சாவர்க்கர்: முகத்திரைக்குபின்னால் !


(பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள, முகத்திரை விலக்கப்பட்ட சாவர்க்கர் என்ற நூலின் அறிமுக உரை இங்கே தரப்படுகிறது )

“வீர் (வீரம்) சாவர்க்கர்” என்னும் விநாயக் தாமோதர்  சாவர்க்கர், தற்போது தேசத் தந்தை, மோகன்தாஸ் கரம் சந்த் காந்திக்கு இணையாகத் தூக்கி நிறுத்தப்பட்டு, இந்திய  நாடாளுமன்றத்தின் மத்தியக் கூடத்தில் அவருடைய படத்திற்கு  எதிரே வைக்கப்பட்டிருக்கிறார். காந்தியைக் கொலை செய்ததில் சாவர்க்கருக்கு இருந்த பங்கு குறித்து, அன்றைய தினம் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் கூறியவற்றை அறிந்துகொள்வது இப்போது பொருத்தமாக இருக்கும்.

அவர், 1948  பிப்ரவரி 27 அன்று நேருவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், “இந்து  மகா சபாவின்; சாவர்க்கரின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கிய  வெறித்தனமான பிரிவு, சதித்திட்டம் தீட்டி, இக்கொடுஞ்செயல் நடைபெறுவதைப் பார்த்தது.”

சாவர்க்கரின் உருவப்படம் காந்தியின் படத்திற்கு அருகே வைக்கப்பட்டிருப்பது இந்துத்துவாவை இன்றையதினம்  பின்பற்றுவோரால் சாவர்க்கரைத் துதிபாடும் வெறித்தனமான கூட்டத்தாரின் பிரச்சாரத்தின் விளைவேயாகும். சாவர்க்கரைப்  போற்றிப் புகழ்தல் சமீபத்திய நடவடிக்கைகளேயாகும். 1990களின்  பிற்பகுதியில் அடல் பிகாரி வாஜ்பாய், எல்.கே. அத்வானி  ஆகிய ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள்/ தொண்டர்கள் தலைமையின்கீழ் தேசிய ஜனநாயகக் கூட்டணி  அரசாங்கம், ஆட்சிக்கு வந்தபின்னரே தொடங்கப்பட்டதாகும்.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் சின்னமாக இந்துத்துவா சித்தாந்தத்தை முன்மொழிந்தவரை மாற்றியிருப்பது இந்து  தேசத்தின் கொள்கையாக ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை சட்டபூர்வமாக்குவதற்கான நடைமுறையின் ஒரு பகுதியேயாகும்.  2002 மே 4 அன்று, வீ.டி.சாவர்க்கரின் பெயரை அந்தமான போர்ட் பிளேர் விமான நிலையத்திற்கு வைத்த அதே சமயத்தில்,  அப்போது உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே.அத்வானி  “சாவர்க்கரால் முன்மொழியப்பட்ட இந்துத்துவா, நாட்டின்  பாரம்பர்யத்தில் அதன் வேருடன் அனைத்தையும் உள்ளடக்கிய  சித்தாந்தமாக இருந்தது,” என்று ஆர்.எஸ்.எஸ். கருத்தோட்டத்தை எதிரொலித்தார். இந்துத்துவாவைக் கொண்டுவந்த நபரைப்  புகழ்வது இத்துடன் நின்றுவிடவில்லை. 2003 பிப்ரவரி 26  அன்று, சாவர்க்கரின் உருவப்படம் ஒன்று நாடாளுமன்றத்தில் திறந்துவைக்கப்பட்டது. இவ்வாறு நாடாளுமன்றத்தின் மத்தியக் கூடத்தில் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற காந்தி மற்றும்  முக்கிய தலைவர்களின் படங்களுடன் சாவர்க்கரின் படமும்  அவர்களுக்கு இணையாக பங்கேற்றது.

நாட்டை இரண்டாகத் துண்டாட வேண்டும் என்ற கோட்பாட்டைக் கொண்டிருந்த, இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வேண்டுமென்றே ஒதுங்கியிருந்த ஒரு நபரை ‘இந்திய தேசியவாதி என்றும், ‘நாட்டுப்பற்று மிகுந்தவர் என்றும் கொண்டாடலாம் என்றால், பின் ஏன் அதேபோன்ற அந்தஸ்தைப் பெற்றிருந்த முகமது அலி ஜின்னாவையும் அவ்வாறு  போற்றிப் பாராட்டுவதைத் தடுத்திட முடியுமா என்று எழும்  கேள்விக்கு திருப்தியடையக்கூடிய விதத்தில் பதிலை நாம் பெற வேண்டியிருக்கிறது.

சாவர்க்கர் 1966இல் இறந்தபோது பெரிய அளவில் துக்கம்  அனுசரிக்கப்படவில்லை என்பது பலருக்குத் தெரியாது. 83  வயதாகி முதுமையில் அவர் இறந்த சமயத்தில் மிகக் குறைந்த அளவிற்குத்தான் அவர் அறியப்பட்டிருந்தார். அவருடைய வாழ்நாள்  காலத்தில் மகாத்மாவின் உயிரைப் பறித்த சதித் திட்டத்தில் அவரும் ஓர் அங்கமாக இருந்தார் என்கிற வடுவை அவரால் அழிக்கவே முடியவில்லை.

வீர் சங்வி என்னும் குறிப்பிடத்தக்க கட்டுரையாளர், ‘‘1990 வரையிலும் அநேகமாக எவரும் அவரை அறிந்திருக்கவில்லை என்று சரியாகவே குறிப்பிட்டார் .  1990களில்தான் “சாவர்க்கருக்கு மறுவாழ்வு அளிப்போம்” என்னும்  இயக்கம்(‘Rehabilitate Savarkar’ movement), பாரதிய ஜனதா  கட்சியால் அதிகாரபூர்வமாக எடுத்துக்கொள்ளப்பட்ட பின்புதான்,  ‘இந்துத்துவா என்னும் சொற்றொடரை உருவாக்கிய நபர் என நமக்கு சொல்லப்பட்ட நபர், இந்தியாவின் விடுதலைக்காகப்  போராடிய நபர்களில் வீரமுதல்வனாக இருந்தார் என்றும்  கூறப்பட்டார். அதன்பின்புதான் சாவர்க்கர் மாபெரும்  விடுதலைப் போராட்ட வீரர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.

இது முற்றிலும் உண்மை. 1998 க்கு முன்பு, இந்துத்துவா  படையணியினர் சாவர்க்கரை தேசிய அளவில் ஒரு சின்னமாக  மாற்றுவதற்கான விருப்பத்தைக் கொண்டிருக்கவில்லை. 1998 க்கு முன்பு பல ஆண்ட காலம் ஆட்சியிலிருந்த மகாராஷ்ட்ராவில் இருந்து வந்த பா.ஜ.க.-சிவசேனைக் கூட்டணி அரசாங்கம்,  மும்பையில் உள்ள சட்டமன்றப் பேரவையின் சுவர்களில் சாவர்க்கரின் உருவப்படத்தை வைத்திட சிந்திக்கவே இல்லை.  2003க்குப் பின்னர்தான், நாடாளுமன்ற அவையில் அவருடைய  படம் வைக்கப்பட்ட பின்னர்தான், மும்பையில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கமும் அவருடைய  படத்தையும் தொங்க விட்டது. 

பின்னர் காங்கிரஸ் தலைமையில் ஒரு பிரிவும்கூட ,  “சாவர்க்கருக்கு மறுவாழ்வு அளிப்போம் இயக்கத்தில்” தன்னையும்  சேர்த்துக்கொண்டது. 2004 ஆகஸ்ட் 4 அன்று புதுதில்லியில் மன்மோகன் சிங் பிரதமரானவுடன் நடத்திய முதல் பத்திரிகையாளர்  கூட்டத்தின்போது, விநாயக் தாமோதர் சாவர்க்கரை, “தேச பக்தர்”  என்றும் “விடுதலைப் போராட்ட வீரர்” என்றும் வர்ணித்தார்.  சாவர்க்கரின் “தேச பக்தர்” என்பதற்கான ஆதாரச் சான்றுகள்  குறித்து பல்வேறு கேள்விகளை காங்கிரஸ் கட்சியின் மற்றொரு  தலைவரும், பெட்ரோலியத் துறை அமைச்சராகவுமிருந்த மணி  சங்கர் ஐயர் எழுப்பியபோது, பிரதமர் கூறியதாவது: “சாவர்க்கர்  குறித்த சர்ச்சையைப் பொறுத்தவரை, இது ஐயரின் தனிப்பட்ட கருத்து. அது அரசாங்கத்தின் கருத்து அல்ல. அது ஒரு தேவையற்ற சர்ச்சை.” 

சாவர்க்கருக்கு ஆதரவாகத் தன்னால் முடிந்த அளவிற்கு  மன்மோகன் சிங் முயற்சித்திருக்கிறார். “வரலாறு பல வழிகளில் நடந்துள்ள நிகழ்வுகளை நமக்கு வியாக்கியானம்  செய்திருந்தபோதிலும், இறந்தவரின் மோசமான விஷயங்கள்  குறித்துப் பேசுவதால் எவ்விதமான நன்மையையும் பெற்றிட  முடியும் என்று நான் நினைக்கவில்லை,” என்று அவர் கூறியுள்ளார்.  காங்கிரஸ் தரப்பிலிருந்து சாவர்க்கருக்கு ஆதரவாக ஒரு பிரதமர்  இவ்வாறு முதன்முறையாக முன்வந்திருக்கிறார். இதேபோன்றே முன்னதாக மன்மோகன் சிங் அமைச்சரவையில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்த குலாம் நபி ஆசாத்,  ஐயரின் விமர்சனங்களை வெளிப்படையாக மறுதலித்து, சாவர்க்கர்  குறித்து அவர் கூறிய கருத்துக்கள் அவருடைய தனிப்பட்ட கருத்துக்கள் என்றும், அரசாங்கம் “அவருடன் ஒத்துப்போகவில்லை”  என்றும் அறிவித்தார்.

மகாராஷ்ட்ராவில், முதலமைச்சர் சுசில் குமார் ஷிண்டே,  சாவர்க்கர் குறித்த ஐயரின் விமர்சனங்களுக்கு எதிராகக் கோபத்துடன் எதிர்வினையாற்றியது மட்டுமல்ல, மற்றொரு  காங்கிரஸ் தலைவரான ஆர்.அதிக், சாவர்க்கரைப் புகழ்ந்து,  கையெழுத்துடன்கூடிய முகப்புக் கட்டுரை ஒன்றையே சிவ சேனா  இதழான சாம்னா (Saamna)வில் எழுதினார்.

சாவர்க்கர்வாதிகள் கூட்டத்துடன் இவ்வாறு காங்கிரசும்  இணைந்து கொண்டிருப்பது துரதிர்ஷ்டவசமாகும். வீர் சங்வியின்  கூற்றுப்படி, “காங்கிரசின் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டிருக்கும்  எவருக்கும், ஏன், அடிப்படை மதச்சார்பின்மைக் கொள்கையை  ஏற்றுக்கொண்டிருப்பவர்களுக்கும், வீர் சாவர்க்கரை வணங்குவது  கடினம். காங்கிரசார் ஆர்.எஸ்.எஸ். மற்றும் சிவ சேனை ஆகியவற்றின் சித்தாந்தங்களோடு ஒத்துப்போகவில்லை எனினும்,  திடீரென்று சாவர்க்கரை துதிபாடத் தொடங்கியிருக்கிறார்கள்.”  விடுதலைப் போராட்டத்திற்குத் துரோகம் இழைத்த ஒரு நபர்  மட்டுமல்ல; காந்தியைக் கொல்வதற்குக் கருவியாகவும் இருந்த ஒரு நபருக்கு ஆதரவாக காங்கிரசார் குரல் கொடுப்பது மிகவும்  கொடுமையாகும். 

இன்றையதினம் உள்ள காங்கிரஸ் தலைமை, காந்தி, நேரு,  வல்லபாய் பட்டேல் ஆகியோரின் தலைமையின்கீழ் செயல்பட்ட காங்கிரஸ் காரியக் கமிட்டியானது, 1934 ஜூனில் தன்னுடைய கட்சி  உறுப்பினர்கள் முஸ்லிம் லீக்குடனோ, இந்து மகா சபாவுடனோ மற்றும் ஆர்.எஸ்.எஸ்.-உடனோ எவ்விதமான தொடர்பும்  வைத்துக்கொள்ளக்கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றியிருந்ததை மறந்துவிட்டார்கள். காங்கிரஸ் கட்சி அன்று பிறப்பித்த அந்தக் கட்டளை இன்றைக்கும் செல்லத்தக்கதாகும். ஏனெனில் அந்தத்  தீர்மானம் இதுவரையிலும் ரத்து செய்யப்படவில்லை.

இவ்வாறு பாசிஸ்ட் மற்றும் பிளவுவாதச் சித்தாந்தங்களுக்கு  எதிராக சவால்விடக்கூடிய விதத்தில் செயல்பட்ட மறக்கமுடியாத  பாரம்பர்யங்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சியின் இன்றைய  தலைமை தன்னுடைய பிரகாசமான கடந்த காலத்தை மறந்துவிட்டு,  செயல்பட்டுக்கொண்டிருப்பது துரதிர்ஷ்டவசமாகும். இந்தக்  காரணத்தால்தான் சாவர்க்கர்வாதிகள், ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக  இந்தியாவை எந்தக் காலத்திலுமே விரும்பாத சாவர்க்கர்  போன்றவர்களின் சிந்தனைகளையும், செயல்பாடுகளையும்  இணைத்து இந்திய விடுதலைப் போராட்டத்தின் மகத்தான ஜனநாயக, மதச்சார்பற்ற பாரம்பர்யத்தைக் குழப்புவதில் வெற்றி  பெற்றிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அரசியல் அங்கமாகத் திகழும் பாரதிய ஜனதா கட்சி 2014இல் தேசிய அளவில் ஆட்சிக்கு வந்தபின், சாவர்க்கரைப் போற்றிப் புகழ்வது மேலும்  உத்வேகம் பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, “வீர சாவர்க்கர்  இறப்பதற்கு அஞ்சாத ஒரு வீர புருஷர்”1 என்று வீர சாவர்க்கரைப்  போற்றிப் புகழ்ந்து பேசும் அதே சமயத்தில், தான் ஆர்.எஸ். எஸ். இயக்கத்தின் ஓர் உறுப்பினன் என்று வெளிப்படையாகவோ சொல்லிக்கொள்வதிலும் பெருமை கொண்டார். மோடி, சாவர்க்கர்தான் தன்னைப் பக்குவப்படுத்தி, செயல்பட வைத்த வழிகாட்டி என்று கூறும் அளவிற்குச் சென்றார்.

இந்துத்துவாவின் சின்னமாக விளங்கும் சாவர்க்கரின் 131ஆவது  பிறந்த தின விழா நடைபெற்ற சமயத்தில் பிரதமர் நரேந்திர  மோடியும் அவருடைய அமைச்சரவை சகாக்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தின் மத்தியக் கூடத்தில் நிறுவப்பட்டிருக்கும் சாவர்க்கரின் உருவப்படத்தின் முன் நின்று  வணக்கம் செலுத்திக் கொண்டனர். சாவர்க்கரின் உருவப்படத்திற்கு  அஞ்சலி செலுத்திய பிரதமர்களில் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு  அடுத்ததாக மோடி இரண்டாவது பிரதமராக மாறினார்.3 விஷயம்  இத்துடன் முடிந்துவிடவில்லை. பா.ஜ.க.-வின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சாக்சி மகராஜ் என்பவர், சாவர்க்கரின்  நெருங்கிய மற்றும் நம்பிக்கைக்குரிய சகாவாக விளங்கியவரும்,  தேசப் பிதா மகாத்மா காந்தியைக் கொன்றதற்காக, தூக்குத்  தண்டனை விதிக்கப்பட்டவருமான நாதுராம் கோட்சேயையும்  போற்றிப் புகழ வேண்டும் என்கிற அளவிற்குப் பேசியுள்ளனர்.  கோட்சேயைப் புகழ்ந்து, அவரை காந்திக்கு இணையாக  முன்னிறுத்தி அவர், “நான் நாதுராம் கோட்சேயையும் ஒரு  தேசியவாதி என நம்புகிறேன். மகாத்மா காந்தியும் நாட்டிற்காக  ஏராளமாகச் செய்துள்ளார். கோட்சே ஒரு பாதிக்கப்பட்ட நபராக  இருந்தார். அவர் தவறாக ஏதேனும் செய்திருக்கலாம். ஆனால் அவர் ஒரு தேச விரோதி அல்ல. அவர் ஒரு தேசபக்தர்.”

சுதந்திரம் பெற்று ஒரு ஜனநாயக மதச்சார்பற்ற இந்தியா  உருவாகி சுமார் நூறாண்டுகளான பின்னரும்கூட, சாவர்க்கர்வாதிகள்  வரலாற்றுக்குப் பேரழிவினை ஏற்படுத்தும் விதத்தில் விளையாடிக் கொண்டிருப்பது வருத்தத்தை அளிக்கிறது. சாவர்க்கரை ஒரு மாபெரும் புரட்சியாளர் என்றும், அசைக்கமுடியாத சுதந்திரப்போராட்ட வீரர் என்றும், மகத்தான பகுத்தறிவாளர்  என்றும், ஏன், என்னதான் கூறாமல் விட்டிருக்கிறார்கள்?  அனைத்து வழிகளிலும் அவரைப் பாராட்டி, தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். சாவர்க்கர் அவர் காலத்தில் அவர் கைப்பட  எழுதிய எழுத்துகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தாலே, அவர்  குறித்துக் கூறும் அனைத்தும் தவறானவை என்பதை மெய்ப்பித்திட  முடியும். அதை இந்தப் புத்தகம் செய்திருக்கிறது.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை வரலாற்று  உண்மைகளுடன் வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்கிற நேர்மையான தூண்டுதலின் விளைவே இந்தப் புத்தகமாகும்.  சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் இருந்த உண்மையான சாவர்க்கரை அறிந்து கொள்வதற்காக, இந்த நூலின் ஆசிரியர்,  இந்து மகா சபா, ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்திய அரசாங்கத்தின்  ஆவணக் காப்பகங்களில் கிடைத்த ஒரிஜினல் ஆவணங்களையே பிரதானமாகச் சார்ந்திருக்கிறார். செல்லுலர் சிறையில் சாவர்க்கருடன்  இருந்த புரட்சியாளர்களின் நினைவுக்குறிப்புகளும் மாபெரும்  தகவல் களஞ்சியங்களாக மெய்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.

சாவர்க்கரின் தேச விரோதப் பண்பு 1963இல் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட சாவர்க்கரின் தொகுப்பு நூல்கள் மற்றும்  சமக்ரா சாவர்க்கர் வாங்மாயா:இந்து ராஷ்ட்ரா தர்ஷன் (Samagra  Savarkar Wangmaya:Hinduj Rashtra Darshan) (Collected Works  of Savarkar in English published in 1963) மற்றும் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் சூறாவளிப் பிரச்சாரம்: 1937 டிசம்பர்  முதல் 1941 அக்டோபர் வரையிலும் அவருடைய பிரச்சாரப்  பயணங்கள் – நேர்காணல்களின் தலைவரின் நாட்குறிப்பிலிருந்து  எடுக்கப்பட்ட சாராம்சங்கள் (Vinayak Damodar Savarkar’s  Whirlwind Propaganda:Extracts from the President’s Diary of  his Propagandist Tours Interviews from December 1937 to October 1941) ஆகியவற்றில் நன்கு வெளிப்படுகின்றன. இவற்றை இந்து மகா சபா வெளியிட்டிருக்கிறது. இரண்டாவது புத்தகம்  முக்கியமாக உண்மையான சாவர்க்கரை அறிந்துகொள்ள மிகவும்  முக்கியமான ஒன்றாகும். இது 1941இல் வெளியாகி இருக்கிறது.  இதனை சாவர்க்கரின் நெருங்கிய சகாவாக விளங்கிய ஏ.எஸ். பிதே (A.S.Bhide) தொகுத்திருக்கிறார்.

இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் கூறப்பட்டிருப்பதாவது:  “இந்தப் புத்தகமானது, இன்றைய தினம் இந்துக்கள் இயக்கத்தின் அடிப்படைச் சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தும்போது  பொதுவாகவும், இந்து மகாசபா இயக்கத்தின் தலைவர்கள்,  பிரச்சாரகர்கள் மற்றும் முன்னணி ஊழியர்கள் குறிப்பாகவும்  எ திர்கொள்கிற பல்வேறுபட்ட பிரச்சனைகள் மற்றும்  கேள்விகளுக்கு விடையளிக்கக்கூடிய விதத்தில் அமைந்திருக்கிற அதிகாரபூர்வமானதும் நம்பிக்கைக்குரியதுமான வழிகாட்டியாகும்.”

இந்தப் புத்தகத்தை இந்து மகா சபாவின் ஒவ்வொரு கிளையும்  முன்னணி ஊழியர்களின் அரசியல் கல்விக்காக மட்டுமல்ல;  பல்வேறு பிரச்சனைகளின்மீது தீர்மானகரமான நிலைப்பாட்டினை மேற்கொள்வதற்கு உதவும் விதத்திலும் இதனைக் கட்டாயமாக  வைத்திருக்க வேண்டும். விடுதலைப் போராட்டத்தில் சாவர்க்கரின்  பங்களிப்பை உண்மையிலேயே மேதைமை மிகுந்ததாக ,  இந்துத்துவா அணியினர் நினைத்தார்கள் என்றால் அவர்கள்  இந்தப் புத்தகத்தை இப்போது மக்கள் மத்தியில் வெளியிட்டால்,  மக்கள் சாவர்க்கர் யார் என்பதை அவர் மூலமாகவே நன்கு  தெரிந்துகொள்ள முடியும்.

இந்து மகா சபாவின் ஆவணக் காப்பகத்தில் உள்ள  சாவர்க்கரின் நூல்களிலிருந்து, சாவர்க்கரும் முஸ்லிம் லீகைப்  போலவே இந்தியா இரு நாடுகளாகப் பிரிய வேண்டும்  என்கிற இருநாட்டுக் கோட்பாட்டின் மீது (two nation theory)  நம்பிக்கை கொண்டிருந்ததோடு, அதற்கான நடவடிக்கைகளையும்  மேற்கொண்டிருந்தார் என்பதை நமக்குக் காட்டுகின்றன.

1937இல் அகமதாபாத்தில் நடைபெற்ற இந்து மகா சபாவின்  19ஆவது மாநாட்டு அமர்வில் தலைமையுரையாற்றுகையில் சாவர்க்கர் கூறியதாவது: “இப்போதுள்ள நிலையில்,  இந்தியாவில் இரு விரோதமான தேசங்கள் அடுத்தடுத்து  இருந்து வருகின்றன. சிறுபிள்ளைத்தனமான அரசியல்வாதிகள் பலர் இந்தியா ஏற்கனவே அனைத்துத்  தரப்பினரும் இணக்கமாக வாழ்ந்துகொண்டிருப்பதுபோன்று  கூறிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் ஆழமான தவறினைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அல்லது அவ்வாறு  இணக்கமாக வாழமுடியும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.  இவை நல்ல அர்த்தமுடையவைதான். ஆனாலும் அவர்களின்  கனவுகள் எதார்த்தமாவதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.  அதனால்தான் அவர்கள் மத அடிப்படையில் வகுப்புவாதச் சிக்கல்கள் ஏற்படும்போது பொறுமையற்று இருக்கிறார்கள், தங்கள்  மதஞ்சார்ந்த அமைப்புகளில் தங்களை இணைத்துக்கொள்கிறார்கள்.  ஆனாலும் திடமான உண்மை என்னவென்றால், பல நூறு  ஆண்டுகளாகவே இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே கலாச்சார ரீதியாகவும், மத அடிப்படையிலும் பிரச்சனைகளும்,  தேசிய அளவில் விரோதங்களும் இருந்து வருகின்றன.  இவ்வாறிருந்துவரும் சங்கடமான உண்மைகளை நாம் துணிவுடன்  எதிர்கொள்வோம். இந்தியா இன்றையதினம் இருப்பதுபோல் ஒன்றாகவே இருந்திடும் என்று கருத முடியாது. மாறாக  இந்தியாவிற்குள் இருவிதமான தேசங்கள், இந்துக்களுக்காக  ஒன்றும், முஸ்லிம்களுக்காக ஒன்றும் என்கிற முறையில் இருந்து வருகின்றன.”

1940களில் இந்து மகா சபா, சாவர்க்கரின் ஒரே தலைமையின்கீழ்,  முஸ்லிம் லீக் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி அரசாங்கங்கள்  நடத்தி இருக்கின்றன. இவ்வாறு முஸ்லிம் லீக்குடன் கூட்டாகச்  செயல்படுவதை வெளிப்படையாகவே நியாயப்படுத்தி, 1942இல் கான்பூரில் நடைபெற்ற இந்து மகா சபாவின் 24ஆவது அமர்வில் ஆற்றிய தலைமையுரையின்போது அவர் பேசியதாவது: 

நடைமுறை அரசியலிலும்கூட, இந்து மகா சபா நியாயமான சமரசங்கள் மூலமாக முன்னேற வேண்டும் என்பதை அறிந்திருக்கிறது. இதற்கு சமீபத்தில் சிந்த் (Sind) பகுதியில் நடைபெற்றுள்ள சம்பவங்கள் சாட்சியமாகும். அங்கேயுள்ள   சிந்த்-இந்து-சபா அழைப்பின்பேரில் லீகுடன் கூட்டணி  அரசாங்கத்தில் இணைந்துகொண்டிருக்கிறது. வங்கத்தின்  நிலைமையும் எல்லாருக்கும் நன்கு தெரியும். காங்கிரசார்  எவ்வளவுதான் பணிந்துபோனாலும் அவர்களுடன் சமாதானமாகப்  போக விரும்பாத காட்டுத்தனமான லீகர்கள்கூட இந்து மகா  சபாவுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு, ஃபஸ்லுல் ஹக் தலைமையின் கீழும், நம் மதிப்பிற்குரிய மகா சபா  தலைவர் டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி தலைமையின்கீழும்  கூட்டணி அரசாங்கத்திற்கு ஒத்துக்கொண்டு வந்திருக்கிறார்கள்.  சுமார் ஓராண்டு காலம் வெற்றிகரமாக ஆட்சி செய்து இரு  சமூகத்தினருக்கும் பயனளித்திருக்கிறார்கள்.

சாவர்க்கர், விடுதலைப் போராட்டத்திலிருந்து ஒதுங்கியிருந்தது  மட்டுமல்லாமல், பிரிட்டிஷாரின் நலன்களுக்கு எங்கெல்லாம்  சவால்கள் ஏற்படுகின்றனவோ அங்கெல்லாம் அவற்றை ஒடுக்குவதற்கு உதவியும் செய்தார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது, காலனிய எஜமானர்களின்  கொடூரமான அடக்குமுறையை எதிர்கொண்டிருந்த சமயத்தில்,  சாவர்க்கர் கீழ்க்கண்டவாறு பிரகடனம் செய்தார்:

இந்து மகா சபா தன்னுடைய அடிப்படை நடைமுறை அரசியல் கொள்கையாக, பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் இணக்கமான ஒத்துழைப்பை நல்குவது என்னும் கொள்கையைப் பின்பற்றுகிறது.  மற்றும், அதன்படி, இந்து மகா சபையைச் சேர்ந்தவர்கள்,  அரசாங்கத்தின் பல அமைப்புகளின்கீழ் பணியாற்றும் கவுன்சிலர்கள்,  அமைச்சர்கள், சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,  மற்றும் நகராட்சிகள் மற்றும் பல உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படுபவர்கள் இந்துக்களின் நியாயமான நலன்களைப்  பாதுகாத்து, மேம்படுத்தும் அதே சமயத்தில், மற்றவர்களின்  நியாயமான நலன்கள்மீது ஆக்கிரமிப்பு எதையும் செய்திடாது,  தேசத்திற்கு மிகவும் உயர்ந்த அளவில் தேசபக்தி சேவையைச்  செய்துகொண்டிருக்கிறார்கள். தாங்கள் வேலை செய்கையில் தங்களுக்குள்ள வரம்புகளை நன்கு அறிந்தேதான் அவர்கள், மகா  சபாவைச் சேர்ந்தவர்கள் அவர்களிடம் அந்தச் சூழ்நிலைமைகளில் எந்த அளவுக்கு நல்லதைச் செய்யமுடியுமோ அந்த அளவுக்கு  அதைச் செய்வதை மட்டுமே அவர்களிடமிருந்து எதிர்பார்த்தார்கள்.  அதைச் செய்வதற்கு அவர்கள் தோல்வியுறாவிட்டால், அதற்காக  அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்கள். வரம்புகள்  என்பவை கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கி,  நாளடைவில் அவர்கள் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டு  விடுவார்கள். பரவலான ஒத்துழைப்புக் கொள்கையின் ஒட்டுமொத்த வரம்புகளும் நிபந்தனையற்ற ஒத்துழைப்பிலிருந்து தீவிரமான,  ஆயுதபாணியிலான எதிர்ப்பு வரைக்கும்கூட சென்றிடும். அது  அன்றைய காலத்தில் உள்ள நிலைமை, நம் கைவசம் உள்ள  வளங்களைச் செலவு செய்யக்கூடிய வல்லமை மற்றும் நம்  தேசிய நலன் நமக்கு உத்தரவிடுவது ஆகிய அனைத்தையும்  பொறுத்ததாகும். (ஒரிஜினலில் உள்ளபடி சாய்வு எழுத்துக்கள்  தரப்பட்டிருக்கின்றன.) 

இரண்டாம் உலக யுத்தம் நடந்துகொண்டிருந்த சமயத்தில்,  சுபாஷ் சந்திர போஸ், இந்தியாவை ராணுவரீதியாக விடுவித்திட  முயற்சித்துக் கொண்டிருந்தபோது, சாவர்க்கர் பிரிட்டிஷாரின் யுத்த முயற்சிகளுக்கு வெளிப்படையாகவே உதவும் அளவிற்குச் சென்றார்.  சாவர்க்கர் எந்த அளவுக்கு பிரிட்டிஷாரின் கூட்டத்துடன் சேர்ந்து  அவர்களின் யுத்த நடவடிக்கைகளுக்கு உதவிடத் தீர்மானித்தார் என்பதைக் கீழ்க்கண்ட அவருடைய வார்த்தைகளிலிருந்து நன்கு  அறியலாம்.

‘‘இந்து தேசம் இந்தியாவின் பாதுகாப்பைப் பொறுத்தவரை,  இந்து தேசத்தைச் சேர்ந்த நம் நலன்களைப் பாதுகாத்திட,  இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் வரையிலும்,  அதற்கு எவ்விதமான தங்குதடையுமின்றி, ராணுவ ரீதியாகவும்,  கப்பல்படை மற்றும் விமானப்படை மூலமாகவும், இணைந்து,  இராணுவத் தளவாடங்கள் உற்பத்தி, வெடிமருந்துகள் உற்பத்தி  மற்றும் போர்த்தந்திரக் கருவிகள் உற்பத்தி என அனைத்திலும்  பொறுப்புமிக்க ஒத்துழைப்பினை நல்கிட வேண்டும் . . .  ஜப்பான் யுத்தத்தில் நுழைந்திருப்பது என்பது, பிரிட்டனின்  எதிரிகளால் நாம் நேரடியாகவும், உடனடியாகவும் தாக்குதலுக்கு  உள்ளாகும் நிலைமையை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நாம் குறித்துக்கொள்ள வேண்டும். இதன் விளைவாக, நாம்  விரும்பினாலும் சரி; அல்லது விரும்பாவிட்டாலும் சரி; யுத்தத்தின்  அழிவுகளிலிருந்து நாம் நம் உயிரையும் உடைமைகளையும்  பாதுகாத்துக்கொள்ள வேண்டுமானால், அது இந்தியாவைப்  பாதுகாப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளைத்  தீவிரப்படுத்துவதன் மூலம் மட்டுமே சாத்தியம். எனவே,  இந்து மகாசபைவைச் சேர்ந்தவர்கள், இந்துக்களை, குறிப்பாக  வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாகாணங்களில் உள்ள இந்துக்களை எழுச்சியுறச்செய்து அவர்கள் அனைவரும் ராணுவத்தின் அனைத்துப்  படைகளிலும் இனியும் ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்கிடாது,  தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும்.”  சாவர்க்கர், சாதியம் மற்றும் இனவெறி ஆகியவற்றின் தீவிரமான நம்பிக்கையாளராக இருந்தார். அவர் தன் வாழ்நாள் முழுவதும்  பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளராகவே விளங்கினார்.  அதனை அவர் இந்துத்துவா என்று அழைத்திட்டார். இவை அனைத்தும் இன்றைய சாவர்க்கர்வாதிகளுக்கு நன்கு தெரியும்.  எனினும் அவர்கள் இந்த ஆவணங்களை மக்கள் பார்வைக்குக் கொண்டுவராமல் ஒளித்து வைத்திடவே விரும்புகிறார்கள்.  ஏனெனில் சாவர்க்கரின் உண்மையான சொரூபத்தை மக்களிடம்  காட்டினால், இந்துத்துவா படையணியினருக்குப் பேரழிவு நிச்சயம்  என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். எனவேதான் அதனை வரலாற்றின் குப்பைக்கூடையில் போட்டு வைத்திருக்கிறார்கள்.

சுயமரியாதை உள்ள எந்தவொரு இந்தியனும் , ஏன்,  காலனியாதிக்க எதிர்ப்புப் பாரம்பர்யத்தில் கொஞ்சமாவது நம்பிக்கையுள்ள எவரும், ‘வீர்’ சாவர்க்கரைப் போற்றிப் புகழ்வதை சகித்துக்கொள்ள முடியாது., எனவேதான் இந்துத்துவாவாதிகள்  இதனை மூடிமறைத்திட முயற்சிக்கிறார்கள். அது நம்மால் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றுதான். ஆனால், இந்தியா விடுதலை  பெற்று முக்கால் நூற்றாண்டுக்குப் பின்னரும்கூட, ஜனநாயக-மதச்சார்பற்ற இந்திய அரசியலுக்காக நிற்பவர்கள் சாவர்க்கர் தொடர்பான ஆவணங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரத் தயங்குவதுதான்  உண்மையில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. 

இந்தப் புத்தகத்தில் வெளிக்கொணரப்பட்டுள்ள ஆவணங்கள்  நிச்சயமாக ஏமாற்றுதல், மோசடி மற்றும் தவறான தகவல்களையே முழுமையாக நம்பியிருக்கும் இந்துத்துவா படையணியினருக்குக் கலக்கத்தை ஏற்படுத்தும்.

‘வீர்’ சாவர்க்கர் குறித்து எதுவும்  தெரியாது அவரைப் போற்றிப் புகழும் தலைவர்களுக்கும்,  நபர்களுக்கும் இந்தப் புத்தகமானது அவர் குறித்துக் கூறப்படும்  சரடுகளிலிருந்து உண்மைகளைத் தெரிந்துகொள்வதற்கு  உதவிடும் என்று நம்புகிறோம்.

இந்தப் புத்தகத்தின் ஏழாவது  அத்தியாயமும் சாவர்க்கரால் எழுதப்பட்ட இந்துத்துவாவின்  1923ஆம் ஆண்டு பதிப்பினை மதிப்பீடு செய்கிறது. ஏனெனில் அப்போதுதான் இந்தியாவை இல்லாது ஒழித்திட கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சிந்தனைகள் மற்றும் அதன்வழி  மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதையும்  அவற்றின் ஆபத்துகளையும், ஜனநாயக மதச்சார்பற்ற இந்தியாவை நெஞ்சார நேசிக்கும் அனைவரும் புரிந்துகொள்ள முடியும்.

பாரதி புத்தகாலயம் வெளியீடு

முகத்திரை விலக்கப்பட்ட சாவர்க்கர்

சம்சுல் இஸ்லாம்

தமிழில்: ச.வீரமணி

விலை: ரூ.200

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s