மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


பால்மிரோ டோக்ளியாட்டியின் பாசிசம் குறித்த விரிவுரைகள்; தொழிலாளி வர்க்க அணுகுமுறைக்கான வழிகாட்டி


சுதிர்

1935ம் ஆண்டில் மாஸ்கோவில் லெனின் பள்ளியின் இத்தாலியப் பிரிவில் பால்மிரோ டோக்ளியாட்டி ‘எதிரிகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய 15 பகுதிகளைக்கொண்ட சொற்பொழிவுகளின் முக்கியமான பகுதியே இந்நூல்.

இத்தாலியில் பாசிசத்திற்கெதிராக 12 வருடங்கள் நடைபெற்ற போராட்டங்களில் நேரடியாக தனக்கிருந்த அனுபவங்களிலிருந்து அவர் இவ்விரிவான சொற்பொழிவுகளை ஆற்றியிருக்கிறார். இத்தகைய சொற்பொழிவுகள், நமக்குச் சம்மந்தப்பட்டதல்ல என்று மெத்தனமாகப் படிக்கும் போக்கிற்கு நாம் இடமளிக்கக் கூடாது என்று இவ்வுரைகளை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் தோன்றும்.

உண்மையில் பாசிசத்திற்கு எதிரான போராட்டப் படிப்பினைகள் வேறெவரையும் விட இந்திய மக்களாகிய நமக்குத்தான் அதிகம் தேவைப்படுகின்றன. பாசிச அபாயத்தை தற்பொழுது நாம் சந்திக்க வேண்டியுள்ளது.

அது மட்டுமல்ல; ஏகபோக முதலாளித்துவம் நம்மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் காலம் வரை பாசிசத்திற்கு எதிராக போராடும்படி நாம் நிர்ப்பந்திக்கப்பட்டே தீருவோம். மிக அதிகபட்ச லாபங்களை அடையும் தனது பாதையில் இதர வடிவங்களில் அமைந்த ஆட்சி தடைக்கற்களாக மாறும்போது, ஏகபோக முதலாளித்துவம் பாசிசத்தை ஆதரிக்க சற்றும் தயங்காது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

டோக்ளியாட்டி திட்டவட்டமாக விவரித்து கூறுவது போல வரலாற்றின் படிப்பினைகளை நாம் கற்றோமானால் “அது இங்கே நடக்காது” என்று தீர்மானிப்பதற்கான போராட்டத்தில் மக்களோடு நாமும் (நமது இயக்கம்) ஒரு முக்கியமான அம்சமாக இருப்போம்.

முதலாளித்துவத்தின் உள் கட்டமைப்புதான் ஜனநாயக விரோதப் போக்கிற்கு வழி பிறக்கச் செய்கிறது என்பதும், அந்தப் போக்குதான் பாசிசத்தை நோக்கிச் செல்லும் இயக்கங்களுக்கு தீனி போடுகிறது என்பதையும் முதலாளித்துவத்தின் நெருக்கடி மற்றும் சரிவு காலகட்டத்தில் “பிற்போக்கான கொள்கைகளை நோக்சிச் செல்லும் போக்கு முதலாளித்துவத்தில்” தலைதூக்கும் என்பதையும் டோக்ளியாட்டி விளக்குகிறார்.

ஏகபோக முதலாளித்துவம், அதனுடைய பொதுவான நெருக்கடி காலகட்டத்தில் தொழில் உச்சபட்சமாக லாபமடையும் கொள்கைகளைப் பின்பற்ற முடியாது. இத்தகைய கொள்கைகளுக்கு எதிராக மக்கள் தலையிடும்படியான மிகக் குறைந்தபட்ச சாத்தியப்பாட்டை ஜனநாயக அமைப்புகள் ஏற்படுத்தினால் கூட ஏகபோக முதலாளித்துவம் அத்தகைய அமைப்புகளை ஒழித்துக் கட்டுவதில் இறங்கும். அது, ஜனநாயக ஆட்சிக்குப் பதிலாக பிற்போக்கான ராணுவ ஆட்சிகளைக் கொண்டு வருவதற்கு முற்படும். பாசிசம் என்பது இத்தகைய பெரும் தொழில் வர்த்தக சர்வாதிகாரங்களின் மிகவும் கொடூரமான, நாசகரமான, வளர்ச்சியடைந்த வடிவமேயாகும்.

பாசிசமானது எப்பொழுதும் பொய்யான மற்றும் வாய்ச்சவடால் வடிவங்களிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக பாசிசம் என்பது ஏகபோக மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான பகுதியின் அப்பட்டமான சர்வாதிகாரம் என்பதை அது மூடி மறைக்கவே முயற்சிக்கிறது.

பாசிசம் என்பது ஏகபோக மூலதனத்தின் மேல்தட்டு வட்டாரங்களின் மிகவும் பிற்போக்கான பகுதியினருடைய அப்பட்டமான, மிகக் கொடூரமான சர்வாதிகாரம் என்பதை விளக்க வேண்டியது அவசியமாகும். அவ்வாறு செய்தால்தான் உண்மையான பகைவனை திட்டவட்டமாக சுட்டிக்காட்டி அவனுக்கு எதிரான போராட்டத்தை நடத்துவது சாத்தியமாகும். அதன்பிறகே பாசிசத்திற்கெதிராகப் பரந்துபட்ட இயக்கத்தை அணிதிரட்டுவது சாத்தியமாகும் என்றும் அவர் விளக்குகிறார்.

“பாசிசம் என்பது ‘நிதி மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான, மிகவும் இனவெறி கொண்ட, மிக மோசமான ஏகாதிபத்திய சக்திகளின் அப்பட்டமான பயங்கரவாத சர்வாதிகாரமாகும்” என்று 1935ம் ஆண்டு நடைபெற்ற கம்யூனிஸ்டு அகிலத்தின் 7வது உலக காங்கிரசுக்கு அளித்த தன்னுடைய வரலாற்றுச் சிறப்புமிக்க அறிக்கையில் தோழர் ஜார்ஜ் டிமிட்ரோவ் அளித்தார் என்பதை டோக்ளியாட்டி எடுத்துரைக்கிறார்.

பாசிசத்திற்கான பாதையைத் தடுப்பதில் நாம் உண்மையிலேயே அக்கறை கொண்டிருப்போமானால், ஒடுக்குமுறைகளை (அதாவது மத, இன, சாதி வெறியை) ஒழித்துக்கட்டப் போராட வேண்டிய படிப்பினையை நாம் இவ்வுரையை வாசிப்பதன் மூலம் அறிய முடியும்.

பாசிச அபாயம் அதிகரிப்பதைத் தொடர்ந்து கம்யூனிச எதிர்ப்பு, இனவெறி, பேரரசு இனவாதம் போன்ற இயக்கங்களும் அவற்றுக்கான பிரச்சாரங்களும் அதிகரிக்கும் என்பதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

முதலாளித்துவமானது தொழிலாளி வர்க்கத்தைச் சுரண்டுவதால் மட்டுமே நீடிக்க முடிகிறது என்ற உண்மையை மூடி மறைக்கவே எப்பொழுதும் முயற்சிக்கிறது. பாசிசம் இந்த மூடி மறைத்தலை ஒரு படி முன்னெடுத்துச் செல்கிறது.

பாசிசமானது ஒருமுறை வேரூன்றிவிட்டால் அது வர்க்கக் கூட்டுக் கொள்கைகளைக் கொண்டுள்ள சங்கங்கள் உள்ளிட்டு அனைத்து தொழிற்சங்கங்களையும் நாசம் செய்துவிடும். அவைகளிருந்த இடத்தில் பாசிஸ்டுகள் தங்களுடைய சொந்த பாசிச தொழிலாளர் முன்னணி அமைப்புகளை உருவாக்குவார்கள்.

பாசிசத்தின் தோல்வியானது அணிதிரட்டப்பட்ட வெகுஜன போராட்டத்தின் விளைவாக மட்டுமே வர முடியும்.

பாசிஸ்டுகளால் ஒழுங்கமைக்கப்பட்டு, அணிதிரட்டப்பட்டு, அவர்களின் செல்வாக்குக்கு உட்பட்ட மக்கள் ஒருநாள் காலையில் தாங்களாகவே பாசிசத்திலிருந்து விலகி, பாட்டாளி வர்க்கப் புரட்சியில் கலந்து கொள்ள நம்மிடம் வந்துவிடுவார்கள் என்று யாரும் நினைக்கக் கூடாது. அந்த மக்களை அவர்களின் பிடியிலிருந்து விடுவிப்பதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். நமது பக்கம் அவர்கள் வந்து சேருவதற்கான முறையில் நாம் பணியாற்ற வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார்.

பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய அடிப்படையான கொள்கைகள் குறித்து டோக்ளியாட்டி பல நிர்ணயிப்புகளை உருவாக்கியுள்ளார்.

“கோட்பாடு குறித்த சரியான நிலைப்பாட்டிற்கும் சக்திகளின் உறவு குறித்த சரியான மதிப்பீட்டிற்கும், ‘நடைமுறைக் கொள்கைப் பிரச்சினைகளில் சரியான தீர்வுகளுக்கும்’ அவர் மிகுந்த முக்கியத்தும் அளிக்கிறார்”.

நடைமுறைக் கொள்கைப் பிரச்சினைகளுக்கான சரியான தீர்வுகளுக்கு அடிப்படையான ‘சரியான கோட்பாட்டு நிலைப்பாட்டை’ மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அழுத்தமாகக் கூறுவதானது சர்ந்தப்பவாத நிலைப்பாடுகளில் தவறி விழுவதற்கு எதிரான எச்சரிக்கையாகும்.

உலக அனுபவம் என்ற பெட்டகத்திலிருந்து குவிக்கப்பட்டிருக்கும் ஏராளமான சான்றாதாரங்களின் அடிப்படையில் டோக்ளியாட்டி பின்வரும் முடிவுகளுக்கு வருகிறார்.

• பாசிசம் என்பது முதலாளித்துவ நாடுகளில் ஒரு அபாயமாக உள்ளது. ஆனால், அது தவிர்க்க முடியாத ஒரு வளர்ச்சிக் கட்டமல்ல.

• பாசிசத்தால், முதலாளித்துவத்தின் பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் அடிப்படையில் தீர்க்க முடியாது. இதனால் அடிப்படையான வர்க்க முரண்பாடும் வர்க்கப் போராட்டமும் தொடரும்.

• பாசிசம் அதிகாரத்திலிருக்கும் மிக மோசமான நிலைமைகளிலும் கூட ஒரு வெகுஜன இயக்கத்தை உருவாக்கி பாசிசத்தைத் தோற்கடிப்பதக்குப் போராடுவது சாத்தியமே.

• பாசிசமானது தன்னுடைய சொந்த உள் முரண்பாடுகளால் நொறுங்கி விழுந்துவிடாது. ஆனால் அதை தோல்வியுறச் செய்ய, அந்த முரண்பாடுகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சிகளும், பாசிச-எதிர்ப்பு ஒற்றுமை என்ற அதனுடைய கொள்கைகளும்தான், பாசிச சவாலை முறியடித்து, பாசிச எதிர்ப்புக்கு வெகுஜன அடித்தளத்தை உருவாக்கி தந்தன என்பதையும் வரலாற்று ரீதியாக விளக்குகிறார்.

நமது எதிரிகள் யார் என்பதை வரையறை செய்தல் மிகவும் முக்கியமானது என்று துவக்கத்திலேயே குறிப்பிடுகிறார். ஏனென்றால் ஒரு தவறான விளக்கமானது அரசியல் தவறுகளுக்கு இட்டுச் செல்லக்கூடும் என்பதையும் எடுத்துரைக்கிறார்.

“பகைவர்கள் என்று பேசும்பொழுது பாசிச அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ள வெகுமக்களை நாம் சிந்தனையில் கொண்டிருக்கவில்லை. நமது பகைவர்கள் பாசிச அமைப்புகளேயாகும். ஆனால், அந்த அமைப்புகளில் உள்ள மக்கள் நமது எதிரிகள் அல்ல. அவர்கள் உழைக்கும் வெகுமக்கள். அவர்களை நம் பக்கம் ஈர்ப்பதற்கு நாம் ஒவ்வொரு முயற்சியையும் செய்ய வேண்டும்” என்கிறார்.

முதலாளித்துவ வர்க்கத்தின் சர்வாதிகாரம் மற்றும் குட்டி-முதலாளித்துவ வெகுமக்கள் இயக்கம் ஆகிய இந்த இரு அம்சங்களை கோட்பாட்டு ரீதியிலான கண்ணோட்டத்தில் காணும்போது, இவ்விரு அம்சங்களுக்கு இடையிலான இணைப்பை முற்றிலுமாகப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும். ஆனால், இந்த இணைப்பு புரிந்து கொள்ளப்பட வேண்டும். முதலாவது அம்சத்தை காண்பதோடு மட்டும் ஒருவர் நிறுத்திக் கொள்வாரேயானால், பாசிசத்தின் வரலாற்றுப் பூர்வ வளர்ச்சியின் முக்கியமான வழியையும், அதனுடைய வர்க்க உள்ளடக்கத்தையும் காண இயலாது. இரண்டாவது அம்சத்தைக் காண்பதோடு மட்டும் ஒருவர் நிறுத்திக் கொள்வாரேயானால், அதனுடைய விளைவுகளை காணத் தவறிவிடுவார் என்றும் எச்சரிக்கிறார்.

வெகுமக்கள் இயக்கம் ஒவ்வொரு நாட்டிலும் ஒரே மாதிரியாக இருக்காது. சர்வாதிகாரம் கூட ஒவ்வொரு நாட்டிலும் ஒரே மாதிரியாக இருக்காது. அதனால் நாம் சுலபமாக தவறு செய்துவிடுவோம் என்பதையும் எச்சரிக்கிறார். இதை வரலாற்று நிகழ்வுகளைக் கொண்டும் விளக்குகிறார்.

இத்தாலிக்கு எது பொருந்துமோ, அது இதர ஒவ்வொரு நாட்டிற்கும் பொருந்தும் என்றோ, பொருந்த வேண்டும் என்றோ நினைக்காதீர்கள். பாசிசமானது வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வடிவங்களை எடுக்கும். வெவ்வேறு நாடுகளின் வெகுமக்கள் பகுதியினர் வெவ்வேறு வடிவங்களிலான அமைப்பைக் கொண்டிருக்கின்றனர். அத்துடன் எந்தக் கால கட்டத்தைக் குறித்து நாம் பேசுகிறோம் என்பதையும் நினைவில் கொண்டிருக்க வேண்டும். பாசிசமானது ஒரே நாட்டில் வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு நோக்கங்களையும், கோணங்களையும் மேற்கொள்கிறது. இந்த இரண்டு அம்சங்களை நாம் ஆராய வேண்டுமென்கிறார்.

முதலாளித்துவ வர்க்கத்தினரின் அப்பட்டமான சர்வாதிகாரமான பாசிசத்தை, தோழர் லெனின் அவர்கள் ஏகாதிபத்தியம் குறித்து எழுதியுள்ளவற்றில் இருந்தே காண முடியும் என்கிறார். ஏகாதிபத்தியம் குறித்து நீங்கள் அறிந்திருக்கவில்லை என்றால், பாசிசம் என்ன என்பது குறித்து நாம் தெரிந்து கொள்ள முடியாது என்றும் எச்சரிக்கிறார்.

ஏகாதிபத்தியத்தின் பொருளாதார அம்சங்களை நீங்கள் அறிவீர்கள். லெனின் அளிக்கும் விளக்கமும் உங்களுக்குத் தெரியும். ஏகாதிபத்தியம் என்பது பின்வருமாறு குணாம்சப்படுத்தப்படுகின்றது; 1. உற்பத்தி மற்றும் மூலதனக் குவிப்பு, பொருளாதார வாழ்வில் ஒரு தீர்மானகரமான பங்கை வகிக்கக் கூடிய ஏகபோகங்களின் உருவாக்கம், 2. வங்கி மூலதனமும் தொழில் மூலதனமும் இணைக்கப்படுதல், நிதி மூலதனத்தின் அடிப்படையில் ஒரு நிதி கும்பல் உருவாதல், 3. மூலதன ஏற்றுமதி மூலம் அடையப்படும் பெரும் முக்கியத்துவம், 4. சர்வதேச முதலாளித்துவ ஏகபோகங்களின் தோற்றம். இறுதியாக, பெரும் முதலாளித்துவ நாடுகளிடையே உலகை மறு கூறுபோடுதல், இந்தப் பணி இப்போது பூர்த்தியடைந்துவிட்டதாகவே கருதலாம்.

மேற்கூறியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு பிற்போக்கான உருமாற்றத்தை அடையும் போக்கு அனைத்து முதலாளித்து அரசியல் அமைப்புகளிலும் காணப்படுகிறது. இதையும் கூட, நீங்கள் லெனின் எழுத்துக்களில் காணலாம். இத்தகைய அமைப்புகளைப் பிற்போக்கானதாக ஆக்கவேண்டுமென்ற போக்கு உள்ளது. இந்தப் போக்கு பாசிசத்துடன் மிகவும் இணைக்கமான வடிவங்களில் தோன்றுகிறது.

ஏனென்றால், தங்களுடைய லாபங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய தேவையை வைத்துப் பார்க்கும் பொழுது, தொழிலாளிகள் மீது மிகுந்த நிர்ப்பந்தம் செலுத்துவதற்கான வடிவங்களை முதலாளித்துவ வர்க்கம் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. மேலும், ஏகபோகங்கள், அதாவது முதலாளித்துவ வர்க்கத்தின் தலையாய சக்திகள், குவிப்பின் மிக உயர்ந்த கட்டத்தை அடைகின்றன. அப்போது ஆட்சியின் பழைய வடிவங்கள் அவற்றின் விரிவாக்கத்திற்குத் தடைக்கற்களாக ஆகிவிடுகின்றன. இதனால் முதலாளித்து வர்க்கம் தான் உருவாக்கியதற்கு எதிராகவே திரும்ப வேண்டியுள்ளது. ஏனென்றால் ஒரு சமயம் அதனுடைய வளர்ச்சிக்கான அம்சமாக இருந்தது இன்று முதலாளித்துவ சமுதாயத்தைப் பாதுகாப்பதற்கு ஒரு இடையூறாகவே இருக்கிறது. இதன் காரணமாகத்தான் முதலாளித்துவ வர்க்கத்தினர் பிற்போக்காளர்களாக மாறி பாசிசத்தை கடைப்பிடிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர் என்று விளக்குகிறார்.

முதலாளித்துவ ஜனநாயகத்திலிருந்து பாசிசத்திற்கு மாறிச் செல்லும் போக்கு தவிர்க்க இயலாத ஒன்று எனக் கருதாமல் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால், ஏகாதிபத்தியத்திலிருந்து பாசிச சர்வாதிகாரம் அவசியம் தோன்றியே தீரும் என்பதல்ல என்பதை உதாரணங்களுடன் விளக்குகிறார். உதாரணத்திற்கு இங்கிலாந்து ஒரு பெரும் ஏகாதிபத்திய நாடு. அங்கே ஜனநாயக வழிப்பட்ட நாடாளுமன்ற அரசாங்கம் (இதிலும் கூட பிற்போக்கான அம்சங்கள் இல்லையென்று கூறிவிட முடியாது) உள்ளது. பிரான்சையும் அமெரிக்காவையும் உதாரணங்களாகக் கூறுகிறார். பாசிச வடிவிலான அரசாங்கத்தை நோக்கிச் செல்லும் போக்கு அனைத்து இடங்களிலும் காணப்பட்டாலும், பாசிசம் எல்லா இடங்களிலும் வந்தே தீரும் என்று பொருளாகாது என்றும் நம்மை எச்சரிக்கிறார்.

தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட உணர்வின் வீச்சு மற்றும் ஜனநாயக அமைப்புகளைப் பாதுகாப்பதில் அதனுடைய திறன் ஆகியவற்றை வைத்தே பாசிச சர்வாதிகாரம் உருவாகக் கூடிய சாத்தியப்பாடுகள் ஏற்படுகின்றன என்பதைக் காணத் தவறக் கூடாது எனவும் எச்சரிக்கிறார்.

பாசிசத்தின் வளர்ச்சிக் கட்டத்தில் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி காணத் தவறிய பிழைகளையும் எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்கிறார். இத்தாலிய மூலதனத்தின் மிக வளர்ச்சியடைந்த உள்ளார்ந்த இயைபையும் நாம் கவனித்திருக்க வேண்டும் என்பதையும் நாம் காணத் தவறிவிட்டோம். இத்தாலிய முதலாளித்துவம் என்பது ஒரு பலவீனமான முதலாளித்துவம் அல்ல என்ற முடிவுக்கு வருவதற்கு, மூலதனக் குவிப்பு, ஏகபோகங்கள் போன்றவற்றைக் கணக்கிலெடுத்துக் கொண்டாலே போதுமானதாக இருந்திருக்கும் என்கிறார்.

1931 ஆம் ஆண்டு ஜெர்மனியில் இதேபோன்றதொரு தவறை, அதாவது பாசிச இயக்கத்தினுடைய வளர்ச்சியைத் தீர்மானிப்பதில் தவறு செய்திருப்பதாகவும் குறிப்பிடுகிறார். ஜெர்மனியில் பாசிசம் முறியடிக்கப்பட்டுவிட்டது என்றும், ஜெர்மனியைப் போன்ற ஒரு வளர்ச்சியடைந்த நாட்டில், தொழிலாளி வர்க்க சக்திகள் நன்றாக ஸ்தாபன ரீதியாக அணிதிரண்டிருக்கும் ஒரு நாட்டில், அத்தகைய ஆபத்து ஏதும் இல்லை என்பதால் பாசிச சர்வாதிகார அச்சுறுத்தல் கிடையாது என்றும் சில தோழர்கள் கூறினார்கள். பாசிசத்திற்கான பாதையை நாங்கள் தடுத்துவிட்டோம் என்றும் அவர்கள் கூறினார்கள். விரிவடைந்த நிர்வாகக் குழுவின் 11வது கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட பல உரைகளிலும் இதே சாயல் காணப்பட்டது. இதே தவறைத்தான் இத்தாலியில் நாமும் செய்தோம்; பாசிச வெகுமக்கள் இயக்கம் வளர்ச்சியுறுவதற்கு அதற்குள்ள உள்ளார்ந்த ஆற்றலைக் குறைத்து மதிப்பிட்டோம் என்றும் விளக்குகிறார்.

பகுத்தாய்வு தவறாக இருக்குமானால் அரசியல் திசைவழியும் தவறாகவே இருக்கும் என்பதை இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள முடியும்.

பாசிச சர்வாதிகாரம் உருவாக்கப்படுவது முதலாளித்துவ வர்க்கம் பலப்படுவதைக் குறிக்கிறதா? அல்லது பலவீனமாவதைக் குறிக்கிறதா என்ற கேள்விக்கு பின்வருமாறு பதிலளிக்கிறார்;

முதலாளித்துவத்தின் உள் முரண்பாடுகள் தீவிரமடைந்து ஜனநாயக வடிவங்களை முதலாளித்துவ வர்க்கத்தினர் கலைக்கும்படியான நிர்ப்பந்தம் ஏற்படுவதன் விளைவாகவே பாசிசம் வளர்கிறது என்பது உண்மையே. இந்தக் கண்ணோட்டத்தில் இருந்து காணும்போது, நாம் ஒரு ஆழமான நெருக்கடியை எதிர்கொள்கிறோம் என்பதும், அதை முதலாளித்துவ வர்க்கத்தினர் சந்திக்க விரும்புகிறார்கள் என்பதும் தெள்ளத் தெளிவாகிறது. ஆனால், இந்த அம்சத்தை மட்டும் காண்பது பின்வரும் தவறான முடிவை எடுப்பதற்கு இட்டுச் செல்லும்; பாசிச இயக்கம் எந்த அளவுக்கு அதிகமாக வளர்கிறதோ அந்த அளவுக்குப் புரட்சிகர நெருக்கடி மிகவும் கூர்மையடையும் என்கிறார்.

பாசிசத் தத்துவமானது பல்வேறு கதம்பக் கூறுகளைத் தன்னுள் கொண்டுள்ளது. இதை நாம் நினைவிற் கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த சித்தாந்தம் எந்த நோக்கத்திற்காகச் செயல்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள இது உதவுகிறது. மேலும் உழைக்கும் வெகுமக்கள் மீது சர்வாதிகாரத்தைத் திணிப்பதற்கான போராட்டத்தில் பலதரப்பட்ட குழுக்களை இணைப்பதற்கும், இதன்பொருட்டு ஒரு பரந்த இயக்கத்தை உருவாக்குவதற்கும், இது பயன்படுகிறது. பாசிச சித்தாந்தம் இத்தகைய சக்திகளை ஒன்றாகப் பிணைப்பதற்கான ஒரு கருவியாக அமைந்துள்ளது. இந்தச் சித்தாந்தத்தின் தேசியவாத பகுதி நேரடியாக முதலாளித்துவ வர்க்கத்துக்குத் தொண்டு செய்கிறது; மற்றொரு பகுதி ஒரு பிணைப்பாகச் செயல்படுகிறது என்று விளக்குகிறார்.

பாசிச சித்தாந்தம் மிக உறுதியான, முழுமையான, ஒரே சீரான சித்தாந்தம் அல்ல; பச்சோந்தியைப் போன்று தோற்றமளிக்கக் கூடியது. ஒரு குறிப்பிட்ட சமயத்தில் ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டைக் கூறி பாசிசம் எய்த விரும்பும் குறிக்கோள்களைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் பாசிச சித்தாந்தத்தை மதிப்பிடாதீர்கள் என்றும் நம்மை எச்சரிக்கிறார்.

பாசிசத்தின் அடிப்படையான கொள்கை வழி உக்கிரமான, வெறித்தனமான தேசியவாதமும் சமூக ஜனநாயகத்துடன் ஒத்த தன்மை கொண்டிருப்பதுமாகும். ஏன் இந்த ஒத்த தன்மை? ஏனென்றால் சமூக ஜனநாயக சித்தாந்தமும் கூட ஒரு குட்டி-முதலாளித்துவ சிந்தாந்தமாகும்; அதாவது குட்டி முதலாளித்துவ உள்ளடக்கம் இவ்விரு தத்துவங்களுக்கும் பொதுவானது. ஆனால், இந்த ஒத்த தன்மை என்பது பல்வேறு நாடுகளில் பல்வேறு சமயங்களில் பல்வேறு வடிவங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது என்கிறார்.

ஒட்டுமொத்தமாக பால்மிரோ டோக்ளியாட்டியின் இந்நூல், பிற்போக்கு சக்திகளுக்கும் பாசிச சக்திகளுக்கும் எதிரான போராட்டத்திற்கு ஒரு முக்கியமான பங்களிப்பாகும். பாசிசம் குறித்த தொழிலாளி வர்க்க அணுகுமுறைக்கான ஒரு மிகச் சிறந்த வழிகாட்டியாகவும் அமைந்துள்ளது.

இறுதியாக, அணிதிரட்டப்பட்ட வெகுமக்கள் போராட்டமே பாசிசத்தை வீழ்த்தும்

பாசிசம் குறித்த விரிவுரைகள் -பால்மிரோ டோக்ளியாட்டி
தமிழ் மொழியாக்கம்: ரா.ரங்கசாமி, ஏ.எஸ்.மணி. என்.ஜெயராமன், என்.ராமகிருஷ்ணன், கல்பனாதாசன்
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: