மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


கம்யூனிஸ்ட் இயக்கத்தில் கருத்துப் போராட்டங்கள் : தோற்றமும், இயக்கத்தின் மீதான தாக்கமும்


(கட்சியின் நூற்றாண்டை முன்னிட்டு “பீப்பிள்ஸ் டெமாக்ரசி” யில் வெளிவந்த தொடர் கட்டுரைகளை அடிப்படையாக கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. தமிழில் சுருக்கமாக: அபிநவ் சூர்யா )

சுதந்திரத்திற்கு பின் முதல் பொதுத் தேர்தல்

சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும், தடைகளும் தாக்குதலும் நிறைந்த கடுமையான சூழலிலும் கூட ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி ஏகாதிபத்தியத்திற்கும், பிற்போக்கு சக்திகளுக்கும் எதிராக மக்களை திரட்டும் பணியை அயராது மேற்கொண்டது. இந்த சூழலில் தான் 1952 -இல் முதல் பொதுத் தேர்தலை எதிர்கொண்டது. பல கம்யூனிஸ்ட் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோதும், அத்தேர்தலில் பல இடங்களில் வென்று மிகப்பெரும் எதிர்கட்சியாக உருவெடுத்தது. தேர்தலுக்கு பின் உடனடியாக மூன்றாவது அகில இந்திய மாநாட்டை நடத்துவதற்காக கட்சி ஆயத்தமானது.

இதர கட்சிகளை கையாள்வது குறித்தும், பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மத்தியக் குழு தொடர்ந்து விவாதித்தது. மிக நீண்ட ப்ளீனம் கூட்டம் 1952  டிசம்பர் 30 முதல் 1953 ஜனவரி 10  தேதிவரை  நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கட்சியின் மூன்றாவது அகில இந்திய மாநாடு 1953 டிசம்பர் 27 –ம் தேதி முதல் 1954 ஜனவரி 4 -ம் தேதி வரை மதுரையில் நடைபெற்றது. மாநாட்டில் ‘கட்சி திட்டம்’ அங்கீகரிக்கப்பட்டது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானத்தில் கட்சியின் ஊழியர்களுக்கும் வெகுஜனங்களுக்கும் பத்திரிக்கைகள் மூலம் உழைக்கும் வர்க்க கருத்தியலை கற்பிப்பதன் தேவையும், கட்சி அறிக்கைகளை பிரச்சாரப்படுத்துவதன் தேவையும் முன்னிறுத்தப்பட்டது. மத்தியத்தர வர்க்கங்களிலிருந்து வரும் பல கட்சி உறுப்பினர்களும் தத்துவார்த்த ரீதியாக வளராமலும், மார்க்சிய-லெனினிய தத்துவங்களை தொழிலாளி-விவசாயி வர்க்கங்களிடையே திட்டமிட்ட முறையில் கொண்டு செல்ல பயிற்சி பெறாமலும் உள்ளனர் என்பதை அரசியல் தீர்மானம் குறிப்பிட்டது.

“கட்சியில் ‘தலைவர் – ஊழியர்’ பண்பு அதீதமாக காணப்படுகிறது. பரந்துபட்ட விவாதங்கள், மேல் குழுக்களில் மட்டுமே நடப்பதும், முடிவுகளை நடைமுறையில் செயல்படுத்துவதில் மட்டுமே கீழ்நிலை குழுக்கள் முனைப்பு காட்டுவதும், கட்சியின் ஊழியர்களின் வளர்ச்சியை பாதிக்கிறது” என்றது அந்த ஆவணம். இந்த நிலையை சரி செய்ய தீர்மானம் முன்வைக்கப்பட்டது. கீழ்நிலை குழுக்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை ஆய்வு செய்து தீர்வு கண்டறியும் அளவு வளர மேல்நிலை குழுக்கள் வழிவகை செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

உட்கட்சி போராட்டம் துவக்கம்

மொழி வாரி மாநிலங்கள் அமைக்கப்படுவது கம்யூனிஸ்டுகளின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. மொழி வாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டால் மட்டுமே நாட்டின் முன்னேற்றத்தை நோக்கிய பொருளாதார, அரசியல் வாழ்வின் மறுகட்டமைப்பில் வெகுஜன மக்களின் ஜனநாயகப் பங்களிப்பு முழுமையடையும் என்ற புரிதல் கட்சிக்கு இருந்தது. மொழி வாரியாக அமைக்கப்பட்ட மாநிலங்களில் தாய் மொழியிலேயே கல்வி முறை இருக்கவேண்டும் என்றும் கட்சி கோரிக்கை வைத்தது.

இந்த காலத்தில் நேரு அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்த முக்கிய விவாதங்கள் கட்சிக்குள் எழுந்தன.  இந்திய அரசின் வெளியுறவு கொள்கைகள் குறித்தும், ஐந்தாண்டு திட்டங்கள் குறித்தும், ‘சோஷலிச பாணி சமூகத்தை கட்டமைப்போம்’ என்ற காங்கிரஸ் கட்சியின் ஏமாற்று கோஷங்கள் குறித்தும் விவாதங்கள் எழுந்தன. கட்சியின் ஒரு பகுதியினர் இந்த கோஷங்களால் ஏமாந்தனர். தேசிய முதலாளி வர்க்கம் இரண்டாக பிளவுற்றதாக வாதிட்டனர். ஏகாதிபத்தியத்துடனும், நிலப்பிரபுத்துவத்துடனும் முழுமையாக கைகோக்கும் ஏகாதிபத்தியம் ஒருபுறமும், ஏகாதிபத்திய-நிலப்பிரபுத்துவத்தை எதிர்க்கும் நேரு தலைமையிலான “இடது காங்கிரஸ்” மறுபுறமும உள்ளதாக வாதிட்டனர். இந்த கண்ணோட்டம் மத்தியக்குழுவினால் நிராகரிக்கப்பட்டாலும், கட்சிக்குள் தொடர்ந்து நிலவியது. இந்த சூழலில்தான் கட்சியின் நான்காவது மாநாடு பாலக்காடு நகரில் 1956 ஏப்ரல் 19 முதல் 29 வரை  நடைபெற்றது.

சர்வதேச கம்யூனிச இயக்கம், குறிப்பாக சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சி கண்ட மாற்றங்கள் கட்சி மாநாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1956 ல் நடைபெற்ற சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடும், தவறான ஆய்வின் அடிப்படையில் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் திரிபுவாத சக்திகளுக்கு வலுவூட்டியது.

பாலக்காடு மாநாட்டில் மத்தியக் குழு வரைவு தீர்மானத்தில் இப்படிப்பட்ட திரிபுவாத முன்மொழிவுகள் நிறைந்திருந்தன. கட்சிக்குள் வர்க்க முரண்பாடு கண்ணோட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய இது வலு சேர்த்தது. இந்த போக்கை மறுத்த மத்தியக் குழுவின் ஒரு பகுதியினர், மாற்று வரைவை முன் வைத்தனர். இந்த வரைவு, இந்திய அரசின் வர்க்க தன்மை குறித்த தெளிவான பார்வையையும், திரிபுவாதத்திற்கு எதிரான விமர்சனங்களையும் முன்வைத்தது. தீவிர விவாதங்கள் நடைபெற்றன. வர்க்க எதிரியுடன் கைகோக்குமாறு கோரியவர்களால் கட்சியில் பெரும்பான்மையை பெற முடியவில்லை.

நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானத்தில், சர்வதேச அளவில் சோஷலிச சக்திகள் வலுவுற்றுவிட்டதாகவும், ஏகாதிபத்தியத்தின் தாக்கம் நலிந்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டது. இதனால் “பாராளுமன்ற முறைகள்”மூலமே சமூக மாற்றத்தை அடைந்துவிடலாம் என்ற எண்ணம் சிலர் மத்தியில் வலுவுற்றது. திட்டம் சார்ந்த கேள்விகளில் கட்சி பிளவுபட்டு இருந்ததை இந்த விவாதங்கள் உணர்த்துகின்றன.

தேர்தல் வெற்றிகள், தீவிரமடையும் போராட்டங்கள்

1957 பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்கு சதவீதம் இரட்டிப்பானது, இரண்டாவது மிகப்பெரும் கட்சியாகவும் உருவெடுத்தது. கேரளாவில் பெரும்பான்மையை வென்றது. தேர்தலுக்கு பின், கட்சி உறுப்பினர் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க்கி “வெகுஜன கட்சியாக” கட்டமைக்க மத்தியக்குழு அழைப்பு விடுத்தது. அமிர்தசரஸ் நகரில் கட்சியின் ஐந்தாவது “சிறப்பு” மாநாடு 1958 ஏப்ரல் 6 முதல் 13 வரை  நடைபெற்றது. “திரிபுவாத, பிரிவினைவாத போக்கிற்கு எதிராக போராடி, இந்திய நிலையை கருத்தில் கொண்டு, மார்க்சிய – லெனினியத்தை பொருத்தி, திட்டங்களை வகுக்க” கட்சியின் செயல்திட்டத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

“பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை வென்று, வெகுஜன போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலம்” பிற்போக்கு சக்திகளை திறம்பட எதிர்த்து, “மக்கள் நலனிற்கான பாராளுமன்றம் மூலம் சமூக-பொருளாதார அமைப்பில் முக்கிய மாற்றங்கள் கொண்டுவர முடியும்” என்றது தீர்மான அறிக்கை. இது “பாராளுமன்ற மோகம்” கட்சிக்குள் ஊடுருவியதை உணர்த்துகின்றது. 1957 பொதுத் தேர்தல் வெற்றிகள் இதற்கு ஊக்கமளித்தன.

கட்சி நடத்தும் பல பத்திரிக்கைகளும் மக்களுக்கு புரியாத கஷ்டமான மொழியிலும், தரவுகள் சரிவர அளிக்காமலும் கட்டுரைகளை வெளியிடுவதாக கட்சி மாநாடு விமர்சித்தது. கட்சியின் கீழ்நிலைகளிலிருந்து வரும் விமர்சனங்களை கணக்கில் கொள்ளாமல் செயல்படும் அதிகாரத்துவ போக்கு பரவலாக இருந்ததையும் மாநாடு சுட்டிக்காட்டியது. மேலும் “பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்”, “ஜனநாயக மத்தியத்துவம்” ஆகிய அம்சங்களை எதிர்ப்போரையும் மாநாடு விமர்சித்தது. இந்த அனைத்து போக்குகளையும் எதிர்க்க மாநாட்டில் உறுதியேற்கப்பட்டது.

அரசியல், தத்துவார்த்த ஞானத்தின் தரத்தை கணக்கில் கொள்ளாமல், “உட்கட்சி ஜனநாயகம்” என்ற பெயரில் குழுக்களின் உறுப்பினர் எண்ணிக்கைகளும் அதிகரிக்கப்பட்டன. ஆக, அமைப்பின் பணிகளில் திரிபுவாத போக்கின் தாக்கம் வெளிப்படையாக தெரியத் துவங்கியது.

ஒன்றுபட்ட கட்சியின் இறுதி மாநாடு

அமிர்தசரஸ் மாநாட்டிற்கு பின்னரும் கூட கட்சிக்குள் வேறுபாடுகள் நிலவின. திரிபுவாத சக்திகளால் காங்கிரஸ் மீதான மென்மையான போக்கு அதிகரித்தது. இந்நிலையில்தான் கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி மத்திய காங்கிரஸ் அரசால் கலைக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் அரசாங்கம் கலைக்கப்பட்டதற்கு எதிராக வரலாறு காணாத போராட்டத்தை கட்சி முன்னெடுத்தது. கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக காங்கிரஸ் தீவிர பொய் பிரச்சாரங்களில் ஈடுபட்டாலும், ஈ.எம்.எஸ் நம்பூத்ரிபாத் செல்லுமிடமெல்லாம் அவருக்கு குவியும் கூட்டங்கள் அதிகரித்தன. இந்த தருணத்தில் தான் இந்தியா-சீனா இடையேயான எல்லைப் போராட்டம் வெடித்தது. இதை பயன்படுத்தி, காங்கிரஸ் கட்சியும், பிற்போக்கு சக்திகளும் கம்யூனிஸ்ட் கட்சியை தாக்கினர்.

இந்த மோதல்கள் குறித்து 1959-61 இடையேயான இரண்டு ஆண்டுகளில் 10 அறிக்கைகளை கட்சி வெளியிட்டது. சியாங் காய்-ஷேக் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்திய ஆதரவுடன் தலாய் லாமா நடத்திய, தோல்வியுற்ற எதிர்புரட்சி இந்தியா-சீனா இடையேயான நல்லுறவை பாதித்தது என அறிக்கைகள் குறிப்பிட்டன. ஆனால் ஹிந்து மகாசபை, ஜன சங், காங்கிரஸில் உள்ள வலதுசாரி சக்திகள் அனைவரும் “திபெத்”பகுதியின் நிகழ்வுகளை திரித்துக் காட்டி, தங்கள் சொந்த பிற்போக்கு திட்டத்திற்கு அதைப் பயன்படுத்திக் கொண்டனர்.

இச்சூழலில்தான் கட்சியின் ஆறாவது மாநாடு 1961 ஏப்ரல் 7 முதல் 16 வரை விஜயவாடா நகரில் நடைபெற்றது. இதுவே ஒன்றுபட்ட கட்சியின் கடைசி மாநாடு ஆகும்.

தற்கால கொள்கைகள் குறித்தும், சர்வதேச கம்யூனிச இயக்கம் சந்திக்கும் தத்துவார்த்த சவால்கள் குறித்தும் மிக முக்கியமான வேறுபாடுகள் கட்சிக்குள் எழுந்தன. தேசியக் குழுவின் பெரும்பான்மை பகுதியினரால் கட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்மானம் திரிபுவாத புரிதலை அப்பட்டமாக வெளிகாட்டியது. ஆறாவது மாநாட்டில் அதன் வரலாற்றிலேயே மிக மோசமான நெருக்கடியை கட்சி சந்தித்தது.

மாநாட்டில் முன்வைக்கப்பட்ட அமைப்புசார் அறிக்கை, அமிர்தசரஸ் மாநாட்டின் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட தோல்விகளை சுட்டிக்காட்டியது. “பாராளுமன்ற மோகம்” போன்ற போக்குகள் கட்சியில் வளர்ந்ததாலும், அதை களையெடுக்க கட்சியின் எந்த நிலையிலுள்ள குழுக்களும் முன் வராததாலும், கட்சியில் தவறான போக்குகள் தலைதூக்கியதை அந்த அறிக்கை கண்டறிந்தது. கட்சியின் தலைமை குழுக்கள் மற்றும் உறுப்பினர்கள் மத்தியில் உள்ள வழக்கங்களாலேயே “முதலாளித்துவ பாராளுமன்றமும், அரசியல் சாசனத்திற்கு உட்பட்ட போராட்டங்களுமே மக்களின் நம்பிக்கையை வெல்லும் ஒரே வழி” என்ற சிந்தனை கட்சிக்குள் வளர்ந்ததற்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டது.

சோஷலிச சிந்தனைகள் மக்கள் மனத்தில் மெல்ல மெல்ல வளர்ந்தால், மெல்ல மெல்ல காங்கிரஸ் அரசாங்கத்தை இடதுசாரி கட்சிகள் வெளியேற்றக் கூடும் என்ற சிந்தனை கட்சிக்குள் தலைதூக்கியது. “திரிபுவாதிகள் மார்க்சியத்தின் புரட்சிகர உணர்வை அழித்து, மக்கள் மத்தியில் சோசியலிசத்தின் மீதான நம்பிக்கையை நிலைகுலையச் செய்வர். அவர்கள் தொழிலாளி வர்க்க புரட்சியின் வரலாற்று அவசியத்தையும், முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசத்திற்கு மாறும் இடைப்பட்ட காலத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் அவசியத்தையும் மறுப்பவர்கள். அவர்கள் மார்க்சிய-லெனினிய கட்சியின் தலைமை பங்கை மறுப்பவர்கள். சர்வதேச தொழிலாளர் வர்க்க ஒற்றுமை, லெனினிய கோட்பாட்டு ரீதியான கட்சி கட்டமைப்பு, முக்கியமாக ஜனநாயக மத்தியத்துவம் ஆகியவற்றை அவர்கள் ஏற்பதில்லை. அவர்கள் கம்யூனிச கட்சியை போர்க்குணமிக்க புரட்சிகர அமைப்பிலிருந்து வெறும் ஒரு விவாத மேடையாக மாற்ற நினைப்பவர்கள்” என்று அந்த ஆவணம் குறிப்பிட்டது.

கட்சி மீதான தாக்குதல்கள்

1962 பொதுத் தேர்தல் முடிந்த நிலையில் கட்சியின் பொதுச்செயலாளர் அஜய் கோஷ் மறைந்தார். புதிய செயலாளரை தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் தேசியக் குழுவில் விவாதிக்கப்பட்டது. கட்சிக்குள் இருந்த சலசலப்புகளை பயன்படுத்தி, கட்சியின் செயல் திட்டம் அனுமதிக்காதபோதும், திரிபுவாத பிரிவினர் “தலைவர்” என்ற புதிய பதவியை உருவாக்கினர். ஒரு சமரசம் ஏற்பட, எஸ்.ஏ.டாங்கே தலைவர் பொறுப்பிற்கும், ஈ.எம்.எஸ். நம்பூத்ரிபாத் பொதுச்செயலாளர் பொறுப்பிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து நடந்த தேசியக் குழு கூட்டத்தில் சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது மாநாடு குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த ஆவணத்தின் பல தவறான முடிவுகளும் விமர்சனமின்றி ஏற்கப்பட்டன. அதில் முக்கியமானது, “சோவியத் ஒன்றியம் அடுத்த தலைமுறைக்குள் கம்யூனிச சமூக கட்டமைப்பை முடித்து விடும்”என்று கூறி ஏகாதிபத்திய சக்திகளின் தாக்கத்தை குறைத்து மதிப்பிட்டது.

இந்த சூழலில் இந்திய-சீன போர் 1962 அக்டோபரில் வெடித்தது. காங்கிரஸ் அரசாங்கம் அவசர நிலையை பிரகடனப்படுத்தியது. ( 1962 – 1968 சீன போரினால் அவசர நிலை அறிவிக்கப்பட்டது ) முசாஃபர் அகமத், ஏ.கே.கோபாலன், சுந்தரய்யா, பி.டி.ரணதிவே, ஹர்கிஷன் சுர்ஜித் போன்ற முக்கிய கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

டாங்கே தலைமையிலான திரிபுவாத பிரிவினர், கட்சியின் புரட்சிகர பிரிவினர் மீதான இந்த தாக்குதலை பயன்படுத்தி, திரிபுவாத போக்குகளை முன்னெடுக்க முயன்றனர். “தேச விரோதிகள்”, “சீன ஆதரவாளர்கள்” எனக் கூறி கட்சியின் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டிக்க மறுத்தனர்.  பிற்போக்கு சக்திகளுடன் சேர்ந்து, டாங்கே போன்ற கம்யூனிஸ்ட் கட்சியினரின் ஆதரவும் கிடைத்தது அரசாங்கத்திற்கு உற்சாகமூட்டியது. டாங்கே குழுவினரை  தவிர இதரப் புரட்சிகர கம்யூனிஸ்டுகள் காங்கிரசின் நடிவடிக்கைகளுக்கு எதிராக கடுமையாக போராடினர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, டாங்கே தலைமையிலான திரிபுவாத பிரிவினர் மேற்கு வங்கம், பஞ்சாப் போன்ற பல இடங்களில் புரட்சிகர பிரிவினரை வெளியேற்றி, கட்சியை கைப்பற்றினர்.

இதுபோன்ற பல தத்துவார்த்த போராட்டங்களை கடந்தே கம்யூனிச இயக்கம் இன்று நூறாவது ஆண்டை அடைந்துள்ளது. சர்வதேச சூழலும், உள்நாட்டு சூழலும், கட்சியின் அமைப்பு, செயல்பாடு, நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் மீது பல தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவை அனைத்தும் கட்சி மாநாடுகளில், அதன் ஆவணங்கள் மற்றும் முடிவுகளில் பிரதிபலிக்கின்றன.



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: