தமிழில்: வயலட்
நாம் முழுமையான ஒன்றாக காண்கிற அனைத்துமே வேறுபாடுகள் கொண்ட பல்வேறு கூறுகளால் ஆனது என்பதையும், அவைகளுக்குள்ளாக முரண்பாடுகள் உள்ளன என்பதையும் மார்க்சியப் பார்வை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது. அவ்வாறு நாம் முழுமையாக பார்க்கிற ஒன்றை கருத்தாக்க அளவில் முழுமையாகவே குறிப்பிடுகிற போதும், அதன் உள்ளார்ந்த பகுதியாக அமைந்திருக்கும் இந்த முரண்பாடுகளைப் பற்றிய விழிப்புணர்வு நமக்கு இருக்க வேண்டும். எதேச்சதிகார, ஃபாசிசத்தனமான அரசுகளின் அரசியல் பொருளாதாரத்தைப் படிக்கும்போது இந்த கட்டளையை மறந்துவிடக் கூடாது.
ஏகபோக மூலதனத்தின் உறுதியான ஆதரவுடன் தான் எதேச்சதிகார, ஃபாசிச தன்மை கொண்ட அரசுகள் என்பதை மார்க்சியர்கள் பல காலமாக பார்த்து வந்திருக்கிறோம்; அத்தகைய அரசுகள் அமைவதில் ஏகபோக மூலதனமே முக்கியப் பங்காற்றியிருக்கிறது. உதாரணத்திற்கு புகழ்பெற்ற மார்க்சிய பொருளாதார அறிஞர் மிகெல் கலெக்கி, “பெரும் தொழில்களும், வளரும் ஃபாசிச சக்திகளும்அமைத்துக்கொண்ட” கூட்டணியின்மீதுதான் 1930களில் ஐரோப்பாவில் ஃபாசிச அரசாங்கங்கள் அமையப்பெற்றன என்கிறார். அப்படிப்பட்ட அரசாங்கங்களுக்குத் தரும் ஆதரவுக்கு பதிலாக, அதனிடமிருந்து பெரிய ஒப்பந்தங்களையும் சலுகைகளையும், அவற்றின் வழியாக இலாபத்தையும், ஏகபோக மூலதனம் தன் பங்காக பிய்த்துத் தின்கிறது.. ஏகபோக மூலதனத்தின் எல்லா பிரிவுகளுமே இத்தகைய ஃபாசிச, அரை-ஃபாசிச, எதேச்சதிகார அரசாங்கங்களால் பலமாக இலாபமடைகின்றன என்றாலும் கூட, அந்த இலாபம் எல்லா பிரிவுகளுக்கும் சமமாகக் கிடைப்பதில்லை. பெரும் தொழில்களுக்குள்ளேயே ஒரு சில குழுக்கள் மட்டும் சலுகையோடு நடத்தப்படுகின்ற, அவை வழமையாக புதிய ஏகபோகக் குழுக்களாக இருக்கும். இந்த நடைமுறை குறித்து மார்க்சிய ஆராய்ச்சிகளில் நிறைய கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது.
ஃபிரெஞ்சு இடதுசாரியான டேனியல் குயரின் தனது ஃபாசிசமும் பெருவணிகமும்(1936) என்ற நூலில், துணி உற்பத்தி போன்ற பாரம்பரிய தொழில்துறைகளில் இயங்கும் பழைய ஏகபோகக் குழுக்களுக்கும், ஆயுதங்கள் போன்ற கடுமையான தொழில்துறைகளில் இயங்கும் புதிய ஏகபோக குழுக்களுக்குமான வேறுபாட்டை பேசுகிறார். இந்த புதிய குழுக்கள் ஐரோப்பாவின் ஃபாசிச அரசாங்கங்களுடன் நெருக்கமான கூட்டு கொண்டிருந்திருக்கின்றன. இதேபோல ஜப்பானில் பழைய சைபாட்சுவுக்கும், (ஷின்கோ சைபாட்சு என்றழைக்கப்படும்) புதிய சைபாட்சுவுக்குமான வித்தியாசங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. (சைபாட்சு என்றால் ஏகபோக குடும்பங்களை குறிக்கும் சொல் ஆகும்)
மிட்சுய், மிட்சுபிஷி, சுமிடோமோ மற்றும் யசுடா போன்ற பழைய சைபாட்சு பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும், பெரும்பாலும் பாரம்பரியமான துறைகளுக்குள்ளேயே இயங்கின. ஷின்கோ சைபாட்சுகள்,முதன்மையாக நிசான் உள்ளிட்டவை, மேற்சொன்னவர்களுக்கு நேர்மாறாக ஆயுத வியாபாரம், வெளிநாட்டில் கனிம சேகரிப்பு உள்ளிட்ட கடினமான தொழில்துறைகள் போன்ற புதிய தொழில்களில் ஈடுபட்டன. நிசான் கொரியாவில் பெருமளவு கனிமச் சுரங்கங்களை அமைத்திருந்தது. கொரியாவின் உள்ளூர் தொழிலாளர்களைப் படுமோசமான சூழல்களில் வேலை வாங்கி, கனிம வளம் குறைவாக இருந்த ஜப்பானின் போர் இயந்திர தயாரிப்புக்காக பயன்படுத்திக்கொண்டது. இந்த ஷின்கோ சைபாட்சுகள், 1930களில் ஜப்பானின் இராணுவ அரசுக்கு மிக நெருக்கமாக இருந்தன என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இந்தியாவிலும் மேற்சொன்ன கருதுகோளானது எதேச்சாதிகாரத்தை நோக்கிய மாற்றப்போக்குகளில் வெளிப்பட்டது. பாரம்பரியமான ஏகபோகத்தை விடவும் ஒப்பீட்டளவில் முரட்டுத்தனமான புதிய ஏகபோகபகுதிகள் உருவானதோடு, இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலத்தில் வெளிப்பட்ட விஷயங்களை நாம் இவ்வாறு தொடர்புபடுத்த முடியும்.
இந்தியாவில் இப்போது நிலவுகிற சூழலை ஆராயும் போது மேற்சொன்ன புரிதல்களை மனதில் கொள்ள வேண்டும். பெருநிறுவன ஆதரவு இல்லாமல் 2014, 2019 இருமுறையும் மோடி அரசு ஆட்சியைப் பிடிப்பது சாத்தியமாகியிருக்காது என்பது வெளிப்படை. மோடி முதலமைச்சராக இருந்த குஜராத்தில், 2014க்கு சிலகாலம் முன்பு பல பெரும் பெருநிறுவனத் தலைகள் பங்கேற்புடன் நடந்த முதலீட்டாளர்கள் மாநாடு ஒன்றில்தான் மோடியை எதிர்கால பிரதமராக முன்னிறுத்தும் யோசனை வெளிப்படுத்தப்பட்டது. ஒரு எளிய விசயத்திலிருந்தே மோடியின் வளர்ச்சியில் பெருநிறுவன ஆதரவின் பங்கைப் புரிந்துகொள்ளலாம்: டெல்லியைச் சேர்ந்த ஒரு அரசுசாரா நிறுவனம் தரும் விபரங்களின்படிபடி, 2019 பாராளுமன்ற தேர்ந்தலில் பாஜகரூ. 27,000 கோடி செலவிட்டிருக்கிறது. இடதுசாரிகளை விட்டுவிடுவோம், இந்தத் தொகை வேறெந்த முதலாளித்துவ கட்சி செலவு செய்ததை விடவும் மிக அதிகம். ஏறக்குறைய ஒவ்வொரு பாராளுமன்றத் தொகுதிக்கும் ரூ.50 கோடி செலவு செய்துள்ளனர். மிக தாராளமான பெருநிறுவன நிதி உதவி இல்லாமல் இந்த அளவு செலவுகள் செய்ய வாய்ப்பேயில்லை.
தற்போதைய அரசாங்கத்தை பெருநிறுவன-வகுப்புவாத கூட்டணியில் அமைந்தது என்று அழைப்பது மிகப் பொருத்தமாகவே இருக்கும்; பெருநிறுவனங்கள் இந்தக் கூட்டணியில் நன்றாகவே இலாபம் பெற்றிருக்கின்றன. நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதற்கு மோடி அரசு ஆட்சியில் இருக்கும்வரை எந்தத் தீர்வும் தென்படவில்லை என்பதெல்லாம் உண்மைதான்; ஆனால் இந்தப் நெருக்கடி அமைப்புரீதியானது (Structural) என்பதையும் மறந்துவிடவேண்டாம். நவதாராளவாதம் முன்னோக்கிச் செல்ல வழியின்றி முட்டி நிற்பதால் ஏற்படுவது. இப்படிப்பட்ட நெருக்கடிச் சூழலிலும் மோடி அரசாங்கம், ஏகபோக முதலாளிகளின் இலாபத்திற்கு அணைபோடுவதில்லை. பொதுத்துறை நிறுவனங்களையும் சல்லிசான விலையில் அவர்களுக்கு வசமாக்குகிறது. சொல்லப்போனால் தனது நட்புக்குரிய பெருநிறுவனங்களுக்கு எப்படி உதவுவது என்பதுதான் இந்தப் நெருக்கடியைக் குறித்து இந்த அரசின் ஒரே கவலையாகும். அவற்றின் “ஜீவஆற்றலை” ஊக்குவிப்பதாகச் சொல்லி, மாபெரும் வரிக்குறைப்பினை (ரூ.1.5 லட்சம் கோடி அளவுக்கு) மோடி அரசாங்கம் அந்த பெருநிறுவனங்களுக்கு வாரி வழங்கியிருக்கிறது.
(ஜீவ ஆற்றல் எனும் சொல் முதலாளித்துவ பொருளாதார அறிஞர் கெய்ன்ஸ், நுகர்வை ஊக்கப்படுத்தும் பொருட்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை குறிப்பிட பயன்படுத்திய சொல் ஆகும்)
இத்தகைய தாராள நடவடிக்கையின் பின்விளைவுகள், நிச்சயமாக, தீர்க்கவே முடியாத நெருக்கடிச் சூழலுக்கு வழிவகுப்பதாகவே அமைந்திடும்; விலக்களிக்கப்பட்ட இந்த வருமானத்தினால் பொதுச் செலவில் துண்டு விழுந்தாலோ, பொதுச் செலவை சரிகட்டுவதற்காக உழைக்கும் மக்களின் மேல் மேலும் கூடுதலான வரிகள் சுமத்தப்பட்டாலோ, இந்த நெருக்கடி இன்னும் தீவிரமே அடையும். நெருக்கடி தீவிரமடையும் பட்சத்தில்கூட, இந்த தாராளத்தின் காரணமாக பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிகர இலாபம் கிடைத்திருக்கும்.
அரசாங்கத்தின் உண்மை நோக்கத்தை விளக்கும் வகையில் எண்களைக் கொண்டு இந்த விளக்கத்தை தெளிவாக்கலாம். பெருநிறுவனங்களுக்குரூ. 1.5 லட்சம் கோடி ரூபாய்கள் வரிவிலக்கு கொடுத்துவிட்டு, அதே அளவு, அதாவது 1.5 லட்சம் கோடி ரூபாயை, இந்த அரசு தன்னுடைய செலவுகளில் குறைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். வெளிநாட்டு வணிகத்தையும் சேர்த்தால் வரும் குழப்பத்தைத் தவிர்க்க, நம்முடையது ஒரு வெளித்தொடர்பற்ற பொருளாதாரம் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் பெருநிறுவனங்களுடைய வருமானம் கால் பங்கு என்று வைத்துக்கொண்டால், அதில் அவர்கள் மூன்றில் ஒரு பங்கை சேமிக்கிறார்கள். மீதமிருக்கும் முக்கால் பங்கு ஜி.டி.பிதொகையில் 1/3 பாகம் சேமிப்பாகிறது. ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் சேமிப்புக்கும்-ஜிடி.பிக்கும்இடையிலான விகிதம் மூன்றில் ஒரு பங்காக இருக்கிறது. (பொருளாதார கணக்கீடுகளின்படி ‘பெருக்க விளைவின் விகிதம்’ [value of the multiplier] என்பது சேமிப்பு விகிதத்திற்கு தலைகீழாக அமையும். மேற்சொன்ன கணக்கின்படி அது 3 ஆகும்) எனவே அரசாங்கம் தன்னுடைய செலவினைரூ. 1.5 லட்சம் கோடி குறைப்பதன் காரணமாக,ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரூ.4.5 லட்சம் கோடிகள் அளவுக்கு வீழ்ச்சி ஏற்படும். இதன் காரணமாக பெருநிறுவனங்களுடைய வருமானம், வரிக்கு முன் கணக்கிடும்போது, ரூ.1.1 லட்சம் கோடியாக வீழ்ச்சியடையும் (மேற்சொன்ன 4.5 லட்சம் கோடியில் கால்பங்கு). ஆனால்,வரிக்கு பிறகான கணக்கீட்டில் பெரு நிறுவனங்கள் ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு லாபம் பெற்றிருப்பார்கள். பெருநிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட வரிச்சலுகையானது, அதன் செலவினங்களை அதே அளவுக்கு குறைக்கின்றது; வரிவிலக்கின் காரணமாக, பொருளாதார நெருக்கடி தீவிரமாகிறது; வேலையின்மை அதிகரிக்கிறது. ஆனாலும் வரிக்குப் பிறகான கணக்கீட்டில் பெருநிறுவன வருமானம் அதிகரிக்கிறது.
சுருக்கமாகச் சொன்னால், அரசின் நடவடிக்கைகள் பொருளாதார நெருக்கடியைதீர்க்க அல்ல; இந்தப் நெருக்கடியின் போதும் பெருநிறுவனங்களின் இலாபம் அதிகரிப்பதை உறுதிசெய்யவே. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பெருநிறுவனங்களை மொத்தமாக இலாபமடையச் செய்தாலும், அவர்களுக்குள்ளேயே சில பெருநிறுவனங்கள் மீது சிறப்பு அக்கறை காட்டுகிறது. இவர்களை நம் நாட்டின் ஷின்கோ சைபாட்சு எனலாம், புதிய, தீவிர வணிக நிறுவனங்களான இவர்கள் இந்த அரசை ஆதரிப்பவர்கள்.
பெருநிறுவனங்களுக்கு இடையிலேயே நம்மால் ஒரு வேறுபாட்டைப் பார்க்க முடிகிறது, குறிப்பாக அம்பானி, அதானி குடும்பத்தார் முதன்மையாக இருக்கும் புதிய நிறுவனங்கள் ஒருபுறம். மோடி அரசின் சலுகைகளில் சிறப்பாக விருப்பத்துக்கு உரியவர்களாக விளங்கும் இவர்கள், இந்த கூட்டுச் சலுகையின் இலாபங்களில் பெரும் பங்குகளைப் பெறுகிறார்கள். மற்றவர்களும் மோடி அரசால் பலன் பெறுபவர்கள்தான். ஆனால் இந்த முதல் குழுவினர் அளவுக்கு அல்ல. பெருநிறுவன முதலாளிகளுக்கு இடையே இரண்டு குழுக்கள். பாரம்பரியமானவர்கள் மற்றும் தீவிரமான புதியவர்கள். இதில் இரண்டாம் குழுவினர் எதேச்சதிகார அரசோடு நெருக்கமாக இணைந்திருப்பவர்கள் என்ற இந்த கருத்தாக்கத்துக்கு சமகால இந்தியச் சூழலில் குறிப்பிட்ட அளவு மதிப்பிருக்கிறது.
அதானிக்கள் குஜராத்தில் வளர்ச்சி அடைந்ததற்கும் நரேந்திர மோடி அந்த மாநிலத்தின் முதல்வராக இருந்ததற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது, மோடி தேசிய அளவில் ஊடக வெளிச்சம் பெற்றபோது அதானிகளும் மத்திய அளவில் நகர்ந்தனர். மோடி 2014இல் பிரதமராக பதவியேற்க அதானியின் விமானத்தில்தான் வந்தார் என்பதே அவர்கள் இருவருக்கும் இடையிலான நெருக்கத்தைக் காட்டும். அதேபோல அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு எந்த அனுபவமும் இல்லாத பட்சத்திலும், பொதுத்துறை நிறுவனங்களைத் தாண்டி ரஃபேல் ஒப்பந்தத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டது. கள்ளக் கூட்டு பாரபட்சத்துக்கு (க்ரோனியிசம்) இதுவே ஆகச்சிறந்த உதாரணம். அதேபோல பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் மிக மோசமாக நடத்தப்படுகிறது. அதுவும் எல்லா வழிகளிலும் முகேஷ் அம்பானியின் ஜியோவுக்கு ஏகபோக சந்தையை அமைத்துத்தர வேண்டியே. இந்த நிறுவனங்களே சிறப்பாக அரசின் விருப்பத்துக்குரியவை.
பெருநிறுவன-நிதி தன்னலக்குழுக்களை ஒரு முழுமையாகப் பார்ப்பது, அதனிடையே இருக்கும் வித்தியாசங்களையும் முரண்பாடுகளையும் புரிந்து கொள்வதற்கு தடையாக வரக்கூடாது. அமித்ஷா பங்கேற்ற ஒரு வணிக நிகழ்வில் ராகுல் பஜாஜ் வெளிப்படையாக அரசை விமர்சித்து, பல பாஜக ட்ரால்களின் (சமூக ஊடகங்கள் மூலமாக தாக்குதலில் ஈடுபடும் குழுக்கள்) வெறுப்புக்கு ஆளானதையும் இந்த அடிப்படையிலேயே புரிந்து கொள்ள வேண்டும். இந்திய ஃபாசிச வகையிலான அரசாட்சியானது, வரலாற்றில் அதையொத்த அரசாட்சிகள் வெளிப்படுத்திய அதே பண்புகளையே தானும் கொண்டிருக்கிறது.
Leave a Reply