பிரபாத் பட்நாயக்
தமிழில்: ஆர்.எஸ். செண்பகம்
(பேராசிரியர் பிரபாத்பட்நாயக் அதிபர்ஜுலியஸ் நெய்ரே பெயரில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் பேசியதன் தொகுப்பே இக்கட்டுரை)
சிறுஉற்பத்தித் துறையை கபளீகரம் செய்யும் முதலாளித்துவம்
முதலாளித்துவம் எப்போதுமே தன்னை நிலைநிறுத்திக்கொள்ள தன்முனைப்புடன் கூடிய தன்னிச்சை நடவடிக்கைகளுடன் செயல்படும் அமைப்பு. தன்னுள்ளே இருக்கும் பல உள்ளார்ந்த போக்குகளால் அது வழிநடத்தப்படுகிறது. பொதுவான சூழலில், சாதாரண காலகட்டத்தில், முதலாளித்துவ நாடுகளின் அரசானது, இந்த உள்ளார்ந்த போக்குகளுக்கு ஆதரவாக செயல்படும்; அந்த போக்குகளை தக்கவைக்க வேண்டிய அனைத்தையும் செய்யும்; மேலும் இதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தும்.
அப்படிப்பட்ட முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த போக்குகளில் ஒன்று –முதலாளித்துவ அமைப்பிற்கு முன்பு, ஒரு நாட்டில் வளர்ந்து தழைத்து வந்த பாராம்பரிய சிறு உற்பத்தித் தொழில்களை கபளீகரம் செய்வது. இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை stock and flow என்ற இரண்டு வடிவங்களில் நிகழ்கிறது. ஒன்று கையிருப்பு (stock) வடிவம். மற்றொன்று சுழற்சி இயக்க ஓட்ட (flow) வடிவம். (ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் உள்ள ஒரு காரணியின் மாற்றத்தை flow காட்டும். Stock என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அந்த காரணியின் அளவினை சுட்டிக்காட்டும். உதாரணத்திற்கு செல்வம் என்பது Stock. வருவாய் என்பது flow.) பொதுவாக, முதலாளித்துவ அமைப்பின் அரசாங்கம் முதலாளிகளுக்குச் சாதகமாக செயல்படுகிறது. இதன் மூலமாக, இந்த முதலாளித்துவ நாடுகளில் உள்ள தனியார் முதலாளிகள் தாங்களே நேரடியாக இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
Stock வடிவம்
Stock வடிவத்தில் சிறுஉற்பத்தியாளர்களின் உற்பத்திவழிமுறைகள் பறிக்கப்படுவது என்பது அவசியமாகிறது. அதாவது சிறுஉற்பத்தியாளர்களுக்கு இதுநாள்வரை அவர்களிடம் இருந்த உற்பத்திவழிமுறைகளின்மீது அவர்களுக்கிருந்த உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இந்த உற்பத்திவழிமுறைகளின் மீதான உரிமைகள், சிலநேரங்களில், முற்றிலும் இலவசமாகவே கையகப்படுத்தப்பட்டு விடுகின்றன. இன்னும் சில நேரங்களில், பெயரளவிற்கு விலைகொடுக்கப்பட்டு வாங்கப்படுகின்றன. உண்மையில், இந்தவிலை என்பது அவர்களுக்குக் கொடுக்கவேண்டிய விலையைவிட மிகக் குறைவாகவே இருக்கும். அதேபோல, சிறுஉற்பத்தியில் பங்கெடுக்கும் ஒரு பிரிவினரின், குறிப்பாக, பாரம்பரியமாக தொழிலாளர்கள் அனுபவித்துவரும் சில வழக்கமான உரிமைகளும் சேர்த்தே பறிக்கப்படுகின்றன. முதலாளித்துவத்தால் அவர்களது கோரிக்கைகளும் எப்போதுமே கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றன.
Flow வடிவம்
Flow வடிவத்தில் சிறுஉற்பத்தியாளர்களின் உற்பத்திவழிமுறைகள் பறிக்கப்படுவதில்லை. மாறாக, இந்த முறையில், சிறுஉற்பத்தித்துறையில் ஈடுபடும் அனைத்துப் பிரிவினரும் வருமானச் சுருக்கத்தினை எதிர்கொள்கின்றனர்.
1. அப்பட்டமான கொள்ளையின் மூலம்
2. சமமற்ற ஏற்றத்தாழ்வான பரிமாற்றத்தின் மூலம்
(மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் இடையிலான சமமற்ற பரிமாற்றத்தின் காரணமாக, அதாவது தொழிலாளர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கப்படாமல், அவர்களிடமிருந்து உறிஞ்சப்படும் உபரி உழைப்பின் காரணமாகவும், சந்தையில் அவ்வப்போது நிலவும் அதிகப்படியான விலையினை தனது உற்பத்திப் பொருட்களுக்கு பெறுவதன் காரணமாகவும் மூலதனம் அதிகலாபத்தை பெறுகிறது. இத்தகைய உழைப்பிற்கும் மூலதனத்திற்கும் இடையிலான சமமற்ற பரிமாற்றத்தின் மூலமாக)
3. அரசின் வரிவிதிப்புகளின் மூலம். அதாவது முதலாளித்துவ அரசு முதலாளிகளுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு சாதகமாக வரிவிதிப்பு முறைகளை பின்பற்றும் என்ற வழிமுறையின் மூலமாக
4. பாரம்பரிய சிறுஉற்பத்தியாளர்களுக்கும் முதலாளித்துவ உற்பத்தியாளர்களுக்கும் இடையில் வர்த்தகச் சமநிலை இருந்தாலும், சிறுஉற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தைகளை பறித்துக் கொள்வதன் காரணமாக. இவையெல்லாவற்றாலும், சிறுஉற்பத்தித்துறையில் வேலையின்மை என்பது உருவாகி அதன்விளைவாக வருமானமின்மை என்பதும் வருமானக்குறைவு என்பதும் ஏற்படுத்தப்படுகிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால், காலனியாதிக்கத்தின்போது காலனிய நாடுகளில் தொழில்துறைகள் தகர்க்கப்பட்டதுபோல் பாரம்பரியத் தொழில்கள் நசிவடையச் செய்யப்படுகின்றன. இதனால் சிறுதொழில் புரிபவர்களிடையே வருமானச் சுருக்கம் உருவாக்கப்படுகிறது.
வேலையின்மையும் வருமானச் சுருக்கமும் ஏன்?
சமநிலைப்படுத்தப்பட்ட வணிகம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்புறமும் ஏன் வேலையின்மை உருவாக்கப்படுகிறது என்பதனை கெய்னீசியன் கோட்பாட்டின் அடிப்படையிலோ அல்லது நியோ கிளாசிக்கல் கோட்பாட்டின் அடிப்படையிலோ தெளிவாகச் சொல்ல முடியவில்லை. இந்த வடிவத்தில் சிறுஉற்பத்தியாளர்களிடம் ஏற்கனவே இருக்கும் விவசாயத்திற்கான நிலப்பரப்பு அதேஅளவில்தான் இருக்கும். பெரும்பாலும் அதன் முழுபரப்பளவும் சிறுஉற்பத்திக்குப் பயன்படவும் செய்யும். ஆனால், பிரச்சினை எங்குள்ளது என்று பார்த்தோமானால், முதலாளித்துவ அமைப்பின்கீழ் முதன்மை விவசாயப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அதேபோல, முன்பு சிறுஉற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட கைவினைப் பொருட்களுக்குப் பதிலாக, தொழிற்சாலைகளில் இயந்திரங்களால் தயாரிக்கப்படும் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் ஒரு சமநிலை இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆனால், இந்த இயந்திர தயாரிப்புகளின் ஏற்றுமதியினால், சிறுஉற்பத்தியாளர்களாக உள்ள கைவினை உற்பத்தியாளர்களின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. கைவினைகலைஞர்கள் தங்கள் தொழிலை செய்யமுடியாமல் வேறுஎங்கும் செல்லவும் முடியாமல் துன்பப்படுகின்றனர். இதன் காரணமாக இவர்களின் உணவு மற்றும் மூலப்பொருட்களின் நுகர்வு அளவு குறைந்துபோகிறது. நுகர்வின் அளவு குறையும்போது உற்பத்தியும் பாதிக்கப்படும். இதுவே வேலையின்மைக்குக் காரணமாகிறது.
அதாவது சிறுஉற்பத்தியாளர்களுக்கான சந்தை அவர்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. அதன்மூலம் வேலையின்மை உருவாக்கப்படுகிறது. இதனால் அவர்களது வருமானம் அவர்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. இதன் விளைவாக அவர்களுக்கென உள்ள சந்தைஇடத்தில் அதிகமான எண்ணிக்கையில் போட்டி அவர்களிடையே ஏற்படுவதன் காரணமாக அதிக அழுத்தம் சிறுஉற்பத்தித்துறையில் ஏற்படுகிறது. முதலாளித்துவத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின்கீழ் இது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இதைத்தான் 1913ல் ரோஸா லக்ஸம்பர்க் தன்னுடைய மூலதனச்சேர்க்கை என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
ஐரோப்பாவிலேயேகூட, 19ம்நூற்றாண்டின் இறுதியில், முதல்உலகப்போர் துவங்கும்முன்பு, முதலாளித்துவ தோற்றத்தின்போது, கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மற்றும் தென்ஆப்பிரிக்காவில் 50 மில்லியன் மக்கள் தங்கள் தாய்நாட்டைவிட்டு வெளியேறி வந்து குடியேறினர் என்று 1978ம் ஆண்டு ஆர்தர் லூயிஸ் என்ற நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் குறிப்பிடுகிறார். இப்படி குடியேறியவர்களால் உள்ளூர்வாசிகளின் நிலங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இவர்கள் விவசாயம் போன்ற தொழில்களிலும் ஈடுபட்டனர். அதனால் முதலாளித்துவத்தினால் ஏற்பட்ட வேலையின்மை என்பது ஐரோப்பாவிற்குள்ளேயே தீர்த்துக் கொள்ளப்பட்டது. ஆனால், இதுபோன்ற வாய்ப்புகள், மூன்றாம் உலக நாடுகளில் முதலாளித்துவத்தினால் இடப்பெயர்வுக்கு ஆளானவர்களுக்குக் கிடைக்கவில்லை. இன்றைக்கு அதற்கான வாய்ப்பு என்பதே இல்லை.
எனவே, சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், சிறுஉற்பத்தித்துறையின் ஆக்கிரமிப்பு என்பது, மேலேகூறிய stock and flow வடிவத்தில், சிறுஉற்பத்தியாளர்களின் உற்பத்திவழிமுறைகளை ஆக்கிரமிப்பதன் மூலமும், அவர்களது உரிமைகளை பறித்துக்கொள்வதன் மூலமும், அந்தத் துறையிலே வருமானச் சுருக்கத்தினையும், வேலையின்மையையும் உருவாக்குவதன் மூலமும் முதலாளித்துவத்தால் தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்காக அரங்கேற்றப்படுகிறது.
முதலாளித்துவ கபளீகரம் செய்வது என்ன? தவறான கண்ணோட்டங்கள்
சிறுஉற்பத்தித் துறையை முதலாளித்துவம் கபளீகரம் செய்வதன் காரணமாக ஏற்படும் விளைவுகள் குறித்து குறைந்தது 4 தவறான கருத்துக்கள் அல்லது கண்ணோட்டங்கள் உள்ளன.
- முதலாவதாக, “சிறுஉற்பத்தித்துறையை முதலாளித்துவம் ஆக்கிரமிப்பு செய்யும்போது, அந்தத் துறையில் இருந்து துரத்தப்படும் சிறுஉற்பத்தியாளர்கள் முதலாளித்துவ அமைப்பின்கீழ் பாட்டாளிவர்க்கமாக கிரகிக்கப்படுவர். இதே முதலாளித்துவ அமைப்பிற்குள் ஏற்கனவே வேலையின்றி வேலைதேடிக் கொண்டிருக்கும் தொழிலாளி வர்க்கப் படையும் இருக்கும். ஆனாலும், இப்படி பாட்டாளிவர்க்கமாக மாற்றப்படும் சிறுஉற்பத்தியாளர்களின் துன்பம் என்பது ஒரு இடைப்பட்ட காலத்திற்கு மட்டுமே இருக்கும். இது முதலாளித்துவம் தன்னை விரிவுபடுத்திக் கொள்ளும்போது, அந்த விரிவாக்கத்தின் ஒரு பகுதியே அல்லாது இதனால் இரண்டு நிரந்தர முரண்பட்ட பிரிவுகள் என்பது எப்போதும் உருவாக்கப்படப் போவதில்லை” என்கிற கருத்து.
இது முற்றிலும் தவறான கருத்தாகும். முதலாளித்துவ அமைப்பின்கீழ் வறுமைக்கும் சீர்குலைவிற்கும் தள்ளப்படும் சிறுஉற்பத்தியாளர்கள், சிறுஉற்பத்தித் துறையிலேயே இருக்கவும் முடிவதில்லை. தொழிலாளர்களோடு தொழிலாளர்களாக கிரகிக்கப்படுவதற்கான வாய்ப்பு என்பதும் இல்லை. ஏனென்றால், முதலாளித்துவ அமைப்பின்கீழ் போதுமான வேலைவாய்ப்பு என்பது எப்போதும் உருவாக்கப்படுவதில்லை. ஐரோப்பாவிலேயே கூட, இது சாத்தியமாகவில்லை. மூன்றாம் உலக நாடுகளில் இதற்கான சாத்தியம் என்பது இல்லவேஇல்லை.
இதனை ஃப்ரடெரிக் எங்கல்ஸ், டேனியல் சன்னிற்கு எழுதிய கடிதத்தில், 1892ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதியே குறிப்பிடுகிறார். மார்க்சின் காலம் கழிந்து எத்தனையோ பத்தாண்டுகள் கடந்துவிட்டன. வரலாற்று அனுபவங்கள் இப்போதும் இதனை உறுதிப்படுத்துகின்றன. உதாரணத்திற்கு, சமீபத்தில், இந்தியப் பொருளாதாரம், உலகின் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு அதிக வளர்ச்சியை எட்டியது. இந்த வளர்ச்சி மூன்றாம் உலக நாடுகளில் பின்பற்றப்படும் உலகமய நவீன தாராளமயத்தின் லாப விளைவுகளுக்கு ஆதாரமாகக் காட்டப்பட்டது. ஆனால், உண்மையில், இந்தியாவின் வேலைவாய்ப்பு விகிதம் இந்தப் பொருளாதார வளர்ச்சிக்கேற்ற அளவிற்கு உயரவில்லை என்பதோடு, மிக அற்பமான வளர்ச்சியையே எட்டியுள்ளது. மேலும், உழைக்கும் மக்களின் எண்ணிக்கை விகிதத்தோடு ஒப்பிடுகையில், இந்த வேலைவாய்ப்பு வளர்ச்சிவிகிதம், அதற்கும் கீழாகவே உள்ளது என்பதுதான் புள்ளிவிவரங்கள் சொல்லும் உண்மை.
உதாரணத்திற்கு, 2004-2005ம் ஆண்டிற்கும் 2009-2010ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் ஆண்டிற்கு 8 சதம் ஆகும். அதேநேரத்தில், ஒரு தொழிலாளி ஒருவருடத்தில் அதிகபட்சம் வேலையில் இருந்த காலஅளவின் அடிப்படையில், வேலையின் ”வழக்கமானநிலை”யின் விகிதத்தை கணக்கிட்டால், அது வெறுமனே 0.8 சதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இது, அந்த நேரத்தில் இருந்த வேலைதேடும் மற்றும் வேலையில் இருந்த தொழிலாளர்களின் வளர்ச்சி விகிதமான 1.5 சதத்தோடு ஒப்பிடும்போது, அந்த விகிதத்தையும் விட குறைவாகும். எனவே, முதலாவது கருத்து தவறானது என்பது நிரூபிக்கப்படுகிறது.
- இரண்டாவதாக, “புராதன மூலதனச் சேர்க்கை குறித்த மார்க்சின் விவாதம் முதலாளித்துவம் துவங்கும் காலக்கட்ட வரையறைக்குள்ளேயே நின்று விடுகிறது. முதலாளித்துவ அமைப்பு உருவானபிறகு, அதனுடைய இயக்கவியலானது, “மூலதனம்” நூலின் இரண்டாம் தொகுதியில், மறுஉற்பத்தித் திட்டங்களின் விரிவாக்கம் பற்றி மார்க்ஸ் குறிப்பிடுவதோடு ஒத்துப் போகிறது. சிறுதொழில்களை கபளீகரம் செய்யும் அதிதீவிர இரக்கமற்ற நடவடிக்கைகளுக்கும் முதலாளித்துவத்தின் இயக்கவியலுக்கும் தொடர்பே இல்லை. கார்ல் மார்க்ஸ்கூட, முதலாளித்துவம் துவங்குவதற்கு முன்பு தோன்றிய பாரம்பரிய துறைகளை முதலாளித்துவம் கபளீகரம் செய்வது குறித்து எதுவும் விவாதிக்கவில்லை” என்ற ஒரு கருத்து நிலவுகிறது.
இந்த கருத்து முற்றிலும் தவறானது. ஏனென்றால், 19ம் நூற்றாண்டு முழுவதும், உலக முதலாளித்துவத்தின் இயக்கவியலை தக்கவைப்பதற்கான பங்கினை காலனியமும், காலனியாதிக்கமும் ஆற்றி வந்தது. இது குறித்து எஸ்.பி. சால் போன்ற பொருளாதார வரலாற்றாய்வாளர்கள் ஆய்வு புத்தகங்களை எழுதியுள்ளனர். பிற்காலத்தில், மார்க்சே கூட, இந்தியாவில் இருந்து பெருமளவிற்கான உபரி லாபம் பிரிட்டனுக்குக் கொள்ளை கொண்டு போவது குறித்து, டேனியல் சன்னிற்கு 1881ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார். அந்த கடிதத்தில், “ஆங்கிலேயர்கள், ஆண்டுதோறும், இந்திய மக்களிடமிருந்து, பெருமளவு பொருட்களை, சம மதிப்பிலான எந்த ஈடும் கொடுக்காமல், அல்லது இந்தியர்களுக்குச் சேரவேண்டிய இந்திய மதிப்பின் அளவிற்கான தொகையையே கூட கொடுக்காமல், இன்னும் சொல்லப் போனால், ஏறக்குறைய இலவசமாக, இங்கிலாந்திற்கு கொண்டு செல்கின்றனர். இந்தத் தொகையானது இந்தியாவில் உள்ள 60 மில்லியன் விவசாய மற்றும் தொழில்துறை தொழிலாளர்களின் மொத்த வருமானத்திற்கு சமமாகும். இது இந்திய மக்களை அதிகப்படியாக துன்பத்திற்குள்ளாக்கும் அதிதீவிர இரக்கமற்ற நடவடிக்கையாகும்” என்று முதலாளித்துவத்தின் கபளீகரம் குறித்து எழுதியுள்ளார்.
இந்த அதிதீவிர இரக்கமற்ற நடவடிக்கைக்கும் முதலாளித்துவத்தின் இயக்கவியலுக்கும் தொடர்பே இல்லை என்று சொல்வது அபத்தமானது. வேறுவார்த்தைகளில் சொல்வதென்றால், சிறுதொழில் துறையை ஆக்கிரமிக்கும் முதலாளித்தவத்தின் செயல்பாடு என்பது வெறுமனே அது பிறக்கும்போது மட்டும் நிகழ்வதல்ல. மாறாக, அது வாழும்காலம் முழுவதும் நிகழ்வதாகும். அதேபோல, சிறுதொழில் நசிவினால் கடுமையான துன்பத்திற்குள்ளாகும் சிறுஉற்பத்தியாளர்களை முதலாளித்துவம் தனது தொழிலாளிவர்க்கப் படையுடன் கிரகித்துக் கொள்வதில்லை. இது முதலாளித்துவம் இருக்கும் காலம்வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். இந்த சிறுஉற்பத்தியாளர்கள் செல்லுமிடம் அறியாது துன்பத்தில் உழன்றுகொண்டுதான் இருக்கின்றனர். இந்த அம்சம் நவீன கிளாசிக்கல் பொருளாதார கோட்பாட்டினாலோ அல்லது சர்வதேச நிதியம் மற்றும் உலகவங்கி போன்ற நிறுவனங்கள் பின்பற்றும் இதுபோன்ற கொள்கைகளாலோ அங்கீகரிக்கப்படவில்லை. மாறாக, அவை “முதலாளித்துவத்தின்கீழ், பெருமுதலாளிகளும் பெருநிறுவனங்களும் அடையும் பலன்கள், சொட்டுச்சொட்டாக கீழே ஏழைகளைச் சென்றடையும்” என்ற trickle down theory -ஐ வலியுறுத்துகின்றன.
- மூன்றாவதாக சொல்லப்படும் இந்த கருத்தும் மேற்கூறிய அம்சத்தை உள்வாங்கவில்லை என்பதோடு, அது முற்றிலும் வேறான இன்னொரு கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறது. இந்த கருத்து “நியோ பாப்புலிஸ்ட் குணாம்சத்துடன் பேசுகிறது. விவசாயிகள் குறிப்பாக நடுத்தர விவசாயிகள் தங்களுக்கே உரித்தான நெகிழ்திறனுடன் முதலாளித்துவத்தின் தாக்குதல்களை தாங்கி நிற்கும் திறன் பெற்றவர்கள்” என்று விவாதிக்கிறது.
இந்த கருத்து முற்றிலும் தவறானது. விவசாயத்துறை நாளும் நசிவடைந்துவரும் சூழ்நிலையில், சிறுவிவசாயிகள் – சிறுஉற்பத்தியாளர்கள் விவசாயத்தை விட்டுச் செல்லாமல், அந்தத் துறையிலேயே தொடர்ந்து இருப்பதனை தங்களுடைய கருத்திற்கு ஆதாரமாகச் சொல்கிறது. உண்மையில், விவசாயத்துறையின், சிறுவிவசாயிகளுக்கு –சிறுஉற்பத்தியாளர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பு என்பது, இந்த முதலாளித்துவ அமைப்பின்கீழ் இல்லாத நிலையில், விவசாயத்துறை நசிவடைந்தாலும் அதற்குள்ளேயே கட்டுண்டு கிடக்கவேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு இருக்கிறது. அதேபோல, ஒரு ஏக்கருக்கு இவ்வளவு விளைச்சல் என்று அவர்கள் உதாரணம் காட்டுகின்றனர். அப்படி அவர்கள் உதாரணமாகக் காட்டுவது சிறுசிறு பண்ணைகள் குறித்த புள்ளிவிவரங்களே ஆகும். உண்மையில், இவர்கள் எடுத்துக்காட்டாகக் கூறும் இந்த விளைநிலப்பரப்பில் குவிந்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கை பெரியது, நெரிசல் மிக்கது. எனவே, ஒரு ஏக்கருக்கு இந்த அளவு விளைபொருட்கள் என்று சொல்லும்போது, அந்த விளைநிலப் பரப்பில் குவிந்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், அவர்களின் உற்பத்தித்திறன் படுபாதாள அளவில் குறைந்து போயுள்ளது என்பது தெள்ளத் தெளிவானது.
எனவே, முதலாளித்துவத்துடன் இணைந்து ஒரு “திறன்மிக்க”, “வலுவான” சிறுவிவசாயமும் இருக்கும் என்பது ஒரு கட்டுக்கதை. அது விவசாயிகளின் “துன்பத்தையும் துயரத்தையும்”, அவர்களின் “செயல்திறனாக” உருவகிக்கும் தவறினை செய்கிறது.
- நான்காவதாக சொல்லப்படும் கருத்து, போருக்குப் பின்னாலுள்ள பல்வேறு முதலாளித்துவ கட்டங்களுக்கும், மூன்றாம் உலக நாடுகளில் காலனியாதிக்கத்திற்குப் பிந்தைய முதலாளித்துவ கட்டத்திற்கும், மேலும், இன்றைய, தற்போதைய சூழலில் உள்ள முதலாளித்துவ கட்டத்திற்கும் உள்ள வேறுபாட்டினை துடைத்தழித்துவிட்டு பார்க்கின்ற கண்ணோட்டத்தின் அடிப்படையிலான கருத்து இது. அதாவது முதலாளித்துவ அமைப்பிற்குள், அதன் அமலாக்கத்தில், பல்வேறு கட்டங்களுக்குள்ளும் வேறுபாடுகள் இல்லை என்ற அடிப்படையிலான பார்வை.
இந்த கருத்து முற்றிலும் தவறானது. ஏனென்றால், மூன்றாம் உலக நாடுகளில் காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்தவுடன் அந்தந்த நாடுகளில் அமைந்த ஆட்சிகள், தேச அபிவிருத்திக்காக தனியார் மூலதனத்தை நாடியபோதுகூட, முதலாளித்துவத்தின் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள எடுக்கும் தன்முனைப்பு தன்னிச்சை நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவே அந்த அரசுகள் முனைந்தன. அதேபோல, காலனியாதிக்கத்திற்குப் பிந்தைய ஆட்சியில், அரசு சமூகப் பொருளாதார விவகாரங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. இதுவே அதனுடைய தனித்தன்மையாக இருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் சிறுஉற்பத்தித்துறையானது பாதுகாக்கப்பட்டதுடன், அதனுடைய வளர்ச்சியும் உறுதி செய்யப்பட்டது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலாளித்துவத் துறையின் ஆக்கிரமிப்பு கட்டுப்படுத்தப்பட்டது. இது காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களின்போது அளிக்கப்பட்ட உத்தரவாதத்தின் அடிப்படையில் அமலாக்கப்பட்டது. மேலும், பெரும்பாலான மூன்றாம் உலக நாடுகளில் அன்று அமைந்த அரசுகள் ஐரோப்பாவில் அமைந்ததுபோன்ற பூர்ஷ்வா அல்லது முதலாளித்துவ அரசுகளைப் போன்ற தன்மையில் அமையவில்லை.
பிற்காலத்தில், ஐஎம்எஃப், உலகவங்கி போன்ற பிரிட்டன்வுட்ஸ் அமைப்புகளின் நிர்பந்தத்தின் காரணமாக, மூன்றாம் உலக நாடுகளில் பொருளாதார தாராளமயமாக்கல் என்பது ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நேரத்தில் அமலாக்கப்பட்டது. இறுதியில், உலக அளவில் நவீன தாராளமயமாக்கல் அமலாக்கப்பட்டபிறகு, முதலாளித்துவம் பெற்ற வெற்றியின் பின்னணியில், அதனுடைய தன்னை நிலைநிறுத்திக் கொள்ள எடுக்கும் தன்முனைப்பு தன்னிச்சை நடவடிக்கைகளைக் கொண்ட குணாம்சம் வெளிப்படத் துவங்கியது. அதிலிருந்து முதலாளித்துவம் அதிதீவிரமான ஆற்றலுடன் பெரும்சக்தியுடன் பகிரங்கமாக வளரத் துவங்கியது. நவீன தாராளமய ஆட்சியின் கீழ், சிறுஉற்பத்தித்துறைக்கு முதலாளித்துவ ஆக்கிரமிப்பில் இருந்து அளிக்கப்பட்ட பாதுகாப்பு என்பது பெரும்பாலும் இல்லை என்றே ஆனது. தற்போதைய ”நவீன தாராளமயக் கொள்கைகளை பின்பற்றும் அரசு” முதலாளித்துவ அமைப்பின் “தன்னை நிலைநிறுத்திக்கொள்ள எடுக்கும் தன்முனைப்பு தன்னிச்சை நடவடிக்கைகளை”மீட்டெடுத்து, உள்நாட்டு பெருமுதலாளிகள் உலகமயமாக்கப்பட்ட நிதிமூலதனத்தோடு இன்னும் ஒருங்கிணைந்து நிற்கக்கூடிய வாய்ப்பினை உருவாக்குகிறது.
விவசாய சிறுஉற்பத்தித்துறையை உலகச் சந்தையின் விலைவாசி ஏற்றஇறக்கங்களுக்கு திறந்துவிட்டதன் காரணமாக, எப்போதுமே அவர்கள் அதிகக் கடனுக்கும், கொடிய வறுமைநிலைக்கும் ஆளாக்கப்படுகின்றனர். மேலும், விவசாய இடுபொருட்களின் விலையில் அளிக்கப்பட்டுவந்த அனைத்து மானியங்களும் திரும்பப் பெறப்படுகின்றன. விதைகள் வாங்குவதிலும், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்குவதிலும், சந்தைப்படுத்துவதற்கான வசதிகளையும் வாய்ப்புகளையும் பெறுவதிலும், சர்வதேச வேளாண் வணிகத்தின் கருணையை எதிர்பார்த்து நிற்கச் செய்யப்படுகின்றனர்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, கல்வி மற்றும் ஆரோக்கியம் போன்றவை தனியார்மயப்படுத்தப்பட்டதன் காரணமாக, அவற்றிற்கான செலவு அதிகரித்துள்ளது. இதனால், சிறுஉற்பத்தியாளர்கள் பெரிய அளவில் கடனிற்கும், கொடிய வறுமைக்கும் தள்ளப்படுகின்றனர். இந்தியாவில், கடந்த 25 ஆண்டுகளில், மூன்று லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்பதில் இருந்தே, வறுமையின் தீவிரத்தை நாம் உணர முடியும். 1991க்கும் 2011க்கும் இடைப்பட்ட இரு பத்தாண்டுகளின் கணக்கெடுப்பின்படி, விவசாயத் துறையில் இருந்து 1.5 கோடி விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறி, மாற்றுவேலை தேடிக் கொண்டிருக்கின்றனர். இதனால் வேலைதேடும் தொழிலாளர்படையின் அளவு பெருத்துள்ளது. இதனால், வேலையின்மை அதிகரித்துள்ளது என்று சொல்வதை விட, கேசுவல், பகுதி நேரம், மற்றும் இடைப்பட்ட நிலையிலான வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்று சொல்லும் நிலை உருவாகியுள்ளது. வேலைதேடும் தொழிலாளர்படையின் அளவு பெருத்துக்கொண்டே செல்வதன் காரணமாக, முதலாளித்துவ அமைப்பின்கீழ் வேலையில் இருக்கும் தொழிலாளர்களின் உண்மைஊதியம் குறைந்துகொண்டே போகிறது. சங்கத்தின்கீழ் அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்களின் உண்மை ஊதியமும் இதேநிலையில்தான் உள்ளது.
அடுத்த பகுதி : மூன்றாம் உலக நாடுகளின் வறுமையும் தொழிலாளர் –விவசாயி கூட்டணியும்