இந்தியாவில் மதச்சார்பின்மை: வரலாறு, விலகல்,சவால் !

  • இரா.சிந்தன்

இந்திய அரசியலமைப்பை தாங்கி நிற்கும் நான்கு அடித்தளங்களாக, மதச்சார்பற்ற மக்களாட்சி, பொருளாதார இறையாண்மை, கூட்டாட்சி மற்றும் சமூக நீதி ஆகியவை அமைந்துள்ளன. இன்றைய பாஜக/ஆர்.எஸ்.எஸ் ஆட்சியினால் இந்த அடித்தளங்கள் அனைத்துமே தாக்குதலுக்கு உள்ளாகின்றன. 73 வது குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ள சூழலில், இந்திய மக்களாட்சியின் மதச்சார்பற்ற அம்சம் பற்றி விரிவாக பார்ப்போம்.

முதலில், மதச்சார்பின்மை என்பது மதவழி சிறுபான்மையினரின் பிரச்சனை மட்டுமே அல்ல. அது இந்திய நாட்டின் மக்களாட்சி கட்டமைப்பின் பிரிக்க முடியாத அங்கம் ஆகும்.

தொடக்கத்தில், பாஜகவின் தலைவர்கள் தாங்கள் ‘போலி மதச்சார்பின்மையை’ எதிர்ப்பதாக சொல்லி வந்தார்கள். ஆனால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரோ, ‘மதச்சார்பின்மை’ என்பது மேற்கத்திய சிந்தனை என்று சொல்லி அதை விலக்கினர்.  

தற்போது, ஆர்.எஸ்.எஸ்/பாஜக பரிவாரம் ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. ஆட்சி நிர்வாகம் ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டுதலிலேயே நகர்கிறது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மதச்சார்பின்மை கோட்பாடு அவர்களால் தாக்கப்படுகிறது. இந்த நிகழ்வுகளை தனியாக பார்க்க முடியாது. ஒட்டுமொத்த இந்திய மக்களாட்சி அமைப்பிற்கே விடுக்கப்பட்டுள்ள சவாலாகத்தான் பார்க்க வேண்டும்.

செக்யூலரிசமும் அதன் பொருளும்:

‘செக்யூலரிசம்’ என்ற ஆங்கிலச் சொல், தமிழில் மதச்சார்பின்மை எனப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளின் வரலாற்று சூழலில் அரசாட்சியில் தேவாலயங்களின் தலையீடு மிதமிஞ்சியதாக இருந்தது. எனவே, அந்த நாடுகளில் முதலாளித்துவ மக்களாட்சி உருவானபோது அரசாட்சியிலும், அரசியலிலும் இருந்து தேவாலயங்கள் விலக்கி நிறுத்தப்பட வேண்டிய அவசியம் இருந்தது. அதுவே மதச்சார்பின்மை வலியுறுத்தப்படுவதற்கான பிரதான அம்சம் ஆகும். ஆனாலும், சோசலிச நாடுகளைத் தவிர வேறு எந்த முதலாளித்துவ நாடுகளும் மதமும், அரசியலும் முற்றாக பிரிக்கப்பட வேண்டும் என்ற தெளிவோடு இல்லை.

எந்தவொரு நாட்டின் மக்களாட்சி கட்டமைப்பும், முழுமையான கருத்தாக முதலில் வடிவமைக்கப்பட்டு, அதன் பிறகு அமலாக்கப்படுவது அல்ல. இறக்குமதி செய்யப்படுவதும் அல்ல. அந்தந்த வரலாற்று காலகட்டத்தில், மக்களின் அனுபவங்களில் இருந்தே, போராட்டங்களின் மூலமாக வடிவம் பெறுகிறது. அதனால்தான், நவீன நாடாளுமன்ற மக்களாட்சி முறை நிலவக்கூடிய நாடுகள் எதுவுமே, ஒன்றை இன்னொன்று பிரதியெடுத்தது போல அமைந்ததில்லை. எனவே, மக்களாட்சியின் ஒரு அம்சமான மதச்சார்பின்மையின் கருப்பொருளையும் இந்திய சூழலில் இருந்து ஆய்வு செய்ய வேண்டும்.

அரசியலும், மதமும் பிரித்து வைக்கப்பட வேண்டும் என்ற பார்வை, இந்தியா மக்களாட்சியை பாதுகாக்க மிக மிக அவசியமானதாகும்.

வரலாற்றில் இணக்க வாழ்வு

இந்திய துணைக்கட்டத்தில் வாக்குரிமையும், நாடாளுமன்றம் உள்ளிட்ட பிரதிநிதுத்துவ அவைகளும் நவீன மக்களாட்சியின் ஏற்பாடுகள். இருப்பினும், மன்னராட்சிக் காலங்களிலும் சமூகத்தில் நல்லிணக்க வாழ்வுக்கான தேவையும்,  மதத்தில், நம்பிக்கையில் அரசு தலையிடாமைக்கான அவசியமும் உணரப்பட்டுள்ளன.

சங்ககால தமிழ் இலக்கியமான பட்டினப்பாலை (பத்துப்பாட்டு தொகுப்பு) காவிரி பூம்பட்டினத்தின் நகர வாழ்க்கையை விவரிக்கிறது. அந்த நாட்டில் பெளத்தம், சமணம், முருக வழிபாடு, காளி கோயில்கள், வீர மறவர் நினைவாக நடப்பட்ட கற்களை தொழுதல் என்று பல்வேறு நம்பிக்கைகள் நிலவுகின்றன. வேள்வி செய்யும் ஆரிய முனிவர்களும் இருக்கிறார்கள். உலகின் பல பகுதிகளில் இருந்தும் துருக்கியர்கள், சீனர்கள், இலங்கையர், யவனர்கள் வந்து செல்லும் வணிகத் தளமாக இருந்துள்ளது.

பட்டினப்பாலை நூலை எழுதியவர் சைவர் என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. ஆனால் அவர் தனது இலக்கியத்தை பொதுவானதாக படைத்துள்ளார். சோழ மன்னன் கரிகாற்பெருவளத்தானின் ஆட்சியும் கூட  சமய/மத நம்பிக்கை வழிப்பட்டதாக அந்த பாடல்களின் வழியாக அறியமுடியவில்லை.

அன்றைய தமிழ்ச் சமூகத்தில் அவரவர் நம்பிக்கை, பேச்சு மொழிகள் மற்றும் சிந்தனைகள் சார்ந்த நல்லிணக்கமும் நிலவிவந்தன. கலைக்கூடங்களில் பல்வேறு மொழி பேசும் மாறுபட்ட சிந்தனை கொண்ட அறிஞர்களுக்கிடையே  விவாதங்கள், அறிவுப் பகிர்வுகள் நடந்து வந்துள்ளன.

அப்போது சமுதாயத்தில் மனித உருவில் சிலைகளை வைத்து  வழிபாடு செய்யும் வழக்கம் இல்லை. கந்து எனப்படும் கல்லை நோக்கி தொழுவதை வேற்று நாட்டாரும் செய்தார்கள். பல்வேறு மத நம்பிக்கைகள் அருகருகே பின்பற்றப்பட்டு வந்தன.  அரசாட்சி என்பது அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என்பது பொது விதியாக இருந்து வந்ததும் தெரிகிறது.

பட்டினப்பாலை நூல் எழுதப்படுவதற்கு 2 நூற்றாண்டுகள் முன்பே அசோகப் பேரரசினால், அதன் ஆட்சிப் பகுதிகள் நெடுகிலும் தர்ம சக்கரம் பொறித்த தூண்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த தூண்களில்  அரசாட்சிக்கான ஒழுக்கங்கள் பிரகடனம் செய்யப்பட்டிருந்தன. அதில் ஒன்று  மக்களின் தனிப்பட்ட நம்பிக்கைகளை அவரவர் தேர்ந்தெடுத்து பின்பற்றுவதற்கான உரிமையை அரசாங்கம் உறுதி செய்திட வேண்டும் என்பதாகும். பின்னர் ஏற்பட்ட முகலாயர் அல்லது பிற முஸ்லிம் மன்னர்களின் ஆட்சியிலும் பெரும்பாலும் இந்த முறையே தொடர்ந்தது. கடந்த காலத்தில் பொதுவான நிலவிய சகிப்புக் கொள்கை என்பது வேறுபட்ட மத நம்பிக்கைகள் அருகருகே வாழ்வது தொடர்பானதாக மட்டுமில்லை. வேறுபட்ட மொழி, பண்பாடு மற்றும் மரபு சார்ந்த வேற்றுமைகளை அங்கீகரித்து இயங்குவதாகவும் இருந்தது.

எனவே, இந்திய சமூகத்தில் நிலவிய செழிப்பான நல்லிணக்க வரலாற்றை மதச்சார்பின்மைக்கான அடித்தளமாக காண முடிகிறது. மேலும், இந்திய வரலாற்றின் பொதுவான போக்கு, உலகின் வேறு பல பகுதிகளை ஒத்ததாகவே இருந்துவந்துள்ளது.

அதே சமயத்தில், பெரிய புராணம் குறிப்பிடும் சமணர் கழுவேற்றத்தைப் போன்று சகிப்பின்மையும், மத அடிப்படையிலான ஒடுக்குமுறைகளும் நிலவிய காலங்களும் வரலாற்றில் உண்டு. மத அடிப்படையில் இயங்க முயற்சித்த பல்வேறு மதங்களை, நம்பிக்கைகளை பின்பற்றியவர்களில் – கஜினி முகமது, தைமூர் போன்ற  மோசமான அரசர்களும் உண்டு. ஆனால் அதை மட்டுமே ஒட்டுமொத்த வரலாறாக முன்னிறுத்தி, இன்றைய அரசியலை பார்க்க முடியாது.

ஆனால் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தன்னுடைய அரசியலுக்கு ஏற்ற விதத்தில் வரலாற்றை திரிப்பதன் மூலம் வகுப்புவாத அரசியலை வளர்த்தெடுக்கிறது. மேலும் மக்களாட்சி ஏற்பாட்டிற்கே  நேர்மாறான, அரதப்பழைய சட்ட நூலான ‘மனுஸ்மிருதியை’ அரசமைப்பிற்கான முன் மாதிரியாக உயர்த்திப் பிடிக்கிறார்கள். அந்த நூலின் உள்ளடக்கம் அவர்களின் அரசியல் திட்டத்திற்கு நெருக்கமாக உள்ளது.

மனுவின் சட்டங்கள், பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வினையும், பாலின அடிப்படையில் வாய்ப்பு மறுப்பதையும், அடிமைப்படுத்துவதையும் நியாயப்படுத்துகின்றன. நிலவுடைமைச் சுரண்டலை தீவிரப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்ட அந்த சட்டங்கள் மக்களாட்சிக்கு நேர் விரோதமானவை. சனாதனத்தை, பிராமண மேலாதிக்கத்தை நிலைநாட்டும் நோக்கம் கொண்டவை. அதனை உயர்த்திப் பிடிக்கும் சங்க பரிவாரம், ஒட்டுமொத்த மக்களாட்சியையும் தகர்க்க நினைக்கிறது.

விடுதலைப் போரில் மக்கள் ஒற்றுமை

நவீன இந்தியாவிற்கான மதச் சார்பின்மைக் கொள்கையின் வலுவான அடித்தளம், விடுதலைப் போராட்ட காலத்தில் உருவானது.

தமிழ்நாட்டில் 1801 ஆம் ஆண்டில் கம்பெனி ஆட்சிக்கு எதிராக நடந்த மருது சகோதரர்கள் கிளர்ச்சிக்கும், வேலு நாச்சியாருக்கும் ஹைதரும், திப்புவும் அளித்த உதவிகளிலும், 1806 வேலூர் கிளர்ச்சியிலும் வலுவான மத ஒற்றுமை வெளிப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாடுதழுவிய அளவில் பரவலான எழுச்சியாக அமைந்தது 1857 முதல் சுதந்திர போராட்டம். மத ஒற்றுமை வெளிப்பட்ட பொற்காலமாக அது இருந்தது. ராணி லட்சுமி பாயும், பேகம் ஹசரத் மஹாலும், மவுலவி அஹமதுல்லாவும், ராவ் துலா ராமும் தோளோடு தோள் நின்று கம்பெனி ஆட்சியை எதிர்த்தார்கள். ராணி லட்சுமி பாயின் காலாட்படை/பீரங்கிபடை தளபதிகள் மற்றும் அவரது பெண் மெய்க்காப்பாளர் முஸ்லீம்களாவர்.  பேகம் ஹஸ்ரத் மகாலின் தளபதிகளில் பாதி பேர் இந்துக்களாவர். மொகலாய முடியரசர் பகதுர் ஷா சபர் இந்த போராட்டத்தின் அடையாளமாக இருந்தார். இந்த ஒற்றுமை பிரிட்டிஷ் அரசாட்சிக்கு ஆபத்தானதாக அமைந்தது.

முதல் சுதந்திர போராட்டம் குறித்து, (பிற்காலத்தில் மன்னிப்புத் திலகமாகிய) வி.டி.சாவர்க்கர் எழுதிய நூல் மிகவும் புகழ்பெற்றதாகும். அதில் அவர் “இந்தியாவின் சுதந்திரத்திற்கு ஏற்பட்ட அபாயத்தை முதன்முதலில் உணர்ந்தவர்கள் பூனாவைச் சேர்ந்த நானா பட்னாவிசும், மைசூரின் ஹைதர் சாஹிபும்தான்” என்கிறார். திப்பு சுல்தானையும், ஹைதர் அலியையும் வெகுவாக புகழ்ந்துள்ளார். (இந்த நூலை எழுதும்போது அவர் ‘இந்துத்துவா’ திட்டத்தை உருவாக்கியிருக்கவில்லை)

மக்களின் விடுதலை எழுச்சியை ரத்த வெள்ளத்தில் ஒடுக்கிய பிரிட்டிஷ் ஆட்சி, நேரடியாக இங்கிலாந்து ஆளுகையின் கீழ் இந்தியாவை கொண்டு வந்தது. அதன் பிறகு இந்திய அரசியலில் வகுப்புவாத பிரிவினைகளை உருவாக்கும் முயற்சிகளையும் வேகப்படுத்தியது.

அதே சமயம் போராட்டக் களத்தில் முன்னின்ற தலைவர்கள், மதங்களைக்  கடந்த ஒற்றுமையை முன்னெடுத்தார்கள். அதன் அடிப்படையில், விடுதலைக்கு பிறகான இந்தியா எவ்வாறு அமைய வேண்டும் என்பதையும் முன்வைத்தார்கள்.

பரிணமித்த அரசமைப்பு சட்டம்

விடுதலைக்கு முன்பே நவீன இந்தியாவின் அரசமைப்பு தொடர்பான வரைவுத் திட்டங்களை உருவாக்கும் முயற்சிகள் தொடங்கிவிட்டன. 1895 ஆம் ஆண்டில் பால கங்காதர திலகர் ‘சுதந்திர மசோதா’ (ஸ்வராஜ்) என்று, அரசமைப்புச் சட்டம் ஒன்றை நாட்டு மக்களின் முன் வைத்தார். அந்த ஆவணம் அனைத்து மதங்களும் இந்தியாவின் மதங்களாக இருக்கும் என்று பிரகடனம் செய்தது.

ஆனால், ஆட்சி அதிகாரத்தை கைவசம் வைத்திருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமோ,  வகுப்புவாத தன்மையுடன் அன்றைய அரசமைப்பில் திருத்தங்களை செய்தது. ஏற்கனவே ஆங்காங்கு தென்பட்ட வகுப்புவாத போக்குகளை, ஆதரித்து வளர்ப்பதாக பிரிட்டிஷ் அரசாங்கம் இயங்கியது. அதன் விளைவாக மத அடிப்படையிலான வகுப்புவாத அமைப்புகள் உருவாயின. 1906ஆம் ஆண்டில் முஸ்லிம் லீக்கும், பல்வேறு இந்து சபாக்களும் அமைக்கப்பட்டன. இந்து சபாக்கள் ஒருங்கிணைந்து 1913 ஆம் ஆண்டில் இந்து மகாசபா ஏற்பட்டது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, 1925ஆம் ஆண்டில்தான் அமைக்கப்பட்டது. இருப்பினும் மற்ற வகுப்புவாத அமைப்புகளில் இருந்து ஆர்.எஸ்.எஸ் வேறுபட்டதாகும். மற்ற அமைப்புகளை ஒத்த விதத்தில் பழமையை மீட்டமைத்தல், மத அடிப்படையிலான அரசியலை முன்னெடுத்தல் என்பதோடு குறிப்பிடத்தக்க வேறு சில அம்சங்களும் இருந்தன.

  • முதலாவது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இத்தாலியின் பாசிசம் மற்றும் ஜெர்மானிய நாசிசத்திடம் இருந்து ஊக்கம் பெற்றதாக இருந்தது.
  • இரண்டாவது, மற்ற வகுப்புவாத அமைப்புகளில் இருந்து வேறுபட்டு, ‘இந்துக்களை ஆயுதமயமாக்குவோம்’ என்றது.
  • மூன்றாவது, பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக மக்கள் போராடி வந்த சூழலில், அதைப்பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் உள்ளுக்குள்ளேயே எதிரிகளை கட்டமைத்து வெறுப்பினை மூட்டியது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அதன் அரசியல் திட்டமும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு சேவகம் செய்வதுடன், மராட்டியத்தில் வளர்ந்து வந்த பிராமணர் அல்லாதார்/தலித் மேம்பாட்டிற்கான அரசியலை எதிர்கொண்டு – சனாதன சிந்தனையை உயர்த்திப்பேசுவதாகவும், முன்னெடுப்பதாகவும் இருந்தன. அவர்களே மத அடிப்படையில் இரண்டு தேசங்கள் என்ற கொள்கையை முதலில் முன்வைத்தார்கள். அதன் பின்னர் சிறுபான்மை வகுப்புவாத அமைப்புகளில் இருந்தும் இரு தேசங்கள் என்ற பிரிவினை முழக்கம் எழுந்தது. இருப்பினும் அந்த காலகட்டத்தில் வகுப்புவாத/பாசிச வகைப்பட்ட திட்டத்திற்கு பரந்த மக்கள் ஆதரவு இல்லை என்பது இயல்பானது.

1925ஆம் ஆண்டில், பகத் சிங் செயல்பட்ட இந்துஸ்தான் சோசலிச குடியரசு சங்கத்தின் ‘புரட்சிகர திட்டம்’ என்ற அரசியலமைப்பு சட்ட நகலை வெளியிட்டனர்.  1927ஆம் ஆண்டு சைமன் ஆணையத்தை புறக்கணித்த போராட்டத்தில் நேரு அறிக்கை வெளியிடப்பட்டது. இவை இரண்டுமே மதச் சார்பின்மைக் கொள்கையின் வழி நின்றன. இந்திய மக்களுக்கு கூடுதல் அதிகாரத்தையும் சுயாட்சியையும் உறுதி செய்வதை நோக்கியதாக இருந்தன.

மதச்சார்பின்மையில் உறுதி

1928ஆம் ஆண்டில், காங்கிரசின் மராட்டிய பிராந்திய மாநாடு நடந்தபோது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இவ்வாறு பேசினார்: “சமூகத்தை ஜனநாயகப்படுத்தாமல், அரசியலில் மட்டும் மக்களாட்சியை நிறுவிட உங்களால் முடியாது. இல்லை நண்பர்களே, அரசியலில் மக்களாட்சியும், சமூகப் பார்வையில் பழமைவாதத்தையும் கொண்டுள்ள விநோதமான கதம்பமாக நாம் ஆகிவிட வேண்டாம்… பிறப்பினால் கிடைக்கும் சாதகங்களும், சாதி அல்லது நம்பிக்கைகளும் அகற்றப்பட வேண்டும்… பெண்களின் நிலை உயர்த்தப்பட வேண்டும்… இந்தியாவின் பல்வேறு சமுதாயங்களிடையே பிரத்யேக நிலைமைகள் நிலவிடும் சூழல்தான் இப்போது நிலவுகிறது. நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டுமானால் மதச்சார்பின்மையும், அறிவியல் பயிற்சிகளும் அவசியப்படுகின்றன…  மதச் சார்பின்மையும், அறிவியல் சிந்தனைகளையும் போல, மதவெறியை குணப்படுத்தக் கூடிய வேறொன்று இல்லை.” என்றார்.

1931ஆம் ஆண்டில், கராச்சியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் சர்தார் வல்லபாய் பட்டேல் “எங்களுக்கு தேவை இதயப்பூர்வமான ஒற்றுமை… பெரும்பான்மை சமூகம் தைரியத்தை இரு கைகளிலும் எடுத்து சிறுபான்மையினரின் இடத்தில் தங்களை வைத்து பார்க்கும்போதுதான் அத்தகைய ஒற்றுமை ஏற்படும். இதுதான் ஞானத்தின் உச்சம்” என்று தெளிவாக முன்வைத்தார்.

மக்கள் போராட்டத்தின் அழுத்தம் காரணமாக, பிரிட்டிஷ் ஆட்சி சில சமரசங்களை முன்னெடுத்தது. அதில் உருவானதுதான் 1935 இந்திய அரசாங்க சட்டம். ஆனால், அதிலும் வகுப்புவாத பிரிவினையை தூண்டும் முயற்சிகள் இருந்தன. இவ்வாறு நவீன இந்தியாவிற்கான அரசாட்சி எவ்வாறு அமையவேண்டும் என்பதிலேயே மிக நீண்ட விவாதங்கள் விடுதலைப் போராட்ட காலத்தில் நடைபெற்றன.

இந்தியா விடுதலை பெற்றபோதும், நமது நல்லிணக்க வாழ்வின் மீதும்,  மதச்சார்பற்ற அரசியலின் மீதும் ஒரு சம்மட்டி அடியைக் கொடுத்தே அகன்றது பிரிட்டிஷ் காலனி நிர்வாகம். அவ்வாறு நிகழ்த்தப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் காரணமாக மத அடிப்படையிலான வகுப்புவாத கலவரங்கள் நிகழ்ந்தன. வகுப்புவாத சக்திகளும் அந்த களத்தை பயன்படுத்தி வளர முயற்சித்தார்கள். இவை வரலாற்றின் ஆறாத வடுக்கள் ஆகின.

ஆர்.எஸ்.எஸ்., முன்னெடுத்ததும், பிறகு சிறுபான்மை வகுப்புவாதிகள் கையில் எடுத்துக் கொண்டதுமான இரு தேசங்கள் பிரிவினையை நோக்கிய வகுப்புவாத வெறி நடவடிக்கைள், 1940களிலேயே தொடங்கிவிட்டன. ஆர்.எஸ்.எஸ் மட்டுமல்லாது, சிறுபான்மை வகுப்புவாத சக்திகளும் களத்தில் சேதங்களை விளைவித்தார்கள். பிரிவினையை காங்கிரஸ் கட்சி ஏற்கவில்லை. அதன் தலைவராக இருந்த மவுலானா  அபுல்கலாம் ஆசாத்திடம் கைகுலுக்க மறுக்கும் அளவுக்கு வெறுப்போடு முகமது அலி ஜின்னா (முஸ்லிம் லீக்)  செயல்பட்டார். இவ்வாறு பெரும்பான்மை வகுப்புவாத அமைப்புகளும், சிறுபான்மை வகுப்புவாத அமைப்புகளும் ஒருவருக்கொருவர் தீனி கொடுத்தார்கள்.

ஆனால், இந்திய தேசிய இயக்கத்தின் தலைவர்கள் மதச்சார்பின்மையில் உறுதி காட்டியது முக்கியமானதாகும். 1947ஆம் ஆண்டில், ‘இந்து அரசு’ அமைக்க வேண்டும் என்ற ஆலோசனையை வல்லபாய் படேலிடம், பிர்லா முன்வைத்தார். அதற்கு ஜூன் 10ஆம் தேதியிட்ட கடிதத்தில் பதில் கொடுத்துள்ளார் பட்டேல். “இந்து மதத்தை அரசின் மதமாகக் கொண்ட இந்து நாடாக இந்துஸ்தானை கருதுவதற்கு இயலாது என்று நினைக்கிறேன். வேறு சில சிறுபான்மையினர் இந்தியாவில் இருக்கிறார்கள். அவர்களை பாதுகாப்பது நமது முதன்மையான பொறுப்பு என்பதை நாம் மறக்கக் கூடாது. அரசு என்பது சாதி மதங்களைக் கடந்து, அனைவருக்குமானதாக இருக்க வேண்டும்”.

இந்திய மக்களாகிய நாம்

விடுதலை இந்தியாவின் அரசமைப்பு எவ்வாறு அமைய வேண்டும் என அரசியல் நிர்ணய சபை விவாதித்தது. இந்த விவாதங்கள் 3 ஆண்டுகள் நடைபெற்றன. பிரிவினையின் மிக மோசமான வன்முறைகளைக் கண்ணுற்ற அந்த அவை மதச்சார்பின்மையில் உறுதி காட்டியது.

அரசியல் நிர்ணய சபையின் விவாதத்தில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தொடக்க வரி என்னவாக இருக்க வேண்டும் என்பதும் விவாதிக்கப்பட்டது. கடவுளின் பெயரால் இந்த நாட்டை நிர்மாணிக்கிறோம் என்ற வாசகமும் அவையில் முன்வைக்கப்பட்டது. ஆனால், இறுதியாக, ‘இந்திய மக்களாகிய நாம்’ என்று தொடங்க வேண்டும் என்றே முடிவானது. இந்த முடிவு வாக்கெடுப்பு நடத்தி இறுதி செய்யப்பட்டது.

13 பிரிட்டிஷ் மாகாணங்களும், 565 மன்னராட்சிப் பகுதிகளும், 8 மதங்களும், ஆயிரக்கணக்கான சாதிகளும், மொழிவழி தேசியங்களும், ஏராளமான மொழிகளும், இனக்குழு சமூகங்களும், பழங்குடிகளும் கொண்டு உருவான ஒரு நாட்டில், ‘மதச்சார்பின்மை இல்லாது போனால் அரசியல் அமைப்பு சட்டம் முன்வைக்கிற எல்லா சிறப்பு அம்சங்களும் பொருளற்றதாகிப் போகும்’ என்றார் அண்ணல் அம்பேத்கர். இவ்வாறுதான் இந்திய மக்களாட்சியின் சாரத்தில் இருந்து பிரிக்க முடியாத அங்கமானது ‘மதச்சார்பின்மை’.

அரசமைப்புச் சட்டத்தின் சாரம்

இருப்பினும், இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில் ‘மதச்சார்பற்ற’ என்ற சொல் 1975 ஆம் ஆண்டில்தான் சேர்க்கப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்புகளில், இந்திய அரசமைப்பில் இருந்து மதச்சார்பின்மைக் கொள்கையை பிரிக்கவே முடியாது என்பதை தெளிவாக்கியே வந்துள்ளது. முதலில் 1962 ஆம் ஆண்டில் தனது கருத்தாகவும் பின்னர், 1973 ஆம் ஆண்டு கேசவானந்த பாரதி வழக்கின் தீர்ப்பிலேயே ஒரு பகுதியாகவும் உறுதிபட குறிப்பிட்டது.

இந்திய அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 14, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது. பிரிவு 15, சாதி, மதத்தின் பேரால் வேற்றுமைகள் பாராட்டக் கூடாது என்கிறது.  ஒவ்வொரு தனி மனிதரும் தம்முடைய நம்பிக்கையை வெளிப்படுத்தவும், பின்பற்றவுமான உரிமையை அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 25 வழங்குகிறது. வெவ்வேறு மதப் பிரிவுகளும் மத நிறுவனங்களை நடத்தவும், சொத்துக்களை சேர்க்கவும், கையாள்வதற்குமான உரிமையை வழங்குகிறது.

அதே சமயம் மத வழி, மொழிவழி, இனவழி சிறுபான்மையினர் மற்றும் அதிகாரம் மறுக்கப்பட்டவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக எந்தவொரு கட்டமைப்பிலும் அரசு தலையிடுவதை உறுதி செய்கிறது. தீண்டாமைக் கொடுமைகளையும், பாலின பாகுபாடுகளையும் மதத்தின் பேரால் நியாயப்படுத்துவதை எதிர்க்கிறது. குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க மத நிறுவனங்களில் அரசு தலையீடு செய்ய வேண்டும் என்கிறது. அதிலிருந்து பிறழ்வோரை தண்டிக்க அதிகாரமளிக்கிறது. இந்து சட்டமும், இட ஒதுக்கீடும், வன்கொடுமை தடுப்பு சட்டமும், மொழிவழி மாநிலங்களும், பாலின சமத்துவ முன்னெடுப்புகளும், அறநிலையத் துறை/கோயில் நிர்வாகங்களில் மேற்கொள்ளும் தலையீடுகளும் இதன்பாற்பட்டவையே. மேலும், தேர்தல் அரசியலில் மதம் கலக்கக் கூடாது என்பதை மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் விரிவாக பேசுகிறது.

இந்தியாவிற்கானது மதச்சார்பின்மை

இருப்பினும், இந்தியாவின் மதச்சார்பின்மை கண்ணோட்டம், வெறுப்பின் அனைத்து வெளிப்பாடுகளையும் மறுதலிக்கிற காந்தியின் கண்ணோட்டத்தில் இருந்துதான் உருவெடுத்தது. எனவே, அது அதற்கே உரிய பலவீனத்தையும் கொண்டிருந்தது.

அரசாங்கத்திலும், அரசியலிலும் இருந்து மத நிறுவனங்களை முற்றாக விலக்கி வைப்பது இந்தியாவிற்கு மிக மிக அவசியமாகும். இங்கு நிலவக் கூடிய படிநிலைச் சாதி அமைப்பும் அதன் சுரண்டலும் பிரத்தியேகமானவை. நாட்டில் பன்முக பண்பாடு நிலவுகிறது, பல்வேறு மொழிவழி தேசியங்களும் இனக் குழுக்களும் வாழ்கின்றனர். எனவே, மதம் மட்டுமல்ல, சாதி அல்லது வேறு எந்த பண்பாட்டு நிறுவனமும் அரசில் ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், மதம், மொழி மற்றும் இனவழி சிறுபான்மையினர் உரிமைகளை முன்னிறுத்தும் மக்களாட்சி மதிப்பீடுகளும், மதச்சார்பின்மையின் அங்கமே ஆகும். இந்தக் கொள்கையானது அரசின் நிர்வாகம் மட்டுமல்லாது அனைத்து பொது நிர்வாகங்களுக்கும் விரிவாக பார்க்க வேண்டியது.

ஒரு நிர்வாகத்தில், அது மத நிறுவனமே ஆனாலும், அதன் நிர்வாக ஒழுங்கு மேற்சொன்ன வரையறைக்குள் இருக்க வேண்டும் என்பதையும் மதச்சார்பின்மை வலியுறுத்துகிறது மேலும், சமூகத்தில் நல்லிணக்க வாழ்வினை பாதுகாப்பதும், வளர்த்தெடுப்பதும் முக்கிய பங்காற்றுகிறது.

நடைமுறையில் மதச்சார்பின்மை

பிரிட்டிஷ் ஆட்சியின் பல்வேறு முயற்சிகளையும், பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை வகுப்புவாத சக்திகளின் தாக்குதல்களையும் தாண்டி,  மதச்சார்பின்மைக் கொள்கையை பாதுகாத்தது விடுதலைப் போராட்டக் களம்தான். விடுதலைக்கு பின், இந்து வகுப்புவாத வெறியூட்டப்பட்ட கோட்சே, அண்ணல் காந்தியை சுட்டு வீழ்த்தினான். அதனைத் தொடர்ந்து சமூகத்தில் நல்லிணக்கத்தை சிதைக்க ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், அந்த முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டன.

மறுபக்கத்தில் மொழிவழி மாநிலங்களுக்கான எழுச்சியும் இன்ன பிற ஜனநாயக இயக்கங்களும் சார்பின்மைக் கொள்கையை வலுப்படுத்தின. முற்போக்கான மாற்றங்களை நோக்கிய போராட்டக் களம், சமூக நல்லிணக்கத்தையும், மதச் சார்பின்மைக் கொள்கையையும் வலுப்படுத்தியதில் செலுத்திய பங்கு தனியாக விவரிக்க வேண்டியதாகும்.

இருப்பினும், விடுதலைக்கு பின் இந்திய ஆளும் வர்க்கம் கடைப்பிடித்த குறுகிய பார்வையின் காரணமாக வகுப்புவாத வெறிக் கூட்டத்திற்கு வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டன. (உதாரணமாக, ஒன்றிய ஆட்சிகள் பின்பற்றிய மக்கள் விரோதக் கொள்கை முடிவுகளை, ஜனநாயகத்தை நசுக்கிய அவசர நிலை மற்றும் ஆட்சிக் கலைப்பு நடவடிக்கைகளை சொல்லலாம்)

முதலாளித்துவ ஜனநாயகமும், மதச்சார்பின்மைக் கொள்கை பற்றிய தாராளவாத பார்வையும் –  தன் அளவிலேயே ஏராளமான போதாமைகளைக் கொண்டவை ஆகும். முதலாளித்துவ ஜனநாயகம் என்பது வெளித்தோற்றத்திற்கு அனைவருக்குமானதாக தெரிகிறது. உண்மையில் அது வர்க்கச் சார்பானது. சுரண்டப்படும் மக்களை அடக்கி ஆள்வதாகவே அரசின் கருவிகள் உள்ளன. எனவே, அரசியலில் அது வகுப்புவாதத்தை அனுமதிக்கிறது. தன்னுடைய அதிகார நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறது. குறுகிய நோக்கங்களுக்காக சமுதாயத்தில் வகுப்புவாத உணர்வு பரவலாக்கப்படும்போது அது ஒட்டுமொத்த மக்களாட்சி அமைப்பையுமே பாதிக்கிறது.

அதனோடு தாராளவாத பார்வையும் இணையும்போது சிக்கல் கூடுதலாகிறது. பொதுவாக, சிறுபான்மையினருக்கான உரிமைகளை வலுவாகப் பேசும் தாராளவாத மதச்சார்பின்மை ஆதரவாளர்கள், ஒட்டுமொத்தமாக உழைக்கும் மக்கள் மீது நிகழ்த்தப்படும் முதலாளித்துவச் சுரண்டலை கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே, சுரண்டலுக்கு ஆளாகும் மக்களில் பெரும்பான்மையோர் முன்பு, சிறுபான்மையினர் தனிச் சலுகை பெற்றவர்களாகவும், எதிரிகளாகவும் சித்தரிக்கப்படும்போது, தாராளவாத பார்வையிடம் அதற்கான பதில் இருப்பதில்லை. ஏற்கனவே அரசியலில் வகுப்புவாத உணர்வுக்கு இடம் ஏற்பட்டுவிடுகிற சூழலில், இத்தகைய குறைபாடுடைய  தாராளவாத போக்குகள் பாதிப்பை கடுமையாக்குகிறது.

சி.பி.ஐ(எம்) கட்சி திட்டத்தில் இது பின்வரும் விதத்தில் தெளிவாக விளக்கப்படுகிறது: “நடைமுறையில் மதச்சார்பின்மை முதலாளி வர்க்கத்தால் நாசமாக்கப்பட்டுள்ளது… அரசியலையும், மதத்தையும் முற்றாகப் பிரிப்பது என்பதற்குப் பதிலாக, அரசு மற்றும் அரசியல் நிகழ்முறைகளில் அனைத்து மத நம்பிக்கைகளுக்கும் சமமாக தலையிடுவதற்கான சுதந்திரம் என்பதே மதச்சார்பின்மையின் பொருள் என மக்களை நம்ப வைக்க முயல்கின்றனர். மதச்சார்பின்மைக்கு எதிரான போக்குகளை உறுதியுடன் எதிர்ப்பதற்கு பதிலாக, முதலாளி வர்க்கம் அதற்கு சலுகை வழங்கி வலுப்படுத்துகிறது.”

மேலும், இந்தியாவில் முதலாளித்துவ சுரண்டல் நிலை காரணமாக அரசியல் சாசனத்தில் சிறுபான்மை மக்களுக்கு உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள உரிமைகள்கூட செயல்படுத்தப்படுவதில்லை. பொருளாதார, சமூகத்துறைகளில் சம வாய்ப்பு இல்லாததோடு பாரபட்சமும் நிலவுகிறது என்பதே உண்மை நிலையாகும்.

ஆனால், இந்திய ஆளும் வர்க்கங்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை. தொடக்கத்திலேயே அவர்கள் பிற்போக்கான நிலவுடைமை வர்க்கங்களோடு சமரசம் செய்தார்கள். அதன்பிறகு பொருளாதார இறையாண்மையையும் விட்டுக் கொடுத்தார்கள். சர்வதேச நிதி மூலதனத்தின் விதிகளுக்கு உட்பட்டு உலகமயத்தை ஏற்று நடந்தார்கள். ஆண்டுகள் செல்லச் செல்ல  விடுதலைப் போராட்ட காலத்தில் முகிழ்த்த புரிதலில் இருந்து திட்டவட்டமான முறிப்பை ஏற்படுத்திக் கொண்டார்கள். இப்படிப்பட்ட போக்கு, இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு சாதகமான புறச்சூழலை உருவாக்கியது. 

ஆர்.எஸ்.எஸ் திட்டம்

இந்திய ஆளும் வர்க்கங்கள் ஆர்.எஸ்.எஸ்., வழிநடத்தும் பாஜகவோடு ஒரு கூட்டினை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள். அதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு மதச்சார்பின்மை அடித்தளத்தையும், சமூகத்தில் நிலவும் நல்லிணக்கத்தையும் தாக்கி அழிக்க முயற்சிக்கிறார்கள். இதற்காக அரசு, நிர்வாகம், கல்வி அமைப்பு, தகவல் தொடர்பு சாதனங்கள் ஆகியவற்றை மதவெறி மயமாக்க முயற்சிக்கின்றனர்.

ஆர்.எஸ்.எஸ் முன்வைக்கும் திட்டம் பாசிச வகைப்பட்டதாகும். அதன் கொள்கைத் திட்டம் சட்டத்தின் முன் அனைவரும் என்பதை ஏற்கவில்லை. இந்து மதம், ஆரிய இனம், சனாதன பண்பாடு மற்றும் சமஸ்கிருத மேன்மை ஆகிய நான்கு அம்சங்களை அது முன்னெடுக்கிறது. இந்து மதத்தை அது தனது அரசியல் திரட்டலுக்கான கருவியாக பார்க்கிறது. பிற மதங்களின் மீதான வெறுப்பை அடிப்படையாகக் கொண்டு மத உணர்வை கட்டமைக்கிறது. ஆரிய இனத்தை மேன்மைக்குரியதாக முன்வைப்பதுடன், சாதி ஆணாதிக்கத்தை உயர்த்திப்பிடிக்கும் சனாதன பண்பாட்டினை திணிக்கிறது. சமஸ்கிருத மொழியை அனைத்து மொழிகளுக்கும் மேம்பட்டதாக முன்வைக்கிறது. இவை அனைத்துமே மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கும், மக்களாட்சிக்கும் நேர் எதிரானதாகும்.

மேலும் கோல்வால்கர் எழுதிய நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நமது தேசம் என்ற நூல், சாமானிய மக்களுக்கு எதிராக, இன்னொரு பகுதி சாமானிய மக்களை ஆயுதம் ஏந்தச் செய்கிற பாசிச திட்டத்தை இன்னும் விரிவாக பேசுகிறது.

அறிவியல் அடிப்படையே இல்லாத விதத்தில் மத நம்பிக்கையின் அடிப்படையில் மக்களின் தேச பக்தியை முடிவு செய்வதுடன், அதன் வழிப்பட்டதாக ஒருவரின் குடியுரிமையை தீர்மானிக்கிறது. மேலும், தனது விளக்கப்படி ‘இந்து தேசத்தின்’ குடிமக்கள் அல்லாதவர்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்த வேண்டும் என்கிறது. முஸ்லிம்களையும், கிறித்துவர்களையும் அன்னியர்கள் என்பதுடன், பிற சிறுபான்மை மதங்களின் (பெளத்தம், சமணம், சீக்கியம்) தனித்துவத்தையும் ஏற்க மறுக்கிறது.

பொதுவாக பெரும்பான்மை வகுப்புவாதம் வெளித்தோற்றத்தில் தேசியவாதம் போலவே தென்படும். உண்மையில் அது அரசியல் லாபத்திற்கான திட்டம் மட்டுமே ஆகும்.

நாட்டின் இறையாண்மையை பாதுகாத்து, வளர்ச்சியை முன்னெடுப்பதன் மூலம் தேச உணர்வை வளர்ப்பதை விடவும் – உள்ளுக்குள்ளேயே எதிரிகளை கட்டமைத்து, முடிவில்லாத மோதல்களை உருவாக்கி, அதன் மூலம், தேசிய வெறியை கட்டமைத்தல் – இன்றைய ஆளும் வர்க்கத்திற்கு சுலபமாக தென்படுகிறது.  ஆனால் இது நாட்டின் அரசமைப்பிற்கும், மதச்சார்பின்மைக்கும் பெரும் சவாலை உருவாக்கியுள்ளது.

முடிவாக…

இந்த சவால், ஆளும் வர்க்கங்கள், சுரண்டப்படும் வர்க்கங்கள் மீது தொடுத்துவரும் தாக்குதலின் மற்றுமொரு வெளிப்பாடே ஆகும். இதன் பின்னணியில் இருப்பது இந்துத்துவா-பெருமுதலாளித்துவ கூட்டே ஆகும்.

இந்துத்துவ வகுப்புவாதம் தனது அரசியலை பெரும்பான்மையினரின் பெயரால் முன்னெடுக்கும் போதிலும் அது உண்மையில் இந்துக்களாக வாழும் மக்களுக்கும் சேர்த்து துயரத்தையே அதிகரிக்கிறது. மிகச் சிறு எண்ணிக்கையிலான பெரு முதலாளிகளையும், கடைந்தெடுத்த பிற்போக்கு சக்திகளையுமே வலுப்படுத்துகிறது. மேலும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பாசிச திட்டமானது, மதச்சார்பின்மைக்கும் ஒட்டுமொத்தமாக மக்களாட்சிகும் அபாயமாகிறது.

பெரும்பான்மை வகுப்புவாதம் வளரும்போது மறுபக்கத்தில் சிறுபான்மை வகுப்புவாதத்தையும் தூண்டி விடுகிறது. அதுவும் மதச்சார்பின்மைக்க்கு சவாலாகவே எழுகிறது. பெரும்பான்மை மதவாதம் காரணி எனில், சிறுபான்மை மதவாதம் அதனால் உருவாகும் விளைவு என்ற தோற்றத்தில் முன்னுக்கு வருகிறது. உண்மையில் ஒன்றுக்கு ஒன்று உதவி செய்து வளர்கிறது. எனவே நாம் காரணியை பிரதானமாக எதிர்க்க வேண்டும், அதன் உடன் தோற்றமான சிறுபான்மை வகுப்புவாதத்தையும் எதிர்க்க வேண்டும். அதை நோக்கிய ஒன்றுபட்ட போராட்டத்தில் அனைத்து மக்களும் இணைய வேண்டும். சிறுபான்மை வகுப்புவாத சக்திகள், பாதிக்கப்படும் மக்களை அதிலிருந்து தனிமைப்படுத்தவும் செய்கிறார்கள். எனவே,  பெரும்பான்மை மதத்தை சார்ந்த மக்களை மதச்சார்பின்மை மற்றும் மதநல்லிணக்கத்தின் பக்கம் வென்றெடுக்க செயல்படும் அதே சமயத்தில், பாதிக்கப்படும் சிறுபான்மை மக்களோடு நிற்பதன் மூலம், ஜனநாயக இயக்கத்தை விரிவாக்க வேண்டும். அதன் வழியாகவே வகுப்புவாதத்தினை உறுதியுடன் எதிர்க்க முடியும்.

எனவே, மதச்சார்பின்மையை பாதுகாக்கும் போராட்டம், இந்திய குடியரசையும் அதன் மக்களாட்சியையும் பாதுகாப்பதற்கான போராட்டமே ஆகும். அதனை வெற்றிகரமாக முன்னெடுக்க  முதலாளித்துவ தாராளவாதப் பார்வை உதவி செய்யாது.

மார்க்சிய அடிப்படையில், மதச்சார்பின்மைக் கொள்கையிலிருந்து ஒரு சிறு விலகல் கூட ஏற்படாமல் செயல்படுவதுடன், விலகல் ஏற்படும்போது அதனை  அம்பலப்படுத்தவும், எதிர்த்து போராடவும் வேண்டும். ஒவ்வொரு மதத்தினரின் உரிமைகளை, அது பெரும்பான்மை மதமாக இருந்தாலும் சரி, அல்லது சிறுபான்மை மதமாக இருந்தாலும் சரி – அல்லது எந்த மதத்தின் மீதும் நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும் சரி, அவர்களது உரிமைகளை பாதுகாத்து நிற்க வேண்டும். அதே நேரத்தில் நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் நிர்வாக நிகழ்முறைகளில் மதத்தை நுழைக்கும் அனைத்து முயற்சிகளையும் எதிர்த்திட வேண்டும். மதச்சார்பற்ற கல்வி, மதச்சார்பற்ற பண்பாடு, மதச்சார்பற்ற சமூக விழுமியங்களை உயர்த்திப் பிடிக்க வேண்டும். இதன் மூலமே மதச்சார்பற்ற இந்திய குடியரசை பாதுகாத்திட முடியும். நாட்டுப் பற்றாளர்கள் முன் உள்ள அவசர கடமை இதுவே.

நகர்ப்புற உள்ளாட்சிகளில் நம்முடைய பணி …

  • அருண்குமார்

அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 74வது திருத்தத்தின்படி உள்ளாட்சி தேர்தல்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும். ஆனாலும், பல மாநிலங்களில் அது முறையாக நடப்பதில்லை.

புதிய பொருளாதார கொள்கை அமலாக்கப்பட்ட பிறகு உள்ளாட்சி அமைப்புகள் மீதான பொருளாதார தாக்குதலோடு கலாச்சார அரசியல் ரீதியான தாக்குதல்களும்  நிகழ்கிறது. மக்களின் பங்கேற்போடு, மக்கள் நலன் சார்ந்து செயல்படுவதற்காகவே, விரிவான ஜனநாயகத்தை கொண்டதாக, உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்பு உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், அவை மக்கள் சார்ந்ததாக இல்லாமல் மையப்படுத்தப்பட்ட  அதிகாரத்தை நோக்கி மெல்ல மெல்ல நகர்த்தப்பட்டுள்ளது. மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தையே தனது கொள்கையாக கொண்டுள்ள பா.ஜ.க அரசு, உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து விதமான ஜனநாயக உள்ளடக்கங்களையும் நசுக்கி வருகிறது.

74வது சட்ட திருத்தத்தின்படி 18 வகையான பணிகளை உள்ளாட்சி அமைப்புகள்தான் மேற்கொள்ளவேண்டும். கல்வி, சாலை அமைத்தல், குடிநீர் விநியோகம், சுகாதாரம், கழிவுநீர் அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் இதில் அடங்கும். ஆனால், சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த 18 பணிகளில் 5 க்கும் குறைவான பணிகளே மாநகராட்சிகள் மூலம் நடத்தப்படுகின்றன. அதிகபட்சமாக 7 பணிகள் மும்பை மாநகராட்சியில் மட்டுமே நடக்கிறது.

உள்ளாட்சி அமைப்புகள் எப்படி செயல்படவேண்டும் என்பது குறித்து பல ஆவணங்களும் அரசாணைகளும் சிறப்பாக உள்ளன. ஆனால், உண்மை நிலவரம் அவ்வாறு இல்லை என்பதையே மேற்கண்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏன் இவ்வாறு உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் முடக்கப்படுகிறது? 13 வது நிதிக்குழு, உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் சொந்த நிதியிலிருந்துதான் செயல்படவேண்டும் என்று தெரிவித்தது. மத்திய, மாநில அரசுகளிடமிருந்து நிதியை எதிர்பார்க்கக்கூடாது என்றது. மத்திய, மாநில அரசுகள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கும் நிதியை குறைக்கவேண்டும் என்று வலியுறுத்தியது.

ஜி.எஸ்.டி போன்ற மத்தியப்படுத்தப்பட்ட வரி விதிப்பு முறைகளால் உள்ளாட்சி அமைப்புகள் தங்களுக்கான வரி வருவாயை அதிகமாக இழக்க நேரிட்டது. நிதிக்குழு கூறியதுபோல், நிதியை உருவாக்க சொத்து வரியை உயர்த்துவது, குடிநீர் கட்டணத்தை உயர்த்துவது, கழிவு நீர் மற்றும் குப்பைகளை அகற்றுவதற்கான  சேவை கட்டணத்தை உயர்த்துவதென மக்கள் மீதான சுமை கூடுதலாக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சிகள் மீது நிதிச்சுமை

தற்போது 15வது நிதிக்குழு மேலும் இக்கட்டணங்களை உயர்த்த சில வழிமுறைகளை சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட அனைத்து வகையான சொத்துக்களையும் பட்டியலிட்டு சிறு பகுதியையும் விடாமல் வரி தீர்மானிக்க வேண்டும் என்கிறது. அதேபோல், சொத்தின் சந்தை மதிப்பிற்கு ஏற்றவகையில் சொத்து வரியை உயர்த்தவேண்டும் என்கிறது. மேலும், தீர்மானிக்கப்பட்ட சொத்து வரியை முழுமையாக வசூலிக்க வேண்டும் என்கிறது.

சொத்துவரியை முறைப்படுத்துவதில் என்ன தவறு? என்று சிலர் கேட்கக் கூடும். எங்கு சிக்கல் உள்ளதோ அங்கு அதை முறைபடுத்துவது தவறல்ல.  ஆனால், அதை பொதுமைப்படுத்தி ஏழை எளிய மக்களை பாதிக்கும் விதமாக வடிவமைப்பதில்தான் சிக்கல் உள்ளது. வர்த்தக பயன்பாடு நிறைந்த பகுதியில் வரி தீர்மானிக்கும்போது, அப்பகுதியில்  உள்ள குடியிருப்புகளுக்கும்  வர்த்தக நிலங்களுக்கு உள்ளதுபோல், குடியிருப்புக்களுக்கும் வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. சொத்து வரி உயர்வால் உயர் நடுத்தர மக்களும், நடுத்தர மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

குடிசை பகுதிகளையும் சொத்துவரிக்கு உட்படுத்தி ஏழை மக்களையும் நசுக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த வரி உயர்வு, வாடகைதாரர்கள் மீது சுமத்தப்படுகிறது. இது வாடகைதாரர்களை மேலும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.

சொத்து வரி உயர்வின் மூலம் ஒரு பகுதி நிதியை உள்ளாட்சி அமைப்புகள் திரட்டுகின்றன. மற்றொரு பகுதி நிதியை மக்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் வழங்க வேண்டிய குடிநீர், குப்பை மற்றும் கழிவு நீர் அகற்றுதல் போன்ற சேவைகளுக்கான கட்டணத்தை உயத்துவதன் மூலம் திரட்டுகின்றன.

15வது நிதிக்குழுவின் வலியுறுத்தலோடு, கரோனா காலத்தில் மாநில அரசுக்கு ஒன்றிய அரசு கொடுத்த அழுத்தமும், சொத்து வரி மற்றும் சேவை கட்டண உயர்வாக நம்மீது திணிக்கப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் பொருளாதாரத்தை மறுகட்டமைப்பு செய்ய 5வது முறையாக பொருளாதார நிதி ஒதுக்கீட்டை அறிவித்த ஒன்றிய அரசு, இந்த நிதி மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டுமெனில், உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் சொத்து வரியையும் சேவைகளுக்கான கட்டணத்தையும் உயர்த்தவேண்டும் என்றது. மேலும் 2021 – 22 க்குள் அனைவருக்கும் இந்த கட்டண உயர்வை அறிவிக்கவேண்டும். 2022 -23க்குள் இந்த கட்டண உயர்வுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.  2023 – 24க்குள் இந்த கட்டண உயர்வை முழுமையாக அமுலாக்க வேண்டும் என்று கட்டளையிட்டது. அதுவே தற்போது அரங்கேறி வருகிறது. நிதி தேவையின் காரணமாக அனைத்து மாநிலங்களும் இந்த கட்டண உயர்வை அமலாக்குகின்றன.

முன்பு குப்பைகளை பெறுவதற்கு கட்டணம் தீர்மானிக்கப்பட்டது. குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்காவிட்டால் தண்டம் விதிக்கப்படும் என்றனர். மலைபோல் குப்பைகளை குவிக்கும் வேலையைதான் மாநகராட்சிகள் மேற்கொண்டன. அது பல சுற்றுச்சூழல் கேட்டிற்கும் உயிர் சேதத்திற்கும்  வழிவகுத்தது. தற்போது குப்பைகளை மறுசுழற்சி செய்வதாக கூறினாலும், அதற்கும் கூடுதலாக கட்டணம் தீர்மானித்து மக்களிடம் வசூலிக்கப்படுகிறது.

சொத்து வரி உயர்வும் உலக வங்கியின் தலையீடும்

சொத்து வரி உயர்வு, சேவை கட்டண உயர்வு என மக்கள் மீது இந்த அழுத்தம் ஏன் சுமத்தப்படுகிறது? அதற்கான காரணம் என்ன? என்பதை நாம் ஆராய்ந்தால் அது உலக வங்கியிடம் போய் நிற்கிறது. 2010 முதல் 2015 ஆண்டு வரை இந்த கட்டண உயர்வுக்கு அழுத்தம் கொடுத்து வந்தது. சுயமான நிதி திரட்டலின் மூலம்தான் உள்ளாட்சி அமைப்புகள் செயல்படவேண்டும் என்பது இங்கிருந்து வந்த முன்மொழிவேயாகும். உலகம் முழுக்க எங்கும் உள்ளாட்சி அமைப்புகளால் சுயமான நிதி திரட்டுதல் மூலம் செயலாற்ற முடியாது. இது அவர்களுக்கும் தெரியும். மும்பை மாநகராட்சிதான் அதிகபட்சமாக தனக்கு தேவையான நிதியில் 60 சதத்தை சுயமாக திரட்டுவது சாத்தியமாகியுள்ளது.

பிறகு ஏன் இத்தகைய விஷயத்திற்கு மீண்டும் மீண்டும் அழுத்தம் தரப்படுகிறது என்பதை 2008இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியுடன் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பிறகு, சர்வதேச நிதி மூலதனத்தினால் அதன் பாதிப்பில் இருந்து வெளிவர இயலவில்லை. எனவே, சர்வதேச அளவில் அதன் நிதி மூலதனத்தை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் முதலீடு செய்து லாபம் ஈட்ட முனைகிறது. நாம் இதை புரிந்துகொண்டு மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.

கோவையில் சூயஸ் நிறுவனம் தண்ணீர் விநியோகத்தில் ஈடுபட மாநகராட்சி அனுமதித்ததை எதிர்த்து போராடினோம். அந்த நிறுவனம் டில்லி மாநகராட்சியில் இப்பணியை மேற்கொண்டது. அது நிர்ணயித்த அதிகமான கட்டணத்தை டில்லி மாநகராட்சியால் வசூல் செய்து கட்ட முடியாமல் போனது. இந்த தொகைக்கு ஈடாக தில்லி மாநகராட்சியின் மையப்பகுதியில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை சூயஸ் நிறுவனத்திற்கு கொடுக்கும்படி உலக வங்கி கூறியது. இதுதான் அதன் நோக்கமும். நிலம் தற்போது பணம் கொழிக்கும் சொத்தாக மாற்றப்பட்டுவிட்டது. நகர்ப்புறங்களில் உள்ள இடங்கள் தற்போது இவர்களின் இலக்காக மாறியுள்ளன. அரசுகளும் அதற்கு ஏற்ற வகையில்தான் செயல்படுகின்றன.

ஒன்றிய அரசு டில்லியில் உள்ள அரசு அலுவலகங்கள் அனைத்தையும் நிர்வாக வசதிக்காக புதிய நாடாளுமன்றம் அமையவுள்ள சென்ட்ரல் விஸ்தாவிற்குள் கொண்டுவரவுள்ளது. உண்மையில், பல பகுதிகளில் உள்ள அலுவலகங்களை இங்கு மாற்றும்போது டில்லியின் முக்கியமான இடங்களில் உள்ள அதன் பழைய அலுவலகங்களை தனியாருக்கு கைமாற்றும் திட்டம் அதில் உள்ளது. சட்டிஸ்கர் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் இந்துஸ்தான் எலக்ட்ரிக்கல் நிறுவனம் ஆதிவாசி மக்களின் நிலத்தில் முன்பு உருவாக்கப்பட்டது. தேசத்தின் வளர்ச்சிக்காக அம்மக்கள் அந்த நிலத்தை தானமாக வழங்கினர். 1990களுக்கு பிறகான பொருளாதார கொள்கையின் அடிப்படையில் பொதுத்துறை நிறுவனங்கள் நாசமாக்கப்பட்டு அடிமாட்டு விலைக்கு தனியாருக்கு கொடுக்கப்படுகிறது.  அப்படித்தான் இந்த நிறுவனமும் ஆக்கப்பட்டது.

மக்களை திரட்டுதல்

நம்மை சுற்றி இவ்வளவு நடந்தாலும், மக்களை திரட்டாமல், இதில் எவ்வித மாற்றத்தையும் உருவாக்க முடியாது. உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதன் மூலம், அதன் பிரதிநிதிகளுக்கான உரிமைகளும் மறுக்கப்படுகிறது. மன்றங்களில் பேசுவதற்கு கூட அனுமதி இல்லாமல் போகிறது. நிதிநிலை அறிக்கைகளை அதிகாரிகளே தயார் செய்கின்றனர். அதை மன்றம் ஏற்காவிட்டாலும், மாநில அரசு ஏற்காவிட்டாலும், நிதிநிலை அறிக்கை மேல் நடவடிக்கைக்கு சென்றுவிடும். மக்களின் பங்கேற்போடே அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்கிறது 74 வது சட்ட திருத்தம். ஆனால், அவை மக்களை புறக்கணித்து அதிகாரிகளை கொண்டே செயல்படுத்தப்படுகிறது.

மக்கள் நலன் சார்ந்து செயல்படும் நம்மைப் போன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் உரிய தலையீடு செய்யமுடியாத நிலை உள்ளது. ஆனால் மக்கள் நேரடியாகத் தொடர்பு கொண்டு கேள்வி கேட்கும் முதல் நபராக உள்ளாட்சி பிரதிநிதிகளே உள்ளனர். எனவே, மக்கள் நலனுக்கு எதிராக உள்ளாட்சி அமைப்புகளின் நடவடிக்கைகள் அமையும்போது, உள்ளாட்சி அமைப்பின் மீதான நம்பிக்கையும் நம்போன்ற கட்சிகளின் மீதான நம்பிக்கையையும் அவர்கள் இழக்க நேரிடுகிறது. எப்படியும் நீங்கள் எங்களுக்காக போராட்டம் போகிறீர்கள்.  உள்ளாட்சி அமைப்பின் பிரதிநியாக உங்களை அமர வைத்தாலும் அங்கு எதையும் செய்வதற்கான வாய்ப்பு உங்களுக்கு இல்லை. பிறகு உங்களை தேர்ந்தெடுப்பதைவிட, எனது சாதி, மதத்தை சார்ந்தவர்களை தேர்வு செய்வது எனக்கு வேறு வகையில் உதவக்கூடும் என்கிற குறுகிய மனநிலைக்கும் அவர்கள் செல்லும் நிலை ஏற்படுகிறது. மக்களை முற்போக்கு அரசியலில் இருந்து, குறுகிய பிற்போக்கு அரசியலுக்கு அவை அழைத்து செல்வது நம்போன்ற கட்சிகளுக்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தும். அதேநேரம் மக்களை ஓரணியில் திரட்டி போராட்டங்களை முன்னெடுக்கவும் இது தடையாக அமையும். 

மக்களிடம் உண்மை நிலவரத்தை விளக்காமல் நம்மால் அவர்களை நமது அரசியலின்பால் ஈர்க்க முடியது. இதை ஒருநாளில் செய்துவிட முடியாது. சொத்துவரி உயர்த்தப்படும்போது மட்டும் வாருங்கள் போராடலாம் என்று கூறி பெரும் பகுதி மக்களை திரட்டிட முடியாது. இது ஒரு தொடர் நிகழ்ச்சியாக மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து மக்களுடன் உரையாடுவதற்கான வேலைகளை திட்டமிட்டு மேற்கொள்ளவேண்டும். அவர்களுக்கு புரியும்படி பேசிடவேண்டும்.

உள்ளாட்சி பிரதிநிதிகளாக

74 வது சட்ட திருத்தம் வார்டு கமிட்டி அமைக்கப்பட்டு மக்களின் பங்கேற்போடுதான் அனைத்து‌ முடிவுகளும் எடுக்கப்பட வேண்டும் என்கிறது. ஆனால், கேரளாவில் மட்டும்தான் வார்டு கமிட்டி நல்ல முறையில் செயல்படுகிறது. மற்ற இடங்களில் பெயர் அளவிற்கு வார்டு கமிட்டிகள் அமைக்கப்பட்ட போதும் அவை செயல்படுவதில்லை. அவர்களுக்கு தேவையானவர்களை கொண்ட கமிட்டி போலவும் அவை அமைக்கப்படுகிறது. 

நகர்புற உள்ளாட்சி மன்ற உறுப்பினர் என்கிற வகையில் வார்டு கமிட்டிகள் போன்ற அமைப்பை நாம் உருவாக்க வேண்டும். அரசு இதுபோன்ற அமைப்பை உருவாக்கியிருக்க வேண்டும். அரசு அதை செய்யாததால் நாங்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இதுபோன்ற கூட்டங்களை கூடுதலாக நடத்தி மக்களிடம் கருத்துக்களை பெற்று, எது சாத்தியம் என்பதையும், எது சாத்தியமற்றதாக உள்ளது என்பதையும் பேசுவதோடு ஏன் இது சாத்தியமாகவில்லை என்பதற்கான காரணங்களையும், அதன் பின்புலத்ததையும் நாம் மக்களோடு பேசவேண்டும். வழக்கமாக நாம் வீதியில் செல்லும்போது இதுபோன்று பேசுவோம். அது போதுமானதல்ல. நாம் பேசும் அந்த நபரை தவிர மற்றவர்களுக்கு அது தெரியாது. மேலும் ஓரிடத்தில் மக்களை கூடச் செய்து அவர்களோடு உரையாடுவதுதான் அவர்களை அரசியல்படுத்தவும். நம்மோடு அவர்களை இணைக்கவும் உதவும். பெண்கள், இளைஞர்கள் என பலரை இணைப்பதும் சாத்தியப்படும்.

சமூக வானொலி மூலம் நமது வார்டுக்கு உட்பட்ட இடங்களில் குறிப்பிட்ட அலைவரிசையில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு கேட்கும் வகையில் வானொலியில் நமது செயல்பாடுகளையும் பிரச்சினைகளையும் குறிப்பிட்ட நேரத்தில் மக்கள் பிரதிநிதிகள் பேசவேண்டும்.

மக்களுடன் உயிரோட்டமான தொடர்பு

வர்க்க, வெகுமக்கள் இயக்கங்களின் செயல்பாடுகளில் ஒருங்கிணைப்பு அவசியம். அந்தந்த அமைப்புகள் அதன் வர்க்க வெகுஜன பணிகளை மேற்கொள்வது அவசியம்தான். அதேநேரம் குடியிருப்புகளில் களத்தில் செயலாற்றும் தொழிற்சங்கம், மாதர், வாலிபர் அமைப்புகள் ஒருங்கிணைந்த சில கோரிக்கைகளை தீர்மானித்து, மக்களை விழிப்படைய செய்து போராட்டங்களில் இணைக்கவேண்டும். அந்தந்த அமைப்புகள் குறுகிய எண்ணிக்கையில் சில போராட்டங்களை அடையாளபூர்வமாக மட்டும் நடத்துவது பயன்தராது. குறிப்பிட்ட மக்கள் கோரிக்கையை தீர்மானித்து, அதில் வர்க்க, வெகுமக்கள் இயக்கங்களை ஒருங்கிணைத்து  உடனடி கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும்.

மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கைகளை மாவட்ட குழுக்கள் படித்து அதில் உள்ள விஷயங்களை ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும். மக்களுக்கு பாதகமான விஷயங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.

நாட்டிலே அதிகமான காலிப்பணியிடங்கள் கோவை மாநகராட்சியில்தான் உள்ளது என்கிறது ஒரு புள்ளிவிவரம். 35 சதவீத  இடங்கள் காலியாக உள்ளது என்கிறது அவ்வறிக்கை. இது தொழிற்சங்க கோரிக்கை மட்டுமல்ல; மக்களுக்கு மாநகராட்சி வழங்க வேண்டிய  அன்றாட பணிகளை இந்த காலிப்பணியிடங்கள் எவ்வாறு பாதிக்கிறது என்பதை பேசவேண்டும். சுகாதாரம், குடிநீர், கழிவு குப்பைகள் அகற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஊழியர் இல்லாதது மக்களின் உடனடி பிரச்சினையோடு இணைந்தது. தொழிற்சங்கம் உள்ளிட்ட வெகுமக்கள் இயக்கங்கள் இதை பொது கோரிக்கையாக மாற்றி மக்களை போராட்டத்தில் இணைக்க வேண்டும்.

குடியிருப்புகளில் நமது பணிகளை விரைவுபடுத்த வேண்டும். அவர்களின் வாழ்வியலோடு ஒன்றிணைந்து பங்கேற்க வேண்டும். பொங்கல் போன்ற பண்டிகைகளை குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் பங்கேற்கும் வகையிலும், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையிலும், மேலும் வலுவாக நடத்திடவேண்டும். விசாகப்பட்டினத்தில் மே தினத்தை ஒரு நாள் நிகழ்வாக, கொடியேற்றி பேசி முடிக்கும் வழக்கமான நடைமுறையாக அல்லாமல், குடியிருப்பு பகுதியில் உள்ள அனைவரும் பங்கேற்கும் வகையில் நடத்தப்பட்டது. அது மே வாரம் போல் ஒரு வாரம் நடைபெற்றது. மகளிர் தினம் மூன்று நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது.

மக்களிடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தினால் அவர்கள் நம்மோடு வருவார்கள். பிரச்சாரம், அறைகூவல்கள், போராட்டங்கள் இவைகளுக்கிடையேயான தொடர்பையும் புரிந்து செயலாற்ற வேண்டும். கொல்கத்தா பிளீனத்தில் குறிப்பிட்டதுபோல் மக்களுடன் உயிரோட்டமான தொடர்பை ஏற்படுத்தும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

 தமிழில்: ச. லெனின்

புரட்சிக்கு ஒரு நாள் முன்பாக லெனின் எழுதிய கடிதம்!

வி.இ.லெனின்

தமிழில்: அபிநவ் சூர்யா

[ரஷ்யாவில் நடைபெற்ற பிப்ரவரி புரட்சிக்குப் பின் எட்டு மாதங்களில் லெனினின் எழுத்துகள் அனைத்துமே புரட்சியின் பாதையில் போல்ஷ்விக் புரட்சியாளர்களிடையே நிலவிய சித்தாந்த குழப்பங்களை, தயக்கங்களை நீக்கும் வகையில் இருந்தன.

கீழ் காணும் கடிதம் லெனின் அவர்கள் அக்டோபர் புரட்சிக்கு ஒரு நாள் முன்பு மத்திய குழு உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதம் ஆகும். இதில் அவர், வரலாற்றில் மிக முக்கியமான தருணங்களை புரட்சியாளர்கள் உணராமல், மக்களின் புரட்சிகர உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் போவது எவ்வாறு மாபெரும் குற்றமாக விளையும் என்பதை விளக்குகிறார்.

ரஷ்ய புரட்சி அரங்கேறிய தேதி, தற்போது புழக்கத்தில் உள்ள ஜார்ஜியன் நாள்காட்டி முறைப்படி நவம்பர் 7 ஆகும். ஆனால் 1917 ஆம் ஆண்டில்,  ரஷ்யாவில் ஜூலியன் நாள்காட்டி முறை பழக்கத்தில் இருந்து. அது ஜார்ஜியன் நாள்காட்டி முறையை விட 13 நாட்கள் பின் தங்கியது. அதன்படி புரட்சி அரங்கேறிய தேதி அக்டோபர் 25. அதனால் இந்த கடிதத்தில் தேதிகள்  “அக்டோபர்” மாதத்தில் என குறிப்பிடப்பட்டுள்ளன. – ஆசிரியர் குழு]

தோழர்களே,

நான் 24ஆம் தேதி மாலையில் இவ்வரிகளை எழுதுகிறேன். மிக மிக முக்கியமான நிலமையை எட்டியுள்ளோம். இப்போது எழுச்சியை தாமதிப்பது என்பது மிகவும் ஆபத்தாக விளையும் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

அனைத்துமே ஒரு நூல் இழையில் தொங்கிக் கொண்டிருக்கிறது என்பதை தோழர்கள் உணர என் மொத்த சக்திகளையும் கொண்டு வற்புறுத்துகிறேன்; எந்த சம்மேளனங்களோ, மாநாடுகளோ (சோவியத் மாநாடு உட்பட) தீர்க்க முடியாத பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். இவை மக்களால், ஜன சக்தியால், ஆயுதம் தாங்கிய மக்களின் போராட்டத்தால் மட்டுமே தீர்க்க முடியும்.

“கோர்னிலோவ்”களின்[1] முதலாளித்துவ சர்வாதிகார தாக்குதல்களும், வெர்கோவ்ஸ்க்கி[2] நீக்கப்பட்டுள்ளதும், நாம் தாமதிக்க முடியாது என்பதை காட்டுகிறது. எந்த நிலையிலும், இன்று மாலையே, இன்று இரவே, நாம் முதலில் இராணுவ அதிகாரிகளின் ஆயுதங்களை பறிமுதல் செய்து (அவர்கள் தடுத்தால், அவர்களை வீழ்த்தி), இந்த அரசாங்கத்தை கைது செய்து, முன்னேற வேண்டும்.

நாம் காத்திருக்க கூடாது! நாம் அனைத்தையும் இழக்கக் கூடும்!

உடனடியாக அதிகாரத்தை கைப்பற்றுவதன் பலனானது மக்களுக்கானதாய் (மாநாடு அல்ல. மக்களுக்கு. குறிப்பாக முதலில் இராணுவ வீரர்களுக்கும்[3] மற்றும் உழவர்களுக்கும்), இந்த கோர்னிலோவிய அரசாங்கத்திடம் இருந்து அவர்களை காப்பதாய் இருக்கும். இந்த அரசாங்கம்தான் வெர்கோவ்ஸ்க்கியை வெளியேற்றி, இரண்டாம் கோர்னிலோவ் சதியை[4] வடிவமைத்தது.

யார் அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டும்?

இந்த கேள்வி இப்போது முக்கியம் இல்லை. வேண்டுமென்றால், புரட்சிகர இராணுவக் குழு எடுக்கட்டும். இல்லையென்றால், மக்களின் நலனை பாராட்டும் உண்மையான பிரதிநிதிகளுக்கு, (உடனடியாக அமைதிக்கான முன்மொழிவு மேற்கொண்டு) இராணுவ வீரர்களின் நலனை காப்பவர்களுக்கு, (உடனடியாக நிலக்கிழார் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, தனிச்சொத்தை ஒழிக்கும்) உழவர்களின் நலனை காப்பவர்களுக்கு, பட்டினியில் வாடுபவர்களின் நலனை காப்பவர்களுக்கு மட்டுமே அதிகாரத்தை விட்டுத் தருவோம் எனக் கூறும் “ஏதோ ஒரு நிறுவனம்” அதிகாரத்தை கையிலெடுக்கட்டும்.

அனைத்து இராணுவ அமைப்புகளும், அனைத்து சேனைகளும், எல்லா படைகளும் உடனடியாக திரட்டப்பட்டு, அவர்களின் பிரதிநிதிகளை புரட்சிகர இராணுவ குழுக்களுக்கும், போல்ஷ்விக்களின் மத்தியக் குழுக்கும் அனுப்பி, எந்த நிலையிலும் 25ஆம் தேதி வரை கெரென்ஸ்க்கி[5] மற்றும் அவர் கூட்டாளிகள் கையில் அதிகாரத்தை விட்டு வைக்கக் கூடாது என்ற பிரத்தியேக கோரிக்கையை வைக்க வேண்டும். இந்த விஷயம் இன்று மாலையே, இன்று இரவே, உடனடியாக முடிவு செய்யப்பட வேண்டும்.

இன்று வெற்றி பெறும் சாத்தியம் இருக்கையில் (இன்று வெற்றி நிச்சயம்), நாளை பெருமளவில் இழக்க, உண்மையில் அனைத்தையும் இழக்க வாய்ப்பு இருக்கையில், மேலும் தாமதித்தால், வரலாறு புரட்சியாளர்களை மன்னிக்காது.

இன்று நாம் அதிகாரத்தை கைப்பற்றுவது சோவியத்களுக்கு[6] எதிராக அல்ல, அவர்களின் சார்பாக.

எழுச்சியின் பிரதான பணியே அதிகாரத்தை கைப்பற்றுவதுதான்; கைப்பற்றிய பின், எழுச்சியின் அரசியல் கடமை குறித்த தெளிவு கிடைக்கும்.

அக்டோபர் 25ஆம் தேதியின் ஊசலாடும் வாக்களிப்பிற்காக காத்திருப்பது என்பது வெறும் ஒரு சடங்காகவோ, அல்லது அபாயகரமாகவோ கூட முடியக் கூடும். இந்த மாதிரியான கேள்விகளுக்கு முடிவை வாக்களிப்பு மூலம் அல்லாமல், வன்முறை மூலம் தீர்மானிக்க, கடமையும் உரிமையும் மக்களுக்கு உண்டு. புரட்சியின் மிக முக்கியமான தருணங்களில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளுக்காக, மிகச் சிறந்த பிரதிநிதிகளுக்காகவும் காத்திருக்காமல், பிரதிநிதிகளுக்கு வழிகாட்டுதல் கொடுக்கும் கடமையும், உரிமையும் கூட மக்களுக்கு உண்டு.

அனைத்து புரட்சிகளின் வரலாறும் இதை நிறுவி உள்ளது; புரட்சியை காப்பாற்றுவதும், அமைதிக்கான வாய்ப்பை உருவாக்குவதும், பெட்ரோகார்ட் நகரத்தை காப்பாற்றுவதும், பஞ்சத்திலிருந்து காப்பாற்றுவதும், உழவர்கள் நில உரிமை பெறுவதும் தங்களை சார்ந்தே உள்ளது என புரட்சியாளர்கள் அறிந்திருந்தும், இந்த வாய்ப்பை தவற விட்டால், அது அளவற்ற பெரும் குற்றமாக விளையும்.

இந்த அரசாங்கம் ஊசலாடிக்கொண்டு இருக்கிறது. எந்த நிலையிலும், அதற்கு இறுதி அடி கொடுக்கப்பட்டே ஆக வேண்டும்.

செயல்பாடுகளை மேலும் தாமதிப்பது அபாயகரமாக ஆகிவிடும்.

*

குறிப்புகள்:

[1] இராணுவ தளபதி கோர்னிலோவ் தலைமையிலான பிற்போக்கு அமைப்பு

[2] கோர்னிலோவை எதிர்த்த அமைச்சர்

[3] முதலாம் உலகப் போரில் அவதிப்பட்டு வந்த ரஷ்ய இராணுவம் மற்றும் சாதாரண சிப்பாய்கள்

[4] ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் இராணுவ ஆட்சியை நிறுவும் முயற்சி

[5] பிப்ரவரி புரட்சிக்குப் பிந்தைய  முதலாளித்துவ அரசின் தலைவர்

[6] தொழிலாளர் கமிட்டிகள்

கொரோனா முன்களத்தில், கியூபாவின் தனிச் சிறப்பு!

  • ஜி. ஆனந்தன்

கியூபாவின் மீதான பொருளாதார முற்றுகையை அமெரிக்கா மேலும் மேலும் இறுக்கிக் கொண்டிருக்கிறது. அந்த நாட்டு மக்கள் உயிர் வாழவே முடியாத அளவிற்கு கொடும் பொருளாதார முற்றுகையை அமெரிக்கா தொடர்கிறது. டொனல்ட் டிரம்ப் அரசாங்கம் முன்பே அறிவித்த பொருளாதார முற்றுகைகளை மேலும் அதிகப்படுத்தியுள்ளது பைடன் நிர்வாகம். இதே பைடன் துணை அதிபராக இருந்த போது, ஒபாமா அரசு ஹவானாவுடனான தனது உறவை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொண்டது. ஒபாமாவே ஹாவானாவிற்கு சென்றார். ஆனால், பைடன் அதிபரான பிறகு, டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து மேலும் மேலும் பொருளாதார முற்றுகையை அதிகரிக்கிறார். இது கடும் குற்றம் என்றாலும், அமெரிக்காவை கட்டுபடுத்த எந்த சர்வதேச அமைப்புகளும் இல்லை.

டிரம்ப் கியூபாவின் மீதான தடைகளை விதித்த பிறகு, உலகம் முழுவதும் கொரோனா தொற்று கொள்ளை நோயாக பரவியது. உலக நாடுகளுக்கெல்லாம் மனித உரிமை பற்றி வாய்கிழிய பேசும் அமெரிக்கா, அத்தகைய சிரமமான காலத்தில்கூட கியூபா மீதோ அல்லது ஈரான், சிரியா போன்ற நாடுகளின் மீதான பொருளாதாரத் தடைகளை மனிதாபிமான முறையில்கூட விலக்கிக் கொள்ள தயாராக இல்லை. உணவு எரிபொருள், கட்டுமானப் பொருட்கள், நவீன தொழிற்நுட்பம் என எதுவுமே கியூபாவை சென்றடைய முடியாமல் பொருளாதார முற்றுகை இட்டுள்ள அமெரிக்கா, கொரோனா தொற்று வந்தபோது அத்துடன் கியூபா மக்கள் அழியட்டும் என மருத்துவ சப்ளைகளுக்கும் தடை விதித்து தனது பிடியை மேலும் இறுக்கியிருந்தது.

கொரோனா தொற்றை பொறுத்தவரை யாரிடமும் எந்த பாரபட்சமும் காட்டவில்லை. அது வெள்ளைத் தோலை பாதித்ததைப் போலவே, கருப்புத் தோலையும், மாநிறத் தோலையும், மஞ்சள் தோலையும் பாதித்தது. உலகின் பணக்கார நாடுகளை தாக்கிய அந்த கிருமி, ஏழை நாடுகளையும் விட்டுவைக்கவில்லை. எவ்வளவு பெரிய இராணுவம் வைத்திருந்த நாட்டையும் அது விட்டு வைக்கவில்லை. அப்படியொரு சமதர்மம். ஆனால் பாதிப்பிற்குப் பிறகு விளைவுகள் ஒவ்வொரு நாட்டிலும் வேறுபடும். அதற்கு காரணம், அந்தந்த நாட்டின் அரசியல்-பொருளாதார நிலைமைகள். நாட்டு மக்களின் உயிரைவிட மருந்துக் கம்பெனிகளின் லாப வேட்கையே முக்கியம் என்றிருக்கும் அமெரிக்காவிலேயே உலகில் மிக அதிகமான மக்கள் கொரோனா தொற்றிற்கு உயிரிழந்தனர். அந்த நாட்டில் பாதிப்பு ஏழைகளுக்கு அதிகமாகவும், பணக்காரர்களுக்கு மிகக் குறைவாகவும் இருந்தது.

அமெரிக்காவில் அனைத்துமே வியாபாரம் என்றாகிவிட்ட நிலையில், அரசு அந்த வியாபாரத்தில் தலையிடக் கூடாது என்ற நிலையில், அமெரிக்க காங்கிரசும் செனட்டும் மிகப்பெரிய கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதற்கான அமைப்பாக மாற்றப்பட்ட நிலையில், மக்களை எப்படி அமெரிக்காவால் காப்பாற்ற முடியும்? உலகிலேயே மிகவும் பணக்கார நாடான அமெரிக்காவில் உலகிலேயே மிக மிக அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டன என்பது தற்செயலானது அல்ல. கொரோனா தொற்று ஏற்பட்டால் அதனை உறுதி செய்யும் ஆர்.டி.பிசிஆர் சோதனை இன்று வரை அமெரிக்காவில் எந்த மருத்துவமனையிலும் இலவசம் கிடையாது. ரேபிட் டெஸ்ட் கிட்கள் பைடன் நிர்வாகம் வந்த பிறகு இலவசமாக பள்ளிகளிலும், வீடுகளிலும் வழங்கப்பட்ட போதிலும்.

அமெரிக்காவில் அதிக உயிரிழப்பு ஏன்?

அமெரிக்காவில் மிக நவீன சிகிச்சை உபகரணங்கள் இருந்தும் உயிரிழப்புகள் அதிகமானதிற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று, மருத்துவம் முழுமையாக தனியார் மயமானதால், வசதி உள்ளவர்களே சிகிச்சை எடுக்க முடியும். ஏழைகள் நோய் பாதித்தாலும் வீட்டிலேயே இருந்து மடிந்தனர். சாதாரண நாட்களிலேயே இதுதான் நிலைமை என்றால், மாபெரும் தொற்று நோய் வந்தபோது நிலைமை படுமோசமானது. அடுத்த பிரச்சனையும், தனியார் மயத்தின் மற்றொரு விளைவுதான். முதலில் மருத்துவமனைகள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, நகரத்தின் மக்கட் தொகைக்கு ஏற்ப அவசர சிகிச்சை பிரிவில் கூடுதல் படுக்கை வசதிகள் தயார் நிலையில் இருந்தன. அவையனைத்தும் பயன்படுத்தப்பட்டிருக்காது. இருப்பினும் இவ்வளவு மக்கட் தொகைக்கேற்ப படுக்கைகள் இருந்தால்தான், மருத்துவ அவசர நிலைகளை சமாளிக்க முடியும் என்ற அடிப்படையில் அவை இருந்தன. இப்படிப்பட்ட பெருந் தொற்று காலங்களில் அவை பயன்பட்டிருக்கும்.

ஆனால், அதற்கு முன் அவசர நிலை மருத்துவம் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியன தனியார் மயமானபிறகு, ஒரு படுக்கையால் எவ்வளவு லாபம் என்பதே அடிப்படையாக மாற்றப்பட்டது. ஒரு படுக்கை இருந்தது என்றால், அது சாதாரண காலங்களில் பயன்படுத்தப்படாமல் இருந்தால், அதனால் எந்த லாபமும் இல்லையென்றால், அந்த படுக்கை அப்புறப்படுத்தப்பட்டது. இவ்வாறு அவசரகால தேவைக்காக இருந்த கூடுதல் படுக்கைகள் அப்புறப்படுத்தப்பட்டதால், கொரோனா தொற்று ஏற்பட்டபோது, ஒரே நேரத்தில் கூட்டமாக மக்கள் பாதிக்கப்பட, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான கட்டமைப்பு இன்றி பலரும் சாக வேண்டிய நிலை ஏற்பட்டது. அமெரிக்காவில் கொரோனா தொற்றிற்கு பல லட்சக் கணக்கானவர்கள் இறந்ததற்கு அங்கு கடைபிடிக்கப்படும் முதலாளித்துவ லாப வேட்கையே முழுமையான காரணமாகும்.

கியூபாவின் மருத்துவ சேவை

2020 ஆண்டு கொரோனா தொற்று உலகம் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருந்தபோது மேலே குறிப்பிட்ட நாடுகளைத் தவிர, கியூபா மருத்துவர்கள் பல நாடுகளில் மருத்துவ சேவையாற்றினர். கியூபாவில் ஹென்றி ரீவ் பிரிகேட் என்ற மருத்துவ பிரிவு உண்டு. ஒபாமா ஹவானா சென்றபோது அமைக்கப்பட்ட மருத்துவ சேனை இது. இந்தப் படையே ஆப்ரிக்காவிற்கு எபொலா வைரஸ் பரவியபோது சென்றது. கொரோனா தொற்று ஏற்பட்டபோது இந்த குழுவில் 593 மருத்துவ நிபுணர்கள் சூரிநாம், ஜமாய்க்கா, டெமினிக், பிலேஸ், செயின்ட் வின்சண்ட், செயிண்ட் கிட்ஸ், வெனிசுவேலா, நிகராகுவா மற்றும் அர்ஜென்டைனா ஆகிய பகுதிகளில் மருத்துவ சேவையை வழங்கிக் கொண்டிருந்தனர்.

கியூபா பற்றி ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட  பிம்பத்திற்கு மாறாக, கியூபாவின் சேவை மேற்கத்திய நாடுகளில் பரவலான வரவேற்பைப் பெற்றிருந்தது. இத்தாலி கொரோனா தொற்று ஏற்பட்டு முழு அடைப்பில் இருந்தபோது, கியூப மருத்துவர்கள் அங்கு சேவைக்காக சென்றது மேற்கத்திய உலகில் பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இத்தாலியின் லம்பார்டி பகுதியின் கிரிமா நகரில் 52 கியூபா மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஒரு மருத்துவமனையை ஏற்படுத்தினர். இதில் தீவிர சிகிச்சைக்கு 3 படுக்கைகள். இது குறித்து லம்பார்டி நகரின் உயர் சமூக நலத்துறை அதிகரி ஜூலியோ கல்லேரோ தெரிவிக்கையில், இது ஒரு குறியீடுதான். கிரிமா நகர மருத்துவமனை மிக மிக நெருக்கடியான நிலையில் திணறிக் கொண்டிருக்கிறது. அவசர நிலை சிகிச்சை பிரிவில் ஏற்கனவே நிரம்பியுள்ள நிலையில், மேலும் மேலும் நோயாளிகள் வருகையினால், மருத்துவர்களும், மருத்துவமனையும் கடும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் இந்த உதவி கிடைத்துள்ளது என பாராட்டினார்.

ஸ்பெயின் நாட்டிற்கும் பிரான்ஸ் நாட்டிற்கும் இடையே ஒரு சிறு நகரத்தின் பரப்பளவில் ஒரு நாடு உள்ளது. அதன் பெயர் அண்டோரா. இங்கும் கியூபா மருத்துவ சேவை குழுவினர் சென்றுள்ளனர். அமெரிக்கா இதர நாடுகளை கியூபா மருத்துவர்களை அனுமதிக்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்த பின்னணியில், அண்டோராவின் வெளியுறவு அமைச்சர், “எங்களுக்கு அமெரிக்காவின் நிலை பற்றி தெரியும். ஆனால் நாங்கள் ஒரு சுயாதிபத்தியம் உள்ள நாடு.  எங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய யாரை தெரிவு செய்வது, யாருடன் உறவுகள் மேற்கொள்வது  என்ற முடிவுகளை எடுக்கும் உரிமை எங்களுக்குள்ளது” என்று அறிவித்தார்(அசோசியேட் பிரஸ்).

கியூபாவின் மருத்துவ சேவையைப் பொறுத்துக் கொள்ள முடியாத அமெரிக்கா, கியூபா மருத்துவ சேவையை இரண்டு விதமாக கொச்சைபடுத்தி வருகிறது. அவர்கள் மருத்துவ சேவை செய்வதன் மூலம், கம்யூனிச கொள்கைகளை பரப்புகிறார்கள் என்பது முதலாவது குற்றச்சாட்டு. இரண்டாவது, மிகவும் மோசமான தொற்றுகள் ஏற்படும் இடங்களில் தங்களின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை அனுப்பி அவர்களின் உழைப்பை கியூபா அரசு சுரண்டுகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை சமூக ஊடகத்தில்(டிவிட்டர்) செய்தியைப் பரப்பியது. தனது நாட்டில் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக 15 டாலர் என்பதை நிர்ணயிக்க வக்கில்லாத அமெரிக்க அரசு, அமேசான்  கிட்டங்கிகளில் சிறுநீர் கழிக்க செல்லக்கூட அனுமதியில்லாமல், பாட்டில்களில் சிறுநீர் கழித்து பின்னர் அவற்றை சுத்தம் செய்து கொள்ளும் நிலையில் தொழிலாளர்களை வைத்துள்ள அமெரிக்கா, கியூபா மருத்துவர்களின் மகத்தான சேவையை கேவலப்படுத்துகிறது.

அமெரிக்கா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சில நாடுகளில் பணிபுரியும் கியூபா மருத்துவர்களை வெளியேற்றியும் உள்ளது. அதனை வெற்றியாகவும் கொண்டாடுகிறது. உதாரணமாக, பிரேசில் நாட்டில் டிரம்ப் போன்ற வலதுசாரி அடிமுட்டாளான பொல்சனரோ நீதிமன்ற தகிடுதத்தங்கள் மூலம் ஆட்சிக்கு வந்தார். அவர் அமெரிக்காவுடன் தனது நேசத்தையும், நெஞ்சமெல்லாம் பொங்கி வழியும் கம்யூனிச எதிர்ப்பும் கொண்டவர். தென் அமெரிக்க பகுதியில் கொரோனா தொற்றில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடு, பிரேசில். அதற்கு காரணம் பொல்சனாரோ. அவர் கொரோனா தொற்று என்பதையே இன்றுவரை நம்பவில்லை. அது பரவாமல் தடுப்பு நடவடிக்கை எடுக்கவும் மறுத்துவிட்டார். மேலும், மருத்துவமனைகளின் அவசரகால தேவைகளுக்கு அரசு சார்பில் கூடுதல் நிதி ஒதுக்கவில்லை. இந்த காரணங்களால் பிரேசில் நாட்டில் லட்சத்திற்கும் அதிகமான மக்கள் எந்த சிகிச்சையும் பெற வழியின்று மடிந்து போயினர். மருத்துவமனைகளில் இடமும் இல்லாத நிலையில், மருத்துவர்களும் பாதிக்கப்பட்டதால் மருத்துவர்களின் தேவையைவிட குறைந்த எண்ணிக்கையிலே அங்கு மருத்துவர் இருந்தனர். கியூபா மருத்துவர்கள் அங்கு ஜோசப் லூலா டி சில்வா காலத்திலிருந்தே சேவை புரிந்து வந்தனர். அப்படி அங்கு ஏற்கனவே சேவையிலிருந்த கியூபா மருத்துவர்களை அமெரிக்காவின் வேண்டுகோளுக்கிணங்க பிரேசில் வெளியேற்றியது. 

உலகம் முழுவதும் 65 நாடுகளில் சுமார் 30,000 கியூபா நாட்டு மருத்துவ நிபுணர்கள் பல்வேறு சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றில் பல ஐ.நா. சபையின் சார்பில் நடைபெறுவது. சில குறிப்பிட்ட நாடுகளின் பேரில் நடைபெறுவது. ஆப்ரிக்கா கண்டத்தில், உலகமே அச்சப்படும் எபோலா வைரஸ் தொற்று ஏற்பட்டபோது அந்தந்த நாட்டு மருத்துவர்களே சிகிச்சை அளிக்க அஞ்சியபோது, அஞ்சாமல் அங்கு சென்று மருத்துவ சேவையை மேற்கொண்டவர்கள் கியூபா நாட்டு மருத்துவ தூதர்கள். அந்த சேவையில் ஒரு கியூபா நாட்டு மருத்துவர்க்கு எபோலா தொற்று ஏற்பட்டு அவர் இறந்தார் என்றாலும், கியூபா தனது சேவையை தொடர்கின்றது.

கொரோனா தொற்றை கட்டுபடுத்துதல்

எல்லா நாடுகளைப் போல் கியூபாவிலும் கொரோனோ தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால், கியூபா பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவ உபகரணங்களைக் கூட இறக்குமதி செய்ய முடியாத நிலை. காரணம்  50 ஆண்டு கால அமெரிக்காவின் பொருளாதார முற்றுகை. அத்தகைய கடினமான சூழலில் அவர்கள் எவ்வாறு தொற்று பரவலை சமாளித்தனர் என்பதை அறிந்தால், கியூபா அரசு அமெரிக்கா சொல்வதைப் போல் எந்தளவுக்கு ‘மனிதாபிமானம்’ இல்லாத ஆட்சி என்பதன் “உண்மைத் தன்மையைப்” புரிந்து கொள்ளலாம்.

அதனை நாம் சொல்வதற்கு பதில், மேற்கத்திய கம்யூனிச எதிர்ப்பு ஊடகங்கள் சொல்வதையே பார்க்கலாம். கியூபா கொரோனா தொற்றை வெற்றிகரமாக எதிர் கொண்ட விதத்தை மேற்கத்திய ஊடகங்களான, கார்டியன், சிஎன்பிசி, அசோசியேட் பிரஸ் ஆகியன சிலாகித்து எழுதியுள்ளன. அவை பெரும்பாலும் ஒரே மாதிரியிருந்தாலும், நாம் லண்டனிலிருந்து வெளிவரும் “கார்டியன்” பத்திரிக்கை எழுதுவதை பார்க்கலாம். கட்டுரையை அப்படியே மொழிபெயர்த்து தருகிறேன்.

கார்டியன் பத்திரிக்கையின் வியப்பு

தலைப்பு என்ன தெரியுமா? “பணக்கார நாடுகளின் கோவிட் முயற்சிகளை, அவை ஏற்படுத்திய அளவீடுகளை கடந்து செல்லும்  கியூபாவின் தடுப்பூசி வெற்றிக் கதை”

ஜெனரல் மாக்சிமா கோமஸ் 19ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டு காலனியாதிக்கத்திற்கு எதிராக போராடியவர்களில் முக்கியமானவர். அவர் தெரிவித்த கருத்து, “கியூபர்கள் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை தவற விடுவார்கள்; அல்லது அதனை கடந்து சென்று கொண்டிருப்பார்கள்” என்றார்.

150 ஆண்டுகளுக்குப் பின் அது முதுமொழி போல் மெய்பிக்கப்பட்டுவிட்டது. கீழ்மட்ட நிலையில் உள்ள இந்த தீவு நாடு, தெரு விளக்குகளை எரியவிடுவதற்கே அல்லல்படும் இந்த நாடு, கோவிட்19 க்கு எதிரான தடுப்பூசி செலுத்துவதில் மிகப்பெரிய வளம் பொருந்திய நாடுகள் பலவற்றைவிட அதிகமான பேர்களுக்கு தடுப்பூசி செலுத்தி விட்டது.

90 சதவீதத்திற்கும் அதிகமான மக்கட் தொகைக்கு குறைந்தபட்சம் ஒரு முறையாவது, கியூபாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  83 சதவீதம் பேர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒரு மில்லியனுக்கு மேல் மக்கட் தொகை கொண்ட நாடுகளில், ஐக்கிய அரபு எமிரேட் மட்டுமே இந்தளவுக்கு தடுப்பூசி போட்டுள்ளது.

“கியூபா மாஜிக்கல் ரியலிசத்தால் பீடிக்கப்பட்ட நாடு” என்கிறார் கனடாவின் டல்ஹவுசி பல்கலைக் கழகத்தில் லத்தீன் அமெரிக்க படிப்புகளுக்கான வருகைதரு பேராசிரியர் ஜான் கிரீக். “11 மில்லியன் மட்டுமே மக்கட் தொகை கொண்ட கியூபா, மிகவும் குறைவான வருவாய் உள்ள நாடு, பயோ டெக்னாலஜியில்  முன்னணி நாடு என்ற கருத்தை ஃபைசர் போன்ற நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவரால் கற்பனை செய்வது இயலாத காரியமாக இருக்கும்”.

இதர லத்தீன் அமெரிக்க நாடுகள் போல கியூபாவிற்கும் சர்வதேச சந்தையில் தடுப்பூசிகள் வாங்க வேண்டுமெனில் அது மிகவும் சிரமமான காரியம் என்பதை அறிந்தே வைத்திருந்தது. ஆகவே 2020 மார்ச் மாதத்தில், சுற்றுலா நின்று போனதாலும், வெறிகொண்ட அமெரிக்க பொருளாதார முற்றுகையாலும், அன்னிய செலவாணி கையிருப்பு படுபாதாளத்திற்கு சென்றபோது, கியூபா நாட்டு விஞ்ஞானிகள் தங்கள் பணிகளில் இறங்கினர்.

துணிந்து இறங்கிய அவர்களின் அந்த முயற்சி நல்ல பலன்களைக் கொடுத்தது: இந்த வசந்தத்தில் கியூபா உலகின் சின்னஞ்சிறு  நாடுகளில் முதன் முதலாக வெற்றிகரமாக தன்னுடைய சொந்த தடுப்பூசியை வளர்த்தெடுத்து அதனை உற்பத்தி செய்யும் நாடாக மாறியது.(சிவப்பு நிறம் கட்டுரையில் உள்ளது-மொ-ர்). அது தொடங்கியது முதல் பொது மருத்துவ சேவை தகர்ந்து கொண்டிருக்கிறது என்று கொண்டால்கூட, இதற்கு  போதுமான மனித சக்தி, அதற்கு தேவைப்படும் ஊசிகளை விரைவாக வெளியிட்டது.  அவர்கள் குழந்தைகளுக்குக்கூட தடுப்பூசி போட்டு விட்டனர். (அந்த நாட்டில் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவரவர் விருப்பம்).

இரண்டு தடுப்பூசிகளுமே 90 சதவீதத்திற்கு மேல் தடுக்கும் திறன் கொண்டவை.  கடந்த வசந்த காலத்தில் கியூபா அரசு நடத்திய மருத்துவமனை சோதனைகள் இதனை உறுதி செய்கின்றன. வெற்றிகரமாக தடுப்பூசி இயக்கத்தை நடத்தியதின் விளைவாக, கடந்த கோடையில் மேற்குலகத்தில் மிக அதிகமாக இருந்த தொற்று தற்போது மிகவும் கட்டுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்டில் ஒவ்வொரு வாரமும் நுற்றுக் கணக்கான கியூபர்கள் கோவிட்19 பாதித்து இறந்து கொண்டிருந்தனர். தற்போது 3 இறப்புகள் என்ற அளவில் உள்ளது.

தடுப்பூசி வெற்றி தனித்துவமாக பிரகாசிக்கிறது. ஏனெனில் இதர மருத்துவ துறைகள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள பின்னணியில், இதனை பார்க்க வேண்டியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களில் பண வருவாய் பாதியாய் குறைந்து விட்ட நிலையில், ஆண்டி பாயடிக் மருந்துகள் மிகவும் அரிதாகிவிட்டன.  20 மாத்திரைகள் கொண்ட அமாக்சலின் மருந்து கருப்பு சந்தையில் விற்கப்படும் விலை ஒரு மாத குறைந்தபட்ச ஊதியத்திற்கு சமமாக உள்ளது. எலும்பு முறிவிற்கு கட்டுபோடும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் இல்லாமல் பல பிரதேசங்களில் மருத்துவர்கள் அட்டைகளை கொண்டு எலும்பு முறிவிற்கு கட்டுபோட வேண்டிய நிலையில் உள்ளனர்.

1959 புரட்சி முதலே கியூபர்கள் இத்தகைய பிரம்மாண்டமான கனவுகளை நடைமுறைப்படுத்துகின்றனர், சில சமயம் அவைகள் பைத்தியக்காரத் தனமாக இருக்கும்.  இருப்பினும் பெரும்பாலும், அவை வெற்றிகரமாக நிறைவேற்றப்படும்” என்கிறார் ஹவானாவில் சட்டத் தொழில் புரிந்து வரும், கிரிகோரி பினியோவ்ஸ்கி.

பினியோவ்ஸ்கி மேலும் கூறுகையில், “இதற்கு முதன்மையான உதாரணம், சோவியத் யூனியன் தகர்ந்தபோது, ஃபிடல் காஸ்ட்ரோ பயோடெக் தொழில்நுட்பங்களில் ஆய்வுகளை மேற்கொள்ள ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்ய முடிவெடுத்ததை கூறலாம். “நிதானமாக ஆலோசனை கூறும் எவருமே, 25 வருடங்கள் கழித்து பலனளிக்கும் ஒரு துறையில் முதலீடு செய்வதற்கு உகந்த நேரம் இதுவல்ல என எதிரான ஆலோசனையே வழங்கியிருப்பர். இப்போது நாங்கள் இங்கிருக்கிறோம்….. பயோடெக்கில் முதலீடு செய்தததின் விளைவாக உயிர்களை காப்பாற்றிக் கொண்டு”

“வேறு சில முயற்சிகள் நாடக பாணியில் தோல்வியில் முடிந்துள்ளன: 1970களில் பத்து மில்லியன் டன் கரும்பு விவசாயம் செய்து, அதன் மூலம் இதுவரை அறியப்படாத அளவிற்கு சர்க்கரை உற்பத்தி செய்து பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவது என்பதாகும். ஆனால் கரும்பை அறுவடை செய்யவே இதர தொழிற்சாலைகளிலிருந்து நிரந்தர பணியாட்களை கொண்டு வர வேண்டியதாயிற்று, இது தொழிற்சாலைகளை முடக்கியது; பொருளாதாரத்தில் கடும் சீரழிவுகளை ஏற்படுத்தியது.

கடந்த வருடம் கியூபா அறுவடை செய்த கரும்பு 1959இல் அறுவடை செய்ததைவிட 7 மடங்கு குறைவு.

ஹால் கிளிப்பாக் இவர் கனடாவின் ராயல் மிலிட்டரி கல்லூரியில் வருகைதரு வரலாறு மற்றும் உத்திகள் துறை பேராசிரியர். இவர் கியூபாவை பற்றி தெரிவிக்கையில், ஒரு நாடாகப் பார்க்கும் போது மிகப் பெரிய விஷயங்களை நிறைவேற்றும் போக்கு காணப்படுகிறது, அதே சமயம் அன்றாட விஷயங்களில் படு மோசமாக இருக்கும் நிலையும் காணப்படுகிறது என்கிறார்.

“நாடு முழுவதையும் பத்தாண்டுகளுக்குள் மின்மயமாக்குவது, இரண்டரை ஆண்டுகளில், படிப்பின்மையைப் போக்குவது, மருத்துவ சர்வதேசியம் போன்றவைகள் பை த்தியக்காரத்தனமான திட்டங்களாகத்தான் தெரியும். ஆனால் அவையனைத்தும் நிறைவேற்றப்பட்டன” என்கிறார். இவ்வாறு கார்டியன் பத்திரிக்கை கோவிட்-19 சிகிச்சையில் கியூபாவின் வெற்றியை எழுதுகிறது.

கொரோனா தடுப்பூசி சாதனை

இன்றைய தேதி வரை கியூபாவின் அரசு ஆராய்ச்சி நிறுவனங்கள் 4 கொரோனா தடுப்பூசிகளை தயாரித்துள்ளன. அவை மருத்துவ  சோதனைகளும் முடிந்து மக்களுக்கும் போடப்பட்டு வருகின்றன. கியூபாவில் உள்ள உலக சுகாதார மையம் அந்த நாட்டில் இதனை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.

கியூபா தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிகள் சபரினா 1, சபரினா 2 மற்றும் அப்தலா ஆகியவை ஊசி மூலம் செலுத்தக் கூடிய புரத சத்து அடிப்படையிலான தடுப்பூசிகள். மாம்பிசா என்ற தடுப்பூசி உலகிலேயே மூக்கில் ஸ்பேரே அடித்துக் கொள்ளக் கூடிய ஒரே தடுப்பு மருந்து. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் தடுப்பூசிகள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் அந்த தொழில்நுட்பத்தை இதர மூன்றாம் உலக நாடுகளுக்கு கொடுக்க மறுத்து வருகின்றன. அதே சமயம் அவற்றின் உற்பத்தியில் பெரும்பகுதியை ஜி-7 நாடுகளே தங்கள் கிட்டங்கிகளில் பதுக்கிக் கொள்கின்றன.

மேலும், அமெரிக்காவின் இரண்டு பெரிய தடுப்பூசிகளான ஃபைசர் மற்றும் மடர்னா ஆகியவை எம் ஆர் என் ஏ வகையைச் சேர்ந்ததால், அவற்றை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல, அங்கு பயன்படுத்தும் வரை பாதுகாக்க நீர் உறைநிலைக்கு கீழே 70 டிகிரி (-70 செல்சியஸ்) என்ற நிலைக்கே அதிகம் செலவிட வேண்டும். ஆனால் கியூபா நாட்டு தடுப்பூசிகள் குளிர்சாதனப் பெட்டிகளில் கொண்டுசெல்லும் வகையில் உள்ளது.

இந்த தடுப்பூசிகளை உலகம் முழுவதும் கொண்டு செல்ல உலக சுகாதார மையம் அங்கீகாரம் வழங்க வேண்டும். ஆனால், அங்கும் மேற்கத்திய நாடுகள் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி, பைசர், மெடர்னா, அஸ்ட்ரா, ஜெனிக்கா போன்ற நிறுவனங்களின் லாபத்தை உறுதி செய்ய கியூபாவின் தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் வழங்கவிடாமல் தடுத்து வருகின்றன. உலகில் வேறெந்த நாட்டின் திறனுக்கும் சற்றும் குறைவில்லாத கியூபா நாட்டு ஆராய்ச்சி நிறுவனங்களை அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளில் உள்ளதைப் போன்ற தரத்துடன் இந்த ஆராய்ச்சி சாலைகள் இல்லை என்று சொட்டை சொல் சொல்லி இந்த தடுப்பூசிகளின் தடுக்கும் திறன் சிறப்பாக இருந்தும் அவற்றிற்கு அங்கீகாரம் வழங்கவிடாமல் தடுத்து வருகின்றன.

எய்ட்ஸ் நோய் கட்டுபடுத்துதல்

1980-90 கியூபாவிற்கு மிகவும் நெருக்கடியான கால கட்டம். கியூபர்கள் மூன்றொலொரு பங்கினர் தென் ஆப்ரிக்காவின் அங்கோலா விடுதலைப் போரில் பங்கேற்றனர். கரிபியன் தீவுப் பகுதிகளில் எய்ட்ஸ் நோய்ப் பரவல் மிக அதிகமாக இருந்தது. 1986இல் கியூபாவில் முதல் எய்ட்ஸ் நோயாளி உயிரிழக்கிறார். தொடர்ந்து கியூபாவின் மிகப் பெரிய மருத்துவ சவாலாக எய்ட்ஸ் நோய்ப் பரவல் இருந்தது. இந்த சமயத்தில் சோவியத் யூனியனும் வீழ்கிறது. கியூபாவின் பொருளாதாரத்திற்கு ஆண்டிற்கு சுமார் 5 பில்லியன் டாலர் அளவிற்கு மான்யங்களை வழங்கி வந்த சோவியத் வீழ்ந்தது ஒரு புறம். மற்றொரு புறம் சர்வதேச வணிகத்தில் ஈடுபடமுடியாதபடி அமெரிக்க பொருளாதார முற்றுகை என கியூபா பெரும் நெருக்கடியை சந்தித்த நேரத்தில் எய்ட்ஸ் தொற்று மிகப்பெரிய அளவில் அந்த தீவு நாட்டை அச்சுறுத்தியது. தென் ஆப்ரிக்காவிற்கு அடுத்தபடியாக மிக அதிக எண்ணிக்கையில் மக்கள் எய்ட்ஸ் நோயால் கரிபீயன் தீவுகளில் பீடிக்கப்பட்டிருந்தனர். ஹெச்ஐவி-எய்ட்ஸ் மருந்துக்கு கூட அமெரிக்க தடைவிதித்திருந்தது.

இந்த நிலையில் கியூபாவின் பயோ டெக்னாலஜி ஆய்வகங்கள், ஹெச்ஐவி கண்டறியும் சோதனைகளை உள்நாட்டிலேயே 1987ஆம் ஆண்டிலேயே தயாரித்தன. இதன் விளைவாக 1993ஆம் ஆண்டிற்குள் 12 மில்லியன் ஹெச்.ஐ.வி. சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தீவு நாட்டின் ஓரிணச் சேர்க்கை பிரிவினர் இந்த நோயால் மிகுந்த அளவில் பீடிக்கப்பட்டனர். அரசு செலவில் ஓரின சேர்க்கை பிரிவினருக்கு எதிரான பிரச்சாரங்களுக்கு எதிர் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. நாடு முழுவதும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு கிளினிக்குகள் ஏற்படுத்தப்பட்டன. நாடு முழுவதும் ஆணுறைகள் அதிக விலையில் இறக்குமதி செய்யப்பட்டு, அவை இலவசமாக வழங்கப்பட்டன. அதேபோல் ஆண்டி வைரல் மருந்துகளும் அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்டு, இலவசமாக வழங்கப்பட்டன. தீவிர சிகிச்சைகள் மூலம் நோய் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.  இத்தகைய தீவிர சிகிச்சைகள் நோய்ப் பரவலை கட்டுபடுத்த சோதனைகள் வாயிலாக எய்ட்ஸ் நோயை கட்டுபடுத்துவதில் கியூபா வரலாற்று சாதனை படைத்தது. உலகிலேயே தாயிலிருந்து கருவிற்கு ஹெச்ஐவி நோய்ப் பரவலை தடுக்க மருந்தும் சிகிச்சையும் கொண்ட ஒரே நாடு கியூபா மட்டுமே. 1990களில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வெறும் இருநூறு என்ற அளவுக்கு அங்கு கட்டுக்குள் வைக்கப்பட்டது. அதே சமயம் கியூபாவைப் போன்ற மக்கட்தொகை கொண்ட நியூயார்க் நகரில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43,000 ஆக இருந்தது (மன்த்லி ரிவ்யூ, ஜூன் 1, 2020)

கியூபாவின் இதர தடுப்பூசிகள்: மெனின்ஜைட்டிஸ் -பி எனப்படும் மூளைக் காய்ச்சலுக்கு 1985லேயே தடுப்பூசி கண்டுபிடித்த ஒரே நாடு கியூபா மட்டும்தான். பின்னர் மஞ்சள்காமாலை பி எனப்படும் ஹெப்படிட்டிஸ் பி வைரஸ் கிருமிக்கும், டெங்கே கிருமிக்கும் தடுப்பூசிகளை (2000க்கு முன்பே) கண்டுபிடித்த நாடு கியூபாவாகும்.

ஒரு புறத்தில் அமெரிக்காவில் மருத்துவத்தை தனியார்மயமாக்கிய பிறகு ஒரு மருத்துவ படுக்கையால் எந்தளவுக்கு லாபம் என்ற பார்வையும் அதற்கேற்ற நடைமுறைகளும் ஏற்பட்டபோது, அன்றாட வாழ்க்கையில்  மூன்று  வேளை உணவே கடும் தட்டுபாடான ஒரு நாட்டில், உலகில் வேறெங்கும் கிடைக்காத அளவிற்கு தடுப்பூசிகளும், சிகிச்சையும் கிடைப்பதை  சோசலிச பொருளாதாரத்தின் சாதனை என்பதைத் தவிர வேறெப்படி அழைக்க முடியும்?