மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


நவீன குடும்ப உறவு முறையும் முதலாளித்துவத்திற்கான கூலி உழைப்பும்


ச. லெனின்


“குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்கிற எங்கெல்சின் இந்நூல் மார்க்சின் மறைவுக்குப் பிறகு எழுதப்பட்டதாகும். மார்க்ஸ் மறைந்த பிறகு “மூலதனம்” நூலின் இரண்டாம், மூன்றாம் தொகுதிகளை எங்கெல்ஸ் பெரும் முயற்சி செய்து வெளிக்கொண்டு வந்தார். அந்தப் பணிகளின் தொடர்ச்சியாகவே இந்நூல் அமைந்துள்ளது. 1884 ஆம் ஆண்டு எங்கெல்ஸ் இந்நூலுக்கு எழுதிய முன்னுரையில் இதைக் காண முடியும். 

“ஓர் அர்த்தத்தில், பின்வரும் அத்தியாயங்கள் மார்க்ஸ் விட்டுச் சென்ற ஒரு பணியைச் செய்து முடிக்கும் வகையில் அமைந்தவையே… (எங்களின்) பொருள் முதல்வாத ஆராய்ச்சியின் மூலம், தான் கண்ட முடிவுகளின் தொடர்பில் மார்கனது ஆராய்ச்சி விளைவுகளை மக்களின் முன்பாக வைத்து, அதன் மூலம் அவற்றின் முக்கியத்துவம் முழுவதையும் தெளிவாக்க வேண்டும் என்று மார்க்ஸ் திட்டமிட்டிருந்தார். ஏனென்றால் (மார்கனது நூல் வெளியாவதற்கு) நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மார்க்ஸ் கண்டுபிடித்திருந்த வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கருத்தோட்டத்தைத்தான் மார்கன் தன்னுடைய வழியில் அமெரிக்காவில் மறுபடியும் கண்டுபிடித்தார்” என்கிறார் எங்கெல்ஸ்.

எல்.எச்.மார்கன் என்கிற அமெரிக்க மானுடவியலாளர், அமெரிக்க பூர்வகுடி மக்கள் மத்தியில் வாழ்ந்து அங்கு நீண்ட ஆய்வை மேற்கொண்டார். அதன் முடிவுகளை உள்ளடக்கி “பண்டைய சமூகம்” (Ancient Society) எனும் நூலை 1877ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்நூலை ஆதாரமாகக் கொண்டே எங்கெல்ஸ் இந்த நூலை எழுதினார்.

ஏடறிந்த வரலாறுகள் அனைத்தும் 

1848இல் மார்க்ஸ் எங்கெல்சின் கூட்டுப் படைப்பாக வெளியான வரலாற்று ஆவணமான “கம்யூனிஸ்ட் அறிக்கை”யின் முதல் அத்தியாயத்தின் முதல் வரி “இதுநாள் வரையில் நிலவி வந்த சமுதாயத்தின் வரலாறுகள் அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும்” என்று தொடங்கும். மார்கனின் படைப்பு வெளியான பிறகே, எங்கெல்ஸ் தனது “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” எனும் இந்நூலில்தான் இதுவரையான வரலாறு என்பதை மாற்றி “ஏடறிந்த வரலாறுகள்” எல்லாம் வர்க்கப் முரண்பாடுகளையும், வர்க்கப் போராட்டங்களையும் உள்ளடக்கியது என்று மாற்றுகிறார்.

ஏனெனில், அதுவரை ஏட்டில் ஏறாதிருந்த ஆதிப்பொதுவுடமைச் சமூக வாழ்க்கை முறையை மார்கன் தனது கள ஆய்வின் மூலம் தனது நூலில் எடுத்துரைக்கிறார். அச்சமூகம் வர்க்க முரண்பாடற்ற நிலையை உள்ளடக்கியதாக இருந்தது. இதையே “நமது ஏடறிந்த வரலாற்றின் இந்த வரலாற்றுக்கு முந்தைய, அடிப்படையான, முக்கியமான அம்சங்களைக் கண்டுபிடித்து, மறுபடியும் நிர்மாணித்துக் கொடுத்ததுதான் மார்கனுடைய மகத்தான சிறப்பாகும்.” என்று மார்கனின் பங்களிப்பை எங்கெல்ஸ் சுட்டிக்காட்டுகிறார்.

பல்வேறு நாடுகளில், பல குழுக்களாகவும், குலங்களாகவும் வாழ்ந்து வந்த மனிதக் கூட்டம் தன்னகத்தே பலவிதமான வாழ்க்கை முறைகளை கொண்டிருந்தது. அதில் ஏற்பட்ட அடிப்படை மாற்றங்கள் எவ்வாறு குடும்பம் உள்ளிட்ட சமூக நிறுவனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை எங்கெல்ஸ் இந்த நூலில் விளக்குகிறார். மேலும் தனிச்சொத்தின் உருவாக்கம், வளர்ச்சி, கெட்டிப்படுதல், எவ்வாறு ஒருதார மணம் மற்றும் குடும்பம் உள்ளிட்டவற்றில் ஒரு வரைமுறையை ஏற்படுத்தியது என்பதையும் இந்த நூல் விளக்குகிறது.

குடும்பம் 

குடும்பம் என்பது “சென்ற காலத்தில் நடந்ததைப் போல சமுதாயம் முன்னேற, அதுவும் முன்னேறும்; சமுதாயம் மாற, அதுவும் மாறும். அது சமுதாய அமைப்பின் படைப்பு; அதன் பண்பாட்டை அது பிரதிபலிக்கும்….. நெடுந்தூர எதிர்காலத்தில் ஒருதார மணக் குடும்பத்தினால் சமுதாயத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாமல் போனால் அதற்குப் பின்னல் வரப் போகின்றவற்றின் இயல்பை ஆரூடம் கூற முடியாது” என்ற மார்கனின் வரிகளை எங்கெல்ஸ் ஒரு இடத்தில் மேற்கோள் காட்டுகிறார். 

அன்று, அதாவது சுமார் 142 ஆண்டுகளுக்கு முன்பு, ஆரூடம் கூற முடியாத விஷயங்கள் இன்றைய முதலாளித்துவ வாழ்க்கை நிலையில் நமக்கு  சில வளர்ச்சிப் போக்குகளை காட்டுகின்றன. ஏனெனில் நவீன குடும்ப உறவு முறையும் முதலாளித்துவத்திற்கான கூலி உழைப்பை உள்ளடக்கியதாகவே உள்ளது. திருமணம் என்கிற பதிவு இல்லாமல் ஒரு ஆணும் பெண்ணும் ஒரே வீட்டில் வாழ்வது (Live in Relation)  சட்டரீதியாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கெட்டியான பழமைவாதம் நிறைந்த வரைமுறைகளை கடந்து,  பிடித்திருந்தால் இந்த உறவை தொடர்வது அல்லது பிரிந்து செல்வது என்ற இந்நிலையை ஒருபடி முன்னேற்றமாகவே அறிவார்ந்த சமூகம் பார்க்கிறது. அதே நேரம் குடும்பம், குழந்தை, ஒரு வரைமுறை ஆகியவை இல்லாத இந்நிலை முதலாளித்துவத்திற்கு தேவையான சூழல் என்பதையும் நாம் கவனிக்க தவறக்கூடாது.


இரவு, பகல், ஓய்வு நாள், குடும்பத்துடன் ஒருநாள் என்பது போன்ற எவ்வித பந்தமும், அதற்காக ஒதுக்க வேண்டிய நேரமும் தேவை இல்லை என்ற நிலையே, தற்போது மாறிவரும் வேலைச் சூழலுக்கு தேவைப்படுகிறது. எல்லா காலத்திலும் ஆளும் வர்க்கத்தின் நலன் சார்ந்தே குடும்ப  முறையும் மாற்றம் கண்டுள்ளது. அதைப்போலவே, காலநேரம் இன்றி தனது உழைப்பை முதலாளிக்கு விற்கும் நிலையை தக்கவைக்கும் போக்கையே நவீன குடும்ப உறவுமுறைகள் வளர்க்கின்றன என்பது கண்கூடு.

எது நாகரிகம் ?

“மலைவாழ் மக்கள் மத்தியில் பாலியல் வல்லுறவு என்பதை நான் கேள்விப்பட்டதில்லை, அதேபோல் திருட்டு என்பதும் அங்கு கிடையாது” என்று பழங்குடியின மக்கள் மத்தியில் பணியாற்றிய ஒருவர் பதிவு செய்துள்ளார். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற, பஞ்சமும் பசியும் நிறைந்த இன்றைய நவீன சமூகத்தை பொதுவாக நாகரிக சமூகம் என்றும், மலைவாழ் மக்களின் வாழ் நிலையை அநாகரிகம் என்றும் இங்கு அடையாளப்படுத்தப்படுகிறது.

“அன்றைய மனிதர்களுடைய நிலையை இன்றைய நாகரிக மக்களின் மிகப் பெரும்பாலோருடைய நிலையுடன் ஒப்பிட்டால் அது…. மிகப் பெரும் இடைவெளியுடன் இருப்பதை காண்போம். எனினும் இந்த அமைப்பின் அழிவு தவிர்க்க முடியாதது என்பதையும் நாம் மறக்கக் கூடாது… இனக்குழுக்களின் கூட்டு அதன் வீழ்ச்சியின் ஆரம்பத்திற்கு சமிக்ஞையாக இருந்தது”  என்கிறார் எங்கெல்ஸ். 

அதேநேரம் முதலாளித்துவ உற்பத்திமுறைக்கு முடிவுகட்டி எழும் புதிய சமூகத்தில் பெண்களின் நிலை குறித்தும் எங்கெல்ஸ் இந்நூலில் குறிப்பிடுகிறார். அங்கு “பணத்தை கொண்டோ, சமூக ரீதியான இதர அதிகார சாதனைகளை கொண்டோ ஒரு பெண்ணை இணங்கச் செய்யும்படி என்றைக்கும் நேராது. பெண்கள் உண்மை காதலுக்காக மட்டுமின்றி வேறெந்த நோக்கத்துக்காகவும் எந்த ஆணுக்கும் என்றைக்குமே இணக்கமாட்டார்கள்; அல்லது பொருளாதார விளைவுகளை பற்றி அஞ்சி தம்முடைய காதலனுக்கு தம்மை கொடுக்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படாது.” என்ற உண்மையான, பண்பட்ட நாகரிக  நிலை கம்யூனிச சமூகத்திலேயே சாத்தியம் என்பதை எங்கெல்ஸ் இங்கு சுட்டிக்காட்டுகிறார்.

வரலாற்றுப் பொருள்முதல் வாதம்  

“பொருள்முதல்வாதக் கருத்தமைப்பின்படி (கடைசியாக பார்க்கும் பொழுது) உடனடி வாழ்க்கையின் உற்பத்தியும் புனருற்பத்தியுமே வரலாற்றில் தீர்மானமான காரணியாகும். ஆனால் இது இருவகையான தன்மை கொண்டது. ஒரு பக்கத்தில் வாழ்க்கைக்குத் தேவையான‌ சாதனங்களை உற்பத்தி செய்வது. அதாவது உணவு, உடை, வீடு ஆகியவற்றையும், அவற்றைப் பெறுவதற்குத் தேவையான கருவிகளை உற்பத்தி செய்வதாகும். மறுபக்கத்தில், மனிதர்களையே உற்பத்தி செய்வது – அதாவது மனித இனத்தை பெருக்குவது”  

அதே போல் “சமூக அமைப்பை உற்பத்தியின் இந்த இரண்டு வகைகளும் கட்டுப்படுத்துகின்றன. ஒரு பக்கத்தில் உழைப்பின் வளர்ச்சி எந்த கட்டத்தில் இருக்கிறது என்பதும், மறுபக்கத்தில் குடும்பத்தின் வளர்ச்சி எந்த கட்டத்தில் இருக்கிறது என்பதுமே அந்த சமூக அமைப்பைக் கட்டுப்படுத்துகின்றன.” என்று எங்கெல்ஸ் தனது முன்னுரையிலேயே குறிப்பிடுகிறார்.  இதற்கு ஆதாரமாக மார்கனின் ஆய்வு முடிவுகளை உள்ளடக்கி தான் சேகரித்த தரவுகளைக் கொண்டு வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தை எங்கெல்ஸ் இந்நூலில் வலுவாக நிறுவுகிறார்.

சொத்துடைமை வர்க்கத்தின் “அரசு” 

அடுத்தடுத்து வந்த சமூக வளர்ச்சியில் எழுந்த புதிய சமூகத்தில் சொத்துடைமை அமைப்பு எவ்வாறு குடும்ப அமைப்பின் மீது ஆதிக்கம் செலுத்தியது என்பது குறித்தும், தலைமை நிலையிலிருந்த பெண்கள், ஆணுக்கு சரிநிகராக இருந்த பெண்கள், எவ்வாறு சொத்து மற்றும் அதன் வாரிசுரிமை என்ற அழுத்தத்தினால் கட்டுப்பாடுகளுக்கும் ஆதிக்கத்திற்கும் உள்ளானார்கள் என்பதை பல்வேறு குலங்கள் மற்றும் குழுக்களின் பழங்கால வாழ்வியலை கொண்டு இந்நூல் விளக்குகிறது.

சொத்துடைமையின் வளர்ச்சி அரசு எனும் ஒரு அமைப்பு உருவாகும் நிலையை ஏற்படுத்தியது. “அரசு என்பது உடைமை வர்க்கத்தின் ஸ்தாபனம்” தான் என்று எங்கெல்ஸ் குறிப்பிட்டுள்ளதை போல் சொத்துடைமை வர்க்கம் தங்களது சொத்துக்களை பாதுகாக்க அரசு எனும் அமைப்பை கட்டமைத்தன. ஏனெனில் “வர்க்கப் பகைமைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்திலிருந்தே அரசு தோன்றியது; அதேசமயத்தில் அந்த வர்க்கங்களுக்கு இடையில்  நடைபெற்ற மோதல்களின் மத்தியிலிருந்தே அது தோன்றியது…. ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை நசுக்கிச் சுரண்டுவதற்கு அது புதிய சாதனங்களை பெறுகிறது” (வர்க்கங்களுக்கு இடையேயான)  “சண்டை”யின் கடுமையைத் தணிப்பது. “ஒழுங்கு” என்னும் வரம்புக்குள் அதைக் கட்டுப்படுத்துவது அதன் (அரசின்)  நோக்கமாகும்.” என்று அரசின் தோற்றம் மற்றும் அதன் செயல்கள் குறித்த எங்கெல்ஸ் இந்நூலில் விளக்குகிறார்.

ஆதிப்பொதுவுடைமை சமூகத்தின் வாழ்நிலையிலிருந்து தொடங்கி, வர்க்க சமூகங்களாக அவை வளர்ந்த அம்சங்களையும், சொத்துடைமையை பாதுகாக்க குடும்ப அமைப்பு எவ்வாறு வரைமுறைப்படுத்தப்பப்பட்டது என்றும், அதற்காக பெண்கள் மீது திணிக்கப்பட்ட கட்டுப்பாடுகளையும் இந்நூல் பேசுவதோடு, சொத்துடமை வர்க்கத்தின்  நலன் சார்ந்து அரசு உருவானதையும், வர்க்க நலன் சார்ந்த அதன் செயல்பாடுகளையும் இந்நூலில் எங்கெல்ஸ் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தோடு விளக்கியுள்ளார்.



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: