பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழில் வெளியானது
புகழ்பெற்ற இந்திய கம்யூனிச இயக்கத்தின் வரலாறு, தாஷ்கண்ட் நகரில் அக்டோபர் 17, 1920 அன்று “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி” உருவாக்கப்பட்டதிலிருந்து தொடங்குகிறது. மாதம் இரு முறை வரவிருக்கும் இக்கட்டுரைத் தொடரில், கடந்த நூறாண்டுகளாக இந்திய கம்யூனிச இயக்கத்தின் முக்கிய நிகழ்வுகள், போராட்டங்கள், தியாகங்கள், முக்கிய கொள்கை முடிவுகள் குறித்த வரலாற்றை நாம் திரும்பிப் பார்க்கவுள்ளோம்!
அக்டோபர் 17, 1920 அன்று, சோவியத் ஒன்றியத்தை சேர்ந்த துர்க்கிஸ்தான் குடியரசின் தலைநகரான தாஷ்கண்ட் நகரில் நிகழ்ந்த சந்திப்பில் “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி” உருவாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அந்த சந்திப்பில் எம்.என்.ராய், எவெலின் ட்ரென்ட்-ராய், அபானி முகர்ஜி, ரோசா ஃபிடிங்கோவ், முகமது அலி, முகமது ஷஃபிக் மற்றும் எம்.பி.டி.ஆச்சார்யா ஆகியோர் பங்கேற்றனர். முகமது ஷஃபிக் கட்சியின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அந்த துவக்க சந்திப்பில் கம்யூனிச அகிலத்தின் (Communist International) கோட்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதோடு, “இந்திய நிலைமைகளுக்கு உகந்த” ஒரு கட்சித் திட்டத்தை உருவாக்கவும் முடிவெடுக்கப்பட்டது.
எம்.என்.ராய் , 1920-ல் மாஸ்கோவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாம் பொதுக்குழு கூட்டத்தில், மெக்சிகோ கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாக பங்கேற்றார். அபானி முகர்ஜியும், ஆச்சார்யாவும் அதே கூட்டத்தில் ஆலோசகர்கள் என்ற அடிப்படையில் பங்கேற்றனர். முகமது ஷஃபிக் இதில் ஒரு பார்வையாளராக பங்கேற்றார்.
அமெரிக்க கம்யூனிஸ்டான எவெலின், தோழர் எம்.என்.ராயின் துணைவியார் ஆவார். ரஷ்ய கம்யூனிஸ்டான ரோசா, அபானி முகர்ஜியை மணம் முடித்தார்.
அந்த குழுவிலிருந்த இந்தியர்கள், அளவில்லா தேசப்பற்று உணர்வின் உந்துதலால், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை தூக்கியெறிய ஒரு புரட்சிகர இயக்கத்தையோ அல்லது ஆயுதம் தாங்கிய போராட்டத்தையோ ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் இந்தியாவிலிருந்து வெளியேறிச் சென்ற இளைஞர்கள். எம்.என்.ராயும், அபானி முகர்ஜியும் இந்த வகையில் அடங்குவர். முகமது அலியும், முகமது ஷஃபிக்கும் பிரிட்டிஷாரை எதிர்க்க உதவி தேடி தாஷ்கண்ட் நகரம் சென்ற “முகாஜிர்”கள். இந்த புரட்சியாளர்களின் சாகசங்கள், துணிச்சலான பயணங்கள் பற்றி வேறொரு தருணத்தில் பேசவேண்டும்.
தாஷ்கண்ட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கத்திற்கு அடிநாதமாக அமைந்த உண்மை என்னவென்றால், உலகத் தொழிலாளர்களின் புரட்சிகர இயக்கமும், இந்தியாவில் நடைபெற்ற தேசிய விடுதலைப் போராட்டமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை என்பதுதான்.
ரஷ்யாவில் 1917-ல்நிகழ்ந்த அக்டோபர் புரட்சி உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த புரட்சியின் தன்மை குறித்த செய்தி பிரிட்டிஷ் காலனியாக இருந்த இந்தியாவை வந்து சேர்வதற்கு முன்னால், வெளிநாட்டு வாழ் இந்திய புரட்சியாளர்களை அடைந்தது. அவர்கள் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சோசலிசப் புரட்சியால் ஈர்க்கப்பட்டனர்.
பெர்லினில் வாழ்ந்து வந்த ஒரு புரட்சியாளர்களின் குழு, மாஸ்கோவில் இருந்த போல்ஷெவிக் புரட்சியாளர்களை தொடர்பு கொள்ள முடிவெடுத்தனர். அக்குழுவின் தலைவர் வீரேந்திரநாத் சட்டோபாத்யாய். அக்குழுவில் பூபேந்திரநாத் தத், முகமது பர்க்கத்துல்லா, நளினி குப்தா மற்றும் பலர் இருந்தனர்.
அமெரிக்காவில், பிரிட்டிஷாரை எதிர்ப்பதற்காக உருவாக்கப்பட்டு, “கோமகட்டா மாரு” நிகழ்விற்குப் பின்பு நசுக்கப்பட்ட, எழுச்சிமிக்க “கத்தார் கட்சி”யின் தலைவர்கள் ரஷ்ய புரட்சியாளர்களை தொடர்பு கொள்ள முயன்றனர்.
இந்தியாவிலிருந்து, 1920-21ல் ஒத்துழையாமை-கிலாபத் இயக்கத்தின் சமயத்தில், பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து தங்கள் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க விரும்பிய பல கிலாபத் போராளிகள் ஆப்கானிஸ்தான் சென்றனர். அங்கிருந்து பலரும் தாஷ்கண்ட் நகரம் சென்றடைந்தனர். சோவியத் அதிகாரிகள் அந்த முகாஜிர்களை வரவேற்று, பிரிட்டிஷாருக்கு எதிரான அவர்களின் போராட்டத்திற்கு துணை புரிய தயாராக இருந்தனர். கம்யூனிஸ்ட் கட்சியுடனும் போல்ஷெவிக் புரட்சியாளர்களுடனும் தொடர்பு கிடைத்த பின், அவர்களில் சிலர் கம்யூனிசத்தை தழுவினர் – அதில் 25 பேர், 1921-ல் மாஸ்கோவில் “கிழக்கு நாடுகளின் உழைப்பாளர்களின் கம்யூனிச பல்கலைக்கழகம்” துவங்கப்பட்டபோது, அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
எம்.என்.ராய், கம்யூனிஸ்ட் அகிலத்தின் செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தாஷ்கண்ட் நகரிலுள்ள மத்திய ஆசிய பணியகத்திற்கு பிரதிநிதி ஆக்கப்பட்டார். இந்தப் பொறுப்பில் இருந்த பொழுதுதான் முகாஜிர்கள் பலரையும் தொடர்பு கொள்ளத் துவங்கினார் – முகாஜிர்கள் பலரும் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பெற்றது குறித்து பெரும் ஆர்வம் கொண்டனர்.
உலகம் முழுவதும் பல கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடக்கத்தில் சிறியதொரு புரட்சியாளர்களின் குழுக்களால் உருவாக்கப்பட்டவையே. சீனாவில், 1921-ல் ஷாங்காய் நகரில் 13 பிரதிநிதிகளின் சந்திப்பின் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்டது. பிரெஞ்சுக் காலனி ஆதிக்கத்தில் இருந்த இந்தோசீனத்தில் (பிற்காலத்தில் வியட்நாம், கம்போடியா, லாவோஸ் என தனி நாடுகளாகஉருவானது இந்தோசீனம்), இந்தோசீன கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சியத்தை தழுவி பிரான்சில் வாழ்ந்து கொண்டிருந்த இந்தோசீன குடியேற்ற வாசிகளால் துவங்கப்பட்டது.
தாஷ்கண்ட் நகரில் உருவாக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் குழுவின் பதிவுகள், அவர்கள் மேலும் இரண்டு சந்திப்புகள் நடத்தியதைக் காட்டுகின்றன. டிசம்பர் 15, 1920-ல் நடந்த அந்த சந்திப்பில் இருந்து, மேலும் மூன்று பேர் கட்சியின் பரீட்சார்த்த உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ளப்பட்டது தெரிய வருகிறது. அப்துல் ஆதேர் சேராய், முகமது அலி ஷாகாஜி மற்றும் அக்பர் ஷா (சலீம்). மூன்று மாத தகுதி காணும் காலம் முடிந்த பின் பரீட்சார்த்த உறுப்பினருக்கு முழு உறுப்பினர் அந்தஸ்து கிடைக்கும்.
அந்நேரத்தில், தாஷ்கண்ட் நகரில், பெருமளவில் முகாஜிர் மற்றும் குடிபெயர்ந்த புரட்சியாளர்களைக் கொண்ட இந்திய புரட்சிகர கமிட்டி இருந்தது. இந்த அமைப்பிலிருந்துதான் கிழக்கு நாடுகளின் உழைப்பாளர்களின் கம்யூனிச பல்கலைக்கழகத்தில் சேர நபர்கள் பதிவு செய்யப்பட்டனர்.
பெர்லினைச் சேர்ந்த, வீரேந்திரநாத் சட்டோபாத்யாய் தலைமையிலான குழு இறுதியாக 1921-ல் கம்யூனிச அகிலத்தின் தலைமையை சந்திக்க மாஸ்கோ வந்ததை இங்கே குறிப்பிடுவது மேலும் சுவையூட்டும். இந்தியா பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற்ற பின்னரே கம்யூனிஸ்ட் கட்சி துவங்கப்பட வேண்டும் என்று அவர்கள் கருதினர். அவர்கள் தேசிய விடுதலைக்காக கம்யூனிச அகிலத்தின் உதவியை நாடினர். அவர்கள் எம்.என்.ராய் மற்றும் அவரின் குழு “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி”யாக அங்கீகரிக்கப்படுவதை விரும்பவில்லை. கம்யூனிச அகிலத்தின் ஆணையம் ஒன்று, அனைத்து தரப்பு விவாதங்களையும் கேட்டறிந்த பின்னர், தாஷ்கண்ட் நகரில் உருவாக்கப்பட்ட கட்சியை இந்திய கம்யூனிஸ்ட் குழுவாக அங்கீகரித்தது.
கம்யூனிச அகிலத்துடன் இணைந்து செயல்பட அவசியமாகிய “கட்சித் திட்டம்” ஒன்றை தாஷ்கண்ட் நகரில் உதித்த இந்த கம்யூனிஸ்ட் கட்சியால் இறுதி செய்ய முடியவில்லை. எனினும், இந்தக் குழு, குறிப்பாக எம்.என்.ராய், இந்தியாவில் பல இடங்களிலும் உருவாக்கப்பட்டு வந்த பல கம்யூனிச குழுக்களிடம் சென்று கம்யூனிச கருத்துக்களை பரப்ப முக்கிய பங்காற்றினர்.
எம்.என்.ராயும் அபானி முகர்ஜியும், 1921-ல் அகமதாபாதில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் அகில இந்திய கமிட்டியின் அமர்வுக்கு ஒரு திறந்த கடிதம் எழுதினர்.
அந்த அறிக்கையில் அவர்கள் அறிவுறுத்த, காங்கிரஸ் “தொழிற்சங்கங்களின் குறைந்தபட்ச கோரிக்கைகளை அதன் சொந்த கோரிக்கையாக ஆக்கிட; விவசாய சங்கங்களின் திட்டத்தை அதன் சொந்த திட்டமாக ஆக்கிட; காங்கிரஸை எந்தவொரு தடையும் தடுத்து நிறுத்த இயலாத நேரம் கூடிய விரைவிலேயே வரும்; முனைப்போடு தன் பொருளியல் தேவைகளுக்காக போராடும், அசைக்க இயலாத சக்தியான பெருவாரியான மக்களின் ஆதரவை அது பெறும்”, என்று எழுதினார்.
கட்சி உருவானதில் இருந்தே, இந்தியாவின் எந்தவொரு கட்சியோ, குழுவோ செய்வதற்கு முன்பே, “பூரண சுதந்திரம்” என்ற முழக்கத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எழுப்பி வந்தது. எம்.என்.ராய் காங்கிரசின் அகமதாபாத் அமர்விற்கு திறந்த மடல் அனுப்பிய அதே நேரத்தில், காங்கிரசின் உள்ளேயே ஹஜ்ரத் மொகானி என்பவர் “விடுதலை” (சுவராஜ்) என்பதை “அந்நிய ஆட்சியிலிருந்து பூரண சுதந்திரம் அடைவது” என்பதாக வரையறுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. காந்தி இந்த தீர்மானத்தை, நடைமுறைக்கு ஒத்துவராத தீர்மானம் எனக் கூறி எதிர்த்தார்.
கம்யூனிச அகிலத்தின் உதவியோடு, எம்.என்.ராய் இந்தியாவின் பல கம்யூனிச குழுக்களையும் தொடர்பு கொள்ள முனைந்தார். எஸ்.ஏ.டாங்கே (பம்பாய்), முசாஃபர் அகமது (கல்கத்தா), சிங்காரவேலர் (மதராஸ்) மற்றும் பலருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பது பற்றியும், அவர்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பது குறித்தும் ஆலோசனை கூறி அவர் கடிதங்கள் எழுதினர்.
1922 முதல் 1923 வரை, பெர்லினிலிருந்து என்.என்.ராய் பதிப்பித்து வெளியிட்ட “இந்திய விடுதலையின் முன்னணிப் படை” (Vanguard of Indian Independence) என்ற இதழே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் அதிகாரப்பூர்வ இதழாகும். இந்த இதழ் இந்தியாவில் கம்யூனிச பரப்புரைக்கும், கருத்துப் பரவலுக்கும் உதவியது. அப்படிப்பட்ட கம்யூனிச பரப்புரை தன் ஆட்சிக்கு ஏற்படுத்தும் ஆபத்தை உணர்ந்த பிரிட்டிஷ் அரசாங்கம், அந்த இதழ் இந்தியாவில் நுழையக்கூடாது என தடை விதித்தது.
1920-ல் தான் அகில இந்திய தொழிற் சங்க காங்கிரஸ் (AITUC) நிறுவப்பட்டது – அந்த வகையில், அது முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு. சீர்திருத்தவாத சார்புடன் அது துவங்கப்பட்ட போதிலும், கம்யூனிஸ்டுகளின் பங்கெடுப்பால், சில ஆண்டுகளிலேயே உழைக்கும் வர்க்கத்தின் போர்க்குணம் உள்ள அமைப்பாக அது மாறியது.
இதனடிப்படையில், 1920 தாஷ்கண்ட் நகரில் “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி” உருவாக்கப்பட்டது. அதையே இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டியமைப்பதற்கான முதல் படியாக நாம் பார்க்க வேண்டும்.
அக்டோபர் 17, 1920-ல் நடைபெற்ற கூட்டத்தின் நிகழ்வுக் குறிப்புகள் (மினிட்ஸ்):
அக்டோபர் 17, 1920-ல், தாஷ்கண்ட்டில் துவங்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் பின்வருமாறு: 1) எம்.என்.ராய், 2) எவெலின் ட்ரென்ட்-ராய், 3) ஏ.என்.முகர்ஜி, 4) ரோசா ஃபிடிங்கோவ், 5) முகமது அலி (அகமது ஹாசன்), 6) முகமது ஷஃபிக் சித்திகி, 7) ஆச்சார்யா (எம்.பிரதிவாதி பயங்கர்).
கட்சியில் சேர விரும்பும் நபர்களுக்கு (பரீட்சார்த்த உறுப்பினர்களுக்கு) மூன்று மாத தகுதி காணும் காலத்தை நிபந்தனையாக நிறுவும் தீர்மானத்தை ஏற்றுக்கொள்கிறது.
தோழர் ஷஃபிக் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
மூன்றாம் கம்யூனிச அகிலம் பிரகடனம் செய்த கோட்பாடுகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொண்டு, இந்திய நிலைமைக்கு ஏற்புடைய ஒரு கட்சித் திட்டத்தை உருவாக்கும் பொறுப்பை ஏற்கிறது.
தலைமை: எம். ஆச்சார்யா
செயலாளர்: ராய்
முத்திரை
தமிழில்: அபிநவ் சூர்யா