அபிநவ் சூர்யா
தன் பேராதிக்கத்தை கேள்விக்குள்ளாக்குவோரை கட்டுக்குள் கொண்டு வர உலக ஏகாதிபத்திய சக்திகள் தொடர்ந்து பயன்படுத்தி வரும் ஆயுதங்களில் ஒன்று “பொய் பரப்புரைகள்”. தன்னை எதிர்க்கும் நாடு/இயக்கம் “படுகொலைகள்/மனித உரிமை மீரல்களில் ஈடுபடுகிறது” என்றோ, “உலக அமைதிக்கு அச்சுறுத்தல்” என்றோ கட்டுக்கதைகள் மூலம் பரப்புரைகளை மேற்கொண்டு, இதை காரணமாக வைத்து அந்த நாடு/இயக்கம் மீது தடைகளை விதிப்பது முதல் போர் தொடுப்பது வரையிலான செயல்பாடுகள் நியாயப்படுத்தப்பட்டு வருகின்றன. சோவியத் ஒன்றியம், வட கொரியாவில் துவங்கி, பின் கியூபா, வியட்நாம், யுகோஸ்லேவியா, ஈரான், ஈராக், என நீண்டு, இன்று வெனிசுவேலா, பொலிவியா வரை இதே உக்தி தான் தொடர்கிறது. இதே உக்தியை தான் மக்கள் சீனம் மீதும் பயன்படுத்தி வருகின்றனர் ஏகாதிபத்தியவாதிகள். மாவோ காலம் முதலே சீன கம்யூனிஸ்ட் கட்சி “பட்டினிச் சாவை உருவாக்கியது”, “திபெத்தியர்களை அழிக்கிறது” என்றெல்லாம் பொய் சொல்லி வந்த மேற்கத்திய நாடுகள், இன்று “ஹாங்காங்கில் ஜனநாயகப் படுகொலை, தைவான் அச்சுறுத்தல், தென் சீன கடல் பகுதி ஆக்கிறமிப்பு” என நீட்டிச் செல்கின்றன. இதன் ஒரு பகுதியாக அண்மை ஆண்டுகளில் எழுந்துள்ள கட்டுக்கதை தான் “சீனாவின் மேற்கு பகுதி ஷின்ஜியாங் மாகாணத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி ‘உய்கூர் முஸ்லீம்’ சிறுபான்மையினரை கொடுமை படுத்தி வருகிறது” என்பதாகும். இந்த கட்டுக்கதைகளில் உள்ள சிக்கல் என்னவென்றால், இந்த பரப்புரைகள் மேற்கத்தி ஊடகங்களில் பரவி இருப்பதனால், பல இடதுசாரி தோழர்கள் கூட இதை உண்மையென நம்பி, ஏகாதிபத்திய வலையில் வீழ்ந்து விடுகின்றனர். ஆக, இதை முளையிலேயே முறியடிப்பது அவசியமாகிறது.
ஷின்ஜியாங் பகுதி வரலாறு
“ஷின்ஜியாங்” மாகாணமே சீனவின் மிகப்பெரும் மாகாணம். மத்திய கிழக்கு ஆசிய நாடுகளை எல்லையாகக் கொண்ட இந்த பகுதியானது மத்திய சீனாவையும் அரபு நாடுகள் – ஐரோப்பாவையும் இணைக்கும் பாலமாக உள்ளது. பண்டைய பட்டு வழிச் சாலையின் பாதையில் உள்ள மிக முக்கிய பகுதி. இதனால் வரலாற்று ரீதியாக “ஹான்” இனத்தவர் மற்றும் “உய்கூர்” இஸ்லாமிய மக்கள் கலாச்சாரங்களுக்கு இடையேயான பரிமாற்றம் செழித்து வந்துள்ள பகுதி.
சீன புரட்சியில் ‘குவாமிங்டான்’ (தேசியவாத) சக்திகள் வீழ்த்தப்பட்ட பின் இப்பகுதியின் அனைத்து மக்களையும் மாவோ ஒன்றிணைத்து, “ஷின்ஜியாங் உய்கூர் சுயசார்பு பகுதி” (XUAR) என்ற மாகாணத்தை உருவாக்கினார். ஆனால் கம்யூனிச எதிரிகளின் ஆதரவுடன் செயல்படும் சக்திகள் “கிழக்கு துருக்கிஸ்தான்” தனி நாடு வேண்டும் என கோரி பிரிவினைவாத செயல்பாடுகளில் பல காலமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் மேல்தட்டு கம்யூனிச எதிர்ப்பாளர்கள் பலர் சீனாவை விட்டு வெளியேறி ஏகாதிபத்திய நாடுகளில் குடியேறி, அந்நாடுகளுக்கு உதவியும் வருகின்றனர்.
1978ல் சீனாவின் சந்தை சீர்திருத்தங்கள் மற்றும் 1989ல் தியானன்மென் போராட்டம் காலங்களில் அமெரிக்கா சென்று படித்து வந்த, மற்றும் புதிதாய் செல்வந்தர்கள் ஆன உய்கூர் இளைஞர்கள் சிலர் சீனாவில் விரக்தி அடைந்து, மேலை நாடுகள் சென்று, “உலக உய்கூர் இளைஞர்கள் மாநாடு” என்ற அமைப்பை ஜெர்மணியில் துவங்கி, ஷின்ஜியாங் பகுதியில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு கொடுத்தும், சீனாவுக்கு எதிரான பரப்புரைகளை மேற்கொண்டும் வருகின்றனர். மேலும் இந்த அமைப்புகள் அமெரிக்க உளவுத்துறையின் நிதி ஆதரவை வெளிப்படையாக பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதன் பின் 1990ல் துவங்கி 2016 வரை ஷின்ஜியாங் பகுதியில் பலக் கலவரங்களையும் தீவிரவாத தாக்குதல்களையும் அரங்கேற்றி வருகின்றனர் பிரிவினைவாத அமைப்புகள். இதில் பல நூறு பேர் உயிரிழந்து பல்லாயிரம் பேர் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். இதற்கெல்லாம் தலைமை தாங்கும் “கிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம்” (ETIM) என்ற அமைப்பு 2002ல் ஐ.நா. சபையால் “தீவிரவாத அமைப்பு” என வரையறுக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியாவில் ‘அல்-கைதா’ மற்றும் ‘ஐசிஸ் (ISIS)’ தீவிரவாதிகளிடம் பயிற்சி பெற்று செயலாற்றி வருகிறது இந்த அமைப்பு. இதன் ஒரு முக்கிய நிகழ்வாக 2009ல் ஷின்ஜியாங் தலைநகர் ‘உரும்ச்சி’-யில் நிகழ்த்தப்பட்ட வன்முறையில் 197 பேர் கொல்லப்பட்டனர். இந்த வன்முறையை ஒருங்கிணைக்க தீவிரவாதிகள் “முகநூல்” (Facebook) தளத்தை பயன்படுத்தினர். இவர்களின் அடையாளங்களை அளிக்க முகநூல் நிறுவனத்திடம் சீன அரசு கேட்ட பொழுது அந்நிறுவனம் மறுத்ததை தொடர்ந்து, சீனாவில் Facebook தடை செய்யப்பட்டது.
சீன அரசின் தீவிரவாத எதிர்ப்பு
இப்படிப்பட்ட பிரிவினைவாத தாக்குதல்களால் 2014ல் விரிவான “சட்டத்திற்கு உட்பட்டு தீவிரவாதத்திற்கு எதிராக தாக்குவது” என்ற அறிக்கையை வெளியிட்டது ஷின்ஜியாங் அரசு. இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால், காஷ்மீரில் இந்திய அரசின் நடவடிக்கைகள் போலவோ, அல்லது மேற்காசியாவில் அமெரிக்காவைப் போலவோ “தீவிரவாத ஒழிப்பு” என்ற பெயரில் ராணுவத்தை குவித்து சட்டவிரோத கொடுமைகளுக்கு வழிவகை செய்து மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் போக்கை சீனா கையிலெடுக்கவில்லை. ஒரு நுணுக்கமான வழிமுறையை கையாண்டது.
மக்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதன் மூலம் அரசின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துவதால், தீவிரவாத இயக்கங்கள் மீதான மோகம் நலிவடையும் (ஷின்ஜியாங்கில் சீன அரசின் வளர்ச்சித் திட்டங்களை பின் பகுதியில் காணலாம்). மேலும் தீவிரவாத சிந்தனையால் பாதிக்கப்பட்டு செயல்படுபவர்களை வெறும் தண்டிக்காமல், அவர்களுக்கு கல்வி & வாழ்வாதார பயிற்சி அளித்து அவர்களை மீட்டெடுப்பது என திட்டமிட்டது சீனா. இச்சமயத்தில், 2016ல் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த “அதி-தீவிரவாதத்திலிருந்து மீட்டெடுக்கும் மையங்கள்“-ஐ சட்டத்திற்கு உட்பட்டு உலக நாடுகள் நடத்தலாம் என ஐ.நா. சபை ஒப்புதல் அளித்தது.
இதனைத் தொடர்ந்து தீவிரவாத சிந்தனைகளை கட்டுப்படுத்த 2017ல் “சிறப்பு தொழில் பயிற்சி மையங்கள்”-ஐ ஷின்ஜியாங் மாகாணத்தின் பல பகுதிகளில் சீனா நிறுவியது. வழக்கமாக இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்காக நடத்தப்படும் தொழில் பயிற்சிகளையும் தாண்டி, இந்த சிறப்பு மையங்களில் அதி-தீவிரவாதத்திலிருந்து மீட்டெடுக்கும் கல்வியும் அளிக்கப்படுகிறது. உதாரணமாக, ‘அரசின் நிதி உதவி திட்டங்கள் “ஹலால்” கிடையாது. அதை திருப்பி கொடுக்க வேண்டும்’ என பிரிவினைவாதிகள் பரப்புரை செய்தனர். இதற்கு விழுந்து, இவ்வாறு செய்ய தன் குடும்பங்களை வற்புறுத்தியவர்கள், அவர்களின் குற்றம் மிகச் சிறியது என்பதால், அவர்களை சிறையில் அடைக்காமல், அவர்கள் திருந்தி வாழ இந்த மையங்களில் சேர்ந்து கல்வி பெறும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த கல்வி என்பது கடவுள் மறுப்பு கல்வி ஒன்றும் கிடையாது. இங்கே தொழில் பயிற்சியுடன் சேர்ந்து சீனாவின் அரசியல் சாசனமும், சட்டங்களும், தீவிரவாதத்தின் ஆபத்துகள் குறித்தும் மட்டுமே கல்வி அளிக்கப்படுகிறது. மேலும் இங்கே வந்து சேர்பவர்கள் தங்களின் சொந்த விருப்பத்தில் தான் சேர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு 4-10 மாதங்கள் பயிற்சி பெற்று செல்பவர்கள் தீவிரவாதத்தை பெரும்பாலும் கைவிட்டு, 90% பேர் நல்ல வேலை/தொழில் செய்து வாழ்கிறவர்களாக மாறுவதை சீனா நன்கு ஆவணப்படுத்தியுள்ளது.
இங்கே கவனிக்க வேண்டியது, இது போன்று தீவிரவாதத்திற்கு எதிரான “மீட்டெடுக்கும் மையங்கள்”-ஐ சீனா மட்டும் அல்லாமல், அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ் போன்ற பல்வேறு நாடுகளும் அமல் படுத்துகின்றனர். சீன அரசின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் பெரும் பலன்களை அளித்துள்ளன. 2017லிருந்து இன்று வரை ஷின்ஜியாங் பகுதியில் ஒரு தீவிரவாத தாக்குதல் கூட நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொய் பரப்புரைகள்
1990களுக்கு பிறகு நவீன தாராளமய வளர்ச்சியின் தோல்வி உலகமெங்கும் வெட்ட வெளிச்சமாக தெரிந்து, மக்களை இன்னலில் ஆழ்த்தி வதைக்க, சீனாவின் “சோசியலிச சந்தை” பொருளாதார வளர்ச்சி அந்நாட்டு மக்கள் மத்தியில் செழிப்பையும் அமைதியையும் குவித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவை விஞ்சும் சக்தியாக சோசியலிச சீனம் உருவெடுத்து வருவதை தடுக்க ஏகாதிபத்திய சக்திகள் பன்முனை தாக்குதலை துவங்கிவிட்டனர். இந்த தாக்குதலின் அங்கமாக ஷின்ஜியாங் அமைந்துள்ளது.
இந்த பணியில் மூன்று முக்கிய செயற்பாட்டாளர்களை பார்க்கலாம். ஒன்று “உலக உய்கூர் மாநாடு” (WUC) என்ற அமெரிக்க உளவுத்துறை நிதி உதவி பெற்ற, ஜெர்மணியிலிருந்து செயல்படக்கூடிய அமைப்பு. இரண்டாவது ‘ஆட்ரியன் சென்ஸ்’ என்ற நபர். பனிப்போர் காலத்தில் அமெரிக்க அரசு “கம்யூனிசத்தால் பாதிக்கப்பட்டோர்” என்ற பொய் பரப்புரை செய்யும் ‘அய்வு மையம்’ ஒன்றை துவங்கியது. இன்று அந்த அமைப்பில் ஆய்வாளர் தான் சென்ஸ். இவர் ஒரு “நாஜி”. ஆம்! ஜெர்மனிய கிருஸ்துவ அடிப்படைவாதி. தான் சோசியலிச சீனத்தை அழிக்க கடவுளால் அனுப்பப்பட்டவர் என சொல்லிக்கொள்பவர். ஹிட்லரின் மீது பாசம் வெளிப்படுத்துவார். மூன்றாவது அமெரிக்க-பிரிட்டன் அரசுகள் மட்டுமல்லாமல், போர்களின் மூலம் லாபம் பெறும் ஆயுத உற்பத்தி நிறுவனங்களான ‘ராயேதான்’, ‘போயிங்’ போன்றவற்றின் நிதி பெறும் “ஏ.எஸ்.பி.ஐ” (ASPI) என்ற ஆஸ்திரேலிய ஆய்வகம் (சீனா உடன் போர் ஏற்பட்டால் இந்நிறுவனங்களுக்கு ஏக சந்தோஷம்).
இந்த மூன்று பேரும் முக்கிய பணிகளை செய்கின்றனர். “உலக உய்கூர் மாநாடு” தான் முதன் முதலில் 2017ல் சீனா தொழிற்பயிற்சி மையங்களில் உய்கூர் முஸ்லிம்களை கொடுமை படுத்துவதாக கட்டுக்கதையை துவக்கியது. இது தொடர்ந்து பிரிவினைவாதிகளுடன் தொடர்பில் இருந்து, அவர்கள் இந்த பயிற்சி மையங்களிலிருந்து “தப்பித்து வந்தவர்கள்” என சித்தரித்து நடிக்க வைத்து, இணைய பிரச்சாரம் மேற்கொள்ளும். ஆட்ரியன் சென்ஸின் பணி சீன அரசின் கொள்கைகளை திரித்து காட்டுவது. இந்த பயிற்சி மையங்களில் 10 லட்சம் முஸ்லிம்கள் அடைபட்டு கிடப்பதாக பொய் கூற துவங்கிய இவர், சீன அரசு “கட்டாய கருத்தடை”, “கலாச்சார அழிப்பு” நடவடிக்கைகள் மூலம் உய்கூர் முஸ்லிம்கள் மீது “இன அழிப்பு” நடவடிக்கைகளை ஏவி விடுவதாக பொய் அறிக்கை வெளியிட்டார். ASPI முதலில் செயற்கைக்கோள் (Satellite) புகைப்படங்கள் வைத்து சீனா பல்லாயிரம் “இன அழிப்பு” மையங்களை திறந்துள்ளதாக பொய் அறிக்கை வெளியிட்டது. பின்னர் சீனா “வறுமை ஒழிப்பு” என்ற பெயரில் உய்கூர் முஸ்லிம்களை வயல்களிலும் ஆலைகளிலும் “அடிமைப் பணி”-யில் அமர்த்தியுள்ளதாக பொய் அறிக்கை வெளியிட்டது.
இந்த மூவர் தான் பிரதானம். இவர்களின் பொய்களை மீண்டும் மீண்டும் மேற்கத்திய ஊடகங்கள் ஒளிபரப்பு செய்துகொண்டே இருக்கும். இந்த பரப்புரைகளின் உண்மை நிலையை பின்வருமாறு காணலாம்.
முஸ்லிம்களின் உரிமைகள்
எந்த மதத்தவரும் அவர்களின் மதத்தை கடைபிடிக்க சீன அரசியல் சாசனத்தில் உரிமை உண்டு. இதை பறிப்பவர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர். இது உய்கூர் முஸ்லிம்களுக்கும் பொருந்தும். ஷின்ஜியாங் முஸ்லிம் ஒவ்வொருவரும் குர்ஆன் படிக்கவும், ஹஜ்ஜி பயணம் செல்லவும், மசூதிகளில் வழிபடவும் செய்கின்றனர். ரமலான் காலத்தில் பண்டைய “காஷ்கார்” நகரமே ஜொலிக்கும். “முஸ்லிம்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது, தயவு செய்து பொய் பரப்பாதீர்கள்” என சீன இஸ்லாமிய கூட்டமைப்பு பல அறிக்கைகள் விடுத்த பின்னும் ஊடக பொய்கள் நிற்கவில்லை.
சீனாவில் தடை செய்யப்பட்ட ஒரே ஒன்று, “பொது வெளியில் மத நடவடிக்கைகள்“. உதாரணமாக, அரசு பணியில் இருப்பவர்கள் மத வெளிப்பாட்டில் ஈடுபட்டால், அது அரசு மத நடவடிக்கையில் ஈடுபடுவதாக ஆகாதா? இதை சீனா அனுமதிப்பதில்லை. “மதம் என்பது தனிமனித எல்லைகளுள் மட்டுமே இருக்க வேண்டும்” – இதானே மதச்சார்பின்மையின் உண்மையன பொருள்? ஃபிரான்ஸ் போன்ற மேற்கத்திய நாடுகளிலும் இது போன்ற விதிகள் உண்டு. ஆனால் இது போன்றவற்றை பிடித்துக்கொண்டு ‘முஸ்லிம்களுக்கு உரிமையே இல்லை’ என பொய்யாடல்கள் வலம் வருகின்றன.
மேலும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வைத்து சீனா மசூதிகளை அழிப்பதாக பொய்ப் பிரச்சாரம வலம் வருகிறது. ஆனால் இந்த பொய்யையும் சீன ஊடகங்கள் உடைத்துள்ளன. அழிக்கப்பட்டதாக சொல்லப்படும் மசூதிகளின் புதுப்பிக்கப்பட்ட புகைப்படங்களே வெளியாகிவிட்டன. மேலும் 1980லிருந்து சீனாவில் 35,000 மசூதிகள் கட்டப்பட்டுள்ளன. 1980ல் ஷிங்சியாங்கில் ~3000 மசூதிகள் இருந்தது. இன்று ~24,000 மசூதிகள் உள்ளன. சீனாவில் சராசரியாக 530 முஸ்லிம்களுக்கு ஒரு மசூதி உள்ளது. இது அனேக இஸ்லாமிய நாடுகளை விடவும் கூட அதிகம். ஷின்ஜியாங்கில் மட்டும் 8 இஸ்லாமிய மதக் கல்லூரிகள் உள்ளன.
பயிற்சி மையங்களா? சிறைகளா?
அதி-தீவிரவாத சித்தாந்தத்திலிருந்து மீட்டெடுப்பதற்காக செயல்படும் மையங்கள் உய்கூர்களை அடைத்து வைக்கும் சிறைகள் என்ற பரப்புரை நிகழ்கிறது. ஆட்ரியன் சென்ஸ் இதை முதலில் சொன்ன பொழுது ஆதாரம் கேட்டால், “அவர் சொல்லி, இவர் சொல்லி கேட்டது” என்ற அபத்தமான ஆதாரம் கொடுத்தார். அவர் 10 லட்சம் என கூறியது ஊதி பெரிதாக்கப்பட்டு, 80 லட்சம் வரை போய்விட்டது (உய்கூர் ஜனத்தொகையே 1.2 கோடி தான்). ஆனால் இது சிறைகள் என்ற வாதம் முழுக்க முழுக்க பொய்.
நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், இந்தியா உட்பட இதுவரை 90 நாடுகளில் இருந்து 1000ற்கும் மேற்பட்ட அதிகாரிகளையும் ஊடகவியலாளர்களையும் அழைத்து சீனா இந்த மையங்களை சுற்றிக்காட்டியுள்ளது. இவர்கள் அனைவருமே இந்த மையங்கள் “இன அழிப்பு மையங்கள் இல்லை” என திட்டவட்டமாக கூறிவிட்டனர். “உலக வங்கி” அதிகாரிகளும் வந்து பார்த்துவிட்டு இதையே தான் கூறினர். இருப்பினும் மேற்கத்திய ஊடகங்கள் பரப்புரைகளை நிறுத்தவில்லை. பிரிட்டனின் “பி.பி.சி” ஊடகவியலாளர்கள் கூட அங்கு சென்று பார்வையிட்டுள்ளனர். அவர்கள் ஒளிபரப்பும் காணொளியை பார்த்தாலே நமக்கு புரிகிறது – இந்த மையங்கள் சிறைகள் இல்லை. அங்குள்ளவர்கள் சொந்த விருப்பத்தில் கல்வி பயில்கின்றனர் என்பது நிரூபணம் ஆகிறது. ஆனாலும் இவை “சிறைகள்” தான் என கட்டுக்கதை கட்டுவதை நிறுத்தவில்லை. அமெரிக்காவின் என்.பி.ஆர், ஏ.பி.சி ஊடகங்களும் சென்று பார்த்து “கொடுமைகள்” பற்றி எந்த ஆதாரமும் கொண்டு வர முடியவில்லை.
மேலும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் “ஆயிரக்கணக்கான சிறைகளை கட்டியது சீனா” என்ற பொய்யும் உடைக்கப்பட்டுவிட்டது. “சிறைகள்” என கூறப்படும் பல ஸ்தலங்களும் உண்மையில் மருத்துவமனைகள்/அலுவலகங்கள் என சீன ஊடகங்கள் நிருவி விட்டன.
இந்த மையங்கள் எல்லாம் சிறைகளே இல்லை என தெளிவாக தெரிகிறது. இதை மேலும் “இன அழிப்பு” மையம் எனக் கூறுவது வரலாற்றில் பாசிசத் தாக்குதலால் மாண்ட யூதர்களையும், கம்யூனிஸ்டுகளையும் அவமானப்படுத்தும் செயல் ஆகும்.
இன அழிப்பு?
இந்த பரப்புரைக்கு மேற்கத்திய நாடுகள் முக்கியமாக பயன்படுத்துவது ஆட்ரியன் சென்ஸ் அவரின் அறிக்கையை தான். “தரவுகளை கொடுமை செய்தால் அதை என்ன கதை வேண்டுமானாலும் சொல்ல வைக்கலாம்” என்ற ஆங்கில சொல்லாடல் உண்டு. அதைத் தான் ஆட்ரியன் சென்ஸ் செய்கிறார். சீன அரசின் சில தரவுகளை பொருக்கி எடுத்துக் கொண்டு, முழு தரவை கூறாமல், அவற்றை திரித்துக் காட்டி, தவறான முடிவுகளுக்கு வருகிறார் சென்ஸ். உதாராணம்: மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனாவில் ஒரு/இரு குழந்தை சட்டம் 1980களிலிருந்து உள்ளது. ஒரு தம்பதியர் ஒன்று (சமீபத்தில் இரண்டு) குழந்தைகள் மட்டுமே பெற்றுக்கொள்ளலாம். ஆனால் 2017 வரை ‘உய்கூர்’ போன்ற சிறுபான்மை இனத்தவருக்கு இந்த சட்டம் பொருந்தாது என இருந்தது (அவர்கள் எவ்வளவு குழந்தை வேண்டுமானலும் பெறலாம்). ஆனால் சுமார் 40 ஆண்டுகளுகு பின் 2017ல் இது சிறுபான்மையினருக்கும் நீட்டிக்கப்பட்டது. இயல்பாகவே 2017ல் உய்கூர் ஜனத்தொகை வளர்ச்சி விகிதம் குறையத் தான் செய்யும். வெறும் 2 ஆண்டு போக்குகளை வைத்து, “உய்கூர் ஜனத்தொகையை சீனா கட்டுப்படுத்துகின்றது. இது இன அழிப்பு” என கட்டுக்கதை வைக்கிறார்.
ஆனால் உண்மை நிலவரம் என்ன? 2010லிருந்து 2018 வரை பார்த்தால், ‘உய்கூர்’ ஜனத்தொகை பெருக மட்டும் இல்லை. “ஹான்” பெரும்பான்மையினத்தவரை (தேசிய அளவில் பெரும்பான்மை) விட அதிவேகமாக வளர்ந்துள்ளது. ‘உய்கூர்’ ஜனத்தொகை 22% அதிகரிக்க, ‘ஹான்’ ஜனத்தொகை வெறும் 2% தான் அதிகரித்துள்ளது. ஷின்ஜியாங் மொத்த ஜனத்தொகையில் இன்று ஹான் இனத்தவர் ~40% பங்கு வகிக்க, ‘உய்கூர்’ இனத்தவரின் பங்கு ~45%-ஆக உயர்ந்துவிட்டது. பின்புலத்தை கூறாமல், வெறும் 2 ஆண்டு போக்கை வைத்து “இன அழிப்பு” என கூறுவது போன்ற பல கயமைத்தனமான கதைகள் நிறம்பியதே ‘சென்ஸ்’ அறிக்கை. இவ்வாறு தோலுரித்து காட்டப்பட்ட பின்பும் ‘ஆட்ரியன் சென்ஸ்’ என்ற “நாஜி”-யின் பொய் அறிக்கையை மேற்கத்திய நாடுகளும் ஊடகங்களும் தூக்கிப் பிடித்த வண்ணம் உள்ளனர்.
ஷின்ஜியாங் வளர்ச்சி
அடுத்த விசாரணைக்கு செல்லும் முன், ஷின்ஜியாங் பகுதியில் சீன அரசின் வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து பார்ப்பது அவசியமாகிறது. புரட்சி ஏற்பட்ட பின்னரே சீனாவின் பிற பகுதிகளைப் போல் ஷின்ஜியாங்கிலும் நிலக்கிழார்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, உழுபவர்களுகு நிலம் அளிக்கப்பட்டது. இதனால் மக்கள் வாழ்வு பன்மடங்கு உயரத் துவங்கியது. 1949ல் வெறும் 10%-ஆக இருந்த கல்வி அறிவு விகிதம், இன்று 98% ஆகியுள்ளது. 1978லிருந்து இன்று வரை தனி மனித சராசரி ஆண்டு வருமானம் 100 மடங்கு அதிகரித்து, இன்று ~$3,500-ஆக உள்ளது. இது இந்தியாவின் அனைத்து பெரும் மாநிலங்களை விடவும் அதிகம் (தமிழகத்தை விட 25% அதிகம்).
அண்மை கால முக்கிய நிகழ்வு என்னவென்றால், அதிவேக வறுமை ஒழிப்பு தான். 2014ல் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ளோர் விகிதம் ஷின்ஜியாங்கில் ~20%. இன்று வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது. இந்த வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் ஒரு முக்கிய பங்காற்றியது ஊழியர்களின் இடமாற்றம். கடந்த பத்தாண்டின் துவக்கத்தில் ஷின்ஜியாங் ஊரகப் பகுதியில் வறுமை விகிதம் மிக அதிகமாக இருந்தது. இதன் காரணம் தெற்கு பகுதிகளில் விளைச்சல் நில அளவு மிகக் குறைவு. இதை நிவர்த்தி செய்ய அரசு பெரும் முதலீடுகள் மேற்கொண்டது. அரசே முன்னெடுப்பு மேற்கொண்டு, ஊரகப் பணியாளர்களுக்கு நகர்ப்புற ஆலைகளில் பணி பெற்றுத் தந்தது. இதனால் அவர்கள் வருமானம் 10 மடங்கானது. இது மட்டுமின்றி, பல தொழில் வளர்ச்சி உதவிகளும் மேற்கொள்ளப்பட்டன. இது போல் மக்கள் நல்வாழ்வில் அரசு காட்டிய அக்கறையின் காரணமாகவே பிரிவினைவாதிகளின் கை என்றுமே ஓங்கவில்லை. 1950ல் வெறும் 3000-ஆக இருந்த உய்கூர்களின் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் எண்ணிக்கை, 2018ல் 4.3 லட்சமாக உயர்ந்துள்ளது!
அடிமை உழைப்பு?
அண்மையில் சீனாவில் கொதித்து வருவது இந்த “அடிமை உழைப்பு” சர்ச்சை. வறுமை ஒழிப்பு நடவடிக்கை திட்டம் மற்றும் ஆலைப் பணிகள் தரவு ஆகியவற்றை திரித்து காட்டும் ASPI மற்றும் சென்ஸ், சீன அரசு உய்கூர் மக்களை அடிமை உழைப்பில் தள்ளுவதாகவும், இது ஹிட்லர் காலத்தில் யூதர்கள் நிலை போன்றது எனவும் கூறியுள்ளனர். இது சாமானிய சீனர்களின் மத்தியிலும் கோபத்தை கிளப்பி உள்ளது. ஆலைகளிலும் பெரும் வயல்களிலும் வேலை பெறும் ஷின்ஜியாங் மக்களுக்கு முதலாளிகள் அரசின் விதிமுறைகளை கடைபிடித்து, ஒப்பந்தம் போட்டு ஊதியம் வழங்க வேண்டும். “இது எப்படி அடிமை உழைப்பாகும்?” என கொதிக்கின்றனர் சீன இணைய வாசிகள். இவ்வாறு அரசு வேலை பெற்றுத் தருவது நாடு முழுவது நடக்கிறது.
குறிப்பாக ஷின்ஜியாங் பருத்தி. இந்தியாவை அடுத்து அதிக பருத்தி உற்பத்தி செய்யும் நாடு சீனா. சீனாவின் ~87% பருத்தி ஷின்ஜியாங்கில் உற்பத்தி ஆகிறது. இந்த பருத்தி உற்பத்தியில் அடிமை உழைப்பு இருப்பதாகக் கூறி “மேம்பட்ட பருத்திக்கான முன்னெடுப்பு” (BCI) என்ற சுவிட்சர்லாந்தை தலைமையகமாகக் கொண்ட சர்வதேச கூட்டமைப்பு ஷின்ஜியாங் பருத்தியை தடை செய்துள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், தடை செய்த தலைமையகத்திலிருந்து ஒருவர் கூட ஷின்ஜியாங்கில் காலடி எடுத்து வைக்கவில்லை. ஆனால் இதே BCI-யின் சீன கிளையில் இருப்பவர்கள் ஷின்ஜியாங் சென்று, அங்கு நன்கு கள ஆய்வு செய்து, “இங்கு அடிமை உழைப்பு இல்லவே இல்லை” என அறிக்கை அளித்துள்ளனர். வேடிக்கை முரண். இது மட்டுமில்லாமல், வடக்கு ஷின்ஜியாங்கில் ஏற்கனவே 95% உற்பத்தி ட்ரோன் மற்றும் எந்திரங்கள் மூலம் நடைபெறுகின்றன. இதில் எங்ருந்து “அடிமை உழைப்பை” புகுத்துவது?
இந்த பொய் பரப்புரையால் கோபமடைந்துள்ள சீன இளைஞர்கள், “எங்கள் பருத்தி உங்களுக்கு வேண்டாம் என்றால் உங்கள் உடை எங்களுக்கு வேண்டாம்!” எனக் கூறி வெளிநாட்டு பிராண்டுகளான “நைக்கி”, “அடிடாஸ்”, “எச்&எம்” போன்றவற்றை புறக்கணிக்க பெருமளவில் துவங்கிவிட்டனர்.
பொய் வாக்குமூலங்கள்
இப்படி ஒவ்வொன்றும் பொய்யென நிருவிய பின்னும், “பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலம்” என சில நபர்களின் காணொளியை தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டே இருக்கும் மேற்கத்திய ஊடகங்கள், அவர்கள் சொல்வதில் உள்ள உண்மைத்தன்மையை ஆராய்வதே இல்லை.
உதாரணமாக மிஹ்ரிகுல் டுர்சுன் என்பவர் 2018ல் அமெரிக்க பாராளுமன்ற கமிட்டி முன் வாக்குமூலம் அளித்தார். அவர் பின்னர் CNN தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அவர் ஷின்ஜியாங் “இன அழிப்பு மையத்தில்” துன்புறுத்தப்பட்டதாகவும், தன் மகன் கொல்லப்பட்டதாகவும் கூறினார். ஆனால் சீன ஊடகங்கள் ஷின்ஜியாங்கில் உள்ள மிஹ்ரிகுல்லின் வீட்டிற்கே சென்று பார்த்தால், மிஹ்ரிகுல்லின் அம்மா தன் பேரக்குழந்தைகள் எகிப்தில் நலமாக உள்ளதாகக் கூறி புகைப்படம் காட்டுகிறார். மேலும் மிஹ்ரிகுல் ஷின்ஜியாங் தொழிற்பயிற்சி மையங்களுக்கு சென்றதே இல்லை எனவும் கூறுகிறார்.
இப்படி பல பல பொய் வாக்குமூலங்கள். இந்த வாக்குமூலங்கள் குறித்து கருத்து கேட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்தை அழைக்கும் மேற்கத்திய ஊடகங்கள். ஒரு கட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் கோபமடைந்து, “இந்த பொய்களுக்கு விடை அளிப்பதே தான் எங்கள் பணியா?” என மேற்கத்திய ஊடகங்களை சாடினார்.
யார் ஆதரிக்கின்றனர்? யார் எதிர்க்கின்றனர்?
இப்படி பொய் மேல் பொய் சொல்லி சீனாவின் ஷின்ஜியாங் கொள்கைகளை தொடர்ந்து எதிர்த்து வரும் நாடுகள் அனைத்துமே மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகள் மட்டுமே! 2020 அக்டோபரில் ஐ.நா. சபையில் சீனாவின் “ஷின்ஜியாங் மனித உரிமை மீரல்கள்” குறித்து “கவலை” தெரிவித்து 39 நாடுகள் கடிதம் அளித்தன. இவை அனைத்துமே வடக்கு அமெரிக்க-ஐரோப்பிய-ஆஸ்திரேலிய ஏகாதிபத்திய நாடுகள். இதில் வேடிக்கை என்னவென்றால், இந்நாட்டு பிரதிநிதிகள் யாருமே ஷின்ஜியாங் சென்றதில்லை. ஷின்ஜியாங் வந்து அங்குள்ள சுதந்திரம் குறித்தும், தொழிற்பயிற்சி மைய்யங்கள் குறிந்தும் வந்து பார்த்துக்கொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்தது சீனா. ஆனால் இந்த அழைப்பை அவர்கள் நிராகரித்துவிட்டனர்.
2021 மார்ச் மாதத்தில் கியூபா தலைமையில் 64 நாடுகள் சீனாவின் ஷின்ஜியாங் கொள்கைகளை ஆதரித்து ஐ.நா மனித உரிமை ஆணையத்திற்கு கடிதம் எழுதினர். இவை பெரும்பாலும் கிழக்காசிய, மேற்காசிய, ஆப்ரிக்க, லத்தீன் அமெரிக்க வளரும் நாடுகள். இந்நாட்டு பிரதிநிதிகள் பலரும் ஷின்ஜியாங்கிற்கு நேரடியாக சென்றுள்ளனர்.
“இஸ்லாமிய ஒருங்கிணைப்பு கூட்டமைப்பு” (OIC) என்பது (180 கோடி இஸ்லாமியர்கள் வாழும்) 57 இஸ்லாமிய நாடுகள் சேர்ந்த அமைப்பு (ஐ.நா-விற்கு பிறகு உலகின் இரண்டாம் பெரும் கூட்டமைப்பு). இந்த அமைப்பின் பிரதிநிதிகள் ஷின்ஜியாங் பயணித்து ஆய்வு செய்து 2019ல் வெளியிட்ட அறிக்கையில், “மக்கள் சீனம் தன் நாட்டில் முஸ்லிம் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பது பாராட்டுக்குறியது” எனக் கூறியது.
ஆனால் தொடர்ந்து பொய்களை கட்டிக்கொண்டு நிற்கிறது மேற்கத்திய நாடுகள். டிரம்ப் வெளியேறுவதற்கு முன்பு, சீனாவில் தொழிற்பயிற்சி முயற்சி “இன அழிப்பு நடவடிக்கை” என முத்திரை குத்தியது அமெரிக்கா. இதையே தற்போதைய பிடன் அரசும் தொடர்கிறது. அமெரிக்காவுடன் கை கோர்த்து நிற்பது பிரிட்டன், கனடா, ஜப்பான் போன்ற நாடுகள். அமெரிக்கா என்ற நாடு உருவானதே அந்நாட்டு பூர்வகுடிகள் செவ்விந்தியர்களி இன அழிப்பிற்கு பின்பு தான். 95% செவ்விந்தியர்கள் கொல்லப்பட்டனர். இதை அந்நாட்டு அறிஞர்களே கூறுவர். ஆனால் அதை அமெரிக்கா “இன அழிப்பு” என இன்றளவும் வரையறுக்கவில்லை. தன் போர் செலவீனத்திற்காக காலனிய பிரிட்டன் அரசு வங்கத்தின் 30 லட்சம் மக்களை பட்டினி போட்டு கொன்ற இனப்படுகொலைக்கு இன்றளவும் மன்னிப்பு கோரவில்லை. ஆனால் இந்த நாட்டு அரசுகள் எல்லாம் பொய்களை கட்டிக்கொண்டு சீனா மீது கள்ளத் தாக்குதல் நடத்துகின்றன.
ஏன் ஷின்ஜியாங்?
சோசியலிச சீனாவை கட்டுப்படுத்த ஏகாதிபத்தியவாதிகள் எந்த வாய்ப்பையும் பயன்படுத்துவர் என்பது உண்மை தான். ஆனால் ஷின்ஜியாங்கை தாக்குவதற்கு இதர காரணங்களும் உண்டு. சீனாவின் அசுர வேகத்தை கண்டு அஞ்சும் அமெரிக்கா, அதை பொருளாதார ரீதியாக கட்டுப்படுத்த முக்கியமாக தாக்குவது சீனாவின் “பெல்ட் & ரோட்” (BRI) என்ற சர்வதேச வர்த்தக கட்டமைப்பை கட்டியமைக்கும் கனவைத் தான். இதை சாத்தியமாக்கிவிட்டால் பெரும்பாலான வளரும் நாடுகளும் மேற்கத்திய நாடுகளை சார்ந்திராமல், சோசியலிச சீனாவுடனான வர்த்தகம் மூலம் செழிக்க வாய்ப்புள்ளது.
பண்டைய் பட்டுப் பாதை போலவே, BRI-க்கும் முக்கிய பகுதியாக இருந்து, சீனாவை கிழக்கு ஐரோப்பிய, மேற்கு ஆசிய, ஆப்ரிக்க நாடுகளுடன் இணைக்கும் பாலம் ஷின்ஜியாங். இந்த பகுதியில் சலசலப்பை உருவாக்கினால் BRI முடங்கும் என்ற நோக்கம் நிச்சயம் இருக்கும். மேலும் எண்ணெய் மற்றும் கணிம வளம் நிறைந்த பகுதி ஷின்ஜியாங். இந்த வளங்கள் மீதும் ஏகாதிபத்திய நாடுகளுக்கு ஒரு பார்வை இருக்கக் கூடும்.
இறுதியாக..
ஷின்ஜியாங் குறித்த சேகரிக்க வேண்டிய தரவுகள் கடினமாக இருப்பதாலும், மேற்கத்திய ஊடகங்களில் பொய்கள் நிறம்பி இருப்பதாலும், இந்த பரப்புரைகளை சில இடதுசாரிகள் கூட நம்பி விடுகின்றனர். உதாரணமாக இந்த “இன அழிப்பு மையங்கள்” உண்மை என நம்பி விமர்சித்து சிபிஐ(எம்-எல்) லிபரேஷன் கட்சி கட்டுரை வெளியிட்டுள்ளது. அந்த கட்டுரையில் வெறும் மேற்கத்திய ஊடகங்களே மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. சீனாவில் ஷின்ஜியாங் செல்ல எந்த தடையும் இல்லை. ஆண்டுக்கு 20 கோடி சுற்றுலா பயணிகள் ஷின்ஜியாங் செல்கின்றனர். ஆனால் ‘உய்கூர் கொடுமை’ குறித்த ஒரு நம்பகத்தன்மை கொண்ட புகைப்படம் கூட வெளிவரவில்லை என்பதை சிந்திக்க மாட்டார்களா? அது சரி. மேற்கு வங்க நிலை குறித்தே சரியான புரிதல் இல்லாதவர்கள் எப்படி மக்கள் சீனம் குறித்து புரிந்து வைத்திருப்பார்கள்?
இப்படி நாமும் ஏகாதிபத்திய வலையில் வீழ்ந்திடக் கூடாது. சீனாவின் “சோசியலிச சந்தை” வளர்ச்சிப் பாதை குறித்தோ, ஷின்ஜியாங்கில் தீவிரவாத கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்தோ நமக்கு விமர்சனம் இருக்கலாம். ஆனால் பொய் பரப்புரைகள் வசப்பட்டு ஏகாதிபத்திய சக்திகளுக்கு வலு சேர்ப்பது உழைக்கும் வர்க்கத்திற்கு எவ்விதத்திலும் உதவாது.
Leave a Reply