புதிய சூழலில் இந்துத்துவா எதிர்ப்பு !

– பிரகாஷ் காரத்

இந்துத்துவா வகுப்புவாத சக்திகளையும், ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்தையும் எதிர்கொள்ள, அரசியல் தளத்திலும், சித்தாந்த தளத்திலும், சமூக மற்றும் பண்பாட்டு தளத்திலும் திட்டவட்டமான அணுகுமுறைகளை உருவாக்கி  முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். இது நம்முடைய முக்கிய நிகழ்ச்சி நிரலாக உள்ளது.

வகுப்புவாத சக்திகளை எதிர்கொள்வது பற்றி, கடந்த காலத்தில் எடுத்த முடிவுகள் இப்போது போதுமானதாக இல்லை. முந்தைய நிலையில், வகுப்புவாத சக்திகள் சில பிரிவினை திட்டங்களை முன்னெடுத்து இந்து மக்களின் ஆதரவை பெற முயல்வதுடன், சிறுபான்மையினருக்கு எதிரான திட்டங்களை முன்னெடுப்பார்கள். ஆனால் இப்போது இந்துத்துவா வகுப்புவாத சக்திகள் அரசு அதிகாரத்துடன் இயங்குகிறார்கள். இது கடந்த கால சூழலில் இருந்து மாறுபட்டது. இப்போதைய புதிய நிலைமைகளை பயன்படுத்தி, குடியரசின் தன்மையையே மாற்றியமைத்து, அரசியல் சாசனத்தை மாற்றியமைத்து,  ‘இந்து ராஷ்ட்டிராவை’ நோக்கி செயல்பட்டு வருகிறார்கள்.  ஆதரவுத் தளத்தை விரிவாக்கிட, முந்தைய காலத்தில் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் இருந்து இது மாறுபட்டது ஆகும். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அடிப்படையான இலக்குகளை நிறைவேற்றக்கூடிய போக்கினை நாம் எதிர்கொண்டு வீழ்த்த வேண்டியுள்ளது.

பாஜக எப்படிப்பட்ட கட்சி ?

மேம்படுத்தப்பட்ட நம்முடைய கட்சி திட்டம், பாரதிய ஜனதா கட்சியை பிற முதலாளித்துவ கட்சிகளைப் போன்ற இன்னொரு சாதாரண முதலாளித்துவக் கட்சியாக பார்க்கவில்லை. பாஜகவை உருவாக்கியதும், வளர்த்தெடுப்பதும் பாசிச வகைப்பட்ட தத்துவத்தால் வழிநடத்தப்படும் ஆர்.எஸ்.எஸ் இயக்கமாகும். அவர்கள் அதிகாரத்திற்கு வரும்போது, அரசு இயந்திரத்தை பயன்படுத்தி ‘இந்து ராஷ்ட்டிராவை’ நோக்கிய பயணத்தை வேகப்படுத்த முயற்சிப்பார்கள் என்று நம் திட்டத்திலேயே குறிப்பிட்டுள்ளோம். 2000 ஆண்டில் நமது கட்சி திட்டத்தை மேம்படுத்திய போது வாஜ்பாய் அரசாங்கம் இருந்தது.

‘இந்து ராஷ்ட்டிரா’ என்பது இந்து ராஜ்ஜியம் அல்ல. அதாவது அது  மத தலைவர்களின் ஆட்சி அல்ல. (ஈரான் நாட்டில் நடப்பதை மத தலைவர்களின் ஆட்சி எனலாம், அதனை ஒத்த ஆட்சியாக இது இருக்காது). ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆட்சி என்பதுதான் ‘இந்து ராஷ்ட்டிரா’ என்பதன் பொருள் ஆகும்.  ஏற்கனவே அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்ட பின்னணியில் ‘இந்து ராஷ்டிரத்தைக்’ கட்டமைக்கும் பணியும் ஏற்கனவே துவங்கி விட்டது. பாஜக மக்களவையில் பெரும்பான்மை பெற்றுள்ளது. அரசமைப்பின் அடிப்படையான சில அம்சங்களையும், குணாம்சத்தையும் மாற்றியமைக்க முயல்கிறது. நீதித்துறையினுடைய தன்மையையும், அதிகார வர்க்கத்தின் தன்மையையும், ராணுவத்தின் தன்மையையும் மாற்றியமைக்க முயல்கிறார்கள்.

அக்னிபத் திட்டத்தை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். அந்த திட்டத்தின் நோக்கம் என்ன?. ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முறையை அரசியல் அடிப்படையிலானதாக திட்டமிட்ட விதத்தில்  மாற்றியமைப்பதுதான் அதன் நோக்கம். இவ்வகையில் அவர்கள் ராணுவத்தில் ஆள் எடுக்கும் தன்மையையே மாற்றியமைக்க முயற்சிக்கிறார்கள்.

பரந்துபட்ட உத்தி அவசியம்

எனவே இதுதான் இப்போதைய நிலை என்கிறபோது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை  தேர்தல் களத்தில் மட்டும் நடத்தினால் போதாது என்பதை உணர முடியும். தேர்தல் கால உத்திகள் மட்டும் பலன் கொடுக்காது. அவர்கள் தேர்தல் களத்திலும், அரசியல் தளத்திலும் மட்டுமே செயல்படுவதில்லை. தங்களை கலாச்சார அமைப்பு என்று கூறிக்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ், இந்திய குடியரசின் பண்பு நலன்களை மாற்றியமைப்பதையே  இலக்காக கொண்டு செயல்படுவதை ஒட்டுமொத்தமாக கணக்கில் எடுத்து, அனைத்தையும் உள்ளடக்கிய விரிவான உத்தியோடு செயல்பட வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ்/பாஜக அமைப்புகளால், இந்திய தேசியம் என்ற பெயரில் இந்து பெரும்பான்மை வகுப்புவாதத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்துள்ளது. 23 வது அகில இந்திய மாநாட்டின் அரசியல் தீர்மானத்தில் இதை நாம் குறிப்பிட்டுள்ளோம். மக்களின் மனங்களில் தாக்கம் ஏற்படுத்தி, கருத்தை மாற்றியமைக்க அவர்களால் முடிந்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் வாழும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சாதாரண மக்களின் மனங்களில் தம் கருத்துக்களை ஆழமாக பதித்துள்ளார்கள். அவர்கள் மட்டுமே  உண்மையான தேசியவாதிகள் என்றும், தேசத்தின் மீது அக்கறை கொண்ட சக்திகள் என்றும் பதிய வைத்துள்ளார்கள்.

இந்துக்கள் வலுவடைந்தால்தான் தேசம் வலுப்படும் என்கிறார்கள். இந்த வாதத்தின் மற்றொரு பகுதி இஸ்லாமியர்கள் இந்த தேசத்தை பலவீனமாக்குகிறார்கள் என்பதாகும். இந்துக்கள் என்றால் ’நாம்’, இஸ்லாமியர்கள் என்றால் ’அவர்கள்’. ‘நாம்’ –  எதிர் –  ‘அவர்கள்’ என்ற உணர்வினை உருவாக்கியுள்ளார்கள். இது கணிசமான மக்களை சென்று சேர்ந்திருக்கிறது.

குறிப்பாக உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இதுதான் நிலைமை. பாஜகவை மக்கள் வலுவான தேசியவாத  சக்தியாக பார்ப்பதுடன், பெரும்பான்மை மக்களுக்கு நல்லது செய்வதற்கே அவர்கள் இருப்பதாக பார்க்கிறார்கள். இந்த சூழலை எவ்வாறு எதிர்கொள்வது?

கடந்த  21, 22 மற்றும் 23 மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானத்திலும், அரசியல் ஸ்தாபன அறிக்கையிலும் ‘இந்துத்துவாவை எதிர்கொள்வது’ என்ற தலைப்பிலான பகுதி இடம்பெற்று வந்துள்ளது. கடந்த காலங்களில் நாம் பொதுவாக காங்கிரஸ் கட்சியை எதிர்த்து போராடியிருக்கிறோம். பல மாநிலங்களில் இதர முதலாளித்துவக் கட்சிகளை எதிர்த்துப் போராடியிருக்கிறோம். ஆனால் இது அதிலிருந்து வேறுபட்ட ஒன்றாகும். அதனால்தான் நமது தீர்மானங்களில் தனியாக குறிப்பிட வேண்டி வந்தது.

எனவே 2015ஆம் ஆண்டில் இருந்து தனித்துவமாக, இதுபோல சில திட்டவட்டமான  உத்திகளை உருவாக்க முயற்சிக்கிறோம்.  அரசியல் செயல்பாடுகளிலும், கருத்தியல் செயல்பாடுகளிலும் இந்துத்துவா சக்திகளை எதிர்கொள்ளும் விதத்தில் பணிகளை திட்டமிட்டு முன்னெடுக்க கட்சியை தயார்ப்படுத்த வேண்டியுள்ளது. பல தளங்களிலும் நாம் கால் பதிக்க வேண்டியுள்ளது என்பதை கட்சி அணிகளுக்கு உணர்த்திட வேண்டும்.

கட்சியும், பல்வேறு வர்க்க வெகுஜன அரங்கங்களும், தமது வேலை பாணியை மாற்றியமைக்க வேண்டும். கருத்தியல் தளத்திலும், சமூக – பண்பாட்டுத் தளத்திலும், கல்வித் தளத்திலும் பணிகளை திட்டமிட வேண்டும். கடந்த காலத்தில் இந்த பணிகளை பொதுவாக அலட்சியப்படுத்தியே வந்திருக்கிறோம். கட்சி சில முழக்கங்களை முன்னெடுக்கும், தேர்தலை எதிர்கொள்ளும், வர்க்க – வெகுஜன அமைப்புகள் சில முழக்கங்களை முன்னெடுப்பார்கள், போராட்டங்களை நடத்துவார்கள்.

கருத்தியல் தளத்தில் கட்சி போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக பேசிவந்திருக்கிறோம். ஆனால் இதுவரை அதில் என்ன செய்திருக்கிறோம்? பொதுவாக நம்முடைய கட்சி தொழிலாளி வர்க்க கட்சியாகும். நம்முடைய கட்சியினுடைய கருத்தியல் என்பது தொழிலாளி வர்க்க கருத்தியலே. ஆனால் மும்பை, தில்லி போன்ற பெருநகரங்களில் வாழும்   தொழிலாளர்களோடு பேசினால் அவர்களில்  கணிசமானோர் பின்பற்றும் சித்தாந்தம் இந்துத்துவா சித்தாந்தமாக உள்ளது. இந்துத்துவாவை பின்பற்றிக் கொண்டே சிலர்  நம்முடைய சங்கங்களிலும் இருப்பார்கள். அதுதான் இப்போதைய சூழல்.

எனவே கருத்தியல் தளத்தில் நடத்த வேண்டிய போராட்டத்தில் நாம் முன்னேற வேண்டியுள்ளது.  தொழிற்சங்கம் மட்டுமே இந்த போராட்டத்தை முன்னெடுத்திருக்க முடியாது. கட்சிக்கு தான் அதில் கூடுதலான பங்கு உள்ளது. எனவே அரசியல் தளத்தில் மட்டுமல்லாது, கருத்தியல் மற்றும் சமூக தளத்திலும் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.

சில மாநிலங்கள் இந்த சூழலில் விதிவிலக்காக அமைந்துள்ளன. தமிழ்நாட்டினை உதாரணமாக பார்க்கலாம். தமிழ் நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்புகள் பிரதான இடத்தில் இல்லை. ஆனாலும் அவர்கள் வளர முயற்சிக்கிறார்கள். இன்றுள்ள நிலைமையை கணக்கில் எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டிலோ, ஆந்திராவிலோ, கேரளத்திலோ ஆர்.எஸ்.எஸ் அமைப்பினுடைய செல்வாக்கிற்கு மக்கள் உட்பட மாட்டார்கள் என்ற நினைப்பில் இருந்துவிடக் கூடாது. ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் அவர்கள் கணிசமான செல்வாக்கை பெற்றுள்ளார்கள். பிரதான சக்தியாக உள்ளார்கள். தெலங்கானாவிலும் சில முன்னேற்றங்களை அடைந்துள்ளார்கள். தமிழ் நாட்டில் ஒரு பெரிய சக்தியாக வளர்வதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்று அவர்களுக்கு தெரியும். அதற்கு இந்த மாநிலத்தின் அரசியல், கருத்தியல், சமூக சூழல் ஒரு காரணமாக உள்ளது. திராவிட சித்தாந்தம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை சொல்லலாம். ஆனாலும் அவர்கள் இந்த நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும், தமது  குறைபாடுகளை மீறி முன்னேறுவதற்கும் பல தளங்களிலும் முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

பட்டியல் இனத்தின் மீது குறி !

ஆர்.எஸ்.எஸ் என்றால் ”உயர்” சாதி அமைப்பு எனபலர் நினைக்கிறார்கள். ஆம் அவர்கள்  சிந்தனை, கருத்தியல் இரண்டிலும் நிச்சயமாக “உயர்” சாதி ஆதிக்க கருத்தியல் கொண்டவர்கள்தான். ஆனால் ”உயர்” சாதியினரை மட்டும் கொண்ட கட்சியாக மட்டுமே அவர்கள் இல்லை.

உத்திரப்பிரதேசத்தை எடுத்துக் கொண்டால் ஓபிசி யை சேர்ந்த பெரும்பகுதியினர் பாஜக ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். அதே போல் தலித் மக்களில் குறைந்த பட்சம் 50 சதவிகிதம் பாஜக ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். இது எப்படி சாத்தியமானது?. முன்பு ”உயர்”  சாதியினர் கட்சியாக பார்க்கப்பட்ட கட்சி,  இன்றைக்கு ஓபிசி, எஸ்சி /எஸ்டி  மத்தியிலும் வளர்ந்திருக்கிறது என்றால் இது எப்படி நடந்தது? அவர்கள் குறிப்பாக சில சாதிகளைக் குறிவைத்து தங்களுடைய பணிகளைச் செய்தார்கள். அனைத்து இந்து மக்களின் பிரச்சனைகளையும் எடுப்பவர்களாக, அவர்களுக்கான கட்சியாகவும்  தங்களை அடையாளப்பட வைப்பதற்கான முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த காலத்தில் ஆர்எஸ்எஸ் உருவாக்கிய அரசியல் கட்சி யான ஜன சங்கத்தை பனியா கட்சி என்று சொல்வதுண்டு, அதற்குப் பிறகு பாஜக உருவான பின்பும் தொடக்க கட்டத்தில் அவர்களை பனியா கட்சி என்றே குறிப்பிடப்பட்டு வந்தது.

பனியா என்பது வடமாநிலத்தில் உள்ள ஒரு குறிப்பட்ட சமூகம். குறிப்பாக வியாபாரிகள் வணிகர்கள்; அவர்கள் ஜெயின் அல்லது குப்தாக்களாக இருக்கலாம். மார்வாடிகளாக இருக்கலாம். ஒரு வியாபாரம் செய்யக்கூடிய சமூகம். அவர்கள் மத்தியில் பாஜக வலுவாக இருந்தது. எனவே பாஜக அல்லது அதற்கு முன்னதாக ஜனசங்கத்தினுடைய வளர்ச்சி என்பது நகர்ப்புறங்களைச் சார்ந்து இருந்தது. ஆனால் இன்றைக்கு உத்தரப்பிரதேசத்தில் பட்டியலினத்துக்கான தொகுதிகளில் பெரும்பான்மையான தொகுதிகளில் அவர்கள் வெற்றிபெற முடிகிறது.

மாயாவதியினுடைய பகுஜன் சமாஜ் கட்சி  இருக்கிறது என்பது உண்மைதான். அந்த கட்சி யார் மத்தியில் இருக்கிறது என்று சொன்னால், பட்டியல் சாதிகளில்  உள்ள குறிப்பிட்ட துணை சாதி மத்தியில்தான் அவர்கள்  ஆழமாக இருக்கின்றனர். பட்டியல் இனத்தின் இதர துணை சாதிகளுக்குள்  பாஜக ஏகமாக வளர்ந்துள்ளது. பட்டியல்/பழங்குடி பிரிவினரை அவர்கள் குறிவைக்கிறார்கள்.

கடந்த 30, 40 ஆண்டுகளாகவே ஆர்எஸ்எஸ் பழங்குடியினர் மத்தியில் ஆழமாக வேலை செய்து வந்தது.  ஒரு நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையில்தான் அவர்கள் பணியாற்றி வந்தார்கள். இவர்களின் ஊடுருவலை நாம் கவனித்து நோக்க வேண்டும்.

பாஜக என்பது நால் வருணத்தில் நம்பிக்கை உள்ள கட்சிதான், மதவாதத்தைப் பின்பற்றுகிற கட்சிதான். இருந்தாலும் அவர்களுடைய அரசியல் நோக்கத்திற்காக அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் தேவை அவர்களுக்கு இருக்கிறது. அதனை முயற்சிக்கிறார்கள்.

தெரிந்த பல அமைப்புகள் ஆர்எஸ்எஸ் அமைப்புகளாக இருக்கும். இந்து முன்னணி போல சிலதை சொல்லலாம். ஆனால், தெரியாமல் பல்வேறு  அமைப்புகள், என்ஜிஓ-கள் ஆர்எஸ்எஸ் வழிகாட்டி நடத்தக்கூடிய அமைப்புகளாக இருப்பார்கள். குறிப்பாக இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் அவர்களுக்கு நிதி என்பது ஒரு பிரச்சனையாக இல்லை.

கேரளாவில் பழங்குடியின மக்கள் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 2 சதவிகிதம் கூட இருக்க மாட்டார்கள். ஆனாலும் ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலில் செயல்படக்கூடிய பெரும்பகுதி என்ஜிஓ கள் செயல்படும் பகுதி பழங்குடியின மக்கள் பகுதிதான். எனவே ஆர்எஸ்எஸ் நடவடிக்கைளுடைய எல்லை என்ன ?ஆழம் என்ன ? அதனுடைய தன்மை என்ன? வகைகள் என்ன ? என்பதை சரியாக புரிந்துகொண்டு எதிர்க்க வேண்டும்.

கருத்தியல் நடவடிக்கைகள்

இதற்கான திட்டத்தை உருவாக்குவதற்கான பரந்த வழிகாட்டுதல், 23 வது அகில இந்திய மாநாட்டின் அரசியல் ஸ்தாபன அறிக்கையில் தெளிவாக தரப்பட்டுள்ளது. அதில் முதல் விசயம், கருத்தியல் நடவடிக்கைகள் ஆகும்.  இந்துத்துவ வகுப்புவாத கருத்தியலை வீழ்த்துவதற்கான நடவடிக்கைகளுக்கான ஏராளமான விபரங்களை கொண்ட பிரசுரங்கள், வகுப்பு குறிப்புகள், பிரச்சார கருவிகளை, சமூக வலைத்தள உள்ளடக்கங்களை உருவாக்க வேண்டும். இவற்றை உள்ளூர் மட்டத்திலேயே சுலபமாக செய்துவிட முடியாது. கட்சியின்  மத்தியக்குழுவும், மாநிலக்குழுவும் இணைந்து குறிப்பிட்ட காலவரையறைக்குள் இதனை முடிக்க வேண்டும். சமூக வலைத்தளத்தையும் வலுப்படுத்தி கருத்தியல் பிரச்சார நோக்கில் பயன்படுத்த வேண்டும்.

இரண்டாவது விசயம், கட்சி மக்களோடு உயிரோட்டமான தொடர்பில்,  இரண்டற  கலந்திருக்க வேண்டும் என்கிற மாஸ்லைன் கடைப்பிடிப்பது.  மக்கள் மத்தியில் நம்முடைய தலையீடுகளும், பணிகளும் விரிவாக நடக்க வேண்டும் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். இது  கட்சிக்கும், வெகுஜன அமைப்புகளுக்கும் பொருந்தும்.  மக்களோடு உயிர்ப்பான ஒரு  தொடர்பில் இருக்க வேண்டும் என்பது  கொல்கத்தா பிளீனத்தில் இருந்தே சொல்லப்படுகிறது. மக்களுடன் உயிரோட்டமான தொடர்பு என்று சொல்வதன் மற்றொரு அம்சம், பல்வேறு நல நடவடிக்கைகளை, சமூக சேவை  நடவடிக்கைகளை முன்னெடுப்பது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் இது போன்ற பணிகளை  மேற்கொள்கிறார்கள். நாம் கட்சியாகவும், வர்க்க வெகுஜன அமைப்புகளின் வழியாகவும் இதனைச் செய்ய வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கல்வி தளத்தில் செயல்படுகிறது. அவர்களை போல ஆயிரக்கணக்கான பள்ளிக்கூடங்களை நாம் நடத்த முடியாது. ஒன்றிரண்டு நடத்தலாம். ஆனால்  இளைஞர், மாணவர் அமைப்புகள்  கல்வி தளத்தில்  பங்களிக்க முடியும். உதாரணமாக மாலை நேர கல்வி (டியூசன்) மையங்கள் நடத்தலாம்.  தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் நடத்தலாம். படிப்பு வட்டங்கள், நூலகங்களை நடத்த முடியும்.

அதே போல, பண்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். பண்பாட்டு நடவடிக்கை என்றாலே  கலைக்குழு அமைப்பு, பாடல்குழு, வீதிநாடகக்குழு என்பது மட்டுந்தான் நினைவில் வருகிறது. அந்த பணிகள் இன்னும் பரந்து பட்டதாக இருக்க வேண்டும். நமக்கு அப்பாற்பட்ட மக்களை ஈடுபடுத்தகூடிய விதமான நடவடிக்கைகளாக செய்ய வேண்டும். உதாரணமாக புத்தகத் திருவிழாக்களை சொல்லலாம். மாணவ/மாணவியருக்கான பேச்சு போட்டி, கட்டுரைப்போட்டிகள் நடத்தலாம். இந்த நடவடிக்கைகளை கட்சியாக மட்டும் நடத்த முடியாது. வர்க்க வெகுஜன அமைப்புகளும் செய்ய வேண்டும். குறிப்பாக தொழிற்சங்கள் சில முயற்சி எடுத்து, தொழிலாளர் வாழும் பகுதிகளில் பண்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்.

அடுத்து வளர்த்தெடுக்க வேண்டியது பாலர் சங்கம்,  சில மாநாடுகளாகவே நாம் பாலர் சங்கம் பற்றி பேசுகிறோம். இந்த விசயத்தில் தீவிர முன்முயற்சி ஏதும் இல்லை. அதனால்தான் பாலர் சங்கத்தை உருவாக்குவதை மாநாட்டின் கடமையாகவே நாம் வரையறுத்திருக்கிறோம். கேரளாவில் இவ்விசயத்தில் நமக்கு நல்ல அனுபவம் இருக்கிறது. ஒரு பரந்த அமைப்பாக பாலர் சங்கத்தை கட்டமைத்திருக்கிறார்கள். பாலர் சங்கத்தை உருவாக்கும் போது, கட்சி ஏற்கனவே கணிசமாக இருக்கும் பகுதி, செல்வாக்கு இருக்கும் பகுதியில் தொடங்கினால், இதர பகுதிகளுக்கும் விரிவாக்க முடியும் என்பது கேரள அனுபவம்.

மத விழாக்கள்

கோவில் திருவிழாக்களிலும், மத விழாக்களிலும் பங்கெடுத்தல் அடுத்து வருகிறது. பொதுவாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கோவில்களை, மத நம்பிக்கைகளை பயன்படுத்துகிறார்கள். கோவில் என்று சொல்லும் போது மதம் சார்ந்த நடவடிக்கைகள் இருக்கும். அடுத்து  கோவில் திருவிழாக்கள் என்று சொல்லும் போது அது மதம் சார்ந்த நடடிவடிக்கையாக மட்டும் இல்லாமல் ஒரு சமூகம் சார்ந்த நடவடிக்கையாகவும் இருக்கும் ஏரளாமான மக்களுடைய பங்கேற்பும் இருக்கும். நாம் சமூகம் சார்ந்த நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்க முடியாது.

திருவிழாக்களை நாம் முற்றிலும் நிராகரித்துவிட முடியாது. ஆனால் எந்த திருவிழாவில் பங்கேற்பது. எந்த அளவில் பங்கேற்பது என்பது பற்றி  ஓரே சீரான முடிவினை மேற்கொள்ள முடியாது. ஒவ்வொரு திருவிழாவின் தன்மையை பொருத்து முடிவு செய்ய வேண்டும். சில திருவிழாக்கள் முழுக்க முழுக்க மதம் சார்ந்த நடவடிக்கையாக மட்டும் இருக்கும். அதில் சமூக ரீதியான  பங்கேற்பு பெரியதாக இருக்காது. எனவே ஒவ்வொரு திருவிழாக்களின் தன்மையை கணக்கில் எடுத்து உள்ளூர் மட்டத்தில் முடிவு எடுக்க வேண்டும்.

கோயில்களுக்கும் சமூக வாழ்க்கையில் பாத்திரம் உள்ளது. அவைகளை ஆர்.எஸ்.எஸ் சார்பு அமைப்புகள் கையகப்படுத்துகிறார்கள். இந்துத்துவா நடவடிகைகளுக்கு பயன்படுத்துகிறார்கள். நாம் அதனை அப்படியே தங்குதடையில்லாமல் அனுமதிக்க முடியாது. எனவே கோயில் நிர்வாகத்தில் நாமும் தலையிட வேண்டும். அதற்காக கட்சியின் முக்கிய ஊழியர்கள் அதனை செய்ய முடியாது. கட்சி ஆதரவாளர்கள், மதச்சார்பற்ற மனநிலை கொண்ட நம்பிக்கையாளர்கள் அதில் இணைந்திட முடியும். இது அத்தனை எளிதாக இருக்காது. ஆனால் நாம் இதன் மூலமே கோயில்களை ஆர்.எஸ்.எஸ் செயல்பாட்டுக்கான  களமாக மாறாமல் தடுக்க முடியும்.

விளையாட்டு விழாக்கள், யோகா பயிற்சி போன்ற வேறு பல சமூகம் சார்ந்த நடவடிக்கைகளும் அவசியமே.

பொதுவாகவே மக்கள் மத்தியில் மத உணர்வு அதிகரித்துள்ளது. (மதவாதத்தை குறிப்பிடவில்லை). கிருத்துவர்கள், இஸ்லாமியர்கள் மத்தியிலும் மத உணர்வு கூடுதலாகியுள்ளது. மதத்திற்கு எதிரான போராட்டத்தை நாம் நடத்துவதில்லை. அதற்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. மதவாத சக்திகள், மதவெறி சக்திகளை எதிர்த்த போராட்டத்திற்குத்தான் முன்னுரிமை கொடுக்கிறோம்.

நேரடியாக மதத்தை விமர்சிக்காத அதே சமயத்தில் அறிவியல் ரீதியான கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும், அதே போல முற்போக்கான சிந்தனைகளை உருவாக்குவதற்கான முயற்சிகளை  மேற்கொள்ள வேண்டும்.  மூடநம்பிக்கைகளையும்,  பழமைவாதத்தையும் எதிர்த்து பிரச்சாரம் செய்ய வேண்டும். இதுபோன்ற முயற்சியின் மூலம் சமூகத்தை  அறிவியல் பாதையில், முற்போக்கு பாதையில் செலுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

சிறுபான்மை வகுப்புவாதம்

ஆர்எஸ்எஸ் இந்துத்துவச் சக்திகள் வளர்கிறார்கள். அந்த வளர்ச்சி மட்டும் தனியாக நடப்பதில்லை. இன்னொரு பக்கம் இஸ்லாமிய மத அடிப்படை வாதிகளும் வளர்கிறார்கள். அதிலிருந்தும் ஆர்.எஸ்.எஸ் பலனடைகிறது. 1990 களில் கோவையில் என்ன நடந்தது என்பதைப் பார்த்தோம்.

பொதுவாக நாடு முழுவதுமே இஸ்லாமிய மக்கள் மிக மோசமான தாக்குதலுக்கு ஆளாகிவருகிறார்கள். குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில்  இரண்டாம்தர குடிமக்களாக வேகமாக மாற்றப்பட்டு வருகிறார்கள். எல்லாக் குடிமக்களுக்கும் உரிய அடிப்படையான உரிமைகள் கூட இஸ்லாமிய மக்களுக்குமறுக்கப் படுகின்றன. எனவே இந்த மாநிலங்களில் இஸ்லாமிய மக்கள்   விரக்தியின் விளிம்பிற்குத் தள்ளப்படுகிறார்கள். அந்த மாதிரியான சூழலில் அவர்கள்  இஸ்லாமிய அடிப்படைவாத, தீவிரவாத  அமைப்புகள் பக்கம் திரும்புவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

குறிப்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அதனுடைய அரசியல் கட்சியான எஸ்டிபிஐ, அதைப்போல ஜமாத்-இ-இஸ்லாமி அதனுடைய அரசியல் கட்சியான வெல்பேர் பார்ட்டி போன்றவற்றை நோக்கி ஒரு பகுதி சிறுபான்மையினர்  திரும்ப வாய்ப்பு இருக்கிறது.

தீவிரவாத போக்குகள்  சிறுபான்மை மக்கள் மத்தியிலிருந்து வந்தாலும் அதை கடுமையாக எதிர்க்க வேண்டும். இந்துத்துவ சக்திகளை எதிர்த்து விட்டு, சிறுபான்மை தீவிரவாதத்தை எதிர்க்கவில்லை என்று சொன்னால், சாதாரண மக்களுக்கு நம் மீது நம்பகத்தன்மை வராது. அது ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு சாதகமாகிவிடும். நம்முடைய நோக்கம் அனைத்து மதங்களையும் சார்ந்த மக்களை ஒரே அணியில் இணைத்து மதவெறிக்கு எதிரான, மதவாதத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான நடவடிக்கைகளை உள்ளூர் அளவில் திட்டமிட்டு, திட்டவட்டமாக முன்னெடுக்க வேண்டும். மாநில அளவிலும், அகில இந்திய அளவிலும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நாடும், நாட்டு மக்களும்  எதிர்கொள்ளும் தீவிர அபாயத்திற்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும்.

தமிழில்: உ.வாசுகி

தொகுப்பு: எம்.கண்ணன் (தீக்கதிர்)

கருத்தியல் களமும், அரசியல் அதிகாரமும்

(தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய பயிற்சிமுகாமில் ஆற்றிய உரையின் வரிவடிவம். நன்றி: அணையா வெண்மணி)

என்.குணசேகரன்

கருத்தியல் களமும் அரசியல் அதிகாரமும் என்கிற இந்தத் தலைப்பு மிக முக்கியமான தலைப்பு. இது நாம் ஆற்றவேண்டிய மிக முக்கியமான பணிகளை நினைவூட்டுவதாக கருதுகிறேன். கருத்தியல் களத்திற்கும் அரசியல் அதிகாரத்திற்கும் ஒரு இணைப்பு உள்ளது என்பதை சொல்லுவதே ஒரு முக்கியமான விஷயம் என்பது மட்டுமல்ல காலம் காலமாக மறைத்துவைக்கப்பட்டிருக்கிற அல்லது மறக்கப்பட்டிருக்கிற செய்தியை இந்தத் தலைப்பு தெரியப்படுத்துகிறது.

சிறிய கூட்டத்தின் ஆட்சி

அரசியல் அதிகாரம் என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக சமூகத்தின் ஒரு மேல்தட்டு, ஒரு சிறு கூட்டத்துக்குத்தான் சொந்தமாக இருந்திருக்கிறது. அதிகாரம், ஆட்சி, நிர்வாகம் என்கிற இவையெல்லாம் செழுமைப்படுத்தப்பட்டிருக்கிற ஒரு மேம்பட்ட வடிவத்தை பெற்றுள்ள இப்போதைய சமூகம் முதற்கொண்டு, இதற்கு முந்தைய காலங்களிலே மன்னர்களுடைய அரசாட்சி என்கிற முறையில் முடியாட்சி நடைபெற்ற காலம் வரைக்கும், ஆட்சி அதிகாரம் என்பது பெரும்பான்மையான மக்களை ஆள்கிற இடத்தில் ஒரு சிறு கூட்டம் தான் இருந்துவந்திருக்கிறது. உடமை வர்க்கங்கள் என்று சொல்லப்படுகிற ஒரு சிறு கூட்டம் தான் ஆளுகிற இடத்தில் இருந்திருக்கிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அவர்கள் நிலவுடைமைச் சக்திகளாக இருந்திருக்கலாம். அதற்கு முன், சாதியக் கட்டமைப்பு இந்திய சமூகத்தில் வேறூன்றத் தொடங்கிய காலத்தில், கிட்டத்தட்ட அடிமைகள் எஜமானர்கள் என்று இருந்த காலத்திலேயே கூட நிர்வாகம் என ஒரு அமைப்பு இருந்திருக்கிறது. ஓரளவுக்கு அரசு என்ற வடிவம் தோன்றியிருக்கிறது. அப்படிப்பட்ட காலத்திலும் ஒரு சிறு கூட்டம்தான் பெரும்பான்மையினரை அடிமைப்படுத்தியிருந்தது.

ஆனால், சாதாரண மக்களுக்கு இது வெளிப்படையாக தெரியவில்லை. உலகில் கிட்டத்தட்ட 800 கோடி மக்கள் வாழ்கிறார்கள், இதில் 99 % உழைக்கும் மக்கள் ஆவர். இந்த மக்களின் உழைப்பைச் சுரண்டி வாழ்ந்து கொண்டிருக்கிற கூட்டம், ஒப்பீட்டளவில் மிக மிகச் சிரியது. அமெரிக்காவில் வால்ஸ்டீரீட்டைக் கைப்பற்றுவோம் என்ற ஒரு இயக்கம் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. நாங்கள் 99 சதவீதம், நீங்கள் 1 சதவீதம் என்று அவர்கள் முன்வைத்த முழக்கத்திலேயே ஒரு செய்தியை முன்வைத்தார்கள். 1% என்பதுதான் ஆளுகின்ற கூட்டம்.

இப்படி காலம் காலமாக ஒரு சிறு கூட்டம் தான் பெரும்பான்மையை அடக்கி ஒடுக்கி வந்திருக்கிறது.

அதிகாரம் செலுத்தும் வழிமுறை

இந்திய நாட்டை எடுத்துக்கொண்டால், மக்கள் தொகை 130 கோடி. இதில் ஒரு சிறு கூட்டம், ஒரு 250 கம்பெனிகள் இருக்கலாம் (அதில் 10 லிருந்து 12 கம்பெனிகள் அதானி அம்பானி போன்ற பெரும் கார்ப்ரேட் கம்பெனிகள்) இப்படிப்பட்ட ஒரு சிறு கூட்டம், மிகப் பெரும்பான்மையை அடக்கி ஆள்கிறது, நினைத்தை சாதிக்கிறது. கொரோனா பெருந்தொற்றின் காலத்திலும் சாதித்துக்கொண்டிருக்கிறது. அது எப்படி நடக்கிறது?

காலம்காலமாக இது எப்படி சாத்தியமாகிறது என்றால், அடக்குமுறைக்கான, வெகுமக்களை அடக்கி ஆள்வதற்கான இரண்டு கருவிகள் அவர்களுக்கு பயன்பட்டு வந்திருக்கிறது. ஒன்று, நேரடிடையாக அடக்குமுறையை ஏவிவிடக்கூடிய கருவிகள் அவர்களிடம் உள்ளன. ஒரு வலுவான காவல்துறை, ஒரு வலுவான இராணுவம் உள்ளது.  

மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறைந்துகொண்டேயிருக்கிறது. அதே நேரத்தில், அடக்குமுறைக் கருவிகளைப் பலப்படுத்துவதற்கான நிதி உள்ளிட்ட எல்லாவிதமான ஏற்பாடுகளையும் அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். இது இந்திய நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கிற விஷயம்.

உழைக்கும் மக்கள் மீது, இராணுவத்தை ஏவிவிட்டு படுகொலை செய்வது காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது. 1940களில் தெலுங்கானாவில் விவாசிகள் தங்கள் நிலத்துக்காக செங்கொடி ஏந்திப் போராடியபோது, அந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக இந்திய இராணுவம், (அப்போது தான் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்திருந்தது) பயன்படுத்தப்பட்டது. மக்களை அழித்தொழித்தது. பல்லாயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகள் வேட்டையாடப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள். எனவே அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை இராணுவம் காவல்துறை உள்ளிட்டவை உழைக்கும் மக்களின் போராட்டங்களை நேரிடையாக ஒடுக்குவதற்கும் தாக்குவதற்கும் இருந்துகொண்டிருக்கிறது. சிறைகூட அதற்காகத்தான் இருந்துகொண்டிருக்கிறது.

ஆனால் இதைவிட பலமான அடக்குமுறைக் கருவி அவர்களிடம் இருக்கிறது. அதன் வழியாக உழைக்கும் மக்களுடைய ஆதரவான கருத்தைப் பெற்றே அவர்களை அடக்கிஒடுக்குகிறார்கள்.

கருத்தியல் எனும் தளம்

கருத்தியல் தளத்தில், ஆளும் வர்க்கங்களுக்கு, ஆள்வதற்கான ஒப்புதலை உருவாக்குகிறார்கள். மன்னர் தெய்வத்தின் அடையாளம் (இங்கிலாந்தில் ஒருகாலத்தில் இந்தக் கருத்து வலுவாக இருந்தது) அதாவது மன்னருக்கும் தெய்வத்துக்கும் வித்தியாசம் இல்லை என்கிற கருத்து. எனவே, தன்னை அடக்கி ஒடுக்குபவரை மன்னருக்கு சமமாக வைத்துப் பார்க்கிற அந்தக் கருத்து, அது மதத்தின் பெயரால் பதியவைக்கப்பட்டது. இந்தியாவைப் பொருத்தவரை கருத்தியல் என்கிற கோட்டையை ஆளும் வர்க்கம் பலமாகக் கட்டுவதற்கு, ஒரு அடித்தளமாக சாதியக் கட்டமைப்பு என்பது பயன்பட்டிருக்கிறது, பயன்பட்டுவருகிறது.

அதாவது கருத்தியல் தளம் என்பது அடக்கி ஒடுக்கப்படுகிற மக்கள் தன்னை அடக்கி ஒடுக்குகிற கூட்டத்துக்கு எதிராகத் திரும்பிடாமல் பார்த்துக்கொள்கிறது. அவர்கள் எல்லாவிதமான உழைப்பையும் சுரண்டி ஊதியத்தைக் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள், உழைப்புக்கான ஊதியம் கிடைப்பதில்லை. ஆனாலும் அவர்களுக்கு எதிராக உழைக்கும் மக்கள் திரும்பிடாமல் இருப்பதற்கு எதிர்ப்புக் களத்துக்கு போகாமல் இருப்பதற்கு கருத்தியல் தளம் பயன்படுத்தப்படுகிறது.  

அது கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் நடக்கிறது. இவையெல்லாம் நேரடியாகத் தெரியக்கூடியவை. இன்னொரு பக்கம் அது கல்வியின் பெயரால் நடக்கிறது. ஊருக்கு ஊர் இருக்கக்கூடிய பேச்சு வழக்குகளின் ஊடாக அது நடக்கிறது. இந்த ஆளும் வர்க்கத்துக்கும் அதனால் ஆளப்படுகிற, சுரண்டப்படுகிற வர்க்கத்துக்குமான முரண்பாட்டை, வேறுபாடுகளை மட்டுப்படுத்துவதற்கு, அது வெடித்திடாமல் தடுப்பதற்கு இந்தக் கருத்தியல் களம் ஆளும் வர்க்கத்துக்கு பயன்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்தக் கருத்தியல் களமும் அரசியல் அதிகாரமும் பிணைந்த ஒன்று.

கருத்தியல் களத்தில் நாம் செயல்படுகிற போது தீண்டாமை ஒழிப்பு முன்னணி இப்படிப்பட்ட பணியைத் துவங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சிகரமான ஒன்று. இப்போதுதான் ஏதோ கருத்தியல் களத்தில் பணியாற்றுவதாக நான் நினைக்கவில்லை. நீண்டகாலமாக அந்தப் பணி நடந்துகொண்டிருக்கிறது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலையிடுகிற எல்லா இடங்களிலேயும் செயல்கள் மூலமாக, தலையீடுகள் மூலமாக அந்தக் குறிப்பிட்ட கிராமத்துக்கு அந்தக் குறிப்பிட்ட பகுதிக்கு ஒரு செய்தியை, ஒரு கருத்தைப் பதியவைக்கிற வேலையும் கூடவே நடந்துகொண்டிருக்கிறது. ஒரு தீண்டாமைக் கொடுமைக்கு எதிர்த்து  வினையாற்றும்போதே கருத்தியல் தளத்திலும் அது வினையாற்றுகிறது. தீண்டாமை ஒழிப்பு என்கிறபோது சாதி ஒழிப்பு என்கிற கருத்தும் பதிகிறது. சாதி ஒழிப்பு என்றால் சாதிக் கட்டமைப்புக்கான எதிர்ப்புக் குரலாக ஆகும். இவ்வாறு அது சமூக சமத்துவம் என்கிற கருத்தியலுக்கான தளத்தினை உருவாக்குகிறது.

சுரண்டலுக்கான கருத்தியல்

இன்று கருத்தியல் களத்தை தன்கைவசம் வைத்துக்கொண்டு ஆளுகிற வர்க்கம், தன்னுடைய அதிகாரத்தை செலுத்திக் கொண்டிருக்கிறது. பெருமபான்மையான மக்கள் மீது தன்னுடைய அதிகாரத்தை அடக்குமுறைக் கருவிகளைவைத்து மட்டுமல்ல, கருத்தியல் என்ற களத்தையும் வைத்துக்கொண்டு அடக்குமுறையையும் சுரண்டலையும் அவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை செயல்பாட்டாளர்களாகிய நாம் உணரவேண்டியிருக்கிறது. எனவே, கருத்தியல் களம் என்பது மிக முக்கியமானது. இது ஒரு பொதுவான அறிவியல் கோட்பாடு என்றே நாம் சொல்லமுடியும். யார் இதைக் கையில் எடுக்கிறார்களோ, யார் இதை சரியாகப் பயன்படுத்துகிறார்களோ அவர்கள் அதில் முன்னேற்றம் காண்கிறார்கள். அந்த வகையில் கடந்த காலங்களில் இதற்கு பல உதாரணங்களைப் பார்க்கலாம்.

உலக முதலாளித்துவம் ஏற்கனவே இதை உணர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம் 1970களிலேயே இதை உணர்ந்திருக்கிறது. அதனால்தான் அவர்கள் தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் போன்றிருக்கக்கூடிய ஊடகங்கள் அத்தனையும் கொண்டு, எந்தச் செய்தியை மக்களிடத்தில் கொண்டு செல்லவேண்டும், எப்படிக் கொண்டு செல்லவேண்டும் என்று வரையறுத்திருக்கிறார்கள். சோவியத் யூனியன் பற்றிய பொய்களை, உண்மை போன்று சொல்லி, சோசலிசமும் கம்யூனிசமும் மோசமானது என்கிற செய்தியை அவர்கள் கொடுப்பது என்கிற முறையில் 1970களிலேயே பக்குவப்பட்டு வந்திருக்கிறார்கள்.

அதே போன்று சின்னங்களைப் பயன்படுத்துவது. சின்னங்களைப் பயன்படுத்துவது என்றால், இந்தியாவிலேயும் தமிழ்நாட்டிலேயும் அதற்கு நிபுணர்கள் பலர் இருக்கிறார்கள். மோடி பெரிய நிபுணர். அவர் அவருடைய படங்களை எல்லா இடத்திலும் வைத்திருப்பது போன்றவை இதில் அடங்கும். இதெல்லாம் ஹிட்லர் காலத்திலேயே நடந்திருக்கிறது.   கருத்தியல் தளத்தில் ‘அவர் ஒரு பிரம்மாண்டமான மனிதர்’, ‘சரித்திரத்தை மாற்ற வந்த மகா புருஷர்’ என்கிற முறையில் சாதாரண மக்கள் மத்தியில் பதியவைப்பது. இப்படிச் சின்னங்கள் மூலமாக தங்களுடைய மேலாதிக்கத்தை பதியவைப்பது என்கிற முறையிலும் ஆளுகிற வர்க்கம் கருத்தியல் மேலாதிக்கத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு சமூக ஊடகங்கள் போன்றவை அதற்கு பயன்படுகின்றன.

பாரதிய ஜனதா கட்சியும் ஆர்எஸ்எஸ்சும் பிரம்மாண்டமாக ஐ.டி., செல் (தகவல் தொழில்நுட்பம் பிரிவு) வைத்துக்கொண்டு செய்யும் வேலைகளைஎல்லாம் நாம் அறிவோம். முதலாளித்துவமும் உலக ஏகாதிபத்தியமும் இதை செய்துகொண்டிருக்கிறது. கருத்தியல் களம் என்பது அவர்கள் மேலாதிக்கம் செய்து கொண்டிருக்கிற ஒரு முக்கயமான தளமாக இருந்துகொண்டிருக்கிறது.

மேலாண்மையும், மேலாதிக்கமும்

இப்போது நம்முடைய நோக்கம் என்பது காலம் காலமாக இருந்துகொண்டிருக்கிற பிற்போக்குக் கருத்தியலுக்கு மாறாக முற்போக்குக் கருத்தியலைக் கொண்டு செல்வது என்பதுதான். முற்போக்குக் கருத்தியலைக் கொண்டு செல்வது என்பதற்கு பதில் நான் ஒரு சின்ன மாற்றத்தை, (உண்மையில் அது பெரிய மாற்றம்) சொல்லவேண்டிய அவசியம் இருக்கிறது. முற்போக்குக் கருத்தியல் மேலாண்மை செலுத்துகிற ஒரு நிலையை உருவாக்க வேண்டும்.  நீங்கள் கொஞ்சம் சரியாகக் கவனித்தீர்கள் என்று சொன்னால், ஆளுகிற வர்க்கம் கருத்தியல் தளத்தில் செலுத்துகிற அந்த அடக்குமுறையை நான் மேலாதிக்கம் என்று சொல்கிறேன். அவர்கள் மேலாதிக்கம் செலுத்துகிறார்கள். தவறான விஷயங்களுக்கு மக்களை ஆட்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். மக்களை தவறான, மிகப் பொய்யான, கட்டுக் கதைகளை நம்ப வைக்கிறார்கள். இந்தக் கட்டுக் கதைகள் பொய்கள் எல்லாமே அவர்கள் கருத்தியல் தளத்தில், மேலாதிக்கம் செய்ய உதவுகிற மிக முக்கியமான விஷயங்கள். எனவே, ஆளுகிற வர்க்கம், ஒரு சிறு கூட்டம், பெருங்கூட்டத்தை தங்களுடைய கருத்துக்கு, தங்களுடைய கொள்கைக்கு தங்களுடைய அடக்குமுறைக்கு ஆதரவாக அவர்களுடைய சம்மதத்தைப் பெறுவதற்கும் அவர்களைத் தங்களுடைய கொள்கைக்குக் கொண்டுவருவதற்கும் செய்வது மேலாதிக்கம். அவர்கள் செய்வது கருத்தியல் மேலாதிக்கம். சிறு கூட்டம் கருத்தியல் தளத்தில் பெரும்பான்மை மக்களை தன்வயப்படுத்துகிறது என்று சொன்னால் அது மேலாதிக்கம்.

காலம் காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டிருக்கிற பெரும்பான்மை மக்களுக்காக, சுரண்டப்பட்டிருக்கிற பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்காக கருத்தியல் தளத்தில், முற்போக்குக் கருத்தியலைக் கொண்டு சென்று, அதில் மேலாண்மை செலுத்தவேண்டும் என்பதுதான் இன்றைக்கு நம் முன்னர் இருக்கக்கூடிய பணி. உழைக்கும் மக்களின் தரப்பு பெரும்பான்மை என்கிற காரணத்தால் அதை மேலாண்மை என்று சொல்கிறோம். இது சரியான காரணத்துக்காக, சரியான லட்சியத்துக்காக, மனித விடுதலைக்கான மேலாண்மை.

3 தளங்களில் போராட்டம்

இந்த வகையில் நம்முடைய பணி என்பது சாதியம், மதவாதம் இதையெல்லாம் எதிர்க்கிற எதிர்ப்புப் பணி மட்டும் அல்ல. அதே நேரத்தில் இது எதிர்மறை நிகழ்ச்சி நிரல் அல்ல, இது நேர்மறையான நிகழ்ச்சி நிரல்.

மூன்று தளங்களில் இதை செய்யவேண்டும் என்று நான் கருதுகிறேன். ஒன்று, இந்த சாதியம் என்கிற ஒரு மிக முக்கியமான பிற்போக்குக் கருத்தியல் தளம், அதில் செயலாற்றவேண்டிய அவசியம் இருக்கிறது. அதை முறியடிக்க வேண்டிய அவசியம இருக்கிறது. அதேபோன்று மதவாதம். வகுப்புவாதம் என்றும் மதவெறி என்றும் வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிப்பொருள் இருக்கிறது என்று சொன்னாலும் கூட, இன்றைக்கு நாம் விவாதிக்கிற சூழலில், மதவாதம் என்றே வைத்துக்கொள்ளலாம். அந்த மதவாத அல்லது வகுப்புவாதக் கருத்தியல் முறியடிக்க வேண்டிய ஒரு இடத்தில் இருக்கிறது. 

மூன்றாவது, நவீன தாராளமய கருத்தியல். இந்த நவீன தாராளமயம் என்று சொல்லும்போது உடனடியாக நம்முடைய மனத்திரைக்கு முன் வருவது என்பது பொருளாதாரம் பற்றியது. நிச்சயமாக நவீன தாராளமயம் என்பது பொருளாதாரத்தோடு இணைந்தது தான். உயிர் காக்கும் மருந்து என்கிற விஷயத்தில் கூட, லாபம், மூலதனக்குவியல் என்பதற்காக அது எந்த வகையில் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்கிற கொள்கைகள் அடங்கியிருக்கிற ஒரு விஷயம்தான் நவீன தாராளமயம் என்பது.

நவீன தாராளமய கருத்தியல்

அதே சமயம் நவீன தாராளமயம் ஒரு கருத்தியலோடு தான் வந்தது. தனியார் மயம் என்ற கருத்து மக்கள் வெறுத்து ஒதுக்கப்பட்ட ஒரு விஷயமாக இருந்த நிலை இருந்தது. குறிப்பாக 1960களில் 70 வரைக்கும் கூட தனியாரிடம் ஒப்படைத்தால் அவர்கள் லாபம் பார்ப்பார்கள், மக்களைப் பார்க்கமாட்டார்கள் என்கிற நிலை இருந்தது. அதனால் தான் தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் அதிகமான அளவுக்கு பொது முதலீட்டில் சுகாதார நிலையங்கள் அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. போக்குவரத்து உட்பட எல்லாமே அரசுத் துறையில் செயல்படுகிற ஒரு நிலை என்பது இருந்தது. இது இந்தியா முழுக்க இருந்தது. இதற்கு பல காரணங்கள் உண்டு.

1950 காலகட்டத்தில் சோவியத் யூனியனில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் அங்கே ஏற்பட்டிருக்கிறக்கூடிய வளர்ச்சி, அது பொதுத் துறை மூலமாக ஏற்பட்டிருக்கிற ஒரு வளர்ச்சி இங்கே சாத்தியம் என்ற நிலையை உருவாக்கியது. அதனுடைய விளைவாகவும் இந்தக் கருத்து என்பது மக்கள் மத்தியில் நிலவியது. ஆனாலும் ஆளுகிற வர்க்கம் தனியார் துறையை விட்டுவிடவில்லை. அதை வளர்ப்பதற்கான முயற்சிகளை திரைமறைவிலும் சிலநேரங்களில் வெளிப்படையாக வெகுவேகமாக செய்து கொண்டிருந்தார்கள். அதே சமயம், இந்த நேரத்தில் தான் பொதுத் துறையையும் கட்டமைக்கிற வேலை நடந்தது. நவீன தாராளமயம் வருகிறபோது அரசுத் தரப்பிலிருந்தே ஒரு கருத்தை அவர்கள் பதியவைத்துக்கொண்டேயிருந்தார்கள். பொதுத்துறையிடம் இருந்தால் என்றால் அங்கே ஒரு மெத்தனப்போக்கு இருக்கும், நிர்வாகத் திறன் இருக்காது, ஊழல் நிறைந்திருக்கும் என்பதை எல்லாம் சொல்லி பொதுத் துறை என்பது சரியல்ல, தனியார் துறை தான் வெகுவேகமாக செயல்படுவார்கள் என்ற ஒரு கருத்து தொடர்ந்து பதியவைக்கப்பட்டது.

இவ்வாறு கருத்தியல் தளத்தில் செயல்பட்டுக்கொண்டேதான் பொருளாதாரத் தளத்தில் நகர்ந்தார்கள். அதே போல தனிமனித உணர்வில் நவீன தாராளமயம் ஒரு கருத்தை முன்வைத்தது. அதாவது விடுதலைப்போராட்டக் காலத்தில், இளைஞர்களுக்கு சமுதாயத்துக்காக ஏதாவது செய்யவேண்டும் என்கிற சமூக அக்கறை இருந்தது. அது விடுதலைக்கு பிறகும் தொடர்ந்தது. ஒரு மனிதன் என்று பிறந்தால், சமூகத்துக்கு என்ன செய்தான் என்பதுதான் முக்கியமானது. எனவே, தன்னுடைய நலத்தைத் தாண்டி பொதுநலத்தைப் பார்க்கிற அந்த மனப்பாங்கு இருந்தது. 

தனியார்மயம் வரவேண்டும், தனியார் கொள்ளையடிக்க வேண்டும் என்றால், தனியாருக்கு ஒரு மதிப்பு ஏற்படுத்தவேண்டும் என்றால், மேற்சொன்ன தனிமனித உணர்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். நீ பணக்காரனாக வேண்டும், நீ மேலும் மேலும் பணம் சேர்க்க வேண்டும், நீ கோடிஸ்வரனாக மாறவேண்டும். அது உன்னுடைய திறமை. நீ திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும், அதற்கேற்ற தொழில்நுட்பம், அதற்கேற்ற படிப்பு, அதற்கேற்ற முயற்சி, விடாமுயற்சி, பில்கேட்சைப் பார், அவரைப் பார், இவரைப் பார் என்று அது பற்றிய நூல்கள் என்ற முறையில் ஒரு தனிமனித சுயநலத்தை வலுப்படுத்துகிற கருத்தியல் என்பது பதியப்பட்டது. அந்தக் கருத்தியலைப் பதியவைத்துத் தான் ஆளும் வர்க்கம் நவீன தாராளமயத்தை கொண்டுபோனார்கள்.

முதலாளித்துவமும் சாதியும்

இந்த நவீன தாராளமயம் பல தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஆணாதிக்க கருத்தியலை அது வலுப்படுத்தியிருக்கிறது.  ஆதிக்கக் கருத்தியலை மேலும் கிளர்ந்து எழச் செய்ததில் முக்கிய காரணியாக நவீன தாராளமயக் கொள்கைகள் இருந்தன. பிற்போக்கான கருத்தியல் என்பதில் ஒரு முக்கியமான இடத்தைப் பெறுகிறது சாதியக் கருத்தியலும் மதவாதக் கருத்தியலும் அதே போல நவீன தாராளமயக் கருத்தியல். இதற்குள் எல்லா விஷயங்களையும் அடக்கிவிடலாம். பெண்ணடிமைத்தனம் இதற்குள்ளேயே வருகிறது. சாதியம் என்று சொல்லுகிறபோது, சாதியம் என்கிற சித்தாந்தம் என்பது பெண்ணடிமைத்தனத்தை உள்ளடக்கியதுதான். முதலாளித்துவ சமூக அமைப்பில்கூட சாதியம் தன்னை புதுவடிவம் எடுத்து நிலைநிறுத்திக்கொண்டுள்ளது.

முதலாளித்துவமும் நிலப்பிரபுத்துவமும் கூடிகுலாவுகிற, ஒன்றிணைந்திருக்கிற ஒரு சமூகமாக இந்திய சமூகம் இருக்கிறது. முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசாக இந்த அரசு இருக்கிறது என்று சொல்வது சதாரண ஒரு வரி விஷயம் இல்லை. நிலப்பிரபுத்துவம் சேர்ந்திருக்கிறது என்று சொன்னால், நிலப்பிரபுத்துவத்தின் கருத்தியல் என்பதும் அதன் பொருளாகும். 

முதலாளித்துவமும் நிலப்பிரபுத்துவமும் இணைந்துவிட்டது என்று சொன்னால், நவீன காலமாற்றத்துக்கேற்ப சாதியமும் புது வடிவம் பெற்றிருக்கிறது என்பதுதான் அதன் பொருள். இதை முதன்முதலில் கண்டுபிடித்தவர்கள், இந்திய சமுதாயத்தை மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்தவர்களே.

ஒரு சாதியை இன்னொரு சாதி வெறுப்பது, எல்லா சாதிகளும் அடித்தட்டிலிருக்கக்கூடிய உழைக்கும் மக்களான அருந்ததியர் உள்ளிட்ட தலித் மக்கள் மீது ஒடுக்குமுறையை பிரயோகிப்பது, ஒடுக்குமுறை மனநிலையோடு அவர்களை அணுகுவது அது நகர்புறமாக இருந்தாலும் சரி, கிராமப்புறமாக இருந்தாலும் சரி. எனவே முதலாளித்துவத்தில் அது நவீன வடிவம் பெற்று அந்த ஒடுக்குமுறையே தொடர்கிறது என்கிறபோது முதலாளித்துவத்துக்கு அது மிகப் பெரும் பயன்படுகிற ஒரு கருவியாக இருக்கிறது.

காந்தியுடைய கருத்தியலில் பல குறைபாடுகள் இருக்கலாம், ஆனால் அவர் செய்த போதனைகள் அன்றைய சாதி சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதைவிட ஒரு முக்கியமான தாக்கம், இந்த சாதி அமைப்புக்கே மிகப் பெரும் ஒரு புரட்சிகரமான எதிர்ப்பை உருவாக்கி, ஒரு மாற்றுக் கருத்தியலை உருவாக்கியது என்பது டாக்டர் அம்பேத்கர் அவருடைய சிந்தனைகள்.

ஆனால், இந்த சமூகத்துக்குள்ளே சாதியத்துக்கு எதிரான இந்தக் குரல்களும் அனுமதிக்கப்பட்டு அதுவும் நடந்தகொண்டு, அதே நேரத்தில் சாதியம் என்பதை முதலாளித்துவத்துவத்துக்கு பயன்படக்கூடிய விதத்தில் அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். முதலாளித்துவம் எப்படி சாதியத்தை பயன்படுத்திக்கொண்டது என்பது ஒரு நீண்ட பெரிய ஆய்வுக்குரிய விஷயம்.

உதாரணமாக, இன்றைய காலகட்டத்தில், வாக்கு அரசியலில் முதலாளித்துவ கட்சிகள் சாதியக் குழுக்களை எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், சாதியப் படிநிலையை எப்படி தங்களுக்கு ஆதரவாகப் பயன்படுததிக்கொள்கிறார்கள் என்பதை நம்மால் பார்க்க முடிகிறது. எனவே முதலாளித்துவக் கட்சி, முதலாளித்துவப் பொருளாதாரம் இது அத்தனையிலும் சாதியம் என்பது அந்த முதலாளித்துவத்தை வளர்ப்பதற்கு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

சாதியும் மதமும்

முற்போக்குக் கருத்தியலை கொண்டு செல்லவேண்டும் என்பதன் முதல் படி, இந்த சாதியக் கருத்தியலை எதிர்த்துப் போராடவேண்டும் என்பது. சாதியம் என்று சொல்லுகிறபோது, சாதியை அழித்தொழித்தல் என்கிற நிகழ்ச்சி நிரல் முக்கியமானது. அந்த நிகழ்ச்சி நிரலை எப்படி கொண்டுசெல்லவேண்டும் என்பதை நாம் விவாதிக்க வேண்டியிருக்கிறது. அதே போன்று, மதவாதம் என்று சொல்லுகிறபோது, இந்து சமயத்தில் மதமும் சாதியையும் பிரித்துப் பார்க்கமுடியாது. சாதியின் இருப்புக்கு ஒரு ஆன்மீக நியாயத்தைக் கற்பித்து வழங்குவது மதம். கடவுளின் பெயரால்தான் நால்வருணம் படைக்கப்பட்டிருக்கிறது. கடவுளின் பெயரால்தான் சடங்கு சம்பிரதாயங்கள் உள்ளன. இந்து சமயம் என்று சொல்லுகிறபோது சாதி என்பதை அதிலிருந்து பிரிக்கமுடியாது. தனித்தனியாகப் பார்க்க முடியாது.

அதே சமயம் மதவாதம் என்று சொல்லுகிறபோது, பிரித்துப்பார்க்கவேண்டிய தேவை இருக்கிறது. மத நம்பிக்கையாளர்கள் என்கிற ஒரு பிரிவு இருக்கிறார்கள். அவர்கள்தான் கோடான கோடி, ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட உழைக்கும் மக்களில் மத நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மதத்தை நம்புவதும் கூட, மத நம்பிக்கையாளர்களாக இருப்பதும் கூட இன்றைய ஆளும் வர்க்கத்துக்கு சாதகமானதுதான். ஏனென்றால் ஆளும் வர்க்கத்தின் சுரண்டலை மறைப்பதற்கு, மத நம்பிக்கையாளர்களாக இருந்தால் அவரவர் படுகிற கஷ்டங்களுக்கு முந்தைய பிறப்பில் அவர் செய்திருக்கக்கூடிய பாவங்கள் தான் காரணம் என்று எளிதாக சொல்லிவிட்டுப் போய்விடலாம். எனவே, மதநம்பிக்கையாளர்களாக இருப்பதும் ஆளும் வர்க்கத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் சாதகமானதே. அந்த மத நம்பிக்கை என்பதும் மதம் சார்ந்த கருத்துக்கள் என்பதும் நாம் எதிர்நோக்க வேண்டிய முக்கியமான விஷயம்.

மதத்தை எதிர்த்த போராட்டம் என்பதில் இருக்கும் ஒரு சங்கடம் என்னவென்றால், தன்னுடைய வாழ்நிலை, வாழ்வாதாரச் சிக்கல்கள் இதற்கெல்லாம் ஒரு நிம்மதியைத் தருகிற ஒரு புகலிடமாக கோவில்களும் மத நம்பிக்கையும் அவர்களுக்குப் பயன்படுகிற காரணத்தால், நேரிடையாக மதத்தின் மீதான தாக்குதல் என்பது, மத நம்பிக்கையோடு இருக்கிற பெரும்பான்மை மக்களை அந்நியப்படுத்துகிற வேலையைத்தான் செய்கிறது என்பது அனுபவம். எனவே, அனைத்தையும் கணக்கிலெடுத்த அணுகுமுறை தேவை.

அடக்கப்பட்டவர்களின் பெருமூச்சாக மதம் இருக்கிறது. வாழ்க்கைச்சுமையிலிருந்து சிறிது நிம்மதி தருவதற்கான இடத்தில் மதம் இருக்கிறது என்று மார்க்ஸ் மதத்தைப் பற்றி சொல்லியிருக்கிறார். அதே நேரத்தில் சுரண்டுகிற கூட்டத்துடைய கருவியாகவும் மதம் என்றும் மார்க்ஸ் சுட்டிக்காட்டியிருக்கிறார். மதத்துடைய பயன்பாடு பற்றிய பொதுவான நிர்ணயிப்பு இது. எனவே, மத நம்பிக்கை என்பதை இந்த அடிப்படையில் அணுகவேண்டும்.

நாம் ஒரு பிரச்சனையை / இயக்கத்தை எடுக்கிறபோது, அது குறித்து அந்த ஊரில் ஊர் கூட்டம் போடுகிறோம். அப்போது பல விஷயங்களைப் பேசுவோம். அதில் அறிவியலைப் பேசவேண்டும்.  பொருள்முதல்வாதக் கருத்தியலை மக்களுக்கு மனதில் பதிய வைப்பதற்கான வாய்ப்பாக அது அமையும். சாதி ஒழிப்பு பற்றி பேசலாம், சாதியக் கருத்தியல் பற்றி பேசலாம். பிரச்சாரத்திலேயேயும், நேரடியாகவும் கொண்டுபோகலாம். மககளிடம் நெருக்கமாகி விவாதிப்பதன்  மூலமும் கொண்டுபோகலாம்.

இந்துத்துவத்தின் நோக்கம்

அதே நேரத்தில் மதவாதம், வகுப்புவாதம், இந்துத்வாவினை நாம் எதிர்க்க வேண்டியுள்ளது. முதலில் இவைகளுக்கும் மதத்துக்கும் தொடர்பில்லை, மதநம்பிக்கைக்கும் இந்துத்வா சொல்கிற விஷயங்களுக்கும் சம்மந்தமில்லை, மதத்தை அவர்கள் அரசியல் அதிகாரத்துக்குப் பயன்படுத்துகிறார்கள் என்கிற விஷயத்தை மக்கள் மனங்களில் பதியவைப்பது அவசியம். ஒருவரியில்/ வாக்கியத்தில் இதை நான் சொல்லிவிட்டேன், ஆனால் அதைப் பதிய வைப்பது சாதாரண விஷயம் அல்ல. ஏனென்றால் இந்துத்வாவின் மிஷினரி என்பது இந்தியா முழுவதும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அவர்களின் செயல்பாடுகள் குறித்து ஏராளமான விவரங்கள் இருக்கிறது. நிறைய அமைப்புக்கள் இருக்கிறது. வரலாறு, தொல்லியல், சமூகவியல், தத்துவம் உள்ளிட்ட 70 துறைகளில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.  ஒவ்வொன்றுக்கும் ஒரு பார்வை வைத்து அவர்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்துத்வா என்று சொல்லுகிறபோது, முதலில் மத அடையாளம் கொண்டிருக்கிற ஒருவருக்கு படிப்படியாக மதப் பிடிமானத்தை அவர்கள் ஏற்படுத்துகிறார்கள். இது இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. மதநம்பிக்கை என்று சொல்லுவது எப்போதாவது நினைவுக்கு வரும். அன்றாடம் 8லிருந்து 16 மணிநேரம் வேலைசெய்துகொண்டிருக்கும் உழைக்கும் மக்கள் மத்தியில் ஒருவருக்கு மத நம்பிக்கை என்பது ஏதாவது ஒரு நேரத்தில் வர வாய்ப்பிருக்கிறது. வாரம் ஒருமுறை கோவிலுக்கு செல்வது போன்ற வகையில் இருக்கிறது. உழைப்பாளி மக்கள் உழைப்பை செலுத்தவேண்டியிருப்பதால் எப்போதும் மதத்தைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்க நேரமில்லை. எந்த மதம் என்று கேட்டாலோ, வழிபாடு நடத்தும்போதோ ஒருவர் தன்னுடைய மதத்தை சொல்வார். மத அடையாளத்துடன் தன்னை இணைத்துக்கொள்வார். ஆனால் இந்துத்வாவாதிகள் செய்வது மதம் தான் எப்போதும் என்று உணர வைப்பது, மதப் பிடிமானத்தை ஏற்படுத்துவது.

கொரோனா காலத்திலேயும் இராமர் கோவில் கட்டுவதற்கான பணியில் இந்துத்வாவாதிகள் இறங்கினார்கள். கொரோனா தொற்று தீவிரமாக பரவிவரும் சூழலில் அடிக்கல் நாட்டுவிழாவை அவர்கள் நடத்தினார்கள். அந்த விழா தொற்றை அதிகரித்தது. இராமர் கோவில் கட்டுவது இப்போது தேவைப்படும் நிகழ்ச்சி நிரலா? இந்தியாவின் பொருளாதாரம் அதள பாதளத்தில் போய்க்கொண்டிருக்கிறது, கோடிக்கணக்கான மக்கள் நடுத்தெருவுக்கு வந்துவிட்டனர். இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் இருக்கின்றபோது, இராமர் கோவில் கட்டுகிறார்கள் என்று சொன்னால், ஒரு மத நம்பிக்கை இருக்கிறவருக்கு இந்த செய்தி போய் சேருகிறபோது நம்முடைய இராமருக்கு கோவில் கட்டுகிறார்கள் என்று மதப்பிடிமானம் வலுக்கிறது. சிறுபான்மை மதங்களுக்கு எதிராக இந்து மதப்பிடிமானத்தைக் கெட்டிப்படுத்துகிற வேலை நடந்துகொண்டிருக்கிறது. இதர மதத்தை வெறுக்கும் போது மத உணர்வு வகுப்புவாதமாக, மதவாத வடிவம் எடுக்கிறது. டெல்லியில் இந்த சூழலிலும் இஸ்லாமியர்கள் தாக்கப்படுவது தொடர்ந்துகொண்டிருக்கிறது. அது நீண்டகாலமாக இவர்கள் செய்துகொண்டிருக்கும் வேலை. எனவே கலவரங்களை செய்வதன் மூலம் இந்துக்களை ஐக்கியப்படுத்தும் வேலையை இந்துத்வாவாதிகள் செய்துகொண்டிருக்கிறார்கள்.

இதில் இன்னொரு அம்சத்தையும் நாம் பார்கக வேண்டியிருக்கிறது. இந்துத்வா என்று சொல்லுகிறபோது இந்து மதம் சார்ந்தவர்களை அவர்கள் வகுப்புவாதக் கருத்தியலுக்கு கொண்டுசெல்கிறபோது, ஏதோ இந்துக்களுக்காக பாடுபடுகிற ஒரு இயக்கமாக ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார இயக்கத்தை அவர்கள் முன்னிறுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் கட்டமைக்க நினைக்கிற இந்து ராஷ்டராவின் கட்டமைப்பு முழுக்க முழுக்க சாதியக் கட்டமைப்பு தான், சாதியப் படிநிலைதான், சாதிய ஒடுக்குமுறைதான். பட்டியல் சாதியினர், பிற்படுத்தப்பட்டோர், ஆதிவாசி உள்ளிட்ட பெருமபான்மை ஒடுக்கப்பட்ட மக்களை ஒரு சிறு கூட்டம் அடித்தட்டில் வைத்து அவர்களை ஒடுக்குகிற முறைதான். பிராமணியம் என்ற கருத்தியல் இந்த ஏற்பாட்டுக்கு உதவுகிறது. அதே நேரத்தில் ஆளுகிற, ஆதிக்கம் செலுத்துகிற பிராமணியம் என்று சொல்லுகிறவர்களின் இன்னொரு முகம், பெருமுதலாளித்துவ கார்ப்பரேட் முகம்.

எனவே, அவர்களின் நிகழ்ச்சிநிரல் என்பது, இந்து ஒற்றுமை என்ற பெயரால் சாதிப் படிநிலையை கெட்டிப்படுத்துவது. இதற்கு சிறுபான்மை எதிர்ப்பு உதவுகிறது. இதுதான் வகுப்புவாதம். இந்த நிகழ்ச்சி நிரலை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் அம்பலப்படுத்துகிறோம் என்ற பெயரில் எல்லோரையும் திட்டிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. இதுதான் அவர்கள் கட்டமைக்க விருப்புகிற சமூக அமைப்பு என்று சொல்லுகிறபோது அந்தக் கருத்தியல் அம்பலப்படும்.

சமத்துவக் கருத்தியல்

நவீன தாரளமயக் கருத்தியல், மதவாதக் கருத்தியல், சாதியக் கருத்தியல் இவை மூன்றும் ஒன்றோடொன்று பிணைந்திருக்கிறது. இந்தப் பிற்போக்குக் கருத்தியலுக்கு மாறாக சமத்துவக் கருத்தியலை – சமத்துவ, மதச்சார்பற்ற, ஜனநாயக கருத்தியல் என்பதை கொண்டு செல்லவேண்டியிருக்கிறது.

சமத்துவம் என்று சொல்லுகிறபோது சாதி நீங்கிய, சாதிவேறுபாடுகள் களையப்பட்ட, சாதி ஒழிந்த அனைத்து மத நம்பிக்கை கொண்டவர்களும் ஒற்றுமையாக, இதர மத நம்பிக்கை கொண்டவர்களை மதிப்புமிக்கவர்களாகக் கருதுகிற, அப்படிப்பட்ட மத நம்பிக்கையாளர்களைக் கொண்டிருக்கிற ஒரு சமூகம். அதே நேரத்தில், இந்த சமூகம் இப்படிப்பட்ட முற்போக்குக் கருத்தியலை முன்னெடுக்கக்கூடிய ஒரு சமூகம், முழுக்க முழுக்க பொருளாதாரத்தை தன் கையில் எடுத்திருக்கும். பொருளாதாரத்தை பெரும்பான்மை மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில், பொருளாதார உற்பத்தி, அதனுடைய பலன், விநியோகம் இந்த மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் அது மாற்றும். முற்போக்குக் கருத்தியலை விதைக்கிற போது அது உடனடியாக இந்த மாற்றங்களை ஏற்படுத்திவிடாது. பொருளாதார அமைப்பில் சமத்துவம் என்று சொல்லுகிறபோது, உழைக்கும் மக்கள் பொருளாதாரத்தைக் கட்டுக்குள் கொண்டுவருகிற அந்த நிலை ஏற்படும். முற்போக்குக் கருத்தியல் அந்த மாற்றத்தைக் ஏற்படுத்தும். அப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறபோது, முற்போக்கு கருத்தியல் மக்களின் மனங்களைக் கவ்விப்பிடித்து, அந்த உழைக்கும் மக்கள் தங்களுக்கான அரசியல் அதிகாரத்தைக் கட்டமைப்பார்கள். இதுதான் வழி.

இதை நான் சொல்லுகிறபோது, உடனே பலருக்கு இது சாத்தியப்படுமா என்கிற அந்தக் கேள்வி வரும்.  அதற்கு வரலாறுதான் ஒரே பதில். பிற்போக்குக் கருத்தியலுக்கும் முற்போக்கு கருத்தியலுக்குமான அந்தப் போராட்டம் இன்று நேற்றல்ல, பல்லாயிரம் ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. அதில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. இன்றைக்கு பல சட்டங்கள், முன்னேற்றங்களைப் பார்க்கிறோம். ஏராளமான போராட்டங்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது என்பதே ஒரு நம்பிக்கைக்குரிய விஷயம். முற்போக்குக் கருத்தியல் என்பது பல ஆண்டு காலமாக, இன்னும் சொல்லப்போனால் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே கடவுள் இல்லை என்று நாத்திக்கருத்துக்களை பரப்பியவர்கள் இந்தியாவில் இருந்திருக்கிறார்கள். மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் அடக்கி ஒடுக்குகிற ஆதிக்க நிலையில் இருக்கக்கூடிய பிராமணியம் என்கிற கருத்தியலை எதிர்த்து, பிராமணர்களை எதிர்த்து இந்தக் கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள். இன்றைக்கு வரையில் அதனுடைய தொடர்ச்சி என்பது இருந்து கொண்டிருக்கிறது. எனவே நிச்சயமாக முன்னேற்றம், சாதனைகளைச் செய்யமுடியும்.

இன்றைக்கு சீனாவில், உழைக்கும் மக்களிடம் தான் பொருளாதாரக் கட்டுப்பாடு என்பது இருக்கிறது. நிறைய சாதனைகள், வெற்றிகள் இந்தப் போராட்டப் பயணத்தில் இருக்கிறது. அந்த வகையில், முற்போக்குக் கருத்தியலுக்கும் பிற்போக்குக் கருத்தியலுக்குமான போராட்டத்தை நாம் முன்னெடுத்துச் செல்லவேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால் வரலாற்றில் வெற்றி என்பது முற்போக்குக் கருத்தியலுக்குத்தான். நாம் வெற்றிக்கான பயணத்துக்குத்தான் வரலாற்றைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்ற நம்பிக்கையோடு அதை செய்யவேண்டியிருக்கிறது.

உள்ளூர் சமூகங்கள்

இந்த முற்போக்குக் கருத்தியலை மிக முக்கியமாக உள்ளூர் சமூகங்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதை நான் வலியுறுத்திச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். உள்ளூர் மட்டத்தில் தனிநபர்களை அணுகக்கூடிய  வாய்ப்புக்களை முதலாளித்துவம் பெற்றிருக்கிறது. தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட ஊடகங்கள் அனைத்தும் தனிநபர்களை எட்டியிருக்கிறது. பிற்போக்குக் கருத்தியல் தனிநபர்களை சென்றடைந்திருக்கிறது. அது மதவாதம், சாதியவாதம், நவீன தாராளமயம் இவை எதுவாக இருந்தாலும் அது தனிநபர்களை சென்றடைந்திருக்கிறது.

அதே போன்று முற்போக்குக் கருத்தியல் தனிநபர்கள், தனிநபர்கள் வாழுகிற உள்ளூர் சமூகம், தெரு, நகர வார்டு, கிராமம் என்கிற உள்ளூர் சமூகத்தை நோக்கிச் செல்லவேண்டிய அவசியம் இருக்கிறது. உள்ளூர் சமூக மக்களிடம் உரையாடுவது அவசியம். உரையாடுவதன் மூலமாக மட்டும் மாற்றம் வந்துவிடாது. செயல் முக்கியமானது. ஒரு செயல் பல கருத்துக்களை, பல பாடங்களை மக்களுக்கு இயல்பாக அனுபவங்கள் மூலமாகக் கற்றுத் தருகிறது. மக்கள் அனுபவங்கள் மூலமாக கற்றுக்கொள்கிறார்கள் என்பதை மாவோ சொல்லியிருக்கிறார். அவர்கள் அனுபவங்களைப் பெறுவதற்கான வாய்ப்பை நாம் ஏற்படுத்தவேண்டும்.

முற்போக்குக் கருத்தியலை கொண்டு செல்வதற்கு, உள்ளூர் மட்டத்திலான மதச்சார்பற்ற, அறிவியலான சமூகங்களை நாம் எங்கெங்கெல்லாம் செல்கிறோமோ அங்கெல்லாம் உருவாக்க வேண்டும். உள்ளூர் மட்டத்திலான முற்போக்கு சமூகங்களை பல்லாயிரக்கணக்கில் தமிழகத்தல் நாம் உருவாக்குகிறபோது அது மேலும் மேலும் பரவும். ஒரு அறிவியல் விதியைச் சொல்வார்கள், இயக்கவியல் விதி என்று ‘அளவு மாறுபாடு அடைய குணமாறுபாடு அடையும்’. ஒரு 10 ஊர்களில் செய்தோமென்றால் அடுத்து 11, 12 என்று போகாது, 10 நூறாகும், ஆயிரம் ஆகும், பத்தாயிரம் ஆகும், லட்சமாகும். இப்படிப்பட்ட உள்ளூர் சமூகங்களைக் கட்டி அமைத்தல் என்பது, டெல்லியின் ஆட்சி அதிகாரத்தை உழைக்கும் மக்கள் கைப்பற்றுகிற ஒரு நிலைக்கு அது கொண்டுசெல்லும். ஏனென்றால் மத்தியில் ஆட்சி என்பதுதான் இந்த முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அதிகாரம் கோலோச்சிய ஆட்சி. எனவே உள்ளூர் சமூகங்கள் வலுவாகக் கட்டமைக்கப்படுவது என்பது முற்போக்கு கருத்தியலைக் கொண்ட கோடிக்கணக்கான உள்ளூர் சமூகங்களை நாம் உருவாக்குகிறபோது, அரசியல் அதிகாரம் முற்போக்காளர்கள் கையில், உழைக்கும் மக்கள் கையில் கைவர வாய்ப்பிருக்கிறது.

உள்ளிருந்தே கைப்பற்றப்பட்ட அரசு அய்ஜாஸ் அகமத் – உடன் ஓர் உரையாடல்

ஜிப்ஸன் ஜான், ஜிதேஷ், எ.எம்

தமிழில்: வீ.பா. கணேசன்

இந்தியாவைச் சேர்ந்த மார்க்சிய சிந்தனையாளரான அய்ஜாஸ் அகமத் நவீன வரலாறு, அரசியல், கலாச்சாரம் ஆகியவை குறித்த கொள்கைகளுக்கான நிபுணராக சர்வதேச அளவில் புகழ்பெற்றவர். இந்தியா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் பல்கலைக் கழகங்களில் பேராசிரியராக பணியாற்றிய அவர், தற்போது இர்வைன் பகுதியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஒப்பியல் இலக்கியத் துறையில் மதிப்புமிகு பேராசிரியராக விமர்சனக் கொள்கையை பயிற்றுவித்து வருகிறார்.

இந்துத்துவ வகுப்புவாதம், பாசிஸம், மதச்சார்பபின்மை, இந்தியப் பின்னணியில் இடதுசாரிகளின் எதிர்காலத்திற்கான வாய்ப்புகள் குறித்த கேள்விகளே இந்தப் பேட்டியில் பெரும் பகுதியாக எழுப்பப்பட்டன. மற்ற பகுதிகளில் உலகமயமாக்கல், உலகளாவிய அளவில் இடதுசாரிகளுக்கான வாய்ப்புகள், அண்டோனியோ க்ராம்சியின் சிந்தனைகளை சரியாகவும், தவறாகவும் பயன்படுத்துவது, இன்றைய சூழலில் கார்ல் மார்க்சின் சிந்தனைகளின் பொருத்தப்பாடு ஆகியவை குறித்த தனது கருத்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றப் பொதுத்தேர்தலுக்கு முன்பாக இந்தப் பேட்டி நடத்தப்பட்டு, தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் மேம்படுத்தப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ்-ம் பாஜக உள்ளிட்ட அதன் பரிவாரங்களும் மிகவும் தனித்துவமான முறையில் பாசிஸ தன்மைகளை வெளிப்படுத்துகின்றன எனவும் அய்ஜாஸ் அகமத் வாதிடுகிறார். எனினும் இந்தியாவின் தாராளவாத நிறுவனங்கள் தற்போது வெற்றுக் கூடுகளாக மாறிவிட்டபோதிலும், இந்திய அரசு இன்னமும் தாராளவாத முறைமையின் அடிப்படையில்தான் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தனித்துவமான தத்துவார்த்த நிலைபாட்டின் அடிப்படையில்தான் இந்தக் கருத்தாக்கத்தை அவர் முன்வைக்கிறார்.

ஜனநாயகத்திற்கும் தாராளவாதத்திற்கும் இடையில் அடிப்படையான முரண்பாடு நிலவுகிறது என்றும் அய்ஜாஸ் அகமத் நம்புகிறார். எனினும் அதீத வலதுசாரிகளுக்கும் அரசின் தாராளவாத நிறுவன வடிவத்திற்கும் இடையே அத்தகைய முரண்பாடு எதுவும் நிலவவில்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார். இத்தகைய தாராளவாதம்தான் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தி அதீத வலதுசாரிகளை வலுப்படுத்துகிறது. எனவேதான் அமெரிக்கா, இஸ்ரேல், துருக்கி, இந்தியா போன்ற பலவகையான உலக நாடுகளிலும் அதீத வலதுசாரி சக்திகள் தாராளவாத நிறுவனங்களின் மூலமாக ஆட்சி செலுத்தவும் முடிகிறது.

பாசிஸம் குறித்த கேள்வியை இருவேறுபட்ட சிந்தனைச் சட்டகத்தில் இருந்து பார்க்க வேண்டும் என்றும், பெரும்பாலான நேரங்களில் இந்தச் சட்டகங்கள் ஒன்றோடு ஒன்று குழப்பிக் கொள்ளப்படுகின்றன என்றும் அவர் நம்புகிறார். அவற்றில் ஒரு சிந்தனைச் சட்டகத்தில் இருந்து பார்க்கும்போது ஏகாதிபத்திய சகாப்தம் முழுவதிலும் முதலாளித்துவ அரசியலின் அனைத்து வடிவங்களிலுமே பாசிஸம் என்ற போக்கு நிரந்தரமான உள்ளீடாக இருந்து வருவதைக் காண முடியும். உதாரணமாக, தாராளவாத/ நவதாராளவாத முதலாளித்துவத்தின் ஆட்சியில் பாசிஸ போக்குகளை வெளிப்படுத்தி வரும் எண்ணற்ற அரசியல் கட்சிகள் ஐரோப்பா கண்டம் முழுவதிலுமே மிக இயல்பாக செயல்பட்டு வருவதைக் காண முடியும்.

எனினும் மேலே சொல்லப்பட்ட சிந்தனைச் சட்டகத்தின் குறுகிய பார்வையில் பார்க்கும்போது போர்களுக்கு இடையிலான காலப்பகுதியில், பிரத்தியேகமான சூழ்நிலைகளில், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் முழுமையான பாசிஸ அரசுகளும் இயக்கங்களும் எழுச்சி பெற்றன. இதற்கு அந்த நாடுகளில் நிலவிய வர்க்க சக்திகளின் பலாபலன் அத்தகையதாக இருந்தது. மூலதனத்தின் ஆட்சியை அச்சுறுத்தி வந்த மிக வலுவான புரட்சிகரமான தொழிலாளி வர்க்க இயக்கங்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட, அரசின் தாராளவாத வடிவத்தை அகற்ற வேண்டியது அவசியமாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலத்தில் வேறெந்த காலகட்டத்தையும் விட இன்று தொழிலாளி வர்க்க இயக்கங்கள் மிகவும் பலவீனமானவையாக உள்ள நிலையில் ஒரு பாசிஸ ஒழுங்குமுறை தேவையற்றதாக உள்ளது. இத்தகைய சூழலில் நரக வேதனையைத் தழுவியபடி அதீத வலதுசாரிகளும் தாராளவாத அமைப்புகளும் ஒன்றாக இருக்க முடியும்.

கேள்வி: மே 2019 தேர்தலில் நரேந்திர மோடி மீண்டும் மக்களின் ஒப்புதலைப் பெற்றிருக்கிறார். அவர் திரும்பவும் ஆட்சிக்கு வந்திருப்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியுடன் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான முக்கிய அம்சங்கள் என்ன? ஆர்.எஸ்.எஸ்.-பாஜகவின் இரண்டாவது முறை ஆட்சியின் கீழ் இந்தியாவின் எதிர்காலம் எத்தகையதாக இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

நரேந்திர மோடியின் தலைமையில் நிச்சயமாக பாஜக மிகப்பெரும் தேர்தல் வெற்றியைப் பெற்றுள்ளது. ‘மக்கள் தீர்ப்பு’ என்று இதைச் சொல்லமுடியுமா என்பதும் கூட சந்தேகத்திற்குரிய ஒன்றுதான். மக்கள் தங்கள் தீர்ப்பைச் சொல்லவேண்டுமானால், உண்மைகளின் அடிப்படையிலான, அறிவுபூர்வமான, அரசியல் விவாதம் மக்களுக்குத் தேவைப்படுகிறது. அதைப் போன்றே எதிர்க்கட்சிகள் தங்களது மாற்றுக் கொள்கைகளை மக்களிடையே தெளிவாக எடுத்துரைப்பதற்கான அமைதியான, தெளிவான சூழலும் தேவைப்படுகிறது. அரசியல் கட்சிகள் உண்மைகளின் அடிப்படையில் அறிவுபூர்வமான மாற்றுக் கருத்துக்களை முன்வைக்க முடிந்தாலும் கூட, அவை மக்களிடம் சென்று சேரும் வாய்ப்பு இன்று இல்லை. ஏனெனில், இந்திய பெரு நிறுவனங்களின் பிடியிலுள்ள ஊடகமானது கிட்டத்தட்ட சங் பரிவார இயந்திரத்தோடு ஐக்கியமான ஒன்றாக மாறிவிட்டதோடு, உண்மைகளையும் கொள்கைகளையும் எவ்வித மாச்சரியமும் இன்றி வெளியிடுவது; மக்கள் நலனுக்கு உகந்த வகையில் செயல்படுவது என்ற தனது தொழில்முறை உறுதிப்பாட்டை இழந்துபோனதாகவும் மாறியுள்ளது. மக்கள் தங்கள் தீர்ப்பைத் தர முடிகின்ற ஜனநாயக பூர்வமான செயல்பாட்டிற்கு இதில் தொடர்புடைய, அனைத்து அமைப்புகளும், குறிப்பாக தேர்தல் ஆணையம், உயர்மட்ட நீதித்துறை, சட்டத்தை அமலாக்கும் அமைப்புகள் போன்றவை, நீதிநெறி முறைகளை, அரசியல் அமைப்புச் சட்ட மற்றும் சட்டரீதியான நெறிமுறைகளை, கறாராகக் கடைப்பிடிப்பனவாக இருக்க வேண்டும். ஆனால் நிலைமை அவ்வாறு இல்லை என்பது தான் உண்மை. இந்திய அரசியல் தளம் மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் ஜனநாயக நெறிமுறைகளை மிகுந்த உறுதியோடு கடைப்பிடித்த ஒரு காலமும் இருந்தது. எனினும் அத்தகைய மக்கள் திரள் கடந்த சில தசாப்தங்களாக இந்தியாவில் பெரும் போராட்டத்தை நடத்தி வருவதோடு, ஆண்டுகள் செல்லச் செல்ல மேலும் மேலும் அதிகமான வகையில் ஊழல்மிக்கதாக மாறி வருகிறது. “ஊழல் மிக்கதாக” என்பதை தேர்தலில் மிகப் பிரம்மாண்டமான வகையில் பணத்தைப் பயன்படுத்துவது என்ற பொருளில் மட்டுமே நான் குறிப்பிடவில்லை; தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் அது மிக முக்கியமான ஓர் அம்சமாக இருக்கிறது என்பதும் உண்மை தான். எனினும் ஜனநாயகச் செயல்பாடு என்ற குறிப்பிடக்கூடிய செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த சீரழிவையே நான் அவ்விதம் குறிப்பிடுகிறேன். 2019 தேர்தல் முடிவுகள் தேர்தல் வெற்றியின் அளவுக்கும் ஜனநாயக ரீதியான அடிப்படை நெறிமுறைகள் என்பதற்கும் இடையேயான உறவுகள் முற்றிலுமாக மறைந்து போன ஒரு கட்டத்தை நாம் எட்டியிருக்கிறோம் என்பதை எடுத்துக் காட்டுவதாகவே தோன்றுகிறது.

மிகுந்த ஆச்சரியமூட்டும் வகையில் இந்திய அரசியல் அமெரிக்க மயமாகியுள்ளது. ஒரு புறத்தில் வழிகாட்டியும் பாதுகாவலருமாகத் தோற்றமளிக்கும் மகத்தான தலைவர் என்ற பிம்பம் உருவாக்கப்படுவதும் மறுபுறத்தில் அச்சத்தையும் பதற்றத்தையும் திட்டமிட்டு உருவாக்குவதும் வழக்கமானதொரு விஷயமாக மாறியிருக்கிறது. அரசியல் என்பது இப்போது இடைவெளியற்ற வகையில் தொலைக்காட்சி நிலையங் களாலும், கருத்துக் கணிப்புகளாலும், பிரம்மாண்டமான பிரச்சாரங்களாலும் பெருநிறுவனங்கள் பல ஆயிரம் கோடிக்கணக்கான ரூபாய்களை செலவழிக்கும் ஒரு விஷயமாக மாறிப் போயிருக்கிறது. இந்தப்பணத்தில் பெரும்பகுதி ரகசியமானது மட்டுமின்றி அடையாளம் காண முடியாத ஒன்றாகவும் இருக்கிறது. அமித் ஷா உள்துறை அமைச்சராக உள்ள நிலையில் குடிமக்கள், குடிமக்கள் அல்லாதவர்கள் குறித்த பதற்றமான சூழ்நிலை அதிகரித்துக் கொண்டே போவது அமெரிக்காவிற்குள் நுழையும் பொருளாதார ரீதியான அகதிகள் குறித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் இனவாத, கிட்டத்தட்ட இனவெறித்தனமான கொள்கைகளின் நகலாகவே தென்படுகிறது. இவை அனைத்தையுமே சங் பரிவாரங்கள் மூன்று வேறுபாடுகளுடன் அமெரிக்காவிடமிருந்து கற்றுக் கொண்டவைதான்: வெட்டவெளிச்சமான பதற்றச் சூழ்நிலையை உருவாக்குவது என்பதுதான் இந்தியாவிலுள்ள அனைத்துத் தொலைக்காட்சிகளின் விதிமுறையாக இருந்து வருகிறது; 2019-ம் ஆண்டில் பாஜகவின் செயல்பாட்டை வேகப்படுத்த உதவிய பணத்திற்கான ஆதாரத்தை கண்டுபிடிக்க முடியாது என்பதோடு அமெரிக்காவில் இவ்வாறு தேர்தலில் செலவழிக்கப்படும் தொகையை விட அது மிக அதிகமாகவே உள்ளது; நீதித்துறையினால் தண்டிக்கப்படுவோம் என்ற பயமேதுமின்றி, தீவிரமாகவும், இடைவிடாத வகையிலும் சங் பரிவாரம் தொடர்ந்து கட்டவிழ்த்து விடும் வன்முறை ட்ரம்ப்பின் மூர்க்கத்தனத்தை விடப் பல மடங்கு அதிகமாகும்.

“2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினவா?” என்று கேட்டால், ஆம், 2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகளைப் போலவே இந்தத் தேர்தலும் எனக்கு வியப்பை அளித்தது. அன்றாட தேர்தல் அரசியலில் நான் அதிக கவனம் செலுத்துபவன் அல்ல. எந்தவொரு தேர்தலிலும் எனது தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் என்பது இடதுசாரிகள், தாராளத்தன்மை கொண்ட இடதுசாரிகள் போன்ற எனக்கு வேண்டியவர்களிடமிருந்து பெற்ற அந்த மதிப்பீடுகள் என்னவென்று தெரியுமா? இருதரப்பினருமே மிகக் குறைந்த வித்தியாசத்தில்தான் வெற்றி பெறுவார்கள்; ஒரு வேளை தொங்கு பாராளுமன்றமாகவும் கூட அது இருக்கலாம். உடனடி எதிர்பார்ப்புகளில் இருந்து நான் விடுபட்ட உடனேயே கட்டமைப்பு குறித்த எனது ஆய்வின் அடிப்படை ஆதாரத்தை நோக்கி நான் திரும்பிச் சென்றேன். மதச்சார்பின்மை எப்போதுமே சிறுபான்மை நிலைபாடு கொண்டதுதான் மதச்சார்பின்மைக்கான உண்மையான பற்றுறுதி என்பது இந்திய சமூகத்திலும் அரசியலிலும் எப்போதுமே சிறுபான்மை நிலைபாட்டைக் கொண்டிருப்பதுதான் என்பதையும் இந்திய சமூகமானது எந்த அளவிற்கு இந்துமயமாக மாறியுள்ளது என்பதையும், எவ்வாறு வகுப்புவாத வன்முறையானது எப்போதுமே பாஜக மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு தேர்தலில் பெருமளவிற்குப் பலனளிக்க வழிவகுக்கிறது என்பதையும், இந்திய அரசின் முக்கியமான, தேர்தல் ஆணையம், உயர்மட்ட நீதித் துறை ஆகியவை உள்ளிட்ட, நிறுவனங்கள் அனைத்தும் மிக அதிகமான அளவிற்கு பாஜகவின் நலன்களுக்கு சேவை செய்வதாக மாறியுள்ளன என்பதையும் நான் எப்போதுமே வலியுறுத்தி வந்துள்ளேன். 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு பெருமளவிலான போக்குகள் குறித்து மேலும் அதிகமான கருத்தோட்டங்களை உள்ளடக்கி 2015-ம் ஆண்டில் நான் எழுதிய கட்டுரையை சோஷலிஸ்ட் ரிஜிஸ்டர் இதழ் 2016-ம் ஆண்டில் வெளியிட்டது. அந்தக் கட்டுரை பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மறுபிரசுரம் செய்யப்பட்டது. இப்போது ஜூன் 7, 2019 தேதியிட்ட ஃப்ரண்ட்லைன் இதழிலும் “இந்தியா: தாராளவாத ஜனநாயகமும் அதிதீவிர வலதுசாரிப் போக்கும்” என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. இந்திய அரசியலின் முக்கியமான அம்சங்கள் என்று நான் சுட்டிக் காட்டியிருந்தவை மேலும் தீவிரமாகியுள்ளன என்பதையே இப்போது நடக்கும் நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.

தேர்தலில் ஒருபுறத்தில் காங்கிரஸிற்கு ஏற்பட்ட பின்னடைவும், மறுபுறத்தில் இடதுசாரிகளுக்கு ஏற்பட்ட சரிவும் மக்களவையில் பாஜகவிற்கு கிடைத்த பெரும்பான்மையைப் போன்றே முக்கியமானது என்று அந்த நேரத்தில் நான் குறிப்பிட்டிருந்தேன். தேர்தல்கள் நடப்பதற்கு நீண்ட நாட்களுக்கு முன்பாகவே முதலாளித்துவ பெரும்புள்ளிகளின் முழுமையான ஆதரவை பெற்றிருந்த முதல் இந்தியப் பிரதமராகவும் மோடி இருந்தார் என்பதையும் நான் சுட்டிக் காட்டியிருந்தேன். அமெரிக்காவை முன்மாதிரியாகக் கொண்டு இந்திய அரசியலை அதிபர் வகைப்பட்டதாக அவர் கட்டாயமாக மாற்றவில்லை என்ற போதிலும் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது அதிபர் தேர்தலுக்காக செலவிட்ட தொகைக்கு இணையான தொகையை மோடி செலவழித்தார் என்பதும் முக்கியமானது.

அரசியலை ஆழமாக உற்று நோக்குபவர்கள் கூட இதில் கவனிக்காமல் விட்ட ஒரு விஷயம் என்னவெனில் இந்தத் தேர்தலுக்காக அவர் திரட்டிய பணமும், பெரு நிறுவனங்களிடமிருந்து எதிர்காலத்தில் திரட்ட அவர் திட்டமிட்டிருந்த தொகையும் கணிசமான அளவிற்கு ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிஷத், ஏன் பாஜகவிடமிருந்தும் கூட சுய உரிமை பெற்றவராக அவரை மாற்றியிருந்தது என்பதே ஆகும். ஏனெனில் பாஜகவின் தேர்தல் பிரச்சாரங்களுக்காக ஆர் எஸ் எஸ் அமைப்பு வழங்கிவரும் தொண்டர்களின் விசுவாசத்தை விலைக்கு வாங்கப் போதுமான பணம் அவரிடம் இப்போது இருக்கிறது. அப்படி இருக்கையில் பாஜகவின் இடைநிலை செயல்பாட்டாளர்களையும் கூட அவரால் எளிதாக விலைக்கு வாங்கிவிட முடியும். தங்களுக்கே ஆன தனி ஒரு உலகத்தை உருவாக்கிக் கொண்டுள்ள மோடி-ஷா இரட்டையரின் தோற்கடிக்க இயலாத தன்மைக்கு அவர்களிடம் இப்போது இருக்கும் அபரிமிதமான செல்வமும் கூட ஒரு விதத்தில் காரணமாகும்.

தாராளவாத நிறுவன கட்டமைப்புகளின் இருப்பை ஆர் எஸ் எஸ் அங்கீகரித்த போதிலும் அரசின் நிறுவனங்களை உள்ளிருந்தே கைப்பற்றி நீண்ட கால அரசை அமைக்கப் போராடுவது என்ற நடைமுறை உத்தியை மேற்கொண்டுள்ளது என்று மிகவும் விரிவாகவே நான் வாதிட்டு வந்திருக்கிறேன். 1960களில் இடதுசாரிகளின் புகழ்பெற்ற கோஷத்தை நினைவுபடுத்தும் வகையில் “நிறுவனங்களின் ஊடாக நீண்ட பயணம்” என்றும் கூட நான் அதைக் குறிப்பிட்டிருக்கிறேன். விரிவான அளவில் பார்க்கும்போது அதீத வலதுசாரிகளின் திட்டங்களுக்கும் தாராளவாத நிறுவன கட்டமைப்புகளுக்கும் இடையே அடிப்படையான முரண்பாடுகள் எதுவும் இல்லை. இந்த நிறுவனங்களை ஆர் எஸ் எஸ் கையிலெடுத்து அவற்றின் மூலம் ஆட்சி செலுத்த முடியும் என்றும் கூட நான் வாதிட்டிருக்கிறேன். எனது முந்தைய ஆய்வில் உள்ள இத்தகைய கருத்தாக்கங்கள் பலவற்றையும் கையிலெடுத்துக் கொண்டு இப்போதிருக்கும் நிலையைப் பற்றிய ஆய்வை நாம் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றே நான் கருதுகிறேன். உதாரணமாக, பல்வேறு வகைகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் மோசடிகளின் அளவு குறித்தோ அல்லது இந்திய அரசின் ஒவ்வொரு முக்கிய நிறுவனமும் எந்தவகையிலும் ரகசியம் வெளியே கசிந்துவிடாதபடிக்கு பாதுகாக்க பாஜக/ஆர் எஸ் எஸ் உடன் கூட்டாகச் செயல்படுவது குறித்தோ நான் வியப்படையவே இல்லை. ஏனெனில் அரசானது பெருமளவிற்கு உள்ளிருந்தே கைப்பற்றப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.

கசப்பான யதார்த்தங்கள்

இதுபற்றி மேலும் ஆழமான ஆய்விற்கு நாம் காத்திருக்கத்தான் வேண்டும். என்றாலும் ஒரு சில கசப்பான விஷயங்களை சொல்லியாக வேண்டும். முதலாவதாக, பாரதீய ஜனதா கட்சி உண்மையிலேயே ஒரு தேசிய கட்சியாக இப்போது உருவெடுத்திருக்கிறது. இந்த கட்டமைப்பின் நிலையான மையமாக மோடி-ஷா கூட்டணி இருக்கிறது.

இரண்டாவதாக, தனது சொந்த பிரிவின் நலன்களை, பெருநிறுவனங்களின் நலன்களை எல்லாம் மீறி மதச் சார்பின்மைக்காக கூட்டாகப் போராட வேண்டிய தேவை இருக்கும் நேரத்தில் இடதுசாரிகளைத் தவிர, வேறெந்த அரசியல் கட்சியுமே, காங்கிரஸ் உள்ளிட்டு, அதற்குத் தயாராக இல்லை. இத்தகைய அங்கீகரிப்பின் விளைவு என்னவெனில் இடதுசாரிகள் நம்பிக்கையோடு இணைந்து செயல்படுவதற்குரிய “மதசார்பற்ற கட்சிகள்’ என்ற எதுவுமே இல்லை என்பதுதான். அவர்கள் ஒவ்வொருவருக்குமே மதச்சார்பின்மை என்பது வசதிக்கேற்ற ஒரு விஷயம் மட்டுமே. இந்த விஷயத்தில் இடதுசாரிகள் மிகவும் முழுமையான வகையில் தனிமைப்பட்டுள்ளனர்.

மூன்றாவதாக, காங்கிரஸின் சரிவு என்பது உறுதியானது; அது மீண்டும் உயிர்பெற்று வர வேண்டுமெனில் மிகப்பெரும் மாற்றங்களை அது செய்ய வேண்டும். ஆனால் அதற்கான அறிகுறிகள் எதுவுமே கண்ணில் தென்படவில்லை.

நான்காவதாக, உத்திரப் பிரதேச மாநிலத்தில் சாதிய அரசியலின் இரண்டு மிகப்பெரும் அடையாளங்களாக இருக்கும் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் கூட்டு வலிமையை உடைத்தெறியும் அளவிற்கு மதரீதியான வெறிக்கூச்சல் மற்றும் சமூக நெறியாள்மை ஆகிய கூட்டணியின் அரசியல் வலுவாக உள்ளது என்பதையே உத்திரப் பிரதேச மாநில நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன. தொடர்ச்சியான சலுகைகளின் மூலம் சாதிய முரண்பாடுகளை பெருமளவிலான இந்து அமைப்பிற்குள்ளேயே கட்டுப்படுத்தி வைத்து விட வேண்டும் என்பதே காந்தியில் இருந்து ஆர் எஸ் எஸ் வரையிலானவர்களின் கனவாக இருந்து வந்துள்ளது. ஒரு வகையில் சொல்வதென்றால் மேல் மட்ட, அடிமட்ட சாதிகள் சகவாழ்வு வாழ்வதற்கு ஒரு நடு சாதிக்கான தீர்வுதான் அது. இந்த விஷயத்தில் குஜராத் மாநிலத்தில் இருந்து நாட்டின் வடகிழக்குப்பகுதி வரையில் ஆர் எஸ் எஸ் பெற்றிருக்கும் பல வெற்றிகளில் மிக சமீப காலத்திய வெற்றியாகவே உத்திரப் பிரதேச தேர்தல் முடிவுகள் அமைகின்றன. சாதிப் பிரச்சனை ஏதாவதொரு வகையில் இந்துத்துவா திட்டத்தை வீழ்த்தி விடும் என்ற நமது ஆழ்ந்த நம்பிக்கையை நாம் மீண்டும் ஆழமாக மறுபரிசீலனை செய்யவேண்டியது அவசியம்.

இறுதியாக, விடுதலை, சீரமைப்பு ஆகியவற்றுக்கான அரசியலுக்கான எந்தவொரு வாய்ப்புக்கும் தொலைதூர நோக்கிலிருந்து பார்க்கும்போது மேற்கு வங்கத்தில் இடதுசாரி நோக்கங்கொண்ட வெகுஜன வாக்குகளின் சரிவு, அவற்றில் பெரும்பங்கு பாஜக நோக்கித் திரும்பியிருக்கக் கூடும் என்ற கருத்தில் உள்ள உண்மை ஆகியவை 2019-ம் ஆண்டின் மிகவும் கவலை தரத்தக்க நிகழ்வாகவே அமைகிறது. தாராளவாத அரசியலின் கொடுமைகளும் ஏமாற்றுக்களும் இந்த உலகின் பாவப்பட்ட மக்களை எந்த அளவிற்கு திசை திருப்ப முடியும் என்பதற்கு இது முதல் முறை உதாரணமும் அல்ல; அவ்வாறு நடைபெற்ற முதல் இடமாகவும் மேற்கு வங்க மாநிலம் இருக்கவில்லை திர்ணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக போன்ற இழிசெயல்புரியும் அரசியல் சக்திகளின் மோதல்களுக்கு நடுவே சிக்கும்போது அன்றாட பொருளாயத அவலங்களை எதிர்கொள்ளவே தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கும் நிராதரவான, நம்பிக்கை இழந்து போன, துயரத்தில் மூழ்கிப் போன மக்கள் என்னதான் செய்வார்கள்? தாராளவாத அரசியலின் சிதிலங்களில் மிகவும் தனிமைப்பட்டிருக்கும் இடதுசாரிகள் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்கே போராட வேண்டியிருக்கும் என்று தேர்தலுக்கு முன்பாகவே நான் கூறியிருந்தேன். இப்போது தேர்தல் முடிவுகள் வந்தபிறகு, நிலைமை அதை விட மிகுந்த கவலைக்குரியதாகவே மாறியுள்ளது.

இடதுசாரிகளின் பங்கு

இவ்வாறு குறிப்பிட்ட நிலையில், இந்தியாவில் உள்ள இடதுசாரிகள் குறித்து மூன்று விஷயங்களை நான் வலியுறுத்த விரும்புகிறேன். ஒன்று வேறு எந்தவொரு கட்சியுடனும் ஒப்பிடமுடியாத வகையில் பரந்த அரசியல் அனுபவமும் ஆழ்ந்த ஸ்தாபனமும் அவர்களிடம் இருக்கிறது. இடதுசாரிகளின் பின்னடைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை சமூக ரீதியான இயக்கங்களும், அரசுமுறை சாரா அமைப்புகளும், அங்குமிங்குமாக செயல்பட்டு வரும் சிறு குழுக்களும் நிரப்பி விடக் கூடும் என்று யாரும் நினைத்தால் அத்தகைய ஒரு நிகழ்வு நடக்கவே நடக்காது. இரண்டாவதாக, ஏழைகளின், ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தின் பார்வையில் இருந்து தெளிவான நோக்கும், சமூகம் குறித்த முழுமையான புரிதலும் உள்ள ஒரே சக்தியாக இடதுசாரிகள் மட்டுமே உள்ளனர். அறிவுலகத்திலும் கலாபூர்வமான வாழ்க்கையிலும் இந்தியாவில் உள்ள இடதுசாரிகளின் இருப்பு மிகவும் அபரிமிதமான ஒன்றாகும். வேறு எந்தவொரு அரசியல் சக்தியும் இந்த விஷயத்தில் அதன் அருகில் கூட வரமுடியாது. மறுகட்டமைப்பைத் தொடங்குவதற்குத் தேவையான பேராற்றல் மிக்க துணிவு இப்போது அதற்குத் தேவைப்பட்ட போதிலும், தேவையான அடிப்படையான வள ஆதாரங்கள் இன்னமும் அதனிடம் இருக்கவே செய்கின்றன.

கடந்த ஐந்து ஆண்டுகளில்நடைபெற்ற அனைத்திற்கு பிறகு 2019தேர்தலின் முடிவுகள் பற்றி வியப்படைவதற்கு அடிப்படையில் எதுவுமில்லை; அடுத்த ஐந்து ஆண்டுகள் இதை விட மோசமாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் கூட நாம் வியப்படைய வேண்டிய அவசியமில்லை. நமது நாட்டின் விடுதலைக்கான போராட்டத்தைத் தொடங்கி வைத்த யுகம் இப்போது முடிவடைந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. இருந்தாலும், மிக விரிவான வகையில் சேதமாகிவிட்ட ஒரு நாட்டையே நமது இளைஞர்கள் இப்போது பெறவிருக்கிறார்கள். அதை மீண்டும் புனரமைப்பதைத் தவிர வேறெந்த வழியும் அவர்களுக்கு இல்லை; அதையும் கூட அவர்கள் கீழே இருந்துதான் தொடங்க வேண்டியிருக்கிறது.

நன்றி: ஃப்ரண்ட்லைன்

அடுத்த இதழில்: இந்துத்வாவின் தாக்குதல்கள்

அதிகாரக் குவிப்பும் அத்துமீறல்களும்

உ. வாசுகி

அரசு என்பது ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறை கருவி என்றார் மார்க்ஸ். ஒரு நாட்டில் உள்ள அரசின் வர்க்கத் தன்மையைப் பொறுத்து, ஆளும் வர்க்கத்தின் நலனுக்கு ஏற்பவே அரசின் அங்கங்களும், அதிகார கட்டமைப்பும் அமையும். இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவின் அரசியல் சாசனம், சுதந்திரத்துக்குப் பின் நவீன இந்தியா எத்தகையதாக கட்டமைக்கப்பட வேண்டும் என்ற பல நீரோட்டங்களின் கருத்து மோதல்களில் உருவானது. இந்திய முதலாளி வர்க்கத்தின் தலைமையிலான தேசிய நீரோட்டம், இடதுசாரி கருத்தோட்டம், ஆர்.எஸ்.எஸ். முன்வைத்த இந்து இந்தியா போன்ற பிரதான கருத்தியல்களில் ஆர்.எஸ்.எஸ்.சின் கண்ணோட்டம் நிராகரிக்கப்பட்டு, ஜனநாயக சோஷலிச குடியரசு என்ற அடிப்படையில் அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டது. பின்னர் மதச்சார்பின்மையும் இணைக்கப்பட்டது. டாக்டர் அம்பேத்கர் போன்ற தலைவர்களின் பங்களிப்பு இதில் முக்கியமானது.

கூட்டாட்சிக் கோட்பாடு இதில் இடம் பெற்றதற்கு முக்கிய காரணம் தேச விடுதலை போராட்டங்களில் மக்கள் பங்கேற்பும் , மொழி வழி மாநிலங்களுக்காகவும், மொழி கலாச்சாரம் பாதுகாக்கப்படுவதற்காகவும் பல்வேறு தேசிய இனங்கள் நடத்திய வெகுமக்கள் போராட்டங்களும்தாம். இவற்றில் இடதுசாரிகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. பல்வகை தேசிய இனங்கள், மொழிகள் உள்ளடங்கிய மாநிலங்கள் இணைந்த ஒன்றியம்தான் இந்தியா என்ற சாராம்சம் அரசியல் சாசனத்தில் இடம் பெற்றது. இந்தியாவில் பெரு முதலாளிகள் பெரிதும் வளர்ச்சியடையாத காலமாகவும் அது இருந்தது.

அரசியல் சாசனம் “வடிவத்தில் கூட்டாட்சி தன்மை (federal) கொண்டதாக இருந்தாலும், குணாம்சத்தில் மத்திய அரசிடம் அதிகார குவிப்புக்கு (unitary) வழி வகுப்பதாக உள்ளது” என்பது அன்றைக்கே கம்யூனிஸ்டுகளின் விமர்சனமாக அமைந்தது. பிரதான அதிகாரங்கள், வருவாய் மற்றும் வளங்களின் மீது கட்டுப்பாடு போன்றவை மத்திய அரசின் பொறுப்பில் இருந்தன. மாநில அரசுகளைக் கலைக்கும் உரிமை மத்திய அரசிடம் இருந்தது. நிதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் மத்திய அரசை சார்ந்து இருக்க வேண்டிய நிலைமையில்தான் மாநிலங்கள் வைக்கப்பட்டன. ஆளுநர்கள் மத்திய அரசின் முகவர்களாக செயல்பட்டனர். பொதுப்பட்டியலில் உள்ள அம்சங்கள் மீது முடிவெடுக்கும்போது கூட மாநிலங்களுடன் கலந்து பேசுவதற்கான ஏற்பாடு இல்லை. காலப்போக்கில் இந்த முரண்பாடு அதிகரித்தது. மத்திய மாநில உறவுகளை மறு வரையறை செய்யக்கோரி, 1977-ல் மேற்கு வங்க இடது முன்னணி அரசு 15 அம்ச கோரிக்கை சாசனத்தை உருவாக்கியது. வேறு பல கட்சிகளும் இந்நிலைபாட்டை எடுத்தன. 1983-ல் ஸ்ரீநகரில் நடந்த மாநாடு இத்தகைய கட்சிகளை ஒருங்கிணைத்தது. அதிகார பரவல் என்பது மைய அரசை பலவீனப்படுத்தாது; மாறாக அடித்தளத்தை வலுப்படுத்தும் என்று தோழர் ஜோதிபாசு அம்மாநாட்டில் முன்வைத்தார். அதே வருடம் மத்திய மாநில உறவுகளை மறு சீரமைப்பு செய்ய சர்க்காரியா கமிஷனை மத்திய அரசு அமைத்தது. இதன் அறிக்கை பல அடிப்படை முரண்பாடுகளைத் தீர்க்க உதவவில்லை. 1990-ல் தேசிய முன்னணி அரசு, மாநிலங்களுக்கிடையேயான கவுன்சிலை (Inter-State council) உருவாக்கியது. இது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், இதுவும் அடிப்படை பிரச்னைகளுக்கு வழிகாட்டவில்லை. மேலும் பல புதிய சிக்கல்கள் முளைத்தன. 2007-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி, மீண்டும் ஒரு கமிட்டியை, மத்திய மாநில உறவுகள் சம்பந்தமாக அமைத்தது. அதன் வரம்பும் கூட மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமல் நிர்ணயிக்கப்பட்டது.

பொதுவாக, அரசியல் சாசனத்தில் இருந்த கூட்டாட்சி அம்சங்களை வலுப்படுத்தும் விதமாக, மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் முறையிலேயே கம்யூனிஸ்ட் கட்சியின் தலையீடுகள், நிலைபாடுகள் அமைந்தன. மத்திய முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ அரசின் அதிகார குவிப்பை நிலைநிறுத்துவதாகவே காங்கிரசின் செயல்பாடுகள் இருந்தன. அரசின் வழிகாட்டுதல் மற்றும் உதவியோடு இந்தியாவில் முதலாளித்துவ வளர்ச்சி பாதை போடப்பட்டது. இந்தத் தேவைக்கு ஏற்றாற் போல் மாநில உரிமை வரம்பை மீறும் மத்திய அரசின் நடவடிக்கைகள் தொடர்ந்தன. மாநில முதலாளித்துவ கட்சிகளைப் பொறுத்தவரை, அவற்றின் தோற்றம் மாநில உரிமைகள், மொழி, கலாச்சாரம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டாலும், மாநில உரிமைகளுக்கான அவர்களின் வலுவான குரல், நவீன தாராளமய காலகட்டம் மாநில முதலாளிகளின் வளர்ச்சிக்குக் கதவைத் திறந்து விட்ட பின்னணியில், தளர்ந்து போனது.

இந்திய முதலாளித்துவத்தின் தடையற்ற வளர்ச்சிக்கு அரசின் கட்டுப்பாடுகள் ஒரு கட்டத்தில் தடையாக மாறின. 1990களில் நவீன தாராளமய கொள்கைகள் சுவீகரிக்கப்பட்ட பின்னணியில், சர்வதேச நிதி மூலதனம் விருப்பம் போல் லாபத்தைத் தேடி உலகம் சுற்றுவதற்கு ஏதுவாக அரசின் பங்கு பாத்திரம் மாறியது. ஒருங்கிணைந்த சந்தை உருவாவது முதலாளித்துவ வளர்ச்சிக்குப் பலனளிக்கும் என்ற நிலையில், மத்திய அரசின் கையில் மேலும் அதிகாரங்கள் மாறவும், மாநில உரிமைகள் நீர்த்துப் போகவுமான நடவடிக்கைகள் பின்தொடர்ந்தன. பெரு முதலாளிகளின் வர்க்க பிரதிநிதியான காங்கிரஸ் இந்தப் பாதையில்தான் செயல்பட்டது. பின்னர் வந்த பாஜக அதிகார குவிப்பை அடுத்த கட்டத்துக்கே கொண்டு போனது. நிதி மற்றும் வருவாய் பகிர்வு குறித்த அதிகார குவிப்பு பிறிதொரு கட்டுரையில் இடம் பெறும். அரசியல் பாதிப்புகளை இங்கு பரிசீலிக்கலாம்.

பாஜக ஆட்சியில் அதிகார குவிப்பு:

பாஜக ஆட்சியில் பெருமளவு அதிகாரங்களை மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும் தம் வசம் குவித்துக் கொள்வதை வெறும் எதேச்சாதிகார நடவடிக்கையாக, மீறலாக மட்டும் பார்க்க இயலாது. பாஜக அரசு இப்படித்தான் இயங்கும். அதன் சித்தாந்தம் அப்படி. வேறு வகையிலான அறிவிப்புகள், வாய் ஜாலங்கள் அனைத்தும் புலியின் மீது போர்த்தப்பட்ட பசு தோல்தான்.

ஆர்.எஸ்.எஸ்.சின் வழிகாட்டுதலில் இயங்கும் பாஜக அரசு, கார்ப்பரேட்டுகளின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெற்றிருக்கிறது. தீவிரமான கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை நடைமுறைப்படுத்தவும், ஏற்க மறுக்கிற மாநிலங்களின் எதிர்ப்பை நசுக்கவும் அதிகாரங்கள் மத்திய அரசிடம் குவிக்கப்பட வேண்டியிருக்கிறது. சர்வதேச நிதி மூலதனம் நாடு நாடாக போவதற்கும், வெளியேறுவதற்கும் ஒரு தேசமே கட்டுப்பாடுகளை அகற்ற வேண்டும் என்னும்போது, மாநிலங்களும் அப்பாதையில் செல்ல நிர்ப்பந்தப்படுத்தப்படுகின்றன. ஒரு பரந்து விரிந்த ஒருங்கிணைக்கப்பட்ட சந்தை நவீன தாராளமய காலத்தின் கட்டாயம்.

மறுபுறம், இந்துத்வ சித்தாந்தத்துக்கு ஏதுவாக ஒரே தேசம் – ஒரே கலாச்சாரம் – ஒரே மொழி என்ற ஒற்றை வடிவத்தைத் திணிக்கவும் அதிகார குவிப்பு மேலும் மேலும் தேவைப்படுகிறது. பாஜகவின் கலாச்சார தேசியம் என்ற சொல்லாடலும் சரி, அதன் கருத்தியலும் சரி, இந்தியாவின் பன்மைத் தன்மையை நிராகரிப்பதாகவே இருக்கிறது. தேசிய இனங்களின் பன்மைத் தன்மையை அங்கீகரிப்பதோடு தொடர்புடையதுதான் மாநில உரிமைகளுக்கான அங்கீகாரம். அது இல்லை என்றால் இது இருக்காது. இந்தப் பின்னணியிலேயே பாஜக அரசின் நடவடிக்கைகளைப் பொருத்திப் பார்க்க வேண்டும்.

உதாரணமாக, மானிய வெட்டு என்பது இவர்கள் பின்பற்றும் பொருளாதார கொள்கையின் ஒரு முக்கிய அம்சம். கொள்கை அடிப்படையில் இடதுசாரிகளும், மக்கள் போராட்டங்களின் வெப்பத்தில் இதர மாநில அரசுகளும், பொது விநியோக முறையை பலப்படுத்த வேண்டும் என்று கோருகின்றன. மானியத்தைக் குறைக்கும் நோக்குடன் வறுமை கோட்டைத் தீர்மானித்து, அதற்கேற்றாற் போல் அரிசி, கோதுமையை குறைப்பது, மண்ணெண்ணெயை நிறுத்துவது போன்ற நடவடிக்கைகள் காங்கிரஸ் ஆட்சியில் துவங்கின. தற்போது பாஜக ஆட்சி அதனைத் தீவிரமாக அமல்படுத்துகிறது. இது கேரளா, தமிழகம் போன்ற பொதுவிநியோக முறை ஓரளவு பலமாக இருக்கும் மாநிலங்களைக் கடுமையாக பாதித்துக் கொண்டிருக்கிறது. நேரடி பணப்பட்டுவாடா மூலம் பொதுவிநியோக முறையை முற்றிலும் சீரழிக்கும் நடவடிக்கைகள் படிப்படியாக அதிகரிக்கின்றன. தற்போதைய ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு என்பது பொதுவிநியோக முறையை நாசமாக்குவது மட்டுமல்ல; மாநில அரசாங்கங்கள் தம் மக்களுக்கு உணவு வழங்கும் அதிகாரத்தை மீறுவதாகவும் அமைகிறது. உலக வர்த்தகக் கழகத்தின் நிர்ப்பந்தங்கள், தம் குறுகிய அதிகாரங்களுக்கு உட்பட்டு சில நலத் திட்டங்களை அமல்படுத்த முயற்சிக்கிற மாநில அரசுகளுக்குத் தடையாக அமைகிறது. எனவே, சர்வதேச ஒப்பந்தங்கள் போடும் போது நாடாளுமன்ற ஒப்புதல் வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டியிருக்கிறது. ஜி.எஸ்.டி., நீட் உள்ளிட்ட நடவடிக்கைகளும் மாநிலங்களின் உரிமைகளை மீறக்கூடியவையாகவே அமைந்தன.

மொழி என்பது ஒரு தேசிய இனத்தின் மைய அம்சங்களில் ஒன்று. இந்தி திணிப்பை வலுவாக எதிர்த்த மாநிலங்களில் முதன்மையானது தமிழகம். இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பு, சமஸ்கிருத வளர்ச்சிக்குக் கூடுதல் நிதி ஒதுக்குவது, அகில இந்திய தேர்வுகள் சிலவற்றில் இந்தி, ஆங்கிலம் இரண்டை மட்டும் பயன்படுத்தியது, ரயில்வேயில் உள்ளக தொடர்புக்கு தமிழைப் பயன்படுத்தக் கூடாது என்று அறிவிப்பு வெளியிட்டது போன்ற நடவடிக்கைகள் மோடி ஆட்சியில் அடிக்கடி நடக்கின்றன. தேசிய வரைவு கல்வி கொள்கையின் மூலம் தமிழகத்தின் இரு மொழிக் கொள்கையை மறைமுகமாக மாற்ற முயற்சிக்கப்பட்டது. ஒவ்வொரு கட்டத்திலும் பலத்த எதிர்ப்புக்கிடையேதான் இது மாற்றிக் கொள்ளப்பட்டது. ஆனால் அடுத்த வாய்ப்பு வரும் போது மீண்டும் முயற்சிக்கப்படுகிறது. எனவே மாநிலங்களின் எதிர்ப்பை அங்கீகரித்து, எடுத்த முயற்சியை விட்டு விடுவது என்பது பாஜகவின் நோக்கமல்ல. தற்காலிகமாக விட்டுக் கொடுப்பது அல்லது தகர்த்து முன்னேறுவதுதான் அதன் உத்தியாகத் தெரிகிறது.

ஒரே தேசம் ஒரே தேர்தல் என்பதிலும் மாநிலங்களின் உரிமைகள் கடுமையாக மீறப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் பதவிக்காலத்தை அதிகரிப்பது அல்லது குறைப்பது என்ற உள்ளடக்கம் இதில் உண்டு. ஆளுநரின் மறைமுக ஆட்சிக்கும் இதில் பரிந்துரை செய்யப்படுகிறது.

17வது மக்களவை அமைக்கப்பட்ட பிறகு, நிலைக் குழுக்களோ, அவைக் குழுக்களோ உருவாக்கப்படவில்லை. எனவே, பல்வேறு மசோதாக்கள் முறையாக தயாரிக்கப்படாமல் நேரடியாக நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டன. பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய, ஆழமாக ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய, மாநில உரிமைகளைப் பறிக்கக் கூடிய மசோதாக்களை தெரிவுக் குழுவுக்காவது விட வேண்டும் என்ற எதிர் கட்சிகளின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. மக்களவையில் உள்ள மிருக பலத்தை வைத்து இந்த மசோதாக்கள் அனைத்தும் வரிசையாக நிறைவேற்றப் பட்டன. இவற்றில் பலவற்றில் மாநில உரிமைகள் வலுவாக மீறப்பட்டுள்ளன.

அனைத்து மாநில மக்கள் பிரதிதிகளும் இடம் பெறும் நாடாளுமன்றமும், அது சம்பந்தமாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகளும் புறக்கணிக்கப்பட்டு, பிரதமர் அலுவலகம் சார்ந்து முடிவுகள் எடுக்கப்படுவதும் கூட்டாட்சிக்கு முரணானது.

வரைவு தேசிய கல்விக் கொள்கை:

தற்போதைய வரைவு கொள்கையின் ஒரு பிரதான அம்சம் மையப்படுத்துதல். உதாரணமாக பிரதமர் தலைமையிலான ராஷ்டிரிய சிக்‌ஷா ஆயோக் என்ற அமைப்பின் கட்டுப்பாட்டிலும், கண்காணிப்பிலும் ஒட்டு மொத்த கல்வி நடவடிக்கைகள் இருக்கும் என்றும், ஆராய்ச்சி செய்ய வேண்டிய முக்கிய பிரச்னைகள் என்ன என்பதை இனி தேசிய ஆராய்ச்சி கழகம்தான் தீர்மானிக்கும் என்றும், இக்கழகம் தொழிலதிபர்கள், கார்ப்பரேட்டுகளின் நிதியைக் கொண்டு இயங்கும் என்றும் முன்மொழிவுகள் உள்ளன. கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாக எழும் போது, நேர்மாறாக, அதனை மத்திய பட்டியலுக்கு அதிகாரபூர்வமாகக் கொண்டு செல்லாமலேயே, அத்தகைய விளைவுகளை இக்கொள்கை ஏற்படுத்துகிறது.

தேசிய மருத்துவ ஆணையம்:

இதிலும் இந்தியா முழுவதும் உள்ள மருத்துவம் சார்ந்த அனைத்து அம்சங்களையும் இந்தக் கமிஷன் கட்டுப்படுத்தும் என்பது வருகிறது. தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50% இடங்களுக்கான கல்வி கட்டணம் அவர்களின் விருப்பத்துக்கு விடப்படுகிறது. மீதி 50%க்கு கட்டணம் வசூலிக்க பொதுவான வழிகாட்டுதல்தான் இருக்குமாம். அதற்கு ‘உட்பட்டு’ தனியார் மருத்துவ கல்லூரிகளே நிர்ணயித்துக் கொள்ளலாம். மாநில அரசு நிர்ணயிக்க இங்கு ஏதும் இல்லை. 6 மாத சுருக்கப்பட்ட பயிற்சி பெற்று கிராமப்புறங்களில் மருத்துவம் பார்க்கலாம் என்பதும், எக்ஸ்ரே டெக்னிஷியன், லேப் டெக்னிஷியன், கம்பவுண்டர் உள்ளிட்டோர் கூட இதனை செய்யலாம் என்பதும், நகர்ப்புற, கிராமப்புறங்களுக்கிடையே மருத்துவ சிகிச்சை தரத்தில் நிலவும் பாகுபாடுகளை இது சட்டபூர்வமாக்குகிறது. மாநில அரசின் அதிகார வரம்பை மீறுகிறது. ஐந்தரை ஆண்டு மருத்துவ படிப்புக்குப் பிறகு, மீண்டும் ஒரு தேர்வு எழுதப்பட வேண்டும் என்ற நிபந்தனை, பல்கலைக்கழகம் மருத்துவ பட்டம் கொடுக்குமா? இந்தத் தேர்வை நடத்தும் முகமையின் சார்பில் பட்டம் கொடுக்கப்படுமா? என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

தகவல் உரிமை சட்டத் திருத்தத்தின்படி மாநில தகவல் ஆணையரின் ஊதியமும், பதவிக் காலமும் இனி மத்திய அரசின் கையில்தான். தேசிய புலனாய்வு முகமை திருத்த சட்டத்தில், எந்த மாநிலத்தில் உள்ள எவரை வேண்டுமானாலும் மத்திய உள்துறை அமைச்சகம், பயங்கரவாதி என்று முத்திரை குத்தி, மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலே அவரைக் கைது செய்து, அவரின் சொத்துக்களைக் கைப்பற்றலாம் என்ற பிரிவு உள்ளது. விசாரணை செய்வதிலும் மாநில காவல்துறையை ஈடுபடுத்தப்போவதில்லை. சட்டம் ஒழுங்கு மாநில அதிகாரம் என்பது இதில் நீர்த்துப் போகிறது.

தொழிலாளர் நல சட்டத் திருத்தம்:

தொழிலாளர் நலன் என்பது மத்திய – மாநில பொதுப் பட்டியலில் உள்ளது. 44 தொழிலாளர் நல சட்டங்கள் வெறும் நான்கு தொகுப்பாக மாற்றப்படும் என்று மாநிலங்களுடன் விவாதிக்காமல், நிதிநிலை அறிக்கையின்போது நிதியமைச்சர் உரையில் அறிவிக்கப்படுகிறது. இவற்றில் ஊதியம் குறித்த தொகுப்பு தற்போது சட்டமாகியிருக்கிறது.

குறைந்த பட்ச ஊதியம் குறித்து 15வது இந்திய தொழிலாளர் மாநாடு வழங்கிய பரிந்துரையும், பின்னர் ராப்டகாஸ் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், இவற்றை ஏகமனதாக ஏற்று உருவாக்கப்பட்ட 45 மற்றும் 46வது இந்திய தொழிலாளர் மாநாடுகளின் பரிந்துரைகளும் இச்சட்டத்தில் இடம் பெறவில்லை. 7வது ஊதிய குழு பரிந்துரைத்த ரூ.18,000 என்பதும் புறந்தள்ளப்பட்டு தேசிய அடிமட்ட ஊதியம் ரூ.4628 என தொழிலாளர் நலத்துறை அமைச்சரால் தன்னிச்சையாக அறிவிக்கப்படுகிறது. முறைசாரா துறையில் முதலாளி, மத்திய அரசு நிர்ணயிப்பதையோ அல்லது மாநில அரசு நிர்ணயிப்பதையோ தரலாம் என்று பச்சை கொடி காட்டியிருப்பது, குறைவான கூலிக்கே இட்டு செல்லும். சில குறிப்பிட்ட மாநிலங்களில் தொழிற்சங்க இயக்கம் போராடி தியாகம் செய்து பெற்ற பலன்கள் கூட தொடர முடியாது. உதாரணமாக, கேரள அரசு ரூ.18,000 குறைந்தபட்ச ஊதியம் என்பதை சட்டரீதியாக்கியிருக்கிறது. சட்டங்களை மீறும் முதலாளிகளுக்கு அதிகமான அபராதம் விதிக்கப்படுவதற்கான சட்டமும் உள்ளது. ஆனால் அகில இந்திய சட்டம் வரும் போது, மாநில சட்டங்களை அமல்படுத்துவது மிகுந்த சிரமத்துக்குள்ளாகும்.

ஆளுநர்கள் அரசியல் ஆதாய கருவிகளாய்:

மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டத்திலேயே ஆளுநர் நியமனம் குறித்த விமர்சனம் இருக்கிறது. மேலிருந்து தன்னிச்சையாக நியமனம் செய்வது கூட்டாட்சிக்கு முரணானது. ஒரு வேளை அப்படிப்பட்ட பதவி தேவை என்றால், மாநில முதல்வர்கள் பரிந்துரைக்கும் மூவரில் ஒருவரை குடியரசு தலைவர் தேர்வு செய்து ஆளுநராக நியமனம் செய்வது என்ற வழியைப் பின்பற்றலாம். இது சர்க்காரியா கமிஷன் பரிந்துரையிலும் இடம் பெற்றிருக்கிறது. உலக அளவில் கூட்டாட்சி அமைப்பை வைத்திருக்கும் பிரதான நாடுகள் எவற்றிலும் மத்திய அரசு ஆளுநரை நியமனம் செய்யும் முறை இல்லை. அதே போல், மாநில அரசுகள் நிறைவேற்றும் மசோதாக்கள் ஆளுநர்/குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் போது எல்லையற்ற காலம் அதைக் கிடப்பில் போட்டு வைப்பதானது தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் பணிகளை முடக்கும் நடவடிக்கையே. எனவே, மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதும் மார்க்சிஸ்ட் கட்சியின் பரிந்துரையாக உள்ளது. மாநிலங்களின் கவுன்சில் இதற்கான அரசியல் சட்டத்திருத்தம் வேண்டும் என்று பலமுறை விவாதித்த பிறகும், அது அமல்படுத்தப்படவில்லை. ஆளுநர்கள் பல்கலைக்கழக வேந்தர்களாக இருப்பது பற்றியும், மாநில அரசை பகிரங்கமாக விமர்சிப்பது, அவர்களின் கருத்துக்களுக்கு முரண்படுவது போன்ற அம்சங்களும் தொடர்ந்து விவாதிக்கப்பட வேண்டியிருக்கிறது. புதுவை, தமிழக ஆளுநர்களின் அணுகுமுறை இதற்கு அண்மைக்கால உதாரணமாகும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கலைப்பது, கவிழ்ப்பது மற்றும் எந்தக் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பது, எப்போது அழைப்பது போன்ற அம்சங்களில் மத்திய அரசின் செயல்கருவியாக ஆளுநர் செயல்பட்டதை அருணாச்சல பிரதேசம், உத்தராகண்ட், தமிழ்நாடு, கோவா, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் பார்த்தோம். இது இன்னும் அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளன.

குதிரை பேரம்:

ஒரு குறிப்பிட்ட கட்சியின் சார்பில் அதன் கொள்கைகளை சொல்லி போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள், இன்னொரு கட்சியால் விலைக்கு வாங்கப்படும் குதிரை பேரமானது ஜனநாயகத்தைக் கேலி கூத்தாக்குவதாகும். மாநில மக்களின் விருப்பத்தை/முடிவை கொல்லைப்புற வழியாக தட்டிப் பறிப்பதாகும். தற்போது பாஜக ஆட்சியில், வாடிக்கையாக, அங்கீகரிக்கப்பட்ட நடவடிக்கையாக இது பெருமளவு மாறிவிட்டது. கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த குதிரை பேரம், அடுத்து ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தைக் குறி வைத்து செய்யப்படுகிறது.

மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து:

11 மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து இந்திய அரசியல் சட்டத்தில் அளிக்கப்பட்டிருக்கிறது. முதன்முதலில் அரசியல் சாசனத்தின் ஓர் அம்சமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டது. ஆனால் படிப்படியாக அது நீர்த்துக் கொண்டே வந்தது. அண்மை காலத்தில் மாநில அரசு கலைக்கப்பட்டு, குடியரசு தலைவரின் ஆட்சியின் கீழ் இருக்கும் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலும் நடத்தப்பட வேண்டும் என்று கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்திய பிறகும், தேர்தல் ஆணையம் முன்வரவில்லை.

தற்போது, ஒரு சில மணி நேரங்களில் நாடாளுமன்றத்தின் மூலமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து, அதன் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, குடியரசு தலைவரின் ஒப்புதலையும் பெற்று, பல்லாண்டுகளாக அம்மாநிலம் அனுபவித்து வந்த உரிமைகளைக் குழி தோண்டிப் புதைத்து விட்டது பாஜக அரசு. இனி சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலமாக அது இருக்க முடியாது என்பது மட்டுமல்ல; மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் அது இயங்க வேண்டியிருக்கும். இந்து இந்தியாவில், முஸ்லீம்கள் கணிசமாக இருக்கும் மாநிலம் சிறப்பு அந்தஸ்துடன் இயங்கலாமா என்ற மதவெறி நிகழ்ச்சி நிரலோடு சேர்த்து, இனி கார்ப்பரேட்டுகளுக்கு அதன் இயற்கை வளங்களை அள்ளிக் கொடுக்க முடியும் என்பதும் உள்ளது. நாடாளுமன்றப் பெரும்பான்மையின் கொடுங்கோன்மையைப் பயன்படுத்தி ஒரு மாநிலத்தையே இந்திய வரைபடத்தில் சிதைக்க முடியும் என்றால், இனி எந்த மாநிலத்தையும் எதுவும் செய்யலாம். ஜனநாயக படுகொலை என்பதோடு சேர்த்து, இந்தியாவின் சாரமாக இருக்கும் கூட்டாட்சியை மியூசியத்தில் அடைத்து வைத்து காட்சி பொருளாக்கும் ஏற்பாடே இது.

விடுதலை போராட்டத்தில் பங்களிப்பு செய்யாத ஆர்.எஸ்.எஸ்., காந்தி படுகொலைக்குப் பின் தடை செய்யப்பட்டு, மீண்டு வந்து, அதன் எண்ணற்ற அமைப்புகள் மூலமாக பாசிச உத்திகளைப் பயன்படுத்தி, தற்போது அரசியல் அதிகாரம் பெரும்பான்மை பலத்தோடு கைக்கு வந்த சூழலில், நாட்டின் விடுதலைக்குப் பிறகு மக்களால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்ட தனது நிகழ்ச்சி நிரலை ஒவ்வொன்றாக அமல்படுத்துகிறது. இதுதான் பாஜக அரசு பயணிக்கும் திசைவழியாக உள்ளது. மக்களின் மனநிலையை ஜனநாயகப்படுத்தி, போராட்ட ஒற்றுமையை ஏற்படுத்தும் பணியில் களத்திலும், கருத்தியல் தளத்திலும் முன்னிலும் வேகமாக இடதுசாரிகள் செயல்பட வேண்டிய நேரம் இது.

மதச்சார்பின்மையை காக்க சமரசமின்றி போராடும் மார்க்சிஸ்ட் கட்சி

(குரல் : கணேசன்)

  • அன்வர் உசேன்

இந்திய அரசியல் இயக்கங்களில் மதச்சார்பின்மையை காக்க துளி சமரசமும் இல்லாமல் போராடுவது மார்க்சிஸ்ட் கட்சிதான் எனில் மிகை அல்ல. மதச்சார்பின்மை என்பது இந்திய ஜனநாயகத்திற்கும் ஒற்றுமைக்கும் மிகவும் இன்றியமையாத கோட்பாடு என கட்சி ஆழமாக மதிப்பீடு செய்துள்ளது. எனவேதான் தனது திட்டத்திலேயே கட்சி கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:

“மதச்சார்பினமை கோட்பாடுகள் அமலாக்குவதற்கு கட்சி சமரசமில்லாத போராட்டத்தை நடத்தும். இந்த கோட்பாடுகளிலிருந்து நழுவுவதற்கு செய்யப்படும் மிகச் சிறிய முயற்சியை கூட அம்பலப்படுத்த வேண்டும்; அதற்கு எதிராக போராட வேண்டும்.”  (பாரா: 5.8)

அனைத்து மதங்களையும் சமமாக பாவிப்பதுதான் மதச்சார்பின்மை என முதலாளித்துவ கட்சிகள் முன்வைக்கின்றன. மாறாக அரசின் செயல்பாடுகளிலும் அரசியலிலும் மதம் தலையிடக்கூடாது என்பதுதான் உண்மையான மதச்சார்பின்மை என கட்சி திட்டம் அழுத்தமாக முன்வைக்கிறது.

மதச்சார்பின்மையை பாதுகாக்க மதவாதத்தை எதிர்த்து மூன்று தளங்களில் மார்க்சிஸ்ட் கட்சி போராடுகிறது. அவை:

  1. சித்தாந்த கருத்தியல் தளம்
  2. அரசியல் தளம்
  3. நடைமுறை போராட்ட களம்.
சங்பரிவாரத்திற்கு எதிராக கருத்தியல் போராட்டம்!

சித்தாந்த கருத்தியல் தளத்தில் சங்கபரிவாரம் கூடுதல் முனைப்புடன் செயல்படுகிறது. கடந்த கால வரலாற்றை மாற்றி எழுத கடும் முயற்சிகள் நடக்கின்றன. குறிப்பாக இந்து-முஸ்லீம் ஒற்றுமை குறித்த அனைத்து வரலாற்று பதிவுகளையும் அழிக்க முயல்கின்றனர்.

இந்திய வரலாற்றின் மத்திய காலம் முரண்பாடுகளும் ஒற்றுமையும் கலந்த கலவையாகவே இருந்தது. சங்பரிவார அமைப்புகள் திட்டமிட்டு ஒற்றுமை அம்சங்களை மக்களின் கவனத்திற்கு வருவதை தடுக்கின்றனர். முரண்பாடுகளை மட்டுமே மிகைப்படுத்தி பொய் பிரச்சாரம் செய்கின்றனர். இதற்கு மாறாக மார்க்சிஸ்ட் கட்சியும் இடதுசாரி கருத்தியல் வல்லுநர்களும் மத்தியகாலத்தின் அனைத்து அம்சங்களையும் மக்களிடம் கொண்டு செல்கின்றனர். குறிப்பாக ஒற்றுமை அம்சங்களுக்கு அழுத்தம் தருகின்றனர்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1801 மற்றும் 1806ல் நடந்த தென்னிந்திய கிளர்ச்சிகளும் 1857ல் நடந்த வட இந்திய கிளர்ச்சியும் மிக வலுவான இந்து- முஸ்லிம் ஒற்றுமை எனும் அடித்தளத்தில் பிரிட்டஷாருக்கு சவால்விட்ட மாபெரும் போராட்டங்கள் ஆகும். இந்துமுஸ்லிம்களிடையே உருவான இந்த மகத்தான ஒற்றுமையின் எந்த தகவலும் மக்களுக்கு சென்று அடையக் கூடாது என சங் பரிவாரம் கண்ணும் கருத்துமாக உள்ளது.

எனவேதான் வரலாற்றை மாற்றி எழுத கடுமையான முயற்சிகள் நடக்கின்றன. இதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி வலுவான கருத்தியல் போராட்டத்தை தொடர்ந்து சமரசமில்லாமல் நடத்துகிறது. இந்த கருத்தியல் போராட்டம் மத ஒற்றுமையையும் மதச்சார்பின்மையையும் வலுப்படுத்திட உதவும் என கட்சி நம்புகிறது.

சங்பரிவாரத்தின் அரசியல் அதிகாரத்தை தடுத்த மார்க்சிஸ்ட் கட்சி:

சங் பரிவாரத்தின் அரசியல் முகமாக விளங்குவது பாரதிய ஜனதா கட்சி ஆகும். பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் தனது இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை அமலாக்குவதற்கு பொன்னான வாய்ப்பு கிடைக்கும் என்பதை ஆர்.எஸ்.எஸ் அறிந்திருந்தது. ஆனால் மார்க்சிஸ்ட் கட்சி வாய்ப்பு கிடைத்த பொழுதெல்லாம் பா.ஜ.க. அரசியல் அதிகாரத்தில் அமர்வதை தடுத்துள்ளது.

1977ல் ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி செய்தது. ஜனதா கட்சிக்குள் ஆர்.எஸ்.எஸ்.ல் உறுப்பினராக இருப்பது குறித்து முரண்பாடுகள் வெடித்தன. . ஜனசங்கம் மற்றும் பழைய காங்கிரஸ் ஆர்.எஸ்.எஸ். பக்கமும் ஏனையோர் எதிர் பக்கமும் நின்றனர். ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக நின்ற பிரிவை கட்சி ஆதரித்தது. இதன் மூலம் சங்பரிவாரம் அரசு இயந்திரத்தில் தொடர்ந்து பங்கு பெறுவதை கட்சி தடுத்தது.

1989ல் வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி ஒரு பக்கம் இடதுசாரிகளின் ஆதரவும் மறுபக்கத்தில் பா.ஜ.க.வின் ஆதரவுடன்தான் ஆட்சி அமைக்க முடியும் எனும் சூழல் உருவானது. எனவே வி.பி.சிங் ஆட்சியில் வலுவான பங்காளியாக இணைந்திட 85 உறுப்பினர்களை கொண்டிருந்த பா.ஜ.க. கடும் முயற்சி செய்தது. பா.ஜ.க. ஆட்சியில் பங்கேற்றால் தேசிய முன்னணிக்கு ஆதரவு இல்லை என மார்க்சிஸ்ட் கட்சி வலுவான நிலைபாடு எடுத்தது. இதன் விளைவாகவே பா.ஜ.க. வெளியிலிருந்து ஆதரவு தரவேண்டிய நிலை ஏற்பட்டது.

தாம் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவோம் எனும் இறுமாப்புடன்தான் பா.ஜ.க. 2004ம் ஆண்டு தேர்தலை சந்தித்தது. ஆனால் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. பா.ஜ.க.வின் ஆட்சியை தடுத்திட மார்க்சிஸ்ட் கட்சியும் இடதுசாரிகளும் காங்கிரஸ் கூட்டணிக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்தன. இந்திய மக்கள் அளித்த இந்த மகத்தான ஆதரவை காங்கிரஸ் கூட்டணி சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. நவீன பொருளாதார கொள்கைகளில் கொண்ட மோகத்தால் 2014ம் ஆண்டு ஆட்சியை பா.ஜ.க.விற்கு தாரை வார்த்த்து காங்கிரஸ்!

பாபர் மசூதி இடிப்பும் பா.ஜ.க. ஆட்சிகள் கலைப்பும்:

இந்திய மக்களின் மத ஒற்றுமையை வலுவாக சீர்குலைத்தது இரு நிகழ்வுகள். ஒன்று 1992ல் பாபர் மசூதி இடிப்பு. இரண்டாவது 2000ம் ஆண்டு குஜராத் கலவரங்கள். முன்னதாக ராஜிவ் காந்தி ஆட்சி மதச்சர்பின்மையை சீர்குலைக்கும் விதத்தில் சில தவறுகளை செய்தது. ஷா பானு வழக்கில் முஸ்லிம் மதவாத அமைப்புகளுக்கு ஆதரவாக சட்ட திருத்தமும் அதனை தொடர்ந்து  இந்து மதவாத அமைப்புகளுக்கு இராமர் கோவில்- பாபர் மசூதி வளாகத்தில் செங்கல் பூஜை அனுமதியும் ராஜிவ் காந்தி ஆட்சி கொடுத்தது. 1990ல் மதவாதத்தை வலுப்படுத்தும் நோக்கில் அத்வானி ரதயாத்திரை நடத்தினார். இது இறுதியில் நரசிம்மராவ் ஆட்சியில் பாபர் மசூதி இடிப்பில் முடிந்தது.

இந்த கால கட்டம் முழுதும் மார்க்சிஸ்ட் கட்சி மதச்சார்பின்மையை பாதுகாக்க வலுவான முயற்சிகளை எடுத்தது. இந்தியா முழுதும் உள்ள மதச்சார்பின்மை சக்திகளை திரட்டியது. அத்வானி ரத யாத்திரை மேற்கு வங்கத்தில் நுழைந்தால் அத்வானி கைது செய்யபப்டுவார் என தோழர் ஜோதிபாசு எச்சரித்தார். அகில இந்திய அளவிலும் ஒவ்வொரு பகுதியிலும் மதச்சார்பின்மைக்காக கட்சி செய்த பிரச்சாரங்கள் மிக ஆழமானவை! குஜராத் கலவரங்களின் கொடூர தன்மைகளை முழுதும் சேகரித்து ஆவணப்படுத்தி அவற்றை இந்திய மக்களின் கவனத்திற்கு கட்சி கொண்டு வந்த்து.

1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டதற்காக உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பா.ஜ.க. ஆட்சிகளை கலைக்க வேண்டும் எனும் கோரிக்கை வலுவாக எழுந்தது. மக்களால் தேர்நெடுக்க்ப்பட்ட மாநில அரசாங்கங்ககளை மத்திய அரசாங்கம் அகற்ற கூடாது என்பதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின் வலுபவான நிலை! மத்திய அரசாங்கத்தின் ஆட்சி கலைப்புக்கு முதல் பலி 1957ல் தோழர் ஈ.எம்.எஸ். தலைமை தாங்கிய அரசாங்கம்தான்! பல முறை மத்திய அரசாங்கம் மாற்று கொள்கைகளை கொண்ட மாநில அரசாங்கங்களை கலைத்துள்ளது. இந்த அரசியல் சர்வாதிகாரத்தை கட்சி கடுமையாக எதிர்த்து வந்துள்ளது.

எனினும் பாபர் மசூதி இடிப்பை அமனுமதித்த உ.பி. பா.ஜ.க. அரசாங்கம் மதச்சார்பின்மை மீது மிகப்பெரிய தாக்குதலை தொடுத்தது. அரசியல் சட்டத்தை அப்பட்டமாக மீறியது. மசூதியை பாதுகாப்போம் என உச்ச நீதிமன்றத்தில் தந்த வாக்குறுதியை உதாசீனப்படுத்தியது. இதே நிலைதான் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச அரசாங்கங்கங்கள் எடுத்தன. எனவே இந்த அரசாங்கங்கங்கள் கலைக்கப்பட்ட பொழுது மதச்சார்பின்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் கட்சி இதனை வரவேற்றது. எனினும் இது ஒரு விதிவிலக்கு எனவும் எல்லா சூழல்களுக்கும் இதனை பொருத்துவது கூடாது எனவும் கட்சி கருதியது.

மதவாத கட்சியான பா.ஜ.க. தனது சுயநலனுக்காக அப்துல் கலாம் அவர்களை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைத்தது. தி.மு.க. காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் அப்துல் கலாமை ஆதரித்த பொழுதும் மார்க்சிஸ்ட் கட்சியும் இடதுசாரி கட்சிகளும் எதிர் வேட்பாளரை களம் இறக்கின. பிரச்சனை அப்துல் கலாம் அல்ல! மாறாக மதசார்பின்மைதான் பிரச்சனை! பா.ஜ.க. முன்நிறுத்தும் ஒரு வேட்பாளரை எப்படி ஆதரிக்க முடியும்?

மதச்சார்பின்மை பாதுகாக்க உயிர் தியாகம்

மதச்சார்பின்மையை பாதுகாக்க கருத்தியல் மற்றும் அரசியல் போராட்டம் மட்டுமல்ல; நேரடி களத்திலும் மார்க்சிஸ்ட் கட்சி உயிர் தியாகம் செய்துள்ளது. மதவாதம் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள கொலை வெறி செயல்களில் ஈடுபடுகிறது. கட்சி அத்தகைய கொலை வெறி  தாக்குதல்களை சந்தித்துள்ளது.

குறிப்பாக கேரளா, மேற்கு வங்கம் மற்றும் தற்பொழுது திரிபுராவில் அத்தகைய தாக்குதல்கள் கட்சி மீது ஏவப்படுகின்றன. மிக அதிகமான தாக்குதல்கள் கேரளாவில் நடைபெற்றுள்ளன. நூற்றுக்கணக்கான ஊழியர்கள் மதவாதத்திற்கு எதிராகவும் மதச்சார்பின்மையை பாதுகாக்கவும் உயிர் தியாகம் செய்துள்ளனர்.

பெரும்பானமை மதவாதம் மட்டுமின்றி சிறுபான்மை மதவாதமும் இத்தகைய கொலை வெறி தாக்குதல்களில் ஈடுபடுகிறது. சமீபத்தில் தோழர் அபிமன்யூவின் கொலை இதற்கு உதாரணம். இதே போல 1980களில் சீக்கிய மதவாதம் அடிப்படையில் இயங்கிய காலிஸ்தான் அமைப்பினர் பல மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களை கொன்றனர். மதச்சர்பின்மையை பாதுகாக்க இத்தகைய உயிர்தியாகம்  மார்க்சிஸ்ட் கட்சி அளவிற்கு வேறு எந்த இயக்கமும் செய்யவில்லை என உறுதியாக கூற முடியும்.

மதச்சார்பின்மையும் சிறுபான்மை மதவாதமும்:

மதச்சார்பின்மைக்கு ஆபத்து மிக அதிகமாக பெரும்பான்மை மதவாதத்திடமிருந்துதான் வருகிறது. எனினும் சிறுபான்மை மதவாதமும் மதச்சார்பின்மையை விரும்புவது இல்லை. மார்க்சிஸ்ட் கட்சி சிறுபான்மை மதவாதத்தை விமர்சிப்பது இல்லை எனும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இது உண்மைக்கு மாறானது.

1980களின் மத்தியில் ஷா பானு வழக்கு மதச்சார்பின்மைக்கு சவாலாக முன்வந்தது. முஸ்லீம் பெண்களுக்கு ஜீவனாம்சம் உரிமை இல்லை என முஸ்லீம் அமைப்புகள் போர் கொடி தூக்கின. ஏனைய பெண்களை போலவே முஸ்லிம் பெண்களுக்கும் ஜீவனாம்சம் உரிமை உண்டு என மார்க்சிஸ்ட் கட்சி உறுதியான நிலை எடுத்தது.

இந்த கால கட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியிடமிருந்து பிரிந்த அகில இந்திய முஸ்லீம் லீக் எனும் அமைப்பு கேரளாவில் இடது ஜனநாயக அணியின் ஒரு அங்கமாக இருந்தது. இந்த அமைப்பு ஷா பானு வழக்கில் முஸ்லீம் அமைப்புகளின் நிலைபாடை ஆதரிக்க வேண்டும் எனவும் ஜீவனாம்சம் உரிமை முஸ்லிம் பெண்களுக்கும் உண்டு எனும் தனது நிலையை கட்சி மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் வற்புறுத்தியது. ஆனால் கட்சி இதனை நிராகரித்துவிட்டது.

இதன் காரணமாக தான் இடது ஜனநாயக முன்னணியிலிருந்து விலகப்போவதாக அகில இந்திய முஸ்லீம் லீக் பயமுறுத்தியது. எனினும் கட்சி தனது நிலைபாடில் மாறவில்லை. பின்னர் அகில இந்திய முஸ்லீம் லீக் வெளியேறியது. இந்த அரசியல் நிகழ்வை ஆய்வு செய்த மார்க்சிஸ்ட் கட்சி ஒரு முக்கியமான முடிவை எடுத்தது. கேரளாவில் மட்டுமல்ல; இந்தியா முழுதும் மதம் அல்லது சாதியை மட்டுமே  சார்ந்து இயங்குகின்ற எந்த ஒரு கட்சியுடனும் தேர்தல் புரிதல் உட்பட எவ்வித அரசியல் புரிதலுக்கும் முயலக்கூடாது எனும் முடிவை கட்சி எடுத்தது. எனவேதான் முஸ்லீம் லீக் கட்சியுடன் எவ்வித தேர்தல் புரிதலுக்கும் மார்க்சிஸ்ட் கட்சி உடன்பட்டதே இல்லை.

முத்தலாக் உட்பட பல பிரச்சனைகளில் மார்க்சிஸ்ட் கட்சி முஸ்லீம் பெண்களுக்கு ஆதரவாக உறுதியான நிலை எடுத்துள்ளது. அதன் காரணமாக முஸ்லிம் மதவாதிகளின் தாக்குதல்களையும் கட்சி சந்தித்துள்ளது. அதே சமயத்தில் முத்தலாக் பிரச்சனையை கிரிமினல்மயமாக்கும் மோடி அரசாங்கத்தின் வஞ்சக அணுகுமுறையை கட்சி கடுமையாக எதிர்க்கிறது.

சமீபத்தில் நடந்த 22வது கட்சி மாநாடு அரசியல் தீர்மானம் சிறுபான்மை மதவாதம் குறித்து கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது: “பெரும்பான்மை மதவாதத்தின் தாக்குதல்கள் சிறுபான்மை மதவாதம் மற்றும் தீவிரவாதத்தின் நடவடிக்கைகளுக்கு களம் அமைத்து தருகின்றன. சிறுபான்மை மக்களின் நலன்களுக்கே கூட இத்தகைய போக்குகள் ஆபத்தானவை. இந்துத்துவா சக்திகளுக்கு எதிராக மக்களின் ஒற்றுமையை உருவாக்க (சிறுபான்மை மதவாதத்தை முன்நிறுத்தும்) இத்தகைய போக்குகளுக்கு எதிராக போராடுவது அவசியமாகிறது.” (பாரா 2.49)

முஸ்லீம் மக்களின் நலன்களுக்காக உறுதியாக குரல் தரும் அதே சமயத்தில் மதச்சார்பின்மையை பாதுகாக்க சிறுபான்மை மதவாதத்தை எதிர்க்க கட்சி தயங்கியது கிடையாது..

மதச்சார்பின்மை எதிர்கொள்ளும் நவீன சவால்கள்!

நிகழ்காலத்தில் குறிப்பாக மோடி ஆட்சிக்கு பின்னர் மதச்சார்பின்மைக்கு உருவாகியுள்ள புதிய சவால்களை உள்வாங்கிகொள்வது மிகவும் அவசியமாகிறது. சில பத்தாண்டுகளுக்கு முன்பு பெரும்பாலும் உயர் சாதியினரின் ஒரு பகுதியினர், குறிப்பாக மத்தியதர வர்க்கத்தினரின் ஒரு பிரிவினர் மதவாதத்தால் ஈர்க்கப்பட்டனர் . ஆனால் இன்று சாதாரண உழைக்கும் மக்களிடையேயும் மதவாதம் ஊடுருவியுள்ளது.

உதாரணத்திற்கு குஜராத்தில் முஸ்லீம்கள் மீதான தாக்குதல்களை திட்டமிட்டது  உயர் சாதியினர். ஆனால் களத்தில் அதனை அமலாக்கியது அதாவது முஸ்லிம்கள் மீது கொலை உட்பட வன்முறையை நிகழ்த்தியது பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் ஆதிவாசி மக்கள்தான் என்கிறார் ராம் புண்ணியானி எனும்  சமூக ஆய்வாளர். சிறுபான்மை மதவாதமும் உழைக்கும் மக்களை மதவாத செயல்களில் ஈடுபடுத்துகிறது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித் மக்கள் உட்பட உழைக்கும் மக்களிடமும் கூட மதவாதம் தனது நச்சு கொடுக்குகளை பரவவிட்டுள்ளது..

மதவாதம் வெற்றிடத்தில் இயங்குவது இல்லை. நவீன தாராளமய பொருளாதார கொள்கைகள் அமலாக்கத்தின் பின்னணியில் மதவாதம் செயல்படுகிறது. நவீன தாராளமய பொருளாதார கொள்கைகள் மிக அதிகமாக ஏழைகளை உருவாக்குகிறன. தமது வாழ்வாதரத்தின் எதிர்காலம் குறித்து மிகப்பெரிய கவலை இப்பகுதி மக்களிடம் எழுகிறது. இந்த பொருளாதார சூழலை பயன்படுத்தி  மக்களின் ஒரு பிரிவினரை மதவாதம் ஈர்ப்பது மிகவும் எளிதாக நடக்கிறது. எனவேதான் மதசார்பின்மை கொள்கைகளை உழைக்கும் மக்களிடையே கொண்டு செல்வது மிக அவசியம் என மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது.

பொருளாதார நெருக்கடி அதிகமாக உள்ள காலகட்டத்தில் மோடி போன்ற இந்துத்துவ அரசியல்வாதி எதிர்காலம் குறித்து பொய்யான கனவுகளை முன்வைத்தால் மக்கள் அதனை நம்புகின்றனர். மதச்சார்பின்மையை பின்னுக்கு தள்ளிவிடுகின்றனர். 2014 தேர்தல் மற்றும் அதனை தொடர்ந்து மோடியின் வெற்றி இதனை தெளிவாக்குகிறது. மோடி ஆட்சியில் நவீனதாராளமய கொள்கைகள் வெறித்தனமாக செயல்படுத்தப்படுகின்றன.

அதே மோடி ஆட்சியில் மதவாதமும் பேயாட்டம் ஆடுகிறது. சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் தொடுக்க லவ்ஜிகாத், மாட்டிறைச்சி போன்ற புதிய பிரச்சனைகள் கட்டமைக்கப்படுகின்றன. கிறித்துவ சிறுபான்மை மக்களும் தாக்குதலுக்கு தப்பவில்லை. அரசு அதிகாரத்தை பயன்படுத்தி சங்பரிவாரம் அரசியல் சட்டத்திலிருந்து மதச்சார்பினமை கோட்பாடை அகற்ற எத்தனிக்கின்றனர்.

ஒரு காலத்தில் முதலாளிகளுக்கு மதச்சார்பின்மை காக்கப்பட வேண்டும் எனும் கவலை இருந்தது. 1992ம் ஆண்டு மும்பை கலவரத்தை கண்டித்து ஜே.ஆர்.டி. டாட்டா, ராமகிருஷ்ணா பஜாஜ் ஆகியோர் பகிரங்கமாக அறிக்கைவிட்டனர்.  ஆனால் இன்று நவீன தாராளமய கொள்கைகள் தரும் கொள்ளை இலாபம் முதலாளித்துவத்தின் கண்களை மறைத்துவிட்டது. “மோடி காந்திஜிக்கு இணையானவர்”” “ என அம்பானி பேசியது இதனை தெளிவாக்குகிறது. சமீபகால மதவாத தாக்குதல்களை கண்டித்து எந்த முதலாளியும் வாய் திறப்பது இல்லை.

மதவாதத்தின் ஊற்றுக்கண்ணாக நவீன தாராளமயம்:

மதவாதத்திற்கு உள்ள பல ஊற்றுக்கண்களில் மிக முக்கிய ஒன்றாக நவீன தாராளமய கொள்கைகள் உருவாகியுள்ளன. நவீன தாராளமயக் கொள்கைகளை ஆதரித்து கொண்டே மதவாதத்திற்கு எதிராக மட்டும் குரல் கொடுப்பது முழு பலன் அளிக்காது. மதவாதம், நவீன தாராளமய கொள்கைகள் இரண்டையுமே எதிர்த்து முறியடிக்க வேண்டிய தேவை உள்ளது. துரதிர்ஷ்ட வசமாகவோ அல்லது தமது வர்க்க நலன்கள் காரணமாகவோ இந்த முக்கிய உண்மையை பல அரசியல் சமூக அமைப்புகள் புரிந்து கொள்ள மறுக்கின்றன.

பா.ஜ.க.வை தோற்கடிப்பது மிக முக்கிய அரசியல் கடமைதான்! எனினும் பா.ஜ.க.வின் தோல்வி என்பது ஆர்.எஸ்.எஸ்.ன் தோல்வியாகவும் அமைந்துவிடும் எனும் உத்தரவாதம் இல்லை. இந்திய சூழலை பொறுத்தவரை பா.ஜ.க.வின் தோல்விக்கு பிறகும் நவீன தாராளமய கொள்கைகள் தொடர்ந்தால் அது மதவாதத்திற்கு உகந்த களமாகவே இருக்கும். எனவேதான் மதவாதம் மற்றும் நவீன தாராளமய கொள்கைகள் இரண்டையுமே முறியடிக்க வேண்டிய அவசியம் உள்ளது என மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது.

மதச்சார்பின்மையை பாதுகாக்கும் முழு கடமை உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. எனவேதான் மதச்சார்பின்மை குறித்த செயல்பாடுகள் உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் வலுவாக கொண்டு செல்ல வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மதவாதத்தை பண்பாடு, கலாச்சார தளங்களிலும் எதிர்கொள்வது அவசியம். மதவாதத்திற்கு எதிரான போரில்  அதன் நவீன வடிவங்கள் முன் நிறுத்தும் சவால்களை முறியடிப்பது அவசிய தேவை. இதனை மார்க்சிஸ்ட் கட்சி உணர்ந்துள்ளது. அதன் அடிப்படையில் மதச்சார்பின்மையை பாதுகாக்க கட்சி இடைவிடாது செயல்படுகிறது. உழைக்கும் மக்களை அணிதிரட்டி மதவாதத்தை தோற்கடிப்பதும் மதசார்பின்மையை உறுதிப்படுத்துவதும் சாத்தியமான ஒன்றே என மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாக நம்புகிறது.

இந்திய சூழலில் ஜனரஞ்சக தேசியவாதம் !

எடிட்: மதன் ராஜ்

தேசியவாதம் (Nationalism), ஜனரஞ்சகவாதம் (Populism) இரண்டுமே பலவிதமான வியாக்கியானங்கள் தரக்கூடிய சொற்கள். இவற்றின் பொருள் குறித்தான மயிர்பிளக்கும் வாதங்களுக்குள் நான் செல்லவில்லை, மாறாக இந்திய சூழலில் உதித்துள்ள ஜனரஞ்சக தேசியவாதத்தைக் (Populist Nationalism) குறித்து சுறுக்கமாக விவாதிக்கவுள்ளேன். அது இந்திய எல்லைகளைக் கடந்தும்  தாக்கம் செலுத்தக்கூடியதாக இருக்கிறது.

முதலாளித்துவ உலகத்தில், முதலாளித்துவ தேசியவாதமானது எப்போதும் முதலாளி வர்க்கத்தின் நலன்களையே முன்நிறுத்துகிறது. ஆளுகின்ற வர்க்கமாக முதலாளித்துவம் தொடருகின்றவரையில், தேசியவாதமே ‘தேசபக்தியாக’ பொருள்கொள்ளப்படும். அதே சமயத்தில் ஜனரஞ்சகம் என்பது ‘பொய்யான உணர்வுநிலையை’ ஏற்படுத்தக்கூடிய விளைவையும் நிகழ்த்துகிறது.

ஜனரஞ்சகம் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் திறளின் உணர்வுகளிலும், உளவியல் கட்டமைப்பிலும் தாக்கம் செலுத்துவதன் மூலம் தேசியவாத எண்ணங்களை வளர்த்தெடுக்கும் அரசியல் நோக்கம் கொண்டதாகும். முதலாளித்துவ ஆளுகையில்,  ஜனரஞ்சக தேசியவாதத்திற்கு இரட்டை நோக்கங்கள் உள்ளன. முதலாவது, முதலாளி வர்க்கத்தின் நலன்களை முன்னெடுப்பது, இரண்டாவது, தங்கள் ஜனரஞ்சகவாத முழக்கங்களின் அடிப்படையில் சமூகங்களில் மாற்றங்களை எதிர்நோக்குகிற குழுக்களின் நலன்களை முன்னெடுப்பது.

தேசியவாதம்:

மனித நாகரீகத்தில் நிலவுடைமைக் கட்டத்திலிருந்து முதலாளித்துவக் கட்டத்தை நோக்கி நடைபெற்ற நீண்ட மாறுதல் நடவடிக்கையின் உள்ளார்ந்த பகுதியாகவே தேசஅரசுகளும் தோன்றின. இக்காலகட்டத்தில் ஐரோப்பாவிலும் தேவாலயங்களிடமிருந்து அரசுகளைப் பிரித்தெடுப்பதற்கான போராட்டத்தையும் தொடங்கியது. முதலாளித்துவம், நிலவுடைமையை வெற்றிகண்டது, அதே நேரத்தில், நிலவுடைமையின் உச்சத்தின் போது, அனைத்து நாகரீகங்களிலும் அரசர்களுக்கும், பேரரசர்களுக்கும் ஆட்சியதிகாரம் செலுத்துவதற்கான தெய்வீக ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாக புகுத்தப்பட்ட நம்பிக்கையிலிருந்து, அரசியல் அதிகாரம் தனியே  பிரிக்கப்பட்டது. இறுதியில் 1648 ஆம் ஆண்டில் வெஸ்ட்பாலியாவில் கையெழுத்தான ஒப்பந்தங்கள், தேச அரசுகளுக்குள்ள இறையாண்மை மற்றும் அதன் காரணமாக எழுகிற சர்வதேச சட்டங்களுக்குமான கொள்கைகளை வகுத்தன.

அரசுகளின் இறையாண்மை கொள்கைகளின் அடிப்படையில் ஒரு சர்வதேச அமைப்புமுறையை நிறுவுவது பற்றிய நம்பிக்கையை பரவலாக அது ஏற்படுத்தியது; அரசுகளுக்கிடையே சமத்துவம்; ஒரு அரசின் உள் பிரச்சனைகளில் மற்றொரு அரசு தலையீடு செய்யாத கொள்கை ஆகியவை பொதுவாக வெஸ்ட்பாலியன் அமைப்புமுறையாக அறியப்படுகின்றன.

1644க்கும் 1648க்கும் இடையே ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இந்த ஒப்பந்தங்களே தற்போது நடைமுறையில் உள்ள பல சர்வதேச சட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்திருக்கின்றன.

(வெஸ்ட்பாலியன் அமைதிக்குப் பிறகு ஐரோப்பாவில் நடைபெற்ற மாற்றங்கள், பாசிசத்தைப் பிரசவித்தன)

இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் பாசிசம் வீழ்த்தப்பட்டது, அதன் தொடரியக்க விளைவாக காலனியாதிக்கம் முடிவுக்கு வந்தது என்ற நிலையில், காலனி ஆதிக்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டங்கள், விடுதலையடைந்த அந்த நாடுகளின் பண்புகளையே வீரஞ்செறிந்த முறையில் மாற்றியமைத்தன.  இந்தியா உட்பட  காலனியாதிக்கத்திற்கு எதிராக இந்த நாடுகளில் நடைபெற்ற நீண்ட நெடிய போராட்டங்கள்தான் இந்நாடுகளின் கட்டமைப்பை உருவாக்கின என்பது உறுதி.

‘இந்தியக் கருத்து’ – பரிணாமம்

பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராக இந்தியா நடத்திய காவியத்தன்மை வாய்ந்த போராட்டத்திலிருந்து ‘இந்தியக் கருத்து’க்கு அடிப்படையாக அமைந்த எண்ணம் உருவாகியது. ‘இந்தியக் கருத்து’ என்பது என்ன? அதன் சிக்கலான பன்முகத்தன்மை மனதில் இருத்தியபடியே, சற்று எளிய வார்த்தைகளில் சொல்வதானால், ‘இந்திய நாடு அதன் மகத்தான வேறுபாடுகளை, அனைவரையும் உள்ளடக்கியதொரு மக்கள் ஒற்றுமையை நோக்கி மேம்படுத்துவதைத்தான்’ அந்தக் கருத்து (idea) அடிப்படை எண்ணமாகக் கொண்டிருக்கிறது. இது, அடிப்படையில், வெஸ்ட்பாலியன் அமைதிக்குப் பின் ஐரோப்பாவில் உருவான ஒட்டுமொத்த வளர்ச்சிப் போக்குக்கும் முற்றிலும் எதிரானது.

இப்போது அவ்வாறு உருவாகியுள்ள மதச்சார்பற்ற (secular)  ஜனநாயக நவீன இந்தியக் குடியரசை, தங்களுடைய சித்தாந்தமான ‘இந்து ராஷ்ட்ரமாக’ மாற்றவேண்டும் என்ற குறிக்கோளுடன் ஆர்.எஸ்.எஸ்./பாஜக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதன் பொருள், இந்துப்  பெரும்பான்மைவாதத்திற்கு மற்ற மதவழி சிறுபான்மையோர் (குறிப்பாக உள்ளிருக்கும் எதிரியாக கற்பிக்கப்பட்ட முஸ்லிம்கள்) அடங்கி நடக்கும் வகையில் இந்திய தேசியத்திற்கு எதிராக ‘இந்து தேசியவாதத்தை வளர்த்தெடுத்து’ அதன் மூலம் வெஸ்ட்பாலியன் மாதிரியை நோக்கி பின்னிழுப்பதாகும்.

உண்மையில் இவர்கள் கூறும் பெரும்பான்மைவாதம் என்பது ஒரு வெறிபிடித்த, சகிப்புத்தன்மையற்ற பாசிச இந்து ராஷ்ட்ரம் என்பது, இந்திய சுதந்திரப்போராட்டத்திற்காக இந்திய மக்களால் உருவாக்கப்பட்ட ‘இந்தியக் கருத்தி’னையே முற்றிலும் நிராகரிக்கிற ஒரு புதுவித அரசியல் உளவியல் ஆகும்.

ஆர்.எஸ்.எஸ்/பாஜக சிந்தனையாளர்கள் ‘இந்தியக் கருத்தை’யே தள்ளுபடி செய்கின்றனர். இதன் மூலம் அவர்கள் இந்திய மக்களின் சுதந்திரப் போராட்ட சகாப்தத்தையே மறுதலிக்கின்றனர். இந்தப் போராட்டத்திலிருந்துதான் இந்திய தேசியத்தின் கருத்துரு, வெஸ்ட்பாலியன் ‘தேசியவாத’த்தை விடவும் மேம்பட்ட ஒன்றாக எழுந்து வளர்ந்தத . பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிரான இந்திய மக்களின் விடுதலைப் போராட்டத்தின் வழியாக முகிழ்ந்த இந்திய தேசியத்திற்கு (இந்தியக் கருத்துக்கு) எதிராக ஆர்.எஸ்.எஸ்/பாஜக இன்று மிகவும் பிற்போக்கான இந்திய (இந்து) தேசியவாத பின்னிழுப்புக்கு தலைமையேற்கிறது.

நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருக்கின்ற அகீல் பில்க்ராமி: இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலான, மக்களின் ஒன்றுபட்ட உறுதியான அளப்பரிய அணிச்சேர்க்கை என்பது இந்தியர் அனைவரும் ஒன்று என்கிற மாற்று சிந்தனை இல்லாமல், ஒன்றுபட்ட சிந்தனையில்லாமல் சாத்தியமாகியிருக்காது” என உறுதிபடத் தெரிவிக்கிறார்.

மொழி, மதம், இனம், பண்பாடு இன்னும் பலவற்றின் அடிப்படையில் இந்தியாவில் காணப்படும் வேற்றுமைகள், உலகில் இதுவரை அறியப்பட்ட எந்த நாட்டோடும் ஒப்பிட முடியாத வகையில் பரந்து விரிந்ததாகும். அதிகாரப்பூர்வமான பதிவுகளின் அடிப்படையில் இந்தியாவில் குறைந்தது 1,618 மொழிகள் உள்ளன, 6400 சாதிகள் உள்ளன, 6 முக்கிய மதங்கள் உள்ளன – அவற்றில் 4 மதங்கள் இங்கேயே பிறப்பெடுத்தவை, மானுடவியல் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட 6 இனக் குழுக்கள் – இவை அனைத்தும் ஒன்றாக இணைக்கப்பட்டு அரசியலாக ஒரே நாடாக நிர்வகிக்கப்படுகிறது இந்தியா.

இந்தியாவில் 29 முக்கிய மத-பண்பாட்டு விழாக்கள் கொண்டாடப்படுவதும், ஒப்பீட்டளவில் இதுதான் அனைத்து நாடுகளிலும் மிக அதிகமான மத அடிப்படையிலான விடுமுறை நாட்களைக் கொண்ட நாடு என்பதும் இங்கே நிலவும் வேற்றுமையின் அளவுகோலாகும்.

பிரிவினையும் பிரிட்டிஷ் ஆட்சியும்:

இவ்வளவு பரந்துபட்ட வேற்றுமையை ஒருங்கிணைத்தது பிரிட்டிஷார்தான் என வாதாடுபவர்கள், 10 லட்சம் மரணங்களையும், மிகப்பெரும் எண்ணிக்கையில் வகுப்புவாத இடம்பெயர்வையும் ஏற்படுத்திய பிரிவினையை திட்டமிட்டுக் கட்டமைத்தது பிரிட்டிஷார்தான் என்ற உண்மையைக் காண மறுக்கிறார்கள்.

இந்தியத் துணைக்கண்டம் மட்டுமல்லாமல், பாலஸ்தீனம், சைப்ரஸ், ஆப்ரிக்காவில் பிரிட்டிஷ் காலனியாதிக்கமானது, தன் காலனி நாடுகளில் பிரிவினையின் வழியாக ஆராத வடுக்களை ஏற்படுத்தி விட்டுச் செல்லும் இழிவான வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்தியா முழுவதும் பரந்துபட்ட அளவில் நடைபெற்ற மக்களின் விடுதலைக்கான  போராட்டங்கள்தான் இந்திய மக்களை, அவர்களின் வேற்றுமைகளுக்கிடையில் ஒற்றுமைப்படுத்தி 660க்கும் மேலான நிலவுடைமை முடியாட்சிப் பகுதிகளை இணைத்து உருவாக்கப்பட்ட நவீன இந்தியாவாக மாற்றிடும் விரிந்த ‘இந்திய உணர்வு நிலை’க்கு வடிவம் கொடுத்தது.

முதலாளித்துவமும், தேசியவாதமும்:

தேசம் குறித்த வெஸ்ட்பாலியன் விளக்கமானது, வணிகவாத சித்தாந்தத்தைக் கொண்ட வணிக முதலாளித்துவக் காலகட்டத்தில் உருவாகிய முதலாளித்துவ தேசியத்தோடு இணைந்து உருவானது. ஒரு நாட்டில் உள்ள அபரிமிதமான செல்வ வளத்தை சூரையாடுவதன் மூலம் – தொடர்ந்து அந்த நாட்டில் உள்ள தங்கம், வைரம் மற்றும் இதர கனிம வளங்களை அடிமை உழைப்பாளர்களைக் கொண்டு நேரடியாகவே சூரையாடுவதன் மூலம் – தங்களுடைய ஏகாதிபத்திய விரிவாக்கத்திற்கான வழிமுறைகளைத்தான் இவர்கள் தேசியவாதம் என்ற சொல்லில் பயன்படுத்துகிறார்களே ஒழிய அந்த நாட்டில் உள்ள மக்களில் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் மக்களின் நிலைமைகளை மேம்படுத்துவதற்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இவர்களால் ‘தேசம்’ என்பது மக்களுக்கு மேலான ஒன்றாக சித்தரிக்கப்படுகிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால் ஏகாதிபத்தியம் இன்னொரு ஏகாதிபத்தியத்துடன் போர் தொடுக்கும் சமயத்தில் தங்கள் சார்பாக மக்களை அணிதிரட்டுவதற்காகத்தான் இந்தச் சொல்லை பயன்படுத்திக்கொள்கிறார்கள். போராடும் நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் தங்கள் சக தொழிலாளர்களை ஈவிரக்கமின்றி கொன்றுவிடவேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனவே, அப்போதும் இப்போதும் எக்காலத்திலும் ‘வளங்களைக் குவித்திட’ விரும்பும் ஒரு உளவியல் கருதுகோளாகிய ‘தேசம்’ மக்களுக்கு அப்பாற்பட்டதாகவே நிற்கிறது.  சர்வதேச நிதி மூலதனத்தின் உலகளாவிய ஆளுகை மற்றும் தாக்குதல் காணப்படுகின்ற இன்றைய நிலைமையில், முதலாளித்துவ தேசியவாதமானது சர்வதேச நிதி மூலதனத்தின் நலன்களை, பரந்த மக்கள் மீது பெரும் துயரத்தை சுமத்துவதன் மூலம் ஊக்குவிக்கிறது. தேசியவாதம் என்ற பெயரில் இந்தியா போன்ற நாடுகளில் ஜனநாயக கட்டமைப்புக்கு உள்ளேயே நவீன தாராளமயத்திற்கு கொடுக்கப்படுகிற அரசியல் ஆதரவு மக்களை பரிதாபகரமான முறையில் அச்சுறுத்துகிறது.

இந்திய சூழலும், பின்நோக்கிய இழுப்பும்:

தற்போது இந்தியாவில், கார்பரேட் – வகுப்புவாதக் கூட்டு ஆதிக்கம் செலுத்திவருகிறது, தேசியவாத சித்தாந்தத்தை தீவிரமாக பரப்புரைப்பதன் வழியே ‘தேசம்’ மற்றும் அதன் நலன்களை மக்களுக்கும் மேலானதாக சித்தரிக்கிறது, மக்களிடம், ‘தேசத்தின்’ பெயரால் அவர்களின் ஜனநாயக உரிமைகளை மீறுவது உட்பட, தியாகங்களை வற்புருத்துகிறது. தற்போதைய இந்திய அரசாங்கத்தின் தலைவர் ‘தேச நலன்களைச் சமரசம் செய்வதாக கருத்துரிமை இருக்க முடியாது’ என்று  பறைசாற்றுகிறார்.

இப்படிப்பட்ட தேசியவாத தேசம், ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான வகுப்புவாத சக்திகளின் பாசிச லட்சியத்தை மேலும் முன்னெடுப்பதிலும் இணைந்திருக்கிறது. பாசிச நிகழ்ச்சி நிரலானது இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசுத் தன்மையை, பெருமளவில் சகிப்பற்ற பாசிச ‘இந்து ராஷ்டிராவாக’ உருமாற்ற விரும்புகிறது.

இந்துத்துவ கற்பிதங்கள்:

ஆர்.எஸ்.எஸ் கட்டமைக்கும் தேசியவாதமானது, இந்து ராஷ்ட்டிரம் அமைக்கின்ற  அதனுடைய சித்தாந்த – கருத்தாக்க நியாயத்தினைச் சார்ந்ததாகும். (இவர்கள் கூறும் இந்துத்துவா ராஷ்ட்ரத்திற்கும், இந்துயிசத்திற்கும் எவ்விதச் சம்பந்தமும் கிடையாது.) ஆர்எஸ்எஸ்-இன் மறைந்த தலைவரான எம்.எஸ். கோல்வால்கர், 1939இல் எழுதிய நாம் அல்லது   வரையறுக்கப்பட்ட நமது தேசம் என்னும் நூலின் முகப்புரையில், “இந்துக்கள், அயலக இனத்தைச் சேர்ந்த எவராலும் இந்த நாடு படையெடுக்கப்படுவதற்கு முன்பே இந்த மண்ணில் எட்டாயிரம் அல்லது பத்தாயிரம் ஆண்டுகளாக எவ்விதமான தகராறோ மற்றும் எவராலும் தொந்தரவுக்கு உள்ளாகாமலோ இருந்து வந்திருக்கிறார்கள்,” என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அவர், “எனவே, இந்துக்கள் பூமியான இந்த பூமி, இந்துஸ்தான் என்று அழைக்கப்பட்டு வந்தது,”  என்றும் குறிப்பிட்டார். (We or Our Nationhood Defined – M.S. Golwalkar, 1939, Page 6).

இந்துத்துவா மேலாதிக்கவாதிகள், இவ்வாறாக இந்துக்கள்தான் எப்போதும் இந்தத் தேசத்தில் இருந்தார்கள் என்றும், தொடர்ந்து இருந்து வருகிறார்கள் என்றும்  அறிவியல்பூர்வமற்ற முறையிலும், வரலாற்று ஆய்வின் அடிப்படையுமின்றி “நிறுவியதைத்” தொடர்ந்து, அத்தகைய இந்து தேசத்தின் சகிப்புத்தன்மையற்ற, தத்துவார்த்த சாராம்சத்தையும் பதித்திடும் வேலையில் தொடர்கிறார்கள்.

“… இவ்வாறு நாம் மேற்கொண்டுள்ள ஆய்வானது, நம்மை மறுக்க இயலாத விதத்தில், … இந்துஸ்தான் இங்கேதான் தோன்றியது மற்றும் புராதன இந்து தேசமும் இங்கேதான் தோன்றி இருக்க வேண்டும், வேறெங்கும் அல்ல என்கிற முடிவுக்கே தள்ளிவிடுகிறது. இந்த தேசத்திற்குச் சொந்தமாயிராத மற்ற அனைவரும், அதாவது, இந்து இனம், மதம், கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றுக்கு சொந்தமாயிராத அனைவரும் இயற்கையாகவே உண்மையான ‘தேசிய’ வாழ்க்கையிலிருந்து விலகிவிடுகிறார்கள்.

“… இவற்றை ஏற்றுக்கொண்டு, தற்போதைய மந்த நிலையிலிருந்து இந்து தேசத்தை மீளவும் கட்டக்கூடிய விதத்தில், புத்துயிரூட்டி, விடுவிப்பதனைக் குறிக்கோளாகக் கொண்டு, செயல்படக்கூடிய இயக்கங்கள் மட்டுமே உண்மையில் ‘தேசிய’ இயக்கங்களாகும். அதில் செயல்படுபவர்கள் மட்டுமே தேசப் பற்றாளர்கள். இந்து இனமும், அவர்களின் இதயத்தினருகில் உள்ள தேசமும் பெருமையடைய வேண்டும் என செயல்பாட்டைத் தூண்டி, இலக்கை நோக்கி முயற்சிப்போரே உண்மையான தேசிய தியாகசீலர்கள். மற்றவர்களெல்லாம் தேசிய நோக்கத்துக்கு துரோகிகளும் எதிரிகளும் ஆவர், அல்லது இளகிய பார்வையில் அவர்கள் முட்டாள்கள்.”  (கோல்வால்கர், 1939, பக்.43-44).

இதுதான் ‘இந்தியக் கருத்தானது’ அனைத்தையும் உள்ளடக்கியதொரு தேசியவாதமாக சாத்தியப்பட முடியாமல் பின்னடைவினை உருவாக்குகிறது. இன்று முன்னெடுக்கப்படுவது, தனிவகைப்பட்ட இந்துத்துவ தேசியவாதம், அதுதான் இந்தியச் சூழலில், ஜனரஞ்சக தேசியவாதமாக அமைந்துள்ளது.

அப்படிப்பட்ட பிற்போக்கான திட்டத்தை இந்தியாவில் வெற்றியடையச் செய்திட, ஆர்.எஸ்.எஸ்/பாஜக சக்திகள் வரலாற்றை இந்து புராணங்களைக் கொண்டும், மெய்யியலை இந்து நம்பிக்கைகளைக் கொண்டும் மாற்றீடு செய்வதில் மையமிட்டுள்ளார்கள். இந்தியாவில் இப்போதுள்ள பாஜக அரசாங்கம், திட்டமிட்ட வகையில் நமது மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் கற்பிக்கப்படும் கல்வித்திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்திவருகிறது, இந்துத்துவ சிந்தனையாளர்களை உயர்கல்வியின் பல்வேறு நிலைகளில் பணியமர்த்திவருகிறது.

பகுத்தறிவற்ற வாதமும் அதன் சவாலும்:

தத்துவார்த்த நிலையில், பகுத்தறிவற்ற வாதத்தை மீண்டும் புகுத்துவதற்கான முயற்சிகள், ஜனரஞ்சக தேசியவாதத்தின் வெற்றிக்கு அடிப்படையாக உள்ளன. ஜார்ஜ் லூகாசுடைய ‘பகுத்தறிவை நொறுக்குதல்’ (Destruction of Reason) என்ற ஆரம்பகால படைப்பினை, பகுத்தறிவற்ற தத்துவத்தின் மீதான விமர்சனம் என்ற விதத்தில், இந்திய சூழலுக்கு  ஏற்ப மீளுருவாக்க வேண்டும். ஹிட்லரை நோக்கிய ஜெர்மனியின் பயணத்தை மற்ற பிற காரணிகளுக்கிடையே, ஜார்ஜ் லூகாஸ்தான், தத்துவப்பரப்பில் கண்டறிகிறார். அவருடைய மையமான கவனம் பின்வருமாறு, “பகுத்தறிவற்றவாதம், ஏகாதிபத்திய உலகத்தில் ஒரு உலக நிகழ்வுப்போக்காகும்” என அவர் அழுத்தமாக குறிப்பிடுகிறார்.

பகுத்தறிவின்மை என்பது, முதல் பார்வையிலேயே, காரணகாரியத்திற்கு   விரோதமான தத்துவப் போக்கு ஆகும், அதன் எல்லா வெளிப்பாடுகளும், ஐரோப்பிய அறிவொளிக் கால நாட்களில் இருந்து இன்றைய ஏகாதிபத்திய உலகமயம் வரையில் மனிதர்கள் தங்கள் விவகாரங்களில் தர்க்க அறிவைப் பயன்படுத்துவதற்கும், உண்மையை உற்று அறிவதற்குமான திறனுக்கு சவாலாகவே அமைந்திருக்கிறது. எந்த நிலையிலும் முழுமையான உண்மையை, அறிவுகொண்டு விளக்குவது சாத்தியமில்லை. இருந்தாலும் பகுத்தறிவின்மையானது, உண்மைக்கும் அறிவுக்குமான இயக்கவியல் உறவை பார்க்க மறுக்கிறது.

லூகாஸ் சொல்வதைப் போல, நிலவுகின்ற உண்மை, அது குறித்த நமது அறிவை விடவும் வளமானதும், சிக்கலானதும் ஆகும். இந்த இடைவெளியை பகுத்தறிவின் அடிப்படையில் புரிந்துகொள்வதற்கு பதிலாக, பகுத்தறிவற்றவாதமானது ஒருவர் உண்மையின் முழுமையைக் குறித்து பகுத்தறிந்த ஞானத்தைப் பெறவே முடியாது என்ற முடிவுக்கு வருகிறது. அறிவின் உயர்ந்த வடிவமாக (அதனால்) கருதப்படுகிற ‘நம்பிக்கை’ அல்லது உள்ளுணர்வினைக்’ கொண்டே முழு உண்மையை உள்வாங்க முடியும் என்கிறது. அத்தகைய ‘நம்பிக்கையைக்’ கொண்டவர்களுக்கு ஜனரஞ்சக தேசியவாதம் ஊக்கமளிக்கிறது, இரண்டு இலக்குகளை அடையும் காரணத்திற்காக இது மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவில் நவ-தாராள நிகழ்ச்சிநிரலை முன்னெடுக்க வேண்டும், இந்தியாவை பிரத்யேக மத ராஜ்ஜிய அரசாக மாற்ற வேண்டும் ஆகியவைதான் அந்த இலக்குகள்.

இதுபோன்ற பகுத்தறிவற்றவாத தத்துவமானது, ஆர்.எஸ்.எஸ்/பாஜக அரசின் கீழ்  இந்தியாவின் சமூக-அரசியல்-பண்பாட்டு வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் ஊடுருவியிருக்கிறது.

நாம் நடத்துகிற போராட்டம்:

பகுத்தறிதல், இந்தப் பார்வைதான் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார நிரலுக்கு உழைப்பதன் மூலமாக ‘இந்தியக் கருத்து’ சாத்தியமாக்கப்படவேண்டும் என்கிறது. பகுத்தறிவற்றவாதமோ, தனது லாபத்தை பெருக்குவதற்காக இந்திய பொருளாதாரத்தை அடிமைப்படுத்த விரும்பும் சர்வதேச நிதி மூலதனத்துடன் கைகோர்த்துக்கொண்டு, நவதாராள சீர்திருத்தங்களை அமலாக்கச் சொல்கிறது. நாட்டின் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வை அகற்றுவதோடு நில்லாமல், இந்தியாவை ஏகாதிபத்தியத்தின் இளைய கூட்டாளியாக மாற்றுகிறது. இத்தகைய போக்கு, ஏழை இந்தியாவுக்கும் பணக்கார இந்தியாவுக்குமான இடைவெளியை அதிகரிக்கிறது. ஏழைகள் மேலும் ஏழ்மையாக்கப்படுகிறார்கள், பணக்காரர்கள் மேலும் வளம்கொழிக்கின்றனர். ‘இந்தியக் கருத்து’ முன்னிருத்தும் உள்ளடக்கிய பார்வைக்கு எதிரான வெளித்தள்ளும் நிரலாக அது உள்ளது.

நமது மக்களின் ஒடுக்கப்பட்ட பகுதியினரான தலித், பழங்குடி, மதவழி சிறுபான்மை மற்றும் பெண்களின் சமூக பொருளாதார உள்ளடக்கத்துக்காக உழைக்கும் படி சொல்வது பகுத்தறிவு. பகுத்தறிவுக்கு விரோதமான வாதமோ அவர்கள் வெளித்தள்ளப்படுவதை மேலும் தொடர்ந்து முன்னெடுக்கிறது. சமுக – பொருளாதார நிலைமைகளைக் கணக்கிலெடுக்காத ‘தகுதி திறமை’ குறித்து பேசுவது பகுத்தறிவின்மை வாதமாகும்.

நமது அரசமைப்புச்சட்டம் வலியுறுத்துகின்ற, ‘சாதி, மதம், பாலின வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட குடிமக்களின் சமத்துவத்தை’ எதிர்நோக்குவது பகுத்தறிவுக்  கண்ணோட்டம். இந்த சமத்துவத்தை மறுப்பது பகுத்தறிவின்மைவாதம். அப்படிப்பட்ட மறுப்பானது நவ தாராளமய கொள்கைப் பாதை மற்றும் இந்துத்துவ தேசியவாதத் தாக்குதலின் விளைவாகும்.

அரசில் இருந்து மதம் பிரிக்கப்படவேண்டும் என்பது பகுத்தறிவுக் கண்ணோட்டம். தீவிரமான மதப் பிரிவினையை ஊட்டுவதன் மூலம் உள்ளடக்கும் தன்மையினை வளர்க்கவேண்டிய இடத்தில் பிரிவினையை முனிருத்துவது பகுத்தறிவின்மை வாதம். அத்தகைய பகுத்தறிவின்மை வாதம் சிறுபான்மையினருக்கு அரசமைப்புச் சட்டம் உறுதி செய்திருக்கும் உரிமைகளை நேரடியாக ஆபத்துக்குள்ளாக்குவதுடன் அவர்களின் வாழ்க்கைப் பாதுகாப்பை, வாய்ப்புகளை பறிப்பதன் மூலம் வகுப்புவாதத் தாக்குதலுக்கு இலக்காக்குகிறது.

‘இந்தியக் கருத்தினை’ முன்னெடுக்கும் மதிப்பீடுகளை வளர்ப்பது பகுத்தறிவு. நமது கல்வி அமைப்பை விஷமாக்குவது, அனைவருக்குமான கல்வியை மறுப்பது, காரணகாரியங்களையும், அறிவியல் மனப்பாங்கையும் மறுப்பது பகுத்தறிவின்மை வாதம். நமது வளமான ஒருங்கமைந்த (syncretic) கலாச்சாரத்தின் இடத்தில் இந்து புராணத்தை மாற்றீடு செய்ய முயல்வது பகுத்தறிவின்மை வாதமாகும்.

இந்தியாவில் ‘ஜனரஞ்சகவாத’ ‘இந்துத்துவ தேசியவாதத்திற்கும்’ , இந்திய  தேசியவாதத்திற்கும் இடையில் ஒரு போராட்டம் நடந்துவருகிறது. மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவை மீட்கும் போராட்டத்தின் பொருள், பகுத்தறிவின்மை வாதத்தை எதிர்த்து பகுத்தறிவுக் கண்ணோட்டம் வெற்றிபெறுதலாகும். அதன் நடுநாயகமாக அமைந்திருப்பதே ‘இந்தியக் கருத்து’.

தமிழில்: இரா.சிந்தன்

காவி மயமாகும் கல்வி

ச. லெனின்

“நடை, உடை, பாவனைகளில் ஆங்கிலேயரைப் பின்பற்றக்கூடிய ஒரு புதிய தலைமுறையை உருவாக்கும் நோக்கத்தை புதிய கல்விமுறை கொண்டிருக்கிறது”  என்றான் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியாவிற்க்கான கல்வி திட்டத்தை வடிவமைத்த மெக்காலே. இன்று ஆர்.எஸ்.எஸ்.தனது திட்டத்தின் அடிப்படியில், அதன்  இந்து ராஷ்ட்ரா கொள்கையை, பிஞ்சு உள்ளங்களில் திணிக்கும் வகையில்  பாடத்திட்டத்தை  மாற்றி வருகிறது.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு தங்கள் நிர்வாகத்தை நடத்த இடைநிலை அதிகாரிகளையும், போதுமான உயர்நிலை அதிகாரிகளையும் உருவாக்குவதே அவர்களுடைய  கல்வி திட்டத்தின் கூடுதல் அம்சமாக இருந்தது. விடுதலைக்கு பின்பும் இந்திய ஆளும் வர்க்கத்திற்கு ஏற்ற வகையில், அதிகார வர்க்கத்தையும், குமாஸ்தாக்களையும், உழைப்பாளர்களையும் உருவாக்குவதையே விடுதலைக்கு பிந்தைய கல்வி கொள்கைகள் கொண்டிருந்தன.  ஒருசில பிரத்யேக கல்விநிலையங்கள் மட்டும் சில பிரத்யேக கல்வி முறையை பயிற்றுவித்ததை தவிர மற்றவை எல்லாம் இதையே செய்துவந்தன.

ஆனபோதும், ஆளும் வர்கத்தின் தேவையை கருத்தில் கொண்டேனும் கல்வி பரவலான மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டது. சாதி போன்ற சமூக கொடுமைகளாலும், மண்டிக்கிடந்த பழமைவாதங்களாலும் முடங்கிக்கிடந்த பலரின் கல்வி வாய்ப்பு திறக்கப்பட்டது.  குறிப்பாக சமூக சீர்திருத்த இயக்கங்களால் ஓரளவு விழிப்புணர்வு பெற்றிருந்த தென் மாநிலங்கள் இதில் கூடுதலாக பயனடைந்தன. துவக்கத்தில் பள்ளிக்கல்விக்கும், தொழிற்கல்விக்கும் கூடுதலாக கவனம் கொடுக்கப்பட்டது. பிறகு நாட்டின் சுயசார்பு தேவையின் அடிப்படியில் ஆய்வித்துறைக்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ஐ.ஐ.டி களும், இதர பல உயர் கல்வி நிறுவனங்களும் உருவாக்கப்பட்டன.

“மனிதனை மனிதன் சார்ந்துள்ள சமூகத்தில் மக்கள் அனைவருக்கும் வாழ்வியல் தேவைகள் உள்ளன. இத்தேவைகளை பெறுவதற்க்கான வாய்ப்பு அனைவருக்கும் இருக்க வேண்டும்.  அவ்வாய்ப்பு தொடர்ந்து வளர வேண்டும்; அதன் மூலம் அதற்க்கான பொது கருத்து உருவாக வேண்டும். இதுவே சமூக தொடர் வளர்ச்சியாகும்” இப்படியான புரிதலோடு இளம் தலைமுறையினரை சமூக அறிவு ஜீவிகளாக (organic intelectual) உருவாக்குவதே உயர்கல்வியில் முக்கிய நோக்கம் என்கிறார் பிரபாத் பட்நாயக். ஆனால்  இதுவரை இந்திய வரலாற்றில் இத்தகைய புரிதலோடு கல்விக்கொள்கை வகுக்கப்படாத போதும், கல்வியின் வீச்சால் பல அறிவு ஜீவிகளும், சிந்தனையாளர்களும் உருவாகினர்.

1990 களுக்கு பிறகு இந்தியா பின்பற்றும் புதிய பொருளாதார கொள்கையின் விளைவாகவும், சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் கட்டளைகளை பின்பற்றியதாலும் நிதி பற்றாக்குறையைஅது சந்தித்தது. இதன் நேரடி விளைவாக கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட மக்கள் நல செலவுகள் வெட்டப்பட்டு, கல்வி உள்ளிட்ட சேவைகள் தனியார்மயம் ஆனது. அது சமூக அறிவு ஜீவிகள் உருவாவதையே முடக்கி, ஆளும் வர்கத்தின் வளர்ச்சிக்கு தேவையான உழைக்கும் கூட்டத்தை மட்டும் உருவாக்கும் வேலையை செய்கிறது.

“பசியுள்ளவன் புத்தகத்தை நாடுவான்” என்றார் பெர்ட்லாட் பெர்ச். அவன் நாடுகின்ற புத்தகம் அவனை பசியோடு வைத்திருக்கும் சமூக காரிணிகளை சொல்வதாக இருக்க வேண்டும். ஆனால் அவன் நாடுகின்ற புத்தகத்தில், அவனது பசிக்கு காரணம் அவன் முற்பிறவியில் செய்த பாவம் தான் என்று சொல்லும் வகையில் பாட திட்டங்களை மாற்றுகிறது ஆளும்  ஆர்.எஸ்.எஸ்.- பி.ஜே.பி. அரசு.

கல்வியை காவி மயமாக்குவதுதான் பிஜேபி-ஆர்.எஸ்.எஸ்-இன் முக்கியமான நோக்கம். வலுவான ஆர்.எஸ்.எஸ் சிந்தனை கொண்டவர்களையே இந்திய வரலாற்று ஆராய்ச்சி நிறுவனம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போன்ற நாட்டின் பல முக்கியமான கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் தலைமை பொறுப்பிற்கு நியமிக்கபட்டுள்ளனர். இந்திய வரலாற்றை திருத்தி எழுத 2016 ஆம் ஆண்டு ஒரு குழுவை பிஜேபி அரசு அமைத்துள்ளது கவனிக்கத்தக்கது.

இந்து புராணங்களுக்கு ஏற்றபடி இந்திய வரலாற்றை மாற்றி எழுத அவர்கள் முயல்கின்றனர். மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசாக இருக்கும் இந்தியாவை சகிப்புத்தன்மையற்ற, பாசிச இந்து ராஷ்ட்ராவாக மாற்ற ஆர்.எஸ்.எஸ் திட்டமிடுகிறது. எனவே, உயர் கல்வியையும், ஆய்வு புலத்தையும் முழுமையாக வகுப்புவாத நிலைக்கு அது மடைமாற்றுகிறது.  இதை எதிர்க்கும் மாணவர்கள் ஒடுக்கப்படுவதோடு, அவர்களின் எதிர்காலமே பாதிப்புக்கு உள்ளாகும் வகையில் நிர்வாக ரீதியாகவும் கடுமையாக பழிவாங்கப்படுகிறார்கள். உதாரணமாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் உமர் காலித்தின் முனைவர் பட்ட ஆய்வு எவ்வித காரணமுமின்றி சமர்ப்பிக்கவே அனுமதிக்கப்படவில்லை.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இந்திய உயர் கல்வி ஆணையச் (பல்கலைக்கழக மானியக்குழு சட்டம் 1956-ஐ திரும்பப் பெறுதல்) சட்டம் 2018 என்கிற வரைவு சட்டத்தை வெளியிட்டுள்ளது.
இச்சட்டம் நிறைவேற்றப்படுமானால் மாநில சட்டமன்றங்கள் மூலம் இதுநாள்வரை உருவாக்கப்ட்ட பல்கலைக்கழகங்களுக்கான சட்டங்கள் அனைத்தும்  காலாவதியாகிவிடும். இது நமது கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைத்து, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படைகளையே மாற்றும் செயலாகும். இந்தியாவில் உள்ள அனைத்து உயர்கல்வி நிலையங்களையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதே இதன் நோக்கமாகும். அதோடு மட்டுமல்லாமல் உயர்கல்வியை முழுமையாக சந்தையிடம் ஒப்படைக்கும் சரத்துக்களும் இந்த வரைவு சட்டத்தில் உள்ளது.

தாராளமான தனியார்மயம்

உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 6 சதவிகிதத்தை கல்விக்கு ஒதுக்க வேண்டும் என்பது 1964-66ல் கோத்தாரி கல்விக்குழு பரிந்துரைத்த காலம் தொட்டு முன்வைக்கப்படும் கோரிக்கையாகும். 2013-14 ஆண்டு 0.71 சதம் மட்டுமே ஜிடிபி-யிலிருந்து கல்விக்கு ஒதுக்கப்பட்து. பிஜேபி அரசோ அதை மேலும் படிப்படியாக குறைத்து 2018-19 ஆம் ஆண்டு ஜிடிபி-யிலிருந்து வெறும் 0.45 சதத்தை மட்டுமே கல்விக்காக ஒதுக்கியது. பொதுக் கல்விக்கான நிதியை தொடர்ந்து வெட்டிச் சுருக்கி, கல்வியில் தனியார் மயத்தை வேகமாக அமல்படுத்துகிறது.

30 மாணவர்களுக்கு குறைவான மாணவர்கள் உள்ள பள்ளியை மூட அரசு வலியுறுத்துகிறது.  பிஜேபி ஆளும் மாநிலங்களில் பள்ளிக் கல்வியை வேகமாக தனியாரிடம் தாரை வார்க்கும் நிகழ்வுகள் தொடர் கதையாகியுள்ளது. ராஜஸ்தான் அரசு 300 அரசுப் பள்ளிகளை தனியார் மற்றும் பொதுக்கூட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. கடந்த ஆண்டு மஹாராஷ்ட்ரா அரசு 4,093 அரசு பள்ளிகளை மூடியுள்ளது. மேலும் மஹாராஷ்ட்ரா அரசு தனியார் கம்பெனிகள் பள்ளிக்கூடங்களை நடத்திட அனுமதிக்கும் சட்டத்தையும் நிறைவேற்றியுள்ளது.

பள்ளிகளில் சத்துணவிற்கான நிதியை குறைத்து குழந்தைகளின் வயிற்றிலடிப்பதில் தொடங்கி, கல்விக்காக அரசு ஒதுக்கும் நிதி ஒவ்வொன்றையும் வெட்டி, தனியாரிடம் தான் கல்வி பெறவேண்டும் என்கிற நிலைக்கு மக்களை தள்ளுகிறது. ஆனால் இதற்கெல்லாம் மாறாக கேரள இடதுசாரி அரசு செயல்பட்டு வருகிறது. அங்கு தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளுக்கு மாற்றி வருகின்றனர்.

பக்கோடா விற்பதும் வேலை தான்

ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை என்று 2014ம் ஆண்டு தேர்தல் களத்தில் வாக்குறுதி கொடுத்த மோடி, இப்போது பக்கோடா விற்பதும் வேலை தான் என்கிறார்.

ஆண்டுதோறும் சுமார் இரண்டு கோடியே நாற்பத்தி ஆறு லட்சம் பேர் புதிதாக வேலை தேடும் களத்திற்கு வருகின்றனர். ஆனால் கடந்த 2014 முதல் 2017 அக்டோபர் வரை உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்போ வெறும் 8,23,000 மட்டுமே என்கிறது சர்வதேச தொழிலாளர் ஆணையம். சீனாவில் ஒரு நாளைக்கு சுமார் ஐம்பதாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படுகிறது, ஆனால் இந்தியாவோ ஒரு நாளைக்கு 450 பேருக்குத்தான் வேலை வாய்ப்பை உருவாக்குகிறது. இதே வேகத்தில் போனால் ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வழங்க சுமார் 77 ஆண்டுகள் ஆகும்.

நாட்டில் 55 சதமானோர் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். அதிலும் சமூக ரீதியாக பின்தங்கியுள்ள தலித் மற்றும் ஆதிவாசி மக்கள் பெரிய அளவில் இருக்கும் இடமும் இதுதான். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்று கூறிய மோடி அதில் ஒரு துளியை கூட செய்யவில்லை. 2014-15 க்கு கிராமப்புற வருமானம் என்பது எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் தேங்கிப் போய் நிற்கிறது. தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் மூலம் கிடைத்து வந்த வேலை வாய்ப்பையும் அரசு தட்டிப் பறிக்கிறது. தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை சரியாக நிறைவேற்ற குறைந்தபட்சம் எண்பதாயிரம் கோடி வரை  தேவைப்படும். ஆனால் அரசு இத்திட்டத்திற்கு ஒதுக்கிய நிதியோ  ஐம்பத்தைந்தாயிரம் கோடி மட்டுமே.

பொதுத்தறை நிறுவனங்கள்

இதுவரை ஒரு லட்சத்து தொண்ணுhற்றி ஆறு லட்சம் கோடி மதிப்பிலான பொதுத்துறை சொத்துக்கள் விற்கப்பட்டுள்ளது. இது கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடந்த பத்து ஆண்டுகளில் விற்கப்பட்டதைவிட அதிகமாகும். பொதுத்துறை நிறுவனங்களில்தான் சமூக நீதியை பாதுகாக்கும் வகையிலான இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு வருகிறது. எல்லாம் தனியார் மயம் என்கிறபோது சமூக நீதியும் அடிபட்டு போய்விடுகிறது. தனியார் துறையில் இடஒதுக்கீடு என்கிற கோரிக்கையை கேட்கக் கூட இந்த அரசு தயங்குகிறது.

பொதுத்துறை நிறுவனங்களிலேயே மூன்றில் ஒருபகுதியினர் ஒப்பந்தத் தொழிலாளர்களாகத்தான் உள்ளனர். தனியார் துறையிலோ 40 முதல் 60 சதம் பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக உள்ளனர். நிரந்தர தொழிலாளர்களை விட இவர்களின் ஊதியம் 30 முதல் 50 சதம் வரை குறைவாகும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று 2016 ஆம் ஆண்டே கூறிய போதும் இதை அமல்படுத்த அரசு எவ்வித நடவடிக்கையும் எடுத்திடவில்லை.

நாட்டின் உழைக்கும் மக்களில் 93 சதமானவர்கள் முறைசாரா தொழிலாளர்களே. குறிப்பாக கட்டுமானம், போக்குவரத்து, விடுதி ஆகிய துறைகளில் முறைசாரா தொழிலார்கள் அதிகம் பணியாற்றுகின்றனர். இவர்களில் பெரும் பகுதியினர் கிராமப்புற வறுமை காரணமாக நகர்ப்புறங்களுக்கு பிழைப்பு தேடி வந்தவர்களே ஆவர். கட்டுமான தொழிலாளர்களின் நலன் காக்க கட்டுமான நிறுவனங்களிடம் இருந்து சுமார் 37,400 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் 9,000 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. அதிலும் பெரும் பகுதி நிர்வாக செலவுகளே ஆகும்.

சிறிய அளவிளான வேலை வாய்ப்புகளையும் பண மதிப்பு நீக்க நடவடிக்கையும், சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கமும் முடக்கிவிட்டது. இருந்த சிறு குறு தொழிலும் அதனால் கிடைத்துவந்த வேலையும் பறிபோனது. சுமார் ஒரு கோடியே ஐம்பது லட்சம் பேர் 2017 ஆம் ஆண்டு துவக்கத்திலேயே வேலை இழந்தனர் என்கிறது இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம். அதே ஆண்டு ஜூலை மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி வேலை இழப்பை மேலும் அதிகப்படுத்தியது.

முதலாளிகளின் அரசு

நாட்டின் மக்கள் தொகையில் சுமார் அறுபது சதவீதம் பேர் முப்பத்தி ஐந்து வயதுக்குட்பட்டவர்களாவர். இது தேச வளர்ச்சிக்கான மிகப்பெரிய உழைப்பு சக்தி ஆகும். முதலாளித்துவத்தின் நலன்களுக்காக இந்த இளம் இந்தியர்களுக்கான வாய்ப்பு வசதிகளை அரசு செய்ய மறுக்கிறது.

முதலாளித்துவத்திற்கு எப்போதும் குறைந்த கூலியிலே தொழிலாளர்கள் தேவை. எனவே வேலையில் உள்ள தொழிலாளர்களை போல் பல மடங்கு வேலையற்ற உழைப்பாளர்கள் கூட்டம் இருப்பதையே முதலாளித்துவம் விரும்பும். இந்த வேலையற்ற கூட்டத்தையே தயார் நிலையிலான தொழிலாளர் படை  என்றார் மார்க்ஸ்.

 

பொய்களை கட்டவிழ்த்து, கலவரங்களை அரங்கேற்றி மக்கள் விரோத அரசின் மீதான கோபத்தை மடைமாற்றி தப்பிக்கும் திட்டத்தையே ஆர்எஸ்எஸ், பிஜேபி கையாளும் பாசிச வழிமுறையாகும். பாசிச சக்திகள் பெரு முதலாளிகளின் விருப்பங்களை சுமந்துகொண்டே  தனது அடிப்டைவாத கொள்கையையும் அமலாக்கும். எனவே இந்த இரண்டு அபாயங்களையும் சேர்த்தே எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இப்போது உள்ளோம்.

அரசு இயந்திரமும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும்

(குரல்: தீபன், ஆடியோ எடிட்டிங்: மதன் ராஜ்)

– அன்வர் உசேன்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தியாவின் பன்முகத்தன்மையை அழித்து இந்து ராஷ்ட்ரா எனும் சமூக அமைப்பை உருவாக்க முயல்கிறது என்பது அனைவரும் அறிந்ததே! இந்து ராஷ்ட்ரா கோட்பாடு இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் போன்ற சிறுபான்மை மக்களுக்கு எதிரானது மட்டுமல்ல; இந்துக்களிடையேயும் கூட பிற்படுத்தப்பட்ட, தலித், ஆதிவாசி மக்களுக்கு எதிரானது என்பதை இங்கு அழுத்தமாக பதிவு செய்ய வேண்டியுள்ளது.

தனது இந்து ராஷ்ட்ரா கோட்பாடுகளை அமலாக்கிட ஆர்.எஸ்.எஸ். இரு முனைகளில் செயல்படுகிறது. ஒன்று, மக்களிடையே நேரடியாக செயல்பட்டு மத மோதல்களை உருவாக்குவது. இன்னொன்று, தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அரசு இயந்திரத்தை வலுவாக பயன்படுத்தி கொள்வது. தனது கருத்தியலை மக்கள் மீது திணிக்க அரசு இயந்திரத்தின் கட்டுப்பாடு தன் கைகளில் இருக்க வேண்டும் என்பதை சங்  புரிந்து வைத்துள்ளது. குறிப்பாக 1998-2004 வாஜ்பாய் ஆட்சியிலும் அதற்கும் மேலாக 2014 மோடி ஆட்சியிலும் அரசு இயந்திரத்தை தனது ஆளுமைக்குள் கொண்டுவர ஆர்.எஸ்.எஸ். கடுமையாக முயற்சிக்கிறது.

இந்திய அரசியல் சட்டத்தை நிராகரிக்கும் ஆர்.எஸ்.எஸ்.

இந்திய அரசியல் சட்டம் உழைப்பாளி மக்களுக்கு ஆதரவானது என்று கூறிவிட முடியாது. பல குறைகளை கொண்டுள்ளது. எனினும் விடுதலைக்கு பின்பு அச்சட்டம் உருவாக்கப்பட்ட பொழுது பன்முகத்தன்மையை உயர்த்தி பிடித்தது. காந்திஜியின் படுகொலை பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். தனிமைப்பட்டிருந்தது. அம்பேத்கார் அவர்களால் உருவாக்கப்பட்ட அரசியல் சட்டத்தை நேரு தலைமையிலான காங்கிரஸ் மட்டுமல்லாது, பொதுவுடமை கட்சி மற்றும் சோசலிஸ்ட் கட்சிகளும் ஆதரித்தன. எனவே பன்முகத்தன்மையை உயர்த்திபிடிக்கும் அரசியல் சட்டம் உருவானது. மக்கள் ஏற்றுக்கொண்டனர்

இந்த அரசியல் சட்டத்தை ஆர்.எஸ்.எஸ். அன்றைக்கே நிராகரித்தது. ஆர்.எஸ்.எஸ்.ன் பத்திரிக்கையான 30.11.1949 ஆர்கனைசர் இதழில் இந்திய அரசியல் சட்டத்தின் ஆவணமாக திகழ்வதற்கு தகுதி படைத்தது மனுஸ்மிருதிதான் என்ற வாதம் வலுவாக முன்வைக்கப்பட்டது. இந்த மனுஸ்மிருதி நால் வர்ண பேதங்களை உயர்த்தி பிடிக்கிறது. அதன் அடிப்படையில் உருவான சாதிய அமைப்பை ஆர்.எஸ்.எஸ். வலுவாக ஆதரிக்கிறது. சாதிய அமைப்பு குறித்து கோல்வால்கர் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

“நமது மகத்தான தேசிய (இந்துத்துவ) வாழ்வில் சாதியம் என்பது பன்னெடுங்காலமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்கிறது. சமூக ஒற்றுமையை உறுதிப்படுத்தும் பிணைப்பாக சாதியம் செயல்படுகிறது.” (சிந்தனை கொத்து/பகுதி-2/ அத்தியாயம்10).

மூவர்ண கொடியையும் ஆர்.எஸ்.எஸ். ஏற்றுகொண்டதில்லை. காவிதான் அவர்களது கொடியின் நிறம். ஆர்.எஸ்.எஸ்.ன் தலைமையகமான நாக்பூரில் 2000ம் ஆண்டுதான் முதன் முதலாக மூவர்ண கொடி ஏற்றப்பட்டது. தனது நிகழ்ச்சி நிரலை அமலாக்க இந்திய அரசியல் சட்டத்தை சிதைக்க வேண்டிய தேவை ஆர்.எஸ்.எஸ்.க்கு உள்ளது. அதற்கு அரசு இயந்திரத்தை முழுமையாக பயன்படுத்துகிறது.

ஆர்.எஸ்.எஸ். பிடியில் மோடி அரசாங்கம்

2014ம் ஆண்டிற்கு பிறகு அரசு இயந்திரத்தை வஞ்சகமாக பயன்படுத்தும் வாய்ப்பு ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு வலுவாக கிடைத்துள்ளது. அதனை முழுமையாக ஆர்.எஸ்.எஸ். பயன்படுத்தி கொள்கிறது எனில் மிகை அல்ல. இந்திய அரசு இயந்திரத்தின் உயர்ந்தபட்ச பொறுப்பு ஜனாதிபதி மற்றும் உதவி ஜனாதிபதி பதவிகள் ஆகும். இந்திய வரலாற்றில் முதன் முதலாக ஜனாதிபதியும் உதவி ஜனாதிபதியும் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள். இந்திய அரசு இயந்திரத்தின் இன்னொரு முக்கிய படிமம் ஆளுநர் பதவி!  இந்தியாவில் 35 ஆளுநர்கள் உள்ளனர். இவர்களில் 25 பேர் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்பு கொண்டவர்கள். இவர்கள்தான் இந்திய அரசியல் சட்டத்தை காக்க வேண்டிய கடமை படைத்தவர்கள். ஆனால் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் என்ற முறையில் இவர்கள் இதே அரசியல் சட்டத்தை நிராகரிப்பவர்கள். எனவே அரசியல் சட்டத்துக்கு என்ன பாதுகாப்பு எனும் கேள்வி எழுகிறது.

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியும் அவர் அமைச்சரவையில் பலரும் ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள். இந்தியாவில் 29 மாநிலங்களும் 9 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. 29-ல் நான்கு மாநிலங்களில்தான் பா.ஜ.க. எதிர்ப்பு சக்திகள் ஆட்சியில் உள்ளன. தெலுகு தேசம் தற்பொழுதுதான் பா.ஜ.க.வை எதிர்க்க தொடங்கியுள்ளது. 20 மாநிலங்களில் பா.ஜ.க. தனியாக அல்லது கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி செய்கிறது. எனவே, மத்தியிலும், பல மாநிலங்களிலும் அரசு இயந்திரத்தின் கடிவாளம் பா.ஜ.க. மூலமாக ஆர்.எஸ்.எஸ். கையில் உள்ளது என்பதை இது தெளிவாக்குகிறது.

ஆர்.எஸ்.எஸ். தனது கொள்கைகளை மோடி அரசாங்கம் பின்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இதற்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் மோடி அரசாங்கத்திற்கும் இடையே ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் ஆர்.எஸ்.எஸ். தரப்பிலிருந்து சுனில் பையா ஜோஷி, சுரேஷ் சோனி, தத்தராய்யா ஹோஸ்பேல், கிருஷ்ண கோபால், ராம்மாதவ் ஆகியோரும் பா.ஜ.க. தரப்பிலிருந்து ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, அமித் ஷா, ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். பல முக்கியமான அமைச்சகங்களில் குறைந்தபட்சம் ஒரு ஆர்.எஸ்.எஸ். ஊழியர் இணைக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்வுகளை கிருஷ்ண கோபால் ஒருங்கிணைக்கிறார். இந்த ஏற்பாடுகள் மூலம் ஆர்.எஸ்.எஸ். தனது ஆளுமையை அரசு இயந்திரத்தில் நிலைநாட்ட முயல்கிறது.

அரசு இயந்திரம் மூலம் திருத்தப்படும் இந்திய வரலாறு

2017ம் ஆண்டு ஜனவரியில் டெல்லியில் வரலாற்று ஆசிரியர்களின் கூட்டத்தை பா.ஜ.க. கலாச்சார அமைச்சர் மகேஷ் ஷர்மா கூட்டினார். இந்த கூட்டத்தின் நோக்கம்: “இந்திய வரலாறை திருத்தி எழுதுவது”. தன்னை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அர்ப்பணிப்பு மிக்க ஊழியர் என பெருமையுடன் அழைத்து கொள்கிறார் இவர். “நான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடமிருந்துதான் வழிகாட்டுதல் பெறுகிறேன்” என இவர் சொல்லிக்கொள்வதில் என்ன ஆச்சர்யம்?

ஏன் வரலாற்றை திருத்தி எழுத வேண்டும்? ஆர்.எஸ்.எஸ்.இன் தலைவர் மோகன் வைத்யா கூறுகிறார்:

“இந்திய வரலாற்றின் உண்மையான வண்ணம் காவிதான். இதனை நிலைநாட்ட கலாச்சார மாற்றம் உருவாக்கவேண்டியுள்ளது. இதற்கு இந்திய வரலாற்றை திருத்தி எழுதுவது அவசியம்.”

இதற்காக 14 பேர் கொண்ட குழு போடப்பட்டுள்ளது. இதன் தலைவர் கே.என். தீட்சீத் தொல்லியல் துறையின் முன்னாள் மூத்த அதிகாரி. மற்றவர்களும் இந்துத்துவா ஆதரவாளர்கள் என்பதை கூறத் தேவையில்லை. இந்த குழுவின் கண்டுபிடிப்புகள் நாடு முழுதும் உள்ள பாடப்புத்தகங்களில் இணைக்கப்படும் என்கிறார் கல்வி அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேக்கர். “இராமாயணம் கற்பனை அல்ல; அது ஒரு வரலாற்று ஆவணம்; இந்து ஆன்மீக நூல்கள் அனைத்தும் வரலாற்று பெட்டகங்கள்தான்.” என்கிறார் மகேஷ் சர்மா. இவர் தலைமை தாங்கும் கலாச்சார அமைச்சகத்திற்கு ஆண்டுக்கு ரூ3,000 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. வரலாற்றை திருத்தி எழுத இந்த நிதி போதாதா என்ன?

வரலாறு திருத்தி எழுதும் முயற்சி ஏன்?

இதுவரை உள்ள அறிவியல் ஆதாரங்கள் இந்தியா எனும் தேசம் உருவானதில் இடப் பெயர்வுக்கு மிக முக்கிய பங்கு உண்டு என நிலைநாட்டுகின்றன. ஆரியர்கள் இங்கே புலம் பெயர்ந்தவர்கள்தான் என்பதே வரலாற்று ஆசிரியர்களின் முடிவு. அதனை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் மேலும் ஆராய்ச்சி முடிவுகள் வெளி வந்துள்ளன. ஆனால் இந்துத்துவ வாதிகள் இதனை மறுக்கின்றனர். ஆரியர்கள்தான் பூர்வகுடி மக்கள் என வலுவாக நிலைநாட்ட முயல்கின்றனர். இதற்காகவே வரலாற்றை திருத்தி எழுதும் வஞ்சக செயல்.

தொடக்க கால வரலாறு மட்டுமல்ல; இந்துத்துவவாதிகளுக்கு மத்திய கால வரலாறும் மாற்றப்பட வேண்டும். மத்திய காலம் மிகவும் சிக்கல் நிறைந்த கால கட்டம். சமணம், பவுத்தம், சைவம் , வைணவம், இஸ்லாம் ஆகிய பெரும் மதங்கள் தமது மேலாண்மையை நிலைநாட்ட கடுமையாக போராடின. இந்த முரண்பாடு பல மோதல்களை உருவாக்கின. அதே சமயத்தில் பல ஒற்றுமைகளையும் உருவாக்கியது. மதத்தின் அடிப்படையிலும் கொள்ளைக்காகவும் கோவில்களை அழித்த கஜனி முகம்மதுவின் வரலாறும் உண்டு. கோவில்களை பாதுகாத்த இப்ராகிம் லோடி, துக்ளக், அக்பர், திப்பு சுல்தான் ஆகியோரின் வரலாறும் உண்டு. மறுபுறத்தில் மசூதிகளை கட்டிகொடுத்த விஜயநகர மன்னர்கள் மற்றும் மராட்டிய வீரர் சிவாஜி ஆகியோரின் வரலாறும் உண்டு.

மத்திய காலகட்டத்தில்தான் மதத்தின் பெயரால் சைவ மற்றும் வைணவ மதங்கள் ஏராளமான சமண மற்றும் பவுத்த கோவில்களை அழித்தன. சங்பரிவாரத்திற்கு வரலாற்றின் இந்த பக்கங்களை அழிக்க வேண்டிய அவசியம் உருவாகிறது. எனவே, வரலாற்றை மாற்றி எழுத அரசு இயந்திரத்தை முழுமையாக பயன்படுத்த ஆர்.எஸ்.எஸ். முயல்கிறது. அதற்கு மோடி அரசாங்கம் ஒத்துழைக்கிறது. இந்துத்துவ தேசியத்தை இந்திய தேசியமாக நிலைநாட்டுவதற்கு இத்தகைய வஞ்சக முயற்சிகள் தேவைப்படுகின்றன.

இந்த கருத்தியலுக்கு எதிராக மாற்று கருத்தியலை முன்வைக்கும் நேரு பல்கலை கழகம். முடக்கப்படுகிறது. நேரு ஆராய்ச்சி மையம், இந்திய வரலாற்று ஆய்வு மையம் போன்ற பல ஆய்வு மையங்களுக்கு ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் தலைமைப் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளனர். சமஸ்கிருதத்தை முன்னெடுக்க “சான்ஸ்கிரீட் பாரதி”” எனும் அமைப்பு தீவிரமாக செயல்படுகிறது. 2016-ம் ஆண்டு அனைத்து ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். நிறுவனங்கள் சமஸ்கிருதத்தில் பாடங்களை தொடங்க வேண்டும் என கல்வி அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியது. 2018ம் ஆண்டு ஜனவரியில் கான்பூர் ஐ.ஐ.டி. சமஸ்கிருதம், இந்து ஆன்மிக ஆவணங்கள் குறித்து ஆடியோக்களை வெளியிட்டது.

நீதி மற்றும் நிர்வாகத் துறைகளில்!

அரசு இயந்திரத்தின் இன்னொரு முக்கிய பகுதி அதிகாரிகள் அடங்கிய நிர்வாகத்துறை மற்றும் நீதித்துறை ஆகும். நீதித் துறையில் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலையீடுதான் மூத்த நான்கு நீதிபதிகளை பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை முன்வைக்க தூண்டியது. இந்துத்துவ ஆதரவாளர்களாக உள்ள பலர் உச்ச நீதிமன்றத்தில் கூட நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். நீதிபதி ஜோசப் போன்றவர்கள் வாய்ப்பு மறுக்கப்படுகின்றனர். உயர் அதிகாரிகள் மட்டத்திலும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். ரிசர்வ் வங்கியில் ரகுராம் ராஜனின் பதவிகாலம் நீட்டிக்கப்படாததற்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று சங் பரிவாரத்தின் சிறுபான்மை எதிர்ப்பு நடவடிக்கைகளை அவர் எதிர்த்ததும் ஒன்று.

அரசு இயந்திரம் ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆதரவாக செயல்பட்டதற்கு சில நடைமுறை உதாரணங்கள்:

  • அந்தமான் விமான நிலையத்திற்கு சவார்க்கர் பெயரை சூட்டியது.
  • சண்டிகார் விமான நிலையத்துக்கு பகத்சிங் பெயரை சூட்ட பஞ்சாப் அரசாங்கம் முடிவு செய்த பொழுது, அதனை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். தலைவரின் பெயரை சூட்ட ஹரியானா அரசாங்கத்தின் முயற்சி.
  • ஹெட்கேவர் வீட்டை அதிகார பூர்வ சுற்றுலாத் தலமாக ஆக்கியது.
  • தீனதயாள் உபாத்யா உட்பட பல இந்துத்துவா தலைவர்களின் பெயரில் மத்திய அரசு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.
  • அரசு இயந்திரத்தின் உதவியுடன் 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுமார் 50 வெளிநாடுகளின் தூதுவர்களை ஆர்.எஸ்.எஸ்.இன் தலைவர் மோகன் பகவத் சந்தித்தது.
  • மும்பை பங்குச் சந்தை கூட்டத்தில் நிதி அமைச்சகத்தின் உதவியுடன் மோகன் பகவத் பேசியது.
  • 2014ம் ஆண்டு தூர்தர்ஷன் தொலைகாட்சியில் தனது தசரா உரையை மோகன் பகவத் பேச அனுமதித்தது.
  • ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களை நடத்த உடற்பயிற்சி மையங்களை ஹரியானா அரசாங்கம் உருவாக்கியது.
  • மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் செயல்பாடுகளில் பா.ஜ.க. மூலமாக ஆர்.எஸ்.எஸ். தலையிடுவது.

சுருக்கமாக சொன்னால் ஆர்.எஸ்.எஸ்.க்குகாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் உருவாக்கப்பட்ட  அரசாங்கமாக மோடி அரசாங்கம் செயல்படுகிறது. அரசு இயந்திரத்தின் பெரும் பகுதியை தன் ஆளுமையின் கீழ் கொண்டுவர ஆர்.எஸ்.எஸ். கடுமையாக முயல்கிறது. அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது என்றால் மிகை அல்ல! மதச்சார்பின்மை சக்திகள் இந்த சவாலை முறியடிக்க வேண்டும். மக்கள் ஒன்றுதிரளும்போது அது சாத்தியமான ஒன்றுதான்!

பேரிடரான காலகட்டம்

கடந்தகால, பாசிசத்திற்கும்,இன்றைய பாசிசத்திற்கும் என்ன வேறுபாடு? உலகில் பாசிச அச்சுறுத்தலை இன்று எவ்வாறு எதிர்கொள்வது? இதற்கான அழுத்தமான தத்துவ விளக்கங்களுடன் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் இக்கட்டுரையை வடிவமைத்துள்ளார்.

  • அன்று ஏகாதிபத்தியங்களுக்குள் மூலதனத்தை திரட்டிட போட்டி மூண்டது.உலகை பங்கு போட்டுக் கொள்ளும் உக்கிரம் மேலோங்கியது.
  • மறுபுறம்,உலக மக்களிடையே வறுமை வேலையின்மை தாண்டவமாடியது.
  • இந்த நிலையில் பாசிசம் வேற்று இனத்தவரை எதிரியாக வகைப்படுத்தி கொலை வெறி கொண்டு வேட்டையாடியது.இந்த “வேற்று”இனத்தார் என்ற சித்தாந்தம், பாசிசம் அரசுகளை கைப்பற்றி அதிகாரத்திற்கு வரவும் உதவியது.
  • ஏகாதிபத்தியங்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் தீவிரம் பெற்று இரண்டாம் உலகப் போர் எனும் பேரழிவு ஏற்பட்டது.
  • போரின் அழிவையும் கொடூரத்தையும் சந்தித்த மக்கள் இதுகாறும் பாசிசத்தை ஒதுக்கியே வந்தனர்.
  • முதலாளித்துவமும் மக்களின்  ‘நலன் காக்கும்’அரசு என்ற வேடம் பூண்டது.சோவியத் தாக்கத்தினால் சில நன்மைகளையும் செய்தனர். கீன்ஸ் கொள்கை அடிப்படையிலும் இவை தொடர்ந்தன.
  • இதனால் பாசிசம் சிறிது அடங்கி இருந்தது.
  • ஆனால் நவீன தாராளமயம் நிலைமையை மாற்றியது.அரசு மக்கள் நலன் காக்கும் என்ற நிலையிலிருந்து விலகியது; முற்றாக, கார்ப்பரேட் மூலதன நலன் காக்கும் அரசுகளாக  மாறின.
  • முன்பு போன்று ஏகாதிபத்தியங்களுக்குள்  முரண்பாடு என்றில்லாமல்,அவர்கள்  கைகோர்த்து நடைபோடும் புதிய சூழல் உருவானது.நிதி மூலதனம் ஆதிக்கம் பெற்றுள்ளதால்,அது உலகை  கூறு போடாமல் வலுப்பெற்று வருவதால்,அந்த முரண்பாடு மட்டுப்பட்டுள்ளது.
  • நிதி மூலதனத்திற்கு  உலகை பங்கு போட்டுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கம் உதவிடாது.அந்த நோக்கத்தை ஒதுக்கி வைத்துவிட்டு,கூட்டாக சுரண்ட வேண்டும் என்பது மேலோங்கியுள்ளது.
  • அதே போன்று அரசு விலகி தனியார் ஆதிக்கம் செலுத்தும் சூழல்(நவீன தாராளமயம்) அதற்கு ஏற்புடையது.
  • இக்கொள்கைகளால்,பொருளாதார நெருக்கடி தீவிரம் பெற்றது.அதிலிருந்து மீள முடியாமல் முட்டுச்சந்தில் சிக்கி கொண்டு தப்பிச் செல்ல வழியேதும் இல்லாமல் உலக முதலாளித்துவம் உள்ள நிலை.
  • மறுபுறம், மீண்டும் “வேற்று” சித்தாந்தம் விஸ்வரூபமெடுக்கிறது.வேற்று இனத்தினர்; வேற்று மதத்தினர்  என ஏராளமான “வேற்று”க்களுடன் பாசிசம் தலை தூக்கி வருகிறது.
  • முன்பு போன்று ஆட்சிக்கு பாசிசம் வரக் கூடும்;அல்லது ஆட்சிக்கு வராமல் இருக்கலாம்.ஆனால் சமுக தளம், அரசியல் தளத்தை பாசிச சித்தாந்தம் தனது ஆளுகையின் கீழ் கொண்டு வரும்.
  • முந்தைய பாசிசம் உலகப் போரில் முடிந்தது.இன்றைய பாசிசம் மனித இனத்தை அழிப்பதில் முடியும்.

எவ்வாறு பாசத்தை முறியடிப்பது.?

  • முதலில் இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் பாசிச சக்திகள் வளர்ச்சி பெற்று வருவதற்கு உறுதுணையாக இருப்பது நவீன தாராளமயம் என்பதனை உணர்ந்து கொள்வது அவசியம்.
  • முதலாளித்துவ முறையை குறை காண்பதற்கு பதிலாக “வேற்று” கூட்டத்தினை எதிரிகளாக முன்வைத்து செய்யப்படும் மக்கள் திரட்டலை மக்கள்  அடையாளம் கண்டிட வேண்டும்.
  • இதனை இடதுசாரிகளே செய்திட இயலும்.

இதற்கு

  • பாசிச எதேச்சதிகாரத்தை ஜீரணிக்க முடியாத,
  • தற்போதைய ஜனநாயகம் நீடிக்க வேண்டுமென நினைக்கின்ற,
  • “வேற்றுமை”பாராட்டாமல் ஒற்றுமை நிலைப்பெற விரும்பும் சக்திகள்
  • அதாவது “லிபரல்” சக்திகள்
  • (இந்தியாவில் மதச்சார்பின்மை நெறி விரும்பும்  சக்திகள் உள்ளிட்டோர்)

திரட்ட வேண்டும்.

  • இந்த சக்திகளை இடதுசாரிகள் வென்றடைய வேண்டும்.தனக்கென்று (நவீன தாராளமயக் கொள்கைக்கு  நேர் எதிரான) இடது மாற்று பொருளாதார திட்டத்தை அழுத்தமாகப் பற்றிக் கொண்டு லிபரல் வெகுமக்கள் இடதுசாரியினர் சக்திகளை திரட்ட வேண்டும்.இதற்கு அவர்களோடு நெருக்கம் கொள்ள வேண்டும்.

இந்த முடிவுகள் இன்றைய நிலை பற்றிய ஆழமான ஆய்வு அடிப்படையில், பிரபாத் பட்நாயக் வந்தடையும் முடிவுகள்.

(இந்த முன்னுரையை படித்த பிறகு பொறுமையுடன் அவரது கட்டுரையை வாசிக்க வேண்டுகிறேன்)

– என்.குணசேகரன்


ஆங்கிலத்தில் : >>>>>

இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின் கடந்த அரைநூற்றாண்டாக,  எல்லாவிடத்திலும் ஒரு முனைப்பான அரசியல் சக்தியாக பாசிசம் உருவகாமல் நின்றுவிட்டது. பல எதேச்சதிகார, கொலைபாதகமும் கொண்ட அரசாங்கங்கள், ராணுவ சர்வாதிகாரங்கள் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் அமைந்திருந்திருக்கின்றன, அவை பெரும்பாலும் சி.ஐ.ஏ உதவியுடன் முற்போக்கு தேசியவாத அரசுகளுக்கு எதிராக வென்று அமையப்பெற்றன என்பதும், அவை அமெரிக்காவின் உத்தி ரீதியிலான ஒத்துழைப்பைப் பெற்றுவந்ததும் சந்தேகத்திற்கிடமில்லாத ஒன்று. ஆனால், பாசிச அரசாட்சியிலிருந்து அவற்றை வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். பாசிச அரசாட்சியென்பது மிகப் பரிதாபகரமான நிலையில் உள்ள சிறுபான்மைக்கு எதிராக வெறுப்பை பரப்புவதன் மூலம் அரசியல் நோக்கம் கொண்ட வெகுமக்கள் திரட்டலைச் சார்ந்தது. சோசலிசத்திற்கும் தாராளவாதத்திற்கும் இடையிலான போட்டிதான் முக்கியமானது என, எனது தலைமுறையினரும், அடுத்தடுத்த பல தலைமுறையினரும் நம்பிவந்தோம்.

அடங்கிப்போயுள்ளதாக பாசிசம் காட்சியளிப்பதற்கு இரண்டு மையமான காரணிகளைக் காண்கிறேன். அதில் முதலாவது, மானுட வரலாற்றில் மனித குலத்தைச் சூறையாடும் வகையில், பாசிசம் திணித்த போர்களின் வழியே கட்டமைத்து எழுப்பிய கடும் வெறுப்பு; பாசிசம் என்ற சொல் பெரும் போர்களை திணிக்கும் உச்சகட்ட பகைமை என்பதற்கு நிகரான சொல்லாக மக்களின் மனங்களில் இடம்பெற்றது. இரண்டாவது உலகப்  போர்களுக்கு இடையிலான காலகட்டத்தில், பாசிச வளர்ச்சிக்கு காரணமாக இருந்த பெரும் எண்ணிக்கையிலான வேலையிழப்பு மற்றும் கொடிய வறுமை ஆகியவை கடந்துபோன வரலாறாகிவிட்டது;  சமூக ஜனநாயகம் என்ற பாதுகாப்புக் கவசத்தின் கீழ் முன்னேறிய நாடுகளில் கினீசின் ‘கிராக்கி மேலாண்மை’ அறிமுகப்படுத்தப்பட்டது: அது ‘முதலாளித்துவத்தின் பொற்காலம்’ என அழைக்கப்பட்டது, காலனியத்திற்கு பிறகான காலத்தில் மூன்றாம் உலக நாடுகளில் கொண்டுவரப்பட்ட சமூக, பொருளாதார துறைகளில் அரசுக்கட்டுப்பாடுக் கொள்கைகள், காலனியச் சுரண்டலின் கொடூரங்களுக்கு ஆளாகியிருந்த பெரும்பகுதி மக்களுக்கு புதிய நம்பிக்கையையும், மேம்பட்ட வாழ்க்கையையும் கொடுத்தன.

கடைசியாகக் குறிப்பிட்ட உண்மையை இப்போது ஏற்றுக்கொள்ள சிரமமாய் இருக்கலாம். ஆனால் இந்தியாவே அந்தக் கருத்தை உணர்த்தும் எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. பிரிட்டிஷ் இந்தியாவில், 1900 ஆண்டுகளில் குடிமக்களின் ஆண்டு உணவுதானிய உட்கொள்ளல் 200 கிலோ கிராம்களாக இருந்தது, 1945-46 ஆண்டுகளில் 136.8 கிலோ கிராம்களாக குறைந்தது, 1980களின் இறுதியில் அது 180 கிலோ கிராம்களாக உயர்ந்தது. (புதிய தாராளவாத ‘சீர்திருத்தங்களுக்கு’ பின் அது ஏறத்தாழ 165 ஆக குறைந்துவிட்டது). இந்தியாவின் வருமான வரி விபரங்களைக் கொண்டு, பிக்கட்டி மற்றும் சான்செல் ஆகியோர் செய்த கணக்கீட்டில், மக்கள் தொகையின் முதல் 1 விழுக்காடு பேர், 1930களில் வருமானத்தில் 21 விழுக்காட்டை பெற்றுவந்தனர். அது 1980களில் 6 விழுக்காடு என்பதாகக் குறைந்தது (2014 ஆம் ஆண்டுகளில் அது 22 விழுக்காடாக உயர்ந்துள்ளது)

முன்னேறிய மற்றும் வளர்ச்சிக் குறைந்த நாடுகளில் பொருளாதாரம் மற்றும் சமூக அமைப்பின் மீது அரசுக்கட்டுப்பாட்டுக்கு முடிவுகட்டிய நவதாராளமயத்தின் வெற்றிக்குப் பிறகும் கூட, அமெரிக்காவின் நிகழ்ந்த டாட்காம் குமிழி (1997 – 2001 ஆண்டுகளில் இணையப் பயன்பாட்டின் மூலம் ஊகமாக ஏற்பட்ட பொருளாதாரப் பெருக்கம்)  மற்றும் வீட்டு வசதிக் குமிழி (housing bubble ) ஆகியவை உலகப் பொருளாதார நடவடிக்கைகளை சற்று மேல் நிலையிலேயே வைத்திருந்தன. எனினும் வீட்டு வசதிக் குமிழி உடைந்த நிலையில், உலகப் பொருளாதாரம் ஒரு நெடிய நெருக்கடிக் காலத்திற்குள் நுழைந்தது. தற்போதுள்ளதைப் போல இடையிடையே மீட்சி குறித்த பேச்சுகள் எழும்; ஆனால் யாரோ சொன்னதைப் போல, பந்து தரையில் குதித்துக் கொண்டிருப்பதோடு (analogy of a ball bumping along the floor )  ஒப்பிடும் வாதங்கள், பந்து தரையை நோக்கி வீழும்போது அதனோடு சேர்ந்தே நொறுங்கிவிடுகின்றன. இப்போதைய மீட்சியும் கூட தற்போது அமெரிக்க சந்தையின் வாங்கும் தன்மையில், அமெரிக்க மக்களின் செலவுத்திறைக் காட்டிலும் கூடுதலான அளவில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டது, எனவே அது அதிககாலம் நீடித்திருக்கக் கூடிய ஒன்றல்ல.

போர்களுக்கு இடையிலான காலகட்டத்தைப் போலவே இப்போதும், முதலாளித்துவ உலகத்தின் நெருக்கடி, உலகமெங்கும் பாசிச வளர்ச்சிக்கான புதிய ஊக்கத்தைக் கொடுத்துள்ளது. ஒருவர் இப்பிரச்சனை அத்தனை எளிதாகப் பார்க்கக் கூடாது; எடுத்துக்காடாக, ஜெர்மனியிலேயே ஏற்பட்டுள்ள  நெருக்கடி பல நாடுகளை பல நாடுகளை விடவும் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது, ஜெர்மனியில் வளரும் பாசிசத்தை உலக முதலாளித்துவ நெருக்கடி, அதனால் ஜெர்மனியில் உருவாகும் விளைவுகளோடு சேர்த்து விளக்கிப் புரிந்துகொள்ளவேண்டும். ஒரு அமைப்பு இயங்கும் முறை மீது குற்றம் சாட்டாமல், ”மற்றவர்களை” (சிறுபான்மையினரை) குற்றம்சாட்டுவதன் அடிப்படையில் அரசியல் நோக்கத்துடன் வெகுமக்களைத் திரட்டுதல், இந்தியா உள்ளிட்டு பல நாடுகளில் பரவலாக வளர்ச்சி பெற்றிருப்பது தெளிவானது.

இதன் பொருள் பாசிச அரசு பல இடங்களில் அரசதிகாரத்திற்கு வந்தே தீரும் என்பதோ, அல்லது அவர்கள் அதிகாரத்திற்கு வரும் இடங்களில், பாசிச அரசை ஏற்படுத்தி, அதன் ஆட்சியை நிலைநாட்டுவதில் உறுதியாக வெற்றியடையும் என்பதாகவோ பொருள்கொள்ள வேண்டியதில்லை. ‘பாசிசத்தின் கீழ், அடுத்த அரசாங்கம் ஒன்று இருப்பதில்லை’ என்ற புகழ்பெற்ற மைக்கேல் கலெக்கியின் மேற்கோள், அவர் குறிப்பிட்ட அக்காலகட்டத்தில் இருந்ததைப் போலவே இன்றைய காலங்களிலும் உண்மையல்லாது போகலாம். ஆனால், தற்கால பாசிசம் இன்னும் சில காலத்திற்கு நீடித்திருக்கப் போகிறது என்பது நிச்சயமான உண்மை.

மேற்குறிப்பிட்ட வகையில் உலகப் போருக்கு பிறகான காலகட்டத்தில் பாசிசத்தை ஓரங்கட்டிய இரண்டு நிலைமைகளும் இப்போது இல்லை. தற்கால பாசிசம், போர்களின் மூலம் (மனிதகுலத்திற்கு அளவற்ற அழிவுகளை ஏற்படுத்துகிற அதே நேரத்தில்) தன்னைத்தானே அழித்துக்கொள்வதாக இல்லை. பெரும் முதலாளித்துவ சக்திகளுக்கு இடையிலான போட்டி, அல்லது லெனின் பெயரிட்டு அழைத்த ‘ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான குரூரமான போட்டா போட்டி’ மட்டுப்பட்டிருப்பது வெளிப்படை, மேலும் அது அப்படியேதான் மட்டுப்பட்ட நிலையிலேயே தொடரும் என்றும் தெரிகிறது, இதற்கு முக்கியக் காரணம் நிதிமூலதனம் ஆகும். லெனின் காலத்தைப் போல அல்லாமல் அது இப்போது சர்வதேசம் தழுவியது, தனது எல்லைதாண்டிய கட்டற்ற சுற்றோட்டத்திற்கு முட்டுக்கட்டையாக அமைந்திடும் என்கிற காரணத்தால் உலகை எந்த வகையிலும் தனித்தனி செல்வாக்கு மண்டலங்களாக பிரிப்பதற்கு அது எதிராக நிற்கிறது. டொனால்ட் டிரம்ப், சீனாவுக்கு எதிராக போர்முரசு கொட்டிவரும் போதிலும், உடனடியாக எந்தப் போரும் நிகழப்போவதாக இல்லை; இருப்பினும் சில கட்டுக்குள் உள்ள முரண்பாடுகள் வெடித்தாலும் கூட  இதனால் நேரடியாக பங்குபெறாத  பிற நாடுகளில் உள்ள பாசிச சக்திகள் செல்வாக்கு இழந்துவிடாது.

அதைப் போலவே, முதலாளித்துவத்தின் பொற்காலத்திற்கு திரும்புவது மட்டுமல்ல, நெருக்கடிக்கு முந்தைய காலகட்டத்திற்கு செல்வது சாத்தியமில்லை என்பது கேள்விக்கிடமற்றதாகிவிட்டது; தாராளவாதிகளிடம் தற்போதைய நெருக்கடி நிலைக்கு நம்பத்தகுந்த தீர்வுகள் ஏதும் இல்லை. பெரும்பாலான தாராளவாதிகள், நெருக்கடி உள்ளது என்று அங்கீகரிப்பதில் கூட பாராமுகமாக உள்ளனர். தேர்தல் கால பரப்புரையில் டிரம்ப் நெருக்கடியைக் குறித்து பேசவேனும் செய்தார் என்பதுடன் அதற்கு ‘வெளியாட்களை’ குற்றம் சொல்லியதுடன், பகைமையைத் தூண்டவும் செய்தார், ஹிலாரி கிளிண்டன் அதுகுறித்து பேசவில்லை என்பதுடன், நெருக்கடி இருப்பதையே அவர் அங்கீகரிக்கவில்லை.

அரசு செலவினங்களின் வழியே கிராக்கியை ஊக்கப்படுத்துவது, அது ராணுவத் தேவைக்கான செலவாக இருந்தாலும் கூட, அது நிதிப்பற்றாக்குறையின் வழியாகவோ அல்லது முதலாளிகளின் மீது வரிபோடுவதன் மூலமாகவோ தான் கைகூடும் ( தனது வருமானத்தின் பெரும்பகுதியை ஏதாவதொரு வகையில் நுகர்வுக்காக செலவிடும் தொழிலாளிகள் மீது வரிபோடுவது , கிராக்கியை அதிகரிக்காது) அரசு செலவினங்களை உயர்த்துவதற்கான மேற்சொன்ன இரண்டு நிதி ஏற்பாடுகளும் நவதாரளமயக் கட்டமைப்பில் விலக்கப்பட்டவை, இந்த நடவடிக்கைகள் உலகமய நிதி வெறுப்புக்கு உள்ளான நடவடிக்கைகளாகும். அத்துடன் பாசிஸ்டுகள் மட்டுமல்லாது தாராளவாதிகளுக்கும் உலகமய நிதிமூலதனத்தின் மேலுள்ள அக்கறை எவ்விதத்திலும் குறைவானதல்ல. உண்மையில் அவர்கள் பாசிஸ்டுகளை விடவும், உலகமய நிதி மூலதனத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் நவ தாராளமயத்திற்கு உறுதியாக இருப்பவர்கள். (இருப்பினும், பாசிஸ்டுகளை விட தாராளவாதிகள் நவீன தாராளமயத்தில் உறுதியாக இருப்பார்கள் என்பது இந்தியச் சூழலில் உண்மையானதல்ல, அதிகாரத்திலிருக்கும் வகுப்புவாத பாசிஸ்டுகள், ‘தாராளவாத’ காங்கிரசைப் போலவே நவ தாராளமயத்திற்கு தங்களை ஒப்புக்கொடுத்தவர்களாக உள்ளனர்)

இப்படிப்பட்ட சூழலில் நாம், நவதாராளமயம் நீடித்திருக்கும்வரை பாசிசம் வற்றாது ஜீவித்திருக்கும் நிலையில் சிக்கிக் கொண்டுள்ளோம். இது தற்கால நிலைமையை பேரிடரானதாக ஆக்குகிறது. பாசிசம், பாசிச அரசை நோக்கி நகருமாயின், அபாயம் இன்னும் வெளிப்படையானதாகிறது. அது ‘தேர்தல் விளையாட்டுகளை’ விளையாடும் போதிலும், வாக்குகளைப் பெற முடியாமல் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டாலும், அது ஒரு மாற்றாக தொடர்ந்திருக்கும், காலச் சுற்றோட்டத்தில் அதிகாரத்திற்கு வரும், அரசியல் மற்றும் சமூக ‘பாசிசமயத்தை’ நோக்கி சீராக முன்னேறும்.

நவதாராள முதலாளித்துவத்திற்குள், பாசிசஇருப்புக்கு அணைபோடவோ ஓரங்கட்டவோ முடியாது. உலகப் பொருளாதாரத்தை நெருக்கடியில் மூழ்கடித்து, முட்டுச் சந்தில் தப்பிக்க இயலாமல் மாட்டிக் கொண்டிருக்கும் நவதாராளமயத்தின் தற்போதைய முதிர்ச்சிக் கட்டம் மனித குலத்திற்கு வழங்கியுள்ள ‘பரிசு’ பாசிசமாகும்.

பாசிசத்தின் இருப்பை தாண்டிச் செல்வதற்கான (transcending ) ஒரே வழி, நவதாராள முதலாளித்துவத்தை வீழ்த்தி முன்னேறுவதுதான். இடதுசாரிகளால் இதனை நிறைவேற்றி சோசலிச மாற்றை நோக்கி முன்னேற முடியும், ஆனால் அது தாராளவாதத்திற்கு உள்ள மக்கள் ஆதரவுத்தளத்தை வென்றெடுப்பதன் மூலமே கைகூடும். இதற்கு தாராளவாத அரசியல் சக்திகளை வென்றெடுக்கவேணுமென்ற புரிதல் தேவைப்படுகிறது. அதே நேரத்தில் இடதுசாரிகள் நவீன தாராளமயத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் மாற்றான, மக்களுக்கு நன்மைகளை ஏற்படுத்துகிற பொருளாதாரத் திட்டத்தை அழுத்தமாக வலியுறுத்த வேண்டும். இந்தப் பொருளாதாரத் திட்டத்தை நடைமுறைப்படுத்த, தற்போதைய உலகமயத்திடமிருந்து துண்டித்துக்கொள்வது மிகத் தேவை. கண்மூடித்தனமான மூலதன ஓட்டத்திற்கு விதிக்கவேண்டிய கட்டுப்பாடுகளைச் எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். இடதுசாரிகள் தங்களது ஆற்றல்மிகு பாத்திரத்தை பொருளாதார மற்றும் அரசியல் தயக்கங்கள் ஏதுமின்றி சாதித்திட வேண்டும்.

தமிழில்: இரா.சிந்தன்

மோடி ஆட்சியின் மூன்றாண்டு: அரசியல் துறையில் எதேச்சாதிகாரம் …

கடந்த 3 ஆண்டுகளில் மோடி அரசு பின் பற்றி வந்த பொருளாதாரக் கொள்கைகள், இந்த தேசத்தின் பெருமுதலாளிகள், கார்ப்பரேட் நிறு வனங்களின் சொத்துக்களை அபரிமிதமாக வளர்க் கும் பாதையில் சென்றிருக்கிறது என்பதற்குப் பல உதாரணங்கள் உண்டு. அதை, பொருளாதாரத்துறை குறித்த கட்டுரை படம் பிடித்துக் காட்டுகிறது. இதனால் வர்க்க சேர்க்கை ரீதியாக ஏற்பட்டுள்ள ஓர் அரசியல் அம்சம் என்னவென்றால், பெரு முதலாளிகள் ஏறத்தாழ முழுமையாக பாஜக பின்னால் சென்றுள்ளனர் என்பதே. பெருமுதலாளி களின் இரண்டு தேசிய கட்சிகளில் காங்கிரஸ் தேய்ந்து வருவதும், பாஜக வளர்ந்து வருவதும் தெரிகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது கட்சி காங்கிரசின் அரசியல் தீர்மானம், பாஜக அரசு நவீன தாராளமயத்தையும் இந்துத் வாவையும் இணைத்து ஏகாதிபத்திய ஆதரவு திசை வழியில் செல்கிறது; இத்துடன் மக்களவை யில் அறுதி பெரும்பான்மை என்ற நிலை, பாஜக அரசை எதேச்சாதிகார பாதையில் செலுத்தும் என்பதை கவனப்படுத்தியது. 3 ஆண்டுகளில் மோடி அரசு பயணித்திருக்கும் அரசியல் பாதை இதை வலுவாக நிரூபித்திருக்கிறது.

நாடாளுமன்றம் உள்ளிட்ட தீர்மானிக்கும் அமைப்புகளை ஓரம் கட்டுதல்
பல முக்கிய முடிவுகள் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் எடுக்கப்படுகின்றன. திட்ட கமிஷனைக் கலைத்தது முதல் இறைச்சிக்காக மாடுகளின் அனைத்து வகைகளையும் சந்தையில் விற்பனை செய்யக் கூடாது என்ற அறிவிக்கை வரை அனைத்தும் பிரதமர் அலுவலகத்தை மையப் படுத்தி எடுக்கப்பட்டுள்ளன. மாட்டிறைச்சி விவகாரத்தை அமைச்சரவையில் விவாதித்த தாகக் கூட தெரியவில்லை. மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்திய பண மதிப்பு நீக்கம் குறித்த பிரத மரின் அறிவிப்பும் இந்த வகைக்குட்பட்டது தான். அமைச்சரவையைக் கூட கலந்து பேசாமல் பிர தமர் அலுவலகம் அவசர சட்டங்கள் இயற்றித் தம் ஒப்புதலுக்கு அனுப்புவதை குடியரசு தலை வர் ஒரு முறை சாடியிருந்தார்.

பிரதமர் அவைக்கு வருவதும், பேசுவதும், விவாதங்களுக்கு பதில் கூறுவதும் அரிதாகவே உள்ளன. நிலம் கையகப்படுத்தும் சட்டம் மாநிலங் களவையின் ஒப்புதலைப் பெறாத சூழலில், அதனை மீறுவதற்காக, மாநிலங்கள் தனித்தனியாக இத் தகைய சட்டங்களைப் பிறப்பித்துக் கொள்ளு மாறு வழிகாட்டப்பட்டது. ஆதார் குறித்த விவாத மும், சட்டம் நிறைவேற்றலும் நடப்பதற்கு முன்பே ஆதார் கட்டாயமாக்கப்பட்டது. ஆதார் சட்டம் மாநிலங்களவையால் நிராகரிக்கப்படும் என்ற சூழலில், அது, பண மசோதாவாக தாக்கல் செய்யப் பட்டு, மாநிலங்களவையின் ஒப்புதல் பெற வேண் டிய அவசியமே இல்லாமல் நிறைவேற்றப்பட்டது. இப்போது வரை இதில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு கள் தொடர்ந்து மீறப்படுகின்றன.

அயல்துறை கொள்கையில் அணி சேரா நிலை யைக் கைவிட்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு சாதகமாக செயல்படுதல்; இந்திய மக்களின் நலனுக்கும், இறையாண்மைக்கும் விரோதமான உடன்படிக்கைகளில் கையெழுத்திடல்; பாலஸ் தீனம் உள்ளிட்ட பிரச்னைகளில் இந்தியாவின் பாரம்பர்ய நிலைபாட்டை மீறுதல்; பாதுகாப்பு துறை துவங்கி சில்லறை வர்த்தகம் வரை 100ரூ அந்நிய முதலீடு ஏற்பு; கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு சாதகமான நிலப் பறிப்பு; பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளையைத் தடுத்துநிறுத்தாமல், மருத்துவர்கள் பிராண்ட் பெயரை மருந்து சீட்டில் எழுதுவது தான் விலை ஏற்றத்துக்குக் காரணம் என்ற தோற்றத்தை உருவாக்குதல் போன்றவற்றில் சில காங்கிரஸ் துவங்கி வைத்ததைத் தீவிரப்படுத்துவதாகவும், வேறு சில பாஜகவின் தத்துவார்த்த நிலைபாடு களுக்கு ஏற்பவும் அமைந்துள்ளன. அரசியலில் பெருமுதலாளிகள், கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கமும், செல்வாக்கும் ஓங்கி வரும் போக்கு முன்னெப்போதையும் விட நிதர்சனமாகத் தெரி கிறது. பெருமுதலாளிகள் அரசை வழி நடத்தும் வரை, ஏகாதிபத்திய ஆதரவு பொருளாதார கொள் கைகளைக் கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் வரை, அணி சேரா அணுகுமுறையும், ஏகாதிபத் திய எதிர்ப்பும் கொண்ட அயல்துறை கொள்கை உருவாவதை உறுதி செய்ய முடியாது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் கூறுவதை இதனோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.

பற்றி எரியும் காஷ்மீர் பிரச்னையைப் பொறுத்த வரை, அரசியல் தீர்வை நோக்கிப் போவதற்கு பதிலாக அனைத்தையும் பாகிஸ்தான் பயங்கர வாதம் என்ற ஒற்றை கருத்தாக்கத்துக்குள் திணிப் பது, அதற்கு பதிலடி ராணுவ நடவடிக்கை தான், அதை விமர்சிப்பவர்கள் பயங்கரவாதத்தை ஆதரிப் பவர்கள் என்ற நிலை எடுப்பது போன்ற அரசின் நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை என்பது மட்டுமல்ல; அது பிரச்னையை மேலும் மேலும் சிக்கலாக்குகிறது. சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் தூதுக்குழு அங்கு சென்று பார்வையிட்டு, சில பரிந்துரைகளை அரசுக்கு அளித்தும், அரசு அவை குறித்து பாராமுகம் காட்டுகிறது. மொத்தத்தில் அங்கு பிரச்னைகள் தீர்க்கப்படுவதில் அக்கறை இல்லை. தேசியத்தையும் ராணுவ நடவடிக்கை களையும் இணைத்து வெறியூட்டி அரசியல் லாபம் ஈட்டுவதே நோக்கம்.
ஜனநாயக உரிமைகள்/மரபுகள் நொறுக்கப்படுதல்
அருணாச்சல பிரதேசம், உத்தராகண்டில் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசாங்கங்களைக் கலைத்ததும் சரி, கோவா, மணிப்பூரில் சிறுபான்மையாக இருந்தும் குதிரை பேரம் நடத்தி ஆட்சியைப் பிடித்ததும் சரி, ஜனநாயக மரபுகளை மீறும் செயலாகும். பாஜக ஆளும் ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களில், உள்ளாட்சி தேர்தலில் வேட் பாளராகப் போட்டியிட கல்வி உள்ளிட்ட தகுதி களை நிர்ணயித்து, பெருவாரியான ஏழைகளை யும், தலித், ஆதிவாசி மக்களை, பெண்களைப் போட்டியிட விடாமல் தடுத்தது ஜனநாயகத்துக்கு விழுந்த பலமான அடி. உ.பி. உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் சட்டரீதியான இறைச்சி கூடங்களையும் பூட்டி சீல் வைத்ததும் சட்ட மீறலே. கிட்டத்தட்ட அனைத்து உயர்மட்ட நிறுவனங்களிலும் தலைவர் பொறுப்புக்கு ஆர்.எஸ்.எஸ். போற்றிகளும், மோடி ஆதரவாளர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தலைமைக்கேற்ற தகுதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. ஆளுநர்கள் பொது வாக மத்திய அரசின் முகவர்கள் என்ற நிலை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. அருணாச்சல பிர தேசம், உத்தராகண்ட் போன்ற மாநிலங்களிலும், அண்மை காலத்தில் தமிழகம், புதுச்சேரியிலும் இதைப் பார்க்க முடிந்தது.
அதே போல் மத்திய புலனாய்வு துறை, வருமான வரித்துறையின் அமலாக்கப்பிரிவு எவ்விதத் தயக்கமும் இன்றி அரசியல் ரீதியாகத் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இப்போக்கின் அம்சங்கள் உணரப் பட்டுள்ளன. எதிர் கருத்து சொல்வோரும், விமர் சனம் செய்வோரும் பல்வேறு வழிகளில் அச்சுறுத் தப்பட்டு, அதன் மூலம் பிற பகுதியினரின் கைகள் முறுக்கப்படுகின்றன. உதாரணமாக, என்டிடிவி யின் நிகழ்ச்சிகள் பல பாஜக அரசின் தவறான நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதாக அமைந்த பின்னணியில், ஒரு நிகழ்ச்சியின் தொகுப்பாளர், பாஜகவின் சாம்பிட் பாத்ராவைக் கேள்வி மேல் கேள்வி கேட்டு அம்பலப் படுத்தினார் என்பதற் காக நிறுவனத்தின் இயக்குநர் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி, முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்தது. ஐசிஐசிஐ வங்கியை ரூ.48 கோடிக்கு ஏமாற்றினார் என்ற ஒரு தனிநபரின் புகாரின் மீது இந்நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட தனியார் வங்கி புகார் கொடுக்கவில்லை என்பதோ, சட்ட விதிகளுக்கு உட்பட்டு, பெரும் கடனை அடைக்கும்போது கணிசமான வட்டி விட்டுக் கொடுக்கப்படும் நடை முறை உள்ளது என்பதோ சிபிஐயின் அராஜக நடவடிக்கையைத் தடுக்கவில்லை. ரூ.72,000 கோடி கடன் பாக்கி வைத்திருக்கும் அதானி பிரதமரின் நண்பராக இருக்க முடிகிறது என்னும் போது, இது அரசியல் பழிவாங்கும் போக்கு என்பது தெள்ளத் தெளிவாக முன்னுக்கு வருகிறது. இதர ஊடகங்கள், சக ஊடக நிறுவனத்துக்கு ஏற்பட் டுள்ள இந்த நெருக்கடியை விமர்சிக்கத் தயங்கும் நிலை உருவாக்கப் படுகிறது.
தேச பக்தி என்பது ஒரு குறிப்பிட்ட வகை தேசியமாக உருமாற்றம் செய்யப்பட்டு, அந்த அளவுகோலை மீறுபவர்கள் தேச பக்தி அற்றவர் கள் என்ற பொதுக்கருத்து உருவாக்கப்படுகிறது. குறிப்பாக மோடியை விமர்சிப்போர் தேச துரோகிகள் என்ற முத்திரை விமர்சனங்களைத் தடுக்கும் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. எந்தப் பிரச்னையை எடுத்தாலும், ராணுவ வீரர் களின் தியாகத்துக்கு முன் இது எம்மாத்திரம் என்ற ஒற்றை கேள்வியில் பதில் அளிக்கப்படுகிறது அல்லது பதில் மறுக்கப்படுகிறது. அதே ராணுவ வீரர்கள் ஒரு ரேங்க் ஒரு ஓய்வூதியம் என்று கேட்டால் கிடைப்பதில்லை. போரில் ஊனமுற்றோருக்கான உதவித் தொகை குறைக்கப் படுகிறது. ராணுவ வீரர்களின் தியாகம் பாஜக வின் அரசியலில் பகடைக்காயாக பயன்படுத்தப் படுகிறது. தேச விடுதலைப் போராட்டத்தில் எதிர்நிலை எடுத்தவர் களால் தேச பக்தி குறித்து உரத்து பேச முடிகிறது என்ற நிலையே அபாயகரமானது.

வரலாறு திரிக்கப்படுகிறது. இல்லாத சரஸ்வதி நதியைத் தேட கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதும், கீழடி போன்ற ஆய்வுகள் இவர் களின் நிகழ்ச்சி நிரலுக்குத் தோதாக இருக்காது என்பதால் அதை சீர்குலைக்க முயல்வதும் நடக் கிறது. அரசியல் சாசனம் வலியுறுத்தும் அறிவி யல் பார்வைக்கு நேர் விரோதமான கருத்துக்கள் முன்மொழியப் படுகின்றன. பிரதமர் துவங்கி, இவர்கள் நியமிக்கும் ‘நிபுணர்கள்’ வரை, அரசாங்க துறைகளின் பொறுப்பு அதிகாரிகள், அமைச்சர் கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டு இதை செய்கின்றனர். அறிவியல், கணிதம், விண்வெளி ஆய்வு போன்ற துறைகளில் இந்தியாவின் அற்புத பங்களிப்பு உண்டு. ஆனால் அதை விட்டுவிட்டு பிளாஸ்டிக் சர்ஜரி, குளோனிங், விமானம் போன்ற நவீன கண்டுபிடிப்புகள் புராதன இந்தியாவில் நடைபெற்றன என்று கற்பனைகளை அறிவியல் உண்மைகள் போல் முன்வைப்பது, சமீபத்தில், உயரமான, சிவப்பான குழந்தை வேண்டும் என்றால், குறிப்பிட்ட நேரத்தில் தாம்பத்ய உறவு வைக்க வேண்டும்; கர்ப்பிணி பெண்கள் இறைச்சி சாப் பிடக் கூடாது; பாலியல் இச்சைக்கு உட்படக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் வரை கேலிக் கூத்துகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இவற்றில் இன ஒதுக்கல், பெண்ணடிமைத்தனம் உள்ளிட்ட கருத்தியல் இருப்பதைக் காண தவறக் கூடாது.
பேயாட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங் கள் என்று கூறுவார்கள். அது போல, அரசு எவ்வழியில் போகிறதோ, அவ்வழியில் ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசியாக நடப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ராஜஸ் தான் உயர்நீதிமன்ற நீதிபதி, பசு ஒரு சிறந்த மருத்துவர் என்று கூறியதாகட்டும், ஆண் மயில் பிரம்மச்சாரி, அதன் கண்ணீரை உண்டு பெண் மயில் கர்ப்பம் தரிக்கிறது என்று கூறியதாகட்டும், பசு பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு என்ற பெயரில் தாக்குதல் நடத்தும் ரவுடி படைகளைக் களத்தில் இறக்க சமிக்ஞை கொடுப்பதாகட்டும், இந்தப் படைகள் செய்யும் குற்றங்களைக் கண்டு கொள்ளாமல் பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்கு போடும் காவல் துறையாகட்டும், அனை வரும் இந்தப் பட்டியலில் வருபவர்கள் தான்.

மாநில உரிமைகள் பறிக்கப்படுதல்
கூட்டாட்சி கோட்பாடு ஆர்.எஸ்.எஸ். அமைப் பினருக்கு எப்போதுமே உடன்பாடில்லாத விஷயம் தான். வலுவான மத்திய அரசு, மத்திய அரசை சார்ந்து செயல்படும் பலவீனமான மாநில அரசு கள் என்பது தான் அவர்களின் கோட்பாடு. மத வெறி நிகழ்ச்சி நிரலோ கார்ப்பரேட் ஆதரவு நிகழ்ச்சி நிரலோ தங்கு தடையில்லாமல் நிறை வேற இது ஒரு முன் நிபந்தனை என்றே அவர்கள் கருதுகின்றனர். குறிப்பாகத் தமிழகத்தில் இதன் பாதிப்புகளைப் பார்க்கிறோம் – உணவு பாது காப்பு சட்டம், நீட், ஜிஎஸ்டி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு, இந்தி மொழி திணிப்பு, நெடு வாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம், மாட்டி றைச்சி குறித்த சட்ட திருத்தம், திட்ட கமிஷன் கலைப்பு, ஊரக வேலை உறுதி சட்டம் உள்ளிட்ட மத்திய திட்டங்களை அமல்படுத்த மாநிலங் களுக்கு அளிக்கப்படும் நிதி வெட்டிச் சுருக்கப் படுதல் போன்ற பல உதாரணங்கள் உள்ளன. தமிழகத்துக்கு, மத்திய அமைச்சகங்கள் நிலுவை வைத்திருக்கும் தொகை ரூ.17,000 கோடியை எட்டும். நிதி சிக்கலை ஏற்படுத்தி, தங்களின் கட்டுப்பாட்டுக்குள் மாநில அரசுகளை வைக்கும் ஏற்பாடே இது.

மார்க்சிஸ்ட் கட்சி செய்த மதிப்பீட்டை உண்மையாக்கும் நிகழ்வுகளே மோடி அரசின் 3 ஆண்டு கால ஆட்சியில் நடந்து கொண்டிருக் கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை லாபத்தை பலப்படுத்தும் பொருளாதார நடவடிக் கைகளும், மதவெறி நிகழ்ச்சி நிரலும்தான் பாஜக ஆட்சியின் அரசியலாக பரிணமித்துள்ளன. உழைக் கும் வர்க்கத்தின் எதிரி, ஆயுதமாக ஏந்தியிருக்கும் இந்த இரண்டு அம்சங்களின் பாதிப்புகளை எதிர்த்த போராட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டும்; பலப்படுத்த வேண்டும் என்பதுதான் சரியான நிலைபாடு. வாழ்வுரிமை பாதிப்புகளை எதிர்த்த போராட்டத்தில் சாதி, மதம் கடந்த ஒற்றுமை யைக் கட்ட முடியும். இதன் மூலம் மதவெறி நிகழ்ச்சி நிரலுக்கான எதிர்ப்பைக் கட்டமைக்க முடியும். பரந்து பட்டதாகவும் ஆக்க முடியும். பாதை தெளிவாகத் தெரிகிறது, அதில் அதிக மான பயணிகள் பயணிக்கும் நிலையை ஏற்படுத்து வதுதான் பாஜக அரசின் எதேச்சாதிகார அரசியல் நிகழ்ச்சி போக்கைக் கட்டுப்படுத்தும் பேராயுதம்.