சுபாஷிணிஅலி
2020 முதல் நமது நாடு கொரோனா பெருந்தொற்று பரவலின் காரணமாக ஏராளமான இறப்புகளையும் துன்பங்களையும் சந்தித்துக் கொண்டு, நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் வேளையிலும் சங்க பரிவாரம் தனது வகுப்புவாத அணிதிரட்டல் நிகழ்ச்சி நிரலை நிறுத்தவில்லை என்று சொன்னால் மக்கள் ஆச்சரியப்படுவார்கள். உண்மை என்னவென்றால், சங்க பரிவாரத்திற்கு அதனுடைய இரண்டு நோக்கங்களை அடைவதற்கு வகுப்புவாத அணிதிரட்டல் என்பது மிகவும் முக்கியமானது. இந்து ராஷ்டிராவை நிர்மாணிப்பது என்பது, அல்லது மனுஸ்மிருதியின் கொள்கைகளால் வழிநடத்தப்படுகிற அந்நிய, இந்திய கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான பொருளாதாரத்தால் முழுவதும் ஆதிக்கம் செலுத்தப்படுகிற ஒரு அரசினை நிர்மாணிப்பது என்பதும் ஆகிய இரண்டு நோக்கங்களையும் எட்டுவதற்கு இந்த வகுப்புவாத அணிதிரட்டல் அவர்களுக்கு தேவைப்படுகிறது.
வகுப்புவாத அணிதிரட்டல் என்பது ஒரு தந்திரம். இது இடைவிடாமல் ஆர்எஸ்எஸ் அமைபினாலும், அதன் பரிவாரங்களாலும், மத்திய அரசாங்கத்தாலும், பாஜக ஆளும் மாநில அரசாங்கங்களாலும், அவற்றின் ஆதரவு தளத்தை பாதுகாக்கவும், பலப்படுத்தவும், விரிவுபடுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் அவற்றிற்கு அளவற்ற லாபங்கள் -பயன்கள் கிடைத்துள்ளன. இந்த தந்திரத்தின் பின் உள்ள உண்மை நிகழ்ச்சி நிரலை நாம் புரிந்து கொள்ளாவிட்டால் எதிர்காலத்திலும் இதனை அவர்கள் தொடர்வார்கள். சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள் என்பது எதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை பெரும்பான்மை பகுதி மக்கள் இப்போது உணரத் துவங்கியுள்ளார்கள். அவர்களுடைய வகுப்புவாத உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்யவும், ஆர்எஸ்எஸ் தலைமையிலான அமைப்புகளின் பின்னால் மதத்தின் அடிப்படையில் ஒன்றுபடுத்தவும், இதனையொட்டி அவர்களின் உரிமைகள், வாழ்வாதாரம் மற்றும் நல்வாழ்வு மீதான தாக்குதலைத் தொடரவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதையும் தற்போது அவர்கள் உணரத் துவங்கியுள்ளார்கள்.
சமீப காலமாக சங்க பரிவாரங்களும் பாஜக தலைவர்களும் இந்தத் தந்திரத்தை பயன்படுத்திய பல்வேறு எடுத்துக்காட்டுகளை எடுத்து ஆராய்ந்தால் இந்த உணர்தலின் முக்கியத்துவத்தை நாம் அறியலாம்.
வூகானில் இருந்து முதல் கொரோனா பாதித்த நோயாளி கேரளாவிற்கு வந்தார். இதனையடுத்து மேலும் தொற்று பரவாமலிருக்க மோடி அரசாங்கம் உடனடியாக அனைத்து ஆகாயவிமான தளங்களையும் மூடி தடுப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். கொரோனாவை சமாளிப்பது என்பது அதற்கு முன்னுரிமையாக இருக்கவில்லை. டெல்லி சட்டமன்ற தேர்தலுக்காக, அதனுடைய அமைச்சர்கள் எல்லோரும், பொதுவாக சிறுபான்மையின மக்களையும், குறிப்பாக CAA/NRC-விற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர்களையும் குறிவைத்து பிரிவினைவாத தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். இந்தப் பிரச்சாரம் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக அகற்றுவதற்கும், புது டெல்லியில் வன்முறை வகுப்புக்கலவரத்தைத் தூண்டுவதற்கும் காரணமாக அமைந்தது. முந்தைய தேர்தலில் மூன்று இடங்களை மட்டுமே வென்ற பாஜகவால், கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 8 இடங்களை வென்றதன் மூலம் அதன் எண்ணிக்கையை உயர்த்த முடிந்தது.
பிரதமர் மோடிக்கு இதற்கடுத்த மற்றொரு முன்னுரிமை இந்த நேரத்தில் நடந்த டிரம்ப் விஜயம்தான். ட்ரம்புடன் ஒரு பெரிய பரிவாரமே வந்திருந்தது. கொரோனா பரவும் ஆபத்து குறித்த எந்தவொரு சிந்தனையும் இல்லாமல் அகமதாபாத்தில் அவரது வருகைக்காக லட்சக்கணக்கான மக்கள் திரட்டப்பட்டனர். இறுதியாக, மார்ச் மாதத்தில், பாஜக அரசாங்கத்தின் மூன்றாவது முன்னுரிமை தெளிவாக வெளிப்பட்டது. மத்திய பிரதேசத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசாங்கம் ஏற்பாடு செய்யப்பட்ட அணிதிரட்டலின் மூலம் (மார்ச் 2020 இல், இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு அரசியல் நெருக்கடி உருவாக்கப்பட்டது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 22 எம்.எல்.ஏக்கள் மாநில சட்டமன்றத்தில் இருந்து ராஜினாமா செய்ததால் கமல்நாத் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கும், பின்னர் மத்தியப் பிரதேசத்தில் நான்காவது சிவராஜ் சிங் சவுகான் அரசாங்கத்தையும் உருவாக்க வழிவகுத்தது) பதவியிலிருந்து அகற்றப்பட்டு மார்ச் 22 அன்று ஒரு பாஜக அரசு நிறுவப்பட்டது. இதற்குப் பிறகுதான் மோடி தனது கவனத்தை கொரோனா பெருந்தொற்றின் மீது திருப்பினார். மார்ச் 25 அன்று அவர் ஒருதலைப்பட்சமாக – கடுமையானதும், திட்டமிடப்படாதுமான – ஊரடங்கினை அறிவித்தார்.
இந்த கடுமையான தவறுகள் அனைத்தாலும் கேரளாவிலும், ஓரளவிற்கு தமிழ்நாட்டிலும் தவிர பிற மாநிலங்களில் சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததன் காரணமாக, பெருந்தொற்றினை எதிர்கொள்ள வேண்டிய நிலையிலிருந்த மக்களின் மீது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தின. மேலும் ஊரடங்கின் காரணமாக அவர்கள் தங்கள் வேலைகளை இழந்தனர். வசிப்பிடங்களை இழந்தனர்; மேலும் உணவிற்கே கூட கஷ்டப்பட வேண்டியிருந்தது.
மார்ச் மாதத்தில் அரசாங்க அனுமதியுடன் டெல்லியில் ஒரு பெரிய சர்வதேச மாநாட்டை நடத்திய முஸ்லீம் பிரிவான தப்லிகி ஜமாஅத்தின் உறுப்பினர்கள் மீது கொரோனாவின் நெருக்கடிக்கான பொறுப்பை முழுக்க முழுக்க மாற்றுவதன்மூலம், மக்கள்மீது தான் ஏற்படுத்திய துன்பங்களுக்கான பொறுப்பைத் தவிர்ப்பதில் சங்க பரிவார் வெற்றிபெற்றது. தப்லீகி உறுப்பினர்களுக்கு எதிராகவும், அனைத்து முஸ்லிம்களுக்கும் எதிராகவும் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஊடகங்களின் அனைத்து பிரிவுகளின் வாயிலாகவும் பயங்கரமான, மாபெரும் பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. ‘ஜமாஅத்திகள்’ டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுடன் தவறாக நடந்து கொண்டார்கள் என்ற பிரச்சாரம், மருத்துவமனைகளில் பிரியாணிதான் வேண்டும் என்று கேட்டார்கள் என்ற பிரச்சாரம், வேண்டுமென்றே காணாமல் தலைமறைவாகி கொரோனாவை வேண்டுமென்றே பரப்ப சதிசெய்துள்ளார்கள் என்பன போன்ற பிரச்சாரங்களால் வெறுப்பின் சூழல் வெறித்தனமாக உருவாக்கப்பட்டது. முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். வேட்டையாடப்பட்டனர் மற்றும் சிறையில் அடைக்கப்பட்டனர் மற்றும் முஸ்லீம் விற்பனையாளர்கள் தாக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டனர்.
இந்தப் பிரச்சாரம் முஸ்லிம்களின் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டது மற்றும் அநீதியை ஏற்படுத்தியது என்பது மட்டுமல்ல. கூடுதலாக, துன்பப்படும் இலட்சக்கணக்கான குடிமக்களின் அவலநிலையை புறக்கணிக்க அரசாங்கத்திற்கு உதவியது. மக்களின் மேம்பட்ட மற்றும் விரிவாக்கப்பட்ட சுகாதார சேவைகளுக்கான தேவையையும், பணச் சலுகைகள் மற்றும் உணவுப் பொருட்களின் வடிவத்தில் நிவாரணம் பெறுவதற்கான உரிமையையும் புறக்கணிக்க உதவியது. வேலையில்லா காலத்திற்கான நிவாரணங்களை வழங்குவதிலிருந்தும், ஊரக வேலை உறுதி திட்டம் போன்ற திட்டங்களை விரிவாக்கும் அவசியத்தை தொடர்ந்து புறக்கணிக்க உதவியது. அரசாங்கத்தின் இயலாமை, நேர்மையின்மை மற்றும் மருத்துவத்தை தனியார்மயப்படுத்துவதற்கான அதன் முக்கியத்துவம் போன்ற அனைத்தும் அது உருவாக்கிய வகுப்புவாத வெறுப்பின் மூடுபனிக்கு பின்னால் மறைந்திருந்தது.
ஊரடங்கு நீக்கப்பட்டவுடன், பாதுகாப்பற்ற முதல் கொரோனா அலையில் இருந்து வெளியில் வந்துவிட்ட தைரியத்தில், பாஜக ஆட்சியில் உள்ள மாநில அரசாங்கங்களும் மத்திய அரசாங்கமும் மிகக் கடுமையான தியாகங்கள் நிறைந்த போராட்டங்களின் மூலம் போராடிப் பெற்ற தொழிலாளி வர்க்கத்தின் அனைத்து உரிமைகளையும் தொடர்ச்சியாக பல சட்டங்களை இயற்றுவதன் மூலம் பறித்தன. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், மத்திய அரசாங்கம் ஜனநாயகமற்ற தன்மையுடன், நவம்பர் 2020ல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராடிய பிறகும், மக்கள் விரோத, விவசாயிகள் விரோத மூன்று வேளாண் சட்டங்களையும் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டங்கள் கார்ப்பரேட்டுகளின் லாபத்திற்காக, குறிப்பாக அதானி மற்றும் அம்பானிக்கு உதவுவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது என்பது தற்போது ஊரறிந்த இரகசியம் ஆகிப் போயுள்ளது.
சங் பரிவாரத்தின் வகுப்புவாத அணிதிரட்டல் அரசியலின் காரணமாக அவர்களின் வாழ்க்கையில் பேரழிவினை உண்டு பண்ணியது என்ற கசப்பான பாடத்தை தங்கள் அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டதன்மூலம் விவசாயிகளின் இயக்கம் இன்று பெரிதும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
2012ல் கிராமப்புற மேற்கு உத்திரப் பிரதேசத்தில் தூண்டப்பட்ட இந்து-முஸ்லீம் கலவரங்கள், நியாயமான விலைகளுக்கான விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டத்தினை அன்றிலிருந்து நடைபெற விடாமல் செய்வதை உறுதிசெய்தது. 2020ல் விவசாயிகளின் தர்ணாக்கள் தொடங்கியபோது, சீக்கிய விவசாயிகளை ‘காலிஸ்தானி பயங்கரவாதிகள்’ என்று முன்னிறுத்த பாஜக முயன்றது. 2021 ஜனவரி 26-க்குப் பிறகு, ஒரு பாஜக எம்எல்ஏவும் பாஜக குண்டர்களும் தர்ணா நடைபெற்ற இடங்களை தாக்க முயற்சித்தனர். அப்போது வெளிப்படையாக 1984 மீண்டும் வருகிறது என்று (சீக்கியர்களுக்கு எதிராக அந்த ஆண்டு நடந்த தாக்குதல்களை நினைவுபடுத்தும் விதமாக) பேசினார்கள். விவசாயிகள் பாறைபோன்று ஒற்றுமையாக நின்றனர். மேற்கு உத்திரப் பிரதேச கிசான் தலைவர்கள் வகுப்புவாத வெறுப்பரசியலுக்கு ஆளாகிய தங்களது முந்தைய தவறை வெளிப்படையாக ஏற்றுக் கொண்டு, இனிமேல் முஸ்லிம் விவசாயிகள் போராட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்று பகிரங்கமாக அறிவித்தனர். மேலும் சீக்கிய மற்றும் சீக்கியரல்லாத விவசாயிகளின் ஒற்றுமை மாறாமல் இருக்கும் என்று அறிவித்தனர்.
கடந்த ஆண்டு, பாஜக ஆட்சி செய்யும் அனைத்து மாநில அரசுகளும் மதமாற்றத்திற்கு எதிராகவும், மதம் விட்டு மதம் நடக்கும் திருமணங்களுக்கு எதிராகவும் கடுமையான சட்டங்களை இயற்றின. இதன் விளைவாக, பல இஸ்லாமிய ஆண்களும் அவர்களது குடும்பங்களும் வன்முறையையும் அநீதியையும் சந்திக்க வேண்டி வந்தது. முஸ்லிம் அல்லாத பெண்கள் பலர் வன்முறைக்கும், அவமானத்திற்கும் சித்திரவதைக்கும் ஆளாகினர். இந்த சட்டங்கள் எல்லாம், அரசியலமைப்பின் மூலமாக உத்திரவாதப்படுத்தியுள்ள அடிப்படை உரிமைகளுக்கும், சுதந்திர உணர்விற்கும், பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்ற உரிமைக்கும் எதிராக வரம்பு தாண்டியவைகளாக உள்ளன என்பது மறைக்கப்படுகிறது. இவையெல்லாம் இந்திய குடிமக்களால் மிகவும் பாடுபட்டு வென்ற உரிமைகள். அவை இன்று தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றன.
தேர்தலில் வெற்றிபெற்றால் கேரளாவில் இதேபோன்ற சட்டங்களை அறிமுகப்படுத்துவதாக பாஜக அளித்த வாக்குறுதி மாநில மக்களால் நிராகரிக்கப்பட்டது என்பது மட்டுமல்லாமல், உண்மையில் தற்போது வென்ற கூட்டணியின் அங்கமாக இருந்த, ‘லவ் ஜிகாத்துக்கு’ எதிராக பேசிய ஒரு வேட்பாளர் தேர்தலில் தோல்வியடைந்தார் என்பதும் மிகவும் மனம்கவர்ந்த விஷயங்களாகும். அவரது கருத்துக்களை உடனடியாக சிபிஐ (எம்) கண்டனம் செய்தது, மேலும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டியிருந்தது, ஆனால் இது அவருக்கு அந்த இடத்தில் வெற்றி பெறுவதற்கு உதவவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
இரண்டாவது கொரோனா அலையை பரிதாபமாக கையாண்டதற்காக விமர்சனங்களையும் எதிர்ப்பையும் எதிர்கொள்ளத் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் பாஜக இரண்டு பெரிய சவால்களை எதிர்கொள்கிறது. முக்கியமான மாநிலமான உத்திரப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளன. விவசாயிகள் போராட்டம் பலவீனமடைவதற்கான அறிகுறிகளும் இதுவரை தெரியவில்லை. இதன்விளைவாக, பாஜக தீய, கொடூரமான, வகுப்புவாத அணிதிரட்டலை நோக்கி புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன் திரும்பியுள்ளது.
விவசாயிகள் இயக்கத்தின் வலிமையான மையங்களில் ஒன்றான ஹரியானா மாநிலத்தில் மேவாட் மாவட்டத்தில் மே30 அன்று பாஜக தலைவர்கள் “இந்து மகா பஞ்சாயத்து” ஒன்றை ஏற்பாடு செய்தனர். மேவாதி மொழி பேசும் ஒரு முஸ்லீம் இளைஞரை யாரென்று அறியப்பட்ட சமூகவிரோதிகள் கொலைசெய்த பின்னணியில் இந்த மகா பஞ்சாயத்து நடத்தப்பட்டுள்ளது. மகா பஞ்சாயத்தில் முஸ்லிம்கள் கொல்லப்படுவது நியாயமானது என்றும், கொலைக்காக கைதுசெய்யப்பட்டவர்களை நியாயப்படுத்தியும் பேசப்பட்டுள்ளது. மேலும் சட்டத்திற்குப் புறம்பாக மோசமான வெறுப்பினையூட்டும் தீப்பற்றும் உரைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்த கூட்டத்தில் பங்கேற்க குறிப்பிட்ட விவசாய சமூகங்கள் ஊக்குவிக்கப்பட்டுள்ளன. இயல்பாகவே, இது வெளிப்படையான வகுப்புவாத அணிதிரட்டல் என்பதோடு, விவசாய சமூகத்திற்குள் தவறான நிலைப்பாடுகளை உருவாக்குவதாகவும் இது உள்ளது.
பாஜகவை கடுமையாகவும் உறுதியாகவும் எதிர்க்கக் கூடிய விவசாயப் பிரிவினர் மதத்தின் பெயரால் தூண்டப்பட்டு அதன் ஆதரவில் கிளர்ந்தெழுச் செய்வதற்கு தூண்டப்பட்டனர். ஜூன் 20 அன்று, AIKS, CITU உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் இடதுசாரி அமைப்புகள், அதே மாவட்டத்தில் ஒரு “ஒற்றுமை மாநாட்டினை” ஏற்பாடு செய்திருந்தன. அந்த மாநாட்டை நடத்துவதிலும், கிராமவாசிகள் அதில் கலந்து கொள்வதைத் தடுப்பதிலும் இடையூறாக அரசாங்கத்தின் முயற்சிகள் பல இருந்தபோதிலும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளன. விவசாயிகள் இயக்கத்தின் பல தலைவர்களும் மகா பஞ்சாயத்தைக் கண்டித்துள்ளனர்.
உத்திரப் பிரதேசத்தில், வகுப்புவாத பதட்டத்தை அதிகரிப்பதற்கு ஆளும் பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்களால் திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு மசூதிகள் இடிக்கப்பட்டு, அரசாங்கம் கண்டுபிடித்ததாகக் கூறும் ‘மதமாற்ற பெரும் அமளி’யைச் சுற்றி (உமர் கவுதம் மற்றும் அவரது கூட்டாளியை “குறைந்தது 1000 பேரை இஸ்லாமியத்திற்கு கட்டாயமாக மாற்றியது” என்ற குற்றச்சாட்டில் கைது செய்த நிகழ்வு) வெறித்தனத்தை உருவாக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வரவிருக்கும் மாதங்களில் வகுப்புவாத பிளவுகளை தீவிரப்படுத்த பாஜக துணிச்சலான பல நகர்வுகளை எடுக்கும். இரண்டாவது கொரோனா அலையின்போது பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கானவர்களின் உதவியற்ற நிலை மற்றும் பெரும் வேதனையின் நினைவுகளை அழிக்க ஒரேவழி இதுதான் என்பதை அவர்கள் அறிவார்கள். வளர்ந்து வரும் வேலையின்மை, பசி மற்றும் வறுமை ஆகியவற்றிற்கு பொறுப்பேற்கவேண்டிய அரசாங்கத்தை தண்டிக்கும் விதமாக – மக்கள் ஒன்றிணைவதைத் தடுக்கக்கூடிய ஒரேவழி இதுதான் என்பதையும் அவர்கள் அறிவார்கள்.
மனுவாத ஆதரவும், கார்ப்பரேட் சார்பும் கொண்டிருக்கும் பாஜகவிற்கும், சங்க பரிவாரத்திற்கும் மக்களுடைய ஆதரவு தேவைப்படுகிறது. எனவே, ஒருபுறம் வகுப்புவாத அடிப்படையிலான திரட்டல், சிறுபான்மையினர் மீதான கொடூர வன்முறைகள் மற்றும் அநீதிகளை நிகழ்த்திக்கொண்டே மறுபுறம் பொய்களையும், திசைதிருப்பல் ஏற்பாடுகளையும் கொண்ட ஒரு ஏற்பாட்டைச் செய்வதன் மூலம், தனது சதி வேலைகளால் பாதிக்கப்படும் மக்கள் அதனை உணராத வகையில் முன்னெடுக்கிறது. வகுப்புவாத அமைப்புகள் முன்னெடுக்கின்றவெறுப்புக்கும், வெறிச் செயல்களுக்கும் பின்னணியாக உள்ள திட்டங்களையும், அதன் வழியாக வர்க்க, சாதி அடிப்படையிலான சுரண்டல் நடைமுறைகள் வேகப்படுத்தப்படுவதையும் புரிந்துகொள்வது அவசியம். மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் இயக்கங்களுடைய வெற்றிக்கு இது மிகவும் அவசியமாகும்.
தமிழில்: ஆர். எஸ். செண்பகம்
Leave a Reply