சோசலிச பதாகையை உயர்த்திப் பிடிக்கும் சீன கம்யூனிஸ்டுகள் !


  • அருண் குமார்

2022 அக்டோபர் 22 அன்று,  சீன கம்யூனிஸ்ட் கட்சி (CPC)-யின் 20வது மாநாடு வெற்றிகரமாக நிறைவுற்றது. உலக பொருளாதாரத்தில், சீனா முக்கிய பங்கை வகிப்பதால் இந்த மாநாடு கூர்ந்து கவனிக்கப்பட்டது.

2021இல் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு 17.7 லட்சம் கோடி டாலர்களை எட்டியது. இது உலகின் மொத்த உற்பத்தி மதிப்பில் 18.5 சதவீதம் ஆகும். 2013 முதல் 2021 வரை சீன பொருளாதாரம் சராசரியாக 6.6 சதவீதம் வளர்ந்தது. இது உலக பொருளாதார வளர்ச்சி விகிதமான 2.6 விட அதிகம். 2013-2021 காலத்தில் உலக உற்பத்தி மதிப்பில் சீனாவின் பங்கு சராசரியாக 38.6 சதவீதமாக இருந்தது. ஜி-7 நாடுகள் செய்த மொத்த பங்களிப்பை விட இது அதிகம் ஆகும். அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி, சர்வதேச வர்த்தகத்தில் மிக அதிகமாக ஈடுபடும் நாடாக 2020ஆம் ஆண்டில் உயர்ந்தது சீனா. 2021ஆம் ஆண்டிலும் இந்த முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டு 6.9 லட்சம் கோடி டாலர்கள் மதிப்பிலான வர்த்தகத்தில் ஈடுபட்டது.

தனிநபர் சராசரி தலா வருமானத்தை 2012ஆம் ஆண்டு இருந்த நிலையில் இருந்து இரட்டிப்பாக்கி 11,890 டாலர்கள் என்ற அளவை எட்டியுள்ளது சோசலிச சீனா. வருமான அளவு உயர்வு, கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டின் காரணமாக சீன மக்களின் சராசரி ஆயுள் 77.9 ஆண்டுகளாக உயர்ந்தது. இது உலக சராசரியை விட 5.2 ஆண்டுகள் அதிகம் ஆகும். இது சோசலிச முறையின் மேம்பாட்டை உணர்த்தி,  அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இவையெல்லாம் மாநாட்டின் மீதான முக்கியத்துவத்திற்கு காரணமாக அமைந்தன.

49 லட்சம் கட்சி அமைப்புகளில் செயல்படும் 9.6 கோடி கட்சி உறுப்பினர்களில் இருந்து 2,296 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றார்கள். மாநாட்டு அறிக்கையை தயாரிப்பதற்கு மாபெரும் ஜனநாயக செயல்முறைகள் நடைமுறைபடுத்தப்பட்டன. கட்சியின் மத்தியக் குழுவின் கீழ் இயங்கும் 54 கல்வி மையங்கள் 26 முக்கிய தலைப்புகளில் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு 80 அறிக்கைகளை தயாரித்தன. அவை மாநாட்டு வரைவு அறிக்கைக்கு அடிப்படையாக அமைந்தன. வரைவு அறிக்கை குறித்து 85.4 லட்சம் கருத்துகள் இணையத்தின் மூலம் பெறப்பட்டன. 20வது மாநாட்டில் முன் வைக்கப்பட்ட வரைவு அறிக்கையின் மேல் 4,700 கருத்துக்கள் வந்தன.

இந்த மாநாட்டின் பரிசீலனைக்கு உள்ளாக்கப்பட்ட கடந்த 5 ஆண்டுகளை ‘நிகழ்வுகள்மிக்க காலம்’ என குறிப்பிட்ட அறிக்கை, ஒருங்கிணைக்கப்பட்ட பொருளாதார,  அரசியல், கலாச்சார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டை முன்னெடுக்கும் ஐந்து-தள ஒருங்கிணைந்த திட்டப் பணியில் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ‘முழுமையான மக்கள் ஜனநாயக செயல்முறைகளை ஊக்குவிப்பது, முன்னேறிய சோசலிச கலாச்சாரத்தை வளர்ப்பது, மற்றும் பொது மக்கள் நலனை மேம்படுத்துவது’ ஆகியவற்றிலும் கட்சி வெற்றி கண்டிருப்பதாக அறிக்கை குறிப்பிட்டது. இந்த காலகட்டத்தில்தான், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு இலக்குகளில் ஒன்றான ‘கடும்வறுமையை ஒழித்து’, மதிப்பு மிக்க செழிப்பான சமுதாயத்தை உருவாக்குதல் எட்டப்பட்டது. இப்போது, நூற்றாண்டின் இரண்டாவது இலக்கினை நோக்கி நாட்டை வழிநடத்துகிறது சீன கம்யூனிஸ்ட் கட்சி. 2049 ஆம் ஆண்டிற்குள், இணக்கமான, வளர்ந்த சோசலிச சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.

கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், சீன பிரதமருமான லீ கச் சியாங் அவர்கள் மக்களின் அடிப்படை நலனை பாதுகாப்பதே கட்சியின் முதன்மையான கடமை என குறிப்பிட்டார். அனைத்து மக்களின் பொதுநலன் பாதுகாக்கப்பட்டு, அனைவரும் உயர்வடைந்தால்தான் வளர்ச்சியை நோக்கிய, நவீன மயமாக்கலின் பலன்களை முழுமையாகவும், நியாயமாகவும் பகிர்ந்து கொள்வதாக அமையும் என்றார்.

கடும் வறுமையை ஒழிக்கும் பணியிலும், கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக முழுமையான போரினை முன்னெடுத்து மக்களின் உயிர்களையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் பணியிலும் கட்சியை வழிநடத்தியது இந்த கோட்பாடுகள்தான். முதலாளித்துவ நாடுகளைப் போல, பொருளாதார நலனுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்காமல், மக்களின் உயிர்களை முதன்மைப்படுத்தி செயல்பட்டது சீனா.

மாநாட்டின் முன்பாக அறிக்கை சமர்ப்பித்து பேசிய, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஜி ஜின்பிங், கட்சியின் அடிப்படைக் கோட்பாடுகளை மறவாது இருக்க வேண்டும்; மார்க்சியத்தின்மீதும், சோசலிசத்தின்மீதும் மாறாத பற்றுறுதியுடன் இருக்க வேண்டும் என்றார். கட்சி தனது தன்மையையும், தான் வகிக்க வேண்டிய பாத்திரத்தையும், உறுதிப்பாட்டினையும் மாறாமல் கடைப்பிடிக்கும் என்றார்.

“மார்க்சியம் வேலை செய்கிறது. குறிப்பாக, சீன நிலைமைகளுக்கும், நம் காலத்தின் தேவைகளுக்கும் பொருத்தி அமலாக்கினால்” என்பதுதான் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும், சீன தன்மையிலான சோசலிசத்திற்கும் காரணம் என்று ஜின் பிங்  கூறினார். “சீனா தன் தன்மையை மாற்றிக்கொண்டு, சோசலிச முறையை கைவிட்டு, ஒரு நாளும் ‘மடை மாறிப் போகாது'” என உறுதியுடன் அவர் கூறினார்.

சீனா ஒரு நாளும் மிரட்டல்கள் மற்றும் அழுத்தங்களுக்கு அடிபணியாது என்றும், எந்த ஒரு சவாலையும் தைரியமாக எதிர்கொள்ளும் என்று உறுதியுடன் பேசினார். ‘காலத்தின் தேவைகளுக்கும்’, ‘மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும்’  விடை அளிப்பதற்கான மாறாஉறுதியுடனும் முனைப்புடனும் முன் நகர்ந்தால் மட்டுமே கட்சி முன்னேறிச் செல்லும் என குறிப்பிட்டார். கம்யூனிஸ்டுகள் எப்போதுமே சுயவிமர்சனங்களுக்கு தயாராக இருந்து, சோசலிச கட்டமைப்பின் பாதையில் வரும் அனைத்து தடைகளையும் தாண்டி செல்ல ஆயத்தமாக இருக்க வேண்டும். இந்த திசைவழியில் ஊழலுக்காக ஊற்றுக்கண்கள் நீடிக்கும்வரை அதற்கு எதிராக உறுதியுடன் கட்சி போராடும் எனவும் அவர் வாக்களித்தார்.

ஒழுங்காய்வுக்கான மத்தியக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் கட்சி ஊழலுக்கு எதிராக வலுவான போராட்டத்தை நடத்தி வருவதாகவும்,  அது நல்ல பலன்களை அளித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டது. அந்த அறிக்கையில் ஊழல் சார்ந்த வழக்குகளில் 74,000 பேர் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 48 சதவீதம் பேர் 18வது மாநாட்டிற்கு முன் தவறு செய்தவர்கள் என்றும், 11.1 சதவீதம் பேர் மட்டுமே 19வது மாநாட்டிற்கு பின் குற்றம் செய்தவர்கள் என்றும், இது ஊழல் குற்றங்கள் குறைந்து வருவதை காட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்சித் தலைமையின் இடைவிடாத முயற்சிகள் காரணமாக, பொதுமக்களிடம் 2022ஆம் ஆண்டு மேற்கொண்ட மாதிரி ஆய்வில் கட்சியின் கடுமையான சுய-ஆளுகை ‘மிகத் திறம்பட’ செயல்படுவதாக 97.4 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இது 2012 இல் மேற்கொண்ட ஆய்வு முடிவுகளை விட 22.4 சதவீதம் அதிகம். கட்சி நிர்வாகிகளின் இணையர்கள் மற்றும் பிள்ளைகளின் தொழில் நடவடிக்கைகள் மீதான கண்காணிப்பு அதிகரித்துள்ளது. 2015லிருந்து 4,700 நிர்வாகிகளின் இணையர்கள் மற்றும் பிள்ளைகளின் தொழில் செயல்பாடுகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அடுத்தகட்ட கவனம் ‘முக்கிய துறைகள் மற்றும் முக்கிய இடங்கள்’ என்றும், அங்கே ‘புலிகளை வெளியேற்றி,  பூச்சிகளை நசுக்கி,  நரிகளை வேட்டையாடி ‘ ஊழலுக்கு எதிரான போரில் வெற்றி காண வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது அந்த அறிக்கை.

1982க்குப் பின் கட்சியின் அமைப்புச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வது  தொடர்நடவடிக்கையாக இருந்து வருகிறது. ‘புதிய கோட்பாட்டு கண்டுபிடிப்புகள் மற்றும் செயல்பாட்டின் பரிணாம வளர்ச்சி’ ஆகியவற்றின் தேவைகளில் இருந்து இது மேற்கொள்ளப்படுகிறது. முன்மொழியப்பட்ட திருத்தங்கள் அனைத்தும் ‘திட்டமிட்ட சிந்தனை’யை பிரதிபலிப்பதாகவும், ‘தற்கால சூழல் மற்றும் சீன நிலைமைகளுக்கு மார்க்சியத்தை பொருத்திப் பார்ப்பதில் கிடைத்துள்ள அண்மைக்கால முன்னேற்றங்கள்’ ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை பிரதிபலிப்பதாகவும் உள்ளன. சீன தேசம் புத்துயிர் பெறுவதை சீனாவின் நவீனமயமாக்கலுக்கான பாதை மூலம் முன்னேற்றிக் கொண்டு செல்வதே கட்சியின் பிரதான கடமையாக நிர்ணயிக்கப்பட்டு, கட்சியின் புதிய அமைப்புச் சட்டத்தில் அது சேர்க்கப்பட்டது.

கட்சியின் தொடக்க கால நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்கள், அதன் முக்கிய சாதனைகள், கடந்த நூறு ஆண்டுகளின் வரலாற்றுப் படிப்பினைகள் ஆகியவற்றையும் அமைப்புச் சட்டத்தில் சேர்க்க மாநாடு ஒப்புதல் அளித்தது. போர்க்குணத்தை முன்னெடுத்துச் செல்வது மற்றும் போராடும் திறனை வளர்த்துக் கொள்வது பற்றிய குறிப்பையும் மாநாடு அமைப்புச் சட்டத்தில் சேர்த்தது.

மேலும் ஒரு முக்கிய திருத்தமும் மேற்கொள்ளப்பட்டது. ‘பொது உடைமை என்பதே முக்கிய பங்கு வகித்து, இதர பலதரப்பட்ட முறைகள் அதனுடன் சேர்ந்து வளரும் முறை,  உழைப்புக்கேற்ற விநியோகம் என்பதே முக்கிய பங்கு வகித்து, இதர விநியோக முறைகள் அதனுடன் சேர்ந்து நிலைக்கும் முறை, மற்றும் சோசலிச சந்தை பொருளாதார முறை, ஆகியவற்றை உள்ளடக்கிய அடிப்படை சோசலிச பொருளாதார முறை, இவையே சீன தன்மைகளைக் கொண்ட சோசலிசத்தின் முக்கிய தூண்கள்’ என்ற கோட்பாட்டை அமைப்புச் சட்டத்தில் சேர்ப்பதுதான் அந்த திருத்தம்.

கட்சியின் அனைத்து மட்டங்களிலும் உள்ள நிர்வாகிகள் சிறப்பு-நடத்தையை எதிர்பார்க்கும் எண்ணம் மற்றும் செயல்களை எதிர்ப்பது, ஊழல் நடவடிக்களை எதிர்ப்பது போன்ற கண்ணோட்டத்துடன் கட்சி ஒழுக்கம் குறித்த அத்தியாயங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தற்கால சவால்களை சந்திக்க தேவையான புதிய கடமைகள் மற்றும் கட்டுப்பாடுகள் கட்சி உறுப்பினர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. விரிவான, முழுமையான, கூடுதல் வலுவான வழிமுறை கொண்ட மக்கள் ஜனநாயகத்தை வளர்ப்பது, ஜனநாயகத் தன்மை கொண்ட தேர்தல்கள், கருத்துக் கேட்பு, முடிவெடுப்பு, நிர்வாகம், மற்றும் மேற்பார்வை போன்றவற்றிற்கான சிறந்த அமைப்பு மற்றும் வழிமுறைகளை நிறுவுதல் ஆகியவற்றையும் கட்சி அமைப்புச் சட்டத்தில் சேர்க்க மாநாடு ஒப்புதல் அளித்தது.

205 உறுப்பினர்கள், 171 மாற்று உறுப்பினர்கள் கொண்ட சீன கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மத்திய குழுவையும், 133 உறுப்பினர்கள் கொண்ட மத்திய ஒழுங்காய்வு ஆணையத்தையும் மாநாடு தேர்வு செய்தது. 23 அக்டோபர் அன்று கூடிய புதிய மத்தியக் குழு, கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் ஜி ஜின் பிங் அவர்களை தேர்வு செய்தது. தோழர் ஜின் பிங் அவர்களை உள்ளடக்கிய 7-உறுப்பினர்கள் கொண்ட நிலைக்குழுவினையும்,அரசியல் தலைமைக்குழுவையும் மத்தியக்குழு தேர்வு செய்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய ஆயுதப்படை ஆணையத்தின் தலைவராகவும் ஜி ஜின் பிங் தேர்வு செய்யப்பட்டார்.

நிறைவுரையில், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு போராடும் துணிவும், வெற்றி பெறும் திறனும் உள்ளதாக ஜி அவர்கள் குறிப்பிட்டார். “இந்த புதிய காலத்தின் புதிய பயணத்தில், புதிய,  மேலும் பெரிய, உலகையே வியக்கச் செய்யும் அற்புதங்களை படைக்கும் முழு தைரியமும், திறனும் எங்களுக்கு உண்டு”. 23 அக்டோபர் அன்று ஊடகங்களை சந்தித்த ஜி ஜின் பிங் அவர்கள், இந்த மாநாடானது ‘பதாகையை உயர்த்திப் பிடித்து, சக்திகளை ஒன்று திரட்டி,  ஒற்றுமை மற்றும் உறுதியை பாராட்டும்’ மாநாடு எனக் கூறினார்.

சீனாவில் சோசலிச சமுதாயத்தை கட்டமைக்கும் முயற்சியில் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாம் அனைவரும் வாழ்த்து தெரிவிப்போமாக.

(கட்டுரையாளர், சி.பி.ஐ(எம்) மத்தியக் குழு உறுப்பினர்)

தமிழில்: அபிநவ் சூர்யா

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s