மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


பெருந்தொற்றை வீழ்த்திய சீனாவின் சோசலிசம்!


இரா.சிந்தன்

உலகம் இதற்கு முன்பு பார்த்திருக்காத ஒரு புதிய கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை 2019 டிசம்பர் இறுதியில் சீனா முதன் முதலில் எதிர்கொண்டது. பிறகு அது உலகம் முழுவதும் பெருந்தொற்றாக பரவியது.

கொரோனா வைரசை முதன் முதலாக எதிர்கொண்ட நாடு என்ற வகையிலும்,  குறிப்பிடத்தக்க வெற்றியை சாதித்திருக்கும் நாடு என்ற வகையிலும் சீன அனுபவங்கள் தனித்துவமானவை. அடுத்தடுத்து புதிய கிருமிகளால் ஏற்படும்  கொள்ளை நோய்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற அறிவியலாளர்களின் எச்சரிக்கையை மனதில் கொண்டால் சீனாவின் உடனடி செயல்பாட்டின் படிப்பினைகள் உலக மக்களுக்கு முக்கியமானவை என்பது புரியும்.  மேலும் இது சோசலிசத்தின் மேன்மையையும் உணர்த்துகிறது.

சோசலிசமும் பொது சுகாதாரமும்:

1918 ஆம் ஆண்டு ஸ்பானிஷ் ஃப்ளூ தொற்று நோய் பரவியது. முதல் உலகப்போரைத் தொடர்ந்து இந்த தொற்று கோடிக்கணக்கான உயிர்களை குடித்தது. அப்போதுதான் உருவாகியிருந்த சோசலிச சோவியத் குடியரசிலும் நோய் பாதிப்பு இருந்தது. வி.இ.லெனின் இதற்கென பொது சுகாதார அமைச்சகத்தை ஏற்படுத்தினார். மேலும் அவர் ”உள்நாட்டு யுத்தத்தை எதிர்கொள்வதில் பெற்ற  அனுபவம் அனைத்தையும் தொற்று நோய்களை எதிர்கொள்வதில் பயன்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டார்.

உலகில் முதன் முறையாக  மையப்படுத்தப்பட்ட, பொது சுகாதார அமைப்பை ஏற்படுத்தியது சோவியத் ஒன்றியத்தில் அமைந்த சோசலிச அரசாங்கமே ஆகும். ஊரக பகுதிகளுக்கும் அது பின்னர் விரிவுபடுத்தப்பட்டது. இது அன்றைய காலத்தின் மிகப்பெரும் சாதனை என ஸ்பானிஷ் ஃப்ளூ பரவல் பற்றிய ‘பேல் ரைடர்’ என்ற புத்தகத்தில் லாரா ஸ்பிண்டி என்ற பத்திரிக்கையாளர் எழுதியுள்ளார்.

அனைத்திலும் முதன்மையானது மனிதர்களின் நலவாழ்வுதான் என்ற  அணுகுமுறைதான் முதலாளித்துவ கட்டமைப்பில் இருந்து சோசலிசத்தை வேறுபடுத்துகிறது. கியூபா மருத்துவத்துறையில் ஆற்றியிருக்கும் மகத்தான சாதனைகளை நாம் அறிவோம். சீனாவின் கள சூழல் வேறுபட்ட ஒன்று. கொரோனா நோய் எதிர்ப்பில் அவர்களுடைய போராட்டத்தைக் குறித்து பார்ப்போம்.

சீனாவில் பொது சுகாதாரம்:

1949 இல் மாவோவின் தலைமையில் மக்கள்சீன புரட்சி அரசாங்கம் அமைந்தது. 1950 நடைபெற்ற தேசிய சுகாதார மாநாட்டில் உருவாக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் இப்போதும் கவனிக்கத் தக்கவை. 

1) விவசாயிகள், தொழிலாளர்களாகிய வெகுமக்கள் நலனுக்கு பணியாற்றுவதே சுகாதாரப் பணியாளர்களின் முதன்மையான கடமை. 
2) நோய்களை முன் தடுப்பதுதான் முதன்மை இலக்கு.
3) நவீன மருத்துவத்தையும் பாரம்பரிய மருத்துவத்தையும் சமமாக வளர்த்தெடுக்க வேண்டும்.
4) மருத்துவ பணியாளர்களுடைய செயலூக்கம் மிக்க பங்களிப்புடன் மக்களுக்கு விழிப்புணர்வை கொண்டு சேர்ப்பது முக்கியமானது.

இப்போது சீனாவின் மக்கள் தொகை 140 கோடியாக உள்ளது.  உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ளது. ஆனாலும் சீனா ஒரு வளரும் நாடுதான். எனவே பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், ஊரகங்கள் மற்றும் நகரங்களுக்கான இடைவெளியும் அதிகமாக உள்ளன. சீனா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்தை பொது சுகாதாரத்திற்காக செலவிடுகிறது. ஆயிரம் பேருக்கு 2 மருத்துவர்கள் உள்ளார்கள். 2.7 செவிலியர்கள் உள்ளனர். 4.34 படுக்கைகள் உள்ளன. இதிலிருந்தே சீனாவின் கட்டமைப்பு இன்னும் மேம்பட வேண்டியிருப்பதை அறிய முடியும்.

சமீபத்தில் புதிய சகாப்தத்தில் சீன சமூகத்தில் வெளிப்படும் முரண்பாடுகளை கம்யூனிஸ்ட் கட்சி ஆய்வு செய்தது. முக்கிய முரண்பாட்டை அடையாளமும் கண்டது. சீன மக்களிடையே பொருளாயத தேவைகள் அதிகரித்துள்ளன, உணவு, உறைவிடம் என்பதோடு கூடுதலான புதிய தேவைகள் உருவாகியுள்ளன, நலவாழ்வுக்கான விருப்பம் அதிகரித்துள்ளது. பண்பாட்டு வாழ்க்கையில் புதிய தேவைகள் உருவாகியுள்ளன. இவையெல்லாம் சமனற்ற, போதாக்குறையான வளர்ச்சியோடு முரண்படுகின்றன என்பது கம்யூனிஸ்ட் கட்சியின் கணிப்பாகும். இதனை மனதில் கொண்டுதான் சீன கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுகிறது.

கொரோனா எதிர்ப்பு மக்கள் யுத்தம்:

சீனாவின் ஊகான் நகரத்தில் நோய்த்தொற்று கண்டறியப்பட்ட ஒரு சில வாரங்களிலேயே பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு நோய் பரவியிருந்தது. அந்த நகரத்தில் மருத்துவமனை, மருத்துவர் மற்றும் மருந்து பொருட்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டது. இதே வேகத்தில் நோய் பரவினால் பொது சுகாதார கட்டமைப்பே பெரும் சுமைக்கு ஆளாகி, சமூக நெருக்கடியாகிவிடும்.

ஜனவரி 7 ஆம் தேதி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை நிலைக்குழு கூடியது. நோய்த்தொற்று நிலைமைகளை அது ஆய்வு செய்தது. உடனடியாகவும், அதிவிரைவாகவும் செயல்படுவதுதான் அவர்களுக்கு இருந்த ஒரே வாய்ப்பு.  அப்போதிருந்தே சீன கம்யூனிஸ்ட் கட்சி இதனை ஒரு மக்கள் யுத்தமாக வழிநடத்தியது. 

“புரட்சிகர யுத்தம் என்பது மக்கள் நடத்துகின்ற ஒன்றாகும். மக்கள் சக்தியை திரட்டுவதன் மூலம் மட்டுமே நாம் அந்த போரினை நடத்த முடியும், மக்களை சார்ந்திருப்பதன் மூலமே அந்த போரை முன்னெடுக்க முடியும்” என்கிறார் தோழர் மாவோ. இந்த போராட்டம் நீண்ட ஒன்று, உத்திகளை மாற்றியமைத்து, உள்ளூர் நிலைமைகளை சரியாக கணக்கிட்டு மெல்ல மெல்ல முன்னேற வேண்டும். சீனாவில் வெற்றிபெற்ற சோசலிச புரட்சி அந்த கருத்தாக்கத்தின் நல்ல உதாரணமாகும். 

மக்கள் யுத்த கருத்தாக்கத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்பதுதான் ஜி ஜின்பிங் வலியுறுத்திவந்த கருத்து. கொரோனா எதிர்ப்பு போராட்டத்தில் அந்த கருத்தாக்கம் பயன்பட்டது. மக்கள் நலவாழ்வே முதன்மையானது என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நாட்டின் அனைத்து வளங்களும் இந்த போராட்டத்திற்காக திருப்பிவிடப்பட்டன. சீன குடியரசுத்தலைவர் ஜி ஜின்பிங், ஒவ்வொரு கட்டத்திலும் இப்போராட்டத்தை வழிநடத்தினார். சீன பிரதமர் லி கெகியாங் கொரோனா எதிர்ப்பு குழுவிற்கு தலைமையேற்று ஒருங்கிணைத்தார்.

இந்த ’யுத்தம்’ இரண்டு முனைகளில் முன்னெடுக்கப்பட்டது. முதலாவது மருத்துவமனைகள். அங்கு வரும் நோயாளிகளின் உயிரை காப்பாற்றுவது முக்கியம். இரண்டாவது நோய் பரவல் தடுப்பு  நோயால் பாதிக்கப்பட்டோரை கண்டறிந்து தனிமைப்படுத்துதல். அதற்கு தேவையான வழிமுறைகளை வகுத்து விரைவாக செயல்படுவது.

ஜனவரி 23 ஆம் தேதி ஊகான் நகரமும் ஹுபே மாகாணமும் உலகம் கண்டிராத மிகப்பெரும் ஊரடங்கினை தொடங்கியிருந்தன. நாட்டின் அனைத்து மாகாணங்களில் இருந்தும் மருத்துவர்கள், நவீன உபகரணங்கள் மற்றும் இதர வளங்களை திரட்டி அங்கே அனுப்பினார்கள். 330 மருத்துவக் குழுக்களும் 41600 மருத்துவ பணியாளர்களும் ஊகானில் குவிக்கப்பட்டார்கள். 

தொற்றுநோய் தடுப்பு சிறப்புக் குழுவினர் 1800 பேர்  ஊகானிற்கு அனுப்பப்பட்டார்கள்.  ஐந்தைந்து பேர் ஒரு குழுவாக இணைந்து ஒவ்வொரு வீட்டிலும் நேரில் சென்று ஆய்வு செய்தார்கள்.  

முதலில் ஊகானிலும் அதை தொடர்ந்து சீனா முழுவதும் பின்பற்றப்பட்ட சில நடவடிக்கைகள் இங்கே குறிப்பிடத்தக்கன. தொற்றாளர்களின் தொடர்புகளை தடமறிய பழைய முறைகளுடன் சேர்த்து டிஜிட்டல் முறைகளும் பின்பற்றப்பட்டன. தொற்றாளர்கள் பயணித்த இடங்களுக்கு மற்றவர்கள் செல்லாமல் தவிர்க்கும் வகையில் எச்சரிக்கை பகிரப்பட்டது. 3 வார காலத்தில் 14 கோடி முறை இதற்காக இணையதள வசதி பயன்படுத்தப்பட்டதாகவும், அக்காலகட்டத்தில் 80 ஆயிரம் பேர் மட்டுமே பயணங்களை மேற்கொண்டதாகவும் அந்த நாட்டின் விபரங்கள் தெரிவிக்கின்றன. ஜெஜியாங் போல சில பகுதிகளில் சாலையில் சிக்னல் வைப்பது போல உடல்நிலையை பரிசீலித்து அடையாளம் காட்டும் சிக்னல்கள் அமைக்கப்பட்டன. சீனாதான் உலகிலேயே மிக அதிகமான இணைய பயன்பாட்டாளர்களை கொண்ட நாடு. அதன் காரணமாக அரசின் சுகாதார கண்காணிப்பு வசதிகளை இணையம் வழியாக சுமார் 90 கோடிப்பேர் பயன்படுத்த முடிந்துள்ளது. 

மருத்துவக் கழிவுகளை கையாள்வதற்காக 13 மாகாணங்களில் இருந்து 140 சிறப்பு நிபுணர்கள் வந்தனர்.  ஒரு நாளைக்கு 1220 டன்கள் மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பாக கையாளும் வகையில் தகுதி படிப்படியாக உயர்த்தப்பட்டது.

ஷாங்காய் நகரத்திலிருந்து ஊகானுக்கு சென்று செவிலியர் பயிற்சிக்காக தன்னை இணைத்துக் கொண்ட செவிலியர் ஹு நானா தனது கடிதத்தில் இவ்வாறு எழுதியிருந்தார். “எல்லோரும் நலமாக இருந்தால் மட்டுமே எங்களின் சிறு குடும்பமும் பாதுகாப்பாக இருக்க முடியும். பல குடும்பங்கள் தங்கள் குடும்பத்தோடு வாழவேண்டும் என்பதற்காக நான் எனது வீட்டை விட்டு வெளியே செல்லும் முடிவை எடுத்தேன். என்னுடைய தேசம் நடத்துகிற போராட்டத்தில் என்னுடைய பங்களிப்பு அவசியம். முன்னேறிய மருத்துவ தொழில்நுட்பங்கள் எங்களிடம் இருக்கின்றன. எனவே எனக்கு ஏதும் அச்சமில்லை. நான் கற்றுக்கொண்ட அனைத்தையும் என் திறமைகளையும் கொண்டு இந்த போராட்டத்திற்கு உதவி செய்வதென முடிவு செய்தேன்.

முதல் கட்ட போராட்டம் அடுத்தடுத்த நிலைகளை எட்டியது. ஜி ஜின்பிங் இவ்வாறு விவரிக்கிறார் “தொற்றுநோய் நாடுமுழுவதும் பரவுதலை  கட்டுப்படுத்த ஒருமாதம் எடுத்தது, தினசரி கண்டறியப்படும் உள்நாட்டு தொற்று எண்ணிக்கை இரண்டாவது மாதத்தில்தான் ஒற்றை இலக்கத்தை எட்டியது. ஊகான் நகரம் அமைந்துள்ள ஹுபெ மாகாணத்தில் போராட்டம் குறிப்பிடத்தக்க வெற்றியை சாதிக்க மூன்றாவது மாதம் ஆகியது”.

ஏப்ரல் 26 ஆம் தேதி ஊகானில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தொற்றாளர்களின் எண்ணிக்கை பூஜ்ஜியம் ஆகியது. ஹுபே மாகாணத்தில் சிகிச்சை பெற்று நலமடைந்தவர்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தீவிர சிகிச்சை பெற்று குணமடைந்தார்கள் என்பதையும், இதில் 3 ஆயிரத்து 600 பேர் 80 வயதுக்கும் அதிகமான முதியவர்கள் ஆவார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். இந்த போராட்டத்தில் வேதனை தரும் வகையில் மருத்துவப் பணியாளர்கள் 46 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தார்கள். முதல் முனையில் போராட்டத்தின் தீவிரம் குறைந்துள்ளது. இரண்டாவது முனை எப்போதும் விழிப்போடு இருக்க வேண்டியுள்ளது.

இந்தப் போராட்டம் முடிந்துவிடவில்லை என்பதை சீனா அறிந்தே வைத்திருக்கிறது. மேலும் தடுப்பு மருந்துகள் மற்றும் சிகிச்சை வழிமுறைகளில் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. 

நோயுடன் ஒரு சதுரங்கம்:

தொற்றுநோய் தடுப்பு போராட்டத்தை விவரிக்கும்போது அதனை ஒரு சதுரங்க விளையாட்டாக ஒப்பிட்டார் ஜி ஜின்பிங். சீன தேசமே அந்த சதுரங்கத்தை ஆடியது.  மருத்துவப் பணியாளர்களும், அறிவியல் அறிஞர்களும் ஒரு அணியாக நின்றார்கள் எனில், அந்த நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியும், சோசலிச அரசாங்கமும், அரசு நிறுவனங்களும் பின்பலமாக நின்றார்கள். 90களுக்கு பிறகு பிறந்த இளைஞர்களின் பங்களிப்பு இதில் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. 

அனைவருக்கும் இலவச சிகிச்சை:

ஊகான் நகரத்தில் ஊரடங்கு அறிவிப்பதற்கு ஒரு நாள் முன்பாகவே, பணம் இல்லாத காரணத்தால் குடிமக்களின் ஒருவருக்கும் கூட கொரோனா பரிசோதனையோ அல்லது சிகிச்சையோ மறுக்கப்படக் கூடாது என்பதை அரசு தெளிவுபடுத்தியது.

சீன மருத்துவ காப்பீட்டு ஆணையத்தின் கணக்கீட்டின் படி கொரோனா தொற்று கண்டறியப்பட்ட உள்நோயாளிகளுக்கான செலவு தலா 2லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகும். தீவிர சிகிச்சை தேவைப்பட்டவர்களுக்கான செலவு 15 லட்சத்தை தாண்டியது.  70 வயதாகிய கொரோனா நோயாளி ஒருவருக்கு 3 மாதங்கள் சிகிச்சை தொடர்ந்து தரப்பட்டது, அவருக்கு எக்மோ கருவி இரு முறை பயன்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அவரை குணப்படுத்துவதற்கான செலவு சுமார் 1 கோடியே 40 லட்சமாக ஆகியது. 

இந்த செலவுகளில் ஒரு பகுதி இன்சூரன்ஸ் மூலமாகவும், பெரும்பகுதி அரசு நிதியாகவும் ஈடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இக்காலத்தில் செயல்பட்ட அத்தியாவசிய நிறுவனங்களில் பணியாளர்களுடைய பாதுகாப்பை அரசே உறுதி செய்தது. தனியார் நிறுவனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதற்கான நிதி உதவியை அரசு மேற்கொண்டது. 

அதிவிரைவான அறிவியல் ஆய்வுகள்:

தொற்று நோய் தடுப்புக்காக அமைக்கப்பட்ட்ட குழுக்களின் அதி முக்கியத்துவம் வாய்ந்தது பல துறை அறிவியல் அறிஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்ட குழுவாகும். உலகம் பல தொற்றுநோய்களை எதிர்கொண்டிருக்கிறது காலரா, பிளேக், சின்னம்மை மற்றும் தொழுநோய் ஆகியவை பரவுவதை அறிந்து கொள்ளவும், தடுப்பதற்கும் நீண்டகால ஆராய்ச்சிகள் தேவைப்பட்டன. சமீபத்தில் நாம் எதிர்கொண்ட பெருந்தொற்றாகிய ஹெச் 1 என் 1  வைரசை அறிவதற்கு ஒருமாத கால ஆய்வு தேவைப்பட்டது. கொரோனா வைரசின் ஜீன் சீக்குவன்ஸ் ஒரு வார காலத்தில் தனிமைப்படுத்தப்பட்டதும், அது உலக நாடுகளோடு பகிரப்பட்டதும் மருத்துவத் துறைக்கு பெரும் உதவியாக அமைந்தது. 

வைரசின் பாதிப்புகள் அது பரவும் விதம் குறித்து அறிந்து தொற்றுநோய் தடுப்பு உத்திகள் வகுக்கப்பட்டன. சிகிச்சை முறை உருவாக்கப்பட்டது. பலன் கொடுக்கும் மருந்துகள் உலகின் பல நாடுகளில் இருந்தும் பெறப்பட்டன. 16 நாட்களில் டெஸ்டிங் கிட்டுகள் உருவாக்கப்பட்டது, அவைகளை போதுமான எண்ணிக்கையில் தயாரித்து அனுப்பும் பணி தொடங்கியது.

அறிவியல் நிபுணர்களுக்கு வேறு ஒரு வேலையும் இருந்தது. அவர்கள் சீன மக்களிடையே தொலைக்காட்சிகளில் உரையாற்றினார்கள். தொலைபேசி வழி கேள்விகளுக்கு பதில் சொன்னார்கள். இவ்வாறு வதந்திகளுக்கு எதிரான அறிவியல் பிரச்சாரமும் முக்கிய பங்கு வகித்தது.

அரசு நிறுவனங்களின் பங்களிப்பு:

சீனாவின் தனியார் தொழில்நுட்ப நிறுவனங்கள் கொரோனா எதிர்ப்பு போராட்டத்தில் செய்த பங்களிப்பு அப்போதே பல செய்திகளில் வெளிவந்தது. அலிபாபா, டென்செண்ட், பைடூ, சென்ஸ் டைம் ஆகிய நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை வழங்கின. இணையதள நேரலை சேவைகளின் மூலம் பள்ளி வகுப்புகள் தொடரப்பட்டன. மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. தொற்றாளர்கள் மற்றும் நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் உணவு விநியோகத்திற்காக  ரோபோட்டுகளை பயன்படுத்தினார்கள். ஆனால் அரசு நிறுவனங்களுடைய மாபெரும் பங்களிப்பு இல்லாமல் கொரோனா போராட்டத்தை அவர்கள் நடத்தியிருக்க முடியாது.

சீன அரசு நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து கூடுதலாக குறிப்பிட வேண்டும்.   சாளரம் அமைப்பதற்கு 10 நொடிகள்,  சுவர் எழுப்ப 2நிமிடங்கள் என அதிவேகமாக,   இரவும் பகலும் உழைத்து மருத்துவமனைகளை கட்டியது சீன அரசுக்கு சொந்தமான கட்டுமான நிறுவனங்களே ஆகும்.  4000 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்கள் இரவு பகலாக உழைத்தார்கள்.  இந்த கட்டுமான பணிகளுக்கு தேவையான மின்சாரம், எரிசக்தி மற்றும் தகவல் தொடர்பினை அரசு நிறுவனங்களே வழங்கின.

மருத்துவ உபகரண உற்பத்தியை அரசு நிறுவனங்களின் விரைவான உதவியின் காரணமாகவே உடனடியாக அதிகரிக்க முடிந்தது.தொற்றுநோய் தடுப்பு உபகரணங்களான கவச உடைகள் முதல் அனைத்து உபகரணங்களின் உற்பத்தியும் விரைவாக அதிகரிக்கப்பட்டது. எரிசக்தி, தானிய உற்பத்தி, எண்ணெய், உணவுப்பொருட்கள் மற்றும் மருந்து உற்பத்தியில் அரசு நிறுவனங்கள் பெரும் பங்களிப்பை செய்தன. சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுக்குள் வைக்கப்பட்டது. விலையை உயர்த்தி விற்ற வணிகர்கள் மீது குற்றவழக்கு பதியப்பட்டது, செயற்கை விலையேற்றம் கட்டுப்படுத்தப்பட்டது.

சீன அரசின் எண்ணெய் மற்றும் உணவுப்பொருள் கழகம், சீன தானிய சேமிப்புக் குழுமம், சீன உப்பு தொழிற்சாலை அனைத்தும் தங்கள் வழங்கலை அதிகப்படுத்தின. சீனாவின் வழங்கல் மற்றும் சந்தைப்படுத்துதல் கூட்டுறவு நிறுவனங்கள் முயற்சியெடுத்து விவசாய கூட்டுறவு சங்கங்களை நேரடியாக தொடர்பு கொண்டு காய் கனிகள் மற்றும் தேவையான பொருட்கள் சரியான விலையில் தடையில்லாமல் கிடைப்பதை உறுதி செய்தன.

மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு, அதிலும் குறிப்பாக மருத்துவர்களுக்கான பாதுகாப்பு கவச கருவிகள் தயாரிக்கும் பணி புயல் வேகத்தில் முடுக்கிவிடப்பட்டது. ஜனவரி 28 ஆம் தேதி அன்று சீனாவின் ஒரு நாளில் 10 ஆயிரம் சோடி கருவிகளை தயாரிக்க முடிந்தது. பிப்ரவரி 24 ஆம் தேதி அவர்களின் தயாரிப்பு வேகம் ஒரு நாளைக்கு 2 லட்சத்தை தாண்டியது. பிப்ரவரி 1 ஆம் தேதி என்ற அளவில்  7 லட்சத்து 73 ஆயிரம் பரிசோதனைக் கருவிகளை சீன அரசு தயாரித்தது பிப்ரவரி 25 ஆம் தேதியன்று ஒரு நாளில் 17 லட்சம் என்ற அளவில் அதன் எண்ணிக்கை உயர்ந்தது. மார்ச் 31 ஆம் தேதி இந்த எண்ணிக்கை 42 லட்சமாகியது. தொழிற்சாலை நிர்வாகங்களை மருத்துவ உபகரண தயாரிப்பை நோக்கி உந்தித் தள்ளியது அரசு நிர்வாகம். ஆம்புலன்சு வாகனங்கள், வெண்டிலேட்டர்கள், இ.சி.ஜி இயந்திரங்கள், கிருமி நாசினி இயந்திரங்கள் உள்ளிட்டு தேவையான அனைத்து கருவிகளும் உள்நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 

முன்னணிப் படையாக கம்யூனிஸ்டுகள்:

மார்க்சியவாதிகள் என்போர் ஆரூடம் சொல்பவர்கள் அல்ல. எதிர்கால வளர்ச்சிப் போக்குகளையும் மாற்றங்களையும் மனதில் கொண்ட பொதுவான வழிகாட்டுதல்கலையே அவர்களால் உருவாக்க முடியும், இயந்திர கதியாக ஒரு காலத்தை நிர்ணயிக்க முடியாது என்றார் மாவோ. சீனாவின் 46 லட்சம் கட்சி கிளைகளும் இப்போராட்டத்தில் ஈடுபட்டார்கள். போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் இயக்கவியல் பார்வையோடு வழிநடத்தினார்கள்.

மக்களிடமிருந்து மக்களுக்கு என்ற மாஸ்லைனை நீண்ட காலமாக கடைப்பிடிக்கும் அனுபவம் கொண்டது சீன கம்யூனிஸ்ட் கட்சி.  கட்சியின் அனைத்து நிலைகளிலும் உள்ள கமிட்டிகள் உடனடியாக ஒரு அவசர நிலையை எதிர்கொள்ள தயாரானார்கள். தங்களிடமுள்ள அனைத்து வளங்களையும் திரட்டினார்கள்.  மக்களுக்கு தலைமையேற்க வேண்டும், மக்களிடம் இருந்து ஆலோசனைகளை பெற்று செயல்பாடுகளை பட்டை தீட்ட வேண்டும். 

யாரும் செய்வதற்கு தயங்கும் ஒரு பணியாக இருந்தால் அதில் கம்யூனிஸ்டுகளே முதல் ஆளாக ஈடுபட வேண்டும். தயக்கம் என்பது ஒருபோதும் கூடாது என்றது  கட்சி.

1) முன் கை எடு,
2) அறிவியல் அடிப்படையில் நோயின் தன்மையை அறிந்து கொண்டு செயல்படு
3)  திட்டமிடுதலை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்க, ஒட்டுமொத்த திட்டத்தின் பகுதியாகவும், உள்ளூர் நிலைமைகளை மனதில் கொண்டும் திட்டம் இருக்க வேண்டும்,
4) திட்டமிட்ட பணிகளை அமைப்பின் வலிமையைக் கொண்டு செயலாக்குக. நடைமுறை அனுபவங்களை உள்வாங்கி செயல்பாட்டினை கூர்மைப்படுத்துக என வழிகாட்டியது.

ஜி ஜின்பிங், “பொத்தாம் பொதுவான உத்தரவுகளைக் கொண்டோ, அதிகாரத்துவத்தைக் கொண்டோ அல்லது பெயருக்கு வேலை செய்வதாலோஇந்த சவாலை எதிர்கொள்ள முடியாது.” என தெளிவாகவே குறிப்பிட்டார். உத்தரவுகளை கேட்டு வேலை செய்யும் பணியாளராக அல்ல, உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப உத்திகளை வகுத்து செயல்படும் தளபதியாக செயல்பட்டார்கள் முரண்பாடுகளை ஆய்வு செய்து முறையாக கையாண்டார்கள்.

மருத்துவர், செவிலியர் என மருத்துவ சிகிச்சை முனையில் பணியாற்றிய குழுக்களில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் முன் நின்றார்கள். உதாரணமாக ஹுபே மாகாணத்திற்கு வந்த சீன ராணுவ மருத்துவக் குழுவினர் 450 பேரிலும் 60 சதவீதம் கட்சி உறுப்பினர்கள் ஆவார்கள்.

பீக்கிங் பல்கலைகழகத்திலிருந்து மட்டும் ஊகானுக்கு 405 மருத்துவ பணியாளர்கள் வந்திருந்தனர்.  அதில் 171 பேர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள். “ஒவ்வொரு பத்து நிமிடத்திலும் 5 நோயாளிகளை பரிசோதிக்க வேண்டியிருந்தது. ” வாங் பென் என்ற மருத்துவர் இவ்வாறு குறிப்பிட்டார் “ஊகானில் ஒவ்வொரு நாளும் மக்கள் எங்களை அன்பில் நனைத்தார்கள், கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்ததற்கான பொருளை இந்த போராட்டம் எங்களுக்கு உணர்த்தியது”.

ஹெய்லாங்ஜியாங் உள்ளிட்ட சில இடங்களில் கட்சியினரும், அரசு அதிகாரிகளும் தளர்வோடு நடந்து கொண்டார்கள். உடனடியாக தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு கட்டுப்பாட்டை கூடுதலாக்கினார்கள். மேலும் களத்தில் ஒவ்வொரு வீடாக சென்று உதவி செய்த கட்சி தோழர்களின் பணியை ஒழுக்க ஆய்வு மற்றும் மேற்பார்வை குழு கண்காணித்தது. இந்தக் குழுவுக்கென தனியாக ஒரு பத்திரிக்கை இயங்குகிறது நோய் தடுப்புக் குழுக்களின் அர்ப்பணிப்பு மிக்க பணிகள் ஏராளமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

சமுதாய குழுக்களின் பங்களிப்பு:

மாகாண அரசுகளும், உள்ளாட்சிகளும் அவரவர் சூழல் குறித்து ஆய்வு செய்து படைப்பாக்கத்துடன் செயல்பட்டார்கள். மக்களுடன் நேரடி தொடர்பை உறுதி செய்யும்  6 லட்சத்து 50 ஆயிரம் சமுதாய குழுக்கள் சீனா முழுவதும் உள்ளன. இவையே சீன அதிகாரப்பரவல் கட்டமைப்பின் கடைசி கண்ணிகள். நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள இந்தக் குழுக்களின் 40 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் கொரோனா விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டார்கள். ஒவ்வொரு சமுதாய குழு உறுப்பினரும் 350 பேரை நேரில் சந்திக்க வேண்டியிருந்தது. ஊரடங்கு தீவிரமாக அமலாக்கப்பட்ட ஹூபே மாகாணத்தில் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் உணவுப்பொருள் மற்றும் மருந்து விநியோகத்தில் பணியாற்றினார்கள்.  அதாவது ஊரடங்கு காலத்தில் மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்கான பணியில் இவர்களின் உழைப்பு மிகப்பெரும் பங்கு வகித்தது.

கரடுமுரடான சாலைகளில், பாதுகாப்பில்லாத பகுதிகளில் பயணித்து ஒவ்வொரு குடிமகனையும் அவர்கள் சந்தித்தார்கள். குடிமக்கள் நல அமைச்சகத்தின் தகவலின்படி இந்த பணியாளர்களில் 53 பேர் பணியின்போது மரணமடைந்துள்ளனர். இவ்வாறு மரணமடைந்தவர்களில் 92.5 சதவீதம் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஆவார்கள்.

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் போய் என்ற மாவட்டத்தில் நடந்தவைகளை சென் சென் என்பவர் பீப்பிள்ஸ் டெய்லி இதழில் எழுதியுள்ளார்.

மாகாணத்தின் திறன் வாய்ந்த தோழர்களை தேர்வு செய்து முன்னணிக்கு அனுப்பினார்கள்.  மொத்தம் 523 பேர். அவர்களின் பணி ஆளுக்கு ஒரு குழுவை வழி நடத்துவதாகும்.

இந்த குழுக்களின் கட்சி உறுப்பினர்கள் சிறப்பாக செயல்பட்டால் அவர்கள் சிவப்பு பட்டியலில் இடம் பெற்றார்கள். தொய்வாக இருந்தால் நீல பட்டியலில் இடம்பெற்றார்கள். போய் மாவட்டத்தில் 76 பேர் சிவப்பு பட்டியலிலும், 2 பேர் நீல பட்டியலிலும் இடம் பிடித்தார்கள்.  முன்னணியில் பணியாற்றும் குழுக்களுக்கு சரியான நேரத்தில் உணவு, குடிநீர் கொடுப்பது. ஆட்களை மாற்றிவிடுவது. முக கவசம், கை உறைகள் கிடைக்கச் செய்வது தனியாக ஒரு குழுவால் கவனிக்கப்பட்டது. இந்த பணியாளர்களுக்கு ஆன்லைன் வழி உளவியல் ஆலோசனைகளும் உறுதி செய்யப்பட்டன. இந்த போராட்டத்தின் வழியே ஏராளமான புதிய உறுப்பினர்கள் கட்சியை நோக்கி ஈர்க்கப்பட்டனர்.

இளைஞர்களின் பெரும் பங்கேற்பு:

கொரோனா நோய் தடுப்பு பணிகளின் இளைஞர்களை அதிக அளவில் ஈடுபடத் தூண்டியது சீன அரசும், கம்யூனிஸ்ட் கட்சியும்.  1990 களுக்கு பின் பிறந்த இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றார்கள். ஆண் செவிலியரான ஜியான் யாங், “நாங்கள் இளைஞர்கள், நாங்களே முன் வரிசையில் நிற்போம்” என உற்சாகமாக குறிப்பிடுகிறார்.  இளைஞர்களின் பங்கு தனித்து குறிப்பிட வேண்டிய அளவில் தனிச்சிறப்பானதாக இருந்தது.

இப்போது சீன ஊடகங்களில் 90களுக்கு பின் பிறந்தோர் என்பதே அவர்களை குறிப்பிட பொதுவான பெயராகிப்போனது. ஊகானில் குவிக்கப்பட்ட மருத்துவப் படையணியில் 12 ஆயிரம் பேர் 90களுக்கு பின் பிறந்தவர்கள் ஆவர். 

ஒரு வேளை இந்த போராட்டத்தில் நான் மரணிக்க நேர்ந்தால் வைரஸ் குறித்த ஆராய்ச்சிக்காக என்னுடைய உடல் பயன்படும் என லி ஹு என்ற பெண் செவிலியர் தெரிவித்தார்.  அவர் 1995க்கு பின் பிறந்தவர்.

95 க்கு பின் பிறந்த காவல் அதிகாரியான யாங் குயுச்செங். தனது அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.  பல நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வரச் செல்லும்போது நாய்களை எதிர்கொள்வது சவாலாக இருந்தது. சில காவலர்கள் நாய் கடிக்கு ஆளானார்கள். நோயாளிகளுக்கு ஏற்படும் அச்சத்தை போக்குவதுடன் அவர்களுடன் நிதானமாக உரையாடியே மருத்துவமனைகளுக்கு அழைத்துவர வேண்டும் என்கிறார் அவர். இந்தப் போராட்டத்தின் போக்கில் அவர் கம்யூனிஸ்ட் கட்சியிலும் தன்னை இணைத்துக் கொண்டார். 

வாகனங்களை பரிசோதிக்கும் பணியில் ஈட்டுபட்ட்டவர் சோவ் போஜியான். “தியாஞ்சின் பகுதியை கடந்த ஒவ்வொரு ஓட்டுனரையும் பரிசோதித்தேன். அவருடைய உடல்நலனை விசாரித்து பதிவு செய்தேன். கைகள் குளிரில் உறைந்தன. எனினும் ஒருவரைக் கூட விசாரிக்காமல் விடவில்லை.” என்கிறார் அவர். 

கூட்டுறவு மற்றும் பகிர்மான அலுவலகத்தின் பணியாளரான லியூ போ, 40 நாட்கள் முன்னணி பணிகளை மேற்கொண்டார். தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு தேவையான உபகரணங்களை வாங்கி வழங்குவது அவருடைய பணி. 10 விதமான பொருட்களை தினமும் 550 செட்டுகள் வாங்கி அவற்றை தனிமைப்படுத்தல் அறைகளில் வைக்க வேண்டும். 40 நாட்கள் இடைவெளியில்லாமல் செய்து முடித்துள்ளார் அந்த இளைஞர். 

இவ்வாறு கொரோனா நோய் தடுப்பில் குறிப்பிடத்தக்க வெற்றியை சீனா சாதித்திருக்கிறது. ஒருங்கிணைந்த விரைவான செயல்பாடுகளே அவர்களை காத்துள்ளன.  

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து சொந்த மக்களை பாதுகாப்பதில் அரசாங்கங்கள், பெரு நிறுவனங்கள், உள்ளூர் சமூகம் மற்றும் ஊடகங்களுடைய செயல்பாடுகளை பற்றிய ஆய்வினை சிங்கப்பூரின் இரண்டு முன்னணி ஆய்வு நிறுவனங்கள் நடத்தினார்கள். (Singapore’s leading social research agency Blackbox Research and technology company Toluna) 23 நாடுகளிலிருந்து பொதுமக்கள் பங்கேற்ற இந்த ஆய்வில் முதல் இடத்தினை சீனமும், இரண்டாம் இடத்தை வியட்நாமும் பிடித்திருந்தன. ஏகாதிபத்திய நாடுகள் இந்த பட்டியலில் 50 புள்ளிகளைக் கூட பெற முடியாமல் பின் தங்கியிருக்கிறார்கள்.

சில படிப்பினைகள்:

அவசரகாலத்தில் முடிவுகளை உள்ளூர் அளவிலேயே மேற்கொள்வதற்கு உதவி செய்யும் வகையில் சட்ட திருத்தம் விவாதிக்கப்பட்டுவருகிறது.  உயர்மட்ட நிர்வாகங்களின் முடிவுகளுக்காக காத்திருந்து அதனால் கால விரையமாதல் மற்றும் பல்வேறு துறைகளுக்கு இடையிலான தகவல் தொடர்பு மற்றும் நிர்வாக முடிவுகளை மேற்கொள்வதன் சிரமங்களை பரிசீலித்து இந்த முடிவுக்கு அவர்கள் வந்துள்ளார்கள்.

மேலும்பொது சுகாதாரம் மற்றும் காப்பீட்டுக்கான சட்டங்களின் செய்ய வேண்டிய திருத்தங்களை அவர்கள் விவாதிக்கிறார்கள், உயிரி பாதுகாப்பு என்பதை தேச பாதுகாப்பின் ஒரு பகுதியாக இணைக்க வேண்டும் என்ற முடிவுக்கும் வந்துள்ளார்கள். வன உயிரிகளை பாதுகாப்பது மற்றும் கழிவுகளை மேலாண்மை செய்யும் வழிமுறைகளை சீர்திருத்துவது மற்றும் நவீனப்படுத்துவது என்பதாக அவர்களின் அடுத்தகட்ட திட்டங்கள் அமைந்திருக்கின்றன.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து மற்றும் சிகிச்சை முறையை வளர்த்தெடுப்பதற்கான ஆய்வுகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மீண்டும் தொற்று பரவல் எங்கிருந்து வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு மட்டுமே இந்த போராட்டத்தில் முடிவான ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும். 

பொருளாதார தாக்கம் குறித்து:

பொது சுகாதாரத்திற்கும், உற்பத்திக்கும் இடையிலான இயக்கவியல் உறவினை புரிந்து கொண்டவர்கள் மார்க்சியவாதிகள். உற்பத்தியில் தற்காலிக முடக்கம் இருக்கும் என்பதை அறிந்தே அவர்கள் செயல்பட்டார்கள். உலக முதலாளித்துவ நாடுகள் பலவற்றிலும் குறிப்பிடத்தக்க வெற்றியை சாதிக்கும் முன்பே பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. அது நோய் பரவலில் கேடான விளைவுகளை ஏற்படுத்தியது. சீனாவை பொருத்தமட்டில் தற்காலிக முடக்கத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டிருப்பது சோசலிச கட்டமைப்பால் கிடைத்த பெரும் நன்மை ஆகும்.

இருவகையான பொருளாதார திட்டங்கள் தேவைப்படுகின்றன. முதலாவது ஊரடங்கு காலத்தில் மக்களின் உயிர் காக்கவும், வருமான இழப்பை ஈடுகட்டவும் செய்யவேண்டிய உதவிகள். இரண்டாவது ஊரடங்கு முடிந்த பிறகாக தேவைப்படுகிற பொருளாதார நடவடிக்கைகள்.

ஊரடங்கு காலத்தில் வேலையில்லாக்கால நிவாரணம் கோரி விண்ணப்பிப்போருக்கு 6 மாதங்களுக்கு ஊதிய காப்பீடு மற்றும் கூடுதலாக விலைவாசி மானியம் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது. 13 லட்சம் நிறுவனங்கள் இக்காலத்தில் வேலையில்லாக்கால இன்சூரன்ஸ் தொகை பெற்றுள்ளன. அவற்றில் பணியாற்றும் 4கோடியே 20 லட்சம் தொழிலாளர்கள் உதவிபெற்றுள்ளார்கள். 

தற்காலிக உதவிக்காக விண்ணப்பிப்போருக்கு தற்காலிக உதவி அறிவிக்கப்பட்டது அவர்களுக்காக 24 மணி நேர தொலைபேசி அழைப்பு அறிவித்து அதன் மூலம் உதவியை கொண்டு சேர்த்தார்கள். குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தாருக்கு பண உதவித்திட்டம் அறிவிக்கப்பட்டது.

இவ்வாறு நிதியமைச்சகத்தின் சமூக பாதுகாப்புத் துறையின் சார்பில் 15 ஆயிரத்து 600 கோடி யுவான்கள் (ரூபாயில் 1 லட்சத்து 66 ஆயிரம் கோடிகள்) ஒதுக்கப்பட்டதாக அந்த துறையின் துணை இயக்குனர் வாங் ஜிக்ஜியாங் தெரிவிக்கிறார்.  இது சீனாவின் மத்திய அரசு ஒதுக்கிய தொகையாகும். மாகாணங்களின் வளர்ச்சி நிலைக்கு ஏற்ப அவர்கள் பங்கும் சேர்த்து உதவிகள் தரப்பட்டுள்ளன. மேலும் உள்ளாட்சி நிர்வாகங்களும் மக்களுக்கு நேரடி நிதி உதவி செய்கிறார்கள். உதாரணமாக மே மாதத்தில் குவாங்க்டாங் மாகாணத்தில் பைஷலோங் என்ற கிராம கமிட்டி தனது கிராமத்தில் வசிக்கும் அனைவருக்கும் தலா ஆயிரம் யுவான்கள் (குழந்தைகள், சிறுவர்கள் உட்பட)  வழங்குவதாக அறிவித்தது. விவசாய வேலைகள் முடங்கியுள்ளதை அடுத்து அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்.

ஊரடங்கு முடிந்த பிறகு மக்கள் கடைவீதிகளுக்கு செல்வதற்காக சிறப்பு கூப்பன்களை உள்ளூர் நிர்வாகங்கள் அறிவித்து வருகின்றனர். 

நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான செலவு தவிர உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வரித் தள்ளுபடியும், மானியக் கடனும் தரப்பட்டது. சிறு, குறுந்தொழில்கள் மற்றும் கிராமப்புற நிறுவனங்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டது. 

பொருளாதார மீட்சிக்கான நீண்ட கால திட்டங்கள்:

2008 ஆம் ஆண்டு எதிர்கொண்ட உலக பொருளாதார நெருக்கடியை விடவும் பெரிய பாதிப்பை இப்போது எதிர்கொள்ள நேரிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இக்காலத்தில் (2020 ஜனவரி மற்றும் பிப்ரவரி) சீனாவின் தொழில்துறை உற்பத்தியானது  13.5 சதவீதமாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நகர்ப்புற வேலையின்மை விகிதம் 6.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்கள் சில்லறை வணிகம் 20.5 சதவீதம் குறைந்திருந்தது. இவையெல்லாம் கடுமையாக விளைவுகளே ஆகும்.

ஏப்ரல் மாத கடைசியில் சீனாவின் வேலையின்மை விகிதம் 20.5% ஆக இருக்கலாம் என ஜோங்டான் செக்யூரிட்டீஸ் என்ற தரகு நிறுவனம் தெரிவிக்கிறது. அவர்கள் எதிர்பார்ப்பின்படி 7 கோடிப்பேர் வேலையில்லாமல் இருக்கலாம் என்கிறார்கள். 

வேலையின்மையை எதிர்கொள்வதை தனது அவசர அவசியமுள்ள நடவடிக்கையாக சீனா எடுத்துக் கொண்டுள்ளது. முக்கிய தொழில்துறைகளில் 10 ஆயிரம் நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் முக்கிய நிறுவனங்களில் 4 லட்சம் தொழிலாளர் பணியிடங்களுக்கான தேவை கண்டறியப்பட்டு தொழிலாளர்களை அமர்த்த முன்கை எடுத்திருக்கிறார்கள். 

முதலாளித்துவ நாடுகளின் திறனுள்ள தொழிலாளர்கள் பசியிலும் வேதனையிலும் அச்சத்திலும் செய்வதறியாது திகைக்கிறார்கள். இது உற்பத்தியை மீட்டமைப்பதில் சிக்கலான விளைவுகளை ஏற்படுத்து.

சீன அரசானது இடம்பெயர்ந்து பணியாற்றும் தொழிலாளர்கள் தங்கள் பணியிடங்களுக்கு பாதுகாப்பாக திரும்புவது முக்கியம். அதற்காக 1 லட்சத்து 92 ஆயிரம் சிறப்பு வாகனங்கள், 367 சிறப்பு ரயில்கள், 1462 கார்கள் மற்றும் 551 விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இதன் மூலம் 5.03 மில்லியன் தொழிலாளர்களை அவர்கள் பணியிடங்களுக்கு நேரடியாக சேர்க்கவிருக்கிறது.

ஏற்றுமதி வர்த்தகத்தை பொருத்தமட்டில் சீனாவின் எதிர்காலம் உலக சூழலை பொருத்தே அமையும். 

மே மாத இறுதியில் சீனாவின் ’இரண்டு பேரவைகள்’ கூடி விவாதிக்கவுள்ளன. கொரோனா நோய் பரவலின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அந்த நிகழ்வு எதிர்வரவுள்ள பொருளாதார சவால்களைக் குறித்து விவாதிக்கவிருக்கிறது. பொருளாதார முனையில் சீனாவின் போராட்டம் அதன் பிறகு தெளிவாகலாம். 

சீனாவின் பொருளாதார நடவடிக்கைகள் கீழ்க்கண்டவாறு இருக்கும் என சீனாவின் ஏடுகள் தெரிவிக்கின்றன.

  • மக்களுக்கு பணம் சென்று சேரும் வகையிலான ஊக்கத்திட்டம் அறிவிக்கப்படும். (வேலையில்லாக்கால நிவாரணத்தை உயர்த்துதல் உள்ளிட்டு) 
  • கட்டமைப்பு திட்டங்களுக்கான ஊக்கத்தை கவனத்தில் கொண்ட நிதிச் செலவினங்கள் மேற்கொள்ளப்படும்.
  • சிறு குறுந்தொழில்களுக்கு சிறப்பு கடன்கள் வழங்கப்படும், அவர்களின் வரிகள் தள்ளுபடி செய்யப்படும்.
  • ஒவ்வொரு உள்ளூர் அரசு நிர்வாகமும் தங்கள் சூழலுக்கு ஏற்ற முடிவுகளை மேற்கொள்வதற்கான சுதந்திரம் உள்ளது. (இது பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் சலுகைகளை அள்ளிக் கொடுக்கும் முதலாளித்துவ அணுகுமுறைக்கு நேர்மாறானதாகும்)
  • உற்பத்தி பழைய நிலைமைக்கு திரும்பியவுடன் வழங்கல் தொடர்பும் சீராக்கப்படும்.
  • தனது சந்தையை உலகிற்கு திறப்பது மற்றும் உள்நாட்டு சந்தை சார்ந்த சீர்திருத்தங்களை தொடர்ந்து மேற்கொள்ளும்.
  • பொருளாதாரத் திட்டங்கள் அனைத்தின் முதன்மை நோக்கம் வேலைவாய்ப்பை மீட்டமைப்பதாகவும், ஏழை மக்களை பாதுகாப்பதாகவும் இருக்கும்.

முதலாளித்துவ ஊடகங்கள் இந்தியாவைப் போலவே சீனாவிலும் தொழிலாளர்கள் நலத்திட்டங்களை வெட்டுமாறு ஆலோசனைகள் வைக்காமல் இல்லை. முதலாளிகள் தொழிலாளர்களுக்கு தரும் சம்பளம் அல்லாது 30 சதவீத தொகையை நலத்திட்டங்களுக்கு செலுத்த வேண்டும். ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு, வேலையில்லாக் கால காப்பீடு, பணிக்கால விபத்துக் காப்பீடு மற்றும் பேறுகால காப்பீட்டு தொகைகளை ரத்து செய்ய வேண்டும் என்பது முதலாளித்துவ அறிஞர்களின் எதிர்பார்ப்பாகும். பொருளாதார தளத்தில் எழக்கூடிய சவால்களை அந்த நாடு எப்படி எதிர்கொள்ளவுள்ளது என்பதை வரும் நாட்களில் பார்க்கலாம்.

இந்த நெருக்கடிகளை சமாளித்துக் கொண்டே வறுமை ஒழிப்பு இலக்கை நோக்கியும் சீனா நடைபோடத் தொடங்கியுள்ளது. உலகம் நிர்ணயித்திருக்கும் வறுமைக்கோட்டு அளவுகோலுக்கு கீழே ஒருவரும் வாழாத நாடாக சீனத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பது அந்த கட்சி வகுத்துக்கொண்ட மிக முக்கியமான இலக்கு. வைரசை எதிர்கொள்வதில் கிடைத்த வெற்றியைப் போலவே இதிலும் வெல்வோம் என்கிறார்கள்.

வறுமையும், நோயும் மனித குலத்தின் பொது எதிரி. இவைகளுக்கு எதிரான போராட்டத்தில் சோசலிசமே உற்ற துணையாகும் என்பதை சீனா எடுத்துக் காட்டட்டும்.



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: