மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


அறிவுசார் சொத்து, அறிவில் ஏகபோக உரிமை மற்றும் வாடகை பொருளாதாரம் !


பிரபிர் புர்கயஸ்தா

இருபதாம் நூற்றாண்டில், பொது நிதியில் பல்கலைக்கழகங்களும், தொழில்நுட்ப நிறுவனங்களும் உருவாக்கப்பட்டன. அதே சமயம் தொழில்நுட்ப மேம்பாடு பெரும்பாலும் பெரிய நிறுவனங்களின் ஆராய்ச்சி மேம்பாட்டுக் (R&D) கூடங்களில் நடைபெற்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டோடு – எடிசன், சீமெண்ட்ஸ், வெஸ்டிங்ஹவுஸ், கிரகம் பெல் போன்ற தனித்த கண்டுபிடிப்பாளர்களின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது. அடுத்த நூற்றாண்டில், பெரும் நிறுவனங்கள் தொழில் உற்பத்தி சார்ந்த ஆய்வகங்களை உருவாக்கின. அங்கே, எதிர்காலத்திற்கான கண்டுபிடிப்புகளை உருவாக்கும் விதத்தில் முன்னணி விஞ்ஞானிகளையும்,தொழில்நுட்ப வல்லுனர்களையும் ஒன்றாக திரட்டினர். இந்தக் கட்டத்தில், மூலதனம் இன்னும் உற்பத்தியை விரிவாக்கிக் கொண்டிருந்தது. உற்பத்தி மூலதனத்தின் மீது நிதி மூலதனத்துடைய ஆதிக்கம் ஏற்கனவே தொடங்கி விட்டிருந்த போதிலும், அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் வலுவான உற்பத்தி தளங்கள் அமைந்திருந்தன.

இந்தக் கட்டத்தில், அறிவியல் கண்டுபிடிப்புகள் பொதுச் சரக்காகக் கருதப்பட்டன. பல்கலைக் கழகங்களிலும், பொது நிதியில் இயங்கக்கூடிய  ஆராய்ச்சி நிறுவனங்களிலும் நடைபெற்றன. அதே சமயம் தொழில்நுட்ப மேம்பாடுகள், பெரும்பாலும் பெரு நிறுவனங்களில் நடந்தன. அறிவியல் ஆராய்ச்சியில் புதிய அறிதல் நிகழ்த்தப்பட்டதும், தொழில் நுட்பத்தில் அதனை புகுத்தி புதிய பொறியமைவுகள் உருவாக்கப்பட்டன. கருத்துக்களை பொறியமைவுகளாக மாற்றியமைப்பதுதான் கண்டுபிடிப்புகளின் பாத்திரமாக இருந்தது.

பொறியமைவுகளில் பயன்படுத்தப்படும் பயனுள்ள கருத்துக்களை பாதுகாக்கும் விதமாக அறிவுசார் சொத்துரிமை – காப்புரிமை அமைப்புக்கள் உருவாகின. எனவே, தொடக்கத்தில் காப்புரிமங்களுக்கு ஒரு பொதுவான நோக்கம் இருந்தது – பொதுவில் தரப்பட்டுவிட்ட ஒரு கண்டுபிடிப்பிற்கு, குறிப்பிட்ட காலத்திற்கான ஏக உரிமையை அரசு உறுதி செய்வதுதான் அதன் அடிப்படை.

பல நூற்றாண்டுகளாக இருந்த இந்த அமைப்புமுறையில் மாற்றம் இரண்டு வேறுபட்ட மாற்றங்களை ஒட்டி ஏற்பட்டது. முதலாவது, அறிவு உற்பத்தி மையங்களான பல்கலைக் கழக அமைப்புக்கள், புதிய தாராளவாத ஒழுங்கிற்கு ஏற்ப, வணிக நிறுவனங்களாக செயல்படத் தொடங்கிய மாற்றம். இரண்டாவது அறிவியலுக்கும், தொழில் நுட்பத்திற்கும் இடையிலான வேறுபாடு மங்கலாகிவிட்ட நிலைமை. உதாரணமாக, மரபணுவியலை எடுத்துக்கொண்டால், அந்தத் துறையில் அடையும் எந்தவொரு முன்னேற்றமும் – எவ்வித வேறுபாடும் இன்றி – காப்புரிமத்திற்குரிய, சந்தைப்படுத்தும் வாய்ப்புடைய பொறியமைவுகளின் உருவாக்கத்திற்கு வழிவகுக்கின்றன. இதே போன்ற நிலைமைதான் மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப துறை கண்டுபிடிப்புகளிலும் நிலவுகிறது. அறிவியலின் பல்வேறு துறைகளும், இதன் விளைவாக, உற்பத்தி முறைக்கு மிக நெருக்கமாக செயல்படும் நிலை உருவானது.

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், நிதி மூலதனத்திற்கும், உற்பத்தி மூலதனத்திற்கும் இடையில் ஒரு விரிசல் உருவாவதைக் காண முடிந்தது. இன்று, நிதி மூலதனமானது தன்னிச்சையான நிதி மூலதனமாகவேசெயல்படுகிறது. தொழில்நுட்பம் மீதான கட்டுப்பாட்டின் மூலம் ஒரு முனையிலும், சந்தை மீதான கட்டுப்பாட்டின் வழியாக இன்னொரு முனையிலும் அது உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது. மூலதனத்தின் இந்தக் கட்டத்தில், ஊகம் மற்றும் வாடகையைச் சார்ந்துதான் அது வாழ்கிறது. உற்பத்தி மூலதனத்தின் ஒரு பகுதியாக பொருள் வடிவிலான மூலதனத்தில் இருந்து, அறிவு மூலதனம் தனித்துத் தெரிகிறது.

இருபதாம் நூற்றாண்டின் தொழில்துறை அமைப்பின் ஒரு பகுதியாகவே செயல்பட்ட ஆய்வு மேம்பாட்டுக்கூடங்கள் (R&D) அழிந்துபோனதுடன் இணைந்த நிகழ்வாக, பல்கலைக்கழக அமைப்புக்கள் நேரடியாகவே வணிக தேவைகளுக்காக அறிவை உற்பத்தி செய்யும் இடங்களாக மாற்றமடைந்தன. நிதி மூலதனம் பல்கலைக் கழக அறிவியலை நேரடியாக கட்டுப்படுத்தின. முதலீடுகளின் வழியாக அல்ல. ‘அறிவை’ வாங்குவதன் வழியாக – பல்கலைக் கழகங்களின் ஆய்வுகளுடைய காப்புரிமங்களை வாங்குவதன் மூலமாக ஏகபோக உரிமை செயல்பட்டது. இந்த ஏகபோகத்தின் மூலமாக அது ஆலை மூலதனத்தின் மீதான ஆதிக்கத்தைச் செலுத்திட வாய்ப்பை உருவாக்குகிறது.

மூலதனத்தை இவ்வகையில் அது ‘தூய’ நிதி மூலதனமாகவும், அறிவின் மீதான தனது ஏகபோக உரிமையை பயன்படுத்தி – காப்புரிமம்,பதிப்புரிமை, தொழில் வடிவமைப்புகள் மீதான உரிமை ஆகியவைகளைக் கொண்டு – வாடகை பெற்றுக்கொள்வதும், இன்றைய காலகட்ட மூலதனத்தின் பண்புகள் ஆகும். இத்துடன் இணைந்து முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் மேலும் மேலும்’சேவை’ சார்ந்த பொருளாதாரங்களாக மாற்றமடைந்தன. சாரத்தில், அவர்கள் உலகளாவிய நிதி, உற்பத்திக்கு தேவையான அறிவு, சில்லறை விநியோகம் மற்றும் உலக ‘பிராண்டுகள்’ ஆகியவற்றின் வழியாக தங்களுடைய ஆதிக்கத்தைச் செலுத்துகின்றனர்.

இந்தக் கட்டமைப்பில்தான் பல்கலைக் கழகங்கள்மூலதனத்தால் கைப்பற்றும் போக்கு அதிகரிக்கிறது – அதனை பல்கலைக் கழக நிறுவனமயமாதல் என்கின்றனர். இப்போதும் கூட புதிய அறிவை உற்பத்தி செய்வதற்கான நிதி, பொது நிதியில் இருந்துதான் வருகிறது. ஆனால், அதன் கண்டுபிடிப்புகள் தனியார்மயமாவது அதிகரித்து வருகிறது. பாய் டோல் சட்டம் மற்றும் அதைப் போன்ற இன்ன பிற சட்டங்கள் உலகின் பல பகுதிகளில் கொண்டு வரப்படுவது இதற்கு உதவுவதற்காகத்தான். பொதுச் சரக்காக உருவாக்கப்பட்ட அறிவை தனியார்மயப்படுத்தும் இயக்கமாக இது நடக்கிறது.

பொது நிதியில் உருவான அறிவியலை தனியார் அறிவியலாக மாற்றியமைப்பது, தனியார் நிதியின் உதவியோடு செய்யப்படுவதில்லை. அறிவியல் நிறுவனங்கள் இப்போதும் பொது நிதியில்தான் இயங்குகின்றன. முன்னேறிய முதலாளித்துவ நாடுகளிலும், இந்தியா போன்ற நாடுகளிலும் அதுதான் நிலைமையாக உள்ளது. அதே சமயம் அறிவியல் ஆராய்ச்சியின் ‘சார்பு’ தனியார் மூலதனத்தால் தீர்மானிக்கப்படும் நிலைமை அதிகரித்துள்ளது. அப்படிப்பட்ட அறிவு உற்பத்தி அமைப்பில், அறிவியல் குறித்த ஆழமான ஆய்வுகள் உடனடியாக வணிக அடிப்படையிலான பலன்கள் தராவிட்டால், தொழிற்சாலைகளால் முக்கியமானதாக கருதப்படும் ஆராய்ச்சிகளை விடவும் குறைவான முன்னுரிமையே தரப்படுகின்றன. இவ்வகையில், நீண்ட கால ஆராய்ச்சிகள் மதிப்பிழக்கின்றன. குறுகிய காலத்தில் கிடைக்கும் பலன்களுக்கே முக்கியத்துவம் கிடைக்கிறது – பல்கலைக் கழக ஆராய்ச்சிகளுக்கு காப்புரிமம் பெறுவதனை ஆராய்ச்சியை ஊக்கப்படுத்தும் செயலாக பல்கலைக் கழக நிர்வாகங்களும், விஞ்ஞானிகளும் காண்கிறார்கள்.

இந்த நிலைமாற்றத்தின் விளைவுகள் வெளிப்படையாக தெரிகின்றன. இந்தியாவில் உதாரணமாக, 1970- 80களில் விவசாய உற்பத்தி பெருக்கத்திற்கான (பசுமைப் புரட்சிக்கான) உந்துதல் பொது அறிவியல் தளத்தில் இருந்தே வந்தது. இன்று, மரபணுவியல் புரட்சியை சில தனியார் நிறுவனங்களே கட்டுப்படுத்துகின்றன. அவை அடுத்த ‘பசுமைப்புரட்சியை’ முன்னெடுக்க வாய்ப்புள்ளவையாகவும் பார்க்கப்படுகின்றன. IARI, ICAR, போன்ற வேளாண் பல்கலைக் கழகங்கள் மான்சாண்டோ போன்ற பெருநிறுவனங்களோடும், அவற்றின் நோக்கங்களோடும் கூடுதாலாக இணைக்கப்படுகின்றன.  இதற்கு நேர்மாறாக, அவற்றின் ஆரம்ப இலக்கு, அறிவியலின் முன்னேற்றங்களை வேளாண் துறையில் பயன்படுத்துவதாகவே இருந்தது.

அமெரிக்காவின் பாய் டோலே சட்டத்தின் மூலம் அறிவியலை தனியார் லாபநோக்கில் பயன்படுத்திக் கொள்ள வழி ஏற்படுத்தப்பட்டது. 1980 ஆம் ஆண்டில்அமலாக்கப்பட்ட அந்த சட்டமானது, அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு என்ற பெயரில், பொது நிதியில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் முடிவுகளை தனியார் சொத்தாக மாற்ற முடியாது என்ற பொதுவான புரிதலை தலைகீழாக மாற்றியது. பொது வளங்களை பயன்படுத்தி செய்த ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை பல்கலைக்கழகங்களும், பொது ஆராய்ச்சி நிறுவனங்களும் காப்புரிமம் செய்துகொள்ள இந்த சட்டம் அனுமதித்தது. அமெரிக்காவின் பார்ச்சூன் என்ற இதழ், மருந்துப் பொருட்களின் விலை ஏற்றத்திற்கு இந்தச் சட்டம் ஒரு காரணமாக அமைந்திருப்பதை அம்பலப்படுத்தியது. “1980களில் 12 பில்லியன் டாலர்களாக  இருந்த அமெரிக்கர்களின் மருத்துவ செலவு 2003இல் 179 பில்லியன் டாலர்களாக பலமடங்கு அதிகரித்தது”. மேலும் அந்தக் கட்டுரையில் பாய் டொலே சட்டம் அறிவியலில் மேம்பாட்டுக்கு உதவுவதற்கு பதிலாக, பின்னடைவை ஏற்படுத்தியது என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.மருந்து உற்பத்தித் துறையில் கண்டுபிடிப்பிற்கு நிகராக கருதப்பட்ட, புதிய மூலக்கூறுகளை கண்டறிவது குறைந்தது. மிகச் சில நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும், விஞ்ஞானிகளும் பல மடங்கு பணக்காரர்களாக ஆயினர்.  அறிவியல் முன்னேற்றத்திற்கான செலவுகள் மக்கள் தலையில் சுமத்தப்பட்டன.

போலியோ சொட்டு மருந்தை கண்டுபிடித்த விஞ்ஞானியான சால்க் ஒருமுறை அந்த மருந்தின் காப்புரிமம் யாரிடம் உள்ளது என்ற கேள்வியை எதிர்கொண்டார். அப்போது அவர், ‘மக்கள்’ என பதில் சொன்னார். இந்த பதிலைத்தான் சில விஞ்ஞானிகளிடம் நாம் இப்போது எதிர்பார்க்கிறோம். கடந்த இருபது ஆண்டுகளில் அறிவுசார் சொத்துரிமை என்ற பெயரில் ஒரு புதிய வகைப்பட்ட‘தனியார் சொத்துரிமை’ உருவாக்கப்பட்டுள்ளது. முந்தைய காலத்தில் தனித்தனியாக இருந்த பல்வேறு உரிமைகள் இப்போது ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்படுகின்றன. பதிப்புரிமை, காப்புரிமம் உள்ளிட்ட அறிவுசார் சொத்து உரிமைகள், விற்பனை இலச்சினை, வணிக ரகசியங்கள் மற்றும் தொழிற்சாலை வடிவமைப்புகள் என பலவகைகளில் அந்த தனியார் சொத்துடைமைகள் ஒரே பெயரில் ‘அறிவுசார் சொத்துடைமை’ ஆகியுள்ளன. இந்த நடைமுறைக்கு இரண்டு நோக்கங்கள் உள்ளன.  ஒன்று, தனி நபர்களுடைய படைப்பாற்றலை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் பெருநிறுவனங்களுடைய உரிமைக்கு வழி ஏற்படுத்தப்படுகிறது. இந்த உரிமைகளை பயன்படுத்தும் வழிமுறைகளும் தொடர்ந்து விரிவாகின்றன.

புதிய ‘அறிவுசார் சொத்து உரிமை’ விதிகளுடைய தாக்கம், உலக வர்த்தக நிறுவனத்தின் விதிமுறைகளோடு இணைந்து முன்னெடுக்கப்படுகின்றன. சமூகத்தால் பொதுவாக பயன்படுத்தப்பட்டு வந்த அறிவுச் சொத்துக்கள் தனியாரால் கையகப்படுத்தப்பட இது வாய்ப்பை உருவாக்கியது. இந்த காப்புரிம சட்டகம், வாழ்க்கை முறைகள், மரபணு ஆதாரங்கள், மரபணு விபரங்கள் என வாழ்க்கை அறிவியளின் பல பிரிவுகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வழிமுறைகளை காப்புரிமம் செய்தல், கணிணி அறிவியலின் செயல்முறைகளை காப்புரிமம் செய்தல், தொழில் முன்னெடுக்கும் வழிமுறைகளும் கூட காப்புரிமத்திற்கு உட்படுத்தப்படுகின்றன. இவை மட்டுமல்லாமல், மென்பொருட்கள், மின்னியல் முறைகளில் சேமிக்கப்பட்ட செய்திகளுக்கும் காப்புரிமம் விரிவாக்கப் பட்டுள்ளது. பாரம்பரியஅறிவும், உயிரி ஆதாரங்களும் பல்வேறு மக்கள் குழுக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தன. அவற்றை உலக பெருநிறுவனங்கள் கடத்துவதும் நடக்கிறது. அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு நிறுவனங்கள் பங்களிப்பது என்ற நடைமுறை மாற்றப்பட்டு, அறிவுத்துறையில் ஏகபோகம் செலுத்திடவும் அதன் மூலமாக சந்தையில் இருந்து அதீத லாபத்தைக் குவிப்பதற்கும் திசை திருப்பப்பட்டுவிட்டது.

இந்த முறையின் விளைவுகள் மிக வெளிப்படையாக தெரிகின்றன.காப்புரிமை இருப்பதால் எச்ஐவி தொற்றுநோய்க்கான உயிர்காக்கும் மருந்துகளை பெரும்பான்மையான மக்களால் இன்று பணம் கொடுத்து வாங்க முடியாத நிலை உள்ளது. அறிவுசார் சொத்துரிமையின் அதிகாரம் காரணமாக, உயிர் ஆபத்து மிகுந்த நோய்க்கு ஆளானவர்கள் சாகிறார்கள். வேளாண் துறையில் நடப்பது இன்னும் மோசமான ஒன்றாகும். உயிரி அறிவியல், உயிரி தகவல் துறை, விதை உற்பத்தி பெருநிறுவனங்கள், பெருநிறுவன தாவர உற்பத்தி ஆகியவைதான் உலக வேளாண்துறையையும் அதன் வழியாக உணவு உற்பத்தியையும் கட்டுப்படுத்துகின்றன. உணவுப் பொருட்களின் விலை ஏற்கனவே விண்ணை முட்டுகிற சூழலில், மேற்சொன்ன ஆதிக்கம் பரவலாகுமென்றால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்ய முடிகிறது.

இருபதாம் நூற்றாண்டின் சிறப்பான கண்டுபிடிப்பு மென்பொருட்கள் ஆகும், அவை 18 வது நூற்றாண்டின் சட்ட வழிமுறையை பயன்படுத்தி – பதிப்புரிமத்தின் மூலம் – அதில் ஏகபோகம் உருவாக்கப்பட்டது. மென்பொருட்களை எல்லோரும் அணுக முடியாமல் செய்வதானது, அதனுடைய குறுகிய ஆயுட்காலம் மற்றும் அதன் செயல்பாட்டு இயல்பிற்கு ஒத்துவரவில்லை. எனவே காப்புரிம விதிகளை சற்று மாற்றியமைத்து பயன்படுத்துகிறார்கள். இப்போது பல நாடுகளில் மென்பொருட்கள் காப்புரிமம் பெற்று செயல்படுகின்றன. மனித நடவடிக்கையின் அனைத்து துறையிலுமே தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் பயன்படுகின்றன. எனவே அனைத்து துறையிலும் பதிப்புரிமைகளும், காப்புரிமங்களும் நுழைந்துவிட்டன. அறிவுப் பொருளாதாரம் என்பது வாடகைப் பொருளாதாரமே ஆகும். அறிவுத்துறை கண்டுபிடிப்புகளில் ஏகபோக உரிமையின் மூலம் வாடகை குவிக்கப்படுகிறது.

அறிவுத்துறையை மூடி வைப்பதன் மூலம் மக்களை அதிலிருந்து விலக்கி வைப்பதற்கான வெளிப்படையான முயற்சிதான் அறிவுசார் சொத்துரிமைஅமைப்பினுடையவிளைவு ஆகும். கடந்த 500 ஆண்டுகளாக பொதுவெளி எப்படி வெகுமக்கள்பயன்பாட்டில் இருந்து விலக்கப்பட்டதோ, அதே வகையில்தான் இதுவும் நடந்தது. அறிவுசார் சொத்துரிமை என்ற சட்ட ஆயுதத்தை பயன்படுத்தி, பொதுவில் பெறப்பட்டஅறிவினை தனியார் சொத்தாக மாற்றுகின்றனர். இதுபோன்ற கட்டுப்பாடு நிச்சயம் இரண்டு வகைகளில் தீங்கானது. மற்றவர்களால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுவது மட்டுமல்ல; எல்லையற்ற முறை பயன்படுத்தப்படும் ஒன்றிற்கு அதற்கான விலையையும் நிர்ணயிக்கிறது. முந்தைய காலங்களில் நடைபெற்ற தனி உரிமை நடவடிக்கைகளை விடவும்அறிவுசார் சொத்துரிமை அமைப்பு அதிக அநீதியானதாகும். அறிவுசார் சொத்து உரிமையின் பல்வேறு வடிவங்களுக்கு எதிரான போராட்டம், உலக பொது வெளி மற்றும் சிறப்பு அறிவின் பல்வேறு வடிவங்களை பாதுகாக்கும் நோக்கத்தில் நடக்கிறது.

அறிவையும், அறிவியலையும் தனியார்மயப் படுத்துவதன் விளைவாக அறிவியலே மாறுதலுக்கு உள்ளாகிறது. முன்பு போல அறிவியல், இயற்கையை அறிந்துகொள்ளும் ஒரு கூட்டுச் செயல்பாடாக, திறந்த நடவடிக்கையாக இல்லை. ஒரு ஆய்வு அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன் அதற்கு காப்புரிமம்பெற்றுவிடும் அவசியத்தை கொண்ட,  ரகசியம் காக்க வேண்டிய ஒரு நடவடிக்கையாக மாறிவிட்டது. கருத்துக்களுக்கு‘வணிக’ மதிப்பு இருக்கிற காரணத்தால் அவை பகிரப்படுவதும் இல்லை. கூட்டாக செயல்படுவதற்கான சூழல்நிலைகள் பிரகாசமாக இருக்கும் காலத்தில் இவ்வாறாக நடந்துகொண்டிருப்பதுதான் நகைமுரண்.

அறிவியல் ஒரு திறந்த நடவடிக்கையாக, கூட்டான செயல்பாடாக மீண்டும் மாற்றப்படுவது அவசியம் என்கிற புரிதலில்தான் ‘பொதுவெளி இயக்கம்’ உருவானது. சூழலை தனியார்மயப் படுத்துவதற்கு எதிராக சூழலியல் மற்றும் உயிர்ச் சூழல் காப்பு இயக்கங்கள் எழுந்தபோது அவர்கள் பொது நிலங்களை காக்க குரல் கொடுத்தனர். புல் வெளிகள், வனங்கள், மீன் வள ஆதாரங்கள், கடல் மற்றும் வாழும் சூழலை தனியார் கையகப்படுத்துவதை அவர்கள் எதிர்த்தனர். அந்தப் பொது வெளிகள் இப்போதும் இயற்கை வளங்களே; அவை எல்லையில்லாதவை என்பதாக கடந்த நூற்றாண்டுகளில் கருதப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அவற்றிற்கு ஒரு எல்லை உண்டு என்பதும், சுரண்டலை கட்டுப்படுத்த வேண்டும் என்பதும் புரிந்துகொள்ளப் பட்டுள்ளது. இயற்கையின் விதிகளும், மரபணு குறித்த அறிவும் எவ்வகையிலும் அதற்கு குறைந்தவை அல்ல. அவற்றை கவனத்துடன் பயன்படுத்த வேண்டும்.

பொது வெளியை, எல்லையற்றதாக கருதும் முதலாளித்துவம் தனது குப்பைகளை அந்த பொது வெளியில் கொட்டுவதற்கு உரிமை கோருகிறது. அதே சமயம், குறிப்பிட்ட அளவே உள்ள பொது வெளியின் மீது தனது ஆதிக்கத்தைச் செலுத்தி, ஏகபோகஉரிமையையும் கேட்கிறது.

பல்வேறு வளஆதாரங்களையும், சமூகங்களையும்ஒருங்கிணைத்து கொண்டுவரும் சாத்தியம் இப்போது போல வேறெப்போதும் ஏற்பட்டதில்லை. புதிய அறிவை உருவாக்க இவையெல்லாம் வழிவகுக்கின்றன. உழைப்பு மேலும் மேலும் சமூக மயமாகியுள்ளது, அனைத்து உழைப்பாக மாறியுள்ளது. அதனை பயன்படுத்தி மக்களின் பொது நன்மைக்கான புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் முயற்சிக்கு இடையூறாக அறிவுசார் சொத்துடைமையின் தனியார் கையகப்படுத்துதல் நோக்கம் செயல்படுகிறது.

சமூக கட்டமைப்பு வாதமும், தொழில்நுட்ப நிர்ணயவாதமும்

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சமூக ஆய்வுகள் என எவற்றை அழைக்கிறோம்? அல்லது அறிவியல் குறித்தும், அறிவியல் கொள்கை குறித்துமான சமூக ஆய்வுகள் எப்படி இருக்க வேண்டும்? என்ற வாதம்  தற்போது  பல்வேறு களங்களில் நடைபெற்று வருகின்றது. இந்த வாதங்கள், சமூக அமைப்பில் தொழில்நுட்பங்கள் செலுத்தும் தாக்கம் குறித்தும், சமூக அமைப்பு தொழில்நுட்பங்கள் மீது செலுத்தும் தாக்கம் குறித்ததும் ஆனவை. அதிலிருந்து எழும் முக்கியமான கருத்து சமூக கட்டமைப்பு வாதம்.

சமூக கட்டமைப்பு வாதத்தினை முன்வைக்கும்அறிஞர்களில் ஒரு பகுதியினர், தொழில்நுட்பம் என்பது தனித்துவமான பாணியில், உள் ஒழுங்கில் இருந்து வெளிப்படக்கூடியதல்ல என்கின்றனர். சமூகத் தேர்வுகள் பலவற்றிற்கு இடையிலான தொடர்புகளில் இருந்தே தொழில்நுட்பங்கள் வெளிப்படுகின்றன என்பது அவர்களின் வாதம். இதை மட்டும்தான் அவர்கள் குறிப்பிட்டார்கள் என்றால் நாம் அவர்களோடு எதிர்வாதம் செய்வதற்கு பெரிதாக ஏதும் இருக்காது. அவர்கள் முன்வைக்கும் கருத்தில் மிக முக்கிய பிரச்சனை என்னவென்றால், சமூகத்தில் வர்க்கமோ, சமூக உற்பத்தியோ இருப்பதாக அவர்கள் பார்க்கவில்லை. இதைத் தவிர்த்த வெறும் சமூகப் பார்வையை மட்டும் முன்வைக்கிறார்கள். சமூக காரணிகள் பலவற்றில் உற்பத்தி முறையும், அதில் ஏற்படும் வெற்றிகரமான மாற்றங்களும் ஒரு சிறு பகுதி என அவர்கள் பார்க்கிறார்கள். உதாரணமாக, இளைஞர்கள் வேகமாகச் செல்லும் மிதிவண்டியை விரும்புவார்கள் என்பதை எடுத்துக் கொள்ளலாம்.தொழில்நுட்ப திறன் மூலமாக அந்த விருப்பத்தை நிறைவு செய்யலாம் என்பது ஒரு வாய்ப்பு மட்டுமே. இன்ன பிற வழிமுறைகளும் உள்ளன என்பதுதான் சமூக கட்டமைப்பு வாத அறிஞர்களின் கருத்து. அவர்களிடம் காணப்படும் இன்னொரு பிரச்சனை தொழில்நுட்பம்  முடிவில்லாத ஒன்று; நெகிழ்வுத்தன்மை கொண்டது. ஒரே பிரச்சனைக்கு அதனால் பல விதமான தீர்வுகளைத் தர முடியும் என அது நம்புகிறது. அந்த தீர்வுகளில் இருந்து நாம் இறுதியாக தேர்வு செய்வது, சமூகத்தில் அதிகம் பேரால், குழுக்களால், முன்னணியினரால் விரும்பப்படுகிற ஒன்றாக இருக்கும் என்கிறார்கள்.

சமூக கட்டமைப்பு வாதிகள் சமூகத்தின் தேர்வுகளுக்கிடையே நடுநிலை வகிக்கும் கொள்கையைப் பின்பற்றுகின்றனர். உதாரணமாக, கலாச்சார முன்னுரிமைக்கும், பொருளாதார தேவைக்கும் இடையே நடுநிலைமையை கடைப்பிடிக்கிறார்கள். வர்க்கமும், வர்க்க நலன்களும் அந்த விளக்கத்திற்குள் காணாமல் போய் விடுகிறது. சமூக கட்டமைப்புவாதிகள் மீதான தனது விமர்சனத்தில் ரஸ்ஸல் இந்த விசயத்தைக் குறிப்பிடுகிறார். “ தொழில்நுட்ப தேர்வுகள் சமூக கட்டமைப்பிற்கு உட்பட்டவை என்ற அவர்களுடைய வாதத்தை நாம் ஏற்போமென்றால், அதன் தொடர்ச்சியாக சார்பு வாதம் வருகிறது. சமூகத்தின் விருப்பங்களுக்கு எது தேவையோ அதனை சார்ந்து தொழில்நுட்ப தேர்வு ஏற்படுவதாக – வேறு வார்த்தையில் சொன்னால், அரசியல் நடுநிலை ஆகிறது”. தொழில்நுட்ப சுதந்திரத்திற்கும், அடக்குமுறைக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் அது காண்பதில்லை. எனவே, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் இது செலுத்தும் தாக்கத்தையும் அது பேசுவதில்லை. தொழில்நுட்ப வளர்ச்சியை தீர்மானிக்கும் சமூக தேர்வுகள் எப்படி சுதந்திர மனநிலையில் இருந்து உருவாக வேண்டும் என்பதை அது சொல்வதில்லை. எனவே அறிவுத்தளத்தில் போராடுவதற்கான எந்த உதவியையும் அந்த வாதம் முன்வைப்பதில்லை.

சமூக கட்டமைப்புவாதிகளிடம் காணப்படும் இன்னொரு பிரச்சனை, தொழில்நுட்பம் எல்லையற்றது, நெகிழ்வுத்தன்மை கொண்டது என்ற பார்வையாகும். அதாவது, வடிவமைப்பும், அதற்கான இடமும் எல்லையற்றது என அவர்கள் நம்புகின்றனர். சமூக கட்டமைப்புவாதம் எல்லையற்ற விருப்பத்தேர்வுகள் சாத்தியம் என நம்புகிறது. மேலும், சமூக காரணிகளுக்கு ஏற்ப ஒருவர் தனது இறுதி விருப்பத் தேர்வை முடிவு செய்கிறார் என்றும் அது பார்க்கிறது. மேலும், அவர்கள் தொழில்நுட்பத்தைக் குறித்து விளக்கும்போது, வெகு சில சாத்தியங்களே இருக்கின்றன என்றும் சொல்கின்றனர். நம்மிடம் உள்ள வெகு சில சாத்தியங்களில் இருந்து பலனுள்ள ஒன்றை தேர்வு செய்வது, அதே சமூக கட்டமைப்புவாதம் முன்வைக்கும் தொழில்நுட்ப ‘கட்டமைப்பு பணி’ என்ற கருத்தோடு முரண்படுகிறது.

மேற்சொன்ன சமூக கட்டமைப்புவாதத்தின் இன்னொரு பிரதிபலிப்புதான் தொழில்நுட்ப நிர்ணயவாதம். அவர்களுடைய கருத்தின்படி மார்க்ஸ், எங்கெல்ஸ் தொடங்கி, பெர்னல் போன்ற மற்ற பல மார்க்சியவாதிகள்அனைவருமேஅறிவியலுக்கு வெளியில் இருந்து அறிவியலை பார்க்கிறார்கள் என அது குற்றம் சாட்டுகிறது. பெர்னல் எழுதிய வரலாற்றில் அறிவியல் என்ற புத்தகத்தை வெளியில் இருந்து எழுதப்பட்ட சிந்தனையின் அதீத வெளிப்பாடாக காணும் அதே சமயத்தில் அவர் எழுதிய அறிவியலின் சமூக இயங்குமுறை என்ற புத்தகம் தொழில்நுட்பநிர்ணயவாதம் அல்லது அறிவியல்வாதபடைப்பாக பார்க்கிறார்கள். தொழில்நுட்ப நிர்ணயவாதம் என்றால் என்ன? தொழில்நுட்பங்கள் மட்டுமே சமூகத்தை உருவாக்குகின்றன என்பதுதான் அந்த வாதத்தின் பொருள். சமூகத்தில் இருந்து ஒப்பீட்டளவில் தொழில்நுட்பங்கள் தனித்து இயங்குகின்றன, தொழில்நுட்பம் வளர்வதற்கு தக்க சமூகத்தை அது படைக்கிறது என்பதும் அவர்களின் வாதம் ஆகும்.

தொழில்நுட்ப நிர்ணயவாதத்தின் முதல் பகுதியை எடுத்து பகுத்துப் பார்ப்போம். தொழில்நுட்பம்தான் சமூக மாற்றத்தை உருவாக்குகிறதா? மார்க்சிய நோக்கில் பார்த்தால், உற்பத்தி சக்திகளில்ஏற்படுகிற மாற்றம் தொழில்நுட்பம் மற்றும் அறிவியலில் அடைகிற முன்னேற்றத்தால் ஏற்படுகிறது. உற்பத்தி சக்திகள் முன்னேற்றமடையும்போது அவை சமூகத்தில் நிலவும் உற்பத்தி உறவுகளுக்கிடையே மோதலை அதிகப்படுத்துகிறது. இருப்பினும், மார்க்சியவாதிகள் அனைவருமே உற்பத்தி அமைப்பில் அறிவியலும், தொழில்நுட்பமும் எப்படி விளைபொருளாகவும் இருக்கின்றன என்பதையும் இணைத்தே காண்கிறார்கள். ஒன்றுக்கொன்று தொடர்புடைய இணைந்த செயல்பாடாக அது இருக்கிறது எனினும் மாற்றமின்றித் தொடர்வதில்லை. சில வர்க்கங்களின் சமூக ஆதிக்கம் காரணமாக தொழில்நுட்பத்தை நிலை மாறாமல் தொடர வைக்க முயற்சி நடந்தாலும் கூட மெல்ல மெல்ல அது மாற்றத்திற்கு உட்பட்டு இறுதியில் சமூகத்தை மாற்றியமைக்கும். ஆனால் தொழில்நுட்பத்தை நிர்ணயிக்கிற சக்தியாக சமூகமும், சமூகத்தை நிர்ணயிக்கிற சக்தியாக தொழில்நுட்பமும் இருக்கிறது. தொழில்நுட்பத்திற்கும், சமூகத்திற்கும் இடையிலான இயக்கவியல் உறவினை பிறகு பார்ப்போம்.

சமூகத்தில் நிலவும் வர்க்க உறவுகளில் இருந்துதான் தொழில்நுட்பத்தின் வகைப்பாடு எழுகிறது என்ற வாதம் ஒரே விவாதத்தின் இன்னொரு பகுதியாகும். அறிவியலும் அவ்வாறே. தொழில்நுட்ப கருவிகளுக்கு சமூக பாத்திரம் உண்டு. எனவே அவை சமூக உறவுகளோடு இணைந்திருக்கின்றன. “நூற்பாலை காலத்தில் நிலவுடைமைஆதிக்க சமூகம் நிலவுகிறது. நீராவி ஆலையின் காலத்தில் ஆலை முதலாளியைக் கொண்ட சமூகம் பிறக்கிறது’ என்கிறார் மார்க்ஸ். (தத்துவத்தின் வறுமை, 2வது அத்தியாயம்)

ஒரு உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். தொழிலாளர் பற்றாக்குறை கொண்ட பொருளாதாரத்தில் தொழிலாளர்களின் உழைப்பிற்கு அதிக செலவு ஆகலாம். எனவே தானியங்கி தொழில்நுட்பங்களை உருவாக்குவதன் மூலம் தரத்தை மேம்படுத்தி, உழைப்பிற்கான செலவினத்தையும் குறைக்க வேண்டி வரும். உழைப்பாளர்கள் உபரியாக உள்ள சமுதாயத்தில், உழைப்பிற்கான செலவு குறைவாக இருக்கக் கூடும். அங்கே தானியங்கி தொழில்நுட்பம் லாபகரமானதாக இருக்காது.  எனவே, சில குறிப்பிட்ட பணிகளுக்கு மட்டும் தானியங்கி முறை பயன்படுத்தப்படுகிறது, பகுதியளவு தானியங்கித்தன்மைதான் விருப்பமான உற்பத்தி வடிவமாக இருக்கக் கூடும். எனவே தொழில்நுட்பங்கள் சமூக நிலைமைகளிலேயே கூடுதலாக நிலைபெற்றிருக்கின்றன.

இன்னொரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். பசுமைப் புரட்சியின்போது கலப்பின விதைகளுக்கு ஆதரவான வாதம் எழுந்தது. விதை தயாரிப்பு நிறுவனங்களின் ஏகபோகத்திற்கான வாய்ப்பை அது உருவாக்கியது. எனவே கலப்பின விதை உருவாக்கம் என்பது விதைகளின் விருப்பம் அல்ல. அது வர்க்கங்களின் தேர்வு. இதே காரணத்திற்காகத்தான் இந்தியாவில் பி ட்டி பருத்தி வகைகள் ஊக்குவிக்கப்பட்டன. இதனை பயன்படுத்தி மான்சாண்டோ நிறுவனம் விதைச்சந்தையில் தன் பிடியை தக்க வைத்துக் கொண்டது.

இந்த புரிதலில் பார்க்கும்போது தொழில்நுட்பம் சமூக உறவுகளை பிரதிபலிக்கிறது. சமூக உறவுகளும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நிலையை பிரதிபலிக்கிறது. ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தைப் பொறுத்து, அதனால் தாக்கம் பெற்ற சமுதாயத்தை நாம் பார்க்க முடியும். தொழில்நுட்ப நிர்ணயவாதம் இதனை ஒருவழிப் பாதையாகக் காண்கிறது. மார்க்சியம் இந்த நிகழ்முறையை இருவழிப்பாதையாகப் பார்க்கிறது. தொழில்நுட்பம் சமூக அமைப்பினை உருவாக்குகிறது, இயக்கவியல் நிகழ்முறையில், தொழில்நுட்பமானது சமூக அமைப்பினால் தாக்கத்திற்கு உள்ளாகிறது.

தொகுத்துச் சொன்னால்…

அறிவியலால் என்ன செய்ய முடியும் என்பதற்கும், அறிவியல் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது என்பற்கும் இடையிலான வேறுபாடுதான் போராட்டம் நடக்கிற தளம். இது அறிவியலிற்கு உள்ளேயும் நடக்கிறது. விரிந்த சமூகப் பரப்பிலும் நடந்து கொண்டிருக்கிறது. இது மனித சமுதாய மேம்பாட்டிற்காக வளங்களை திருப்பிவிடும் பெரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். எனவே இந்தப் போராட்டம், சமுதாயத்திலும்,அறிவியலிலும் நிலவக்கூடிய பகுத்தறிவற்ற நிலைமைக்கு எதிரான ஒன்றாகும். சமூக அக்கறையுடைய அறிவியல் அறிஞர்களும், அறிவியல் உணர்வுடைய முற்போக்கு பிரிவு மக்களும் இந்த போராட்டத்தை இணைந்து முன்னெடுக்க வேண்டும். அறிவியல் அடிப்படையில் முடிவுகளை மேற்கொள்வதை மேலும் ஜனநாயகப் படுத்துவதும் இதில் உள்ளடங்கியுள்ளது; மிக சில அறிவியல் அறிஞர்கள் மட்டும் கூடி சமுதாயத்திற்கு என்ன தேவை என்பதை முடிவு செய்துவிட முடியாது. பெர்னலும் சமூக பொறுப்புனர்வு கொண்ட அறிவியலாளர்களை உருவாக்க போராடிய பிற அறிஞர்களும் இந்தப் புரிதலில் இருந்துதான் போராடினார்கள். உலக சமாதானத்திற்கான, அணு ஆயுதங்களுக்கு எதிரான அறிவியல் அறிஞர்கள் இந்த புரிதலோடுதான் செயல்பட்டார்கள்.  முற்போக்கு இயக்கங்கள், அறிவியலை பரவலாக்கிடும் நோக்கத்துடன் தொடர்ந்து இயங்குவதற்கான காரணம் இதுதான்.

இன்றைக்கு, அறிவியலிலும் (தொழில்நுட்பத்திலும்) மாற்றுப்பார்வைகள்  உருவாகியுள்ளன. அவற்றை எதிர்த்தும் போராட வேண்டிய நிலைமை இருக்கிறது. அறிவியலும்,தொழில்நுட்பமும் இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்துவதாக அவர்களின் தத்துவப்பார்வை உள்ளது. (பெரும்பாலும் இவர்கள் அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் ஒன்றாகவே பார்க்கின்றனர்). இந்தப் பார்வையின் அடிப்படையில் இயற்கையை புரிந்துகொள்வதும், அதன் மீது ஆதிக்கம் செலுத்துவதும் ஒன்றே. அதைத்தான் அறிவியலின் தத்துவமாக கொள்கின்றனர். எனவே, இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்தும் தத்துவமானது நமது புவிக்குஆபத்தும் ஆகும். நாம் இந்தக்கருத்தின் அடிப்படையில் பார்த்தோம் என்றால் அறிவியலை பின்னுக்குத் தள்ளினால்தான் உலகத்தை காத்திட முடியும் என்றாகிறது. அறிவியல் எதிர்ப்பு, தொழில்நுட்ப எதிர்ப்பு கருத்துக்கள் இந்த அடிப்படையில் இருந்துதான் எழுகின்றன. அவர்களுக்கு அறிவியலும், தொழில்நுட்பமும், வளர்ச்சியும்தான் ‘எதிரிகள்’; மூலதனம் அல்ல. வர்க்கப் பிரச்சனைகளில் இருந்து அவர்கள் துண்டித்துக்கொள்கின்றனர். யார் எதனை உடைமையாகக் கொண்டுள்ளனர் என்பதையோ, பயனாளர்கள் யார் என்பதையோ அவர்கள் பார்ப்பதில்லை.

உலகம் ஒரே நிலையில் இருக்காது என்பதுதான், அறிவியலில் இருந்து பின் வாங்குவது மற்றும் மறைமுகமாக முன்னேற்றத்தில் இருந்து பின்வாங்குவதன் பிரச்சனை ஆகும். எந்த ஒரு காலகட்டத்திலும், சமூகம் இயற்கையுடன் ஒரு சமநிலையை பராமரித்துக் கொண்டே உள்ளது. இந்த சமநிலையில் இருந்து வெளியேறுவது சாத்தியமே இல்லை. முன்னேறிச் செல்லவேண்டும்; அல்லது பின்னோக்கி இழுக்கப்படுவதை தவிர்க்க முடியாது. இப்போதைய முதலாளித்துவ சமூக அமைப்பினை அப்படியே தக்கவைப்பதற்கும், உலகின் மொத்த மக்கள் தொகையையும் உயிரோடு வைத்திருப்பதற்கும் அப்பாற்பட்டது. அறிவியலை புறந்தள்ள வேண்டும் என்ற வாதமானது, இப்போதுள்ளதை விடவும் சிறந்த சமுதாயத்தைக் கட்டமைக்க முடியும் என்ற நம்பிக்கையில் இருந்து பின்வாங்குவதே ஆகும். அறிவினை வளர்த்தெடுக்காமல் நம்முடைய உற்பத்திக் கருவிகளை வளர்ப்பதும் சாத்தியமில்லை. நாம் இப்போது அடைந்திருக்கும் முன்னேற்றங்களை தக்கவைத்துக் கொள்வதும் கூட சாத்தியமில்லை.

இரண்டு உதாரணங்களை எடுத்துக் கொள்வோம். முதலாவது, மருந்துத் துறை. குறிப்பிட்ட ஆண்டி பாயாட்டிக் மருந்துகளை பயன்படுத்தும்போது, பாக்டீரியா கிருமிகள் அதற்கு தக்க தன்னை தகவமைத்துக் கொள்ளும் என்பது எளிய பரிணாம உண்மை ஆகும். புதிய மருந்துகளை உருவாக்குவதை நிறுத்திவிட்டோம் என்றால் அதனால் என்ன விளையும்? இதுவரை நாம் பயன்படுத்திவரும்ஆயுதங்களான மருந்துகள் காலப்போக்கில் பயனற்றதாகி விடும். அப்போதும் கூட நாம் வேறுபட்ட ஆண்டி பயாட்டிக் மருந்துகளை சுழற்சி முறையில் பயன்படுத்தலாம் என்றாலும், நமக்கு தேவையான பலனை அது கொடுக்காது. இதுமட்டும் அல்லாமல், புதிய நோய்களும்எழக்கூடும் என்பதை இத்தோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.  எச்.ஐ.வி / எய்ட்ஸ் ஒரு எடுத்துக்காட்டு. உலகப் பெரும் நிறுவனங்கள் மற்றும் அவற்றில் பணியாற்றும் அறிவியலாளர்களுடைய பகட்டான கண்டுபிடிப்பாக மட்டும் புதிய மருந்துகளை பார்க்க முடியாது. அவை அத்தியாவசிய தேவைகளும் ஆகும்.

நம்முடைய எதிர்ப்பு சக்தியும் பரிணாமம் அடைந்து, நோய்களுக்கு உடலே எதிர்ப்புத்தன்மை பெற்றிட  முடியும் என்பதும் சாத்தியம்தான். அப்படித்தான் மனித குலம் தன் தொடக்க காலத்தில் பிழைத்துவந்தது. அதில் பிரச்சனை என்னவென்றால், மனித சமூகமே தன்னை தகவமைப்பதற்கு நீண்ட காலம் எடுக்கும். அதற்குள் சமூகத்தில் ஒரு பேரழிவும் நிகழ்ந்துவிடக் கூடும். இதனை நாம் அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம். ஏனென்றால் பிளேக், கறுப்பு நோய் போன்ற தொற்றுநோய்களால் ஏற்பட்ட பேரழிவுகள் முடிந்து நீண்ட காலம் ஒன்றும் ஆகவில்லை.

இன்னொரு உதாரணம், உணவு உற்பத்தி. 2000 ஆண்டுகளுக்கு முன் மனித குலத்தின் மொத்த மக்கள் தொகை சுமார் 30 கோடியாக இருந்தது. இந்த எண்ணிக்கை இரட்டிப்பாக 1600 ஆண்டுகள் எடுத்தது. 250 ஆண்டுகளில் இந்த மக்கள்தொகை அடுத்த இரட்டிப்பு மடங்கை எட்டியது (1850 – 120 கோடி) அடுத்து வந்த 50 ஆண்டுகளில் அது 600 கோடியை எட்டியது.

மால்தூஸ் என்ற அறிஞர், மனித குலத்தின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும்போது, உணவு உற்பத்தி நேர்கோட்டில்தான் உயரும் எனில், உலகம் உணவுப் பற்றாக்குறைக்கு ஆளாகும் என கணித்தார். அறிவியலும் தொழில்நுட்பமும் முன்னேறிய காரணத்தால், உணவு உற்பத்தியும் தேவைக்கு ஏற்ப உயர்ந்தது. மால்தூஸ் முன்வைத்த கருத்து பொய்த்துப் போனது. ஒருவேளை அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ச்சி காணாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?. உணவு உற்பத்தி தேவையான அளவிற்கு நடந்திருக்காது. மக்கள் குறைவான வளர்ச்சியை எதிர்கொண்டால் கூட, இன்னொரு 50 ஆண்டுகள் மட்டுமே தாக்குப் பிடித்திருக்க முடியும்.

சில குறிப்பிட்ட துறைகளில் அறிவின் எல்லைகளுக்கு வரம்பிடுவது சாத்தியமும் இல்லை. செயற்கையாக நாம் சில ஒழுங்குகளை உருவாக்கி வரம்புகளைஅமைக்கலாம் – அறிவியலில் எல்லா அறிவியலும்இயக்கவியலாக ஒன்றோடு ஒன்றி இணைந்தவையே ஆகும். நாம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இயற்கையை புரிந்துகொள்ளத் தொடங்கினால் அது மற்றொரு எல்லையின் புதிரையும் விடுவிக்கும்.

அறிவியலை சரியாகவோ/தவறாகவோ பயன்படுத்துவதற்காக இந்த வாதத்தை நாம் முன்வைக்கவில்லை. அறிவியலை பயன்படுத்தும் சமூகக் குழுக்கள், வர்க்கங்கள்,  நாடுகள் அவற்றை சரியாகவோ, தவறாகவோ பயன்படுத்தலாம். ஆனால் அது அறிவியலின் சார்பு நிலை அல்ல. ஒரு அறிவியலாளரோ, அறிவியல் பணியாளரோ எந்தச் சார்பும் இல்லாமல், அறிவை மட்டும் படைப்பதில்லை. அவர்கள் மனிதர்களையும், சூழலையும் அழித்து மிகச் சிலருக்கு மட்டும் பலன் கொடுக்கக் கூடிய ஒரு அறிவைக் கூடக் கண்டுபிடிக்கலாம். எனவே, சமூகத்தில் நடக்கும் போராட்டத்தை அறிவியலிடம் இருந்து பிரித்துப் பார்ப்பதும் சாத்தியமில்லை. இரண்டும் இணைந்துதான் முன்னேற முடியும். பெரும் எண்ணிக்கையிலான மனிதத் திரளின் தேவைகளுக்கு அறிவியல் பயன்பட வேண்டும். பிரச்சனைகளை தேர்வு செய்வதும், அதற்காக தரப்படும் தீர்வுகளும், அறிவியல் அதில் பயணிக்கும் திசைவழியும், நாம் நடத்தும் பெரும் போராட்டத்தின் ஒரு பகுதியே ஆகும்.

இந்தக் கட்டுரையை, நான் ஹெலினா ஷீஹானின் மேற்கோளுடன் முடிக்கிறேன். அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சமூகம் பற்றிய எனது நிலைப்பாட்டை அவர் இந்த பத்திகளில் அடக்கி விட்டார்.

“பெர்னலின் பாரம்பரியத்தைப் பின்பற்றிய இடதுசாரிகள் அறிவியலோடு இணைந்து பயணித்தனர். அறிவியலுடைய அறிவாற்றல் திறமையையோ அல்லது சமூக சாத்தியங்களையோ அதில் இருந்து நீக்கிவிட்டுப் பார்ப்பது ஒரு இடதுசாரிக்கு உகந்த செயல் அல்ல என்றே நான் கருதுகிறேன். இடதுசாரிகள்அறிவியலோடு இணைந்து நிற்க வேண்டும்; விமர்சனப் பூர்வமான மறுகட்டமைக்க வேண்டும். சமூகப் பொறுப்புள்ள அறிவியலை முன்னெடுக்க வேண்டும், ஆனால் அதே சமயம் அறிவியலின் உயர்ந்த சாத்தியக்கூறுகளுடன் உடன் நிற்க வேண்டும். உலக மூலதனத்தின் ஒரு பகுதியாக அறிவியலை மாற்றியமைக்கும் முயற்சிக்கு எதிராக தீவிரமான விமர்சனத்தை முன்னெடுக்க வேண்டும். அறிவியலின் முற்போக்கான சாத்தியங்களுக்கு பாதை அமைப்பது இடதுசாரிகளாக இருக்க வேண்டும்.”

இன்றைக்கு நாம் எதிர்கொள்ளும் சவால் இதுதான்.

(இந்தக் கட்டுரை கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன் எழுதப்பட்டது)

தமிழில்: மோசஸ் பிரபு



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: