கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை காட்டும் பாதை

ஜி.ராமகிருஷ்ணன்

“முதலாளித்துவ வர்க்கத்தின் வீழ்ச்சியும், பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியும் தவிர்க்கவியலாதவை” என மார்க்சும், ஏங்கெல்சும் இணைந்து வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் உறுதிபடக் கூறினார்கள்.

1848-ம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று லண்டனில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முதல் பிரதி (ஜெர்மன் மொழியில்) வெளியிடப்பட்டது. தீப்பொறி வேகத்தில் அடுத்தடுத்து பல மொழிகளில், பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியானது. இவ்வாறு வெளியான அறிக்கைக்கு மார்க்சும், ஏங்கெல்சும் இணைந்து இரண்டு முன்னுரைகளும், மார்க்சின் மறைவிற்குப் பிறகு ஏங்கெல்ஸ் தனியாக ஐந்து முன்னுரைகளும் எழுதியுள்ளனர். ஒவ்வொரு முன்னுரையிலும் வரலாற்று வளர்ச்சிப் போக்குடன் தாங்கள் வெளியிட்ட அறிக்கையின் நிர்ணயிப்புகளை ஒப்பிட்டு, பொருத்திப் பார்த்து சரியாக மதிப்பீடும் செய்துள்ளனர்.

முதலாளித்துவம் வீழ்ச்சியுறும் என்ற நிர்ணயிப்பின்படியே 1871-ம் ஆண்டு ஃபிரெஞ்சு நாட்டில் தொழிலாளி வர்க்கம் அந்நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரத்தை புரட்சியின் மூலம் கைப்பற்றியது. இரண்டு மாதங்களுக்கு மேல் அதனால் தக்க வைக்க முடியவில்லை என்றாலும் மார்க்சும், ஏங்கெல்சும் கூறிய அடிப்படையில் தொழிலாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்பதற்கான முன்னுதாரணமான முதல் புரட்சிதான் பாரீஸ் கம்யூன்.  

1872-ம் ஆண்டு இருவரும் இணைந்து எழுதிய ஒரு முன்னுரையில் மேற்கண்ட பாரீஸ் கம்யூன் புரட்சியைப் பற்றி குறிப்பிட்டதோடு, 1882-ம் ஆண்டு இருவரும் இணைந்து எழுதிய முன்னுரையில் ரஷ்யாவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை மதிப்பீடு செய்து “ரஷ்யப் புரட்சியானது மேற்கு நாடுகளில் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு முன்னோடியாகி … கம்யூனிச வளர்ச்சிக்கான தொடக்கப்புள்ளியாக பயன்படக் கூடும்” எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

1917-ம் ஆண்டு நவம்பர் 7 அன்று லெனின் தலைமையிலான ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி புரட்சியின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து 1949-ல் சீனாவிலும், இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், 1950களில் வியட்நாம், கொரியா, 1959-ம் ஆண்டு கியூபா என அடுத்தடுத்து கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. இது எவ்வாறு சாத்தியமானது?  உலகு தழுவிய பாட்டாளி வர்க்கத்திற்கு அவரவர் வாழும் நாடுகளில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஒரு பொதுச் செயல்திட்டமாக அமைந்தது.

“பாட்டாளி வர்க்கத்தின் வெற்றி தவிர்க்க முடியாதது” என்ற முடிவுக்கு மார்க்சும், ஏங்கெல்சும் வந்தது யூகத்தினால் அல்ல. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிடுவதற்கு முந்தைய பத்தாண்டுகளில் மார்க்சும், ஏங்கெல்சும் தனியாகவும், இணைந்தும், அக்காலத்தில் நிலவிய தத்துவ,  பொருளாதார, அரசியல் சூழலை ஆய்வு செய்து அதனடிப்படையில் மாற்றம் தவிர்க்க முடியாதது என்ற முடிவுக்கு வந்தனர். வேறுவகையில் சொல்வதானால், கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிடுவதற்கு முந்தைய ஆண்டுகளில் இருவரும் இணைந்து உருவாக்கிய இயக்க இயல், வரலாற்றியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தினை நடைமுறைப்படுத்திட (Application) உருவாக்கப்பட்டதுதான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்ற செயல்திட்டம்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையைப் பற்றி லெனின் கூறியதை இங்கு மேற்கோள் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

“மனித வாழ்க்கையின் உண்மைகளைச் சார்ந்த, சீரான பொருள்முதல் வாதம்; வளர்ச்சி பற்றிய விரிவான கோட்பாடாகிய இயக்கவியல்; கம்யூனிச சமூகத்தைப் படைக்கும் வல்லமை கொண்ட பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர வரலாற்று பாத்திரம், வர்க்கப் போராட்ட கருத்தியல்;  இவை யாவும் அடங்கிய ஒரு புதிய உலகக் கண்ணோட்டத்தை இந்த நூல் மாமேதைகளுக்கேயுரிய தெளிவோடு எடுத்துரைக்கிறது.”

அக்கால அரசியல், பொருளாதார, தத்துவ வளர்ச்சிப் போக்குகளை இயக்க இயல், வரலாற்று இயல் அணுகுமுறை அடிப்படையில் அறிக்கையின் பல பகுதிகளில் அவர்களுக்கே உரிய பாணியில் விளக்கியிருக்கிறார்கள்.

சுதந்திரமானவனும் – அடிமையும், உயர்குலச் சீமானும் – பாமர குடிமகனும், நிலப்பிரபுவும் – பண்ணை அடிமையும், முதலாளியும் – தொழிலாளியும் சுருங்கக் கூறின் ஒடுக்குவோரும் – ஒடுக்கப்படுவோரும் தீரா பகைமைக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு கட்டத்திலும் ஒடுக்கும் வர்க்கத்திற்கும் – ஒடுக்கப்படும் வர்க்கத்திற்கும் இடையறாத போராட்டம் வரலாற்று நெடுகிலும் நடந்து வந்தது என்பதைத்தான் “இதுநாள் வரையில் நிலவி வந்துள்ள சமுதாய வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறே ஆகும்” என  கூறுகிறார்கள்.

மனித குல வரலாற்றை மேற்கண்டவாறு இயக்கவியல் முறையில் ஆய்வு செய்த மார்க்சும், ஏங்கெல்சும் டார்வினுடைய பரிணாம வளர்ச்சித் தத்துவத்தை தங்களுடைய நிர்ணயிப்புக்கு ஆதாரமாக கருதினார்கள். மார்க்ஸ் தனது உற்றத் தோழன் ஏங்கெல்ஸ்சுக்கு எழுதிய கடிதத்தில், இயற்கையில் ஏற்படும் மாற்றத்தை விளக்கிடும் டார்வினின் பரிணாம வளர்ச்சித் தத்துவம் (உயிரின் தோற்றம்), மனித சமுதாயத்தில் ஏற்படும் மாற்றம் பற்றிய தங்களது ஆய்வை நிரூபிப்பதற்கு துணையாக இருப்பதாக   எழுதினார்.

“டார்வினுடைய கொள்கை உயிரியலுக்கு ஆற்றிய அதே பங்கினை இந்த வரையறைப்பு வரலாற்று இயலுக்கு ஆற்றப்போவது நிச்சயம். நாங்கள் இருவரும் 1845க்கு சில ஆண்டுகள் முன்பிருந்தே இந்த வரையறையை நோக்கி படிப்படியாக நெருங்கி வந்து கொண்டிருந்தோம்” என ஏங்கெல்சும் குறிப்பிட்டிருக்கிறார்.

சமூகத்தின் சகல அம்சங்களையும் தனித்தனியாக ஆய்வு செய்து கொண்டிருந்த இந்த இரண்டு மேதைகளின் சந்திப்பு மார்க்சியத் தத்துவத்தை உருவாக்குவதில் மிகப் பெரிய பாத்திரத்தை வகித்துள்ளது.

1844 ஆகஸ்ட் கடைசியில் பாரிஸில் மார்க்சை ஏங்கல்ஸ் சந்தித்தார். அவர் இங்கிலாந்திலிருந்து ஜெர்மனிக்கு திரும்பும் வழியில் பாரிசுக்கு வந்தார். அவர் அப்போது பாரிஸ் நகரத்தில் பத்து தினங்கள் தங்கியிருந்தார். அப்போது இருவரும் அநேகமாக எல்லா நேரத்தையும் ஒன்றாகவே கழித்தனர். அவர்களுடைய நேரடியான நாள்தோறும் நிகழ்ந்த கலந்துரையாடல் அவர்களுடைய கருத்தோட்டங்கள் அநேகமாக அத்தனை பிரச்சனைகள் மீதும் தத்துவம் நடைமுறை ஆகியவற்றின் ஒவ்வொரு அம்சத்திலும் முழுவதும் ஒன்றுபோல் இருந்தன. முழு கருத்தொற்றுமை நிலவியது.

“1844 கோடைக்காலத்தில் பாரிஸில் நான் மார்க்ஸிடம் சென்று அவரை சந்தித்துப் பேசியபோது எல்லா தத்துவத் துறைகளிலும் எங்கள் இருவருக்கிடையில் இருந்த முழுமையான உடன்பாடு தெளிவாகத் தெரிந்தது. எங்களுடைய கூட்டுப்பணி அன்றிலிருந்தே தொடங்கியது” என ஏங்கெல்ஸ் எழுதியிருக்கிறார்.

1840களின் துவக்கத்திலேயே இருவரும் தனியாகவும், கூட்டாகவும் பொருளாதாரம், தத்துவம், சோசலிசம் ஆகிய அம்சங்கள் குறித்து விரிவான ஆய்வுகளில் இறங்கினர். “இங்கிலாந்தில் தொழிலாளர்களின் வாழ்நிலை” என்ற நூலில் இங்கிலாந்தில் தொழிலாளர்களின் உழைப்பு முதலாளிகளால் ஒட்டச் சுரண்டப்படுவதும், இதனால் வாழ்க்கைத் தரம் குறைந்து வருவதும்,  தங்களுடைய வாழ்க்கையைப் பாதுகாக்க ஆலை முதலாளிகளுக்கு எதிராக போராடுவதும் ஆகிய பல்வேறு அம்சங்களை ஏங்கெல்ஸ் தனது நூலில் விளக்குகிறார். மேலும், முதலாளித்துவத்தை வீழ்த்தி சோசலிசத்திற்கான போராட்டத்திற்கு பாட்டாளி வர்க்கம்தான் தலைமை தாங்கும் தகுதியுள்ளது எனவும் ஏங்கெல்ஸ் பதிவு செய்திருக்கிறார். மேலும், ‘அரசியல், பொருளாதாரம் பற்றிய விமர்சனக் குறிப்பு என்ற ஏங்கெல்சினுடைய கட்டுரையையும், இங்கிலாந்தில் தொழிலாளர்களின் வாழ்நிலை என்ற நூலையும் படித்த மார்க்ஸ் தன்னுடைய பல கட்டுரைகளில் அவற்றை எடுத்தாண்டிருக்கிறார்.

1843லிருந்து 1845 வரை மார்க்ஸ் பாரீஸில் இருந்தார். இக்காலத்தில் சில இதழ்களுக்கு கட்டுரைகள் எழுதியதோடு அக்கால பொருளாதார, தத்துவ பிரச்சனைகள் குறித்து பல குறிப்புகளை தயார் செய்தார். இந்த கையெழுத்து பிரதிகள் பிற்காலத்தில் ‘பாரீஸ் கையெழுத்து பிரதிகள்’ என அழைக்கப்பட்டது. இதில் தொழிலாளர்களின் ஊதியம், முதலாளிகளின் லாபம் உள்ளிட்ட பல அம்சங்களை ஆய்வு செய்தார். தொழிலாளர்களின் உழைப்பால் உருவாகும் மூலதனமே அவர்களை ஒடுக்குகிறது என்ற முடிவுக்கு வருகிறார். பிற்காலத்தில் மூலதனம் நூலை எழுதுகிற போது பாரிஸ் கையெழுத்து குறிப்பில் உள்ள பல அம்சங்களை விளக்கமாக பதிவு செய்திருக்கிறார். மூலதனத்திற்கும் (முதலாளித்துவம்) உழைப்பிற்குமான முரண்பாடு இரண்டு வர்க்கங்களுக்கிடையிலான முரண்பாடு என்று வர்ணித்ததோடு இந்த மோதல் முதலாளித்துவ வர்க்கத்தின் வீழ்ச்சிக்கும், தொழிலாளி வர்க்கத்தின் வெற்றிக்கு இட்டுச் செல்லும்; இதுவே சோசலிச சமூகம் உருவாவதற்கு வழிவகுக்கும் என்ற முடிவுக்கு வருகிறார். இத்தகைய முடிவு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலும் பிரதிபலித்துள்ளது.

1844-ம் ஆண்டு மார்க்சும், ஏங்கெல்சும் சந்தித்த பிறகு அப்போது ஜெர்மனியில் இளம் ஹெகலியர்களில் ஒரு பிரிவினர் மத்தியில் நிலவிய திரிபுவாதப் போக்குகள் குறித்து விமர்சனப் பூர்வமான பார்வையில் இருவரும் இணைந்து எழுதிய முதல் நூல் ‘புனிதக் குடும்பம்’ (Holy Family). வரலாற்றியல் பொருள்முதல்வாத தத்துவத்திற்கான அடிப்படை அம்சங்களை இந்நூலில் அவர்கள் விளக்கினர்.

“வரலாற்றை உருவாக்குவதும், உள்வாங்குவதும் என அனைத்து மனித செயல்பாடுகளுக்கும் அடிப்படை மனிதனே. “வரலாறு தானே எதையும்  செய்யாது. அது அபரிமிதமான வளங்களைக் கொண்டிருக்கவில்லை”. அது “எந்த போராட்டத்தையும் நடத்துவதில்லை”. அவற்றையெல்லாம் செய்கிறவன் மனிதன். உயிருள்ள மனிதனே; மோதுவதும் கைப்பற்றுவதும் மனிதனே; இவற்றை ‘வரலாறு’ செய்வதில்லை; வரலாறு ஒரு நபர் அல்ல; அது தன் சொந்த இலக்குகளை அடைவதற்காக மனிதனை பயன்படுத்திக் கொள்கிறது. வரலாறு என்பது மனிதர்கள் தங்கள் இலக்குகளை அடைவதற்காக கைக்கொள்ளும் வழிமுறைகள் தவிர வேறல்ல.”

புனிதக் குடும்பம் என்ற நூலுக்கு அடுத்ததாக இருவரும் இணைந்து இயக்கவியல், வரலாற்றியல் பார்வையில் அக்கால  தத்துவ, பொருளாதாரச் சூழலை ஆய்வு செய்து ஜெர்மன் தத்துவம் என்ற நூலை எழுதினார்கள். எதிர்காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை மட்டுமல்ல, மூலதனம் உள்ளிட்டு மார்க்ஸ் – எங்கெல்சின் பல படைப்புகளில் ‘ஜெர்மன் தத்துவம்’ நூலின் நிர்ணயிப்புகளின் அடிப்படையில் பல கோட்பாடுகளை வலியுறுத்தினார்கள். சொல்லப் போனால், மார்க்சிய தத்துவத்தினுடைய அடிப்படை கோட்பாடுகள் பலவற்றினுடைய துவக்கம் ‘ஜெர்மன் தத்துவம்’ என்ற நூலில் சொல்லப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில்தான் அமைந்துள்ளது.

முதல் பகுதி என்பது, அனைத்து சிந்தனைகள் மற்றும் அனைத்து வரலாறுகளின் நிலைமைகளைச் சொல்வதிலிருந்து தொடங்குகிறது, மார்க்சியத்தின் தத்துவ அடிப்படையை நேர்மறையாகவும் தெளிவாகவும் விளக்குகிறது. மார்க்சும் எங்கெல்சும் தனியார் சொத்துடைமையின் வளர்ச்சியையும், ஒவ்வொரு கட்டத்திலும் பொருளாதார கட்டமைப்பும் அதனோடு தொடர்புடைய, அதன் கீழ்ப்பட்ட அரசியல் மற்றும் தத்துவ வடிவங்கள் குறித்த வரையறுப்பை தருவதிலிருந்து தொடங்குகின்றனர். 

முதலாளித்துவ அமைப்பில் சொத்துக்கள் ஒரு சிலர் கையில் குவிகிறது. முதலாளித்துவ வர்க்கம் எந்தளவுக்கு வளர்கிறதோ, அதே அளவுக்கு நவீன பாட்டாளி வர்க்கமும் எண்ணிக்கையில் வளர்கிறது. அதேநேரத்தில் பாட்டாளிகள் தம்மைத் தாமே கொஞ்சம், கொஞ்சமாக விலைக்கு விற்றாக வேண்டிய கட்டாயத்தில்  சரக்காகவே இருக்கிறார்கள். ஆம். அவர்களின் உழைப்புச் சக்தி சந்தையில் விற்கப்படும் சரக்கைப் போன்று ஆகிறது. முதலாளிகள் உள்ளிட்ட ஆலைகள், இயந்திரங்கள், நிறுவனங்கள் ஆகிய முதலாளித்துவ உற்பத்தி சக்திகளுக்கும் உழைப்பு சக்தியை விற்கும் நிலைக்கு ஒட்டச் சுரண்டப்படும் தொழிலாளர்களுக்கும் இடையிலான மோதலே உற்பத்தி சக்திகளுக்கும்,உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான  வர்க்கப் போராட்டமாக உருவாகிறது. இதனைத்தான் “ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் ஒரு அரசியல் போராட்டமே ஆகும்” என கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

“நவீன கால அரசின் நிர்வாக அமைப்பானது, ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கத்தின் பொது விவகாரங்களை நிர்வகிப்பதற்கான ஒரு குழுவே அன்றி வேறல்ல” என முதலாளிகளின் நலன்களை பாதுகாக்கக் கூடிய நிர்வாகமாகத்தான் அரசு உள்ளது என்பதை கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.

மார்க்சும், ஏங்கெல்சும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஒரு தவறான கருத்து வெளியானால் அதனை எதிர்க்காமல் ஓயமாட்டார்கள். “தவறான கருத்தை மறுக்காமல் விடுவது அறிவுலகில் ஒழுக்கக் கேட்டை ஊக்குவிப்பதாகும்” என மார்க்ஸ் கூறினார். குறிப்பாக, வறுமையின் தத்துவம் என்று புரூதோன் எழுதிய நூலில் வெளிப்பட்ட இயக்க இயலுக்கு மாறான கருத்துக்களை மறுத்து தத்துவத்தின் வறுமை என்ற நூலை 1847-ம் ஆண்டில் மார்க்ஸ் எழுதினார். அன்றைய முதலாளித்துவ சமூக அமைப்பை மாற்றத் தேவையில்லை,அதில் உள்ள தவறான அம்சங்களை மட்டும் நீக்கிட வேண்டும் என்பதுதான் புரூதோன் முன்வைத்த கருத்து. அது தவறு. அக்கருத்தை மறுத்த போராட்டத்தின் விளைவாக உருவாக்கப்பட்டதே சரியான கருத்து (Thesis –Anti-thesis- Synthesis) என்ற இயக்க இயல் கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே வறுமையின் தத்துவம் என்ற நூல்.

பொருளாதாரம், தத்துவம், அரசியல் ஆகிய சூழல்களை ஆய்வு செய்து இயக்க இயல், வரலாற்றியல் கோட்பாட்டின் அடிப்படையில் அணுகுமுறையை உருவாக்கிட முயற்சித்த அதேநேரத்தில் நேரடி நடவடிக்கையில் ஈடுபட பாட்டாளிகளைத் திரட்டும் அமைப்பையும் உருவாக்கினார்கள். 1847-ம் ஆண்டு ‘கம்யூனிஸ்ட் லீக்’ என்ற அமைப்பில் அவர்கள் செயல்பட்டனர். பல மேலை நாடுகளில் இதனடிப்படையில் போராட்டங்களும் நடைபெற்றன.

இரண்டு தளங்களில் – கருத்தியல் ரீதியிலும் நேரடி நடவடிக்கைகளிலும் – கம்யூனிஸ்டுகள் மேற்கொள்ள வேண்டிய  புரட்சிகர பணிகளையும் அவர்கள் வலியுறுத்தினர்.

ஒவ்வொரு சமூக அமைப்பிலும் ஆளும் வர்க்கத்தின் சித்தாந்தமே மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தும். பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமெனில் ஆளும் வர்க்க சித்தாந்தத்தை எதிர்த்த போராட்டத்தை நடத்திட வேண்டுமென்று அவர்கள் வலியுறுத்தினர்.

ஜெர்மன் தத்துவம் என்ற நூலில் “ஏற்கெனவே நிலவி வரும் பழைய தத்துவ நோக்கங்களுடன் கணக்குத் தீர்க்க வேண்டும்” (To settle accounts with our erstwhile Philosophical conscience) என்கின்றனர். மேலும் “இதுவரை வந்த தத்துவ ஞானிகள் உலகைப் பற்றி விளக்க மட்டுமே செய்தார்கள். ஆனால் உலகை மாற்றுவது என்பதே முக்கியமானது” என அந்த நூலிலேயே குறிப்பிட்டிருந்தார்கள் மார்க்சும் எங்கெல்சும். ஆம். சரியான திட்டமும், நடைமுறையும் சேர்ந்தால்தான் மாற்றத்தை உருவாக்க முடியும்.

இப்போதும் இந்தியாவில் ஆளும் வர்க்கம் நவீன தாராளமயக் கொள்கைளை அமலாக்கி வருகிறது, மேலும் மத்திய பாஜக அரசு தனது இந்துத்துவா சித்தாந்தத்தை இணைத்து முன்னெடுக்கிறது. இவைகளை எதிர்த்த போராட்டம், வர்க்கக் கண்ணோட்டத்தோடு எழ வேண்டும். அப்போதுதான் ஆளும் வர்க்கத்தை முறியடிப்பதுடன் ஒரு சுரண்டலற்ற சமூகத்தை நோக்கி முன் நகர முடியும். இத்தகைய வரலாற்றுக் கடமையைக் கொண்டிருக்கும் பாட்டாளி வர்க்கத்தின் ஆயுதமாக கம்யூனிஸ்ட் அறிக்கை திகழும். இந்தியத் தொழிலாளி வர்க்கத்திற்கும் அது உயிர்ப்போடு கூடிய உற்ற துணையாக இருக்கும் என்பது நிச்சயம்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முதலாளித்துவம் குறித்த ஆய்வுக் கருவூலம்

பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா

அறிமுகம்

கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை பிரசுரமாக வெளிவந்தது 1848-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ம் நாள். அறிக்கை வெளிவந்து 172 ஆண்டுகள் விரைவில் நிறைவடையவுள்ளன. இக்காலகட்டத்தில் உலகில் பிரம்மாண்டமான அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியும் அரசியல்-சமூக-பொருளாதார மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன. ஆனால் இன்றும் அறிக்கையை வாசித்தால் அது பல மையமான அம்சங்களில் சமகால முதலாளித்துவ உலக மயத்தைப் பற்றிய மிகத் துல்லியமான ஆவணம் என்பதை நாம் உணர்வோம். இதற்குக் காரணம் முதலாளித்துவம் என்ற உற்பத்தி அமைப்பை, அதன் இயக்க விதிகளை மிகச் சரியாக இயக்கவியல்-வரலாற்றுப் பொருள்முதல்வாத அணுகுமுறையில் அறிக்கை ஆய்வு செய்துள்ளது என்பதே ஆகும்.

நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்திய முதலாளித்துவம்

அறிக்கை முதலாளித்துவ உற்பத்தி அமைப்பை ஆழமாக ஆய்வு செய்கிறது. எவ்வாறு முந்தைய உற்பத்தி அமைப்பான நிலப்பிரபுத்துவ உற்பத்தி அமைப்பில் இருந்து முதலாளித்துவம் எழுகிறது என்பதை ஐரோப்பிய நாடுகளின் அனுபவங்களின் மூலம் அறிக்கை விளக்குகிறது. மானுட உயிரினத்தின் ஆரம்ப காலத்தில் மானுட சமூகங்களின் குறைவான உற்பத்திசக்திகளின் விளைவாக நிலவிய, நிர்ப்பந்தத்தின் அடிப்படையிலான, துவக்கநிலை பொதுவுடமை அமைப்பு உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில் காலாவதியாகிறது. உபரி உற்பத்தி மானுட சமூகத்தின் இலக்கணமாக மாறுகிறது. உபரி உற்பத்தி வர்க்க சமூகத்தை, சுரண்டலை, சாத்தியமாக்குகிறது. இதில் இருந்தே சுரண்டும் வர்க்கத்திற்கும் சுரண்டப்படும் வர்க்கத்திற்கும் இடையிலான இடையறாத வர்க்கப் போராட்டம் மானுட வரலாற்றின் இலக்கணமாக அமைகிறது என்பதை துவக்கத்திலேயே அறிக்கை விளக்குகிறது. வர்க்கச் சுரண்டலுக்கு நிலம் உள்ளிட்ட உற்பத்திக் கருவிகளில் தனியுடைமை அவசியம் என்பதையும் சுரண்டல் அமைப்பை சுரண்டும் வர்க்கம் சார்பாக பாதுகாக்க அரசு என்ற அடக்குமுறை இயந்திரம் அவசியம் என்பதையும் சுருக்கமாகத் தெளிவுபடுத்துகிறது அறிக்கை.

அடுத்து, உற்பத்திசக்திகளின் தொடர் வளர்ச்சி மீண்டும் மீண்டும் சமூக உற்பத்தி உறவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதையும், இம்மாற்றங்கள் வர்க்கப் போராட்டங்கள் மூலமாக நிகழும் என்பதையும் அறிக்கை விளக்குகிறது. இந்தப் பின்புலத்தில் ஒரு சில விறுவிறுப்பான பக்கங்களில் ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவ உற்பத்தி அமைப்பிற்கு முந்தைய உற்பத்தி அமைப்பான நிலப்பிரபுத்துவ அமைப்பில் நிகழ்ந்துவந்த உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி புதிய உற்பத்தி உறவுகளை அந்த அமைப்பிற்குள்ளேயே வளரச் செய்கின்றன என்பதையும் இதனால் புதிய வர்க்கங்கள் நிலப்பிரபுத்துவ ஆளும் வர்க்கத்திற்கு எதிராக உருவாக்கப்படுகின்றன என்பதையும் இயக்கவியல்-வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் பாலபாடமாக அறிக்கை விவரிக்கிறது. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி உபரி உற்பத்தியை கணிசமாக உயர்த்துகிறது. இவற்றை வெகுதூரம் கொண்டுசென்று விற்கும் வாய்ப்புகளை இது அவசியப்படுத்துகிறது.

பொருட்களை பதப்படுத்தி பலகாலம் பராமரிக்கும் தொழில்நுட்பங்களையும் தொலைதூர போக்குவரத்து தொழில்நுட்பங்களையும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி சாத்தியமாக்குகிறது. இந்த மாற்றங்கள், நிலப்பிரபுத்துவ அமைப்பில் ஒவ்வொரு நிலப்பிரபுவின் ஆளுமைக்கு உட்பட்டிருந்த குறுகிய நிலப்பரப்பிலும் நிலவிய தொழில் மற்றும் வர்த்தக தடைகளையும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த இதர அம்சங்களையும் தகர்த்தெறிந்து புதிய உற்பத்தி உறவுகளுக்கு இட்டுச் சென்றது. படிப்படியாக, நிலப்பிரபுக்களின் ஆதிக்கம் தகர்க்கப்பட்டு, நகர்ப்புற பட்டறைகள் மூலம் உற்பத்தியையும் உற்பத்தி சக்திகளையும் விரிவுபடுத்தி, தொலைதூர வணிகத்தை வளர்த்துவந்த –  அன்றைய காலத்தில் மத்தியதர வர்க்கம் என்று அழைக்கப்பட்ட – புதிதாக வளர்ந்துவந்த நவீன முதலாளி வர்க்கம் நிலப்பிரபுத்துவ அமைப்புக்கு சாவுமணி அடிக்கும் வர்க்கமாக வரலாற்றுக்களத்தில் தனது இடத்தை நிலைநாட்டிக் கொண்டது.

முதலாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் தனது வரலாற்றுப் பயணத்தில் மன்னருக்கும் நிலப்பிரபுக்களும் இடையிலான முரண்பாடுகளில் மன்னருக்கு ஆதரவாக செயல்பட்டு நிலப்பிரபுத்துவ வர்க்கத்தை எப்படி பலவீனப்படுத்தியது? பின்னர் எப்படி மன்னர்களின் அதிகாரங்களை சிதைத்து தனது வர்க்க ஆட்சியை ஏற்படுத்தியது? இப்பயணத்தில் எவ்வாறு தொழிலாளி வர்க்கத்தை பயன்படுத்திக் கொண்டது? என்ற விஷயங்களை அறிக்கை சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்குகிறது.

முதலாளித்துவத்தின் வரலாற்றுப் பாத்திரம்

அறிக்கை முதலாளித்துவத்தின் அடிப்படைத்தன்மையை மிகவும் துல்லியமாக வர்ணிக்கிறது. அதன் சில முக்கிய அம்சங்களை அறிக்கையின் வாசகங்களிலேயே கீழே காணலாம் :

முதலாளித்துவ வர்க்கம் வரலாற்று ரீதியாகமிகவும் புரட்சிகரமான பாத்திரம் வகித்துள்ளது. உற்பத்திக் கருவிகளையும்அதன்மூலம் உற்பத்தி உறவுகளையும்அவற்றோடு கூடவே ஒட்டுமொத்த சமுதாய உறவுகளையும் இடையறாது புரட்சிகரமாக மாற்றி அமைத்திடாமல் முதலாளித்துவ வர்க்கம் உயிர்வாழ முடியாது…..

முதலாளித்துவத்தின் உற்பத்திப் பொருள்களுக்குத் தொடர்ந்து விரிவடைந்து செல்லும் சந்தை தேவைப்படுகிறது. இத்தேவை முதலாளித்துவ வர்க்கத்தைப் புவியின் பரப்பு முழுவதும் விரட்டியடிக்கிறது. அது எல்லா இடங்களுக்கும் சென்று கூடு கட்டிக் கொள்ள வேண்டும்எல்லா இடங்களிலும் குடியேற வேண்டும்எல்லா இடங்களிலும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டே ஆக வேண்டும். உலகச் சந்தையை நன்கு பயன்படுத்திக் கொள்வதன் மூலம் முதலாளித்துவ வர்க்கம் ஒவ்வொரு நாட்டிலும் பொருள் உற்பத்திக்கும் நுகர்வுக்கும் ஓர் உலகத் தன்மையை (cosmopolitan character) அளித்துள்ளது.

மக்கள் தொகையும்உற்பத்திச் சாதனங்களும்சொத்துகளும் சிதறுண்டு கிடக்கும் நிலையை முதலாளித்துவ வர்க்கம் மேலும் மேலும் ஒழித்துக்கொண்டே வருகிறது. மக்கள் தொகையை ஆங்காங்கே குவித்து வைத்துள்ளது. உற்பத்திச் சாதனங்களை மையப்படுத்தியுள்ளது. சொத்துகளை ஒருசிலர் கையில் குவிய வைத்துள்ளது. இதன் தவிர்க்கவியலாத விளைவு அரசியல் அதிகாரம் மையப்படுதலாகும்.

முதலாளித்துவ வர்க்கம் நூறாண்டுகள் கூட ஆகாத அதன் ஆட்சிக் காலத்தில்இதற்கு முந்தைய தலைமுறைகள் அனைத்தும் சேர்ந்து உருவாக்கியவற்றைக் காட்டிலும் மிகப்பெரிய அளவில் மிகப் பிரம்மாண்டமான உற்பத்தி சக்திகளை உருவாக்கி வைத்துள்ளது. இயற்கையின் சக்திகளை மனிதனுக்கு அடிபணியச் செய்தல்எந்திர சாதனங்கள்தொழில்துறைக்கும் விவசாயத்துக்கும் இரசாயனத்தைப் பயன்படுத்தல்நீராவிக் கப்பல் போக்குவரத்துரயில் பாதைகள்மின்சாரத் தந்திகண்டங்கள் முழுவதையும் திருத்திச் சாகுபடிக்குத் தகவமைத்தல்கால்வாய்கள் வெட்டி நதிகளைப் பயன்படுத்தல்மனிதனின் காலடி படாத இடங்களிலும் மாயவித்தைபோல் பெருந்திரளான மக்களைக் குடியேற்றுவித்தல் – இத்தகைய உற்பத்தி சக்திகள் சமூக உழைப்பின் மடியில் துயில் கொண்டிருக்குமென இதற்கு முந்தைய நூற்றாண்டு கற்பனையாவது செய்திருக்குமா?

ஆக நாம் காண்பது என்னவெனில்: முதலாளித்துவ வர்க்கம் தன்னைக் கட்டி அமைத்துக்கொள்ள அடித்தளமாக இருந்த உற்பத்திச் சாதனங்களும்பரிவர்த்தனைச் சாதனங்களும் நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் உருவாக்கப்பட்டவை. இந்த உற்பத்தி மற்றும் பரிவர்த்தனைச் சாதனங்களுடைய வளர்ச்சியின் குறிப்பிட்ட ஒரு கட்டத்தில்நிலப்பிரபுத்துவ சமுதாயம் எத்தகைய சமூக நிலைமைகளின்கீழ் உற்பத்தியும் பரிவர்த்தனையும் செய்து வந்ததோ அந்தச் சமூக நிலைமைகளும்விவசாயம்பட்டறைத் தொழில் ஆகியவற்றில் நிலவிய நிலப்பிரபுத்துவ ஒழுங்கமைப்பும்சுருங்கக் கூறின்நிலப்பிரபுத்துவச் சொத்துடைமை உறவுகள்ஏற்கெனவே வளர்ச்சிபெற்றுவிட்ட உற்பத்திச் சக்திகளுக்கு இனிமேலும் ஒவ்வாதவை ஆயின. அவை, [உற்பத்தியைக் கட்டிப்போடும்] கால் விலங்குகளாக மாறின. அந்த விலங்குகளை உடைத்தெறிய வேண்டியிருந்ததுஅவை உடைத்தெறியப்பட்டன.

அவற்றின் இடத்தில் தடையற்ற போட்டியும்அதனுடன் கூடவே, அதற்கு ஏற்றாற் போன்ற, சமூகஅரசியல் அமைப்புச் சட்டமும்முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதாரஅரசியல் ஆதிக்கமும் வந்து அமர்ந்து கொண்டன.

மானுட வரலாற்று வளர்ச்சியில் உற்பத்தி சக்திகளின் தவிர்க்கவியலாத வளர்ச்சி நிலவும் உற்பத்தி உறவுகளுடன் முரண்பட்டே ஆகவேண்டும்இந்த முரண்பாடுதான் வளர்ச்சிக்கான அடித்தளம்இந்த முரண்பாடு வர்க்கப் போராட்டம் மூலமாகவே வரலாற்றில் தன் பணியைச் செய்கிறது ஆகிய வரலாற்றுப் பொருள்முதல் வாதத்தின் அடிப்படைக் கூறுகளில் நின்று, நிலப்பிரபுத்துவம் வீழ்த்தப்பட்டு முதலாளித்துவம் ஆட்சிக்கு வந்த வரலாற்றையும் அதில் முதலாளி வர்க்கத்தின் முதன்மை பாத்திரத்தையும் இவ்வளவு சுருக்கமாகவும், தவறு இன்றியும், எளிமையாகவும் வேறு எந்த ஆவணமும் விளக்கியதில்லை. 

முதலாளித்துவத்திற்கு முடிவு உறுதி

முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் வரலாற்று பாத்திரத்தை விறுப்பு வெறுப்பின்றி அறிக்கை விவரித்திருப்பதன் பொருள் முதலாளித்துவத்தை அது பாராட்டுகிறது என்பதல்ல. மாறாக, இயக்கவியல் அணுகுமுறையின் அடிப்படையில் நின்று, முதலாளித்துவத்தின் ‘சாதனை’களின் மறுபக்கத்தை அறிக்கை தோலுரித்துக் காட்டுகிறது. அதுமட்டுமின்றி, முதலாளித்துவ சுரண்டலுக்கு முடிவுகட்டி மானுட விடுதலையை சாதிக்க வல்ல வர்க்கம் தொழிலாளி வர்க்கமாகத்தான் இருக்க முடியும் என்பதையும் அறிக்கை விளக்குகிறது.

முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகளை ஒன்றன்பின் ஒன்றாக அறிக்கை விவரிக்கிறது. லாபவெறி அடிப்படையில் இயங்கும் முதலாளித்துவ உற்பத்தி அமைப்பு உற்பத்தி சக்திகளின் மாபெரும் வளர்ச்சியை ஒவ்வொரு நொடியும் முன்னெடுத்துச் செல்லும் அவசியத்தை சந்திக்க நேர்ந்தாலும், நெருக்கடி நிறைந்த அமைப்பாகவே முதலாளித்துவம் உள்ளது என்பதை அறிக்கை பின்வருமாறு விளக்குகிறது:

இவ்வளவு பிரம்மாண்ட உற்பத்திச் சாதனங்களையும் பரிவர்த்தனைச் சாதனங்களையும் மாயவித்தைபோல் தோற்றுவித்துள்ள இந்த முதலாளித்துவ சமுதாயம் – தனது மந்திரத்தின் வலிமையால் பாதாள உலகிலிருந்து தட்டியெழுப்பி வந்த சக்திகளை இனிமேலும் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் மந்திரவாதியின் நிலையில் இருக்கிறது. கடந்த சில பத்தாண்டுகளது தொழில்துறைவணிகம் ஆகியவற்றின் வரலாறானதுநவீன உற்பத்தி உறவுகளுக்கு எதிராகவும்முதலாளித்துவ வர்க்கமும் அதன் ஆட்சியதிகாரமும் நிலவுதற்கு அடிப்படையாக விளங்கும் சொத்துடைமை உறவுகளுக்கு எதிராகவும்நவீன உற்பத்தி சக்திகள் நடத்தும் கலகத்தின் வரலாறே ஆகும். இதனை உறுதிப்படுத்தகுறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படும் வணிக நெருக்கடிகளைக் குறிப்பிட்டாலே போதும். இந்த நெருக்கடிகள் ஒவ்வொரு முறை வரும்போதும் முன்னைவிட அச்சமூட்டும் வகையில்ஒட்டுமொத்த முதலாளித்துவ சமுதாயத்தின் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்குகின்றன. இந்த நெருக்கடிகளின்போதுஇருப்பிலுள்ள உற்பத்திப் பொருள்களின் பெரும்பகுதி மட்டுமன்றிஏற்கெனவே உருவாக்கப்பட்ட உற்பத்தி சக்திகளில் ஒரு பெரும்பகுதியும் தொடர்ந்து அழிக்கப்படுகிறது. இதற்கு முந்தைய சகாப்தங்கள் அனைத்திலும் அபத்தமானதாகக் கருதப்பட்டிருக்கும் ஒரு கொள்ளை நோய் – தேவைக்கு அதிகமான உற்பத்தி என்னும் கொள்ளை நோய் – இந்த நெருக்கடிகளின்போது தொற்றுகிறது. சமுதாயம்தான் திடீரெனெத் தற்காலிக அநாகரிக நிலைக்குப் பின்னோக்கித் தள்ளப்பட்டுள்ளதைக் காண்கிறது. ஏதோ ஒரு பெரும் பஞ்சம் அல்லது உலகளாவிய ஒரு சர்வநாசப் போர் ஏற்பட்டு வாழ்வாதாரப் பொருள்கள் அனைத்தின் வினியோகமும் நிறுத்தப்பட்டதுபோல் தோன்றுகிறதுதொழிலும் வணிகமும் அழிக்கப்பட்டுவிட்டதாகத் தோன்றுகிறது

இதன் பொருள் என்ன? அறிக்கையின் வார்த்தைகளில்: “சமுதாயத்தின் வசமுள்ள உற்பத்தி சக்திகள்முதலாளித்துவச் சொத்துடைமை உறவுகளின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல இனிமேலும் உதவப் போவதில்லை. மாறாகஅந்த உறவுகளை மீறி உற்பத்தி சக்திகள் வலிமை மிக்கவை ஆகிவிட்டன. முதலாளித்துவ உடைமை உறவுகள்உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்குத் தளைகளாகிவிட்டன.“ சமகாலத்தில், கடந்த பத்து ஆண்டுகளாக நிலவும் உலக முதலாளித்துவத்தின் பொருளாதார மந்தநிலை, மானுட உயிரினத்தின் எதிர்காலத்தை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கும் பருவநிலை மாற்றம், மிகக் கொடிய அளவிலான வேலையின்மை, அறிவியல் தொழில்நுட்பம் பிரம்மாண்டமாக வளர்ந்தும் பசியும் பிணியும் வறுமையும் உலகில் பல கோடி மக்களை தொடர்ந்து வாட்டி வதைப்பது ஆகியவை சொல்லும் செய்தி இதுதானே?

தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றுப் பாத்திரம்

நிலப்பிரபுத்துவ உற்பத்தி அமைப்பில் உற்பத்தி சக்திகள் வளர்ந்து வந்ததன் விளைவாக ஒரு கட்டத்தில் அந்த உற்பத்தி அமைப்பின் உற்பத்தி உறவுகள் உற்பத்தி சக்திகளின் தொடர் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக மாறின என்பதையும், அக்கட்டத்தில் நிலப்பிரபுத்துவ அமைப்பின் உள்ளிருந்தே வளர்ந்துவந்த முதலாளி வர்க்கம் நிலப்பிரபுத்துவ அமைப்பிற்கு முடிவுகட்டும் வர்க்கமாக அமைந்தது என்பதையும்அறிக்கை விளக்கியதை நாம் குறிப்பிட்டோம். அதேபோல் முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் உற்பத்தி உறவுகள் உற்பத்தி சக்திகளின் தொடர்வளர்ச்சிக்கு தடையாக மாறும் தருணத்தில் இந்த உற்பத்தி அமைப்பை தூக்கி எறியும் வர்க்க சக்தியாக தொழிலாளி வர்க்கம் அமையும் என்பதையும் அறிக்கை விளக்குகிறது.

அறிக்கை யின் வரிகளில் இதனை பார்ப்போம்:

எந்த ஆயுதங்களைக் கொண்டு முதலாளித்துவ வர்க்கம் நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தித் தரைமட்டம் ஆக்கியதோஅதே ஆயுதங்கள் இப்போது முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராகத் திருப்பப்படுகின்றன. ஆனால்முதலாளித்துவ வர்க்கம் தனக்கே அழிவைத் தரப்போகும் ஆயுதங்களை மட்டும் வார்த்தெடுக்கவில்லைஅந்த ஆயுதங்களைக் கையாளப்போகும் மனிதர்களையும்அதாவது நவீனத் தொழிலாளி வர்க்கமாகிய பட்டாளிகளையும் உருவாக்கி உலவவிட்டுள்ளது.

பாட்டாளி வர்க்கம் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களைக் கடந்து செல்கிறது. பிறந்தவுடனே அது முதலாளித்துவ வர்க்கத்துடனான தனது போராட்டத்தைத் தொடங்கிவிடுகிறது. முதலாவதாகஇந்தப் போராட்டத்தைத் தனித்தனித் தொழிலாளர்களும்அடுத்து ஒரு தொழிற்சாலையைச் சேர்ந்த தொழிலாளர்களும்பிறகு ஒரு வட்டாரத்தில் ஒரு தொழிற்பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்களும்தம்மை நேரடியாகச் சுரண்டும் தனித்தனி முதலாளிகளுக்கு எதிராக நடத்துகின்றனர்.

தொழில்துறையின் வளர்ச்சியைத் தொடர்ந்து தொழிலாளி வர்க்கம் எண்ணிக்கையில் அதிகமாவது மட்டுமின்றிபெருந்திரள்களாகவும் குவிக்கப்படுகிறதுஅதன் வலிமை வளர்கிறதுஅந்த வலிமையை அது அதிகம் உணரவும் செய்கிறது. எந்த அளவுக்கு எந்திர சாதனங்கள் உழைப்பின் பாகுபாடுகள் அனைத்தையும் துடைத்தொழித்துஅனேகமாக எல்லா இடங்களிலும் கூலி விகிதங்களை ஒரேமாதிரிக் கீழ்மட்டத்துக்குக் குறைக்கிறதோ அந்த அளவுக்குப் பாட்டாளி வர்க்க அணிகளுக்குள்ளே பல்வேறு நலன்களும்வாழ்க்கை நிலைமைகளும் மேலும் மேலும் சமன் ஆக்கப்படுகின்றன. தொடர்ந்து அதிவேக வளர்ச்சி காணும் எந்திர சாதனங்களின் முடிவுறாத மேம்பாடுஅவர்களுடைய பிழைப்பை மேலும் மேலும் நிலையற்றதாக்குகிறது. தனிப்பட்ட தொழிலாளர்களுக்கும் தனிப்பட்ட முதலாளிகளுக்கும் இடையேயான மோதல்கள்மேலும் மேலும் இரு வர்க்கங்களுக்கு இடையிலான மோதல்களின் தன்மையைப் பெறுகின்றன. உடனே தொழிலாளர்கள் முதலாளிகளுக்கு எதிராகக் கூட்டமைப்புகளை (தொழிற் சங்கங்களை) அமைத்துக்கொள்ளத் தொடங்குகின்றனர். கூலிகளின் விகிதத்தைத் [குறைந்து போகாமல்] தக்கவைத்துக்கொள்ள அவர்கள் ஒன்று சேர்கிறார்கள். …அவர்களுடைய போராட்டங்களின் மெய்யான பலன் அவற்றின் உடனடி விளைவில் அடங்கியிருக்கவில்லை. எப்போதும் விரிவடைந்து செல்லும் தொழிலாளர்களின் ஒற்றுமையில் அடங்கியுள்ளது. நவீனத் தொழில்துறை உருவாக்கியுள்ள மேம்பட்ட தகவல் தொடர்புச் சாதனங்கள் இந்த ஒற்றுமைக்குத் துணைபுரிகின்றன

இன்றைக்கு முதலாளித்துவ வர்க்கத்தை நேருக்குநேர் எதிர்த்து நிற்கும் வர்க்கங்கள் அனைத்திலும் பாட்டாளி வர்க்கம் ஒன்று மட்டுமே உண்மையில் புரட்சிகரமான வர்க்கமாகும். பிற வர்க்கங்கள் நவீனத் தொழில்துறையின் முன்னே சிதைவுற்று முடிவில் மறைந்து போகின்றன. பாட்டாளி வர்க்கம் மட்டும்தான் நவீனத் தொழில்துறையின் தனிச்சிறப்பானசாரமான விளைபொருளாகும்.

மூலதனம் உருவாதலும் வளர்ந்து பெருகுதலும்தான் முதலாளித்துவ வர்க்கம் நிலவுவதற்கும் ஆதிக்கம் செலுத்துவதற்கும் இன்றியமையாத நிபந்தனை ஆகும். மூலதனத்துக்கு இன்றியமையாத நிபந்தனை கூலி உழைப்பாகும். கூலி உழைப்போ முற்றிலும் தொழிலாளர்களுக்கு இடையிலான போட்டியை மட்டுமே சார்ந்துள்ளது. முதலாளித்துவ வர்க்கம் அனிச்சையாக வளர்த்தெடுக்கும் தொழில்துறையின் முன்னேற்றமானதுஅத்தகைய போட்டியின் காரணமாக தொழிலாளர்களிடையே ஏற்படும் தனிமைப்போக்கை, அவர்கள் [சங்க அமைப்பில்] ஒன்றுசேர்தலின் காரணமாக ஏற்படும் புரட்சிகரப் பிணைப்பின் மூலம் நீக்குகிறது. எனவேநவீனத் தொழில்துறையின் வளர்ச்சியானதுஎந்த அடிப்படையில் முதலாளித்துவ வர்க்கம்பொருள்களை உற்பத்தி செய்தும் கையகப்படுத்தியும் வருகிறதோஅந்த அடிப்படைக்கே உலை வைக்கிறது. ஆகஅனைத்துக்கும் மேலாகத் தனக்குச் சவக்குழி தோண்டுவோரையே முதலாளித்துவ வர்க்கம் உற்பத்தி செய்கிறது. முதலாளித்துவ வர்க்கத்தின் வீழ்ச்சியும்பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியும் சம அளவில் தவிர்க்கவியலாதவை ஆகும்.

முதலாளித்துவ உற்பத்தி அமைப்பை வரலாற்றின் குப்பைமேட்டில் தூக்கி எறியும் வலிமையும் வரலாற்றுக் கடமையும் தொழிலாளி வர்க்கத்துடையது என்பதற்கான சிறப்பான தத்துவார்த்த விளக்கத்தை அறிக்கை இவ்வாறு அளிக்கிறது.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பொய்த்துப் போய்விட்டதா?

அறிக்கை 1848 தொடக்கத்தில் வெளிவந்தது. அப்பொழுது முதலாளித்துவ உற்பத்தி அமைப்பு ஐரோப்பாவில் பல நாடுகளில் வெற்றியடைந்திருந்தது. இதுதான் மானுடத்தின் எதிர்காலம்; இதுதான் நிரந்தரமாக இருக்கும் என்ற கருத்து மேலோங்கியிருந்தது. அப்பொதுக்கருத்து தவறானது என்பதையும் மானுடத்தின் எதிர்காலம் பாட்டாளி வர்க்க ஆட்சியை நோக்கித்தான் பயணிக்கும் என்பதையும் ஆழமான ஆய்வின் அடிப்படையில் ஆணித்தரமாக, உரக்கச் சொல்லியது.அறிக்கைவெளிவந்தபின் அடுத்த பல பத்தாண்டுகளில் முதலாளித்துவம் மேலும் பாய்ச்சல்வேகத்தில் பரவி, உலகம் முழுவதையும் தனது ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வந்தது. அறிக்கை பொதுவிவாதத்தில் சில பத்தாண்டுகள் இடம் பெறவில்லை. 1871 இல் வெடித்த பாரிஸ் கம்யூன் புரட்சி முதலாளித்துவத்தை உறு­­திபட எதிர்த்து புரட்சிகர மாற்றம் கொண்டுவரும் திறன் கொண்டது தொழிலாளி வர்க்கம்தான் என்பதை உலகுக்கு அறிவித்தபோதிலும், அப்புரட்சி நீண்ட நாட்கள் நிலைக்க இயலவில்லை. எனினும் பாரிஸ் கம்யூன் புரட்சி நிகழ்ந்து அடுத்த 50ஆண்டுகள் நிறைவடையும் முன்பே மகத்தான அக்டோபர் புரட்சி ரஷ்யாவில் வெடித்தது. 19-ம் நூற்றாண்டில் முதலாளித்துவம் உலகை வென்றது என்றால் இருபதாம் நூற்றாண்டின் முதல் ஐம்பது ஆண்டுகளில் அதன் எதிர்காலம் கடுமையான கேள்விக்குறியானது. கடந்த நூற்றாண்டில், முதல்உலகப்போர் (1914-1918), பெரும் பொருளாதார வீழ்ச்சி (1929-1939), இரண்டாம் உலகப்போர்(1939 – 1945) என்று தொடர்ந்து முதலாளித்துவம் கடும் நெருக்கடியில் சிக்கியது.

மறுபுறம், பின்தங்கிய ரஷ்யாவில் 1917 அக்டோபரில் போல்ஷ்விக் கட்சியின் முன்னணி பாத்திரம் மூலம் தொழிலாளி வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றியது. அப்புரட்சியை முளையில் கிள்ளியெறிய 14 முதலாளித்துவ நாடுகள் தங்களது ராணுவங்களை அனுப்பின. இவர்களை மக்கள் ஆதரவுடன் செஞ்சேனை வீழ்த்தியது. ஏகாதிபத்தியம் தந்த தொடர்நெருக்கடிகளை எதிர்கொண்டே, போல்ஷ்விக் கட்சியின் தலைமையில் சோசலிச சோவியத் ஒன்றியம் மாபெரும் முன்னேற்றத்தை சாதித்தது. ஏகபோக முதலாளித்துவத்தின் பிரத்யேக அரசு வடிவமான பாசிசத்தை வீழ்த்தி மானுடத்தையும் ஜனநாயகத்தையும் சோசலிசம் காப்பாற்றியது. இரண்டாம் உலகப் போரின் இறுதிக் காலத்திலும் அதனை தொடர்ந்தும் உலகில் சோசலிச வெற்றிகள் தடம் பதித்தன. தனியாக நின்று ஏகாதிபத்தியங்களை எதிர்கொண்டு வந்த சோவியத் ஒன்றியத்திற்கு பக்கபலமாக பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் மக்கள் ஜனநாயக அரசுகள் அமைந்தன. மாபெரும் சோசலிச மக்கள் சீனம் 1949இல் மலர்ந்தது. இதனை தொடர்ந்து வடவியத்நாம், வடகொரியா, பின்னர் க்யூபா என்று 1950களின் இறுதியில் உலக நிலப்பரப்பில் ஆறில் ஒரு பங்கும், மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கும் சோசலிச அமைப்பின்கீழ் வந்தன.

கடந்த நூற்றாண்டின் முதல் எண்பது ஆண்டுகள் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் வரலாற்றுப் பார்வை மிகச்சரியானது என்பதை நிரூபித்தன. சோசலிச நாடுகளின் சாதனைகளை நாம் மறக்க இயலாது. ஏகாதிபத்திய ராணுவ பலத்திற்கு எதிராக நின்று உலக அமைதியையும் முன்னாள் காலனிநாடுகளின் இறையாண்மையையும் பாதுகாப்பதில் அவற்றின் பங்கு அளப்பரியது. வறுமையையும் வேலையின்மையையும் பெருமளவிற்கு முடிவுக்கு கொண்டு வந்தது; அனைத்து மக்களுக்கும் கல்வியையும், ஆரோக்கிய வசதிகளையும் உறுதிப்படுத்தியது; பாலின சமத்துவத்தில் பெரும் முன்னேற்றம் கண்டது; உழைப்பாளி மக்களுக்கு மேம்பட்ட வாழ்க்கையை சாத்தியமாக்கியது உள்ளிட்ட சாதனைகளை நாம் பதிவுசெய்ய வேண்டும்.

1991இல் சோவியத் ஒன்றியம் சிதைக்கப்பட்டு, முதலாளித்துவம் அங்கும் கிழக்கு ஐரோப்பாவிலும் மீண்டும் ஆட்சியை பிடித்தபோதிலும் 2008இல் துவங்கி முடிவின்றி தொடரும் உலக முதலாளித்துவ பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியும் மானுடத்தின் எதிர்காலத்தையே அச்சுறுத்தும் பருவநிலை மாற்றமும் உற்பத்தி சக்திகளின் தொடர்வளர்ச்சிக்கும் மானுடத்தின் எதிர்காலத்திற்கும் எதிரியாக முதலாளித்துவம் நிற்கிறது என்பதை நாளும் பளிச்சென்று உணர்த்துகிறது. இருபதாம் நூற்றாண்டின் வெற்றிகரமான பல சோசலிஸ்ட் புரட்சிகளின் சாதனைகளும் அனுபவங்களும் வீண்போகாது என்று இன்றைய உலகம் நமக்கு நினைவூட்டுகிறது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் கணிப்பு வரலாற்றுப் பார்வையில் மிகச்சரியானது என்று மானுட அனுபவம் நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.

கம்யூனிஸ்ட் அறிக்கையும், இந்திய புரட்சியின் திட்டமும்

என். குணசேகரன்

கம்யூனிஸ்ட் அறிக்கை மானுட சமூகத்தின் உலகளாவிய விடுதலையைப் பேசுகிறது. இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி (மார்க்சிஸ்ட்) ன் திட்டம், இந்திய விடுதலையைப் பேசுகிறது. இந்த இரண்டும் இந்திய நாட்டில் செயல்படுகிற  ஒரு புரட்சிகர போராளிக்கு  வழிகாட்டும்  கையேடுகளாகத் திகழ்கின்றன.

அனைத்து நாட்டு மக்களுக்கும் உண்மையான விடுதலையை முன்னிறுத்தும் விடுதலைப் பிரகடனமாக, கம்யூனிஸ்ட் அறிக்கை திகழ்கிறது. அடிமை விலங்குகளை உடைத்தெறிந்து, முதலாளித்துவ சுரண்டலிலிருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும் விடுபட பாட்டாளி வர்க்கத்திற்கு அறிக்கை வழிகாட்டுகிறது.

பிரெட்ரிக் எங்கெல்ஸ் 1883-ம் ஆண்டில் ஜெர்மன் பதிப்புக்கு எழுதிய முன்னுரையில்  “(அனைத்து வரலாறும்) சமூக வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களிலும் சுரண்டப்படும் வர்க்கத்துக்கும், சுரண்டும் வர்க்கத்துக்கும், ஒடுக்கப்படும் வர்க்கத்துக்கும், ஒடுக்கும் வர்க்கத்துக்கும் இடையேயான போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது …” என்கிறார்.

இந்த நெடிய போராட்டத்தில் முதலாளித்துவம் பாட்டாளி வர்க்க முன்னேற்றத்தை தடுக்கவும் ஒடுக்கவும் அனைத்து  சாகசங்களையும் செய்துவருகிறது. ஆனால் இதில் இறுதி வெற்றியை தீர்மானிக்கிற  இடத்தில் பாட்டாளி வர்க்கமே உள்ளது. வரலாற்றில் நிகழவிருக்கும் இந்த விடுதலை சமூகம் முழுமைக்குமான விடுதலையாக அமைந்திடும். 

1848-ல்  மார்க்சும் எங்கெல்சும் எழுதிய இந்தக் கருத்துக்கள் இன்றும் பொருந்துமா?. 20-ம் நூற்றாண்டில் பணி நிலைமைகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. உற்பத்தி முறையிலும் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன; இதன் காரணமாக உழைக்கும் மக்களின் வலிமை பலவீனமடைந்து உள்ளது என்ற வகையில் பல வாதங்களைப் பலரும் முன்வைத்தனர். பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்தை வீழ்த்துவது என்ற கருத்தாக்கம் பொருத்தமற்றதாகப் போய்விட்டது என்றனர்.

ஆனால், இன்றைய நிலைமைகளும் கூட மார்க்சின்  கருத்தினை   உறுதிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. மார்க்ஸ் குறிப்பிட்டார்: “பாட்டாளிகளின் இந்த ஒழுங்கமைப்பு முன்னிலும் வலிமை மிக்கதாக, உறுதி மிக்கதாக, சக்தி மிக்கதாக மீண்டும் வீறுகொண்டு எழுகிறது.” 

21-ம் நூற்றாண்டில் முறைசாரா தொழில்கள், அணி சார்ந்த உற்பத்தித் துறைத் தொழில்கள் மற்றும் சேவைத் துறை தொழில்கள் என பலவிதமாக தொழிலாளர் எண்ணிக்கை பெரும் அளவில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சங்க ரீதியாக ஒன்றுதிரண்டு போராடுகிற திறனும் சமீபகாலங்களில் அதிகரித்துள்ளது .

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2018-ம் ஆண்டுக் கணக்கீட்டின்படி தற்போது வேலையில் இருக்கும் மொத்த உழைப்பாளர்களில் 60% முறைசாரா தொழில்களில், எவ்வித சமூகப் பாதுகாப்பும் இல்லாமல், வறுமைச் சூழலில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு பணியாற்றும் தொழிலாளர்கள் எண்ணிக்கையே 200 கோடியைத் தாண்டுகிறது. இது மிகப்பெரும் பிரம்மாண்டமான உலகப் பாட்டாளி வர்க்கம். இந்தியாவில் 50 கோடிக்கும்  மேற்பட்ட எண்ணிக்கை கொண்ட வலிமையான பாட்டாளி வர்க்கம் உள்ளது.

தொழிலாளர் ஒற்றுமைக்கான தடைகள் மார்க்ஸ் காலத்தைவிட இன்று அதிகமாக உள்ளன. இன்று வலதுசாரி கருத்தியல் தொழிலாளர்களிடம், இன, சாதி, மத அடையாளங்களை வலுப்படுத்தி, வெறியூட்டி, அரசியல் லாபம் பெற்று வருகிறது. எனினும், மார்க்சின் அறைகூவலான  “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!” என்ற  பாதையில் உழைக்கும் வர்க்கம் தீரமுடன் பயணம் மேற்கொண்டால் சுரண்டலற்ற ஒரு சமூகம் சாத்தியமே.

இந்திய கம்யூனிஸ்ட்கள்

அறிக்கை காட்டும் பாதையில்  இந்திய புரட்சிக்கான திட்டத்தை   வகுக்க இந்திய கம்யூனிஸ்ட்கள் 1920- ம் ஆண்டுகளிலிருந்தே முயற்சித்து வந்தனர்.

கார்ல் மார்க்ஸ் தொழிலாளி வர்க்கம் தனது விடுதலையைத்  தானே சாதித்துக் கொள்ள வேண்டும் என்றும், தனக்கென்று ஒரு அரசியல் கட்சியை வளர்த்தெடுத்து, ஆளுகிற வர்க்கமாக தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றும் கம்யூனிஸ்ட் அறிக்கையில் எழுதியுள்ளார். இது நடக்கும் வரை, முதலாளித்துவ கட்சிகள் பல வடிவங்களில் உழைக்கும் வர்க்கத்தினை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள். மார்க்சின் இந்த அறிவுரை அடிப்படையில் ஒரு புரட்சிகரமான கட்சியை உருவாக்கிட இந்திய  கம்யூனிஸ்ட் இயக்கம் துவக்கத்திலிருந்தே முயற்சித்து வந்தது.

மார்க்சிஸ்ட் கட்சியின்  திட்டத்தில் கட்சியின்  பங்கு குறிப்பிடப்படுகிறது;

“புரட்சிகர இயக்கத்தின் வளர்ச்சிப் போக்கின் தனித்துவமான கட்டங்களில் பல்வேறு வர்க்கங்களும், ஒரே வர்க்கத்தின் பல்வேறு பகுதியினரும், பல வகைப்பட்ட நிலைபாடுகளை எடுப்பார்கள். ஒரு பலமான கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே வெகுஜன இயக்கங்களை வளர்த்தெடுத்து, தொலைநோக்கு இலக்கை அடைவதற்குப் பொருத்தமான ஐக்கிய முன்னணி உத்தியை உருவாக்கி, மாற்றங்களை உருவாக்குவதன்மூலம் இத்தகைய பிரிவினரை தனது அணிக்குள் ஈர்க்க முடியும்.

இத்தகைய கட்சியால்தான் மிகுந்த அக்கறைகொண்ட, சகல தியாகங்களுக்கும் தயாராக உள்ள பகுதியினரை தனது அணிக்குள் கொண்டுவந்து புரட்சிகர இயக்கத்தின் பாதையில் ஏற்படும் பல்வேறு திருகல்கள், திருப்பங்களின் போது மக்களுக்கு தலைமை தாங்கிச் செல்ல முடியும்.” (7.16)

உழைக்கும் மக்கள் ஆதரவைப் பெற, சித்தாந்தத் துறை முக்கியமானது. தங்களது மூலதன நலன்களை பாதுகாக்கும் சித்தாந்தத்தை தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கானது என்று சித்தரிப்பதில் முதலாளித்துவ சிந்தனையாளர்களும், ஊடகவியலாளர்களும் வல்லவர்கள். எனவே இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் இந்தியாவில் நிலவும் சாதிய ஒடுக்குமுறை, மதங்கள் முன்னிறுத்தும் நம்பிக்கைகள், பிற்போக்கான வாழ்வியல் கருத்துக்கள் ஆகிய அனைத்தையும் எதிர்கொண்டு, இந்திய புரட்சியைப் பற்றி கம்யூனிஸ்ட்கள் சிந்தித்தனர்.

தொழிலாளி வர்க்கத்தின்  ஒவ்வொரு போராட்டமும், முதலாளித்துவ அரசியல்  அதிகாரப்  பிடிப்பிற்கு சவாலாக அமைந்திடும். “ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் ஓர் அரசியல் போராட்டமே” என்பது மார்க்சின் கூற்று. இந்தியாவில் 1947-ல் விடுதலை கிடைக்கும்வரை ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகவும், உழைக்கும்  மக்களின் உடனடி  கோரிக்கைகளை  முன்வைத்தும்,  இந்திய  கம்யூனிஸ்டுகள் எண்ணற்ற  போராட்டங்களை முன்னின்று  நடத்தினார்கள். அவை அனைத்தும் காலனிய எதிர்ப்பு, வர்க்க சுரண்டலுக்கு எதிரானதாக நடந்தன. அவற்றின் அரசியல்  தாக்கம்தான் 1947-க்குப் பிறகு அமைந்த  அரசு அமைப்பு ஜனநாயகமும், மதச்சார்பற்ற தன்மையும் கொண்டவையாக அமைய வழிவகுத்தன.

அவ்வப்போது சில வெற்றிகளை தொழிலாளி வர்க்கம் பெற்றபோதிலும், முதலாளித்துவத்துடன்  உள்ள முரண்பாடு  நீடிக்கிறது. இந்த நிகழ்வுப்போக்கின் இறுதிக் காட்சியை மார்க்ஸ் சித்தரிக்கிறார். “…பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்தை தூக்கி எறிந்து தனிச்சொத்துரிமையையும் அழித்திடும்” என்று மார்க்ஸ்  குறிப்பிட்டார். இந்த எதிர்காலப் பார்வைதான் இந்திய சோசலிச  மாற்றத்திற்கான திட்டத்தை  இந்திய மார்க்சியர்கள் உருவாக்குவதற்கான பார்வையாக  அமைந்தது.

முதலாளித்துவம் வீழும் என்பது மார்க்சின் ஆருடம்  அல்ல. முதலாளித்துவ வரலாற்றின் தர்க்கரீதியான நிகழ்வுப் போக்கு.  “இது  தவிர்க்க முடியாதது” என்று அழுத்தந்திருத்தமாக மார்க்ஸ் குறிப்பிடுவதற்குக்   காரணம், அவற்றின் போக்குகளை  அவர்  துல்லியமாக அறிந்திருந்ததுதான்.

முதலாளித்துவ  அழிவு  என்பதனை மார்க்ஸ் தனது விருப்பமாக வெளிப்படுத்தவில்லை; அல்லது முதலாளித்துவ சுரண்டல் கொடுமைகளுக்கு ஆளாகும் பாட்டாளி வர்க்கத்தின்  மீது ஏற்பட்ட பரிதாபத்தின் விளைவாக முதலாளித்துவம்  அழியட்டும் என்று மார்க்ஸ் சாபமிட்டார் என்று கருத முடியாது. அவரும் எங்கல்சும், உருவாக்கிய தத்துவக்  கோட்பாடுகள் முதலாளித்துவ எதிர்காலத்தை கணிக்க உதவின. இயக்கவியல், வரலாற்றுப் பொருள்முதல்வாதம் முதலாளித்துவத்தை ஆராய்வதற்கான சோதனைக் கூடமாக அமைந்தது.

எனவே இந்திய புரட்சிப்பாதையை தெரிவு செய்கிறபோது, இந்திய முதலாளித்துவம்,  அதன் வளர்ச்சிப் போக்குகளை துல்லியமாகவும், வரலாற்றுப் பொருள்முதல்வாதத் துணை கொண்டும் ஆராய்ந்திடும் முயற்சியில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் முயன்றது.

1864 ஆம் ஆண்டு சர்வதேச தொழிலாளர் அமைப்பின் விதிகளை எழுதுகிறபோது மார்க்ஸ் கீழ்கண்டவாறு குறிப்பிட்டார்: “தொழிலாளி வர்க்கங்களின் விடுதலையை தொழிலாளி வர்க்கங்களேதான் சாதிக்க வேண்டும்” வேறு எந்த வர்க்கமும் அந்த வேலையை சாதித்திட முடியாது. இந்தக் கருத்து மற்ற சிந்தனையாளர்களிடமிருந்து மார்க்சினை வேறுபடுத்திக் காட்டுகிறது; அடிமைப்பட்டும், சுரண்டப்பட்டும் இருக்கிற உழைக்கும் மக்களை விடுதலை செய்வதற்கு தேவதூதன் போன்று ஒரு மகத்தான தலைவர் தோன்றிடுவார் என்பது உள்ளிட்ட, பல  பொய்யான சித்தாந்தங்களை உழைக்கும் மக்களிடையே கால காலமாக விதைத்து வருகின்றனர். ஊடகங்களும் ‘சுதந்திர சந்தை, சுதந்திர போட்டியே’ ‘ஜனநாயகம்’ என்பது போன்ற கருத்துகளைப் பரப்பி, சில தனிநபர்களையும் முன்னிறுத்துகின்றனர். இந்த வேலை காலம்காலமாக இடையறாது நடந்து கொண்டிருக்கிறது.

தங்களின் விடுதலையை தாங்களே சாதித்துக் கொள்ள வேண்டும் என்பதும், அதற்கான  தெளிவான திட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சி முன்வைக்க வேண்டும் என்பதும் மார்க்சிய லெனினிய வழிகாட்டுதல். இந்திய உழைக்கும் வர்க்கங்களான தொழிலாளர் – விவசாயிகளின் சமூக பொருளாதார நிலைமைகள் அனைத்தையும் அறிந்து அவர்களின் வர்க்க விடுதலைக்கான வியூகத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் விளக்குகிறது.

இந்திய அரசும், அரசாங்கமும் முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையில் நாட்டின் பொருளாதாரத்தை கொண்டு செல்கிற நடவடிக்கையையும், அந்நிய நிதி மூலதனத்தோடு, வலுப்பெற்று வருகிற அதன் கூட்டையும்,  கட்சித்திட்டம் விளக்குகிறது. நவீன தாராளமயக் கட்டத்தில் முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சிப் போக்குகளை கட்சித் திட்டம் துல்லியமாக விளக்குகிறது. விவசாயம், தொழில் மற்றும் வெளியுறவு கொள்கையைப் பற்றிய துல்லியமான மதிப்பீட்டை கட்சித் திட்டம் கொண்டிருக்கிறது.

அதிகாரத்தை கைப்பற்றுதல்

கம்யூனிஸ்டுகளின் செயல்பாடுகள் அனைத்தும் முதலாளித்துவ முறைமையை ஒழிப்பதுதான் என்பது அறிக்கை பகிரங்கமாக  எடுத்துரைக்கிறது. இதனை எவ்வாறு செய்து முடிப்பது என்பதற்கான கோட்பாடுகளையும் அறிக்கை கொண்டுள்ளது.

இதை மூன்று வகையாக பிரித்து அறிக்கை மேலும் விளக்குகிறது. பாட்டாளிகளை ஒரு வர்க்கமாக கட்டியமைக்க வேண்டும் என்றும், அது கம்யூனிஸ்டுகளின் முதல் நோக்கம் என்றும்  அறிக்கை குறிப்பிடுகிறது. இதன் பொருள் என்ன ? பாட்டாளிகள் இந்த சமூகத்தை மாற்றுவதற்கு தாங்கள் கடமைப்பட்டவர்கள் என்ற உணர்வினை அடைய வேண்டும். அவர்களுக்கு அந்த உணர்வினை ஏற்படுத்துகிற பொறுப்பு கம்யூனிஸ்டுகளுக்கு உண்டு. தங்களது அன்றாட பொருளாதார கோரிக்கைகளுக்கு மட்டுமே பாட்டாளி வர்க்கம் முன்கை எடுப்பது போதுமானதல்ல; அந்தப் போராட்டங்கள் அரசியல் உள்ளடக்கம் கொண்டவையாக இருந்தாலும், இறுதியாக, ஒரு பெரும் வரலாற்று கடமையை பாட்டாளி வர்க்கம் நிறைவேற்றவேண்டும். அந்தக் கடமையை உணர்ந்த  வர்க்கமாக பாட்டாளி வர்க்கம் உயரும்போதுதான் அது தனது வரலாற்றுக் கடமையை  செவ்வனே நிறைவேற்றும்.

அது எப்படிப்பட்ட வரலாற்று கடமை என்பதை இரண்டாவது அம்சமாக அறிக்கை குறிப்பிடுகிறது. முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துகிற கடமையைத்தான் அறிக்கை குறிப்பிடுகிறது. புரட்சிகர உணர்வு கொண்ட பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துகிற  வல்லமை கொண்டதாக மாறிடும்.

மூன்றாவதாக, பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க வேண்டும் என்பதை அறிக்கை  வலியுறுத்துகிறது. அரசியல் அதிகாரம்தான் முதலாளித்துவ சமூக ஒழுங்கினை முடிவுக்குக் கொண்டுவந்து சமூக சமத்துவத்தை நிலைநாட்டும் .

எனவே, பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு ஏற்றவாறு, அந்த  வர்க்கத்திற்கு உணர்வு ஊட்டுகிற பணியை கம்யூனிஸ்டுகள் மேற்கொள்ள வேண்டும் என்பது அறிக்கையின் வழிகாட்டுதல். 

அறிக்கை முதலாளித்துவத்தின் உலகம் தழுவிய செயல்பாட்டை விரிவாக பேசுகிறது; அதேநேரத்தில், தேசிய எல்லைகளுக்குள் வர்க்கப் போராட்டம் நடத்தவேண்டிய தேவையையும் அழுத்தமாக குறிப்பிடுகிறது. முதலாளித்துவ வர்க்கத்துடன் பாட்டாளி வர்க்கம் நடத்தும் போராட்டம், முதலில் தேசிய அளவிலான போராட்டமாக இருக்கிறது என்பதை அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. ஏனெனில்,.”…. ஒவ்வொரு நாட்டின் பாட்டாளி வர்க்கமும் முதலில் தன் நாட்டின் முதலாளித்துவ வர்க்கத்துடன் கணக்கு தீர்க்க வேண்டும்” என்று அறிக்கை தீர்க்கமாக குறிப்பிடுகிறது.

இவ்வாறான தேசிய அளவிலான போராட்டங்கள் வடிவத்தில் உள்நாட்டு எல்லைகளை கொண்டிருந்தாலும் இந்தப் போராட்டங்கள் உலக அளவில் “முதலாளித்துவத்தோடு கணக்கு தீர்ப்பதில்” கொண்டு செல்லும்.

சமூக பொருளாதார அமைப்புகள்

மார்க்சியத்தில் சமூக பொருளாதார அமைப்புகள் குறித்த தனித்த பார்வை உண்டு. புராதன கம்யூனிச சமுதாயம், அடிமை சமூகம், நிலப்பிரபுத்துவ சமுதாயம், முதலாளித்துவ சமூகம் என குறிப்பிட்ட கட்டங்களாக சமூக வளர்ச்சியை மார்க்சிஸ்டுகள் பார்ப்பது வழக்கம். ஆனால் இதை ஒரு சூத்திரமாக, ஒன்றின் பின் ஒன்றாக அணிவகுத்து வரும் சமூக வளர்ச்சியாக பார்ப்பது கூடாது. எங்கெல்ஸ் எழுத்துக்களில் இந்த வறட்டுத்தனம் தவிர்க்கப்பட்டு இருப்பதை காணலாம்.

ஒவ்வொரு நாடும் தனித்தன்மை கொண்ட சமூக பொருளாதார அமைப்பினையும் , விசேச தன்மைகளையும் கொண்டதாக உள்ளது. அந்த வளர்ச்சியின் பயணம் நேர்கோட்டில் செல்வதில்லை. முன்னேற்றமும் பின்னடைவும் நிறைந்ததாகவே உள்ளது. ஆனால், வர்க்கப் போராட்டம் இடையறாது நிகழ்வது, கம்யூனிச சமூக அமைப்பு, அதன் முதற்கட்டமாக சோசலிசம் என்ற இலக்கை நோக்கிய பயணம் முடிவடைவதில்லை.

இந்தியா போன்ற நாடுகளில் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை, முதலாளித்துவ  உற்பத்தி  முறை  என  இரண்டுமே  இயங்குவதைக்  காண முடியும். பல ஐரோப்பிய  நாடுகளில் நிலப்பிரபுத்துவ அழிவில்  முதலாளித்துவம்  வளர்ச்சியடைந்த  வரலாற்றையும் காணமுடியும். “குறிப்பிட்ட நிலைமைகளை,  குறிப்பிட்டவாறு ஆய்வு  செய்திட  வேண்டும்” என்று லெனின் வலியுறுத்தினார்.

கட்சித் திட்டம் அந்த குறிப்பிட்ட நாட்டில் நிலவுகிற திட்டவட்டமான நிலைமைகளை மார்க்சிய, லெனினிய கண்ணோட்டத்துடன் ஆய்வு செய்கிற ஒரு ஆவணமாகும். இந்திய புரட்சியின் முதலாவது கட்டம் இந்திய விடுதலையோடு நிறைவு பெற்றது. அப்போது முதலாளிகள், தொழிலாளி வர்க்கம், விவசாயப் பிரிவினர், குட்டி முதலாளிகள் போன்ற பிரிவினர் ஒன்று சேர்ந்து நடத்திய புரட்சியின் முதலாவது கட்டம் முடிவுக்கு வந்தது. இதில் ஏகாதிபத்தியம் முதன்மை எதிரியாக விளங்கியது. தற்போதைய இரண்டாவது கட்டத்தில் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புக் கடமைகள் நிறைவேற்ற வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, பெருமுதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம், ஏகாதிபத்தியம் ஒன்றுபட்டு உழைக்கும் வர்க்கங்களுக்கு எதிராக அதிகாரம் செலுத்துகிற இந்தச் சூழலில்,  இந்த மூன்றுக்கும் எதிரான வர்க்க கூட்டணி அமைத்து புரட்சியை நோக்கி முன்னேறுவதுதான் இந்திய புரட்சியின் இரண்டாவது கட்டமாக விளங்குகிறது. இந்த கட்டத்தில் அணி சேர வேண்டிய வர்க்கங்களாக தொழிலாளி வர்க்கம், விவசாய பிரிவினர், நடுத்தர வர்க்கங்கள், ஏகபோகமல்லாத முதலாளித்துவ பிரிவினர் ஆகியோர் அடங்குவர். இவை அனைத்தையும் கட்சித்திட்டம் மக்கள் ஜனநாயக அணி என்கிற தலைப்பின் கீழ் ஒவ்வொரு பிரிவினரும் வகிக்கும் பங்கு குறித்து விரிவாக விளக்குகிறது. 

விடுதலைக்குப் பிறகு, அரசின் வர்க்கத்தன்மை, இந்திய முதலாளித்துவ வளர்ச்சியின் தன்மை, புரட்சியின் தன்மை, வர்க்க மதிப்பீடுகள் உள்ளிட்ட பலவற்றில் கருத்து மோதல்கள் தொடர்ந்தன. இவை அனைத்திலும் தவறான நிர்ணயிப்புக்களை எடுத்துரைத்து, புரட்சிகர இயக்கத்தை திசை திருப்பும் முயற்சிகள் நடந்தன.

தற்போதைய இந்திய புரட்சியின் கட்டமாக மக்கள் ஜனநாயக புரட்சி என்பது நமது கட்சி திட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய அரசினுடைய வர்க்கத்தன்மை பற்றிய நிர்ணயிப்பு – முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அரசாக இந்திய அரசு செயல்படுகிறது என்பதையும், இதற்கு பெருமுதலாளித்துவம் தலைமை தாங்கி வருகிறது என்பதையும் கட்சித்திட்டம் வரையறை செய்கிறது. அரசு கட்டமைப்பு மற்றும் ஜனநாயகம் குறித்த விளக்கங்கள் கட்சித் திட்டத்தில் உள்ளன.  உண்மையான ஜனநாயகம் பெரும்பகுதியான மக்களுக்கு மறுக்கப்படுவது குறித்தும், நாட்டின் தேச ஒருமைப்பாட்டுக்கு எதிரான சக்திகளின் வளர்ச்சி, வகுப்புவாத சக்திகளால் மதச்சார்பின்மைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து, அதிகரித்து வரும் சமூக ஒடுக்குமுறை ஆகியன கட்சித் திட்டத்தில் விளக்கப்படுகிறது.

மக்கள் ஜனநாயக அரசு அமைகிறபோது, அது ஏற்று அமலாக்கவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து கட்சித் திட்டத்தில் விரிவாக விளக்கப்படுகிறது. தொழிலாளிகள், விவசாயிகள், நடுத்தர மக்கள் உள்ளிட்ட அனைவரின் வாழ்வாதார கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகிற திட்டங்கள் அனைத்தும் விளக்கப்படுகிறது.

மக்கள் ஜனநாயக அரசை அமைப்பதற்கு கட்ட வேண்டிய புரட்சிகரமான மக்கள் ஜனநாயக அணி அதில் அங்கம் வகிக்க வேண்டிய வர்க்க சக்திகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. மார்க்சிய – லெனினிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இந்த அம்சங்கள் அனைத்தும் மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டத்தில் விளக்கப்பட்டுள்ளன. 

வர்க்கங்களிடையே முரண்பாடுகளும், வர்க்கத் திரட்டலும்

மக்கள் ஜனநாயக அணியில் அங்கம் வகிக்கும் வர்க்கங்கள் மற்றும் பல்வேறு பிரிவினரைப் பற்றி கட்சித் திட்டம் விரிவாக விளக்குகிறது.

“தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் வலுவான கூட்டணிதான் மக்கள் ஜனநாயக முன்னணிக்கு மையமானதும், அடித்தளமானதும் ஆகும். நாட்டின் சுதந்திரத்தை பாதுகாக்கவும், நீண்டகால விளைவுகளை தரக்கூடிய ஜனநாயக மாற்றத்தைக் கொண்டுவரவும், ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்தை உறுதிப் படுத்தவும் இந்த கூட்டணி மிக முக்கியமான சக்தியாக இருக்கும். புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில் இதர வர்க்கங்கள் வகிக்கும் பாத்திரம் தொழிலாளர் – விவசாயிகள் கூட்டணியின் வலிமை, நிலைத்தன்மை ஆகியவற்றையே முக்கியமாக சார்ந்துள்ளது.(7.6)

“விவசாயத்தில் முதலாளித்துவம் ஆழமாக ஊடுருவியுள்ளதால், விவசாயிகளிடையே தெளிவான முரண்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, புரட்சியில் பலவகைப்பட்ட பகுதியினரும் பல்வேறு வகையான பாத்திரத்தை வகிப்பார்கள். நிலப்பிரபுக்கள் மற்றும் முதலாளித்துவவாதிகளின் ஈவு இரக்கமற்ற சுரண்டலுக்கு கிராமப்புறங்களில் மிகப்பெரும் எண்ணிக்கையில் உள்ள விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகள் ஆளாகியுள்ளனர். இவர்கள் தொழிலாளி வர்க்கத்தின் அடிப்படையான கூட்டாளிகளாக இருப்பார்கள். நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ நிலப்பிரபுக்களின் கந்துவட்டி மூலதனத்தாலும், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பெரு முதலாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முதலாளித்துவ சந்தையாலும், கிராமப்புறங்களில் உள்ள நடுத்தர விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமப்புற வாழ்க்கையில் நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தால் இவர்களது சமூக நிலையும் பல்வேறு வகைகளிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் மக்கள் ஜனநாயக முன்னணியில் நம்பகமான கூட்டாளிகளாக இருப்பார்கள்.

மேலும் மேலும் பாட்டாளி வர்க்க பட்டாளத்தில் நடுத்தரவர்க்கமும் இடையறாது வந்து சேர்கிறது. இதனை அறிக்கை படம் பிடித்துக் காட்டுகிறது (7.7)

கம்யூனிஸ்ட் அறிக்கையில் நடுத்தர வர்க்கம் குறித்து முக்கியமான கருத்து பேசப்படுகிறது. “நடுத்தர பட்டறைத் தொழில்முறையின் இடத்தைப் பிரம்மாண்ட நவீனத் தொழில்துறை பிடித்துக் கொண்டது. பட்டறைத் தொழில் சார்ந்த நடுத்தர வர்க்கத்தாரின் இடத்தில் கோடீஸ்வரத் தொழிலதிபர்கள் ஒட்டுமொத்தத் தொழில்துறைப் படையணிகளின் தலைவர்கள், அதாவது நவீன முதலாளித்துவ வர்க்கத்தினர் உருவாயினர். நவீனத் தொழில்துறை உலகச் சந்தையை நிறுவியுள்ளது..'” (அத்தியாயம்-1 முதலாளிகளும் பாட்டாளிகளும்)

இந்தியாவில் நடுத்தர வர்க்கங்களின் நிலைமை பற்றி குறிப்பிட்டு அவர்கள் புரட்சிகர இயக்கத்தில் பங்காற்ற இயலும் என்பது கட்சியின் திட்டத்திலும் சுட்டிக்காட்டப்படுகிறது.

“முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ ஆட்சியால் நகர்ப்புற மற்றும் கிராமப்புற நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரும் எண்ணிக்கையிலான நடுத்தர வர்க்க ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழில்முறைநிபுணர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் அறிவு ஜீவிகளின் புதிய பிரிவினர் ஆகியோர் முக்கியமான பகுதியினராகவும், செல்வாக்கு செலுத்தும் பகுதியினராகவும் உள்ளனர்.

மக்கள் ஜனநாயக முன்னணியில் இவர்களை கூட்டாளிகளாக இருக்கவைக்க முடியும்; இருப்பார்கள். புரட்சிக்காக இவர்களை வென்றெடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த பிரிவினரை ஜனநாயக லட்சியங்களுக்காக அணிதிரட்டுவதில் முற்போக்கான அறிவு ஜீவிகளின் பணி முக்கியமான ஒன்றாகும்.”(7.9).

“தொழிலாளி – விவசாயி கூட்டை மையமாகக் கொண்டு அனைத்து தேசபக்த, ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையின் மூலம் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் லட்சியங்களை அடைவதற்கான போராட்டம் சிக்கலானதும், நீண்டகால தன்மை கொண்டதும் ஆகும்.” என்று திட்டம் கூறுகிறது.

மக்கள் ஜனநாயக அணியில் இடம்பெறும் வர்க்கங்கள் மற்றும் பல்வேறு பிரிவினர்களுக்கும்  முதலாளித்துவ அரசிற்கும் ஏற்படும் முரண்பாடுகள்தான் அந்த வர்க்கங்களை திரட்டும் பணிக்கான ஆதாரம். எனவே அந்த முரண்பாடுகள் குறித்த புரிதலை கட்சி உறுப்பினர்களுக்கு ஏற்படுத்தி, தாங்கள் வாழும் சூழலில் தாங்கள் திரட்ட வேண்டிய வர்க்கங்கள் குறித்த ஆழமான புரிதலை உருவாக்க வேண்டும்.

“எண்ணற்ற உள்ளூர் போராட்டங்கள்” முதலாளித்துவத்தை எதிர்த்து அதனை வீழ்த்தும் தன்மை கொண்டவை  என்பது அறிக்கையின் பார்வை. அறிக்கை  பயன்படுத்தும் “உள்ளூர் போராட்டங்கள்” எனும்  சொற்றொடர் முக்கியமானது. நவீன தொடர்பு சாதனங்கள் இந்த உள்ளூர் போராட்டங்களை “ஒரே தேசிய போராட்டமாக மையப்படுத்த” உதவுவதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

இதேபோன்று உழைக்கும் மக்களின் உள்ளூர் போராட்டங்களும் முக்கியமானவை. முதலாளித்துவத்தின் சுரண்டல் கொள்கைகள் கடைக்கோடி கிராமங்கள் மற்றும்  குடியிருப்புகள் வரை தாக்கத்தை செலுத்துகின்றன. இந்த நிலையில், சமூகரீதியில் ஒடுக்கப்படுவோர், சிறுபான்மையினர், மீனவர்கள், ஆதிவாசிகள் என அனைத்துத் தரப்பு உள்ளூர் மக்கள் அனைவரும் அந்தந்தப் பகுதி சார்ந்த போராட்டக்களத்தில் வருவது முதலாளித்துவ எதிர்ப்பினை கூர்மைப்படுத்தும். இது தேசிய போராட்டத்தையும், உலகப் போராட்டத்தையும் வலுப்படுத்தும்.

வாசிப்பது கடினமானதா?

கட்சித் திட்டத்தின் அடிப்படைகளை உணர்ந்துகொள்ள கம்யூனிஸ்ட் அறிக்கை உதவிடும். இரண்டு ஆவணங்களையும் ஆழமாக உள்வாங்கிட வேண்டும். வாசிப்பது கடினமாக இருக்கிறது என்கிற காரணத்தை முன்வைத்து , ஒருவர் , அவற்றை வாசிக்காமல் இருப்பது, அவரது கம்யூனிச லட்சியப் பிடிப்பினை தளரச்  செய்திடும். இவ்வாறு, இலட்சிய பிடிப்பில் தளர்ச்சியுடன் செயல்படும் தெளிவற்ற உறுப்பினர்கள் கொண்ட இயக்கம் வளர்ச்சி காணாது. இயக்கத்திலும் தீவிரமான செயல்பாடு இருந்தாலும் வளர்ச்சி என்பது கானல் நீராகவே இருந்திடும்.

வாசிப்பது, மறுபடியும் வாசிப்பது, வரிக்கு வரி பொறுமையுடன் வாசிப்பது, மார்க்சியம் அறிந்தோருடன் விவாதம் செய்து வாசிப்பது, வாசகர் வட்ட கூட்டங்களில் இந்த இரண்டு ஆவணங்களின் கருத்துக்களை முன்வைத்து விவாதிப்பது, மற்றவர்களுக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கும், அறிக்கையிலும் திட்டத்திலும் உள்ள விஷயங்களை பேசுவது மற்றும் போதிப்பது- என பல வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

கம்யூனிஸ்ட் கட்சியில் சேருகிறவர்கள் கட்சித் திட்ட லட்சியத்துடன் தன்னை முழுமையாக இணைத்துக் கொள்ள வேண்டுமென்று லெனின் அறிவுறுத்தினார். கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் அறிக்கையையும், திட்டத்தையும் போதிக்கும் பணி முக்கியமானது மட்டுமல்ல; புரட்சிகரமான ஒரு பணியும் ஆகும்.

நவீன தொழிலாளர்களும், கம்யூனிஸ்ட் அறிக்கையும்

சுகுமால் சென்

Download APP

தமிழில் சுறுக்கமாக : ஆர்.எஸ்.செண்பகம்

வளர்ந்து வரும் தொழில்நுட்ப புரட்சி, உழைப்பில் ஏற்படும் மாற்றங்கள், செயல்முறைகள் ஆகியவற்றின் காரணமாக பாட்டாளி வர்க்கம் வேகமாகக் குறைந்து வருகிறது என்றும், அந்த இடத்தில் ஒரு  ‘புதிய நடுத்தர வர்க்கம்’ வளர்ந்து வருகிறது என்றும், ஒரு கருத்து மார்க்சிய வட்டாரங்களிலும் மற்ற இடதுசாரிகளிடமும் நிலவுகிறது. நடுத்தர வர்க்கத்திற்கு எந்தவொரு புரட்சிகர முன்னோக்குப் பார்வையோ, புரட்சிகர ஆற்றலோ இல்லை என்றும்,  அதிவேகமாக வீழ்ச்சியடைந்து வரும் பாட்டாளி வர்க்கமும் இயற்கையாகவே தன்னுடைய புரட்சிகரத் திறனை  இழந்து கொண்டிருக்கிறது என்றும் குறிப்பிடும் அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வலியுறுத்துகின்ற பாட்டாளி வர்க்க புரட்சிக்கான அறைகூவலை மதிப்பற்ற ஒன்றாக ஆக்கிட முயற்சிக்கிறார்கள்.  இக்கட்டுரையில் நாம் இந்த விஷயத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதுடன், வளர்ந்து வரும் யதார்த்தத்தை சுட்டிக் காட்டவும் முயற்சிப்போம்.

தொழிலாளி வர்க்கத்தின் கட்டமைப்பு மாற்றங்கள்

தற்போது நடந்துவரும் அறிவியல் தொழில்நுட்பப் புரட்சி உற்பத்திசக்திகளின் தனிச்சிறப்புகளில் புதிய அம்சங்களை திறந்து விடுகிறது.  இதனால் தொழிலாளி வர்க்கத்தின் பாரம்பரிய கட்டமைப்பிலும் மாற்றம் ஏற்படுகிறது.  தொழில்நுட்பப் புரட்சியின் விளைவாக உருவாகியுள்ள நவீன தொழில்துறை குறித்து கார்ல் மார்க்ஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார் “நவீன தொழில் துறையானது பலதரப்பட்ட, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத,  பழைய தொழிலுற்பத்தி வடிவங்களிலிருந்து வெளிவந்து,  இயற்கை விஞ்ஞானத்தை உணர்வுப்பூர்வமாக கவனமாகவும்,  திட்டவட்டமான ஒழுங்குமுறையுடனும் பயன்படுத்தி, தனக்கான பயனுள்ள செயல்திறனையும் விளைவுகளையும் அடைய முயல்கிறது” என்றார். 1867 தொழில் புரட்சியின் துவக்கக் கட்டத்திலேயே, உற்பத்தியில், அறிவியல் வளர்ச்சி செலுத்தும் தாக்கத்தை உணரத்தொடங்கிய காலத்திலேயே மார்க்ஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  இது எத்தனை முன்னுணர்ந்த கண்ணோட்டம்?  தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் அறிவியல், தொழில்நுட்பப் புரட்சியானது ‘இயற்கை விஞ்ஞானத்தை உணர்வுப்பூர்வமாக பயன்படுத்துவதன்’ மூலமாக உற்பத்தி சக்திகள் புரட்சிகரமாக மாற்றியமைக்கப்படுவதும், அதனால் எழுகின்ற புதிய சாத்தியங்களையும், சிக்கல்களையும் நாம் பார்க்கிறோம்.

தொழிற்புரட்சி என்பது சில தனிப்பட்ட விஞ்ஞானிகளின் குறிப்பிட்ட கண்டுபிடிப்புகளினால் விளைந்தது.  அதிலும் குறிப்பாக நீராவி எஞ்சினின் கண்டுபிடிப்பு, தொழில் புரட்சிக்கான முதன்மை இயக்கியாக இருந்ததை நாம் பார்க்கலாம்.  ஆனால், தற்போதைய எந்தவொரு கண்டுபிடிப்பும் இத்தகையதொரு இடத்தினை பிடிக்க முடியவில்லை.  ஆலைப்பாட்டாளியும், மார்க்சிய அறிஞருமான ஹாரி பிரேவர்மேன் (Harry Braverman) என்பவர், மார்க்சின் உழைப்பு நிகழ்முறை குறித்து ஆழமான ஆய்வினை நடத்தியவர்.  அவர் தனது “உழைப்பு மற்றும் ஏகபோக மூலதனம்” என்னும் நூலில்,  “அறிவியல் தொழில்நுட்பப் புரட்சி என்பதை, குறிப்பிட்ட கண்டுபிடிப்புகளை வைத்து புரிந்துகொள்ள முடியாது. அதனால்தான் நம்மால் ஒரு குறிப்பிட்ட கண்டுபிடிப்பை வைத்து புரிந்துகொள்வது சாத்தியப்படவில்லை… சாதாரண செயல்பாடுகளோடு இணைந்திருக்கும் முழுமையான பொறியியல் மற்றும் அறிவியல் ஆய்வுப்பார்வையை உள்ளடக்கிய உற்பத்தி முறையினைப் புரிந்துகொள்வதன் மூலமே  அதை அறிய வேண்டும். மிக முக்கியமான கண்டிபிடிப்பினை, வேதியலிலோ, மின்னணுவியலிலோ, தானியங்கி இயந்திரங்கள், வானியல், அணு இயற்பியல், அல்லது இந்த அறிவியல் – தொழில்நுட்பத்தின் ஏதேனும் ஒன்றிலோ காண முடிவதில்லை, மாறாக அறிவியலே மூலதனமாக மாற்றமடைவதில் காண முடியும்” என்று குறிப்பிடுகிறார்.

அறிவியல், தொழில்நுட்பப் புரட்சி உற்பத்திசக்திகளை புரட்சிகரமாக மாற்றியமைப்பதுடன், உழைப்பு முறையிலும் அளவில்லா மாற்றத்தை கொண்டு வருகிறது.  ஏற்கனவே உருவான ஏகபோக மூலதனமும், நிர்வாகப் பணிகளின் விரிவாக்கமும், மிகப் பெருமளவில் எழுத்தர் பணிகளில் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது.  தற்போது, அறிவியல், தொழில்நுட்பப் புரட்சியின் விளைவாக, மிகப் பெரிய சேவைத் துறை என்பது உருவாக்கப்பட்டு, அதில் தனித்திறன் மிக்க பணியாளர்கள், தொழில் நுட்பவியலாளர்கள், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள், பிற சிறப்பு அறிவுத் திறனுடன் கூடிய தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

எர்னஸ்ட் மண்டேல், “முதலாளித்துவ சேவைத்துறையின் விரிவாக்கம் என்பது சமீபத்திய முதலாளித்துவ வடிவத்தின் சான்றாக நம் முன் உள்ளது.  இந்த சேவைத் துறையின் விரிவாக்கம் முதலாளித்துவ உற்பத்தி முறையில் உள்ள அனைத்து முக்கிய முரண்பாடுகளையும் கொண்டுள்ளது.  உற்பத்தியின் சமூக, தொழில்நுட்ப, அறிவியல் சக்திகளின் அபரிமிதமான விரிவாக்கத்தை அது பிரதிபலிக்கிறது.  இதனோடு உற்பத்தியாளர்களிடம் கலாச்சார, நாகரீக தேவைகளையும் அது அதிகரிக்கிறது. அவ்வாறே, இது முதலாளித்துவ அமைப்பில் நடக்கிற காரணத்தால், விரோத மனப்பான்மையையும் அது பிரதிபலிக்கிறது. மேலும், இந்த சேவைத்துறையின் விரிவாக்கம் என்பது பெருமளவு மூலதன மயமாக்கலுடன் சேர்ந்து நடக்கிறது.  இதனால், பலன்களை பெறுவதில் அதிகப்படியான சிரமங்களையும், பொருள்மதிப்புகள் வீணாக்கப்படுதலையும் ஏற்படுத்துகிறது. உற்பத்தி நடவடிக்கையிலும், நுகர்வுத்தளத்திலும் தொழிலாளர்கள் அந்நியப்படுதலும் நடக்கிறது” என்று கூறுகிறார்.

ஒவ்வொரு நாடும் இதுபோன்ற தனித்துவமான சேவைத்துறை வளர்ச்சியை காண்கின்றன. இதனால் சேவைத் துறை தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.  இது இந்தியாவிற்கும் பொருந்தும். சேவைத்துறை ஊழியர்கள் அல்லது தொழிலாளர்கள் பெரிய, தேசிய கூட்டமைப்புகளின் கீழ் திரட்டப்பட்டுள்ளனர்.  அவர்கள் தொழிற்சங்க இயக்கத்தில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளனர். ஆனால் அடிக்கடி ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது. இந்த சேவைத்துறை என்பது உற்பத்தி சார்ந்ததா? இல்லையா? என்று. உற்பத்தி சார்ந்த  துறை இல்லை என்றால், இந்த முதலாளித்துவ சமுதாயத்தில், ஒரு வர்க்கப் போராட்டத்தை தொடர்ச்சியாக நடத்துவதில், அதைக் கூர்மைப்படுத்துவதில் இந்தத் துறையின் ஊழியர்கள், தொழிலாளர்கள் என்ன பங்கு வகிக்கமுடியும் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இந்த தலைப்பின் கீழ் விவாதத்தை தொடர்வதற்கு முன் மார்க்ஸ் இதுகுறித்து ஏதேனும் பேசியிருக்கிறாரா என்று பார்ப்போம்.

வணிக கூலித் தொழிலாளர்கள்

வர்த்தக மூலதனம் பற்றிய ஆய்வினை மேற்கொள்ளும்போது மார்க்ஸ்  “வணிக கூலித் தொழிலாளர்கள்” (commercial wage-workers) என்ற பதத்தை பயன்படுத்துகிறார்.  இவர்களையும்,  முதலாளிகளுக்காக தங்களுடைய உபரி உழைப்பை உபரி மதிப்பாக உருவாக்கும்  “கூலித்தொழிலாளர்கள்” என்றே மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.  வணிக முதலாளியாக இருக்கும் வியாபாரிகளால் பணிக்கு அமர்த்தப்படும் இவர்களைக் குறித்த கேள்வியை எழுப்பி அதற்கான விடையையும் மார்க்ஸ் தருகிறார்.

முதலாவதாக, இந்தத் தொழிலாளியின் உழைப்பு சக்தியானது மூலதனத்தை பெருக்குவதற்காக மாறும் மூலதனத்தால் விலைக்கு வாங்கப்படுகிறது.   இரண்டாவதாக, இவர்களுடைய உழைப்பு சக்தியின் மதிப்பும் அதாவது சம்பளமும் பிற கூலித் தொழிலாளர்களைப் போன்றே உற்பத்திக்கான செலவு மற்றும் அவர்களுடைய உழைப்புச் சக்தியை மறுஉற்பத்தி செய்வதற்கான செலவைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.

இங்கே மார்க்ஸ் இரண்டு முக்கியமான விஷயங்களை மிகத் தெளிவாகக் கூறுகிறார்.  1. வணிக கூலித் தொழிலாளர்களும் பிற கூலித்தொழிலாளர்களைப் போன்ற கூலித் தொழிலாளரே ஆவார்.  2.  அவரது கூலியும் பிற கூலித்தொழிலாளர்களைப் போன்றே நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதாகும்.

மார்க்ஸ் அதற்கு மேலும் விளக்கம் தருகிறார்.   “தொழில் துறை மூலதனத்திற்கும், வணிக மூலதனத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் போலவே, தொழில்துறை மூலதனத்தால் நேரடியாக பணியமர்த்தப்படுகிற கூலித்தொழிலாளியையும், வணிக கூலித்தொழிலாளியையும் வேறுபடுத்திப்பார்க்க வேண்டும்”, “வெறுமனே சுற்றோட்ட முகவராக ஒரு வர்த்தகர் இருக்கும் வரையில் அவர் மதிப்பையோ, உபரி மதிப்பையோ உற்பத்தி செய்வதில்லை… எனவே, அதே பணிகளில் அமர்த்தப்படுகிற வணிக தொழிலாளர்களும் நேரடியாக உபரி மதிப்பை அவருக்காக படைத்துக்கொடுக்க முடியாது. “

மேலும் மார்க்ஸ் விளக்குகிறார், “உபரி மதிப்புக்கும் வணிக மூலதனத்திற்குமான உறவு, தொழில்துறை மூலதனத்திற்கும் உபரி மதிப்புக்குமான உறவில் இருந்து வேறுபட்டதாகும். தொழில் துறை மூலதனம் பிறரது ஊதியமில்லா உழைப்பை நேரடியாகத் தனதாக்கிக் கொள்வதன் மூலம் உபரி மதிப்பை உற்பத்தி செய்கிறது. வணிக மூலதனமோ இந்த உபரி மதிப்பில் ஒரு பகுதியை தொழில் துறை மூலதனத்திடமிருந்து தனக்கு மாற்றிக் கொள்வதன் மூலம் தனதாக்கிக் கொள்கிறது” வேறு வார்த்தைகளில் சொன்னால், வணிக கூலித்தொழிலாளரும் உபரியை படைக்கிறார், வழிமுறைகள் வேறுபடுகின்றன.

“தனியொரு வணிகரின் இலாபமானது, அவர் இந்த நிகழ்முறையில் ஈடுபடுத்தும் மூலதனத்தின் அளவைப் பொருத்ததாகும்; அவருடைய எழுத்தர்களின் ஊதியமில்லா உழைப்பு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவு அதிகமாக அவர் வாங்குவதற்கும் விற்பதற்கும் அந்த மூலதனத்தை பயன்படுத்த முடியும்… இந்த எழுத்தர்களின் ஊதியமில்லா உழைப்பு மதிப்பை படைப்பதில்லை என்றாலும் வணிகர் உபரி-மதிப்பை தனதாக்கிக் கொள்வதற்கு வழிவகை செய்கிறது. அவரது மூலதனத்தை பொறுத்தவரை உபரி-மதிப்பை படைப்பதும் தனதாக்கிக் கொள்வதும் விளைவளவில் ஒன்றுதான். ஆகவே இந்த ஊதியமில்லாத உழைப்புதான் அவரது இலாபத்திற்கு ஆதாரம்.” மேலும், “திறனுடை மூலதனத்திற்கான உபரி மதிப்பை ஒரு தொழிலாளியின் ஊதியமில்லா உழைப்பு நேரடியாக படைத்தளிப்பதைப் போலவே வணிக கூலித் தொழிலாளியின் ஊதியமில்லா உழைப்பும் இந்த உபரி மதிப்பில் ஒரு பங்கை வணிக மூலதனத்திற்கு பெற்றுக் கொடுக்கிறது”

வணிக முதலீடும் லாப உற்பத்தியும்

சுற்றோட்டத் துறையில் உள்ள தொழிலாளி உற்பத்தியை உண்டு பண்ணுகிறவரா இல்லையா என்ற கேள்விக்கு வந்து ஒரு முடிவான விளக்கத்தினை மார்க்ஸ் தருகிறார்.   “தொழில் மூலதனத்திற்கு சுற்றோட்டச் செலவுகள் என்பவை பலனற்ற செலவுகள் போல் தெரிகின்றன. ஆம், அது அவ்வாறே. ஆனால் ஒரு வணிகருக்கு, பொது லாப வீதத்தைப் பொருத்தும், அளவைப் பொருத்தும் நேர் விகிதத்தில் லாபமடைவதற்கான ஆதாரமாக அந்தச் செலவுகள் அமைந்திருக்கின்றன. ஆகவே இந்த சுற்றோட்டச் செலவுகளுக்கு செய்யும் முதலீடு வணிக-மூலதனத்திற்கு பலன் தரும் செலவே ஆகும்.” இவ்வாறு குறிப்பிடும் கார்ல் மார்க்ஸ், “இந்தக் காரணத்தினால்வணிக மூலதனத்தால் வாங்கப்படும் உழைப்பு உடனடியாக நேரடியாக உடனடி பலன் தரக்கூடியதாக இருக்கிறது” என்ற விளக்கத்தை தருகிறார்.

இவ்வகைப்பட்ட கூலித் தொழிலாளர்களை குறிப்பிட, மார்க்ஸ் “white collar worker” (அறிவுசார் தொழிலாளி) என்ற பதத்தை பயன்படுத்தவில்லை, தொழில்துறை கூலித்தொழிலாளர்களை அழைப்பதை ஒத்த வகையில் “வணிக பாட்டாளிகள்” என்ற பதத்தையும் அவர் பயன்படுத்தவில்லை. இருப்பினும், மார்க்ஸ் இவர்களை கூலித் தொழிலாளர்கள் என்றும், முதலாளித்துவ உற்பத்தி உறவுகளில் இவர்கள் ஒடுக்கப்படுபவர்களாகவும், சுரண்டப்படுபவர்களாகவும் இருக்கின்றனர் என்றும் தெளிவுபடுத்துகிறார்.

சுரண்டலின் அளவுகோள்

அதே போன்று, இந்த தொழிலாளர்கள் குறித்து இன்னொரு கருத்து நிலவுகிறது.  அவர்கள் அதிகம் சம்பளம் பெறுபவர்கள்.  அதனால், இவர்கள் போராட முன்வருவதற்கு வாய்ப்பில்லை என்ற கருத்து நிலவுகிறது.  மார்க்ஸ் இந்த இடத்தில் இன்னொரு விவாதத்தினை முன்வைக்கிறார்.   “வணிக தொழிலாளர் – இச்சொல்லுக்கு உரிய கண்டிப்பான பொருளிலில் – ஓரளவுக்கு நல்ல ஊதியம் பெறும் கூலித்தொழிலாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர், தேர்ச்சி பெற்ற உழைப்பாக வகைப்படுத்தப்பட்டு சராசரி உழைப்புக்கு மேற்பட்டதாக இருக்கும் உழைப்புக்கு உரியவர்களான கூலித்தொழிலாளர் வகையைச் சேர்ந்தவர்கள். என்றாலும், முதலாளித்துவ பொருள் உற்பத்தி முறையில் முன்னேற்றம் ஏற்படும்போது சராசரி உழைப்பு தொடர்பாகவும் கூட கூலி குறைந்து செல்லும் போக்கு வெளிப்படுகிறது.” சமூகத்தின் எந்த பகுதியிலிருந்து இவர்கள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள்?  மார்க்ஸ் அதனை விளக்குகிறார், “பொதுக்கல்வி அனைவருக்குமாக பரவலாக்கப்படுவதால், சமூகத்தில் அடித்தட்டில், மிகவும் தரம் குறைந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த மக்களிடையே இருந்தவர்களும் கல்வி பெறும் வாய்ப்பு ஏற்பட்டது.  இதனால், தனித்திறன் மிக்க தொழிலாளர்கள் அதிக அளவில் உருவாவதும், அவர்களிடையே போட்டி ஏற்படும் நிலையும் உருவானது.  இதனால், ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர்த்து இவர்களின் உழைப்பு சக்தியானது மதிப்பிழக்கும் நிலை முதலாளித்துவ உற்பத்தி முறையின் முன்னேற்றப் பாதையில் உருவானது” என்று குறிப்பிடுகிறார்.  இதன் பொருள் தெளிவானது.  முதலாளித்துவம் முன்னேற முன்னேற, இந்த பகுதி தொழிலாளர்கள் மிகப் பெருமளவிற்கு சுரண்டலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதுதான்.

எனவே, மார்க்சின் மிகத் தெளிவான வரையறைகளின்படி பார்க்கும்பொழுது பொதுவான தொழிலாளி வர்க்க இயக்கத்தில் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களில் இவர்களது பங்கு குறித்து இருக்கும் கருத்துக்கள் தவறானவை என்பது மிகத் தெளிவாக நிரூபிக்கப்படுகிறது.

பாட்டாளி வர்க்கத்தின் வரையறை

மார்க்சின் நாட்களில் இருந்து, இன்று மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.  அதுவும் தொழில்நுட்ப புரட்சியின் காரணமாக உழைப்பு முறையிலும் புரட்சிகரமான பல மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.  தற்காலத்திய மார்க்சிஸ்டுகள் இந்த மாற்றங்களை புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.  அந்த புரிதல்களின் அடிப்படையில் விஷயங்களை மதிப்பிட வேண்டும்.  மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் அடிப்படை சூத்திரங்கள், கொள்கைகளின் அடிப்படையில் விஷயங்களை பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.

முதலாளித்துவ கட்டமைப்பு, மூலதனக் குவிப்பு, உழைப்புக் கருவிகளின் தொழில் நுட்ப முன்னேற்றங்கள் ஆகியவற்றைப் பொறுத்து தான் தொழிலாளி வர்க்கத்தின் உழைப்பு முறையிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன.  தொழிற்சாலைகளில் கூட, இயந்திரமயமாக்கல் என்பது இயந்திரங்களை பயன்படுத்தி அதிக அளவில் உற்பத்தி செய்வதற்காக முதலாளித்துவ உற்பத்தி முறையில் புகுத்தப்பட்டது என்ற முறையில் மூலதனத்தின் முதல் பகுதியில் மார்க்ஸ்  தனது ஆய்வினை மேற்கொள்கிறார்.  19-ம்நூற்றாண்டில் லான்ஷயர் காட்டன் வர்த்தக நிறுவனம் போன்ற ஒரு சில முன்னேறிய தொழிற்சாலைகள் தவிர்த்து, பெரும்பகுதி முதாலாளித்துவ நிறுவனங்கள் நீராவி இயந்திரங்களை விட மனித உழைப்பு சக்தியைத்தான் பயன்படுத்தின.  உண்மையில் தொழில் புரட்சி காலத்திலேயே கூட பெருமளவில் இயந்திரமயமாக்கல் நிகழவில்லை.  19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20-ம் நூற்றாண்டிலும்தான் மிகப் பெருமளவில் அமெரிக்காவில் அது பயன்படுத்தப்பட்டது.

தொழிலாளி வர்க்கம் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட நிலையான கட்டமைப்பை உடையதாகவோ அல்லது கலவையானதொரு அமைப்பை உடையதாகவோ இருந்ததில்லை.  மாறாக, தொழிலாளி வர்க்கத்தின் கலவை அமைப்பும், கட்டமைப்பும் மூலதன சேர்க்கையின் தேவைக்கேற்ப மாற்றி அமைக்கப்படுகிறது.  மறுகட்டமைப்பு மற்றும் ஒருங்கிணைப்புகள் நிகழும்போது, திவாலானவை கையகப்படுத்தப்படும்போது, திறனற்ற துறைகள் பயனற்றதாகும்போது, புதிய துறைகள் உருவாகும் போது, அதிக திறன் படைத்த மூலதனங்கள் வரும்போது நெருக்கடிகள் எழுவதுண்டு.  தொழிலாளி வர்க்கத்திற்குள்ளும் இதே அழிக்கப்படுதலும், உருவாக்கப்படுதலும் நிகழ்கிறது.

தற்போதைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புரட்சி காலக்கட்டத்தில், முதலாளித்துவ பொருளாதார உலகமயமாக்கலின் கீழ், முதலாளிகள் அதிக அளவில் தொழிலாளர்கள் தேவைப்படாத வகையில் சாதனங்களை பயன்படுத்துகின்றனர்.  மினனணுவியல், சைபர்நெட்டிக்ஸ் எனும் தன்னாள்வியல், ஆட்டோமேஷன் எனும் தானியங்கல் ஆகியவை முதலாளிகளுக்கு அதிக அளவில் தொழிலாளர்கள் தேவைப்படாத வகையில் சாதனங்களை பயன்படுத்த உதவுகின்றன.

மார்க்ஸ் சொன்னது போல், கல்வி பொதுவாக்கப்பட்டதன் காரணமாக வர்த்தக முதலாளிகளுக்கு வேலை செய்யக்கூடிய தொழிலாளர்கள் பெருமளவில் கணக்காளர்களாக, எழுத்தர்களாக, கொடுக்கல் வாங்கல் துறைகளில் வேலை செய்ய தயாராக இருக்கிறார்கள்.  அதேபோல, தானியங்கித் துறை மற்றும் கணிணித் துறையில் உள்ள உயர் மட்ட தொழில் நுட்பக் கல்வியின் காரணமாக, சேவைத்துறையின் முதலாளிகளுக்கு தொழில்நுட்ப தனித்திறன் பெற்ற தொழிலாளர்களை அவர்கள் விரும்பும் வேலைகளில் பணியமர்த்த முடிகிறது. அதாவது, தொழிலதிபர்களுக்குத் தேவையான பல்வேறு வகையான தொழிலாளர்களை பல்வேறு பணிகளில் பணியமர்த்திக் கொள்கின்றனர்.  உண்மையில் தொழிலாளர்களின் பெருக்கம் என்பது முதலாளிகளின் நலன்களை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் பல்வேறு வகையான வேலைகளுக்கு தொழிலாளர்களை பணியமர்த்த உதவுகிறது என்பதை மார்க்ஸ் கண்ணுற்று கூறுகிறார்.

வர்க்கங்கள் குறித்து கார்ல் மார்க்ஸ் சொல்வது

மார்க்சின் மூலதனம் நூலின் பகுதி மூன்றில், வர்க்கங்கள் குறித்த அத்தியாயத்தில், எழுதியவை முடிக்கப்படாமல் கையெழுத்துப் பிரதி பாதியில் நின்று விடுகிறது.  மார்க்ஸ், “கூலித் தொழிலாளர்களும், முதலாளிகளும், நிலவுடைமையாளர்களும் முப்பெரும் சமுதாய வர்க்கங்களாக அமைவது எதனால்? “ என்ற கேள்வியை எழுப்பி விடை காண முயல்கிறார்.

“முதல் பார்வையில் – வருவாய் ஆதாரங்களும், வருவாய்க்கான மூலங்களும் காரணமாகவே என்று தோன்றுகிறது.” கூலித் தொழிலாளர்களும், முதலாளிகளும், நிலவுடைமையாளர்களும் “உழைப்பு சக்தியாலும், மூலதனத்தாலும், நிலச் சொத்தாலும் கிடைக்கிற கூலியையும் இலாபத்தையும் நில வாடகையையும் நம்பி வாழ்கின்றனர்.”

“எனினும், இந்தக் கண்ணோட்டத்தில் மருத்துவர்களும், அலுவலர்களும் கூட இரு வர்க்கங்களாவர்.  ஏனென்றால், அவர்கள் இரு வேறு சமூகக் குழுக்களைச் சேர்ந்தவர்கள்.  ஒவ்வொரு குழுவின் உறுப்பினர்களும் ஒரே ஆதாரத்திலிருந்து தமது வருவாயைப் பெறுகிறவர்கள்.   சமுதாய உழைப்புப் பிரிவினை தொழிலாளர்களையும், அதே போல் முதலாளிகளையும், நிலவுடைமையாளர்களையும் அவர்கள் பெறக்கூடிய நலன்கள் என்ற வகையிலும், தரம் என்ற வகையிலும் எல்லையற்ற முறையில் பிரித்துக் கூறு போடுகிறது.  உதாரணமாக, நிலவுடைமையாளர்களை திராட்சை தோட்ட உடைமையாளர்கள், பண்ணை உடைமையாளர்கள், வன உடைமையாளர்கள், சுரங்க உடைமையாளர்கள், மீன் வள உடைமையாளர்கள் என்று பிரிக்கிறது.  அதற்கும் இதுவே பொருந்தும்.  கெடுவாய்ப்பாக  கையெழுத்துப் பிரதி இங்கே நின்றுவிடுகிறது.

சேவைத் துறை உள்ளிட்ட நவீன உற்பத்தித் துறையில் தொழிலாளர்களின் வேலைப்பிரிவினை என்பது அவர்களுடைய தனித் திறன் சார்ந்தது என்பதையும்,  தர வகைப்பட்டது என்பதையும் நாம் வெளிப்படையாக இன்று கண்டு கொண்டிருக்கிறோம்.

இன்னொரு இடத்தில் மார்க்ஸ்,  “ஒட்டுமொத்த தொழில் முறையின் உண்மையான நெம்புகோல் அல்லது முன்னோக்கி எடுத்துச் செல்லும் சக்தி என்பது தனிப்பட்ட தொழிலாளர்கள் அல்ல.  மாறாக, உழைப்பு சக்தி சமூக அளவில் ஒருங்கிணைக்கப்படும்போது, அது கூட்டு  வேலையாகும்போது,  பல்வேறு உழைப்பு சக்திகள் ஒருங்கே சேர்ந்து ஒட்டு மொத்த உற்பத்தி நிகழ்முறையை உருவாக்கி, பொருட்களை உற்பத்தி செய்யும் பல்வேறு வழிகளில் பங்கெடுக்கும்போது, அதுவே ஒட்டுமொத்த தொழில் முறையின் உண்மையான நெம்புகோலாகிறது.  சிலர் கரங்களால் சிறப்பாக வேலை செய்வார்கள்; சிலர் கருத்தால் வேலை செய்வார்கள். மேனேஜராக, என்ஜினியராக, தொழில் நுட்ப வல்லுநராக, கண்காணிப்பாளராக, உடலுழைப்பு தொழிலாளியை விட இன்னும் கடின உழைப்பாளியாக சிறப்பாக செயல்படுவார்கள்.  எப்போதுமே அதிகரித்துக் கொண்டிருக்கும் எண்ணற்ற உழைப்பு வகைகள் உற்பத்தி உழைப்பு பற்றிய கருத்தாக்கத்திற்குள் அடக்கப்படும்.  அதைச் செய்பவர்கள் உற்பத்தித் தொழிலாளர்கள் என வகைப்படுத்தப்படுவார்கள். இந்தத் தொழிலாளர்கள் நேரடியாக  மூலதனத்தால் சுரண்டப்படுகிறார்கள்.  அதே போல அவர்கள் மூலதனத்தின் உற்பத்தி மற்றும் விரிவாக்கத் தாக்கங்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்” என்று கூறுகிறார். 

கூட்டு வேலை என்பது முதலாளித்துவ உற்பத்தி முறைக்கே உரிய சிறப்பியல்பு அல்ல.  முதலாளித்துவ கூட்டு வேலையில் சுயேச்சையான கூலித் தொழிலாளியும், உற்பத்தி சாதனங்களின் தனி உடைமையும் தேவைப்படுகிறது.  கூட்டு வேலை முறை வளரும் போது உழைப்பு மூலதனத்துக்கு கீழ்படிந்து செயல்படுவது என்பது வெறும் புறவடிவமாக இருந்த நிலையிலிருந்து உண்மையான நேரடியான கீழ்ப்படிதல் நடைபெறும் நிலைக்கு மாறி விடுகிறது.

எனவே, மார்க்சின் வாதத்தின்படி, யாரெல்லாம் கூட்டு வேலையின் பங்களிப்பாளர்களாக ஆகிறார்களோ, அவர்கள் அனைவருமே உற்பத்தி தொழிலாளர்கள் ஆவர்.  அவர்கள் கரத்தால்தான் வேலை செய்ய வேண்டும் என்பதில்லை.  அதே போல மார்க்ஸ் வணிக தொழிலாளர்கள் பற்றி குறிப்பிடும்போது உற்பத்தி தொழில்துறையில் வேலை செய்பவர்கள் மட்டும் பாட்டாளி வர்க்கம்  என்று சொல்லவில்லை.  இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. 

உழைப்புச் சக்தியும், கட்டாயமும்

உண்மையில், உற்பத்தி மற்றும் உற்பத்திசாரா தொழிலாளர்கள் என்பதற்கான வேறுபாடு என்னவென்றால் மூலதனத்தின் விரிவாக்கத்திற்கு பங்களிப்பவர்கள்  என்பதும், பங்களிக்காதவர்கள் என்பதுமே ஆகும்.  19-ம் நூற்றாண்டின் இரண்டாவது பகுதியில் (பிரிட்டனில் விக்டோரியா மகாராணியின் காலம்) நடுத்தர மற்றும் உயர்தட்டு மக்களால் அவர்களுடைய வருமானத்தில் இருந்து பணிக்கமர்த்தப்பட்ட வீட்டு வேலை தொழிலாளர்களை இதற்கு உதாரணமாக மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.  ஆனால், வீட்டு வேலை செய்யும் அவ்வகைப்பட்ட தொழிலாளர்களுக்கு வேறு வாழ்க்கை ஆதாரங்கள் இல்லாததால் உழைப்புச் சக்தியை இவ்வகையில் விற்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அவர் குறிப்பிடத் தவறிவிட்டார். மார்க்ஸ் தொழிலாளர்களின் பல்வேறு வகைகள் பற்றி குறிப்பிடும்போது, நாம் இன்னொன்றையும் மார்க்சினுடைய முதலாளித்துவ ஆய்வின் அடிப்படையிலேயே புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.  தன்னுடைய உழைப்பு சக்தியை விற்றால்தான் வாழ முடியும் என்ற சமூகப் பொருளாதார நிர்ப்பந்தம் அல்லது கட்டாயம் என்பதுதான் பாட்டாளி வர்க்கத்தின் வெளிப்படையான குணாம்சமாகும்.

இதனால் அனைத்து கூலித்தொழிலாளர்களும் முதலாளித்துவ உற்பத்தி உறவுகளின் அடிப்படை கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடுகிறார்கள்.  உற்பத்திக்கான வழிமுறைகள் சொந்தமின்மை, நிலஉடமையின்மை மற்றும் அவை கைக்கெட்டாமை, உழைப்பு சக்தியை (தொடர்ச்சியாக) விற்காமல் வாழ்வாதாரத்திற்குத் தேவையானவற்றை வாங்குவதற்கு போதுமான பணமின்மை என்பது போன்ற சமூகப் பொருளாதார நிர்ப்பந்தங்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.  இந்த பிரிவில் வணிக தொழிலாளர்களும், அரசாங்கத்தின் கீழ் நிலை ஊழியர்களும், சிதறிக் கிடக்கும் தினக் கூலிகளும் (வீட்டு வேலை பணியாளர்களும்) அடங்குவர்.  ஏனென்றால், இவர்களுக்கும் வாழ்வாதாரத் தேவைகளுக்காக தங்களுடைய உழைப்பு சக்தியை விற்பதைத் தவிர வேறு வழியில்லை.

இங்கே ரோசா லக்சம்பர்க் தன்னுடைய மூலதனக் குவிப்பு குறித்த நூலில், அத்தியாயம் 16-ல் ‘மூலதன மறு உருவாக்கம் மற்றும் சமூக அமைப்பாக்கம் என்ற தலைப்பின் கீழ் எழுதியுள்ளதை நாம் கவனிக்க வேண்டியுள்ளது’. அவர் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பாட்டாளி வர்க்கத்தின் உற்பத்தி நிலைகள் பற்றி விவாதிக்கும்போது,  “விவசாயப் பொருளாதாரம் மற்றும் கைவினைத் தொழில்கள் தொடர்ச்சியாக நசிவடைந்தபோது, கிராமப்புற மற்றும் நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தினர் எப்படி பாட்டாளி வர்க்கமாக மாற்றப்பட்டார்கள்” என்று குறிப்பிடுகிறார், ” அதாவது, முதலாளித்துவம் கோலோச்சாத நிலையில் இருந்து, உழைப்பு சக்தியானது முதலாளித்துவ  நிர்ப்பந்தங்களுக்கு இடைவிடாது உட்படுத்தப்பட்டு, மாற்றங்கள் ஏற்பட்டது, முதலாளித்துவத்திற்கு முந்தைய நிலையிலிருந்து, உற்பத்தி முறையில் முன்னோக்கிய சிதைவுகளும் முறிவுகளும் ஏற்பட்டன”.  இது 19-ம் நூற்றாண்டு ஐரோப்பாவிற்கு மட்டும் பொருந்தும் ஆய்வல்ல;  தற்போது இந்தியாவில் நிலவும் சூழலுக்கும் இது மிகச் சரியாகப் பொருந்துகிறது.

உழைப்புச் சக்தியும் சேவைத்துறையும்

இன்னொரு முக்கியமான விஷயம்  கருத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளது.  சேவை குறித்து மார்க்ஸ் குறிப்பிடும்போது, ”சேவை என்பது ஒரு பொருளின் அல்லது ஒரு உழைப்பின் பயன் மதிப்பின் பயனுள்ள விளைவு என்பதன்றி வேறில்லை” என்று பொதுவான வரையறை ஒன்றினை கூறியுள்ளார்.  அதன் பிறகு அவர் தனித் திறன் பெற்ற தொழிலாளர்கள் மற்றும் திறன்பெறாத சாதாரண தொழிலாளர்கள் குறித்து ஒரு சுவாரஸ்யமான விளக்கம் அளித்துள்ளார். “மதிப்பினை உருவாக்கும் ஒவ்வொரு உற்பத்தி செயல் முறையிலும், தனித்திறன் பெற்ற தொழிலாளி மற்றும் சாதாரண சமூகத் தொழிலாளியின் குறைப்பு  (உ-ம்)  திறன் பெற்ற தொழிலாளியின் 1 நாள் முதல் திறனற்ற தொழிலாளியின் 6 நாள் வரை குறைப்பு என்பது தவிர்க்க முடியாதது” என்று குறிப்பிடுகிறார்.

ஒரு முதலாளியால் பொருட்களின் உற்பத்திக்கென பணியில் அமர்த்தப்படும் ஒரு தொழிலாளி முதலாளிக்கு தனது சேவையை செய்கிறார்.  இந்த சேவையின் மூலம் அவர் உறுதியான விற்பனைக்குரிய ஒரு பொருளை சரக்காக மாற்றுகிறார்.  உழைப்பின் பயனுள்ள விளைவு விற்பனைக்குரிய ஒரு பொருளாக மாறாத போது வித்தியாசமான ஒரு சூழல் உருவாகிறது.  ஹாரி ப்ரேவர்மேன் இந்த சூழல்கள் குறித்து மிகவும் தர்க்கரீதியான விளக்கத்தினை அளிக்கிறார். “ஒரு தொழிலாளி தன் உழைப்பால் பயன்பெறக் கூடியவருக்கு நேரடியாக தனது உழைப்பை வழங்காமல், ஒரு முதலாளியிடம் விற்று, அந்த முதலாளி சரக்கு சந்தையில் அதனை மறுவிற்பனை செய்வார் என்றால், அது சேவைத் துறையில் நடைபெறும் உற்பத்தியின் முதலாளித்துவ வடிவமாகும்” என்று குறிப்பிடுகிறார்.

அதே போல, ஹாரி ப்ரேவர்மேன் அத்தகைய சேவை என்பது முதலாளித்துவ உற்பத்தி முறையில், உபரிமதிப்பை உற்பத்தி செய்கிற பயனுள்ள உழைப்பாகும் என விளக்கும் விதத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.  

“முதலாளித்துவத்தின் வரலாற்றில் ஏகபோக மூலதனத்தின் காலத்தில் பல்வேறு வகையான உழைப்பு முறைகளானது மூலதனத்தின் லாபகரமான முதலீட்டின் ஒரு பகுதியாக ஆகிவிடுவதன் காரணமாக, அவை மூலதன விரிவாக்கத்திற்கே பயன்படுகின்றன.  தற்போதைய நவீன  “கார்ப்பரேட்டுகள்” அல்லது  “பெரு நிறுவனங்கள்” வடிவத்தில் அனைத்து வகையான தொழிலாளர்களும் எவ்வித வேறுபாடுமின்றி பணிக்கமர்த்தப்படுகிறார்கள்.  நவீன கார்ப்பரேட் குழுமங்களில் உற்பத்தி, வர்த்தகம், வங்கி, சுரங்கம் மற்றும் சேவை போன்றவற்றை கவனிப்பதற்கென சில பிரிவுகள் இருக்கின்றன. அவற்றில் அவரவர் வேலையை அமைதியாக அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.  இறுதியில் கம்பெனியின் பேலன்ஸ் ஷீட் வெளிவரும்போது அனைத்து வகையான உழைப்பு வடிவங்களும் மறைந்து போய் அவை அனைத்தும் மதிப்புருக்களாக தெரிகிறது” என்று சேவை குறித்த தனது விளக்கத்தினை மிகத் தெளிவாக தருகிறார்.

மார்க்ஸ் இது குறித்து கம்யூனிஸ்ட் அறிக்கையை எழுதும் முன்பே  “கூலி உழைப்பு,  மூலதனம்” என்ற நூலில் விளக்கியுள்ளார்

 “உற்பத்தி மூலதனம் வளரும்போது, தொழிலாளர்களுக்கான கிராக்கியும் வளர்கிறது.  இதன் விளைவாக, உழைப்பின் விலை, கூலி அனைத்தும் உயர்கின்றன…….

 “கவனிக்கத்தக்க ஒரு கூலி உயர்வு ஏற்படுகிறது என்றால், அது  உற்பத்தி மூலதனத்தின் துரித வளர்ச்சியை சுட்டிக்காட்டுகிறது.  உற்பத்தி மூலதனத்தின் துரித வளர்ச்சி என்பது அதற்கு சமமான செல்வாதார வளர்ச்சியை, ஆடம்பர மற்றும் சமூகத் தேவைகளின் வளர்ச்சியை, சமூக போகங்களின் வளர்ச்சியை உருவாக்குகிறது.  இப்படி தொழிலாளியின் அனுபோகங்கள் வளர்ச்சி அடைந்தாலும், முதலாளியின் அனுபோகங்களின் வளர்ச்சியோடு ஒப்பிடும்போது அது குறைவாக இருப்பதால், முதலாளியின்  அனுபோகங்கள் தொழிலாளிக்கு எட்டாதவையாக இருப்பதால், சமூகத்தின் பொதுவான முன்னேற்றத்தோடு ஒப்பிடுகையில், தொழிலாளியின் அனுபோக வளர்ச்சிகள் போதுமானதாக இல்லாமல் இருப்பதால், ஒரு தொழிலாளி பெறும் அனுபோகங்களில் சமூக திருப்தி என்பது குறைவாகவே இருக்கிறது.  நமது ஆசைகளும் இன்பங்களும் சமூகத்தில் இருந்தே முளைத்தெழுகின்றன.  நாம் அவற்றை சமூகத்தின் அளவுகோலால் மட்டுமே அளக்கிறோம்.  நம்மிடம் இருக்கும் பொருட்களால் அல்ல.  ஏனென்றால் அவை சமூகத்துடன் தொடர்புடையவை;  சமூகத் தன்மையுடன்,  இயல்புடன் கூடியவை.  பொதுவாக, கூலி என்பது சரக்குகளின் விலையால் மட்டும் தீர்மானிக்கப்படுவதல்ல.  அது பல்வேறு உறவுகளை உள்ளடக்கியதாகும்” என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

மார்க்சின் இந்த வார்த்தைகள் தற்போதைய சூழலை புரிந்து கொள்ள மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.  தொழிலாளர்களின் போராட்டங்கள் மற்றும் பல்வேறு பிற காரணிகளால், தொழிலாளர்களின் கூலியும்  வசதி வாய்ப்புகளும் உயர்ந்தாலும் அவர்களின் வாழ்க்கைத் தரம் என்பது 19-ம் நூற்றாண்டின் மத்திய காலத்தின் அளவிற்கு இல்லை என்பதே இன்றைய நிலை.  முதலாளித்துவம் முதலாளிகளுக்கும் கூலித் தொழிலாளர்களுக்கும் இடையே ஒரு பரந்த பொருளாதார ஏற்றத்தாழ்வினை உருவாக்குகிறது.  தொழிலாளர்கள் ஒரு வேளை கூடுதலான ஊதிய விகிதம் அல்லது வசதிவாய்ப்புகளை பெறலாம்.  ஆனால் உடைமையாளர்களின் செல்வச் செழிப்புகளும் வசதிகள் மற்றும் சொத்துக்களும்  ஒரு நிரந்தர விகிதாச்சாரத்தில் அதைவிட கூடிக் கொண்டே போகிறது.

இந்த முதலாளித்துவ உலகமயமாக்கல் காலக்கட்டத்தில், குறிப்பாக நிதி மூலதனத்தின் ஆதிக்கத்தின் கீழ், வருமான ஏற்றத் தாழ்வுகள் என்பது இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.  உலகமயமாக்கலின் கதாநாயகன் என்று சொல்லப்படும் உலக வங்கியே கூட, அதனுடைய அடுத்தடுத்த அறிக்கைகளில் இந்த வருமான ஏற்றத்தாழ்வுகள் குறித்து கவலை தெரிவித்துள்ளது.  மேலும் மேலும் மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவது குறித்தும், வேலையில்லாமல் இருப்பது குறித்தும் உலக வங்கி கவலை தெரிவித்துள்ளது.  அதே போல ஆட்சியாளர்களுக்கு எதிராக துன்பப்படும் ஏழை எளிய மக்களின் அதிருப்தியை கண்டுணர்ந்துளளது.

எனவே, ஊதியத்தில் எவ்வளவு உயர்வு ஏற்பட்டிருக்கிறது என்ற கேள்வியல்ல இப்போது முக்கியத்துவம் பெறுவது.  தற்போதைய வினா என்னவென்றால், ஒரு நாட்டின் செல்வாதாரத்தை -/ வருமானத்தை உருவாக்கும் சாமானிய மக்களுக்கு அவர்களுக்கு சேர வேண்டிய பங்கு உரிய விகிதத்தில் / உரிய முறையில் சேர்கிறதா என்பதுதான்.  இந்த இழப்புணர்வும், ஏற்றத்தாழ்வான நிலையும்தான் தொழிலாளி வர்க்கத்தின் போர்க்குணத்திற்கு உண்மையான கரு ஆகிறது.

இந்த எல்லா வகையான உண்மைகளையும், சூத்திரங்களையும் கருத்தில் கொண்டு, இன்றைய உற்பத்தித் துறை தொழிலாளர்கள், திறன் பெற்ற சேவைத் துறை தொழிலாளர்கள், வணிக நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள், நிதி நிறுவனங்களாகிய வங்கிகள், இன்சூரன்ஸ் துறை ஊழியர்கள், அரசுத் துறைகளில் – அரசு அலுவலகங்களில் எழுத்தர்களாகவும் அதற்கும் கீழான பியூன் போன்ற வேலையில் இருக்கும் தொழிலாளர்கள், முதலாளிகளுக்கு சேவை செய்வதில் இது போன்ற வேலைகளில் இருக்கும் தொழிலாளர்கள், ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் தனித் தனியான தினக் கூலிகள்  என அனைவருமே கூலித் தொழிலாளர்கள் என்ற வரையறையின் கீழ் இயற்கையாகவே வந்துவிடுகிறார்கள்.  அதே நேரத்தில் பாட்டாளி வர்க்கத்தின் மையமாக, முக்கிய கருவாகத் திகழ்பவர்கள் தொழில் துறை கூலித் தொழிலாளர்கள் ஆவர்.

தங்களுடைய உழைப்பு சக்தியை விற்பதைத் தவிர வேறு வாழ்வாதாரம் இல்லாத வீட்டு வேலை தொழிலாளர்கள், அவர்கள் மதிப்பினை உருவாக்கவில்லை என்றாலும், முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக அணி திரளாவிட்டாலும், மிக அதிக அளவில் சுரண்டலுக்கு உட்படுத்தப்படுகின்ற, அனைத்தையும் இழந்து நிற்கும் தொழிலாளர்கள் என்ற முறையில் பாட்டாளி வர்க்கம் என்பதன் பரந்த வரையறைக்குள் வந்துவிடுகின்றனர்.

இந்த காரணிகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, பாட்டாளி வர்க்கம் என்பது இன்றைக்கு மிக வேகமாகக் குறைந்து கொண்டே வரும் வர்க்கமாகவும், மறைந்து போகிற வர்க்கமாகவும் இருக்கிறது என்பதும், அந்த இடத்தில் புதிதாக போர்க்குணமற்ற, புரட்சிகர திறனற்ற, மிக அதிக அளவில் ஊதியம் மற்றும் பிற வசதி வாய்ப்புகளை பெற்ற வாழும் ஒரு மத்திய தர வர்க்கம் உருவாகி  இருக்கிறது என்பதுமான கருத்து ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லை.

தொழிலாளி வர்க்கத்தின் வர்க்க உணர்வு (புரட்சிகர குணாம்சம்)

மார்க்சிய இயக்கவியல் கொள்கையின்படி, வர்க்க உணர்வு என்பது ஒரு மனிதனின் புறச் சூழலுக்கும்,  அதன் காரணமாக அவனுள் ஏற்படும் உணர்வு நிலைக்குமான உள்ளார்ந்த தொடர்பு குறித்த விழிப்புணர்வில் இருந்து உருவாகிறது.

“தத்துவத்தின் வறுமை” என்ற தனது நூலில் வர்க்கத்திற்குள்ளும், வர்க்கத்திற்காகவும்  என்ற இரண்டிற்குமான முக்கியமான வேறுபாட்டினை பற்றி மார்க்ஸ் பேசுகிறார்.  இந்த இடத்தில்தான் தொழிலாளி வர்க்கத்தின் உணர்வு மட்டத்தின் வேர் இருக்கிறது என்று குறிப்பிடுகிறார்.

 “பொருளாதார நிலைமைகள் முதன்முதலில் நாட்டின் திரளான மக்களை தொழிலாளிகளாக மாற்றிவிட்டது.  மூலதனத்தின் ஆதிக்கம் இந்த மக்கள் திரளுக்கு ஒரு பொதுவான நிலைமையை, பொதுவான நலனை உண்டாக்கிவிடுகிறது.  எனவே, இந்த மக்கள் திரள் ஏற்கனவே மூலதனத்துக்கு எதிரான வர்க்கமயமாகியுள்ளது என்றாலும் தனக்காக நிற்கும் வர்க்கமாக இன்னும் ஆகவில்லை.  இந்தப் போராட்டத்தில் – அதன் சில கட்டங்கள் மட்டும் நாம் குறிப்பிட்டிருக்கிறோம்.  இந்த மக்கள் திரள் ஒன்றுபடுகிறது.  தனக்காக நிற்கும் வர்ககமாக உருவமைத்துக் கொள்கிறது.  அது காத்து நிற்கும் நலன்கள் வர்க்க நலன்களாகி விடுகின்றன.  ஆனால் வர்க்கத்துக்கு எதிராக வர்க்கம் நடத்தும் போராட்டம் ஒரு அரசியல் போராட்டமாகும்.” என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

இங்கு நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது,  மார்க்ஸ்  “பொருளாதார போராட்டங்களை” புரட்சிகர அரசியல் உணர்வு மட்டத்துடனோ அல்லது சோசலிசத்துடனோ தொடர்புடையது அல்ல என்று ஒரு போதும் சொல்லவில்லை.  மார்க்சைப் பொறுத்த வரையில்,  “பொருளாதாரப் போராட்டங்கள்”தான் ஒரு பிரத்தியேகமான, பரந்துபட்ட அரசியல் உணர்வினை உருவாக்குவதற்கு மையமான முக்கிய அம்சமாகும்.

அதே நேரத்தில், இந்த அரசியல் உணர்வு – சோசலிச குணாம்சம் என்பது தானாக தொழிலாளி வர்க்கத்திற்கு வந்துவிடாது என்று லெனின்கூறுகிறார்.  அதாவது ஒரு புரட்சிகர கட்சியின் தலையீட்டினால் மட்டுமே இந்த சோசலிச உணர்வு மட்டம் என்பது பாட்டாளி வர்க்கத்திற்கு ஊட்டப்பட முடியும் என்று லெனின் குறிப்பிடுகிறார்.

தற்போது நவீன முதலாளித்துவ சமுதாயத்தில் பாட்டாளி வர்க்கம் மட்டுமே புரட்சிகர வர்க்கமாக இருக்கிறது.  ஆனால், அவர்களுடைய அரசியல் உணர்வு மட்டம் அல்லது புரட்சிகர குணாம்சம் என்பது லெனின் கூறியபடி தானாக வந்துவிடாது.  அதே போல எல்லா சந்தர்ப்பங்களிலும் எல்லா இடங்களிலும் முதலாளித்துவ நெருக்கடிக்கு எதிரான போராட்டங்கள் ஒரே மாதிரியாக இருக்காது.

ஹங்கேரியன் மார்க்சிஸ்ட் ஜார்ஜ் லூகாக்ஸ்,   “பொருளாதார நெருக்கடிக்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தின் உணர்வு மட்டம் என்பது பல நேரங்களில் போதுமான அளவிற்கு அதன் தீவிரமான தாக்குதலுக்கு எதிர் வினையாற்றும் தீவிரத்துடன்  இருப்பதில்லை” என்று குறிப்பிடுகிறார்.

தற்போதைய தலைமுறை தொழிலாளி வர்க்கம் முதலாளித்துவ நெருக்கடிகளுக்கு எதிரான போராட்டங்களில் உலகம் முழுவதும் ஆங்காங்கே  ஈடுபட்டுக் கொண்டு தான் இருக்கிறது.  ஆனால், உலகளாவிய அளவில் இந்த போராட்டங்கள் நடப்பதில்லை.  தற்போது புரட்சிகர பாட்டாளிவர்க்க அரசியல் கட்சிகளின் முக்கிய கடமை என்பது தேவையான தலையீடுகளை செய்து, பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் உணர்வு மட்டத்தை வளர்த்தெடுப்பதாகும்.  அவர்களுக்கு சோசலிசமே மாற்று என்பதனை அறிவுறுத்தி, ஒரு புரட்சிகரப் போராட்டத்தினை நடத்துவதற்குத் தேவையான வழிகாட்டுதல்களை அளிக்க வேண்டியதாகும்.  இதைத்தான் கம்யூனிஸ்ட் அறிக்கை அறிவுறுத்துகிறது.

ஓரடி முன்னால், ஈரடி பின்னால் : புரட்சிகர கட்சி அமைப்புக்கான போராட்டம்

ஜி.செல்வா

Voice: Beeman

“அது கடினமானதல்ல, சட்டென புரிந்து கொள்ளக்கூடிய எளிமை உள்ளது அது. நீ சுரண்டல்வாதியல்லன். எனவே உன்னால் அதை  எளிதில் புரிந்துகொள்ள முடியும். அது உன் நன்மைக்கு வழி. எனவே அதைப் பற்றி நீ தெரிந்து கொள்.

அதனை மடமை என்போர் மடையர்கள். அது மோசம் என்போர் மோசடிக்காரர். மோசடிகளுக்கு எதிரானது அது. சுரண்டல்வாதிகள் அதனை ‘கிரிமினல்’ ஆனது என்பர். ஆனால் உண்மை விஷயம் நமக்குத் தெரியும். கிரிமினல் ஆன அனைத்திற்கும் அது முடிவு கட்டும். அது கிறுக்குத்தனமானது அல்ல. கிறுக்குத்தனங்கள் அனைத்தையும் முடிவுகட்டுவது அது.

அது குழப்பமல்ல; ஒழுங்கு. எளிமையான விஷயம்தான். எனினும் செய்யக் கடினமானது”

“கம்யூனிசத்திற்கு வாழ்த்து’ என்ற தலைப்பில் ஜெர்மன் நாடக ஆசிரியர் பெர்டோல்ட் ப்ரெக்ட் எழுதிய புகழ்பெற்ற வரிகள் இவை. இதிலுள்ள “அது குழப்பமல்ல; ஒழுங்கு’ என்ற வார்த்தைக்கான பொருள் என்ன? அந்த ‘ஒழுங்கு’ கம்யூனிச இயக்கத்திற்குள் உருப்பெற்றது எப்படி? அப்படியான ‘ஒழுங்குக்குள்’ கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் உட்பட்டு இருக்க வேண்டியதன் தேவை என்ன? 

கம்யூனிசத்தை, மார்க்சியத்தை, பெயரளவில் அல்லது கொள்கைரீதியாக ஏற்றுக் கொள்பவர்கள் கூட,  கம்யூனிஸ்ட் இயக்கங்கள் வளராததற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு ரீதியான ஒழுங்குகளை விமர்சனமாக சுட்டி காட்டுகின்றனர். தொடர்ந்து விவாதத்தின் மையப்புள்ளியாய் முன்வைத்து வருகின்றனர். 

இந்தியாவில் எத்தனையோ இடர்ப்பாடுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்கொண்டாலும் அதையெல்லாம் முறியடித்து சமாளித்து இன்று இந்தியாவில் உயிர்த்துடிப்புள்ள  இயக்கமாக செயலாற்றுவதற்கு கட்சியின் அமைப்பு ரீதியான ஒழுங்கு மிக முக்கியமானது என உறுதியாக கருதுகிறது. இதன் காரணமாகவே எப்போதெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு ரீதியான ஒழுங்குமுறைகள் விமர்சனத்துக்குள்ளாக்கப் படுகிறதோ அப்போதெல்லாம் கட்சி அவ்விவாதங்களுக்கு பதிலளித்தே செயலாற்றி வருகிறது.

கட்சியின் அமைப்புச் சட்ட விதிகளை ஏற்று செயலாற்றும் உறுப்பினர்களை மட்டுமே கட்சியில் வைத்திருக்கமுடியும் என உறுதியாக தீர்மானித்து அதை செயல்படுத்த முயன்று வருகிறது கட்சி. 

இதை கருத்தியல் நோக்கில் புரிந்து கொள்ள மார்க்சிய ஆசான் லெனினிடமே செல்ல வேண்டும். கம்யூனிச இயக்கத்திற்குள் ஸ்தாபன ஒழுங்கை கொண்டுவந்தவரிடம் கற்றுத் தெளிய,  வாசிக்க வேண்டிய புத்தகம் “ஓரடி முன்னால் ஈரடி பின்னால்”. 

சுமார் 116 ஆண்டுகளுக்கு முன்பு 1903ல் எழுதப்பட்ட புத்தகம். அதை இன்றைக்கு கம்யூனிஸ்ட் ஊழியர்கள் ஏன் வாசிக்க வேண்டும்? அதுவும் ரஷ்யாவில் அன்றிருந்த சூழலுக்கு லெனினால் எழுதப்பட்டதை இந்தியாவில் புரட்சிகர இயக்கத்திற்காக அர்ப்பணித்துள்ள ஊழியர் இப்போது ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? இக்கேள்விக்கு விடைதேட இக்கட்டுரை முயல்கிறது.

1906 ஆண்டு லெனின் “பத்து ஆண்டுகள்” என்று ஒரு தொகுப்பு நூலை வெளியிடுகிறார். அதில் 1895 முதல்1905 வரை எழுதிய முக்கிய நூல்களை மட்டும் தொகுத்து, அதற்கு ஒரு முன்னுரையும் எழுதி உள்ளார். அதில்  ‘ஓரடி முன்னால் ஈரடி பின்னால்’ நூலினைப் பற்றி குறிப்பிடும் போது அதை எழுதியதற்கான காரணங்களை சுட்டிக் காண்பித்து 18 அத்தியாயம் கொண்ட நூலின் உள்ளடக்கத்திலிருந்து  ஏழு அத்தியாயங்களை நீக்கி அதன் சாராம்சத்தை மற்ற அத்தியாயங்களோடு இணைத்து மேம்படுத்தியதை குறிப்பிட்டுள்ளார்.

நூலினை எழுதுவதற்கு தூண்டிய நிகழ்வு போக்குகள்: 

ரஷ்ய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் உருவாகி வளர்ந்த கருத்து மோதல்கள் முட்டி மோதி இரு குழுவாக பிரிந்து செயலாற்ற வேண்டிய நிலை 1903ல் இரண்டாவது கட்சி காங்கிரஸில் நடந்தேறியது. இம்மாநாட்டில் பெரும்பான்மையான பிரதிநிதிகள் லெனின் முன்மொழிந்த வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் போல்ஷ்விக் என அழைக்கப்பட்டனர். போல்ஷ்விக் என்றால் ரஷ்ய மொழியில் பெரும்பான்மை என்று அர்த்தம் . லெனினது நிலைபாடுகளுக்கு மாறான  கருத்துக்களை பிளக்கனோவ், மார்த்தவ் போன்றோர்முன்மொழிந்தனர். அவர்களை பின்பற்றியவர்கள் மென்ஷ்விக்குகள் என அழைக்கப்பட்டனர். 

கட்சி காங்கிரஸ் நிறைவேற்றிய முடிவுகளின் அடிப்படையில் செயல்படாமல், அதற்கு நேர்மாறாக மென்ஷ்விக்குகள் செயல்பட ஆரம்பித்தனர்.குறிப்பாக, கட்சியின் பத்திரிக்கையான இஸ்க்ரா (தீப்பொறி) வுக்கு கட்சி காங்கிரஸில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் குழுவுடன், தேர்ந்தெடுக்கப்படாத பழைய உறுப்பினர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டுமென பிளக்கனோவ் வற்புறுத்தினார். இதை லெனின் ஒப்புக்கொள்ளவில்லை. கட்சியின் மத்திய குழுவில் வலுவாக காலூன்றி நின்று கொண்டே சந்தர்ப்பவாதிகளின் மண்டையில் ஓங்கி அடிக்க வேண்டும் என கருதினார். எனவே இஸ்க்ரா பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவில் இருந்து லெனின் ராஜினாமா செய்தார். பிளக்கனோவ் கட்சி காங்கிரஸின் விருப்பத்தை காலில் போட்டு மிதித்து  தன்னிச்சையாக ஆசிரியர் குழுவை உருவாக்கினார். அன்று முதல்  மென்ஷ்விக்குகளின் சொந்த பத்திரிக்கையாக இஸ்க்ரா மாற்றப்பட்டது. கட்சி காங்கிரஸின் முடிவுகளுக்கு மாறாக தங்களுக்கு விருப்பமான சந்தர்ப்பவாத கருத்துகளை அப்பத்திரிக்கையில் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர்.  “செய்யக்கூடாது என்ன?”என்ற தலைப்பில் பிளக்கனோவ் கட்டுரை எழுதினார். இக்கட்டுரையானது லெனின் எழுதிய இன்றளவும் உலக கம்யூனிஸ்ட் இயக்க ஊழியர்களின் கையேடாக விளங்கும் “என்ன செய்ய வேண்டும்?”  நூலுக்கு மறுப்பாக எழுதப்பட்டது.  தொடர்ந்து கட்சி காங்கிரசின் முடிவுகளுக்கு எதிராக மென்ஷ்விக்குகள் எழுத ஆரம்பித்தனர்.  ‘கட்சி ஸ்தாபனத்தை ஒழுங்கற்ற முறையிலான ஒரு பொருளாக’   மார்த்தவ் கருதினர். 

இத்தகைய போக்குகளுக்கு எதிராக கட்சி காங்கிரஸ்  முடிவுகளை கட்சி அணிகளுக்கு

தெளிவுபடுத்த விரும்பினார் லெனின். ஆனால் கட்சிப் பத்திரிகையோ மென்ஷ்விக்குகள் வசம் இருந்தது. எனவே தனது கருத்துக்களை ஒரு  நூலாக எழுத தொடங்கினார். அதுதான்  ‘ஓரடி முன்னால் ஈரடி பின்னால்’ . இந்நூலில் கட்சிக் காங்கிரசில் நடைபெற்ற நிகழ்வுகளை துல்லியமான ஆய்வுக்கு உட்படுத்தினார் . இத்தகு பணிக்கு லெனின் ஆதாரமாக  எடுத்துக் கொண்டது மாநாட்டு தீர்மானங்கள், பிரதிநிதிகள் பேச்சு, விவாதத்தின் போக்கில் பல்வேறு குழுக்கள் தெரிவித்த கருத்தோட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மாநாட்டு மினிட்ஸ் புத்தகங்கள்.

மினிட்ஸ் புத்தகங்களின் முக்கியத்துவம்

மாநாடுகளில் மினிட்ஸ் குழுவை தேர்ந்தெடுப்பதன் தேவையை, அதில் செயல்படுபவர்களின் பணிகளின் முக்கியத்துவத்தை, லெனினது வார்த்தைகளை வாசிக்கையில் உணரமுடியும்.

” கட்சிக் காங்கிரசின் கூட்ட நடவடிக்கை குறிப்புகள் நமது கட்சியின் உண்மையான நிலையைப் படம் பிடித்துக் காட்டுவதாக விளங்குகின்றன. இந்த வகையில் அவசியமானதாயும், துல்லியம், பூரணத்துவம், சர்வாம்சத்தன்மை, அதிகாரபூர்வ தன்மை ஆகியவற்றில் ஈடு இணையற்றது.

இயக்கத்தில் பங்கு கொண்டவர்கள் தாங்களாகவே தீட்டிய கருத்துகள், உணர்வுகள், திட்டங்கள் ஆகியவற்றின் படம் இது.அரசியல் சாயங்களின் ஒரு சித்திரம். அவற்றின் பரஸ்பர உறவுகள், போராட்டங்கள் ஆகியவற்றை காட்டும் ஒரு கருவி” என்கிறார் லெனின்.

“உட்கட்சி விவாதங்களில் விவேகமான பங்களிப்பை செலுத்த விரும்பும் ஒவ்வொரு தோழரும், கட்சி உறுப்பினரும், நமது கட்சி காங்கிரஸ் பற்றி கவனமாக படிக்க வேண்டியது அவசியம்” எனச் சொல்லும் லெனின், “கவனத்துடனும் சுயமுயற்சியால் படித்து அறிவதன் மூலம் மட்டுமே, சொற்பொழிவுகளின் சுருக்கங்கள், விவாதங்களின் சுவையற்ற பகுதிகள்  சிறு ( சிறியவையாக தோன்றும்) பிரச்சினைகள் மீது சில்லறை மோதல்கள் ஆகியவற்றை கொண்டு முழுமையானதொரு வடிவத்தை இணைத்து காணமுடியும்.” 

இப்படியாய் எழுதப்பட்ட இந்நூலை கட்சி உறுப்பினர்கள் மத்தியில் செல்லாமல் தடுப்பதற்கு சிறு குழுவினர் முயற்சி செய்தனர். இன்னும் ஒரு படி மேலே சென்று இப்புத்தகத்தை மத்திய குழு தடை செய்ய வேண்டும் என்று பிளக்கனோவ் வாதிட்டார். இத்தகைய தடைகளை தகர்த்து தான் லெனினது நூல் கட்சி உறுப்பினர்களிடம் சென்றடைந்தது.

கட்சி காங்கிரஸை எப்படி புரிந்து கொள்வது?: 

கட்சி அமைப்பு குறித்து தத்துவார்த்த ரீதியில் விரிவாக மார்க்சிய நோக்கில் எழுதப்பட்ட முதல் நூல் இது. குறிப்பாக கட்சி அமைப்பு முறை, கட்சி உறுப்பினர் என்பவர் யார்? அவரது செயல்பாடுகள், பங்களிப்புகள் எவ்வாறு இருக்க வேண்டும் ? என்பது போன்ற வரையறைகளை இந்நூல் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு வழங்கியுள்ளது.

விவாதத்திற்கு உள்ளான இரண்டாவது கட்சிக் காங்கிரசின் பிரதான பணிகளை சுட்டிக் காண்பிக்கும் லெனின் கட்சி காங்கிரஸ்-ஐ எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என வழிகாட்டுகிறார்.

நூலின் ஓட்டத்தில்  அவர் சுட்டிக் காட்டியுள்ள  கருத்துக்கள் இன்றைக்கும்  பொருத்தப்பாடு உடையவை. 

“கட்சிக் காங்கிரசின் எல்லா முடிவுகளும், அது நடத்தி முடிக்கும் எல்லாத் தேர்தல்களும், கட்சியின் முடிவுகளாகும். அவை கட்சி அமைப்புகள் அனைத்தையும் கட்டுப்படுத்துவதாகும். எக்காரணம் கொண்டும் அவற்றை ஏற்றுக் கொள்ள எவரும் மறுக்க கூடாது. கட்சி காங்கிரசால் மட்டுமே அவை நீக்கப்படவோ அல்லது திருத்தப்படவோ முடியும். 

மேலும் கட்சி காங்கிரஸ் முடிவுகளையும், தேர்தல்களையும் ஏற்றுக்கொள்ள  மறுப்பதை கட்சிக்கு செய்யும் நம்பிக்கை துரோகமாகக் கருத வேண்டும்”   எனக் கூறியிருக்கிறார். அம் மாநாட்டில் பங்கேற்ற பல்வேறு கருத்தோட்டம் உடைய குழுக்களின் நிலைப்பாடுகளை லெனின் ஒவ்வொன்றாய் நம்முன் வைக்கிறார். அவ்வாறு சொல்லும் பொழுது “ஓரிடத்தில் முக்கியமல்லாத சிறு பிரச்சினைகள் மீது நடந்த எண்ணற்ற வாக்களிப்புகளை நாம் விட்டுவிடுவோம். நம்முடைய காங்கிரஸின் பெரும்பகுதி நேரத்தை இதுதான் எடுத்துக் கொண்டது” என்கிறார். இது அன்று மட்டுமல்ல; இன்றும் தொடர்கிறது என்பதை நமது அனுபவம் சுட்டிக்காட்டுகிறது. அது மட்டுமல்ல; மாநாட்டு நிகழ்வுகளை பிரதிநிதிகளின் செயல்பாடுகளை லெனின் கூர்மையான விவாதங்களுக்கு மட்டும் உட்படுத்தவில்லை. நையாண்டிக்கும் நமட்டு சிரிப்புக்கும் வாசகரை உள்ளாக்கும் வகையில் தனது எழுத்தை கையாண்டுள்ளார்.

அகநிலை பார்வையற்ற ஆய்வு

லெனின் தனது நூலில் இரண்டு முக்கிய பிரச்சனைகளை மைய தளமாக கொண்டு விவாதத்தை முன்னெடுத்துச் செல்கிறார். ஒன்று அரசியல் முக்கியத்துவம் பற்றியது. அதாவது  கட்சிக் காங்கிரசில்  உருவெடுத்த பெரும்பான்மை – சிறுபான்மை  பிளவுக்கான அம்சங்கள். இதை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள கட்சிக் காங்கிரசில் நடைபெற்ற கருத்தியல் போராட்டத்தை தளமாக கொள்கிறார்.

இரண்டாவது, கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இதற்கு  இஸ்க்ரா பத்திரிகை ஆசிரியர் குழுவில் இருந்து அவர் விடுபட்ட பிறகு  வந்திருந்த கட்டுரைகளை, எழுத்துக்களை விவாதத்திற்கு எடுத்துக் கொள்கிறார்.

கட்சிக் காங்கிரசில் பங்கேற்ற பல்வேறு கருத்தோட்டம் உடைய குழுவினரை எதிர் கொள்வதன் வழியாக “அகநிலை பார்வையற்று” செயலாற்ற  நமக்கு கற்றுக் கொடுக்கிறார் லெனின். அதுமட்டுமல்ல; மாற்றுக் கருத்துக்களை எப்படி ஜனநாயகரீதியில் எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் பக்குவமாக சுட்டி காண்பிக்கிறார். அதேவேளையில் வார்த்தை ஜாலங்களில் வித்தை காண்பிப்பவர்களை, உதட்டளவில் புரட்சிகரமாக பேசி செயலளவில் ஜம்பமாக செயல்பட்டோரை, கிழி கிழி என்று கிழித்து தொங்க விடுகிறார்.

உதாரணத்திற்கு இந்நூலில் பிளக்கனோவ், மார்த்தவ் ஆகியோர் கடும் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டு  உள்ளனர். பிளக்கனோவ் லெனினுக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர். மார்த்தவ் சமகாலத்தவர்.ஆனால் அவர்களது பங்களிப்புகளை மிக உயர்வாக மதிப்பிடுவது மட்டுமல்ல; அதை கட்சி அணிகளுக்கும் கடத்துகிறார். இவர்களை வர்க்க பகைவர்கள் போல் புரிந்து கொள்ளாமல் அவர்களின் கருத்தியல் குறைபாடுகளைத் தான் முதன்மையாக கொள்ளவேண்டும் என்பதற்காகவே எத்தனை அடிக்குறிப்புகள். இதுதான் கம்யூனிஸ்ட்  இயக்கத்தின் ஜனநாயக செயல்பாட்டுக்கு உதாரணம் என்பதை பெருமை பொங்க வாசிப்பின் வழி உணரமுடிகிறது.

குழுவாத போக்குக்கு “தான் எதிரி என தம்மை தாமே அழைத்துக் கொள்கிறார்” மார்த்தவ். இருப்பினும் கட்சி காங்கிரசுக்கு பிறகு அவற்றின் ஆதரவாளர் ஆனார் என கிண்டல் அடிக்கும் லெனின் அதை ஆதாரத்துடன் எடுத்து சொல்கிறார்.

கட்சி காங்கிரசுக்கு பிறகு ஸ்தாபன கோட்பாடுகளை எதிர்த்து, லெனினை தாக்கி எழுதப்பட்ட கட்டுரை இஸ்க்ரா பத்திரிகையில் பிரசுரிக்கப் படுகிறது. இக்கட்டுரையின் சில அம்சங்களில் மாறுபடுவதாக சொல்லி மொத்தத்தில் அக்கட்டுரையை ஏற்றுக்கொண்டு, அதன் ஆய்வுரைகளை ஒப்புக்கொள்கிறது ஆசிரியர் குழு. இதை விரிவாக எடுத்துச் சொல்லும் லெனின், “கட்சிக் காங்கிரசின் போது தாங்கள் சொன்னதற்கு நேர் விரோதமாக காங்கிரஸுக்கு பிறகு பேசும் ஆசிரியர் குழுவை கொண்ட ஒரு கட்சிப் பத்திரிகையை எவராவது என்றாவது கண்டதுண்டா?” என கேள்வி எழுப்புகிறார். 

நூலின் உள்ளடக்கம்

1, மார்க்சிஸ்ட் கட்சியானது தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதி

2, தொழிலாளி வர்க்கத்தின் அமைப்புரீதியாக உருவாக்கப்பட்ட படைப் பகுதி

3, தொழிலாளி வர்க்கத்தின் அமைப்புகளுக்கெல்லாம் தலைசிறந்த உயர்ந்த அமைப்புகளாகும்.

4, பல லட்சக்கணக்கான தொழிலாளிவர்க்க மக்களுடன் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படை இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த இணைப்பின் உருவமே கட்சி.

5, ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டை அடிப்படையாக கொண்டு கட்சி இருக்க வேண்டும்.

6, தத்துவ ரீதியான ஒற்றுமை மட்டுமல்ல; எதார்த்தத்தில்  தெரியும்படியான ஸ்தாபன ஒற்றுமையோடு கட்சி இருக்க வேண்டும்.

இந்த கருதுகோள்களை விளக்கி, ஏன் இதனடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்பட வேண்டும் என்பதை, தனது காலத்தில் தான் எதிர்கொண்ட பிரச்சினைகள் வழி லெனின் உலக கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு ஸ்தாபனம் குறித்த அடிப்படைகளை எடுத்துரைத்துள்ளார்.

வர்க்கத்தின் ஒரு பகுதி என்றால் என்ன?

வேலைநிறுத்தம், போராட்டங்களில் பங்கேற்பவர்களை  கட்சி உறுப்பினராக கருத வேண்டும் என்ற வாதம் கட்சிக் காங்கிரசில் முன்வைக்கப்பட்டது. அதற்கு லெனின் “கட்சியையும் வர்க்கத்தையும் ஒன்றாக போட்டு யார் குழப்புகிறார்களோ அவர்கள் கட்சியின் உணர்வை ‘ஒவ்வொரு வேலைநிறுத்தக்காரனுடைய’ உணர்வின் அளவுக்கு குறைத்து தாழ்த்துகிறார்கள்” என கடுமையாக விமர்சிக்கிறார்.

மார்க்சிஸ்ட் கட்சி ஆனது தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதி ஒரு பிரிவு. ஆனால் தொழிலாளி வர்க்கம் பல்வேறு பகுதிகளை கொண்டுள்ளது. தொழிலாளி வர்க்கத்தின் இத்தகைய  பகுதிகளை கட்சியாக கருதக்கூடாது. காரணம் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படையான வர்க்க உணர்வு கொண்ட பகுதிதான் மார்க்சிஸ்ட் படைப்பகுதி. ஏனெனில் சமூக வாழ்க்கை, சமூகத்தின் வளர்ச்சி விதிமுறைகள் குறித்தும், வர்க்கப் போராட்டத்தின் வழிமுறைகள் பற்றிய அறிவையும் ஆயுதமாக கொண்டுள்ளது இப்படை. மேலும் இந்த காரணத்தினால்தான் அதனால் தொழிலாளி வர்க்கத்தை தலைமை தாங்கி நடத்தி செல்ல முடிகிறது. வழிகாட்டி செயல்பட முடிகிறது.ஆகவே பகுதியை முழுமையாக போட்டு குழப்பக்கூடாது என சுட்டிக் காட்டுகிறார் லெனின்.

முதலாளித்துவ சமூகத்தின் கீழ் இருக்கும் போது 

வர்க்கத்தின் முன்னணிப் படையாக உள்ள கட்சியினரின் உணர்வின் அளவிற்கு, செயல்களின் அளவிற்கு தொழிலாளி வர்க்கம் முழுவதும் எழும்பி உயரும் என்று எந்த சமயத்திலாவது நினைத்தால் அது கண்மூடித்தனமான வெறும் திருப்தியாகவே இருக்கும். வர்க்க உணர்வு ஊட்டப்பட்ட பகுதியினருக்கும் வெகுமக்களுக்கும் உள்ள உணர்வு மட்ட வித்தியாசத்தை பார்க்க தவறுவதை, குறைத்து மதிப்பிடுவதை “நம் முன் நிற்கும் வேலைகளின் பிரம்மாண்ட அளவை பார்க்காமல், கண்களை மூடிக் கொள்வதற்கு ஒப்பாகும். மேலும், இந்த வேலைகளை மிகவும் சுருக்கிக் குறுக்குவதே என்றே அர்த்தம்” என எடுத்துரைக்கிறார்.

அமைப்புரீதியாக ஒன்று திரட்டுவதின் தேவை

“கட்சி உறுப்பினர் என்ற பட்டம் எந்த அளவுக்குப் பரந்து இருக்கிறதோ, அந்த அளவுக்கு நல்லது” என மார்த்தவ் தனது கருத்தை வலுவாக முன்வைக்கிறார். அதற்கு லெனின் ” வர்க்கத்தின் முன்னணிப் படை என்ற முறையில் எவ்வளவு தூரம் அமைப்புரீதியாக ஒன்று திரட்டி உருவாக்க முடியுமோ, அவ்வளவு தூரம் கட்சியை உருவாக்க வேண்டும். ஒரு குறைந்தபட்ச அமைப்புக் கோட்பாடுகளுக்கு எத்தகைய நபர்கள் தங்களை உட்படுத்தி கொள்வார்களோ, அத்தகைய நபர்களை கட்சிக்குள் உறுப்பினர்களாக அனுமதிக்க வேண்டும்” என்கிறார். மேலும் “கட்சியின் கட்டுப்பாட்டை பார்த்து முகம் சுளித்து பின்வாங்குபவர்கள், கட்சியின் அமைப்பில் சேர்வதற்கு பயப்படுபவர்கள் கட்சிக்கு உறுப்பினர்களாக தேவைப்படவில்லை. கட்டுப்பாட்டையோ, அமைப்பையோ பார்த்துத் தொழிலாளர்கள் பின்வாங்குவதில்லை. கட்சியில் உறுப்பினராக சேருவது என்று தீர்மானித்து விட்டால் அவர்கள் மனப்பூர்வமாக அமைப்பில் சேருகிறார்கள். தன்னந்தனியான போக்குடைய  படைப்பாளிகள்தான் கட்டுப்பாட்டையும் அமைப்பையும் கண்டு பயப்படுகிறார்கள்” என்கிறார்.

கட்சி, அமைப்பு ரீதியாக உருவாக்கப்பட்ட சாதாரண பகுதி மட்டுமல்ல. தொழிலாளி வர்க்கத்தின் அமைப்பு வடிவங்களிலெல்லாம் தலை சிறந்த, உயர்ந்த அமைப்பு வடிவம் ஆகும். “அதிகாரத்திற்காக பாட்டாளிவர்க்கம் நடத்துகிற போராட்டத்தில் அமைப்பைத் தவிர வேறு ஆயுதம் எதுவும் இல்லை” என்பதே லெனினியத்தின் அடிப்படை.

கட்டுப்பாடுகளை ஸ்தாபன ஒழுங்கை கட்சி முன்னிறுத்துவதன் அடிப்படைகள்

“தன்னுடைய கூட்டுக்குள்ளேயே எந்த கட்சி அடைபட்டு கிடைக்கிறதோ, பொதுமக்களிடமிருந்து எந்த கட்சி தன்னை தனிமைப்படுத்திக் கொள்கிறதோ, தன்னுடைய வர்க்கத்துடன் எந்த கட்சி தொடர்பு அற்று இருக்கிறது அல்லது அந்த தொடர்பை தளர்த்திக் கொள்கிறதோ, அந்த கட்சி மக்களுடைய நம்பிக்கையை ஆதரவை இழப்பது திண்ணம். இதன் பயனாக அது அழிந்தும் போகும். பூரணமாக வாழ்வதற்காகவும், வளர்ச்சி அடைவதற்காகவும் மக்களுடன் வைத்திருக்கும் தன்னுடைய தொடர்புகளை கட்சி பன்மடங்கு அதிகமாக்க வேண்டும். தன்னுடைய வர்க்கத்தைச் சேர்ந்த பல லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கைகளை பெருமுயற்சி செய்து பெற வேண்டும்” இவ்வாறு  லெனின் சொல்வதை கருத்தளவில் ஏற்றுக் கொள்பவர்கள் கூட அதை அடைய கட்சியின் ஒழுங்கு, கட்டுப்பாடு குறித்து சொல்லும்போது கண்டுகொள்ளாமல் சென்றுவிடுகின்றனர். அந்த ஒழுங்கை ரஷ்ய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் கொண்டு வருவதற்கு லெனின் நடத்திய கருத்தியல் போராட்டத்தை கூர்ந்து வாசிப்பது இன்றைய தேவைக்கு மிக முக்கியமானது. 

கட்சி ஸ்தாபனத்தை ‘கொடூரமானதாக கருதுவதை, முழுமைக்கு பகுதி கட்டுப்படுவதை, பெரும்பான்மைக்கு சிறுபான்மை உட்படுத்தப்படுவதை, ‘பண்ணை அடிமைத்தனமாக’ கூக்குரலிட்டு கத்தி பேசுவதை லெனின் தனது வாதங்களின் வழி நையப் புடைக்கிறார்.

“கட்சியை கட்டுவதில்  தொடர்ந்து ஈடுபடும்போது தொழிலாளி வர்க்க ஊழியரின் மனோபாவத்திற்கும் தன்னுடைய அராஜகப் பேச்சுகளை ஜம்பமாகப் பேசுகிற முதலாளித்துவப் படிப்பாளியின் சிந்தனை போக்கிற்கும்  இடையே உள்ள வேறுபாட்டை வர்க்க உணர்வு ஊட்டப்பட்ட தொழிலாளர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். சாதாரண உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், ‘தலைமையில் உட்கார்ந்து இருப்பவர்களும்’ தங்களது கடமையை நிறைவேற்றி பூர்த்தி செய்ய வேண்டும் என்று வற்புறுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.” இவ்வாறு வழிகாட்டி புரட்சிகர இயக்கத்தை வளர்த்தெடுக்க பாடுபட்ட லெனின் தன்னை ஓரிடத்தில் சுயவிமர்சனத்துக்கு உட்படுத்தி பேசும் வார்த்தைகள் நெகிழ்ச்சி அளிக்கிறது. 

“நான் அடிக்கடி திகில் தரும் எரிச்சலான நிலையில் சீற்றம் கொண்டவனாக நடந்திருக்கிறேன்; செயல்பட்டிருக்கிறேன் என்பதை உணருகிறேன். என்னுடைய அந்தப் பிழையை நான் எவரிடத்திலும் ஒத்துக் கொள்ள விருப்பமுள்ளவனாகவே இருக்கிறேன். அது ஒரு குற்றம் என்று கருதப்படுமேயானால், அது சூழல், எதிர்செயல்கள், போராட்டம் ஆகியவற்றின் இயற்கையான விளைவே.

அவ்விளைவுகளை ஆராய்ந்து பார்த்தோமேயானால், கட்சிக்கு ஊறு விளைவிப்பதாக எதுவுமில்லை. சிறுபான்மையை புண்படுத்தும் அல்லது இழிவுபடுத்தும் என்று சொல்லக்கூடியது எதுவுமில்லை.” என்கிறார்.

அறிவுஜீவிகள் யார்? முதலாளித்துவ சமூக அமைப்பில் அவர்களது உணர்வோட்டம் எப்படி கட்டமைக்கப்படுகிறது? என்பதை விரிவாக ஆய்வுக்கு இந்நூலில் உட்படுத்தி உள்ளார். ஓர் அறிவுஜீவி எப்படி இருக்க வேண்டும் என்ற உதாரணத்தையும் எடுத்துரைத்துள்ளார். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சர்வதேச தொழிலாளி வர்க்க இயக்கத்தின் தலைசிறந்த தலைவர் லீஃப்னெக்ட்-ஐத் தான் லெனின் சுட்டிக்காட்டுகிறார்.

“அவர் சிறப்பான எழுத்தாளராக இருந்தும், ஓர் அறிவுஜீவியின் தனிப்பட்ட மனப்பான்மையை முற்றிலும் இழந்து விட்டு, தொழிலாளர்களுடைய அணியில் மகிழ்ச்சியுடன் நடைபோட்டார். அவருக்கு என ஒதுக்கித் தரப்பட்ட எந்த பதவியிலும் பணிபுரிந்தார். மாபெரும் லட்சியத்திற்காக தன்னை முழு மனதோடு ஆட்படுத்திக்கொண்டார்” என புகழாரம் சூட்டுகிறார் லெனின்.

நிறைவாக,

தமிழகத்தில் உறுதியான, புரட்சிகர குணாம்சமிக்க கட்சியை கட்டுவதில் உள்ள பலவீனமான அம்சங்களை  மத்திய குழு சுட்டிக்காட்டி உள்ளது. அப் பலவீனங்களை களைய கட்சி முழுவதும் எப்படி செயல்படுவது என பல்வேறு வழிகாட்டுதல்களை கட்சியின் மாநிலக்குழு விவாதித்து உருவாக்கி நடைமுறைப்படுத்தி வருகிறது. அதை கோட்பாட்டு ரீதியாக புரிந்து கொள்ளவும், இன்னும் முழு ஈடுபாட்டுடன் செயல் தளத்தில் நடைமுறைப்படுத்தவும், லெனினது ” ஓரடி முன்னால் ஈரடி பின்னால்” நூல் நமக்கு வழிகாட்டும்; உற்சாகமூட்டும். இது நான்கு சுவர்களுக்குள் உருவான கருத்தியல் பெட்டகம் அல்ல. மாறாக, கள அனுபவங்களை  மார்க்சிய தத்துவ ஒளியின் கண் கொண்டு பார்த்து சித்தாந்தரீதியான உரையாடல்களை ஜனநாயகரீதியாக மேற்கொண்டு உருவாக்கப்பட்ட ஆய்வு நூல். அதைவிடவும் முக்கியமானது, இப்படியாகக் கட்டப்பட்ட கட்சியின் மூலம் தான் ரஷ்ய புரட்சி சாத்தியம் ஆனது.

புரட்சிகர கட்சி அமைப்புக்கான போராட்டம் …

ஜி. செல்வா

“அது கடினமானதல்ல, சட்டென புரிந்து கொள்ளக்கூடிய எளிமை உள்ளது அது. நீ சுரண்டல்வாதியல்லன். எனவே உன்னால் அதை  எளிதில் புரிந்துகொள்ள முடியும். அது உன் நன்மைக்கு வழி. எனவே அதைப் பற்றி நீ தெரிந்து கொள்.

அதனை மடமை என்போர் மடையர்கள். அது மோசம் என்போர் மோசடிக்காரர். மோசடிகளுக்கு எதிரானது அது. சுரண்டல்வாதிகள் அதனை ‘கிரிமினல்’ ஆனது என்பர். ஆனால் உண்மை விஷயம் நமக்குத் தெரியும். கிரிமினல் ஆன அனைத்திற்கும் அது முடிவு கட்டும். அது கிறுக்குத்தனமானது அல்ல. கிறுக்குத்தனங்கள் அனைத்தையும் முடிவுகட்டுவது அது.

அது குழப்பமல்ல; ஒழுங்கு. எளிமையான விஷயம்தான். எனினும் செய்யக் கடினமானது”

“கம்யூனிசத்திற்கு வாழ்த்து’ என்ற தலைப்பில் ஜெர்மன் நாடக ஆசிரியர் பெர்டோல்ட் ப்ரெக்ட் எழுதிய புகழ்பெற்ற வரிகள் இவை. இதிலுள்ள “அது குழப்பமல்ல; ஒழுங்கு’ என்ற வார்த்தைக்கான பொருள் என்ன? அந்த ‘ஒழுங்கு’ கம்யூனிச இயக்கத்திற்குள் உருப்பெற்றது எப்படி? அப்படியான ‘ஒழுங்குக்குள்’ கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் உட்பட்டு இருக்க வேண்டியதன் தேவை என்ன? 

கம்யூனிசத்தை, மார்க்சியத்தை, பெயரளவில் அல்லது கொள்கைரீதியாக ஏற்றுக் கொள்பவர்கள் கூட,  கம்யூனிஸ்ட் இயக்கங்கள் வளராததற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு ரீதியான ஒழுங்குகளை விமர்சனமாக சுட்டி காட்டுகின்றனர். தொடர்ந்து விவாதத்தின் மையப்புள்ளியாய் முன்வைத்து வருகின்றனர். 

இந்தியாவில் எத்தனையோ இடர்ப்பாடுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்கொண்டாலும் அதையெல்லாம் முறியடித்து சமாளித்து இன்று இந்தியாவில் உயிர்த்துடிப்புள்ள  இயக்கமாக செயலாற்றுவதற்கு கட்சியின் அமைப்பு ரீதியான ஒழுங்கு மிக முக்கியமானது என உறுதியாக கருதுகிறது. இதன் காரணமாகவே எப்போதெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு ரீதியான ஒழுங்குமுறைகள் விமர்சனத்துக்குள்ளாக்கப் படுகிறதோ அப்போதெல்லாம் கட்சி அவ்விவாதங்களுக்கு பதிலளித்தே செயலாற்றி வருகிறது.

கட்சியின் அமைப்புச் சட்ட விதிகளை ஏற்று செயலாற்றும் உறுப்பினர்களை மட்டுமே கட்சியில் வைத்திருக்கமுடியும் என உறுதியாக தீர்மானித்து அதை செயல்படுத்த முயன்று வருகிறது கட்சி. 

இதை கருத்தியல் நோக்கில் புரிந்து கொள்ள மார்க்சிய ஆசான் லெனினிடமே செல்ல வேண்டும்.

கம்யூனிச இயக்கத்திற்குள் ஸ்தாபன ஒழுங்கை கொண்டுவந்தவரிடம் கற்றுத் தெளிய,  வாசிக்க வேண்டிய புத்தகம் “ஓரடி முன்னால் ஈரடி பின்னால்”. 

சுமார் 116 ஆண்டுகளுக்கு முன்பு 1903ல் எழுதப்பட்ட புத்தகம். அதை இன்றைக்கு கம்யூனிஸ்ட் ஊழியர்கள் ஏன் வாசிக்க வேண்டும்? அதுவும் ரஷ்யாவில் அன்றிருந்த சூழலுக்கு லெனினால் எழுதப்பட்டதை இந்தியாவில் புரட்சிகர இயக்கத்திற்காக அர்ப்பணித்துள்ள ஊழியர் இப்போது ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? இக்கேள்விக்கு விடைதேட இக்கட்டுரை முயல்கிறது.

1906 ஆண்டு லெனின் “பத்து ஆண்டுகள்” என்று ஒரு தொகுப்பு நூலை வெளியிடுகிறார். அதில் 1895 முதல்1905 வரை எழுதிய முக்கிய நூல்களை மட்டும் தொகுத்து, அதற்கு ஒரு முன்னுரையும் எழுதி உள்ளார். அதில்  ‘ஓரடி முன்னால் ஈரடி பின்னால்’ நூலினைப் பற்றி குறிப்பிடும் போது அதை எழுதியதற்கான காரணங்களை சுட்டிக் காண்பித்து 18 அத்தியாயம் கொண்ட நூலின் உள்ளடக்கத்திலிருந்து  ஏழு அத்தியாயங்களை நீக்கி அதன் சாராம்சத்தை மற்ற அத்தியாயங்களோடு இணைத்து மேம்படுத்தியதை குறிப்பிட்டுள்ளார்.

நூலினை எழுதுவதற்கு தூண்டிய நிகழ்வு போக்குகள்: 

ரஷ்ய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் உருவாகி வளர்ந்த கருத்து மோதல்கள் முட்டி மோதி இரு குழுவாக பிரிந்து செயலாற்ற வேண்டிய நிலை 1903ல் இரண்டாவது கட்சி காங்கிரஸில் நடந்தேறியது. இம்மாநாட்டில் பெரும்பான்மையான பிரதிநிதிகள் லெனின் முன்மொழிந்த வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் போல்ஷ்விக் என அழைக்கப்பட்டனர். போல்ஷ்விக் என்றால் ரஷ்ய மொழியில் பெரும்பான்மை என்று அர்த்தம் . லெனினது நிலைபாடுகளுக்கு மாறான  கருத்துக்களை பிளக்கனோவ், மார்த்தவ் போன்றோர்முன்மொழிந்தனர். அவர்களை பின்பற்றியவர்கள் மென்ஷ்விக்குகள் என அழைக்கப்பட்டனர். 

கட்சி காங்கிரஸ் நிறைவேற்றிய முடிவுகளின் அடிப்படையில் செயல்படாமல், அதற்கு நேர்மாறாக மென்ஷ்விக்குகள் செயல்பட ஆரம்பித்தனர்.குறிப்பாக, கட்சியின் பத்திரிக்கையான இஸ்க்ரா (தீப்பொறி) வுக்கு கட்சி காங்கிரஸில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் குழுவுடன், தேர்ந்தெடுக்கப்படாத பழைய உறுப்பினர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டுமென பிளக்கனோவ் வற்புறுத்தினார். இதை லெனின் ஒப்புக்கொள்ளவில்லை. கட்சியின் மத்திய குழுவில் வலுவாக காலூன்றி நின்று கொண்டே சந்தர்ப்பவாதிகளின் மண்டையில் ஓங்கி அடிக்க வேண்டும் என கருதினார். எனவே இஸ்க்ரா பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவில் இருந்து லெனின் ராஜினாமா செய்தார். பிளக்கனோவ் கட்சி காங்கிரஸின் விருப்பத்தை காலில் போட்டு மிதித்து  தன்னிச்சையாக ஆசிரியர் குழுவை உருவாக்கினார். அன்று முதல்  மென்ஷ்விக்குகளின் சொந்த பத்திரிக்கையாக இஸ்க்ரா மாற்றப்பட்டது. கட்சி காங்கிரஸின் முடிவுகளுக்கு மாறாக தங்களுக்கு விருப்பமான சந்தர்ப்பவாத கருத்துகளை அப்பத்திரிக்கையில் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர்.  “செய்யக்கூடாது என்ன?”என்ற தலைப்பில் பிளக்கனோவ் கட்டுரை எழுதினார். இக்கட்டுரையானது லெனின் எழுதிய இன்றளவும் உலக கம்யூனிஸ்ட் இயக்க ஊழியர்களின் கையேடாக விளங்கும் “என்ன செய்ய வேண்டும்?”  நூலுக்கு மறுப்பாக எழுதப்பட்டது.  தொடர்ந்து கட்சி காங்கிரசின் முடிவுகளுக்கு எதிராக மென்ஷ்விக்குகள் எழுத ஆரம்பித்தனர்.  ‘கட்சி ஸ்தாபனத்தை ஒழுங்கற்ற முறையிலான ஒரு பொருளாக’   மார்த்தவ் கருதினர். 

இத்தகைய போக்குகளுக்கு எதிராக கட்சி காங்கிரஸ்  முடிவுகளை கட்சி அணிகளுக்கு தெளிவுபடுத்த விரும்பினார் லெனின். ஆனால் கட்சிப் பத்திரிகையோ மென்ஷ்விக்குகள் வசம் இருந்தது. எனவே தனது கருத்துக்களை ஒரு  நூலாக எழுத தொடங்கினார். அதுதான்  ‘ஓரடி முன்னால் ஈரடி பின்னால்’ . இந்நூலில் கட்சிக் காங்கிரசில் நடைபெற்ற நிகழ்வுகளை துல்லியமான ஆய்வுக்கு உட்படுத்தினார் . இத்தகு பணிக்கு லெனின் ஆதாரமாக  எடுத்துக் கொண்டது மாநாட்டு தீர்மானங்கள், பிரதிநிதிகள் பேச்சு, விவாதத்தின் போக்கில் பல்வேறு குழுக்கள் தெரிவித்த கருத்தோட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மாநாட்டு மினிட்ஸ் புத்தகங்கள்.

மினிட்ஸ் புத்தகங்களின் முக்கியத்துவம்

மாநாடுகளில் மினிட்ஸ் குழுவை தேர்ந்தெடுப்பதன் தேவையை, அதில் செயல்படுபவர்களின் பணிகளின் முக்கியத்துவத்தை, லெனினது வார்த்தைகளை வாசிக்கையில் உணரமுடியும்.

” கட்சிக் காங்கிரசின் கூட்ட நடவடிக்கை குறிப்புகள் நமது கட்சியின் உண்மையான நிலையைப் படம் பிடித்துக் காட்டுவதாக விளங்குகின்றன. இந்த வகையில் அவசியமானதாயும், துல்லியம், பூரணத்துவம், சர்வாம்சத்தன்மை, அதிகாரபூர்வ தன்மை ஆகியவற்றில் ஈடு இணையற்றது.

இயக்கத்தில் பங்கு கொண்டவர்கள் தாங்களாகவே தீட்டிய கருத்துகள், உணர்வுகள், திட்டங்கள் ஆகியவற்றின் படம் இது.அரசியல் சாயங்களின் ஒரு சித்திரம். அவற்றின் பரஸ்பர உறவுகள், போராட்டங்கள் ஆகியவற்றை காட்டும் ஒரு கருவி” என்கிறார் லெனின்.

“உட்கட்சி விவாதங்களில் விவேகமான பங்களிப்பை செலுத்த விரும்பும் ஒவ்வொரு தோழரும், கட்சி உறுப்பினரும், நமது கட்சி காங்கிரஸ் பற்றி கவனமாக படிக்க வேண்டியது அவசியம்” எனச் சொல்லும் லெனின், “கவனத்துடனும் சுயமுயற்சியால் படித்து அறிவதன் மூலம் மட்டுமே, சொற்பொழிவுகளின் சுருக்கங்கள், விவாதங்களின் சுவையற்ற பகுதிகள்  சிறு ( சிறியவையாக தோன்றும்) பிரச்சினைகள் மீது சில்லறை மோதல்கள் ஆகியவற்றை கொண்டு முழுமையானதொரு வடிவத்தை இணைத்து காணமுடியும்.” 

இப்படியாய் எழுதப்பட்ட இந்நூலை கட்சி உறுப்பினர்கள் மத்தியில் செல்லாமல் தடுப்பதற்கு சிறு குழுவினர் முயற்சி செய்தனர். இன்னும் ஒரு படி மேலே சென்று இப்புத்தகத்தை மத்திய குழு தடை செய்ய வேண்டும் என்று பிளக்கனோவ் வாதிட்டார். இத்தகைய தடைகளை தகர்த்து தான் லெனினது நூல் கட்சி உறுப்பினர்களிடம் சென்றடைந்தது.

கட்சி காங்கிரஸை எப்படி புரிந்து கொள்வது?: 

கட்சி அமைப்பு குறித்து தத்துவார்த்த ரீதியில் விரிவாக மார்க்சிய நோக்கில் எழுதப்பட்ட முதல் நூல் இது. குறிப்பாக கட்சி அமைப்பு முறை, கட்சி உறுப்பினர் என்பவர் யார்? அவரது செயல்பாடுகள், பங்களிப்புகள் எவ்வாறு இருக்க வேண்டும் ? என்பது போன்ற வரையறைகளை இந்நூல் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு வழங்கியுள்ளது.

விவாதத்திற்கு உள்ளான இரண்டாவது கட்சிக் காங்கிரசின் பிரதான பணிகளை சுட்டிக் காண்பிக்கும் லெனின் கட்சி காங்கிரஸ்-ஐ எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என வழிகாட்டுகிறார்.

நூலின் ஓட்டத்தில்  அவர் சுட்டிக் காட்டியுள்ள  கருத்துக்கள் இன்றைக்கும்  பொருத்தப்பாடு உடையவை. 

“கட்சிக் காங்கிரசின் எல்லா முடிவுகளும், அது நடத்தி முடிக்கும் எல்லாத் தேர்தல்களும், கட்சியின் முடிவுகளாகும். அவை கட்சி அமைப்புகள் அனைத்தையும் கட்டுப்படுத்துவதாகும். எக்காரணம் கொண்டும் அவற்றை ஏற்றுக் கொள்ள எவரும் மறுக்க கூடாது. கட்சி காங்கிரசால் மட்டுமே அவை நீக்கப்படவோ அல்லது திருத்தப்படவோ முடியும். 

மேலும் கட்சி காங்கிரஸ் முடிவுகளையும், தேர்தல்களையும் ஏற்றுக்கொள்ள  மறுப்பதை கட்சிக்கு செய்யும் நம்பிக்கை துரோகமாகக் கருத வேண்டும்”   எனக் கூறியிருக்கிறார். அம் மாநாட்டில் பங்கேற்ற பல்வேறு கருத்தோட்டம் உடைய குழுக்களின் நிலைப்பாடுகளை லெனின் ஒவ்வொன்றாய் நம்முன் வைக்கிறார். அவ்வாறு சொல்லும் பொழுது “ஓரிடத்தில் முக்கியமல்லாத சிறு பிரச்சினைகள் மீது நடந்த எண்ணற்ற வாக்களிப்புகளை நாம் விட்டுவிடுவோம். நம்முடைய காங்கிரஸின் பெரும்பகுதி நேரத்தை இதுதான் எடுத்துக் கொண்டது” என்கிறார். இது அன்று மட்டுமல்ல; இன்றும் தொடர்கிறது என்பதை நமது அனுபவம் சுட்டிக்காட்டுகிறது. அது மட்டுமல்ல; மாநாட்டு நிகழ்வுகளை பிரதிநிதிகளின் செயல்பாடுகளை லெனின் கூர்மையான விவாதங்களுக்கு மட்டும் உட்படுத்தவில்லை. நையாண்டிக்கும் நமட்டு சிரிப்புக்கும் வாசகரை உள்ளாக்கும் வகையில் தனது எழுத்தை கையாண்டுள்ளார்.

அகநிலை பார்வையற்ற ஆய்வு

லெனின் தனது நூலில் இரண்டு முக்கிய பிரச்சனைகளை மைய தளமாக கொண்டு விவாதத்தை முன்னெடுத்துச் செல்கிறார். ஒன்று அரசியல் முக்கியத்துவம் பற்றியது. அதாவது  கட்சிக் காங்கிரசில்  உருவெடுத்த பெரும்பான்மை – சிறுபான்மை  பிளவுக்கான அம்சங்கள். இதை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள கட்சிக் காங்கிரசில் நடைபெற்ற கருத்தியல் போராட்டத்தை தளமாக கொள்கிறார்.

இரண்டாவது, கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இதற்கு  இஸ்க்ரா பத்திரிகை ஆசிரியர் குழுவில் இருந்து அவர் விடுபட்ட பிறகு  வந்திருந்த கட்டுரைகளை, எழுத்துக்களை விவாதத்திற்கு எடுத்துக் கொள்கிறார்.

கட்சிக் காங்கிரசில் பங்கேற்ற பல்வேறு கருத்தோட்டம் உடைய குழுவினரை எதிர் கொள்வதன் வழியாக “அகநிலை பார்வையற்று” செயலாற்ற  நமக்கு கற்றுக் கொடுக்கிறார் லெனின். அதுமட்டுமல்ல; மாற்றுக் கருத்துக்களை எப்படி ஜனநாயகரீதியில் எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் பக்குவமாக சுட்டி காண்பிக்கிறார். அதேவேளையில் வார்த்தை ஜாலங்களில் வித்தை காண்பிப்பவர்களை, உதட்டளவில் புரட்சிகரமாக பேசி செயலளவில் ஜம்பமாக செயல்பட்டோரை, கிழி கிழி என்று கிழித்து தொங்க விடுகிறார்.

உதாரணத்திற்கு இந்நூலில் பிளக்கனோவ், மார்த்தவ் ஆகியோர் கடும் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டு  உள்ளனர். பிளக்கனோவ் லெனினுக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர். மார்த்தவ் சமகாலத்தவர்.ஆனால் அவர்களது பங்களிப்புகளை மிக உயர்வாக மதிப்பிடுவது மட்டுமல்ல; அதை கட்சி அணிகளுக்கும் கடத்துகிறார். இவர்களை வர்க்க பகைவர்கள் போல் புரிந்து கொள்ளாமல் அவர்களின் கருத்தியல் குறைபாடுகளைத் தான் முதன்மையாக கொள்ளவேண்டும் என்பதற்காகவே எத்தனை அடிக்குறிப்புகள். இதுதான் கம்யூனிஸ்ட்  இயக்கத்தின் ஜனநாயக செயல்பாட்டுக்கு உதாரணம் என்பதை பெருமை பொங்க வாசிப்பின் வழி உணரமுடிகிறது.

குழுவாத போக்குக்கு “தான் எதிரி என தம்மை தாமே அழைத்துக் கொள்கிறார்” மார்த்தவ். இருப்பினும் கட்சி காங்கிரசுக்கு பிறகு அவற்றின் ஆதரவாளர் ஆனார் என கிண்டல் அடிக்கும் லெனின் அதை ஆதாரத்துடன் எடுத்து சொல்கிறார்.

கட்சி காங்கிரசுக்கு பிறகு ஸ்தாபன கோட்பாடுகளை எதிர்த்து, லெனினை தாக்கி எழுதப்பட்ட கட்டுரை இஸ்க்ரா பத்திரிகையில் பிரசுரிக்கப் படுகிறது. இக்கட்டுரையின் சில அம்சங்களில் மாறுபடுவதாக சொல்லி மொத்தத்தில் அக்கட்டுரையை ஏற்றுக்கொண்டு, அதன் ஆய்வுரைகளை ஒப்புக்கொள்கிறது ஆசிரியர் குழு. இதை விரிவாக எடுத்துச் சொல்லும் லெனின், “கட்சிக் காங்கிரசின் போது தாங்கள் சொன்னதற்கு நேர் விரோதமாக காங்கிரஸுக்கு பிறகு பேசும் ஆசிரியர் குழுவை கொண்ட ஒரு கட்சிப் பத்திரிகையை எவராவது என்றாவது கண்டதுண்டா?” என கேள்வி எழுப்புகிறார். 

நூலின் உள்ளடக்கம்

1, மார்க்சிஸ்ட் கட்சியானது தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதி

2, தொழிலாளி வர்க்கத்தின் அமைப்புரீதியாக உருவாக்கப்பட்ட படைப் பகுதி

3, தொழிலாளி வர்க்கத்தின் அமைப்புகளுக்கெல்லாம் தலைசிறந்த உயர்ந்த அமைப்புகளாகும்.

4, பல லட்சக்கணக்கான தொழிலாளிவர்க்க மக்களுடன் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படை இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த இணைப்பின் உருவமே கட்சி.

5, ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டை அடிப்படையாக கொண்டு கட்சி இருக்க வேண்டும்.

6, தத்துவ ரீதியான ஒற்றுமை மட்டுமல்ல; எதார்த்தத்தில்  தெரியும்படியான ஸ்தாபன ஒற்றுமையோடு கட்சி இருக்க வேண்டும்.

இந்த கருதுகோள்களை விளக்கி, ஏன் இதனடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்பட வேண்டும் என்பதை, தனது காலத்தில் தான் எதிர்கொண்ட பிரச்சினைகள் வழி லெனின் உலக கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு ஸ்தாபனம் குறித்த அடிப்படைகளை எடுத்துரைத்துள்ளார்.

வர்க்கத்தின் ஒரு பகுதி என்றால் என்ன?

வேலைநிறுத்தம், போராட்டங்களில் பங்கேற்பவர்களை  கட்சி உறுப்பினராக கருத வேண்டும் என்ற வாதம் கட்சிக் காங்கிரசில் முன்வைக்கப்பட்டது. அதற்கு லெனின் “கட்சியையும் வர்க்கத்தையும் ஒன்றாக போட்டு யார் குழப்புகிறார்களோ அவர்கள் கட்சியின் உணர்வை ‘ஒவ்வொரு வேலைநிறுத்தக்காரனுடைய’ உணர்வின் அளவுக்கு குறைத்து தாழ்த்துகிறார்கள்” என கடுமையாக விமர்சிக்கிறார்.

மார்க்சிஸ்ட் கட்சி ஆனது தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதி ஒரு பிரிவு. ஆனால் தொழிலாளி வர்க்கம் பல்வேறு பகுதிகளை கொண்டுள்ளது. தொழிலாளி வர்க்கத்தின் இத்தகைய  பகுதிகளை கட்சியாக கருதக்கூடாது. காரணம் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படையான வர்க்க உணர்வு கொண்ட பகுதிதான் மார்க்சிஸ்ட் படைப்பகுதி. ஏனெனில் சமூக வாழ்க்கை, சமூகத்தின் வளர்ச்சி விதிமுறைகள் குறித்தும், வர்க்கப் போராட்டத்தின் வழிமுறைகள் பற்றிய அறிவையும் ஆயுதமாக கொண்டுள்ளது இப்படை. மேலும் இந்த காரணத்தினால்தான் அதனால் தொழிலாளி வர்க்கத்தை தலைமை தாங்கி நடத்தி செல்ல முடிகிறது. வழிகாட்டி செயல்பட முடிகிறது.ஆகவே பகுதியை முழுமையாக போட்டு குழப்பக்கூடாது என சுட்டிக் காட்டுகிறார் லெனின்.

முதலாளித்துவ சமூகத்தின் கீழ் இருக்கும் போது 

வர்க்கத்தின் முன்னணிப் படையாக உள்ள கட்சியினரின் உணர்வின் அளவிற்கு, செயல்களின் அளவிற்கு தொழிலாளி வர்க்கம் முழுவதும் எழும்பி உயரும் என்று எந்த சமயத்திலாவது நினைத்தால் அது கண்மூடித்தனமான வெறும் திருப்தியாகவே இருக்கும். வர்க்க உணர்வு ஊட்டப்பட்ட பகுதியினருக்கும் வெகுமக்களுக்கும் உள்ள உணர்வு மட்ட வித்தியாசத்தை பார்க்க தவறுவதை, குறைத்து மதிப்பிடுவதை “நம் முன் நிற்கும் வேலைகளின் பிரம்மாண்ட அளவை பார்க்காமல், கண்களை மூடிக் கொள்வதற்கு ஒப்பாகும். மேலும், இந்த வேலைகளை மிகவும் சுருக்கிக் குறுக்குவதே என்றே அர்த்தம்” என எடுத்துரைக்கிறார்.

அமைப்புரீதியாக ஒன்று திரட்டுவதின் தேவை

“கட்சி உறுப்பினர் என்ற பட்டம் எந்த அளவுக்குப் பரந்து இருக்கிறதோ, அந்த அளவுக்கு நல்லது” என மார்த்தவ் தனது கருத்தை வலுவாக முன்வைக்கிறார். அதற்கு லெனின் ” வர்க்கத்தின் முன்னணிப் படை என்ற முறையில் எவ்வளவு தூரம் அமைப்புரீதியாக ஒன்று திரட்டி உருவாக்க முடியுமோ, அவ்வளவு தூரம் கட்சியை உருவாக்க வேண்டும். ஒரு குறைந்தபட்ச அமைப்புக் கோட்பாடுகளுக்கு எத்தகைய நபர்கள் தங்களை உட்படுத்தி கொள்வார்களோ, அத்தகைய நபர்களை கட்சிக்குள் உறுப்பினர்களாக அனுமதிக்க வேண்டும்” என்கிறார். மேலும் “கட்சியின் கட்டுப்பாட்டை பார்த்து முகம் சுளித்து பின்வாங்குபவர்கள், கட்சியின் அமைப்பில் சேர்வதற்கு பயப்படுபவர்கள் கட்சிக்கு உறுப்பினர்களாக தேவைப்படவில்லை. கட்டுப்பாட்டையோ, அமைப்பையோ பார்த்துத் தொழிலாளர்கள் பின்வாங்குவதில்லை. கட்சியில் உறுப்பினராக சேருவது என்று தீர்மானித்து விட்டால் அவர்கள் மனப்பூர்வமாக அமைப்பில் சேருகிறார்கள். தன்னந்தனியான போக்குடைய  படைப்பாளிகள்தான் கட்டுப்பாட்டையும் அமைப்பையும் கண்டு பயப்படுகிறார்கள்” என்கிறார்.

கட்சி, அமைப்பு ரீதியாக உருவாக்கப்பட்ட சாதாரண பகுதி மட்டுமல்ல. தொழிலாளி வர்க்கத்தின் அமைப்பு வடிவங்களிலெல்லாம் தலை சிறந்த, உயர்ந்த அமைப்பு வடிவம் ஆகும். “அதிகாரத்திற்காக பாட்டாளிவர்க்கம் நடத்துகிற போராட்டத்தில் அமைப்பைத் தவிர வேறு ஆயுதம் எதுவும் இல்லை” என்பதே லெனினியத்தின் அடிப்படை.

கட்டுப்பாடுகளை ஸ்தாபன ஒழுங்கை கட்சி முன்னிறுத்துவதன் அடிப்படைகள்

“தன்னுடைய கூட்டுக்குள்ளேயே எந்த கட்சி அடைபட்டு கிடைக்கிறதோ, பொதுமக்களிடமிருந்து எந்த கட்சி தன்னை தனிமைப்படுத்திக் கொள்கிறதோ, தன்னுடைய வர்க்கத்துடன் எந்த கட்சி தொடர்பு அற்று இருக்கிறது அல்லது அந்த தொடர்பை தளர்த்திக் கொள்கிறதோ, அந்த கட்சி மக்களுடைய நம்பிக்கையை ஆதரவை இழப்பது திண்ணம். இதன் பயனாக அது அழிந்தும் போகும். பூரணமாக வாழ்வதற்காகவும், வளர்ச்சி அடைவதற்காகவும் மக்களுடன் வைத்திருக்கும் தன்னுடைய தொடர்புகளை கட்சி பன்மடங்கு அதிகமாக்க வேண்டும். தன்னுடைய வர்க்கத்தைச் சேர்ந்த பல லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கைகளை பெருமுயற்சி செய்து பெற வேண்டும்” இவ்வாறு  லெனின் சொல்வதை கருத்தளவில் ஏற்றுக் கொள்பவர்கள் கூட அதை அடைய கட்சியின் ஒழுங்கு, கட்டுப்பாடு குறித்து சொல்லும்போது கண்டுகொள்ளாமல் சென்றுவிடுகின்றனர். அந்த ஒழுங்கை ரஷ்ய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் கொண்டு வருவதற்கு லெனின் நடத்திய கருத்தியல் போராட்டத்தை கூர்ந்து வாசிப்பது இன்றைய தேவைக்கு மிக முக்கியமானது. 

கட்சி ஸ்தாபனத்தை ‘கொடூரமானதாக கருதுவதை, முழுமைக்கு பகுதி கட்டுப்படுவதை, பெரும்பான்மைக்கு சிறுபான்மை உட்படுத்தப்படுவதை, ‘பண்ணை அடிமைத்தனமாக’ கூக்குரலிட்டு கத்தி பேசுவதை லெனின் தனது வாதங்களின் வழி நையப் புடைக்கிறார்.

“கட்சியை கட்டுவதில்  தொடர்ந்து ஈடுபடும்போது தொழிலாளி வர்க்க ஊழியரின் மனோபாவத்திற்கும் தன்னுடைய அராஜகப் பேச்சுகளை ஜம்பமாகப் பேசுகிற முதலாளித்துவப் படிப்பாளியின் சிந்தனை போக்கிற்கும்  இடையே உள்ள வேறுபாட்டை வர்க்க உணர்வு ஊட்டப்பட்ட தொழிலாளர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். சாதாரண உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், ‘தலைமையில் உட்கார்ந்து இருப்பவர்களும்’ தங்களது கடமையை நிறைவேற்றி பூர்த்தி செய்ய வேண்டும் என்று வற்புறுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.” இவ்வாறு வழிகாட்டி புரட்சிகர இயக்கத்தை வளர்த்தெடுக்க பாடுபட்ட லெனின் தன்னை ஓரிடத்தில் சுயவிமர்சனத்துக்கு உட்படுத்தி பேசும் வார்த்தைகள் நெகிழ்ச்சி அளிக்கிறது. 

“நான் அடிக்கடி திகில் தரும் எரிச்சலான நிலையில் சீற்றம் கொண்டவனாக நடந்திருக்கிறேன்; செயல்பட்டிருக்கிறேன் என்பதை உணருகிறேன். என்னுடைய அந்தப் பிழையை நான் எவரிடத்திலும் ஒத்துக் கொள்ள விருப்பமுள்ளவனாகவே இருக்கிறேன். அது ஒரு குற்றம் என்று கருதப்படுமேயானால், அது சூழல், எதிர்செயல்கள், போராட்டம் ஆகியவற்றின் இயற்கையான விளைவே.

அவ்விளைவுகளை ஆராய்ந்து பார்த்தோமேயானால், கட்சிக்கு ஊறு விளைவிப்பதாக எதுவுமில்லை. சிறுபான்மையை புண்படுத்தும் அல்லது இழிவுபடுத்தும் என்று சொல்லக்கூடியது எதுவுமில்லை.” என்கிறார்.

அறிவுஜீவிகள் யார்? முதலாளித்துவ சமூக அமைப்பில் அவர்களது உணர்வோட்டம் எப்படி கட்டமைக்கப்படுகிறது? என்பதை விரிவாக ஆய்வுக்கு இந்நூலில் உட்படுத்தி உள்ளார். ஓர் அறிவுஜீவி எப்படி இருக்க வேண்டும் என்ற உதாரணத்தையும் எடுத்துரைத்துள்ளார். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சர்வதேச தொழிலாளி வர்க்க இயக்கத்தின் தலைசிறந்த தலைவர் லீஃப்னெக்ட்-ஐத் தான் லெனின் சுட்டிக்காட்டுகிறார்.

“அவர் சிறப்பான எழுத்தாளராக இருந்தும், ஓர் அறிவுஜீவியின் தனிப்பட்ட மனப்பான்மையை முற்றிலும் இழந்து விட்டு, தொழிலாளர்களுடைய அணியில் மகிழ்ச்சியுடன் நடைபோட்டார். அவருக்கு என ஒதுக்கித் தரப்பட்ட எந்த பதவியிலும் பணிபுரிந்தார். மாபெரும் லட்சியத்திற்காக தன்னை முழு மனதோடு ஆட்படுத்திக்கொண்டார்” என புகழாரம் சூட்டுகிறார் லெனின்.

நிறைவாக,

தமிழகத்தில் உறுதியான, புரட்சிகர குணாம்சமிக்க கட்சியை கட்டுவதில் உள்ள பலவீனமான அம்சங்களை  மத்திய குழு சுட்டிக்காட்டி உள்ளது. அப் பலவீனங்களை களைய கட்சி முழுவதும் எப்படி செயல்படுவது என பல்வேறு வழிகாட்டுதல்களை கட்சியின் மாநிலக்குழு விவாதித்து உருவாக்கி நடைமுறைப்படுத்தி வருகிறது. அதை கோட்பாட்டு ரீதியாக புரிந்து கொள்ளவும், இன்னும் முழு ஈடுபாட்டுடன் செயல் தளத்தில் நடைமுறைப்படுத்தவும், லெனினது ” ஓரடி முன்னால் ஈரடி பின்னால்” நூல் நமக்கு வழிகாட்டும்; உற்சாகமூட்டும். இது நான்கு சுவர்களுக்குள் உருவான கருத்தியல் பெட்டகம் அல்ல. மாறாக, கள அனுபவங்களை  மார்க்சிய தத்துவ ஒளியின் கண் கொண்டு பார்த்து சித்தாந்தரீதியான உரையாடல்களை ஜனநாயகரீதியாக மேற்கொண்டு உருவாக்கப்பட்ட ஆய்வு நூல். அதைவிடவும் முக்கியமானது, இப்படியாகக் கட்டப்பட்ட கட்சியின் மூலம் தான் ரஷ்ய புரட்சி சாத்தியம் ஆனது.

செவ்வியல் நூல்: மார்க்சியமும், தேசிய இனப் பிரச்சனையும் …

மார்க்சியமும், தேசிய இனப்பிரச்சனையும் என்ற சிறு புத்தகத்தை தோழர் ஸ்டாலின் 1913-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் எழுதினார். சிறுபான்மை தேசிய இனங்களோடும், பண் பாட்டுக் குழுக்களோடும் போல்ஷ்விக்குகள் எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்; பரந்துபட்ட தொழிலாளிவர்க்க ஒற்றுமையைக் கட்டமைப்பதற்கான சரியான உத்தி எது என்ற கேள்வி அப்போது விவாதப் பொருளாக இருந்தது. குறிப்பாக, யூத தொழி லாளர்கள் மத்தியில் இயங்கிய பண்ட் என்ற அமைப்பு ஒரு தேசியத்திட்டத்தை முன்வைத் திருந்தது, காகஸஸ் பகுதிக்கான தன்னாட்சி மற்றும் கலாச்சார தேசிய தன்னாட்சி என்ற கோரிக்கைகள் காகேஷியர்கள் தரப்பிலிருந்து எழுந்தன. இத்தகைய கோரிக்கைகளை மார்க்சிய கண்ணோட்டத்தில் எப்படி அணுக வேண்டும் என்ற குழப்பம் நிலவியது. ரஷ்ய சமூக ஜனநாயகக் கட்சியின் ‘கலைப்பாளர்கள்’, சந்தர்ப்பவாத நிலைப் பாடுகளை மேற்கொண்டார்கள். அந்த வாதங் களுக்கு பதிலளிக்கும் வகையிலும், பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையி லும் இந்த சிறு பிரசுரம் எழுதப்பட்டது.

ஆஸ்த்ரியாவின் (ஜெர்மன்) நன்கு அறியப் பட்ட சிந்தனையாளரான ஓட்டோ பேர், மற்றும் ஸ்ப்ரிங்கர் ஆகியோரின் எழுத்துகளும், பண்ட் அமைப்பின் தீர்மானங்களும், காகேசியர்களின் நிலைப்பாட்டினையும், கலைப்பாளர்களின் சந்தர்ப் பவாதத்தையும் முன்வைத்து, அவற்றின் பலவீனங் களைச் சுட்டிக்காட்டி – இயக்கவியல் நோக்கில் சரியான நிலைப்பாட்டிற்கு வந்தடைவதே இப்பிர சுரத்தின் நோக்கமாகும். ஓட்டோ பேர் மற்றும் காவுட்ஸ்கி ஆகியோர் ஜெர்மானிய மொழியில் எழுதியிருந்த கருத்துக்களை, நிக்கோலாய் புகாரி னுடைய உதவியுடன் ஸ்டாலின் அறிந்து கொண்டு இப்புத்தகத்தை எழுதினார். 1913-ம் ஆண்டு எழுத்தாளர் மாக்சிம் கார்க்கிக்கு எழுதிய கடிதத்தில் தோழர் லெனின் இக்கட்டுரை யைப் பாராட்டியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
சோவியத் அனுபவத்தின் முக்கியத்துவம்
உலகின் முதல் சோசலிச அரசான சோவியத் ஒன்றியம் தேசிய இனப்பிரச்சனையில் முன்னுதாரண மாக செயல்பட்டது. லெனின் தலைமையிலான புரட்சி அரசாங்கம் கடைப்பிடித்த தேசிய இனக் கொள்கை, உலகம் முழுவதும் தேசிய இயக்கங் களின் மீது தாக்கம் செலுத்தியது.

சோவியத் ஒன்றியத்தில் 1918-ம் ஆண்டில் தேசிய இனங்களின் விஷயங்களைக் கவனிக்க ஒரு அமைச்சகம் உருவாக்கப்பட்டது. ஸ்டாலின் அதன் முதல் மக்கள் அமைச்சராக நியமிக்கப் பட்டார். லெனின் வழிகாட்டுதலுடன், தேசிய இனக் கொள்கை பற்றி முக்கிய பேச்சாளராக அவர் இருந்தார். தேசிய இனங்களின் மக்கள் அமைச்சகத்தின் கீழ் பல பிரிவுகள் ஏற்படுத் தப்பட்டன. மிகச் சிறிய குழுக்களான பாஷ் கிர்கள், டாட்டர்கள் உள்ளிட்டோருக்கான பிரிவுகள் தொடங்கப்பட்டு சுவாஷ் மொழியில் அவர்களுடைய பிரச்னைகள் பற்றி புகார் அளிக்க தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இவை தவிர, மாவட்ட, கிராம சோவியத்துகள் மக்கள் கூட்டங் களை நடத்தி, மிகவும் சிறிய குழுக்கள் கூட புரிந்து கொள்ளும் வகையில், செய்தித்தாள்கள் வாசிப்பது, முக்கிய தகவல்கள்,பிரகடனங்களை அவர்களுடைய மொழியில் வாசித்து காண்பித்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டனர். போல்ஷ் விக்குகள் இப்பணிகளை உணர்வுப்பூர்வமாக வும், சோசலிச அமைப்பை பாதுகாத்து பரந்து பட்ட ஒற்றுமையை முன்னெடுக்கும் விருப்பத் தோடும், அர்ப்பணிப்போடும் மேற்கொண் டார்கள். 1922-ம் ஆண்டில், பல தேசங்கள் முன்வந்து சோசலிச அமைப்பில் இணைந்தன. சோவியத் ஒன்றியம் உருவாகியது.சரியான மார்க் சிய – லெனினிய அணுகுமுறையே அதற்குக் காரணமாகும். எனவே சோவியத் அனுபவத்தைக் கற்பது நமக்கு அவசியமான ஒன்று.

தேசம் என்பது என்ன?

பொதுப்பயன்பாட்டில் தேசம் என்ற சொல்லும், நாடு, அரசு ஆகிய சொற்களும் தெளிவற்று ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. அவை அப்படியல்ல. தேசம் என்ற கருத்தாக்கம் உருவாகி உறுதிபெற்றுவந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட இந்தப்புத்தகம் தேசம் பற்றிய மார்க்சியக் கோட் பாட்டினை விவரிக்கிறது.

முதல் அத்தியாயத்தில் தேசம் குறித்த தெளி வான வரையறைவிளக்கப்பட்டுள்ளது. “ஒரு தேசம் என்பது, ஒரு பொதுவான மொழி, எல்லை, பொருளாதார வாழ்வு மற்றும் (பொதுவான) உளவியல்கட்டமைப்பு (psychological make-up) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று ரீதியாக உருவாகிய நிலைபெற்ற மக்கள் சமூகமாகும்” என்பதே அந்தவரையறையா கும். எனவே, மேற்சொன்ன அனைத்து அடிப் படைகளும் ஒருங்கே அமையும் போதுதான் அதுவொரு தேசமாகிறது. மேலும், ‘வரலாற்று ரீதியாக’ சமூகம் உருவாவது என்ற நிகழ்வு, வரலாற்று விதிகளுக்கு உட்பட்டுமாறக் கூடிய ஒன்றேயாகும்.‘நிலைபெற்ற’ அந்த மக்கள் சமூகம், என்றென்றைக்கும் மாறாத ஒன்றுமல்ல என தெளிவுபடுத்துகிறது.

அதற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட ஒவ்வொரு உதாரணங்களும், அன்றைய உலகில் நிலவிய பல்வேறு களச் சூழல்களையும், காரணிகளையும் ஒப்பிட்டுக் காட்டுகின்றன. பேரரசர் ஒருவரின் ஆளுகைக்குஉட்பட்ட பேரரசைஒரு ‘தேசம்’ என்று அழைக்க முடியாது. ஏனென்றால் எவ்விதப் பிடிப்பும் இல்லாமல் சேர்க்கப்பட்ட பல்வேறு குழுக்களின் சேர்ப்பாக அது அமைந்தது. ரஷ்யா விற்குள் அப்போதிருந்த போலந்து தேசமும், ஆஸ்திரியாவிற்குள் அமைந்துள்ள செக் தேசமும் பொது மொழியோடு இயங்கின. பல்வேறு மொழி கள் பேசப்பட்டாலும் அவற்றின் ஒருமைப்பாடு பாதிக்கப்படவில்லை. ஒரே மொழியைக் கொண் டிருந்தாலும், இங்கிலாந்தும் அமெரிக்காவும் ஒரே தேசமாக இல்லை. ஏனென்றால் அவற்றின் எல்லைப்பகுதிகளில் நிலவும் மாற்றங்கள் காரண மாக இருவேறு தேசங்களாகவே அவை அமையப் பெற்றன. அயர்லாந்து உருவாக்கப்பட்ட விதத்தை கவனித்தால், அதில் ‘உளவியல்கட்டமைப்பு’ ஒரு முக்கியக் காரணியாக வெளிப்பட்டது. இவ்வாறு உலகச் சூழலை விவரிக்கும் முதல் அத்தியாயம், “அனைத்து காரணிகளும் ஒருங்கே அமையும் போது மட்டுமே அது ஒரு தேசம் என்றாகிறது” என விளக்குகிறது. பிற்பகுதியில் தேசம் குறித்து நிலவிய கோட்பாடுகளையும், அந்தக் கோட் பாடுகளில் காணப்பட்ட முரண்களையும் விளக்குகிறது.

முதலாளித்துவமும் – தேசமும்
பொதுவான பொருளாதார வாழ்வும் பொரு ளாதார ஒன்றிணைப்பும் ஒரு தேசத்தின் பிரதான அம்சங்களில் ஒன்று என்பதை மேலே பார்த் தோம். தேசம் என்ற வகையினம் முதலாளித் துவத்தோடு இணைந்த ஒன்றாகவே உதயமாகிறது. முதலாளிகளுக்கு ஒரு நிரந்தர சந்தைதேவை. எனவே‘தேசங்கள்’ அவசியமாகின்றன. இதன் காரணமாக முதலாளிகள் தேசியவாத முழக்கங் களை எழுப்புகின்றனர். வரலாற்றின் போக்கில் முதலாளித்துவ அரசாங்கங்களின் உருவாக்கத்தை கவனித்தால் அவற்றில் பல்வேறு போக்குகளும் தென்படுகின்றன. ஐரோப்பாவின் மேற்கில் அமைந்த பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி போன்ற அரசுகள், சுதந்திர ‘தேசிய அரசுகளாக’ உருவாகின. கிழக்கு ஐரோப் பாவிலோ ‘பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட அரசுகள்’ உருவாகின. இந்த இரண்டு போக்குகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் முதலா ளித்துவ வளர்ச்சிக்கும், தேசியவாத முழக்கங் களுக்குமான நேரடித் தொடர்பு புரியவருகிறது.

முதலாளித்துவதேசியவாதிகள் “பிளவுபடுத்தி ஆளுதலுக்காக” தேசிய இனத்தைத் தூண்டி விடுவதும் காலங்காலமாக நடந்துவருகிறது. அவை மாபெரும் இனப் படுகொலைகளில் முடிந் திருக்கின்றன. “எங்கெல்லாம் அடிப்படை மனித உரிமைகள் கூட இல்லையோ, அங்கெல்லாம் இது (தேசியவாதம்) கொடூரமான வடிவத்தை எடுக்கிறது” மேலும், “எங்கெல்லாம் (தேசியவாதம்) இவ்வாறு தூண்டப்பட்டு (முதலாளித்துவ வர்க்கத் திற்கு) வெற்றி கிடைத்ததோ அங்கெல்லாம் பாட்டாளி வர்க்கத்திற்கு மிகப்பெரும் கேடு ஏற்படுத்துவதாக (தேசியவாதம்) அமைந்தது. பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த தொழிலாளர் களை ஒன்றுபடுத்துவதற்கும் இது மாபெரும் தடையாக அமைந்தது.
முதலாளிவர்க்கத்திற்கு உள்ள ‘சொந்த’ , ‘உள்நாட்டு’ சந்தைக்கான விருப்பத்தைத் தாண்டி, குறிப்பிட்ட தேசிய இனத்தின் ஆதிக்கமும், தேசியவாத முழக்கங்களுக்கு அடிப்படையாக அமைகிறது. அதாவது, ஒரு சமூகத்தில் குறிப் பிட்ட தேசிய இனத்தைச்சார்ந்த ஆளும் வர்க்கங் கள், மற்றவற்றை ஒடுக்கும் நிலையை இப்புத்தகம் குறிப்பிடுகிறது. அவ்வாறுஒடுக்கப்படும் தேசிய இனத்தின் பல்வேறு வாய்ப்புகளை, ஒடுக்கும் தேசிய இனத்தின் ஆளும் வர்க்கங்கள் முடக்கு கிறார்கள். எனவே ஒடுக்கப்படும் தேசிய இனத் தின் மத்தியிலிருந்துமுதலாளிகளும் இயக்கமாக கிளர்ந்தெழும் முனைப்பு உருவாகிறது.

முதலாளிகள் தலைமையேற்கும்போது, அந்தப் போராட்டங்களுக்கு வெளிப்புறத்தே ‘தேசிய அளவிலான தன்மையே’ உள்ளது. ஆனால் “சாராம்சத்தில் … முதலாளித்துவ நலனுக்காகவும், முதலாளித்துவ லாபத்திற்காகவும் நடைபெறும் முதலாளித்துவப் போராட்டமாகவே இருக்கும்.” இங்கே, ஒரு எழுச்சி முதலாளிகளின் தலைமை யில் உருவாகும்போது, அதில் பாட்டாளி களும், விவசாயிகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டால் தான் வலிமையான தேசிய இயக்கமாக அது மாற்றமடைகிறது என்பதையும் பார்க்க வேண்டும்.

தொழிலாளி வர்க்கமும் – தேசமும்
ஒரு தேசிய இனம் அடக்குமுறைக்கு ஆளாக் கப்படும்போது அவை அந்த தேசிய இனத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்களையே அதிகம் பாதித்தன. எனவே, பாட்டாளிவர்க்கம் தேசிய அடக்குமுறைக்கு எதிராக நுட்பமான வழிகளி லும், கரடு முரடான வழிகளிலும் போராட வேண்டும் என்பதுடன், தேசங்களை ஒன்றுக்கு ஒன்று எதிராக தூண்டிவிடும் கொள் கையை எதிர்த்து அனைத்து வடிவங்களிலும் போராட வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். தேசிய இனங் களின் ஒற்றுமையைப் பாதுகாத்துக் கொண்டே ஜனநாயக உரிமைகளுக்காக போராடு வது ஒட்டு மொத்த பாட்டாளி வர்க்கத்தின் கடமையாகும்.

இந்த நேரத்தில், தோழர் ஸ்டாலின் சுட்டிக் காட்டும் எச்சரிக்கையை எப்போதும் மனதில் நிறுத்தவேண்டும். ‘தேசியப் பிரச்சனைக ளானவை, பாட்டாளிவர்க்கத்தின் பெரும்பகுதியினரை சமூகப் பிரச்சனைகள், வர்க்கப் போராட்டப் பிரச்சனைகளிலிருந்து திசைதிருப்புகின்றன. அவை முதலாளிகளுக்கும், தொழிலாளர்களுக் கும் ‘பொதுவான’ பிரச்சனைகளில் கவனம் செலுத்தச் செய்கின்றன’. தேசிய இனப் பிரச்சனை களை பயன்படுத்திக்கொள்ளும் முதலாளித்துவ வர்க்கம், தொழிலாளி வர்க்க ஒற்றுமையை இரத் தத்திலும் கண்ணீரிலும் மூழ்கடிக்கச் செய்யும். எனவே இவ்விசயத்தில் சரியான புரிதலுடன் கூடிய சரியான எதிர்வினை மிக மிக அவசியமாகும்.

இவ்விடத்தில் அப்போது ரசிய சமூக ஜன நாயகவாதிகள் (போல்ஷ்விக்குகள்) முன்வைத்து வந்த சுயநிர்ணய உரிமை பற்றி ஸ்டாலின் குறிப் பிடுகிறார், “ ஒரு தேசிய இனத்தின் வாழ்க்கையில் வலுக்கட்டாயமாக குறுக்கிடுவதற்கோ, அதன் பள்ளிகளையும் மற்ற நிறுவனங்களையும் அழிப் பதற்கோ அதன் பழக்கவழக்கம் மற்றும் மரபு களை மீறுவதற்கோ, அதன் மொழியை நசுக்கு வதற்கோ, அவர்களின் உரிமைகளை ஒடுக்கு வதற்கோ ஒருவருக்கும் உரிமையில்லை” என அறுதியிட்டுக் கூறுகிறார்.
இதன் பொருள் தேசிய இனத்திற்கு கேடு பயக்கக்கூடிய மரபு மற்றும் நிறுவனங்களை, பாட்டாளிவர்க்கம் அப்படியே ஏற்கவேண்டும் என்பதல்ல. மாறாக ஒரு தேசிய இனத்தைச் சார்ந்த உழைக்கும் மக்களைக் காப்பாற்றும் நோக்கில், அத்தகைய மரபுகளையும் நிறுவனங் களையும் எதிர்த்துப் போராடவேண்டும்.

இவ்வகையில் பாட்டாளி வர்க்கத்தின் நிலைப் பாடு சாராம்சத்தில் வேறுபட்ட ஒன்றாகும். பாட்டாளிவர்க்க நலனை அடிப்படையாக வைத்துக்கொண்டு, தேசிய இனச் சிக்கல்களுக்கு தீர்வுகாண்பது என்ற அடிப்படையிலேயே ஒவ்வொரு உத்தியும் அமைகிறது.

தேசிய இன வாதம் நச்சாகும்போது
முதலாளித்துவ வர்க்கத்தால் முன் மொழியப் படும் வெளிப்படையான தேசியவாதத்தை சமாளிக் கலாம். அதே சமயம் “சோசலிசக் கவசத்தால் பாதுகாக்கப்பட்ட தேசிய இனவாதம் … தொழி லாளர்கள் மத்தியிலே வேரூன்றும்போது … நச்சுக் கருத்துக்களைப் பரப்புகிறது. பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களிடையே நம்பிக்கையின்மையையும், பிளவுறும் தன்மையை யும் உருவாக்கும் ஆபத்தான கருத்துக்களையும் படரவிடுகிறது” என்கிறார்ஸ்டாலின்.

இத்தகைய சூழலை எதிர்கொள்ள வலுவான தத்துவார்த்தப் போராட்டம் அவசியமாகும். தேசிய இனச்சிக்கல்கள் எழும் போது பாட்டாளி வர்க்க சித்தாந்தப்பார்வையில் சரியான தீர்வு களை முன்னெடுக்கவேண்டும். அவ்வகையில் தவறான போக்குகளை வீழ்த்த வேண்டும். தேசிய இனங்களின் உரிமை என்று சொல்லும் போது அதில் பாட்டாளி வர்க்க நலனும் வெளிப் படுகிறது, அந்த தேசத்திற்குட்பட்ட முதலாளி கள், பிரபுக்கள், மதகுருக்களின் நலன்களும் வெளிப்படுகின்றன. எனவே பாட்டாளி வர்க்கம் தனது வர்க்கத்தின் நலனை மனதிற்கொண்டே இப்பிரச்சனையில் தலையிடவேண்டும்.

சோசலிசம் வந்த பிறகே தீர்வா?
தேசிய இனப்பிரச்சனைகளுக்கு, சோசலிச சமூக அமைப்புதான் முடிவான தீர்வைக் கொடுக்க முடியும். அதன் பொருள் சோசலிசம் வரும் வரையில் இப்பிரச்சனைகளில் அமைதிகாக்க வேண்டும் என்பதல்ல. முதலாளித்துவ அமைப் பிற்குள்ளே, தேசிய இனங்களின் சுய வளர்ச்சிக் கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்த உழைப்பது பாட்டாளிவர்க்கத்தின் கடமையாகும். ஒரு தேசிய இன ஆதிக்கத்தின் கீழ் மற்ற தேசிய இனங்கள் இருப்பதான சூழலில், உழைக்கும் வர்க்க விடு தலை சாத்தியமாகாது. எனவே, ஜனநாயக சூழலை ஏற்படுத்துவது முதன்மையான கடமை.

மேலும், பாட்டாளிவர்க்கம் குறிப்பிடும் சுய நிர்ணயம் என்பதும் கூட ஏட்டில் உள்ள உரிமை அல்ல. பிரத்யேக நிலைமைகளுக்கு ஏற்றவாறு நடைமுறைப் படுத்த வேண்டும். எனவே, அந்த உரிமைகளை அனுபவிப்பதற்கு ஏற்ப சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டியது அவசியம். பாட்டாளி கள் குறிப்பிடும் சுய நிர்ணயம் என்பது வர்க்க நலன் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்படு கிறது. எனவே, முதலாளித்துவ முழக்கங்களை அப்படியே ஏற்காது.

தன்னாட்சி உரிமை குறித்த விவாதம்
தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு என்ற முறை யில் ‘தேசிய தன்னாட்சி’, ‘கலாச்சார தேசிய தன்னாட்சி’ மற்றும் ‘வட்டாரத் தன்னாட்சி’ ஆகிய கோரிக்கைகள் பேசப்படுகின்றன. பண்ட் அமைப்பும், காகேஷியர்களும், ஆஸ்திரிய அறிஞர் களும், சமூக ஜனநாயகக் கட்சியினுள் நடைபெற்ற விவாதங்களிலும் இவை அனைத்தும் இடம் பெறுகின்றன. இவை அனைத்தையும் முன்வைத்து விவாதிக்கும் ஸ்டாலின் – தேசியத் தன்னாட்சி, கலாச்சார தேசிய தன்னாட்சி ஆகிய வாதங் களின் பலவீனங்களை சுட்டிக்காட்டுகிறார். பாட்டாளிவர்க்க ஒற்றுமை, சோசலிசப் புரட்சி யின் வெற்றி என்ற இலக்கில் பற்றி நிற்கும் அதே சமயம் – தேசிய இனங்களின் ஜனநாயக உரிமை களிலும் சமரசம் செய்துகொள்ளாத ஒரு தீர்வை எட்டுவது குறித்து விவாதிக்கிறார்.

உலகம் முழுவதும் நிலவும் தேசிய இனச் சிக்கல்களுக்கான தீர்வு, ஒரு நாட்டைப் போல மற்றொன்றில் அமையாது. அது வரலாற்று நிலைமைகளைப் பொறுத்து எட்ட வேண்டிய ஒன்றேயாகும். “சூழ்நிலைமைகள் மற்ற எதையும் போல மாற்றமடைவது ஆகும். எனவே ஒரு குறிப்பிட்ட தருணத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு இன்னொரு தருணத்தில் முற்றிலும் பொருந்தாமல் போகலாம்” “குறிப் பிட்ட தேசிய இனத்தின் பருமையான வரலாற்று நிலைமைகளைப் பொருத்தே (பிரச்சனைகளுக் கான) தீர்வு என்பது அமையும்” என்கிறார். ஆஸ்திரியாவில் எழும் பிரச்சனைகளுக்கு நாடாளு மன்ற அமைப்பை அடிப்படையாகக் கொண்டு முடிவுகாணும் அதே சமயம், ரஷ்யாவின் தேசிய இனப்பிரச்சனை நாட்டின் விடுதலை என்ற முக்கியப் பிரச்சனையின் ஒரு பகுதியாக அமைந்திருப்பதை ஒப்பிட்டுக் காட்டுகிறார்.

தேசிய இனங்களின் சமத்துவம்
வளர்ச்சியடையாத எல்லாதேசங்களையும் ஒரு பொதுவான உயர்தர கலாச்சார நீரோட்டத் திற்கு கவர்ந்திழுப்பதே சமூக ஜனநாயகம் முன் வைக்கும் முற்போக்கான தீர்வாகும். வட்டாரத் தன்னாட்சி அதற்கு உதவுமென்றால் ஏற்றுக் கொள்ளத் தக்கதே. வட்டாரத் தன்னாட்சியும், பிராந்தியத் தன்னாட்சியும் பிரதான அம்சங்கள். அதே சமயம் சிறுபான்மையினருக்கான செயற் கையான கட்டமைப்பைக் கொடுப்பதை விட உண்மையான உரிமைகளை உறுதி செய்ய வேண் டும். சொந்த மொழியைப் பயன்படுத்துவதற்கான வசதி, சொந்தமான கல்வி நிலையங்கள், மொழி, கல்வி போன்ற அனைத்திலும் தேசிய இனங் களுக்கு சம உரிமை கண்டடைவது மிக முக்கியம்.

“சோசலிசப் புரட்சியும் தேசங்களின் சுயநிர்ணய உரிமையும்” என்றதலைப்பில் 1916-ம் ஆண்டில் லெனின் எழுதிய ஆய்வுக்கட்டுரையில், “சிறு சிறுஅரசுகளாகப் பிளவுண்டுள்ளதையும், தேசங்கள் தனிமைப்பட்டுக் கிடப்பதையும் ஒழிப் பது மட்டுமின்றி தேசங்களை நெருங்கவைத்து ஒன்று கலப்பதும் சோசலிசத்தின் நோக்கமாகும்” என்று குறிப்பிடுகிறார். அந்த நோக்கத்தை சில உத்தரவுகளின் மூலம் எட்ட முடியாது என்பதை யும், அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாடுகளின் மூலமே படிப்படியான மாற்றங்களை அடைய முடியும் என்பதையும் லெனின் தலைமையில் சோவியத் போல்ஷ்விக்குகள் முன்னெடுத்த முயற்சிகளும் அனுபவங்களும் காட்டுகின்றன. இந்தச் சிறுபிரசுரம், நமக்கு சிறந்த வழிகாட்டி யாகவும். வரலாற்றுச் சூழல்களை ஆய்வு செய்து முடிவுகளை வந்துசேர்வதற்கான கையேடாகவும் விளங்குகிறது.

புரட்சி உத்திகள் எனும் கலை

மார்க்சிய செவ்வியல் நூல் அறிமுகம் 10:

“ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரண்டு உத்திகள்” – லெனின்

-என்.குணசேகரன்

கம்யூனிஸ்ட் இயக்கம் புரட்சி இலட்சியத்தைக் கொண்டது. ‘புரட்சி’ என்ற சொல் மிக உயர்ந்த பொருள் கொண்டது. அது மாற்றத்தைக் குறிக்கும்; சாதாரண மாற்றத்தை அல்ல. புதிய குணம், புதிய பண்புகள் கொண்ட சமூக மாற்றம். காலாவதியாகிப் போன ஒரு சமூகத்திலிருந்து, முற்றிலும் புதிய முற்போக்கான சமூகத்தைப் படைப்பது புரட்சி.

வரலாறு முதலாளித்துவத்தை பொருத்தமற்ற அமைப்பாக மாற்றி வருகிறது. எதிர்கால வரவாக சோசலிசப் புரட்சி, வரலாற்றின் நுழைவாயிலில் நின்று கொண்டிருக்கிறது. பாட்டாளி வர்க்கம் புரட்சியை நிகழ்த்தி, சோசலிசத்தை கொண்டு வரும்.

புரட்சி பற்றி வந்த நூல்களிலியே இன்றும் நீடித்த நிலைத்த புகழ் கொண்ட நூல், லெனின் எழுதிய “ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரண்டு உத்திகள்” என்ற நூல்.

லெனின் 1905-ஆம் ஆண்டில் ஜூன், ஜூலை மாதங்களில் இந்நூலை எழுதினார். ரஷ்ய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி அமைப்பான ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் மத்தியக்குழு வெளியிட்டது. ரஷ்யாவிற்கு இந்நூல் விநியோகிக்கப்பட்டு, புரட்சி வேட்கையை புயலாகத் தூண்டியது.

இந்நூலின் புரட்சி தாக்கத்தை தடுத்து நிறுத்த அன்றைய ஜாராட்சி முயன்றது. செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகர நீதிமன்றம் ”அந்த நூலை அழித்தொழியுங்கள்” என கட்டளையிட்டது. ஆனால் அந்நூலின் வீச்சினை கட்டுப்படுத்த முடியவில்லை.

கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ‘உத்திகள்’

கம்யூனிஸ்ட் இயக்கத்தில் “உத்தி” என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுவதுண்டு. ஆங்கிலத்தில் ‘Tactics’ என்றழைக்கப்படும்.  அந்த சொல், ஒரு முக்கியமான கருத்தாக்கம். சாதாரணமாக பயன்படுத்தும்போது அதற்கு ஒரு அர்த்தம் உண்டு. ஒரு குறிப்பிட்ட நோக்கத்தையோ, இலக்கையோ, அடைவதற்கு, மிகவும் கவனமாக ஒரு செயலைத் திட்டமிடுவது அல்லது ஒரு அணுகுமுறையை உருவாக்குவது ‘உத்தி’ எனப்படும். இந்த சொல் பயன்பாடு போர் நடத்தும் முறைகள் தொடர்பாக உருவானது. எதிரிகளைத் தாக்குவதற்கு பதுங்கு வழிமுறைகள் அல்லது நேரடி தாக்குதல் போன்ற வழிகளில் அணிவகுத்து முன்னேறுவதற்கு திட்டம் உருவாக்குவது ‘உத்திகள்’ எனப்படும். இது ஒரு கலையாகவும், அறிவியலாகவும் வளர்க்கப்பட்டு வந்துள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு வகை உத்திகள் உண்டு. ஒன்று தொலைநோக்கு உத்தி, மற்றொன்று தற்போதைய நடைமுறை உத்தி. ஒரு நாட்டின் பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவ சுரண்டலிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள, நாட்டில் நிலவும் அன்றைய சூழலில், அடைய வேண்டிய இலட்சியத்தை வரையறுப்பது, தொலைநோக்கு உத்தி, இதனை கம்யூனிஸ்ட் கட்சி தனது ‘திட்டம்’ எனப்படும் ஆவணத்தில் விவரிக்கிறது. எடுத்துக்காட்டாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தில் செல்ல வேண்டிய தொலைநோக்கு இலக்காக, ஒரு மக்கள் ஜனநாயக அரசு அமைத்திட வேண்டுமென்று கூறப்படுகிறது. இது சோசலிச அரசு அமைக்கும் உயரிய இலட்சியத்தை அடைவதற்கான தொலைநோக்கு உத்தியாக கருதப்படுகிறது.

தற்போதைய நடைமுறை உத்தி எனப்படுவது அப்போது நாட்டில் நிலவும் நிலைமைகளுக்கு ஏற்ப சில இலக்குகளை நிச்சயித்து, அவற்றை அடைவதற்கு பாடுபடுவது என்பதாகும். எடுத்துக்காட்டாக, ஒரு நாட்டில் சர்வாதிகார அரசு இருந்தால், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அப்போதைய நடைமுறை இலக்கு சர்வாதிகாரத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாக இருக்கும் அதுவே, சோசலிசம் நோக்கிய தொலைநோக்கு இலக்கை அடைவதற்கு  வழிவகுக்கும். நடைமுறை உத்திகள் அவ்வப்போது நிலைமைகளின் மாற்றங்களுக்கு ஏற்ப மாறும். தொலைநோக்கு உத்தி, நிர்ணயித்த இலக்கினை அடையும் வரை நீடித்திருக்கும். ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியில் அன்று புரட்சி அரசை ஏற்படுத்துவதற்கான தீவிரமான விவாதம் நடந்தது. கட்சிக்குள் போல்ஷ்விக் (பெரும்பான்மை) மென்ஷ்விக் (சிறுபான்மை) என்ற இரண்டு குழுக்கள் இந்த விஷயத்தில் கருத்து ரீதியாக மோதிக் கொண்டன. புரட்சி இலட்சியத்தை அடைய ஒரே கட்சிக்குள் இரண்டு விதமான உத்திகள் உருவாக்கப்பட்டன. இந்த இரண்டு உத்திகளை விளக்கி, போஷ்விக்குகளின் உத்தி எவ்வாறு சரியானது என்பதனை இந்த நூலில் லெனின் நிறுவுகிறார்.

நூல் உருவான சூழல்:

பின்னாளில் கம்யூனிஸ்ட் கட்சியாக உருவெடுத்த கட்சி, ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி. அதன் முதல் அமைப்பு மாநாடு 1898ஆம் ஆண்டு நடைபெற்றது. 1903-ஆம் ஆண்டு இரண்டாவது மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிலேயே போல்ஷ்விக், மென்ஷ்விக் என்ற இரு பிரிவுகளாக கட்சி பிளவுபட்டது. ஆனால் தனி கட்சிகளாக உருவாகவில்லை.

1905 -ஆம் ஆண்டு மூன்றாவது மாநாடு நடைபெற்றது. அந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் தான் ஜார் ஆட்சிக்கு எதிரான ஒரு புரட்சி வெடித்தது. அது கொடூரமாக ஓடுக்கப்பட்டது. என்றாலும் ஜாராட்சி சில ஜனநாயக அமைப்புக்களை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது. 1906-ஆம் ஆண்டு ‘டூமா’ என்றழைக்கப்பட்ட குறைந்த அதிகார வரம்பு கொண்ட ரஷ்ய பாராளுமன்றம் அமைக்கப்பட்டது.

இவ்வாறான, புதிய நிலைமைகள் ஏற்பட்டுள்ள சூழலில், மூன்றாவது மாநாடு கூடியது. மென்ஷ்விக்குகள் இந்த  மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டுமென லெனின் அவர்களை அழைத்தார். ஆனால் அவர்கள் தனியாக ஒரு மாநாடு கூட்டினர். இரண்டு மாநாடுகள், இரண்டு பார்வைகள் என்றவாறு நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த இரண்டு மாநாடுகளில் இரண்டு விதமான உத்திகள் உருவாக்கப்பட்டன.

மாநாடு முடிந்தவுடன், போல்ஷ்விக்குகள் உருவாக்கிய உத்தியை விளக்கிடவும் மென்ஷ்விக்குகளின் உத்தியை விமர்சித்தும் லெனின் “இரண்டு உத்திகள்..” நூலை எழுதினார். புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில் போல்ஷ்விக்குகள் சரியான உத்தியை உருவாக்கினர். ஆனால் மென்ஷ்விக்குகள் இதில் ஊசலாட்டத்துடன் இருந்தது மட்டுமல்ல, புரட்சியில் முதலாளித்துவம் மேலாதிக்கம் பெறவும், அவர்களின் பின்னால்வால் பிடிக்கும் வர்க்கமாக பாட்டாளி வர்க்கம் செயல்பட வேண்டுமென்றும் மென்ஷ்விக்குகள் கருதினர். இந்த வர்க்க சமரசத்தை லெனின் அம்பலப்படுத்தினார்.

நூலின் விவாதப் பொருள்:

அன்றைய ரஷ்யாவில், புரட்சி வரவிருக்கும் சூழலில், புரட்சியை சாதிப்பதற்கு, முக்கியமான சில நடைமுறைப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டியிருந்தது. அந்தப் பிரச்சனைகளை கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்தலாம்.

* ஜார் ஆட்சியை வீழ்த்துவதற்கான ஆயுதந்தாங்கிய எழுச்சியை ஏற்படுத்துவது.

* தற்காலிக புரட்சி அரசாங்கத்தை அமைப்பது.

* சமூக ஜனநாயக கட்சி  தற்காலிக அரசாங்கத்தில் பங்கேற்பது .

* விவசாயிகள் குறித்த அணுகுமுறையை தீர்மானிப்பது.

*முதலாளித்துவ வர்க்கம் பற்றிய அணுகுமுறை

இந்தப் பிரச்சனைகள் அனைத்திலும் உருவாக்கப்பட்ட தீர்மானங்களில் போல்ஷ்விக்குகளுக்கும், மென்ஷ்விக்குகளுக்கு வேறுபட்ட பார்வைகள் இருந்தன. இந்தப் பிரச்சனைகள் அனைத்திலும் மென்ஷ்விக்குகளின் சந்தர்ப்பவாத போக்குகள் வெளிப்பட்டன. லெனின் அந்தப் போக்குகளை துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளார்.

எதிர்வரும் புரட்சியின் தன்மை

அன்றைய ரஷ்ய சூழலில் நிகழுவிருக்கும் புரட்சி, முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி என்பதில் கட்சியின் இரு பிரிவினருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. லெனினும் தனது நூலில் அன்றிருந்த முதலாளித்துவ வளர்ச்சியில் சாத்தியமான புரட்சி, முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிதான் என்றும், அந்த எல்லையை உடனடியாக தாவி அடுத்த கட்டத்திற்கு செல்வது சாத்தியமில்லை என்பதையும் எழுதியிருந்தார்.

எனவே, ஜார் ஆட்சியை வீழ்த்தி, ஜனநாயகப் புரட்சியை நிகழ்த்துவது உடனடி கடமையாக அன்று இருந்தது. ஜார் ஆட்சியின் ஏதேச்சதிகார முறையிலிருந்து, ஓரளவு ஜனநாயகச் சூழல் நிலவும் கட்டத்திற்கு ரஷ்யா செல்ல வேண்டும்.

ஆனால் இந்தப் புரட்சி முதலாளிகள் உள்ளிட்ட மேல்தட்டு வர்க்கங்களின் புரட்சி அல்ல. அது மக்களின் புரட்சி. தொழிலாளிகள், விவசாயிகள் உள்ளிட்ட வெகுமக்கள் நடத்தும் புரட்சி.

இந்தப் புரட்சியின் விளைவாக அமையும் ஜனநாயக குடியரசின் முக்கியத்துவத்தை லெனின் வலியுறுத்தினார்.

“ஒன்றை நாம் மறந்துவிடக்கூடாது. சோசலிசத்தை நோக்கி நெருங்க வேண்டுமென்றால், தற்போதைய நிலையில், முழுமையான அரசியல் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் ஒரு ஜனநாயக குடியரசை அமைப்பதைத் தவிர வேறு எதுவும் வழியில்லை”

எனவே, முதலாளிகளும், உழைக்கும் வர்க்கங்களும், ஜனநாயக குடியரசை உருவாக்க வேண்டும் என்பது கட்சியின்  உத்தியாக அன்று இருந்தது.

இந்தப் புரட்சிகர மாற்றத்தில் பாட்டாளி வர்க்கம் என்ன செய்ய வேண்டும்?

மென்ஷ்விக்குகள் துரோகம்:

புரட்சியில் பாட்டாளி வர்க்கம் ஆற்ற வேண்டிய பங்கு  பற்றிய பிரச்சனையில் மென்ஷ்விக்குகளும் போல்ஷ்விக்குகளும் எதிர் எதிரான நிலை எடுத்தனர்.

எதிர்வரும் ரஷ்யப் புரட்சி முதலாளித்துவ, மேல்தட்டு புரட்சியாக இருப்பதால், ‘பாட்டாளி வர்க்கம் பெரிய பங்கினை ஆற்ற வேண்டியதில்லை; இந்தப் புரட்சியில் பாட்டாளி வர்க்கத்திற்கு பெரிய முக்கியத்துவம் எதுவும் தர வேண்டியதில்லை; புரட்சியிலிருந்து பாட்டபாளி வர்க்கம் தள்ளியே நிற்க வேண்டும்’ என்றெல்லாம் மென்ஷ்விக்குகள் வாதிட்டனர்.

இக்கருத்துக்களும், மென்ஷ்விக்குகள் நிலையும் பாட்டாளி வர்க்கத்துக்கு பெரும் துரோகம் இழைப்பதாக லெனின் விமர்சித்தார்.

லெனின் எழுதினார்.

“முதலாளித்துவப் புரட்சியிலிருந்து பாட்டாளி  வர்க்கம் தனித்து நிற்கக் கூடாது என்று மார்க்சியம் போதிக்கிறது;  அந்தப் புரட்சியை அலட்சியப்படுத்தக்கூடாது; புரட்சியின் தலைமை முதலாளிகளிடம் செல்ல பாட்டாளி வர்க்கம் அனுமதிக்கக்கூடாது; மாறாக, அந்தப் புரட்சியில் பாட்டாளி வர்க்கம் முழுச் சக்தியுடன் பங்கேற்க வேண்டும். பாட்டாளி வர்க்க ஜனநாயகம் அமைய தளர்வில்லாமல் உறுதியாகப் போராட வேண்டும். பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவப் புரட்சியில் பங்கேற்று, அதன் தலைமையை தானே மேற்கொண்டு, புரட்சியை வெற்றிக்கு கொண்டுவர வேண்டுமென்று லெனின் வாதிட்டார். ஏனென்றால், அந்த வெற்றிதான் முதலாளித்துவத்தை வீழ்த்தி, சோசலிசம் வருவதற்கான வழியைத் திறந்துவிடும்.

வெற்றி பெறும் புரட்சி, இரண்டு விதமான நிலைமைகளைத் தோற்றுவிக்கக் கூடும் என்று கருதினார் லெனின்.

1) ஜாராட்சியை வீழ்த்துவதில் புரட்சி உறுதியான வெற்றியை சாதிக்கும்; ஒரு ஜனநாயகக் குடியரசை ஏற்படுத்திடும்.

இந்த நிலைமை ஏற்படாமல் போனால், வேறு ஒரு சூழல் உருவாகக்கூடும்.

2)புரட்சி சக்திகள் போதுமான அளவிற்கு திரண்டு நிற்க முடியாமல் போகலாம். அந்த நிலைமையில், முதலாளிகள், மக்கள் நலனை காவு கொடுத்து, ஜார் மன்னனுடன் ஒரு பேரம் நடத்தி, ஒப்பந்தம் செய்துகொள்ளக் கூடும்; அரைகுறையான ஒரு அரசியலமைப்புச் சட்டம் கொண்டுவரப்படலாம். அல்லது ஒரு அரசியலமைப்பு சட்டம் போன்ற ஒரு சட்ட ஏற்பாட்டைக் கொண்டு வரலாம்” இந்த இரண்டு வாய்ப்புக்களை லெனின் கணித்தார். இந்த இரண்டில் பாட்டாளி வர்க்க நலனுக்கு உகந்தது எது? முதலில் சொல்லப்பட்ட ஜாராட்சியை உறுதியாக வீழ்ச்சி அடையச் செய்து முழுவெற்றி பெறுவதுதான். இது நடைபெற வேண்டுமென்றால், பாட்டாளி வர்க்கம் புரட்சிக்கு தலைமையேற்க வேண்டும். முதலாளி வர்க்கத்துக்கு பின்னால், வால் பிடித்து அணிவகுக்கும் வர்க்கமாக இருக்கக்கூடாது. புரட்சிப் போரில் முதலாளிகளுக்குப்பின் நிற்கும் துணைப்படையாக, கூலிப்படையாக பாட்டாளி வர்க்கம் இருக்கக்கூடாது. மக்கள் புரட்சியின் தலைவனாக உயர்ந்து, புரட்சியில் தலைமைப் பாத்திரத்தை பாட்டாளி வர்க்கம் ஆற்ற வேண்டும் என்றார் லெனின். இதனையே கட்சியின் மூன்றாவது மாநாட்டுத் தீர்மானம் வலியுறுத்தியது.

லெனினது இந்தப் பார்வை புரட்சி வரலாற்றில் ஒரு மகத்தான பங்களிப்பு. பிரெஞ்சுப் புரட்சி உள்ளிட்ட கடந்த காலப் புரட்சிகளில், பாட்ட்hளி வர்க்கம் புரட்சியில் கலந்து கொண்டு, முக்கிய பங்கினை ஆற்றினாலும், முதலாளி வர்க்கத்துக்கு தலைமைப் பாத்திரத்தை விட்டுக்கொடுத்து வந்துள்ளது. மாறாக, ரஷ்யப் புரட்சிதான் பாட்டாளி வர்க்கத் தலைமை என்ற மகத்தான கோட்பாட்டை முன்னிறுத்தி வெற்றி பெற்றது.

புரட்சியின் கூட்டாளிகள் யார்?

முதலாளிகளுக்கு வழிவிட்டு மற்ற குழுக்களும், இதர வர்க்கங்களும், கண்ணை மூடிக்கொண்டு முதலாளிகள் பின்னால் அணி வகுக்க வேண்டுமென்பது மென்ஷ்விக்குகளின் பார்வை. பாட்டாளி வர்க்கமோ, விவசாயப் பிரிவுகளோ, இதர குழுக்களோ, புரட்சியில் முக்கிய இடத்தைப் பிடித்தால், ‘முதலாளிகள் மிரட்சி அடைந்து பின்வாங்கி விடுவார்கள், அதிலும் ஆயுதந்தாங்கிய எழுச்சி நடைபெற்றால், முதலாளிகள் புரட்சியை முன்னெடுத்துச் செல்ல தயக்கம் காட்டுவார்கள்’ என்ற பாணியில் மென்ஷ்விக்குகள் வாதிட்டனர்.

இந்தக் கருத்தை லெனின் ஏற்கவில்லை. அவர்களது நலன்களை காத்திட முதலாளிகள் புரட்சியை முன்கொண்டு செல்வார்கள்; நிச்சயமாக முதலாளிகள் முக்கியப் பங்காற்றும்  புரட்சிதான், தற்போதைய ரஷ்ய கட்டமைப்பில் சாத்தியம் என்பதை போல்ஷ்விக்கும் அங்கீகரித்தனர்.

ஆனால், ஜாராட்சியை வீழ்த்த விரும்பும் அனைத்து சக்திகனையும் திரட்டி புரட்சியை நிகழ்த்தி, முன்னேறினால்தான் அடுத்த கட்டமான சோசலிசத்தை நோக்கிச் செல்ல முடியும் என்பதில் லெனினும், போல்ஷ்விக்குகளும் உறுதியாக இருந்தனர்.

ரஷ்யப் புரட்சியை நிகழ்த்த விரும்பும் சக்திகள் எவை என்பதையும், அவற்றை பாட்டாளி வர்க்கம் திரட்டிட வேண்டுமென்றும் லெனின் தனது நூலில் விரிவாக எழுதியுள்ளார். முதலில் எதிரிகள் யார் என்பதை அறிய வேண்டும்.

* சர்வாதிகாரம் ஆதிக்கம் செலுத்தும் ஜார் அரசு.

* அந்த அரசின் பக்கபலமாக இருக்கும் நீதிமன்றம்.

* காவல் துறை.

* அரசின் அதிகார வர்க்கம்

* அரசின் இராணுவம்.

* ஒரு பகுதி மேல்தட்டு வசதி படைத்த கூட்டம்

‘இந்த எதிரி வரிசை இருந்தபோதிலும், மக்களின் புரட்சி ஆவேசம் அதிகரிக்கும்போது, ராணுவத் துருப்புக்களின் ஜார் ஆட்சி மீதான விசுவாசம் தடுமாறும்; அதிகார வர்க்கமும் ஊசலாடும்’ என்பதை லெனின் சுட்டிக்காட்டுகிறார்.

முதலாளிகள் சுதந்திரத்தைப் பற்றி பேசுவதோடு, மக்களுக்கு ஆதரவாகவும், புரட்சிக்கு ஆதரவாகவும் கூட பேசி வந்தனர். ஆனால் மார்க்சிஸ்ட்கள் முதலாளிகளின் இந்தப் பேச்சுக்களின் பின்னணியாக இருக்கும் அவர்களது வர்க்க சுயநலன்களை உணர வேண்டுமென்று லெனின் அறிவுறுத்தினார்.

புரட்சிக்கான முக்கியமான பிரிவாக விவசாயிகள் உள்ளனர். பாட்டாளி வர்க்கத்தின் முக்கிய கூட்டாளியாக அவர்கள் விளங்குகின்றனர்.

விவசாயிகள் என்று பேசும் போது அன்றைய ரஷ்யாவில் இருந்த நிலவுடைமையில் சிறிதளவு நிலம் வைத்திருப்போரும், நிலமில்லாமல் பண்ணையடிமைத்தனத்தில், நிலப்பிரபுக்ககளின் அடிமைகள் போன்று வாழும் விவசாயிகள் அடங்குவர். இந்தப் பிரிவினருக்கு புரடசியில் ஊசலாட்டம் வர வாய்ப்புண்டு. எனினும் முதலாளிகளின் ஊசலாட்டத்தோடு இதனை ஒப்பிட முடியாது.

விவசாயிகள் நிலங்கள் பெருமளவுக்கு நிலப்பிரபுக்களின் கையில் குவிந்திருப்பதை விரும்பவில்லை. நிலவுடைமையை, தனி உடைமையாக உள்ள விவசாயப் பண்ணைகளையும் தகர்த்து, அந்த சொத்துக்களை தங்களது உடைமையாக மாற்றவே விரும்புகின்றனர். அவர்களை பாட்டாளி வர்க்கம் வர்க்கக் கட்சிக்கு ஆதரவாக அணி திரட்ட வேண்டும். ஏனென்றால் அவர்களது வர்க்கக் கட்சியான போல்ஷ்விக் கட்சி, நிலவுடைமை யைத் தகர்க்கும் செயல்திட்டம் கொண்டது.

ஏற்கெனவே விவசாயிகள் போரட்டக்களத்தில் உள்ளனர். 1900 லிருந்து 1904 வரை 670 விவசாயிகள் எழுச்சிப் போரட்டங்கள் நடந்தள்ளன அனைத்துவிதமான பண்ணையடிமைத்தனத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கத் தயராக இருக்கும் விவசாயிகளிடம் புரட்சி மட்டுமே இதை சாதிக்கும் என்று பாட்டாளி வர்க்கம் அவர்களுக்கு உணர்த்த வேண்டும். தொழிலாளி விவசாயி ஒற்றுமைக்கான அடித்தளம் அமைக்க அது வழிவகை செய்திடும்.

இந்த விவாதத்தின் வழியாக புரட்சியில் விவசாயிகள் உள்ளிட்ட பிரிவினைத் திரட்டி  பாட்டாளி வர்க்க மேலாண்மையை நிறுவுவது என்ற மார்க்சியக் கோட்பாட்டை லெனின் உருவாக்கி மார்க்சியத்திற்கு தத்துவப் பங்களிப்பு செய்துள்ளார். இது போன்ற புதிய தத்துவப் பங்களிப்புக்கள் இந்நூலில் உண்டு.

தற்காலிக அரசு

அந்த தற்காலிக அரசும், அரசில் கட்சி பங்கேற்பது குறித்தும் லெனின் விரிவாக எழுதியுள்ளார் ஜாராட்சியை முடிவுக்கு கொண்டு வந்த பிறகு அமையும் தாற்காலிக  அரசு, என்ன செய்ய வேண்டுமென்பதை லெனின் வரையறுத்துள்ளார்.

* அரசியல்  அமைப்பு சட்ட அவை ஒன்று அமைக்கப்பட வேண்டும்

* சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தேர்தல்கள் நடைபெற வேண்டும்.

* ஏற்கெனவே சமூக ஜனநாயக கட்சி முன்வைத்துள்ள 8 மணி நேர வேலை உள்ளிட்ட குறைந்தபட்சத் திட்டதை அமலாக்க வேண்டும்.

இதுபோன்று ஜாராட்சி வீழ்ச்சிக்குப் பிறகு வரும் அரசின் தன்மை, இலக்குகள் குறித்து லெனின் அழுத்தமாக முன்வைத்தார். ஆனால் மென்ஷ்விக்குகள் வெறும் பாரளுமன்றம் இருந்தால் போதும்; அதில் நமது கோரிக்கைகளை பேச வாய்ப்பளித்தால் போதும் என்ற நிலைபாட்டில் இருந்தனர். இந்தப் போக்கினை லெனின் வன்மையாக கண்டித்தார்.

தற்காலிக அரசு அமையும் சூழலும், அந்த அரசின் உள்ளடக்கமும் சமூக ஜனநாயக கட்சி அந்த அரசில் பங்கேற்க வேண்டிய அவசியத்தை முன்னிறுத்தின. இதனையும் லெனின் துல்லியமாக விவரிக்கின்றார். ஆனால் மென்ஷ்விக்குகள் இதனை எதிர்த்தனர். முதலாளிகள் ஆட்சியில் இருந்து அவர்களை சுதந்திரமாக செயல்பட வைக்க வேண்டுமென்று அவர்கள் வாதிட்டனர். இது அவர்களது துரோகத்தை வெளிப்படுத்தியது.

 

* * * * * *

ரஷ்ய வரலாற்றில் லெனினது நூல் முக்கிய பங்காற்றியது. 1905க்குப் பிறகு ரஷ்யாவில் பல மாற்றங்கள் நடந்தன. போல்ஷ்விக்குகள் அவ்வப்போது தங்களது  உத்தியை மாறிவரும் நிலைமைகளுக்கு ஏற்ப  செழுமைப்படுத்தி வந்துள்ளனர்.

நவம்பர் புரட்சி வரலாற்றை பயிலுகிறபோது, லெனின் தலைமையிலான ரஷ்ய கம்யூனிஸ்டுகள் தொலைநோக்கு, நடைமுறை உத்திகளை எவ்வாறு  உருவாக்கி, அமலாக்கினார்கள் என்பது மிக முக்கியமாக கற்றிட வேண்டிய பகுதி இதில் ஆழமான அறிவு பெறுவது இந்தியப் புரட்சிக்கும் உதவிடும்.

உலக வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்த புரட்சிக்கு, ஒரு நேரடி சாட்சியம் …

 

– இரா.சிந்தன்

உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் – ஜான் ரீட்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்,  விலை ரூ. 300/- 448 பக்கங்கள்.

ஜான் ரீட் ஒரு அமெரிக்கர். பத்திரிக்கையாளர், கவிஞர். அவர் ஒரு கம்யூனிஸ்டும் புரட்சியாளரும் ஆவார். 1917 ஆம் ஆண்டு நடைபெற்ற நவம்பர் புரட்சியின் நேரடி சாட்சிகளில் ஒருவராக அவரும் இருந்தார். புரட்சி வெடிப்பின் தருணத்தில் நடந்த சம்பவங்களை உள்வாங்கி, எழுதிய இந்தப் புத்தகம் ஒரு வரலாற்று ஆவணமாக விளங்குகிறது.

சோசலிசத்தை நேசித்த தம்பதியர்:

ஜான் ரீட் மற்றும் அவரது மனைவி ப்ரயாண்ட் இருவரும் 1917 ஆம் ஆண்டு ஐரோப்பா வழியாக ரஷ்யாவின் பெத்ரோ கிராடு நகரத்திற்குச் சென்றார்கள். 1918 ஆம் ஆண்டு ஜனவரியில், ப்ரயாண்ட் அமெரிக்காவுக்கு திரும்பிவிட்டார். ரீட் பின்லாந்து வழியாக பயணித்தபோது போதுமான ஆவணங்களின்றி கைதாக நேர்ந்தது. அவரது கையிலிருந்து சேகரிப்புகள் பறிக்கப்பட்டன. அமெரிக்காவுக்கு திரும்பிய ரீடும் அவரது மனைவியும், ரஷ்ய புரட்சி அரசின் மீதான படையெடுப்பை  கண்டித்து தொடர்ந்து எழுதிவந்தனர். ஜான் ரீடின் நடவடிக்கைகளை முடக்குவதை அமெரிக்க அரசு தொடர்ந்து மேற்கொண்டது.

1913 ஆம் ஆண்டிலேயே ‘தி மாசஸ்’ பத்திரிக்கையில் இணைந்த ரீட், 50 கட்டுரைகளை அதில் எழுதியுள்ளார். 1914 ஆம் ஆண்டு ஜெர்மனி – பிரான்ஸ் இடையிலான போர் அறிவிப்பை ஒட்டி அங்கு சென்றவர் ‘இது வணிகர்களின் யுத்தம்’ என்ற கட்டுரையை எழுதினார். ‘தி மாசஸ்’ இதழில் அவர் எழுதிய கட்டுரையின் தலைப்புக்காகவே ‘ராஜ துரோக’ வழக்கை சந்திக்க நேர்ந்தது. அடுத்தடுத்து பல்வேறு வழக்குகளையும், அரசுத் தாக்குதல்களையும் எதிர்கொண்டபடியே அவர் பத்திரிக்கையாளராக செயல்பட்டுவந்தார். நியூயார்க் கம்யூனிஸ்ட் இதழுக்கு ஆசிரியராக செயல்பட்டார். தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் ‘கோமிண்டர்ன்’ (கம்யூனிஸ்ட் அகிலம்) பணிகளில் ஈடுபட்டு, 1920 ஆம் ஆண்டு, ரஷ்யாவில் இருந்தபோது நோய்த் தாக்குதலுற்றார். அவருக்கு வந்திருப்பது டைபஸ் காய்ச்சல் எனக் கண்டறிந்தும் ரஷ்யா மீதான ‘பொருளாதாரத் தடை’ காரணமாக, உரிய மருந்துகளைப் பெற முடியாமல், அவர் மரணமடைந்தார். போராட்டங்கள் நிறைந்த ரீடின் வாழ்க்கை சோசலிச லட்சியத்தின்மீது கொண்டிருந்த விடாப்பிடியான உறுதியைக் காட்டுகிறது. ரீடின் இறுதி மூச்சுவரை உடனிருந்த அவரின் மனைவி ப்ரயாண்ட் பாரீஸ் நகரத்தில் 1936 ஆம் ஆண்டு வரை வாழ்ந்தார்.

ஜான் ரீடின் உடல் செஞ்சதுக்கத்தில், கிரெம்ளின் சுவரின் அருகே அடக்கம் செய்யப்பட்டது. ஜான் ரீட் இத்தகைய ‘மாபெரும் சிறப்பைப் பெறும் தகுதிபெற்றவர்’ என்று நெகிழ்ந்து தனது முன்னுரையில் பதிவு செய்கிறார் நதேழ்தா குரூப்ஸ்காயா.

பாராட்டி வரவேற்ற லெனின்:

1917 நவம்பர் மாதத்தின் புரட்சி நாட்கள் உண்மையாகவே உலகைக் குலுக்கின. வலிமை மிக்க பேரரசை வீழ்த்தி, பரந்துபட்ட ரஷ்ய நிலப்பரப்பில் பாட்டாளிகளால் ஆளுகை செலுத்த முடியும் என்பது மானுட வரலாற்றில் முதல் முறையாக நிரூபிக்கப்பட்டது.  ரஷ்ய மக்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கும் மூலதனத்தின் அழுத்தத்திற்கு உட்பட்டு, சுரண்டலுக்கு ஆட்பட்டு வந்த அனைத்து மக்களுக்கும் இந்தச் செய்தி ஒரு ஈர்ப்பைக் கொடுத்தது. அதனால்தான் லெனின், சோவியத் புரட்சி முக்கியத்துவம் பெறுவதாக குறிப்பிடுகிறார்.

ஆங்கிலப் பதிப்பிற்கு முன்னுரை எழுதியுள்ள தோழர் லெனின் நடந்த சம்பவங்களை சரியாக புரிந்து கொண்டு  எழுதப்பட்டுள்ளதைப் பாராட்டியதுடன் “பாட்டாளி வர்க்கப் புரட்சி என்றால் என்ன, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமான நிகழ்வுகளை உள்ளது உள்ளபடி, உயிர்க் களையுடன் இது விவரிக்கிறது” என்கிறார். இந்த புத்தகம் லட்சக்கணக்கில் அச்சிட்டு, பல்வேறு மொழிகளில் அனைத்து மக்களையும் அடைய வேண்டுமெனவும் அவர் விரும்பினார்.

மார்ச் முதல் நவம்பர் வரை:

உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் – ஒரு நேரடி சாட்சியின் விவரணையாகும். புரட்சிகர நிறுவனங்கள் எவ்வாறு உதயமாகின, அவற்றின் செயல்பாடுகளால் மக்கள்  ஈர்க்கப்பட்டது எவ்வாறு, அரசியல் நிர்ணயசபை கலைக்கப்பட்டு, சோவியத் அரசு அமைந்ததும், முதல் உலக யுத்தத்தில் ரஷ்ய பங்கேற்பை முடிவுக்கு கொண்டுவந்த பிரெஸ்த்-லித்தொவ்ஸ்க் அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளின் போக்கும், கள விளைவுகளும் இப்புத்தகத்தின் விளக்கப்படுகின்றன. (தொடர்ச்சியாக ஜான் ரீட் எழுதிவந்த மற்றொரு புத்தகம் முழுமையாகும் முன்பே அவர் இறந்துவிட்டார். எனவே அது வெளியாகவில்லை)

உலகை பங்கீடு செய்துகொள்வதற்கான முதல் உலக யுத்தத்தில் ஏகாதிபத்தியங்கள் முனைப்புடன் இருந்தன. இந்த யுத்தங்கள் மக்களுக்கு பேரிழப்பையே ஏற்படுத்தின. 1915 ஆம் ஆண்டிலேயே ரஷ்யாவின் உள்நாட்டு  சூழல் மிகக் கடுமையான சிதைவுகளுக்கு உள்ளாகியிருந்தது. ஊழல் மலிந்திருந்தது, பொருளாதாரச் சூழல் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது.  ஜெர்மனியுடனான போரும், பின்வாங்குதலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தின. சுமார் 18 லட்சம் பேர் கொல்லப்பட்டிருந்தனர்.  10 லட்சம் பேர் காணாமல் போயிருந்தனர். 20 லட்சம் பேர் போர்க் கைதிகளாகினர். சமாதானத்திற்கான வேட்கை மக்களிடையே நிறைந்திருந்தது.

1917 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஏற்பட்ட புரட்சியை அடுத்து (பிப்ரவரி புரட்சி), ஜார் நிக்கோலஸ் 2 ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். இருப்பினும் அதிகாரம் பாட்டாளிவர்க்கத்தின் கைகளுக்கு மாறியிருக்கவில்லை. கெரன்ஸ்கி தலைமையில் இடைக்கால அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டது. சொத்துடைமை வர்க்கங்களும் கெரன்ஸ்கியின் அமைச்சரவையையும் சேர்ந்து சோவியத்துகள், ஆலைக் குழுக்களின் அதிகாரங்களை வரம்புக்கு உட்படுத்துவதற்கு முயன்றார்கள். இதனை பாட்டாளிவர்க்கம் தங்கள் அதிகாரத்தை குறுக்கும் முயற்சியாக கண்டுகொண்டது. அத்தகைய முயற்சிகளை அனுமதிக்க மாட்டோம் என்ற அரசியல் உணர்வும், எதிர்ப்பும் அங்கே நிலவியது.

குறிப்புகளும், இணைப்புகளும்:

போல்ஷ்விக்குகள், மென்ஷ்விக்குகள், நரோத்நிக்குகள், காடெட்டுகள் என அன்று செயல்பட்ட இயக்கங்கள், சோவியத்துகள் (ஆலோசனை சபைகள்), ஆலைக் கமிட்டிகள், டூமாக்கள் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள், தலைமைக் குழுக்கள் மற்றும் பிற அமைப்புகளைக் குறித்த சிறு குறிப்புகளை ஜான் ரீட் வாசகர்களுக்கு முதலில் வழங்கிவிடுகிறார். ரஷ்ய சமுதாயத்தை நேரடியாக கண்ணுற்றிருக்காத எவருக்கும், இந்தப் புத்தகம் புரியாமல் போய் விடக் கூடாது என்ற அக்கறையுடன் அதனைச் செய்திருக்கிறார். ஜான் ரீட் கொண்டிருந்த புரிதல், கம்யூனிஸ்ட் கட்சியுடையதல்ல, ஒரு பார்வையாளராக, நேரடியாகக் கண்டவையும், திரட்டிய ஆவணங்களையும், உரையாடல்கள் வழி அறிந்தவற்றையும் வைத்து அவரே தொகுத்தவையாகும். ஒரு பேரவைக் கூட்டத்தை விளக்கினால், அதில் பங்கேற்பாளர்களிடம் காணப்பட்ட ஈடுபாட்டையும் நமக்கு காட்சிப்படுத்துகிறார். புரட்சிக்கு முன்னதாக நிலவிய விலையேற்ற சுரண்டல், பதுக்கல் நடவடிக்கைகள், டூமாவில் செயல்பட்ட பிரதிநிதிகளின் எண்ணிக்கை, கட்சிகள் பெற்ற வாக்குகளின் விபரம் போன்ற புள்ளிவிபரங்களும் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியவையாகும்.

சோவியத்துகளை நேசிக்கும் மக்கள்:

1917 செப்டம்பர் வாக்கில் நிலவிய யதார்த்தத்தைப் படம் பிடிப்பதோடு ’தொடங்குகிறது கதை’. தொழில் நகரங்களிலும், கிராமங்களிலும் ‘நிலங்கள் எல்லாம் விவசாயிகளுக்கே, ஆலைகள் எல்லாம் தொழிலாளர்களுக்கே’ என்ற ஓயாத உரையாடல் நிலவிவருகிறது. போர் அழிவுகள் முடிவுக்கு வரவேண்டும் என்ற முழக்கம் வலுக்கிறது. மிதவாதிகளோ ‘புரட்சிக்கு முடிவுகட்ட’ வேண்டுமென அழைப்பு விடுக்கின்றனர். காத்திருங்கள், டிசம்பர் மாதத்தில் அரசியல் நிர்ணயசபை கூடட்டும் என்ற பதிலை அளிக்கிறார்கள். அத்தகைய காலம்கடத்தலை மக்கள் ஏற்பதாயில்லை. போர் லட்சியங்களை மக்கள் எதிர்க்கிறார்கள். இடைக்கால அரசின் தலைவரான கெரன்ஸ்கியும், மிதவாத சோசலிஸ்டுகளும் சொத்துடைத்த வர்க்கங்களோடு கூட்டணி அரசாங்கம் நிறுவியபோது, மக்கள் அவர்களின் பால் நம்பிக்கை இழந்தனர். அந்தக் கூட்டணி சும்மாயிருக்கவில்லை.  மக்களை அடக்குமுறையின் மூலம் மெளனமாக்குவதில் தெள்ளத் தெளிவாகவே ஈடுபட்டது. அந்தக் காலகட்டத்தில் சோவியத் அமைப்புகளில் மென்ஷ்விக்குகளுக்கே செல்வாக்கு இருந்தது.

ஆனால், போல்ஷ்விக்குகள்தான்  “அனைத்து ஆட்சியதிகாரங்களும் சோவியத்துகளுக்கே” எனும் கோஷத்தை எழுப்பினார்கள். அந்த முழக்கத்தின் நியாயத்திற்கு சோவியத்துகள் செவிமடுத்தன. சோவியத் அமைப்புகளில் போல்ஷ்விக்குகளின் வலிமை அதிகரிக்கிறது. அவர்களின் முழக்கங்களுக்கு  ஆராவாரமான ஈர்ப்பு இருந்தது. மாறிவரும் நிலைமைகள் பெருமுதலாளிகளுக்கு நன்றாகவே புரிந்தன. ‘ருஷ்ய ராக்பெல்லர்’ என்று அழைக்கப்பட்ட ஸ்தெபான் கியோர்கியெவிச் லியனேவ் ‘புரட்சி ஒரு நோய் என்று பேசினார்.  உலக நாடுகளையும் எச்சரித்தார். ரஷ்ய சமுதாயத்தின் தேவையை நிறைவேற்ற வக்கற்ற முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிரான போராட்டம், ஜீவமரணப் போராட்டமாக நடந்தது.

வாதப் பிரதிவாதங்களின் களமாய் ரஷ்யா:

முதல் அத்தியாயத்தை வாசிக்கும்போதே, இந்த புத்தகம் எந்த விதத்தில் தனித்துவமானது என்பதை நாம் உணரலாம். கருத்தியலாக நடைபெற்ற போராட்டங்கள், கள அளவில் எப்படி வெளிப்பட்டன என்பதை காட்சிப்படுத்திக் காட்டுகிறார் ஜான் ரீட். பாலுக்கும், ரொட்டிக்கும், சர்க்கரைக்கும், புகையிலைக்கும் கடுங்குளிரில் நீள்வரிசையில் மக்கள் நின்றுகொண்டிருக்க, அதுகுறித்து எந்தக் கவலைகளும் இல்லாமல், சமூக மேல்தட்டு கவிஞர்களும், இலக்கியவாதிகளும் செயல்பட்டுவருகின்றனர்.

ஜெர்மனிக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான யுத்தம் எதற்கு யார் நலனுக்காக என்ற வாதப் பிரதிவாதங்கள் ராணுவத்தினரிடையே  வெளிப்படையாகவே நடக்கின்றன. 548 வது டிவிசனை சேர்ந்த ஒரு படையாள் பேசுகிறார் “நான் போர் புரிவது புரட்சியின் பாதுகாப்புக்காக என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமானால், என்னைப் பலவந்தம் செய்ய மரணதண்டனை தேவையாய் இருக்காது. நானே போய் போர்புரிவேன்.” இரண்டாம் அத்தியாயம் முழுமையும் நிறைந்திருக்கும் இத்தகைய வாதங்களும், எதிர்வாதங்களும் ‘தேசபக்தியின்’ பேரால் எல்லாவற்றையும் நியாயப்படுத்தும் ஆளும் வர்க்கத்தின் மயக்கும் சொற்பொழிவுகளை மக்கள் பிரித்துப் பார்க்கத் தொடங்கிவிட்டதைக் காட்டுகிறது. போல்ஷிவிக்குகள் மட்டுமல்ல, ஒவ்வொருவருமே தீவிரமாக இயங்குகிறார்கள். சோவியத் ‘ஆலோசனை சபைகளை’ பாதுகாக்க மக்களிடம் உறுதி தென்படுகிறது. இந்த நிலையில் ஒரு ராணுவ அதிகாரி மக்களிடம் பேசுகிறார். “இந்த போல்ஷ்விக் கிளர்ச்சியாளர்கள் வாய்வீச்சுக்காரர்கள்” என்கிறார் அவர். மேலும், “சிறிது காலத்திற்கு நாம் வர்க்கப் போராட்டத்தை மறந்தாக வேண்டும்” என்கிறார்.  “நீங்கள் விரும்புவதெல்லாம் அதுதான்” என்ற எதிர்க் குரல் வலுவாக வந்து விழுகிறது.

இடைக்கால அரசு தனது போர் லட்சியங்களில் மாற்றமில்லை என 1917 ஏப்ரலில் அறிவிக்கிறது. இதற்கு எதிராக கொந்தளிப்பு உருவாகிறது. இதைத் தொடர்ந்து மில்யுக்கோவ் ராஜினாமா செய்கிறார். சில மென்சுவிக்குகளும், சோசலிச புரட்சியாளர்களும் அரசில் இணைகின்றனர்.

1917 நாடுகடத்தப்பட்டிருந்த லெனின் ரஷ்யாவுக்குத் திரும்புகிறார். தன்னுடைய ஏப்ரல் கருத்தாய்வை உருவாக்குகிறார். அதில் லெனின் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “புரட்சியின் முதல் கட்டத்தில் முதலாளிகள் கையில் அதிகாரம் சென்றடைந்துள்ளது, இதற்குக் காரணம், ரஷ்யப் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க உணர்வு குறைவாக இருந்ததுதான். அத்துடன், அமைப்புரீதியாகத் திரள்வதில் பாட்டாளி வர்க்கத்திற்கு இருந்த பலவீனமும் அந்த நிலைமை ஏற்பட்டதற்குக் காரணம்புரட்சி இரண்டாவது கட்டத்திற்கு முன்னேறிட வேண்டும்…  பாட்டாளி வர்க்கத்திடமும்,விவசாயிகளில் மிகுந்த வறிய நிலையில் உள்ள ஏழை விவசாயிகளிடமும் அதிகாரம் சென்றடைய வேண்டும்.”

எழுச்சிக்கு உத்தரவிட்ட பாட்டாளிகள்:

1917 அக்டோபரில் எழுச்சி குறித்த விவாதத்தில் ஈடுபட்ட போல்ஷ்விக்குகளின் மத்தியக் குழுவில், அறிவுத்துறையினரில் லெனினும், ட்ராட்ஸ்கியும் எழுச்சியை ஆதரிக்கின்றனர். ஆனால் வாக்கெடுப்பில் அந்த தீர்மானம் தோல்வியடைகிறது. ஆத்திரம் தாங்கமாட்டாமல் எழுந்து நின்ற பெத்ரோகிராது தொழிலாளி ஒருவர் நாங்கள் எழுச்சியை ஆதரிக்கிறோம். நீங்கள் எப்படி வேண்டுமானாலும் செய்யலாம்என்று ஆத்திரத்துடன் எதிர்வினையாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து மீண்டும் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் எழுச்சிக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது.

நவம்பர் 3 முதல் நவம்பர் 7 வரை:

நவம்பர் 3 ஆம் தேதியே ஸ்மோல்னியில் நடைபெற்ற படையாட்களின் பொதுக் கூட்டம் ‘பெத்ரோகிராடு சோவியத்தின் கீழ் புரட்சி ராணுவக் கமிட்டி’ அமைக்கப்பட்டிருப்பதை வரவேற்று தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. ஆயுதமேந்திய கமிசார்கள் கிரோன்ஸ்வெர்கிஸ் ஆயுதச் சாலையில் இருந்து படைத் தளவாடங்களைக் கைப்பற்றினார்கள். பத்தாயிரம் துப்பாக்கிக் குத்தீட்டிகளை தடுத்து நிறுத்தினார்கள்.

நவம்பர் 4 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை, பெத்ரோகிராடு சோவியத் நடக்கும் என்று  குறிக்கப்படுகிறது. மிகப்பெரிய எண்ணிக்கையில் மக்கள் வருகையை ஏற்படுத்தி, அதன் மூலம் அதன் செல்வாக்கை உணர்த்தவே திட்டமிடுகின்றனர். அதே நாளில் சில ’கசாக்குகள்’ (கசாக்குகள் எனப்படுவோர் ரஷ்யாவில் ஊர்க் காவல், எல்லைப் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட ஒரு பிரிவு மக்கள் ஆவர்) சிலுவை ஊர்வலத்திற்கான ஏற்பாட்டைச் செய்ய விளைகிறார்கள். அப்படி நடந்தால் அங்கே உள்நாட்டுக் கலக சூழல் எழுந்திருக்கும். சிலுவை ஊர்வலத்தின் இந்த நோக்கத்தை சோவியத்து தன் அறிக்கை வாயிலாக அம்பலப்படுத்துகிறது, வலுவானதொரு எச்சரிக்கையை வெளியிடுகிறார்கள். சிலுவை ஊர்வலத்திற்கான ஏற்பாடு கைவிடப்படுகிறது. முதலாளித்துவ பத்திரிக்கைகளும் அப்போது  சோசலிஸ்டுகளுக்கு எதிரான மனநிலையை கிளறிக் கொண்டே இருந்தார்கள்.

கதவு மூடப்பட்ட ரகசியக் கூட்டத்தில் லெனின் பேசுகிறார் “நவம்பர் 6 ஆம் நாள் மட்டுமீறி  காலத்துக்கு முன்னதான நாளாகும்… நவம்பர் 8 ஆம் நாள் மட்டுமீறி காலங்கடந்ததாகிவிடும் …. நவம்பர் 7 ஆம் நாளன்றே நாம் செயலை மேற்கொண்டாக வேண்டும்… “இதோ இருக்கிறது ஆட்சியதிகாரம் ! என்ன செய்யப் போகிறீர்கள்?”

நவம்பர்  5 ஆம் தேதியிட்ட லண்டன்  டைம்ஸ் இதழ் “போல்ஷ்விசத்துக்கு மருந்து துப்பாக்கிக் குண்டுகள்தான்” என தலையங்கம் எழுதுகிறது. ருஷ்யக் குடியரசு அலுவலகத்தில் இடதுசாரிகளுக்கும், வலதுசாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடக்கிறது. நள்ளிரவில் ஒரு நாடகம் நடக்கிறது. இராணுவத் தலைமை அலுவலர் குழுவில் பெத்ரோகிராடு சோவியத்தின் பிரதிநிதியை சேர்த்துக் கொள்ள வாக்களித்தார். ஒரு மணிநேரத்தில் அதனை நிராகரித்தார் யுத்த அமைச்சர் ஜெனரல் மனிக்கோவ்ஸ்கி.

நவம்பர் 6 ஆம் தேதி பெத்ரோகிராது நகரச் சுவர்களில் காணப்பட்ட அறிவிப்பு இவ்வாறு குறிப்பிடுகிறது: “குண்டர்களையும், கறுப்பு நூற்றுவர் கிளர்ச்சிக்காரர்களையும் கைது செய்து அருகாமையில் இருக்கும் இராணுவப் பிரிவிலுள்ள சோவியத்துக் கமிசாரிடம் ஒப்படைக்கும்படி நகர மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் … ”

நவம்பர் 7 ஆம் தேதி பெத்ரோகிராடு சோவியத்தின் (ஆலோசனை சபையின்) கட்டுப்பாடு  போல்ஷ்விக்குகளின் கைக்கு வருகிறது. பெத்ரோகிராடுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த போர்க்கப்பல் அரோராவிலிருந்து குளிர்கால அரண்மனையின் மீதான தாக்குதல் தொடங்குகிறது. 140 பேர் மட்டுமே கொண்ட பெண்களின் ராணுவப் படைப்பிரிவு அரண்மனையைக் கைப்பற்றுகிறது. சுமார் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள் சரணடைகின்றனர்.

தனக்கு புரட்சியின் வெற்றிச் செய்தி எவ்வாறு வந்ததென்பதை ஜான் ரீட் குறிப்பிடுகிறார். போல்ஷ்விக்குகள் ஏடாகிய ரபோச்சி பூத் பெரிய அளவு காகிதத்தில், கொட்டை எழுத்துகளில் ஆன தலைப்புகளுடன் வெளியாகியிருக்கிறது. கைப்பற்றப்பட்ட அச்சகமாக ரூஸ்கையா வோல்யாவின் அச்சகத்தில் அது அச்சடிக்கப்பட்டுள்ளது. அதன் தலைப்பு இவ்வாறு கூறியது “அனைத்து ஆட்சியதிகாரமும் தொழிலாளர்கள், படையாட்கள், விவசாயிகளது சோவியத்துக்கே ! சமாதானம்! ரொட்டி! நிலம்!”. ஆட்சியதிகார மாற்றத்தின் பொருள் “நிலப்பிரபுத்துவக் கொடுமை அறவே ஒழிக்கப்படுவதையும், முதலாளிகளுக்கு உடனடியாய்க் கடிவாளமிடப்படுவதையும், நியாயமான சமாதானம் உடனடியாய் முன்மொழியப்படுவதையும்” குறிப்பதாக அதன் தலையங்கம் கூறியது.

புரட்சிக்கு பின்னர் எழுந்த சவால்கள்:

புரட்சிக்குப் பின்னர் உள்நாட்டு யுத்தம், பொய்ப் பிரச்சாரங்கள் என இரண்டு சவால்களை போல்ஷ்விக் புரட்சியாளர்கள் எதிர்கொள்ளவேண்டியிருந்தது. அனைத்து ருஷ்ய  சோவியத் காங்கிரஸ் கசாக்குகளுக்கு விளக்கும் வகையில் வெளியிட்டிருந்த அறிக்கை பொய்ப் பிரச்சாரங்களுக்கு பதில் கொடுக்கிறது. குறிப்பாக கசாக்குகளிடம் உள்ள நிலங்களை புரட்சி அரசாங்கம் பிடுங்கிக் கொள்ளும் என்ற பொய்ப் பிரச்சாரத்தை மறுத்த அறிக்கை இவ்வாறு தெரிவிக்கிறது: “தொழிலாளர்கள், படையாட்கள், உணர்வுபடைத்த விவசாயிகளது எல்லா நிறுவனங்களும் எங்களுடைய காங்கிரசில் பிரதிநிதித்துவம் பெற்றிருக்கின்றன. உழைக்கும் கசாக்குகளையும் இந்தக் காங்கிரஸ் தன் மத்தியில் வந்தமர வேண்டுமென விரும்புகிறது”… “பெரிய கசாக்கு நிலப்பிரபுக்களிடமிருந்து மட்டும்தான் புரட்சியானது நிலத்தைப் பறிமுதல் செய்து மக்களிடம் தரப்போகிறது”

புரட்சியின் காலத்தில் வெளியிடப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒவ்வொரு துண்டறிக்கையையும், அரசு அறிவிக்கைகளையும் ஜான் ரீட் ஆவணப்படுத்தியுள்ளார். களத்தில் அவற்றின் விளைவுகளை விவரிக்கும்போது பிரச்சாரம் என்றால் என்ன? மக்களுக்கும் அரசியலுக்கும் இடையிலான தொடர்பு எப்படி இருந்தது? ஒரு புரட்சி அரசாங்கம் தன்னை எப்படி தற்காத்துக் கொண்டு முன் சென்றது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. போல்ஷிவிக்குகள் எவ்வாறு விவாதங்களில் ஈடுபட்டார்கள், விவாதங்களை எப்படி வென்று காட்டினார்கள் என அனைத்தும் நமக்கு புரிய வருகின்றன.

மக்கள் கமிஷார் தலைவராகிறார் லெனின்:

போரிடும் எல்லா நாடுகளுக்கும் விடுக்கப்பட்ட பிரகடனம் காங்கிரசின் முன்னால் வைக்கப்படுகிறது. நிலத்தைப் பற்றிய அரசாணை வாசிக்கப்படுகிறது. தோழர் லெனின் தலைமையிலான மக்கள் கமிசார் தேர்ந்தெடுக்கப்படுகிறது. தோழர் லெனினை அவைத் தலைவராகக் கொண்ட மக்கள் கமிசாரின் பட்டியல் வாசிக்கப்படுகிறது. அத்தனை நிகழ்வுகளும் நம் கண் முன்னே விரிகின்றன. நெருக்கியடித்த கூட்டத்தில் நாமும் ஒருவராய் நின்று அந்த விவாதங்களைக் கேட்பதுபோல் தோன்றுகிறது. அங்கே புரட்சியின் ஆதரவாளர்கள் மட்டுமே பேசவில்லை. இடதுசாரி சோசலிஸ்டு புரட்சியாளர் கட்சியின் பிரதிநிதி இவ்வாறு கூறுகிறார் “சோஷலிஸ்டுக் கூட்டின் அரசாங்கத்தையன்றி வேறெந்த அரசாங்கத்தையும் நாங்கள் ஆதரித்து நிற்க இயலாது”

போல்ஷிவிக்குகளின் சார்பில் ட்ராட்ஸ்கி எழுகிறார், “எங்களது கட்சி தனிமைப்பட்டுவிடும் அபாயத்தைப் பற்றிய இந்த வாதங்கள் புதியவை அல்ல” என்று மறுக்கிறார்.  இரத்தம் ஏதும் சிந்தாமலே அரசாங்கத்தை வீழ்த்த முடிந்தது பற்றி பெருமையோடு குறிப்பிடும் அவர் இடைக்கால அரசாங்கமே தனிமைப்பட்டிருந்தது என அறுதியிட்டுக் கூறுகிறார். அந்த மேடையில் ஒரே ஒரு கூட்டு மட்டுமே சாத்தியம்.  அது “தொழிலாளர்கள், படையாட்கள், மிகவும் ஏழ்மைப்பட்ட விவசாயிகளின் கூட்டுதான்” என பிரகடனப்படுத்தப்படுகிறது.

மக்கள் அங்கீகாரத்தை வெல்வதற்கான போராட்டம்:

புதிய மக்கள் கமிசார் அவை வெளியிட்ட முதல் ஆணை அச்சிடப்பட்டு ஆயிரக்கணக்கில் நகரத் தெருக்களில் விநியோகிக்கப்படுகின்றன. ரயில்களின் வழியே எடுத்துச் செல்லப்பட்டு நாடு முழுவதும் விநியோகிக்கப்படுகிறது அந்த ஆணை.   “அரசியல் நிர்ணயச் சபைத் தேர்தல்கள் நவம்பர் 12 ஆம் தேதி நடக்கவேண்டும்” என்ற உத்தரவைப் பிரகடனம் செய்தது.  விரட்டியடிக்கப்பட்டவர்கள் சும்மாயில்லை, மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவதற்கான எல்லாப் பணிகளையும் செய்தார்கள். கசாப்புத் துருப்புகளது அரசாங்கத்தின் அதிபர் என்ற பெயரிலும் இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சர் அதிபர் உச்சப்படைத் தலைவர் கெரன்ஸ்கி என்ற பெயரிலும் ஆணைகள் வெளிவந்தன. இவையும் பல்வேறு வாதப் பிரதிவாதங்களை, விவாதங்களை ரஷ்யா முழுவதும் ஏற்படுத்தின. மரண தண்டனையை ஒழித்துக் கட்டிய தொழிலாளர், விவசாயிகளின் அரசாங்கத்தின் மீது சித்திரவதைப் படுகொலைகள் செய்வதாய் பழிசொல்லப்பட்டது. ஆனால் அவை புளுகுமூட்டைகள் என்பது அம்பலமாகியது.

புரட்சிப் போர்முனை என்ற அத்தியாயம் நவம்பர் 10 ஆம் தேதி நிகழ்வுகளைக் குறிப்பிடுவதுடன் தொடங்குகிறது. நாலாப்புறமும் வதந்தியும், விசாரிப்புகளும் இருக்கின்றன. அதே சமயம் எல்லாம் இயல்பாகவே இயங்கிவருகிறது. பத்திரிக்கைகள் அவரவர் இயக்கங்கள் சார்ந்த செய்திகளையே உண்மையைப் போல் பதிகின்றன. முதலாளித்துவ ஏடுகளைக் காணவில்லை. போல்ஷ்விக்குகளின் இதழான பிராவ்தா சோவியத் குடியரசின் நாடாளுமன்றமாய் அமைந்த இத்ஸேயிகவின் முதல் கூட்ட விபரங்களை வெளியிட்டிருந்தது. பத்திரிக்கைகளுக்கான பொது விதிகள், வீட்டு வாடகை ஒத்திவைப்பு அரசாணை, தொழிலாளர் காவல்துறையை நிறுவுவதற்கான அரசாணைகளுடன் – காலிக் குடித்தனப் பகுதிகளையும் வீடுகளையும் கைப்பற்றுவதற்கான அதிகாரமளித்தல் மற்றும் ரயில் வண்டிகளில் இருந்து அவசரத் தேவைப் பொருட்களை  விநியோகிக்க ஏற்பாடு செய்யும் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டிருந்தன.

ரீட் அடுத்தடுத்து நடந்தவைகளை விவரிக்கிறார். எதிர்ப் புரட்சியாளர்கள் மூர்க்கத்துடன் நடத்தும் தாக்குதலுக்கு எப்படியெல்லாம் சோவியத்துகள் தயாராகின என்பதை விளக்குகிறார். பெத்ரோகிராடு முற்றுகைக்கு உட்பட்டதாக புரட்சி ராணுவக் கமிட்டி அறிவிக்கிறது. எதிர்ப் புரட்சித் தாக்குதல் தொடங்குகிறது. எதிர்ப் புரட்சி சூழலை 8 வது அத்தியாயம் நம் கண் முன் நிறுத்துகிறது. அடுத்தடுத்த அத்தியாயங்கள் புரட்சியின் வெற்றி எவ்வாறு பாதுகாக்கப்பட்டது என்பதை, மோதலின் மத்தியிலிருந்தபடியே விளக்குகிறார் அவர். ஒரு அமெரிக்க பிரதிநிதியாக அடையாள சீட்டோடு பயணிக்கும் ரீட் எதிர்கொள்ளும் ஒவ்வொரு அனுபவங்களும் நம் கண் முன் எழுகின்றன.  ‘அமெரிக்கா ஏன் புரட்சியைக் குலைக்க நினைக்கிறது?’ என்ற போல்ஷ்விக் வீரனின் ஆதங்கத்தங்கத்தையும் உள்ளிட்டே ரீட் பதிவு செய்திருக்கிறார்.

கண்ணீர் மல்க நிற்கும் கொலந்தாய்:

ஆட்சியதிகாரத்தைக் கைக்கொள்ளும் போல்ஷ்விக்குகள், ருஷ்ய மக்களின் உரிமைப் பிரகடனத்தை வெளியிடுகின்றனர். அது மக்களின் சரிசமத்துவம் பற்றியும், தேசியச் சிறுபான்மைகளின் உரிமை குறித்தும் தெளிவாக அறிவிக்கிறது. தோழர் ஸ்டாலினும், லெனினும் அந்த பிரகடனத்தை வெளியிடுகிறார்கள். அமைச்சரவை நியமனம் நடக்கிறது. இன்று முதலாளித்துவ நாடுகளில் காண்பதைப் போல் ஒரு பகட்டான நிகழ்வல்ல அது. ’அலெக்சாந்திரா கொலந்தாய் நவம்பர் 13 ஆம் தேதியன்று பொது நலத்துறை கமிசாராக நியமிக்கப்பட்டார். அமைச்சகத்தின் அலுவலர்களில் 40 பேரைத் தவிர மற்றவர்கள் வேலை நிறுத்தம் செய்து அவரை ‘வரவேற்றார்கள்’. பெரிய நகரங்களைச் சேர்ந்த பஞ்சையர்கள் பட்டினியால் முகம் வாடி வதங்கி நீலம் படர்ந்துவிட்ட நிலையில் அமைச்சரக்க் கட்டிடத்தை சூழ்ந்து நிற்க, கொலந்தாய் கண்களில் நீர்ததும்ப நின்றார். தபால், தந்தி மற்றும் ரயில்வே துறைகளில் ஒத்துழையாமைச் சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.

அரசு வங்கிகளும் கூட ஒத்துழையாமையில் இறங்கின. போல்ஷ்விக்குகள் வன்முறை புரிவதாய்க் கூறி, வங்கிகளின் கதவுகளைத் தாழிட்டார்கள். மிகத் திறம்பட ஒருங்கிணைக்கப்பட்ட ஒத்துழையாமை அது. அதே சமயத்தில்  சோவியத்துகளின் இரண்டாவது காங்கிரஸ் போல்ஷ்விக்குகளுக்கு பெரும்பான்மை அளித்தது. முதலில் ஆட்சியதிகாரப் பிரச்சனைக்குத் தீர்வுகண்டவர்கள், நடைமுறை நிர்வாகப் பிரச்சனையில் கவனம் செலுத்தினார்கள். பதுக்கலுக்கு எதிரான சோதனைகள் நடந்தன. நிலக்கரி கைப்பற்றப்பட்டு ஆலைகள் இயங்குவதற்கான முயற்சிகள் தொடங்கின. பொருளாதார வாழ்வு சீர்குலைக்கப்படுவதற்கு எதிராக மக்கள் பெருந்திரளை செயலில் இறக்கினார் லெனின். ஆட்சியதிகாரத்தை மக்கள் தாமே மேற்கொள்ளவும், சொத்துடைத்த வர்க்கங்களின் எதிர்ப்பை தகர்த்திடவும், அரசாங்க நிலையங்களை கைக்குக் கொண்டுவந்துவிடவும் பிரகடனம் அறைகூவி அழைத்தது. “புரட்சிகர ஒழுங்கு, புரட்சிகர கட்டுப்பாடு, கண்டிப்பான கணக்குப் பதிவு முறை, கண்காணிப்பு! வேலை நிறுத்தங்கள் வேண்டாம்! சோம்பித்திரிதல் கூடாது!” போல்ஷ்விக்குகள் மக்களால் ஒரு ஆட்சியதிகாரத்தை நிறுவ முடியும் என்பதை நிலைநாட்டும் அனுபவங்களைப் பெற்றுவந்தார்கள்.

கடைசி அத்தியாயமான ‘விவசாயிகள் காங்கிரஸ்’ என்பதில் லெனின் பேச்சை விவரிக்கிறார் ஜான் ரீட், அவர் சாய்வு நாற்காலியைப் பிடித்துக் கொண்டு நிற்கிறார். “அவர் வேண்டாம் ஒழிக” என்ற கூச்சல் கேட்கிறது. ”உங்களுடைய அரசாங்கத்தை நாங்கள் அங்கீகரிக்கவில்லை” என்று  கூச்சலிடுகிறார்கள் விவசாயிகள். லெனின் மிக அமைதியாக, கூட்டத்தை உற்று நோக்கியபடி நிற்கிறார். “மக்கள் கமிசார் அவையின் உறுப்பினனாக இங்கு நான் வரவில்லை” என அறிவிக்கிறார். கூச்சல்  அடங்குகிறது. போல்ஷ்விக் கட்சியின் பிரதிநிதியாகவே தன்னைப் பார்க்குமாறு சொல்கிறார்.  அதே சமயம் மக்கள் கமிசார் போல்ஷ்விக்குகளால் அறிவிக்கப்பட்டதுதான் என்பதை அவர் மறுக்கவில்லை.

தெளிவான, மிக எளிமையான வாதங்களின் மூலம் போல்ஷ்விக் நிலைப்பாட்டை விளக்குகிறார். கடுமையான வாதப் பிரதிவாதங்களின் மூலம் ஒவ்வொரு தீர்மானமும் திருத்தப்பட்டு, ஏற்கப்பட்டு, விவாதங்கள் நீண்டுகொண்டே செல்கின்றன. நிலப்பிரச்சனை குறித்து, சோவியத் குறித்து, ஆலைகள் குறித்து காங்கிரஸ் விவாதிக்கிறது.

கட்சியின் முக்கியத்துவம்:

இத்தகைய சூழலில் கட்சியின் முக்கியத்துவம் என்ன என்பதை லெனின் குறிப்பிடுகிறார். “சோசலிஸ்டு அரசியல் கட்சியானது தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப்படையாகும். மக்கள் பெருந்திரளினரது சராசரிக் கல்வி நிலையின் பற்றாக்குறை தன்னை தடுத்து நிறுத்துவதற்கு கட்சி இடந்தரலாகாது. இதற்கு மாறாக இந்தக் கட்சி சோவியத்துகளை புரட்சிகர முன் முயற்சிக்கான செயல் உறுப்புகளாக பயன்படுத்தி மக்கள் பெருந்திரளினருக்குத் தலைமைதாங்கி அழைத்துச் செல்ல வேண்டும்… ஆனால் தயங்குவோருக்கு தலைமைதாங்கி அழைத்துச் செல்லவேண்டுமென்றால் இடதுசாரி சோசலிஸ்டு புரட்சியாளர்கள் முதலில் தமது தயக்கத்திற்கு முடிவுகட்டிக் கொண்டாக வேண்டும்”

நவம்பர் 29 விவசாயிகளின் சிறப்பு அமர்வு தொடங்கியது. குதூகல மனப்பான்மையும், புன் சிரிப்பும் பளிச்சிட்டதை ரீட் பதிவு செய்கிறார். விவசாயிகளின் சோவியத்துகளுக்கும், படையாட்கள் மற்றும் தொழிலாளர்களது சோவியத்துக்கும் இடையிலான ”வாழ்க்கை ஒப்பந்தம்” பற்றிய அறிக்கையை நந்தன் சோன் என்ற முதியவர் வாசிக்கிறார். அவர் குரல் கரகரக்கிறது, கண்களில் நீர் ததும்புகிறது.

நீங்கள் எத்தனையோ புத்தகங்களை வாசித்திருக்கலாம். ஆனாலும், இந்தப் புத்தகத்தை தவறவிடாதீர்கள். புரட்சியைக் குறித்தும், கட்சி ஸ்தாபனம் குறித்தும் நமக்கு எத்தனையோ நுணுக்கங்கள் தெரிந்திருந்தாலும் கூட, நம்மால் உணர முடியாததொரு பயணத்தை, புரட்சிக் கொதிகலனில், சமூகத்தின் ஒவ்வொரு துகளும் எப்படி ஒன்றோடொன்று மோதிக் கொள்ளும் என்ற நேரடி தரிசனத்தை இது கொடுக்கிறது. அரசியல் உணர்வுபெற்ற மக்களும், மக்கள் நலன்களை உள்வாங்கித் தெளிந்த அரசியல் இயக்கமும் எப்படி ஒன்றோடொன்று இயல்பாக, இணங்கிப் பயணிக்க முடியும் என வரலாற்றில் ஒரு மாபெரும் மானுட வெற்றியின் ஊடாக நின்றுகொண்டு நமக்கு விளக்குகிறது.

 

சோவியத் புரட்சியை சாத்தியமாக்கிய போல்ஷ்விக் கட்சி வரலாறு

– ஜி.செல்வா

1903-ல் குறைந்த எண்ணிக்கையில் தலை மறைவு புரட்சிக் குழுக்களாக இருந்த இயக்கம், ஆயிரக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக 1912-ல் உருவெடுக்கிறது. 1917-ல் சோசலிசப் புரட்சியை தலைமைதாங்கி வழி நடத்த 3 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக பல்கிப் பெருகுகிறது. அதுதான் ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷ்விக்).

“புரட்சிகளின் நூற்றாண்டாக” இருபதாம் நூற்றாண்டை மாற்றி ரஷ்யாவில் புரட்சியை நடத்தி, சோசலிசப் பாதைக்கு அடித்தளமிட்டு, உலக மெல்லாம் பாட்டாளி வர்க்க கருத்துக்கள் வெடித்து எழும்ப வித்திட்டது ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி. இதன் வரலாற்றை மிகக் கச்சிதமாக மார்க்சிய, லெனினிய சித்தாந்தப் பார்வையில், எழுதப்பட்ட புத்தகம்தான் சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு என்னும் நூல்.

நூல் உருவானப் பின்னணி
உலக மக்களுக்கு ஆதர்ஷ சக்தியாக சோசலி சப் பாதையில் சோவியத் யூனியன் முன்னேறிக் கொண்டிருந்த காலம். அப்போது சோசலிச கட்டு மானத்தைத் துரிதப்படுத்துவதில் ஏற்பட்ட அளவிடற்கரிய பிரச்சனைகள், சோவியத் யூனியன் எதிர்கொண்ட அபாயங்கள் மற்றும் சவால்களால் கட்சி ஊழியர்களுக்கு தத்துவார்த்த, அரசியல் பயிற்சி அளிப்பது முக்கியத்துவம் பெற்றது.

மார்க்சிய – லெனினிய அடிப்படை ஞானத்தில் தேர்ச்சி பெற்று அதனை சோசலிச கட்டுமானத் தில் முறையாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலுவாக வலியுறுத்திய ஸ்டாலின் “அனைத்து நடைமுறைப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதற்குத் தேவையானது கட்சி ஊழியர் களுக்கு சித்தாந்தப் பயிற்சி அளிப்பதும் அவர் களை அரசியல் ரீதியில் பயிற்றுவித்து வலுப் படுத்துவதும்தான்” எனக் கருதினார்.
இதற்கு உதவியாய் கட்சி வரலாற்றை சொல்லித் தரும் வகையில் புத்தகம் எழுதுவதற்கு ஸ்டாலின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. 1937ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அக்குழுவினர் எழுதியதை அரசியல் தலைமைக் குழு சரிபார்த்து கொடுத்தது. அதன் ஆலோசனைகளை ஏற்று அடுத்த நான்கு மாதங்களில் மேம்படுத்தப்பட்டு புத்தகமாக உருவெடுத்தது. இப்புத்தகம் 1938 ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 50 லட்சம் பிரதி கள் வெளியான பிராவ்தா கட்சி நாளிதழில் தொடராக வெளியிடப்படுகிறது. 1938 ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு என்ற நூலாக வெளியிடப்படுகிறது. அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டும் என்பதற்காக மிகக் குறைவாக விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

1939 மே மாதத்தில் இந்நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு அமெரிக்காவில் மட்டும் ஒரு லட்சம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு 3 மாதத்திற் குள் 70,000 பிரதிகள் விற்பனை ஆயின. அதே காலகட்டத்தில் 28 மொழிகளில் மொழிபெயர்க் கப்பட்டுள்ளது. 1953க்குள் ரஷ்யாவில் மட்டும் 301 முறை பதிப்பிக்கப்பட்டு 42,82,60,000 புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன.

1947 ஜனவரி மாதம், ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினராக இருந்த வரும், சமரன் பத்திரிகையின் ஆசியரிரும், ஜூலியஸ் பூசிக்கின் தூக்கு மேடைக் குறிப்பு நூலை தமிழில் மொழி பெயர்த்தவருமான எம்.இஸ்மத் பாஷாவால் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இதன் இரண்டாவது பதிப்பு 1979 டிசம்பர் மாதம் ஸ்டா லின் நூற்றாண்டு விழாவின்போது சென்னை புக் ஹவுஸ் வெளியிட்டுள்ளது. நவம்பர் புரட்சி நூற்றாண்டினை முன்னிட்டு பாரதி புத்தகாலயம் இந்நூலினை மீண்டும் பதிப்பித்துள்ளது.

1883 முதல் 1937ஆம் ஆண்டு வரையிலான வரலாறு சுமார் 600 பக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நூலின் மையக் கருவாக விளங்கும் கருத்துக் களை இக்கட்டுரையில் சுருக்கமாகப் பார்க்கலாம்.

கரு உருமாறி வெளியேறும் காலக்கட்டம்
புரட்சியாளர் லெனின், அரசியல் தளத்திற்கு வருவதற்கு முன்பாகவே, ரஷ்ய தேசத்தில் உழைக் கும் மக்களுக்கான போராட்ட அமைப்புகள் தொடங்கப்பட்டு விட்டன. ஜார் ஆட்சியின் கொடுமைக்கும்,சுரண்டலுக்கும் உள்ளாகியிருந்த மக்கள் வெடித்துக் கிளம்பினர்.அதே காலக் கட்டத்தில் ரஷ்யாவின் நகரங்களில் மட்டுமல்லா மல், கிராமங்களிலும் தொழிற்சாலைகள் அமைந் ததால் முதலாளித்துவம் வளர்ச்சியடையத் தொடங்கி இருந்தது.

1875-ல் தென் ரஷ்ய தொழிலாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அது ஒன்பது மாதங் களுக்குள் ஆட்சியாளர்களால் நிர்மூலமாக்கப் படுகிறது. 1878-ல் வட ரஷ்ய தொழிலாளர் சங்கத்தை ஒரு தச்சுத் தொழிலாளியும், பிட்டரும் இணைந்து உருவாக்குகின்றனர். இப்படிப்பட்ட அமைப்புகள் உருவானது குறித்தும், உருவாக் கியவர்கள் குறித்தும் மிகச் சுவையான செய்திகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. 1881-1886 கால கட்டங்களில் மட்டும் 48 வேலை நிறுத்தங்கள் நடந்துள்ளன. இதில் 80 ஆயிரம் தொழிலாளர் கள் பங்கேற்றுள்ளனர்.
ரஷ்யாவில் முதல் மார்க்சிஸ்ட் குழு 1883-ல் ஜி.வி.பிளக்கனோவ் தலைமையில் ‘தொழிலாளர் விடுதலைக்குழு’ என்ற பெயரில் அமைக்கப் படுகிறது. இவ்வமைப்பு மார்க்ஸ், ஏங்கல்ஸ் நூல்களை ரஷ்ய மொழியில் வெளியிடுகிறது. கம்யூனிஸ்ட் அறிக்கை, கூலி உழைப்பும் மூலதன மும், கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் ஆகிய நூல்களை வெளிநாடுகளில் அச்சடித்து, ரஷ்ய நாட்டு தொழிலாளிகளிடம் விநியோகிக்கின்றனர்.
இக்காலக் கட்டத்தில் ‘நரோத்னிக்’ என்ற அமைப்பினரும், பிளக்கனோவும் நிகழ்த்திய சித்தாந்தப் போராட்டம் மிக முக்கியமானது. நரோத்னிக் என்ற ரஷ்ய வார்த்தையின் பொருள் மக்களிடம் செல்வது. புரட்சிகர எண்ணம் கொண்ட படித்த இளைஞர்கள் இந்த அமைப் பில் சேர ஆரம்பித்தனர். இவர்கள் ரஷ்யாவில் தற்செயலான நிகழ்வுப் போக்குதான் முதலாளித் துவம். எனவே, இது வளராது என்றும், கிராமப் புற விவசாயிகள் தான் புரட்சிகரமானவர்கள், தனிச்சிறப்பு வாய்ந்த தனி நபர்களால்தான் சரித்திரம் உருவாக்கப்படுகிறது என்றும் கருதினர்.

இவர்களுக்கு எதிராக பிளக்கனோவும், அவரைத் தொடர்ந்து லெனினும் நடத்திய உரையாடல், எழுத்துக்கள் மிக விரிவாக இந்நூலில் கொடுக் கப்பட்டுள்ளது. இதே பிளக்கனோவ், எதிர் காலத்தில் லெனினின் கருத்துக்கு எதிர்திசைக்கு சென்றார். இருந்தாலும் அவரது பங்களிப்பு இந்நூலில் உரிய முறையில் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. பிளக்கனோவ் 1895-ல் வெளியிட்ட சரித்திரத்தின் ஒருமைவாத வளர்ச்சியைப் பற்றி என்ற புத்தகம் “ரஷ்ய மார்க்சிஸ்டுகளின் ஒரு தலைமுறை முழுவதையும் அறிவியல் பக்குவப் படுத்த பணிபுரிந்தது” என லெனின் கூறியுள்ளார்.

தத்துவ அடிப்படையில் தொழிலாளி வர்க்க இயக்கத்தைக் கட்ட முதல் வேலையைச் செய்தது தொழிலாளர் விடுதலைக் குழு என லெனின் புகழாரம் சூட்டியுள்ளார். எனவேதான் அக்கால கட்டத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வளர்ச் சியை கரு உருமாறி வெளியேறும் வளர்ச்சியில் இருந்ததாக லெனின் கூறினார்.

புரட்சிகர தத்துவம் ; புரட்சிகர இயக்கம்
புரட்சிகரமான தத்துவம் என்றால் என்ன? புரட்சிகரமான இயக்கம் என்றால் என்ன? தத்துவத்திற்கும்,நடைமுறைகளுக்குமான தொடர்பு எப்படி இருக்க வேண்டும்? இப்படி யான கேள்விகளுக்கு ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி வரலாறும், அதில் லெனினும் அவர்தம் தோழர் களின் எழுத்துகளும், செயல்பாடுகளுமே நமக்கு விடையாக அமையும்.
லெனின் என்னும் மனிதரின் ஆளுமையும், அவர் புரட்சிகர இயக்கத்தில் இணைந்த பிறகு ஏற்பட்ட மாற்றங்களும், மிக விரிவாக இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது.
மார்க்சைப் பற்றி அவர் தெரிந்து கொண்டிருந்த அசாதாரணமான விஷய ஞானம், அன்றைய ரஷ்யாவில் நிலவிய அரசியல், பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்றவாறு மார்க்சியத்தைப் பொருத்திக் காண்பிப்பதில் அவருக்கிருந்த திறமை, தொழிலாளர்களின் லட்சியம், நிச்சயம் வெற்றிய டையும் என்பதில் அவருக்கிருந்த அசைக்க முடி யாத நம்பிக்கை, அமைப்புகளை உருவாக்குவதில் அவர் காட்டிய தனிச்சிறப்பு வாய்ந்த ஆற்றல் ஆகியவையெல்லாம் லெனினை செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மார்க்சிஸ்டுகள் அனைவராலும் மனப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்ட தலைவ ராக ஏற்கச் செய்தன.

1898-ல் ரஷ்ய சமூக ஜனநாயக தொழிற் கட்சி முதல் மாநாட்டில் 9 பேர் தான் பங்கு கொண் டனர். அப்போது லெனின் நாடு கடத்தப்பட்டு சைபீரியாவில் இருந்ததால் பங்கெடுக்க முடிய வில்லை.இம்மாநாட்டிலிருந்துதான் ரஷ்ய கம்யூ னிஸ்ட் கட்சியின் வரலாறு கூறப்பட்டுள்ளது.
நரோத்னிக்குள் மற்றும் பொருளாதாரவாதிகள் அதாவது பொருளாதார கோரிக்கைகளுக் காக நடத்தப்படும் போராட்டங்களில் மட்டும் தான் தொழிலாளர்கள் ஈடுபட வேண்டும் என விடாப்பிடியாக கருதும் குழுவினர். இவர்களின் கருத்தோட்டத்திற்கு எதிராக லெனின் நடத்திய சித்தாந்தப் போராட்டம் மிகத் தெளிவாக நூலில் சொல்லப்பட்டுள்ளது. லெனினது மிக முக்கியப் படைப்பான ரஷ்யாவில் முதலாளித் துவ வளர்ச்சி நூலிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள கருத்துகள் கம்யூனிஸ்ட்களுக்கு மிக தேவையான ஒன்றே. வேதனை என்னவெனில் இதுவரை தமிழில் வெளிவரவில்லை.

லெனின் எழுதுகிறார் “உடனடியாக நிறை வேற்ற வேண்டிய வேலையை நம்முன் இன்று சரித்திரம் வைத்திருக்கிறது. இந்த உடனடியான வேலை மிகமிகப் புரட்சிகரமானது. மற்ற நாட்டு பாட்டாளிகளின் முன் நிற்கின்ற உடனடியான வேலைகள் யாவற்றையும் விட மிகவும் புரட்சி கரமான வேலையாகும். இந்த வேலையைச் செய்து முடித்தால், ஐரோப்பிய பிற்போக்கிற்கு மட்டுமல்லாமல் ஆசியாவின் பிற்போக்கிற்கும் மிகவும் வலுவான கோட்டையாக திகழும் ஜார் ஆட்சியை அழித்து ஒழிப்பதால், புரட்சிகரமான சர்வதேசப்பாட்டாளி வர்க்கத்துக்கு ரஷ்ய பாட்டாளி வர்க்கம் முன்னணிப்படையாக ஆகும்.” எவ்வளவு தீர்க்கமான, தெளிவான பார்வை. அதை நோக்கி லெனின் நடத்திய பயணம்தான் கற்க வேண்டிய பாடம்.

கட்சி அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என உலக கம்யூனிச இயக்கத்துக்கு வலுவான கருத் தியலை கொடுத்தது மட்டுமல்லாமல் நடைமுறைப் படுத்தியும் காண்பித்தவர் லெனின். கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபன செயல்பாடுகளை கொச்சை யாக, கேலியாக, விஷமத்தனமாக இன்றும் அதி கார வர்க்கத்தினர் எழுதியும், பேசியும் வருகின் றனர். சில நேரங்களில் இக்கருத்துக்கள் கம்யூனிஸ்ட் ஊழியர்களிடத்தும் செல்வாக்கு செலுத்தும்.

புரட்சி நடத்த வேண்டுமானால் புரட்சிகர இயக்கம், அதாவது கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்பட வேண்டும். அது எப்படி இருக்க வேண்டும், எப்படி கட்ட வேண்டும் என்பதற்கு இந்நூலில் உள்ள விசயங்கள் இன்றும் நமக்கு வழிகாட்டும்.
கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடைபெற்ற கருத்தி யல் ரீதியான போராட்டம் இரண்டு குழுக்களா கப் பிளவுபட நேர்ந்தது. லெனினைப் பின்பற்றிய வர்கள் போல்ஷ்விக்குகள் (அதாவது பெரும் பான்மை உறுப்பினர்கள் என்ற அர்த்தத்தில்) என்றும், எண்ணிக்கையில் குறைவாக இருந்தவர் கள் மென்ஷ்விக்குகள் எனவும் அழைக்கப்பட்டனர்.

போல்ஷ்விக்குகளுக்கும், மென்ஷ்விக்குகளுக் கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலின் காரணங்கள், அக்காலகட்டத்தில் லெனின் எழுதிய நூல்களிலிருந்து பல்வேறு கருத்துக்கள் இந்நூலில் எடுத்தாளப்பட்டுள்ளது.

ரஷ்ய நாட்டிற்குள் மட்டும் இக்கருத்துப் போராட்டத்தை லெனின் நடத்தவில்லை. மேற்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்த சமூக ஜனநாயக கட்சிகளுடனும் சித்தாந்தப் போராட்டத்தை நடத்தி வந்தார். ஏங்கெல்ஸ் காலமான பிறகு மேற்கு ஐரோப்பிய சமூக ஜனநாயகக் கட்சிகள் சீரழிந்து போனதை போல்ஷ்விக்குகள் பார்த் தனர். ஏங்கெல்ஸ் காலத்தில் சமூகப் புரட்சிகர கட்சிகளாக இருந்த இயக்கங்கள் சமூக சீர்திருத் தக் கட்சிகளாக மாறி சீரழிந்து போயின. அவை ஒவ்வொன்றும் அமைப்பு ரீதியில், அந்தக் கட்சி யின் நாடாளுமன்ற சந்தர்ப்பவாதக் குழுக்களு டைய தொங்கு சதையாக ஏற்கனவே மாற்றப் பட்டு விட்டன. அத்தகைய கட்சிகளால் பாட்டாளி களுக்குப் பயன் எதுவும் இல்லை. தொழிலாளி வர்க்கத்தை அக்கட்சிகளால் வழிகாட்டி புரட் சியை நோக்கி அழைத்துச் செல்ல முடியாது என்பதை போல்ஷ்விக்குகள் தெளிவாக உணர்ந்தனர்.

உண்மையான மார்க்சியக் கட்சியை பெற்றி ருக்க விரும்புகிற எல்லோருக்கும் ஒரு உதாரண மாகத் திகழும் புதிய கட்சியை, போல்ஷ்விக் கட்சியைப் படைப்பதற்கு போல்ஷ்விக்குகள் விரும்பினார்கள். என்ன நேர்ந்தபோதிலும், எத்தகைய கஷ்டங்கள் வந்தபோதிலும் மனம் தளராமல் உறுதியுடன் விடாப்பிடியாக உழைத்து வந்தனர்.

இந்த வேலையில் லெனினுடைய நூல்கள் கட்சிக்கு மிகவும் அடிப்படையான – செல்நெறியை நிர்ணயிக்கும்படியான பங்கு வகித்தன. லெனின் எழுதிய என்ன செய்ய வேண்டும்? என்ற நூல் தான் அதற்கு அவசியமான கருத்தையும், கண்ணோட்டத் தையும் கொடுத்து தயாரிப்பு செய்தது. லெனின் எழுதிய ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்ற நூல்தான் அத்தகைய கட்சிக்கு அமைப்பு ரீதியான தயாரிப்பாக இருந்தது. லெனின் எழுதிய, ஜன நாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரு நடைமுறை உத்திகள் என்ற புத்தகம்தான் அரசியல் ரீதியான தயாரிப்பாக இருந்தது. லெனின் எழுதிய பொருள் முதல்வாதமும், அனுபவவாத விமர்சனமும் என்ற புத்தகம் கட்சிக்குத் தத்துவ ரீதியான அடித்தளமாக இருந்தது.

இப்படியாக கட்டப்பட்ட கட்சி புரட்சிக்கு மட்டுமல்ல, புரட்சிக்குப் பின்னரும் சோசலிசப் பாதை நோக்கி, இயந்திர தொழில்மயமாக்கு வதற்கு சோவியத் ஆட்சி மேற்கொண்ட அனைத் திற்கும் உதவிகரமாக இருந்ததுதான் இந்நூலின் வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

புரட்சி… புரட்சி… புரட்சி…
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறே மூன்று புரட்சிகளின் வரலாறுதான். 1. 1905ஆம் ஆண்டு நடந்த முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி 2. 1917 மார்ச்சில் நடைபெற்ற முதலாளித் துவ ஜனநாயகப் புரட்சி 3. 1917-ல் நடைபெற்ற நவம்பர் சோசலிஸ்ட் புரட்சி. எப்படி இத்தகைய புரட்சிகள் சாத்தியமாயின?
எங்கள் தேவை
துண்டுத் துணி அல்ல;
முழு ஆடை
பருக்கைகளல்ல
முழுச் சாப்பாடு
ஒரு வேலை மட்டுமல்ல;முழுத் தொழிற்சாலையும் எங்களுக்குத் தேவை.

நிலக்கரி, தாதுப்பொருள், உலோகக் கரி
அத்தனையும் எங்களுக்குத் தேவை
எல்லாவற்றுக்கும் மேலாக
நாட்டின் ஆளும் அதிகாரமும்
எங்களுக்குத் தேவை
நல்லது
இவ்வளவும் எங்களுக்குத் தேவை
ஆனால்
நீங்கள் கொடுப்பது என்ன?

இது பிரக்டின் கவிதை வரிகள். இக்கவிதை வரிகளின் சாராம்சம்தான் மூன்று புரட்சிகளின் போதும் ரஷ்ய தொழிலாளிகளுக்கும், விவசாயி களுக்கும் ஜார் ஆட்சியை நோக்கிய, அதிகார வர்க்கத்தை நோக்கிய உணர்வுமிக்க முழக்கங் களாக மாறின.

ரஷ்ய தேசத்தின் வளர்ச்சியில் ஒரு சரித்திரப் பூர்வமான கட்டம் முழுவதையும் முதல் ரஷ்யப் புரட்சி (1905) குறித்தது.
இப்புரட்சி மக்களின் பரம விரோதி ஜார் ஆட்சி என்றும், முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்குத் தலைமை தாங்குவதாக தொழிலாளி வர்க்கம் மட்டும்தான் இருக்க முடியும். ஊசலா டியபோதும் பாடுபடும் விவசாய வர்க்கம் தான் தொழிலாளி வர்க்கத்துடன் கூட்டுறவை ஏற்படுத் திக் கொள்ளத்தக்க முக்கியமான சக்தி என்பதும் நிரூபணமாயிற்று.

புரட்சியை குலைத்துக் கலைத்துவிடுவதை மென்ஷ்விக்குகள் தங்கள் பாதையாக கருதினர். எழுச்சியின் மூலம் ஜார் ஆட்சியை வீழ்த்துவதற் குப் பதில் அதை சீர்படுத்துவது எனக் கூறினர். இவ்விதம் சமரச சகதியில் மென்ஷ்விக்குகள் சிக் கினர். கட்சியிலும் தேசத்திலும் ஒரே ஒரு புரட்சி கரமான மார்க்சிஸ்ட் சக்தி, போல்ஷ்விக்கு கள்தான் என நிரூபிக்கப்பட்டது.

இப்புரட்சி தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து 1908 முதல் 1912ஆம் ஆண்டு வரை மிக நெருக்கடியான காலக்கட்டத்தில் புரட்சிக் கான வேலை செய்வது கடினமானதாக மாறியது. இந்தச் சூழல்களுக்கு ஏற்றாற்போல் போல்ஷ் விக்குகள் நடைமுறை உத்திகளை மாற்றினர்.
சட்ட விரோதமான நடவடிக்கைகளையும், சட்டப்பூர்வமான செயல்பாடுகளையும் திறமை யாக இணைத்தனர். கட்சி விரோதமான பேர் வழிகளுக்கு எதிராக பிளக்கனோவ் உடன் சேர்ந்து தற்காலிக அணியை லெனின் அமைத் தார். இது கட்சிக்கு சாதகமாகவும், கட்சி விரோ திகளுக்கு பாதகமாகவும் இருக்க வேண்டும் என்பதே அடிப்படை.
இந்த நடைமுறை உத்தி எப்படி போல்ஷ் விக்குகளின் புரட்சிப் பணிக்கு சாத்தியமாயிற்று என்பதை நூலை வாசிக்கும்போது தெளிவாக உணரலாம். பத்திரிகைக்கு சந்தா சேர்ப்பு இயக் கம், தொழிலாளர் தொகுதியில் வெற்றி பெறு தல், சங்கத் தேர்வுகளில் பெற்ற வாக்குகள் என தொடர்ந்தது போல்ஷ்விக்குகளின் வெற்றிப் பயணம்.

முதலாவது உலக யுத்தம் தொடங்குவதற்கு முன்பே, லெனின் தலைமையிலான போல்ஷ்விக் குகள் அதை உணர்ந்தனர். “யுத்தம் என்பது முதலாளித்துவத்துடன் இரண்டறக் கலந்து நிற்கிற தவிர்க்க முடியாத விளைவு” என்று லெனின் சுட்டிக் காட்டினார். யுத்தத்திற்கு எதிராக எத்தகைய நிலைபாடுகளை மேற்கொள்ள வேண்டுமென லெனின் எழுதியும், பேசியும் வந்தார். சமாதானம் நிலவ வேண்டும் என்ற லட்சியத்துடன், பாட்டாளி வர்க்கப் புரட்சி வெற்றியடைய வேண்டும் என்ற லட்சியத்தைப் போல்ஷ்விக்குகள் இணைத்தனர். இந்த காலக்கட்டத்தில்தான் 1916-ல் லெனின் எழுதிய நூல் ஏகாதிபத்தியம் : முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம். இந்நூல் உலகத் தொழிலாளி வர்க்க இயக்கத்துக்கு லெனின் வழங்கிய அறிவுக் கருகூலம். இதன் வாயிலாக மார்க்சியத்தை லெனின் வளர்த்தெடுத்த நிகழ்வும் நடந்தேறியது. அதேபோல் இந்த யுத்த காலத்தின்போது லெனின் எழுதிய எழுத்துக்கள், இப்புத்தகத்தில் மேற்கோள்களாகத் தரப்பட்டுள்ளன.

ஏகாதிபத்தியம் குறித்து லெனின் ஆய்வு செய்த பல்வேறு விசயங்களை சுட்டிக்காட்டுகிறது இந்நூல். தனியாக ஒரு தேசத்தை மட்டும் எடுத்துக் கொண்டால், தனிதேசத்தில் சோசலி சம் வெற்றியடைய முடியாது என்றும், நாகரிகத் தில் முதிர்ந்த சகல தேசங்களிலும் ஒரே சமயத் தில்தான் அது வெற்றியடையும் என்றும் அக்காலத் திய மார்க்சிஸ்டுகள் சிலர் கருதினர். ஆனால், “லெனினோ ஏகாதிபத்திய முதலாளித்துவத் தைப் பற்றிய உண்மையான புள்ளி விவரங்களை ஆதாரமாகக் கொண்டு பழைய கருத்துக்கு மாறாக புதிய கருத்தை வளர்த்தெடுத்தார். இதன் படி ஒரே சமயத்தில் எல்லா தேசங்களிலும் சோசலி சம் வெற்றியடைவது என்பது அசாத்தியம். தனியான ஒரு முதலாளித்துவ நாட்டில் சோசலிசம் வெற்றியடைவதும் சாத்தியமே!” என்றார்.

இதுதான் யுத்தம், சமாதானம், புரட்சி ஆகிய வற்றைப் பற்றிய பிரச்சனைகளில் போல்ஷ்விக் குகள் கைக்கொண்ட தத்துவமும், நடைமுறை உத்தியுமாகும். இந்தக் கொள்கைகளை கொண்டு தான் ரஷ்யாவில் நடைமுறை வேலைகளை போல்ஷ்விக்குகள் நிறைவேற்றினர்.
விளைவு போல்ஷ்விக்குகள் மார்ச் மாத இரண்டா வது புரட்சியில் ஜனநாயகப் புரட்சியில் வெற்றி பெற்றனர். இதை நூலின் வாயிலாக வாசிக்க வாசிக்க புரட்சிகர உணர்வுகளும், சிந்தனைகளும் பெருக்கெடுத்து வருவதை வாசகரால் உணர முடியும்.

இதைத் தொடர்ந்து தற்காலிக அரசாங்கம் அமைந்தவுடன், அதில் பங்கு பெறவும் மந்திரி பதவிகள் பெறவும் மென்ஷ்விக்குகள் உள்ளிட்ட குழுவினர் வாய் பிளந்து காத்துக் கிடக்க, லெனினோ சோசலிசப் புரட்சியை நோக்கி களத்தை விரிவு படுத்தினார்.

முதலாளித்துவ புரட்சிகர கட்டத்திலிருந்து சோசலிசப் புரட்சிக் கட்டத்திற்கு முன்னேறி செல்வதற்கு கட்சிக்கும், பாட்டாளி வர்க்கத்திற் கும் வழிகாட்டினார். அது ஏப்ரல் கொள்கை என்ற நூலின் வழியாக நடந்தேறியது. மாறும் சூழல்களை மிக லாவகமாக உணர்ந்து, மார்க்சிய பகுப்பாய்வில் வர்க்கங்களின் நிலை அறிந்து வழி காட்டிய லெனின் நமக்குப் பேராசானாகத் திகழ்கிறார்.

போல்ஷ்விக் கட்சியினால் வழிகாட்டப்பட்டு ஏழை விவசாயிகளுடன் கூட்டுறவு ஏற்படுத்திக் கொண்டு, ராணுவ வீரர்கள், கடற்படையினரின் ஆதரவையும் பெற்று, முதலாளிகளுடைய அதி காரத்தை தொழிலாளி வர்க்கம் அடியோடு வீழ்த்தியது. “நவம்பர் 7 சோசலிசப் புரட்சி” முதலாளித்துவத்தை தகர்த்து தவிடுபொடியாக் கியது.

சோசலிசத்தை நோக்கி…

நவம்பர் புரட்சியைத் தொடர்ந்து லெனின் தலைமையிலான புரட்சிகர அரசு மேற்கொண்ட பயணம், உலகக் கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு பாடம். பன்னாட்டு முதலாளித்துவ சக்திகளிடமிருந்தும், உள்நாட்டில் வெண் படைகளை சமாளித்தும், புரட்சி மீதான மக்களின் ஆசைகளை, வேண்டு கோளை நிறைவேற்ற லெனின் எடுத்த நிலைபாடு கள், செயல்பாடுகள் இந்நூலில் கொடுக்கப் பட்டுள்ளன.
இந்த சோசலிசப் பாதை எவ்வளவு கடுமை யாக இருந்திருக்கும் என்பதை சார்லஸ் பெட்டில் ஹெய்ம் என்ற பிரெஞ்சு பொருளாதார நிபுணரின் கணிப்பின் மூலம் அறிய முடிகிறது. “சோவியத் யூனியனில் சோசலிசத்தைக் கட்டுவதற்காகப் பணிக்கப்பட்டவர்களில் நான்கில் மூன்று பேர் ஜார் மன்னனின் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த முன்னாள் ஊழியர்கள். ஒரு புரட்சிகரமான சமு தாயத்தைக் கட்டியமைக்க எந்த வகையிலும் பொருத்தமற்றவர்கள். அதேவேளையில் சோவியத் பொருளாதாரம் போருக்கு முன்பிருந்த நிலையி லிருந்து 10 சதவீத வீழ்ச்சியை சந்தித்தது. இத்தகைய கடினமான சூழ்நிலையில் தங்களின் வாழ்க்கையை வேறு எங்காவது அமைத்துக்கொள்ள வாய்ப் புடைய படித்தவர்கள் உள்ளிட்ட 20 லட்சம் மக்கள் ரஷ்யாவிட்டு வெளியேறினர்.”

இப்படியான சூழல்களுக்கு மத்தியில் தான் சோசலிசத்திற்கான அடித்தளத்தை லெனின் நிறுவினார். லெனின் மறைவைத் தொடர்ந்து ஸ்டாலின் தலைமையில் போல்ஷ்விக் கட்சி வீறுநடை போட்டது. சோசலிசப் புரட்சியை கொச்சைப்படுத்தி ட்ராட்ஸ்கி எழுதிய எழுத்துக் களுக்கு எதிராக ஸ்டாலின் தத்துவார்த்த போரை உறுதியுடன் நடத்திச் சென்றார். அவர் எழுதிய லெனினியத்தின் அடிப்படைகள் என்ற புத்தகம் போல்ஷ்விக்குகள் கையில் சக்தி மிக்க ஆயுதமாக மாறியது.

இயந்திர தொழில்மயமாக்கலும், கூட்டுப் பண்ணை அமைப்பு முறைகளும் எவ்வாறு நிகழ்ந் தேறின. அதன் பலன்கள் எப்படி சோசலிசத்தை உயர்த்திப் படிக்க உதவிற்று போன்றவை மிக விரிவாக நூலில் படித்து அறிய முடியும்.

நிறைவாக
சோவியத் யூனியனின் உழைக்கும் மக்கள், சோசலிசத்திற்காக வெற்றிகரமாகப் போராடிய அனுபவமும், படிப்பினைகளும் இந்நூலில் காணக் கிடைக்கின்றன.
சோசலிசத்திற்கான போராட்டத்தில் மார்க்சிய போதனைகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. மேலும், அப்போராட்டத்தின் ஊடே லெனினும், ஸ்டாலினும் அவற்றை எவ்வாறு மேலும் வளர்த்தெடுத்தனர் என்பதை விளக்குகிறது.
மார்க்சிய – லெனினியத்தின் அடிப்டைக் கருத்து களை அறிமுகப்படுத்தி, அவற்றை எவ்வாறு நடைமுறையில் செயல்படுத்தி வளர்த்தெடுப்பது, எவ்வாறு அவற்றுக்காகப் போராடுவது என்பதை எடுத்துக் காட்டுகிறது. சமுதாய வளர்ச்சியின் விதிகளைப் பற்றிய அறிவைத் தந்து நம்மை ஆயத்தமாக்குகிறது. உலகம் முழுவதும் கம்யூனி சத்தின் வெற்றி நிச்சயம் என்ற நமது நம்பிக்கையை வலுப்படுத்துகிறது” என மார்க்சிய அறிஞர் மாரிஸ் கார்ன்ஃபோர்த் மார்க்சிய மூல நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி எனும் நூலில் இப்புத்தகத்தை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
இந்திய நாட்டில் மக்கள் ஜனநாயக புரட்சியை மூல உத்தியாகக் கொண்டு சிபிஐ(எம்) செயல்பட்டு வருகிறது. இப்புரட்சியை நிறைவேற்றுவதற்கு புரட்சிகர கட்சியை கட்டுவது மிக அவசியம். நவம்பர் புரட்சி நூற்றாண்டைக் கொண்டாடும் இத்தருணத்தில் புரட்சிகர கட்சியை கட்டுவதற்கு, புரட்சியை நடைமுறையில் சாத்தியப்படுத்திய போல்ஷ்விக் கட்சியின் வரலாறு மிகப்பெரும் உந்து சக்தியாக இருக்கும் என்பது நிச்சயம்.