இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ‘கட்சித் திட்டம்’ குறித்து …

தமிழில்: இரா.சிந்தன்

இந்தக் கட்டுரையை Pdf கோப்பாக தரவிறக்க இங்கே சொடுக்கவும்

ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கு புரட்சியின் குறிப்பிட்ட கட்டம் முழுமைக்கும், தொலைநோக்கு உத்தி ரீதியான இலக்குகளைக் காட்டும் கட்சித் திட்டம்தான், முக்கியமான அடிப்படை ஆவணமாகும்.

இந்தியாவின் கம்யூனிச இயக்கத்தில், குறிப்பாக விடுதலைக்கு பின்னர், அப்படியொரு திட்டத்தை வடித்தெடுப்பது பற்றி ஒன்றுக்கொன்று வேறுபட்ட, வித்தியாசமான பார்வைகள் நிறைந்திருந்தன. ஆளும் வர்க்கத்தின் அடிப்படைப் பண்புகள், அரசு அதிகாரம் ஆகியவைகளுடன் இந்தியப் புரட்சிக்கான அடிப்படை செயல்திட்டத்தையும், உத்தியையும் உருவாக்கி ஏற்பதற்கான போராட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ளே சுமார் பத்தாண்டுகள் நடந்தது.

விஜயவாடாவில் 1961 ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சியின் 6 வது அகில இந்திய மாநாட்டில், ஒன்றுபட்ட கட்சிக்குள் ஒரு திட்டத்தை உருவாக்குவதற்கான கடைசி முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அங்கு இரண்டு வரைவுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டன, சமரசம் காண முடியாத வேறுபாடுகள் காரணமாக அந்தத் திட்டங்கள் அலமாரிக்குச் சென்றன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து சிபிஐ(எம்) உருவான பின்னர், 1964 ஆம் ஆண்டில்தான், பம்பாயில் நடைபெற்ற 7 வது மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், கல்கத்தாவில் நடைபெற்ற 7 வது மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் விவாதித்து தங்களுக்கான தனித்தனியான திட்டங்களை ஏற்படுத்தினர்.

மிக நெடிய போராட்டத்திற்குப் பிறகும், கம்யூனிஸ்ட் கட்சிக்கு அடிப்படையான திட்டம், கருத்தென்ற அளவிலேயே தொடர்ந்துகொண்டிருந்தது. இந்த சூழலில், கட்சி பிரிக்கப்பட்டு அவரவருக்கான திட்டங்களை உருவாக்கிக் கொள்வதுதான் அப்போதைய ஒரே தீர்வாக இருந்தது. ஒருவேளை அந்த வேறுபாடுகள் நடைமுறை உத்தி தொடர்பானதாகவோ அல்லது சில கருத்தியல் பிரச்சனைகளில் புரிதலில் வேறுபாடாகவோ இருந்திருந்தால் கட்சிப் பிளவு ஏற்பட்டிருக்காது.

இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்கள் அடிப்படை செயல்திட்ட ஆவணங்களை உருவாக்கி ஏற்றுக் கொண்டு அறுபது ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்தக் காலகட்டத்தில் பல்வேறு அரசியல் பிரச்சனைகளிலும், குறிப்பிட்ட அரசியல் சூழலில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை உத்திகளிலும் இரண்டு கட்சிகளும் ஒரே புரிதலுக்கு வர முடிந்துள்ளது. இதுதான் (நமது) இணைந்த செயல்பாட்டுக்கும், இடதுசாரி ஒற்றுமைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியது.

சிபிஐ(எம்) கடந்த 2000 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் தனது கட்சித் திட்டத்தை மேம்படுத்தியது. சர்வதேச அளவிலும், தேசிய நிலைமைகளிலும், குறிப்பாக வர்க்க உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்களை உள்வாங்கி, மறு ஆய்வுக்கு உட்படுத்தி கட்சித் திட்டம் மேம்படுத்தப்பட்டது. இருப்பினும், புரட்சியின் கட்டம், அரசின் தன்மை மற்றும் மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கான வர்க்கங்களின் கூட்டணி மற்றும் அதன் தலைமை குறித்த அடிப்படையான வரையறுப்புக்கள் அப்படியே தக்கவைக்கப்பட்டன. 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சியின் 14 வது மாநாடு, கட்சித் திட்டத்தை மேம்படுத்த முடிவெடுத்து, அந்தப் பணி சுமார் 8 ஆண்டுகளுக்கு நீண்டது.

நீடித்த முயற்சிகள்:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பொருத்தமட்டில் புதிய கட்சித் திட்டத்தை வரைவு செய்யும் பணி கூடுதல் காலமெடுத்ததுடன் பல கட்டங்களையும் கடந்து வந்தது. 1986 ஆம் ஆண்டு அதன் 13 வது மாநாட்டில் கட்சி ஒரு வரைவுக் குழுவை ஏற்படுத்தி 1964 ஆம் ஆண்டு ஏற்கப்பட்ட கட்சித் திட்டத்தை மறு வரையறுக்க முடிவு செய்தது. 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற பாட்னா மாநாட்டில், ஏழு பேர் கொண்ட ஆணையத்தால் ஒரு வரைவு திட்டம் முன்வைக்கப்பட்டது. இருப்பினும் அந்த மாநாட்டில் வரைவு அறிக்கை ஏற்கப்படவில்லை. ஹைதராபாத்தில் 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற 15 வது மாநாட்டில் வரைவு திட்ட ஆவணம் விவாதிக்கப்பட்டு ஏற்கப்பட்டது. சர்வதேச, தேசிய சூழல்களில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களை கணக்கில் கொண்ட இடைக்கால நடவடிக்கையாக அது அமைந்தது. இருப்பினும், அது அரசின் தன்மை, ஜனநாயகப் புரட்சிக்கான வர்க்க கூட்டணி ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான கட்சித் திட்டமாக இல்லை.

இந்த வகையில், 1995 ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சியின் 16 வது மாநாடு, புதிய தேசியக் குழு உடனடியாக ஒரு ஆணையம் அமைத்து வரைவுத் திட்டம் உருவாக்க பணித்தது. அந்த முயற்சிகள் தொடர்ந்தன.

இறுதியாக, புதிய கட்சித் திட்டத்தை, புதுவையில் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற 22 வது மாநாட்டில் நிறைவேற்றியது. நீண்டகால விவாதத்தின் வெளிப்பாடாக உருவான இந்த திட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் எதிர்கால செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் பெற்றதாக அமைந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தைக் குறித்து விமர்சனப்பூர்வமான மதிப்பீட்டுக்கு வர முயற்சிப்பது உபயோகமானதாக இருக்கும். புரட்சியின் கட்டத்தை நிர்ணயிக்கும் வர்க்க பகுப்பாய்வு, அரசின் தன்மை மற்றும் தற்போதுள்ள அரசமைப்பை மாற்றியமைத்து, சோசலிசத்தை நோக்கிய மாறுதலை உருவாக்கும் புரட்சிகர அணிச்சேர்க்கை மற்றும் அதன் தலைமை ஆகியவைதான் அடிப்படையாக ஒரு கட்சித் திட்டத்தின் சாராம்சம்.

அரசு அதிகாரத்தின் தன்மை:

1964 ஆம் ஆண்டு கட்சித் திட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தற்போதைய புரட்சியின் கட்டத்தை ஜனநாயக கட்டம் என்றே வரையறுத்தனர். முழுமையடையாமல் உள்ள ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்புக் கடமைகளை நிறைவேற்றவேண்டிய தேவை இருப்பதை உணர்ந்தே (இரு கட்சிகளும்) இந்த முடிவுக்கு வந்தோம்.

அரசியல் விடுதலையை எட்டிய பின்னர், (புதிதாக அமைந்த) அரசின் தன்மை குறித்து முடிவு செய்வதிலும், ஆளும் வர்க்கத்திற்கும், அரசுக்கும் எதிரான புரட்சிகர இயக்கத்தை கட்டமைத்து முன்னெடுக்க அவசியமான வர்க்க கூட்டணி பற்றியும் தீர்மானிப்பதிலும், மாற்றுக் கருத்துக்கள் எழுந்தன. இன்றைய சமூகத்தில் ஆளும் வர்க்கமாக அமைந்து ஆதிக்கம் செலுத்தும் சுரண்டல் வர்க்கங்கள் மற்றும் அவற்றின் தன்மை ஆகியவற்றை, இந்திய சமூகம் குறித்த வர்க்கப் பகுப்பாய்வில் நிறுவ வேண்டும். இந்த ஆளும் வர்க்கம்தான் அரசினைக் கட்டுப்படுத்தி அதன் தன்மையை முடிவு செய்கிறது. முக்கியமான எதிரி யார்? யாருக்கு எதிராக ஒரு புரட்சிகர இயக்கத்தை வழிநடத்த வேண்டும் என்று தீர்மானிப்பதுதான் நீண்டகால உத்தியில் (strategy) மிக முக்கியமானது.

அரசு அதிகாரம் பற்றிய மாறுபட்ட பார்வைகள்:

மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தமட்டில், அரசின் தன்மை கீழ்க்காணுமாறு வரையறுக்கப்பட்டது:

இன்றைய இந்திய அரசு என்பது பெரு முதலாளிகளால் தலைமை தாங்கப்படுகிற முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ வர்க்க ஆட்சியின் கருவியாகும். இந்த அரசு முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை பின்பற்றும் பொருட்டு, அன்னிய நிதி மூலதனத்துடனான தனது ஒத்துழைப்பை அதிகரித்துக் கொண்டு வருகிறது. நாட்டு மக்களின் வாழ்க்கையில் அரசின் பங்கையும், செயல்பாட்டையும் வர்க்கத் தன்மைதான் முக்கியமாகத் தீர்மானிக்கிறது. (V அரசு கட்டமைப்பும், ஜனநாயகமும் 5.1)

அரசின் தன்மை குறித்த மேற்சொன்ன வரையறுப்பு, மேம்படுத்தப்பட்ட திட்டத்தில் தொடர்கிறது.

சிபிஐ 1964 ஆம் ஆண்டு தனது திட்டத்தில் அரசினை கீழ்க்கண்டவாறு வரையறுத்தது:

ஒட்டுமொத்தமாக இந்தியாவில் உள்ள அரசானது, இந்தியப் பொருளாதாரத்தில் முதலாளித்துவத்தையும், முதலாளித்துவ உற்பத்தி முறை, விநியோகம் மற்றும் பரிமாற்றத்தையும் உயர்த்திப் பிடித்து வளர்த்தெடுக்கும் தேசிய முதலாளிகளின் ஆட்சிக் கருவியாக அமைந்துள்ளது.

அரசாங்க அதிகாரத்தை நிறுவுதல் மற்றும் செயல்படுத்துவதில் பெருமுதலாளிகள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை செலுத்திக் கொண்டுள்ளனர். நிலப்பிரபுக்களுடன் தேசிய முதலாளிகள் சமரசம் செய்துகொண்டு அமைச்சரவையிலும், அரசாங்கக் கட்டமைப்பிலும், குறிப்பாக அரசின் மட்டங்களிலும் இடமளிக்கின்றனர்.

மேற்சொன்ன வரையறுப்பு 1968 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 8 வது மாநாட்டில் கீழ்க்காணுமாறு திருத்தப்பட்டது:

ஒட்டுமொத்தமாக இந்தியாவில் உள்ள அரசு பெரு முதலாளிகளின் வலுவான தலையீட்டுடன் கூடிய, தேசிய முதலாளிகளின் ஆட்சிக் கருவியாக அமைந்துள்ளது. இந்த வர்க்க ஆட்சி நிலப்பிரபுக்களிடம் வலிமையான தொடர்பு கொண்டுள்ளது. அரசு அதிகாரத்தில் இந்த காரணிகள் பிற்போக்குத்தன்மைக்கு ஊக்கமளிக்கின்றன.

அரசின் தன்மை குறித்த வரையறுப்பில் இரண்டு திட்டங்களுக்கும் இடையில் கணிசமான வேறுபாடு உள்ளது, இது இரண்டு கட்சிகளின் நீண்டகால திட்டத்திலும், வர்க்கக் கூட்டு மற்றும் நடைமுறைத் திட்டம் ஆகியவைகளில் குறிப்பிடத்தக்க தாக்கம் செலுத்துகிறது.

மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டத்தினுடனான குறிப்பிடத்தக்க மாறுபாடுகள் பின்வருமாறு:

மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டமானது, பெரு முதலாளிகளை, இந்திய அரசைக் கட்டுப்படுத்தும் வர்க்கக் கூட்டின் தலைமைப் பொறுப்பில் வைத்துப் பார்க்கிறது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதன் தலைமைப் பொறுப்பை மறுக்கிறது. தங்களின் 1964 ஆம் ஆண்டு திட்டத்தில் பெரு முதலப்பிடத்தக்க தாக்கம் செலுத்துகிறார்கள்” என்றவாறு அமைத்துக் கொண்டவர்கள் 1968 ஆம் ஆண்டு திருத்தத்தில் வலிமையான தாக்கத்தை கொண்டிருக்கின்றனர்” என்று மாற்றினர். இதுதான் இரண்டு திட்டங்களிலும் இந்திய அரசின் தன்மையை வரையறுப்பதில் முக்கிய மாறுபாடாக அமைந்தது.

பெருமுதலாளிகள் தொடக்கம் முதலே இந்திய முதலாளிகளுக்கிடையே ஒரு சக்திவாய்ந்த அடுக்குமுறையை ஏற்படுத்திவிட்டனர். முதலாளித்துவ வளர்ச்சியின் முதிர்வு நிலையில், பெருமுதலாளிகளின் ஏகபோகக் கட்டத்திற்கு வந்தடைந்த ஐரோப்பிய முதலாளித்துவத்தைப் போல் அல்லாமல், இந்திய முதலாளித்துவம் காலனிய ஆதிக்கத்தின் கீழானதொரு தனித்துவமான சூழலில் வளர்ந்தது, பெரு முதலாளிகளும் ஏகபோக நிறுவனங்களும் முன்கூட்டியே உருவாகி வளரத்தொடங்கின. பெரு முதலாளிகளின். இந்திய விடுதலைக்குப் பிறகான பத்தாண்டுகளில், முதலாளித்துவ வர்க்கத்தின் மீது வலுவான பிடிப்போடு பெரு முதலாளிகள் வளர்ச்சியடைந்தனர்.

பெரு முதலாளிகளே அரசின் தலைவர்களாக இருந்ததானது ஒரு குறிப்பிட்ட விதமான முதலாளித்துவ வளர்ச்சியை ஏற்படுத்தியது. இந்திய அரசு ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்துகொண்டதுடன், நிலப்பிரபுக்களிடமும் தன் கூட்டணியை பராமரித்தது. மார்க்சிஸ்ட் கட்சி தன் திட்டத்தில் சொல்வதைப் போல:

ஒருபுறம் அரசு அதிகாரத்தை பயன்படுத்தி மக்களைச் சுரண்டி தனது வர்க்க நலனை வலுப்படுத்திக் கொண்டுள்ளதோடு, மறுபுறத்தில் ஏகாதிபத்தியத்துடனும், நிலப்பிரபுத்துவத்துடனும் தனது மோதல்களையும், முரண்பாடுகளையும் பேரம் பேசியும், சமரசம் செய்து கொண்டும், அழுத்தம் கொடுத்தும் சரி செய்துகொண்டது.

மேற்சொன்ன நடவடிக்கைகளின் மூலம், அன்னிய ஏகபோகங்களுடன் தன் பிணைப்புகளை வலுப்படுத்தி தனது அதிகாரத்தை நிலப்பிரபுத்துவ வர்க்கத்துடன் பகிர்ந்துகொண்டது.

இந்தியாவில் அரசு ஒட்டுமொத்தமாக தேசிய முதலாளிகளுடையதென்று குறிப்பிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டமானது பெரு முதலாளிகள் தலைமைப் பொறுப்பில் இருப்பதை ஏற்பதில்லை, மாறாக வலுவான தாக்கத்தைசெலுத்துவதாக மட்டும் சொல்கிறது. மேலும் முதலாளி நிலப்பிரபுத்துவ வர்க்கக் கூட்டணி இந்திய அரசின் அடித்தளமாக அமைந்திருக்கிறதென்று சொல்லும் மார்க்சிஸ்ட் கட்சியின் பார்வைக்கு மாறாக ”நிலப்பிரபுத்துவ வர்க்கத்தோடு வலிமையான பிணைப்பு” கொண்டிருப்பதாக மட்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் குறிப்பிடுகிறது. நிலப்பிரபுத்துவ வர்க்கத்தார் அரசுக் கட்டமைப்பின் பகுதி அல்ல; அதன் பொருள் அவர்கள் ஆளும் வர்க்கத்தின் பகுதி அல்லர் என்றாகிறது.

இரண்டு கட்சித்திட்டங்களிலும் உள்ள மற்றொரு வேறுபாடு அரசின் தன்மை குறித்தானதாகும். முதலாளித்துவ வளர்ச்சிப்பாதையில் வழிநடத்தும் பெருமுதலாளிகளின் தலைமையில் உள்ள ஆளும் வர்க்கத்தோடு அன்னிய நிதி மூலதனம் கைகோர்த்திருப்பதை மார்க்சிஸ்ட் கட்சி தன் திட்டத்தில் காண்கிறது. அதாவது, நிலப்பிரபுத்துவமும், ஏகாதிபத்தியமும் இந்திய ஆளும் வர்க்கங்களுடனும், அரசு கட்டமைப்பிலும் வலுவான பிணைப்புக் கொண்டிருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தை விடவும் மார்க்சிஸ்ட் கட்சி திட்டம் தெளிவாக வரையறுத்திருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வகைப்படுத்துதலில் ஆளும் வர்க்கக் கட்டமைப்பு எதுவாக இருந்தாலும், ஏகாதிபத்தியமும், அன்னிய நிதி மூலதனமும் வகிக்கும் பாத்திரங்கள் குறித்து எதுவுமில்லை.

மேற்சொன்ன, அரசின் தன்மை குறித்த வகைப்படுத்துதல் நடைமுறையில் பெருத்த விளைவுகளை ஏற்படுத்தும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தமட்டில் தேசிய முதலாளிகள் தலைமையிலான அரசில், பெருமுதலாளிகள் வலிமையான ஆதிக்கம் செலுத்துகின்றனர் எனும்போது அரசின் மீதான அவர்களின் அணுகுமுறை மார்க்சிஸ்ட் கட்சியினுடையதிலிருந்து வேறுபடும். மேலும், நிலப்பிரபுத்துவ வர்க்கத்தினர் ஆளும் வர்க்கத்தின் உள்ளார்ந்த பாகமாக இருந்து அரசைக் கட்டுப்படுத்தவில்லை எனும்போது முதலாளித்துவ அரசின், ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு கடமைகள் பற்றி மிகை மதிப்பீடு உருவாகும். “தேசிய முதலாளிகளின்” பாத்திரம் குறித்த விசயத்திலும் மேற்சொன்ன பாதிப்பு ஏற்படும்.

இந்திய அரசு, தேசிய முதலாளிகளுடையதென்று வரையறுக்கும்போது, அது எதிரி வர்க்கத்தின் கையில் இல்லை என்றாகிறது. தேசிய முதலாளிகள் அரசை தலைமையேற்றபடியே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய ஜனநாயகப் புரட்சியில் பங்கேற்கும் தகுதியுடைய வர்க்கமாகவும் உள்ளனர். உழைக்கும் வர்க்கத்தால் முற்போக்கு திசையில் உந்தித் தள்ளி, திசை மாற்றி, ஊக்கப்படுத்த வேண்டியதொரு வர்க்கமாகவும், பெரு முதலாளிகள், ஏகாதிபத்தியம் மற்றும் நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் அரசால் கொடுக்கப்படும் பிற்போக்கு அழுத்தங்களை உழைக்கும் வர்க்கத்தின் துணைகொண்டு தடுத்தாளும் நிலைமையிலும் தேசிய முதலாளி வர்க்கம் இருக்கிறது. இந்திய அரசு பற்றிய இந்தக் கருத்து, 1956 ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்த பார்வையின் தாக்கத்துடன் ஒத்திசைந்து ஏற்பட்டதாகும்.

இது ஆளும் வர்க்கத்தின் மீதும், முதன்மையான ஆளும் வர்க்க கட்சியின் (காங்கிரஸ்) மீதும் ஒரு மென்மையான போக்கிற்கு இட்டுச் சென்றது. ஒரு தேசிய ஜனநாயகப் புரட்சிக்கு அதாவது ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம் மற்றும் ஏகபோகத்தை எதிர்த்த புரட்சிக்கு அரசும், தேசிய முதலாளிகளின் ஆளும் கட்சியும் தகுதிவாய்ந்த கூட்டாளிகளாகப் பார்க்கப்பட்டனர். நிலப்பிரபுத்துத்தையும், ஏகாதிபத்தியத்தையும் ஆளும் வர்க்கத்தோடு இணைத்துப் பார்க்கத் தவறியது இத்தகைய நீண்டகால உத்தியை முடிவு செய்ய வைத்தது. அதே சமயம் நடைமுறை உத்தி அளவிலும் இந்த வரையறுப்பானது முதலாளித்துவக் கட்சிகளால் ஆதிக்கம் செலுத்தப்படும் மத்திய அரசுகளில் இணைய வாய்ப்பு ஏற்பட்டபோது, அரசாட்சியில் பங்கேற்கும் முடிவுக்கு இட்டுச்சென்றது (1994 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில்)

கட்சித் திட்டம் பற்றிய விவாதங்களில் இந்த வரையறைகளை மறுஆய்வு செய்யும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. 1989 மார்ச் மாதம் நடைபெற்ற மாநாட்டில் முன்வைக்கப்பட்ட வரைவுத் திட்டத்தில் அரசு குறித்த வரையறுப்பு 1968 ஆம் ஆண்டு 8 வது மாநாட்டில் செய்யப்பட்ட திருத்தத்தை ஒத்தேதான் இருந்தது.

இந்தியாவில் உள்ள அரசு, பெரு முதலாளிகள் வலிமையான தாக்கம் செலுத்துவதாகவும், தேசிய முதலாளிகளான ஆளும் வர்க்கத்தாரின் கருவியாகவும் உள்ளது. இந்த வர்க்க ஆட்சியானது நிலப்பிரபுத்துவ வர்க்கத்தோடு வலிமையான பிணைப்புக் கொண்டுள்ளது. இந்த நிலைமையானது அரசு அதிகாரத்தில் பிற்போக்கு அழுத்தங்களை ஏற்படுத்துகின்றன.

வரைவுத் திட்டத்தை உருவாக்கும் பணியை எடுத்துக் கொண்ட குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஜெகநாத் சர்க்கார் வேறுபட்ட பார்வையை கொண்டிருந்தார். அரசின் தன்மை குறித்த தன்னுடைய திருத்தத்தையும் முன்வைத்திருந்தார். அந்த திருத்தத்தின் முதல் பகுதி பின்வருமாறு:

இந்தியாவில் உள்ள அரசு இந்திய முதலாளி வர்க்கத்தின் கருவியாகும், அதற்கு நிலப்பிரபுத்துவ வர்க்கம் கூட்டாளியாக உள்ளதுடன் பெரு முதலாளி வர்க்கம் தீர்மானகரமான ஆதிக்கத்தை அதன் மீது செலுத்திவருகிறது. நிலப்பிரபு வர்க்கத்துடனான இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் கூட்டும், பெரு முதலாளிவர்க்கத்தின் தீர்மானகரமான ஆதிக்கமும் இந்திய அரசின் மீது தாக்கம் செலுத்தி பிற்போக்குத்தனத்தை இயம்பியுள்ளன.

இந்திய அரசின் முக்கிய பகுதியான முதலாளிகள் பாரம்பரியமாகவே நிலப்பிரபுக்களிடம் நெருக்கமான உறவுகொண்டுள்ளனர். இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது குறு மன்னர்களும், பெரு நிலக்கிழார்களும் ஆங்கிலேய ஆதிக்கத்தின் ஆதரவாளர்களாக இருந்தபோது சிறு நில உடைமையாளர்களும், நடுத்தர நிலவுடைமையாளர்களும் பொதுவாக காலனிய எதிர்ப்பு போராட்டத்தை ஆதரித்தனர். இது நிலப்பிரபுத்துவ வர்க்கத்தார் அரசியல் தளத்தில் முதலாளிகளுக்கு நெருக்கமாக்க வகை செய்தது. இந்தக் கூட்டு விடுதலைக்குப் பிறகும் தொடர்ந்தது (இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வரைவுத் திட்டம், 1989)

சர்க்காரின் வரையறுப்பின் படி, பெரு முதலாளிகள் “தீர்மானகரமான கட்டுப்பாட்டை” இந்திய அரசின் மீது செலுத்துகின்றனர். மேலும், அவரின் திருத்தத்தில் முதலாளி வர்க்கத்திற்கும் நிலப்பிரபு வர்க்கத்திற்கும் இடையிலான கூட்டு அறியப்படுகிறது. அவர் மேலும் பெரு முதலாளிகள்தான், முதலாளித்துவ வர்க்கத்திலேயே பலம்வாய்ந்த அடுக்கு என்பதை வெளிக்கொண்டுவருவதற்காக “தேசிய முதலாளிகள்” என்ற பதத்தை தவிர்க்கிறார்.

கட்சித் திட்டத்திற்கான குழுவின் மற்றொரு உறுப்பினர் பி.கே.வாசுதேவன் நாயர் முன்வைத்த திருத்தத்திலும் பெரு முதலாளிகள் “தீர்மானகரமான தாக்கம்” செலுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

22 வது மாநாட்டில் ஏற்கப்பட்ட புதிய திட்டத்தில், அரசு பற்றிய வரையறுப்பில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பின்வருமாரு:

8.1 இந்தியாவில் உள்ள அரசு கார்ப்பரேட் பெரு முதலாளிகள் மற்றும் ஏகபோகங்களின் தலைமையிலான முதலாளிகளின் அரசாகும். இந்த வர்க்க ஆட்சி, அரைநிலப்பிரபு அரை முதலாளித்துவ நிலப்பிரபுக்களோடு வலுவான பிணைப்புக் கொண்டுள்ளது. இது ஒரு அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகளை தீர்மானிக்கிறது. விவசாயத்தில் முதலாளித்துவத்தின் வளர்ச்சியை செயலாக்க பணிக்கிறது. உலக முதலாளித்துவ அமைப்புக்குள் செயல்பட்டு அமெரிக்கா மற்றும் உலக வங்கி, .எம்.எப் ஆகிய சர்வதேச நிதி அமைப்புகளால் வழிநடத்தப்படு சர்வதேச நிதி மூலதனத்தோடு நெருக்கமான பிணைப்பை வளர்க்கிறது.

(புதிய திட்டத்தில்) ”தேசிய முதலாளிகள்” என்ற வார்த்தைப் பயன்பாடு கைவிடப்பட்டுள்ளது ஒரு சரியான முடிவாகும். முந்தைய வரையறுப்புகளில் இருந்து மாறுபட்ட வகையில், இந்த அரசானது ”கார்பரேட் பெரு நிறுவனங்கள், ஏகபோகங்களால் தலைமையேற்கப்படும்” முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் கருவியாக அறியத்தருகிறது. நிலப்பிரபுக்களுடனான உறவு இப்போதும் “வலிமையான பிணைப்பு என்றே குறிக்கப்படுவதுடன், நிலப்பிரபுக்கள் “அரை நிலப்பிரபுத்துவ” “முதலாளித்துவ” தன்மையுடையதாய் குறிக்கப்படுகின்றனர். முந்தையவற்றிலிருந்து கூடுதலாக மேற்சொன்ன வரையறுப்பில் இடம்பெற்றுள்ள புதிய பகுதி சர்வதேச நிதி மூலதனத்துடன் அரசுக் கட்டமைப்பு “நெருக்கமான பிணைப்பை” வளர்த்துக் கொள்கிறது.

இந்தியாவிலுள்ள அரசுக்கு கார்ப்பரேட் பெருமுதலாளிகள் மற்றும் ஏகபோகங்கள் தலைமையேற்பதை அறியத்தருவதன் மூலம், தனது முந்தைய வரையறுப்புகளை விடவும் தெளிவானதொரு வரையறுப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அடைந்துள்ளது. இந்த குணநலன் குறிப்புகளுக்கு முன், வர்க்க நிலைமைகளின் மேம்பாடு குறித்த ஆய்வு வருகிறது:

பெரும் பகுதி இந்திய முதலாளிகள் உள்ளிட்டு மக்கள் நலன்களைக் காவுகொடுத்து சில பெரும் ஏகபோக முதலாளிகள் பொருளாதார வலிமையையும், மூலதனக் குவிப்பையும் மேற்கொண்டுவருவது முதலாளித்துவ வளர்ச்சியின் போக்கில் ஏற்பட்டுள்ள ஒரு மிக முக்கியமான விளைவாகும்.

இருந்தாலும், ஏன் “பெருமுதலாளிகள்” என் வார்த்தைக்கு பதிலாக கார்ப்பரேட் பெருந்தொழில் மற்றும் ஏகபோகம் ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது கடினம்.பெருமுதலாளிகள்” பெரும் மூலதனப் பிரிவின் அனைத்துத் தரப்பையும் முழுமையாக உள்ளடக்கும் சொல்லாகும். கார்ப்பரேட் அல்லது நிறுவனங்கள் என்பவை உடைமையின் சட்டப்பூர்வ பெயர்கள் உதாரணமாக “பொது நிறுவனம்/கூட்டுப் பொறுப்பு நிறுவனங்கள். பெரும் கார்ப்பரேட்டுகள் ஆகியோர் பெரு முதலாளிகளின் ஒரு பகுதி, பெரும் ஏகபோக நிறுவனங்களும் அப்படியே. மேலும், பெரும் மூலதனம் உற்பத்தித் துறைக்கு வெளியே பல்வேறு துறைகளில், முதலீடு செய்யப்பட்டிருப்பதையும் இங்கே கணக்கில் கொள்ள வேண்டும். (உதாரணத்திற்கு ஊடகத் துறையில் உள்ள பெரு நிறுவனங்கள்). இவையெல்லாம், மூலதனச் செறிவில் குறிப்பிட்ட அளவு குவிக்கப்படும்போது, பெரு முதலாளிகளின் பகுதியாகத்தான் கருதப்பட வேண்டும். “கார்ப்பரேட் பெரும் நிறுவனங்கள் மற்றும் ஏகபோகங்கள்” என்று குறிப்பிடுவதற்கான நோக்கம் சரியானதாக இருந்தாலும் “பெரு முதலாளிகள்” என்ற சொல்லின் விரிவான பொருளைக் குறிப்பிட அது போதுமானதாக இல்லை.

நிலப்பிரபுக்களை அரசுக் கட்டமைப்பிற்கு வெளியே வைத்துப் பார்ப்பதானது, அரசு அதிகாரம் குறித்த விளக்கத்தின் பின்னடைவாக உள்ளது. விவசாய உற்பத்தியில் முதலாளித்துவ ஆதிக்கம் வளரும் அதே சமயம் அரை நிலவுடைமை நிலப்பிரபுத்துவத்தில் முறையாக வீழ்ச்சி இல்லாததால் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவம் மேலோங்குகிறது. “வலிமையான பிணைப்பு” மட்டுமே இருப்பதாகக் கருத எந்த அடிப்படையும் இல்லை. அவர்கள் ஆளும் வர்க்கத்தின் பிரிக்க முடியாத பகுதியாகவுள்ளனர். “நிலப்பிரபு” என்ற வார்த்தை இன்னமும் பயன்படுத்தப்படுவதற்கு காரணம், அழிக்கப்படவேண்டிய அரைநிலப்பிரபுத்துவ உறவுகள் இன்னமும் தொடர்வதேயாகும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தில் ஒரு இடத்தில் “ஊரக முதலாளிகள்” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. முதலாளித்துவ நிலப்பிரபுக்களும் இந்த ஊரக முதலாளிகளில் ஒரு பகுதியாகும். அவர்கள் அரசு கட்டமைப்பின் வெளியில் இருப்பதாகக் கருதுவதானது நடைமுறைக்கு மாறானது. இந்திய அரசு குறித்து சரியான புரிதலுக்கு வருவதற்கு பெரு முதலாளிகள் நிலப்பிரபுத்துவத்தோடு சமரசம் செய்து நிலச் சீர்திருத்தத்தை அமலாக்குவதையும், ஜனநாயகப் புரட்சியை முழுமை பெறச் செய்வதையும் தவிர்த்திருப்பதை கவனிப்பது அவசியம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தில் குறிப்பிட்டிருக்கும் சர்வதேச நிதி மூலதனத்திற்கும் இந்திய அரசுக்குமான பிணைப்பினை அங்கீகரிப்பது, சரியான திசையில் ஒரு படி முன்னேற்றம். இந்தியாவின் முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கின் காரணமாக இந்திய முதலாளிகளுக்கும் சர்வதேச நிதி மூலதனத்திற்கும் இடையிலான கூட்டிற்கு வந்து சேர்ந்ததென்ற தருக்க ரீதியான முடிவுக்கு வந்திருக்க வேண்டும். “இந்திய ஆளும் வர்க்கங்களுக்கும் அன்னிய நிதி மூலதனத்திற்கும் இடையில் அதிகரிக்கும் கூட்டு, இந்திய முதலாளித்துவ வளர்ச்சியின் ஒரு பகுதியாக நிகழ்கிறது” என்ற மார்க்சிஸ்ட் கட்சியின் வரையறுப்பில் இது பிரதிபலிக்கிறது.

தொகுத்துப் பார்த்தால், இந்திய அரசு குறித்த சிபிஐ கட்சித் திட்டத்தில் சில பலவீனங்களும் பிரச்சனைகளும் இருக்கின்ற போதிலும், இந்திய அரசின் தன்மை குறித்த இந்த மதிப்பீடு, சரியான சித்தரிப்பை நோக்கிய சரியான முன் நகர்வு ஆகும்.

ஜனநாயகப் புரட்சிக்கு யார் தலைமையேற்பார்கள்?:

இரண்டு கட்சித் திட்டங்களிலும் உள்ள மற்றொரு வேறுபாடு, ஜனநாயகப் புரட்சியை வெற்றிகரமாக சாதிக்கும் அணி அல்லது வர்க்க அணிச்சேர்க்கையும் அந்த அணிக்கு யார் தலைமையேற்பார்கள் என்பதுமாகும்.

இரண்டு கட்சிகளின் திட்டமுமே புரட்சியின் ஜனநாயகக் கட்டத்தைப் பற்றியும், ஜனநாயக முன்னணி அல்லது அணிச்சேர்க்கையில் எந்த வர்க்கங்கள் இடம்பெரும் என்பதிலும் ஒன்றுபோல பேசுகின்றன. அந்த அணிக்கு யார் தலைமையேற்க வேண்டும் என்பதில் இரண்டுக்கும் வேறுபாடுகள் உள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அந்த அணிக்கு தேசிய ஜனநாயக அணி என்று பெயரிட்டுள்ளது, மார்க்சிஸ்ட் கட்சி மக்கள் ஜனநாயக அணி அல்லது முன்னணி என்று அழைக்கிறது.

1964 ஆம் ஆண்டு கட்சித் திட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது, தேசிய ஜனநாயக அணியின் தலைமை குறித்து கீழ்க்கண்டவாறு வரையறுத்தது:

தேசிய ஜனநாயக அணியின் கைகளிலிருக்கும் தேசிய ஜனநாயக அரசு (சோசலிசத்தை நோக்கி) மாறும் கட்டத்தில் அமைந்திடும், அதன் அதிகாரம் ஏகாதிபத்திய ஒழிப்பிற்காகவும் அரை நிலப்பிரபுத்துவ சக்திகளையும், பெருகிவரும் ஏகபோகங்களின் சக்தியையும் எதிர்த்துப் போராடிய அனைத்து வர்க்கங்களாலும் கூட்டாக கைக்கொள்ளப்படும். இந்தக் கூட்டில், உழைக்கும் வர்க்கத்தின் தலைமை இன்னும் பரவலாக்கப்படவில்லை என்றபோதிலும் முதலாளித்துவ வர்க்கத்தின் தனித்த அதிகாரம் தொடராது” (பக்கம் 41, ஆங்கில புத்தகத்தில்)

உழைக்கும் வர்க்கத்தின் தனித்த அதிகாரமோ முதலாளி வர்க்கத்தின் தனித்த அதிகாரமோ இல்லை என்றால் அது முதலாளித்துவ வர்க்கம் மற்றும் உழைக்கும் வர்க்கத்தின் கூட்டு அதிகாரமாகும் என்று மார்க்சிஸ்ட் கட்சி முன்வைத்த விமர்சனத்தைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது 8 வது கட்சி மாநாட்டில் கடைசியாக ஒரு பாராவை சேர்த்து கூடுதல் விளக்கமளித்தது. அந்த பத்தி பின்வருமாரு: “இந்தக் கூட்டணியின் தலைமை ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவ, ஏகபோக எதிர்ப்பு சக்திகளிடம் இருக்கும்”. மேற்சொன்ன வரையறுப்புக்கு பிறகும், பல்வேறு வர்க்கங்களின் கூட்டுத் தலைமையையே அது உணர்த்துகிறது.

1964 ஆம் ஆண்டு திட்டத்தில் அடுத்த பத்தி பின்வருமாறு இருந்தது:

தேசிய ஜனநாயக அணியின் அரசும், அந்த அரசு பிரதிநிதித்துவப்படுத்தும் வர்க்க கூட்டும் தனது ஈட்டி முனையாக  உழைப்பாளர்கள் விவசாயிகளின் அணியையே கொண்டிருக்கும், அதன் தலைமைக்கு உழைக்கும் வர்க்கம்  அதிக அளவில் வந்து சேரும், இந்த வர்க்கம்தான் தேசிய ஜனநாயக அணியின் உணர்வுப்பூர்வ வாரிசாகவும், அதன் கட்டமைப்பாளராகவும் இருக்கும். (பக்கம் 48)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் திட்டத்தில் உள்ள (முதலாளித்துவ வர்க்கம் உழைப்பாளி வர்க்கத்தின் ) கூட்டுத் தலைமை என்ற கருத்தாக்கத்தை விடவும், மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் கீழ்க்காணுமாறு குறிப்பிடுகிறது:

7.1 இந்தியப் புரட்சியின் அடிப்படையான கடமைகளை முழுமையாகவும், முழு நிறைவாகவும் பூர்த்தி செய்வதற்கு இப்போதுள்ள பெரு முதலாளிகளின் தலைமையிலான முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அரசை அகற்றிவிட்டு, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் மக்கள் ஜனநாயக அரசை நிறுவுவது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.

மேலும், இன்றைய சகாப்தத்தில், சோசலிசத்தை அடைவதற்கான பாதையில் முன்னேறிச் செல்வதற்கு தேவையான ஒரு முன் நடவடிக்கையான ஜனநாயகப் புரட்சிக்கு பாட்டாளி வர்க்கம் தலைமையேற்க வேண்டியுள்ளது. இது பழைய பாணி முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி அல்ல, மாறாக, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் அணிதிரட்டி நடத்தப்படும் புதிய வகையிலான மக்கள் ஜனநாயகப் புரட்சி ஆகும். (பத்தி 7.2)

இதுவொரு வரட்டுத்தனமான வலியுறுத்தல் அல்ல புதிதாக விடுதலையடைந்த நாடுகளில் முதலாளித்துவ வர்க்கங்களால் ஜனநாயக்ப் புரட்சியை முன்னெடுக்க முடியவில்லை என்ற வரலாற்று அனுபவத்திலிருந்து வந்தடைந்த வரையறுப்பாகும். குறிப்பாக, பெரு முதலாளிகளால் தலைமையேற்கப்படும் இந்திய அரசில், பெரு முதலாளிகளின் தலைமையிலான முதலாளி நிலப்பிரபுத்துவ வர்க்க கூட்டின் அரசு அதிகாரத்தை அகற்றுவதுதான் மையமான பணியாகும். தொழிலாளி விவசாயி இடையே வலிமையான கூட்டு உருவாவது தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலேயே சாத்தியமாகும். பெரு முதலாளிகள் அல்லாத வர்க்கப் பகுதிகளும் மக்கள் ஜனநாயக அணியின் பகுதியாக இடம்பெறலாம் என்றபோதும், அவர்கள் உறுதியான கூட்டாளிகளாக இருக்க முடியாது, தொழிலாளி விவசாயி இடையிலான கூட்டு எத்தனை வலுவாக இருக்கிறதென்பதைப் பொறுத்துத்தான் அவர்களின் பங்களிப்பு இருக்கும்.

இந்தியாவில், விடுதலைக்குப் பிறகான அறுபதாண்டுகளுக்கும் மேலான முதலாளித்துவ வளர்ச்சியில், குறிப்பாக புதிய தாராளவாத முதலாளித்துவக் கட்டம் தொடங்கிய பின் பெரு முதலாளிகளுக்கும் அவர்கள் அல்லாத பகுதியினருக்கும் இடையிலான வேறுபாடுகள் மெளனமாக்கப்பட்டுள்ளன. சமீபத்திய வரலாற்றின் இந்த அம்சம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தில் எங்கும் கணக்கில்கொள்ளப்படவில்லை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய திட்டம் இப்போதும், ஜனநாயகப் புரட்சியை முழுமையாக்கி சோசலிச கட்டத்திற்கு மாறிச் செல்லும் கட்டத்திற்கு பல்வேறு வர்க்கங்கள் படிநிலைகளின் கூட்டுத் தலைமை என்ற கருத்தாக்கத்தில் நிலைபெற்றுள்ளது. அதில் கீழ்க்காணுமாறு குறிப்பிடப்படுகிறது:

ஜனநாயகப் புரட்சிக்கான பணிகளை நடைமுறையில் முன்னெடுக்கும் வர்க்கங்கள் மற்றும் மக்கள் பகுதிகள் தொழிலாளி வர்க்கம், ஊரக (கிராமப்புற) பாட்டாளிகள், உழைக்கும் விவசாயிகள், முற்போக்கு ஜனநாயகவாதிகள், மதச்சார்பற்ற சிந்தனையாளர்கள் மற்றும் மத்தியதர வர்க்கத்தின் புரட்சிகர பகுதியினர், ஒரு பகுதி நடுத்தர மற்றும் சிறு முதலாளிகள் ஆவர். வலிமையான விவசாயி தொழிலாளி கூட்டணியை நோக்கி அணிவகுக்கும், ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்து தலைமையில் உள்ள பெரு முதலாளிகளை மாற்றியமைக்கும் வரையில் முன்னணியில் இருப்பார்கள் (பத்தி 9.1)

தொழிலாளி வர்க்கம், ஊரக பாட்டாளிகள் தொடங்கி நடுத்தர, சிறு முதலாளிகள் வரையிலான வர்க்கங்களுக்கு, சோசலிசத்தை நோக்கிய மாறுதல் கட்டம் வரையிலான தலைமையை வழங்குவதானது பெரு முதலாளிகள், ஏகாதிபத்தியம் மற்றும் அரை நிலப்பிரபுத்துவ எச்சங்களுக்கு எதிராக தொய்வில்லாத தலைமையை யார் கொடுக்க முடியும் என்பதை மங்கச் செய்கிறது.

மாறுதலுக்கான காலகட்டத்தில் இருக்க வேண்டிய வர்க்கக் கூட்டினை தொழிலாளி வர்க்க தலைமை இல்லாமலே கொண்டு செல்ல முடியுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் கருதுகிறது. மாறுதல் காலகட்டத்தின் முடிவில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையும், பரந்த ஜனநாயக கூட்டும் அமைக்கப்படும் என்று வெறுமனே சொல்லிச் செல்கிறது.

முதலாளிகளின் இடத்தில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையும் ஆதன் பரந்த ஜனநாயக அணிகளும் இடம்பெறுவதானது, பல அதிர்ச்சிகளுக்கும் சமூக எழுச்சிகளுக்கும் இட்டுச்செல்லும்.

மார்க்சிஸ்ட் கட்சியின் புரிதலுக்கும், செயல்நோக்கிற்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலே தெளிவான அடிப்படை வேறுபாடு உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியைப் பொருத்தமட்டில் ஜனநாயகப் புரட்சியை முழுமைப் படுத்திய பிறகு சோசலிசத்தை நோக்கி மாறிச் செல்லும் கட்டமானது, தொழிலாளி வர்க்கம் மற்றும் அதன் புரட்சிகர வர்க்கக் கூட்டணியின் தலைமையிலேயே சாத்தியமாகும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் மாறுதல் கட்டத்தின் உச்சத்திலேயே தொழிலாளி வர்க்கத்தலைமையை நிறுவ முடியும் என்று கருதுகிறது.

பெரு முதலாளிகளால் தலைமையேற்கப்படும் தற்போதைய அரசமைப்பை மாற்றியமைப்பது மிகமிக அத்தியாவசியம் என்று மார்க்சிஸ்ட் கட்சியைப் போல, சிபிஐ பார்க்கவில்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வழியையே சமூகத்தில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று சொல்வதில் அது வெளிப்படையாகிறது.

புரட்சிகர மக்கள் இயக்கங்களை வளர்த்தெடுத்து, இடதுசாரி ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையை பரவலாக்குவதன் மூலமும், அத்தகைய மக்கள் இயக்கங்களின் துணையோடு நாடாளுமன்றத்தில் வலுவான பெரும்பான்மையைப் பெறுவதன் மூலமும் தொழிலாளி வர்க்கமும் அதன் கூட்டாளிகளும் தங்களால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு எதிர்ப்பு சக்திகளின் தடுப்பை தகர்த்து நாடாளுமன்றத்தை மக்கள் விருப்பங்களுக்கான ஒரு கருவியாகவும், சமூக மாற்றத்திற்கான அடிப்படையாகவும் மாற்றுவார்கள் (பத்தி 9.4)

இதன் பொருள் தற்போதுள்ள அரசுக் கட்டமைப்புக்குள்ளேயே செயலாற்றுவதன் மூலம் சமூகத்தில் அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்பதாகும். வெளிப்படையாக 1964 ஆம் ஆண்டு கட்சித் திட்டத்தில், இந்திய அரசுக் கட்டமைப்பில் ஏகாதிபத்தியம், ஏகபோகம் மற்றும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புக் கூறுகள் சில உள்ளதாக கூறப்பட்டது, இப்போதைய வரையறுப்பிலும் தொடர்கிறது.

வர்க்க பகுப்பாய்வு:

கட்சித் திட்டம் சுட்டும் நீண்டகால உத்தியில் உள்ள சில பலவீனங்கள், முழுமையற்றதும் பல்நோக்குடையுதுமான வர்க்கப் பகுப்பாய்விலிருந்து எழுகின்றன. கட்சியின் திட்டமானது இந்திய சமூகத்தில் நிலவும் வர்க்க உறவுகள் மீது மேற்கொள்ளப்படும் அறிவியல் பூர்வமான பகுப்பாய்வின் அடிப்படையில் இருப்பது அவசியமானது. அதன் மூலம்தான் பொருளாதார அடிப்படையிலும், சமூக ரீதியிலும் சுரண்டும் வர்க்கம் யார், சுரண்டப்படும் வர்க்கங்கள், பகுதிகள் யார் என்பதை கண்டறிய முடியும்.

நிலப்பிரபுத்துவத்தைக் கண்டுகொள்ளாமை:

விடுதலைக்குப் பிறகான விவசாய உறவுகள்”” என்ற பகுதியில் விவசாயத்துறை கண்டுள்ள பல்வேறு முதலாளித்துவ வளர்ச்சிப் போக்குகள் குறிக்கப்பட்டுள்ளன. எனினும், நிலப்பிரபுக்களின் இயல்பு குறித்து எந்த ஆய்வும் இல்லை. முதலாளித்துவ நிலப்பிரபுக்கள், பெரு முதலாளி விவசாயிகள் இடையேயான அடுக்குகளின் உருவாக்கம் குறித்த ஆய்வோ நிலக்குவியலும் பிற உடைமைகளும் எப்படி நிலப்பிரபுக்கள், பெரு முதலாளி விவசாயிகளிடம் தொடர்கின்றன என்பது பற்றிய ஆய்வோ இல்லை. அந்தப் பகுதியில், நிலக்குவியல் மற்றும் இதர சொத்துக்களின் மீது நிலப்பிரபுத்துவ பிடிமானம் பற்றி பேசாமலே நிலவிநியோகம் பற்றியும் நிலத்துக்கான போராட்டம் பற்றியும் பேசப்படுகிறது. முதலாளித்துவத்தின் கீழ் விவசாய வர்க்கத்திடையே ஏற்பட்டுள்ள வேறுபாடுகள் பெயரளவில் குறிக்கப்பட்டுள்ளன, விவசாயிகளிடையே உள்ள (ஏழை, நடுத்தர, பணக்கார) அடுக்குகள் குறித்தோ, வர்க்கப் போராட்டத்தில் அவர்களின் பாத்திரம் குறித்த அனுமானமோ, புரிதலோ குறிப்பிடப்படவில்லை.

உண்மையில், விவசாயிகளின் பல்வேறு பகுதிகள் குறித்த பத்தி, ஊரக (கிராமப்புற) வர்க்கங்கள் குறித்த ஆய்வின் பலவீனத்தையே காட்டுகின்றன.

பெரிய விவசாயிகளின் செல்வாக்கு காரணமாக, புதிய கொள்கையை நோக்கிய நிலைப்பாடு தெளிவற்றதாக உள்ளது. முதலில் அவர்கள் விவசாய தொழில்மயமும், தாராள வர்த்தகமும் தங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்று கருதினர். பின்னர், தாராள வர்த்தகத்தை எதிர்த்ததுடன் அரசு தலையீட்டின் மூலம் தங்கள் பொருளாதார தளத்தை பாதுகாக்க கோரிக்கை வைக்கத் தொடங்கினர். நடுத்தர மற்றும் சிறு விவசாயிகள் நல்ல லாபம் கிடைக்குமென்ற நம்பிக்கையில் பெரிய விவசாயிகளின் தலைமையையே பொதுவாகப் பின்பற்றினர். சிறு, நடுத்தர விவசாயிகள் அதிக அளவில் தங்கள் நிலங்களில் இருந்தும் இதர வளங்களில் இருந்தும் விரட்டப்பட்டுள்ளனர்.(பத்தி 6.6)

இங்கே “பெரிய விவசாயிகள்” என்று குறிப்பிடப்படுவோர் நிலப்பிரபுக்களா? முதலாளித்துவ விவசாயிகளா அல்லது பணக்கார விவசாயிகளா? “நடுத்தர, சிறு விவசாயிகள்” நடுத்தர விவசாயிகளாகவோ அல்லது ஏழை விவசாயிகளாகவோ இருக்கலாம். “வர்க்கங்கள் மற்றும் பிற பிரிவினர்: அவர்களின் பாத்திரம்” என்ற பகுதியில் ஊரக முதலாளிகள், முதலாளித்துவ நிலப்பிரபுக்களின் பாத்திரம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதோடு இதனை இணைத்துப் பார்க்க வேண்டும்.

ஊரக முதலாளிகள், முதலாளித்துவ நிலப்பிரபுக்கள் மற்றும் பணக்கார விவசாயிகள் ஆகியோர் நிலமற்ற தொழிலாளர்களின் போராட்டத்தோடோ, நில விநியோகத்துக்கான போராட்டத்தோடோ இணைய மாட்டார்கள். அதே சமயம் பிற விசயங்களில் உதாரணமாக இடுபொருட்கள் விலையேற்றம், உள் கட்டமைப்பு வசதிகள், கட்டுப்படியான விலை மற்றும் விவசாயத்தை சாட்தியமானதாக்குதல் மற்றும் அரசு வலுக்கட்டாயமான விவசாய நிலங்களைக் கைப்பற்றுதல் ஆகிய பிரச்சனைகளில் எல்லோரும் கைகோர்ப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியும். (பத்தி 7.15)

மேற்கண்ட பத்தியில், ஊரக முதலாளிகள், முதலாளித்துவ நிலப்பிரபுக்கள் மற்றும் பணக்கார விவசாயிகள் விவசாயிகள் ஒட்டுமொத்த போராட்டத்தின் பகுதியாக உள்ளனர். இது ஊரக முதலாளிகளின் பாத்திரம் குறித்த தவறான புரிதலாகும். உண்மையில் நிலப்பிரபுக்கள், பணக்கார விவசாயிகளின் போராட்டமானது அரசு வளங்களில் அதிகமான பங்கைப் பெறுவதற்கானதாகும். அந்த வளங்கள் மானியமாக இருக்கலாம், கடன் மற்றும் கட்டமைப்பு வசதியாக இருக்கலாம். மற்ற பகுதி விவசாயிகளை மேற்கண்டவைகளுக்காக அவர்கள் திரட்டுவார்கள். அதே சமயம் முதலாளி நிலப்பிரபுத்துவ ஒழுங்கமைவை எதிர்த்த போராட்டங்களின் பகுதியாக மாட்டார்கள். உண்மையில், விவசாயிகளின் ஜனநாயக இயக்கத்திற்கு எதிராக உருவெடுப்பார்கள்.

நிலப்பிரபுக்களும் ஆளும் வர்க்கத்தின் பகுதியாக இருந்து அரசு அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் உண்மை முழுமையாகத் தவறவிடப்பட்டுள்ளது. விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள், ஊரக ஏழைகள் மீது அவர்களால் நடத்தப்படும் வர்க்கச் சுரண்டல் பற்றிய கவனமும் முழுமையாகத் தவறியுள்ளது. அப்படியான வர்க்கப் பகுப்பாய்வும், அணுகுமுறையும் இல்லாமல் அரசு அதிகாரத்திற்கும் ஆளும் வர்க்கத்திற்கும் எதிராக வலுவானதொரு இயக்கத்தைக் கட்டமைப்பதோ, முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கங்களுக்கு எதிரான உழைப்பாளி விவசாயி கூட்டணியை ஏற்படுத்துவதோ சாத்தியமில்லை.

தொழில் மற்றும் வணிக மூலதனத்தைப் பொருத்தமட்டில் இந்த பகுப்பாய்வு புதிய தாராளவாத பொருளாதார சீர்திருத்தங்களின் விளைவை மட்டுமே கணக்கில் கொள்கிறது. முதலாளித்துவ வர்க்கங்களில் இருந்து வலிமையான கார்பரேட் நிறுவனங்களின் வலிமையான படிநிலைகள் எழுந்துள்ளன, பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களோடு இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் பலவிதமான கூட்டணிகளை ஏற்படுத்துவதை அது கவனப்படுத்துகிறது. கார்பரேட் முதலாளித்துவத்தின் மீது கவனம் குவிந்துள்ளது.

பெரு முதலாளிகளை உருவாக்கும் பெரும் மூலதனத்தின் அனைத்துப் பிரிவுகளின் மீதும் கவனம் விரிவாக்கப்படவேண்டும். முன்னமே குறிப்பிட்டதைப் போல, அது பெரும் கார்ப்பரேட்டுகளைக் குறித்தானது மட்டுமல்ல, மற்ற வகையிலான மூலதனவுடைமை மற்றும் வளங்களின் மீதான கட்டுப்பாடு என அனைத்துமாகும்.

பிராந்திய முதலாளிகள் மற்றும் பெருமுதலாளி அல்லாதவர்கள்:

பிராந்திய முதலாளிகளின் நிலை குறித்த ஆய்வும், சித்தரிப்பும் போதுமான அளவு இல்லாதது மற்றுமொரு பிரச்சனை. அதில் பெரும்பான்மை பெரு முதலாளி அல்லாதார் என்ற வரையறுப்பின் கீழ் வருகிறது. ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கத்தில் பிராந்திய முதலாளிகளின் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது, இதன் காரணமாக அவர்களுக்கு பெரு முதலாளிகளுடனான உறவிலும் மாற்றம் வந்துள்ளது. பெரு முதலாளிகள் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தின் மற்ற சிறு பிரிவுகள் இடையிலான முரண்பாடுகளைக் குறிப்பது மட்டும் போதுமானதல்ல. தாராளவாதம் அமலானதற்கு பின், பெரு முதலாளி அல்லாத முதலாளிகளுக்கும் தங்கள் மூலதனத்தை விரிவாக்கவும் அனைத்திந்திய பெரு முதலாளிகளோடு கைகோர்க்கவும் வாய்ப்புப் பெற்றுள்ளனர். இந்த நிகழ்முறையின் வழியாக, பெரு முதலாளி அல்லாத முதலாளிகளில் சில பகுதியினர், தங்கள் பிராந்தியத்தில் மூலதன அடித்தளத்தை தக்கவைத்துக் கொண்டே பெரு முதலாளிகள் என்ற நிலைக்கு வந்துள்ளனர்.

அன்னிய மூலதனத்திற்கும் பெரு முதலாளி அல்லாதோருக்கும் இடையிலான நீடித்த உறவு இல்லாதது பெரு முதலாளிகளுக்கும் அவர்கள் அல்லாத முதலாளிகளுக்கும் இடையிலான முரண்களின் ஒன்றாகவிருந்தது. தாராளவாத அமலாக்கத்திற்குப் பின் இது மாறிவிட்டது. பெரு முதலாளி அல்லாத பகுதியினரும் அன்னிய மூலதனத்தோடு கைகோர்க்கும் வாய்ப்பைப் பெற்று அதன் பலன்களையும் அடைந்துள்ளனர். இதுவெல்லாம் பெரு முதலாளிகளுக்கும், பெரு முதலாளி அல்லாத முதலாளிகளுக்கும் இடையிலான முரண்களை மெளனமாக்கியுள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தில், பிராந்தியக் கட்சிகளின் பாத்திரத்தைப் பற்றிய வரையறுப்பில் மேற்சொன்ன மாற்றங்கள் கணக்கில்கொள்ளப்படவில்லை. பிராந்தியக் கட்சிகளின் சில இயலாமைகளைக் குறிப்பிடுவதோடு பெரும்பாலும், பிராந்தியக் கட்சிகளை நேர்மறையான கண்ணோட்டத்தோடு பார்க்கின்றது. அவர்களின் ஆவணம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது:

அவர்கள் (பிராந்தியக் கட்சிகள்) குறிப்பிட்ட மாநிலம் அல்லது பிராந்தியத்தின் முக்கியப் பிரிவுகளுடைய குரலையும், தேவைகளையும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். அந்தக் குறிப்பிட்ட பிராந்தியத்தின் மக்கள் முன்னேற்றத்திற்கான குரலை எழுப்புகின்றனர்தீர்மானகரமான அரசியல் கண்ணோட்டம் இல்லாதபோதும், சூழலின் அவசியத்தைப் பொருத்து இந்த பிராந்தியக் கட்சிகள் கம்யூனிஸ்டுகளோடு கரம்கோர்க்க விரும்புகின்றனர்.

மேற்சொன்ன வகைப்படுத்துதலானது இந்தக் கட்சிகளை இடது ஜனநாயக அணியில் இணைக்க முனைகிறது.

பிராந்திய முதலாளிகளிடையே கடந்த இருபதாண்டுகளில் வளர்ச்சியடைந்துள்ள மாற்றங்களை மார்க்சிஸ்ட் கட்சியின் புதுப்பிக்கப்பட்ட தீர்மானத்தில் உள்ளடக்க முடியாதபோதும், அடுத்தடுத்த கட்சி தீர்மானங்களில் பிராந்திய முதலாளிகளின் பாத்திரத்திலும், நிலைமையிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அதன் விளைவாக பிராந்தியக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பிராந்தியக் கட்சிகளுடன் கடைப்பிடிக்கவேண்டிய அணுகுமுறை நடைமுறை உத்திக்குள் அடங்கும் என்கிறபோதும், பிராந்தியக் கட்சிகளின் வர்க்க அம்சத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொலைநோக்கு உத்தியில் முக்கியத்துவம் பெறுகிறது, இது நிச்சயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

வேலைத்திட்ட பிரச்சனைகளை விவாதிப்போம்:

தொகுத்துக் கூறினால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசு குறித்த வகைப்படுத்துதலில் குறிப்பிடத்தக்க மாற்றம் உள்ளது, அது மார்க்சிஸ்ட் கட்சியின் புரிதலோடு நெருங்கச் செய்கிறது. வேலைத்திட்டத்தின் மேலும் சில அம்சங்களில் பல்வேறு வர்க்கங்களின் மீது முதலாளித்துவ வளர்ச்சியின் தாக்கம் சரியாக ஆராயப்பட்டுள்ளது. இருப்பினும், வர்க்க பகுப்பாய்வுகளிலும், மற்ற வர்க்கங்களின் பங்கு பற்றி விளக்குவதிலும் சில குறைபாடுகள் இன்னமும் உள்ளன. ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்பதிலும் சோசலிசத்திற்கு மாறிச் செல்வதிலும் தொழிலாளி வர்க்கம் தலைமைப்பாத்திரத்தை ஏற்கவேண்டியது அடையாளம்காணப்படவில்லை. மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அவ்வபோதைய உத்தி சார்ந்த முடிவுகளில் பழைய புரிதல்கள் நீடிக்கின்றன. இருப்பினும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இப்பிரச்சனைகளை ஆய்வுக்குட்படுத்துவது கூடுதல் ஊக்கமளிக்கிறது. புதிய திட்டத்தை ஏற்றுக் கொண்ட 22 வது மாநாட்டில், கட்சியின் திட்டத்தை மறு ஆய்வு செய்து தொடர்ந்து மேம்படுத்த ஏ.பி.பரதன் தலைமையில் ஒரு வேலைத் திட்டக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.தோழர் பரதனின் எதிர்பாராத இழப்பின்போதும், மேற்சொன்ன பணி தொய்வின்றித் தொடருமென நாம் நம்புகிறோம்.

தற்போதைய அரசியல் மாற்றங்கள் தொடர்பாகவும், பின்பற்ற வேண்டிய உத்திகள் தொடர்பாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், மார்க்சிஸ்ட் கட்சிக்கும் இடையில் விவாதங்கள் தொடர்கின்றன. தொடரும் விவாதங்கள் மற்றும் கூட்டுச் செயல்பாடுகளின் இடையே, திட்டம் சார்ந்த விவாதங்களையும் மேற்கொள்வதும் பயனுள்ளதாக அமைந்திடும் என்று எதிர்பார்க்கலாம்.

(மார்க்சிஸ்ட் இணையதளத்தில் கருத்துக்களை பதிவு செய்யும் வசதி உள்ளது. விவாதிக்க அழைக்கிறோம்)

ஒரு சரியான கொள்கை வழி மட்டும் போதாது- டிமிட்ரோவ் (2)

– ஜார்ஜ் டிமிட்ரோவ்

முதல் பகுதியை வாசிக்க <<<<<<

[1882 ஜீன் 18ல் பிறந்த இவர், லெனின் வழியில் தோன்றிய கம்யூனிஸ்ட் தலைவர்; பாசிசத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் எதிராகப் போராடியவர். பல்கேரியாவின் தொழிற்சங்கத் தலைவராகவும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் விளங்கியவர்.

பல்கேரிய கம்யூனிஸ்ட் கட்சியை அரும்பாடுபட்டு உருவாக்கி அதன் தலைவராக 1946 முதல் 1949 வரை இருந்தவர். 1902ல் புதிதாகத்து வங்கியிருந்த தொழிலாளர் இயக்கத்திலும் சமூக ஜனநாயக கட்சியிலும் இணைந்தார்.

1913லிருந்து 1923 வரை பாராளுமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டார். 1918ல் முதல் உலகப் போரை அவர் எதிர்த்த காரணத்தால் சிறையில் தள்ளப்பட்டார். 1935 முதல் 1943 வரை மூன்றாம் கம்யூனிஸ்ட் அகிலத்தை வழிநடத்திச் சென்றவர்.

1944 முதல் 1949 (இறக்கும்) வரை பல்கேரியாவின் பிரதமராக இருந்தவர். உலக பாட்டாளி வர்க்கத்திற்கு பல்வேறு தலைப்புகளில், குறிப்பாக ஐக்கிய முன்னணி தந்திரம், தொழிற்சங்க இயக்கங்களின் கடமைகள், பாசிசத்திற்கு எதிரான உழைக்கும் மக்களின் ஒற்றுமை பற்றி எழுதியவர். 1949 ஜீலை2ல் மறைந்தார்.]

——————————————

ஊழியர்களைத் தேர்ந்தெடுப்பதில் நமது பிரதான அளவுகோல் ஏதுவாக இருக்க வேண்டும்?

முதலாவதாக, தொழிலாளி வர்க்கத்தின் லட்சியத்தில் முழு முதல் பற்று கட்சியின் மீது அளவு கடந்த விசுவாசம். வர்க்க விரோதியை எதிர்த்து போரிட்டு, போர்க்களத்தில், சிறைக் கூடங்களில், நீதிமன்றங்களில், சோதனைகளில், தேர்வு கண்டவர்கள்.

இரண்டாவது, மக்களுடன் மிக நெருக்கமான தொடர்பு. தோழர்கள் மக்களுடைய நலவுரிமைகளில் முழுமையாக ஈடுபட்டவர்களாக இருக்க வேண்டும். மக்களின் வாழ்க்கை நாடித் துடிப்புகளை உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மக்களின் உணர்வுகளையும் தேவைகளையும் உணர்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும். நமது கட்சி ஸ்தாபனங்களின் தலைவர்களின் அந்தஸ்தும் கவுரவமும் எல்லாவற்றிற்கும் முதன்மையாக மக்கள் தாங்களாகவே அவர்களைத் தங்கள் தலைவர்களாகக் கருதுவதன் அடிப்படையில், மக்கள் தங்கள் சொந்த அனுபவத்தின் மூலம் கட்சித் தலைவர்களின் திறமையை, ஆற்றலை, போராட்டத்தில் அவர்களுடைய உறுதியை, தன்னலமற்ற தியாகத்தைப் பார்த்து மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதனடிப்படையில் அமைய வேண்டும்.

மூன்றாவதாக, குறிப்பிட்ட சந்தர்ப்ப சூழ்நிலையில் ஒருவர் தனது பொறுப்பு நிலையை சுயேச்சையாகக் கண்டு கொள்ளும் ஆற்றல், முடிவுகளை எடுக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்குப் பயப்படாதிருத்தல். பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு பயப்படும் ஒருவர் ஒரு தலைவரல்ல. முன்கையெடுத்து செயலாற்ற முடியாத ஒருவர். “எனக்கு என்ன சொல்லப்படுகிறதோ அதைத்தான் செய்வேன்” என்று கூறும் ஒருவர் ஒரு போல்ஷ்விக் அல்ல. தோல்வி ஏற்படும்போது சோர்வு ஏற்பட்டு அறிவிழக்காமலும், வெற்றி ஏற்படும்போது மண்டைக்கணம் ஏற்படாமலும் முடிவுகளை நிறைவேற்றுவதில் தளர்வில்லாத உறுதியைக் காட்டுபவர்தான் ஒரு உண்மையான போல்ஷிவிக் தலைவராவார். ஊழியர்கள் மிகச் சிறந்த முறையில் விருத்தி அடைவதும், வளருவதும் போராட்டங்களில் ஏற்படும் ஸ்தூலமான பிரச்சனைகளை சுயேச்சையாகத் தீர்ப் பதற்கான நிலையில் அவர்களுக்கு இடமளிக்கும் போதும், அவர்களுடைய முடிவுகளுக்கு அவர்கள்தான் முழுப் பொறுப்பு என்று உணரும் போதுதான்.

நான்காவது, கட்டுப்பாடும் வர்க்க விரோதிகளுக்கெதிரான போராட்டத்திலும் போல்ஷிவிக் கொள்கை வழியிலிருந்து எந்த விலகலும் திரிபும் இருந்தாலும் அதைக் கடுமையாக விட்டுக் கொடுக்காமல் எதிர்க்கும் குணத்திலும் போல்ஷிவிக் வார்ப்பட மாகவும் இருக்க வேண்டும்.
இந்த நிபந்தனை நிலைகளின் மீது நாம் அதிகமாக வலியுறுத்த வேண்டும். இவைதான் ஊழியர்களைச் சரியாகத் தேர்ந்தெடுப்பதை நிர்ணயிக்கின்றன. ஏன் என்றால் நடைமுறையில் யாருக்கு அதிகமாகச் சலுகை கொடுக்கப்படுகிறது. உதாரணமாக ஒரு தோழர் நல்ல எழுத்தாளராகவோ அல்லது நல்ல பேச்சாளராகவோ இருந்தால் அவருக்கு அதிக சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் அவர்கள் நல்லப்போராட்ட குணம் படைத்தவராகவோ அல்லது செயல்வீரராக இல்லாமலிருந்தாலும் பரவாயில்லை. வெறும் பேச்சுக்கும் எழுத்துக்கும் மட்டும் அதிக சலுகை தரப்படுகிறது. வேறு சில அத்தகைய தோழர்கள் நன்றாக எழுத முடியாமலும் பேச்சாளராகவும் இல்லாமலிருக்கலாம். ஆனால் ஒரு உறுதிமிக்க தோழராகவும் முன்கையெடுத்து எந்த வேலையையும் திறம்பட செய்பவராகவும் மக்களுடன் நெருங்கித் தொடர்பு கொண்டவராகவும் போர்க்களத்திற்கு நேரில் செல்லும் ஆற்றலும் போராட்ட களத்தில் இதரர்களையும் ஈர்த்து தலைமை தாங்கும் ஆற்றல் கொண்டவராகவும் இருக்கலாம். அவர்களுக்கு அதிக சலுகைகள் கொடுக்கப்படுவதில்லை. வெறும் செக்டேரியன்ளும், குருட்டுத்தனமான கோட்பாட்டுவாதிகளும், வெற்றொழுக்க வாய் வீச்சாளர்களும் குவிந்து உண்மையான வெகுஜன ஊழியர்களும் உண்மையான தொழிற்சங்கத் தலைவர்களும் பின்னுக்குத் தள்ளப்படும் செயல்கள் பலவற்றை நாம் காணவில்லையா?

போல்ஷிவிக் உள்ளுறுதி, புரட்சிகரமான பலம் கொண்ட குணப்பண்பு, அவற்றைச் செயல்படுத்தும் உள வலிமை ஆகியவற்றுடன் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்னும் ஞானத்தையும் நமது தலைமையிலான ஊழியர்கள் ஒன்றிணைக்க வேண்டும்.

ஊழியர்கள் பிரச்சனை பற்றியதன் தொடர்பாக சர்வதேச தொழிலாளர் பாதுகாப்பு நிறுவனம் (ஐ.எல்.டி) தொழிற்சங்க இயக்கத்திலுள்ள ஊழியர்கள் சம்பந்தமாக என்ன செய்ய வேண்டுமென்று பணித்துள்ளது பற்றி இங்கு நான் எடுத்துக்கூற விரும்புகிறேன். அரசியல் கைதிகளுக்கும், அவர்களுடைய குடும்பங்களுக்கும், வெளிநாடுகளுக்கு வெளியேற்றப்பட்டு அங்குக் குடியேறியுள்ள அரசியல் ஊழியர்கள், அடக்குமுறைகளுக் குள்ளாக்கப்பட்ட புரட்சிக்காரர்கள், பாஸிஸ்டு எதிர்ப்பு வீரர்கள் ஆகியோருக்கு சர்வதேசத் தொழிலாளர் பாதுகாப்பு ஸ்தாபனங்கள் அளித்த பொருளாயத, தார்மீக உதவி பலநாடுகளிலுள்ள பல ஆயிரக்கணக்கான அருமையான தொழிலாளி வர்க்கப் போராட்ட வீரர்களின் உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறது அவர்களின் பலத்தையும் போராட்டத் திறனையும் பாதுகாத்திருக்கிறது. சிறை சென்றிருக்கும் எங்களைப் போன்றவர்கள், எங்களுடைய சொந்த அனுபவத்தின் மூலமாக நேரடியாக சர்வதேசத் தொழிலாளர் பாதுகாப்பு நிறுவனத்தின் அரிய பணிகளைப் பற்றிய சிறப்பு மிக்க பெரும் அளவிலான முக்கியத்துவத்தைக் கண்டு கொண்டோம்.
இந்த சர்வதேசத் தொழிலாளர் பாதுகாப்பு நிறுவனம் தனது அரிய பணியின் மூலம் லட்சக்கணக்கான பாட்டாளிகள் மற்றும் விவசாயிகள், படிப்பாளிகளுக்கிடையிலுள்ள புரட்சிகரமான நபர்கள் ஆகியோரின் அபிமானத்தை, பக்தியை, உளம் நிறைந்த நன்றியறிதலை வென்றெடுத்திருக்கிறது.
இன்றைய சூழ்நிலைமைகளில் அதாவது பூர்ஷ்வா பிற்போக்கு சக்திகள் வளர்ந்து கொண்டும், பாஸிஸம் வெறி கொண்டு திரிந்து கொண்டும் வர்க்கப் போராட்டம் மிகவும் கூர்மையடைந்து கொண்டுமிருக்கும் இன்றையச் சூழ்நிலைமைகளில், சர்வதேசத் தொழிலாளர் பாதுகாப்பு நிறுவனத்தின் பங்கு மிகப்பெரும் அளவு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சர்வதேசத் தொழிலாளர் பாதுகாப்பு நிறுவனத்தின் முன்பு இப்போதுள்ள முக்கிய கடமை அது எல்லா முதலாளித்துவ நாடுகளிலும் உழைக்கும் மக்களுடைய உண்மையான வெகுஜன ஸ்தாபனமாக ஆக வேண்டு. (குறிப்பாக பாஸிஸ்டு நாடுகளில் அங்குள்ள விசேஷ சூழ்நிலைமைகளுக்குத் தக்கபடி தன்னை அமைத்துக் கொள்ள வேண்டும்) அதாவது அது பாட்டாளி வர்க்க ஐக்கிய முன்னணியின் பாஸிஸ்டு எதிர்ப்பு மக்கள் கூட்டணியின் கோடிக்கணக்கான மக்களைத் தழுவியுள்ள அக்கூட்டணிகளின் ஒருவகை “செஞ்சிலுவை சங்கத்தைப்போல்” இருக்க வேண்டும். பாஸிஸத்திற்கெதிரான போர்க்களத்தில் கடுமையான சமரில் ஈடுபட்டுள்ள, சமாதானத்திற்கும் சோசலிசத் திற்கும் போராடிக் கொண்டிருக்கிற உழைக்கும் பெரு மக்களான ராணுவத்தின் ‘செஞ்சிலுவை’ சங்கமாக இருக்க வேண்டும். சர்வதேசத் தொழிலாளர் பாதுகாப்பு நிறுவனம் வெற்றிகரமாகத் தனது பங்கை செலுத்த வேண்டுமானால் ஆயிரக்கணக்கான தனது சொந்த ஊழியர்களை ஏராளமான தனது சொந்த பொது ஊழியர்களை, சர்வதேசத் தொழிலாளர் பாதுகாப்பு நிறுவன ஊழியர்களை பயிற்றுவிக்க வேண்டும். இந்த மிக முக்கியமான ஸ்தாபனத்தின் அதி முக்கியமான கடமைகளுக்குத் தங்கள் தகுதி திறன் மூலம் பதிலளிக்கும் வகையில் தங்கள் சீரிய கடமைகளைச் சிறப்பாக நிறைவேற்றும் வகையில் பயிற்றுவிக்க வேண்டும்.
இங்கு நான் திட்டவட்டமாக மிகக் கூர்மையாக ஒன்று கூற விரும்புகிறேன். பொதுவாக தொழிலாளர் இயக்கம் என்று எடுத்துக் கொண்டாலே ஒரு அதிகார வர்க்க முறையிலான அணுகுமுறையும், ஆட்களின் பால் ஒரு இதயமற்ற அணுகுமுறையும் மிகவும் கேடுவிளைவிக்கக் கூடியதாகும். இன்னும் சர்வதேசத் தொழிலாளர் பாதுகாப்பு நிறுவனத்தின் பணிகள் துறையில் இத்தகைய அணுகு முறை இருக்குமானால் அது கிரிமினல் செய்கைக்கு அடுத்த தீமை பயப்பதாகும். தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட வீரர்கள், பிற்போக்கு சக்திகளின் பாஸிஸத்தின் கீழ் பலியானவர்கள். பாதிக்கப்பட்டவர்கள் சித்திரவதை முகாம்களிலும் கொடுஞ்சிறைக் கோட்டங்களிலும் துன்ப துயரங்களில் வீழ்ந்து கிடக்கும் அந்த அருமைத் தோழர்கள், நாடு கடத்தப்பட்டு பல இடங்களில் வாழ்ந்துவரும் தோழர்களும் அவர்களுடைய குடும்பங்களும் சர்வதேசத் தொழிலாளர் பாதுகாப்பு நிறுவனங்களுடையவும் அதன் செயல்வீரர்களுடையவும் மிகுதியான அனுதாபத்தையும் நல்லாதரவையும் பெற வேண்டியவர்களாவர். சர்வதேசத் தொழிலாளர் பாதுகாப்பு நிறுவனம், பாட்டாளி வர்க்கப் போராட்ட, பாஸிஸ எதிர்ப்புப் போராட்ட இயக்கங்களில் ஈடுபட்டுள்ள போராட்ட வீர்களுக்கு உதவுவதில் குறிப்பாகத் தொழிலாளர் இயக்கத்திலுள்ள ஊழியர்களை வாழ்வளவிலும் தார்மீக அளவிலும் சேமித்துப் பாதுகாப்பதில் இன்னும் அதிகமாக கவனம் எடுத்து ஆதரவளித்துத் தங்கள் கடமைகளை ஆற்ற வேண்டும். கம்யூனிஸ்டுகளும், புரட்சிகரமான தொழிலாளர்களும் சர்வதேசத் தொழிலாளர் பாதுகாப்பு நிறுவனங்களில் பணியாற்றக் கூடியவர்கள் அந்த சர்வதேசத் தொழிலாளர் பாதுகாப்பு நிறுவனங்களின் பங்கையும், கடமைகளையும் வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்குத் தொழிலாளி வர்க்கத்திற்கும் கம்யூனிஸ்டு அகிலத்திற்கும் முன்பாக ஒவ்வொரு படியிலும் தங்கள் அளப்பரிய பொறுப்பு எவ்வளவு இருக்கிறது என்பதை உணர வேண்டும்.
தோழர்களே! நீங்கள் ஏற்கனவே நன்கு அறிவீர்கள் ஊழியர்கள், தங்கள் சிறந்த பயிற்சியை போராட்டங்களில் செயல் வளர்ச்சிப் போக்கில், தாங்க முடியாத பல கஷ்டங்கள் தொல்லகளைத் தாங்குவதில் பல சோதனைகளிலிருந்து மீள்வதில் இன்னும் சாதகமும், பாதகமும் நிறைந்த செயலாட்சி உதாரணங் களிலிருந்தும் மிகச் சிறந்த பயிற்சியை பெறுகிறார்கள். வேலை நிறுத்தங்களில் ஆர்ப்பாட்டங்களில் சிறைக் கூடங்களில், நீதி மன்றங்களில் காட்டப்பட்ட வீரமிக்க செயலாட்சிகள் பற்றி நூற்றுக்கணக்கான வீர சாகஸத்தின் எடுத்துக்காட்டுகள் உண்டு. ஆனால் துரதிருஷ்டவசமாக நம்மிடைய நெஞ்சுறுதியின்மை, கோழைத்தனம், இன்னும் ஓடுகாலித்தனம் ஆகியவற்றிற்கும் கூட பல உதாரணங்கள் உள்ளன. இந்த உதாரணங்களை நல்லவற்றையும் கெட்டவற்றையும் இரண்டையும் அடிக்கடி மறந்து விடுகிறோம் இந்த உதாரணங்களினால் கிடைக்கும் அணுகூலங்களை நாம் மக்களுக்குக் கற்று கொடுப்பதில்லை. நாம் அவர்களுக்கு எந்த உதாரணங்கள் புத்துணர்ச்சி ஊட்டுகின்றன. எவற்றை நிராகரிக்க வேண்டும் என்பதைக் காட்ட வேண்டும். வர்க்க மோதல்களின் போது போலீஸ் விசாரணை நேரத்தில், சிறைக் கூடங்களில், சித்திரவதைக் கூடங்களில், நீதிமன்றங்கள் முதலியவற்றில் நமது தோழர்கள் மற்றும் போர்க்குண மிக்க தீவிரத் தொழிலாளர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பது பற்றிய விவரங்கள் சேகரித்து ஆராய்ந்து அறிய வேண்டும். சிறந்த உதாரணங்களை வெளியே அறிவித்து பிரபலப்படுத்த வேண்டும். அவை முன்னு தாரணங்களாக விவரித்துக் கூற வேண்டும். அசிங்கமான வற்றை போல்ஷிவிக் அல்லாதனவற்றை பண்பு கெட்ட செயல்களை யெல்லாம் ஒதுக்க வேண்டும். ரீச்ஸ்டாக் தீ வைப்பு வழக்கு விசாரணையிலிருந்து நம்முடைய அரும் தோழர்கள் பலர் பூர்ஷ்வா கோர்ட்டுகளிலும், பாஸிஸ்டு கோர்ட்டுகளிலும் கொடுத்த வாக்குமூல அறிக்கைகள், போல்ஷிவிக்குகள் நீதிமன்றங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு தெளிவான ஞானம் எண்ணற்ற நமது ஊழியர்களிடையே வளர்ந்து கொண்டு இருப்பதைக் காட்டுகிறது.
ஆனால் உங்களில், இந்தக் காங்கிரஸில் பிரதிநிதிகளாக வந்துள்ள உங்களில் எத்தனை பேருக்கு ருமேனிய ரயில்வே தொழிலாளர் மீதுள்ள வழக்கு விசாரணை பற்றிய விவரங்கள் தெரியும். பியதே ஸூல்ஸே மீதான வழக்கு விவரங்கள் தெரியும். பியதே ஸூல்ஸே ஜெர்மனி பாஸிஸ்டுகளால் கொல்லப்பட்டார். வீரம் மிக்க ஜப்பானியத் தோழர் இட்சிகாவா மீது வழக்கு விசாரணை பல்கேரிய புரட்சிகரமான படை வீரர்கள் மீதான வழக்கு விசாரணை, இம்மாதிரி இன்னும் பல வழக்கு விசாரணைகள், அவற்றில் மிகச் சிறந்த அளவில் பாட்டாளி வர்க்க வீரம் வெளிப்படுத்தப்பட்ட சீரிய உதாரணங்கள் ஏராளம் உள்ளன. அது எத்தனை பேருக்குத் தெரியும்?
பாட்டாளி வர்க்கம் வீரம் பற்றிய இத்தகைய சிறப்பு தகுதி பெற்ற எடுத்துக்காட்டுகளை விரிவாகப் பிரபலப்படுத்த வேண்டும். நம்முடைய அணிகளிலும் தொழிலாளி வர்க்க அணிகளிலும் வெளிப்படுகின்ற கோழைத்தனம், பண்புக் கேடு எல்லா வகையான இழுக்கு, அழுக்குகளுக்கு மாற்றாக, நமது தோழர்களின் செயற்கறிய வீர சாகஸங்களை விரிவாக மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். இந்த உதாரணங்களை தொழிலாளர் இயக்கத்தில் ஊழியர்களைப் பயிற்றுவிப்பதற்கு மிக விரிவாகப் பயன்படுத்த வேண்டும்.
தோழர்களே! நமது கட்சித் தலைவர்கள் நமக்குப் போதுமான ஆட்கள் இல்லை. கிளர்ச்சிப் பிரச்சார வேலைகளுக்கு, பத்திரிகை களுக்கு, தொழிற்சங்கங்களுக்கு, இளைஞர்கள், மாதர்கள் இடையில் வேலை செய்வதற்குப் போதுமான ஆட்கள் இல்லை என்று அடிக்கடி புகார் சொல்கிறார்கள். போதுமான ஆட்கள் உள்ளது. நமக்கு ஆட்கள் இல்லை அவ்வளவுதான். ஆனால் இதற்கு லெனினுடைய பழைய ஆனால் என்றென்றும் புத்தம் புதிதாய் ஒளிபெற்று பிரகாசிக்கும் கீழ்க்கண்ட வார்த்தைகள் மூலம் பதில் கூற விரும்புகிறேன்.
“போதுமான ஆட்கள் இல்லை – இருப்பினும் ஏராளமான ஆட்களும் இருக்கிறார்கள். ஏராளமான எண்ணிக்கையில் ஆட்கள் இருக்கிறார்கள். ஏன் என்றால் தொழிலாளி வர்க்கம் சமுதாயத்தின் பலவேறுபட்ட பிரிவினர்களும் ஆண்டுதோறும் அவர்களுடைய அணிகளிலிருந்து ஏராளமான எண்ணிக்கையில் தங்கள் கண்டனங்களை வெளிப்படுத்த விரும்பும் அதிருப்தி அடைந்த ஆட்கள் வெளியே வந்து கொண்டே இருக்கிறார்கள்… அதே சமயத்தில் நமக்கு ஆட்கள் இல்லை. ஏன் என்றால் நமக்குத் திறமையான ஸ்தாபன அமைப்பாளர்கள், விரிவான, அதே சமயத்தில் ஒரே மாதிரியான, இசைவான வேலையை எல்லா சக்திகளுக்கும் மிகவும் சர்வ சாதாரண முக்கியமற்ற சாதாரண மானவர்கள் உள்பட அனைவருக்கும் வேலை கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்வதற்குத் திறமை படைத்தவர்கள் நம்மிடம் இல்லை. (இனி செய்யவேண்டியது என்ன?)
லெனினுடைய இந்த வார்த்தைகளை நம்முடைய கட்சிகள் முழுமையாகக் கிரகிக்க வேண்டும். தங்களுடைய அன்றாட வேலைக்கு அவற்றை வழிகாட்டியாகப் பயன்படுத்த வேண்டும். ஏராளமான பேர் இருக்கிறார்கள். அவர்களை நாம் கண்டுபிடிக்க வேண்டும். நம்முடைய ஸ்தாபனங்களில் இருப்பவர்களின் வேலை நிறுத்தங்களில் ஆர்ப்பாட்டங்களில் தொழிலாளர்களின் பல்வேறு வெகுஜன ஸ்தாபனங்களில், ஐக்கிய முன்னணி நிறுவனங்களில் நாம் அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அவர்களுடைய வேலையின் போது, போராட்டத்தின்போது, அத்துடக் சேர்ந்து அவர்கள் வளருவதற்கு அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அவர்கள் தொழிலாளி வர்க்க லட்சியத்திற்கு உண்மையில் பயனுள்ள வகையில் சரியான நிலையில் வைக்கப்பட வேண்டும்.
தோழர்களே, கம்யூனிஸ்டுகளாகிய நாம் செயல் வீரர்கள், நமது பிரச்சனை முதலாளித்துவத்தின் தாக்குதல்களை எதிர்த்து பாஸிஸத்தை எதிர்த்து, ஏகாதிபத்திய யுத்த பயமுறுத்தலை எதிர்த்து நடத்த வேண்டிய நடைமுறைப் போராட்டம் பற்றிய முதலாளித் துவத்தைத் தூக்கி எறிவதற்கான போராட்டம் பற்றிய பிரச்சனை யாகும். துல்லியமாக இந்த நடைமுறைக் கடமையின் காரணமாகத் தான் கம்யூனிஸ்டு ஊழியர்கள் புரட்சிகரமான தத்துவத்தில் கட்டாயம் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று கூறுகிறோம். ஏன் என்றால் தத்துவம் நடைமுறை வேலையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சரியான திசைவழியைக் கண்டுபிடிக்கும் சக்தியையும் லட்சிய நோக்கில் தெளிவும், வேலையில் உறுதிப்பாடும் லட்சியத்தின் வெற்றியில் நம்பிக்கையும் அளிக்கிறது.
ஆனால் உண்மையான புரட்சிகரமான தத்துவம் பலவகையான வலுவிழந்த ஆண்மையற்ற தத்துவ முறைகளுக்கு மொட்டையாக மேற்கோள்களைக் கொண்ட வறட்டு விளையாட்டு களுக்கு முற்றிலும் விரோதமானவை. “நமது தத்துவம் ஒரு வறட்டுத்தனமான கோட்பாடல்ல. ஆனால் அது நமது செயலுக்கு வழிகாட்டியாகும்”. லெனின் இவ்வாறு கூறுவது வழக்கம். இத்தகைய ஒரு தத்துவம் தான் நமது ஊழியர்களுக்குத் தேவை. அது அவர்களுக்கு மிகவும் அவசியமான தேவையாகும். உணவும் காற்றும் தண்ணீரும் எவ்வளவு அவசியமாகத் தேவைப்படுகிறதோ அவ்வளவு அவசியமாக இந்தத் தத்துவம் நமது ஊழியர்களுக்குத் தேவைப்படுகிறது.

யாராவது உண்மையில், உயிரற்ற வறட்டுத்தனமான வெட்டிக் காய்ந்துபோன திட்டங்களை, தீமை நிறைந்த புத்தகப் பூச்சிகளின் வாசகங்களைத் தவிர்க்க விரும்புகிறார்களோ, அவர்கள் மக்களுடன் நின்று அவர்களுக்குத் தலைமை தாங்கி நடத்தப்படும் நடைமுறை செயலூக்கமிக்க போராட்டங்கள், மார்கஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் வல்லமை மிக்க, செழுமையான வளம் நிறைந்த சகலசக்தியும் வாய்ந்த போதனைகளில் முழு தேர்ச்சி பெறுவதற்கு இடைவிடாமல் முயற்சி செய்வது ஆகிய இருவழிகளிலும் செக்கச் செவேரென்று சூடாக்கப்பட்ட இரும்பு சூட்டுக்கோல் கொண்டு அந்தத் தீய திட்டங்களைப் பொசுக்க வேண்டும்.

தொடரும் …

ஒரு சரியான கொள்கை வழி மட்டும் போதாது- டிமிட்ரோவ் (1)

தோழர்களே!

கம்யூனிஸ்ட் அகிலத்திற்கும் அதன் பிரிவுகளுக்கும் அடிப்படையான விஷயம் ஒரு சரியான கொள்கை வழியை வகுப்பதாகும் என்பது தெளிவான ஒரு விஷயம். ஆனால் வர்க்கப் போராட்டத்தில் திட்டவட்டமான தலைமைக்கு ஒரு சரியான கொள்கை வழி மட்டும் போதாது.

அதற்கு பல நிபந்தனை நிலைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாகக் கீழ்க்கண்டவை முக்கிய மானதாகும்.

முதலாவது ஸ்தாபன (கட்சி அமைப்பு) உத்திரவாதங்கள்:

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நடைமுறையில் செயல்படுத்தப் படுவதற்கும் அதற்குக் குறுக்கே நிற்கும் இடையூறுகளை உறுதியாக நின்று சமாளித்து முன்செல்வதற்கு ஸ்தாபன (கட்சி அமைப்பு) உத்திரவாதம் வேண்டும். சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் 12-வது காங்கிரஸில் தோழர் ஸ்டாலின் கட்சியின் கொள்கை வழியைச் செயல் படுத்துவதற்கு அவசியமான நிலைமைகளைப் பற்றிக் கூறியது நமது இந்தக் காங்கிரஸிற்கு முழுவதும் பொருந்தும்.

சிலபேர், ஒரு சரியான கொள்கை வழியை வகுத்துவிட்டால் போதும், எல்லோருடைய கவனத்தையும் கவரும்படி பிரகடனம் செய்து விட்டால் போதும், பொதுவான கருத்துரைகளையும் தீர்மானங்களையும் வரையறுத்து அவற்றை ஏகமனதாக நிறைவேற்றி விட்டால் போதும், வெற்றி தானாகவே வந்து விடும். கிடைத்து விடும் என்று கருதுகிறார்கள். நிச்சயமாக இது தவறானதாகும். இது ஒரு பெரிய பிரமையாகும்.

தோழர் ஸ்டாலின் கூறியதாவது:

“திருத்த முடியாத அதிகார வர்க்கத் தோரணை கொண்டவர்கள் தான் அத்தகைய நிலை கொள்ளுவார்கள். கட்சியின் பொதுக் கொள்கையைப் பற்றி அருமையான தீர்மானங்களும் பிரகடனங்களும் வெறும் ஆரம்பம் மட்டும்தான். காரணம் அவை வெற்றிக்கான விருப்பத்தைத்தான் தெரிவிக்கின்றன. வெற்றியைத் தருவதில்லை. சரியான கொள்கை உருவாக்கப்பட்ட பிறகு வெற்றிக்கான சரியான வழிகள் சுட்டிக் காட்டப்பட்ட பிறகு வெற்றி கிடைப்பது என்பது ஸ்தாபன வேலையைப் பொறுத்தும். கட்சியின் கொள்கை வழியை அமலாக்கு வதற்கான போராட்டத்தை உருவாக்கி அமைப்பதைப் பொறுத்தும் சரியான ஊழியர்களைத் தேர்ந்தெடுப்பதைப் பொறுத்தும் தலைமை அமைப்புகள் முடிவுகளை நிறைவேற்று வதைச் சரியாகக் கண்காணிப்பதைப் பொறுத்துமே இருக்கிறது. இவற்றில் குறைபாடுகள் இருந்தால் சரியாக இல்லாமல் இருந்தால் சரியான கொள்கை வழியில் தீர்மானங்களும் முடிவுகளும் பழுதடையும் அபாயத்தையே தாங்கி நிற்கும். இன்னும் அதிகமாக சொல்லப் போனால் சரியான கொள்கை வகுக்கப்பட்ட பிறகு எல்லாமே ஸ்தாபன வேலையைப் பொறுத்தே இருக்கிறது. அந்த அரசியல் கொள்கை உட்பட அது அமலாக்கப்படுவதும் அதன் வெற்றியும் தோல்வியும் ஸ்தாபன வேலையைப் பொறுத்தே இருக்கிறது.”

இந்த வாசகங்களுக்குமேல் அதிகமாக எதுவும் கூறத் தேவையில்லை. இவை நமது கட்சியின் வேலை முழுவதற்கும் வழிகாட்டும் கோட்பாடுகளாக அமைந்துள்ளன.

மற்றொரு நிபந்தனை நிலை கம்யூனிஸ்ட் அகிலம் மற்றும் அதன் பிரிவுகளின் தீர்மானங்கள் முடிவுகளை விரிவான மக்கள் பகுதியினர் தங்களுடையத் தீர்மானங்கள் முடிவுகளாக மாற்று வதற்குள்ள திறனாகும். அது இப்போது மிகவும் அவசியமாகும். அதிலும் இப்போது பாட்டாளி வர்க்கத்தின் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கி அமைக்கும் கடமையை, ஒரு பாஸிஸ்டு எதிர்ப்பு மக்கள் முன்னணியின் மக்களின் பரந்த பகுதியினை ஈர்த்திழுக்கும் கடமையை நாம் எதிர்நோக்கும் இந்தச் சமயத்தில் இது மிகவும் அவசியமாகும். லெனின் அவர்களுடைய அரசியல் மற்றும் உபாயம் குறித்த மேதாவிலாசம் மிகவும் சரியாகவும் மிகவும் தெளிவாகவும் முனைப்பாகவும் மக்களைத் தங்கள் சொந்த அனுபவத்தின் மூலமாக கட்சியின் சரியான கொள்கையையும் கோஷங்களையும் புரிந்து கொள்ளச் செய்யும் திறமையில் வெளிப்படுகிறது. போல்ஷிவிஸத்தின் வரலாற்றைச் சற்று ஆராய்ந் தோமானால், புரட்சிகரமான தொழிலாளர் இயக்கத்தின் அரசியல் வியூகம் உபாயங்கள் ஆகியவற்றின் மகத்தான அந்தப் பொக்கிஷத்தை ஆராய்ந்தோமானால் மக்களுக்கு தலைமை தாங்கும் முறைகளுக்குப் பதிலாக அந்த இடத்தில் கட்சியைத் தலைமை தாங்கும் முறைகளை போல்ஷிவிக்குகள் ஒருபோதும் கையாண்ட தில்லை என்பதை நாம் காணலாம்.

அக்டோபர் புரட்சி தொடங்கிய பொழுது ரஷ்ய போல்ஷிவிக்குகளின் உபாயங்களில் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை ஸ்டாலின் சுட்டிக் காட்டுகிறார். அப்போது போல்ஷிவிக்குகுள்  மக்கள் ‘புரட்சியின் நுழைவாயிலுக்குச் செல்லும் இயல்பான வழிகளையும் திருப்பங்களையும் காண்பதில் திறமை பெற்று இருந்தார்கள் . மக்களே தங்களுடைய சொந்த அனுபவத்தின் மூலமே கட்சியின் முழக்கங்களை சரியான தன்மையினை உணர்வதற்கும் அதை சரிபார்ப்பதற்கும் அதை அடையாளம் கண்டு அங்கீகரிப் பதற்கும் மக்களுக்கு போல்ஷிவிக்குகள் உதவி செய்தார்கள். அவர்கள் மக்களின் தலைமைக்கும், கட்சியின் தலைமைக்கும் ஒன்றுக்கொன்று வைத்து குழப்பிக் கொள்ளவில்லை. ஆனால் அவற்றிற்கிடையில் வேறுபாட்டை மிகவும் தெளிவாகக் கண்டார்கள். இதன் மூலம் உபாயங்களை கட்சித் தலைமை பற்றிய ஒரு விஞ்ஞானமாக மட்டுமல்லாமல் கோடானு கோடி உழைக்கும் மக்களின் தலைமை பற்றிய ஒரு விஞ்ஞானமாகவும் ஆக்கியிருந் தார்கள் .

மேலும் மற்றொன்றையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். அதாவது நமது முடிவுகளைப் பற்றி மக்கள் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் பேசுவதற்கு நாம் கற்றுக் கொள்ளாவிட்டால் அம்முடிவுகளை மக்கள் சேமித்து தன்னியலாக்கிக் கொள்ள முடியாது. நாம் எப்போதுமே மக்களுக்குப் பழக்கமான சுலபமாகப் புரிந்து கொள்ளும் உதாரணங்களைச் சொல்லி, எளிய முறையில் திட்டவட்டமாகப் பேசுவதற்கு நன்கு தெரிந்து கொண்டிருக்கிறோம் என்று கூறமுடியாது. குருட்டுத்தனமாக மனப்பாடம் செய்துள்ள வறட்டுத்தனமாக சூத்திரங்களை இன்னும் நம்மால் தவிர்க்க முடியவில்லை. உண்மையில் நம்முடைய அறிவிப்புத்தாள், பத்திரிகைகள், தீர்மானங்கள், விளக்கவுரைகள் முதலியவற்றைப் படித்து பார்த்தோமானால் அதிலுள்ள சொல்நடை மொழிநடை மிகவும் கடினமானதாக இருக்கும். நமது கட்சி ஊழியர்களுக்குக் கூட புரிந்து கொள்வது கடினமாக இருக்கும். இன்னும் சாதாரண அணிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் சொல்லவேத் தேவையில்லை.

தொழிலாளர்கள், குறிப்பாக பாஸிஸ்டு நாடுகளில் இந்தப் பிரசுரங்களை வினியோகிப்பவர்கள் அல்லது படிப்பவர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் தங்கள் உயிரையே பணயமாக வைத்து அவ்வேலைகளைச் செய்கிறார்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே அவர்கள் செய்யும் மகத்தான தியாகம் வீண்போகாதபடி, அவர்களுக்கு நன்கு புரியக்கூடிய மொழியில் தெளிவாக எழுத வேண்டிய அவசியத்தை நாம் உணர வேண்டும்.

இதே விஷயங்கள் நமது வாய்மொழிப் பிரச்சாரத்திற்கும் கிளர்ச்சிக்கும் பொருந்தும். நாம் வெளிப்படையாக மனம் விட்டுக் கூற வேண்டுமானால் நம்முடைய பல தோழர்களைக் காட்டிலும் பாஸிஸ்டுகள் கைத்திறன் மிக்கவர்களாகவும் நெளிவு சுழிவு மிக்கவர்களாகவும் உள்ளார்கள் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.

ஹிட்லர் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னால் ஒரு தடவை பெர்லின் நகரத்தில் வேலையில்லாதோர் கூட்டம் ஒன்று நடந்தது. அதை இங்கே நினைவு கூற விரும்புகிறேன். அதே காலத்தில்தான் படுமோசமான கொள்ளை லாப மோசடிக்காரர்களான ஸ்கிளாரெக் சகோதரர்கள் மீதான வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த வழக்கு பல மாதங்களாக நீடித்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒரு தேசிய சோஷலிஸ்டு பேச்சாளர் ஒருவன் அந்தப் பொதுக் கூட்டத்தில் மிகப் பெரிய வாய்ச்சவடால் அடித்து தனது காரியங்களைச் சாதித்துக் கொள்ள பேசிக் கொண்டிருந்தான். அவன் பேசும்போது அந்த ஸ்கிளாரெக் சகோதரர்கள் மீது நடைபெறும் வழக்கைப் பற்றிக் குறிப்பிட்டு அவர்களின் மோசடி லஞ்சம் மற்றும் பல குற்றங்களையெல்லாம் அடுக்கடுக்காய் எடுத்துக்காட்டி வாயளந்து, இந்த வழக்கு பல மாதங்களாக நீடித்து நடத்தப்படுகிறது என்றும் இதற்காக எத்தனை ஆயிரக்கணக்கான மார்க்குகள் ஜெர்மானிய மக்களின் வரிப்பணம் வீணாக்கப்படுகிறது என்று வர்ணித்து கடைசியில் கூட்டத்தினர் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்ததற்கிடையில் ஸ்கிளாரெக் சகோதரர்கள் போன்ற கொள்ளைக் கூட்டத்தாரை விசாரணை செய்வதன் பேரால் பணத்தை விரயமாக்குவதற்குப் பதிலாக அவர்களை சுட்டுப் பொசுக்கி விட்டு அந்தப் பணத்தை வேலையின்றித் தவிக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரணமளிக்கலாம் என்று ஆரவாரத்துடன் பேசினார்.

ஒரு கம்யூனிஸ்ட் கூட்டத்தில் எழுந்து தான்பேசுவதற்கு அனுமதி கேட்டார். கூட்டத் தலைவர் முதலில் அனுமதி தர மறுத்தார். ஆனால் கூட்டத்தினர் ஒரு கம்யூனிஸ்டு பேசுவதைக் கேட்க வேண்டும் என்னும் ஆவலில் அவரைப் பேச அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்தவே கூட்டத் தலைவர் அத்தோழரைப் பேச அனுமதித்தார். அவர் பேசுவதற்கு மேடை ஏறியதும் எல்லோரும் ஒரு கம்யூனிஸ்ட் என்ன பேசப் போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்த்தனர். அவரும் எழுந்து பேசத் தொடங்கினார். என்ன பேசினார்?

அவர் எழுந்து உரத்த கணீரென்ற குரலில் “தோழர்களே! கம்யூனிஸ்டு அகிலத்தில் விரிவடைந்தக் கூட்டம் இப்போது தான் முடிவடைந்திருக்கிறது. அது தொழிலாளி வர்க்கத்தின் முழு மீட்சிக்கு வழிகாட்டியிருக்கிறது. அது நம் முன்வைக்கும் பிரதான கடமை தோழர்களே! தொழிலாளி வர்க்கத்தின் பெரும்பாலான பகுதியினரை நம் பக்கம் கொண்டு வரவேண்டும். வேலையில்லாமல் திண்டாடும் தொழிலாளர்களை அரசியல்படுத்த வேண்டும் என்று பிளீனம் சுட்டிக்காட்டியிருக்கிறது. அதை இன்னும் மேல் மட்டத்திற்கு உயர்த்த வேண்டும் என்று பிளீனம் நம்மை அறைகூவி அழைத்திருக்கிறது. இந்த இயக்கத்தை ஒரு மேலான மட்டத்திற்கு உயர்த்த வேண்டும் என்று பிளீனம் வேண்டிக் கொண்டிருக்கிறது”

இதேபாணியில் அவர் பேசிக் கொண்டே சென்றார். பிளீனத்தினுடைய முடிவுகளை மிகவும் சரியான முறையில் விளக்கிக் கூறி கொண்டிருப்பதாகவே அவர் கருதினார்.

ஆனால் இத்தகைய ஒரு பிரசங்கம், வேலையில்லாமல் திண்டாடும் தொழிலாளர் கூட்டத்தில் எடுக்குமா? முதலில் அவர்களை அரசியல்படுத்தி, பிறகு அவர்களைப் புரட்சிகரமாக்கி, பிறகு ஒன்று திரட்டி அவர்களுடைய இயக்கத்தை ஒரு உயர்ந்த மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு நாம் உத்தேசித்திருக்கிறோம் என்னும் உண்மை வேலையின்றித் தவிக்கும் அந்த மக்களுக்கு உடனடியான திருப்தியை அளிக்குமா?

நான் அந்த ஹாலின் ஒரு ஓரத்தில் உட்கார்ந்திருந்தேன். பெருத்த ஏமாற்றத்துடன் கூட்டத்துடன் கூடியிருந்தவர்களைக் கவனித்தேன். அங்குக் கூடியிருந்தவர்கள் ஒரு கம்யூனிஸ்டிடமிருந்து வேலையில்லாதோரும் உடனடி நிவாரணம் கிடைக்க ஒரு நடைமுறையான கண்கூடான வழியைக் கூறுபவர் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் ஏமாற்றமடைந்து கொட்டாவி விடத் தொடங்கினார்கள். இறுதியில் கூட்டத் தலைவரே தலையிட்டு பேச்சாளரின்பேச்சைக் சுருக்கும்படி நிறுத்தினார். அப்போது கூட்டத்தினர் ஒருவர் கூட ஆட்சேபிக்கவில்லை. அதில் நான் ஆச்சரியப்படவில்லை.

துரதிருஷ்டவசமாக நமது கிளர்ச்சி பிரச்சார வேலையில் இம்மாதிரி பல உதாரணங்கள் இருக்கின்றன. இம்மாதிரி உதாரணங்கள் ஜெர்மனியில் மட்டுமில்லை. இந்தப் பாணியில் பேசுவது என்பது நமது லட்சியத்தைச் செயலாற்றுவதற்கு எதிரான எதிர்விளைவுகளை உண்டாக்கும் பேச்சுக்களாகும். இத்தகைய சிறுபிள்ளைத்தனமான கிளர்ச்சி பிரச்சார முறைகளுக்கு ஒரு இறுதியான முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியமாகும்.

நான் அறிக்கை சமர்ப்பித்துக் கொண்டிருந்தபோது கூட்டத் தலைவர் தோழர் குஸினன் அவர்கள் கையில் கூட்டத்திலிருந்து தோழர் எனக்கு ஒரு கடிதத்தைக் கொடுத்தார். அந்தக் கடிதம் ஒரு விசேஷமான கடிதமாகும். அதை நான் படிக்கிறேன் கேளுங்கள்:

“காங்கிரஸில் உங்களுடைய பேச்சில் கீழ்க்கண்ட விஷயங்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது கம்யூனிஸ்ட் அகிலத்தில் எதிர்காலத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் முடிவுகள் அனைத்தையும் எழுத்து வடிவத்தில் கொண்டு வந்துவிட வேண்டும். அதனால் அவற்றின் பொருளை பயிற்சி பெற்ற கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல. எந்த ஒரு சாதாரணத் தொழிலாளியும் அவற்றைப் படித்து ஆரம்பப் பயிற்சி கூட தேவையில்லாமல் கம்யூனிஸ்டுகள் என்ன விரும்பினார்கள், கம்யூனிசம் எத்தகைய மகத்தான சேவையைச் செய்கிறது என்பதைப் புரிந்து கொள்வார்கள். அவர்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டிருக்க வேண்டும். அதை மிகவும் பலமாகவே நினைவுபடுத்த வேண்டும். அத்துடன் கம்யூனிசத்திற்கான கிளர்ச்சிப் பிரச்சாரம் எல்லோரும் புரிந்து கொள்ளக் கூடிய மொழிநடையில் செய்யப்பட வேண்டும்.”

இந்தக் கடிதத்தை யார் எழுதினார்கள் என்பது தெளிவாக எனக்குத் தெரியாது. ஆனால் இந்தத் தோழர் தன்னுடைய கடிதத்தில் கோடிக்கணக்கான சாதாரணத் தொழிலாளர்களின் விருப்பத்தையும் தெரிவித்துள்ளார் என்பதில் சந்தேகமில்லை. நமது தோழர்களில் பலர் நினைக்கிறார்கள், நம்முடைய கிளர்ச்சிப்  பிரச்சாரத்தில் நீண்ட கடுமையான உயர்ந்த பண்டித நடையுள்ள வார்த்தைகளையும் வாசகங்களையும் உபயோகித்தால், அடுக்கான அலங்காரச் சொற்களையும் சூத்திரங்களையும் உபயோகித்தால், சாதாரண மக்கள் புரிந்து கொள்ள முடியாத சொற்களை உபயோகித்தால், அத்தகைய கிளர்ச்சி பிரச்சாரம் தான் தரமானது மேம்பட்டது என்று நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள். நமது சகாப்தத்தின் ஆகப்பெரிய மகத்தான தலைவரும் தொழிலாளி வர்க்க தத்துவ மேதையுமான லெனின். மிகவும் சர்வ சாதாரணமான மொழியையே, சாதாரண மக்கள் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய மொழியிலேயே எப்போதும் பேசினார். எழுதினார் என்பதை மறந்துவிடுகிறோம்.

ஒவ்வொருவரும் இதை ஒரு விதிமுறையாக ஒரு போல்ஷிவிக் விதிமுறையாக ஒரு சர்வசாதாரண ஆரம்ப விதிமுறையாகக் கொள்ள வேண்டும்.

நீங்கள் எழுதும்போதும் பேசும்போதும் சாதாரண அணிகளில் உள்ள தொழிலாளர்களை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் உங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுடைய வேண்டுகோளில் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும். உங்கள் தலைமையை ஏற்று உங்கள் பின் வரத் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் யாருக்காக எழுதுகிறீர்கள், பேசுகிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஊழியர்கள்

தோழர்களே! நமது சிறந்த தீர்மானங்கள் கூட அவற்றைச் செயல்படுத்துவதற்குத் திறமையான ஆட்கள் இல்லையென்றால் பெறும் காகிதக் குப்பைதான் என்றாலும் துரதிருஷ்டவசமாக நமக்கு முன்புள்ள மிகவும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றான ஊழியர் பிரச்சனை மீது இந்தக் காங்கிரஸ் அநேகமாக எந்த கவனமும் எடுத்துக் கொள்ளவில்லை என்பதை நான் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

கம்யூனிஸ்ட் அகிலத்தில் நிர்வாகக் கமிட்டியின் அறிக்கையின் மீது ஏழு நாட்கள் விவாதம் நடைபெற்றது. பல நாடுகளிலிருந்து பலர் பேசினார்கள். ஆனால் அதில் ஒரு சிலர் தான் இந்தப் பிரச்சனையின் மீது கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தொழிலாளர் இயக்கத்துக்கும் மிகவும் முக்கியமானதாக உள்ள இந்தப் பிரச்சனையின் மீது விவாதத்தில் சுட்டிக் காட்டினார்கள். அதுவும் லேசாக போகும் போக்கில் குறிப்பிட்டார்கள். நடைமுறை வேலையில் மக்கள், ஊழியர்கள் அனைத்தையும் தீர்மானிக்கிறார்கள் என்பதை நமது கட்சிகள் இன்னும் சரியாக உணரவில்லை.

தொடர்ந்து நமது போராட்டங்களில் நாம் நமது நல்ல அருமையான ஊழியர்களை இழந்து வருகிறோம். இந்த நிலைமையில் ஊழியர் பிரச்சனை பற்றி புறக்கணிக்கும் மனப்பான்மை அனுமதிக்க முடியாததாகும். நாம் ஒரு படிப்பாளிக் கூட்டமல்ல. ஆனால் ஒரு போர்க்குணம் மிக்க இயக்கமாகும். நமது இயக்கம் இடைவிடாமல் போர்க்களத்தில் முன்வரிசையில் நின்று கொண்டிருக்கும் இயக்கமாகும். நமது ஆற்றல் மிகுந்த துணிச்சல்மிக்க வர்க்க உணர்வு நிறைந்த நபர்கள் எல்லாம் முன்வரிசையில் இருந்து கொண்டிருக்கிறார்கள். இந்த முன்னணித் தோழர்களைத் தான் எதிரிகள் வேட்டையாடுகிறார்கள். கொலை செய்கிறார்கள். சிறைக்கூடங்களில் சித்தரவதைக் கூடங்களில் தள்ளுகிறார்கள். கொடுந்துன்பம் மிக்க படுமோசமான சித்திர வதைக்கு ஆளாக்குகிறார்கள். குறிப்பாக பாஸிஸ்டு நாடுகளில் இந்த நிலைமை கடுமையாக உள்ளது. இதன் காரணமாய் எண்ணிக்கையில் குறையும் நமது அணிகளை இடைவிடாமல் நிரப்பிக் கொண்டிருக்க வேண்டியதும் பல புதிய ஊழியர்களை உருவாக்கி பயிற்சி கொடுக்க வேண்டியதும் ஏற்கனவே உள்ள ஊழியர்களைப் பாதுகாக்க வேண்டியதும் இடைவிடாது அவசியமாகிறது.

ஊழியர் பிரச்சனை குறிப்பிடத்தக்க மிகவும் அவசர மானதாகும் என்பதற்கு மீண்டும் ஒரு துணைக் காரணம் நமது செல்வாக்கின் கீழ் வெகுஜன ஐக்கிய முன்னணி இயக்கம் பெருஞ் சிறப்பு மிக்கதாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. பல ஆயிரக்கணக்கான புதிய தொழிலாளி வர்க்கம் தீவிரமான போர்க்குணம் மிக்க நபர்களை இயக்கத்தின் முன்னணிக்குக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. மேலும் அவர்கள் இளம் புரட்சிகர முன்னணி வீரர்களாகவும் இப்போதுதான் புரட்சிகர இயக்கத்திற்கு வந்தவர்களாகவும் இதற்கு முன்னர் எப்போதும் அரசியல் இயக்கத்தில் பங்கு கொள்ளாதவர்களாகவும் அந்தப் பெரு வெள்ளம் நமது அணிகளில் வந்து நிறைந்து கொண்டிருக்கிறது. அடிக்கடி மேலும் சமூக ஜனநாயகக் கட்சிகளின் முன்னாள் உறுப்பினர்களும் தீவிர ஊழியர்களும் நம்முடன் சேருகிறார்கள். இந்தப் புதிய ஊழியர்கள்பால் நாம் அதிகமான சிறப்பான கவனத்தை செலுத்த வேண்டியதிருக்கிறது. குறிப்பாக சட்டவிரோத நிலையிலுள்ள கம்யூனிஸ்டுக் கட்சிகளில் இது மிகவும் அவசிய மாகிறது. இது மிகவும் அவசியம். காரணம், தங்களுடைய நடைமுறை வேலையில் இந்த ஊழியர்கள் அவர்களுடைய குறைவான தத்துவப் பயிற்சியின் காரணமாய் அவர்கள் தாங்களே தீர்க்க வேண்டிய மிகவும் சிக்கல் மிக்க அரசியல் பிரச்சனைகளை அடிக்கடி எதிர்நோக்கி சமாளிக்க வேண்டியவர்களாகிறார்கள்.

ஊழியர்கள் சம்பந்தமாக ஒரு சரியான கொள்கை என்னவாக இருக்க வேண்டும் என்னும் பிரச்சனை நமது கட்சிகளுக்கும் இளம் கம்யூனிஸ்ட் லீகிற்கும் இதர எல்லா வெகுஜன ஸ்தாபனங்களுக்கும் புரட்சிகரமான தொழிலாளர் இயக்கம் முழுவதற்கும் ஒரு கருத்தாழம் மிக்க கவலைமிக்க பிரச்சனையாகும்.

ஊழியர்கள் சம்பந்தமாக ஒரு சரியான கொள்கையில் என்ன அடங்கியிருக்கிறது?

முதலாவதாக, ஒருவர் அவருடைய மக்களை அறிந்து கொள்ளுதல், உண்மையில் நமது கட்சிகளில் ஊழியர்களைப் பற்றி ஒரு முறையான கவனமான ஆய்வு இல்லை. அண்மையில்தான் பிரெஞ்சுக் கம்யூனிஸ்டுக் கட்சி, போலந்து கம்யூனிஸ்ட் கட்சி, கிழக்கில் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி ஆகியவை இந்த திசையில் சில வெற்றிகளைக் சாதித்திருக்கிறார்கள். ஜெர்மன் கம்யூனிஸ்டுக் கட்சி அதனுடைய தலைமறைவு காலத்திற்கு முன்பு அதன் ஊழியர்களைப் பற்றி ஒரு ஆய்வு நடத்தியது. நமது கட்சிகளின் அனுபவம் அவர்களுடைய ஆட்களைப் பற்றி ஆய்ந்தறியத் தொடங்கியவுடன் அதில் கட்சி ஊழியர்கள் அறவே கவனிக்கப்படவில்லை என்னும் உண்மை கண்டுபிடிக்க முடிந்தது என்பதைத் தெளிவாகக் காட்டி யிருக்கிறது. மறுபக்கத்தில் சித்தாந்த ரீதியிலும் அரசியல் ரீதியிலும் தீங்கு விளைவிக்கக் கூடிய பல அன்னிய குணம்படைத்த நபர்கள் அக்கட்சிகளிலிருந்து அழிந்தொழியத் தொடங்கினார்கள். பிரான்ஸில் போல்ஷிவிக் பூதக் கண்ணாடி கொண்டு பார்த்தபோது செலார், பார்பி ஆகியோர் வர்க்க விரோதியின் ஏஜண்டுகள் என்பது தெரிய வந்தது. அவர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். இந்த உதாரணத்தை எடுத்துக்காட்டுவது அதைப் புரிந்து கொள்வதற்குப் போதுமானதாகும். ஹங்கேரியில் ஊழியர்கள் பரிசீலனை செய்யப்பட்டபோது, ஆத்திரமூட்டி நாசவேலை செய்வோரும் எதிரி ஏஜண்டுகளும் கூடுகட்டி நின்றனர் என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தது. அவர்கள் வேண்டுமென்றே பெரு முயற்சியுடன் தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளாதபடி மறைந்திருந்தனர்.

இரண்டாவது, ஊழியர்களைச் சரியாக உயர்த்துவது, முன்னுக்குக் கொண்டு வருவது என்பது ஏதோ தற்காலிகமாக எப்போதாவது செய்வது அல்ல. அது கட்சியின் முறையான செயல்பாடுகளில் ஒன்றாக அமைந்திருக்க வேண்டும். உயர்த்தி முன்னுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு கம்யூனிஸ்டு விரிவான மக்கள் பகுதியில் தொடர்பு கொண்டுள்ளவரா இல்லையா என்பதைக் கருதாமல் வெறும் பணிக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் மட்டுமே வேலை உயர்வு கொடுப்பது நல்லதல்ல. பல்வேறு கட்சி ஊழியர்கள் அவர்கள் குறிப்பிட்ட பணிகளைத் திறமையாக நிறைவேற்றுவதற்குரிய ஆற்றலை அடிப்படையாகக் கொண்டும் வெகுஜனங்களிடம் அவர்களுக்குள்ள செல்வாக்கு பிரபலத்தை அடிப்படையாகக் கொண்டும் வேலை உயர்வு இருக்க வேண்டும். நமது கட்சிகளில் மிகச் சிறந்த பலன்களை அளித்துள்ள ஊழியர் உயர்வுகளைப் பற்றிய உதாரணங்கள் நம்மிடையே இருக்கின்றன. எடுத்துக்காட்டாக ஸ்பெயின் நாட்டுப் பெண் கம்யூனிஸ்டு இந்த மாநாட்டின் தலைமைக்குழுவில் அமைந்திருப்பவர் தோழியர் டோலோரெஸ் இரண்டாண்டுகளுக்கு முன்வு இவர் சாதாரண தோழராக அணகளில் இருந்து வேலை செய்து வந்தார். ஆனால் வர்க்க எதிரிகளுடன் ஏற்பட்ட முதல் மோதலிலேயே இவர் ஒரு மிகச்சிறந்த கிளர்ச்சிக்காரர் என்றும், போர்க்குணம் மிக்க வீராங்கனை என்றும் நிரூபணமாயிற்று. அதன் பிறகு அவர் கட்சியின் தலைமை அமைப்பிற்கு உயர்த்தப்பட்டார். அவர் அத்தலைமை அமைப்பின் மிகத் தகுதிவாய்ந்த உறுப்பினர் என்பதை நிரூபித்துவிட்டார்.

வேறு பல நாடுகளிலும் இம்மாதிரியான பல முன்னுதாரணங்களை நான் சுட்டிக்காட்ட முடியும். ஆனால் பெரும்பாலான இடங்களில் வேலை உயர்வு முறையாக அல்லாமல், தற்செயலாக இஷ்டத்திற்கு தாறுமாறாய் கொடுக்கப்படுகிறது. அதனால் அவை எப்போதும் சரியாக இருப்பதில்லை துரதிருஷ்ட வசமான நிலைமைகள் ஏற்பட்டு விடுகின்றன. சில சமயங்களில் வெற்றொழுக்க வீரர்கள், வாய்வீச்சுக்காரர்கள், சவடால் வீரர்கள் உண்மையில் நமது லட்சியங்களுக்குத் தீங்கு விளைவிப்பவர்கள். அவர்கள் முக்கிய தலைமைப் பொறுப்புகளுக்கு உயர்த்தப்பட்டு விடுகிறார்கள்.

மூன்றாவது, நமது ஆட்களுடைய திறமை அனைத்தையும் சிறந்த முறையில் கட்சிக்கு ஆகச் சாதகமான முறையில் பயன் படுத்துவது. செயலூக்கமுள்ள தனி உறுப்பினர் ஒவ்வொருவரின் மதிப்பு மிக்க திறமைகள் அனைத்தையும் உறுதிப்படுத்தி அதைப் பயன்படுத்துவதற்கு நம்மால் முடிய வேண்டும்.  சுத்த சுயம்பிரகாசமானவர் இருக்கிறார்களோ அவ்வாறே அவர்களை எடுத்துக்கொண்டு அவர்களுடைய குறைபாடுகளையும் பலவீனங் களையும் களைவதற்கு முயற்சிக்க வேண்டும். சிறந்த நேர்மையான கம்யூனிஸ்டுகளைத் தவறான முறையில் பயன்படுத்தப்பட்ட உதாரணங்களை நமது கட்சிகளில் நாம் அறிவோம். அவர்களுக்குரிய தகுதியான வேலைகளைக் கொடுத்திருந்தால் அவர்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்திருப்பார்கள்.

நான்காவது, ஊழியர்களைச் சரியானபடி பகிர்ந்து வேலை கொடுத்தல், முதலாவதாக, இயக்கத்தின் பிரதான இணைப்புக் கண்ணி மக்களுடன் தொடர்புள்ள அடிமட்டத்திலிருந்து தோன்றிய முன்கையெடுத்து உறுதியாகப் பணியாற்றக் கூடிய திறமையான ஆட்களின் கைகளிலே இருக்கின்றன. மிகவும் முக்கியமான மாவட்டங்களில் அத்தகைய செயலூக்கமுள்ள சிறந்த தோழர்கள் போதுமான அளவில் இருக்க வேண்டும். முதலாளித்துவ நாடுகளில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஊழியர்களை மாற்றுவது என்பது அவ்வளவு சுலபமல்ல. அந்த வேலைக்கு பல தடைகளும் கஷ்டங்களும் இருக்கின்றன. போதுமான பணவசதியின்மை, குடும்பப் பிரச்சனைகள் முதலிய தொல்லைகள் உள்ளன. இவற்றைச் சரியானபடி கவனத்தில் எடுத்துக் கொண்டு தீர்க்க வேண்டும். ஆனால் பொதுவாக நாம் இவற்றைச் சரியாகச் செய்யாதபடி முற்றிலும் புறக்கணித்து விடுகிறோம்.

ஐந்தாவது, ஊழியர்களுக்கு முறையாக இடைவிடாமல் உதவி செய்வது, இந்த உதவி என்பது விரிவான குறிப்பு என்னென்ன எவ்வாறு செய்ய வேண்டும் என்று அறிவூட்ட வேண்டும், நட்புணர்வுப் பூர்வமாக அவர்களின் வேலைகளைச் சரிபார்க்க வேண்டும். குறைபாடுகளையும் தவறுகளையும் திருத்த வேண்டும். தினசரி வேலைகளில் திட்டவட்டமாக உதவி வழி காட்ட வேண்டும்.

ஆறாவது, ஊழியர்களைப் பேணி காப்பதில் கவனம் செலுத்த வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலையின் தேவை ஏற்படும்போது உடனுக்குடன் கட்சி ஊழியர்களைப் பின்னணிக்கு வாபஸ் செய்து அந்த இடத்தில் வேறு தோழர்களை நிறுத்த வேண்டும். கட்சித் தலைமை குறிப்பாகக் கட்சி சட்டவிரோதமாக்கப் பட்டுள்ள நாடுகளில் கட்சி ஊழியர்களைப் பாதுகாப்பதில்  அதிமுக்கிய கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோர வேண்டும். ஊழியர்களைப் பேணிப் பாதுகாத்தல் என்பதற்கு கட்சியில் மிகவும் திறமைமிக்க ரகசிய ஸ்தாபன (கட்சி அமைப்பு) முறையும் மிகவும் அவசியமான முன் தேவையாகும். நமது சில கட்சிகளில் அவை பெயரளவில், ஸ்தாபன அளவில் ஒழுங்குபடுத்தப்பட்டு, கட்சி விதிகள் ஏட்டளவில் அமைக்கப் பட்டு புனரமைக்கப்பட்டவுடன், எல்லாவிதமான சட்ட விரோதமான நிலைமைகளையும் சமாளிப் பதற்குத் தயாராகிவிட்டது என்றுபல தோழர்கள் கருதுகிறார்கள். கட்சி தலைமறைவான பின்னர் கட்சி புனரமைப்பு வேலையைப் பற்றி முறையாக ஆரம்பிப்பதனால் எதிரியின் நேரடியான பலமான தாக்குதல்களினால் கட்சி அளப்பரிய சேதங்களை எதிர் நோக்கி தியாகங்களைச் செய்ய வேண்டியதிருக்கிறது. ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி தலைமறைவு நிலைமைகளுக்கு மாறும்போது எவ்வளவு நஷ்டங்களைச் சமாளித்து சிரமப்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த உதாரணம், இன்று சட்டப்பூர்வமாக உள்ள, நாளை சட்டவிரோத நிலை ஏற்படக் கூடும் என்றுள்ள கட்சிகளுக்கு ஒரு எச்சரிக்கையாகும்.

ஊழியர்கள் பற்றி ஒரு சரியான கொள்கை இருந்தால் தான் நமது கட்சிகள் தங்கள் முன்புள்ள கிடைக்கக் கூடிய சக்திகள் அனைத்தையும் அதிகபட்சமாக வளர்க்கவும், பயன்படுத்தவும் முடியும். வெகுஜன இயக்கம் என்னும், மிகப் பெரிய சேமிப்பிலிருந்து மேலும் மேலும் தேவையான புதிய சிறந்த செயலூக்கமிக்க ஊழியர்களை ஈர்த்து புது பலத்தைப் பெற முடியும்.

(ஊழியர்களை தேர்வு செய்தல், பயிற்றுவித்தல் பற்றிய பகுதியில் அடுத்த பகுதியில் … )

கொல்கத்தா ப்ளீனம் (சிறப்பு மாநாடு) தீர்மானம் முழுமை

கொல்கத்தா, டிசம்பர் 27-31, 2015

21வது கட்சி காங்கிரசின் முடிவின் படி நடைபெற்ற ஸ்தாபனம் குறித்த பிளீனம்:

கீழ்க்கண்டவற்றை நடத்திடத் தீர்மானிக்கிறது:

தற்போதுள்ள சவால்களை சந்திக்கும் தன்மையுடன் கட்சி ஸ்தாபன செயல்திறன்களை வலுப்படுத்தி, முறைப்படுத்துவது; இந்திய மக்கள் மத்தியில், மக்கள் ஜனநாயக அணியின் முன்னோடியான இடதுஜனநாயக அணியைக் கட்டுவதற்கு சாதகமாக வர்க்க சமன்பாட்டை மாற்றும் நோக்கத்துடன் உருவாக்கப் பட்ட அரசியல் நடைமுறை உத்திக்கு இசைந்தாற் போல், பிரம்மாண்டமான வெகுஜன போராட்டங்களைக் கட்டவிழ்த்து விடுவதன் மூலம், கட்சியின் சொந்த பலத்தை அதிகரிப்பது; இதன் மூலம் மக்கள் ஜனநாயக புரட்சி என்ற இலக்கை நோக்கி முன்னேறுவது

கீழ்க்கண்டவற்றை அடிக்கோடிட்டு காட்டுகிறது:

மேற்கூறிய புரட்சிகர கடமைகளை நிறைவேற்றி, அனைத்து சுரண்டப்படும் வர்க்கங்களையும் அணி திரட்டும் தொழிலாளி வர்க்க அரசியல் கட்சியாக மேலெழ அவசியமான ஸ்தாபன திறன்களைப் பெருமளவில் கண்டிப்பாக வளர்த்திட வேண்டும்.

  • ஏனெனில் முதலாளித்துவத்தின் கீழ் எவ்வளவு சீர்திருத்தங்கள் செய்தாலும் அதிகரிக்கும் சுரண்டலிலிருந்து மக்களை விடுவிக்க முடியாது என்பதையே உலக பொருளாதார நெருக்கடியின் யதார்த்த சூழல் காட்டுகிறது. சோஷலிசம் என்கிற அரசியல் மாற்றின் மூலமே இது சாத்தியம்
  • ஏனெனில் மக்களின் உள்ளார்ந்த திறமைகளை அவர்களை உணர செய்து, ஒரு மேம்பட்ட இந்தியாவை அதன் அடிப்படையில் உருவாக்க வல்ல மாற்றுக் கொள்கையைத் தம் வசம் வைத்திருக்கும் அரசியல் கட்சியாக நாம் இருக்கிறோம்.
  • ஏனெனில் இந்தியாவின் இளைஞர் சமூகத்துக்கு ஒரு சிறந்த எதிர்காலம் குறித்த தீர்க்கமான நோக்கை வழங்குகிற அரசியல் கட்சி நாம். அவர்களுக்குத் தரமான கல்வி, ஆரோக்கியம், வேலை வாய்ப்பு அளிப்பதற்காக நமது நாட்டின் வளங்களைப் பயன்படுத்தும் மாற்றுப்பாதையை முன்வைக்கும் கட்சியாக நாம் இருக்கிறோம்.
  • ஏனெனில் வெறி பிடித்த, சகிப்புத் தன்மையற்ற பாசிஸ இந்து ராஜ்யத்தை திணிக்க முற்படும் ஆர்.எஸ்.எஸ்./பா.ஜ.க.வின் திட்டங்களை முறியடித்து, மத அடிப்படையில் மக்களைக் கூறு போடும் முயற்சிகளைக் கூர்மை படுத்துவதை எதிர்த்து, பன்முகக் கலாச்சாரம், மொழி, மதம், இனங்களைப் பின்பற்றும் மக்களின் ஒற்றுமைக்காக வாதாடுகிற, போராடுகிற நிலை மாறாத அரசியல் சக்தியாக நாம் இருக்கிறோம்.
  • ஏனெனில் அனைத்து வித அடிப்படைவாதம், பயங்கரவாதத்தை உறுதியுடன் எதிர்க்கும் கட்சியாக நாம் இருக்கிறோம். பெரும்பான்மை மதவாதமும், சிறுபான்மை அடிப்படைவாதமும் ஒன்றை ஒன்று வலுப்படுத்துகின்றன.
  • ஏனெனில், சாதிய அடிப்படையிலான தீண்டாமை, அனைத்து வித பாகுபாடுகள் மற்றும் பல வகை சமூக ஒடுக்குமுறைகளை சமரசமின்றி எதிர்க்கும் கட்சியாக நாம் இருக்கிறோம்.
  • ஊழல் மற்றும் தார்மீக சீரழிவுகளை எதிர்த்துப் போராடும் மிக உயர்ந்த அரசியல் நெறிகளைத் தடுமாற்றமின்றி உயர்த்திப் பிடிக்கும் கட்சியாக நாம் இருக்கிறோம்.

 

எத்தகைய திட்டவட்ட சூழலில் இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதைக் கீழ்க்கண்ட விதத்தில் கணக்கில் எடுக்கிறது:

  • சோவியத் ஒன்றியமும், கிழக்கு ஐரோப்பிய சோஷலிச ஆட்சி அமைப்புகளும் சிதறுண்டு போன நிலையில், சர்வ தேச அரசியல் சக்திகளின் சேர்க்கை ஏகாதிபத்தியத்துக்கு சாதகமாக மாறிவிட்ட பாதகமான சூழ்நிலை
  • சர்வதேச நிதி மூலதனத்தின் தலைமையில் ஏகாதிபத்திய உலகமயத்தை கெட்டிப்படுத்த நடந்து கொண்டிருக்கிற முயற்சிகள்
  • இதனுடன் இணைந்த நடவடிக்கையாக மக்களை, குறிப்பாக வளர்ந்து வரும் சுரண்டப்படும் வர்க்கங்களை அரசியலற்றதாக ஆக்குவதற்காக அரசியல், பொருளாதாரம், சமூகம், பண்பாடு, சுற்றுச்சூழல் என்று அனைத்து தளங்களிலும் முன்னெடுக்கப் படும் கம்யூனிச எதிர்ப்பு, பிற்போக்கு சித்தாந்த தாக்குதல்
  • பல்வேறு நாடுகளிலும் இதற்கு எதிராக நடக்கும் மக்கள் போராட்டங்கள், ஆனாலும் மூலதனத்தின் ஆட்சிக்கு எதிராக வர்க்க ரீதியான தாக்குதலை எழுப்பி, சோஷலிச அரசியல் மாற்றை முன்னிருத்தும் நிலை எட்டாத சூழல்
  • இந்திய ஆளும் வர்க்கம் நவீன தாராளமயத்தைத் தழுவி, இந்தியாவை ஏகாதிபத்தியத்தின் கீழ்நிலை கூட்டாளியாக ஆக்குவதற்கு எடுக்கும் முயற்சிகள்
  • இவற்றின் காரணமாக சமூகத்தில் உருவான கட்டமைப்பு மாற்றங்களானது வேறுபட்ட வர்க்கங்களின் மீது ஏற்படுத்தும் வெவ்வேறான தாக்கங்கள்; அவற்றை எதிர்கொள்ளத் தேவையான வர்க்க போராட்டங்களைக் கூர்மைப்படுத்த நமது ஸ்தாபன செயல்முறையில் மாற்றங்கள் நிகழ வேண்டிய சூழல்
  • மத்திய அரசைக் கைப்பற்றி அரசு அதிகாரத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் வகுப்புவாத சக்திகள் இந்திய அரசியல் அமைப்பின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளத்தைத் தகர்த்து, அந்த இடத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்தியலான இந்து ராஜ்யத்தை நிறுவ எடுக்கும் முயற்சிகள்
  • கடும் நவீன தாராளமய நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றி, இந்திய மக்கள் மீதான சுரண்டலை தீவிரப்படுத்துவதுடன், வெறி பிடித்த வகுப்புவாதம், அதிக அளவிலான சர்வாதிகாரம் கடைப்பிடிக்கப் படும் சூழல்
  • நமது வலுவான தளங்கள் மீது, குறிப்பாக மேற்கு வங்கத்தின் மீது வலதுசாரி பிற்போக்கு சக்திகள் ஒன்று சேர்ந்து நடத்தும் திட்டமிட்ட தாக்குதல்கள், அரசியல் பயங்கரவாதம், அச்சுறுத்தல் நடவடிக்கைகள்; இவற்றை முறியடித்து மீண்டெழும் வகையில் நமது ஸ்தாபனத்தை வலுப்படுத்தும் தேவை உள்ள நிலை
  • நமது ஸ்தாபன பலவீனங்களை சரி செய்ய, குறிப்பாக கட்சி மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகளில் ஏற்பட்டுள்ள சரிவு/தேக்கம், ஏற்றத்தாழ்வான உறுப்பினர் கலவை, தேர்தல் பலத்தில் ஏற்பட்டுள்ள கூர்மையான வீழ்ச்சியை சரி செய்ய வேண்டிய அவசர தேவை

1978ல் சால்கியா பிளீனம் நடந்த போது, கட்சி தனது அரசியல் செல்வாக்கில் ஏறுமுகமாக இருந்தது. ஆனால் தற்போது, அரசியல் செல்வாக்கு வீழ்ச்சி அடைந்துள்ள மோசமான சூழலில் இருக்கிறோம். இத்தகைய சூழலில்,

அவசரமாகத் தேவைப்படுவது:

  • மாஸ் லைனைக் கடைப்பிடித்து நமது சொந்த பலத்தையும், தலையீடு செய்யும் திறனையும் துரிதமாக அதிகரிப்பது; இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்தி இடது ஜனநாயக அணியைக் கட்டுவது; இதனைத் தேர்தல் அணியாக மட்டுமின்றி, பிற்போக்கான ஆளும் வர்க்கங்களைத் தனிமைப்படுத்தி, அரசியல் பொருளாதார மாற்றத்தைக் கொண்டு வரக்கூடிய சக்திகளின் போராட்ட அணியாக உருவாக்குவது
  • ஒற்றுமை-போராட்டம் என்கிற இரட்டை கடமைகளை நிறைவேற்றும் நோக்குடன் ஐக்கிய முன்னணி உத்தியைத் திறமையாக செயல்படுத்துவது; இதன் மூலம் முதலாளித்துவ கட்சிகளது செல்வாக்கின் பின்னுள்ள சுரண்டப்படும் வர்க்கப் பகுதிகளை அணுக வகை செய்யும் விதத்தில் கூட்டு இயக்கங்களை உருவாக்குவது
  • அரசியல் சூழலில் உருவாகும் துரித மாற்றங்களை எதிர்கொள்ள, அரசியல் நடைமுறை உத்திக்கு ஏற்ற விதத்தில் நெகிழ்வான உத்தியைக் கடைப்பிடிப்பது
  • சமூக இயக்கங்கள், மக்கள் திரட்டல்கள், பிரச்னை அடிப்படையிலான இயக்கங்களுடன் கூட்டு மேடைகளை நிறுவுவது
  • இடது ஜனநாயக அணியைக் கட்டுவது என்பதை முதன்மை இடத்தில் வைத்து, அதற்குப் பொருந்துவதாகத் தேர்தல் உத்தியை உருவாக்குவது
  • கீழ்க்கண்ட அடிப்படையில் வர்க்க வெகுஜன போராட்டங்களை வலுப்படுத்துவது:
  • நிலப்பிரபு–கிராமப்புற பணக்காரர் அணி சேர்க்கைக்கு எதிராக விவசாய தொழிலாளிகள், ஏழை விவசாயிகள், நடுத்தர விவசாயிகள், விவசாயம் அல்லாத இதர துறைகளில் உள்ள கிராமப்புற தொழிலாளர்கள், கை வினைஞர்கள், இதர கிராமப்புற ஏழை பிரிவினரை இணைத்த பரந்த அணியை அமைப்பது
  • முக்கிய மற்றும் கேந்திர தொழிற்சாலைகளிலுள்ள தொழிலாளர்களைத் திரட்டுவது; அமைப்பு சார் மற்றும் அமைப்பு சாரா துறைகளில் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களை அணி திரட்டுவது; நமது தொழிற்சங்கங்கள், இளைஞர், பெண்கள் அமைப்புகள் ஒருங்கிணைந்து பகுதி(ஏரியா) வாரி அமைப்புகளை உருவாக்குவது
  • கிராமப்புற ஏழைகளை குடியிருப்பு/ஸ்தல மட்டங்களில் திரட்டுவது; தொழில்வாரி கமிட்டிகளை குடியிருப்பு/அருகமை/ஸ்தல மட்டத்தில் உருவாக்குவது
  • குடிமக்கள் மன்றம், கலாச்சார அமைப்புகள்/மேடைகள் உள்ளிட்டு மத்தியதர வர்க்கத்தின் வாழ்க்கை மற்றும் பணியுடன் தொடர்புடைய அமைப்புகளை உருவாக்கி, அவர்கள் மத்தியில் நமது பணியினை, குறிப்பாக தத்துவார்த்த பணியினை, அறிவியல் கண்ணோட்டத்தை வலுப்படுத்துவது. குடியிருப்பு சங்கங்கள், ஓய்வுபெற்றோர் சங்கங்கள், தொழில்முறை/சார்ந்த அமைப்புகளின் நமது பணியை வலுப்படுத்துவது

இக்கடமைகளை நிறைவேற்ற கீழ்க்கண்டவை தேவை:

  • கட்சி மையத்தை அவசரமாக வலுப்படுத்த வேண்டும்:
  • மையத்தில் அரசியல் தலைமை குழு உறுப்பினர்களின் ஒருங்கிணைப்பு, கூட்டு செயல்பாடு, தனி நபர் பொறுப்பை உறுதி செய்வது
  • மாநிலங்களில் நடக்கும் இயக்கங்கள், போராட்டங்கள், பிரச்சாரங்களில் அகில இந்திய தலைவர்களின் பங்கேற்பை அதிகரிப்பது
  • ஸ்தாபன முடிவுகளைக் கண்காணித்து, தேவையை ஒட்டித் தலையீடு செய்வது
  • வர்க்க வெகுஜன அமைப்புகளின் வேலை பரிசீலனையைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் மத்திய குழுவில் செய்வது
  • கட்சிக் கல்வியை நிரந்தர அடிப்படையில் கொண்டு செல்வது; அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் சுய கல்விக்கு முயற்சிக்க ஊக்கப் படுத்துவது; விரைவில் உருவாக இருக்கிற சுர்ஜித் பவனில் கட்சிப் பள்ளியை நிறுவுவது,
  • பல்வேறு துறைகளை இயக்கக் கூடிய திறன் பெற்ற ஊழியர்களை அடையாளம் கண்டு அங்கே அமர்த்துவது
  • முன்னுரிமை மாநிலங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது; இந்தி பேசும் மாநிலக் குழுக்களின் தேவைகளைத் துரிதமாக பூர்த்தி செய்வது
  • நாடாளுமன்றப் பணிகளையும், வெளியே களத்தில் செய்ய வேண்டிய பணிகளையும் திறமையாக இணைப்பது
  • உலக ஏகாதிபத்தியம், அதன் முகமைகள் மற்றும் உள்நாட்டுப் பிற்போக்கு சக்திகளின் கம்யூனிச, மார்க்சீய எதிர்ப்பு சித்தாந்த தாக்குதலை எதிர்த்துப் போரிடுவது
  • வகுப்புவாத சக்திகளின் தத்துவார்த்த தாக்குதலை எதிர்கொள்ள:
  • இலக்கியவாதிகள், விஞ்ஞானிகள், வரலாற்றியலாளர்கள், கலாச்சார தளத்தில் இயங்கும் பிரமுகர்கள் மற்றும் இதர பகுதி அறிவு ஜீவிகளைத் திரட்டுவது
  • மதச்சார்பின்மை மற்றும் அறிவியல் கண்ணோட்டத்தைப் பிரச்சாரம் செய்ய சமூக, கலாச்சார நடவடிக்கைகளை உருவாக்குவது குறித்து சிறப்பு கவனம் செலுத்துவது; ஆசிரியர் அமைப்புகள், சமூக அமைப்புகளை ஈடுபடுத்தி மழலையர் பள்ளி மற்றும் பொதுவான பள்ளிகள் மட்டத்தில் இதற்கான முன்முயற்சி எடுப்பது
  • சுரண்டப்படும் வர்க்கங்கள், தலித், ஆதிவாசி மக்கள் மத்தியில் வகுப்புவாதக் கருத்தியலின் செல்வாக்கு ஊடுருவதைத் தடுக்க சிறப்பு நடவடிக்கைகளை வடிவமைப்பது
  • முற்போக்கு மற்றும் மதச்சார்பின்மை கருத்துக்களையும், கலாச்சார படைப்புகளையும் கொண்டு செல்ல பரந்த கலாச்சார மேடைகளை உருவாக்குவது
  • சுகாதார மையங்கள், கல்வி மையங்கள், வாசிப்பு மன்றங்கள், நிவாரண பணிகள் போன்ற சமூக நல நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வது
  • மக்களுக்கான அறிவியலையும், கலை இலக்கிய நடவடிக்கைகளையும் வலுப்படுத்துவது

இக்கடமைகளை வெற்றிகரமாக நிறைவேற்ற:

  • கட்சி உறுப்பினர்களின் தரத்தைக் கீழ்க்கண்ட நடவடிக்கைகள் மூலம் பெருமளவு மேம்படுத்துவது:
  • கட்சி உறுப்பினர் சேர்ப்பை உறுதியற்ற, தளர்வான தன்மையில் செய்வதற்கு முற்றுப்புள்ளி வைப்பது; மக்களுக்கான போராட்டங்களில் துடிப்புடன் இறங்குபவர்களை அடையாளம் கண்டு, துணை குழுக்கள் மூலம் அவர்களைக் கட்சிக்குள் கொண்டு வருவது; கட்சி அமைப்புச் சட்டம் கூறியுள்ள 5 அம்ச அளவுகோலின் அடிப்படையில் உறுப்பினர்களைப் புதுப்பிப்பது
  • துணை குழுக்களை முறையாக செயல்படுத்துவது; அவர்கள் பரீட்சார்த்த உறுப்பினர்களாகத் தயாராகும் விதத்தில் மார்க்சீய லெனினீயத்தை போதிப்பது
  • வர்க்க வெகு ஜன அமைப்புகளில் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஈடுபடுவதை உறுதி செய்வது
  • கமிட்டிகளில், குறிப்பாக உயர்நிலை கமிட்டிகளில் வர்க்க மற்றும் சமூக சேர்க்கையை மேம்படுத்துவது
  • அடுத்த 3 ஆண்டுகளில் கட்சியில் பெண்களின் எண்ணிக்கை 25 சதவீதத்தை எட்டக் கூடிய விதத்தில் அதிகரிப்பதை உறுதி செய்வது
  • இளைஞர்களை ஈர்க்கக் கூடிய விதத்தில் கட்சியின் நிகழ்ச்சிகளையும், நடவடிக்கைகளையும் தகவமைத்து, கட்சியில் இளைஞர்களின் பிரதிநிதித்துவம் அதிகரிப்பதை உறுதி செய்வது
  • முறையான ஊழியர் கொள்கையை உருவாக்கி, இளம் தோழர்களை அடையாளம் கண்டு பொறுப்புகளுக்கு உயர்த்துவது ; தோழர்கள் குறித்த மதிப்பீட்டைக் கூட்டாக உருவாக்கி அதன் அடிப்படையில் பணிகளை ஒதுக்கீடு செய்வது
  • புரட்சிகர மாற்றத்துக்காக தியாக சமர் புரிந்து, சித்தாந்த பிடிப்பின் அடையாளமாகத் திகழும் விதத்தில் முழு நேர ஊழியர்களை வளர்ப்பது
  • முழுநேர ஊழியர்களுக்கு முறையான ஊதிய விகிதத்தை உறுதி செய்வது; மாதம் தோறும் அதை வழங்குவது
  • நிர்ணயிக்கப் பட்டுள்ள லெவி தொகை அளிக்கப்படுவதைக் கறாராக அமல்படுத்துவது
  • கட்சிக்கான நிதி தேவையைப் பூர்த்தி செய்ய பிரதான நிதி ஆதாரமாக முறையான வெகுஜன வசூலை நடத்துவது; கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகளின் வரவு செலவு கணக்கினை அனைத்து மட்டங்களிலும் சீராகப் பராமரிப்பது

 

  • துடிப்பான ஜனநாயக மத்தியத்துவத்தை உறுதி செய்வது:
  • கிளைகள் முறையாகக் கூடி, செயல்படுவதை உறுதி செய்வது; கிளை செயலாளர்களை வளர்த்தெடுப்பதும், பயிற்றுவிப்பதும் இதற்குத் தேவை. மக்களுடன் உயிரோட்டமான தொடர்புகளைப் பராமரிக்க கிளைகளின் திறமையான செயல்பாடு மிகவும் அவசியம்.
  • அனைத்து மட்டக் கட்சி கமிட்டிகளின் செயல்பாட்டை மேம்படுத்துவது
  • கூட்டு செயல்பாடு தனி நபர் பொறுப்பு முறையான கண்காணிப்பு என்ற ஸ்தாபன கோட்பாட்டை, கட்சியின் அனைத்து மட்டங்களிலும் கறாராக அமல்படுத்துவது; தனி நபர் பொறுப்புகள் நிறைவேற்றப் பட்ட விதம் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசீலனை செய்வது
  • விமர்சனம் சுய விமர்சனம் என்ற ஆயுதத்தைக் கூர்மைப்படுத்துவது
  • கீழ்மட்ட கமிட்டிகள் மற்றும் கட்சி உறுப்பினர்களிடமிருந்து வரும் கருத்துக்களைத் தலைமை கவனித்து, காதுகொடுத்துக் கேட்டு உட்கட்சி ஜனநாயகத்தை வலுப்படுத்துவது
  • பிரதேசவாதம், அகநிலைவாதம், தாராளவாதம், குழுவாதம் போன்ற தவறான போக்குகளை எதிர்ப்பது; நாடாளுமன்றவாதத் திரிபுகளை எதிர்த்துப் போரிடுவது
  • வருடாந்திர உறுப்பினர் பதிவு புதுப்பிப்புடன் சேர்த்து நெறிப்படுத்தும் இயக்கத்தை நடத்துவது, அதனைப் பரிசீலனைக்கு உட்படுத்துவது

 

  • சக்திவாய்ந்த வெகுஜன அமைப்புகளைக் கட்டுவது:
  • வெகுஜன அமைப்புகளின் பலத்தையும் செல்வாக்கையும் விரிவுபடுத்துவது
  • ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள மத்தியக் குழு ஆவணங்களைக் கறாராக அமல்படுத்துவதன் மூலம், வெகுஜன அமைப்புகளின் சுயேச்சையான, ஜனநாயக செயல்பாட்டை மேலும் பலப்படுத்துவது
  • வெகுஜன அமைப்புகளின் அகில இந்திய மையங்களை வலுப்படுத்துவது
  • வெகுஜன அமைப்புகளின் கிளைகளை உருவாக்கவும், செயல்படுத்தவும் கவனம் செலுத்துவது
  • வெகுஜன அமைப்புகளுக்கான சப் கமிட்டி/பிராக்‌ஷன்களை அமைக்காத மாநிலங்கள் அதனை உடனடியாக செய்வது
  • அரங்கில் கட்சி கட்டும் கவனத்துடன் சப் கமிட்டி, பிராக்‌ஷன் கமிட்டிகளின் பொருத்தமான, சீரான செயல்பாட்டை உறுதிப்படுத்துவது

 

  • சமூக பிரச்னைகளை எடுப்பது:
  • பாலின ஒடுக்குமுறைக்கும், தலித், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், மதவழி சிறுபான்மையினர் மீதான பாகுபாடுகளுக்கும் எதிரான போராட்டங்களை, ஒட்டுமொத்தக் கட்சியும் உறுதியாக நடத்துவது
  • தலித், பழங்குடியினர், மதவழி சிறுபான்மையினர், மாற்றுத் திறனாளிகளின் பிரச்னைகளை எடுப்பதற்காக நாம் உருவாக்கியிருக்கும் அமைப்புகள், மேடைகளின் செயல்திறனை மேம்படுத்துவது
  • இந்தியாவில் வர்க்கப் போராட்டத்தின் முன்னேற்றத்தைத் தாங்கி நிற்கிற இரண்டு கால்களைப் போன்ற பொருளாதார சுரண்டல்-சமூக ஒடுக்குமுறை ஆகியவற்றை ஒரே நேரத்தில் கையில் எடுப்பது

 

  • நமது செல்வாக்கை விரிவுபடுத்துவது:
  • பலவீனமான மாநிலங்களில் குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில் கட்சி ஸ்தாபனத்தையும், இயக்கங்களையும் பலப்படுத்துவது
  • ஏற்கனவே நாம் நிகழ்த்தி வரும் கலாச்சார நடவடிக்கைகளை வலுப்படுத்தி, புதிய பகுதிகளில் கலை குழுக்களை உருவாக்கி பண்பாட்டுத்துறையில் தலையீடுகளை அதிகரிப்பது
  • முன்னுரிமை மாநிலங்கள் பட்டியலைத் திருத்தி அமைப்பது; ஒவ்வொரு மாநிலத்திலும் முன்னுரிமை பகுதிகள், முன்னுரிமை அமைப்புகளை வரையறை செய்து, அவற்றின் வளர்ச்சிக்கு முறையான கவனம் செலுத்துவது
  • உள்ளூர் மக்களை பாதிக்கும் பிரச்னைகளின் மீது தொடர்ந்த விடாப்பிடியான ஸ்தல போராட்டங்களைக் கட்டி அமைக்க ஏற்ற விதத்தில் ஸ்தல கட்சி கமிட்டிகளின் ஆற்றலை மேம்படுத்துவது
  • நாடாளுமன்றம் மற்றும் இதர தேர்ந்தெடுக்கப் படும் பொறுப்புகள் உள்ள அமைப்புகளில் செயல்படும் கட்சி கமிட்டிகளை வலுப்படுத்துவது; அத்தகைய அமைப்புகளில், களத்தில் நடக்கும் போராட்டங்களைப் பிரதிபலிக்கக் கூடிய விதத்தில் திறமையான தலையீடுகள் நடப்பதை உறுதிப்படுத்துவது
  • கட்சி வகுப்புகளை சீராக நடத்துவது; மையப்படுத்தப் பட்ட பாடத்திட்டத்தையும், அத்துடன் அவசியமான சுய கல்விக்கான பட்டியலையும் உருவாக்குவது
  • கட்சி பத்திரிகைகள், வெளியீடுகளைப் பெருமளவு செம்மைப் படுத்துவது; வடிவத்தையும், உள்ளடக்கத்தையும் மேம்படுத்துவது
  • கட்சியின் நிலைபாடுகளையும், கண்ணோட்டத்தையும், கருத்துக்களையும் கூடுதலான மக்கள் பகுதியினரிடம் கொண்டு சேர்க்கும் சக்தி வாய்ந்த கருவியான சமூக ஊடகத்தின் மீது முறையான கவனம் செலுத்தி அத்தளத்தில் தலையீடுகளை உருவாக்குவது

எனவே அவசியம் கீழ்க்கண்டவற்றை நாம் செய்ய வேண்டும்:

  • பிரம்மாண்டமான, வீரியம்மிக்க வர்க்க, வெகுஜன போராட்டங்களைக் கட்டவிழ்த்து விடும் சக்தியைப் பெறுவதற்கு மக்களுடனான நமது இணைப்பை பலப்படுத்துவது
  • இந்த உயிரோட்டமான இணைப்பை நிறுவிட, கட்சியின் மாஸ் லைனை உருவாக்கித் திறமையாக செயல்படுத்துவது
  • சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் அனைத்து கிராமப்புற மக்கள் பகுதியினரின் போராட்ட ஒற்றுமையையும் கட்டி, ஜனநாயகப் புரட்சியின் அச்சாணியான விவசாய புரட்சியை முன்னேற்றும் பணியில் கவனத்தைக் குவிப்பது
  • தொழிலாளி விவசாயி கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சிகளை வலுப்படுத்துவது
  • பிரதானமாக, கீழ்க்கண்டவற்றின் மீது கவனம் செலுத்திட வேண்டும்:
  • இடது ஜனநாயக சக்திகளை அணி திரட்டவும், கட்சியின் செல்வாக்கை விஸ்தரிக்கவும் பொருளாதார, சமூகப்பிரச்னைகளில் வர்க்க வெகுஜன போராட்டங்களைக் கட்டமைப்பது
  • மாஸ் லைனைக் கடைப்பிடித்து மக்களுடன் உயிரோட்டமான தொடர்பினை நிறுவுவது
  • உயர்ந்த தரத்துடன் கூடிய உறுப்பினர்கள் கொண்ட புரட்சிகரக் கட்சியைக் கட்டுவதற்காக ஸ்தாபனத்தை செம்மைப்படுத்துவது
  • கட்சியின் பால் இளைஞர்களை ஈர்த்திட சிறப்பு முயற்சிகளை செய்வது
  • வகுப்புவாதம், நவீன தாராளமயம் மற்றும் பிற்போக்கு சித்தாந்தங்களை எதிர்த்து தத்துவார்த்த போராட்டம் நடத்துவது

கட்சியின் அகில இந்திய மையம் துவங்கி இக்கடமைகள் குறிப்பிட்ட கால வரையறைக்குள் செய்யப் பட வேண்டும். மாநிலக் குழுக்களும் குறிப்பிட்ட காலத்தில் இக்கடமைகளை நிறைவேற்ற ஸ்தூலமாகத் திட்டமிட்டு, ஒரு வருட காலத்தில் பரிசீலிக்க வேண்டும்.

சிபிஐ(எம்) – இந்திய மக்களின் புரட்சிகர கட்சி

கட்சி உருவகப்படுத்தும் காட்சி உயிர் பெற, நமது ஸ்தாபன செயல் திறன்களைப் மிகப் பெருமளவு வலுப்படுத்திக் கொள்வது தேவைப்படுகிறது.

ஒரு புரட்சிகர கட்சி என்ற முறையில், இந்திய விடுதலைக்கான, சோஷலிச மாற்றுக்கான கட்சியின் பெருமை மிகு போராட்ட மரபின் வாரிசுகளாக விளங்குகிறோம். சர்வ தேச, உள்நாட்டு புரட்சிகர இயக்கத்தின் தத்துவார்த்த, ஸ்தாபன திரிபுகளை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்ற பாரம்பர்யத்தையும் சுவீகரித்துள்ளோம்.

மார்க்சீய லெனினீய புரட்சிகர உள்ளடக்கத்தைப் பற்றி நின்று, அனைத்து மார்க்சீய விரோத தத்துவங்களையும், கம்யூனிச இயக்கத்துக்குள் எழுந்த இடது அதிதீவிரவாதம், வலது திருத்தல்வாதத்தினையும் எதிர்த்துப் போராடி, தாம் வழி நடத்தும் மக்கள் போராட்டங்களின் பலத்தின் அடிப்படையில் இந்தியாவில் வலுவான கம்யூனிச சக்தியாக சிபிஐ(எம்) முன்னெழுந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான தோழர்களின் அரும்பெரும் தியாகம், அர்ப்பணிப்பின் மூலமாகவே இது சாத்தியமாகியிருக்கிறது.

சுரண்டுகிற ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக, சுரண்டப்படும் அனைத்து வர்க்கங்களை சேர்ந்த மக்கள் திரள் கிளர்ந்தெழாமல் சமூக மாற்றம் சாத்தியமில்லை என்பது மட்டுமல்ல, மாற்றம் குறித்து நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. இறுதியில் சீர்தூக்கிப் பார்த்தால், மக்கள் தான் வரலாற்றைப் படைக்கிறார்கள். புரட்சிகர வரலாறும் இதற்கு விதிவிலக்கல்ல. மக்களின் பேரெழுச்சியின் முன்னணி படையாக, புரட்சிகர கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி முன்னெழ வேண்டும். இது நமது வரலாற்றுப் பொறுப்பு.

இப்பொறுப்பை நிறைவேற்றுவதை நோக்கி முன்னேறும் உறுதியை, இந்த பிளீனத்தில் இரண்டு மடங்காக்குவோம்.

அகில இந்திய வெகுஜன தளத்துடன் வலுவான சிபிஐ(எம்) உருவாவதை நோக்கி முன்னேறுவோம்

மாஸ் லைனைப் பின்பற்றும் புரட்சிகர கட்சியாக இயங்குவதை நோக்கி முன்னேறுவோம்.