சர்வதேச மகளிர் தினம் பற்றி அலெக்சாண்ட்ரா கொலந்தாய்

[ரஷ்யாவில் முதன்முதலாக 1913ஆம் ஆண்டு மார்ச் 8 அன்று (பழைய நாட்காட்டி அடிப்படையில் பிப்ரவரி 23) உழைக்கும் மகளிரின் சர்வதேச ஒற்றுமையின் வெளிப்பாடாக சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வை முன்னிட்டு கொண்டாட்டத்திற்கு ஒருவார காலத்திற்கு முன்பு அலெக்சாண்ட்ரா கொலந்தாயின் இக்கட்டுரை ரஷ்ய போல்ஷ்விக் கட்சியின் இதழான பிராவ்தாவில் வெளியானது. அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தியும், பிரச்சாரங்களை முன் வைத்தும், உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையிலும், உழைக்கும் மகளிரின் உணர்வு நிலையை உயர்த்தும் நோக்குடனும் புனித பீட்டர்ஸ்பர்க் நகரில் இத்தினம் கொண்டாடப்பட்டது.]


மகளிர் தினம் என்பது என்ன? அப்படியான ஒரு தினம் அவசியம்தானா? பெண்களுக்கு வாக்குரிமை கேட்டுப் போராடுபவர்களுக்கும் பெண்ணியவாதிகளுக்கும் முதலாளித்துவ வர்க்கத்தைச் சார்ந்த பெண்களுக்கும் கொடுக்கப்படும் சலுகைதானே அது? அது தொழிலாளி வர்க்க இயக்கத்தின் ஒற்றுமைக்கு ஆபத்தை விளைவிக்காதா? இப்படியான கேள்விகளை இப்போதும் ரஷ்யாவில் கேட்க முடிகிறது. இக்கேள்விகளுக்கான தெளிவான பதிலை  வாழ்க்கை நமக்கு முன்பே வழங்கியுள்ளது.


மகளிர் தினம் என்பது உழைக்கும் மகளிர் இயக்கத்தின் வலுவான, நீளமான சங்கிலியின் இணைப்புக் கண்ணியாகும். ஒவ்வொரு ஆண்டும் உழைக்கும் மகளிரின் திரட்டப்பட்ட அணி வளர்ந்து வருகிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்சங்கங்களில் உழைக்கும் மகளிர் சிறு எண்ணிக்கையில்தான் இருந்தனர். தொழிலாளர் கட்சியிலும் மிகச் சில பெண்களே இருந்தனர். தற்போது பிரிட்டனில் 2,92,000 பெண்கள் தொழிற்சங்கங்களில் உள்ளனர். ஜெர்மனியில் 2,00,000 பேர் தொழிற்சங்கங்களிலும், 1,50,000 பேர்  தொழிலாளர் கட்சியிலும் உள்ளனர். ஆஸ்திரியாவில் 47,000 பேர் தொழிற்சங்கத்திலும், 20,000 பேர் கட்சியிலும் உள்ளனர்.


இத்தாலி, ஹங்கேரி, டென்மார்க், ஸ்வீடன், நார்வே, சுவிட்சர்லாண்ட் என எங்கும் உழைக்கும் மகளிர் தங்களை தாங்களே அணிதிரட்டி வருகின்றனர். சோஷலிச பெண்கள் படையில் சுமார் பத்து லட்சம் பேர் உள்ளனர்.  இது ஒரு சக்திமிக்க படையாகும். விலைவாசி உயர்வு, குழந்தை தொழிலாளர்கள், மகப்பேறு காப்பீடு, உழைக்கும் மகளிரைக் காப்பதற்கான சட்டம் என எல்லாம் கேள்விக்குள்ளாகும் இன்றைய நிலையில், உலகின் சக்திவாய்ந்த உழைக்கும் மகளிரைத் திரட்டுவதில் ஏற்பட்டுள்ள உயர்வு கவனிக்கத்தக்கதாகும்.


மூலதனத்திற்கு எதிரான போராட்டத்தின் சுமையை தாங்கள் மட்டுமே சுமக்க வேண்டுமென்று ஆண் தொழிலாளர்கள் நினைப்பதும், பெண்களின் உதவியில்லாமல் இந்த ‘பழைய உலகின்’ மீது தலையீடு செய்ய வேண்டும் என்று அவர்கள் கருதிய காலமும் இருந்தது. தங்களது கணவன, தந்தையோ வேலையிழந்த சூழலில், தவிர்க்க முடியாத காரணங்களால், பெண்கள் உழைக்கும் மகளிராக உழைப்புச் சந்தைக்கு வருகின்றனர். பெண்களை வர்க்க உணர்வு அடையவிடாமல் தடுப்பதன் மூலமாகவே தங்களின் சுயநலனை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதை ஆண் தொழிலாளர்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளனர்.


எந்த அளவிற்கு வர்க்க உணர்வு பெற்ற போராளிகள் அதிகரிக்கின்றனரோ அந்த அளவிற்கு வெற்றிக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. குடும்பம், சமூகம், அரசு என எங்கும் அதிகாரம் மறுக்கப்பட்ட நிலையில், அடுப்படியில் அமர வைக்கப்பட்டிருக்கும் பெண்கள் என்ன அளவிலான உணர்வைப் பெற்றிருக்க முடியும்? அவர்களுக்கென்று ‘சொந்த சிந்தனை’ எதுவுமின்றி, அவர்களது கணவனோ, தந்தையோ சொல்வதைக் கேட்டு, அதற்கேற்ற வகையில் கீழ்ப்படிந்து செயல்படுவதே அவர்களுக்கு வழக்கமாகிவிடுகிறது. எவ்வித உரிமைகளுமின்றி பின்தங்கிய நிலையில் பெண்களை வதைப்பதும், அவர்களை அலட்சியமாகவும் அடிமை போலவும் நடத்துவது உழைக்கும் வர்க்கத்திற்கு எவ்வித பலனையும் தராது. இன்னும் சொல்வதெனில் அது வர்க்க நலன்களுக்கு எதிரானதாகும். அதேநேரம் பெண் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை இயக்கத்திற்குள் எவ்வாறு இணைப்பது? எனும் கேள்வியும் எழுகிறது.


வெளிநாடுகளில் உள்ள சமூக ஜனநாயகவாதிகளால் உடனடியாக இதற்கான தீர்வினை கண்டடைய முடியவில்லை. அங்கு தொழிலாளர் இயக்கங்களில் பெண் தொழிலாளர்கள் இணைவதற்கான வாசல்கள் திறந்திருந்தபோதும் மிகச்சிலரே அதில் சேர்ந்துள்ளனர். ஏனெனில், தொழிலாளி வர்க்கத்தில் உள்ள பெண் தொழிலாளர்களே சட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் கடுமையான இழப்புகளைச் சந்திக்கிறார்கள் என்கிற புரிதலை உழைக்கும் வர்க்கம் அங்குப் பெறவில்லை. நூற்றாண்டுகளுக்கு மேலாகப் பெண்களை அடித்துத் துன்புறுத்துவது, அச்சுறுத்துவது என்பது நிகழ்ந்து வருகிறது. எனவே, அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையிலும், அவர்கள் புரிந்துகொள்ளும் மொழியிலும் பேசி, அவர்களை மன ரீதியாகவும் இதய பூர்வமாகவும் இணைக்கும் வகையிலான சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

சுரண்டல் நிறைந்த, உரிமைகளற்ற இந்த உலகில் தொழிலாளர்கள் உடனடியாக சில முன்முயற்சிகளை வரவேற்க மாட்டார்கள். பெண்கள் உழைப்பை விற்பவர் என்கிற முறையில் (பொருளாதார ரீதியாக) சுரண்டப்படுவதோடு, தாய், பெண் என்கிற வகையில் (சமூக ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும்) ஒடுக்கப்படுகிறார்கள். உழைக்கும் மக்களின் சோஷலிஸ்ட் கட்சி இவற்றை  புரிந்து கொண்டுள்ளது. உழைப்பாளி என்ற வகையிலும் தாய், பெண் எனப் பெண்கள் ஒடுக்கப்படும் அனைத்து நிலைகளிலும், மிகத்துணிவோடு அவர்களுக்கு ஆதரவாக சோஷலிஸ்ட் கட்சி நிற்கிறது.


பெண்களுக்கு அரசியல் உரிமைகளை வழங்கு! பெண் தொழிலாளர்களுக்குச் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடு! தாய் மற்றும் குழந்தைகளுக்குக் காப்பீடு வழங்கு! என்பன உள்ளிட்ட பெண்களுக்கு ஆதரவான கோரிக்கைகளை அனைத்து நாடுகளிலும் சோஷலிஸ்டுகள் முன்வைக்கின்றனர். தொழிலாளர்களின் கட்சி மிகத்தெளிவாக இக்கோரிக்கைகளை முன்னெடுத்தது. அதேபோல், பெண் தொழிலாளர்களும் மிகுந்த விருப்பத்துடன் கட்சியில் இணைந்தனர். பெண்களுக்கான தனித்துவமான, அத்தியாவசியமான கோரிக்கைகளை முன்னெடுப்பதில் தொழிலாளர்களின் கட்சியே முதன்மை பாத்திரம் வகிக்கிறது என்றும் வரவேற்றனர். உழைக்கும் மகளிர் தங்களை அமைப்பாக ஒருங்கிணைத்துக் கொண்டதும், அதன்மூலம் வர்க்க உணர்வு பெற்றதுமே, இந்த இலக்குகளைத் தெளிவுபடுத்துவதற்கான மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

சோஷலிச இயக்கத்தின்பால் உழைக்கும் மகளிரை ஈர்க்கும் கடினமான பணி தற்போது நம்முன் உள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் பெண்களுக்கான செயற்குழு மற்றும் தலைமைக் குழுக்கள் உள்ளன. இக்குழுக்கள் அரசியல் உணர்வு பெறாத பெண்கள் மத்தியில் பணியாற்றி, அவர்களை அணி திரட்டி, அவர்கள் மத்தியில் வர்க்க உணர்வை வளர்க்கின்றனர். பெண்களை அதிகம் பாதிக்கும் பிரச்சனைகளையும் அடையாளம் காண்கின்றனர். விலைவாசி உயர்வுக்கு எதிராகவும், குடியிருப்புகளை மேம்படுத்துவதற்கான கோரிக்கைகளை முன்வைத்தும், பெண்களுக்கான அரசியல் உரிமைகளுக்காகவும், பெண் தொழிலாளர்களுக்கான சட்ட பாதுகாப்பிற்காகவும், பாலூட்டும் தாய்மார்களுக்கான உணவு மற்றும் பாதுகாப்பிற்காகவும், குழந்தை இறப்பு மற்றும் விபச்சாரத்திற்கு எதிரான பிரச்சாரம் என்பன உள்ளிட்டவற்றை அவர்கள் முன்னெடுக்கின்றனர்.


கட்சி உறுப்பினர்கள் என்ற வகையில் பொதுவான வர்க்க நலன்களுக்காகப் போராடுவதோடு, தாய், குடும்பத் தலைவி, பெண் என்கிற வகையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், அவர்களுக்கான தேவைகளையும், பெண் தொழிலாளர்கள் முன்வைக்கின்றனர். கட்சியும், இக்கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துப் போராடுகிறது. பொதுவான தொழிலாளர் நல அம்சங்களின் ஒருபகுதியே  உழைக்கும் மகளிரின் இக்கோரிக்கைகளுமாகும். மகளிர் தினத்தன்று தங்களுக்கு மறுக்கப்பட்டுள்ள உரிமைகளை வென்றெடுக்க அணி திரட்டப்பட்ட பெண்கள் போராடுகின்றனர்.

எதற்காகப் பெண் தொழிலாளர்களைத் தனியாக அணிதிரட்ட வேண்டும்? தொழிலாளி வர்க்கத்தைச் சார்ந்த பெண்களுக்கு தனியான துண்டுப் பிரசுரங்கள், கூட்டங்கள் மற்றும் மாநாடுகளை ஏன் நடத்த வேண்டும்? இது இறுதியில் முதலாளித்துவ பெண்ணியவாதமாகவோ, முதலாளித்துவ ஜனநாயகம் முன்வைக்கும் வெறும் வாக்குரிமைக்கான விஷயமாகவோ ஆகிவிடாதா? என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். வாக்குரிமைக்கான போராட்டத்தை மட்டும் முன்வைக்கும் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கும், தீவிரமான சோஷலிச பெண் இயக்கத்திற்குமான வித்தியாசத்தை அறியாதவர்கள்தான் இப்படியான கேள்விகளை எழுப்புவர்.


முதலாளித்துவ சமூக அமைப்பில் அவர்களின் தந்தையும், கணவரும் மற்றும் சகோதரர்களும் பெறும் உரிமைகளை தாங்களும் அடைவது மட்டுமே முதலாளித்துவ பெண்ணியவாதிகளின் இலக்காகும். பிறப்பின் அடிப்படையிலோ, செல்வ வளத்தின் அடிப்படையிலோ நிலவும் அனைத்து சலுகைகளையும் ஒழிப்பதே உழைக்கும் மகளிரின் இலக்காகும். தங்களை ஆளுகைக்கு உட்படுத்துவது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், உழைக்கும் மகளிர் அதை எதிர்ப்பதில் எவ்வித பாகுபாடும் காட்டுவதில்லை. ஏனெனில், ஒரு தொழிலாளி என்கிற வகையில் இந்நிலையை அவர் மிக எளிதில் அடைகிறார்.


எங்கும் எப்போதும் முதலாளித்துவ பெண்ணியவாதிகள் சம உரிமை என்று கோருகின்றனர். உழைக்கும் மகளிரோ, ஆண், பெண் என அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமை கோருகிறோம். அதே நேரம் குடிமக்கள், தொழிலாளி என்பதாக மட்டுமல்லாமல், பெண்கள் தாய்மார்களாகவும் உள்ளனர் என்பதை நாங்கள் மறப்பதற்கில்லை. ஒரு தாய் என்கிற வகையில் எதிர்காலத்திற்கான தலைமுறையை உருவாக்குபவர்கள் பெண்கள்தான். எனவே, அரசும் சமூகமும் அவர்களையும், அவர்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளையும், பாதுகாப்பதற்கான சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்கிறோம்.


முதலாளித்துவ பெண்ணியவாதிகள் அரசியல் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கின்றனர். உழைக்கும் மக்களைச் சுரண்டிக் கொழுக்கும் இவ்வுலக அமைப்பிற்குள்ளேயே அவர்கள் வசதியாக செயல்படுவதற்கான சூழலையே அவர்கள் முன்வைக்கும் அரசியல் உரிமைகள் கூறுகின்றன. (உழைக்கும் மக்களைச் சுரண்டிக் கொழுக்கும் இவ்வுலக அமைப்பையே தூக்கியெறிந்துவிட்டு) உழைக்கும் மக்களின் அரசைப் படைக்கும் மிகக் கடினமான பாதையை உள்ளடக்கியதே உழைக்கும் மகளிர் முன்வைக்கும் அரசியல் உரிமையாகும்.


உழைக்கும் மகளிருக்கும் முதலாளித்துவ வாக்குரிமையை மட்டும் கோருவோருக்குமான பாதைகள் வெவ்வேறானவை. வாழ்க்கை அவர்களுக்கிடையில் அவர்களின் இலக்குகளை தீர்மானிப்பதில் ஒரு பெரிய வித்தியாசத்தைக் கொடுத்துள்ளது. எஜமானருக்கும் சேவகனுக்கும் இருப்பது போன்ற ஒரு முரண்பாடு, முதலாளித்துவ பெண்ணுரிமையாளர்களுக்கும், உழைக்கும் மகளிருக்குமிடையே உள்ளது. இவர்களுக்கிடையில் எவ்வித தொடர்போ, சமரசமோ இல்லை. எனவே, உழைக்கும் வர்க்க பெண்களுக்கான சிறப்பு மாநாடு குறித்தோ, தனியான மகளிர் தினம் குறித்தோ, ஆண் தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை.
ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்கான போராட்டத்தில் பங்கேற்கச் செய்வதற்கான உணர்வினை பெண் தொழிலாளர்கள் மத்தியில் உருவாக்குவதே உழைக்கும் வர்க்க பெண்கள் மத்தியில் ஆற்ற வேண்டிய தனித்துவமான பணியாகும். மகளிர் தினம், பெண் தொழிலாளர்கள் மத்தியில் நிதானமாகவும், அதேநேரம் கவனமாகவும், ஒரு சுய விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்துகிறது. அது தொழிலாளி வர்க்கத்தை பிரிக்கவில்லை; மாறாக ஒன்றிணைக்கிறது.


உழைக்கும் மகளிர், வர்க்க விடுதலைக்கான போராட்டத்தோடு பெண் விடுதலை என்பதையும் இணைத்து  மகளிர் தினக் கொண்டாட்டத்தில் இணைய வேண்டும்.

தமிழில்: ச. லெனின்

பிப்ரவரி  1913, லெக்சாண்ட்ரா கொலந்தாய், தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள், முன்னேற்றப் பதிப்பகம்,1984 மற்றும் marxist.org (2000)

முதலில் வெளியானது: பிராவ்தா,  No. 40(244), 17 பிப்ரவரி 1913, புனித பீட்டர்ஸ்பர்க்



தமிழகத்தில் நிலப்பிரபுத்துவம்; சீர்திருத்தமும் எதார்த்தமும்

ச.லெனின்

தமிழ்நாடு அரசின் மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவரும் பொருளாதார ஆய்வாளருமான ஜெ.ஜெயரஞ்சன் எழுதியுள்ள “தமிழகத்தில் நிலபிரபுத்துவம் வீழ்ந்த கதை” எனும் நூல் குறித்த சில விமர்சனங்களை முன்வைத்தே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

ஜெயரஞ்சன் அவர்களே குறிப்பிடுவதுபோல், கடந்த முப்பத்தி ஐந்து ஆண்டுகளாக தமிழகத்தில் நிகழ்ந்துவரும் பொருளாதார சமூக மாற்றங்களின் பல கூறுகளை அவர் ஆராய்ந்துள்ளார். இந்நூலுக்கான ஆக்கம், இரண்டாண்டு கால ஆய்வில் திரட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். காவிரிப் படுகையின் மேற்கு டெல்டா பகுதியான பேட்டை என்கிற கிராமமும், கிழக்கு டெல்டா பகுதியில் குறிச்சி என்கிற கிராமமும் ஆய்வுக்கான பகுதியாக தேர்வு செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நூல் உள்ளடக்கியுள்ள ஆய்வின் நோக்கத்தை ஜெயரஞ்சன் தனது நூலின் முன்னுரையிலேயே தெளிவாக குறிப்பிட்டுள்ளார். “காவேரிப் படுகையில் நிலச்சீர்திருத்தம் தோல்வியைத் தழுவியதைப் பலரும் பலவாறாக ஆராய்ந்து ஆவணப்படுத்தியுள்ளனர். அப்படியானால் முன்பு நிலவிய நிலப்பிரபுத்துவம் அப்படியே தொடர வேண்டும் அல்லது வேறு வடிவத்திலாவது தொடர வேண்டும். …… களத்திற்கும் ஆய்விற்குமான பெருத்த இடைவெளி எனக்கு அவமானமாக இருந்தது. இதனை ஓரளவேனும் நிரப்ப முயற்சி செய்தேன்” என்கிறார். அந்த முயற்சியின் விளைபயனே இந்த நூல்.

அதேபோல் “இது மிகச் சிறிய முயற்சி. எழுதப்படாத வரலாறுகள் ஏராளம் உள்ளன என்பதை நாளும் உணர்கிறேன்’‘ என்று குறிப்பிட்டுள்ளார். முந்தைய முயற்சிகளில் உள்ள போதாமைகளையும், தவறான அவதானிப்புகளையும், அடுத்தடுத்த ஆய்வுகள் சீர்செய்யும் என்பதுதான் அறிவியல் பூர்வமான ஆய்வுப் பணிகளின் அடிப்படையாகும். அந்த வகையில் மேலும் பல ஆய்வுகள் இந்த கருத்தோட்டத்தில் நடந்திட இம்முயற்சி அடித்தளம் அமைக்கட்டும்.

இந்நூல் பல்வேறு சிறப்பான தகவல்களையும் நிர்ணயிப்புகளையும் ஆய்வு புலத்திற்கு வழங்கியுள்ளது. நேர்மறையாக எடுத்துக்கொள்ள நிறைய தகவல்களும் நிர்ணயிப்புகளும் இந்நூலில் கொட்டிக் கிடக்கிறது. தஞ்சையில், இடதுசாரி இயக்கங்கள் செய்த பங்களிப்பை பல இடங்களில் சிறப்பாகவே குறிப்பிட்டுள்ளார். தோழர் கோ.வீரய்யன் எழுதிய “செங்கொடியுடன் ஒரு நீண்ட பயணம்” என்னும் நூலில் உள்ள தகவல்களும், கேத்தலின் கஃப் எழுதிய தகவல்களும், இடதுசாரிகளின் பங்களிப்பை எடுத்துக்காட்ட பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் ஆய்வின் முடிவில் ஜெயரஞ்சன் முன்வைக்கும் முடிவுகளை மறுக்கும் வகையிலான தகவல்கள் இந்த நூலிலேயே உள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் நிலப்பிரபுத்துவம் வீழ்ந்த கதையில், சாதிக் கொடுமைகள் இன்னும் ஒழியவில்லை என்பதும் குறிப்பாகவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொள்கையும் கோட்பாடுகளும்

திமுக அரசிற்கு, குறிப்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்திற்கு, சார்பு தன்மையுடன் எழுதப்பட்ட இடங்களிலும், அதன்பொருட்டு பொதுவுடைமை கட்சியினர் – குறிப்பாக சிபிஐ(எம்) கட்சியை குற்றம் சாட்ட முனையும் இடத்திலும், நிர்ணயிப்புக்களில் தடுமாற்றம் தெரிகிறது. சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் பேராசிரியர் கே.நாகராஜ் அவர்கள் வழிகாட்டுதலில், 2007 ஆம் ஆண்டு “ஸ்லேட்டர் கிராமங்கள்” (திருநெல்வேலி – கங்கைகொண்டான் கிராமம் மற்றும் விழுப்புரம் – இருவேல்பட்டு கிராமம்) குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் ஜெயரஞ்சன் முக்கியமான பங்காற்றினார். நான் கள ஆய்வை மேற்கொள்ளும் ஆய்வு உதவியாளராக பணியாற்றினேன். “ஆய்வு மேற்கொள்ளும்போது உனது கொள்கை கோட்பாடுகளை ஓரமாக வைத்துவிட்டு, கிடைக்கும் கள எதார்த்ததிலிறுந்து உனது கொள்கைகளை உரசிப் பார்க்க வேண்டும்.” என்று அவர் அப்போது என்னிடம் கூறினார். இன்றும் அது எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. ஆனால், கருணாநிதிக்கு சார்பாக எழுதும் சில இடங்களில் எனக்கு கூறிய வரிகளை ஜெயரஞ்சன் மறந்துவிட்டாரோ? என்று எண்ணத் தோன்றியது.

சமூக சீர்திருத்தம் என்பதே இறுதி என்கிற நிலையில் இருந்துதான் திராவிட சிந்தனை முன்னெழும். அது இயல்பாகவே சமூக மாற்றம் என்று முழங்கும். கம்யூனிஸ்டுகளை முழுமையாக ஏற்க மறுக்கும். தஞ்சையில் சர்வோதயா தொண்டு நிறுவனமான லாஃப்டி (உழுபவருக்கே நிலம் சொந்தம்) கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் பங்களிப்பு குறித்த பகுதிகளிலும் இதைக் காண முடியும்.

“நிலப்பிரபுக்களிடம் நம்பிக்கையான முறையில் பேசி அவர்களிடம் மிகுதியாக இருக்கும் நிலங்களை குத்தகைதாரர்களக்கு மற்றும் வேளாண் தொழிலாளர்களுக்கு வழங்கவைப்பதற்கு ஒரு இயக்கத்தை (கிருஷ்ணம்மாள் – ஜெகன்னாதன்) முன்னெடுத்தார்கள்.” நிலம் உழுபவர்களுக்குதான் உடைமையாக இருக்க வேண்டும் என்பது சரி. ஆனால், அது எப்படி நடைபெற வேண்டும் என்பதுதான் இங்கு மாறுபடுகிறது. சமரச பேச்சுவார்த்தைகள் எதுவும் வர்க்கபேதத்தை ஒழிக்காது. நிலவுடைமையாளர்களும் குணமாக பேசினால் நல்லவர்களாக மாறப்போவதில்லை.

அடித்தால் திருப்பி அடி

ஏழை கூலி விவசாயியின் வாயில் சாணியை கரைத்து ஊற்றுவதும், தோல் பிய்ந்து தொங்கும் அளவிற்கு சவுக்கால் அடிப்பதும், பாலூட்டும் மார்பகம் கனத்து வலித்தாலும், பால் வேண்டி குழந்தை களத்து மேட்டில் அழுதாலும், வேலை முடியும்வரை வரப்பே பால் கொடுக்க அனுமதிக்காத, ஆதிக்க சாதி நிலப்பிரபுவிடம் எப்படி குணமாக பேசுமுடியும் என்று எதிர்பார்க்கிறார்கள்? கணுக்கால் தெரிய வேட்டி கட்டக்கூடாது; கக்கத்தில்தான் துண்டு; செருப்பு போடக்கூடாது; மணப்பெண்ணின் முதலிரவு பண்ணையோடுதான்; வீட்டு வாசலுக்கு கூட அனுமதிக்கப்படாத நிலையில் அவர்களுடன் எப்படி நம்பிக்கையோடு பேசுவது?

செங்கொடியின் போராட்டம்தான் பண்ணைகளின் அடாவடித்தனத்தை நிறுத்தியது. “அடித்தால் திருப்பி அடி” என்று தோழர். பி. சீனிவாசராவ் செங்கொடி ஏந்தி முழங்கியதுதானே ஆண்டைகளை கதிகலங்க வைத்தது? செங்கொடியின் போராட்டம்தான், குழந்தை அழுதால் எந்தநேரமும் பால் கொடுக்கும் உரிமையை பெற்றுத் தந்தது. தோளில் துண்டு போடக்கூடாது என்பதை எதிர்த்த போராட்டத்தின் வெற்றியின் அடையாளமாகத்தானே இன்றும் தஞ்சை விவசாய தோழர்களின் தோள்களில் சிவப்பு துண்டாக ஜொலிக்கிறது. இவை எதுவும் குணமாக பேசி வாங்கியதல்ல; அடிபணிந்து நின்றவரை இவை எதுவும் கிடைக்கவில்லை.

”1968 இல் நடைபெற்ற கீழ்வெண்மணி படுகொலைக்கு பிறகு கிழக்கு தஞ்சாவூரில் சர்வோதயா மிகவும் துடிப்பாக செய்ல்பட்டது” என்று புத்தகத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. கிருஷ்ணம்மாள் – ஜெகன்நாதன் இருவரும் காந்தியவாதிகள். எப்போதெல்லாம் இந்திய விடுதலை போராட்டம் எழுச்சி பெற்று, ஆளும் வர்க்கத்தை அச்சமூட்டுகிறதோ, அப்போதெல்லாம் இந்த சாத்வீகம் மக்களை இடைமறித்து போராட்ட கனலை வெட்டிச் சுருக்கும். அப்படியான பார்வையோடுதான் சர்வோதயா அமைப்பின் செயல்பாடுகள் அமைந்தன. அதுவே, கீழ்வெண்மணி எனும் போராட்டக் கனல், மற்ற இடங்களில் பரவிவிடும் என்ற அச்சமே கிருஷ்ணம்மாள் – ஜெகன்னாதன் இணையரை இந்த தளத்தில் தள்ளியது. பெரும்பான்மையான தொண்டு நிறுவனங்களின் நோக்கமே மக்களின் போராட்ட அலையை முடக்குவதுதான். சட்டம் சொல்வதுபோல் செய்வோம் என்பது பொதுவான வாய்மொழியாக இருக்கும். இங்கு பிரச்சனை சட்டம் யாருக்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளது என்பதுதானே?

அரசியல் உள்நோக்கமும் வர்க்க சார்பும்

“அவர்கள் கிழக்கு தஞ்சாவூரின் மிகப்பெரிய நிலவுடைமையாளரான வலிவலம் தேசிகருக்கு சொந்தமான நிலங்களை பினாமிகளாக வைத்திருந்தவர்களை சுட்டிக்காட்டினார்கள். தேசிகர் 16 அறக்கட்டளைகளை உருவாக்கி, அதன் மூலம் 350 ஏக்கர் நிலங்களை அவரின் கட்டுப்பாட்டில் தக்கவைத்துக் கொண்டார். 1971 இல் ஜெகன்னாதன் மற்றும் கிருஷ்ணம்மாள் தலைமையில் இயங்கும் சர்வோதயா ஒரு சத்தியாகிரக போராட்டத்தை அறிவித்தது. இந்த இயக்கத்திற்கு சிபிஐ மற்றும் திமுக ஆதரவு அளித்தன. ஆனால், சிபிஎம் ஆதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. மாநிலத்தை ஆட்சி செய்யும் கட்சியான திமுக இந்த இயக்கத்திற்கு ஆதரவு தந்ததனால், சர்வோதயா பினாமி நிலங்களை கைப்பற்றி அதனை கிராமத்தில் இருந்த 300 நிலமற்ற குடும்பங்களுக்கு வழங்கியது. அதே போல, சர்வோதயா கீழவெண்மணியில் நிலங்களை விலைக்கு வாங்கி அதனை நிலமற்றவர்களுக்கு பகிர்ந்து அளித்தது.”

நூலில் உள்ள மேற்கண்ட பகுதி பல கேள்விகளை எழுப்புகிறது. சர்வோதய இயக்கம் தேசிகரை எதிர்த்த போராட்டத்தை சிபிஎம் எதிர்த்தது என்று ஒற்றை வரியில் முடிப்பது, ஏதோ தேசிகருக்கு சிபிஎம் ஆதரவு தெரிவித்து, சர்வோதயா இயக்கத்தை எதிர்த்தது போன்ற பொருள்படும்படியே அது எழுதப்பட்டுள்ளது. நிலவுடைமையை முற்றாக உடைத்து, தேசிகர் மட்டுமல்லாது, வாண்டையார், மூப்பனார் என அனைவரது நிலத்தையும் அரசு கைப்பற்றி, ஏழை உழைக்கும் மக்களுக்கு நிலத்தை பகிர்ந்து கொடுக்கவேண்டும் என்பதே சிபிஎம் நிலை என்பதை அறியாதவர் அல்ல ஜெயரஞ்சன். ஆனால் இங்கு விஷயம் வேறொன்றை உள்ளடக்கியுள்ளது. இந்த சர்வோதயா இயக்கம் மிதவாதத்தை பேசும் ஆளும்வர்க்க சார்புடைய அமைப்பு என்பது நாம் அறிந்ததே. திமுக உள்ளிட்ட அரசுகள் அனைத்தும் நிலவுடைமை வர்க்கத்திற்கு ஆதரவானவைதான். இயல்பிலேயே நிலவுடைமை வர்க்கத்தை எவ்வித சமரசமும் இன்றி எதிர்த்து போராடும் மார்க்சிஸ்ட்டுகளை எதிர்க்கும் அதே நேரத்தில், திரளான உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என்பதை அறிவிக்கும் நோக்கோடு சர்வோதய இயக்கத்தை திமுக ஆதரித்ததில் வியப்பேதும் இல்லை. சிபிஐ உடைந்து சிபிஎம் உருவான துவக்க காலத்தில் சிபிஐ, எதிர் அணியோடு இருந்ததற்கு கூடுதல் விளக்கம் நமக்கு இங்கு தேவையில்லை. மேலும் சர்வோதயா இயக்கம் பினாமி நிலத்தை மீட்டு, நிலமற்ற மக்களுக்கு கொடுத்ததை ஆதரித்த திமுக, ஏன் அதே ஆதரவை மார்க்சிஸ்டுகள் நடத்திய போராட்டத்திற்கு வழங்கவில்லை? அரசியல் உள்நோக்கமும் வர்க்க சார்புமே அதற்கான அடிப்படை காரணமாகும்.

இதையும் நூலின் வேறு ஒரு பகுதியில் ஜெயரஞ்சன் குறிப்பிடுவதில் இருந்தே நாம் புரிந்துகொள்ள முடியும். “வேளாண் கொந்தளிப்பு அலைகள் 1968 க்கும் 1972 க்கும் (இரண்டாம் அலை) இடையில் அமைந்தது. 1967 ஆம் ஆண்டில் ஆட்சி அதிகாரத்தை கைபற்றி திமுக, தஞ்சாவூர் மாவட்டத்தில் குறிப்பாக கீழ் தஞ்சாவூரின் வேளாண் தொழிலாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் மத்தியில் கட்சியை வலுவாக்க் கட்ட முயன்றது. கருணாநிதி கிழக்கு தஞ்சாவூரின் மையப் பகுதியான திருவாரூரிலிருந்து வந்தவர். அவர் பின்னாளில் திமுக வின் தலைவராகவும் மாநிலத்தின் முதல்வராகவும் 1969 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மாவட்டத்தில் கம்யூனிஸ்ட்களின் பிடியை உடைப்பதற்கு பல முயற்சிகளை எடுத்தார். காங்கிரஸ் வலுவாக இருந்த பகுதிகளை திமுக கைப்பற்றி இருந்தாலும், அவர்களால் கம்யூனிஸ்ட்களின் இடங்களை அவ்வளவு எளிதாகக் கைப்பற்ற முடியவில்லை. கருணாநிதி இதை ஒரு முக்கியமான சவாலாகவே எடுத்துக்கொண்டார்.”

யாருக்கும் வலிக்காத அணுகுமுறை

சர்வோதயா இயக்கம், கீழவெண்மணியில் நிலங்களை விலைக்கு வாங்கி நிலமற்றவர்களுக்கு அதை கொடுத்தது. நிலவுடைமையாளர்களிடமிருந்து நிலத்தை இழப்பீடு இன்றி மீட்பதுதானே நில உச்சரம்பு சட்டம். இங்கு நிலத்தை மீட்டு விநியோகிப்பது என்பதற்கு மாறாக நிலத்தை வாங்கி விநியோகிப்பது நிலவுடைமையாளருக்கு ஏதுவான, யாருக்கும் வலிக்காத அணுகுமுறைதான். வங்கியில் கடன் பெற்று, பல நிலங்கள் அவர்களது தொண்டு நிறுவனம் சார்பில் வாங்கி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கடன் திரும்ப செலுத்தப்படாததால் அவை நின்றும் போயுள்ளது. இது கைகூடவில்லை என்பதால் வங்கிகளில் கடன் பெற்று வீடு கட்டி அதை தவணை தொகை பெற்று விற்றுள்ளது. “நிலத்தின் விலை உயர்ந்துவிட்டது. எனவே லாஃப்டி அமைப்பு அதன் பழைய நடவடிக்கைகளை நடைமுறை செய்வதிலிருக்கும் பிரச்சினையை உணர்ந்துகொண்டது. மேலும், அது தன்னுடைய கவனத்தை, நிலம் வாங்கி நிலமற்றவர்களுக்கு கொடுப்பதிலிருந்து, வீடற்றவர்களக்கு வீட்டு வசதி செய்து கொடுப்பதை நோக்கி மாற்றிவிட்டது. அந்த வீடுகளுக்கான தொகையில் தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு 50 சதத்தை மாநில திமுக அரசு மானியமாக வழங்கியுள்ளது. இவை எல்லாம் இருக்கும் அமைப்பு முறைக்குளாகவே எதையாவது மாற்றி வைப்பதுதான். வங்கி கடன் அதன்பேரில் நிலம் என்று துவங்கி, அது சாத்தியமாகவில்லை. எனவே வங்கி கடன், அதற்கு வீடு என்று மாறிவிட்டது. இதில் நிலவுடைமை ஒழிப்பு, உழுபவனுக்கு நிலம் என்பதெல்லாம் எங்கே போனது? இதற்கு திமுக மற்றும் சிபிஐ ஆதரவு என்று நிறைவு செய்யலாமா?.

”கபிஸ்தலத்தை சேர்ந்த மூப்பனார்கள், பூண்டியைச் சேர்ந்த வாண்டையார்கள் தற்போது தங்களுடைய நிலங்களை தக்க வைத்துக்கொண்டுள்ளனர்.” மூப்பனார் தனது அரசியல் செல்வாக்கினால் தனது நிலங்களை பாதுகாத்துக் கொண்டதாகவும், செல்வாக்கு மற்றும் பண பலம் வாண்டையார்களின் நிலவுடைமையை தக்கவைக்க உதவியதா என தெரியவில்லை என்கிறார் ஜெயரஞ்சன். நிலப்பிரபுத்துவமும் நிலவுடைமையும் ஒழியவில்லை என்பதை இதுவும் எடுத்துக்காட்டுகிறது. நிச்சயம் பல இடங்களில் நிலவுடைமை முறை, பல மாற்றங்களை கண்டுள்ளது. ஆனபோதும் நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்படவில்லை. இதனால் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளுக்கு நிலம் பகிர்ந்தளிக்கப்படவில்லை. திமுக எடுத்த நடவடிக்கைகள் அனேகமாக தேர்தல் ஆதாயம் மற்றும் தனது செல்வாக்கை உயர்த்த எடுக்கப்பட்டதே அன்றி, நிலவுடைமையை ஒழிப்பதற்கான உள்ளீடு எதுவும் அதில் கிடையாது.

புதிய மரபுத்தொடர்

”முன்பு கம்யூனிஸ்ட் கட்சிகள், தலித் தொழிலாளர்களை அமைப்பாக திரட்டி வைத்திருந்த்து. அதனால் அவை பள்ளர், பறையர் கட்சி என்று அழைக்கப்பட்டது. கருணாநிதி கிழக்கு காவேரி படுகைப் பகுதியில் திமுக செயலாளராக எப்போதும் ஒரு தலித்தையே வைத்திருந்தார்” என்று மிக எதார்த்தமாக அன்றைய நிலையை ஜெயரஞ்சன் விளக்கியுள்ளார். ஆனால், திமுக ஆட்சியின் பலன்கள், தலித் மக்களுக்கு கிடைக்கவில்லை என்பதையும், அவரே பின்னர் ஓரிரு இடங்களில் குறிப்பிடுகிறார். நிலப்பிரபுத்துவம் ஒழிந்ததாகவும், குத்த்கைதாரர்களுக்கு ஆதாயம் கிடைத்ததாகவும் நூல் விவரித்தாலும், அதனால் பலனடைந்தவர்களில் தலித் மக்கள் மிகமிக குறைவுதான். திக மற்றும் திமுக வின் செயல்பாடுகள் ”பார்ப்பனர் எதிர்ப்பு இயக்கம் பார்ப்பனர்களின் மேலாதிக்கத்தை கேள்விக்குட்படுத்திய அளவுக்கு வெற்றியடைந்ததே ஒழிய ஒட்டுமொத்தமாக சாதி எனும் கருத்தியலை ஒழிக்க முடியவில்லை.” என்பதையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ”பார்ப்பனிய ஒழுங்கினால் வடிவமைக்கப்பட்ட வேளாண் உறவுகள், இப்போது பிற்படுத்தப்பட்ட சாதிகள் எனும் புதிய மரபுத்தொடரில் இயங்க வேண்டிய நிலை வந்தது” என்றும் பதிவு செய்துள்ளார்.

ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கிராமங்களில் கிடைக்கப்பெற்ற புள்ளி விபரங்களின் அடிப்படையிலும் தலித் மக்களுக்கு குத்தகைக்கு கூட நிலங்கள் வழங்கப்படவில்லை. “தலித் அல்லாத சாதிகள் பெற்ற நன்மைகயை காட்டிலும் தலித்கள் குறைவாகவே நன்மை அடைந்தார்கள். … மாநில அரசாங்கம் தலித்துகளின் பக்கம் அதிகமாக சாய்வு கொண்டு இருந்தால், அவர்கள் இன்னும் நன்மையடைந்திருக்கலாம்.’‘ ஆனால் திமுக மற்றும் அதிமுக அரசின் தன்மையும், அதன் உள்ளடக்கமும், அவ்வாறு செய்வதற்கான வாய்ப்பை தரவில்லை. குறிச்சி கிராமத்தில் சுர்ஜித் என்பவர் மேற்கொண்ட ஆய்வின்படி “குத்தகை நிலங்களில் 80 சதமான நிலங்களை தலித் அல்லாத சாதிகளுக்கே குத்தகைக்கு விடப்பட்டு இருக்கிறது. … தலித் அல்லாத குத்தகைதாரர்களை காட்டிலும் தலித் குத்தகைதார்கள் செலுத்தும் வாரத்தின் அளவு இரு மடங்கு அதிகமாக உள்ளது” என்பதையும அவர் நிறுவியுள்ளதை ஜெயரஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.

பெரியார் மண்ணில் தொடரும் தீண்டாமை

பெரியார் மண் என்று கூறினாலும், சாதி ஆணவப் படுகொலைகளும், தீண்டாமை கொடுமைகளும் இன்றும் இங்கு தொடர்கிறது. இந்தியாவில் சாதியும் வர்க்கமும் பின்னிப் பிணைந்துள்ளது என்கிறது மார்க்சிஸ்ட் கட்சி. சாதியும் சொத்துடைமையும் எவ்வாறு இணைந்துள்ளது என்பதை குத்தகைகு நிலம் பகிரப்பட்டுள்ள விபரங்கள் தெளிவுபடுத்துகிறது.

“கீழ்த்தஞ்சையில் நடந்த பெரும் போராட்டங்கறது பொருளாதார உரிமைக்காகவும் அதைவிட மனித உரிமைக்காக நடந்த போராட்டம். சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இணைஞ்சு நடத்தப்பட்ட இயக்கம்.”

“கேரளாவில் மேற்கொள்ளப்பட்ட தீவிர நிலச்சீர்திருத்தம் ஆதிக்க சாதியினரின் ஆதிக்கத்தை வெகுவாகக் குறைத்துவிட்டது. பொதுவாக, ஆதிக்க சாதியினர்தான் நிலப்பிரபுக்களாகவும், குத்தகை விடுபவர்களாகவும் இருப்பார்கள். நில சீர்திருத்தத்தின் காரணமாக இந்த நிலவுடைமையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. இது சாதிய பாகுபாடுகளையும், தீண்டாமை கொடுமைகளையும், பொதுவெளியில் இல்லாமல் ஆக்கிவிட்டது. ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் சமூக ரீதியாக மேல்நோக்கி வர, நில சீர்திருத்தம் வழி அமைத்துள்ளது” என்று முன்னாள் கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் தனது “கேரளா- மற்றொரு உலகம் சாத்தியம்’‘ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது. இது ஏன் தமிழ்நாட்டில் சாத்தியப்படவில்லை? என்பதற்கான பதில் யாதெனில், இங்கு நில சீர்திருத்தம் சரியாக அமலாக்கப்படவில்லை என்பதுதான்.

“ஒரு அரசியல் அமைப்பினர் உரிமைகளுக்காக போராடினார்கள்; இன்னொரு கட்சி தன் அதிகாரத்தை கொண்டு, குத்தகைதாரர்களின் நலன்களைக் காக்க சட்டம் இயற்றியது” என்று முடிவுரையில் எழுதியுள்ளார். கம்யூனிஸ்ட்கள் உரிமைகளுக்காக போராடினார்கள்; இன்றளவும் போராடுகிறார்கள். சட்டங்களை இயற்றிய திமுக மற்றும் அதிமுகவால், சில பலன்கள் சிலருக்கு கிடைத்தாலும், முந்தைய அரசுகளை போலவே நிலப்பிரபுத்துவத்தை முற்றாக ஒழிக்க, அது போதுமானதாக இல்லை. குத்தகை விவசாயிகள், அதுசார்ந்த சில நடவடிக்கைகளே பிரதானமானதாக இருந்துள்ளது. மாறாக, நிலசீர்திருத்தம் என்பதற்கான ஏற்பாட்டிற்குள்ளாகவே தமிழ்நாடு அரசு செல்லவில்லை. அப்படியான சட்டங்களை இயற்றுவதோ, அதை அமலாக்குவதோ அவர்களின் நோக்கமும் அல்ல. வெண்மணி வரதராஜ நாயுடு துவங்கி தற்போது வாண்டையார், மூப்பனார் வரை நிலவுடைமையும் நிலப்பிரபுத்துவமும் காலத்திற்கு ஏற்ற சில மாற்றங்களுடன் அரசின் ஆதரவுடன் நிலைபெற்று நிற்கிறது.

திமுக ஆட்சியின்போது நிகழ்ந்த வெண்மணி சம்பவத்திற்கு பிறகு அந்த அரசு கணபதியாபிள்ளை கமிஷன் அமைத்தது. 1969 ல் செயல்படத் துவங்கிய இந்த கமிஷன் கூலி விவசாயிகளின் கோரிக்கைகளை பிரிசீலித்தது. கோரிக்கையின் மீதிருந்த நியாயத்தை கருத்தில் கொண்டு “மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலிய ஏத்தணும்னு பரிந்துரை செஞ்சாங்க. அதுவும் தஞ்சை மாவட்டம் முழுவதுக்கும் கூட பொருந்துறமாதிரி இல்லாமல், கீழ்த்தஞ்சை மாவட்டத்துக்கு மட்டும் நியாய கூலிச்சட்டம்னு போட்டங்க” என்று தோழர் ஜி.வீரையன் குறிப்பிடுகிறார். போராட்டங்களுக்கு பயந்துதான் அரசு சில சமரச நடவடிக்கைகளுக்கு வந்ததே அன்றி மற்றபடி அது எப்போதும் வர்க்க சார்புடன்தான் இயங்குகிறது. போராட்டம் தீவிரமாக நடைபெற்ற கீழ்த்தஞ்சைக்கு மட்டும்தான் நியாய கூலி என்பதே அதை எடுத்துக்காட்டும் சிறு உதாரனமாகும்.

தலித் மற்றும் பழங்குடி மக்கள் நலன் சார்ந்து இறுதிவரை பனியாற்றிய பி.எஸ் கிருஷ்ணன் அவர்கள் மேற்கு வங்கத்தில் அரசு பொறுப்பில் பணியாற்றியபோது அவருக்கு கிடைத்த அனுபவத்தை பதிவு செய்துள்ளார். நிலவுடைமையை குத்தகைதாரர்கள் முறையாக வைத்திருப்பதால் பயனில்லை என்பதோடு நில விநியோகம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சென்றுசேர்வது அவசியம் என்பதை பதிவு செய்கிறார்.

உண்மையான நிலச்சீர்திருத்தம்

“குத்தகை விவசாயிகளுக்கு பர்கா சீர்திருத்தம் நிரந்தரமான அனுபோகத்தை அந்த நிலத்தின் மீது அளித்தது. ஆனால், நிலத்தைச் சொந்தமாக்கிக் கொள்ளும் உரிமையை அது வழங்கவில்லை.

1987இல் இருந்து 1989 வரை, நான், பட்டியல் சாதியினருக்கான சிறப்பு ஆணையராகவும், அதில் சில காலம் பழங்குடியினருக்கான ஆணையராகவும், பணியில் இருந்தேன். அந்தப் பதவியின் காரணமாக, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடிகள் தொடர்பான பிரச்சனைகளுக்காக, மேற்குவங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்குச் செல்வேன். அப்போது மேற்கு வங்க சமூகநலத் துறை அமைச்சராக இருந்த திரு. தாகுவாவிடம், குத்தகை விவசாயிகளுக்கு அனுபோக உரிமையை மட்டும் கொடுப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டுமா? என்று ஒரு கேள்வி கேட்டேன்.

அனுபோக உரிமையையும் தாண்டி, நிலத்தை அவர்களுக்கே சொந்தமாக்கிக்கொள்வதாக அதை நீட்டிக்க முடியுமா? என்று அவர் வினவினார்.

உழுபவருக்கே நிலம் என்பதுதான் நியாயம். கூடுதல் விளைச்சலும் இதனால் ஏற்படும் என்றேன். தாகுவா என்னுடைய ஆலோசனையை உடனே புரிந்துகொண்டார். ஏற்றுக்கொண்டார். உடனே அதை சரி செய்தார். (இந்தியாவின் மற்ற பகுதிகளும் மேற்கு வங்கமும் வேறுபாடானவை. மேற்கு வங்கக் குத்தகை விவசாயிகளில் 46 சதவீதம் பேர் பட்டியல் சாதியினர், 6 சதவீதம் பேர் பழங்குடிகள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளில் சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட சமூக வர்க்கங்களிலேயே அடித்தளத்தில் இருக்கிற சாதிகள்தான் குத்தகையாளர்களாக இருக்கிறார்கள்)”

இந்த நடவடிக்கையை சாத்தியப்படுத்த 1955 இல் காங்கிரஸ் ஆட்சியின்போது, இயற்றப்பட்ட மேற்கு வங்க நில சீர்திருத்த சட்டத்தில் மூன்று முறை சில முக்கியமான திருத்தங்களை மேற்கு வங்க இடது ஜனநாயக அரசு செய்தது. நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதுவெல்லாம் தடையாக இருந்ததோ, அதையெல்லாம் களை எடுத்தது. பினாமி நிலங்கள் குறித்த விசாரணையை வருவாய் அதிகாரியே மேற்கொள்ள அதிகாரம் கொடுத்தது. விவசாயத்தோடு சம்மந்தமில்லாதவர்களிடம் இருந்த குத்தகை நிலங்கள் கையப்படுத்தப்பட்டது. தானே ஒரு டிரஸ்டை உருவாக்கி நிலத்தை அதன் பெயருக்கு மாற்றிவிட்டு, அதை அனுபவிப்பதை தடுக்கும் வகையில், அதன் டரஸ்டியின் நிலமாகவே அந்த நிலங்கள் கருதப்பட்டு நில உச்சவரம்பின் அடிப்படையில் நிலங்கள் கையகப்படுத்த வழிவகை செய்யப்பட்டது. இதைத்தான் வலிவலம் தேசிகர் விஷயத்தில் திமுக அரசு செய்திருக்க வேண்டும். ஆனால், திமுக அரசோ, கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதனுக்கு ஆதரவு கொடுப்பதோடு தனது கடமையை முடித்துக்கொண்டது.

மார்க்சிஸ்ட கட்சி என்ன செய்தது என்பதை “தென்பரை முதல் வெண்மணி வரை” எனும் நூலில் வலிவலம் எஸ்.தியாகராஜன் பதிவு செய்துள்ளார். “1970 ல் பொடிகாளத்தூர்ல வலிவலம் பண்ணைட்ட கணக்கப்பிள்ளையா இருந்தேன். வலிவலம் பண்ணை மனத்துணை நாத தேசிகர். அங்க அவருக்கு 30 வேலி நிலம் இருந்துச்சு. இந்த சமயத்துல ஜீ.வி (ஜி.வீரய்யன்) கிட்டவும் நெருக்கம் ஏற்பட்டுச்சு. அந்த சமயத்துலதான் நமச்சியவாயபுரத்துல 110 ஏக்கர் எடுத்தாங்க. இதை 90 ஏழை விவசாய தொழிலாளிகளுக்குப் பிரிச்சுக் கொடுத்தோம்.

அப்புறம் வலிவலம் பண்ணைக்கு நிறைய டிரெஸ்டுல நிலம் இருந்துச்சு அதுல 400 ஏக்கர் வரைக்கும் நிலத்த பிரிச்சுக் கொடுத்தோம். இது சுந்தரபாண்டியம், கீழ்வேலி, வலிவலம், நெய்வில் நாலு கிராமத்தில் இருந்து எடுத்த நிலம். … வலிவலம் தேசிகர்கிட்ட வேல பாத்த பண்ணையாள்தான் எம்.எஸ் (எம்.செல்லமுத்து). அப்புறம் அவர் எம்.எல்.ஏ ஆனார்.” இதுதான் செங்கொடியின் தடம்.

முதலாளித்துவ ஜனநாயக அமைப்பு முறைக்குள் ஒரு மாநில அரசு செயல்படுவதற்கான வரம்புகளும் உரிமைகளும் மிகக்குறைவே. நவதாரளமயம் இதை மேலும் வெட்டி சுருக்கியுள்ளது. இதற்குள்ளாக, மக்கள் நலன் சார்ந்து தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. ஒரு சேமநல அரசாக தன்னை தகவமைத்துக்கொண்டு செயலாற்ற அது தொடர்ந்து போராடுகிறது. முதலாளித்துவ நவதாரளமய கொள்கைகளின் விசை அதை பல நேரங்களில் உலுக்கி எடுக்கிறது. சேமநல அரசு – சமூக சீர்திருத்தம் என்பதாக மட்டும் அது நின்றுபோகும்போது, அதன் வர்க்க சார்பு இந்த நெருக்கடியின் காரணமாக அதை சுவீகரித்துக்கொள்கிறது. எனவேதான், நில சீர்திருத்தம் போன்ற அவசியமான நடவடிக்கைகளை அரசியல் ஆயுதம்போல் ஆகாயத்தில் வேகமாக வீசிவிட்டு போர் முடிந்துவிட்டதாக அதுவே கூறிக்கொள்கிறது. சுரண்டல் நிறைந்த இந்த சமூக அமைப்பிற்குள்ளாகவே சில சீர்திருத்தங்களில் திருப்தி அடைந்துகொள்ளாமல் ஒரு முழுமையான சமூக மாற்றத்தை படைப்பது என்ற லட்சியத்தையே இடது ஜனநாயக அரசுகள் மேற்கொள்கின்றன. சீர்திருத்தங்கள், சமூக மாற்றத்திற்கான பயணத்திற்கு படிக்கட்டுக்கள் என்கிற வகையில் அவசியமே. சீர்திருத்தங்களோடு திருப்தியடைவதும் அதுவே புரட்சிகர மாற்றம் என்பதாக புளகாங்கிதம் அடைவதும் அற்தமற்றதாகும்.

உலகமய காலத்தில் வாழ்விட உத்தரவாதமும் சமூக நீதியும்

ச. லெனின்

குரல்: தோழர் பீமன்

சென்னை உள்ளிட்டு தமிழகத்தின் பல இடங்களில் வாழ்விட பாதுகாப்பிற்கான போராட்டங்கள் முன்னுக்கு வந்துள்ளது. குறிப்பாக, நீர்நிலைப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மேம்பட்ட வாழ்விடம் வழங்குதல் என்ற பெயரில் ஏழை எளிய மக்களின் குடியிருப்புக்கள் அகற்றப்படுவதும், அதை எதிர்த்த மக்களின் போராட்டங்களும் தொடர்கின்றன. நகர்ப்புறங்களின் மையத்திலிருந்து, உழைக்கும் மக்களின் பெரும்பகுதியினர் நகரங்களின் விளிம்பிற்கு துரத்தப்படுகின்றனர். இதுபோன்ற நிலைகள் எதுவும் திடீர் நிகழ்வுகளோ, தவிர்க்க முடியாத விஷயங்களோ அல்ல. இதன் பின்னால் உள்ள அரசியல் பொருளாதாரத்தை விளக்கிடும்  சிறு முயற்சியை இக்கட்டுரை மேற்கொள்கிறது.

சென்னை (மெட்ராஸ்), கல்கத்தா, மும்பை உள்ளிட்ட நகரங்கள் பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே துறைமுகம், வர்த்தகம் சார்ந்து வளர்ச்சிபெற்று வந்தன. இந்திய விடுதலைக்கு பிறகான காலப்பகுதியில் புதிய வளர்ச்சிப் போக்குகளின் விளைவாக நகரங்கள் விரிவடைந்தது. அதன் முக்கிய விளைவாக, நகரத்தின் வளர்ச்சிக்கான அடித்தளமாக விளங்கிய உழைக்கும் மக்களும் நகரங்களில் குவிந்தனர். அதேநேரம் சுரண்டல் நிறைந்த முதலாளித்துவ அமைப்பு முறையில் அவர்களுக்கு கிடைத்த குறைந்த கூலியில் குடிசை பகுதிகளில்தான் குடியிருக்க முடிகிறது. கூவம் ஆற்றங்கரையிலும், நெருக்கடி நிறைந்த, காற்றோட்டம் இல்லாத, குடிநீர், கழிப்பிடம், அடிப்படைகள் வசதிகள் ஏதுமற்ற, குறுகிய சந்துகளையே சாலைகளாக கொண்ட, மழை / வெயில் என எந்த காலத்திலும் வாழ தகுதியற்ற மூச்சுத்திணறும் சிறு அறைகளை கொண்ட அல்லது அறைகளற்ற வீடுகளில், அங்கு நிலவும் சுகாதாரமற்ற சூழலில் வாழவேண்டும் என்பது அவர்களது விருப்பமல்ல. உழைப்பாளிகளின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கொடுக்கப்படாத சூழலே அவர்களை ஏழ்மையில் தள்ளியது. அதுவே மோசமான வாழ்நிலையிலும் குடியிருப்புக்களிலும் அவர்களை வாழவைக்கிறது. ஆனால், முதலாளித்துவமும் அதன் கண்ணோட்டம் கொண்ட மேட்டிமை சிந்தனையுடையவர்களும், ஏதோ குடிசை பகுதி மக்களின் தவறான போக்கின் விளைவாகவே அவர்கள் அங்கு இருப்பதுபோன்ற கருத்துக்களை பதிவு செய்கின்றனர். முதலாளித்துவம்தான் அவர்களின் அப்படியான வாழ்நிலைக்கு காரணம் என்பதிலிருந்து தப்பித்துக் கொள்ளும் அரசியலும் அதில் உள்ளது.  இன்று நேற்றல்ல; மார்க்ஸ், எங்கெல்ஸ் காலத்திலேயே இப்படியான கருத்துக்களை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

“வாடகையில் சிறிதளவு பணத்தை மிச்சப்படுத்த முடியுமென்றால், அவர்கள் இருண்ட, ஈரப்பதமான, போதுமானதாக இல்லாத, சுருக்கமாகச் சொல்வதென்றால் சுகாதார நிபந்தனைகள் அனைத்தையும் கேலிக்கூத்தாக்குகின்ற குடியிருப்புக்களை வாடகைக்கு எடுத்துக் கொள்கிறார்கள். பெரும்பாலானவற்றில் சில குடும்பங்கள் ஓர் அறைக்கட்டை, ஒரு சிறு அறையைகூட எடுத்துக் கொள்கிறார்கள். வாடகையை இயன்ற அளவுக்குக் குறைக்க வேண்டும் என்பதற்காக இதைச் செய்கிறார்கள். ஆனால், மறு பக்கத்தில் அவர்கள் தம்முடைய வருமானத்தை உண்மையிலேயே பாபகரமான வழியில் குடிப்பதிலும் எல்லா விதமான சிற்றின்பங்களிலும் விரயம் செய்கிறார்கள்.” என்று ஸாக்ஸ் என்பவர் பதிவு செய்கிறார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் “சாதாரண மக்கள் மதுக்கடைக்குப் போகிறார்கள். அந்தஸ்துடையவர்கள் மனமகிழ் மன்றங்களுக்குப் போகிறார்கள்” என்று தனது ஆசிரியர் இவ்வாறு கூறுவார் என்று எங்கெல்ஸ் அதை நையாண்டி செய்கிறார். மேலும் “முதலாளிகளை பொறுத்தமட்டில், குற்றம் அறியாமையாகக் குறைந்துவிடுகிறது; ஆனால் தொழிலாளர்களைப் பொறுத்தமட்டில், அறியாமையே அவர்களுடைய குற்றத்திற்குக் காரணமாகிவிடுகிறது” என்கிறார் எங்கெல்ஸ்.

துவக்கத்தில் குடிசை பகுதிகள் இருந்த இடங்களிலேயே அதை மேம்படுத்திடும் திட்டங்களை ஆட்சியாளர்கள் மேற்கொண்டனர். புதிய பொருளாதார வளர்ச்சிப் போக்குகள் உழைக்கும் மக்கள் குடியிருக்கும் நிலத்தின் மதிப்பின் மீது தனது பார்வையை செலுத்தியது. அதன் விளைவாக, குடிசை பகுதிகளை மேம்படுத்துவது என்பதிலிருந்து குடிசை பகுதிகளை அகற்றுவது  என்கிற நிலைக்கு அரசும் ஆட்சியாளர்களும் வந்தனர். அதற்கு தேவையான காரணங்களையும் கட்டமைத்தனர். தற்போது குடிசை பகுதிகளை அகற்றுவது என்பதை கடந்து இது ‘ஆக்கிரமிப்பு’ பகுதி, நீர்நிலைகள், மேய்ச்சல் நிலம் என அதன் கைகள் நீள்கிறது. அதுவும் சாஸ்தா பல்கலைக் கழகம் போன்ற பெருநிறுவனங்களின் மீது அவை நீள்வதில்லை. இருக்க இடமின்றி ஒண்டிக்குடித்தனம் செய்யும் எளிய மக்களின் வீடுகள் மீதே அரசின் புல்டோசர்களின் கைகள் நீள்கிறது. இதுவே குடியிருப்புக்கள் மீதான அரசின் வர்க்க கண்ணோட்டத்தை வெளிப்படுத்திவிடுகிறது.

குடியிருப்புகள் குறித்த அரசின் கொள்கைகள்

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் குடியிருப்புகள் குறித்த ஒரு விரிவான அணுகுமுறைகள் எதுவும் உருவாக்கப்படவில்லை. விடுதலை இந்தியாவில் தமிழகம் சார்ந்த கொள்கை ஆவணங்களில் 1956ஆம் ஆண்டுதான் முதன் முதலாக குடிசை பகுதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1956இல் “குடிசை பகுதி (மேம்பாடு மற்றும் அகற்றுதல்) சட்டம்” இயற்றப்பட்டுள்ளது. மனிதர்கள் வாழ தகுதியற்ற நிலையில்தான் குடிசை பகுதிகள் இருக்கிறது என்று சட்டம் கூறுகிறது. ஒன்று குடிசை பகுதி மக்களை அவர்கள் வசிக்கும் இடத்திலேயே மேம்பாட்டு பணிகளை செய்து கொடுத்து குடியிருக்க அனுமதிப்பது அல்லது அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு இடத்தில் குடியமர்த்துவது என்பதே அதன் முன்னால் இருக்கும் இரண்டு வழிகளாக அமைந்திருந்தது. இந்த இரண்டு வழிகளில் எதை அமலாக்குவது என்பதை அவ்வப்போது இருந்த சமூக, அரசியல், பொருளாதார சூழல்களே தீர்மானித்துள்ளன.

தேசிய திட்டக் குழுவின் மூலம் 1960களுக்கு முந்தைய இரண்டு தேசிய திட்டங்களிலும் குடிசை பகுதிகளை வேறு இடங்களுக்கு மாற்றுவது குறித்து பரிந்துரைகளை வழங்கியுள்ளன. குறிப்பாக, மும்பை மற்றும் கல்கத்தா சார்ந்து அதிகம் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், நகர்ப்புறங்களின் விளிம்பில் அவர்களை மறு குடியமர்வு செய்யவும் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இதற்கு கூடுதல் செலவுகளை மேற்கொள்ள வேண்டி வரும் என்பதோடு, அவர்களின் வேலை, சமூகத் தொடர்பு, கல்வி உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்படும் என்பதால், அப்போது அது முன்னெடுக்கப்படவில்லை என்று டில்லி குடிசை பகுதி அகற்றம் குறித்த கட்டுரையில் கெர்ட்னர்தெரிவித்துள்ளார். 1960 முதல் 1970கள் வரை மறுகுடியமர்வு என்பதை விட அவர்கள் குடியிருக்கும் இடத்தை மேம்படுத்துவது என்பதாகவே இருந்து வந்துள்ளது. ஆனால், தற்போது உலக வங்கியின் கடன் மூலம் நிதி கிடைக்கிறது. மக்களின் வேலை, சமூக தொடர்பு, கல்வி குறித்த எவ்வித அக்கறையுமின்றி அரசு மக்களை நகரத்தின் விளிம்பிற்கு துரத்துகிறது.

விடுதலைக்கு பிந்தைய காலப்பகுதியில் சென்னையை நோக்கி வரும் மக்கள் கூட்டம் அதிகரித்தது. இது குடியிருப்பு குறித்த பிரச்சினைகளின்பால் அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. போதுமான அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் உள்ள குடிசை பகுதிகளை மேம்படுத்தி வழங்கிடும் வேலைகளை அரசு மேற்கொள்ளும் என்று ஆட்சியாளர்கள் தெரிவித்தனர். குடியிருப்பு பிரச்சினைக்கான அரசின் தலையீடு என்பது சமூக நிர்ப்பந்தத்தால் விளைந்ததே அன்றி அது யாருடைய கனவு திட்டமாகவும் எழவில்லை. குறைந்த வருமானமுடைய ஏழை எளிய புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் குடிசை பகுதி மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட குடியிருப்புக்களை வழங்குவோம் என்று காங்கிரஸ் கட்சியினரை வாக்குறுதி வழங்க வைத்தது. இதன் தொடர்ச்சியாகவே, குடிநீர் வசதி, கழிப்பறைகள், மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை கொண்ட குடியிருப்புகளை உருவாக்குதல் என்கிற வகையிலேயே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் “மெட்ராஸ் மாகாண வீட்டு வசதி வாரிய சட்டம் 1961” உருவாக்கப்பட்டது. இதுவே தற்போது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் என்றுள்ளது. குடிசை பகுதிகளை மேம்படுத்தி வாழ்வதற்கு தகுதியான அடிப்படை வசதிகளை கட்டமைப்பது என்கிற வகையில் இது துவங்கப்பட்டது. ஆனபோதும் அதில் போதுமான முன்னேற்றத்தை அதனால் ஏற்படுத்த முடியவில்லை.

1967இல் திமுக தமிழகத்தின் ஆட்சி பொறுப்பிற்கு வந்தது. திமுக-விற்கு சென்னையின் குடிசைபகுதி மக்களிடம் வலுவான செல்வாக்கு இருந்தது.  அவர்களை உள்ளடக்கி திட்டமிடும் நோக்கில் 1970ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டது. இது தமிழகம் முழுவதும் உள்ள குடிசை பகுதிகளின் பிரச்சினைகளை மாநில அளவிளான நோக்கோடு அணுகிட வழி செய்தது. “தமிழ்நாடு குடிசை பகுதிகள் மேம்படுத்துதல் மற்றும் அகற்றுதல் சட்டம் 1971” இயற்றப்பட்டது. குடிசை பகுதிகளில் அதிகமான செல்வாக்கையும் கூடுதல் வாக்கு வங்கியையும் பெற்றிருந்த திமுக-விற்கு அப்பகுதி மக்களை அங்கிருந்து அகற்றி நகரத்தின் விளிம்பிற்கு துரத்துவது என்பது அப்போது விருப்பமானதாக இல்லை. எனவே, குடிசை பகுதிகளை கண்டறிதல், வரைமுறைப் படுத்துதல், மக்கள் குடியிருக்கும் பகுதிகளிலேயே புதிய கட்டிடங்களை கட்டுதல், பொதுக்கழிப்பிடங்கள் அமைத்தல், குடிநீர் விநியோகம் என்பனவற்றை தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் செய்தது. பொதுவாக சமூக நல திட்டங்களை அமலாக்குதல், பொது செலவீனங்களுக்கான நிதி ஒதுக்குவது என்பதெல்லாம் எளிய மக்களுக்கு குறைந்தபட்ச ஆதாரங்களை உருவாக்கும் நோக்கம் கொண்டதாக அமைந்தது. முழுக்க வர்க்க நோக்கோடு உழைக்கும் மக்களை மையப்படுத்தி அமலாக்கப்படாத போதும், பிரபலமான வகையில் சமூக நீதி என்கிற நோக்கோடு எளிய மக்களின் ஒரு பகுதியை அது ஆசுவாசப்படுத்தியது. “ஒவ்வொரு லிபரல் அரசாங்கமும் நிர்பந்திக்கப்படும்போது மட்டுமே சமூக சீர்திருத்தச் சட்டங்களை அவை கொண்டு வரும்…..”. உழைக்கும் மக்களின் அப்படியான போராட்டங்களும் எதிர்வினைகளுமே இன்றுவரை எளிய மக்களை பாதுகாக்கின்ற சட்டங்களையும் ஆணைகளையும் சாத்தியமாக்கியுள்ளன.

மாநில அரசின் கொள்கை மாற்றம்

“ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்” என்பதாகவே ஆரம்பக்கால நடவடிக்கைகள் துவங்கின. கொள்கை ரீதியாக ஏற்பட்ட மாற்றங்கள் ஏழைகளின் சிரிப்பை பறித்தது. குறிப்பாக 1970களின் மத்தியில் சர்வதேச நிதியத்தின் நிதி பங்களிப்பு குடிசை பகுதிகள் மேம்பாடு குறித்த கொள்கை திட்டங்களில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. 1975இல் தமிழகத்திற்கு உலக வங்கி நிதி பங்களிப்பு செய்தது. குடிசை பகுதிகள் மேம்பாட்டிற்காக 240 லட்சம் டாலரை நிபந்தனைக்குட்பட்ட கடனாக உலக வங்கி வழங்கியது. நிபந்தனையின் பகுதியாக அரசு கட்டிக் கொடுக்கும் வீடுகளுக்கு பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்கும்படி கூறியது. தற்போது வரை இந்த உலக வங்கியின் கைகள் மக்களின் பாக்கெட்டில் உள்ள பணத்தை எடுப்பதற்கான துவக்கப் புள்ளியாக அமைந்தது. “மெட்ராஸ் நகர்புற மேம்பாட்டு திட்டம் 1இல் (1971) கொள்கை ரீதியான ஒரு மாற்றத்தை உட்கொண்டது. இதில் பயன்பாட்டாளர் பங்களிப்பு என்கிற வகையில் பணத்தை திரும்பப் பெறுதல் என்பது அறிமுகப்படுத்தப்பட்டது” என்கிறது 1982இல் வெளியான உலக வங்கி அறிக்கை. இதன் விளைவாக ஏழை எளிய மக்கள் வாடகை என்பதாகவோ, மேம்பாட்டிற்கான கட்டணம் என்றோ, பயன்பாட்டு கட்டணம் என்கிற வகையிலோ, பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் உருவானது. இது மக்கள் மத்தியில் எதிர்வினையை உருவாக்கக்கூடும். அது ஆட்சிக்கு எதிராக திரும்பும் என்கிற சிறு அச்சம் ஆட்சியாளர்களுக்கும் உண்டு. ஆனால், இவ்வாறான கட்டணங்களை வசூலிக்காவிட்டால், தங்களின் நிதி பங்களிப்பை இழக்க வேண்டிவரும் என்றும், பணத்தை வசூலிக்க தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கூடுதல் முன்முயற்சி எடுக்க வேண்டும் என்றும், உலக வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது. கட்டணமில்லா குடியிருப்பு வசதி மற்றும் மேம்பாடு என்பதாக இருந்த குடிசை பகுதி கொள்கை நிலையை உலக வங்கியின் தலையீடு மாற்றியமைத்தது. பல்வேறு நேரடியான மற்றும் மறைமுக காரணங்களால் அதை ஏற்று, ஆட்சியாளர்களும் அதற்கேற்ற வகையில் கொள்கை திட்டங்களை மாற்றி அமைத்தனர். எளிய மக்களிடம் கட்டணம் வசூலிப்பதும் அரசின் பங்களிப்பை குறைப்பதும் அவர்கள் பேசிய சமூக நீதிக்கும் எதிரானது என்பது வெளிப்படை.

இதற்கு பிறகு வந்த எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசு புதிய கொள்கை திட்டத்திற்கு தன்னை முழுமையாக உட்படுத்திக் கொண்டது. திமுக ஆட்சியில் இருந்தபோது, அதனை எதிர்ப்பதற்கும், அந்த ஆட்சியை வீழ்த்தும் செயல்பாட்டிற்கும், ஒன்றிய அரசுடன் இணக்கம் பாராட்டிய அதிமுக, ஆட்சிக்கு வந்தவுடன் ஒன்றிய அரசின் கொள்கை திட்டத்திலும் தன்னை இணைத்துக் கொண்டது. மாநில நலன், தமிழ் நிலம் என்றெல்லாம் பேசிவந்த தமிழக அரசியல் களம் இந்த காலகட்டத்தில் மேலும் அமைதியானது. 1980களில் சர்வதேசிய நிதியத்தின் நிதியை ஏற்றுக் கொண்டது. உலக வங்கி கூறியபடி குடியிருப்புக்களை மேம்படுத்த அரசு செய்த செலவீனங்களை குறைத்துக் கொண்டு, மக்கள் செலுத்த வேண்டிய பயன்பாட்டு கட்டணத்தை அதிகரித்தது. ஏழைகளுக்காகவே வாழ்வதாக தனது படங்களில் நடித்ததின் விளைவாக மக்கள் மத்தியில் பெரிய பிம்பத்தை ஏற்படுத்திய எம்ஜிஆர் ஆட்சி காலத்தில்தான் இவையெல்லாம் நிகழ்ந்தது. உலக வங்கியின் பரிந்துரைகள்படி தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் செயல்பட துவங்கியது. இக்காலத்தில்தான் முந்தைய 240 லட்சம் டாலர் கடன் என்பதை கடந்து 3,000 லட்சம் டாலர் கடனை சர்வதேச நிதியம் வழங்கியது. இதுவும் நிபந்தனைக்குட்பட்ட கடன் என்பதை தனியாக சொல்ல வேண்டியதில்லை. இதைத்தொடர்ந்து 1990களில் தாராளமயத்தை உள்ளடக்கிய புதிய பொருளாதார கொள்கையை இந்திய அரசு அமலாக்கியது, மேலும் உழைக்கும் மக்களின் குடியிருப்பு பிரச்சினையை சிக்கலாக்கியது. தற்போது தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் என்பது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என பெயர் மாற்றம் கண்டுள்ளது. அது பெயர் மாற்றம் மட்டுமல்ல; அதன் உள்ளடக்கமும் மாறிவிட்டது. தனியார் பங்களிப்பு, அரசின் பங்களிப்பு குறைப்பு, பராமரிப்பு பணியிலிருந்து வாரியம் வெளியேறுவது, மக்களிடம் பயன்பாட்டு கட்டணத்தை கூடுதலாக பெறுவது என்று அதன் முழுமையான சமூக நோக்கு சிதைக்கப்பட்டுள்ளது. சமூக நீதி எனும் திராவிட சித்தாந்தம் இங்கு கடுமையாக பாதிக்கப்படுகிறது. தனியார்மயத்தை ஆதரிப்பதும், அதனை அமலாக்குவதும், எளிய மக்களை சிக்கலுக்கு உள்ளாக்கும். அது சமூகநீதிக்கு எதிரான அப்பட்டமான செயல்பாடுதான் என்பதை அனுபவங்கள் நிருபிக்கின்றன.

புதிய பொருளாதார கொள்கை அமலாக்கப்பட்ட காலத்திலும், அதற்கு பின்னரும், அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகள்தான் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் மாறி மாறி இருந்துள்ளன. இதே காலக்கட்டத்தில் ஒன்றிய அரசுடன் இரு கட்சிகளும் உறவு பாராட்டி வந்துள்ளன. திமுக கணிசமான காலம் ஒன்றிய ஆட்சியில், அமைச்சரவையிலும் பங்கேற்றுள்ளது. பொதுத்துறையை விற்க நேரும் தருணங்களில், சில எதிர்ப்புகளை தெரிவித்ததை தவிர, தனியார்மயத்தையும், தாராளமயத்தையும் உள்ளடக்கிய உலகமயமாக்கலின் புதிய பொருளாதார கொள்கைகளை இவ்வரசுகள் எதிர்த்ததில்லை. இது மாநில அரசில் அவர்கள் மேற்கொண்ட கொள்கை மாற்றங்களிலும் வெளிப்பட்டது. அது குடியிருப்பு பிரச்சினையிலும் தாக்கத்தை செலுத்தியது.

வளர்ச்சித் திட்டங்கள் அனைத்திலும் தனியார் பங்களிப்பு பிரதானமாக்கப்பட்டுள்ளது. அரசின் பங்களிப்பு வெட்டி சுருக்கப்பட்டது. இக்காலத்தில் குடிசை பகுதிகள் மேம்படுத்துவதற்கு பதிலாக அம்மக்களை நகரத்தை விட்டு அகற்றுவதற்கே ஏற்பாடுகள் செய்யப்பட்டன. குறிப்பிட்ட கட்சியின் கோட்டை, இங்குள்ள வாக்குகள் இன்னாருக்குத்தான் என்றில்லாமல் இம்மக்களின் வாக்கு செலுத்தும்முறை மாற்றம் கண்டு விட்டதும், எனவே, அவர்கள் மீதான கவனமும், அவர்களை அங்கேயே தக்க வைக்க வேண்டும் என்கிற தேவையும், ஆட்சியாளர்களுக்கு இல்லாமல் போனது.

குடிசை மக்கள் குடியிருக்கும் இடம் சுகாதாரமாக இல்லை; குடிநீர் சுத்தமாக இல்லை; கழிப்பறை இல்லை; வீடுகள் காற்றோட்டத்துடன் வாழ்வதற்கு ஏற்றதாக இல்லை என்று பிரதானமாக பேசப்பட்டது. எனவே, இவற்றை அங்கு ஏற்படுத்திக் கொடுப்பது முதன்மையாக பேசப்பட்டது. அப்புறப்படுத்துதல் என்பது இரண்டாவதாக இருந்தது. இன்று தனியார் பங்களிப்பு அதிகரித்தவுடன் புதிய வகையில் இந்த விவாதங்கள் திட்டமிட்ட வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படியான சூழலில், அவர்கள் அங்கு வாழ்வது ஆபத்தானது என்பதாக இருந்த விவாதம், கூவம் கரையோரம் அவர்கள் வாழ்வது அந்த ஆற்றை சீரழிக்கிறது என்றும், அந்த ‘ஆக்கிரமிப்பே’ சுற்றுச்சூழலை சீர்கெடுக்கிறது; இது சமூகத்திற்கே ஆபத்து என்று மாற்றப்பட்டது. கொசஸ்தலை ஆறும், அடையாறு ஆறும், கூவம் ஆறும் மாசு அடைந்ததற்கு அந்த மக்கள் எந்த வகையிலும் காரணம் இல்லை. மோசமான நகர்ப்புற திட்டமிடல், எவ்வித சுத்திகரிப்பும் செய்யாமல் கழிவுகளை கலப்பது போன்ற ‘வளர்ச்சிப் போக்குகளே’ காரணமாகும். ஆனால், கரையோரம் வாழும் மக்கள் மீது மிக எளிதாக பழி சுமத்தி மக்களின் பொதுப்புத்தியில் நச்சுக் கருத்தை புகுத்தி, சமூக ஒப்புதலுடன் அவர்களை நகரை விட்டே விரட்டியடிக்கிறது அரசு. இப்படியான பகுதிகளில் இருந்த மக்களை அகற்றிவிட்டு, அவை எதுவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கோடு பராமரிக்கப்படவில்லை என்பதுதான் நிதர்சனம். அவ்விடங்கள் தனியாரின் கைகளுக்கு மாற்றப்படுவதும், பொழுதுபோக்கு பூங்காக்கள், வணிகவளாகங்கள் (மால்கள்) என கட்டிடங்களின் தொகுப்பாகவே மாறுகிறது. சென்னையில் பங்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று கூறி கரையோரம் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஆனால், அரசின் ஆக்கிரமிப்பில் அந்த கால்வாயில் தூண்கள் போட்டுதான் பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கூவம் ஆற்றங்கரையில் வாழ்ந்து வந்த மக்கள் இதேபோல் அப்புறப்படுத்தப்பட்டனர். அதே கூவத்தின் இடையில் தூண்களைர் அமைத்துதான் மதுரவாயல் முதல் துறைமுகம் வரையிலான பறக்கும் சாலை திட்டம் அமையவுள்ளது. இதே கூவம் மற்றும் பக்கிங்காம் கரையோரம் இருந்த குடிசைகள் இடிக்கப்பட்ட நிலையில், பெரிய பெரிய தனியார் கட்டிடங்கள் இடிக்கப்படவில்லை. இப்படியான நிலையில் இவர்கள் முன்வைத்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்னவானது?

குடிசை பகுதிகள்தான் அனைத்து குற்றச் செயல்களுக்கும் ஆதாரமான இடம் என்று குறிப்பிடப்பட்டு, இது சுற்றுப்புற மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கிறது என்கிற கருத்தும் பரவலாக்கப்பட்டது. சாராயம் காய்ச்சுவதை பார்க்கும் பார்வையோடு பீர் தொழிற்சாலை மற்றும் மது உற்பத்தி செய்யும் உரிமையாளரை பார்ப்பதில்லை. கஞ்சா உற்பத்தி எந்த குடிசை பகுதிகளிலும் நடக்கவில்லை. கப்பல்கள் மூலமாகவும், விமானம் மூலமாகவுமே கடத்தல்கள் நடக்கிறது. இந்த கனவான்கள்தானே உண்மையில் குற்றவாளிகள். ஆனால் பழி என்னவோ குடிசை பகுதி மக்கள் மீதுதானே?

நகரத்தைவிட்டு விரட்டப்பட்டவர்கள்

இயற்கை பேரிடர்களை காரணம் காட்டியும், குடிசைபகுதி மக்கள் தங்களது குடியிருப்புகளிலிருந்து அப்புறப்படுத்தப்படுகின்றனர். குறிப்பாக, சுனாமி காலத்தில் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்புகிறோம் என்கிற பெயரில், கடற்புற மக்கள் நிரந்தரமாகவே வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். சென்னை துரைப்பாக்கத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வரிய குடியிருப்பு பகுதியில் சுனாமி குடியிருப்பு என்ற பெயரில் குடியிருப்புகள் உள்ளது. சென்னையின் மைய பகுதியிலிருந்து நகரத்தின் விளிம்பிற்கு துரத்தப்பட்ட மக்களின் வாழ்விட பிரச்சனை மேலும் கூடுதலான சிரமத்திற்குள் அவர்களை தள்ளியுள்ளது. துரைப்பாக்கம் கண்ணகி நகர் பகுதியில் மட்டும் சுமார் 20ஆயிரம் வீடுகள் ஒரே இடத்தில் குவியலாக உள்ளது. இக்குடியிருப்பு சென்னையின் மையத்திலிருந்து பல பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.  அங்கிருந்து மேலும்  10 கிலோ மீட்டர் தெலைவில் செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதியில் சுமார் 27,000 குடியிருப்புக்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் அனைவரும் சென்னையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு விரட்டப்பட்டவர்களே. இவர்களுக்கான வேலை, கல்வி, சுகாதாரம் வாழ்வாதாரம் என எல்லாமும் கேள்விக்குறியாகவே உள்ளது. எந்த சுகாதார சீர்கேட்டிலிருந்து இம்மக்களை பாதுகாக்கப் போவதாக கூறி அரசு இவர்களை இவ்வளவு தெலைவில் விரட்டியடித்த்தோ அங்கு எவ்வித நலமும், சமூக பாதுகாப்பும் இல்லாமல் வசிக்கின்றனர்.

“முதலாளித்துவ வர்க்கம் நடைமுறையில் குடியிருப்பு பிரச்சினைகளை எப்படி தீர்க்கிறது என்பதற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க உதாரணமாகும். முதலாளித்துவ உற்பத்தி முறையில் நம்முடைய தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்புக்கள் நோயின் பிறப்பிடங்களாக விளங்குகிறது. அத்தகைய கேவலமான பொந்துகள் மற்றும் நிலவறைகளை முதலாளித்துவ உற்பத்தி முறையில் ஒழிக்கப்படுவதில்லை. அவை வேறெங்காவது மாற்றப்படுபடுகிறது.” என்கிற எங்கெல்சின் வார்த்தைகளின் உண்மையை, சென்னையை விட்டு விரட்டப்பட்டுள்ள மக்களின் தற்போதைய குடியிருப்புகள் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

சென்னை வெள்ளதின்போதும் அதை தொடர்ந்தும் பல்வேறு குடியிருப்புக்கள் அகற்றப்பட்டன. இங்குதான் குடிசை பகுதிகளை கடந்து அடுத்த நிலையில் உள்ள பட்டா இல்லாத குடியிருப்புகளில் வாழும் மக்கள் குடியிருப்புக்களின் மீது அரசின் கைகள் நீள்கிறது. மயிலாப்பூர் கோவிந்தசாமி நகர் குடிசைமாற்று வாரியத்தால் குடியிருப்பு பகுதி என வரையறுக்கப்பட்டுள்ளது. ஒரு பொதுநல வழக்கை பயன்படுத்தி அரசு நிர்வாகம் குடியிருப்புகளை அகற்றுகிறது. ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் உள்ள குடியிருப்புகளுக்கு ஆட்சியர் பரிந்துரைத்த பிறகும், மேய்ச்சல் புறம்போக்கு நிலம் என்று கூறி குடியிருப்புகளை அகற்ற துடிக்கின்றனர். பயன்பாடற்ற நீர்நிலை பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் குடியிருந்து வருகின்றனர். அரசு நீர்நிலை என வரையறுத்து கரைகளை கட்டிய பிறகும், பொதுப்பயன்பாட்டில் உள்ள நிலங்களை நீர்நிலை என வகைப்படுத்தி நீதிமன்றங்களின் துணையோடு அகற்ற முயற்சிக்கின்றனர். அடுத்தகட்டமா அரசே ஒதுக்கிய நிலம், குடிசைமாற்று வாரியத்தால் குடியிருப்பு பகுதி என வரையறுக்கப்பட்ட நிலத்தில் வசிப்போரையும் அகற்ற முயற்சிக்கின்றனர். இதற்கு சாதகமாக நீதிமன்றங்களை பயன்படுத்திக் கொள்ளும் ஆட்சியாளர்கள் தங்களின் வர்க்க நிலையை எடுத்துக் காட்டுகின்றனர்.

“முதலளித்துவ உற்பத்தி முறை நீடிக்கின்ற வரை குடியிருப்பு பிரச்சினை, அல்லது தொழிலாளர்களை பாதிக்கின்ற, வேறு சமூகப் பிரச்சினைனையை தனியாக தீர்க்க முடியும் என்று நம்புவது முட்டாள்தனமே.” “பாட்டாளி வர்க்கம், அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்த உடனே பொதுநன்மையைப் பற்றிய அக்கறையினால் தூண்டப்பட்டுகின்ற நடவடிக்கைகள்  நிறைவேற்றப்படும். (உடைமை வர்க்கத்திடமிருந்து சொத்துக்கள் பறிக்கப்பட்டு உழைக்கும் மக்களுக்கு வழங்கும் நடவடிக்கைகள்) இன்றைய அரசு செய்கின்ற உடைமை பறித்தல்கள், தங்குமிட ஆணைகளைப் போல், அதுவும் சுலபமாக நிறைவேறும்.” என்கிற எங்கெல்சின் வார்த்தைகளே உழைக்கும் மக்களை அணிதிரட்டுவதற்கான போர்குரலாகும்.

——————————————————————————————————————–

CITY and Community என்கிற ஆங்கில இதழில் டிசம்பர் 2019இல் Pranath Diwakar எழுதியுள்ள A Recipe for Disaster: Framing Risk and Vulnerability in Slum Relocation Policies In Chennai, India. எனும் கட்டுரையில் உள்ள தரவுகளை அடிப்படையாக கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

#RedBooksDay2022 : செயலுக்கான நோக்கத்தை தெளிவுபடுத்திய விஞ்ஞான சோசலிசம்

ஆசாத்

(தமிழ்நாட்டில் சிவப்பு புத்தக தின கொண்டாட்டத்திற்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள ‘கற்பனாவாத சோசலிசமும், விஞ்ஞான சோசலிசமும்’ நூலை வாசிக்க உதவியாக மார்க்சிஸ்ட் இதழில் இந்த கட்டுரையை வெளியிடுகிறோம்.)

”பகுத்தறிவின் தீர்ப்பு மேடை முன்னே தன் இருப்பை நியாயப்படுத்தியாக வேண்டும்; அல்லது இல்லாது ஒழிந்தாக வேண்டும். பகுத்தறிவுக்கு உகந்தது என்கின்ற ஒன்றே அனைத்துக்கும் அளவுகோல் ஆயிற்று”

18 ஆம் நூற்றாண்டின் போது வளர்ச்சி பெற்றுவந்த பிரெஞ்சு தத்துவத்தின் வளர்ச்சி குறித்து பேசும்போது எங்கெல்ஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார். நவீன அறிவியலின் புதிய கண்டுபிடிப்புகளின் வழிவந்த பகுத்தறிவின் வரலாற்று வளர்ச்சிப்போக்கில் கருத்துமுதல்வாதத்தின் வாதங்கள் நிற்கமுடியாமல் காணாமல் போனது.

“புதிய சூழலின் நிலைமைகள், முந்தைய நிலைமைகளுடன் ஒப்பிடுகையில், போதுமான அளவு பகுத்தறிவுக்கு உகந்ததாக இருந்த போதிலும், எந்த வகையிலும் முற்றிலும் பகுத்தறிவுக்கு உகந்த ஒன்றாக இல்லை.” பகுத்தறிவின் ஆட்சி என்று முதலாளித்துவம் கூறியது, முதலாளித்துவ வர்க்கம் மிகைப்படுத்திக் கூறிக்கொண்ட ஆட்சியே அன்றி வேறொன்றுமில்லை. நித்தியமான நீதி என்று அவர்கள் கூறியது முதலாளித்துவத்தின் நீதியே ஆகும். சமத்துவம் என்பதும் சட்டத்தின் முன்பான குறுகிய முதலாளித்துவ சமத்துவமாகவே இருந்தது.

“நவீன தொழில் துறை ஒருபுறம் மோதல்களை வளர்க்கிறது. உற்பத்தி முறையில் ஒரு புரட்சியையும், உற்பத்தி முறையின் முதலாளித்துவ தன்மைக்கு முடிவு கட்டுவதையும் அவசியமாக்கும் மோதல்களை வளர்க்கிறது.”
முதலாளித்துவத்தின் வளர்ச்சி தவிர்க்க முடியாத வகையில் பாட்டாளிகளின் எண்ணிக்கையையும் உயர்த்தியது. பாட்டாளிகளான உழைக்கும் மக்களும் அவர்களின் உழைப்பு சக்தியும் இல்லாமல் முதலாளித்துவம் நிலவ முடியாது. தொழிலாளர்களின் உழைப்பின் பலனை கொண்டு வளர்ச்சி பெற்ற முதலாளித்துவம், உழைக்கும் அம்மக்களுக்கு வறுமை மற்றும் துயரத்தையும் சமூகத்தின் வாழ்க்கை நிலைமையாக மாற்றியது. “பாட்டாளி வர்க்கமானது, ‘ஏதும் இல்லாத’ இந்தச் சாதாரண மக்களிடமிருந்து, அப்போதுதான் முதன் முதலாக ஒரு புதிய வர்க்கத்தின் உட்கருவாய் தானாகவே பரிணமித்தது. இன்னமும் சுயேச்சையான அரசியல் நடவடிக்கைக்கு சற்றும் திறனற்றிருந்த அவ்வர்க்கம் ஒடுக்கப்பட்ட, துயருறும் பகுதியாகவே தோற்றமளித்தது.

இந்த வரலாற்று சூழலே சோசலிசம் குறித்த துவக்ககால சிந்தனையை கொண்டவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தியது. ”முதலாளித்துவ முறையிலான உற்பத்தியின் முதிர்ச்சியுறாத நிலைமைகளுக்கும், முதிர்ச்சியுறாத வர்க்க நிலைமைகளுக்கும் ஒத்திசைவாக முதிர்ச்சியுறாத கொள்கைகளே முன்வைக்கப்பட்டன. சமூகப் பிரச்சினைகளுக்குரிய தீர்வினை, வளர்ச்சியுறாத பொருளாதார நிலைமைகளில் இன்னமும் மறைந்துகிடந்த அந்தத் தீர்வினை, கற்பனாவாதிகள் மனித மூளையிலிருந்து உருவாக்க முயன்றனர்.”

சான் சிமோன், பூரியே, ஓவன் ஆகியோரை அக்காலத்திய மூன்று மிகப்பெரிய கற்பனாவாதிகள் என்கிறார் எங்கெல்ஸ். மனிதனின் சிந்தனையில் உதித்த கடவுள் எனும் கருத்தே உலகை படைத்தது எனும் கருத்துமுதல்வாதத்தைபோல், இந்த கற்பனாவாதிகள் சமூக வளர்ச்சியின் அடிப்படைகளை கருத்தில் கொள்ளாமல் மனித மூளையின் சிந்தனையைக் கொண்டே அவற்றை கண்டறிய முனைந்தனர். முரண்பாட்டிற்குள் ஒற்றுமை என்கிற வகையில் “வரலாற்று ரீதியான வளர்ச்சியின் விளைவாய் தோன்றிய பாட்டாளி வர்க்கத்தினுடைய நலன்களின் பரதிநிதியாக (கற்பனாவதிகள்) தோன்றவில்லை.” அனைத்து மனிதர்களும் வேலை செய்ய வேண்டும். பயங்கர ஆட்சி உடைமையற்ற சாதாரண மக்களின் ஆட்சியே. அரசியல் என்பது உற்பத்தியைப் பற்றிய விஞ்ஞானமாகும். அரசியலானது பொருளாதாரத்தால் முழு அளவுக்கு உட்கவரப்பட்டுவிடும். என்கிற சான் சிமோனின் கருத்து, பொருளாதார நிலைமைகளே அரசியல் நிறுவனங்களின் அடித்தளம் என்கிற அரசியல் அறிவு கரு வடிவில்தான் இருந்தது என்பதை எடுத்துரைத்தது.
கடைசி முடிவாக பூமி அழிந்துபோகும் என்னும் கருத்தை இயற்கை விஞ்ஞானத்தில் எவ்வாறு கான்ட் புகுத்தினாரோ, அதேபோல், மனிதகுலத்தின் இறுதி அழிவெனும் கருத்தை வரலாற்று விஞ்ஞானத்தில் பூரியே புகுத்தினார்.

எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் எடுத்துக்காட்டான முன்மாதிரி பரிசோதனைகள் மூலம் அந்த அமைப்புகளை வெளியிலிருந்து சமுதாயத்தின் மீது திணிப்பது அவசியம் என கற்பனாவாதிகள் கருதினர். அந்த வகையில் ஓவன் சில முயற்சிகளை தான் சார்ந்த நிறுவனத்தில் செய்து வெற்றி கண்டார். தொழிலாளர்களின் வேலை நேரத்தை குறைப்பது, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது என பலவற்றை செய்தார். ஆனபோதும் நிறுவனத்தின் வளர்ச்சி வெற்றிகரமாக இருந்ததை நிரூபித்தார். ஆனால், இம்மக்கள் (அவரது நிறுவனத்தில் பணியாற்றியவர்கள்) என் தயவில் அடிமைகளாகவே இருந்தனர்” என்கிறார் ஓவன். ஏனெனில் “தன்னுடைய தொழிலாளர்களுக்கு வழங்கியிருந்த வாழ்க்கை நிலைமைகள் ஒப்பீட்டளவில் அனுகூலமானவை என்றாலும், அவர்களின் பண்பியல்பும், அறிவுத்திறனும் அனைத்துத் திசைகளிலும் நியாயமான வளர்ச்சிபெற அனுமதிக்கும் நிலைக்கு இன்னமும் எட்டாத தொலைவிலேயே இருந்தன. அவர்களுடைய வினையாற்றல்கள் அனைத்தையும் சுதந்திரமாக செயல்படுத்த மிகவும் குறைவான வாய்ப்புகளை வழங்கும் வாழ்க்கை நிலைமைகளே இருந்தன.

” புறச்சூழலே ஒரு முழுமையான தாக்கத்தை ஏற்படுத்தவல்லதே அன்றி, அது வெளியிலிருந்து திட்டமிட்டு புகுத்தப்படுவதன் மூலம் சாத்தியப்படுத்தக் கூடியதல்ல. “சோசலிசத்தை ஒரு விஞ்ஞானமாக்க முதலில் அதை கற்பனை அல்லாத ஓர் உண்மையான அடித்தளத்தின் மீது இருத்த வேண்டியிருந்தது” கற்பனை அல்லாத ஓர் உண்மையின் அடித்தளத்தின் மீது சோசலிசத்தை இருத்த மார்க்சின் இரண்டு கண்டுபிடிப்புகளே வழி செய்தன. “வரலாறு பற்றிய பொருள் முதல்வாதக் கருத்துரு, உபரி மதிப்பு மூலமாக முதலாளித்துவ முறையிலான உற்பத்தி பற்றிய இரகசியத்தை வெளிப்படுத்தியது” எனும் மார்க்சின் இவ்விரண்டு கண்டுபிடிப்புகளுமே விஞ்ஞான சோசலிசத்தின் அடித்தளமாகியது.

இயற்கை அறிவியலையும் சமூக அறிவியலையும் இணைத்த, இயக்கவியல் வரலாற்றுப் பொருள் முதல்வாத நோக்குகொண்ட ஒரு தனிச்சிறப்புமிக்க பார்வையுடன் விஞ்ஞான சோசலிசம் வளர்ச்சி பெற்றது. இயற்கை அறிவியலிலும் சமூக அறிவியலிலும் கிடைக்கப்பெற்ற புதிய தரவுகளும் புதிய கண்டுபிடிப்புகளும் இவற்றை சாத்தியப்படுத்தியது. நவீன தொழில் வளர்ச்சி வர்க்கப் பிரிவினையை கூர்மைப்படுத்தியது. மேலும் வர்க்கங்களுக்கிடையேயான நட்பையும் முரணையும் மேலும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. முந்தைய சிந்தனை போக்குகள் எல்லாம் அதற்கே உரிய குறுகிய இயக்க மறுப்பியல் தன்மையை கெண்டிருந்தன. அவற்றின் “அறிவுணர்வானது அதற்குரிய நான்கு சுவர்களின் எளிய ஆட்சி எல்லைக்குள் இருக்கும்போது மதிக்கத் தக்கதாக திகழ்ந்தது. (இயற்கை அறிவியலின் வள்ர்ச்சியின்போது) ஆராய்ச்சி என்னும் பரந்த உலகினுள் ஆபத்தான பயணத்தில் அடியெடுத்து வைக்கும்போது, அது விந்தைமிகு அபாயங்களை நேரடியாக எதிர்கொண்டது.”

“மனிதனின் உணர்வைக் கொண்டு அவனுடைய இருப்பை விளக்குவதற்குப் பதிலாக, மனிதனின் இருப்பை கொண்டு அவனுடைய உணர்வை விளக்குவதற்கான வழிமுறை கண்டறியப்பட்டது.“ சோசலிசம் என்பது வரலாற்று ரீதியாக வளர்ச்சி பெற்ற இரு வர்க்கங்களான பாட்டாளி வர்க்கத்திற்கும் முதலாளி வர்க்கத்திற்கும் இடையே நிகழும் போராட்டத்தின் தவிர்க்க முடியாத நிகழ்வு என்று நிறுவப்பட்டது. இதற்கு முந்தைய சோசலிச கருத்துரு இந்த இயக்கவியல் வரலாற்று பொருள்முதல்வாதப் பார்வை அற்றதாக இருந்தது.

முந்தைய சோசலிச கருத்துரு “முதலாளித்துவ உற்பத்தி முறையையும் அதன் பின்விளைவுகளையும் கண்டித்தது உண்மைதான்.’‘ ஆனால், அவை எந்த வகையில் தீயவையாக உள்ளது? அத்தீமை எதன் பொருட்டு, எதன் அடிப்படையில் நடைபெறுகிறது? என்பதை விளக்க அதனால் முடியவில்லை. அதன் முழுவடிவத்தை விளக்கிட முடியாமல் அது தீயவை என நிராகரிக்க மட்டுமே அதனால் முடிந்தது. “முதலாளித்துவத்தில் தவிர்க்க முடியாதபடி தொழிலாளி வர்க்கம் சுரண்டப்படுவதை எந்த அளவுக்கு முந்தைய சோசலிசம் வெளிப்படையாக கண்டித்ததோ, அந்த அளவுக்குத் தெளிவாக இந்தச் சுரண்டல் எதில் அடங்கியிருந்தது, அது எவ்வாறு தோன்றியது என்பதை அதனால் விளக்கிட முடியவில்லை.

இயக்கவியல் வரலாற்றுப் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் “(1) முதலாளித்துவ உற்பத்தி முறையை அதன் வரலாற்றுத் தொடர்பில் விளக்கி, ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலகட்டத்தில் அது தவிர்க்க முடியாதது என்பதை எடுத்துரைப்பதோடு, அதன் காரணமாக நிகழும் தவிர்க்க முடியாதபடியான அதன் வீழ்ச்சியையும் எடுத்துரைப்பது (2) இதுநாள்வரை இரகசியமாக இருந்து வந்த, முதலாளித்துவத்தின் சாராம்சத் தன்மையை தோலுரித்துக் காட்டுவதும், அவசியமாக இருந்தது.” உபரி மதிப்பை மார்க்ஸ் கண்டுணர்ந்ததன் மூலம் இது நிறைவேற்றப்பட்டது.

“ஊதியம் தரப்படாத உழைப்பை உறிஞ்சிக் கொள்வதுதான் முதலாளித்துவ உற்பத்தி முறைக்கும், அதன்கீழ் தொழிலாளி சுரண்டப்படுவதற்கும் அடிப்படையாக அமைகிறதென்று எடுத்துக்காட்டப்பட்டது.” அந்த வகையில், இயக்கவியல் வரலாற்று பொருள்முதல்வாத கருத்துரு மற்றும் உபரி மதிப்பை கண்டறிந்து முதலாளித்துவ உற்பத்தியின் ரகசியத்தை மார்க்ஸ் கண்டறிந்ததின் மூலம் சோசலிசம் விஞ்ஞானமானது என்கிறார் எங்கெல்ஸ்.

விஞ்ஞான சோசலிசம்

“சமூக மாற்றங்களுக்கும் அரசியல் புரட்சிகளுக்குமான முடிவான காரணங்களை, உற்பத்தி, விநியோக முறைகளில் ஏற்படும் மாற்றங்களில் கண்டறிய முயல வேண்டுமே அல்லாது, மனிதர்களின் சிந்தனைகளிலோ, நித்தியமான உண்மை, நித்தியமான நீதி குறித்த மனிதனுடைய முன்னிலும் சிறப்பான உள்ளுணர்வுகளிலோ அல்ல. அத்தகைய காரணங்களை அந்தந்தக் குறிப்பிட்ட சகாப்தத்தின் பொருளாதார அமைப்புமுறையில் கண்டறிய முயல வேண்டுமே அல்லாது தத்துவத்தில் அல்ல.” சோசலிசம் என்பது மனிதர்களின் சிந்தனையில் திடீரென முகிழ்ந்த ஒன்றல்ல. “எதார்த்தத்தில் நிலவும் (வர்க்கங்களுக்கு இடையேயான) மோதலினால் சிந்தனையில் ஏற்படும் எதிர்வினையே அன்றி வேறல்ல. இம்மோதலால் நேரடியாக பாதிக்கப்படும் வர்க்கமாகிய தொழிலாளி வர்க்கத்தின் மனங்களில் ஏற்படும் இயல்பான பிரதிபலிப்பே சோசலிசமாகும்.”

“மூலதனத் திரட்சிக்கு இணையாகத் துயரமும் திரண்டு பெருகுவதை இந்த விதி உறுதி செய்கிறது. எனவே, ஒரு முனையில் செல்வம் திரள்வதும் எதிர்முனையில் மூலதனத்தின் வடிவில் தன் சொந்தப் பொருளை உற்பத்தி செய்யும் வர்க்கம் துயரமும், உழைப்பின் வேதனையும் அடிமைத்தனமும் அறியாமையும் கொடுமையும் மனச் சீரழிவும் திரண்டு பெருகுவதை குறிக்கிறது.“ (மூலதனம்)

முதலாளித்துவ அமைப்பு முறையில், நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாகவும் கூடுதலான உழைப்புச் சுரண்டலின் காரணமாகவும் உற்பத்தி அதிகரிக்கிறது. உற்பத்தி அதிகரிக்கிறது என்றால் சுரண்டலின் அளவும் அதிகரித்துள்ளது என்பதே அதன் உள்ளீடு. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியே உற்பத்தியின் அளவை உயர்த்துகிறது. நவீன தொழில் நுட்ப வளர்ச்சியால் கிடைக்கப்பெறும் இயந்திரங்களோடு நவீன பாட்டாளிகளின் மேம்பட்ட உழைப்பு சக்தியின் பங்களிப்புமே உற்பத்தியை அதிகரித்துள்ளது. உற்பத்தி அதிகரிக்கும் அதே நேரம் தொழிலாளி அதிக அளவில் சுரண்டப்படுவதும் நிகழ்கிறது. உழைப்புக்கேற்ற கூலி கிடைக்கப்பெறாமல் அவர்களின் வாங்கும் சக்தி குறைகிறது. வேலைவாய்ப்பு பறிக்கப்படுகிறது. கிராக்கி வீழ்ச்சி அடைகிறது. இதன் விளைவே உற்பத்தியாகியுள்ள அதிகமான பொருட்கள் சந்தையில் தேங்குகிறது. தொடர்ந்து வர்க்கங்களுக்கிடையே ஏற்படும் மோதலை தணிக்க ஆளும் வர்க்கத்தின் சார்பில் அரசு நிற்கிறது. “இறுதியில், முதலாளித்துவச் சமுதாயத்தின் அதிகாரபூர்வ பிரதிநிதியாக உற்பத்தியின் நெறியாண்மையை அரசு மேற்கொள்ள வேண்டியிருக்கும்.’‘

புரட்சியின் மூலம் “பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு உற்பத்திச் சாதனங்களை அரசின் உடைமையாக மாற்றுகிறது. இதைச் செய்வதன் மூலம், அது பாட்டாளி வர்க்கம் என்ற தன் வர்க்க நிலைக்கே முடிவு கட்டுகிறது. அனைத்து வர்க்க வேறுபாடுகளுக்கும் வர்க்க பகைமைகளுக்கும் முடிவுகட்டுகிறது. அரசு அரசாக இருக்கும் நிலைக்கும் முடிவு கட்டுகிறது.”அரசு ஒழிக்கப்படுவதில்லை. அது உலர்ந்து உதிர்ந்துவிடுகிறது என்கிறார் எங்கெல்ஸ்.

“தற்போது ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கு இந்த நிலைமைகளைப் பற்றியும், அது நிறைவேற்றப் பணிக்கப்பட்டுள்ள மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த செயலின் நோக்கத்தைப் பற்றியும், முழுமையான அறிவை ஊட்ட வேண்டும். இதுவே பாட்டாளி வர்க்க இயக்கத்தின் தத்துவார்த்த வெளிப்பாடான விஞ்ஞான சோசலிசத்தின் பணியாகும்” என்கிற வாக்கியத்துடன் இந்நூலை எங்கெல்ஸ் நிறைவு செய்கிறார். இந்த இறுதி வரிகளை பற்றிக் கொண்டு உழைக்கும் வர்க்கத்தை அணிதிரட்டும் கடமையை நிறைவேற்றுவதே சிவப்பு புத்தக தினத்தின் குறியிலக்காகும்.

விவசாயிகளின் போராட்டமும் அதன் வர்க்க அடித்தளமும்

நிலோத்பல் பாசு

ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் தலைமையிலான ஓராண்டு கால போராட்டம், நினைத்துப் பார்க்க முடியாத வெற்றியை சாதித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மோடி அரசு முதன் முறையாக ஒரு மக்கள் போராட்டத்திற்கு முன் அடிபணிந்துள்ளது. விவசாயிகளின் ஒருங்கிணைந்த இப்போராட்டம் நாடு முழுவதின் கவனத்தை ஈர்த்துள்ளதோடு, நவ தாராளமயத்தின் சர்வதேச நிதி மூலதனத்தின் கீழ் இயங்கும் வலதுசாரி அரசியல் சித்தாந்தத்திற்கு எதிராக உலகம் முழுவதும் போராடி வரும் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

விவசாயிகளின் போராட்டம் அரசாங்கத்திற்கு அதிர்ச்சியை  ஏற்படுத்தி இருப்பதோடு அவர்களுக்குப் பெரும் சங்கடத்தையும்  ஏற்படுத்தியுள்ளது. மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று பிரதமர் அறிவித்தார். பெரும் பகுதி விவசாயிகளின் ஒன்றுபட்ட  போராட்டத்தின் முன் தனது முந்தைய நிலைபாட்டில் அவரால் உறுதியாக நிற்க முடியாமல் போனதே அந்த அதிர்ச்சியின் வெளிப்பாடாகும்.

விவசாயிகள் போராட்டம் நடந்த இக்காலம் முழுவதும் அரசாங்கத்தின் கொள்கையே சரி என்று வழிமொழிந்த பிரதான ஊடகங்கள், மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்கிற முடிவை மோடியின் கச்சிதமான ஆட்டம் என்று முன்னிறுத்துகின்றன. இது விவசாயிகளின் பிரம்மாண்டமான போராட்டத்தை மறுக்கும் செயலாகும். அதனால்தான், விரைவில் வரவிருக்கும் சில மாநில தேர்தல்களை மனத்தில் கொண்டே சட்டங்கள் திரும்பப் பெறப்படுவதாக அவை தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், பூனை கூடையை விட்டு வெளியே வந்துவிட்டது. மூன்று வேளாண் சட்டங்களையும் ஏன் திரும்பப் பெறுகிறோம்? என்பதற்கான காரணங்கள் மற்றும் நோக்கங்கள் நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ளது. அக்குறிப்பே, எவ்வாறு இச்சட்டங்கள், விவசாயம் மற்றும் வேளாண் பணிகள் அனைத்தும் கார்ப்பரேட் பெரு முதலாளிகளிடம் கையளிக்கும் உள்நோக்கத்தைக் கொண்டது என்பதை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.

சட்டங்களை  திரும்பப் பெறும்போதும் அரசாங்கம் தனது பொய்களையும் ’நியாயங்களையும்’  மீண்டும் மீண்டும் கூறியுள்ளது. அதில் ”வல்லுநர் குழுக்களின் பல ஆண்டுகால பரிந்துரைகள், விவசாயிகள், துறைசார் வல்லுநர்களின் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள்,  விவசாய பொருளாதார அறிஞர்கள் உள்ளிட்டவர்களின் ஆலோசனைகள், விவசாய அமைப்புகள் முன்வைத்த கோரிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையிலும் விவசாயிகள் மற்றும் ஊரக அமைப்புகளின் அனைத்துவிதமான சமூக பொருளாதார முன்னேற்றத்தை கருத்தில் கொண்டும் இந்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. முப்பதாண்டுகளாக பல அரசாங்கங்கள் இச்சீர்திருத்தங்களை செய்ய முயற்சித்தபோதும் தற்போதைய அரசைபோல் விரிவான அளவில் அதற்கான முன்முயற்சிகளை அவை மேற்கொள்ளவில்லை. மேலும் இக்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியும் நிகழ்ந்துள்ளது.” என்று அக்குறிப்பில் அரசு தெரிவித்துள்ளது.

விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்துவதும் அவற்றை ஏளனமாக கருதும் போக்கும் இதிலும் தொடர்வதைக் காணலாம். “குறிப்பிட்ட சில விவசாய குழுக்களே இச்சட்டங்களை எதிர்த்து போராடுகின்றபோதும், பல்வேறு கூட்டங்களிலும் பல்வேறு முறைகளிலும் வேளாண் சட்டங்களின் அவசியத்தை விவசாயிகளிடம் எடுத்துரைக்க அரசாங்கம் கடுமையாக முயற்சித்தது.” என்று நாடாளுமன்றத்தில் அரசு கூறியுள்ளது. இதில் எள் அளவும் உண்மை இல்லை.

சர்வதேச நிதியம் & நவ தாராளமயத்தின் கூட்டு தான் வேளாண் சட்டத்தின் உள்ளடக்கம்

துவக்கத்திலேயே அரசாங்கத்தின் வர்க்க சார்பு இதில் வெளிப்படையாக தெரிவதை கவனத்தில் கொள்வது அவசியமாகும். கரோனா பெரும்தொற்றுக் காலத்தை கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான சீர்திருத்தங்களை மேற்கொள்ள சாதகமாக பயன்படுத்தப்படுவதே அருவருக்கத்தக்க செயலாகும். கரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த இந்த கடுமையான ஊரடங்கு அமலாக்கப்படுவதாக கூறினாலும்,  விவசாயத்தை கார்ப்பரேட்களுக்கு, குறிப்பாக அரசாங்கத்தோடு நெருக்கமானவர்களுக்கு, கையளிக்கவே ஊரடங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. விவசாய பொருட்களை கொள்முதல் செய்வதற்கும், அவற்றை சேமிப்பதற்கான சேமிப்பு கிடங்குகளை அமைப்பதற்கும்,  விநியோக ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இக்காலத்தில் செய்துள்ள முதலீடுகளின் அளவே இதனை அப்பட்டமாக வெளிப்படுத்தும்.

இது அரசாங்கத்தின் செயல்பாட்டில் உள்ள வர்க்க உள்ளடக்கத்தை வெளிப்படுத்துகிறது. வர்க்க உணர்வுடன் அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளை எதிர்த்து நிற்காமல் போனால், சொந்தமாக விவசாயம் செய்வதற்கும், எதை விதைப்பது? என்பதை சுயமாக முடிவு செய்வதற்கும், விற்பனைக்கான முறைகளை தீர்மானிப்பதற்கும், பல்வேறு வேளாண் நடவடிக்கைகளில் விவசாயிகளின் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கும் முடியாமல் போகும்.

சர்வதேச நிதியத்தின் விவசாய பொருட்களின் உலகளாவிய சந்தையின் தேவைகளை நிறைவேற்றும் போக்குடைய செயல்பாட்டின் ஒரு பகுதியாக தங்களை நிறுத்திக்கொள்ள விவசாயிகள் இயக்கம் உறுதியாக மறுத்துள்ளது. கார்ப்பரேட் பெருமுதலாளிகள் அரசாங்கத்தை அதை நோக்கியே தள்ளுகின்றனர். இது உலகளாவிய போக்காகவே உள்ளது. அதன் அடிப்படையிலான உலகளாவிய சட்டகத்தின் ஒரு பகுதியாக இந்தியாவிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்குடனேதான் வேளாண் சட்டங்கள் அவசரகதியில் கொண்டுவரப்பட்டன.

இந்த சட்டகத்தின் முக்கியமான கூறு என்னவெனில், விவசாய நிலத்தில் பயிரிடப்படும் பொருளை மாற்றுவதாகும். மற்ற வளர்முக நாடுகளைபோல் அல்லாமல் சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு, நாம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திருப்பது நமது அரசியல் மற்றும் பொருளாதார இறையாண்மை பாதுகாப்பதற்கான முக்கியமான அரணாக உள்ளது. உணவு உற்பத்தி எவ்வாறு இந்திய மக்களுக்கு அவசியமோ, அதேபோல் கார்ப்பரேட் தலைமையிலான விவசாய சந்தைக்கு வர்த்தகப் பயிர்கள் அவசியமாக உள்ளது. மேலும் இந்த வர்த்தகப் பயிர்கள் இந்தியாவின் பல்வேறு காலச்சூழலில் நன்றாக விளைய கூடியதாகவும் உள்ளது.  எனவே  வேளாண் சட்டங்கள், எதை விதைப்பது? எதை விவசாயம் செய்வது? எனும் சுதந்திரத்தை பாதிக்கும். விவசாயிகள் மீது தொடுக்கப்பட்ட இத்தாக்குதலை பூகோள எல்லைகளை கடந்து விவசாயிகள் இயக்கம் வென்றுள்ளது.

எதிர்ப்பாற்றலின் விரிந்த தன்மை

“தொடர்ந்து நிலவும் சர்வதேச முதலாளித்துவ நெருக்கடி, கொரோனா பெருந்தொற்று மற்றும் அதை தொடர்ந்த ஊரடங்கின் காரணமாக  இந்திய பொருளாதாரம் சந்திக்கும் நெருக்கடிகளின் பின்னணியில், விவசாயம் மற்றும் அதன் வர்த்தகத்தை முழுமையாக கார்ப்பரேட்டுகளின்  கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்ல இந்திய ஆளும் வர்க்கத்தின் தலைமை எடுத்த முயற்சிகளை விவசாயிகளின் இந்தப் போராட்டம் தடுத்துள்ளது” என்று விவசாயிகளின் இப்போராட்டத்தை அங்கீகரிக்கும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நிறைவேற்றிய தீர்மானம் சுட்டிக்காட்டியுள்ளது.

முன்னெப்போதும் இல்லாத அளவிலான எதிர்ப்புணர்வின் விரிந்த தன்மையையும் அதன் வர்க்க இயங்கு தன்மையையும் தெளிவாக விளக்குவது எளிதானதல்ல. கடந்த 2019 ஆம் ஆண்டு மோடி தலைமையிலான அரசாங்கம்  இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு அதன் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து ஆங்காங்கே எழுந்த எதிர்ப்பு இயக்கங்களுக்கு சரியான பலன் கிடைக்கவில்லை. தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்கச் சொன்ன அச்சுறுத்தல் நிறைந்த காலத்தில் பொதுவான கொள்கை பிரச்சினைகளுக்காக பிரம்மாண்டமான மக்கள் திரள் போராட்டங்களை நடத்துவதில் உள்ள சிரமமே நம்ப முடியாத அளவிலான இப்போராட்டத்தை புரிந்து கொள்ள போதுமானதாகும்.

இப்போராட்டம் மேலும் பல சிக்கல்களை கொண்டதாகும். ஏனெனில், இந்திய விவசாயிகளிடம் நிலவும் வர்க்க வேறுபாடுகளால் கடந்த காலத்தில் அனைத்து தரப்பு விவசாயிகளையும் ஒன்றிணைத்து ஒரு போராட்டத்தை நடத்த முடிந்ததில்லை. ஆனால், இப்போராட்டத்தில் வசதிபடைத்த விவசாயிகள், சிறிய மற்றும் மத்திய தர விவசாயிகளும் பங்கேற்றனர். அதேநேரம் சாதிய படிநிலையின் படி கடந்த காலங்களில் தனித்து ஒதுங்கியிருந்த நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளர்களை அணிதிரட்டுவது பெரும் சவாலாக இருந்தது.

அரசாங்கமும் அதன் அரசியல் இயந்திரமான பிஜேபி – ஆர் எஸ் எஸ் –உம் இந்த சமூகக் குறைபாட்டைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த முனைந்தனர். மத அடையாளங்களை பயன்படுத்தியும் அரசியல் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. போராட்டத்தில் பங்கேற்ற பெரும்பகுதியினர் பஞ்சாப் மாநிலத்தவர்கள் என்பதால் இப்போராட்டம் காலிஸ்தான் தீவிரவாதத்தின் சதி என்றும் கொச்சைப்படுத்தினர். ஆனால், அரசின் அத்தனை முயற்சிகளும் தோல்வியையே தழுவியது. வேற்றுமைகளை கடந்த ஒற்றுமையின் பலத்துடன் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் தலைமையில் சுமார் 500 அமைப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு அரசாங்கத்தின் பல்வேறு  தாக்குதல்களை எதிர்கொள்ளும் கேடயமாக இருந்தது. இவ்வொற்றுமையே அதன் தனித்தன்மையாக விளங்கியது.

இந்த விரிந்து பரந்த வர்க்க – வெகுஜன ஒருங்கிணைவு ஏற்படுவதற்கான அடிப்படையான அம்சங்களை பிரதான ஆய்வாளர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர்; அல்லது தெரிந்தே அதை மறுத்து, சிதைக்கப் பார்க்கின்றனர். இப்போராட்டம் நீண்டகால வளர்ச்சிப்போக்கின் அடித்தளத்தில் எழுந்துள்ளது. நிச்சயம் திரும்ப பெற வேண்டிய சட்டமான கட்டாய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்த போராட்டத்திலிருந்து இது துவங்கியது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது; பணப்புழக்கம் குறைந்தது ஆகியவற்றுக்கு எதிராக நடந்த போராட்டங்கள் இப்போராட்டத்தின் இரண்டாம் கட்டமாகும். அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு (AIKSCC) ஒரு விரிந்த மேடையின் துவக்கமாகும். அதுவே பின்னர் வேளாண் சட்டங்களுக்கு எதிரான ஐக்கிய விவசாயிகள் முன்னணியாக எழுந்து நின்றது. இது, வர்க்கம், சாதி என்கிற வேற்றுமைகளை கடந்த ஒருங்கிணைவை வழங்கியது.

“சர்வதேச நிதி மூலதனத்துடன் இணைந்த பெரு முதலாளிகளுக்கும் பணக்கார விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் இடையே இந்த வேளாண் சட்டம் ஒரு மோதலை உருவாக்கியுள்ளது. இம்மோதல் உழைக்கும் வர்க்கம், ஏழை விவசாயி மற்றும் விவசாய கூலி தொழிலாளர்களை ஒருங்கிணைத்து முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வர்க்க அமைப்பிற்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதற்கு உதவும் சாத்தியக்கூறுகள் உள்ளன’‘ என்ற மத்திய குழுவின் அறிக்கையை கொண்டு நாம் இதை சுருக்கமான கூறலாம்.

விவசாயிகளின் இப்போராட்டத்தின் துவக்கத்திலிருந்தே தொழிற்சங்கங்களின் உடனடியான ஆதரவு செயல்பாடுகளை உள்வாங்காமல், இயற்கையாக உள்ள விரிவான வர்க்க இணைவு முழுமை பெறாது. மோடி அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத செயல்பாடுகளையும், அது கொண்டு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்தும், இயற்கை வளங்களை கண்மூடித்தனமாக விற்பதை கண்டித்தும் உழைக்கும் வர்க்கம் கனன்று கொண்டிருந்தது. இது விவசாயிகளின் ஒருங்கிணைந்த போராட்டத்திற்கு தொழிலாளி வர்க்கத்தையும் தெழிற்சங்கங்களையும் தங்களது உறுதியான ஆதரவை நல்கிட வழிவகுத்தது. சமீபகாலங்களில் திட்டமிட்ட அடிப்படையில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க அமைப்புகளின் ஒருங்கிணைவு பல முட்டுக்கட்டைகளை தகர்த்துள்ளது. அதுவே ஒரு விரிவான ஒருங்கிணைவை கட்டியமைக்க வழிகோலியது.

“தேசத்தின் சொத்துக்களை கொள்ளையடிக்கும்  நவ தாராளமய பொருளாதார சீர்திருத்தங்களின் தீவிரத்தன்மை பெரு முதலாளிகளுக்கும் சிறு,குறு மற்றும் மத்திய தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் முதலாளிகளுக்கும் இடையே ஒரு மோதலை உருவாக்கியுள்ளது. பெரு முதலாளிகள் மற்றும் இதர முதலாளிகள் மத்தியில் உருவாகியுள்ள இம்மோதல், பிஜேபி மற்றும் அதன் கொள்கைகளுக்கு எதிரான வலுவான விரிந்த ஒருங்கிணைவை கட்டியமைக்கும் சாத்தியக்கூறுகளை உருவாக்கியுள்ளது.” (மத்திய குழு அறிக்கை)

புதிய அரசியல் விழிப்புணர்வு: ஜனநாயகத்தையும் அரசியல் அமைப்பு சட்டத்தின் மாண்புகளை பாதுகாத்தல்

திரும்பிப் பார்க்கையில், வாழ்நிலையைப் பாதுகாப்பதற்கான வர்க்கப் போராட்டமானது, அடிப்படையாகவும், பெருமளவிலும் பொருளாதாரரீதியான தன்மை கொண்டதாக அமைந்திருந்த இந்தப் போராட்டத்தினை புதியதொரு அரசியல் மட்டத்திற்குக் கொண்டு சென்று, அதை உண்மையானதொரு மக்கள் இயக்கமாக உருமாற்றி அமைத்தது என்பது தெளிவாகிறது. “விவசாயிகளுக்கு ஆதரவான சீர்திருத்தம்” என்று சொல்லப்பட்ட இச்சட்டங்களை எதிர்த்து போராடுவதற்கான விழிப்புணர்வை மூவர்ணக் கொடியின் பின்னணியில் இந்திய அரசியல் அமைப்பு சட்டமே ஏற்படுத்தியது என்பது தற்செயல் நிகழ்வே.

அரசாங்கத்தின் இந்த சட்ட நடைமுறைகள் முழுக்க முழுக்க இந்திய அரசியல் சாசனத்திற்கும் அதன் ஜனநாயக விழுமியங்களுக்கும் எதிரானதாகும். அதுவே இந்த நீடித்த போராட்டத்திற்கு அடித்தளமாக அமைந்தது. இவ்வேளாண் சட்டங்களை அரசாங்கம் மிருக பலத்துடன்  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய போதும், அது நாடாளுமன்ற மரபுகளையும் நடைமுறைகளையும் காலில் போட்டு மிதித்தது. அதுவும் இந்த வீரியமிக்க போராட்டத்திற்கு உரமிட்டது.

தேச விடுதலை போராட்டத்தின் போது அது உத்தரவாதப்படுத்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் உள்ளடக்கமான ஜனநாயகம் மற்றும் மாநில உரிமைகளை இவ்வரசு குறைத்து மதிப்பிட்டதன் விளைவாக அது தற்போது அம்பலப்பட்டு நிற்கிறது. இறுதியாக, தேசத்தின் தலைநகரின் வீதிகளில் நடந்த இப்போராட்டம் அரசாங்கத்தின் அருவருக்கத்தக்க வடிவத்தை தோலுரித்து காட்டியுள்ளது. இதில் முரண்பாடு என்னவெனில், வேளாண் சட்டங்களை அரசாங்கம் திரும்பப் பெற்றிருப்பது, நீதி நியாயங்களை நிலைநாட்டுவதற்கான போராட்டங்கள் சரியானதுதான் என்று நிருபித்துள்ளது.

அரசாங்கம்தான் வன்முறையை கையாளும் என்பதை உருவகமாக மட்டுமல்லாமல் நிஜத்திலும் எடுத்துக்காட்டியுள்ளது. எழுநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் போராட்ட களத்தில் தியாகிகளாக மரணித்திருந்தாலும் அரசின் தாக்குதலுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் உள்ளது. தடுப்பு வேலிகள் போடுவது, சாலைகளில் பள்ளம் வெட்டி வைப்பது, கூர்மையான கம்பிகளை சாலையில் பதிப்பது போன்ற அரசின் நடவடிக்கைகள் மேலெழும் மக்கள் திரள் போராட்டங்களை தடுத்துவிட முடியாது. வன்முறையற்ற மக்கள் திரள் போராட்டங்கள் பெரிய அளவில் ஆதரவை பெற்றிருப்பதோடு வருங்கால போராட்ட முறையாகவும் காட்சி தருகிறது.

வெற்றிகளின் பலன்களை முன்னோக்கிய பயணத்திற்கு பயன்படுத்துவோம்

இவ்வரசு வீழ்த்த முடியாத சக்தியல்ல; ஒன்றிணைந்த போராட்டத்தால் அதை முறியடிக்க முடியும் என்கிற உணர்வு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. அனைத்து விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய பொருட்களுக்கு போதுமான கொள்முதல் விலை, விவசாய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் வகையில் அமைப்பு ரீதியான அடிப்படை மாற்றங்கள் உள்ளிட்டவைகளுக்கான போராட்டம் தொடரும் என்பது தெளிவு.

ஐக்கிய விவசாயிகள் முன்னணி தொடர்ந்து செயலாற்றும் என்றும், மேற்கண்ட பிரச்சினைகளை எதிர்கொள்ள அது புதிய முன்னெடுப்புகளை செய்யும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜனநாயக இயக்கங்களுக்கான புதிய சாத்தியக்கூறுகளை இப்போராட்டத்தின் வெற்றி உருவாக்கியுள்ளது என்பது தெளிவு. முன்னோக்கிய பயணத்திற்கான விரிவான ஒருங்கிணைவை இந்த வெற்றி விட்டுச் சென்றுள்ளது.

தமிழில்: ச.லெனின்

நவீன குடும்ப உறவு முறையும் முதலாளித்துவத்திற்கான கூலி உழைப்பும்

ச. லெனின்


“குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்கிற எங்கெல்சின் இந்நூல் மார்க்சின் மறைவுக்குப் பிறகு எழுதப்பட்டதாகும். மார்க்ஸ் மறைந்த பிறகு “மூலதனம்” நூலின் இரண்டாம், மூன்றாம் தொகுதிகளை எங்கெல்ஸ் பெரும் முயற்சி செய்து வெளிக்கொண்டு வந்தார். அந்தப் பணிகளின் தொடர்ச்சியாகவே இந்நூல் அமைந்துள்ளது. 1884 ஆம் ஆண்டு எங்கெல்ஸ் இந்நூலுக்கு எழுதிய முன்னுரையில் இதைக் காண முடியும். 

“ஓர் அர்த்தத்தில், பின்வரும் அத்தியாயங்கள் மார்க்ஸ் விட்டுச் சென்ற ஒரு பணியைச் செய்து முடிக்கும் வகையில் அமைந்தவையே… (எங்களின்) பொருள் முதல்வாத ஆராய்ச்சியின் மூலம், தான் கண்ட முடிவுகளின் தொடர்பில் மார்கனது ஆராய்ச்சி விளைவுகளை மக்களின் முன்பாக வைத்து, அதன் மூலம் அவற்றின் முக்கியத்துவம் முழுவதையும் தெளிவாக்க வேண்டும் என்று மார்க்ஸ் திட்டமிட்டிருந்தார். ஏனென்றால் (மார்கனது நூல் வெளியாவதற்கு) நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மார்க்ஸ் கண்டுபிடித்திருந்த வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கருத்தோட்டத்தைத்தான் மார்கன் தன்னுடைய வழியில் அமெரிக்காவில் மறுபடியும் கண்டுபிடித்தார்” என்கிறார் எங்கெல்ஸ்.

எல்.எச்.மார்கன் என்கிற அமெரிக்க மானுடவியலாளர், அமெரிக்க பூர்வகுடி மக்கள் மத்தியில் வாழ்ந்து அங்கு நீண்ட ஆய்வை மேற்கொண்டார். அதன் முடிவுகளை உள்ளடக்கி “பண்டைய சமூகம்” (Ancient Society) எனும் நூலை 1877ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்நூலை ஆதாரமாகக் கொண்டே எங்கெல்ஸ் இந்த நூலை எழுதினார்.

ஏடறிந்த வரலாறுகள் அனைத்தும் 

1848இல் மார்க்ஸ் எங்கெல்சின் கூட்டுப் படைப்பாக வெளியான வரலாற்று ஆவணமான “கம்யூனிஸ்ட் அறிக்கை”யின் முதல் அத்தியாயத்தின் முதல் வரி “இதுநாள் வரையில் நிலவி வந்த சமுதாயத்தின் வரலாறுகள் அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும்” என்று தொடங்கும். மார்கனின் படைப்பு வெளியான பிறகே, எங்கெல்ஸ் தனது “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” எனும் இந்நூலில்தான் இதுவரையான வரலாறு என்பதை மாற்றி “ஏடறிந்த வரலாறுகள்” எல்லாம் வர்க்கப் முரண்பாடுகளையும், வர்க்கப் போராட்டங்களையும் உள்ளடக்கியது என்று மாற்றுகிறார்.

ஏனெனில், அதுவரை ஏட்டில் ஏறாதிருந்த ஆதிப்பொதுவுடமைச் சமூக வாழ்க்கை முறையை மார்கன் தனது கள ஆய்வின் மூலம் தனது நூலில் எடுத்துரைக்கிறார். அச்சமூகம் வர்க்க முரண்பாடற்ற நிலையை உள்ளடக்கியதாக இருந்தது. இதையே “நமது ஏடறிந்த வரலாற்றின் இந்த வரலாற்றுக்கு முந்தைய, அடிப்படையான, முக்கியமான அம்சங்களைக் கண்டுபிடித்து, மறுபடியும் நிர்மாணித்துக் கொடுத்ததுதான் மார்கனுடைய மகத்தான சிறப்பாகும்.” என்று மார்கனின் பங்களிப்பை எங்கெல்ஸ் சுட்டிக்காட்டுகிறார்.

பல்வேறு நாடுகளில், பல குழுக்களாகவும், குலங்களாகவும் வாழ்ந்து வந்த மனிதக் கூட்டம் தன்னகத்தே பலவிதமான வாழ்க்கை முறைகளை கொண்டிருந்தது. அதில் ஏற்பட்ட அடிப்படை மாற்றங்கள் எவ்வாறு குடும்பம் உள்ளிட்ட சமூக நிறுவனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை எங்கெல்ஸ் இந்த நூலில் விளக்குகிறார். மேலும் தனிச்சொத்தின் உருவாக்கம், வளர்ச்சி, கெட்டிப்படுதல், எவ்வாறு ஒருதார மணம் மற்றும் குடும்பம் உள்ளிட்டவற்றில் ஒரு வரைமுறையை ஏற்படுத்தியது என்பதையும் இந்த நூல் விளக்குகிறது.

குடும்பம் 

குடும்பம் என்பது “சென்ற காலத்தில் நடந்ததைப் போல சமுதாயம் முன்னேற, அதுவும் முன்னேறும்; சமுதாயம் மாற, அதுவும் மாறும். அது சமுதாய அமைப்பின் படைப்பு; அதன் பண்பாட்டை அது பிரதிபலிக்கும்….. நெடுந்தூர எதிர்காலத்தில் ஒருதார மணக் குடும்பத்தினால் சமுதாயத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாமல் போனால் அதற்குப் பின்னல் வரப் போகின்றவற்றின் இயல்பை ஆரூடம் கூற முடியாது” என்ற மார்கனின் வரிகளை எங்கெல்ஸ் ஒரு இடத்தில் மேற்கோள் காட்டுகிறார். 

அன்று, அதாவது சுமார் 142 ஆண்டுகளுக்கு முன்பு, ஆரூடம் கூற முடியாத விஷயங்கள் இன்றைய முதலாளித்துவ வாழ்க்கை நிலையில் நமக்கு  சில வளர்ச்சிப் போக்குகளை காட்டுகின்றன. ஏனெனில் நவீன குடும்ப உறவு முறையும் முதலாளித்துவத்திற்கான கூலி உழைப்பை உள்ளடக்கியதாகவே உள்ளது. திருமணம் என்கிற பதிவு இல்லாமல் ஒரு ஆணும் பெண்ணும் ஒரே வீட்டில் வாழ்வது (Live in Relation)  சட்டரீதியாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கெட்டியான பழமைவாதம் நிறைந்த வரைமுறைகளை கடந்து,  பிடித்திருந்தால் இந்த உறவை தொடர்வது அல்லது பிரிந்து செல்வது என்ற இந்நிலையை ஒருபடி முன்னேற்றமாகவே அறிவார்ந்த சமூகம் பார்க்கிறது. அதே நேரம் குடும்பம், குழந்தை, ஒரு வரைமுறை ஆகியவை இல்லாத இந்நிலை முதலாளித்துவத்திற்கு தேவையான சூழல் என்பதையும் நாம் கவனிக்க தவறக்கூடாது.


இரவு, பகல், ஓய்வு நாள், குடும்பத்துடன் ஒருநாள் என்பது போன்ற எவ்வித பந்தமும், அதற்காக ஒதுக்க வேண்டிய நேரமும் தேவை இல்லை என்ற நிலையே, தற்போது மாறிவரும் வேலைச் சூழலுக்கு தேவைப்படுகிறது. எல்லா காலத்திலும் ஆளும் வர்க்கத்தின் நலன் சார்ந்தே குடும்ப  முறையும் மாற்றம் கண்டுள்ளது. அதைப்போலவே, காலநேரம் இன்றி தனது உழைப்பை முதலாளிக்கு விற்கும் நிலையை தக்கவைக்கும் போக்கையே நவீன குடும்ப உறவுமுறைகள் வளர்க்கின்றன என்பது கண்கூடு.

எது நாகரிகம் ?

“மலைவாழ் மக்கள் மத்தியில் பாலியல் வல்லுறவு என்பதை நான் கேள்விப்பட்டதில்லை, அதேபோல் திருட்டு என்பதும் அங்கு கிடையாது” என்று பழங்குடியின மக்கள் மத்தியில் பணியாற்றிய ஒருவர் பதிவு செய்துள்ளார். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற, பஞ்சமும் பசியும் நிறைந்த இன்றைய நவீன சமூகத்தை பொதுவாக நாகரிக சமூகம் என்றும், மலைவாழ் மக்களின் வாழ் நிலையை அநாகரிகம் என்றும் இங்கு அடையாளப்படுத்தப்படுகிறது.

“அன்றைய மனிதர்களுடைய நிலையை இன்றைய நாகரிக மக்களின் மிகப் பெரும்பாலோருடைய நிலையுடன் ஒப்பிட்டால் அது…. மிகப் பெரும் இடைவெளியுடன் இருப்பதை காண்போம். எனினும் இந்த அமைப்பின் அழிவு தவிர்க்க முடியாதது என்பதையும் நாம் மறக்கக் கூடாது… இனக்குழுக்களின் கூட்டு அதன் வீழ்ச்சியின் ஆரம்பத்திற்கு சமிக்ஞையாக இருந்தது”  என்கிறார் எங்கெல்ஸ். 

அதேநேரம் முதலாளித்துவ உற்பத்திமுறைக்கு முடிவுகட்டி எழும் புதிய சமூகத்தில் பெண்களின் நிலை குறித்தும் எங்கெல்ஸ் இந்நூலில் குறிப்பிடுகிறார். அங்கு “பணத்தை கொண்டோ, சமூக ரீதியான இதர அதிகார சாதனைகளை கொண்டோ ஒரு பெண்ணை இணங்கச் செய்யும்படி என்றைக்கும் நேராது. பெண்கள் உண்மை காதலுக்காக மட்டுமின்றி வேறெந்த நோக்கத்துக்காகவும் எந்த ஆணுக்கும் என்றைக்குமே இணக்கமாட்டார்கள்; அல்லது பொருளாதார விளைவுகளை பற்றி அஞ்சி தம்முடைய காதலனுக்கு தம்மை கொடுக்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படாது.” என்ற உண்மையான, பண்பட்ட நாகரிக  நிலை கம்யூனிச சமூகத்திலேயே சாத்தியம் என்பதை எங்கெல்ஸ் இங்கு சுட்டிக்காட்டுகிறார்.

வரலாற்றுப் பொருள்முதல் வாதம்  

“பொருள்முதல்வாதக் கருத்தமைப்பின்படி (கடைசியாக பார்க்கும் பொழுது) உடனடி வாழ்க்கையின் உற்பத்தியும் புனருற்பத்தியுமே வரலாற்றில் தீர்மானமான காரணியாகும். ஆனால் இது இருவகையான தன்மை கொண்டது. ஒரு பக்கத்தில் வாழ்க்கைக்குத் தேவையான‌ சாதனங்களை உற்பத்தி செய்வது. அதாவது உணவு, உடை, வீடு ஆகியவற்றையும், அவற்றைப் பெறுவதற்குத் தேவையான கருவிகளை உற்பத்தி செய்வதாகும். மறுபக்கத்தில், மனிதர்களையே உற்பத்தி செய்வது – அதாவது மனித இனத்தை பெருக்குவது”  

அதே போல் “சமூக அமைப்பை உற்பத்தியின் இந்த இரண்டு வகைகளும் கட்டுப்படுத்துகின்றன. ஒரு பக்கத்தில் உழைப்பின் வளர்ச்சி எந்த கட்டத்தில் இருக்கிறது என்பதும், மறுபக்கத்தில் குடும்பத்தின் வளர்ச்சி எந்த கட்டத்தில் இருக்கிறது என்பதுமே அந்த சமூக அமைப்பைக் கட்டுப்படுத்துகின்றன.” என்று எங்கெல்ஸ் தனது முன்னுரையிலேயே குறிப்பிடுகிறார்.  இதற்கு ஆதாரமாக மார்கனின் ஆய்வு முடிவுகளை உள்ளடக்கி தான் சேகரித்த தரவுகளைக் கொண்டு வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தை எங்கெல்ஸ் இந்நூலில் வலுவாக நிறுவுகிறார்.

சொத்துடைமை வர்க்கத்தின் “அரசு” 

அடுத்தடுத்து வந்த சமூக வளர்ச்சியில் எழுந்த புதிய சமூகத்தில் சொத்துடைமை அமைப்பு எவ்வாறு குடும்ப அமைப்பின் மீது ஆதிக்கம் செலுத்தியது என்பது குறித்தும், தலைமை நிலையிலிருந்த பெண்கள், ஆணுக்கு சரிநிகராக இருந்த பெண்கள், எவ்வாறு சொத்து மற்றும் அதன் வாரிசுரிமை என்ற அழுத்தத்தினால் கட்டுப்பாடுகளுக்கும் ஆதிக்கத்திற்கும் உள்ளானார்கள் என்பதை பல்வேறு குலங்கள் மற்றும் குழுக்களின் பழங்கால வாழ்வியலை கொண்டு இந்நூல் விளக்குகிறது.

சொத்துடைமையின் வளர்ச்சி அரசு எனும் ஒரு அமைப்பு உருவாகும் நிலையை ஏற்படுத்தியது. “அரசு என்பது உடைமை வர்க்கத்தின் ஸ்தாபனம்” தான் என்று எங்கெல்ஸ் குறிப்பிட்டுள்ளதை போல் சொத்துடைமை வர்க்கம் தங்களது சொத்துக்களை பாதுகாக்க அரசு எனும் அமைப்பை கட்டமைத்தன. ஏனெனில் “வர்க்கப் பகைமைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்திலிருந்தே அரசு தோன்றியது; அதேசமயத்தில் அந்த வர்க்கங்களுக்கு இடையில்  நடைபெற்ற மோதல்களின் மத்தியிலிருந்தே அது தோன்றியது…. ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை நசுக்கிச் சுரண்டுவதற்கு அது புதிய சாதனங்களை பெறுகிறது” (வர்க்கங்களுக்கு இடையேயான)  “சண்டை”யின் கடுமையைத் தணிப்பது. “ஒழுங்கு” என்னும் வரம்புக்குள் அதைக் கட்டுப்படுத்துவது அதன் (அரசின்)  நோக்கமாகும்.” என்று அரசின் தோற்றம் மற்றும் அதன் செயல்கள் குறித்த எங்கெல்ஸ் இந்நூலில் விளக்குகிறார்.

ஆதிப்பொதுவுடைமை சமூகத்தின் வாழ்நிலையிலிருந்து தொடங்கி, வர்க்க சமூகங்களாக அவை வளர்ந்த அம்சங்களையும், சொத்துடைமையை பாதுகாக்க குடும்ப அமைப்பு எவ்வாறு வரைமுறைப்படுத்தப்பப்பட்டது என்றும், அதற்காக பெண்கள் மீது திணிக்கப்பட்ட கட்டுப்பாடுகளையும் இந்நூல் பேசுவதோடு, சொத்துடமை வர்க்கத்தின்  நலன் சார்ந்து அரசு உருவானதையும், வர்க்க நலன் சார்ந்த அதன் செயல்பாடுகளையும் இந்நூலில் எங்கெல்ஸ் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தோடு விளக்கியுள்ளார்.

பெண் விடுதலையும் லெனினும் – கிளாரா ஜெட்கினின் அனுபவம்

ச.லெனின்

பெண்கள் பிரச்சினைகள் குறித்து தோழர் லெனின் என்னுடன் அவ்வப்போது பேசுவார். கம்யூனிஸ்டுகளின் கொள்கையை வகுப்பதற்கு பெண்களுக்கான சமூக சமத்துவம் என்பது அவசியமானதாகும். இதுகுறித்து 1920ஆம் ஆண்டு கிரெம்ளினில் லெனினுடன் ஒரு நீண்ட உரையாடல் நடந்தது.  

அப்போது லெனின் “ஒரு தெளிவான தத்துவார்த்த அடித்தளத்துடன் வலுவானதொரு சர்வதேச பெண்கள் இயக்கத்தை கட்டியமைக்க வேண்டும். மார்க்சிய தத்துவமின்றி ஒரு நல்ல நடைமுறை இல்லை என்பது தெளிவு. இப்பிரச்சினையில் கம்யூனிஸ்டுகளுக்கு கொள்கை ரீதியான சரியான தெளிவு தேவை. இதில் நமக்கும், இதர கட்சிகளுக்கும்  கூர்மையான வித்தியாசம் அவசியம் இருக்க வேண்டும்” என்று கூறினார்.

“பெண்கள் மத்தியில் கம்யூனிஸ்டுகளின் பணி குறித்த ஒரு முன்மொழிவை உருவாக்குங்கள். உங்கள் மனத்தில் என்ன மாதிரியான முன்மொழிவுகள் உள்ளன?” என்று லெனின் என்னிடம் வினவினார். நான் ஒரு சுருக்கமான வரைவை அவரிடம் கூறினேன்.

அதற்கு “பெண்களுக்கான உண்மையான சுதந்திரம் என்பது கம்யூனிசத்தால் மட்டுமே சாத்தியம் என்பதை உங்கள் அறிக்கை தெளிவாக முன்வைக்க வேண்டும்.  உற்பத்தி சாதனங்கள் மீதான தனிச் சொத்துடைமைக்கும் சமூகத்தில் பெண்களின் கீழான நிலைக்கும் பிரிக்கமுடியாத தொடர்பு உள்ளது என்பதை வலுவாக வெளிக்கொணர வேண்டும்.  அதுவே நமக்கும் மற்ற பெண்ணியவாதத்திற்கும் இடையே தவிர்க்கமுடியாத, தெளிவான ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும். 

தொழிலாளர்களுடைய பிரச்சினைகளின் ஒரு பகுதியான பெண்களின் பிரச்சினைகள் குறித்த அடிப்படையை இது வழங்கும். அதுவே தொழிலாளிகளின் வர்க்க போராட்டத்தினையும் புரட்சியையும் உறுதியாக பிணைக்கும்.

பரந்துபட்ட மக்களுடைய இயக்கத்தின் ஒரு பகுதியாக விளங்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பெண்கள் இயக்கம் பெரியதொரு மக்கள் திரள் இயக்கமாக இருக்க வேண்டும். இதில் தொழிலாளி வர்க்கத்தினர் மட்டுமின்றி முதலாளித்துவம் உள்ளிட்ட ஆதிக்க அமைப்புகளால் சுரண்டப்பட்டும், ஒடுக்கப்பட்டும் பாதிப்புக்குள்ளான அனைவரையும் இணைக்க வேண்டும். அதுவே தொழிலாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும், கம்யூனிச சமூகம் அமைவதற்கான வரலாற்று கடமையை ஆற்றுவதற்கும் முக்கியமானதாகும்.

கட்சியிலும், கம்யூனிஸ்ட் அகிலத்திலும் புரட்சிகர பெண் போராளிகள் பூத்துக் குலுங்குகிறார்கள் என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால்  அது போதுமானதல்ல. கிராமங்களிலும் நகரங்களிலும் உள்ள கோடிக்கணக்கான உழைக்கும் பெண்களை நாம் வென்றெடுக்க வேண்டும். நமது போராட்டக் களத்திற்கு வென்றெடுப்பதோடு, கம்யூனிசத்தை நோக்கிய சமூக மாறுதலுக்கான பணியிலும் அவர்களை இணைத்திட வேண்டும்.   ஒரு உண்மையான வெகுஜன இயக்கமென்பது பெண்கள் இன்றி சாத்தியமில்லை” என்றார் லெனின்.

சோவியத் ரஷ்யா பெண்களுக்கான கோரிக்கைகளை புதிய வெளிச்சத்தில் பார்க்கிறது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் அக்கோரிக்கைகள் என்பது பாட்டாளிகளுக்கும் முதலாளி வர்க்கத்திற்கும் இடையே நடக்கும் போராட்டம் போன்றதல்ல. அவை கம்யூனிச சமூக அமைப்பின் ஒரு பகுதியாகும். அது மற்ற நாடுகளில் உள்ள பெண்களுக்கு பாட்டாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டியதன் தீர்க்கமான  முக்கியத்துவத்தை உணர்த்தும். மற்றவர்களுக்கும் நமக்குமான வித்தியாசம் தெளிவாக எடுத்துரைக்கப்பட வேண்டும். அப்போதுதான்  பெண்கள் பாட்டாளிவர்க்கத்தின் புரட்சிகரமான  வர்க்கப்போராட்டத்தில் இணைவார்கள். சரியான புரிதலுடன் கூடிய கொள்கை மற்றும் ஸ்தாபன அடித்தளத்தோடு பெண்களை திரட்டுவதே கம்யூனிஸ்ட் கட்சிகளின் வெற்றிக்கு அவசியமானதாகும்.

கம்யூனிச சிந்தனைகள்  அல்லாத பழைய உளவியல்கள் அனைத்தையும் கடந்து முன்னேறும் வேலையை தொழிற்சங்கங்கள், கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டவை ஒருங்கிணைத்து பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசின் கீழ் செய்து முடிக்கும். இங்கு எந்த பழைமைவாதத்தையும் அது விட்டு வைக்காது. எங்கும் சமத்துவத்தை நடைமுறைக்கு கொண்டுவரும் உண்மையான ஆவல் மேலெழும் தன்மை காணப்படுகிறது. நாம்  சட்ட ரீதியாகவும், அரசுமுறையிலும் பெண்களை சமூக பொருளாதாரத்தில் இணைக்கிறோம். அவர்களின் தொழில் முறை மற்றும் சமூக திறன்களை வளர்க்கும் நோக்கோடு அனைத்து கல்வி நிலையங்களும் அவர்களுக்காக திறந்திருக்கிறது.

அனைவருக்கும் பொதுவான சமையல், பொது உணவு உட்கொள்ளும் நிலையம், பொது துணி துவைக்கும் மையம், குழந்தைகள் காப்பகம், அனைத்து குழந்தைகளுக்குமான கல்வி நிலையங்கள் எல்லாம் அமைக்கப்படுகிறது. சுருக்கமாக சொல்வதெனில், பொருளாதார மற்றும் கல்வியியல் நடவடிக்கைகளை குடும்ப பொறுப்புகளில் இருந்து சமூக பொறுப்பாக மாற்றுகிறோம். இது பழைய வீட்டு வெளிகளில் இருந்தும், ஆணை சார்ந்திருக்க வேண்டும் என்ற நிலையிலிருந்தும், பெண்களை விடுவிக்கும். மற்றவற்றை சார்ந்திருக்கும் நிலையிலிருந்து பெண்களை இது விடுவிப்பதோடு அவர்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் உதவிடும். வீட்டில் வளர்வதை விட குழந்தைகள் மேம்பட்ட நிலையில் இங்கு வளர்வார்கள். பெண் தொழிலாளர்களுக்கான முன்னேறிய பாதுகாப்பு நிறைந்த  சட்டங்கள் இங்கு உள்ளது. மகப்பேறு மருத்துவமனைகளும், குழந்தைகள் வளர்ப்பு வழிமுறைகளும் இன்னபிற தாய் சேய் நல  நடவடிக்கைகளும் சிறந்த முறையில் உருவாக்கப்படுகிறது. வேலை இல்லாத, வேலை வழங்கப்படாத பெண்களின் நலன் குறித்தும் கூடுதல் அக்கறை செலுத்தப்படுகிறது.

பெண்களின் உண்மையான விடுதலைக்கு இவையெல்லாம் போதுமென்று நாங்கள் கருதவில்லை.  உழைக்கும் பெண்களின் தேவைகளோடு ஒப்பிடுகையில் இவை போதுமானதல்ல. ஆனபோதும் ஜார் ஆட்சியின் கீழ் இருந்த முதலாளித்துவ நிலைமைகளை விட இது மேலும் முன்னேறிய ஒரு நிலையே ஆகும். முதலாளித்துவ நாடுகளுடன் ஒப்பிடுகையில் இவை மிகப்பெரிய விஷயமாகும். இது சரியான பயணத்தின் நல்லதொரு துவக்கமாகும். நாம் மேலும் முன்னேறிச் செல்வோம். பெண்களின் பங்களிப்பு இல்லாமல் சோவியத் அரசின் நிலைத்தன்மை சாத்தியம் இல்லை என்பதை அனுபவம் நிரூபித்து வருகிறது.