இந்திய வரலாற்றில் இஸ்லாம்

ரொமிலா தாப்பார்

பேட்டி கண்டோர்: ஜிப்சன் ஜான் – ஜிதேஷ், பி.எம்.

நன்றி: ஃப்ரண்ட்லைன்

கேள்வி: இந்திய வரலாற்றில் இஸ்லாமிய மதத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

இஸ்லாமிய தன்மை  குறிப்பிடத்தக்க ஒன்றா அல்லது பெயரளவிற்கானதா என்பதை எல்லாம் பொருட்படுத்தாமல், இஸ்லாமியத்தோடு  தொடர்புடைய அனைத்தையும் முஸ்லிம் என்பதாக அழைக்கும் பழக்கம் நமக்கு உள்ளது. ஆக்கிரமிப்பதற்காக இந்தியாவுக்குள் வந்தவர்கள் என்று ‘முஸ்லிம்களை’ ஒரே மாதிரியாக கருதிக் கொண்டு  இஸ்லாத்தை ஒரு மதமாக நாம் கருதுகிறோம். இதற்கு முன் என்ன நடந்தது என்பதை விளக்குவதற்கு “முஸ்லீம் படையெடுப்பாளர்கள்” மூலம் பெற்ற விளைவு பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. ஆனால் உண்மையில் இந்தியாவிற்குள் வந்த மற்றவர்களிடமிருந்து வேறுபட்ட சில வழிகளில்தான் இஸ்லாம் இந்தியாவிற்குள் வந்தது. அதைக் கொண்டுவந்தவர்கள் உலகின் வெவ்வேறு பகுதிகள் மற்றும் சமூகங்களிலிருந்து வந்தவர்கள் என்பது மட்டுமின்றி, அவர்கள் பின்பற்றிய மதத்தின் பதிப்புகளும் வேறுபட்டவையாக இருந்தன. எனவே, இந்தியாவில் இஸ்லாத்தின் பல்வேறு வகைகள் நடைமுறையில் இருந்தன. சிலர் தங்களுக்கு கற்பிக்கப்பட்ட இஸ்லாத்துடன் நெருக்கமாக இருந்தனர். ஆனால் பலர் இந்து நம்பிக்கை மற்றும் நடைமுறையின் சில பிரிவுகள் போன்ற உள்ளூர் மதங்களிலிருந்து கடன் வாங்கிக் கொண்டனர்.

இன்று நாம் பயன்படுத்தும் இந்த வார்த்தையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்னவென்றால், காலனி ஆதிக்கத்திற்கு முந்தைய காலத்தில், சமஸ்கிருதத்தில் உள்ள இந்திய ஆதாரங்களும் பிராந்திய மொழிகளும் “முஸ்லிம்களை” குறிப்பிடும்போது இஸ்லாத்துடன் இணைக்கப்பட்ட சொற்களை எப்போதாவதுதான் பயன்படுத்துகின்றன. அவற்றில் குறிப்பிடப்படும் மக்கள் இனத்தின் வரலாற்று தொடர்ச்சியைக் குறிக்கும் சொற்களால் அழைக்கப்படுகிறார்களே அன்றி,  அவர்களின் மதத்தால் அல்ல. இவ்வாறு இந்தியாவிற்குள் வந்த குழுக்கள் எவ்வாறு உணரப்பட்டன என்பது பற்றி இது நிறைய கூறுகிறது. இஸ்லாம் இந்தியாவுக்கு வந்த சில வழிகளாவன:

  • அ. எட்டாவது நூற்றாண்டில் அரேபியர்கள் சிந்து பகுதியின் மீதும், பதினோராவது நூற்றாண்டில் துருக்கியர்களும் ஆப்கானியர்களும் வட மேற்கு பகுதியின் மீதும், வடக்குப் பகுதியின் மீதும் படையெடுத்தனர் எனில், பதினாறாம் நூற்றாண்டில் முகலாயர்கள்  வட இந்தியா முழுவதையும் தங்கள் ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்தனர்.
  • ஆ. இந்தியத் துணைக் கண்டத்தின் பிற பகுதிகளில், இந்தத் தொடர்புகள் வேறு வழியில் வந்தன. அரேபியா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து வந்த அரேபியர்களின் சமூகங்கள் எட்டாம் நூற்றாண்டிலிருந்து (அல்லது அதற்கு முன்னதாகவும் கூட) மேற்கு இந்தியாவுடன் வர்த்தகம் செய்து வந்தன. மேலும் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து மேற்கு இந்தியாவின் கரையோரங்களில் அவர்கள் குடியேறினர். இது உள்ளூர் சமூகங்களுக்கும் குடியேறிய அராபியர்களுக்கும் இடையே உருவான தொடர்புகளில் இருந்து பல்வேறு மதக் குழுக்கள் உருவாகவும் வழிவகுத்தது. போஹ்ராஸ், கோஜாஸ், நவாயத் மற்றும் மாபில்லாஸ் போன்ற பிரிவினர் இவ்வாறு மாற்றம் பெற்றவர்கள் ஆவர்.

இதேபோல், ஆப்கான் மற்றும் துருக்கி நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்து வட இந்தியாவுடன் வர்த்தகம் செய்தபடியே அந்த பகுதிகளில் வந்து குடியேறினர்.

  • இ. பணம் ஒன்றையே இலக்காகக் கொண்ட போர்வீரர்களும் இந்தப் பகுதிகளில் இருந்து இந்திய அரசர்களின் ராணுவங்களில் சேர்ந்து கொண்டனர். இந்த ராணுவங்களில் சிலவற்றுக்கு அரசர்களும் வேறு சிலவற்றுக்கு சுல்தான்களும் தலைமை தாங்கினர். கி.பி. ஆயிரம் ஆண்டு காலத்திய ராணுவங்களில் இதுபோன்ற அபிசீனிய, எத்தியோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றிய குறிப்புகள் உள்ளன.

அதேபோன்று அல்-இந்த் பகுதியிலிருந்தும் படைவீரர்கள் பணத்திற்காக ஆப்கானிய, துருக்கிய ராணுவப் படைகளில் பணிபுரிந்துள்ளனர். கஜினி நகரத்தைச் சேர்ந்த முகமதுவின் மிகுந்த நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்த திலக், அல்-இந்த் பகுதியைச் சேர்ந்த படைவீரர்களைக் கொண்ட மிகப்பெரும் படையணியுடன் அவருக்காகப் போர் செய்திருக்கிறார். அந்நாட்களில் நாடுகளின் எல்லைகள் பெருமளவிற்குத் திறந்தே இருந்தமையால் எல்லைகளைத் தாண்டி பல்வேறு தொழில்களையும் மேற்கொள்ள ஆட்களை வேலைக்கு எடுக்க முடிந்தது.

  • ஈ. இஸ்லாம் மதத்தினைப் பரப்புவதற்கான மிகப்பெரும் பிரச்சாரக் குழுக்கள் என்பது சுஃபிக்கள் என்று அழைக்கப்பட்டவர்களைக் கொண்டதாகவே இருந்தன. இவர்களில் சிலர் பாரசீகத்திலிருந்து வந்தவர்கள் எனில், மிகப் பலர் மத்திய ஆசியப் பகுதியில் இருந்து வந்தவர்கள். இஸ்லாம் மதத்தினை சேர்ந்த இவர்களது மத வடிவங்கள் அரேபியர்களின் இஸ்லாம் மதத்தைப் போன்றதாக இருக்கவில்லை. இவ்வாறு இந்தியாவிற்கு வந்த சுஃபிக்களில் சிலர் ஓரளவிற்குப் பழமைவாதிகளாக இருந்தபோதிலும், மற்றவர்கள் தங்களது மதத்தை உள்ளூர் மதங்களோடு கலக்கச் செய்தனர். அவர்களது இத்தகைய செயல்களை கட்டுப்பெட்டியான முஸ்லீம் மதகுருக்கள் ஒப்புக் கொள்ள மறுத்தனர்.

இவர்களை சுட்டிக் காட்டுகின்ற சமஸ்கிருத நூல் ஆதாரங்களில் இருந்தே இஸ்லாம் மதத்தில் நிலவிய இத்தகைய வேறுபாடுகளை நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. அவர்களது மதத்தின் பெயரால் அவர்களை சுட்டிக் காட்டுவதென்பது மிகவும் அபூர்வமாகவே உள்ளது. பெரும்பாலான நேரங்களில் அவர்களுக்கான சுட்டுப் பெயர் என்பது முந்தைய காலத்திய மேற்கு மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்களை அடையாளப்படுத்திக் கூறப்பட்ட பெயர்களாகவே இருந்தன. இவ்வகையில் மேற்கிலிருந்து வந்தவர்கள் யவனர்கள் என்று அழைக்கப்பட்டனர். இதே பெயர்தான் கிரேக்கர்களைக் குறிப்பிடவும், நவீன காலத்தில் பிரிட்டிஷ் நாட்டவர்களைக் குறிப்பிடவும் பயன்படுத்தப்பட்டது. துருக்கியர்களைக் குறிப்பிட டுருஷ்காக்கள் என்ற பெயரும், ஆஃப்கானியர்களை குறிப்பிட ஷாகாக்கள் என்ற பெயரும் பயன்பட்டன. பண்டைய காலத்தில் குறிப்பிடப்பட்ட ஷாகாக்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள் ஆவர். சமஸ்கிருத குறிப்பேடுகளில் துக்ளக் வம்சத்தினர் ஷாகாக்கள் என்றே குறிப்பிடப்படுகின்றனர். டுருஷ்கா என்பது துருக்கி என்பதற்கான சமஸ்கிருதச் சொல்லாகும். குஷாணர்கள் என்பதைப் போன்று மத்திய ஆசியாவிலிருந்து வந்த மக்களைக் குறிப்பிட முன்னாளில் இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டது. மதத்தினால் ஏற்பட்ட வேறுபாடுகள் பெரும்பாலான நேரங்களில் அடையாளமாக இருக்கவில்லை என்றே தோன்றுகிறது. பூகோள அமைப்பும், இன அடையாளமுமே இந்தச் சுட்டுப் பெயரில் முக்கியமான அம்சங்களாக இருந்தன.

மதரீதியான சகிப்புத் தன்மை

பொதுவாகவே மத ரீதியான சகிப்புத்தன்மை என்பதே இந்திய நாகரீகத்தின் தனித்ததொரு அடையாளம் என்று போற்றப்படுகிறது. டாக்டர். எஸ். ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் இந்தக் கருத்தை பெரிதும் முன்னெடுத்துச் செல்பவர்களாக இருந்தனர். இத்தகைய மதரீதியான சகிப்புத் தன்மை என்பது இந்திய வகைப்பட்ட மதச்சார்பின்மையே என்று விளக்கம் கூறுவது அல்லது அதற்குச் சமமானது என்றும் கூறப்படுகிறது. இந்த ஆய்வுப் பொருட்கள் பற்றி உங்கள் கருத்து என்ன? அந்தக் கருத்துக்கள் எந்த அளவிற்குப் பொருத்தமுடையவை?

மதச்சார்பின்மை மற்றும் மத சகிப்புத்தன்மை ஆகியவை முற்றிலும் வேறுபட்டவை. மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களின் சகவாழ்வு, ஒரு சமூகத்தில் உள்ள அனைத்து மதங்களின் சமத்துவம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, எந்தவொரு மதத்திற்கும் அன்றைய மக்கள் சமூகத்தின் சட்டங்கள் மற்றும் அதன் அரசியல் ஆகியவற்றுக்கு இடையிலான தூரத்தை பராமரித்தல் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. எனவே மதச்சார்பின்மை  என்பதும் மத சகிப்புத்தன்மை என்பதும் ஒன்றாக இருக்க முடியாது. அதுவும் போக, மத சகிப்புத்தன்மை என்பது இந்திய நாகரிகத்தின் ஒரு அடையாளமாகவும் இருந்ததில்லை. பண்டைய காலங்களிலிருந்தே சகிப்பின்மைக்கு போதுமான வரலாற்று சான்றுகள் உள்ளன. ஒவ்வொரு மதத்தின் வரலாற்றிலும் இதேதான் நடக்கிறது. உதாரணமாக, பவுத்த மதம், வேறு எந்த மதத்தையும் விட அகிம்சை குறித்த போதனைகளில் மிகவும் வலுவான முத்திரையைக் கொண்டுள்ளது. எனினும், அது ஆதிக்கம் செலுத்தும் மதமாக இருக்கும் சமூகங்களில், வன்முறையிலிருந்து அது விடுபடவில்லை. ஒரு மதத்தில் கற்பிக்கப்படுவதும், உண்மையில் கடைப்பிடிக்கப்படுவதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டியதில்லை.

எனவே, ஒன்றுக்கு மேற்பட்ட மதங்கள் இருந்தால், சில பரஸ்பர கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த கருத்து வேறுபாடு சில நேரங்களில் இறையியலுடன்  மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மற்ற நேரங்களில் அது வன்முறையாக இருக்கக்கூடிய எதிர்ப்பு வடிவத்தை எடுக்கும்.  இந்திய வரலாற்றின் ஆரம்ப கால நூல்களில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வன்முறையை பாரம்பரியமாக கையாளுவது மற்றும் மதரீதியான வேறுபாடுகளைக் குறிக்கிறது, உதாரணமாக, சைவர்களுக்கும் கடவுள் மறுப்பு மதங்களான பவுத்தர்கள், சமணர்களுக்கு இடையிலான வேறுபாடுகள் சில சமயங்களில் வன்முறையாக வெடித்ததைக் கூறலாம். இத்தகைய வேறுபாடுகள் எழக் கூடும்தான். ஏனெனில் அரசரின் ஆதரவைப் பெறுவதற்கு அவற்றுக்கு இடையே ஒரு போட்டி உள்ளது. அதிலும் குறிப்பாக அரசர்கள் வழங்கும் பகட்டான நன்கொடைகளுக்காக. மேலும் அதிக எண்ணிக்கையில் தம்மைப் பின்தொடர்பவர்களைப் பெறுவதற்கான முயற்சிகளிலிருந்தும் போட்டி வரலாம். இது இந்தியாவுக்கு மட்டுமல்ல; ஒவ்வொரு சிக்கலான சமூகத்திற்கும் இது பொருந்தும்.

சிந்து சமவெளி நாகரிகம் தொடர்பான ஏழு தளங்களில் சுமார் 4,600 ஆண்டுகளுக்கு முற்பட்ட பீங்கான் பாத்திரங்களில் கால்நடை மற்றும் எருமை இறைச்சி உள்ளிட்ட விலங்கு பொருட்களின் எச்சங்கள் இருப்பதை ஒரு புதிய ஆய்வு சமீபத்தில் கண்டறிந்துள்ளது. மொத்தத்தில் மாட்டிறைச்சியை தடைசெய்யும் மசோதாவை கர்நாடக அரசு நிறைவேற்றும் நேரத்தில் இந்த கண்டுபிடிப்பு வெளிப்பட்டுள்ளது. ஒரு வரலாற்றாசிரியராக இந்த  ஆய்வையும் இந்த சட்டத்தையும் நீங்கள் எவ்வாறு  பார்க்கிறீர்கள்?

இந்த ஆய்வு குறித்த விவரங்களை நான் பார்க்கவில்லை. எனவே இது குறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியாது. செய்திகளில் வரும் விஷயங்களின் நம்பகத்தன்மை குறித்து ஒருவர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த செய்தி அகழ்வாராய்ச்சிகளிலிருந்து பெற்றதாக இருக்கக்கூடும். எனினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அத்தகைய ஆதாரத்தை முதலில் தொழில்முறை ரீதியான தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆராய வேண்டும். மேலும் அதைப் பற்றி விவாதிக்கவும் கருத்துத் தெரிவிக்கவும் முன்பாக அவர்களின் கருத்துக்களை கேட்க வேண்டிய தேவை உள்ளது.

இந்திய சமூகம் ஒருபோதும் மாறாத, தேக்கமான ஒரு சமூகமாக இருந்ததில்லை; இப்போதும் அப்படி இல்லை. 4,600 ஆண்டு காலத்தில், நம்பிக்கை மற்றும் சமூக  நடைமுறையில் ஆழமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இன்று நாம் எப்படி இருக்கிறோம், நாம் எதை செயல்படுத்துகிறோம் என்பதெல்லாம் இந்த மாற்றங்களிலிருந்து உருவானதே ஆகும். ஆகவே, நமது நல்வாழ்வை உறுதி செய்யும் என்று நாம் நம்புகின்ற விதிகளுக்கு இணங்க விரும்பினால், ஐந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய, தொலைதூர கடந்த காலத்திலிருந்தோ அல்லது சமீபத்திய கடந்த காலத்திலிருந்தோ  சட்டபூர்வமான தன்மையை நாம் தேடிக் கொண்டிருக்க மாட்டோம். இப்போது நாம் என்ன செய்கிறோம் என்பதற்கான அனுமதியைப் பெற ஐந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பார்க்க வேண்டுமா என்பதுதான் கேள்வி. இது நிச்சயமாக தேவைப்படவில்லை. சமூகம் முன்னேறுவதற்கு மாற்றம் என்பது அடிப்படை. ஒவ்வொரு சமூகமும் அதன் விதிகளை தேவைப்படும்போதெல்லாம் மாற்றிக் கொள்கிறது. சமூக மாற்றம்  என்ற ஒன்று இருந்தால், அதற்கேற்ப சமூக விதிகளும் மாறியே ஆக வேண்டும்.

குறிப்பாக சமூகத்தின் சமூக ரீதியான வரிசைப்படுத்தலில் பதிவு செய்யப்பட்டுள்ள மாற்றங்களில் காணப்படுகிறது. எனவே, பெண்கள், தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் ஓபிசிக்கள் [பிற பிற்படுத்தப்பட்டோர்] ஆகிய பிரிவினருக்கு சமூகத்தில் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கை இன்று எழுகிறது. அவர்கள் முழு உரிமைகளைக் கொண்ட, சுதந்திரமான  குடிமக்கள். இந்நிலையில் மனு தர்ம சாஸ்திரத்தால் அவர்களுக்கு விதிக்கப்பட்டபடி கீழ்ப்படிதல் மற்றும் ஒடுக்குமுறை என்பது  தொடர்ந்து நீடிக்க முடியாது.

இதைப் போலவே, உணவுப் பழக்கவழக்கங்களைப் பற்றிய விதிகளும் கூட அவற்றுக்குக் கீழ்ப்படியுமாறு கோரப்படும் நபர்களுடன் விவாதிக்கப்பட வேண்டும்.  கடந்த காலங்களில் இவை இருந்திருக்கலாம் என்று வெறுமனே கூறி அவர்கள் மீது இதைச் சுமத்த முடியாது. கடந்த கால ஆதாரங்கள்படி மக்கள் கால்நடை-இறைச்சி சாப்பிட்டதற்கான சான்றுகள் உள்ளன. நடப்புக் காலத்தில் இது தடை செய்யப்பட வேண்டுமானால், அதற்கான வாதம் என்பது கடந்த காலத்தில் சாப்பிடவில்லை என்பதைத் தவிர வேறு ஒன்றாகவும் இருக்க வேண்டும். ஆட்சி செய்யவும் பொதுமக்களின் கருத்தின்படியும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பல்வேறு கூட்டங்களிலும் இத்தகைய தடைகள் குறித்த பொருளாதாரம் மற்றும் அரசியல் ஆகியவை முழுமையாக விவாதிக்கப்பட வேண்டும்.

அது நிரூபிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் சரி, அல்லது கருதப்படுகின்ற ஒன்றாக இருந்தாலும் சரி, தொலைதூர கடந்த காலத்திலிருந்து வருவதாக நம்பப்படும் ஒரு பாரம்பரியம் என்பது நிகழ்காலத்தில் புதிய ஒரு விதியை விதிக்க யாருக்கும் தானாகவே உரிமை வழங்கி விடாது. பாரம்பரியம் என்பது தொடர்ந்து கண்டுபிடிக்கப்படும் ஒன்று எனவும், அவை கடந்த காலத்திலிருந்து வந்தவை போல முன்வைக்கப்படுகின்றன என வரலாற்றாசிரியர்கள் வாதிட்டு வந்துள்ளனர். ஆனால் கண்டுபிடிப்பு என்பது தற்காலத்தின் தேவைகளிலிருந்து பெறப்பட்டது; மேலும் அதை நியாயப்படுத்தவும் பயன்படுகிறது.

இங்கே அடிப்படை கேள்வி என்னவென்றால், தற்போது விதிக்கப்பட்டுள்ள விதியானது ஒரு சமகால அரசியல் கொள்கையின் தேவைகளிலிருந்து எழுகிறதா? அல்லது அதை  பாரம்பரியம் என்று நம்பும் மக்கள் சிலர் கடைப்பிடிக்கும் உணர்வுகளின் பிரதிபலிப்பா? அனைத்து குடிமக்களின் நலனையும் உறுதி செய்யும் சூழலில் தற்போதைய கருத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதே அரசாங்கம். அதேபோல், இவ்வாறு விதிக்கப்படுபவர்களுக்கு அந்த விதிகளைப் பற்றி விவாதிக்க, உரிமை உண்டு. அதை நிராகரிப்பது என்று அவர்கள் முடிவு செய்தால் அவ்வாறே அது நிராகரிக்கப்பட வேண்டும். ஒரு ஜனநாயகம் செயல்படுவதற்கு இத்தகைய செயல்முறை மிகவும் அத்தியாவசியமானதும் கூட.

ஆரியர்களின் தோற்றம் என்பது இந்திய வரலாற்றில் விவாதத்திற்குரிய மிக முக்கியமானதொரு கேள்வி. உங்களைப் போன்ற வரலாற்றாசிரியர்கள் மத்திய ஆசிய பிராந்தியத்திலிருந்து ஆரியர்கள் இந்தியாவுக்கு குடிபெயர்ந்ததை சுட்டிக்காட்டுகின்றனர். இது ஆரியர்கள் இந்தியாவிலேயே பூர்வீகமாகத் தோன்றினார்கள் என்ற கோட்பாட்டை நிராகரிக்கிறது. சமீபத்திய டி.என்.ஏ ஆய்வுகள்  இடப்பெயர்வு குறித்த உங்களது கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்துகின்றன. இத்தகையதொரு சூழலில், உங்கள் கருத்துப்படி, ஆரம்பகால இந்தியர்கள் என்று யாரைக் குறிப்பிட முடியும்?

கடந்த 5000 ஆண்டு காலமாக உள்ள, மொழியியல், தொல்பொருள் மற்றும் மரபணு போன்ற எங்களிடம் உள்ள சான்றுகளின் அடிப்படையில் ஆராயும்போது, ​​ஆரம்பகால இந்தியர்கள் என்பவர்கள்  கலவையான, ஒரு சில மரபணு குழுக்களை அதிகம் கொண்டு உருவான ஒரு மக்கள்தொகையினர் என்பது தெளிவாகிறது. தொடக்க கால கலாச்சாரங்கள் பலவற்றுக்கும் இந்த அம்சம் பொதுவானதாகும். கலாச்சாரங்களின் முன்னேற்றத்திற்கு மக்கள், வெவ்வேறு மக்களுடன் தொடர்புடைய தொழில்நுட்பங்கள், தொழில்கள், மொழிகள், வாழ்க்கை முறைகள், நம்பிக்கை அமைப்புகள் போன்ற பல காரணிகளின் பரஸ்பர தொடர்பு தேவைப்படுகிறது. தனித்துவமானதொரு மக்கள் கூட்டத்தோடு தொடர்புடைய அதிநவீன கலாச்சாரங்கள் மற்றும் நாகரிகங்கள் மூலமே  தனித்துவமானதொரு கலாச்சாரமும் நாகரீகமும் தோன்றியது என்று வற்புறுத்த முயல்வதை ஒரு கனவு என்றே சித்தரிக்க முடியும்!

தமிழில்: வீ.பா.கணேசன்

உலக, இந்திய இடதுசாரி இயக்கங்கள் அய்ஜாஸ் அகமது-உடன் ஓர் உரையாடல்

ஜிப்ஸன் ஜான், ஜிதேஷ் பி.எம்.

நன்றி: பிரண்ட்லைன் ஆங்கில ஏடு

தமிழில்: வீ. பா. கணேசன்

இடதுசாரி இயக்கம் உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஓரளவிற்கு வலுப்பெற்று வருகிறது. எனினும், இந்தியாவில் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரி இயக்கம் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. இன்றைய இந்தியப் பின்னணியில் இடதுசாரி அரசியல் எந்த அளவிற்குப் பொருத்தம் உள்ளதாக இருக்கும் என்று கருதுகிறீர்கள்?

 “உலகின் பல்வேறு பகுதிகளிலும்” என்ற வாக்கியத்தைப் பொறுத்தவரையில், அது நீங்கள்  ‘இடதுசாரி’ என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள், உலகின் எந்தப் பகுதியை சுட்டிக்காட்டுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது ஆகும். லத்தீன் அமெரிக்க இடதுசாரி இயக்கம் – அதாவது  ‘இளஞ்சிவப்பு அலை’ என்று அழைக்கப்படுவது – பெருமளவிற்குக் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. தென் அமெரிக்காவின் மிகப்பெரிய நாடான ப்ரேசில் –  லூலாவின் ப்ரேசில் – இப்போது அதிதீவிர வலதுசாரி ஆட்சியின் கீழ், மோடியின் இந்தியாவை விட மிகக் கொடூரமானதாக உள்ளது. அதேபோலத்தான் ஈக்வடாரும். அர்ஜெண்டினா இப்போது கொடூரத்தில் அதைவிட ஓரளவு குறைந்ததாக இருந்தபோதிலும் அதற்கு முந்தைய இரண்டு ஆட்சிகளின்போது தொழிலாளிவர்க்கம் பெற்றிருந்த பயன்கள் அனைத்தையும் பறிப்பதில் தீவிரம் காட்டும் ஆட்சியைக் கொண்டதாகவே உள்ளது. வெனிசுவேலாவில் சாவேஸின் அரசும் இயக்கமும் தன் இருப்பை நிலைநிறுத்திக் கொண்ட போதிலும் அமெரிக்கா அதன் மீது திணிக்கும் பொருளாதார தடை, உள்நாட்டுப் பொருளாதாரத்தின் மீதான நெறிப்பு ஆகியவற்றால் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகிறது. மறுபுறத்திலோ, ஐரோப்பிய – அமெரிக்கப் பகுதிகளில் உள்ள முக்கியமான சில நாடுகள் இடதுசாரிகளிலிருந்து தொடங்கி தீவிர வலதுசாரி அரசுகளின் சவால்களை – அமெரிக்காவைப் பொறுத்தவரையில் அதிதீவிர வலதுசாரி அரசின் சவாலை – எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளன. இதையும் கூட அதற்குரிய கண்ணோட்டத்தின்படியே காண வேண்டியுள்ளது.

அதன் எந்தவொரு பொருளிலும் அமெரிக்காவிலுள்ள பெர்னி சாண்டர்ஸ்-ஐ ஒரு சோஷலிஸ்ட் என்று கூறிவிட முடியாது. அவர் தொழிலாளி வர்க்கத்திற்கு கொஞ்சம் கூடவே குறைந்தபட்ச ஊதியம், கனடா, மேற்கு ஐரோப்பாவைப் போன்ற பொது சுகாதார அமைப்பு போன்ற சீர்திருத்தங்களுக்காகப் போராடுகின்ற, மிக மெல்லிய, சமூக ஜனநாயகத்தை எட்டிப் பிடிக்கும் வகையிலான, நாகரீகமான, புதிய வகைப்பட்ட ஜனநாயகவாதிதான். பிரிட்டனில் (ஜெர்மி) கோர்பின் எப்போதும் இருப்பதைப் போலவே, தொழிலாளர் கட்சியின் இடதுசாரிப் பிரிவின் ஒரு பிரதிநிதியாகத்தான் இருக்கிறார். 1950களிலும் 1960களிலும் கூட இதே போன்ற நிலைமைதான் இருந்தது. பிரான்சில் எப்போதுமே மைய நிலைபாட்டை மேற்கொள்ளும், இப்போது தரமிழந்துபோன சோஷலிஸ்ட் கட்சியின் முன்னாள் உறுப்பினரான ழீன் லக் மெலஞ்சன், 30 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலான காலத்தில் ப்ரெஞ்சு அதிபர் தேர்தல் அரசியலில் காணாத வகையில், மிகத் தீவிரமான இடதுசாரி திட்டத்துடன் தேர்தலில் குறிப்பிடத்தக்க வாக்குகளை கைப்பற்றியிருக்கிறார். இவர்களை எல்லாம் யார் தடுத்தார்கள்? சாண்டர்ஸைப் பொறுத்தவரையில் ஜனநாயக கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள், கோர்பினைப் பொறுத்தவரையில் தொழிலாளர் கட்சியின் ப்ளேர் ஆதரவுப் பிரிவு, அதைப் போன்றே பிரான்சில் இப்போது சுருங்கிப் போய்விட்ட சோஷலிஸ்ட் கட்சி மெலஞ்சனுடன் சேர்ந்து நிற்க மறுத்தது ஆகியவைதான். சுருக்கமாகச் சொல்வதானால், ஓரளவிற்கு சோஷலிச உணர்வு கொண்ட இடதுசாரிகளுக்கு நிலைத்த நிலையில் உள்ள தாராளவாதிகள் செய்த துரோகம்தான் இது. மிகப் பழைய கதையும் கூட.

அபாயகரமான தருணம்

இந்தியாவில் இடதுசாரிகள் எப்போதுமே பாதகமான சூழலைத்தான் பெருமளவிற்கு எதிர்கொண்டு வந்திருக்கின்றனர். இந்திய அரசியலில் தேர்தல் ரீதியாக, ஆர் எஸ் எஸ் ஸின் எழுச்சி தொடங்கியதில் இருந்தே – உண்மையில் இது அவசர காலத்திலிருந்தே தொடங்கியது என்றே கூற வேண்டும் –தெலுங்கானாவில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக ராணுவப் படைகளை யார் அனுப்பினார்கள் என்பதையும், கேரளாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது கம்யூனிஸ்ட் அரசை கலைத்தது யார் என்பதையும் நிகழ்காலத் தேவைகளின் அழுத்தத்தினால் இடதுசாரி கட்சிகள் பலவும் மறந்துவிடத் தீர்மானித்தன. தேர்தல் நேர அரசியலில் யாராவது ஒரு எதிரியுடன் அல்லது மற்றொருவருடன் சேர்ந்து கொள்ள வேண்டிய காலமும் இருந்தது. எனினும் அந்த எதிரிகளின் அடிப்படை குணாம்சத்தை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

ஜெயப்ரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோஹியா, அவரது வாரிசுகள் போன்ற சோஷலிஸ்டுகள் காங்கிரஸ் கட்சி மீதான வெறுப்பை விட அதிகமான வெறுப்பை கம்யூனிஸ்டுகளின் மீதே கொண்டிருந்தனர் என்பதை விரிவாகச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அவசரநிலை காலத்தில் சிக்கலானதொரு சூழ்நிலை எழுந்தபோது அவசரநிலைக்கு எதிரான கூட்டணியில் கைகோர்க்க மார்க்சிஸ்ட் கட்சியை விட ஆர் எஸ் எஸ்ஸிற்கே ஜெயப்ரகாஷ் நாராயண் முன்னுரிமை அளித்து, அதன் மூலம் அவசரநிலையை விலக்கிக் கொண்ட பிறகு உடனடியாக நடந்த தேர்தலில் உருப்பெற்ற ஜனதா கட்சியின் அரசில் வலதுசாரிப் போக்கு வலுப்பெறுவதை உறுதிப்படுத்தினார்.

அதையடுத்து வந்த பல பத்தாண்டுகளில் இந்திய அரசியலுக்கு பெரும் ஊறு விளைவிப்பதாகவே அத்தருணம் திகழ்ந்தது. அப்போதுதான் சோஷலிஸ்டுகள், மொரார்ஜி தேசாய், அவரது கும்பல் போன்ற காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்றவர்களின் உதவியுடன் ஆர் எஸ் எஸ் இந்திய அரசியலில் தனக்கேயுரிய இடத்தைப் பெற முடிந்தது. 1977 காலப்பகுதியில் மேற்கு வங்கத்தில் இடது முன்னணி ஆட்சிக்கு வந்தபோதிலும் கிட்டத்தட்ட இதே காலப்பகுதியில்தான் இடதுசாரிகளின் அரசியல் ரீதியான தனிமைப்படுத்தல் வளர்ந்தது என்ற உண்மையை மறைக்கவே அது பயன்பட்டது.

இப்போது இடதுசாரிகளின் பங்கு குறித்த உங்கள் கேள்விக்கு மீண்டும் வருகிறேன். இந்துத்துவ வகுப்புவாதம், பெரும்பான்மை வாதம் ஆகியவை குறித்து நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்தக் கேள்விக்கும் அதை ஒட்டியே பதிலளிக்கிறேன். எனது கருத்துப்படி இந்தியாவில் மதசார்பற்ற ஒரு சமூகம், அரசியல் களம் ஆகியவற்றின் மீது தீர்க்கமான, மாற்றமேதுமில்லாத உறுதிப்பாட்டைக் கொண்ட ஒரே சக்தியாக கம்யூனிச இடதுசாரிகள் மட்டுமே உள்ளனர். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலக் கட்சிகளுமே ஏதோவொரு நேரத்தில் ஆர் எஸ் எஸ்ஸின் அரசியல் முகமூடியான பிஜேபியுடன் இணைந்து செயல்பட்டவைதான்.

சற்று முன்பு நான் சொன்னதுபோல இந்திரா காந்திக்கு எதிரான, அவசர நிலைக்கு எதிரான இயக்கங்களில் ஜேபி இயக்கமும் ஆர் எஸ் எஸ்ஸும் மிக நெருக்கமாக செயல்பட்டு வந்தவை. இந்த இயக்கங்கள்தான் ஜனதா அரசு உருவாவதற்கு வழிவகுத்தன. இந்த ஜனதா அரசில் ஜனசங்கம்தான் மிகப்பெரிய, மிக வலிமையான சக்தியாக விளங்கியது. சுதந்திரத்திற்கு முன்பும் கூட மகாத்மா காந்தியின் காங்கிரஸிற்கு உள்ளேயும் கூட வலுவானதொரு வகுப்புவாதப் பிரிவு எப்போதும் இருந்தே வந்தது. இந்திய சமூகத்திலும், அரசியலிலும் இந்து வகுப்புவாதம் என்பது எப்போதுமே மிகப்பெரியதொரு நீரோட்டமாகவே இருந்து வந்துள்ளது.

இந்திய விடுதலைக்குப் பிறகு சில பத்தாண்டுகள் வரையில் மதசார்பற்ற நீரோட்டம் தொடர்ந்து மேலாதிக்கம் செலுத்தி வந்தது. நாட்டின் பல பகுதிகளிலும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வலிமை, பெருமை ஆகியவையும் இதற்கு ஓரளவிற்குக் காரணமாக இருந்தது. அதைப் போன்றே ஆளும் காங்கிரஸ் கட்சியும் கூட இந்த மதசார்பற்ற நீரோட்டத்தோடு தன்னை அடையாளப்படுத்திக்  கொண்டதும் இதற்கு ஓரளவிற்கு காரணமாக இருந்தது. இந்தப் போக்கிற்கும் கூட, குறிப்பாக 1950-ல் (வல்லபாய்) படேல் மறைவிற்குப் பிறகு (ஜவகர்லால்) நேரு, அவரது கூட்டாளிகள் ஆகியோருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவசர நிலைக்குப் பிறகு இந்திராவின் காலத்திலேயே காங்கிரஸின் இத்தகைய தன்மை மறையத் தொடங்கியது.

பாப்ரி மசூதியை இடித்துத் தள்ளிய சங் பரிவாரங்களை முறையான வகையில் நேருக்கு நேராக சந்திக்க (பி.வி.)நரசிம்ம ராவ் மறுத்துவிட்ட நேரத்தில் இடதுசாரி கட்சிகளைத் தவிர மற்ற அரசியல் கட்சிகளின் மேல்மட்டத் தலைவர்களிடையே இந்தக் கொடூரச் செயலுக்கு எதிராக எதையும் செய்யாமலிருப்பது என்ற உணர்வின் விரிவானதொரு கட்டமைப்பு உருவாகியிருந்தது. குஜராத் படுகொலைகள் பற்றி விதிமுறைகளின்படியாகவாவது விவாதம் செய்வதற்கு இந்த மேல்மட்டத் தலைவர்கள் நாடாளுமன்றத்தினை அனுமதிக்கவில்லை என்பதையும் கூட நீங்கள் இங்கே நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

நாடு முழுவதிலும் முன் எப்போதும் இருந்ததை விட அதிகமான அளவில் இந்துத்துவக் கருத்தோட்டங்கள், திட்டங்கள் ஆகியவை இப்போது நடுத்தர வர்க்க இந்துக்களுக்கு ஏற்புடையதாக இருக்கின்றன என்றே நான் நினைக்கிறேன். மிக நீண்ட காலமாக கம்யூனிஸ்ட் பாரம்பரியத்தைக் கொண்டவையாக இருந்தபோதிலும் கூட, கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களும் கூட இந்தப் போக்கிலிருந்து விடுபட்டிருக்கவில்லை. எனவே அவர்களால் என்ன செய்யமுடியுமோ அதை இடதுசாரிகள் செய்ய வேண்டும். எனினும் அவர்களுக்கு முன்னால் உள்ள வாய்ப்புகள் மிகவும் குறைவே. கேரளாவில் ஆர் எஸ் எஸ்ஸிடமிருந்தும், மேற்கு வங்கத்தில் திர்ணாமூல் கட்சியிடமிருந்தும் ஆண்டு முழுவதும் இடதுசாரிகள் வன்முறையை எதிர்கொள்ள வேண்டியிருப்பதையும் நீங்கள் பார்க்கலாம்.

ஆர் எஸ் எஸ் மட்டுமின்றி தாராளவாதிகளின் நடவடிக்கைகளாலும் கூட இந்திய அரசியல் எவ்வளவு தூரம் தரமிழந்திருக்கிறது என்பதைக் காணும்போது இடதுசாரிகள் தங்களது இயக்கத்தை உயிர்ப்போடு வைத்திருப்பதற்காகவே முதலில் போராட வேண்டியிருக்கிறது. அதன் பிறகே தங்களால் முடிந்த அளவிற்கு பகுத்தறிவுபூர்வமான, மதசார்பற்ற திசைவழியை நோக்கிச் செல்ல இந்திய அரசியலுக்கு அவர்கள் வழிகாட்ட முடியும்.

நவதாராளவாத முதலாளித்துவத்திற்கு எதிராக உலகின் பல பகுதிகளிலும் கிளர்ச்சிகள் அதிகரித்து வருகின்றன. ஓர் உலகளாவிய புரட்சிகர எழுச்சி உருவாகி வந்துகொண்டிருக்கிறது என்று நீங்கள் கருதுகிறீர்களா? சோஷலிசத்திற்கான ஒரு புரட்சிகர எழுச்சிக்கான வாய்ப்புகள், வசதிகள், சவால்கள் எவை?

முதலாளித்துவம் என்பதே பெருமளவில் கொடுமைகளை கட்டவிழ்த்து விடுகின்ற காட்டுமிராண்டித்தனமான ஒரு வடிவம்தான். குறிப்பாக அதன் உச்சகட்ட நிலைதான் நவதாராளவாதம். இந்தக் கொடுமைகள் தொடர்ந்து நீடிக்கும் வரையில் இத்தகைய எழுச்சிகளும் தொடர்ந்து எழுந்து கொண்டேதான் இருக்கும். இந்த எழுச்சிகளில் பலவும் இடதுசாரிகளிடமிருந்தே உருவாகிறது. எனினும் உலகளாவியதொரு புரட்சிகர எழுச்சிக்கான எந்தவொரு சூழலும் இப்போது இருப்பதாக நான் கருதவில்லை.

சீனாவில் 1970களின் பிற்பகுதியில் டெங்(சியோ பிங்)கின் புகழ்பெற்ற சீர்திருத்தங்கள் தொடங்கிய காலத்திலிருந்தே உலகளாவிய ஓர் அம்சம் என்ற வகையில் சோஷலிசம் என்ற கருத்தாக்கமானது பின்வாங்கி வரும் நிலையில்தான் இருந்து வருகிறது. 1930களில் தன் காலத்தைப் பற்றிய கிராம்ஷியின் புகழ்பெற்ற சித்தரிப்பான பாசிஸத்தின் எழுச்சியை பலரும் இப்போது மிகச்சரியாகவே எடுத்துக் காட்டுகின்றனர்.

அவரது சித்தரிப்பு இவ்வாறாகத்தான் இருந்தது: பழைய உலகம் இறந்து கொண்டிருக்கிறது. ஆனால் புதிய உலகம் இன்னும் பிறக்கவேயில்லை. இத்தகையதொரு சூழலில்தான் மரணங்கள், கொடிய நோய்கள் ஆகியவற்றுக்கான பல அறிகுறிகள் உலகத்தில் தென்படுகின்றன. இனரீதியான, மத அடிப்படையிலான வெறுப்புணர்வு, வன்முறையின் எழுச்சி என்பதும் இத்தகைய அறிகுறிகளில் ஒன்றாகும்.

வெற்றி பெற்றவர்களைப் போலவே அவர்களால் பாதிக்கப்பட்டவர்களிடமும் கூட இந்த அறிகுறிகள் எழுகின்றன. தீவிரவாத வெறித்தனத்தின் மிகக் கொடூரமான வடிவமான இஸ்லாமிய அரசு என்று அழைக்கப்படும் அமைப்பிற்கான ஆதரவாளர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? ஈராக்கின் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்டவர்களிலிருந்தே அவர்கள் வருகிறார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. எனவே இடதுசாரிகள் தங்களின் இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதில்தான் தற்போது ஈடுபட்டு வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இதுதான் இந்தியாவிலும், ஏன் உலகம் முழுவதிலும் நடந்து வருகிறது.

மார்க்ஸ் இன்று

2018-ம் ஆண்டு கார்ல் மார்க்சின் 200வது பிறந்த ஆண்டு. கார்ல் மார்க்சின் எப்போதும் பொருத்தமான, மிக முக்கியமான பங்களிப்பு என்பது எது? நாம் ஏன் மார்க்சை கொண்டாட வேண்டும்?

இந்தக் கேள்வி மிக முக்கியமானதுதான். என்றாலும் மிக விரிவானதும் கூட. எனவே நான் சற்று திகைத்துப் போய்த்தான் இருக்கிறேன். நல்லது. 50 ஆண்டுகளுக்கு முன்னால் ழீன் பால் சாத்ரே கூறிய ஒன்றை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். இயங்கியலின் காரணம் குறித்த விமர்சனம் என்ற தனது நூலுக்கு அவர் எழுதிய, ஒரு தனி நூல் அளவிற்கு நீளமான, அறிமுகவுரையில் மார்க்சியத்தை இவ்வாறு விளக்கியிருந்தார். முதலாளித்துவ உற்பத்தி முறையினால் பதிலளிக்கவியலாத அறிவியலே மார்க்சியம். முதலாளித்துவம் நீடிக்கும் வரையில் அனைத்து சிந்தனைகளுக்குமான உயர்மட்ட வரம்பாக அதுவே நீடிக்கும். இந்த விஷயத்தின் மையக் கருத்து இதுவென்றே நான் கருதுகிறேன்.

அதே நேரத்தில் மார்க்சியம் அதன் அடிப்படையான தன்மையில் முழுமைபெறாத, முழுமைப்படுத்தவியலாத ஓர் அறிவு. ஏனெனில் மாறிக் கொண்டேயிருக்கும் இன்றைய உலகம் பற்றிய ஒரு விஞ்ஞானம் என்ற மார்க்சியமும் கூட என்றும் ஒரே மாதிரியாக நிலைத்த ஒன்றாக இல்லாது உயிர்த்துடிப்புடன் விளங்கும் ஓர் அறிவாகும். அது எப்போதும் தன்னை மேம்படுத்திக் கொண்டேயிருக்கிறது; புதுப்பித்துக் கொள்கிறது. ஏனெனில் மாற்றமெனும் சூறாவளியில் எப்போதும் சிக்கித் தவிக்கும் பொருளாயத உலகமே அந்த அறிவின் மையக் கருத்தாக விளங்குகிறது  என்றும் சாத்ரே குறிப்பிட்டார்.

இதையே வேறு வார்த்தைகளில் கூறுவதானால் மார்க்ஸ் நம்மிடையே இரண்டு வகையான வடிவங்களில் வாழ்ந்து வருகிறார். தனது பாரம்பரியமாக அவர் நமக்கு விட்டுச் சென்ற மிகப் பிரம்மாண்டமான எழுத்துக்களில்; அந்தப் பாரம்பரியத்தை மேலும் செழுமைப்படுத்திக் கொண்டே வருகின்ற, பல தலைமுறைகளைச் சேர்ந்த மார்க்சிஸ்டுகளின் அறிவார்ந்த அரசியல் பங்களிப்பில்.

இவற்றோடு நான் இன்னும் கொஞ்சம் சேர்த்துக் கூற விரும்புகிறேன்.  மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூல் நம்மை மூச்சுத் திணறவைக்கும் தன்மை கொண்டது. பொதுவாகவே, பொருளாதார ஆய்விற்கான குறிக்கோள்களையும் வழிமுறைகளையும் அறிந்து கொள்ள மார்க்சையும், புரட்சிகர அரசியலுக்கான தொலைநோக்கு உத்தி, இடைக்கால உத்தி ஆகியவற்றுக்கு லெனினையும் தேடிச் செல்லும் போக்கு இங்கே உருவாகியிருக்கிறது. லெனினின் முக்கியத்துவத்தை நான் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை. என்றாலும், அரசியல் என்ற கருத்தாக்கத்தின் மையமான ஒரு நபராக, நடைமுறைப் புரட்சியாளராக, தொழிலாளி வர்க்க அரசியலை நிறுவிய தத்துவஞானியாக மார்க்ஸ் திகழ்கிறார் என்பதை நான் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன். இடதுசாரி சிந்தனைப் போக்கின் வரலாற்றில் அறிவார்ந்த செயல்வீரர்கள் என்ற மகத்தான பாரம்பரியம் என்பதே மார்க்சின் வாழ்க்கை, செயல்பாடு ஆகியவற்றை நேரடியான முன்மாதிரியாகக் கொண்டு உருவானதுதான்.

அடுத்த இதழில்: சாதி  குறித்து  

இந்துத்துவா அரசியலை பாஜக கைவிடுமா? அய்ஜாஸ் அகமது-உடன் ஓர் உரையாடல்

ஜிப்ஸன் ஜான், ஜிதேஷ் பி.எம்.

தமிழில்: வீ. பா. கணேசன்

மோடியின் காலத்தில் இந்துத்துவ வலதுசாரிகளின் தாக்குதல்கள் புதிய உச்சங்களைத் தொட்டுள்ளன. கூட்டமாகச் சேர்ந்து அடித்துக்கொலை செய்வது; வெட்ட வெளிச்சமாகவே படுகொலை செய்வது; கொலை செய்வதற்கான சதித்திட்டங்களை தீட்டுவது; மாற்றுக்கருத்துக்களை சொல்ல முயற்சிப்பவர்களை பயமுறுத்திப் பேசவிடாமல் தடுப்பது என வலதுசாரிக் குழுக்களின் செயல்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் அன்றாட நிகழ்வுகளாக இருந்தன. இவை இப்போது மேலும் தீவிரமாகத் தொடர்கின்றன. இவற்றை நீங்கள் எப்படிப்பார்க்கிறீர்கள்?

இத்தகைய நிகழ்ச்சிகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன என்று நீங்கள் சொல்வது சரிதான். என்றாலும் இத்தகைய விஷயங்களை அதற்குரிய கண்ணோட்டத்தில்தான் அணுக வேண்டும். வகுப்புவாதப் படுகொலைகள், பாகிஸ்தானில் இருந்து இந்துக்களும் சீக்கியர்களும் இந்தியாவிற்கும், இந்தியாவில் இருந்து முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கும் என மனித குல வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவில் மத அடிப்படையில் நிகழ்ந்த மக்களின் இடப்பெயர்வு ஆகியவற்றுக்கு இடையேதான் நமது குடியரசு பிறந்தது. இன்னும் சொல்லப்போனால் நமது நாட்டின் விடுதலைக்கும், நமது நாடு இரண்டாகப் பிரிக்கப்படுவதற்கும் முன்பிருந்தே இந்த வகுப்புவாத வன்முறை இருந்து வருகிறது. தங்கள் சமூக வாழ்க்கையில் மற்றவர்களை சிறந்த வகையில் அனுசரித்துப் போகிற, தங்கள் அரசியல் நடத்தையில் மதசார்பற்ற கண்ணோட்டத்தைப் பின்பற்றுகின்ற கோடானுகோடி இந்திய மக்கள் இருக்கிறார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. சாதியை அடிப்படையாகக் கொண்ட, கடவுள் மீது அதீதமான பற்று கொண்ட ஒரு சமூகத்தில் எந்த அளவிற்கு மற்றவர்களை அனுசரித்துப் போகிற, மதசார்பற்ற அணுகுமுறையை பின்பற்ற முடியும் என்பதற்கும் வரம்பு இருக்கிறது என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.\

வகுப்புவாத வன்முறையின் லாபங்கள்

1980களின் நடுப்பகுதியில் இருந்தே வகுப்புவாத வன்முறையானது கலாச்சார ரீதியாகவும், தேர்தல் மூலமாகவும் மிக நல்ல லாபத்தை கொடுத்து வருவதை நாம் மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறோம் என்பது இதில் இரண்டாவது விஷயமாகும். நாட்டின் தலைநகரிலேயே ஆயிரக்கணக்கில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டது இந்து தேசத்தை ஒன்றுபடுத்த பயன்பட்டது மட்டுமின்றி, இதுவரையில் பெற்றதிலேயே மிக அதிகமான மக்களவை இடங்களையும் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கியது.

பெரும்பான்மையான இந்துக்களை காங்கிரஸ் கட்சியிடமிருந்து பிரித்து சங் பரிவாரம் அவர்களை வென்றெடுக்க வேண்டும் என்பதற்காகவே ராமஜன்ம பூமி இயக்கம் கட்டவிழ்த்து விடப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக வன்முறையை கட்டவிழ்த்து விட்டபடி நடைபெற்ற ஐந்தாண்டு கிளர்ச்சிக்குப் பிறகு, நாடாளுமன்ற மக்களவையில் இரண்டே இடங்களை மட்டுமே வைத்திருந்த பாஜகவினால் 85 இடங்களை கைப்பற்ற முடிந்தது. மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ரதயாத்திரைகளையும், ரத்த ஆறுகளையும் ஓடவிட்ட பிறகு அதனிடம் 120 இடங்கள் வசமாயின. பாப்ரி மசூதி தரைமட்டமாக்கப்பட்ட பிறகு நடந்த முதல் தேர்தலில் 161 இடங்களை வென்று நாடாளுமன்றத்தில் இரண்டாவது இடத்தை கைப்பற்றியது மட்டுமின்றி, மிகக் குறுகிய மட்டுமேயானாலும் மத்தியில் அதனால் ஆட்சியையும் அமைக்க முடிந்தது.

இத்தகையதொரு சாதனையைப் படைத்துள்ள நிலையில் அதற்கு மிகவும் இயற்கையாகவே கைவரப்பெற்ற வகுப்புவாத வன்முறையை சங் பரிவாரம் கைவிடுவதென்பது அரசியல் ரீதியாக முட்டாள்தனமான ஒரு நடவடிக்கையாகவே இருக்கும். இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். 2002-ம் ஆண்டில் நடைபெற்ற குஜராத் படுகொலைகளுக்கு முன்னால் பாஜகவின் அரசியல் வானில் மோடி மிகச் சாதாரணமான ஒரு நபராகத்தான் இருந்தார். இந்தப் படுகொலைகளுக்குப் பிறகோ, முதலில் குஜராத் மாநிலத்திலும் பின்னர் அகில இந்திய அளவிலும் அவரையும் அமித் ஷாவையும் யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. தேர்தல் ரீதியான கணக்குகளால் ஒரு சில நேரங்களில் தற்காலிகமான பின்னடைவுகளை அது சந்தித்திருந்த போதிலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது 1980களின் நடுப்பகுதியில் இருந்தே சங் பரிவாரம் ஆட்சி அதிகாரத்தை மட்டுமின்றி தனது பெருமையையும் அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது.

மத்திய மாநில அரசுகளுக்கான தேர்தல்களில் ஆர் எஸ் எஸ், பாஜக தொடர்ந்து வலுப்பெற்றுக் கொண்டே வந்துள்ளன என்பது மட்டுமின்றி சமூக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் நாட்டின் உறுதித் தன்மையையே மாற்றுவதிலும் கூட அவை வெற்றி பெற்றுள்ளன. 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இன்றைய இந்தியா அதிகமான அளவிற்கு இந்துமயமாகி உள்ளது. இன்றைய நாகரீகமாக காவியை ஏற்றுக் கொண்டிருக்கும் இளைஞர்கள் மட்டுமின்றி, பணக்கார விவசாயிகள், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள அடித்தட்டு சாதிகளை சேர்ந்தவர்களுக்கும் இது பொருந்தும்.

உதாரணமாக, வாஜ்பேயி அரசு அதன் தொடக்க நாட்களில் மாட்டுக் கறிக்கு தடைவிதிக்கும் சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த முயற்சித்தது. எனினும் நாடாளுமன்றத்தில் எழுந்த பெருங்கூச்சலைத் தொடர்ந்து அது பின்வாங்கியது. ஆனால் எந்தவிதமான எதிர்ப்பும் இன்றி மாட்டுக் கறி விற்பனையை தடை செய்யும் சட்டத்தை மோடி-ஷா இரட்டையரின் அரசினால் அமலாக்க முடிந்துள்ளது. ஆர் எஸ் எஸ் அமைப்பின் நிகழ்ச்சி நிரலில் உள்ள பல விஷயங்களை அமலாக்க முடிந்துள்ளது. அவர்கள் வளர்ச்சி பெறுவதற்கு முன்னால் ஒரு சிறு கட்சியின் தலைவர்களாக நாடாளுமன்றத்தில் மிக நீண்ட காலத்திற்கு தங்கள் வாழ்க்கையைக் கழித்த வாஜ்பேயி, எல். கே. அத்வானி ஆகியோரை விட கொடூரமானவர்களாக, ரத்தவெறி பிடித்தவர்களாக மோடியில் இருந்து தொடங்கி (யோகி) ஆதித்யநாத் வரையிலான புதிய தலைமுறை தலைவர்கள் இருக்கின்றனர். சின்னாபின்னமாக சிதறிக் கிடக்கும் எதிர்க்கட்சிகளைப் பற்றி நான் எதுவும் சொல்ல வேண்டியதே இல்லை. சுருக்கமாகச் சொல்வதெனில், அதன் வாக்குவலிமையில் உச்சகட்டத்தை பாஜக எட்டிப் பிடித்திருக்கும் சரியானதொரு தருணத்தில்தான் ஆர் எஸ் எஸ் அமைப்பின் மிக மோசமான நபர்கள் அதிகாரத்தில் வந்து அமர்ந்திருக்கின்றனர். அப்படியிருக்கும்போது இத்தகைய அதிகாரத்தை அவர்களுக்குப் பெற்றுத் தந்த நடைமுறை உத்தியை அவர்கள் ஏன் கைவிட வேண்டும்?

பாப்ரி மசூதி தரை மட்டமாக்கப்பட்ட பின்னணியில் நாட்டில் பாசிசம் வலுப்பெற்றுவருகிறது என்று எச்சரித்த அறிவாளர்களில் நீங்கள்தான் முதலாமவர். இதுகுறித்த உங்களது உரை பின்னர் “பாசிசமும் தேசிய கலாச்சாரமும்: இந்துத்துவ நாட்களில் க்ராம்சியை பயில்வது” என்ற தலைப்பில் கட்டுரையாகவும் வெளியானது. இந்தியாவில்இந்துத்துவ பாசிசம் எழுச்சிபெற்றுவருவது குறித்த மிகச்சிறந்த கட்டுரை அது. அந்தக் கட்டுரையில் “ ஒவ்வொரு நாடும் அதற்குத் தகுதியான பாசிசத்தை பெறுகிறது” என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அவ்வாறெனில், இப்போது இந்தியா அதற்கேயுரிய பாசிசத்தை பெற்றிருக்கிறதா?

ஆம். இந்த சம்பவம் நடந்து முடிந்த நாட்களில் முதலில் அதுதான் எனது பிரதிபலிப்பாக இருந்தது. அந்த நேரத்தில் பாசிசம் என்ற வார்த்தையை நான் கொஞ்சம் தேவைக்கு அதிகமாகவே பயன்படுத்தி இருந்தேன். எனினும் அந்த தொடக்க நாட்களுக்குப் பிறகு மிக விரைவிலேயே இந்த வார்த்தையைப் பயன்படுத்துவது குறித்து பல முன் எச்சரிக்கைகளையும் அறிமுகம் செய்யத்  தொடங்கினேன். பாப்ரி மசூதியை இடித்துத் தரைமட்டம் ஆக்கியது ஒரு பாசிச வெளிப்பாடு என்றும், ஆர் எஸ் எஸ் தனித்துவமான பல பாசிச தன்மைகளைக் கொண்டதாக இருக்கிறது என்றும் நான் இப்போதும் நம்புகிறேன். இருந்தபோதிலும் ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கும் வரலாற்று ரீதியாகவே மிகவும் தனித்துவமான அரசியல் கட்சியாக இருக்கும் அதன் வெகுஜன அரசியல் முன்னணிப் படைக்கும் இடையே ஒரு வேறுபாட்டையும் நான் காண்கிறேன்.

மிக எளிதாக இந்தக் கட்சியின் மீது ஒரு முத்திரையை குத்துவதற்கு முன்பாக அதன் புதுமையான கட்டமைப்பைப் புரிந்து கொள்வதற்கு நமக்கு மிகத் துல்லியமான இயங்கியல் செயல்முறைகள் தேவைப்படுகின்றன. நீங்கள் சுட்டிக்காட்டிய எனது உரை/கட்டுரையும் கூட அயோத்தியா இடிப்பு சம்பவம் நடைபெற்ற உடனேயே எழுதப்பட்டதுதான். ஆனால் அந்தக் கட்டுரை நீங்கள் குறிப்பிட்டதுபோல “இந்துத்துவ பாசிசத்தின் எழுச்சி” குறித்ததல்ல. மாறாக, க்ராம்சி தனக்குள்ளேயே எழுப்பிக் கொண்ட கேள்வியைப் போலவே இந்தியாவிற்கு உள்ளிருந்தபடி, நெருக்கடியின் குறிப்பிட்டதொரு கட்டத்தில், குறிப்பிட்டதொரு பிரச்சனையை பற்றி சிந்தித்ததே ஆகும்.

1920-ம் ஆண்டில் மிகச் சிறிய, ஒழுங்கமைப்பில்லாத பாசிச அணியை விட இத்தாலிய இடதுசாரிகள் ஒப்பில்லாத வகையில் வலுவானவர்களாகத் திகழ்ந்தனர். ஆனால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு (பெனிட்டோ) முசோலினி ஆட்சியில் இருந்தார். 1926-ம் ஆண்டிலோ அவரது அதிகாரம் முழுமையானதாக இருந்தது; அதே நேரத்தில் ஓர் அரசியல் சக்தியாக இடதுசாரிகள் முழுமையாகத் துடைத்தெறியப்பட்டிருந்தனர். இவை அனைத்துமே ஜெர்மனியில் நாஜிகள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே நடந்துவிட்டிருந்தன.

இந்தப் பின்னணியில்தான் க்ராம்சி தனக்குள் கேட்டுக் கொண்டார்: பாசிசம் மிக எளிதாக வெற்றி அடைய, இடதுசாரிகள் மிக எளிதாகத் தோல்வி அடைய நமது நாட்டு வரலாற்றிலும், சமூகத்திலும், நமது நாட்டு முதலாளித்துவ தேசிய வாதத்திலும் என்ன இருந்தது? என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது. அவரது சிறைக் குறிப்புகள் நூலின் பெரும்பகுதி இத்தாலிய வரலாறு குறித்த, அந்த வரலாற்றில் வாடிகனுக்கு இருந்த சிறப்பான இடம் குறித்த, ரிசோர்ஜிமெண்டோவின் தனித்துவமான தன்மைகள் மற்றும் இத்தாலியை ஒன்றுபடுத்தும் முயற்சி, இத்தாலிய முதலாளித்துவ வர்க்கத்தின், அதன் தொழில்நகரங்களின் சிதைந்த தன்மை, வெகுஜன ஆதரவைப் பெற்ற புதினங்கள், என்பது போன்ற வெகுஜன உணர்வின் வடிவங்களைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும் ஒரு சிந்தனை ஓட்டமாகவே அந்தக் குறிப்புகள் இருந்தன.

இதேபோன்று இந்தியாவைப் பற்றிய கேள்விகளை எழுப்பவே நான் முயன்றேன். அந்தக் கட்டுரையைப் பொறுத்தவரையில் இருந்த பிரச்சனை என்னவெனில் அதில் பெரும்பகுதி ஒப்பீட்டு முறையிலான சிந்தனையை அடிப்படையாகக் கொண்டதாகும். இத்தகைய சிந்தனை மிகவும் தரம் தாழ்ந்ததாகும். அதன் பிறகு மிக விரைவிலேயே இத்தாலிய பாசிசம் குறித்து மிக நீண்ட கட்டுரை ஒன்றை நான் எழுதினேன். அந்தக் கட்டுரை எனக்கு மிகுந்த விருப்பமுள்ளதாகவும் இருந்தது.

ஒவ்வொரு நாடுமே அது பெறுவதற்குத் தகுதியுள்ள பாசிசத்தையே பெறுகிறது என்று நான் குறிப்பிட்டிருந்தேன். ஜெர்மனிக்கும் இத்தாலிக்கும் இடையே, இத்தாலிக்கும் ஜெர்மனிக்கும் அல்லது ஸ்பெயினுக்கும் இடையே என்பது போல் இருந்த பெரும் வேறுபாடுகளைத்தான் நான் அப்போது மனதில் கொண்டிருந்தேன். இந்தியாவிற்குப் பாசிசம் வருவதாக இருந்தால் அது நமது சொந்த வரலாறு, சமூகம் ஆகியவற்றிலிருந்து உருவானதாக மற்றவற்றிலிருந்து வேறுபட்டதாக இருக்கும் என்பதையே குறிக்கிறது. இப்போது பாசிசம் இந்தியாவிற்கு வருகிறதா என்று நீங்கள் என்னைக் கேட்டீர்கள். இதற்கான பதில் இல்லை என்பதுதான். இந்திய முதலாளி வர்க்கத்திற்கோ அல்லது ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கோ இப்போது பாசிசம் தேவைப்படவில்லை.

இரண்டு உலகப் போர்களுக்கு இடையேயான ஐரோப்பாவில் தொழிலாளி வர்க்க இயக்கம் மிக வலுவாக இருந்த, ஒரு கம்யூனிஸ்ட் புரட்சி நடைபெறுவதற்கான வாய்ப்பு இருந்த நாடுகளில் பாசிசத்தின் பல்வேறு வகைகள் வெளிவந்தன. இத்தகையதொரு நிலைமை இப்போது இந்தியாவில் இல்லை. அது எவ்வளவு கோரமானதாக இருந்தாலும், அல்லது சரியாக குறிப்பிட்ட நேரத்தில் தலைதூக்கினாலும் சரி, வகுப்புவாத வன்முறை என்பது பாசிசம் அல்ல. அப்படியானால் ஆர் எஸ் எஸ் அமைப்பு மற்றும் நாடாளுமன்ற வகைப்பட்டதாக இல்லாத அதன் பல்வேறு அணிகளில் பாசிச குணாம்சங்கள் இருக்கிறதா? ஆம். அவற்றுள் பாசிச குணாம்சங்கள் இருக்கின்றன. என்றாலும் உலகம் முழுவதிலும் அதிதீவிர வலதுசாரித்தன்மை கொண்ட பல இயக்கங்கள்,கட்சிகளிலும் கூட இத்தகைய குணாம்சங்கள் இருக்கத்தான் செய்கின்றன. 1880களில் இருந்தே பாசிச போக்கு என்பது முதலாளித்துவ அரசியலில் தொடர்ந்து நீடித்தே வருகிறது. என்றாலும் ஒரு சில நாடுகள் அல்லது அரசியல் கட்சிகளைத்தான், அதன் உண்மையான பொருளில்,  பாசிசத் தன்மை கொண்டவை என்று குறிப்பிட முடியும்.

குறைந்த அழுத்தம் கொண்ட ஜனநாயகம்

இந்தியாவில் உள்ள தாராளவாத அரசியல் கட்டமைப்பினை முழுமையாக உடைத்து நொறுக்கி, அதை அகற்றவேண்டிய அவசியம் சங்பரிவாரத்தைப்போன்ற வலதுசாரிசக்திகளுக்கு இல்லை என்று நீங்கள் கூறினீர்கள்.  அதற்குப்பதிலாக,  அதற்குள்ளேயே இருந்து செயல்பட்டு,  அதைப் பயன்படுத்திக்கொள்ள அவற்றால்முடியும் என்றும் குறிப்பிட்டீர்கள்.  வலதுசாரி எதேச்சாதிகார போக்கின் கீழ் நொறுங்கிப் போய்விடாமல் ஒரு தாராளவாத ஜனநாயக பாராளுமன்ற அமைப்பாக நீடிக்கவைக்கும் அளவிற்கு நமது ஜனநாயகப்பாரம்பரியமும் தாராளவாத அரசியல் அமைப்பும் வலுவாக உள்ளனவா?

அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஒரு சில அம்சங்களை மாற்றுவதும் தாராளவாத அமைப்பை உடைத்து நொறுக்குவதும் ஒரே விஷயமல்ல. அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்திலும் கூட பல திருத்தங்கள் அடங்கியிருக்கின்றன. ஓர் அரசியல் அமைப்புச் சட்டத்தில்  புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துவதற்கான நாடாளுமன்ற நெறிமுறைகள் இருக்கின்றன. இந்த மாற்றங்களை நீங்களோ அல்லது நானோ விரும்பாமல் கூட இருக்கலாம். இருந்தாலும் எவ்வளவு தூரம் இந்த நாடாளுமன்ற நெறிமுறைகளை பின்பற்றுகிறோமோ அந்த அளவிற்கு தாராளவாத அமைப்பு தொடர்ந்து நிலைத்து நிற்கும். ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஜனநாயகத்தை நான் பெரிதும் ஆதரிப்பவன் தான். எனினும் தாராளவாதத்தை நான் வெறுக்கிறேன். உண்மையில் ஜனநாயகத்தை தாராளமயமாக்குவதை கண்டித்து நான் ஒரு கட்டுரையையும் கூடப் பதிப்பித்திருக்கிறேன். கடந்த ஐந்தாண்டு காலத்தில் மிகவும் அச்சமூட்டக் கூடியதாக இருந்த வளர்ச்சிப் போக்கு என்பது நீதித்துறை, தேர்தல் ஆணையம், இன்னும் சொல்லப்போனால் பெருமளவிலான மின்னணு ஊடகம், மேலாதிக்கம் வகிக்கும் தொலைக்காட்சி நிலையங்கள் போன்ற தாராளவாத அமைப்பின் மிக முக்கிய பிரிவுகளிடமிருந்து தனது விருப்பத்திற்கு ஏற்ற நடத்தையை பாஜகவினால் பெற முடிந்துள்ளது ஆகும். எப்போதுமே நமது ஜனநாயகம் மிகவும் குறைந்த அழுத்தமுடைய ஒன்றாகும். ஆனால் இப்போது அதற்கு இதுவரை இருந்து வந்த அழுத்தமும் கூட அரிக்கப்பட்டுவிட்டது. இன்னும் ஒரு விஷயம்.  “எதேச்சாதிகாரம்” என்ற வார்த்தையை நான் அறவே வெறுக்கிறேன். கம்யூனிஸ்ட் நாடுகளை அவமதிப்பதற்காகவே இந்த வார்த்தை கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு கம்யூனிசம் பாசிசம் ஆகிய இரண்டுமே சம அளவில் எதேச்சாதிகார தன்மை கொண்டவை என்பதை நிறுவவும் முயற்சிக்கப்பட்டது.

21-ம்நூற்றாண்டின்காலனியப்பின்னணியில்ஆர்எஸ்எஸ்இந்துத்துவஅரசியல்தோன்றியதைநீங்கள்எப்படிப்பார்க்கிறீர்கள்இரண்டுஉலகப்போர்களுக்குஇடையேயானஇதேபோன்றஎதிர்ப்புரட்சிசக்திகள்உதாரணமாகமுஸ்லீம்சகோதரத்துவஅமைப்புபோன்றவைஉலகின்பல்வேறுபகுதிகளிலும்தோன்றினஎன்றுமுன்புநீங்கள்எழுதியிருந்தீர்கள்இத்தகையஅமைப்புகள்தோன்றுவதற்குஎதுகாரணமாகஇருந்ததுகுணத்தில்அவைஎவ்வாறுஒரேபோன்றவையாகஇருக்கின்றன?

இந்தக் கேள்விக்கு திருப்திகரமான பதிலளிப்பதற்கு மிக நீண்ட நேரமும் இடமும் தேவைப்படும். என்றாலும் மூன்று விஷயங்களைக் கொண்டு அதற்கு சுருக்கமாக பதிலளிக்கலாம். புரட்சிக்கும் எதிர்ப்புரட்சிக்கும், பகுத்தறிவிற்கும் பகுத்தறிவற்ற நிலைக்கும், தேசியவாதம் குறித்த மதசார்பற்ற விளக்கங்களுக்கும் தேசியவாதம் குறித்த இன ரீதியான அல்லது மதரீதியான விளக்கங்களுக்கும், பல்வேறு வகைப்பட்ட தாராளவாத நிறுவனங்களுக்கும் பல்வேறு வகையான எதேச்சாதிகார நிறுவனங்களுக்கும் என்பது போன்று இருவேறு வகையான கருத்தோட்டங்களுக்கு இடையேயான போராட்டங்களின் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டதாகவே ஐரோப்பா கண்டம் அமைந்திருக்கிறது. காலனியாதிக்கமானது இந்த நோய்கள் அனைத்தையும் தனது ஆளுகைக்குக் கீழுள்ள காலனி நாடுகளுக்கும் கொண்டு சென்றது. இதன் வழியாக இத்தகைய போட்டிகள் நமது சமூகத்திலும் மிகவும் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டிருந்தன. எனவே இந்து தேசியவாதம், முஸ்லீம் தேசியவாதம் ஆகியவற்றில்  குறிப்பாக இந்தியத் தன்மை என்ற எதுவும் இல்லை. இன்னும் சொல்வதானால் அவை அரசாட்சியையும் கத்தோலிக்க தேவாலயங்களின் தனியுரிமைகளையும் இல்லாமல் ஆக்கிய ப்ரெஞ்சு புரட்சியை பெரிதும் வெறுத்தொதுக்கிய அதே ப்ரெஞ்சு நாட்டின் எதிர்ப்புரட்சியின் பாரம்பரியத்தின் வேறு வகையான கண்ணோட்டம் காலனி நாடுகளில் வந்து சேர்ந்தவையே ஆகும். மதரீதியான சிறுபான்மை மக்களுக்கு எதிரான வகுப்புவாத வன்முறை என்பதும் கூட ஐரோப்பிய நாடுகளில் யூதர்களுக்கு எதிராக நிலவி வந்த கசப்புணர்வின் பிரதியைத் தவிர வேறல்ல.

இரண்டாவதாக, இந்து மகாசபா, முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பு போன்ற நநன்கு அறிந்தே இருந்தன என்பதோடு, ஓரளவிற்கு அவற்றிடமிருந்து கற்றுக் கொள்ளவும் செய்தன. உதாரணமாக, ஜெர்மனியின் யூதப் பிரச்சனைக்கு நாஜிகள் தீர்வு கண்டதைப் போலவே, அதாவது இன அழிப்பின் மூலம், இந்துக்களும் முஸ்லீம்கள் குறித்த தங்களது பிரச்சனையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று வி.டி. சவார்க்கர் கூறினார்.

மூன்றாவதாக, இதுபோன்ற இயக்கங்கள் ஒரு நாட்டிலோ அல்லது வேறொரு நாட்டிலோ, ஒரு குறிப்பிட்ட காலத்திலோ அல்லது வேறொரு காலத்திலோ, தோன்றுவதற்கும், அவை வெற்றியோ அல்லது தோல்வியோ அடைவதற்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் உரிய தனித்தன்மையான அம்சங்களே காரணமாக அமைகின்றன. இதுபோன்ற விஷயங்களில் பொதுவான போக்கில் அணுகுவது என்பது நம்மை தவறான வழிக்கு திசைதிருப்பி விடும்.

மதச்சார்பின்மை என்ற கருத்தோட்டம் எந்த அளவிற்கு முக்கியமானதாக இருக்கிறது?

எல்லா நேரங்களிலுமே மதச்சார்பின்மை என்பது நல்லதொரு கருத்தோட்டமே ஆகும். எவரொருவரும் அதை இறுகப் பற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. எனினும் பெரும்பான்மை இந்துத்துவ கருத்தோட்டத்தை எதிர்த்த போராட்டத்திற்கு அனைத்துவகைப்பட்ட, வேறு விதமான கருத்தோட்டங்களும் தேவைப்படுகிறது. மிகக் கொடூரமான வடிவங்களிலான ஒடுக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றின் அடிப்படையிலான ஓர் அமைப்பிற்குள் காங்கிரஸ் வகைப்பட்ட மதச் சார்பின்மையும், பாஜக வகைப்பட்ட பெரும்பான்மைவாதமும் ஒன்றுக்கொன்று போட்டியிடும் தத்துவங்களே ஆகும். இந்தியாவின் தேர்தல் அடிப்படையிலான அரசியல் பெருமளவிற்கு சாதி, மதம், பல்வேறு வகைப்பட்ட சொத்துரிமை ஆகியவற்றைச் சுற்றியே கட்டமைக்கப்பட்டுள்ளது. மதச்சார்பின்மை என்ற கருத்தோட்டமானது “சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம்” என்ற விழிப்புணர்வுக் கோட்பாட்டிலிருந்தே  உருவெடுத்தது. “சகோதரத்துவம்” என்ற விரிவான வகைப்படுத்தலுக்குள்தான் மதச்சார்பின்மை அடங்குகிறது. சாதியை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகம் “சகோதரத்துவம்” நிரம்பியதாக இருக்க முடியுமா? அப்படியில்லையென்றால், அதன் முழுமையான அர்த்தத்தில் மதச்சார்பற்றதாக அது இருக்க முடியுமா? சமத்துவம் இல்லாமல் சகோதரத்துவம் என்பது இருக்க முடியுமா? அல்லது வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சோஷலிசம் என்பது இல்லாமல் ஜனநாயகம் இருக்க முடியுமா? போல்ஷ்விக் புரட்சி கூட அல்ல; ப்ரெஞ்சுப் புரட்சி நடைபெறுவதற்கு முன்பாகவே ரூசோ இதற்கு பதிலளித்திருந்தார்: ”உலகத்தில் உள்ள பொருட்களை அணுகுவதில் சம உரிமை இல்லாதவர்கள் எந்த காலத்திலும் சட்டத்தின் முன்பாக  சமமானவர்களாக இருக்க முடியாது!” நாம் அறிந்துள்ள கம்யூனிசம் என்பது ப்ரெஞ்சுப் புரட்சியின் போதுதான் முதன்முதலாகத் தென்பட்டது. அதே ப்ரெஞ்சுப் புரட்சிதான் மதத்தின் அதிகாரத்திற்கு எதிரான ஒரு கருத்தாக்கம் என்ற வகையில் மதச்சார்பின்மையை, ஃப்ராங்காய் நோயெல் பாவூஃப்-இன்  “சமமானவர்களின் சதித்திட்டம்” என்பதை – இதைக் கிட்டத்தட்ட ஒரு கம்யூனிச அமைப்பு என்றே சொல்லலாம் – நமக்குத் தந்தது. அந்தக் கம்யூனிச போக்கு தோற்கடிக்கப்பட்டது. நமக்கு மிச்சமிருந்ததெல்லாம் மதச்சார்பின்மையும், தாராளவாதமும்தான். எனவே கடந்த 200 வருடங்களுக்கு மேலாகவே ஒரு கேள்வி தொடர்ந்து நீடித்து வருகிறது: “தாராளவாதத்தால் மட்டுமே மதச்சார்பின்மையை பாதுகாத்துவிட முடியுமா? சோஷலிசம் என்பதில்லாமல் மதச்சார்பின்மை என்பது சாத்தியமா?” 

இல்லை என்பதே இதற்கு எனது பதில். தாராளவாத ப்ரான்ஸ், ஐரோப்பா முழுவதிலும் உள்ள மற்ற தாராளவாத நாடுகள் ஆகியவற்றின் யூதர்களுக்கு எதிரான, இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வின் வரலாற்றையே பாருங்கள். எனவே உங்கள் கேள்வியைப் பொறுத்தவரையில், ஆம். மதச்சார்பின்மை என்ற கருத்தோட்டம் மிக முக்கியமானது. எனினும் நடைமுறையில் இந்த கருத்தோட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்னதாக, உங்களிடம் உண்மையானதொரு சோஷலிச சமூகம் இருக்க வேண்டும். இன்றைய இந்தியாவில், இந்தக் கருத்தோட்டத்தையை உண்மையாக நடைமுறைப்படுத்துவதென்பது இயலாத ஒன்றே ஆகும். பெரும்பான்மைவாதம் எவ்வளவு விஷமத்தனமானது என்பது நமக்குத் தெரியும். என்றாலும் தாராளவாதம் எப்போதுமே மதச்சார்பின்மைக்கு துரோகம் செய்துதான் வந்துள்ளது; எதிர்காலத்திலும் எப்போதும் அது அப்படித்தான் நடந்து கொள்ளும் என்ற உண்மையை நாம் பெரும்பாலும் மறந்து விடுகிறோம்.

நன்றி: ஃப்ரண்ட்லைன் ஆங்கில இதழ்

உள்ளிருந்தே கைப்பற்றப்பட்ட அரசு அய்ஜாஸ் அகமத் – உடன் ஓர் உரையாடல்

ஜிப்ஸன் ஜான், ஜிதேஷ், எ.எம்

தமிழில்: வீ.பா. கணேசன்

இந்தியாவைச் சேர்ந்த மார்க்சிய சிந்தனையாளரான அய்ஜாஸ் அகமத் நவீன வரலாறு, அரசியல், கலாச்சாரம் ஆகியவை குறித்த கொள்கைகளுக்கான நிபுணராக சர்வதேச அளவில் புகழ்பெற்றவர். இந்தியா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் பல்கலைக் கழகங்களில் பேராசிரியராக பணியாற்றிய அவர், தற்போது இர்வைன் பகுதியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஒப்பியல் இலக்கியத் துறையில் மதிப்புமிகு பேராசிரியராக விமர்சனக் கொள்கையை பயிற்றுவித்து வருகிறார்.

இந்துத்துவ வகுப்புவாதம், பாசிஸம், மதச்சார்பபின்மை, இந்தியப் பின்னணியில் இடதுசாரிகளின் எதிர்காலத்திற்கான வாய்ப்புகள் குறித்த கேள்விகளே இந்தப் பேட்டியில் பெரும் பகுதியாக எழுப்பப்பட்டன. மற்ற பகுதிகளில் உலகமயமாக்கல், உலகளாவிய அளவில் இடதுசாரிகளுக்கான வாய்ப்புகள், அண்டோனியோ க்ராம்சியின் சிந்தனைகளை சரியாகவும், தவறாகவும் பயன்படுத்துவது, இன்றைய சூழலில் கார்ல் மார்க்சின் சிந்தனைகளின் பொருத்தப்பாடு ஆகியவை குறித்த தனது கருத்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றப் பொதுத்தேர்தலுக்கு முன்பாக இந்தப் பேட்டி நடத்தப்பட்டு, தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் மேம்படுத்தப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ்-ம் பாஜக உள்ளிட்ட அதன் பரிவாரங்களும் மிகவும் தனித்துவமான முறையில் பாசிஸ தன்மைகளை வெளிப்படுத்துகின்றன எனவும் அய்ஜாஸ் அகமத் வாதிடுகிறார். எனினும் இந்தியாவின் தாராளவாத நிறுவனங்கள் தற்போது வெற்றுக் கூடுகளாக மாறிவிட்டபோதிலும், இந்திய அரசு இன்னமும் தாராளவாத முறைமையின் அடிப்படையில்தான் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தனித்துவமான தத்துவார்த்த நிலைபாட்டின் அடிப்படையில்தான் இந்தக் கருத்தாக்கத்தை அவர் முன்வைக்கிறார்.

ஜனநாயகத்திற்கும் தாராளவாதத்திற்கும் இடையில் அடிப்படையான முரண்பாடு நிலவுகிறது என்றும் அய்ஜாஸ் அகமத் நம்புகிறார். எனினும் அதீத வலதுசாரிகளுக்கும் அரசின் தாராளவாத நிறுவன வடிவத்திற்கும் இடையே அத்தகைய முரண்பாடு எதுவும் நிலவவில்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார். இத்தகைய தாராளவாதம்தான் ஜனநாயகத்தை பலவீனப்படுத்தி அதீத வலதுசாரிகளை வலுப்படுத்துகிறது. எனவேதான் அமெரிக்கா, இஸ்ரேல், துருக்கி, இந்தியா போன்ற பலவகையான உலக நாடுகளிலும் அதீத வலதுசாரி சக்திகள் தாராளவாத நிறுவனங்களின் மூலமாக ஆட்சி செலுத்தவும் முடிகிறது.

பாசிஸம் குறித்த கேள்வியை இருவேறுபட்ட சிந்தனைச் சட்டகத்தில் இருந்து பார்க்க வேண்டும் என்றும், பெரும்பாலான நேரங்களில் இந்தச் சட்டகங்கள் ஒன்றோடு ஒன்று குழப்பிக் கொள்ளப்படுகின்றன என்றும் அவர் நம்புகிறார். அவற்றில் ஒரு சிந்தனைச் சட்டகத்தில் இருந்து பார்க்கும்போது ஏகாதிபத்திய சகாப்தம் முழுவதிலும் முதலாளித்துவ அரசியலின் அனைத்து வடிவங்களிலுமே பாசிஸம் என்ற போக்கு நிரந்தரமான உள்ளீடாக இருந்து வருவதைக் காண முடியும். உதாரணமாக, தாராளவாத/ நவதாராளவாத முதலாளித்துவத்தின் ஆட்சியில் பாசிஸ போக்குகளை வெளிப்படுத்தி வரும் எண்ணற்ற அரசியல் கட்சிகள் ஐரோப்பா கண்டம் முழுவதிலுமே மிக இயல்பாக செயல்பட்டு வருவதைக் காண முடியும்.

எனினும் மேலே சொல்லப்பட்ட சிந்தனைச் சட்டகத்தின் குறுகிய பார்வையில் பார்க்கும்போது போர்களுக்கு இடையிலான காலப்பகுதியில், பிரத்தியேகமான சூழ்நிலைகளில், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் முழுமையான பாசிஸ அரசுகளும் இயக்கங்களும் எழுச்சி பெற்றன. இதற்கு அந்த நாடுகளில் நிலவிய வர்க்க சக்திகளின் பலாபலன் அத்தகையதாக இருந்தது. மூலதனத்தின் ஆட்சியை அச்சுறுத்தி வந்த மிக வலுவான புரட்சிகரமான தொழிலாளி வர்க்க இயக்கங்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட, அரசின் தாராளவாத வடிவத்தை அகற்ற வேண்டியது அவசியமாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலத்தில் வேறெந்த காலகட்டத்தையும் விட இன்று தொழிலாளி வர்க்க இயக்கங்கள் மிகவும் பலவீனமானவையாக உள்ள நிலையில் ஒரு பாசிஸ ஒழுங்குமுறை தேவையற்றதாக உள்ளது. இத்தகைய சூழலில் நரக வேதனையைத் தழுவியபடி அதீத வலதுசாரிகளும் தாராளவாத அமைப்புகளும் ஒன்றாக இருக்க முடியும்.

கேள்வி: மே 2019 தேர்தலில் நரேந்திர மோடி மீண்டும் மக்களின் ஒப்புதலைப் பெற்றிருக்கிறார். அவர் திரும்பவும் ஆட்சிக்கு வந்திருப்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியுடன் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான முக்கிய அம்சங்கள் என்ன? ஆர்.எஸ்.எஸ்.-பாஜகவின் இரண்டாவது முறை ஆட்சியின் கீழ் இந்தியாவின் எதிர்காலம் எத்தகையதாக இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

நரேந்திர மோடியின் தலைமையில் நிச்சயமாக பாஜக மிகப்பெரும் தேர்தல் வெற்றியைப் பெற்றுள்ளது. ‘மக்கள் தீர்ப்பு’ என்று இதைச் சொல்லமுடியுமா என்பதும் கூட சந்தேகத்திற்குரிய ஒன்றுதான். மக்கள் தங்கள் தீர்ப்பைச் சொல்லவேண்டுமானால், உண்மைகளின் அடிப்படையிலான, அறிவுபூர்வமான, அரசியல் விவாதம் மக்களுக்குத் தேவைப்படுகிறது. அதைப் போன்றே எதிர்க்கட்சிகள் தங்களது மாற்றுக் கொள்கைகளை மக்களிடையே தெளிவாக எடுத்துரைப்பதற்கான அமைதியான, தெளிவான சூழலும் தேவைப்படுகிறது. அரசியல் கட்சிகள் உண்மைகளின் அடிப்படையில் அறிவுபூர்வமான மாற்றுக் கருத்துக்களை முன்வைக்க முடிந்தாலும் கூட, அவை மக்களிடம் சென்று சேரும் வாய்ப்பு இன்று இல்லை. ஏனெனில், இந்திய பெரு நிறுவனங்களின் பிடியிலுள்ள ஊடகமானது கிட்டத்தட்ட சங் பரிவார இயந்திரத்தோடு ஐக்கியமான ஒன்றாக மாறிவிட்டதோடு, உண்மைகளையும் கொள்கைகளையும் எவ்வித மாச்சரியமும் இன்றி வெளியிடுவது; மக்கள் நலனுக்கு உகந்த வகையில் செயல்படுவது என்ற தனது தொழில்முறை உறுதிப்பாட்டை இழந்துபோனதாகவும் மாறியுள்ளது. மக்கள் தங்கள் தீர்ப்பைத் தர முடிகின்ற ஜனநாயக பூர்வமான செயல்பாட்டிற்கு இதில் தொடர்புடைய, அனைத்து அமைப்புகளும், குறிப்பாக தேர்தல் ஆணையம், உயர்மட்ட நீதித்துறை, சட்டத்தை அமலாக்கும் அமைப்புகள் போன்றவை, நீதிநெறி முறைகளை, அரசியல் அமைப்புச் சட்ட மற்றும் சட்டரீதியான நெறிமுறைகளை, கறாராகக் கடைப்பிடிப்பனவாக இருக்க வேண்டும். ஆனால் நிலைமை அவ்வாறு இல்லை என்பது தான் உண்மை. இந்திய அரசியல் தளம் மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் ஜனநாயக நெறிமுறைகளை மிகுந்த உறுதியோடு கடைப்பிடித்த ஒரு காலமும் இருந்தது. எனினும் அத்தகைய மக்கள் திரள் கடந்த சில தசாப்தங்களாக இந்தியாவில் பெரும் போராட்டத்தை நடத்தி வருவதோடு, ஆண்டுகள் செல்லச் செல்ல மேலும் மேலும் அதிகமான வகையில் ஊழல்மிக்கதாக மாறி வருகிறது. “ஊழல் மிக்கதாக” என்பதை தேர்தலில் மிகப் பிரம்மாண்டமான வகையில் பணத்தைப் பயன்படுத்துவது என்ற பொருளில் மட்டுமே நான் குறிப்பிடவில்லை; தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் அது மிக முக்கியமான ஓர் அம்சமாக இருக்கிறது என்பதும் உண்மை தான். எனினும் ஜனநாயகச் செயல்பாடு என்ற குறிப்பிடக்கூடிய செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த சீரழிவையே நான் அவ்விதம் குறிப்பிடுகிறேன். 2019 தேர்தல் முடிவுகள் தேர்தல் வெற்றியின் அளவுக்கும் ஜனநாயக ரீதியான அடிப்படை நெறிமுறைகள் என்பதற்கும் இடையேயான உறவுகள் முற்றிலுமாக மறைந்து போன ஒரு கட்டத்தை நாம் எட்டியிருக்கிறோம் என்பதை எடுத்துக் காட்டுவதாகவே தோன்றுகிறது.

மிகுந்த ஆச்சரியமூட்டும் வகையில் இந்திய அரசியல் அமெரிக்க மயமாகியுள்ளது. ஒரு புறத்தில் வழிகாட்டியும் பாதுகாவலருமாகத் தோற்றமளிக்கும் மகத்தான தலைவர் என்ற பிம்பம் உருவாக்கப்படுவதும் மறுபுறத்தில் அச்சத்தையும் பதற்றத்தையும் திட்டமிட்டு உருவாக்குவதும் வழக்கமானதொரு விஷயமாக மாறியிருக்கிறது. அரசியல் என்பது இப்போது இடைவெளியற்ற வகையில் தொலைக்காட்சி நிலையங் களாலும், கருத்துக் கணிப்புகளாலும், பிரம்மாண்டமான பிரச்சாரங்களாலும் பெருநிறுவனங்கள் பல ஆயிரம் கோடிக்கணக்கான ரூபாய்களை செலவழிக்கும் ஒரு விஷயமாக மாறிப் போயிருக்கிறது. இந்தப்பணத்தில் பெரும்பகுதி ரகசியமானது மட்டுமின்றி அடையாளம் காண முடியாத ஒன்றாகவும் இருக்கிறது. அமித் ஷா உள்துறை அமைச்சராக உள்ள நிலையில் குடிமக்கள், குடிமக்கள் அல்லாதவர்கள் குறித்த பதற்றமான சூழ்நிலை அதிகரித்துக் கொண்டே போவது அமெரிக்காவிற்குள் நுழையும் பொருளாதார ரீதியான அகதிகள் குறித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் இனவாத, கிட்டத்தட்ட இனவெறித்தனமான கொள்கைகளின் நகலாகவே தென்படுகிறது. இவை அனைத்தையுமே சங் பரிவாரங்கள் மூன்று வேறுபாடுகளுடன் அமெரிக்காவிடமிருந்து கற்றுக் கொண்டவைதான்: வெட்டவெளிச்சமான பதற்றச் சூழ்நிலையை உருவாக்குவது என்பதுதான் இந்தியாவிலுள்ள அனைத்துத் தொலைக்காட்சிகளின் விதிமுறையாக இருந்து வருகிறது; 2019-ம் ஆண்டில் பாஜகவின் செயல்பாட்டை வேகப்படுத்த உதவிய பணத்திற்கான ஆதாரத்தை கண்டுபிடிக்க முடியாது என்பதோடு அமெரிக்காவில் இவ்வாறு தேர்தலில் செலவழிக்கப்படும் தொகையை விட அது மிக அதிகமாகவே உள்ளது; நீதித்துறையினால் தண்டிக்கப்படுவோம் என்ற பயமேதுமின்றி, தீவிரமாகவும், இடைவிடாத வகையிலும் சங் பரிவாரம் தொடர்ந்து கட்டவிழ்த்து விடும் வன்முறை ட்ரம்ப்பின் மூர்க்கத்தனத்தை விடப் பல மடங்கு அதிகமாகும்.

“2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினவா?” என்று கேட்டால், ஆம், 2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகளைப் போலவே இந்தத் தேர்தலும் எனக்கு வியப்பை அளித்தது. அன்றாட தேர்தல் அரசியலில் நான் அதிக கவனம் செலுத்துபவன் அல்ல. எந்தவொரு தேர்தலிலும் எனது தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் என்பது இடதுசாரிகள், தாராளத்தன்மை கொண்ட இடதுசாரிகள் போன்ற எனக்கு வேண்டியவர்களிடமிருந்து பெற்ற அந்த மதிப்பீடுகள் என்னவென்று தெரியுமா? இருதரப்பினருமே மிகக் குறைந்த வித்தியாசத்தில்தான் வெற்றி பெறுவார்கள்; ஒரு வேளை தொங்கு பாராளுமன்றமாகவும் கூட அது இருக்கலாம். உடனடி எதிர்பார்ப்புகளில் இருந்து நான் விடுபட்ட உடனேயே கட்டமைப்பு குறித்த எனது ஆய்வின் அடிப்படை ஆதாரத்தை நோக்கி நான் திரும்பிச் சென்றேன். மதச்சார்பின்மை எப்போதுமே சிறுபான்மை நிலைபாடு கொண்டதுதான் மதச்சார்பின்மைக்கான உண்மையான பற்றுறுதி என்பது இந்திய சமூகத்திலும் அரசியலிலும் எப்போதுமே சிறுபான்மை நிலைபாட்டைக் கொண்டிருப்பதுதான் என்பதையும் இந்திய சமூகமானது எந்த அளவிற்கு இந்துமயமாக மாறியுள்ளது என்பதையும், எவ்வாறு வகுப்புவாத வன்முறையானது எப்போதுமே பாஜக மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு தேர்தலில் பெருமளவிற்குப் பலனளிக்க வழிவகுக்கிறது என்பதையும், இந்திய அரசின் முக்கியமான, தேர்தல் ஆணையம், உயர்மட்ட நீதித் துறை ஆகியவை உள்ளிட்ட, நிறுவனங்கள் அனைத்தும் மிக அதிகமான அளவிற்கு பாஜகவின் நலன்களுக்கு சேவை செய்வதாக மாறியுள்ளன என்பதையும் நான் எப்போதுமே வலியுறுத்தி வந்துள்ளேன். 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு பெருமளவிலான போக்குகள் குறித்து மேலும் அதிகமான கருத்தோட்டங்களை உள்ளடக்கி 2015-ம் ஆண்டில் நான் எழுதிய கட்டுரையை சோஷலிஸ்ட் ரிஜிஸ்டர் இதழ் 2016-ம் ஆண்டில் வெளியிட்டது. அந்தக் கட்டுரை பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மறுபிரசுரம் செய்யப்பட்டது. இப்போது ஜூன் 7, 2019 தேதியிட்ட ஃப்ரண்ட்லைன் இதழிலும் “இந்தியா: தாராளவாத ஜனநாயகமும் அதிதீவிர வலதுசாரிப் போக்கும்” என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. இந்திய அரசியலின் முக்கியமான அம்சங்கள் என்று நான் சுட்டிக் காட்டியிருந்தவை மேலும் தீவிரமாகியுள்ளன என்பதையே இப்போது நடக்கும் நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.

தேர்தலில் ஒருபுறத்தில் காங்கிரஸிற்கு ஏற்பட்ட பின்னடைவும், மறுபுறத்தில் இடதுசாரிகளுக்கு ஏற்பட்ட சரிவும் மக்களவையில் பாஜகவிற்கு கிடைத்த பெரும்பான்மையைப் போன்றே முக்கியமானது என்று அந்த நேரத்தில் நான் குறிப்பிட்டிருந்தேன். தேர்தல்கள் நடப்பதற்கு நீண்ட நாட்களுக்கு முன்பாகவே முதலாளித்துவ பெரும்புள்ளிகளின் முழுமையான ஆதரவை பெற்றிருந்த முதல் இந்தியப் பிரதமராகவும் மோடி இருந்தார் என்பதையும் நான் சுட்டிக் காட்டியிருந்தேன். அமெரிக்காவை முன்மாதிரியாகக் கொண்டு இந்திய அரசியலை அதிபர் வகைப்பட்டதாக அவர் கட்டாயமாக மாற்றவில்லை என்ற போதிலும் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது அதிபர் தேர்தலுக்காக செலவிட்ட தொகைக்கு இணையான தொகையை மோடி செலவழித்தார் என்பதும் முக்கியமானது.

அரசியலை ஆழமாக உற்று நோக்குபவர்கள் கூட இதில் கவனிக்காமல் விட்ட ஒரு விஷயம் என்னவெனில் இந்தத் தேர்தலுக்காக அவர் திரட்டிய பணமும், பெரு நிறுவனங்களிடமிருந்து எதிர்காலத்தில் திரட்ட அவர் திட்டமிட்டிருந்த தொகையும் கணிசமான அளவிற்கு ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிஷத், ஏன் பாஜகவிடமிருந்தும் கூட சுய உரிமை பெற்றவராக அவரை மாற்றியிருந்தது என்பதே ஆகும். ஏனெனில் பாஜகவின் தேர்தல் பிரச்சாரங்களுக்காக ஆர் எஸ் எஸ் அமைப்பு வழங்கிவரும் தொண்டர்களின் விசுவாசத்தை விலைக்கு வாங்கப் போதுமான பணம் அவரிடம் இப்போது இருக்கிறது. அப்படி இருக்கையில் பாஜகவின் இடைநிலை செயல்பாட்டாளர்களையும் கூட அவரால் எளிதாக விலைக்கு வாங்கிவிட முடியும். தங்களுக்கே ஆன தனி ஒரு உலகத்தை உருவாக்கிக் கொண்டுள்ள மோடி-ஷா இரட்டையரின் தோற்கடிக்க இயலாத தன்மைக்கு அவர்களிடம் இப்போது இருக்கும் அபரிமிதமான செல்வமும் கூட ஒரு விதத்தில் காரணமாகும்.

தாராளவாத நிறுவன கட்டமைப்புகளின் இருப்பை ஆர் எஸ் எஸ் அங்கீகரித்த போதிலும் அரசின் நிறுவனங்களை உள்ளிருந்தே கைப்பற்றி நீண்ட கால அரசை அமைக்கப் போராடுவது என்ற நடைமுறை உத்தியை மேற்கொண்டுள்ளது என்று மிகவும் விரிவாகவே நான் வாதிட்டு வந்திருக்கிறேன். 1960களில் இடதுசாரிகளின் புகழ்பெற்ற கோஷத்தை நினைவுபடுத்தும் வகையில் “நிறுவனங்களின் ஊடாக நீண்ட பயணம்” என்றும் கூட நான் அதைக் குறிப்பிட்டிருக்கிறேன். விரிவான அளவில் பார்க்கும்போது அதீத வலதுசாரிகளின் திட்டங்களுக்கும் தாராளவாத நிறுவன கட்டமைப்புகளுக்கும் இடையே அடிப்படையான முரண்பாடுகள் எதுவும் இல்லை. இந்த நிறுவனங்களை ஆர் எஸ் எஸ் கையிலெடுத்து அவற்றின் மூலம் ஆட்சி செலுத்த முடியும் என்றும் கூட நான் வாதிட்டிருக்கிறேன். எனது முந்தைய ஆய்வில் உள்ள இத்தகைய கருத்தாக்கங்கள் பலவற்றையும் கையிலெடுத்துக் கொண்டு இப்போதிருக்கும் நிலையைப் பற்றிய ஆய்வை நாம் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றே நான் கருதுகிறேன். உதாரணமாக, பல்வேறு வகைகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் மோசடிகளின் அளவு குறித்தோ அல்லது இந்திய அரசின் ஒவ்வொரு முக்கிய நிறுவனமும் எந்தவகையிலும் ரகசியம் வெளியே கசிந்துவிடாதபடிக்கு பாதுகாக்க பாஜக/ஆர் எஸ் எஸ் உடன் கூட்டாகச் செயல்படுவது குறித்தோ நான் வியப்படையவே இல்லை. ஏனெனில் அரசானது பெருமளவிற்கு உள்ளிருந்தே கைப்பற்றப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.

கசப்பான யதார்த்தங்கள்

இதுபற்றி மேலும் ஆழமான ஆய்விற்கு நாம் காத்திருக்கத்தான் வேண்டும். என்றாலும் ஒரு சில கசப்பான விஷயங்களை சொல்லியாக வேண்டும். முதலாவதாக, பாரதீய ஜனதா கட்சி உண்மையிலேயே ஒரு தேசிய கட்சியாக இப்போது உருவெடுத்திருக்கிறது. இந்த கட்டமைப்பின் நிலையான மையமாக மோடி-ஷா கூட்டணி இருக்கிறது.

இரண்டாவதாக, தனது சொந்த பிரிவின் நலன்களை, பெருநிறுவனங்களின் நலன்களை எல்லாம் மீறி மதச் சார்பின்மைக்காக கூட்டாகப் போராட வேண்டிய தேவை இருக்கும் நேரத்தில் இடதுசாரிகளைத் தவிர, வேறெந்த அரசியல் கட்சியுமே, காங்கிரஸ் உள்ளிட்டு, அதற்குத் தயாராக இல்லை. இத்தகைய அங்கீகரிப்பின் விளைவு என்னவெனில் இடதுசாரிகள் நம்பிக்கையோடு இணைந்து செயல்படுவதற்குரிய “மதசார்பற்ற கட்சிகள்’ என்ற எதுவுமே இல்லை என்பதுதான். அவர்கள் ஒவ்வொருவருக்குமே மதச்சார்பின்மை என்பது வசதிக்கேற்ற ஒரு விஷயம் மட்டுமே. இந்த விஷயத்தில் இடதுசாரிகள் மிகவும் முழுமையான வகையில் தனிமைப்பட்டுள்ளனர்.

மூன்றாவதாக, காங்கிரஸின் சரிவு என்பது உறுதியானது; அது மீண்டும் உயிர்பெற்று வர வேண்டுமெனில் மிகப்பெரும் மாற்றங்களை அது செய்ய வேண்டும். ஆனால் அதற்கான அறிகுறிகள் எதுவுமே கண்ணில் தென்படவில்லை.

நான்காவதாக, உத்திரப் பிரதேச மாநிலத்தில் சாதிய அரசியலின் இரண்டு மிகப்பெரும் அடையாளங்களாக இருக்கும் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் கூட்டு வலிமையை உடைத்தெறியும் அளவிற்கு மதரீதியான வெறிக்கூச்சல் மற்றும் சமூக நெறியாள்மை ஆகிய கூட்டணியின் அரசியல் வலுவாக உள்ளது என்பதையே உத்திரப் பிரதேச மாநில நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன. தொடர்ச்சியான சலுகைகளின் மூலம் சாதிய முரண்பாடுகளை பெருமளவிலான இந்து அமைப்பிற்குள்ளேயே கட்டுப்படுத்தி வைத்து விட வேண்டும் என்பதே காந்தியில் இருந்து ஆர் எஸ் எஸ் வரையிலானவர்களின் கனவாக இருந்து வந்துள்ளது. ஒரு வகையில் சொல்வதென்றால் மேல் மட்ட, அடிமட்ட சாதிகள் சகவாழ்வு வாழ்வதற்கு ஒரு நடு சாதிக்கான தீர்வுதான் அது. இந்த விஷயத்தில் குஜராத் மாநிலத்தில் இருந்து நாட்டின் வடகிழக்குப்பகுதி வரையில் ஆர் எஸ் எஸ் பெற்றிருக்கும் பல வெற்றிகளில் மிக சமீப காலத்திய வெற்றியாகவே உத்திரப் பிரதேச தேர்தல் முடிவுகள் அமைகின்றன. சாதிப் பிரச்சனை ஏதாவதொரு வகையில் இந்துத்துவா திட்டத்தை வீழ்த்தி விடும் என்ற நமது ஆழ்ந்த நம்பிக்கையை நாம் மீண்டும் ஆழமாக மறுபரிசீலனை செய்யவேண்டியது அவசியம்.

இறுதியாக, விடுதலை, சீரமைப்பு ஆகியவற்றுக்கான அரசியலுக்கான எந்தவொரு வாய்ப்புக்கும் தொலைதூர நோக்கிலிருந்து பார்க்கும்போது மேற்கு வங்கத்தில் இடதுசாரி நோக்கங்கொண்ட வெகுஜன வாக்குகளின் சரிவு, அவற்றில் பெரும்பங்கு பாஜக நோக்கித் திரும்பியிருக்கக் கூடும் என்ற கருத்தில் உள்ள உண்மை ஆகியவை 2019-ம் ஆண்டின் மிகவும் கவலை தரத்தக்க நிகழ்வாகவே அமைகிறது. தாராளவாத அரசியலின் கொடுமைகளும் ஏமாற்றுக்களும் இந்த உலகின் பாவப்பட்ட மக்களை எந்த அளவிற்கு திசை திருப்ப முடியும் என்பதற்கு இது முதல் முறை உதாரணமும் அல்ல; அவ்வாறு நடைபெற்ற முதல் இடமாகவும் மேற்கு வங்க மாநிலம் இருக்கவில்லை திர்ணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக போன்ற இழிசெயல்புரியும் அரசியல் சக்திகளின் மோதல்களுக்கு நடுவே சிக்கும்போது அன்றாட பொருளாயத அவலங்களை எதிர்கொள்ளவே தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கும் நிராதரவான, நம்பிக்கை இழந்து போன, துயரத்தில் மூழ்கிப் போன மக்கள் என்னதான் செய்வார்கள்? தாராளவாத அரசியலின் சிதிலங்களில் மிகவும் தனிமைப்பட்டிருக்கும் இடதுசாரிகள் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்கே போராட வேண்டியிருக்கும் என்று தேர்தலுக்கு முன்பாகவே நான் கூறியிருந்தேன். இப்போது தேர்தல் முடிவுகள் வந்தபிறகு, நிலைமை அதை விட மிகுந்த கவலைக்குரியதாகவே மாறியுள்ளது.

இடதுசாரிகளின் பங்கு

இவ்வாறு குறிப்பிட்ட நிலையில், இந்தியாவில் உள்ள இடதுசாரிகள் குறித்து மூன்று விஷயங்களை நான் வலியுறுத்த விரும்புகிறேன். ஒன்று வேறு எந்தவொரு கட்சியுடனும் ஒப்பிடமுடியாத வகையில் பரந்த அரசியல் அனுபவமும் ஆழ்ந்த ஸ்தாபனமும் அவர்களிடம் இருக்கிறது. இடதுசாரிகளின் பின்னடைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை சமூக ரீதியான இயக்கங்களும், அரசுமுறை சாரா அமைப்புகளும், அங்குமிங்குமாக செயல்பட்டு வரும் சிறு குழுக்களும் நிரப்பி விடக் கூடும் என்று யாரும் நினைத்தால் அத்தகைய ஒரு நிகழ்வு நடக்கவே நடக்காது. இரண்டாவதாக, ஏழைகளின், ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தின் பார்வையில் இருந்து தெளிவான நோக்கும், சமூகம் குறித்த முழுமையான புரிதலும் உள்ள ஒரே சக்தியாக இடதுசாரிகள் மட்டுமே உள்ளனர். அறிவுலகத்திலும் கலாபூர்வமான வாழ்க்கையிலும் இந்தியாவில் உள்ள இடதுசாரிகளின் இருப்பு மிகவும் அபரிமிதமான ஒன்றாகும். வேறு எந்தவொரு அரசியல் சக்தியும் இந்த விஷயத்தில் அதன் அருகில் கூட வரமுடியாது. மறுகட்டமைப்பைத் தொடங்குவதற்குத் தேவையான பேராற்றல் மிக்க துணிவு இப்போது அதற்குத் தேவைப்பட்ட போதிலும், தேவையான அடிப்படையான வள ஆதாரங்கள் இன்னமும் அதனிடம் இருக்கவே செய்கின்றன.

கடந்த ஐந்து ஆண்டுகளில்நடைபெற்ற அனைத்திற்கு பிறகு 2019தேர்தலின் முடிவுகள் பற்றி வியப்படைவதற்கு அடிப்படையில் எதுவுமில்லை; அடுத்த ஐந்து ஆண்டுகள் இதை விட மோசமாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் கூட நாம் வியப்படைய வேண்டிய அவசியமில்லை. நமது நாட்டின் விடுதலைக்கான போராட்டத்தைத் தொடங்கி வைத்த யுகம் இப்போது முடிவடைந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. இருந்தாலும், மிக விரிவான வகையில் சேதமாகிவிட்ட ஒரு நாட்டையே நமது இளைஞர்கள் இப்போது பெறவிருக்கிறார்கள். அதை மீண்டும் புனரமைப்பதைத் தவிர வேறெந்த வழியும் அவர்களுக்கு இல்லை; அதையும் கூட அவர்கள் கீழே இருந்துதான் தொடங்க வேண்டியிருக்கிறது.

நன்றி: ஃப்ரண்ட்லைன்

அடுத்த இதழில்: இந்துத்வாவின் தாக்குதல்கள்

“வாழ வைத்தது இந்த செங்கொடிதான்!”

நவம்பர் 20 அன்று 86 வயதை எட்டிய தோழர் கோ.வீரய்யன் தமிழக விவசாய சங்கத்தின் முன்னோடி தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும் ஆவார். 1968 டிசம்பர் 25 அன்று இரவில் கீழத்தஞ்சையில் கீழ்வெண்மணி கிராமத்தில் ராமய்யாவின் குடிசையில் ஒளிந்திருந்த பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என 44 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் மனிதாபிமானம் மிக்க அனைவரின் நெஞ்சங்களையும் உலுக்கி, உருக்கிய கோர சம்பவம் ஆகும். தமிழகத்தின் மீது ஆறாக் கறையை படிய வைத்த  இந்தச் சம்பவம் குறித்த தன் அனுபவத்தை தோழர் கோ.வீரய்யன் நம்முடம் பகிர்ந்து கொள்கிறார்:

கோ. வீரய்யன்:  வெண்மணியைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் அது மிகப்பெரிய தொரு கோர நிகழ்ச்சி. மனிதன் என்ற பெயரில் இருந்த மனித மிருகங்களால் நிறைவேற்றப்பட்ட ஒன்று. இது மனிதர்களால் செய்யக் கூடிய ஒரு செயலல்ல.  மிராசுதார்கள் கூலித் தொழிலாளிகளிடம் வெச்ச கோரிக்கை ஒண்ணே ஒண்ணுதான். நீங்க கேக்கற கூலியைத் தர்றோம். அதுக்குப் பதிலா நீங்க செவப்புக் கொடியை எறக்கிட்டு, நெல் உற்பத்தியாளர் சங்கக் கொடியை ஏத்துங்க என்பதுதான். அதுக்கு அந்த ஜனங்க  இதைத்தான் பதிலாச் சொன்னாங்க: “  பண்ணை அடிமைகளா இருந்த எங்களை விடுவிச்சி, சுதந்திர மனிதர்களா நடமாட வெச்ச, வாய் பேச முடியாம இருந்த எங்களை உரிமைகளுக்காக பேச வெச்ச, நடக்க முடியாம இருந்த எங்களை நடக்க வெச்ச, துண்டை இடுப்பிலும், வேட்டியை தலையிலும் கட்டிட்டு இருந்த எங்களை வேட்டியை இடுப்பிலும், துண்டை தோளிலும் போட வெச்சி எங்களை வாழவெச்சது இந்தச் செங்கொடிதான். அதை எக்காரணம் கொண்டும் நாங்க கீழே இறக்க மாட்டோம்.  அவங்களுக்கு நல்லாவே தெரியும். இவங்க ஏமாத்துறாங்கன்னு. கொடியை கீழே எறக்கினாலும் சொன்ன மாதிரி கூலி ஒண்ணும் தரமாட்டார்கள் என்பதை அனுபவத்திலிருந்தே அந்த மக்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தார்கள்.

அதுக்கு முன்னால (தஞ்சை) மாவட்டம் முழுவதிலும் தொடர்ந்து கூலிக்கான போராட்டம் நடந்து கொண்டிருந்தது. 1967 நவம்பரில் மன்னார்குடியில் ஒரு முத்தரப்பு மாநாடு நடந்தது. அதில் ஒரு முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி மிராசுதாருக்கும் கூலித்தொழிலாளிக்கும் பிரச்சனை ஏற்பட்டால் அரசு நிர்வாகம் தலையிட்டு அதைப் பேசித் தீர்க்க வேண்டும். அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் கிசான் தாசில்தார் என்ற பதவி. இது அதற்கு முன்னால் இருந்ததில்லை. அதே மாதிரி உருவானதுதான் கிசான் போலீஸ். இந்த அமைப்புகள் அரசு நிர்வாகத்தின் ஒரு பகுதியாக கிசான் என்ற பெயரில் அமைந்திருந்தாலும் கூட அவை கூலித் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருக்கவில்லை. மிராசுதார்களுக்கு ஆதரவாகவே இருந்தன.

அதே போலத்தான் வெண்மணியிலும் பிரச்சனை இருந்தது. ஒரு கலம் நெல் என்பது 48 படி. இப்படி ஒரு கலம் அறுவடை செய்வதற்கு கூலியாக 6 படி வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கை. அதே மாவட்டத்தில்  மன்னார்குடி தாலுக்கா பூந்தாழங்குடிக்குப் பக்கத்தில் கருப்பூர் என்று ஒரு கிராமத்தில் இருந்த மிராசுதார்கள் அனைவரும் முஸ்லீம்கள். அந்த கிராமமே முஸ்லீம்களின் கிராமமாக  இருந்தது. இவர்களுக்கு கூத்தாநல்லூரில் இருந்தவர்கள் உறவினர்கள். பலர் அங்கிருந்து வந்தவர்களும் கூட. இவர்களின் பண்ணைகளுக்கு பெயர் எதுவும் கிடையாது. நெம்பர்தான். ஒண்ணாம் நெம்பர் பண்ணை; ரெண்டாம் நெம்பர் பண்ணை இப்படி. இதில் கருப்பூர் ஆறாம் நெம்பர் பண்ணையில் அறுவடை. அந்த மிராசுதார் கூலித் தொழிலாளிகள் கேட்ட 6 படி நெல்லை கூலியா கொடுத்திட்டாரு. மறுநாள் நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தப்பு அடித்தபடி வர, அடியாட்கள் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஆண், பெண்கள் எல்லோரையும் அடித்து கரையேற்றினார்கள். கண்ணில் பட்ட செங்கொடிகளை எல்லாம் வெட்டிச் சாய்த்தார்கள். இப்படி செய்து கொண்டிருக்கும்போதே, பூந்தாழங்குடி கிராமத்துல இருந்த செங்கொடியை வெட்டி வீழ்த்த வந்தபோது, அங்கிருந்த மக்களெல்லாம் ஒண்ணா சேர்ந்து அதைத் தடுத்தாங்க. அப்போ அங்கிருந்த இன்ஸ்பெக்டர் பாண்டியன் என்பவர் துப்பாக்கியால் சுட்டதில்  அந்த கிராமத்தைச் சேர்ந்த பக்கிரி என்பவர் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களில் முதல் களப்பலியானவர் பூந்தாழங்குடி பக்கிரி. இதில் வரலாற்றுச் சிறப்பு என்னவென்றால் நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்தபிறகு காங்கிரஸ் ஆட்சியில் இத்தகைய போராட்டத்தில்  களப்பலியானவர் ஆதனூர் நடேசன். அவரும் செங்கொடி இயக்கத்தைச் சேர்ந்தவர்தான். அவங்க மோசமானவங்கன்னு சொல்லி 1967-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதே போன்ற தாக்குதலில் தோழர் பக்கிரி களப்பலி ஆனார். பின்னர் ஆட்சிக்கு வந்த அஇஅதிமுக ஆட்சியிலும் களப்பலியானவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியினர்தான். அதுவும் கூட பூந்தாழங்குடியில்தான். இது ஒரு வரலாற்று நிகழ்வு.

1967 நவம்பரில் நடந்த பூந்தாழங்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து நாங்கூர் பழனிச்சாமி தலைமையில் நாகப்பட்டினத்தில் பொதுக்கூட்டம். அதில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிய சிக்கல் பக்கிரிசாமி இரவு 10-11 மணிக்கு சிக்கல் கடைத்தெருவில் வைத்தே வெட்டிக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்துதான் வெண்மணி வருகிறது. அங்கும்கூட கூலித் தொழிலாளர்கள் ஆறுபடி கூலிதான் கேட்டார்கள். வேறு எதுவும் கேட்கவில்லை. நிலம் வேண்டுமென்றோ, வீடு வேண்டுமென்றோ அவர்கள் கேட்கவில்லை. இப்போ ஐந்தே கால் படி, ஐந்தரை படின்னு கூலி இருக்கு. அதை ப்ளாட் ரேட்-ஆ ஆறு படியா குடுங்க. உள்ளூர்காரங்களுக்கு வேலை குடுங்க. இதுதான் அவங்க கேட்டது. கூலிப் பிரச்சனை எழுந்த உடனேயே மிராசுதார்ங்க ஜாதிப் பிரச்சனையை கொண்டு வந்தாங்க. மத்த ஜாதி குடியானவங்க கிட்ட தலித்துங்க தான் இந்த மாதிரி கூலியை உசத்தி கேக்கறாங்க. அவங்கள அடக்கி வைக்கணும்னு தூண்டி விடப் பாத்தாங்க. அதே மாதிரி வெளியூர்ல இருந்து ஆளுங்கள கொண்டு வந்தும் இதை உடைக்கப் பார்த்தாங்க. உள்ளூர் ஆளுங்கள பட்டினி போட்டாங்க. இவங்கள பட்டினி போட்டே பணிய வெச்சிட முடியும்ங்கிறதுதான் மிராசுதார்களோட நெனப்பு. இதையெல்லாம் மீறித்தான் அந்த மக்கள் போராடிக் கொண்டிருந்தாங்க… இதுல என்ன விசேஷம்னா… ஏன் வெண்மணியை குறிவெச்சாங்கன்னா… நெல் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கோபால கிருஷ்ண நாயுடு…. அவருடைய சொந்த ஊர் இரிஞ்சூர். அங்கு போகணும்னா வெண்மணியைத் தாண்டித்தான் போகணும். அதனால இந்த ஊரை (வெண்மணியை) நம்ம கையில் வெச்சிருந்தாதான் நமக்கு பாதுகாப்பு என்கிறது அவர் எண்ணம். அதுக்கு முன்னால் டிராக்டர்ல அடியாட்கள் வருவாங்க… தலித் மக்கள் இருக்கும் குடிசைகளை எரித்து நாசமாக்குவாங்க… இப்படி பல ஊர்ல நடந்தது.

கடைசியா வெண்மணில கட்சிக் கிளைச் செயலாளர் அந்த கிராமத்துல ஒரு டீக்கடை வெச்சு நடத்திட்டு இருந்தார். அவர்கிட்ட கோபால கிருஷ்ண நாயுடுவோட அடியாளுங்க போயி, “அய்யாவிடம் 250 ரூபா கடன் வாங்கியிருக்க இல்ல. அதைத் திருப்பிக் குடு” ன்னு கேட்டிருக்காங்க. அவர் பதிலுக்கு “ நான் கடன் எதுவும் வாங்கலியே. நீங்க எங்கிட்ட தப்பா வந்து கேக்கறீங்க” என்று சொல்லியிருக்கிறார். அதுக்கு அந்த அடியாளுங்க : நல்லா யோசிச்சு வை. சாயந்திரம் வர்றோம். அப்போ அய்யா கிட்ட வாங்கின கடனை வட்டியோட குடுக்கணும். இல்லேன்னா நடக்கிறதே வேற”ன்னு சொல்லிட்டு போயிட்டாங்க. அவங்க மீண்டும் சாயந்திரம் வந்தாங்க.. கடைக்காரர் “நான் கடன் எதுவும் வாங்கவில்லையே. அப்புறம் எப்படி கொடுப்பது?” என்றபோது , அவரை கட்டிப் போட்டு தூக்கிச் சென்று பக்கத்து குடியானவத் தெருவுல ஒரு வீட்டில கொண்டு அறையில் பூட்டி வைத்துவிட்டுச் சென்று விட்டாங்க.

இதைக் கேள்விப்பட்டவுடனே ஊர்ஜன்ங்க எல்லாம் திரண்டெழுந்து அந்த வீட்டுக்கு முன்னால திரண்டுட்டாங்க. ஜனங்க  மொத்தமா திரண்டு வந்ததைப் பார்த்த அந்த வீட்டுப் பெண்கள் அவரை அடைத்து வைத்திருந்த அறையில் இருந்து வெளியே அழைத்து கொல்லைப் புறமாக வீட்டுக்குப் போய் விடும்படி சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்கள். பின்பு வாசலுக்கு வந்து தங்கள் வீட்டில் யாரையும் அடைத்து வைத்திருக்கவில்லை என்றும் வேண்டுமானால் நீங்களே உள்ளே போய் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கதவைத் திறந்து விட ஊர் மக்கள்  வீட்டில் யாரையும் காணாமல் திரும்பி விட்டனர்.

இந்தச் செய்தி கோபால கிருஷ்ண நாயுடுவுக்குப் போகிறது. நாம அடைச்சி வெச்சிருந்த ஆளை இவங்க மீட்டுக் கொண்டுட்டு போறதா? என்று அவருக்குக் கோபம். உடனே டிராக்டர்ல அடியாளுங்க ஏறினாங்க. கூடவே கத்தி, வேல்கம்பு, பெட்ரோல், தீப்பெட்டி எல்லாம் எடுத்துட்டு வெண்மணியை நோக்கி வரும்போதே வழியெல்லாம் வீடுகளுக்கு தீவைத்துக் கொண்டே வந்தாங்க. தெருவில வரச்சே 26 வீடுங்க தீப்பத்தி எரியுது. இதைப் பார்த்த உடனே 19பெண்கள், 19 குழந்தைகள், 6 முதியவர்கள் எல்லாம் ராமய்யாவோட வீட்ல போய் ஒளிஞ்சிகிட்டாங்க. வந்த அடியாளுங்க கண்மண் தெரியாம சுட்டுகிட்டே வந்தாங்க. மொத்தம் 17 பேருக்கு குண்டுக் காயம். ஒவ்வொரு உடம்பிலேயும் 12 குண்டு, 17 குண்டு, 23 குண்டுன்னு இருந்தது. இப்படி குண்டுக்காயம் பட்டவங்க ஓடி ஒளிஞ்சிக்க முயற்சித்தபோது நல்லா வெளஞ்சிருந்த வயல்ல நினைவில்லாம உழுந்து கிடந்தாங்க. மறுநாள் காலைல விடிஞ்ச பெறகுதான் அவங்களைத் தேடிக் கண்டெடுத்து நாகப்பட்டினம் பெரியாஸ்பத்திரிக்கு எடுத்துட்டுப் போனோம்.

இங்க ராமய்யா குடிசையில ஒளிஞ்சிக்க போனவங்க தங்களை காப்பாத்திக்கிறதா நெனச்சி உள்ளே தாழ்ப்பா போட்டுகிட்டாங்க. நமக்கு பாதிப்பு ஏதும் வராதுன்னு அவங்க நம்பிக்கை. வீடுங்களை வரிசையா கொளுத்திட்டு வந்தவனுகளுக்கு இது வசதியா போச்சு. அந்த வீட்டு வெளி தாழ்ப்பாளை போட்டுட்டு அந்த வீட்டு மேல பெட்ரோலை ஊத்தி கொளுத்தி உட்டுட்டானுங்க… உள்ளே இருந்த 44 பேரும் கதறி கூச்சல் போடறாங்க. ஊரே நிசப்தமா இருக்கு. அதுல ஒரு தாய் தன்னோட்ட குழந்தைய மார்போட அணைச்சுகிட்டே கருகி செத்திருந்தா. மற்றொரு தாய் தன் குழந்தையாவது பிழைக்கட்டும்னு குழந்தையை வெளியே வீசி எரிஞ்சிருக்கா… வெளியே இருந்த அடியாளுங்க அந்தக் குழந்தைய ரெண்டா வெட்டி திரும்பவும் எரியற தீயில போட்டிருக்கானுங்க…  ராத்திரி 11 மணிக்கு ஆரம்பிச்சு விடிகாலை 3 மணிக்கு இதுவெல்லாம் அடங்கி முடிஞ்சுது.  அங்கிருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில இருக்கிற போலீஸ் காலைல 5 மணிக்கு மேலதான் ஊருக்குள்ள வந்தது. அப்போ கீழ்வேளூர்ல இருந்த இன்ஸ்பெக்டர் பரமசாமி தான் இந்த கேஸ்-ஐ எழுதினவர். 26 வீடுங்க தீப்பிடிச்சு எரிஞ்சதுன்னு எழுதியவர் …. வீடு தீப்பற்றி எரிந்தது…. வீடு தீப்பற்றி எரிந்தது…அப்படீன்னு தான் எழுதினாரே தவிர தீவைக்கப்பட்டதுன்னு எழுதல. இப்படித்தான் அப்போ போலீஸ் நடந்துகிட்டது.

அப்போ போலீஸ் லாரில்லாம் நீல கலர்ல இருக்கும். அதேபோல இந்த அடியாட்கள் வந்ததும் நீல கலர் லாரியிலதான். ஜனங்க  போலீஸ் லாரிதான் நம்ம பாதுகாப்புக்கு வருதுன்னு நெனச்சிட்டு இருந்தாங்க… போலீஸ் லாரி மாதிரி வேஷத்துல அடியாளுங்க வர்றாங்கன்னு அவங்களுக்குத் தெரியல…  காலைல 5 மணிக்கு போலீஸ் வந்த போது ஊர்ல இருக்கற வீடு பூரா தீப்பிடிச்சி எரிஞ்சி சாம்பலா கெடக்கு.  பின்னால வழக்கு தொடுத்தாங்க… கீழ்க்கோர்ட்ல 10 பேருக்கு தண்டனை கொடுத்தாங்க. அவங்க மேல உயர்நீதிமன்றத்துக்கு அப்பீல் பண்ணாங்க. உயர்நீதிமன்றமோ இந்த வழக்குல சம்பந்தப்பட்டவங்க எல்லாம் பெரிய மிராசுதார்கள். அவங்க இவ்ளோ தூரம் எறங்கி வந்து அடிக்கிறது, கொளுத்தறது மாதிரியான வேலையெல்லாம் செய்ய மாட்டாங்க… வேணும்னா ஆளுங்கள வெச்சு ஏதாவது செய்யலாமே தவிர நேரடியா இந்த மாதிரி செய்திருக்க வாய்ப்பில்லைன்னு சொல்லி அவங்க  எல்லோரையுமே விடுதலை செஞ்சிட்டாங்க… இப்படி முடிஞ்சது அந்த வழக்கு…

அப்புறம் இதை கொலைவழக்கா போடறதா? நீதிவிசாரணை வைப்பதா? என்ற சர்ச்சை எழும்பியது. அப்போ கல்யாணசுந்தரம் கூட நீதிவிசாரணை வேணும்னுதான் கேட்டார். ஆனால் பி.ஆர்.தான் ( தோழர் பி. ராமமூர்த்தி) தெளிவா சொல்லிட்டார். நடந்தது பூராவும்  கொலை. எனவே கொலை வழக்காத்தான் பதிவு பண்ணனும்னு. பின்னால் கணபதியாப் பிள்ளை என்பவரை வைத்து ஒரு கமிஷனை வைத்து ஊர்ல சாட்சி விசாரணை செஞ்சாங்க.. அதுல இரண்டு பிரதான வரிகள் ரொம்ப முக்கியமானது. உள்ளூர் ஆளுங்களுக்கு வேலை; ஒரேமாதிரியான கூலி என்பதைக் கேட்டது முழுக்க முழுக்க நியாயமானது. ஒண்ணு ஒரே ஊர்ல பலவிதமான கூலி; ரெண்டு வெளியூர்ல இருந்து ஆட்களைக் கொண்டுவந்து இறக்குவது இந்த இரண்டும்தான் பிரச்சனைக்கு அடிப்படையான காரணம்னு அவர் சொல்லியிருந்தாரு… அவங்களோட கோரிக்கை முழுக்க முழுக்க நியாயமானது என்று கணபதியாப் பிள்ளை கமிஷன் கூறியிருந்தது.

26ஆம் தேதி காலைல காணாமல் போன ஆட்களை தேடி வயல்ல இருந்து அவர்களின் குண்டுகள் பாய்ந்த உடம்புகளை எடுத்து வந்தோம். அப்போது கொச்சியில் கட்சியின் அகில இந்திய மாநாடு நடந்து கொண்டு இருந்த நேரம். என்றாலும் தகவல் கிடைத்ததும் பி.ஆர்., மாவட்ட செயலாளர் ஞான சம்பந்தம், தாலுக்கா செயலாளர் மீனாட்சி சுந்தரம் எல்லோரும் வந்து சேர்ந்தாங்க. அந்தப் பகுதியில் அப்போது 144 தடையுத்தரவு போடப்பட்டு இருந்ததால டிசம்பர் 30 ஆம் தேதியன்று திருவாரூரில் இந்தச் சம்பவத்தைக்  கண்டித்து கண்டனக் கூட்டம் நடைபெறும் என்று பி. ஆர். அறிக்கை விட்டார்.  30ஆம் தேதியன்று காலையில் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடந்தது. அதில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. 44 உயிர்கள் கொடூரமாக எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அந்த மனையிடத்தை  விலைக்கு வாங்கி அந்த இடத்தில்  தியாகிகள் நினைவுச் சின்னம் ஒன்றை எழுப்புவது; 2. முடிந்தால் அந்த கிராமத்தையே விலைக்கு வாங்கி அதில் வீடுகளை கட்டி மீண்டும் அவர்களை குடியமர்த்துவது; 3. மிராசுதார்களுக்கு எதிரான போராட்டத்தை  அனைத்து வழிகளிலும் தொடர்வது: 4. ஜனவரி 16ஆம் தேதிக்குள் முத்தரப்பு மாநாட்டைக் கூட்டி சம்பா அறுவடைக்கான கூலியை தீர்மானிக்க வேண்டும். இல்லையெனில் ஜனவரி 17லிருந்து வயல் கரைகளில் இருந்து போராட்டம் தொடரும். 1967 டிசம்பர் 30ஆம் தேதி மாலை திருவாரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்  இந்த நான்கு தீர்மானங்களை  விளக்கி நான் பேசினேன்.

இந்த சம்பவத்தில் கிடைத்த விளைவு என்பது தேவையான நேரங்களில் தாக்குதலை எதிர்த்து நிற்கவேண்டிய அவசியம் உறுதிப்படுத்தப்பட்டது. உற்பத்தியாளர்கள் சங்கம் மொத்தமாக காலியானது. நாயுடு ஏற்படுத்தியிருந்த மிராசுதார்களின் ஒற்றுமையையும் காணாமலே போனது. மக்கள் மத்தியிலும் அவர்களின் தீய நடவடிக்கைகள் அனைத்தையும் அம்பலப்படுத்தியே வந்துள்ளோம்.

கேட்டு எழுதியவர்:  வீ.பா.கணேசன்

சோசலிசத்தை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு உடன் நிற்போம் …

– சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர், சி.பி.ஐ(எம்)

நேர்காணல்: இரா.சிந்தன்

கேள்வி: உலகத்தில் பல நாடுகளில் வலதுசாரித் திருப்பம் நிகழ்ந்துவருகிறது… இந்த சூழலில் நடைபெற்று முடிந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு, சோசலிசத்தின் புதிய கட்டத்திற்குள் நுழைவதாக அறிவித்திருக்கிறது. இதனை எப்படிப் பார்க்கிறீர்கள்?

முதலாளித்துவ உலகில் ஒரு வலதுசாரித் திருப்பம் நிகழ்ந்துவருகிறது. பொருளாதாரம் நெருக்கடியில் தள்ளப்படும்போதெல்லாம், அரசியலில் திருப்பம் நேர்கிறது. அது வலதுசாரித் திருப்பமாக அமைவதை தவிர்க்கவியலாததில்லை. இடதுசாரித் திருப்பமாக மாற்ற முடியும். அது யார் வலிமையாக இருக்கிறார்கள்? என்பதையும், இடது வலது சக்திகளுக்கிடையிலான முரண் தொடர்பு எப்படி அமைந்துள்ளது என்பதையும் பொறுத்தது அது. பொருளாதார நெருக்கடியால் மக்களுக்கு உருவாகியிருக்கிற வெறுப்புணர்வை அனுகூலமாக பயன்படுத்தி முன்னேற யாரால் முடிகிறதென்பதைப் பொறுத்தது. இடதுசாரிகள் வலிமையாக உள்ள இடங்களில் இடதுசாரிகள் முன்னேறுகிறோம். இடதுசாரிகளுக்கு வலிமை இல்லாதவிடங்களில் வலதுசாரிகள் பலனடைகிறார்கள். வலது போக்கும், இடதுபோக்கும் தொடர்ந்து மோதிக் கொண்டிருக்கின்றன.

1930 ஆம் ஆண்டு, உலகப் பொருளாதார நெருக்கடியின்போது வலதுசாரித் திருப்பம் அதன் ஒரு வெளிப்பாடாக அமைந்ததைப் பார்த்தோம். அது ஜெர்மன், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் பாசிசமாக மாறியது. இடதுசாரிகள் முனைந்து அதனைத் தடுக்க முயல்கிறபோது, தடுக்கவும் முடிந்துள்ளது. இப்போதும் கூட லத்தின் அமெரிக்க நாடுகள் உள்ளிட்டு பல இடங்களில் வலதுசாரிகள் தடுக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் ஐரோப்பிய நாடுகளில், இடதுசாரிகள் வலுக் குறைவாக உள்ள நாடுகளில் வலதுசாரித் திருப்பம் நிகழ்ந்துள்ளது. அது முக்கியமானது. ஆனால் அடிப்படையாக நாம்,  இடது – வலது சக்திகளுக்கிடையே நடந்துவரும் போராட்டத்தை கவனிக்க வேண்டும். இந்தப் போராட்டத்தில் சில நாடுகளில் இடது சக்திகளும், சிலவற்றில் வலது சக்திகளும் முன்னேறுகிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் வலதுசாரி சக்திகள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

இந்தக் காலகட்டத்தில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடைபெறுவது முக்கியமானது. அவர்கள் சோசலிசத்தின் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைவதாக தெரிவித்திருப்பது சரியானதே. 1970 சீனா என்ன திட்டமிட்டது. தோழர் டெங் ஜியோ பிங்,  தோழர் இ.எம்.எஸ் -ன் நண்பர். மார்க்சிஸ்ட் கட்சிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான உறவை புதுப்பிக்கும் ஒப்பந்தத்தில் அவர்கள் இருவருமே கையெழுத்திட்டிருந்தனர். 1986 ஆம் ஆண்டு சீனாவுக்கு தோழர் இ.எம்.எஸ் உடன் பயணம் செய்தபோது, புகழ்பெற்ற தலைவர் டெங் சியோ பிங்கினைச் சந்தித்தோம்.அவரிடம் சீனாவில் நடைபெற்றுவரும் மாற்றங்களை புரிந்துகொள்வதற்காக கேள்வி எழுப்பினேன். அவர் சீன வரைபடத்தை எடுத்துவரச் செய்தார். அதில் தெற்கு பகுதியைச் சுட்டிக்காட்டி 1980 ஆம் ஆண்டில் இந்தப் பகுதியை வளர்த்தெடுப்போம், 1990 ஆம் ஆண்டில் கிழக்குப் பகுதி, 2000 ஆம் ஆண்டுக்குள் வடக்கு சீனம். 2020 ஆம் ஆண்டுக்குள் மேற்கு சீனம். பின்னர் நாங்கள் மத்திய சீனத்தையும், ஒட்டுமொத்த சீனத்தையும் வளர்த்தெடுப்போம் என விளக்கினார். அப்படியான திட்டமிட்ட பாதையிலிருந்து விலகாமல் சீனம் பயணிக்கிறது. மேலும், சோசலிசத்தின் மேன்மையை உயர்த்திப்பிடிக்கும் வகையில் ஒட்டுமொத்த தேசத்தையும் அடுத்தகட்டத்திற்கு வளர்த்தெடுக்கும் பாதையில் அவர்கள் பயணிக்கின்றனர்.

சமனற்ற வளர்ச்சிக்கும், மக்களின் தேவைகள் அதிகரிப்புக்கும் இடையிலான முரண்பாடு, முக்கியமானதாக மாறியிருப்பதாக ஜீ ஜின்பிங் குறிப்பிட்டுள்ளாரே ?
சீனா ஏன் தனது சீர்திருத்தங்களைத் தொடங்கியது? … சீனத்தில் நிலவிவந்த முக்கிய முரண்பாடு – மக்களின் விருப்பங்கள் அதிகரித்துவருவதும் – அதனை நிறைவேற்றுவதில் சோசலிசத்திற்கு இருந்த போதாமையும் ஆகும். மக்களின் தேவைகளும், விருப்பங்களும் சோசலிசத்தின் காரணமாகவே அதிகரிக்கின்றன. இந்த முரண்பாட்டை சரியாகவே சீன கம்யூனிஸ்ட் கட்சி கணித்தது. பொருளாதார, சமூக கட்டமைப்பை மக்கள் விருப்பங்களை நிறைவேற்றுகிற வகையில் மாற்றியமைக்க வேண்டும். இந்த முரண்பாட்டிற்கு தீர்வு காணாவிட்டால் சோசலிசமே நீடித்திருக்க முடியாது. எனவே மேற்கு நாடுகளின் மூலதனத்தையும், தொழில்நுட்பத்தையும் அனுமதிப்பதன் மூலம், தனது இலக்கை எட்டுவதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி முயன்றது. கம்யூனிஸ்டுகளின் விருப்பமும் இலக்கும் இதுவாக இருக்கலாம். முதலாளித்துவத்தின் மூலதனம், சீனாவில் சோசலிசத்தை வலிமையாக்குவதற்காக வருவதில்லை. அது சோசலிசத்தை சிதைக்க முயற்சிக்கும். எனவே அந்த முரண்பாட்டில் இருந்துதான் சீர்திருத்த நடவடிக்கைகளும் தொடங்குகிறது. இந்த முரணும், மோதலும் சீர்திருத்தத்தில் இருந்து பிரிக்க முடியாதவை.

ஹூ ஜிந்தாவோ மற்றும் ஜீ ஜின்பிங் ஆகியோர் சொல்வது சரிதான்.  (உலகமயத்திற்கு சாளரத்தைத் திறக்கும்போது) மூன்று முக்கியமான சிக்கல்கள் எழுகின்றன. மக்களுக்கிடையிலான, பிராந்தியங்களுக்கு இடையிலான சமனற்ற தன்மை உருவாகுகிறது. அந்த இரண்டுமே சோசலிசத்திற்கு பகைமையானவை. இரண்டாவது நீங்கள் சாளரத்தைத் திறக்கும்போது அங்கே எல்லாமே வரும் என்பதை மறந்துவிடாதீர்கள். நல்லவைகளோடு சேர்த்து கொசுக்களும், டெங்கு, சிக்கன் குனியாவும் வரும். அப்படி வந்து சேர்ந்துள்ள ஒரு சிக்கல் ஊழல். மேற்சொன்ன மூன்று சிக்கல்களையும் அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சி உணர்ந்துள்ளது. சீர்திருத்தங்களைப் பயன்படுத்தி சோசலிசத்தை வலுப்படுத்த முயல்கிறது. ஆனால் முதலாளித்துவ சக்திகள் பலவீனப்படுத்த விரும்புகின்றனர்.

சமூக ஏற்றத்தாழ்வு, பிராந்திய ஏற்றத்தாழ்வு மற்றும் ஊழல் ஆகிய சிக்கல்களை  சீன கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்து போராடிவருகிறது. இந்தப் போராட்டத்தில் யார் வெற்றியடைவார்கள்? … இந்த மாநாட்டில் கூட ஜீ ஜின்பிங் பேசும்போது மார்க்சிய – லெனினிய தத்துவம், மாசேதுங் சிந்தனைகள், டெங் ஜியோ பிங் கொள்கைகள் மற்றும் நான்கு முக்கியக் கோட்பாடுகள் உள்ளிட்டவை பற்றி பேசியுள்ளார். இந்தப் போராட்டத்தில் யார் வெற்றியடைவார்கள் என்ற ஊகத்தைப் பற்றி நான் பேசவில்லை. மார்க்சியம் என்பது ஜோதிடம் அல்ல. எனது விருப்பம் அங்கே சோசலிசம் வலுப்படவேண்டும் என்பதுதான். நாம் சோசலிசத்தை வலுப்படுத்த நடக்கும் முயற்சிகளுக்கு உடன் நிற்போம்

சோசலிசத்திற்காக இளைஞர்கள் போராட வேண்டும்: சுதந்திர போராட்ட வீரர் என்.சங்கரய்யா

என்.சங்கரய்யா

பேட்டி: வீ.பா.கணேசன்

கேள்வி : இந்தியா விடுதலை பெறுவதற்கு ஒரு நாள் முன்புதான் சிறை யில் இருந்து விடுதலை பெற்றீர்கள். அன்று இந்தியாவின் எதிர்காலம் பற்றி உங்கள் எண்ணம் என்னவாக இருந்தது?

என்.எஸ்.: மதுரை சதிவழக்கு போட்டு ஒரு வருடம் சிறையில் இருந்தோம். 1947 ஆகஸ்ட் 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு நாங்கள் விடுதலை செய்யப்பட்டோம். அந்த வழக்கில் பி. ராமமூர்த் திக்கு அடுத்து நான் இரண்டாவது குற்றவாளி. கே.டி.கே. தங்கமணி உட்பட 100க்கும் மேற்பட்ட தோழர்கள் அதில் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி மாலை 6 மணிக்கு சிறைச்சாலைக்கு வந்து, இந்த வழக்கு காவல்துறையினரால் இட்டுக் கட்டப்பட்ட வழக்கு என்று தீர்ப்பளிக்கிறார். நாங்கள் விடு தலையாகி வெளியே வருகிறோம்.

மதுரை சிறைச்சாலையில் இருந்து பொதுக் கூட்டம் நடந்த திலகர் சதுக்கம் வரையில் ஒரு பிரம்மாண்டமான ஊர்வலம் நடைபெற்றது.

நீங்கள் கேட்ட கேள்வி குறித்து சிறையிலேயே விவாதித்திருக்கிறோம். இந்தியாவின் சுதந்திரம் முழுமையடைய வேண்டுமென்றால் தொழிலாளி கள்- விவசாயிகள், – சாதாரண பொதுமக்கள் ஆகியோரு டைய ஜனநாயக சுதந்திரத்திற்கு முழுப் பாது காப்பு இருக்க வேண்டும். அதுதான் இந்திய சுதந்திரத்தின் அடிப்படையாக இருக்க முடியும் என்பதுதான் எங்களுடைய ஆழமான கருத்தாக இருந்தது. அதற்காகத்தான் போராடினோம். இனி மேற்கொண்டு போராடி அதை ஒரு ஜனநாயக இந்தியாவாக மாற்றலாம் என்று நினைத்தோம். அதையே அந்தக் கூட்டத்திலும் எங்கள் எண்ணமாக வெளியிட்டோம். இந்தியா வின் சுதந்திரத்தை வலுப்படுத்த வேண்டும்; இந்திய மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற் கான நிலைமையை உருவாக்க வேண்டும்; அதற் காகப் போராடுவதற்குத் தயாராக இருக்க வேண் டும் என்று அப்போது நாங்கள் தொழிலாளி களிடம் கூறினோம்.

கேள்வி: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் விடு தலைப் போராட்ட வீரர்களுக்கு இடையே எத்தகைய ஒற்றுமை – வேற்றுமைகள் இருந்தன?

என்.எஸ்.: வேலூர் ஜெயிலில் காங்கிரஸ் தலைவர் களும் (காமராஜர், பட்டாபி சீத்தாரமய்யா, அப்துல் ரகுமான், அன்னபூர்ணையா) நாங்களும் இருந்தோம். அந்த நேரத்தில் சோவியத் யூனியன் மீது `ஹிட்லரின் ராணுவம் படையெடுத்தது. அது தங்களுக்குச் சாதகமான நிலைமையாக இந்தியா விற்கு இருந்தது என அவர்கள் நினைத்தார்கள். இரண்டாவது உலக யுத்தத்தைப் பற்றி பெரிய தொரு விவாதம் நடந்து கொண்டிருந்தது. நாங் கள் அவர்களோடு ஒத்துழைக்கவில்லை என்று சொல்லி, நமக்கெதிராக ஜெயிலிலேயே ஆர்ப் பாட்டம் செய்தார்கள். அதிலுள்ள சிலரால் ஒரு கம்யூனிஸ்ட் எதிர்ப்புணர்வை உருவாக்குவதற் கான முயற்சியும் செய்யப்பட்டது.
ஆகவே, காங்கிரஸா? கம்யூனிஸ்டா? என்பது தான் முன்னே வந்தது. காங்கிரஸ் பாதையா? கம்யூனிஸ்ட் பாதையா? நாம் வலுவான அரசியல் எதிரியாக வருவோம் என்று அவர்கள் நினைத் தார்கள்.

சிறுகடைக்காரர்கள், வக்கீல்கள், டாக்டர்கள் நம்மோடு நல்ல நட்புறவோடுதான் பழகினார்கள். அது பிற்காலத்தில் பெரிய அளவிற்கு உதவி செய்தது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் நமது தோழர்கள் 10-12 பேர் இருந்தனர். 1945 வரைக்கும் இருந்தனர். அப்போது ஒவ்வொரு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத் திலேயும் நமது தோழர்கள் மாற்றுப் பாதையை முன்வைத்தனர். அதாவது மகாத்மா காந்தி தனிநபர் சத்தியாக்கிரகத்தை முன்வைத்தால்நாம் வெகுஜன போராட்டத்தை முன்வைத்தோம்.

கேரளா போன்ற இடத்தில் மாநில காங்கிரஸ் கமிட்டியே நம்மிடம் இருந்தது. மதுரையிலும் காங்கிரஸ் கமிட்டி நம்மிடம் இருந்தது. நாமும் காங்கிரஸிற்குள் இருந்தோம். கட்சிக்குள் தேர்தல் நடந்தபோது வைத்தியநாத அய்யரைத் தோற் கடித்து ஜானகியம்மா வெற்றி பெற்றார். மதுரை டவுன் கமிட்டி எங்களிடம்தான் இருந்தது. இதே போல ஆந்திராவிலும், கேரளாவில் முழுமையா கவும் இருந்தது. வங்காளத்திலும் இருந்தது. நண்பர்களாகவும் இருந்தோம். அதே நேரத்தில் இந்த இரண்டு கட்சிகளிடையே சித்தாந்த ரீதியான போட்டியும் இருந்தது.

கேள்வி: இன்றைய வலதுசாரி, இந்துத்துவா சக்திகளின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த மக்களிடையே எத்தகைய அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என்று கருது கிறீர்கள்?

என்.எஸ்.: இன்றைக்கு மதவாத, வகுப்புவாதம் தான் ஆட்சியில் உள்ளது. பொருளாதாரரீதியாக அந்நிய நாட்டு ஏகாதிபத்தியவாதிகளுக்கும் இந்தியப் பெருமுதலாளிகளுக்கும் நிறைய சலுகைகள் கொடுக்கும் ஆட்சி இது. பொருளாதாரத்தில் பிற் போக்கான கொள்கைகளையும், சமூக ரீதியாக சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக பெரும்பான்மையான மக்களுடைய மனோபாவத்தை உருவாக்கி, அதன் மூலம் ஒரு மதத்தின் ஆதிக்கத்தை ஏற்படுத்த முயலும் ஆட்சி. அதாவது இந்துத்துவா என்று சொல்லக்கூடியது தான் இன்று இங்கே ஆட்சியில் உள்ளது. எனவே இன்றைய காலகட்டத்தின் மிக முக்கியமான தேவை என்னவெனில் மிகப் பரந்த அளவில் மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளை அணிதிரட்ட வேண்டியிருக்கிறது.

கேள்வி : இன்றைய சூழ்நிலையில் சோஷலிசத்திற்கான போராட்டத்தை வரும் தலைமுறையினர் எவ்வாறு நடத்திச் செல்ல வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

என்.எஸ்.: மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கின்ற ஒரு மத்திய ஆட்சி அவசியம். இரண்டாவது விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் அரசியல் கட்சிகளின் செல்வாக்கு தேர்தலில் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும். ஜனநாயகம் அப்போதுதான் பல மடையும். பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வேண்டும்.. மாநிலங்களின் நலன்களுக்கு எதிராக செயல்படக் கூடிய கவர்னர்களின் ஆட்சி போன்ற ஏற்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப் பட வேண்டும். மொழிகளின் சமத்துவம். இந்தியா விலுள்ள அனைத்து தேசிய மொழிகளும் ஒரே உரிமை கொண்ட மொழிகள் என்பது ஏற்கப்பட்டு, அவற்றின் வளர்ச்சிக்கு முன்னுரிமை தரப் பட வேண்டும்.
பொருளாதார ரீதியில் அயல்நாட்டுப் பெருமுதலாளி களின் சுரண்டல் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள் பாது காக்கப்பட வேண்டும். அவை மேலும் வலுவடைய வேண்டும். அது ஒன்றுதான் இந்தியாவில் சாதாரண மக்களை பாதுகாக்கக் கூடியதாக இருக்கும். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாய மான விலை, அவர்களின் கடன் சுமைகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கூட்டுறவு இயக்கம் வலுப்படுத்தப்பட வேண்டும். இன்றைக்கு தொழிலாளிகள் – உழைப்பாளி மக்களின் எண்ணிக்கை கூடுதலாகி உள்ளது. இவர்களது அரசியல், பொருளாதார, சமூக, தொழிற்சங்க உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் போன்றவை வேண்டும். குறிப்பாக இப்போது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி யுள்ள ஜி.எஸ்.டி மூலமாக மக்கள் மீது நடக்கும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்.

சமூக ரீதியில் தீண்டாமைக் கொடுமைக்கு எதிரான இயக்கம் வலுப்படுத்தப்பட வேண்டும். இந்தியாவில் வயதுவந்த எந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளலாம். அதற்கு அரசு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இதை எல்லா அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொள்ள வேண் டும். அப்போதுதான் இதை நிறைவேற்ற முடியும். இட ஒதுக்கீடு இன்னும் கணிசமான காலத்திற்கு நீடிக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இந்தியாவின் விடுதலை என்பது இந்தியாவி லுள்ள எல்லா மக்களின் நலன்கள் பாதுகாக்கப் படுவதில்தான் அடங்கியுள்ளது. இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் ஏகாதிபத்தியத்தின், ஏகபோக முதலாளித்துவத்தின், நிலப்பிரபுத்துவத்தின் கொடுமைகளை எதிர்த்துப் போராட அகில இந்திய அளவிலான முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆகியோரின் ஒற்றுமை அவசியம். கூட்டுப் போராட்டத்திற்கு முயற்சிக்க வேண்டும். அது தேவைப்படுகிறது என்றே நான் நினைக்கிறேன். எப்படி பிரிட்டிஷ் ஏகாதிபத் தியத்தை எதிர்த்து மக்கள் போராடினார்களோ, அதே போல இந்த வகுப்புவாத, பிற்போக்கு சக்தியை எதிர்த்துப் போராடுவதற்கு ஒரு அகில இந்திய இயக்கம் தேவைப்படுகிறது.

கேள்வி: வருங்காலத் தலைமுறையினருக்கு உங்கள் அறிவுரை…?

என்.எஸ்.: மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகி யோரின் நூல்களை அறிமுகம் செய்து கொள்ள வேண்டும். உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள் என்று மார்க்ஸ் சொன்னதற்கு வேறு வழியேதும் கிடையாது. உலக ஏகாதிபத்தியத் தையும், உலக முதலாளித்துவத்தையும் அப்புறப் படுத் திவிட்டு, உலக சோஷலிச அமைப்பை உருவாக்குவதன் மூலம்தான் உலகத்திலுள்ள எல்லா நாடுகளுக்கும் உண்மையான, உறுதி யான விடுதலை கிடைக்கும். சரித்திரம், கலாச் சாரம் ஆகியவற்றில் ஒவ்வொரு நாட்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஆக, இந்தியாவிலும் இந்திய நிலைமைகளுக்கு ஏற்ப, இந்திய அம்சங் களைக் கொண்ட சோஷலிசம் என்பதற்கான ஒரு பெரிய இயக்கம் நடைபெற வேண்டும்.

சோஷலிசத்தின் அரசியலை போதியுங்கள். சோஷலிசத்தின் பொருளாதார அம்சங்களை போதியுங்கள். சோஷலிசத்தின் கலாச்சார அம் சங்களை போதியுங்கள். உலகத்தில் தொழிலாளி வர்க்க உழைப்பாளிகளின் தலைமையில் இடது சாரிகள், மத்தியதர வர்க்கத்தினர், சாதாரண மக்கள் ஆகியோரின் நலன்களைப் பாதுகாக்க வேண்டுமெனில், சோஷலிசம் தவிர வேறு எந்த சமூக அமைப்பினாலும் முடியாது என்பது உறுதி.

ஆகவே தொடர்ச்சியாக மக்களோடு தொடர்பு கொண்டு இருக்க வேண்டும். நான் சொல்ல விரும்புவது ஒவ்வொரு கம்யூனிஸ்டும் குறைந்தது 300 குடும்பங்களையாவது சந்தித்து அவர்களின் பிரச்சனைகளில் தலையிட வேண்டும். இதைச் செய்யும்போது நம்முடைய பிரச்சனைகளுக்கு வழிகாட்ட ஒரு தோழர் இருக்கிறார் என்ற நம்பிக்கை அவர்களிடையே ஏற்படும். அந்தத் தோழரைச் சுற்றி ஏற்படக்கூடிய ஒற்றுமைதான் எந்த நெருக்கடியையும் சமாளிக்க உதவி செய்யும். இந்தக் கட்சி எந்த நிலைமையிலும் மக்களைக் காப்பாற்றும்; முன்னெடுத்துச் செல்லும்.

கடைசியாக அரசியல், பொருளாதார,சமூக, கலாச்சார துறைகள் அனைத்திலும் இந்திய மக்களை, தமிழ் மக்களை முன்னேற்றக் கூடிய இயக்கமாக, மாணவர்கள் செயல்பட வேண்டு மென்று நான் நினைக்கிறேன்.

இதைக் கொண்டுவர வேண்டியது கம்யூனிஸ்டுகளின், சோஷலிஸ்டுகளின் கடமை. வகுப்பு வாதத்திற்கு எதிராக ஒரு தத்துவப் போராட்டத்தை, அரசியல் போராட்டத்தை, கருத்துப் போராட்டத்தை நடத்த வேண்டும். எவ்வாறு சுதந்திரப் போராட்டத் தில் இந்தியா வெற்றி பெற்றதோ, அதேபோல சோஷலிசத்திற்கான போராட்டத்திலும் இந்தியா வெற்றி பெறும். அதில் இடதுசாரி சக்திகள், ஜனநாயக சக்திகள், முற்போக்கு சக்திகள் தங் களது கடமையை ஆற்ற வேண்டும்.

குதிரைக்கு முன்பாக வண்டியைப் பூட்ட முடியாது …

பிரகாஷ் காரத்

நேர்காணல்: இரா.சிந்தன்

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி யுள்ளன. உத்தரபிரதேசத் தேர்தலில் பாஜக அடைந்துள்ள வெற்றியை எப்படிப் பார்க் கிறீர்கள்?
2014 மக்களவைத் தேர்தலை பாஜக எதிர் கொண்டதை கவனித்தால், மேற்கு உத்தரப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் முசாபர் நகர் உள்ளிட்ட இடங்களில் மதவாத வன்முறைகள் திட்டமிட்டு நடத்தப்பட்டன. அதில் பாஜக பலனடைந்தது. 2012 -ம் ஆண்டில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்குள் தொடர்ச் சியாக மத வன்முறைகள் கட்டவிழ்த்து விடப் பட்டன. அவற்றில் ஆர்எஸ்எஸ் மற்றும் பரிவார அமைப்புகளுக்குத் தொடர்பிருந்தது. முசாபர் நகர் உட்பட சுமார் 40க்கும் அதிகமான இந்த வன் முறைகள், உ.பி., ஊரகப் பகுதிகளிலும் நடை பெற்றதை கவனிக்க வேண்டும். ஊரகப் பகுதி களில் இதற்கு முன்பாக கலவரங்கள் நடை பெற்றதில்லை.

மேலும், மோடி ‘வளர்ச்சியின்’ பிம்பமாக முன்நிறுத்தப்பட்டார். அனைத்து சாதியைச் சேர்ந்த இளைஞர்களிடம் இந்த பிரச்சாரத்திற்கு கவனம் கிடைத்தது. இந்த இரண்டும் இணைந்த போது அவர்களுக்கு வெற்றி கிடைத்தது. சட்ட மன்றத் தேர்தலில் அந்தப் போக்கு தொடராது என வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் தொடர்ந்துள்ளது. இந்தியத் தேர்தல் முறையில் ஒரு கட்சி 35 சதவீதத்திற்கும் அதிகமான வாக்கு கள் பெற்றாலே பெரும்பான்மை கிடைத்துவிடும். உத்தரப் பிரதேசத்தில் பாஜக சுமார் 40 சதவீத வாக்குகளைப் பெற்றது.
பாஜக தனது பிரச்சாரத்தில் இந்து -முஸ்லிம் வெறுப்பை தொடர்ந்து விதைத்தது. மோடியும், மத்திய அமைச்சர்களும் தொடங்கி எல்லோருமே பேசினார்கள். சாதி உணர்வுகளை மிகத் திட்ட மிட்ட வகையில் பயன்படுத்தினார்கள். யாதவ் அல்லாத பிற்படுத்தபப்ட்ட சாதிகள், யாதவ் அல்லாத தலித்துகள் மற்றும் உயர்சாதிகளின் ஆதரவுகளைப் பெற்றார்கள். சிலர் கோருவதைப் போல பாஜக சாதி உணர்வுகளை மட்டுப்படுத்த வில்லை; மாறாக சாதி உணர்வுகளைப் பயன் படுத்திக் கொண்டார்கள்.

மோடியை முன்நிறுத்தித்தானே பாஜக வின் பிரச்சாரம் அமைந்தது?
உத்தரப் பிரதேச மக்கள் அதற்கு காது கொடுத் துள்ளனர். மோடியை இந்து தேசியவாதத்தின் பிரதிநிதியாகப் பார்க்கிறார்கள். அப்படி அவரை முன்நிறுத்தியதற்கு வாக்குகள் கிடைத்துள்ளன. உத்தரப் பிரதேசம் நிர்வாக அடிப்படையிலான மாநிலம். நான் தமிழன்; நான் பஞ்சாபி என்று சொல்வதைப் போல நான் உத்தரப் பிரதேசத்த வன் என்ற உணர்வு அங்கே இல்லை.

உ.பி. மாநிலத்திற்கு பிராந்திய அடையாளம் இல்லை. உ.பி. மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சி களும் கூட தங்களை இந்தியத் தலைவர்களா கவே முன்நிறுத்திக் கொள்கிறார்கள். எனவே இந்து மற்றும் தேசியவாதம் ஆகிய முழக்கங் களுக்கு வரவேற்புக் கிடைத்திருக்கிறது. பாஜக வின் முழக்கத்திற்கு மாற்றான ஒரு முழக்கத்தை சமாஜ்வாதியோ, பகுஜன் சமாஜ் கட்சியோ முன் நிறுத்த முடியவில்லை.

இந்த சூழலில் வகுப்புவாதத்தை எதிர் கொண்டு வீழ்த்த, மகா கூட்டணி அமைக்க வேண்டும் என்ற கருத்தை பலரும் வெளிப்படுத்துகிறார்கள் அல்லவா?
வகுப்புவாதத்தை மட்டுமல்ல, தெளிவான தத்துவப் பின்னணியோடு இயக்கப்படும் ஒரு கட்சியையும் அதன் கொள்கையையும் எதிர்த்து வீழ்த்தவேண்டும். சில கட்சிகள் ஒரே மேடையில் நின்றால் மட்டும் அது சாத்தியமாகாது. இந்துத் துவா தத்துவத்தின் மக்கள் விரோதத் தன்மையை அம்பலப்படுத்தவேண்டும். அதற்கு எதிரான தெளிவான தத்துவப் பார்வையை முன்நிறுத்த வேண்டும். உத்தரப் பிரதேசத்தில் உள்ள கட்சி களிடம் அத்தகைய பார்வை இல்லை. தத்துவம் மட்டுமல்ல; ஒரு மாற்றுத் திட்டமோ கொள்கை களோ கூட இல்லை.

மோடியின் செல்லா நோட்டு அறிவிப்பின் காரணமாக மக்கள் அவதியுற்றார்கள். சமாஜ்வா தியும், பகுஜன் சமாஜ் கட்சியும் நாடாளுமன்றத் தில் அதனை எதிர்த்தார்கள். அதே சமயம் மக்களைத் திரட்டிப் போராடவோ, அம்பலப்படுத்தவோ இல்லை. இப்படி குதிரைக்கு முன் வண்டியைக் கட்டி பயணிக்க முடியாது.

பாஜகவின் அரசியலை எதிர் கொள்ள எத்தகைய அணி அவசியம்?
பாஜகவின் கொள்கைகளால் மக்கள் பாதிக் கப்படுகிறார்கள். இத்தகைய கொள்கைகளுக்கு எதிராகப் போராடவேண்டும். கொள்கைகளின் அடிப்படியிலான எதிர்ப்பின் அடிப்படையில் ஒற்றுமை உருவாக வேண்டும். யாரெல்லாம் அப்படி இணைவார்களென்று பார்க்கலாம்.
அப்படி அல்லாமல் ஒரு ஒற்றுமை சாத்திய மில்லை. பாஜக அல்லாத கட்சிகளெல்லாம் ஒன்றுசேர வேண்டுமென்றால் திமுகவும் அதிமுக வும், திரிணாமுலும், மார்க்சிஸ்ட் கட்சியும், காங்கிரசும், பிஜூ ஜனதாதளமும் இணைந்து ஓரணியில் நிற்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத் திலும் உள்ள சூழல்கள் வேறு வேறு. இதுவும் அதுவும் சேரவே கூடாதென்று சொல்லவில்லை. ஆனால் எந்த இலக்கினை நோக்கி? என்பது மிக முக்கியம்.
இன்று பாஜக முன்னெடுக்கும் பொருளா தாரக் கொள்கைகள் காங்கிரசால் தொடங்கி வைக்கப்பட்டவை. ஆதார் கட்டாயமாக்குவதற்கு காங்கிரஸ் தொடங்கியது. அப்போது மோடி எதிர்த்தார்; இப்போது முன்னெடுக்கிறார். பொதுத்துறை பங்குகளை விற்பதும், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடும் காங்கிரஸ் கொண்டுவந்தது. அப்படி இருந்துகொண்டு நான் பாஜகவை எதிர்க்கிறேன் என்று சொன்னால் மக்கள் எப்படி நம்புவார்கள்?

உத்தரப் பிரதேசத்தில் பாஜக யோகி ஆதித்யநாத்-ஐ நியமித்ததும், மதச் சார் பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றுபட மார்க் சிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்த தல்லவா?

உத்தரப் பிரதேசத்தில் தாக்குதல் தொடங்கி யிருக்கிறது. அதற்கு எதிரான ஒற்றுமை அவசியம். யோகி அரசின் முடிவுகளால் சாமானிய மக்கள் வாழ்க்கை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. சிறு பான்மையினர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந் துள்ளனர். கள அளவில் இதற்கான எதிர்ப்பைக் கட்டமைக்க வேண்டும். ஒன்றுபட்ட எதிர்ப்பு அவசியம். இது தேர்தலுக்கான ஒற்றுமை அல்ல. இடதுசாரிகள் தொடர்ந்து வலியுறுத்துவதைப் போல, ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும், பாஜகவின் சித்தாந்தத்தையும் – தேர்தல் அணி அமைப்பதன் மூலம் மட்டும் எதிர்கொள்ள முடியாது.

சித்தாந்த வலு இழந்துள்ள இன்றைய திராவிட அரசியல் …

வரலாற்றாய்வாளர் பேராசிரியர் மணிக்குமாருடன் நேர்காணல்…

  • பேராசிரியர் பொன்ராஜ்

அண்ணா ஒரு நாள் இந்தியாவிற்கு தேவைப்படுவார் என்று ஒரு கருத்து சொல்லப்படுகிறது திராவிட இயக்கங்கள் பற்றிய பரவலான நிர்ணயிப்புகள் சரிதானா?

அத்தகைய கருத்துக்களின் சாராம்சம் இதுதான் தமிழ்ச் சமூகத்தின் சமகால அபிலாஷைகளும், கலாச்சாரமும் திராவிட இயக்கங்களின் போக்கைத் தீர்மானிக்கின்றன. தத்துவம் அல்ல!

சித்தாந்த ரீதியாக பிரச்சனைகளை அணுகும் போது பல நேரங்களில் மக்களிடமிருந்து அந்நியப் படக் கூடும். இதை அண்ணாதுரை மட்டுமின்றி அவரது தம்பிமார்களும் தெரிந்திருந்தனர். டெல்லி ஏகாதிபத்தியம் என மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கை எதிர்த்த அண்ணா ஆரம்பத்தில் கோரியது தனித்தமிழ்நாடு ஆனால் 1962 தேர்தலில் திமுக சட்டமன்றத்தில் ஐம்பது இடங்களைக் கைப்பற்றிய பின்னணியில் தனித் தமிழ்நாடு கோரிக்கையை கைவிட்டு விட்டதாக 1963ல் அறிவித்தார். இருப்பினும் வடக்கு வளர் கிறது தெற்கு தேய்கிறது என ஆதாரங்களுடன் பேசி வந்த அண்ணாவால் மாநில சுயாட்சி பற்றி பேசாமல் இருக்க முடியவில்லை. எனவே மாநிலங் களுக்கு கூடுதலான அதிகாரங்கள் பற்றி பேசினார். ஆனால் இன்றைக்கு அதுவும் கிடையாது.

“தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி வாக்காளர் களுக்கு பரிசு கொடுக்கிறது. பணம் கொடுக்கிறது” என அன்று அண்ணா குற்றம் சாட்டினார். ஆனால் இன்று திருமங்கலம் பார்முலா, ஸ்ரீரங்கம் பார்முலா என்று பணம் தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக மாறியிருக்கிறது. “ஜாதி ஒழிப்பு” பேசிய திமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் தேர்வில் சாதியை அடிப்படையாக் கொள்வதை பார்க்க முடிகிறது. தீண்டாமை ஒழிப்பு அவர்களின் நிகழ்ச்சி நிரலில் இல்லை. இத்தகைய சீரழிவுகளுக்குத் தலைவர்கள் பொறுப் பாக உள்ளபோது அண்ணா மீண்டும் வந்தால், அவரும் தம்பிமார்கள் போல் மாறுவார். மக்களிடையே சித்தாந்த பிரச்சாரம் மேற்கொள்ளாமல், கருத்தியலை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாது என்பது நிதர்சனம்.

மேலும் ஆரியர் என்ற சொல் மொழியைக் குறிக்கிறது, இனத்தை அல்ல என ரோமிலா தாப்பர் போன்ற வரலாற்றறிஞர்கள் ஆய்வு அடிப்படையில் முடிவுக்கு வந்த பிறகு, ஆரியர் மொழியில் திராவிடக் கலாச்சாரத்தின் தாக்கம் பற்றியும் வேத இலக்கியத்திலும், புராண பாரம் பரியங்களிலும் ஆரியரல்லாத பிராமணர்களின் பெயர்கள் பல இருப்பதையும், சில பிராமணர் கள் தசா (னயளலர டிச னயளய) வகுப்பிலிருந்து தோன்றிய தற்கான ஆதாரங்கள் இருப்பதையும் வரலாற்று அறிஞர் டி.டி. கோசாம்பி சுட்டிக் காட்டிய நிலையில் இனக்கலப்படம் ஏற்பட்ட பிறகே சாதி தோன்றியது எனக் கருதிய அம்பேத்கர் எழுப்பிய, “வங்காளத்தில் உள்ள பிராமணனுக்கும் தமிழகத்தில் உள்ள பிராமணனுக்கும் பறையனுக்கும் உள்ள இனவேறுபாடு தான் என்ன? பஞ்சாபில் தீண்டத்தகாத சாமர் சாதியினருக்கும் தமிழகத்தில் உள்ள தீண்டத்தகாத பறையருக்கும் இடையே என்ன இன ஒற்றுமை இருக்க முடியும்?”போன்ற கேள்விகளுக்குப் பகுத்தறிவு அடிப்படையிலோ, அல்லது அறிவியல் ரீதியாகவோ பதில் சொல்ல முடியாத போதாமையை திராவிட அரசியல் சித்தாந்தவாதிகள் அடைந்துள்ளனர்.

1967 ல் தமிழ்ச்சமூகம் திராவிட இயக் கத்திடம் வைத்த நம்பிக்கை உடனடி தேவையை ஒட்டியதுதானா?
1967 தேர்தலில் மக்கள் திமுகவிற்கு வாக் களித்தது, பல்வேறு காரணங்களால் ஆகும். 1949- ல் திராவிடமுன்னேற்றக் கழகம் தொடங் கப்பட்டபோது திராவிடர்கழகம் உடைந்தது. அப்போது 75 சதவீதமானவர்களை திமுகவிற்கு இழுத்துச் சென்றவர் அண்ணா. கழக உறுப் பினர்கள் ஏறத்தாழ அனைவருமே அண்ணா விற்கு இளையவர்கள். நாற்பது வயதிற்கு உட் பட்டவர்கள். பட்டதாரிகளும், மாணவர் களும் அதிக எண்ணிக்கையில் அண்ணாவின் பேச்சாற்றலா லும் தலைமைப் பண்பாலும் ஈர்க்கப்பட்டவர்கள். மொழி அடிப்படையில் தனி நாடு கோரிக்கையை அயர்லாந்தில் எழுப்பிப் போராடிய சின்பெய்ன் இயக்கம் பற்றியும் அதன் தலைவர் டிவேலரா பற்றியும் தனது தம்பிமார்களுக்கு கற்றுக் கொடுத் தார், அண்ணா. பிரிட்டன் அரசியல் கோட் பாட்டாளர் ஹரால்ட் லாஸ்கி (ழயசடிடன டுயளமi), இத்தாலி நாட்டு பொருளாதார மேதை அக்கிலெ லொரியா (ஹஉhடைடந டுடிசயை) போன்றோரை மேற்கோள் காட்டி அவரால் விவாதம் செய்ய முடிந்தது. சினிமா, நாடகம், கலை என அனைத் துத்துறைகளிலும் திமுக தனது கொள்கைளைப் பரப்பியது. எம்.ஜி.ஆரின் பிரபல் திரைப்பட பாடல்கள், சினிமா மூலம் அவர் விடுத்த செய்தி கள் அதே நேரத்தில் காமராஜர் கட்சிப் பணிக்கு சென்ற பின் முதலைமைச்சர் பொறுப்பேற்ற பக்தவத்சலத்தின் தவறான அணுகுமுறைகள், இந்தித் திணிப்புக்கு எதிரான கோபம், கடுமை யான வறட்சி, உணவுப் பொருள் தட்டுப்பாடு, தொழில் வளர்ச்சி இல்லாததால் படித்த இளை ஞர்களுக்கு வேலை வாய்ப்பின்மை போன்ற சூழல்கள் திமுக ஆட்சிக்கு வர சாதகமாக அமைந் தன. தேர்தல் முறையில் வெற்றிக்கு அவசியமான பரந்த கூட்டணியும் உதவியாக அமைந்தது.

திராவிட கருத்துநிலையில் முன்வைக்கப் பட்ட சமூக, அரசியல், பண்பாடுக் கூறுகள் பற்றி. இன்று அவற்றின் நிலை பற்றி?
பெரியார் தலைமையிலான திராவிட கழகம், பிராமணீயத்தை மதத்தை நிராகரிக்கக் கோரியது. அதிலிருந்து தோன்றிய அண்ணாவின் திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று கடவுள் மறுப்பைக் கைவிட்டு, தமிழ் மொழி பேசுகின்ற, தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றுகிற அனைவரும் திராவிடரே என்ற விளக்கத்தின் மூலம் அரசியலில் இறங்கியது. அதே நேரத்தில் மத மூட நம்பிக்கைகள், சாதியப் பாகுபாடுகள் போன்ற சமூக அவலங்களை கடுமையாகத் தாக்கி பகுத்தறிவு வாதத்தை தமிழ் சமூகத்தில் பரப்பிட உதவினார் அண்ணா. பண்பாட்டுத் தளத்தில் சமஸ்கிருதத்தின், பின்னாளில் இந்தி மொழியின் ஆதிக்கத்தை எதிர்ப்பதில் தி.மு.க தீவிர கவனம் செலுத்தியது.

அரசியலில் மத்தியிலும் மாநிலத்திலும் ஆண்ட காங்கிரஸ் கட்சியால் அரசியல்ரீதியாக திரட்டப்படாத பகுதியினரை தி.மு.க அணி திரட்டியது. நிலமுடையவர்கள் அல்லது சொத் துரிமையாளர்கள், குறீப்பாக இடைசாதிப் பிரிவினர் கம்யூனிஸ்டுகளை ஆதரிக்காத சூழலில் அப்பகுதி யினரை அணிதிரட்டுவதில் தி.மு.க அக்கரை காட்டியது. சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு ஆதரவாக நில உச்ச வரம்புச் சட்டம், வங்கி தேசிய மயமாக்கம் மற்றும் சாலை போக்கு வரத்து அரசுடைமையாக்கும் திட்டம் போன்ற கோரிக்கைகள், மற்றும் நெசவாளர்களுக்கு ஆதர வாக திமுகவினரை கைத்தறி ஆடை அணியச் செய்தது ஆகியவை தி.மு.கவை அப்பிரிவினரி டையே நெருக்கமடையச் செய்தது.

தமிழ் மொழி பயிற்று மொழி, அரசு அலுவலங்களில் முற்றிலும் தமிழ், மாநிலத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டல் போன்றவை மக்களால் வரவேற்கப் பட்டன், ஆனால் ஆட்சியில் 1967ல் பொறுப் பேற்ற பிறகு நில உச்ச வரம்புச்சட்டத்தால் பலன் பெற வேண்டியவர்கள் பயன் அடையாத போது, வர்க்கரீதியான பிரச்சனைகளை முன்னிறுத்தி முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை (குறிப்பாக முழுமையான நில சீர்திருத்தம், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு நிலம்) தி.மு.க நிராகரிக்க தயங்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் உச்ச வரம்பு மிச்சவரம்பாகியது என தி மு க. கேலி செய்தது. ஆனால் அதன் ஆட்சியிலும் அண்ணாதிமுக ஆட்சியி லும் நிகழ்ந்த நில மறுவிநியோகம் மிகச்சொற்பமே.

1977ல் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சிக்கு வந்தபின் எம்.ஜி.ஆர் திராவிட இயக்க சித்தாந்தங்களை எல்லாம் பற்றி அவரிடம் கேட்ட போது அது பற்றி ஆசிரியர்களும் வல்லு நர்களும் தான் முடிவு எடுப்பர் என்றார். அதே சமயம் மக்கள் செல்வாக்கு பெற ஜனரஞ்சகமான திட்டங்களை நடைமுறைப் படுத்தினார். இன்று திமுகவும், அதிமுகவும் மாறிமாறி ஆட்சிக்கு வந்த நிலையில் போட்டி போட்டுக் கொண்டு பல இலவசத்திட்டங்களை இன்று வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு செயல் படுத்தியுள்ளனர். திராவிடக் கட்சிகளுக்கு பக்க பலமாக இருந்த, இருந்து வரும், சிறு விவசாயிகள், சிறு வணிகர்கள், சிறு தொழில் முனைவோர், இன்றைய கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆதர வான பொருளாதாரக் கொள்கையால் பெரும் பாதிப்புக்குள்ளாயிருக்கும் போதும், அணி சேராத அல்லது அணிதிரட்டப்படாத தொழி லாளர்கள் பாதுகாப்பற்ற பணி மற்றும் நிரந்தர மற்ற வருமானம் என்ற நிலையில் திக்கற்று இருக்கும் போதும், ஒரு மாற்று சித்திரம் அல்லது பொருளாதாரக் கொள்கை திமுக-அதிமுகவிடம் இல்லை.

திராவிட அடையாளம் தமிழ் அடை யாளம் தானா? தமிழ் அடையாளம் சாதிய அடையாளத்தைத் தாண்டி நிற்கிறதா?
பெரியார் திராவிட நாடு குறித்து பேசிய போது அது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலயாளம் பேசுவோரை உள்ளடக்கியிருந்தது. 1956ல் மொழி வாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது, திராவிட நாடு கருத்துக்கு இதர தென் இந்திய மாநிலங்களில் ஆதரவு இல்லாததால் தனித் திராவிட நாடு கேட்ட பெரியார் தனித் தமிழ்நாடு பற்றி பேசத் தொடங்கினார். தமிழ்தான் திராவிட மொழிகளின் தாய், எனவே தமிழ்தான் திரா விடம், திராவிடம் தான் தமிழ் என வாதிடப் பட்டது. திராவிட அடையாளம் இவ்வாறாக தமிழ் அடையாள மாயிற்று.

தமிழ் தேசியத்தை வரையறுத்தவர் மறைமலை அடிகள். அவர் சாதி மேலாண்மை பற்றி ஏதும் கூறாது, வேளாளர்களை மையப்படுத்திய தமிழ் கலாச்சரத்தை உயர்வானதாகக் கருதினார். வேளாளர்கள் எட்டியிருந்த கலாச்சார உச்சத்தை பிராமணரைத்தவிர அனைத்து தமிழ் சாதியினரும் எட்டமுடியும் என்றும், வேற்றுமை பாராது அனைத்து பிரிவினரும் ஒற்றுமையாக வாழ முடியும் என்றும் கூறினார். மத்திய அரசின் அதிகாரக் குவிப்பு, இந்தித்திணிப்பு முயற்சி, தொழில் வளர்ச்சியில் தமிழகம் புறக்கணிக்கப் பட்ட நிலை ஆகியவை தமிழ் தேசியத்தை மக்களிடம் செல்வாக்கு பெறச் செய்தன.

1950, 1960களில் சாதிக்கு அப்பால் ஒற்றுமை யைக் கட்ட தமிழ்தேசியம் பயன்பட்டது. பிரா மணரல்லாதோர் இயக்கத்தில் பலன் அடைந் தவர்கள், உயர்சாதி இந்துக்களான வேளாளர், முதலியார், செட்டியார், நாயக்கர், ரெட்டியார் போன்றவர்களே. அப்போது பலனைடயாத இடைச்சாதியினராகிய கவுண்டர், முக்குலத் தோர், கோனார், வன்னியர் போன் றோர். திமுகவின் பால் ஈர்க்கப்பட்டனர். இருப்பினும் பெரியார் அப்போது அரசியல் வாழ்வை அனுபவிக்க நினைத்த திராவிடர் கழகத்தினரை காமராசர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியிலேயே சேருமாறு வேண்டினார். தமிழ் தேசியத்தை அண்ணா கைவிடுவதற்கு இதுமட்டுமின்றி மத்திய அரசின் எச்சரிக்கையும் ஒரு காரணமாகும். பிரிவினை வாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தீர்மானித்த பின்னணியிலும், ஐம்பது சட்டமன்ற உறுப்பினர்களைப் பெறக்கூடிய நிலைக்கு கட்சி வளர்ந்து விட்ட சூழலிலும் தனித் தமிழ்நாடு கோரிக்கையை அண்ணா கைவிட்டார். இதனால் தமிழ் தேசியம் நீர்த்துப்போயிற்று.

தமிழ் அடையாளம், சாதி ஆகிய காரணிகள் வர்க்க உணர்வை சிதைக்கின்றனவா?

வர்க்க ஒற்றுமைக்கு முரணாக முன்வைக்கப் படும் பொழுது அவ்வாறு தமிழ் அடையாளம் வர்க்க உணர்வை சிதைக்கிறது. தமிழ் அடை யாளம் சாதி, மதம் போன்ற இதர அடையாளங்களைப் போல ஆக்கப்படும் அபாயம் உள்ளது. வர்க்கப் பார்வை திட்டமிட்டுத்தான் வளர்த் தெடுக்கப்பட வேண்டும்.
அவ்வாறு, அப்பட்டமாக சாதி – வர்க்க தொடர்பு வெளிப்பட்ட தஞ்சாவூரில் தான் வர்க்க போராட்டம் சாத்தியமாயிருக்கிறது. இதர இடங்களில் குறிப்பாக இராமநாதபுரத்தில் சாதி வர்க்க உறவுகள் வெளிப்படையாக தெரியாத நிலையில் முரண்பாடுகளும், சுரண்டல்களும் சாதிய மோதல்களாகவே வெடித்துள்ளன. தஞ்சாகூரில் குத்தகை விவசாயிகளையும் கூலி விவசாயிகளையும் ஒரே பதாகையின் கீழ் போராட வைக்க முடிந்த போது, இராமநாதபுரத் தில் அது முடியாது போயிற்று. வர்க்க ஒற்றுமை மேல்மட்டத்தில், செல்வந்தர்கள் மத்தியில் சாத்தியமாகிறது. ஆனால் பாட்டாளி மக்களி டையே காணப்படும் சாதிப்பற்று வர்க்க உணர்வு வளரத்தடையாய் இருக்கிறது. மேட்டுக்குடி மக்களும் அரசியல்வாதிகளும் திட்டமிட்டு சாதிப்பற்றை ஊட்டி வளர்க்கின்றன்ர். வெகுசனங் களை அரசியல் படுத்துவதன் மூலமே அவர் களை வர்க்க போராட்டத்திற்கு தயாரிக்கமுடியம்.

பெரியாரின் திராவிட இயக்கம் அண்ணாவின் திமுக ஒன்றுபடும் புள்ளி எது? எதில் வேறுபடுகின்றன?

ஒன்றுபடுவது பிராமண எதிர்ப்பு, சமஸ்கிருத இந்தி எதிர்ப்பு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பிரச்சனைகளில். பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை அண்ணா ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன் எனச் சொல்லி சமாளித்து விட்டார். அதுபோல் பொரியார் காலத்திலும், நீதிக்கட்சி காலத்திலும் சூத்திரன் என்ற சொல் ஒர் அவச் சொல்லாகக் கருதப்பட்டது. ஆனால் காங்கிரஸ்காரர்கள் நான்காம் தரக் கட்சி என திமுகவை தாக்கிப் பேசிய போது ஆம் நான்காம் மக்கள் ( சூத்திரர்) கட்சிதான் என தனது பெருமிதத்தை வெளிப் படுத்தி பிராமணரால்லா தோரில் பிற்படுத்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களின் ஆதரவைப் பெற்றவர் கலைஞர். பெரியார் பிராமணரல்லா தோரில் உயர்சாதியினரை தாக்க முயலவில்லை. ஆனால் பிற்படுத்தப்பட்ட இடைச்சாதி மக்கள் நலனுக்கு எதிராக சுரண்டும் கொள்கையைக் கடைபிடித்த நிலக்கிழார்களையும், பெரும் வணிகர்களையும் கண்டிக்க, ஆட்சிக்கு வரும் முன் அண்ணாவும் கலைஞரும் கண்டித்தனர். பெரியார் முன்வைத்த சுயமரியாதை, பெண் விடுதலை போன்ற முழக்கங்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் வளர்த்தெடுக்கப்படவில்லை. திமுக அதில் அக்கறை செலுத்தவில்லை.

திமுக தலைவர்கள் பக்தி இயக்கத் திற்கு மாறாக சிலப்பதிகாரம் மற்றும் சங்க இலக்கியத்தை முன்னிறுத்தியது பற்றி சொல்லுங்கள்.

அண்ணாவின் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கருத்து பக்தி இலக்கியத்திலிருந்து எடுத் தாளப்பட்டது தான். திருமூலர் திருமந்திரத்தில் கூறும் கருத்து இது. பிராமணர் மற்றும் அவர் களது மதத்திற்கு எதிரான கருத்துக்கள் அடங்கிய சித்தர் பாடல்கள் பிராமண எதிர்ப்புக்கும், சமஸ்கிருத்ததிற்கு மாற்றாக தமிழ் மொழியை வளர்க்கவும் பயன்படுத்தப்பட்டவை தான். சைவசித்தாந்தவாதிகள் சித்தர்களை இடைக் கால இந்து மதத்தின் எதிரிகளாய்ப் பார்த்தனர். ஒருவேளை அதனால் பக்தி இலக்கியங்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்காமல் இருந்திருக் கலாம். சிலப்பதிகாரம், மன்னனின் நீதிமாண்பு கண்ணகியின் கற்பு போன்ற நற்குணங்களை வெளிப்படுத்தும் இலக்கியமாகப் பார்க்கப் பட்டது. அது போல் தமிழனின் வீரத்தையும் காதலையும் போற்றும் மேட்டுக்குடி நாகரீகம் சங்க இலக்கியங்களில் சித்தரிக்கபபட்டிருந்ததால் அவற்றை சிலப்பதிகாரத்தோடு மிக அதிகமாக பேச்சிலும் எழுத்திலும் கையாண்டவர் கலைஞர் கருணாநிதிதான்.

திராவிட அரசியல் ஏன் தாழ்த்தப் பட்ட மக்களின் வளர்ச்சிக்கு ஆதரவாக, குறிப்பாக தீண்டாமைக்கு எதிராக பெரிதாக இயக்கம் காணவில்லை?

திராவிட இயக்கம் தாழ்த்தப்பட்ட மக்களின் நல்லெண்ணத்தை பெறமுடியவில்லை. நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த ஒராண்டிற்குள் அக்கட்சியுடனான உறவை எம்.சி..ராஜா முறித்துக் கொள்ள நேர்ந்தது. பெரியாரின் சுயமரியாதை இயக்கம் பிராமணர் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு போன்றவற்றை முன்னிறுத்தி இந்து மதசடங்கு களையும், சாஸ்திரங்களையும் தாக்கிய அளவிற்கு தீண்டாமைக்கு எதிராகப் போராடவில்லை. தீண்டாமைக்கு எதிரான பிரச்சாரங்கள் நடத்திய காந்தியின் ஹரிஜன சேவா சங்கமும், காங்கிரஸ் வாதிகளும் இயற்றப்பட்ட சட்டங்களை அமுல் படுத்துவதில் அக்கறை காட்டவில்லை. தனித்திரா விட நாடு பேசிய பெரியார் அதில் முஸ்லீம் மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் இடம் பெறுவர் என்று கூறீயது. இவ்விரு பிரிவினரையும் சமமாகக் கருதவில்லை என அறிய வைக்கிறது. நீதிக்கட்சி யில் பிராமணரல்லாத உயர் சாதியினர் இடம் பெற்றிருந்தார்கள் என்றால், சுயமரியாதை இயக்கத்திலும், பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் இடைசாதியினரே அதிக எண்ணிக்கை இருந்தனர்.

தீண்டாமைக்கு எதிராகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகவும் உண்மையில் முதலில் போராடியவர்கள், இயக்கம் நடத்திய வர்கள் கிறிஸ்துவ பாதிரிமார்களே. இது இன்று மறைக்கப்படும் வரலாறு. (பின்னர், பொதுவுடைமை இயக்கம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்க பெரும் போராட்டங்களை நடத்தியது என்பது வலுவாகப் பேசப்படவேண்டிய விஷயம்) தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள், நாடார்கள் உட்பட, தங்கள் எதிர்ப்பை மதமாற்றத் தின் மூலமே வெளிப்படுத்தினர். திராவிட அரசியல் தலித் விடுதலைக்கு உதவவில்லை.

எதனால் இடைநிலை சாதியினருக் கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இடையி லுள்ள முரண்பாட்டை திராவிட இயக்க அரசியலால் தீர்க்க முடியவில்லை?
ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டம் 1948ல் கொண்டுவரப்பட்டாலும் இரண்டு அரசியல் சட்ட திருத்தங்களுக்குப்பிறகு ( முதல் மற்றும் நான்காவது) 1955ல் தான் அமுலுக்கு வந்தது. அதே போன்று நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வருவதற்கு முன்பே, நிலம் பெருமளவில் கைமாறியிருந்தது. இதில் பயனடைந்தவர்கள் அதுவரை நில உடைமையாளார்களாக அறியப் படாத பெரும்பாலும் சிறு மற்றும் குத்தகை விவசாயிகளாக இருந்த இடைசாதியினர். நிலம் அவர்களது கட்டுப்பாட்டிற்குள் வந்த பிறகு, குறிப்பாக தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு, இவர் களில் ஒருபகுதியான பணக்கார விவசாயிகளும் முதலாளித்வ விவசாயிகளும் அரசியல் அதிகாரத் தையும் பெற முடிந்தது.

நிலப்பிரபுக்களுடன் சமரசமும் செய்து கொள்ளப்பட்டது. பெரும் பாலும் நிலமற்ற விவசாயத் தொழிலாளராக இருந்த தலித்துகளுக் கும் பெரு நில உடமையாளர் களுக்கும் வர்க்க முரண்பாடுகள் காரணமாக மோதல்கள் வெடித் தன. ஆனால் அத்தகைய மோதல்கள் தஞ்சாகூர் உட்பட பல இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக பார்ககப்பட்டது. நில உரிமையா ளராய் மாறியிருந்த இடைச்சாதி செல்வந்தர் களுக்கு ஆதரவாக அரசு செயல் பட்டதால் தலித்துகளிடம் இருந்து ஆட்சி நடத்திய அரசியல் கட்சிகள் அந்நியமாயின. மேலும் தீவிர நிலச்சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு தலித்துக்களை பொருளாதார ரீதியாக வல்ல மைப்படுத்தியிருந்தால் முரண் பாட்டை களைந்து மோதல்களைத் தவிர்த்திருக் கலாம். ஆனால் தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந் திருந்த காங்கிரஸ் கட்சியும் திராவிடகட்சிகளும் அதைச் செய்ய வில்லை. இதன் காரணமாக, தலித் மீதான ஒடுக்கு முறை நீடிக்கிறது.

திமுக முன் வைத்த மாநில சுயாட்சி இன்று அழுத்தமாகத் தேவைப்படுகிறது. ஆனால் திராவிடகட்சிகளின் நிலைப் பாட்டில் முந்திய அழுத்தம் இல்லையே.

உண்மைதான், என்றும் இல்லாத அளவிற்கு மைய அரசின் ஆதிக்கம் எல்லா துறைகளிலும் பெருகிவிட்ட நிலையில் மாநில சுய ஆட்சிக்கான தேவை இன்று அதிகரித்திருக்கிறது. அன்று காங் கிரஸ் கட்சி ஏறத்தாழ அனைத்து மாநிலங் களிலும் ஆட்சி செய்த நிலையில் காங்கிரஸ் அல்லாத பிராந்திய கட்சிகள், குறிப்பாக தி.மு.க, மாநிலத்திற்கு அதிக அதிகாரங்களை வேண்டின. ஆனால் இன்று மத்தியில் ஆளும் கட்சி, காங் கிரஸ் ஆக இருந்தாலும் சரி, பா.ஜ.க ஆக இருந் தாலும் சரி, காங்கிரஸ் அல்லாத பிராந்திய கட்சி களுடன் கூட்டணி அமைத்தே ஆட்சி நடத்த வேண்டியிருக்கிறது. அதிகாரத்தில் பங்குவகிப்ப தன் காரணமாக மாநிலத்தில் அரசாளும் கட்சி கள் மத்திய அரசு இலாக்காக்களைப் பங்கு போட்டுக் கொள்வதில் காட்டக் கூடிய அக்கறையை மாநிலங்களின் அதிகாரம் பறிபோகும் போது காட்டுவது கிடையாது. இதனால் பாதிக்கப் படுவது பொதுமக்களே.
சமீபத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கு நாடு தழுவிய நுழைவுத்தேர்வு நடத் தும் உரிமையை மைய அரசு எடுத்துக் கொண்ட தன் விளைவாக கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். ஆனால் இது ஒரு மாநில அரசின் உரிமைப் பிரச்சனையாக ஆட்சி செய்யும் அ.இ.அ, தி.மு.க அரசு கருதவில்லை. தனிப் பெரும்பான்மை பெற்று மத்தியில் தற்போது ஆட்சி அமைத்துள்ள பா.ஜ.க ஆட்சியில் மேலும் பல மாநில அதிகாரங்கள் பறி போகும் நிலையில் மீண்டும் இக் கோரிக்கையை வலுப்படுத்த வேண்டும்.

இந்துத்வா வாதம் முன்னெப்போதும் இல்லாத அளவில் செயல்பட தொடங்கி யுள்ள நிகழ்காலச் சூழலில் அரசியல் அதிகாரம் பெறும் நோக்குடன் செயல் படும் மதவாதசக்திகளை எதிர்ப்பதில் திராவிடக்கட்சிகளுக்குப் பங்கேதும் இருக்குமா?

இன்று பிரதான திராவிட கட்சிகளாகக் கருதப்படும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முதல் தேமுதிக வரை ஆகியவை அரசியல் அதிகாரம் பெற இந்துத்வா மதவாத சக்திகளுடன் ஏற்கனவே கூட்டணி அமைத்த நிலையில் இக்கட்சிகள் இந்துத்வா கொள்கையைப் பின்பற்றும் அரசையோ அல்லது அதற்கு பின் பலமாக இருக்கும் மதவாத சக்திகளையோ எதிர்ப்பதில் முக்கிய பங்கேற்பு அளிக்க வாய்ப்பு உண்டு என உறுதியாகச் கூற முடியாது. ஆனால் பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தாலொ அல்லது இந்திதிணிப்பு முயற்ச் சியை மேற்கொண்டாலொ, தங்களது கட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவாவது நிச்சயம் இந்த்துவா அரசை எதிர்த்து போராடுவர். ஆனால் ஒரு பிரச்சனை என்னவெனில் 1950,1960 களில் திமுக அணிகளிடம் காணப்பட்ட போர்க்குணம் தற்போது கிடையாது.

தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் வளர்ச்சிதான் இடது சாரி இயக்கம் வளர தடையாக இருந்ததா? இன்னும் இருக்கிறதா?
முதல் கட்டத்தில் இடது சாரி இயக்கம் வளர காங்கிரஸ் பெருந்தடையாய் இருந்த்து. இராஜாஜி தனது முதல் எதிரி கம்யூனிஸ்ட் என அறிவித் திருந்தார். “நான் ஏன் கம்யூனிஸ்ட்டுகளை வெறுக்கிறேன்” என்ற புத்தகத்தை அவர் ஆங்கிலத் தில் எழுதியிருந்தார். அதன்பின் காமராஜர் காலத்திலும் கம்யூனிஸ்ட்களுக்கு எதிரான அடக்கு முறை தொடர்ந்தது. முதுகுளத்தூர் கலவரத்தின் போது தலித்களுக்கு ஆதரவாக செயல்பட்ட காமராஜர் தலைமையிலான காங்கிரஸ், தஞ்சா கூரில் கம்யூனிஸ்ட்களின் தலைமை யிலான விவசாய தொழிலாளி தலித் போராடிய போது அவர்கள் மீது காவல்துறை அராஜகத்தை கட்ட விழ்த்து விட்டது. கம்யூனிஸ்ட்கள் மீது ஏவிய அடக்குமுறையை காங்கரஸ்காரர்கள் திமுக வினர் மீது கையாளவில்லை. எனவே எந்த ஆளும் வர்க்க அரசியல் கட்சியாக இருந்தாலும் வர்க்க ரீதியான போராட்டங்களை ஒடுக்குவதில் முனைப்பு காட்டுகின்றனர். இதனால் இடது சாரி இயக்கத் தில் இணைய அஞ்சக்கூடிய மனநிலை தமிழக மக்களிடம் இல்லாமல் இல்லை. அடக்கு முறையை எதிர்க்கும் நெஞ்சுரம் கொண்ட தோழர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதன் மூலமே இடது சாரி இயக்கத்தை வலுவடையச் செய்ய முடியும்.

இன்று சித்தாந்தரீதியாக அரசியல் ரீதியாகவும் திராவிட கட்சிகளுக்கும் இந்துவா சக்திகளுக்கும் மாற்றாகவும் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள இடது சாரி இயக்கங்கள் என்ன செய்ய வேண்டும்?
காங்கிரஸ் இம்மாநிலத்தில் ஒர் வலுவான அரசியல் சக்தியாக இல்லாததால் அக்கட்சியை நீங்கள் குறிப்பிடவில்லை எனக் கருதுகிறேன். இன்றைய உலகமயமாதல் சூழலில் காலம் சென்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் கூறியது போல் முதலாளிவர்க்கத் திடம் முதலாளித்துவக் கொள்கை யையும், பாட்டாளி வர்க்கத்திடம் சோசலிச கொள்கையையும் என இரண்டையும் பேசிய காங்கிரஸ் தலைமைக்கு கொள்கைப்பிடிப்பு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. அன்றே காங்கிரஸ் கட்சியினரை காங்கிரஸ் அங்கி அணிந்த மதவாதிகள் என நேரு குறிப்பிட்டுருந் தார். பா.ஜ.க.வை பொருத்தமட்டில் வெறும் மதவாதக் கட்சி அல்லது இந்துத்வா கட்சி எனபது மட்டும் அல்ல. நவீன தாராளமய கொள்கைகளை தீவிரமாக அமலாக்கி வரும் பா ஜ க. மேட்டுக்குடி மக்கள் மற்றும் நகர்புற நடுத்தர வர்க்கத்தின் முன்னேற்றத்திற்கும் அவர்களது நலன்களைப் பாதுகாப்பதிலும் திட்டமிட்டு செயல்படும் கட்சி கிராமப்புற ஏழை, எளியவர், பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் மேம்பாட்டில் சிறிதும் அக்கரை இல்லாத கட்சி.
மக்களை வேற்றுமைப்படுத்தும் இந்துத்வா தேசியத்தை முன்னிறுத்தி, மக்களை ஒற்றுமைப் படுத்தும் இந்திய தேசியத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுப்போர் மீது அடக்குமுறைகளைக் கட்ட விழ்த்து விட்டு ஜனநாயகக் கலாச்சாரத்தை அழிக்க முயலும் கட்சி.

இடது சாரி இயக்கங்களையும், இடது சாரி மாணவர் இயக்கங்களையும் ஒடுக்கி வருகிற அதே நேரத்தில், ஆர். எஸ்.எஸ், பஜ்ரங்தல், எ.பி.வி.பி போன்ற தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பினரை அராஜக நடவடிக்கைகளில் அத்து மீறி நடந்து கொள்ள அனுமதிக்கிறது. பாஜ.க வினரின் அரசியலாக்கப்பட்ட இந்து மதவெறியை நாடெங்கிலும் தூண்டி, சிறுபான் மையினரின் மனதில் அச்சத்தையும், பாதுகாப் பற்ற உணர்வையும் உருவாக்கி அவர்களை பொதுத் தளத்திற்குப் போராடவராமல் செய்கிறது. நேர்மையுடன் சிறுபான்மையினர் நலனுக்குப் போராட இடது சாரிகளைத்தவிர வேறு யார் உள்ளனர்? பா.ஜ.க வில் தலித் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாற்பது. அவர்களில் ஒருவர்கூட குஜராத்தில் உனா சம்பவத்தில் தலித்துகள் தாக்கப்பட்ட போதோ, தயாசங்கர் சிங் ( மத்திய பிரதேசம்) மாயாவதியை இழிவாகப் பேசிய போதோ, ரோ`ஹித் வெமுலா தற்கொலை செய்து கொண்ட போதோ எவ்வித எதிர்ப்புக் குரலையும் எழுப்பவில்லை. தலித்- இடது சாரி கட்சிகளின் ஒற்றுமை இன்றைய காலத்தின் கட்டாயம். அதறகான முன் முயச்சிகளை இடது சாரிகள் மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.
அ.இ.அ.தி.மு.க, தி.மு.க போன்ற திராவிட அரசியல் கட்சிகளுக்கு ஆட்சியை தக்கவைப்பதே பிரதான நோக்கமாயிருக்கிறது. இளைஞர்களும், கீழ்நிலை நடுத்தரவகுப்பினரும் இவ்விரு கட்சி களையும் ஊழல் கட்சிகளாகக் கருதுகின்னர். இலவசங்கள், வெகுமதிகள் மூலமே இவ்விரு கட்சிகளும் வாக்குப் பெற முயல்கின்றன. சென்ற தேர்தலில் இன்னும் ஒரு நூறு கோடி செல வழித்திருந்தால் அ.இ.தி.மு.க வை வீழ்த்தியிருக்க முடியும் என்பது தான் தி.மு.க தலைமைக்கு நெருங்கிய வட்டத்தில் பேசப்பட்ட செய்தி. இடது சாரி கட்சிகள் கடந்த காலங்களில் இவ்விரு திராவிட அரசியல் கட்சிகளை மாறி மாறி ஆதரித்து வந்ததால் அவர்கள் மீது நம்பிக்கை வைக்க மாற்று அணி விரும்புவோர் தயங்குகின்றனர்.
சென்ற தடவை யாருடைய தலைமையில் கூட்டணி அமைந்திருந்தது. அவர்களது குறைந்த பட்ச செயல் திட்டம் என்ன என்பதெல்லாம் மக்களுக்கு சரியாகப் போய்ச் சேரவில்லை. எனவே தேர்தல் முடிவு ஏமாற்றத்தைத்தந்தது. எதிர்காலத்தில் பவுலொ பிரயர் கூறியது போல் மக்களுக்காக ஆயிரம் நடவடிக்கைகளில் இறங்கி யிருந்தாலும், மக்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து போராடும் மனிதாபிமானி களாய் இடது சாரிகள் தொடந்து தங்களது இலட்சிய பயணத்தில் உண்மையாக மக்கள் நலன் கருதும், சமூக அவலங்களை அகற்றப் போராட விரும்பும் கட்சிகளுடன் மட்டுமே இணைந்து அரசியல் தளத்தில் செயல் பட வேண்டும்.செயல் படுவார்கள் என நம்புகிறேன்.

சுரண்டலுக்கு எதிரான அனைத்து உழைப்பாளர்களின் ஒற்றுமை!

ஏ.கே.பத்மநாபன் நேர்காணல் …

14324230_296972730682567_2748406671079088980_oசெப் 2 ஆம் தேதி நடைபெற்ற தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டத்தின் வெற்றியாக எதைக் கருதுகிறீர்கள்?

வெற்றி என்பதில் இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளன. இது தனிப்பட்ட ஒரு வேலை நிறுத்தம் அல்ல. கடந்த 25 ஆண்டுகளில் நவதாராளமயக் கொள்கைகளின் அமலாக்கத்திற்கு எதிராக இந்திய தொழிலாளர்கள் நடத்தும் 17 வது, நாடுதழுவிய வேலை நிறுத்தம் ஆகும்.

1991 ஆம் ஆண்டில் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம், புதிய தாராளமயக் கொள்கைகளை அமலாக்கத் தொடங்கியது. (எனினும், 1980களிலேயே இந்திகாந்தி அரசாங்கம் ஐ.எம்.எப் உடன் ஒப்பந்தம் போட்டு ரகசியமாக வைக்கப்பட்டதை பத்திரிக்கைகள் வெளிக்கொண்டுவந்தன) குறிப்பாக, ‘புரட்சியின் 25 ஆண்டுகள்’ என முதலாளித்துவ ஊடகங்கள் கொண்டாடிக் கொண்டுள்ள சூழலில், அந்தக் கொள்கைகளுக்கு வலுவான எதிர்ப்பை இந்திய தொழிலாளி வர்க்கம் பதிவு செய்திருக்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் இப்போராட்டங்களில் பங்கேற்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகின்றது.

2013 பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்கி, இந்திய வரலாற்றில் காணாதவகையில் 48 மணி நேர வேலை நிறுத்தம் நடந்தது. 15 கோடிப்பேர் கலந்துகொண்ட அந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றவர்களில் 40 சதவீதம் பேர் எந்தத் தொழிற்சங்கத்திலும் இல்லாதவர்கள் என்பது குறிப்பிடத் தகுந்தது. அதாவது, தொழிலாளர் சட்டத் திருத்தங்களால் நேரடியாக பாதிக்கப்படும் ஆலைத் தொழிலாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் பங்கேற்றனர். உதாரணமாக ஹரியானா குர்கானில் இருந்து ராஜஸ்தான் எல்லை வரையில் உள்ள 10 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள். ஹைதராபாத் ரெங்காரெட்டி மாவட்டத்திலும், புனே தொழிற்பேட்டையிலும், நாசிக்கிலும் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் பங்கேற்பைச் சொல்லலாம்.

தங்களை தொழிலாளர்களாக நடத்தவே மறுக்கும் நிலைக்கு எதிராக திட்டப்பணியாளர்கள் (ஸ்கீம் வொர்க்கர்ஸ்) வேலை நிறுத்தங்களில் பங்கேற்றனர்.

வேலைநிறுத்தக் கோரிக்கைகள் தொழிலாளர்களிடம் எடுத்துச் செல்லப்படும்போது, அவர்கள் உணர்ந்து பங்கேற்பது இங்கே முக்கியமாகச் சொல்லவேண்டியதாகும். இந்தியாவில் தொழிற்சங்கங்களின் எண்ணிக்கை அதிகம், அதே சமயம் சங்கங்கள் ஏதிலும் இல்லாத தொழிலாளர்களின் எண்ணிக்கை 30 சதவீதம். இந்த சூழலில், செப்.2 ஆம் தேதி நடைபெற்ற நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் (கடந்த இரண்டு வேலை நிறுத்தங்களில் கடைசி நேரத்தில் பிஎம்எஸ் விலகிக்கொண்டபோதிலும்) 18 கோடி தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர். இது முதல் அம்சம்.

2009 ஆம் ஆண்டு வரையிலான 12 வேலைநிறுத்தங்களை இடதுசாரி தொழிற்சங்க அமைப்புகள் ஒருங்கிணைத்தன. அந்தப் போராட்டக் கோரிக்கைளை ஏற்ற பிற சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் (சங்கங்கள் போராட்டத்தில் இணையாதப்போதிலும் கூட) இப்போராட்டங்களில் பங்கேற்றனர். இந்த நிர்ப்பந்தமும், அரசின் கொள்கைகளில் ஏற்பட்டுள்ள தீவிரமான மாற்றங்களும், ‘வேறு மாற்று இல்லை’ என்று பேசிவந்த சங்கங்களையும் போராட்டத்தில் இணைத்துள்ளன. அதன் தொடர்ச்சியாக, 2010 ஆம் ஆண்டிலிருந்து ஐஎன்டியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள், தொழில்வாரி சம்மேளனங்களும் அதைத் தொடர்ந்து பிஎம்எஸ் சங்கங்கள் இணைந்தனர். (இரண்டு வேலை நிறுத்தங்களில்தான் பிஎம்எஸ் பங்கேற்றது என்றபோதிலும்) இது இரண்டாவது அம்சம் ஆகும்.

குறைந்தபட்ச ஊதியம் மற்றும் உண்மை ஊதியம் என்பவை என்ன?

இந்தியாவில் பல கொள்கைகள் உள்ளன. ஆனால், அரசுக்கென்று ஒரு ஊதியக் கொள்கை மட்டும் இல்லை. அப்படியொரு கொள்கை வேண்டுமென 1957 ஆம் ஆண்டில், 15வது இந்திய தொழிலாளர் மாநாடு விவாதித்து, (குடும்பத்தில் 3 பேர் இருப்பதாக மட்டும் ஒரு அடிப்படையை எடுத்துக் கொண்டு) உடலுக்குத் தேவையான கலோரி உள்பட கணக்கிட்டு அறிவியல் பூர்வமானதொரு கொள்கையை முன்மொழிந்தது. அந்தக் கொள்கையை ஏற்பதாக இன்றுவரையில் எந்த அரசும் சொல்லவில்லை.

1991 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு ஒன்றில், தொழிலாளர்களின் மாறியுள்ள தேவைகளைக் கணக்கில்கொண்டு 25 சதவீதம் கூடுதல் ஊதியம் வழங்கவேண்டுமென கூறியது. அப்படிக் கணக்கிட்டால், இன்றைய விலைவாசி நிலைமையில் ரூ.26 ஆயிரம் குறைந்தபட்ச ஊதியம் வருகிறது. இருப்பினும் நடப்பில் உள்ள மிகக் குறைந்த ஊதியத்திற்கும், கோரிக்கைக்குமான இடைவெளி மிக அதிகமாக உள்ள சூழலில், மத்திய அரசின் 7 வது ஊதியக் குழு நிர்ணயித்த ரூ.18 ஆயிரமாவது, குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயம் செய்க என்று கோரிக்கை வைத்துள்ளோம். இது ஒரு இடைக்கால இலக்குதான்.

விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதியம் உயர்த்தப்பட வேண்டும். ஊதியம் உயராமலே இருந்து விலைவாசி மட்டும் உயரும்போது, உண்மை மதிப்பில் குறைவு ஏற்படுகிறது. ஆண்டுகள் நகர நகர இந்த இடைவெளி கடுமையாக அதிகரிக்கிறது. திரட்டப்பட்ட தொழில்களில் பஞ்சப்படி கணக்கிடப்படும்போதும் அனைத்து தொழிலாளருக்கும் பஞ்சப்படி கிடைப்பதில்லை. எனவேதான், ஊதியம் வழங்கப்படவேண்டும் என வலியுறுத்துகிறோம்.

ஒவ்வொரு சங்கமும் தன் நலனை மையப்படுத்தித்தானே செயல்படும். சிஐடியு ஏன் தொழிற்சங்கங்களை ஒன்றிணைக்க விரும்புகிறது?

இப்போது சிஐடியு மட்டும்தான் இதைச் செய்கிறதென்று சொல்லவில்லை. அதே சமயம், தொழிலாளர்களின்  பலம் என்பது அவர்களுடைய ஒற்றுமையில்தான் இருக்கிறது. நாடு முழுமையிலும் உள்ள தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி, ஒரு சமூக ரீதியிலான மாற்ற வேண்டும் என்று போராடுவதே சிஐடியுவின் நோக்கம். ஆரம்பத்தில் தொழிலாளர்களும், தொழிற்சங்கமும் தனிப்பட்ட பொருளாதாரக் கோரிக்கைகளுக்காகத்தான் வருவார்கள். ஆனால், அதோடு முடிந்துவிடக் கூடாது.

உதாரணமாக, விலைவாசி உயர்வுக்கு ஏற்ற ஊதியத்தை எடுத்துக் கொள்வோம்.  ஒரு முதலாளியால் ஊதியத்தைக் கொடுக்க முடியுமே தவிர, விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியாது. அதற்கு அரசின் கொள்கைகளில் மாற்றம் வேண்டும். அமெரிக்கா உட்பட உலகம் முழுவதுமே உண்மை ஊதியம் குறைந்துகொண்டே வருகிறது. கொள்கையோடு தொடர்புபடுத்தி சிந்திக்கும் நிலைக்கு தொழிலாளர்கள் வளர்வதற்கு பரந்துபட்ட ஒற்றுமை தேவைப்படுகிறது.

பல்வேறு சங்கங்களில் செயல்பட்டுவந்த நாங்கள் 1970 ஆம் ஆண்டில் சிஐடியு அமைப்பை உருவாக்கினோம். அப்போதே மிகத் தெளிவான முறையில் ‘ஒன்றுபடுவோம், போராடுவோம்’ என்ற முழக்கத்தை முன்வைத்தோம். ஒற்றுமை என்பது போராடுவதற்காக, அதற்கு பயன்படாத ஒற்றுமையை ஏற்க முடியாதென்பது சிஐடியு நிலைப்பாடு. இதற்காகத்தான் சிஐடியு இந்த கோஷத்தை எழுப்பியது.

அப்போதே 1970 ஆம் ஆண்டுகளில் யுனைட்டட் கவுன்சில் ஆப் டிரேட் யூனியன்ஸ் (யூசிடியு) என்ற பொது மேடையை உருவாக்கினோம். அதில், சிஐடியு, இன்சூரன்ஸ் ஊழியர்கள், தபால் ஊழியர்கள், ஹெச் எம் எஸ் அமைப்பில் ஒரு பகுதி என ஒரு சிறு பகுதி தொழிற்சங்கங்கள் இணைந்து நின்றன. அப்போதே என்.சி.டியு என்று மற்றொரு மேடை உருவாக்கப்பட்டு இந்த ஒற்றுமையை உடைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 1974 ஆம் ஆண்டு ரயில்வே தொழிலாளர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டம் நடைபெற்றது. அதன் பின் பல்வேறு கட்ட அரசியல் மாற்றங்களைக் கடந்து, 1980 ஆம் ஆண்டில் நேஷனல் கேம்பைன் கமிட்டீ என ஒரு கூட்டு மேடை உருவானது. அதில் சிஐடியு, ஏஐடியுசி, ஹெச் எம்எஸ்-இல் ஒரு பகுதி இணைந்தன. அது ஸ்பான்சரிங் கமிட்டி ஆப் இந்தியன் டிரேட் யூனியன்ஸ் என்று மேலும் விரிவானது.

அதைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட வெகுஜன இயக்கங்களில் தேசிய மேடை ‘என்பிஎம்ஓ’ என்ற பொது மேடையில் விவசாயிகள், மாணவர் என பல சங்கங்களும் இணைந்தன. இந்த அமைப்பு 1982 ஆம் ஆண்டு நடத்திய போராட்டக் கோரிக்கைகளில் விவசாயத் தொழிலாளர்களுக்கான கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. இதன் விளைவாக விவசாயத் தொழிலாளர்களுக்கான ஒரு சட்டம் உருவாக்கும் தேவை எழுந்தது, இருப்பினும் அரசு அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றத்தவறியது. இப்படி, ஒன்றுபட்ட போராட்டங்களுக்கான தொடர் முயற்சி இன்றைக்கு மத்திய தொழிற்சங்களின் ஒற்றுமையாக மலர்ந்திருக்கிறது.

அதே சமயம், எதிர்த் தரப்பு வலுவாக இருக்கிறது. தொழிலாளர்கள் மீது வலுவான தாக்குதல்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன. தற்காப்பு நிலையில் இருத்தப்பட்டிருக்கிற தொழிலாளிவர்க்கத்தின் முன்னேற்றத்தை சாதிக்க வேண்டியுள்ளது. தொழிலாளிகளின் ஒற்றுமை விரிவுபடுத்தப்பட்டு அனைத்து உழைப்பாளி மக்களின் ஒற்றுமையாக கொண்டுவரப்படவேண்டும். இதுவரை நடைபெற்றுள்ள கூட்டுப் போராட்டங்களால் நாம் ஒரு படி முன்னேற்றம் அடைந்துள்ளதாகப் பார்க்க வேண்டும். அதே சமயம், இலக்கை நோக்கிய பயணம் நீண்டதென்று உணர்ந்திருக்கிறோம். அதற்கான உணர்வு மட்டம் உயர வேண்டும். போகவேண்டிய திசையில் சரியாக நகர்ந்துகொண்டிருக்கிறோம்.

உலகமயமாக்கலின் தாக்கமும் – தொழிலாளர் இடம்பெயர்தலும் அதிகரித்துள்ள சூழலில் தொழிற்சங்கங்களால் தொழிலாளர்களைத் திரட்ட முடிகிறதா?

இரண்டு வெவ்வேறு விசயங்களை இணைத்து ஒரு கேள்வியாக கேட்டிருக்கிறீர்கள். தொழிலாளர்கள் வேலையைத் தேடி ஓடுவது ஒன்றும் நவீன காலப் பிரச்சனை அல்ல. கடந்தகாலத்தில், மலேசியாவிற்கும், இலங்கைக்கும், பிஜி தீவுகளுக்கும் கடத்திச் செல்லப்பட்டு வேலைவாங்கப்பட்டிருக்கலாம். அல்லது கங்கானிகள் அழைத்துச் சென்றிருக்கலாம். உலகம் முழுவதும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட குடியேற்றங்கள் நடந்துள்ளன.

இடம்பெயர்தல் என்பது பல வடிவங்களில் நடக்கிறது. கிராமங்களில் இருந்து அருகில் உள்ள நகரங்களுக்கு இடம்பெயர்தல். மாநிலம் விட்டு மாநிலம் இடம்பெயர்தல். சொந்த நாட்டிலிருந்து வேறு நாட்டை நோக்கி இடம்பெயர்வது. அதிலும், மூளை உழைப்பாளர்களும், உடல் உழைப்பாளர்களும் உள்ளனர்.

அஸ்ஸாமிலிருந்து தமிழகம் வரும் தொழிலாளர்களைத் திரட்டவேண்டுமென்றால் அவர்களின் மொழி தெரியாமல் இங்கு தொழிற்சங்க ஊழியர்கள் படும் பாடு ஒரு சவால்தான், அதற்கான தீர்வுகளை விவாதிக்கிறோம். மொழி உள்ளிட்ட தடைகளை நீக்க வேண்டியுள்ளது. தென் ஆப்ரிக்காவில் இந்தியத் தொழிலாளர்களை திரட்டும் பணிக்கு உதவியாக சிஐடியு தொழிலாளர்கள் அங்கு சென்றுவந்தோம். கிரேக்கம் சென்றபோது, நானே அவ்வாறு தொழிலாளர்களிடம் பேசியுள்ளேன்.

இவ்வாறான தொழிலாளர்களில், தொழிற்சங்க உரிமையே இல்லாத பகுதிகளின் நிலைமை வேறு. ஐரோப்பிய, ஆப்ரிக்க நிலைமைகள் வேறு. தமிழகத்திலிருந்து வேறு மாநிலங்கள் செல்வோர், அங்கிருந்து இங்கே வருவோரின் நிலைமைகள் வேறு. இந்த அனைத்துப் பகுதி தொழிலாளர்கள் மீதும் உழைப்புச் சுரண்டல் நிகழ்ந்தே வருகிறது. சுரண்டல் நடப்பதை ஏற்றுக்கொள்ளாத பகுதியினர் மீதும் சுரண்டல் நடந்தே வருகிறது.

உலகமயம் – நவீன கால சூழலின் வெளிப்பாடு. உலகமயத்தின் பிரச்சனை என்னவென்றால், மூலதனம் உலகின் எந்த மூலைக்கும் பாயலாம், ஆனால் தொழிலாளிக்கு அத்தகைய சுதந்திரம் இல்லை என்பதுதான். இந்தியாவில் மூலதனம் தங்குதடையற்றுப் பாய்ந்து இந்திய வளங்களை சுரண்ட அனுமதிக்கப்படுகின்றது. மராட்டியத்திலும், குஜராத்திலும் முதலாளிகளுக்கு சலுகைகளும், வசதிகளும் செய்துகொடுக்கப்படுகின்றன. அதேசமயம் தொழிலாளி, தன் விருப்பம்போல் வேலை இருக்கும் இடத்திற்குச் சென்று வேலை செய்ய முடியாது. அரசிடமிருந்து சலுகைகளும், வசதிகளும் கோர முடியாது. உலகமயத்தால் கிடைக்கும் வளர்ச்சியும் அனைவருக்குமானதாக இல்லை.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள அரசுகள், நிதிக் கொள்கைகளில் ஏற்படுத்தும் மாற்றங்களால் தொழிலாளர் நலத்திட்டங்களே பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன. இந்தியாவில் பாட்டாளி வர்க்கம் அதிகரித்துள்ளது. அதே சமயம் அவர்களில் பெரும்பாலானவர்கள் அமைப்பு ரீதியாக திறப்பட்ட, தொழிற்சாலைகளில் பணியாற்றுவோராக இல்லை. மேலும், இந்திய முதலாளித்துவம் வரலாற்று ரீதியாகவே, ஒரு வரையரைக்கு உட்பட்டுத்தான் வளர்ந்திருக்கிறது என்பதை இங்குள்ள உழைக்கும் மக்களின் நிலையும், குணாம்சங்களும் பிரதிபலிக்கின்றன. அதோடு உலகமயமாக்கலின் தாக்கத்தையும் அது காட்டுகிறது. விவசாய நெருக்கடியால் வேலை தேடி வருவோருக்கு வேலை கொடுக்கும் அளவு உற்பத்தித் துறை வளர்ச்சி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை. ‘வேலை வாய்ப்பற்ற வளர்ச்சி’ என்ற முரண்பட்டதொரு நிலையையே எட்டியிருக்கிறோம். இத்தகைய சுரண்டலைத் தீவிரப்படுத்துவதில் அரசுகளும் உதவிபுரிகிறது.

தொழில் நிறுவனங்களின் கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், சங்கம் ஏற்படுத்துவதை பாதிக்கிறதா?

முதலாளித்துவ வளர்ச்சிமுறையின் ஒரு பகுதியாகத்தான் இந்த மாற்றங்கள் நடக்கின்றன. காண்டிராக்ட், அவுட்சோர்சிங் என்பதெல்லாம் அதன் பகுதியாக உருவாகின. நான் ஒரு ஆட்டோமொபைல் நிறுவனத்தில் வேலைபார்த்தேன். அந்தத் தொழிற்சாலையிலேயே  அனைத்துப் பாகங்களும் உருவாக்கப்பட்டு ’தரத்துக்கு நாங்கள் பொறுப்பு’ என்று மார்தட்டிய காலம் அது. இப்போது வெறும் ஸ்க்ரூ டிரைவர் தொழில்நுட்பமாகியிருக்கிறது. அதாவது தனித்தனி பாகங்களை வாங்கி, இணைப்பது மட்டுமே ஒரு தொழிற்சாலையின் பணியாகிறது.

இவை முதலாளித்துவ லாப வேட்கையில் அவர்களுடைய தேவையை ஒட்டி ஏற்படுகிற மாற்றங்கள். நிரந்தரத் தொழிலாளி நியாயம் கேட்கும்போது அவனைத் தோற்கடிக்க பலவீனப்படுத்த என்ன வழி? என யோசிக்கின்றனர். அன்று தொழிலாளர் நல அதிகாரியாக செயல்பட்டவரின் இடத்தில் ‘மனித வளத் துறை’ செயல்படுகிறது. ஆனால், அந்த ‘மனித வள’ நிர்வாகிக்கு ஒரு மனிதனோடு எப்படிப் பழகுவதென்று தெரியவில்லை. முன்பைவிடவும் சுரண்டல் மோசமாகியுள்ளது. அதே சமயம், உளவியலாக ஒரு தொழிலாளியின் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொல்வது, திருமண நாள் வாழ்த்து என சில நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

லாபத்தை எப்படியாவது அதிகப்படுத்த நடக்கும் முயற்சிகள் ஒரு பக்கமும், அதனால் ஏற்படும் விளைவுகளை நிர்வகிப்பது மறுபக்கமும் நடக்கின்றன. தொழிற்சங்கங்களும் தன்னை பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுத்தியே வந்துள்ளோம். செங்குத்தாக அமைப்புக் கட்டுவது மட்டுமல்ல, பக்கவாட்டிலும் சங்கங்கள் வளர்கின்றன. ஒவ்வொரு துறைக்கும் அதுசார்ந்த கோரிக்கைகளில் சங்கங்கள் வளர்க்கப்படுகின்றன. புதிய புதிய சவால்களைக் குறித்து விவாதித்து முடிவுகளை அடைகிறோம்.

இந்தியாவுக்கென பிரத்யேக நிலைமைகள் உள்ளனவே, அதனை சங்கம் கவனிக்கிறதா?

ஒரு வலு வாய்ந்த எதிரியை அதன் எல்லா முனையிலிருந்தும் சந்திக்க வேண்டிய சவால் தொழிற்சங்களுக்கு உள்ளது. சுரண்டலைத் தக்கவைக்கும் எல்லா வடிவங்களுக்கு எதிராகவும் தன்னை மேம்படுத்திக் கொண்டே ஒரு சங்கம் செயல்படுகிறது. பன்முகத் தன்மை கொண்டதாக ஒரு சங்கம் இருக்க வேண்டும். பிரச்சனைகளில் இருந்து கொள்கைகளையும், அதிலிருந்து அரசியலையும் வந்தடையும் தெளிவு வேண்டும். இதுதான் இன்றைய தொழிற்சங்கம் செய்ய வேண்டிய பணியாகும். சிஐடியு தனது நோக்கமாக இதைத்தான் கொண்டிருக்கிறது. சுரண்டலற்ற சமதர்ம சமுதாயத்தை விரும்பும் ஒரு சங்கம் அப்படித்தான் செயல்பட முடியும்.

காற்று பலமாக அடிக்கிறது, புயலடிக்கிறதென்றாலும் அவைகளுக்கு நடுவில்தான் நாம் பணியாற்ற வேண்டும். விழுந்தும், எழுந்தும் எழுந்தும் விழுந்துமாக முன்செல்கின்றன  தொழிற்சங்கங்கள், நேரடியாக சங்கம் வேண்டாம் என்று மறுப்பது ஒரு பக்கம். சாதியைச்சொல்லி, மதத்தைச் சொல்லி, தரம் சொல்லி என்று பல்வேறு வகைகளில் தொழிலாளர் ஒற்றுமைக்கு எதிரான செயல்பாடுகள் நடக்கின்றன.

இந்தியாவில் சாதி ஒரு யதார்த்தமாக இருக்கிறது. இந்த யதார்த்தத்தை உணர்ந்து சாதியும், வர்க்கமும் இரண்டும் இணைந்து செயல்படுவதை புரிந்துகொண்டே சங்கம் செயல்பட வேண்டும்.  சாதியின் ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்களுடைய, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் உடன் நின்று, வர்க்கச் சுரண்டலுக்கு எதிரான ஒன்றுபட்ட அணியை உருவாக்குவது அவசியம். இத்தகைய இணைப்பில் முன்னைக்காட்டிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுவருகிறது.

 

இப்போது, தொழிலாளர்களே தனித்தனி தீவாக மாறியிருக்கிறார்களா? ஐடி துறையில் பணியாற்றும் தொழிலாளர்களின் நிலை வேறுதானே?

ஐடி துறையில் பணியாற்றுவோரை ஒரே வகையான தொழிலாளர்களாகப் பார்க்கவில்லை. குறைந்த சம்பளத்தில் 4000, 5000 சம்பளத்திலும் வேலை வாங்கப்படுகிறது. 1 லட்சம், 2 லட்சம் என உயர்ந்த சம்பளமும் பெறுவோர் உள்ளனர். அவர்களுக்கு கல்லூரிக் காலத்திலிருந்தே சங்கமாகத் திரளும் அனுபவத்திலிருந்து விலக்கிவைக்கப்படுகின்றனர். உடலுழைப்பு குறித்த துவேசம் கூட அவர்கள் மனதில் விதைக்கப்படுகிறது. அந்தத் தொழில்களில் ‘கூட்டு உற்பத்தி சூழல்’ இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதனால், ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையில்லாமல், சொந்த நண்பர்களுடனே போட்டிபோட ஆயத்தமாக்கப்படும் நிலைமையும் உள்ளது.

சில நிறுவனங்களில் ‘பிங்க் ஸ்லிப்’ வழங்கப்பட்டு வேலையிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிரான கோப உணர்வு உருவானதை சமீபத்தில் பார்த்தோம். எனவே, அனைத்து தரப்பு தொழிலாளர்கள் மத்தியிலும், சங்கமாகத் திரண்டு போராடும் சூழல் எழுந்துதான் தீரும்.

இல்லை. இது எப்போதுமே இருந்துவந்திருக்கிறது. அரசுத்துறை ஊழியர்கள், சங்கம் சேர்வதும் போராடுவதும் தங்களுக்கு அவமானம் என்று கருதியது உண்டு. ஆனால் அதிலேயே உடைப்பு ஏற்பட்டது.

காலனி ஆதிக்க காலத்திலேயே, ஆங்காங்கு தொழிலாளர் ஒன்றுபட்ட போராட்டங்கள் நடந்துவந்துள்ளன. 8 மணி நேர வேலைக்கான போராட்டங்கள் நடந்துள்ளன. 1918 ஆம் ஆண்டிலேயே முதல் முறையான சங்கம் சென்னையில் தொடங்கப்பட்டது. அதற்கு முன்பே 1908 ஆம் ஆண்டில் வ.உ.சி தூத்துக்குடியில் போராடியுள்ளார். இந்திய அளவில் 1920 ஆம் ஆண்டு ஏஐடியுசி உருவாக்கப்பட்டு, அது சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் இந்திய தொழிலாளார்களை பிரதிநிதித்துவப்படுத்தியது.

பிரிட்டிஷ் அரசின்நேரடி கட்டுப்பாட்டில் இருந்து பலிவாங்குதலுக்கு உள்ளான தபால் மற்றும் தந்தி ஊழியர்களும்  சங்கமாகத் திரண்டனர். சுரண்டலுக்கு எதிராக ஒன்றுபட்டனர். எனவே, தனித்தனித் தீவுகளாக இருக்கும் தொழிலாளர்களை, சங்கமே ஒன்றுபடுத்துகிறது.