பொது சுகாதாரம்: முதலாளித்துவ பார்வையின் குறைபாடுகள்


(பொது சுகாதாரம் குறித்து முதலாளித்துவ அறிஞர்களிடம் இருந்த நம்பிக்கைகள் சிதைந்திருக்கும் சூழலில் அதற்கான அடிப்படை காரணங்களை ரிச்சர்ட் லெவின்ஸ் பட்டியலிடுகிறார். குறுகலான முதலாளித்துவ பார்வையிலிருந்து, முற்போக்கான மார்க்சிய பார்வையை அவர் வேறுபடுத்துகிறார். இந்தப் பார்வையை முன்னெடுப்பது வர்க்கப் போராட்டத்தில் தவிர்க்க முடியாதது என்கிறார். மந்த்ளி ரிவியூ இதழில் அவர் எழுதிய கட்டுரையின் சுறுக்கமான மொழியாக்கம். – ஆசிரியர் குழு)

– ரிச்சர்ட் லெவின்ஸ்

வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ‘மேற்குலக’ நாடுகளின் அறிவியல் பாரம்பரியமானது. “இது எதனால் ஆனது” மற்றும் “இது எப்படி இயங்குகிறது” என்ற கேள்விகளுக்கு பதில் தேடும் அறிவியல் கண்ணோட்டங்களில் மிகப்பெரும் வெற்றிகளை சாதித்திருக்கிறது. நூற்றாண்டுகளாக இந்த கேள்விகளுக்கான விடை அறியும் எளிய வழிமுறைகளை உருவாக்கியிருக்கிறார்கள். பொருட்களை உடைத்து திறந்தும், செதுக்கி மெலிதாக்கி, கீரியும் அவை எதனால் செய்யப்பட்டிருக்கிறது என கூறுகிறோம். ஆனால் ஒப்பீட்டளவில் சிக்கலான அமைப்புகளை புரிந்துகொள்வதில் இந்த வெற்றி சாத்தியமாகவில்லை.

மக்கள் நலவாழ்வு சார்ந்த விசயங்களை ஆய்ந்து பார்த்தால் இந்த பலவீனம்  தெளிவாகவே புலப்படுகிறது. கடந்த நூற்றாண்டிலும் அதற்கு முன்பும் மாறிக் கொண்டேவந்துள்ள மக்கள் நலவாழ்வு குறித்தான போக்குகளில் கொண்டாடுவதற்கு உள்ள காரணங்களைப் போலவே, அச்சுறுத்தும் காரணங்களும் உள்ளன. கடந்த இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் முப்பது ஆண்டுகள் அதிகரித்தது. வினோதமான உயிர்க்கொல்லி நோய்கள் மட்டுப்படுத்தப்பட்டன. கிட்டத்தட்ட அழிக்கப்பட்டன. பெரியம்மை நோய் ஒழிக்கப்பட்டு விட்டது.  தொழுநோய் அரிதான ஒன்றாக மாறிப் போயுளளது.  போலியோ நோய் உலகின் பல பகுதிகளில் ஒழிக்கப்பட்டு விட்டது. ஒரே மாதிரியான வெவ்வேறு கிருமிகளை வேறுபடுத்தி சோதித்து அறியும் அளவிற்கு அதி நவீன அறிவியல் தொழில் நுட்பத்தில் நாம்  முன்னேறியிருக்கிறோம்.

அதே சமயம் ஏழை பணக்காரர் இடைவெளி அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சிகளையும் உலக மக்கள் திரளில் பெரும் பகுதியினருக்கு கிடைகாத சூழல் உருவாகியுள்ளது. இப்படியான சூழலில் புதுப்புது நோய்கள் தோன்றுகின்றன, ஒழித்துவிட்டதாக கருதிய நோய்கள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளன. இது பொதுசுகாதார வல்லுனர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது.

1970-களிலேயே தொற்று நோய்கள் முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டன. அதாவது தொற்றுநோய்கள் கொள்கையளவில் ஒழிக்கப்பட்டுவிட்டன.  எதிர்கால சுகாதாரப் பிரச்சனை என்பது சிதைவுறுதல் நோய்கள் (Degenerative diseases), வயது முதிர்வு காரணமாக ஏற்படும் நோய்கள், நாட்பட்ட நோய்கள் போன்ற நோய்களாகும்.  அவ்வாறு நினைத்தது ஒரு இமாலயத் தவறு என்பதை இன்று உணர்கிறோம். 

மலேரியா, காலரா, காசநோய், டெங்கு மற்றும் நவீன நோய்கள் வந்துள்ளன. புதிய, வேறுபட்ட வகையிலான நோய்கள் பீடித்திருப்பதும், அதில் மிகவும் அச்சப்படத்தக்க நோயான ‘எய்ட்ஸ்’ நோய், ‘லிஜனேர்’ நோய் (Legionnaire’s disease), எபோலா தொற்று, நச்சு அதிர்வு பாதிப்பு (Toxic shock syndrome) பல்வேறு மருந்துகளுக்கும் கட்டுப்படாத காச நோய் மற்றும் இதர நோய்களின் தாக்குதல் அதிர்ச்சி தருகின்றன.

இது எப்படி நடந்தது?  பொதுசுகாதாரம் இவ்வாறு சிக்கலுக்குள்ளானது எப்படி?  சுகாதார நிபுணர்கள் தொற்று நோய் மறைந்து விடும் என கருதியது எப்படி? அது ஏன் தவறாகியது?

பொய்யாகிப்போன சில காரணங்கள்

கடந்த நூற்றைம்பது ஆண்டுகளாக ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் தொற்று நோய்த் தாக்கம் குறைந்து வந்தது உண்மைதான்,  இந்த போக்கு அப்படியே தொடரும் என்பது வழக்கமான கணிப்பு ஆகும். அவ்வாறு கணித்த சுகாதார வல்லுனர்கள் முன்வைத்த வாதம் தொற்று நோய்கள் முற்றாக மறைந்து விடும் என்பதாகும்.

முதலாவதாக அதனை எதிர்கொள்ள அனைத்து விதமான புதிய தொழில்நுட்பங்களையும் கடைபிடித்துள்ளோம் என்பதால் அவர்கள் அவ்வாறு நம்பினார்கள்.

உண்மையில் சில நோய்களைக் கண்டுபிடிப்பதில் விரைவாகச்  செயல்பட்டிருக்கிறோம். இரண்டே நாளில் ஆளைக் கொன்றுவிடும் அபாயமான நோய் பீடித்த நோயாளருக்கு ஆய்வக பரிசோதனைகளின் மூலம் நோயை விரைவாகக் கண்டுபிடித்து உடனே சிகிச்சை அளிக்க முடிகிறது.  வாரக் கணக்கில் பாக்டீரியா கிருமிகளை வளர்த்து அதன் மூலம் நோயைக் கண்டறிவதற்குப் பதிலாக மரபணு சோதனை மூலம் ஒரே மாதிரி தெரிகிற நோய்க்கிருமிகளையும் கூட விரைவாக வேறுபடுத்தி அடையாளம் காண முடிகிறது.  

நோய் பரப்பும் நுண் உயிரிகளுக்கு எதிரான போர்க் கருவிகளாகிய  மருந்துகளையும், தடுப்பூசிகளையும் உருவாக்கியுள்ளோம். கொசு மற்றும் சிறு பூச்சிகளை (Ticks) அழிப்பதற்கு மருந்துகள் உருவாக்கியுள்ளோம்.  உயிர்வகை மாற்றம் மற்றும் இயற்கை தேர்வு மூலம் நுண்ணுயிரிகள் தொடர்ந்து அச்சுறுத்தும் என்பது நாமறிந்ததே. எனவே நோய்கள் உருவாகும் செயல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேயிருக்கும்.  அதே சமயம் அதனை எதிர்கொள்ள இதுவரை கண்டிராத புதுப்புது ஆயுதங்கள் உருவாக்கப்படும்.

குறிப்பிட்டுச் சொன்னால் நமக்கும், நோய் உருவாக்கும் நுண்ணுயிரிகளுக்கும் போர் நடக்கிறது. நாம்தான் இதில் முன்னணியில் இருப்போம். ஏனெனில் நமது ஆயுதங்கள் மென்மேலும் வலுவானதாகவும், ஆற்றல் மிக்கதாகவும் உள்ளன.

மற்றொரு காரணம் – இதைத்தான் உலக வங்கியும், சர்வதேச நிதி நிறுவனமும் சுட்டிக் காட்டுகிறது – பொருளாதார வசதி வறுமையை ஒழித்துவிடும், செல்வத்தைப் பெருக்கிவிடும் எனவே அனைத்து புதிய தொழில்நுட்பங்களும் அனைவருக்கும் கிடைக்கும்.

மூன்றாவதாக மக்கள் தொகை வல்லுனர்கள் ஒரு காரணத்தை முன்வைத்தார்கள். தொற்று நோய்கள் குழந்தைகள் மீதே கடுமையாக இருக்கின்றன, நமது சமூகத்தில் வயது மூத்தவர்கள் அதிகம் எனவே நோய் தாக்கத்திற்கு குழந்தைகள் ஆளாகும் வாய்ப்பு குறைவாகும்.

இவ்வாறு அனுமானக்கும்போது ஒரு விசயத்தை அவர்கள் கவனிக்க தவறியுள்ளார்கள். குழந்தைகளை நோய்கள் அதிகம் தாக்குவதற்கு காரணம் அவர்கள் கிருமிகளை எதிர்கொண்டதில்லை என்பதாகும். வயதானவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிக் கொண்டுள்ளார்கள். இப்போது குறைவாக உள்ள குழந்தைகளுக்கு வயதாகும்போது அவர்கள் நோய்க்கு ஆளாகும் சாத்தியம் அதிகம். அம்மை போன்ற வியாதிகள் குழந்தைகளை விடவும் வயதானவர்களுக்கே அதிகமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

குறுகிய கண்ணோட்டமே பிரச்சனை

மருத்துவமும் அது சார்ந்த அறிவியல் துறையும் கொண்டிருக்கும் வரலாற்று அறிவும், தத்துவ புரிதலும் ஒரு வரம்புக்கு உட்பட்டவையே ஆகும். பொது சுகாதார கணிப்பில் ஈடுபட்டுள்ள கிட்டத்தட்ட அனைவரும் பூகோள ரீதியிலும், வாழ்வுரிமை பற்றியும் குறுகிய கண்ணோட்டம் கொண்டவர்கள். அவர்கள் கடந்த நூற்றாண்டு அல்லது இரண்டு நூற்றாண்டுகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்கின்றனர்.  முழுமையான வரலாற்றுக் காலத்தை எடுத்துக் கொள்வதில்லை.  நீண்ட கால நோக்கில் அவர்கள் பார்த்திருப்பார்களென்றால் மக்கள் தொகையிலும், உணவு மற்றும் நிலப்பயன்பாட்டிலும் ஏற்பட்டிருக்கும் பெரிய மாற்றங்களின் விளைவாக, நோய் உருவாக்கம் ஏற்படுவதையும், மறைவதையும் கணக்கில் எடுத்திருப்பார்கள். இயற்கையோடான உறவில் மாற்றம் ஏற்படும்போது தொற்று நோய் பரவலுக்கும், தாக்குதலுக்கும் ஆளாகிறோம்.

ஐரோப்பாவில் பிளேக் நோய்

ஆறாம் நூற்றாண்டில் ரோமப் பேரரசில் ஜஸ்டினன் என்ற அரசருடைய முடியாட்சிக் காலம் வீழ்ச்சியுற்ற சமயத்தில் ஐரோப்பாவில் முதன்முறையாக பிளேக் நோய் பரவியது.  சமூக சீர்குலைவும், உற்பத்தி வீழ்ச்சியும் ஏற்பட்டு ஐரோப்ப கண்டமே துயரில் ஆழ்ந்தது.  அந்தக் காலகட்டத்தில் மிகப் புகழ் பெற்ற நகரங்களில் சுகாதார வசதிகள் சீர்குலைந்தன.  பிளேக் நோய் பரவிய காலத்தில் பெரும் எண்ணிக்கையில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.  14 ஆம் நூற்றாண்டில் நிலப்பிரபுத்துவத்திற்கு நெருக்கடி உருவாகி வளர்ந்த காலத்தில் பிளேக் நோய் மீண்டும் தோன்றியது, பிளேக் நோய் பரவுவதற்கு முன்பாகவே மக்கள் தொகை வீழ்ச்சியுற்றதை பார்த்தோம்.  1338-ஆம் ஆண்டில் ஆசியாவிலிருந்து கருங்கடல் துறைமுகங்களில் வந்திறங்கிய மாலுமிகள் மூலம் பிளேக் நோய் கடத்தப்பட்டு பின்னர் அது அங்கிருந்து குறுகிய கால இடைவெளியில் மேற்கு முகமாக பயணம் செய்து ரோம், பாரீஸ், லண்டன் நகரங்களைத் தாக்கியது என்பதே பிளேக் நோய் பரவல் குறித்த பொதுவான வரலாறு ஆகும்,  வேறு வார்த்தைகளில் சொன்னால், பிளேக் நோய் வேறு இடத்தில் தோன்றி இங்கு பரப்பப்பட்டது என்பதாகும்.  இதற்கு முன்னர் பல கால கட்டங்களில் பலமுறை பிளேக் நோய் தோன்றியிருக்கக்கூடிய சாத்தியப்பாடு இருந்தும், எந்தப் பாதிப்புகளையும் ஏற்படுத்தவில்லை. மக்கள் அதனை எதிர்த்து நிற்கும் சக்தியை இழந்திருந்த போதுதான் அந்த நோய் வெற்றிபெற்றது. எலிகளை கட்டுப்படுத்தி வந்த  நமது சமூகத்தின் கட்டுமானம் தகர்க்கப்பட்ட பின்னணியில், எலிகளினால் பரப்பப்படும் நோயினை எதிர்க்கும் சக்தியை இழந்தோம்.

சூழலியலை கணக்கில் கொண்ட பார்வை

இதர நோய்களைப் பார்த்தோமானால், அவைகள் வரலாற்றில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் சூழ்நிலைகள் காரணமாக உருவாவதும், மறைவதும் நிகழ்கிறது. நாடு வளர்ச்சியடையும்போது தொற்று நோய் மறைந்து விடும் என்ற கோட்பாட்டிற்கு  மாற்றாக ஒரு சுற்றுச்சூழல் பார்வை முன்வைக்கப்பட்டது.  மக்களின் வாழ்வியலில் ஏற்படும் பெரிய மாற்றங்கள் காரணமாக (மக்கள் தொகை பெருக்கம், தங்குமிட அமைப்பு முறை, உற்பத்தி முறைகள்) நோய்க்கிருமிகள், அவைகளின் உற்பத்தி மற்றும் பரவல் ஆகியவற்றிலும் மாற்றம் ஏற்படுகிறது

லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் இதர பகுதிகளில் பரவிய ரத்தக்கசிவு நோய் எலிகள் மூலம், நேரடியாக இல்லாமல் விளைந்த தானியக் கதிர்களை கடித்து உண்ட மிச்சத்தை சுத்தம் செய்ததன் வழியாக பரவியது.  தானியங்கள் எலிகளின் உணவாகும்.  எலிகள் தானிய விதைகளையும், புற்களையும் உண்டு வாழ்கின்றன.  காடுகள் அழிக்கப்பட்டு, தானிய பயிர் விளைச்சல் துவங்கிய பொழுது ஓநாய், சிறுத்தை, பாம்புகள் மற்றும் எலிகளை தின்னும் ஆந்தை போன்ற உயிரினங்கள் அழிக்கப்பட்டன.  அதன் இறுதி விளைவாக எலிகளுக்கான  உணவுத் தேவை கூடியது, எலிகளின் இறப்பு விகிதம் குறைந்தது.

தற்போது தொற்று நோய்களின் வாகனமாக இந்த சமுக விலங்குகள் உள்ளன.  அவைகள் தங்களுக்கான வளைகளை கட்டிக் கொண்டன.  தங்கள் இனத்தை கட்டிக் காத்தன.  எப்பொழுது எல்லாம்  புதிய தலைமுறை உருவாகிறதோ, அப்பொழுது இளமையான எலிகள் புதிய இடங்களைத் தேடி வளைகள் அமைக்கச் சென்று விடுகின்றன.  அவைகள் பெரும்பாலும் உணவுக் கிடங்குகளையும், குடியிருப்புகளையும் நோக்கிச் சென்றன.  அதன் மூலம் நோயைக் கடத்துபவைகளாக  மாறிப்போயின.

இதே போன்ற மற்றொரு மனித நடவடிக்கை நீர்ப்பாசன ஏற்பாடுகள் ஆகும்.  இதனால் கல்லீரல் புளூக் நோயை பரப்பும் நத்தை, மலேரியா, டெங்கு மற்றும் மஞ்சள் காமாலை நோயை பரப்பும் கொசு போன்ற உயிரினங்களுக்கான வாழ்விடங்கள் உருவாகின்றன. நீர்ப்பாசனம் பெருகிய பொழுது, உதாரணமாக எகிப்தில் அஸ்வான் அணை கட்டிய பின்னர் கொசுக்களின் வாழ்விடங்கள் உருவாக்கப்பட்டன.  எப்போதாவது வரும் ‘ரிப்ட் பள்ளத்தாக்கு காய்ச்சல்’ எகிப்தில் இப்போது எல்லாக் காலங்களிலும் காணப்படும் நோயாக மாறியுள்ளது. 

மூன்றாம் உலக நாடுகளில் பிரம்மாண்டமான நகர உருவாக்கம் காரணமாக  டெங்கு நோயைப் பரப்பும் கொசுக்களால் “ஏடெஸ் எகிப்தி”  எனும் மஞ்சள் காமாலை நோய் பரப்பப்படும் புதிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.  நகரத்தின் மூலை முடுக்கெல்லாம் வாழ அவை பழகிக்கொண்டன.  காடுகளில் இருக்கக்கூடிய இதர கொசுக்களோடு போட்டி போட முடியாத சோனி கொசுக்கள் வெப்ப மண்டலங்களில் பெரிய நகரங்களில் கைவிடப்பட்ட பொருட்களான குட்டைகள், நீர்த்தொட்டிகள் மற்றும் பழைய டயர்கள் மூலம் இனப் பெருக்கம் செய்ய வசதியாக ஒரு சிறப்பு சூழலை உருவாக்கித் தந்துள்ளோம். வெப்ப மண்டலங்களில் நகரமய வளர்ச்சி, குறிப்பாக பெருநகரங்களான பாங்காக், ரியோ டி ஜெனீரோ. மெக்சிகோ மற்றும் பத்திலிருந்து இருபது மில்லியன் மக்கள் தொகை கொண்ட பெருநகரங்களில் டெங்கு மற்றும் மஞ்சள் காமாலை நோய் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.

மக்கள் தொகை நெருக்கம்

மக்கள் தொகை நெருக்கமானது புதிய புதிய நோய்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது.  தட்டம்மை நிலைத்து நிற்க சில நூறு ஆயிரம் மக்கள் தொகை போதும். எண்ணிக்கை குறைவாக இருந்தால் தட்டம்மை அனைவரையுமே தாக்கும், அதிலிருந்து மீள்வோருக்கு எதிர்ப்பு சக்தி உருவாகிவிடும். குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்போது அந்த நோய் நீடித்திருக்க முடியாமல் மறைந்துவிடும். மீண்டும் அது உருவாகித்தான் வளர வேண்டும். இரண்டரை லட்சம் பேர் வாழுகிற ஒரு நகரத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவான குழந்தைகளின் எண்ணிக்கையானது தட்டம்மை நோய் நிலைத்து தொடர போதுமான அளவாகும்.  அதுவே ஒரு கோடிப்பேர் அல்லது இரண்டு கோடிப்பேர் வாழும் நகரமாக இருந்தால் எம்மாதிரியான நோய்கள் தோன்றவும், பரவவும் முடியும் என எண்ணிப் பார்க்க வேண்டும்.  வாழ்க்கை நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டால் அது நோய்க்கான வாய்ப்பு வாசல்களை திறந்து விடும் என்று தெளிவாக தெரிகிறது.

நுண்ணுயிர்கள் பரவலுக்கான சூழல்

பொது சுகாதாரம் பற்றி குறுகிய பார்வை கொண்ட மருத்துவர்கள், மனிதனுக்கு தோன்றும் நோய்கள் மீது மட்டுமே அக்கறை கொள்வார்கள், காட்டு விலங்குகள் அல்லது வளர்ப்பு பிராணிகள் மற்றும் தாவரங்களைத்  தாக்கும் நோய்கள் மீது போதிய அக்கறை செலுத்துவதில்லை. அவ்வாறு கவனம் செலுத்தினால் எல்லா உயிரினங்களும் நோய்களை பரப்புகிற உண்மையை அவர்கள் எதிர் கொள்ள நேரிட்டிருக்கும்.  ஒட்டுண்ணிகளால் தான் நோய்கள் பரப்பப்படுகின்றன.  நோய்த்தொற்று ஒன்று தோன்றினால் அதன் அறிகுறிகள் தென்படலாம் அல்லது தென்படாமலும் இருக்கலாம். ஆனால் எல்லா உயிரினங்களும் ஒட்டுண்ணிகளுடன் தொடர்பு உடையவையே.  நீரிலோ அல்லது நிலத்திலோ உயிர்வாழ்வதற்கான போட்டியில் தப்பி பிழைக்கும் வழியாகத்தான் ஒட்டுண்ணிகள் உயிரினங்களில் தொற்றுகின்றன.

உதாரணமாக லிஜனேர் நோய்க் கிருமி தண்ணீரில் தான் வாழ்கிறது. இந்த பாக்டீரியா கிருமி உலகமெங்கும் காணப்பட்டாலும் அதன் வலுவற்ற தன்மை காரணமாக, பரவலாக நோயை உருவாக்கவில்லை. அதன் நுணுக்கமான உணவுத்தேவைகளின் காரணமாக, மனிதர்களை பெரும்பாலும் தொற்றுவதில்லை. அதற்கு சில தன்மைகள் உண்டு.   ஒன்று கடுமையான வெப்பநிலையைத் தாங்கும் சக்தி, இரண்டு ஓர் அமீபாவிற்குள் ஒளிந்து கொண்டு குளோரின் தாக்குதலிலிருந்து தப்பிக்கும் ஆற்றல். அரங்கங்கள், உணவு விடுதிகள், சாலையோரக் கடைகளில் தண்ணீரை கொதிக்கவைத்து, குளோரின் கலந்து பயன்படுத்துகிறார்கள். சில தங்கும் விடுதிகளில் ‘ஷவர்’ (நீர்த்தூவல்) வசதி இருக்கும். அதில் நீர் பொழியும்போது அதனால் கிருமிகளை நுரையீரலின் இடுக்குகளுக்கு கொண்டு சேர்க்க முடியும். லினேஜர் கிருமிக்கு தகுந்த சூழலை இந்த வகையில் நாம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். குளோரினும், நீரை கொதிக்க வைப்பதும் லினேஜர் கிருமி அல்லாத பிற கிருமிகளை அழித்துவிடும். குழாய்களின் உட்பகுதிகளில் லினேஜர் கிருமிகள் தங்கிக் கொள்கின்றன.

உயிரினங்களை நாம் கவனித்தோமானால், ஒட்டுண்ணி மற்றும் அதன் புரவலர் உயிரினங்கள் மீது அமர, போட்டி போடுகின்றன.  ஒரே பண்புடைய உயிரினங்கள், ஒட்டுண்ணிகளை ஈர்க்கும் தன்மை கொண்டவை, எனவே ஒட்டுண்ணிகள் அவற்றை நோக்கி படையெடுக்கின்றன.  நோய் பரவல், குறிப்பாக, காலரா பரவல் குறித்து உற்று நோக்கினால், அது  பூமிக் கோளத்தின் கிழக்கு பகுதியிலிருந்து அமெரிக்கா சென்று பின்னர் பெரு நாட்டிற்குள் புகுந்து மத்திய அமெரிக்கா வரை பயணப்பட்டுள்ளது.  ஆரஞ்சு மர நோய், பீன்ஸ் மற்றும் தக்காளியைத் தாக்கிய நோய்க் கிருமிகள், அதே போல விலங்குகளை தாக்கிய நோய்கள் இதே பாதையில் பயணப்பட்டுள்ளன.  நாம் காண்பது என்னவென்றால் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வாழ்க்கையில் நோய்க்கிருமிகள் மற்றும் அதன் புரவலர்கள் ஓர் இணையான பரிணாம வளர்ச்சியை கொண்டுள்ளன.  ஆனால் இவை மனிதர்களிடம் காணப்படுவதில்லை என்பது ஒரு வேறுபாடு ஆகும். இந்தக் கண்ணோட்டத்தில் மனிதனைத் தாக்கும் நோய்கள் குறித்து புரிதல் ஏறிபட்டால் அதன் மூலம் ஏற்படும் சாத்தியமான ஆபத்துகளை கண்டுகொள்ள முடியும்.

நோய்க் கடத்தல்  முறை

எந்த மாதிரியான பூச்சிகள் நோயைப் பரப்புகின்றன. கிட்டத்தட்ட அவைகள் கொசுக்களாகவோ அல்லது ஈககளாகவோ உள்ளன அல்லது உண்ணி, வண்டு மற்றும் பேன் போன்ற பூச்சிகளாக இருக்கின்றன, பல்லாயிரக்கணக்கான பூச்சியினங்கள் இருந்தாலும், இந்த இரு பிரிவுகள் தான் பெரும்பாலும் நோய்க்கிருமிகளை மனிதனிடம் பரப்புகின்றன.   பட்டாம்பூச்சி மற்றும் தட்டான்பூச்சி போன்ற பூச்சிகள் மூலம்  நோய்கள் பரப்பப்படுவதில்லை.  அது ஏன் இப்படி நடக்கிறது?  அதற்கான காரணம் என்ன?

இந்த இரு பிரிவுகளும் ஒரே மாதிரியான உறிஞ்சு குழல் வாயமைப்பு கொண்டவை.  அவர்களின் புரவலர்களிடமிருந்து ஒரு வித திரவத்தை உறிஞ்சுகின்றன.  கொசு ரத்தத்தினை உறிஞ்சுகிறது. அபிட் வண்டு தாவரத்தின் சத்துக்களை உறிஞ்சுகிறது.  ஏதாவது பானத்தை உறிஞ்சு குழல் மூலம் உறிஞ்சிப் பழகியிருந்தால் நீங்கள் அறிவீர்கள், அதாவது உறிஞ்சிய சில நேரம் கழித்து உறிஞ்சு குழலில் ஓர் இடைவெளி உண்டாகும். தொடர்ந்து பானத்தை உறிஞ்ச வேண்டுமானால் ஒரு சிறு அளவாவது அந்தத் திரவம் அக்குழாய்க்குள் திருப்பி அனுப்பப்பட வேண்டும்.  கொசு மற்றும் அபிட் வண்டின் உமிழ்நீர் சுரப்பி உறிஞ்சு குழல் மூலம் திருப்பி அனுப்பப்பட்டு ரத்தம் அல்லது உயிர்ச்சத்தை மீண்டும் பருகுகிறது.  அதனால் தான் கிருமிகள் குறித்து ஆராயும் போது, கொசுக்களின் உமிழ்நீர் சுரப்பி மற்றும் உண்ணியின் உமிழ்நீரையும் சோதிக்கிறோம். குறிப்பிட்ட நோய் அல்லது குறிப்பிட்ட சூழலை மட்டும் ஆய்வு செய்யாமல், மேற்சொன்ன வகையில் ஒட்டுமொத்தத்தையும் ஆய்வு செய்தால் நம்மால் பொதுத் தன்மையை அறிந்துகொள்ள முடியும். ஆனால் அப்படியான ஆய்வுகள் நடப்பதில்லை.

பரிணாமம் மற்றும் சமுதாயம் குறித்த பார்வையில் குறைபாடு

பொது சுகாதார அறிவியலில் நிலவக்கூடிய மற்றுமொரு குறுகிய நோக்கு – அறிவுக்கு தாமே திணித்துக்கொண்ட கட்டுப்பாடு – பரிணாம வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சியை வளர்த்தெடுப்பதின் பின்னடைவாகும். பரிணாமம் என்றால், சூழலில் ஏற்படும் சவால்களுக்கு தக்க உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்பதே உடனடியான புரிதலாக இருக்கிறது. உதாரணமாக உடல் தனக்கு எழக்கூடிய சவாலை ஆன்டிபாடி மூலம் எதிர்க்கிறது. பல நுண்ணுயிர்கள் ஆன்டிபாடிக்களை எதிர்கொண்டு நிலைத்திருக்கும் தன்மையை வளர்த்துக் கொண்டிருப்பதை பார்க்கிறோம். வேளாண் துறையில் பல பூச்சிகள், பூச்சிக்கொல்லி மருந்துகளை எதிர்த்து தங்களை தகவமைத்துக்கொண்ட அனுபவங்கள் நமக்கு உள்ளன. சில நுண்ணுயிர்கள், ஆன்டிபாடிக்களை எதிர்கொள்வதற்கு முன்பே அதற்கு எதிரான ஆற்றலை உருவாக்கிக் கொண்டிருப்பதையும் கூட பார்க்கிறோம்!. இதற்கு காரணம் புதிய பெயரோடு சந்தைக்கு வரும் மருந்துகள் அதற்கு முந்தைய மருந்துகளை பெரும்பாலும் ஒத்து இருப்பதும், பெயர் மட்டுமே புதிதாக இருப்பதும் ஆகும். எனவே கிருமிகளுக்கு அந்த ஆன்டிபாடிக்களை எதிர்கொள்வது சிரமமாக இல்லை. ஒரு நோய்க்கான காரணிகளை மட்டுமே பார்ப்பது போதாது, மக்களை பலவீனமாக்கும் பிற காரணிகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.

குறைபாடுள்ள பொது சுகாதார சிந்தனையானது, பிற உயிரிகள் குறித்தும், பரிணாம வளர்ச்சி, சூழலியல் ஆகியவை குறித்தும் கண்டுகொள்ளவில்லை. அதே போல அது சமூக அறிவியலையும் கண்டுகொள்ளவில்லை. எல்லா விதமான சுகாதார சிக்கல்களுக்கும் ஏழைகளும், ஒடுக்கப்பட்டோருமே அதிகமாக ஆளாகிறார்கள். ஆயுட்காலம், முதுமையினால் வரும் நோய்கள், மாரடைப்பு ஏற்படும் கால இடைவெளி போன்றவைகளை வெளிப்படுத்துவதாக வர்க்க வேறுபாடுகள் அமைகின்றன.

ஒரு முற்போக்கான திறனாய்வாளர் 

ஒரு முற்போக்கான மருத்துவ திறனாய்வாளர் என்றால் எது மக்களை நோயாளிகளாக ஆக்குகிறது, எந்தவித சுகாதார வசதி மக்களுக்கு கிடைக்கிறது என்பது குறித்து செயல்புரிபவராக இருக்க வேண்டும்.

மக்களின் குறைவான வருமானம், பருவநிலை மாற்றத்தின் மூலம் உண்டாகும் வெப்பம் ஆகியவை பொது சுகாதாரத்தை பாதிக்கும் முக்கியமான காரணிகளாகும். இலையுதிர் காலத்தின் இறுதியில் அல்லது குளிர் காலத்தின் ஆரம்பத்தில், மண்ணெண்ணெய் அடுப்பு, மின் அடுப்பு, மற்றும் வெப்பம் குறைவான அறைக்கு வெப்பமூட்டும் சாதனங்கள் மூலம் ஏற்படும் தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற அதிக எண்ணிக்கையில் மக்கள் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வருவார்கள். இப்படிப்பட்ட மக்களுக்கு உடல் வெப்ப நிலையில் ஒரு சிறு மாற்றம் அவரின் உடல்நலத்தைப் பாதிக்கும்.  ஆனால் வசதி படைத்தவர்களை அது பாதிக்காது.  அதுவே தான் உணவு விஷயத்திலும் இருக்கும்.  மக்கள் வேலையில் இல்லாமல் இருந்தால், அல்லது விலைவாசி உயரும் போது, அவர்கள் உணவிற்கு செலவிடுவதை குறைத்துக் கொள்வார்கள்.  அதன் உடனடி விளைவு ஊட்டச் சத்து குறைபாடு ஆகும். 

தெரிவு எனும் கற்பனை

உடல் நலத்தில் விளிம்பு நிலையில் இருப்பவர்களுக்கு, புறந்தள்ளப்படுவதால் ஏற்படும் வேறுபாடுகள், உடல்நலத்தில் கடுமையான பாதிப்பை உருவாக்கும்.  ஒருவேளை ஒரு மாணவர் கிட்டப்பார்வை உடையவர் என வைத்துக் கொள்வோம். ஆனால் அவள் உயரமானவளாக இருந்த காரணத்தினால், கடைசி இருக்கைக்கு மாற்றப்பட்டாள்.  ஆசிரியர் கூடுதல் பணியில் இருந்தபடியால் அவளால் கரும்பலகையை பார்க்க முடியவில்லை என்பதை கவனிக்கவில்லை.  படபடப்பு காரணமாக அவள் பக்கத்து மேசையில் இருந்த குழந்தையோடு சண்டையில் ஈடுபட்டாள். திடீரென அவள் கற்றல் குறைபாடுடைய குழந்தையாகப் பார்க்கப்பட்டு தொழில் பயிற்சி வகுப்பிற்கு மாறறப்பட்டாள்.  அவள் ஒரு சிறந்த கவிஞராக வந்திருக்கும் வாய்ப்புள்ளவளாக இருந்திருக்கலாம்.  மிகவும் வசதி படைத்த சமூகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவும், ஆசிரியர்கள் மாணவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தும் வாய்ப்பும் இருக்கும்.  இப்பெண் அங்கிருந்தால், இறுதியில் கண்ணாடி அணியும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.

நச்சு வாயுவை வெளியேற்றும் ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களை புற்று நோய் கடுமையாகத் தாக்கும். முக்கியமான வாழ்க்கை விளைவுகள் அற்பமான உயிரியல் வேறுபாடுகளினால் தான் உருவாகின்றன.

தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் பற்றி

மனிதர்கள் தம் தெரிவு செய்யும் உரிமையை பயன்படுத்துவது கூட சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது. 

புகை பிடித்தல் பழக்கம் ஒரு உதாரணம். பணியில் சுதந்திரமாக இருக்கும் சூழலைப் பொறுத்து புகைபிடிக்கும் எண்ணிக்கை உயரும்.  வாழ்க்கையில் குறைவான  வாய்ப்பு உள்ளவர்கள், புகை பிடிக்கும் வாய்ப்பை பயன்படுத்துகிறார்கள்.  ஒரு சில பணிகளின் போது இடைவேளை எடுத்துக் கொண்டு வெளியில் செல்ல வாய்ப்பாக இது பயன்படுகிறது.  இதனை தெரிவு செய்பவர்கள் கூறுவது “ஆமாம்.  புகைபிடித்தால் இன்னும் இருபது ஆண்டுகளில் புற்று நோயை உருவாக்கும். ஆனால் நிச்சயமாக இன்று என்னை அது உயிருடன் வாழ வைக்கிறது”. இந்த புத்திசாலித்தனமற்ற முடிவுகளை எடுக்கும் மக்கள், தங்களின் சூழ்நிலையை கணக்கில் எடுத்துக் கொண்டு, அதற்கான பொருத்தப்பாடுகளை உருவாக்குகின்றனர்.  ஆகையால் போதனைகள் மூலம் அவர்களை மாற்றி விடலாம் என்பது நடவாத காரியமாகும்.  தெரிவு எதனடிப்படையில் செய்யப்பட்டுள்ளது என்பதின் உள்ளடக்கத்தை நீங்கள் மாற்ற வேண்டும்.

மக்கள் தங்கள் வசம் உள்ள அனைத்தையும் பயன்படுத்தி அர்த்தமுள்ள தெரிவைச் செய்ய வேண்டுமென்றால், அவர்கள் வாழ்க்கையை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்கும் நிலை ஏற்பட வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்?

ஒரு கூட்டத்தில் நான் பங்கேற்றபோது கேள்வித்தாள் ஒன்றை கொடுத்தார்கள். அந்தக் கேள்வி பின்வருமாறு :  நாம் ஜனநாயகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கு எல்லா மக்களுக்கும் ஓட்டுப் போடும் உரிமை இருக்கும் போது, சுகாதாரத்தில் இது போன்ற எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும், அசமத்துவத்தை அனுமதிக்கும் கொள்கைகளை ஏன் தொடர அனுமதிக்க வேண்டும்? நாம் விவசாயத்தை மேம்படுத்த திட்டங்கள் தீட்டுகிறோம், ஆனால் அது பசியை உருவாக்குகிறது.  நாம் மருத்துவமனைகளை உருவாக்குகிறோம், ஆனால் அவைகள் புதிய நோய்களை பரப்பும் இடமாக உள்ளது.  நாம் வெள்ளத்தை கட்டுப்படுத்த, பொறியியல் திட்டங்களில் முதலீடு செய்கிறோம்,  ஆனால் அது வெள்ள அபாயத்தை கூட்டுகிறது.  என்ன தவறு நிகழ்ந்தது? 

அதற்கு ஒரு விடை, நாம் போதுமான அளவு புத்திசாலித்தனம் அற்றவர்களாக நாம்  இருக்கலாம். அல்லது அந்தப் பிரச்சனைகள் மிகவும் சிக்கலானதாக இருக்கலாம்; அல்லது நாம் சுயநலவாதிகளாக இருக்கலாம்; அல்லது நம்மிடம் கோளாறு ஏதோ இருக்கலாம் என்பதாகும். அல்லது, ஒருவேளை, இயற்கையுடன் இயைந்து கூட்டுறவு வாழ்வு வாழ தகுதியற்ற ஜந்துக்களாக நாம் இருக்கிறோம் என சொல்லலாம்.

இது போன்ற எதிர்மறை முடிவுகளை நிராகரிக்க வேண்டும்.   போராட்ட வரலாறு நீண்டது, கடினமானது; ஆனால் போராட்டங்களே வெற்றியை சாதித்துள்ளன. ஜனநாயகம் என்ற மாயையை நம்பிக்கொண்டிருப்பதும், ஒரு சாதகமான அரசு நமது பிரச்சனைகளை தீர்க்கும் என நம்புவதும் மிக எளிது.   சமூக ஜனநாயக அரசுகளால் உருவாக்கப்பட்ட மிகவும் தொலைநோக்கு கண்ணோட்டம் கொண்ட திட்டங்கள் எந்தவிதத்திலும் முதலாளித்துவத்திற்கு சவால் விடவில்லை.  அவைகள் செய்தது சற்றுக் கூடுதல் சமத்துவம், அதாவது முற்போக்கான வருமான வரித் திட்டம், தாராள வேலையில்லாக் கால காப்பீடு போன்றவைகளாகும்.

சரக்கு உந்து ஓட்டுநர்கள் மத்தியில் காணப்படும் இதய நோய் தாக்குதலை கட்டுப்படுத்த, மேம்படுத்தப்பட்ட உணவு வழங்க வேண்டுமென ஸ்வீடனில் போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர். அவர்கள் தெருவோர உணவு கடைகளில் மேம்படுத்தப்பட்ட தரமான உணவு கிடைத்திட நகர உணவகங்கள் (restaurant) மற்றும் உணவு கடைகள் (canteen) ஆகியவற்றின் முதலாளிகளுடன் இணைந்து  தரமான உணவு கிடைக்கச் செய்தனர். மற்ற பகுதிகளில் தொழிற்சங்கங்கள் கூட்டுப்பேர ஒப்பந்தங்கள் மூலம் ஷிப்ட் பணி நிலைமைகள், ஷிப்ட் பணி நேரங்கள் மற்றும் பணி நிலைமைகளில் மாற்றம் கண்டன.  தொழிற்சங்கங்கள், சுகாதாரப் பிரச்சனை வர்கக உறவுகளில் ஒரு கூறு என்பதை அங்கீகரித்தன.

ஒரு சில விஷயங்களில் பணியிட மேம்பாடு செலவில்லாததாக உள்ளது.  கட்டிட பணிகளில் ஈடுபடும் தொழிலாளிகள் கடினமான அந்த தலைக்கவசம் அணிய வற்புறுத்தும் விளம்பரப் பலகை வைக்க எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்.  பணி மறுசீரமைப்பு மற்றும் செலவு பிடிக்கும் பணி குறித்து பேசினால் தந்திரமாக நழுவி செல்லப்படுகிறது. 

சுகாதாரத்தை மேம்படுத்தும் அரசு திட்ட செலவிற்கு, வரி மூலம் ஈடுகட்ட அரசு முயன்றால், வணிக வர்க்கம் கடுமையாக எதிர்க்கும்.  புதிய செலவினங்கள், தங்களது போட்டித் தகுதியில் குறிக்கிடுவதாக கருதுவார்களேயானால், அவர்களது எதிர்ப்பு, அரசியல் வடிவம் எடுக்கும் – உதாரணம்.  சில சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விதிகள் நீக்கம்.  தொழிற்சங்கத்தினால் முன்வைக்கப்படும் ஒரு சில செலவுகள் தனியார் முதலாளிகள் செய்ய வேண்டி வந்தால், அக்கோரிக்கை கடுமையாக எதிர்க்கப்படும்.  அவர்கள் கூறுவார்கள்,  போட்டிச்சூழலில் இது கடுமையான பாதிப்பை உருவாக்கும், எனவே, வியாபாரத்தை வேறு இடத்திற்கு கொண்டு செல்லப் போவதாக அச்சுறுத்துவார்கள். ஒருவேளை, தொழிற்சங்கம் பணிச்சூழல் குறித்து கோரிக்கை வைத்தால், நிர்வாகம் அதனை வர்க்க முன்னுரிமையின் அடித்தளமாக பார்க்கத் துவங்குவர்.  இந்த சூழ்நிலையில், ஒரு வலுமிக்க, திறமையாக கட்டமைக்கப்பட்ட தொழிற்சங்கத்தினால் மட்டுமே அதனை சாதிக்க முடியும்.

சுகாதார வாழ்வு என்பது தொழிலாளர்களுக்கு அவர்களின் திறனின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது.  ஆனால் மேல்தட்டு மக்களுக்கு சுகாதாரம் ஒரு நுகர்வுப் பொருளாகும்.  தங்களுக்கான மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதியை காசு கொடுத்து வாங்கிக் கொள்வார்கள். குடிநீர் தரம் மேம்படுத்தப்படுவதற்கு மாறாக, பாட்டில் குடிநீர் வாங்குவார்கள், காற்றின் தரம் உயர்த்தப்படுவதற்கு மாறாக தாங்கள் வாழும் அறைகளுக்கு பிராணவாயு உருளைகள் வாங்குவார்கள். சுகாதாரமும் ஒரு விற்பனை பண்டமாகும்.  அதனால், மருத்துவமனை, சுகாதார பராமரிப்பு அமைப்புகள் (Health Maintenance Organisations). மருந்து உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட இத்தொழிலில் ஈடுபட்டுள்ள சுகாதார அமைப்புகள் அனைத்தும் இதில் முதலீடு செய்துள்ளன.

ஒருவருடைய சிறப்பான உடல்நலம் அமைவது என்பது அவர் தேவையான மற்றும் பொருத்தமான நடவடிக்கை எடுக்கும் திறன், அவர் வாழ்க்கையில் எந்த இடத்தில் இருக்கிறார் என்பவைகளைப் பொறுத்தது ஆகும்.  அந்த இடம் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பதும் முக்கியமாகும். கொள்கைகளை தீர்மானிக்கும் இடத்தில் யார் இருக்கிறார்கள், எந்த வர்க்கம் இருக்கிறது என்பது முக்கியமாகும்.

சமூகம், தொற்றுயியல் மற்றும் வரலாற்றியல் அடிப்படையில்  எழுப்பும் கேள்விகளையும், மற்றும் சுகாதார சேவை, சுகாதாரக் கொள்கைகளையும் விரிவாக பார்க்க வேண்டிய தேவை உள்ளது. இது எல்லாமே ஒருங்கிணைந்த அமைப்பாகும், அதை உருவாக்குவதுதான் வருங்கால போர்க்களமாகும்.  நாம் சுகாதாரப் பிரச்சனையையும் பரவலாக்க வேண்டும்.  அவைகள் வர்க்கப் போராட்டத்தின் கூறுகளாகும்.  அதற்கு மாற்று வேறு எதுவும் கிடையாது.

(தமிழாக்கம் – ரமணி)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s