’புதிய’ இந்தியாவின்அரசியல்சாசனம்

  • உ. வாசுகி

இந்தியாவின் அரசியல் சாசனம், அரசியல் நிர்ணய சபையில் நிறைவேற்றப் பட்டதிலிருந்தே, அதனுடனான ஆர்.எஸ்.எஸ்.சின் ஒவ்வாமை, பல விதங்களில் ,வெளிப்படுத்தப்பட்டுள்ளது.  ”இதில் நம்முடையது என்று சொல்லிக் கொள்ள என்ன இருக்கிறது?’ என்ற கேள்வியிலிருந்து, ”மனுவின் கோட்பாடுகளை விட சிறந்த சட்டம் எதுவும் இல்லை” என்ற வாக்குமூலம் வரை அனைத்துமே ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையான ஆர்கனைசர் தலையங்கத்தில் பிரசுரிக்கப்பட்டது. ‘நம்முடையது’ என்று அவர்கள் சொல்லும்போது, அரசியல் சாசனத்தில் இருப்பது வேறு யாருடையதோ என்று பொருள்.  அதாவது ஜனநாயகம், மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் உள்ளிட்ட கூட்டாட்சி கோட்பாடு, சம நீதி, சமூக நீதி, அறிவியல் கண்ணோட்டம், கருத்து சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் எதுவுமே நம்முடையது இல்லை என்பது அவர்கள் வாதம். இந்துத்துவ ராஷ்டிரம் வந்தால், இவை எதுவுமே இருக்காது என்றுதான் இந்த வாதத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தின் அடிப்படை நிலைபாடான இந்துத்துவ ராஷ்டிரம் அமைவதை குறிக்கோளாக வைத்தே, ஆர்.எஸ்.எஸ். – பாஜக அரசு ஒவ்வொரு நகர்வையும் மேற்கொண்டு வருகிறது.

இந்துத்துவ நகல் அரசியல் சாசனம்:

சில மாதங்களுக்கு முன், வாரணாசியில் 30க்கும் மேற்பட்ட இந்து மத சாதுக்கள், இந்துத்துவ ராஜ்யத்தின் அரசியல் சாசனம் எப்படி இருக்கும் என்ற நகலை வெளியிட்டனர். இது நாள் வரை, ஆர்.எஸ்.எஸ்.சோ, பாஜகவோ, இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறவில்லை. இந்திய தலைநகர் வாரணாசி என்றும், நாடாளுமன்றம் மக்கள் பிரதிநிதிகளின் மன்றம் அல்ல; மத பிரதிநிதிகளின் மன்றம் என்றும் வரைவு அறிக்கை கூறுகிறது. இசுலாமியர்களும், கிறித்துவர்களும் இந்தியாவின் குடிமக்களாகத் தொடரலாம்; ஆனால் ஓட்டுரிமை இருக்காது என்பது அதில் ஒன்று. அண்மையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், ஆர்கனைசர், பஞ்சஜன்யா இதழ்களுக்கு அளித்த பேட்டியிலும் இது பிரதிபலிக்கிறது.   “இசுலாமியர்கள் இங்கு இருந்தாலும் இருக்கலாம். அவர்களின் முன்னோர்கள் இடத்துக்குப் போவதென்றாலும் போகலாம். இங்கு இருக்க வேண்டும் என்றால், அவர்களின் உயர்வு மனப்பான்மையைக் கைவிட வேண்டும். இந்துக்கள் 1000 ஆண்டுகளாக அந்நிய சதிகளை முறியடிக்க ஒரு யுத்தம் நடத்தி வருகின்றனர். யுத்தத்தில், ஆக்ரோஷமாக இருப்பது இயல்பானது” என்ற அவரின் பேச்சு, சிறுபான்மையினர் மீதான சங் அமைப்பின் நிலைபாட்டைத் தெளிவுபடுத்துவது மட்டுமல்ல; வன்முறையைத் தூண்டுவதாகவும் அமைந்திருக்கிறது. அடுத்து, நீதி பரிபாலன முறை, இந்துத்துவ ராஷ்டிரத்தில் திரேதா யுகம், துவாபர யுகத்தில் பின்பற்றப்பட்ட முறையாக இருக்கும் என அந்த நகலில் தெரிவிக்கப் பட்டுள்ளது.  சமத்துவ அடிப்படையில் உருவாக்கப்பட்ட பல சட்டங்கள், சங் அமைப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏதுவாக இல்லை. பல சுற்று விவாதித்து, மக்கள் பிரதிநிதிகளால் இயற்றப்பட்ட சட்டங்கள், திருத்தங்கள், இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் உட்பட நிராகரிக்கப்படும்.  இத்தகைய யுகங்கள், இந்து மத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டவை. எனவே, மத அடிப்படையிலான அசமத்துவ கோட்பாடுகள் இவற்றில் பிரதிபலிக்கும். சிறுபான்மையினரை இரண்டாம் நிலையில் நிறுத்துவது மட்டுமல்ல; பெண்கள், தலித்துகள், பழங்குடியினர் போன்ற பிரிவுகளுக்கும் சமநீதி இல்லை. இந்த வரைவு அறிக்கையின் மைய அம்சம், வருண அமைப்பின் அடிப்படையில்தான் அரசு நிர்வாகம் இயங்கும் எனக் கூறுகிறது. வருண, சாதிய கட்டமைப்பு வலுப்படுத்தப்படும் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. தோழர் பிரகாஷ் கராத், இந்துத்துவ ராஷ்டிரத்தைப் பற்றிக்  கூறும்போது,  அரசு நிர்வாகத்தை மதத் தலைவர்கள் நடத்துவதுதான் இந்துத்துவ ராஷ்டிரம் என இதனை எளிமையாகப் புரிந்து கொண்டு விடக்கூடாது; உள்ளடக்கம் அதை விட ஆழமானது, ஒட்டு மொத்தக் கட்டமைப்பும் அசமத்துவ அடிப்படையில், இந்துத்துவா என்கிற அரசியல் திட்டத்தின் அடிப்படையில், நிர்மாணிக்கப்படும் என்று சுட்டிக் காட்டினார். இந்த நிகழ்ச்சி நிரலுக்கு, இன்றைய அரசியல் சாசனம் பெரிதும் எதிராக இருப்பதால், அதனை சீர்குலைத்து, பிற்போக்கான மாற்று கதையாடலை முன்னிறுத்தும் ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது.

இரண்டும் ஒன்றல்ல:

அதன் ஒரு பகுதியாகவே ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு என்று பட்டியல் நீள்கிறது. இந்தியா முழுவதும் காவல்துறையின் சீருடை ஒரே மாதிரி இருக்க வேண்டும் என பிரதமர் சமீபத்தில் முன்மொழிந்தது இதற்கு ஒரு உதாரணம். காவல்துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் இந்த முன்மொழிவு வைக்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் எடுக்கும் சில நடவடிக்கைகள், கடந்த கால அரசாங்கமும் எடுத்ததாகக் கூட இருக்கலாம். ஆனால், இரண்டும் ஒன்றல்ல.  வகுப்புவாத சித்தாந்தத்தைப் பின்பற்றும் ஒரு கட்சி, ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு, இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கிறது என்ற வேறுபாடு முக்கியமானது.  இந்தி திணிக்கப்படுவதும், சமஸ்கிருதம் போற்றப்படுவதும், இந்தியாவின் பன்மைத்துவத்தை சிதைக்கும் நோக்கம் கொண்டது. தேசிய புலனாய்வு முகமை, மாநில காவல்துறையின் எல்லையை மீறி நேரடியாகத் தலையிடலாம் என்பது, இசுலாமியர்களை அல்லது அரசியல் எதிரிகளைத் தீவிரவாதிகளாக முத்திரை குத்தும் வாய்ப்பை ஒன்றிய அரசின் கைவசம் வைக்கும் முடிவு.  இந்த வரிசையில்தான் ஆளுநரின் அதிகார மீறல் பிரச்னையும் வருகிறது.

அரசியல் ஆயுதமாக ஆளுநர்

தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, பஞ்சாப், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட  மாநில அரசாங்கத்துக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இதனால் ஒன்றிய அரசுக்குக் கிடைக்கும் குறுகிய அரசியல் ஆதாயம் மட்டும் பகிரங்கமாகக் கண்ணுக்குத் தெரியலாம். ஆனால், விளைவு அது மட்டுமல்ல; பாஜக அல்லாத மாநில அரசுகளை செயல்பட விடாமல் தடுக்கும் அரசியல் நோக்கமும் இதில் உண்டு. அரசியல் சாசனம் கூறும் அதிகார வரம்பு மீறல், கூட்டாட்சி கோட்பாடு சிதைக்கப்படுதல் போன்ற விளைவுகளுடன்,  அனைத்து அதிகாரங்களையும் மையத்தில் குவிப்பது என்கிற ஆர்.எஸ்.எஸ். நோக்கத்தை ஒட்டியே இந்த நகர்வு மேற்கொள்ளப்படுகிறது. சகல அதிகாரமும் பெற்ற ஒன்றிய அரசாங்கமாக இருந்தால்தான், எதிர்ப்புகளை நசுக்கி,  இந்துத்துவ நிகழ்ச்சி நிரலையும், கார்ப்பரேட் ஆதரவு நிகழ்ச்சி நிரலையும், சுயசார்பு அற்ற அயல்துறை கொள்கையையும் துரிதமாக நடத்தி செல்ல முடியும்.

எதேச்சாதிகார பாதை

பாஜக அல்லாத மாநில அரசுகளை முடக்க ஆர்.எஸ்.எஸ். பாஜக எடுக்கும் முயற்சிகள் பலவிதம். மத்திய புலனாய்வு பிரிவு, அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை போன்றவற்றைக் காட்டி அச்சுறுத்தி எதிர்க்கட்சிகளைப் பணிய வைப்பது, பல நூறு கோடிகள் கொடுத்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் ஏற்பாடு, தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமான செயல்பாட்டை முடக்கி, தேர்தல்களில் பாஜக கூட்டணியில் இல்லாத கட்சிகளுக்கு பிரச்னைகளை ஏற்படுத்துவது, நீதித்துறையிலும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த பிடிப்புள்ளவர்களை ஊடுருவ வைப்பது எனப் பல வடிவங்களில் இவை வருகின்றன. ஊடக சுதந்திரத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தி, பெரும்பாலான ஊடகங்களைத் தம் ஊதுகுழலாக்கி வைத்திருப்பதும் இதில் உள்ளடங்கும். வரி வருவாய் உட்பட நிதி பகிர்வு விஷயத்தில் மாநில அரசுகளைத் திணற வைப்பது, மாநில அரசுகளின் நல திட்டங்களை இலவசம் என்று முடக்க முயற்சிப்பது போன்ற நடவடிக்கைகள் இக்காலத்தில் அதிகம் முன்னுக்கு வருகின்றன.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவணங்கள் சுட்டிக்காட்டுவது போல, பாஜக அரசாங்கம் கார்ப்பரேட் ஆதரவு மதவெறி கொள்கைகளை அமல்படுத்தி, இந்துத்துவ ராஷ்டிரத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்றால், எதேச்சாதிகார பாதையில் செல்லத்தான் வேண்டும். ஜனநாயகமும், சுதந்திரமும், கருத்து வேறுபாடுகளும், எதிர்க்கட்சிகளும், பாஜக அல்லாத மாநில அரசாங்கங்களும். மக்கள் தம் விருப்பப்படி வாக்களிப்பதும் அவர்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும்.

இதில் முக்கியமானது, மக்களின் சிந்தனைகளைக் கட்டுப்படுத்துவது என்பதாகும். அனைத்துக்கும் ஒரு தர்க்க நியாயம் இருக்க வேண்டும் என்பதை மறுதலிப்பது, கருத்து சுதச்திரத்தை முடக்குவது, ஊடகங்களைத் தம் கைப்பாவையாக வைத்திருக்கும் முயற்சி, பிபிசி ஆவண படத்துக்குத் தடை, சமூக ஊடகங்கள் மீது நிர்ப்பந்தம், வெறுப்பு அரசியல் பேச்சுக்கள் போன்றவற்றைக் கூறலாம். உயர்கல்வி துறை, குறிப்பாக பல்கலைக்கழக வளாகங்கள், மாணவர்களின் சுதந்திர சிந்தனையை ஊக்குவிக்கக் கூடிய இடங்களாகும். ஆளுநர் என்பவர், பல்கலைக்கழக  வேந்தர் என்பதைப் பயன்படுத்தி, சங் சிந்தனையாளர்களைத் துணை வேந்தர்களாக நியமித்து ஊடுருவது என்பதும், சுதந்திர சிந்தனையை சீர்குலைக்கும் போக்காகும். தேசிய கல்வி கொள்கை முழுக்க முழுக்க, சங் சிந்தனை கூடாரமாகக் கல்வி நிலையங்களை மாற்றும் போக்கே.

ஆளுநரின் பங்கு பாத்திரம்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் அணுகுமுறையை இந்தப் பின்புலத்தில் பார்ப்பதே பொருத்தமாக இருக்கும். அதிகார வரம்பு தெரியாமல் அவர் செயல்படவில்லை. தெரிந்தே அதை மீறுகிறார். அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள பணி அது.  டாக்டர் அம்பேத்கர் அவர்கள், ஆளுநருக்கு என்று எந்த வேலையும் இல்லை; அரசியல் சாசனம் வரையறுத்துள்ள கடமைகள்தான் உண்டு என சுட்டிக் காட்டுகிறார். சர்க்காரியா கமிஷன், ஆளுநர் என்பவர் தீவிர அரசியலிலிருந்து விலகி நிற்பவராகவும், தீவிர அரசியல் தொடர்புகள் இல்லாதவராகவும் இருக்க வேண்டும் என விளக்குகிறது. எனவே, தம் சொந்த அரசியல் – சித்தாந்த கருத்துக்களை வெளிப்படுத்த அவருக்கு அதிகாரம் இல்லை என்பது தெளிவு. தமிழ்நாடு சட்டமன்றத்தில் அவர் வாசிக்க மறுத்த பகுதிகள் முழுவதும் சங் சித்தாந்தத்துக்கு எதிரானவை.

மத்திய – மாநில உறவுகள் சீரமைப்புக்காக உருவாக்கப்பட்ட பல கமிஷன்கள், ஆளுநர் குறித்து பரிந்துரைகளை முன்வைத்துள்ளன. உதாரணமாக, சர்க்காரியா கமிஷன் (1983), ஆளுநரை அகற்றும் போது, மாநில அரசுடன் கலந்து பேச வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.  நிர்வாக சீர்திருத்த கமிஷன் (1969) அரசியல் சார்பு தன்மை இல்லாத ஒருவரையே ஆளுநராக நியமிக்க வேண்டும் என்கிறது. பூஞ்ச்சி கமிஷன் (2007). ஆளுநர்களை அகற்ற (இம்பீச்மெண்ட்) மாநில அரசுக்கு சட்ட ரீதியான அதிகாரம் வேண்டும்.; ஆளுநர் நியமனத்தில் மாநில முதலமைச்சரின் கருத்து கணக்கில் எடுக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.

இத்தகைய சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சிவதாசன், ஆளுநரின் அதிகாரங்களை இன்னும் ஸ்தூலமாக வரையறுக்கக் கூடிய அரசியல் சாசன திருத்தம் (பிரிவு 153ஐ திருத்துவது சம்பந்தமாக) கோரி தனிநபர் மசோதாவை சமீபத்தில் முன்மொழிந்துளார். மாநில முதலமைச்சரிடம் 3 பெயர்களைப் பெற்று, அதில் ஒன்றைப் பரிசீலிக்கலாம என்ற ஆலோசனையை முன்வைத்துள்ளார். காலனிய ஆதிக்கத்தின்போது ஆளுநர்கள், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பிரதிநிதியாக இருந்தது போன்ற அணுகுமுறை ஜனநாயக கட்டமைப்பில் பொருந்தாது என்ற அவரது வாதம்  சரியானது. மார்க்சிஸ்ட் கட்சி, ஆளுநரின் அவசியத்தைப் பற்றிக் கேள்வி எழுப்புவதோடு, மேலிருந்து நியமிக்கப்படுபவராக ஆளுநர் இருக்கக் கூடாது என்று கூறுகிறது.

நீதிபதிகள் நியமனம்

இதனை ஒட்டியே நீதிபதிகள் நியமனம் குறித்த சர்ச்சையைப் பார்க்க வேண்டும். ஒன்றிய சட்ட அமைச்சர் கிரேன் ரிஜிஜு,  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கு, ஒன்றிய அரசின் பிரதிநிதியை உள்ளடக்கிய தேடுதல் குழுவை நியமிக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். ஏற்கனவே, அரசியல் சாசன பிரிவுகளின் சாராம்சம், அரசாங்கமே நீதிபதிகளை நியமிக்கக் கூறுகிறது என்றும், இந்த முடிவை எடுக்காவிட்டால், நீதிபதிகளின் காலி இடங்கள் நீடிக்கும் என்றும் அச்சுறுத்தும் விதத்தில் கூறி வந்தார். தற்போது உச்சநீதிமன்றத்தில் மட்டுமல்ல,  உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் ஒன்றிய அரசாங்கம் தலையிடும் வாய்ப்பை உருவாக்க முனைகிறார்.

குடியரசு துணை தலைவர், இப்பிரச்னையில், கேசவானந்த பாரதி வழக்கில், அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சங்களை (basic tenets of constitution) வரையறுத்து, சட்டங்கள் இதற்கு உட்பட்டே இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை கேள்விக்கு உள்ளாக்குகிறார். குடியரசு துணைத் தலைவர் பதவியும் அரசியல் சாசன அடிப்படையில் அமைந்ததாகும். தம் விருப்பம் போல் கருத்துக்களைக் கூற முடியாது.   நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பயன்படுத்தி, அரசியல் சாசனத்தை மீறியும் கூட எவ்வித சட்டத்தையும் இயற்றும் அதிகாரம் வேண்டும் என்பதே இதன் உட்பொருள்.

நீதிபதிகளே நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலிஜியம் முறையின் மாற்றங்கள் வேண்டும் என்பது உண்மைதான். நீதிபதிகள் நியமனம், இடமாற்றம், நீக்கம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கவனிக்கக் கூடிய, சார்புத்தன்மை அற்ற  கமிஷன் வேண்டும் என்பது அவசியம்தான். ஆனால், கொலிஜியத்தின் கோளாறுகளை முன்வைத்து, அந்த இடத்தில், ஒன்றிய அரசே அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஏற்பாட்டைக் கொண்டு வர, ஒன்றிய அரசு முனைவதை அனுமதிக்கக் கூடாது. பாஜக அரசின் இந்த முயற்சி, நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடும் போக்கு மட்டுமல்ல; தம் சித்தாந்த அடிப்படையில் தீர்ப்புகளை வழங்க வைக்கும் ஆபத்தும் மிக அதிகமாகத் தெரிகிறது. மோடியும், மோகன் பகவத்தும் முன்வைக்கும் கருத்துக்கள் எல்லாம் தீர்ப்புகளாகி விட்டால், இந்திய குடியரசின் குணாம்சம் முற்றிலும் மாற்றப்படும். எனவே, ஒன்றிய அரசின் நகர்வுகளை, ஒவ்வொன்றாகத் தனித்து பார்ப்பதை விட, ஆர்.எஸ்.எஸ். முன்வைக்கும் இந்துத்துவா என்கிற அரசியல் திட்டத்தின் வெவ்வேறு அம்சங்கள் என்ற ஒட்டு மொத்த பார்வையுடன் அணுகுவதும், பல்வேறு அரசியல் கட்சிகள், பாஜக அல்லாத மாநில அரசாங்கங்களை ஒருங்கிணைப்பதும், மக்கள் மத்தியில் இதனை அம்பலப்படுத்துவதும் நமக்கு முன் உள்ள மிக முக்கிய கடமையாகும்.

முற்றுகையின் கீழ் இந்திய ஜனநாயகம்…

  • பிரகாஷ் காரத்

இந்திய மக்களாகிய நாம் நமது தேசத்தின் 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வேளையில், விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்பும் கூட, இந்திய நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயகம் நடைமுறையில் இருக்கிறது என்பது நமது சாதனைகளுள் ஒன்றாகும். இதற்கு முழுமுதற் காரணம், 1950 ஆம் வருடம் நாம் ஏற்றுக் கொண்ட இந்திய அரசியல் அமைப்பு சட்டமும் அதன் பலனாக இந்திய மக்கள் அனைவரின் குரல்களும் அரசியலில் ஒலித்துக்  கொண்டிருப்பதும்தான். இன்றைக்கு இந்திய மக்கள் எழுப்பும் இந்த குரல், இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் எழுப்பப்பட்ட குரல்களின் எதிரொலி என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

இந்திய நாட்டில், முதலாளித்துவ சக்திகளின் குறுகிய பார்வை போன்ற கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் கூட, சுதந்திரம் பெற்று ஏழு பத்தாண்டுகள் கடந்த பின்னரும், நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது உயிர்ப்புடன் இருக்கிறது. இவ்வளவு காலம் நாடாளுமன்ற ஜனநாயகம் நிலைத்திருப்பதற்கு முக்கிய காரணம், இந்திய மக்களும், ஜனநாயக சக்திகளும் இணைந்து நடத்திய போராட்டங்கள்தான்.

எனினும், நாம் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் இருண்டதாக தெரிகிறது. நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பும், இந்திய அரசியல் அமைப்பு நமக்கு கட்டமைத்து கொடுத்திருக்கிற ஜனநாயகத்தை பாதுகாத்திடும் அடித்தளங்களும் மிகத் தீவிரமான தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கின்றன. இன்றைக்கு முழு அளவிலான சர்வாதிகார போக்கு என்பது தலைதூக்கி வருகிறது. இது இந்திய நாட்டின் ஜனநாயகம் வழங்கியுள்ள அரசு நிறுவனங்கள்  அமைப்புகளின் அதிகாரங்களை குறைத்துவிட்டதால், இந்திய நாட்டின் ஆட்சி அதிகாரம், நீதிமன்றம் மற்றும் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களுக்கு இடையேயான சமநிலையை பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

முழு அளவிலான சர்வாதிகாரத்தனம்..

கூடுதலான நாடாளுமன்ற உறுப்பினர்களோடு, 2019ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க., ஒரு கட்சி சர்வாதிகாரத்தை கட்டமைப்பதற்கான இலக்கினை தனக்குத் தானே நிர்ணயித்துக் கொண்டுள்ளது. பா.ஜ.க.வின் இந்த நிர்ணயிப்பிற்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் நின்று கடுமையான எதிர்த்தாக்குதலை நடத்திட வேண்டும். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல்களை ஒடுக்குவது, எதிர்க்கட்சிகள் ஆட்சி புரியும் மாநிலங்களில், ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சிக் கவிழ்ப்பை செய்வது, மத்திய அரசின் சிபிஐ, வருமானவரி, அமலாக்கத்துறை போன்ற   அமைப்புகளை தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் மீதும், எதிர்க்கட்சி தலைவர்கள் மீதும்  தாக்குதலுக்கு பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது சர்வாதிகார பா.ஜ.க. அரசு.

நாடாளுமன்றத்தின் மாண்புகளை குறைப்பது, நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீரழிப்பது என்பது  மோடியின் இரண்டாவது ஆட்சியில் மிகவும் தீவிரத்தன்மையோடு உள்ளது. இந்திய நாடாளுமன்றம் கடந்த 2021 ஆம் ஆண்டில் மொத்தத்தில் 50 நாட்களுக்கும் குறைவாகவே நடைபெற்றுள்ளது. எந்தவொரு மசோதா மீதும் விவாதங்கள் என்பது நடப்பதில்லை; எதிர்க்கட்சிகளுக்கு விவாதங்களுக்கான நேரம் என்பது ஒதுக்கப்படுவது கிட்டத்தட்ட இல்லை என்ற அளவில்தான் உள்ளது. அதே போல், எந்தவொரு மசோதாவும் ஆய்விற்கு உட்படுத்துவது என்பதும் இல்லை. கடந்த UPA ஆட்சியில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 60 முதல் 70 சதவீத மசோதாக்கள், நாடாளுமன்ற நிலைக்குழு அல்லது தேர்வுக்குழுக்களுக்கு அனுப்பப்பட்டன. ஆனால் இந்த சதவீதம் பா.ஜ.க. வின் முதலாம் ஆட்சியில் 23 சதமாகவும், இரண்டாவது ஆட்சியில் 13 சதமாகவும் குறைந்து விட்டன. இவற்றோடு இணைந்து, எதிர்க்கட்சிகள் பிரச்னைகளை எழுப்புவதற்கும், ஓட்டெடுப்பு கோருவதற்கும் நாடாளுமன்றத்தில் மறுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மசோதாக்களை பண மசோதாக்களாக (Money Bill) கொண்டு வந்து, ராஜ்ய சபையின் மாண்புகளை தரம் தாழ்த்தி விட்டது மோடி அரசு.

பா.ஜ.க. அரசின் சர்வாதிகாரப் போக்கு, இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள பொது மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் குடிமக்களின் சுதந்திரம் ஆகியவற்றை காலில் போட்டு மிதிப்பது என்கிற இடத்திற்கு ஆட்சியாளர்களை இட்டுச் சென்றுள்ளன.

எதிர்ப்புக் குரல்களை குற்றவாளிகளாக சித்தரித்து தண்டிப்பது, குடிமக்களின் உரிமைகளை நசுக்குவது என்பது சர்வாதிகார மோடி ஆட்சியின் முத்திரையாக மாறிவிட்டது. கொடூரமான சட்டங்களான உவாபா (UAPA)  போன்றவற்றின் மூலம் எதிர்ப்பு குரல்களை நசுக்கும் போக்கு வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்துள்ளது. 2014 முதல் 2020 ஆம் வருடங்களுக்கு இடையிலான ஆறு வருட காலத்தில் 690 குற்ற வழக்குகள் இந்திய நாட்டு மக்களின் மீது போடப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் வாயிலாக 10,552 பேர் கைது செய்யப்பட்டுள்ள கொடூரம் நிகழ்ந்துள்ளது. அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அரசியல் செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள் என அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. பீமா கோரேகான் வழக்கில் 16க்கும் மேற்பட்ட சமூக செயல்பாட்டாளர்கள், அறிவு ஜீவிகள் கைது செய்யப்பட்டு சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் மூன்று வருட காலமாக அடைக்கப்பட்டுள்ளனர்.

உச்சநீதிமன்றம் தனது சுயேச்சையான செயல்பாட்டை நிறுத்திவிட்டு அதிகாரிகளின் கைப்பவைகளாக செயல்பட ஆரம்பிப்பதுதான் சர்வாதிகார ஆட்சியின் மோசமான அம்சம். உச்சநீதிமன்றம் ஒரு நிர்வாக நீதிமன்றமாக செயல்படத் துவங்கியுள்ளது. சமீபத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகளான ஜாக்கியா ஜாஃப்ரி வழக்கிலும், பண மோசடி வழக்குகளில் அமலாக்கப் பிரிவின் அதிகார வரம்பு பற்றிய வழக்கிலும் உச்ச நீதி மன்றம் குடிமக்களின் உரிமைகள் மீது நிர்வாகத் தாக்குதல்கள் நடத்தியிருப்பதை காண முடியும்.

75 ஆண்டுகால இந்திய வரலாற்றை பார்க்கையில், 1975ஆம் வருடம் ஜூன் மாதம் இந்திராகாந்தி  ஆட்சி காலத்தில், இந்திய ஜனநாயகத்திற்கு நெருக்கடி நிலை என்கிற பெயரில் மிகப் பெரிய தாக்குதல் ஏற்பட்டது. ஆனால் அது 20 மாத காலம் மட்டுமே நீடித்தது.  அந்த காலகட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சிவில் உரிமைகள் பறிக்கப்பட்டு, அனைத்து பத்திரிக்கைகளும் தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டன. அடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆனால் இன்றைக்கு ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலானது, எமர்ஜென்சி காலத்தை விட மிகவும் தீவிரமானது; விரிவானது. குடியாட்சி என்கிற தத்துவத்தின் முக்கியமான அம்சங்களான மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சி இரண்டையும் துண்டித்து வருகிறது.

ஏன் இந்த கொடூர வடிவிலான சர்வாதிகாரம் இந்திய நாட்டின் ஜனநாயகத்தை முடக்கத் துடிக்கிறது? இது ஏதோ பிறழ்வோ அல்லது தற்செயலாக ஏற்பட்ட விபத்தோ அல்ல. இது தனிநபர் சர்வாதிகாரப் போக்கு என்றும் நாம் குறிப்பிட முடியாது. இத்தகைய சர்வாதிகாரம் கருக்கொள்வதற்கு பல்வேறு பாசிச சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட்டுள்ளன என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அரசியல் ஜனநாயகம் குறித்து அம்பேத்கர் …

இந்திய நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தினை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நேரத்தில், டாக்டர். அம்பேத்கர் அவர்கள் கூறியதை தற்போது நினைவு கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. பொருளாதார சமத்துவமும், சமூக நீதியும் வெற்றி பெறாமல் அரசியல் சுதந்திரம் என்பது வெற்றி பெறாது என்று கூறினார். இந்தியாவில் ஜனநாயகம் என்பது வெறும் மேல்பூச்சாக மட்டுமே உள்ளது; அது ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோதமானது என்றும் அம்பேத்கர் எச்சரித்தார்.

இவ்வளவு காலமும், தேர்தல் ஜனநாயகம் நடைமுறையில் இருந்தாலும், பொருளாதார மற்றும் சமூக ஜனநாயகம் தோற்றுப் போயுள்ளது. ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுத்த முதலாளித்துவ பாதை இவற்றையெல்லாம் சீரழித்துவிட்டதோடு, பிராந்திய அளவிலான வேற்றுமைகளையும் அதிகரித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகாலமாக இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு வரும் புதிய தாராளமயக் கொள்கைகள், பொருளாதார அசமத்துவத்தை மேலும் மேலும் விரிவுபடுத்தி, இந்திய நாட்டின் வளங்களை எல்லாம் ஒரு சிலரின் கைகளில் கொண்டு சேர்த்திருக்கிறது. மற்றொரு புறம் முதலாளித்துவ வர்க்கம், நிலப்பிரபுக்களிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, சாதிய ஒடுக்குமுறைகளை களைவது போன்ற ஒரு நாடகத்தை மட்டுமே நிகழ்த்தியுள்ளனர்.

அம்பேத்கர் அவர்கள் அரசியல் ஜனநாயகத்திற்கும், பொருளாதார மற்றும் சமூக நிலைமையில் விரிவடைந்து வரும் சமத்துவமற்ற போக்கிற்கும் உள்ள முரண்பாட்டினை முன் கூட்டியே உணர்ந்து சொல்லியிருக்கிறார்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், அம்பேத்கரின் இந்த பகுப்பாய்வும், இந்தியாவில் மார்க்சிஸ்டுகள் சொல்லி வரும் கருத்துக்களும் இணையானதாக உள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துவக்கத்திலிருந்தே சொல்லி வருவது என்னவென்றால், சமூக மற்றும் விவசாய உறவுகளில் ஜனநாயகப் பூர்வமான மாற்றத்தை  முழுமையாக கொண்டு வராமல் முதலாளித்துவ வளர்ச்சியே சாத்தியமில்லை என்பதுதான். நவீன தாராளமயக் கொள்கைகளும், இந்துத்துவா சர்வாதிகாரமும் கைகோர்த்து பவனி வரும்போது, சமூக மற்றும் பொருளாதார நீதி என்பது முற்றிலும் தோல்வியுறும். இது முற்றிலும் ஜனநாயகத்தை வேரறுத்து சர்வாதிகாரத்தை வளர்ந்துவிடும்.

ஜனநாயகத்தை கட்டுப்படுத்தும் புதிய தாராளமயம்…

புதிய தாராளமயக் கொள்கைகள் ஜனநாயகத்தின் மாண்புகளை குறைத்தும் கட்டுப்படுத்தியும் வருகின்றது. குடிமக்கள் மற்றும் அவர்களது உரிமைகளை விட சந்தை தான் முக்கியமானது என்று வற்புறுத்துகிறது. நிதி மூலதனம் அரசியல் அமைப்பிற்குள் ஊடுருவி விட்டது. அனைத்து முதலாளித்துவ கட்சிகளும் பெரும் மூலதனத்திற்கு கீழ்ப்படிந்து கிடக்கின்றன.  இந்தப் போக்கு நாடாளுமன்ற அமைப்பையே சீரழிக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் இதைத்தான் சொல்கிறது: “நாடாளுமன்ற அமைப்புகளுக்கும், ஜனநாயகத்திற்கும் ஆபத்து என்பது ஒருபோதும் தொழிலாளி வர்க்கத்தால் அல்லது அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த அரசியல் கட்சிகளாலும் ஏற்படாது. ஆனால் அந்த ஆபத்து சுரண்டும் வர்க்கத்தால் மட்டுமே ஏற்படும். முதலாளித்துவ சுரண்டும் வர்க்கம்தான் நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் இருந்து கொண்டு, அவர்களின் குறுகிய லாபத்திற்காக நாடாளுமன்ற அமைப்பையே சிதைக்கிறார்கள்.

2014 ஆம் ஆண்டில் இந்துத்துவா சக்திகளின் வளர்ச்சியும், பா.ஜ.க. தனிக்கட்சியாக ஆட்சி அமைத்ததும் ஒரு முக்கிய மாற்றத்தை இந்திய அரசியலில் கொண்டு வந்தது. ஆர்.எஸ்.எஸ். என்கிற மதவாத சக்திகளால் தூண்டப்பட்ட ஒரு அரசியல் கட்சி அதை பயன்படுத்திக் கொண்டு நாட்டின் ஆட்சியைப் பிடிக்கிறது. இந்த அரசு, ஜனநாயகம் என்பதையே இழிவாக பார்க்கும், இந்துத்துவா சித்தாந்தத்தை புகுத்தி, இந்து ராஷ்ட்ரம் அமைத்திட துடிக்கிறது. இந்து ராஷ்ட்ரம் என்பது சிறுபான்மையினருக்கு சாம் அந்தஸ்தும், சம உரிமைகளையும் மறுக்கின்ற ஒரு கொள்கையாகும்.

இந்துத்துவா கொள்கைகளுக்கு ஆதரவாக அரசின் சட்டங்களையும், இந்து தீவிரவாத அமைப்புகளின் சிறுபான்மையினருக்கு எதிரான தீவிர நடவடிக்கைகளையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சிறுபான்மையினர் என்றால், குறிப்பாக இஸ்லாமிய மக்களை குறி வைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அவர்களை தொடர்ந்து அச்சத்திலும், வன்முறையிலும் வைத்திருக்கின்றன மத வாத அரசுகள். குறிப்பாக, பா.ஜ.க. ஆட்சி புரியும் உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களில் இஸ்லாமிய மக்கள் அனுதினமும் துன்புறுத்தப்படுகிறார்கள் அல்லது அச்சுறுத்தப்படுகிறார்கள்.

இந்துத்துவா-கார்ப்பரேட் கூட்டணி…

சர்வாதிகாரம் என்பது கார்ப்பரேட் மற்றும் இந்துத்துவா சக்திகளினால் நெய் ஊற்றி வளர்க்கப்படும் பெரு நெருப்பாகும். இரு தீய சக்திகளுக்கும் நவீன தாராளமயக் கொள்கைகளை முன்னெடுப்பது என்பது அடிப்படை தேவைகளாகும். அதற்கு உயர்ந்தபட்ச சர்வாதிகாரம் என்பது தேவைப்படுகிறது. அதன் ஒரு வெளிப்பாடுதான் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான அனைத்து சட்டங்களையும் வெட்டிச் சுருக்கி நான்கு தொழிலாளர் விதிகளாக (four labour codes) மாற்றி அமைத்தது ஆகும்.

அரசியல் அமைப்பு என்கிற போர்வைக்குள் இருந்து கொண்டு, ஜனநாயகத்தின் அத்தனை தூண்களையும் தகர்க்கும் வேலையை இந்த கூட்டணி செய்து கொண்டிருக்கிறது. சர்வாதிகாரம் என்பது அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்படாமல், சமூகம் மற்றும் பண்பாட்டுத் தளங்களில் வளர்த்தெடுக்கப் படுகிறது. பசு மாடுகளை கொல்லத்தடை, மாட்டிறைச்சி உண்பதற்குத் தடை, ஒழுக்க காவலர்களாக மாறுதல், கலைஞர்களை எழுத்தாளர்களை கட்டுப்படுத்துவது, – இவையெல்லாம் சர்வாதிகாரத்தின் கூறுகளாக நாம் தினம் தினம் காண்கிறோம்.

ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் போர்…

ஆகவே, இந்திய நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்த பின்பு, இந்திய நாட்டின் ஜனநாயகம் என்பது மோசமான திருப்புமுனையில் உள்ளது. மோடி அரசால் பின்பற்றப்படும் இந்த சர்வாதிகாரம் இந்திய ஜனநாயக மாண்புகளுக்கும் குடிமக்களின் உரிமைகளுக்கும் எதிரானது. அது நாட்டின் சமத்துவம் கூட்டாட்சித் தத்துவங்களின் மீதான தீவிர தாக்குதல்களை செய்து வருகிறது. வரும் காலங்களில் அனைத்து தரப்பு மக்களும் சாதி, மத, இன, மொழி பேதமின்றி இத்தகைய தாக்குதல்களுக்கு எதிராக போர் புரிய வேண்டும். அப்படி ஜனநாயகத்தை காக்கும் போராட்டம் என்பது நவீன தாராளமய கொள்கைகளுக்கும், இந்துத்துவா சக்திகளுக்கும் எதிரான போர் என்பதை உணர்ந்து போரிட வேண்டும்.

தொழிலாளர் வர்க்கத்தைப் பொறுத்த மட்டில், ஜனநாயக உரிமை என்பது மிகவும் அடிப்படையான தேவையாகும். ரோசா லக்சம்பர்க் சொல்வது போல், முதலாளித்துவ சாதிகளுக்கு ஜனநாயகம் என்பது தேவையற்றது மட்டுமல்லாமல் தொந்தரவானதும் கூட; ஆனால் அதுவே, தொழிலாளி வர்க்கத்திற்கு மிகவும் முக்கியமானது மட்டுமல்லாமல் தவிர்க்க முடியாததும் கூட. ஏனென்றால் முதலாளித்துவ பூர்ஷ்வா சக்திகளை அழித்துவிட்டு, சமத்துவ சமூக மாற்றத்தினை முன்னெடுப்பதற்கு ஜனநாயகம் என்பது சக்கரங்களாகவும், அதிர்வு தாங்கிகளாகவும் உள்ளது. அது இன்றியமையாதது; ஏனெனில் அதில் மட்டுமே, ஜனநாயகத்திற்கான போராட்டத்தில், பாட்டாளி வர்க்கம் அதன் வர்க்க நலன்கள் மற்றும் அதன் வரலாற்றுப் பணியை உணர்ந்து கொள்ள முடியும்.

இடதுசாரிகள் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கும், இந்துத்துவா சக்திகளுக்கும் முற்றிலும் எதிரானது என்ற நிலையில், நாட்டிலுள்ள அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளை ஓரணியில் இணைத்து ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. முன்னெடுக்கும் சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடுவதற்கு முன்முயற்சி எடுக்க  வேண்டும்.

தமிழில்: வெ. ராகுல்ஜி

மதச்சார்பற்ற குடியரசை காத்து நிற்போம் !

நாட்டு மக்கள்  அனைவரும் தமது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்பதை மையப்படுத்தி இந்திய விடுதலையின் 75வது ஆண்டை ஆசாதி கா அம்ரித் மகாத்சவ் என்ற பெயரில் மோடி அரசு ஒரு பெரும் பிரச்சாரத்தை முன்னெடுத்தது.  கதர், பருத்தி,பட்டு போன்ற இயற்கை துணிகளுக்கு மாறாக பாலியஸ்டர் துணியில் கொடி தயாரிக்கலாம் என்ற வகையில் 2021 டிசம்பரில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. நாட்டின் மிகப்பெரும் பாலியஸ்டர் உற்பத்தியாளர் யார் என்பதை அனைவரும் அறிவர். கூட்டுக் களவாணி முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு இது வழி வகை செய்தது.

அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமர் பொறுப்பேற்கும் வரை ஆர் எஸ் எஸ்-ம், பாஜக-வும் எப்போதும் தேசியக் கொடியை ஏற்றவில்லை. காவிக்கொடியின் மீதே அவர்களது விசுவாசம் குவிந்திருந்தது. ஆர்எஸ்எஸ் ஒருபோதும் இந்திய விடுதலைப் போரில் பங்கேற்கவில்லை. இந்துத்துவ ஆதரவு வரலாற்று ஆசிரியர்களாலும் பதிவு செய்யப்பட்டு ஆங்கிலேய உளவுத்துறையினரால் உறுதிப்படுத்தப்பட்ட உண்மை இது.

கம்யூனிஸ்டுகளின் போற்றத்தக்க பங்கு

மாறாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்த ஒன்பது அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களும் விடுதலைப் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு பல்லாண்டு காலம் சிறைகளில் வாடினர். அந்தமான் செல்லுலார் சிறையில் பளிங்கு கற்களில் பொறித்து வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான பெயர்கள் புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கத்துடன் தொடர்புடையவை ஆகும்.1947 ஆகஸ்டு 15 ல் சிறையில் இருந்தே தோழர் ஏ.கே.கோபாலன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். ஹோசியாபூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இருந்த யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டு மூவர்ணக் கொடியை ஏற்றியதற்காக 16 வயதே நிரம்பிய ஹர்கிஷன் சிங் சுர்ஜித் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டார். கம்யூனிஸ்ட்களுக்கும், மார்க்சிஸ்ட் கட்சிக்கும் தேச பக்தி யும், தியாக உணர்வும் இந்திய சோசலிச மாற்றத்துக்கான புரட்சிகர பார்வையின் உள்ளார்ந்த அம்சமாகும்.

1920 ம் ஆண்டு தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே கம்யூனிஸ்ட் கட்சி விடுதலை இயக்க நிகழ்ச்சி நிரல்களை வடிவமைப்பதில் செல்வாக்கு செலுத்தத் தொடங்கியது. 1921 ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அகமதாபாத் மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மௌலானா ஹஸ்ரத் மோகனியும், சுவாமி குமாரனந்தாவும் முழு விடுதலை தீர்மானத்தை முன்மொழிந்தனர். காந்தியடிகள் இந்த தீர்மானத்தை ஏற்கவில்லை.(1929 ஆம் ஆண்டிலேயே முழு விடுதலை தீர்மானம் ஏற்கப்பட்டது) 1922 ஆம் ஆண்டு கயாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் அடுத்த மாநாட்டில் தேசிய இயக்கத்தின் நோக்கங்கள் அடங்கிய சாசனத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விநியோகித்தது. அடுத்தடுத்து நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுகளிலும் இது தொடர்ந்தது.

விடுதலை இயக்கத்தின் நிகழ்ச்சி நிரல் மீது செல்வாக்கு செலுத்துவதில் கம்யூனிஸ்டுகள் பெரும் பங்காற்றினார். நிலப் பிரச்சனை: நாட்டின் பல பகுதிகளில் குறிப்பாக 1940 களில் கம்யூனிஸ்டுகள் நிலப் பிரச்சனையில் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். கேரளாவில் புன்னப்புரா- வயலாரு, வங்காளத்தில் தெபாகா இயக்கம், அசாமில் சுர்மா பள்ளத்தாக்கு போராட்டம், மகாராஷ்டிராவில் வார்லி கிளர்ச்சி,  இவற்றின் உச்சமாக  தெலுங்கானா ஆயுதப் போராட்டம் ஆகியன நிலச்சீர்திருத்தம், ஜமீன்தாரி முறை ஒழிப்பு போன்ற பிரச்சனைகளை முன்னுக்குக் கொண்டு வந்தன.

இந்தியாவின் மொழி பன்மைத்துவத்துக்காகவும், மொழி ரீதியிலான பல்வேறு தேசிய இனக் குழுக்களை விடுதலைப் போராட்டத்தில் ஒருங்கிணைப்பதற்காகவும் கம்யூனிஸ்டுகள் அரும்பாடுபட்டனர். இது விடுதலை பெற்ற இந்தியாவில் மொழி அடிப்படையிலான மறுசீரமைப்புக்கு இயல்பாக  இட்டுச் சென்றது.

விடுதலைப் போராட்ட காலத்தில் வகுப்புக் கலவரங்கள் வெடித்தபொழுது அமைதியையும், நல்லிணக்கத்தையும் நிலை நாட்டுவதில் கம்யூனிஸ்டுகள் மதச்சார்பின்மையின்   பால் கொண்டிருந்த உறுதியான அர்ப்பணிப்பு பெரும் பங்காற்றியது. இன்றும்  மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிப்பதில் கம்யூனிஸ்டுகளே முன்னணி பாத்திரம் வகித்து வருகின்றனர்.

விடுதலைப் போராட்டத்தில் இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள ஆகப் பெரும்பான்மையான சுரண்டப்படும் மக்களையும், சமூக ரீதியில் ஒடுக்கப்பட்ட, குறிப்பாக அருவருப்பான சாதிய அடிப்படையிலான ஒடுக்குமுறைக்கும், தாக்குதலுக்கும் தொடர்ந்து உள்ளாக்கப்பட்டு வரும் மக்களையும், மொழி அடிப்படையிலான ஏராளமான தேசிய இனங்களையும், பல்வேறு மதங்களைச் சேர்ந்த  மக்களைத் திரட்டுவதிலும், எல்லாவற்றிற்கும் மேலாக, பொருளாதாரத்திலும், சமூக நீதி அடிப்படையிலும் உள்ளடக்கிய பாதையில் இந்தியர்கள் அனைவரையும் திரட்டுவதிலும் கம்யூனிஸ்டுகள் மகத்தான பங்காற்றினர்.

வரலாற்றைத் திருத்தி, பொய்மையைக் கட்டமைத்தல்

விடுதலை இயக்கத்தில் ஆர்எஸ்எஸ்-ம், பாஜக-வும் தங்களையும் ஒரு அங்கமாகக் காட்டும் வகையில் வரலாற்றைத் திருத்துவதற்கான ஒரு வாய்ப்பை சுதந்திர தின  நிகழ்வுகள் வழங்கியுள்ளன. இந்துத்துவ , ஆர்எஸ்எஸ் தலைவர்களை விடுதலைப் போராட்ட வீரர்களாகச் சித்தரிக்கும் வகையில் அரசு ஆதரவில் ஆர்ப்பரிக்கும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பிரச்சாரத்தில் வி.டி.சவர்க்கரின் பெயர் முதன்மையாகக் குறிப்பிடப்படுகிறது. 1923 ஆம் ஆண்டு சவர்க்கர், இந்து மதத்துடன் எவ்விதத்திலும் தொடர்பற்ற இந்துத்துவா என்று சொல்லாடலை ஒரு அரசியல் திட்டமாக முன் வைத்தார். காந்திஜியின் படுகொலைக்கு சதித் திட்டம் தீட்டியதில் பின்னணியாக செயல்பட்டதால் கைது செய்யப்பட்டார்.  போதுமான சாட்சியம் இல்லை எனக்கூறி கிரிமினல் சட்டத்திலுள்ள ஓட்டைகளைக் காட்டி  விடுதலை செய்யப்பட்டார். சிறந்த கிரிமினல் வழக்குரைஞராகவும் திகழ்ந்த சர்தார்பட்டேல்  குற்றத்தை உணர்ந்ததால் தான் அவரை விசாரணைக்கு உட்படுத்தினார்.

ஆங்கிலேயர்களின்  உதவியுடனும், ஆதரவுடனும் துயரம் நிறைந்த பிரிவினைக்கு இட்டுச் சென்ற, முஸ்லிம்களுக்கு தனி நாடு எனும் கோரிக்கையை முன்வைத்து முகமது அலி ஜின்னா  போராடியதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சவர்க்கர் 

இரு தேசக் கொள்கையை முதலில் முன்வைத்தார். செல்லுலார் சிறையில் கைதியாக இருந்த பொழுது சவர்க்கர் தன்னை விடுதலை செய்யக்கோரி ஆங்கிலேய அரசுக்கு கருணை மனு அனுப்பியதை இந்துத்துவ ஆதரவு வரலாற்று ஆசிரியர்களின் பதிவுகளே உறுதிப்படுத்து கின்றன.தனது மனுவில் ஆங்கிலேய அரசுக்கு பின்வரும் உறுதிமொழியை சவர்க்கர் அளித்திருந்தார்:

“1906-07ல் நிலவிய பதட்டமான, நம்பிக்கையற்ற இந்தியச் சூழலினால் ஏமாந்து போய் நாங்கள் அமைதியான முன்னேற்றப் பாதையிலிருந்து விலகி முட்கள் மண்டிய பாதைகளில் சென்றது போல் இன்று இந்தியாவையும், மனித குலத்தின் நன்மையையும் மனதில் கொண்ட ஒருவரும் கண்ணை மூடிக்கொண்டு செல்ல மாட்டார்கள். எனவே ,அரசாங்கம் அளவற்ற அறத்தையும், கருணையையும் காட்டி என்னை விடுதலை செய்தால், நான் அரசியல் சட்ட ரீதியான முன்னேற்றத்திற்காகவும் ,அத்தகைய முன்னேற்றத்திற்கு முன் நிபந்தனையாக ஆங்கிலேய அரசின்பால் காட்ட வேண்டிய விசுவாசத்துக்காக வும் தீவிரமாக வாதிடுபவனாக இருப்பேன். (ஆர்.சி மஜும்தார் அந்தமானில் தண்டனை, பக்கம் 211- 213)

ஆங்கிலேயர்களுடன் சமாதான உடன்பாடு செய்து கொண்டதற்குப் பின்னர் தமது வாழ்வின் பெரும்பாலான காலங்களில் ஆங்கிலேய ஆட்சியை எதிர்க்கவில்லை என்பது மட்டுமல்லாமல் காங்கிரசையும், இடதுசாரிகளையும் எதிர்ப்பதே அவரது அரசியலாக இருந்தது. 1942 ஆம் ஆண்டின் வெள்ளையனே வெளியேறு  இயக்கம் போன்றவை இந்து மகாசபை அல்லது சங்பரிவார் உறுப்பினர்களின் எவ்விதப் பங்கேற்புமின்றி நடைபெற்றதாக இந்து மகாசபையின் தலைவர் என்ற வகையில் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

‘அரசாங்கத்தின் எந்த ஒரு பதவியிலும் அல்லது ,பொறுப்பி லும் உள்ள இந்து சங்பரிவாரத்தினர் அனைவரும் அப்பொறுப்புகளில் தொடர்ந்து நீடிப்பதுடன், தமது வழக்கமான கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியான வழிகாட்டல்களை நான் வழங்குகிறேன்’  

 (நூராணி மேற்கோள், பிரண்ட்லைன், டிசம்பர் 1 ,1995) என்றார்.

1942 ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது பம்பாய் உள்துறை அமைச்சகம் பின்வருமாறு பதிவு செய்துள்ளது: சங் பரிவார் அமைப்புகள் தம்மைத்தாமே கண்காணித்துக் கொண்டு சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட்டு வந்தனர். குறிப்பாக 1942 ஆகஸ்ட்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஒட்டி வெடித்த போராட்டங்களில் அவர்கள் பங்கேற்கவில்லை’.

உண்மையை மறைக்க அவர்கள் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக வதந்திகளைப் பரப்பினர். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் ஐம்பதாம் ஆண்டு விழாவை நாடு கொண்டாடிய பொழுது ,அன்றைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா, 1992 ஆகஸ்ட் 9ஆம் தேதி நள்ளிரவு நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் ஆற்றிய உரையில்,

 ‘கான்பூர், ஜாம்செட்பூர், அகமதாபாத் ஆகிய இடங்களில் ஆலைகளில் மிகப்பெரும் வேலை நிறுத்தங்கள் நடைபெற்றதைத் தொடர்ந்து 1942 செப்டம்பர் 5 ம் தேதி டெல்லியிலிருந்து லண்டனுக்கு அனுப்பப்பட்ட குறிப்பில்  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி  ஆங்கிலேய எதிர்ப்புப் புரட்சியாளர்களைக் கொண்ட அமைப்பு  என்பதை இதன் உறுப்பினர்கள் பலரது நடவடிக்கைகள் தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றன’ என பதிவு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். இத்தகையதுதான் சவர்க்கரின் வெட்கக்கேடான பங்களிப்பு.

நேர்மாறாக, அரசாங்கம் மேற்கொண்டு வரும் பிரச்சாரங்களில் கம்யூனிஸ்டுகளை விடுங்கள், ஜவஹர்லால் நேருவைப் பற்றியும்  எதுவும் குறிப்பிடவில்லை அல்லது பெயரளவிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற, ஜனநாயக இந்தியாவுக்கான பெரும் விவாதங்களை முன்னெடுத்து, தீர்மானங்களை நிறைவேற்றி, விடுதலை பெற்ற இந்தியாவை ஒரு நவீன மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக வடிவமைப்பதற்குரிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் நேரு மகத்தான பங்கையாற்றியதால் இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. சவர்க்கரும், 

ஆர்எஸ்எஸ் -ம்  வெறித்தனமான, சகிப்புத்தன்மையற்ற, பாசிச இந்து ராஷ்டிரமாக இந்தியாவை உருவாக்க நினைத்த பார்வைக்கு இது நேரெதிரானதாகும். தற்போது ஆர்எஸ்எஸ்- ன் அரசியல் பிரிவான பாஜக இத்தகைய இந்துத்துவத்தை முன்னெடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல்

அரசியல் சாசனம் உறுதிப்படுத்தியுள்ள இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற, ஜனநாயகத் தன்மையை வீழ்த்திட, அதன் மீது தாக்குதல் தொடுப்பதும், சிறுமைப்படுத்து வதும், இறுதியில் அதனை ஒழிப்பதும் பாசிச திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அவசியமாகும். ‘குறிப்பாக, 2019 ஆம் ஆண்டு மோடி அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு நமது அரசியல் சாசனத்தின் நான்கு அடிப்படைத்  தூண்களான மதச்சார்பற்ற ஜனநாயகம், கூடாடாட்சி, சமூக நீதி, பொருளாதார இறையாண்மை ஆகியவற்றின் மீது கொடூரத் தாக்குதல் நடைபெற்று வருகிறது’ என சிபிஐ(எம்) 23 வது அகில இந்திய மாநாட்டு அறிக்கை குறிப்பிடுகிறது.

அரசியல் சாசனத்தின் மீதான இந்தத் தாக்குதலானது அரசியல் சாசனத்தின் செயல்பாட்டைப் பாதுகாப்பதையும், மக்களுக்கு அரசியல் சாசன ரீதியில் அளிக்கப்பட்டுள்ள உத்தரவாதங்களை உறுதிப்படுத்தவதையும் கண்காணித்து பராமரிப்பதை உறுதிப்படுத்தும் கருவிகளாக செயல்படும் சுதந்திரமான அரசியல் சாசன ரீதியிலான நிறுவனங்களையும், அதிகார அமைப்புகளையும் சிறுமைப்படுத்தி செயலிழக்கச் செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் வழக்கமான நடைமுறைகள் அனைத்தும் மோசமாக சிறுமைப்படுத்தப் பட்டு, நாடாளுமன்றக் குழுக்களின் செயல்பாடுகளும், விவாதங்களும் புறம் தள்ளப்பட்டு வருகின்றன. பெரும்பான்மை பலத்தைக் கொண்டு எவ்வித விவாதமோ, பரிசீலனையோ இன்றி சட்டங்கள் நிறைவேற்றப்படு கின்றன. அதிகரித்து வரும் பண வீக்கம், வேலையின்மை போன்ற மக்களின் கடுமையான பிரச்சனைகள் குறித்து போதுமான விவாதங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்திய ‘குற்றத்துக்காக’  

27 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் சென்ற கூட்டத்தொடரில் தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.  மக்களுக்கு பதில் அளிக்கக் கடமைப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்றத்திற்கு பதிலளிக்கக் கடமைப்பட்ட அரசாங்கமும் என்ற வகையிலான முறையை மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தைக் கொண்டு  செயலிழக்கச் செய்வது ஆபத்தானதாகும். இவ்வாறு தான் ‘மக்களாகிய நாம்’ நமது இறையாண்மையை அனுபவித்து வருகிறோம். நாடாளுமன்றத்தைச் செயலிழக்கச் செய்வதென்பது மக்களின் இறையாண்மையைப் பறிப்பதும், அரசாங்கம் தனது பொறுப்பிலிருந்தும் பதிலளிக்கும் கடமையிலிருந்தும் தப்பிப்பதும் ஆகும். பாசிச வழிமுறைகளின் மூலம் சர்வாதிகாரத்தை நோக்கி அச்சுறுத்தும் வகையில் நாடு நகர்கிறது.

அரசியல் சாசனப் பிரிவு 370 , 35 ஏ  நீக்கம், குடியுரிமை திருத்தச் சட்டம் ,அரசியல் ஊழலை சட்டபூர்வமாக்கும் தேர்தல் பத்திரங்கள் போன்ற அரசியல் சாசனத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் மூன்று ஆண்டுகளாகியும் உச்சநீதிமன்றம் இன்னமும் இவற்றை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. நீதித்துறையின் பாரபட்சமற்ற தன்மையும், சுதந்திரமும் கடுமையாக சமரசம் செய்யப்படுகையில், அரசியல் சாசன விதிகளை நடைமுறைப்படுத்துவதிலும், ஜனநாயக உரிமைகளையும், குடிமை உரிமைகளையும் உத்தரவாதப்படுத்துவதிலும்  நீதித்துறையின் பார்வை நீர்த்துப்போய் விடும்.

அதேபோல, ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு மிகவும் இன்றியமையாத, சுதந்திரமாகவும், நியாயமாகவும் தேர்தல் நடத்துவதை உத்திரவாதப்படுத்து வதற்கு தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமற்ற, சுதந்திரச் செயல்பாடு அவசியமாகும். இது சமரசம் செய்யப்படுகையில் அரசாங்கங்கள் மக்களின் ஜனநாயகக் கருத்துக்களையும், மக்களின் தீர்ப்புகளையும் இனி பிரதிபலிக்க வாய்ப்பில்லாமல் போய்விடும்.

மத்திய புலனாய்வுத் துறை, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் மோடி அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலை அமலாக்குவதற்கான கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் விதத்தை நாடு உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறி வைப்பது, ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களைச்  சீர்குலைப்பது, தேர்தலில் தோல்வியுற்ற பிறகும் கட்சித் தாவல்களை ஊக்குவித்து பாஜக அரசாங்கங்களை அமைப்பது போன்ற ஜனநாயகக் கேலிக்கூத்துகளும், ஜனநாயகத்தை சீரழிப்பதுமான நடவடிக்கைகளும் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

தீவிர வகுப்புவாதப் பிளவு

அரசியல் சாசன முறைமையை மிகப்பெருமளவில் அழித்தொழிப்பதுடன் நச்சு வெறுப்புகளைப் பரப்புவதன் அடிப்படையில் வகுப்புவாத ரீதியில் தீய பிரச்சாரமும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயகப் பண்புகளை அழிப்பதற்கான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சிறுபான்மைச் சமூகத்தைக் குறிவைத்து நடத்தப்பட்டு வருகிற பெருமளவிலான ‘புல்டோசர் அரசியல்’ பல மாநிலங்களில் வன்முறைக்கு இட்டுச் சென்றுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மீது தேசியச் சின்னத்தைப் பொறிக்கும் பொழுது இந்து மதச் சடங்குகளை நடத்துவது போன்றவற்றின் மூலம் இந்திய அரசை, அரசியல் சாசனத்துடன் அல்லாமல் இந்துத்துவாவுடன் அடையாளப்படுத்தும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

எதேச்சதிகாரத் தாக்குதல்கள்

வகுப்புவாதப் பிளவு அச்சுறுத்தல் அதிகரித்து வருவதோடு ஜனநாயக உரிமைகள் மீதும், மக்களின் குடிமை உரிமைகள் மீதும் முன்னெப்போதும் இல்லாத தாக்குதல் நடைபெறுகிறது. தீஸ்தா செடால்வட் கைது செய்யப்பட்ட விதத்திலும், பீமா கோரேகான் கைதிகள் தொடர்ந்து சிறையில் வாடுவதையும், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரையும் கொடூரச் சட்டங்களின் கீழ் காவலில் வைத்திருப்பதையும் கண்டு வருகிறோம். மாற்றுக் கருத்துக்கள் ஒவ்வொன்றும் ‘தேச விரோதமாக’ச் சித்தரிக்கப்பட்டு கண்காணிப்பு அரசின் ‘தீயக் கண்களால்’ கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

பகுத்தறிவுக்கும், அறிவியலுக்கும் எதிரான தாக்குதல்

இந்துத்துவக் கதையாடலை வெற்றி பெறச் செய்ய, பாசிச திட்டத்தின் கருத்தியல் உள்ளடக்கத்தை நிலைநாட்ட, இந்திய வரலாற்றை திருத்தி எழுதுவது அவசியமாகும். ஆகையால், சிந்தனையிலும், செயலிலும் பகுத்தறிவைப் புறம் தள்ளி மூடநம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் கல்வி முறை புதுப்பிக்கப்படுகிறது. அறிவியல் மனோபாவத்தை மறுத்து மூடநம்பிக்கை , இருண்மை வாதம், புராண கட்டுக்கதைகள் ஊக்குவிக்கப்படு கின்றன. இந்தியப் பண்பாட்டின் ஒத்திசைவுத்தன்மை, ஒற்றைப் பண்பாட்டுக் கதையாடலைத் திணிப்பதன் மூலம் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்து புராணங்களையும், இந்து இறையியல் தத்துவத்தையும் கொண்டு, இந்தியாவின் வளமை மிக்க பன்மைத்துவம் அழிக்கப்படுகிறது.

பெருகிவரும் மக்கள் எதிர்ப்பு

மக்கள் மத்தியில்  இந்துத்துவ அடையாளத்தை நிலை நிறுத்துவது, வாழ்வாதாரங்கள் மீதான தினசரி தாக்குதல்களுக்கு உள்ளாகும் நமது மக்களின் அவலமான வாழ்க்கை நிலைமைகளைப் பின்னுக்குத் தள்ள பயன்படுகிறது. இந்தியாவின் மதச்சார்பற்ற, ஜனநாயக அரசியல் சாசனத்தைப் பாதுகாத்து வலுப்படுத்திட, விலைவாசி உயர்வு, வேலையின்மை, பட்டினி, ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற அன்றாடப் பிரச்சினைகளில் பெருமளவில் மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைப்பது அவசியம். ஜனநாயக உரிமைகள், குடிமை உரிமைகள், மதச்சார்பின்மை ஆகியவற்றைத் தீவிரப் போராட்டங்களின் மூலமே காக்க முடியும்.

பெருகிவரும் வலிமைமிக்க போராட்டங்களின் மூலம் சிபிஐ(எம்) -ன் சுய பலத்தை அதிகரிப்பது, இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்துவது, இடது ஜனநாயக சக்திகளை அணி திரட்டுவது, இந்துத்துவ வகுப்புவாத நடவடிக்கைகளுக்கு எதிராக பரந்துபட்ட சக்திகளைத் திரட்டுவது, நமது அரசியலமைப்பின் அடிப்படையான மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசைப் பாதுகாப்பது ஆகியவையே இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை அனுசரிப்பதற்கான வழிமுறையாகும். இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதே தேசபக்திக்கு அடிப்படையாகும். இதையொட்டி மார்க்சிஸ்ட் கட்சி   அலுவலகங்களில் தேசியக்கொடியை ஏற்றி, ஆங்கிலேய ஆட்சியிலிருந்து நாடு விடுதலை பெற்றதன் 75 ஆம் ஆண்டு தினமான ஆகஸ்ட் 15 அன்று நமது அரசியல் அமைப்பின் முகவுரையை முன்வைத்து உறுதியேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நமது மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை அழிக்கும் பாசிச இந்துத்துவா ராஷ்டிரத்தைத் திணிக்கும் வெறித்தனமான முயற்சிகளிலிருந்து நாட்டைக்காக்கும் போராட்டத்தை அனைவரும் ஒருங்கிணைந்து வலுவாக முன்னெடுப்போம்.

 தமிழில்: சிசுபாலன்

சாவர்க்கர்: முகத்திரைக்குபின்னால் !

(பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள, முகத்திரை விலக்கப்பட்ட சாவர்க்கர் என்ற நூலின் அறிமுக உரை இங்கே தரப்படுகிறது )

“வீர் (வீரம்) சாவர்க்கர்” என்னும் விநாயக் தாமோதர்  சாவர்க்கர், தற்போது தேசத் தந்தை, மோகன்தாஸ் கரம் சந்த் காந்திக்கு இணையாகத் தூக்கி நிறுத்தப்பட்டு, இந்திய  நாடாளுமன்றத்தின் மத்தியக் கூடத்தில் அவருடைய படத்திற்கு  எதிரே வைக்கப்பட்டிருக்கிறார். காந்தியைக் கொலை செய்ததில் சாவர்க்கருக்கு இருந்த பங்கு குறித்து, அன்றைய தினம் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் கூறியவற்றை அறிந்துகொள்வது இப்போது பொருத்தமாக இருக்கும்.

அவர், 1948  பிப்ரவரி 27 அன்று நேருவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், “இந்து  மகா சபாவின்; சாவர்க்கரின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கிய  வெறித்தனமான பிரிவு, சதித்திட்டம் தீட்டி, இக்கொடுஞ்செயல் நடைபெறுவதைப் பார்த்தது.”

சாவர்க்கரின் உருவப்படம் காந்தியின் படத்திற்கு அருகே வைக்கப்பட்டிருப்பது இந்துத்துவாவை இன்றையதினம்  பின்பற்றுவோரால் சாவர்க்கரைத் துதிபாடும் வெறித்தனமான கூட்டத்தாரின் பிரச்சாரத்தின் விளைவேயாகும். சாவர்க்கரைப்  போற்றிப் புகழ்தல் சமீபத்திய நடவடிக்கைகளேயாகும். 1990களின்  பிற்பகுதியில் அடல் பிகாரி வாஜ்பாய், எல்.கே. அத்வானி  ஆகிய ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள்/ தொண்டர்கள் தலைமையின்கீழ் தேசிய ஜனநாயகக் கூட்டணி  அரசாங்கம், ஆட்சிக்கு வந்தபின்னரே தொடங்கப்பட்டதாகும்.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் சின்னமாக இந்துத்துவா சித்தாந்தத்தை முன்மொழிந்தவரை மாற்றியிருப்பது இந்து  தேசத்தின் கொள்கையாக ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை சட்டபூர்வமாக்குவதற்கான நடைமுறையின் ஒரு பகுதியேயாகும்.  2002 மே 4 அன்று, வீ.டி.சாவர்க்கரின் பெயரை அந்தமான போர்ட் பிளேர் விமான நிலையத்திற்கு வைத்த அதே சமயத்தில்,  அப்போது உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே.அத்வானி  “சாவர்க்கரால் முன்மொழியப்பட்ட இந்துத்துவா, நாட்டின்  பாரம்பர்யத்தில் அதன் வேருடன் அனைத்தையும் உள்ளடக்கிய  சித்தாந்தமாக இருந்தது,” என்று ஆர்.எஸ்.எஸ். கருத்தோட்டத்தை எதிரொலித்தார். இந்துத்துவாவைக் கொண்டுவந்த நபரைப்  புகழ்வது இத்துடன் நின்றுவிடவில்லை. 2003 பிப்ரவரி 26  அன்று, சாவர்க்கரின் உருவப்படம் ஒன்று நாடாளுமன்றத்தில் திறந்துவைக்கப்பட்டது. இவ்வாறு நாடாளுமன்றத்தின் மத்தியக் கூடத்தில் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற காந்தி மற்றும்  முக்கிய தலைவர்களின் படங்களுடன் சாவர்க்கரின் படமும்  அவர்களுக்கு இணையாக பங்கேற்றது.

நாட்டை இரண்டாகத் துண்டாட வேண்டும் என்ற கோட்பாட்டைக் கொண்டிருந்த, இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வேண்டுமென்றே ஒதுங்கியிருந்த ஒரு நபரை ‘இந்திய தேசியவாதி என்றும், ‘நாட்டுப்பற்று மிகுந்தவர் என்றும் கொண்டாடலாம் என்றால், பின் ஏன் அதேபோன்ற அந்தஸ்தைப் பெற்றிருந்த முகமது அலி ஜின்னாவையும் அவ்வாறு  போற்றிப் பாராட்டுவதைத் தடுத்திட முடியுமா என்று எழும்  கேள்விக்கு திருப்தியடையக்கூடிய விதத்தில் பதிலை நாம் பெற வேண்டியிருக்கிறது.

சாவர்க்கர் 1966இல் இறந்தபோது பெரிய அளவில் துக்கம்  அனுசரிக்கப்படவில்லை என்பது பலருக்குத் தெரியாது. 83  வயதாகி முதுமையில் அவர் இறந்த சமயத்தில் மிகக் குறைந்த அளவிற்குத்தான் அவர் அறியப்பட்டிருந்தார். அவருடைய வாழ்நாள்  காலத்தில் மகாத்மாவின் உயிரைப் பறித்த சதித் திட்டத்தில் அவரும் ஓர் அங்கமாக இருந்தார் என்கிற வடுவை அவரால் அழிக்கவே முடியவில்லை.

வீர் சங்வி என்னும் குறிப்பிடத்தக்க கட்டுரையாளர், ‘‘1990 வரையிலும் அநேகமாக எவரும் அவரை அறிந்திருக்கவில்லை என்று சரியாகவே குறிப்பிட்டார் .  1990களில்தான் “சாவர்க்கருக்கு மறுவாழ்வு அளிப்போம்” என்னும்  இயக்கம்(‘Rehabilitate Savarkar’ movement), பாரதிய ஜனதா  கட்சியால் அதிகாரபூர்வமாக எடுத்துக்கொள்ளப்பட்ட பின்புதான்,  ‘இந்துத்துவா என்னும் சொற்றொடரை உருவாக்கிய நபர் என நமக்கு சொல்லப்பட்ட நபர், இந்தியாவின் விடுதலைக்காகப்  போராடிய நபர்களில் வீரமுதல்வனாக இருந்தார் என்றும்  கூறப்பட்டார். அதன்பின்புதான் சாவர்க்கர் மாபெரும்  விடுதலைப் போராட்ட வீரர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.

இது முற்றிலும் உண்மை. 1998 க்கு முன்பு, இந்துத்துவா  படையணியினர் சாவர்க்கரை தேசிய அளவில் ஒரு சின்னமாக  மாற்றுவதற்கான விருப்பத்தைக் கொண்டிருக்கவில்லை. 1998 க்கு முன்பு பல ஆண்ட காலம் ஆட்சியிலிருந்த மகாராஷ்ட்ராவில் இருந்து வந்த பா.ஜ.க.-சிவசேனைக் கூட்டணி அரசாங்கம்,  மும்பையில் உள்ள சட்டமன்றப் பேரவையின் சுவர்களில் சாவர்க்கரின் உருவப்படத்தை வைத்திட சிந்திக்கவே இல்லை.  2003க்குப் பின்னர்தான், நாடாளுமன்ற அவையில் அவருடைய  படம் வைக்கப்பட்ட பின்னர்தான், மும்பையில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கமும் அவருடைய  படத்தையும் தொங்க விட்டது. 

பின்னர் காங்கிரஸ் தலைமையில் ஒரு பிரிவும்கூட ,  “சாவர்க்கருக்கு மறுவாழ்வு அளிப்போம் இயக்கத்தில்” தன்னையும்  சேர்த்துக்கொண்டது. 2004 ஆகஸ்ட் 4 அன்று புதுதில்லியில் மன்மோகன் சிங் பிரதமரானவுடன் நடத்திய முதல் பத்திரிகையாளர்  கூட்டத்தின்போது, விநாயக் தாமோதர் சாவர்க்கரை, “தேச பக்தர்”  என்றும் “விடுதலைப் போராட்ட வீரர்” என்றும் வர்ணித்தார்.  சாவர்க்கரின் “தேச பக்தர்” என்பதற்கான ஆதாரச் சான்றுகள்  குறித்து பல்வேறு கேள்விகளை காங்கிரஸ் கட்சியின் மற்றொரு  தலைவரும், பெட்ரோலியத் துறை அமைச்சராகவுமிருந்த மணி  சங்கர் ஐயர் எழுப்பியபோது, பிரதமர் கூறியதாவது: “சாவர்க்கர்  குறித்த சர்ச்சையைப் பொறுத்தவரை, இது ஐயரின் தனிப்பட்ட கருத்து. அது அரசாங்கத்தின் கருத்து அல்ல. அது ஒரு தேவையற்ற சர்ச்சை.” 

சாவர்க்கருக்கு ஆதரவாகத் தன்னால் முடிந்த அளவிற்கு  மன்மோகன் சிங் முயற்சித்திருக்கிறார். “வரலாறு பல வழிகளில் நடந்துள்ள நிகழ்வுகளை நமக்கு வியாக்கியானம்  செய்திருந்தபோதிலும், இறந்தவரின் மோசமான விஷயங்கள்  குறித்துப் பேசுவதால் எவ்விதமான நன்மையையும் பெற்றிட  முடியும் என்று நான் நினைக்கவில்லை,” என்று அவர் கூறியுள்ளார்.  காங்கிரஸ் தரப்பிலிருந்து சாவர்க்கருக்கு ஆதரவாக ஒரு பிரதமர்  இவ்வாறு முதன்முறையாக முன்வந்திருக்கிறார். இதேபோன்றே முன்னதாக மன்மோகன் சிங் அமைச்சரவையில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்த குலாம் நபி ஆசாத்,  ஐயரின் விமர்சனங்களை வெளிப்படையாக மறுதலித்து, சாவர்க்கர்  குறித்து அவர் கூறிய கருத்துக்கள் அவருடைய தனிப்பட்ட கருத்துக்கள் என்றும், அரசாங்கம் “அவருடன் ஒத்துப்போகவில்லை”  என்றும் அறிவித்தார்.

மகாராஷ்ட்ராவில், முதலமைச்சர் சுசில் குமார் ஷிண்டே,  சாவர்க்கர் குறித்த ஐயரின் விமர்சனங்களுக்கு எதிராகக் கோபத்துடன் எதிர்வினையாற்றியது மட்டுமல்ல, மற்றொரு  காங்கிரஸ் தலைவரான ஆர்.அதிக், சாவர்க்கரைப் புகழ்ந்து,  கையெழுத்துடன்கூடிய முகப்புக் கட்டுரை ஒன்றையே சிவ சேனா  இதழான சாம்னா (Saamna)வில் எழுதினார்.

சாவர்க்கர்வாதிகள் கூட்டத்துடன் இவ்வாறு காங்கிரசும்  இணைந்து கொண்டிருப்பது துரதிர்ஷ்டவசமாகும். வீர் சங்வியின்  கூற்றுப்படி, “காங்கிரசின் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டிருக்கும்  எவருக்கும், ஏன், அடிப்படை மதச்சார்பின்மைக் கொள்கையை  ஏற்றுக்கொண்டிருப்பவர்களுக்கும், வீர் சாவர்க்கரை வணங்குவது  கடினம். காங்கிரசார் ஆர்.எஸ்.எஸ். மற்றும் சிவ சேனை ஆகியவற்றின் சித்தாந்தங்களோடு ஒத்துப்போகவில்லை எனினும்,  திடீரென்று சாவர்க்கரை துதிபாடத் தொடங்கியிருக்கிறார்கள்.”  விடுதலைப் போராட்டத்திற்குத் துரோகம் இழைத்த ஒரு நபர்  மட்டுமல்ல; காந்தியைக் கொல்வதற்குக் கருவியாகவும் இருந்த ஒரு நபருக்கு ஆதரவாக காங்கிரசார் குரல் கொடுப்பது மிகவும்  கொடுமையாகும். 

இன்றையதினம் உள்ள காங்கிரஸ் தலைமை, காந்தி, நேரு,  வல்லபாய் பட்டேல் ஆகியோரின் தலைமையின்கீழ் செயல்பட்ட காங்கிரஸ் காரியக் கமிட்டியானது, 1934 ஜூனில் தன்னுடைய கட்சி  உறுப்பினர்கள் முஸ்லிம் லீக்குடனோ, இந்து மகா சபாவுடனோ மற்றும் ஆர்.எஸ்.எஸ்.-உடனோ எவ்விதமான தொடர்பும்  வைத்துக்கொள்ளக்கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றியிருந்ததை மறந்துவிட்டார்கள். காங்கிரஸ் கட்சி அன்று பிறப்பித்த அந்தக் கட்டளை இன்றைக்கும் செல்லத்தக்கதாகும். ஏனெனில் அந்தத்  தீர்மானம் இதுவரையிலும் ரத்து செய்யப்படவில்லை.

இவ்வாறு பாசிஸ்ட் மற்றும் பிளவுவாதச் சித்தாந்தங்களுக்கு  எதிராக சவால்விடக்கூடிய விதத்தில் செயல்பட்ட மறக்கமுடியாத  பாரம்பர்யங்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சியின் இன்றைய  தலைமை தன்னுடைய பிரகாசமான கடந்த காலத்தை மறந்துவிட்டு,  செயல்பட்டுக்கொண்டிருப்பது துரதிர்ஷ்டவசமாகும். இந்தக்  காரணத்தால்தான் சாவர்க்கர்வாதிகள், ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக  இந்தியாவை எந்தக் காலத்திலுமே விரும்பாத சாவர்க்கர்  போன்றவர்களின் சிந்தனைகளையும், செயல்பாடுகளையும்  இணைத்து இந்திய விடுதலைப் போராட்டத்தின் மகத்தான ஜனநாயக, மதச்சார்பற்ற பாரம்பர்யத்தைக் குழப்புவதில் வெற்றி  பெற்றிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அரசியல் அங்கமாகத் திகழும் பாரதிய ஜனதா கட்சி 2014இல் தேசிய அளவில் ஆட்சிக்கு வந்தபின், சாவர்க்கரைப் போற்றிப் புகழ்வது மேலும்  உத்வேகம் பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, “வீர சாவர்க்கர்  இறப்பதற்கு அஞ்சாத ஒரு வீர புருஷர்”1 என்று வீர சாவர்க்கரைப்  போற்றிப் புகழ்ந்து பேசும் அதே சமயத்தில், தான் ஆர்.எஸ். எஸ். இயக்கத்தின் ஓர் உறுப்பினன் என்று வெளிப்படையாகவோ சொல்லிக்கொள்வதிலும் பெருமை கொண்டார். மோடி, சாவர்க்கர்தான் தன்னைப் பக்குவப்படுத்தி, செயல்பட வைத்த வழிகாட்டி என்று கூறும் அளவிற்குச் சென்றார்.

இந்துத்துவாவின் சின்னமாக விளங்கும் சாவர்க்கரின் 131ஆவது  பிறந்த தின விழா நடைபெற்ற சமயத்தில் பிரதமர் நரேந்திர  மோடியும் அவருடைய அமைச்சரவை சகாக்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தின் மத்தியக் கூடத்தில் நிறுவப்பட்டிருக்கும் சாவர்க்கரின் உருவப்படத்தின் முன் நின்று  வணக்கம் செலுத்திக் கொண்டனர். சாவர்க்கரின் உருவப்படத்திற்கு  அஞ்சலி செலுத்திய பிரதமர்களில் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு  அடுத்ததாக மோடி இரண்டாவது பிரதமராக மாறினார்.3 விஷயம்  இத்துடன் முடிந்துவிடவில்லை. பா.ஜ.க.-வின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சாக்சி மகராஜ் என்பவர், சாவர்க்கரின்  நெருங்கிய மற்றும் நம்பிக்கைக்குரிய சகாவாக விளங்கியவரும்,  தேசப் பிதா மகாத்மா காந்தியைக் கொன்றதற்காக, தூக்குத்  தண்டனை விதிக்கப்பட்டவருமான நாதுராம் கோட்சேயையும்  போற்றிப் புகழ வேண்டும் என்கிற அளவிற்குப் பேசியுள்ளனர்.  கோட்சேயைப் புகழ்ந்து, அவரை காந்திக்கு இணையாக  முன்னிறுத்தி அவர், “நான் நாதுராம் கோட்சேயையும் ஒரு  தேசியவாதி என நம்புகிறேன். மகாத்மா காந்தியும் நாட்டிற்காக  ஏராளமாகச் செய்துள்ளார். கோட்சே ஒரு பாதிக்கப்பட்ட நபராக  இருந்தார். அவர் தவறாக ஏதேனும் செய்திருக்கலாம். ஆனால் அவர் ஒரு தேச விரோதி அல்ல. அவர் ஒரு தேசபக்தர்.”

சுதந்திரம் பெற்று ஒரு ஜனநாயக மதச்சார்பற்ற இந்தியா  உருவாகி சுமார் நூறாண்டுகளான பின்னரும்கூட, சாவர்க்கர்வாதிகள்  வரலாற்றுக்குப் பேரழிவினை ஏற்படுத்தும் விதத்தில் விளையாடிக் கொண்டிருப்பது வருத்தத்தை அளிக்கிறது. சாவர்க்கரை ஒரு மாபெரும் புரட்சியாளர் என்றும், அசைக்கமுடியாத சுதந்திரப்போராட்ட வீரர் என்றும், மகத்தான பகுத்தறிவாளர்  என்றும், ஏன், என்னதான் கூறாமல் விட்டிருக்கிறார்கள்?  அனைத்து வழிகளிலும் அவரைப் பாராட்டி, தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். சாவர்க்கர் அவர் காலத்தில் அவர் கைப்பட  எழுதிய எழுத்துகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தாலே, அவர்  குறித்துக் கூறும் அனைத்தும் தவறானவை என்பதை மெய்ப்பித்திட  முடியும். அதை இந்தப் புத்தகம் செய்திருக்கிறது.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை வரலாற்று  உண்மைகளுடன் வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்கிற நேர்மையான தூண்டுதலின் விளைவே இந்தப் புத்தகமாகும்.  சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் இருந்த உண்மையான சாவர்க்கரை அறிந்து கொள்வதற்காக, இந்த நூலின் ஆசிரியர்,  இந்து மகா சபா, ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்திய அரசாங்கத்தின்  ஆவணக் காப்பகங்களில் கிடைத்த ஒரிஜினல் ஆவணங்களையே பிரதானமாகச் சார்ந்திருக்கிறார். செல்லுலர் சிறையில் சாவர்க்கருடன்  இருந்த புரட்சியாளர்களின் நினைவுக்குறிப்புகளும் மாபெரும்  தகவல் களஞ்சியங்களாக மெய்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.

சாவர்க்கரின் தேச விரோதப் பண்பு 1963இல் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட சாவர்க்கரின் தொகுப்பு நூல்கள் மற்றும்  சமக்ரா சாவர்க்கர் வாங்மாயா:இந்து ராஷ்ட்ரா தர்ஷன் (Samagra  Savarkar Wangmaya:Hinduj Rashtra Darshan) (Collected Works  of Savarkar in English published in 1963) மற்றும் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் சூறாவளிப் பிரச்சாரம்: 1937 டிசம்பர்  முதல் 1941 அக்டோபர் வரையிலும் அவருடைய பிரச்சாரப்  பயணங்கள் – நேர்காணல்களின் தலைவரின் நாட்குறிப்பிலிருந்து  எடுக்கப்பட்ட சாராம்சங்கள் (Vinayak Damodar Savarkar’s  Whirlwind Propaganda:Extracts from the President’s Diary of  his Propagandist Tours Interviews from December 1937 to October 1941) ஆகியவற்றில் நன்கு வெளிப்படுகின்றன. இவற்றை இந்து மகா சபா வெளியிட்டிருக்கிறது. இரண்டாவது புத்தகம்  முக்கியமாக உண்மையான சாவர்க்கரை அறிந்துகொள்ள மிகவும்  முக்கியமான ஒன்றாகும். இது 1941இல் வெளியாகி இருக்கிறது.  இதனை சாவர்க்கரின் நெருங்கிய சகாவாக விளங்கிய ஏ.எஸ். பிதே (A.S.Bhide) தொகுத்திருக்கிறார்.

இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் கூறப்பட்டிருப்பதாவது:  “இந்தப் புத்தகமானது, இன்றைய தினம் இந்துக்கள் இயக்கத்தின் அடிப்படைச் சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தும்போது  பொதுவாகவும், இந்து மகாசபா இயக்கத்தின் தலைவர்கள்,  பிரச்சாரகர்கள் மற்றும் முன்னணி ஊழியர்கள் குறிப்பாகவும்  எ திர்கொள்கிற பல்வேறுபட்ட பிரச்சனைகள் மற்றும்  கேள்விகளுக்கு விடையளிக்கக்கூடிய விதத்தில் அமைந்திருக்கிற அதிகாரபூர்வமானதும் நம்பிக்கைக்குரியதுமான வழிகாட்டியாகும்.”

இந்தப் புத்தகத்தை இந்து மகா சபாவின் ஒவ்வொரு கிளையும்  முன்னணி ஊழியர்களின் அரசியல் கல்விக்காக மட்டுமல்ல;  பல்வேறு பிரச்சனைகளின்மீது தீர்மானகரமான நிலைப்பாட்டினை மேற்கொள்வதற்கு உதவும் விதத்திலும் இதனைக் கட்டாயமாக  வைத்திருக்க வேண்டும். விடுதலைப் போராட்டத்தில் சாவர்க்கரின்  பங்களிப்பை உண்மையிலேயே மேதைமை மிகுந்ததாக ,  இந்துத்துவா அணியினர் நினைத்தார்கள் என்றால் அவர்கள்  இந்தப் புத்தகத்தை இப்போது மக்கள் மத்தியில் வெளியிட்டால்,  மக்கள் சாவர்க்கர் யார் என்பதை அவர் மூலமாகவே நன்கு  தெரிந்துகொள்ள முடியும்.

இந்து மகா சபாவின் ஆவணக் காப்பகத்தில் உள்ள  சாவர்க்கரின் நூல்களிலிருந்து, சாவர்க்கரும் முஸ்லிம் லீகைப்  போலவே இந்தியா இரு நாடுகளாகப் பிரிய வேண்டும்  என்கிற இருநாட்டுக் கோட்பாட்டின் மீது (two nation theory)  நம்பிக்கை கொண்டிருந்ததோடு, அதற்கான நடவடிக்கைகளையும்  மேற்கொண்டிருந்தார் என்பதை நமக்குக் காட்டுகின்றன.

1937இல் அகமதாபாத்தில் நடைபெற்ற இந்து மகா சபாவின்  19ஆவது மாநாட்டு அமர்வில் தலைமையுரையாற்றுகையில் சாவர்க்கர் கூறியதாவது: “இப்போதுள்ள நிலையில்,  இந்தியாவில் இரு விரோதமான தேசங்கள் அடுத்தடுத்து  இருந்து வருகின்றன. சிறுபிள்ளைத்தனமான அரசியல்வாதிகள் பலர் இந்தியா ஏற்கனவே அனைத்துத்  தரப்பினரும் இணக்கமாக வாழ்ந்துகொண்டிருப்பதுபோன்று  கூறிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் ஆழமான தவறினைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அல்லது அவ்வாறு  இணக்கமாக வாழமுடியும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.  இவை நல்ல அர்த்தமுடையவைதான். ஆனாலும் அவர்களின்  கனவுகள் எதார்த்தமாவதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.  அதனால்தான் அவர்கள் மத அடிப்படையில் வகுப்புவாதச் சிக்கல்கள் ஏற்படும்போது பொறுமையற்று இருக்கிறார்கள், தங்கள்  மதஞ்சார்ந்த அமைப்புகளில் தங்களை இணைத்துக்கொள்கிறார்கள்.  ஆனாலும் திடமான உண்மை என்னவென்றால், பல நூறு  ஆண்டுகளாகவே இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே கலாச்சார ரீதியாகவும், மத அடிப்படையிலும் பிரச்சனைகளும்,  தேசிய அளவில் விரோதங்களும் இருந்து வருகின்றன.  இவ்வாறிருந்துவரும் சங்கடமான உண்மைகளை நாம் துணிவுடன்  எதிர்கொள்வோம். இந்தியா இன்றையதினம் இருப்பதுபோல் ஒன்றாகவே இருந்திடும் என்று கருத முடியாது. மாறாக  இந்தியாவிற்குள் இருவிதமான தேசங்கள், இந்துக்களுக்காக  ஒன்றும், முஸ்லிம்களுக்காக ஒன்றும் என்கிற முறையில் இருந்து வருகின்றன.”

1940களில் இந்து மகா சபா, சாவர்க்கரின் ஒரே தலைமையின்கீழ்,  முஸ்லிம் லீக் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி அரசாங்கங்கள்  நடத்தி இருக்கின்றன. இவ்வாறு முஸ்லிம் லீக்குடன் கூட்டாகச்  செயல்படுவதை வெளிப்படையாகவே நியாயப்படுத்தி, 1942இல் கான்பூரில் நடைபெற்ற இந்து மகா சபாவின் 24ஆவது அமர்வில் ஆற்றிய தலைமையுரையின்போது அவர் பேசியதாவது: 

நடைமுறை அரசியலிலும்கூட, இந்து மகா சபா நியாயமான சமரசங்கள் மூலமாக முன்னேற வேண்டும் என்பதை அறிந்திருக்கிறது. இதற்கு சமீபத்தில் சிந்த் (Sind) பகுதியில் நடைபெற்றுள்ள சம்பவங்கள் சாட்சியமாகும். அங்கேயுள்ள   சிந்த்-இந்து-சபா அழைப்பின்பேரில் லீகுடன் கூட்டணி  அரசாங்கத்தில் இணைந்துகொண்டிருக்கிறது. வங்கத்தின்  நிலைமையும் எல்லாருக்கும் நன்கு தெரியும். காங்கிரசார்  எவ்வளவுதான் பணிந்துபோனாலும் அவர்களுடன் சமாதானமாகப்  போக விரும்பாத காட்டுத்தனமான லீகர்கள்கூட இந்து மகா  சபாவுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு, ஃபஸ்லுல் ஹக் தலைமையின் கீழும், நம் மதிப்பிற்குரிய மகா சபா  தலைவர் டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி தலைமையின்கீழும்  கூட்டணி அரசாங்கத்திற்கு ஒத்துக்கொண்டு வந்திருக்கிறார்கள்.  சுமார் ஓராண்டு காலம் வெற்றிகரமாக ஆட்சி செய்து இரு  சமூகத்தினருக்கும் பயனளித்திருக்கிறார்கள்.

சாவர்க்கர், விடுதலைப் போராட்டத்திலிருந்து ஒதுங்கியிருந்தது  மட்டுமல்லாமல், பிரிட்டிஷாரின் நலன்களுக்கு எங்கெல்லாம்  சவால்கள் ஏற்படுகின்றனவோ அங்கெல்லாம் அவற்றை ஒடுக்குவதற்கு உதவியும் செய்தார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது, காலனிய எஜமானர்களின்  கொடூரமான அடக்குமுறையை எதிர்கொண்டிருந்த சமயத்தில்,  சாவர்க்கர் கீழ்க்கண்டவாறு பிரகடனம் செய்தார்:

இந்து மகா சபா தன்னுடைய அடிப்படை நடைமுறை அரசியல் கொள்கையாக, பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் இணக்கமான ஒத்துழைப்பை நல்குவது என்னும் கொள்கையைப் பின்பற்றுகிறது.  மற்றும், அதன்படி, இந்து மகா சபையைச் சேர்ந்தவர்கள்,  அரசாங்கத்தின் பல அமைப்புகளின்கீழ் பணியாற்றும் கவுன்சிலர்கள்,  அமைச்சர்கள், சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,  மற்றும் நகராட்சிகள் மற்றும் பல உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படுபவர்கள் இந்துக்களின் நியாயமான நலன்களைப்  பாதுகாத்து, மேம்படுத்தும் அதே சமயத்தில், மற்றவர்களின்  நியாயமான நலன்கள்மீது ஆக்கிரமிப்பு எதையும் செய்திடாது,  தேசத்திற்கு மிகவும் உயர்ந்த அளவில் தேசபக்தி சேவையைச்  செய்துகொண்டிருக்கிறார்கள். தாங்கள் வேலை செய்கையில் தங்களுக்குள்ள வரம்புகளை நன்கு அறிந்தேதான் அவர்கள், மகா  சபாவைச் சேர்ந்தவர்கள் அவர்களிடம் அந்தச் சூழ்நிலைமைகளில் எந்த அளவுக்கு நல்லதைச் செய்யமுடியுமோ அந்த அளவுக்கு  அதைச் செய்வதை மட்டுமே அவர்களிடமிருந்து எதிர்பார்த்தார்கள்.  அதைச் செய்வதற்கு அவர்கள் தோல்வியுறாவிட்டால், அதற்காக  அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்கள். வரம்புகள்  என்பவை கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கி,  நாளடைவில் அவர்கள் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டு  விடுவார்கள். பரவலான ஒத்துழைப்புக் கொள்கையின் ஒட்டுமொத்த வரம்புகளும் நிபந்தனையற்ற ஒத்துழைப்பிலிருந்து தீவிரமான,  ஆயுதபாணியிலான எதிர்ப்பு வரைக்கும்கூட சென்றிடும். அது  அன்றைய காலத்தில் உள்ள நிலைமை, நம் கைவசம் உள்ள  வளங்களைச் செலவு செய்யக்கூடிய வல்லமை மற்றும் நம்  தேசிய நலன் நமக்கு உத்தரவிடுவது ஆகிய அனைத்தையும்  பொறுத்ததாகும். (ஒரிஜினலில் உள்ளபடி சாய்வு எழுத்துக்கள்  தரப்பட்டிருக்கின்றன.) 

இரண்டாம் உலக யுத்தம் நடந்துகொண்டிருந்த சமயத்தில்,  சுபாஷ் சந்திர போஸ், இந்தியாவை ராணுவரீதியாக விடுவித்திட  முயற்சித்துக் கொண்டிருந்தபோது, சாவர்க்கர் பிரிட்டிஷாரின் யுத்த முயற்சிகளுக்கு வெளிப்படையாகவே உதவும் அளவிற்குச் சென்றார்.  சாவர்க்கர் எந்த அளவுக்கு பிரிட்டிஷாரின் கூட்டத்துடன் சேர்ந்து  அவர்களின் யுத்த நடவடிக்கைகளுக்கு உதவிடத் தீர்மானித்தார் என்பதைக் கீழ்க்கண்ட அவருடைய வார்த்தைகளிலிருந்து நன்கு  அறியலாம்.

‘‘இந்து தேசம் இந்தியாவின் பாதுகாப்பைப் பொறுத்தவரை,  இந்து தேசத்தைச் சேர்ந்த நம் நலன்களைப் பாதுகாத்திட,  இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் வரையிலும்,  அதற்கு எவ்விதமான தங்குதடையுமின்றி, ராணுவ ரீதியாகவும்,  கப்பல்படை மற்றும் விமானப்படை மூலமாகவும், இணைந்து,  இராணுவத் தளவாடங்கள் உற்பத்தி, வெடிமருந்துகள் உற்பத்தி  மற்றும் போர்த்தந்திரக் கருவிகள் உற்பத்தி என அனைத்திலும்  பொறுப்புமிக்க ஒத்துழைப்பினை நல்கிட வேண்டும் . . .  ஜப்பான் யுத்தத்தில் நுழைந்திருப்பது என்பது, பிரிட்டனின்  எதிரிகளால் நாம் நேரடியாகவும், உடனடியாகவும் தாக்குதலுக்கு  உள்ளாகும் நிலைமையை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நாம் குறித்துக்கொள்ள வேண்டும். இதன் விளைவாக, நாம்  விரும்பினாலும் சரி; அல்லது விரும்பாவிட்டாலும் சரி; யுத்தத்தின்  அழிவுகளிலிருந்து நாம் நம் உயிரையும் உடைமைகளையும்  பாதுகாத்துக்கொள்ள வேண்டுமானால், அது இந்தியாவைப்  பாதுகாப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளைத்  தீவிரப்படுத்துவதன் மூலம் மட்டுமே சாத்தியம். எனவே,  இந்து மகாசபைவைச் சேர்ந்தவர்கள், இந்துக்களை, குறிப்பாக  வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாகாணங்களில் உள்ள இந்துக்களை எழுச்சியுறச்செய்து அவர்கள் அனைவரும் ராணுவத்தின் அனைத்துப்  படைகளிலும் இனியும் ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்கிடாது,  தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும்.”  சாவர்க்கர், சாதியம் மற்றும் இனவெறி ஆகியவற்றின் தீவிரமான நம்பிக்கையாளராக இருந்தார். அவர் தன் வாழ்நாள் முழுவதும்  பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளராகவே விளங்கினார்.  அதனை அவர் இந்துத்துவா என்று அழைத்திட்டார். இவை அனைத்தும் இன்றைய சாவர்க்கர்வாதிகளுக்கு நன்கு தெரியும்.  எனினும் அவர்கள் இந்த ஆவணங்களை மக்கள் பார்வைக்குக் கொண்டுவராமல் ஒளித்து வைத்திடவே விரும்புகிறார்கள்.  ஏனெனில் சாவர்க்கரின் உண்மையான சொரூபத்தை மக்களிடம்  காட்டினால், இந்துத்துவா படையணியினருக்குப் பேரழிவு நிச்சயம்  என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். எனவேதான் அதனை வரலாற்றின் குப்பைக்கூடையில் போட்டு வைத்திருக்கிறார்கள்.

சுயமரியாதை உள்ள எந்தவொரு இந்தியனும் , ஏன்,  காலனியாதிக்க எதிர்ப்புப் பாரம்பர்யத்தில் கொஞ்சமாவது நம்பிக்கையுள்ள எவரும், ‘வீர்’ சாவர்க்கரைப் போற்றிப் புகழ்வதை சகித்துக்கொள்ள முடியாது., எனவேதான் இந்துத்துவாவாதிகள்  இதனை மூடிமறைத்திட முயற்சிக்கிறார்கள். அது நம்மால் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றுதான். ஆனால், இந்தியா விடுதலை  பெற்று முக்கால் நூற்றாண்டுக்குப் பின்னரும்கூட, ஜனநாயக-மதச்சார்பற்ற இந்திய அரசியலுக்காக நிற்பவர்கள் சாவர்க்கர் தொடர்பான ஆவணங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரத் தயங்குவதுதான்  உண்மையில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. 

இந்தப் புத்தகத்தில் வெளிக்கொணரப்பட்டுள்ள ஆவணங்கள்  நிச்சயமாக ஏமாற்றுதல், மோசடி மற்றும் தவறான தகவல்களையே முழுமையாக நம்பியிருக்கும் இந்துத்துவா படையணியினருக்குக் கலக்கத்தை ஏற்படுத்தும்.

‘வீர்’ சாவர்க்கர் குறித்து எதுவும்  தெரியாது அவரைப் போற்றிப் புகழும் தலைவர்களுக்கும்,  நபர்களுக்கும் இந்தப் புத்தகமானது அவர் குறித்துக் கூறப்படும்  சரடுகளிலிருந்து உண்மைகளைத் தெரிந்துகொள்வதற்கு  உதவிடும் என்று நம்புகிறோம்.

இந்தப் புத்தகத்தின் ஏழாவது  அத்தியாயமும் சாவர்க்கரால் எழுதப்பட்ட இந்துத்துவாவின்  1923ஆம் ஆண்டு பதிப்பினை மதிப்பீடு செய்கிறது. ஏனெனில் அப்போதுதான் இந்தியாவை இல்லாது ஒழித்திட கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சிந்தனைகள் மற்றும் அதன்வழி  மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதையும்  அவற்றின் ஆபத்துகளையும், ஜனநாயக மதச்சார்பற்ற இந்தியாவை நெஞ்சார நேசிக்கும் அனைவரும் புரிந்துகொள்ள முடியும்.

பாரதி புத்தகாலயம் வெளியீடு

முகத்திரை விலக்கப்பட்ட சாவர்க்கர்

சம்சுல் இஸ்லாம்

தமிழில்: ச.வீரமணி

விலை: ரூ.200

பாசிசத்தை வீழ்த்துவது வரலாற்றுக் கடமை – பிரபாத் பட்நாயக்

  • பேரா.  பிரபாத் பட்நாயக்

(மார்க்சிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க நாளிதழ் கணசக்திக்கு பொருளாதார அறிஞர் பிரபாத் பட்நாயக் அளித்த நேர்காணல்)

சக்தி –  75 ஆண்டு கால சுதந்திரத்திற்கு பிறகும் தேசத்தின் வளத்தில்  அசமத்துவமும் வேலையின்மையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. மக்கள் தொகையின் பெரும்பகுதியினருக்கு வேலைவாய்ப்பும். வருவாயும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இவற்றை பார்க்கும்போது இந்தியாவானது மக்கள் நல அரசாக  நீடித்திருக்க முடியுமா?

பிரபாத் பட்நாயக் – மக்கள் நல அரசு பற்றிய அர்த்தத்தை மிகச் சரியான முறையில் பரிசீலித்தால் இந்தியா ஒருபோதும் மக்கள் நல அரசாக இருந்ததில்லை. மக்கள் நல அரசானது ஒரு குறிப்பிட்ட பகுதியினரைச் சார்ந்தவர்களுக்கு என்பதற்கு பதிலாக அனைவருக்குமான  அரசாக அது செயல்பட்டிருக்க வேண்டும். ஒவ்வொருவருடைய சிற்சில குறைந்தபட்ச உத்திரவாதத்தையாவது செய்து தர முயற்சித்திருக்க வேண்டும். ஆனால் இந்தியாவின் விசயத்தில் இது  ஒருபோதும் நடக்கவில்லை. நாட்டின் உணவு பாதுகாப்பை உத்திரவாதப்படுத்துவதற்காக பொதுவிநியோக முறை கொண்டுவரப்பட்டது. ஒருசில மாநில அரசுகளே கிராமப்புறங்களில் ரேசன்கடைகளுக்கு நிதியளித்தன. தற்போது திட்டத்தில் பொது விநியோகம் என வார்த்தை இருந்தபோதிலும் உண்மையில் அவ்வாறு இல்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளின்படி மக்கள் நல அரசு அமைப்பின் நடைமுறையானது மாநில அரசின்  கொள்கை வழிகாட்டுதல்களின் கீழ் செயல்படுத்த வேண்டும். ஆனால் இதை எந்த நீதி மன்றமும் அமுலாக்குவதற்கான உத்திரவுகளை பிறப்பிக்க முடியாது. எனவே மாநில அரசுகள் இதை கறாராக பின்பற்றுவதில்லை.

இந்தியா ஒரு மக்கள் நல அரசாக செயல்பட வேண்டும் என்பதை துவக்கத்திலிருந்தே இந்திய அரசியலமைப்பின் இலக்காக இருந்தது என்பதே உண்மையாகும். இந்த இலக்கு தற்போது வெளிப்படையாகவே கைவிடப்பட்டுவிட்டது. இல்லையென்றால், பெருமுதலாளிகளுக்கு வரிச்சலுகைகளை அளித்து உதவி செய்வதை அரசால் தன்னெழுச்சியாக செய்திருக்க முடியாது. நல அரசு கொள்கையை கைவிடுவது என்பது நவீன தாராளமயத்தின் கொள்கையின் ஒரு பகுதியாகும். இது பல்வேறு தளங்களில் வெளிப்படுத்துகிறது.  உதாரணமாக உணவுப் பொருட்களை பொது விநியோக முறையில் வழங்குவது திரும்ப பெற்றதும், கல்வியை நுகர்வு பொருட்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டதுமாகும். இதனால் பெரும்பான்மையான மக்கள் உணவு மற்றும் கல்வியை பெறமுடியாதவர்களாக்கப்பட்டனர். இது பொது சுகாதார மருத்துவத்தையும் பலவீனப்படுத்தி வருகிறது. இது போன்ற பல உதாரணங்களை சொல்ல முடியும்.

சுதந்திரத்திற்கு பிறகு என்றுமில்லாத நிலையில்  வேலையின்மை விகிதம் மிக உச்ச அளவில் உள்ளது. வேலையில்லாதவர்களுக்கான உதவி கூட தேசிய அளவில் ஒரு பொது வடிவம் இல்லை. கடந்த நூற்றாண்டுகளை விட தற்போது நாட்டின் அசமத்துவம் தீவிரமடைந்துள்ளது. பொருளாதார நிபுணர்கள் பிக்கட்டி மற்றும் கான்சல் ஆகியோரின் கூற்றுப்படி மக்கள் தொகையின் பெரும்பகுதியினர் மத்தியில் ஊட்டச்சத்து குறைந்து வருகிறது. பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு  கடுமையான விளைவுகள் அதிகரித்து வருகிறது என்பதை அனுபவம் உணர்த்துகிறது. இத்தகைய போக்குகள் நவீன தாராளமய  காலத்தில் தான் சரிந்து  வருகிறது என்பதை வெளிப்படுத்துகின்றன.

கணசக்தி – நவீன தாராளமயக் கொள்கைகள் அமுலாக்க துவங்கி 30 ஆண்டுகள் கழிந்து விட்டன. இந்த கொள்கையின் மிக முக்கியமான விளைவு எது? தற்போதைய தருணத்தில் இந்த கொள்கை முற்றிலுமாக தோல்வியடைநதுவிட்டது என்று நம்மால் கூறமுடியுமா?

பி.ப – இந்தியாவின் நவீன தாராளமயத்தினை இரண்டு பகுதிகளாக பிரிக்கலாம். ஒன்று அதிகமான பொருளாதார வளர்ச்சி விகிதம் மற்றது நவீன தாராளமயத்தினால் துவங்கிய பொருளாதார நெருக்கடி. பின்னர் வந்த நெருக்கடி உலகளாவிய அளவில் பரவியது. இவ்விரண்டு பகுதிகளுக்கும் இடையே கோடு பிரிக்கலாம். அமெரிக்காவில்  வெடித்து கிளம்பிய வீட்டுக் கடன் நெருக்கடியும்  அதன் பிறகு இரண்டாவது ஐ.மு.கூட்டணி அரசின் கால கட்டம் ( 2009-2014). இந்திய தன்மையில் நெருக்கடிகள் சிறிது காலம் தாழ்த்தி துவங்கின.

உண்மையில் நவீன தாராளமயத்தின் துவக்க காலத்தில் வளர்ச்சி விகிதம் அதிகரித்தபோதிலும் கூட அதைப்போலவே  மொத்த வறுமை விகிதமும் அதிகரித்தது. 

இந்தியாவின் கிராமப்புறத்தில் ஒருவர் தினசரி 2200 கலோரிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்  என்ற  வறுமையை வரையறைக்குட்படுத்தப்பட்ட அளவிளை எடுத்துக்கொள்ள முடியாத மக்கள் தொகை 1993-94இல் 58 சதவிகித இருந்தது 2011-12ஆம் ஆண்டில் 68 சதவிகிதமாக உயர்ந்தது. நகர்புறத்தில் 2100 கலோரிகளை எட்டமுடியாதவர்கள் இதே காலத்தில் 57 சதவிதகத்திலிருந்து 65 சதவிகிதமாக அதிகரித்தது.

எவ்வாறாயினும், நவீன தாராளமயக் கொள்கைகளின் நெருக்கடிகளும் தேக்கநிலையும் உழைக்கும் மக்கள் பிரிவினரை மிகக் கடுமையாக தாக்கியது. 2017-18ஆம் ஆண்டின் தேசிய மாதிரி ஆய்வு அறிக்கையினை மோடி அரசு வெளியிடாமல் நிறுத்தி வைத்திருந்ததிலிருந்தே மோசமான நிலைமையினை உணர்ந்து கொள்ள முடியும்.  இவைகளை  மறைப்பதற்காக தேசிய மாதிரி ஆய்வு துறையையே மூடிவிடவும் கூட மோடி அரசு முடிவெடுத்தது. மேற்படி அறிக்கை கசிந்த நிலையில் அதன் விபரப்படி இந்திய கிராமப்புற உண்மையான தனி நபர் நுகர்வு சக்தி 2011-12க்கும் 2017-18ஆம் ஆண்டுகளுக்கு இடையே 9 சதவிகிதம் குறைந்துவிட்டது. இது ஒட்டு மொத்த சராசரியாகும். உழைக்கும் மக்களின் நிலைமையை ஒப்பிடும்போது மிகவும் மோசமாக உள்ளது. பெருந்தொற்றுக் காலமும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட உலகளாவிய பணவீக்கமும் சேர்ந்து இந்த நிலைமையை மேலும் கடுமையாக்கியுள்ளது.

பெருந்தொற்று மற்றும் உக்ரைன் போர் பாதிப்பிலிருந்து உலக முதலாளித்துவம் மீண்டு வந்தபோதிலும், நவீன தாராளமயத்தின் நீண்ட கால கட்டமைப்பு நெருக்கடியானது ஏற்கனவே 2019-20க்குமுன்னரே வெளிப்படுத்திவிட்டது; அது தற்போதும் நீடிக்கிறது. நவீன தாராளமயத்தின் நெருக்கடியை எதிர்கொள்ள முதலாளிகளுக்கு சலுகைளை வாரி வழங்குவதன் மூலம் அவர்கள் அதை தொழிற்துறையில்  முதலீடு செய்வதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்கும். அதன் விளைவாக வேலைவாய்ப்யை அதிகரிக்க செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் முயற்சிக்கிறது. ஆனால்  நெருக்கடியான காலங்களில் சந்தை முதலாளிகள் எந்தவொன்றிலும் முதலீடு செய்ய மாட்டார்கள். எனவே நெருக்கடி மேலும் ஆழமாகி வருகிறது என்பதே உண்மை. நவீன தாராளமயம் நீடிக்கும் வரை மக்களின் சமூக பொருளாதார நிலைமைகளும்  தொடர்ந்து மோசமடைந்து வரும். எவ்வளவு விரைவாக இந்த கொள்கையிலிருந்து நாடு  வெளியேறுவதுதான் ஒரே வழி.

கணசக்தி – இந்திய பொருளாதாரத்தில் எந்த ஒரு துறை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று உங்களிடத்தில் கேட்டால் நீங்கள் எந்த ஒன்றை தேர்வு செய்வீர்கள்?

பி.ப – நவீன தாராளமயத்தின் மிகப்பெரிய பிரச்சனை குறிப்பாக சிறு உற்பத்தியாளர்கள் மற்றும் நேரடியாக உழைப்பை செலுத்திடும் விவசாயத்தின் மீதான  அதன் தாக்குதல் தான். தாராளமயம் உருவானது முதல் அது பெரும் முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிதி மூலதனத்தின் கூட்டணியால்  வழிநடத்தப்படுகிறது. அது விவசாயிகளை சார்ந்து உள்ள உழைப்பை செலுத்திடும் விவசாயத்திற்கான ஆதரவினை திரும்ப பெற்றது. உண்மையில் உணவுப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையினை ஒழித்துக்கட்டுவதற்காக எடுத்த முயற்சியானது மேடி அரசின் இறுதிக்கட்ட நடவடிக்கையாயாகும். விவசாயிகளும் எழுச்சிமிக்க போராட்டத்தின் காரணமாக தற்காலிகமாக பின்வாங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதன் ஆபத்து நீடிக்கிறது.

அரசாங்கம் விவசாய பொருளாதாரத்துறைக்கான தனது ஆதரவினை குறைப்பதன் விளைவாக விவசாயிகளின் லாபத்தை தடுத்துவிடும். மேலும் அரசாங்கம் முதலீடுகளை குவிப்பததற்கு  முதன்மையானது என சொல்லி  இந்த துறையில் பெரும் பெரு நிறுவனங்களை அனுமதிக்க ஊக்கப்படுத்துகிறது. தற்போதைய விவசாயத்துறையின் நெருக்கடிக்கான காரணங்களின் பின்னணி இதுவே. நாட்டின் விடுதலைக்கு பிறகு என்றுமில்லாத நிலையில் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதும் இந்த நெருக்கடியின் விளைவுகளால் தான். பெருந்திரளான விவசாயிகள் வேலை தேடி கிராமப்புறங்களிலிருநது நகரங்களை நோக்கி இடம்பெயர்கிறார்கள் இங்கு ஏற்கனவே உள்ள வேலையில்லா தொழிலாளர்களோடு சேர்ந்து  வேலையின்மை மேலும் அதிகரிக்கிறது.  இதுவும் நெருக்கடியின் மற்றொரு பகுதியாக மாறுகிறது. வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்து வேலைக்கான ஆட்கள் எண்ணிக்கையைக் காட்டிலும் வேலை தேடுவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் விவசாயிகள் என்று வகைப்படுத்துவோர் எண்ணிக்கை 1991 மற்றும் 2001 ஆகிய இரு கணக்கெடுப்பிற்கு இடையில் ஒன்றரை கோடி விவசாயிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

விவசாயிகளின் வறுமையானது அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்களின் பேரம் பேசும் சக்தியை வலுவிழக்க செய்வதோடு,  மக்கள் தொகையில்  மொத்த வறுமையும் உயருகிறது. நவீன தாராளமய முதலாளித்துவத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க குணமும், அதன்  மையமான கருவும்   இதுதான். இந்தியா போன்ற ஒரு நாட்டில் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு விவசாயம் உயிரோட்டமாக இருக்க வேண்டும் என்பதுதான் வளர்ச்சிக்கான  மிக முக்கியமான திறவுகோல் . மேலும்  அது விவசாய தொழிலாளர்களின் சூழ்நிலைமையோடு மிக நெருக்கமான உறவுகளை கொண்டுள்ளது. நவீன தாராளமயம் விவசாயத் தொழிலாளர்களின்  வாழ்வாதாரத்தினை கேள்விக்குறிக்கு தள்ளியுள்ளது.

கணசக்தி – இந்திய கார்ப்பரேட் துறை இந்து அடிப்படைவாத தத்துவத்தின் அபாயத்தினை உணர்ந்துள்ள போதிலும் கூட அதற்கு சிறியதாகவே அல்லது அதிகமாகவே ஆதரவு தெரிவிக்கிறது.இது ஏன் நிகழ்கிறது? இந்திய பெரு முதலாளிகள் தங்களின் கலாச்சார, தத்துவார்த்த கொள்கையினை மாற்றிக்கொண்டார்களா?

பி.ப – இல்லை. இந்திய பெரும் முதலாளிகள் தங்களின் கலாச்சார தத்துவார்த்த கொள்கைககளை  இதுபோல மாற்றிக் கொள்ளவில்லை. பன்னாட்டு  நிதி மூலதனம் மற்றும் உள்ளுர் பெரும் முதலாளிகள் கீழிருந்து வரும் மாற்றங்களின்போது அவர்கள் அச்சப்படுவது சாத்தியம். இது  நவீன தாராளமய நெருக்கடியின் விளைவாகும். நவீன தாராளமயத்தின் முதற்கட்ட காலத்தின்போது பொருளாதார வளர்ச்சி அதிகரித்து இருந்தபோதே வரி சலுகை உள்ளிட்டவை மூலம் உழைக்கும் வெகுமக்களுக்கு ஆதரவை பெற முயற்சித்தது.  இதன் மூலமாக நவீன தாராளயமத்திற்கு எதிரான எதிர்ப்பினை எவ்வாறு  தவிர்க்கவும் அல்லது தள்ளிப்போடவும் என்பதற்கான நோக்கமாக  அது   இருந்தபோதிலும் உழைக்கும் மக்களின் துயரம் நீடித்தது. இது நவீன தாராளமயத்தின் ஆதரவு அமைப்பு முறையின் ஒரு பகுதியாகும். ஆனால் நெருக்கடியை நோக்கி வந்தடைந்தபோது இந்த ஆதரவு அமைப்பு முறை ஒழிந்து போனது. எந்த மட்டத்திலும்  வளர்ச்சியில்லை என்ற நிலைமையில், ஆதரவு முறை ஒன்றுமில்லை என்றாகிவிட்டது. இந்த சூழ்நிலையில் நவீன தாராளமயத்திற்கு ஒரு புதிய ஆதரவு அமைப்பு முறை தேவையாகிறது. நவீன பாசிசமே அதன் ஆதரவு அமைப்பு. இது நவீன தாராளமய மற்றும் நவீன பாசிச கூட்டணிக்கு கொண்டு சென்றது. இந்தியாவில் இது கார்ப்பரேட் மற்றும் இந்துத்துவ சக்திகளின் கூட்டணியாக உருவாகியது. இந்த கூட்டணி நவீன தாராளமய முதலாளித்துவம்  நீடித்திருக்க உதவி செய்ய முயற்சிக்கிறது. இந்த கூட்டணி கதையை மாற்றியமைத்து  சிறுபான்மை மக்களுக்கு எதிராக வெறுப்பு உணர்வை உருவாக்குவதன் மூலமாக, உழைக்கும் மக்கள் தங்களின் வாழ்நிலை பாதிப்பிற்கு எதிரான நியாயமான உணர்வுகள் திசைதிருப்பப்படுகிறது.   இது நவீன தாராளமயத்திற்கு இருவழிகளில் துணைபோகிறது. இது உழைக்கும் வர்க்கத்தை பிளவுபடுத்துகிறது. மேலும் அவர்களின் வாழ்வாதார பிரச்சனைகளிலிருநது மத ரீ தியான பிரச்சனைகளுக்கு திசைதிருப்புகிறது. இந்த கார்ப்பரேட் –  இந்துத்துவ கூட்டணி  பாசிசத்தின் ஒரு ஆயுதமாகும்.

கம்யூனிஸ்ட் அகிலத்தின் 7வது மாநாட்டில் பேசிய ஜார்ஜ் டிமிட்ரோவ் முதலாளித்துவத்தின் நெருக்கடியான காலத்தில் தான் பாசிசம் உருவாகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.1930களில் ஏற்பட்ட பெரும் மந்தநிலையே இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும். தற்போதைய நவீன தாராளமயத்தின் நெருக்கடியும் அதைப்போன்றே நவீன பாசிசம் உருவாக காரணமாகியுள்ளது. மேலும் 1930களில் உருவான  பாசிசம் போலவே தற்போதைய நவீன பாசிசமும் உலகம் முழுவதும் உருவாகியுள்ளது. எனவே இது இந்தியாவிற்கு மட்டும் கட்டப்பட்டதாக இல்லை என்பது குறிப்பிட வேண்டியதாகும்.

எவ்வாறாயினும் 1903களின் நிலைமைக்கும் இன்றைய நிலைமைக்கும் வித்தியாசம் உள்ளது. 1930களில் பாசிசம் தன்னுடைய போர் நடவடிக்கைகளுக்கு ஏராளமான ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்காக  அரசாங்கங்கள் பெருமளவு செலவு செய்ததன் மூலமாக  முதலாளித்துவதை நெருக்கடியிலிருந்து காப்பாற்றியது  இந்த கூடுதல் செலவுகளுக்கு நிதி நிறுவனங்களிடமிருந்து கடன்களை பெற்றன. ஆனால் தற்போது அரசாங்கங்களால் கூடுதல் செலவிற்கு கடன்களை பெற முடியாது. இது கேள்விகளுக்கு அப்பாற்பட்டது. ஏனென்றால் அளவுக்கதிகமான நிதிப்பற்றாக்குறைப் போக்கினை நிதி மூலதனம் அனுமதிப்பதில்லை. மேலும் நிதி மூலதனமானது ஒரு சர்வதேசமயமானது. ஆனால் அரசுகள் ஒரு நாட்டிற்கு உட்பட்டது. எனவே நிதிமூலதனம் நாட்டை விட்டு வெளியேறாத வகையில் அரசாங்கம் சலுகைகளை அளிக்க முயற்சிக்க வேண்டும். அதேசமயம் அதிகப்படியான உபரி மதிப்பால் குவிந்துள்ள செல்வத்திற்கு எதிராக கூடுதல் வரி விதித்து கஜானாவிற்கு வருவாய் ஈட்டலாம் என்பதும் நவீன தாராளமயத்தில் அரசுகளால் முடியாது.  இதற்கு பதிலாக, அரசுகள் தங்களின் செலவுகளை ஈடுசெய்ய உழைக்கும் மக்கள் மீதே வரிகளை சுமத்த முயற்சிக்கின்றன. ஆனால் உண்மையில் இத்தகைய கூடுதல் வரிகள் மூலமாக மொத்த வருவாய் அளவை உயர்த்த முடியாது. ஏனென்றால் உழைக்கும் மக்கள் தங்களின் வருவாயின் பெரும்பகுதியை அடிப்படை வாழ்க்கைத் தேவைகளுக்காகவே செலவிட வேண்டியுள்ளது. எனவே பழைய பாசிச அரசு பாணியில்  தற்போதைய நெருக்கடியிலிருந்து முதலாளித்துவத்தை மீட்க முடியாது.இதுவே 20ஆம் நூற்றாண்டு  பாசிசத்திற்கும் இன்றைய  நவீன பாசிசத்திற்குமான வித்தியாசம் என்பதோடு இது நவீன பாசிசத்தின் ஒரு பலவீனமுமாகும்.

கணசக்தி – கார்ப்பரேட்-இந்துத்துவா கூட்டணியால் இந்தியா பாசிசத்தை நோக்கி நகரும் என்று நீங்கள் கருதுகிறீர்களா? அவ்வாறெனில் இந்திய பாசிசத்திற்கான பண்புகள் எவ்வாறு இருக்கும்?

 1930கள் போன்று இல்லாமல்  தற்போதைய சூழ்நிலை வித்தியாசமாக உள்ளது. இன்றைய பாசிசம் 1930களின் பாசிசத்தை நகல் எடுத்தாற்போல் இருக்காது. இருப்பினும், பாசிசத்திற்கான அத்தனை பொதுவான பண்புகளும் இந்தியாவில் ஏற்கனவே இருந்து வருகிறது. உதாரணமாக, பெரும் வர்த்தக மற்றும் பாசிச கட்சிக்கு இடையேயான கூட்டணி, அச்சத்திற்கு இடமளிக்கும் வகையில்,  சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்ம பிரச்சாரங்களும் அவர்களை  குறிவைத்து பாசிச சக்திகளின் வன்முறை கும்பல்களும் அரசாங்கத்தால் தொடுக்கப்படும் அரசியல் ரீதியான துன்புறுத்தல்களும்  சர்வாதிகார அரசை போன்ற அடிப்படையில்தான் இருந்து வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இத்தகைய சர்வாதிகார அரசிற்கு எதிராக குரல் கொடுக்கும் அறிவுஜிவிகள், சமூக இயக்கங்கங்களுக்கு எதிராக பரவலான அடக்குமுறைகளும் வன்முறைகளும் ஏவப்படுகின்றன. இவையெல்லாம் தன்னுடைய அரசியல் பலத்தை இழந்து விடுவோம் என்ற அச்சத்திலிருந்து பாசிச அரசால்  மேற்கொள்ளப்படுகிறது. எனினும்  இன்றைய பாசிசமாகட்டும் அல்லது நவீன பாசிசமாகட்டும், அவை ஜனநாய கட்டமைப்புக்குள் செயல்படுவதற்கு தள்ளப்படுகின்றன. எனவே நவீன பாசிசமானது ஜனநாயகத்தை அழித்தொழிக்கும் வேலையை செய்து கொண்டே, அதை பாதுகாப்பது போன்ற தோற்றத்தினையும் மேற்கொள்கிறது. அது எப்போதும் ஜனநாயகத்தை பற்றி பாசாங்குத்தனமாக நடந்து கொள்ளும். இன்றைய பாசிசம் ஒரு கபட வேடம் பூண்டுள்ளது என்பதே இதன் பொருள். எனவே இன்றைய கார்ப்பரேட்- இந்துத்துவ கூட்டணியானது பாசிசத்தை நோக்கி செல்லும் என்பதை நம்மால் சொல்ல முடியாது. இந்த கூட்டணி மாறுவேடம் தரித்த பாசிசமாகும். இது ஒரு சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது. அதுவரை வேடம் தரித்தும், அதற்கு பின்னர் ஒளிவு மறைவின்றியும் நேரடியான நடவடிக்கையில் இறங்கும்.

ஜனநாயக  முகமூடி அணிவது என்பது இந்திய பாசிசத்தின் ஒரு குணாம்சம் என்று மட்டும் என்றிருப்பது ஒரு தனித்துவம் இல்லையென்றாலும், அதன் முக்கிய பண்புகளில் ஒன்று மற்றவர்கள் என வரையறுத்த மத அடையாளத்தைப் பயன்படுத்துவதாகும். இந்த மற்றவர்கள் இந்தியாவின் மதச் சிறுபான்மையோர் ஆவர். இது மற்ற நாடுகளில் இனம், தேசியம் போன்ற இதர அடையாளங்களை வைத்து மற்றவர்கள் என்று அடையாளப்படுத்தப்படுவார்கள். இந்தியாவில்  மதத்தையே அடிப்படைவாதமாக பயன்படுத்தப்படுகிறது.

பாசிசம் தோற்கடிக்கப்படவும்   ஜனநாயகத்தையும்  மீட்டெடுக்கவும் உழைக்கும் மக்களின் பொருளாதார நிவாரண நடவடிக்கைகளை மீட்டெடுக்க வேண்டும் என்றால்  இடதுசாரிகளின் பலத்தை அதிகப்படுத்த வேண்டும். நவீன தாராளமயத்திலிருந்து வெளியேறவும், நவீன பாசிசத்தையும்  தோற்கடிக்கவுமான ஒரே வழி இடதுசாரிகள் பலமடைவதுதான்.  பாசிசத்திற்கு எதிரான  சக்திகள்  ஒரே மேடையில் ஒன்றிணைக்கப்பட வேண்டும். இதற்காக இடதுசாரிகள் விரிவான மக்கள் இயக்கத்தை கட்டமைக்க வேண்டும்.  இதே இடதுசாரி சக்திகளால்தான் கடந்த நூற்றாண்டில் பாசிசம் தோற்கடிக்கப்பட்டது. இத்தகைய வரலாற்றுக்  கடமையினை இப்போதும் முன்னெடுத்துச் செல்வோம்.

தமிழில்:  எஸ்.ஏ.மாணிக்கம் –  நன்றி – மன்த்லி ரெவ்யூ  இணைய தளம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை (1926)

(1926 இல் கவுகாத்தியில் நடைபெற இருந்த அகில இந்திய தேசிய காங்கிரஸின் வருடாந்திர கூட்டதில் விவாதிக்குமாறு கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சமர்ப்பித்த அறிக்கையின் சுருக்கமான வடிவத்தை தமிழில் தந்துள்ளோம். இதில் இடம்பெற்றுள்ள பல கோரிக்கைகளை 1930 இல் கட்சி ஏற்றுக் கொண்ட செயல் திட்டத்தில் இணைத்துக் கொண்டது இங்கு குறிப்பிடத்தக்கது.)

வகுப்புவாத மோதல்கள்

கடந்த சில ஆண்டுகளாக நாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கும் வகுப்புவாத மோதல்களால் பலருக்கும் அவநம்பிக்கை ஏற்பட்டிருக்கும். நிச்சயமாக அது அவநம்பிக்கை தரக்கூடிய ஒரு அம்சம்தான். என்றாலும் கூட, ஒரு மக்கள் கட்சி அதற்குத் தீர்வு காணும். உயர் வர்க்கங்கள் உரிமைகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் போராடும் அதே நேரத்தில், இந்து-முஸ்லீம் ஆகிய இந்த இரு பிரிவுகளையும் சேர்ந்த பெருந்திரளான மக்களிடையே மிக முக்கியமானதொரு விஷயம் பொதுவானதாக இருக்கிறது. அதுவே சுரண்டல். இந்து-முஸ்லீம் தொழிலாளர்கள் ஒரே தொழிற்சாலை கூரையின் கீழ் வேர்வை சிந்தப் பாடுபடுகின்றனர். இந்து –முஸ்லீம் விவசாயிகள் கொளுத்தும் வெய்யிலில் நிலத்தில் பாடுபடுகின்றனர். அதே நேரத்தில் இந்த இரு பிரிவினருமே சமமான அளவில் நிலப்பிரபுக்களாலும், கந்துவட்டிக்காரர்களாலும் ஏகாதிபத்தியத்தின் ஏஜெண்டுகளாலும் கொள்ளையடிக்கப்படுகின்றனர். அவரது முதலாளி அதே மதத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக ஒரு முஸ்லீம் தொழிலாளிக்கு நல்ல ஊதியம் வழங்குவதில்லை. அதைப் போலவே,  ஓர் இந்து நிலப்பிரபு முஸ்லீம் குத்தகை விவசாயியை விட குறைவான குத்தகையை இந்து விவசாயியிடம் இருந்து பெறுவதில்லை. (குட்டி அறிவுஜீவிகள், சிறு வியாபாரிகள், கைவினைஞர்கள் போன்ற) சுரண்டலுக்கு ஆளாகும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் இதே விதி பொருந்தும்.

ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 98 சதவீதம்பேர் சுரண்டல் என்ற ஒற்றைச் சரடால் பிணைக்கப்பட்டிருக்கும் நிலையில் இத்தகைய வகுப்புவாத மோதல்களில் ஈடுபடுவதற்கு எந்தவிதக் காரணமும் இல்லை. பொருளாதார நலன்களைப் பற்றிய உணர்வு ஏற்படுவதற்கு அவர்களுக்கு உதவுங்கள்;  பொதுவான எதிரியை எதிர்த்துப் போராட துணிவுமிக்க ஒரு தலைமையை அவர்களுக்கு வழங்குங்கள். அப்போது இத்தகைய வகுப்புவாத மோதல்களைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கும் சதிகாரக் கொள்கையின் அடித்தளம் உடைத்தெறியப்படும். இது ஒரே நாளில் நடந்து விடாது என்பது உண்மையே. எனினும், தேசியவாத இயக்கத்திற்குள் புகுந்து அதன் உயிரோட்டமான உறுப்புகளை அரித்துக் கொண்டிருக்கும் வகுப்புவாதம் என்ற புற்றுநோய்க்கு இதைத் தவிர வேறெந்த மருந்தும் இல்லை.

தேசியவாத இயக்கத்தின் சரிவுதான் வகுப்புவாத மோதலுக்கான உந்துதலை அளித்திருக்கிறது. தீவிரமான வெகுஜன நடவடிக்கை என்ற திட்டத்துடன் தேசியவாத இயக்கத்தை சீரமைத்தோம் எனில், அதுவே இத்தகைய உந்துதலை அப்புறப்படுத்தி விடும். அரசியல் உணர்வை உருவாக்குவதற்குப் பதிலாக ஒத்துழையாமை இயக்கமும், கிலாஃபத் கிளர்ச்சியும் மதவாத வெறித்தனத்தை விரைவுபடுத்தியுள்ளன. தேசியவாத இயக்கத்தை உறுதியானதொரு மதசார்பற்ற அடித்தளத்தில் நிலைநிறுத்துவதன் மூலம் இந்த மாபெரும் தவறினை திருத்திக் கொள்ள வேண்டும். உடனடி பொருளாதார கோரிக்கைகளுக்கான முழக்கங்களுடன், தேசியவாதம் என்ற பதாகையின்கீழ், பெருந்திரளான மக்கள் அணிதிரட்டப்பட வேண்டும். நிலக் குத்தகை, நில வாடகை, கந்துவட்டிக்காரர்களின் கொடும் வட்டி, விலைவாசி, ஊதியம், வேலைநிலைமைகள், தொடக்கக் கல்வி ஆகியவையே கிளர்ச்சியின் முக்கிய அம்சங்களாக இருக்க வேண்டும். மக்களின் வாழ்க்கையை மிகப் பெருமளவிற்குப் பாதிக்கின்ற இந்த ஒவ்வொரு அம்சத்தின் மீதும், அதன் வழியாகப் பெறவிருக்கும் நலனுக்கான அடையாளத்தை மிகத் தெளிவாகவும் எளிதாகவும் நம்மால் உணர்த்தவும் முடியும். எனவே, இவ்வகையிலான கிளர்ச்சியானது தேசிய இயக்கத்திற்கான உறுதியான அடித்தளத்தை வளர்த்தெடுக்கும் அதே நேரத்தில் வகுப்புவாத நெருக்கடிக்கு எதிரான பாதுகாப்பான உறுதிமொழியையும் வழங்குவதாக இருக்கும்.

எனினும் ஜனநாயகரீதியான குறிக்கோள்கள் தேசிய சிறுபான்மையினரின் நலன்களுக்கு எதிராகச் செயல்படுவதில்லை. இந்தியாவிலுள்ள இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே நிலவும் பரஸ்பர அவநம்பிக்கை ஒரு வரலாற்றுரீதியான பின்னணியைக் கொண்டதாகும். எனவே, இந்த வகுப்புவாதப் பிரச்சனையை தேசிய சிறுபான்மையினர் என்றதொரு பிரச்சனையாகத்தான் அணுக வேண்டும். தேசிய சிறுபான்மையினரின் நலன்கள் தேசியவாத மேடையின் முக்கியமான தளங்களில் ஒன்றாக இருக்க வேண்டும். இந்தப் பாதுகாப்பினை தேசியவாத இயக்கம் தரத் தவறுமானால், அதைத் தருவதற்கான வாய்ப்பும், அதன் மூலம் நாடு முழுவதிலும் நேர்க்கோடாக ஒரு பிளவை ஏற்படுத்தும் வசதியும் ஏகாதிபத்தியத்திற்குக் கிடைக்கும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட பிரபலமான இந்து தேசியத் தலைவர்களின் நடத்தையும் அறிவிப்புகளும் முஸ்லீம்களிடையே சந்தேகம் எழுவதற்குப் போதுமான காரணங்களைத் தருகின்றன. மறுபுறத்தில், முஸ்லீம் தலைவர்களில் ஒரு பிரிவினரின் தாய்நாட்டை மீறிய தேசப் பற்று என்பது இந்து பிற்போக்குவாதிகளின் ஊறுவிளைவிக்கும் பிரச்சாரத்திற்குத் தூண்டுகோலாக அமைந்து விடுகிறது. இந்த இரண்டு பிரிவுகளிலுமே அதீதமான போக்கு என்பது தவிர்க்கப்பட வேண்டும். வகுப்புவாதத்திற்கு எதிரான நிச்சயமான காப்புறுதி என்பது பெருந்திரளான மக்களை அவர்களது பொருளாதார நலன்களின் அடிப்படையில் அணிதிரட்டுவதே ஆகும். இந்த வர்க்க ரீதியான எல்லைகள் வகுப்புவாத அடிப்படையில் பெரும்பாலான நேரங்களில் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள மேலெழுந்தவாரியான பிரிவினைகளை மிக ஆழமாகவே தாண்டிச் செல்வதாக அமைகின்றன.

தேசிய நலனும் வர்க்க நலனும்

தொடர்ந்து வெடித்து வரும் வகுப்புவாத மோதல்கள் தேசிய இயக்கத்திற்கு பெருமளவிற்கு ஊறு விளைவிப்பதாக அமைகின்றன. எனினும் இந்த இயக்கத்தின் இப்போதைய சீரழிவு தேசியவாத அணிகளுக்கு உள்ளே வர்க்க நலன்களின் அடிப்படையில் உருவாகும் மோதல்களின் காரணமாகவே உருவானதாகும். வேறெந்த நாட்டிலும் உள்ள முதலாளித்துவ சமூகத்தைப் போலவே இந்திய சமூகமும் வர்க்கங்களாகப் பிளவுபட்டுள்ளது.

இந்திய சமூகத்தின் பல்வேறு வர்க்கங்களுடனான பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் உறவு என்பது ஒரே மாதிரியானதாக இருப்பதில்லை. இந்த நாடு அந்நிய சக்தி ஒன்றினால் ஒடுக்கப்படுகிறது; சுரண்டப்படுகிறது. எனினும் இந்த ஒடுக்குமுறையின் அழுத்தமானது இந்திய மக்களின் அனைத்துப் பிரிவினரின் மீதும் சமமாக விழுவதில்லை. அதன் குறிக்கோள் என்பது அனைத்து மக்களையும் சுரண்ட வேண்டும் என்பதுதான். ஆனால் அந்தச் சுரண்டல் தங்கள் உழைக்கும் சக்தியைக் கொண்டு செல்வத்தை உருவாக்கும் வர்க்கங்களின் மீது மட்டுமே விழுகிறது. நாட்டின் 98 சதவீதம் பேராக உள்ள தொழிலாளர்களும் விவசாயிகளுமே உள்ளனர். இந்திய சமூகத்தின் உயர் வர்க்கத்தினருக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான சச்சரவு என்பது அடிக்கும் கொள்ளையை எப்படிப் பிரித்துக் கொள்வது என்பதில்தான்.

உள்ளூரில் உள்ள நிலப்பிரபுக்களும் முதலாளிகளும் உற்பத்தி செய்யும் உழைக்கும் மக்களை நம்பியே உயிர் வாழ்கின்றனர். எனினும், ஏகாதிபத்தியத்தின் ஏகபோகக் கொள்கையானது தங்குதடையற்ற பொருளாதார வளர்ச்சி அடைவதற்கு அவர்களை அனுமதிப்பதில்லை. அவ்வாறு இருந்தால் தொழிலாளி வர்க்கத்தைச் சுரண்டும் தங்கள் திறனை அவர்களால் மேலும் அதிகரித்துக் கொள்ள முடியும். இந்திய தொழிலாளிகளும் விவசாயிகளும் உற்பத்தி செய்கின்ற மதிப்பில் பெரும்பகுதி ஏகாதிபத்தியத்தின் சட்டைப் பைகளை மேலும் ஊதிப் பெரிதாக்குகிறது. இந்திய முதலாளிகள் பெயரளவிற்கு இடைத்தரகருக்கான பங்கைப் பெறுவதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். காலப்போக்கில் கொள்ளையில் கிடைக்கும் இந்தச் சிறிய பங்கைக் கண்டு அவர்கள் அதிருப்தி அடைகின்றனர். இறுதியில், இந்திய மக்களின் உழைப்புச் சக்தியின் ஆதாரம் முழுவதன் மீதான முன்னுரிமையை, அதிகரித்துக் கொண்டே போகும் பங்கைத்தான் அவர்கள் கோருகின்றனர்.

எனினும், ஏகாதிபத்தியத்தின் ஏகபோகத்திற்கு சவால் விடாமல் நாட்டை தங்களது ஆளுகைக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்ற தங்கள் ஆசைகளை இந்திய முதலாளிகளால் நிறைவேற்றிக் கொள்ள முடியாது. மேலும் இதை அவர்களால் தானாகவே செய்துவிடவும் முடியாது. அனைத்து மக்களின் புரட்சிகரமான நடவடிக்கை மூலமாக அல்லாமல் அந்நிய மேலாதிக்கத்திலிருந்து இந்தியா தன்னை விடுவித்துக் கொண்டுவிட முடியாது. எனினும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான வெகுமக்களின் எழுச்சி என்பது தேசிய முதலாளிகளின் மனக்குறைகளால் உருவானது. அதற்கேயுரிய காரணங்கள் அந்த எழுச்சிக்கு உண்டு. பெருந்திரளான மக்கள் சுரண்டலுக்கு எதிராகக் கிளர்ந்தெழுகின்றனர். அதன் காரணமாகவே, நாட்டின் ஒரே எஜமானனாக, ஆட்சியாளராக இருக்க வேண்டும் என்று விரும்புகிற தேசிய முதலாளிகள் நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற ஏகாதிபத்தியத்திற்கு மிக மோசமான அச்சுறுத்தலை தரக்கூடிய வலிமை வாய்ந்த ஒரே ஆயுதத்தைப் பயன்படுத்தத் துணிவதில்லை. இவ்வகையில் தேசிய நலன்கள் – அதாவது 98 சதவீதம் பேரின் நலன்கள் – வர்க்க நலன்களுக்காக பலி கொடுக்கப்படுகின்றன. நாட்டின் மீதான முழுமையான ஆளுமையை பெறுவதற்கான அதன் முயற்சி, மிகுந்த சேதாரத்தை ஏற்படுத்தும் அபாயத்தையும் உள்ளடக்கியுள்ளது என்ற நிலையில் தேசிய முதலாளிகள் கூட்டாகச் சேர்ந்து இந்திய மக்களை சுரண்டுவதற்காக ஏகாதிபத்தியத்துடன் கூட்டணி ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

குறிப்பிட்டதொரு உள்நாட்டு அம்சத்தின் உதவியின்றி எந்தவொரு அந்நிய சக்தியுமே ஒரு நாட்டை நீண்ட நாட்களுக்கு ஆட்சி செய்ய முடியாது. நிலையானதொரு அரசுக்கு ஒரு சமூக அடிப்படை இருக்க வேண்டும். (முதல்) உலகப் போர் வரையிலான காலத்தில் இரண்டு வகையான சமூக அம்சங்கள் இந்தியாவில் பிரிட்டிஷ் அரசுக்கு உதவி செய்து வந்தன. அவையே நிலப்பிரபுத்துவ வர்க்கமும் விவசாயிகளும் ஆகும். இந்த இரண்டு பிரிவினருமே மக்கள் தொகையில் பெரும்பான்மையினராக உள்ளனர். இவ்வகையில் ஏகாதிபத்தியத்திற்கு உறுதியானதொரு அடித்தளம் இருந்தது.

எனினும் இந்த இரு சமூக சக்திகளுமே ஒரே மாதிரியான வகையில் பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவு தரவில்லை. நிலப்பிரபுத்துவ வர்க்கம் சாதகமான, உணர்வுபூர்வமான ஆதரவை வழங்கி வந்த அதே நேரத்தில், விவசாயிகள் அவர்களது செயலூக்கமற்ற விசுவாசத்தின் காரணமாக உணர்வுபூர்வமற்ற ஆதரவை வழங்கி வந்தனர். உலகப் போருக்குப் பின்பு நிலைமை மாறிவிட்டது. விவசாயிகளின் செயலூக்கமற்ற விசுவாசம் சீர்குலைந்தது. அதற்குப் பதிலாக அவர்களின் கோபக் கனல் மிக்க கொந்தளிப்பு அவ்வப்போது எழத் தொடங்கியது. இதன் விளைவாக ஏகாதிபத்தியத்தின் அடித்தளம் இப்போது மிக மோசமான வகையில் கலகலக்கத் தொடங்கியது. அதனை சமப்படுத்துவதற்கு புதியதொரு கூட்டாளியை அது கண்டெடுக்க வேண்டியதாயிற்று.

அந்தப் புதிய கூட்டாளிதான் (வங்கியாளர்கள், வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள், உயரதிகாரிகள் மற்றும் இந்த வர்க்கத்தினரோடு நெருங்கிய தொடர்புடைய தொழில்முறை நிபுணர்கள் ஆகியோரை உள்ளடக்கிய) தேசிய முதலாளி வர்க்கம் ஆகும். உலகப் போருக்குப் பிந்தைய வருடங்களில் தேசிய இயக்கம் ஒரு புரட்சியை நோக்கி மிக வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. இதன் மோசமான விளைவுகளைக் கண்டு தேசிய முதலாளிகள் அஞ்சினர். பாதுகாப்பானதொரு வழியில் பயணம் செய்வதென்று அவர்கள் தீர்மானித்தனர். இவ்வகையில் இந்திய மக்களை சுரண்டுவதில் ஏகாதிபத்தியத்தின் இளைய கூட்டாளி என்ற அந்தஸ்தை ஏற்றுக் கொள்ள அவர்கள் முன்வந்தனர்.

முதலாளி வர்க்கத்தின் இந்தக் கட்சி மாறல் தேசிய இயக்கத்திலும் அதன் அடையாளத்தை விட்டுச் சென்றது. சமரசமும் சரணாகதியுமே கொள்கையாக மாறின. வர்க்க நலன்கள் என்ற பலிபீடத்தில் மக்களை பலி கொடுப்பது என்பது 1922ஆம் ஆண்டிலிருந்தே படிப்படியாக நடைபெற்று வருகிறது. கூடவிருக்கின்ற புதிய சட்டமன்றமும் கவுன்சிலும் இதன் இறுதிக் கட்டமாக அமைகிறது. அது எத்தகைய வடிவத்தை மேற்கொள்ள இருக்கிறது என்பது முக்கியமில்லை. ஆனால் அடிப்படையில் முதலாளித்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உண்மையான எதிர்ப்புகள் அனைத்தையும் கைவிட்டுவிட்டு, ‘நாகரீகமாகவோ’ அல்லது ‘பதில் நடவடிக்கையாகவோ’ பிரிட்டிஷ் அரசுடன் ஒத்துழைக்கும்.

என்ன செய்ய வேண்டும்?

எவ்வாறாயினும், ஏகாதிபத்தியத்திற்கும் உள்நாட்டு முதலாளித்துவத்திற்கும் இடையிலான பகைமையின் சமரசம் ஒரு தேசியப் புரட்சிக்கான அடிப்படைக் காரணத்தை அகற்றிவிடாது. இந்திய மக்களுக்கு விடுதலையின் அவசியம் தேசியவாத முதலாளித்துவ பிரிவின் நலன்களால் தீர்மானிக்கப்படுவதில்லை. ஏகாதிபத்தியத்துக்கும் உள்நாட்டு முதலாளித்துவத்துக்கும் இடையேயான ஒப்பந்தம் இந்திய மக்களை அரசியல் ஆதிக்கம் மற்றும் பொருளாதாரச் சுரண்டலில் இருந்து விடுவிப்பதில்லை. கிட்டத்தட்ட 98 சதவீத மக்கள் இன்னமும் அரசியல் உரிமைகள் இல்லாமல்தான் உள்ளனர். ஏகாதிபத்தியம் தனது பங்கைக் குறைத்துக் கொள்வதன்மூலம் உள்நாட்டு முதலாளித்துவத்திற்குப் பொருளாதாரச் சலுகைகளை வழங்குவதில்லை. மாறாக, உழைக்கும் மக்கள் ஏகாதிபத்தியத்திற்காக செய்யும் உற்பத்திக்கும் மேலாக உள்நாட்டு முதலாளித்துவத்திற்கான மதிப்பை உற்பத்தி செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டு, அதன்மூலம் உழைக்கும் மக்களின் சுரண்டலை மேலும் அதிகரிக்கும். இந்த நிலையில், தேசிய விடுதலைக்கான போராட்டத்தைத் தொடர வேண்டியது அவசியமாகும். தேசியவாத இயக்கம் என்பது பெரும்பான்மையான மக்களின் நலன்களைப் பிரதிபலிக்கும் வேலைத்திட்டத்துடன் கூடிய வெகுஜன இயக்கமாக இருக்கவேண்டும். இயக்கத்தின் வேலைத்திட்டம் சுயராஜ்யத் திட்டத்தில் இருந்ததைப் போன்ற குழப்பம் மற்றும் தெளிவின்மை ஆகியவற்றிலிருந்து விடுபட்டதாகவும் இருக்க வேண்டும்.

குறிப்பாக, விவசாயப் பிரச்சினையில் தேசியவாத இயக்கத்தின் நிலைப்பாடு தெளிவாக இருக்கவேண்டும். மக்கள்தொகையில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் விவசாயிகள். இந்திய சமூகத்தின் தற்போதைய நிலையில் இது மிக முக்கியமான பொருளாதார காரணியாகும். தேசிய விடுதலைக்கான இயக்கத்தில் அது உறுதியான பங்கை வகிக்கும். விவசாயிகளுக்கான போராட்டம் என்பது தேசியவாத இயக்கத்தின் முக்கிய பணிகளில் ஒன்றாக இருக்க வேண்டும். விவசாயிகளின் நம்பிக்கையை மீண்டும் பெற ஏகாதிபத்தியம் சாமர்த்தியமாக முயற்சிக்கிறது. கடந்த சில ஆண்டுகளில், பல மாகாணங்களில் நில உரிமையாளர் வர்க்கத்தின்மீது குத்தகை சீர்திருத்தச் சட்டங்களை அது கட்டாயப்படுத்தியுள்ளது. இது 1919-21இல் கடுமையான விவசாயக் குழப்பங்களால் உருவான ஆபத்தான சூழ்நிலையை கையில் எடுக்க உதவியது. விவசாயிகளின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் முயற்சியின் அடுத்தகட்டமாக, விவசாயத்திற்கான அரச ஆணையம் இருந்தது. இந்த நகர்வுகள் அனைத்திற்கும் பின்னால் உள்ள உள்நோக்கம் விவசாயிகளுக்கு உதவுவது அல்ல; மாறாக அவர்களை ஏமாற்றுவதுதான் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இந்தியாவில் இருந்து ஏகாதிபத்தியம் எடுத்துச் செல்லும் இலாபத்தின் முக்கிய ஆதாரமாக விவசாயிகள் மீதான மிருகத்தனமான  சுரண்டல் அமைகிறது. ஏகாதிபத்தியத்தின் மோசமான திட்டங்களை முறியடிக்கவும், விவசாயிகளின் நம்பிக்கையை மீளப் பெறவும் தேசியவாத இயக்கம் ஒரு தீவிரமான விவசாயத் திட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் அரசாங்கத்தால் முன்மொழியப்படும் சீர்திருத்த நடவடிக்கைகளின் உள்நோக்கத்தையும் அம்பலப்படுத்த வேண்டும்.

1923 தேர்தலுக்கு முன்னதாக சுயராஜ்ய கட்சி வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது:

“குத்தகைதாரருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக கட்சி நிற்கிறது என்பது உண்மைதான்; எனினும் அது நிலஉரிமையாளருக்கு ஏதேனும் அநீதி விளைவிப்பதாக இருந்தால், அந்த நீதியின் தரம் மோசமாக இருக்கும்.”

தேசியவாத இயக்கம் விவசாயிகளின் தீவிர ஆதரவைப் பெற விரும்பினால், இந்த மேற்கோளில் வெளிப்படுத்தப்பட்ட பிற்போக்குத்தனமான கண்ணோட்டத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும். நிலவுடைமை பெற்றவர்களின் வாக்குக்காக மீன்பிடிக்கும் கட்சிக்கு இத்தகைய வேலைத்திட்டம் அவசியம்; ஆனால் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் மக்களை வழிநடத்த முன்மொழியும் ஒரு கட்சிக்கு இது நிச்சயமாக தீங்கு விளைவிக்கும். நிலவுடைமையாளர்களின் சலுகைகள் நிரம்பிய நிலையைத் தொடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தால், விவசாயிகளுக்கு அநீதியை மட்டுமே இழைக்க முடியும். நிலவுடைமை வர்க்கம் என்பது விவசாயிகளின் இரத்தத்தை உறிஞ்சும் ஒரு சமூக ஒட்டுண்ணி. மேலும், கிட்டத்தட்ட நாட்டில் பாதியில் உள்ள நிலங்களுக்கு அரசாங்கமே நிலப்பிரபுவாக உள்ளது. நீதியின் சாரம் அங்கேயும் பொருந்துவதாக வேண்டும். எனவே, விவசாயிகளைப் பற்றிய சுயராஜ்யத் திட்டம் ஒட்டுண்ணி நிலஉரிமையாளர்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு வரம்பற்ற வாழ்வாதாரத்தை அளிப்பதாகவும் இருக்கிறது. தேசியவாத இயக்கத்தின் விவசாய வேலைத்திட்டம் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதாக இருக்கவேண்டும். விவசாயிகளைச் சுரண்டும் அனைத்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முகவர்களுக்கு எதிராக இரக்கமின்றி அது இயங்க வேண்டும்.

தேசியவாத இயக்கத்தின் திட்டம்

தேசிய விடுதலைக்கான இயக்கம் ஒரு மக்கள் கட்சியால் மட்டுமே தலைமை தாங்கப்பட்டு வெற்றிபெற முடியும். தெளிவாக வரையறுக்கப்பட்ட வேலைத்திட்டத்தின்படி செயல்படும் ஒரு கட்சியால் அது வழிநடத்தப்படாவிட்டால், தேசிய விடுதலை இயக்கம் ஒரு சுக்கான் இல்லாத கப்பலைப் போல தத்தளிக்கும். தேசிய விடுதலை இயக்கத்தின் நோக்கம் என்ன என்பதை பல ஆண்டுகளாகவே இந்தத் தலைவர்கள் நாட்டுக்கு சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுயராஜ்யம் என்பது தேசவிடுதலை என்பதைத் தவிர மற்ற எல்லாமாகவும் விளக்கப்பட்டுள்ளது. அதன் நோக்கம் தேசத்தின் விடுதலையைப் பெறவேண்டும் என்பதாக இல்லாமல் இருக்குமானால், அத்தகைய தேசிய இயக்கம் அதன் உண்மையான பொருளை இழந்துவிடும். இதற்கு சட்டபூர்வமான அல்லது அரசியல்சட்ட ரீதியான விளக்கம் எதுவும் தேவைப்படாது.

இதன் பொருள் என்னவெனில், தனக்கே உரிய அரசாங்கத்தை நிறுவவும், அரசியல்ரீதியான, பொருளாதாரரீதியான, கலாச்சார ரீதியான என்பது போன்ற தனது காரியங்களை தானே பார்த்துக் கொள்ளவும் ஆன சுதந்திரம் என்பதே ஆகும். தேசியவாத வேலைத்திட்டத்தின் இந்த அடிப்படையான அம்சம் இதுவரை தெள்ளத்தெளிவாக நாட்டின்முன் வைக்கப்படவில்லை. தேசியவாத இயக்கத்தை மறுசீரமைப்பதற்கான முதல் செயலாக இது செய்யப்பட வேண்டும். எந்த நிபந்தனைகளின்கீழ் தேசியவாதிகள் பதவி ஏற்க வேண்டும் என்ற சர்ச்சையானது இந்த முக்கிய பிரச்சினையை குழப்பிவிடக் கூடாது. இன்று இருக்கும் அனைத்து தேசியவாத கட்சிகளும் ஆதிக்கத்திற்கு உட்பட்ட அந்தஸ்து என்ற திட்டத்தில் உறுதியாக உள்ளன. அதையும்கூட உடனடியாகத் தரவேண்டும் என்றுகூட அவை கோரவில்லை. தற்போதைய மக்கள் பிரதிநிதித்துவம்அற்ற சட்டமன்றத்திற்கு ஓரளவிற்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு மிகவும் தீவிரமான சில பிரிவினரை திருப்திப்படுத்துவதாகவும்கூட இருக்கக்கூடும். இது தேசவிடுதலைக்கான போராட்டம் அல்ல. மாறாக, அது ஒரு கேலிக்கூத்தே ஆகும். அப்பட்டமான தேசத்துரோகம் என்றுகூடக் கூறலாம்.

மக்களுக்கு முழுமையான சுதந்திரம், அதுவும் நிபந்தனையற்ற சுதந்திரம் இருக்க வேண்டும். இந்த சுதந்திரத்தைக் கோருவதற்கும் அதற்காகப் போராடுவதற்கும் என ஒரு மக்கள் கட்சி இருக்க வேண்டும்.

மேம்பட்ட ஜனநாயகக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு குடியரசு வகைப்பட்ட அரசை நிறுவுவது என்பதே தேசவிடுதலையின் உறுதியான வடிவமாகும்.

வயதுவந்தோர் அனைவரின் (ஆண் – பெண் உள்ளிட்டு) வாக்குரிமையால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தேசிய சட்டமன்றம் மக்களின் உயர்ந்தபட்ச அமைப்பாக இருக்கும்; சாதி, வர்க்கரீதியான சிறப்புச் சலுகைகள் அனைத்தும் ஒழிக்கப்படும். நாடு முற்றிலுமாக ஜனநாயகப்படுத்தப்படும்.

இந்த தேசிய விடுதலையானது மக்களுக்கு மேலும் உறுதியான வசதிகளைத் தருவதாக இருக்க வேண்டும். அதாவது அவர்களின் உடனடியான பொருளாதாரக் குறைகளை நீக்குவதாக, உயர்ந்ததொரு வாழ்க்கைத்தரத்திற்கு உத்தரவாதம் அளிப்பதாக இருக்க வேண்டும். தேசவிடுதலையானது கீழ்க்கண்ட குறிக்கோளை நிறுவுவதாக அமைய வேண்டும்: நிலம் என்பது உழவர்களுக்கு மட்டுமே சொந்தமானது. நிலத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஆடம்பரமாக வாழும் ஒட்டுண்ணி வர்க்கங்கள் தங்கள் நலன்களை இழக்க நேரிடும். நிலவுடைமை வர்க்கத்தின் பாக்கெட்டுகளை வீங்கவைத்துக் கொண்டிருந்த பெரும்தொகைகள் இப்போது விவசாயிகளை, அவர்களின் சுமைகளிலிருந்து விடுவிப்பதாக இருக்கும். நிலவாடகையானது அனைத்துவகையிலும் குறைக்கப்படும். பொருளாதார ரீதியாக கட்டுப்படியாகாத நிலங்களை வைத்துக்கொண்டு பரிதாபகரமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவரும் ஏழை விவசாயிகளுக்கு நிலவாடகையிலிருந்து முற்றிலுமாக விலக்கு அளிக்கப்படும். கடன் கொடுப்பவர்களின் அத்துமீறலில் இருந்து விவசாயிகள் பாதுகாக்கப்படுவார்கள். தேசிய அரசாங்கம் விரிவான விவசாயக் கடன்கள் மூலம் விவசாயிகளுக்கு உதவும். விவசாயத்தில் இயந்திரங்களை அறிமுகப்படுத்துவதன் மூலமும், இலவச ஆரம்பக்கல்வி மூலமாகவும் விவசாயிகளின் கலாச்சார நிலை உயர்த்தப்படும்.

தேசிய அரசாங்கம் தொழில்துறை தொழிலாளர்களுக்கு எட்டுமணிநேர வேலை மற்றும் குறைந்தபட்ச வாழ்க்கை ஊதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கும். நாகரீகமான வேலைநிலைமைகள் மற்றும் வீட்டுவசதி குறித்து சட்டம் இயற்றப்படும். வேலையில்லாத தொழிலாளர்களுக்கு அரசு பாதுகாப்பு அளிக்கும்.

ரயில்வே, நீர்வழிகள், தந்தி போன்ற பொதுப்பயன்பாடுகள் தேசத்தின் சொத்தாக இருக்கும். அவை தனிப்பட்ட லாபத்திற்காக அல்லாமல், பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவே இயக்கப்படும்.

தொழிலாளர்கள் (விவசாயிகளும்) ஒன்றிணைவதற்கான முழு சுதந்திரமும், தங்கள் நலன்களைக் காத்துக்கொள்வதற்காக வேலைநிறுத்த உரிமையையும் பெறுவார்கள்.

மதம் மற்றும் வழிபாடுகளில் முழுமையான சுதந்திரம் இருக்கும். தேசிய இன மற்றும் மதரீதியிலான சிறுபான்மையினர் சுயாட்சி உரிமையை அனுபவிப்பார்கள்.

பெரும்பான்மையான மக்களை ஒருங்கிணைத்து, தவிர்க்கமுடியாத வகையில் அவர்களை செயலில் ஈடுபடுத்தும் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் இவை. (முதலாளித்துவ மற்றும் நிலஉடைமை வர்க்கங்களின் நலன்களைப் பாதுகாத்தல்) என்ற முதலாளித்துவ தேசியவாதத்தின் வேலைத்திட்டம் நாட்டைக் காட்டிக் கொடுத்துள்ளது. முதலாளித்துவத்தின் துரோகத்தையும் தயக்கத்தையும் பொருட்படுத்தாமல் நாடு தன்னை உறுதிப்படுத்திக் கொண்டு விடுதலையை நோக்கி நகர வேண்டும். பாசாங்குத்தனமான முதலாளித்துவ அரசியல்வாதிகளின் செல்வாக்கிலிருந்து தேசிய காங்கிரஸ் விடுவிக்கப்பட வேண்டும். சுதந்திரத்திற்காக நேர்மையாகவும் தைரியமாகவும் போராடத் தயாராக இருப்பவர்களே மக்களின் குரலை எதிரொலிக்கும் பேச்சாளர்களாக மாறவேண்டும். தேசவிடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல விரும்பும் கட்சி, வாக்காளர்களில் சில அதிர்ஷ்டசாலிகளை அல்ல; வாக்குரிமையற்ற பெரும்பான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் கட்சியாக மாற வேண்டும். தற்போது கவுன்சிலின் மாமன்றம் மக்கள் கட்சியின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தவே விழைகிறது. அது மேலும் பரந்த செயல்பாட்டுக் களங்களை கண்டறிய வேண்டியது அவசியமாகும். தேசிய விடுதலை, அனைத்து வகையிலும் தேசிய வாழ்க்கையை முழுமையாக ஜனநாயகப்படுத்துவது – இதுதான் தேசியவாத மேடையின் அடிப்படையான தூண்கள். இந்தத் திட்டத்தை வென்றடைவதற்கான போர் முழக்கம் இதுதான்: ”நிலம்- உணவு- கல்வி.”

தமிழில் : வீ. பா. கணேசன்

மார்க்சிஸ்ட் (ஆங்கிலம்) , Download தொகுதி 36, இதழ் 3-4, ஜூலை-டிசம்பர் 2021 இல் வெளியானது. (சுருக்கப்பட்டது)

புதிய சூழலில் இந்துத்துவா எதிர்ப்பு !

– பிரகாஷ் காரத்

இந்துத்துவா வகுப்புவாத சக்திகளையும், ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்தையும் எதிர்கொள்ள, அரசியல் தளத்திலும், சித்தாந்த தளத்திலும், சமூக மற்றும் பண்பாட்டு தளத்திலும் திட்டவட்டமான அணுகுமுறைகளை உருவாக்கி  முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். இது நம்முடைய முக்கிய நிகழ்ச்சி நிரலாக உள்ளது.

வகுப்புவாத சக்திகளை எதிர்கொள்வது பற்றி, கடந்த காலத்தில் எடுத்த முடிவுகள் இப்போது போதுமானதாக இல்லை. முந்தைய நிலையில், வகுப்புவாத சக்திகள் சில பிரிவினை திட்டங்களை முன்னெடுத்து இந்து மக்களின் ஆதரவை பெற முயல்வதுடன், சிறுபான்மையினருக்கு எதிரான திட்டங்களை முன்னெடுப்பார்கள். ஆனால் இப்போது இந்துத்துவா வகுப்புவாத சக்திகள் அரசு அதிகாரத்துடன் இயங்குகிறார்கள். இது கடந்த கால சூழலில் இருந்து மாறுபட்டது. இப்போதைய புதிய நிலைமைகளை பயன்படுத்தி, குடியரசின் தன்மையையே மாற்றியமைத்து, அரசியல் சாசனத்தை மாற்றியமைத்து,  ‘இந்து ராஷ்ட்டிராவை’ நோக்கி செயல்பட்டு வருகிறார்கள்.  ஆதரவுத் தளத்தை விரிவாக்கிட, முந்தைய காலத்தில் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் இருந்து இது மாறுபட்டது ஆகும். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அடிப்படையான இலக்குகளை நிறைவேற்றக்கூடிய போக்கினை நாம் எதிர்கொண்டு வீழ்த்த வேண்டியுள்ளது.

பாஜக எப்படிப்பட்ட கட்சி ?

மேம்படுத்தப்பட்ட நம்முடைய கட்சி திட்டம், பாரதிய ஜனதா கட்சியை பிற முதலாளித்துவ கட்சிகளைப் போன்ற இன்னொரு சாதாரண முதலாளித்துவக் கட்சியாக பார்க்கவில்லை. பாஜகவை உருவாக்கியதும், வளர்த்தெடுப்பதும் பாசிச வகைப்பட்ட தத்துவத்தால் வழிநடத்தப்படும் ஆர்.எஸ்.எஸ் இயக்கமாகும். அவர்கள் அதிகாரத்திற்கு வரும்போது, அரசு இயந்திரத்தை பயன்படுத்தி ‘இந்து ராஷ்ட்டிராவை’ நோக்கிய பயணத்தை வேகப்படுத்த முயற்சிப்பார்கள் என்று நம் திட்டத்திலேயே குறிப்பிட்டுள்ளோம். 2000 ஆண்டில் நமது கட்சி திட்டத்தை மேம்படுத்திய போது வாஜ்பாய் அரசாங்கம் இருந்தது.

‘இந்து ராஷ்ட்டிரா’ என்பது இந்து ராஜ்ஜியம் அல்ல. அதாவது அது  மத தலைவர்களின் ஆட்சி அல்ல. (ஈரான் நாட்டில் நடப்பதை மத தலைவர்களின் ஆட்சி எனலாம், அதனை ஒத்த ஆட்சியாக இது இருக்காது). ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆட்சி என்பதுதான் ‘இந்து ராஷ்ட்டிரா’ என்பதன் பொருள் ஆகும்.  ஏற்கனவே அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்ட பின்னணியில் ‘இந்து ராஷ்டிரத்தைக்’ கட்டமைக்கும் பணியும் ஏற்கனவே துவங்கி விட்டது. பாஜக மக்களவையில் பெரும்பான்மை பெற்றுள்ளது. அரசமைப்பின் அடிப்படையான சில அம்சங்களையும், குணாம்சத்தையும் மாற்றியமைக்க முயல்கிறது. நீதித்துறையினுடைய தன்மையையும், அதிகார வர்க்கத்தின் தன்மையையும், ராணுவத்தின் தன்மையையும் மாற்றியமைக்க முயல்கிறார்கள்.

அக்னிபத் திட்டத்தை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். அந்த திட்டத்தின் நோக்கம் என்ன?. ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முறையை அரசியல் அடிப்படையிலானதாக திட்டமிட்ட விதத்தில்  மாற்றியமைப்பதுதான் அதன் நோக்கம். இவ்வகையில் அவர்கள் ராணுவத்தில் ஆள் எடுக்கும் தன்மையையே மாற்றியமைக்க முயற்சிக்கிறார்கள்.

பரந்துபட்ட உத்தி அவசியம்

எனவே இதுதான் இப்போதைய நிலை என்கிறபோது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை  தேர்தல் களத்தில் மட்டும் நடத்தினால் போதாது என்பதை உணர முடியும். தேர்தல் கால உத்திகள் மட்டும் பலன் கொடுக்காது. அவர்கள் தேர்தல் களத்திலும், அரசியல் தளத்திலும் மட்டுமே செயல்படுவதில்லை. தங்களை கலாச்சார அமைப்பு என்று கூறிக்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ், இந்திய குடியரசின் பண்பு நலன்களை மாற்றியமைப்பதையே  இலக்காக கொண்டு செயல்படுவதை ஒட்டுமொத்தமாக கணக்கில் எடுத்து, அனைத்தையும் உள்ளடக்கிய விரிவான உத்தியோடு செயல்பட வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ்/பாஜக அமைப்புகளால், இந்திய தேசியம் என்ற பெயரில் இந்து பெரும்பான்மை வகுப்புவாதத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்துள்ளது. 23 வது அகில இந்திய மாநாட்டின் அரசியல் தீர்மானத்தில் இதை நாம் குறிப்பிட்டுள்ளோம். மக்களின் மனங்களில் தாக்கம் ஏற்படுத்தி, கருத்தை மாற்றியமைக்க அவர்களால் முடிந்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் வாழும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சாதாரண மக்களின் மனங்களில் தம் கருத்துக்களை ஆழமாக பதித்துள்ளார்கள். அவர்கள் மட்டுமே  உண்மையான தேசியவாதிகள் என்றும், தேசத்தின் மீது அக்கறை கொண்ட சக்திகள் என்றும் பதிய வைத்துள்ளார்கள்.

இந்துக்கள் வலுவடைந்தால்தான் தேசம் வலுப்படும் என்கிறார்கள். இந்த வாதத்தின் மற்றொரு பகுதி இஸ்லாமியர்கள் இந்த தேசத்தை பலவீனமாக்குகிறார்கள் என்பதாகும். இந்துக்கள் என்றால் ’நாம்’, இஸ்லாமியர்கள் என்றால் ’அவர்கள்’. ‘நாம்’ –  எதிர் –  ‘அவர்கள்’ என்ற உணர்வினை உருவாக்கியுள்ளார்கள். இது கணிசமான மக்களை சென்று சேர்ந்திருக்கிறது.

குறிப்பாக உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இதுதான் நிலைமை. பாஜகவை மக்கள் வலுவான தேசியவாத  சக்தியாக பார்ப்பதுடன், பெரும்பான்மை மக்களுக்கு நல்லது செய்வதற்கே அவர்கள் இருப்பதாக பார்க்கிறார்கள். இந்த சூழலை எவ்வாறு எதிர்கொள்வது?

கடந்த  21, 22 மற்றும் 23 மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானத்திலும், அரசியல் ஸ்தாபன அறிக்கையிலும் ‘இந்துத்துவாவை எதிர்கொள்வது’ என்ற தலைப்பிலான பகுதி இடம்பெற்று வந்துள்ளது. கடந்த காலங்களில் நாம் பொதுவாக காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போராடியிருக்கிறோம். பல மாநிலங்களில் இதர முதலாளித்துவக் கட்சிகளை எதிர்த்துப் போராடியிருக்கிறோம். ஆனால் இது அதிலிருந்து வேறுபட்ட ஒன்றாகும். அதனால்தான் நமது தீர்மானங்களில் தனியாக குறிப்பிட வேண்டி வந்தது.

எனவே 2015ஆம் ஆண்டில் இருந்து தனித்துவமாக, இதுபோல சில திட்டவட்டமான  உத்திகளை உருவாக்க முயற்சிக்கிறோம்.  அரசியல் செயல்பாடுகளிலும், கருத்தியல் செயல்பாடுகளிலும் இந்துத்துவா சக்திகளை எதிர்கொள்ளும் விதத்தில் பணிகளை திட்டமிட்டு முன்னெடுக்க கட்சியை தயார்ப்படுத்த வேண்டியுள்ளது. பல தளங்களிலும் நாம் கால் பதிக்க வேண்டியுள்ளது என்பதை கட்சி அணிகளுக்கு உணர்த்திட வேண்டும்.

கட்சியும், பல்வேறு வர்க்க வெகுஜன அரங்கங்களும், தமது வேலை பாணியை மாற்றியமைக்க வேண்டும். கருத்தியல் தளத்திலும், சமூக – பண்பாட்டுத் தளத்திலும், கல்வித் தளத்திலும் பணிகளை திட்டமிட வேண்டும். கடந்த காலத்தில் இந்த பணிகளை பொதுவாக அலட்சியப்படுத்தியே வந்திருக்கிறோம். கட்சி சில முழக்கங்களை முன்னெடுக்கும், தேர்தலை எதிர்கொள்ளும், வர்க்க – வெகுஜன அமைப்புகள் சில முழக்கங்களை முன்னெடுப்பார்கள், போராட்டங்களை நடத்துவார்கள்.

கருத்தியல் தளத்தில் கட்சி போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக பேசிவந்திருக்கிறோம். ஆனால் இதுவரை அதில் என்ன செய்திருக்கிறோம்? பொதுவாக நம்முடைய கட்சி தொழிலாளி வர்க்க கட்சியாகும். நம்முடைய கட்சியினுடைய கருத்தியல் என்பது தொழிலாளி வர்க்க கருத்தியலே. ஆனால் மும்பை, தில்லி போன்ற பெருநகரங்களில் வாழும்   தொழிலாளர்களோடு பேசினால் அவர்களில்  கணிசமானோர் பின்பற்றும் சித்தாந்தம் இந்துத்துவா சித்தாந்தமாக உள்ளது. இந்துத்துவாவை பின்பற்றிக் கொண்டே சிலர்  நம்முடைய சங்கங்களிலும் இருப்பார்கள். அதுதான் இப்போதைய சூழல்.

எனவே கருத்தியல் தளத்தில் நடத்த வேண்டிய போராட்டத்தில் நாம் முன்னேற வேண்டியுள்ளது.  தொழிற்சங்கம் மட்டுமே இந்த போராட்டத்தை முன்னெடுத்திருக்க முடியாது. கட்சிக்கு தான் அதில் கூடுதலான பங்கு உள்ளது. எனவே அரசியல் தளத்தில் மட்டுமல்லாது, கருத்தியல் மற்றும் சமூக தளத்திலும் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.

சில மாநிலங்கள் இந்த சூழலில் விதிவிலக்காக அமைந்துள்ளன. தமிழ்நாட்டினை உதாரணமாக பார்க்கலாம். தமிழ் நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்புகள் பிரதான இடத்தில் இல்லை. ஆனாலும் அவர்கள் வளர முயற்சிக்கிறார்கள். இன்றுள்ள நிலைமையை கணக்கில் எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டிலோ, ஆந்திராவிலோ, கேரளத்திலோ ஆர்.எஸ்.எஸ் அமைப்பினுடைய செல்வாக்கிற்கு மக்கள் உட்பட மாட்டார்கள் என்ற நினைப்பில் இருந்துவிடக் கூடாது. ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் அவர்கள் கணிசமான செல்வாக்கை பெற்றுள்ளார்கள். பிரதான சக்தியாக உள்ளார்கள். தெலங்கானாவிலும் சில முன்னேற்றங்களை அடைந்துள்ளார்கள். தமிழ் நாட்டில் ஒரு பெரிய சக்தியாக வளர்வதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்று அவர்களுக்கு தெரியும். அதற்கு இந்த மாநிலத்தின் அரசியல், கருத்தியல், சமூக சூழல் ஒரு காரணமாக உள்ளது. திராவிட சித்தாந்தம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை சொல்லலாம். ஆனாலும் அவர்கள் இந்த நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும், தமது  குறைபாடுகளை மீறி முன்னேறுவதற்கும் பல தளங்களிலும் முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

பட்டியல் இனத்தின் மீது குறி !

ஆர்.எஸ்.எஸ் என்றால் ”உயர்” சாதி அமைப்பு எனபலர் நினைக்கிறார்கள். ஆம் அவர்கள்  சிந்தனை, கருத்தியல் இரண்டிலும் நிச்சயமாக “உயர்” சாதி ஆதிக்க கருத்தியல் கொண்டவர்கள்தான். ஆனால் ”உயர்” சாதியினரை மட்டும் கொண்ட கட்சியாக மட்டுமே அவர்கள் இல்லை.

உத்திரப்பிரதேசத்தை எடுத்துக் கொண்டால் ஓபிசி யை சேர்ந்த பெரும்பகுதியினர் பாஜக ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். அதே போல் தலித் மக்களில் குறைந்த பட்சம் 50 சதவிகிதம் பாஜக ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். இது எப்படி சாத்தியமானது?. முன்பு ”உயர்”  சாதியினர் கட்சியாக பார்க்கப்பட்ட கட்சி,  இன்றைக்கு ஓபிசி, எஸ்சி /எஸ்டி  மத்தியிலும் வளர்ந்திருக்கிறது என்றால் இது எப்படி நடந்தது? அவர்கள் குறிப்பாக சில சாதிகளைக் குறிவைத்து தங்களுடைய பணிகளைச் செய்தார்கள். அனைத்து இந்து மக்களின் பிரச்சனைகளையும் எடுப்பவர்களாக, அவர்களுக்கான கட்சியாகவும்  தங்களை அடையாளப்பட வைப்பதற்கான முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த காலத்தில் ஆர்எஸ்எஸ் உருவாக்கிய அரசியல் கட்சி யான ஜன சங்கத்தை பனியா கட்சி என்று சொல்வதுண்டு, அதற்குப் பிறகு பாஜக உருவான பின்பும் தொடக்க கட்டத்தில் அவர்களை பனியா கட்சி என்றே குறிப்பிடப்பட்டு வந்தது.

பனியா என்பது வடமாநிலத்தில் உள்ள ஒரு குறிப்பட்ட சமூகம். குறிப்பாக வியாபாரிகள் வணிகர்கள்; அவர்கள் ஜெயின் அல்லது குப்தாக்களாக இருக்கலாம். மார்வாடிகளாக இருக்கலாம். ஒரு வியாபாரம் செய்யக்கூடிய சமூகம். அவர்கள் மத்தியில் பாஜக வலுவாக இருந்தது. எனவே பாஜக அல்லது அதற்கு முன்னதாக ஜனசங்கத்தினுடைய வளர்ச்சி என்பது நகர்ப்புறங்களைச் சார்ந்து இருந்தது. ஆனால் இன்றைக்கு உத்தரப்பிரதேசத்தில் பட்டியலினத்துக்கான தொகுதிகளில் பெரும்பான்மையான தொகுதிகளில் அவர்கள் வெற்றிபெற முடிகிறது.

மாயாவதியினுடைய பகுஜன் சமாஜ் கட்சி  இருக்கிறது என்பது உண்மைதான். அந்த கட்சி யார் மத்தியில் இருக்கிறது என்று சொன்னால், பட்டியல் சாதிகளில்  உள்ள குறிப்பிட்ட துணை சாதி மத்தியில்தான் அவர்கள்  ஆழமாக இருக்கின்றனர். பட்டியல் இனத்தின் இதர துணை சாதிகளுக்குள்  பாஜக ஏகமாக வளர்ந்துள்ளது. பட்டியல்/பழங்குடி பிரிவினரை அவர்கள் குறிவைக்கிறார்கள்.

கடந்த 30, 40 ஆண்டுகளாகவே ஆர்எஸ்எஸ் பழங்குடியினர் மத்தியில் ஆழமாக வேலை செய்து வந்தது.  ஒரு நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையில்தான் அவர்கள் பணியாற்றி வந்தார்கள். இவர்களின் ஊடுருவலை நாம் கவனித்து நோக்க வேண்டும்.

பாஜக என்பது நால் வருணத்தில் நம்பிக்கை உள்ள கட்சிதான், மதவாதத்தைப் பின்பற்றுகிற கட்சிதான். இருந்தாலும் அவர்களுடைய அரசியல் நோக்கத்திற்காக அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் தேவை அவர்களுக்கு இருக்கிறது. அதனை முயற்சிக்கிறார்கள்.

தெரிந்த பல அமைப்புகள் ஆர்எஸ்எஸ் அமைப்புகளாக இருக்கும். இந்து முன்னணி போல சிலதை சொல்லலாம். ஆனால், தெரியாமல் பல்வேறு  அமைப்புகள், என்ஜிஓ-கள் ஆர்எஸ்எஸ் வழிகாட்டி நடத்தக்கூடிய அமைப்புகளாக இருப்பார்கள். குறிப்பாக இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் அவர்களுக்கு நிதி என்பது ஒரு பிரச்சனையாக இல்லை.

கேரளாவில் பழங்குடியின மக்கள் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 2 சதவிகிதம் கூட இருக்க மாட்டார்கள். ஆனாலும் ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலில் செயல்படக்கூடிய பெரும்பகுதி என்ஜிஓ கள் செயல்படும் பகுதி பழங்குடியின மக்கள் பகுதிதான். எனவே ஆர்எஸ்எஸ் நடவடிக்கைளுடைய எல்லை என்ன ?ஆழம் என்ன ? அதனுடைய தன்மை என்ன? வகைகள் என்ன ? என்பதை சரியாக புரிந்துகொண்டு எதிர்க்க வேண்டும்.

கருத்தியல் நடவடிக்கைகள்

இதற்கான திட்டத்தை உருவாக்குவதற்கான பரந்த வழிகாட்டுதல், 23 வது அகில இந்திய மாநாட்டின் அரசியல் ஸ்தாபன அறிக்கையில் தெளிவாக தரப்பட்டுள்ளது. அதில் முதல் விசயம், கருத்தியல் நடவடிக்கைகள் ஆகும்.  இந்துத்துவ வகுப்புவாத கருத்தியலை வீழ்த்துவதற்கான நடவடிக்கைகளுக்கான ஏராளமான விபரங்களை கொண்ட பிரசுரங்கள், வகுப்பு குறிப்புகள், பிரச்சார கருவிகளை, சமூக வலைத்தள உள்ளடக்கங்களை உருவாக்க வேண்டும். இவற்றை உள்ளூர் மட்டத்திலேயே சுலபமாக செய்துவிட முடியாது. கட்சியின்  மத்தியக்குழுவும், மாநிலக்குழுவும் இணைந்து குறிப்பிட்ட காலவரையறைக்குள் இதனை முடிக்க வேண்டும். சமூக வலைத்தளத்தையும் வலுப்படுத்தி கருத்தியல் பிரச்சார நோக்கில் பயன்படுத்த வேண்டும்.

இரண்டாவது விசயம், கட்சி மக்களோடு உயிரோட்டமான தொடர்பில்,  இரண்டற  கலந்திருக்க வேண்டும் என்கிற மாஸ்லைன் கடைப்பிடிப்பது.  மக்கள் மத்தியில் நம்முடைய தலையீடுகளும், பணிகளும் விரிவாக நடக்க வேண்டும் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். இது  கட்சிக்கும், வெகுஜன அமைப்புகளுக்கும் பொருந்தும்.  மக்களோடு உயிர்ப்பான ஒரு  தொடர்பில் இருக்க வேண்டும் என்பது  கொல்கத்தா பிளீனத்தில் இருந்தே சொல்லப்படுகிறது. மக்களுடன் உயிரோட்டமான தொடர்பு என்று சொல்வதன் மற்றொரு அம்சம், பல்வேறு நல நடவடிக்கைகளை, சமூக சேவை  நடவடிக்கைகளை முன்னெடுப்பது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் இது போன்ற பணிகளை  மேற்கொள்கிறார்கள். நாம் கட்சியாகவும், வர்க்க வெகுஜன அமைப்புகளின் வழியாகவும் இதனைச் செய்ய வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கல்வி தளத்தில் செயல்படுகிறது. அவர்களை போல ஆயிரக்கணக்கான பள்ளிக்கூடங்களை நாம் நடத்த முடியாது. ஒன்றிரண்டு நடத்தலாம். ஆனால்  இளைஞர், மாணவர் அமைப்புகள்  கல்வி தளத்தில்  பங்களிக்க முடியும். உதாரணமாக மாலை நேர கல்வி (டியூசன்) மையங்கள் நடத்தலாம்.  தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் நடத்தலாம். படிப்பு வட்டங்கள், நூலகங்களை நடத்த முடியும்.

அதே போல, பண்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். பண்பாட்டு நடவடிக்கை என்றாலே  கலைக்குழு அமைப்பு, பாடல்குழு, வீதிநாடகக்குழு என்பது மட்டுந்தான் நினைவில் வருகிறது. அந்த பணிகள் இன்னும் பரந்து பட்டதாக இருக்க வேண்டும். நமக்கு அப்பாற்பட்ட மக்களை ஈடுபடுத்தகூடிய விதமான நடவடிக்கைகளாக செய்ய வேண்டும். உதாரணமாக புத்தகத் திருவிழாக்களை சொல்லலாம். மாணவ/மாணவியருக்கான பேச்சு போட்டி, கட்டுரைப்போட்டிகள் நடத்தலாம். இந்த நடவடிக்கைகளை கட்சியாக மட்டும் நடத்த முடியாது. வர்க்க வெகுஜன அமைப்புகளும் செய்ய வேண்டும். குறிப்பாக தொழிற்சங்கள் சில முயற்சி எடுத்து, தொழிலாளர் வாழும் பகுதிகளில் பண்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்.

அடுத்து வளர்த்தெடுக்க வேண்டியது பாலர் சங்கம்,  சில மாநாடுகளாகவே நாம் பாலர் சங்கம் பற்றி பேசுகிறோம். இந்த விசயத்தில் தீவிர முன்முயற்சி ஏதும் இல்லை. அதனால்தான் பாலர் சங்கத்தை உருவாக்குவதை மாநாட்டின் கடமையாகவே நாம் வரையறுத்திருக்கிறோம். கேரளாவில் இவ்விசயத்தில் நமக்கு நல்ல அனுபவம் இருக்கிறது. ஒரு பரந்த அமைப்பாக பாலர் சங்கத்தை கட்டமைத்திருக்கிறார்கள். பாலர் சங்கத்தை உருவாக்கும் போது, கட்சி ஏற்கனவே கணிசமாக இருக்கும் பகுதி, செல்வாக்கு இருக்கும் பகுதியில் தொடங்கினால், இதர பகுதிகளுக்கும் விரிவாக்க முடியும் என்பது கேரள அனுபவம்.

மத விழாக்கள்

கோவில் திருவிழாக்களிலும், மத விழாக்களிலும் பங்கெடுத்தல் அடுத்து வருகிறது. பொதுவாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கோவில்களை, மத நம்பிக்கைகளை பயன்படுத்துகிறார்கள். கோவில் என்று சொல்லும் போது மதம் சார்ந்த நடவடிக்கைகள் இருக்கும். அடுத்து  கோவில் திருவிழாக்கள் என்று சொல்லும் போது அது மதம் சார்ந்த நடடிவடிக்கையாக மட்டும் இல்லாமல் ஒரு சமூகம் சார்ந்த நடவடிக்கையாகவும் இருக்கும் ஏரளாமான மக்களுடைய பங்கேற்பும் இருக்கும். நாம் சமூகம் சார்ந்த நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்க முடியாது.

திருவிழாக்களை நாம் முற்றிலும் நிராகரித்துவிட முடியாது. ஆனால் எந்த திருவிழாவில் பங்கேற்பது. எந்த அளவில் பங்கேற்பது என்பது பற்றி  ஓரே சீரான முடிவினை மேற்கொள்ள முடியாது. ஒவ்வொரு திருவிழாவின் தன்மையை பொருத்து முடிவு செய்ய வேண்டும். சில திருவிழாக்கள் முழுக்க முழுக்க மதம் சார்ந்த நடவடிக்கையாக மட்டும் இருக்கும். அதில் சமூக ரீதியான  பங்கேற்பு பெரியதாக இருக்காது. எனவே ஒவ்வொரு திருவிழாக்களின் தன்மையை கணக்கில் எடுத்து உள்ளூர் மட்டத்தில் முடிவு எடுக்க வேண்டும்.

கோயில்களுக்கும் சமூக வாழ்க்கையில் பாத்திரம் உள்ளது. அவைகளை ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்புகள் கையகப்படுத்துகிறார்கள். இந்துத்துவா நடவடிகைகளுக்கு பயன்படுத்துகிறார்கள். நாம் அதனை அப்படியே தங்குதடையில்லாமல் அனுமதிக்க முடியாது. எனவே கோயில் நிர்வாகத்தில் நாமும் தலையிட வேண்டும். அதற்காக கட்சியின் முக்கிய ஊழியர்கள் அதனை செய்ய முடியாது. கட்சி ஆதரவாளர்கள், மதச்சார்பற்ற மனநிலை கொண்ட நம்பிக்கையாளர்கள் அதில் இணைந்திட முடியும். இது அத்தனை எளிதாக இருக்காது. ஆனால் நாம் இதன் மூலமே கோயில்களை ஆர்.எஸ்.எஸ் செயல்பாட்டுக்கான  களமாக மாறாமல் தடுக்க முடியும்.

விளையாட்டு விழாக்கள், யோகா பயிற்சி போன்ற வேறு பல சமூகம் சார்ந்த நடவடிக்கைகளும் அவசியமே.

பொதுவாகவே மக்கள் மத்தியில் மத உணர்வு அதிகரித்துள்ளது. (மதவாதத்தை குறிப்பிடவில்லை). கிருத்துவர்கள், இஸ்லாமியர்கள் மத்தியிலும் மத உணர்வு கூடுதலாகியுள்ளது. மதத்திற்கு எதிரான போராட்டத்தை நாம் நடத்துவதில்லை. அதற்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. மதவாத சக்திகள், மதவெறி சக்திகளை எதிர்த்த போராட்டத்திற்குத்தான் முன்னுரிமை கொடுக்கிறோம்.

நேரடியாக மதத்தை விமர்சிக்காத அதே சமயத்தில் அறிவியல் ரீதியான கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும், அதே போல முற்போக்கான சிந்தனைகளை உருவாக்குவதற்கான முயற்சிகளை  மேற்கொள்ள வேண்டும்.  மூடநம்பிக்கைகளையும்,  பழமைவாதத்தையும் எதிர்த்து பிரச்சாரம் செய்ய வேண்டும். இதுபோன்ற முயற்சியின் மூலம் சமூகத்தை  அறிவியல் பாதையில், முற்போக்கு பாதையில் செலுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

சிறுபான்மை வகுப்புவாதம்

ஆர்எஸ்எஸ் இந்துத்துவச் சக்திகள் வளர்கிறார்கள். அந்த வளர்ச்சி மட்டும் தனியாக நடப்பதில்லை. இன்னொரு பக்கம் இஸ்லாமிய மத அடிப்படை வாதிகளும் வளர்கிறார்கள். அதிலிருந்தும் ஆர்.எஸ்.எஸ் பலனடைகிறது. 1990 களில் கோவையில் என்ன நடந்தது என்பதைப் பார்த்தோம்.

பொதுவாக நாடு முழுவதுமே இஸ்லாமிய மக்கள் மிக மோசமான தாக்குதலுக்கு ஆளாகிவருகிறார்கள். குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில்  இரண்டாம்தர குடிமக்களாக வேகமாக மாற்றப்பட்டு வருகிறார்கள். எல்லாக் குடிமக்களுக்கும் உரிய அடிப்படையான உரிமைகள் கூட இஸ்லாமிய மக்களுக்குமறுக்கப் படுகின்றன. எனவே இந்த மாநிலங்களில் இஸ்லாமிய மக்கள்   விரக்தியின் விளிம்பிற்குத் தள்ளப்படுகிறார்கள். அந்த மாதிரியான சூழலில் அவர்கள்  இஸ்லாமிய அடிப்படைவாத, தீவிரவாத  அமைப்புகள் பக்கம் திரும்புவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

குறிப்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அதனுடைய அரசியல் கட்சியான எஸ்டிபிஐ, அதைப்போல ஜமாத்-இ-இஸ்லாமி அதனுடைய அரசியல் கட்சியான வெல்பேர் பார்ட்டி போன்றவற்றை நோக்கி ஒரு பகுதி சிறுபான்மையினர்  திரும்ப வாய்ப்பு இருக்கிறது.

தீவிரவாத போக்குகள்  சிறுபான்மை மக்கள் மத்தியிலிருந்து வந்தாலும் அதை கடுமையாக எதிர்க்க வேண்டும். இந்துத்துவ சக்திகளை எதிர்த்து விட்டு, சிறுபான்மை தீவிரவாதத்தை எதிர்க்கவில்லை என்று சொன்னால், சாதாரண மக்களுக்கு நம் மீது நம்பகத்தன்மை வராது. அது ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு சாதகமாகிவிடும். நம்முடைய நோக்கம் அனைத்து மதங்களையும் சார்ந்த மக்களை ஒரே அணியில் இணைத்து மதவெறிக்கு எதிரான, மதவாதத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான நடவடிக்கைகளை உள்ளூர் அளவில் திட்டமிட்டு, திட்டவட்டமாக முன்னெடுக்க வேண்டும். மாநில அளவிலும், அகில இந்திய அளவிலும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நாடும், நாட்டு மக்களும்  எதிர்கொள்ளும் தீவிர அபாயத்திற்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும்.

தமிழில்: உ.வாசுகி

தொகுப்பு: எம்.கண்ணன் (தீக்கதிர்)

மதமும் வகுப்புவாதமும்

சீத்தாராம் யெச்சூரி

(2002 நவம்பரில் சேவியர் சமூக சேவை கல்வி நிறுவனத்தில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்)

தமிழில்: கே. ராமசுப்பிரமணியன்

இன்றைய சூழல், அச்சுறுத்துவதாகவும், வகுப்புவாத பாசிச கருமேகங்கள் சூழ்ந்துள்ளதாகவும் இருக்கிறது. நவீன இந்தியாவின் அடித்தளத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசின் தன்மையை, சகிப்புத் தன்மையற்ற பாசிச சமூகமாக மாற்றிட அனைத்து நடவடிக்கைகளும் மிக வேகமாக எடுக்கப்படுகின்றன. சமீபத்தில் அரசின் ஆதரவுடனே குஜராத் மாநிலத்தில் நடந்த உறைய வைக்கும் வகுப்புவாத படுகொலைகள், வகுப்புவாத அரக்கனின் கோர முகத்தை வெளிக்காட்டியது. இதற்கு முன்பு குஜராத்திலுள்ள கிறிஸ்துவர்களுக்கு எதிரான மத வன்முறைகள் மற்றும் ஒடிசா போன்ற பல இடங்களில் நடந்துள்ள வகுப்புவாத வெறியாட்டங்களும், கிரஹாம் ஸ்டெயின்ஸ் குழந்தைகளோடு எரித்துக் கொல்லப்பட்டதும் – இவை அனைத்தும் சகிப்புத் தன்மையற்ற பாசிச முகத்தை வெளிக்காட்டுகிறது.

இன்று இந்திய நாட்டுப்பற்றாளர்கள் முன் உள்ள மிகப் பெரிய சவால் என்பது நாம் அறிந்த இந்தியாவை பாதுகாப்பதே ஆகும்.

எனக்களித்த தலைப்பிற்குள்ளே செல்வதற்கு முன்,  சமகால இந்திய அரசியலில், சமூக, பொருளாதார வாழ்வில் ஏன் இத்தகைய அபாயகரமான பண்பு மாற்றம் ஏற்படுகிறது என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

வகுப்புவாத வன்முறைகளுக்கான காரணங்கள்

இந்திய சமூக, அரசியல் நிகழ்வுகளில் வகுப்புவாத மோதல்களும், விரோதங்களும், ஒரு பகுதியாக கடந்த ஒரு நூற்றாண்டாகவே இருந்து வந்துள்ளன. இன்றைக்கு புதிய பண்புகளோடு எழுந்து வருகிற தாக்குதல்களை ஊக்குவித்து, பதட்டத்தை தொடரச் செய்திடும் மூல காரணங்கள் யாவை?

இதனை ஆராய முற்படுகையில், சுதந்திர இந்தியாவில் இதுவரை நடந்து வந்துள்ள வர்க்க ஆட்சி நடைமுறைகளின் விளைவுகளை பரிசீலித்துப் பார்க்க வேண்டும்.

இந்தியப் பெருமுதலாளிகளும், அதன் தலைமையும், இந்திய ஏகபோக மூலதனமும் தங்களுடைய சமூக அடித்தளம் குறுகியதாக இருக்கும் காரணத்தால், தனது வர்க்க அதிகாரத்தை தொடர்வதற்கு, நிலப்பிரபுக்களின் பகுதியுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டார்கள். இக்கூட்டுச் சேர்க்கையே இந்திய சமூக அரசியலின் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் உள்ளடக்கத்தையும், வழியையும் தீர்மானிக்கக் கூடிய புதிய முரண்பாடுகளின் தொகுப்பை செயல்படுத்தத் தொடங்கியது.

மேற்சொன்ன கூட்டுச் சேர்க்கையின் காரணமாக ஒருபக்கம் ஆளும் வர்க்கத்தினால் ஏகாதிபத்தியத்தின் பிடியை தீர்க்கமாக உடைத்தெறிய முடியவில்லை. மறுபக்கம் நிலப்பிரபுத்துவம் இந்திய மக்களிடையேயும், பொருளாதாரத்தின் மீதும் கொண்டுள்ள ஆதிக்கத்தைக் களையவும் முடியவில்லை.

இக்கால கட்டத்தில், நடுத்தர வர்க்கம் விரிவடைந்துள்ளது என்றபோதிலும், நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தினால் உள்நாட்டு சந்தை மேலும் குறுகியிருப்பதையும்  பார்க்க முடிகிறது.

வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பார்த்தால் நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளை திட்டவட்டமாக முறியடிக்காமல், உலகில் எங்கும் முதலாளித்துவம் வளர்ச்சியடையவில்லை. அவ்வாறே இங்கும், ஒரு பக்கம் ஏகாதிபத்தியத்துடன் சமரசமும், மறுபக்கம் நிலப்பிரபுத்துவத்துடன் சமரசமும் செய்து கொண்டதால் இந்திய பெரு முதலாளிகளால் தாங்கள் விரும்பியது போல் சுதந்திர இந்தியாவில் முதலாளித்துவ வளர்ச்சிக்கான அடித்தளத்தை உருவாக்க முடியவில்லை.

நிலப்பிரபுத்துவ கட்டமைப்பின் மேல் முதலாளித்துவத்தை திணிப்பதன் மூலம்  நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தை அகற்றி விடலாம் என்ற இந்தியப் பெருமுதலாளிகளின் முயற்சி பயனற்று போனது.

இந்த காலகட்டத்தில், பெருவாரியான இந்திய மக்கள் வருமானம் இல்லாமல்,  வாங்கும் சக்தியை இழந்த நிலையில், உள்நாட்டுச் சந்தை மேலும் குறுகத் தொடங்கியது. ஆளும் வர்க்கமோ, வாங்கும் சக்தியை பெருக்கும் விதத்தில்  முழுமையான நிலச் சீர்திருத்தம் எதையும் செய்திட முன்வரவில்லை. இந்த நிலையில், தனது முதலாளித்துவ வளர்ச்சிப் பாதைக்கு தடங்கல் ஏதும் ஏற்படாமலிருக்க அந்நிய சந்தையை நாட வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய முதலாளிகள் தள்ளப்பட்டனர்.

இப்போக்கின் காரணமாக, ஏகாதிபத்திய நாடுகளின் மூலதனத்தையும் தொழில்நுட்பங்களையும் கூடுதலாக சார்ந்திருக்கும் நிலைக்கு இந்தியப் பொருளாதாரம் தள்ளப்பட்டதுடன், அந்நிய நாட்டு சந்தையோடு போட்டிபோடும் நிலையும் ஏற்பட்டது. இதன் விளைவுதான் புதிய பொருளாதாரக் கொள்கையும், இந்திய மக்களின் மீதான அதனுடைய பேரழிவுத் தாக்குதல்களும் ஆகும்.

மேற்சொன்ன விதத்தில், நிலப்பிரபுத்துவத்துடன் செய்துகொண்ட சமரசம், இந்திய பெருமுதலாளிகளுக்கு பெரும் முரண்பாட்டை ஏற்படுத்தியது. அந்த முரண்பாட்டில் இருந்து விடுபடுவதற்கு, அபாயகரமான வகையில் ஏகாதிபத்தியத்தினை சார்ந்திருக்க வேண்டிய நிலைமையும், மறுபுறம் இதனால் ஏற்பட்ட நெருக்கடியினை பொதுமக்களின் தோள்களில் மாற்ற வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. முரண்பாட்டின் ஒரு வெளிப்பாடாக இது இருக்கையில், அதற்கு ஈடான, இன்னும் முக்கியத்துவம் வாய்ந்த, மற்றொரு வெளிப்பாடும் உள்ளது. நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தை, தனது கட்டமைப்பில் இருந்து நீக்க முடியாத காரணத்தால் நிலப்பிரபுத்துவத்தோடு இணைந்த சமூக உணர்வுநிலை இன்றும் நிலைத்து நிற்கிறது’. இந்த நிலைமையினுடைய தாக்கத்தினால் வகுப்புவாதமும், சாதீயமும் சமூக ஒழுக்கத்தின் மீது ஆதிக்கத்தை தொடர்ந்தன. எனவே நிலப்பிரபுத்துவத்தின் மீது முதலாளித்துவத்தை திணிக்கும் இந்த முயற்சியினால், நிலப்பிரபுத்துவத்துடன் இணைந்த பிற்போக்கு உணர்வுடன் கூடவே, சீரழிந்த போட்டி உணர்வுடன் கூடிய முதலாளித்துவமும் உருவானது.

இந்நிலையில் முதலாளித்துவ வளர்ச்சியில் விளைவான வர்க்கங்களின் உருவாக்கம் (தொழிலாளி வர்க்கம் போன்றவை), ஏற்கனவே உள்ள, சாதிப்பிரிவு சமூக நிலைகளின் உள்ளாகவே உருவாகியது. முதலாளித்துவத்திற்கு முன்பு இருந்த சமூக உறவுகளை மாற்றி அமைக்காமலேயே, அதனுடன் முதலாளித்துவம் சமரசம் செய்து கொண்டதால் இந்திய சமூகத்தில் ஏற்பட்டிருக்கிற மிகச் சிக்கலான இப்பிரச்சனையின் காரணத்தையும், அதனால் ஏற்பட்டு இருக்கிற விளைவுகளையும் இந்த போக்கு மிகத் துல்லியமாக விளக்குகிறது.

ஆகவே, வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி என்பது ஏற்கனவே உயிரோட்டமாக உள்ள சாதியத்தையும், சாதிய ஒடுக்குமுறைகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. சமகால இந்தியாவில் சுரண்டப்படும் வர்க்கத்திற்கும், ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கும் இடையே ஒட்டிக் கொண்டுள்ள பொதுத்தன்மையை இது துல்லியமாக காட்டுகிறது.

இவ்வாறு தரம் மலிந்த நிலப்பிரபுத்துவமும், சீரழிந்த முதலாளித்துவமும் இணைந்து, சமூகத்தின் மேல்கட்டுமானத்தில் குற்றமயமாக்கல் பெருக வழிவகுக்கின்றன. அத்துடன், சாதிய வகுப்புவாத சக்திகள் ஒன்றாக ‘வளரவும் வழிவகை செய்கின்றன. இந்த நிலைமையை ஆளும் வர்க்கங்கள் தங்களது அரசியல் மற்றும் தேர்தல் வாய்ப்புகளுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றன.

மேலே குறிப்பிடப்பட்ட முரண்பாடுகளின் வெளிப்பாட்டின் அடிப்படையில், விடுதலை இந்தியாவில் மதவாத வன்முறைகளை வகுப்புவாத சக்திகள் அரங்கேற்றுகிறார்கள். நாட்டில் ஏற்கனவே ஏற்பட்டுள்ள நெருக்கடி, இந்திய மக்களின் மனதில் பல வருடங்களாக சேர்ந்துள்ள அதிருப்தியை மேலும் வளர்த்துள்ளது. பரபரவென்று  வளர்ந்து வருகிற நடுத்தர வர்க்க மக்களிடையேயும் இந்த அதிருப்தி வளர்ந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடுத்தர வர்க்கம் இன்றும் சுரண்டலுக்கு ஆளாகிற பகுதியிலிருந்து நடுத்தர வர்க்கமாக வந்தவர்களே ஆவர். சுரண்டும் வர்க்கத்தினுடைய உணர்வுகளின் ஆதிக்கத்துடன், நடுத்தர வர்க்கத்தினரின் அதிருப்தியும் இணைவதால் வகுப்புவாத சக்திகள் வளர்வதற்கு ஒரு வளமான தளம் அமைகிறது.

சமூகத்தில், பிற்போக்கு உணர்வுகள் நிலைத்து இருக்கையில், வகுப்புவாத சக்திகள் நிலவுகின்ற அதிருப்தியை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, வகுப்புவாதத்திற்கு மடை திறந்துவிட்டு, தங்களது அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

அதற்காக அவர்கள் இருமுனைத் தந்திரங்களை கையாளுகின்றனர். ஒருபக்கம் இந்தியாவிலுள்ள பல தரப்பட்ட சமூகங்களாகப் பிரிந்து கிடக்கிற – ஆனால் இந்து மதத்தை தழுவக் கூடியவர்களாக உள்ள அனைவரையும் ஒன்றாகக் கட்டி இணைப்பது. மற்றொரு பக்கம், இந்து அல்லாதவருக்கு எதிராக வெறுப்புணர்ச்சியைத் தூண்டி எதிரிகளாக்குவது – உதாரணமாக முஸ்லீம், கிறிஸ்துவர் இவர்களுக்கு எதிராக –  இந்த இரண்டு முனைகளிலும் தங்களது நோக்கத்தை அடைவதற்காக அவர்கள் கையாளும் பிரச்சார இயந்திரங்கள் பாசிச வெறியோடும், நவீன தொழில்நுட்பங்களோடும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

பார்க்கப் போனால், இந்து ராஜ்யம் என்பதற்கான அடித்தளம் 1920களில் வி.டி. சாவர்க்கர் என்பவரால் போடப்பட்டது. பின்பு 1925இல் தோன்றிய ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இக்கொள்கையை தனதாக்கிக் கொண்டது. 1930 பின்பகுதி காலங்களில் ஆங்கிலேய அரசு இந்த மதப்பிரிவு நிலையினை கண்டுகொண்டு அதனை தனது சுயலாபத்திற்காகப் பயன்படுத்தியது.

இந்நோக்கத்தை வெளிப்படுத்தியவர் ஆர்.எஸ்.எஸ்.சின் தலைவராக பணியாற்றிய எம்.எஸ். கோல்வால்கர் தான். 1939இல் அவர் எழுதிய, நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நமது தேசம் என்ற அவரது நூலில், விளக்கப்படும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நோக்கத் திட்டத்தில், உறைய வைக்கக் கூடிய அளவுக்கு வெளிப்படுத்திய பாசிச எண்ணங்களே இன்றும் காவிக்கும்பலுக்கு ஊக்கமளிக்கிறது.

இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே தேசிய இனம் என்ற ஆதாரமற்ற கூற்றை பொறுப்பற்று அறிவித்து விட்டு அவர் சொல்வது “(இந்த நாட்டில்) அந்நியர்களாக உள்ளவர்களுக்கு இரண்டே வழிகள் உள்ளன. ஒன்று (இந்து) தேசிய இனத்துடன் ஒன்றரக்கலந்து அதன் கலாச்சாரத்தை ஏற்று வாழ வேண்டும்; அல்லது அந்த தேசிய இனத்தின் கருணையில் அவர்கள் எவ்வளவு நாட்கள் வாழ விடுகிறார்களோ அதுவரையில் வாழ்வது. (அவர்கள் கூறும்போது) அந்த தேசிய இனத்தின் அன்பு கோரிக்கைக்கு இணங்க நாட்டை விட்டு வெளியேற வேண்டும்”.

இந்த நிலைபாட்டிலிருந்து, புத்திசாலித்தனமாக நடந்து கொண்ட முந்தைய நாடுகளின் அனுபவத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது – இந்துஸ்தானில் உள்ள அந்நிய இனங்கள் இந்து கலாச்சாரத்தையும், மொழியையும் கட்டாயம் ஏற்றுக் கொள்ள வேண்டும். மற்றும் இந்து மதத்திற்கு மரியாதையாக இருப்பதுடன், அந்த மதத்தை பய பக்தியுடன் அணுகிட வேண்டும். இந்து இனத்தையும், அதன் கலாச்சாரத்தையும் மகிமைப்படுத்துவது தவிர வேறு எந்த எண்ணத்திற்கும் இடம் கொடுக்கலாகாது – இது இந்த தேசத்திற்கும் சேர்த்து தான். அவர்களுக்கான தனித்துவமாக உள்ள வாழ்க்கையை விட்டு விட்டு இந்து இனத்துடன் ஒன்றிணைந்து விட வேண்டும். மற்றும் இந்து தேசத்திற்கு அடிபணிந்து வாழ வேண்டும். அவர்கள் எந்த உரிமையையும் கேட்கக் கூடாது. அவர்களுக்கு எந்த சலுகையும் கிடையாது. முன்னுரிமை அளிக்கக் கூடிய நடவடிக்கைகள் எதனையும் நினைக்கவே கூடாது. குடிமக்கள் உரிமை என்பது கூடவே கூடாது. அவர்கள் பின்பற்ற வேறு மார்க்கம் எதுவும் இருக்கக் கூடாது. நாம் ஒரு புராதான நாடு. புராதான நாடுகள் அந்நிய இனத்தை எவ்வாறு நடத்துமோ அதேபோன்று நம் நாட்டை தேர்ந்தெடுத்துள்ள அந்நிய இனத்தை நடத்துவோம்”.

புரதான அரசுகள் எப்படி நடத்தின. இனம் மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையை பாதுகாத்திட ஜெர்மனி தனது நாட்டிலுள்ள யூதர் இனத்தை கொன்று குவித்தது. இனப் பெருமை மிக உயர்ந்து இருப்பதை இது வெளிக்காட்டியது. ஜெர்மனி நமக்கு காட்டுவதெல்லாம் இனத்திலும், கலாச்சாரத்திலும் அடிப்படையில் வேறுபடுகிற நிலையில் உள்ளவை ஒருங்கிணைந்து ஒன்றாக மாறுவது என்பது முடியாதது ஆகும். இதை இந்துஸ்தான் ஒரு படிப்பினையாக ஏற்று நாம் பலனடைந்திட வேண்டும்.

இதே கோல்வால்கர்தான் மகாத்மா காந்தி சுட்டு கொலை செய்யப்பட்ட போது, ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடை செய்யப்பட்டதை அடுத்து, அன்றிருந்த உள்துறை அமைச்சர் சர்த்தார் பட்டேல் அவர்களிடம் ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை நீக்கக் கோரினார், “ஆர்.எஸ்.எஸ். இனி கலாச்சார அமைப்பாக மாத்திரம் செயல்படும்” என்றும் உறுதி அளித்தார். இதன் பிறகு மாற்றாக ஒரு அரசியல் அமைப்பை தேடிக் கொண்டிருந்த கோல்வால்கர், அன்றைய ஜவஹர்லால் நேரு மீது அதிருப்தியை வெளியிட்டு, மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறிய ஸ்யாம பிரசாத் முகர்ஜியை வைத்து 1951இல் ஒரு புதிய அரசியல் கட்சியை ஸ்தாபிக்க சில பிரச்சாரகர்களை அனுப்பினார். அன்றைக்கு ஸ்யாம பிரசாத் முகர்ஜியை சந்தித்துப் பேச அனுப்பப்பட்ட இரண்டு பேரில் ஒருவர் இன்றைய பிரதமர் (வாஜ்பாய்), மற்றொருவர் இன்றைய உள்துறை அமைச்சர் (அத்வானி). ஆக இன்றைக்கு அவதாரம் எடுத்துள்ள பாரதீய ஜனதா கட்சியின் முன் அவதாரமான ஜனசங்கம் இவ்வாறு தான் தொடங்கப்பட்டது.

எனவே, இன்றைக்குள்ள பாரதிய ஜனதா கட்சி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் உறுப்பு என்பதை யாரேனும் மறுப்பார்களேயானால் அவர்கள் முட்டாள்களின் கூடாரத்தில்தான் இருப்பார்கள் என்று சொல்லலாம்.

மேலும், பிறகு கோல்வால்கர் எழுதிய சிந்தனைக் கொத்து என்ற நூலில், ஒரு தனி அத்தியாயத்தில் இவ்வாறு எழுதினார்: இந்திய நாட்டு மதச்சார்பின்மையை அழிப்பதை மூன்று உள்நாட்டு எதிரிகள் தான் தடுத்து நிறுத்துகின்றன. அவை தான் ஆர்.எஸ்.எஸ். பாசிச இந்து ராஜ்யத்தை நோக்கி நடைபோடுவதையும் தடுத்து நிறுத்துகின்றன. ஆர்.எஸ்.எஸ்.சின் கண்ணோட்டத்தில் அவைகள் ஒன்று முஸ்லீம் மதத்தினர், இரண்டாவது கிறிஸ்துவ மதத்தினர். மூன்றாவது கம்யூனிஸ்ட்டுகள். ஆகவே பால் ரோப்ஸன் சொன்னது போல் “நாம் அனைவரும் ஒரே படகில் தான் சகோதரரே” (என்று அங்கு திரண்டு இருந்தவர்களைப் பார்த்துக் கூறினார்)

இதன் பிறகு கிடைத்துள்ள அனுபவங்கள் ஒரு உண்மையை கோடிட்டு காட்டுகிறது.  அதாவது இந்து மதவாத அடிப்படைவாதிகளும், முஸ்லீம் மதவாத அடிப்படைவாதிகளும் (எந்த மதத்தைச் சார்ந்த அடிப்படைவாதிகளாக இருந்தாலும்) அவர்களது இன்றைய நடவடிக்கை என்பது நமது இன்றைய நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற, ஜனநாயக ஆட்சி முறை பெற்றிருக்கும் சுதந்திரத்தையும், இறையான்மையையும் நேரடியாக தாக்குவதாகவே அமைகிறது. இந்த இரண்டு சக்திகளுமே ஒன்றுக்கொன்று ஊட்டத்தை கொடுத்துக் கொள்கிறார்கள். இந்த இரண்டு சக்திகளும், மதச்சார்பின்மை, ஜனநாயகம், நாட்டுப் பற்று போன்ற நவீன கருத்துக்கள் மீது முன்னெடுக்கும் தாக்குதல்கள் ஒரேமாதிரி உள்ளன. அவர்கள் மதத்தை மையமாகக் கொண்ட ஒரு சிதைந்த தேசியத்திற்குள் தங்களை வரையறுத்துக் கொண்டுள்ளார்கள். எந்த ஒரு தேசியத்தின் உருவாக்கத்திலும், ஒற்றுமைப்படுத்தும் காரணியாக மதம் என்றைக்கும் இருந்ததில்லை; இருக்கப் போவதும் இல்லை என்ற வரலாற்று படிப்பினைகளை ஏற்க மறுக்கின்றனர். (உதாரணமாக பாகிஸ்தானிடமிருந்து பங்களாதேஷ் பிரிந்தது) மாறாக, அரசியலிலும், சமூக அமைப்பிலும் மதம் தான் ஆதிக்கம் செலுத்திட வேண்டுமென்று வாதாடுகின்றனர். இவ்வாறு அவர்கள் வரலாற்றில் விளைந்த, விஞ்ஞான அடிப்படையிலான தேசியத்தை மறுக்கின்றனர்.

வகுப்புவாதமோ அல்லது அதன் அடிப்படைவாதிகளின் தத்துவமோ மதத்தை உயர்த்திப் பிடிப்பதாகவும் இல்லை; அதை பாதுகாக்கவும் இல்லை. மாறாக, மக்களிடையே நிலவுகிற மதப் பிளவுகளைப் பயன்படுத்தி, தனது குறிப்பிட்ட அரசியல் நோக்கத்திற்காக பிளவுகளை தீவிரமாக்கவும், நிலைநிறுத்தவும் செய்கின்றனர். அவர்களது இந்த தத்துவம் மதங்களிடையே மோதலை உருவாக்கி குறிப்பிட்ட அரசியலுக்கு பயன்படுத்துவதற்கு மட்டுமே உதவுகிறது. ஆங்கிலேயர்கள் மதங்களிடையே உள்ள வெறுப்பை தங்களது காலனி ஆதிக்கத்தை நிலைநிறுத்திட பயன்படுத்தினர். பின்பு இந்த மத மோதல்கள் கட்டுக் கடங்காமல் போகவே நமது தேசத்தை இரண்டாகப் பிரிப்பதில் வெற்றி கண்டனர். இன்றும் இக்கசப்பான நிகழ்வுப்போக்கு எண்ணற்ற உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கிறது. ஆகவே, வகுப்புவாதம் என்பது மதங்களிலிருந்து தன்னை நீக்கிக் கொண்டு தள்ளி இருக்கிறது என்பதை அறிய முடிகிறது. வகுப்புவாதம் பிற மதத்தினரின் பால் வெறுப்பை உண்டாக்கியும், நீடிக்கச் செய்தும், தான் இருப்பதற்கும், வளர்வதற்கும் அடித்தளத்தை அமைத்துக் கொள்கிறது.

மதமும் – மார்க்சியமும்

இப்படிப்பட்ட சூழலில், மார்க்சிஸ்ட்டுகளுக்கு மதம் பற்றி உள்ள புரிதலைக் குறித்து சர்ச்சைகள் அதிகமாக எழுப்பப்படுகின்றன. இதில் மிகப் பிரபலமான கருத்தாக இருப்பதும், கூறப்பட்ட சூழலில் இருந்து விலக்கி எடுத்தாளப்படுவதுமான மதம் என்பது மக்களுக்கு அபின் போன்றது என்ற மார்க்சின் கூற்று ஆகும்.

அந்த மேற்கோள் எந்த பகுதியில் இடம் பெறுகிறதோ அது, வேண்டுமென்றே,  முழுவதுமாக வெளியிடப்படவில்லை. உண்மையில் மார்க்ஸ் கூறியது மத (நம்பிக்கையோடு கூடிய) துயரம் என்பது அதே நேரத்தில் உண்மையான துயரத்தின் வெளிப்பாடே ஆகும். அது உண்மையான துயரத்திற்கு எதிர்ப்பை தெரிவிப்பதும் ஆகும். மதம் (மத நம்பிக்கை) ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சு. இதயமற்ற உலகில் (அரவணைக்கும்) இதயம். ஊக்கமற்ற நிலையில் ஊக்கமளிப்பதும் ஆகும். இது மக்களுக்கு அபின் போன்றது. (அக்காலத்தில் காயத்தினால் ஏற்படும் வலியை  மறந்திட அபின் கொடுக்கப்பட்டது – மொழி பெயர்ப்பாளர்)

மதத்தை அபினுடன் ஒப்பிடுவதற்கான காரணம் அபினுக்கு உள்ள குணத்தை ஒத்த விதத்தில் மதமும் ஒரு மாயையை ஏற்படுத்துவதால் தான். துயரம் தாங்க முடியாமல் இருக்கும் மனிதனுக்கு அதிலிருந்து நீக்கம் அளிக்கிறது. இதயமற்ற உலகில் (அரவணைக்கும்) இதயத்தையும், ஊக்கம் அற்ற நிலையில் ஊக்கத்தையும் அளிக்கிறது.

(அவர்களது துன்பமானது) அவர்களது உணர்வு நிலைக்கும், கட்டுப்பாட்டுக்கும் அப்பால் இருக்கும் நிலைப்பாடாகத் தொடர்கிறது என்ற துல்லியமான காரணத்தால் அவர்களை செயலற்ற தன்மைக்கு இட்டுச் சென்று மந்தப்படுத்த இந்த அபின் மக்களுக்கு தேவையாகிறது.

மதங்கள் குறித்து, மார்க்சிஸ்டுகள் கொண்டுள்ள புரிதல், அந்த மதம் ஒரு தத்துவத்தின் அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டு ஒருங்கிணைக்கப்பட்டு இருப்பதை புரிந்து கொள்வதே ஆகும். மார்க்ஸ் தான் வாழ்ந்த காலத்தில் மனிதர்களுடைய உண்மையான சுதந்திரத்தையும், அவர்களுடைய முழுமையான விடுதலையையும் எது தீர்மானிக்கிறது என்ற கேள்விக்கு விடை தேடுகையில், ஹெகலின் தத்துவமான மனதின் புரட்சி என்ற தத்துவத்தை – அதை ஃப்யூயர்பாக் அவர்களும் பரிந்துரைத்ததை – மறுத்து எதிர்கால வளர்ச்சிக்கு அவசியமான விளக்கத்தை அளித்தார்.

அது என்னவென்றால்; மனிதர்களுடைய உணர்வுகளை சமூக நிலைமைகளே தீர்மானிக்கிறதே தவிர அதற்கு மாறான  வகையில்  அல்ல. அதாவது, “மனிதர்களின் உணர்வுகள் அவர்கள் இருக்கும் நிலையை தீர்மானிக்கவில்லை. மாறாக, அவர்களது சமூக நிலைகளே அவர்களது உணர்வுகளை தீர்மானிக்கிறது. (Introduction to Critique of Political economy)

மேற்கண்ட முக்கியமானதும், மூல ஆதாரமான முடிவின் அடிப்படையில் மார்க்ஸ் கூறியது, “சமயப் பற்றற்ற இந்த விமர்சனத்திற்கான அடிப்படை. மனிதனே மதத்தினை உருவாக்கினான். மதம் மனிதனை உருவாக்கவில்லை.” வேறு சொற்களில் சொல்வதென்றால், மனிதர்களின் உணர்வுகள் பல விதங்களில் வெளிப்படுவது போல், உதாரணமாக, அவனது சிந்தனையும், அதன் விளைவாக ஏற்படுகிற அறிவுசார் நடவடிக்கைகளும் போல், மதமும் மனிதனுடைய சமூக வாழ்க்கையின் ஒரு விளைவுதானே அன்றி, மதம் தான் சமூக வாழ்க்கைக்கு காரணம் என்றோ, சமூக வாழ்க்கையை உண்டாக்கியது என்றோ கூறுவதற்கில்லை.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்வது, மதம் என்பது சமூக வரலாற்றின் உந்து சக்தியில் இருந்து விலகி தன்னைத் தானே ஆட்கொண்டதும் அல்ல; தன்னைத் தானே உருவாக்கிக் கொண்டதும் அல்ல. ஆகவேதான், மார்க்சிய தத்துவம் கோபர்நிகஸூக்கு கொடுத்த இடருக்காகவோ அல்லது ஏகலைவனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகவோ மதத்தின் மீது குற்றம் சாட்டவில்லை. ஏனெனில் இந்நிகழ்ச்சிகள் அனைத்துமே மதம் ஒரு தத்துவமாக ஆதிக்கம் செலுத்துகிற காலகட்டத்தில் நிகழ்ந்துள்ளது என்பதை பதிவு செய்யப்பட்ட வரலாறு தெளிவாக்குகிறது.

மதம் என்பது ஒரு ஆதிக்கம் செலுத்தும் தத்துவமாக இருக்கும் நிலையில் முற்போக்காளர், பிற்போக்காளர், சொந்த நலன்களையே நோக்கும் அதிகார வர்க்கம் அல்லது சுரண்டப்படுகிற வர்க்கங்களின் கோரிக்கைகள் – இப்படி அனைத்து மனிதர்களின் உணர்வுகளில் மதப் பற்று வேறுபாடில்லாமல் வியாபித்திருக்கிறது. ஆனால், மார்க்சிய தத்துவம் ஆக்கப்பூர்வமான முற்போக்கு கருத்துக்களையும், சீர்திருத்த இயக்கங்களையும் உள்ளடக்கிய மதப் பழக்கவழக்கங்களை கவனத்தில் கொள்கிறது. உதாரணமாக, சுஃபி மற்றும் பக்தி இயக்கங்கள். அதே சமயத்தில் இந்த இயக்கங்கள் தங்களை மதப்பிடிப்புக்குள் இருத்திக் கொண்டதால், சமூகத்தில் தேவையான மாற்றங்களை செய்வதற்கு சாத்தியமில்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. எந்த சமூக நிலைமைகளின் காரணமாக, குறிப்பிட்ட வடிவிலான மத நடவடிக்கைகள் ஆதிக்கம் பெற்றனவோ, அந்த சமூக நிலைமைகளை மாற்றினாலொழிய இந்த குறிப்பிட்ட மதத்துடன் இணைந்த ஒடுக்குமுறைகளை அகற்றிவிட முடியாது. இவ்வாறு மார்க்சியமானது மதங்களின் ஆக்கப்பூர்வமான உள்ளடக்கத்தை அங்கீகரிக்கிறது, அவற்றின் சீர்திருத்தக் கருத்துக்களுடைய வரம்பை அறிந்துள்ளது. மனித நாகரீகத்தின் வளர்ச்சியின் ஒரு பகுதியாக, மனித உணர்விற்குள் பொருந்தி இருக்கும் பகுதியாக மதங்களின் வரலாற்று வளர்ச்சியைப் பார்க்கிறது.

ஆகவே மார்க்சிச தத்துவம் வரலாற்று நிகழ்வுகளுக்கு அறிவியல் விளக்கங்களை தருகிற நிலையிலும், சமூகப் போராட்டங்களில் மதங்கள் ஆற்றியுள்ள சிக்கலான பாத்திரங்களையும் கவனத்தில் கொள்கிறது.

ரோமப் பேரரசின் சிதைவுக்கு காரணமான மக்களின் பேரெழுச்சியின் விளைவாக கிறிஸ்துவ மதம் தோன்றியதை பார்த்திடலாம். அதேபோல் அரேபிய பாலைவனத்தில் வாழ்ந்த நாடோடிகளுக்கும், நகர மக்களுக்கும் நடந்த போராட்ட விளைவுகளாலும், அபிசீனிய ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து நாட்டை மீட்டிட எழுந்த அரேபிய தேசிய உணர்ச்சியும், அதன் மூலம் பல காலமாக உபயோகப்படாமல் இருந்த வர்த்தக வழிகளை மீட்டெடுப்பதுமே இஸ்லாம் மதம் தோன்றக் காரணம் என்பதை மார்க்சும், ஏங்கல்சும் சுட்டிக் காட்டுகின்றனர். இதுபோலவே சிதையும் நிலப்பிரபுத்துவத்திற்கும், வளரும் முதலாளித்துவத்திற்கும் நடந்த போராட்டத்தின் விளைவே பிராட்டஸ்டென்ட் சீர்திருத்தம் தோன்றக் காரணம். அழிக்க முடியாத பிராட்டெஸ்டென்டுகளின் எதிர்ப்புக் கொள்கைகளே வெல்ல முடியாத முதலாளித்துவத்தின் உதயத்திற்கு காரணமானது. (ஏங்கெல்ஸ் – ஃபயர்பாக்)

ஆகவே, மார்க்சுக்கும், மார்க்சிய தத்துவவாதிகளுக்கும், மதம் என்பது சமூக நிலைமைகளினால் ஏற்பட்ட விளைபொருளே; அதில் மனிதர்கள் வாழ்ந்தனர் என்பதும், வாழ்கின்றனர் என்பதையும் கவனத்தில் கொள்கிறோம். மதங்களின் வரலாறு என்பது ஒரு விதத்தில் பார்த்தால் மனித பரிணாம வளர்ச்சியின் பிரதிபலிப்பே ஆகும். இவ்வகையில் மதம் என்பது யதார்த்த உலகின் பிரதிபலிப்பு ஆகும். இயற்கையின் வலிமையும், சமூக நிகழ்வுப்போக்குகளுமே வாழ்வின் வழிகாட்டும் விதி.தால் புரிந்துகொள்ள முடியாத நிலைமையில் இயற்கையினைக் கடந்த வேற்று கிரக சக்தி ஒன்றை கற்பித்துக் கொள்வது அவர்களுக்கு அவசியமாகிறது. ஆகவே மதம் என்பது மனித குலத்திற்கு ஆறுதலையும், வாழ்வின் மீதான ஈர்ப்பையும், நிம்மதியையும் தருகிறது. அதேசமயத்தில், ஆதிக்கம் செலுத்தக்கூடிய தத்துவமாக மதம் அமைகின்றபோது, அந்த காலகட்டத்தில் ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்துடைய வெளிப்பாடாகிறது.

மார்க்சும், மார்க்சிய தத்துவமும் மாத்திரமே மதங்களின் பிறப்பு, தோற்றம் மற்றும் மனித மனங்களில் அவை செலுத்தும் தாக்கம் இவைகளை அறிவியல் பூர்வமாக புரிந்து கொண்டுள்ளதால், மதங்கள் வகிக்கும் பங்கினை வழிப்படுத்துவதும், தீர்மானிப்பதும், அரசின் சமூக அமைப்புகளே என்று அடித்துச் சொல்கிறார்கள். துல்லியமான இந்தக் காரணத்தினால்தான் மார்க்சிய தத்துவம் மதங்களை குறிப்பிட்டு தாக்குவது கிடையாது. மாறாக, மதங்களின் தோற்றங்களுக்கு காரணமான சமூக நிலைகளையும் மற்றும் மனித குலத்தின் மேல் மதம் தொடர்ந்து வைத்து வருகிற பிடிமானத்திற்கான நிலைகளையுமே தாக்குகிறது. மார்க்சிய தத்துவம் மதங்களை நிலைத்திருக்கச் செய்வதற்காக உதவும் நிலைகளை, அதாவது வர்க்கத்தை ஒடுக்கும் ஒரு கருவியாக மதம் இயங்குவதை முற்றிலுமாக மாற்றிட முயல்கிறது.

மார்க்சிஸ்டுகள் பொருள்முதல்வாதிகள். பொருள்முதல்வாதிகளாக இருப்பதினால், வர்க்கமாக பிரிந்து கிடக்கும் சமூகத்தில் சிக்கலான பாத்திரமேற்று மதம் நடத்தும் விளையாட்டின் முழுமையையும் புரிந்து கொண்டுள்ளனர். மதம் என்பது சமூகத்தின் மேல் கட்டுமானமாக தொடர்கிறது. ஒரு வர்க்கமற்ற சமுதாயத்தை நிறுவினாலும் அதிலும் நீண்ட காலத்திற்கு மதம் தொடர்ந்து இருக்கும். மார்க்சிய தத்துவம் மதத்தை குறியிட்டு தாக்குவதில்லை. ஆனால் மதத்தினை தோற்றுவிக்க காரணமான சமூக நிலைகளை தாக்குவதால், இதன் அடிப்படையிலேயே மார்க்சிய தத்துவத்தின் திசைவழி அமைகிறது.

இதுவே பொருள்முதல்வாதிகளான மார்க்சிஸ்ட்டுகளின் மதத்தைப் பற்றிய புரிதலும் சிந்தனையும் ஆகும். மதத்தில் மனித நேய உள்ளடக்கமும் உள்ளது, அதே நேரத்தில் அது ஒரு வர்க்கத்தின் ஆட்சி அதிகாரத்திற்காக உபயோகப்படுத்தப்படும் கருவியாகவும் உள்ளது என்பதை ஒட்டுமொத்தமாகப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. மதத்தின் பிடிமானம் தொடர்வதற்காக உள்ள சமூக நிலைகளை மாற்ற ஒரு கம்யூனிஸ்ட் முயற்சிக்க வேண்டுமே அல்லாது மதத்தை குறியிட்டு தாக்கக் கூடாது.

வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டம்

மதத்தை உயர்த்திப்பிடிக்கும் ஏகபோக உரிமையாக்கிக் கொண்ட வகுப்புவாதிகளையும், மத அடிப்படைவாத சக்திகளையும் அம்பலப்படுத்துவதும், மேற்சொன்னவாறு இன்றைக்கு நிலவும் சமூக நிலைகளுக்கு எதிராக நடத்தப்படும் ஒருங்கிணைந்த போராட்டத்தோடு இணைந்த செயல்பாடு ஆகும். இவ்வாறான மாற்றத்தை இந்தியாவில் ஏற்படுத்திட மார்க்சிஸ்டுகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யும் விழைகின்றனர்.

பார்க்கப் போனால், அடிமை இந்தியாவில், ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சி நிலைத்திருப்பதற்கான கருவியாக வகுப்புவாதத்தை உருவாக்கியும், பயன்படுத்தியும், கீழ்த்தரமானதொரு பிரித்தாளும் கொகையைக் கையாண்டார்கள்.

1857 முதல் சுதந்திரப் போரில் இந்துக்களும், முஸ்லீம்களும் இணைந்து வெளிப்படுத்திய உருக்குப்போன்ற ஒற்றுமையை கண்ட ஆங்கிலேயர்கள், அந்த ஒற்றுமையை சிதைத்தழிப்பதற்காக வகுப்புவாத அரசியலை திட்டமிட்டு கையாண்டனர். வாக்காளர்களை இந்து – முஸ்லீம் என்று பிரித்தார்கள். வங்காளத்தை இரண்டாகப் பிரித்தனர். முஸ்லீம் லீக் அமைப்பிற்கு தனித்த ஆதரவு காட்டினார்கள். இவையெல்லாம் காலனி ஆதிக்கத்தை தொடர்வதற்கான நிகழ்ச்சி நிரலாக மேற்கொள்ளப்பட்டன.

சுதந்திரத்திற்கு பிந்தைய ஆண்டுகளில், (கட்டுரையின் முன் பகுதியில் குறிப்பிட்ட)  நெருக்கடி நிலை மக்களிடையே அதிருப்தியை அதிகப்படுத்தியது. ஆளும் வர்க்கங்கள் இந்த அதிருப்தியில் இருந்து தற்காத்துக்கொள்ள, வகுப்புவாத பிரிவினையை பயன்படுத்தினார்கள். நாட்டுப் பிரிவினையைத் தொடர்ந்து, ஆழமாக வேரூன்றி நிலைத்துவிட்ட வகுப்புவாதத்தை ஒழிப்பதற்கு உணர்வுப்பூர்வமான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. குறுகிய அரசியல் நோக்கத்துடன், ஊசலாட்டமும் வகுப்புவாத சக்திகளுடனான சமரசமும் செய்துகொள்ளப்பட்டது.

இன்று இந்தியாவில் நடந்துகொண்டிருப்பது, பாசிசத்திற்கான முன் நடவடிக்கை என்று ஒரு புகழ்பெற்ற அறிஞர் கூறினார். இன்று நம் பொதுவாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் அது தென்படத் தொடங்கிவிட்டது. மதத்தின் பெயரால் மக்களை திரட்டும் அருவருக்கத்தக்க முயற்சிகள் தொடர்கின்றன. ஆர்.எஸ்.எஸ் வகைப்பட்ட ‘இந்து ராஷ்ட்டிராவை’ எதிர்க்கும் ஒவ்வொரு நிகழ்வின் மீதும், ஒவ்வொரு குடிமகனின் மீதும் பாசிச வெறுப்பு உமிழப்படுகிறது. நமது ஜனநாயக சமூகத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவுகிறது. நம் குடியரசின் அரசமைப்புச் சட்டத்தை இழிவுபடுத்துகிறது. நிர்வாகத்தில் நேர்மையற்ற குறுக்கீடுகளைச் செய்கிறது. தன் விருப்பங்களை அடைவதற்காக சூழ்ச்சிகளைக் கையாள்கிறது. விதிகளை மீறியும், நடைமுறைகளை மீறியும், தரக்குறைவான பேரங்களைப் பேசுகிறது. இதுவரை நிகழ்ந்திராத அளவுக்கு மக்களின் மேல் பொருளாதாரச் சுமைகள் குவிக்கப்படுகின்றன. அனைத்து இடங்களிலும் ஊழல் மலிந்திருக்கிறது – என அனைத்தும் நன்றாக தென்படுகின்றன.

பாஜக ஆட்சியில் இருக்கிற இச்சில வருடங்களில், இந்த அரசின் கொள்கைகள் ஏகாதிபத்தியத்திற்கு துணை போவதாகவும், பிற்போக்கான இந்திய ஏகபோக மூலதனத்தின் நோக்கங்களுக்கு துணை செய்வதாகவும் இருக்கிறது. பார்க்கப் போனால், இந்த வாஜ்பாய் அரசு தான் அமெரிக்க அரசிற்கு, இதுவரை சுதந்திர இந்தியாவில் நடந்திராத அளவிற்கு அணுசரணையாக நடந்து கொள்கிறது. அதனுடைய பொருளாதாரக் கொள்கைகள் ஒருபக்கம் இந்தியாவின் இறையாண்மையை அடகு வைத்து விட்டது. மறுபக்கம் பெருவாரியான மக்களை வறுமை நிலைக்கு தள்ளி விட்டுள்ளது. அமெரிக்கா முன்னெடுக்கும் யுத்த நடவடிக்கைகளுக்கு இந்தியாவை கூட்டாளியாக ஆக்கியிருக்கும் அளவு அயல்நாட்டு கொள்கை வளைக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்கள் ஆட்சியில் உள்ள இச்சில வருடங்களில் நமது நாட்டில் உள்ள கல்வி முறை மீது ஒரே கண்ணோட்டத்துடன் தாக்குதல்கள் ஏவப்படுகின்றன. இந்து மத நம்பிக்கை வைத்துள்ள மக்களிடையே நிலவும் பன்முக கலாச்சாரத்தை மாற்றி,  கட்டுண்ட ஒரே இந்து கலாச்சாரமாக மாற்றும் ஆர்.எஸ்.எஸ் முயற்சிகளும், வகுப்புவாத பிரிவினை விஷத்தை ஆழமாக பரப்பி, சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக, முக்கியமாக கிறிஸ்துவர், முஸ்லீம்களுக்கு எதிராக, வன்முறையை விதைத்து, நமது பள்ளி மாணவர்களின் பாடத் திட்டத்தை மாற்றுகின்றனர். இவ்வாறு நமது கல்வித் துறையை சீரமைப்பதன் மூலம், வகுப்புவாத, மத வெறுப்பு எண்ணங்களை புகுத்தி அதை வலுவடையச் செய்து, காவிக் கும்பல் தங்களது பாசிச நோக்கத்திற்கான பயணத்தை எளிதாக்கிட நினைக்கின்றனர்.

இதைப்போலவே, இவ்வருடங்களில் இந்திய வரலாற்றை மாற்றியெழுதும் இடைவிடாத முயற்சிகளையும் பார்க்க முடிகிறது. தாங்கள் தான் இந்தியாவின் மறுக்க முடியாத முன்னோர்கள் என்று நிறுவிட, வரலாற்று உண்மைகளையும், ஆதாரங்களையும் திரித்துக் கூறுவது என்பது சங்க பரிவாரத்திற்கு அவசியமாகிறது. அவர்களுடைய, “இந்து ராஷ்ட்டிரா”விற்கு இந்துக்கள், இந்துக்கள் மாத்திரமே உண்மையான முன்னோர்கள் என நிரூபிக்க இந்த வரலாற்று திருத்தல் அவசியமாகிறது. எனவே, இந்துக்கள் வேறெங்கும் இருந்து இங்கு வரவில்லை என்று நிறுவிட வேண்டியுள்ளது. ஏனெனில், அவர்களும் வெளியில் இருந்து வந்தவர்கள் என்றாகி விட்டால், பிறகு இந்நாட்டின் மீதான அவர்களது உரிமை கோரல் என்பது, அனைத்து மற்ற மதம் சார்ந்தவர்கள் இந்நாட்டிற்கு வந்து குடியேறிய நிலையோடு ஒப்பிட்டு, வேறுபாடு காட்ட முடியாத கோரிக்கையாகி விடும்.

அன்றைய கோல்வால்கருக்கும், இன்றைய ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் இந்து என்றால் ஆரியர்கள் என்றே பொருள். இந்து மதத் தலைவர்கள் ஆர்யவர்த்தா என்றே அழைக்கப்படுகிறார்கள்.

ஒரு பாசிச வெறுப்புடன் தமக்கு எதிராக உள்ள அனைத்து வரலாற்று ஆதாரங்களையும் நிராகரித்து, இந்திய வரலாற்றை மாற்றி எழுதி, இந்தியா தான் ஆரியர்கள் அவதரித்த பூமி என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தின் உந்துதலில், அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளது. ஆரியர்கள் தான் இந்தியாவிலிருந்து உலகைச் சுற்றி வந்தவர்கள் என்று நம்மையே நம்ப வைக்க முயற்சிப்பார்கள். ஆரிய இனம் தான் உயர்ந்தது என்ற கொள்கையோடு ஜெர்மனியில் பாசிச ஆட்சியை நிலை நாட்டிய ஹிட்லர் உண்மையில், இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்தவரே என்று கூட நம்மை நம்ப வைக்க இந்தக் கூட்டம் முயலும்.

அண்மை வருடங்களில், ஆர்.எஸ்.எஸ். தனது பாசிச குறிக்கோளை முன்னெடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. மதவெறியைத் தூண்டி கலவரங்களை ஏற்படுத்துவதே அதன் பிரதான நடவடிக்கையாக உள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் நடந்த வகுப்புவாத கலவரங்களை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதி விசாரணைக் கமிஷன்கள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். தான் முக்கிய குற்றவாளி என தீர்ப்பு வழங்கியிருக்கின்றன. தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு வகுப்புவாத நடவடிக்கைகள் மிக, மிக, முனைப்பாக பெருகியுள்ளது.

குஜராத்தில் அரசே முன்னின்று முஸ்லீம் மதத்தினருக்கு எதிராக நடத்திய வகுப்புவாத படுகொலை என்பது இதுவரை நடந்தவற்றை எல்லாம் விட நடத்தப்பட்ட கீழ்த்தரமான நடவடிக்கையாகும். குஜராத்தில் நடந்துள்ளது ஒரு இன அழிப்பிற்கு ஒப்பாகும். ஆர்.எஸ்.எஸ்.-உம் அதன் பரிவாரங்களும் குற்ற உணர்வோடு வருந்துவதற்கு பதிலாக, சுரணையற்று பச்சைப் படுகொலைகளை மகிழ்வுடன் வரவேற்று இந்துக்கள் புகழ் ஓங்குக என்று பறைசாற்றினர்.

சாதி, மத, மொழி போன்ற அனைத்து வேறுபாடுகளையும் கொண்ட மக்களை ஒற்றுமைப்படுத்தும் இந்திய நாட்டுப்பற்றினை மாற்றியமைத்து, தேசிய வெறியை உண்டாக்கிட ஆர்.எஸ்.எஸ். முயல்கிறது.

நமது நாடு ஒற்றுமையும், பண்பும் மிகப் பரந்த பன்முகத் தன்மையும் கொண்ட நாடு. மதத்தில், மொழியில், பாரம்பரியத்தில், பழக்க வழக்கங்களில், பன்முகத் தன்மை கொண்ட இந்த நாட்டை பராமரிக்க வேண்டுமானால், பன்முகத் தன்மையின் இடையிலான ஒற்றுமையை வலுவாக்குவதன் மூலமே முடியும். அதற்குப் பதிலாக ஒற்றைத்தன்மையை  திணிக்க முற்பட்டால், அந்தப் போக்கு நம் நாட்டின் ஒற்றுமையையும், பண்பையும் நொறுக்கி விடும். இதைத்தான் வகுப்புவாத பாசிச சக்திகள் துல்லியமாக நிறைவேற்றிடத் துடிக்கின்றன.

வகுப்புவாத விஷத்தை தூவுவதும், மதத்தின் பேரால் திரட்டுவதும் – எதிர் வரும் நாட்களில் நாட்டை பிளவுபடுத்தி, “உள்நாட்டுப் போர்” மூள்வதற்கான ஆபத்தான அடித்தளத்தை உருவாக்குகின்றன. மேலும் மக்கள் ஜனநாயகத்தை நோக்கி முன்னேறுவதற்கு அடிப்படையாக உள்ள உழைக்கும் பகுதி மக்களின் ஒற்றுமையையும் வகுப்புவாதம் சீர்குலைக்கிறது. எந்த அடிப்படை வர்க்கங்களின் ஒற்றுமையைக் கொண்டு, தற்போதுள்ள ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை நடத்த வேண்டுமோ, அந்த அடிப்படை வர்க்கங்களின் ஒற்றுமையை இன்றைக்கு எழுந்துள்ள வகுப்புவாதம் பலவீனப்படுத்தியுள்ளது என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது. ஆகவே, வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான போராட்டம் என்பது நமது வர்க்கத்தின் ஒற்றுமையை வலுப்படுத்திக் கொண்டு அதே நேரத்தில், நமது நாட்டை பாதுகாப்பதற்கும், முன்னேற்றுவதற்குமான போராட்டத்தோடு ஒன்றிணைந்ததும் ஆகும்.

இன்றைய இந்தியாவின் சூழலில் உழைக்கும் மக்கள் தங்களது வாழ்க்கை ஆதாரங்களை உயர்த்திக் கொள்ளவும், நேர்மையான சுதந்திரத்தையும், கண்ணியத்தையும் பெற்றிடவும் கையிலெடுக்கும் போராட்டங்கள் சிதைக்கப்பட்டு வகுப்புவாத பதட்டங்களுக்கும், சண்டைகளுக்கும் இப்போராட்டங்களை திசை திருப்பி விட்டுள்ளன. இப்போராட்டங்களுக்கு வலிமை ஊட்டி, வகுப்புவாத அச்சுறுத்தலை தோல்வி அடையச் செய்யாவிடில் மக்கள் விடுதலைக்கான முன்னேற்றங்கள் முறியடிக்கப்படும்.

இப்படிப்பட்ட சூழலில் வருத்தத்தை அளிக்கக் கூடிய, கொழுந்துவிட்டு எரியும் வகுப்புவாத விரோதங்களினால், தொடர்ந்து கொண்டிருக்கும் துயரங்கள் பெருகிவிடாமல் இருக்க இவ்விசயத்தில் தீவிரமாகத் தலையிடுவது நமது கடமையாகும். தெளிவான மனசாட்சியுள்ள எவரும் இப்போராட்டத்திலிருந்து விலகி நிற்க முடியாது. பொன்மொழிகள் சொல்வது போல் தீயவர்கள் வெற்றி பெற நல்லவர்கள் மௌனமாக இருப்பது ஒன்றே போதுமானது”.

இந்திய நாட்டை சிறந்த நாடாக மாற்றிட நாம் அதை பாதுகாக்க வேண்டியுள்ளது. 1947இல் அரசியல் சுதந்திரம் அடைந்த பிறகு பெறப்பட்ட சிறிய, சிறிய நன்மைகளைக் கூட அகற்றிட வகுப்புவாத சக்திகள் தாக்குதல்களை தொடுக்கின்றனர். இன்றைக்கு அனைத்து இந்திய தேச பக்தர்களின் கடமை என்பது இதுவரை கிடைத்தவற்றைப் பாதுகாத்து சிறப்பான எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவதேயாகும்.

23வது கட்சி காங்கிரஸ்: முடிவுகளும் – அறைகூவல்களும்!

ஜி. ராமகிருஷ்ணன்

வீரம் விளைந்த கண்ணூர் மாவட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் 23 வது அகில இந்திய மாநாடு, 2022 ஏப்ரல் 6 முதல் 10 வரை நடந்தது.  கேரள மாநிலத்தின் வலிமை வாய்ந்த கம்யூனிஸ்ட் இயக்கம் வேர் பிடித்த இடம் கண்ணூர் மாவட்டம்தான். காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள் ரகசியமாக இயங்கிய கம்யூனிஸ்ட் குழு,  பரப்ரம் என்ற பகுதியில் 1937 ஆம் ஆண்டில் கூடி, முதல் கட்சிக் கிளையை அமைத்தது. இப்போது கண்ணூர் மாவட்டத்தில் மட்டும் 62 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் உள்ளார்கள்.

கண்ணூரில், வெகு சிறப்பாக நடந்த அகில இந்திய மாநாட்டில், நாடு முழுவதும் இருந்து 729 பிரதிநிகளும், 78 பார்வையாளர்களும் பங்கேற்றார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்பே வெளியிடப்பட்டு, கட்சியின் அனைத்து மட்டங்களிலும் விவாதிக்கப்பட்ட அரசியல் நகல் தீர்மானம், மாநாட்டு பிரதிநிதிகளாலும் விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டது. மாநாட்டுக்கு முன்பாக … திருத்தங்கள் வரப் பெற்றன. மாநாட்டு பிரதிநிதிகள் தங்கள் விவாதத்தில் … திருத்தங்கள் முன்வைத்தார்கள்.

அரசியல் – ஸ்தாபன அறிக்கையின் மீது பிரதிநிதிகள் விவாதம் நடந்தது. அதில் … திருத்தங்கள் பெறப்பட்டன. இவை தவிர, அமைப்புச் சட்ட திருத்தம் முன்வைக்கப்பட்டது, மத்தியக்குழு, அரசியல் தலைமைக்குழு, பொதுச் செயலாளர் தேர்வு மற்றும் மத்திய கட்டுப்பாட்டுக் குழு தேர்வு ஆகியவை நடைபெற்றன. மொத்தத்தில் இந்த மாநாடு ஒற்றுமையையும், உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.

உலக நிலைமைகள்:

உலக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு முதலாளித்துவ கட்டமைப்பிற்குள் தீர்வு இல்லை என்பதை இந்த காலகட்டம் மீண்டும் நிரூபித்துள்ளது. அதேசமயம், சோசலிச நாடுகளின் செயல்பாடுகள், மக்களை பாதுகாத்தபடியே முன்னேற்றம் சாத்தியம் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்தன.

குறிப்பாக, கொரோனா பெருந்தொற்று காலத்திலும் கூட, அமெரிக்க ஏகாதிபத்தியமும், பிற முதலாளித்துவ நாடுகளும் மக்கள் நலனை பின்னுக்குத் தள்ளி லாப வெறியோடு செயல்பட்டன. சோசலிச நாடுகள் அதற்கு நேர்மாறாக, களத்தில் முன்நின்று மக்களை பாதுகாத்தார்கள்.

இப்போது உலக பொருளாதார மந்தநிலை இன்னமும் ஆழமாகியுள்ளது. மறுபக்கம், மூலதன குவிப்பு நடவடிக்கை தொடர்கிறது. நிதி மூலதனத்தின் ஆதிக்கப் பிடி அதிகரிக்கிறது. நவதாராளமய கொள்கைகள் இந்த போக்கினை தீவிரப்படுத்துகின்றனவே தவிர, தீர்வு தருவதில்லை. இதனால் உலக மக்களிடையே வறுமையும், வேலையின்மையும் அதிகரிக்கிறது.

கடந்த மாநாட்டின் காலத்தில், உலகம் முழுவதும் வலதுசாரி திருப்பம் நடந்துவரும் போக்கினை கண்ணுற்றோம். இப்போதும் அந்த நிலைமைகள் தொடர்ந்தாலும், எதிர்ப்பு போராட்டங்கள் வலிமையடைந்துள்ளன. லத்தீன் அமெரிக்காவில் சிலி, வெனிசுவெலா, பொலீவியா மற்றும் ஹோண்டுரஸ் ஆகிய நாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் வலிமையடைந்துள்ளன. முற்போக்கு சக்திகளும், இடதுசாரிகளும் தேர்தல் வெற்றிகளை அடைந்துள்ளார்கள்.

உலக அரங்கில், சோசலிச நாடான சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக ஆகியிருப்பதுடன், வறுமை ஒழிப்பில் சாதனை புரிந்துள்ளது. இருந்தாலும், அமெரிக்கா தன்னுடைய உலக மேலாதிக்கத்தை பல வழிகளிலும் தொடர்கிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளில், வலதுசாரி அரசியல் சக்திகளை அமெரிக்கா ஆதரித்து ஊக்கமளிக்கிறது. மேற்கு ஆசியாவில் தொடர்ந்து தலையிடுவதுடன், ஆப்ரிக்காவில் ராணுவ தலையீடுகளை கூடுதலாக்கி வருகிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவின் தலைமையிலான  நேட்டோ படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. அதே சமயத்தில் கிழக்கு நோக்கி நேட்டோவை விரிவாக்கம் செய்ய முயற்சிக்கிறார்கள். அதன் காரணமாக எழுந்த  ரஷ்யா – உக்ரைன் இடையிலான முரண்பாடும், அதன் தொடர்ச்சியாக, டாலர் பரிவர்த்தனை வளையத்தை பயன்படுத்துவதில் ரஷ்யாவின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும், ரூபிள் பயன்பாட்டின் மூலமே எரிபொருள் வர்த்தகத்தை மேற்கொள்ளும் ரஷ்யாவின் அறிவிப்பும் உலக நிதி பரிவர்த்தனை மீது தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

சோசலிச நாடுகளான கியூபா மற்றும் வட கொரியாவை  ‘அரச பயங்கரவாத’ நாடுகள் என்று அமெரிக்கா வகைப்படுத்தியுள்ளது. கியூபாவின் மீதான பொருளாதார தடைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்விதத்தில், ஏகாதிபத்தியத்திற்கும், சோசலிசத்திற்கும் இடையிலான முரண்பாடுகள் கூர்மையடைந்து வருகின்றன. ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகளும் பல்வேறு தளங்களில் தொடர்கின்றன. வளரும் நாடுகளின் மீது அமெரிக்காவின் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலைமை, வளரும் நாடுகளுக்கும், ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான முரண்பாட்டினை வெளிப்படுத்துகிறது. மூலதனத்திற்கும், உழைப்புக்கும் இடையிலான முரண்பாடு தீவிரமடைந்து வருகிறது.

நமது அண்டை நாடுகளை பொறுத்தமட்டில், தெற்காசியாவில்  வகுப்புவாத சக்திகளின் வளர்ச்சியும், எதேச்சதிகார போக்கு அதிகரிப்பதையும் 22வது மாநாட்டு அறிக்கை எடுத்துக் காட்டியது. இந்தியாவின் பெரும்பான்மை அண்டை நாடுகளில் மதவழி, இனவழி சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

புவி வெப்பமாதல் காரணமாக, பருவநிலையில் அதிக தீவிரமான தாக்கங்கள் ஏற்பட்டுவருகின்றன. இதனால் ஏற்படும் உற்பத்தி சக்திகளின் நெருக்கடி, பல நூறு கோடி மக்களுடைய நலவாழ்விற்கு ஆபத்தாகி விடக் கூடாது என்றால் – வளர்ச்சியடைந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையில் சமநீதி அடிப்படையில் இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். இந்த போராட்டம், நீடித்த ஒன்றாக அமைந்திடும்.

மேற்சொன்ன நிலைமைகளை விரிவாக ஆய்வு செய்த அகில இந்திய மாநாட்டில், அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பினை வலுப்படுத்துவதுடன், இந்தியாவை அமெரிக்காவிடம் சரணாகதி அடையச் செய்திடும் பாஜகவின் கொள்கைகளுக்கு எதிராக மக்களை திரட்டுவது என்று முடிவு செய்துள்ளது.

உலக சோசலிச சக்திகளோடு ஒற்றுமைப்பாட்டை அதிகரிப்பதுடன். தெற்கு ஆசியாவில் அமெரிக்க தலையீட்டை தொடர்ந்து எதிர்ப்பது, பாலஸ்தீன மக்களின் உரிமைகளோடு உடன் நிற்பது, அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டில் இந்தியாவையும் சேர்த்துப் பிணைக்கும் பாஜகவின் போக்கினை வலுவாக எதிர்ப்பது, ஏகாதிபத்திய தாக்குதலுக்கு எதிராக போராடும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும், வளர்முக நாடுகளுக்கும், சோசலிச நாடுகளுக்கும் ஆதரவினை நல்குவது என்று மாநாடு தீர்மானித்துள்ளது.

தேச நிலைமைகள்:

பாசிச வகைப்பட்ட, ஆர்.எஸ்.எஸ்.  வழிகாட்டுதலில் இயங்கும் பாஜக, நாட்டில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது அவர்களால் வகுப்புவாத – தேச வெறியை சுற்றி, உணர்ச்சித் தூண்டல் பிரச்சாரத்தை கட்டமைக்க முடிந்தது. மக்களின் துயரங்கள் அதிகரிக்கும் பின்னணியிலும் கூட, தேர்தல் வெற்றியினை சாதித்திட அவர்களால் முடிந்துள்ளது.

வேறுபட்ட பல இன அடையாளங்களையும், சமூக நிலைமைகளையும் கொண்டுள்ள மக்களிடையே ‘இந்து அடையாளத்தை’ உருவாக்குவதில் அவர்கள் வெற்றியடைந்துள்ளனர். பாசிச போக்குகளும், வலதுசாரி அரசியல் போக்கும் தீவிரமடைந்துள்ளன.

கொரோனா பெருந்தொற்றினை மிக மோசமாக எதிர்கொண்டு, கோடிக்கணக்கான மக்களை துயரத்தில் தள்ளியது மோடி அரசாங்கம். கடந்த 4 ஆண்டுகளில் இந்திய அரசமைப்பின் மீதும், அரசமைப்பு நிறுவனங்களின் சுயேட்சைத் தன்மையின் மீதும் திட்டமிட்ட விதத்தில் தாக்குதல் நடக்கிறது. மதச்சார்பற்ற ஜனநாயகம், கூட்டாட்சி, சமூக நீதி, பொருளாதார சுயச்சார்பு என அனைத்தையும் சிதைக்கும் முயற்சிகள் நடக்கின்றன.

மறுபக்கத்தில், நவதாராளமய பொருளாதார சீர்திருத்தங்கள் வேகமெடுக்கின்றன. ஆயுத தளவாட உற்பத்தி உள்ளிட்டு அனைத்து துறைகளிலும் நாட்டின் சுய சார்பு அழிக்கப்படுகிறது. மேற்சொன்ன போக்குகளால் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் மோசமான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. சமூக நீதி ஏற்பாடுகள் சிதைக்கப்படுகின்றன. பெண்களின் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளன.

ஆனால், மோடி அரசாங்கம் தனிநபர் அந்தரங்கத்தை உளவு பார்ப்பது, ஊடக நிறுவனங்களை கட்டுப்படுத்துவது, பத்திரிக்கையாளர்களை கைது செய்வது, அரசு நிறுவனங்களை ஏவிவிடுவது என்று எதேச்சாதிகார பாதையில் வேகமாக பயணிக்கிறது.

கட்சிகளின் நிலை:

பெருமுதலாளிகளுக்கும் – வகுப்புவாத சக்திகளுக்கும் இடையிலான கூட்டு வலுப்பட்டுள்ளது (Corporate – Communal Nexus) . நவதாராளமய சீர்திருத்தங்களை பாஜக மூர்க்கமாக முன்னெடுக்கிறது. இதனால் நெருக்கடி சூழலிலும், பெரும்பணக்காரர்களின் செல்வ வளம் பல மடங்கு அதிகரித்து வருவதை நாம் பார்க்கிறோம்.

பாஜக – ஆர்.எஸ்.எஸ் வலைப்பின்னல் வேகமாக விரிவடைகிறது. அதன் பின்னணியுடன், பாஜக நாடு முழுவதும் தனது செல்வாக்கை பரப்பியுள்ளது. ஆளும் வர்க்கங்களுடைய பிரதான அரசியல் கட்சியாக உருவெடுத்திருக்கிறது.

12 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. 6 மாநிலங்களில் கூட்டணி ஆட்சி நடத்துகிறது. நாடாளுமன்றத்தில் 2 அவைகளையும் கட்டுப்படுத்துகிறது.

காங்கிரஸ் கட்சி – இந்திய ஆளும் வர்க்கங்களின் நலனை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. காங்கிரஸ் கட்சியின் அரசியல் செல்வாக்கும், அமைப்பு வலுவும் சரிந்து வருகிறது. மதச்சார்பின்மையை பறைசாற்றினாலும், இந்துத்துவா முன்னிறுத்தும் சவாலை திறம்பட எதிர்கொள்வதாக இல்லை. காங்கிரசால் எதிர்க் கட்சிகளை ஓரணியில் திரட்ட முடியாது. பாஜக – காங்கிரஸ் இரண்டு கட்சிகளையும் சம தூரத்தில் வைக்க முடியாது. அதே சமயம் நாம் காங்கிரஸ் கட்சியோடு அரசியல் கூட்டணியை ஏற்படுத்த முடியாது.

பிராந்திய கட்சிகள் – தொடக்கத்தில் பிராந்திய முதலாளித்துவ-நிலப்பிரபு வர்க்கங்களின் நலன்களுக்காக தங்களை நிலைநிறுத்திக் கொண்ட பிராந்தியக் கட்சிகள், பின்னர் மொத்தமாக, நவ-தாராளமயப் பாதையை ஏற்றுக்கொண்டன. கூட்டாட்சியின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், மாநில அரசுகளை வழிநடத்தும் பல பிராந்தியக் கட்சிகளுக்கும் பாஜகவுக்குமான மோதல் கூர்மையடைகிறது.

தமிழ்நாட்டில் திமுக, பீகாரில் ராஷ்ட்ரியா ஜனதாதளம், உ.பி., மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி ஆகியவை பாஜகவை எதிர்த்து முன்னணியில் உள்ளன. மகாராஷ்ட்டிராவில் பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் – சிவசேனா அணியுடன் ஆட்சி அமைப்பதில் தேசியவாத காங்கிரஸ் கட்சி பங்கு வகிக்கிறது. ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப்பில் ஆட்சி அமைத்திருப்பதன் மூலம் முக்கியமான பிராந்திய கட்சியாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் வி.சி.க  போன்ற சில கட்சிகள் மதச்சார்பற்ற ஜனநாயக நிலைப்பாட்டை மேற்கொள்கின்றன.

அதே சமயம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், பிஜூ ஜனதாதளம், தெலங்கானா ராஷ்ட்டிரிய சமிதி, திர்ணாமுல் காங்கிரஸ், ஏ.ஜி.பி., அ.இ.அ.தி.மு.க, தெலுங்குதேசம், அகாலிதளம் ஆகிய கட்சிகளின் நிலைப்பாட்டையும் அரசியல் தீர்மானம் விளக்குகிறது.

சிறுபான்மை அடிப்படைவாத சக்திகளின் வளர்ச்சியை பின்னுக்கு தள்ளுவதில் மதச்சார்பற்ற – ஜனநாயக சக்திகளின் செயல்பாடுகளுக்கு உள்ள முக்கியத்துவம் பற்றியும் தீர்மானம் கவனப்படுத்துகிறது.

பாஜக தலைமையிலான ஒன்றிய அரசாங்கத்தின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராகவும், மதச்சார்பின்மையை பாதுகாக்கவுமான போராட்டங்களை நாம் விரிந்த ஒற்றுமையுடன் முன்னெடுக்க வேண்டும். பிராந்திய கட்சிகளோடு அதற்கான ஒத்துழைப்பை கொடுக்கும் அதே சமயத்தில் மாநிலத்தின் அரசியல் சூழ்நிலைமையை கருத்தில் கொள்ள வேண்டும்.

பிராந்திய கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், மக்களுக்கு பாதகமான நடவடிக்கைகளை, தனியாகவும், இடதுசாரி கட்சிகளோடு இணைந்தும் எதிர்க்கும் அதே சமயத்தில் – இந்த அரசாங்கங்களை பாஜக வழிநடத்தும் ஒன்றிய/மாநில அரசாங்கங்களுக்கு சமமாக ஒப்பிடக் கூடாது.

இந்துத்துவாவை வீழ்த்திட

மார்க்சிஸ்ட் கட்சியை பலப்படுத்துவது, இந்துத்துவா சக்திகளை தனிமைப்படுத்தி வீழ்த்துவதற்கான அடிப்படைத்தேவையாகும். அரசியல், கருத்தியல், பண்பாடு மற்றும் சமூக தளங்களில், நிலையான போராட்டத்தை நடத்திட வேண்டும். அதற்கான உறுதியான வழிமுறைகளை அரசியல் தீர்மானம் விவரிக்கிறது.

  1. கட்சியின் வலிமையும், இடதுசாரி சக்திகளின் வலிமையும் அதிகரிப்பது அவசியம். மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை பரந்த அளவில் திரட்டுவதற்கு கட்சி உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
  2. நவ-தாராளமய கொள்கைகளுக்கு எதிராக கட்சி முன்னணியில் நின்று போராட வேண்டும். நாட்டின் சொத்துக்கள் அப்பட்டமாக கொள்ளையடிக்கப்படுவதற்கு எதிராக, அண்மையில் நடந்த, வரலாற்று சிறப்பு மிக்க விவசாயிகள் போராட்டத்தைப் போலவே தீவிரமான போராட்டங்களை நடத்துவதன் மூலமாகத்தான் பெருநிறுவன-வகுப்புவாத கூட்டணியை முறியடிக்க முடியும்.
  3. ஒப்புக்கொள்ளப்பட்ட பிரச்சனைகளில், மதச்சார்பற்ற எதிர்க் கட்சிகளோடு நாடாளுமன்றத்தில் கட்சி ஒத்துழைப்பு தரும்.
  4. நாடாளுமன்றத்திற்கு வெளியே, வகுப்புவாத நிகழ்ச்சி நிரலிற்கு எதிராக, அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் பரந்துபட்ட அளவில் அணி திரட்டுவதற்காக கட்சி நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
  5. நவ தாரளமய கொள்கைகளுக்கு எதிராகவும், எதேச்சாதிகார போக்கிற்கு எதிராகவும் கட்சி தனியாகவும், இடதுசாரி – ஜனநாயக சக்திகளோடு கைகோர்த்தும் போராடும்.
  6. வர்க்க – வெகுமக்கள் அமைப்புக்களின் ஒன்றுபட்ட நடவடிக்கைக்கான கூட்டுத் தளங்களை கட்சி ஆதரிக்கும். தொழிலாளர் – விவசாயிகள் – விவசாயத் தொழிலாளர்கள் இடையிலான ஒன்றுபட்ட நடவடிக்கைகளை வலுப்படுத்துவதை கட்சி ஆதரிக்கும்.
  7. கட்சியின் சொந்த பலத்தை அதிகரிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
  8. முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ வர்க்கங்களுடைய கொள்கைக்கு மாற்றான கொள்கைகளை முன்னிலைப்படுத்த வேண்டும்.
  9. அத்தகைய, இடதுசாரி ஜனநாயக திட்டத்தை முன்னிலைப்படுத்தி கூட்டுப் போராட்டங்களையும், இயக்கங்களையும் நடத்த வேண்டும்.
  10. தேர்தல்கள் நடக்கும்போது பாஜக எதிர்ப்பு வாக்குகளை ஒருமுகப்படுத்தும் விதத்தில் பொருத்தமான தேர்தல் உத்திகள், மேற்கூறிய அரசியல் கொள்கையின் அடிப்படையில் பின்பற்ற வேண்டும்.

நாட்டில் உள்ள அகில இந்திய கட்சிகளும், பிராந்திய முதலாளித்துவ கட்சிகளும் கடைப்பிடிக்கும் கொள்கைகளுக்கும், திட்டங்களுக்கும் மாறுபட்டதுதான் இடதுசாரி மாற்றுக் கொள்கை. அதன் அடிப்படையில் நாம் ஏற்படுத்த வேண்டியதே இடது ஜனநாயக அணி. இவை நம்முடைய உடனடி அரசியல் ஸ்தாபன பணியாகும். அதனை மேற்கொள்வதன் மூலம், வர்க்க பலாபலனில் மாற்றத்தை உருவாக்கிட வேண்டும்.

அதிகரிக்கும் எதிர்ப்புணர்வு:

மோடி அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான உணர்வு மக்களிடையே அதிகரித்துவருகிறது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக, நாடு முழுவதும் போராட்டங்கள் எழுந்தன. தொழிற்சங்கங்களுக்கும், விவசாய சங்கங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பு இந்த காலகட்டத்தில் அதிகரித்துள்ளது. இரண்டு நாட்கள் நடைபெற்ற நாடு தழுவிய வேலை நிறுத்தத்தின் தொடர்ச்சியாகவே, வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டம் எழுந்தது.

விவசாயிகளின் துயரங்கள் ஆழமடைந்துவரும் பின்னணியில் எழுந்த பொதுவான கோரிக்கைகளின் அடிப்படையில், விவசாய சங்கங்களின் ஒற்றுமை ஏற்பட்டது. 500க்கும் அதிகமான விவசாய சங்கங்களின் மாநாட்டை, விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு நடத்தியது. அதிலிருந்துதான் ஐக்கிய விவசாயிகள் முன்னணி உருவானது. விவசாயிகள் போராட்டத்தின் வரலாற்றுச்சிறப்பு மிக்க வெற்றியை இதுவே சாத்தியமாக்கியது. ஒன்றிய அரசாங்கத்தை பணிய செய்தது.

ஆனால் அதே சமயத்தில், மேற்கு உத்திர பிரதேசத்தில் பாஜகவினால் வாக்குகளை பெற்று வெற்றிபெற முடிந்துள்ளது. மத அடிப்படையிலான உணர்வினை உருவாக்குவதன் மூலமே இது  சாத்தியமானது என்பதை நாம் மாநாட்டின் வெளிச்சத்தில் புரிந்துகொள்ள முடியும்.

இடது ஜனநாயக திட்டம்

முதலாளித்துவநிலப்பிரபுத்துவ கொள்கைகளுக்கு மாற்றான இடது ஜனநாயக திட்டம் பின்வரும் அடிப்படையில் அமைய வேண்டும்.

  1. பொருளாதார இறையாண்மையை பாதுகாத்தல்
  2. அரசமைப்பு சட்டத்தை பாதுகாத்தல்
  3. குடிமை சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகளை காத்தல்
  4. கூட்டாட்சி
  5. விவசாயி – தொழிலாளர் நலன்
  6. சமூக நீதி (சாதி, பாலினம், மாற்றுத்திறனாளிகள் பிரச்சனை மற்றும் குழந்தைகள் நலன்)
  7. மக்கள் நல திட்டங்கள்
  8. அனைவருக்கும் மருத்துவம்
  9. சுற்றுச்சூழல்
  10. பண்பாடு – ஊடகம்
  11. வெளியுறவுக் கொள்கை

பொருளாதாரஇறையாண்மை எனும்போது, பொதுத்துறைகளை பாதுகாப்பது மட்டுமல்லாமல் – குடிநீர், மின்சாரம், பொதுப் போக்குவரத்து, கல்வி மற்றும் மருத்துவத்தை அனைவருக்கும் உறுதி செய்வது. ஆயுத தளவாட உற்பத்தியை பொதுத்துறையில் பாதுகாப்பது. சிறு குறு தொழில் நிறுவனங்களை வளர்த்தெடுப்பது. பெரும்பணக்காரர்கள் மீது வரி விதிப்பது. வேளாண் துறையை பாதுகாப்பது, கூட்டுறவு ஏற்படுத்துவது. மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகியவையும் அடங்கும்.

விவசாயி – தொழிலாளர் பிரச்சனைகளில், குறைந்தபட்ச கூலி மாதத்திற்கு ரூ. 26 ஆயிரத்திற்கு குறைவில்லாமல் இருக்க வேண்டும். விலைவாசி புள்ளிக்கு தக்க உயர்ந்திட வேண்டும் என்பதும் சேரும். இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பு, விவசாய தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு திட்டங்களை உறுதி செய்வதும் அதில் உள்ளடங்கும்.

இந்தியாவில், சாதிய படிநிலை நீடித்துவரும் நிலையில் சமூக நீதிக்கான போராட்டங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதே நேரத்தில் சமூக நீதிக்கான நம்முடைய கவனம்பெண்கள், குழந்தைகள், பால் சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள் என்ற அடிப்படையிலும் செலுத்தப்பட வேண்டும்.

அனைவருக்கும் நியாய விலையில் உணவுப் பொருட்களை உறுதி செய்வதுடன், அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்குதல். ஊரக – நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டங்கள். வேலையில்லாக் காலத்திற்கு நிவாரணம். இவை தவிர அனைவருக்கும் அறிவியல் அடிப்படையிலான கல்வியை உறுதி செய்வதும், தனியார் கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்துதல் மற்றும் இணைய இடைவெளிக்கு தீர்வுகாண்பதும் இதில் அடங்கும்.

பண்பாட்டுத் தளத்தில் நமது போராட்டம் வகுப்புவாத தாக்கத்திற்கு எதிரானதாக அமைய வேண்டும். 8வது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளுக்கும் சமமான வாய்ப்புகளை உறுதி செய்வதை முன்னிறுத்திட வேண்டும். ஊடகச் சுதந்திரத்தை பாதுகாப்பது, ஊடகத் துறையில் ஏகபோகத்தை எதிர்ப்பது, சுயேட்சையான கட்டுப்பாட்டு அமைப்புகளை ஏற்படுத்துவது ஆகியவை இதில் உள்ளடங்கும்.

இவ்வாறு, இடது-ஜனநாயக திட்டத்தை முன்நிறுத்திய போராட்டங்களின் வழியாக ஒற்றுமையை கட்டுவதன் மூலமும், மக்களுக்கு நிவாரணம் அளிக்கக் கூடிய மாற்று திட்டங்களை செயல்படுத்துவதன் வழியாகவுமே இந்த போராட்டத்தில் முன்னேற முடியும். தத்துவ, அரசியல், பண்பாடு மற்றும் சமூக தளங்களில் போராட்டங்களை இணைத்து முன்னெடுக்க வேண்டும்.

ஸ்தாபன கடமைகள்:

கட்சியின் அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள ஸ்தாபன கடமைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

  • வரும் ஓராண்டு காலத்திற்குள் அனைத்து மாநிலக் குழுக்களும், இடது ஜனநாயக அணி குறித்த  திட்டத்தை விவாதித்து இறுதி செய்வதுடன் அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலும் அணி திரட்டும் சாத்தியமுள்ள சக்திகளை அடையாளம் காண வேண்டும்.
  • மாநிலங்களில் இடது ஜனநாயக மேடையை உருவாக்குவது பற்றி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் பொதுவான புரிதலுக்கு வர வேண்டும்.
  • கேரளா, மேற்கு வங்கம் மற்றும் திரிபுராவில் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள இடது – ஜனநாயக முன்னணியை வலுப்படுத்துவது பற்றி விவாதிக்க வேண்டும்.
  • வெகுமக்கள் பாதையில் (மாஸ் லைன் ) கட்சி முழுமையான கவனம் செலுத்திட வேண்டும்.
  • வர்க்க அடிப்படையிலான பிரச்சனைகளிலும், வெகுமக்கள் பிரச்சனைகளிலும் (சமூக பிரச்சனைகளிலும்)  உள்ளூர் அளவில் நீடித்த போராட்டங்களை வளர்த்தெடுக்க வேண்டும்.
  • கட்சி உறுப்பினர்களின் தரத்தை மேம்படுத்துவது: 2023 ஆம் ஆண்டு கட்சி உறுப்பினர் பதிவு பரிசீலனையின் போது, ஏற்கனவே வரையறுக்கப்பட்டுள்ள 5 வழிகாட்டுதல்களை கண்டிப்பாக அமலாக்கிட வேண்டும்.
  • கட்சியின் கிளைகளை செயல்படுத்துவது: 6 மாத கால வரையறைக்குள் எத்தனை கிளைகளை செயல்படுத்துவது என்ற ஒரு இலக்கினை ஒவ்வொரு மாநிலக் குழுவும் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். கிளைச் செயலாளர்களுக்கான பயிற்சியும் வழங்கப்பட வேண்டும்.
  • 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் உறுப்பினர் பதிவு பரிசீலனை மற்றும் புதுப்பித்தலில், இளைஞர்கள், பெண்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதத்தில் திட்டமிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
  • புதிய, இளம் முழுநேர ஊழியர்களை தேர்வு செய்வதற்கு திட்டமிட்ட முயற்சிகள் வேண்டும். தத்துவ, அரசியல் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். அதே போல தற்போதுள்ள முழு நேர ஊழியர்களுக்கு மறு கல்வியும், பயிற்சியும் வழங்குவதில் கவனம் தேவை.
  • ஆர்.எஸ்.எஸ் வகுப்புவாத அரசியலின் செயல்முறை பற்றிய குறிப்பினை இறுதி செய்து, கட்சி அரசியல் கல்விக்கான பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும்.
  • ஊரக தொழிலாளர்களுக்கான சங்கங்களும், கூட்டமைப்புகளும் ஏற்படுத்த வேண்டும்.
  • கட்சி ஸ்தாபனத்துடன், சமூக வலைத்தளங்களை ஒருங்கிணைத்து பயன்படுத்துவதற்கான திட்டத்தை மாநிலக் குழுக்கள் வடிவமைத்திட வேண்டும். இதற்காக வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை அமலாக்கும் விதத்தில் பயிலரங்குகள் நடத்திட வேண்டும்.
  • வெகுமக்கள் அமைப்புக்கள் சுயேட்சையாக செயல்பட வேண்டும். வழிகாட்டும் குழுக்களின் செயல்பாடுகளும், கட்சியை வளர்த்தெடுப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

முடிவுரை

கட்சி உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து, மிக அதிகமான சவால்கள் நிரம்பிய சூழலை கட்சி இப்போது சந்தித்துக் கொண்டுள்ளது. இந்திய குடியரசின் தன்மையையே மாற்றியமைக்க முயலும் பாஜக – ஆர் எஸ் எஸ் ஆட்சிக்கு எதிராக நமது கட்சியும், இடதுசாரிகளும், ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு போராட வேண்டியுள்ளது.

இடதுசாரி  – ஜனநாயக மாற்றினை வளர்த்தெடுக்கும் விதத்தில், வெகுமக்களை அணிதிரட்டும் புரட்சிகர கட்சியாக மார்க்சிஸ்ட் கட்சியை வளர்த்தெடுக்க வேண்டும். அப்போதுதான் நாட்டின் வர்க்க சக்திகளின் பலாபலனில், சாதகமான மாற்றத்தை கொண்டுவர முடியும்.

  • வலிமையான கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதற்கும் வலுப்படுத்துவதற்குமான நம் உறுதிப்பாட்டை இரட்டிப்பாக்குவோம் !
  • வெகுஜன நிலையுடன் கூடிய புரட்சிகரமான கட்சியை நோக்கி முன்னேறுவோம் !
  • இந்தியா முழுவதும், வெகுஜன அடித்தளத்தைக் கொண்ட வலுவான மார்க்சிஸ்ட் கட்சியை உருவாக்குவதை நோக்கி முன்னேறுவோம் !

இந்தியாவில் அதிகாரப் பரவலாக்கமும், கூட்டாட்சி அமைப்பும்

  • தாமஸ் ஐசக்

(மார்க்சிஸ்ட் இதழ் நடத்திய விடுதலை 75 தொடர் கருத்தரங்கத்தில் கேரள மாநில முன்னாள் நிதியமைச்சரும் பேராசிரியருமான தாமஸ் ஐசக் அவர்கள் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம் இங்கே தரப்படுகிறது)

நாடு விடுதலை பெற்று, இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தருணத்திலேயே, இது ‘முழுமைபெறாத கூட்டாட்சியாக இருக்கிறது’ என்று பலரும் விமர்சித்தார்கள். அதற்குப் பிறகு நடந்தவற்றை ஆராய்ந்து பார்த்தால் இரண்டு போக்குகளை நம்மால் காணமுடிகிறது. ஒன்று, அதிகாரத்தை மையத்தில் குவிப்பது; மற்றொன்று. அதிகாரத்தை பரவலாக்கம் செய்வது.

அரசமைப்பும், அதிகார குவிப்பும்:

அதிகார பரவலாக்கம் பற்றி அரசியலமைப்புச் சட்டத்தில் எழுதப்பட்டிருந்தாலும் அதற்கு வடிவம் கொடுக்க போதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. 1990களின் தொடக்கத்தில் பல்வேறு விவாதங்களுக்கு பிறகு அதிகார பரவலாக்கத்தின் அவசியத்தை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் உறுதிப்படுத்தும் விதமான திருத்தங்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்டன. ஆனால் அதற்கு பிறகும் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. உள்ளாட்சி அமைப்புகளை உண்மையான தன்னாட்சியுடன் செயல்படக்கூடிய நிர்வாக அதிகாரமாக மாற்றும் முயற்சி நடைபெறவே இல்லை. இந்தப் போக்கினை இந்தியாவின் அரசியல் பொருளாதார வளர்ச்சியுடன் பொருத்திப் பார்த்தால் புரிந்துகொள்ள முடியும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோதே ஒன்றிய அரசின் அதிகாரம் மாநில அரசுகளைவிட கூடுதலாக இருப்பது அனைவருக்கும் புரிந்தது. அரசியலமைப்புச் சட்டத்தில் பல்வேறு ஓட்டைகள் இருப்பதும் அதனை பயன்படுத்தி மாநில அரசுகளின் அதிகாரங்களை ஒன்றிய அரசு அத்துமீறும் போக்கும் கண்கூடாகவே தெரிந்தது.

ஒன்றிய அரசுகளுக்கு என்று சில அதிகாரங்களும், மாநில அரசுகளுக்கு என்று சில அதிகாரங்களும் அதனுடன் மூன்றாவதாக பொது (concurrent) பட்டியலும் இருக்கிறது. பொதுப்பட்டியலில் ஒன்றிய அரசும் சட்டங்களை கொண்டு வரலாம். மாநில அரசுகளும் சட்டங்களை கொண்டு வரலாம். ஆனால் ஒன்றிய அரசின் அதிகாரமே இறுதியில் செல்லுபடியாகும்.

அரசு நிர்வாக அதிகாரத்தை பொறுத்தவரை ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்குமான வரைமுறைகள் தெளிவாக வகுக்கப்படவில்லை. உதாரணத்திற்கு நீதித்துறையை நிர்வகிக்க மாநிலங்களுக்கு துளிக்கூட அதிகாரமில்லை. மாநிலப் பட்டியலில் உள்ள விசயங்கள் தொடர்பாக எந்த மாநிலத்தையும் ஆலோசிக்காமல் ஒன்றிய அரசு எந்தவொரு சர்வதேச ஒப்பந்தத்திலும் கையெழுத்திட முடியும். இதனால்தான் இந்தியாவை முழுமையற்ற கூட்டாட்சி என்கிறோம்.

இந்தியா பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாடு. இங்கு பல மொழிகள் பேசும் மக்கள் வாழ்கிறார்கள். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தொடக்கத்தில், மொழிவாரியான கமிட்டிக்களே இடம்பெற்றிருந்தன. விடுதலைப் போராட்டத்தின்போது உயர்த்தி பிடிக்கப்பட்ட கோட்பாடாகவும் அது  இருந்தது. அப்படிஇருந்த நிலையில், அதிகாரக் குவிப்பிற்கான சாத்தியம் எப்படி ஏற்பட்டது?

இதற்கு தோழர் இ.எம்.எஸ். ஒரு முக்கியமான காரணத்தை முன்வைக்கிறார். அதாவது, நாடு விடுதலை பெறுகிற சமயத்தில் ஏற்பட்ட இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையும், அதனால் மக்கள் அனுபவித்த கடும் துயரங்களையும் கணக்கில் கொண்டு இதுபோல் ஒரு நிகழ்வு மீண்டும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் ஒன்றிய அரசுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டதாக தோழர் இ.எம்.எஸ். சுட்டிக்காட்டுகிறார். அரசியலமைப்பு இவ்வாறு இருக்க தொடக்கம் முதலே அதிகார குவிப்பு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

முரண்பட்ட போக்குகள்:

1956-இல் கேரளாவில் நடந்த முதல் தேர்தலில் மக்கள் பேராதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைக்கிறது. ஆட்சி அமைத்தவுடன், நிலச்சீர்திருத்தம், கல்வியில் சீர்திருத்தம், அதிகார பரவலாக்கம், தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச கூலி மற்றும் தொழிற்சங்க உரிமைகளை நிலைநாட்டும் சட்டங்கள் போன்றவற்றை அரசு மேற்கொள்கிறது.

1959-இல் அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு அமெரிக்காவின் சி.ஐ.ஏ.வின் விருப்பத்திற்கு ஏற்றபடி கேரளாவில் சில குழப்பங்களை ஏற்படுத்தி, பின் சட்டஒழுங்கை காரணம் காட்டி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்க்கிறது. இது ஏதோ இந்தியாவில் ஒரு மாநிலத்திற்கு மட்டும் நடந்துவிட்டதாக நாம் கருதிவிடக் கூடாது.

இரண்டாம் உலகப்போருக்கு பிறகு உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் இடதுசாரி அரசுகள் (இவை கம்யூனிச அரசுகள் கூட இல்லை) ஜனநாயக வாக்கெடுப்பு மூலம் ஆட்சிக்கு வந்தன. காங்கோ, இரான், பிரேசில் இன்னும் பல நாடுகளைச் சொல்லலாம். இங்கெல்லாம் மிக மோசமான முறையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீட்டால் இடதுசாரி அரசுகள் கவிழ்க்கப்பட்டன. அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களின் அடிப்படையில் இவைகுறித்து இன்று ஏராளமான ஆய்வுகள் நமக்கு கிடைக்கின்றன. இதன் ஒரு பகுதியாகத்தான் கேரளத்திலும் நமது ஆட்சி பறிக்கப்பட்டது.

அடுத்து ஒன்றிய அரசு மூலம் மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமிக்கப்படுவதை பார்த்தால் அவர்களும் ஒன்றிய அரசின் முகவர்களாக மாநில அதிகாரத்தில் தலையிடுகிறார்கள். பொருளாதார தளத்தை எடுத்துக் கொண்டால், ஒன்றிய அரசு நேரடியாக சில பொருளாதார திட்டங்களை கொண்டுவருகிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் இதற்கு இடமேயில்லை. மாநில அரசுகள் சில வரிகளை வசூலிக்கலாம். ஒன்றிய அரசு சில வரிகளை வசூலிக்கலாம். வசூலிக்கப்படும் வரிகளை எவ்வாறு மாநிலங்களின் வளர்ச்சி திட்டங்களுக்காக பகிர்ந்தளிப்பது என்று முடிவெடுக்க இந்திய நிதி ஆணையம் உருவாக்கப்பட்டது. இவ்வளவுதான் பொருளாதார தளத்தை பொறுத்தவரையில் அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. (அதிலும் ஒன்றிய அரசின் வரிவசூலிக்கும் அதிகாரம் மாநிலங்களைவிட மிகக் கூடுதலாகவே இருக்கிறது)

ஆனால் ஒன்றிய அரசுகள் மாநிலங்களின் உரிமைகளான கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற தளங்களில் தமது திட்டங்களை மாநில அரசுகளை மீறி திணிப்பதிலிருந்து அதிகாரக் குவிப்பு தெளிவாகிறது.

நல்வாய்ப்பாக இதற்கு எதிரான போக்கும் வளரத் தொடங்கிவிட்டது. இந்த போக்கு பன்முகத் தன்மையை உயர்த்திப் பிடிக்கும் இடதுசாரிகள் மற்றும் மாநில கட்சிகளை உள்ளடக்கியது ஆகும்.

1967 பொதுத்தேர்தலில் 8 மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத இடதுசாரி மற்றும் மாநிலக் கட்சிகளின் கூட்டணி பெற்ற வெற்றி ஒரு வரலாற்று திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிற்பகுதிகளில் இடதுசாரிகள் மற்றும் மாநிலக்கட்சிகளின் தலைவர்கள் (இ.எம்.எஸ், ஜோதிபாசு, ஷேக் அப்துல்லா மற்றும் பலர்) ஸ்ரீநகரில் கூட்டிய மாநாடு, மாநில உரிமைகளில் ஒன்றிய அரசு தலையிடும் அதிகார குவிப்பை கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய அவசியத்தை உணர்த்தியது. இதன் விளைவாகத்தான் 2007-இல் பூஞ்சி கமிஷன் உருவாக்கப்பட்டது. இக்குழு ஆழமாக விவாதித்து ஒன்றிய அரசின் அதிகார குவிப்பிற்கு கடிவாளம் போடும் விதமான வலுவான பரிந்துரைகளை முன்வைத்தது.

இந்த இரண்டு போக்குகளும் 1991 வரை முரண்பாட்டுடன் தொடர்ந்தன.

1990களுக்கு பின்:

1990 களுக்கு பிறகு இந்த இரண்டு முரண்பட்ட போக்குகளின் இயக்கத்தில் ஒரு தடை ஏற்பட்டு அதிகாரம் மையத்தில் குவிக்கப்படும் போக்கு வேகமெடுத்து இன்று அதன் விளைவாக இந்திய கூட்டாட்சி அமைப்புமுறையே ஆபத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

எந்த அளவிற்கு என்றால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்கிறது. ஆனால் ஒன்றிய அரசு நினைத்தால் ஒரு மாநிலத்தை உருவாக்கிடவும் கலைத்திடவும் முடியும் என்ற அளவிற்கு அதிகார குவிப்பு வளர்ந்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு ஏற்பட்ட நிலை நாளை எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும்ஏற்படலாம்.

அடுத்து ஒன்றிய அரசு கொண்டுவந்த சட்டங்களைப் பார்ப்போம். 3 வேளாண் சட்டத்திருத்தங்கள், தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், புதிய கல்விக்கொள்கை, மின்சாரச் சட்டம் என அனைத்தும் மாநில அதிகாரத்தில் செய்யப்பட்ட வரம்புமீறிய தலையீடுகளே.

விவாதத்தில் இருக்கும் மின்சாரச் சட்டத் திருத்தத்தின்படி ஒரு மாநிலத்தின் மின்சாரவாரியத்தின் நிர்வாக உறுப்பினர்களை ஒன்றிய அரசுதான் நியமிக்கும். இந்த வாரியத்தை எப்போது வேண்டுமானாலும் கலைத்து வேறு மாநிலத்தின் வாரியத்தின்கீழ் கொண்டுவரவும் இச்சட்டதிருத்தத்தில் ஒன்றிய அரசுக்கு அதிகாரம் வழங்க ஏற்பாடு உள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகளை தேர்வு செய்வதில் தலையீடு, பணியிலிருந்து ஓய்வுபெற்ற சில நீதிபதிகளுக்கு சலுகைகள் வழங்குவது என நீதித்துறையையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சி செய்கிறது. இந்த வரிசையில் தற்போது சமீபமாக மாநிலங்களில் அமர்த்தப்படும் ஐஏஎஸ் (இந்திய ஆட்சிப்பணி) அதிகாரிகளை மாநில அரசுடன் கலந்தாலோசிக்காமல் எப்போது வேண்டுமானாலும் திரும்பப்பெற்று வேறு அதிகாரியை பணியில் அமர்த்தும் அதிகாரத்தை தங்களுக்கு வழங்கிக் கொள்கிறது ஒன்றிய அரசு.

நீதித்துறையைப் போலவே திட்ட ஆணையமும் ஒரு தன்னிச்சையான அமைப்பு. இதில் ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்திற்கு தேவையான திட்டங்களை பற்றி எடுத்துரைக்கும் உரிமை இருந்தது. ஆனால் திட்ட ஆணையம் கலைக்கப்பட்டு, அதனிடத்தில் ‘நிதிஆயோக்’ என்ற ஒரு குழுவை அமர்த்தியுள்ளது. திட்டக் கமிஷனை கலைத்ததால் ஏற்பட்ட விளைவு என்ன? மாநிலங்களின் திட்டத்திற்கு தேவைப்படும் நிதியை கேட்டுப்பெற இயலாது. ஒன்றிய நிதிஅமைச்சரின் நிதிஒதுக்கீடு முடிவுகளை சார்ந்தேஇருக்க வேண்டியுள்ளது.

ஜி.எஸ்.டி. வரியை ஒன்றிய அரசு கொண்டுவந்தது. அதன்மீது மாநில அரசுகளுக்கு நடைமுறையில் எந்த அதிகாரமும் இல்லை. அதற்கும் ஒன்றிய அரசையே நாட வேண்டியுள்ளது. நிதிசார் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை  (FRBM-Fiscal Responsibility & Budget Management) என்கிற சட்டத்தை 2000ஆம் ஆண்டு ஒன்றிய அரசு கொண்டுவந்தது. மாநில அரசுகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து எவ்வளவு கடன் வாங்கமுடியும் என்பதை ஒன்றியஅரசு இதன்மூலம் கட்டுப்படுத்துகிறது. ஒரு மாநிலத்தின் மொத்த உற்பத்தியிலிருந்து 3% வரை மட்டுமே கடன்வாங்க முடியும் என்றும், அப்படி வாங்கும் கடன்தொகையை மாநிலங்கள் மூலதன செலவீனங்களுக்காக மட்டுமே செலவுசெய்ய வேண்டும்எனவும் நிபந்தனை விதிக்கப்படுகிறது.

இதுபோன்ற நிபந்தனைகள் மாநிலங்களின் உரிமைகளை பறிக்கிறது. உதாரணத்திற்கு, இந்த கொரோனா பொதுமுடக்க காலத்தில் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கியிருக்க நேர்ந்தது. இதனால் வேலை வருமானம் என அனைத்தும் பாதிக்கப்பட்டது. மக்களுக்கு உணவு தேவைப்பட்டது. உடனடி மருத்துவ உதவிகள் தேவைப்பட்டன. ஒன்றிய அரசின் இந்த நிபந்தனையால், அரசுக் கருவூலத்தில் பணம் இருந்தும் மாநில அரசுகளால் மக்களின் உடனடி தேவைகளுககு செலவுசெய்ய முடியவில்லை.

நவம்பர் 31, 2021 அன்று மாநிலங்களின் கருவூலத்தில் வைத்திருந்த ஒட்டுமொத்த இருப்பு 3லட்சம் கோடி ரூபாய்கள். இந்த கொரோனா காலத்தில் மக்கள் எவ்வளவு நெருக்கடிக்கு ஆளானார்கள் என்று அரசுக்கு தெரியாதா? அந்த பணத்தை செலவுசெய்ய முடியாத நிலை ஏன்?

ஒற்றை ஆட்சி விருப்பங்கள்:

இந்தியா வேகமாக அதன் கூட்டாட்சி குணங்களை இழந்துவருகிறது. இப்போது மத்திய ஆட்சியில், கூட்டாட்சி முறையை விரும்பாத, பன்முகத் தன்மையை ஏற்காத, இந்தியா பல்வேறு தேசியஇனங்களின் கூட்டு என்பதை ஏற்காத ஒரு கட்சி அமர்ந்துள்ளது.

இன்று ஒருவர் தன்னை எந்த அளவிற்கு இந்தியன் என்று உணர்கிறாரோ, அதேஅளவுக்கு தான் ஒரு தமிழன், மலையாளி, கன்னடிகா, … என தங்கள் மொழி மற்றும் பண்பாட்டு அடையாளத்தையும் உணர்கிறார்கள் என்பதே உண்மை. முன்பு இருந்த ஒன்றிய அரசுகளுக்கும் தற்போது இருக்கும் அரசுக்கும் முக்கியமான வேறுபாடு ஒரே இந்தியா, ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே வரி என அனைத்தையுமே ஒற்றைத்தன்மையை நோக்கி செலுத்துவதே. இப்படி ஒரு சித்தாந்தத்தை கொண்டுள்ள கட்சி எப்படி கூட்டாட்சி முறையை வலுப்படுத்தும்?

வேதனைக்குரிய விசயம் என்னவென்றால், 1990களுக்கு முன் வலுவாக இருந்த எதிர்ப்புகள் இப்போது அப்படி இல்லை.

1990 இல் ஏற்பட்ட நெருக்கடி

விடுதலைக்குப்பின் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியை குறைத்து உள்நாட்டில் தன்னிறவை எட்டிட முடிவு செய்தோம். இதற்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிட பொதுத்துறை நிறுவனங்கள் பிரதான பங்காற்றின. மாநிலங்களுக்கு இடையிலான சமத்துவமின்மையை குறைக்க திட்டக் குழு அவசியப்பட்டது.

ஆனால் இதில் சில சிக்கல்களை நாம் சந்திக்க நேர்ந்தது. வெளிநாடுகளிலிருந்து எதையும் இறக்குமதி செய்யமாட்டோம் என்றால், உள்நாட்டு வளர்ச்சி உள்நாட்டு சந்தையை சார்ந்து இருக்கிறது என்று பொருள். நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் செலவுசெய்ய போதுமான அளவு வருமானம் ஈட்டினால்தான் உள்நாட்டு சந்தை விரிவடையும். ஆனால் அது நிகழவில்லை. ஏனெனில் பெரும்பாலான உழைக்கும் மக்கள் விவசாயத் தொழிலை சார்ந்துதான் வாழ வேண்டியிருந்தது. விவசாயத் தொழிலில் ஈடுபடும் பெரும்பாலான மக்களின் பொருளாதார நிலைமைகள் முன்னேற வேண்டுமென்றால் அதற்கு நிலச்சீர்திருத்தம் அடிப்படையான முன்நிபந்தனை. அதை செய்யாத காரணத்தால் சீர்குலைவு ஏற்பட்டது.

எனவே 1980களில் வேறு முடிவுகளை அரசு எடுக்கிறது. அதாவது உற்பத்தி செய்யப்படும் பொருட்களை நாம் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வது என்று. ஆனால் உற்பத்திக்குத் தேவைப்படும் இடுபொருட்களையும், நவீன இயந்திரங்களையும், இன்னபிறவற்றையும் இறக்குமதி செய்யும் முடிவிற்கு மீண்டும் அரசு வருகிறது. ஏற்றுமதியும் எதிர்பார்த்த அளவில் நிகழவில்லை.

இந்த தொடர் நிகழ்வுகளால் உள்நாட்டில் நமது கடன்சுமை அதிகரித்து ஒரு பொருளாதார நெருக்கடிக்குள் நாடு சென்றது. இப்பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளிவர ஐ.எம்.எஃப் மற்றும் உலகவங்கியிடம் கடன்வாங்க வேண்டியிருந்தது. இந்த இரண்டு அமைப்புகளும் ஏகாதிபத்தியத்தின் கையாட்களே. நவீன தாராளமய கொள்கைகளை அமல்படுத்துவதற்குதான் இவர்கள் கடன்கொடுக்கிறார்கள்.

இந்திய முதலாளிகளுக்கும் அரசு பின்பற்றும் பொருளாதார கொள்கையில் மாற்றம் தேவைப்பட்டது. அரசின் கொள்கைகள் அவர்களுக்கு லாபகரமாக இல்லைஎன்பதை அவர்கள் புரிந்துகொண்டு உலகசந்தையில் அவர்கள் வலைவீச விருப்பப்பட்டனர். விடுதலைக்குப்பின் உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியடைந்திருந்தன.எனவே இந்திய முதலாளிகள் நவீன தாராளமயக் கொள்கையின் தனியார் மயத்தை ஆதரித்து அந்நிய மூலதனத்தின்பக்கம் நின்றனர்.

இது எவ்வாறு அரங்கேற்றப்பட்டது என்பதற்குள் நான் ஆழமாக போகவிரும்பவில்லை. ஆனால் ஒன்றைமட்டும் முன்வைக்கிறேன். அனைத்து துறைகளிலும் இருந்த ஒழுங்குமுறைகள் யாவும் உலகசந்தையோடு ஒத்துப்போகும்படி அந்நிய மூலதனத்துக்கு ஆதரவாக மாற்றிஅமைக்கப்பட்டது. இன்னும் எளிமையாக சொல்வதென்றால் அந்நிய மூலதனத்தின் தடையற்ற போக்குவரத்திற்காக விதிகள் தளர்த்தப்பட்டன.

இதன்விளைவாக என்னநடந்தது?

“என்ன விளைவுகள் இருந்தால் என்ன, இது பொருளாதார வளர்ச்சியைஅதிகரித்துள்ளது” என ஒருசிலர் வாதிடுகின்றனர். இப்படி வாதம் செய்பவர்கள் எதையும், எதையும் ஒப்பிடுகிறார்கள்? கொரோனாவுக்கு முன், இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 7% ஆக இருந்தது. 1951 முதல் 1980 வரையான காலக்கட்டத்தில் 3.5% ஆகயிருந்த வளர்ச்சி விகிதம் நவீன தாராளமயக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதற்குப்பிறகு இருமடங்காக அதிகரித்து 7% ஆகியிருக்கிறது என்பது அவர்களுடைய வாதம். ஆனால் இவர்கள் 1980 ஆம் ஆண்டிலேயே பொருளாதார வளர்ச்சி 3.5% என்பதில் இருந்து 5% ஆகிவிட்டிருந்ததை கூறமாட்டார்கள். தனியார் மயத்திற்கு முன்பே ஒரு சீரான வளர்ச்சிப்போக்கில்தான் பொருளாதாரம் வளர்ந்தது.

விடுதலைக்கு முன் என்ன நடந்தது என்பதை பார்க்க வேண்டும். அப்போது 1% என்ற அளவிற்கும் குறைவாக இருந்த வளர்ச்சி, விடுதலைக்கு பின் 5% ஆனது. எனவே மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி என்பது 1990களுக்கு பின்  ஏற்பட்டது அல்ல.

வரலாறு காணாத ஏற்றத்தாழ்வு:

உண்மையில், நவீன தாராளமயக் கொள்கையின் நடைமுறையால் கிடைத்த வளர்ச்சிக்கு இந்திய மக்கள் பெருந்தொகையை இழக்க வேண்டியிருந்தது. சமத்துவமின்மை எல்லா இடங்களிலும் ஆழமாக வளரத் துவங்கியது. இந்திய வரலாற்றில் இன்றிருப்பதுபோல் சமத்துவமின்மை எக்காலத்திலும் இருந்ததில்லை. அவ்வளவு இடைவெளி கொண்ட ஏற்றத்தாழ்வு இருக்கிறது.

உதாரணத்திற்கு சில புள்ளிவிவரங்களை பார்க்கலாம்.

முதலில் இந்தியாவில் அதிக பணம்படைத்த 1% மேல்தட்டு மக்களின் வருமானத்தைப் பார்ப்போம். 1961-இல் அவர்களின் வருமானம் 13% இருந்தது. 1981 வரைஇது ஏறத்தாழ இப்படியே நீடித்தது. 1991-இல் இது 10.4% ஆக குறைகிறது. ஆனால் தனியார்மயமும் நவீன தாராளமய கொள்கைகளும் நடைமுறைக்கு வந்தபிறகு 2020-இல் அவர்களுடைய வருமானம் 21% ஆக அதிகரித்திருக்கிறது.

இதே காலக்கட்டத்தில் அடித்தட்டில் இருக்கும் 50% மக்களின் வருமானம் எப்படி இருந்தது?

1961-இல் 21% ஆகவும், 1981-இல் 23% ஆகவும் உயர்ந்திருந்தது. பின் தனியார்மயம் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு பிறகு 2020-இல் 14.7% ஆக குறைந்திருக்கிறது. நினைவில் கொள்க. இதில் வெறும் 1% செல்வந்தர்களையும் 50% அடித்தட்டு உழைக்கும் மக்களையும் மட்டுமே நாம் ஒப்பிடுகிறோம்.

சொத்துக்குவிப்பு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். அடித்தட்டு மக்களின் சொத்துக்கள் 1961-இல் 10% லிருந்து 1981 வரை 12% ஆக உயர்ந்தது. இன்று 2020-இல் வெறும் 2.8% ஆக சுருங்கியுள்ளது! 1% மேல்தட்டு மக்களிடம் சுதந்திரம் பெற்றதிலிருந்து 1991 வரை 11% ஆக சீராக இருந்த சொத்துசேர்ப்பு, இன்று 43% ஆக அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்த ஏற்றத்தாழ்வுகள் ஒரு சமூக கொந்தளிப்பாக மாறிவிடக் கூடாது என்பதற்காகத்தான் பா.ஜ.க போன்றொதொரு கட்சியின் ஆட்சி முதலாளிகளுக்கு தேவைப்படுகிறது. இதன் அரசியல், மக்களை மதம், சாதிசார்ந்த இந்துத்துவ வெறுப்பு அடிப்படையில் எப்போதும் பிரித்து வைக்கிறது. அதோடு ஒரு எதேச்சதிகாரத் தன்மையுடன் நடந்துகொள்ளக்கூடிய, பன்முகத்தன்மையை புறம்தள்ளி அனைத்தையும் ஒற்றைஅதிகாரத்தின்கீழ் கொண்டுவரக்கூடிய ஒற்றைஆட்சியை நோக்கிய ஒரு கட்சியாக அது செயல்படுகிறது. அதிகாரகுவிப்பு என்பது நவீன தாராளமயக் கொள்கையின் உள்ளார்ந்த பண்பும்கூட என்று புரிந்துகொள்ள வேண்டும்.

அதிகார பரவலின் நிலை:

இப்போது மாநிலகட்சிகளின் தன்மையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகளைப் போலவே இவர்களும் நவீன தாராளமயக் கொள்கைகளை ஏற்றுக்கொள்கின்றனர்.

அதன் விளைவாகவே, கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு கஜானாவில் பணம்கொட்டிக்கிடந்தும் வாழ்வாதாரத்தை இழந்த, வேலையிழந்த மக்களுக்கு அதனை பயன்படுத்தாத நிலையை மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டன.

ஆனால் கேரளா இதனை கொரோனா காலம் முழுவதும் செலவு செய்தது. 2021-இல் ஒருநாள்கூட கேரள அரசு கஜானாவில் பணம் விட்டுவைத்ததில்லை. இதுதான் எங்கள்கொள்கை. இடதுசாரி கொள்கை. இக்காலத்தில் கடனாக பெற்ற பணத்தை உணவு, மருத்துவ தொகுப்புகளை வழங்கவும், ஓய்வூதியத்தை உயர்த்தவும், சுயஉதவிக்குழுக்களின் கடன்களை தள்ளுபடி செய்யவும் செலவிட்டது. 2021-இல் கேரளாவின் சமூகநல செலவினங்கள் 162% உயர்ந்துள்ளது. பிற மாநிலங்களில் 30% மட்டுமே உயர்ந்துள்ளது.

அதிகார பரவலாக்கம் என்று சொல்லும்பொழுது,

1. மத்தியிலிருந்து மாநிலங்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படவேண்டும்.

2. மாநிலங்களிலிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பகிரப்படவேண்டும்.

ஆனால்,பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை பொருத்தமட்டில் அதிகார பரவலாக்கம் என்பது மாநிலங்களின் உரிமைகளை மீறி, நேரடியாக தங்கள் அதிகார எல்லைக்குள்உள்ளாட்சிகளை கொண்டுவர வேண்டும் என்பதாகவே இருக்கிறது. இதற்கு சிறந்த உதாரணம் ராஜிவ்காந்தி ஆட்சிக்காலத்தில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு செய்யவிருந்த 64 மற்றும் 65வதுதிருத்தங்கள். அவை பின் முறியடிக்கப்பட்டன.

பா.ஜ.க உள்ளாட்சி அமைப்புகள் பற்றி அதிகம் பேசுவார்கள். ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் செய்த முதல்காரியம் உள்ளாட்சி துறைக்கு இருந்த அதிகாரத்தை குறைத்ததுதான்.

அதீத வறுமை ஒழிப்பு:

இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கும் மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது. கேரள மாடலுக்கு இப்படி பல தனித்துவங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி “Peoples Planning” (மக்களின் திட்டமிடல்) என ஒரு தனி புத்தகமே வெளிவந்துள்ளது. புயல், வெள்ளம், கொரோனா போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் கேரளா உள்ளாட்சி அமைப்புகள் மூலமே மீண்டெழுகிறது.

தோழர் இ.எம்.எஸ். தொடங்கி வைத்த “மக்களின் திட்டமிடல்” என்ற பாதையில் கேரளா பயணிக்கத் தொடங்கி தற்போது 25வது ஆண்டு நிறைவை நாங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேலையில், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கேரளாவில் அதீத வறுமைஒழிப்பு என்ற பிரச்சாரத்தை நாங்கள் கையிலெடுத்திருக்கிறோம் என்று பெருமிதத்தோடு கூறுகிறேன். அதீத வறுமையில்லாத மாநிலமாக கேரளாவை மாற்றுவது என முடிவு செய்திருக்கிறோம்.

இதனால் கேரளாவில் அனைத்துமே சரியாக நடக்கிறது என்ற எண்ணம் வேண்டாம். நல்ல உள்ளாட்சிகளும் உள்ளன; மோசமாக செயல்படும் உள்ளாட்சிகளும் உள்ளன. ஆனால் அதிகார பரவலாக்கம் திட்டமிடலிருந்துதான் தொடங்க வேண்டும் என்பதுதான் கேரள அனுபவம் உணர்த்தும் உண்மை.

தனியார் மயத்திற்கு மாற்று மக்கள் பங்களிப்புடன் கூடிய திட்டமிடல்தான். அவரவர் வசிக்கும் பகுதிகளில் என்ன வரவேண்டும் என்று மக்கள் திட்டமிட அதிகாரம் வேண்டும். இருக்கும் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் எதற்கு முன்னுரிமை வழங்கவேண்டும், நிலம் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும், கூட்டாக எப்படி, என்ன பயிர் செய்யவேண்டும் என அனைவரின் பங்களிப்பு மட்டுமே தனியார் மயத்திற்கு மாற்றாகும். (Participation is the answer to Privatization)

முடிவாக:

“ஜனநாயக மத்தியத்துவம் பேசும் கம்யூனிஸ்ட் கட்சி எப்படி ஜனநாயக பரவலாக்கம்” குறித்து பேசமுடியும் என தோழர் இ.எம்.எஸ்இடம் ஒருமுறை பத்திரிக்கையாளர் கேட்க, அதற்கு அவர் கொடுத்த பதில், “ஜனநாயக மத்தியத்துவம் என்பது எங்கள் கட்சிக்குள் கடைப்பிடிக்கப்படும் கொள்கை. அதில் ஒருவருக்கு உடன்பாடில்லை என்றால் அவர் தாராளமாக விலகலாம். ஆனால் ஜனநாயக பரவலாக்கம் என்பது அரசுகளின் கொள்கையாக இருக்கவேண்டும்.” ஜனநாயக அதிகார பரவலாக்கம் அதிகாரத்தை மத்தியிலிருந்து மாநிலத்திற்கும், மாநிலத்திடமிருந்து உள்ளாட்சிக்கும் கடத்திடும்.

கேரளாவில் இடதுசாரி ஆட்சியில் உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளின் கட்டமைப்புகள் மிகவும் வலுவாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் இவை மிகவும் வலுவற்றதாக இருக்கின்றன. எவ்வளவு குறைபாடுகள் இருந்தாலும், எவ்வளவு வலுவற்றதாக இருந்தாலும் அதிகார பரவலாக்கத்திற்கு நம் அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள அமைப்புகளை இந்நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட, விரிவுபடுத்த நாம் பயன்படுத்தவேண்டும் என்பதையே முடிவாக நான் சொல்ல விரும்புகிறேன்.

தமிழில்: பிரசன்னா வெங்கடேஷ்