சாதிய அமைப்பும் கம்யூனிஸ்ட் செயல்திட்டமும்

பிருந்தா காரத்

“அடிமைத்தனம், சாதிய அமைப்பு, (சமூகம், கலாச்சாரம் போன்ற) அனைத்து வடிவங்களிலுமான சாதிய ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை முற்றிலுமாக அழித்தொழிக்கவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது. உழைக்கும் தீண்டத்தகாதவர்கள் மற்றும் நாட்டிலுள்ள அனைத்து உழைப்பாளிகளின் முழுமையான, முற்றிலுமான சமத்துவத்திற்காகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது”.
1930ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட செயலுக்கான மேடை என்ற கட்சி ஆவணத்தில் இடம்பெற்றுள்ள வார்த்தைகள் இவை. இதன் இன்றைய முக்கியத்துவம் என்ன?

1930ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சி முதன்முதலாக வெளியிட்ட இந்தக் கொள்கை அறிக்கை மூன்று முக்கியமான அம்சங்களைக் கொண்டதாகும். முதல் அம்சம், சாதிய அமைப்பையும், அதிலிருந்து தோன்றும் ஏற்றத்தாழ்வுகள் அனைத்தையும் முற்றிலுமாக அழித்தொழிப்பது என்ற தனது உறுதிப்பாட்டை அது வெளிப்படுத்துகிறது.

1916ஆம் ஆண்டில் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மாணவராக இருந்த இளம் அம்பேத்கர் “சாதியை புறந்தள்ளுவதற்கான நீடித்த முயற்சிகள்” குறித்து எழுதியிருந்தார். “இயற்கைக்கு முரணான ஓர் அமைப்பு” என்றும் அவர் அதை விவரித்து இருந்தார்.

19ஆம் நூற்றாண்டில் சாதிய அமைப்பை எதிர்த்துப் போராடிய ஜோதிபா புலே மற்றும் இதர மகத்தான சமூக சீர்திருத்தவாதிகளுக்குப் பிறகு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் வந்தாரெனில், அரசியல் கட்சிகளிடையே சாதிய அமைப்பை முற்றிலுமாக அகற்ற அறைகூவல் விடுத்த முதல் அரசியல் கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது. இந்தப் பின்னணியில்தான் சாதிய அமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை அப்படியே இருத்திக் கொண்டு அதை ‘சீர்திருத்த’ வேண்டும் என்ற காந்திய அணுகுமுறையை 1930ஆம் ஆண்டின் இந்த ஆவணம் விமர்சித்திருந்தது.

இந்த ஆவணத்தின் இரண்டாவது அம்சம் என்பது சாதிய அமைப்பிற்கு எதிரான போராட்டத்தை பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்கும் நிலப்பிரபுத்துவத்திற்கும் எதிரான தேச விடுதலைப் போராட்டத்தோடு இணைத்ததே ஆகும். “நம் நாட்டில் உள்ள பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியின் விளைவாக அனைத்து வகையான உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ள பல லட்சக்கணக்கான அடிமைகள், சமூக ரீதியாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள ( தீண்டத்தகாதவர்கள் என்றழைக்கப்படும்) கோடிக்கணக்கான உழைப்பாளிகள் இப்போதும் இந்நாட்டில் இருந்து வருகின்றனர். பிரிட்டிஷ் ஆட்சி, நிலப்பிரபுத்துவ அமைப்பு, பிற்போக்குத் தனமான சாதி அமைப்பு, மத ரீதியான ஏமாற்றுவேலைகள், கடந்த காலத்திய அடிமைத்தன, பண்ணையடிமைத் தனங்கள் ஆகிய இவை அனைத்துமே இந்திய மக்களின் குரல்வளையை நெறித்து, அவர்களின் விடுதலைக்குத் தடையாக நிற்கின்றன. 20ஆம் நூற்றாண்டிலும் கூட சக மனிதனை நேருக்கு நேராகச் சந்திக்க, பொதுக் கிணறுகளில் நீரெடுத்துக் குடிக்க, பொதுப் பள்ளிகளில் சமமாக அமர்ந்து படிக்க உரிமைகளற்று ஒதுக்கப்படும் நிலை நீடித்து நிற்கவும் அவை வழிவகுத்துள்ளன” என்றும் அது குறிப்பிட்டது.

இத்தகைய சாதிய அமைப்பை எதிர்த்துப் போராடிக் கொண்டிருப்பவர்களில் ஒரு சிலரிடையே ஒருவிதமான மாயை அல்லது நம்பிக்கையும் நிலவி வந்தது. அப்போது இருந்த தேசியவாதத் தலைமையைப் போலில்லாமல் சாதிய அமைப்பை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் பிரிட்டிஷாருக்கு இல்லை என்பதே அந்த நம்பிக்கை ஆகும். உண்மையில், மக்களை பிளவுபடுத்தி தங்களது ஆட்சியை நீட்டித்துக் கொள்வது என்ற உத்தியின் மூலம் இந்து-முஸ்லீம் என்ற அடையாளங்களை வளர்த்தெடுக்க பிரிட்டிஷார் எவ்வாறு உதவி செய்தார்களோ, அதே போன்று சாதிய அமைப்பில் இருந்த பிளவுகளையும் அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். இதற்கு வர்க்க ரீதியான காரணமும் இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்குக் கிடைத்து வந்த மிகப்பெரும் ஆதரவு என்பது நிலப்பிரபுக்கள், ராஜாக்கள், மகாராஜாக்கள் ஆகியோரிடமிருந்தே வந்தது. ‘தீண்டத்தகாதவர்’களின் உழைப்பை மலிவாகப் பயன்படுத்திக் கொண்டு, ‘பண்ணை அடிமை மற்றும் அடிமை நிலைகளை’ நிலைநிறுத்திக் கொள்ள சாதிய அமைப்பே அவர்களுக்கு வழியேற்படுத்தித் தந்திருந்தது. இந்நிலையில் அத்தகைய சாதிய அமைப்பை நிலைநிறுத்தி, வலுப்படுத்த வேண்டிய அவசியமும் இந்தப் பிரிவினருக்கு இருந்தது.

இவ்வகையில் காலனிய ஆட்சிக்கு எதிரான போராட்டம் என்பது நிலப்பிரபுத்துவத்திற்கும் ஆழ வேரூன்றியிருந்த சாதிய அமைப்பிற்கும் எதிரான போராட்டத்தோடு இணைக்கப்பட்டதாக இருந்தது. எனவேதான் “காந்திய வகைப்பட்ட, சீர்திருத்தம் பெற்றிருந்த சாதிய அமைப்பை இரக்கமேதுமின்றி அழித்தொழிப்பதன் மூலம் மட்டுமே, விவசாயப் புரட்சியின் மூலம் மட்டுமே, பிரிட்டிஷ் ஆட்சியினை வலுவாகத் தூக்கியெறிவதன் மூலம் மட்டுமே, உழைக்கும் தீண்டத்தகாதவர்களின், அடிமைகளின் முழுமையான சமூக, பொருளாதார, கலாச்சார, சட்டபூர்வமான விடுதலை என்பதற்கு வழியேற்படும்” என 1930ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட செயல்திட்டம் குறிப்பிட்டிருந்தது.

மூன்றாவது அம்சம் என்னவெனில், அப்போதுதான் தலையெடுத்துக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் தலைவர்களும் பிரிட்டிஷ் ஆட்சியின் மிகப்பெரும் அடக்குமுறைக்கு ஆளான போதிலும், ஒன்றன்பின் ஒன்றாக ‘சதிவழக்குகள்’ அவர்கள் மீது போடப்பட்ட போதிலும், 1930ஆம் ஆண்டின் செயல்திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு தீண்டாமை, ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பது, அந்நாட்களில் தலித்களுக்கு விரோதமான நடைமுறைகள் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களில் தங்களை இணைத்துக் கொண்டனர். சில இடங்களில் இத்தகைய போராட்டங்களை அவர்களே தலைமையேற்றும் நடத்தினர். எனவே சாதிய அமைப்பை எதிர்த்துப் போராடுவதன் அத்தியாவசியமான அம்சத்தைப் பொறுத்தவரையில், அது தத்துவார்த்தரீதியான ஒரு நிலைபாடு மட்டுமல்ல; இத்தகைய போராட்டங்களில் கம்யூனிஸ்டுகளின் நேரடியான பங்களிப்பும் இதில் அடங்கியுள்ளது.

விடுதலை போராட்டத்தின்போதும், புதிதாக விடுதலை பெற்ற இந்தியாவிலும் சாதியைப் பொறுத்தவரையில் ஆர் எஸ் எஸ் மற்றும் அதே போன்ற கருத்துக்களைக் கொண்டிருந்த சக்திகளின் பங்களிப்பு எத்தகையதாக இருந்தது?

மக்களைப் பிளவுபடுத்தி காலனி ஆட்சியை நீட்டிப்பது என்ற பிரிட்டிஷாரின் உத்தியை இந்திய மயமாக்குவது என்பதுதான் விடுதலைப் போராட்டத்தில் ஆர் எஸ் எஸ் அமைப்பின் ‘பங்களிப்பாக’ இருந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்து-முஸ்லீம் இனத்தவரின் ஒற்றுமையின் அடிப்படையில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக 1857இல் நடைபெற்ற கிளர்ச்சிக்குப் பிறகு, இத்தகைய ஒற்றுமை தமது ஆட்சிக்கு மிகப்பெரும் அழிவை ஏற்படுத்துவதாக இருக்கும் என்பதை பிரிட்டிஷார் உணர்ந்து கொண்டனர். 1857ஆம் ஆண்டு கிளர்ச்சிக்குப் பிறகு, விடுதலைக்கான தேசிய அளவிலான ஒற்றுமை உணர்வை பிளவுபடுத்தும், பலவீனப்படுத்தும் அடையாளங்களை வலியுறுத்துகின்ற, குறிப்பாக மதத்தைப் பயன்படுத்தி, கொள்கைகளை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வடிவமைத்தனர். இவ்வாறுதான் தேசிய இயக்கத்தை பிளவுபடுத்த உதவும் வகையில் 1906ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட முஸ்லீம் லீக் அமைப்புக்கு அவர்கள் சாதகமாக நடந்து கொண்டனர். இந்து அடையாளம் என்பதை தீவிரமாக மேற்கொள்ள அதே அளவிற்குத் தேவைப்படும் நிலையில்தான் 1925இல் ஆர் எஸ் எஸ் உருவானது. இந்தியாவின் விடுதலைக்கான போராட்டத்தில் கலந்து கொள்வதிலிருந்து ஆர் எஸ் எஸ் தனது உறுப்பினர்களை மிகத் தீவிரமான வகையில் தடுத்து வந்தது. இன்றைய பிரதமர் உள்ளிட்டு பலராலும் குருஜி என்று போற்றப்படுகின்ற கோல்வால்கர் சொன்னார்: “நாம் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழியில் நமது மதம், நமது கலாச்சாரம் ஆகியவற்றை பாதுகாப்பதன் மூலமே நாட்டின் விடுதலையைப் பற்றி நாம் பேசுகின்றோமே தவிர, இங்கிருந்து பிரிட்டிஷார் வெளியேறுவதைப் பற்றி அது குறிப்பிடவில்லை என்பதை நாம் நன்கு நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.” (ஸ்ரீகுருஜி சமக்ர தர்ஷன், தொகுதி -4, பக். 40)

‘இந்தியன்’ என்பதற்கு மாறாக, அனைத்து இந்தியாவையும் உள்ளடக்கிய ‘இந்து’ என்ற அடையாளத்தை முன்னிறுத்துவதன் ஒரு பகுதியாக ஆர் எஸ் எஸ் அமைப்பும், அதேபோன்ற கருத்தைக் கொண்ட சமூக சக்திகளும், மனுஸ்மிருதி மற்றும் இதர இந்துமத நூல்கள் முன்வைத்த தத்துவத்தை மேலும் முன்வைத்து வளர்த்தெடுத்தன. மறுபுறத்தில், ஆர் எஸ் எஸ் உருவான நாளிலிருந்தும், அதற்கு முன்பாக இந்து மகாசபா செயல்பட்டு வந்த நாட்களிலும், இந்துத்துவா மற்றும் இந்து ராஷ்ட்ரா ஆகிய அரசியல் திட்டங்களுக்கு இந்து ஒற்றுமை என்பதை முன்னிறுத்துவது அவசியமானதாக இருந்தது. சாதிய அமைப்பை அப்படியே நிலைநிறுத்திக் கொண்டு இந்த இந்து ஒற்றுமையை வளர்த்தெடுக்க அனைத்து வகையான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்துக்கள் அனைவருமே முகலாயர்களின் அடக்குமுறைக்கு ஆளானவர்கள்தான் என்ற கொள்கையை முன்னெடுத்ததன் மூலம் இத்தகைய ஒற்றுமையை அவர்களால் உருவாக்க முடிந்தது.

இந்துத்துவா என்ற கருத்தாக்கத்தின் தந்தையான வி.டி. சவர்க்கார் சாதிக்கு எதிரானவர் என்றும், சாதி மறுப்பு திருமணங்களை அவர் முன்னின்று நடத்தியிருக்கிறார் என்றும் கூறிக் கொள்கின்றனர். சாதியை முற்றிலுமாக அழித்தொழிப்பதற்கான ஒரு பகுதியாகவா அது அமைகிறது? இல்லை. அதிலிருந்து வெகுதூரத்தில் உள்ளது என்பதே உண்மை. சவர்க்காரும் அவருக்குப் பின் வந்த மற்றவர்களும் சாதிய அமைப்பினை மிக வலுவாக ஆதரித்து நின்றவர்களே. அவர் எழுதியிருந்தார்: “சில குறிப்பிட்ட சூழ்நிலைகளிலும் பின்னணியிலும் இந்து சமூகம் வலுவாக ஒன்றிணைவதற்கும், வியக்கத்தக்க வகையில் நிலைத்து நிற்பதற்கும் பிறப்பின் அடிப்படையிலான சாதிப் பிரிவினைகள் என்ற நடைமுறையே காரணமாக இருந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதன் நிறை-குறைகளை மதிப்பிடும்போது சாதி என்ற நிறுவனத்தின் பின்னாளைய தீய விளைவுகளை மட்டுமே சுட்டிக்காட்டி குறை கூறுவது முற்றிலும் நன்றிகெட்டதொரு செயலே ஆகும். இந்து தேசத்தின் நலன்களை மட்டுமே மனதில் கொண்டு, அந்நாளைய இந்துக்கள் அதே நேரத்தில் ரத்த உறவுகள், இன வாழ்க்கை, பாரம்பரியம் ஆகியவற்றின் தூய்மையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பிறப்பின் அடிப்படையிலான சாதிய வேறுபாடுகளை அனுமதித்தனர் அல்லது உருவாக்கினர் என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். (1963, இந்திய வரலாற்றின் ஆறு மகத்தான யுகங்கள், தொகுதி 4, பக். 710)

இந்துத்துவா: யார் இந்து? என்ற தனது நூலில் சவர்க்கார் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: “சாதிய அமைப்பு செய்ததெல்லாம் நம்பிக்கையின் அடிப்படையில் தனது புனிதமான ரத்தத்தை அது ஒழுங்குபடுத்திக் கொண்டதே ஆகும். இதன் மூலம் வறட்சியான, வறுமைமிக்க அனைத்தையும் உரமூட்டி, வளப்படுத்துவதிலும் அது பங்காற்றியது.” எனவே இந்துத்துவ சக்திகளின் அதிகாரபூர்வ இலச்சினையாகத் திகழும் சவர்க்காரைப் பொறுத்தவரையில் இந்து சமூகத்தை பாதுகாப்பதில் மிகவும் முக்கியமான பங்கினை சாதி வகித்தது. ஒரு சில ‘குறைகள்’ இருந்தபோதிலும் அது பாராட்டப்பட வேண்டிய ஒன்று என்றே அவர் கருதினார். தூய்மையாக வைத்திருக்கப்பட வேண்டிய ‘புனிதமான ரத்தம்’ என்பது உயர் சாதிக்காரர்களுடையதே ஆகும். ‘வறட்சியான மற்றும் வறுமைமிக்கவர்கள்’ என்பது சூத்திரர்களும், சாதியப் படிநிலைக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளவர்களுமே ஆகும். இப்படித்தான் சவர்க்கார் சாதிக்கு எதிரானவர் என்று அவர்கள் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

சாதிய அமைப்புக்கு வக்காலத்து வாங்கும் இந்த வாதத்தை மேலும் முன்னெடுத்துச் சென்ற கோல்வால்கர் தனது ‘சிந்தனைக் கொத்து’ என்ற நூலில் இவ்வாறு எழுதினார்: “ஒரு புறத்தில் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் கிரேக்கர்கள், சாகர்கள், ஹூணர்கள், முஸ்லீம்கள், ஏன் ஐரோப்பியர்களின் அட்டூழியங்களை எல்லாம் சகித்துக் கொண்டு ‘சாதியில் மூழ்கிப் போனதாக’ சொல்லப்படும் இந்து சமூகம் உயிரோட்டத்துடன், வெல்லப்படமுடியாத ஒன்றாக இன்றும் நீடிக்கிறது. மறுபுறத்திலோ சாதியே இல்லாத சமூகங்கள் பொடிப்பொடியாக நொறுங்கிப் போய் மீண்டெழ முடியாத நிலையை எட்டியுள்ளன. வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமானால், இந்த விபரீத சிந்தனையின்படி சாதிய அமைப்பானது இந்துக்களின் வலிமையை உறுதிப்படுத்தியுள்ளது.”

உள்ளார்ந்த மனிதத்தன்மை என்ற தனது கொள்கையில் தீன் தயாள் உபாத்யாயா வர்ண அமைப்பை நியாயப்படுத்தியிருந்தார். அதை தத்துவார்த்த ரீதியானதோர் உதாரணமாக பாஜக இன்றும் கூட உயர்த்திப் பிடித்து வருகிறது. 1965ஆம் ஆண்டில் அவர் எழுதியிருந்தார்: “நான்கு வகையான சாதிகள் என்ற நமது கருத்தாக்கத்தில் விராட் புருஷனின் வெவ்வேறு வகையான உறுப்புகளோடு அவை ஒப்பீடு செய்யப்பட்டன. இந்த உறுப்புகள் ஒன்றுக்கொன்று உதவிகரமானவை என்பது மட்டுமின்றி, இன்னும் சொல்லப்போனால் அங்கு தனித்தன்மையும், ஒற்றுமையும் நிலவுகிறது. ஒருமித்த நலன்களுக்கான முழுமையான அடையாளமும், ஒன்றையொன்று சார்ந்த அடையாளமும் அங்கு உள்ளன. இந்தக் கருத்தை உயிர்ப்போடு வைத்திராவிட்டால், ஒன்றுக்கொன்று உதவிகரமாக இருக்கும் இந்த சாதிகளிடையே மோதலை உருவாக்கிவிடக் கூடும். அவ்வாறெனில், அது தன் இயல்பிற்கு மாறானதாக மாறிவிடும்.”

எனவே வரலாறு நெடுகிலும் தலித்துகள் எதிர்கொண்டு வந்துள்ள அடக்குமுறை, பாரபட்சம் ஆகியவற்றின் வரலாறு என்பது சாதிய அமைப்பின் விளைவாக ஏற்பட்டதல்ல; மாறாக, அதன் ‘இயல்பிற்கு மாறானதே’ ஆகும். இதுவே பாஜகவின் புரிதலாக இன்றும் தொடர்ந்து நீடித்து வருகிறது. எனவேதான் மநுஸ்மிருதி இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடித்தளமாக இருக்க வேண்டும் என்பது அவர்களின் விருப்பமாக இருந்து வருகிறது. 1949ஆம் ஆண்டு நவம்பர் 30 அன்று, அதாவது, அரசியல் நிர்ணய சபை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை இறுதிப்படுத்திய நான்கு நாட்களுக்குப் பிறகு, ஆர் எஸ் எஸ் இவ்வாறு அறிவித்தது: “இன்றுவரையிலும் மநுஸ்மிருதியில் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ள அவரது (மநுவின்) சட்டங்கள் உலகத்தவரால் போற்றப்படுவதோடு, அதனை பின்பற்றவும், அவற்றோடு ஒத்த வகையில் இருக்கவேண்டும் என்ற உணர்வும் எழும்பியுள்ளது. ஆனால் நமது அரசியல் அமைப்புச் சட்ட நிபுணர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு அது ஒரு பொருட்டே அல்ல.”

இவ்வகையில் சாதிய அமைப்பையே முற்றிலுமாக அழித்தொழிக்க வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கரும் கம்யூனிஸ்டுகளும் உறுதியாக நம்பி, அதற்காகப் போராடி வந்தனர் எனில், காந்தியவாதிகள் சீர்திருத்த நடவடிக்கைகளில் நம்பிக்கை கொண்டிருந்தனர். அதே நேரத்தில் ஆர் எஸ் எஸ் –ஐ சேர்ந்த இந்துத்துவவாதிகளோ இந்து சமூகத்தை ஒன்றாக நிலைநிறுத்த சாதிய அமைப்பு அவசியமானது என்று கருதி வந்துள்ளனர்.

சாதியைப் பொறுத்தவரையில் தற்போதைய ஆர் எஸ் எஸ்ஸின் அணுகுமுறையில் மாற்றம் ஏதும் உள்ளதா?

சாதி குறித்த ஆர் எஸ் எஸ்ஸின் அணுகுமுறையில் அடிப்படையான மாற்றம் ஏதும் இல்லை. சாதிவேறுபாடின்றி அனைவரும் சேர்ந்து உண்ணுதல் போன்ற பெயரளவிற்கான திட்டங்களின் மூலம் மேலோட்டமான மாற்றங்களைக் கொண்டுவர அது முயற்சிக்கிறது. அல்லது பாஜக தலைவர்கள் தலித்துகளின் இல்லங்களுக்குச் சென்று உணவருந்துவது போன்ற – இது தலித்துகளை அவமானப்படுத்துவது என்பதைத் தவிர வேறில்லை – நடவடிக்கைகளின் மூலம் தங்களது சமமான குடியுரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்று அவர்கள் கோருவதைப் போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது.

எனினும் சாதிமறுப்புத் திருமணம் செய்யும் ஓர் ஆண் தலித் ஆக இருப்பாரானால் அதன் மீதான காப் பஞ்சாயத்துகளின் பிற்போக்குத்தனமான அணுகுமுறைக்கு அது முழுமையான ஆதரவை அளிக்கிறது. தனது சாதிய குணத்தை மறைத்துக் கொள்வதற்காக அண்ணல் அம்பேத்கரை கவர்ந்து செல்லவும் அது முயற்சிக்கிறது. எனினும் அதன் இத்தகைய முயற்சிகள் முன்னுக்குப் பின் முரணானவையே ஆகும். ஏனெனில் சாதி குறித்த புதுவகையான விளக்கங்களின் மூலம் மநுஸ்மிருதிக்கு நற்பெயரை ஏற்படுத்தவே அது முயற்சி செய்கிறது.

மேலே எடுத்துக் காட்டிய கோல்வால்கரின் எழுத்துக்கள் உள்ளிட்டு, சாதி குறித்து அதன் நிறுவன உறுப்பினர்கள் வெளிப்படுத்தியிருந்த கருத்துக்களை ஆர் எஸ் எஸ் எப்போதுமே மறுத்ததில்லை; அல்லது அவற்றிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டதும் இல்லை. இந்து சமூகத்தில் உள்ள சாதிய அமைப்பு என்பது மிகவும் எளிமையான ஓர் உழைப்புப் பிரிவினையே ஆகும்; முஸ்லீம்களே அதற்குள் படிநிலைகளையும் பாரபட்சமான போக்குகளையும் அறிமுகப்படுத்தினர் என்ற கருத்தோட்டத்தையே ஆர் எஸ் எஸ் முன்வைக்கிறது.

பல்வேறு சாதிகள் குறித்து ஆர் எஸ் எஸ் ஆதரவாளர் ஒருவர் எழுதிய நூல் ஒன்றுக்கு அணிந்துரை எழுதுகையில் மூத்த ஆர் எஸ் எஸ் தலைவரான பைய்யா ஜோஷி இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: “சூத்திரர்கள் எப்போதுமே தீண்டத்தகாதவர்களாக இருந்ததில்லை. சத்திரியர்களின் இந்து என்ற பெருமையை சீர்குலைக்கவே அரேபியாவிலிருந்து படையெடுத்து வந்த முஸ்லீம் ஆட்சியாளர்கள் பசுவை கொல்வது; அவற்றின் தோலை உரிப்பது; அவற்றின் உடல்களை தொலைதூரங்களில் வீசுவது போன்ற அவமானகரமான செயல்களை மேற்கொள்ள கட்டாயப்படுத்தினர். பெருமைமிக்க இந்து கைதிகளுக்கு தண்டனையாக இத்தகைய வேலைகளை அளித்ததன் மூலம் அந்நிய படையெடுப்பாளர்கள் முற்றிலுமாக தோல் தொழிலில் மட்டுமே ஈடுபடும் ஒரு சாதியையே உருவாக்கினர்.”

மற்றொரு மூத்த ஆர் எஸ் எஸ் தலைவரான சுரேஷ் சோனி இவ்வாறு எழுதினார்: “துருக்கியர்கள், முஸ்லீம்கள், முகலாயர்கள் காலத்தில்தான் தலித்துகளின் வம்சாவளி தொடங்குகிறது. மத்தியகால அல்லது இஸ்லாமிய ஆட்சிக்காலத்தின்போது பிராமணர்களுக்கும் சத்திரியர்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடுமைகளின் விளைவாகவே இன்றுள்ள வால்மீகி, சுதர்சன், மாஜாபி சீக்கியர்கள் மற்றும் இவர்களுக்குள் உள்ள 624 துணை சாதிகள் தோன்றின.”

இவ்வகையில், ஆர் எஸ் எஸ் தத்துவவாதிகளின் இந்தக் கருத்துப்படி, இன்றுள்ள தலித்துகள் உண்மையில் சத்திரியர்கள்தான். அவர்கள் முகலாயர் ஆட்சிக் காலத்தில் ‘தூய்மையற்ற வேலை’களை செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டவர்களே. எனவே அவர்களை தீண்டத்தகாதவர்களாக ஆக்கியவர்கள் முகலாய ஆட்சியாளர்கள்தான்! மநுஸ்மிருதி மற்றும் இதர மத நூல்களில் கூறப்பட்டிருக்கும் விதிமுறைகளை எல்லாம் மறந்து விடுங்கள். ஏகலைவன், சம்புகன், சபரி ஆகியவர்களைப் பற்றிய இதிகாச கதைகளைத் தான் ஆர் எஸ் எஸ் வரலாறு எனக் கருதுகிறது. இவை அனைத்திற்குமாக பழி சுமத்தப்பட வேண்டியவர்கள் முகலாயர்கள்தான்.

மறுபுறத்தில், முன்னாள் ஆர் எஸ் எஸ் பிரச்சாரகரும் இன்றைய பிரதமருமான நரேந்திர மோடி ‘கர்மயோக்’ என்ற வெளியீட்டில் மனிதக் கழிவுகளை அகற்றுவோரைப் பற்றி பின்வருமாறு கூறியிருந்தார்: “கடவுள்களின் மற்றும் சமூகம் முழுவதின் மகிழ்ச்சிக்காக பணிபுரிவதே தங்களது (வால்மீகிகளின்) கடமை என்று ஏதோவொரு காலப்பகுதியில் இவர்களில் யாரோ ஒருவருக்கு ஞானோதயம் பிறந்திருக்க வேண்டும். கடவுள்களால் தங்களுக்கு அளிக்கப்பட்ட இந்தப் பணியை அவர்கள் செய்தாக வேண்டும். (மனிதக் கழிவுகளை) சுத்தப்படுத்துவது என்ற இந்த வேலை உள்ளார்ந்த இறைச் செயலாக இன்னும் பல நூற்றாண்டுகளுக்குத் தொடர வேண்டும். வேறெந்த வேலையை அல்லது தொழிலை மேற்கொள்வதற்கான வாய்ப்பு அவர்களின் முன்னோர்களுக்கு கிடைக்கவில்லை என்பது நம்புவதற்கு இயலாத ஒன்று.”

இன்றைக்கும் தொடர்ந்து நீடித்து வருகின்ற, இந்த பிறப்பின் அடிப்படையில் சாதிக்கு ஏற்ற வகையில் தீர்மானிக்கப்பட்ட தொழிலை மிகக் கொடூரமான வகையில் நியாயப்படுத்துகின்ற இந்தப் போக்குதான் சாதிய அமைப்பு குறித்த ஆர் எஸ் எஸ் மற்றும் இந்துத்துவாவின் உண்மையான அணுகுமுறை ஆகும். ஆர் எஸ் எஸ்ஸின் அரசியல் பிரிவான பாஜக ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியில் இருந்தபோது, அன்றைய முதல்வர் பைரோன் சிங் ஷெகாவாத் தான் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற வளாகத்தில் மநுவின் சிலையை நிறுவுவதற்கு அனுமதி அளித்தார். அந்தச் சிலையை அகற்றுவதை எதிர்த்து நீதிமன்றத்திடமிருந்து தடை ஆணையை பெற்றவர் ஆர் எஸ் எஸ் ஸின் மற்றொரு பிரிவான விஸ்வ இந்து பரிஷத்தின் ஒரு தலைவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் மாநிலத்தில் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த அரசுகளின் போலித்தனத்தின் அவமானச் சின்னமாக அந்தச் சிலை இன்றும் கூட நின்று கொண்டிருக்கிறது.

ஒரு இந்து ராஷ்ட்ரத்தை அமைப்பதற்கான ஆர் எஸ் எஸ் ஸின் நிகழ்ச்சி நிரலைத்தான் மோடி அரசு இப்போது நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. அந்த இந்து ராஷ்ட்ரத்தின் மையமாகத் திகழ்வது சாதிய அமைப்புதான். இந்தியாவின் அரசியல் அமைப்புச்சட்டம் நிறைவேற்றப்பட்டபோது ‘மநுவின் ஆட்சி முடிவிற்கு வந்து விட்டது’ என்று அண்ணல் அம்பேத்கர் கூறினார். தனது அதிகார பூர்வ இதழான ஆர்கனைசர் இதழில் ஆர் எஸ் எஸ் ஒரு கட்டுரை மூலம் அதற்கு பதிலளிக்கும்போது ‘இன்றும் மநு எங்கள் மனங்களில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்’ என்று குறிப்பிட்டது. அம்பேத்கர் தனது உரையில் மேலும் கூறுகையில் “இந்து ஆட்சி என்பது நடைமுறைக்கு வருமானால், அது இந்த நாட்டின் மிகப்பெரும் பேரழிவாகவே இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை…. அது ஜனநாயகத்துடன் ஒத்துப்போகாத ஒன்று.” என்று குறிப்பிட்டிருந்தார். அப்போது உண்மையாக இருந்த அண்ணல் அம்பேத்கரின் கருத்து இப்போதும் பொருத்தமானதொரு உண்மையாகவே உள்ளது.

நாடு விடுதலை பெற்று 73 ஆண்டுகள் கடந்த பின்னரும்கூட கிராமப்புற, நகர்ப்புற உழைப்பாளிகளில் பெரும்பகுதியினர் தலித்துகளாகவே உள்ளனர். இந்நிலையில் சாதிக்கும் வர்க்கத்திற்கும் இடையிலான உறவு எத்தகையதாக உள்ளது?

வர்க்க அடிப்படையிலான சமூகத்தின் வளர்ச்சியோடு இணைந்த வகையில் சாதி என்பது எவ்வாறு வரலாற்று ரீதியாகத் தலையெடுத்தது என்பதை கம்யூனிஸ்டுகளும் மார்க்சிய வரலாற்று ஆசிரியர்களும் எடுத்துக் காட்டியுள்ளனர். இந்தியாவில் சாதிய அமைப்பானது சமூகத்துடனும் உற்பத்தி உறவுகளுடனும் பின்னிப் பிணைந்துள்ளது. உற்பத்தி சக்திகள் நிலைபெற்ற விவசாயமாக வளர்ச்சி பெற்றது, சமூக உபரியின் வளர்ச்சியும், உற்பத்திக் கருவிகள் மற்றும் உபரி ஆகியவற்றின் மீதான உரிமை மற்றும் ஆதிக்கத்தைக் கைக்கொண்டுள்ள வர்க்கங்கள் மற்றும் அந்த உபரியை உற்பத்தி செய்கின்ற வர்க்கங்களாக வளர்ச்சி பெற்றது ஆகியவை நாம் நன்கறிந்த சமூகங்களின் வளர்ச்சி குறித்த ஆய்வின் ஒரு பகுதியாகும்.

பண்டைய இந்தியா குறித்த வரலாற்றாசிரியரும் மிகப் பரவலாக அங்கீகாரம் பெற்ற, பெரிதும் மதிக்கப்படுகின்றவருமான டி.டி. கோசாம்பி இவ்வாறு எழுதியிருந்தார்: “ இந்தியாவில் மிகக் குறைந்த வற்புறுத்தலுடன் தொடக்கநிலை உற்பத்தியாளர் தனது உபரியை பறிகொடுக்கும் வகையில் மதரீதியான சமூக உணர்வை உருவாக்குவதாகவே சாதி என்பது உற்பத்தியின் தொடக்கநிலையில் ஒரு வர்க்கமாக உள்ளது.”

மேலும் தூதரக அதிகாரியும் எழுத்தாளரும் கல்வியாளருமான ஜயந்தனுஜா பந்தோபாத்யாயா வர்க்கப் போராட்டங்கள் மற்றும் சாதிய ஒடுக்குமுறை ஆகியவை குறித்த தனது கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: “ எப்படியிருந்த போதிலும், உண்மையில், தெய்வத்தால் தோற்றுவிக்கப்பட்டது என்ற சாக்குப்போக்குடன் மத நூல்களால் நால்வருண முறைக்கு வழங்கப்பட்ட ஆதரவானது, தொழிலாளி வர்க்கத்தின் மீதான ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட ஒரு பழங்கால வடிவமான அநியாய உழைப்புப் பிரிவினையை புனிதப்படுத்தவும் நிலைத்து நிற்கச் செய்யவும் உதவியது. மிகச் சிறிய ஒட்டுண்ணி ஆளும் வர்க்கத்தால் பண்டைய இந்தியாவின் பெரும்பான்மையானவர்களாக உள்ள தொழிலாளி வர்க்கத்தை சுரண்டுவதற்கும் இது அடிப்படையானதாக விளங்கியது. இயல்பாகவே ‘வேற்றுலக’ ரீதியான மதத் தடைகள் வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்ட சித்தாந்தங்களாகவே இருந்தன. இது இந்த உலகத்தில் சமூக பொருளாதார சுரண்டல் கட்டமைப்பை மறைக்க உதவியது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நால் வருண மெய்யியலின் சமூக வேர்கள் பண்டைய இந்தியாவின் உற்பத்தி உறவுகளில் பதிக்கப்பட்டிருந்தன. ”

தலித்துகளில் பெரும்பான்மையோர் பல ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, மேலும் குறிப்பாக நவதாராளமய பொருளாதாரக் கொள்கைகளினால் பாதிக்கப்பட்டவர்களாகவும், சமூக-பொருளாதார ஏணியின் இறுதிப்படிக்கட்டில் கட்டுண்டும் கிடக்கின்றனர். ஏனெனில் சாதிய அமைப்பானது நவீன இந்தியாவின் ஆளும் வர்க்கமான முதலாளித்துவ வர்க்கத்தின் ஆதரவைப் பெற்றுள்ளதே இதற்கான காரணமாகும். குறிப்பாக தலித்துகளும், பிற்படுத்தப்பட்ட சாதியினரும் மேற்கொள்ளும் உற்பத்தியின் உபரி மதிப்பை அவர்களிடமிருந்து மேலும் தீவிரமாகக் கறப்பதற்கான ஒரு கருவியாக சாதிய அமைப்பு கையாளப்படுகிறது. எனவே சாதி என்பதை முதலாளித்துவத்திற்கு முந்தைய உற்பத்தி உறவுகளின் ஒரு பகுதியாக மட்டுமே பார்ப்பது தவறானது. சாதிய உறவுகள் நிலப்பிரபுத்துவ சமூகத்தின் ஒரு பகுதி என நமது இயக்கத்திற்கு உள்ளேயும் கூட அடிக்கடி கூறப்பட்டு வந்துள்ளது. இத்தகைய கருத்து வெளிப்பாட்டின் பின்னே உள்ள புரிதல் என்னவெனில், ஒரு நவீன முதலாளித்துவ சமூகத்தில் சாதி மறைந்து போய் வர்க்க உறவுகளே மேலாதிக்கம் பெற்றதாக இருக்கும் என்பதே ஆகும். இது முற்றிலும் தவறானதொரு புரிதல் என்பதையே நமது அனுபவம் எடுத்துக் காட்டுகிறது.

எனவேதான் கட்சித் திட்டம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது: “ தலையெடுத்து வந்த முதலாளித்துவ வர்க்கத்தால் அழித்தொழிக்கப்பட்ட, முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூகத்தின் சாம்பலிலிருந்து முதலாளித்துவம் வளர்ந்துள்ள, முன்னேறிய முதலாளித்துவ நாடுகளை போலல்லாமல், இந்தியாவில் முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூகத்தின் மீதே முதலாளித்துவம் பதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கவாதிகள் அவர்களின் ஆட்சிக் காலத்திலோ அல்லது நாட்டு விடுதலைக்குப் பிறகு ஆட்சி அதிகாரத்திற்கு வந்த இந்திய முதலாளித்துவமோ அதை உடைத்தெறிய முயற்சிக்கவேயில்லை. முதலாளித்துவத்தின் சுதந்திரமான வளர்ச்சிக்கான மிக முக்கியமான முன் நிபந்தனைகளில் இவ்வாறு உடைத்தெறிவதும் ஒன்றாகும். எனவே தற்போதைய இந்திய சமூகமானது சாதிய, வகுப்புவாத, பழங்குடி நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து மேலாதிக்கம் செலுத்தும் ஏகபோக முதலாளித்துவத்தின் விசித்திரமான ஒரு கலவையே ஆகும்.”

எனவே சாதி என்பதை ஒரு நிலப்பிரபுத்துவ அல்லது முதலாளித்துவத்திற்கு முந்தைய உறவாக மட்டுமே பார்க்காமல் முதலாளித்துவத்தின் கீழ் வளர்ந்து வரும் பொருளாதார, சமூக, அரசியல், கலாச்சார உறவுகளில் இணைத்துக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே நாம் புரிந்து கொள்ள வேண்டும். சாதியை எதிர்த்துப் போராடாமல் நம்மால் முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராட முடியாது. முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடாமல் நம்மால் சாதியை எதிர்த்துப் போராட முடியாது.

இந்நிலையில் நாம் செய்ய வேண்டியது என்ன?

வர்க்கச் சுரண்டலை கண்ணுறாமல் சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறையை மட்டுமே காணுகின்ற சமூக சீர்திருத்த இயக்கங்களின் வரையறைகளை வரலாறு நமக்கு எடுத்துக் காட்டியுள்ளது. அதைப் போன்றே சாதிய ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல் செயல்படுவது குறித்த சமூகரீதியான உணர்வு இன்றி, வர்க்கப் போராட்டங்களை மட்டுமே வளர்த்தெடுக்க முனைவதென்பது, அந்த வர்க்கப் போராட்டத்தை பலவீனப்படுத்துவதாக ஆகிவிடுகிறது என்பதையும் நமது சொந்த அனுபவங்களிலிருந்தே நாம் கற்றுக் கொண்டுள்ளோம். பாட்டாளி வர்க்கத்தின் மிகப்பெரியதோர் உலகத்தை இது கண்ணுக்குத் தென்படாத ஒன்றாக ஆக்குகிறது. இந்த உலகத்தவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இரட்டைச் சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைக்கு ஆளாகின்றனர். அதுவே ஒரு தலித் பெண்ணாக இருப்பாரே ஆனால் அவர் ஒரு தலித் என்ற வகையிலும், ஒரு தொழிலாளி என்ற வகையிலும், ஒரு பெண் என்ற வகையிலும் மூன்று வகையான சுமைகளை சுமப்பவராக மாறுகிறார். இந்த நிலையை மாற்றுவதற்கான ஒரே வழி வர்க்கப் போராட்டம், சாதிய அமைப்பிற்கு எதிரான போராட்டம் மற்றும் தலித்துகளின் உரிமைகளுக்கான போராட்டம் ஆகியவற்றின் கூட்டணியை வளர்த்தெடுப்பதே ஆகும்.

முதலாளித்துவத்தின் வளர்ச்சியைத் தொடர்ந்து சாதிகளுக்கு உள்ளேயும் வேறுபாடுகள் வளர்ந்து வருவதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். வர்க்கமும் சாதிகளும் ஒன்றல்ல. சாதி அடையாள அரசியலானது இந்த வேறுபாட்டை கண்ணுக்குத் தெரியாமல் மறைத்து விடுகிறது. எனினும் விரிவான பொருளில் பார்க்கும்போது இந்தியாவில் வர்க்கப் போராட்டமானது மிகவும் வித்தியாசமானதொரு தன்மையைக் கொண்டதாக உள்ளது என்ற, அது சாதிய அமைப்பை எதிர்த்த போராட்டமாக இருக்கவேண்டும் என்ற உண்மையை இது பலவீனப்படுத்தி விடாது.

கட்சித் திட்டம் இது பற்றிக் குறிப்பிடுகையில்: “ தலித் பிரிவைச் சேர்ந்த மக்களில் பெரும்பாலோர் உழைக்கும் வர்க்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் நிலையில், தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமை என்பதற்கு சாதிய அமைப்பிற்கு எதிரான, தலித்துகளின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான ஒற்றுமையே முன்நிபந்தனையாக அமைகிறது. சாதி அமைப்பை முற்றிலுமாக அழித்தொழிக்கவும், சமூக சீர்திருத்த இயக்கம் ஒன்றின் மூலம் அனைத்து வடிவங்களிலுமான சமூக ஒடுக்குமுறையை ஒழித்துக் கட்டவுமான போராட்டம் என்பது ஜனநாயகப் புரட்சியின் மிக முக்கியமானதொரு பகுதியாகும். அவ்வகையில் சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது வர்க்கச் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தோடு பின்னிப் பிணைந்த ஒன்றே ஆகும்.”

புதிதாகப் பிறந்துள்ள 2021ஆம் ஆண்டில், அதாவது 1930ஆம் ஆண்டின் செயலுக்கான மேடை மேற்கொள்ளப்பட்டு 91 ஆண்டுகளுக்குப் பிறகு, வெறுத்தொதுக்கப்பட வேண்டிய சாதிய அமைப்பு, அதை நீடித்து நிலைக்கச் செய்ய முயலும் அனைத்து சக்திகள் ஆகியவற்றை எதிர்த்த போராட்டத்தை தீவிரப்படுத்த நாம் மீண்டும் உறுதி பூணுவோமாக.

தமிழில்: வீ. பா. கணேசன்

மக்களே இறையாண்மை கொண்டவர்கள்

  • என்.குணசேகரன்

இந்திய கூட்டாட்சி முறை தற்போது கடுமையான சவால்களை சந்தித்து வருகிறது. பாஜகவின் இந்துத்துவ நிகழ்ச்சி நிரல், ஒரு பாசிச அரசை அமைக்கும் நோக்கம் கொண்டது. இன்றைய இந்திய கூட்டாட்சி முறையை அழித்து அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசுக்கே என்ற சர்வாதிகார அரசமைப்பினை உருவாக்க பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்-ம் நீண்ட கால நோக்கில் செயல்பட்டு வருகின்றன.

இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ், மாநிலத்தின் அதிகாரங்களை பறித்து, மத்திய அரசுக்கே அதிக அதிகாரங்களைக் குவித்திடும்  ஜனநாயக விரோதப் பாதையில் சென்றது.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சித் திட்டம் முன்வைக்கும் கூட்டாட்சி முறை கோட்பாடுகள், இதற்குச் சிறந்த மாற்றுப் பாதையாக திகழ்கின்றது.

இந்திய கூட்டாட்சி முறை

தற்போதைய இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்தியக் குடியரசைக் “மாநிலங்களின் ஒன்றியம்” என்று குறிப்பிடுகிறது. இதனால், இந்தியக் குடியரசு, ஃபெடரல் (கநனநசயட) என்ற கூட்டாட்சி அமைப்பு கொண்டதாக விளங்குகிறது.
மத்திய, மாநில அரசாங்கங்களுக்குரிய சட்ட, நிர்வாக அதிகாரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இரு தரப்பும்    இணைந்து  பகிர்ந்து கொள்வது என்ற வகையில் பொதுப் பட்டியல் அதிகாரங்களும் வரையறுக்கப்பட்டுள்ளன. மத்திய அரசுக்கு 100, மாநில அரசுகளுக்கு 61, பொதுவாக 52 என்ற எண்ணிக்கையில் அதிகாரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்தப் பட்டியல்கள் வெளிப்படையாக ஒரு உண்மையை தெளிவுபடுத்துகின்றன. தொடர்ந்து மத்திய அரசுக்கு அதிகாரங்கள் அதிகரித்து வருவதும், மாநிலங்களின் அதிகாரங்கள் குறைந்து வருவதும், பொதுப் பட்டியல் என்பதிலும் கூட மத்திய அரசுக்கே கூடுதல் அதிகாரங்கள் என்ற நிலையும் ஏற்பட்டு வருவதைக் காண முடியும்.
முதல்  பிரதமரான நேரு, கேரளத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை கலைத்தார். நிலச்சீர்திருத்தம், அனைவருக்கும் கல்வி கிடைக்கும் வகையிலான பல முற்போக்கு நடவடிக்கைகளை மேற்கொண்ட அந்த அரசாங்கம், விதி 356 என்ற அரசியலமைப்பு சட்ட விதிக்கு பலியானது. இவ்வாறு கடந்த காலத்தில் அரசியலமைப்பு விதி 356 அடிப்படையில்  தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை மத்திய அரசு பல முறை கலைத்தது. இவ்வாறு இந்திய ஆளும் வர்க்கங்கள் கூட்டாட்சி கோட்பாட்டினைக் கேலிக்கூத்தாக மாற்றிவிட்டன.
இன்றைய முதலாளித்துவ அரசு தேசிய இனங்களிடையே பகைமையை ஏற்படுத்துகிறது. ஒரு மொழிக்கு சலுகை கொடுத்து இதர தேசிய இனங்களை எதிரும் புதிருமாக திருப்புகிறது. காவிரிப் பிரச்னையில் அரசியல் ஆதாயத்திற்காக உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கிறது. இது போன்ற நதி நீர் தாவா, எல்லை தாவா பிரச்னைகளில் தேசிய வெறியை தூண்டி இரு தரப்பினை மோத விட்டு அதன் மூலம் தனது அதிகாரத்தை ஆளும் வர்க்கம்  தக்க வைத்துக் கொள்கிறது.
பண்பாட்டு சிறப்பு கொண்ட தமிழ் இனத்தின் பண்பாட்டு சிறப்புக்களை மேலும் வளர்த்தெடுப்பதற்கு பதிலாக அவற்றை அழிக்க முயற்சிக்கிறது. இது போன்று இந்தியாவின் பன்முக பண்பாடுகளை சிதைக்கும் வேலையில் மத்திய ஆட்சியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர்.
தேசிய இனங்களின் உரிமைகள்
தேசிய இனங்களுக்கிடையே சமத்துவம் என்பது உண்மையில் பாட்டாளி வர்க்க நலனை பாதுகாக்கும். கட்சித் திட்டத்தில்,
அரசு கட்டமைப்பு பற்றி குறிப்பிடும்போது, ”இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்களுக்கும் உண்மையான சமத்துவம் மற்றும் சுயாட்சி தந்து அதன் அடிப்படையில் இந்திய யூனியனின் ஒற்றுமையை பாதுகாத்து முன் னெடுத்துச் செல்ல”  பணியாற்றும் என்ற உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ( பாரா: 6.3).

மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் இருப்பதை இந்திய ஆளும் வர்க்கம் எப்போதும் அனுமதித்ததில்லை. அனைத்து அதிகாரங்களும் கொண்ட மையப்படுத்தப்பட்ட அரசுதான் ஆளும் முதலாளித்துவ வர்க்க நலனை பாதுகாக்கும். இதனால் வலுவான மத்திய அரசு, பலவீனமான மாநில அரசுகள் என்ற அரசு கட்டமைப்பையே ஆளும் வர்க்கங்கள் நிலை நிறுத்த முயற்சிக்கின்றனர். சமமான, அதிக அதிகாரங்கள் கொண்ட மாநிலங்கள் செயல்படும் உண்மையான மாநில சுயாட்சிக் கோட்பாட்டை பற்றி கட்சி திட்டம் பேசுகிறது.
இன்றைய முதலாளித்துவ அமைப்பில், பொதுவாக மாநிலங்களுக்கு உரிய நிதி ஒதுக்கப்படுவதில்லை. அதிலும் மாற்று அரசியல் கருத்தோட்டம் கொண்ட அரசாங்கங்களை புறக்கணிக்கும் போக்கினை மத்திய அரசு கடைப்பிடிப்பதுண்டு. இடதுசாரி அரசாங்கங்கள் அமையும் போதெல்லாம் நிதி ஒதுக்கீட்டை வெட்டுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு, பழிவாங்கும் வகையில் நடந்து கொள்வது  மத்திய அரசின்  வழக்கமான வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.`

இதற்கு மாறாக, சம அதிகாரங்கள் கொண்ட மாநிலங்கள் மட்டுமல்லாது, பின் தங்கிய பிரதேசங்களும் முன்னேற்றமடைய, தன்னாட்சி அதிகாரம் கொண்ட  பிரதேச சுயாட்சியையும் கட்சி திட்டம் பேசுகிறது: “பிற்பட்ட மற்றும் பலவீனமான மாநிலங்கள், பிராந்தியங்கள், பகுதிகள் தங்கள் பிற்பட்ட தன்மையிலிருந்து விரைவாக மீள நிதி மற்றும் இதர உதவிகள் தந்து சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.” அதாவது, நிதி ஒதுக்கிடு போன்றவற்றில் தற்போதுள்ளது போன்ற பாரபட்சம் இருக்காது.

”ஆதிவாசி மக்கள் வாழும் பகுதி அல்லது ஒத்த சமூக மற்றும் பண்பாட்டு முறையை பின்பற்றும் குறிப்பிட்ட இன மக்கள் தொடர்ச்சியாக மற்றும் வரையறுக்கப்பட்ட பகுதிகளில் வாழ்ந்தால், அந்தப் பகுதிகளுக்கு சம்பந்தப்பட்ட மாநில அமைப்புக்குட்பட்ட பிரதேச சுயாட்சி வழங்கப்படும். அந்தப் பகுதிகளின் வளர்ச்சிக்கு முழு உதவி செய்யப்படும்.” (பாரா: 6.3.ii) என்று கட்சி திட்டம் உறுதியாக குறிப்பிடுகிறது.

மக்களே அனைத்தும்…

மக்கள் ஜனநாயக அரசு செயல்பாட்டின்  ஒவ்வொரு அம்சத்திலும் மக்களே தீர்மானிக்கும் சக்தியாக விளங்குவார்கள். தேர்தல்கள் முறையாக நடத்தப்படுவது மட்டுமல்லாமல், தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதி சரியாக செயல்படவில்லை என்றால், அவரை பதவிலிருந்து அகற்றுகிற  ‘திருப்பி அழைக்கும் உரிமையும்’ மக்களுக்கு உண்டு.

மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கட்டுப்படுத்தும் வகையில் தற்போதுள்ள மேலவை, ஆளுநர் பதவி போன்ற எதுவும் மக்கள் ஜனநாயக அரசின் கீழ் இருக்காது.

பல்வேறு மாறுபட்ட பண்பாடுகளோடு  பலவகையான தேசிய இனங்களைக் கொண்ட 130 கோடி மக்கள் வாழும் பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது. அதன் ஒற்றுமை பாதுகாக்கப்படுவது மிக முக்கியமான கடமை. பாட்டாளி வர்க்க நலனுக்கும் இது முக்கிய தேவை. இதற்கு கட்சி திட்டம் காட்டும் கூட்டாட்சிப் பாதையே சிறந்த பாதை
புரட்சிக்கு பிறகு அமையவிருக்கும் மக்கள் ஜனநாயக அரசின் ஒவ்வொரு அசைவும்  “மக்களே இறையாண்மை கொண்டவர்கள்.”என்று உயரிய கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்திருக்கும்.

மதச்சார்பின்மைக் கொள்கையில் சமரசமற்ற பார்வை (15)

(ஒலி: தேவி ப்ரியா)

என். குணசேகரன்

உண்மையான மதச்சார்பின்மை கோட்பாடுகளை உயர்த்திப் பிடிக்கும் கட்சியாக மார்க்சிஸ்ட் கட்சி திகழ்கிறது. இந்தியாவின் மதச்சார்பற்ற பாரம்பரியத்தை பேணிக்காக்க உறுதி கொண்ட அரசாக புரட்சிக்குப் பிறகு அமையும்  மக்கள் ஜனநாயக அரசு செயல்படும்.

கட்சித் திட்டம் மதச்சார்பின்மை கோட்பாடு பற்றிய  அழுத்தமான நிர்ணயிப்புக்களைக் கொண்டுள்ளது. புரட்சிக்கு பிறகு அமையும் அரசு எவ்வாறு செயல்படும் என்பதும் விளக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் போராட்ட காலத்தில் இந்து, இஸ்லாமிய உழைக்கும் மக்கள் ஒன்று திரண்டு போராடினர். இதனால்தான் இந்தியா காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது. இந்த ஒன்றுபட்ட போராட்டத்தினால் மதச்சார்பின்மை நெறி மக்களிடையே வளர்ந்தது.

ஆனால் விடுதலைக்குப் பிறகு வந்தவர்கள் இந்த கோட்பாட்டிற்கு துரோகம் இழைத்தனர்.

கட்சித் திட்டத்தில் “V – அரசு கட்டமைப்பும் ஜனநாயகமும்” என்ற தலைப்பில் முதலாளித்துவ அரசு எவ்வாறு மதச்சார்பின்மை கோட்பாட்டை நீர்த்துப்போக செய்து அழித்து வருகிறது, உண்மை விரிவாக விளக்கப்படுகிறது;

“….அரசியலையும், மதத்தையும் முற்றாக பிரிப்பது என்பதற்குப் பதிலாக அரசு மற்றும் அரசியல் வாழ்க்கையில் அனைத்து மத நம்பிக்கைகளுக்கும் சமமாக தலையிடுவதற்கான சுதந்திரம் என்பதே மதச்சார்பின்மையின் பொருள் என மக்களை நம்ப வைக்க முயல்கின்றனர்…” என்று அழுத்தமாக ஆட்சியாளர்கள் மீது கட்சித் திட்டம் குற்றம் சாட்டுகிறது.

இதற்கு வரலாற்றில் பல எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது 1986-ஆம் ஆண்டு தனது சரியும் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளவும், தேர்தல் ஆதாயத்திற்காகவும் அயோத்தியாவில் வழிபாடு எதுவும் நடக்காமல் இருந்த பாபர் மசூதியின் கதவுகளை திறந்து விட்டு இந்துக்களின் ஆதரவினை பெற முயன்றார். இதுதான் வகுப்புவாத வளர்ச்சிக்கு ஊக்கமளித்தது.

இதுபோன்று, இதுவரை வந்த இந்திய ஆட்சியாளர்கள் அனைவரும் அவ்வப்போது மதச்சார்புடன் நடந்து வந்துள்ளனர்.  “மதச்சார்பின்மைக்கு எதிரான போக்குகளை உறுதியுடன் எதிர்ப்பதற்கு பதிலாக, முதலாளி வர்க்கம் அதற்கு சலுகை வழங்கி வலுப்படுத்துகிறது” என்று இதனை கட்சித் திட்டம் குறிப்பிடுகிறது.

அரசியல் ஆதாயத்திற்கு அரசியலிலும், அரசாங்க செயல்பாட்டிலும் மதத்தை பயன்படுத்திக் கொள்ளும் அரசுகளாக, கடந்த காலங்களில் இருந்த முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்கள் இருந்து வந்துள்ளனர்.

பாஜக இன்றுள்ள மதச்சார்பின்மை கொள்கையை ஒழிக்க கங்கணம் கொண்டுள்ளது. “மதவெறி மற்றும் பாசிசத் தன்மை கொண்ட ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான கூட்டம் வளர்ந்து மத்தியில் ஆட்சிப்பொறுப்புக்கு வந்துள்ளதால் மதச்சார்பின்மை அடித்தளத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அரசு, நிர்வாகம், கல்வி அமைப்பு, தகவல் தொடர்பு சாதனங்கள் ஆகியவற்றை மதவெறி மயமாக்க திட்டமிட்ட வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று கட்சித் திட்டம் கூறுவது இன்றைய நிலைமைக்கும் முழுமையாகப் பொருந்தும்.

இந்துத்துவ முயற்சிகள் இயல்பாகவே சிறுபான்மை மதவெறியை வலுப்படுத்துகின்றன. இதனை  கட்சித் திட்டம் “பெரும்பான்மை மதவெறியின் வளர்ச்சி சிறுபான்மை மதவெறி சக்திகளை வலுப்படுத்தும், … நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்து விளைவிக்கும்” என்று எச்சரிக்கிறது.

ஊசலாட்டமற்ற நிலை

முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசை தூக்கியெறிந்துவிட்டு மலரும் மக்கள் ஜனநாயக அரசு மதச்சார்பின்மைக் கோட்பாட்டை எவ்வாறு அமலாக்கிடும் என்பதனை கட்சித் திட்டம் விளக்குகிறது, “மக்கள் ஜனநாயகமும் அதன் திட்டமும்-( VI)” என்ற தலைப்பில் மதச்சார்பின்மை பற்றிய கட்சியின் அணுகுமுறை வரையறுக்கப்பட்டுள்ளது.

முதலில் மக்களுக்கு தெளிவான ஒரு உறுதிமொழியை கட்சி திட்டம் தெளிவாக்குகிறது.

“மதச்சார்பின்மைக் கோட்பாடுகளை தொய்வின்றி செயலாக்க வேண்டும் என்பதற்காக சமரசமற்ற போராட்டத்தை நடத்த நமது கட்சி உறுதி பூண்டுள்ளது. மதச்சார்பின்மை கொள்கையிலிருந்து ஒரு சிறு விலகல் ஏற்பட்டால் கூட அதை அம்பலப்படுத்துவதோடு போராடவும் வேண்டும்.”(xv).

இது மதச்சார்பின்மையில் முதாளித்துவ கட்சிகளுக்கு இருப்பது போன்ற  ஊசலாட்டம் மக்கள் ஜனநாயக அரசில் இருக்காது என்பதனை தெளிவுபடுத்தும் கூற்று.

மதத்திற்கு எதிரானதா ?

மதச்சார்பின்மை எனும் கொள்கை மதத்திற்கு எதிரானது என்ற தவறான கருத்து நீடித்து வருகிறது. குறிப்பாக கம்யூனிஸ்டுகளைக் குறி வைத்து இந்து மதவாதிகள் மட்டுமல்லாது, இஸ்லாமிய, இதர சிறுபான்மை மதவாதிகளும் இந்த பிரச்சாரத்தை செய்து வருகின்றனர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு எழுதினார்:  “மார்க்சிய லெனினியவாதிகள் தெளிவாக சொல்லுவது இதுதான்; மதத்தினை  அரசியல் நோக்கத்திற்கு, தேர்தல் உள்ளிட்ட தருணங்களில் பயன்படுத்துவதை எதிர்க்கிற அதே நேரத்தில், மக்களின் மத உணர்வுகளை அவர்கள் மதிக்கின்றனர்; மக்களின் மத உணர்வுகள் அவர்கள் புண்படும் வகையில் எதையும் அவர்கள் செய்வதில்லை…”

இதே அணுகுமுறை கட்சித் திட்டத்திலும் தெளிவாக்கப்பட்டுள்ளது.

“.. ஒவ்வொரு மதத்தினரின் உரிமைகளை – அது பெரும்பான்மை மதமாக இருந்தாலும் சரி, அல்லது சிறுபான்மை மதமாக இருந்தாலும் சரி – அல்லது எந்த மதத்தின் மீதும் நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும் சரி அவர்களது உரிமைகளை கட்சி பாதுகாக்கும்.”

அரசின் செயல்பாட்டில் மதம் தலையிடாது என்பதும் தெளிவாக்கப்பட்டுள்ளது.

. “.அதே நேரத்தில் பொருளாதாரம், அரசியல் மற்றும் நிர்வாகம் போன்ற நாட்டின் வாழ்க்கையில் மதம் ஊடுருவும் எந்த வடிவத்தையும் கட்சி எதிர்த்துப் போராடும். பண்பாடு, கல்வி மற்றும் சமூகத்தில் மதச்சார்பற்ற, ஜனநாயக மதிப்பீடுகளை உயர்த்திப் பிடிக்கும். மதவெறி அடிப்படையிலான பாசிச போக்குகளின் ஆபத்து வலுப்பெற்று வருவதை எதிர்த்து அனைத்து நிலைகளிலும் அரசின் மதச்சார்பற்ற தன்மை உறுதி செய்யப்படும். நாட்டின் அரசு மற்றும் அரசியல் வாழ்வு தொடர்பான விவகாரங்களில் மத நிறுவனங்களின் தலையீடு தடை செய்யப்படும். மத ரீதியான சிறுபான்மையோர் பாதுகாக்கப்படுவதோடு, அவர்களுக்கு எதிரான எத்தகைய பாரபட்சமும் தடுக்கப்பட போராடும்.”

மூகத் தளத்தில் பண்பாட்டுப்பணி

அதே போன்று சமூகத் தளத்தில் செய்ய வேண்டிய கடமை பற்றியும்  கட்சித் திட்டம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது.

“ஜனநாயக, மதச்சார்பற்ற அணுகுமுறை கொண்ட ஒரு புதிய முற்போக்கான மக்கள் பண்பாட்டை வளர்த்தெடுக்க நமது மக்களின் ஆக்கப்பூர்வமான திறமைகளை மக்கள் ஜனநாயக அரசு மற்றும் அரசாங்கம் உரமூட்டி வளர்க்கும்.”(xx)

ஆக, இந்திய நாட்டில் உள்ள கட்சிகளிலேயே, மிக அறிவியல்ரீதியான பார்வையுடன், மதச்சார்பின்மை குறிக்கோளை மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் தெளிவுபடுத்தியுள்ளது. இதில், மார்க்சிஸ்ட் கட்சி காட்டும் பாதையே சரியானது என்பதை வரலாற்று அனுபவம் எடுத்துரைக்கிறது.

இன்றைய நிலையில் இந்துத்துவா சக்திகளால் மதச்சார்பின்மைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை எதிர்த்த போராட்டம் முக்கியமானது. அரசு, சமூகம் இரண்டு தளத்திலும் இது தீவிரப்படுத்த வேண்டும்.

சமூகத்தில் மதச்சார்பின்மை கலாச்சாரம் வலுப்படுகிறபோதுதான் புரட்சியை முன்னெடுக்கும் வர்க்கங்கள் கொண்ட மக்கள் ஜனநாயக அணி வலுப்பெறும்.

பெண்கள் குறித்த மார்க்சிஸ்ட் கட்சி திட்டத்தின் கண்ணோட்டம்

  • .வாசுகி

இந்திய சூழலில், சோசலிசப்  புரட்சிக்குப் போவதற்கு முன்பு, மார்க்சிஸ்ட் கட்சியின் இலக்காக  மக்கள் ஜனநாயகப் புரட்சி வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தப் புரட்சியில் தலைமை பாத்திரம் வகிக்க வேண்டிய தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதியினராக பெண்கள் உள்ளனர். ஜனநாயக புரட்சியின் முக்கிய அம்சம், விவசாய உறவுகளில் புரட்சிகர மாற்றங்களைக் கொண்டு வருவது. அதற்கு கிராமப்புற உழைப்பாளிகளைத் திரட்ட வேண்டும், அதன் ஒரு பகுதியாக விவசாயிகளாக, விவசாய தொழிலாளராக உள்ள பெண்களைத் திரட்டும் கடமையும் புரட்சிகர இயக்கத்தின் முன் உள்ளது. அதே சமயம், சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாகிற சமூகப் பிரிவினராகவும் பெண்கள் உள்ளனர்.

சாதி, வர்க்கம், பாலினம் :

பெண்ணியவாதிகளில் ஒரு பகுதியினர் கூறுவதைப் போல், பெண்ணின் மீதான ஒடுக்குமுறைக்கு ஆணாதிக்கத்தை மட்டும் காரணமாகக் கட்சி திட்டம் நிறுவவில்லை. ஆணாதிக்கத்துடன், நிலப்பிரபுத்துவமும், முதலாளித்துவமும் பெண்ணடிமைத்தனத்துக்கான காரணிகளாக, அதனை நியாயப்படுத்தி, நீட்டிக்கும் தத்துவங்களாக உள்ளன என்பதையும், பெண்ணடிமைத்தனம் சமூகக் கட்டமைப்போடு இணைந்தது; இதற்கான பவுதீக சூழல் நிலவுகிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. இந்தப் புரிதலின் அடிப்படையில்தான் பெண், உழைப்பாளி, குடிமகள் என்று மூன்று வகைகளில் பெண்ணின்  மீதான ஒடுக்குமுறை அமைவதாக கட்சித் திட்டம் விளக்குகிறது. மேலும் சாதி-வர்க்கம்-பாலினம் என்ற ஒன்றுக்கொன்று தொடர்புடைய அடிப்படையிலும், பெண்கள் மீதான சுரண்டல் நிகழ்வதை கவனிக்க வேண்டும்.

அப்படியானால்,  சில தனிநபர்களின் மனச் சிதைவு காரணமாக பெண்ணின் மீதான ஒடுக்குமுறை நிகழ்கிறது என்ற வாதமும், மறுபுறம் அதற்கு தீர்வு ஆண் எதிர்ப்பு என்பதும் நிராகரிக்க வேண்டிய கருத்தியலாகின்றன. தனிநபர் அணுகுமுறைதான் காரணம் என்றால், பெண்ணின் மீதான ஒடுக்குமுறைக்கு சமூக ஒப்புதல் கிடைப்பது எப்படி?  சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் இது நிலவுவதும், நியாயப்படுத்தப் படுவதும், இது ஒரு பொதுக்கருத்தாக, பொதுப் புத்தியாக மாறியிருப்பதும், புராண, இதிகாசங்கள் உள்ளிட்டவை இதற்குத் துணை போவதும், ஆண்மை பெண்மை என்று வேறுபட்ட முறையிலான கற்பிதமும் எவ்வாறு நிகழ்கின்றன? பல நூறாண்டுகளாக இது நீடிப்பது எப்படி?

வரலாற்றில் தனியுடமை தோன்றியதும், பெண்ணடிமைத்தனம் உருவானதும் ஒத்திசைந்து நிகழ்ந்ததாக எங்கல்ஸ் ஆதாரங்களுடன் எடுத்து வைக்கிறார். வர்க்க சமூக அமைப்பு உருவான காலம் தொட்டு நிலவும் பெண்ணடிமைத்தனம், நில உடமை சமூகத்தில் தத்துவமாக நிலை பெறுகிறது. முதலாளித்துவ சமூக அமைப்பு, தன் லாபத்துக்காக அதைப் பயன்படுத்துகிறது. புதிய வடிவங்களில் பெண்ணின் மீதான ஒடுக்குமுறை தொடர்கிறது. பண்பாடு அதைத் தொடர்ந்து வலுப்படுத்துகிறது. எனவே முதலாளித்துவ சமூக அமைப்பிலும் நிலைபெற்று நீடிக்கிற இதன் ஆழத்தைப் புரிந்து கொள்ளாமல், ஒரு குடும்பத்தில் ஆணாதிக்கம், மற்றொரு குடும்பத்தில் பெண்ணாதிக்கம் என்று போகிற போக்கில் சமப்படுத்தி விட முடியாது.

உதாரணமாக, பெண் விவசாய தொழிலாளி குறைவான கூலிக்கு உழைக்க நேரும் போது அங்கு பாலினம்/வர்க்கம் என்ற இரண்டு அம்சங்களில் ஒடுக்கப்படுவது நடக்கிறது. தலித் பெண் உழைப்பாளி என்றால், சாதி என்பதையும் சேர்த்து மூன்று விதங்களிலும் அவர் ஒடுக்கப்படுகிறார். தலித்துகளுக்கும், பெண்களுக்கும் குறைவான கூலி கொடுக்கப்படுவதே அவர்களது தாழ்த்தப்பட்ட சமூக அந்தஸ்து காரணமாகத்தான். அதேபோல், பெண்ணை சுமையாகப் பார்க்கும் நில உடமை கருத்தியல் இன்னும் காலாவதியாகி விடவில்லை. முதலாளித்துவ சமூக அமைப்பில், இது பல்வேறு விதங்களில் வெளிப்படுகிறது. உதாரணமாக, முன்னேறிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, பெண்கரு அழிப்பு நடைபெறுவதைக் கூற முடியும்.

கட்சி திட்டத்தின் பாரா 3.15, விவசாய புரட்சியின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக சாதிய, பாலின ஒடுக்குமுறை ஒழிப்பை முன்வைக்கிறது. அரசு கட்டமைப்பு பற்றிய அத்தியாயத்தில், பாரா 5.13ல் அனைத்து துறைகளிலும் முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அரசு ஆணாதிக்கத்தை வலுப்படுத்தியிருக்கிறது; பெண், தொழிலாளி, குடிமகள் என்று பல மட்டங்களில் ஒடுக்குமுறை நடக்கிறது, நவீன தாராளமயமானது பொருளாதாரம் மற்றும் சமூக தளங்களில் புதிய வடிவிலான பாலின சுரண்டலைக் கொண்டு வந்திருக்கிறது என்கிறது. இந்த நிலை வன்முறையை அதிகரிக்கிறது. பொருளாதார சுதந்திரமும், சமூக -அரசியல் வாழ்வில் சுதந்திரமான பங்களிப்பும், பெண்களின் முன்னேற்றத்துக்கான முன்நிபந்தனையாகும். இன்றைய சமத்துவமற்ற நிலையை எதிர்ப்பதுடன், சமத்துவத்துக்கான பெண்கள் இயக்கத்தை, சமூக விடுதலைக்கான இயக்கத்தின் ஒரு பகுதியாகப் பார்க்க வேண்டும் என்று விளக்குகிறது கட்சித் திட்டம். பாரா 5.20வில் இன்றைய பண்பாட்டு வளர்ச்சிப் போக்குகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, மரபு, மதச்சடங்கு என்ற பெயரில் பெண்களை இழிவுபடுத்தும் நாசகரமான பழக்க வழக்கங்கள் நிலவுகின்றன என்பது குறிப்பிடப்படுகிறது.

மக்கள் ஜனநாயக அரசு என்ன செய்யும்?

இச்சூழலில் மக்கள் ஜனநாயகப் புரட்சி நடந்து, மக்கள் ஜனநாயக அரசு அமைந்தால் அது பெண்களுக்கு என்ன செய்யும் என்பதும் திட்டத்தில் இடம் பெற்றிருக்கிறது. தொழிலாளிகளுக்கும், விவசாயிகளுக்கும் நிகழும் முன்னேற்றத்தின் பலன், அவ்வர்க்கங்களில் உள்ள பெண்களுக்கும் போய் சேரும் என்பது ஒரு புறம். அனைவருக்கும் சம உரிமை, சம வேலைக்கு சம ஊதியம் போன்ற நடவடிக்கைகள் உண்மையாக அமலுக்கு வரும். மேலும், பெண்களுக்கு எதிரான சமூக சமத்துவமின்மையும், பாகுபாடும் அகற்றப்படும். நிலம் உள்ளிட்ட சொத்துக்களின் மீது சம உரிமை, அனைத்து சமூகங்களையும் சார்ந்த பெண்களுக்கு சம உரிமையின் அடிப்படையில் சம சட்டங்கள் உறுதி செய்யப்படும்.

முதலாளித்துவ அரசியல் கட்சிகள் குடும்ப அமைப்பைப் பற்றிப் பேசுவது அரிது. அப்படியே பேசினாலும், அது புனிதமானது; கேள்விக்கு அப்பாற்பட்டது என வலியுறுத்துவார்கள். பெண்ணியவாதிகளில் ஒரு பகுதியினர், குடும்பக் கட்டமைப்பு பெண்ணுக்கு எதிரானது; எனவே அது தகர்க்கப்பட வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால்,  மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டமோ இந்த இரண்டையும் நிராகரித்து, குடும்ப அமைப்பு ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும் என மதிப்பீடு செய்கிறது. மக்கள் ஜனநாயக அரசு அமைந்தால் ”குடும்பக் கட்டமைப்பை ஜனநாயகப்படுத்துவதன் பகுதியாக குழந்தை வளர்ப்பு மற்றும் வீட்டு வேலைகளில் பொருத்தமான ஆதரவு ஏற்பாடுகள் செய்யப்படும்” என்பது திட்டத்தில் இடம் பெற்றிருக்கிறது.

சோவியத் யூனியனில் மலிவு விலை உணவகம், சலவையகம், அனைத்து வேலைத்தளங்களிலும் தரமான குழந்தை காப்பகம் உறுதி செய்யப்பட்ட பின்னணியில்தான், சோசலிச அரசு முன்வைத்த சம வாய்ப்புகளை பெண்களால் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. குடும்பத்தின் அல்லது பெண்ணின் கடமையாக இருந்தவை அரசின் பொறுப்பாக மாறியது. இது ஒரு முக்கிய மாற்றம் என்பதையும் இத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.

புதிய முற்போக்குப் பண்பாடு:

பெண்ணடிமைத்தனத்தை மன மாற்றத்தின் மூலம் மட்டுமே ஒழிக்க முடியாது. அதற்கான பவுதீக சூழல் (material conditions) இருக்க வேண்டும். அதே சமயம், பொருளாதார தளத்தில் மாற்றம் வருவது, தானாகவே பண்பாட்டுத் தளத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்து விடாது. அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். அதைப் பற்றியும் கட்சித் திட்டம் கூறுகிறது. அதாவது ஜனநாயக, மதச்சார்பற்ற கண்ணோட்டத்தை உடைய புதிய முற்போக்கு மக்கள் பண்பாடு முன்னெடுக்கப்படும். சாதிய, பாலின பாகுபாடு, வகுப்புவாத வெறுப்புணர்வு, அடிமைத்தனம், மூடநம்பிக்கைகள் போன்றவற்றைப் போக்குவதற்கு இது வழி கோலும்.

எனவே, பெண்கள் மக்கள் ஜனநாயக அணியில் இடம் பெற வேண்டிய வர்க்கங்களின் இன்றியமையாத ஒரு பகுதியினர் என்ற முறையிலும், ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை கிடைக்கப் போராட வேண்டிய சமூகப்பிரிவினர் என்ற முறையிலும் பார்க்கப்பட வேண்டும். ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிரான போராட்டத்தில் வர்க்கரீதியாகவும், சமூகரீதியாகவும் அவர்கள் அணிதிரட்டப்பட வேண்டும், புரட்சிகர போராட்டத்தில் தோளோடு தோள் நிற்கும் போர்ப் படையின் பகுதி அவர்கள் என்ற புரிதல் கட்சி திட்டத்தில் வெளிப்படுகிறது.

குரல்: வெங்கடேஷ்

எடிட்டிங்: மதன் ராஜ்

கட்சி திட்டம் தொடர் – 12

ஆராய்ச்சியாளர் தீபா

இருபதாம் நூற்றாண்டில் நிகழ்த்த பல முக்கிய நிகழ்வுகள் நவீன உலகம் உருவாக அடிப்படையாக அமைத்தது. மனித குலத்திற்கே விடிவெள்ளியாய், ஒரு புதிய ஏற்றத்தாழ்வற்ற சமூகம் என்றால் எப்படி இருக்கும் என்ற கனவை நிகழ்த்தி காட்டிய சோவியத் புரட்சியில் தொடங்கி சீன , கியூபா என பல நாடுகளில் சோசலிச அரசுகள் அமைத்ததும் இந்த நூற்றாண்டில் தான் . இருபதாம் நூற்றாண்டில் மக்கள் புரட்சியின் தாக்கம் மற்றும் முக்கிய புதிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியும் மனிதகுல முன்னேற்றத்திற்கு இதுவரை இல்லாத அளவு புதிய பாதையை உருவாக்கியது.
இந்த நவீன உலகத்தில் எந்த ஒரு சமூகமோ அல்லது நாடோ வளர்ச்சி பெற தொழில் துறையின் வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. தொழிற்துறை மற்றும் உற்பத்தி சக்தியின் பிரம்மாண்ட வளர்ச்சி என்பது அதிநவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவே. ஆகவே உற்பத்தி சக்தி மற்றும் தொழில்துறையின் வளர்ச்சி மக்களின் வாழ்க்கை மேன்பட பயன்படுத்த வேண்டும். இது எப்போது சாத்தியமாகும். இன்றைய நிலை எப்படி இருக்கிறது என்று புரிந்து கொண்டால் தான் மக்களுக்கான வளர்ச்சி எப்படி சாத்தியப்படும் என்று தெளிவடைய முடியும்.

இந்திய விடுதிக்கு பின் : பெரும் பகுதி மக்களின் பங்கேற்பின் விளைவாகவே விடுதலை அடைத்தது இந்தியா . ஆனால் முதலாளி வர்க்கத்தின் கையில் தான் தலைமை இருந்தது. இதன் விளைவாக “புதிய அரசுக்குத் தலைமையேற்ற பெரு முதலாளி வர்க்கம் ஜனநாயகப் புரட்சியின் அடிப்படை கடமையை பூர்த்தி செய்ய மறுத்தது. உற்பத்தி சக்திகளின் விலங்குகளை உடைத்தெறிவதில்தான், இந்திய சமூகத்திற்கு புத்துயிரளிக்கும் பாதை அமைகிறது. புல்லுருவித்தனமான நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்பட்டு விவசாயத் தொழிலாளர்களுக்கும், ஏழை விவசாயிகளுக்கும் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்க வேண்டும். அன்னிய மூலதன ஆதிக்கப் பிடியிலிருந்து தொழில் வளர்ச்சி விடுவிக்கப்பட்டிருந்தால், சுயசார்பு பொருளாதாரத்துடன் கூடிய முன்னேறிய தொழில் வளர்ந்த நாடாக மாற வழியேற்பட்டிருக்கும்” (para 3.2)

இதன் விளைவாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது இல்லாமல் முதலாளிகளின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்ட பொருளாதார கொள்கைகள் உருவாக்கப்பட்டன . முழுமையான மக்கள் ஜனநாயக புரட்சிக்கு இட்டு செல்லாமல் இந்திய முதலாளிகள் நிலப்பிரபுக்களுடன் கூட்டணியும் ஏகாதிபத்தியத்துடன் சமரசமும் செய்து கொண்டது. இதன் விளைவாக பல முரண்களை இந்திய முதலாளிகள் சந்திக்க நேர்ந்தபோதும் தங்களின் வளர்ச்சிக்காகவே  அரசை முழுமையாக பயன்படுத்தினர்.

விடுதலைக்கு பின்னான ஆரம்ப காலகட்டங்களில் பெரும் அளவிலான திட்டங்களுக்கு முதலீடு செய்யும் அளவுக்கு இந்திய முதலாளிகளிடம் மூலதனம் இல்லை. ஆகவே ஆரம்ப கால கட்டமைப்புத்துறை, கனரக தொழில்கள், எந்திர தயாரிப்பு தொழில் ஆகியவை பொதுத்துறை மூலம் சோவியத் உதவியுடன் வளர்க்கப்பட்டது. வங்கி, காப்பீட்டு துறை, எண்ணெய் மற்றும் நிலக்கரி போன்ற இயற்கை வளங்களை தேசிய மயமாக்கியதன் மூலம் அரசு துறை விரிவாக்கப்பட்டது. “அரைகுறை மனதோடு எடுக்கப்பட்டாலும், தொழில் மயமாக்கு வதற்கான வேறு சில கொள்கை முடிவுகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, புதிய காப்புரிமைச் சட்டம், நமது சந்தையில் அன்னிய பொருட்கள் மற்றும் மூலதனம் நுழைவதற்கு கட்டுப்பாடு, சிறுதொழில்களுக்கு பாதுகாப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவில் நிலவிய இந்தச் சூழலில் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய நடவடிக்கைகளால், ஏகாதிபத்திய சக்திகளையே சார்ந்திருக்க வேண்டும் என்ற நிலைமையையும், பின்தங்கிய பொருளாதார தன்மையையும் ஓரளவுக்கு மாற்ற உதவியதோடு தொழில் வளர்ச்சிக்கான தொழில்நுட்ப அடித்தளமும் நிறுவப்பட்டது”.(para 3.7)

அரசு கட்டமைப்புகளை முதலாளிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டனர். இதன் விளைவாக குறுகிய காலத்திலேயே தங்களுக்கு போதுமான மூலதனத்தை முதலாளிகள் சேர்த்துக்கொண்டனர். “1980களின் மத்தியில் அரசிற்கென ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த கேந்திரத் தொழில்களில் நுழையவும், பொதுத்துறை நிறுவனங்களைத் தாங்களே எடுத்துக் கொள்ளவும், அன்னிய மூலதனத்துடன் சேர்ந்து புதிய பகுதிகளில் விரிவடையும் அளவிற்கும் பெரு முதலாளிகள் தயாராக இருந்தனர். இத்துடன் அரசு கடைப்பிடித்து வந்த முதலாளித்துவ பாதையில் ஏற்பட்ட நெருக்கடியும் சேர்ந்து தாராளமயத்தை புகுத்துவதற்கான உள்நாட்டு அடித்தளம் அமைக்கப்பட்டது” para 3.10)

புதிய பொருளாதார கொள்கைக்கு பிந்தைய காலகட்டங்களில் இன்று வரை பொது துறை மாற்று அரசு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு தடையாகவும் முதலாளிகளின் ஏகபோக வளர்ச்சிக்கு இட்டு செல்லும் வகையான பொருளாதார மற்றும் அரசின் அனைத்துக் கொள்கைகளும் உருவாக்கப்படுகின்றன. சர்வதேச அளவிலும் சரி, இந்தியாவிலும் சரி பெரும் முதலாளிகளின் வளர்ச்சி கட்டுக்கடங்காத ஏகபோக வளர்ச்சியை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். உற்பத்தி சத்தி மற்றும் அணைத்து தொழில் வளர்ச்சியும் முதலாளிகளின் கட்டுப்பாட்டிற்குள் வருவதற்காக அணைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதலாளிகளின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற மாயையை உருவாக்கி அறிவியல் மாற்று தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் முதலாளிகளின் லாப நோக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்த படுகின்றது. உழைப்பாளிகளின் உழைப்பு சுரண்டலின் விளைவாகவே முதலாளிகளும், பெரும்  ஒப்பந்த காரர்களும், பன்னாட்டு நிறுவனங்களும் லாபம் ஈட்டி வருகின்றனர். முதலாளித்துவ சமூகத்தில் லாபம் பெருக்க தொழிலாளர் ஒடுக்குமுறைகள் இன்றியமையாதது. இதை அரசு நிறுவனங்களின் உதவியுடன் நேர்த்தியாக நிறைவேற்றி வருகிறது. உற்பத்தி சத்தி மற்றும் தொழிற்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அணைத்து வகையான முயற்சியும் சர்வதேச மற்றும் தேசிய அளவில் கருத்துருவாக்கமும், தலையீடும் செய்ய முழுமுயற்சியில் இறங்கியுள்ளது முதலாளித்துவம்.  புதிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தைப் பயன்படுத்தி உற்பத்தி சக்திகளை தொடர்ந்து வளர்த்துவந்தும்கூட, முதலாளித்துவமானது நெருக்கடியைத் தன்னகத்தே கொண்டதாகவும், அடக்குமுறை, சுரண்டல், அநீதி ஆகிய தன்மை கொண்டதாகும்.

முதலாளித்துவ வளர்ச்சி என்பது சமூக நீதிக்கும் சமத்துவத்திற்கு நேர் எதிரானது. உழைப்பாளிகளின் உழைப்பு சுரண்டலின் மீது கட்டமைக்கப்படுவதே  முதலாளித்துவத்தின் லாபம். இதற்கு மாற்று சோசலிச பாதையே. மக்களின் பொருளாதார முன்னேற்றம் என்பது இல்லாமல் முதலாளிகளின் லாப அதிகரிப்பு என்ற அடிப்படையே கொண்டதான பொருளாதார கொள்கைகளின் காரணமாக தொழில்துறை ஏகபோக நிறுவனங்களின் பிடியிலும் அன்னிய மூலதன ஊடுருவல் என ஒட்டுமொத்தமாக தனியார் மற்றும் முதலாளிகளின் பிடியில் உள்ளது. இது ஏற்றத்தாழ்வு நிறைத்த சமூகத்தையே உருவாக்கி உள்ளது.

தொழில் துறை மற்றும் உற்பத்தி சாதனங்களை பொது மயமாக்குவது, பொதுத்துறை நிறுவனங்களை வலுப்படுத்தும் நடவடிக்கை, தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் மேன்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். புதிய தொழில்நுட்ப வளர்ச்சி, மற்றும் தொழில் துறையின் முன்னேற்றத்திற்கான தேவையின் பொறுத்தே கட்டுப்படுத்த பட்ட அந்நிய மூலதனம் அனுமதிக்கப்படும். வாழ்க்கைச் சம்பளம் என தொழிலாளர்களின் ஊதியம் உயர்த்தப்படும், பணி நேரம் குறைக்கப்படும், தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு உத்திரவாத படுத்தப்படும். தொழிற்சங்க அங்கீகாரம், கூட்டுப்பேர உரிமை, அதேபோன்று வேலைநிறுத்தம் செய்வதற்கான உரிமை, குழந்தை தொழில் ஒழிப்பு என நாம் வாழும் இன்றைய காலகட்டத்தில் உழைக்கும் மக்களின் மீதான அணைத்து ஒடுக்குமுறையும் மக்கள் ஜனநாயக ஆட்சியில் மாற்றியமைக்கப்படும் இது இடது சரி அரசியல் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் தான் சத்தியம். அதற்கான நமது பணியை முழு அர்ப்பணிப்புடன் செயல்முறை படுத்துவோம்.

மார்க்சிஸ்ட் கட்சி குறிப்பிடும் மக்கள் ஜனநாயகமும் அதன் திட்டமும்

கட்சி திட்டம் – 11

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுதி பூண்டுள்ள அதனுடைய லட்சியமான சோசலிச மற்றும் கம்யூனிச சமூகத்தை  நிர்மாணிக்க பாட்டாளி வர்க்க அரசின் தலைமை அவசியம்.   ஒரு பின்தங்கிய முன்னாள் காலனி நாட்டில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் நிலப்பிரபுத்துவ ஒழிப்பு ஜனநாயகப் புரட்சியை நடத்தும் திட்டத்தை முன் வைத்துள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்).  மக்கள் ஜனநாயகத்திட்டத்தின் பிரதான குறிக்கோள் விவசாயப்புரட்சி.  முற்போக்கான நிலச்சீர்திருத்தம் மூலம் நிலப்புரபுத்துவத்தை ஒழித்துக் கட்டுவது மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஏழை விவசாயிகளுக்கும் இலவசாக நிலம் வழங்குவது போன்ற குறிக்கோளை நோக்கி நகரும்.

சமூக விடுதலை மற்றும் சோசலிச மாற்றம் என்ற வழிமுறையானது நீண்டகாலத் தன்மையுடையதும் சிக்கலானதுமாகும்.  முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு மாறிச் செல்வதானது ஒரே தடவையில் நிகழ்ந்து விடக்கூடியதல்ல.  ஆனால், அரசு அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னவரும் கூட வர்க்கங்களன் தீவிரமான போராட்டம் நீண்டதொரு காலம் நடக்கும் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. (கட்சித் திட்டம் பாரா 2.4)

வேகமாக மாறிவரும் அரசியல் சூழலின் தேவைகளை சந்திக்க பல்வேறு இடைக்கால கோஷங்களை கட்சி உருவாக்க வேண்டியிருக்கும் என்பது வெளிப்படையானதாகும்.  (கட்சித் திட்டம் பாரா 7.17)

எனவே தான், கட்சியின் 21வது காங்கிரஸ், இடது ஜனநாயக அணியை இடைக்கால முழக்கமாக, அரசியல் நடைமுறை உத்தியின் ஒரு பகுதியாக அறிவித்து, அந்த அணியை கட்டுவதற்கு முக்கியத்துவமும், முன்னுரிமையும் அளிக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ளது.

இடது ஜனநாயக அணிக்கும் மக்கள் ஜனநாயக அணிக்கும் உள்ள வித்தியாசம்

மக்கள் ஜனநாயக அணி என்பது நமது இலக்கின் முக்கிய பகதி.  அதனை எட்டுவதாற்கு இடது ஜனநாயக அணி என்ற நடைமுறை உத்தி பயன்படும்.  இரண்டிலும் நாம் அணி திரட்ட வேண்டிய பகதியினர் ஒன்றுதான்.  மக்ள் ஜனநாயக அணிக்கு தொழிலாளி வர்க்கம் தலைமை தாங்கமூ.  மக்கள் ஜனநாயக அணி புரட்சியின் மூலம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றும்.  அரசு கட்டமைப்பில் மாற்றத்தைக் கொண்டு வந்து மக்கள் ஜனநாயக அரசை அமைக்கும்.  எனவே, மக்கள் ஜனநாயக அணியின் திட்டம் வேறு.  இடது ஜனநாயக அணியின் திட்டம் வேறு.   இடது ஜனநாயக அணி மக்களின் அரசியல், பொருளாதார உடனடி முன்னேற்றங்களுக்காக பாடுபடும்.  இந்த அணியின் அஸ்திவாரமாக இடது சாரி கட்சிகள், மற்றும் அவற்றின் வர்க்க வெகுஜன அமைப்புகள் இடம்பெறும்.  மேலும் இடதுசாரி குழுக்கள், அறிவு ஜீவிகள் போன்றவர்களும் இந்த அணியில் இடம்பெறுவர்.  தமலும், பல்வேறு கட்சிகளில் சிதறிக் கிடக்கும் சோஷலிஸ்டுகள், மதச்சார்ப்ற்ற முதலாளித்துவ கட்சிகளில் இருக்கும் ஜனநாயகப் பகுதியினர், பழங்குடியினர், தலித்‘, பெண்கள், சிறுபான்மையினர் மத்தியில் செயல்படும் அமைப்புகள், ஒடுக்கப்படும் பகுதியினரின் பிரச்சனைகளை எடுக்கும் சமூக அமைப்புகள் போன்றவர்களை ஒருங்கிணைத்து பொது மேடைக்குக் கொண்டு வருவோம்.  மக்கள் ஜனநாயக அணிக்கு வர வேண்டிய வர்க்கங்களை ஒன்றிணைக்கும் பணிக்கு இடது ஜனநாயக அணி அவசியம்.

மக்கள் ஜனநாயக அணி

தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் விவாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டணி அமைப்பது என்பது மக்கள் ஜனநாயக அணியின் மையமான அம்சம்.  மேலும் இந்த அணியில் அனைத்து உண்மையான நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, ஏகபோக எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளையும் அணி திரட்டலாம்.  விவசாயிகள் எனும் போது ஏழை விவசாயிகள், நடுத்தர விவசாயிகள், நிலப்பிரபுக்கள் அல்லாத பணக்கார விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகள் இந்த அணியில் திரட்டப்படுவர்.  அதே போல கிராமப்புற நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர், அறிவு ஜீவிகள் எனும் பகுதியினர், கல்வி மருத்துவம் உள்ளிட்ட சேவைத் துறைகளில் உள்ளவர்கள், பெரு முதலாளிகள் அல்லாத முதலாளிகள், தொழில் முனைவோர், மாதர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரையும் இந்த அணியின் கீழ் ஒன்றுபடுத்த வேண்டும்.  அனைத்து தேசபக்த ஜனநாயக சக்திகள், முற்போக்கு சக்திகளும் இந்த அணியின் கீழ் திரட்டப்படுவர்.  இந்த அணியின் மூலம் மக்கள் ஜனநாயகப் புரட்சி நடத்தப்படும்.   மக்கள் ஜனநாயகப் புரட்சி வெற்றி பெற்றவுடன் மக்கள் ஜனநாயக அரசு அமைக்கப்படும்.   புரட்சியின் கடமைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்.  கூடவே சோசலிச மாற்றத்திற்கான பணிகள் துவக்கப்படும்.

தனது அணியில் மிகவும் மேம்பட்ட, மிகவும் செயலூக்கமுள்ள, சற்றும் சுயநலமற்ற உழைக்கும் மக்களின் புதல்வர்களையும், புதல்விகளையும் ஒன்றுபடுத்தி அவர்களை உறுதிமிக்க மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்டுகளாகவும், பாட்டாளிவர்க்க சர்வதேசியவாதிகளாகவும் வளர்த்தெடுக்க கட்சி அயர்வின்றி முயற்சி மேற்கொள்கிறது.  (கட்சி திட்டம் பாரா 8.7)

மக்கள் ஜனநாயக அரசு என்னவெல்லாம் செய்யும்?

இப்போதைய முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ அரசை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் மக்கள் ஜனநாயக அரசை நிறுவுவதே முதன்மையான முக்கியமான தேவையாகும்.  இந்தியப் புரட்சியில் நிறைவேறாத ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்றுவதன் மூலமே நாட்டை சோசலிசத்திற்கான பாதையை நோக்கி அழைத்துச் செல்ல முடியும்.  மக்கள் ஜனநாயக அரசு பின்வரும் கடமைகளையும், திட்டங்களையும் நிறைவேற்றும்.  (கட்சித் திட்டம் பாரா 6.2)

அடிப்படை உரிமை என்று கருதப்படுகிற சமூக உரிமைகளே மக்கள் ஜனநாயக அரசின் அடிப்படையான கோட்பாடாக அமையும்.  (கட்சித்திட்டம் பாரா  6.3(19))

தேசிய இனங்கள், மொழிகள், பண்பாடுகளின் பன்முகத்தன்மை மதிக்கப்படுவதோடு வெற்றுமையில் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான கொள்கை வகுக்கப்படும்.  (கட்சித்திட்டம் பாரா 6.3(5))

முழுமையான மனித உரிமை உத்தரவாதப்படுத்தப்படும்.  மக்களின் உரிமைகள் மீறப்படாமல் பாத்துக் கொள்ளப்படுவதோடு, நாட்டின எந்தப் பாகத்திலும் குடியேறும் உரிமையும் பாதுகாக்கப்படும்.  ….மத நம்பிக்கை மற்றும் வழிபாட்டு உரிமை, பேச்சுரிமை, பத்திரிக்கை சுதந்திரம், கூட்டம் கூடும் உரிமை, வேலை நிறுத்தம் சேய்யும் உரிமை, அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் அமைக்கும் உரிமை, இடம் பெயரும் மற்றும் பணியாற்றும் உரிம, மாற்று கருத்துக் கூறும் உரிமை ஆகியவை உத்தவராதப்படுத்தப்படும். ( கட்சித் திட்டம் பாரா 6.3(11))

தொழில் துறை

தொழில் துறையில் உற்பத்தி சாதனங்களை சமூகமயமாக்குவது. பிரதான உற்பத்தி வடிவமாக பொதுத்துறைகளை உருவாக்குவது, உள் நாட்டு, வெளி நாட்டு ஏக போக நிறுவனங்களின் பிடிகளை சிறிது சிறிதாக தளர்த்துவத,போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.  அரசுத்துறை, கூட்டுறவு துறை தனியார் துறை  ஆகிய அனைத்து வகை சொத்துடமைகளும் நீடிக்கும்.  தேசியமயமாக்கல் மற்றும் வேறு வடிகவங்களில் சமூக உடைமையாக்கும் முயற்சிகளம் மேற்கொள்ளப்படும்.  தொடிழலாளாகளும், ஊழியர்களும் கூட்டாக உரிமையாளர்களாக விளங்கக்கூடிய அமைப்புகளையும் கூட்டுறவு துறைகளையும் உருவாக்குவது, அதிநவின தொழில் நுட்பம் தேவைப்படும் துறையில் மட்டும் அன்னிய மூலதனம் அனுமதிக்கப்படும்.

மொழிக் கொள்கை

அனைத்து தேசிய மொழிகளுக்கும் சம உரிமை, அனைவருக்கும் (மொழிச் சிறுபான்மையினர் உட்பட) தாய் மொழி வழிக் கல்வி அடைப்படை உரிமை ஆக்கப்படும்.  உருது மொழிக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படும்.  அனைத்து மொழீகளுக்கும் சம அந்தஸ்து கொடுப்பதன் மூலம் மட்டுமே நாடு முழுவதும் ஏற்க்க் கூடிய தொமடர்பு மொழியாக இந்தி வர முடியும்.  அது வரை தொடர்பு மொழியாக இந்தியையும், ஆங்கிலத்தையும் பயன்படுத்தும் தற்போதைய ஏற்பாடு தொடர வேண்டும்.

கூட்டாட்சி  கோட்பாடு

ஜனநாயகப் பூர்வமானசமஷ்டி அரசு அமைப்புகள் உருவாக்கப்படும்.  விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை பின்பற்றப்படும்.  தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் உரிமை இருக்கும்.  மாநிலங்களுக்கு உண்மையான தன்னாட்சி மற்றும் சம அதிகாரங்கள் உறுதிப்படுத்தப்படும்.  மலைவாழ் மக்களுக்கு சுயாட்சி அமைப்புகள் இருக்கும்.  அதிகாரப் பரவல் என்பது உத்திரவாதப்படுத்தப்படும்.  அனைத்து சமூக அரசியல் நிறுவனங்களும் ஜனநாயக முறையில் செயல்படுத்தப்படும்.  அரசியல் கட்சிகளையும் சங்கங்களையும் அமைக்கும் உரிமைகள் உறுதிபடுத்தப்படும்.  பல கட்சி ஆட்சி அமைப்பு முறை நீடிக்கும்.

ஜனநாயக மதச்சார்பற்ற அணுகுமுறை கொண்ட ஒரு புதிய முற்போக்கான மக்கள் பண்பாட்டை வளர்த்தெடுக்க நமது மக்களின் ஆக்கப்பூர்வமான திறமைகளை மக்கள் ஜனநாயக அரசு மற்றும் அரசாங்கம் உரமூட்டி வளர்க்கும். ………சாதிய, பாலியல் பாகுபாடுகள், மதவெறியில் எழும் வெறுப்புணர்வுகள், அடிமைப்புத்திகள், மூட நம்பிக்கைகளிலிருந்து விடுவிக்க உதவும் அறிவியல் அணுகுமுறையை வளர்த்தெடுக்கும்.  ……இதர நாடுகளில் வாழும் மக்களோடு நமது மக்களுக்கு சகோதரபூர்வமான உணர்வு வளர பாடுபடுவதோடு, இன மற்றும் தேசிய அடிப்படையிலான பகை உணர்வை கைவிடுவதற்கான உணர்வும் வளர்க்கப்படும்.   (கட்சித் திட்டம் 6.3(20))

உலகம் முழுவதும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நெருக்கடிக்கு மக்கள் மாற்றினை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.  நாடுகளில் மக்கள் விரும்பும் மாற்றினை தங்களுடைய கோஷங்களாக மாற்றி மக்கள் முன்பு மிகத் திறமையாக வைக்கின்ற சக்திகள் (அவை வலதுசாரி சக்திகளாக இருந்தால் அவையும், இடதுசாரி சக்திகளாக இருந்தால்  அவையும்) ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டிருக்கின்றன.  இந்தியாவிலும் அப்படிப்பட்ட சூழல் தான் இன்று ஏற்பட்டுள்ளது.  இதை யார் பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்கள் என்பதே நம் முன் உள்ள கேள்வி.  கம்யூனிஸ்ட்டுகளை பொறுத்த வரையில் புறச்சூழல் நமது வளர்ச்சிக்கு சாதகமாக உள்ளது.  அகச்சூழலை பலப்படுத்திக் கொண்டால் நமது இலக்கினை நோக்கி நாம் முன்னேற முடியும்.  இதைத்தான் கட்சித் திட்டம் வலியுறுத்துகிறது.

ஆர். எஸ். செண்பகம், திருநெல்வேலி. 

அயல்துறை கொள்கை : கட்சித்திட்டம் என்ன சொல்கிறது?

– எஸ்.பி.ராஜேந்திரன்

“முதலாளிகளும் நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களும் ஏகாதிபத்திய சக்திகளுடன் கைகோர்த்து கூட்டணி சேர்ந்து கொள்வது என்பதையே தங்களது அயல்துறைக் கொள்கையாகவே வைத்திருக்கிறார்கள்; அவர்கள் எப்போது தங்களது நாட்டின் சுயசார்பை ஏகாதிபத்திய சக்திகளிடம் அடகு வைப்பார்கள்.

ஆனால் பாட்டாளி வர்க்கத்தின் அயல்துறைக் கொள்கை என்பது எப்போதுமே முன்னேறிய நாடுகளில் உள்ள புரட்சிகர சக்திகளுடனும் உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களது நாடுகளுடனும்தான் கூட்டணியே தவிர ஒருபோதும் எந்தவொரு ஏகாதிபத்திய சக்தியுடனும் அல்ல.”

– 1917 நவம்பர் புரட்சிக்கு முன்பு, மாமேதை லெனின் எழுதிய வார்த்தைகள் இவை. இந்த வார்த்தைகளின் விரிவாக்கம் தான், புரட்சிக்கு பிறகு சோவியத் ஒன்றியம் பின்பற்றிய அயல்துறைக் கொள்கை. சோவியத் ஒன்றியம் உலகெங்கிலும் காலனியாதிக்கத்திற்கு எதிரான போராட்டங்களை ஊக்குவித்தது. அடிமை நாடுகளாக சிக்கிச் சிதைந்து கொண்டிருந்த இந்தியா உள்ளிட்ட எண்ணற்ற நாடுகளின் விடுதலைக்கு உந்துசக்தியாக திகழ்ந்தது. இதன் தாக்கம்தான், விடுதலைக்குப் பிறகு இந்தியா உள்ளிட்ட நாடுகளின் அயல்துறைக் கொள்கையில்  பிரதிபலித்தது.

ஆனால் இரண்டு உலகப் போர்களுக்கு பின்னர் – குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்கு பின்னால் உலக முதலாளித்துவமானது தனது கைகளில் நினைத்துப் பார்க்க முடியாத விதத்தில்  மிகப் பெரும் அளவில் மூலதனத்தை குவித்தது. ஒருபுறம் சோவியத் ஒன்றியம் பிரம்மாண்டமான வளர்ச்சியை எட்டியது; மறுபுறம் சோவியத் ஒன்றியத்தை வீழ்த்துவதையே இலக்காக கொண்டு முதலாளித்துவம் சர்வதேச பொருளாதார அரங்கிலும் அரசியல் அரங்கிலும் எண்ணற்ற சதிராட்டங்களை அரங்கேற்றியது.

1990களில் சோவியத் ஒன்றியம் பின்னடைவை சந்தித்தபிறகு முதலாளித்துவத்தின் மூலதனக் குவிப்பு இன்னும் தீவிரமடைந்தது, அது 20ஆம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகளில்தான்  இந்தாண்டுகளில் தான் தாராளமயம்- தனியார்மயம் – உலகமயம் ஆகிய கோட்பாடுகளை உள்ளடக்கிய நவீன தாராளமயக் கொள்கைகளை சர்வதேச நிதி மூலதனம் உலகெங்கிலும் உந்தித் தள்ளியது. இந்தியா உள்ளிட்ட வளர்முக நாடுகளின் சந்தைகளை குறிவைத்து ஆக்டோபஸ் கரங்களாக  மிகப்பெரும் லாப வேட்கையுடன் சர்வதேச நிதி மூலதனம் பாய்ந்து வந்தது. இந்தியாவின் சந்தைகள் அந்நிய மூலதனத்திற்காக – அந்நிய உற்பத்தி பொருட்களுக்காக திறந்துவிடப்பட்டன. லாபம், மேலும் லாபம் என்பதையே மட்டும் குறியாக கொண்ட சர்வதேச நிதி மூலதனம், இந்தியாவின் உள்நாட்டு தொழில்களை அழித்தொழித்தது. வளர்முக நாடுகள் அனைத்திலும் இதுதான் நடந்தது.

இத்தகைய தன்மையுடன் கூடிய உலகமயம் என்பது, முதலாளித்துவச் சுரண்டலின் உச்சக்கட்டமான ஏகாதிபத்தியம் என்பதை நோக்கிய ஏகபோக முதலாளித்துவத்தின் பயணத்தில் ஒரு முக்கியமான கட்டமாகும். கடந்த 30 ஆண்டு காலத்தில் இந்தக் கட்டம் தீவிரமடைந்துள்ளது. மேலும் மேலும் மூலதனக்குவிப்பு- லாபவெறி என்ற இந்த பயணத்தில் தடையாக இருக்கிற அனைத்தையும் தகர்ப்பது என்பதே ஏகபோக முதலாளித்துவத்தின் வேட்கை.

சோவியத் ஒன்றியம் வீழ்ந்து விட்டதால், இனி எதிர்ப்பதற்கு ஆள் இல்லை என்ற எண்ணத்துடன், எண்ணெய் வளமிக்க இராக்கில் துவங்கி ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா உள்பட கடந்த 30 ஆண்டு காலத்தில் எண்ணெய் வள பூமிகளில் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகள் எண்ணற்ற போர்களை நடத்தியுள்ளன. லட்சக்கணக்கான உயிர்களைப் பறித்துள்ளன. நூற்றுக்கணக்கான பயங்கரவாதக் குழுக்களை உருவாக்கியுள்ளன. இயற்கை பேரிடர்களை விட தனது லாப வேட்கைக்காக ஏகாதிபத்திய சக்திகள் நடத்திய படுகொலைகளும் இரத்த வெறியாட்டங்களும் மனிதப் பேரழிவுகளுமே அதிகம்.

சோவியத் ஒன்றியம் இல்லாத பின்னணியில், இன்றைக்கு ஏகாதிபத்திய சக்திகளுக்கு சவால் விடும் சக்திகளாக – ஏகாதிபத்திய சக்திகளிடம் அடிபணிந்து போகாத பிரம்மாண்டமான சக்திகயாக சோசலிசம் சீனா திகழ்கிறது. அத்துடன் நிலவிய ரஷ்யாவும் அமெரிக்க அடாவடித்தனத்தை எதிர்க்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம், 2008ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் ஆழத்திலிருந்து மீண்டுவருவதற்கு இன்னும் முயற்சி செய்து கொண்டிருக்கின்ற நிலையில், சீனாவின் பொருளாதாரம் பிரம்மாண்டமான வளர்ச்சியை கடந்த 10 ஆண்டுகாலத்தில் எட்டியுள்ளது. புடின் தலைமையிலான ரஷ்யா – அது இன்றைக்கு முதலாளித்துவ அரசியலமைப்பு நிலவுகிற நாடாக உள்ள போதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஏற்க மறுக்கிற – அமெரிக்காவின் சூழ்ச்கிகளை அனைத்து நிலைகளிலும் எதிர்க்கிற சக்தியாக நீடிக்கிறது.

ஒருபுறம் அமெரிக்கா மற்றும் அதன் தலைமையிலான ஏகபோக முதலாளித்துவ சக்திகள்; மறுபுறம் ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளின், அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு முற்போக்கு மற்றும் புரட்சிகர சக்திகள். பளிச்சென்று இந்த உலகைப் புரிந்து கொள்வதற்கு இது போதுமானது. ஆனால் இந்த இரண்டு சக்திகளுக்கும் இடையில் நடக்கிற மோதலில் இந்தியா எங்கே இருக்கிறது என்கிறகேள்விதான் இந்தியாவின் அயல்துறைக் கொள்கையை தீர்மானித்துக் கொண்டிருக்கிறது.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப்பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் – நரசிம்மராவ் துவங்கி – வாஜ்பாய் வழியாக – இன்றைய மோடி வரை -அனைவருமே தங்களுக்கு பாதுகாப்பு அரண் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகளிடம்தான் இருக்கிறது என்று தப்புக்கணக்கு போட்டு நகரத் துவங்கிவிட்டார்கள். இந்த சாய்மானத்தை அமெரிக்க ஏகாதிபத்தியம் கவ்விப்பிடித்துக்கொண்டது. சீனாவையும் ரஷ்யாவும் பல வழிகளில் நிர்ப்பந்திப்பதற்கும் தடுத்து நிறுத்துவதற்கும் புவி அரசியல் ரீதியாக இந்தியாவை பயன்படுத்த முடியும் என்று கணக்கு போட்டது.  முதலாளித்துவம் மற்றும் நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்கள் ஏகாதிபத்தியத்துடன் கைகோர்ப்பார்கள் என்று லெனின் சொன்னதுபோல இந்தியாவின் முதலாளித்துவம் மற்றும் நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்கள் ஏகாதிபத்திய சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

மோடி அரசின் ஏகாதிபத்திய ஆதரவு

இந்த நிலை, இந்தியாவைப் பாசிச பாதையில் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ள மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தபிறகு கடந்த 3 ஆண்டு காலத்தில் இன்னும் மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. இதை விளக்குவதற்கு இரண்டு  உதாரணங்கள் பொருத்தமாக இருக்கும்.

ஒன்று அமெரிக்காவுடனான பாதுகாப்பு உடன்பாடுகள்; மற்றொன்று இஸ்ரேலுடனான ஆயுத பேரங்கள்.

1990களில் நரசிம்மாராவ் ஆட்சிக்காலத்தில் முதன்முதலில் அமெரிக்காவுடன் ராணுவப் பயிற்சி மற்றும் கூட்டு ராணுவ ஒத்துழைப்புக்கு இந்தியா உடன்பட்டது. அது 1998இல் வாஜ்பாய் ஆட்சிக்கு வந்தபிறகு, அமெரிக்காவின் இளைய கூட்டாளி என்று சொல்லும் அளவிற்கு நிலைமை சென்றது.

2015இல் மோடி ஆட்சிக்கு வந்தபிறகு அமெரிக்காவுடன் 10 ஆண்டு காலத்திற்கு பாதுகாப்பு வரையறை ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதனடிப்படையில் அடுத்தடுத்து 3 உடன்பாடுகள் கையெழுத்தாகின. தளவாடங்கள் கையாளுவதற்கான  உடன்பாடு, தகவல் தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்ற புரிந்துணர்வு உடன்பாடு, அடிப்படை விபரங்களை பரிமாறி கொள்வது மற்றும் ஒத்துழைப்பு உடன்பாடு ஆகியவையே அவை.

இதன் அர்த்தம் என்ன?

அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் அனைத்திற்கும் இந்தியாவின் துறைமுகங்கள், ராணுவ தளங்கள், விமானப்படை தளங்கள், விமான நிலையங்கள் போன்றவற்றை தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம்; அமெரிக்க ஆயுதப்படைகள் போரில் ஈடுபடும் போது தேவைப்பட்டால் இந்திய ராணுவ தளவாடங்களையும் ஆயுதங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்; அமெரிக்க ராணுவப் படைகளோடு இந்திய ராணுவப் படைகளும் ஆயுதமேந்தி எந்த விதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம் என்பதுதான் மேற்கண்ட உடன்பாடுகளின் சாராம்சம்.

இதைப் பளிச்சென்று புரிந்து கொள்ள வேண்டுமானால், இந்தியா ஒட்டுமொத்தமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ராணுவத் தளமாக மாறப் போகிறது என்று அர்த்தம். இந்தியாவில் தங்களது படைகளை இறக்கி, இங்கிருந்து கொண்டு சீனாவையும் ரஷ்யாவையும் மிரட்டுவதற்கோ அல்லது தாக்குவதற்கோ அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு நீண்டகால ராணுவ சூழ்ச்சி திட்டத்தோடு தயாராகிறது என்று அர்த்தம். இந்தியாவின் அமைதியை சீர்குலைத்து இதை ஒரு போர் பூமியாக மாற்ற போகிறது என்று அர்த்தம்.

இது அப்பட்டமான தேசவிரோதம்

மற்றொரு முக்கிய அம்சம், இஸ்ரேலுடனான ராணுவ பேரங்கள். அரபு பிரதேசத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வேட்டை நாயாகவே செயல்பட்டு வருகிறது இஸ்ரேலிய இன வெறி அரசு. பாலஸ்தீன மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட இஸ்ரேலிடம்தான் கடந்த 15 ஆண்டுகாலமாக ஏராளமான ஆயுதங்களையும் தளவாடங்களையும் இந்திய பாதுகாப்புத்துறை கொள்முதல் செய்திருக்கிறது. இஸ்ரேலிய ராணுவமே வாங்காத அளவிற்கு அதிகமான விலையில் இஸ்ரேலிய ஆயுதக் கம்பெனிகளிடமிருந்து இந்திய ராணுவத்திற்கு – இந்திய படைகளுக்கு ஆயுதம் வாங்கியிருக்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சிகரமான தகவல். இதில் மிகப்பெரும் ஊழல்கள் நடக்கின்றன என்பது தனிக்கதை.

இதுமட்டுமல்ல, கடந்த மூன்று ஆண்டுகளில் எண்ணற்ற நாடுகளுக்கு பயணம் செய்த பிரதமர் மோடி ஆயுத பேரங்கள், அதானி- அம்பானிக்கான பேரங்கள் ஆகியவற்றை மேற்கொண்டதைத் தவிர வேறெதையும் செய்யவில்லை. அனைத்துப் பயணங்களிலும் பயங்கரவாத ஒழிப்பு மட்டுமே அவரது பேச்சுக்களில் பிரதானமாக இருந்திருக்கிறது. உலகெங்கிலும் பயங்கரவாதத்தைத் தூண்டிவிட்ட ஏகாதிபத்திய சக்திகளுடன் கூடிக் குலாவிக் கொண்டே அவர் பேசுகிறார்.

மறுபுறத்தில் சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் உறவுகள் நாளுக்குநாள் மோசமடைகின்றன. குறிப்பாக சீனாவுடனான நல்லுறவு கடந்த மூன்று ஆண்டுகளில் படிப்படியாக சீர்குலைந்து, பரஸ்பரம் நம்பிக்கையின்மை என்ற நிலைமைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இவை எதுவும் தற்செயலான நிகழ்வுகள் அல்ல.

ஏகாதிபத்திய சக்திகளுடன் மேலும் மேலும் நெருங்கும் போது உலகின் முற்போக்கான சக்திகளிடமிருந்து இந்தியா தனிமைப்படுகிறது. மகத்தான இந்தியாவின் வரலாற்றில் இப்படி நிகழ்ந்ததே இல்லை. அணி சேராக் கொள்கையின் ஆதர்ச நாடுகளில் ஒன்று இந்தியா. சமீப காலங்களில் பிரிக்ஸ் என்ற பெயரில் பிரேசில்- ரஷ்யா- இந்தியா – சீனா – தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளது கூட்டமைப்பு பலமான சக்தியாக உருவான போதிலும், ஏகாதிபத்திய ஆதரவு நேட்டோ ராணுவ கூட்டணிக்கு இணையாக பசிபிக் மற்றும் வளர்முக நாடுகளின் வலுவான கூட்டணியாக வளர்ந்து கொண்டிருக்கிற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியாவுக்கும் இடமளிக்கப்பட்ட போதிலும் மோடி அரசின் நகர்வு மேலும் மேலும் ஏகாதிபத்தியத்தின் ஏவலாளி என்ற நிலையை நோக்கியே இருக்கிறது. சீனாவின் முன்முயற்சியில் கிட்டத்தட்ட நூறுநாடுகள் இணைந்துள்ள மிகப் பிரம்மாண்டமான வர்த்தக கூட்டணியான “பிஆர்ஐ” என்று சொல்லப்படுகிற ஒரே சாலை திட்டத்தில் இந்தியா மட்டும் இணையவில்லை. இதன் விளைவு, ஆசிய பசிபிக் பிராந்தியத்திலேயே இந்தியா மட்டும் தனிமைப்பட்டு நிற்கிறது. பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளுடனும் உறவுகள் மோசமடைந்துள்ளன. ஆப்பிரிக்க நாடுகளுடனும் சொல்லிக்கொள்ளும்படியான நல்லெண்ண உறவு இந்தியாவுக்கு இல்லை. ஆப்பிரிக்க மாணவர்கள் மீது தில்லியிலும் இதர பல இடங்களிலும் இந்துத்துவா மதவெறியர்கள் நடத்திய தாக்குதல்களை மோடி அரசு அலட்சியமாக கையாண்டது. அது எதிர்த்து இந்தியாவில் உள்ள 44 நாடுகளின் தூதர்கள் கூட்டம் நடத்தி தீர்மானம் போட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது.

இந்திய ஆட்சியாளர்கள் தங்களது அயல்துறை கொள்கையை தொடர்ந்து ஏகாதிபத்திய ஆதரவு நிலையில் கொண்டு செல்வதும் உலகளவில் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் தொலைநோக்கு அடிப்படையிலான சூழ்ச்சிகளுக்கு இந்தியா ஒரு களமாக மாறுவதும் நமது அயல்துறை கொள்கைகளுக்கும் நலன்களுக்கும் முற்றிலும் விரோதமானது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சித்திட்டம் விளக்குகிறது. கட்சித்திட்டத்தின் பத்தி 4.4 இல் இதன் சாராம்சம் அளிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பாதையை கைவிட்டு இந்தியா ஒரு சுயேட்சையான அயல்துறை கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று கட்சித்திட்டம் வலியுறுத்துகிறது.

 

 

கம்யூனிஸ்ட் கட்சி திட்டம் 9: இந்திய அரசு யாருக்கானது?

ஒவ்வொரு கட்சியும் ஆட்சிக்கு வரும் போது, “இது ஏழை எளிய மக்களுக்கான அரசு” என்று ஒரு பொய்யினை அடிக்கடி கூறுவதுண்டு. ஆனால், ஆட்சி செயல்படும்போது, அவர்கள் யாருக்காகச் செயல்படுகிறார்கள் என்ற உண்மை வெட்ட வெளிச்சமாகி விடும்.

எடுத்துக்காட்டாக, தற்போதைய மோடி அரசினைக் குறிப்பிடலாம்.மோடி தேர்தலின்போது ‘விவசாயிகள் தற்கொலையைத் தடுத்து நிறுத்துவேன்’, ’அனைவருக்கும் வேலை,’ ‘பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவேன்’ என்றெல்லாம் சாதாரண மக்களின் வாழ்க்கைத் தேவைகள் தொடர்பான வாக்குறுதிகளை அளித்தார்.

ஆனால் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பது மட்டுமல்ல,பெரு முதலாளிகளின் சொத்து, மூலதன அதிகரிப்பதற்கு இடையறாது பாடுபட்டு வருகிற அரசாக  மோடி அரசு செயல்பட்டு வருகிறது..பெரு முதலாளிகள் மற்றும் அந்நிய மூலதனத்தோடு அது கைகோர்த்துள்ளது என்பதற்கு அதிக விளக்கம் தேவையில்லை.அவர்களின் சேவகனாக விசுவாசத்துடன் செயல்பட்டு வருகிறது.

அரசு என்பது என்ன?

உண்மையில் அரசு என்பது ஒரு குறிப்பிட்ட வர்க்கங்களின் குரலாகவும்,அவர்களின் நலனைப் பாதுகாக்கும் ஏற்பாடாகவே உள்ளது.

மனிதச் சமூகம் வர்க்கங்களாகப் பிளவுண்டபோது அரசு தோன்றியது.ஆளும் வர்க்கங்களுக்கு, வெகு மக்களை அடக்கி, ஒடுக்கி ஆள்வதற்கு ஒரு அமைப்பு தேவைப்பட்டது.அதற்கு  அரசு இயந்திரம் பயன்பட்டு வந்துள்ளது..

மக்களை ஒடுக்குவதே,தற்கால முதலாளித்துவ அரசுகளின்  செயல்பாடாக அமைந்துள்ளது.இந்த அரசைத் தகர்த்து, இதுகாறும் ஒடுக்கப்பட்டு வந்த மக்களின் புதிய அரசு மலர வேண்டும். இது தானாக உருவாகிவிடாது.

ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் வர்க்கக் ஒற்றுமை ஏற்பட்டு, வர்க்கக் கூட்டணி அமைய வேண்டும். அந்த வர்க்க கூட்டு நிகழ்த்தும் புரட்சியே முதலாளித்துவ அரசு அகற்றி,மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வழி.

தொழிலாளிகள்.விவசாயிகள் மற்றும் இதர உழைக்கும் வர்க்கங்களிடையே எவ்வாறு வர்க்க ஒற்றுமை ஏற்படும்.இங்குத்தான் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு உள்ளது.வர்க்கக் ஒற்றுமை . கட்டி, வர்க்க கூட்டணி அமைத்துப் புரட்சியை முன் கொண்டு செல்வது, கம்யூனிஸ்ட் கட்சி .

துல்லியமான ஒரு ஆய்வு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தில் “சுதந்திரமும்,அதற்குப் பின்னரும்,”என்ற மூன்றாவது தலைப்பில் இந்தியச் சமுகத்தில் உள்ள வர்க்கங்கள்,அவர்களின் வாழ்க்கை நிலை, வேறுபட்ட பல வர்க்கங்களின் வாழ்வில் அரசின் கொள்கைகள் ஏற்படுத்தி வரும் தாக்கம் போன்றவை விளக்கப்பட்டுள்ளன.

இந்தத் தலைப்பின் கீழ் இந்தியச் சமுகத்தில் உள்ள வர்க்கங்கள் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பல  கருத்தாக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இது துல்லியமான ஒரு ஆய்வு. வர்க்கங்கள் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் வர்க்கங்களை, திரட்டிப் புரட்சிகர மாற்றம் ஏற்படுத்தும் பணி சாத்தியமில்லை.இந்த தேவையை மூன்றாவது அத்தியாயம் நிறைவேற்றுகிறது.

எதிரி யார்?

வர்க்கங்களை ஒடுக்கி ஆட்சி செய்து வரும் ஆளும் வர்க்கங்கள் எவை என்பதிலும் தெளிவு தேவை. எந்த எதிரிக்கு எதிராக வர்க்கக் கூட்டணி உருவாக்க வேண்டும்? இந்த அரசு யாருக்கானது?எந்த வர்க்கங்கள் இந்த அரசில் அங்கம் வகித்து மக்களை ஒடுக்கி வருகின்றன? இவை பற்றிய தெளிவு தேவைப்படுகிறது.

இதற்கான விடைகளை “அரசு கட்டமைப்பும் ஜனநாயகமும்” என்ற தலைப்பிலான  ஐந்தாவது அத்தியாயம் கொண்டுள்ளது. துவக்கமாக  வருகின்ற பத்தி வரலாற்று முக்கியத்துவம் பெற்றது.

“இன்றைய இந்திய அரசு என்பது பெரு முதலாளிகளால் தலைமை தாங்கப்படுகிற முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ வர்க்க ஆட்சியின் கருவியாகும். இந்த அரசு முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையைப் பின்பற்றும் பொருட்டு, அன்னிய நிதி மூலதனத்துடனான தனது ஒத்துழைப்பை அதிகரித்துக் கொண்டு வருகிறது. நாட்டு மக்களின் வாழ்க்கையில் அரசின் பங்கையும், செயல்பாட்டையும் வர்க்கத் தன்மைதான் முக்கியமாகத் தீர்மானிக்கிறது”. (பாரா:5.1 )

மாபெரும் உட்கட்சி விவாதங்களால் உருப்பெற்ற நிர்ணயிப்பு இது.

இந்திய அரசு இந்தியாவில் உள்ள  முதலாளித்துவ வர்க்கங்கள் மற்றும்  நிலப்பிரபுத்துவத்தின்  கருவியாகச் செயல்படுவதைக் கட்சித்  திட்டத்தின் இந்தப் பத்தி அழுத்தமாகக் குறிப்பிடுகிறது.

மற்றொரு தெளிவையும் இது வரையறுக்கிறது.   முதலாளி வர்க்கப் பிரிவுகளில் எந்தப் பிரிவு ஆதிக்கம் செலுத்துகிறது?பெரு முதலாளித்துவ வர்க்கமே அரசின் தலைமை வர்க்கமாக உள்ளது.அதாவது,இந்த ஆட்சி முதலாளித்துவ ஆட்சியாக இருந்தாலும், பெருமுதலாளி வர்க்கத்தின் நலம் தான் ஆட்சியின் கொள்கைகளை நிர்ணயிக்கும் முக்கிய அடிப்படையாக உள்ளது.

தற்போதைய நிலையில் இது தெள்ளத் தெளிவாகப் புலனாகிறது. அரசின் அந்நிய மூலதனத்தை இந்தியப் பொருளாதாரத்தில் தடையின்றி நுழைத்திட ஏராளமான வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி வருகிறது.அரசின்  இந்தக் கொள்கைகளால் பெருமுதலாளிகள் அல்லாத பல பிரிவினர் அதிருப்தி அடைகின்றனர்.எனினும் பெரு முதலாளிகளின்  இலாப வேட்டைக்கும்,மூலதனக் குவியலுக்கும் இது உதவிடும் என்பதால் இந்தக் கொள்கையை விடாப்பிடியாகக் கடைப்பிடித்து வருகின்றனர்.எனவே ஆளும் வர்க்கக் கூட்டிற்குப் பெரு முதலாளிகளே தலைமை தாங்குகின்றனர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி அல்லாத பல கட்சிகள் ஆளும் வர்க்கக் கட்டமைப்பு பற்றித் தெளிவான பார்வை கொண்டிருக்கவில்லை. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தில் சில மாறுதல்கள் இருந்தாலும் பெருமுதலாளிகள்  தலைமை என்பதை இன்னமும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. முதலாளித்துவக் கூட்டணியில் வலுவான, குறிப்பிடத்தக்க தாக்கம் செலுத்துகின்றனர் என்றே அவர்கள் கருதுகின்றனர். ஆனால் இது உண்மை நிலைக்கு மாறானது. அதிலும் நவீன தாராளமயக் காலத்தில் பெரு முதலாளிகளின் பலம்தான் அதிகரித்துள்ளது, அவர்களது மூலதனக் குவியலும் அதிகரித்துள்ளது.

இந்திய அரசினைக் கட்டுப்படுத்துகிற, முதலாளித்துவ வர்க்கக் கூட்டணியில்  பெரு முதலாளிகள் தலைமைப் பொறுப்பில் உள்ளனர் என்ற மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் உண்மையானது என்பதனை இன்றைய இந்திய அரசியல் நடப்புகள் தெளிவாக்குகின்றன.

மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம்,   நிலப்பிரபுத்துவம்  ஆட்சி அதிகாரத்தின் அங்கமாக இருக்கிறது என்று வரையறுக்கிறது. ஆனால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி  நிலப்பிரபுத்துவம் அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்துகிறது என்று மட்டுமே குறிப்பிடுகிறது.இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியும் பெரு முதலாளிகள் தலைமை எனும் கருத்தாக்கத்தை ஏற்கவில்லை.அதிகாரத்தில் நிலப்பிரபுத்துவத்தின் இடம் குறித்தும் அவர்களுக்கு மாறுபட்ட பார்வை உண்டு.

கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் அரசின் வர்க்கத் தன்மை குறித்து நீண்ட விவாதங்கள் நடைபெற்றுள்ளன. மார்க்சிஸ்ட் கட்சியின்  நிலையிலிருந்து மாறுபட்ட பார்வையுடன் இதர இயக்கங்கள் செயல்படுகின்றன.எனினும் முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ, அந்நிய நிதிமூலதன நலன்களைப் பாதுகாக்கும் கருவியாக  இந்திய அரசு செயல்படுகிறது என்பதில் கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்குள் மாறுபட்ட கருத்து இல்லை. அதனால்தான், தற்போது இடதுசாரி மேடையில் கூட்டுச் செயல்பாடுகள், கூட்டு இயக்கங்கள் அதிகரித்து வருகின்றன.

திட்டவட்டமான நிலைமைகள் குறித்த திட்டவட்டமான ஆய்வே, மார்க்சியத்தின் முக்கிய சாராம்சமும், மார்க்சியத்தின் உயிர்த்துடிப்புள்ள ஆன்மாவும் ஆகும் என்றார்,லெனின்.

இந்த லெனினிய பார்வையுடன் மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் அமைந்துள்ளது. இந்திய சமுகத்தின் வர்க்கக் கட்டமைப்பு, உழைக்கும் பாட்டாளி வர்க்கங்களின் மீது ஒடுக்குமுறை, சுரண்டலை நிகழ்த்தும் ஆளும் வர்க்கக் கட்டமைப்பு ஆகிய இரண்டையும் பிசிறின்றி விளக்கிடும் ஆவணமாகக் கட்சி திட்டம் அமைந்துள்ளது. வர்க்கக் கட்டமைப்புகள் பற்றிய இந்தப் பார்வை பாட்டாளி வர்க்கம் புரட்சிக் கடமையை ஆற்றிட வழிகாட்டுகிறது.

கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் – 8

கட்சி திட்டத்தில் வேளாண் பிரச்சினை

விஜூ கிருஷ்ணன்

இந்திய மக்களின் முன் உள்ள முதன்மையான தேசிய பிரச்சினை வேளாண் பிரச்சினை தான் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் தெளிவாகக் கூறுகிறது. இப்பிரச்சினையின் தீர்வுக்கு புரட்சிகர மாற்றம் அவசியம். நிலப்பிரபுத்துவத்தை அழித்தொழிப்ப தும் வேளாண் தொழிலாளருக்கு நிலங்களை பிரித்துக்கொடுப்பது உள்ளிட்ட தீவிரமான நிலச் சீர்திருத்தமும் தேவை. லேவாதேவி-வணிகர் சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவருவதும், பாலின மற்றும் சாதிய ஒடுக்குமுறைகளை அழிப்பதும் அவசியம்.

புரட்சியின் முதல் கட்டத்தில் நாடு விடுதலை பெற்றது. விடுதலை ஏகாதிபத்தியம் மற்றும் நிதி மூலதனத்தின் பிடியில் இருந்து இந்தியாவை முழுமையாக விடு விக்கவில்லை. நிலப்பிரபுத்துவத் தில் இருந்து முதலாளித்துவத்திற்கான பயணத்தையும் நிறைவு செய்யவில்லை.

விடுதலைக்குப்பின் இந்திய முதலாளி வர்க்கம் நிலப்பிரபுக்களுடன் கூட்டணி அமைத்துக்கொண்டது. ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்துகொண்டது. நிலச்சீர்த்திருத்தங்களை அமலாக்கி உற்பத்தி சக்தி களை கட்டவிழ்த்து விடுவதற்கு பதில் அவர்கள் ஒருபுறம் அரை நிலப்பிரபுத்துவ நில உடைமையாளர்களை முதலாளித்துவ நிலப்பிரபுக்களாக மாற்றுவதற்கான கொள்கைகளை பின்பற்றினர். மறுபுறம், ஒரு பணக்கார விவசாயப் பகுதியையும் வளர்த்தனர். நிலப்பிரபுக்களுக்கு அதிகமான நட்ட ஈடு வழங்கப் பட்டது. அதேசமயம், ஜமீன்தாரி மற்றும் முந்தையகால சட்டபூர்வமான நிலப்பிரபுத்துவத்தை ஒழித்திட எடுக்கப்பட்ட சட்டபூர்வநடவடிக்கைகள் அரைமனதுடன் அமலாக்கப்பட்டன. நிலப்பிரபுக்கள் தொடர்ந்து தம் கைகளில் பினாமி நிலம் உள்ளிட்டு பிரம்மாண்ட மான நிலக்குவியலை வைத்துக்கொண்டனர். குத்தகை தொடர்பான சட்டங்களை முடக்கி, சொந்த சாகுபடி என்றபெயரில் நிலங்களை மீண்டும் கையகப்படுத்தி பல லட்சக்கணக்கான குத்தகை விவசாயிகள் வெளியேற்றப்பட்டனர். பலலட்சக் கணக்கான ஏக்கர் உபரி நிலங்கள் கையகப்படுத்தப்படவில்லை. மறு விநியோகம் நடக்கவில்லை. ஆளும் வர்க்கக்கொள் கைகள், பொதுமுதலீடுகள், கடன் வசதி, மானியங் கள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள், பாசனம் மற்றும் இதர அரசு திட்டங்களால் நிலப்பிரபுக்களும் பணக்கார விவசாயிகளும் பயன்பெற்றனர். இது ஏற்றத்தாழ்வை அதிகரித்தன.

பெரும்பகுதி மக்களுக்கு வறுமையும் வேலையின்மையும் ஊட்டச்சத்தின் மையும் தான் கிடைத்தது. முதலாளித்துவ நிலப் பிரபுத்துவ ஆட்சி ஜனநாயக தன்மையில் வேளாண் பிரச்சினையை தீர்க்க தவறியது.

இந்திய புரட்சி ஜனநாயக கட்டத்தில் உள்ளது. புரட்சியின் தன்மை: ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலபிப்ரபுத்துவ எதிர்ப்பு, ஏகபோக மூலதன எதிர்ப்பு என்பதாகும். மக்கள் ஜனநாயகப் புரட்சியின் அச்சாணி வேளாண் புரட்சியாகும். இதன் மையப்புள்ளியும் இயக்குசக்தியும் தொழிலாளி – விவசாயி கூட்டணி யாகும். தொழிலாளிகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான உறுதியான கூட்டணியின் அடிப் படையில் தான் நாம் மக்கள் ஜனநாயகப் புரட்சியை நோக்கி செல்ல முடியும். மக்கள் முன்னுள்ள உடனடி இலக்கு இக்கூட்டணியின் அடிப்படையில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் அனைத்து உண்மையான நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, ஏகபோக எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளையும் இணைத்து மக்கள் ஜனநாயக அமைப்பை நிறுவுவதாகும். திட்ட வட்டமான மாற்றின் அடிப்படையில் கிராமப்புற மக்களை மக்கள் ஜனநாயக முன்னணி திரட்ட வேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் அடிப்படை யான நேச சக்திகள் முற்றிலும் கருணையற்று சுரண்டப்படுகின்ற விவசாயத்தொழிலாளர்களும் ஏழை விவசாயிகளும் ஆகும். சுரண்டலுக்கு உள்ளா கும் நடுத்தர விவசாயிகளும் நம்பகமான நேச சக்திகள். பணக்கார விவசாயிகளில் ஒருபகுதியினர் நமது வர்க்க கூட்டணியை ஆதரிக்க வாய்ப்பு உண்டு. ஆனால் இப்பிரிவு உறுதியற்ற தன்மைகொண்டது. மைய மற்றும் நம்பகமான நேச சக்திகள் வலுவடைந்து மக்கள் ஜனநாயகப் புரட்சி வெற்றிபெறும் என்ற கருத்து உருவாகும் நிலையில் தான் ஒருபகுதி பணக்கார விவசாயிகள் மக்கள் ஜனநாயக முன்னணியின் பக்கம் வரக்கூடும்.

மக்கள் ஜனநாயகப் புரட்சியின் வேளாண் திட்டம் என்ன? மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மிக முக்கியமான கடமை வேளாண் துறையில் உற்பத்தி சக்திகளை கட்டிப்போட்டுள்ள நிலப்பிரபுத்துவ, அரை நிலப் பிரபுத்துவ மிச்சங்களை எல்லாம் தவிர வேளாண் சீர்திருத்தங்கள் மூலம் முற்றிலும் அகற்றுவதாகும். நில ஏகபோகத்தை தகர்க்காமல், ஏழை விவசாயி கள், விவசாயத்தொழிலாளர்கள் மற்றும் சிறு கைவினைஞர்கள் நிலப்பிரபுக்கள் மற்றும் லேவாதேவிக் காரர்களிடம் சிக்கியுள்ள கடன்சுமையில் இருந்து விடுவிக்காமல் நாட்டின் பொருளாதார, சமூக மாற்றம் சாத்தியமல்ல.

மக்கள் ஜனநாயகப் புரட்சியின் கடமை சாதி அமைப் பில் வேரூன்றியுள்ள ஒடுக்கும் சமூக அமைப்பை முற்றிலும் அழிப்பதாகும். பாலின அசமத்துவமும் ஆணாதிக்கமும் அழிக்கப்பட வேண்டும். நிலச் சீர்திருத்தம் மற்றும் கடன் ஒழிப்பை தொடர்ந்து, அரசு தலைமையில், பெரு வியாபாரிகளிடமிருந்தும் பன்னாட்டு கம்பனிகளிடம் இருந்தும், கடுமையான விலை ஏற்ற இறக்கங்களில் இருந்தும், விவசாயி களை பாதுகாக்கின்ற சந்தை அமைப்பு உருவாக்கப் படும். வேறு பல நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவை வருமாறு: நீண்டகால, குறைந்த வட்டியிலான கடன்கள்; எரிசக்தி மற்றும் பாசன வசதிகளை அதிகப்படுத்துவதும், அவற்றின் முறையான மற்றும் நியாயமான பயன்பாடும்; வேளாண் துறையில் ஆராய்ச்சி வசதிகளை மேம்படுத்துவது; விவசாயத் தொழிலாளர்களுக்கு போதுமான கூலி, சமூக பாதுகாப்பு ஏற்பாடுகள், மற்றும் இருப்பிட வசதிகள்; வேளாண்மைக்கும் இதர சேவைகளுக்கும் விவசாயி கள் மற்றும் கைவினைஞர்களின் கூட்டுறவு அமைப்பு களை ஊக்குவித்தல்; உணவு தானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பண்டங்களை மலிவாக மக்களுக்கு அளிக்கும் வகையிலான முழுமையான பொது விநியோக அமைப்பு.

இத்தகைய மாற்று வேளாண் திட்டத்தின் அடிப் படையில் கிராமப்புற மக்களில் பெரும்பான்மை யோரை மக்கள் ஜனநாயக முன்னணியில் திரட்ட முடியும். அதன் மூலம் ஆளும் வர்க்கங்களை தூக்கி யெறிந்து மக்கள் ஜனநாயகப் புரட்சியை வெல்ல முடியும். இது சோசலிசம் நோக்கிய நமது பயணத் தில் ஒரு அவசியமான நடவடிக்கையாகும்.

(கட்டுரையாளர் நிரந்தர அழைப்பாளர், மத்தியக் குழு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட். தமிழில் : வெங்கடேஷ் ஆத்ரேயா)

கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் – 7

– ச.லெனின்

இந்தியாவின் 1 சதவீத பெருமுதலாளிகள் நாட்டின் 58.4 சதவீத சொத்துகளை வைத் துள்ளனர். கடந்த 2000 ஆம் ஆண்டு 34 சதவீ தமாக இருந்த இவர்களின் இந்த சொத்து மதிப்பு தற்போது 58 சதவீதத்தை கடந்துள்ளது. உலக சராசரி விகிதமே 50 சதவீதம் தான் என்பது கூடுதல் தகவல் ஆகும்.
அதே நேரம், ஏழ்மை நிலையில் உள்ள 70 சதவீத மக்களின் சொத்து மதிப்பு வெறும் 7 சதவீதம் தான் உள்ளது. இதில் குறிப்பிட வேண் டிய அம்சம் என்னவெனில் 2000 ஆம் ஆண்டு 14 சதவீதமாக இருந்தது இவர்களின் சொத்து மதிப்பு இடைப்பட்ட இக்கலத்தில் சரிபாதியாக சுரண்டப்பட்டுபட்டுள்ளது.

நாட்டின் முதல் 84 பெருமுதலாளிகளிடம் மட்டும் 248 பில்லியன் டாலர் சொத்து உள்ளது. (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி) அடுத்த இருபது ஆண்டுகளுக்குள் இது 2.1 ட்ரில்லி யனாக (ஒரு டிரில்லியன் என்பது பில்லியனின் ஆயிரம் மடங்கு) உயரும் என்றும் அது நாட்டின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விட அதிகமாகும் என்று கணிக்கிறது ஆப்ஸ்போர்ம் அறிக்கை.

கடந்த இருபது ஆண்டுகளில் முதலாளி களின் வருமானம் 15 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துவந்துள்ளது. ஏழைகளின் வருமானமோ 15 சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கிறது அவ்வறிக்கை.
இந்திய அரசின் பொருளாதார நடவடிக்கை களின் வெளிப்பாடே இந்த சமமின்மையாகும். சுதந்திர இந்தியாவின் நிலப்பிரபுக்கள் மற்றும் முதலாளிகளுக்கு ஆதரவான அரசு கட்டுப் பாடுடைய அரசு முதலாளித்துவம் 1980 களில் முட்டுச் சந்திற்கு வந்து நின்றது. முதலாளித்துவ வளர்ச்சிக்கான நிதி ஆதாரங்களை திரட்டு வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை யினால் ஏற்பட்ட கடன் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் தீவிர தாக்குதல்கள் இந்திய பெரு முதலாளிகளிடத்தில் குணாம்ச ரீதியான பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. இது அரசின் பொருளாதார திட்டமிடல்களிலும் மாற்றங் களை மேற்கொள்ள செய்தது.1991 க்கு பிறகான புதிய பொருளாதார கொள்கை என்று அறியப் பட்ட நவீன தாராளமய கொள்கையை இந்திய பொருளாதாரம் தழுவியது. இது தொடர்ந்து நிலவி வந்த சமமின்மையை, ஏற்றத் தாழ்வை மேலும் அதிகபடுத் தியது. அதன் வெளிப்பாடே மேல நாம் பார்த்த புள்ளிவிபரங்கள்.
தாராளமயமாக்குதல் காரண மாக சமூக பொருளாதார பிராந் திய ஏற்றத்தாழ்வுகள் தீவிர மடைந்துள்ளன என்று நமது மேம்படுத்தப்பட்ட கட்சித் திட்டம் சுட்டிக்காட்டுகிறது. இன்றைய சமூக பொருளாதார நிலைமைகள், நமது கட்சித் திட்டம் முவைத்துள்ள இக் கருத்தையே இன்றும் வழிமொழி யும் வண்ணம் உள்ளது.

இந்திய பொருளாதாரம் வேகமாக வளர் கிறது, இந்திய உள்நாட்டு மொத்த உற்பத்தி (ழுனுஞ) உயர்ந்துள்ளது என்று அரசு பல புள்ளி விபரங்களை கொடுத்தாலும், இது யாருக்கான வளர்ச்சி ? யாருக்கான லாபம் ? என்பதை ஏனைய பல புள்ளிவிபரங்கள் காட்டி கொடுத்து விடு கிறது. தொழிலாளர்கள், பெண்கள், ஒடுக்கப் படும் சமூக மக்கள், சிறுபான்மையினர், தலித்து கள் என அனைத்து பகுதி மக்கள் மீதும் கடுமை யான சமூக பொருளாதார தாக்குதல்களும், பெருமுதலாளிகளுக்கு சலுகைகளும், கரிசனம் மிக்க அணுகுமுறையும் அரசின் செயல் திட்ட மாக தொடர்கிறது.
15 வயதிலிருந்து 29 வயதிற்குட்பட்ட இளம் இந்தியர்களில் 30 சதவீதத்தினர் வேலையின்றி வீதியில் உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் வெறும் 1.36 லட்சம் வேலைகள் மட்டுமே புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. அமைப்பு சாரா தொழில் களிலேதான் அதிகப்படியான வேலைகள் இன்று உள்ளது. இதில் இன்னும் கொடுமை என்ன வெனில் அமைப்பு சார்ந்த தொழில்களிலும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பெருகிவருகின்றன .

பணியாற்றும் பெண்களில் 22 சதவீதம் பேர் மட்டுமே நிலையான பணிகளில் உள்ளனர். ஆண் செய்யும் அதே வேலையை பெண்கள் செய் தாலும் ஊதியத்தில் வேறுபாடு நிலவுகிறது. அதிகப்படியான பாலியல் பாகுபாடு பார்க்கும் நாடுகளின் பட்டியலில் இந்திய 145 நாடுகளில் 136 வது இடத்தில உள்ளது. பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர் மீதான சமூக பொருளாதார ரீதியான தாக்குதல்கள் அதிகரித்து வருவதையே அரசின் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

மாநிலங்களுக்குக்கிடையே முதலீடுகளிலும், வளர்ச்சியிலும் பல்வேறு ஏற்றத்தாழ்வை தாராள மய கொள்கை உயர்த்தியுள்ளது. மேலும், மேலும் சலுகை எங்கு கிடைக்கிறதோ அங்கே தான் முதலீடு செய்வது என்பதும், முதலாளிகளுக்கு ஆதரவான அரசுகளின் செயல்பாடே நிறுவனத் தின் தொடர் இருப்புக்கான அடிப்படையாகவும் மாற்ற பட்டிருப்பது, மாநிலங்கள் முதலீடுகளை பெறுவதிலும், தக்கவைத்து கொள்வதிலும் சமமின்மையை உயர்த்தியுள்ளது.
2015-16 நிதியாண்டில் கூட இரண்டு லட்சம் கோடி வரை பொதுத்துறை நிறுவனங்கள் அரசுக்கு நிதி ஆதாரத்தினை வழங்கியுள்ள போதும், தனி யாருக்கு பொதுத்துறை நிறுவனங்களை அடி மாட்டு விலைக்கு விற்கவே அரசு தீவிரம் காட்டு கிறது. தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை விற்றும் வருகிறது. பொதுத்துறையை விற்பது என்பது பொருளாதார ரீதியான பாதிப்பு என்ப தோடு, சமூக ரீதியான இட ஒதுக்கீடு உள்ளிட்ட வைகளையும் சேர்த்தே பாதிப்புக்குள்ளாக்கு கிறது. தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்பதை கேட்கும் திறன் அற்றவர் காதில் ஊதும் சங்காகவே அரசு பாவிக்கிறது.

முதலாளிகளுக்கு ஆதரவான அரசின் விசு வாசம் என்பது, தொழிலாளர் நல சட்டங்களை முதலாளிகள் நல சட்டமாக மாற்றும் வகையில் திருத்தங்களை மேற்கொள்கிறது. 15% தொழி லாளர்கள் ஆதரவு இருந்தால் தொழிற்சங்கள் அங்கீகரிக்க படலாம் என்பதை 30% உயர்த்தி யுள்ளது. 20 தொழிலாளர்கள் இருந்தால் தொழிற் சங்க உரிமை என்பதை மாற்றி 50 தொழிலாளர்கள் இருந்தால் தான் தொழிற்சங்க உரிமை என்கிறது.

விவசாயிகளின் தற்கொலை தொடர்ந்து அதி கரித்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 40000 விவசாயிகள் தற்கொலை நடந்துள்ளது. 1951 ல் ஒரு நபர் சராசரியாக 61கிராம் வரை பருப்பு உட்கொண்டு வந்த நிலை 2015-ல் 44 கிராமாக குறைந்துள்ளது. உணவு பாதுகாப்பு என்பதையே கேள்விக்குறியாக்கி யுள்ளது.

நாட்டின் மொத்த விவசாய கடனே 75,000 கோடி தான். அதே சமயம் அதானியின் நிறுவனத் தின் கடன் மட்டும் 72,000 கோடியாகும். மாணவர் களின் கல்வி கடனை வசூலிக்க அரசு வாங்கி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு காண்ட்ராக்ட் கொடுத்து மாணவர்களின் கழுதை பிடிக்கிறது. பல கார்ப்பரேட் நிறுவனங்களோ தங்களின் வங்கி கடன்களை வராக்கடன் பட்டியலில் சேர்க்க வைக்கிறது.

பொதுத்துறை வங்கிகளில் தற்போதைய வராக் கடன் என்பது 6.8 லட்சம் கோடிகளாகும். இக்கடனில் 70% கடன் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுடையதாகும். ரிசர்வ் வங்கியின் தகவல்படி கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 3.5 லட்சம் கோடி மோசமான கடன் மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. அதாவது கார்ப்பரேட் நிறுவங்கள் கட்டாத கடன்களுக்கு பதிலாக புதிதாக அவர்களுக்கு கடன் கொடுக்கப் பட்டு பழைய கடன்கள் வசூலிக்க பட்டதாக மாற்றப்படும். இப்புதிய கடன் கார்ப்பரேட் முதலாளிகளின் வசதிக்கு ஏற்ப தவணை முறை யில் மாற்றம், வட்டி குறைப்பு என பல்வேறு சலுகைகளும் வழங்கப்படும்.

சமீபத்தில் அதானியின் இரண்டு நிறுவனங் களுக்கு 15,000 கோடி வரை கடன் வழங்கப் பட்டது. அந்த இரண்டு நிறுவனங்களின் மொத்த வருமானமே அந்நிறுவத்திற்கு வழங்கப்பட்ட கடனுக்கான வட்டியை கட்ட கூட போது மானதாக இல்லை. ஆனால் விவசாய கடனுக் கும், கல்விக்கடனுக்கும் சூரிட்டியும், சொத்து பத்திரமும் இல்லாமல் ஒன்றும் நடக்காது.

வங்கியில் இருப்பது யாருடைய பணம்? 60% மான பணம் சாதாரண குடியானவர்களின் சேமிப்பு பணம், 15% அரசின் பணம். சுமார் 75% மக்களின் பணமே வங்கியில் உள்ள போதும் அதன் பலன் கள் எல்லாம் பெருமுதலாளிகளுக்கும், நஷ்டங் கள் மட்டுமே மக்களுக்குமாக மாற்றபடுகிறது.
2015-16 நிதியாண்டில் மட்டும் கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு ரூ 6.59 லட்சம் கோடி வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் நாடாளுமன்றத்தை கூட்டி நிகழ்த்தப்பட்ட சமீ பத்திய நள்ளிரவு கொள்ளையன சரக்கு மற்றும் சேவை வரியும் கார்ப்பரேட் முதலாளிகளின் நலனை மையப்படுத்தியதே. மாநில உரிமைகளை பறிப்பதும் கூட. பாதுகாப்பு துறை, ரயில்வே, தகவல் தொடர்பு, பெட்ரோலியம் என அரசின் கேந்திரமான அணைத்து தொழிலிலும் 100ர% அந்நிய நேரடி முதலீட்டை தற்போதைய மத்திய அரசு அனுமதித்துள்ளது.

இது போன்ற அரசின் நடவடிக்கைகள் இருவேறு இந்தியாவிற்கிடையே தீவிரமான இடைவெளியை அதிகப்படுத்துகிறது. ஏழை இந்தியா மேலும் ஏழையாகவும், பணக்கார இந்தியா மேலும், மேலும் வசதி வாய்ப்புகளை பெற்று வளர்ச்சியுறவும் வழிவகை செய்கிறது.
மேற்கண்ட தகவல்களோடு கட்சி திட்டத்தின் அத்தியாயம் மூன்றில் உள்ள பத்திகள் 3.11 முதல் 3.14 வரையிலான அம்சங்களின் தற்கால பொருத் தப்பாடு சற்று புரிபடும். தாராளமயமாக்கலின் விளைவாக இந்திய சமூகத்தில் வளர்ந்துள்ள சமமின்மையை மேற்கண்ட புள்ளிவிபரங்கள் எடுத்துரைக்கும்.