ஆ.சி.ஈ.பி (RCEP) ஒப்பந்தம் இந்தியாவுக்கு உகந்த ஒன்றுதானா?


பிரபாத் பட்நாயக்

தமிழில்: பிறைகண்ணன், நர்மதா தேவி

பிராந்திய அளவிலான விரிவான பொருளாதாரக் கூட்டு’ (Regional Comprehensive Economic Partnership – RCEP-ஆர்.சி.ஈ.பி) என அழைக்கப்படும் , இந்தியா உட்பட 16 நாடுகள் அங்கம் வகிக்க இருக்கும் அமைப்பை எதிர்த்து, கடந்த அக்டோபர் 24-25 தேதிகளில், நாடு முழுவதும் விவசாயிகள் மாபெரும் போராட்டத்தை நடத்தினார்கள். ஒப்பந்தப் பேர பேச்சுவார்த்தைகள் இறுதிப்படுத்தப்படவுள்ள நிலையில், இத்தகைய போராட்டங்கள் உச்சத்தை எட்டியிருக்கின்றன. அனைத்திந்திய விவசாயிகள் சங்கம் நவம்பர் 4 அன்று – ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதற்கு சற்று முன்னால் – நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளது. கேரள அரசும் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கிறது!

முதலில் இந்த ஆர்.சி.ஈ.பி என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம் !

ஆர்.சி.ஈ.பியில் அங்கம் வகிக்கும் தெற்காசியாவின் 16 நாடுகளில், பத்து நாடுகள் தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியானில் அங்கமாக இருக்கின்றன. அதாவது இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், தெ.கொரியா உள்ளிட்ட ஆறு நாடுகள் ஆசியான் அமைப்புடன் தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் (Free Trade Agreement – FTA) இருக்கின்றன. இந்த 16 நாடுகளின் மக்கள்தொகை உலகின் சரி பாதியாகும். உலகின் 40 % உற்பத்தியும் 30 % வர்த்தகமும் இந்த நாடுகளிடம் இருக்கின்றன. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், இத்தகைய ஒப்பந்தங்களிலேயே இதுதான் மிகப் பெரிய ஒன்றாக இருக்கும். இந்த ஓர் அம்சமே, இந்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் பரம ரகசியமான முறையில் நடந்து வருவதை, மிகப்பெரும் கண்டனத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.

ஜனநாயகமற்ற வகையில் இந்த ஒப்பந்தம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வருவது உண்மையில் மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பேர பேச்சுக்கள் பரம ரகசியமாக நடத்தப்பட்டு வருகின்றன; நவம்பர் தொடக்கத்தில் அரசுகள் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டால், எஃப்.டி.ஏ., கையெழுத்தாகும், பாதிக்கப்படப்போகும் தரப்பைக் கலந்தாலோசிக்காமல் நிறைவேற்றப்பட்ட, ஒரு ‘செய்து முடிக்கப்பட்ட வினை’யாகிடும் (fait accompli)

இந்த ஒப்பந்தத்துக்குள் வரும் இந்தியா உட்பட எந்த நாட்டின் மக்களும், அவர்கள் மீது இந்த ஒப்பந்தம் ஏற்படுத்த இருக்கும் தாக்குதல்கள் குறித்துக் கருத்து தெரிவிக்க முடியாமல் போய்விடும்.

இந்திய அரசு ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் இந்தத் தாராள வர்த்தக ஒப்பந்தத்துக்குள் நாட்டை இழுத்துச் செல்கிறது என்பதையும் தாண்டி இன்னொரு ஆபத்து இருக்கிறது. மத்திய மாநில அரசுகளின் அதிகார வரம்புகளை வரையறுக்கும் இந்திய அரசியலமைப்பின் 7-ம் அட்டவணைப்படி, விவசாயம் தற்போது மாநில அரசின் அதிகார வரம்புக்குள் வருகிறது.
ஆர்.சி.ஈ.பியோ, அல்லது எந்தவொரு தாராள வர்த்தக ஒப்பந்தமோ, விவசாயத்தை நிச்சயமாகப் பாதிக்கும். என்றாலும், அதன் நிபந்தனைகள் குறித்து மாநிலங்களிடம் கலந்தாலோசிக்கப்படவில்லை. மாநிலங்களின் அதிகார வரம்புக்குள் இருக்கும் ஒரு துறை குறித்து, மத்திய அரசு இப்படி ஒருதலைப்பட்சமாக செயல்படுவது என்பது, மாநிலங்களுடைய அரசியலமைப்பு உரிமையை அப்பட்டமாக மீறும் செயல்.

அமெரிக்காவில், அரசு நிர்வாகம் இத்தகைய பன்னாட்டு ஒப்பந்தங்களில் முன்னதாகவே கையெழுத்திட்டிருந்தாலும்கூட, நாட்டில் ஒப்பந்தம் அமலாவதற்கு முன்பாக அந்த நாட்டின் பாராளுமன்றமான காங்கிரசின் ஒப்புதலைப் பெறுவது அவசியம்.
இந்தியாவிலோ, அரசிலமைப்புச் சட்டம் அத்தகைய நடைமுறைக்கு அழுத்தம் கொடுத்தாலும், அடுத்தடுத்த மத்திய அரசுகள், பாராளுமன்ற ஒப்புதலுக்கு சமர்ப்பிக்காமலேயே, இத்தகைய தாராள வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகின்றன.

உண்மையில், ஆசியான் அமைப்பின் தாராள வர்த்தக ஒப்பந்தம், இரண்டாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால், முற்றிலும் ஒருதரப்பான முறையிலேயே கையெழுத்திடப்பட்டது. கேரள அரசு, தன்னுடைய மாநிலத்தின் சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் மீது இந்த ஒப்பந்தம் ஏற்படுத்த இருக்கும் தாக்கம் குறித்து பெருங்கவலைகள் கொண்டிருந்தது; அப்போதைய முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் தலைமையிலான அரசின் தூதுக்குழு, டில்லி சென்று, மத்திய அரசிடம் தங்களுடைய கவலைகளைத் தெரிவித்தது. தன்னுடைய அமைச்சரவை சகாக்களுடன் இந்தக் குழுவைச் சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங், கேரளாவுடன் கலந்தாலோசித்த பிறகே அந்த ஒப்பந்தம் இறுதியாகக் கையெழுத்திடப்படும் என்று தனிப்பட்ட அளவில் உறுதிகூறினார். இருந்த போதிலும், அடுத்தமுறை கேரள அரசின் தூதுக்குழு நாட்டின் தலைநகரை அடைந்தபோது, தாராள வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுவிட்டதாகக் கேள்விப்பட்டது! பிஜேபி அரசோ, கூட்டாட்சித் தத்துவத்தின் மீது துளிகூட மதிப்பு கொண்டிறாத நிலையில், இந்த அப்பட்டமான அரசியலமைப்பு உரிமை மீறலை வெகு இலகுவாக அடுத்த கட்டத்துக்கு நடத்திச்செல்கிறது.

ஒப்பந்தத்தின் உண்மையான அம்சங்கள் மூடிமறைக்கப்பட்டாலும், விவசாயிகள் இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் வலுவாகவே இருக்கின்றன, காரணம் விவசாயத்தை உள்ளடக்கிய இந்த வகையிலான முந்தைய தாராள வர்த்தக ஒப்பந்தங்கள் எப்போதுமே விவசாயத்துக்கு எதிராக இருந்து வருகின்றன. இந்திய உற்பத்தியாளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி, ஆஸ்திரேலியா, நியுசிலாந்தில் இருந்து மானிய விலையில் இறக்குமதி செய்யப்படும் பால் பொருட்களின் தாக்கம் இங்கு ஏற்கனவே கவனம் பெற்றுவருகிறது. அதேபோல், இந்திய சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்களை, அதுவும் குறிப்பாகக் கேரள உற்பத்தியாளர்களைப் பாதிக்கக்கூடிய, இந்தோனேசியா, மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவுவிலை சமையல் எண்ணெய்க்கான வாய்ப்புகளும் கவனம் பெற்றுள்ளது.

இந்திய-ஆசியான் தாராள வர்த்தக ஒப்பந்தம் ஏற்கனவே சமையல் எண்ணெய் இறக்குமதியை இந்தியாவிற்குள் அனுமதித்துவிட்டது என்பது உண்மைதான். அதேசமயம், அந்த ஒப்பந்தம் அவை மீதான வரி விதிப்புகளையும் அனுமதித்து வந்தது. இந்த ஆர்.சி.ஈ.பி ஒப்பந்தமோ, அதற்கான வாய்ப்புகளை மிகவும் குறைத்துவிடும்.
உண்மையில் இந்தக் காரணத்தால் தான், கோதுமை, பருத்தி இறக்குமதிக்கான வாய்ப்புகள் குறித்த கவலைகளும் அதிகரித்துள்ளன. இவை இந்திய விவசாயத்துறையின் மீது பரவலான தாக்கத்தை ஏற்படுத்தும்.

நாட்டின் தொழிலாளர் சக்தியில் சரிபாதியைக் கொண்டுள்ள வேளாண்துறை, நவீன தாராளமயக் கொள்கையால் ஏற்கனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், பிஜேபி அரசின் பணமதிப்பிழப்பு உள்ளிட்ட மதிகெட்ட செயல்களால் அந்தப் பாதிப்பு மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கும் ஆர்.சி.ஈ.பியின் விளைவுகள் கடுமையானவை.

ஆபத்துகள் இத்தோடு முடியவில்லை. ஆர்.சி.ஈ.பியின் ஒரு அம்சமாக வரயிருக்கும் அறிவுசார் காப்புரிமை ஆதிக்கம், விவசாயிகள் தங்களுடைய விதைகளைப் பயன்படுத்துவதற்குக் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வரும் என்பதோடு மட்டுமில்லாமல், வழக்குகள் இல்லாமல், விவசாயிகள் தங்களுடைய விதைகளைப் பயன்படுத்த முடியாத நிலையையும் உருவாக்கும்.
காப்புரிமை ஆதிக்கத்தின் கடுமையான கட்டுப்பாடுகள், மருந்துத் துறையையும் கடுமையாகப் பாதித்து, மருந்துகளின் விலையை ஏற வைத்து மக்களைக் கடுமையாகப் பாதிக்கும்.

இத்தகைய சூழல், ‘இந்த ஒப்பந்தந்தால், இறக்குமதிகள் மலிவாகி, சரக்குகளின் விலை குறைந்து, நுகர்வோருக்கு நன்மை பிறக்கும்’ என்ற வழக்கமான வாதத்துக்கும் முரணாகவே நிலைமைகள் மாறும் என்பதை காட்டுகிறது.
மேலும் இந்த வாதம், காலனியாதிக்கத்தின் போது, இந்தியாவில் தொழிற்சாலைகள் அழிக்கப்பட்டதை நியாயப்படுத்த, காலனிய அரசாங்கம் முன்வைத்த வாதத்தை முற்றிலும் ஒத்திருக்கிறது.

இயந்திரங்கள் உற்பத்தி செய்த மலிவான பொருட்களின் இறக்குமதியால் விளைந்த, பெருந்திரளான வேலையின்மையையும், பெருந்திரளான வறுமையையும் நியாயப்படுத்த, இத்தகைய மலிவான இறக்குமதிகள், இத்தகைய பொருட்களின் நுகர்வோரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியது என அந்தக் காலத்தில் வாதிடப்பட்டது.
ஆனால், மலிவான இறக்குமதியால் ஏற்படும் பெருந்திரளான வேலையின்மைக்கும் வறுமைக்கும் எதிராகப் போராடுவது மட்டும் இங்கு கேள்வியில்லை.

இந்த மலிவான இறக்குமதியால் சிலருக்கு சிறந்த வாழ்க்கைத் தரம் கிடைக்கும் என்பது முற்றிலும் அற்பமானது. இங்கே இன்னும் ஒரு நுட்பமான புள்ளி உள்ளது.
மலிவான இறக்குமதிகள் உருவாக்கக்கூடிய விவசாயிகளின் நிற்கதியற்ற நிலை என்பது, உழைப்பை வழங்கக்கூடிய வேலையற்றோர் பட்டாளத்தை அதிகரிப்பதுடன், தங்களுடைய கூலிக்கான கோரிக்கைகளை முன்வைக்கும் வலுவற்றவர்களாக அவர்களை ஆக்கிவிடும்.
விவசாயிகள் மற்றும் பிற தொழிலாளர்களின் குறைந்த வருமானம் போன்றவற்றால், ஏற்படக்கூடிய பெருக்க விளைவுகள் வாயிலாக, தற்போது நம்முடைய பொருளாதாரம் வீழ்வதற்காக விரைந்து கொண்டிருக்கும் மந்தநிலை என்பது மேலும் தீவிரமடையும்.
மலிவான இறக்குமதிகளால் பயன்பெறக் கூடிய நபர்கள், விவசாயிகள் ஆதரவற்ற நிலையில் இருந்தாலும், தங்களுடைய வருமான துளியும் பாதிப்புக்குள்ளாத நபர்களாகவே இருப்பார்கள்.
ஆனால், விவசாயிகளின் நிற்கதியற்ற நிலை என்பது ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதிக்கும்போது, மாறாத வருமானம் கொண்ட உழைக்கும் மக்கள் என்று ஒருத்தரும் இருக்க முடியாது.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், விவசாயிகளின் தலையெழுத்து, நாட்டு மக்களின் தலையெழுத்தையும் பெரிய அளவில் பாதிக்கும். அவர்களின் நிற்கதியற்ற நிலை, சமூகத்தின் பரவலான ஒரு பகுதியைப் பாதிக்கும்.
இந்த உண்மை, வேறு சில சந்தர்ப்பங்களில், வேறு சில நிகழ்வுகளால் மறைக்கப்படும் என்பது உண்மைதான். உதாரணமாக, சொத்து விலைவீக்கக் குமிழி போன்றவற்றால் பொருளாதாரத்தில் ஏற்படும் மலர்ச்சி.

உண்மையில் தற்போதுவரை அந்த பாதிப்புகால் மறைக்கப்பட்டே வந்துள்ளது; விவசாய நெருக்கடி என்பது இதுவரை நடுத்தர வர்க்கத்தைப் பாதிக்கவில்லை; ஆனால், தற்போதைய சூழலில், இந்த மலர்ச்சியெல்லாம் அடங்கிவிட்ட நிலையில், அவ்வாறாக வாய்ப்பே இல்லை, அதனால், இனி மேற்கொண்டு வரக்கூடிய நிற்கதியற்ற விவசாயிகளின் நிலை என்பது, பரவலான பாதிப்பை சமூகத்தில் ஏற்படுத்தத்தான் செய்யும், அதனால், மலிவான இறக்குமதிகளால் பயனடைபவர்களாக எஞ்சப் போகிறவர்கள் சொற்ப எண்ணிக்கையிலானவர்களாகவே இருப்பார்கள்.

ஆர்.சி.ஈ.பி வெறும் விவசாயத் துறையை மட்டும் பாதிக்கப் போவதில்லை. கிழக்காசியாவில் இருந்து இந்தியாவிற்குள் குவியக்கூடிய இறக்குமதிகள் இந்திய உற்பத்தித் துறையையும் கடுமையாகப் பாதிக்கும். இரும்பு, உருக்கு, கடல்வளப் பொருட்கள், வேதிப் பொருட்கள், மின்னணுப் பொருட்கள் துறைகள், ஏன் ஆடைத் துறைகள் கூட, ஆர்.சி.ஈ.பின் கீழான வரிவெட்டுகள் குறித்துக் கலக்கமடைந்துள்ளன.
ஒரு சிலர், ‘இப்படிப் பரவாலான உற்பத்தித் தளத்தில் இந்தியா போட்டிகளை இல்லாமல் செய்துவிட்டால், தகுதியற்ற உற்பத்திக் கூடங்களை மூடுவதன் வாயிலாக, நிலைமையை மேம்படுத்த முடியும் அல்லவா?’ எனக் கேட்கிறார்கள்.
இந்தக் கேள்வி, பொருளாதாரம் குறித்த புரிதலற்ற போக்கைக் காட்டிக்கொடுக்கிறது. ஒரு சமூகத்தால் உற்பத்தி செய்ப்பட்ட பொருட்கள்- வளங்களின் அடிப்படையில் அது எவ்வளவு விலை அதிகமாக இருந்தாலும்- அதே சமூகத்தால் முழுவதும் பயன்படுத்தப்படும்போது, அந்தச் சமூகத்தில் அதிகமான வேலைவாய்ப்புகளும், நுகர்வும் இருக்கும்.
ஆனால், அந்தச் சமூகத்து மக்கள் தங்கள் சமூகத்தில் உற்பத்தியாகாமல், வெளியில் இருந்து உற்பத்தியான பொருட்களை வேண்டினால், வேலைவாய்ப்பும், உற்பத்தியும் மட்டும் வீழ்ச்சியடையாது (இறக்குமதி மதிப்புக்கு சமமான அளவுக்கு ஏற்றுமதிகளால் இந்த நிலை சரிப்படுத்தப்படாதவரை), திருத்தத்துக்கு இடமே இல்லாத வகையில் நுகர்வும் குறையும்.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், “தாராள வர்த்தம்” “திறன்” போன்ற வாதங்கள் எல்லாம், முதலாளித்துவ பொருளாதாரத்தின் தூய கருத்தியல் மரபே. அவை பொதுவாக செல்லுபடியாகாது; அவற்றை நாம் விரைவில் மறப்பது நமக்கு நல்லது.
இதுவரை ஆர்.டி.ஈ.பியின் வேலையின்மையை உருவாக்கும், அல்லது வறுமையை உருவாக்கும் விளைவுகளை மட்டுமே நாம் பார்த்தோம்.

எவ்வாறாயினும், அத்தகைய வறுமையுடன் நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் விரிவடையும் (உண்மையில் வறுமையின் பிரதிபலிப்புதான் இது).
இந்தோ-ஆசியான் எஃப்.டி.ஏ., ஏற்கனவே ஆசியான் முகாமுடன் நமது தற்போதைய பற்றாக்குறையை விரிவுபடுத்தியுள்ளது; சீனாவுடனான நமது பற்றாக்குறையைப் போலவே ஆர்.சி.ஈ.பி.,யின் கீழ் இந்தப் பற்றாக்குறை மேலும் விரிவடையும்.
சுருக்கமாகக் கூறுவெதென்றால், ஆர்.சி.ஈ.பி.,யில் கையெழுத்திடுவது என்பது, நாட்டில் வறுமையை ஏற்படுத்துவதற்காக, ஒரு பெரும் தொகையைக் (தற்போதைய விரிந்த பற்றாக்குறையை ஈடுசெய்வதற்காக) கடன் வாங்குவதற்கு ஒப்பானது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s