இரா. வேல்முருகன்
1947ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதியன்று டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டிருந்த யூனியன் ஜாக் கொடி அகற்றப்பட்டு, அந்த இடத்தில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. தங்களின் நீண்டகால சுதந்திர கனவு ஈடேறிவிட்டதாக இந்தியாவின் கோடிக்கணக்கான மக்கள் குதூகலித்து கொண்டாடினார்கள்.
ஆனால் இந்த விடுதலை நாள் கொண்டாட்டத்தில் காந்தி பங்கேற்கவில்லை. மாறாக அப்போது நடைபெற்ற வகுப்பு கலவரங்களில் இருந்து நவகாளியிலும், பீகாரிலும் அமைதியை நிலைநாட்ட அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். அதே நாளில் ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகள் சிறைச்சாலையில் விடுதலை போராட்ட கைதிகளாக அடைபட்டிருந்தனர். இந்திய மக்களுக்கு விடுதலை நாள் செய்தியை கேட்டு ஒரு பத்திரிக்கையாளர் காந்தியை அணுகிய போது ” என் இதயம் வறண்டு போய்விட்டது” என அவர் மிகுந்தவேதனையுடன் பதிலளித்தார்.
காங்கிரஸ் கட்சி
காங்கிரஸ் கட்சி 1885 இல் துவங்கப்பட்டபின் முதல்20 ஆண்டுகள் வரை பிரிட்டிஷ் காலனி அரசிடம் மனு கொடுக்கும் பணியை மட்டுமே செய்து வந்தது என்றால் மிகையாகாது. 1896-97 ஓர் ஆண்டில் மட்டும் சுமார் 45 லட்சம் மக்கள் பஞ்சத்தில் மடிந்துபோனார்கள். 1899 – 1900 வரை 12.50 லட்சம் மக்கள் மாண்டுபோனார்கள். 1860 முதல் 1908 வரை 48 ஆண்டுகளில் 20 ஆண்டுகள் இத்தகைய பெரும் பஞ்சம் நீடித்து, ஒரு கோடிக்கும் அதிகமாக மக்கள் செத்து மடிந்தனர். இதற்கு எதிராக பெரும் போராட்டங்களை காங்கிரஸ் கட்சி நடத்தவில்லை.
ஆனால் இத்தகைய கொடுமைகளுக்கு எதிராக இந்திய நாட்டின் இளைஞர்கள் அதிதீவிர குழுக்களாக உருவாகிவந்தனர். மகாராஷ்ட்ராவில் சாபேகர் சகோதரர்கள் போன்ற இளைஞர்கள் மித்ரமேலா, அபிநவ் பாரத் போன்ற அமைப்புகளை உருவாக்கி போராடினார்கள். வங்கத்தில் அனுசீலன் சமிதி, யுகாந்தர் குழு போன்ற அமைப்புகள் நடத்திய போராட்டங்கள் வங்கப் பிரிவினையை பிரிட்டிஷ் அரசு திரும்பப் பெறச் செய்ததில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தன. இதே கால கட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக தீவிரமாக செயல்படவேண்டும் என லாலா லஜபதி ராய் , பாலகங்காதர திலகர், விபின் சந்திர பால் போன்றோரும், பிரிட்டிஷ் அரசின் கோபத்திற்கு ஆளாகாமால் மிதமாக செயல்பட வேண்டும் என கோபாலகிருஷ்ண கோகலே, அன்னிபெசன்ட் அம்மையார் போன்றோரும் இரண்டு குழுக்களாக செயல்பட்டனர்.
ஜாம்ஷெட்பூரில் டாட்டா – புதிய ஜவுளி ஆலையை (சுதேசி ஆலை) துவக்கினார் அப்போது இந்திய தேசிய முதலாளிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி தீவிரவாத தலைவர்கள் லால்-பால்-பால் அந்நிய பொருட்கள் புறக்கணிப்பு, தேசிய கல்வி கொள்கை, சுதேசி போராட்டம், சுயராஜ்யம் (தன்னாட்சி) போன்ற சீர்திருத்த கொள்கைகளை முன்வைத்தார்களே ஒழிய இந்திய மக்களுக்கான முழு சுதந்திரம் என்ற கோரிக்கை அவர்களிடத்தில் எழவில்லை. 1905ஆம் ஆண்டு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கோபாலகிருஷ்ண கோகலே தலைமை உரையாற்றிய போது இந்திய நாடாளுமன்றத்தில் இந்தியாவின் ஆட்சி நடைபெறவேண்டும் என்பதுதான் காங்கிரஸ் குறிக்கோள். காலப்போக்கில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு உட்பட்டு காலனி நாடுகள் சுயமாக ஆட்சியை எப்படி நடத்துகிறார்களோ, அதேபோன்று இந்தியர்களும் அரசாட்சி நடத்துவோம் என்றார். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிரிட்டிஷ் ஆட்சி கொள்கையை மென்மையாக விமர்சிப்பது,அரசியல் சீர்திருத்தங்கள் உருவாக்குவது இதன் மூலம் சில சலுகைகளை பெறுவதுதான் காங்கிரசின் நோக்கமாக இருந்தது.
காந்தியின் தலைமை
“ஊழியர்களும் மக்களுமே இந்த உலகின் ஆகப் பெரிய செல்வம், மிக உயர்ந்த தீர்மானகரமான சக்தி, மிக உயர்ந்த மூலதனம், அவர்கள் இல்லாமல் உலகில் எந்த புரட்சியும் சாத்தியமில்லை” என்பதை உணர்ந்த மகாத்மா காந்தி இதனை சரியாக பயன்படுத்தினார்”. காந்தியின் தலைமையின் கீழ் இந்திய முதலாளி வர்க்கம் வெகுமக்கள் போராட்டத்திற்கு தலைமை தாங்கியது. “மகாத்மா காந்தியின் தலைமையில் செயல்பட்ட முதலாளித்துவ வர்க்க தலைமையானது பிரிட்டிஷாரை பேச்சுவார்த்தை மேடைக்கு அழைத்து கொண்டு வருவதற்காகவே வெகு மக்கள் பங்கேற்கும் போராட்டத்தை நடத்துவது என்ற வியூகத்தையும் அதற்கேற்ப உத்திகளையும் மிகவும் விரிவான முறையில் திட்டமிட்டு நடத்தியது.” அதனால்தான் காந்தி நடத்திய ஒத்துழையாமை போராட்டமாக இருந்தாலும் சரி, சட்டமறுப்பு இயக்கமாக இருந்தாலும் சரி, வெகுமக்கள் எழுச்சியை உருவாக்கி இந்திய தேசிய முதலாளிகளின் நலனுக்கு ஏற்ப சில உடன்பாடுகளோடு போராட்டத்தை திரும்ப பெற்றார் .
பீஹாரில் சம்பரான் மாவட்டம் விவசாயிகள் போராட்டத்தில் மகாத்மா காந்தி பங்கெடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் அழைத்தனர். விவசாயிகளின் அழைப்பின் பேரில் காந்தி அங்கே சென்றதோடு அல்லாமல் அகிம்சா போராட்டத்தை அங்கு நடத்தி வெற்றியும் பெற்றார். இதேபோல் குஜராத் மாநிலத்திலுள்ள கெட்டா விவசாயிகளின் கோரிக்கைக்கான சத்தியாகிரக போராட்டத்திற்கு வழிகாட்டியது மட்டும் இல்லாமல், சத்தியாகிரக போராட்டத்தை நடத்தி வெற்றியும் கண்டார். இதன் காரணமாக காந்தியின் புகழ் இந்தியா முழுவதும் பரவியது.
வெள்ளை ஏகாதிபத்தியத்தின் ரௌலட் சட்டத்தை எதிர்த்து அகிம்சை வழியில் ஒத்துழையாமை இயக்கத்திற்கு காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி முடிவு எடுத்தது. மகாத்மா காந்தி எவ்வித நிபந்தனையும் இன்றி ஒத்துழையாமை இயக்கம் என அறிவித்து திலகர் போன்ற தீவிர தேசிய தலைவர்களை எல்லாம் ஓரங்கட்டியது என்றாலும், ஒத்துழையாமை இயக்கத்தையும், கிலாபத் இயக்கத்தையும் இணைத்து மாபெரும் மக்கள் எழுச்சியை உருவாக்க முடிந்தது.
ஒத்துழையாமை இயக்கம் அறிவித்ததுடன் காந்தி மகாராஷ்டிராவில் இருந்து ரயிலில் புறப்படும்போது கைது செய்யப்பட்டார், பம்பாய், டில்லி போன்ற இடங்களில் நடந்த வன்முறை. இந்த வன்முறைக்கு எதிராக மக்கள் போராடியபோது டாக்டர் சத்பாலும், டாக்டர் சைபுத்தீன் கிச்சிலுவும் நாடு கடத்தப்பட்டனர். இதற்கு எதிராக நடந்த எழுச்சியின் துவக்கம்தான் ஜாலியன் வாலாபாக்கில் ஜெனரல் டயர், மைக்கேல் டயர், லார்டு ஷெட்லாந்து நடத்திய மிருகத்தனமான மனிதத்தன்மையற்ற துப்பாக்கிச்சூடு. இதில் ஏராளமான மக்கள் தங்கள் இன்னுயிரை இழந்தனர், பல நூற்றுக்கணக்கான மக்கள் பலத்த காயம் அடைந்தனர்.
இந்த படுகொலை நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் மக்களை கிளர்ந்தெழ செய்தது. இந்த போராட்டத்தின் உச்சமாக உத்திரபிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டம் அருகில் உள்ள ஒரு சிறிய நகரமான சௌரி சவ்ரா காவல் நிலையத்தை கிராம மக்களே ஒருங்கிணைந்து முற்றுகை இட முயற்சி செய்தனர். அப்போது காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் 3 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.இதை தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட மக்கள் காவல் நிலையத்தை சூறையாடினார்கள். இதில் 22 காவலர்கள் மாண்டனர். இதில் 228 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 172 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. காந்தி இந்த தண்டனையை வரவேற்றார். ஆனால் கம்யூனிஸ்ட் தலைவர் நரேன் பட்டாச்சார்யா நாடுமுழுவதும் பெரும் போராட்டங்களை நடத்தினார்.பின்னர் இதன் விளைவாக 110 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகவும்,19 பேருக்கு தூக்குதண்டனையாகவும் மாறியது.
இப்போராட்டத்திற்கு பிறகு ஏதோ மக்கள் பெரும் தவறை செய்ததை போல் மக்களை நொந்துக் கொண்டு காந்தி ஒத்துழையாமை போராட்டத்தை திரும்ப பெற்றார்.
பூரண சுயராஜ்யமும் கம்யூனிஸ்டுகளும்
1920 ஆம்ஆண்டு தாஷ்கண்டில் அமைக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் கட்சி கிளைதான் இந்தக் கோரிக்கையை முதலில் முன்வைத்தது. 1921ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிலும், 1922கயா காங்கிரஸ் மாநாட்டிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த அபானி முகர்ஜியும், எம்.என்.ராயும் தயாரித்த பூரண சுயராஜ்யம் என்ற தீர்மானம் முன்மொழியப்பட்டது. காங்கிரஸ் கட்சியில் இந்த தீர்மானம் பெரும் கருத்து மோதலை உருவாக்கியது. இதன் விளைவாக மௌலானா ஹஷ்ரத் மொஹானி முழு விடுதலை தீர்மானத்தை மாநாட்டில் முன்மொழிந்தார். ஆனால் காந்தி இந்த தீர்மானத்தை தோற்கடித்ததோடு நில்லாமல் எம்.என்.ராயின் இந்த முயற்சி அரைவேக்காட்டுத்தனம் என்றும் சாடினார்.
தேசிய முதலாளிகளும், காங்கிரஸ் கட்சியும் பூரண சுயராஜ்யம் என்ற இந்த நிலைபாட்டிற்கு வருவதற்கு சுமார் பத்தாண்டுகள் தேவைப்பட்டது . 1929ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில்தான் பூர்ண சுயராஜ்யம் கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
1928ஆம் ஆண்டு நடைபெற்ற விவசாய தொழிலாளர்களின் போராட்டத்திலும்,பம்பாய், குஜராத், உத்திரபிரதேசம் போன்ற பகுதிகளில் நடைபெற்ற வேலை நிறுத்தம் மற்றும் குஜராத் விவசாயிகளின் வரிகொடா இயக்கம் ஆகியவற்றில் சுமார் 1.50 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்றனர். அதேபோன்று தென்னிந்திய இரயில்வே வேலைநிறுத்தம், தொழிற்தகராறு மசோதா போராட்டத்தில் சுமார் 5 லட்சம் மக்கள் பங்கேற்றனர். இந்த சூழலில்தான் வேறு வழியின்றி காந்தியால் பூரண சுயராஜ்யம் என்ற தீர்மானம் முன்மொழியப்பட்டு மாநாடும் ஏகமனதாக அங்கீகரித்தது.
காந்தி – இர்வின் உடன்படிக்கை
1930 ஏப்ரல் 6ஆம் தேதி ‘உப்பு சத்தியா கிரகம்’ காந்தி தலைமையில் துவங்கப்பட்டது. இப்போராட்டம் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை காந்தி விதித்திருந்தார். நாடு முழுவதும் சத்தியகிரகிகள் கைது செய்யப்பட்டனர். ஆனால் மே 5ஆம் தேதி வரை காந்தி சுதந்திரமாக விடப்பட்டிருந்தார். காந்தியை தவிர, நேரு, வல்லபாய் பட்டேல் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர். இப்போராட்டம் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
நான் கைது செய்யப்பட்டால் எனது தோழர்களோ , பொதுமக்களோ பதட்டம் அடைய தேவையில்லை. நமக்கு வழிகாட்டுவது கடவுள்தான் நானில்லை. ஒவ்வொரு கிராமமும் உப்பு உற்பத்தி செய்யட்டும். உத்தரவை மீறி உப்பு கொண்டு வரட்டும். மதுபானக்கடைகள், கஞ்சா மையங்கள், அந்நிய துணிக்கடைகள் முன்னால் பெண்கள் மறியல் நடக்கட்டும். ஒவ்வொரு குடும்பத்தின் இளைஞர்களும் பெரியவர்களும் நூல் நூற்கட்டும்.அந்நிய துணிகள் எரிக்கப்படட்டும். இந்து, இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் அனைவரின் இதயமும் ஒன்றிணையட்டும். பள்ளி கல்லூரிகளை விட்டு மாணவர்கள் வெளியேறட்டும். அரசு ஊழியர்கள் பணியில் இருந்து விலகட்டும். மக்கள் பணியில் தங்களை ஈடுபடுத்திகொள்ளட்டும். அப்போது முழு சுயராஜ்யம் வந்து நமது கதவுகளைத் தட்டும் என்றார் காந்தி.
அனைத்து மக்களையும் தனது அகிம்சா போராட்டத்தில் கொண்டுவருவதற்கு காந்தி முயன்றார். அவர் தொடங்கிய உப்பு சத்தியாகிரக போராட்டம் மக்கள் போராட்டமாக உருமாறி மாபெரும் எழுச்சியை மக்கள் மத்தியில் உருவாக்கியது. இதுவரை வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடந்த பெண்கள், குழந்தைகள் என அனைத்து பகுதி மக்களும் இப்போராட்டத்தில் இணைந்தனர். ஆனால் இப்போராட்டம் வெளிப்படையாகவே இந்திய ஜவுளி ஆலை முதலாளிகள் நலன்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே அமைந்தது. அந்நிய துணி பகிஷ்கரிப்பும், சுதேசிய ஆதரவு பிரச்சாரமும் இந்திய ஆலை முதலாளிகளின் நலன்களையும் பாதுகாக்க பயன்பட்டதே ஒழிய சுயராஜ்யம் என்பது பின்னுக்குப் போனது.
1931ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் நாள் காந்தி – இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் ஏற்கனவே 1929 ஆம் ஆண்டு லாகூரில் நடைபெற்ற மாநாட்டில் கொண்டு வந்த பூரண சுயராஜ்யம் என்ற இலக்கை நீர்த்துப் போக செய்து சில நிபந்தனைகளுடன் காந்தி இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானது. “சில நிபந்தனைகளுடன் உப்பு தயாரிக்கும் உரிமை மக்களுக்கு வழங்கப்பட்டது, அத்துடன் அந்நிய துணிக்கடைகள் மற்றும் மதுபானக்கடைகள் முன் மறியல் செய்வதற்கான உரிமை,காங்கிரஸ் கட்சி பகிரங்கமாக செயல்பட அனுமதி, இவற்றிற்கெல்லாம் மேலாக அறவழி போராட்டத்தில் ஈடுபட்ட சத்தியாகிரகிகளை விடுதலை செய்வது போன்ற பிரிவுகள் அதில் அடங்கியிருந்தன. ஆனால் காந்தியின் முதலாளி வர்க்க நலனுக்கு சிறிது கூட பங்கம் வந்துவிடக்கூடாது என்ற சிந்தனையில் சுயராஜ்யம் என்ற நிலைபாட்டிலிருந்த கீழிறங்கி வந்தது மட்டும் அல்ல; விடுதலை போராட்டத்தில் தீவிரமாக பங்கெடுத்த பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் உள்ளிட்ட அதிதீவிர இயக்கத் தோழர்களின் தூக்குத்தண்டனை குறித்தோ, தீவிர போராட்ட வீர்ர்கள் குறித்தோ மவுனம் சாதித்ததோடு அவர்களின் தண்டனையும் நியாயமே என்பதுதான் காந்தியின் நிலைபாடாக இருந்தது.
இந்த உடன்படிக்கைக்கு ஆதரவாகவும், எதிராகவும் காங்கிரஸ் கட்சி தலைவர்களிடத்திலும் மக்கள் மத்தியிலும் இரண்டு விதமான உணர்வு உருவாகியது. அதே நேரத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு ஒரு உண்மை புரிய வைக்கப்பட்டிருந்தது. தாங்கள் கடைப்பிடிக்கும் இந்த மோசமான அடக்குமுறைகளால் மக்களின் எழுச்சியை தடுத்து நிறுத்தமுடியாது என்பதையும் பிரிட்டிஷார் புரிந்துகொண்டனர்.
காங்கிரசின் நெருக்கடியும் மக்கள் எழுச்சியும்
1933ஆம் ஆண்டு சத்தியாகிரகப் போராட்டத்தை காந்தி விலக்கிக் கொண்ட பிறகு காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் நெருக்கடி நிலவியது. இதன் விளைவாக காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து செயல்பட்ட முற்போக்காளர்கள், சோசலிஸ்டுகள் சுபாஷ் சந்திர போஸ், ஜவஹர்லால் நேரு, வித்தல்பாய் பட்டேல், ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்றவர்களெல்லாம் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே தனி அமைப்பாக செயல்படும் நிலைக்கு வந்துவிட்டனர். இவையனைத்தையும் காந்தி எதிர்க்கவில்லை. காரணம் நேரு காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் வரை எந்த பாதிப்பும் இல்லை என காந்தி புரிந்து வைத்திருந்தார். “நேருவின் கருத்துக்கள் காங்கிரசின் கொள்கையுடன் அடிப்படையில் மாறுபட்டு விலகிச்செல்லும் அளவிற்கு தெளிவானதொரு வடிவத்தை எடுத்துள்ளதாக நான் கருதுவதில்லை. எனவே அவரது கம்யூனிச சிந்தனையை கண்டு யாரும் அச்சமடைய வேண்டாம்” என்றார் காந்தி. இந்த புரிதலில் இருந்துதான் இடதுசாரிகள் பக்கம் மக்கள் சென்றுவிடாமல் தடுக்க ஜவஹர்லால் நேருவை தொடர்ந்து மூன்று முறை காங்கிரஸ் கட்சியின் தலைவராக அனுமதித்தார் காந்தி.
விவசாயிகள் கோரிக்கைகளை காங்கிரஸ் திட்டத்தில் சேர்க்கவேண்டும் என கோரிக்கைகளை வைத்தனர். ஆனால் காங்கிரஸ் இக்கோரிக்கையை நீண்ட காலமாக புறக்கணித்து வந்தது. காங்கிரஸ் கட்சியே விவசாயிகளின் கட்சிதான் என வாதிட்டது. ஆனால் 1935ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்டுப்பாட்டிற்குள் இல்லாமல் தனித்து இயங்கும் விவசாய சங்கம் துவக்கப்பட்டது. “உழுபவனுக்கே நிலம் சொந்தம், நிலவுடைமையை ஒழிப்போம்” என்பது போன்ற கோஷங்களுடன் அது உதயமானது.
தொழிலாளர்கள் இதற்கு முன்பு வரை காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து செயல்பட்டனர். ஆனால் தற்போது காங்கிரஸ் கட்டுப்பாட்டில் இருந்து விலகி சுயமாகச் செயல்படும் தொழிற்சங்கமாக உருவெடுத்தது. 1920களில் துவங்கிய ஏஐடியுசி பதினாறு ஆண்டுகளுக்கு பிறகு தொழிலாளர்களின் நலன் காக்க ஏகாதிபத்தியம் மற்றும் தேசிய முதலாளிகளை எதிர்த்தும் இயக்கம் நடத்தும் அளவிற்கு வர்க்க அரசியல் தெளிவடைந்திருந்தனர். இதை பொறுக்க முடியாத முதலாளித்துவத்தின் தேசிய தலைமை தொழிற்சங்கத்தை உடைக்க காங்கிரஸ் கட்டுப்பாட்டில் செயல்படும் தொழிற்சங்கத்தை உருவாக்க முயற்சித்தார்கள். ஆனால் இந்த காலத்தில் பாம்பே, கான்பூர், டில்லி, கல்கத்தா, நாக்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்சங்கம் வேகமாக வளர்ந்தது மட்டுமல்ல; அது வெகுமக்களையும் இணைத்துக் கொண்டு செயல்பட்டது.
இதேபோன்று ரவீந்திரநாத் தாகூர், சரோஜினி நாயுடு, முன்ஷி பிரேம்சந்த் போன்ற உயரிய எழுத்தாளர்கள் எல்லாம் இணைந்து இந்திய முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம், நாடு முழுவதும் செயல்பட்ட இளைஞர், மாணவர் குழுக்களையெல்லாம் ஒருங்கிணைத்து அனைத்திந்திய இளைஞர் மாணவர் அமைப்புகள் துவங்கின. இந்த அமைப்புகளை எல்லாம் ஒருங்கிணைத்து பூரண சுயராஜ்யம் பெறவேண்டும் – அதாவது “இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி அகற்றப்பட்டு அந்த இடத்தில் தொழிலாளி – விவசாயிகள் நலன் காக்கும் ஆட்சி அமைக்க வேண்டும்” என்ற பொருள்பட 1936இல் லக்னோவில் கூடிய கிசான் காங்கிரஸ் முடிவெடுத்தது. இத்தகைய போக்குகளால் காங்கிரஸ் கட்சி கலக்கமடைந்தது. அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு தயாரானது.
வெள்ளையனே வெளியேறு இயக்கம்
1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7, 8 தேதிகளில் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்க தீர்மானத்தை ஜவஹர்லால் நேரு முன்மொழிந்தார் என்பதுதான் மிக முக்கியமான செய்தி. அத்தீர்மானத்தில் கம்யூனிஸ்டுகள் கொடுத்த திருத்தத்திற்கும் நேருதான் பதிலளித்தார். காங்கிரஸ் கட்சியின் அனைத்து குழுக்களையும், பிரிவினரையும் இணைத்து தனது பின்னே அணிவகுக்க செய்து, தீர்மானத்தை கிட்டத்தட்ட கம்யூனிஸ்டுகளை தவிர ஒருமனதாக நிறைவேற்றிட காந்தியால் முடிந்தது. ஆகஸ்ட் 8 அன்று வெள்ளையனே வெளியேறு இயக்க தீர்மானத்தை நிறைவேற்றிய உடன் இரவோடு இரவாக பொழுது விடிவதற்குள் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
சரியான திட்டமிடல் இல்லாமல் துவக்கியதன் விளைவாக பிரிட்டிஷ் அரசாங்கம் இப்போராட்டத்தை கடுமையாக ஒடுக்க முடிந்தது. நாடுமுழுவதும் சுமார் 2,000 சத்தியாகிரகிகள் கைது செய்யப்பட்டனர் இருந்தாலும் இப்போராட்டம் குறிப்பிடத்தக்க எந்த விளைவையும் உருவாக்கவில்லை. இரண்டாம் உலக யுத்தத்தின் போக்குகள் ஜெர்மன், இத்தாலி, ஜப்பான் ஆகிய பாசிசஅணிக்கு எதிராக திரும்பியதும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் போருக்கு பிறகு இந்தியாவை ஆட்சி செய்ய முடியாது. ஆனாலும், உடனடியாக இந்தியாவை ஒப்படைக்கும் மனநிலையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இல்லை. ஆனால், காங்கிரசும், முஸ்லிம் லீக்கும் ஏதாவது ஒரு வகையில் நெருக்கடி கொடுத்து பேச்சுவார்த்தை மூலம் இந்திய தேசிய முதலாளிகள் அதிகாரத்தை கைப்பற்றிட முயற்சி செய்தனர்.எனினும் அவர்கள் இதில் வெற்றியடையவில்லை.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்
இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு வெகுஜன எழுச்சி ஏற்பட்டது. நாடு முழுவதும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், வங்காளத்தில், விளைச்சலில் ஐந்தில் மூன்று பங்குக்கு உரிமை கோரிய குத்தகை விவசாயிகளின் தேபாகா போராட்டம், பம்பாய் ஆர்.ஐ.என் (பிரிட்டிஷ் கப்பற்படை மாலுமிகள்) போராட்டம், அவர்களுக்கு ஆதரவான பம்பாய் தொழிலாளர்களின் போராட்டம், விவசாயிகளின் உரிமைக்காகவும் தொழிலாளர்களின் உரிமைக்காகவும் 400க்கும் மேற்பட்ட தோழர்களை பலிகொடுத்து போராடிய கேரள புன்னப்புரா வயலார் எழுச்சி, வடக்கு மலபார், கையூர், திரிபுரா பழங்குடி இன எழுச்சி என இப்படி ஏராளமான வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டங்கள் கம்யூனிஸ்டுகளின் தலைமையில் இக்காலத்தில் நடந்தன.
கூலி விவசாயிகள், ஏழை விவசாயிகளின் உரிமைக்காக உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற கோரிக்கைக்காக முன்வைத்து 4000க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாய தொழிலாள தோழர்கள் உயிரை ஈந்து நடத்திய தெலுங்கானா ஆயுத எழுச்சி, மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் வோர்லி பழங்குடி மக்களை கந்துவட்டி கும்பலிடமிருந்தும், நிலப்பிரபுக்களிடம் இருந்தும் விடுவிக்க நடந்த வீரம் செறிந்த போராட்டம், கீழைத்தஞ்சையில் விவசாயிகள் போராட்டம் இவை அனைத்தையும் தலைமை தாங்கி நடத்தியது கம்யூனிஸ்டுகள்தான். ஏகாதிபத்திய எதிர்ப்பு போரில் முன்னணி பகுதியாக கம்யூனிஸ்டுகள் மாறினார்கள். சுதந்திரத்திற்காக ஏற்பட்ட வெகுஜன எழுச்சியை இந்திய தேசிய முதலாளி வர்க்கம் தங்களின் சுயநலனுக்காக பயன்படுத்தியது. தேசிய முதலாளித்துவ வர்க்கம் சமரச போக்கில் ஈடுபட்டு பிரிட்டிஷ் அரசிடமிருந்து சமாதான ரீதியில் அதிகாரத்தை மாற்றிக்கொள்ள முயன்றனர்.
1946ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் பிரிட்டிஷ் – இந்திய கப்பற்படை வீரர்கள் நடத்திய எழுச்சி. பிரிட்டிஷார் கடைபிடித்து வந்த இனப் பாகுபாட்டு கொள்கைக்கு எதிராக ஒரு மாதத்திற்கு முன்பாக இந்திய விமானப் படைவீரர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் படையைச் சேர்ந்த அனைத்து பிரிவினர் மத்தியிலும் இனப்பாகுபாட்டிற்கு எதிரான உணர்வு இதேபோன்று இருந்து வந்தது. ஆனால் கடற்படை வீர்ர்கள் நடத்திய கலகத்திற்கு ஈடான வடிவத்தை வேறு எந்த போராட்டமும் எட்டவில்லை.
கடற்படை வீரர்களின் எழுச்சி உலக யுத்தத்திற்கு பிந்தைய காலத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு எழுச்சியில் மிகவும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக கருதப்படுகிறது. பிரிட்டிஷ் இந்தியாவின் தரைப்படை,விமானப்படை மற்றும் கடற்படை வீரர்களோடு இணைந்து மாபெரும் எழுச்சியாக உருவாகிய இப்போராட்டத்திற்கு ஆரம்பத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய இயக்கங்கள் ஆதரவு அளித்தன. ஆனால் பின்னர் காங்கிரசும், முஸ்லிம் லீக்கும் போராட்டத்திற்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றன. ஆனால் கம்யூனிஸ்டுகள் கப்பற்படை எழுச்சிக்கு வழிகாட்டியது மட்டும் அல்லாமல் அவர்களுக்கு ஆதரவாக இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்த அனைத்து தொழிலாளர்களையும் இணைத்து காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இது நாடு முழுவதும் மிகப்பெரிய எழுச்சியை உருவாக்கின. இந்த போராட்டங்களுக்கு பிறகே, இனியும் இந்தியாவை ஆட்சிசெய்ய முடியாது என்ற நிலைக்கு பிரிட்டிஷார் வந்தனர்.
இந்திய விடுதலை என்பது நம் பாட புத்தகத்தில் படித்தது போல் கத்தியின்றி, இரத்தமின்றி பெறப்பட்டதல்ல. மகாத்மா காந்தியின் ஆளுமைமையை கண்டு அஞ்சி நடுங்கி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் விடுதலையை கொடுத்துவிடவில்லை. காங்கிரஸ் கட்சி நடத்திய ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என அவர்கள் நடத்திய இந்த மூன்று போராட்டத்தினால் மட்டுமே நாடு விடுதலை அடைந்துவிடவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய முஸ்லிம் லீக், கத்தார் கட்சி, மித்ரமேலா, அபிநவ் பாரத், அனுசீலன் சமிதி, யுகாந்தர் குழு, இந்துஸ்தான் குடியரசு ராணுவம், இந்துஸ்தான் குடியரசு சோசலிஸ்ட் ராணுவம், பாரத் மாதா சங்கம், ஏஐடியுசி, கிசான் சபா, அனைத்திந்திய மாணவர், இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் இப்படி நூற்றுக்கணக்கான அமைப்புகள் நடத்திய போராட்டங்களில் லட்சகணக்கான மக்கள் எழுச்சியாக பங்கெடுத்ததும் கூட அதற்குக் காரணம் என்பதையும் வரலாற்றிலிருந்து மூடி மறைத்துவிட முடியாது.
Leave a Reply