சோசலிசம் இன்று !


(தற்கால உலகில் சோசலிசம் குறித்தான குறிப்பு)

நாம் வாழ்ந்துவரக்கூடிய வரலாற்று காலகட்டம், உலகமே சோசலிசத்தை நோக்கி மாறிச் செல்வதற்கான காலகட்டம் எனலாம். முதலாளித்துவச் சுரண்டல் உச்சம் தொட்டிருக்கும் இன்றைய ஏகாதிபத்திய கட்டத்தில் இருந்து, ஒரு மனிதர் இன்னொருவரை சுரண்டாத, ஒரு நாடு மற்றொரு நாட்டை சுரண்டாத சோசலிச அமைப்பை நோக்கி பயணிப்பதற்கான போராட்டமே, சோசலிசத்திற்கான போராட்டம் ஆகும். இந்த போராட்டம் கடுமையானது. மிக அவசியமானது.

இன்றைய உலகம் எவ்வாறு இயங்கி வருகிறது?

அண்மையில் நடைபெற்ற சி.பி.ஐ(எம்) அகில இந்திய மாநாட்டில், உலக முரண்பாடுகள் தீவிரமடைவதை பற்றி விவாதித்தது. அதன்படி,

உலகம் முழுவதுமே உழைப்புக்கும், மூலதனத்திற்கும் உள்ள அடிப்படையான முரண்பாடு தீவிரமடைகிறது.

வளர்முக நாடுகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, தனது மேலாதிக்கத்தை உறுதி செய்து கொள்ள ஏகாதிபத்தியம் முனைகிறது. இது ஏகாதிபத்தியத்திற்கும் வளர்முக நாடுகளுக்குமிடையேயான முரண்பாட்டை கூர்மையாக்குகிறது.

ஏகாதிபத்திய நாடுகள் தங்களுக்குள்ளாகவும் முரண்படுகின்றன. எனினும் அந்த முரண்பாடுகளின் தீவிரத்தன்மை சற்றே மட்டுப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் ஏகாதிபத்தியத்திற்கும்,  சோசலிசத்திற்குமான முரண்பாடே இந்த மாறும் இடைக்காலத்தில் மைய முரண்பாடாக நீடித்து வருகிறது இந்த நான்கு முரண்பாடுகளில், வரலாற்று நிகழ்வுப் போக்கில் ஏதேனுமொன்று முன்னுக்குவரும்; அதே சமயம் மையமான முரண்பாடு தொடரும்.

அனைத்து துறைகளிலும் தோல்வி:

சமகால முதலாளித்துவத்தை, நவதாராள உலகமயம்” என்கிறோம். இந்த அமைப்பு அனைத்து முனைகளிலும் தோல்வியை எதிர்கொண்டு வருவது கண்கூடாக தெரிகிறது. உலகத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை கணக்கிடும் சர்வதேச நிதியம், 2021 ஆம் ஆண்டில் 6 சதவீத வளர்ச்சியை எதிர்நோக்கியது அந்த சதவீதம் 2022 ஆம் ஆண்டில் 3.2 ஆக சரிந்தது, 2023 ஆம் ஆண்டில் 2.7 சதவீதம் மட்டுமே என்று மெத்தனமாக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 2.8 லட்சம் கோடி டாலர்கள் என்ற அளவில் இழப்பு ஏற்படும் என மதிப்பிட்டுள்ளனர். ஏகாதிபத்திய அமெரிக்காவில் பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி வேகமாக சரிகிறது என்று புளூம்பெர்க் பொருளாதார அறிக்கை எச்சரித்துள்ளது. இவ்விதத்தில் உலகமே பொருளாதார மந்தநிலையை நோக்கி வேகமாக செல்கிறது.

அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் நடவடிக்கைகள் நிலைமையை சிக்கலாக்குகின்றன. ரஷ்யா – உக்ரைன் யுத்தத்தை தொடரச் செய்திடும் விதத்தில் ராணுவ உதவிகளை பிரம்மாண்டமாக மேற்கொள்கிறார்கள். மக்களின் வாங்கும் சக்தி வீழ்கிறது, விலையேற்றமோ உச்சத்திற்கு செல்கிறது. ஊதியப் பிரச்சனைகள், கடுமையான வேலை நிலைமைகள், பறிக்கப்படும் ஓய்வூதிய உரிமைகள் தொழிலாளி வர்க்கத்தினை போராட்டத்தில் தள்ளுகின்றன. (குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில்)

அமெரிக்க டாலரின் ஆதிக்கத்திற்கு எதிராக வளரும் நாடுகள் விவாதிக்க தொடங்கியுள்ளன. மேற்சொன்ன சூழல், முதலாளித்துவ நெருக்கடி அதிகரிப்பதை எடுத்துக்காட்டுவதுடன், மூன்றாம் உலக நாடுகளுக்கும் ஏகாதிபத்திய நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடு அதிகரிப்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

கடந்த நூற்றாண்டில் சோசலிசம்:

இவ்வாறான சூழலில் பாட்டாளி வர்க்க புரட்சி தவிர்க்க இயலாதது என்பதை எங்கெல்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார். புரட்சியின் வழியாக, “பாட்டாளி வர்க்கம் பொது ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்கிறது. இதைப் பயன்படுத்தி, முதலாளித்துவ வர்க்கத்தின் கைகளிலிருந்து நழுவிக் கொண்டிருக்கும் சமூகமயமான உற்பத்திச் சாதனங்களைப் பொதுச் சொத்தாக மாற்றுகிறது. இச்செயலின் மூலம் பாட்டாளி வர்க்கம், உற்பத்திச் சாதனங்களை அவை இதுவரை சுமந்திருந்த மூலதனம் என்னும் தன்மையிலிருந்து விடுவிக்கிறது.  —- ஒரு திட்டத்தின் அடிப்படையில் அமைந்த சமூகமயமான உற்பத்தி சாத்தியம் ஆகிறது.

அதுமுதற்கொண்டு, உற்பத்தியின் வளர்ச்சி, சமுதாயத்தில் வேறுபட்ட வர்க்கங்கள் நிலவுவதை காலத்துக்கு ஒவ்வாததாய் ஆக்குகிறது. சமூக உற்பத்தியில் அராஜகம் எந்த அளவு மறைகிறதோ, அந்த அளவு அரசியல் ஆட்சியதிகாரம் மறைந்து போகிறது…

இந்த உலகளாவிய விடுதலைச் செயலை நிறைவேற்றுவது நவீனப் பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமையாகும். [இச்செயலுக்கான] வரலாற்று நிலைமைகளையும், அதன்மூலம் இச்செயலின் தன்மையையும்கூடத் தீர்க்கமாகப் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கு, இந்த நிலைமைகளைப் பற்றியும், அது நிறைவேற்றப் பணிக்கப்பட்டுள்ள மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த செயலின் நோக்கத்தைப் பற்றியும் முழுமையான அறிவை ஊட்ட வேண்டும். இதுவே பாட்டாளி வர்க்க இயக்கத்தின் தத்துவார்த்த வெளிப்பாடான விஞ்ஞான சோஷலிசத்தின் பணியாகும்.” என்றார் அவர்.

மார்க்சிய இயக்கம் கொடுத்த விஞ்ஞான சோசலிசத்தின் வெளிச்சத்தில் நடைபெற்ற, 1917 சோவியத் புரட்சியும், அதன் பின்னர் உலகம் எதிர்கொண்ட சோசலிச புரட்சிகளும், தேச விடுதலைப் போராட்டங்களும் மனித நாகரீகத்திற்கு வளமான உள்ளடக்கத்தை சேர்த்தன.

முதலாளித்துவப் பொருளாதாரங்கள் ஒவ்வொரு சில ஆண்டுகளுக்கு ஒருமுறை பின்னடைவை தவறாது சந்தித்து, பெரிய மந்தநிலையில் மூழ்கியிருந்த போதும், சோவியத் பொருளாதாரம் இடையறாது வளர்ந்து, அனைவருக்கும் எப்பொழுதும் வேலையை உறுதி செய்தது.

விழுந்த முதலாளித்துவ வர்க்கம் தான் இழந்ததைப் பெற நூறு மடங்கு வலிமையுடன் திருப்பித்தாக்கும் என்று மாமேதை லெனின் எச்சரிக்கை செய்தார். சோசலிச கோட்பாடுகளின் அமலாக்கத்தில் ஏற்பட்ட தவறுகள் சோசலிசத்தின் பின்னடைவுக்கு இட்டுச்சென்றது. அதனைத் தொடர்ந்து சோசலிசத்தையே ஒட்டுமொத்தமாக வீழ்த்தி முடிக்க வேண்டும் என்று உலக முதலாளித்துவ சக்திகள் முயற்சித்தன. அதைத்தான் நாம் இப்போதுவரை பார்த்து வருகிறோம்.

ஆனாலும் சோவியத் ஒன்றியத்திலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோசலிச கட்டமைப்பு உருவாக்கிய முன்னுதாரணங்கள் இப்போது வரலாற்று படிப்பினைகளை கொடுத்து வருகின்றன. இப்போதும் சீனா, கியூபா, வியட்நாம், வடகொரியா, லாவோஸ் ஆகிய நாடுகள் சோசலிசத்தை கட்டமைத்து வருகின்றன.

சாதனைப் பாதையில் சோசலிசம்:

இன்றைய சோசலிச நாடுகள் தங்களுடைய பொருளாதார முன்னேற்றத்தை தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்துகிறார்கள். உற்பத்தி சக்திகளை தொடர்ந்து மேம்படுத்தவும் செய்கிறார்கள். இதன் மூலம், மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, வீடு, உடை, கல்வி மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்திட முன்னுரிமை தருகிறார்கள்.

வறுமை ஒழிப்பில் வியட்நாமும், சீனாவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். சீனாவின் சாதனைகள் இதில் குறிப்பிடத்தகுந்தவையாகும். உலக வர்த்தகத்தில் அதிகம் ஈடுபடும் நாடாக இருந்துவந்த அமெரிக்காவை, கடந்த 2020 ஆம் ஆண்டில் பின்னுக்குத்தள்ளியது சோசலிச சீனா. அந்த இடத்தை இப்போது வரை தக்கவைத்துள்ளது. அதே சமயத்தில் தனிநபர் சராசரி வருமானத்தை 2012 ஆம் ஆண்டின் நிலையில் இருந்து இரட்டிப்பாக்கியுள்ளது. உலக சராசரியை விட 5.2 ஆண்டுகள் அதிகமான சராசரி ஆயுள் (77.9) என்ற நிலையை எட்டியுள்ளது.

அனைவருக்கும் வாழ தகுதியான வீடு, பாதுகாப்பான குடிநீர், சுகாதாரம் ஆகியவைகளை உறுதி செய்துள்ள சீனா, கடும் வறுமையை ஒழித்துள்ளது. ஓரளவு முன்னேறிய சமூகம் என்ற இலக்கினை எட்டியது. இப்போது அடுத்த இலக்கை நோக்கி நடைபோடும் சீனா 2049 ஆம் ஆண்டிற்குள், இணக்கமான, வளர்ந்த சோசலிச சமுதாயத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

“பொதுவுடைமை என்பதே முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், இதர பல்வேறுபட்ட உடைமை முறைகளும் அதனோடு சேர்ந்து வளர்வதற்கான ஒரு முறை; உழைப்பிற்கேற்ற விநியோகம் என்பதே முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், இதர விநியோக முறைகளும் அதனோடு சேர்ந்து நிலைபெறுவதற்கான ஒரு முறை: சோஷலிச சந்தைப் பொருளாதார முறை ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் அடிப்படை சோஷலிச பொருளாதார முறை ஆகிய இவையே பிரத்தியேகமான சீன தன்மைகளைக் கொண்ட சோஷலிசத்தின் மிக முக்கியமான தூண்களாக அமைகின்றன” என்பதை தனது அமைப்பு சட்டத்தில் இணைத்துள்ளது சீன கம்யூனிஸ்ட் கட்சி.

சோசலிச நாடான கியூபாவில், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளையும் தாண்டி, அனைத்து மக்களுக்கும் இலவச கல்வி மற்றும் சுகாதாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. லாவோஸ், வடகொரியா ஆகிய நாடுகளும் தங்கள் பின் தங்கிய நிலைமையை மாற்றி முன்னேறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்கள்.

இந்த நாடுகள் அனைத்துமே, சுய விமர்சன பார்வையுடன், தனது பிரச்சனைகளை ஆய்வு செய்கிறார்கள். பொருளாதாரத்தின் பின் தங்கிய நிலைமை, பிராந்தியங்களுக்குள் நிலவும் ஏற்றத்தாழ்வு மற்றும் ஊழல் உள்ளிட்ட பிரச்சனைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கிறார்கள்.

சோசலிசம் பெற்ற படிப்பினைகள்:

சோசலிசம் என்பது சிக்கலும் இல்லாமல், நேர் கோட்டுப் பயணத்தில் வந்துவிடாது அது கம்யூனிச சமுதாயத்தை எட்டுவதற்கு முந்தைய ஒரு மாறும் இடைக்கால நிலையே ஆகும். மார்க்ஸ் அதை கம்யூனிசத்தின் முதல் கட்டம் என்கிறார்.

“வர்க்க சமுதாயத்திலிருந்து வர்க்கபேதமற்ற சமுதாயமாக மாறும் அந்த (சோசலிசக்)  காலகட்டத்தில் முதலாளித்துவமும் சோசலிசமும் நீண்ட காலத்திற்கு நீடித்திருக்கும்” [சிபிஐ(எம்) தத்துவார்த்த தீர்மானம்] இந்த காலகட்டத்தில் புரட்சி சக்திகளுக்கும், முதலாளித்துவத்தை பாதுகாக்க முனையும் எதிர்ப் புரட்சி சக்திகளுக்கும் இடையே- மோதல் தொடரும்.

சோசலிச சக்திகள் வரலாற்றுப் போக்கிலிருந்து கற்று மேம்படுத்திக் கொண்ட படிப்பினைகளை கீழ்க்காணுமாறு பட்டியலிடலாம்.

  1. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் இன்றியமையாமை
  2. உற்பத்தி சக்திகளை சமூக மயமாக்குதல் தனியார் மூலதனத்தின் இடத்தில் சமூக உடைமையை மாற்றீடு செய்ய வேண்டும் அதில் அரசு உடைமை என்பது பல்வேறு வடிவங்களில் ஒன்றாகவிளங்கிடும்)
  3. சரக்கு உற்பத்தியும், சந்தையும் இருப்பது சோசலிசத்திற்கு எதிரானதல்ல சோசலிச கட்டத்திலும் சந்தை இருக்கும். அதே சமயத்தில் பெரு மூலதனம் உருவாகாத விதத்தில் அரசு அதனை கட்டுப்படுத்திட வேண்டும்
  • திட்டமிட்ட பொருளாதாரம் என்பது சோசலிசத்தின் மற்றுமொரு அடிப்படைக் கொள்கையாகும் ஆனால் திட்டமிடலின் தன்மை, அனைத்து பொருளாதார முடிவுகளையும் மையப்படுத்துவதாக இருக்கக் கூடாது. பொருளாதார முடிவுகளில் மக்களின் பங்கேற்பினை உறுதி செய்ய வேண்டும்.  பொருளாதார நிறுவனங்களை நடத்துவதும், திட்டமிடுதலும் பரவலாக்கப்பட வேண்டும்.
  • ஜனநாயகமே சோசலிசத்தின் உயிர் நாடியாகும். மக்கள் பங்கேற்பை உறுதி செய்கிற, அரசியலமைப்பை உத்திரவாதப்படுத்தும் பல கட்சி முறை இருக்க வேண்டும்.  சோசலிச சமூக அமைப்பிற்கு உள்ளாகவே, மாற்றுக் கருத்துக்களை முன்னெடுக்கும் உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். இதனை முன்னெடுக்கும்போது கட்சியின் முன்னணிப் பாத்திரத்தையோ, அரசின்வர்க்கத்தன்மையையோகைவிடுதல்கூடாது
  • சோசலிச கட்டமைப்பு, முதலாளித்துவ– ஏகாதிபத்திய சூழலிலேயே நடக்கிறது என்பதை மனதில் நிறுத்த வேண்டும் புதிய சமூக அமைப்பினை பாதுகாக்கும் சோசலிச உணர்வினை மக்களிடம் பராமறிப்பதும், வளர்த்தெடுப்பதும்  சோசலிச ஜனநாயகத்தின் கடமையாகும்
  • ஆணாதிக்க அமைப்பு முறையை வீழ்த்தி பாலின சமத்துவத்தை நிலைநாட்டும் அவசியத்தை சோசலிசம் மனதில் நிறுத்திட வேண்டும்.
  • சூழலியல் நெருக்கடி,  புவி வெப்பமாதல் பிரச்சனைகள் புவிக்கோளத்திற்கே நெருக்கடியாக முன்வந்திருக்கின்றன. புவியைப் பாதுகாப்பதும் சோசலிசத்தின் இலக்குகளில் ஒன்றாகும்.

இந்தியாவிற்கான படிப்பினைகள்:

உலக சோசலிச இயக்கத்தின் அனுபவத்தை, இந்தியாவின் திட்டவட்டமான சூழலில் இருந்து ஆய்வு செய்திட்ட சி.பி.ஐ(எம்), தனது திட்டத்தில் கீழ்க்கண்ட பத்தியை சேர்த்தது. இந்தியாவில் ஏற்படுத்தப்படும் “மக்கள் ஜனநாயக அரசு, பொருளாதாரத்தின் முக்கியமான துறைகளில் அரசுடமை மூலம் ஒரு தீர்மானகரமான பாத்திரத்தை வகிப்பதோடு, இதர துறைகளில் கட்டுப்படுத்துகிற, வழிகாட்டுகிற பாத்திரத்தை அரசு வகிக்க வேண்டியுள்ளது பொதுத்துறைக்கு மேலாதிக்கம்தரும், பல்வேறு வடிவ சொத்துடமை கொண்டதாக, பன்முக கட்டமைப்பு கொண்டதாக மக்கள் ஜனநாயகப் பொருளாதாரம் அமையும்.” “உலகப் பொருளாதாரத்தில் பெரும்மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை கருத்தில்கொண்டு வெளிநாடுகளின் மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொள்ளும் அதே நேரத்தில் சுயசார்பு பொருளாதாரத்தை பலப்படுத்துவதில் நாடு உறுதியோடு நிற்கும்”

அதே சமயத்தில், இந்தியாவின் திட்டவட்டமான சூழலையும் தனது தத்துவார்த்த தீர்மானத்தில் விளக்கியது.

இப்போதுள்ள பிரதிநித்துவ அமைப்புகளை (உள்ளாட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம் உள்ளிட்டவைகளை) வெகுமக்கள் இயக்கங்களை வலுப்படுத்தும் விதத்தில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த அவைகளுக்குள் நடத்தும் பணிகளை, வெகுமக்கள் போராட்ட இயக்கத்தோடும், நடவடிக்கைகளோடும் இணைத்து, முதலாளித்துவ நிலவுடைமை அமைப்புக்கு மாற்றான இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும். இதிலிருந்து எந்தவிதமான விலகலும் அனுமதிக்கப்படக் கூடாது.

உழைக்கும் வர்க்க ஒற்றுமையை அதிகப்படுத்தி வலுமிக்க தொழிலாளர் – விவசாயி கூட்டணியை உருவாக்கிட வேண்டும். இந்திய சமுதாயத்தில், வர்க்கச் சுரண்டலும் சமூகச் சுரண்டலும் நிலவி வருவதை மார்க்சிஸ்ட் கட்சி உணர்ந்துள்ளது. இப்போதைய சமூக பொருளாதார அமைப்பில், முதலாளித்துவ – அரை நிலவுடைமை வர்க்கங்களின் சுரண்டல் தொடர்கிறது, பல்வேறு வடிவிலான சாதி, இன மற்றும் பாலின ஒடுக்குமுறைகளும் நிலவுகின்றன. ஆலும் வர்க்கங்கள் தமது சுரண்டலின் மூலமாக உபரியை உறிஞ்சிக் கொள்கிறார்கள், தங்கல் மேலாதிக்கத்தை நிலைநாட்டிட சமூக ஒடுக்குமுறையின் அனைத்து வடிவங்களையும் பயன்படுத்திக் கொள்கிறன. எனவே, சமூக ஒடுக்குமுறைகளுக்கும், அனைத்து வடிவிலான சுரண்டலுக்கும் எதிரான போராட்டங்களை ஒருங்கிணைத்து முன்னெடுக்க வேண்டும் என்ற புரிதலை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.

மேலும், இதே பின்னணியில் இருந்து அனைத்து விதமான அடிப்படைவாத சக்திகளுக்கும், வகுப்புவாத சக்திகலுக்கும் எதிரான போராட்டத்தை பார்க்க வேண்டும். மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் அடிப்படைகளை பாதுகாத்தால்தான், வர்க்கத் திரட்டலை வேகப்படுத்திட முடியும். மேற்கண்ட சக்திகள் வர்க்க ஒற்றுமையை சிதைத்து, சுரண்டப்படும் மக்களிடையே வகுப்புவாத விஷத்தை பரப்புகிறார்கள். எனவே, வகுப்புவாதத்தை எதிர்க்கும் வீரம் செறிந்த போராட்டம், பாட்டாளிவர்க்க புரட்சிகர இயக்கத்தின் முன்னுள்ள முழுமுதல் கடமையாகும்.

ஏகாதிபத்திய எதிர்ப்பு, புதிய தாராளமய கொள்கை எதிர்ப்பு, இந்துத்துவா/வகுப்புவாத எதிர்ப்பு, சமூக ஒடுக்குமுறை, மேலாதிக்க எதிர்ப்பு ஆகியவற்றை மையமாக வைத்து சோசலிசத்தை நோக்கி மாறிச் செல்வதற்கான போராட்ட இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s