புனையப்படும் பொய் ‘வரலாறு’!

பேரா. ஆதித்ய முகர்ஜி

(பாசிச தன்மை கொண்ட ஆர்.எஸ்.எஸ் தன்னுடைய அரசியலுக்கு வசதியாக இந்திய வரலாற்றை சிதைத்து பொய்களை வரலாறாக புனையும் முயற்சியினை அம்பலப்படுத்தும் கட்டுரை)

‘வரலாறு‘ என்பதையே முழுவதுமாகத் திரித்து, அதை மக்களிடையே ‘வெறுப்பு மனப்பான்மை‘யை வளர்த்தெடுக்கும் ஒரு கருவியாகச் சிலர் பயன்படுத்தி வருவதை, இந்தியா, பதைபதைப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறது.  நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த விடுதலை இயக்கம் இந்திய தேசம் குறித்து கொண்டிருந்த ஒளிமிகுந்த கனவுகளைச் சிதைத்துச் சீரழிப்பதற்கும், 1947இல் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று, நம் நாடு ஒரு ‘ஜனநாயகக் குடியரசாக‘ மலர்ந்ததன் அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்வதற்கும், மிகவும் இழிவான முறையில் ‘வரலாறு‘ பயன்படுத்தப்படுகிறது.  இத்தகைய போக்குகளின் காரணமாக, இந்திய நாட்டின் பெருமைக்குரிய பண்புநலன்களும், இந்தியாவின் எதிர்காலமுமே கேள்விக்குறியாய் மாறி நிற்கிறது.

காலனி ஆதிக்க கண்ணோட்டம்

காலனியாட்சி முடிவுக்கு வந்த 20ஆம் நூற்றாண்டின் மையப்பகுதி வரை, வரலாற்றியல் கல்வியில் அதன் ஆதிக்கமும், ஆளுமையும் நீடித்தது.

இந்தப் பின்னணியிலேயே, காலனியாதிக்கத்தின் கண்ணோட்டத்திலிருந்து இந்திய வரலாறு எழுதப்பட்டது என்பதையும், இந்திய சமூகத்தில் பிளவையும், பிரிவினையையும் உருவாக்கி வளர்த்திடும் விதத்திலும், காலனியாட்சியை ஆதரித்து நியாயப்படுத்தும் தன்மையிலும் வரலாற்றியல் வடிக்கப்பட்டது என்பதையும் இத்தருணத்தில் நாம் உணர வேண்டியது அவசியம்.

இந்தியாவில் இன்று தங்களுக்குத் தாங்களே ‘உண்மையான தேசியவாதிகள்‘ என்று வேடமிட்டுக் கொண்டு, மக்களிடையே மத அடிப்படையில் வெறுப்புணர்வைத் தூவி, பிரிவினையைத் தூண்டும் பாசிச சக்திகள், மேற்சொன்ன ‘காலனித்துவ விளக்கத்தைத்‘ தான், தங்களுக்குச் சாதகமான முறையில் பயன்படுத்திக் கொள்கின்றன.  இந்தியாவில் வாழும் பல கோடிக்கணக்கான சிறுபான்மை மக்களின் நலன்களைப் புறக்கணிப்பதற்கும், ஜனநாயக பூர்வமான  உரிமைகளை நசுக்குவதற்கும் பாசிச ஆட்சியாளர்கள் மேற்கூறிய காலனித்துவ விளக்கத்தைக் கையிலெடுத்துக் கொள்கின்றன.  இந்தச் சூழலில், இந்திய வரலாற்றின் காலனித்துவ விளக்கம் என்ன என்பதைச் சுருக்கமான முறையில் நாம் அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

தொழிற்புரட்சியின் பயனாக 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், உலகின் முதலாவது தொழில்வள நாடாக பிரிட்டன் உருவானது.  அதன் நீட்சியாக, காலனியாதிக்கத்தின் இரண்டாவது நிலையான, ‘தொழில் மூலதன காலகட்டமும்‘ (1813 – 1858) துவங்கியது.  அத்தருணத்தில், இந்தியாவின் பொருள் உற்பத்தி முறைகள், மிகவும் பழமையானதாக, காட்டுமிராண்டித் தனமாக இருப்பதாகவும், அது உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்றும் ஒரு வாதம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் முன்வைக்கப்பட்டது.  மிக வேகமாக வளர்ந்து வரும் பிரிட்டன் பொருளாதாரத்திற்கு அனுகூலமாக இருந்து உதவிடும் வகையில், இந்தியா தன்னுடன் இணைக்கப்பட வேண்டும் என்று பிரிட்டன் முடிவுசெய்தது…

இந்தக் காலகட்டத்தில்தான், இந்தியாவின் சரித்திரத்தை எழுத முற்பட்ட பிரிட்டிஷ் வரலாற்றியலாளர்கள், வகுப்புவாத அடிப்படையில், இந்தியாவில் முதலில் ‘இந்து ஆட்சி‘யும், தொடர்ந்து ‘முஸ்லிம் ஆட்சி‘யும் நடைபெற்றதாக முழுவதும் பிழையாக வரையறுத்த விபரீதம் நிகழ்ந்தது.  பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியர்கள் ஒருபடி மேலே போய், “இடைக்காலத்தில் இந்தியாவில் நடைபெற்ற முஸ்லிம் ‘கொடுங்கோலாட்சி‘யை அகற்றி, இந்தியாவுக்குப் பல நன்மைகளை பிரிட்டிஷ் ஆட்சி செய்து வருவதாகவும்” விளக்கம் கூறத் தலைப்பட்டனர்.  (அவர்கள் இவ்விடத்தில் ‘கிறிஸ்தவ ஆட்சி‘ என்று குறிப்பிடாமல் ‘பிரிட்டிஷ் ஆட்சி‘ என்று குறிப்பிட்டதும் கூர்ந்து கவனிக்கத் தக்கது). கிட்டத்தட்ட 19-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி வரையிலும் மேற்சொன்ன கருத்தோட்டமே மேலாதிக்கம் செலுத்தி வந்தது.

நிதி மூலதன காலகட்டம்

காலனியாதிக்கத்தின் மூன்றாம் நிலையான ‘நிதி மூலதன’ காலகட்டத்திற்குள் 19ஆம் நூற்றாண்டின் கடைசி ஆண்டுகளில் பிரிட்டன் அடியெடுத்து வைத்த போது, உலகின் பல நாடுகள், குறிப்பாக மேற்கத்திய நாடுகள், விரைவான தொழில்மயத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன.  இதையடுத்து, காலனியாதிக்கத்தை விரிவுபடுத்துவது, ஏற்கனவே தங்கள் ஆளுகையில் உள்ள காலனிய நாடுகளில் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது ஆகிய அம்சங்களில் பிரிட்டன் உள்ளிட்ட ஆதிக்க நாடுகள் அக்கறை செலுத்த ஆரம்பித்தன.  புதுப்புது நாடுகளைத் தங்களது காலனியாதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதில் இந்த நாடுகளிடையே கடுமையான போராட்டமும், போட்டியும் நிலவியது.  தமது நாடுகளில் புதிதாக நிறுவப்பெற்ற தொழிற்சாலைகளுக்கு கச்சாப் பொருள்கள் கிடைக்கச் செய்வதற்கும், ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்வதற்கான சந்தையை விரிவுபடுத்துவதற்கும் இந்த நாடுகளுக்கு, காலனி விரிவாக்கம் என்பது அவசியமான ஒன்றாக ஆகியிருந்தது. 

காலனியாதிக்கம் இரண்டாம் நிலையிலிருந்து மூன்றாம் நிலைக்குச் சென்ற சூழலில் நிகழ்ந்த அணுகுமுறை மாற்றத்தைத் தோழர் வி.ஐ. லெனின் மிக எளிதாக விளக்கியுள்ளார். “அந்நிய மூலதனம் என்கிற புதிய அம்சம் வர்த்தக பரிமாற்றத்திற்குள் புகுந்துள்ள நிலையில், இதுகாறும் விற்பனையாளர், வாங்குபவர் என்றிருக்கும் உறவைவிட, இனி கடன் கொடுப்பவர், கடன் பெறுபவர் என்கிற உறவு நிலைக்குக் கூடுதல் முக்கியத்துவம் கிட்ட வாய்ப்புள்ளது” என்பது அவரது கூற்று.

நிதி மூலதன நுழைவின் இன்னொரு முகமாக, ‘காலனிய நாட்டினர் தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்வது’ என்கிற வாதம் மறைந்துபோய், ‘காலனி தேசத்து மக்கள் சுய ஆட்சி என்பதற்கு எந்தக் காலத்திலும் தகுதியற்றவர்கள்‘ என்ற கூக்குரல் வேகமாகக் கேட்க ஆரம்பித்தது. ‘என்றேனும் ஒரு நாள், ஆட்சி நிர்வாகத்தை இந்தியர்களிடம் ஒப்படைத்துவிட்டு பிரிட்டிஷார் வெளியேறுவார்கள்‘ என்கிற நம்பிக்கைக்கும் பேச்சுக்கும் எள்ளளவும் இடமில்லை என்பதாக ஆட்சியாளர்களின் எண்ணப்போக்கு அழுத்தம் திருத்தமாக வெளிப்பட்டது.  அப்போது பம்பாய் மாகாணத்தின் ஆளுநராக இருந்த சர் ரிச்சர்டு டெம்பிள், “இங்கிலாந்து, இந்தியாவைத் தனது முழு ஆளுகைக்குள்ளாகவே எப்போதும் வைத்திருக்க வேண்டும்.  ஏனெனில், ‘இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நிரந்தரமாக நீடித்து நிலைத்திருக்கும்‘ என்கிற உறுதிமொழியுடன் கணிசமான அளவு மூலதனம் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளது,” என்று 1880ஆம் ஆண்டில் எழுதிய குறிப்பு ஒன்றில் கூறியுள்ளார். 

காலனிய ஆய்வாளர்களின் தவறான கூற்று

இந்திய வரலாறு குறித்த காலனிய / வகுப்புவாத விளக்கவுரை, இந்து-முஸ்லிம் மோதல் காரணமாக நேரிட்ட ‘மனவேதனைகள்‘ குறித்து மீண்டும் மீண்டும் உரையாடலை மேற்கொள்கிறது.  பிரபல இந்து கருத்தியலாளரான கே.எம். முன்ஷி, 1951இல் சமர்ப்பித்த ஆய்வறிக்கையொன்றில், தற்போது ஆஃப்கானிஸ்தானத்தில் உள்ள கஜினி பகுதியின் சுல்தானாக விளங்கிய மன்னன் முகம்மது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1026இல் நடத்திய படையெடுப்பில் சோமநாதர் ஆலயம் தாக்குதலுக்குள்ளானது குறித்த தனது தரவுகளை வெளியிட்டுள்ளார். இந்தப் படையெடுப்பின்போது, சோமநாதர் கோயில் தாக்கப்பட்டது, “ஒரு தேசியப் பேரழிவாக, மறக்கவியலாத மாறாத வடுவாக, இந்துக்களின் மனதில் பதிந்துவிட்டது” என்று முன்ஷி குறிப்பிடுகிறார். இதன் மூலம் 19ஆம் நூற்றாண்டில் காலனியாட்சி உருவாக்கிய கருத்தாக்கத்தையே முன்ஷியும் எதிரொலிக்கிறார். ஆனால், 1026இல் இந்துக்களின் மனதிற்கு ஏற்பட்டுவிட்ட ‘காயங்களுக்குப்‘ பழி தீர்த்திடும் வகையில் எதிர்வினை ஆற்றிட வேண்டும் என்கிற பேச்சும் வாதமும், 800 வருடங்கள் கடந்து, 1843இல் தான் எழுப்பப்படுகிறது.  பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினரால் இப்பிரச்னை எழுப்பப்படுகிறது. 

இவ்வாறாக, 19ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்படுகிற ‘காலனிய வரலாற்றாய்வு‘, இந்தியாவில் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையே பல நூற்றாண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருவது போன்ற ஒரு சித்திரத்தைத் தீட்ட முனைந்துள்ளது. இதையொட்டியே, இந்து, முஸ்லிம் என இரு தேசக் கோட்பாட்டை உருவாக்கி, இருவரும் தனித்தனி தேசங்கள் என வரையறை செய்தது.  ஆனால் புகழ்பெற்ற வரலாற்றியல் அறிஞர் ரொமிலா தாப்பர், காலனிய ஆய்வாளர்களின் மேற்சொன்ன அத்தனை கூற்றுகளையும் வன்மையாக மறுப்பதோடு, தகுந்த ஆதாரங்களுடன் தனது கருத்தாக்கங்களை முன்வைக்கிறார்.  பண்டைய நாட்களிலும், இடைப்பட்ட காலத்திலும் உலகெங்கிலும் படையெடுப்புகளின்போது, அதன் ஒரு பகுதியாக, மத வழிபாட்டுத் தலங்களைத் தாக்குவதும், அவற்றிலிருந்து மதிப்பு வாய்ந்த, விலையுயர்ந்த பொருள்களைக் கொள்ளையடிப்பதும், மத வேறுபாடுகள் கடந்து, எல்லா நாடுகளிலும், எல்லாக் காலங்களிலும் நடந்து வந்துள்ள நிகழ்வே என்பதை எடுத்துரைக்கும் பேராசிரியர் ரொமிலா தாப்பர், 1026ஆம் வருடத்திய தாக்குதலும் அவ்வாறான ஒன்றே என  விளக்குகிறார்.  150 வருடங்கள் கழித்து, ஒரு இந்து மன்னனால் சோமநாதபுரம் ஆலயம் புதுப்பித்துக் கட்டப்படுகிறது.  இதையொட்டிக் கிடைத்துள்ள பதிவுகளில், கஜினி முகம்மதுவால் சோமநாதர் ஆலயம் தாக்கப்பட்டது பற்றிய எந்தவிதக் குறிப்பும் இல்லை.  250 வருடங்களுக்குப் பிறகு, சோமநாதர் கோயிலுக்குச் சொந்தமான ஒரு இடத்தில் இஸ்லாமிய வணிகர் ஒருவரால் மசூதி ஒன்று கட்டப்படுகிறது.  அப்பகுதியை ஆளும் இந்து மன்னர், உள்ளுர் வணிகர்கள், ஆலயத்தில் பூசை செய்வோர் என அனைவரிடமும் முறையான அனுமதியைப் பெற்று, மசூதி எழுப்பப்பட்டது.    இந்த இந்துக்களின் உள்ளங்களில் மேலே குறிப்பிட்ட வடுக்களும், வேதனைகளும் பதிந்து கிடந்ததாகச் செய்தி ஏதுமில்லை. அப்படி எதுவும் இந்துக்களின் நினைவுகளில் நிழலாடவில்லை. அத்தகைய ‘நினைவுகள்‘, காலனிய ஆட்சிக் காலத்தில்தான், மத/வகுப்புவாதக் கண்ணோட்டத்தில் உருவாக்கம் பெற்று பரவலாக எடுத்துச் செல்லப்பட்டன என்பதை ரொமிலா தாப்பர் அறுதியிட்டு விளக்குகிறார்.

சரியான முறையில் தொகுக்கப்பட்ட இந்திய வரலாறு

இந்திய தேசத்தின் விடுதலைக்குப் பிறகே, இந்தியாவின் வரலாற்றைச் சரியான முறையில் கொண்டு செல்வதற்கான களம் ஓரளவு கிட்டியது.  காலனிய கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட இந்திய வரலாற்றின் குறைபாடுகளையும், குளறுபடிகளையும் அகற்றி, இந்தியக் கண்ணோட்டத்தில் தேசத்தின் சரித்திரத்தைப் புரிந்து கொள்வதற்கும், பண்டைய நாட்களிலிருந்து தற்காலம் வரையிலுமான இந்திய சமூகக் கட்டமைப்பு, அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அளவீடுகளை அறிந்து கொள்வதற்கும் உதவிடும் வகையில் தலைசிறந்த வரலாற்றியல் வல்லுநர்களை வைத்து ஆய்வுகளை மேற்கொள்வதற்கு வழிபிறந்தது.  1960-களிலும், 1970-களிலும் இந்தியாவின் பெருமைமிக்க பல்கலைக் கழகங்களிலும், உயர்கல்வி நிறுவனங்களிலும் இதற்கான பணிகள் முறைப்படி துவங்கின.

இந்திய வரலாற்றின் நுணுக்கங்களைச் சரியான கோணத்தில் இந்திய பள்ளிக் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் 1960-களில்  தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகத்தின் சார்பில் சில முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  உலக அளவில் அங்கீகாரம் பெற்ற தலைசிறந்த வரலாற்றியல் கல்வியாளர்களான ரொமிலா தாப்பர், பிபின் சந்திரா, ஆர்.எஸ். சர்மா, சதீஷ் சந்திரா போன்றோர், தமது சமூகக் கடமையின் ஒரு பகுதியாக, தங்கள் பொன்னான நேரத்தைச் செலவிட்டு, பள்ளிக் குழந்தைகளுக்கான பாடப் புத்தகங்களைத் தயார் செய்து கொடுத்தனர்.  எடுத்துக் காட்டாக, 6ஆம் வகுப்பில் பயிலும் 11 வயது சிறார்களுக்கான பாடப்புத்தகத்தை ரொமிலா தாப்பர் தயாரித்து வழங்கினார்.  நானறிந்த வரையில் உலகில் வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு முக்கியத்துவத்துடன், இத்தனை பெரிய அளவில் கல்விசார்ந்த இத்தகைய பணி அரசின் சார்பில் மேற்கொள்ளப்படவில்லை.  இதன் விளைவாக மிக அருமையான பாடப் புத்தகத் திரட்டுகள் பள்ளி மாணவர்களுக்கு வசப்பட்டன.  50ஆண்டுகள் கடந்து இன்றும் அவை கல்வி வளாகங்களில் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. 

ஆர்எஸ்எஸ் ன் மனப்போக்கு ஒரு பாசிச மனப்போக்கு

அறிவியல்பூர்வமான, மதச்சார்பற்ற கல்விக்கு, வகுப்புவாதக் கண்ணோட்டத்துடனான எதிர்ப்பும், தாக்குதலும் துவக்கத்திலிருந்தே ஆர்எஸ்எஸ் அமைப்பிடமிருந்து வந்து கொண்டிருந்தது.  ராஷ்ட்ரீய சுயம்சேவக் சங் எனப்படுகிற ஆர்எஸ்எஸ் அமைப்பு, ஒரு தனியார் இராணுவம் போலச் செயல்படுவதையும், ஹிட்லர் காலத்திய ஜெர்மனியின் நாஜிக்கள் போன்று அவர்களது பயிற்சிகள் அமைந்திருப்பதையும் குறித்து ஜவஹர்லால் நேரு ஆரம்ப நாட்களிலேயே எச்சரிக்கை விடுத்தார்.  ‘ஆர்எஸ்எஸ்இன் மனப்போக்கு ஒரு பாசிச மனப்போக்கு‘ என்று தனது மதிப்பீட்டை நேரு வெளிப்படையாகவே தெரிவித்தார். 

மகாத்மா காந்தியின் படுகொலையையடுத்து, துணைப்பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் சர்தார் பட்டேலின் முழு சம்மதத்துடன், ஆர்எஸ்எஸ் அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டு, அதன் 25,000 செயல்பாட்டாளர்களும் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.  ஆனால் தடை விலக்கிக் கொள்ளப்பட்டு, அனைவரும் விடுதலையானதும், ஆர்எஸ்எஸ் அமைப்பு, கருத்தியல் ரீதியான தன்னுடைய தாக்குதலை தேசத்தின் மீது தொடுக்க ஆரம்பித்தது.  இதன் பின்விளைவுகளை நன்கு உணர்ந்திருந்த நேரு, ஆர்எஸ்எஸ் இன் அபாயகரமான செயல்முறைகள் பற்றிய தனது ஆதங்கத்தையும், எச்சரிக்கையையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார்.  அதையொட்டி அனைத்து மாகாண முதல்வர்களுக்கு எழுதிய கடிதத்தில்தான் “ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் முழுமையான மனப்போக்கும், பாசிச மனப்போக்கே” என்றும், ‘அவர்களது நடவடிக்கைகள் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டும் ‘ என்றும் நேரு குறிப்பிட்டார். இத்தாலி நாட்டின் புகழ்பெற்ற அறிஞர் மார்சியா கசோலரி தனது ஆழமான ஆய்வுகள் மற்றும் நேரடி கள விசாரணைகள் மூலம், “ஆர்எஸ்எஸ் தலைவர்கள் உள்ளிட்ட இந்து வகுப்புவாதச் சிந்தனையாளர்கள் அனைவரும் இத்தாலி மற்றும் ஜெர்மனியில்அரங்கேற்றப்பட்ட பாசிச மாடல் நடவடிக்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, அதைப் பாராட்டிக் கொண்டாடிக் கொண்டிருப்பவர்கள்” என்றும், “இவர்களது முக்கியத் தலைவரான பி.எஸ். மூஞ்சே, இத்தாலிக்கு நேரடியாகவே வருகை புரிந்து, சர்வாதிகாரி முசோலினியைச் சந்தித்து, அவரது அறிவுரையையும், ஆலோசனையையும் பெற்றவர்” என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

மதவாத பாடத்திட்டம்

‘அரசியலில் நாங்கள் ஒருபோதும் ஈடுபட மாட்டோம்’ என்று எழுத்துபூர்வமாக வழங்கப்பட்ட உறுதிமொழியின் அடிப்படையில்தான் ஆர்எஸ்எஸ் மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. அதையடுத்து தாங்கள் ஒரு ‘கலாச்சார அமைப்பு‘ தான் என்று ஆர்எஸ்எஸ் மீண்டும் மீண்டும் கூறிக் கொள்கிறது.  ஆனால் இன்னொருபுறம், பிரிவினையைத் தூண்டி வெறுப்பினை உமிழும் தனது மோசமான கருத்தியலைப் பிஞ்சு உள்ளங்களின் நெஞ்சிலே பரப்பி, பதியச் செய்திடும் நோக்கத்துடன் ‘சரஸ்வதி சிசு மந்திர்‘ என்கிற பெயரில் நாடு முழுவதும் பல்லாயிரக் கணக்கான கல்வி நிறுவனங்களைத் துவக்கி ஆர்எஸ்எஸ் நிர்வகித்து வருகிறது.  இத்தகைய தன்மையில் முதலாவது பள்ளி 1952இல் ஆர்எஸ்எஸ்-ன் அன்றைய தலைவர் எம்.எஸ். கோல்வால்கர் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது.  (கோல்வால்கரின் விநோதமான வரலாற்று மற்றும் புவியியல் ஞானம், பல நேரங்களில் பரிகசிப்புக்கு ஆளானதுண்டு.  “ஆரியர்கள் வட துருவத்திலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் என்று சொல்ப்படுகிறது. இருக்கக் கூடும். ஆனால் உண்மையில் வட துருவமானது அப்போது இந்தியாவில்தான் இருந்தது. இன்றைய பீகார் மற்றும் ஒரிசா பகுதிகளில் தான் வட துருவம் நிலை கொண்டிருந்தது.  பின்னர் ஆரியர்கள் இங்கேயே தங்கிவிட, வட துருவம் மட்டும் இடம் பெயர்ந்து, இப்போதுள்ள இடத்திற்குச் சென்று விட்டது” என்பது கோல்வால்கரின் புகழ்பெற்ற வாதம்). 

ஆண்டுகள் செல்லச்செல்ல, ஆர்எஸ்எஸ்இன் வலைப்பின்னலும் அதிகரித்தே வந்துள்ளது.  1977இல் 500 என்றிருந்த ஆர்எஸ்எஸ் பள்ளிகளின் எண்ணிக்கை, 1993-94இல் 6,000 ஆகவும், 1999இல் 14,000 ஆகவும் உயர்ந்துவிட்டது.  இந்தப் பள்ளிகளின் மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் வகுப்புவாதக் கருத்தியல் இளம் மாணவச் செல்வங்களின் மூளைக்குள் பலவந்தமாகத் திணிக்கப்படுகிறது.  இந்தப் பள்ளிகளையும் தாண்டி, உ.பி., குஜராத், ம.பி., கர்நாடகம் உள்ளிட்ட பிஜேபி ஆளும் பல மாநிலங்களில் அரசுப் பள்ளிகள் வாயிலாகவும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் புகுத்தப்படுகிறது.

ஆர்எஸ்எஸ் பள்ளிகளில் 9 வயதும், 10 வயதும் உடைய நான்காம்/ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வரலாற்றுப் புத்தகத்தில், “இந்தியாவுக்குள் நுழைந்து இஸ்லாமியப் படையெடுப்பாளர்கள், ஒரு கையில் வாளும், இன்னொரு கையில் குரானும் கொண்டு வந்தார்கள்”, “நான்கு திசைகளிலும் படையெடுத்துச் சென்ற அவர்கள், எதிரில் வருகிற எல்லோரையும் கொல்வது, வழிபாட்டுத் தலங்களை இடிப்பது, பல்கலைக் கழகங்களைத் தகர்ப்பது, நூல் நிலையங்களைக் கொளுத்துவது, பிற மதங்களின் புனித நூல்களை எரிப்பது, தாய்மார்களையும், சகோதரிகளையும் மானபங்கப் படுத்துவது என அத்தனை கொடூரச் செயல்களிலும் ஈடுபட்டனர்“, “நீதி, நியாயம், கருணை போன்றவையெல்லாம் அவர்கள் அறியாதவை“ என்று இஸ்லாம் வளர்ச்சி குறித்த பாடத்தில் இடம் பெற்றுள்ளது.

(இந்து வகுப்புவாதக் கும்பலால் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதையும், புனே நகரில் பந்தார்கர் நூலகம் அடித்து நொறுக்கப்பட்டதையும், 2002இல் குஜராத்தில் தாய்மார்களும், சகோதரிகளும் பாலியல் வன்கொடுமைக்குள்ளானதையும் நாம் மறந்துவிட வேண்டும்).

ஆர்எஸ்எஸ்இன் இன்னொரு வெளியீடு, கிறிஸ்தவர்களை தேசவிரோதிகளாகவும், நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிப்பவர்களாகவும் சித்தரிக்கிறது.  “கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர்கள் செய்த சதித் திட்டத்தின் காரணமாகவே இந்திய நாடு துண்டாடப்பட்டது“, “கிறிஸ்தவ மிஷினரிகள் நாகாலாந்து, மேகாலயா, அருணாசலப் பிரதேசம், பீகார், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் தேசவிரோதக் கருத்துக்களைப் பரப்பி வருகின்றன. இவர்களால் இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் அபாயம் நேரிட்டுள்ளது“ என்று மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது.

குஜராத்தின் பள்ளிப் பாடப் புத்தகத்தில் ஹிட்லருக்குப் புகழ்மாலை சூட்டப்படுகிறது.  இன்னொரு நூலில், மெக்கா மசூதியின் மையப்பகுதியில் உள்ள காபா கட்டிடம், சிவலிங்கமாகச் சித்தரிக்கப்படுகிறது. டில்லியின் முதலாவது முஸ்லிம் ஆட்சியாளரான குத்புதீனால் 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது குதுப்மினார். ஆனால் இது 4ஆம் நூற்றாண்டில், சமுத்திரகுப்தரால் எழுப்பப்பட்ட ‘விஷ்ணு ஸ்தம்பம்’ என்று கற்பிக்கப் படுகிறது. வகுப்புவாதக் கண்ணோட்டத்துடன், முற்றிலும் உண்மைக்கு மாறான செய்திகள் ஆர்எஸ்எஸ் பள்ளிகளுக்கும் அப்பால் நாடு முழுவதும் எடுத்துச் செல்லப்படுகின்றன.  

ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்துத்துவ அகராதியின்படி, இந்தியாவைப் பொறுத்தமட்டிலும் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் ‘வெளியாட்கள்‘ ஆவர்.  இந்திய நாட்டின் மீதான அவர்களுடைய பற்றும், விசுவாசமும் கேள்விக்குரியது.  இந்துக்களின் ‘புண்ணிய பூமி‘ இந்தியாவிலேயே உள்ளது.  ஆனால் இஸ்லாமியர்களுக்கு அரேபியாவின் மெக்காவிலும், கிறிஸ்தவர்களுக்கு பாலஸ்தீனத்தின் ஜெருசலேமிலும் இருக்கிறது.  ஆக, இந்துக்கள் மட்டுமே ‘இந்திய தேசம்‘ என்கிற அடையாளத்துக்குச் சொந்தம் கொண்டவர்கள்  என்பதுதான் ஆர்எஸ்எஸ்-இன் நிலைபாடு. 

பார்த்த மாத்திரத்திலேயே பரிகாசத்துக்குரிய இத்தகைய விளக்கவுரையின் மூலமாகத்தான், முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் அந்நியப்படுத்தி, அவர்களை ‘வேறானவர்கள் (Others)‘ என்று வகைப்படுத்துகிறது ஆர்எஸ்எஸ்.  இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இந்தியாவின் குடியுரிமை மறுக்கப்பட வேண்டும் என்பதே இதன் உள்ளடக்கம். 

ஒரு வாதத்திற்கு ஆர்எஸ்எஸ்-இன் மேற்கூறிய ‘விளக்கம்‘ ஏற்றுக் கொள்ளப்படுமானால், ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் ஏன் ஆசியாவிலேயே தென் கொரியாவிலும் வாழ்ந்து வரும் கிறிஸ்தவ சமூகத்தினர், தத்தம் நாடுகளில் குடியுரிமை கோர முடியாது – காரணம் அவர்களது புண்ணிய பூமி பாலஸ்தீனத்தில் இருக்கிறது.

2014ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பிஜேபி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன், கல்வி நிலையங்களைக் காவிமயப் படுத்தும் ஆர்எஸ்எஸ்-இன் முயற்சிக்குப் புதிய வலு கிட்ட ஆரம்பித்தது.  2019-இல் பிஜேபி கட்சி நாடாளுமன்றத்தில் தானே அறுதிப் பெரும்பான்மையை அடைந்துவிட்டதால், கூட்டணிக் கட்சிகளுடனான கலந்தாலோசனை போன்ற எந்தவித நிர்ப்பந்தமும் இன்றி, ஆட்சியதிகாரத்தைத் தனது விருப்பம் போல் பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பும் வந்து சேர்ந்தது.

கல்விப் புலத்தில் வகுப்புவாத சக்திகள்

மாணவர்களுக்குப் புதிதாகப் புகுத்தப்பட்டுள்ள வரலாற்றுப் பாடத் திட்டம், தேசத்தந்தை மகாத்மா காந்தி ஒரு இந்து தீவிரவாதியால் படுகொலை செய்யப்பட்ட உண்மை நிகழ்வை உரைக்க மறுக்கிறது.  இந்திய தேசிய இயக்கத்தில் முன்னணிப் பங்கு வகித்த மாபெரும் தலைவர்கள் பற்றிய பாடத்தில், நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பிரிட்டிஷாருடன் 30 வருடங்களுக்கு மேலாக வீரச் சமர் புரிந்து, அதில் முழுவதுமாக 9 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து, அரும் பாடுபட்ட மகத்தான தலைவர் ஜவஹர்லால் நேரு பற்றிய சிறு குறிப்பு கூட  இடம் பெறவில்லை.

ஆனால் நேருவைப் பற்றிய எதிர்மறையான குறிப்பு மட்டும் பாடத் திட்டம் முழுவதும் பரவிக் கிடக்கிறது.  இந்திய தேசம் சந்தித்த அத்தனை பிரச்னைகளுக்கும் முழுமுதற் காரணம் நேருவும், அவர் பின்பற்றிய கொள்கைகளும்தான் என்று வன்மையாகச் சாடும் இந்த வரலாற்றுப் பாடத் திட்டம், போகிற போக்கில், முழுவதும் கற்பனையான கற்பிதமாகக் கூறப்படுகிற, நேருவின் மூதாதையர்களின் முஸ்லிம் (!) மதச் சார்பு பற்றியும் பேசுகிறது.  (பிஜேபி-யின் தலைவர் ஒருவர், ஆர்எஸ்எஸ் அமைப்பின் வார இதழில், ‘காந்தியைக் கொன்ற கோட்சே, நேருவையும் சுட்டுத் தள்ளியிருக்க வேண்டும்‘ என்று வெளிப்படையாக எழுதியிருந்ததை இவ்விடத்தில் நினைவுபடுத்த வேண்டியுள்ளது). 

கல்விப் புலத்தில் வகுப்புவாத சக்திகள் ஆக்ரோஷமாக நடத்துகிற கருத்தியல் ரீதியான தாக்குதலானது, தேசத்தின் வரலாற்றைத் தங்கள் விருப்பம் போல திரித்துக் கூறுவது என்பதையும் கடந்து, பொது வெளியில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.  அது, இடைவிடாத தொடர் பிரசாரங்கள் மூலம், பழங்கால புராணக் கதைகள் குறித்த மாயத் தோற்றத்தையும், போலி பெருமித உணர்வையும் பெரும்பான்மை சமூக மக்களின் மனதில் பதியவிடுகிறது.  பின்னர் அதே பெரும்பான்மையினருக்கு, சிறுபான்மை மக்களிடமிருந்து அச்சுறுத்தலும், ஆபத்தும் ஏற்படப் போவதாக ஒரு பொய்யான பிம்பத்தைக் கட்டமைக்க எத்தனிக்கிறது.  இதன் மூலம் பெரும்பான்மை மக்களின் மனதில் அச்சவுணர்வை ஏற்படுத்தி, அதன் மூலம் நிரந்தரமாக அவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சிக்கிறது.  உலகின் பல பகுதிகளிலும், தனது மேலாதிக்கத்தைத் திணிக்க முற்படும் பாசிச சக்திகள், இது போன்ற அணுகுமுறையையே பின்பற்றுகின்றன என யேல் பல்கலைக் கழகத்தின் தத்துவவியல் பேராசிரியர் ஜாசன் ஸ்டான்லி எடுத்துக் காட்டுகளுடன் விளக்கியுள்ளார்.

பொய்யான பிம்பத்தைக் கட்டமைத்தல்

ஒருசில உதாரணங்களை இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.  இன்றைய பிரதமர், 2014ஆம் ஆண்டு தான் பதவியேற்ற சில மாதங்களில் மும்பையில் கலந்துகொண்ட நிகழ்ச்சியொன்றில், புராணக் கதைகளில் கூறப்படும் புனைவுகளை வரலாற்றுடன் அப்பட்டமாக இணைத்து, உரை நிகழ்த்தினார்.  விநாயகப் பெருமானின் கதையானது, ‘இந்தியாவில் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே பிளாஸ்டிக் சர்ஜரி நடத்தப்பட்டதற்கான‘ சான்று என பிரதமர்  முழங்கினார்.  இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் மிகவும் பிரபலமான மருத்துவர்களும், திரை நட்சத்திரங்களும், வர்த்தகத்தில் சாதனை படைத்து வரும் பெரிய வணிகர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத் தக்கது.  இது போன்றே, மேற்கு வங்க மாநில மேனாள் ஆளுநரும், தற்போதைய குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கர், 2020 ஜனவரியில் கொல்கத்தாவில் நடைபெற்ற அறிவியல், பொறியியல் கண்காட்சியைத் துவக்கி வைத்து ஆற்றிய உரையில், ‘மகாபாரதத்தின் முக்கிய வீரனான அர்ஜுனன், நியூக்ளியர் சக்தி படைத்த அம்புகளைக் கொண்டே போரில் எதிரிகளை வீழ்த்தினான்‘ என்று குறிப்பிட்டுள்ளார்.  ஆர்எஸ்எஸ் அமைப்பின் அன்றைய தலைவரான  சர்சங்சலாக் கே.எஸ்.சுதர்சன்,‘பரத்வாஜ முனிவரும், போஜ ராஜனும், புதிய விமானங்கள் வடிவமைப்பது பற்றி மட்டுமல்ல; அவற்றில் ஒவ்வொரு விமானத்தையும் எவ்வளவு உயரத்தில் பறக்கவிடுவது என்பது பற்றியும், அதில் எழும் பிரச்னைகளை எவ்வாறு சரிசெய்வது என்பது பற்றியும் கூட விரிவான உரையாடல் நடத்தியதாகக் கூறியுள்ளார்.

இவ்வாறு ‘இந்துக்கள்‘ கடந்த காலங்களில் ‘அளப்பரிய சாதனைகளைப்‘ படைத்திருந்தாலும், இன்று அவர்கள் மிகுந்த சோதனைகளைச் சந்தித்து வருகிறார்கள் என்கிற கற்பிதம் வகுப்புவாத சக்திகளால் தொடர்ந்து உருவாக்கப்படுகிறது.  கடந்த நூற்றாண்டுகளில் முஸ்லிம்களால் இந்துக்கள் என்னென்ன ‘சித்திரவதைகளை‘ அனுபவித்தார்கள் என்று மீண்டும் மீண்டும் மக்களுக்கு ‘நினைவூட்டப்‘ படுகிறது.  தேசத்தின் தலைநகர் புது டில்லியிலிருந்து மிக அருகாமையில் இருக்கும் ஹரியானா மாநிலத்தின் கிராமப்புறங்களில் ஒரு கதை சொல்லப்படுவதை நானே பலமுறை கேட்டுள்ளேன்.  முகலாய மன்னன் அவுரங்கசீப்பிடம் தினந்தோறும் இரவில் கணிசமான எண்ணிக்கையில், உயர்சாதியினர் அணிந்து கொள்ளும் பூணூல் சரடுகளைக் கொண்டுவந்து காட்டிய பிறகு தான் உறங்கச் செல்வானாம்.  நிறைய இந்துக்கள் கொல்லப்பட்டனர் அல்லது மதம் மாற்றப்பட்டனர் என்ற செய்தியைக் கேட்ட பிறகுதான் அவனுக்குத் தூக்கம் வருமாம்.  நான் வரலாற்றுப் பாடம் கற்பிக்கும் பணியில் உள்ளவன் என்பதைத் தெரிவித்தவுடன், என்னிடம் இந்த ‘வரலாறு’ உடனடியாகச் சொல்லப்படுகிறது.

பிஜேபி அரசு புது டில்லியின் ஒரு சாலைக்கு இடப்பட்டிருந்த அவுரங்கசீப்பின் பெயரை அகற்றியதை, தனது வீரச் செயலாகப் பெரிதும் விளம்பரப்படுத்திக் கொண்டது.  வலிமைமிக்க உள்துறை அமைச்சர் பதவியைத் தன் வசம் வைத்திருக்கும் திருவாளர் அமித் ஷா, இந்தியாவுக்குள் வங்கதேச முஸ்லிம்கள் பெரும் எண்ணிக்கையில் தினந்தோறும் ‘ஊடுருவிக் கொண்டிருப்பதாகவும்‘, நாட்டின் பல பகுதிகளிலும் ‘கறையான்கள் போலப் பரவி‘, அவர்கள் நடமாடிக் கொண்டிருப்பதாகவும், அவர்களால் நாட்டின் பாதுகாப்புக்கே பெரும் அச்சுறுத்தல் இருந்து வருவதாகவும் அடிக்கடி ‘எச்சரிக்கை‘ விடுத்து வருகிறார். முஸ்லிம்களால் இந்துக்களுக்கும், இந்தியாவுக்கும் ஆபத்து காத்திருக்கிறது என்பது போன்ற ஒரு தோற்றம், நாடு முழுவதும் நெருப்பாகப் பற்றிப் பரவச் செய்யப்படுகிறது. இந்துக்களுக்கு எதிராக உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் ஒன்றுசேர்ந்து வரிந்து கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறார்கள் என பல முனைகளிலிருந்தும் பிரசாரம் மேற்கொள்ளப் படுகிறது.  இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக, முஸ்லிம்கள் தங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள ‘பலதார மண முறை‘யைப் பயன்படுத்திக் கொண்டு, மிகவும் அதிகமான எண்ணிக்கையில் பெருகி வருவதாகவும், வெகு விரைவில் நாட்டின் மக்கள் தொகையில் இந்துக்களைப் பின்னுக்குத் தள்ளி முஸ்லிம்கள் முந்திச் சென்று, பெரும்பான்மையை எட்டி விடுவார்கள் என்றும் ஒரு கருத்து உரத்த குரலில் முன்வைக்கப்படுகிறது.  தேசத்தின் அத்தனை தரவுகளையும், பல்வேறு புள்ளி விவரங்களையும், மக்கள் தொகை கணக்கீடுகளையும் மூடி மறைத்து, முழுவதும் பொய்யான ஒரு வாதம், மிகவும் திட்டமிட்டு உலவ விடப்படுகிறது. இத்தகைய ஒரு வாதத்தை வைத்துக் கொண்டு, உத்தரப்பிரதேசத்தில் ‘மக்கள் தொகை கட்டுப்பாடு மசோதா‘ ஒன்று நிறைவேற்றப்பட்டு, அதிக குழந்தைகள் உள்ள ஏழை இஸ்லாமியர் குடும்பங்கள் தண்டனைக்குள்ளாக்கப்படும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன. 

பாசிசச் சிந்தனையாளர்கள் பின்பற்றும் இன்னொரு பொதுவான வழிமுறை, பெரும்பான்மை சமூகத்தவரிடம், பாலியல்  ரீதியாக அவர்களுக்குப் பெரும் இடர்ப்பாடுகள் இருப்பதாக அச்சமூட்டுவது.  இதன் ஒரு வடிவமாகவே, அப்பாவி இந்துப் பெண்களை இஸ்லாமிய இளைஞர்கள் காதல் என்ற பெயரில் குறி வைப்பதாகவும், அவர்களைக் கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்து கொள்வதாகவும் ஓயாத பிரசாரம் கட்டவிழ்த்து விடப்படுகிறது.  ‘லவ் ஜிகாத்‘ என்று வர்ணிக்கப்படுகிற இந்தக் ‘குற்றத்தை‘ தடுத்து நிறுத்துவதற்கென்று, பிஜேபி ஆளும் மாநிலங்களில் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.  இது மட்டுமன்றி, காலனிய ஆட்சிக் காலத்திய தேசத் துரோகச் சட்டம், சமீப ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட ‘உபா‘ சட்டம் உள்ளிட்ட அனைத்தையும் பயன்படுத்தி, ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் கயவர்களாகவும், கிரிமினல் குற்றவாளிகளாகவும் சித்தரிக்கும் கவலைக்குரிய போக்கு அதிகரித்துள்ளது. 

சிறுபான்மை சமூகத்தினர் மீதான பொதுவெளி தாக்குதல்களும், ஏன் கும்பல் படுகொலைகளும் சமீப ஆண்டுகளில் பெருமளவு அதிகரித்துள்ளன.  அரசு நிர்வாகம் இத்தகைய கொடூர நிகழ்வுகளைக் கண்டும் காணாமல் கடந்து செல்கிறது.  அமெரிக்க அரசின் வெளியுறவுத் துறை, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த 2021-ஆம் வருடத்திற்கான தனது ஆண்டறிக்கையில், சர்வதேச அளவிலான மத சுதந்திரம் பற்றிய குறிப்பில், ‘இந்தியாவில் சிறுபான்மை சமூகத்தினர் தாக்குதலுக்குள்ளாவது, படுகொலை செய்யப்படுவது,  அச்சுறுத்தல்களுக்கு ஆளாவது போன்ற கொடுமைகள் ஆண்டு முழுவதும் அரங்கேறி வந்துள்ளன‘ என்று தெரிவித்துள்ளது.

அயோத்தியில் 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி, அது தான் இந்து கடவுள் இராமர் பிறந்த இடம் என்று வலதுசாரி வகுப்புவாத சக்திகள் நடத்திய பிரசாரத்தின் பின்னணியில் 1992-இல் இடித்துத் தள்ளப்பட்டது. தற்போது அங்கே கட்டப்பட்டு வரும் மிகப் பெரிய இராமர் கோயிலுக்கு 2021-இல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.  இதே போன்ற பிரச்னைகள் வேறு இடங்களை மையமாக வைத்து தற்போது மீண்டும்  எழுப்பப்படுகிறது.  1991-ஆம் வருடம் இந்திய நாடாளுமன்றம் ஏகமனதாக நிறைவேற்றிய வழிபாட்டுத் தலங்கள் சட்டம், அனைத்து இறை வழிபாட்டு இடங்களும் நாடு விடுதலையடைந்த 1947 ஆகஸ்ட் 15 தேதியில் இருந்த நிலையில் அவ்வாறே பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும் என்று தெளிவாக வரையறுத்துள்ளது.  ஆனால் அந்தச் சட்டத்தை முழுவதுமாக அவமதிக்கும் வகையில், மதுராவில் ஷாகி இத்கா மசூதியைக் குறிவைத்து, கிருஷ்ண ஜன்மஸ்தான் பிரச்னை எழுப்பப் படுகிறது.  அதே போல, வாரணாசியின் ஞானவாபி மசூதியின் நீரூற்றுப் பகுதியில் சிவலிங்கம் இருப்பதாகவும், அங்கு வழிபாடு நடத்த அனுமதியளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படுகிறது. 

உண்மைகளை மறைத்தல்

மேற்கூறிய மூன்று இடங்களிலும் இந்து ஆலயங்கள் இடிக்கப்பட்டு அவற்றின் மீது மசூதிகள் எழுப்பப்பட்டதாகவும், இதுபோல் நாடு முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட மசூதிகள் கட்டப்பட்டதாகவும், வரலாற்றில் நிகழ்ந்துவிட்ட தவறுகள் சரிசெய்யப்பட வேண்டும் என்றும், இந்து மதத்தின் பெருமை நிலைநாட்டப்பட வேண்டும் என்றும், அதுவே இந்துக்களின் மனதில் உள்ள காயங்களுக்கு மருந்தாக அமைந்திடும் என்றும், ஆர்எஸ்எஸ்-இன் தீய பிரசாரம் உரத்த குரலில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இவற்றின் உள்ளே ஒளிந்திருக்கும் உண்மை திட்டமிட்டு மறைக்கப்படுகிறது.  அயோத்தி, மதுரா, காசி ஆகிய மூன்று நகர்களிலுமே, பல நூற்றாண்டுகளாக, தலைமுறை தலைமுறையாக இந்துக்களும், இஸ்லாமியர்களும் அமைதியாகவும், இணக்கமாகவும், பரஸ்பர புரிதலுடன் தோளோடு தோள் நின்று வாழ்ந்து வந்துள்ளனர்.  அவரவர் கடவுளுக்குப் படைக்கப்படும் பிரசாத காணிக்கைகளைப் பகிர்ந்து பரிமாறிக் கொள்ளும் தன்மையில் மக்களிடையே நல்லெண்ணமும், ஒன்றுபட்ட உணர்வும் பன்னெடுங்காலமாக இருந்து வந்துள்ளது.

இந்த ஒற்றுமைச் சூழலை உடைத்திடும் விதமாகவே, இந்துக்களுக்கு வலி, வேதனை, மாறாத வடு, மனதில் காயம், துயர நினைவுகள் என்று பல கற்பனைகள் உள்நோக்கத்துடன் உருவகம் பெற்றுள்ளன.  காலனிய ஆட்சியில் இந்திய சமூகத்தை இரு கூறாக்கி எதிரெதிர் திசையில் நிறுத்துவதற்கு சோமநாதர் ஆலயம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை முன்னரே பார்த்தோம்.  இத்தகைய முயற்சிகளின் ஊடாகவே அரசியல் களத்தில் ‘பெரும்பான்மை‘ வாதம் முன்னிறுத்தப்படுகிறது. உ.பி. முதல்வர் உள்பட பிஜேபி-யின் முன்னணித் தலைவர்கள், ‘80 : 20‘ என்று பேசி, இந்து வாக்குகளை ஒருங்கிணைக்க யத்தனிப்பதும் கவனிக்கத் தக்கது.

இந்திய பண்பாட்டின் அடிப்படையான பொது பாரம்பரியக் கூறுகளை மறுதலித்து, இஸ்லாமிய எதிர்ப்புணர்வை வலியப் புகுத்திடும் தன்மையில் தேசத்தின் வரலாற்றைத் திரித்துக் கூறுவதும், கடைந்தெடுத்த பொய்களுக்கு மெய்யான தோற்றம் தருவதும் வகுப்புவாத சக்திகளின் இன்றைய நடைமுறையாய் மாறியுள்ளது.  முகலாயர் ஆட்சியின் முக்கிய நிகழ்வுகளும், சாதனைகளும் கூட சர்ச்சையாக்கப்படுகின்றன. மாமன்னர் ஷாஜகானால் கட்டப்பெற்ற, உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மகால், அதன் எழில்மிகு கட்டிடக் கலைக்கும், நிபுணத்துவம் நிறைந்த வடிவமைப்பிற்கும் பெயர் பெற்றது.  ஆனால் தாஜ் மகால் ஒரு இந்து மன்னரால் கட்டப்பட்ட  இந்து கோயில் என்றும், அதன் பெயர் ‘தேஜோ மகால்‘ என்றும் ஒரு புதிய விவாதம் கிளப்பி விடப்படுகிறது. இத்தகைய சர்ச்சைக்குரல் அறுபதாண்டுகளுக்கு முன்பே, 1960-களில் ‘விநோதமாகச் சிந்திக்கும் விந்தை மனிதர்‘ புருஷோத்தம் நாகேஷ் ஓக் என்பவரிடமிருந்து எழுந்தது.  அபத்தமாகக் கருதப்படும் இவரது விவாதம் இதோடு முடியவில்லை.  பகவான் கிருஷ்ணரின் போதனைகளை உரைக்கும் ‘கிருஷ்ண நீதி‘ என்பதிலிருந்து தான் ‘கிறிஸ்தவ மதம்‘ உதித்தது என்றும், இந்து மதத்தில் துறவிகளின் வாழ்விடமாக சமஸ்கிருதத்தில் சொல்லப்படும் ‘வாதிகா‘ என்ற வார்த்தையிலிருந்துதான் ‘வாடிகன்‘ நகருக்குப் பெயரிடப்பட்டது என்றும், மெக்காவின் ‘காபா‘ சிவலிங்கத்தின் வடிவம் என்றும் அவர் அடுக்கிக் கொண்டே போகிறார்.  பல பத்தாண்டுகளாக இவரது மேற்கூறிய சர்ச்சைக் கருத்துக்கள், மனப்பிறழ்வு கொண்ட ஒருவரிடமிருந்து வெளிப்படுகிற, ஓரங்கட்டப்பட வேண்டிய உளறல்கள் என்றே எள்ளி நகையாடப்பட்டன.  ஆனால் இன்று, ‘ஓரங்கட்டப்பட்ட‘ இந்தக் கருத்துக்களுக்கு உயரிய இடம் வழங்கப்பட்டு, அதை விமர்சிப்பவர்கள் தேசவிரோதிகளாகவும், இடதுசாரி-மதச்சார்பற்ற சிந்தனையை முன்னிறுத்தி, இந்து உணர்வுகளை உதாசீனம் செய்பவர்களாகவும், முஸ்லிம்களையும், ஏனைய சிறுபான்மையினரையும் தாஜா செய்து திருப்திப்படுத்துவதற்காக, இந்துக்களை அவமதிப்பவர்களாகவும் முத்திரையிடப்படுகின்றனர்.

“அண்மைக் காலங்களில் இந்து வகுப்புவாதப் பேச்சாளர்கள், வட இந்தியாவின் பல பகுதிகளிலும் இஸ்லாமியர்களுக்கு எதிராக விஷத்தைக் கக்கி வெறுப்பூட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்” என்று தி எகானமிஸ்ட் ஏடு அக்கறையுடன் அம்பலப்படுத்துகிறது.  ‘முஸ்லிம்களைக் கூண்டோடு நாட்டைவிட்டு வெளியேற்றுவோம்‘, ‘முஸ்லிம் பெண்களைக் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவோம்‘ என்றெல்லாம் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் இவர்கள் கொக்கரிப்பது வாடிக்கையாகி வருகிறது. பீகார் மாநில பிஜேபி தலைவர்களுள் ஒருவரான ஹரிபூஷன் தாகுர் பச்சல், கடந்த மே 7 அன்று ஒரு பேரணியில், ‘இந்து பண்டிகைகளில் இராவணனின் கொடும்பாவி எரிக்கப்படுவதைப் போல, இஸ்லாமியர்கள் அனைவரும் உயிரோடு கொழுத்தப்பட வேண்டும்‘ என்று பேசினார்.  வெளிப்படையாகவே வன்முறையைத் தூண்டும் தங்களுடைய வார்த்தை விளையாட்டுகள் மீது ஆளும் அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்பதை நன்கு அறிந்த இந்த இந்துத்துவ வெறியர்கள், ‘இந்துக்கள் அனைவருக்கும் ஆயுதங்கள்  அளிக்கப்பட வேண்டும்‘ என்றும், ‘இந்தியாவின் நன்மைக்காக, இஸ்லாமியர்கள் மீது ஒரு இனப்படுகொலை நடத்தப்பட வேண்டும்‘ என்றும் பகிரங்கமாக அறைகூவல் விடுத்து, பொது வெளியில் முழங்கி வருகிறார்கள். 

சிறுபான்மையினர் எதிர்ப்பு மனநிலை

ஒரு தேசத்தின் உருவாக்கம் என்பது, படிப்படியாக நடைபெறும் வரலாற்று நிகழ்வு.  ஆட்சிக் கட்டிலில் இருப்பவர்களின் ஆணைகளைக் கொண்டோ, நிரந்தரமாக வரையப்பட்ட விதிகளைக் கொண்டோ அது நடைபெற இயலாது என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.  தேச வரலாற்றின் வளர்ச்சிப் போக்கில் திடீர் திருப்பங்களும் மாற்றங்களும் தவிர்க்க இயலாதவை.  1990-களில் யுகோஸ்லேவியா மறைந்து புது நாடுகள் உருவானதும், 1971-இல் நமக்கு மிக அருகே, பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்கதேசம் பிறந்ததும்,  தேசங்களின் வரலாற்றுத் திருப்பங்களுக்கான சமீபத்திய எடுத்துக் காட்டுகளாக உள்ளன.  14-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நடைபெற்ற சண்டையில் துருக்கிய முஸ்லிம்கள் வெற்றி பெற்று, செர்பிய கிறிஸ்தவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.  அந்தப் போரின் ‘வலி மிகுந்த நினைவுகள்‘, 600 வருடங்கள் கடந்தபின், பழிதீர்க்கும் மனநிலையோடு மீண்டும் மீண்டும் பேசப்பட்டதால், 1995-இல் யுகோஸ்லேவியாவின் ஸ்ரெப்ரீனிகா பகுதியில், 8,000-க்கும் மேற்பட்ட போஸ்னிய முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இப்பகுதியில் ஐந்து நூற்றாண்டுகளாக இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் இணக்கமான சூழலில் அமைதியாகவே வாழ்ந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்தியாவில் ‘இஸ்லாமியக் கொடுங்கோன்மை‘ என்ற பெயரில் ‘நினைவுகளை வன்முறைப்படுத்தும்‘ போக்கு நீடித்தால், யுகோஸ்லேவியாவின் கதியே இங்கும் நிகழும் என்று கூறினால் அது நிச்சயம் மிகையல்ல.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த தலைசிறந்த அறிஞரான மிச்சேல் குக்லெயில்மோ, இந்தியாவில் அண்மைக் காலமாக வகுப்புவாத சக்திகள் வலுப்பெற்று, இந்தியாவை மதச்சார்பற்ற ஜனநாயக நாடு என்ற தன்மையிலிருந்து, ‘இந்து ராஷ்டிரமாக‘ மாற்றிட, அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதை, போதிய ஆதாரங்களுடன் உறுதிபட எடுத்துரைத்துள்ளார்.  ஆட்சியாளர்கள் ஆணவத்தோடு தங்கள் வழிமுறைகளைச் செயல்படுத்தும் விதம், இந்தியாவில் ஜனநாயகம் நீடிக்குமா? என்று கேள்வியெழுப்பும் சூழலைக் கொணர்ந்து நிறுத்தியுள்ளது.  ஸ்வீடன் நாட்டின் வீ-டெம் இன்ஸ்டிடியூட்,  அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ஃப்ரீடம் ஹவுஸ் நிறுவனம், தி எகானமிஸ்ட் ஏட்டின் அறிவுத்திறன் பிரிவு ஆகிய அனைத்து ஆய்வு அமைப்புகளும், இன்றைய இந்தியாவை ஒரு முழுமையான ஜனநாயக நாடாக ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. இந்தியாவில் ‘ஜனநாயகப் பின்னடைவு‘ நிகழ்ந்து வருவதாக அறுதியிட்டுக் கூறும் இந்த சர்வதேச அமைப்புகள், இந்தியாவின் இன்றைய யதார்த்த நிலையை , ‘ஓரளவே சுதந்திரமான ஜனநாயகம்‘, ‘குறைபாடுமிக்க ஜனநாயகம்‘, ‘தேர்தல்வழி சர்வாதிகாரம்‘ என்று அடையாளப்படுத்துகின்றன. 

இவ்வாறு இந்தியா தரமிறக்கம் செய்யப்பட்டிருப்பதற்கு, இன்றைய ஒன்றிய அரசு திட்டமிட்டு பரவச் செய்யும் ‘சிறுபான்மையினர் எதிர்ப்பு மனநிலை‘ மற்றும் அதையொட்டி நிறைவேற்றப்பட்ட சட்டங்கள், மனித உரிமை மீறல் சம்பவங்கள், குறைந்து வரும் கருத்துச் சுதந்திரம், ஒடுக்குமுறைக்கு ஆளாகும் ஊடக சுதந்திரம், சிவில் சமூகத்தின் தேக்க நிலை  போன்றவையே பிரதான காரணங்களாகக் கூறப்படுகின்றன.

ஆக்கபூர்வமான முயற்சிகள் தேவை

அண்மைக்காலமாக, வரலாற்றை அப்படியே திரித்துக் கூறுவதும், உண்மைக்குச் சிறிதும் தொடர்பில்லாத அப்பட்டமான பொய்களைப் பெருமளவில் உற்பத்தி செய்து, அவற்றையும் வரலாறு என்றே அடையாளப்படுத்துவதும் அனைவரையும் அச்சம் கொள்ளச் செய்யும் விதத்தில் மிக வேகமாக நடந்தேறி வருகிறது.  இருப்பினும், இவற்றுக்கான தகுந்த எதிர்வினையும், இத்தகைய போக்குகளைத் தடுப்பதற்குரிய ஆவேசமான செயல்பாடும் போதுமான வேகம் பெறாமல், தேவைப்படுகிற அழுத்தமும் இல்லாமல் முடங்கிக் கிடப்பது போலத் தெரிகிறது.  1999-2005இல் பாசிச சக்திகளைத் தடுப்பதற்கான போராட்டம் பலம் வாய்ந்ததாக இருந்தது.  1977-79 வருடங்களிலோ, வகுப்புவாத சக்திகளின் தீய முயற்சிகளை முளையிலேயே கிள்ளி எறியும் அளவுக்கு எதிர்ப்புக் குரல் ஓங்கி ஒலித்தது.  ஆனால் இன்று எதிர்ப்பியக்கம் ஆமை வேகத்தில் நடைபெறுவதும், பொது வெளியில் பலத்த மௌனம் நிலவி வருவதும் உண்மையிலேயே ஆழ்ந்த கவலைக்குரிய அம்சம்…

இவ்வாறாக, இடர்கள் நிறைந்த ஒரு காலச் சூழலில், ஒரு சிலர் முன்வந்து உண்மையான வரலாற்றை எழுதித் தொகுக்க முன்வருவதால் மட்டும், வரலாற்றியல் மீதான தாக்குதல்களை எதிர்கொள்ள இயலாது.  சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் ஆளுமை செலுத்தக் கூடிய, உறுதிமிக்க அரசியல் தலையீடுகளே இன்று உடனடித் தேவையாக உள்ளன. 

நாட்டின் பல பகுதிகளிலும் தன்னெழுச்சியாக நடைபெற்று வருகிற போராட்ட, பிரசார இயக்கங்கள் வருங்காலத்தின் மீதான நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சுகின்றன.  கணிசமான எண்ணிக்கையிலான மதிப்புவாய்ந்த மூத்த குடிமக்கள், முக்கியப் பதவிகளை வகித்த முன்னாள் அரசு உயரதிகாரிகள், இராணுவத்தில் உயர்நிலை பொறுப்புகளை ஏற்றுப் பணியாற்றியவர்கள், அயல்நாட்டுத் தூதர்களாகவும், இன்ன பிற துறை தலைவர்களாகவும் செயல்பட்ட வல்லுநர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள ஊடிளேவவைரவiடியேட ஊடினேரஉவ ழுசடிரயீ அமைப்பு, ஜனநாயக வழிமுறைகளைப் புறக்கணித்தும், அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து வழுவியும் ஒன்றிய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சிப்பதோடு, அதற்கு எதிரான பரப்புரைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.  இதுபோன்றே, அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது துணிவுடன் இயங்கும் செய்தி ஏடுகள், சுதந்திரமான ஊடக நிறுவனங்கள், உண்மையை உரக்கப் பேசும் பத்திரிகையாளர்கள், அறிவார்ந்த சமூகத்தின் பிரதிநிதிகளாக விளங்கும் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், முற்போக்குக் கலைஞர்கள், மனித உரிமைப் போராளிகள், சரித்திரத் தேர்ச்சி கொண்ட வரலாற்றியல் அறிஞர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் என அனைவரும் படைவரிசையாய் நின்று, தேசத்தின் ஜனநாயக மரபுகளைக் காக்கவும், கூட்டாட்சி தத்துவத்துடன் அரசியலமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்தவும் ஓங்கிக் குரல் எழுப்பி பாடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய ஆக்கபூர்வமான முயற்சிகள் மூலம், இந்திய வரலாறு சிதைக்கப்படுகிற கொடுமை தடுத்து நிறுத்தப்பட்டு, உண்மை வரலாறு நிலைபெற வேண்டும்.  ஜனநாயகம் வெற்றிகண்டு சாதனை படைக்க வேண்டும்.

(ஆங்கில மார்க்சிஸ்ட் (ஜனவரி – ஜூன் 2022) இதழில் வெளியானது.)

தமிழில்: கடம்பவன மன்னன்

புதிய சூழலில் இந்துத்துவா எதிர்ப்பு !

– பிரகாஷ் காரத்

இந்துத்துவா வகுப்புவாத சக்திகளையும், ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்தையும் எதிர்கொள்ள, அரசியல் தளத்திலும், சித்தாந்த தளத்திலும், சமூக மற்றும் பண்பாட்டு தளத்திலும் திட்டவட்டமான அணுகுமுறைகளை உருவாக்கி  முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். இது நம்முடைய முக்கிய நிகழ்ச்சி நிரலாக உள்ளது.

வகுப்புவாத சக்திகளை எதிர்கொள்வது பற்றி, கடந்த காலத்தில் எடுத்த முடிவுகள் இப்போது போதுமானதாக இல்லை. முந்தைய நிலையில், வகுப்புவாத சக்திகள் சில பிரிவினை திட்டங்களை முன்னெடுத்து இந்து மக்களின் ஆதரவை பெற முயல்வதுடன், சிறுபான்மையினருக்கு எதிரான திட்டங்களை முன்னெடுப்பார்கள். ஆனால் இப்போது இந்துத்துவா வகுப்புவாத சக்திகள் அரசு அதிகாரத்துடன் இயங்குகிறார்கள். இது கடந்த கால சூழலில் இருந்து மாறுபட்டது. இப்போதைய புதிய நிலைமைகளை பயன்படுத்தி, குடியரசின் தன்மையையே மாற்றியமைத்து, அரசியல் சாசனத்தை மாற்றியமைத்து,  ‘இந்து ராஷ்ட்டிராவை’ நோக்கி செயல்பட்டு வருகிறார்கள்.  ஆதரவுத் தளத்தை விரிவாக்கிட, முந்தைய காலத்தில் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் இருந்து இது மாறுபட்டது ஆகும். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அடிப்படையான இலக்குகளை நிறைவேற்றக்கூடிய போக்கினை நாம் எதிர்கொண்டு வீழ்த்த வேண்டியுள்ளது.

பாஜக எப்படிப்பட்ட கட்சி ?

மேம்படுத்தப்பட்ட நம்முடைய கட்சி திட்டம், பாரதிய ஜனதா கட்சியை பிற முதலாளித்துவ கட்சிகளைப் போன்ற இன்னொரு சாதாரண முதலாளித்துவக் கட்சியாக பார்க்கவில்லை. பாஜகவை உருவாக்கியதும், வளர்த்தெடுப்பதும் பாசிச வகைப்பட்ட தத்துவத்தால் வழிநடத்தப்படும் ஆர்.எஸ்.எஸ் இயக்கமாகும். அவர்கள் அதிகாரத்திற்கு வரும்போது, அரசு இயந்திரத்தை பயன்படுத்தி ‘இந்து ராஷ்ட்டிராவை’ நோக்கிய பயணத்தை வேகப்படுத்த முயற்சிப்பார்கள் என்று நம் திட்டத்திலேயே குறிப்பிட்டுள்ளோம். 2000 ஆண்டில் நமது கட்சி திட்டத்தை மேம்படுத்திய போது வாஜ்பாய் அரசாங்கம் இருந்தது.

‘இந்து ராஷ்ட்டிரா’ என்பது இந்து ராஜ்ஜியம் அல்ல. அதாவது அது  மத தலைவர்களின் ஆட்சி அல்ல. (ஈரான் நாட்டில் நடப்பதை மத தலைவர்களின் ஆட்சி எனலாம், அதனை ஒத்த ஆட்சியாக இது இருக்காது). ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆட்சி என்பதுதான் ‘இந்து ராஷ்ட்டிரா’ என்பதன் பொருள் ஆகும்.  ஏற்கனவே அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்ட பின்னணியில் ‘இந்து ராஷ்டிரத்தைக்’ கட்டமைக்கும் பணியும் ஏற்கனவே துவங்கி விட்டது. பாஜக மக்களவையில் பெரும்பான்மை பெற்றுள்ளது. அரசமைப்பின் அடிப்படையான சில அம்சங்களையும், குணாம்சத்தையும் மாற்றியமைக்க முயல்கிறது. நீதித்துறையினுடைய தன்மையையும், அதிகார வர்க்கத்தின் தன்மையையும், ராணுவத்தின் தன்மையையும் மாற்றியமைக்க முயல்கிறார்கள்.

அக்னிபத் திட்டத்தை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். அந்த திட்டத்தின் நோக்கம் என்ன?. ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முறையை அரசியல் அடிப்படையிலானதாக திட்டமிட்ட விதத்தில்  மாற்றியமைப்பதுதான் அதன் நோக்கம். இவ்வகையில் அவர்கள் ராணுவத்தில் ஆள் எடுக்கும் தன்மையையே மாற்றியமைக்க முயற்சிக்கிறார்கள்.

பரந்துபட்ட உத்தி அவசியம்

எனவே இதுதான் இப்போதைய நிலை என்கிறபோது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை  தேர்தல் களத்தில் மட்டும் நடத்தினால் போதாது என்பதை உணர முடியும். தேர்தல் கால உத்திகள் மட்டும் பலன் கொடுக்காது. அவர்கள் தேர்தல் களத்திலும், அரசியல் தளத்திலும் மட்டுமே செயல்படுவதில்லை. தங்களை கலாச்சார அமைப்பு என்று கூறிக்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ், இந்திய குடியரசின் பண்பு நலன்களை மாற்றியமைப்பதையே  இலக்காக கொண்டு செயல்படுவதை ஒட்டுமொத்தமாக கணக்கில் எடுத்து, அனைத்தையும் உள்ளடக்கிய விரிவான உத்தியோடு செயல்பட வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ்/பாஜக அமைப்புகளால், இந்திய தேசியம் என்ற பெயரில் இந்து பெரும்பான்மை வகுப்புவாதத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்துள்ளது. 23 வது அகில இந்திய மாநாட்டின் அரசியல் தீர்மானத்தில் இதை நாம் குறிப்பிட்டுள்ளோம். மக்களின் மனங்களில் தாக்கம் ஏற்படுத்தி, கருத்தை மாற்றியமைக்க அவர்களால் முடிந்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் வாழும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சாதாரண மக்களின் மனங்களில் தம் கருத்துக்களை ஆழமாக பதித்துள்ளார்கள். அவர்கள் மட்டுமே  உண்மையான தேசியவாதிகள் என்றும், தேசத்தின் மீது அக்கறை கொண்ட சக்திகள் என்றும் பதிய வைத்துள்ளார்கள்.

இந்துக்கள் வலுவடைந்தால்தான் தேசம் வலுப்படும் என்கிறார்கள். இந்த வாதத்தின் மற்றொரு பகுதி இஸ்லாமியர்கள் இந்த தேசத்தை பலவீனமாக்குகிறார்கள் என்பதாகும். இந்துக்கள் என்றால் ’நாம்’, இஸ்லாமியர்கள் என்றால் ’அவர்கள்’. ‘நாம்’ –  எதிர் –  ‘அவர்கள்’ என்ற உணர்வினை உருவாக்கியுள்ளார்கள். இது கணிசமான மக்களை சென்று சேர்ந்திருக்கிறது.

குறிப்பாக உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இதுதான் நிலைமை. பாஜகவை மக்கள் வலுவான தேசியவாத  சக்தியாக பார்ப்பதுடன், பெரும்பான்மை மக்களுக்கு நல்லது செய்வதற்கே அவர்கள் இருப்பதாக பார்க்கிறார்கள். இந்த சூழலை எவ்வாறு எதிர்கொள்வது?

கடந்த  21, 22 மற்றும் 23 மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானத்திலும், அரசியல் ஸ்தாபன அறிக்கையிலும் ‘இந்துத்துவாவை எதிர்கொள்வது’ என்ற தலைப்பிலான பகுதி இடம்பெற்று வந்துள்ளது. கடந்த காலங்களில் நாம் பொதுவாக காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போராடியிருக்கிறோம். பல மாநிலங்களில் இதர முதலாளித்துவக் கட்சிகளை எதிர்த்துப் போராடியிருக்கிறோம். ஆனால் இது அதிலிருந்து வேறுபட்ட ஒன்றாகும். அதனால்தான் நமது தீர்மானங்களில் தனியாக குறிப்பிட வேண்டி வந்தது.

எனவே 2015ஆம் ஆண்டில் இருந்து தனித்துவமாக, இதுபோல சில திட்டவட்டமான  உத்திகளை உருவாக்க முயற்சிக்கிறோம்.  அரசியல் செயல்பாடுகளிலும், கருத்தியல் செயல்பாடுகளிலும் இந்துத்துவா சக்திகளை எதிர்கொள்ளும் விதத்தில் பணிகளை திட்டமிட்டு முன்னெடுக்க கட்சியை தயார்ப்படுத்த வேண்டியுள்ளது. பல தளங்களிலும் நாம் கால் பதிக்க வேண்டியுள்ளது என்பதை கட்சி அணிகளுக்கு உணர்த்திட வேண்டும்.

கட்சியும், பல்வேறு வர்க்க வெகுஜன அரங்கங்களும், தமது வேலை பாணியை மாற்றியமைக்க வேண்டும். கருத்தியல் தளத்திலும், சமூக – பண்பாட்டுத் தளத்திலும், கல்வித் தளத்திலும் பணிகளை திட்டமிட வேண்டும். கடந்த காலத்தில் இந்த பணிகளை பொதுவாக அலட்சியப்படுத்தியே வந்திருக்கிறோம். கட்சி சில முழக்கங்களை முன்னெடுக்கும், தேர்தலை எதிர்கொள்ளும், வர்க்க – வெகுஜன அமைப்புகள் சில முழக்கங்களை முன்னெடுப்பார்கள், போராட்டங்களை நடத்துவார்கள்.

கருத்தியல் தளத்தில் கட்சி போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக பேசிவந்திருக்கிறோம். ஆனால் இதுவரை அதில் என்ன செய்திருக்கிறோம்? பொதுவாக நம்முடைய கட்சி தொழிலாளி வர்க்க கட்சியாகும். நம்முடைய கட்சியினுடைய கருத்தியல் என்பது தொழிலாளி வர்க்க கருத்தியலே. ஆனால் மும்பை, தில்லி போன்ற பெருநகரங்களில் வாழும்   தொழிலாளர்களோடு பேசினால் அவர்களில்  கணிசமானோர் பின்பற்றும் சித்தாந்தம் இந்துத்துவா சித்தாந்தமாக உள்ளது. இந்துத்துவாவை பின்பற்றிக் கொண்டே சிலர்  நம்முடைய சங்கங்களிலும் இருப்பார்கள். அதுதான் இப்போதைய சூழல்.

எனவே கருத்தியல் தளத்தில் நடத்த வேண்டிய போராட்டத்தில் நாம் முன்னேற வேண்டியுள்ளது.  தொழிற்சங்கம் மட்டுமே இந்த போராட்டத்தை முன்னெடுத்திருக்க முடியாது. கட்சிக்கு தான் அதில் கூடுதலான பங்கு உள்ளது. எனவே அரசியல் தளத்தில் மட்டுமல்லாது, கருத்தியல் மற்றும் சமூக தளத்திலும் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.

சில மாநிலங்கள் இந்த சூழலில் விதிவிலக்காக அமைந்துள்ளன. தமிழ்நாட்டினை உதாரணமாக பார்க்கலாம். தமிழ் நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்புகள் பிரதான இடத்தில் இல்லை. ஆனாலும் அவர்கள் வளர முயற்சிக்கிறார்கள். இன்றுள்ள நிலைமையை கணக்கில் எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டிலோ, ஆந்திராவிலோ, கேரளத்திலோ ஆர்.எஸ்.எஸ் அமைப்பினுடைய செல்வாக்கிற்கு மக்கள் உட்பட மாட்டார்கள் என்ற நினைப்பில் இருந்துவிடக் கூடாது. ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் அவர்கள் கணிசமான செல்வாக்கை பெற்றுள்ளார்கள். பிரதான சக்தியாக உள்ளார்கள். தெலங்கானாவிலும் சில முன்னேற்றங்களை அடைந்துள்ளார்கள். தமிழ் நாட்டில் ஒரு பெரிய சக்தியாக வளர்வதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்று அவர்களுக்கு தெரியும். அதற்கு இந்த மாநிலத்தின் அரசியல், கருத்தியல், சமூக சூழல் ஒரு காரணமாக உள்ளது. திராவிட சித்தாந்தம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை சொல்லலாம். ஆனாலும் அவர்கள் இந்த நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும், தமது  குறைபாடுகளை மீறி முன்னேறுவதற்கும் பல தளங்களிலும் முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

பட்டியல் இனத்தின் மீது குறி !

ஆர்.எஸ்.எஸ் என்றால் ”உயர்” சாதி அமைப்பு எனபலர் நினைக்கிறார்கள். ஆம் அவர்கள்  சிந்தனை, கருத்தியல் இரண்டிலும் நிச்சயமாக “உயர்” சாதி ஆதிக்க கருத்தியல் கொண்டவர்கள்தான். ஆனால் ”உயர்” சாதியினரை மட்டும் கொண்ட கட்சியாக மட்டுமே அவர்கள் இல்லை.

உத்திரப்பிரதேசத்தை எடுத்துக் கொண்டால் ஓபிசி யை சேர்ந்த பெரும்பகுதியினர் பாஜக ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். அதே போல் தலித் மக்களில் குறைந்த பட்சம் 50 சதவிகிதம் பாஜக ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். இது எப்படி சாத்தியமானது?. முன்பு ”உயர்”  சாதியினர் கட்சியாக பார்க்கப்பட்ட கட்சி,  இன்றைக்கு ஓபிசி, எஸ்சி /எஸ்டி  மத்தியிலும் வளர்ந்திருக்கிறது என்றால் இது எப்படி நடந்தது? அவர்கள் குறிப்பாக சில சாதிகளைக் குறிவைத்து தங்களுடைய பணிகளைச் செய்தார்கள். அனைத்து இந்து மக்களின் பிரச்சனைகளையும் எடுப்பவர்களாக, அவர்களுக்கான கட்சியாகவும்  தங்களை அடையாளப்பட வைப்பதற்கான முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த காலத்தில் ஆர்எஸ்எஸ் உருவாக்கிய அரசியல் கட்சி யான ஜன சங்கத்தை பனியா கட்சி என்று சொல்வதுண்டு, அதற்குப் பிறகு பாஜக உருவான பின்பும் தொடக்க கட்டத்தில் அவர்களை பனியா கட்சி என்றே குறிப்பிடப்பட்டு வந்தது.

பனியா என்பது வடமாநிலத்தில் உள்ள ஒரு குறிப்பட்ட சமூகம். குறிப்பாக வியாபாரிகள் வணிகர்கள்; அவர்கள் ஜெயின் அல்லது குப்தாக்களாக இருக்கலாம். மார்வாடிகளாக இருக்கலாம். ஒரு வியாபாரம் செய்யக்கூடிய சமூகம். அவர்கள் மத்தியில் பாஜக வலுவாக இருந்தது. எனவே பாஜக அல்லது அதற்கு முன்னதாக ஜனசங்கத்தினுடைய வளர்ச்சி என்பது நகர்ப்புறங்களைச் சார்ந்து இருந்தது. ஆனால் இன்றைக்கு உத்தரப்பிரதேசத்தில் பட்டியலினத்துக்கான தொகுதிகளில் பெரும்பான்மையான தொகுதிகளில் அவர்கள் வெற்றிபெற முடிகிறது.

மாயாவதியினுடைய பகுஜன் சமாஜ் கட்சி  இருக்கிறது என்பது உண்மைதான். அந்த கட்சி யார் மத்தியில் இருக்கிறது என்று சொன்னால், பட்டியல் சாதிகளில்  உள்ள குறிப்பிட்ட துணை சாதி மத்தியில்தான் அவர்கள்  ஆழமாக இருக்கின்றனர். பட்டியல் இனத்தின் இதர துணை சாதிகளுக்குள்  பாஜக ஏகமாக வளர்ந்துள்ளது. பட்டியல்/பழங்குடி பிரிவினரை அவர்கள் குறிவைக்கிறார்கள்.

கடந்த 30, 40 ஆண்டுகளாகவே ஆர்எஸ்எஸ் பழங்குடியினர் மத்தியில் ஆழமாக வேலை செய்து வந்தது.  ஒரு நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையில்தான் அவர்கள் பணியாற்றி வந்தார்கள். இவர்களின் ஊடுருவலை நாம் கவனித்து நோக்க வேண்டும்.

பாஜக என்பது நால் வருணத்தில் நம்பிக்கை உள்ள கட்சிதான், மதவாதத்தைப் பின்பற்றுகிற கட்சிதான். இருந்தாலும் அவர்களுடைய அரசியல் நோக்கத்திற்காக அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் தேவை அவர்களுக்கு இருக்கிறது. அதனை முயற்சிக்கிறார்கள்.

தெரிந்த பல அமைப்புகள் ஆர்எஸ்எஸ் அமைப்புகளாக இருக்கும். இந்து முன்னணி போல சிலதை சொல்லலாம். ஆனால், தெரியாமல் பல்வேறு  அமைப்புகள், என்ஜிஓ-கள் ஆர்எஸ்எஸ் வழிகாட்டி நடத்தக்கூடிய அமைப்புகளாக இருப்பார்கள். குறிப்பாக இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் அவர்களுக்கு நிதி என்பது ஒரு பிரச்சனையாக இல்லை.

கேரளாவில் பழங்குடியின மக்கள் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 2 சதவிகிதம் கூட இருக்க மாட்டார்கள். ஆனாலும் ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலில் செயல்படக்கூடிய பெரும்பகுதி என்ஜிஓ கள் செயல்படும் பகுதி பழங்குடியின மக்கள் பகுதிதான். எனவே ஆர்எஸ்எஸ் நடவடிக்கைளுடைய எல்லை என்ன ?ஆழம் என்ன ? அதனுடைய தன்மை என்ன? வகைகள் என்ன ? என்பதை சரியாக புரிந்துகொண்டு எதிர்க்க வேண்டும்.

கருத்தியல் நடவடிக்கைகள்

இதற்கான திட்டத்தை உருவாக்குவதற்கான பரந்த வழிகாட்டுதல், 23 வது அகில இந்திய மாநாட்டின் அரசியல் ஸ்தாபன அறிக்கையில் தெளிவாக தரப்பட்டுள்ளது. அதில் முதல் விசயம், கருத்தியல் நடவடிக்கைகள் ஆகும்.  இந்துத்துவ வகுப்புவாத கருத்தியலை வீழ்த்துவதற்கான நடவடிக்கைகளுக்கான ஏராளமான விபரங்களை கொண்ட பிரசுரங்கள், வகுப்பு குறிப்புகள், பிரச்சார கருவிகளை, சமூக வலைத்தள உள்ளடக்கங்களை உருவாக்க வேண்டும். இவற்றை உள்ளூர் மட்டத்திலேயே சுலபமாக செய்துவிட முடியாது. கட்சியின்  மத்தியக்குழுவும், மாநிலக்குழுவும் இணைந்து குறிப்பிட்ட காலவரையறைக்குள் இதனை முடிக்க வேண்டும். சமூக வலைத்தளத்தையும் வலுப்படுத்தி கருத்தியல் பிரச்சார நோக்கில் பயன்படுத்த வேண்டும்.

இரண்டாவது விசயம், கட்சி மக்களோடு உயிரோட்டமான தொடர்பில்,  இரண்டற  கலந்திருக்க வேண்டும் என்கிற மாஸ்லைன் கடைப்பிடிப்பது.  மக்கள் மத்தியில் நம்முடைய தலையீடுகளும், பணிகளும் விரிவாக நடக்க வேண்டும் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். இது  கட்சிக்கும், வெகுஜன அமைப்புகளுக்கும் பொருந்தும்.  மக்களோடு உயிர்ப்பான ஒரு  தொடர்பில் இருக்க வேண்டும் என்பது  கொல்கத்தா பிளீனத்தில் இருந்தே சொல்லப்படுகிறது. மக்களுடன் உயிரோட்டமான தொடர்பு என்று சொல்வதன் மற்றொரு அம்சம், பல்வேறு நல நடவடிக்கைகளை, சமூக சேவை  நடவடிக்கைகளை முன்னெடுப்பது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் இது போன்ற பணிகளை  மேற்கொள்கிறார்கள். நாம் கட்சியாகவும், வர்க்க வெகுஜன அமைப்புகளின் வழியாகவும் இதனைச் செய்ய வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கல்வி தளத்தில் செயல்படுகிறது. அவர்களை போல ஆயிரக்கணக்கான பள்ளிக்கூடங்களை நாம் நடத்த முடியாது. ஒன்றிரண்டு நடத்தலாம். ஆனால்  இளைஞர், மாணவர் அமைப்புகள்  கல்வி தளத்தில்  பங்களிக்க முடியும். உதாரணமாக மாலை நேர கல்வி (டியூசன்) மையங்கள் நடத்தலாம்.  தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் நடத்தலாம். படிப்பு வட்டங்கள், நூலகங்களை நடத்த முடியும்.

அதே போல, பண்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். பண்பாட்டு நடவடிக்கை என்றாலே  கலைக்குழு அமைப்பு, பாடல்குழு, வீதிநாடகக்குழு என்பது மட்டுந்தான் நினைவில் வருகிறது. அந்த பணிகள் இன்னும் பரந்து பட்டதாக இருக்க வேண்டும். நமக்கு அப்பாற்பட்ட மக்களை ஈடுபடுத்தகூடிய விதமான நடவடிக்கைகளாக செய்ய வேண்டும். உதாரணமாக புத்தகத் திருவிழாக்களை சொல்லலாம். மாணவ/மாணவியருக்கான பேச்சு போட்டி, கட்டுரைப்போட்டிகள் நடத்தலாம். இந்த நடவடிக்கைகளை கட்சியாக மட்டும் நடத்த முடியாது. வர்க்க வெகுஜன அமைப்புகளும் செய்ய வேண்டும். குறிப்பாக தொழிற்சங்கள் சில முயற்சி எடுத்து, தொழிலாளர் வாழும் பகுதிகளில் பண்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்.

அடுத்து வளர்த்தெடுக்க வேண்டியது பாலர் சங்கம்,  சில மாநாடுகளாகவே நாம் பாலர் சங்கம் பற்றி பேசுகிறோம். இந்த விசயத்தில் தீவிர முன்முயற்சி ஏதும் இல்லை. அதனால்தான் பாலர் சங்கத்தை உருவாக்குவதை மாநாட்டின் கடமையாகவே நாம் வரையறுத்திருக்கிறோம். கேரளாவில் இவ்விசயத்தில் நமக்கு நல்ல அனுபவம் இருக்கிறது. ஒரு பரந்த அமைப்பாக பாலர் சங்கத்தை கட்டமைத்திருக்கிறார்கள். பாலர் சங்கத்தை உருவாக்கும் போது, கட்சி ஏற்கனவே கணிசமாக இருக்கும் பகுதி, செல்வாக்கு இருக்கும் பகுதியில் தொடங்கினால், இதர பகுதிகளுக்கும் விரிவாக்க முடியும் என்பது கேரள அனுபவம்.

மத விழாக்கள்

கோவில் திருவிழாக்களிலும், மத விழாக்களிலும் பங்கெடுத்தல் அடுத்து வருகிறது. பொதுவாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கோவில்களை, மத நம்பிக்கைகளை பயன்படுத்துகிறார்கள். கோவில் என்று சொல்லும் போது மதம் சார்ந்த நடவடிக்கைகள் இருக்கும். அடுத்து  கோவில் திருவிழாக்கள் என்று சொல்லும் போது அது மதம் சார்ந்த நடடிவடிக்கையாக மட்டும் இல்லாமல் ஒரு சமூகம் சார்ந்த நடவடிக்கையாகவும் இருக்கும் ஏரளாமான மக்களுடைய பங்கேற்பும் இருக்கும். நாம் சமூகம் சார்ந்த நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்க முடியாது.

திருவிழாக்களை நாம் முற்றிலும் நிராகரித்துவிட முடியாது. ஆனால் எந்த திருவிழாவில் பங்கேற்பது. எந்த அளவில் பங்கேற்பது என்பது பற்றி  ஓரே சீரான முடிவினை மேற்கொள்ள முடியாது. ஒவ்வொரு திருவிழாவின் தன்மையை பொருத்து முடிவு செய்ய வேண்டும். சில திருவிழாக்கள் முழுக்க முழுக்க மதம் சார்ந்த நடவடிக்கையாக மட்டும் இருக்கும். அதில் சமூக ரீதியான  பங்கேற்பு பெரியதாக இருக்காது. எனவே ஒவ்வொரு திருவிழாக்களின் தன்மையை கணக்கில் எடுத்து உள்ளூர் மட்டத்தில் முடிவு எடுக்க வேண்டும்.

கோயில்களுக்கும் சமூக வாழ்க்கையில் பாத்திரம் உள்ளது. அவைகளை ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்புகள் கையகப்படுத்துகிறார்கள். இந்துத்துவா நடவடிகைகளுக்கு பயன்படுத்துகிறார்கள். நாம் அதனை அப்படியே தங்குதடையில்லாமல் அனுமதிக்க முடியாது. எனவே கோயில் நிர்வாகத்தில் நாமும் தலையிட வேண்டும். அதற்காக கட்சியின் முக்கிய ஊழியர்கள் அதனை செய்ய முடியாது. கட்சி ஆதரவாளர்கள், மதச்சார்பற்ற மனநிலை கொண்ட நம்பிக்கையாளர்கள் அதில் இணைந்திட முடியும். இது அத்தனை எளிதாக இருக்காது. ஆனால் நாம் இதன் மூலமே கோயில்களை ஆர்.எஸ்.எஸ் செயல்பாட்டுக்கான  களமாக மாறாமல் தடுக்க முடியும்.

விளையாட்டு விழாக்கள், யோகா பயிற்சி போன்ற வேறு பல சமூகம் சார்ந்த நடவடிக்கைகளும் அவசியமே.

பொதுவாகவே மக்கள் மத்தியில் மத உணர்வு அதிகரித்துள்ளது. (மதவாதத்தை குறிப்பிடவில்லை). கிருத்துவர்கள், இஸ்லாமியர்கள் மத்தியிலும் மத உணர்வு கூடுதலாகியுள்ளது. மதத்திற்கு எதிரான போராட்டத்தை நாம் நடத்துவதில்லை. அதற்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. மதவாத சக்திகள், மதவெறி சக்திகளை எதிர்த்த போராட்டத்திற்குத்தான் முன்னுரிமை கொடுக்கிறோம்.

நேரடியாக மதத்தை விமர்சிக்காத அதே சமயத்தில் அறிவியல் ரீதியான கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும், அதே போல முற்போக்கான சிந்தனைகளை உருவாக்குவதற்கான முயற்சிகளை  மேற்கொள்ள வேண்டும்.  மூடநம்பிக்கைகளையும்,  பழமைவாதத்தையும் எதிர்த்து பிரச்சாரம் செய்ய வேண்டும். இதுபோன்ற முயற்சியின் மூலம் சமூகத்தை  அறிவியல் பாதையில், முற்போக்கு பாதையில் செலுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

சிறுபான்மை வகுப்புவாதம்

ஆர்எஸ்எஸ் இந்துத்துவச் சக்திகள் வளர்கிறார்கள். அந்த வளர்ச்சி மட்டும் தனியாக நடப்பதில்லை. இன்னொரு பக்கம் இஸ்லாமிய மத அடிப்படை வாதிகளும் வளர்கிறார்கள். அதிலிருந்தும் ஆர்.எஸ்.எஸ் பலனடைகிறது. 1990 களில் கோவையில் என்ன நடந்தது என்பதைப் பார்த்தோம்.

பொதுவாக நாடு முழுவதுமே இஸ்லாமிய மக்கள் மிக மோசமான தாக்குதலுக்கு ஆளாகிவருகிறார்கள். குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில்  இரண்டாம்தர குடிமக்களாக வேகமாக மாற்றப்பட்டு வருகிறார்கள். எல்லாக் குடிமக்களுக்கும் உரிய அடிப்படையான உரிமைகள் கூட இஸ்லாமிய மக்களுக்குமறுக்கப் படுகின்றன. எனவே இந்த மாநிலங்களில் இஸ்லாமிய மக்கள்   விரக்தியின் விளிம்பிற்குத் தள்ளப்படுகிறார்கள். அந்த மாதிரியான சூழலில் அவர்கள்  இஸ்லாமிய அடிப்படைவாத, தீவிரவாத  அமைப்புகள் பக்கம் திரும்புவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

குறிப்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அதனுடைய அரசியல் கட்சியான எஸ்டிபிஐ, அதைப்போல ஜமாத்-இ-இஸ்லாமி அதனுடைய அரசியல் கட்சியான வெல்பேர் பார்ட்டி போன்றவற்றை நோக்கி ஒரு பகுதி சிறுபான்மையினர்  திரும்ப வாய்ப்பு இருக்கிறது.

தீவிரவாத போக்குகள்  சிறுபான்மை மக்கள் மத்தியிலிருந்து வந்தாலும் அதை கடுமையாக எதிர்க்க வேண்டும். இந்துத்துவ சக்திகளை எதிர்த்து விட்டு, சிறுபான்மை தீவிரவாதத்தை எதிர்க்கவில்லை என்று சொன்னால், சாதாரண மக்களுக்கு நம் மீது நம்பகத்தன்மை வராது. அது ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு சாதகமாகிவிடும். நம்முடைய நோக்கம் அனைத்து மதங்களையும் சார்ந்த மக்களை ஒரே அணியில் இணைத்து மதவெறிக்கு எதிரான, மதவாதத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான நடவடிக்கைகளை உள்ளூர் அளவில் திட்டமிட்டு, திட்டவட்டமாக முன்னெடுக்க வேண்டும். மாநில அளவிலும், அகில இந்திய அளவிலும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நாடும், நாட்டு மக்களும்  எதிர்கொள்ளும் தீவிர அபாயத்திற்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும்.

தமிழில்: உ.வாசுகி

தொகுப்பு: எம்.கண்ணன் (தீக்கதிர்)

இங்கிருந்து எங்கே…?

கலாநிதி க. கைலாசபதி

அண்மையில் மறைந்த முதுபெரும் எழுத்தாளர் கு. சின்னப்ப பாரதி அவர்கள் தமிழிலக்கிய உலகில் சோஷலிச எதார்த்த வாதத்தின் அடிப்படையிலேயே தனது எழுத்துக்களை வழங்கி வந்தார். அவரது ‘சுரங்கம்’ நாவல் குறித்த விரிவான ஆய்வுக் கட்டுரை ஒன்று ஆகஸ்ட் இதழில் வெளியாகும். அதற்கு முன்பாக, தமிழிலக்கிய உலகில் மார்க்சியப் பார்வையோடு எழுத்தின் முக்கியத்துவம் குறித்து விரிவாக எழுதிய கலாநிதி கைலாசபதி அவர்களின் எழுத்தின் இலக்கு குறித்த கட்டுரையை இங்கே தந்துள்ளோம்.- ஆசிரியர் குழு

கலாநிதி . கைலாசபதி (1933-1982) இலங்கை பேராதனை பல்கலைக்கழகத்தில் எம்.. முடித்து, பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் டாக்டர் (கலாநிதி) பட்டம் பெற்றவர். தாம் வாழ்ந்த காலத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள், நண்பர்கள், எழுத்தாளர்களின் சிந்தனையிலும் இதயத்திலும் குடிகொண்டவர். தம் காலத்தில் தனி நிறுவனமாகவே விளங்கினார். கல்வி, ஆராய்ச்சி, விமர்சனம், பத்திரிக்கைத் தொழில் ஆகிய துறைகளில் எல்லாம் புதுமை வேண்டி உழைத்தவர். கலைஇலக்கிய வரலாற்றில் அவர் பங்களிப்பு மலை போன்றது. அவர் பெயரில் பத்து அரிய நூல்கள் வரையும் நூற்றுக் கணக்கான ஆய்வுக்கட்டுரைகளும் உள்ளன.

பழந்தமிழ் இலக்கியத்தையும் நவீன இலக்கியத்தையும் விஞ்ஞானபூர்வமாக அணுகும் போக்கின் முன்னோடியாகவும் முதல்வராகவும் அவர் விளங்கினார்.  “விமர்சனம் என்பது உலகை விவரிப்பது மாத்திரமன்று….அது உலகத்தை மாற்றி அமைப்பதற்குஓயாது பயன்படுத்தும் ஆயுதமாகவும் இருக்க வேண்டும்என்ற அவரது கலை, இலக்கியம், விமர்சனம் குறித்த உயர்ந்த கோட்பாடு அவரது எழுத்துக்கள் அனைத்திலும் ஊடுருவி நிற்பதைக் காணலாம். இலக்கியத்தின் இலக்கு மற்றும் எதிர்காலம் குறித்து அவர் எழுதிய ஒரு கட்டுரையை இங்கே வழங்குகிறோம்.

இலக்கிய உலகிலே காலத்துக்குக் காலம் புதிய பிரச்சனைகள் தோன்றுவதுண்டு. அதேபோல, காலங்காலமாக எழுப்பப்படும் சில வினாக்களும் உண்டு. அத்தகைய  ‘நித்தியமான’ வினாக்களில் ஒன்று ‘இலக்கியம் எதற்காக?’ என்பதாகும். காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப இவ்வினாவிற்கு வேறுபடும் விடைகள் அளிக்கப்படலாம். எனினும் இலக்கியம் சம்மந்தமான அடிப்படை கேள்விகளில் மேலே குறிப்பிட்டதும் ஒன்றாகும்.

இலக்கியத்தின் குறிக்கோள் பற்றி கருத்து ரீதியாக விடை கூறுவதிலும் பார்க்க, இலக்கிய கர்த்தாக்களின் நோக்கையும் போக்கையும் விவரிப்பதனால் விளக்கம் தேடுதல் விரும்பத்தக்கதாகும். தனிப்பட்ட ஒரு எழுத்தாளன் காதல், புகழ், பணம், சமய நம்பிக்கை, அரசியல் ஈடுபாடு முதலிய பல காரணங்களில் ஒன்றோ, பலவோ உந்துவதால் எழுதுகிறான் எனக் கூறலாம். எனினும் எழுத்தாளனை பொதுவாக நோக்குமிடத்து மூன்று நிலைப்பாடுகளை கவனிக்கலாம்.

எழுத்தாளன் தனித்து வாழும் ஒருவன் அல்லன். அவன் சமூகப்பிராணி. சமுதாயத்தில் எல்லாக் காலங்களிலும் முரண்பாடுகளும், போராட்டங்களும், இயக்கங்களும் இடைவிடாது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றின் மத்தியிலே எழுத்தாளனும் வாழ்கின்றான். இந்நிலையில் மூன்று நிலைப்பாடுகளை பொதுவாக எழுத்தாளரிடையே காணக்கூடியதாய் உள்ளது.

ஒரு பிரிவினர், பிரச்சினைகளையும், முரண்பாடுகளையும், துன்ப துயரங்களையும் எதிர்நோக்காதவராய், அவற்றுடன் சம்பந்தப்படாமல், இன்பமூட்டுவதையே எழுத்தின் தலையாய நோக்கமாய்க் கொண்டு, அதற்கு இயைய கற்பனைச் சம்பவங்களையும், கதைகளையும், உணர்ச்சிகளையும் இலக்கியமாக்குபவர்கள். இவர்களில் சிலர் கூறும் வாதம் சுவையானது. “வாழ்க்கை பலருக்குத் துன்பமாயுள்ளது என்பதை நாமும் அறிவோம். எனவே துன்ப மயமாய் அமைந்த வாழ்க்கைக்கு மேலும் துயர் கூட்டுவதுபோல, சஞ்சலத்தையும், அவலத்தையும், அருவருப்பையும் இலக்கியத்தில் எதற்காகப் புகுத்த வேண்டும்? ஆகவே, துன்பத்தின் மத்தியில் துளிநேர மாற்றத்தை அளிப்பதாய், கற்பனையிலேனும் களிப்பையும் கவர்ச்சியையும் நாம் கொடுத்து உதவ விரும்புகிறோம்; முயல்கிறோம்.” இவ்வாறு அவர்கள் தமது நிலைப்பாட்டிற்குச் சமாதானமும் விளக்கமும் கூறுவர். நடைமுறையில் பெரு வணிக நிறுவனங்களின் குரலாகவே இது இருப்பதைக் கண்டு கொள்ள அதிக நேரம் பிடிக்காது. தென்னிந்தியாவிலே பெரும் தொழிற்துறையாக வளர்ந்துள்ள சினிமா இத்தகைய வாதத்தின்  துணையுடனேயே, ‘அபினி’யாக மக்களுக்கு ஊட்டப்படுகிறது என்பதனை நாம் அறிவோம். பல லட்சக் கணக்கில் வெளியிடப்படும் ‘குமுதம்’, ‘ஆனந்த விகடன்’ முதலிய சஞ்சிகைகளும் ‘துன்பப்படும் மக்களுக்கு மகிழ்வூட்டுவதற்காகவே’ வெளிவருகின்றன எனக் கூறப்படுவதுண்டு. “எனது குறிக்கோள் மக்களை மகிழ்விப்பது ஒன்றே” என்றுதான் ஜெமினி அதிபரும் ஆனந்தவிகடன் வெளியீட்டாளருமான வாசன் எப்பொழுதும் கூறிவந்தார்.

இப்பிரிவினர் அனைவருமே பெருவணிகர் என்றோ, திட்டமிட்டு மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிப்போர் என்றோ நாம் கூற வேண்டுவதில்லை. இலக்கியம் தூய்மையானது; பேருணர்ச்சிகளுக்கு வாகனமாய் அமைய வேண்டியது; கற்பனை சார்ந்ததாய் இருக்க வேண்டியது என்று உண்மையாகவே நம்பும் எழுத்தாளரும் இருக்கக் கூடும். எவ்வாறாயினும் சமூகப் பிரச்சனைகளைப் பிரதிபலிக்காமல் மானசீக உலகில் இருந்துகொண்டு எழுதுவோர் ஒரு பிரிவினர் எனலாம்.

வரலாற்று அடிப்படையில் நோக்கும்போது, மன்னராட்சிக் காலங்களிலும், நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பிலும், பாராட்டப்பெற்ற ‘அவை’ இலக்கியங்கள் இத்தகையன என்று பொதுப்படக் கூறலாம். குறிப்பாக உயர் மட்டத்தினரின் காதல் வாழ்க்கை, இன்பக் கேளிக்கை, உல்லாசப் பொழுதுபோக்கு என்பவற்றை மையமாகக் கொண்டு எத்தனையோ சிற்றின்ப நூல்கள் தோன்றின. இவற்றின் மிச்ச சொச்சத்தை நவீன காலத்திலே ஐயத்துக்கிடமின்றி நாம் காணக் கூடுமாயினும், முதலாளித்துவ சமுதாயத்திலே, வாழ்க்கையை, முற்றுமுழுதாகப் புறக்கணிக்கும் இலக்கியங்கள் தோன்றுவது குறைவு என்றே கூற வேண்டும்.

இன்னொரு பிரிவினர், மேலே நாம் விவரித்த சமுதாய முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் ஓரளவுக்கு நோக்கி, அவற்றைத் தமது எழுத்தின் பொருளாகக் கொள்பவர்கள். சமுதாயத்திலே பரவலாகக் காணப்படும் துன்ப துயரங்களை உணர்ச்சியின் அடிப்படையிலே அனுதாபத்துடன் பார்க்கும் இப்பிரிவினர், முந்தைய பிரிவினரோடு ஒப்புநோக்குமிடத்து தம்மைச் சுற்றியுள்ள யதார்த்தத்தை எதிர்நோக்குகின்றனர் என்பதில் ஐயமில்லை. எனினும் சமுதாய நிலைமைகளை பிரதிபலித்தாலே போதும் என்னும் எண்ணம் இவர்களில் பெரும்பாலானோரை பற்றிக் கொண்டிருக்கிறது என்பதிலும் ஐயமில்லை. அதாவது முதற்பிரிவினர் பிரச்சனைகள் இருப்பதையே எழுத்தில் பிரதிபலிக்கவில்லை; அதனால் அப்பிரச்சனை இலக்கியத்திற்கு உகந்த உரிய பொருட்கள் அல்ல என்னும் கருத்தைக் கொண்டவராய் உள்ளனர். இரண்டாவது பிரிவினரோ இதற்கு மாறாக, சமுதாயப் பிரச்சினைகள் இலக்கியத்தில் இடம் பெறுவதை ஏற்றுக் கொள்கின்றனர். எனினும் தமது கடமை, அல்லது பொறுப்பு அவற்றைத் தத்ரூபமாகச் சித்தரித்து விடுவதே என்று கருதுகின்றனர். காலப்போக்கில் சமுதாயம் திருந்தும் என்ற நம்பிக்கையும் இவர்களுக்கு உண்டு.

வரலாற்று அடிப்படையில் நோக்கும்பொழுது, நிலப்பிரபுத்துவ சமுதாயத்தை அடுத்து வந்துள்ள முதலாளித்துவ சமுதாய அமைப்பில், சந்தைக்குப் பொருள் தயாரிப்போருள் ஒருவனாக மாற்றப்பட்டுள்ள எழுத்தாளன், வாழ்க்கைப் போராட்டத்தின் அடிப்படையில் வேலைத் தட்டுப்பாடு, மோசடி, ஏற்றத்தாழ்வு, சுரண்டல் முதலிய கொடுமைகளை அனுபவரீதியாகவும், அறிவுரீதியாகவும் ஓரளவு கண்டு, அவற்றை இலக்கியத்திலும் பிரதிபலிக்கிறான். ஆயினும், இவற்றை எல்லாம், அவன் எழுத்தாளன் என்னும் வகையில் தனிப்பட்ட முறையிலும், தனிப்பட்ட மாந்தரின் அவலங்களாகவுமே எழுதுகிறான். இதன் விளைவாக, துன்ப துயரங்களை கண்டு கண்ணீர் வடித்து, இரங்கி ஏங்கும் நிலைக்குப் பெரும்பாலும் அவன் தள்ளப்படுகிறான். யதார்த்தத்தைக் கண்டு மனம் நொந்து வெதும்புகிறான்; சில சமயங்களில் சினங்கொண்டு சீறவும் செய்கிறான்; எனினும் அதற்கு மேல் அவன் நோக்கு பெரும்பாலும் போவதில்லை.

நவீன உலகில் பரவலாகப் பொதுமைச் சிந்தனைகளும், சோஷலிசக் கருத்துக்களும் நிலவுவதால், அவற்றாலும் இரண்டாம் பிரிவு எழுத்தாளர்கள் சிலர் ஈர்க்கப்படுவதுண்டு. எனினும் அவர்களிடத்தும், இலக்கியத்தை ‘பிரச்சாரம்’ ஆக்குதல் கூடாது என்னும் சில ஐயங்களும், அச்சங்களும் ஆழமாக வேரூன்றி இருப்பதைக் காணலாம்.

பல்வேறு வரலாற்றுக் காரணங்களினால், கடந்த கால் நூற்றாண்டு காலத்திலே, ஈழத்துத் தமிழிலக்கியத்தில் இப்போக்கு கணிசமான தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது எனலாம்.

எனினும் சமீப காலத்தில் பல இளைஞர்களிடையே, குறிப்பாக கிராமப் பக்கங்களில் வாழும் எழுத்தாளர்களிடையே, பிரச்சினைகளை இன்னும் நுணுக்கமாகவும், தூலமாகவும் ஆராய்ந்து அவற்றுக்குப் பரிகாரம் கூறும் இலக்கியப் படைப்புக்கள் வேண்டும் என்னும் கருத்து வேகம் பெற்று வருதலைக் கவனிக்கக் கூடியதாய் உள்ளது. இதற்குத் தருக்கரீதியான காரணங்களும் இல்லாமல் இல்லை. மனிதாபிமான உணர்வுடன் நடைமுறைப் பிரச்சினைகளை சித்தரித்தல் ஏற்றதே என்னும் கோட்பாடு ஓரளவு வழக்காகிய பின், அடுத்து என்ன? என்னும் வினா எழுதல் இயல்பே. அது மட்டுமன்று. பிரச்சினைகளை மேலும் கூர்ந்து நோக்கி, ஒவ்வொன்றின் காரண காரிய தொடர்புகளை விளங்கிக் கொண்டு எழுதும்போது, அவற்றை நீக்க வேண்டிய அவசியத்தையும், அதற்கான வழிவகைகளையும் விவரித்தல் தவிர்க்க இயலாததே. நோயை நுணுக்கமாக விளக்கி விவரித்தால் மட்டும் போதுமா? நோயாளியின் மீது இரக்கப்பட்டால் மட்டும் போதுமா? நோயின் வரலாற்றை ஆதியோடு அந்தமாகக் கூறினால் மட்டும் போதுமா? நோய் தீர மருந்தும் மார்க்கமும் வேண்டாமா?

இன்னும் ஒரு காரணமும் உண்டு. ஒரு காலகட்டத்தில் இரண்டாவது பிரிவைச் சேர்ந்த எழுத்தாளர்கள் புதுமையின் பெயரிலும் புரட்சியின் பெயரிலும் இலக்கியத்தில் புகுத்திய பொருள்களும் சித்தரிப்பு முறைகளும் இன்று வர்த்தக வெளியீடுகளிலும், சாதாரணமாக இடம்பெறத் தக்கவையாகி விட்டன. ‘அரங்கேற்றம்’ போன்ற திரைப்படமும் ‘யதார்த்தப்’ படைப்பு எனப் பலர் கருதுமளவிற்கு, பொருள் எடுத்தாளப்படுகிறது. அதாவது இனம் காண்பது கடினமாகி விட்டது எனலாம்.

இந்நிலையில், சமுதாயத்தில் காணப்படும் முரண்பாடுகளையும், துன்ப துயரங்களையும், போராட்டங்களையும் உதிரியான தனிமனிதர்களின் பிரச்சினைகளாக மாத்திரம் கண்டு காட்டாமல் அவற்றை வர்க்கங்களுக்கு இடையே நிகழும் போராட்டத்தின் வெளிப்பாடுகளாக காண்பது இன்றியமையாததாக ஆகிறது. இரண்டாவது பிரிவிலே தொடங்கியபோதும், வர்க்க அடிப்படையிலே பாத்திரங்களை அணுகாமல் விசேஷமான தனிப்பிறவிகளை இலக்கிய மாந்தராகக் கொண்டமையாலேயே, ஒரு காலத்து ‘முற்போக்கு’ எழுத்தாளர் ஜெயகாந்தன், இன்று ‘பிரம்மோபதேசம்’ செய்பவராக உருமாறியுள்ளார். இது ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரது தனிப்பட்ட பலவீனம் மட்டுமன்று; அவன் பற்றிக் கொண்டிருந்த இலக்கியக் கோட்பாட்டிலே உள்ளார்ந்த பலவீனமாய் இருந்த அம்சத்தின் பரிணாமம் என்றும் கூறலாம் அல்லவா? ஜெயகாந்தனை விதிவிலக்கான ‘வில்லனாக’ நாம் விவரிக்க வேண்டியதில்லை. பல எழுத்தாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எடுத்துக்காட்டு என்றே கொள்ள வேண்டும். வர்க்க ஆய்வின் அடிப்படையில், தூலமான சந்தர்ப்பங்களில் பாத்திரங்களை சித்தரிக்கத் தவறும் எந்த எழுத்தாளரும் ஜெயகாந்தன் ஆவதற்கு அதிக நாள் பிடிக்காது.

இதை இன்னொரு வகையாகவும் நோக்கலாம். ஜெயகாந்தனது எழுத்தில் இன்றும் நுணுக்க விவரங்களைக் கூறும் ‘யதார்த்த’ப் பண்பு, அதாவது இயற்கையாகப் பாத்திரங்களைத் தீட்டும் ஆற்றல் குறைவின்றியே இருக்கிறது. மனிதாபிமான உணர்வும் இல்லையென்று அடித்துக் கூற இயலாது. ஆயினும் சமுதாய மாற்றத்துக்கு ஆதரவு தருபவராக அவர் இன்று இல்லை. எனவே பிழை எங்கு உள்ளது என்று கவனமாய்த் தேட வேண்டும்.

இந்த இடத்திலேதான் மூன்றாவது பிரிவினர் முக்கியத்துவம் பெறுகின்றனர். சமுதாயத்தை நுணுக்கமாகப் பிரதிபலிப்பது மட்டுமின்றி, அதனை மாற்றி அமைக்கும் பணியில் பங்குபற்றுவதுடன், அப்பணி வெற்றி பெறுவதற்குரிய மாற்றங்களை இலக்கியப் பொருளாகத் துணிந்து ஏற்றுக் கொள்வதும் இன்றைய தேவையாகும் என இப்பிரிவினர் வற்புறுத்துகின்றனர். இவ்வாதத்தை இலகுவில் ஒதுக்கிவிட முடியாது. அனுபவமும் அனைத்துலகப் போக்கும் இவ்வாதத்துக்கு அரண் செய்வனவாகவே உள்ளன.

வரலாற்று அடிப்படையில் நோக்கும்பொழுது, தொழிலாளர், விவசாயிகள் வர்க்கத்திலிருந்து தோன்றும் கலை இலக்கியக் கோட்பாட்டின் காத்திரமான குரல் இது என்பது வெளிப்படை. எதிர்காலத்தை மாற்றி அமைக்கும் பெரும் பணிக்கு அவர்கள் தலைமை தாங்குபவர்கள் ஆதலின் அக்குரல் வலிமை உடையது என்பதில் ஐயமில்லை. இக்கோட்பாடு இலக்கியத்தில் செயற்படுகையில் சிறப்பான பிரச்சினைகள் தோன்றும் என்பது உண்மை. கலையழகு, உருவம், நம்பகத்தன்மை, ஏற்புடைமை, மொழி நயம் முதலிய பல்வேறு அம்சங்கள் இணைதல் வேண்டும். புதிய நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். ஆயினும் இவை எதிர்நோக்க வேண்டிய சவால்களே. இந்தக் காலகட்டத்தில் இன்று ஈழத்து எழுத்தாளர்கள் வந்து நிற்கின்றனர். தருக்கரீதியாக வளர்ந்து வந்துள்ள இப்போக்கை தக்கபடி முன்னெடுத்துச் செல்வதிலேயே எமது எதிர்காலம் தங்கியுள்ளது.

(இக்கட்டுரை ‘தாயகம்’ இதழில் 1974ஆம் ஆண்டில் வெளியாகி, கைலாசபதியின் மறைவையடுத்த ஒரு மாத காலத்திற்குள் ஈழத்து நாவலாசிரியர் செ. கணேசலிங்கன் பதிப்பித்த நினைவு மலரான ‘இலக்கியச் சிந்தனைகள்’ என்ற நூலில் இடம் பெற்றது.)

கருத்தியல் களமும், அரசியல் அதிகாரமும்

(தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய பயிற்சிமுகாமில் ஆற்றிய உரையின் வரிவடிவம். நன்றி: அணையா வெண்மணி)

என்.குணசேகரன்

கருத்தியல் களமும் அரசியல் அதிகாரமும் என்கிற இந்தத் தலைப்பு மிக முக்கியமான தலைப்பு. இது நாம் ஆற்றவேண்டிய மிக முக்கியமான பணிகளை நினைவூட்டுவதாக கருதுகிறேன். கருத்தியல் களத்திற்கும் அரசியல் அதிகாரத்திற்கும் ஒரு இணைப்பு உள்ளது என்பதை சொல்லுவதே ஒரு முக்கியமான விஷயம் என்பது மட்டுமல்ல காலம் காலமாக மறைத்துவைக்கப்பட்டிருக்கிற அல்லது மறக்கப்பட்டிருக்கிற செய்தியை இந்தத் தலைப்பு தெரியப்படுத்துகிறது.

சிறிய கூட்டத்தின் ஆட்சி

அரசியல் அதிகாரம் என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக சமூகத்தின் ஒரு மேல்தட்டு, ஒரு சிறு கூட்டத்துக்குத்தான் சொந்தமாக இருந்திருக்கிறது. அதிகாரம், ஆட்சி, நிர்வாகம் என்கிற இவையெல்லாம் செழுமைப்படுத்தப்பட்டிருக்கிற ஒரு மேம்பட்ட வடிவத்தை பெற்றுள்ள இப்போதைய சமூகம் முதற்கொண்டு, இதற்கு முந்தைய காலங்களிலே மன்னர்களுடைய அரசாட்சி என்கிற முறையில் முடியாட்சி நடைபெற்ற காலம் வரைக்கும், ஆட்சி அதிகாரம் என்பது பெரும்பான்மையான மக்களை ஆள்கிற இடத்தில் ஒரு சிறு கூட்டம் தான் இருந்துவந்திருக்கிறது. உடமை வர்க்கங்கள் என்று சொல்லப்படுகிற ஒரு சிறு கூட்டம் தான் ஆளுகிற இடத்தில் இருந்திருக்கிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அவர்கள் நிலவுடைமைச் சக்திகளாக இருந்திருக்கலாம். அதற்கு முன், சாதியக் கட்டமைப்பு இந்திய சமூகத்தில் வேறூன்றத் தொடங்கிய காலத்தில், கிட்டத்தட்ட அடிமைகள் எஜமானர்கள் என்று இருந்த காலத்திலேயே கூட நிர்வாகம் என ஒரு அமைப்பு இருந்திருக்கிறது. ஓரளவுக்கு அரசு என்ற வடிவம் தோன்றியிருக்கிறது. அப்படிப்பட்ட காலத்திலும் ஒரு சிறு கூட்டம்தான் பெரும்பான்மையினரை அடிமைப்படுத்தியிருந்தது.

ஆனால், சாதாரண மக்களுக்கு இது வெளிப்படையாக தெரியவில்லை. உலகில் கிட்டத்தட்ட 800 கோடி மக்கள் வாழ்கிறார்கள், இதில் 99 % உழைக்கும் மக்கள் ஆவர். இந்த மக்களின் உழைப்பைச் சுரண்டி வாழ்ந்து கொண்டிருக்கிற கூட்டம், ஒப்பீட்டளவில் மிக மிகச் சிரியது. அமெரிக்காவில் வால்ஸ்டீரீட்டைக் கைப்பற்றுவோம் என்ற ஒரு இயக்கம் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. நாங்கள் 99 சதவீதம், நீங்கள் 1 சதவீதம் என்று அவர்கள் முன்வைத்த முழக்கத்திலேயே ஒரு செய்தியை முன்வைத்தார்கள். 1% என்பதுதான் ஆளுகின்ற கூட்டம்.

இப்படி காலம் காலமாக ஒரு சிறு கூட்டம் தான் பெரும்பான்மையை அடக்கி ஒடுக்கி வந்திருக்கிறது.

அதிகாரம் செலுத்தும் வழிமுறை

இந்திய நாட்டை எடுத்துக்கொண்டால், மக்கள் தொகை 130 கோடி. இதில் ஒரு சிறு கூட்டம், ஒரு 250 கம்பெனிகள் இருக்கலாம் (அதில் 10 லிருந்து 12 கம்பெனிகள் அதானி அம்பானி போன்ற பெரும் கார்ப்ரேட் கம்பெனிகள்) இப்படிப்பட்ட ஒரு சிறு கூட்டம், மிகப் பெரும்பான்மையை அடக்கி ஆள்கிறது, நினைத்தை சாதிக்கிறது. கொரோனா பெருந்தொற்றின் காலத்திலும் சாதித்துக்கொண்டிருக்கிறது. அது எப்படி நடக்கிறது?

காலம்காலமாக இது எப்படி சாத்தியமாகிறது என்றால், அடக்குமுறைக்கான, வெகுமக்களை அடக்கி ஆள்வதற்கான இரண்டு கருவிகள் அவர்களுக்கு பயன்பட்டு வந்திருக்கிறது. ஒன்று, நேரடிடையாக அடக்குமுறையை ஏவிவிடக்கூடிய கருவிகள் அவர்களிடம் உள்ளன. ஒரு வலுவான காவல்துறை, ஒரு வலுவான இராணுவம் உள்ளது.  

மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறைந்துகொண்டேயிருக்கிறது. அதே நேரத்தில், அடக்குமுறைக் கருவிகளைப் பலப்படுத்துவதற்கான நிதி உள்ளிட்ட எல்லாவிதமான ஏற்பாடுகளையும் அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். இது இந்திய நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கிற விஷயம்.

உழைக்கும் மக்கள் மீது, இராணுவத்தை ஏவிவிட்டு படுகொலை செய்வது காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது. 1940களில் தெலுங்கானாவில் விவாசிகள் தங்கள் நிலத்துக்காக செங்கொடி ஏந்திப் போராடியபோது, அந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக இந்திய இராணுவம், (அப்போது தான் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்திருந்தது) பயன்படுத்தப்பட்டது. மக்களை அழித்தொழித்தது. பல்லாயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகள் வேட்டையாடப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள். எனவே அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை இராணுவம் காவல்துறை உள்ளிட்டவை உழைக்கும் மக்களின் போராட்டங்களை நேரிடையாக ஒடுக்குவதற்கும் தாக்குவதற்கும் இருந்துகொண்டிருக்கிறது. சிறைகூட அதற்காகத்தான் இருந்துகொண்டிருக்கிறது.

ஆனால் இதைவிட பலமான அடக்குமுறைக் கருவி அவர்களிடம் இருக்கிறது. அதன் வழியாக உழைக்கும் மக்களுடைய ஆதரவான கருத்தைப் பெற்றே அவர்களை அடக்கிஒடுக்குகிறார்கள்.

கருத்தியல் எனும் தளம்

கருத்தியல் தளத்தில், ஆளும் வர்க்கங்களுக்கு, ஆள்வதற்கான ஒப்புதலை உருவாக்குகிறார்கள். மன்னர் தெய்வத்தின் அடையாளம் (இங்கிலாந்தில் ஒருகாலத்தில் இந்தக் கருத்து வலுவாக இருந்தது) அதாவது மன்னருக்கும் தெய்வத்துக்கும் வித்தியாசம் இல்லை என்கிற கருத்து. எனவே, தன்னை அடக்கி ஒடுக்குபவரை மன்னருக்கு சமமாக வைத்துப் பார்க்கிற அந்தக் கருத்து, அது மதத்தின் பெயரால் பதியவைக்கப்பட்டது. இந்தியாவைப் பொருத்தவரை கருத்தியல் என்கிற கோட்டையை ஆளும் வர்க்கம் பலமாகக் கட்டுவதற்கு, ஒரு அடித்தளமாக சாதியக் கட்டமைப்பு என்பது பயன்பட்டிருக்கிறது, பயன்பட்டுவருகிறது.

அதாவது கருத்தியல் தளம் என்பது அடக்கி ஒடுக்கப்படுகிற மக்கள் தன்னை அடக்கி ஒடுக்குகிற கூட்டத்துக்கு எதிராகத் திரும்பிடாமல் பார்த்துக்கொள்கிறது. அவர்கள் எல்லாவிதமான உழைப்பையும் சுரண்டி ஊதியத்தைக் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள், உழைப்புக்கான ஊதியம் கிடைப்பதில்லை. ஆனாலும் அவர்களுக்கு எதிராக உழைக்கும் மக்கள் திரும்பிடாமல் இருப்பதற்கு எதிர்ப்புக் களத்துக்கு போகாமல் இருப்பதற்கு கருத்தியல் தளம் பயன்படுத்தப்படுகிறது.  

அது கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் நடக்கிறது. இவையெல்லாம் நேரடியாகத் தெரியக்கூடியவை. இன்னொரு பக்கம் அது கல்வியின் பெயரால் நடக்கிறது. ஊருக்கு ஊர் இருக்கக்கூடிய பேச்சு வழக்குகளின் ஊடாக அது நடக்கிறது. இந்த ஆளும் வர்க்கத்துக்கும் அதனால் ஆளப்படுகிற, சுரண்டப்படுகிற வர்க்கத்துக்குமான முரண்பாட்டை, வேறுபாடுகளை மட்டுப்படுத்துவதற்கு, அது வெடித்திடாமல் தடுப்பதற்கு இந்தக் கருத்தியல் களம் ஆளும் வர்க்கத்துக்கு பயன்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்தக் கருத்தியல் களமும் அரசியல் அதிகாரமும் பிணைந்த ஒன்று.

கருத்தியல் களத்தில் நாம் செயல்படுகிற போது தீண்டாமை ஒழிப்பு முன்னணி இப்படிப்பட்ட பணியைத் துவங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சிகரமான ஒன்று. இப்போதுதான் ஏதோ கருத்தியல் களத்தில் பணியாற்றுவதாக நான் நினைக்கவில்லை. நீண்டகாலமாக அந்தப் பணி நடந்துகொண்டிருக்கிறது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலையிடுகிற எல்லா இடங்களிலேயும் செயல்கள் மூலமாக, தலையீடுகள் மூலமாக அந்தக் குறிப்பிட்ட கிராமத்துக்கு அந்தக் குறிப்பிட்ட பகுதிக்கு ஒரு செய்தியை, ஒரு கருத்தைப் பதியவைக்கிற வேலையும் கூடவே நடந்துகொண்டிருக்கிறது. ஒரு தீண்டாமைக் கொடுமைக்கு எதிர்த்து  வினையாற்றும்போதே கருத்தியல் தளத்திலும் அது வினையாற்றுகிறது. தீண்டாமை ஒழிப்பு என்கிறபோது சாதி ஒழிப்பு என்கிற கருத்தும் பதிகிறது. சாதி ஒழிப்பு என்றால் சாதிக் கட்டமைப்புக்கான எதிர்ப்புக் குரலாக ஆகும். இவ்வாறு அது சமூக சமத்துவம் என்கிற கருத்தியலுக்கான தளத்தினை உருவாக்குகிறது.

சுரண்டலுக்கான கருத்தியல்

இன்று கருத்தியல் களத்தை தன்கைவசம் வைத்துக்கொண்டு ஆளுகிற வர்க்கம், தன்னுடைய அதிகாரத்தை செலுத்திக் கொண்டிருக்கிறது. பெருமபான்மையான மக்கள் மீது தன்னுடைய அதிகாரத்தை அடக்குமுறைக் கருவிகளைவைத்து மட்டுமல்ல, கருத்தியல் என்ற களத்தையும் வைத்துக்கொண்டு அடக்குமுறையையும் சுரண்டலையும் அவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை செயல்பாட்டாளர்களாகிய நாம் உணரவேண்டியிருக்கிறது. எனவே, கருத்தியல் களம் என்பது மிக முக்கியமானது. இது ஒரு பொதுவான அறிவியல் கோட்பாடு என்றே நாம் சொல்லமுடியும். யார் இதைக் கையில் எடுக்கிறார்களோ, யார் இதை சரியாகப் பயன்படுத்துகிறார்களோ அவர்கள் அதில் முன்னேற்றம் காண்கிறார்கள். அந்த வகையில் கடந்த காலங்களில் இதற்கு பல உதாரணங்களைப் பார்க்கலாம்.

உலக முதலாளித்துவம் ஏற்கனவே இதை உணர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம் 1970களிலேயே இதை உணர்ந்திருக்கிறது. அதனால்தான் அவர்கள் தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் போன்றிருக்கக்கூடிய ஊடகங்கள் அத்தனையும் கொண்டு, எந்தச் செய்தியை மக்களிடத்தில் கொண்டு செல்லவேண்டும், எப்படிக் கொண்டு செல்லவேண்டும் என்று வரையறுத்திருக்கிறார்கள். சோவியத் யூனியன் பற்றிய பொய்களை, உண்மை போன்று சொல்லி, சோசலிசமும் கம்யூனிசமும் மோசமானது என்கிற செய்தியை அவர்கள் கொடுப்பது என்கிற முறையில் 1970களிலேயே பக்குவப்பட்டு வந்திருக்கிறார்கள்.

அதே போன்று சின்னங்களைப் பயன்படுத்துவது. சின்னங்களைப் பயன்படுத்துவது என்றால், இந்தியாவிலேயும் தமிழ்நாட்டிலேயும் அதற்கு நிபுணர்கள் பலர் இருக்கிறார்கள். மோடி பெரிய நிபுணர். அவர் அவருடைய படங்களை எல்லா இடத்திலும் வைத்திருப்பது போன்றவை இதில் அடங்கும். இதெல்லாம் ஹிட்லர் காலத்திலேயே நடந்திருக்கிறது.   கருத்தியல் தளத்தில் ‘அவர் ஒரு பிரம்மாண்டமான மனிதர்’, ‘சரித்திரத்தை மாற்ற வந்த மகா புருஷர்’ என்கிற முறையில் சாதாரண மக்கள் மத்தியில் பதியவைப்பது. இப்படிச் சின்னங்கள் மூலமாக தங்களுடைய மேலாதிக்கத்தை பதியவைப்பது என்கிற முறையிலும் ஆளுகிற வர்க்கம் கருத்தியல் மேலாதிக்கத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு சமூக ஊடகங்கள் போன்றவை அதற்கு பயன்படுகின்றன.

பாரதிய ஜனதா கட்சியும் ஆர்எஸ்எஸ்சும் பிரம்மாண்டமாக ஐ.டி., செல் (தகவல் தொழில்நுட்பம் பிரிவு) வைத்துக்கொண்டு செய்யும் வேலைகளைஎல்லாம் நாம் அறிவோம். முதலாளித்துவமும் உலக ஏகாதிபத்தியமும் இதை செய்துகொண்டிருக்கிறது. கருத்தியல் களம் என்பது அவர்கள் மேலாதிக்கம் செய்து கொண்டிருக்கிற ஒரு முக்கயமான தளமாக இருந்துகொண்டிருக்கிறது.

மேலாண்மையும், மேலாதிக்கமும்

இப்போது நம்முடைய நோக்கம் என்பது காலம் காலமாக இருந்துகொண்டிருக்கிற பிற்போக்குக் கருத்தியலுக்கு மாறாக முற்போக்குக் கருத்தியலைக் கொண்டு செல்வது என்பதுதான். முற்போக்குக் கருத்தியலைக் கொண்டு செல்வது என்பதற்கு பதில் நான் ஒரு சின்ன மாற்றத்தை, (உண்மையில் அது பெரிய மாற்றம்) சொல்லவேண்டிய அவசியம் இருக்கிறது. முற்போக்குக் கருத்தியல் மேலாண்மை செலுத்துகிற ஒரு நிலையை உருவாக்க வேண்டும்.  நீங்கள் கொஞ்சம் சரியாகக் கவனித்தீர்கள் என்று சொன்னால், ஆளுகிற வர்க்கம் கருத்தியல் தளத்தில் செலுத்துகிற அந்த அடக்குமுறையை நான் மேலாதிக்கம் என்று சொல்கிறேன். அவர்கள் மேலாதிக்கம் செலுத்துகிறார்கள். தவறான விஷயங்களுக்கு மக்களை ஆட்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். மக்களை தவறான, மிகப் பொய்யான, கட்டுக் கதைகளை நம்ப வைக்கிறார்கள். இந்தக் கட்டுக் கதைகள் பொய்கள் எல்லாமே அவர்கள் கருத்தியல் தளத்தில், மேலாதிக்கம் செய்ய உதவுகிற மிக முக்கியமான விஷயங்கள். எனவே, ஆளுகிற வர்க்கம், ஒரு சிறு கூட்டம், பெருங்கூட்டத்தை தங்களுடைய கருத்துக்கு, தங்களுடைய கொள்கைக்கு தங்களுடைய அடக்குமுறைக்கு ஆதரவாக அவர்களுடைய சம்மதத்தைப் பெறுவதற்கும் அவர்களைத் தங்களுடைய கொள்கைக்குக் கொண்டுவருவதற்கும் செய்வது மேலாதிக்கம். அவர்கள் செய்வது கருத்தியல் மேலாதிக்கம். சிறு கூட்டம் கருத்தியல் தளத்தில் பெரும்பான்மை மக்களை தன்வயப்படுத்துகிறது என்று சொன்னால் அது மேலாதிக்கம்.

காலம் காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டிருக்கிற பெரும்பான்மை மக்களுக்காக, சுரண்டப்பட்டிருக்கிற பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்காக கருத்தியல் தளத்தில், முற்போக்குக் கருத்தியலைக் கொண்டு சென்று, அதில் மேலாண்மை செலுத்தவேண்டும் என்பதுதான் இன்றைக்கு நம் முன்னர் இருக்கக்கூடிய பணி. உழைக்கும் மக்களின் தரப்பு பெரும்பான்மை என்கிற காரணத்தால் அதை மேலாண்மை என்று சொல்கிறோம். இது சரியான காரணத்துக்காக, சரியான லட்சியத்துக்காக, மனித விடுதலைக்கான மேலாண்மை.

3 தளங்களில் போராட்டம்

இந்த வகையில் நம்முடைய பணி என்பது சாதியம், மதவாதம் இதையெல்லாம் எதிர்க்கிற எதிர்ப்புப் பணி மட்டும் அல்ல. அதே நேரத்தில் இது எதிர்மறை நிகழ்ச்சி நிரல் அல்ல, இது நேர்மறையான நிகழ்ச்சி நிரல்.

மூன்று தளங்களில் இதை செய்யவேண்டும் என்று நான் கருதுகிறேன். ஒன்று, இந்த சாதியம் என்கிற ஒரு மிக முக்கியமான பிற்போக்குக் கருத்தியல் தளம், அதில் செயலாற்றவேண்டிய அவசியம் இருக்கிறது. அதை முறியடிக்க வேண்டிய அவசியம இருக்கிறது. அதேபோன்று மதவாதம். வகுப்புவாதம் என்றும் மதவெறி என்றும் வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிப்பொருள் இருக்கிறது என்று சொன்னாலும் கூட, இன்றைக்கு நாம் விவாதிக்கிற சூழலில், மதவாதம் என்றே வைத்துக்கொள்ளலாம். அந்த மதவாத அல்லது வகுப்புவாதக் கருத்தியல் முறியடிக்க வேண்டிய ஒரு இடத்தில் இருக்கிறது. 

மூன்றாவது, நவீன தாராளமய கருத்தியல். இந்த நவீன தாராளமயம் என்று சொல்லும்போது உடனடியாக நம்முடைய மனத்திரைக்கு முன் வருவது என்பது பொருளாதாரம் பற்றியது. நிச்சயமாக நவீன தாராளமயம் என்பது பொருளாதாரத்தோடு இணைந்தது தான். உயிர் காக்கும் மருந்து என்கிற விஷயத்தில் கூட, லாபம், மூலதனக்குவியல் என்பதற்காக அது எந்த வகையில் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்கிற கொள்கைகள் அடங்கியிருக்கிற ஒரு விஷயம்தான் நவீன தாராளமயம் என்பது.

நவீன தாராளமய கருத்தியல்

அதே சமயம் நவீன தாராளமயம் ஒரு கருத்தியலோடு தான் வந்தது. தனியார் மயம் என்ற கருத்து மக்கள் வெறுத்து ஒதுக்கப்பட்ட ஒரு விஷயமாக இருந்த நிலை இருந்தது. குறிப்பாக 1960களில் 70 வரைக்கும் கூட தனியாரிடம் ஒப்படைத்தால் அவர்கள் லாபம் பார்ப்பார்கள், மக்களைப் பார்க்கமாட்டார்கள் என்கிற நிலை இருந்தது. அதனால் தான் தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் அதிகமான அளவுக்கு பொது முதலீட்டில் சுகாதார நிலையங்கள் அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. போக்குவரத்து உட்பட எல்லாமே அரசுத் துறையில் செயல்படுகிற ஒரு நிலை என்பது இருந்தது. இது இந்தியா முழுக்க இருந்தது. இதற்கு பல காரணங்கள் உண்டு.

1950 காலகட்டத்தில் சோவியத் யூனியனில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் அங்கே ஏற்பட்டிருக்கிறக்கூடிய வளர்ச்சி, அது பொதுத் துறை மூலமாக ஏற்பட்டிருக்கிற ஒரு வளர்ச்சி இங்கே சாத்தியம் என்ற நிலையை உருவாக்கியது. அதனுடைய விளைவாகவும் இந்தக் கருத்து என்பது மக்கள் மத்தியில் நிலவியது. ஆனாலும் ஆளுகிற வர்க்கம் தனியார் துறையை விட்டுவிடவில்லை. அதை வளர்ப்பதற்கான முயற்சிகளை திரைமறைவிலும் சிலநேரங்களில் வெளிப்படையாக வெகுவேகமாக செய்து கொண்டிருந்தார்கள். அதே சமயம், இந்த நேரத்தில் தான் பொதுத் துறையையும் கட்டமைக்கிற வேலை நடந்தது. நவீன தாராளமயம் வருகிறபோது அரசுத் தரப்பிலிருந்தே ஒரு கருத்தை அவர்கள் பதியவைத்துக்கொண்டேயிருந்தார்கள். பொதுத்துறையிடம் இருந்தால் என்றால் அங்கே ஒரு மெத்தனப்போக்கு இருக்கும், நிர்வாகத் திறன் இருக்காது, ஊழல் நிறைந்திருக்கும் என்பதை எல்லாம் சொல்லி பொதுத் துறை என்பது சரியல்ல, தனியார் துறை தான் வெகுவேகமாக செயல்படுவார்கள் என்ற ஒரு கருத்து தொடர்ந்து பதியவைக்கப்பட்டது.

இவ்வாறு கருத்தியல் தளத்தில் செயல்பட்டுக்கொண்டேதான் பொருளாதாரத் தளத்தில் நகர்ந்தார்கள். அதே போல தனிமனித உணர்வில் நவீன தாராளமயம் ஒரு கருத்தை முன்வைத்தது. அதாவது விடுதலைப்போராட்டக் காலத்தில், இளைஞர்களுக்கு சமுதாயத்துக்காக ஏதாவது செய்யவேண்டும் என்கிற சமூக அக்கறை இருந்தது. அது விடுதலைக்கு பிறகும் தொடர்ந்தது. ஒரு மனிதன் என்று பிறந்தால், சமூகத்துக்கு என்ன செய்தான் என்பதுதான் முக்கியமானது. எனவே, தன்னுடைய நலத்தைத் தாண்டி பொதுநலத்தைப் பார்க்கிற அந்த மனப்பாங்கு இருந்தது. 

தனியார்மயம் வரவேண்டும், தனியார் கொள்ளையடிக்க வேண்டும் என்றால், தனியாருக்கு ஒரு மதிப்பு ஏற்படுத்தவேண்டும் என்றால், மேற்சொன்ன தனிமனித உணர்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். நீ பணக்காரனாக வேண்டும், நீ மேலும் மேலும் பணம் சேர்க்க வேண்டும், நீ கோடிஸ்வரனாக மாறவேண்டும். அது உன்னுடைய திறமை. நீ திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும், அதற்கேற்ற தொழில்நுட்பம், அதற்கேற்ற படிப்பு, அதற்கேற்ற முயற்சி, விடாமுயற்சி, பில்கேட்சைப் பார், அவரைப் பார், இவரைப் பார் என்று அது பற்றிய நூல்கள் என்ற முறையில் ஒரு தனிமனித சுயநலத்தை வலுப்படுத்துகிற கருத்தியல் என்பது பதியப்பட்டது. அந்தக் கருத்தியலைப் பதியவைத்துத் தான் ஆளும் வர்க்கம் நவீன தாராளமயத்தை கொண்டுபோனார்கள்.

முதலாளித்துவமும் சாதியும்

இந்த நவீன தாராளமயம் பல தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஆணாதிக்க கருத்தியலை அது வலுப்படுத்தியிருக்கிறது.  ஆதிக்கக் கருத்தியலை மேலும் கிளர்ந்து எழச் செய்ததில் முக்கிய காரணியாக நவீன தாராளமயக் கொள்கைகள் இருந்தன. பிற்போக்கான கருத்தியல் என்பதில் ஒரு முக்கியமான இடத்தைப் பெறுகிறது சாதியக் கருத்தியலும் மதவாதக் கருத்தியலும் அதே போல நவீன தாராளமயக் கருத்தியல். இதற்குள் எல்லா விஷயங்களையும் அடக்கிவிடலாம். பெண்ணடிமைத்தனம் இதற்குள்ளேயே வருகிறது. சாதியம் என்று சொல்லுகிறபோது, சாதியம் என்கிற சித்தாந்தம் என்பது பெண்ணடிமைத்தனத்தை உள்ளடக்கியதுதான். முதலாளித்துவ சமூக அமைப்பில்கூட சாதியம் தன்னை புதுவடிவம் எடுத்து நிலைநிறுத்திக்கொண்டுள்ளது.

முதலாளித்துவமும் நிலப்பிரபுத்துவமும் கூடிகுலாவுகிற, ஒன்றிணைந்திருக்கிற ஒரு சமூகமாக இந்திய சமூகம் இருக்கிறது. முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசாக இந்த அரசு இருக்கிறது என்று சொல்வது சதாரண ஒரு வரி விஷயம் இல்லை. நிலப்பிரபுத்துவம் சேர்ந்திருக்கிறது என்று சொன்னால், நிலப்பிரபுத்துவத்தின் கருத்தியல் என்பதும் அதன் பொருளாகும். 

முதலாளித்துவமும் நிலப்பிரபுத்துவமும் இணைந்துவிட்டது என்று சொன்னால், நவீன காலமாற்றத்துக்கேற்ப சாதியமும் புது வடிவம் பெற்றிருக்கிறது என்பதுதான் அதன் பொருள். இதை முதன்முதலில் கண்டுபிடித்தவர்கள், இந்திய சமுதாயத்தை மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்தவர்களே.

ஒரு சாதியை இன்னொரு சாதி வெறுப்பது, எல்லா சாதிகளும் அடித்தட்டிலிருக்கக்கூடிய உழைக்கும் மக்களான அருந்ததியர் உள்ளிட்ட தலித் மக்கள் மீது ஒடுக்குமுறையை பிரயோகிப்பது, ஒடுக்குமுறை மனநிலையோடு அவர்களை அணுகுவது அது நகர்புறமாக இருந்தாலும் சரி, கிராமப்புறமாக இருந்தாலும் சரி. எனவே முதலாளித்துவத்தில் அது நவீன வடிவம் பெற்று அந்த ஒடுக்குமுறையே தொடர்கிறது என்கிறபோது முதலாளித்துவத்துக்கு அது மிகப் பெரும் பயன்படுகிற ஒரு கருவியாக இருக்கிறது.

காந்தியுடைய கருத்தியலில் பல குறைபாடுகள் இருக்கலாம், ஆனால் அவர் செய்த போதனைகள் அன்றைய சாதி சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதைவிட ஒரு முக்கியமான தாக்கம், இந்த சாதி அமைப்புக்கே மிகப் பெரும் ஒரு புரட்சிகரமான எதிர்ப்பை உருவாக்கி, ஒரு மாற்றுக் கருத்தியலை உருவாக்கியது என்பது டாக்டர் அம்பேத்கர் அவருடைய சிந்தனைகள்.

ஆனால், இந்த சமூகத்துக்குள்ளே சாதியத்துக்கு எதிரான இந்தக் குரல்களும் அனுமதிக்கப்பட்டு அதுவும் நடந்தகொண்டு, அதே நேரத்தில் சாதியம் என்பதை முதலாளித்துவத்துவத்துக்கு பயன்படக்கூடிய விதத்தில் அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். முதலாளித்துவம் எப்படி சாதியத்தை பயன்படுத்திக்கொண்டது என்பது ஒரு நீண்ட பெரிய ஆய்வுக்குரிய விஷயம்.

உதாரணமாக, இன்றைய காலகட்டத்தில், வாக்கு அரசியலில் முதலாளித்துவ கட்சிகள் சாதியக் குழுக்களை எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், சாதியப் படிநிலையை எப்படி தங்களுக்கு ஆதரவாகப் பயன்படுததிக்கொள்கிறார்கள் என்பதை நம்மால் பார்க்க முடிகிறது. எனவே முதலாளித்துவக் கட்சி, முதலாளித்துவப் பொருளாதாரம் இது அத்தனையிலும் சாதியம் என்பது அந்த முதலாளித்துவத்தை வளர்ப்பதற்கு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

சாதியும் மதமும்

முற்போக்குக் கருத்தியலை கொண்டு செல்லவேண்டும் என்பதன் முதல் படி, இந்த சாதியக் கருத்தியலை எதிர்த்துப் போராடவேண்டும் என்பது. சாதியம் என்று சொல்லுகிறபோது, சாதியை அழித்தொழித்தல் என்கிற நிகழ்ச்சி நிரல் முக்கியமானது. அந்த நிகழ்ச்சி நிரலை எப்படி கொண்டுசெல்லவேண்டும் என்பதை நாம் விவாதிக்க வேண்டியிருக்கிறது. அதே போன்று, மதவாதம் என்று சொல்லுகிறபோது, இந்து சமயத்தில் மதமும் சாதியையும் பிரித்துப் பார்க்கமுடியாது. சாதியின் இருப்புக்கு ஒரு ஆன்மீக நியாயத்தைக் கற்பித்து வழங்குவது மதம். கடவுளின் பெயரால்தான் நால்வருணம் படைக்கப்பட்டிருக்கிறது. கடவுளின் பெயரால்தான் சடங்கு சம்பிரதாயங்கள் உள்ளன. இந்து சமயம் என்று சொல்லுகிறபோது சாதி என்பதை அதிலிருந்து பிரிக்கமுடியாது. தனித்தனியாகப் பார்க்க முடியாது.

அதே சமயம் மதவாதம் என்று சொல்லுகிறபோது, பிரித்துப்பார்க்கவேண்டிய தேவை இருக்கிறது. மத நம்பிக்கையாளர்கள் என்கிற ஒரு பிரிவு இருக்கிறார்கள். அவர்கள்தான் கோடான கோடி, ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட உழைக்கும் மக்களில் மத நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மதத்தை நம்புவதும் கூட, மத நம்பிக்கையாளர்களாக இருப்பதும் கூட இன்றைய ஆளும் வர்க்கத்துக்கு சாதகமானதுதான். ஏனென்றால் ஆளும் வர்க்கத்தின் சுரண்டலை மறைப்பதற்கு, மத நம்பிக்கையாளர்களாக இருந்தால் அவரவர் படுகிற கஷ்டங்களுக்கு முந்தைய பிறப்பில் அவர் செய்திருக்கக்கூடிய பாவங்கள் தான் காரணம் என்று எளிதாக சொல்லிவிட்டுப் போய்விடலாம். எனவே, மதநம்பிக்கையாளர்களாக இருப்பதும் ஆளும் வர்க்கத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் சாதகமானதே. அந்த மத நம்பிக்கை என்பதும் மதம் சார்ந்த கருத்துக்கள் என்பதும் நாம் எதிர்நோக்க வேண்டிய முக்கியமான விஷயம்.

மதத்தை எதிர்த்த போராட்டம் என்பதில் இருக்கும் ஒரு சங்கடம் என்னவென்றால், தன்னுடைய வாழ்நிலை, வாழ்வாதாரச் சிக்கல்கள் இதற்கெல்லாம் ஒரு நிம்மதியைத் தருகிற ஒரு புகலிடமாக கோவில்களும் மத நம்பிக்கையும் அவர்களுக்குப் பயன்படுகிற காரணத்தால், நேரிடையாக மதத்தின் மீதான தாக்குதல் என்பது, மத நம்பிக்கையோடு இருக்கிற பெரும்பான்மை மக்களை அந்நியப்படுத்துகிற வேலையைத்தான் செய்கிறது என்பது அனுபவம். எனவே, அனைத்தையும் கணக்கிலெடுத்த அணுகுமுறை தேவை.

அடக்கப்பட்டவர்களின் பெருமூச்சாக மதம் இருக்கிறது. வாழ்க்கைச்சுமையிலிருந்து சிறிது நிம்மதி தருவதற்கான இடத்தில் மதம் இருக்கிறது என்று மார்க்ஸ் மதத்தைப் பற்றி சொல்லியிருக்கிறார். அதே நேரத்தில் சுரண்டுகிற கூட்டத்துடைய கருவியாகவும் மதம் என்றும் மார்க்ஸ் சுட்டிக்காட்டியிருக்கிறார். மதத்துடைய பயன்பாடு பற்றிய பொதுவான நிர்ணயிப்பு இது. எனவே, மத நம்பிக்கை என்பதை இந்த அடிப்படையில் அணுகவேண்டும்.

நாம் ஒரு பிரச்சனையை / இயக்கத்தை எடுக்கிறபோது, அது குறித்து அந்த ஊரில் ஊர் கூட்டம் போடுகிறோம். அப்போது பல விஷயங்களைப் பேசுவோம். அதில் அறிவியலைப் பேசவேண்டும்.  பொருள்முதல்வாதக் கருத்தியலை மக்களுக்கு மனதில் பதிய வைப்பதற்கான வாய்ப்பாக அது அமையும். சாதி ஒழிப்பு பற்றி பேசலாம், சாதியக் கருத்தியல் பற்றி பேசலாம். பிரச்சாரத்திலேயேயும், நேரடியாகவும் கொண்டுபோகலாம். மககளிடம் நெருக்கமாகி விவாதிப்பதன்  மூலமும் கொண்டுபோகலாம்.

இந்துத்துவத்தின் நோக்கம்

அதே நேரத்தில் மதவாதம், வகுப்புவாதம், இந்துத்வாவினை நாம் எதிர்க்க வேண்டியுள்ளது. முதலில் இவைகளுக்கும் மதத்துக்கும் தொடர்பில்லை, மதநம்பிக்கைக்கும் இந்துத்வா சொல்கிற விஷயங்களுக்கும் சம்மந்தமில்லை, மதத்தை அவர்கள் அரசியல் அதிகாரத்துக்குப் பயன்படுத்துகிறார்கள் என்கிற விஷயத்தை மக்கள் மனங்களில் பதியவைப்பது அவசியம். ஒருவரியில்/ வாக்கியத்தில் இதை நான் சொல்லிவிட்டேன், ஆனால் அதைப் பதிய வைப்பது சாதாரண விஷயம் அல்ல. ஏனென்றால் இந்துத்வாவின் மிஷினரி என்பது இந்தியா முழுவதும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அவர்களின் செயல்பாடுகள் குறித்து ஏராளமான விவரங்கள் இருக்கிறது. நிறைய அமைப்புக்கள் இருக்கிறது. வரலாறு, தொல்லியல், சமூகவியல், தத்துவம் உள்ளிட்ட 70 துறைகளில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.  ஒவ்வொன்றுக்கும் ஒரு பார்வை வைத்து அவர்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்துத்வா என்று சொல்லுகிறபோது, முதலில் மத அடையாளம் கொண்டிருக்கிற ஒருவருக்கு படிப்படியாக மதப் பிடிமானத்தை அவர்கள் ஏற்படுத்துகிறார்கள். இது இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. மதநம்பிக்கை என்று சொல்லுவது எப்போதாவது நினைவுக்கு வரும். அன்றாடம் 8லிருந்து 16 மணிநேரம் வேலைசெய்துகொண்டிருக்கும் உழைக்கும் மக்கள் மத்தியில் ஒருவருக்கு மத நம்பிக்கை என்பது ஏதாவது ஒரு நேரத்தில் வர வாய்ப்பிருக்கிறது. வாரம் ஒருமுறை கோவிலுக்கு செல்வது போன்ற வகையில் இருக்கிறது. உழைப்பாளி மக்கள் உழைப்பை செலுத்தவேண்டியிருப்பதால் எப்போதும் மதத்தைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்க நேரமில்லை. எந்த மதம் என்று கேட்டாலோ, வழிபாடு நடத்தும்போதோ ஒருவர் தன்னுடைய மதத்தை சொல்வார். மத அடையாளத்துடன் தன்னை இணைத்துக்கொள்வார். ஆனால் இந்துத்வாவாதிகள் செய்வது மதம் தான் எப்போதும் என்று உணர வைப்பது, மதப் பிடிமானத்தை ஏற்படுத்துவது.

கொரோனா காலத்திலேயும் இராமர் கோவில் கட்டுவதற்கான பணியில் இந்துத்வாவாதிகள் இறங்கினார்கள். கொரோனா தொற்று தீவிரமாக பரவிவரும் சூழலில் அடிக்கல் நாட்டுவிழாவை அவர்கள் நடத்தினார்கள். அந்த விழா தொற்றை அதிகரித்தது. இராமர் கோவில் கட்டுவது இப்போது தேவைப்படும் நிகழ்ச்சி நிரலா? இந்தியாவின் பொருளாதாரம் அதள பாதளத்தில் போய்க்கொண்டிருக்கிறது, கோடிக்கணக்கான மக்கள் நடுத்தெருவுக்கு வந்துவிட்டனர். இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் இருக்கின்றபோது, இராமர் கோவில் கட்டுகிறார்கள் என்று சொன்னால், ஒரு மத நம்பிக்கை இருக்கிறவருக்கு இந்த செய்தி போய் சேருகிறபோது நம்முடைய இராமருக்கு கோவில் கட்டுகிறார்கள் என்று மதப்பிடிமானம் வலுக்கிறது. சிறுபான்மை மதங்களுக்கு எதிராக இந்து மதப்பிடிமானத்தைக் கெட்டிப்படுத்துகிற வேலை நடந்துகொண்டிருக்கிறது. இதர மதத்தை வெறுக்கும் போது மத உணர்வு வகுப்புவாதமாக, மதவாத வடிவம் எடுக்கிறது. டெல்லியில் இந்த சூழலிலும் இஸ்லாமியர்கள் தாக்கப்படுவது தொடர்ந்துகொண்டிருக்கிறது. அது நீண்டகாலமாக இவர்கள் செய்துகொண்டிருக்கும் வேலை. எனவே கலவரங்களை செய்வதன் மூலம் இந்துக்களை ஐக்கியப்படுத்தும் வேலையை இந்துத்வாவாதிகள் செய்துகொண்டிருக்கிறார்கள்.

இதில் இன்னொரு அம்சத்தையும் நாம் பார்கக வேண்டியிருக்கிறது. இந்துத்வா என்று சொல்லுகிறபோது இந்து மதம் சார்ந்தவர்களை அவர்கள் வகுப்புவாதக் கருத்தியலுக்கு கொண்டுசெல்கிறபோது, ஏதோ இந்துக்களுக்காக பாடுபடுகிற ஒரு இயக்கமாக ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார இயக்கத்தை அவர்கள் முன்னிறுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் கட்டமைக்க நினைக்கிற இந்து ராஷ்டராவின் கட்டமைப்பு முழுக்க முழுக்க சாதியக் கட்டமைப்பு தான், சாதியப் படிநிலைதான், சாதிய ஒடுக்குமுறைதான். பட்டியல் சாதியினர், பிற்படுத்தப்பட்டோர், ஆதிவாசி உள்ளிட்ட பெருமபான்மை ஒடுக்கப்பட்ட மக்களை ஒரு சிறு கூட்டம் அடித்தட்டில் வைத்து அவர்களை ஒடுக்குகிற முறைதான். பிராமணியம் என்ற கருத்தியல் இந்த ஏற்பாட்டுக்கு உதவுகிறது. அதே நேரத்தில் ஆளுகிற, ஆதிக்கம் செலுத்துகிற பிராமணியம் என்று சொல்லுகிறவர்களின் இன்னொரு முகம், பெருமுதலாளித்துவ கார்ப்பரேட் முகம்.

எனவே, அவர்களின் நிகழ்ச்சிநிரல் என்பது, இந்து ஒற்றுமை என்ற பெயரால் சாதிப் படிநிலையை கெட்டிப்படுத்துவது. இதற்கு சிறுபான்மை எதிர்ப்பு உதவுகிறது. இதுதான் வகுப்புவாதம். இந்த நிகழ்ச்சி நிரலை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் அம்பலப்படுத்துகிறோம் என்ற பெயரில் எல்லோரையும் திட்டிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. இதுதான் அவர்கள் கட்டமைக்க விருப்புகிற சமூக அமைப்பு என்று சொல்லுகிறபோது அந்தக் கருத்தியல் அம்பலப்படும்.

சமத்துவக் கருத்தியல்

நவீன தாரளமயக் கருத்தியல், மதவாதக் கருத்தியல், சாதியக் கருத்தியல் இவை மூன்றும் ஒன்றோடொன்று பிணைந்திருக்கிறது. இந்தப் பிற்போக்குக் கருத்தியலுக்கு மாறாக சமத்துவக் கருத்தியலை – சமத்துவ, மதச்சார்பற்ற, ஜனநாயக கருத்தியல் என்பதை கொண்டு செல்லவேண்டியிருக்கிறது.

சமத்துவம் என்று சொல்லுகிறபோது சாதி நீங்கிய, சாதிவேறுபாடுகள் களையப்பட்ட, சாதி ஒழிந்த அனைத்து மத நம்பிக்கை கொண்டவர்களும் ஒற்றுமையாக, இதர மத நம்பிக்கை கொண்டவர்களை மதிப்புமிக்கவர்களாகக் கருதுகிற, அப்படிப்பட்ட மத நம்பிக்கையாளர்களைக் கொண்டிருக்கிற ஒரு சமூகம். அதே நேரத்தில், இந்த சமூகம் இப்படிப்பட்ட முற்போக்குக் கருத்தியலை முன்னெடுக்கக்கூடிய ஒரு சமூகம், முழுக்க முழுக்க பொருளாதாரத்தை தன் கையில் எடுத்திருக்கும். பொருளாதாரத்தை பெரும்பான்மை மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில், பொருளாதார உற்பத்தி, அதனுடைய பலன், விநியோகம் இந்த மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் அது மாற்றும். முற்போக்குக் கருத்தியலை விதைக்கிற போது அது உடனடியாக இந்த மாற்றங்களை ஏற்படுத்திவிடாது. பொருளாதார அமைப்பில் சமத்துவம் என்று சொல்லுகிறபோது, உழைக்கும் மக்கள் பொருளாதாரத்தைக் கட்டுக்குள் கொண்டுவருகிற அந்த நிலை ஏற்படும். முற்போக்குக் கருத்தியல் அந்த மாற்றத்தைக் ஏற்படுத்தும். அப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறபோது, முற்போக்கு கருத்தியல் மக்களின் மனங்களைக் கவ்விப்பிடித்து, அந்த உழைக்கும் மக்கள் தங்களுக்கான அரசியல் அதிகாரத்தைக் கட்டமைப்பார்கள். இதுதான் வழி.

இதை நான் சொல்லுகிறபோது, உடனே பலருக்கு இது சாத்தியப்படுமா என்கிற அந்தக் கேள்வி வரும்.  அதற்கு வரலாறுதான் ஒரே பதில். பிற்போக்குக் கருத்தியலுக்கும் முற்போக்கு கருத்தியலுக்குமான அந்தப் போராட்டம் இன்று நேற்றல்ல, பல்லாயிரம் ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. அதில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. இன்றைக்கு பல சட்டங்கள், முன்னேற்றங்களைப் பார்க்கிறோம். ஏராளமான போராட்டங்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது என்பதே ஒரு நம்பிக்கைக்குரிய விஷயம். முற்போக்குக் கருத்தியல் என்பது பல ஆண்டு காலமாக, இன்னும் சொல்லப்போனால் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே கடவுள் இல்லை என்று நாத்திக்கருத்துக்களை பரப்பியவர்கள் இந்தியாவில் இருந்திருக்கிறார்கள். மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் அடக்கி ஒடுக்குகிற ஆதிக்க நிலையில் இருக்கக்கூடிய பிராமணியம் என்கிற கருத்தியலை எதிர்த்து, பிராமணர்களை எதிர்த்து இந்தக் கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள். இன்றைக்கு வரையில் அதனுடைய தொடர்ச்சி என்பது இருந்து கொண்டிருக்கிறது. எனவே நிச்சயமாக முன்னேற்றம், சாதனைகளைச் செய்யமுடியும்.

இன்றைக்கு சீனாவில், உழைக்கும் மக்களிடம் தான் பொருளாதாரக் கட்டுப்பாடு என்பது இருக்கிறது. நிறைய சாதனைகள், வெற்றிகள் இந்தப் போராட்டப் பயணத்தில் இருக்கிறது. அந்த வகையில், முற்போக்குக் கருத்தியலுக்கும் பிற்போக்குக் கருத்தியலுக்குமான போராட்டத்தை நாம் முன்னெடுத்துச் செல்லவேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால் வரலாற்றில் வெற்றி என்பது முற்போக்குக் கருத்தியலுக்குத்தான். நாம் வெற்றிக்கான பயணத்துக்குத்தான் வரலாற்றைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்ற நம்பிக்கையோடு அதை செய்யவேண்டியிருக்கிறது.

உள்ளூர் சமூகங்கள்

இந்த முற்போக்குக் கருத்தியலை மிக முக்கியமாக உள்ளூர் சமூகங்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதை நான் வலியுறுத்திச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். உள்ளூர் மட்டத்தில் தனிநபர்களை அணுகக்கூடிய  வாய்ப்புக்களை முதலாளித்துவம் பெற்றிருக்கிறது. தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட ஊடகங்கள் அனைத்தும் தனிநபர்களை எட்டியிருக்கிறது. பிற்போக்குக் கருத்தியல் தனிநபர்களை சென்றடைந்திருக்கிறது. அது மதவாதம், சாதியவாதம், நவீன தாராளமயம் இவை எதுவாக இருந்தாலும் அது தனிநபர்களை சென்றடைந்திருக்கிறது.

அதே போன்று முற்போக்குக் கருத்தியல் தனிநபர்கள், தனிநபர்கள் வாழுகிற உள்ளூர் சமூகம், தெரு, நகர வார்டு, கிராமம் என்கிற உள்ளூர் சமூகத்தை நோக்கிச் செல்லவேண்டிய அவசியம் இருக்கிறது. உள்ளூர் சமூக மக்களிடம் உரையாடுவது அவசியம். உரையாடுவதன் மூலமாக மட்டும் மாற்றம் வந்துவிடாது. செயல் முக்கியமானது. ஒரு செயல் பல கருத்துக்களை, பல பாடங்களை மக்களுக்கு இயல்பாக அனுபவங்கள் மூலமாகக் கற்றுத் தருகிறது. மக்கள் அனுபவங்கள் மூலமாக கற்றுக்கொள்கிறார்கள் என்பதை மாவோ சொல்லியிருக்கிறார். அவர்கள் அனுபவங்களைப் பெறுவதற்கான வாய்ப்பை நாம் ஏற்படுத்தவேண்டும்.

முற்போக்குக் கருத்தியலை கொண்டு செல்வதற்கு, உள்ளூர் மட்டத்திலான மதச்சார்பற்ற, அறிவியலான சமூகங்களை நாம் எங்கெங்கெல்லாம் செல்கிறோமோ அங்கெல்லாம் உருவாக்க வேண்டும். உள்ளூர் மட்டத்திலான முற்போக்கு சமூகங்களை பல்லாயிரக்கணக்கில் தமிழகத்தல் நாம் உருவாக்குகிறபோது அது மேலும் மேலும் பரவும். ஒரு அறிவியல் விதியைச் சொல்வார்கள், இயக்கவியல் விதி என்று ‘அளவு மாறுபாடு அடைய குணமாறுபாடு அடையும்’. ஒரு 10 ஊர்களில் செய்தோமென்றால் அடுத்து 11, 12 என்று போகாது, 10 நூறாகும், ஆயிரம் ஆகும், பத்தாயிரம் ஆகும், லட்சமாகும். இப்படிப்பட்ட உள்ளூர் சமூகங்களைக் கட்டி அமைத்தல் என்பது, டெல்லியின் ஆட்சி அதிகாரத்தை உழைக்கும் மக்கள் கைப்பற்றுகிற ஒரு நிலைக்கு அது கொண்டுசெல்லும். ஏனென்றால் மத்தியில் ஆட்சி என்பதுதான் இந்த முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அதிகாரம் கோலோச்சிய ஆட்சி. எனவே உள்ளூர் சமூகங்கள் வலுவாகக் கட்டமைக்கப்படுவது என்பது முற்போக்கு கருத்தியலைக் கொண்ட கோடிக்கணக்கான உள்ளூர் சமூகங்களை நாம் உருவாக்குகிறபோது, அரசியல் அதிகாரம் முற்போக்காளர்கள் கையில், உழைக்கும் மக்கள் கையில் கைவர வாய்ப்பிருக்கிறது.

காந்தியும் மதமும்

என். குணசேகரன் 
குரல்: அபிநவ் சூர்யா

இந்தியா பல தேசிய இனங்கள், பல்வேறு பண்பாடுகள், மத நம்பிக்கைகள், மொழிகள் கொண்ட நாடு. பல வேறுபாடுகள் கொண்ட இந்த நாட்டில் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்த ஒன்றுபட்ட போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது; இது உலக வரலாற்றில் ஒரு மகத்தான நிகழ்வு. சாதி, மத, இன, மொழி, தத்துவங்கள் என வேறுபாடுகள் பல்லாயிரக்கணக்கில் இருந்தாலும், அந்நிய அடக்குமுறை ஆட்சியை எதிர்த்து மக்கள் திரண்டு புதிய வரலாறு படைத்தனர்.

இந்த நாடு தழுவிய ஒற்றுமை ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருந்தபோதும், ஒரு முக்கிய பங்களிப்பு காந்திக்கு உண்டு. மூடநம்பிக்கைகளிலும், பின்தங்கிய நிலைமைகளிலும் வாழ்ந்துவந்த கோடானுகோடி கிராமப்புற மக்களையும் தட்டியெழுப்பி, போராட்டப் பாதையில் கொண்டு வந்த அந்த மகத்தான நிகழ்வுக்கு காந்தியின் வாழ்வும் செயல்பாடுகளும் முக்கிய பங்களிப்பு செலுத்தியது. இந்திய வரலாற்றை ஆழமாக பயில்பவர்கள் இதை ஏற்றுக் கொள்வார்கள். காந்தியின் செயல்பாடுகளும் கருத்துக்களும்தான் அவர் படுகொலை செய்யப்படுவதற்கு காரணமாக அமைந்தது. அவரது இந்த உயிர்த் தியாகம் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

இன்றும் காந்தி இந்திய சிந்தனை பரப்பில் முக்கிய தாக்கம் செலுத்துகிறார். அவரது வாழ்க்கை பற்றிய விவாதங்கள் தொடர்கின்றன. கடும் விமர்சனங்களும் தொடர்கின்றன. ஆனால் அவரது கருத்துக்களுக்கு நேரெதிரான சித்தாந்தம் கொண்டவர்களும் இன்றைக்கு அவரை தூக்கிப் பிடிக்கிற நிலையைக் காண்கின்றோம். எனவே அவரை சரியாக மதிப்பிடுவது எப்படி என்பது முக்கியமான ஒரு கேள்வி.

இஎம்எஸ் வழிகாட்டுதல்

இந்தியாவில் மார்க்சிய சிந்தனையை வலுவாகப் பதித்து மார்க்சிய இயக்கத்தை கட்டுவதில் பெரும்பங்காற்றியவர், தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அவர்கள். அவர் காந்தியை பற்றிய துல்லியமான ஆய்வினை செய்துள்ளார். “மகாத்மாவும் அவரது தத்துவமும்” என்ற அவரது நூல் மார்க்சிய நோக்கில் காந்தியை மதிப்பீடு செய்கிறது. இந்திய பாட்டாளி வர்க்கம் அவரை எப்படி புரிந்து கொள்ள வேண்டுமென அந்த நூல் வழிகாட்டுகிறது.

காந்தியின் சிந்தனைகளையும் நடைமுறையையும் புரிந்துகொள்வதில் இரண்டு விதமான தவறுகள் இருப்பதாக தோழர் இ.எம்.எஸ். குறிப்பிடுகிறார். ஒன்று, அவரது சிந்தனைகளை குறைத்து மதிப்பிட்டு, காந்தியத்தை நிராகரிக்கும் வகையில் முற்றாக விமர்சிப்பது ஒரு வகை; மற்றொரு வகை, பாரபட்சமாக அவரை உச்சத்தில் வைத்து போற்றிப் புகழ்வது. இந்த இரண்டு தவறுகளையும் தவிர்க்க வேண்டுமென தோழர் இஎம்எஸ் வலியுறுத்துகிறார்.

எடுத்துக்காட்டாக, எழுத்தாளர் அருந்ததிராய், காந்தியை சாதிய முறைக்கு ஆதரவானவர் எனவும், அவரது தீண்டாமை எதிர்ப்புப் பிரச்சாரம் தலித் மக்களை இந்து மதப் பிடிக்குள் கொண்டு வருகிற நோக்கம் கொண்டது என்றெல்லாம் எழுதியுள்ளார். காந்தியை ஆதரிப்பவர்கள் மட்டுமல்லாது, அவரை விமர்சிப்பவர்களும் தங்களது கருத்துக்களுக்கு ஆதரவாக காந்தி எழுதிய எழுத்துக்கள், அவர் ஆற்றிய உரைகளையே மேற்கோள்களாக பயன்படுத்துகின்றனர்.

இந்த முரண்பாடுகளுக்கு என்ன காரணம்? அவரது 60 ஆண்டுகால எழுத்தும் பிரச்சாரமும் ஒரே மாதிரியாக இருக்கவில்லை. அவர் அவ்வப்போது மாறும் சூழலுக்கு ஏற்பவும், அவர் எதிர்கொண்ட புதிய கருத்துக்கள், உண்மைகளுக்கு ஏற்பவும் தனது கருத்துக்களையும் மாறுதல்களுக்கு உள்ளாக்கி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் நால் வருண அமைப்பை வலுவாக ஆதரிப்பதாக பேசும் காந்தி, பிற்போக்கு பழமைவாதம் தலை தூக்கிய நிலையில் நால்வருண அமைப்பை எதிர்ப்பதாகவும் கருத்து தெரிவித்தார்.

காந்தியை முற்றாக நிராகரிப்பதும், விமர்சனமற்ற வகையில் போற்றி புகழ்வதும் தவறு. தற்போதைய மாறியுள்ள காலச்சூழலில் உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை சந்திக்க காந்தியின் சிந்தனை எவ்வாறு பயன்படும் என்பதே முக்கியமான கேள்வி.

மதங்களின் பன்முகத் தன்மை

பன்முக சமய கண்ணோட்டங்கள் மனித சமூகத்தில் தவிர்க்க இயலாதது என்பது காந்தியின் கருத்து. அதுவே, ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு அவசியம் என அவர் கருதினார். “அனைத்து மதங்களிலும் எல்லையில்லாத அளவில் பல்வேறு பிரிவுகள் உள்ளன; முடிவற்ற மத வேறுபாடுகள் உள்ளன”என்றார் காந்தி.

“சிலர் புனித பயணம் மேற்கொண்டு புனித ஆறுகளில் குளிப்பார்கள்; மற்றவர்கள் மெக்காவிற்கு செல்வார்கள்; சிலர் கோவிலில் வழிபாடு மேற்கொள்வார்கள்; மற்றவர்கள் மசூதிகளில் வழிபடுவார்கள்; சிலர் தலைவணங்கி வழிபடுவார்கள்; சிலர் வேதங்களை படிப்பார்கள்; மற்றவர்கள் குரானை படிப்பார்கள்; சிலர் தங்களை இந்து என்று அழைத்துக் கொள்வார்கள்; மற்றவர்கள் இஸ்லாமியர்கள் என்பார்கள்”என்று விவரிக்கிறார் காந்தி.

மதங்களின் மற்றொரு முக்கியமான தன்மையையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை; “என்னை நான் இந்து என்று சொல்லிக்கொள்கிறபோது, நான் வழிபடுகின்ற முறையில், மற்ற இந்துக்களும் வழிபடுவதில்லை என்பதை நான் அறிவேன்” என்று குறிப்பிடுகிறார்.

ஆழமான, பன்முக, வேறுபாடுகள் கொண்ட மதங்கள் உள்ள நிலையில் என்ன அணுகுமுறை தேவை என்பதை காந்தி விளக்குகிறார். “மனித சமூகம் முழுமைக்கும் ஒரே ஒரு மதம் என்பது தேவையில்லை; தற்போதைய தேவை என்னவென்றால் பல்வேறு மதப் பிரிவினருக்கிடையே பரஸ்பர மரியாதை, சமமான மதிப்பு அளிப்பது, பல்வேறு மதங்களின் பக்தர்களிடையே சகிப்புத்தன்மை போன்றவையே” என்று அழுத்தமாக குறிப்பிடுகிறார் காந்தி. காந்தியின் இத்தகைய கருத்துக்கள் இந்து மதத்தின் பெயரால் இந்துத்துவவாதிகள் பிரச்சாரம் செய்கிற கருத்துக்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை என்பது மறுக்கமுடியாத உண்மை.

”அனைத்து மதங்களும் உண்மையானவை; அனைத்தும் சில தவறுகளை கொண்டிருக்கின்றன; நான் என்னுடைய மதத்தைப் பின்பற்றுகிறபோது இந்து மதத்தின் மீது எந்த அளவில் என்னிடம் பற்று இருக்கிறதோ, அந்த அளவில் மற்ற மதத்தினரையும் நேசிக்க வேண்டும். இதில் வித்தியாசம் பார்க்கக் கூடாது” என்று கூறிய காந்தி, அவரது வாழ்நாள் முழுவதும் இந்த நெறியை கடைப்பிடித்து வந்தார்.

காந்தி தனது நோக்கில் இந்து மதத்தை பற்றி விளக்கினார். “இந்து மதம் எல்லா உயிர்களும் ஒரே மூல ஆதாரத்திலிருந்து தோன்றுகிறது எனவும், அந்த மூலாதாரத்தை அல்லா என்றும், கடவுள் என்றும், பரமேஸ்வரன் என்றும் அழைக்கலாம்” என்று காந்தி கருதினார். இதுதான் இந்து மதத்தின் பார்வை என்று காந்தி கூறினார். ”இஸ்லாம் மதத்தின் அல்லாவும், கிறித்துவ மதத்தின் கடவுளும், இந்துக்களின் ஈஸ்வரனும் ஒன்றே!” என்றார்.

இந்தக் கருத்தை இந்துக்கள் என்று தங்களை அழைத்துக் கொள்கிற அனைவரும் ஏற்றுக்கொள்வார்களா? நிச்சயமாக, இந்துத்துவவாதிகள் இந்த கருத்தை கடுமையாக எதிர்ப்பார்கள்.

சாதி முறை குறித்து

ஒடுக்குமுறை சார்ந்த சாதி கட்டமைப்பை வலியுறுத்தும் வர்ணாசிரம முறையை காந்தி ஆதரித்து வந்தது உண்மையே. இருப்பினும் அந்த சித்தாந்தத்தின் ஒடுக்குமுறை, தீண்டாமை போன்றவற்றை தொடர்ந்து எதிர்த்து வந்தார். அதே போன்று, நடைமுறை வாழ்க்கையில், அவர் சாதி வேறுபாடுகள் அடிப்படையில் மக்களை அணுகவில்லை. ஒடுக்குமுறை அடிப்படையிலான சாதிய முறையை அவரது செயல்பாடுகளில் மதத்தின் பெயரால் கடைப்பிடிக்கவில்லை. அவர் உருவாக்கி வழிநடத்திய ஆஸ்ரமத்தில் சமூக சமத்துவத்தை பின்பற்றினார்.

1934-இல், “இந்து சாஸ்திரங்கள் தற்போது நிலவும் தீண்டாமைக்கு ஆதரவு நிலையை வெளிப்படுத்துவதாக அறிந்தால், நான் இந்து மதத்தை கைவிட்டு, இந்து மதத்தை எதிர்ப்பேன்”என்று அவர் எழுதினார்.1935-இல் ஹரிஜன் இதழில் எழுதிய ஒரு கட்டுரையின் தலைப்பு “சாதி மறைய வேண்டும்” (caste has to go). அதில் “பொதுச் சிந்தனையில் எவ்வளவு விரைவாக சாதி ஒழிய வேண்டுமோ, அந்த அளவிற்கு நல்லது” என்று அவர் எழுதினார்.

காந்தியின் சமூக, பொருளாதார கருத்துக்கள் அனைத்தும் மதக் கண்ணோட்டம் சார்ந்த நெறிமுறைகள் அடிப்படையில் அமைந்துள்ளன. ஒழுக்கம், நேர்மை, உண்மைத்தன்மை போன்ற நெறிகளை அவர் இந்து மத நோக்கில்தான் வலியுறுத்தினார். இந்து மதம் மீது அவர் கொண்டிருந்த பற்றுடன் இணைந்ததாக அவரது சமூக, அரசியல் கருத்துக்கள் அனைத்தும் அமைந்துள்ளன. மதங்களுக்கிடையே சமத்துவமும் பன்முகத் தன்மையும் நிலவுகிறது என அவர் கருதியதால், அதற்கேற்ப இந்து மதம் பற்றிய விளக்கங்களை அவர் பதிவு செய்துள்ளார்.

காந்தி பார்வையில் மதச்சார்பின்மை

இந்த நடைமுறைகளும், இந்து மதம் குறித்த காந்தியின் மத நல்லிணக்கம் சார்ந்த பார்வையும்தான் இந்து மதவெறியர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர் வலியுறுத்திய இந்து முஸ்லிம் ஒற்றுமை,இந்து மதத்தைப் பற்றிய மத நல்லிணக்கம் சார்ந்த அவரது கருத்துக்கள் போன்றவற்றை ஜீரணிக்க முடியாத இந்துமத வெறியர்கள் அவரை படுகொலை செய்தனர்.

மதச்சார்பற்ற அரசு என்பது என்ன? ஒரு அரசு தனது அரசியல் சட்ட அமைப்பு அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட மதத்துடன் தொடர்புடையதாக இருக்கக்கூடாது; அத்துடன் ஒரு மதத்தை உயர்த்திப் பிடிப்பதாக இருக்கக் கூடாது. எந்த மதத்தின் உள் விவகாரங்களிலும் தலையிடுவதாக அரசு இருக்கக்கூடாது; ஒரு குடிமகனை மதம் சார்ந்து அரசு அணுகிடக் கூடாது; ஒரு தனி மனிதனின் மத சுதந்திரத்தை அரசு பாதுகாக்க வேண்டும். இதுபோன்ற தன்மைகள் கொண்டதுதான் ஒரு மதச்சார்பற்ற அரசாக இருக்க முடியும். இந்தப் பார்வை காந்தியின் சிந்தனையிலும் செயல்பாடுகளிலும் நிறைந்திருந்தது.

காந்தியின் மதம் குறித்த பார்வை இயல்பாகவே அவரை ஒரு மதச்சார்பற்ற எண்ணம் கொண்டவராக வாழ்வதற்கு வித்திட்டது. அனைத்து மதங்களும் இந்து மதம் போலவே தனக்கு பிடித்தமான மதங்கள் என்று அவர் குறிப்பிட்டார்; “எல்லா மதங்களும் ஒரே உண்மையை நோக்கி பல வழிகளில் பயணிப்பவை” என்பதும் அவரது பார்வையாக இருந்தது. எந்த மதமும் வேறு மதத்திற்கு எதிரானது அல்ல என்பதையும் அவர் வலியுறுத்தி வந்தார். இந்த கருத்துக்கள் ஒரு தனி மனிதனின் மத சுதந்திரத்தை பேணி பாதுகாக்கும் கருத்துக்களாக அமைந்துள்ளன.
அதேபோன்று அரசு எந்த மதத்தையும் சாராமல் செயல்பட வேண்டும் என்பதிலும் காந்தி உறுதியாக இருந்தார்.1947-இல் அவர் “நான் எனது மதத்தின் மீது உறுதியான பற்று கொண்டவன்; நான் எனது மதத்திற்காக உயிரைக் கூட துறப்பேன்; அது என்னுடைய தனிப்பட்ட விவகாரம்; ஆனால் அரசு அதில் தலையிடக் கூடாது; அரசு மதச்சார்பற்ற முறையில் வாழ்நலன்களை பாதுகாக்கும்” என்று எழுதிய காந்தி “..மதம் ஒருவரின் தனிப்பட்ட விவகாரம்; அரசியலில் அதற்கு இடமில்லை ..” என்று அழுத்தமாக குறிப்பிட்டார்.

எனவே, காந்தி மதச்சார்பற்ற சிந்தனை கொண்டவராக வாழ்ந்தார். ஒரு மதச்சார்பற்ற இந்தியா என்கிற காந்தியின் எண்ணத்துக்கு மாறாக இன்று மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளது. மதச்சார்பின்மையை காக்க காந்தியின் கருத்துக்கள் பயன்படும்.

காந்தியின் தத்துவம்

காந்தி இந்துமத தத்துவார்த்த மரபுகள் மீதான பிடிப்பு கொண்டவராக விளங்கினார். வேதாந்தம், பகவத்கீதை, உபநிடதங்கள் போன்றவை அவரது சிந்தனையில் ஆழ்ந்த தாக்கம் செலுத்தின. காந்தியின் தத்துவ சிந்தனையை ஆராய்ந்த தோழர் இ .எம்.எஸ். தனது நூலில் காந்தி ஒரு கருத்து முதல்வாதி எனக் குறிப்பிட்டார். மதம் பற்றிய காந்தியின் சிந்தனைகள் கருத்துமுதல்வாதக் கண்ணோட்டம் கொண்டவை.

தத்துவத்தில் அடிப்படையான கேள்விகள் உண்டு. பொருளிலிருந்து சிந்தனை தோன்றியதா? சிந்தனையிலிருந்து பொருள் தோன்றியதா? பொருள் முதன்மையானதா? சிந்தனை முதன்மையானதா? -போன்றவை தத்துவப் பிரச்னைகள். மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டு இயங்குகிற, பொருட்களால் ஆன பிரபஞ்சம், இயற்கை அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டது என்றும், அனைத்தையும் இயக்குவது சிந்தனையே என்பதும் கருத்துமுதல்வாதம். இந்தக் கண்ணோட்டம் மாற்றத்தை சாதிக்கும் கடமையை கடவுளுக்கு விட்டுவிட்டு மனிதர்களை முடமாக்குறது. இதற்கு நேர்மாறானது பொருள்முதல்வாதம்.

இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையில் மதத்தின் பங்கினை மார்க்சியம் விளக்குகிறது. மனித வாழ்க்கையின் அனைத்து பரிமாணங்களிலும் மதத்தின் பங்கு எவ்வாறு உள்ளது என்பதை அறிவியல்பூர்வமாக விளக்குகிற ஒரு தத்துவம் மார்க்சிய தத்துவமே. கடவுள் உண்டா,இல்லையா என்ற மேம்போக்கான ஆன்மீக, நாத்திக விவாதங்களை கொண்டதல்ல மார்க்சியம். கண்ணை மூடிக் கொண்டு, இறப்புக்குப் பிறகு சொர்க்கமா, நரகமா என்று விவாதிப்பதல்ல மார்க்சியம்.

வாழும் பூமியில் நிலவும் சமூக எதார்த்த நிலைமைகளை ஆராய்ந்து மார்க்ஸ் மதம் பற்றிய கருத்துக்களை படைத்தார். வர்க்க ரீதியாக பிளவுபட்டுள்ள சமூகத்தில் பெரும்பான்மை மனிதர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் ஆளாகி கரைந்து போகின்றனர். அந்த நிலையில், ஆன்மீகத்தில் தங்களை மீட்டெடுத்துக் கொள்ள மனிதர்கள் முயற்சிக்கின்றனர். அதற்கு மதம் அவர்களுக்கு புகலிடமாக அமைகிறது.

மார்க்ஸின் பிரசித்திபெற்ற கீழ்க்கண்ட மேற்கொள் இதனை விளக்குகிறது;
“மதம் ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்கப் பெருமூச்சாகவும், இதயமற்ற உலகின் இதயமாகவும், ஆன்மா இல்லாத நிலைமைகளின் ஆன்மாகவும் உள்ளது. மதம் மக்களுக்கு அபினி.” இப்படிப்பட்ட பங்கினை மதம் ஆற்றுவதால், அதன் மீதான நேரடித் தாக்குதல் பலன் தராது. வறட்டுத்தனமான கடவுள் மறுப்பு ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் நிலைமையை மாற்றுவதற்கான போராட்டத்திலிருந்து அந்நியப்படும் நிலையை ஏற்படுத்தும்.

மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதம், இயற்கையின் இயக்கத்தை மேலும் மேலும் புரிந்து கொள்ள உதவுகிறது. உலகம், பிரபஞ்சம், இயற்கை, சமூகத்தின் இயக்கப் போக்கு ஆகியவை பற்றிய அறிவு மனித சிந்தனையில் பதியும்போது கடவுளுக்கு எவ்வித பங்கும் இல்லாமல் போகிறது. இது ஒரே நாளில் நடப்பதில்லை. தொடர்ச்சியான கருத்துப் போராட்டத்தில்தான் இது ஏற்படும். இதற்கு கருத்து தளத்தில் போராட்டம் நடந்தால் மட்டும் போதாது; ஒடுக்குமுறை, சுரண்டலை மேற்கொள்ளும் அதிகார வர்க்கங்களுக்கு எதிரான வர்க்கப் போராட்டத்தில் மனிதர்கள் மத மயக்கத்திலிருந்து மீள்கின்றனர். கடவுள் மீது பாரத்தை இறக்கி நிம்மதி காணும் நிலையிலிருந்து மாறி, தங்கள் மீதும், தங்களது வர்க்க ஒற்றுமை மீதும் நம்பிக்கை கொள்கின்றனர்.
முதலாளித்துவத்தை வீழ்த்தி, சுரண்டலற்ற புதியதோர் உலகம் படைக்கிறபோது, தங்களது எதிர்காலத்தை, கற்பிதமான கவுளிடம் விட்டு வைக்காமல் தாங்களே தங்கள் எதிர்காலத்தை உருவாக்குகின்றனர். மதம் பற்றிய விளக்கங்களை அளிக்கும் மார்க்சியம், மனித சமூகம் தனது விடுதலைக்காக இந்த பூவுலகில் நடத்த வேண்டிய வர்க்கப் போராட்டப் பாதையையும் விளக்குகிறது.

வர்க்க இயக்கமும் காந்தியும்

இந்த சிந்தனைகள் காந்தியின் மதம் பற்றிய பார்வையில் இல்லை என்பது வெளிப்படையானது. ஆனால் மார்க்சிய சமூக மாற்ற செயல்திட்டத்தில் காந்தியின் மத நல்லிணக்கப் பார்வை, மதத்தினை பன்முகத் தன்மையோடு பார்க்கிற பாங்கு உள்ளிட்டவை மக்களை ஒன்றுபட வைக்கிறது. இது வர்க்க ஒற்றுமைக்கான திறவுகோலாக அமைகிறது. மார்க்சிய செயல் திட்டத்திற்கு வாய்ப்பான சூழலை அது ஏற்படுத்துகிறது. அந்த வகையில் வர்க்க இயக்கத்தை முன்னேற்றம் கண்டிட காந்தியும் தேவைப்படுகிறார்.

ஆனால் மதம் பற்றிய அவரது ஆன்மீகப் பார்வை அறிவியல் பார்வையோடு முரண்படுகிற நிலையும் ஏற்படுகிறது. எனவே காந்தியின் ஆன்மீக பார்வையை மார்க்சிஸ்டுகள் ஏற்க இயலாது; மதத்தில் செயல்பாடு பல தருணங்களில் மனிதர்கள் செயல்படுவதற்கான திறனை மழுங்கடிப்பதாக அமைகிறது. அந்த நிலையில் மத நம்பிக்கை பிற்போக்கான பங்கினை ஆற்றுகிறது. இதில் பாட்டாளி வர்க்க கட்சி கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு அறிவுரையை லெனின் வழங்குகிறார்: “…மத நம்பிக்கைகளின் வடிவத்தில் ஏற்படுகிற வர்க்க உணர்வற்ற நிலை, அறியாமை, மூடத்தனம் போன்றவை குறித்து அக்கறையற்று இருக்க முடியாது; இருக்கவும் கூடாது.” வர்க்க உணர்வை மழுங்கடிக்கும் மூடநம்பிக்கைகளை கம்யூனிஸ்டு கட்சி எதிர்த்திட வேண்டும்.

அதே நேரத்தில், குறிப்பிட்ட பல தருணங்களில் அடக்கு முறையை எதிர்ப்பதற்கும் மத நம்பிக்கை ஊக்கமளிப்பதாக இருந்ததுண்டு. பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடந்துள்ள விவசாயிகள் எழுச்சிகள் வீரியமாக நடைபெறுவதற்கு மத நம்பிக்கைகளும் ஓரளவு தூண்டுகோலாக பயன்பட்டுள்ளன. இலத்தீன் அமெரிக்காவில் ஏகாதிபத்திய சுரண்டலை எதிர்ப்பதற்கு கிறித்துவ மத அமைப்புக்களும், இடதுசாரிகளும் அணி சேர்ந்து போராடிய அனுபவங்களும் உண்டு.
இந்த சாதகமான மத செயல்பாட்டை பயன்படுத்துவது அவசியம். ஆனால் கருத்தியல் ரீதியாக, மதம் ஆளும் வர்க்கத்தின் கருவியாகவும், சுரண்டலை நியாயப்படுத்துகிற கருத்தியலாகவும் இருப்பதையும் கவனத்தில் கொள்ள மார்க்சியம் அறிவுறுத்துகிறது. அதனை மார்க்சிஸ்டுகள் கண்டறிந்து அம்பலப்படுத்த தயங்கக் கூடாது; அதே நேரத்தில், ஆளும் வர்க்க எதிரிகளை தனிமைப்படுத்துவதற்கு, விரிவான உழைக்கும் மக்களின் ஒற்றுமையை கட்டுவதற்கு, அனைவரும் ஒன்று சேர்கிற நிலையை உருவாக்க வேண்டும்.

லெனின் குறிப்பிட்டது போன்று, இந்த விரிவான அணியில் மதநம்பிக்கை கொண்டவர்கள், நாத்திகர்கள் என அனைவரும் ஒன்றிணைய வேண்டும். வர்க்க ஒற்றுமை எழுச்சியில் இணைந்திட மதநம்பிக்கை தடையாக இருக்கக்கூடாது. அவ்வாறான ஒன்றுபட்ட போராட்டம் காலப்போக்கில் மதத்தின் மீதான பிடிப்பில் தளர்வை ஏற்படுத்துகிறது. சிறிது சிறிதாக அறிவியல் ரீதியான சிந்தனையை பலப்படுத்துகிறது. மதத்தின் சிக்கலான செயல்பாடுகளை உணர்ந்து மார்க்சிஸ்டுகள் மதம் பற்றிய தங்களுடைய அணுகுமுறையை வகுத்துக் கொள்ள வேண்டும் என மார்க்சிய லெனினியம் போதிக்கிறது.

எனவே, காந்தியின் கருத்துக்களை முற்றாக நிராகரிப்பது சரியல்ல. அவரது கருத்துக்களில் உடன்பாடு காண்பதற்கான கூறுகளை இணைத்துக்கொண்டு, முரண்பட வேண்டிய கருத்துக்களை விமர்சித்து செயல்படும் நடை முறையை கையாள வேண்டும். இன்று இந்து மதத்தினை முன்னிறுத்தி, சுரண்டப்பட்ட மக்களை தங்களது அரசியலுக்கும், அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும் அணி சேர்க்கிற வேலையை இந்துத்துவா செய்து கொண்டிருக்கிற நிலையில், இந்த அணுகுமுறை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

இன்றைய சூழலில், காந்தி பிரச்சாரம் செய்த இதர மதங்கள் மீதான வெறுப்பு கூடாது என்கிற போதனையும், மதங்கள் பற்றிய பன்முகப்பார்வையும், மதநல்லிணக்க கருத்துக்களும் பெரிதும் பயன்படும். மதச்சார்பின்மையை பாதுகாக்கிற போராட்டத்திற்கும் காந்தியின் சிந்தனைகள் பயன்படும். இந்தப் புரிதலுடன் சோசலிச இலட்சியத்திற்கு போராடும் இயக்கங்கள் காந்தியின் சிந்தனைகளை அணுகிட வேண்டும்.

அதற்கு ஏற்ப தங்களது அணுகுமுறையை வகுத்து செயல்படுவதுதான் இந்திய சோசலிசத்திற்கான சரியான பாதையாக அமையும்.தோழர் இ.எம்.எஸ் நம்பூதிரிபாடு “மகாத்மாவும் அவரது தத்துவமும்” நூலினை கீழ்க்கண்டவாறு முடிக்கின்றார்: “காந்திய நடைமுறை மற்றும் தத்துவத்திற்கு எதிராக சித்தாந்த ரீதியாகவும் கோட்பாட்டு ரீதியாகவும் போராட்டத்தை மார்க்சிய லெனினியர்கள் நடத்த வேண்டும். எனினும், குறிப்பிட்ட பிரச்சனைகளில் சாத்தியமான அளவில் கூட்டு செயல்பாட்டுக்கு உள்ள வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.” இந்த வழிகாட்டுதல் இன்றளவும் பொருத்தமானது. அதிலும், இன்றைய இந்துத்துவா சவாலை எதிர்கொள்ள மேற்கண்ட அணுகுமுறை மிகவும் பொருத்தமானது.

COP26 மாநாட்டின் உண்மைப் பின்னணி !

வெப்பமாகும் புவி: நவ-காலனிய ஆதிக்கத்திற்கான புதிய திட்டம்

ஜெ.ராஜன்

தமிழில்: சிந்தன்

குரல்: தோழர் பீமன்

பருவநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசாங்க குழு (IPCC) முன்வைத்த அறிக்கையின் படி, தொழில்மயத்திற்கு முன்பு இருந்ததை விடவும், புவி மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை 1.07 டிகிரி செல்சியஸ் சராசரி உயர்வை கண்டுள்ளது. முன்னர் பாரீசில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில், அனைத்து நாடுகளும் முயற்சிப்பதாக ஒப்புக்கொண்ட வெப்பநிலை இலக்குகளை 15 ஆண்டுகளிலோ அல்லது அதற்குள்ளோ எட்டிவிடுவோம் என்பதையும், இப்போது அனைத்து நாடுகளும் பசுங்கூட வாயுக்கள் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த எடுத்துவரும் முயற்சிகளின் அடிப்படையில், சராசரி வெப்பநிலை இலக்கு 1.5 டிகிரியாக அதிகரித்துள்ளது என்பதையும் விஞ்ஞானிகள் அதே அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

கார்பன் பட்ஜெட்:

முற்போக்காளர்களும், ஜனநாயகவாதிகளும் பூமியின் சூழல் வளங்கள் (வளிமண்டலம், கடல்கள் மற்றும் நிலம்) அனைத்தும் உலகிற்கு பொதுவானவை என்ற பார்வையை முன்வைக்கிறார்கள். அந்த பார்வைக்கான அறிவியல் ஆதாரத்தை பருவநிலை விஞ்ஞானம் தெளிவாக முன்வைக்கிறது. உலக ‘கார்பன் பட்ஜெட்’ என்ற கருத்தில் இந்த பார்வை வெளிப்படுகிறது. புவி வெப்பநிலை உயர்வினை குறிப்பிட்ட வரம்பிற்குள் கட்டுப்படுத்த வேண்டுமானால், மொத்த உலகமும் சேர்ந்து பசுங்கூட வாயுக்களின் வெளியீட்டு அளவினை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக அதிகபட்ச எல்லையே ‘கார்பன் பட்ஜெட்’ ஆகும்.

வளர்ந்த நாடுகளால், உலகப் பொது வளங்கள், பெருமளவில் அபகரிக்கப்பட்டு வந்துள்ளன. உலக மக்கள் தொகையில் 18 சதவீதம் பேர் மட்டுமே வாழக்கூடிய அந்த நாடுகளில் இருந்துதான், தொழில்மய காலத்திற்கு முன்பில் இருந்து தற்சமயம் வரை வெளியான மொத்த பசுங்கூட வாயுக்களில் 60 சதவீதம் அளவு வரையிலும் வெளியாகியுள்ளன. சீனாவின் வெளியேற்றம் சுமார் 13 சதவீதம் ஆகும். தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள 1.5 டிகிரி என்ற வெப்பநிலை இலக்கின்படி, 17 சதவீத ‘கார்பன் பட்ஜெட்’ மட்டுமே மீதமுள்ளது. இந்தியாவின் வெளியேற்றம் 4.37 சதவீதம் மட்டுமே ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இந்தியா வெளியிடும் பசுங்கூட வாயுக்களின் தலா கணக்கீடு மிகவும் குறைவு ஆகும்.

நிலக்கரி அவசியம்:

வளரும் நாடுகளின் ஆற்றல் உருவாக்கத்திற்கு, புதைபடிவ எரிபொருட்கள் (fossil fuels) இப்போதும் அவசியமாக உள்ளன. அந்த வகையில் இந்தியாவை பொருத்தமட்டில், நிலக்கரி தொடர்ந்து தேவைப்படுகிறது. சூரியன் இரவில் ஒளிர்வதில்லை, காற்று எல்லா நேரத்திலும் வீசுவதில்லை என்பதால் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கும் கூட, புதைபடிவ எரிபொருட்களில் இருந்து ஆற்றலை பெறுவது அவசியம். வளரும் நாடுகளில் வசிக்கும் பெரும்பகுதி மக்கள் தொகையினரிடையே நிலவும் ஆற்றல் வள வறுமையை தீர்ப்பதற்கு, விலை குறைந்த பேட்டரிகளோ, இதர மின் ஆற்றல் சேமிப்பு முறைகளோ கண்டுபிடிக்கும் காலம் வரைக்கும் காத்திருக்க முடியாது. உரம் உற்பத்தி செய்வதற்கு புதைபடிவ எரிபொருட்கள் அத்தியாவசியமாக உள்ளன, மேலும் வேளாண் உற்பத்தியால் வெளியிடப்படும் பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றம், உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ‘அத்தியாவசிய வெளியேற்றமும்’ ஆகும். முக்கியமான தொழில் உற்பத்தி துறைகளும் ஆற்றல் தேவைகளுக்காக புதைபடிவ எரிபொருட்களையே சார்ந்துள்ளன. இத்துறைகளும் இவற்றில் செயல்படும் சிறு குறுந்தொழில்களும், இந்தியா உள்ளிட்ட (புவியின்) தெற்கு நாடுகளில் வாழும் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற அவசியமானவை ஆகும்.

வளர்ந்த நாடுகளின் நோக்கம்:

வளர்ந்த நாடுகள், தாங்கள் வெளியிடும் பசுங்கூட வாயுக்களின் அளவை குறைப்பதற்கு தேவையான முயற்சிகளை எடுக்க மறுக்கிறார்கள். அவர்கள் 1990 ஆம் ஆண்டில் வெளியிட்டதை விடவும் ஒவ்வொரு ஆண்டும் 0.4 சதவீதம் கூடுதலான பசுங்கூட வாயுக்களை வெளியிடுவார்கள் (2020 ஆம் ஆண்டில்) என்ற மதிப்பீட்டினை ஐக்கிய நாடுகள் சபையின், பருவநிலை தொடர்பான மாநாடு (UNFCCC) முன்வைத்துள்ளது. அதனோடு ஒப்பிட்டு நோக்கினால், அவர்கள் 2050 ஆம் ஆண்டுக்குள், பசுங்கூட வாயு வெளியேற்றத்தை நிகர மதிப்பில் பூஜ்ஜியம் ஆக்கிவிடுவோம் என்று தரும் உறுதி நம்பத்தக்கதல்ல. மேற்சொன்ன இலக்குத் தேதியை அப்படியே நம்பினாலும், வரும் 2030 ஆம் ஆண்டு வரையிலும் கொடுத்திருக்கும் புதிய வாக்குறுதிகளின் கணக்குப்படி பார்த்தாலும் கூட, உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் கூட கொண்டிருக்காத அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும், மீதமுள்ள ‘கார்பன் பட்ஜெட்டில்’ 30 சதவீதத்தை விழுங்கிவிடுவார்கள்.

பருவநிலை நெருக்கடிக்கான தீர்வை சந்தையின் மூலமாக கண்டடையலாம் என்று வளர்ந்த நாடுகள் தொடர்ந்து வற்புறுத்துகிறார்கள். அதாவது, புவி வெப்ப தணிப்பு நடவடிக்கைகளுக்காக தங்கள் பொருளாதாரத்தில் தர வேண்டிய மதிப்பை விடவும் மலிவான விலையில் கார்பன் பட்ஜெட்டை ‘வாங்கிக் கொள்ளலாம்’ என்று எதிர்பார்க்கிறார்கள். பருவநிலை மாற்றத்தால் நமக்கு ஏற்படும் தாக்கத்தை நிர்ணயிக்கும் முக்கிய காரணி இந்தியா பசுங்கூட வாயு வெளியேற்றத்தை குறைப்பது என்ற நடவடிக்கை அல்ல. உலகளவில் எந்த அளவிற்கு பசுங்கூட வாயு வெளியேற்றம் குறைகிறது என்பது தான்.

சமநீதியான தீர்வு:

செவ்வியல் மார்க்சியம் வரையறுத்துள்ள நெருக்கடியாகவே இது உள்ளது. பழைய முறையில் புதைபடிம எரிபொருட்களை சார்ந்த நுட்பங்களை தொடர்ந்து பயன்படுத்தினால் உலகம் தொடர்ந்து வெப்பமடையும். இதனை மாற்றிட) தேவைப்படும் புதிய நுட்பங்களை இன்னும் முறையாக வெளிவரவில்லை.இப்போதைக்கு ஆற்றல் உருவாக்கத்தில் அவற்றின் (மாற்று முறைகளின்) பயன்பாட்டு வரம்பு மிகவும் குறைவு. அதுவும் பெரும்பாலும் ஆற்றல் துறை உற்பத்திக்கு மட்டும் பயன்படும். அவற்றின் செலவும் அதிகம். ஆனால் வளரும் நாடுகளில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திக்கு அரசு தர வற்புறுத்தப்படும் ஆதரவினால் அந்தச் செலவுகள் வெளியில் தெரிவதில்லை. எனவே மேலெழுந்தவாரியாக பார்த்தால் மலிவாக தெரிகின்றன.

இந்த நெருக்கடிக்கான தீர்வினை சமநீதியின் அடிப்படையில் தேடிட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாநாட்டில் (UNFCCC) கையெழுத்திட்டுள்ள அனைத்து நாடுகளும், ஒரே பொதுவான இலக்கில், அவரவர் தகுதிக்கு தக்க மாறுபட்ட பொறுப்புகளை ஏற்று இயங்க வேண்டும். இதில் வளர்ந்த நாடுகளே முன்னிலை வகிக்க வேண்டும். ஆனால் வளர்ந்த நாடுகள், உலக பருவநிலை திட்டத்தினை மேற்சொன்ன கொள்கையின் அடிப்படையில் முன்னெடுக்க மறுக்கின்றனர். அதுமட்டுமல்லாது, பிற உலக நாடுகளுக்கு பருவநிலை நிதியும், பருவநிலை தொழில்நுட்ப உதவிகளும் செய்வோம் என்ற முன்பு அளித்திருந்த வாக்குறுதிகளில் இருந்தும் நழுவுகிறார்கள்.

நவ-காலனிய முயற்சிகள்:

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான சுமையில் பெரும்பகுதியை வளரும் நாடுகளின் மீது திணிப்பதற்கே வளர்ந்த நாடுகள் தொடர்ந்து முயற்சிக்கிறார்கள். பாரிஸ் ஒப்பந்தத்தை அமலாக்க தொடங்கியபோது, சீனாவையும் தங்களோடு ஆட்டத்திற்கு இழுத்தார்கள், அதன் மூலம் தெற்கு நாடுகளில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை தடுக்கும் வகையிலான தாக்குதலுக்கு முயற்சித்தார்கள். அணு சக்தி விசயத்தில் நடந்ததைப் போலவே இந்த விசயத்திலும் ‘புதைபடிவ எரிபொருள் தடை ஒப்பந்தம்’ ஏற்படுத்துவதற்கான வாதங்கள் தொடங்கின. இந்த ஏற்பாடு, உலகின் பருவநிலை மீது பாரபட்சமான அதிகாரத்தை செலுத்துவதற்கான முயற்சியே ஆகும். மேலும், இது அணு பரவல் தடை ஒப்பந்தத்தினை விடவும் பாதகமானதாக அமைந்துவிடும்.

அமெரிக்காவின் தலைமையில் முன்னெடுக்கப்படும் நவ காலனிய முயற்சியின் திட்டங்கள் பின்வருமாறு அமைகின்றன :

1) புதைபடிவ எரிபொருட்களை பயன்படுத்தும் வளர்ச்சித்திட்டங்களுக்கு – நிலக்கரி, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு பயன்படுத்தும் திட்டங்களுக்கு – பன்னாட்டு வளர்ச்சி வங்கிகளின் கடன் உதவிகளை தடுப்போம் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இதே அமெரிக்காதான், சமீபத்தில் உலகம் கண்ட மிகப்பெரிய எண்ணெய் எரிவாயு ஏலத்தை நடத்தி முடித்துள்ளது, ரஷ்யாவிற்கு செல்லும் எண்ணெய் எரிவாயு குழாயை ஐரோப்பிய ஒன்றியம் இப்போதுதான் கட்டி முடித்துள்ளது என்ற செய்திகளையும் இத்துடன் இணைத்துப் பார்க்கும்போது, அவர்களின் பாகுபாடும் பொய்மையும் தெள்ளத்தெளிவாகிறது.

2) தனியார் துறையின் மூலமான பருவநிலை நிதியை அமெரிக்கா அறிவித்துள்ளது. வளரும் நாடுகள் அந்த உதவியைப் பெறுவதன் மூலம் கடுமையான ‘பசுமை’ நிபந்தனைகளும், பெரும் கடன் சுமையும் அவர்கள் மீது சுமத்தப்படும். பசுங்கூட வாயு வெளியேற்றத்தை குறைத்து, புவி வெப்பத்தை தணிப்பதற்காக, வளரும் நாடுகளில் நடக்கும் தொழிற்கூட உற்பத்திகளை பலவீனப்படுத்தும் வகையில் சர்வதேச நிதி மூலதனம் திரட்டப்படுகிறது.

3) பிரேசிலின் காடுகள் அவர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல என்று அமெரிக்காவும், பிரான்சும் மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். புவியின் தெற்கு நாடுகளில் உள்ள தாவரங்களும் காடுகளும் வளிமண்டலத்தில் பசுங்கூட வாயுக்களை உறிஞ்சிக்கொள்ளுமானால் அது வடக்கே உள்ள நாடுகள் பசுங்கூட வாயு வெளியேற்றத்தை குறைப்பதை தாமதப்படுத்த உதவும் என்ற உத்தியின் வெளிப்பாடே இந்த மிரட்டல் ஆகும். தெற்கு நாடுகளின் வளங்களை கைப்பற்ற வடக்கு நாடுகள் விரும்புகிறார்கள்.

அதே விதத்தில், வேளாண்மையும், வெப்ப தணிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இழுக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள சிறு விவசாய குடும்பங்கள், பருவநிலை நெருக்கடி உருவாகக் காரணமான எதையுமே செய்ததில்லை. ஆனால் பணக்கார நாடுகள் செய்தவைகளுக்கான விளைவுகளை அவர்கள் அனுபவிப்பார்கள். “செலவே இல்லாத இயற்கை விவசாயம்” என்பது போன்ற அறிவியலுக்கு புறம்பான முன்மொழிவுகளை ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு பெற்ற சர்வதேச நிறுவனங்கள் முன்வைக்கின்றன. இந்த விதத்தில் ‘பசுங்கூட வாயுக்களை’ குறைப்பது என்ற பெயரால் விவசாயத்தில் உற்பத்தி திறனை உயர்த்துவதற்கான முக்கியத்துவம் பின் தள்ளப்படுகிறது. இலங்கை இப்போது எதிர்கொண்டுவரும் வேளாண் உற்பத்தி நெருக்கடி, வரும் காலத்தில் வளரும் நாடுகள் எதிர்கொள்ளவுள்ள நெருக்கடியை எடுத்துக்காட்டும் ஒரு உதாரணமாகும். நவ-காலனிய ஆதிக்க பிரச்சாரத்திற்கு அடிபணிந்தோமானால், இதுதான் நடக்கும்.

பொருத்தமற்ற அணிச்சேர்க்கைகள்:

தங்களுக்கு முன்னுள்ள சவால்களை வளரும் நாடுகளால் எதிர்கொள்ள முடியவில்லை. ஒற்றுமையும் பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்த வளர்ச்சியுற்ற நாடுகள், சிறு தீவு நாடுகள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட நாடுகள் பலவும் வளர்ந்த நாடுகளோடு சேர்ந்து நிற்பதன் மூலம், பெரிய வளரும் நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து, தங்களுடைய பங்கினை பெற முடியும் என்று நினைக்கிறார்கள்.

டிரம்ப் அதிபராக இருந்த 4 ஆண்டுகளில் பருவநிலை நெருக்கடியை மறுத்துக் கொண்டு, அதன் வழியாக சிக்கலை தீவிரப்படுத்திய அமெரிக்கா, தற்போது தனது வல்லாதிக்க நடைமுறைகளின் மூலம் மற்றவர்கள் மீது நிர்ப்பந்தம் செலுத்த முயற்சிக்கிறது. அமெரிக்க அதிபரான பைடன் பருவநிலை பிரச்சனையை ஒரு முக்கிய “ பாதுகாப்பு” பிரச்சினையாக அறிவித்துள்ளார். மற்ற வளர்ந்த நாடுகளுடன் இணைந்து அந்த பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு எடுத்துச் செல்ல முயற்சிக்கிறார். உலகத்தில் ஏற்கனவே வர்த்தக ஆளுகையிலும், நிதி ஆளுகையிலும் தான் செலுத்திவரும் ஆதிக்கத்தை பருவநிலை பற்றிய ஆளுகையிலும் செலுத்திட வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது. புவிக்கோளத்தின் தெற்கில் உள்ள நாடுகளை நோக்கி, பைடனின் நிர்வாகம் முன்னெடுக்கும் இந்த நவ காலனீய நடவடிக்கைகளை, வளர்ந்த நாடுகளில் உள்ள சமூக ஜனநாயக ‘இடதுசாரி’ பிரிவினர் சிலர் விமர்சனமற்று ஆதரிப்பது வருத்தமளிப்பதாகும்.

பருவநிலை பிரச்சனையில் இயங்கும் புதிய தலைமுறை இளைஞர் ‘இயக்கங்களும்’ கூட, புவி வெப்பமாதலால், தெற்கு நாடுகளில் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய புரிதலும், கவலையும் அற்றவர்களாக உள்ளனர். பருவநிலை நெருக்கடியினால், வடக்கு நாடுகளில் உருவான புதிய ‘இயக்கங்கள்’ முன்னெடுக்கும் ஆபத்தான முழக்கம் ‘வளர்ச்சி மறுப்பு’ ஆகும். தெற்கு நாடுகளில் நிலவும் மிகக் குறைந்த தொழில் உற்பத்தி அல்லது தொழில் உற்பத்தியே இல்லாத நிலைமையை அப்படியே தொடரச் செய்வதுதான் அந்த நாடுகளுக்கு தேவையான ஒன்று என்ற வாதத்தை, இடதுசாரி முகமூடியுடன் அவர்கள் முன்வைக்கிறார்கள். அதுவும், தெற்கு நாடுகளின் ஊரக பகுதிகளில் ஆற்றல் வளங்களே இல்லாத நிலைமையும், ஆற்றல் வளத்தின் குறைந்த பயன்பாடுகளுமே ‘நல்லொழுக்கம்’ என்ற வகையில் அதீதமான புனிதப்படுத்துதல் வேலையும் செய்யப்படுகிறது. இந்த வாதங்கள் வளர்ந்த சமூகங்களை நோக்கியது போல தோன்றினாலும், அவை தெற்கின் மீதுதான் அழுத்துகின்றன.

கார்பன் காலனியம் :

அமெரிக்காவின் தலைமையிலான வளர்ந்த நாடுகளின் இந்த அழுத்தத்தின் பின்னணியில்தான், கிளாஸ்கோவில் COP26 மாநாடு நடந்தது. COP26 மேற்கொண்ட பல முடிவுகளும் வளந்த நாடுகளின் விருப்பத்திற்குரிய நிகழ்ச்சி நிரலை பிரதிபலிக்கின்றன. வளரும் நாடுகள் மீதான அவர்களுடைய அழுத்தத்தை உயர்த்துகின்றன. வளரும் நாடுகள் இதை எதிர்க்க வேண்டும். பருவநிலை மாற்ற நிதி வழங்குவோம் என்ற வாக்குறுதியளித்த வளர்ந்த நாடுகள், அதிலிருந்து தவறியிருப்பதை சுட்டுவதுடன், வரும் காலத்தில் பருவநிலை மாற்ற நிதியை உருவாக்கி, தொடர்வதையும் ஒவ்வொரு பருவநிலை மாநாட்டிலும் இது பற்றிய விவாதங்கள் தொடர்வதையும் நோக்கி செயல்பட வேண்டும். அப்போதும் முக்கியமான ஒரு பிரச்சனை தொடர்ந்துகொண்டுள்ளது. அமெரிக்காவும் பிற வளந்த நாடுகளும் உலக பருவநிலை ஆளுகையை தங்கள் வசம் வைத்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள். அதன்மூலம், அவர்கள் தங்களுடைய சுமைகளை குறைக்கவே முயற்சிக்கிறார்கள். இப்பிரச்சனையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தவிர்த்துக்கொள்ளும் அதே சமயத்தில், சர்வதேச பொருளாதாரத்தில் தங்கள் ஆதிக்கத்தை தக்கவைத்துக்க முயல்கிறார்கள். COP26 மாநாட்டில் பேசிய பொலிவியா (ஒத்த சிந்தனையுடைய வளரும் நாடுகளின் சார்பில் பேசிய போது) முன்னெப்போதும் இல்லாத வகையில் வடக்கு நாடுகளின் “கார்பன் காலனிய சிந்தனை” என்பதை மீண்டும் மீண்டும் குறிப்பிட்டது. இந்த ஒத்த சிந்தனையுடைய வளரும் நாடுகளின் கூட்டணியில் இந்தியா, சீனா உட்பட 14 நாடுகள் உள்ளன.

உற்பத்தி சக்திகளுக்கு நெருக்கடி:

மற்ற வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை விடவும், இந்தியாவின் பொருளாதாரத்தில், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு, பெரிய நெருக்கடி வந்துள்ளது. இந்தியாவிலிருந்து குறைவாகவே பசுங்கூட வாயுக்கள் வெளியிடப்படுவது, நிலைத்தகு தன்மையின் விளைவாக அல்ல மாறாக இங்கே ஆலை உற்பத்தி வளர்ச்சி குறைவாக உள்ளதன் காரணமாகவே அந்த நிலைமை நிலவுகிறது. நவ-தாராளமய சீர்திருத்த காலத்தில் நடக்கும் பொருளாதார வளர்ச்சி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஆலை உற்பத்தி வகிக்கும் பங்கினை அதிகரிப்பதாக இல்லை. மனித வள மேம்பாடு குறைவாகவே நடக்கிறது, எனவே பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளுக்கு நம் மக்கள் தொகையில் பெரும்பகுதியானவர்கள் ஆளாகும் சூழல் உள்ளது.

இந்திய கார்ப்பரேட் முதலாளிகளின் குரலும், ‘நிபுணர்கள்’ என்று அறியப்படுவோரின் குரலும், வளர்ந்த நாடுகளின் ஆதரவு நிறுவனங்களின் ‘பிரச்சாரகர்களும்’ , சர்வதேச என்.ஜி.ஓ நிறுவனங்களும் – புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டினை இந்தியா தடை செய்ய வேண்டும் என்று ஓயாமல் சொல்லி வருகிறார்கள். மன்மோகன் சிங் காலத்திய நவீன தாராளமய சிந்தனையாளர்களும் அதற்கு ஒத்து ஓதுகிறார்கள். பசுமையான மாற்றத்தை முன்னெடுக்கும் ஒரு ‘உலக தலைவனாக’ இந்தியாவை மாற்றியமைக்கும் வாய்ப்பாக, பருவநிலை நெருக்கடியை பார்க்க வேண்டும் என்று அவர்கள் பேசுகிறார்கள். நாட்டின் உற்பத்தி அடித்தளத்தினை தற்சார்புடையதாகவும், விரிவான ஒன்றாகவும் உருவாக்கத் தவறிய அரசாங்கங்களையும், அவர்களுடைய தோல்விகளையும் கவனித்து வரக்கூடிய எவருக்கும், மேற்சொன்ன வாதங்களின் சாத்தியமற்ற தன்மை புலப்படும்.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி பெரிய அளவில் நடக்கிறது, அவ்வாறு இதில் ஒரு சிறு பகுதியே இந்தியாவில் உருவாக்கப்பட்ட திறன் (capacity). இந்தியாவிலேயே நடக்கும் நிலக்கரி உற்பத்தியை குறைப்பதால், பன்னாட்டு எண்ணெய்/எரிவாயு நிறுவனங்களே பலனடைவார்கள். அவர்கள் எரிசக்தி ஆற்றலுக்கான கட்டணத்தை உயர்த்துவார்கள். நிலக்கரி துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும். இவையெல்லாம் பொருளாதாரத்தில் நேரடியான, மறைமுகமான தாக்கங்களை உருவாக்கும்.

அவசியமற்ற வாக்குறுதிகள்:

இந்திய பிரதமர், கிளாஸ்கோவில் பேசியபோது புதிய வாக்குறுதிகளை அறிவித்தார். பருவநிலை நெருக்கடியின் தொடர் விளைவுகளைக் குறித்து அச்சத்தில் இருக்கும் உலக மக்களுக்கு இத்தகைய அறிவுப்புகள் நம்பிக்கையூட்டும் என்பது உண்மை. அதே சமயத்தில், நியாயமான அளவை விடவும் அதிகமான சுமைகளை நாம் ஏற்பது, நாட்டின் பொருளாதாரத்திற்கு புதிய சிக்கல்களை கொண்டுவரும். இந்த மாற்றங்களுடைய விளைவுகளை யார் சுமப்பது என்பதைப் பற்றிய தீவிரமான விவாதங்கள் எதுவும் நடக்கவில்லை. ஏற்கனவே நம் நாட்டில் மலிவான நிலக்கரி மின்சார உற்பத்திக்கு பதிலாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் வழியாக மேற்கொள்ளப்படும் மின்சாரத்திற்காக, அதிகமான கட்டணத்தை மக்கள் செலுத்திவருகிறார்கள். ஒன்றிய அரசாங்கம், கொரோனா நெருக்கடிக் காலத்திலும் கூட இந்தக் கொள்கையை தயக்கமின்றி முன்னெடுத்தது. அதன் விளைவாக நிலக்கரி மின்சார உற்பத்தி திறனை பயன்படுத்துவது குறைந்தது. இதையே காரணம் காட்டி, நம் நாட்டிற்கு நிலக்கரி மின்சாரம் அவசியப்படவில்லை என்ற வக்கிரமான வாதம் முன்னெடுக்கப்பட்டது. அதன் பிறகு, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்திக்கும், நிலக்கரி மின் உற்பத்திக்குமான செலவுகளை ஒப்பிட்டு வாதங்கள் வைக்கப்பட்டன. அவ்வாறு செலவுகளை ஒப்பிடும்போது புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியில் உள்கட்டமைப்புக்கு ஆகும் செலவு சேர்க்கப்படவில்லை, ஆனால் நிலக்கரி மின் உற்பத்திச் செலவுகளில் உள்கட்டமைப்புச் செலவும் சேர்த்து காட்டி இரண்டும் ஒப்பிடப்பட்டது.

அதே போல வாகன உற்பத்தி துறையிலும், ஒன்றிய அரசாங்கத்தினால் பி.எஸ்., 4 விதிகளில் இருந்து நேரடியாக பி.எஸ்.6 விதிகள் திணிக்கப்பட்டன. அதற்கான செலவினம் ரூ. 50 ஆயிரம் கோடி முதல் ரூ.60 ஆயிரம் கோடி வரை ஏற்பட்டது. மேலும் இது அந்தத் துறையில் பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தியது. ஒருபக்கம் இந்த மாற்றம் அமலாகத்தொடங்கியிருந்த நிலையில், இன்னொரு பக்கம் மின்சார வாகன பயன்பாட்டை பெரிய அளவில் முன்னெடுக்கத் தொடங்கினார்கள். 2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் வாகனங்களில் 80-90 சதவீதம் மின்சாரத்தில் ஓடச் செய்வோம் என்ற வாக்குறுதியும் தரப்பட்டது. மன்மோகன் சிங் அரசாங்கம் முதலே இந்த வாக்குறுதிகள் தரப்பட்டன. பின் 5 ஆண்டுகளில் அந்த இலக்கு 90 சதவீதம் என்பதில் இருந்து 30 சதவீதமாக ஆக்கப்பட்டது. இதற்காகவும் கூட நாம் இறக்குமதியைத்தான் பெருமளவில் சார்ந்திருக்க வேண்டி வரும். அதே போல, 2030 ஆம் ஆண்டுக்குள், இந்திய ரயில்வே வெளியிடும் பசுங்கூட வாயுக்களின் அளவு நிகர பூஜ்ஜியமாக்கும் என்ற உத்தரவாதம் தரப்பட்டது. இது எப்படி சாத்தியம் என்பது வெளிப்படையாக விளக்கப்படவில்லை. அதுவும் கூட ஒரு விளம்பர அறிவிப்பாகவே இருக்கக் கூடும். தற்சார்பு பொருளாதாரம் என்ற பகட்டான அறிவிப்பு வெளியாகி, அது பற்றிய அரசு அமைச்சகங்களும், மாநில அரசுகளும் பேசிக்கொண்டிருக்கும்போதே, நமது போதாமை அப்பட்டமாக வெளிப்பட்டது. மேலே குறிப்பிட்ட இந்த எல்லாக் கருத்துக்களும் அன்னிய நிதி உதவிபெற்ற நிறுவனங்களினாலும், சர்வதேச என்.ஜி.ஓக்களாலும் முன்னெடுக்கப்பட்டவையே.

தொடரும் கபடத்தனம் :

கிளாஸ்கோவில் நடந்த COP26 மாநாடு முடிவுக்கு வந்தபோது, அங்கே தரப்பட்ட உறுதிமொழிகள் பலவும், வளர்ந்த நாடுகளின் விருப்பங்களை முன்னெடுப்பதாகவே அமைந்தன. நிலக்கரி மட்டும்தான் புதைபடிம எரிபொருள் என்றும் அதனை பயன்படுத்துவதில் இருந்து இந்தியா வெளியேறுவது அவசியம் என்றும் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை இந்தியா ஏற்க இயலாது என்பதில் இருகருத்துக்கு இடம் இல்லை. எரிவாயு மற்றும் எண்ணெய் பயன்பாட்டின் காரணமாக அமெரிக்கா வெளியேற்றும் பசுங்கூட வாயுக்களைப் பற்றி எவருமே சுட்டிக்காட்டிப் பேசவில்லை. அந்த அளவு, இந்திய நிலக்கரி பயன்பாட்டினால் வெளியேறும் பசுங்கூட வாயுக்களை விடவும் அதிகம். ஐரோப்பிய நிலைமையோடும் எந்த ஒப்பீடும் செய்யப்படவில்லை. ஆக, இதிலும் கூட பொய்மை தன்மையே அம்பலப்பட்டது. இந்தியாவின் வாக்குறுதிகளும், அறிவிக்கப்பட்ட அவற்றின் அளவும் உண்மையிலேயே தேவையற்றவை. பாரிசில் நடந்த மாநாட்டில், வாக்குறுதி கொடுத்த பல முக்கிய பொருளாதாரங்களைப் போல இந்தியாவும் வாக்குறுதிகள் கொடுத்தது. அவை அப்படியே இருக்கும்போது இந்த வாக்குறுதிகள் அவசமியமற்றவை என்றே சுயேட்சையான நிபுணர்கள் பலரும் கருதுகிறார்கள்.

இந்தியா வெளியிடும் பசுங்கூட வாயுக்களின் அளவை 2070 ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜியமாக குறைப்போம் என முன்வைக்கப்பட்டுள்ள இலக்கு இந்திய மக்களை குழப்பியுள்ளது. முக்கியமான சில துறைகளில் அல்லது ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் பசுங்கூட வாயு வெளியேற்றத்திற்கு முற்றாக முடிவுகட்டுவதுதான் அந்த அறிவிப்பின் பொருள் என பலரும் தவறாக அனுமானிக்கிறார்கள். இந்த குழப்பத்தினை பயன்படுத்திக்கொண்டு, வளர்ந்த நாடுகள் நமது அரசாங்கத்தின் மீது நிர்ப்பந்தத்தை செலுத்துவார்கள். மேலும், மாநில அரசாங்கங்கள், மாநில அளவில் செயல்படும் பல்வேறு நிறுவனங்களின் மூலம், வளர்ச்சித் தேவைகளை விடவும் பருவநிலை மாற்ற பிரச்சினையே முதன்மையானது என்ற அழுத்தத்தை தருவதாக அவர்களின் வாதம் அமையக்கூடும். மாநில அரசாங்கங்கள் அந்த அழுத்தத்திற்கு பலியாகக் கூடாது. ஒன்றிய அரசு முன்வைத்துள்ள தணிப்பு நடவடிக்கைகளுக்கும் தாண்டி அரசியல் போட்டியால் உந்தப்பட்டு கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதில்லை.

வேளாண்மைக்கும் பாதிப்பு:

ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலின் வெட்டவெளிச்சமான பாரபட்ச அணுகுமுறை இந்திய அரசை வளர்ந்த நாடுகள் ஏற்படுத்திய நிர்ப்பந்தங்களுக்கு எதிராக ஓரளவிற்கு நிலை எடுக்க வைத்துள்ளது. மற்ற பல துறைகளில் அமெரிக்காவுடன் தமது உறவை வலுப்படுத்துவதில் இந்திய அரசு ஆர்வமாக உள்ளது. ஆனால், பருவநிலை பிரச்சனையில் இது இந்தியாவிற்கு மிகவும் கடினமானது. மீத்தேன் மற்றும் காடுகளைக் குறித்தான கிளாஸ்கோ உடன்படிக்கைகளின் விளைவுகள் தீவிரமாக இருக்கும் என்பதை இந்திய அரசாங்கம் உணர்ந்துள்ளது. காடுகளைப் பற்றிய உடன்படிக்கை அதைப் பற்றி மட்டும் பேசவில்லை, அதில் வேளாண்மையைக் குறித்த பகுதிகளும் உள்ளன. அதன் காரணமாக, கார்பன் வரி, உற்பத்தி திறன் வளர்ச்சி மீதான கட்டுப்பாடுகள் என்று பல்வேறு புதிய சுமைகள் வேளாண்மையின் மீது சுமத்தப்படும். மேற்சொன்ன இரண்டு உடன்படிக்கைகளும் இந்திய சிறு குறு விவசாயத்தை கடுமையாக பாதிப்பதுடன், அனைத்து துறைகளின் மீதும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த உடன்படிக்கைகளில் கையெழுத்திடுவதன் மூலம், இந்தியாவின் வேளாண்மைத் துறையும் பருவநிலை தணிப்பு நடவடிக்கைகளுக்கு உடன்பட வேண்டிய கட்டாயம் உருவாகிறது. கோடிக்கணக்கான இந்திய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வேளாண்மையை சார்ந்துள்ளனர். அதன் மூலம் வெளியாகும் பசுங்கூட வாயுக்கள், உலக நாடுகளோடு ஒப்பிட்டால் மிக மிகக் குறைவாகும்.

இந்தியா அடிபணிவதா?

குறைந்த கார்பன் வெளியேற்றத்துடன் கூடிய வளர்ச்சி என்ற திட்டத்தை முன்னெடுத்து, புவி வெப்பமாதலின் அச்சுறுத்தலுக்கு எதிராக தனது உரிய பங்கை ஆற்றிக்கொண்டே இந்தியா, உலக கார்பன் பட்ஜெட்டில் தனது நியாயமான பங்கினை பயன்படுத்திக்கொள்ளும் வகையிலான உத்திகளை வகுக்க வேண்டும். சுய சார்பான உற்பத்தி துறை வளர்ச்சி என்ற இலக்கில் சமரசத்திற்கு இடம் இல்லை. அதே போல, வறுமை ஒழிப்பும் இந்திய மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்வதும் அவசர கடமைகள். குறைந்த கார்பன் வெளியேற்றம் கொண்ட வளர்ச்சியை முன்னெடுத்துக்கொண்டே, அதன் சுமைகள் எவ்வாறு பகிரப்பட வேண்டும், குறுகிய எதிர்காலத்தில் இதற்கான பாதையும் வழித்தடங்களும் எவை என்பன குறித்த அறிவியல் பூர்வமான ஆய்வுகளையும் மேற்கொள்ளவேண்டும்.

கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாக நடந்துவரும் முதலாளித்துவ-நிலவுடைமை வர்க்கங்களின் ஆட்சியின் விளைவாக உலக பருவநிலை ஆளுகை என்ற பெயரில், ஏகாதிபத்திய நாடுகள் முன்னெடுக்கும் நவ-காலனிய ஆதிக்க விதிகளுக்கு அடிபணியக்கூடிய பலவீன நிலையில் இந்தியா உள்ளது இந்தியாவில் உற்பத்தி சக்திகளுடைய வளர்ச்சியினை வெட்டிச் சுறுக்குவதனால், புவி வெப்பமாதலால் எழும் சவால்களை எதிர்கொள்வதும், மக்கள் நல்வாழ்விற்கு அவசியமான அடிப்படை நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் என இரண்டுமே பாதிப்புக்கு உள்ளாகும். இந்த பாதிப்பு உடனடியாகவும், எதிர்காலத்திலும் வெளிப்படும். எனவே இந்தியாவின் உற்பத்தி திறன் வளர்ச்சிக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுருத்தலை சரியாக புரிந்து எதிர்க்க வேண்டும். இந்தியாவிற்கு மட்டுமல்ல பெரும்பகுதி வளரும் நாடுகளுக்கும் இது பொருந்தும்.

இந்திய வரலாற்றில் இஸ்லாம்

ரொமிலா தாப்பார்

பேட்டி கண்டோர்: ஜிப்சன் ஜான் – ஜிதேஷ், பி.எம்.

நன்றி: ஃப்ரண்ட்லைன்

கேள்வி: இந்திய வரலாற்றில் இஸ்லாமிய மதத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

இஸ்லாமிய தன்மை  குறிப்பிடத்தக்க ஒன்றா அல்லது பெயரளவிற்கானதா என்பதை எல்லாம் பொருட்படுத்தாமல், இஸ்லாமியத்தோடு  தொடர்புடைய அனைத்தையும் முஸ்லிம் என்பதாக அழைக்கும் பழக்கம் நமக்கு உள்ளது. ஆக்கிரமிப்பதற்காக இந்தியாவுக்குள் வந்தவர்கள் என்று ‘முஸ்லிம்களை’ ஒரே மாதிரியாக கருதிக் கொண்டு  இஸ்லாத்தை ஒரு மதமாக நாம் கருதுகிறோம். இதற்கு முன் என்ன நடந்தது என்பதை விளக்குவதற்கு “முஸ்லீம் படையெடுப்பாளர்கள்” மூலம் பெற்ற விளைவு பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. ஆனால் உண்மையில் இந்தியாவிற்குள் வந்த மற்றவர்களிடமிருந்து வேறுபட்ட சில வழிகளில்தான் இஸ்லாம் இந்தியாவிற்குள் வந்தது. அதைக் கொண்டுவந்தவர்கள் உலகின் வெவ்வேறு பகுதிகள் மற்றும் சமூகங்களிலிருந்து வந்தவர்கள் என்பது மட்டுமின்றி, அவர்கள் பின்பற்றிய மதத்தின் பதிப்புகளும் வேறுபட்டவையாக இருந்தன. எனவே, இந்தியாவில் இஸ்லாத்தின் பல்வேறு வகைகள் நடைமுறையில் இருந்தன. சிலர் தங்களுக்கு கற்பிக்கப்பட்ட இஸ்லாத்துடன் நெருக்கமாக இருந்தனர். ஆனால் பலர் இந்து நம்பிக்கை மற்றும் நடைமுறையின் சில பிரிவுகள் போன்ற உள்ளூர் மதங்களிலிருந்து கடன் வாங்கிக் கொண்டனர்.

இன்று நாம் பயன்படுத்தும் இந்த வார்த்தையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்னவென்றால், காலனி ஆதிக்கத்திற்கு முந்தைய காலத்தில், சமஸ்கிருதத்தில் உள்ள இந்திய ஆதாரங்களும் பிராந்திய மொழிகளும் “முஸ்லிம்களை” குறிப்பிடும்போது இஸ்லாத்துடன் இணைக்கப்பட்ட சொற்களை எப்போதாவதுதான் பயன்படுத்துகின்றன. அவற்றில் குறிப்பிடப்படும் மக்கள் இனத்தின் வரலாற்று தொடர்ச்சியைக் குறிக்கும் சொற்களால் அழைக்கப்படுகிறார்களே அன்றி,  அவர்களின் மதத்தால் அல்ல. இவ்வாறு இந்தியாவிற்குள் வந்த குழுக்கள் எவ்வாறு உணரப்பட்டன என்பது பற்றி இது நிறைய கூறுகிறது. இஸ்லாம் இந்தியாவுக்கு வந்த சில வழிகளாவன:

  • அ. எட்டாவது நூற்றாண்டில் அரேபியர்கள் சிந்து பகுதியின் மீதும், பதினோராவது நூற்றாண்டில் துருக்கியர்களும் ஆப்கானியர்களும் வட மேற்கு பகுதியின் மீதும், வடக்குப் பகுதியின் மீதும் படையெடுத்தனர் எனில், பதினாறாம் நூற்றாண்டில் முகலாயர்கள்  வட இந்தியா முழுவதையும் தங்கள் ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்தனர்.
  • ஆ. இந்தியத் துணைக் கண்டத்தின் பிற பகுதிகளில், இந்தத் தொடர்புகள் வேறு வழியில் வந்தன. அரேபியா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து வந்த அரேபியர்களின் சமூகங்கள் எட்டாம் நூற்றாண்டிலிருந்து (அல்லது அதற்கு முன்னதாகவும் கூட) மேற்கு இந்தியாவுடன் வர்த்தகம் செய்து வந்தன. மேலும் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து மேற்கு இந்தியாவின் கரையோரங்களில் அவர்கள் குடியேறினர். இது உள்ளூர் சமூகங்களுக்கும் குடியேறிய அராபியர்களுக்கும் இடையே உருவான தொடர்புகளில் இருந்து பல்வேறு மதக் குழுக்கள் உருவாகவும் வழிவகுத்தது. போஹ்ராஸ், கோஜாஸ், நவாயத் மற்றும் மாபில்லாஸ் போன்ற பிரிவினர் இவ்வாறு மாற்றம் பெற்றவர்கள் ஆவர்.

இதேபோல், ஆப்கான் மற்றும் துருக்கி நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்து வட இந்தியாவுடன் வர்த்தகம் செய்தபடியே அந்த பகுதிகளில் வந்து குடியேறினர்.

  • இ. பணம் ஒன்றையே இலக்காகக் கொண்ட போர்வீரர்களும் இந்தப் பகுதிகளில் இருந்து இந்திய அரசர்களின் ராணுவங்களில் சேர்ந்து கொண்டனர். இந்த ராணுவங்களில் சிலவற்றுக்கு அரசர்களும் வேறு சிலவற்றுக்கு சுல்தான்களும் தலைமை தாங்கினர். கி.பி. ஆயிரம் ஆண்டு காலத்திய ராணுவங்களில் இதுபோன்ற அபிசீனிய, எத்தியோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றிய குறிப்புகள் உள்ளன.

அதேபோன்று அல்-இந்த் பகுதியிலிருந்தும் படைவீரர்கள் பணத்திற்காக ஆப்கானிய, துருக்கிய ராணுவப் படைகளில் பணிபுரிந்துள்ளனர். கஜினி நகரத்தைச் சேர்ந்த முகமதுவின் மிகுந்த நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்த திலக், அல்-இந்த் பகுதியைச் சேர்ந்த படைவீரர்களைக் கொண்ட மிகப்பெரும் படையணியுடன் அவருக்காகப் போர் செய்திருக்கிறார். அந்நாட்களில் நாடுகளின் எல்லைகள் பெருமளவிற்குத் திறந்தே இருந்தமையால் எல்லைகளைத் தாண்டி பல்வேறு தொழில்களையும் மேற்கொள்ள ஆட்களை வேலைக்கு எடுக்க முடிந்தது.

  • ஈ. இஸ்லாம் மதத்தினைப் பரப்புவதற்கான மிகப்பெரும் பிரச்சாரக் குழுக்கள் என்பது சுஃபிக்கள் என்று அழைக்கப்பட்டவர்களைக் கொண்டதாகவே இருந்தன. இவர்களில் சிலர் பாரசீகத்திலிருந்து வந்தவர்கள் எனில், மிகப் பலர் மத்திய ஆசியப் பகுதியில் இருந்து வந்தவர்கள். இஸ்லாம் மதத்தினை சேர்ந்த இவர்களது மத வடிவங்கள் அரேபியர்களின் இஸ்லாம் மதத்தைப் போன்றதாக இருக்கவில்லை. இவ்வாறு இந்தியாவிற்கு வந்த சுஃபிக்களில் சிலர் ஓரளவிற்குப் பழமைவாதிகளாக இருந்தபோதிலும், மற்றவர்கள் தங்களது மதத்தை உள்ளூர் மதங்களோடு கலக்கச் செய்தனர். அவர்களது இத்தகைய செயல்களை கட்டுப்பெட்டியான முஸ்லீம் மதகுருக்கள் ஒப்புக் கொள்ள மறுத்தனர்.

இவர்களை சுட்டிக் காட்டுகின்ற சமஸ்கிருத நூல் ஆதாரங்களில் இருந்தே இஸ்லாம் மதத்தில் நிலவிய இத்தகைய வேறுபாடுகளை நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. அவர்களது மதத்தின் பெயரால் அவர்களை சுட்டிக் காட்டுவதென்பது மிகவும் அபூர்வமாகவே உள்ளது. பெரும்பாலான நேரங்களில் அவர்களுக்கான சுட்டுப் பெயர் என்பது முந்தைய காலத்திய மேற்கு மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்களை அடையாளப்படுத்திக் கூறப்பட்ட பெயர்களாகவே இருந்தன. இவ்வகையில் மேற்கிலிருந்து வந்தவர்கள் யவனர்கள் என்று அழைக்கப்பட்டனர். இதே பெயர்தான் கிரேக்கர்களைக் குறிப்பிடவும், நவீன காலத்தில் பிரிட்டிஷ் நாட்டவர்களைக் குறிப்பிடவும் பயன்படுத்தப்பட்டது. துருக்கியர்களைக் குறிப்பிட டுருஷ்காக்கள் என்ற பெயரும், ஆஃப்கானியர்களை குறிப்பிட ஷாகாக்கள் என்ற பெயரும் பயன்பட்டன. பண்டைய காலத்தில் குறிப்பிடப்பட்ட ஷாகாக்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள் ஆவர். சமஸ்கிருத குறிப்பேடுகளில் துக்ளக் வம்சத்தினர் ஷாகாக்கள் என்றே குறிப்பிடப்படுகின்றனர். டுருஷ்கா என்பது துருக்கி என்பதற்கான சமஸ்கிருதச் சொல்லாகும். குஷாணர்கள் என்பதைப் போன்று மத்திய ஆசியாவிலிருந்து வந்த மக்களைக் குறிப்பிட முன்னாளில் இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டது. மதத்தினால் ஏற்பட்ட வேறுபாடுகள் பெரும்பாலான நேரங்களில் அடையாளமாக இருக்கவில்லை என்றே தோன்றுகிறது. பூகோள அமைப்பும், இன அடையாளமுமே இந்தச் சுட்டுப் பெயரில் முக்கியமான அம்சங்களாக இருந்தன.

மதரீதியான சகிப்புத் தன்மை

பொதுவாகவே மத ரீதியான சகிப்புத்தன்மை என்பதே இந்திய நாகரீகத்தின் தனித்ததொரு அடையாளம் என்று போற்றப்படுகிறது. டாக்டர். எஸ். ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் இந்தக் கருத்தை பெரிதும் முன்னெடுத்துச் செல்பவர்களாக இருந்தனர். இத்தகைய மதரீதியான சகிப்புத் தன்மை என்பது இந்திய வகைப்பட்ட மதச்சார்பின்மையே என்று விளக்கம் கூறுவது அல்லது அதற்குச் சமமானது என்றும் கூறப்படுகிறது. இந்த ஆய்வுப் பொருட்கள் பற்றி உங்கள் கருத்து என்ன? அந்தக் கருத்துக்கள் எந்த அளவிற்குப் பொருத்தமுடையவை?

மதச்சார்பின்மை மற்றும் மத சகிப்புத்தன்மை ஆகியவை முற்றிலும் வேறுபட்டவை. மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களின் சகவாழ்வு, ஒரு சமூகத்தில் உள்ள அனைத்து மதங்களின் சமத்துவம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, எந்தவொரு மதத்திற்கும் அன்றைய மக்கள் சமூகத்தின் சட்டங்கள் மற்றும் அதன் அரசியல் ஆகியவற்றுக்கு இடையிலான தூரத்தை பராமரித்தல் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. எனவே மதச்சார்பின்மை  என்பதும் மத சகிப்புத்தன்மை என்பதும் ஒன்றாக இருக்க முடியாது. அதுவும் போக, மத சகிப்புத்தன்மை என்பது இந்திய நாகரிகத்தின் ஒரு அடையாளமாகவும் இருந்ததில்லை. பண்டைய காலங்களிலிருந்தே சகிப்பின்மைக்கு போதுமான வரலாற்று சான்றுகள் உள்ளன. ஒவ்வொரு மதத்தின் வரலாற்றிலும் இதேதான் நடக்கிறது. உதாரணமாக, பவுத்த மதம், வேறு எந்த மதத்தையும் விட அகிம்சை குறித்த போதனைகளில் மிகவும் வலுவான முத்திரையைக் கொண்டுள்ளது. எனினும், அது ஆதிக்கம் செலுத்தும் மதமாக இருக்கும் சமூகங்களில், வன்முறையிலிருந்து அது விடுபடவில்லை. ஒரு மதத்தில் கற்பிக்கப்படுவதும், உண்மையில் கடைப்பிடிக்கப்படுவதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டியதில்லை.

எனவே, ஒன்றுக்கு மேற்பட்ட மதங்கள் இருந்தால், சில பரஸ்பர கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த கருத்து வேறுபாடு சில நேரங்களில் இறையியலுடன்  மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மற்ற நேரங்களில் அது வன்முறையாக இருக்கக்கூடிய எதிர்ப்பு வடிவத்தை எடுக்கும்.  இந்திய வரலாற்றின் ஆரம்ப கால நூல்களில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வன்முறையை பாரம்பரியமாக கையாளுவது மற்றும் மதரீதியான வேறுபாடுகளைக் குறிக்கிறது, உதாரணமாக, சைவர்களுக்கும் கடவுள் மறுப்பு மதங்களான பவுத்தர்கள், சமணர்களுக்கு இடையிலான வேறுபாடுகள் சில சமயங்களில் வன்முறையாக வெடித்ததைக் கூறலாம். இத்தகைய வேறுபாடுகள் எழக் கூடும்தான். ஏனெனில் அரசரின் ஆதரவைப் பெறுவதற்கு அவற்றுக்கு இடையே ஒரு போட்டி உள்ளது. அதிலும் குறிப்பாக அரசர்கள் வழங்கும் பகட்டான நன்கொடைகளுக்காக. மேலும் அதிக எண்ணிக்கையில் தம்மைப் பின்தொடர்பவர்களைப் பெறுவதற்கான முயற்சிகளிலிருந்தும் போட்டி வரலாம். இது இந்தியாவுக்கு மட்டுமல்ல; ஒவ்வொரு சிக்கலான சமூகத்திற்கும் இது பொருந்தும்.

சிந்து சமவெளி நாகரிகம் தொடர்பான ஏழு தளங்களில் சுமார் 4,600 ஆண்டுகளுக்கு முற்பட்ட பீங்கான் பாத்திரங்களில் கால்நடை மற்றும் எருமை இறைச்சி உள்ளிட்ட விலங்கு பொருட்களின் எச்சங்கள் இருப்பதை ஒரு புதிய ஆய்வு சமீபத்தில் கண்டறிந்துள்ளது. மொத்தத்தில் மாட்டிறைச்சியை தடைசெய்யும் மசோதாவை கர்நாடக அரசு நிறைவேற்றும் நேரத்தில் இந்த கண்டுபிடிப்பு வெளிப்பட்டுள்ளது. ஒரு வரலாற்றாசிரியராக இந்த  ஆய்வையும் இந்த சட்டத்தையும் நீங்கள் எவ்வாறு  பார்க்கிறீர்கள்?

இந்த ஆய்வு குறித்த விவரங்களை நான் பார்க்கவில்லை. எனவே இது குறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியாது. செய்திகளில் வரும் விஷயங்களின் நம்பகத்தன்மை குறித்து ஒருவர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த செய்தி அகழ்வாராய்ச்சிகளிலிருந்து பெற்றதாக இருக்கக்கூடும். எனினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அத்தகைய ஆதாரத்தை முதலில் தொழில்முறை ரீதியான தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆராய வேண்டும். மேலும் அதைப் பற்றி விவாதிக்கவும் கருத்துத் தெரிவிக்கவும் முன்பாக அவர்களின் கருத்துக்களை கேட்க வேண்டிய தேவை உள்ளது.

இந்திய சமூகம் ஒருபோதும் மாறாத, தேக்கமான ஒரு சமூகமாக இருந்ததில்லை; இப்போதும் அப்படி இல்லை. 4,600 ஆண்டு காலத்தில், நம்பிக்கை மற்றும் சமூக  நடைமுறையில் ஆழமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இன்று நாம் எப்படி இருக்கிறோம், நாம் எதை செயல்படுத்துகிறோம் என்பதெல்லாம் இந்த மாற்றங்களிலிருந்து உருவானதே ஆகும். ஆகவே, நமது நல்வாழ்வை உறுதி செய்யும் என்று நாம் நம்புகின்ற விதிகளுக்கு இணங்க விரும்பினால், ஐந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய, தொலைதூர கடந்த காலத்திலிருந்தோ அல்லது சமீபத்திய கடந்த காலத்திலிருந்தோ  சட்டபூர்வமான தன்மையை நாம் தேடிக் கொண்டிருக்க மாட்டோம். இப்போது நாம் என்ன செய்கிறோம் என்பதற்கான அனுமதியைப் பெற ஐந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பார்க்க வேண்டுமா என்பதுதான் கேள்வி. இது நிச்சயமாக தேவைப்படவில்லை. சமூகம் முன்னேறுவதற்கு மாற்றம் என்பது அடிப்படை. ஒவ்வொரு சமூகமும் அதன் விதிகளை தேவைப்படும்போதெல்லாம் மாற்றிக் கொள்கிறது. சமூக மாற்றம்  என்ற ஒன்று இருந்தால், அதற்கேற்ப சமூக விதிகளும் மாறியே ஆக வேண்டும்.

குறிப்பாக சமூகத்தின் சமூக ரீதியான வரிசைப்படுத்தலில் பதிவு செய்யப்பட்டுள்ள மாற்றங்களில் காணப்படுகிறது. எனவே, பெண்கள், தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் ஓபிசிக்கள் [பிற பிற்படுத்தப்பட்டோர்] ஆகிய பிரிவினருக்கு சமூகத்தில் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கை இன்று எழுகிறது. அவர்கள் முழு உரிமைகளைக் கொண்ட, சுதந்திரமான  குடிமக்கள். இந்நிலையில் மனு தர்ம சாஸ்திரத்தால் அவர்களுக்கு விதிக்கப்பட்டபடி கீழ்ப்படிதல் மற்றும் ஒடுக்குமுறை என்பது  தொடர்ந்து நீடிக்க முடியாது.

இதைப் போலவே, உணவுப் பழக்கவழக்கங்களைப் பற்றிய விதிகளும் கூட அவற்றுக்குக் கீழ்ப்படியுமாறு கோரப்படும் நபர்களுடன் விவாதிக்கப்பட வேண்டும்.  கடந்த காலங்களில் இவை இருந்திருக்கலாம் என்று வெறுமனே கூறி அவர்கள் மீது இதைச் சுமத்த முடியாது. கடந்த கால ஆதாரங்கள்படி மக்கள் கால்நடை-இறைச்சி சாப்பிட்டதற்கான சான்றுகள் உள்ளன. நடப்புக் காலத்தில் இது தடை செய்யப்பட வேண்டுமானால், அதற்கான வாதம் என்பது கடந்த காலத்தில் சாப்பிடவில்லை என்பதைத் தவிர வேறு ஒன்றாகவும் இருக்க வேண்டும். ஆட்சி செய்யவும் பொதுமக்களின் கருத்தின்படியும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பல்வேறு கூட்டங்களிலும் இத்தகைய தடைகள் குறித்த பொருளாதாரம் மற்றும் அரசியல் ஆகியவை முழுமையாக விவாதிக்கப்பட வேண்டும்.

அது நிரூபிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் சரி, அல்லது கருதப்படுகின்ற ஒன்றாக இருந்தாலும் சரி, தொலைதூர கடந்த காலத்திலிருந்து வருவதாக நம்பப்படும் ஒரு பாரம்பரியம் என்பது நிகழ்காலத்தில் புதிய ஒரு விதியை விதிக்க யாருக்கும் தானாகவே உரிமை வழங்கி விடாது. பாரம்பரியம் என்பது தொடர்ந்து கண்டுபிடிக்கப்படும் ஒன்று எனவும், அவை கடந்த காலத்திலிருந்து வந்தவை போல முன்வைக்கப்படுகின்றன என வரலாற்றாசிரியர்கள் வாதிட்டு வந்துள்ளனர். ஆனால் கண்டுபிடிப்பு என்பது தற்காலத்தின் தேவைகளிலிருந்து பெறப்பட்டது; மேலும் அதை நியாயப்படுத்தவும் பயன்படுகிறது.

இங்கே அடிப்படை கேள்வி என்னவென்றால், தற்போது விதிக்கப்பட்டுள்ள விதியானது ஒரு சமகால அரசியல் கொள்கையின் தேவைகளிலிருந்து எழுகிறதா? அல்லது அதை  பாரம்பரியம் என்று நம்பும் மக்கள் சிலர் கடைப்பிடிக்கும் உணர்வுகளின் பிரதிபலிப்பா? அனைத்து குடிமக்களின் நலனையும் உறுதி செய்யும் சூழலில் தற்போதைய கருத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதே அரசாங்கம். அதேபோல், இவ்வாறு விதிக்கப்படுபவர்களுக்கு அந்த விதிகளைப் பற்றி விவாதிக்க, உரிமை உண்டு. அதை நிராகரிப்பது என்று அவர்கள் முடிவு செய்தால் அவ்வாறே அது நிராகரிக்கப்பட வேண்டும். ஒரு ஜனநாயகம் செயல்படுவதற்கு இத்தகைய செயல்முறை மிகவும் அத்தியாவசியமானதும் கூட.

ஆரியர்களின் தோற்றம் என்பது இந்திய வரலாற்றில் விவாதத்திற்குரிய மிக முக்கியமானதொரு கேள்வி. உங்களைப் போன்ற வரலாற்றாசிரியர்கள் மத்திய ஆசிய பிராந்தியத்திலிருந்து ஆரியர்கள் இந்தியாவுக்கு குடிபெயர்ந்ததை சுட்டிக்காட்டுகின்றனர். இது ஆரியர்கள் இந்தியாவிலேயே பூர்வீகமாகத் தோன்றினார்கள் என்ற கோட்பாட்டை நிராகரிக்கிறது. சமீபத்திய டி.என்.ஏ ஆய்வுகள்  இடப்பெயர்வு குறித்த உங்களது கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்துகின்றன. இத்தகையதொரு சூழலில், உங்கள் கருத்துப்படி, ஆரம்பகால இந்தியர்கள் என்று யாரைக் குறிப்பிட முடியும்?

கடந்த 5000 ஆண்டு காலமாக உள்ள, மொழியியல், தொல்பொருள் மற்றும் மரபணு போன்ற எங்களிடம் உள்ள சான்றுகளின் அடிப்படையில் ஆராயும்போது, ​​ஆரம்பகால இந்தியர்கள் என்பவர்கள்  கலவையான, ஒரு சில மரபணு குழுக்களை அதிகம் கொண்டு உருவான ஒரு மக்கள்தொகையினர் என்பது தெளிவாகிறது. தொடக்க கால கலாச்சாரங்கள் பலவற்றுக்கும் இந்த அம்சம் பொதுவானதாகும். கலாச்சாரங்களின் முன்னேற்றத்திற்கு மக்கள், வெவ்வேறு மக்களுடன் தொடர்புடைய தொழில்நுட்பங்கள், தொழில்கள், மொழிகள், வாழ்க்கை முறைகள், நம்பிக்கை அமைப்புகள் போன்ற பல காரணிகளின் பரஸ்பர தொடர்பு தேவைப்படுகிறது. தனித்துவமானதொரு மக்கள் கூட்டத்தோடு தொடர்புடைய அதிநவீன கலாச்சாரங்கள் மற்றும் நாகரிகங்கள் மூலமே  தனித்துவமானதொரு கலாச்சாரமும் நாகரீகமும் தோன்றியது என்று வற்புறுத்த முயல்வதை ஒரு கனவு என்றே சித்தரிக்க முடியும்!

தமிழில்: வீ.பா.கணேசன்

இந்தியாவிற்கான கல்விக் கொள்கை எப்படி அமைய வேண்டும்?

பேரா. ஜவகர்நேசன்
தமிழில்: அ.அன்வர் உசேன்

கல்வி என்பது இன்று மிகவும் உற்று கவனிக்கப்படுகின்ற, விவாதிக்கப்படுகின்ற அம்சமாக மாறியுள்ளது. கல்வியுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் தமது குறுகிய மற்றும் சுய தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும் எனும் இறுதி நோக்கத்துடன் கல்வி மீது தமது மேலாதிக்கத்தை செலுத்த முனைகின்றனர்.

அரசாங்கங்கள் அதீத அதிகாரங்களை கொண்டிருக்கலாம்; சந்தை சக்திகள் நிதி அதிகாரத்தை பெற்றிருக்கலாம்; சமூகத்தின் பல தரப்பினரை பிரதிநித்துவப்படுத்தும் பிரிவுகள் சமூக மேலாதிக்கத்தை பெற்றிருக்கலாம் (இந்திய சூழலில் சமூக அமைப்பில் சில விசேட அதிகாரங்களை பெற்றுள்ள சமூக பிரிவுகள் உட்பட); இத்தகைய அதிகாரங்கள் கொண்ட ஒவ்வொரு பிரிவும் தமது சொந்த நலன்கள் மற்றும் தேவைகளை மட்டுமே நிறைவேற்றிகொள்ள முயல்கின்றார்கள். ஆனால் கல்வி இத்தகைய பழமையான மாறாத இரும்பு பிடியை கொண்டுள்ள சக்திகளை தனது பரிசுத்தமான வடிவத்தின் வரம்பிற்குள் இணைத்துகொள்ளாது. அதன் பரிசுத்த வடிவத்தின் மூலம் கல்வி கற்கப்படுமானால், சமூகம் தனது பகுத்தறிவின் மூலம் கூட்டு மனசாட்சியாகப் பரிணமிக்கிறது. அப்பொழுது மேற்கண்ட எத்தகைய சக்தியின் தாக்கமும் இல்லாமல் அது இருக்கும்.

எனவே மேற்கண்ட சக்திகள் எப்பொழுதுமே “கல்வி கொள்கையை” தமது சொந்த நலன்களுக்கு உகந்ததாக வடிவமைக்க கடுமையாக முயற்சிக்கின்றார்கள். அதில் அதிர்ச்சியடைவதற்கு எதுவுமில்லை. ஏனென்றால், கோட்பாடுகள்/ வரையறைகள்/ விதிகள்/ சட்டங்கள் /வழிகாட்டல்/ நெறிமுறைகள்/அளவுகோள்கள்/விழுமியங்கள்/நம்பிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளவையே கொள்கைகள் ஆகும். எனவே, கல்வி எப்படி இயங்க வேண்டும் என்பதை இவை கொள்கைகள் கட்டுப்படுத்துகின்றன.

எனவே, இதன் விளைவு, மேற்சொன்ன சக்திகளின் நலன்களை மையக் கருவாகக் கொண்டுதான் கொள்கைகளின் பல்வேறு அம்சங்களும் உருவாக்கப்படுகின்றன. இதிலிருந்து மாறுபட்டு, பரிசுத்தமான கல்வியின் அம்சங்களை உத்தரவாதப்படுத்தும் வகையில் கொள்கைகள் உருவாக்கப்பட்டால், சமூகத்தின் அனைத்து பிரிவினரும் உண்மையான கல்வியை பெற்றிருப்பார்கள். கல்வி பெறுவதில் ஏற்றத்தாழ்வுகளும், குறுகிய முனைப்புகளும் இல்லாமல் போயிருக்கும். மனிதகுலம் பரிணமித்த காலத்திலிருந்து கல்வி இதற்காகவே பயன்பட்டிருக்கும்.

சுதந்திர இந்தியாவில் இந்த இலக்கை எட்ட முடிந்துள்ளதா? இல்லையா? 1949ம் ஆண்டு மாண்புமிகு முனைவர் ராதாகிருஷ்ணன் குழுவிலிருந்து 2020ம் ஆண்டு புதிய கல்வி கொள்கை முன்வைக்கப்பட்டது வரை இத்தகைய கொள்கைகள் கல்வியில் ஆக்கபூர்வமான வளர்ச்சியை உருவாக்கவில்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது. சிற்சில மாற்றங்கள் உருவாகியிருக்கலாமே தவிர, அடிப்படை வளர்ச்சியை முன்னேற்றத்தை இந்த கொள்கைகள் கொண்டுவரவில்லை.

இந்திய கல்வி கொள்கைகளின் புதிர்களும் குறைகளும்

டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆணையம் என அழைக்கப்பட்ட உயர் கல்வி ஆணையம்(1949) பல்கலைக்கழக கல்விக்கு ஒரு கட்டமைப்பு/ பாட பிரிவுகளுக்கான உள்ளடக்கம்/தேர்வு சீர்திருத்தங்கள் ஆகியவற்றை முன்வைத்தது. சாதி அல்லது வேறு எந்த வேறுபாடும் இன்றி அனைவரும் கல்வியை பெறுவதற்கான வாய்ப்புகளை முன்மொழிந்தது; இந்திய அரசியல் அமைப்பு/கலாச்சாரம்/மதம்/இந்திய விழுமியங்கள்/ சமத்துவம்/ சமூக நீதி ஆகியவற்றுக்கு இசைந்த முறையில் கல்விமுறையை மாற்றியமைத்திட பல ஆலோசனைகளை முன்வைத்தது.

முதலியார் ஆணையம் என அறியப்பட்ட பள்ளி கல்வி ஆணையம் (1952) ஒரே மாதிரியான சீரான பாடத்திட்டம்/மும்மொழி கொள்கை/தொழில் கல்வி/ தேர்வு சீர்திருத்தம் மற்றும் போதனை முறைகளை ஆய்வு செய்தது.

கல்வியின் அனைத்து பிரிவுகள் குறித்தும் ஆய்வு செய்த முதல் ஆணையம் கோத்தாரி ஆணையம் என அறியப்பட்ட இந்திய கல்வி ஆணையம்தான்(1964-66). இந்த ஆணையம் 4 படிநிலைகள் கொண்ட சீர்திருத்த கடமைகளை முன்மொழிந்தது:

1) கல்வியின் திறன் நிலையை அதிகரிப்பது;
2) சமூக/தேசிய ஒருங்கிணைப்பை சாதிப்பது;
3) நவீனமயத்தை விரைவுபடுத்துவது;
4) தார்மீக மற்றும் ஆன்மீக விழுமியங்களை உருவாக்குவதன் மூலம் மாணவர்களிடையே நல்லொழுக்கத்தை வலுவாக்குவது.

அது முன்வைத்த சில குறிப்பான நடவடிக்கைகள்: பொதுவான பள்ளி கல்விமுறை/ தொழில் கல்வி/ பணி அனுபவம்/மும்மொழிக் கொள்கை/ கல்வி பெறுவதில் சம வாய்ப்பு/ கல்வி கட்டமைப்பு/ பாடத்திட்டம் மேம்படுத்துதல்/ போதனை முறைகள்/ தரமான பாட புத்தகங்கள்/ ஆசிரியர்கள் பிரச்சனைகள்/ பள்ளி வளாகங்கள்/ மாணவர்களின் கற்றல் திறன் ஆய்வு/ வயது வந்தோர் கல்வி/ தொலைதூர கல்வி ஆகியவை ஆகும்.

கோத்தாரி ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் 1968ம் ஆண்டு இந்திய அரசாங்கம் “தேசிய கல்வி கொள்கையை” உருவாக்கியது. இதில் முன்வைக்கப்ட்ட ஆலோசனைகள்:

• 14 வயது வரை கட்டாய கல்வி;
• கல்விக்கு நாட்டு வருவாயில் 6% செலவிடுதல்

இருபது ஆண்டுகளுக்கு பின்னர் 1986ம் ஆண்டு “கல்வி பற்றிய தேசிய கொள்கை” உருவாக்கப்பட்டது. இரண்டு முறை இந்த கொள்கையில் மாற்றங்கள் செய்யப்பட்டன. 1992ம் ஆண்டு “செயல்பாட்டுக்கான திட்டம்” உருவானது. இந்த திட்டத்தில் சமத்துவத்துக்கான கல்வி; பொதுவான பள்ளி கல்வி முறை; ஆசிரியர்கள் நியமனம்; கணிணி கல்வி; பட்டியலின மற்றும் பழங்குடி மக்கள்/பிற்படுத்தப்பட்ட மக்கள்/ பெண்கள் ஆகிய பிரிவினரின் கல்வி முன்னேற்றம் குறித்த அம்சங்கள் இடம் பெற்றன.

இறுதியாக 2020ம் ஆண்டு “தேசிய கல்வி கொள்கை 2020” அறிவிக்கப்பட்டது. இந்த கொள்கை சொல்வது என்ன? இந்திய அதீத தேசிய வெறி/ இந்திய தற்பெருமை/ கல்வி காவிமயம் ஆகியவை தவிர வேறு எதுவும் இந்த கொள்கையில் இல்லை.

இந்த கொள்கை “தேசிய அரசை” ஒரு முற்றிலும் முடிவான, சர்வ அதிகாரங்களையும் கொண்ட அதிகார மையமாக முன்வைக்கிறது. கல்வியை வரையறுப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் இரும்புக் கரம் கொண்டு செயல்பட முயல்கிறது. இந்திய சமூகத்தின் பன்முகத்தன்மை குறித்தோ, பல மாநிலங்களை கொண்ட ஒன்றியமே இந்தியா என்பது குறித்தோ, அது இம்மியளவும் கவலைப்படவில்லை. இது இட்லரின் நாசிசம் அல்லது முசோலினியின் பாசிசம் முன்வைத்த “தேசிய கல்வியின்” அப்பட்டமான பிரதி அல்லாமல் வேறு இல்லை. நாசிசமும் பாசிசமும் பொதுவான கலாச்சார மற்றும் இன ரீதியியிலான விழுமியங்களை அடிப்படையாக கொண்டுள்ளன. அதே போல நாசிசமும் இந்துத்துவாவும் பொதுவான கலாச்சார மற்றும் இன அடிப்டையிலான விழுமியங்களை கொண்டுள்ளன.

இந்துத்துவாவும் பாசிசமும் வெவ்வேறு அல்ல; ஒன்றுதான் எனும் முடிவுக்கு இரு கோட்பாடுகளை ஆய்வு செய்யும் எவர் ஒருவரும் அறிய முடியும். “தேசிய கல்வி கொள்கை 2020”ன் அடிப்படை தத்துவம் இந்துத்துவாதான்! இந்துத்துவாவை கழித்துவிட்டால், இப்போதைய கல்விக் கொள்கைக்கும் இதற்கு முன்பு உருவாக்கப்பட்ட கல்வி கொள்கைகளுக்கும் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை. மையப்படுத்தப்பட்ட கல்வி முறை/ மும்மொழி கொள்கை/சமமான கல்வி வாய்ப்புகள்/ கல்விச் சேர்க்கையின் முக்கியத்துவம் ஆகியவைதான் முன்வைக்கப்படுகின்றன.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, உலகிற்கு தத்துவத்தையும் மருத்துவத்தையும் அறிவியலையும் கொடுத்த ஒரு நாடு, இப்போது சுதந்திரத்தின் 70 ஆண்டுகளுக்கு பிறகும் கூட, சமமான கல்வி வாய்ப்புகளை உறுதி செய்தல், சேர்க்கையை மேம்படுத்துதல் ஆகியவற்றை பேசும் சூழலிலேயே இருப்பது பரிதாபத்திற்குரியதுதான். அனைவருக்கும் தரம் மிக்க கல்வியை கொடுப்பதைக் குறித்து விவாதிக்க வேண்டிய நேரத்தில் நாம் விடுதலையின் போது முன்னுக்கு வந்த கல்வித் தேவைகளை பூர்த்தி செய்யவே போராடிக் கொண்டிருக்கிறோம்.

எது சாதிக்கப்பட வேண்டுமோ அதில் ஒரு மிகச்சிறிய பகுதிதான் இந்த 70 ஆண்டுகளில் கல்வியில் சாதிக்கப்பட்டுள்ளது. பல அரசாங்கங்கள் ஆட்சியில் இருந்தாலும் இதுதான் நிலை! கல்வி கொள்கைகள் என எவை பரிந்துரைக்கப்பட்டனவோ அவை சமூகத்துக்கும் தேசத்துக்கும் பொருத்தமற்றவையாகவே இருந்தன.

1949ம் ஆண்டு சூழலுடன் ஒப்பிடும் பொழுது சில முக்கிய அளவுகோள்களான கற்றல் விகிதம்/பள்ளி, கல்லூரி, பல்கலை கழகங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை/ பள்ளி மற்றும் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை/ கல்வி பெறும் வாய்ப்பு (ஆனால் சமத்துவ வாய்ப்பு அல்ல) ஆகியவை சமீப காலம் வரை அதிகரிக்கும் போக்கை காண முடிகிறது என்பது உண்மைதான்! பல கல்வி கொள்கைகள் உருவாக்கப்பட்டதன் பயனாக ஒரு பகுதியளவான முன்னேற்றம் சாதிக்கப்பட்டுள்ளது. பல ஏற்றத்தாழ்வுகள் பாரபட்சங்கள் இருந்தாலும் தேவை ஓரளவு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இன்னும் மிகப்பெரிய அளவுக்கு கூடுதலாக சாதிக்கப்பட வேண்டியுள்ளது.

இத்தனைக்கு பிறகும் எழும் அடிப்படை கேள்வி என்னவென்றால், பல்வேறு கல்வி கொள்கைகளின் வினைப்பொருளாக கல்வி தனது இலக்குகளையும் நோக்கங்களையும் அடைந்திருக்கிறதா! இல்லை என்பதே சரியான பதிலாக இருக்க இயலும். கல்வியின் உண்மையான இலக்குகள் என்பது என்ன? அது என்ன செய்திருக்க வேண்டும்? ஜனநாயக பூர்வமான/ நியாயமான/ நாகரீகம் நிறைந்த /சுய சிந்தனையாற்றல் கொண்ட ஒரு சமூகத்தை அது பரிணமிக்க செய்திருக்க வேண்டும். சமூக ரீதியாக/அரசியல் ரீதியாக/பொருளாதார ரீதியாக சமத்துவம் கொண்டதாக சமூகம் இருந்திருக்க வேண்டும். அறிவு திறன்/படைப்பாற்றல் ஆகியவை மூலம் சமத்துவம் அடிப்படையிலான பொருளாதார திறன் உருவாகியிருக்க வேண்டும். இந்த சாதனைகள் என்பது சாதி/இனம்/பாலினம் ஆகிய அனைத்து வேறுபாடுகளையும் கடந்து நிகழ்ந்திருக்க வேண்டும். இவைதான் கல்வி கொள்கைகள் எந்த ஒரு தேசத்திலும் கண்ணுக்கு தெரியும் அளவில் நிகழ்த்தியிருக்க வேண்டும்.

கடந்த 70 ஆண்டுகளில் சுதந்திர இந்தியாவில் ஆறு முக்கிய கொள்கைகள் கல்வி குறித்து உருவாக்கப்பட்டன. ஆனால் இந்த கொள்கைகள் சில சிறிய முன்னேற்றங்களை உருவாக்கியிருந்தாலும் அடிப்படை மாற்றத்தை உருவாக்கவில்லை. உதாரணத்திற்கு மனித வளம் மற்றும் அறிவுசார் அம்சங்களில் உலக குறியீடு பட்டியலில் இந்தியாவின் இடம் பல சிறிய நாடுகளை ஒப்பிடும் பொழுது மிகவும் பின் தங்கியுள்ளது. மனிதவள மேம்பாடு குறியீடில் 131வது இடம்; சமூக முன்னேற்ற குறியீடில் 117வது இடம்; புதிய கண்டுபிடிப்பு படைப்பாற்றல் குறியீடில் 48வது இடம்; என சீனாவுடன் ஒப்பிடும் பொழுது மோசமாக உள்ளது. சர்வதேச மாணவர் மதிப்பீடு திட்ட பட்டியலில் 2009ம் ஆண்டு இறுதியாக பங்கேற்ற பொழுது 72வது இடத்தில் உள்ளது.

இந்தியாவின் கல்வி முறை சிறந்த முறையில் செயல்பட்டிருக்குமானால் இந்த முக்கிய அளவுகோள்களில் இந்தியா சிறப்பான இடத்தை பிடித்திருக்க வேண்டும். உண்மை என்னவென்றால் இந்த கொள்கைகளில் பெரும்பலானவை ஒரே மாதிரியான கருத்துகளையே திரும்பத் திரும்ப முன்வைத்தன. மும்மொழி கொள்கை/ மையப்படுத்தப்பட்ட பாடத்திட்டங்கள்/ தேசியமயமாக்கப்பட்ட ஒழுங்குமுறை / பொதுவான ஒரே மாதிரியான கல்விமுறை/ கல்வி கட்டமைப்பு மேம்படுத்துதல் போன்ற கருத்துகளையே முன்வைத்தன.

ஆனால் அவர்கள் கல்வியின் உண்மையான தத்துவம் என்ன என்பதை உணர முற்படவில்லை. இந்தியாவில் நீண்ட காலமாக உள்ள தனித்துவமான பிரச்சனைகளான சமத்துவமற்ற சமூகம்/ அடக்குமுறைகள்/ சமூக ரீதியாக உருவாக்கப்பட்ட பொருளாதார வறுமை/ சமூக வன்முறைகள்/ மனித உரிமைகள்/ சகிப்பற்ற தன்மை/ சமூக மேலாதிக்கம்/ அதிகரிக்கும் காட்டுமிராண்டித்தனம்/ சமுதாய வளர்ச்சியில் சரிந்துவரும் அறிவியல் விழுமியங்கள் ஆகியவை அகற்றப்படும் வகையில் கல்விகொள்கைகள் இருக்க வேண்டும் என்பதில் அக்கறை செலுத்தப்படவில்லை. மேலே கண்ட கொள்கைகள் எதுவும் இந்தியாவின் இத்தகைய தனித்துவ பிரச்சனைகளை எதிர்கொள்வதில் கவனம் செலுத்தவில்லை. இந்த பிரச்சனைகள்தான் இந்தியாவின் அறிவுசார்/அறிவியல் பூர்வமான முன்னேற்றம் மற்றும் பொருளாதார உற்பத்தி திறன் மிக குறைந்த அளவு இருப்பதற்கு அடிப்படை காரணம் என்பது உணரப்படவில்லை.

இதற்கு மாறாக இந்தியாவின் கல்வி குறித்து திசைவழியை நிர்ணயிக்க அமைக்கப்பட்ட முதல் ஆணையமான டாக்டர் ராதா கிருஷ்ணன் ஆணையம் தனது கொள்கையை இந்திய சூழலுக்கு ஏற்ப தகவமைக்க முற்றிலும் தவறிவிட்டது. அந்த ஆணையத்தின் கால கட்டத்திலேயே அதன் பரிந்துரைகள் குறிப்பாக கலாச்சாரம்/மதம்/சமூகம் குறித்து பொத்தாம் பொதுவாக இருந்தன என விமர்சனங்ககள் எழுந்தன.

டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆணையம் நமது கல்விமுறை “இந்தியத் தன்மையற்று” உள்ளது எனவும், அதனை “இந்திய மயமாக்க” வேண்டும் எனவும் ஆலோசனையை முன்வைத்தது. பிரிட்டஷ் ஆட்சியால் கல்வி “இந்தியத் தன்மையற்றதாக” ஆக்கப்பட்டது என ஆணையம் கருதியது. இந்திய பாரம்பரியம்/கலாச்சாரம்/மதங்கள் மற்றும் விழுமியங்கள் ஆகியவை மூலம் இந்திய மயமாக்கப்பட வேண்டும் என கருதிய ஆணையம் அவற்றை துல்லியமாக வரையறுக்க தவறியது. இதற்கு பிறகு உருவான ஆணையங்களும் “இந்திய மயம்” என்பது என்ன என்பதை வரையறுப்பதில் கவனம் செலுத்தவில்லை.

ஆனால் தேசிய கல்வி கொள்கை 2020 “இந்திய மயம்” என்பது இந்துத்துவாதான் என முன்னெடுக்கிறது. இந்திய தேசியம்/இந்திய பாரம்பரியம்/ இந்திய கலாச்சாரம்/ இந்திய பெருமை/ இந்திய முதன்மை/ இந்திய தத்துவம் என இவற்றின் பெயரால் இந்துத்துவா கருத்துகளை கல்வி கொள்கையில் முன்வைக்கிறது.

இப்பொழுது நாம் ஒன்றை எளிதாக புரிந்துகொள்ளலாம். டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆணையம் தொடங்கி பின்வந்த பல ஆணையங்களும் தமது அணுகுமுறைகள் அல்லது இந்திய மயம் என்ன என்பதை தெளிவாக வரையறுக்காத காரணத்தால் 2020ல் “இந்திய மயம்” என்ற பெயரில் இந்துத்துவா கொள்கைகள் கல்விமுறையில் புகுத்தப்படுவதற்கு வழிவகை செய்துவிட்டன.

உண்மையில் வருத்தம் அளிக்கும் ஒன்று என்னவெனில் சமூக அமைப்பு முறையில் கல்வியின் பங்கு குறித்து டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆணையம் என்ன கூறுகிறது என்பதுதான்: “நமது சமூக அமைப்பு முறைக்காக கல்வி (மாணவர்களை) தயார்ப்படுத்துகிற படியால், நமது கல்விமுறை தனது வழிகாட்டல் கோட்பாடுகளை சமூக அமைப்புமுறை கொண்டிருக்கும் குறிக்கோள்களிலிருந்தும், அது கட்டமைக்க இருக்கும் நாகரீகத்தின் தன்மையிலிருந்தும் கண்டுகொள்ள வேண்டும்” என சொல்கிறது.

ஆணையம் நமது அரசியல் அமைப்பு விழுமியங்களான சுதந்திரம்/ சகோதரத்துவம்/ சமத்துவம்/மதச்சார்பின்மை ஆகியவற்றை கல்விமுறை வலுப்படுத்த வேண்டும் என கூறினாலும் சமூக அமைப்பின் மீதே கூடுதலான நம்பிக்கையை வைத்தது. சமூக அமைப்பிலிருந்துதான் வழிகாட்டல் கோட்பாடுகளை கல்விமுறை கண்டெடுக்க வேண்டும் என கூறியது. அப்படியானால் அனைவருக்கும் சமமான, நியயமான கல்வி என்பதை எப்படி வென்றெடுக்க முடியும்?

மாநில அடிப்படையில் கல்விக் கொள்கை ஏன் தேவை?

கல்வி கொள்கையின் சட்டரீதியான அதிகார எல்லை, நாம் கவனிக்க வேண்டிய அடுத்த அம்சம். அதிகார எல்லை என்பது வெறும் பூகோள எல்லைகள் மட்டுமல்ல; அது தனது குணாம்சத்தை தேசம் எனும் கோட்பாடிலிருந்து பெறுகிறது. தேசம் என்பது பூகோளம்/அரசியல் சட்டம்/விதிகள் ஆகியவற்றால் உருவாகியது அல்ல; மாறாக அங்கு வாழும் மக்களால்; சமூகத்தில் அந்த மக்கள் அங்கம் வகிக்கும் தனித்துவத்தால் தேசம் என்பது உருவாகிறது.

தேசம் எனும் கருத்தியல் என்பது சமூகத்தின் (மக்களின்) சமூக பொருளாதார – அரசியல் தேவைகளின்படி அரசு (மாநிலம்) தன் தேவைகளை முழுமையாக பிரதிபலிப்பதும் அல்லது அதன்பால் வடிவெடுப்பதும் தவிர வேறல்ல. பன்மைத்தன்மை கொண்ட பிரதிநிதித்துவத்துடன் சமூகங்கள் இருக்கும் பொழுது அவை வெவ்வேறு தனித்துவம் கொண்ட கருத்தியலை பிரதிபலிக்கின்றன. அதன் பொருள் என்னவென்றால் அரசியல் சட்ட அடிப்படையில் ஒரே தேசமாக இணைந்து இருந்தாலும் அவை பல்வேறு தேசங்களாக உள்ளன.

“அரசியல் சட்ட அடிப்படையில் உள்ள தேசம் (தேச – அரசு)” என்பதும் “கருத்தியல் அடிப்படையில் உள்ள தேசம்” என்பதும் வெவ்வேறு ஆகும். அரசியல் சட்ட அடிப்படையிலான தேசம் என்பது பல்வேறு சட்டங்களால் மற்றும் அரசியல் அமைப்பு சட்டத்தால் உருவாக்கப்படுகிறது. ஆனால் கருத்தியல் அடிப்படையிலான தேசம் என்பது அங்கீகரிக்கப்படுகிற சமூகத்தால் அதன் சமூக உட்கூறுகளால் பிரதிநித்துவப் படுத்தப்படுகிறது.

கல்வியின் சட்ட எல்லைக்கோடு என்பது கருத்தியல் அடிப்படையிலான தேசத்துக்கு மட்டுமே பொருந்துவதாக இருக்க வேண்டும். அரசியல் அடிப்படையிலான தேசத்துக்கு அல்ல! ஒரே கல்வி கொள்கை பல கருத்தியல் தேசங்களுக்கு பொருந்த முடியாது. இந்திய அரசு-தேசம் என்பது பல கருத்தியல்கள் கொண்ட தேசங்களை உள்ளடக்கியுள்ளது. தமிழ் தேசம்/மலையாள தேசம்/ தெலுகு தேசம்/வங்காள தேசம்/இந்தி தேசம் என பல மொழிகள்/ கலாச்சாரம்/ இனம் கொண்டதாக உள்ளது.

இந்த வகையில் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் தனி கருத்தியல் கொண்ட தேசம் ஆகும். ஒவ்வொரு தேசத்துக்கும் தனி கலாச்சாரம்/பாரம்பரியம்/அறிவியல் தேவைகள்/சமூக குணங்கள்/ உள்ளூர் அறிவு/அனுபவம் என தனித்தனியாக உள்ளன. இவை அனைத்துக்கும் ஒரே கல்வி கொள்கை என்பது இருக்க இயலாது. இதனை புரிந்துகொண்ட காரணத்தினால்தான் அமெரிக்கா/ ரஷ்யா/ பிரிட்டன்/ஐரோப்பா போன்ற முற்போக்கான நாடுகள் தமது தேசம் முழுமைக்கும் ஒரே கல்வி கொள்கை என்பதை உருவாக்கவில்லை.

இது குறித்து தீர்மானகரமாக சொல்லப்பட வேண்டியது என்னவெனில் கல்வி கொள்கையின் எல்லைக்கோடு என்பது கருத்தியல் அடிப்படையிலான தேசத்துக்கு பொருந்துவதாக இருக்க வேண்டும். இது இந்திய சூழலில் மாநிலங்களே ஆகும். கல்வி என்பதும், கல்வி கொள்கை என்பதும், முற்றிலும் மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகவே பார்க்கப்பட வேண்டும்.

நம் நாட்டில் உருவாக்கப்பட்ட கல்வி கொள்கை எதுவும் இந்த பிரச்சனையை புரிந்துகொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் மாநில அளவில் உருவான கல்வி கொள்கைகள் கூட கல்வி சம்பந்தப்பட்ட தரவுகள் மற்றும் சில பிரச்சனைகளை பேசியதே தவிர கல்வியின் அடிப்படைக் கொள்கைகள் பற்றி ஆய்வு செய்யப்படவில்லை. ஒருவேளை இதனால்தான் சமூகத்தின் அடித்தட்டில் கல்வி தனது இலக்குகளை செயல்பட வைப்பதில் இதுவரை உருவாக்கப்பட்ட கொள்கைகள் எதுவும் வெற்றி அடைய இயலவில்லை போலும். இங்கும் அங்குமாக சில முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் தரமான கல்வி என்பது ஒரு தொலைதூரக் கனவாகவே இன்னும் உள்ளது.

கல்வி உருவாக்கல்- கொள்கை தேவைகள்

மேலும் கல்வியின் மீதான மாநில அரசின் சட்ட வரம்பினைக் குறித்த மேற்கண்ட வாதங்கள் மட்டுமின்றி தனிமனிதர்களின் மட்டத்திலும் கல்வி செயல்பட வேண்டும். ஏனெனில் கல்வி தனி மனிதர்களிடத்தில்தான் மாற்றத்தை உருவாக்குகிறது. இந்த மாற்றம் என்பது என்ன? கல்வி தனிமனிதனை சிந்திக்க வைக்க வேண்டும்; அந்த தனி மனிதனை சுய உணர்வு மற்றும் சுய அறிதல் கொண்டவராக ஆக்க வேண்டும்; அதன் விளைவாக அந்த தனி மனிதர் சுயமாக ஆய்வு செய்து சரியான முடிவை மேற்கொள்ள வேண்டும். இது இரண்டு விளைவுகளை உருவாக்குகிறது. ஒன்று தனி மனிதரை சுயமாக சிந்திக்க வைக்கிறது. இரண்டு அதன் மூலம் உண்மையை (அறிவை) அறிய/உருவாக்க வைக்கிறது.

எனினும் கல்வியாளர்கள் மற்றும் கல்வி கொள்கை உருவாக்குபவர்கள் இப்பொழுதும் கூட அறிவு பெறும் முறையை அங்கும் இங்கும் மாற்றுவதன் மூலம் சிந்தனையை மேம்படுத்த முடியும் எனும் பிரமையில் கல்விக்கான நிகழ்ச்சி நிரலையும் பாடத்திட்டங்களையும் உருவாக்கி கொண்டுள்ளனர். ஆனால் நரம்பியல் விஞ்ஞானிகள் பல ஆண்டுகளுக்கு முன்பே சிந்தனை என்பது அறிவாற்றலைச் சாராதது, சுயேச்சையாக உள்ளது என்பதை நிரூபித்துவிட்டனர். மூளையின் வெளிப்பகுதியாகிய புறணிதான் சிந்தனையின் மையம் என நம்பப்பட்டு வந்தது. இப்பொழுது சிந்தனை என்பது புறணியை சார்ந்தது இல்லை என்று நிலைநாட்டப்பட்டுள்ளது.

தனி நபர்கள் கல்வி நிகழ்வில் கற்பித்தலில்/கற்றலில்/பாடத்திட்டங்கள் உருவாக்குவதில் எவ்வாறு ஈடுபடுகின்றனர் என்பது குறித்த மறுசிந்தனை அவசியம். இதனை கல்வி கொள்கைகள் ஆய்வு செய்ததே இல்லை.

சிந்தனை என்பது உள்ளார்ந்ததாகவும், புறச்சூழலிலும் சமூகத்திலும் இருந்து விடுபட்டும் சுயேச்சையான ஒன்றாகவும் இருக்கிறதா?

டெஸ்கார்ட்டஸ்/கான்ட்/ஹெகல் போன்ற பல தத்துவ ஆசிரியர்கள் சிந்தனைதான் புற உலகு; புற உலகுதான் சிந்தனை எனும் முடிவுக்கு பரிணாம ரீதியாக வந்தனர். இந்த கருத்தினை நவீன நரம்பியல் அறிவியலும், அளவு இயங்கியலும் (quantum mechanics) உறுதிபடுத்தியுள்ளன.

சிந்தனை என்பது பெருமளவில் புற உலகத் தன்மை கொண்ட சுயநினைவாற்றலால் விளையும் நிகழ்வாகும். அது உண்மையின் சாம்ராஜ்யத்துக்குள் பயணிக்கும் அனுபவமாகும். புற உலகின் அனுபவமும் அதன் விளைவாக உருவாகும் காரண காரியங்களும் அல்லது கேள்விகளும் ஒரு குறிப்பிட்ட சமூகச் சூழலில்தான் நிகழ்கின்றன. தங்களது சுயசிந்தனையை சுதந்திரமாக செயல்படுத்தும் வாய்ப்பினை, தனி மனிதர்களும், சமூகமும் பெற்றிருந்தால்தான் அங்கே உண்மையான சிந்தனைகள் வருவது சாத்தியமாகும்.

இந்த சாத்தியத்தை ஏற்படுத்த மிக முக்கிய தேவை “ஜனநாயகமும் சமத்துவமும்” ஆகும். இந்த குணாம்சம்தான் சமூகத்தில் உள்ள தனிநபர்களை சிந்திக்கவும் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவும் அவை குறித்து ஆய்வு செய்யவும் வாய்ப்பினை உருவாக்குகின்றன. இதன் மூலம்தான் சுயசிந்தனை நிகழ்வு ஒரு தொடர் நிகழ்வாக நடக்கின்றது. இவ்வாறு உருவாகும் அறிவு பொதுவானதாகவும் சமூகத்தின் கூட்டு சிந்தனையாகவும் அமைகிறது. நாளடைவில் இந்த அறிவு சமூகம் முழுமைக்கும் பொதுவானதாகிறது. இதன் பொருள் என்னவென்றால், அந்த சிந்தனை சமூக அங்கீகாரம் பெறுகிறது. எனவே சிந்தனைக்கு சொந்தமான சமூகப் பிரிவு அதிகாரம் கொண்டதாகிறது. சமூக அடக்குமுறையால் அடக்கப்படுபவர்களை விடுதலை செய்ய இது முக்கியமான வழியாகும். அத்தகைய கல்விமுறையை கட்டமைப்பது என்பது அடக்கப்பட்டவர்களுக்கு சமத்துவமற்ற, ஜனநாயகமற்ற, சமூக முறையை எதிர்கொள்ள ஆற்றலை தர உதவும். இவ்வாறு அது சாதிய முறைகளை அழிக்க வழிகோலும்.

கல்வியின் உண்மையான நோக்கங்கள் நிறைவேற வேண்டுமெனில், இந்த மனித சிந்தனை அதன் அனைத்து அம்சங்களிலும் ஒன்றிணைந்து பரிணமிக்கும் வகையில் கல்வி கொள்கை உருவாக்கப்பட வேண்டும். ஆனால் அத்தகைய குணாம்சம் இந்திய சமூகத்தில் இல்லை. இந்திய சமூகம் பெருமளவு சமத்துவமற்றதாகவும் ஜனநாயகமற்ற முறையிலும் உள்ளது. இதனை எதிர்க்கும் வகையில் கல்விமுறை இருக்க வேண்டும். சமூகம் முரண்பட்ட கட்டமைப்பை கொண்டிருக்கும்பொழுது, கல்வி பற்றிய எதிரெதிர் கண்ணோட்டங்களை கொண்டிருக்கும்பொழுது, கல்விமுறையை எப்படி நியாயமாக வடிவமைப்பது என்பது மிக முக்கியமான சவால் ஆகும்.

கல்வி கொள்கையை வகுப்பதற்கு பொருத்தமான வழிமுறைகளை கைக்கொள்வதன் மூலம் கல்வி செயல்பாட்டினை மேம்படுத்த வேண்டும். சமூக கட்டமைப்பை கருத்தில் கொண்டதாக அதனை முடுக்கிவிட வேண்டும். ஒரு குறிப்பிட்ட வசதிபடைத்த மேல்தட்டு சமூகத்துக்கு சாதகமாக இல்லாமல், எந்த பிரிவும் ஒதுக்கப்படாமல், எவ்வித பாரபட்சமும் இன்றி, மனித அனுபவத்தை மொத்தமாக உள்வாங்குவதற்கு தேவையான காரணிகளை பெற்றிருக்குமாறு கல்வி செயல்பாடு உருமாற வேண்டும். அத்தகைய மனித அனுபவமே பாடப்பிரிவுகளாகவும் கற்பிக்கும் விடயங்களாகவும் அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் எந்த பாகுபாடுமின்றி வழங்கப்பட வேண்டும்.

அனைத்து சமூக கூறுகளும் கருத்துக்களை சுதந்திரமாக பரிமாறிக்கொள்வதற்கும் தமது அனுபவங்கள்/நம்பிக்கைகள்/விழுமியங்களை பதிவு செய்வதற்கும் ஏதுவாக போதுமான இடமும் வாய்ப்பும் ஒருங்கே பெற்றிருப்பதே உதாரண சமூகமாகும். பரந்துபட்ட பிரிவினரின் அந்த கூட்டு அனுபவங்களை கற்பவருக்கு மடைமாற்றம் செய்கிற பணியை கல்வியின் மூலம் திறம்பட செய்வதற்கு இந்த உதாரண சமூகமே ஏதுவாக இருக்கும்.

சமூக பிரிவினர்களுக்கு நடுவில் அனுபவப் பகிர்வு அதிகமாக நடக்கும்போது கற்றல் திறன் அதிகமாக இருக்கும். கற்றல் திறன் என்பது சமூகத்தின் தடைகளை தாண்டும் திறன் ஆகும். அறிவாற்றலை – உள்ளூர் அறிவாற்றலை- தொடர்ச்சியாக மேம்படுத்துவதற்கான தேவையை பூர்த்தி செய்வதாகும். ஒரு சமூகம் தனக்குதானே உகந்த முறையில் செயல்பட்டு அறிவு வளர்ச்சியின் மூலம் தொடர்ந்து தன் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதாகும். இதை செய்வதற்கு கருத்துகள்/தகவல்/அனுபவம்/கலாச்சாரம் போன்றவைகளை பல்வேறுபட்ட சமூக கூறுகள் நன்கு பரிமாறிகொள்வதற்கு உகந்த சமூக கட்டமைப்பும் ,சமூக முறையையும், பிணைப்பினையும் கொண்டிருக்க வேண்டும். இதனை உறுதி செய்வது கல்விக் கொள்கையின் இலக்காக இருக்க வேண்டும். மேலும், சர்வதேச அறிவாற்றல்கள் மூர்க்கத்தனமாக உலா வரும் வேளையில், உள்ளூர் மக்களின் அறிவாற்றலை பாதுகாக்கவும், முன்னெடுக்கவும் மேற்சொன்ன அமைப்பு தேவை.

அறிவாற்றல் என்பதில் சர்வதேச அல்லது உள்ளூர் என வித்தியாசம் உண்டா என்று கேட்டால், அறிவாற்றல் என்பது உலகம் முழுமைக்கும் உரியதுதான்! உள்ளூர் மக்களின் அறிவாற்றல் என குறிப்பிடுவது அடக்கப்பட்ட/ஒடுக்கப்பட்ட மக்களின் அனுபவம் ஆகும். பொதுவாக அது சமூக அங்கீகாரம் பெறுவது இல்லை. இத்தகைய அங்கீகாரம் இல்லையெனில் அவர்களது அறிவு கூட்டாக பிரதிபலிக்கப்படும் ஒட்டுமொத்த சமூக சிந்தனையில் இடம் பெறுவது இல்லை.

மறுபுறத்தில் உள்ளூர் மக்களின் அறிவாற்றல் என்பது தனிச்சிறப்புடன் விளங்கும் சமூக கூறுகளால் கொண்டாடப்படும் பழங்கால அறிவாற்றலை தூக்கி பிடிப்பது என்று பொருள் அல்ல. பழங்கால அறிவாற்றல் என்பது சமூகத்தில் சில மேல்தட்டு பிரிவினரின் அறிவாற்றலாக மட்டுமே இருந்தது. அந்த மக்களின் அனுபவத்திற்கு அதில் இடமில்லை. எனவே உள்ளூர் மக்களின் அறிவாற்றல் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் சிந்தனை. அவர்கள் எப்படி பல்வேறு சமூக சூழல்களை எதிர்கொண்டார்கள் எனும் அனுபவத்தின் கூட்டு சிந்தனையாகும். அதுவே அறிவாகும்.

உள்ளூர் மக்களின் அறிவாற்றலை பயன்படுத்த கல்வி முறை தவறுமென்றால், அந்தக் கல்வியின் விளைவாக உருவாகும் மனித ஆற்றலில் அவ்வறிவு புலப்படுவதும் இல்லை. எனவே அத்தகைய அறிவாற்றலை வென்றெடுப்பது என்பது அனைத்து மக்களின் அறிவாற்றலின் அனைத்து அம்சங்களையும் – கலாச்சாரம்/ விழுமியங்கள்/மொழி/இயற்கை வளங்கள்/சுற்று சூழல் – உள்ளடக்கியதாக இருப்பதாகும்.

கல்வியை பொறுத்தவரை தனிநபரும் சமூகமும் பிரிக்க முடியாதவை. இரண்டுமே முக்கியம். இவை இரண்டும் கல்வி உருவாவதில் ஒன்றுக்கொன்று உதவுகின்றன. ஏனைய பிரிவுகளான மைய அரசு/சந்தை சக்திகள்/கல்வி அமைப்புகள் கல்வியை உருவாக்க வழிகோலும் பங்கை மட்டுமே செலுத்துகின்றன. கொள்கை மற்றும் சட்டங்களை உருவாக்குபவர்கள் இதனை புரிந்துகொள்வது மிகவும் அவசியம்.

இந்த அடிப்படை அம்சத்தை இந்திய கல்வி உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அதற்கு உகந்த வழியில் கல்வி கொள்கை உருவாக்கப்பட வேண்டும். ஆனால் இந்த 70 ஆண்டுகளில் என்ன நடந்தது? அரசாங்கங்கள் தனக்கு விசுவாசமான குடிமக்களை உருவாக்க முயன்றன; சந்தை சக்திகள் தமக்கு தேவையான மனித வளத்தை உருவாக்க முயன்றன; சமூகத்தின் மேல் தட்டில் இருந்தவர்கள் அவர்களின் இடத்தை தக்க வைத்து கொள்ளவும், தமது அதிகாரத்தை வலுவாக்கவும் முயன்றனர். இந்த இலக்குகளை நோக்கிதான் கல்வி கொள்கைகள் உருவாக்கப்பட்டன.

கல்வியும் சந்தை சக்திகளும்

உலக வர்த்தக அமைப்பு / நவீன தாரளமய சந்தை சக்திகள்/ அரசு ஆகிய மும்மூர்த்திகள் உருவாக்கிய நவீன நுகர்வு கலாச்சாரம் கல்வியில் செலுத்தும் தாக்கம் கவலை தருகிறது. கல்விக்கு அவசிய தேவைகளாக உள்ள தனிநபர்கள் மற்றும் சமூகங்களுடைய சுதந்திர விருப்பத்தை/ உரிமையை இந்தச் சக்திகள் உதாசீனம் செய்துவிட்டார்கள். கல்வியின் கவனக் குவிப்பினை மக்களிடமிருந்து சந்தைக்கும், அறிவாற்றலிருந்து உற்பத்தி பொருட்களுக்கும் இவை மடைமாற்றிவிட்டன.

இவை கல்வியை சந்தை சூழலில் தனிநபர்களை விருப்பம் போல பயன்படுத்தும் ஒரு கருவியாக மாற்றிவிட்டன. அவர்களை வேலை தேடுபவர்களாகவும் தொழில் முனைவர்களாகவும் மாற்றிவிட்டன. இதன் விளைவாக கல்வியின் இலக்கு என்பது வேலைவாய்ப்புக்கு தகுதி பெறுவது என்பதாக, கல்வியின் பரந்த நோக்கத்துக்கு எதிரான ஒரு புதிய அணுகுமுறை உருவாகியது. தனி நபர்கள் ஒன்றும் சந்தை பொருள்கள் அல்ல; விருப்பம் போல அவர்களை பயன்படுத்த! ஆனால் கல்வியின் விளைவுகளில் ஒன்றாக, ‘வேலைக்குத் தயாரான நிலைமை’யும் ஆகிப்போனது. இந்தப் போக்கு கல்வியுடைய தத்துவத்தை மீறும் செயலாகும். ஏனெனில் சந்தையின் இசைவுப்படி மாணவர்கள் மிகக்குறுகிய திறன் தொகுப்புகளுடன் உருவாக்கப்படுகின்றனர். இது கல்வியே அல்ல.

கடந்த கால/ நிகழ்கால கல்விக் கொள்கைகள் மேற்சொன்ன கருத்துகளுக்கே அழுத்தம் கொடுத்தன. அதனை எட்டுவதற்கு பல பரிந்துரைகளை முன்வைத்தன. அவை பெரும்பாலும் சந்தையின் தேவைகளை கல்வியின் வழியாக அடைவதும், அதன் மூலம் தயாரிக்கப்பட்ட தனிநபர்களை எப்படி பயன்படுத்துவது என்பதை நோக்கியுமே இருந்தன. சந்தையின் தேவைக்கு ஏற்ப கல்வி உருவானது. கல்வியின் உண்மையான தேவை பின்னுக்குத் தள்ளப்பட்டது. வேலை வாய்ப்பு திறனை அதிகரிக்கும் வகையிலான பாடத்திட்டங்கள் அல்லது தொழிற்கல்விக்கான அதிக பரிந்துரைகள் ஆகியவை கல்வியை சந்தையின் தேவைக்கு ஏற்ப தகவமைக்கும் முயற்சிகளின் பல வெளிப்பாடுகள் ஆகும்.

அதற்கு அப்பாற்பட்ட மற்றொரு பெரிய பாரபட்சம், பரம்பரை அடிப்படையிலான தொழிற்கல்வி தருவதைப் பற்றிய கொள்கைகள் ஆகும். தொழில் மற்றும் சமூகத்தின் தேவைக்கு ஏற்ப கல்வி வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. எனினும் அத்தகைய கல்வி பாரபட்சமாகவும் பரம்பரை அடிப்படையிலும் இருக்க கூடாது.

இந்திய பொருளாதார சமூக சூழல்கள்/ நவீன நுகர்வு கலாச்சாரம்/ நவீன தாராளமய சந்தைகள் ஆகியவை அறிவாற்றலை உருவாக்குவதிலும், மனித சிந்தனை போக்கிலும் பாதகமான பெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ளன. அதே சமயத்தில் இன்னொரு புறம் பல பெரிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளும் பாதகமான தாக்கத்தை உருவாகியுள்ளன. செயற்கை நுண்ணறிவு/ ஆழ் கற்றல்/இயந்திர கற்றல்/சைபர் இயற்பியல் முறைகள்/ கணிணி செயல்பாடுகள் ஆகியவையும் கூட அறிவாற்றல் உற்பத்தியில், சிந்தனை உருவாக்கத்தில், சில மேல்தட்டு சுயநல சக்திகளுக்கு சாதகமான தாக்கத்தை விளைவித்துள்ளன.

ஏற்கனவே ஜனநாயகமற்று உள்ள அறிவாற்றல் சூழலை மேலும் கூடுதலாக ஜனநாயகமற்றதாக ஆக்கும் நிலைமையே இதன் விளைவாக உருவாகும். இத்தகைய நவீன தொழில் நுட்பங்களின் பாதக அம்சங்களை தடுக்கும் அதே சமயத்தில், அதன் சாதக அம்சங்களை முன்னெடுக்கும் பெரிய பங்கு கல்விக்கு இருக்கிறது. அவ்வாறான கல்வியின் மூலம் இந்த தொழில்நுட்பங்களை கொண்டு அறிவினை பரிணாம வளர்ச்சிக்கு உள்ளாக்கவும், சமூக பொருளாதார மாற்றங்களை பெற்றிடவும் முடியும்.

சமீபத்திய இந்திய கொள்கைகள் இவற்றை கணிக்கவே இல்லை. எதையுமே சொல்லவில்லை. குறிப்பாக நவீன இயற்பியல் விதிகள், குவாண்டம் மெகானிக்ஸ் போன்றவை அதி வேக கணிணி செயல்பாடுகளுக்கும், தொலைதூரங்களுக்கு அதிவேகத்தில் தகவல் சென்றடையும் சாத்தியங்களுக்கும், தகவல் உருவாக்க பெருக்கத்திற்கும் வழிவகுக்கின்றன. இவை மனித சிந்தனை ஆற்றலில் ஊடுருவும் பொழுது நமது வாழ்வு முறையும் சமூகம் இயங்கும் தன்மையும் கூட பெரிய மாற்றத்துக்கு உள்ளாகும்.

நமது பொருளுலகுக்கு அப்பாலும், ஆன்மீகம் என்ற பெயரிலும் உருவகப்படுத்திவந்த கருத்தியல்கள் இல்லாமல் போகின்றன. அனேகமாக அனைத்து கேள்விகளுக்கும் பதில் தரக்கூடிய இடத்துக்கு அறிவியலே முன்னேறியுள்ளது. இதற்கு முன்னால் மனித மூளையினால் விடை காண முடியாது என கருதப்பட்ட கேள்விகள் கூட இன்றைக்கு அறிவியல் ஆய்வுகளின் மூலமாக பதில் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

எனவே தார்மீக மதிப்பீடுகளுக்காக ஆன்மீகம் அல்லது மதம் எனும் வரையறைக்குள் சிந்திக்க நிலை இல்லை. மாறாக அவை அறிவியலாலும், மனித சிந்தனையினாலும் வரையறுக்கப்படும். இதற்குத்தான் கல்வி வழிவகுக்க வேண்டும். கல்வி என்பது அறிவியலிற்கும், மனித சிந்தனைக்கும் மட்டுமே உட்பட வேண்டும். அதனைக் கடந்து மதம் அல்லது ஆன்மீகம் பக்கம் செல்லக்கூடாது.

இந்தியாவில் சமூக மற்றும் பொருளாதார தளங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கும் பாதகமான பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் எனில் கல்வி கொள்கைளை முன்னெடுக்கும்போது மேற்சொன்னவைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். இருபத்தொன்றாம் நூற்றாண்டையும், அதற்கு பிறகு வரவுள்ளதுமான சூழ் நிலைமைக்கு இசைந்ததாக கல்வியை உருவாக்கிட வேண்டும்.

தமிழகத்தின் கல்வி கொள்கைகள் வகுப்பதற்கான சில முக்கிய கருத்துகளும் கோட்பாடுகளும் மேலே முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றை கணக்கிலெடுத்து செயல்படுவதன் மூலம் தமிழகத்தில் கல்வி ஆக்கபூர்வமானதாகவும் பயனுள்ளதாகவும் சமூகத்தை பிரதிபலிப்பதாகவும் உருவாக்கப்பட வேண்டும். ஒரு பரந்துபட்ட தளத்தில் கல்வியின் பல்வேறு அம்சங்களுக்காக பன்முக தலையீடுகளும் தீர்வுகளும் உருவாக்குவதற்கு மேற்சொன்ன கோட்பாடுகள் முனைகின்றன.

தமிழ்நாடு ஒரு முக்கிய தேசியத்தைக் கொண்ட மாநிலம் என்ற முறையில் தனித்துவமான சமூக கூறுகள் கொண்டுள்ளது. எனவே தமிழகத்துக்கென தனியான ஒரு கல்வி கொள்கை தேவைப்படுகிறது. தற்போதைய மற்றும் எதிர்கால சமூகத்தின் தேவைகள்/சமூக மாற்றம்/பொருளாதார அமைப்பு/ தொழில்நுட்ப முன்னேற்றங்கள்/சூழலியல் மாற்றங்கள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் ஆகியவற்றின் காரணமாக தேவைப்படும் புதிய அறிவாற்றல் தேவைகளையும், திறன் மேம்பாட்டினையும் கணக்கில் கொண்டு, இந்த நூற்றாண்டுக்கும், பின்னர் வரவுள்ள சூழ்நிலைமைகளையும் எதிர்கொள்ளும் வகையில், கல்வி கொள்கையை உருவாக்கிட வேண்டும்.

மார்க்சிய பார்வையில் நகரமயமாதல் …

திக்கெந்தர் சிங் பன்வர்

நகரமயமாக்கல் நடவடிக்கை குறித்து மார்க்சீய பார்வையில் எழுதுவது என்பது மிகவும் சுவாரசியமான ஒன்றாகும். இந்தியாவிலும், உலகம் முழுவதிலும் ஏற்பட்டு வரும் நகரமயமாக்கல் குறித்தும், அதன் பரிமாணங்கள் குறித்தும், இதில் தலையிடுவதற்கான நமது பணிகளைப் பற்றித் தெளிவுபடுத்தும் மார்க்சீய அடிப்படைக் கொள்கைகள் குறித்தும் புரிந்துகொள்வது முக்கியமாகும்.

முதலாளித்துவ உற்பத்தி நடைமுறை உபரியை உருவாக்குகிறது.  இவ்வாறு உருவாக்கப்படும் உபரி பின்னர் கைப்பற்றப்பட்டு, அந்நடைமுறையில் மேலும் ஒருங்கிணைக்கப்படுகிறது. எந்தவொரு மார்க்சீயவாதியைப் பொறுத்தவரையிலும், இவ்வாறு கைப்பற்றப்பட்ட உபரி மீண்டும் தொழிலாளிக்கே பகிர்ந்தளிக்கப்படுவதை உத்திரவாதம் செய்திடப் பணியாற்றுவது முக்கியமாகும்.  அதேநேரத்தில் முதலாளி களைப் பொறுத்தவரையிலும், முதலாளித்துவ வர்க்கத்தைப் பொறுத்தவரையிலும், மேலும் அதிக அளவில் உபரி உற்பத்தி செய்யப்படுவதையும், அதை பெருமளவில் தனதாக்கிக் கொள்வதையும் உறுதிப்படுத்திக் கொள்வதே அதன் நோக்கமாகும்.  200 ஆண்டுகளுக்கும் மேலான முதலாளித்துவ வளர்ச்சியில், இந்த அடிப்படைக் கோட்பாடு எவ்வாறு மேலும் ஒருங்கிணைக்கப்படுகிறது என்பதையும், பெருமுதலாளிகளின் வளர்ச்சி எவ்வாறு பெருகியுள்ளது என்பதையும் நாம் கண்டு வருகிறோம். உலகிலுள்ள மக்கள்தொகையில் 60 சதவீதத்தினரான 4.6 பில்லியன் மக்களின் சொத்துக்களின் மதிப்பைவிட கூடுதலான சொத்துமதிப்பு கொண்டவர்களாக கிட்டத்தட்ட 2000 பில்லியனர்கள் (ஆயிரம் கோடிக்கும் மேலான மதிப்பில் சொத்துடையவர்கள்) உள்ளனர் என்பதிலிருந்து இதை உணரமுடிகிறது.

குவியலுக்கான மையமாக மாறும் நகரம்

நகரம் என்பது உபரியை உருவாக்கி, மறுபங்கீடு செய்யும் ஒரு தொழிற்சாலையைப் போன்றதல்ல என்றாலும், மேற்கூறப்பட்ட வடிவத்திலான சொத்துக் குவியலுக்கு நகரம் துணைபோகிறதா? என்ற கேள்வி எழுகிறது.

இத்தாலிய நகரவாதிகளைப் பொறுத்தவரை “முதலாளித்துவ உற்பத்தி அதிக அளவில் ஆழமாக ஊடுருவி, விரிவாக்கத்தை விறுவிறுப்பாகத் துவங்குகிறபோது ஒட்டுமொத்த சமூக உறவுகள், உற்பத்தியோடு முழுமையாக ஒத்திசைந்த சமூகமாகவும், உற்பத்தியானது சமூகத்தின் தனித்துவமாகவும் தோற்றமளிக்கிறது.”  முதலாளித்துவ உற்பத்தியின் சமூக உறவுகளில் உற்பத்தியை பொதுமைப்படுத்துவதே சமூகத்தின் உன்னத நிலையாக தெரியப்படுத்துவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.  மேலும் இது ஒன்றிணைந்து சமூக உறவுகளின் வலைப்பின்னலுக்கு – ஒரு பொதுவான சமூக உறவுக்கு – வழிவகுக்கிறது.  ஒட்டுமொத்த சமூகமும் உற்பத்தியின் வெளிப்பாடாக மாற்றப்படுகிறது.  அதாவது, ஒட்டுமொத்த சமூகமும் தொழிற்சாலையின் செயல்பாடாக உள்ளது.  மேலும், தொழிற்சாலை என்பது அதன் பிரத்தியேக ஆதிக்கத்தை ஒட்டுமொத்த சமூகத்திற்கும் விரிவுபடுத்துகிறது.  

எளிமையாகச் சொல்வதானால், முதலாளித்துவ உற்பத்தியின் சமூகஉறவுகள், சமூகத்தை உற்பத்திக்கான ஒரு வழிமுறையாகவும், உற்பத்தியை அதன் இறுதிநிலையாகவும் பார்க்கிறது.  அதே சமூக சார்பு தனிப்பட்ட முறையிலான பங்கீட்டிற்கான வழிமுறையாகிறது.  எனவே, சமூக உறவானது ஒருபோதும் உற்பத்தி உறவுகளிலிருந்து பிரிக்கப்படுவதில்லை என்பதோடு, தொழிற்சாலையின் சமூக உறவுகளோடே உற்பத்தி உறவுகள் அடையாளம் காணப்படுகின்றன.  மேலும், தொழிற்சாலையுடனான உற்பத்திஉறவுகள் ஒவ்வொரு முறையும் பெருமளவிலான, நேரடியான அரசியல் உள்ளடக்கத்தைப் பெறுகின்றன. 

உழைக்கும் வர்க்கமானது அரசு என்பதை சமூகக் கண்ணோட்டத்திலிருந்தும், சமூகத்தை தொழிற்சாலையின் கண்ணோட்டத்திலிருந்தும், தொழிற்சாலையை தொழிலாளியின் கண்ணோட்டத்திலிருந்தும் புரிந்துகொள்வது அவசியமாகும்.  உண்மையில் சொல்லப்போனால், நகரம் என்பது உபரியை உற்பத்தி செய்வதற்கும், பெருமளவிலான பங்கீட்டிற்குமான மற்றொரு தளம் எனவும் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.  முதலாளித்துவ வளர்ச்சியின் சட்டங்கள் அதில் மர்மமானவையாக உள்ளன.  “நகரம் குறித்து திட்டமிடுபவர்கள் அதனை காகிதத்திலான வெறும் திட்டமாகத் தீட்டுவதில்லை.  அவர்கள் வங்கிகளுடன், முதலாளிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தி, தங்களது நலன்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள்” என தி கேப்பிடல் சிட்டி என்ற தனது புத்தகத்தில் சாமுவேல் ஸ்டெயின் குறிப்பிடுகிறார்.

மிகச்சிறந்த மார்க்சீயவாதியான லெஃபெப்வ்ரே நகர்ப்புறம் என்பதற்கு ஒரு புதிய அர்த்தத்தை  அளித்தார்.  தொழில்துறையில் கவனம் செலுத்துவதைப் போலவே மார்க்சிஸ்டுகள் நகர்ப்புறத்திலும், தொழிற்சாலைகளைப் போலவே தெருக்களிலும் கவனம் செலுத்தவேண்டுமென அவர் கூறினார். நகரமயமாக்கல் என்பது முதலாளித்துவ உற்பத்திமுறை என்பதோடு, சமூகக் கட்டுப்பாட்டிற்கான ஒரு வழிமுறையும் ஆகும்.  அரசு சார்ந்த செயல்பாடுகள், வேலைப்பங்கீடு, சந்தையின் தொடர்ச்சியான செயல்பாடு, தொழில்துறை உற்பத்தி மற்றும் சமூகப் போராட்டங்கள் ஆகியவற்றை நகர்ப்புறப்  பகுதிகள் உருவாக்குகின்றன.

இறுதியாக, நகரமயமாக்கல் என்பது வர்க்கங்களின் பிரிவை இடமாற்றம் செய்வதற்கான ஒரு செயல்முறையைக் குறிக்கிறது.  மேலும், இது ஃபிரெட்ரிக் எங்கெல்சால் வீட்டுவசதி குறித்து என்ற புத்தகத்தில் ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இடம் சார்ந்த வடிவங்கள் சமூக செயல்முறைகளை உள்ளடக்குகின்றன என்பதோடு, அனைத்து செயல்முறைகளும் இயல்பாகவே இடம் சார்ந்தவையாகவே இருக்கின்றன.  

எனவே, நகரம் என்பது மூலதனத் திரட்டலுக்கும், உபரியை பங்கீடு செய்வதற்குமான மிக முக்கியமான களங்களில் ஒன்றாக ஆகிறது.

ஆண்டாண்டு காலமாக, குறிப்பாக 1980களின் பிற்பகுதியிலிருந்து, மிகப்பெரிய அளவிலான உபரியை உருவாக்குவது என்பது நகரங்களின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக உள்ளது. மூலதனம் பறிக்கப்பட்டுள்ளதோடு, உபரியை உற்பத்தி செய்யும் வழக்கமான முறை கடந்த 40 ஆண்டுகளில் உருமாற்றம் பெற்றுள்ளது.  முதலாளித்துவ பொருளாதாரத்தில் உபரியை உருவாக்குவதில் எந்தத் தவறும் இல்லை.  இறுதியில், அதுவே (உபரியை உருவாக்குவதும், பயன்படுத்துவதும்) அதன் உந்துசக்தியாகத் திகழ்கிறது.

ஆனால் சமீபகாலமாக நடைபெற்று வருபவை பற்றி முதலாளித்துவ பொருளாதாரத்தில் இதற்குமுன் கேள்விப்படாத ஒன்றாகும்.  முதலாளித்துவ பொருளாதாரத்தில் உற்பத்தி நடைமுறையில் சொத்துக்களின் உபரி உருவாக்கப்படுகிறது. எனவே, இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் பரிமாற்ற மதிப்பு உள்ளது.  சமூகத்திற்கும், தனிநபர்களுக்கும் ‘பயன்மதிப்பு’ கொண்டவையாகக் கருதப்படும் சில பொருட்களை பண்டமாக்க முடியவில்லை.  உதாரணமாக, தண்ணீர், கல்வி, சுகாதாரம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.  தண்ணீர் என்பது உரிமையா அல்லது தேவையா?  வாஷிங்டன் ஒப்பந்தத்தின்படி, தண்ணீர் என்பது ‘தேவை’ ஆகும்.  எனவே, அதனை மக்களுக்குக் கிடைக்கச் செய்வது ‘அரசு’ மற்றும் அதன் கருவிகளின் கடமையல்ல.  சந்தையில் உள்ள பகாசுர கார்ப்பரேட்டுகள் உள்ளிட்ட பலரால் இந்தத் தவையை பூர்த்தி செய்ய முடியும்.

கல்வி, சுகாதாரம், தகவல்தொழில்நுட்பம் போன்ற அடிப்படை சேவைகள் பண்டமாக்கப்படுவதை  நாம் கண்டு வருகிறோம்.   இந்த நடைமுறையில் உபரிமதிப்பு பறிமுதல் செய்யப்படுவதும், தனதாக்கிக் கொள்ளப்படுவதும் பெருமளவில் நடைபெறுகிறது.  (2019ல் சோஷியலிஸ்ட் ரெஜிஸ்டரின் பக்கம் 65ல் உர்சுலா ஹ்யூஸ்).  இத்தகைய குவிப்பு நடைமுறை விரைவுபடுத்தப்படுகையில், உண்மையில் புதிய உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை உருவாக்குவதில் மந்தநிலை உருவாகிறது.  இதையே வேறு வார்த்தைகளில் சொல்வதானால், மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களின் லாபம் உற்பத்தியின் காரணமாக அதிகரிக்கவில்லை.  மாறாக, ஏற்கனவே உள்ள உற்பத்தித் திறனை முழுமையாக உறிஞ்சும் வகையில் பயன்படுத்துவதாலேயே அவர்களது லாபம் தொடர்ந்து நீடிக்கிறது.

2006ம் ஆண்டில் செயல்பட்டுவந்த மிகப்பெரிய 100 பன்னாட்டு நிறுவனங்களில், 20% சேவைத்துறையில் இருந்தன.  1997ம் ஆண்டில் இது வெறும் 7% மட்டுமே இருந்தது.  நவீன தாராளவாதத்திற்குப் பிந்தைய யுகத்தில் முதலாளித்துவத்தின் தன்மை மாறியுள்ளது.  இதில் உற்பத்தியின் காரணமாக லாபம் அதிகரிக்கவில்லை.  மாறாக, வீட்டுக்கடனை தொகுப்பது, சேவைகளை சரக்காக்குவது போன்ற நிதி சம்பந்தமான மூலதனத்தின் இதர சூறையாடல்களால் இது ஏற்பட்டது.

நிக்தியோடர், ஜேமீபெக் மற்றும் நீல் ப்ரென்னர் சுட்டிக்காட்டியுள்ளதைப் போன்று, “தொழில்துறை மீதான அரசின் கட்டுப்பாட்டை நீக்குதல், அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள், கார்ப்பரேட்டுகள் மீதான வரிகளை குறைப்பது, மக்களுக்கான சேவைகளையும், சொத்துக்களையும் தனியார்மயமாக்குவது, சமூக உதவித் திட்டங்களை நீக்குவது, சர்வதேச மூலதனத்தின் செயல்பாட்டை மேம்படுத்துவது மற்றும் பகுதிகளுக்கு இடையேயான போட்டிகளைத் தீவிரப்படுத்துவது” ஆகியவற்றையே நவீன தாராளவாதம் குறிப்பதாக அமைகிறது.  (http://www.blackwellreference.com/public/tocnode?id= g9781405189811_ chunk_ g97814051 898112).

நகர்ப்புற இந்தியா

இந்தியாவில் நகரமயமாக்கல் என்பது ஹரப்பா நாகரீகத்தைப் போன்று பழமையானது.  அதன்பின்னர், வளர்ச்சிப் போக்கின் பிந்தைய கட்டத்தில் உருவாக்கப்பட்ட சில புராதன நகரங்களும், சில பெரிய முகலாய நகரங்களும், மாநகர்களும் உள்ளன.  காலனியாதிக்கத்திற்குப் பிந்தைய காலம் குறித்து, அதுவும் குறிப்பாக 1990கள் துவங்கி நவீன தாராளவாத கொள்கைகள் செயல்படுத்தப்பட்ட காலம் குறித்தே நாம் அதிகம் கவனம் கொள்கிறோம்.  விடுதலைக்குப் பிந்தையரஇந்தியாவில், திறன்களை நினைவூட்டுபவையாக மட்டுமின்றி, பெருமளவில் அனைத்தையும் உள்ளடக்கிய வடிவங்களை கொண்ட நகரங்களை நிர்மாணிக்க சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  புதுமையான கண்ணோட்டத்தோடு நிர்மாணிக்கப்பட்ட சண்டிகர் மற்றும் இதர நகரங்கள் போன்றவை பின்னால் நாம் கைவிட்டு விட்ட மற்றொரு மாதிரியாகும்.

2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மக்கள்தொகையில் 32 சதவீதத்தினர் நகர்ப்புற பகுதிகளில் வாழ்ந்தனர்.  2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் நகர்ப்புற மக்கள்தொகை அதிகரிப்பு விகிதம், கிராமப்புற மக்கள்தொகையை விட கூடுதலாக பதிவு செய்யப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 40 சதவீதத்தினர் நகர்ப்புறபகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.  இருப்பினும், 2021ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு துல்லியமான எண்ணிக்கையை குறிக்கும்.  நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 66 சதவீதம் நகர்ப்புறங்களில் இருந்து வருகின்றன.  அரசின் வருமானத்தில் கிட்டத்தட்ட 90 சதவீதம் நகர்ப்புற இந்தியாவிலிருந்து வருகிறது.  பெருநகரங்களில், 40 சதவீதத்திற்கும் கூடுதலான மக்கள் குடிசைப் பகுதிகளில் வசித்து வருகின்றனர்.  நகர்ப்புற இந்தியாவில் கிட்டத்தட்ட 45 சதவீதத்தினர் ஒற்றை அறையில் வசித்து வருகின்றனர்.  75 சதவீதத்தினர் இரண்டு அறைகளைக் கொண்ட வீடுகளில் வசித்து வருகின்றனர். 

அணிதிரட்டப்பட்ட உழைக்கும் வர்க்க இயக்கங்களின் வீழ்ச்சி காரணமாக உழைக்கும் மக்களின் பேரம்பேசும் திறன் குறைந்துவருவதால், நகரங்கள் தொடர்ந்து வாழத்தகுந்த இடங்களாக நீடிக்கமுடியாமல் போயுள்ளன.  குடிநீர், சுகாதாரம், கல்வி போன்றவை சரக்காக மாற்றப்பட்டுள்ளதால் அவற்றிற்கான பெரும்செலவை மக்கள்ஏற்க வேண்டியுள்ளது.  மேலும், ஏழைகளுக்கான, கீழ்த்தட்டு நடுத்தர வர்க்கங்களுக்கான வீட்டுவசதி என்பது கூட எட்டாக்கனியாகி உள்ளது.  இந்நிலையில் கிட்டத்தட்ட  50 மில்லியன் பேர் தங்குமிடம் எதுவுமின்றி இருப்பதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

விலக்கின் மற்றொரு வடிவம்

இன்றைய நகர திட்டமிடல் மற்றும் வளர்ச்சியானது, ஏழைமக்கள் வசித்துவந்த நகர்ப்புற பகுதிகளில் வீட்டுவசதிகளை மேம்படுத்தி புதிய வர்த்தகங்களை ஈர்த்து, அங்கு அதுவரை வசித்துவந்த ஏழைமக்களை அங்கிருந்து வெளியேற்றி, வசதிபடைத்தவர்களை அங்கே குடியேறச் செய்கிறது.  மேலும், சாதாரண மக்களுக்கு, தொழிலாளர்களுக்கு வீட்டுவசதியை எட்டாக்கனியாக்குகிறது.  குறிப்பாக முறைசாரா துறையை சார்ந்தவர்களின் இருப்பிடம் வீடு என்ற தகுதியே இல்லாத ஒன்றாக உள்ளது.  பிரதானமாக இதன் காரணமாகவே குடிசைப்பகுதிகளில் வசிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது.

நகரங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன – ஏழைகளின் வசிப்பிடங்களிலிருந்து அவர்களை வெளியேற்றி வசதிபடைத்தவர்களை அங்கு குடியேறச் செய்வது (gentrification) அல்லது முதலீட்டைத் திரும்பப் பெறுவது அல்லது குறைப்பது என்பதே அந்த இரண்டு வாய்ப்புகளாகும்.  நகர்ப்புற பகுதிகளில் மூலதனத்தை மறுமுதலீடு செய்து அங்கு ஏற்கனவே வசித்துவரும் ஏழைகளையும், அவர்களது கலாச்சார தயாரிப்புகளையும் அங்கிருந்து இடம்பெயரச் செய்து, அவ்விடங்களை வசதிபடைத்தோரையும், அவர்களுக்குப் பிடித்தமான அழகியல் மற்றும் வசதிகளைக் கொண்டு நிரப்புவதே ஜென்ட்ரிஃபிகேஷன் என்பதாகும்.

இந்திய நகரங்களின் கதையானது அமெரிக்காவின்  வீட்டு வசதி மேம்பாடு மற்றும் செயல்முறைகளிலிருந்து சற்றே மாறுபடுகிறது.  இருந்தபோதும், இந்தியாவில், உடைமைப்பறிப்பின் வாயிலாகவே மூலதனத் திரட்டல் நடைபெறுகிறது.  குடிசைப்பகுதிகளிலிருந்து ஏழைமக்களை வெளியேற்றி, பொதுவான தேவைகளுக்காக மாற்றியமைக்க வேண்டிய அவ்விடங்களை ரியல்எஸ்டேட் மேம்பாட்டிற்கானவையாக மாற்றுவது முக்கியமான பிரச்சனையாகும்.

இத்தகையதொரு சூழலில், வலுவான உறுதியான நடவடிக்கைகள் எதுவுமின்றி, நகரத்தின் நிலைத்தன்மை ஏட்டளவில் மட்டுமே உள்ளது.  ஒருபோதும் யதார்த்தத்தில்  அது நடப்பதில்லை.  நகரங்களை வாழத் தகுதியான இடங்களாக ஆக்கிட உபரியை ஜனநாயகமாக்குவது மிக அவசியமாகும்.  உழைப்பாளி மக்களின் கூட்டு வலிமையின் மூலமாகவோ அல்லது நகர, மாகாண மற்றும் தேசிய அளவிலான கொள்கைரீதியிலான தலையீடுகள் மூலமாகவோ உபரியை ஜனநாயகமாக்குவது நடைபெறலாம்.

உறுதியான நடவடிக்கையையும், உபரியை ஜனநாயகமாக்குவதையும் எட்டுவதற்கான ஒரு கருவியாக நகரக் கவுன்சில் இருக்கக்கூடும்.  ஆனால், கடந்த ஆறு ஆண்டுகளாக ஏற்பட்டுவரும் முன்னேற்றங்கள், நகரத்தை சுதந்திரமாகவும், ஜனநாயக பூர்வமாகவும் நிர்வகிக்கக்கூடிய திறன் சூறையாடப்பட்டுள்ளது.  அதிகபட்சமாக, மாகாண அரசுகளின் இணைப்புகளாக அவை மாறிவருகின்றன.

ஸ்மார்ட் சிட்டிதிட்டம்

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் நகர வளர்ச்சியின் பரிணாம வரலாற்றில் சமூகங்கள் வென்றெடுத்த அடிப்படை உரிமைகள் மற்றும் முன்னேற்றங்களுக்கு பெரும் அச்சுறுத்தலை குறிக்கிறது.  காவல், போக்குவரத்து, எரிசக்தி போன்ற நகரம் முழுவதற்குமான பொறுப்புகளை தானாக இயங்குபவையாக ஆக்கிடுவதற்கு தரவுப்புள்ளிகளை பயன்படுத்துகிற நகர்ப்புற வளர்ச்சித் திட்டமே ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டமாகும்.  முக்கியமான முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இது கைமாற்றுவதோடு, பாரம்பரியமாக நகராட்சி அதிகாரிகளால் நிர்வகிக்கப்படும் பல நகர்ப்புற சேவைகளை இத்திட்டங்கள் தனியார் மயமாக்குகின்றன.  தொழில்நுட்பம் நிரம்பிய ஸ்மார்ட் சிட்டியானது தனிநபர் சுதந்திரங்களையும், உரிமைகளையும் வெட்டிச் சுருக்குவதோடு, ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய “1984” எனும் நாவலில் விவரிக்கப்பட்டதைப் போன்ற – மக்களது வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் அரசு கட்டுப்படுத்த முயல்கிற அரசியல் நடைமுறையைக் கொண்ட எதிர்காலத்திற்கு இட்டுச் செல்கிறது. 

ஸ்மார்ட் நகரங்கள் என்பவை வெறுமனே தகவல்களையும், தகவல்தொடர்பு தொழில்நுட்ப குவியல்களும், நகரத்தால் மட்டுமே செயல்படுத்தப்படும் கொள்கைகளும் அல்ல. ஸ்மார்ட் சிட்டி திட்டம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிட, அரசு, தனியார் மற்றும் சமூக துறைகளைச் சார்ந்த நிறுவனங்கள் பங்கேற்கக்கூடிய வகையிலானதொரு சமூக அமைப்பை நகரமோ அல்லது நகராட்சியோ உருவாக்கிட வேண்டும்.  இதில் பங்கேற்பவர் ஒவ்வொருவரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தங்களது பங்களிப்பை அளித்து, அதற்குப் பதிலாக மதிப்பைப் பெறுகின்றனர். 

இதற்குப் பல பங்கேற்பாளர்கள் உள்ளனர்.  உதாரணமாக, ஜிஇ, ஐபிஎம், க்வால்காம், மாஸ்டர்கார்ட், ஆல்ஸ்ட்ராம், வெரிசான், சிஸ்கோ, எனெல், மைக்ரோசாப்ட் மற்றும் தாம்சன் ராய்ட்டர்ஸ் ஆகிய நிறுவனங்களை தனது பல்வேறு பிரிவுகளிலான ஸ்மார்ட் சிட்டி தொழில்நுட்பம் மற்றும் கட்டமைப்பு சேவைகளை அளிப்பவர்களாக இந்திய ஸ்மார்ட் சிட்டி கவுன்சில் பட்டியலிடுகிறது. (http://india.smartcitiescouncil.com/member-levels/lead-partners).

ஸ்மார்ட் சிட்டி தொழில்நுட்ப சேவை அளிப்பவர்களாக உள்ள மிகப்பெரிய மற்றும் மிகமுக்கியமான நிறுவனங்கள் பலவும், நிதி நிர்வாகத்தில் ஈடுபடும் பணியை எடுத்துக் கொண்டுள்ளன; அல்லது இத்திட்டத்தின் முன்முயற்சிகளுக்கு நிதியளிப்பவர்களோடு இணைந்து செயல்படுகின்றன.   இயல்பாகவே இது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைச் செயல்படுத்துதல், கொள்கைகள் மற்றும் தரவு ஆகியவற்றின் மீதான மேற்கூறப்பட்ட பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவரின் செல்வாக்கையும், கட்டுப்பாட்டையும் பெருமளவில் அதிகரிக்கச் செய்கிறது(http://www.slideshare.net/FrostandSullivan/smart-cities-from-concept-to-reality). 

இந்தியாவில், ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியில் பெரும்பாலான தொகை உண்மையில் இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 3 சதவீத அளவில் உள்ள தொழில்துறை (ப்ரொஃபெஷனல்) மற்றும் மத்தியதர வர்க்கத்தைச் சார்ந்தவர்களுக்கான ஸ்மார்ட் என்க்ளேவ்களை(பெரும் குடியிருப்பு வளாகங்கள்) உருவாக்கவும், நகரத்தின் இதர பகுதிகளிலிருந்தும், அதன் வறுமையிலிருந்தும், அசௌகரியங்களிலிருந்தும் பிரிக்கவே செல்கிறது.  திறன்மிக்க மின் விநியோகக் கட்டமைப்பு, சூரிய எரிசக்தி திட்டங்கள், திறன்மிகுந்த அளவீட்டுமுறை, மழைநீர் சேகரிப்பு திட்டங்கள், திடக்கழிவு மேலாண்மை, மின்ஆளுமை, நிறுவப்பட்ட சாலைஇணைப்புகள், நடைபாதைகள், மிதிவண்டிக்கான தனி வழித்தடங்கள், திறன்மிக்க வாகன நிறுத்துமிடங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய சொர்க்கபுரியாக இந்த என்க்ளேவ்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான சவால்கள்

இதற்குமுன்னெப்போதும் இருந்ததைவிட இன்றைக்கு சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான கவலைகள் மிகவும் அதிகரித்து வருகின்றன.  முதலாளித்துவ பாணியிலான வளர்ச்சியானது, தொழிலாளர்களை புறநிலைப்படுத்தியதோடு மட்டுமின்றி இயற்கையையும் கூட பண்டமாக்கியுள்ளது. இதனால், பூமிப்பந்தில் உயிரினம் வாழ்வதற்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது.  உலகளாவிய வெப்பநிலை உயர்வுக்கும், பண்டமாக்கல் காரணமாக ஏற்பட்டுள்ள பூமியிலுள்ள பல்லுயிர்களின் மீதான அச்சுறுத்தலுக்கும் கரியமில வாயுக்கள் உமிழ்வுகள் காரணமாகும். மனித குலத்தின் வரலாற்று பூர்வமான பரிணாம வளர்ச்சியின்போது இருந்ததைவிட கடந்த 40 ஆண்டுகளில் (சுற்றுச்சூழல் பேரழிவிற்கு அப்பால்) கரியமில வாயு உமிழ்வுகள் கிட்டத்தட்ட 50% அதிகரித்துள்ளன. 

முதலாளித்துவ உற்பத்திமுறையானது, தனியுடைமை மூலமாகவும், வளங்களை சுரண்டுவதன்மூலமும், உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மிகப்பெரிய அளவிலான இடமாற்றங்களும், பொருட்கள் மற்றும் எரிசக்தியின் இயற்கையான குவியல்களையும், ஓட்டங்களையும் சீர்குலைக்கிறது.  இரண்டாவதாக, உழைப்புச் சுரண்டலின் மூலம் இணைபிரியாத உழைப்பையும், இயற்கையையும் மாற்றி, வளங்களின் தொகுப்பை மனிதகுலத்தைச் சுரண்டிட புறநிலைப்படுத்தப்படுவதை உத்திரவாதம் செய்கிறது.  போட்டி மற்றும் பண்டமாக்கல் மூலம் மனிதரல்லாத வாழ்க்கை வடிவங்களின் நிலைகளையும், மனிதர்களுக்குத் தேவையானவற்றையும் ஆக்கிரமிக்கின்றன.  முதலாளித்துவ உற்பத்தியும் பொருட்களின் விநியோகமும் எப்போதும் அதிகரித்துவரும் கழிவுப்பொருட்களின் உற்பத்தியின் மூலம் வளர்சிதை மாற்றத்தை மறுவடிவமைப்பு செய்கின்றன என உலகை மிகச்சிறந்ததொரு இடமாக உருவாக்குவது என்ற தலைப்பிலான தனது கட்டுரையில் பார்பரா ஹாரிஸ் எழுதுகிறார்.

இத்தகைய நிலைமைகளில் கம்யூனிஸ்டுகள் எவ்வாறு செயல்படவேண்டும்?  பொருள்உலகத்துடனான உறவில், இவ்வுலகை குறைந்தபட்சம் மேலும் சீரழிக்காது, அதனை மேம்படுத்த முயற்சித்திடும் சோசலிச சமூக அமைப்பை உருவாக்கி, பராமரிக்கிற மறுசீரமைப்பை மார்க்ஸ் முன்மொழிந்தார்.  எனினும், இதுவும் ஒரு கற்பனாவாதமே.  குறிப்பாக, சோசலிச சக்திகள் இல்லாதபோதும், அச்சுறுத்தலின் காலஅளவிலும் இது ஒரு கனவேயாகும்.  (சோஷியல் ரெஸ்டிட்யூஷன், பக்கம் 12).

கடந்தகாலத்தில் மேற்கொள்ளப்பட்ட சில பரிசோதனைகள்

கொரோனா பெருந்தொற்று அதிகரித்துவரும் நிலையில், நகரமயமாக்கலின் தற்போதைய வடிவங்கள் நீடிக்க இயலாதவை என்பதை அது நமக்கு நினைவூட்டி வருகிறது.  இந்நிலையில், நகர வளர்ச்சியின் எதிர்காலத்திற்காக பலவகையான வடிவமைப்புகளை அல்லது கடந்தகாலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டவற்றை நாம் காண வேண்டியது அவசியம்.

நகரத்தின் கட்டிடக் கலை வடிவமைப்பு எவ்விதத்தில் செயல்பட வேண்டும் என்பதை கட்டிட வடிவமைப்புக் கலை வெளிப்படுத்துகிறது. இது தொடர்பாக பல பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நகர மேம்பாட்டிற்கான மூலதனத்திற்கு மிகுந்த அழுத்தம் தரும் தொழில்நுட்பங்களில் நவீன தாராளவாத முன்னுதாரணம் கவனம் செலுத்துகிறது. உதாரணமாக, கண்ணாடியும், செங்குத்து வளர்ச்சியும் மூலதனத்தின் ஆற்றலை நிரூபித்திட பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில், சுகாதாரத்திற்கான அளவுகோல்களின்படி, இத்தகைய கட்டிடங்கள் இன்னமும் பாதுகாப்பானவையா என்பது குறித்தும் தற்போது மீண்டும் விவாதிக்கப்படுகிறது.

குடியிருப்புகளுக்கு அருகில் விளையாட்டு மைதானங்களை அமைப்பதை விட விளையாட்டு அரங்கங்களை அமைக்கவே நவீன தாராளவாத கட்டமைப்பு கூடுதலாக முனைப்பெடுக்கும். அதேபோன்று, சமூக சுகாதார மையங்களுக்குப் பதிலாக பல்சிறப்பு மருத்துவமனைகளை உருவாக்குவதிலேயே அது அதிக கவனத்தைச் செலுத்துகிறது. இதன் காரணமாக, மருத்துவ சேவைகளுக்கான செலவுகள் அதிகரிக்கின்றன.

புதுமையான, சோதனை முயற்சி மிக்க கட்டிடக் கலை குறித்து விமர்சனங்கள் இருந்தபோதிலும், சோவியத்துகள் மேற்கொண்ட பரிசோதனைகள் கட்டிட வடிவமைப்புக் கலைகளை வர்ணிக்கின்றன. தாராளமாக பொது இடங்களை உருவாக்குவதன் மூலம் சினிமா, சமூகக் கூடம், உடற்பயிற்சி நிலையம், நூலகம், வானொலி நிலையம் போன்ற பல்வேறுபட்ட பொதுச்செயல்பாடுகளை ஒரே கட்டமைப்பின் கீழ் ஒன்றாகக் கொண்டு வரப்படும்.

2010ஆம் ஆண்டில் ஜூரிச் நகரில் ‘எதிர்காலத்தை நோக்கி ஒரு பார்வை’ என்ற தலைப்பில் தான் உருவாக்கியிருந்த கண்காட்சியில் பாட்ரிக் ஷூமாச்சர் இவ்வாறு விளக்கியிருந்தார்: “ 90 ஆண்டுகளுக்கு முன்பு அக்டோபர் புரட்சி புதியதொரு சமூகத்திற்கான திட்டத்திற்காக உணர்ச்சிக் கொந்தளிப்புமிக்க வகையில் அளவற்ற படைப்புக்கத்தினை கிளர்ந்தெழச் செய்தது. அதுவும் மிக மோசமான பொருள்தட்டுப்பாடுகளுக்கு இடையிலேயே அது நிகழ்ந்தது. 20ஆம் நூற்றாண்டின் கலை மற்றும் கட்டிடக் கலையினை வரையறுக்கும் ஒன்றாகவும் அது திகழ்ந்தது. கலை, அறிவியல், வடிவமைப்பு ஆகிய துறைகளில் அளவிலும் தரத்திலும் அப்போது வெளிப்பட்ட படைப்பூக்கத் திறன் பிரமிக்கத்தக்க ஒன்றேயாகும். உலகத்தின் மற்ற பகுதிகளில் 50 ஆண்டுகளுக்குப் பிறகே வெளிப்பட்ட இத்திறனை கண்ணிமைக்கும் நேரத்தில் முன்னறிவிப்பு செய்வதாகவும் அது திகழ்ந்தது.”

21ஆம் நூற்றாண்டில் சாத்தியமாகக் கூடும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் துயரமும் அநீதியும் நிரம்பிய ஒரு சமூகத்திற்கும், கற்பனை உலகிற்கும் இடையே ஓர் உரையாடல் என்ற வகையில் ‘பேழையை உருவாக்கப்போவது யார்?’ என்ற தலைப்பில் மைக் டேவிஸ் எழுதிய ஒரு கட்டுரையில் சோஷலிசத்தையும் அதே நேரத்தில் சூழலியல் தன்மையையும் சுட்டிக் காட்டுகின்ற ஒரு நவீன நகரத்தினை உறுதிசெய்ய முயற்சித்தபோது, அவர் சோவியத் நாட்டின் முற்றிலும் புதுமையான சோதனை முயற்சிகளை நோக்கியே திரும்பினார்.

தொடக்க காலத்தில் சோவியத் நாட்டின் நகர்ப்புறப் பகுதிகளில் நிலவிய துயரம், பொதுமுதலீட்டிற்கான கடுமையான பற்றாக்குறை ஆகியவற்றால் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் புத்திசாலித்தனமான சோஷலிஸ்ட் வடிவமைப்புக் கலைஞர்கள் சந்தடிமிக்க அடுக்குமாடி வாழ்க்கையிலிருந்து மக்களை விடுவிக்க முடிவெடுத்தனர். அதன் அடிப்படையிலேயே தொழிலாளர்களுக்கான கேளிக்கை விடுதிகள், மக்களுக்கான  மிகப்பெரும் பொது அரங்குகள், விளையாட்டு வளாகங்கள் ஆகியவற்றை மிகச் சிறப்பான வகையில் அவர்கள் வடிவமைத்தனர். மேலும் பொதுவான சமையலறைகள், பகல்நேர குழந்தைக் காப்பகங்கள், பொதுக் குளியல் கூடங்கள் மற்றும் அனைத்துவகையான கூட்டுறவு அமைப்புகள் ஆகியவற்றின் மூலம் பாட்டாளிவர்க்கப் பெண்களின் விடுதலைக்கும் அவர்கள் முன்னுரிமை அளித்தனர்.

நகர வாழ்க்கையின் சமத்துவ அம்சங்கள் வளங்களைப் பாதுகாக்கவும், கார்பன் இடப்பெயர்வுக்குமான சிறந்த சமூகவியல் மற்றும் ஸ்தூலமான ஆதரவினை தொடர்ச்சியாக அளிக்கின்றன. ஒருவேளை அவையே உண்மையான எதிர்காலமாகவும் கூட இருக்கலாம்.

இந்தியாவைப் பொறுத்தவரை, புலம்பெயர்தல் என்பது நகர்ப்புறப் பகுதிகளில் பெரும்பிரச்சனையாக உள்ளது. அனைத்தையும் உள்ளடக்கிய, சமத்துவமான எதிர்கால வாழ்விடம் கண்டறியப்பட்டு உருவாக்கப்பட வேண்டும். கூடுதலான வாடகை வீடுகள், தொழிலாளர் தங்கும் விடுதிகள், அதிக அளவிலான திறந்தவெளிகள் ஆகியவை மக்களுக்குத் தேவைப்படுகின்றன.

நகர்ப்புற இந்தியாவில் திட்டமிடலுக்கான நடைமுறைகள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படாத அமைப்புகளிடமே குறுக்கப்பட்டுள்ளன. உள்ளூர் மட்டத்தில் திட்டமிடுவதற்குப் பதிலாக, மக்களுக்குப் பதிலளிக்கத் தேவையில்லாத, மேம்பாட்டு அதிகாரிகளாலேயே இது செய்யப்படுகிறது. இவ்வாறு திட்டமிடல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் பெரும் நிறுவனங்களின் ஆலோசகர்களை சார்ந்தே இருக்கின்றனர். இவர்கள் மீண்டும் மூலதனம் தேவைப்படும் தொழில்நுட்பங்களுக்காகவே நகரங்களை திட்டமிடுகின்றனர். இது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். மேலும் திட்டமிடலுக்கான நடைமுறை பரவலாக்கப்பட்டு, மேலும் ஜனநாயகமாக்கப்பட வேண்டும்.

கூடுதல் ஜனநாயகமாக்கலுக்கான குரல் உரத்து எழுப்பப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிப்பதும், மக்களின் சுய ஆளுமையை அதிகப்படுத்துவதும் அவசியமாகும். குடியிருப்பு மட்டத்தில் திட்டங்களை தயாரிப்பதற்கான வழிமுறையை ஏற்படுத்துவதன் மூலம் இதைச் செய்திடலாம். தங்களுக்கான இடங்களை மீண்டும் கோரவும் மக்களும், தொழிலாளி வர்க்கமும் தலையீடு செய்யவும் கூடுதல் வாய்ப்பை இது அளிக்கக் கூடும்.

பல்வேறு வழிமுறைகளை அளிக்கிற நகரமானது கார்ப்பரேட்டுகளுக்கு அதிகபட்ச லாபங்களை அளிப்பதற்கான இடமாகவும் இருக்கிறது. பெருமளவிலான அசமத்துவத்தையும் இது ஏற்படுத்துகிறது. உழைக்கும் வர்க்கத்தின் போராட்டங்களை தொழிற்சாலைகளிலிருந்து நகரத்தோடு இணைப்பதன் மூலமும், உழைக்கும் மக்களை வஞ்சித்து பெருமளவில் மூலதனத் திரட்டல் நடத்தப்படும் தொழிற்சாலைகளாக நகரங்களைக் கருதுவதன் மூலமும் இந்தப் பிரச்சனையை நம்மால் எதிர்கொள்ள முடியும்.

தமிழில்: எம். கிரிஜா

சாதிய அமைப்பும் கம்யூனிஸ்ட் செயல்திட்டமும்

பிருந்தா காரத்

“அடிமைத்தனம், சாதிய அமைப்பு, (சமூகம், கலாச்சாரம் போன்ற) அனைத்து வடிவங்களிலுமான சாதிய ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை முற்றிலுமாக அழித்தொழிக்கவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது. உழைக்கும் தீண்டத்தகாதவர்கள் மற்றும் நாட்டிலுள்ள அனைத்து உழைப்பாளிகளின் முழுமையான, முற்றிலுமான சமத்துவத்திற்காகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது”.
1930ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட செயலுக்கான மேடை என்ற கட்சி ஆவணத்தில் இடம்பெற்றுள்ள வார்த்தைகள் இவை. இதன் இன்றைய முக்கியத்துவம் என்ன?

1930ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சி முதன்முதலாக வெளியிட்ட இந்தக் கொள்கை அறிக்கை மூன்று முக்கியமான அம்சங்களைக் கொண்டதாகும். முதல் அம்சம், சாதிய அமைப்பையும், அதிலிருந்து தோன்றும் ஏற்றத்தாழ்வுகள் அனைத்தையும் முற்றிலுமாக அழித்தொழிப்பது என்ற தனது உறுதிப்பாட்டை அது வெளிப்படுத்துகிறது.

1916ஆம் ஆண்டில் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மாணவராக இருந்த இளம் அம்பேத்கர் “சாதியை புறந்தள்ளுவதற்கான நீடித்த முயற்சிகள்” குறித்து எழுதியிருந்தார். “இயற்கைக்கு முரணான ஓர் அமைப்பு” என்றும் அவர் அதை விவரித்து இருந்தார்.

19ஆம் நூற்றாண்டில் சாதிய அமைப்பை எதிர்த்துப் போராடிய ஜோதிபா புலே மற்றும் இதர மகத்தான சமூக சீர்திருத்தவாதிகளுக்குப் பிறகு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் வந்தாரெனில், அரசியல் கட்சிகளிடையே சாதிய அமைப்பை முற்றிலுமாக அகற்ற அறைகூவல் விடுத்த முதல் அரசியல் கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது. இந்தப் பின்னணியில்தான் சாதிய அமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை அப்படியே இருத்திக் கொண்டு அதை ‘சீர்திருத்த’ வேண்டும் என்ற காந்திய அணுகுமுறையை 1930ஆம் ஆண்டின் இந்த ஆவணம் விமர்சித்திருந்தது.

இந்த ஆவணத்தின் இரண்டாவது அம்சம் என்பது சாதிய அமைப்பிற்கு எதிரான போராட்டத்தை பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்கும் நிலப்பிரபுத்துவத்திற்கும் எதிரான தேச விடுதலைப் போராட்டத்தோடு இணைத்ததே ஆகும். “நம் நாட்டில் உள்ள பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியின் விளைவாக அனைத்து வகையான உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ள பல லட்சக்கணக்கான அடிமைகள், சமூக ரீதியாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள ( தீண்டத்தகாதவர்கள் என்றழைக்கப்படும்) கோடிக்கணக்கான உழைப்பாளிகள் இப்போதும் இந்நாட்டில் இருந்து வருகின்றனர். பிரிட்டிஷ் ஆட்சி, நிலப்பிரபுத்துவ அமைப்பு, பிற்போக்குத் தனமான சாதி அமைப்பு, மத ரீதியான ஏமாற்றுவேலைகள், கடந்த காலத்திய அடிமைத்தன, பண்ணையடிமைத் தனங்கள் ஆகிய இவை அனைத்துமே இந்திய மக்களின் குரல்வளையை நெறித்து, அவர்களின் விடுதலைக்குத் தடையாக நிற்கின்றன. 20ஆம் நூற்றாண்டிலும் கூட சக மனிதனை நேருக்கு நேராகச் சந்திக்க, பொதுக் கிணறுகளில் நீரெடுத்துக் குடிக்க, பொதுப் பள்ளிகளில் சமமாக அமர்ந்து படிக்க உரிமைகளற்று ஒதுக்கப்படும் நிலை நீடித்து நிற்கவும் அவை வழிவகுத்துள்ளன” என்றும் அது குறிப்பிட்டது.

இத்தகைய சாதிய அமைப்பை எதிர்த்துப் போராடிக் கொண்டிருப்பவர்களில் ஒரு சிலரிடையே ஒருவிதமான மாயை அல்லது நம்பிக்கையும் நிலவி வந்தது. அப்போது இருந்த தேசியவாதத் தலைமையைப் போலில்லாமல் சாதிய அமைப்பை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் பிரிட்டிஷாருக்கு இல்லை என்பதே அந்த நம்பிக்கை ஆகும். உண்மையில், மக்களை பிளவுபடுத்தி தங்களது ஆட்சியை நீட்டித்துக் கொள்வது என்ற உத்தியின் மூலம் இந்து-முஸ்லீம் என்ற அடையாளங்களை வளர்த்தெடுக்க பிரிட்டிஷார் எவ்வாறு உதவி செய்தார்களோ, அதே போன்று சாதிய அமைப்பில் இருந்த பிளவுகளையும் அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். இதற்கு வர்க்க ரீதியான காரணமும் இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்குக் கிடைத்து வந்த மிகப்பெரும் ஆதரவு என்பது நிலப்பிரபுக்கள், ராஜாக்கள், மகாராஜாக்கள் ஆகியோரிடமிருந்தே வந்தது. ‘தீண்டத்தகாதவர்’களின் உழைப்பை மலிவாகப் பயன்படுத்திக் கொண்டு, ‘பண்ணை அடிமை மற்றும் அடிமை நிலைகளை’ நிலைநிறுத்திக் கொள்ள சாதிய அமைப்பே அவர்களுக்கு வழியேற்படுத்தித் தந்திருந்தது. இந்நிலையில் அத்தகைய சாதிய அமைப்பை நிலைநிறுத்தி, வலுப்படுத்த வேண்டிய அவசியமும் இந்தப் பிரிவினருக்கு இருந்தது.

இவ்வகையில் காலனிய ஆட்சிக்கு எதிரான போராட்டம் என்பது நிலப்பிரபுத்துவத்திற்கும் ஆழ வேரூன்றியிருந்த சாதிய அமைப்பிற்கும் எதிரான போராட்டத்தோடு இணைக்கப்பட்டதாக இருந்தது. எனவேதான் “காந்திய வகைப்பட்ட, சீர்திருத்தம் பெற்றிருந்த சாதிய அமைப்பை இரக்கமேதுமின்றி அழித்தொழிப்பதன் மூலம் மட்டுமே, விவசாயப் புரட்சியின் மூலம் மட்டுமே, பிரிட்டிஷ் ஆட்சியினை வலுவாகத் தூக்கியெறிவதன் மூலம் மட்டுமே, உழைக்கும் தீண்டத்தகாதவர்களின், அடிமைகளின் முழுமையான சமூக, பொருளாதார, கலாச்சார, சட்டபூர்வமான விடுதலை என்பதற்கு வழியேற்படும்” என 1930ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட செயல்திட்டம் குறிப்பிட்டிருந்தது.

மூன்றாவது அம்சம் என்னவெனில், அப்போதுதான் தலையெடுத்துக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் தலைவர்களும் பிரிட்டிஷ் ஆட்சியின் மிகப்பெரும் அடக்குமுறைக்கு ஆளான போதிலும், ஒன்றன்பின் ஒன்றாக ‘சதிவழக்குகள்’ அவர்கள் மீது போடப்பட்ட போதிலும், 1930ஆம் ஆண்டின் செயல்திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு தீண்டாமை, ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பது, அந்நாட்களில் தலித்களுக்கு விரோதமான நடைமுறைகள் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களில் தங்களை இணைத்துக் கொண்டனர். சில இடங்களில் இத்தகைய போராட்டங்களை அவர்களே தலைமையேற்றும் நடத்தினர். எனவே சாதிய அமைப்பை எதிர்த்துப் போராடுவதன் அத்தியாவசியமான அம்சத்தைப் பொறுத்தவரையில், அது தத்துவார்த்தரீதியான ஒரு நிலைபாடு மட்டுமல்ல; இத்தகைய போராட்டங்களில் கம்யூனிஸ்டுகளின் நேரடியான பங்களிப்பும் இதில் அடங்கியுள்ளது.

விடுதலை போராட்டத்தின்போதும், புதிதாக விடுதலை பெற்ற இந்தியாவிலும் சாதியைப் பொறுத்தவரையில் ஆர் எஸ் எஸ் மற்றும் அதே போன்ற கருத்துக்களைக் கொண்டிருந்த சக்திகளின் பங்களிப்பு எத்தகையதாக இருந்தது?

மக்களைப் பிளவுபடுத்தி காலனி ஆட்சியை நீட்டிப்பது என்ற பிரிட்டிஷாரின் உத்தியை இந்திய மயமாக்குவது என்பதுதான் விடுதலைப் போராட்டத்தில் ஆர் எஸ் எஸ் அமைப்பின் ‘பங்களிப்பாக’ இருந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்து-முஸ்லீம் இனத்தவரின் ஒற்றுமையின் அடிப்படையில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக 1857இல் நடைபெற்ற கிளர்ச்சிக்குப் பிறகு, இத்தகைய ஒற்றுமை தமது ஆட்சிக்கு மிகப்பெரும் அழிவை ஏற்படுத்துவதாக இருக்கும் என்பதை பிரிட்டிஷார் உணர்ந்து கொண்டனர். 1857ஆம் ஆண்டு கிளர்ச்சிக்குப் பிறகு, விடுதலைக்கான தேசிய அளவிலான ஒற்றுமை உணர்வை பிளவுபடுத்தும், பலவீனப்படுத்தும் அடையாளங்களை வலியுறுத்துகின்ற, குறிப்பாக மதத்தைப் பயன்படுத்தி, கொள்கைகளை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வடிவமைத்தனர். இவ்வாறுதான் தேசிய இயக்கத்தை பிளவுபடுத்த உதவும் வகையில் 1906ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட முஸ்லீம் லீக் அமைப்புக்கு அவர்கள் சாதகமாக நடந்து கொண்டனர். இந்து அடையாளம் என்பதை தீவிரமாக மேற்கொள்ள அதே அளவிற்குத் தேவைப்படும் நிலையில்தான் 1925இல் ஆர் எஸ் எஸ் உருவானது. இந்தியாவின் விடுதலைக்கான போராட்டத்தில் கலந்து கொள்வதிலிருந்து ஆர் எஸ் எஸ் தனது உறுப்பினர்களை மிகத் தீவிரமான வகையில் தடுத்து வந்தது. இன்றைய பிரதமர் உள்ளிட்டு பலராலும் குருஜி என்று போற்றப்படுகின்ற கோல்வால்கர் சொன்னார்: “நாம் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழியில் நமது மதம், நமது கலாச்சாரம் ஆகியவற்றை பாதுகாப்பதன் மூலமே நாட்டின் விடுதலையைப் பற்றி நாம் பேசுகின்றோமே தவிர, இங்கிருந்து பிரிட்டிஷார் வெளியேறுவதைப் பற்றி அது குறிப்பிடவில்லை என்பதை நாம் நன்கு நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.” (ஸ்ரீகுருஜி சமக்ர தர்ஷன், தொகுதி -4, பக். 40)

‘இந்தியன்’ என்பதற்கு மாறாக, அனைத்து இந்தியாவையும் உள்ளடக்கிய ‘இந்து’ என்ற அடையாளத்தை முன்னிறுத்துவதன் ஒரு பகுதியாக ஆர் எஸ் எஸ் அமைப்பும், அதேபோன்ற கருத்தைக் கொண்ட சமூக சக்திகளும், மனுஸ்மிருதி மற்றும் இதர இந்துமத நூல்கள் முன்வைத்த தத்துவத்தை மேலும் முன்வைத்து வளர்த்தெடுத்தன. மறுபுறத்தில், ஆர் எஸ் எஸ் உருவான நாளிலிருந்தும், அதற்கு முன்பாக இந்து மகாசபா செயல்பட்டு வந்த நாட்களிலும், இந்துத்துவா மற்றும் இந்து ராஷ்ட்ரா ஆகிய அரசியல் திட்டங்களுக்கு இந்து ஒற்றுமை என்பதை முன்னிறுத்துவது அவசியமானதாக இருந்தது. சாதிய அமைப்பை அப்படியே நிலைநிறுத்திக் கொண்டு இந்த இந்து ஒற்றுமையை வளர்த்தெடுக்க அனைத்து வகையான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்துக்கள் அனைவருமே முகலாயர்களின் அடக்குமுறைக்கு ஆளானவர்கள்தான் என்ற கொள்கையை முன்னெடுத்ததன் மூலம் இத்தகைய ஒற்றுமையை அவர்களால் உருவாக்க முடிந்தது.

இந்துத்துவா என்ற கருத்தாக்கத்தின் தந்தையான வி.டி. சவர்க்கார் சாதிக்கு எதிரானவர் என்றும், சாதி மறுப்பு திருமணங்களை அவர் முன்னின்று நடத்தியிருக்கிறார் என்றும் கூறிக் கொள்கின்றனர். சாதியை முற்றிலுமாக அழித்தொழிப்பதற்கான ஒரு பகுதியாகவா அது அமைகிறது? இல்லை. அதிலிருந்து வெகுதூரத்தில் உள்ளது என்பதே உண்மை. சவர்க்காரும் அவருக்குப் பின் வந்த மற்றவர்களும் சாதிய அமைப்பினை மிக வலுவாக ஆதரித்து நின்றவர்களே. அவர் எழுதியிருந்தார்: “சில குறிப்பிட்ட சூழ்நிலைகளிலும் பின்னணியிலும் இந்து சமூகம் வலுவாக ஒன்றிணைவதற்கும், வியக்கத்தக்க வகையில் நிலைத்து நிற்பதற்கும் பிறப்பின் அடிப்படையிலான சாதிப் பிரிவினைகள் என்ற நடைமுறையே காரணமாக இருந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதன் நிறை-குறைகளை மதிப்பிடும்போது சாதி என்ற நிறுவனத்தின் பின்னாளைய தீய விளைவுகளை மட்டுமே சுட்டிக்காட்டி குறை கூறுவது முற்றிலும் நன்றிகெட்டதொரு செயலே ஆகும். இந்து தேசத்தின் நலன்களை மட்டுமே மனதில் கொண்டு, அந்நாளைய இந்துக்கள் அதே நேரத்தில் ரத்த உறவுகள், இன வாழ்க்கை, பாரம்பரியம் ஆகியவற்றின் தூய்மையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பிறப்பின் அடிப்படையிலான சாதிய வேறுபாடுகளை அனுமதித்தனர் அல்லது உருவாக்கினர் என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். (1963, இந்திய வரலாற்றின் ஆறு மகத்தான யுகங்கள், தொகுதி 4, பக். 710)

இந்துத்துவா: யார் இந்து? என்ற தனது நூலில் சவர்க்கார் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: “சாதிய அமைப்பு செய்ததெல்லாம் நம்பிக்கையின் அடிப்படையில் தனது புனிதமான ரத்தத்தை அது ஒழுங்குபடுத்திக் கொண்டதே ஆகும். இதன் மூலம் வறட்சியான, வறுமைமிக்க அனைத்தையும் உரமூட்டி, வளப்படுத்துவதிலும் அது பங்காற்றியது.” எனவே இந்துத்துவ சக்திகளின் அதிகாரபூர்வ இலச்சினையாகத் திகழும் சவர்க்காரைப் பொறுத்தவரையில் இந்து சமூகத்தை பாதுகாப்பதில் மிகவும் முக்கியமான பங்கினை சாதி வகித்தது. ஒரு சில ‘குறைகள்’ இருந்தபோதிலும் அது பாராட்டப்பட வேண்டிய ஒன்று என்றே அவர் கருதினார். தூய்மையாக வைத்திருக்கப்பட வேண்டிய ‘புனிதமான ரத்தம்’ என்பது உயர் சாதிக்காரர்களுடையதே ஆகும். ‘வறட்சியான மற்றும் வறுமைமிக்கவர்கள்’ என்பது சூத்திரர்களும், சாதியப் படிநிலைக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளவர்களுமே ஆகும். இப்படித்தான் சவர்க்கார் சாதிக்கு எதிரானவர் என்று அவர்கள் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

சாதிய அமைப்புக்கு வக்காலத்து வாங்கும் இந்த வாதத்தை மேலும் முன்னெடுத்துச் சென்ற கோல்வால்கர் தனது ‘சிந்தனைக் கொத்து’ என்ற நூலில் இவ்வாறு எழுதினார்: “ஒரு புறத்தில் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் கிரேக்கர்கள், சாகர்கள், ஹூணர்கள், முஸ்லீம்கள், ஏன் ஐரோப்பியர்களின் அட்டூழியங்களை எல்லாம் சகித்துக் கொண்டு ‘சாதியில் மூழ்கிப் போனதாக’ சொல்லப்படும் இந்து சமூகம் உயிரோட்டத்துடன், வெல்லப்படமுடியாத ஒன்றாக இன்றும் நீடிக்கிறது. மறுபுறத்திலோ சாதியே இல்லாத சமூகங்கள் பொடிப்பொடியாக நொறுங்கிப் போய் மீண்டெழ முடியாத நிலையை எட்டியுள்ளன. வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமானால், இந்த விபரீத சிந்தனையின்படி சாதிய அமைப்பானது இந்துக்களின் வலிமையை உறுதிப்படுத்தியுள்ளது.”

உள்ளார்ந்த மனிதத்தன்மை என்ற தனது கொள்கையில் தீன் தயாள் உபாத்யாயா வர்ண அமைப்பை நியாயப்படுத்தியிருந்தார். அதை தத்துவார்த்த ரீதியானதோர் உதாரணமாக பாஜக இன்றும் கூட உயர்த்திப் பிடித்து வருகிறது. 1965ஆம் ஆண்டில் அவர் எழுதியிருந்தார்: “நான்கு வகையான சாதிகள் என்ற நமது கருத்தாக்கத்தில் விராட் புருஷனின் வெவ்வேறு வகையான உறுப்புகளோடு அவை ஒப்பீடு செய்யப்பட்டன. இந்த உறுப்புகள் ஒன்றுக்கொன்று உதவிகரமானவை என்பது மட்டுமின்றி, இன்னும் சொல்லப்போனால் அங்கு தனித்தன்மையும், ஒற்றுமையும் நிலவுகிறது. ஒருமித்த நலன்களுக்கான முழுமையான அடையாளமும், ஒன்றையொன்று சார்ந்த அடையாளமும் அங்கு உள்ளன. இந்தக் கருத்தை உயிர்ப்போடு வைத்திராவிட்டால், ஒன்றுக்கொன்று உதவிகரமாக இருக்கும் இந்த சாதிகளிடையே மோதலை உருவாக்கிவிடக் கூடும். அவ்வாறெனில், அது தன் இயல்பிற்கு மாறானதாக மாறிவிடும்.”

எனவே வரலாறு நெடுகிலும் தலித்துகள் எதிர்கொண்டு வந்துள்ள அடக்குமுறை, பாரபட்சம் ஆகியவற்றின் வரலாறு என்பது சாதிய அமைப்பின் விளைவாக ஏற்பட்டதல்ல; மாறாக, அதன் ‘இயல்பிற்கு மாறானதே’ ஆகும். இதுவே பாஜகவின் புரிதலாக இன்றும் தொடர்ந்து நீடித்து வருகிறது. எனவேதான் மநுஸ்மிருதி இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடித்தளமாக இருக்க வேண்டும் என்பது அவர்களின் விருப்பமாக இருந்து வருகிறது. 1949ஆம் ஆண்டு நவம்பர் 30 அன்று, அதாவது, அரசியல் நிர்ணய சபை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை இறுதிப்படுத்திய நான்கு நாட்களுக்குப் பிறகு, ஆர் எஸ் எஸ் இவ்வாறு அறிவித்தது: “இன்றுவரையிலும் மநுஸ்மிருதியில் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ள அவரது (மநுவின்) சட்டங்கள் உலகத்தவரால் போற்றப்படுவதோடு, அதனை பின்பற்றவும், அவற்றோடு ஒத்த வகையில் இருக்கவேண்டும் என்ற உணர்வும் எழும்பியுள்ளது. ஆனால் நமது அரசியல் அமைப்புச் சட்ட நிபுணர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு அது ஒரு பொருட்டே அல்ல.”

இவ்வகையில் சாதிய அமைப்பையே முற்றிலுமாக அழித்தொழிக்க வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கரும் கம்யூனிஸ்டுகளும் உறுதியாக நம்பி, அதற்காகப் போராடி வந்தனர் எனில், காந்தியவாதிகள் சீர்திருத்த நடவடிக்கைகளில் நம்பிக்கை கொண்டிருந்தனர். அதே நேரத்தில் ஆர் எஸ் எஸ் –ஐ சேர்ந்த இந்துத்துவவாதிகளோ இந்து சமூகத்தை ஒன்றாக நிலைநிறுத்த சாதிய அமைப்பு அவசியமானது என்று கருதி வந்துள்ளனர்.

சாதியைப் பொறுத்தவரையில் தற்போதைய ஆர் எஸ் எஸ்ஸின் அணுகுமுறையில் மாற்றம் ஏதும் உள்ளதா?

சாதி குறித்த ஆர் எஸ் எஸ்ஸின் அணுகுமுறையில் அடிப்படையான மாற்றம் ஏதும் இல்லை. சாதிவேறுபாடின்றி அனைவரும் சேர்ந்து உண்ணுதல் போன்ற பெயரளவிற்கான திட்டங்களின் மூலம் மேலோட்டமான மாற்றங்களைக் கொண்டுவர அது முயற்சிக்கிறது. அல்லது பாஜக தலைவர்கள் தலித்துகளின் இல்லங்களுக்குச் சென்று உணவருந்துவது போன்ற – இது தலித்துகளை அவமானப்படுத்துவது என்பதைத் தவிர வேறில்லை – நடவடிக்கைகளின் மூலம் தங்களது சமமான குடியுரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்று அவர்கள் கோருவதைப் போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது.

எனினும் சாதிமறுப்புத் திருமணம் செய்யும் ஓர் ஆண் தலித் ஆக இருப்பாரானால் அதன் மீதான காப் பஞ்சாயத்துகளின் பிற்போக்குத்தனமான அணுகுமுறைக்கு அது முழுமையான ஆதரவை அளிக்கிறது. தனது சாதிய குணத்தை மறைத்துக் கொள்வதற்காக அண்ணல் அம்பேத்கரை கவர்ந்து செல்லவும் அது முயற்சிக்கிறது. எனினும் அதன் இத்தகைய முயற்சிகள் முன்னுக்குப் பின் முரணானவையே ஆகும். ஏனெனில் சாதி குறித்த புதுவகையான விளக்கங்களின் மூலம் மநுஸ்மிருதிக்கு நற்பெயரை ஏற்படுத்தவே அது முயற்சி செய்கிறது.

மேலே எடுத்துக் காட்டிய கோல்வால்கரின் எழுத்துக்கள் உள்ளிட்டு, சாதி குறித்து அதன் நிறுவன உறுப்பினர்கள் வெளிப்படுத்தியிருந்த கருத்துக்களை ஆர் எஸ் எஸ் எப்போதுமே மறுத்ததில்லை; அல்லது அவற்றிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டதும் இல்லை. இந்து சமூகத்தில் உள்ள சாதிய அமைப்பு என்பது மிகவும் எளிமையான ஓர் உழைப்புப் பிரிவினையே ஆகும்; முஸ்லீம்களே அதற்குள் படிநிலைகளையும் பாரபட்சமான போக்குகளையும் அறிமுகப்படுத்தினர் என்ற கருத்தோட்டத்தையே ஆர் எஸ் எஸ் முன்வைக்கிறது.

பல்வேறு சாதிகள் குறித்து ஆர் எஸ் எஸ் ஆதரவாளர் ஒருவர் எழுதிய நூல் ஒன்றுக்கு அணிந்துரை எழுதுகையில் மூத்த ஆர் எஸ் எஸ் தலைவரான பைய்யா ஜோஷி இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: “சூத்திரர்கள் எப்போதுமே தீண்டத்தகாதவர்களாக இருந்ததில்லை. சத்திரியர்களின் இந்து என்ற பெருமையை சீர்குலைக்கவே அரேபியாவிலிருந்து படையெடுத்து வந்த முஸ்லீம் ஆட்சியாளர்கள் பசுவை கொல்வது; அவற்றின் தோலை உரிப்பது; அவற்றின் உடல்களை தொலைதூரங்களில் வீசுவது போன்ற அவமானகரமான செயல்களை மேற்கொள்ள கட்டாயப்படுத்தினர். பெருமைமிக்க இந்து கைதிகளுக்கு தண்டனையாக இத்தகைய வேலைகளை அளித்ததன் மூலம் அந்நிய படையெடுப்பாளர்கள் முற்றிலுமாக தோல் தொழிலில் மட்டுமே ஈடுபடும் ஒரு சாதியையே உருவாக்கினர்.”

மற்றொரு மூத்த ஆர் எஸ் எஸ் தலைவரான சுரேஷ் சோனி இவ்வாறு எழுதினார்: “துருக்கியர்கள், முஸ்லீம்கள், முகலாயர்கள் காலத்தில்தான் தலித்துகளின் வம்சாவளி தொடங்குகிறது. மத்தியகால அல்லது இஸ்லாமிய ஆட்சிக்காலத்தின்போது பிராமணர்களுக்கும் சத்திரியர்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடுமைகளின் விளைவாகவே இன்றுள்ள வால்மீகி, சுதர்சன், மாஜாபி சீக்கியர்கள் மற்றும் இவர்களுக்குள் உள்ள 624 துணை சாதிகள் தோன்றின.”

இவ்வகையில், ஆர் எஸ் எஸ் தத்துவவாதிகளின் இந்தக் கருத்துப்படி, இன்றுள்ள தலித்துகள் உண்மையில் சத்திரியர்கள்தான். அவர்கள் முகலாயர் ஆட்சிக் காலத்தில் ‘தூய்மையற்ற வேலை’களை செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டவர்களே. எனவே அவர்களை தீண்டத்தகாதவர்களாக ஆக்கியவர்கள் முகலாய ஆட்சியாளர்கள்தான்! மநுஸ்மிருதி மற்றும் இதர மத நூல்களில் கூறப்பட்டிருக்கும் விதிமுறைகளை எல்லாம் மறந்து விடுங்கள். ஏகலைவன், சம்புகன், சபரி ஆகியவர்களைப் பற்றிய இதிகாச கதைகளைத் தான் ஆர் எஸ் எஸ் வரலாறு எனக் கருதுகிறது. இவை அனைத்திற்குமாக பழி சுமத்தப்பட வேண்டியவர்கள் முகலாயர்கள்தான்.

மறுபுறத்தில், முன்னாள் ஆர் எஸ் எஸ் பிரச்சாரகரும் இன்றைய பிரதமருமான நரேந்திர மோடி ‘கர்மயோக்’ என்ற வெளியீட்டில் மனிதக் கழிவுகளை அகற்றுவோரைப் பற்றி பின்வருமாறு கூறியிருந்தார்: “கடவுள்களின் மற்றும் சமூகம் முழுவதின் மகிழ்ச்சிக்காக பணிபுரிவதே தங்களது (வால்மீகிகளின்) கடமை என்று ஏதோவொரு காலப்பகுதியில் இவர்களில் யாரோ ஒருவருக்கு ஞானோதயம் பிறந்திருக்க வேண்டும். கடவுள்களால் தங்களுக்கு அளிக்கப்பட்ட இந்தப் பணியை அவர்கள் செய்தாக வேண்டும். (மனிதக் கழிவுகளை) சுத்தப்படுத்துவது என்ற இந்த வேலை உள்ளார்ந்த இறைச் செயலாக இன்னும் பல நூற்றாண்டுகளுக்குத் தொடர வேண்டும். வேறெந்த வேலையை அல்லது தொழிலை மேற்கொள்வதற்கான வாய்ப்பு அவர்களின் முன்னோர்களுக்கு கிடைக்கவில்லை என்பது நம்புவதற்கு இயலாத ஒன்று.”

இன்றைக்கும் தொடர்ந்து நீடித்து வருகின்ற, இந்த பிறப்பின் அடிப்படையில் சாதிக்கு ஏற்ற வகையில் தீர்மானிக்கப்பட்ட தொழிலை மிகக் கொடூரமான வகையில் நியாயப்படுத்துகின்ற இந்தப் போக்குதான் சாதிய அமைப்பு குறித்த ஆர் எஸ் எஸ் மற்றும் இந்துத்துவாவின் உண்மையான அணுகுமுறை ஆகும். ஆர் எஸ் எஸ்ஸின் அரசியல் பிரிவான பாஜக ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியில் இருந்தபோது, அன்றைய முதல்வர் பைரோன் சிங் ஷெகாவாத் தான் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற வளாகத்தில் மநுவின் சிலையை நிறுவுவதற்கு அனுமதி அளித்தார். அந்தச் சிலையை அகற்றுவதை எதிர்த்து நீதிமன்றத்திடமிருந்து தடை ஆணையை பெற்றவர் ஆர் எஸ் எஸ் ஸின் மற்றொரு பிரிவான விஸ்வ இந்து பரிஷத்தின் ஒரு தலைவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் மாநிலத்தில் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த அரசுகளின் போலித்தனத்தின் அவமானச் சின்னமாக அந்தச் சிலை இன்றும் கூட நின்று கொண்டிருக்கிறது.

ஒரு இந்து ராஷ்ட்ரத்தை அமைப்பதற்கான ஆர் எஸ் எஸ் ஸின் நிகழ்ச்சி நிரலைத்தான் மோடி அரசு இப்போது நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. அந்த இந்து ராஷ்ட்ரத்தின் மையமாகத் திகழ்வது சாதிய அமைப்புதான். இந்தியாவின் அரசியல் அமைப்புச்சட்டம் நிறைவேற்றப்பட்டபோது ‘மநுவின் ஆட்சி முடிவிற்கு வந்து விட்டது’ என்று அண்ணல் அம்பேத்கர் கூறினார். தனது அதிகார பூர்வ இதழான ஆர்கனைசர் இதழில் ஆர் எஸ் எஸ் ஒரு கட்டுரை மூலம் அதற்கு பதிலளிக்கும்போது ‘இன்றும் மநு எங்கள் மனங்களில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்’ என்று குறிப்பிட்டது. அம்பேத்கர் தனது உரையில் மேலும் கூறுகையில் “இந்து ஆட்சி என்பது நடைமுறைக்கு வருமானால், அது இந்த நாட்டின் மிகப்பெரும் பேரழிவாகவே இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை…. அது ஜனநாயகத்துடன் ஒத்துப்போகாத ஒன்று.” என்று குறிப்பிட்டிருந்தார். அப்போது உண்மையாக இருந்த அண்ணல் அம்பேத்கரின் கருத்து இப்போதும் பொருத்தமானதொரு உண்மையாகவே உள்ளது.

நாடு விடுதலை பெற்று 73 ஆண்டுகள் கடந்த பின்னரும்கூட கிராமப்புற, நகர்ப்புற உழைப்பாளிகளில் பெரும்பகுதியினர் தலித்துகளாகவே உள்ளனர். இந்நிலையில் சாதிக்கும் வர்க்கத்திற்கும் இடையிலான உறவு எத்தகையதாக உள்ளது?

வர்க்க அடிப்படையிலான சமூகத்தின் வளர்ச்சியோடு இணைந்த வகையில் சாதி என்பது எவ்வாறு வரலாற்று ரீதியாகத் தலையெடுத்தது என்பதை கம்யூனிஸ்டுகளும் மார்க்சிய வரலாற்று ஆசிரியர்களும் எடுத்துக் காட்டியுள்ளனர். இந்தியாவில் சாதிய அமைப்பானது சமூகத்துடனும் உற்பத்தி உறவுகளுடனும் பின்னிப் பிணைந்துள்ளது. உற்பத்தி சக்திகள் நிலைபெற்ற விவசாயமாக வளர்ச்சி பெற்றது, சமூக உபரியின் வளர்ச்சியும், உற்பத்திக் கருவிகள் மற்றும் உபரி ஆகியவற்றின் மீதான உரிமை மற்றும் ஆதிக்கத்தைக் கைக்கொண்டுள்ள வர்க்கங்கள் மற்றும் அந்த உபரியை உற்பத்தி செய்கின்ற வர்க்கங்களாக வளர்ச்சி பெற்றது ஆகியவை நாம் நன்கறிந்த சமூகங்களின் வளர்ச்சி குறித்த ஆய்வின் ஒரு பகுதியாகும்.

பண்டைய இந்தியா குறித்த வரலாற்றாசிரியரும் மிகப் பரவலாக அங்கீகாரம் பெற்ற, பெரிதும் மதிக்கப்படுகின்றவருமான டி.டி. கோசாம்பி இவ்வாறு எழுதியிருந்தார்: “ இந்தியாவில் மிகக் குறைந்த வற்புறுத்தலுடன் தொடக்கநிலை உற்பத்தியாளர் தனது உபரியை பறிகொடுக்கும் வகையில் மதரீதியான சமூக உணர்வை உருவாக்குவதாகவே சாதி என்பது உற்பத்தியின் தொடக்கநிலையில் ஒரு வர்க்கமாக உள்ளது.”

மேலும் தூதரக அதிகாரியும் எழுத்தாளரும் கல்வியாளருமான ஜயந்தனுஜா பந்தோபாத்யாயா வர்க்கப் போராட்டங்கள் மற்றும் சாதிய ஒடுக்குமுறை ஆகியவை குறித்த தனது கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: “ எப்படியிருந்த போதிலும், உண்மையில், தெய்வத்தால் தோற்றுவிக்கப்பட்டது என்ற சாக்குப்போக்குடன் மத நூல்களால் நால்வருண முறைக்கு வழங்கப்பட்ட ஆதரவானது, தொழிலாளி வர்க்கத்தின் மீதான ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட ஒரு பழங்கால வடிவமான அநியாய உழைப்புப் பிரிவினையை புனிதப்படுத்தவும் நிலைத்து நிற்கச் செய்யவும் உதவியது. மிகச் சிறிய ஒட்டுண்ணி ஆளும் வர்க்கத்தால் பண்டைய இந்தியாவின் பெரும்பான்மையானவர்களாக உள்ள தொழிலாளி வர்க்கத்தை சுரண்டுவதற்கும் இது அடிப்படையானதாக விளங்கியது. இயல்பாகவே ‘வேற்றுலக’ ரீதியான மதத் தடைகள் வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்ட சித்தாந்தங்களாகவே இருந்தன. இது இந்த உலகத்தில் சமூக பொருளாதார சுரண்டல் கட்டமைப்பை மறைக்க உதவியது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நால் வருண மெய்யியலின் சமூக வேர்கள் பண்டைய இந்தியாவின் உற்பத்தி உறவுகளில் பதிக்கப்பட்டிருந்தன. ”

தலித்துகளில் பெரும்பான்மையோர் பல ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, மேலும் குறிப்பாக நவதாராளமய பொருளாதாரக் கொள்கைகளினால் பாதிக்கப்பட்டவர்களாகவும், சமூக-பொருளாதார ஏணியின் இறுதிப்படிக்கட்டில் கட்டுண்டும் கிடக்கின்றனர். ஏனெனில் சாதிய அமைப்பானது நவீன இந்தியாவின் ஆளும் வர்க்கமான முதலாளித்துவ வர்க்கத்தின் ஆதரவைப் பெற்றுள்ளதே இதற்கான காரணமாகும். குறிப்பாக தலித்துகளும், பிற்படுத்தப்பட்ட சாதியினரும் மேற்கொள்ளும் உற்பத்தியின் உபரி மதிப்பை அவர்களிடமிருந்து மேலும் தீவிரமாகக் கறப்பதற்கான ஒரு கருவியாக சாதிய அமைப்பு கையாளப்படுகிறது. எனவே சாதி என்பதை முதலாளித்துவத்திற்கு முந்தைய உற்பத்தி உறவுகளின் ஒரு பகுதியாக மட்டுமே பார்ப்பது தவறானது. சாதிய உறவுகள் நிலப்பிரபுத்துவ சமூகத்தின் ஒரு பகுதி என நமது இயக்கத்திற்கு உள்ளேயும் கூட அடிக்கடி கூறப்பட்டு வந்துள்ளது. இத்தகைய கருத்து வெளிப்பாட்டின் பின்னே உள்ள புரிதல் என்னவெனில், ஒரு நவீன முதலாளித்துவ சமூகத்தில் சாதி மறைந்து போய் வர்க்க உறவுகளே மேலாதிக்கம் பெற்றதாக இருக்கும் என்பதே ஆகும். இது முற்றிலும் தவறானதொரு புரிதல் என்பதையே நமது அனுபவம் எடுத்துக் காட்டுகிறது.

எனவேதான் கட்சித் திட்டம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது: “ தலையெடுத்து வந்த முதலாளித்துவ வர்க்கத்தால் அழித்தொழிக்கப்பட்ட, முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூகத்தின் சாம்பலிலிருந்து முதலாளித்துவம் வளர்ந்துள்ள, முன்னேறிய முதலாளித்துவ நாடுகளை போலல்லாமல், இந்தியாவில் முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூகத்தின் மீதே முதலாளித்துவம் பதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கவாதிகள் அவர்களின் ஆட்சிக் காலத்திலோ அல்லது நாட்டு விடுதலைக்குப் பிறகு ஆட்சி அதிகாரத்திற்கு வந்த இந்திய முதலாளித்துவமோ அதை உடைத்தெறிய முயற்சிக்கவேயில்லை. முதலாளித்துவத்தின் சுதந்திரமான வளர்ச்சிக்கான மிக முக்கியமான முன் நிபந்தனைகளில் இவ்வாறு உடைத்தெறிவதும் ஒன்றாகும். எனவே தற்போதைய இந்திய சமூகமானது சாதிய, வகுப்புவாத, பழங்குடி நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து மேலாதிக்கம் செலுத்தும் ஏகபோக முதலாளித்துவத்தின் விசித்திரமான ஒரு கலவையே ஆகும்.”

எனவே சாதி என்பதை ஒரு நிலப்பிரபுத்துவ அல்லது முதலாளித்துவத்திற்கு முந்தைய உறவாக மட்டுமே பார்க்காமல் முதலாளித்துவத்தின் கீழ் வளர்ந்து வரும் பொருளாதார, சமூக, அரசியல், கலாச்சார உறவுகளில் இணைத்துக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே நாம் புரிந்து கொள்ள வேண்டும். சாதியை எதிர்த்துப் போராடாமல் நம்மால் முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராட முடியாது. முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடாமல் நம்மால் சாதியை எதிர்த்துப் போராட முடியாது.

இந்நிலையில் நாம் செய்ய வேண்டியது என்ன?

வர்க்கச் சுரண்டலை கண்ணுறாமல் சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறையை மட்டுமே காணுகின்ற சமூக சீர்திருத்த இயக்கங்களின் வரையறைகளை வரலாறு நமக்கு எடுத்துக் காட்டியுள்ளது. அதைப் போன்றே சாதிய ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல் செயல்படுவது குறித்த சமூகரீதியான உணர்வு இன்றி, வர்க்கப் போராட்டங்களை மட்டுமே வளர்த்தெடுக்க முனைவதென்பது, அந்த வர்க்கப் போராட்டத்தை பலவீனப்படுத்துவதாக ஆகிவிடுகிறது என்பதையும் நமது சொந்த அனுபவங்களிலிருந்தே நாம் கற்றுக் கொண்டுள்ளோம். பாட்டாளி வர்க்கத்தின் மிகப்பெரியதோர் உலகத்தை இது கண்ணுக்குத் தென்படாத ஒன்றாக ஆக்குகிறது. இந்த உலகத்தவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இரட்டைச் சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைக்கு ஆளாகின்றனர். அதுவே ஒரு தலித் பெண்ணாக இருப்பாரே ஆனால் அவர் ஒரு தலித் என்ற வகையிலும், ஒரு தொழிலாளி என்ற வகையிலும், ஒரு பெண் என்ற வகையிலும் மூன்று வகையான சுமைகளை சுமப்பவராக மாறுகிறார். இந்த நிலையை மாற்றுவதற்கான ஒரே வழி வர்க்கப் போராட்டம், சாதிய அமைப்பிற்கு எதிரான போராட்டம் மற்றும் தலித்துகளின் உரிமைகளுக்கான போராட்டம் ஆகியவற்றின் கூட்டணியை வளர்த்தெடுப்பதே ஆகும்.

முதலாளித்துவத்தின் வளர்ச்சியைத் தொடர்ந்து சாதிகளுக்கு உள்ளேயும் வேறுபாடுகள் வளர்ந்து வருவதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். வர்க்கமும் சாதிகளும் ஒன்றல்ல. சாதி அடையாள அரசியலானது இந்த வேறுபாட்டை கண்ணுக்குத் தெரியாமல் மறைத்து விடுகிறது. எனினும் விரிவான பொருளில் பார்க்கும்போது இந்தியாவில் வர்க்கப் போராட்டமானது மிகவும் வித்தியாசமானதொரு தன்மையைக் கொண்டதாக உள்ளது என்ற, அது சாதிய அமைப்பை எதிர்த்த போராட்டமாக இருக்கவேண்டும் என்ற உண்மையை இது பலவீனப்படுத்தி விடாது.

கட்சித் திட்டம் இது பற்றிக் குறிப்பிடுகையில்: “ தலித் பிரிவைச் சேர்ந்த மக்களில் பெரும்பாலோர் உழைக்கும் வர்க்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் நிலையில், தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமை என்பதற்கு சாதிய அமைப்பிற்கு எதிரான, தலித்துகளின் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான ஒற்றுமையே முன்நிபந்தனையாக அமைகிறது. சாதி அமைப்பை முற்றிலுமாக அழித்தொழிக்கவும், சமூக சீர்திருத்த இயக்கம் ஒன்றின் மூலம் அனைத்து வடிவங்களிலுமான சமூக ஒடுக்குமுறையை ஒழித்துக் கட்டவுமான போராட்டம் என்பது ஜனநாயகப் புரட்சியின் மிக முக்கியமானதொரு பகுதியாகும். அவ்வகையில் சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது வர்க்கச் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தோடு பின்னிப் பிணைந்த ஒன்றே ஆகும்.”

புதிதாகப் பிறந்துள்ள 2021ஆம் ஆண்டில், அதாவது 1930ஆம் ஆண்டின் செயலுக்கான மேடை மேற்கொள்ளப்பட்டு 91 ஆண்டுகளுக்குப் பிறகு, வெறுத்தொதுக்கப்பட வேண்டிய சாதிய அமைப்பு, அதை நீடித்து நிலைக்கச் செய்ய முயலும் அனைத்து சக்திகள் ஆகியவற்றை எதிர்த்த போராட்டத்தை தீவிரப்படுத்த நாம் மீண்டும் உறுதி பூணுவோமாக.

தமிழில்: வீ. பா. கணேசன்