மார்க்சிய கல்வியின் அவசியம்

என். குணசேகரன்

கம்யூனிஸ்ட் இயக்கங்களில் மார்க்சிய கல்விப் பணி என்பது மிக முக்கியமானது. தொழிற்சங்கம், விவசாய சங்கம், மாதர், வாலிபர், மாணவர், மாற்றுத் திறனாளர், எழுத்தாளர்கள் என பல்வேறு தரப்பு வெகுமக்கள் இயங்கும் சங்கங்களில்  செயல்படும் உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்களுக்கு அப்பால் உள்ள மக்கள் என அனைவருக்குமே மார்க்சிய கல்வி அவசியமான ஒன்று.

இப்படிக் கூறும்போது, சாதாரண மக்களுக்கும் மார்க்சியம் தேவையா? எனும் கேள்வி எழலாம். இன்றைய உலகில் 99 சதவீத மக்கள் தங்களுடைய வாழ்க்கையின் இன்னல்களில் இருந்தும், துன்பங்களிலிருந்தும் தாங்கள் எதிர்நோக்கக் கூடிய வாழ்வாதார பிரச்சினைகளில் இருந்தும் தீர்வு கிடைக்குமா என எதிர்பார்க்கின்றனர். அதிலும் குறிப்பாக, சமூகத்தின் அடித்தட்டில் இருக்கக்கூடிய உழைக்கும் வர்க்கம், மேலும் மேலும் வாழ்வாதாரப்  பறிப்புக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறபோது இதிலிருந்து எப்போது விடுதலை கிடைக்கும்? எப்போது தீர்வு கிடைக்கும்? என்கிற ஏக்கத்தோடு உள்ளது. இந்தியாவிலும் இதே நிலைதான்.

கொரோனா பேரிடர் காலத்தில் பல கோடிக்கணக்கான மக்கள் வாழ்விழந்திருக்கிறார்கள். அது முன்னேறிய நாடுகளாக இருந்தாலும் சரி, ஏழை நாடுகளாக இருந்தாலும் சரி, வாழ்வாதார இழப்பு, கல்வி மற்றும் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வாழ்வாதார சிக்கல்கள் கொரோனா காலத்திற்கு முன்பே துவங்கிவிட்டன. கொரோனா பேரிடரின் போது இவை தீவிரமடைந்தன. முறைசாரா தொழில்கள் அழிக்கப்படுவது, சிறு குறு தொழில்கள் அழிக்கப்படுவது என்பதெல்லாம் கொரோனா காலத்திற்கு முன்பே துவங்கிவிட்டது.  இந்த பிரச்சினைகளிலிருந்து தீர்வை அடைவதற்கு என்ன வழி என்பது குறித்து இன்றைக்கு மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவையெல்லாம் முதலாளித்துவ அமைப்பு உருவாக்கிய துயரங்களே  என்பதை எத்தனை பேர் உணர்ந்திருக்கின்றனர்? எனவேதான்  முதலாளித்துவ அமைப்பை அகற்றி ஒரு புதிய சமூகம் படைக்க வழிகாட்டும் மார்க்சியத்தை சாதாரண மக்களுக்கும் அறியப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

காலம் காலமாக சமூகத்தினுடைய பெரும்பகுதி துயரங்களுக்கு உள்ளாகிறார்கள். மக்களுடைய பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம் கர்மவினை, பாவம், புண்ணியம் என்கிற ஆன்மிக கருத்தாக்கங்கள் 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிலைத்து நீடித்து வருகிறது. மனிதனுடைய  கவலைகளை, துன்பங்களை, பிரச்சனைகளை, பல  தத்துவஞானிகளும் ஆழ்ந்து சிந்தித்தார்கள். அதில் கணிசமான தத்துவஞானிகள் முக்தி, மோட்சம்  என்ற வகையில் சமய நோக்கிலான தீர்வுகளை சொன்னார்கள்.

2500 ஆண்டுகளுக்கு முன்னர் கௌதம புத்தர் மக்களுடைய துன்பங்களைக் கண்டு இரக்கப்பட்டார். இந்த துன்பங்களுக்கெல்லாம் என்ன காரணம் என்று சிந்தித்தார். அப்படி சிந்தித்தபோது, அவர் தனிமனித பேராசைதான்  இதற்கெல்லாம் காரணம் என்கிற முடிவுக்கு வந்தார். தன் ஆசையையும், அகந்தையையும் வெற்றி கொண்டு “தான்”, “தனது” என்ற நிலையிலிருந்து விலகினால், “நிர்வாணம்” என்கிற நிலையை அடையலாம் என்றும், அதுவே துன்பங்களிலிருந்து விடுதலைக்கான வழி என்றும் புத்தர் போதித்தார்.

ஆசைதான் எல்லாவற்றுக்கும் காரணம் என்பது அந்தக் காலகட்டத்தில்  ஒரு வகையில் முற்போக்கான கருத்துதான். ஏனெனில்  கடவுளிடம் தீர்வை எதிர்பார்க்காமல் முக்தி, மோட்சம் ஆகியவற்றையெல்லாம் சொல்லாமல் ஆசைதான் காரணம் என்ற கருத்தை அவர் முன்வைத்தார்.

ஆன்மீகம் பேசாத  தத்துவஞானிகளும் கூட நிலவும் பிரச்சனைகளுக்கு  முறையான தீர்வு சொல்வதற்கு பதிலாக இருக்கிற நிலைமைகளை விளக்கினார்கள். சமூக  நிலைமைகள் குறித்த விளக்கங்கள்,சமூக நிலை பற்றிய மனிதனுடைய  மனப் பரிமாணங்கள், மனிதனுக்கான வாழ்க்கை நெறிகள், நீதி போதனைகள் என  பல தத்துவக் கருத்துக்கள் படைக்கப்பட்டன.

உலகை அடியோடு மாற்றிடும் தத்துவம்

மனித சமூகத்தின் வளர்ச்சியின் ஒரு கட்டத்தில்,19ஆம் நூற்றாண்டில், ஒரு முக்கிய திருப்புமுனையாக மார்க்சியம் உருவானது. மார்க்சியம்  விடுதலைக்கு வழி காட்டுகிறது. காலம் காலமாக துன்பங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு அந்த துன்பங்களிலிருந்து விடுதலைக்கான மேம்போக்கான தீர்வை சொல்லாமல், அறிவியல் பூர்வமான வழியைக் காட்டுகிறது மார்க்சியம். இன்றும் பல்லாயிரக்கணக்கான சிந்தனைகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் அவை அனைத்திலிருந்தும் மார்க்சியம் எதில் வேறுபட்டுள்ளது? எனில் மார்க்சியம் மனித விடுதலைக்கு வழி காட்டுகிறது.

இதுகாறும் இருந்து வந்திருக்கிற மானுட வரலாறு, தத்துவம், சமூகவியல், அறிவியல் என பன்முக சிந்தனைகளை உள்வாங்கி, மானுட சிந்தனை வளர்ச்சி எட்டியுள்ள அத்தனை பரிமாணங்களையும் அலசி ஆராய்ந்து, விடுதலைக்கான பாதையை கண்டதுதான் மார்க்சின் சாதனை. அந்த வகையில் மக்களுக்கு வழிகாட்டும் உன்னத தத்துவமாக  மார்க்சியம் விளங்குகிறது. அதனால்தான் அதனை அனைத்து மக்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.

மார்க்சியமல்லாத பல  சிந்தனைகளிலிருந்தும் எடுத்துக்கொள்ள வேண்டியவை, உள்வாங்க வேண்டியவை ஏராளமாக இருக்கிறது. மற்ற மனித நேய தத்துவங்களோடு நட்பு பாராட்டலாம். அந்த  தத்துவங்களில் நல்ல விஷயங்கள் பல இருக்கலாம். ஆனால் மார்க்சியம் மட்டும்தான் சுரண்டல், அடிமைத்தனத்திலிருந்து முற்றாக விடுதலையை காட்டுகிற தத்துவம். இந்த உலகத்தை மாற்றுவதன் மூலம் புதிய உலகை படைத்து, உழைக்கும் மக்கள் அனைவருக்கும் சமத்துவம் சாதிக்கிற ஒரு தத்துவம் இருக்கிறது என்று சொன்னால், அது மார்க்சியம் மட்டும்தான்.

இதுவரை வந்திருக்கக்கூடிய தத்துவஞானிகள் அனைவரும் இந்த உலகை பல்வேறு வழிகளில் விளக்கி இருக்கிறார்கள்: ஆனால் இதை மாற்ற வேண்டும் என்பதுதான் மிக முக்கியமானது என்று கூறிய மார்க்ஸ்,அதே நோக்கத்துடன்  உலகை அடியோடு மாற்றிடும் தத்துவத்தை உருவாக்கினார். கடுமையான வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு மத்தியில் குடும்பத்தின் வறுமை சூழலில் மார்க்ஸ் மார்க்சிய தத்துவத்தை படைத்தார். மானுட விடுதலை என்கிற லட்சியத்துக்காக  அவரும் அவரது குடும்பத்தினரும் தங்களை அர்ப்பணித்தனர்.

மூன்று தளங்களில் மார்க்சிய கல்வி

மார்க்சியத்தை பயில வேண்டும் என்கிற ஆர்வத்தை கட்சி உறுப்பினர், கட்சி ஆதரவாளர்கள்  மட்டுமல்லாது மக்களுக்கும், ஏற்படுத்த வேண்டும். எனவே, கட்சிக் கல்விப் பணிகள் என்பது  மூன்று தளங்களில் அமைய வேண்டும்.

1. மக்களிடையே இந்தப் பணியைச் செய்ய வேண்டும்.

2. கட்சி உறுப்பினர்களிடையே இடையறாது இப்பணி நடந்திட வேண்டும்.

3. கட்சியின் ஆதரவு தளங்களில் இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும்.

மார்க்சியத்தின் இலக்கு பாட்டாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும். ஆண்டாண்டு காலமாக உழைக்கும் மக்கள் அடிமைப்பட்டுத்தான் வந்திருக்கிறார்கள். ஆண்டாண்டு காலமாக உழைக்கும் மக்கள் சுரண்டப்படும் சமூகத்தினுடைய அடித்தளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும். அவர்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற   “உலகத்தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!” என்று மார்க்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையில் அறைகூவல் விடுத்துள்ளார். அவருடைய வழிகாட்டுதல்களை உள்வாங்கிய பாட்டாளி வர்க்கம் சோவியத் யூனியனில் சோஷலிச ஆட்சியை லெனின் தலைமையில் நடத்தியது. 70 ஆண்டுகள் சோவியத் யூனியன் இருந்தது. சோசலிசம் சந்தித்த பின்னடைவை பயன்படுத்தி இனிமேல் கம்யூனிசத்திற்கு எதிர்காலம் இல்லை என்கிற பிரசாரத்தை முதலாளித்துவவாதிகள் செய்கிறார்கள். சோவியத் வீழ்ச்சிக்கு பல காரணங்கள் இருந்தாலும், மிக முக்கியமான ஒரு காரணம் உள்ளது. ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய அந்த பாட்டாளி வர்க்கம் அரசியல் தத்துவார்த்த கல்வியில் பலவீனமாக இருந்தது; இதுவும் அதன்  வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது என்பதையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.

அரசியல் தத்துவார்த்த கல்வியும், பயிற்சியும் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே இருக்க வேண்டும். புதிய நிலைமைகளுக்கு ஏற்ப அரசியல் தத்துவார்த்த ஞானம் புதுப்பிக்கப்பட வேண்டும். அதில் தவறு நேர்ந்த காரணத்தினால் சோவியத் சிதைவு ஏற்பட்டது. இந்தியாவைப் பொறுத்தவரையில் பெரு முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ ஆட்சி அந்நிய முதலாளிகள் கூட்டணியோடு அதிகாரத்தில் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் பாட்டாளி வர்க்கத்தை மாற்றத்திற்கான பாதையில் அணிவகுக்கச் செய்திட,  அரசியல் தத்துவார்த்தப்  பணி  மிக முக்கியமானது ஆகும்.

கட்சியின் தரம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி   2015இல் கொல்கத்தாவில் ஒரு சிறப்பு மாநாட்டை (பிளீனம்) கூட்டி அமைப்பு சந்திக்கும்  பிரச்னைகளை ஆழமாக விவாதித்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவிற்கான சரியான மாற்றுக் கொள்கைகள் கொண்ட கட்சி. உழைப்பாளி மக்களுக்காக போராடிக் கொண்டிருக்க கூடிய கட்சி. தெளிவான சித்தாந்தமும் கொள்கைகளும் கொண்ட  கட்சியாக, மக்களிடையே மதிப்புமிக்க  கட்சியாக இருந்தாலும் கூட, அது வேகமான வளர்ச்சியை எட்டுவது  இன்னமும் கடினமாக உள்ளது. வேகமான வளர்ச்சியை அடைவதற்கான ஒரு முக்கியமான தேவையாக, கட்சி உறுப்பினர்களின் தரத்தை மேம்படுத்தும் பணி இருப்பதாக கொல்கத்தா சிறப்பு மாநாடு சுட்டிக் காட்டியது.

மார்க்சிஸ்ட் கட்சி குறிப்பிடும் “தரம்” என்பதற்கு ஒரு தனிப்பொருள் இருக்கிறது. கட்சியின் ஒரு உறுப்பினர், பல்வேறு கோரிக்கைகளுக்காக  மக்களைத் திரட்டுவதில் சிறந்த திறன் பெற்றவராக இருக்க வேண்டும். அத்துடன்,மார்க்சிய லெனினியத்தில் தேர்ச்சி  பெற்றவராக இருக்க வேண்டும். இதற்கு கட்சிக் கல்வி என்பது இடையறாது மேற்கொள்ளப்பட வேண்டும்; அது தொடர்ச்சியான ஒன்றாக இருக்க வேண்டும். அதே போன்று கட்சிக் கல்வி ஒரு ஒழுங்குமுறையான பாடதிட்டத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

முதலாளித்துவ வர்க்கத்திற்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையே முரண்பாடு தொடர்கிறது. உழைக்கும் மக்களின் உணர்வுகளை, அதிருப்தியை வெளிப்படுத்த கோரிக்கைகளுக்காக இயக்கம் நடத்தப்படுகிறது. ஏனெனில் வர்க்கப் போராட்டம்தான் வரலாற்றை மாற்றக்கூடியது. இவற்றுக்கு மத்தியில் கட்சிக் கல்வியில் மேம்பாடு அடைய வேண்டும். வர்க்கப் போராட்டத்தை நடத்த மார்க்சிஸ்ட் கட்சி முன்னணியில் இருக்கிறது. மார்க்சிய கல்வியும் இடையறாது நடத்தப்பட வேண்டும். வெகு மக்கள்  அமைப்புகள் நடத்தும் வர்க்கப் போராட்டங்களில் கலந்து கொள்ளும் வெகுமக்களை அரசியல் தத்துவார்த்த கல்வியில் இணைக்க வேண்டும்.

கடுமையான சூழலிலும் கட்சிக் கல்வி

 இன்று, சீன கம்யூனிஸ்ட் கட்சி சோசலிசத்தைக் கட்டுவதில் ஒரு பெரும் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. 1949இல் சீனத்தில் புரட்சி நடைபெற்றது. சீனாவில் ஆளும் வர்க்கத்தை வீழ்த்தி விவசாய, தொழிலாளி வர்க்கங்கள் ஆட்சியதிகாரத்திற்கு வந்தன. இதற்காக அங்கு ஏராளமான போராட்டங்கள் நடைபெற்றன. வரலாற்றில் ‘லாங் மார்ச்’ என முக்கியத்துவம் பெற்றுள்ள , மாசேதுங் தலைமையிலான நெடும்பயணம் நடத்தப்பட்டது. இதுதான் புரட்சிக்கு வித்திட்ட ஒரு மாபெரும் வரலாற்று இயக்கம். எதிரிகளை முறியடித்து முன்னேறி கொண்டிருந்த இந்த இயக்கத்தின் ஊடாகவே அரசியல் தத்துவார்த்தப் பணியும் நடந்தது. மலைகளிலும் காடுகளிலும் இரவு நேரங்களிலும் தன்னோடு வந்து கொண்டிருக்க கூடிய தோழர்களுக்கு மாசேதுங்  மார்க்சிய கல்வி வகுப்புக்களை நடத்தினார்.

ராணுவப்  பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கட்சி உறுப்பினர்களுக்கு மட்டுமல்லாமல்,கடந்து செல்கிற வழியில் உள்ள விவசாயிகளுக்கும், மக்களுக்கும் புரட்சி இலட்சியத்தை விளக்கும்  வகுப்புகள் எடுக்கப்பட்டன. இந்த பணியை செய்தால்தான் புரட்சி வெற்றி பெறும்; புரட்சி வெற்றி பெற வேண்டும் என்றால் மக்களை தயார் செய்ய வேண்டும்; அதே போன்று கட்சி உறுப்பினர்களை புரட்சிகர உணர்வு கொண்டவர்களாக மாற்ற வேண்டும்; இது போன்ற நோக்கங்களுடன்  மார்க்சிய பாடத்தை கற்பிக்க கடும் முயற்சிகளை மேகொண்டனர். செய்தார்கள். எனவே கட்சிக் கல்வி என்பது ஒரு முக்கியமான புரட்சிகர பணி.

அன்றாட பணிகளால் கட்சி கல்வி வகுப்பை நடத்த முடியவில்லை என்று சமாதானம் சொல்வது கட்சியின் முன்னேற்றத்திற்கு உதவிடாது. இந்தியாவில் கட்சி தடை செய்யப்பட்டு இருந்த கடுமையான சூழலில் கூட  கட்சி இப்பணிகளை நடத்தியுள்ளது. தீக்கதிர் ஆசிரியராக பணியாற்றிய கட்சியின் முன்னோடி தலைவரான கே.முத்தையா சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது அங்கு அவர்  செயல்பட்டுக் கொண்டிருந்த கட்சிக் கிளைக்கு வகுப்பு எடுக்க வேண்டியிருந்தது. கட்சி தடை செய்யப்பட்டிருந்த அந்தக் காலத்தில் சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் கூடி, வகுப்பு எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு தோழர்களுக்கு கட்சி வகுப்பெடுத்தவர் கோவில் குருக்கள் தோற்றத்தில் வந்த ஒரு தலைவர்.  அவர்தான் பின்னாளில் கட்சியின் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக செயல்பட்ட  தோழர். ஏ.கே.கோபாலன். கட்சி தடை செய்யப்பட்ட அக்காலத்தில் மாறுவேடத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவந்தார். மக்கள் போற்றும் தலைவராக இருந்த அவர் அந்த இக்கட்டான காலத்திலும் கூட கட்சிக் கல்வி வகுப்பை தோழர்களுக்கு எடுத்து வந்தார். எந்த சூழலிலும் கட்சிக் கல்வியை கைவிடுவது புரட்சியைக் கைவிடுவதாக அமையும்.

கட்சிக் கல்வி தொடர்ச்சியானதாகவும், குறிப்பிட்ட பாடத்திட்ட ஒழுங்குமுறையுடனும் நடைபெற வேண்டும். ஒருவர் ஏற்கெனவே பல தலைப்புக்களில் வகுப்பைக் கேட்டிருந்தாலும் கூட, மாறுகிற சூழலில்  மேலும் மேலும் தன்னை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. அந்த வகையில் மூத்த தோழர்களுக்கும் பாடத்திட்டம் தேவைப்படுகிறது. புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கு தனிப் பாடத்திட்டம் தேவைப்படுகிறது. அதேபோன்று பல வெகு மக்கள் அமைப்புக்களில்  பணியாற்றும் ஆதரவாளர்களாக வரக்கூடியவர்களுக்கும் பாடத்திட்டம் தேவைப்படுகிறது.

முதலாளித்துவத்தின் சகல பரிமாணங்களையும் அறிந்திட வேண்டும். முதலாளித்துவம் எப்படி இயங்குகிறது என்பனவற்றவற்றை விளக்கும் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஆகியோரின் எழுத்துக்கள், கட்சி கோட்பாடுகள் பற்றிய விளக்கங்களை தரும் லெனினின் எழுத்துக்கள், இந்திய நாட்டில் புரட்சிக்கான வழி குறித்து விளக்குகின்ற மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம், முதலாளித்துவ கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் இன்றைய காலத்தில் நாம் செய்ய வேண்டிய பணிகளை அறிந்து கொள்ளவும், இடது மாற்றை எப்படி கொண்டு வர வேண்டும் என்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவணங்களையும் உள்வாங்கிட வேண்டும். இவற்றில் தெளிவாக இருப்பவராலேயே கம்யூனிஸ்டாக இருக்க முடியும். அப்போதுதான் அவர்களால் மக்களை வென்றெடுக்க முடியும்.

மார்க்சிய லட்சியம், இந்தியப்  புரட்சி லட்சியம், கட்சித் திட்டம், இடது ஜனநாயக அணி ஆகியவை மீது பிடிப்புடன் இருக்கும் ஒருவர், வர்க்க உணர்வுடன் ,உள்ளூர் அளவில் கட்சியை விரிவாக்கம் செய்திடும்  பணியை சிறப்பாக மேற்கொள்வார். உழைக்கும் மக்களை வர்க்க அடிப்படையில் திரட்டுகிற கடமையில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்வார்.

சிந்தனையில்  ஆதிக்கம்

சமூகத்தில் ஆதிக்க வர்க்கத்தினர் எண்ணிக்கையில் சிறுபான்மையினரே. முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடிகள், உற்பத்தி தேக்கம் ஆகியவை  தவிர்க்க முடியாது. அதேபோன்றுதான் வேலையின்மையும், வறுமையும் தவிர்க்க இயலாமல் முதலாளித்துவ சமூகத்தில் தாண்டவமாடுகிறது. எனினும் முதலாளித்துவ முறையிலிருந்து ஏன் நாடுகள் வெளியேற மறுக்கின்றன? சீனா போன்ற சோசலிசத்தை தழுவிய நாடுகளைத் தவிர இதர நாடுகள் முதலாளித்துவத்தையே கட்டியழுவது ஏன்? இந்த இடத்தில் தான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு உண்மை இருக்கிறது.முதலாளித்துவம்  பொருளாதார ஆதிக்கம் மட்டுமின்றி சமூகத்தில் சிந்தனை ஆதிக்கத்தையும் செலுத்துகிறது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி, வகுப்புவாத வன்முறைகள், வாழ்வாதார இழப்புக்கள்  போன்ற கொடூர தாக்குதல்களை மேற்கொண்ட போதும், அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் கணிசமான மக்கள் பாஜகவிற்கு வாக்களித்துள்ளனர்.  எங்களைத் தவிர வேறு சரியான மாற்று இல்லை எனும் கருத்தாக்கத்தை சங்பரிவாரின் பிரச்சார இயந்திரம் மக்கள் மத்தியில் விதைக்கிறது. இவ்வாறான பொய் பிரச்சாரங்கள் இடையறாது நடக்கிறது. தனிநபரை பெரும் ஆளுமையாக மலையளவிற்கு கட்டமைப்பது எல்லா நாடுகளிலும் நடந்திருக்கிறது. இந்தியாவில்  அது அதிகமாகவே உள்ளது. பல வழிகளில்  மக்களின் சிந்தனை மழுங்கடிக்கப்படுகிறது. ஊடகங்கள் மூலம் முதலாளித்துவ ஆதரவு கருத்துக்கள் மக்களிடம் திணிக்கப்படுகிறது.

 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக வெற்றி பெற்ற பகுதிகளை ஆராயும்போது எங்கெல்லாம் மக்களை மதத்தின் அடிப்படையில் திரட்டி சிறுபான்மை மக்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டுள்ளனரோ, அங்கெல்லாம் அதிகமான ஓட்டுக்களைப் பெற்றுள்ளனர். ஒருவருக்கு வேலையிழப்பு ஏற்பட்டிருந்தாலும், இந்து எனும் மத அடையாளத்தை தூண்டி, இந்து மதத்தை பாதுகாக்க வேண்டுமென்றால், பாஜகவினால்தான் முடியும் என்கிற பிரசாரத்தின் மூலம், தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டனர். வர்க்க ஒற்றுமை என்ற கருத்தாக்கத்தை பரவ விடாமல் தடுக்க,  ஆளும் வர்க்கங்களுக்கு அடையாள திரட்டல் உதவுகிறது. சமூகத்தில் நன்றாக வாழ வேண்டுமென்றால், தன்னைப் பற்றி  மட்டும் கவலைப்பட வேண்டும்; தான் மட்டும் அதிக  சொத்துக்களை சேர்க்க வேண்டும் என்ற எண்ணங்களை  தனி மனித உணர்வில் நவீன தாராளமயம் திணிக்கிறது. அதுவே கிட்டத்தட்ட நடுத்தர மக்களை கடந்த 20 ஆண்டுகளாக ஆட்டுவித்து வருகிறது.

களத்தில் மக்களைத் திரட்டி போராட்டங்களில் ஈடுபடுவதும்,முதலாளித்துவ, தாராளமய சிந்தனைகளுக்கெதிராக, மத, சாதியவாதத்திற்கு எதிராக சோசலிச கருத்தாக்கங்களை விதைக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும். இதற்கு கட்சிக் கல்வி பயன்படுகிறது.முதலாளித்துவத்தை வீழ்த்துவதற்கு பொருளாதார கொள்கைகளை எதிர்த்துப் போராடுகிற அதேவேளையில், கருத்தியல் ரீதியாலான அதன் ஆதிக்கத்தை வீழ்த்திட,  கருத்தியல் போராட்டத்தை நடத்த வேண்டும். உழைக்கும் மக்களிடம் திணிக்கப்பட்டிருக்கும் கருத்தியலை வீழ்த்த மார்க்சிய முற்போக்கு, சமத்துவ கருத்தியலை கொண்டு செல்ல வேண்டும்.

கட்சிக் கல்வியை பல வடிவங்களில் நடத்த வேண்டும். அதில் சுய கல்வி மற்றும் வாசிப்பை மேம்படுத்துவது முக்கியமானது. நாட்டு நடப்புகளை, உலக நடப்புகளை, தத்துவார்த்தப்  போக்குகளை விளக்கும் சிறந்த படைப்புக்களை தெரிவு செய்து படிக்க வேண்டும். அனைத்து நூல்களையும் விமர்சன பூர்வமாக படிக்க வேண்டும். திட்டமிட்ட கட்சிக் கல்வி வகுப்பு, படிப்பு வட்டங்கள் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். மார்க்சிய கண்ணோட்டத்துடன் அரசியல் தத்துவார்த்த உரையாடலை மேற்கொள்ள வேண்டும்.

மாநாட்டு முடிவுகள்

முத்தாய்ப்பாக  கட்சி கல்வி பற்றி மார்க்சிஸ்ட் கட்சியின் 23வது அகில இந்திய மாநாட்டு முடிவுகளை குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். அவை வருமாறு:

1) “வலிமையான மாநிலங்கள் உட்பட, எல்லா மாநிலங்களிலுமே போதுமான தரம்வாய்ந்த ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. இந்த குறைபாட்டில் இருந்து மீளும் முயற்சிகளை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

2) பல்வேறு தலைப்புகளில் வகுப்பு குறிப்புகளை உடனடியாக இறுதி செய்திட வேண்டும். நாடு முழுவதும் கட்சி கல்வி வகுப்புகளுக்கிடையே ஒரே மாதிரியான தன்மையை கொண்டுவர இது உதவிடும்.

3) கொல்கத்தா ஸ்தாபன பிளீனம் மேற்கொண்ட முடிவின் அடிப்படையில், கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் குறைந்தது 4 தலைப்புகளில் கல்வி வகுப்புக்களை மேற்கொள்ளும் கடமையை, அதற்குரிய காலத்தைத் தீர்மானித்து, அமலாக்கிட வேண்டும். இது அல்லாமல், ஆர்.எஸ்.எஸ். பற்றிய வகுப்பினை நம்முடைய கட்சி கல்வி பயிற்சிகளில் கட்டாயமாக்க வேண்டும்.

4) படிப்பு வட்டங்களுடைய முக்கியத்துவம் அனைவராலும் ஏற்கப்பட்டுள்ளது. ஆனாலும், நடைமுறைப்படுத்துவதில் சுணக்கம் தொடர்கிறது. இந்த குறைபாட்டை களைந்திட வேண்டும். ‘படிப்பு வட்டங்களை எவ்வாறு மேற்கொள்வது’ என்ற தலைப்பில் பயிற்சியினை திட்டமிட்டு வழங்கலாம்.

5) அகில இந்திய மையத்தில், ஹர்கிஷன் சிங் சுர்ஜித் பவனில், நிரந்தர பள்ளி தயாராக உள்ளது. இந்த வசதியை, முறையாக பயன்படுத்த திட்டம் மேற்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும். அதே போல வேறு சில மாநிலங்களிலும் நிரந்தர பள்ளி கட்டப்பட்டுள்ளது. அவற்றில் வகுப்புக்களை தொடர்ந்து நடத்திட உரிய திட்டமிடல் மேற்கொள்ளப்பட வேண்டும். நிரந்தர பள்ளி இல்லாத மாநிலங்களில், அத்தகைய ஒன்றைத் தொடங்கிட பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

எனவே, மார்க்சியத்தை பயில்வோம், பரவலாக்குவோம்,  புரட்சிகர இயக்கத்தை வலிமைப்படுத்துவோம்.

கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியலும் ஸ்தாபனமும்

  • . வாசுகி

 கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரை ஸ்தாபனம் என்பது தனித்துப் பார்க்க இயலாதது. கட்சியின் அரசியல் நோக்கத்திலிருந்து பிரித்து பார்க்கக் கூடாதது. ஜோசப் ஸ்டாலின் அவர்கள், “சரியான அரசியல் நிலைபாட்டை உருவாக்கி, கூரை மேல் நின்று அதை கூவினால் போதும்; அதை தீர்மானமாக இயற்றி ஏகமனதாக நிறைவேற்றினால் போதும்; வெற்றி தானாக வந்து விடும் என சிலர் நினைக்கிறார்கள்…. வெற்றி பொதுவாக தானாக வராது; அதனை அடைய வேண்டும்….. தீர்மானம் போடுவது வெற்றி அடையும் விருப்பத்தை காட்டுகிறதே தவிர, அதுவே வெற்றி அல்ல… சரியான அரசியல் நிலைபாட்டை உருவாக்கிய பின், அதனை நடைமுறைப்படுத்த ஸ்தாபன ரீதியாக போராட வேண்டும்…. அதாவது சரியான அரசியல் நிலைபாட்டை உருவாக்கிய பின், அதன் தலைவிதியை, வெற்றி தோல்வியை, ஸ்தாபனமே தீர்மானிக்கிறது” என்கிறார்.

 அரசியல் நோக்கமும்  ஸ்தாபனமும் கம்யூனிச இயக்கத்தின் இரு கால்களைப் போல… இரண்டும் ஒரே திசையில் ஒத்திசைந்து  பயணிப்பது முக்கியம்.

 எனவேதான், அகில இந்திய மாநாட்டில், அரசியல் ஸ்தாபன அறிக்கை என்ற பெயரிலேயே ஸ்தாபன அறிக்கை வைக்கப்படுகிறது. சென்ற மாநாட்டு அரசியல் நடைமுறை உத்தி பற்றிய பரிசீலனை, கட்சி அமைப்பு, வர்க்க வெகுஜன அமைப்புகள் என மூன்று பகுதிகள் இதில் இடம்பெறும்.

இடது ஜனநாயக அணி

1978இல் 10வது அகில இந்திய மாநாட்டில் அரசியல் சூழல் விவாதிக்கப்பட்டது. அதுவரை காங்கிரஸ் என்ற  பெரு முதலாளித்துவ வர்க்கப் பிரதிநிதி மட்டுமே மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி நடத்திய சூழலில்,  காங்கிரஸ் கட்சியை முறியடிப்பது;  அதன் எதேச்சாதிகாரத்திற்கு எதிராக, பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக, அனைத்துப் பகுதி மக்களையும் ஒருங்கிணைப்பது   என்பதே  அரசியல் நடைமுறை உத்தியின் சாராம்சமாக இருந்தது. ஆனால் 1978 மாநாட்டின்போது  ஜனதா கட்சி உருவாகி ஆட்சி அதிகாரத்தைப் பிடித்த பின்னணியில், காங்கிரஸ், ஜனதா கட்சி இரண்டுமே அடிப்படையில்  முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ கொள்கைகளைக்  கடைப்பிடிக்கக் கூடிய கட்சிகள். எனவே இவற்றுக்கு மாற்று என்பது இதே கொள்கைகளை ஏற்ற இறக்கத்தில் கடைப்பிடிக்கும் இன்னொரு அணியாக இருக்க முடியாது.  இந்தக் கொள்கைகளுக்கு  முற்றிலும் மாறாக,  மக்களுக்கான ஒரு திட்டத்தை  உருவாக்குவதும், அந்த திட்டத்தின் அடிப்படையில்  அணி சேர்க்கையைக் கட்டமைப்பதும்  தேவை என்ற புரிதலோடு, இடது ஜனநாயக அணியைக் கட்டமைப்பது என்ற நிலைபாடு எடுக்கப்பட்டது. இதன் வளர்ச்சி மக்கள் ஜனநாயக அணி கட்டமைக்கப்பட உதவும். இதில் இடம் பெற வேண்டிய வர்க்கங்கள், சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பகுதியினர் குறித்தும் தீர்மானிக்கப்பட்டது. இவர்களுக்கு என்று ஒரு வர்க்க அமைப்போ, வெகுமக்கள் அமைப்போ உருவாக்கப்பட்டால்தான் அணிதிரட்ட முடியும்.

எனவே 1980களுக்கு பிறகு பல்வேறு வர்க்க, வெகுஜன அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இந்த அரசியல் நோக்கத்திற்கு ஏதுவாக கட்சி ஸ்தாபனத்தை ஒழுங்கமைக்கவே, சால்கியா பிளீனம் நடத்தப்பட்டது. அதே போல், மீண்டும் 20வது மாநாட்டில், நவீன தாராளமய கொள்கை அமலாக்கத்துக்குப் பின், கட்சி உருவாக்கிய அரசியல் நடைமுறை உத்திகள் அனைத்தும் மீள்பரிசீலனை செய்யப்பட்டு, இடது ஜனநாயக அணியின் முக்கியத்துவம் மீட்டெடுக்கப்பட்ட பின், அதற்கேற்ப ஸ்தாபனத்தை ஒழுங்கமைக்க, கொல்கத்தா பிளீனம் நடத்தப்பட்டது. இருப்பினும், பொதுவாக இடது ஜனநாயக அணியை கட்டமைப்பதற்கான துவக்க கட்ட வேலைகள் கூட செய்யப்படவில்லை என்பதை மாநாட்டு அறிக்கைகள் சுய விமர்சனமாக முன்வைக்கின்றன. அதிகரித்து வரும் நாடாளுமன்ற வாதமும், சித்தாந்தப் பிடிப்பில் ஏற்பட்டுவரும் சரிவும், இதற்குக் காரணம் என கொல்கத்தா பிளீனம் சுட்டிக்காட்டியது இப்போதும் தொடர்கிறது. இதில் ஒரு முறிப்பை ஏற்படுத்த வேண்டியுள்ளது.

ஸ்தாபனம் என்பது அரசியல் நிலைபாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான பேராயுதம். மையப்படுத்தப்பட்ட கட்சி கமிட்டி (மத்திய குழு), மையப்படுத்தப்பட்ட கட்சியின் ஏடு, தொழில் முறை புரட்சியாளர்கள், ஜனநாயக மத்தியத்துவ கோட்பாடு, வர்க்க வெகுஜன அமைப்புகளைக் கட்டுவது, ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் ஏதேனும் ஒரு வெகுஜன அமைப்பில் பணியாற்றுவது, கட்சி திட்டத்தை ஏற்பது உள்ளிட்ட அம்சங்களை இந்தப் பின்னணியில் புரிந்து கொள்ள வேண்டும். கட்சி உறுப்பினர்கள் குறைந்தபட்சம் ஐந்து ஸ்தாபன கடமைகளை நிறைவேற்றுவது குறித்து பரிசீலித்த பின்னரே  அவர்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற வழிகாட்டுதலை இதனுடன் இணைத்துப் பார்த்தால், இதனால்  உறுப்பினர் எண்ணிக்கை குறைந்து விடும்  என்பதை விட, கட்சி உறுப்பினர்களின் தரத்தை கெட்டிப்படுத்தி கட்சி விரிவாக்கத்திற்கு இது  வழி வகுக்கும் என்கிற புரிதல் தெளிவாக முன்னுக்கு வரும்.

வர்க்கங்களையும் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவினரையும் அவரவருக்கான அமைப்பில் திரட்டி அரசியல்படுத்த வேண்டும் என்பது இடது ஜனநாயக அணியோடும், வர்க்க சேர்மானத்தில் மாற்றம் ஏற்படுத்துவதோடும்  இணைந்தது என்கிற வெளிச்சத்தில், வர்க்க வெகுஜன அமைப்புகளின் மீதான கண்ணோட்டம் மாற வேண்டும். இந்த அமைப்புகளில் பணியாற்றும் கம்யூனிஸ்டுகள், இந்த அரசியல் ஸ்தாபன நோக்கத்தை புரிந்துகொண்டு  அதில் செயலாற்ற வேண்டும். தான் பொறுப்பு வகிக்கும் வர்க்க வெகுஜன அமைப்புகளில் அப்பொறுப்புகளைத்  திறம்பட நிறைவேற்றுவதோடு, கம்யூனிஸ்ட் அல்லாதவர்களின் கடமை முடிந்து போகலாம். ஆனால் கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரை, பொறுப்பைத் திறம்பட நிறைவேற்றுவது என்பதோடு சேர்த்து, அதில் வரும் வெகு மக்களை ஸ்தாபனப்படுத்துவதும், அரசியல்படுத்துவதும், இடதுசாரி அரசியலுக்கு நெருக்கமாகக் கொண்டு வருவதும், தொடர்புகளைப் பயன்படுத்தி கட்சியை விரிவாக்கம் செய்வதும், கட்சியின் முடிவுகளை அந்த அரங்கின் வெகுஜனத் தன்மைக்கும் ஜனநாயகத்திற்கும் பொருந்தக் கூடிய விதத்தில் நிறைவேற்றுவதும் என கடமைகளின் பட்டியல் நீண்டது. வர்க்க, வெகுமக்கள் அமைப்புகளையும், அல்லது அதில் பணியாற்றக்கூடிய கட்சி ஊழியர்களையும் இரண்டாம் நிலையில் வைப்பது அரசியல் ஸ்தாபன புரிதல் பற்றாக்குறையின் வெளிப்பாடே.

23வது மாநாட்டு முடிவுகள்

இருபத்தி மூன்றாவது அகில இந்திய மாநாட்டின் அரசியல் தீர்மானம் கட்சியின் சொந்த பலம் அதிகரிப்பு, இடது ஜனநாயக அணியை கட்டமைப்பதற்கான பணிகள், சாதியம், ஆணாதிக்கம், மதவெறி அனைத்தின் கலவையுமான இந்துத்துவா  சித்தாந்தத்தை முறியடிப்பது, அதை முன்வைக்கும் சங் பரிவாரங்களின் கருத்துக்களையும் நடவடிக்கைகளையும் எதிர்கொள்வது, தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பது, இதற்குத் தேவைப்படும் கூட்டு செயல்பாடுகள், கூட்டு மேடைகள், பரந்த மேடைகள் உள்ளிட்ட ஸ்தாபன பணிகளில் கவனம் செலுத்துவது, இந்தப் புரிதலுடன் ஊழியர்களை வளர்த்தெடுத்து செயல்பட வைப்பது, அதில் இளைஞர்கள் பெண்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது, மக்களோடு  உயிர்ப்புடன் கூடிய தொடர்பு போன்றவற்றை ஸ்தாபன கடமைகளாக வரையறுத்துள்ளது. இதை செய்யக்கூடிய திறன்  படைத்தவையாக மாநிலக்குழு, மாவட்டக்குழு, இடைக்குழு, கிளை மாற வேண்டும். அனைத்து மட்ட பொறுப்பாளர்கள், செயலாளர்கள் இதை நோக்கியே தங்களது வேலைகளை அமைத்துக் கொள்ளவேண்டும். வேலை முறையில் மாற்றம் என்பது இதுதான்.

உதாரணமாக, ஸ்தல போராட்டங்கள் அல்லது உள்ளூர் மட்ட போராட்டங்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்பது பிளீனம் மற்றும் நடந்துமுடிந்த மாநாடுகளின்  அறிவுறுத்தலாக உள்ளது. அகில இந்திய மாநாடு  ஸ்தல போராட்டங்கள் குறித்து ஏன் பேசுகிறது, எந்த அடிப்படையில் பேசுகிறது என்று பார்த்தால், மாஸ் லைன் என்று சொல்லப்படுகிற மக்களோடு உயிர்ப்பான தொடர்பு என்பதை நடைமுறைப்படுத்துவதற்கு உள்ளூர் மட்ட  இயக்கங்களே பெரும் வாய்ப்பு என்பதுதான். எனவே நாம் நடத்தும் ஸ்தல போராட்டங்களின் மூலம் உள்ளூர் மக்களோடு கட்சிக்கு, வர்க்க வெகுமக்கள் அமைப்புகளுக்கு, தொடர்பு பலப்பட்டு, அது இடதுசாரி அரசியலாக, கருத்தியலாக, அமைப்புகளாக பரிணமிக்க வேண்டும். அரசியல் நோக்கத்தை கணக்கில் எடுக்காமல், போராட்டங்கள் நடத்தி மக்களுக்கு நிவாரணம் பெற்றுத் தருவதோடு நிறுத்திவிட்டால் கம்யூனிஸ்ட் பணி முழுமை பெறாது, அரசியல் நோக்கம் ஈடேறாது. இத்தகைய போராட்டங்கள் ஒரு சில கோரிக்கைகள் வெற்றி பெறும் வரை நீடித்து   நடத்தப்பட வேண்டும். உள்ளூர் மட்ட போராட்டங்கள் நீடித்து நடக்காமல் போவதற்கு காரணங்களாக, அரசியல், பொருளாதார, சமூக, ஆதிக்க சக்திகளுடன் மோதல்கள் கடுமையாக வரும் சூழல், நாடாளுமன்ற வாதம் போன்றவற்றை அகில இந்திய மாநாடு சுட்டிக்காட்டுகிறது. இவற்றை எதிர்கொண்டு  போராட்டங்களை உத்தரவாதப்படுத்துவது மேல் கமிட்டிகளின் பொறுப்பாகும்.

மற்றோர் உதாரணம் கூட்டு இயக்கங்கள், கூட்டு மேடைகள் குறித்ததாகும். இதன் அரசியல் நோக்கம் என்ன? பல்வேறு கட்சிகளை அமைப்புகளை திரட்டும் போது, கோரிக்கைகளுக்கு வலு கிடைக்கும், இந்த அமைப்புகளுக்கு பின்னாலுள்ள மக்களுக்கு செய்தி போகும் என்பது ஒருபுறம். இதன் மறுபக்கம் அதுவும் முக்கியமான பக்கம் என்பது, அவர்களிடம் நம்முடைய மாற்று அரசியலையும் கருத்துக்களையும் முன் வைப்பதற்கும், ஈர்ப்பதற்குமான வாய்ப்பு என்பதாகும். எனவே, கூட்டு இயக்கங்கள் நடந்த பிறகு, அதன் மீதான பரிசீலனையில், நமக்கு அரசியல், ஸ்தாபன ரீதியாக கிடைத்த பலன்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் இந்துத்துவ சக்திகளின் சவால்களை சந்திப்பதற்கு பன்முக செயல்பாடுகள் தேவைப்படுகின்றன. பல்வேறு வாழ்வுரிமை பிரச்சனைகளில் பாதிக்கப்படும் மக்களை அணிதிரட்டி ஒன்றுபட்ட போராட்டம் நடத்தினாலே மதவெறி செயல்பாடுகளை பின்னுக்கு தள்ளி விட முடியும் எனக் கருதிவிட முடியாது. இந்துத்துவ சக்திகளுடைய தொடர்ச்சியான கருத்தியல் பிரச்சாரம் மக்களின் மன உணர்வுகளை மாற்றியமைக்கிறது. வெற்றிகரமாக ஓராண்டுக்கும் மேல் நடந்த விவசாயிகளுடைய மகத்தான போராட்டத்திற்கு பின்பும், உத்தரப் பிரதேசத்தில் பாஜக அதிக வாக்கு சதவீதத்தோடு ஆட்சியைக் கைப்பற்றியது இதற்கோர் எடுத்துக்காட்டு. தேர்தல் நேரத்தில் பாஜகவை தோற்கடிக்க மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கும் போது மட்டும் மதவெறி சித்தாந்தம் குறித்து பிரச்சாரம் செய்வது போதாது. கருத்தியல் தளத்தில் வர்க்க ஒற்றுமைக்கும் சமூக நீதிக்குமான தொடர் பிரச்சாரம் நிகழ்த்தப்பட வேண்டும்.

கட்சியின் முக்கிய ஸ்தாபன கோட்பாடான ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடு இன்றைக்கு பலராலும் விமர்சிக்கப்படும்  அம்சமாக உள்ளது. கட்சிக் கட்டுப்பாடு எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதும் கட்சியின் அரசியல் நோக்கோடும், இலக்கோடும் இணைந்தது. ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு,  ஏகபோக எதிர்ப்பு  என்ற அம்சங்களை உள்ளடக்கிய மக்கள் ஜனநாயகப் புரட்சியை  இலக்காக முன்வைக்கும்போது, பல்வேறு சவால்களை, அடக்குமுறைகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே கம்யூனிஸ்ட் கட்சிக்குள் விவாதத்தில்  மிக உயர்ந்த ஜனநாயகமும், முடிவெடுத்த பின் அதை அமல்படுத்துவதில் மிக உயர்ந்த கட்டுப்பாடும் தேவைப்படும்.

கட்சித் திட்டம் முன்வைக்கும் இலக்கை நோக்கிய பயணம் முன்னேறக் கூடிய விதத்திலேயே அரசியல் நடைமுறை உத்தி உருவாக்கப்படுகிறது. இடது ஜனநாயக அணியைக் கட்டுவது என்பது அரசியல் நடைமுறை உத்தியின்  ஒரு பகுதி, மையப்பகுதி. அதை விட்டுவிட்டு அகில இந்திய மாநாட்டின் அரசியல் நடைமுறை உத்தியை வெற்றிகரமாக நிறைவேற்றி விட முடியாது. இந்த ஒட்டுமொத்த புரிதலோடு கட்சி ஸ்தாபனம் முழுமையும் களத்தில் இறங்கினால், முன்னேற்றம் நிச்சயமாக உறுதிப்படுத்தப்படும். அனைத்து கட்சி உறுப்பினர்களும் கட்சியின் திட்டத்தைப்  புரிந்து கொண்டவர்களாக,  அதை ஒட்டிய மாநாட்டு கடமைகள்,  மத்திய, மாநிலக் குழு  முடிவுகளை  அடிப்படையாகக் கொண்டு, தம் அன்றாட பணிகளை அமைத்துக் கொள்பவர்களாக உருவாக்கப்படவேண்டும். கட்சி உறுப்பினர்கள்  சிறு சிறு குழுக்களாக இருந்தால் தான்,  அன்றாட வேலைகளை பங்கீடு செய்வதும், கண்காணிப்பதும் சாத்தியம் என்கிற அடிப்படையிலேயே கிளைகள் உருவாக்கப்படுகின்றன. கிளைகளே கூடா விட்டால்  இந்த அடிப்படை நோக்கமே அடிபட்டுப் போகிறது. இந்தப் பின்னணியில் மாநாட்டு ஸ்தாபன முடிவுகளை, கட்சியின் அரசியல் நோக்கத்தோடு இணைத்துப் பார்க்கக்கூடிய புரிதலை, கட்சி அணிகள் மத்தியில் உருவாக்குவதே, பிரதான கடமையாக முன்னுக்கு வருகிறது.

லெனினும் புரட்சிகர கட்சியும்

குரல்: பூங்கொடி மதியரசு

அன்வர் உசேன்

ஜனவரி 21 லெனின் நினைவு தினம். அவர் மறைந்து 98 ஆண்டுகள் கடந்துவிட்டன. சமூக மாற்றத்துக்கான சோசலிச புரட்சியை சாத்தியமாக்க வேண்டும் எனில் கம்யூனிஸ்டு கட்சி அவசியம் என்பதும் அத்தகைய கட்சி அந்தந்த சமூகத்துக்கு பொருத்தமான சித்தாந்த கோட்பாடுகளையும் ஸ்தாபன கோட்பாடுகளையும் கொண்டிருக்க வேண்டும் எனும் ஆழமான புரிதலையும் உருவாக்கிய மாபெரும் அமைப்பாளர் லெனின் அவர்கள்.

“அரசு அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான தனது போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்துக்கு ஸ்தாபனம் எனும் ஆயுதம் தவிர வேறு எதுவும் இல்லை” – வி.இ.லெனின்

“அரசு அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான தனது போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்துக்கு ஸ்தாபனம் எனும் ஆயுதம் தவிர வேறு எதுவும் இல்லை” என லெனின் மிக தெளிவாக கூறினார். “மார்க்சிய கோட்பாடுகளின் அடிப்படையில் உருவான சித்தாந்த ஒற்றுமை, ஸ்தாபன ஒற்றுமையின் வழியாக மேலும் உறுதிப்படுவதன் மூலம்தான் தொழிலாளி வர்க்கம் வெல்லற்கரிய சக்தியாக பரிணமிக்க முடியும்” எனவும் லெனின் வலுவாக பயிற்றுவித்தார். சோசலிசப் புரட்சிக்காக போராடும் ஒவ்வொரு கம்யூனிஸ்டு கட்சிக்கும் சித்தாந்த ஒற்றுமையும் அந்த சித்தாந்தத்தை செயல்படுத்துவதற்கு இசைந்த அமைப்பு கோட்பாடுகளும் தவிர்க்க முடியாத ஒன்று என்பது லெனின் உருவாக்கிய மிக முக்கியமான பாடம் ஆகும்.

கட்சி இல்லாமல் புரட்சி சாத்தியமில்லை

மார்க்சும் ஏங்கெல்சும் கம்யூனிஸ்டு கட்சியின் தேவையினைக் குறித்து எதுவும் சொல்லவில்லை என்றும் அப்படிப்பட்ட சர்வாதிகார அமைப்பை உருவாக்கியது லெனின்தான் எனவும் சில மேற்கத்திய ‘ஆய்வாளர்கள்’ சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இது உண்மைக்கு முற்றிலும் மாறானது.

தொழிலாளர்கள் ‘தங்களை ஒரு வர்க்கமாகவும், அதன்மூலம் ஓர் அரசியல் கட்சியாகவும்’ உருவாக்கிக்கொள்வதை கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலேயே குறிப்பிடும் மார்க்சும் எங்கெல்சும், “முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துதல், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்தல்” ஆகியவை இரண்டையும் கம்யூனிஸ்டுகளின் கடமைகளாக வகுத்துள்ளார்கள்.

முதல் அகிலம் எனப்படும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் எங்கெல்ஸ் கீழ்க்கண்டவாறு அறிவுறுத்தினார்:

“அனைத்து இடங்களிலும் அனுபவம் நமக்கு எடுத்து காட்டுவது என்னவெனில் தொழிலாளர்களை பழைய கட்சிகளின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றால் அதற்கு சிறந்த வழி சுயேச்சையான பாட்டாளி வர்க்க கட்சியை உருவாக்குவதுதான். இந்த கட்சிக்கு தனது சொந்த கொள்கைகள் இருக்க வேண்டும்; அந்த கொள்கைகள் ஏனைய கட்சிகளின் கொள்கைகளிலிருந்து வேறுபட்டிருக்க வேண்டும்”

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஸ்பானிய பிரிவுக்கு 1871ம் ஆண்டு எங்கெல்ஸ் எழுதிய கடிதம்…

எனவே கம்யூனிஸ்டு கட்சி கட்டமைப்பு கோட்பாடுகள் ஆகியவையெல்லாம் சர்வாதிகார விருப்பத்துடன் லெனின் உருவாக்கியவை என்பது மிகப்பெரிய அவதூறு என்பது மிகை அல்ல. உண்மையில், லெனின் வழிகாட்டிய கம்யூனிஸ்டு கட்சிகளில்தான், கட்சிக்குள் மிக உயர்ந்த செழுமையான ஜனநாயகம் உள்ளது. மார்க்சும் எங்கெல்சும் சுயேச்சையான கட்சியை உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்தினாலும் அதன் கட்டமைப்பையும் அதன் பல்வேறு உட்கூறுகளையும் வடிவமைத்த சிற்பி லெனின் ஆவார். புரட்சிகர சித்தாந்தத்தை அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட ஒரு புரட்சிகர அமைப்பு இல்லாமல் சமூக மாற்ற புரட்சி சாத்தியம் இல்லை என்பதை லெனின் தொடர்ந்து வலியுறுத்தினார். ரஷ்ய சோவியத் புரட்சியின் மூலம் அதனை நிரூபித்தும் காட்டினார். பின்னர் நடந்த சீனப் புரட்சியிலிருந்து வியட்நாம் புரட்சி வரை அனைத்தும் கம்யூனிஸ்டு கட்சிகளால்தான் சாத்தியமாக்கப்பட்டன. 

இன்று சில இடதுசாரி சக்திகள் இந்தியாவிலும் வெளி தேசங்களிலும் சமூக மாற்றத்துக்கு கம்யூனிஸ்டு கட்சி தேவையில்லை எனவும் கம்யூனிஸ்டு கட்சிகள் காலாவதியாகி விட்டன எனவும் கூறுகின்றனர். ஆனால் கம்யூனிஸ்டு கட்சி இல்லாமல் எந்த ஒரு சமூக முன்னேற்றத்தையும் வலுவாக தொடர்ச்சியாக செயல்படுத்துவது சாத்தியம் இல்லை என்பதுதான் அனுபவங்களில் அறிய முடிவது. பிரிட்டனில் தொழிலாளர் கட்சியில் ஜெர்மி கோபின் அனுபவமும் அமெரிக்க ஜனநாயக கட்சியில் பெர்னி சாண்டர்ஸ் அனுபவமும் பழைய கட்சிகளை ஒரு எல்லைக்கு மேல் முற்போக்கு பாதையில் செலுத்த இயலாது என்பதை நிரூபிக்கின்றன.

கிரேக்கத்தில் மிகவும் நம்பிக்கையோடு உருவான இடதுசாரிகளின் சிர்சியா ஆட்சி இன்று அடையாளம் தெரியாமல் மறைந்து போனது வேதனையான உதாரணம் . இதே நிலைதான் ஸ்பெயினில் பொடோமஸ் எனும் இடதுசாரி அமைப்புக்கும் உள்ளது. இந்த பட்டியலில் சேர்க்க வேண்டிய இன்னொரு இயக்கம் “இயற்கை சூழலை பாதுகாக்க” உருவான “Greens Party” எனப்படும் பசுமை கட்சிகள் ஆகும். மேற்கண்ட இந்த இயக்கங்கள் இடதுசாரிகள்தான் என்றாலும் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணி படையான கம்யூனிஸ்டு கட்சிக்கு இருக்கும் அறிவியல் பூர்வமான சமூகக் கோட்பாடுகளும் வர்க்க அணுகுமுறைகளும் இல்லாததால் நாளடைவில் அவை பின்னடைவை சந்தித்துள்ளன.

இந்தியாவிலும் சிலர் தங்களை “புதிய இடதுசாரிகள்” என அழைத்து கொண்டு கம்யூனிஸ்டு கட்சிகள் காலாவாதியான பழைய இடதுசாரிகள் எனவும் அவர்களுக்கு எதிர்காலம் இல்லை எனவும் உளறுகின்றனர். அவர்களுக்கு மேற்சொன்ன உதாரணங்கள் உதவும்.

யார் கட்சி உறுப்பினர்?

1903ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் (அன்று ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி) போல்ஷ்விக் பிரிவினரான லெனின் ஆதரவாளர்களுக்கும் மென்ஷ்விக் பிரிவினருக்கும் கடும் கருத்து மோதல் உருவான முக்கிய அம்சம் “கட்சி உறுப்பினர் ஆவதற்கு யாருக்கு தகுதி உள்ளது?” என்ற கேள்விதான்.  ஒருவர் கட்சி திட்டத்தை ஏற்றுக்கொண்டாலே போதுமானது; அவர் கட்சி உறுப்பினர் ஆகிவிடலாம் என மென்ஷ்விக் பிரிவின் தலைவரான மார்டோவ் வாதிட்டார். ஒரு படி மேலே போய் “வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் எவர் ஒருவரும் கட்சி உறுப்பினராக ஆவதற்கு நாம் அனுமதிக்க வேண்டும்” எனவும் மார்டோவ் கூறினார்.

இந்த கருத்தை லெனின் மிகக்கடுமையாக நிராகரித்தார். ஒருவர் கட்சி உறுப்பினர் ஆவதற்கு கீழ்கண்ட தகுதிகள் இருக்க வேண்டும் என வாதிட்டார்:

  • கட்சி திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  • கட்சி அமைப்பு ஏதாவது ஒன்றில் இணைந்து பணியாற்ற வேண்டும்.
  • கட்சி கட்டுப்பாடுக்கு தன்னை உட்படுத்தி கொள்ள வேண்டும்.

அரசு இயந்திரத்தை எதிர்த்து போராடும் ஒரு அமைப்பின் உறுப்பினர்கள் ஊசலாட்டம் இல்லாதவர்களாகவும் வர்க்க உணர்வை பெற்றவர்களாகவும் தொழிலாளி வர்க்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தொழிலாளி வர்க்கத்தின் மிகவும் உன்னதமான வர்க்க உணர்வு படைத்த போராளிகள்தான் கட்சியில் உறுப்பினராக வேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் முன்னணி படைதான் கட்சியாக உள்ளது; வர்க்கம் முழுவதுமே கட்சி அல்ல என்றார்.

கம்யூனிஸ்ட் கட்சி தரமானதாக செயல்படுவதற்கு அதன் உறுப்பினர்களின் தரம் உயர்ந்திருக்க வேண்டியது மிக அவசியம். கட்சி உறுப்பினர்களின் தரத்தை உயர்த்துவதன் அவசியத்தை மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கட்சி உறுப்பினர்கள் தரம் குறித்து 2015 கொல்கத்தா பிளீனம் கீழ்கண்ட சில முக்கிய அம்சங்களை முன்வைக்கிறது:

  • கட்சி உறுப்பினர்கள் முதலில் துணைக்குழு உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டாலும் பெரும்பாலான துணைக்குழுக்கள் செயல்படுவது இல்லை; அவற்றை செயல் படுத்துவதற்கான முனைப்புகளும் குறைவாக உள்ளன.
  • துணைக்குழு உறுப்பினர்கள் பரீட்சார்த்த உறுப்பினர்களாக உயர்வு பெறும் பொழுது தேவையான தகுதிகள் பெற்றனரா என்பது பல சமயங்களில் ஆய்வு செய்யப்படுவது இல்லை.
  • உறுதியற்ற முறையில் கட்சி உறுப்பினர்கள் சேர்க்கப்படுவதாலும் அவர்களுக்கு முறையான அரசியல் பயிற்சியும் கட்சி அமைப்பு பற்றிய புரிதல் போதிக்கப்படாததாலும் அவர்களின் அரசியல் உணர்வு கீழ்மட்டத்தில் உள்ளது.
  • கட்சி உறுப்பினர்களின் கணிசமான பிரிவினர் கிளைக்கூட்டங்களில்/ அரசியல் வகுப்புகளில்/கட்சி இயக்கங்களில் பங்கேற்பது இல்லை.
  • இந்த குறைகள் உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். கட்சி உறுப்பினர்களை சேர்ப்பதில் ஒரு அடிப்படையான மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். வர்க்க/ வெகுமக்கள் போராட்டங்களில் பங்கேற்பு என்பதுதான் கட்சி உறுப்பினர் சேர்ப்புக்கான அடிப்படை தகுதிகளாக இருக்க வேண்டும்.
  • ஐந்து கடமைகளான கிளைக்கூடங்களில் பங்கேற்பு/கட்சி வகுப்புகள் மற்றும் போராட்டங்களில் திருப்திகரமான பங்கேற்பு/ ஏதாவது ஒரு வெகு மக்கள் அமைப்பில் செயல்படுவது/ லெவி தருதல்/கட்சி பத்திரிக்கைகளை படித்தல் ஆகியவற்றின் அடிப்படையில்தான் கட்சி உறுப்பினர் பதிவு புதுப்பிக்கப்பட வேண்டும்.

இந்திய சமூகத்தை சூறையாடுவதற்காக  கை கோர்த்துள்ள வகுப்புவாதிகள் – கார்பரேட்டுகள் கூட்டணியை ஒருசேர எதிர்கொள்ளும் தகுதி படைத்த ஓரே அரசியல் இயக்கம் கம்யூனிஸ்டு கட்சிதான். அந்த கடமையை நிறைவேற்ற கம்யூனிஸ்டு கட்சியின் தரமும் அதன் உறுப்பினர்களுடைய தரமும் மேலும் உயர்ந்த தளத்திற்கு செல்ல வேண்டும். இந்த வரலாற்று கடமையை நிறைவேற்றிட கட்சி உறுப்பினர்களின் தரம் குறித்த லெனின் போதனைகள் நமக்கு வழிகாட்டியாக செயல்படும்.

ஜனநாயக மத்தியத்துவம்

இணையற்ற கட்சி அமைப்பாளர் என்ற முறையில் லெனின் அவர்களின் மகத்தான பங்களிப்பு ‘ஜனநாயக மத்தியத்துவம்’ எனும் கோட்பாடு ஆகும். கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு கோட்பாடுகளின் உயிர்நாடி அதுவே. ஜனநாயக மத்தியத்துவத்தை புறந்தள்ளிவிட்டு தனது புரட்சிகர நோக்கங்களை கம்யூனிஸ்டு கட்சி சாத்தியமாக்கிய அனுபவம் இல்லை. புரட்சிக்கு பின்னரும் கட்சியின் செயல்பாட்டில் (அரசின் செயல்பாட்டில் அல்ல) ஜனநாயக மத்தியத்துவம் தொடர்வது அவசியம்.

முதலாளித்துவவாதிகளால் மிகவும் மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு உள்ளாகும் சில முக்கிய கோட்பாடுகளில் ஒன்று ஜனநாயக மத்தியத்துவம் ஆகும். சில சமயங்களில் கட்சி ஊழியர்கள் கூட இந்தக் கோட்பாடு குறித்து ஊசலாட்டம் அடைகின்றனர்.

கட்சி பொறுப்புகளுக்கு தேர்தல் மூலம் தேர்வு செய்வது

ஒவ்வொரு கமிட்டியும் தன் கீழ் உள்ள கமிட்டிகளுக்கும் மேல் உள்ள கமிட்டிகளுக்கும் தனது பணி குறித்து தெரிவிப்பது

கட்சி உறுப்பினர்களின் கருத்துகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பது

கூட்டு முடிவு தனி நபர் பொறுப்பு என்ற முறையில் செயல்படுவது

ஆகிய முக்கிய அம்சங்களுடன் இணைந்து சிறுபான்மை கருத்து உடையவர்கள் பெரும்பான்மை கருத்துக்கு கட்டுப்படுவது என்பது ஜனநாயக மத்தியத்துவத்தின் முக்கிய உட்கூறுகள் ஆகும். இதனை நமது கட்சி அமைப்பு சட்டம் தெளிவாக கூறுகிறது.

ஜனநாயகமும் மத்தியத்துவமும் முரண்பட்ட அம்சங்கள் போல தோன்றினாலும் உண்மையில் அவை ஒன்றுக்கொன்று இயைந்தவை. ஒரு குறிப்பிட்ட சூழலில் எந்த அம்சம் கூடுதல் அழுத்தம் பெறவேண்டும் என்பதை தீர்மானிப்பதில் சரியான அணுகுமுறை தேவைப்படுகிறது.

லெனின் வழிகாட்டுதலில் கம்யூனிஸ்டு அகிலம் 1921ம் ஆண்டு உருவாக்கிய “கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பின் கோட்பாடுகள்” எனும் மிகச்சிறந்த ஆவணத்தில் ஜனநாயக மத்தியத்துவம் குறித்து கீழ்கண்டவாறு குறிப்பிடப்படுகிறது:

“கம்யூனிஸ்டு கட்சியில் ஜனநாயக மத்தியத்துவம் என்பது பாட்டாளி வர்க்க ஜனநாயகமும் மத்தியத்துவமும் இரண்டறக் கலந்த பிரிக்க முடியாத (fusion) கோட்பாடாக இருக்க வேண்டும். ஒன்றிலிருந்து இன்னொன்றை பிரிக்க முடியாத உண்மையான செழுமைப்படுத்தப்பட்ட புத்தாக்க கலவையாக (synthesis) இருக்க வேண்டும்” என முன்வைக்கிறது.

மத்தியத்துவம் என்பது தலைமையின் கைகளில் அதிகாரங்களை குவித்து கொள்வது என பொருள் அல்ல; அல்லது கட்சி உறுப்பினர்கள் மீது தலைமை தனது மூர்க்கத்தனமான அதிகாரத்தை திணிப்பது என்பது அல்ல. மாறாக கம்யூனிஸ்டு நடவடிக்கைகளை செயலாக்கத்தை மத்தியத்துவப்படுத்துவது என்று பொருளாகும் எனவும் இந்த ஆவணம் குறிப்பிடுகிறது.

விவாதங்களில் ஜனநாயகம்! அமலாக்கத்தில் மத்தியத்துவம்!

கருத்துகள் விவாதிக்கப்படும் பொழுது அனைவரும் தமது கருத்துகளை தமது கிளைகள் அல்லது குழுக்களில் விரிவாக பேசும் உச்சபட்ச ஜனநாயகமும் முடிவுகள் எடுக்கப்பட்ட பின்னர் கட்சி ஒரே மனிதனாக நின்று செயல்படுத்தும் மத்தியத்துவமும் இணைந்து இருப்பது ஜனநாயக மத்தியத்துவத்தின் முக்கிய அம்சம் ஆகும். இந்த கோட்பாட்டினை அமலாக்கும் பொழுது பல பிரச்சனைகள் உருவாகின்றன. விவாதங்களுக்கு பின்னர் கருத்தொற்றுமை மூலம் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பது சாலச்சிறந்தது. ஆனால் கருத்து வேறுபாடுகள் இருந்தால் வாக்கெடுப்பு மூலம் முடிவு என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிறது. வாக்கெடுப்பில் பெரும்பான்மை கருத்துதான் முடிவாக உருவாகும். இந்த முடிவுதான் சிறுபான்மை கருத்து உடையவர்களையும் கட்டுப்படுத்தும். ஆனால் சிறுபான்மை கருத்துடையவர்கள் முடிவை அமலாக்குவதில் சுணக்கம் காட்டுவதோ அல்லது தமது சிறுபான்மை கருத்துகளை தமது கிளை அல்லது கமிட்டிக்கு வெளியே முன்வைப்பதோ கட்சியின் ஒற்றுமைக்கு பயன்படாது; அது ஜனநாயக மத்தியத்துவத்துக்கு விரோதமான செயல் ஆகும்.

சமீப காலங்களில் சிலர் தமது  மாறுபட்ட கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவிடுவதும் அவ்வாறு பதிவிடுவது தமது உரிமை எனவும் வாதிடுகின்றனர்.  அத்தகையோர் லெனின் அவர்களின் கட்சி வாழ்க்கையை உள்வாங்குவது பயன் தரும்.

“அமைப்பு(ஸ்தாபனம்) இல்லாமல் ஒற்றுமை சாத்தியம் இல்லை; சிறுபான்மை கருத்துடையோர் பெரும்பானமை கருத்துக்கு தலைவணங்காமல் அமைப்பு சாத்தியம் இல்லை” என லெனின் தெளிவாக குறிப்பிடுகிறார்.

“விமர்சிக்கும் சுதந்திரமும் செயல்பாட்டுக்கான ஒற்றுமையும்” எனும் சிறு பிரசுரத்தில் லெனின் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

“ஒரு உதாரணத்தை எடுத்து கொள்வோம். கட்சி மாநாடு நாடாளுமன்ற (டூமா) தேர்தல்களில் பங்கேற்பது என முடிவு செய்தது. தேர்தல்களில் பங்கேற்பது என்பது ஒரு மிக முக்கியமான முடிவார்ந்த செயல் நடவடிக்கை! தேர்தல் காலத்தில் தேர்தல்களை புறக்கணிக்க வேண்டும் எனவோ அல்லது  பங்கேற்புக்கு எதிராக விமர்சனம் செய்யும் உரிமையோ எந்த கட்சி உறுப்பினருக்கும் கிடையாது. ஏனெனில் இது கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை சீர்குலைக்கும். ஆனால் தேர்தல்கள் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக பங்கேற்பு குறித்து விமர்சனம் செய்யும் உரிமை ஒவ்வொரு கட்சி உறுப்பினருக்கும் முழுமையாக உண்டு”

விமர்சிக்கும் சுதந்திரமும் செயல்பாட்டுக்கான ஒற்றுமையும்

ஜனநாயகம் மற்றும்  மத்தியத்துவம் என்பது என்ன? செயல் நடவடிக்கைகளுக்கான முடிவுகள் எடுக்கப்படுவதற்கு முன்பு விமர்சனத்துக்கான முழு சுதந்திரமும் முடிவு எடுக்கப்பட்ட பின்னர் செயல் நடவடிக்கையில் ஒற்றுமையும் இருக்க வேண்டும். முடிவினை அமலாக்கும் பொழுது அங்கு விமர்சனத்துக்கு இடமில்லை. லெனின் முன்வைக்கும் விமர்சன உரிமைக்கும் செயல் நடவடிக்கைகளுக்கும் உள்ள இயக்கவியல் இணைப்பை உள்வாங்குவது மிக அவசியம். இரண்டில் எந்த அம்சத்தை தவறாக பயன்படுத்தினாலும் அது தீங்காகவே முடியும்.

லெனின் வாழ்வு கற்றுதரும் படிப்பினை

தனது நியாயமான கருத்து நிராகரிக்கப்பட்டதாக ஒருவர் நினைத்தால் என்ன செய்வது? அதற்கும் லெனின் வாழ்வு நமக்கு படிப்பினையை தருகிறது. 1917 பிப்ரவரியில் ரஷ்ய தொழிலாளி வர்க்கமும் ஏனைய உழைப்பாளிகளும் முதலாளித்துவ வர்க்கங்களை பிரதிநித்துவப்படுத்திய அரசியல் கட்சிகளும் இணைந்து ஜார் மன்னனுடைய ஆட்சியைத் தூக்கியெறிந்தனர். ஒரு ஜனநாயக குடியரசை நிறுவுவது என்பதே குறிக்கோள். ஆனால் ஆட்சியைக் கைப்பற்றிய முதலாளித்துவவாதிகள் வழக்கம் போல உழைப்பாளிகளுக்கு துரோகம் இழைக்க முனைந்தனர்.  எனவே பிப்ரவரி முதலாளித்துவ ஜனநாயக புரட்சியை சோசலிச  புரட்சியாக நீட்டிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக லெனின் கணித்தார். எனவே அதற்காக “ஏப்ரல் ஆய்வு குறிப்புகள்” எனும் ஆவணத்தை உருவாக்கினார். அதனை போல்ஷ்விக் கட்சி முன் வைத்தார். ஆனால் கட்சி அதனை  ஏற்கவில்லை. மிக முக்கியத்துவம் வாய்ந்த பீட்டர்ஸ்பர்க் கமிட்டி 13க்கு 2 என்ற வாக்கு விகிதத்தில் லெனின் கருத்தை நிராகரித்தது. மாஸ்கோ மற்றும் பல கமிட்டிகளும் லெனின் கருத்தை நிராகரித்தன. பிராவ்டா பத்திரிக்கை லெனின் கருத்தை கண்டித்து கட்டுரை வெளியிட்டது. பல முக்கிய தலைவர்களும் லெனின் கருத்தை ஏற்கவில்லை. ஆனால் லெனின் பொறுமையாக தனது கருத்தின் நியாயத்தை விளக்கினார்.  புறச்சூழல்கள் குறித்து எடுத்துரைத்தார். 

நீண்ட கருத்து பரிமாற்றத்துக்கு பின்னர் போல்ஷ்விக் கட்சி லெனின் கருத்தை (பெரும்பான்மை அடிப்படையில்) அங்கீகரித்தது. அதற்கு பின்னர் இந்த கருத்தை கட்சியின் அனைத்து மட்டங்களிலும் விவாதிப்பதை லெனின் உத்தரவாதப்படுத்தினார். மென்ஷ்விக்குகளும் லெனின் கருத்தை ஏற்க வேண்டிய சூழல் உருவானது. எல்லாவற்றிற்கும் மேலாக புரட்சியின் தேவையை பெரும்பான்மையான உழைப்பாளிகளும் அங்கீகரிப்பதையும் லெனின் உத்தரவாதப்படுத்தினார். அதற்கு பின்னர்தான் புரட்சி எழுச்சிக்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. தனது கருத்தின் நியாயத்தை பெரும்பான்மையோர் ஏற்கும்வரை பொறுமையாக லெனின் செயல்பட்டார். தான் சரியென நினைக்கும் கருத்தை பெரும்பான்மை நிராகரித்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை லெனின் வாழ்வு நமக்கு கற்று கொடுக்கிறது.

லெனின் கருத்தை எல்லா சமயங்களிலும் போல்ஷ்விக் கட்சி ஏற்றுக்கொண்டதில்லை. பல சமயங்களில் அவரது கருத்து நிராகரிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட உதாரணத்தையே எடுத்து கொண்டால் போல்ஷ்விக் கட்சி புரட்சிக்கு அறைகூவல் விட வேண்டும் என முடிவு செய்தபொழுது சியனோவ்/கமனொவ் எனும் இரு தலைவர்கள் அந்த முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல; அவர்கள் மென்ஷ்விக் பத்திரிக்கைகளில் பகிரங்கமாக புரட்சி அறைகூவல் தவறு என பேட்டி அளித்தனர். இது லெனினுக்கு கடும் கோபத்தை உருவாக்கியது. ஏனெனில் இது புரட்சியை காட்டி கொடுக்கும் செயலாகும். எனவே அவர்கள் இருவரையும் கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என லெனின் மத்தியகுழுவுக்கு கோரிக்கை வைத்தார். ஆனால் கட்சி அந்த இரு தலைவர்களின் கடந்தகால சேவையை கருத்தில் கொண்டு அவர்கள் தவறை உணர்ந்தால் கட்சியில் நீடிக்க அனுமதிக்க வேண்டும் என தீர்மானித்தது. அதன்படி அவர்கள் தவறை உணர்ந்ததாக வெளிப்படுத்தினர். பின்னர் கட்சியில் தொடர்ந்து செயல்பட்டனர்.

சில சமயங்களில் லெனின் கருத்து சிறுபான்மையாக இருந்தது. ஆனால் அவர் பெரும்பான்மை முடிவுக்கு கட்டுப்பட்டார். சில சமயங்களில் விட்டுக்கொடுத்தார். சில அடிப்படை முக்கிய பிரச்சனைகளில் இடைவிடாது கட்சிக்குள் போராடினார். தனது கருத்தை கட்சி ஏற்றுக்கொள்ள வைப்பதில் முனைப்பு காட்டினார். அதே சமயத்தில் சிறுபான்மை கருத்து பெரும்பான்மை கருத்துக்கு கட்டுப்படுவது எனும் ஜனநாயக மத்தியத்துவத்தின் முக்கிய அம்சத்தை அவர் தொடர்ந்து வலியுறுத்தினார்; தனது செயல்பாடுகளில் கடைபிடித்தார். அதே சமயத்தில் ஜனநாயகம் இல்லாமல் மத்தியத்துவம் சாத்தியம் இல்லை என்பதிலும் லெனின் உறுதியாக இருந்தார். முடிவுகள் எடுக்கப்படுவதற்கு முன்பு உச்சபட்ச ஜனநாயக விவாத உரிமை அனைத்து உறுப்பினர்கள் மற்றும் கமிட்டுகளுக்கு இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

ஜனநாயக மத்தியத்துவம் மாறாநிலை கோட்பாடு அல்ல!

ஜனநாயக மத்தியத்துவம் அனைத்து சூழல்களிலும் அனைத்து கட்சிகளுக்கும் ஒரே மாதிரியாக பொருந்தும் கோட்பாடு அல்ல. ஓரே கட்சியின் நீண்ட பயணத்தில் கூட வெவ்வேறு காலகட்டங்களில் வெவேறு அணுகுமுறைகளை உருவாக்க வேண்டிய அவசியம் உருவாகலாம். 1903 முதல் 1912ம் ஆண்டு வரை போஷ்விக்குகளும் மென்ஷ்விக்குகளும் இணைந்து செயல்பட்டனர். 1912ல் போல்ஷ்விக் கட்சி சுயேச்சையான அமைப்பாக செயல்பட்டது. இரு சூழல்களிலும் ஜனநாயக மத்தியத்துவம் குறித்து  ஒரே மாதிரியான அணுகுமுறை லெனின் கொண்டிருக்கவில்லை. போல்ஷ்விக் கட்சி உதயமான பின்னர் அமைப்பு கோட்பாடுகள் செழுமைப்படுத்தப்பட்டன. ஜனநாயக மத்தியத்துவ கோட்பாடும் அதற்கேற்றவாறு செழுமைப்பட்டது.

ஒரு கட்சி  அடக்குமுறைக்கு உள்ளாகும் பொழுது அங்கு மத்தியத்துவம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. ஏனைய சமயங்களில் ஜனநாயக அம்சம் கூடுதல் அழுத்தம் பெற வேண்டும். எனினும் முடிவுகள் எடுப்பதற்கு முன்பு உச்சபட்ச ஜனநாயகமும் அந்த முடிவுகளை அமலாக்குவதில் ஒன்றுபட்ட செயல்பாட்டின் அடிப்படையிலான மத்தியத்துவமும் அனைத்து சூழல்களுக்கும் பொருந்தும். ஜனநாயக மத்தியத்துவம் தவறானது என அதனை கைவிட்ட பல கட்சிகள் காணாமல் போய்விட்டன என்பதும் அனுபவம் ஆகும்.

ஜனநாயக மத்தியத்துவம் என்பது வெறும் பெரும்பான்மைக்கு சிறுபான்மை கட்டுப்படுவது மட்டுமல்ல; ஜனநாயக மத்தியத்துவத்தின் செழுமை என்பது கட்சிக்குள் வெளிப்படையான விரிவான விவாத உரிமை/கட்சி உறுப்பினர்களின் சித்தாந்த அரசியல் உணர்வை அதிகரித்தல்/ கட்சி உறுப்பினர்களையும் அவர்கள் சார்ந்த கிளைகளையும் செயல்பட வைத்தல்/ விமர்சனம் சுயவிமர்சனத்தை ஊக்குவித்தல்/குழுவாத போக்குகளை தவிர்த்தல்/ கருத்து வேறுபாடுகளை பொது வெளியில் பேசாமல் இருத்தல் ஆகிய அம்சங்களுடனும் இணைந்துள்ளது.  இதனை நமது கட்சியின் அமைப்புசட்டம் தெளிவாக முன்வைக்கிறது. அதுவே லெனின் நமக்கு புரட்சிகர கட்சி அமைப்பு பற்றி கற்று தரும் பாடம் ஆகும். அத்தகைய ஒரு வலுவான கட்சியை உருவாக்க உறுதியேற்போம்!   

– கட்டுரைக்கு உதவிய நூல்கள் :

1) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் – லெனின்

2) விமர்சன உரிமையும் செயல்பாட்டுக்கான ஒற்றுமையும் – லெனின்

3) கட்சி அமைப்பின் கோட்பாடுகள்-கம்யூனிஸ்டு அகிலம்

4) லெனினும் புரட்சிகர கட்சியும் – பால் பிளான்க்

5) 2015 CPI(M) பிளீனம் ஆவணம்

6) CPI(M) கட்சி அமைப்பு சட்டம்.