ச.லெனின்
தமிழ்நாடு அரசின் மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவரும் பொருளாதார ஆய்வாளருமான ஜெ.ஜெயரஞ்சன் எழுதியுள்ள “தமிழகத்தில் நிலபிரபுத்துவம் வீழ்ந்த கதை” எனும் நூல் குறித்த சில விமர்சனங்களை முன்வைத்தே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
ஜெயரஞ்சன் அவர்களே குறிப்பிடுவதுபோல், கடந்த முப்பத்தி ஐந்து ஆண்டுகளாக தமிழகத்தில் நிகழ்ந்துவரும் பொருளாதார சமூக மாற்றங்களின் பல கூறுகளை அவர் ஆராய்ந்துள்ளார். இந்நூலுக்கான ஆக்கம், இரண்டாண்டு கால ஆய்வில் திரட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். காவிரிப் படுகையின் மேற்கு டெல்டா பகுதியான பேட்டை என்கிற கிராமமும், கிழக்கு டெல்டா பகுதியில் குறிச்சி என்கிற கிராமமும் ஆய்வுக்கான பகுதியாக தேர்வு செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நூல் உள்ளடக்கியுள்ள ஆய்வின் நோக்கத்தை ஜெயரஞ்சன் தனது நூலின் முன்னுரையிலேயே தெளிவாக குறிப்பிட்டுள்ளார். “காவேரிப் படுகையில் நிலச்சீர்திருத்தம் தோல்வியைத் தழுவியதைப் பலரும் பலவாறாக ஆராய்ந்து ஆவணப்படுத்தியுள்ளனர். அப்படியானால் முன்பு நிலவிய நிலப்பிரபுத்துவம் அப்படியே தொடர வேண்டும் அல்லது வேறு வடிவத்திலாவது தொடர வேண்டும். …… களத்திற்கும் ஆய்விற்குமான பெருத்த இடைவெளி எனக்கு அவமானமாக இருந்தது. இதனை ஓரளவேனும் நிரப்ப முயற்சி செய்தேன்” என்கிறார். அந்த முயற்சியின் விளைபயனே இந்த நூல்.
அதேபோல் “இது மிகச் சிறிய முயற்சி. எழுதப்படாத வரலாறுகள் ஏராளம் உள்ளன என்பதை நாளும் உணர்கிறேன்’‘ என்று குறிப்பிட்டுள்ளார். முந்தைய முயற்சிகளில் உள்ள போதாமைகளையும், தவறான அவதானிப்புகளையும், அடுத்தடுத்த ஆய்வுகள் சீர்செய்யும் என்பதுதான் அறிவியல் பூர்வமான ஆய்வுப் பணிகளின் அடிப்படையாகும். அந்த வகையில் மேலும் பல ஆய்வுகள் இந்த கருத்தோட்டத்தில் நடந்திட இம்முயற்சி அடித்தளம் அமைக்கட்டும்.
இந்நூல் பல்வேறு சிறப்பான தகவல்களையும் நிர்ணயிப்புகளையும் ஆய்வு புலத்திற்கு வழங்கியுள்ளது. நேர்மறையாக எடுத்துக்கொள்ள நிறைய தகவல்களும் நிர்ணயிப்புகளும் இந்நூலில் கொட்டிக் கிடக்கிறது. தஞ்சையில், இடதுசாரி இயக்கங்கள் செய்த பங்களிப்பை பல இடங்களில் சிறப்பாகவே குறிப்பிட்டுள்ளார். தோழர் கோ.வீரய்யன் எழுதிய “செங்கொடியுடன் ஒரு நீண்ட பயணம்” என்னும் நூலில் உள்ள தகவல்களும், கேத்தலின் கஃப் எழுதிய தகவல்களும், இடதுசாரிகளின் பங்களிப்பை எடுத்துக்காட்ட பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் ஆய்வின் முடிவில் ஜெயரஞ்சன் முன்வைக்கும் முடிவுகளை மறுக்கும் வகையிலான தகவல்கள் இந்த நூலிலேயே உள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் நிலப்பிரபுத்துவம் வீழ்ந்த கதையில், சாதிக் கொடுமைகள் இன்னும் ஒழியவில்லை என்பதும் குறிப்பாகவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொள்கையும் கோட்பாடுகளும்
திமுக அரசிற்கு, குறிப்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்திற்கு, சார்பு தன்மையுடன் எழுதப்பட்ட இடங்களிலும், அதன்பொருட்டு பொதுவுடைமை கட்சியினர் – குறிப்பாக சிபிஐ(எம்) கட்சியை குற்றம் சாட்ட முனையும் இடத்திலும், நிர்ணயிப்புக்களில் தடுமாற்றம் தெரிகிறது. சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் பேராசிரியர் கே.நாகராஜ் அவர்கள் வழிகாட்டுதலில், 2007 ஆம் ஆண்டு “ஸ்லேட்டர் கிராமங்கள்” (திருநெல்வேலி – கங்கைகொண்டான் கிராமம் மற்றும் விழுப்புரம் – இருவேல்பட்டு கிராமம்) குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் ஜெயரஞ்சன் முக்கியமான பங்காற்றினார். நான் கள ஆய்வை மேற்கொள்ளும் ஆய்வு உதவியாளராக பணியாற்றினேன். “ஆய்வு மேற்கொள்ளும்போது உனது கொள்கை கோட்பாடுகளை ஓரமாக வைத்துவிட்டு, கிடைக்கும் கள எதார்த்ததிலிறுந்து உனது கொள்கைகளை உரசிப் பார்க்க வேண்டும்.” என்று அவர் அப்போது என்னிடம் கூறினார். இன்றும் அது எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. ஆனால், கருணாநிதிக்கு சார்பாக எழுதும் சில இடங்களில் எனக்கு கூறிய வரிகளை ஜெயரஞ்சன் மறந்துவிட்டாரோ? என்று எண்ணத் தோன்றியது.
சமூக சீர்திருத்தம் என்பதே இறுதி என்கிற நிலையில் இருந்துதான் திராவிட சிந்தனை முன்னெழும். அது இயல்பாகவே சமூக மாற்றம் என்று முழங்கும். கம்யூனிஸ்டுகளை முழுமையாக ஏற்க மறுக்கும். தஞ்சையில் சர்வோதயா தொண்டு நிறுவனமான லாஃப்டி (உழுபவருக்கே நிலம் சொந்தம்) கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் பங்களிப்பு குறித்த பகுதிகளிலும் இதைக் காண முடியும்.
“நிலப்பிரபுக்களிடம் நம்பிக்கையான முறையில் பேசி அவர்களிடம் மிகுதியாக இருக்கும் நிலங்களை குத்தகைதாரர்களக்கு மற்றும் வேளாண் தொழிலாளர்களுக்கு வழங்கவைப்பதற்கு ஒரு இயக்கத்தை (கிருஷ்ணம்மாள் – ஜெகன்னாதன்) முன்னெடுத்தார்கள்.” நிலம் உழுபவர்களுக்குதான் உடைமையாக இருக்க வேண்டும் என்பது சரி. ஆனால், அது எப்படி நடைபெற வேண்டும் என்பதுதான் இங்கு மாறுபடுகிறது. சமரச பேச்சுவார்த்தைகள் எதுவும் வர்க்கபேதத்தை ஒழிக்காது. நிலவுடைமையாளர்களும் குணமாக பேசினால் நல்லவர்களாக மாறப்போவதில்லை.
அடித்தால் திருப்பி அடி
ஏழை கூலி விவசாயியின் வாயில் சாணியை கரைத்து ஊற்றுவதும், தோல் பிய்ந்து தொங்கும் அளவிற்கு சவுக்கால் அடிப்பதும், பாலூட்டும் மார்பகம் கனத்து வலித்தாலும், பால் வேண்டி குழந்தை களத்து மேட்டில் அழுதாலும், வேலை முடியும்வரை வரப்பே பால் கொடுக்க அனுமதிக்காத, ஆதிக்க சாதி நிலப்பிரபுவிடம் எப்படி குணமாக பேசுமுடியும் என்று எதிர்பார்க்கிறார்கள்? கணுக்கால் தெரிய வேட்டி கட்டக்கூடாது; கக்கத்தில்தான் துண்டு; செருப்பு போடக்கூடாது; மணப்பெண்ணின் முதலிரவு பண்ணையோடுதான்; வீட்டு வாசலுக்கு கூட அனுமதிக்கப்படாத நிலையில் அவர்களுடன் எப்படி நம்பிக்கையோடு பேசுவது?
செங்கொடியின் போராட்டம்தான் பண்ணைகளின் அடாவடித்தனத்தை நிறுத்தியது. “அடித்தால் திருப்பி அடி” என்று தோழர். பி. சீனிவாசராவ் செங்கொடி ஏந்தி முழங்கியதுதானே ஆண்டைகளை கதிகலங்க வைத்தது? செங்கொடியின் போராட்டம்தான், குழந்தை அழுதால் எந்தநேரமும் பால் கொடுக்கும் உரிமையை பெற்றுத் தந்தது. தோளில் துண்டு போடக்கூடாது என்பதை எதிர்த்த போராட்டத்தின் வெற்றியின் அடையாளமாகத்தானே இன்றும் தஞ்சை விவசாய தோழர்களின் தோள்களில் சிவப்பு துண்டாக ஜொலிக்கிறது. இவை எதுவும் குணமாக பேசி வாங்கியதல்ல; அடிபணிந்து நின்றவரை இவை எதுவும் கிடைக்கவில்லை.
”1968 இல் நடைபெற்ற கீழ்வெண்மணி படுகொலைக்கு பிறகு கிழக்கு தஞ்சாவூரில் சர்வோதயா மிகவும் துடிப்பாக செய்ல்பட்டது” என்று புத்தகத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. கிருஷ்ணம்மாள் – ஜெகன்நாதன் இருவரும் காந்தியவாதிகள். எப்போதெல்லாம் இந்திய விடுதலை போராட்டம் எழுச்சி பெற்று, ஆளும் வர்க்கத்தை அச்சமூட்டுகிறதோ, அப்போதெல்லாம் இந்த சாத்வீகம் மக்களை இடைமறித்து போராட்ட கனலை வெட்டிச் சுருக்கும். அப்படியான பார்வையோடுதான் சர்வோதயா அமைப்பின் செயல்பாடுகள் அமைந்தன. அதுவே, கீழ்வெண்மணி எனும் போராட்டக் கனல், மற்ற இடங்களில் பரவிவிடும் என்ற அச்சமே கிருஷ்ணம்மாள் – ஜெகன்னாதன் இணையரை இந்த தளத்தில் தள்ளியது. பெரும்பான்மையான தொண்டு நிறுவனங்களின் நோக்கமே மக்களின் போராட்ட அலையை முடக்குவதுதான். சட்டம் சொல்வதுபோல் செய்வோம் என்பது பொதுவான வாய்மொழியாக இருக்கும். இங்கு பிரச்சனை சட்டம் யாருக்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளது என்பதுதானே?
அரசியல் உள்நோக்கமும் வர்க்க சார்பும்
“அவர்கள் கிழக்கு தஞ்சாவூரின் மிகப்பெரிய நிலவுடைமையாளரான வலிவலம் தேசிகருக்கு சொந்தமான நிலங்களை பினாமிகளாக வைத்திருந்தவர்களை சுட்டிக்காட்டினார்கள். தேசிகர் 16 அறக்கட்டளைகளை உருவாக்கி, அதன் மூலம் 350 ஏக்கர் நிலங்களை அவரின் கட்டுப்பாட்டில் தக்கவைத்துக் கொண்டார். 1971 இல் ஜெகன்னாதன் மற்றும் கிருஷ்ணம்மாள் தலைமையில் இயங்கும் சர்வோதயா ஒரு சத்தியாகிரக போராட்டத்தை அறிவித்தது. இந்த இயக்கத்திற்கு சிபிஐ மற்றும் திமுக ஆதரவு அளித்தன. ஆனால், சிபிஎம் ஆதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. மாநிலத்தை ஆட்சி செய்யும் கட்சியான திமுக இந்த இயக்கத்திற்கு ஆதரவு தந்ததனால், சர்வோதயா பினாமி நிலங்களை கைப்பற்றி அதனை கிராமத்தில் இருந்த 300 நிலமற்ற குடும்பங்களுக்கு வழங்கியது. அதே போல, சர்வோதயா கீழவெண்மணியில் நிலங்களை விலைக்கு வாங்கி அதனை நிலமற்றவர்களுக்கு பகிர்ந்து அளித்தது.”
நூலில் உள்ள மேற்கண்ட பகுதி பல கேள்விகளை எழுப்புகிறது. சர்வோதய இயக்கம் தேசிகரை எதிர்த்த போராட்டத்தை சிபிஎம் எதிர்த்தது என்று ஒற்றை வரியில் முடிப்பது, ஏதோ தேசிகருக்கு சிபிஎம் ஆதரவு தெரிவித்து, சர்வோதயா இயக்கத்தை எதிர்த்தது போன்ற பொருள்படும்படியே அது எழுதப்பட்டுள்ளது. நிலவுடைமையை முற்றாக உடைத்து, தேசிகர் மட்டுமல்லாது, வாண்டையார், மூப்பனார் என அனைவரது நிலத்தையும் அரசு கைப்பற்றி, ஏழை உழைக்கும் மக்களுக்கு நிலத்தை பகிர்ந்து கொடுக்கவேண்டும் என்பதே சிபிஎம் நிலை என்பதை அறியாதவர் அல்ல ஜெயரஞ்சன். ஆனால் இங்கு விஷயம் வேறொன்றை உள்ளடக்கியுள்ளது. இந்த சர்வோதயா இயக்கம் மிதவாதத்தை பேசும் ஆளும்வர்க்க சார்புடைய அமைப்பு என்பது நாம் அறிந்ததே. திமுக உள்ளிட்ட அரசுகள் அனைத்தும் நிலவுடைமை வர்க்கத்திற்கு ஆதரவானவைதான். இயல்பிலேயே நிலவுடைமை வர்க்கத்தை எவ்வித சமரசமும் இன்றி எதிர்த்து போராடும் மார்க்சிஸ்ட்டுகளை எதிர்க்கும் அதே நேரத்தில், திரளான உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என்பதை அறிவிக்கும் நோக்கோடு சர்வோதய இயக்கத்தை திமுக ஆதரித்ததில் வியப்பேதும் இல்லை. சிபிஐ உடைந்து சிபிஎம் உருவான துவக்க காலத்தில் சிபிஐ, எதிர் அணியோடு இருந்ததற்கு கூடுதல் விளக்கம் நமக்கு இங்கு தேவையில்லை. மேலும் சர்வோதயா இயக்கம் பினாமி நிலத்தை மீட்டு, நிலமற்ற மக்களுக்கு கொடுத்ததை ஆதரித்த திமுக, ஏன் அதே ஆதரவை மார்க்சிஸ்டுகள் நடத்திய போராட்டத்திற்கு வழங்கவில்லை? அரசியல் உள்நோக்கமும் வர்க்க சார்புமே அதற்கான அடிப்படை காரணமாகும்.
இதையும் நூலின் வேறு ஒரு பகுதியில் ஜெயரஞ்சன் குறிப்பிடுவதில் இருந்தே நாம் புரிந்துகொள்ள முடியும். “வேளாண் கொந்தளிப்பு அலைகள் 1968 க்கும் 1972 க்கும் (இரண்டாம் அலை) இடையில் அமைந்தது. 1967 ஆம் ஆண்டில் ஆட்சி அதிகாரத்தை கைபற்றி திமுக, தஞ்சாவூர் மாவட்டத்தில் குறிப்பாக கீழ் தஞ்சாவூரின் வேளாண் தொழிலாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் மத்தியில் கட்சியை வலுவாக்க் கட்ட முயன்றது. கருணாநிதி கிழக்கு தஞ்சாவூரின் மையப் பகுதியான திருவாரூரிலிருந்து வந்தவர். அவர் பின்னாளில் திமுக வின் தலைவராகவும் மாநிலத்தின் முதல்வராகவும் 1969 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மாவட்டத்தில் கம்யூனிஸ்ட்களின் பிடியை உடைப்பதற்கு பல முயற்சிகளை எடுத்தார். காங்கிரஸ் வலுவாக இருந்த பகுதிகளை திமுக கைப்பற்றி இருந்தாலும், அவர்களால் கம்யூனிஸ்ட்களின் இடங்களை அவ்வளவு எளிதாகக் கைப்பற்ற முடியவில்லை. கருணாநிதி இதை ஒரு முக்கியமான சவாலாகவே எடுத்துக்கொண்டார்.”
யாருக்கும் வலிக்காத அணுகுமுறை
சர்வோதயா இயக்கம், கீழவெண்மணியில் நிலங்களை விலைக்கு வாங்கி நிலமற்றவர்களுக்கு அதை கொடுத்தது. நிலவுடைமையாளர்களிடமிருந்து நிலத்தை இழப்பீடு இன்றி மீட்பதுதானே நில உச்சரம்பு சட்டம். இங்கு நிலத்தை மீட்டு விநியோகிப்பது என்பதற்கு மாறாக நிலத்தை வாங்கி விநியோகிப்பது நிலவுடைமையாளருக்கு ஏதுவான, யாருக்கும் வலிக்காத அணுகுமுறைதான். வங்கியில் கடன் பெற்று, பல நிலங்கள் அவர்களது தொண்டு நிறுவனம் சார்பில் வாங்கி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கடன் திரும்ப செலுத்தப்படாததால் அவை நின்றும் போயுள்ளது. இது கைகூடவில்லை என்பதால் வங்கிகளில் கடன் பெற்று வீடு கட்டி அதை தவணை தொகை பெற்று விற்றுள்ளது. “நிலத்தின் விலை உயர்ந்துவிட்டது. எனவே லாஃப்டி அமைப்பு அதன் பழைய நடவடிக்கைகளை நடைமுறை செய்வதிலிருக்கும் பிரச்சினையை உணர்ந்துகொண்டது. மேலும், அது தன்னுடைய கவனத்தை, நிலம் வாங்கி நிலமற்றவர்களுக்கு கொடுப்பதிலிருந்து, வீடற்றவர்களக்கு வீட்டு வசதி செய்து கொடுப்பதை நோக்கி மாற்றிவிட்டது. அந்த வீடுகளுக்கான தொகையில் தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு 50 சதத்தை மாநில திமுக அரசு மானியமாக வழங்கியுள்ளது. இவை எல்லாம் இருக்கும் அமைப்பு முறைக்குளாகவே எதையாவது மாற்றி வைப்பதுதான். வங்கி கடன் அதன்பேரில் நிலம் என்று துவங்கி, அது சாத்தியமாகவில்லை. எனவே வங்கி கடன், அதற்கு வீடு என்று மாறிவிட்டது. இதில் நிலவுடைமை ஒழிப்பு, உழுபவனுக்கு நிலம் என்பதெல்லாம் எங்கே போனது? இதற்கு திமுக மற்றும் சிபிஐ ஆதரவு என்று நிறைவு செய்யலாமா?.
”கபிஸ்தலத்தை சேர்ந்த மூப்பனார்கள், பூண்டியைச் சேர்ந்த வாண்டையார்கள் தற்போது தங்களுடைய நிலங்களை தக்க வைத்துக்கொண்டுள்ளனர்.” மூப்பனார் தனது அரசியல் செல்வாக்கினால் தனது நிலங்களை பாதுகாத்துக் கொண்டதாகவும், செல்வாக்கு மற்றும் பண பலம் வாண்டையார்களின் நிலவுடைமையை தக்கவைக்க உதவியதா என தெரியவில்லை என்கிறார் ஜெயரஞ்சன். நிலப்பிரபுத்துவமும் நிலவுடைமையும் ஒழியவில்லை என்பதை இதுவும் எடுத்துக்காட்டுகிறது. நிச்சயம் பல இடங்களில் நிலவுடைமை முறை, பல மாற்றங்களை கண்டுள்ளது. ஆனபோதும் நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்படவில்லை. இதனால் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளுக்கு நிலம் பகிர்ந்தளிக்கப்படவில்லை. திமுக எடுத்த நடவடிக்கைகள் அனேகமாக தேர்தல் ஆதாயம் மற்றும் தனது செல்வாக்கை உயர்த்த எடுக்கப்பட்டதே அன்றி, நிலவுடைமையை ஒழிப்பதற்கான உள்ளீடு எதுவும் அதில் கிடையாது.
புதிய மரபுத்தொடர்
”முன்பு கம்யூனிஸ்ட் கட்சிகள், தலித் தொழிலாளர்களை அமைப்பாக திரட்டி வைத்திருந்த்து. அதனால் அவை பள்ளர், பறையர் கட்சி என்று அழைக்கப்பட்டது. கருணாநிதி கிழக்கு காவேரி படுகைப் பகுதியில் திமுக செயலாளராக எப்போதும் ஒரு தலித்தையே வைத்திருந்தார்” என்று மிக எதார்த்தமாக அன்றைய நிலையை ஜெயரஞ்சன் விளக்கியுள்ளார். ஆனால், திமுக ஆட்சியின் பலன்கள், தலித் மக்களுக்கு கிடைக்கவில்லை என்பதையும், அவரே பின்னர் ஓரிரு இடங்களில் குறிப்பிடுகிறார். நிலப்பிரபுத்துவம் ஒழிந்ததாகவும், குத்த்கைதாரர்களுக்கு ஆதாயம் கிடைத்ததாகவும் நூல் விவரித்தாலும், அதனால் பலனடைந்தவர்களில் தலித் மக்கள் மிகமிக குறைவுதான். திக மற்றும் திமுக வின் செயல்பாடுகள் ”பார்ப்பனர் எதிர்ப்பு இயக்கம் பார்ப்பனர்களின் மேலாதிக்கத்தை கேள்விக்குட்படுத்திய அளவுக்கு வெற்றியடைந்ததே ஒழிய ஒட்டுமொத்தமாக சாதி எனும் கருத்தியலை ஒழிக்க முடியவில்லை.” என்பதையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ”பார்ப்பனிய ஒழுங்கினால் வடிவமைக்கப்பட்ட வேளாண் உறவுகள், இப்போது பிற்படுத்தப்பட்ட சாதிகள் எனும் புதிய மரபுத்தொடரில் இயங்க வேண்டிய நிலை வந்தது” என்றும் பதிவு செய்துள்ளார்.
ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கிராமங்களில் கிடைக்கப்பெற்ற புள்ளி விபரங்களின் அடிப்படையிலும் தலித் மக்களுக்கு குத்தகைக்கு கூட நிலங்கள் வழங்கப்படவில்லை. “தலித் அல்லாத சாதிகள் பெற்ற நன்மைகயை காட்டிலும் தலித்கள் குறைவாகவே நன்மை அடைந்தார்கள். … மாநில அரசாங்கம் தலித்துகளின் பக்கம் அதிகமாக சாய்வு கொண்டு இருந்தால், அவர்கள் இன்னும் நன்மையடைந்திருக்கலாம்.’‘ ஆனால் திமுக மற்றும் அதிமுக அரசின் தன்மையும், அதன் உள்ளடக்கமும், அவ்வாறு செய்வதற்கான வாய்ப்பை தரவில்லை. குறிச்சி கிராமத்தில் சுர்ஜித் என்பவர் மேற்கொண்ட ஆய்வின்படி “குத்தகை நிலங்களில் 80 சதமான நிலங்களை தலித் அல்லாத சாதிகளுக்கே குத்தகைக்கு விடப்பட்டு இருக்கிறது. … தலித் அல்லாத குத்தகைதாரர்களை காட்டிலும் தலித் குத்தகைதார்கள் செலுத்தும் வாரத்தின் அளவு இரு மடங்கு அதிகமாக உள்ளது” என்பதையும அவர் நிறுவியுள்ளதை ஜெயரஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.
பெரியார் மண்ணில் தொடரும் தீண்டாமை
பெரியார் மண் என்று கூறினாலும், சாதி ஆணவப் படுகொலைகளும், தீண்டாமை கொடுமைகளும் இன்றும் இங்கு தொடர்கிறது. இந்தியாவில் சாதியும் வர்க்கமும் பின்னிப் பிணைந்துள்ளது என்கிறது மார்க்சிஸ்ட் கட்சி. சாதியும் சொத்துடைமையும் எவ்வாறு இணைந்துள்ளது என்பதை குத்தகைகு நிலம் பகிரப்பட்டுள்ள விபரங்கள் தெளிவுபடுத்துகிறது.
“கீழ்த்தஞ்சையில் நடந்த பெரும் போராட்டங்கறது பொருளாதார உரிமைக்காகவும் அதைவிட மனித உரிமைக்காக நடந்த போராட்டம். சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இணைஞ்சு நடத்தப்பட்ட இயக்கம்.”
“கேரளாவில் மேற்கொள்ளப்பட்ட தீவிர நிலச்சீர்திருத்தம் ஆதிக்க சாதியினரின் ஆதிக்கத்தை வெகுவாகக் குறைத்துவிட்டது. பொதுவாக, ஆதிக்க சாதியினர்தான் நிலப்பிரபுக்களாகவும், குத்தகை விடுபவர்களாகவும் இருப்பார்கள். நில சீர்திருத்தத்தின் காரணமாக இந்த நிலவுடைமையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. இது சாதிய பாகுபாடுகளையும், தீண்டாமை கொடுமைகளையும், பொதுவெளியில் இல்லாமல் ஆக்கிவிட்டது. ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் சமூக ரீதியாக மேல்நோக்கி வர, நில சீர்திருத்தம் வழி அமைத்துள்ளது” என்று முன்னாள் கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் தனது “கேரளா- மற்றொரு உலகம் சாத்தியம்’‘ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது. இது ஏன் தமிழ்நாட்டில் சாத்தியப்படவில்லை? என்பதற்கான பதில் யாதெனில், இங்கு நில சீர்திருத்தம் சரியாக அமலாக்கப்படவில்லை என்பதுதான்.
“ஒரு அரசியல் அமைப்பினர் உரிமைகளுக்காக போராடினார்கள்; இன்னொரு கட்சி தன் அதிகாரத்தை கொண்டு, குத்தகைதாரர்களின் நலன்களைக் காக்க சட்டம் இயற்றியது” என்று முடிவுரையில் எழுதியுள்ளார். கம்யூனிஸ்ட்கள் உரிமைகளுக்காக போராடினார்கள்; இன்றளவும் போராடுகிறார்கள். சட்டங்களை இயற்றிய திமுக மற்றும் அதிமுகவால், சில பலன்கள் சிலருக்கு கிடைத்தாலும், முந்தைய அரசுகளை போலவே நிலப்பிரபுத்துவத்தை முற்றாக ஒழிக்க, அது போதுமானதாக இல்லை. குத்தகை விவசாயிகள், அதுசார்ந்த சில நடவடிக்கைகளே பிரதானமானதாக இருந்துள்ளது. மாறாக, நிலசீர்திருத்தம் என்பதற்கான ஏற்பாட்டிற்குள்ளாகவே தமிழ்நாடு அரசு செல்லவில்லை. அப்படியான சட்டங்களை இயற்றுவதோ, அதை அமலாக்குவதோ அவர்களின் நோக்கமும் அல்ல. வெண்மணி வரதராஜ நாயுடு துவங்கி தற்போது வாண்டையார், மூப்பனார் வரை நிலவுடைமையும் நிலப்பிரபுத்துவமும் காலத்திற்கு ஏற்ற சில மாற்றங்களுடன் அரசின் ஆதரவுடன் நிலைபெற்று நிற்கிறது.
திமுக ஆட்சியின்போது நிகழ்ந்த வெண்மணி சம்பவத்திற்கு பிறகு அந்த அரசு கணபதியாபிள்ளை கமிஷன் அமைத்தது. 1969 ல் செயல்படத் துவங்கிய இந்த கமிஷன் கூலி விவசாயிகளின் கோரிக்கைகளை பிரிசீலித்தது. கோரிக்கையின் மீதிருந்த நியாயத்தை கருத்தில் கொண்டு “மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலிய ஏத்தணும்னு பரிந்துரை செஞ்சாங்க. அதுவும் தஞ்சை மாவட்டம் முழுவதுக்கும் கூட பொருந்துறமாதிரி இல்லாமல், கீழ்த்தஞ்சை மாவட்டத்துக்கு மட்டும் நியாய கூலிச்சட்டம்னு போட்டங்க” என்று தோழர் ஜி.வீரையன் குறிப்பிடுகிறார். போராட்டங்களுக்கு பயந்துதான் அரசு சில சமரச நடவடிக்கைகளுக்கு வந்ததே அன்றி மற்றபடி அது எப்போதும் வர்க்க சார்புடன்தான் இயங்குகிறது. போராட்டம் தீவிரமாக நடைபெற்ற கீழ்த்தஞ்சைக்கு மட்டும்தான் நியாய கூலி என்பதே அதை எடுத்துக்காட்டும் சிறு உதாரனமாகும்.
தலித் மற்றும் பழங்குடி மக்கள் நலன் சார்ந்து இறுதிவரை பனியாற்றிய பி.எஸ் கிருஷ்ணன் அவர்கள் மேற்கு வங்கத்தில் அரசு பொறுப்பில் பணியாற்றியபோது அவருக்கு கிடைத்த அனுபவத்தை பதிவு செய்துள்ளார். நிலவுடைமையை குத்தகைதாரர்கள் முறையாக வைத்திருப்பதால் பயனில்லை என்பதோடு நில விநியோகம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சென்றுசேர்வது அவசியம் என்பதை பதிவு செய்கிறார்.
உண்மையான நிலச்சீர்திருத்தம்
“குத்தகை விவசாயிகளுக்கு பர்கா சீர்திருத்தம் நிரந்தரமான அனுபோகத்தை அந்த நிலத்தின் மீது அளித்தது. ஆனால், நிலத்தைச் சொந்தமாக்கிக் கொள்ளும் உரிமையை அது வழங்கவில்லை.
1987இல் இருந்து 1989 வரை, நான், பட்டியல் சாதியினருக்கான சிறப்பு ஆணையராகவும், அதில் சில காலம் பழங்குடியினருக்கான ஆணையராகவும், பணியில் இருந்தேன். அந்தப் பதவியின் காரணமாக, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடிகள் தொடர்பான பிரச்சனைகளுக்காக, மேற்குவங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்குச் செல்வேன். அப்போது மேற்கு வங்க சமூகநலத் துறை அமைச்சராக இருந்த திரு. தாகுவாவிடம், குத்தகை விவசாயிகளுக்கு அனுபோக உரிமையை மட்டும் கொடுப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டுமா? என்று ஒரு கேள்வி கேட்டேன்.
அனுபோக உரிமையையும் தாண்டி, நிலத்தை அவர்களுக்கே சொந்தமாக்கிக்கொள்வதாக அதை நீட்டிக்க முடியுமா? என்று அவர் வினவினார்.
உழுபவருக்கே நிலம் என்பதுதான் நியாயம். கூடுதல் விளைச்சலும் இதனால் ஏற்படும் என்றேன். தாகுவா என்னுடைய ஆலோசனையை உடனே புரிந்துகொண்டார். ஏற்றுக்கொண்டார். உடனே அதை சரி செய்தார். (இந்தியாவின் மற்ற பகுதிகளும் மேற்கு வங்கமும் வேறுபாடானவை. மேற்கு வங்கக் குத்தகை விவசாயிகளில் 46 சதவீதம் பேர் பட்டியல் சாதியினர், 6 சதவீதம் பேர் பழங்குடிகள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளில் சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட சமூக வர்க்கங்களிலேயே அடித்தளத்தில் இருக்கிற சாதிகள்தான் குத்தகையாளர்களாக இருக்கிறார்கள்)”
இந்த நடவடிக்கையை சாத்தியப்படுத்த 1955 இல் காங்கிரஸ் ஆட்சியின்போது, இயற்றப்பட்ட மேற்கு வங்க நில சீர்திருத்த சட்டத்தில் மூன்று முறை சில முக்கியமான திருத்தங்களை மேற்கு வங்க இடது ஜனநாயக அரசு செய்தது. நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதுவெல்லாம் தடையாக இருந்ததோ, அதையெல்லாம் களை எடுத்தது. பினாமி நிலங்கள் குறித்த விசாரணையை வருவாய் அதிகாரியே மேற்கொள்ள அதிகாரம் கொடுத்தது. விவசாயத்தோடு சம்மந்தமில்லாதவர்களிடம் இருந்த குத்தகை நிலங்கள் கையப்படுத்தப்பட்டது. தானே ஒரு டிரஸ்டை உருவாக்கி நிலத்தை அதன் பெயருக்கு மாற்றிவிட்டு, அதை அனுபவிப்பதை தடுக்கும் வகையில், அதன் டரஸ்டியின் நிலமாகவே அந்த நிலங்கள் கருதப்பட்டு நில உச்சவரம்பின் அடிப்படையில் நிலங்கள் கையகப்படுத்த வழிவகை செய்யப்பட்டது. இதைத்தான் வலிவலம் தேசிகர் விஷயத்தில் திமுக அரசு செய்திருக்க வேண்டும். ஆனால், திமுக அரசோ, கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதனுக்கு ஆதரவு கொடுப்பதோடு தனது கடமையை முடித்துக்கொண்டது.
மார்க்சிஸ்ட கட்சி என்ன செய்தது என்பதை “தென்பரை முதல் வெண்மணி வரை” எனும் நூலில் வலிவலம் எஸ்.தியாகராஜன் பதிவு செய்துள்ளார். “1970 ல் பொடிகாளத்தூர்ல வலிவலம் பண்ணைட்ட கணக்கப்பிள்ளையா இருந்தேன். வலிவலம் பண்ணை மனத்துணை நாத தேசிகர். அங்க அவருக்கு 30 வேலி நிலம் இருந்துச்சு. இந்த சமயத்துல ஜீ.வி (ஜி.வீரய்யன்) கிட்டவும் நெருக்கம் ஏற்பட்டுச்சு. அந்த சமயத்துலதான் நமச்சியவாயபுரத்துல 110 ஏக்கர் எடுத்தாங்க. இதை 90 ஏழை விவசாய தொழிலாளிகளுக்குப் பிரிச்சுக் கொடுத்தோம்.
அப்புறம் வலிவலம் பண்ணைக்கு நிறைய டிரெஸ்டுல நிலம் இருந்துச்சு அதுல 400 ஏக்கர் வரைக்கும் நிலத்த பிரிச்சுக் கொடுத்தோம். இது சுந்தரபாண்டியம், கீழ்வேலி, வலிவலம், நெய்வில் நாலு கிராமத்தில் இருந்து எடுத்த நிலம். … வலிவலம் தேசிகர்கிட்ட வேல பாத்த பண்ணையாள்தான் எம்.எஸ் (எம்.செல்லமுத்து). அப்புறம் அவர் எம்.எல்.ஏ ஆனார்.” இதுதான் செங்கொடியின் தடம்.
முதலாளித்துவ ஜனநாயக அமைப்பு முறைக்குள் ஒரு மாநில அரசு செயல்படுவதற்கான வரம்புகளும் உரிமைகளும் மிகக்குறைவே. நவதாரளமயம் இதை மேலும் வெட்டி சுருக்கியுள்ளது. இதற்குள்ளாக, மக்கள் நலன் சார்ந்து தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. ஒரு சேமநல அரசாக தன்னை தகவமைத்துக்கொண்டு செயலாற்ற அது தொடர்ந்து போராடுகிறது. முதலாளித்துவ நவதாரளமய கொள்கைகளின் விசை அதை பல நேரங்களில் உலுக்கி எடுக்கிறது. சேமநல அரசு – சமூக சீர்திருத்தம் என்பதாக மட்டும் அது நின்றுபோகும்போது, அதன் வர்க்க சார்பு இந்த நெருக்கடியின் காரணமாக அதை சுவீகரித்துக்கொள்கிறது. எனவேதான், நில சீர்திருத்தம் போன்ற அவசியமான நடவடிக்கைகளை அரசியல் ஆயுதம்போல் ஆகாயத்தில் வேகமாக வீசிவிட்டு போர் முடிந்துவிட்டதாக அதுவே கூறிக்கொள்கிறது. சுரண்டல் நிறைந்த இந்த சமூக அமைப்பிற்குள்ளாகவே சில சீர்திருத்தங்களில் திருப்தி அடைந்துகொள்ளாமல் ஒரு முழுமையான சமூக மாற்றத்தை படைப்பது என்ற லட்சியத்தையே இடது ஜனநாயக அரசுகள் மேற்கொள்கின்றன. சீர்திருத்தங்கள், சமூக மாற்றத்திற்கான பயணத்திற்கு படிக்கட்டுக்கள் என்கிற வகையில் அவசியமே. சீர்திருத்தங்களோடு திருப்தியடைவதும் அதுவே புரட்சிகர மாற்றம் என்பதாக புளகாங்கிதம் அடைவதும் அற்தமற்றதாகும்.
Leave a Reply