இங்கிருந்து எங்கே…?

கலாநிதி க. கைலாசபதி

அண்மையில் மறைந்த முதுபெரும் எழுத்தாளர் கு. சின்னப்ப பாரதி அவர்கள் தமிழிலக்கிய உலகில் சோஷலிச எதார்த்த வாதத்தின் அடிப்படையிலேயே தனது எழுத்துக்களை வழங்கி வந்தார். அவரது ‘சுரங்கம்’ நாவல் குறித்த விரிவான ஆய்வுக் கட்டுரை ஒன்று ஆகஸ்ட் இதழில் வெளியாகும். அதற்கு முன்பாக, தமிழிலக்கிய உலகில் மார்க்சியப் பார்வையோடு எழுத்தின் முக்கியத்துவம் குறித்து விரிவாக எழுதிய கலாநிதி கைலாசபதி அவர்களின் எழுத்தின் இலக்கு குறித்த கட்டுரையை இங்கே தந்துள்ளோம்.- ஆசிரியர் குழு

கலாநிதி . கைலாசபதி (1933-1982) இலங்கை பேராதனை பல்கலைக்கழகத்தில் எம்.. முடித்து, பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் டாக்டர் (கலாநிதி) பட்டம் பெற்றவர். தாம் வாழ்ந்த காலத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள், நண்பர்கள், எழுத்தாளர்களின் சிந்தனையிலும் இதயத்திலும் குடிகொண்டவர். தம் காலத்தில் தனி நிறுவனமாகவே விளங்கினார். கல்வி, ஆராய்ச்சி, விமர்சனம், பத்திரிக்கைத் தொழில் ஆகிய துறைகளில் எல்லாம் புதுமை வேண்டி உழைத்தவர். கலைஇலக்கிய வரலாற்றில் அவர் பங்களிப்பு மலை போன்றது. அவர் பெயரில் பத்து அரிய நூல்கள் வரையும் நூற்றுக் கணக்கான ஆய்வுக்கட்டுரைகளும் உள்ளன.

பழந்தமிழ் இலக்கியத்தையும் நவீன இலக்கியத்தையும் விஞ்ஞானபூர்வமாக அணுகும் போக்கின் முன்னோடியாகவும் முதல்வராகவும் அவர் விளங்கினார்.  “விமர்சனம் என்பது உலகை விவரிப்பது மாத்திரமன்று….அது உலகத்தை மாற்றி அமைப்பதற்குஓயாது பயன்படுத்தும் ஆயுதமாகவும் இருக்க வேண்டும்என்ற அவரது கலை, இலக்கியம், விமர்சனம் குறித்த உயர்ந்த கோட்பாடு அவரது எழுத்துக்கள் அனைத்திலும் ஊடுருவி நிற்பதைக் காணலாம். இலக்கியத்தின் இலக்கு மற்றும் எதிர்காலம் குறித்து அவர் எழுதிய ஒரு கட்டுரையை இங்கே வழங்குகிறோம்.

இலக்கிய உலகிலே காலத்துக்குக் காலம் புதிய பிரச்சனைகள் தோன்றுவதுண்டு. அதேபோல, காலங்காலமாக எழுப்பப்படும் சில வினாக்களும் உண்டு. அத்தகைய  ‘நித்தியமான’ வினாக்களில் ஒன்று ‘இலக்கியம் எதற்காக?’ என்பதாகும். காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப இவ்வினாவிற்கு வேறுபடும் விடைகள் அளிக்கப்படலாம். எனினும் இலக்கியம் சம்மந்தமான அடிப்படை கேள்விகளில் மேலே குறிப்பிட்டதும் ஒன்றாகும்.

இலக்கியத்தின் குறிக்கோள் பற்றி கருத்து ரீதியாக விடை கூறுவதிலும் பார்க்க, இலக்கிய கர்த்தாக்களின் நோக்கையும் போக்கையும் விவரிப்பதனால் விளக்கம் தேடுதல் விரும்பத்தக்கதாகும். தனிப்பட்ட ஒரு எழுத்தாளன் காதல், புகழ், பணம், சமய நம்பிக்கை, அரசியல் ஈடுபாடு முதலிய பல காரணங்களில் ஒன்றோ, பலவோ உந்துவதால் எழுதுகிறான் எனக் கூறலாம். எனினும் எழுத்தாளனை பொதுவாக நோக்குமிடத்து மூன்று நிலைப்பாடுகளை கவனிக்கலாம்.

எழுத்தாளன் தனித்து வாழும் ஒருவன் அல்லன். அவன் சமூகப்பிராணி. சமுதாயத்தில் எல்லாக் காலங்களிலும் முரண்பாடுகளும், போராட்டங்களும், இயக்கங்களும் இடைவிடாது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றின் மத்தியிலே எழுத்தாளனும் வாழ்கின்றான். இந்நிலையில் மூன்று நிலைப்பாடுகளை பொதுவாக எழுத்தாளரிடையே காணக்கூடியதாய் உள்ளது.

ஒரு பிரிவினர், பிரச்சினைகளையும், முரண்பாடுகளையும், துன்ப துயரங்களையும் எதிர்நோக்காதவராய், அவற்றுடன் சம்பந்தப்படாமல், இன்பமூட்டுவதையே எழுத்தின் தலையாய நோக்கமாய்க் கொண்டு, அதற்கு இயைய கற்பனைச் சம்பவங்களையும், கதைகளையும், உணர்ச்சிகளையும் இலக்கியமாக்குபவர்கள். இவர்களில் சிலர் கூறும் வாதம் சுவையானது. “வாழ்க்கை பலருக்குத் துன்பமாயுள்ளது என்பதை நாமும் அறிவோம். எனவே துன்ப மயமாய் அமைந்த வாழ்க்கைக்கு மேலும் துயர் கூட்டுவதுபோல, சஞ்சலத்தையும், அவலத்தையும், அருவருப்பையும் இலக்கியத்தில் எதற்காகப் புகுத்த வேண்டும்? ஆகவே, துன்பத்தின் மத்தியில் துளிநேர மாற்றத்தை அளிப்பதாய், கற்பனையிலேனும் களிப்பையும் கவர்ச்சியையும் நாம் கொடுத்து உதவ விரும்புகிறோம்; முயல்கிறோம்.” இவ்வாறு அவர்கள் தமது நிலைப்பாட்டிற்குச் சமாதானமும் விளக்கமும் கூறுவர். நடைமுறையில் பெரு வணிக நிறுவனங்களின் குரலாகவே இது இருப்பதைக் கண்டு கொள்ள அதிக நேரம் பிடிக்காது. தென்னிந்தியாவிலே பெரும் தொழிற்துறையாக வளர்ந்துள்ள சினிமா இத்தகைய வாதத்தின்  துணையுடனேயே, ‘அபினி’யாக மக்களுக்கு ஊட்டப்படுகிறது என்பதனை நாம் அறிவோம். பல லட்சக் கணக்கில் வெளியிடப்படும் ‘குமுதம்’, ‘ஆனந்த விகடன்’ முதலிய சஞ்சிகைகளும் ‘துன்பப்படும் மக்களுக்கு மகிழ்வூட்டுவதற்காகவே’ வெளிவருகின்றன எனக் கூறப்படுவதுண்டு. “எனது குறிக்கோள் மக்களை மகிழ்விப்பது ஒன்றே” என்றுதான் ஜெமினி அதிபரும் ஆனந்தவிகடன் வெளியீட்டாளருமான வாசன் எப்பொழுதும் கூறிவந்தார்.

இப்பிரிவினர் அனைவருமே பெருவணிகர் என்றோ, திட்டமிட்டு மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிப்போர் என்றோ நாம் கூற வேண்டுவதில்லை. இலக்கியம் தூய்மையானது; பேருணர்ச்சிகளுக்கு வாகனமாய் அமைய வேண்டியது; கற்பனை சார்ந்ததாய் இருக்க வேண்டியது என்று உண்மையாகவே நம்பும் எழுத்தாளரும் இருக்கக் கூடும். எவ்வாறாயினும் சமூகப் பிரச்சனைகளைப் பிரதிபலிக்காமல் மானசீக உலகில் இருந்துகொண்டு எழுதுவோர் ஒரு பிரிவினர் எனலாம்.

வரலாற்று அடிப்படையில் நோக்கும்போது, மன்னராட்சிக் காலங்களிலும், நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பிலும், பாராட்டப்பெற்ற ‘அவை’ இலக்கியங்கள் இத்தகையன என்று பொதுப்படக் கூறலாம். குறிப்பாக உயர் மட்டத்தினரின் காதல் வாழ்க்கை, இன்பக் கேளிக்கை, உல்லாசப் பொழுதுபோக்கு என்பவற்றை மையமாகக் கொண்டு எத்தனையோ சிற்றின்ப நூல்கள் தோன்றின. இவற்றின் மிச்ச சொச்சத்தை நவீன காலத்திலே ஐயத்துக்கிடமின்றி நாம் காணக் கூடுமாயினும், முதலாளித்துவ சமுதாயத்திலே, வாழ்க்கையை, முற்றுமுழுதாகப் புறக்கணிக்கும் இலக்கியங்கள் தோன்றுவது குறைவு என்றே கூற வேண்டும்.

இன்னொரு பிரிவினர், மேலே நாம் விவரித்த சமுதாய முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் ஓரளவுக்கு நோக்கி, அவற்றைத் தமது எழுத்தின் பொருளாகக் கொள்பவர்கள். சமுதாயத்திலே பரவலாகக் காணப்படும் துன்ப துயரங்களை உணர்ச்சியின் அடிப்படையிலே அனுதாபத்துடன் பார்க்கும் இப்பிரிவினர், முந்தைய பிரிவினரோடு ஒப்புநோக்குமிடத்து தம்மைச் சுற்றியுள்ள யதார்த்தத்தை எதிர்நோக்குகின்றனர் என்பதில் ஐயமில்லை. எனினும் சமுதாய நிலைமைகளை பிரதிபலித்தாலே போதும் என்னும் எண்ணம் இவர்களில் பெரும்பாலானோரை பற்றிக் கொண்டிருக்கிறது என்பதிலும் ஐயமில்லை. அதாவது முதற்பிரிவினர் பிரச்சனைகள் இருப்பதையே எழுத்தில் பிரதிபலிக்கவில்லை; அதனால் அப்பிரச்சனை இலக்கியத்திற்கு உகந்த உரிய பொருட்கள் அல்ல என்னும் கருத்தைக் கொண்டவராய் உள்ளனர். இரண்டாவது பிரிவினரோ இதற்கு மாறாக, சமுதாயப் பிரச்சினைகள் இலக்கியத்தில் இடம் பெறுவதை ஏற்றுக் கொள்கின்றனர். எனினும் தமது கடமை, அல்லது பொறுப்பு அவற்றைத் தத்ரூபமாகச் சித்தரித்து விடுவதே என்று கருதுகின்றனர். காலப்போக்கில் சமுதாயம் திருந்தும் என்ற நம்பிக்கையும் இவர்களுக்கு உண்டு.

வரலாற்று அடிப்படையில் நோக்கும்பொழுது, நிலப்பிரபுத்துவ சமுதாயத்தை அடுத்து வந்துள்ள முதலாளித்துவ சமுதாய அமைப்பில், சந்தைக்குப் பொருள் தயாரிப்போருள் ஒருவனாக மாற்றப்பட்டுள்ள எழுத்தாளன், வாழ்க்கைப் போராட்டத்தின் அடிப்படையில் வேலைத் தட்டுப்பாடு, மோசடி, ஏற்றத்தாழ்வு, சுரண்டல் முதலிய கொடுமைகளை அனுபவரீதியாகவும், அறிவுரீதியாகவும் ஓரளவு கண்டு, அவற்றை இலக்கியத்திலும் பிரதிபலிக்கிறான். ஆயினும், இவற்றை எல்லாம், அவன் எழுத்தாளன் என்னும் வகையில் தனிப்பட்ட முறையிலும், தனிப்பட்ட மாந்தரின் அவலங்களாகவுமே எழுதுகிறான். இதன் விளைவாக, துன்ப துயரங்களை கண்டு கண்ணீர் வடித்து, இரங்கி ஏங்கும் நிலைக்குப் பெரும்பாலும் அவன் தள்ளப்படுகிறான். யதார்த்தத்தைக் கண்டு மனம் நொந்து வெதும்புகிறான்; சில சமயங்களில் சினங்கொண்டு சீறவும் செய்கிறான்; எனினும் அதற்கு மேல் அவன் நோக்கு பெரும்பாலும் போவதில்லை.

நவீன உலகில் பரவலாகப் பொதுமைச் சிந்தனைகளும், சோஷலிசக் கருத்துக்களும் நிலவுவதால், அவற்றாலும் இரண்டாம் பிரிவு எழுத்தாளர்கள் சிலர் ஈர்க்கப்படுவதுண்டு. எனினும் அவர்களிடத்தும், இலக்கியத்தை ‘பிரச்சாரம்’ ஆக்குதல் கூடாது என்னும் சில ஐயங்களும், அச்சங்களும் ஆழமாக வேரூன்றி இருப்பதைக் காணலாம்.

பல்வேறு வரலாற்றுக் காரணங்களினால், கடந்த கால் நூற்றாண்டு காலத்திலே, ஈழத்துத் தமிழிலக்கியத்தில் இப்போக்கு கணிசமான தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது எனலாம்.

எனினும் சமீப காலத்தில் பல இளைஞர்களிடையே, குறிப்பாக கிராமப் பக்கங்களில் வாழும் எழுத்தாளர்களிடையே, பிரச்சினைகளை இன்னும் நுணுக்கமாகவும், தூலமாகவும் ஆராய்ந்து அவற்றுக்குப் பரிகாரம் கூறும் இலக்கியப் படைப்புக்கள் வேண்டும் என்னும் கருத்து வேகம் பெற்று வருதலைக் கவனிக்கக் கூடியதாய் உள்ளது. இதற்குத் தருக்கரீதியான காரணங்களும் இல்லாமல் இல்லை. மனிதாபிமான உணர்வுடன் நடைமுறைப் பிரச்சினைகளை சித்தரித்தல் ஏற்றதே என்னும் கோட்பாடு ஓரளவு வழக்காகிய பின், அடுத்து என்ன? என்னும் வினா எழுதல் இயல்பே. அது மட்டுமன்று. பிரச்சினைகளை மேலும் கூர்ந்து நோக்கி, ஒவ்வொன்றின் காரண காரிய தொடர்புகளை விளங்கிக் கொண்டு எழுதும்போது, அவற்றை நீக்க வேண்டிய அவசியத்தையும், அதற்கான வழிவகைகளையும் விவரித்தல் தவிர்க்க இயலாததே. நோயை நுணுக்கமாக விளக்கி விவரித்தால் மட்டும் போதுமா? நோயாளியின் மீது இரக்கப்பட்டால் மட்டும் போதுமா? நோயின் வரலாற்றை ஆதியோடு அந்தமாகக் கூறினால் மட்டும் போதுமா? நோய் தீர மருந்தும் மார்க்கமும் வேண்டாமா?

இன்னும் ஒரு காரணமும் உண்டு. ஒரு காலகட்டத்தில் இரண்டாவது பிரிவைச் சேர்ந்த எழுத்தாளர்கள் புதுமையின் பெயரிலும் புரட்சியின் பெயரிலும் இலக்கியத்தில் புகுத்திய பொருள்களும் சித்தரிப்பு முறைகளும் இன்று வர்த்தக வெளியீடுகளிலும், சாதாரணமாக இடம்பெறத் தக்கவையாகி விட்டன. ‘அரங்கேற்றம்’ போன்ற திரைப்படமும் ‘யதார்த்தப்’ படைப்பு எனப் பலர் கருதுமளவிற்கு, பொருள் எடுத்தாளப்படுகிறது. அதாவது இனம் காண்பது கடினமாகி விட்டது எனலாம்.

இந்நிலையில், சமுதாயத்தில் காணப்படும் முரண்பாடுகளையும், துன்ப துயரங்களையும், போராட்டங்களையும் உதிரியான தனிமனிதர்களின் பிரச்சினைகளாக மாத்திரம் கண்டு காட்டாமல் அவற்றை வர்க்கங்களுக்கு இடையே நிகழும் போராட்டத்தின் வெளிப்பாடுகளாக காண்பது இன்றியமையாததாக ஆகிறது. இரண்டாவது பிரிவிலே தொடங்கியபோதும், வர்க்க அடிப்படையிலே பாத்திரங்களை அணுகாமல் விசேஷமான தனிப்பிறவிகளை இலக்கிய மாந்தராகக் கொண்டமையாலேயே, ஒரு காலத்து ‘முற்போக்கு’ எழுத்தாளர் ஜெயகாந்தன், இன்று ‘பிரம்மோபதேசம்’ செய்பவராக உருமாறியுள்ளார். இது ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரது தனிப்பட்ட பலவீனம் மட்டுமன்று; அவன் பற்றிக் கொண்டிருந்த இலக்கியக் கோட்பாட்டிலே உள்ளார்ந்த பலவீனமாய் இருந்த அம்சத்தின் பரிணாமம் என்றும் கூறலாம் அல்லவா? ஜெயகாந்தனை விதிவிலக்கான ‘வில்லனாக’ நாம் விவரிக்க வேண்டியதில்லை. பல எழுத்தாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எடுத்துக்காட்டு என்றே கொள்ள வேண்டும். வர்க்க ஆய்வின் அடிப்படையில், தூலமான சந்தர்ப்பங்களில் பாத்திரங்களை சித்தரிக்கத் தவறும் எந்த எழுத்தாளரும் ஜெயகாந்தன் ஆவதற்கு அதிக நாள் பிடிக்காது.

இதை இன்னொரு வகையாகவும் நோக்கலாம். ஜெயகாந்தனது எழுத்தில் இன்றும் நுணுக்க விவரங்களைக் கூறும் ‘யதார்த்த’ப் பண்பு, அதாவது இயற்கையாகப் பாத்திரங்களைத் தீட்டும் ஆற்றல் குறைவின்றியே இருக்கிறது. மனிதாபிமான உணர்வும் இல்லையென்று அடித்துக் கூற இயலாது. ஆயினும் சமுதாய மாற்றத்துக்கு ஆதரவு தருபவராக அவர் இன்று இல்லை. எனவே பிழை எங்கு உள்ளது என்று கவனமாய்த் தேட வேண்டும்.

இந்த இடத்திலேதான் மூன்றாவது பிரிவினர் முக்கியத்துவம் பெறுகின்றனர். சமுதாயத்தை நுணுக்கமாகப் பிரதிபலிப்பது மட்டுமின்றி, அதனை மாற்றி அமைக்கும் பணியில் பங்குபற்றுவதுடன், அப்பணி வெற்றி பெறுவதற்குரிய மாற்றங்களை இலக்கியப் பொருளாகத் துணிந்து ஏற்றுக் கொள்வதும் இன்றைய தேவையாகும் என இப்பிரிவினர் வற்புறுத்துகின்றனர். இவ்வாதத்தை இலகுவில் ஒதுக்கிவிட முடியாது. அனுபவமும் அனைத்துலகப் போக்கும் இவ்வாதத்துக்கு அரண் செய்வனவாகவே உள்ளன.

வரலாற்று அடிப்படையில் நோக்கும்பொழுது, தொழிலாளர், விவசாயிகள் வர்க்கத்திலிருந்து தோன்றும் கலை இலக்கியக் கோட்பாட்டின் காத்திரமான குரல் இது என்பது வெளிப்படை. எதிர்காலத்தை மாற்றி அமைக்கும் பெரும் பணிக்கு அவர்கள் தலைமை தாங்குபவர்கள் ஆதலின் அக்குரல் வலிமை உடையது என்பதில் ஐயமில்லை. இக்கோட்பாடு இலக்கியத்தில் செயற்படுகையில் சிறப்பான பிரச்சினைகள் தோன்றும் என்பது உண்மை. கலையழகு, உருவம், நம்பகத்தன்மை, ஏற்புடைமை, மொழி நயம் முதலிய பல்வேறு அம்சங்கள் இணைதல் வேண்டும். புதிய நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். ஆயினும் இவை எதிர்நோக்க வேண்டிய சவால்களே. இந்தக் காலகட்டத்தில் இன்று ஈழத்து எழுத்தாளர்கள் வந்து நிற்கின்றனர். தருக்கரீதியாக வளர்ந்து வந்துள்ள இப்போக்கை தக்கபடி முன்னெடுத்துச் செல்வதிலேயே எமது எதிர்காலம் தங்கியுள்ளது.

(இக்கட்டுரை ‘தாயகம்’ இதழில் 1974ஆம் ஆண்டில் வெளியாகி, கைலாசபதியின் மறைவையடுத்த ஒரு மாத காலத்திற்குள் ஈழத்து நாவலாசிரியர் செ. கணேசலிங்கன் பதிப்பித்த நினைவு மலரான ‘இலக்கியச் சிந்தனைகள்’ என்ற நூலில் இடம் பெற்றது.)

இந்தி திணிப்பும் தமிழ் ஆட்சி மொழியும் 2

கே.பாலகிருஷ்ணன்

ஒரு மாநிலத்தின் மக்களோடு தொடர் புடைய நிர்வாகம் நடத்திட வேண்டுமெனில் அந்த மாநிலத்தின் மொழியினை ஆட்சி மொழி யாக கொள்வதே உகந்ததாகும். அந்த வகையில் தான் 1924 கான்பூர் மாநாட்டில் காந்தி முன் மொழிந்த ஆட்சி மொழி சம்பந்தமான தீர்மானத் தில் மாநில அளவில் அந்தந்த வட்டார மொழி கள் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதிலும் இந்தி திணிப்பை எதிர்த்து பெரும் போராட்டம் தமிழ கத்தில் நடைபெற்றது. ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ், இங்கும் தமிழ், எங்கும் தமிழ்’ என்ற முழக்கங்கள் எழுந்தன.

இந்திய விடுதலைக்குப் பின் மொழிவழி மாநிலங்கள் ஏற்படுத்துவதற்காக மக்கள் போராட்டங் கள் வெடித்தன. 1956 ஆம் ஆண்டு மாநிலங்களின் எல்லை மறுவரையறைச் சட்டம் நிறைவேற்றப் பட்டது. அரசியல் சட்டத்தின் பிரிவு 345 மாநிலங் களில் வட்டார ஆட்சி மொழியை உருவாக்கு வதற்கான வாய்ப்புகளை அளித்துள்ளது. 1955 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கேர் தலைமை யிலான ஆட்சிமொழிக்குழு மொழி அடிப்படை யில் மாநிலங்கள் அமைக்கப்பட்டால் மாநில மொழிகளை ஆட்சி மொழியாக்கிக் கொள்ள லாம் என பரிந்துரைத்திருந்தது. அதன்படி 1956-ல் சென்னை மாநிலம் அமைக்கப்பட்ட பின்னர், தமிழ்நாடு ஆட்சி மொழிச்சட்டம் சட்டமன்றத் தில் நிறைவேற்றப்பட்டது. இதில் தமிழ் மொழியே தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக இருக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கென பயிற்சி வகுப்புகள், இதனை நடைமுறைப்படுத்த ஆட்சி மொழி குழுக்கள் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் கடந்த ஆட்சிமொழி சட்டம் நிறை வேற்றப்பட்ட 1956 முதல் தற்போது 2017 வரை தமிழ் ஆட்சிமொழி மற்றும் பயிற்று மொழியின் செயலாக்கம் பற்றி ஆய்வு செய்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஆர்ப்பாட்டமான அறிவிப்புகளை யும், அவை நிறைவேற்றப்பட்ட விதம் குறித்தும் ஒப்புநோக்கினால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாட்டை காண முடியும். இன்றைக்கும் தமிழக அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்டம் செயல்படுத்தப்படுவதாக சொன்னாலும், அது 40 விழுக்காட்டுக்கும் குறைவாகவே செயல் படுத்தப்படுகிறது. ஆனால் அண்டை மாநிலங் களான கேரளம், கர்நாடகம், ஆந்திர பிரதேசம் ஆகியவற்றில் அவர்களின் ஆட்சி மொழித் திட்டம் 75 சதவிகித அளவுக்குச் செயல்படுவதாக பத்திரிகையாளர் ஞாநி கூறியுள்ளார்.

தமிழ் ஆட்சிமொழி – சட்டம்
இந்நிலை ஏற்படுவதற்கான காரணங்களை பரிசீலிக்க வேண்டும். அரசியல் சட்டத்தின் பிரிவு 345 அந்தந்த மாநிலத்தில் அந்தந்த மாநில மொழியை ஆட்சி மொழியாக்கிக் கொள்ள வகை செய்கிறது. அதேசமயம், மாநிலங்களுக்கு இடையிலோ, இந்திய ஒன்றியத்துடனோ தொடர்பு கொள்ள ஒன்றிய மொழியே இருக்க வேண்டும் என்ற பிரிவு உள்ளது. அதாவது அந்தந்த மாநில மொழிகளில் தொடர்பு கொள்ள முடியாது. மாறாக, இந்தி (அல்லது) ஆங்கிலத்தில்தான் தொடர்பு கொள்ள முடியும். அடுத்தடுத்த பிரிவுகளில் உள்ளவை அதை விட மோசமானது. சட்டமன்றத்தில் கொண்டுவரப்படும் அனைத்து மசோதாக்கள், அவற்றுக்கான திருத்தங்கள், அனைத்து சட்ட முன் வரைவுடன், ஆளுநர் பிறப்பிக்கும் அவசர சட்டங்கள், மாநில சட்டமன்றம் வெளியிடும் ஆணைகள், ஒழுங்குமுறைகள், விதிமுறைகள் ஆகிய அனைத்துக்குமான அதிகாரபூர்வமான பிரதிகள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என (348(1)ஏ)என்ற பிரிவு) குறிப்பிட்டுள்ளது. இவை அனைத்தும் மாநில மொழியில் கொண்டு வந்தா லும், இதற்கான ஆங்கில மொழி பெயர்ப்புகளே அதிகாரப்பூர்வமான பகுதிகளாக கருதப்படும். தமிழ்ப் பிரதிகளை புறந்தள்ளி ஆங்கில பிரதிகள் தான் அதிகாரப்பூர்வமானவை என்று கூறுவதன் மூலம் அதிகாரபூர்வமான ஆட்சி மொழி ஆங்கில மாகத்தான் இருக்கும் என்பதற்கு மேலும் விளக் கம் தேவையில்லை.
மேலும் 1956-ம் ஆண்டு தமிழ்நாடு சட்ட மன்றத் தில் நிறைவேற்றப்பட்ட தமிழ் ஆட்சிமொழி சட்டத்தின் மூன்றாம் பிரிவு கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது.

“2-ம் பிரிவில் என்ன கூறப்பட்டு இருப்பினும், அரசியலமைப்பு சட்டத்தின் 346, 347 பிரிவுகட்கு ஊறின்றி இந்த சட்டத்தின் தொடர்புக்கு முன்பு ஆங்கிலம் பயன்பட்டு வந்த அலுவல்முறை காரியங் கள் அனைத்துக்கும் ஆங்கிலத்தை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.” இதே சட்டத்தின் 2வது விதி தமிழ்நாட்டில் தமிழே ஆட்சிமொழியாக இருக்கும் என அறிவிக்கிறது. அதற்கு மாறாக 3வது விதி ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட அனைத்து காரியங்களுக்கும் ஆங்கிலத்தையே பயன்படுத்த வேண்டும் என திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது. ஆம்! வலதுகையால் தமிழ்மொழிக்கு வழங்கப் பட்ட உரிமை இடதுகையால் தட்டி பறிக்கப் பட்டு விட்டது.

இதேசட்டத்தின் 4வது பிரிவு ‘மாநில அரசு அவ்வப்போது வெளியிடுகிற அறிவிக்கையின் மூலமாக, அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்படு கின்ற அலுவலக நடைமுறை செயல்களுக்கு தமிழை பயன்படுத்த வேண்டும் என கட்டளையிடலாம்’ என கூறுகிறது. அதாவது, ஆங்கிலத்தை நிரந்தர மாக வைத்துக் கொண்டு அவ்வப்போது தமிழை பயன்படுத்தலாம் என கட்டளையிடலாம். அவ்வளவு தான். இந்த சட்டத்தை வைத்துக் கொண்டுதான் தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சிமொழி என நாம் மார் தட்டிக் கொள்கிறோம்.
மேற்கண்ட இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட போது, தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அடிப்படையில் காங்கிரஸ் கட்சி இந்திக்கு வக்காலத்து வாங்குபவர்கள் என்பது அறிந்ததே. ஆனால் தமிழ்நாட்டில் தமிழுக்கு ’போர் முரசு’ கொட்டி 1967-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக இந்த நிலைமையில் ஏதும் மாற்றம் கொண்டு வந்ததா? மேற்கண்ட சட்டத்தில் தமிழ் தான் ஆட்சி மொழி என வற்புறுத்தும் வகையில் உரிய திருத்தங்களை மத்திய அரசின் அனுமதி யின்றி திமுக நிறைவேற்றி இருக்க அனைத்து வாய்ப்புகளும் இருந்தன. ஆனால் அவர்கள் சுண்டு விரலைக்கூட அசைக்கவில்லை.

தாய்மொழிக் கல்வி
தாய்மொழிக் கல்வியே சிந்தனை திறனை வளர்ப்பதற்கு அடிப்படையானது. 1949-ம் ஆண்டு அமைக்கப்பட்ட பல்கலைக்கழக கல்விக் கமிஷன் தாய்மொழிக் கல்வியின் அவசியம் பற்றி “கல்வி கண்ணோட்டத்தைக் கொண்டு பார்த்தாலும் சரி, ஜனநாயக சமூகத்தின் பொது நலனைக் கொண்டு பார்த்தாலும் சரி, கல்வி பிரதேச மொழியில் இருக்க வேண்டியது அவசியமா கும். இவ்வாறு கல்வி பயிலுவதுதான் அவர்களுடைய இலக்கியத்தை செழுமைப்படுத்தவும், கலாச் சாரத்தை வளர்க்கவும் உதவும். இவ்வாறு இயற் கையாக கல்வி பயின்ற மக்கள் கல்வியிலும், கற்பனையிலும் உயர்ந்த மட்டங்களை எட்டுவது சாத்தியமாகும். ஆராய்ச்சிக்கும் அறிவின் எல்லையை விஸ்தரிப்பதற்கும் பலமான ஆதிக்கத்தை இது அவர்களுக்குக் கொடுக்கும்” என குறிப்பிட்டது.

யுனெஸ்கோ போன்ற சர்வதேச நிறுவனங் களே தாய் மொழிக் கல்வியையே வற்புறுத்துகின் றன. ஆங்கில ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற நாடுகள் அனைத்திலும் அந்நிய மொழியை தூக்கி எறிந்து விட்டு உடனடியாக சொந்த மொழியை ஆட்சி மொழியாகவும், தாய்மொழிக் கல்வியை நிலைநிறுத்தும் பணியை நிறைவேற்றியுள்ளதை பெரும்பாலான நாடுகளில் பார்க்க முடிகிறது. ஆனால் தமிழ்நாட்டில் இந்த நிலை ஏற்படவில்லை.

தற்போது தமிழ் பயிற்று மொழி பெருமளவு குறைந்து வருகிறது. உயர்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்த ஆங்கில பயிற்றுமொழி என்பது தற்போது ஆரம்பக் கல்வியிலும் புகுத் தப்பட்டு விட்டது. புற்றீசல் போல் ஆங்கில மழலையர் பள்ளிகள் தமிழ்நாட்டில் நடத்தப் பட்டு வருகின்றன. தமிழ்வழி கல்வி பயில்வதற்கு மாணவர்கள், பெற்றோர்கள் ஆர்வம் காட்டுவ தில்லை. தமிழ்வழிக்கல்வி வகுப்புகளில் மாணவர் கள் சேர்வதில்லை என கருத்து தெரிவிக்கப்படு கிறது. வேலை வாய்ப்புக்கும், நவீன வாழ்க்கைத் தேவைக்கும் அடிப்படையாக உள்ள பொறியி யல், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் இப்போது வரை தமிழ் வழிக்கல்வி அறிமுகப்படுத்தப்பட வில்லை. இதற்கான தமிழ் புத்தகங்கள் உருவாக் கப்படவில்லை. இலங்கையில் கூட இப்பிரிவு வகுப்புகளை தமிழ் வழிக்கல்வியில் படிக்க வாய்ப்பு உள்ள போது தமிழ்நாட்டில் இதற்கான வாய்ப்பு கள் இல்லாதது யாருடைய குற்றம்?

மேலும், வேலைவாய்ப்புக்கு உகந்த கல்வி ஆங்கில வழிக்கல்வி என்ற எண்ணம் ஊட்டி வளர்க்கப்பட்டுள்ளது. ஆங்கில வழியில் படித்த பல லட்சம் பேர் வேலையின்றி தவித்துக் கொண் டுள்ளார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

தமிழ்மொழிக் கல்வியை கட்டாயமாக்கி விட்டு மாற்று மொழிகளில் கல்வி பெறுவோர் விதிவிலக்கு அல்லது அனுமதி பெற்று படிக்க வேண்டும் என்ற நிலையை ஆரம்பத்திலேயே உருவாக்கி இருந்தால் நிச்சயம் தமிழ் வழிக்கல்வி பலமடைந்திருக்கும்.

தற்போது தாராளமய பொருளாதார கொள் கையின் விளைவாக கல்வி என்பது வியாபார மாக்கப்பட்ட சூழலில் கல்வி வியாபாரிகள் தங்களது லாப வேட்டைக்கு ஆங்கில வழிக் கல்வியை திணிப்பது அசுர வேகத்தில் நடந்து கொண்டுள்ளது. தமிழ் பயிற்று மொழியாக மாறாதவரை தமிழ் ஆட்சி மொழியாவது கற்பனையாகவே இருக்கும்.

நீதிமன்ற மொழி
அரசியல் சட்டம் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதின்றங்களில் ஆங்கிலமே நீதிமன்ற மொழி யாக இருக்க வகை செய்துள்ளது. உயர்நீதிமன்றங் களுக்கு கீழ் உள்ள கீழமை நீதிமன்றங்கள், தீர்ப் பாயங்கள் அனைத்திலும் தமிழே நீதிமன்ற மொழியாக இருக்க வேண்டுமென பல அரசாணை கள் வெளியிடப்பட்டுள்ளன. தீர்ப்புரைகள் தமிழிலேயே வழங்கிட வேண்டுமென வற்புறுத்தப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில், இது சொற்ப அளவே நடந்து வந்தது. ஆங்கிலத்தில் தீர்ப்புரை எழுதிட வேண்டுமாயின் உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற்றிட வேண்டுமென விதி வகுக்கப்பட்டிருந் தது. ஆனால் அடிக்கடி அனுமதி கேட்டு நீதிமன்ற நடுவர்கள் விண்ணப்பிப்பதால் அந்த ஆணையை மாற்றி தமிழில் (அ) ஆங்கிலத்தில் தீர்ப்புரை எழுதலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு விட்டது. அதைதொடர்ந்து பெரும்பாலான தீர்ப்பு களும் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டு வருகின்றன.

அரசியல் சட்டப்பிரிவு 348 (1) உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்களில் ஆங்கிலம் நீதிமன்ற மொழியாக இருக்க வேண்டுமென குறிப்பிட் டுள்ளது. அதேசமயம் 348(2) பிரிவும் 1963-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அலுவல் மொழிச் சட்டம் பிரிவு 7-ன்படி உயர்நீதிமன்ற தீர்ப்புரைகள் மற்றும் உத்தரவுகள் இந்தி (அ) அந்த மாநிலத் தின் ஆட்சி மொழியில் வெளியிடுவதற்கு, சம்பந் தப்பட்ட மாநில ஆளுநர், குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று வழங்கிட உத்தரவிடலாம் எனவும், அவ்வாறு அந்த மொழிகளில் வழங்கப்படும் தீர்ப்புரைகள் அல்லது உத்தரவுகளின் ஆங்கில மொழி பெயர்ப்பும் இருக்க வேண்டும் என தெளி வாக கூறப்பட்டுள்ளது.

இந்த பிரிவுகளை பயன்படுத்தியே பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிர தேசம் ஆகிய மாநிலங்களில் இந்தியில் தீர்ப் புரைகள் மற்றும் உத்தரவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் தமிழ்நாடு, குஜராத், சட்டீஸ்கர் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு இதே உரிமை மறுக்கப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக தமிழக ஆளும் கட்சிகள் மத்திய அரசில் கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றிருந் தன. இக்கட்சி தலைவர்கள் நினைத்திருந்தால், மத்திய அரசிடம் வற்புறுத்தி மேற்கண்ட அனு மதியை பெற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் தீர்ப்புரைகள் மற்றும் உத்தரவுகளை வழங்குவதற்கான வரலாற்று சிறப்பு மிக்க ஏற் பாட்டினை செய்து முடித்திருக்க முடியும். இதன் மூலம் கீழமை நீதிமன்றங்களில் தமிழ் முழுமை யான நீதிமன்ற மொழியாக உயர்த்தப்பட்டிருக் கும். ஆனால் இக்கட்சித் தலைவர்கள் இந்தப் பிரச் சனையில் கொஞ்சமும் அக்கறை செலுத்தவில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

தமிழும் திமுக – அதிமுகவும்
தமிழ்நாட்டில் 1967 முதல் தொடர்ந்து ஆட்சி யில் நீடித்து வரும் திமுக, அதிமுக அரசுகள் மேற்கண்ட நிலைமைக்கு முக்கிய காரணமாகும். “இந்திக்கு ஒரு இந்தியத் தகுதியை தேடிக் கொடுக் கும் காங்கிரஸ் இயக்கமும், இந்தி எதிர்ப்பை கேடயமாக்கி ஆங்கிலத்தை ஆதரிக்கும் திராவிட இயக்கமும் தமிழுக்கு ஒரு தனி இடத்தை மறுக் கின்றன” என பேராசிரியர் கோ. கேசவன் கூறி யுள்ளார். துவக்க காலம் முதலே இந்தி திணிப்பை எதிர்த்த திராவிட இயக்கம், அந்த இடத்தில் தமிழை அரங்கேற்றுவதற்கு மாறாக ஆங்கிலத்தை வழிமொழிந்தார்கள்.

நாடு விடுதலையடைந்த பின்னர், தமிழ் பிர தேசங்களை கொண்டு தமிழ்நாடு மாநிலத்தை உருவாக்கிட வேண்டுமென கம்யூனிஸ்ட்டுகள், ம.பொ.சி. போன்றோர் போராடியபோது மொழி வழி மாநிலம் அமையக்கூடாது என குரல் கொடுத்த வர்கள் தந்தை பெரியாரும், ராஜாஜியும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போராட்டம் எழுச்சி யுடன் நடைபெற்ற காலத்தில் திராவிட முன் னேற்றக் கழகம் உதயமாகி இருந்தது. ஆனால் இப்போராட்டங்களில் இடம்பெறாமல் திமுக ஒதுங்கியே இருந்தது கவனிக்கத்தக்கது. அப்போ தெல்லாம் திமுக திராவிட நாடு எண்ணத் திலேயே மிதந்து கொண்டிருந்தது.

இந்த காலம் முழுவதும் திமுக என்ன நிலை மேற்கொண்டது எழுத்தாளர் தோழர். சு. வெங்கடேசன் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

“தமிழே இன்றி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு நிர்வாகத்துக்கு எதிராக திமுக மௌனம் சாதித்தது. ரயில் நிலையங்களில் இந்தியை அழித்தும், டால்மியாபுரத்திற்கு தமிழ்ப்பெயர் வைக்கப்பட வேண்டுமென்றும் கோரி போராட்டம் நடத்திய திமுக கன்னித் தமிழை ஆட்சி மொழி யாக்கவோ, பயிற்று மொழியாக்கவோ வலி யுறுத்தி எந்த போராட்டத்தையும் நடத்தவில்லை. குறிப்பிட்ட சில மாவட்டங்களிலாவது தாய் மொழியில் நிர்வாகம் நடைபெற வேண்டும்; பயிற்று மொழியாக தாய்மொழி இருக்க வேண் டும்; குறைந்தபட்சம் சட்டமன்ற உறுப்பினர் களுக்கு மொழி பெயர்ப்பு வசதியாவது செய்து தரப்பட வேண்டும் என ஐந்தாண்டு காலம் சட்ட மன்றத்திலேயே எழுப்பப்பட்ட குரலை திமுக கண்டுகொள்ளவில்லை. காரணம், அன்றைய சென்னை மாகாணத்தின் ஆட்சி மொழியாக ஆங்கிலம் தான் இருக்க வேண்டுமென்பதே திமுகவின் நிலைப்பாடு.”

தமிழ் மொழியும் கம்யூனிஸ்டுகளும்
சென்னை மாநில சட்டசபையில் நீண்டகால மாகவே மாநில மொழிகளை ஆட்சி மொழியாக்க வேண்டும்; மற்றமொழிகளில் பேசுபவர்களது உரையை மாநில மொழியில் மொழிபெயர்க்க மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்க வேண்டு மென தீர்மானம் முன்மொழியப்பட்டது. அதனை ஆதரித்து பேசிய கம்யூனிஸ்ட் கட்சி தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான பி. ராமமூர்த்தி – விடு தலைபெற்று ஐந்தாண்டு காலம் கடந்த பின்னரும் நாம் இன்றும் இந்த அந்நிய பாஷையை வைத்துக் கொண்டு, அந்த பாஷையில் பேசுவது, வேடிக் கையிலும் வேடிக்கையாக இருக்கிறது. உலகில் வேறு எந்த நாட்டிலும் சுதந்திரம் வந்த பின்னர் இப்படிப்பட்ட ஒரு காட்சியை காண முடியாது” என தீர்மானத்தை ஆதரித்து, வரலாற்றில் முதன் முறையாக தமிழில் பேசினார். அதனை தொடர்ந்து பேசிய ஜீவானந்தம் அவர்களும் சென்னை மாநில சபையில் தமிழ் குரல், கன்னட குரல், தெலுங்கு குரல், மலையாள குரல் தான் ஒலிக்க வேண்டும் என வாதிட்டார்.

அதன் பின்னர் ஆளுநர் உரையின் மீது பேசிய ஜீவானந்தம் அந்தந்த மாநிலத்தில் அந்தந்த மாநில மொழியே அரசு மொழியாக இருக்க வேண்டும். இந்த மாநிலத்தின் ஆட்சி மொழியாக தமிழ்தான் இருக்க வேண்டுமென வற்புறுத்தினார். ஆங்கிலத் தில் மட்டுமே பேச முடியும் என்ற சென்னை மாநில சட்டசபையில், நிதிநிலை அறிக்கையின் மீது தோழர் பி.ராமமூர்த்தி தமிழில் நீண்ட உரை யாற்றி புதிய வரலாறு படைத்தார். இவரது தமிழ் உரையை நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் வெகு வாக பாராட்டினார். அதன் பின்னர் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் பேசிய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் தமிழ் ஆட்சிமொழியாக இருக்க வேண்டுமென அனல் பறக்க சட்டமன்றத்தில் வாதாடினார்கள். தமிழக வரலாற்றில் தமிழுக் காக சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் அழுத்தமான குரல் கொடுத்தவர்கள் கம்யூனி ஸ்ட்டுகள் என்பது வரலாற்று உண்மையாகும்.

தீவிர போராட்டத்தின் விளைவாக 1956-ல் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப் பெற்று 1956 டிசம்பர் அன்று தமிழ் ஆட்சி மொழி மசோதாவை, சென்னை மாகாண சட்டமன்றத்தில் அமைச்சர் திரு. சி. சுப்பிரமணியம் முன்மொழிந்தபோது, அதனை வரவேற்று பேசியதுடன் இதனை படிப்படியாக கிராமங்கள் வரை விரிவுபடுத்திட வேண்டுமென கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அழுத்தமாக வாதாடினார்கள்.

ஒட்டுமொத்தத்தில், பலமொழி பேசும் இந்திய நாட்டில் இந்தியை திணிப்பதும், அதை எதிர்த்து நியாயமாக குரல் கொடுத்த திமுக மறுபக்கத்தில் ஆங்கிலத்தை திணிப்பதும் நடைமுறையாகி விட்டது. இந்நிலையில், இந்தியாவின் மொழிப் பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பதில் தெளிவான சிந்தனையுடன் செயல்பட்டவர்கள் கம்யூனிஸ்ட்டுகளே. நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற விவாதங்களை சற்று சீர்தூக்கி பார்த்தாலே இதனை புரிந்து கொள்ள முடியும்.

1968-ம் ஆண்டு மத்திய அரசு, ஆட்சிமொழி சட்ட திருத்தத்தையும் தீர்மானத்தையும் நாடாளு மன்றத்தில் நிறைவேற்றியதை முன்பு குறிப்பிட் டிருந்தோம். இம்மசோதா நிறைவேற்றப்பட்டதை யொட்டி தமிழ்நாட்டில் மாணவர்கள் மீண்டும் இந்தி திணிப்பை எதிர்த்து போராடத் துவங் கினார்கள். போராட்டக் களத்திலே இருந்த மாண வர்களை முதலமைச்சர் அண்ணாதுரை நேரில் சந்தித்து பேசினார். மேற்கண்ட சட்டதிருத்தத்தை யும் – தீர்மானத்தையும் எதிர்த்து சட்டமன்றத் திலே தீர்மானத்தை நிறைவேற்றுவேன் என மாண வர்களிடம் வாக்குறுதியளித்தார். அந்த வாக்குறு தியின் அடிப்படையில் தமிழ்நாடு சட்டப்பேரவை யின் சிறப்புக் கூட்டம் 23.1.1968 அன்று நடை பெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானத் தின் மீது முதலமைச்சர் அண்ணாதுரை உட் பட பல கட்சித் தலைவர்கள் திருத்தங்களை முன்மொழிந்ததுடன் சட்டப்பேரவையில் உரையாற்றினார்கள்.

ஏ.பாலசுப்ரமணியம் உரை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சட்டமன்ற கட்சித் தலைவர் தோழர் ஏ. பாலசுப் பிரமணியம் விரிவான திருத்தங்களை முன்மொழிந்து நீண்ட உரையாற்றினார். இதனை வழிமொழிந்து தோழர் என். சங்கரய்யா உரையாற்றினார். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்மொழிந்த திருத் தங்களும், தோழர்கள் ஏ. பாலசுப்பிரமணியம், தோழர் என். சங்கரய்யா ஆகியோரது உரைகளும் மிகச் சிறந்த ஆவணங்களாகவும் இந்தியாவின் மொழிச்சிக்கலுக்கு தீர்வுகளை முன்மொழியும் வழிகாட்டிகளாகவும் சட்டப்பேரவை ஆவணங் களில் உள்ளன. அதன் முக்கிய பகுதிகள் கீழே: தோழர் ஏ.பாலசுப்ரமணியம் அவர்கள் முன்மொழிந்த திருத்தத்தின் முக்கிய பகுதிகள் வருமாறு:-

“பல்வேறு மொழிகளைப் பேசும் மக்களைக் கொண்ட இந்நாட்டில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடந்த சுதந்திரப் போராட்டத்தில் உருவான நாட்டின் ஒற்றுமையை பேணிப் பாதுகாத்து, மேலும் உறுதிப் படுத்துவதற்கு இந்நாட்டில் வழங்கும் எல்லா மொழிகளுக்கும் சம அந்தஸ்தை எல்லா மட்டங் களிலும் நல்குவது இன்றியமையாதது என்பதே இச்சபையின் திடமான கருத்து”.

இதற்கென கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண் டும் என்றும் இச்சபை வலியுறுத்துகிறது:-
1. அரசியல் சட்டத்தில் இந்திக்கு பிரத்யேக மான அந்தஸ்து அளித்திருப்பது அகற்றப்பட்டு, நாட்டின் பிற மொழிகளுக்கு கீழ்நிலையை அளிக்கும் பிரிவுகளையெல்லாம் நீக்கி, எல்லா இந்திய மொழிகளுக்கும் சம அந்தஸ்து நல்கும் வகையில் திருத்தப்பட வேண்டும்.
2. அரசியல் ஷரத்தின் 8வது ஷெட்யூலில் குறிப் பிடப்பட்டுள்ள மொழிகள் அனைத்தும் மத்திய அரசின் அலுவல்மொழிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
3. பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள் அரசி யல் சட்டத்தின் 8வது ஷெட்யூலில் உள்ள மொழி களில் நடப்பதற்கும், ஏககாலத்தில் மொழி பெயர்ப்புக்கும் ஏற்பாடு செய்திட வேண்டும்.
4. மத்திய அரசின் மசோதாக்கள், சட்டங்கள், உத்தரவுகள் போன்றவை அனைத்தும் 8வது ஷெட்யூலில் குறிப்பிட்டுள்ள மொழிகளில் பிரசுரிக்க வேண்டும்.
5. மத்திய அரசின் பணிமனைகள் (அலுவலகங்கள்) இருக்கும் மாநிலங்களில் அந்தந்த மாநில மொழி களிலேயே மக்களுடன் தொடர்பு வைத்து பணி யாற்ற வேண்டும்.
6. மாநில அரசுகள் மத்திய அரசுக்கு தத்தம் மாநில மொழியிலேயே கடிதம் எழுதுவதற்கும் அம்மொழியிலேயே பதில் பெறுவதற்கும் உரிமை வழங்கிட வேண்டும்.
7. ஒவ்வொரு பிரiஜைக்கும் தன் தாய் மொழி யிலேயே மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதற்கும் பதில் பெறுவதற்கும் உரிமை வழங்கிட வேண்டும்.
8. எட்டாவது ஷெட்யூலில் உள்ள எல்லா மொழிகளின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு சமமாக நிதிவசதிகளை வழங்கிட வேண்டும்.
9. எல்லா மாநிலங்களிலும் கல்வி நிலையங் களில் உயர்நிலை வரையிலும் அந்தந்த மாநில மொழிகளே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்.
10. அதேபோன்று அந்தந்த மாநிலத்தின் மொழியே மாநிலங்களில் நிர்வாக மொழியாகவும், உயர்நீதி மன்றம் வரை நீதிமன்ற மொழியாகவும் இருக்க வேண்டும். இவை யாவும் அடுத்த பத்தாண்டுகளில் முழுமையாக அமலாக துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
11. மொழிவழி சிறுபான்மையினருக்கு உயர் கல்வி வரை தங்கள் தாய்மொழியிலேயே கல்வி பயிலுவதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
12. மும்மொழித் திட்டம் என்பது பயனற்றது. அதேசமயத்தில் உயர்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தாய்மொழியைத் தவிர இதர இந்திய மொழிகளையும், ஆங்கிலம் அல்லது வேறு அந்நிய மொழிகளையும் மாணவர்கள் இஷ்டம் போல் கற்பதற்கு வசதியளிக்கப்பட வேண்டும்.

இத்தகைய விரிவான திருத்தத்தை சட்டமன்றத் தில் மொழிந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே. முதலமைச்சர் அண்ணாதுரை அவர்கள் முன்மொழிந்த திருத்தத்தில் கூட மத்தியில் ஆட்சி மொழி குறித்து குறிப்பிடப்பட்டதே தவிர, மாநிலத் தில் அந்தந்த மாநில ஆட்சி மொழியே இருக்க வேண்டுமென்றோ, அந்தந்த மாநிலங்களில் கல்வி நிலையங்களில், அந்தந்த மாநிலத்து மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டுமென்றோ குறிப்பிடப்படவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.
நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பேசும் போது “இந்தியாவில் இருக்கிற எல்லா தரப்பு மொழிகளுக்கும் சம அந்தஸ்து அளிக்கும் கொள் கையை எல்லோருக்கும் முழு உரிமையை வழங் கும் கொள்கையை முன்வைத்தால் கட்டாயமாக அதன் அடிப்படையில் எல்லா தரப்பு மக்களை யும் ஒருமித்த கருத்துக்கு கொண்டு வர முடியும்….” எந்த நாடும் சுதந்திரம் அடைந்தவுடன் அந்நிய மொழியை தூக்கி எறிந்து விட்டு தன்மொழிக்கு உரிய இடத்தை கொடுப்பதைத்தான் பார்க் கிறோம். அதற்கு மாறாக, எந்த மொழியில் சொல்வது, எந்த மொழியை நீதிமன்ற மொழியாக கொள் வது, எந்த மொழியை நிர்வாக மொழியாக கொள்வது என்பதை கேள்விக்குரிய விஷயமாக வைத்திருப்பதற்கு காங்கிரஸ்தான் பிரதானமாக பொறுப்பேற்க வேண்டும்.
“இந்த விசயத்தில், இங்கு பேசும்போது, சிலர் ஆங்கிலமே நீடிக்க வேண்டுமென்று விரும்புகிறார் கள். ஆங்கிலத்தை அதை விரும்பாத மக்கள் மீது கட்டாயமாக திணிக்கப்படும் ஏற்பாடு இருந்தால், அந்த ஏற்பாடு இந்தியாவின் ஒற்றுமையை குலைக்கும்.”

நமது அரசியல் சட்டத்தில் இந்திக்கு தனி சிறப்பு இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதை மாற்ற வேண்டும் என எங்கள் திருத்தம் வற்புறுத்து கிறது. இந்திக்கு தனி உயர்ந்த இடம் அளிக்கப்பட் டுள்ளதை ஏற்க முடியாது. எந்த ஒரு மொழிக்கும் தனிச்சலுகை இருக்கக்கூடாது; அந்த நிலைமையை மாற்றுவதற்கு அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்பது அவசியமானதாகும்.

எங்களைப் பொறுத்தவரையில் 14 மொழிகளும் (தற்போது 22 மொழிகள்) சம அந்தஸ்து பெற வேணடும் என்று கூறுகிறோம். அப்படிப்பட்ட ஏற்பாடு வரும் வகையில் இடைக்காலத்தில் ஆங்கிலம் துணை அலுவல் மொழியாக நீடிக்கலாம் என்பது தான் கருத்து. கடந்த காலத்தில் கட்டாயமாக ஒரு ஆட்சி மொழி வேண்டுமா என்ற கேள்வி கேட்கப் பட்டுள்ளது. ஏறத்தாழ 55 ஆண்டுகளுக்கு முன்பு உலகத்தின் சகல பிரச்சனைகளுக்கும் வழிகாட்டிய லெனின் இதற்கும் வழி கூறியிருக்கிறார். கட்டாய ஆட்சி மொழி தேவையா என்பது கேள்வி. தேவையில்லை என்று அவரே எழுதியுள்ளார். தடியால் அடித்து சொர்க்கத்துக்கு எவரையும் அனுப்ப முடியாது என கூறியுள்ளார். இணைப்பு மொழி எப்படி உருவாகும் என்பதற்கும் அவரே பதில் சொல்கிறார் “ஜனநாயகம் வளர வளர, தொழில்கள் பெருகப் பெருக, மக்கள் போக்குவரத்து அதிகரிக்க அதிகரிக்க, தானாகவே வரலாற்றுப் போக்கில் எந்த மொழி பயனுள்ளதாக உள்ளதோ அது இணைப்பு மொழியாக அமையும்”. அது தான் சரி. அதற்கு மாறாக, ஏதாவது ஒரு மொழிக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து அது கட்டாயமாக ஆக்கப்பட்டால், அது இந்தியாவிற்கு ஆபத்தாகவே முடியும்.

இதனை தொடர்ந்து பேசிய தோழர் என்.சங்கரய்யா அவர்கள் முதலமைச்சர் அவர்கள் 14 மொழிகளும் மத்திய ஆட்சி மொழியாக வேண்டும். அதற்கு அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டுமென்ற திருத்தத்தை நாங்கள் ஆமோதிக்கிறோம். அதே போல் முதலமைச்சர் கொண்டு வந்துள்ள திருத் தத்தில் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வை தமிழில் எழுதுகிறவர்கள் இந்திய தேசிய மொழி களான 14 மொழிகளிலும் எழுதலாம் என சேர்த்துக் கொள்வது ஒரு முன்னேற்றமாக இருக்கும்.

மும்மொழித் திட்டம்
மும்மொழி திட்டம் நிச்சயமாக தேவையில்லை. தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் தமிழை தவிர வேறு மொழியை கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டுமென்று சொல்ல நமக்கு உரிமையில்லை. அண்டை மாநில மொழிகளைக் கூட கற்றுக் கொள்ள சொல்ல நமக்கு உரிமை இல்லை. அப்படியிருக்க 6,000 மைல்களுக்கு அப்பால் உள்ள ஆங்கில மொழியை நம்முடைய மாணவர் கள் கட்டாயமாக படிக்க வேண்டுமென நாம் ஏன் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்? அவரவர் களின் தாய் மொழியைத் தவிர வேறு ஏதாவது ஒரு மொழியை படிக்கலாம் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, ஆங்கிலம்தான் படிக்க வேண் டும்; இந்திதான் படிக்க வேண்டுமென்று சொல்லக் கூடாது. மற்ற மொழிகளை படிப்பதை அவரவர் விருப்பத்திற்கு விட்டுவிட வேண்டும். இதற்கு அரசாங்கமும், கல்வித்துறையும் எந்த அளவுக்கு ஏற்பாடு செய்ய முடியுமோ அந்த அளவு ஏற்பாடு களை செய்து தர வேண்டும்’ என ஆணித்தரமாக சட்டமன்றத்தில் கருத்தினை பதிவு செய்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் ஜனநாயகம் குறித்து செயல்பாட்டை விவரித்த கட்சித் திட்டம் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தது:
நாடாளுமன்றம், மத்திய நிர்வாகத்தில் அனைத்து மொழிகளுக்கும் சமத்துவம் என்பது அங்கீகரிக்கப்படும். நாடாளுமன்ற உறுப்பினர் கள் அவரவர் தேசிய மொழியில் பேசும் உரிமை வழங்கப்படுவதோடு, மற்ற அனைத்து மொழிகளி லும் அதே நேரத்தில் மொழிபெயர்க்கவும் ஏற் பாடு செய்யப்படும். அனைத்துச் சட்டங்கள், அரசு உத்தரவுகள், தீர்மானங்கள் அனைத்து தேசிய மொழிகளிலும் கிடைக்கும். மற்ற மொழிகளை விலக்கி விட்டு, இந்தி மொழியை மட்டுமே ஆட்சி மொழியாக ஆக்குவது என்பது கட்டாயப்படுத் தப்பட மாட்டாது.

கல்வி நிலையங்களில் உயர்நிலை வரை தாய் மொழியில் பயிலும் உரிமை உத்தரவாதப்படுத்தப் படும். ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில மொழியிலேயே அனைத்து பொதுத்துறை, அரசு நிறுவனங்களில் நிர்வாகம் நடைபெறுவது உறுதி செய்யப்படும். மாநிலத்தில் மாநில மொழியின் தேவையை ஒட்டி ஒரு பகுதியிலுள்ள சிறுபான்மை அல்லது சிறுபான்மையினரின் மொழியையும் இணைத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.

மிக நீண்ட காலமாகவே தந்தி, மணி ஆர்டர் போன்றவற்றுக்கான படிவங்களை ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுத வேண்டிய நிலையில் இருந்ததை மாற்றி, ஆங்கிலம் அறிந்தவர்களின் உதவியை நாடாமல், தமிழிலேயே இந்தப் படிவங் களை எழுதுவதற்கான உரிமையை தமிழ் மக்களுக் குப் போராடிப் பெற்றுத் தந்தவர் மார்க்சிஸ்ட் கட்சியின் அந்நாள் செயலாளரான தோழர் ஏ. நல்லசிவன்.
அதைப் போன்றே தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கோரி தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்கம் தொடர்ச்சியான போராட்டங்களை தில்லி வரை சென்று நடத்திய தன் விளைவாகவே இந்தப் பெருமை தமிழுக்கு வந்து சேர்ந்தது. இப்போதும் கூட கீழடி அகழ் வாராய்ச் சிக்கான போராட்டத்தை அது நடத்தி வருகிறது.

நாட்டின் மொழிப்பிரச்சனைக்கு தீர்வு காண எத்தகைய அணுகுமுறையினை கையாள வேண் டும் என்ற விவாதத்தில் ஏராளமான கருத்து முரண்பாடுகள், வேறுபாடுகள் இருந்த போதி லும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் முன்மொழிந்துள்ள தீர்வே இந்தியாவின் பன்முகத் தன்மையை பாதுகாத்திடவும், பல மொழி பேசும் மக்கள் இரண்டற இணைந்து வாழ்ந்திடவும், இந்திய நாட்டின் ஒற்றுமையை பலப்படுத்திடவும் அடியுரமாக அமையும் என்பது தெளிவு. இதற்கு மாறாக தற்போது பாஜக முன்மொழிந்துள்ள இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பு இந்தியாவின் ஒற்றுமைக்கும், பன்முக கலாச்சாரத்திற்கும் விடப்பட்டுள்ள சவாலாகும்.

இந்தித் திணிப்பு எதிர்ப்பும்: தமிழ் ஆட்சிமொழியும் …

  • கே.பாலகிருஷ்ணன்

இந்திய வரலாற்றில் இந்தி திணிப்பும் அதனை எதிர்த்த போராட்டமும் தொடர்நிகழ்வாக உள்ளன. விடுதலைப் போராட்டக் காலத்திலும், விடுதலைக்குப் பின்னரும் ஆட்சிப் பொறுப் பேற்றிருந்த காங்கிரஸ் ஆட்சிக்காலங்களில் இந்தி மொழி கட்டாயமாக திணிக்கப்பட்டது. அதனை எதிர்த்த போராட்டங்களும் வலுவாக நடை பெற்றன. 1967-ல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத் திற்கு இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்களும் ஒரு காரணியாக அமைந்தன.
எனினும், இந்தி திணிப்புக்கான முயற்சிகள் நின்றபாடில்லை.

தற்போது மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள பாஜக தலைமையிலான அரசு, புதிய வேகத்துடன் இந்தி திணிப்பில் இறங்கியுள்ளது. இந்திய அரசியல் சட்டத்தின் படி அமைக்கப்பட்ட “ஆட்சிமொழிக்கான பாராளுமன்றக்குழுவின்” சிபாரிசுகள் அரசுக்கு முன்மொழியப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளது. இக்குழு வின் 117 சிபாரிசுகளுக்கும் குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த சிபாரிசுகளை நாடு முழுவதும் அமலாக்கும் பணியினை பாஜக அரசு மேற்கொள்வது என்பது இந்தி பேசாத மக்கள் மீது இந்தியை திணிக்கும் நடவடிக்கையே ஆகும்.

புதிய சிபாரிசுகளின் அம்சங்கள்
“அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் இந்தி மொழி எவ்வாறு செயல்படுத்தப் படுகிறது என்பதை மேற்பார்வையிட ஒரு இந்தி அலுவலர் பணியிடம் உருவாக்கிட வேண்டும். உயர்கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்களில் ஆங்கில வழிக் கல்வி மட்டுமே இருக்கும் வகையில் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதை மாற்றி, அனைத்து பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்களில் இந்தி வழிக் கல்வியை புகுத்தும் வகையில் விதிகளை உருவாக்கி நாடாளு மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விஞ்ஞான கல்வி கூடங்கள், ஆராய்ச்சி நிலையங்களின் நூலகங்களுக்கு புத்தகங்கள் மற்றும் இதழ்கள் வாங்குவதில் இனி 50 சதவிகிதம் இந்தி புத்தகங் கள் மற்றும் இதழ்கள் வாங்கிட செலவழிக்க வேண்டும்.”

பள்ளிகளில் இந்தி மொழியை கட்டாயமாக்கு வதன் முதற்படியாக, சிபிஎஸ்இ மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை இந்தி மொழியை கட்டாயமாக்குவது; அனைத்து பல்கலைக் கழகங்களிலும் இந்தி மூலம் பயில்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது; குடியரசுத் தலைவர், அமைச்சர்கள், மத்திய அரசு அதிகாரி கள் இனி இந்தியில்தான் பேசவும், எழுதவும் வேண்டும்; நாடாளுமன்றத்தில் இந்தி தெரிந்த மத்திய அமைச்சர்கள் இந்தியில்தான் பேசவேண் டும்; மத்திய அரசுப் பணியில் சேர விரும்புவோர் இந்தி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்; மத்திய அரசின் விளம்பரங்களில் பாதி அளவு இந்தியில் தான் இருக்க வேண்டும் போன்றவை உள்ளிட்ட பரிந்துரைகளை ஏற்றுக் கொள்வதாக குடியரசுத் தலைவர் அறிவித்துள்ளார்.

மேற்கண்ட சிபாரிசுகள் அமலாக்கப்படும் போது அது இந்தித் திணிப்பு நடவடிக்கையாகவே அமைந்திடும். இந்தி பேச, எழுத தெரிந்தவர்கள் நாடாளுமன்ற விவாதங்களில் இந்தியில்தான் பேச வேண்டும் என்று கூறுவதன் மூலம், இந்தியை அனைவரும் கட்டாயமாக படிப்பதற்கான வற் புருத்தல் வெளிப்படுகிறது.

பாஜகவும் அதன் குருபீடமான ஆர்.எஸ். எஸ் – ம் இந்தியாவின் பன்முகத்தன்மையை நிராகரிக்கும் அமைப்புகள் என்பது மட்டு மின்றி ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண் பாடு, ஒரே மதம் என்பதை அரங்கேற்றுவதை லட்சியமாக கொண்டவை. இந்தி திணிப்பு என்பது இவர்களை பொறுத்தவரை ஒரு இடைக்கால ஏற்பாடுதான். இந்தியை அரங்கேற்றுவதன் மூலம், படிப்படியாக சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக வும், தேசிய மொழியாகவும் நிறுவ வேண்டும் என்பதே இவர்களின் இலக்கு. உலகில் உள்ள எல்லா மொழிகளுக்கும் தாய்மொழி சமஸ்கிருதமே என்பது ஆர்.எஸ்.எஸ். குருவான கோல்வால்கரின் தவறான தத்துவ போதனை. இதனை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நிறைவேற்றுவது என்ற நோக்கிலேயே 1999 – 2000 ம் ஆண்டை சமஸ்கிருத ஆண்டாக வாஜ்பாய் அரசு அறிவித்தது. தற்போது மோடி அரசு சமஸ்கிருதத்தை கட்டாய பாடமாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்தப் பின்னணியில் பல மொழிகள், பல இனங்களைச் சார்ந்த மக்கள் இணைந்து வாழும் இந்திய திருநாட்டின் மொழிச்சிக்கலுக்கு தீர்வு குறித்தும் இந்தி மொழி திணிப்பு குறித்தும் வரலாற்று நோக்கில் பரிசீலிக்க வேண்டியுள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பு பல்வேறு பகுதி களுக்கிடையே கலாச்சார தொடர்புகள் இருந்த போதிலும் இந்திய நாடு முழுமையாக ஒருங் கிணைக்கப்படவில்லை. பிரிட்டிஷ் ஆட்சியாளர் களால் இந்தியா ஒரு நாடாக ஒருங்கிணைக்கப் பட்டது என்றாலும், முழுமையான ஒருங் கிணைப்பு என்பது அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடந்த நீண்ட நெடிய விடுதலைப் போராட்டத்தின் விளைவாக ஏற்பட்ட ஒற்றுமை யில் உருவானதாகும். இது அனைத்து தேசிய இன மக்களுக்கும் விடுதலை, அனைவருக்கும் சம உரிமை கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் அந்த ஒற்றுமை உருவானது.

விடுதலைப் போராட்ட காலத்தில் மொழிவழி மாநிலங்கள், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் என்றெல்லாம் வலியுறுத்தப்பட்டது. அந்தந்த மொழிகளில் உணர்ச்சி ததும்பும் உரைகள், கவிதைகள் மூலம் விடுதலை உணர்ச்சி தட்டி எழுப்பப்பட்டது. எனவே அனைத்து மொழி களுக்கும் சமவாய்ப்பு, சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்தியாவின் பன்முகத்தன்மை பாது காக்கப்படுவதன் மூலம் மட்டுமே இந்திய ஒற்று மைக்கு உரமிட முடியும் என்றெல்லாம் வற்புறுத் தப்பட்டது. இத்தகைய எழுச்சியின் மூலம் இன,மொழி,மத வேறுபாடுகளைக் கடந்து ஏற் பட்ட ஒன்றுபட்ட எழுச்சியின் விளைவாகவே நாடு விடுதலை பெற்றது.

மகாத்மா காந்தி முன்மொழிந்த தீர்மானம்
விடுதலை பெற்ற இந்திய நாட்டின் பன்முகத் தன்மையை பாதுகாப்பதில் அக்கறை காட்டப் பட்டதா? தேசிய இன மக்களின் உரிமைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதா? தேசிய இனங் கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மொழி வாரி மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப் பட்டதா? பலமொழிகளைக் கொண்ட இந்திய நாட்டில், மொழி பிரச்சனைக்கு ஜனநாயக அடிப் படையிலான தீர்வு காணப்பட்டதா? என்பது போன்ற பல கேள்விகளுக்கு எதிர்மறையான பதிலைத்தான் காண முடிகிறது. விடுதலைக்கு பின்னர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த இந்திய தேசிய காங்கிரஸ் – விடுதலை போராட்டத் தின்போது தான் முன்மொழிந்ததை நிறைவேற்று வதில்கூட அக்கறை காட்டவில்லை. அந்நிய ஏகாதிபத்தியத்தை வெளியேற்றுவதற்கு மக்கள் எழுச்சியை உருவாக்க வேண்டிய அவசியத்தின் காரணமாக இந்திய தேசிய காங்கிரஸ் இந்திய மக்களின் உணர்வுகளுக்கு அழுத்தம் கொடுத்தது. அதே காங்கிரஸ், விடுதலைக்கு பின்னர், முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ, பெருமுதலாளித்துவ நலனுக்கு முன்னுரிமை கொடுத்து இந்திய மக்களின் உணர்வு களை காலில் போட்டு மிதித்தது என்பதே வரலாறு.

காந்தியின் நிலைப்பாடு
விடுதலைப் போராட்டத்தின்போது ஆங்கில மொழியை கொண்டு இந்திய நாட்டு மக்களை தட்டி எழுப்புவது சாத்தியமானதல்ல என்ற சரியான முடிவுக்கு மகாத்மா காந்தி வந்தார். ஆனால் அதே சமயம் இந்தி மொழியை பரப்பு வதன் மூலம் இந்திய மக்களை அணிதிரட்டவும், ஒன்றுபடுத்தவும் இயலும் என்ற நிலைபாட்டி னையும் அவர் மேற்கொண்டார். இந்து – இஸ்லாமிய மக்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் இந்தி – உருது மொழி இணைந்து உருவாகியுள்ள இந்துஸ்தானி மொழியை இந்தியாவின் பொது மொழியாக்க வேண்டும் என வற்புறுத்தியதுடன், 1925-ம் ஆண்டு கான்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் இதையே தீர்மானமாகவும் நிறை வேற்றினார். இம்மாநாட்டில் துவங்கிய மொழிப் பிரச்னை இன்றுவரையில் தீர்வு காணப்படாமல் தொடர்ந்து வருகிறது.

காந்தி இந்துஸ்தானி மொழியை முன் மொழிந்தார். காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் இந்தி மொழியின் மீதே ஈர்ப்பும், கவனமும் இருந்தது. இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் தலைவர்களும் கூட, சில விதிவிலக்கு களை தவிர, இந்தி மொழி பிரச்சாரத்தில் அக் கறை கொண்டவர்களாக இருந்தார்கள். தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பெரியாரும் கூட, இந்தியை பிரச்சாரம் செய்வதை, இந்தி பள்ளிக்கூடம் நடத்தும் பணியை மேற் கொண்டிருந்தார்.

மெட்ராஸ் மாகாணத்தில் இந்தி திணிப்பு
பிரிட்டிஷ் அரசு முன்மொழிந்த புதிய அரசியல மைப்பின் அடிப்படையில் 1937-ம் ஆண்டு தேர்தல் கள் நடைபெற்றன. மெட்ராஸ் மாகாணத்தில் நடை பெற்ற தேர்தலில் நீதிக்கட்சி தோற்கடிக்கப்பட்டு, காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று மெட்ராஸ் மாகாணத்தில் ஆட்சி அமைத்தது. ராஜாஜி சென்னை மாகாணத்தின் முதல்வராக பொறுப்பேற்றார். ஏற்கனவே இந்தி மொழியை எல்லொரும் படிக்க வேண்டுமென் பதை தொடர்ந்து வற்புறுத்தி வந்தவர் ராஜாஜி. காங்கிரஸ் ஆட்சியில் இந்தியை புகுத்த நடவடிக் கைகள் தொடங்கின. 1938-39 நிதிநிலை அறிக்கை யில் சென்னை மாகாணத்தில் தமிழ் மொழி பகுதிகளில் 60 பள்ளிகளிலும், தெலுங்கு மொழி பகுதிகளில் 54 பள்ளிகளிலும், கன்னட மொழி பகுதிகளில் 4 பள்ளிகளிலும், மலையாள மொழி பகுதியில் 7 பள்ளிகளிலும் என ஆக மொத்தம் 125 பள்ளிகளில் 6,7,8-ம் வகுப்புகளில் இந்தி மொழி கட்டாய பாடமாக்கப்படும் என அறிவித்ததோடு அதற்கான அரசாணையையும் வெளியிடப் பட்டது.

இந்தித் திணிப்பு எதிர்ப்பு தியாகங்கள்
இந்தி மொழியை கட்டாயமாக படிக்க வேண்டும் என்ற அறிவிப்பை எதிர்த்த முதல் போராட்டம் அன்றைய ஒன்றுபட்ட சென்னை மாகாணத்தில் துவங்கியது. தந்தை பெரியார், கி.ஆ.பெ. விஸ்வநாதம், டபிள்யூ. பி.ஏ. பாண்டிய நாடார், சோமசுந்தர பாரதியார் உள்ளிட்ட பலரையும் கொண்ட இந்தி எதிர்ப்பு வாரியம் என்ற போராட்டக்குழு அமைக்கப்பட்டு போராட்ட அறைகூவல் விடப்பட்டது. பள்ளிகள் புறக் கணிப்பு, மறியல், ஆர்ப்பாட்டம் என போராட்டங் கள் நடைபெற்றன. போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள் கைது செய்யப்பட்டு, ஓராண்டு வரை தண்டனை வழங்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். தந்தை பெரியார் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார். ஆண்கள் மட்டு மின்றி, போராட்டத்தில் கலந்து கொண்ட பெண் களுக்கும் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. குறிப்பாக, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், டாக்டர் தர்மாம்பாள், மலர்முத்தம்மையார், பட்டம்மாள், சீத்தாம்மாள் ஆகிய ஐந்து பெண் களுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

இப்போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை யிலடைக்கப்பட்டிருந்த நடராசன் என்ற தலித் இளைஞர் சிறையில் மரணமடைந்தார். இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழகத்தில் உயர்நீதித்த முதல் தியாகி இவரே. இவரை தொடர்ந்து தாள முத்து என்ற இளைஞர் சிறையில் மரணமடைந்தார்.

போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், இரண்டாவது உலக யுத்தத்தில் பிரிட்டனுடன் இணைந்து இந்தியாவும் பங்கேற் கும் என பிரிட்டிஷ் ஆட்சி அறிவித்தது. இதனை ஏற்க மறுத்த காங்கிரஸ் கட்சி, தனது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் 8 மாநிலங்களில் ஆட்சி யிலிருந்த அமைச்சரவைகளிலிருந்து ராஜினாமா செய்வது என முடிவு செய்தது. அதன்படி ராஜாஜி யும் ராஜினாமா செய்தார். இந்தி கட்டாய பாடம் என்ற அரசாணையும் செயல்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இந்தி எதிர்ப்பு போராட்டமும் வாபஸ் பெறப்பட்டது.

இதனை தொடர்ந்து 1947, மார்ச் மாத்த்தில் மெட்ராஸ் மாகாண முதல்வராக பொறுப்பேற்ற ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் மீண்டும் இந்தித் திணிப்பு நடவடிக்கையை மேற்கொண் டார். இதனை எதிர்த்து, மீண்டும் இந்தித் திணிப் புக்கு எதிரான கிளர்ச்சி வெடித்து கிளம்பியது.

அரசியல் நிர்ணய சபை
இந்தித் திணிப்பை எதிர்த்த போராட்டம் தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், இந்தியாவின் அரசியல் அமைப்பை உருவாக்க அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையில், இந்தியாவின் ஆட்சி மொழி குறித்த விவாதம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. சமஸ்கிருதத்திற்கு ஆதரவாகவும், இந்திக்கும், இந்துஸ்தானிக்கும் ஆதரவாகவும், ஆங்கிலத் துக்கு ஆதரவாகவும், இதர தேசிய மொழிகளுக்கு ஆதரவாகவும் நிர்ணயசபை உறுப்பினர்களிடையே ஆழமான, எதிரும், புதிருமான விவாதங்கள் நடை பெற்றன. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் ஒருமித்த கருத்தை உருவாக்க உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது. ஆனால், அதற்குள்ளும் ஒருமித்த கருத்து ஏற்படாமல் மீண்டும் அரசியல் நிர்ணய சபையே தீர்மானித்துக் கொள்ளட்டும் என்ற முடிவு மேற்கொள்ளப்பட்டது.

மொழியியல் துறையில் டெல்லி பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய திரு ராமா காந்த் அக்னி ஹோத்ரி என்ற பேராசிரியர், அரசியல் நிர்ணய சபையில் மொழி தொடர்பான விவாதங்கள் பற்றி எழுதியுள்ள கட்டுரையில், மொழி அடிப்படை யில் மாநிலங்களை பிரிப்பது, தேசிய மற்றும் அலுவல் மொழியை தீர்மானிப்பது, அதன் எழுத்து வடிவம், தாய்மொழிக் கல்வியின் பாத்திரம், நீதிமன்றம் மற்றும் நிர்வாக மொழி, சிறுபான்மை மக்களது மொழி பிரச்சனைகள் உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன. இந்த விவாதங்கள் போற்றத்தக்க அளவிற்கு அறிவுகூர்மையோடு நடைபெற்ற போதிலும், இறுதியில் இந்தியாவின் பெருமைப்படத்தக்க பன்மொழி மற்றும் பல கலாச்சார அம்சங்களை நிராகரிக்கும் வகையிலேயே முடிவு மேற்கொள்ளப் பட்டது. மொழி சிறுபான்மையினரின் உரிமை கள் சமரசம் செய்து கொள்ளப்பட்டன. பன் மொழி பேசும் மக்களின் உணர்வுகளை கணக்கில் கொள்ளாமல் மேற்கொள்ளப்பட்ட முடிவு எதிர் காலத்தில் மொழி மற்றும் கலாச்சார அடிப்படை களில் மோசமான விளைவுகளுக்கு இடமளிக்கும் என குறிப்பிட்டார். அதுதான் நடந்து வருகிறது.

முடிவாக, அரசியல் நிர்ணய சபையில் மொழி பிரச்சனையின் மீதான அணுகுமுறை தீர்மானிக் கப்பட்டு அரசியல் சட்டத்தின் 17 வது பாகமாக இணைக்கப்பட்டது. அரசியல் சட்டப் பிரிவு 343 முதல் 351 வரையிலான பிரிவுகள் மொழி குறித்த அம்சங்களை விளக்குகின்றன. இந்த பிரிவுகளை மேலொட்டமாக ஆய்வு செய்தாலே, இப்பிரச் சனையில் எத்தகைய பாரபட்சமான அணுகு முறை கடைப்பிடிக்கப்பட்டது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
இந்தி திணிப்புக்கு வழிகோலிய அரசியல் அமைப்பு
பிரிவு 343-ன் படி தேவநாகரி வடிவத்தில் எழுதப்பட்டுள்ள இந்தி மொழியே மத்திய அரசின் ஆட்சி மொழியாகும். அடுத்த 15 ஆண்டுகளுக்கு (1965 வரை) ஆங்கிலம் அலுவல் பயன்பாடுகளுக்காக தொடர்ந்து பயன்படுத்தப் படலாம். இதன்படி 1965-ம் ஆண்டுக்கு பின்னர் இந்தி மொழி இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக இருக்கும். இருப்பினும் இடை யிலேயே தேவைப்படும் தருணங்களில் இந்திக்கு குடியரசு தலைவர் சிறப்பு ஆணை வழங்கி உத்தரவிடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகமான மக்களால் பேசப்படுவதால் இந்தி ஆட்சி மொழியாக தீர்மானிக்கப்பட்டதாக நிர்ணய சபையின் தலைவரான ராஜேந்திர பிரசாத் கூறினார். எனினும் அன்றைய கணக்குபடியே, இது முழு உண்மையல்ல. இருப்பினும் இந்தி மொழி ஆட்சி மொழியாக தீர்மானிக்கப்பட்டது.

பன்முகத்தன்மைக்கு விரோதம்
பலமொழி பேசும் மக்களைக் கொண்ட இந்திய நாட்டில் ஒரு மொழியை மத்திய ஆட்சி மொழியாக தீர்மானிப்பது, இதர மொழி பேசும் மக்களின் உணர்வுகளை நிராகரிப்பதாகும். ஒரு மொழிதான் ஆட்சிமொழியாக இருக்க வேண் டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. உலகின் பல மொழி பேசும் நாடுகளில் இத்தகைய நிலை பாடு மேற்கொள்ளப்படவில்லை. தமிழ் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் திரு. மா. ராசேந்திரன் அவர்கள் பல மொழி பேசும் நாடுகளில், பல மொழிகள் ஆட்சி மொழிகளாகவும், அந்நாடு களின் நாட்டுப் பண் பாடலே பல மொழிகளில் பாடப்படுவதையும் எடுத்துக் காட்டியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் பதினொரு ஆட்சி மொழிகள் உள்ளன. சிங்கப்பூரில் ஆட்சி மொழி கள் (தமிழ் உள்ளிட்டு) நான்கு. சுவிட்சர்லாந்தில் தேசிய மொழிகள் நான்கு. நியூசிலாந்தில் ஆட் மொழி இரண்டு. பிஜியின் தேசிய மொழி இரண்டு. கனடா நாட்டில் ஆங்கிலமும், ஃப்ரெஞ் சும் ஆட்சி மொழிகள். இலங்கையில் ஆட்சி மொழிகள் இரண்டு என பட்டியலிட்டது மட்டு மின்றி அந்நாடுகளில் உள்ள தேசிய கீதம் (நாட்டுப் பண்) அவற்றின் மொழிகள் அனைத்திலும் பாடப் படுகிறது எனவும் விளக்கியுள்ளார். ஆனால் இந்தியாவில் இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி. தேசிய கீதமும் இந்தியில் மட்டுமே பாடப் படுகிறது. பல மொழிகள் பேசும் நாடுகளில், பலமொழிகள் பேசும் மக்களை ஒருங்கிணைக்கும் வகையில்தான் அந்நாடுகளில் ஆட்சி மொழிக் கொள்கைகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் இயற்கைக்கு மாறாக இந்தி மட்டுமே ஆட்சிமொழி என தீர்மானிக்கப்பட்டுள்ளது. மிக்க் குறுகிய கால வரலாறு கொண்ட இந்தி மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக அங்கீகரித்து, அதற்கு சிறப்பு அந்தஸ்து கொடுப் பதானது அதைவிட பல நூற்றாண்டு நீண்ட வரலாறு கொண்ட தமிழ் உள்ளிட்ட, இதர இந்திய மொழிகளை புறக்கணிக்கும் செயல் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது.

பிரிவு 344 ஐந்தாண்டுகளுக்கு பிறகு இந்தி மொழி வளர்ச்சிக்கு உதவிட, ஆட்சி மொழி ஆணையம் ஒன்றினை அமைத்திட, குடியரசு தலைவருக்கு அதிகாரம் வழங்குகிறது. அதாவது, அரசு துறையில் முழுமையாக இந்தியை பயன் படுத்துவதற்கும், அதற்கேற்ப ஆங்கில பயன் பாட்டை கட்டுப்படுத்துவதற்குமான வழிமுறை களை கண்டறிந்து, இந்த ஆணையம் குடியரசு தலைவருக்கு தனது சிபாரிசுகளை வழங்கும். இந்த ஆணையத்தின் சிபாரிசுகளுக்குத்தான் தற்போது குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்து அவற்றைச் செயல்படுத்துவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.
பிரிவு 345 அந்தந்த மாநிலங்களில் ஆட்சி மொழிகளை தீர்மானித்துக் கொள்வதற்கான விளக்கங்களை தருகிறது. 351வது பிரிவுதான் ஆழ்ந்து சிந்திக்கதக்கது. இந்தி மொழி வளர்ச் சிக்கு மத்திய அரசு அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும். இந்த மொழியை பரப்பி செழித்தோங்கச் செய்வது இந்திய அரசின் கடமையாகும் என வற்புறுத்துகிறது இந்த பிரிவு.

ஆக, இந்தி மொழிக்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கும் அதே நேரத்தில், இந்தியாவின் இதர தேசிய மொழிகள் பற்றி இந்திய அரசியல் சட்டம் கண்டுகொள்ளவில்லை. உண்மையில் இதர மொழிகள் இரண்டாந்தர மொழிகளாக்கப்பட்டது என்பதில் சந்தேகமில்லை. அரசியல் சாசனம் 8வது பட்டியலில் இதர மொழிகள் கொண்ட ஒரு பட்டியல் இணைக்கப்பட்டு தற்போது 22 மொழி கள் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. உண்மையில் 8வது பட்டியலில் உள்ள மொழிக்கு எந்த சலுகையும் சிறப்பு அந்தஸ்துகள் எதுவும் வழங்கப்படவில்லை. இந்த மொழிகள் தேசிய மொழிகள் என்று கூட அழைக்கப்படாமல், வட்டார மொழிகள் என்றே அரசியல் சாசனத் தில் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நேருவின் வாக்குறுதி
அரசியலமைப்பின் மேற்கண்ட பிரிவுகள்தான் தொடர்ந்து இந்தி திணிப்புக்கும் அதனை எதிர்த்த போராட்டத்திற்கும் அடிப்படை காரண மாக அமைந்துள்ளன. பிரிவு 344-ன் படி குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன் படுத்தி ஆட்சி மொழிக் குழு அமைக்கப்பட்டது. அக்குழு விரிவான ஆய்வுகள் நடத்தி இந்தியை ஆட்சி மொழியாக்குவதற்கும், ஆங்கிலத்தின் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்குமான சிபாரிசு களை நாடாளுமன்றத்துக்கு அளித்தது. இந்தச் சிபாரிசுகள் நாடாளுமன்றத்தில் சூடான விவாதத்தை கிளப்பியது. நாடு முழுவதும் இந்தி எதிர்ப்பு கோஷங்கள் கிளம்பின. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர பிரதமர் நேரு 7.8.1959 அன்று நாடாளு மன்றத்தில் ஒரு வாக்குறுதியை அளித்தார்.

முதலாவதாக, 1965-க்கு பிறகு இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி ஆன பிறகும் ஆங்கில மும் மத்திய அரசின் அலுவல் மொழியாக நீடிக்கும். இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மக்களின் சம்மதத்தைப் பெறாமல் இந்த நிலை மாற்றப்படாது. இரண்டாவதாக, மத்திய அரசின் பணிகளைப் பொறுத்தவரையில், இந்தி பேசாத மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார். இந்தி பேசாத மக்களுக்கு இது ஒருவித நம்பிக்கையை அளித்தது. இந்தி எதிர்ப்பு போராட்டங்களும் சற்று அடங்கின.

ஆனால், வேடிக்கை என்னவெனில் பிரதமரின் வாக்குறுதியை நிராகரிக்கும் வகையில், அடுத்த ஆறுமாதங்களுக்குள், குடியரசு தலைவர் ஆட்சி மொழி குறித்த பாராளுமன்ற குழுவின் சிபாரிசு கள் மீது ஒரு அறிக்கை வெளியிட்டார். இதில் பிரதமரின் வாக்குறுதி நிறைவேற்றப்படும். அதற் குரிய சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும் என எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. மேலும் மத்திய அரசு பணிகளுக்கு ஆங்கிலத்தில் நடைபெறும் தேர்வுகள் சில காலத்துக்கு பிறகு இந்தி மொழிக்கு மாற்றம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இதுவும் அரசுப் பணிகள் சம்பந் தமான நேருவின் வாக்குறுதிகளுக்கு எதிரானதா கும். மேலும், இத்தேர்வுகளை பிரதேச மொழி களில் நடத்துவதற்கு பெரும் கஷ்டங்கள் உள்ளன என கூறியதன் மூலம், வரும் காலத்தில் இந்தி மொழி படித்தவர்கள் மட்டுமே இத்தேர்வுகளை எழுத முடியும் என்ற நிலையினை உருவாக்கியது.

இதுகுறித்து 20.07.1960 அன்று சென்னையில் கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானம் பின்வருமாறு கூறியது:
“ஜனாதிபதியின் உத்தரவில் உள்ள சில அம்சங்கள் வரவேற்கப்பட வேண்டியவை. அதேசமயம், மாநில மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்காத ஜனாதிபதியின் உத்தரவு, தமிழ் மக்களுக்கு மட்டுமில்லாமல், இந்திபேசாத இதர மாநில மக்களுக்கும் பாதிப்பாக முடியும். மேலும் 1965-க்கு பிறகும் ஆங்கிலத்தையும் மத்திய அரசு விவகாரங்களுக்கு உபயோகிப்பதற்கு வேண்டிய சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வரப் போவதாக பிரகடனம் செய்ய வேண்டுமென” தீர்மானம் வலியுறுத்தியுள்ளது. பிரதமர் நேருவின் வாக்குறுதியால் ஓரளவு சமாதனமடைந்திருந்த இந்தி பேசாத மக்களை குடியரசுத் தலைவரின் ஆணை ஆத்திரப்படுத்தியது. மீண்டும் இந்தி எதிர்ப்பு குரல்கள் வலுவடைந்தன.

ஆட்சி மாற்றம்
இதனை தொடர்ந்து 1963-ம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று உள்துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் நாடாளுமன்றத்தில் ஆட்சி மொழி மசோதாவை தாக்கல் செய்தார். இதில் 1965-க்கு பின்னர் இந்தியாவின் ஆட்சி மொழி யாக இந்தி இருக்கும் என்றும், ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம் எனவும் பட்டும் படாமலும் கூறப்பட்டது. நேருவின் வாக்குறுதி அழுத்தமாக இடம் பெறாததால், 1965-க்கு பின்னர் இந்தி ஆட்சி மொழியாகி விடும் என்ற அச்சம் பரவ ஆரம்பித்தது. ஆட்சி மொழி மசோதா நாடாளு மன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. விளைவு – தொடர்ந்து இந்தி எதிர்ப்பு கிளர்ச்சிகள் வெடித்தன. 1965-ம் ஆண்டு போராட்டம் தீவிர மடைந்து தமிழ்மாநிலம் முழுவதும் துப்பாக்கிச் சூடு, தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சு நடந்தது. இப்போராட்டத்தில் மாணவர்கள் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்றார்கள். இப் போராட்டத்திற்கு ஆதரவாக பல கட்சியை சார்ந்தவர்களும் திரண்டார்கள். ஆரம்பத்தில் இந்தியை கட்டாய பாடமாக திணித்த ராஜாஜி இப்போது இந்தியை எதிர்த்து குரல் கொடுத் தார். அரசமைப்பு சட்டம் 17வது பிரிவுதான் இந்தித் திணிப்புக்கு வழி வகுக்கிறது. அதை தூக்கி கடலில் போடுங்கள் என்றார். இந்தித் திணிப்பை கண்டித்து மத்திய அமைச்சர்கள் சி.சுப்பிரமணியம், அழகேசன் ஆகியோர் ராஜினாமா செய்தார்கள். எனினும் பின்னர் ராஜினாமாவை அவர்கள் திரும்பப் பெற்றுக் கொண்டார்கள். தமிழகம் போராட்டக் களமாக மாறியது.

இதனைத் தொடர்ந்து 1967-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் சரிவை சந்தித்தது. 8 மாநிலங்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்து, எதிர்க்கட்சிகள் ஆட்சி யைக் கைப்பற்றின. தமிழ்நாட்டில், திமுக வெற்றி பெற்று அண்ணாதுரை முதலமைச்சராக பொறுப் பேற்றார். காங்கிரஸ் ஆட்சியில் மக்களது அடிப் படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படாதது; ஏற்பட்ட உணவு பஞ்சம் உள்ளிட்ட பிரச்சனை களோடு, இந்தி திணிப்பால் உருவான மக்கள் எழுச்சி அனைத்தும் சேர்ந்து காங்கிரஸ் ஆட்சி யின் படுதோல்விக்கு காரணமாக அமைந்தன.
லால் பகதூர் சாஸ்திரியின் மறைவுக்கு பின்னர், இந்திரா காந்தி பிரதமராகப் பொறுப்பேற்றிருந் தார். இந்தி பேசாத மக்களிடம் ஏற்பட்ட சரி வினை மீட்டெடுக்கும் முயற்சியில் காங்கிரஸ் தலைமை இறங்கியது. இந்தி மீதான எதிர்ப்புணர்வை கணக்கில் எடுத்துக் கொண்டு அலுவல் பயன் பாட்டில் ஆங்கிலம் நீடிக்கும் வகையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட ஆட்சி மொழி சட்டத் திருத்த முன்வடிவினை நாடாளுமன்றத்தில் 1967 நவம்பர் 27 அன்று மத்திய அரசு முன்மொழிந்தது.

முன்னாள் பிரதமர் நேருவின் வாக்குறுதியை நிறைவேற்ற அதற்கு சட்டரீதியான அங்கீகாரம் கொடுப்பதற்காக, இந்த சட்டத் திருத்தம் கொண்டு வருவதாக சொல்லப்பட்டது. ஆனால் அந்த நோக்கம் முழுமையான அளவில் திருத்த முன் வடிவில் இல்லை. மேலும், இந்த திருத்த முன்வடி வோடு சேர்ந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீண்டும் இந்திதான் ஆட்சிமொழி என்பதற்கான உள்ளடக்கம் கொண்டதாக இருந்தது.

இந்த சட்டத்திருத்த முன்வடிவை ஏற்க முடி யாது என தோழர் பி. ராமமூர்த்தி அவர்கள் நாடாளுமன்றத்தில் நீண்ட உரையாற்றினார். இந்த திருத்த முன்வடிவு எந்த தீர்வையும் அளிக் காது என சுட்டிக்காட்டியதுடன், நாட்டின் மொழிச்சிக்கலை தீர்க்க வழிகளையும் விளக்க மாக சுட்டிக்காட்டினார். மேலும் இந்திய அரசியல் அமைப்பில் உள்ள மொழி குறித்த பிரிவுகளை படித்து காட்டி ‘பல மொழி ராஜ்ய அமைப்பில் எவ்வாறு ஒரு மக்களது மொழி மட்டுமே அரசாங்க மொழி ஆகமுடியும்? சகல மொழிகளுக்கும் உரித்தான இடத்தை அளிக்க வேண்டும் என்பதை அரசியல் சட்டத்தை உருவாக்கியுள்ளவர்கள் மனதில் கொள்ளவே இல்லை’ என ஆணித்தரமாக சுட்டிக்காட்டினார்.

இச்சட்டத்திருத்தம் மற்றும் தீர்மானம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அப்போது நிறைவேற்றிய தீர் மானத்தில்:

“காலஞ்சென்ற பிரதம மந்திரியின் வாக்குறு தியை அமலாக்குவதற்கு கூட, போதுமானபடி திருத்த மசோதா இருக்கவில்லை. யூனியனின் எல்லா அரசாங்க காரியங்களுக்கும் நாடாளு மன்றத்தில் அலுவல் நடத்துவதற்கும், இந்தியுடன் ஆங்கிலத்தின் உபயோகத்தையும் அது கட்டாய மாக்கவில்லை. இந்தி பேசாத மாநிலங்களுக்கிடையே போக்குவரத்துக்கும், வேறு சில காரியங்களுக்கும் மட்டுமே இந்தியுடன் ஆங்கிலத்தை உபயோகிக்க அது வழி செய்கிறது.
இத்துடன் அரசாங்கம் கொண்டுவந்துள்ள தீர்மானமும் மத்திய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளும் மேலும் அது எடுக்கவுள்ள நடவடிக்கைகளும் இந்தியை ஆட்சி மொழியாக்கு வதுடன், திணிப்புக்கு வழிவகுக்கிறது. நிர்ப்பந்திக் கவும், முன்பு ஆங்கிலம் இருந்த இடத்தில் அதை வைக்கவும், உறுதி பூண்டுள்ளதை தெளிவாக காட்டுகிறது.
இந்தியை ஒரே ஆட்சி மொழியாக திணிக்கும் இந்த முயற்சியை நம் கட்சி எதிர்க்கிறது என்று அரசியல் தலைமைக்குழு அறிவித்தது. இந்திய யூனியனின் ஐக்கியத்தை குலைக்கவே இந்த முயற்சி வழி வகுக்கும்” என தெளிவாக சுட்டிக்காட்டியதுடன் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் அரசியல் தலைமைக்குழு தீர்மானம் பட்டியலிட்டது.

காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட சரிவை ஈடுகட்ட இந்தி எதிர்ப்புணர்வை கணக்கில் கொண்டு முன்மொழியப்பட்ட சட்டத்திருத்த முன் வடிவும் தீர்மானமும் கொல்லைப்புற வழியாக இந்தியை திணிக்கும் நோக்கிலே இருந்தன என்பதற்கு இதற்கு மேலும் விளக்கம் தேவையில்லை.
(தொடரும்)