’புதிய’ இந்தியாவின்அரசியல்சாசனம்


  • உ. வாசுகி

இந்தியாவின் அரசியல் சாசனம், அரசியல் நிர்ணய சபையில் நிறைவேற்றப் பட்டதிலிருந்தே, அதனுடனான ஆர்.எஸ்.எஸ்.சின் ஒவ்வாமை, பல விதங்களில் ,வெளிப்படுத்தப்பட்டுள்ளது.  ”இதில் நம்முடையது என்று சொல்லிக் கொள்ள என்ன இருக்கிறது?’ என்ற கேள்வியிலிருந்து, ”மனுவின் கோட்பாடுகளை விட சிறந்த சட்டம் எதுவும் இல்லை” என்ற வாக்குமூலம் வரை அனைத்துமே ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையான ஆர்கனைசர் தலையங்கத்தில் பிரசுரிக்கப்பட்டது. ‘நம்முடையது’ என்று அவர்கள் சொல்லும்போது, அரசியல் சாசனத்தில் இருப்பது வேறு யாருடையதோ என்று பொருள்.  அதாவது ஜனநாயகம், மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் உள்ளிட்ட கூட்டாட்சி கோட்பாடு, சம நீதி, சமூக நீதி, அறிவியல் கண்ணோட்டம், கருத்து சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் எதுவுமே நம்முடையது இல்லை என்பது அவர்கள் வாதம். இந்துத்துவ ராஷ்டிரம் வந்தால், இவை எதுவுமே இருக்காது என்றுதான் இந்த வாதத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தின் அடிப்படை நிலைபாடான இந்துத்துவ ராஷ்டிரம் அமைவதை குறிக்கோளாக வைத்தே, ஆர்.எஸ்.எஸ். – பாஜக அரசு ஒவ்வொரு நகர்வையும் மேற்கொண்டு வருகிறது.

இந்துத்துவ நகல் அரசியல் சாசனம்:

சில மாதங்களுக்கு முன், வாரணாசியில் 30க்கும் மேற்பட்ட இந்து மத சாதுக்கள், இந்துத்துவ ராஜ்யத்தின் அரசியல் சாசனம் எப்படி இருக்கும் என்ற நகலை வெளியிட்டனர். இது நாள் வரை, ஆர்.எஸ்.எஸ்.சோ, பாஜகவோ, இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறவில்லை. இந்திய தலைநகர் வாரணாசி என்றும், நாடாளுமன்றம் மக்கள் பிரதிநிதிகளின் மன்றம் அல்ல; மத பிரதிநிதிகளின் மன்றம் என்றும் வரைவு அறிக்கை கூறுகிறது. இசுலாமியர்களும், கிறித்துவர்களும் இந்தியாவின் குடிமக்களாகத் தொடரலாம்; ஆனால் ஓட்டுரிமை இருக்காது என்பது அதில் ஒன்று. அண்மையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், ஆர்கனைசர், பஞ்சஜன்யா இதழ்களுக்கு அளித்த பேட்டியிலும் இது பிரதிபலிக்கிறது.   “இசுலாமியர்கள் இங்கு இருந்தாலும் இருக்கலாம். அவர்களின் முன்னோர்கள் இடத்துக்குப் போவதென்றாலும் போகலாம். இங்கு இருக்க வேண்டும் என்றால், அவர்களின் உயர்வு மனப்பான்மையைக் கைவிட வேண்டும். இந்துக்கள் 1000 ஆண்டுகளாக அந்நிய சதிகளை முறியடிக்க ஒரு யுத்தம் நடத்தி வருகின்றனர். யுத்தத்தில், ஆக்ரோஷமாக இருப்பது இயல்பானது” என்ற அவரின் பேச்சு, சிறுபான்மையினர் மீதான சங் அமைப்பின் நிலைபாட்டைத் தெளிவுபடுத்துவது மட்டுமல்ல; வன்முறையைத் தூண்டுவதாகவும் அமைந்திருக்கிறது. அடுத்து, நீதி பரிபாலன முறை, இந்துத்துவ ராஷ்டிரத்தில் திரேதா யுகம், துவாபர யுகத்தில் பின்பற்றப்பட்ட முறையாக இருக்கும் என அந்த நகலில் தெரிவிக்கப் பட்டுள்ளது.  சமத்துவ அடிப்படையில் உருவாக்கப்பட்ட பல சட்டங்கள், சங் அமைப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏதுவாக இல்லை. பல சுற்று விவாதித்து, மக்கள் பிரதிநிதிகளால் இயற்றப்பட்ட சட்டங்கள், திருத்தங்கள், இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் உட்பட நிராகரிக்கப்படும்.  இத்தகைய யுகங்கள், இந்து மத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டவை. எனவே, மத அடிப்படையிலான அசமத்துவ கோட்பாடுகள் இவற்றில் பிரதிபலிக்கும். சிறுபான்மையினரை இரண்டாம் நிலையில் நிறுத்துவது மட்டுமல்ல; பெண்கள், தலித்துகள், பழங்குடியினர் போன்ற பிரிவுகளுக்கும் சமநீதி இல்லை. இந்த வரைவு அறிக்கையின் மைய அம்சம், வருண அமைப்பின் அடிப்படையில்தான் அரசு நிர்வாகம் இயங்கும் எனக் கூறுகிறது. வருண, சாதிய கட்டமைப்பு வலுப்படுத்தப்படும் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. தோழர் பிரகாஷ் கராத், இந்துத்துவ ராஷ்டிரத்தைப் பற்றிக்  கூறும்போது,  அரசு நிர்வாகத்தை மதத் தலைவர்கள் நடத்துவதுதான் இந்துத்துவ ராஷ்டிரம் என இதனை எளிமையாகப் புரிந்து கொண்டு விடக்கூடாது; உள்ளடக்கம் அதை விட ஆழமானது, ஒட்டு மொத்தக் கட்டமைப்பும் அசமத்துவ அடிப்படையில், இந்துத்துவா என்கிற அரசியல் திட்டத்தின் அடிப்படையில், நிர்மாணிக்கப்படும் என்று சுட்டிக் காட்டினார். இந்த நிகழ்ச்சி நிரலுக்கு, இன்றைய அரசியல் சாசனம் பெரிதும் எதிராக இருப்பதால், அதனை சீர்குலைத்து, பிற்போக்கான மாற்று கதையாடலை முன்னிறுத்தும் ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது.

இரண்டும் ஒன்றல்ல:

அதன் ஒரு பகுதியாகவே ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு என்று பட்டியல் நீள்கிறது. இந்தியா முழுவதும் காவல்துறையின் சீருடை ஒரே மாதிரி இருக்க வேண்டும் என பிரதமர் சமீபத்தில் முன்மொழிந்தது இதற்கு ஒரு உதாரணம். காவல்துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் இந்த முன்மொழிவு வைக்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் எடுக்கும் சில நடவடிக்கைகள், கடந்த கால அரசாங்கமும் எடுத்ததாகக் கூட இருக்கலாம். ஆனால், இரண்டும் ஒன்றல்ல.  வகுப்புவாத சித்தாந்தத்தைப் பின்பற்றும் ஒரு கட்சி, ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு, இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கிறது என்ற வேறுபாடு முக்கியமானது.  இந்தி திணிக்கப்படுவதும், சமஸ்கிருதம் போற்றப்படுவதும், இந்தியாவின் பன்மைத்துவத்தை சிதைக்கும் நோக்கம் கொண்டது. தேசிய புலனாய்வு முகமை, மாநில காவல்துறையின் எல்லையை மீறி நேரடியாகத் தலையிடலாம் என்பது, இசுலாமியர்களை அல்லது அரசியல் எதிரிகளைத் தீவிரவாதிகளாக முத்திரை குத்தும் வாய்ப்பை ஒன்றிய அரசின் கைவசம் வைக்கும் முடிவு.  இந்த வரிசையில்தான் ஆளுநரின் அதிகார மீறல் பிரச்னையும் வருகிறது.

அரசியல் ஆயுதமாக ஆளுநர்

தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, பஞ்சாப், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட  மாநில அரசாங்கத்துக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இதனால் ஒன்றிய அரசுக்குக் கிடைக்கும் குறுகிய அரசியல் ஆதாயம் மட்டும் பகிரங்கமாகக் கண்ணுக்குத் தெரியலாம். ஆனால், விளைவு அது மட்டுமல்ல; பாஜக அல்லாத மாநில அரசுகளை செயல்பட விடாமல் தடுக்கும் அரசியல் நோக்கமும் இதில் உண்டு. அரசியல் சாசனம் கூறும் அதிகார வரம்பு மீறல், கூட்டாட்சி கோட்பாடு சிதைக்கப்படுதல் போன்ற விளைவுகளுடன்,  அனைத்து அதிகாரங்களையும் மையத்தில் குவிப்பது என்கிற ஆர்.எஸ்.எஸ். நோக்கத்தை ஒட்டியே இந்த நகர்வு மேற்கொள்ளப்படுகிறது. சகல அதிகாரமும் பெற்ற ஒன்றிய அரசாங்கமாக இருந்தால்தான், எதிர்ப்புகளை நசுக்கி,  இந்துத்துவ நிகழ்ச்சி நிரலையும், கார்ப்பரேட் ஆதரவு நிகழ்ச்சி நிரலையும், சுயசார்பு அற்ற அயல்துறை கொள்கையையும் துரிதமாக நடத்தி செல்ல முடியும்.

எதேச்சாதிகார பாதை

பாஜக அல்லாத மாநில அரசுகளை முடக்க ஆர்.எஸ்.எஸ். பாஜக எடுக்கும் முயற்சிகள் பலவிதம். மத்திய புலனாய்வு பிரிவு, அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை போன்றவற்றைக் காட்டி அச்சுறுத்தி எதிர்க்கட்சிகளைப் பணிய வைப்பது, பல நூறு கோடிகள் கொடுத்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் ஏற்பாடு, தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமான செயல்பாட்டை முடக்கி, தேர்தல்களில் பாஜக கூட்டணியில் இல்லாத கட்சிகளுக்கு பிரச்னைகளை ஏற்படுத்துவது, நீதித்துறையிலும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த பிடிப்புள்ளவர்களை ஊடுருவ வைப்பது எனப் பல வடிவங்களில் இவை வருகின்றன. ஊடக சுதந்திரத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தி, பெரும்பாலான ஊடகங்களைத் தம் ஊதுகுழலாக்கி வைத்திருப்பதும் இதில் உள்ளடங்கும். வரி வருவாய் உட்பட நிதி பகிர்வு விஷயத்தில் மாநில அரசுகளைத் திணற வைப்பது, மாநில அரசுகளின் நல திட்டங்களை இலவசம் என்று முடக்க முயற்சிப்பது போன்ற நடவடிக்கைகள் இக்காலத்தில் அதிகம் முன்னுக்கு வருகின்றன.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவணங்கள் சுட்டிக்காட்டுவது போல, பாஜக அரசாங்கம் கார்ப்பரேட் ஆதரவு மதவெறி கொள்கைகளை அமல்படுத்தி, இந்துத்துவ ராஷ்டிரத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்றால், எதேச்சாதிகார பாதையில் செல்லத்தான் வேண்டும். ஜனநாயகமும், சுதந்திரமும், கருத்து வேறுபாடுகளும், எதிர்க்கட்சிகளும், பாஜக அல்லாத மாநில அரசாங்கங்களும். மக்கள் தம் விருப்பப்படி வாக்களிப்பதும் அவர்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும்.

இதில் முக்கியமானது, மக்களின் சிந்தனைகளைக் கட்டுப்படுத்துவது என்பதாகும். அனைத்துக்கும் ஒரு தர்க்க நியாயம் இருக்க வேண்டும் என்பதை மறுதலிப்பது, கருத்து சுதச்திரத்தை முடக்குவது, ஊடகங்களைத் தம் கைப்பாவையாக வைத்திருக்கும் முயற்சி, பிபிசி ஆவண படத்துக்குத் தடை, சமூக ஊடகங்கள் மீது நிர்ப்பந்தம், வெறுப்பு அரசியல் பேச்சுக்கள் போன்றவற்றைக் கூறலாம். உயர்கல்வி துறை, குறிப்பாக பல்கலைக்கழக வளாகங்கள், மாணவர்களின் சுதந்திர சிந்தனையை ஊக்குவிக்கக் கூடிய இடங்களாகும். ஆளுநர் என்பவர், பல்கலைக்கழக  வேந்தர் என்பதைப் பயன்படுத்தி, சங் சிந்தனையாளர்களைத் துணை வேந்தர்களாக நியமித்து ஊடுருவது என்பதும், சுதந்திர சிந்தனையை சீர்குலைக்கும் போக்காகும். தேசிய கல்வி கொள்கை முழுக்க முழுக்க, சங் சிந்தனை கூடாரமாகக் கல்வி நிலையங்களை மாற்றும் போக்கே.

ஆளுநரின் பங்கு பாத்திரம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் அணுகுமுறையை இந்தப் பின்புலத்தில் பார்ப்பதே பொருத்தமாக இருக்கும். அதிகார வரம்பு தெரியாமல் அவர் செயல்படவில்லை. தெரிந்தே அதை மீறுகிறார். அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள பணி அது.  டாக்டர் அம்பேத்கர் அவர்கள், ஆளுநருக்கு என்று எந்த வேலையும் இல்லை; அரசியல் சாசனம் வரையறுத்துள்ள கடமைகள்தான் உண்டு என சுட்டிக் காட்டுகிறார். சர்க்காரியா கமிஷன், ஆளுநர் என்பவர் தீவிர அரசியலிலிருந்து விலகி நிற்பவராகவும், தீவிர அரசியல் தொடர்புகள் இல்லாதவராகவும் இருக்க வேண்டும் என விளக்குகிறது. எனவே, தம் சொந்த அரசியல் – சித்தாந்த கருத்துக்களை வெளிப்படுத்த அவருக்கு அதிகாரம் இல்லை என்பது தெளிவு. தமிழ்நாடு சட்டமன்றத்தில் அவர் வாசிக்க மறுத்த பகுதிகள் முழுவதும் சங் சித்தாந்தத்துக்கு எதிரானவை.

மத்திய – மாநில உறவுகள் சீரமைப்புக்காக உருவாக்கப்பட்ட பல கமிஷன்கள், ஆளுநர் குறித்து பரிந்துரைகளை முன்வைத்துள்ளன. உதாரணமாக, சர்க்காரியா கமிஷன் (1983), ஆளுநரை அகற்றும் போது, மாநில அரசுடன் கலந்து பேச வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.  நிர்வாக சீர்திருத்த கமிஷன் (1969) அரசியல் சார்பு தன்மை இல்லாத ஒருவரையே ஆளுநராக நியமிக்க வேண்டும் என்கிறது. பூஞ்ச்சி கமிஷன் (2007). ஆளுநர்களை அகற்ற (இம்பீச்மெண்ட்) மாநில அரசுக்கு சட்ட ரீதியான அதிகாரம் வேண்டும்.; ஆளுநர் நியமனத்தில் மாநில முதலமைச்சரின் கருத்து கணக்கில் எடுக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.

இத்தகைய சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சிவதாசன், ஆளுநரின் அதிகாரங்களை இன்னும் ஸ்தூலமாக வரையறுக்கக் கூடிய அரசியல் சாசன திருத்தம் (பிரிவு 153ஐ திருத்துவது சம்பந்தமாக) கோரி தனிநபர் மசோதாவை சமீபத்தில் முன்மொழிந்துளார். மாநில முதலமைச்சரிடம் 3 பெயர்களைப் பெற்று, அதில் ஒன்றைப் பரிசீலிக்கலாம என்ற ஆலோசனையை முன்வைத்துள்ளார். காலனிய ஆதிக்கத்தின்போது ஆளுநர்கள், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பிரதிநிதியாக இருந்தது போன்ற அணுகுமுறை ஜனநாயக கட்டமைப்பில் பொருந்தாது என்ற அவரது வாதம்  சரியானது. மார்க்சிஸ்ட் கட்சி, ஆளுநரின் அவசியத்தைப் பற்றிக் கேள்வி எழுப்புவதோடு, மேலிருந்து நியமிக்கப்படுபவராக ஆளுநர் இருக்கக் கூடாது என்று கூறுகிறது.

நீதிபதிகள் நியமனம்

இதனை ஒட்டியே நீதிபதிகள் நியமனம் குறித்த சர்ச்சையைப் பார்க்க வேண்டும். ஒன்றிய சட்ட அமைச்சர் கிரேன் ரிஜிஜு,  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கு, ஒன்றிய அரசின் பிரதிநிதியை உள்ளடக்கிய தேடுதல் குழுவை நியமிக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். ஏற்கனவே, அரசியல் சாசன பிரிவுகளின் சாராம்சம், அரசாங்கமே நீதிபதிகளை நியமிக்கக் கூறுகிறது என்றும், இந்த முடிவை எடுக்காவிட்டால், நீதிபதிகளின் காலி இடங்கள் நீடிக்கும் என்றும் அச்சுறுத்தும் விதத்தில் கூறி வந்தார். தற்போது உச்சநீதிமன்றத்தில் மட்டுமல்ல,  உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் ஒன்றிய அரசாங்கம் தலையிடும் வாய்ப்பை உருவாக்க முனைகிறார்.

குடியரசு துணை தலைவர், இப்பிரச்னையில், கேசவானந்த பாரதி வழக்கில், அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சங்களை (basic tenets of constitution) வரையறுத்து, சட்டங்கள் இதற்கு உட்பட்டே இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை கேள்விக்கு உள்ளாக்குகிறார். குடியரசு துணைத் தலைவர் பதவியும் அரசியல் சாசன அடிப்படையில் அமைந்ததாகும். தம் விருப்பம் போல் கருத்துக்களைக் கூற முடியாது.   நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பயன்படுத்தி, அரசியல் சாசனத்தை மீறியும் கூட எவ்வித சட்டத்தையும் இயற்றும் அதிகாரம் வேண்டும் என்பதே இதன் உட்பொருள்.

நீதிபதிகளே நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலிஜியம் முறையின் மாற்றங்கள் வேண்டும் என்பது உண்மைதான். நீதிபதிகள் நியமனம், இடமாற்றம், நீக்கம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கவனிக்கக் கூடிய, சார்புத்தன்மை அற்ற  கமிஷன் வேண்டும் என்பது அவசியம்தான். ஆனால், கொலிஜியத்தின் கோளாறுகளை முன்வைத்து, அந்த இடத்தில், ஒன்றிய அரசே அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஏற்பாட்டைக் கொண்டு வர, ஒன்றிய அரசு முனைவதை அனுமதிக்கக் கூடாது. பாஜக அரசின் இந்த முயற்சி, நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடும் போக்கு மட்டுமல்ல; தம் சித்தாந்த அடிப்படையில் தீர்ப்புகளை வழங்க வைக்கும் ஆபத்தும் மிக அதிகமாகத் தெரிகிறது. மோடியும், மோகன் பகவத்தும் முன்வைக்கும் கருத்துக்கள் எல்லாம் தீர்ப்புகளாகி விட்டால், இந்திய குடியரசின் குணாம்சம் முற்றிலும் மாற்றப்படும். எனவே, ஒன்றிய அரசின் நகர்வுகளை, ஒவ்வொன்றாகத் தனித்து பார்ப்பதை விட, ஆர்.எஸ்.எஸ். முன்வைக்கும் இந்துத்துவா என்கிற அரசியல் திட்டத்தின் வெவ்வேறு அம்சங்கள் என்ற ஒட்டு மொத்த பார்வையுடன் அணுகுவதும், பல்வேறு அரசியல் கட்சிகள், பாஜக அல்லாத மாநில அரசாங்கங்களை ஒருங்கிணைப்பதும், மக்கள் மத்தியில் இதனை அம்பலப்படுத்துவதும் நமக்கு முன் உள்ள மிக முக்கிய கடமையாகும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s