(2017 அக்டோபர் 14-16 தேதிகளில் நடைபெற்ற கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த ஆவணம் இன்றைய தருணத்தில் மிகுந்த கவனம் பெறத்தக்க ஒன்றாக அமைகிறது. எனவே அதன் முக்கியத்துவம் கருதி இதனை தொடராக வெளியிட முடிவு செய்துள்ளோம். – ஆசிரியர் குழு)
மனித இனம் தனது சமூக வாழ்வின் அனைத்து வெளிப்பாடுகளையும் உள்ளடக்கி வெளிப்படுத்துகின்ற ஒரு களமாக கலாச்சாரம் விளங்குகிறது. இசை, நடனம், ஓவியம், சிற்பம், இலக்கியம் போன்ற பல்வேறு வடிவங்களின் வழியாக கலாபூர்வமாக வெளிப்படுத்தும் ஒன்றாக மட்டுமே அது இருப்பதில்லை. இத்தகைய கலாபூர்வமான வெளிப்பாடுகளோடு கூடவே நடத்தை, கருத்து வெளியீடு, அங்க அசைவுகள் போன்ற முழுமையான வாழ்க்கையை வெளிப்படுத்துவதாகவும் கலாச்சாரம் விளங்குகிறது. எனவே, கலாச்சார அரங்கில் நமது தலையீடுகள் மனித விடுதலைக்கான போரில் வெற்றி பெறுவதையும், மனிதர்களால் மனிதர்கள் சுரண்டப்படுவதை முடிவுக்குக் கொண்டு வருவதையும் நோக்கமாகக் கொண்டு எல்லா நேரங்களிலும் கருத்துப் போராட்டத்தில் நாம் இணைவதையே குறிப்பிடுகிறது.
- சர்வதேச அளவிலும் சரி, உள்நாட்டு அளவிலும் சரி, தற்போதைய வர்க்க சக்திகளின் பலாபலன் வலதுசாரி அரசியலுக்குச் சாதகமானதாகவே நகர்ந்துள்ளது. தங்களது விடுதலைக்காகப் போராடுகின்ற மக்கள், இடதுசாரி அரசியல் மற்றும் அனைத்து வடிவங்களிலும் முற்போக்கான, ஜனநாயகரீதியான, மதசார்பற்ற சக்திகள் ஆகியோருக்கு எதிராக மிகக் கடுமையான தத்துவார்த்த தாக்குதலையும் அது கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
1.3 சர்வதேச அளவில், உலக முதலாளித்துவத்தின் தற்போதைய தொடரும் நெருக்கடி, புதிய தாராளவாதத்தின் செல்லுபடியாகும் வெற்றியை முற்றிலும் மறுதலிக்கிறது. இது தீவிரமான முதலாளித்துவ சுரண்டலுக்கான வேறொரு பெயரைத் தவிர வேறில்லை. எனினும், உலகளாவிய முதலாளித்துவம், தனது அதிகபட்ச இலாபத்தைப் பாதுகாப்பதற்காகவே, இந்தப் பாதையைத் தொடர்கிறது. இரக்கமற்ற வகையிலும், கண்மூடித்தனமாகவும் மனித மற்றும் இயற்கை வளங்களை சுரண்டுவதன் மூலம் கொடூரமான ‘புராதன (மூலதன) சேகரிப்பு’ என்ற செயல்முறையை அது தீவிரப்படுத்துகிறது. இது புதிய தாராளவாதத்திற்கு எதிராக வளர்ந்து வருகின்ற, முதலாளித்துவ அமைப்பிற்கே சவால் விடுமளவிற்கு திறமை வாய்ந்த, மக்களின் அதிருப்தியை சீர்குலைக்க வடிவமைக்கப்பட்ட ஒரு கருத்தியல்-கலாச்சார கட்டமைப்பை நிறுவுவதன் அடிப்படையில் ஒரு வலதுசாரி அரசியலை நோக்கி மாறுவதை அவசியமாக்குகிறது. இவ்வாறான கட்டமைப்பிற்கு இனம், மதம், சாதி, நிறம் அல்லது மக்களைப் பிளவுபடுத்தும் வேறு எந்தவொரு அம்சத்தின் அடிப்படையிலும் வெறுப்பினை பரப்ப வேண்டியுள்ளது. இதன் விளைவாக ஏற்படும் சகிப்பின்மை, வெறுப்பு, இனவெறி போன்றவை கலாச்சாரத்தில் பிரதிபலிக்கின்றன. இது வலதுசாரி அரசியலின் ‘கலாச்சாரத்தை’ தோற்கடிக்க நாம் அணி சேர வேண்டிய கலாச்சார முன்னணியின் கருத்துப் போர் ஆகும்.
- தற்போதைய ஆர் எஸ் எஸ்/பாஜக தலைமையின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய அரசு இந்திய அரசியலில் தெள்ளத்தெளிவானதொரு வலதுசாரி மாற்றத்தை நிறுவனமயமாக்கி வருகிறது. இவ்வகையில் புதிய தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளும் ஊக்கம்பெற்றதொரு வகுப்புவாத ஒரு துருவ முனைப்பும் ஒன்றிணைந்து முழுமையானதொரு தாக்குதலை மேற்கொள்கின்றன. கருத்தியல்ரீதியாக, இந்தியாவின் செறிவுமிக்க, ஒத்திசைவுமிக்க நாகரீக வரலாற்றின் இடத்தில் இந்துப் புராணங்கள், இந்து தத்துவத்துடன் கூடிய இந்திய தத்துவார்த்த பாரம்பரியங்களை நிலைநிறுத்துவதே இதன் நோக்கமாகும். நாட்டின் விடுதலைக்காக நாட்டு மக்கள் நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தின் மூலமாக உருவான நமது அரசியல் அமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள நவீன இந்தியாவின் அடித்தளங்களை இது முற்றிலும் மறுதலிப்பதாக உள்ளது. புரட்சிகரமானதொரு மாற்றம் என்ற தங்களது இலக்கை வென்றடைவதை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் இந்தியாவின் வர்க்கப் போராட்டங்களின் அடித்தளமாக விளங்கும் நவீன இந்திய குடியரசினை இத்தகைய செயல்பாடுகள் நிலைகுலையச் செய்ய முயற்சிக்கின்றன.
இவ்வகையில் கலாச்சார அரங்கில் நடத்தப்படும் போராட்டங்கள் நமது காலத்தின் ஸ்தூலமான நிலைமைகளில் இந்தியாவில் நடத்தப்படும் வர்க்கப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதில் உள்ளடங்கியதொரு பகுதியாகவே அமைகின்றன. நமது இந்த ஆய்வின் இறுதியில் நமக்குத் தேவைப்படுவதெல்லாம் சமூக மாற்றத்திற்கான புரட்சிகர ஆயுதத்தை மேலும் கூர்மைப்படுத்துவதும், வலுப்படுத்துவதுமே ஆகும். ”கொள்கையின் கடமையும், அறிவியலின் நோக்கமும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் உண்மையான போராட்டத்திற்குச் செய்யப்படும் ஓர் உதவி என்று இங்கு வரையறுக்கப்படுவது உண்மையல்லவா?” என்று லெனின் கேட்டார். (லெனின் தொகுப்பு நூல்கள், தொகுதி 1, பக். 327-8) ‘கொள்கை’, ‘அறிவியல்’ ஆகிய இரண்டுமே கலாச்சாரத்தைப் புரிந்து கொள்வதன் ஒரு பகுதியாகவே அமைகின்றன.
1.5 மார்க்ஸ்-எங்கெல்ஸ் கூறினர்: “ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களே ஆட்சி செய்யும் கருத்துக்களாக இருக்கின்றன. அதாவது சமூகத்தின் பொருளாயத சக்தியை ஆளுகின்ற வர்க்கமே அதே நேரத்தில் அறிவுபூர்வமாக ஆளும் சக்தியாகவும் விளங்குகிறது. பொருள் உற்பத்திக்கான கருவிகளை தன் வசம் வைத்திருக்கும் வர்க்கமே மனதின் மூலமாக உற்பத்தி செய்வதையும் கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் மனதின் மூலமாக உற்பத்தி செய்வதற்கான வழிவகை இல்லாதவர்களின் கருத்துக்களையும் அது தனது ஆளுகைக்குள் எடுத்துக் கொள்கிறது. ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றவற்றோடு கூடவே உணர்வையும், அதன் வழியாக சிந்தனையையும் கொண்டவர்களாக இருக்கின்றனர். எனவே ஒரு வர்க்கமாக அவர்கள் ஆட்சி செய்வதோடு, வரலாற்று ரீதியான ஒரு காலகட்டத்தின் பரப்பையும் வீச்சையும் அவர்களே தீர்மானிக்கின்றனர். இதை அவர்கள் முழுமையான வகையில் செய்கின்றனர் என்பதும் கூட தெள்ளத் தெளிவானது. எனவே மற்ற விஷயங்களோடு கூடவே அவர்கள் சிந்தனையாளர்களாக, கருத்துக்களின் உற்பத்தியாளர்களாக ஆட்சி செய்வதோடு, தங்களது காலத்திற்கான கருத்துக்களை உற்பத்தி செய்து பரப்புவதையும் ஒழுங்குபடுத்துகின்றனர். இவ்வகையில் அவர்களது கருத்துக்களே அந்த காலகட்டத்தினுடைய ஆளும் கருத்துக்களாக இருக்கின்றன. (ஜெர்மானிய தத்துவம், மாஸ்கோ, 1976, பக். 67. இங்கு வலியுறுத்தப்படும் கருத்து தனித்துக் காண்பிக்கப்பட்டுள்ளது)
1.6 ஆளும் வர்க்கங்களினது கருத்துக்களின் இந்த மேலாதிக்கமானது அரசினால் மட்டுமே அமலாக்கப்படுவதில்லை என்பதையும் அண்டோனியோ கிராம்சி விளக்குகிறார். இந்த வகையில் அரசு என்பது கோட்டைக்கு முன்னால் உள்ள ஓர் ’அகழி’ மட்டுமே. அதற்குப் பின்னால் ‘வலுவான கோட்டையும் கொத்தளங்களும்’ உள்ளன. அதாவது ஆளும் வர்க்கங்களின் மேலாதிக்கத்திற்கு உதவுகின்ற கலாச்சார நிறுவனங்களின் வலைப்பின்னலும் மதிப்பீடுகளுமே இந்தக் கோட்டையும் கொத்தளங்களும் ஆகும்.
1.7 சமூக உறவுகளின் மிகச் சிக்கலான வலைப்பின்னல், அதனைத் தொடர்ந்த சமூக கட்டமைப்புகள் ஆகியவற்றின் மூலம் இந்த மேலாதிக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களின் மேலாதிக்கத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் மதிப்பீடுகளையும் கருத்தாக்கங்களையும் வடிவமைப்பதில் குடும்பம், இனக்குழு, சாதி, மதம், அவற்றின் வழிபாட்டுத் தலங்கள் ஆகியவை தொடர்ந்து பங்களித்து வருகின்றன. இத்தகையதொரு செயல்முறையில் அவர்கள் ‘(அனைவருக்கும்) பொதுவான ஒரு கலாச்சாரம்’ என்ற மாயையை உருவாக்குகின்றனர். இந்தப் ‘பொதுக் கலாச்சாரம்’ என்பது ’இயல்பான அறிவு’ என்ற பெயரில் வர்க்க மேலாதிக்கம் பெற்ற மதிப்பீடுகளை குறிப்பிட்ட வகையில் பரவச் செய்வது என்பதைத் தவிர வேறில்லை.
1.8 கலாச்சார அரங்கில் நமது தலையீடு என்பது புரட்சிகர வர்க்கங்களால் தானாகவே ஊக்குவிக்க முடியாத, அந்தக் காலப்பகுதியின் கலாச்சாரம், மொழி, உணர்வுகள், அனுபவங்கள் ஆகியவற்றின் மூலம் புரட்சிகர இயக்கத்திற்கு ஊக்கமளிப்பதாகவே இருக்க வேண்டும். உற்பத்தி உறவுகள் மட்டுமின்றி, அரசு (அரசியல் சமூகம்), மக்கள் சமூகம் ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு ‘புதியதொரு கலாச்சாரத்தை’ உருவாக்குவது புரட்சிகரமான மாற்றத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு அவசியமாகும். சமூகத்தின் மீதான மேலாதிக்கத்திற்கு எதிரான இத்தகைய உணர்வை உருவாக்குவதும் அவசியமாகும். கலாச்சார அரங்கில் உள்ள நமது செயல்பாட்டாளர்கள் நடைமுறை வாழ்க்கையில் தீவிரமாகப் பங்கேற்கும் அதே நேரத்தில் தற்போது நிலவும் சமூக உறவுகளை பலவீனப்படுத்த இத்தகைய மாற்று மேலாதிக்கத்தை உருவாக்க வேண்டும். இவையே கருத்துக்களை உருவாக்குவதற்கான அத்தியாவசிய அம்சங்களாக அமைகின்றன. மார்க்ஸ் ஒரு முறை கூறியது போல “ மக்களின் மனதைக் கவ்விப் பிடித்தவுடனேயே அவை ஒரு பொருளாயத சக்தியாக மாறிவிடுகின்றன.” (கார்ல் மார்க்ஸ்- ப்ரெடரிக் எங்கெல்ஸ், தொகுப்பு நூல்கள், தொகுதி 3, பக். 182)
1.9 ஆளும் வர்க்கங்களின் ஒட்டுமொத்த மேலாதிக்கத்தையும் குறிக்கும் அறிகுறி என்ற வகையில் கலாச்சாரமானது இயல்பாகவே அறிவுஜீவிகளின் வளர்ச்சிக்கான களமாக அமைகிறது. இவ்வகையில் அவர்கள் உருவாக்கும் இந்த மேலாதிக்கத்திற்கான மாற்று என்பது மனித இருப்பு, மனித சாரம் ஆகியவற்றை முழுமையாக உள்வாங்கிய ஒன்றாகவும் அமைகிறது.
உணர்ச்சிமிக்க ஒப்புதல், உணர்வுகள், நடத்தை, இன்பம், எழில்மிகு உருவாக்கங்களின் பல்வேறு தோற்றங்கள் ஆகியவற்றின் மூலம் இயற்கையோடும், சக மனிதர்களோடுமான ஊடாடலின் விளைவாக ஏற்படும் மனிதர்களின் மனநிறைவு பல்வேறு வகையில் வெளிப்படுகின்றது. ‘மாற்று கலாச்சாரத்தின்’ உள்ளார்ந்த அம்சங்களை முன்வைப்பதன் மூலம் ஆளும் வர்க்கத்தின் மேலாதிக்கத்தால் உருவாக்கப்பட்ட அறிவார்ந்த ‘நோக்கங்களை’ மறுப்பதை உள்ளடக்கியதாகவும் இந்த மனநிறைவின் பல்வேறு வகைகள் அமைகின்றன. இதன் மூலம் மேலாதிக்கத்திற்கான மாற்று கட்டமைப்புகளை கலாச்சார செயல்பாட்டாளர்கள் உருவாக்குகின்றனர்.
இத்தகைய ஒப்புதல்களின் முழுமையான தன்மை, அதாவது மனிதர்களின் மன நிறைவு குறித்த பல்வேறு வகைகளின் முழுமையான தன்மை, படைப்புச் செயலின் அனைத்து வடிவங்களிலும் வெளிப்படுகிறது. அதன் மூலமாக, புரட்சிகர இயக்கத்தின் ‘மாற்று கலாச்சாரம்’ என்று நாம் அழைக்கக் கூடிய ஒன்றை வடிவமைக்கிறது.
1.10 இத்தகைய கலாச்சாரமானது எப்போதும் இருப்பின் பொருளாயத நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கும். உற்பத்தி, நுகர்வு ஆகியவை பற்றி எழுதுகையில் மார்க்ஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ”உற்பத்தியானது தேவைக்கு உகந்த வகையில் ஒரு பொருளை வழங்குவது மட்டுமின்றி, பொருளுக்கான தேவையையும் வழங்குகிறது. நுகர்வானது அதன் இயற்கையான செப்பமிடாத நிலை மற்றும் உடனடித் தன்மை ஆகிய தொடக்க நிலையில் இருந்து வெளிப்படும்போது – அது இந்த நிலையிலேயே நீடிக்குமானால், உற்பத்தியே அசைவற்றுப் போகுமானால் இத்தகைய நிலை ஏற்படும் – அந்தப் பொருளினால் உந்தப்பட்டதாக மாறிவிடுகிறது. நுகர்வானது ஒரு பொருளுக்கான தேவையை உணர்வதென்ற வகையில் அதன் உள்ளுணர்வால் உருவாக்கப்படுவதாகும். மற்றெந்தப் பொருளைப் போலவே கலையின் நோக்கமும் கலையை உணர்கின்ற, அதன் அழகை அனுபவிக்கின்ற மக்களை உருவாக்குவதாகும். இவ்வாறு உற்பத்தி என்பது மக்களுக்கான ஒரு பொருளை உருவாக்குவது மட்டுமல்ல; ஒரு பொருளுக்கான மக்களை உருவாக்கவும் செய்கிறது. இவ்வகையில் உற்பத்தியானது (1) அதற்கான பொருளை உருவாக்குவதன் மூலமும் (2) நுகர்வுத் தன்மையை தீர்மானிப்பதன் மூலமும் (3) நுகர்வோர் அதன் தேவையை உணர்ந்த வகையில் தொடக்கத்தில் நோக்கங்களாக முன்வைக்கப்பட்டு பின்பு பொருட்களாக உருவாக்குவதன் மூலமும் நுகர்வை உருவாக்குகிறது. இவ்வாறு அது நுகர்விற்கான பொருளையும், நுகர்வுத்தன்மையையும், நுகர்விற்கான நோக்கத்தையும் உருவாக்குகிறது.” (க்ரண்ட்ரைஸ், பக். 92) பொருள் உற்பத்தியைப் போன்றே அறிவுசார் உற்பத்திக்கும் இது பொருந்துவதாகும்.
1.11 ஆளும் வர்க்கக் கலாச்சார மேலாதிக்கத் தளத்தில் உருவாக்கப்படும் மிகப்பெரும் விஷயங்களிடையே, வெளிப்படையாக தோற்றமளிக்காவிடினும், இந்திய அரசியலில் இந்த வலதுசாரி மாற்றத்திற்கான, ‘இந்துத்துவா’ கலாச்சார அம்சங்களைக் கொண்ட பொருட்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இன்றைய இந்தியப் பின்னணியில் இது நம் கவனத்திற்கு உரியதாகும்.
1.12 நவீனமும் நவீனத் தன்மையும்: சமத்துவ உணர்வு, மற்றவர்கள் மீதான கரிசனம் ஆகியவை நவீன சமூகத்தில் கலாச்சாரத்தினை வரையறுக்கும் ஒரு பண்பாகக் கருதப்படுகிறது. எனினும் ஒரு நவீன சமூகத்தில் உண்மையில் அனைவரும் சமமானவர்களாக இருப்பதில்லை. இருந்தபோதிலும், மக்களிடையே பல்வேறு வகையான வேற்றுமைகள் நிலவிய போதிலும், சமத்துவத்திற்கான ஓர் அடிக்கோடு இருக்க வேண்டும் என்று நவீன சமூகம் கோருகிறது. இதன் மூலம் மக்கள் கண்ணியத்தோடு வாழ முடியும் என்பதோடு, தங்களது இருப்பு நிலைகளை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளையும் உண்மையாகவே பயன்படுத்திக் கொள்ள முடியும். சமத்துவத்தின் இந்த அடித்தளத்தின்மீதுதான் இதர வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் சேர்த்துக் கொள்ளப்பட முடியும். எனினும் இத்தகைய அடிப்படையான சமத்துவத்திற்காக எவ்வித சமரசமும் செய்து கொள்ள முடியாது. ஏனெனில், நவீன சமூகங்களில் இதன் அடிப்படையிலேயே குடியுரிமை என்பது கோரப்படுகிறது. நிலப்பிரபுத்துவ அமைப்பில் அரசர்களும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்த மக்களும் இருந்தார்களே தவிர, குடிமக்கள் இருக்கவில்லை.
‘மேற்கத்திய மயமாக்கல்’ என்பதற்குப் பதிலாக, ‘மேற்கத்திய நச்சுமயமாக்கல்’ என்றதொரு சொற்றொடரை ஈரானைச் சேர்ந்த ஓர் அறிவுஜீவி உருவாக்கினார். புகழ்பெற்ற நிறுவனங்கள் தயாரிக்கும் ஆடம்பர ஆடை, மிக முன்னேறிய கருவிகள் ஆகியவற்றை பணக்காரர்கள் மற்றவர்களுக்கு முன்பாக காட்டிக் கொண்டிருப்பதைக் குறிக்கும் வகையிலேயே அவர் அதைக் குறிப்பிட்டார். இந்தியாவைப் பொறுத்த வரையில் இதை நவீனம், நவீனத்தன்மை என்பதாக நாம் எடுத்துக் கொள்ளலாம். சமீப காலத்தில் உருவாக்கப்பட்ட பொருட்கள், கருவிகள் ஆகியவற்றை நுகர்வோருக்காக காட்சிப்படுத்துவதில் அதீத ஆர்வம் காட்டுவது நவீனத்திற்கு இணையானதாகக் கருதப்படுகிறது. ஜி-20 நாடுகள் கூட்டத்தின் உயர்ந்த மேடைகளில் அமர்ந்து உலக வல்லரசு நாடுகளின் தலைவர்களின் தோள்களை உரசுவதே ‘பொருளாதாரத்தில் உயர்ந்து வரும் நாடு’ என்ற இந்தியாவின் முத்திரையாக இது மாறியுள்ளது. இந்திய மண்ணில் எப்போதுமே காலடி எடுத்து வைத்திராத வெளிநாடுவாழ் இந்தியர்கள் உள்ளிட்டு, நமது சமூகத்தின் மிக ‘நவீனமான’ பிரிவினர் எவ்வாறு தங்களது உட்பிரிவு சாதியிலேயே மணப்பெண்/ மணமகன் வேண்டும் என்று கோரி வருகிறார்கள் என்பதையும் திருமணம் தொடர்பான விளம்பரங்களை மேலோட்டமாகப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். இது நவீன நச்சுத் தன்மையின் கலாச்சாரமே தவிர நவீனம் அல்ல. வலதுசாரி அரசியலை நோக்கிய இந்த மாற்றத்தை இது மிக அழகாக மறைக்கிறது.
நவீனத்தை நோக்கிய இந்தியாவின் பயணமானது சாதி அடிப்படையிலான சமூக ஒடுக்குமுறை, ஆணாதிக்க சமூக அமைப்பு, வன்முறை கொண்டு சாதியை நிலைநிறுத்தும் காப் பஞ்சாயத்துகள், மதரீதியான சிறுபான்மையினரை சமமற்ற வகையில் நடத்துவது போன்ற கடந்தகால சமூக நிறுவனங்களின் கொடுமைகள் தொடர்ந்து நீடித்து நிற்கும் தன்மையாலேயே அவை தடுத்து நிறுத்தப்படுவதில்லை. நவீன தாராளவாத நுகர்வுக் கலாச்சாரம், பெண்களை மனிதர்களாக மதிக்காமல் அவர்களை காட்சிப் பொருளாக, அடக்கி ஆளப்பட வேண்டியவர்களாக, சுரண்டப்பட வேண்டியவர்களாக நடத்துவது ஆகியவற்றின் மூலம் இவை நிலைநிறுத்தப்படுவதோடு, மூடி மறைக்கவும் படுகிறது. நமது தேர்தல் அமைப்பில் உள்ளார்ந்த வகையில் பொதிந்து கிடக்கும் பரவலான சந்தர்ப்பவாதத்தின் மூலமாகவும் இது மேலும் வலுப்படுத்தப்படுகிறது. தேர்தல் வெற்றிகளுக்காக நமது சமூக அமைப்பில் நிலவும் இத்தகைய அநீதியான, சமத்துவமற்ற அம்சங்கள் அனைத்தும் புத்துயிர் ஊட்டப்படுகின்றன. இவ்வாறு நவீனமான, நாகரீகமான ஆடைகளை அணிந்தபடி, மிக நவீனமான கருவிகளை கையில் ஏந்தியபடி நம்மிடையே உலாவரும் நபர்கள் நவீன ஜனநாயகத்திற்கு முற்றிலும் பொருத்தமற்றது என தூக்கியெறிய வேண்டிய இந்த நடைமுறைகள் அனைத்திலும் ஈடுபட்டு வருவது எவ்வகையிலும் முரண்பட்ட ஒன்றாகவே தோன்றுகிறது.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உறுதியளித்துள்ளபடி சாதி, மதம் அல்லது பாலினம் என்ற எவ்வித வேறுபாடுமின்றி, அனைத்துக் குடிமக்களுக்கும் சம உரிமை என்பதாகவே நவீனத்துவம் வரையறுக்கப்படுகிறது. இவ்வகையில் புரட்சிகர இயக்கத்தின் மேலாதிக்கத்திற்கான மாற்றை நிலைநிறுத்துவதற்குத் தவிர்க்கவியலாத ஒரு கலாச்சார கூறாகவும் அது அமைகிறது.
1.13 கலாச்சார தொழில்: இந்த நவீன தாராளவாத சீர்திருத்தங்கள் செல்வம் மற்றும் சொத்துக்களின் மிகப்பெரும் செறிவோடு கூடவே ஒரு கலாச்சார தொழிலின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கிறது. உலகளவில், தகவல், தகவல்தொடர்பு, பொழுதுபோக்கு ஆகிய பெருநிறுவனங்களின் இணைப்பானது ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றுக்கான பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் பெரும்பகுதியை கட்டுப்படுத்தி, உலகளாவிய தனித்ததொரு கலாச்சார சந்தையாக உலகத்தை மாற்றுவதற்கும் முயற்சிக்கிறது.
இத்தகையதொரு செயல்முறையை விரும்புகின்ற கலாச்சார மேலாதிக்கமானது மக்களின் ரசனையை ஒரே மாதிரியானதாக உருவாக்க வேண்டியதன் தேவையையும் வெளிப்படுத்துகிறது. இந்த ரசனையானது எந்த அளவிற்கு ஒரே மாதிரியானதாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு பெருமளவிலான மக்களுக்கான கலாச்சார பொருட்களை இயந்திரகதியாக மறு உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பங்களை வளர்த்தெடுப்பதும் எளிதாகிறது. மூன்றாம் உலக நாடுகள் பலவற்றிலும் கல்வியறிவின்மை பரவலாக இருந்தபோதிலும் வால்ட் டிஸ்னியின் கார்ட்டூன் சித்திரங்கள் குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமான ஒன்றாக இருக்கின்றன. (ஆப்ரிக்காவின் சஹாரா உட்புற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இதை உறுதி செய்துள்ளன) வர்க்க மேலாதிக்கம் என்ற கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது, நவீன தாராளவாதத்தின் கலாச்சாரமானது அன்றாட வாழ்க்கையின் உண்மையான நிலைமைகளில் இருந்து மக்களை பிரித்து வைக்க முயல்கிறது. கலாச்சாரமானது இங்கு அழகியலைக் கோருவதாக இல்லாமல், வறுமை, துயரம் ஆகிய பிரச்சனைகளில் இருந்து மக்களை திசைதிருப்புவதாக, மடைமாற்றுவதாகவே செயல்படுகிறது.
இதன் விளைவாக, தங்களது இந்த துன்பகரமான வாழ்க்கையை மாற்றியமைப்பதற்கான போராட்டத்தை மக்கள் மேற்கொள்வதற்கான உந்துதலை சீர்குலைக்கவே அது முயற்சிக்கிறது. மைக்கேல் பாரெண்டி கூறுகிறார்: “ நமது கலாச்சாரத்தின் பெரும்பகுதியானது ‘மக்கள் கலாச்சாரம்’, ‘பிரபலமான கலாச்சாரம்’ என்று மிகப் பொருத்தமாகவே இப்போது பெயரிடப்பட்டுள்ளது. மிகப்பெரும் நிறுவனங்களுக்குச் சொந்தமான, அவற்றால் நடத்தப்படுகின்ற ‘ஊடக கலாச்சார’த்தின் முக்கிய நோக்கம் என்பது செல்வத்தைப் பெருக்குவது, தங்களது உரிமையாளர்களை பாதுகாக்கும் வகையில் உலகத்தை நிலைநிறுத்துவது என்பதே ஆகும். இவர்களின் நோக்கம், பயன் மதிப்பு என்பதற்கு பதிலாக பரிமாற்ற மதிப்பாகவும், சமூக ரீதியான படைப்பூக்கம் என்பதற்கு பதிலாக சமூகக் கட்டுப்பாடு என்பதாகவே இருக்கிறது. வாழ்க்கையின் பெரும் யதார்த்தங்கள் குறித்து சிந்திப்பதில் இருந்து நம்மை திசைதிருப்பும் வகையிலேயே பெரும்பாலான வெகுஜன கலாச்சாரம் என்பது ஒழுங்கபடுத்தப்பட்டுள்ளது. உடனடி தேவையான, ஊட்டமளிக்கக் கூடிய விஷயங்களை ஒதுக்கித் தள்ளுவதாகவே பொழுதுபோக்கு கலாச்சாரத்தின் வீக்கமும் குப்பைகளும் உள்ளன. மக்களின் அடிமட்ட ரசனையை தொடர்ந்து தூண்டி விடுவதன் மூலம், பரபரப்பு மிக்க வெகுஜன கலாச்சாரமானது பொதுமக்களின் ரசனையை மேலும் கீழிறக்கி விடுகிறது. இதன் விளைவாக, மக்களின் ரசனையானது கலாச்சார ரீதியான குப்பைகள், பெரும் பரபரப்பு, அதிர்ச்சியூட்டும்படியான, மிக கவர்ச்சிகரமான, மிகுந்த வன்முறை நிரம்பிய, உடனடியாக உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய, பெரும்பாலும் மேம்போக்கான விஷயங்களையே முன்வைக்க விரும்புவதாகவும் மாறியுள்ளது.
”இத்தகைய விஷயங்கள்தான் பெரும்பாலான நேரங்களில் அதன் உண்மையான தத்துவார்த்த உள்ளடக்கமாக இருக்கின்றன. அதன் நோக்கம் அரசியல்நோக்கம் அற்றதாக இருந்தபோதிலும் கூட, பொழுதுபோக்கு கலாச்சாரமானது ( உண்மையில் அது பொழுதுபோக்குத் தொழிலே ஆகும்) அதன் தாக்கத்தில் அரசியல்தன்மை கொண்டதாகவும், கீழ்த்தரமான பாலியல் மதிப்பீடுகள், இனவெறி, நுகர்வுக் கலாச்சாரம், எதேச்சாதிகார உணர்வு கொண்ட, ராணுவ வெறிபிடித்த, ஏகாதிபத்தியத் தன்மை கொண்ட சித்திரங்களையும் மதிப்பீடுகளையுமே பிரச்சாரம் செய்கிறது.” ( மன்த்லி ரிவ்யூ, பிப்ரவரி 1999)
1.14 இவ்வகையில் நவீன தாராளவாதமும் வகுப்புவாதமும் உள்நாட்டளவில் பொது ரசனையை ஒரே மாதிரியாக மாற்ற முயல்கின்றன. கலாச்சார மேலாதிக்கத்தை வலுப்படுத்தவும், அதீதமான லாபத்தை ஈட்டவும் நவீன தாராளவாதம் செயல்படுகிறது. இதனோடு கூடவே, ஆர் எஸ் எஸ் ஸின் இலக்கான ‘இந்து ராஷ்ட்ரா’ என்ற மிக மோசமான, சகிப்புத்தன்மையற்றதொரு பாசிஸ அரசை நிறுவுவதற்கான பாதையை வகுப்புவாதம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ’ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே கலாச்சாரம்’ என்ற அதன் கோஷமானது இந்தியாவின் வளமான, செறிவான பன்முகக் கலாச்சாரத்தின் அடிப்படைகளையே மறுதலித்து, இத்தகைய ஒருமுகப்படுத்தலின் மூலமே உண்மையான அந்தஸ்தையும் பொருளையும் அடைய முடியும். மேலும் புதிய தாராளவாதம், வகுப்புவாதம் ஆகிய இரண்டுமே அன்றாடப் பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவும், அதிலும் முக்கியமாக, தற்போது நிலவுகின்ற சுரண்டல்மிக்க அமைப்பிற்கு எதிரான அவர்களது போராட்டத்தை பலவீனப்படுத்தவுமே முயல்கின்றன.
1.15 இவ்வகையில் தொழிலாளி வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களின் ‘மாற்று மேலாதிக்கத்தை’ நிறுவுவதற்கான போராட்டங்களுக்கு மக்கள் பிரச்சனைகளுக்கான கலாச்சார நிகழ்ச்சிநிரலை மீண்டும் கொண்டுவர வேண்டிய தேவை உள்ளது. இவற்றை நமது பார்வையிலிருந்து மறைத்து, அழிப்பதே புதிய தாராளவாதம் மற்றும் வகுப்புவாத கலாச்சாரத்தின் அடிப்படை இயல்பாக உள்ளது. இதுவே கலாச்சார அரங்கில் நமது கடமைகளின் அடிப்படையான நோக்கமாக அமையும்.
4.1. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கட்சி உறுப்பினர்கள் தீவிரமாகச் செயல்பட்டு வரும் கலாச்சாரக் குழுக்கள், அரங்கங்கள், மேடைகள், சங்கங்கள் ஆகியவை தங்களது செயல்பாடுகளில் மிக விரிவான அளவில் கலைஞர்களையும், கலாச்சார செயல்பாட்டாளர்களையும், அறிவுஜீவிகளையும் ஈடுபடுத்த வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளில் படைப்பூக்கமும், தனிச்சிறப்பான தன்மையும் ஈர்த்தெடுக்கப்பட வேண்டும். இதற்கான நமது அணுகுமுறை என்பது விரிவானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், பாரபட்சமற்றதாகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட, ஜனநாயக ரீதியான, முற்போக்கான, மதசார்பற்ற மதிப்பீடுகளின் மீது பற்றுறுதி கொண்டுள்ள கலைஞர்கள் அல்லது அறிவுஜீவிகளுக்கு கலாச்சார செயல்பாடுகளில் பங்கேற்க நமது மேடையில் விரிவான அளவில் இடம் தர வேண்டியதும் அவசியமாகும். நம்மோடு இணைந்து செயல்படும் கலாச்சார அமைப்புகளின் தலைமைப் பொறுப்புகளில் கட்சி சார்பற்ற கலைஞர்களை உணர்வுபூர்வமாக ஊக்கப்படுத்த வேண்டும்.
4.2. வெகுஜன, வர்க்க அமைப்புகள் ஜனநாயகபூர்வமாகவும், சுயேச்சையாகவும் செயல்படுவதன் முக்கியத்துவத்தை சால்கியா, கொல்கத்தா பிளீனங்கள் வலியுறுத்தி வந்துள்ளன. கலாச்சார அமைப்புகளின் விஷயத்தில் இந்த அம்சம் மேலும் முக்கியமான ஒன்றாக இருப்பதோடு, அவற்றுக்கு கணிசமான அளவிற்கு சுயாட்சி வழங்கப்பட வேண்டும். இந்தக் கலாச்சார அமைப்புகளை கட்சியோடு ஒட்டிக் கொண்டிருக்கும் உறுப்புகளாகப் பார்க்கலாகாது. கட்சி முழுமையும், அதைப் போன்றே அதன் வர்க்க, வெகுஜன அமைப்புகளும் சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் கலாச்சார ரீதியான தலையீட்டினை அங்கீகரிப்பதன் மூலமே, இந்த விஷயத்தில் சரியானதொரு அணுகுமுறையை உருவாக்க முடியும். கலாச்சார அமைப்புகளுக்கு உள்ளேயும் கூட சுதந்திரமான, விமர்சனபூர்வமான சிந்தனைக்கு ஊக்கம் தருவதை உறுதிப்படுத்த வேண்டும். இதை உறுதிப்படுத்துவதன் மூலம் மட்டுமே கலாச்சாரத் தளத்தில் இளமையான, புதுமையான தலைமையை நம்மால் வளர்த்தெடுக்க முடியும். அமைப்பின் அனைத்து மட்டங்களிலும் சிறுபான்மையினர் உள்ளிட்டு, தலித்கள், பழங்குடிகள் மற்றும் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள, நலிந்த குழுக்களையும் இனங்களையும் சேர்ந்த கலைஞர்கள், பெண்கள் ஆகியோர் தீவிரமாகச் செயல்படுவதற்கு ஊக்கம் அளிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு தலைமைப் பொறுப்புகளும் வழங்கப்பட வேண்டும்.
4.3. கலாச்சாரம் என்பது கலாச்சார அமைப்புகள் மட்டுமே செயல்படுகின்ற ஒரு களம் அல்ல. கட்சி உறுப்பினர்கள் வேலை செய்யும் வெகுஜன, வர்க்க அரங்கங்களும் கலாச்சார நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் விரிவான கலாச்சார சமூகத்தை ஈடுபடுத்துவது முக்கியம். எனினும், அவர்கள் எதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதிலும், நமது பிரச்சாரங்களில் அவர்களை கவர்ந்திழுக்க முயற்சிக்கும்போது அவர்கள் எந்த நடவடிக்கைகளில் சிறந்தவர்கள் என்பதை அளவிடுவதிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல், இந்த ஈடுபாடு தேர்தல் அரசியலுக்கு மட்டுமே ஆனதாகவும் மட்டுப்படுத்தப்படக்கூடாது. சாத்தியமான இடங்களில், வகுப்புவாத அல்லது சமூக விரோதக் குழுக்களால் ஆதிக்கம் செலுத்தப்படாத, தற்போது செயல்பட்டு வரும் கலாச்சார அமைப்புகளில் நமது தோழர்கள் நுழைந்து பணியாற்ற வேண்டும். இது அவர்களுக்கு ஒரு முற்போக்கான, மதச்சார்பற்ற, ஜனநாயக பூர்வமான திசைவழியை காட்ட முயற்சிப்பதாக அமையும்.
4.4. ஒரு கலைஞரின் அகநிலைப்பட்ட, தனிப்பட்ட பார்வைகள் குறித்த நமது எதிர்வினையை அந்தக் கலைஞரது படைப்பு குறித்த புறநிலை மதிப்பீட்டில் இருந்து நாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். நமது செயல்பாட்டாளர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதன் மூலமும், சமூகத்தில் நடக்கும் பல்வேறு வகையான கலாச்சார முயற்சிகளில் ஈடுபடுவதன் மூலமும் மட்டுமே, நமது இலக்கை நோக்கி நகர்வதற்கு எது உதவக்கூடும் என்பதை வரையறுக்கவும், மதிப்பீடு செய்யவும் முடியும். கருத்து சுதந்திரம், முற்போக்கான முயற்சிகளை அனுமதிக்கும் ஆக்கபூர்வமான மற்றும் தகவல் தொடர்பு தளங்களை நாம் இப்போது எங்கே காண முடியும்? இலாப நோக்கத்தினால் அல்லது சமூக/மத பழமைவாதத்தினால் இவை எங்கே முழுமையாக உள்வாங்கப்பட்டு சிதைக்கப்பட்டன? நமது போராட்டங்களை வலுப்படுத்தும் ஆதாரங்களுக்கான இந்தத் தேடலில் கடுமையான முன்முடிபுகளால் நாம் கட்டுண்டு விடமுடியாது. எனினும் நாம் ஏற்கனவே அடையாளம் கண்டுள்ள ஆதாரங்களின் அடிப்படையில்தான் இந்தச் சோதனை அமைய வேண்டும்.
4.5. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மதச்சார்பற்ற, ஜனநாயக பூர்வமான கலாச்சார அமைப்புகள் பல உள்ளன. ஒரு மாநிலத்திற்கு உள்ளேயும் கூட, நம்மிடம் பல முற்போக்கான, மதச்சார்பற்ற கலாச்சார அமைப்புகள், தனிநபர்கள் ஆகியோர் பல்வேறு கலை வடிவங்களில் செயல்பட்டு வருகின்றனர். அதில் நமது கட்சி உறுப்பினர்களும் கூட தீவிரமாகச் செயல்பட்டு வரலாம். நம்மால் முடிந்தவரை இவற்றோடு மிகப்பெரிய ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை உருவாக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். இந்த நோக்கத்திற்காக, கலாச்சார மாநாடுகள் அல்லது கூட்டங்கள், திருவிழாக்கள், பட்டறைகள், கருத்தரங்குகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்வதற்கான சாத்தியக் கூறுகளையும் நாம் ஆராய வேண்டும். மாநிலங்களுக்கு இடையேயான சமூக ஊடகக் குழுக்கள் இருப்பதற்கான சாத்தியத்தையும் நாம் ஆராய வேண்டும். உடனடி பிரச்சினைகளுக்கும், குறிப்பாக தணிக்கை மற்றும் கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல்களின் போது விரைவாகவும், ஒருங்கிணைந்த முறையிலும் பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ள இது உதவும்.
5.0 மேலே விவரிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த அணுகுமுறையோடு கூடவே, கலாச்சார அரங்கில் நம் முன்னே உள்ள முக்கிய பணிகளாவன:
5.1. தொடர்ச்சியான சுய ஆய்வு மற்றும் சுயவிமர்சனம் மூலம் நமது நடத்தை, தினசரி நடைமுறைகளில் ஒரு தரத்தை முன்னிறுத்துவது என்பது, கிராமப்புற, நகர்ப்புற இந்தியாவின் உழைக்கும் மக்களை உள்ளடக்கிய நமது அடிப்படை வர்க்கத்தினருடன் தகவல் தொடர்பு கொள்ளவும் அவர்களின் நம்பிக்கையை வெல்லவும் உதவும்.
5.2 வெறுமனே அது ஒரு ‘கலை’ என்பதாக அல்லாமல், மாறாக மக்களின் ‘வாழ்ந்த வாழ்க்கை’ என்ற வகையில் கலாச்சாரத் துறையினை அதன் முழுமைத் தன்மையோடு காண வேண்டும். நமது பேச்சு முறை, நம் உணவின் சுவைகள், நம் ஆடைகளின் நிறங்கள் மற்றும் அவை வெட்டப்படும் முறை மற்றும் வேறு பல விஷயங்களும் மக்களின் சாதாரண, அன்றாட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி வடிவமைந்ததாக இந்தக் கலாச்சார காரணிகள் அமைகின்றன. இந்த காரணத்தினாலேதான், கலாச்சார ரீதியான தலையீடுகளில் இருந்து நம் கவனத்தை மாற்ற வேண்டும். அதாவது, ஒரு கருத்தினை வெளிப்படுத்தவும், கலாச்சாரத்தில் தலையீடுகளை மேற்கொள்ளவும், இசைக்கருவியைப் பயன்படுத்தும் ஒரு கலைஞர் கலையை ‘பயன்’படுத்துகிறார். அதாவது, அன்றாட வாழ்வில், நடைமுறையில் முற்போக்கான, மதச்சார்பற்ற, ஜனநாயக கருத்துக்களை வடிவமைக்க வேண்டும். அன்றாட வாழ்க்கையிலும் சமூகத்திலும் அமைப்புகளிலும் குடும்பத்திலும் அவை எவ்வாறு ஒழுங்கமைக்கப்படுகிறது என்பதன் மூலமாகவும் இவை வெளிப்படுகின்றன.
5.3. மதச்சார்பற்ற ஜனநாயக கலாச்சார மரபுகளுக்கான சமூக களத்தை நாம் மீட்டெடுக்க வேண்டுமெனில், நம் நாட்டிலும், உலகின் பிற பகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்தும் மேலாதிக்கங்களை எதிர்த்த முற்போக்கு சிந்தனை போக்குகள், காலனியத்திற்கு எதிரான சிந்தனை மரபுகள், இவற்றோடு கூடவே மக்களுக்கு உயிரோட்டமான வகையில் செய்திகளை எடுத்துச் செல்லும் செவ்வியல், நவீன, நாட்டுப்புற கலை வடிவங்களை உருவாக்குவோரைப் பற்றியும், மார்க்சிய சிந்தனையின் வரலாறு மற்றும் சோஷலிசத்தை நோக்கி முன்னேறும் புரட்சிகர இயக்கங்கள் ஆகியவை பற்றியும் அறிந்தவர்களாகவும் நாம் இருக்க வேண்டும். கூடவே, இந்த அறிவை பயன்படுத்திய வகையில் கலாச்சாரத்தில் ஓர் இறை தத்துவம், எதேச்சாதிகாரப் போக்கு, குழுவாதப் போக்கு ஆகியவற்றையும் எதிர்த்துப் போராட வேண்டும்.
5.4. கலாச்சார தேசியம் என்ற பெயரிலோ அல்லது ‘மத ரீதியான உணர்வு’ என்ற பெயரிலோ அல்லது ‘சாதிய உயர்தன்மை’ என்ற பெயரிலோ வகுப்புவாத சக்திகள் முன்வைக்கின்ற சகிப்புத்தன்மையற்ற அனைத்து வடிவங்களையும் எதிர்த்துப் போராட வேண்டும். மக்களின் கலாச்சார நடைமுறைகளில் மொழிரீதியான, இனரீதியான, பிராந்திய அடிப்படையிலான பன்முகத்தன்மையை அங்கீகரித்து ஊக்குவிக்க வேண்டும். இத்தகைய மாறுபட்ட சிந்தனையை கடைப்பிடிப்பவர்களிடையே நல்ல தொடர்புகளையும் கருத்துப் பரிமாற்றங்களையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தகைய பன்முகத் தன்மை கொண்ட பாரம்பரியங்களை பிரதிபலிக்கும் சிந்தனையாளர்கள், கலைஞர்கள் ஆகியோர் மீதான தாக்குதல்கள் எழும்போது அவர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும்.
5.5. பழமைவாதம், மதவெறி, மூடநம்பிக்கை, பகுத்தறிவின்மை ஆகியவற்றை எதிர்ப்பது; பொதுக் கல்வி முறை, அறிவியல், அறிவு சார்ந்த, கலாச்சார நிறுவனங்களின் சுயாட்சி ஆகியவற்றைப் பாதுகாப்பது; உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையங்கள் மீதான தாக்குதல்களை எதிர்ப்பது; நமது வரலாறு மற்றும் சுதந்திரப் போராட்டத்தின் பகுத்தறிவு, ஒத்திசைவு மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியின் மதச்சார்பற்ற மரபுகளை பாதுகாப்பது.
5.6. உணர்வுபூர்வமான உதவி, ஆழமான மக்களின் ஆழமான நம்பிக்கைக்கான தேவையை, பல்வேறு மதங்களைச் சேர்ந்த ‘மத’ நிறுவனங்களும் ஆன்மீகத் தலைவர்களும் தங்களது பெரும் வணிக நலன்களுக்காக, பகுத்தறிவின்மை, மூடநம்பிக்கை பிரச்சாரம் போன்றவற்றைப் பயன்படுத்துவதோடு, அவர்களைப் பின்பற்றுபவர்களிடையே பிரிவினைவாத உணர்வு, வகுப்புவாதம் ஆகியவற்றையும் விதைக்கின்றனர். இந்நிலையில் மக்களின் துன்பங்களுக்குக் காரணமாக உள்ள பரந்துபட்ட சுரண்டலுக்கு எதிராகவும் கிளர்ந்தெழுவது.
5.7. பல வழிபாட்டுத் தலங்களிலும் வகுப்புவாத, தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு நடைபெறும் திருவிழா செயல்பாடுகள் மீது மக்களை தவறாக வழிநடத்தும் நோக்கமுடைய வகுப்புவாத பிளவுப் பிரச்சாரம் ஆதிக்கம் செலுத்துகிறது. ஒவ்வொரு இடத்திலும் நிலவும் ஸ்தூலமான சூழ்நிலையைப் பொறுத்து, நமது செயல்பாட்டாளர்களின் தலையீட்டின் மூலம் சாத்தியமான அளவில் இதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
5.8. பொருளாதார ரீதியிலான சுரண்டல் மட்டுமின்றி, சாதி, பாலினம் போன்றவற்றின் அடிப்படையிலான சமூகச் சுரண்டலுக்கும் இடமில்லாத, மனித சமுதாயத்தின் சமத்துவமான எதிர்காலத்தை எதிர்நோக்கிய, ஆக்கப்பூர்வமான முயற்சிகளை ஆதரித்து நிற்பது.
5.9. உழைக்கும் மக்களின் பாரம்பரிய கலை வடிவங்களை ஆதரித்து நிற்பது; (பொம்மலாட்டக்காரர்கள், சுருள் சீலைகளில் கதைகளை ஓவியமாக வழங்கும் ஓவிய கலைஞர்கள், கிராமப்புற, நகர்ப்புற தெரு கலைஞர்கள், கிராமப்புற உடற்பயிற்சி வல்லுநர்கள் போன்ற) இந்த கலை வடிவங்களின் கண்ணியம் மற்றும் அவற்றின் மதிப்பை மக்கள் சமூகம் அங்கீகரிப்பதற்காக உழைப்பது; இவற்றில் பல கலை வடிவங்களும், மக்களின் சொந்த படைப்பாற்றலை உள்ளடக்கியதாக இருப்பதோடு, அவர்களுக்கு வாழ்வாதாரத்தையும் வழங்குகின்றன. இந்தக் கலைகள் இப்போது பெரிய மத நிறுவனங்கள்/பெரிய வணிக நிறுவனங்களால் முழுமையாக உள்வாங்கப்பட்டு வருகின்றன; அல்லது அழிக்கப்படுகின்றன. இதனால் அவர்களின் உண்மையான பயிற்சியாளர்கள், புரவலர்கள், பயனாளிகள், நுகர்வோர் ஆகிய உழைக்கும் மக்கள் கலாச்சார இடைவெளியை எதிர்கொள்கின்றனர்; இந்த கலைஞர்கள் தங்கள் படைப்பாற்றலுடன் மக்களுக்கு சேவை செய்யும் வகையில் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
5.10. (பொருளாதார, அரசியல், சாதி அடிப்படையிலான, பாலின அடிப்படையிலான, சிறுபான்மையினருக்கு எதிரானவை போன்ற) குறிப்பான அடக்குமுறை அல்லது அநீதியான நிகழ்வுகளுக்கு எதிராக (அறிவுஜீவிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், சமூக ஊடக பயனர்கள் போன்ற) கலாச்சார சக்திகளை அணிதிரட்டுவது. இதன் மூலம் அவர்கள் மக்களையும் சமுதாயத்தையும் பாதுகாப்பதில் தங்கள் சிறப்புத் திறன்களை புதுமையான, ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்தலாம்.
5.11. கட்டற்ற நுகர்ச்சி, தனிப்பட்ட மகிழ்ச்சியை மட்டுமே விரும்புவதைத் தூண்டி கலாச்சார மதிப்புகளை பண்டமாக்குவதை எதிர்ப்பது; பண்டமாக்கல் என்பது இன்று அனைத்து கலாச்சார தயாரிப்புகளும் சந்தையின் மூலம் மத்தியஸ்தம் செய்யப்பட வேண்டும் என்பது மட்டுமல்லாமல், பெருநிறுவன மூலதனமானது அதன் பார்வையில் எந்த சந்தை மதிப்பையும், அந்தப் பொருட்களை உற்பத்தி செய்பவர்களின், அதாவது, கலைஞர்கள், ஆசிரியர்கள், நிகழ்த்துக் கலைஞர்கள் ஆகியோரின், படைப்பாற்றலின் மீதும், அது போன்ற அனைத்து பொருட்களின் மீதும், தனது முழுமையான உரிமையை நிலைநாட்ட முயல்கிறது. பெருநிறுவனத்தால் நடத்தப்படும் உலகளாவிய கலாச்சார சந்தையின் விருப்பத்திற்கு ஏற்ப அடிமைத்தனத்துடன் அடிபணியச் செய்கிறது. இது கலைஞர்கள் மற்றும் கலாச்சாரத்தின் உண்மையான களஞ்சியங்களான மக்களின் முக்கிய மன திறன்களை அழிக்கிறது; அனைத்து வகையிலும் இதை எதிர்க்க வேண்டும்.
5.12. தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய அச்சு மற்றும் ஒலி-ஒளி ஊடக உலகத்திற்குள்ளான இடத்தை மக்களுக்காக மீட்டெடுக்கப் போராடுவது; மின்னணு ஊடகத்தின் மீது பெருநிறுவன மூலதனத்தின் பிடிப்பு வலுவாக இருக்கும் நிலையில், இத்தகைய தொழில்நுட்ப முன்னேற்றத்தின் பயன்கள் மக்களுக்கு மறுதலிக்கப்படுகின்றன. இதன் விளைவாக அற்பமான, பொருளற்ற செய்திகள், உண்மை நிகழ்வுகள் என்ற பெயரால் நடைபெறும் கேவலமான, மேம்போக்கான நிகழ்ச்சிகள், பிற்போக்குத்தனமான, ஆணாதிக்க, பெண் வெறுப்பு மிக்க காட்சித் தொடர்கள் மற்றும் இதுபோன்ற மின்னணு பொருட்கள் கட்டற்ற விளம்பரங்களால் பின்னிப் பிணைந்து மக்களின் மீது மேலாதிக்கம் செலுத்த வழியேற்படுகிறது. இணையவழி வெளியீடுகள், சமூக ஊடகங்கள், ஆவணப்படங்கள், மக்கள் வானொலி போன்ற, மக்களுக்குப் பொருத்தமானதாக இருக்கும் சில இடங்களை மீட்டெடுப்பது இத்தகைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக்கூடிய சில வழிகள் ஆகும்; இந்தத் துறைகளில் திறமையுள்ளவர்கள் இந்த வழியில் திட்டமிட வேண்டும் என்பதோடு அவர்கள் முறையாக ஊக்குவிக்கப்படவும் வேண்டும்.
5.13. குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்களைப் பாதுகாக்க முன் நிற்க வேண்டும். இதன் மூலம் தனித்திறன்மிக்க படைப்பு திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை அவர்கள் பெற முடியும். இக்காலத்தின் இரக்கமற்ற போட்டி, நுகர்வோர் மதிப்புகள் அல்லது வெறுப்புக் கலாச்சாரம் மற்றும் பரஸ்பர அழிவு உணர்வு ஆகியவற்றால் அவர்களின் விருப்பங்கள் விழுங்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அவர்களின் கல்வி உரிமைகள் மற்றும் மிகவும் மேம்பட்ட அறிவுக்கான உரிமைகள் வலியுறுத்தப்பட வேண்டும்; கல்வி நிறுவனங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் நமது சிறப்பான அறிவுத் திறன், ஆக்கப்பூர்வமான மரபுகள் ஆகியவற்றுடன் அவர்கள் தொடர்பு கொள்ள பல வகையிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
5.14. பல்வேறு வகையான தீவிரவாத, மதவெறி, பயங்கரவாத அமைப்புகளும் சித்தாந்தங்களும் வளர்ந்து வருகின்ற, வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற ஓர் உலகில் நாம் வாழ்கிறோம். உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் அதிக அளவிலான சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்ல இது தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. சாத்தியமான இடங்களில், சிறப்பு அதிகாரங்களும் அரசால் கைக்கொள்ளப்படுகின்றன. பல நேரங்களில், தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் இத்தகைய நடவடிக்கைகளை ஆதரிக்குமாறு பொது மக்கள் தூண்டப்படுகிறார்கள்; அல்லது வற்புறுத்தப்படுகிறார்கள். எங்கெல்லாம் எதேச்சாதிகார அரசால் மீறப்படுகிறதோ அங்கெல்லாம் மக்கள் உரிமைகள், ஜனநாயக மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்க நாம் முன்நிற்கிறோம்; பொதுமக்களுக்கு எதிராக இராணுவம், துணை இராணுவப் படைகளைப் பயன்படுத்துவதை நாம் எதிர்க்கிறோம்; மாறுபட்ட கருத்துக்களை ஒடுக்குவதற்கு தடையற்ற அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் அரசுக்கு வழங்கும் கொடுங்கோன்மை சட்டங்களையும் நாம் எதிர்க்கிறோம்.
5.15. மேற்கண்ட கடமைகளை நிறைவேற்ற, ஒவ்வொரு மட்டத்திலும் கலாச்சார முன்னணியில் உள்ள பணிகளில் கட்சி மேலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்; குறிப்பிட்ட கால வரம்பிற்குள் இலக்குகள் எட்டப்படுவதற்கு உகந்த வகையில் ஒவ்வொரு மட்டத்திலும் தகுதியான ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
5.16. பாடல் குழுக்கள், வீதி நாடகக் குழுக்கள் போன்ற கலாச்சாரப் பிரிவுகளை உருவாக்க வெகுஜன அமைப்புகள், ஆசிரியர்கள், சேவை நிறுவனங்கள், திட்டத் தொழிலாளர்கள் போன்ற இதர வகைப்பட்ட ஊழியர்களின் அமைப்புகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதோடு, அவை முறையாக வழிநடத்தப்பட வேண்டும். கலாச்சார அரங்கின் பணியை கைவிட்டு விடக்கூடாது என்பதோடு, அந்தப் பணி கலாச்சார அரங்கிலுள்ள ஆர்வலர்களுக்கு மட்டுமேயான ஒரு பணி என்பதாகப் பிரித்துப் பார்க்கவும் கூடாது.
5.17. கலாச்சார, கல்வி மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளின் மூலம் ஜனநாயக, மதச்சார்பற்ற, முற்போக்கு எண்ணங்களை வளர்த்தெடுக்க அக்கம்பக்கத்தில் உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு ‘பாலவேதி’ அல்லது ‘பாலர் சங்கம்’ போன்ற அமைப்புகளை உருவாக்க உதவ வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் ஏற்கனவே வெற்றிகரமாக செயல்படும் இடங்களில், அவற்றை மேலும் விரிவுபடுத்தவும் ஒருங்கிணைக்கவும் உதவ வேண்டும்.
5.18. இத்தகைய கலாச்சார அரங்க நடவடிக்கைகள் எதுவும் இல்லாத மாநிலங்களில், இந்தப் போதாமையை சரிசெய்யும் வகையில் திட்டமிட்ட நடவடிக்கைகள் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும்.
5.19. (அ) பல்வேறு மட்டங்களிலும் செயல்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தவும், (ஆ) எதிர்கால திட்டங்கள், படைப்பூக்க ரீதியான தலையீடுகள் ஆகியவற்றுக்கு பொதுவான வழிகாட்டுதலை வழங்கவும், படைப்புத் திறன் மிக்க கலை-கலாச்சார செயல்பாட்டாளர்கள் பங்கேற்கும் வகையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் கலாச்சார மாநாடுகள் நடத்தப்பட வேண்டும்.
5.20. இந்த அரங்கின் முன்னேயுள்ள கடமைகள் குறித்த இந்த ஆவணத்தில் கூறப்பட்டவை அனைத்தும் குறிப்பிட்ட கால வரம்பில் பல்வேறு மட்டங்களிலும் எந்த அளவிற்கு அமலாக்கப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்யும் வகையில் தொடர்ந்து முறையாகப் பரிசீலனை மேற்கொள்ளப்பட வேண்டும்.
தமிழில்: வீ. பா. கணேசன்
Leave a Reply