உற்பத்தி துறைகளை பெரு நிறுவனங்கள் கபளீகரம் செய்வது குறித்தும், அதன் விளைவுகள் குறித்தும் “முதலாளித்துவம், சோசலிசம், சிறு உற்பத்தித் துறைகள்” என்ற கட்டுரை விவாதிக்கிறது. இது அதிபர் ஜுலியஸ் நெய்ரே பெயரில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் பேரா. பிரபாத் பட்நாயக் பேசியதன் ஒரு பகுதியாகும்.
வாகன உற்பத்தி துறையில் ஏற்பட்ட வேலை இழப்பு இன்னும் தொடர்ந்துகொண்டே வருகிறது. ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. இதற்கான காரணங்களையும் அதற்கான உண்மையான மாற்றையும் முன்வைத்து பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயாவின் “இந்திய பொருளாதாரத்தின் மந்தநிலை” என்கிற கட்டுரை விளக்குகிறது.
தண்ணீர் தனியார் மயமாவதின் அரசியலையும் அதன் ஆபத்தையும் விளக்குவதோடு, அதன் உலக மற்றும் இந்திய அனுபவங்களை மேற்கோள் காட்டி நமது உள்ளூர் வரை அதன் தாக்கத்தை அ. இராசகோபால் எழுதிய “தமிழகத்தில் குடிநீர் பிரச்சினை: தனியார் மயம் மற்றும் உலகமயம் உணர்த்தும் பாடங்கள்” என்கிற கட்டுரை எடுத்துரைக்கிறது.
காஷ்மீர் பிரச்சனை குறித்தான சில கேள்விகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் எம்.பி. அவர்களின் பதில்கள் “ஆர்.எஸ்.எஸ் விரும்பும் அகண்ட பாரதமும்.
காஷ்மீர் பிரச்சனையும்” என்கிற தலைப்பின் கீழ் வெளியாகிறது.
ஃப்ரண்ட்லைன் இதழுக்காக ஜிப்ஸன் ஜான், ஜிதேஷ் பி.எம் ஆகியோர் பேராசிரியர் அய்ஜாஸ் அகமத் உடன் நடத்திய பேட்டியின் அடுத்த பகுதி “இந்துத்துவாவின் தாக்குதல்கள்” என்கிற தலைப்பில் இந்த இதழில் வெளியாகிறது.
மார்க்சிஸ்ட் இதழுக்கான சந்தா சேர்ப்பு இயக்கமும், ஒப்படைப்பு நிகழ்ச்சிகளும் பல மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. தோழர்கள் அதில் முழுமையாக ஈடுபட்டு சந்தாவை அதிகரிக்க கூடுதல் முயற்சி எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஆசிரியர் குழு