பேரா. பிரபாத் பட்நாயக்
Neo-Liberalism and Anti-Inflationary Policy
முதலாளித்துவ நாடுகளில் இருக்கும் மத்திய வங்கிகள் அனைத்துமே, பணவீக்கம் அதிகரிக்கும் சூழ்நிலையை எதிர் கொள்வதற்காக, வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளார்கள்; அல்லது விரைவில் உயர்த்த இருக்கிறார்கள். பெருந்தொற்றினால் ஏற்பட்ட விளைவுகளில் இருந்து மீள்வதற்கே, உலக பொருளாதாரம் திணறுகிறது. அது தேக்க நிலையை நோக்கியும், அதிக வேலை இழப்புகளை நோக்கியும் சரிந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், உலக பொருளாதாரத்தை முன்னோக்கி உந்துவதற்கு இந்த நடவடிக்கை அவசியம் என்று கருதப்படுகிறது.
அமெரிக்காவின் பார்வை
அதேநேரத்தில், உலகின் பல நாடுகளுடைய மத்திய வங்கிகளுக்கும், உதாரணமாக உள்ள அமெரிக்க மத்திய வங்கி, வேலை இழப்பும் மந்த நிலையும் இருக்காது என்று மாறுபட்டுப் பேசியுள்ளது. வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடிய உத்தரவுகள், உண்மைப் பொருளாதாரத்தின் மீது குறைந்த தாக்கத்தையோ அல்லது குறுகிய கால பாதிப்பையோ மட்டுமே ஏற்படுத்தும்; பொருளாதார மீட்சியை அது பெரிதாக பாதிக்காது என்றும் அது கூறுகிறது. அவர்களின் இந்தப் பார்வை, அடிப்படையிலேயே குறைபாடான பின்வரும் காரணியால் உருவானது.
அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோமி பவுல் குறிப்பிடும்போது, அமெரிக்கா தற்போது எதிர்கொள்ளும் பண வீக்கத்தை ஏற்படுத்துவது, ஊதியம் (Money Wage) உயர்வதால் ஏற்படும் அழுத்தமே என்கிறார். அதாவது மக்கள் பண வீக்கத்தை எதிர்பார்த்துக் கொண்டுள்ளார்கள்; எனவே வட்டி விகிதத்தை உயர்த்துவதால், மக்களுக்கு பணவீக்கம் குறையப்போகிறது என்ற எதிர்பார்ப்பை உருவாக்குகிறோம்; அது ஊதிய உயர்வினால் ஏற்பட்ட தாக்கத்திற்கு முடிவுகட்டி, பண வீக்கத்தை குறைத்துவிடும். இவ்வாறு நாம் மாற்றியமைக்கும் அனைத்து நடவடிக்கைகளும், ’எதிர்பார்க்கப்படும் விலை’ என்ற (எதிர்காலத்தின்) வரம்பிற்குள்ளேயே நடக்கின்ற காரணத்தினால், உண்மையான விலை என்ற வரம்பினில், அதாவது, உண்மை பொருளாதாரத்திலும், வேலைவாய்ப்பு உருவாக்கத்திலும் மந்தநிலை ஏற்படுவது அரிது. மேலே சொன்ன மொத்த வாதமும் தவறு என்பது, ஒரு எளிய உண்மையோடு ஒப்பிட்டுப் பார்த்தாலே தெரிந்துவிடுகிறது. உழைக்கும் மக்கள் பணமாக பெறக்கூடிய ஊதியம், பண வீக்கத்திற்கு (விலைவாசிக்கு) பின் தவழ்ந்துகொண்டிருக்கிறது. ஏனென்றால் உண்மை ஊதியம் குறைவதன் காரணமாக அவர்கள் தவித்து வருகிறார்கள். எனவே, அமெரிக்காவில், ஊதிய உயர்வினால் (Money Wage) ஏற்படுத்தும் அழுத்தம் காரணமாகவே, பண வீக்கம் ஏற்படுவதாக சொல்வது முற்றிலும் தவறு ஆகும்.
போர் காரணமா?
பண வீக்கத்தை ஏற்படுத்துவதாகச் சொல்லப்படும் மற்றும் ஒரு பொதுவான காரணமும், இதைப் போலத்தான் அமைந்துள்ளது. அதாவது, ரஷ்யா-உக்ரைன் இடையிலான போரின் காரணமாக பல்வேறு சரக்குகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, உலக சந்தையில் எண்ணெய் மற்றும் உணவு தானியங்களுக்கு பற்றாக்குறை உருவாகியுள்ளது என்கிறார்கள். இந்த விளக்கமும் மனநிறைவினைக் கொடுப்பதாக இல்லை. போரின் காரணமாக பற்றாக்குறை உருவாகக்கூடும் என்றாலும், இதுவரை அப்படிப்பட்ட பற்றாக்குறை எதுவும் உருவாகவில்லை. போரின் காரணமாக, உலகச் சந்தையில் மேலே குறிப்பிட்ட சரக்குகளின் வரத்து குறைந்திருப்பதனை எடுத்துக்காட்டும் விபரங்கள் ஏதும் இல்லை. குறிப்பாக அமெரிக்காவை எடுத்துக்கொண்டால், (ரஷ்யா-உக்ரைன் இடையிலான) போரின் காரணமாக ஏற்பட்ட பற்றாக்குறையே பண வீக்கத்திற்கு காரணம் என்பதும் தவறான வாதமே ஆகும்.
அமெரிக்காவில் லாப விகிதங்கள் தன்னிச்சையாக அதிகரிக்கப்படுவதால் உண்மை ஊதியத்தில் ஏற்பட்டிருக்கும் உயர்வை விட அதிகமாக விலைவாசி உயர்வு இருக்கிறது. அதுதான் அங்கு நிலவும் பண வீக்கத்திற்கான காரணம். குறிப்பிட்ட ஒரு சரக்கிற்கு பற்றாக்குறை ஏற்படும்போதுதான் லாப விகிதம் உயர்த்தப்படும். ஆனால், இப்போது பண வீக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் பல்வேறு பொருட்களின் மீதும், பற்றாக்குறைக்கான எந்த அழுத்தமும் இல்லை. பெருந்தொற்றின் காரணமாக, பொருட்கள் விநியோக சங்கிலியில் தடை ஏற்பட்டதால், குறைவாக விநியோகிக்கப்பட்ட சில பொருட்களின் மீதும் கூட, வழக்கத்திற்கும் கூடுதலான விலை ஏற்றப்பட்டது. அது நீடிக்கவும் செய்கிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், அமெரிக்காவில் நிலவக்கூடிய பணவீக்கத்திற்கான காரணி, தன்னிச்சை போக்கில் லாபத்தை கூட்டிக் கொள்வதற்கான எத்தனிப்பே ஆகும். இது ஊகம் நடப்பதின் வெளிப்பாடு.
லாப நோக்கமும் பண வீக்கமும்
ஊக நடைமுறையானது, வணிகர்களிடமும் இடைத் தரகர்களிடமும் காணப்படும்; உற்பத்தியாளர்களிடம் அந்த நடைமுறை இருக்காது என்று நினைக்கும் போக்கு பொதுவாக உள்ளது. ஆனால் அந்த நினைப்பிற்கு அடிப்படை ஏதும் இல்லை. பன்னாட்டு நிறுவனங்கள் விலையை உயர்த்துவதற்கு பின் ஊக நடவடிக்கைக்கு இடமுள்ளது. உலகின் மிகப் பெரும் பொருளாதாரமான அமெரிக்காவை, ஊக நடவடிக்கையால் தூண்டப்பட்ட பண வீக்கம் தாக்கி வருவதற்கான காரணம், இன்றுவரையிலும் அவர்கள் கடைப்பிடிக்கும் அதீத எளிமையான பணக் கொள்கையும், அதன் காரணமாக எளிதாக கடன் வழங்கப்படுவதும் ஆகும்.
“அளந்து தளர்வு தருதல்” (சேமிப்பின் மீதும், கடன்களின் மீதும் வட்டி விகிதத்தை குறைப்பதற்காக பத்திரங்களை வாங்குதல்) என்ற பெயரில், அமெரிக்க மத்திய வங்கி, பொருளாதாரத்திற்குள் அதிகமான பணத்தை தள்ளுகிறது. அதற்கு தோதான விதத்தில் குறுகிய கால கடன்களுக்கும், நீண்டகால கடங்களுக்குமான வட்டி விகிதத்தை கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக்கியுள்ளது. இது, (முதலாளிகள்) தன்னிச்சையாக லாப விகிதங்களை உயர்த்திக்கொள்ள சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. (அதிகமான பணம் புழக்கத்தில் இருக்கும்படியான சூழல் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளதை குறிப்பிடுகிறார்.) காலம் காலமாக அவர்கள் கடைப்பிடித்த மேற்கண்ட பணக் கொள்கையின் காரணமாக ஏற்பட்டிருக்கும் இந்த பண வீக்கத்தை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கு நம்மிடம் இருக்கும் வழிகளில் ஒன்று ‘நிதி சிக்கன நடவடிக்கை’ அல்லது (இப்போது நாம் செய்திருப்பதை போல) (ரெப்போ) வட்டி விகிதங்களை உயர்த்துவது ஆகியவைதான். இந்த இரண்டில் எதைச் செய்தாலும் பொருளாதார மந்த நிலைமையும், வேலை இழப்புகளும் உருவாக்கப்படும்.
மையமும், விளிம்பும்
இப்போது நாம் பிரச்சனையின் மூல காரணத்தை நெருங்கிவிட்டோம். சமகால முதலாளித்துவத்திற்கு உட்பட்ட பொருளாதார ஏற்பாட்டில், அமெரிக்காவில் இருக்கும் சிலரின் ஊக நடவடிக்கையை முறியடிக்க வேண்டும் எனில், அதற்காக அமெரிக்கா மட்டுமல்லாமல் உலகெங்கிலும் பெருமளவு வேலை இழப்புகள் நடக்க வேண்டும் (சொல்வதற்கே அபத்தமாக இருக்கிறது). நவ தாராளமய சூழலில் மூலதனம், குறிப்பாக நிதி மூலதனம், எல்லைகளைத் தாண்டிப் பாய்வதனாலேயே இந்த கருத்து எழுகிறது. ஏனென்றால், அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் உயர்ந்தால், உலகம் முழுவதுமே வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் (அப்படி செய்யாவிட்டால், விளிம்பில் இருக்கும் நாடுகளில் இருக்கும் நிதி மூலதனம், மையத்தில் இருக்கும் அமெரிக்காவை நோக்கி ஈர்க்கப்படும். அதனால் விளிம்பு நாடுகளின் செலவாணியின் டாலருக்கு நிகரான மதிப்பு சரியும்). வேறு வார்த்தைகளில் சொன்னால், அமெரிக்காவில் நடக்கும் ஊக நடவடிக்கைகளை நேரடியாக எதிர்கொள்வதற்கு பதிலாக, நிதி ‘தாரளமயமாக்கல்’ மூலமாக சமாளிக்கிறார்கள். அதன் காரணமாக உலகம் முழுவதும் மிகப்பெரும் வேலையின்மையை உருவாக்கப்படுகிறது. இது மூடத்தனத்தின் உச்சம்.
நிதித்துறையில் தலையீடு
அக்டோபர் புரட்சியின் காலத்தில், உலகப் பெருமந்தத்தின் மத்தியில் நின்றுகொண்டு எழுதிய ஜான் மேனார்ட் கீன்ஸ் இந்த பகுத்தறிவுக்கு ஒவ்வாத நிலைமையை நன்றாக அறிந்திருந்தார். எனவே, (முதலாளித்துவ சமூக ) அமைப்பினை ‘பாதுகாக்கும் தன்னுடைய நோக்கத்தை எட்டுவதற்கு, “முதலீட்டை சமூகமயப்படுத்த வேண்டும்” என்ற பெயரிலான திட்டத்தை செயலாக்க விரும்பினார். அதை செய்வதற்கு, பொருத்தமான பணக் கொள்கையும், அதோடு நிதித்துறையில் அரசின் தலையீடும் அவசியமாகும். மேலும் இந்த இரண்டுமே ஒட்டுமொத்த சமூகத்தின் தேவைகளுக்கும், நிதி சார்ந்த நலன்களுக்கும் உட்பட்டதாக இருக்கவும் வேண்டும்.
இப்படிப்பட்ட சிந்தனை நிலவிய சூழலில், உலகப் போருக்கு பிறகு விடுதலையடைந்த நாடுகள் பல புதுமையான நிதிக் கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். இந்த அமைப்புகளில் பொருளாதாரச் செயல்பாடுகளை எவ்விதத்திலும் குறைக்காமலேயே, வேலைவாய்ப்பிலும் பெருமளவு பாதிப்பு இன்றி, ஊடக நடவடிக்கைகளை நேரடியாக கட்டுப்படுத்தினார்கள். உதாரணமாக, இந்தியாவில் நீண்டகால முதலீடுகளை மேற்கொள்வதற்காக சிறப்பு நிதி நிறுவனங்கள் நிதி வழங்கினார்கள். குறுகிய கால கடன்களுக்கு வங்கிகள் நிர்ணயித்த வட்டி விகிதங்களை விடவும், இந்த நிதிக்கான வட்டி பொதுவாக குறைவாக இருந்தது. ஊக நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு, வட்டி விகிதம் (மற்றும் இருப்பு விகிதம் போன்ற பாரம்பரிய கருவிகளை) மட்டுமல்லாமல், வேறு பல கருவிகளையும் வங்கிகள் பயன்படுத்தின. ஊக நடவடிக்கையின் தாக்கம் அதிகமுள்ள குறிப்பான துறைகளுக்கு கடன் வாய்ப்புகளை முறைப்படுத்துவது, நேரடியான தலையீட்டுக்கான கருவிகளில் ஒன்று ஆகும். “தேர்ந்தெடுக்கப்பட்ட கடன் கட்டுப்பாடுகள்” என்று அவை அழைக்கப்பட்டன. பண வீக்கத்தை கட்டுப்படுத்த நிதி மற்றும் பணம் சார்ந்த நடவடிக்கைகள் மட்டுமே முன்னெடுக்கப்படவில்லை. “சரக்கு விநியோகத்தில் தலையீடு செய்வதன்” மூலமாக, (ரேசன் கடைகள் போன்ற) பொது விநியோக திட்ட அமைப்புகளை ஏற்படுத்தி பணவீக்கத்தை கட்டுப்படுத்தினார்கள். இவை அனைத்துமே முதலீட்டை உறுதி செய்தன. உற்பத்தியும், வேலைவாய்ப்புகளும் – ஊக நடவடிக்கைகளால் பாதிக்கப்படாமல் தடுத்தன.
நிதித் துறையில் தாராளமயம்
உலக வங்கியும், சர்வதேச நிதியமும் அவைகளுக்கு விசுவாசமான நவ தாராளமய பொருளாதார அறிஞர்களும் மேற்சொன்ன ஏற்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்கள். இந்த நிதி ஏற்பாடுகளை “நிதி சார்ந்த அடக்குமுறை” என்றார்கள். பொருளாதார கட்டுப்பாடுகள் இருந்த நாடுகளிலெல்லாம் “தாராளமய” நடவடிக்கைகள் அமலாக்கவேண்டும் என்றார்கள். உணவு தானிய விநியோகத்தில் இப்போதும் தொடரக்கூடிய பொது விநியோக (ரேசன் கடைகள்) ஏற்பாட்டினை கைவிட்டு விட வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்தினார்கள். மோடி அரசாங்கம் நிறைவேற்றிய மோசமான 3 (வேளாண்) சட்டங்களின் நோக்கம் அதுவாகவே இருந்தது. பொது விநியோக அமைப்பையும், ரேசன் திட்டத்தையும் கைவிடச் செய்யும் முயற்சியில் அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், நவதாராளமய ‘சீர்திருத்தங்களின்’ பெயரால் பிற ‘நிதி தாராளமயமாக்கல்’ கொள்கையை அமலாக்கிவிட்டார்கள்.
“நிதி தாராளமயமாக்கல்” என்பது, பணக் கொள்கையின் ஒரு கருவியாக வட்டி விகிதங்கள் மீது வைக்கப்படும் தனிப்பட்ட நம்பிக்கையாகிவிட்டது, மேலும் (ஏற்கனவே சொன்னதைப் போல) இது அமெரிக்காவில் கடைப்பிடிக்கப்படும் வட்டி விகிதத்துடன் நேரடியாக பிணைக்கப்பட்டிருப்பதால், வேறு வழியில்லாமல் ஆக்கப்பட்டது. அரசாங்கத்தின் வருவாயும், அரசின் செலவினங்களும் “நிதிப் பொறுப்பு” என்ற பெயரால் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுவிட்டன. அதன் காரணமாக பணக்காரர்கள் மீது அதிக வரி சுமத்தி அரசாங்கம் தனது வருவாயை உயர்த்திக் கொள்வதற்கான வாய்ப்புகளும் அடைக்கப்பட்டுவிட்டன. எனவே, பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வட்டி வட்டி விகிதமானது, முதலீட்டையும், உற்பத்தியையும், வேலைவாய்ப்புக்களையும் நிர்ணயம் செய்கிறது.
முன்பு குறிப்பிட்டதையே இது மீண்டும் உணர்த்துகிறது. ஒரு குறிப்பிட்ட நாட்டின் உள்நாட்டு ஊக முதலாளிகள் கூட்டத்தினுடைய நடத்தை, அந்த நாட்டில் நிலவும் உற்பத்தியையும் வேலை வாய்ப்பையும் பாதிக்கிறது என்பது மட்டுமல்லாமல், அமெரிக்க நாட்டில் உள்ள குறிப்பிட்ட ஊக முதலாளிகளின் நடத்தை, ஒவ்வொரு நாட்டிலும், அதாவது உலகின் உற்பத்தியையும் வேலை வாய்ப்பையும் பாதிக்கிறது.
நவதாராளமய கட்டமைப்பு
ஒரு சில ஊக முதலாளிகளின் விருப்பங்களின் அடிப்படையில், கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வேலை வாய்ப்புகள் நிர்ணயிக்கப்படுவதற்கு அனுமதிக்காது என்ற காரணத்திற்காக, நாம் முன்பு கொண்டிருந்த (dirigiste era) நிதிக் கட்டமைப்பினை புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் டாக்டர் கே.என். ராஜ் வியந்து பாராட்டினார். அந்த கட்டமைப்பு, நிதி தாராளமயமாக்கல் நடவடிக்கைகளால் துல்லியமாக நொறுக்கப்பட்டது. மேலும், அந்த நடவடிக்கைகளே ஒவ்வொரு நாட்டின் வேலை வாய்ப்பு நிலைமைகளும், ஒரு சில அமெரிக்க ஊக முதலாளிகளின் விருப்பத்தை சார்ந்ததாக ஆக்கியது.
பணவீக்கத்தை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளில் ஒன்றாக, வட்டி விகிதங்களை அதிகப்படுத்துகிற சிந்தனையைக் குறித்து உலகெங்கிலும் ஏராளம் எழுதப்படுகிறது. நவதாராளமய கட்டமைப்பை மனதில் கொண்டு, வேலையின்மைக்கும் பண வீக்கத்துக்கும் நடுவில் சமரசம் தேடும் விதத்தில் ஒரு குறிப்பிட்ட நிலைப்பாட்டை எடுப்பதாக, இந்த வாதங்கள் பொதுவாக அமைகின்றன. ஆனால், இந்த சமரசப் புள்ளிக்கான அவசியமே, நவதாராளமய கட்டமைப்பின் காரணமாக, அரசின் வசம் இருந்த பல விதமான கருவிகள் அகற்றப்பட்டதால் எழுவதுதானே. எனவே, நவதாராளமய கட்டமைப்பினையே மாற்றி அமைப்பதன் மூலம் நாம் சமரச சிந்தனைகளுக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதுதான் முக்கியமாக சொல்ல வேண்டியதாகும். அதுபோன்ற விவாதங்கள் மிக அரிதாகவே எழுகின்றன.
தமிழில்: சிந்தன்
Leave a Reply