தனித்துவம் மிக்க நவம்பர் புரட்சி

 

கே. பாலகிருஷ்ணன்

நவம்பர் புரட்சி நடந்து ஒரு நூறாண்டு கடந்து அடுத்த ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாள் நவம்பர் 7, 2018.

உலகத்தில் பல ஆட்சிமாற்றங்கள், ராணுவப் புரட்சிகள், மக்கள் புரட்சிகள் அளவற்று நடந்திருந்த போதிலும் இவற்றில் இருந்து அடிப்படையிலேயே வேறுபட்ட தன்மை கொண்டது ரஷ்ய நாட்டில் 1917 நவம்பரில் நடந்த நவம்பர் புரட்சியாகும். மனித குலத்தில் நீடித்து நிலைத்து வந்த சுரண்டல் முறைக்கு முடிவு கட்டி, சுரண்டல் ஆட்சிமுறையை சுட்டெரித்து தொழிலாளி மற்றும் உழைப்பாளி மக்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய நாள்தான் நவம்பர் புரட்சி தினமாகும்.

மனித குல வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத மாற்றத்தை ரஷ்ய நாட்டு வரலாற்றில் மட்டுமல்ல; ஒட்டுமொத்த உலக வரலாற்றில் நடந்த புதுமையான நிகழ்வு இது.

முதலாளித்துவ சமுதாயத்தைப் பற்றி ஆய்வு செய்த மார்க்சும் எங்கெல்சும் முதலாளித்துவ அமைப்பை வீழ்த்தி சோஷலிசத்தை நிறுவும் பாட்டாளி வர்க்கப் புரட்சி முதலாளித்துவம் வளர்ச்சி அடைந்த ஐரோப்பிய நாடுகளில்தான் நடைபெறும் என எதிர்பார்த்தார்கள். 1882-ம் ஆண்டு காட்ஸ்கிக்கு எங்கெல்ஸ் எழுதிய கடிதத்தில் கூட, இந்தியா, எகிப்து, அல்ஜீரியா போன்ற நாடுகளில் புரட்சி வந்தால் நல்லதுதான். ஆனால் அது சோஷலிசப் புரட்சியாக அமைவதற்கான வாய்ப்புகள் குறைவே என எழுதினார். அதாவது சோஷலிசப் புரட்சி என்பது ஐரோப்பிய நாடுகளிலேயே வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளிலேயே சாத்தியம் என அவர் கருதினார்.

ஆனால் 1917 நவம்பர் 7-ம் நாள் ரஷ்ய நாட்டில் சோஷலிசப் புரட்சி நடைபெற்றது. ரஷ்யா ஒரு வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடல்ல. அப்போது உலக அரங்கில் ரஷ்யா ஒரு பின்தங்கிய  நாடாகவே இருந்தது.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை அடுத்த பெரிய நாடாக ரஷ்யா இருந்தபோதிலும் அதன் தனிநபர் வருமானம் 1913-ல் 102 ரூபிள். அதே சமயம் இங்கிலாந்து 463, பிரான்ஸ் 355, ஜெர்மனி 262 ரூபிள்களாகும். ரஷ்யாவின் பொருளாதாரம் விவசாயத்தை நம்பி இருந்தது. அதன் தேசிய வருமானத்தில் 51.3 சதவீதம் வேளாண் வருவாய். தொழில் வருமானம் 28.6 சதவீதம். மொத்த மக்கள் தொகையில் 80 சதவீத மக்கள் விவசாயத்தைச் சார்ந்தவர்கள். ஆலைத் தொழிலாளர்கள் மொத்த மக்கள் தொகையில் 2 சதவீதம் மட்டுமே. மக்கள் தொகையில் நகர்ப்புறங்களில் வாழ்ந்தவர்கள் 5 சதவீதத்தினர் மட்டுமே. வேளாண் துறையில் அதிகமான நிலங்கள் நிலப்பிரபுக்களின் கட்டுப்பாட்டில் குத்தகை விவசாயிகள் சாகுபடியில் இருந்தன.

மார்க்சிய கண்ணோட்டத்தில் மிகவும் பின்தங்கிய, நிலப்பிரபுத்துவ- ஜார் மன்னர்களின் கீழ் ரஷ்யா இருந்தது. இந்நாட்டில் உலகின் முதன் முதலான சோஷலிசப் புரட்சி நடந்தது என்பதுதான் சோவியத் நவம்பர் புரட்சியின் வரலாற்று முக்கியத்துவம் ஆகும். இது எப்படி நடந்தது? இதற்கான வியூகங்கள் எப்படி அமைக்கப்பட்டன?

முதலாளித்துவ வளர்ச்சி பின்தங்கிய ரஷ்ய நாட்டில் சோசலிச புரட்சியை நடத்துவதற்கான சரியான போர்த்தந்திரத்தை உருவாக்கி அதை வெற்றிகரமாக நடத்தியதுதான் உலக புரட்சிகர இயக்கத்திற்கு லெனின் வழங்கிய மகத்தான பங்களிப்பாகும். நவம்பர் புரட்சியைத் தொடர்ந்த அடுத்த அரை நூற்றாண்டில் மிகவும் பின் தங்கிய நாடுகளான மக்கள் சீனம், கியூபா, கொரியா, வியட்நாம், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் புரட்சியின் மூலம் சோஷலிசம் அரசுகள் அமைக்கப்பட்டன. 1970-ம் ஆண்டு வாக்கில் உலக சோஷலிச முகாமில் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் வாழும் அளவிற்கு வலுவான முகாமாக சோஷலிசம் முகாம் அமைந்திருந்தது. சோவியத் நாட்டில் நடைபெற்ற நவம்பர் புரட்சியின் முன்னுதாரணம் இல்லாமல் இருந்திருந்தால் இந்நாடுகளில் சோஷலிச புரட்சிகள் வெற்றி பெற்றிருக்குமா என்பது கேள்விக் குறிதான்.

கார்ல் மார்க்ஸ் தனது காலத்தில் முதலாளித்துவ சமூகத்தின் வளர்ச்சியைப் பற்றி பல்வேறு பரிமாணங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு அதன் உள்ளடக்கம், வளர்ச்சி போன்ற அனைத்தையும் உலகுக்குப் படம் பிடித்துக் காட்டினார். அதனைத் தொடர்ந்து மார்க்சியம் ஒரு சமூக விஞ்ஞானம் என்ற அடிப்படையில் முதலாளித்துவ வளர்ச்சி குறித்து ஆய்வு நடத்திய லெனின் அவரது காலத்தில் முதலாளித்துவத்தின் உச்சகட்டமான ஏகாதிபத்திய கட்டத்தை அடைந்துள்ளது என்பதை விளக்கினார். ஏகாதிபத்தியமாக வளர்ச்சியடைந்த உலக முதலாளித்துவ சங்கிலித் தொடரில் பலவீனமான கண்ணி உடைபட வாய்ப்புள்ளது என்ற முடிவுக்கும் லெனின் வந்தார். இந்த அடிப்படையில் 19-ம் நூற்றாண்டின் பொருளாதார நெருக்கடி, முதல் உலக யுத்த முடிவில் ரஷ்யா சந்தித்திருந்த உச்சகட்ட நெருக்கடிகள் ஆகியவைகளால் பலவீனமான கண்ணியாக இருந்த ரஷ்யாவில் புரட்சி வெற்றி பெற முடியும் என்று கருதினார்.

ஐரோப்பிய நாடுகளில் 17-ம் நூற்றாண்டில் நடந்த முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிகள் மூலம் நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தி முதலாளித்துவ வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றியது. எனவே, எல்லா நாடுகளிலும் நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தி முதலாளித்துவ வர்க்கம் தலைமை தாங்கித்தான் புரட்சி நடத்திட வேண்டும் என்ற கருத்தோட்டமே நிலவியது.

இதற்கு மாறாக, முதலாளித்துவம் வளர்ச்சியடையாத பின் தங்கிய நாடுகளில் முதலாளித்துவம் தலைமை தாங்கி புரட்சி நடத்தும் வரை காத்திருக்க வேண்டியதில்லை என்ற முடிவுக்கு லெனின் வந்தார். மேலும், இத்தகைய பின் தங்கிய நாடுகளில் உள்ள முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவ அமைப்பை எதிர்த்து புரட்சியை நடத்தும் அளவிற்கு வலுப்பெறவில்லை. எனவே இந்நாடுகளில் நிலப்பிரபுத்துவ அமைப்பை எதிர்த்த முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை தொழிலாளி வர்க்கம் தலைமை தாங்கி நடத்துவதன் மூலம் வெற்றிபெற முடியும் என்ற முடிவுக்கும் லெனின் வந்தார். முதலாளித்துவ ஜனநாயக புரட்சி தொடர்பாக லெனின் உருவாக்கிய இப்போர்த்தந்திரம் இதற்கு முன் எப்போதும் உருவாக்கப்படாத முற்றிலும் புதிய போர்த்தந்திரமாகும். இப்பிரச்சனை குறித்து சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் (சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி) எதிரும் புதிருமான விவாதங்கள் நடந்து கட்சி போல்ஷ்விக், மென்ஷ்விக் என இரண்டு பிரிவாக கருத்துப் போராட்டம் நடைபெற்றது. இரண்டு பிரிவுகளும் தனித்தனியாக மாநாடுகளை நடத்தி தங்களது அணுகுமுறைகளை தீர்மானித்தன.

“ஜனநாயகப் புரட்சியில் சமூக -ஜனநாயக வாதிகளின் இரண்டு போர்த்தந்திரங்கள்” என்ற புகழ் மிக்க கட்டுரையில் இரண்டு போர்த் தந்திரங்களைப் பற்றி லெனின் விரிவாக எழுதியுள்ளார். ரஷ்யாவில் 1905-ம் ஆண்டு நடைபெறும் முதலாளித்துவ ஜனநாயகப் புர்ட்சி என்றாலும் அப்புரட்சியில் பாட்டாளி வர்க்கம் தீர்க்கமான பங்களிப்பை ஆற்ற வேண்டும் எனவும் அப்புரட்சிக்கு தலைமை தாங்க வேண்டும் எனவும் இவற்றை நிறைவேற்றுவதன் மூலம் ரஷ்யாவில் சோஷலிசப் புரட்சிக்கு வித்திட முடியும் என அழுத்தமான முடிவுகளுக்கு லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சி வந்தது. ஆனால் இதற்கு நேர்மாறாக, முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியில் தொழிலாளி வர்க்கம் சிரத்தை காட்டக் கூடாது எனவும் இப்புரட்சிக்கு முதலாளித்துவ வர்க்கம்தான் தலைமை தாங்க வேண்டும் எனவும் மென்ஷ்விக் பிரிவு கூறியது. இப்புரட்சியின் மீது ஒருமித்த அணுகுமுறை இல்லாதது உள்பட பல காரணங்களால் 1905-ல் நடந்த இப்புரட்சி தோல்வியில் முடிந்தது.

குறிப்பாக ஜார் ஆட்சிக்கு எதிராக தொழிலாளர்-விவசாயிகள் நிலையான கூட்டணி வலுவாக ஏற்படவில்லை. நிலச்சுவான்தார்களை எதிர்த்து விவசாயிகள் கலகம் செய்து வந்தனர். ஆனால் நிலச்சுவான்தார்களுடன் கைகோர்த்துக் கொண்டிருந்த ஜார் அரசனை வீழ்த்தாத வரையில் நிலச்சுவான்தார்களை வீழ்த்த முடியாது என்பதை அவர்களால் உணரமுடியவில்லை. மேலும் விவசாயிகளின் மகன்களே அதிகமாக ராணுவத்தில் இருந்தனர். விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்குவதற்கு இவர்கள் ஜாருக்கு உதவியாக இருந்தனர். தொழிலாளி வர்க்க முன்னணிப் படையாக இருந்த சமூக ஜனநாயக கட்சி போல்ஷ்விக் – மென்ஷ்விக் என இரு கூறுகளாக பிளவுபட்டுக் கிடந்தது. மேலும் ஜார் மன்னன் புரட்சியை ஒடுக்குவதற்கு ரஷ்யாவில் மூலதனம் இட்டிருந்த ஐரோப்பிய முதலாளிகள் ஜார் மன்னனுக்கு ஆதரவாக உதவினர். மேலும் ரஷ்யப் புரட்சி வெற்றி பெற்றால் ஐரோப்பிய நாடுகளுக்கும் அது பரவும் என்ற அச்சமும் அவர்களை புரட்சியை ஒடுக்க உதவிக்கரம் நீட்டக் காரணமாக இருந்தது. இக்காரணங்களால் ரஷ்யாவில் முதற்கட்ட புரட்சி தோல்வியில் முடிந்தது.

முதல் புரட்சி தோல்வியினைத் தொடர்ந்து போல்ஷ்விக்குகள் அடுத்த கட்டப் புரட்சிக்கு விரிவான தயாரிப்புப் பணிகலில் ஈடுபட்டு வந்தனர். தொழிலாளர்களை ஒருங்கிணைப்பது, விவசாயிகள் பிரச்சனைகளில் நிலச்சுவான்தார்கள் எதிர்ப்புப் போராட்டங்களில் முனைப்பு காட்டப்பட்டன. 1914-ம் ஆண்டு தொடங்கிய முதல் உலக யுத்தத்தில் ரஷ்யா ஈடுபட்டது. ரஷ்யா மீது ஜெர்மனி தாக்குதல் தொடுத்தது. உலக நாடுகளை கூறுபோடுவதற்காக நடந்த யுத்தத்தை போல்ஷ்விக் எதிர்த்தது. யுத்தம் மூண்ட விநாடி முதலே தேசப் பாதுகாப்புக்காக யுத்தம் ஆரம்பிக்கப்படவில்லை; மாறாக அந்நியப் பிரதேசங்கலை கைப்பற்றுவதற்காகவே யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது என எதிர்த்தது. ஜார் எதேச்சாதிகாரத்தை எதிர்த்து நிலச்சுவான்தார்களை எதிர்த்து முதலாளிகளை எதிர்த்து, ஏகாதிபத்தியத்தை எதிர்த்து உறுதியான போராட்டத்தை போல்ஷ்விக் கட்சி நடத்தியது.

யுத்தத்தை எதிர்த்து போல்ஷ்விக் கட்சி உறுதியான போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்த வேளையில் இன்னொரு முக்கியமான நிகழ்வும் நடந்தது, ரஷ்ய நாட்டிலும் வேறு பல நாடுகளிலும் உள்நாட்டில் உள்ள மக்களை யுத்தத்திற்கு ஆதரவாக திரட்ட ஆட்சியாளர்கள் திட்டமிட்டு வேலை செய்தார்கள். இச்சதிக்கு உள்நாட்டு மக்களின் ஒரு பகுதியினர் மட்டமின்றி அந்தந்த நாடுகளிலிருந்த சோசலிஸ்டுகளும் தங்கள் அரசுக்கு ஆதவளிக்கும் நிலையினை மேற்கொண்டார்கள். அந்தந்த நாட்டு ஏழை ராணுவ வீரர்களால் அடுத்த நாட்டு ராணுவ வீரர்கள் சுட்டு அழிக்கப்படுமா பற்றி கொஞ்சமும் அவ்வியக்க தலைவர்கள் கவலைப்படாத சந்தர்ப்பவாத நிலையினை மேற்கொண்டார்கள், இதனால் உலகம் முழுவதும் இருந்த சோசலிஸ்டுகள் கம்யூனிஸ்டுகளுக்கு வழிகாட்டுவதற்காக 1889ம் ஆண்டு பிரடரிக் ஏங்கெல்ஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட ‘இரண்டாவது அகிலம்’ என்ற சர்வதேச அமைப்பும் பெரும் பாதிப்புக்குள்ளானது. இதில் இடம் பெற்றிருந்த அந்தந்த நாட்டு சோசலிஸ்ட் தலைவர்கள் பாட்டாளி வர்க்க சர்வதேசிய முழக்கத்திற்கு மாறாக அந்தந்த நாட்டு தேசிய வெறிக் கொள்கை இறையானார்கள். பாட்டாளி வர்க்கத்துக்கு துரோகம் செய்து அந்தந்த நாட்டு முதலாளி வர்க்கத்துக்கு காவடி தூக்கும் நிலைமைக்கு உள்ளானர், இதன் விளைவாய் “இரண்டாவது அகிலம்” கலைந்து போனது.

இத்தகைய சூழலில் லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சி மட்டுமே யுத்தம் குறித்த உறுதியான நிலை எடுத்து உள்நாட்டில் உண்மையான சமாதான நிலைக்கு பாட்டாளி வர்க்க புரட்சி வெற்றி பெற வேண்டுமெனவும், ஏகாதிபத்திய முதலாளித்துவ ஆட்சியை அடியோடு சாய்ப்போம் என போர் முழக்கப்பட்டது.

யுத்த முடிவின் ஜார் மன்னனுக்கு தோல்விக்கு மேல் தோல்வி ஏற்பட்டது. உள்நாட்டில் பொருளாதார சீர்குலைவு தீவிரமடைந்தது. உணவுப் பொருட்கள் பஞ்சம், தொழிற்சாலைக்கு மூலப் பொருட்கள் பற்றாக்குறை பல ஆயிரம் ஆலைகள் மூடல், பல்லாயிரம் தொழிலாளர் வேலையிழப்பு என நிலைமை அனைத்து துறையிலும் மோசமடைந்தது. சகிக்க முடியாத இந்த நிலைமைகளிலிருந்து மீள்வதற்கு ஜார் மன்னனது ஆட்சியை அடியோடு வீழ்த்துவதை தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்தார்கள்.

ஜார் மன்னனை எதிர்த்த போராட்டங்கள் தீவிரமடைந்தன. நிலைமையை சரியாக கணித்திருந்த போல்ஷ்விக்குகள் விரைந்து களமிறங்கினார்கள். 1917 பிப்ரவரி 23 (மார்ச் 8  அன்று) போல்ஷ்விக் கட்சி லட்சக்கணக்கான பெண்களை திரட்டி போராட்டத்தில் இறங்கியது. பட்டினி பசியை எதிர்த்தும் அதற்கு காரணமான ஜார் மன்னணை எதிர்த்து பெண்கள் தொழிலாளர்கள் வீடுகளை விட்டு புறப்பட்டு வீதிகள் எங்கும் பேரணியாக சென்றார்கள். இந்த அரசியல் போராட்டம் ஆயுதம் தாங்கி எழுச்சியாக புறப்பட்டது. ராவ உடைதணிருந்த விவசாயிகள் வீட்டு பிள்ளைகள் இம்மக்களோடு சேர்ந்து போராட்டத்தில் இரண்டற கலந்தார்கள். இவர்களது துப்பாகிகள் முதன் முறையாக ஜார் மன்னனுக்கு எதிராக வெடித்தன. 1917ல் நடந்த இரண்டாவது புரட்சி வெற்றி பெற்றது.

புரட்சி வெற்றி பெற்ற பின்னணியில் ஏற்பட்ட இடைக்கால அரசு புரட்சிக்கு விரோதமாக திரைமறைவு தில்லு முல்லுகளில் ஈடுபட்டார்கள். இதனை அம்பலப்படுத்தியும் புதிய கொள்கை திட்டத்தை லெனின் வெளியிட்டார். அது “ஏப்ரல் கொள்கை” என பிரகடனப்படுத்தியது. இந்த முறை “ஏப்ரல் கொள்கை” முதலாளித்துவ புரட்சி கட்டத்துக்கு மாறுதலடைந்து சோசலிசப் புரட்சி கட்டத்துக்கு முன்னேறி செல்வதற்கு கட்சிக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் மிகவும் தெளிவான புரட்சிகரமான பாதையை காட்டியது.

“புரட்சியின் முதல் கட்டத்தில் பட்டாளிகளிடம் அமைப்பு பலம் போதிய அளவு இல்லை. அதனால் அரசியல் அதிகாரத்தை புரட்சியின் முதல் கட்டம் முதலாளி வர்க்கத்திடம் ஒப்படைத்தது. புரட்சியின் இரண்டாவது கட்டம் பட்டாளிகளும் விவசாய வர்க்கத்தில் மிக மிக ஏழையாக கீழ்படிகளில் உள்ளவர்களிடம் அரசியல் அதிகாரம் ஒப்படைக்க வேண்டும்”என புரட்சியின் இரண்டாவது கட்டத்தின் நோக்கத்தினை லெனின் விளக்கினார். மேலும் தற்காலிக இடைக்கால அரசுக்கு எந்த ஆதரவும் கொடுக்க கூடாது. தேசம் முழுவதும் இடைக்கால சர்க்காருக்கு மாற்றாக மேலிருந்து கீழ் வரை தொழிலாளர்களையும் விவசாய கூலிகளின் பிரதிநிதிகளையும், விவசாய பிரதிநிதிகளையும் கொண்ட சோவியத்துகளை அமைக்க வேண்டும் என கட்டளையிட்டார்.

புரட்சியின் இரண்டாம் கட்டத்தை நோக்கிய பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு நவம்பர் 7ம் தேதி புரட்சி வெற்றி பெற்றது.

விவசாயிகளும் சோஷலிசப் புரட்சியும்

இதற்கு முன்பு பல ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற புரட்சிகளில் விவசாயிகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக அமையவில்லை. 1789-ல் நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சியில் விவசாயிகள் போராட்டங்கள் நடந்தபோதிலும் அவர்களுக்கான தனித்த பங்களிப்பு ஏதும் இல்லை. இப்புரட்சியில் முதலாளித்துவ வர்க்கம் நிலப்பிரபுத்துவ அமைப்பை அடித்து நொறுக்கி விவசாயிகளுக்கு நிலத்தைப் பகிர்ந்தளித்தது. இதர வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளிலும் முதலாளித்துவ ஜனநாயகப்புரட்சியின் போது இதுவே நடந்தது.

கார்ல் மார்க்ஸ் காலத்தில் 1871-ல் நடந்த பாரீஸ் கம்யூன் எழுச்சி ஏற்பட்டு தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் முதன்முறையாக ஆட்சி அமைக்கப்பட்டது. ஆனால் குறுகிய காலத்திலேயே இப்புரட்சி முறியடிக்கப்பட்டது. இப்புரட்சியை முறியடிக்க பிரெஞ்சு குடியரசுத் தலைவர் தலைமையிலான பிரெஞ்சு ஆட்சியாளர்கள் விவசாயிகளை தங்களுக்கு ஆதரவாகத் திரட்டி போராட்டம் நடத்தியதும் முக்கிய காரணமாகும். அவர்களது பிரச்சாரத்தில் தற்போது முதலாளிகள் சொத்துரிமையின் மீது தாக்குதல் தொடுக்கும் தொழிலாளி வர்க்கம் அடுத்த கட்டத்தில் விவசாயிகளின் சொத்துரிமை மீதும் தாக்குதல் நடத்துவார்கள் என்பது மையமாக இருந்தது.

இவ்வடிப்படையில் பிரஞ்சு ஆட்சியாளர்கள் விவசாயிகள் ஆதரவோடு பாரீஸ் கம்யூன் மீது கொடூரமான தாக்குதலை நடத்தி அதை வீழ்த்தினார்கள்.

இப்படிப்பினைகளை கணக்கில் கொண்டே ரஷ்ய நாட்டில் நடைபெறவுள்ள முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியில் பாட்டாளி வர்க்கம் தலைமை தாங்கும் பாத்திரத்தை நிறைவேற்ற உறுதியாக போராடக் கூடிய வர்க்கம் பாட்டாளி வர்க்கம் தான். அதனுடைய புரட்சி போராட்டத்தில் விவசாய மக்கள் சேர்ந்தால் தான் ஜனநாயகத்திற்கான வெற்றிகரமாக போராடும் வீரனாக அதனால் இருக்க முடியும் என திட்டவட்டமாக லெனின் கூறினார். அந்த வகையில் தொழிலாளி வர்க்கத்தின் இயற்கையான கூட்டாளியாக விவசாயிகள் வர்க்கம் திகழும் என்றார்.

முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி வரலாற்றில் லெனின் கையாண்ட போர் தந்திரம் புதியதோர் பாதையாகும். இதுகாறும் நடைபெற்ற முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிகளில் முதலாளித்துவ வர்க்கமே கதாநாயக பாத்திரத்தை வகிக்கும் தொழிலாளி வர்க்கமும் – விவசாயிகள் வர்க்கமும் – துணை கருவிகளாகவும் பார்வையாளர்களாகவும் இருந்தனர். வரலாற்றில் முதன் முறையாக முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிலும் அதனை தொடர்ந்து சோசலிச புரட்சியிலும் தொழிலாளி வர்க்கத்தையும், விவசாயிகள் வர்க்கத்தையும் கதாநாயகர்கள் பாத்திரம் வகிக்க செய்த போர் தந்திரம் நவம்பர் புரட்சிக்கு லெனின் வகுத்தளித்த போர் தந்திரமாகும்.

அனைத்துக்கும் மேலாக வரலாறு நெடுகிலும் புறக்கணிக்கப்பட்டவர்களான விவசாய வர்க்கம் புரட்சியில் முக்கிய பங்காளியாக நிர்மானித்தது விவசாயி வர்க்கத்தின் புரட்சி கர போர்க்குணத்துக்கு வழங்கப்பட்ட வரலாற்று ரீதியான அங்கீகாரமாகும்.

லெனின் வகுத்தளித்த இந்த தனித்துவமான போர்த் தந்திரமே சோவியத் நாட்டின் சோசலிச புரட்சியின் தனித்துவமான போர்த் தந்திரம் என்பதற்கு விளக்கங்கள் தேவையில்லை. 1917 நவம்பர் 8ம் நாள் புரட்சி வெற்றி பெற்ற அடுத்த நாள் சோவியத் அரசு சமாதானத்தைப் பற்றிய சட்டத்தை முதலில் நிறைவேற்றியது. இதன் மூலம் யுத்தத்தை நிறுத்தி சமான உடன்படிக்கை செய்து கொள்ள யுத்தம் புரிந்த நாடுகளை கேட்டுக் கொண்டது. அன்று இரவே நிலம் தொடர்பான சட்டத்தையும் நிறைவேற்றியது. நிலப்பிரபுக்கு சொந்தமான நில உரிமை நஷ்ட ஈடு ஏதுமின்றி இன்றோடு ஒழிக்கப்பட்டது என அச்சட்டம் பிரகடனப்படுத்தியது. மேலும் நிலச்சுவான்தாரர்கள், ஜார் அரசனின் குடும்பத்தை தேர்ந்தவர்கள் மற்றும் மாதா கோவில்கள், மடங்கள், முதலாளித்துவக்கு சொந்தமான நிலங்கள் அனைத்தும் பாட்டாளிகள் விவசாயிகள் எல்லோரும் தங்கள் இஷ்டப்படி உபயோகப்படுத்தப்பட்டதுக்கு அளிக்கப்பட வேண்டும். இச்சட்டத்தின் படி 40 கோடி ஏக்கருக்கு மேல் விவசாய வர்க்கம் பெற்றது. இச்சங்கத்தின் படி ஆண்டுக்கு 50 கோடி தங்கள் ரூபிள் இதுவரை நிலச்சுவான்தாரர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த குத்தகை இனி கொடுக்க வேண்டிய அவசியமில்லை. சுரங்க மூலப் பொருள்கள் காடுகளும் நீர் நிலைகளும் பொதுமக்கள் சொத்துக்களாகின.

சோவியத் நாட்டில் உருவாக்கப்பட்ட தொழிலாளி, விவசாயி கூட்டணிதான் சோசலிச புரட்சிக்கு அடிப்படையாக அமைந்தது மட்டுமன்றி புரட்சி வெற்றிக்குப் பின்னர் தொழிலாளர் விவசாயிகளது தோளில் ஏற்றப்பட்டு வந்த சுரண்டல் நுகத்தடிகள் நொறுக்கப்பட்டன என்பதை சோவியத் புரட்சியின் படிப்பினையாகும்.

புரட்சியும் எதிர்ப்புரட்சியும் – 1917முதல் 2017 வரை

Revolution and Counterrevolution, 1917–2017

ஜான் பெல்லாமி ஃபாஸ்டர்

(மார்க்சிய அறிஞர், அமெரிக்காவிலிருந்து வெளியாகும் மந்த்ளி ரிவ்யூ இதழின் ஆசிரியர்)

தமிழில் : எஸ். ரமணி

கார்ல் மார்க்சின் உயரிய படைப்பான மூலதனம் வெளிவந்த ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் 1917-ல் ருஷ்யப் புரட்சி வெடித்தது. துவக்கம் முதலே அக்டோபர் புரட்சி, மார்க்சின் ஆய்வினை உறுதிப்படுத்தியும், மறுதலித்தும் வருவதாகவே தோன்றியது. அவர் மேற்கத்திய ஐரோப்பாவில் தொழிலாளி வர்க்கத்தின் கீழ் புரட்சி வெடிக்கும் எனக் கணித்தார். இறப்பதற்கு ஓராண்டிற்கு முன்பு, 1882-ல் கம்யூனிஸ்ட் அறிக்கை க்கு அவர் எழுதிய முன்னுரையில், தனது முந்தைய கருத்தை மாற்றிக் கொண்டவராக, “மேற்கத்திய நாடுகளில் தொழிலாளி வர்க்கப் புரட்சி சாத்தியமே என்பதற்கான ஓர் அறிகுறியாக” ருஷ்யப் புரட்சி விளங்குகிறது என்று சுட்டிக் காட்டியிருந்தார். மார்க்சிஸ்டுகளின் தலைமையில் தொழிலாளி-விவசாயப் புரட்சி ருஷ்யாவில் 1917-ல் வெற்றிபெற்ற போதிலும், அந்நாடு பெரும்பாலும் வளர்ச்சியுறாத ஒரு நாடாகவே இருந்தது. அதே நேரத்தில், ருஷ்யப் புரட்சியைத் தொடர்ந்து ஜெர்மனி மற்றும் மத்திய ஐரோப்பாவில் புரட்சிகர எழுச்சிகள் வெடித்தெழுந்தபோதிலும் அவை வலிமையற்றதாக, எளிதில் அணைத்து விடக் கூடியதாகவே இருந்தன.

அந்தச் சூழ்நிலையில் முற்றிலும் தனிமைப்பட்டிருந்த சோவியத் ருஷ்யா கடுமையான எதிர்ப்புரட்சியை சந்திக்க வேண்டியிருந்தது. முக்கிய ஏகாதிபத்திய சக்திகள் அனைத்தும் உள்நாட்டுப் போரில் ருஷ்ய முதலாளிகளின் வெண்படைகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டன. வரலாறு நெடுகிலும் சோவியத் யூனியன் முன்வைத்த பாதுகாப்பு கோஷமான “ஒரு தேசத்தில் சோஷலிசம்” என்ற புவிசார் அரசியல் எதார்த்தம் பெருமளவிற்கு வெளியில் இருந்து அதன் மீது திணிக்கப்பட்ட ஒன்றே ஆகும். ஜார் பேரரசின் பெரும்பான்மையான நிலப்பரப்பை விட்டுத் தரவேண்டிய கட்டாயத்தை உருவாக்கிய ப்ரெஸ்ட்-விடாவ்ஸ்க் ஒப்பந்தம் தொடங்கி ருஷ்யாவைத் தனிமைப்படுத்த உருவான வெர்செய்ல்ஸ் ஒப்பந்தம் வரை அனைத்து ஒப்பந்தங்களுமே இவற்றுக்குச் சாட்சியங்களாக உள்ளன.

காலனிய வாதத்தின் வரலாறு முழுவதிலும் சூழ்ந்துள்ள அதன் அடிப்படையான பொருளில் அல்லாமல், முதலாளித்துவத்தின் ஏகபோக நிலையுடனான அதன் தொடர்பில்தான் லெனின் பயன்படுத்திய சொற்றொடரான அந்த ‘ஏகாதிபத்தியம்’ 20-ம் நூற்றாண்டின் வித்தியாசமான தன்மை கொண்ட முதலாளித்துவமாக, புரட்சி, எதிர்ப்புரட்சி ஆகிய இரண்டிற்குமான நிலைமைகளையும் தீர்மானிக்கும் சக்தியாக அமைகிறது. 17-ம் நூற்றாண்டிலிருந்தே ஐரோப்பாவில் நடைபெற்ற மோதல்களை பெருமளவிற்கு வடிவமைத்த காலனிகளுக்கான  போட்டி என்பதற்குப் பதிலாக 19-ம் நூற்றாண்டின் இறுதியில் முற்றிலும் புதியதொரு போராட்டம் உருவானது: அதாவது தேசிய அரசுகளுக்கும் அதன் பெருநிறுவனங்களுக்கும் இடையேயான போட்டியாக அது அமைந்திருந்தது. இந்தப் போட்டி ஏகாதிபத்திய பகுதிகளுக்கானதாக இல்லாமல், அதிகமான அளவிற்கு ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்த, ஏகாதிபத்திய உலக முறையில் உலகளாவிய மேலாதிக்கத்திற்கான போட்டியாக அமைந்திருந்தது. எனவே புரட்சி, எதிர்ப்புரட்சி என்பவை அந்த அமைப்பின் முழுஅளவிலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கும். பெருநகர ஆட்சியாளர்கள் உபரியான செல்வத்தை உறிஞ்சுவது அதிகரிக்க அதிகரிக்க சுரண்டல் கடுமையானதாக மாறி, அந்தப் பகுதியிலேயே அனைத்து வகையான புரட்சிகரமான எழுச்சிகளும் குவிந்து, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எழுச்சிகளாக உருவெடுக்கின்றன. இவற்றை முக்கிய முதலாளித்துவ அரசுகளால் நடத்தப்படும் எதிர்ப்புரட்சிகள் எதிர்கொள்கின்றன. இச்சூழலை மேலும் சிக்கலாக்கும் வகையில் இவ்வாறு உபரி செல்வம் உறிஞ்சப்படும் செயலின்போது அதனால் மறைமுகமாகப் பயனடைந்த தொழிலாளி வர்க்கத்தின் ஒரு மேல்தட்டுப் பிரிவினர் ‘பிரபுத் தொழிலாளி’யாக உருவாகி வந்தனர் என்பதை எங்கெல்ஸ் பின்னாளில் சுட்டிக் காட்டியிருந்தார். இதனை பின்னர் லெனின் ‘ஏகாதிபத்தியம்- முதலாளித்துவத்தின் மிக உயர்ந்த கட்டம்’ என்ற தனது நூலிலும் குறிப்பிட்டிருந்தார்.

1917 அக்டோபர் புரட்சி அரை நூற்றாண்டைக் கடந்த பிறகு, மார்க்சின் மூலதனம் வெளிவந்து நூறாண்டுகளுக்குப் பிறகு, 1967-ல் வியத்நாம் போர், சீனக் கலாச்சாரப் புரட்சி ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலத்தில் உலகில்  புரட்சிகள் சீராக மேல்நோக்கி வந்த நிலையில், அந்தப் புரட்சிகள் ருஷ்யா மட்டுமின்றி சீனா, கியூபா, இதர பகுதிகளில் வெற்றி பெற்றன என்பதை மாற்ற இயலாது எனக் கருதுவது நியாயத்திற்குப் புறம்பானதல்ல. மனித குல வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டு ரத்தம் தோய்ந்த நூற்றாண்டு என்பது முன்பே நிரூபணமாகியுள்ளது. எனினும் மனித குல விடுதலையில் அதிகமான முன்னேற்றம் நிகழ்ந்த காலமும் அதுவே. உலக எதிர்ப்புரட்சி சக்திகள் குறுகிய காலத்தில் ஒன்று திரண்டபோதிலும், வெற்றி பெற்ற போதிலும், அது நிலைத்து நிற்காது.  “1972- எதிர்ப்புரட்சியும் கிளர்ச்சியும் (1972 Counter-revolution and Revolt)  என்ற தனது நூலின் முகவுரையில் ஹெர்பெர்ட் மார்க்யூஸ் கீழ்க்கண்டவாறு தெரிவித்திருந்தார்:

“மேற்கத்திய உலகம் தனது வளர்ச்சிப் போக்கின் புதியதொரு கட்டத்தை எட்டியுள்ளது. முதலாளித்துவ உலகைப் பாதுகாக்க, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அவர்களுக்கு எதிர்ப்புரட்சி அமைப்புகள் தேவைப்படுகின்றன. அதன் தீவிர வெளிப்பாடாகவே நாஜிகளின் ஆட்சியின் போது நிகழ்த்தப்பட்ட கொடூரமான செயல்கள் மீண்டும் அரங்கேற்றப்படுகின்றன. கம்யூனிஸ்டுகளுக்கு எதிராகவும், ஏகாதிபத்திய அடிவருடி அரசுகளை எதிர்த்து நடைபெறும் கிளர்ச்சிகளை ஒடுக்குவது என்ற போர்வையில், இந்தோ சீனா, இந்தோனேசியா, காங்கோ, நைஜீரியா, பாகிஸ்தான், சூடான் போன்ற நாடுகளில் மனிதப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. லத்தீன் அமெரிக்க நாடுகளில் பாசிச, ராணுவ சர்வாதிகாரிகளால் கொடூரமான வன்முறை ஏவப்பட்டது. உலகம் முழுவதும் விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்வது சர்வ சாதாரணமானதொரு நிகழ்வாக மாறிப்போனது. மேற்கத்திய கலாச்சாரம் உச்சத்தில் இருந்தபோது உருவான மதப்போர்கள் மன உளைச்சலை உருவாக்கின; பணக்கார நாடுகள் ஏழை நாடுகளுக்கு ஆயுதம் வழங்கி நிரந்தரமாக தேச, சமூக விடுதலைக்கான எழுச்சிகளை ஒடுக்க உதவி புரிந்தன. எதிர்ப்புரட்சி பெரும்பாலும் ஒரு தடுப்பு நடவடிக்கையாகவே இருக்கும்; குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் ஒட்டுமொத்தமாகவே இது தடுப்பு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. வரலாற்றில் நிகழ்ந்த அனைத்துப் புரட்சிகளிலும் மிகத் தீவிரமான ஒரு புரட்சியின் அபாயத்தை எதிர்கொள்ள முதலாளித்துவம் தன்னையே மறுநிர்மாணம் செய்து கொள்கிறது. அதுதான் உண்மையிலேயே முதல் முதலான உலக ரீதியான- வரலாற்று ரீதியான புரட்சி ஆகும்.”

இன்று ருஷ்யப் புரட்சிக்கு நூறாண்டுகளுக்குப் பிறகு, மூலதனம் வெளிவந்து நூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பிறகு நிலைமைகள் மாறியுள்ளன. கடிகார முள் எதிர்த்திசைக்கு திருப்பப்பட்டது போன்ற, உலகத்தின் எதிர்ப்புரட்சி சக்திகள் வெற்றி பெற்றுவிட்டது போன்ற ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.1960களில் உலகின் முக்கிய பகுதிகளில் செல்வாக்கு செலுத்திய, அடிப்படையிலேயே விளிம்பில் இருந்து வந்த, விடுதலை சக்திகள் இன்று முற்றிலுமாக வீழ்த்தப்பட்டுள்ளன.

இருப்பினும் முதலாளித்துவ வளர்ச்சியின் முரண்பாடுகள், குறிப்பாக பூமியின் சுற்றுச்சூழல் நெருக்கடி, முற்றிப் போய் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அபாய கட்டத்தை எட்டியுள்ளது. 2007-09-ல் உருவான மிகப்பெரிய சர்வதேச நிதிச் சிக்கல் அதன் முகத்திரையைக் கிழித்துள்ளது. உலக ஏகபோக நிதி மூலதனம் இன்று எதிர்பாராத அளவிற்கு சமத்துவமற்ற நிலையை உருவாக்கியுள்ளது. சமூகம் பின் தங்கியுள்ளது. ஸ்திரத் தன்மை சீர்குலைந்துள்ளது. நாகரீகம் வீழ்ச்சியடைந்துள்ளது. சுற்றுச் சூழல் அழிக்கப்பட்டுள்ளது. புதிய அவதாரம் எடுத்துள்ள அரசியல் பொருளாதாரம் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கியுள்ளது. இன்றைய தலைமுறையை மட்டுமின்றி, அனைத்துத் தலைமுறையினரையும் அச்சுறுத்தும் வகையில் மனித குலம் நிலைப்பது கேள்விக் குறியாகியுள்ளது. எரிக் ஹாப்ஸ்வாம் தனது “இருபதாம் நூற்றாண்டின் சரித்திரம்” என்ற நூலின் முடிவில் இவ்வாறு தெரிவித்திருப்பார்: “தோல்விக்கான விலை என்பதை எவ்வாறு குறிப்பிடுவது எனில், மாற்றமடைந்துள்ள சமூகத்திற்கு மாற்று இருளே ஆகும்.”

உலக அளவில் எதிர்வினை

இருபதாம் நூற்றாண்டில் உருவான புரட்சி அலைகளை மீறி இறுதியில் ஏகாதிபத்தியம் வெற்றி பெற்றது எனில் அதை நாம் எவ்வாறு புரிந்து கொள்வது? உலகப் புரட்சியின் எதிர்காலத்தை எத்தகைய பொருளில் புரிந்து கொள்வது? இதற்கான விடையைக் காண கடந்த நூற்றாண்டில் ஏகாதிபத்திய புவிசார் அரசியல் வரலாற்றை முழுமையான ஆய்விற்கு உட்படுத்த வேண்டியுள்ளது.

1870களின் நடுப்பகுதியிலிருந்து முதல் உலகப்போர் வரையிலான காலம் முதலாளித்துவ வளர்ச்சியின் நியாயத்தன்மையில் குணாம்ச ரீதியான இடைவெளியைக் குறிப்பதாக அமைந்திருந்தது. புதிய நாடுகளை காலனிகளாக மாற்றுவது வேகமாக அதிகரித்து வந்த, புதிய ஏகாதிபத்திய சக்திகள் எழுச்சி பெற்று வந்த, ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையேயான மோதல்கள் மீண்டும் தோன்றி வருவதைக் குறிப்பிடும் வகையில் 1870களிலேயே அப்போது இருந்த சமகாலத்துப் பார்வையாளர்கள் “புதிய ஏகாதிபதித்தியம்” பற்றிப் பேசியிருந்தனர். மிகப்பெரும் தொழிற்சாலைகள், நிதி நிறுவனங்களின் மேலாதிக்கத்தில் இருந்த முதலாளித்துவமான ஏகபோக மூலதனம் எழுச்சி பெற்றது இந்தக் கட்டத்தில்தான். ஜெர்மனியும் அமெரிக்காவும் கனரகத் தொழில் என்ற புதிய காலத்திற்குள் நுழைந்து முதலாளித்துவத்தின் ஏகபோக கட்டத்திற்குள் மிக வேகமாக முன்னேறியது. அதே நேரத்தில் இந்த இரண்டு அம்சங்களிலுமே பிரிட்டன் பின் தங்கியிருந்தது. தொழிற்புரட்சி துவங்கிய காலத்திலிருந்தே முதலாளித்துவத்தின் உலகப் பொருளாதாரத்தின் மீது மேலாதிக்கம் செலுத்தி வந்த பிரிட்டன், அப்போதும் அளவில் மிகப் பெரியதாக, தன்னிகரற்றதாக இருந்த போதிலும், ஒன்றோடொன்று போட்டியிட்டு வரும் நாடுகளின் புதிய பன்முக ஒழுங்கமைப்பினால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆளாகி வந்தது. 19ஆம் நூற்றாண்டின் கடைசி முப்பதாண்டுகள் பொருளாதார ரீதியான மந்தநிலை நிலவிய காலமாகும். அந்த நாட்களில் ஐரோப்பாவில் அது மாபெரும் தாழ்வுநிலை என்று அறியப்பட்ட காலம் ஆகும். எனினும் முதலாளித்துவ அதிகாரத்தின் செயல்படும் பாதையில் வியக்கத்தக்க மாற்றங்களை உருவாக்கிய காலமாகவும் அது இருந்தது.

இந்தப் போக்குகளை கூர்ந்து கவனித்து வரும் முக்கிய முதலாளித்துவ நாடுகளில் உள்ள சில ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் புவிசார் அரசியல் என்ற புதுவிதமானதொரு போலி அறிவியலை உருவாக்கினர். அது உலக அமைப்பின் மீது மேலாதிக்கம் செலுத்துவதற்கான போராட்டங்களில் தன் கவனத்தைச் செலுத்தியது. கிளாசிவிசியன் (Clausewitzian) கருத்துப்படி புவிசார் அரசியல் பொதுவாக ஆயுத மோதல்களுக்கு இட்டுச் செல்கிறது. அது ஜெர்மனியிலும் அமெரிக்காவிலும் 1890களில் துவங்கியது.  இதன் விளைவாகவே ஜெர்மனியும் அமெரிக்காவும் ஏகாதிபத்திய சக்திகளாக உருப்பெற்றன. அமெரிக்காவில் இந்தக் கண்ணோட்டத்தை சார்லஸ் கோனன்ட் (Charles Conant) எழுதிய “ஏகாதிபத்தியத்தின் பொருளாதார அடிப்படை” (The Economic Basis of Imperialism) ப்ரூக்ஸ் ஆடம்ஸ்  (Brooks Adams) எழுதிய “புதிய பேரரசு” (The New Empire) ஆகியவை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளன. அவை உலகின் பெரும்பகுதிகளில், குறிப்பாக பசிபிக் பகுதியில், அமெரிக்காவின் மேலாதிக்கம் குறித்துப் பேசுகின்றன. அமெரிக்காவின் புவிசார் அரசியலின் நிறுவனர்களில் ஒருவரான ப்ரெடரிக் ரேஷல் (Friedrich Ratzel)  “லிபரம்”, அதாவது வாழும் இடம் என்ற புதிய சொல்லை 1890-ல் பயன்படுத்தினார். இந்தச் சிறிய கிரகத்தில் ஒரே ஒரு நாட்டிற்கு மட்டுமே போதுமான நிலப்பரப்புதான் உள்ளது என்று அவர் கூறியிருந்தார்.

இருப்பினும் இடைப்பட்ட போர்க்காலம், இரண்டாம் உலகப்போர்க்காலம் ஆகியவற்றில் நடத்திய ஆய்வுகள் நவீன புவிசார் அரசியல் ஆய்வுகள் என அழைக்கப்படுகின்றன. அதன் முன்னணி பிரிட்டிஷ் தத்துவவாதி, லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்சின் முன்னாள் இயக்குநர், கிளாஸ்கோவிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு 12 ஆண்டுகள் பணியாற்றிய ஹால்போர்ட் மெக்கிண்டர் (Halford Mackinder) ஆவார். மறைமுகமாகவோ அல்லது நேரிடையாகவோ நாடுகளுக்கு இடையிலான சமநிலையற்ற வளர்ச்சிதான் பெரும் போர்கள் உருவாவதற்கான வரலாறாகும் என்று அவர் “ஜனநாயக குறிக்கோள்களும் யதார்த்தமும்” (Democratic Ideals and Reality) என்ற நூலில் தெரிவிக்கிறார். முதலாளித்துவ புவிசார் அரசியலின் தலையாய நோக்கம் பேரரசுகளின்  வளர்ச்சியை ஊக்குவிப்பது; இறுதியில் ஒரே ஒரு உலகப் பேரரசை நிறுவுவது என்பதே ஆகும்.  “இதய நிலப்பரப்பு” (Heartland) என்ற தனது கண்டுபிடிப்பின் மூலம் மெக்கிண்டர் பிரபலமானார். (கிழக்கு ஐரோப்பா, ருஷ்யா, மத்திய ஆசிய பகுதிகளைச் சுற்றிய யூரேசிய நிலப்பரப்பு ஆகியவையே  ‘இதய நிலப்பரப்பு’ என்று அழைக்கப்படுகிறது. உலகத்தீவின்  (World Island)(ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ள கண்டங்களான ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா ஆகிய பகுதிகள்) மீது மேலாதிக்கம் செலுத்தி அதன் மூலம் உலகத்தையே தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர  ‘இதய நிலப்பரப்பை’ ஆதிக்கம் செலுத்தினால் மட்டுமே சாத்தியம் என்று மெக்கிண்டர் தெரிவிக்கிறார். புதிய யூரேசியா காலத்தில் முந்தைய நூற்றாண்டுகளில் இருந்ததுபோல்  கடல் வலிமையைக் காட்டிலும் நிலவலிமையே தீர்மானகரமான சக்தியாக உள்ளது என்பது மெக்கிண்டரின் புகழ்பெற்ற வாசகமாகும்.

*              யார் கிழக்கு ஐரோப்பாவை ஆட்சி செய்கிறார்களோ அவர்கள் இதய நிலப்பரப்பின்மீது செல்வாக்கு செலுத்துவார்கள்;

*              யார் இதயப் பரப்பை ஆள்கிறார்களோ, அவர்கள் உலகத்தீவின்மீது செல்வாக்கு செலுத்துபவர்களாக இருப்பார்கள்;

*              யார் உலகத்தீவை ஆள்கின்றனரோ, அவர்கள் உலகத்தின் மீது செல்வாக்கு செலுத்துபவர்களாக இருப்பார்கள்.

ருஷ்யப் புரட்சியின் செல்வாக்கு மெக்கிண்டரின் புவிசார் அரசியல் உத்தி

உருவாவதற்குக் காரணமாகும். ஏகாதிபத்திய எதிர்ப்புரட்சியை நியாயப்படுத்த அவர் இதனப் பயன்படுத்தினார். பிரிட்டிஷ் அரசு அவரை 1919-ல் தென் ருஷ்யாவிற்கான ஹைகமிஷனராக நியமித்தது. ருஷ்ய உள்நாட்டுப் போரில் ருஷ்ய வெண்படை, ஜெனரல் டெனிகினுக்கு பிரிட்டிஷ் ஆதரவை உறுதிப்படுத்தும் பொறுப்பும் அவரிடம் வழங்கப்பட்டது. டெனிகின் செம்படையினால் தோற்கடிக்கப்பட்ட பின்பு மெக்கிண்டர் லண்டனுக்கு திருப்பி அழைத்துக் கொள்ளப்பட்டார். “ஜெர்மனி தொழில்மயமாவது குறித்த பிரிட்டனின் கவலை நியாயமானதாக இருப்பினும் அதனைத் தடுக்கும் வண்ணம் வெர்செயில்ஸ் ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தாலும், ஜெர்மனியின் மறுநிர்மாணம் தேவையான ஒன்று” என அவர் பிரிட்டிஷ் அரசிடம் தெரிவித்தார். மெக்கிண்டரின் கண்ணோட்டத்தில் கிழக்கு ஐரோப்பா போல்ஷெவிக்குகளின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதை தடுக்கும் அரணாக ஜெர்மனி இருக்கும். அதன் மூலம் இதய நிலப்பரப்பு பாதுகாக்கப்படும் என்று அவர் கருதினார்.

 

போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இதுபோன்ற நம்பிக்கை கொண்டிருந்த பிரபலமானவர்களில், மெக்கிண்டர் மட்டுமல்லாது, வேறு பலரும் இருந்தனர். இதே கண்ணோட்டத்துடன் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தின் நெவில் சேம்பர்லின் அரசு நாஜி ஜெர்மனியை தாஜா செய்ததுடன் அதனோடு கூட்டும் சேர்ந்து கொண்டது. ஜெர்மனி தன் துப்பாக்கியை கிழக்குப் புறமாக, அதாவது சோவியத்தை நோக்கி, திருப்பும் என்ற நம்பிக்கையில்தான் இந்தக் கூட்டணி உருவானது. ஒப்பந்தத்தில் குறிப்பிடவில்லை என்றாலும் தோரஸ்டன் வெப்லான் கூற்றுப்படி சோவியத்தை சுருக்கும் நோக்குடன் கச்சிதமாக உருவாக்கப்பட்டதுதான் வெர்செய்ல்ஸ் ஒப்பந்தம்.

 

1930-40களில் ஜெர்மனியில் முன்னணியில் இருந்த புவிசார் அரசியல் கோட்பாளர் கார்ல் ஹ்ஷோஃபர் (Karl Haushofer) ஆவார். நாஜிக்களின் ஆட்சியில் இவர் துணைத்தலைவராக இருந்தவர். அடால்ஃப் ஹிட்லரின் முக்கிய ஆலோசகரும் கூட. அவர் பிரிட்டன், அமெரிக்கப் பேரரசுகளை ஜெர்மனிக்கான அச்சுறுத்தலாகவே பார்த்தார். எனவே கண்டங்களுக்கு இடையிலான ஓர் அதிகாரக் குழுவை உருவாக்க விரும்பினார். அதன் அடிப்படையில் ஆங்கில, அமெரிக்க சக்திகளை அழிக்க ருஷ்யா, ஜப்பானுடன் ஓர் ஒப்பந்தத்தை உருவாக்கினார். தங்களுக்கிடையில் ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதில்லை என்ற ஒப்பந்தம் ஹிட்லருக்கும் ஸ்டாலினுக்கும் இடையில் கையெழுத்தானது. அதன்பிறகு அவர் “இப்போது அச்சு நாடுகள், தூரக்கிழக்கு நாடுகள் இணைந்து செயலாற்றுவதன் நோக்கம் ஜெர்மானிய மக்களின் கண் முன்னே தெரிகிறது. இறுதியாக மேற்கத்திய ஜனநாயக நாடுகளின் கழுத்தை அறுக்கும் அனகோண்டா கொள்கைகளிலிருந்து அது விடுபடும் என்ற நம்பிக்கை துளிர்விட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

அந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவில் இருந்த முன்னணி புவிசார் அரசியல் சிந்தனையாளர் நிக்கோலஸ் ஸ்பைக்மேன் (Nicholas Spikeman) ஆவார். அவர் “உலக அரசியலில் அமெரிக்காவின் உத்தி” (1942) (America’s Strategy in World Politics), அவர் மறைந்த பிறகு வெளிவந்த அமைதியின் நிலப்பரப்பு (1944) (The Geography of Peace) ஆகிய நூல்களில் மெக்கிண்டரின் ‘இதய நிலப்பரப்பு’ (Heartland) கோட்பாடான நிலம் சார்ந்து உருவான புவிசார் அரசியல் உத்தியை கடுமையாக எதிர்த்ததோடு, அதற்கு மாறான கடல்சார் ஆதிக்கத்திற்கு அழுத்தம் தந்தார். ஐரோப்பா, மத்தியக் கிழக்கு, கிழக்காசியா, பசிபிக் பகுதிகளை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால் சோவியத் யூனியனின் பிடியிலுள்ள யூரேஷியாவின் இதய நிலப்பரப்பை சுற்றி வளைத்துக் கைப்பற்ற முடியும் என்பதே அவரது பார்வையாகும்.  அமெரிக்க-பிரிட்டிஷ் நாடுகளின் உலக மேலாதிக்கத்தின் தேவையை அவர் வலியுறுத்தினார். ஐரோப்பிய கடல் பகுதிகலின் மீது சோவியத் யூனியனின் மேலாதிக்கத்தைத் தடுப்பது குறித்து தனது நூலான அமைதியின் நிலப்பரப்பில் அவர் விவரித்துள்ளார். ஒன்றிணைந்த கடல் பகுதி கூட்டணியை எதிர்த்து சோவியத் யூனியன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் வாதிட்டார். பனிப்போர் தொடங்கிய நிலையில் ஜார்ஜ் கென்னனின் ‘கட்டுப்படுத்தும்’ உத்தியையும் தாண்டி, அதே சமயம் வெளியுறவு கவுன்சிலின் பெரும் திட்டங்களையும் மீறிய வகையில், பெருமளவு மறக்கப்பட்ட  ஸ்பைக்மேனின் புவிசார் அரசியல் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் வலுவான அழுத்தத்தை உருவாக்கியது.

அமெரிக்க மேலாதிக்கத்தை விரிவாக்க:

1943-ல் மெக்கிண்டர் இப்பூவுலகில் அமெரிக்கப் பேரரசின் பங்கை வலியுறுத்திய வகையில் தெரிவித்த கருத்தான “சோவியத் யூனியனின் நிலப்பரப்பு இதய நிலப்பரப்பிற்குச் சமமானது; அதனை அவர்கள் தொடர்ந்து கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள அனுமதிக்க முடியாது” என்ற வரிகள் அமெரிக்க வெளியுறவுத் துறையின் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற நேரத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆரம்பகால புவிசார் உத்தி, அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளபடி, பிரிட்டிஷ்- அமெரிக்க பேரரசுகளின் மிகப் பரந்த நிலப்பரப்பைத் தாண்டி ஐரோப்பா கண்டம், மத்தியக் கிழக்கு, ஆசியாவின் கடல் சார்ந்த பகுதிகள் உள்ளிட்டவற்றில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தை விரிவுபடுத்துவது என்பதாகும். இந்தப் புதிய கம்யூனிச எதிர்ப்புப் போரில் உலகெங்கிலும் நடைபெறும், குறிப்பாக கேந்திரமான பகுதிகளில் நடைபெறும், புரட்சிகளை எதிர்த்துப் போராட வேண்டும். வெளியுறவு அமைச்சகம் மட்டுமின்றி, பனிப்போர் காலத்திலும், பனிப்போர் விலகிய காலத்திலும், தொடர்ச்சியாக முன்னணி அரசியல் உத்தி வகுப்பாளர்களான ஜேம்ஸ் பர்ன்ஹாம் (James Burnham), யூஜின் ரோஸ்டோவ் (Eugene Rostow), ஹென்றி கிசிஞ்சர் (Henry Kissinger), ஷீக்னு பிரசன்ஸ்கி (Zbigniew Brezinski), பால் உல்ஃபோவிச் (Paul Wolfowitz) போன்றோரும் மேற்கூறிய கருத்தோடு உடன்பட்டு வாதிடுபவர்களாக இருந்தனர். உலகின் எல்லாப் பகுதிகளிலும் தானே செல்வாக்கு செலுத்த வேண்டும்; அதே போன்று கேந்திரமான வளங்கள், மூலதன இடப்பெயர்வு, நாணயச் செலாவணி, உலக வர்த்தகம் ஆகியவையும் தனது கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதை வாஷிங்டன் தனது குறிக்கோளாகக் கொண்டுள்ளது. சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னரான ஏகாதிபத்திய காலகட்டத்தில் அனைத்து விழுமியங்களையும் தொலைத்து விட்டு நிர்வாணமாக நிற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பேராசை வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது.

உலகை ஆளவேண்டும் என்ற அமெரிக்காவின் பேரவா, கொள்கைகளை வகுக்கும் ராணுவ அமைச்சகத்தின் உதவிச் செயலாளர் உல்ஃபோவிச் மேற்பார்வையில் வெளியான ராணுவ திட்டமிடல் கையேடு 1994-99 (Defence Planning Guide)  (இதன் சில பகுதிகள் ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கையில் அம்பலமாயின) அதிகாரபூர்வ அறிக்கையாக வெளியானபோது உல்ஃபோவிச் கோட்பாடு என அறியப்பட்டது. பொதுவாகவே இது நவீன பழமைவாதத்துடன்  தொடர்புடையது. உலக அரங்கிலிருந்து சோவியத் சோஷலிச குடியரசு மறைந்த பின்னணியில் நிரந்தரமாக ஒற்றைத் துருவ உலகை நிறுவ வெளிப்படையாக அறிவித்த அமெரிக்காவின் புவிசார் உத்தியின் புதிய குறிக்கோள் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தலாக மீண்டெழுந்து வரும் எதிர்ச் சக்திகளை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்துவது என்பதே ஆகும். யூரேஷியாவில் வலுவான, அதிகாரமிக்க, ராணுவ ஆற்றல்மிக்க நாடு ருஷ்யா. அது மட்டுமே அமெரிக்காவை வீழ்த்தும் திறன் படைத்தது. எனவே அந்நாடு நிரந்தரமாகக்  குறிவைக்கப்பட  வேண்டிய நாடாகும்.

1997-ல் ‘மிகப்பெரிய செஸ் பலகை’  (The Grand Chessboard) என்ற தனது நூலில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரசென்ஸ்கியின் கூற்று இது:  “அமெரிக்கா தனது ராணுவத்தை இப்போது நேரிடையாக யூரேஷியா கண்டத்தின்  மூன்று சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலைநிறுத்தியுள்ளது. மேற்கு ஐரோப்பா, கிழக்கு ஐரோப்பாவின் ஒரு சில பகுதிகள், மத்திய ஆசியா, மத்தியக் கிழக்கு, கிழக்காசியா, பசிபிக் கடல் பகுதிகள் ஆகியவையே அவை. அதன் குறிக்கோள் புதுவித மேலாதிக்கம் அல்லது புவி மேலாதிக்கம். அதாவது அமெரிக்காவை ஒற்றை உலக சக்தியாக நிலைநிறுத்துவது. புதிய உலக ஒழுங்கமைப்பு என்பது அமெரிக்காவே ஒற்றைத் துருவ சக்தி. அதன் பின்புலமாக அணுஆயுத சக்தி இருக்கும். அமெரிக்கப் பேரரசுக்கு வெளியே மத்திய பகுதிகளில் ஆட்சி மாற்றம் புவிசார் அரசியலில் முக்கியமானதாக உள்ளது. பனிப்போர் காலத்தில் இவையனைத்தும் பொறுத்துக் கொள்ளப்பட்ட போதிலும், தற்போது அது தேவையாக மாறியுள்ளது. இங்கே குறிக்கோள் நிலையான ஜனநாயகத்தை நிறுவுவதல்ல. மத்திய ஆசியாவின் முக்கிய பகுதிகளில் இந்த நோக்கம் நிறைவேறுவது சாத்தியம் என எந்த காலத்திலும் கருதப்பட்டதில்லை. மாறாக போக்கிரித் தனமான அரசுகளை அழிப்பது, சிக்கல் நிறைந்த அரசியல் அமைப்புகளை, குறிப்பாக யூரேஷியாவின் இதய நிலப்பரப்பிற்கு வெளியிலுள்ள எண்ணெய் வளமிக்க பெர்சிய வளைகுடா நாடுகள்- இந்நாடுகள் அமெரிக்கப் பேரரசின் விரிவாக்கத்திற்குத் தடையாக, அச்சுறுத்தலாக இருக்கும் எனக் கருதப்படுவதால்- அழித்தொழிக்கப்பட வேண்டிய நாடுகள் ஆகும். இந்த மிகப்பெரும் அழிப்புச் செயலுக்கு எதிரான சாட்சியமாக, திருப்பித் தாக்கும் சக்தியாக, இன்று ஐஎஸ் (இஸ்லாமிய அரசு) என்ற தீவிரவாத அமைப்பு தலையெடுத்துள்ளது.

சோவியத் மறைவுக்குப் பின், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மாபெரும் உத்தி, அதனுடைய ராணுவ திட்டமிடல் கையேட்டில் கோடிட்டுக் காட்டியுள்ளபடி அமைந்தது. அதன் ஆதிக்கச் சிந்தனை  எதிர்பாராத விதமாக மீண்டெழுந்து முதலாளித்துவ ருஷ்யாவுடன் மோதல் போக்கு இறுதியாக எழுச்சி பெறும் என்பதாக அமைந்துள்ளது. இதனை எதிர்பார்த்தே அமெரிக்கா, நேட்டோ கூட்டணி நாடுகள் தங்கள் செயல்பாடுகளை யூரேஷியா, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விரிவுபடுத்தியுள்ளனர். ஃபால்கன் நாடுகள், மத்திய ஆசியா, மத்தியக் கிழக்கு, வட அமெரிக்க நாடுகளுடன் போரில் ஈடுபட்டுள்ளது. கால் நூற்றாண்டாக 1992லிருந்து இன்றுவரை ருஷ்யாவை மூச்சுத் திணறடித்துக் கொண்டிருக்கிறது. இந்த மாபெரும் ஏகாதிபத்திய உத்தி கேந்திர பகுதிகளில் நடைபெறும் திட்டமிட்ட எதிர்ப்பு இயக்கங்களை நசுக்குவது; சீனாவை ராணுவ ரீதியாக, அரசியல் ரீதியாக தடுப்பது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்பதாகும்.

அமெரிக்காவில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட 2001 செப்டெம்பர் 11 தாக்குதல்களுக்குப் பின்னர் ஜார்ஜ் W. H. புஷ் அறிவித்த ‘புதிய உலக ஒழுங்கமைப்பு’, கூடுதல் தத்துவார்த்த  தீபமாக ஜார்ஜ் W. புஷ் முன்மொழிந்த ‘தீவிரவாதத்திற்கு எதிரான போர்” என்பதையும் தன்னுள் இணைத்துக் கொண்டது. பூவுலகில் நிரந்தரமாகப் போர் நடைபெறுவதை, மனித நேயம் என்ற பெயரால் தலையிடுவதை இந்த உத்தி நியாயப்படுத்துகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் தங்கள் மேலாண்மையை முழுமையாக உறுதிப்படுத்த 2003-ல் ஈராக் மீது நடத்தப்பட்ட போருக்குப் பின்பு, நேட்டோ நாடுகளின் ஆதரவுடன் அமெரிக்கா 2011-ல் லிபியாவிற்குள் அத்துமீறி நுழைந்தும், பின் சிரியா தீவிரவாதத்திற்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும், அது ஒழிக்கப்பட வேண்டும் எனவும், அதுவே தங்கள் நோக்கம் எனவும் தெரிவிக்கிறது. இருப்பினும் மத்தியக் கிழக்கு, இதர பகுதிகளில் ஆட்சி மாற்றத்திற்கான உண்மையான நோக்கம் 1990வாக்கில் உல்ஃபோவிச், வெஸ்லி க்ளார்க்கிடம் (Wesley Clarak) தெரிவித்தது போல் உறுதியாக இது ஒரு புவிசார் அரசியல் செயல்பாடே ஆகும்.

ருஷ்யாவுடன் புதிய பனிப்போர்?

ஒபாமா ஆட்சி  நேட்டோ கூட்டணி நாடுகளுடன் சேர்ந்து உக்ரைனில் ஆட்சிக் கவிழ்ப்பிற்கு இடைத்தரகராகச் செயல்பட்டது. மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவாகச் செயல்படும் ஒரு சிறு சுயநலக் குழு அமெரிக்காவிற்கு அடிபணியும் தீவிர வலதுசாரி அரசை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியதன் மூலம் எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி ருஷ்யாவிற்கு எதிராகப் பனிப்போர் துவக்கியுள்ளதை அமெரிக்கா பறைசாற்றியுள்ளது. 2007 வாக்கில் விளாடிமிர் புடின்  ஒருதுருவக் கொள்கை (இப்புவியை அமெரிக்கா மட்டுமே ஆட்சிபுரியும் நிலை) ஏற்புடையதல்ல; இன்றைய உலகில் அது சாத்தியமும் அல்ல என்று கூறிய பின்னர்தான் அவர்களுக்கே உரிய பாணியில் கேந்திரமான பிரச்சார உத்தி பின்பற்றப்பட்டது. மீண்டெழுந்து வந்து இன்றைய முதலாளித்துவத்திற்கு மாறியுள்ள ருஷ்யாவிற்கு எதிராக நடத்தப்படும் நீண்ட எதிர்ப்புரட்சியின் நீட்சியாக அமெரிக்காவின் புவிசார் உத்தி கடைப்பிடிக்கப்படுகிறது. ருஷ்யா கிரீமியா பகுதியை ( முன்பு உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்தது) ஓட்டெடுப்பின் மூலம் மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் தன்னுடன் இணைத்துக் கொண்டது. கிழக்கு உக்ரைன் எல்லைப்புறத்தில் நிலைத்தன்மையை உருவாக்கும் நோக்குடன் அமெரிக்கா-சவூதி அரேபியா பதிலியாக இருந்து நடத்தும் ஆசாத்-இன் சிரியா அரசுக்கு எதிரான போரில் தலையீடு செய்தும் அதன் மூலம் தன் மத்தியக் கிழக்கு கூட்டாளியைக் காப்பாற்றும் நடவடிக்கையில் ருஷ்யா வெற்றி பெற்றுள்ளது.

கச்சா எண்ணெய் தொடர்பான தொழில்கள், நிதியமைப்புகள் போன்றவற்றால் ஈர்க்கப்படும் கீழ்த்தட்டு நடுத்தர வர்க்கம், தீவிர வலதுசாரிகள் ஆகிய பிரிவினருக்குக் கடமைப்பட்டுள்ள, சற்றே மாறுபட்ட, அமெரிக்க முதலாளித்துவப் பிரிவினரை பிரதிநிதித்துவப்படுத்தும் ட்ரம்ப் நிர்வாகம் துவக்கத்தில் ருஷ்யாவுடன் சமாதானமாகப் போகும் நோக்குடன் புவிசார் அரசியலில் ஒரு மாற்றத்தை உருவாக்கியது. அதே நேரத்தில் இஸ்லாமிய நாடுகள், ஈரான், வடகொரியா, சீனா ஆகியவை அடிப்படையில் உலக எதிரிகள் என வர்ணித்து அவர்களை எதிர்கொள்ள ஒரு கொள்கையை முன்னிறுத்தியது. இது சாமுவேல் பி. ஹண்டிங்டன் (Samuel P. Huntington) என்பவரது ‘நாகரீகங்களின் மோதல்’ என்ற கொள்கையின் அடிப்படையில் உருவானதாகும். (அரசியல் விஞ்ஞானியான ஹண்டிங்டன் பனிப்போருக்குப் பிந்தைய ஆயுத மோதல்கள் நாடுகளுக்கு இடையிலானதாக இல்லாமல், கலாச்சாரங்களுக்கு இடையிலான மோதல்களாகவே இருக்கும் என கணித்திருந்தார். இதன்படி இஸ்லாமிய தீவிரவாதம் அமெரிக்காவிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்) இது உல்ஃபோவிச், ப்ரசென்ஸ்கியின் யூரேஷியாதான் இதய நிலப்பரப்பு என்ற கோட்பாட்டிற்கு எதிரானதாகும். அதிவேகமாக பொருளாதார வளர்ச்சியில் முன்னேறி வருகின்ற அதிக செல்வாக்கு கொண்ட பிராந்திய சக்தியான சீனாதான் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக  இருப்பதால், அந்நாடுதான் ஏகாதிபத்திய உத்தியின் முக்கிய இலக்காகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்க ராணுவத் தளவாடத் தொழில் பிரிவினரில் பெரும்பகுதியினர், பெண்டகன் தொடங்கி புலனாய்வு அமைப்புகள் வரை முக்கிய பாதுகாப்பு அமைப்புகளின் ஒப்பந்ததாரர்கள் வரை அனைவருமே ருஷ்யாதான் முதன்மையான எதிரி என்ற நிலைபாட்டிலிருந்து புதிய அரசு மாறுபடுவதை கடுமையாக எதிர்க்கின்றனர். இவர்களின் செயல்பாடு எவ்வளவு தூரம் நீண்டுள்ளது எனில் ட்ரம்ப் நிர்வாகம் ருஷ்ய அரசின் நிர்வாகிகளுடன் நடத்திய ஆரம்ப கட்டப் பேச்சுவார்த்தையை எதிரியுடன் உறவு, மறைமுகமான தேசத் துரோகச் செயலாக சித்தரிப்பது வரை சென்றுள்ளது. எனவே புதிய அமெரிக்க அரசு என்றுமில்லாத வகையில் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து பல்வேறு தகவல் கசிவுகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. அதனடிப்படையில் தேர்தல் காலத்தில் ருஷ்யாவுடனான தொடர்புகள், தேர்தலுக்குப் பிந்தைய தொடர்புகள் ஆகியவை குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. யூரேஷியாவின் இதய நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ள, அமெரிக்காவின் முதன்மையான அணு ஆயுத எதிரியாக உள்ள ருஷ்யாவை ஆளும் வர்க்கத்தின் மீது செல்வாக்கு செலுத்தும் ஒரு பிரிவினர் அமெரிக்காவின் முக்கிய எதிரியாக பார்க்கின்றனர். நேட்டோ கூட்டமைப்பின் ஸ்திரத் தன்மை, ஐரோப்பாவை நிரந்தரமாக அமெரிக்காவிற்கு அடிபணிந்து இருக்க வைக்கும் அமெரிக்க உத்தி ஆகியவை ருஷ்யாவுடனான புதிய பனிப்போரின் மீது கட்டப்பட்டதாகும்.

அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கு அமெரிக்க பொருளாதாரத்தின் வலிமை, டாலரின் மேலாதிக்கம், வாஷிங்டன் நிதியமைப்பின் மேலாதிக்கம் இவை அனைத்தும் அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தைச் சார்ந்து இருப்பது என்பதாகும். அமெரிக்காவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி, முக்கிய முதலாளித்துவ நாடுகளின் உற்பத்தி ஆகியவை தேக்கமடைந்திருந்த போதிலும், வேகமாக வளர்ந்து வரும் சீனப் பொருளாதாரத்தின் முன்பு மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரங்கள் வீழ்ச்சியடைந்து வந்தாலும், வாஷிங்டனிலிருந்து ஒழுங்கற்ற புவிசார் அரசியல் உத்தி வெளிப்பட்டாலும் இன்னமும் கூட அது ஒற்றைத்துருவ ஒழுங்கமைப்பையே தனது குறிக்கோளாகக்  கொண்டுள்ளது. அமெரிக்கத் தலைமையின் கீழ் உள்ள மூவர் அணியான அமெரிக்க-கனடா, ஐரோப்பா, ஜப்பான் ஆகிய இவர்களின் பலம் புவிசார் அரசியல் மேலாண்மை, ராணுவ, தொழில்நுட்ப மேலாதிக்கம், டாலர் மூலம் நிதி மேலாதிக்கம் போன்றவற்றின் மூலம் இந்த நிலைமையை சரிக்கட்ட அது முயற்சிக்கிறது.

இப்புவியின் மீது முழுமையான மேலாதிக்கம் செலுத்தும் விருப்பத்திற்கேற்ப அணு ஆயுதத் திறனை நவீனப்படுத்துவது என்ற பெயரில் தனது அணு ஆயுதத் தொழிற்சாலையை வலுப்படுத்திடும் போக்கு அமெரிக்காவின் வெறிபிடித்த ஏகாதிபத்திய உத்தியே ஆகும். இந்த உத்தி வலிமை குன்றியுள்ள ருஷ்யா நவீனப்படுத்துவதில், பராமரிப்பதில் அமெரிக்காவை விட பல பத்தாண்டுகள் பின்தங்கியுள்ள  நிலையை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அமெரிக்காவை அணு ஆயுதத்தில் தீர்மானகரமான சக்தியாக முன்னோக்கி நகர்த்தும் குறிக்கோளாகும். அமெரிக்காவின் அணு ஆயுத உத்தி என்பது ஏற்கனவே ஊகிக்கப்பட்டபடி ‘பரஸ்பரம் ஒப்புக் கொண்ட அணு ஆயுத ஒழிப்பு’க்கான ஒப்பந்தம் (Mutually Asssured Destruction) சாகடிக்கப்படும்.   (பரஸ்பரம் மோதல்களில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது என இருதரப்பினரும் ஒப்புக்கொள்ளும் ஒப்பந்தம் இது.  தம்மிடம் உள்ள அணு ஆயுதங்களை முழுமையாகப் பயன்படுத்தினால் தாக்கப்பட்ட, தாக்கிய நாடு ஆகிய இரண்டு நாடுகளுமே அழிவதற்கான வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்த வகையில் ஒரு தடுப்பு முயற்சியாகவே இந்த ஒப்பந்தம் விளங்குகிறது) அதாவது இத்துறையில் நிகழும் குற்றங்களைத் தடுக்கின்ற அனைத்து அமைப்புகளும் ஒழிக்கப்படும் என்பதாகும்.

அமெரிக்காவின் முக்கிய கோட்பாடுகளை வகுப்பவர்கள் அதீதமாக நம்புவது அமெரிக்கா உலகில் அணு ஆயுத மோதல் வெடித்தால் தனது அணு ஆயுத உற்பத்திச் சாலையில் உற்பத்தியான ஆயுதங்களில் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்தி முதல் தாக்குதலிலேயே அல்லது எதிர்த் தாக்குதலில் எதிரியின், அது ருஷ்யாவாக இருந்தாலும் சரி, அணு ஆயுதங்களை பெருமளவு அழித்துவிடலாம் என்பதாகும். பெண்டகனில் உள்ள போருக்கான திட்டமிடுவோர் அமெரிக்கா தற்போது அணு ஆயுதத் திறனில் மேலாண்மை மிக்க சக்தியாக உள்ளது என நம்புகின்றனர். 1945-ல் அமெரிக்க அதிபர் ட்ரூமென் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்களின் மீது அணுகுண்டு வீச உத்தரவிட்டதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள் பலியானதும், அது ஒரு ராணுவ முடிவு என்பதை விட அரசியல் முடிவாகவே இருந்ததோடு, அது பனிப்போர் காலத்தில் நடைபெற்ற உண்மையானதொரு ராணுவ நடவடிக்கையுமாகும். அதற்குப் பிறகு தற்போது எதிரி மீது அணு ஆயுதத் தாக்குதல் சாத்தியம் என முதன்முறையாக எண்ணிப் பார்க்க முடிகிறது. பரஸ்பரம் ஒப்புக் கொண்ட அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தம் காலி செய்யப்படவுள்ள நிலையில், அண்மையில் நிகழவிருக்கும் அபாயமான அணு ஆயுதப் பதட்ட காலத்தில் எதிர்த்தரப்பினர் கூட முதல் தாக்குதல் நடத்தினால் அமெரிக்காவால் தாங்கள் அழிக்கப்படுவோம் என்ற அச்சத்தையும் மீறி அத்தகைய முதல் தாக்குதலினால் தங்களுக்கு பெரும்பயன் ஏற்படக்கூடும் என்பதால் அத்தகைய தாக்குதல்களில் ஈடுபடுவர்.

இவ்வுலகில் அதிக பலம் கொண்ட அரசுகள் தங்கள் மேலாதிக்கத்தை நிறுவுவதற்காக தங்களுக்கிடையே மோதிக் கொள்வது ஏகாதிபத்தியத்தின் சிறப்பியல்பு என லெனின் குறிப்பிட்டுள்ளார். ஒரு முதலாளித்துவ அரசு, அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, 21ஆம் நூற்றாண்டில் ஒரு ஒற்றைத் துருவ உலகம் அல்லது திறமையான ஏகாதிபத்திய ஒழுங்கமைப்பை உருவாக்க முனையும்போது மேலே கூறிய அபாயம் இரண்டு மடங்காக உயரும்.

20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் போர்கள், படையெடுப்பு, எதிர்க்கிளர்ச்சி போன்றவற்றின் மூலம் லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து, உலகிலேயே மிகவும் நாசகரமான நாடு என்பதை அமெரிக்கா வெளிப்படுத்திக் கொண்டுள்ளது. அதன் ரத்தவெறி கொண்ட மரபு இன்றளவும் தொடர்கிறது. தொழிலாளர்களின் வார விடுமுறை நாட்களில் ஒரு நாள், அதாவது 2016 செப்டெம்பர் 3-5 தேதிகளுக்கு  பெரிய இஸ்லாமிய நாடுகளான ஈராக், லிபியா, சோமாலியா, சிரியா, ஏமன் மீது குண்டுகளை வீசியும், ஏவுகணைத் தாக்குதலையும் நடத்தியது. 2015-ல் ஈராக், சிரியா மீது 22,000 குண்டுகளை அது பொழிந்துள்ளது. அமெரிக்காவிற்கு எதிரான எந்தவொரு நாடும் அமெரிக்காவின் இந்த வன்முறையை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.

புரட்சி: மனிதனின் எதிர்காலம்

வர்க்கப் போராட்டங்களைப் போலவே ஏகாதிபத்திய எதிர்ப்பு காரணமாகவும் 20ஆம் நூற்றாண்டில் புரட்சிகள் வெடித்தன. லெனின் அவதானித்தது போலவே பெரும்பாலான நேரங்களில் ஏகாதிபத்திய உலக அமைப்பில் வலிமை குன்றிய கண்ணிகளில்தான் இந்தப் புரட்சிகள் வெடித்தெழுந்தன. அவை தவிர்க்க இயலாமல் பெருமுதலாளித்துவ சக்திகளால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்புரட்சி சக்திகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சிறு எழுச்சியும் கூட உலக முதலாளித்துவ அமைப்பிற்கு அச்சுறுத்தலாக கருதப்பட்டு கொடூரமான வன்முறை மூலம் நசுக்கி ஒடுக்கப்பட்டது. ரொனால்டு ரீகனின் ராணுவம் 1983-ல் குட்டித் தீவான க்ரெனடா மீது படையெடுத்தது. நிகரகுவாவில் சாண்டினிஸ்டா அரசை எதிர்த்து மறைமுகப் போர் தொடுத்தது ஆகியவை இன்றளவும் சாட்சிகளாக உள்ளன. போர்களில் பெருமளவிலான மனித உயிர்கள் பலியாவதற்குக் காரணமாக ஏகாதிபத்திய எதிர்ப்புரட்சியின் மீது குற்றம் சாட்டுவதற்கு மாறாக மேலாதிக்க சிந்தனைகள் புரட்சியையே குற்றம் சாட்டுகின்றன. இதன் மூலம் குற்றத்திற்கு எதிர்ப்புரட்சியே காரணம் என்பதை அவர்கள் வரலாற்றிலிருந்து முற்றிலுமாக நீக்கிவிடுகின்றனர்.

சிலியில் பாப்புலர் யூனிட்டி அரசின் தலைவராக ஜனநாயகபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சால்வடார் அலெண்டே (Salvador Allende) சிலியில் சோஷலிசத்தை கொண்டுவருவதாக அறிவித்தார். அதன் முதல் கட்டமாக, அந்நாட்டின் பெரு நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த அமெரிக்க பெருநிறுவனங்களின் சொத்துக்களை அந்த அரசு தேசியமயமாக்கியது. 1970-ல் மார்க்சிய-சோஷலிச சார்பு இதழான மன்த்லி ரிவ்யூவின் வெளியீட்டாளர்களான ஹேரி மக்டாப் (Harry Magdoff), பால் ஸ்வீசி (Paul Sweezy) ஆகியோரை அதிபர் அலெண்டே தனது அரசின் துவக்க விழாவிற்கு அழைத்திருந்தார். மக்டாப், ஸ்வீசி அலெண்டேயின் நீண்ட நாள் நண்பர்களாவர். துவக்கவிழா நிகழ்ச்சியில், அமெரிக்காவிற்கும் சிலி ராணுவத்திற்கும் உள்ள தொடர்பு, அதனால் ஏற்படக் கூடிய அபாயம், இதன் தொடர்ச்சியாக வாஷிங்டனால் ஏற்பாடு செய்யப்படும் ஆட்சிக் கவிழ்ப்பு பிரிட்டோனிய காவலர்களால் நிகழ்த்தப்படும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக அவர்கள் அலெண்டேவை எச்சரித்தனர். தற்போதுள்ள அமைப்பிற்கு குந்தகம் ஏற்பட்டால், ஏகாதிபத்தியம் எத்தகைய சட்டங்களையும் மதிக்காது எனவும் அவர்கள் எச்சரித்தனர். உண்மையிலேயே மூன்றாண்டுகளுக்குப் பின்னர் ஜெனரல் அகஸ்டோ பினோசெட் (Augusto Pinochet) மூலம்  அலெண்டேவும் ஆயிரக் கணக்கானோரும் உயிரிழந்து, ரத்த வெள்ளத்தில் ஆட்சி கைப்பற்றப்பட்டது.

இவையனைத்தும் உணர்த்தும் வரலாறு, புரட்சிகள் உருவானாலும் கூட, அவை எதிர்ப்புரட்சியை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதாகும். உண்மையிலேயே கடந்த நூற்றாண்டின் புரட்சியையும் எதிர்ப்புரட்சியையும் மதிப்பீடு செய்யும்போது எதிர்ப்புரட்சியின் வலிமையையும் வீரியத்தையும் மிகுந்த அழுத்தத்துடனேயே மதிப்பீடு செய்ய வேண்டும். போராட்டங்களையும் தவறுகளையும் விரிவான வரலாற்று இயங்கியல் அடிப்படையில் பார்க்க வேண்டும்.

மேற்குலக மேலாதிக்கச் சிந்தனை, வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் தொடங்கி முக்கிய செய்தி ஊடகங்கள் வாயிலாக 1917 ருஷ்யப் புரட்சி துவக்கம் முதல் இறுதிவரை ஒரு தோல்வி என்பதாகவே சித்தரிக்கிறது. திறமையின்மை, சரி செய்யமுடியாத கோளாறுகள் போன்றவற்றால் அது வீழ்ந்ததாகவும் கூறப்பட்டது. அதே மூச்சில், அமெரிக்காவின் வலிமை, ராணுவ பலமே பனிப்போரில் வென்றது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். வரலாற்றுச் சோகங்கள், சமூக-பொருளாதார முரண்கள் நிறைந்ததுதான்  ருஷ்யா என்பது மறுக்கமுடியாத உண்மை. ருஷ்யப் புரட்சி காலகட்டத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட மனித ஆற்றல் மேற்கத்திய நாடுகளின் ஆதரவும் ஆயுதமும் பெற்ற ருஷ்ய வெண்படையுடன் மோதி, சீர்குலைவை உருவாக்கிய உள்நாட்டுப் போரில் அனைத்து சக்திகளையும் இழந்து நின்றது.

அதுமட்டுமின்றி, சோவியத் யூனியன், அதன் வரலாற்றில் அசாதரணமான தொழில் வளர்ச்சி கண்டது. தொழிலாளி வர்க்கத்தின் நிலைமைகளில் பொதுவாக முன்னேற்றம் கண்டது. உலகின் இதர பகுதிகளில் கிடைக்கப் பெறாத பல சலுகைகள் மக்களுக்குக் கிடைத்தன. இரண்டாம் உலகப் போரில் மேற்கத்திய நாடுகளைக் காப்பாற்றியதும் சோவியத் யூனியன்தான். ஸ்டாலின்கிராடில் வெர்மா (Wehrmacht)வின் (முப்படைகளையும் இணைத்த ஜெர்மனியின் படை அமைப்பு) திடீர் தோல்வி, செம்படையின் மேற்கு நோக்கிய முன்னேற்றம் ஆகியவையே இந்த வெற்றிக்குக் காரணம். அந்தப் போர் இதுவரை கண்டிராத வகையில் அதிக எண்ணிக்கையில் மனித உயிர்களை பலி வாங்கியது. சோவியத் யூனியன் மட்டுமே 2 கோடி மக்களை இந்தப் போரில் இழந்த போதிலும் நிலைத்து நின்று மூன்றாம் உலக நாடுகளில் விடுதலை இயக்கங்களைத் தூண்டிவிட்டது. சோவியத் முகாமின் வளர்ச்சி, அந்தப் பகுதியில் ஏற்பட்ட பொருளாதார, தொழில் நுட்ப வெற்றிகள் உலக அரங்கில் சோவியத் யூனியன் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாக 1970வரை கருதப்பட்டது. சில திறமையின்மைக் குறைபாடுகளைத் தவிர்த்து, பொருளாதாரத்தில் அதிகாரத்துவ மேலாண்மை வெளிப்படையாகச் செயல்பட்டதையும் தாண்டி, முதலாளித்துவம் அல்லாத அமைப்பின் விதிகளுக்கு உட்பட்டுச் செயலாற்றி வேறுபல வழிகளில் சமூக வளர்ச்சியை அது வெற்றிகரமாக்கியது.

ஆனால் சோவியத் யூனியன் சோஷலிசப் புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில் தோல்வியடைந்துள்ளது. ஆனால் சோவியத் யூனியன் சோஷலிசப் புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில் தோல்வியடைந்தது. புரட்சியின் வெற்றிக்குப் பிறகு உருவான சமூக அமைப்பில் இருந்த சமமற்ற தன்மையால், தனக்கான  ஆளும் அதிகார வர்க்கத்தை அது உருவாக்கிக் கொண்டது. கிழக்கு ஐரோப்பா சுதந்திரமான வளர்ச்சி பெறுவதை சோவியத் யூனியன் உறுதியோடு மறுதலித்தது.

இறுதியில் அது தனது உள்ளார்ந்த ஆற்றலை இழந்ததற்குக் காரணம் (தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு, புதிய சிந்தனை கொண்ட மனித ஆற்றலைக் கட்டவிழ்த்து விடுதல் போன்ற) செறிவான வளர்ச்சிக்கு மாறாக (கட்டாய உழைப்பு, ஆதாரங்கள்)ஆகியவற்றைக் கொண்ட விரிவான வளர்ச்சியை அது சார்ந்து இருந்ததே ஆகும். ராணுவம், அரசியல், பொருளாதார தளங்களில் மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது, பல பத்தாண்டுகள் பின்தங்கியிருந்த நிலையில், அவற்றை எதிர்கொள்வதற்காக தன் சக்திக்கு மீறிய வகையில் பெருமளவிலான ஆயுதப் போட்டியை சந்திக்க வேண்டிய கட்டாயம் சோவியத் யூனியனுக்கு ஏற்பட்டது. அவர்களின் மேம்போக்கான வாக்குறுதிகளையும் தாண்டி, மிக்கயீல் கோர்ப்பசேவின் தவறான புரிதலில், கடுமையான அழிவை ஏற்படுத்தக் கூடிய க்ளாஸ்நாஸ்ட் (Glasnost ) (வெளிப்படைத்தன்மை), பெரெஸ்த்ரோய்க்கா (Perestroika)  (மறுசீரமைப்பு) ஆகிய கொள்கைகள் அந்த அமைப்பை புனரமைப்பதற்கு மாறாக சீர்குலைக்கவே செய்தது. பெர்லின் சுவர் தகர்ப்பு கிழக்கு ஐரோப்பா கைவிட்டுப் போனது என்பதை அறிவித்த போதிலும், சோவியத்தின் வித்தியாசமான ஆளும் அதிகார வர்க்கம்தான் இந்த அமைப்பு இறுதியில் தகர்வதற்கான சாட்சியமாக இருந்தது. சோவியத் அதிகார மையத்தின் சலுகை பெற்ற, ஊழல் நிறைந்த, புலனாய்வு அமைப்பு போரிஸ் எல்ஸ்டினுடனும், மேற்கத்திய நாடுகளுடனும் கூட்டு சேர்ந்து, புரட்சிக்குப் பின் உருவான சோவியத் அரசை மேலிருந்து கீழ் வரை தங்களின் தனிப்பட்ட நலன்கள், வர்க்க நலன்கள் முதலாளித்துவத்தின் கீழ் பாதுகாக்கப்படும் என்ற அடிப்படையில் முற்றாக அழித்தனர்.

இவை அனைத்திற்கும் அப்பால், முதலாளித்துவ அமைப்பிலிருந்து உடைத்துக் கொண்டு வெளிவந்த முதல் பெரிய சோஷலிச நாடான சோவியத் ருஷ்யாவின் அனுபவங்கள் தொடர்ந்து கவனத்தை ஈர்ப்பதாக, 21ஆம் நூற்றாண்டில் பேசப்படும் பொருளாக மாறியுள்ளது. மாறுபட்ட வகையில் உருவாகியிருந்த போதிலும், அமெரிக்க ஆதரவுடன் நடைபெற்ற எதிர்ப்புரட்சியின் ஆபத்தை சந்தித்த போதிலும், ஹ்யூகோ சாவேசின் பொலிவாரிய புரட்சி சோவியத் மாதிரிக்கு அப்பாலும் நிகழும் என்று கற்பனை செய்ய வழிவகுத்தது. பொருளாதாரத்தில், தொழில்நுட்பத்தில், கலாச்சாரத்தில் சோவியத் ருஷ்யாவில் நிகழ்த்தப்பட்ட  சாதனைகளை வரலாற்றின் நினைவிலிருந்து அவ்வளவு எளிதாக அகற்றிவிட முடியாது.

20ஆம் நூற்றாண்டின் இறுதிவாக்கில் உலக முதலாளித்துவ நெருக்கடி முக்கிய முதலாளித்துவ நாடுகளையும் சுற்றி வளைத்தது. அந்நாடுகள் இந்த நெருக்கடியில் சிக்கி 1970லிருந்து பொருளாதார மந்தத்தை சந்தித்து வருகின்றன 1980-90 நிதிக்குவிப்பு ஒரு பக்கம் எதிவினை ஆற்றினாலும், 2007-09 வாக்கில் குடியிருப்பு நீர்க்குமிழி வெடிப்பிற்குப் பின்னர் அது முற்றிலுமாகத் தகர்ந்தது. பெரும் நிதிச்சிக்கல் உருவானதில் இருந்து, பொருளாதார மந்தம் முழுமையாகத் தாக்கிய பிறகு, வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் உள்ள தொழிலாளி வர்க்கத்தின், கீழ் நடுத்தர வர்க்கத்தின் நிலை வீழ்ச்சியடைந்தது. என்றுமில்லாத அளவிற்கு அசமத்துவம் உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் உச்சத்தை எட்டியுள்ளது.

இந்த முடிவில்லாத சிக்கல் முக்கிய முதலாளித்துவ நாடுகளின் ஸ்திரத் தன்மையை சீர்குலைத்துள்ளது. பல்வேறு முதலாளித்துவ நாடுகளின் ஆளும் வர்க்கம் இந்த நிலைமைகளுக்கு எதிராக வினையாற்றும்பொருட்டு இந்த அமைப்பை நிலைத்திருக்கச் செய்ய தீவிர வலதுசாரிகளை உள்ளிழுத்து, அவர்களை தங்களின் தாங்கு தளங்களாகப் பயன்படுத்தி வருகின்றனர். எனவே நவீன தாராளமயம், நவீன பாசிசம் (மைய வலதுசாரிகள்/தீவிர வலதுசாரிகள்) கூட்டணியாக உருவாகியுள்ளது. முதலாளித்துவத்திற்கு ஆபத்து என்ற காரணத்தால் அமெரிக்காவில் அறிவியல் நிராகரிக்கப்படுகிறது. பருவநிலை மாற்றம் குறித்த அறிவியல் பார்வை நிராகரிப்பு ட்ரம்ப் பின் வெள்ளை மாளிகை அரசின் நிலைப்பாடாக உள்ளது.  ‘காரணத்தை அழிப்பது’ என்பது இவ்வாறு முழுமை பெற்றுள்ளது.

வர்க்கப்போர் வரலாற்றில் பிற்போக்கு சக்திகள் வலுப்பெற்று வந்தது இதற்கு முன்பும் நிகழ்ந்ததுதான். எனினும் அவை புதிய புரட்சி அலைகள் மேலெழும்பி வரவும் வழிவகுத்தன. 1848 ஐரோப்பியப் புரட்சிக்குப் பின், ஏங்கெல்ஸ் “ஜெர்மனி : புரட்சியும் எதிர்ப்புரட்சியும்”  (Germany: Revolution and Counter-Revolution) என்ற தனது நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்:

“கண்டங்களில் புரட்சிகரமான கட்சி அல்லது கட்சிகள் போரின் அனைத்து முனைகளிலும் தோல்வி அடைந்திருப்பதை எண்ணிப் பார்க்க முடியவில்லை. அதனால் என்ன…? எங்கு புரட்சி தோன்றுகிறதோ அங்கு ஏதோவொரு சமூகத் தேவை இருந்திருக்கும் என்பதை ஒவ்வொருவரும் நன்கறிவர். வெளி அமைப்புகள் தங்களைத் திருப்திப்படுத்திக் கொள்ள, அதைத் தடுத்திருக்கக் கூடும். நாம் தோல்வியைத் தழுவியிருந்தாலும் வேறு வழியில்லை; மீண்டும் ஆரம்பத்திலிருந்து துவங்கத்தான் வேண்டும்..”

வரலாற்று நிலைமைகள் பலமுறை மாற்றங்களைக் கண்டிருப்பினும் இதே உணர்வுதான் தொடர்ந்து நம் மனங்களில் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது. சமூக மாற்றத்தின் தேவை அதிகரித்துள்ள இன்றைய நிலையில், 21ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ப, புதிய, வலிமையான, புரட்சிகர சோஷலிசம் கட்டமைக்கப்படுவது முதலில் இருந்து தொடங்கப்பட வேண்டும்.உலகம் முழுவதும் பிரம்மாண்டமான, ஜனநாயகபூர்வமான, சமத்துவமான, சுற்றுச்சூழல் பாதுகாப்பான புரட்சிகர மாற்றம்தான் உண்மையான மனிதர்களின் எதிர்காலத்தை பிரதிநிதித்துவப் படுத்துவதாக அமையும். இதற்கு மாறான அனைத்தும் மனிதகுல அழிவிற்கே இட்டுச் செல்லும்.

 

அரசமைப்புச் சட்டங்களின் வழியே சோவியத் தரிசனம் !

நவம்பர் புரட்சி நூற்றாண்டு கட்டுரை

இரா.சிந்தன்

பொதுவாக ஒருநாடு தன்னை ‘ஜனநாயக’ நாடென அழைத்துக் கொண்டாலும் அந்த நாட்டின் அரசு எந்த வர்க்கத்தின் கருவியாகவுள்ளது என்பதை வைத்தே, அதைப் பற்றிய மதிப்பீட்டுக்கு வரமுடியும். முதலாளித்துவ நாடுகளில், நாடாளுமன்ற ஜனநாயகம் இயங்குகிறது. குடிமக்களுக்கு சிலஉரிமைகளும் வழங்கப்படுகின்றன. இருப்பினும், அந்த சமூகத்தில் நிலவும் முதலாளித்துவ உற்பத்தி முறையில், சுரண்டல் தொடர்கிறது. எனவே பொருளாதார நெருக்கடிகளும், வேலையின்மையும் தவிர்க்க இயலாததாகின்றன.

மிகச் சிறு எண்ணிக்கையிலான முதலாளித்துவ வர்க்கம் ஒரு ஆட்சிக்குத் தலைமையேற்கும்போது – எப்போது அது தன்னுடைய நலன்களை மட்டுமே முதன்மையாகக் கருதுகிறது. நெருக்கடிகள் எழுந்தால், அதன் பாதகமான விளைவுகளை பெரும்பகுதி மக்களின் மீது சுமத்த ஆளும்வர்க்கம் தயங்குவதில்லை. அத்தகைய சுரண்டலுக்கான கருவியாகவே அரசும் பிறநிறுவனங்களும் தொடர்கின்றன.

சோவியத்துகளின் இரண்டாவது காங்கிரஸ்:

சோவியத் ஒன்றிய அரசானது – பாட்டாளிகள், விவசாயிகளின் அரசுதான் என்பதை அவர்களின் அரசமைப்புச் சட்டம் அறுதியிட்டுக் கூறியது.

1917, நவம்பர் 7 ஆம் தேதியில் குளிர்கால அரண்மனை கைப்பற்றப்பட்டது. நவம்பர் 8ஆம் தேதி சோவியத்துகளின் இரண்டாவது காங்கிரஸ் நடைபெற்றது. அதில் உலக சமாதானத்திற்கான அழுத்தமான குரல் எழுந்தது. மேலும், அப்போது நிறைவேற்றப்பட்ட முடிவுகளின் மூலம் 40 கோடி ஏக்கர்களுக்கும் அதிகமான நிலம் விவசாயி வர்க்கத்தின் ஆளுகையின்கீழ் வந்தது. குத்தகைச் சுரண்டல்களுக்கு முடிவுகட்டப்பட்டது.

’மனிதனை மனிதன் சுரண்டும் முறை இனி இங்கில்லை, சோசலிசப் பொருளாதார அமைப்பில் பொருளாதார நெருக்கடிக்கும், வேலையின்மைக்கும் பொருளில்லை’ என்று பெருமையோடு அறிவித்தது சோவியத் யூனியன். அதைநோக்கிய பயணத்திற்கு லெனின் தலைமையேற்று பாதை வகுத்தார். ரஷ்யாவின் காலனிநாடுகள் விடுவிக்கப்பட்டன.

1918ஆம் ஆண்டில் எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டம் பாலினம், இனம், மொழி உள்ளிட்ட பாகுபாடுகளுக்கு முடிவுகட்டியது. பெண்கள் மீதான பிற்போக்குத்தனமான கட்டுப்பாடுகளை சட்டவிரோதமாக்கியது சோவியத் அரசேயாகும். ஆண் – பெண்திருமணம், விவாகரத்து, வேலை, குழந்தைப்பேறு போன்ற தேர்வுகளை அது சாத்தியமாக்கியது.

1930களில் உலகமும் சோவியத்தும்:

1930களில் உலகம் முழுவதுமே மிகக்கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வந்தது. அமெரிக்காவில் 25% வேலையின்மை நிலவியது. பல நாடுகளில் 33% வரை வேலையின்மை அதிகரித்தது. விவசாய விளைபொருட்களுக்கு 60 சதவீதத்திற்கும் அதிகமாக விலை வீழ்ச்சி ஏற்பட்டது. உலகப் போர்களின் வழியாகவும், போருக்குப் பிறகும் அந்த நெருக்கடியின் சுமைகள் முழுமையாக குடிமக்கள் தலையிலேயே சுமத்தப்பட்டன. ஆனால் சோவியத் பொருளாதாரம் நெருக்கடிகளையோ, விலையேற்றங்களையோ காணாத பேரதிசயமாக இயங்கியது.

1920களில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமலில் இருந்தன. அதாவது அங்கே முதலாளித்துவ உற்பத்தி முறைகளும் நிலவின. முதலாளிகள் இருந்தார்கள். கூட்டுப்பண்ணைகள் முழுமையாக வளர்ந்திருக்கவில்லை. குலாக்குகள் இருந்தார்கள்.

1936 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றிய அரசமைப்புச்சட்டம் திருத்தப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் முதலாளித்துவ உற்பத்திமுறை முழுமையாக ஒழிக்கப்பட்டு, விவசாயத்தில் குலாக்குகள் என்ற பிரிவின் தேவை ஒழிக்கப்பட்டது. கூட்டுப் பண்ணைகள் வெற்றிகரமாக, பிரம்மாண்டமாக இயங்கின.

1936 ஆம் ஆண்டு திருத்தங்கள்:

சோவியத் அரசமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும் என்று 7 வது காங்கிரசில் முடிவு செய்தவுடன், ஸ்டாலின் தலைமையில் 31 பேர் கொண்ட அரசமைப்புச் சட்ட ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. அந்த ஆணையம் எழுதிய வரைவு அரசமைப்புச் சட்டம், நாடு முழுவதும் அனுப்பப்பட்டது. மக்கள் அந்த திருத்தங்களை விவாதித்தார்கள். சுமார் 160 நாட்கள் இந்த விவாதங்கள் நடைபெற்றன; திருத்தங்கள் பெறப்பட்டன. பிறகு எட்டாவது மாநாட்டில் இறுதி வடிவத்தை நிறைவேற்றினார்கள். உலக முதலாளித்துவ நாடுகளின் விமர்சனங்களும், அவை எத்தனை கொச்சையாக இருப்பினும், மாநாட்டின் விவாதத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன. அரசமைப்புச் சட்டத்தை வடிவமைப்பதற்கான இந்த விவாதமே மிகப்பெரிய ஜநாயக நடவடிக்கை என்பதை கவனிக்கவேண்டும்.

புதியதோர் சமூகச் சூழல்:

புதிய அரசமைப்புச் சட்டத்தை முன்வைத்து, ஸ்டாலின் உரையாற்றியபோது மிகுந்த உற்சாகம் நிலவியது. அவர் விவசாயத்தில் ஏற்பட்டுள்ள பிரம்மாண்ட மாற்றங்களைக் குறிப்பிட்டார். கூட்டுப்பண்ணை உற்பத்தியும், புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சியும் பிரம்மாண்ட மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தன. ‘3,16,000 டிராக்டர்களும் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் குதிரைத் திறன் 57,00,000. அரசின் பண்ணைகளையும் சேர்த்துக் கணக்கிட்டால் 4,00,000 டிரேக்டர்கள் 75,80,000 குதிரைத் திறனோடு செயல்பட்டுவருகின்றன’ என்றார்.

வர்க்கங்களின் புதிய நிலைமைகள்:

தொழிலாளர்கள், விவசாயிகள், அறிவுஜீவிகள் இருந்தார்கள். ஆனால் சுரண்டும் வர்க்கங்கள் இல்லை. உற்பத்திக் கருவிகளும், நிலம் உள்ளிட்ட வளங்களும், பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் செயல்படும் சோசலிச அரசுடையதாக இருந்தன. இவ்வாறு பாட்டாளிவர்க்கம் ஒரு புதிய நிலையை எட்டியது. முதலாளித்துவ நாடுகளில் இருப்பதுபோன்ற நிலையில் அது இல்லை. இனியும் அது சுரண்டப்படும் வர்க்கமில்லை. விவசாயிகளும் கூட, கூட்டுப்பண்ணை முறையால் புதிய வளர்ச்சியை எட்டியிருந்தார்கள். விவசாயத்தில் புதிய நுட்பங்கள் புகுத்தப்பட்டிருந்தன. அறிவுஜீவிகளின் நிலையிலும் மாற்றம் ஏற்பட்டிருந்தது. எனவே அவர்கள், சோசலிசத்தில் இருந்து கம்யூனிசத்தை நோக்கி மாறிச் செல்லும் கட்டத்திற்கு பாதை வகுப்போராக இருந்தார்கள். இதையெல்லாம் ஸ்டாலின் பெருமையுடன் குறிப்பிட்டார்.

தேர்தல், வாக்களித்தல், திரும்பப் பெறுதல்:

பொதுப்புத்தியில் ஜனநாயகம் என்பது ஒரு தேர்தல் நடைமுறையாக மட்டுமே கருதப்படுகிறது. தேர்தல், நாடாளுமன்றங்களில் ஜனநாயகம் நிலவுவது மிக முக்கியமே என்ற போதிலும், அவற்றையும் தாண்டிய ஜனநாயக உரிமைகளை சோவியத் அரசமைப்புச் சட்டம் உறுதி செய்தது.

சோவியத் அரசாங்க அமைப்பில் உச்ச அதிகாரம் பெற்றது ‘சுப்ரீம் சோவியத்’ ஆகும். அதில் இரண்டு அவைகள் இருந்தன. ஒன்று சோவியத் ஒன்றிய அவை; மற்றொன்று, தேசிய இனங்களின் சோவியத் அவை. இந்த அவைகளுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல்கள் நடப்பதை அரசமைப்புச் சட்டம் உறுதி செய்தது. 18 வயது வந்த அனைவருக்கும் சம மதிப்பிலான வாக்கும், மறைமுகமான தேர்தல் முறையும் உறுதி செய்யப்பட்டன. (இக்காலகட்டத்தில் பல முதலாளித்துவ நாடுகளில் வாக்குரிமை அனைவருக்குமானதாக இல்லை. வசதி, பாலினம், கல்வியறிவு, இனம், மொழி, வாழிடம் சார்ந்து உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தன) சோவியத் ஒன்றிய அவை உறுப்பினரை தேர்வு செய்ய – ஒவ்வொரு 3 லட்சம் பேருக்கும், ஒரு பிரதிநிதி என்ற வகையில் மறைமுக வாக்கெடுப்பு நடைபெற்றது.

தேசிய இனங்களின் சோவியத் அவைக்கான பிரதிநிதிகள் -ஒவ்வொரு ஒன்றியக் குடியரசிலிருந்தும் தலா 25 , தன்னாட்சிக் குடியரசிலிருந்து 11, தன்னாட்சிப் பிரதேசங்களில் இருந்தும், தேசியப் பகுதிகளில் இருந்தும் தலா ஒருவர் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். இரண்டு அவைகளும் சமஅதிகாரம் கொண்டவையாக இருந்தன. அனைவரும் தேர்தலில் வாக்களிப்பதை உறுதிசெய்த அமைப்புச் சட்டம், போட்டியிடும் உரிமையையும் உறுதி செய்தது. அதே சமயம், சோசலிசக் கட்டமைப்பை பாதுகாத்து கம்யூனிசத்திற்கு பாதையமைக்கும் லட்சியத்தை வென்றெடுக்கும் நோக்கில், பாட்டாளிவர்க்க அமைப்புகளே வேட்பாளர்களை நிறுத்த முடியும் என அரசமைப்புச் சட்டம் வரையறுக்கிறது. தனியுடைமையை ஆதரிக்கும் கட்சிகள், அமைப்புகளுக்கு அதிகாரம் மறுக்கப்பட்டது – இதைத்தான் முதலாளித்துவ நாடுகள் ஜனநாயக விரோத நடவடிக்கையாக வர்ணித்தனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை திரும்ப அழைப்பதற்கான உரிமையும் அத்தியாயம் 11இல் பிரிவு 142 உறுதி செய்தது. குடியரசுகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல்கள் நடைபெற்றன.

நீதிபதிகளுக்கான தேர்தல்:

மேலும்,சுவாரசியம் தரும் வகையில் சோவியத் ஒன்றியத்தில் மாவட்ட நீதிமன்றங்களுக்கு தேர்தல் நடத்துவது உறுதி செய்யப்பட்டது. இந்தத் தேர்தலிலும் அனைவருக்கும் நேரடியான, சம வாக்கு உறுதிசெய்யப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தத் தேர்தல்கள் நடத்தப்பட்டன.

1977ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தத்தில், குடிமக்கள் அரசாங்க நிர்வாகப் பணிகளில் பங்கேற்கவும், அரசு நிறுவனங்களுக்கு முன்மொழிவுகளை அனுப்புதல், அரசுப்பணிகளில் நிலவும் தொய்வுகளைக் கேள்வி கேட்பதற்கான உரிமைகளும், அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக வழக்குத் தொடுக்கும் உரிமையும் உறுதி செய்யப்பட்டன. ஊழல் முறைகேடுகளைத் தடுத்திடும் நடவடிக்கைகளாக இவை அமைந்தன.

குடிமக்கள் உரிமைகள்:

முதலாளித்துவ சமூகத்தில் ஒரு பாட்டாளிக்கு உழைப்பு என்பது அவளின்/அவனின் இயல்பிலிருந்து துண்டிக்கப்பட்ட ஒன்றாக அமைந்துள்ளது. அவள்/அவன் உற்பத்தி நடவடிக்கையை மகிழ்ச்சியுடன் மேற்கொள்வதாக அமைவதில்லை. வேலைசெய்யாத போதுதான் ஒரு பாட்டாளி மகிழ்ச்சியடைவதாகக் கருதும் நிலை உள்ளது. இதனை மார்க்ஸ் அன்னியமாதல் (alienation) என்று குறிப்பிடுகிறார். உற்பத்திப் பொருளில் இருந்து உழைப்பு நடவடிக்கையை அன்னியப்படுத்துவதானது ஒரு மனிதனை அவரது வாழ்க்கை நடவடிக்கைகளில் இருந்தும், சமூக இயல்பிலிருந்தும் தனிமைப்படுத்தி, துண்டிக்கிறது.

சோசலிச சமூகத்தில் உழைப்பு வயிற்றுத்தேவைக்கான ஒரு உயிரற்ற நடவடிக்கையாக இல்லை. மாறாக அது, சொந்த வாழ்க்கைக்கும், சமூகத்தின் நலனுக்குமான சேவையாகிறது. எனவே, ஒரு உழைப்பாளி தன் உழைப்பை மதிப்புமிக்கதொரு பணியாக மேற்கொள்கிறார். இந்தப் பின்னணியில்தான். முதலாளித்துவ நாடுகளில் ஏட்டளவில்கூட வழங்கப்படாத உரிமைகளை, சோவியத் ஒன்றிய அரசமைப்புச் சட்டம் தனது குடிமக்களுக்கு உறுதி செய்தது.

உழைப்பும், ஓய்வும் உரிமைகள்:

ஒவ்வொரு குடிமகனுக்கும் உழைப்பு உரிமையாக்கப்பட்டது. அதன்படிவேலை வழங்குவதும், உழைப்புக்கேற்ற ஊதியத்தை உறுதிசெய்வதும் அரசின் கடமையாகும். ஓய்வெடுத்தலும், புதுப்பித்துக் கொள்வதும் குடிமக்களின் உரிமையாக்கப்பட்டது. 7 மணி நேர வேலை, ஆண்டுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை மற்றும் விடுமுறைக் காலத்தில் வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதும் அரசின் கடமையாக ஏற்றது.

ஓய்வுக் காலத்தில், உடல் நலம் குன்றிய சூழலில் சோவியத் குடிமக்களைப் பாதுகாப்பதும் உரிமைகளாக்கப்பட்டன. கல்வி உரிமையும், பெண்களுக்கான சம உரிமையும் சட்டப்படி உறுதி செய்யப்பட்டன. இனம், மொழி, பண்பாடு, சமூகம் சார்ந்த எந்த வகையிலான வெறுப்பும் கண்டனத்திற்குரியவை மட்டுமல்ல; தண்டமைக்குரியதாகவும் ஆக்கப்பட்டன.

மத வழிபாடுகளும், பிரச்சாரமும், நாத்திகப் பிரச்சாரமும் அனைத்து மனிதர்களுக்கும் உறுதி செய்யப்பட்டன. பேச்சுரிமை, கூட்டம் கூடுவது, போராடும் உரிமைகள் உறுதி செய்யப்பட்டன.

1977ஆம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்ட அரசமைப்புச் சட்டத்தில் மேலும் பல புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஒருவர் தன் வேலையைத் தேர்வு செய்வதற்கான உரிமையும், சுகாதாரத்தை பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமையும் உறுதி செய்யப்பட்டன. தனிநபர் சுதந்திரத்தின் எல்லைகள் விரிவாக்கப்பட்டன. தனிநபர்களின் விருப்பத் தேர்வுகள் அங்கீகரிக்கப்பட்டன. அவற்றில் தலையீடு செய்வது குற்றமாக்கப்பட்டது.

தஞ்சம் புகுவதற்கான உரிமை வழங்கியது சோவியத் ஒன்றியம். பிறநாடுகளில் இருந்த உழைக்கும் மக்களின் நலன்களுக்காக போராடியவர்கள், தேசிய விடுதலைக்காக போராடியவர்கள், அறிவியல்ஆய்வுகளைத் தொடர முடியாமல் அபயம் கேட்டு வருவோருக்கு, தஞ்சம் புகுவதற்கான உரிமை வழங்கியது சோவியத் யூனியன்.

சோவியத் ஒன்றிய கூட்டாட்சி:

சோவியத் ஒன்றியத்தோடு இணைந்த குடியரசுகள் 14 வது பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ளன. தேசிய இனங்களின் அவைக்கு முக்கியத்துவம் தரப்பட்டதுடன், அதிகாரப் பரவலாக்கம் பற்றியும் அரசமைப்புச் சட்டம் விவரிக்கிறது. அந்தந்தப் பிராந்திய நீதிமன்ற நடவடிக்கைகள் அந்தந்தப் பகுதிகளுக்கான மொழியில் நடப்பது உறுதி செய்யப்பட்டன. 1944 ஆம் ஆண்டில் ஒவ்வொரு சோவியத் குடியரசிலும் செம்படைக் கிளைகள் ஏற்படுத்தவும், வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சகம் ஏற்படுத்திக்கொள்ளவும் உரிமைகள் வழங்கி திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. கூட்டாட்சி குறித்த பகுதிகளும், அனுபவமும் வேறொரு முழுநீளக் கட்டுரைக்கானவை.

இதுபற்றி பெருமிதம் பொங்க குறிப்பிடும் தோழர் ஸ்டாலின், ’தேசியங்களும், இனங்களும் சமஉரிமையோடு வாழமுடியாது என்பது மட்டுமல்ல தங்களுக்கு கீழே பல காலனி நாடுகளை வைத்திருக்கும் முதலாளித்துவ நாடுகள், ஆளும் ‘தேசியங்களின்’ சாசனமாகவே அரசமைப்புச் சட்டத்தை வடிக்கிறார்கள். இதிலிருந்து மாறுபட்டது சோவியத் ஒன்றியம்.’ என்கிறார்.

மேலும், ‘சர்வதேசத் தன்மையோடும், அனைத்து தேசியங்களுக்கும் இனங்களுக்கும் சமஉரிமையை உறுதி செய்வதாகவும், நிறம், மொழி, கலாச்சாரம், அரசியல் முன்னேற்றம் என ஆதிக்கத்திற்கு வக்காலத்து வாங்கும் எந்தப் பிரிவும் அமையப் பெறாத ஒன்றாக சோவியத் அரசமைப்புச் சட்டம் உள்ளது.’ என்கிறார். அரசியல் வலிமையோ, கடந்த கால நிலைமைகளோ ஒரு குடியரசின் சம அந்தஸ்தை மறுக்கும் காரணியாக அமைய முடியாது என்கிறார் அவர்.

மறக்கவியலாச் சுவை:

சுரண்டுவோரும், சுரண்டப்படுவோரும் இருக்கையிலே அனைவரும் சமம் என்று இறுமாப்புக் கொள்வதன் பொருள்தான் என்ன? என்ற கேள்விக்கு முதலாளித்துவ நாடுகளில் பதில் இல்லை. சோவியத் ஒன்றியம் அந்த நிலைமையிலிருந்தே மாற்றத்தை தொடங்கியது. அங்கு நிலவிய உற்பத்தி முறையும், உற்பத்தி சக்திகளின் உடைமையும் தனியொரு வர்க்கத்தின் ஆதிக்கத்திலிருந்து அகற்றப்பட்டன. இதன் விளைவாகவே முதலாளித்துவ நாடுகளிலும் இல்லாத பல உரிமைகளை சோவியத் உறுதி செய்தது. இது குறித்து உலகத் தொழிலாளி வர்க்கமே பிரமிப்போடு நோக்கியது. சுரண்டலை முடிவுக்குக் கொண்டு வராமல், இத்தகைய வாழ்க்கைச்சூழல் சாத்தியமில்லை என்ற நிலையில்தான் விமர்சனங்களை முதலாளித்துவ அறிவுஜீவிகள் முன்வைத்தனர். அவர்கள் இதனை ஒரு விளம்பர நடவடிக்கையாக மட்டுமே சுருக்க விரும்பினார்கள்.

ஆனால், சோவியத் தனது லட்சியப்பாதையில் நடைபோட்டது. அதன் அரசமைப்புச் சட்டம் பலமுறை திருத்தப்பட்டுள்ளது. அது தனக்குத்தானே வரித்துக் கொண்ட உயர்ந்த லட்சியங்களை அமலாக்கும் போராட்டத்தில் ‘உலகப் பாட்டாளிகளுக்கு இன்றுவரை கனவாக அமைந்திருக்கும் உரிமைகளை, அது சாத்தியமாக்கிக் காட்டியதென்பதை’ யாரும் மறுக்கமுடியாது. ஒவ்வொரு முறை திருத்தத்தின் போதும் சோவியத் ஜனநாயகம் மெருகூட்டப்பட்டது. “நாங்கள் பெற்ற வெற்றிகளின் கனிகளைத் தருகிறோம்” என்ற மகிழ்ச்சியோடு ஸ்டாலின் அதனை வர்ணித்தார். உலகமே அந்தக் கனிகளைச் சுவைத்தது. பின்னடைவுக்குப் பிறகும் தன் கனிகளின் சுவையை சோவியத் வரலாறு நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறது.

மறையாத சரித்திரமாக வாழ்ந்திடும் சோவியத் ரஷ்ய புரட்சி !

மானுட வரலாற்றில் ரஷ்ய புரட்சி ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதுவரை மனிதனை மனிதன் ஒடுக்கும் வரலாறாகவே மனித சமூக வரலாறு நீடித்து வந்த நிலையில், ஒடுக்குமுறையினையும், சுரண்டலையும் ஒழித்துவிட முடியும் என்று உலகுக்கு புது வழி காட்டிய புரட்சி,ரஷ்யப் புரட்சி.

மனித சமத்துவம் கனவாக மட்டுமே இருந்த சூழலில், ரஷ்யப் புரட்சி முற்றிலும் புதிய ஒரு சமூகத்தை படைத்தது. புரட்சிக்குப் பிறகு லெனின் தலைமையில் அமைந்த சோவியத் சோசலிச அரசு,மக்களை முதன்மைப் படுத்திய அரசு. நிலம்,தொழில் அனைத்தும் மக்கள் சமூகத்தின் உடைமையாக்கிய அரசு.

சோவியத்தில் இருந்து பிரிந்த நாடுகளில் இன அடிப்படையில் மோதல்களும், அடையாள அரசியல் உலகம் முழுவதுமே தலைதூக்கியுள்ள நிலையினையும் இன்று நாம் காண்கிறோம். இனப் பிரச்னைக்கு ஜனநாயத் தீர்வினைக் கண்ட பெருமை சோவியத் சோசலிசத்திற்கு உண்டு.பல நூற்றாண்டு இன ஒடுக்குமுறையை ரஷ்யப் புரட்சி முடிவிற்கு கொண்டு வந்தது.

சோவியத் புரட்சி காலனியாதிக்கத்தில் இருந்து பல நாடுகள் விடுபட தூண்டுகோலாக இருந்தது என்பதும்,அன்று இந்தியா போன்ற மூன்றாம் நாடுகளின் மக்களுக்கு உத்வேகம் அளித்த சமுக முறையாக சோவியத் சோசலிசம் விளங்கியது என்பதும் வரலாற்று உண்மைகள்.

நாடுகளை அடிமைப்படுத்தும், ஏகாதிபத்திய வல்லரசு நாடுகளுக்கு சவால் விடுத்த அரசாக சோவியத் சோசலிசம் திகழ்ந்தது.குறுகிய காலத்தில் மிகப் பெரும் உலகப் பொருளாதாரமாக உயர்ந்தது, சோவியத் நாடு. கல்வி,சுகாதாரம்,வேலை வாய்ப்பு அனைத்திலும் உண்மையான சமூக நீதியை அது நிலை நாட்டியது.20-நூற்றாணடு வரலாற்றை அடியோடு புரட்டிப் போட்ட நிகழ்வாக மட்டுமல்லாது,எதிர் வரும் நூற்றாண்டுகளிலும், மீண்டும் மீண்டும் அலசி ஆராய்கிற வரலாற்று நிகழ்வாக ரஷ்ய புரட்சி திகழுகிறது.

சோசலிச இலட்சியப்பார்வையுடன்,  மக்கள் ஜனநாயக உழைக்கும் மக்களின் அரசு இந்தியாவில் மலர வேண்டும் என்ற நோக்கோடு மார்க்சிஸ்ட் கட்சி செயலாற்றி வருகின்றது.இந்த இலட்சியங்ளுக்கான தத்துவார்த்தப் பங்களிப்பை கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக “மார்க்சிஸ்ட்” மாத இதழ் மேற்கொண்டுவருகிறது. இந்த (2016-2017) ஆண்டு முழுவதும் ரஷ்ய புரட்சியின் மகத்துவம் குறித்தும்,அதன் பல்வேறு பரிமாணங்கள் குறித்தும் பல படைப்புக்கள் மார்க்சிஸ்ட் இதழில் வெளிவர உள்ளன.

சோவியத் புரட்சியை சாத்தியமாக்கிய போல்ஷ்விக் கட்சி வரலாறு

– ஜி.செல்வா

1903-ல் குறைந்த எண்ணிக்கையில் தலை மறைவு புரட்சிக் குழுக்களாக இருந்த இயக்கம், ஆயிரக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக 1912-ல் உருவெடுக்கிறது. 1917-ல் சோசலிசப் புரட்சியை தலைமைதாங்கி வழி நடத்த 3 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக பல்கிப் பெருகுகிறது. அதுதான் ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷ்விக்).

“புரட்சிகளின் நூற்றாண்டாக” இருபதாம் நூற்றாண்டை மாற்றி ரஷ்யாவில் புரட்சியை நடத்தி, சோசலிசப் பாதைக்கு அடித்தளமிட்டு, உலக மெல்லாம் பாட்டாளி வர்க்க கருத்துக்கள் வெடித்து எழும்ப வித்திட்டது ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி. இதன் வரலாற்றை மிகக் கச்சிதமாக மார்க்சிய, லெனினிய சித்தாந்தப் பார்வையில், எழுதப்பட்ட புத்தகம்தான் சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு என்னும் நூல்.

நூல் உருவானப் பின்னணி
உலக மக்களுக்கு ஆதர்ஷ சக்தியாக சோசலி சப் பாதையில் சோவியத் யூனியன் முன்னேறிக் கொண்டிருந்த காலம். அப்போது சோசலிச கட்டு மானத்தைத் துரிதப்படுத்துவதில் ஏற்பட்ட அளவிடற்கரிய பிரச்சனைகள், சோவியத் யூனியன் எதிர்கொண்ட அபாயங்கள் மற்றும் சவால்களால் கட்சி ஊழியர்களுக்கு தத்துவார்த்த, அரசியல் பயிற்சி அளிப்பது முக்கியத்துவம் பெற்றது.

மார்க்சிய – லெனினிய அடிப்படை ஞானத்தில் தேர்ச்சி பெற்று அதனை சோசலிச கட்டுமானத் தில் முறையாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலுவாக வலியுறுத்திய ஸ்டாலின் “அனைத்து நடைமுறைப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதற்குத் தேவையானது கட்சி ஊழியர் களுக்கு சித்தாந்தப் பயிற்சி அளிப்பதும் அவர் களை அரசியல் ரீதியில் பயிற்றுவித்து வலுப் படுத்துவதும்தான்” எனக் கருதினார்.
இதற்கு உதவியாய் கட்சி வரலாற்றை சொல்லித் தரும் வகையில் புத்தகம் எழுதுவதற்கு ஸ்டாலின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. 1937ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அக்குழுவினர் எழுதியதை அரசியல் தலைமைக் குழு சரிபார்த்து கொடுத்தது. அதன் ஆலோசனைகளை ஏற்று அடுத்த நான்கு மாதங்களில் மேம்படுத்தப்பட்டு புத்தகமாக உருவெடுத்தது. இப்புத்தகம் 1938 ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 50 லட்சம் பிரதி கள் வெளியான பிராவ்தா கட்சி நாளிதழில் தொடராக வெளியிடப்படுகிறது. 1938 ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு என்ற நூலாக வெளியிடப்படுகிறது. அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டும் என்பதற்காக மிகக் குறைவாக விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

1939 மே மாதத்தில் இந்நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு அமெரிக்காவில் மட்டும் ஒரு லட்சம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு 3 மாதத்திற் குள் 70,000 பிரதிகள் விற்பனை ஆயின. அதே காலகட்டத்தில் 28 மொழிகளில் மொழிபெயர்க் கப்பட்டுள்ளது. 1953க்குள் ரஷ்யாவில் மட்டும் 301 முறை பதிப்பிக்கப்பட்டு 42,82,60,000 புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன.

1947 ஜனவரி மாதம், ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினராக இருந்த வரும், சமரன் பத்திரிகையின் ஆசியரிரும், ஜூலியஸ் பூசிக்கின் தூக்கு மேடைக் குறிப்பு நூலை தமிழில் மொழி பெயர்த்தவருமான எம்.இஸ்மத் பாஷாவால் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இதன் இரண்டாவது பதிப்பு 1979 டிசம்பர் மாதம் ஸ்டா லின் நூற்றாண்டு விழாவின்போது சென்னை புக் ஹவுஸ் வெளியிட்டுள்ளது. நவம்பர் புரட்சி நூற்றாண்டினை முன்னிட்டு பாரதி புத்தகாலயம் இந்நூலினை மீண்டும் பதிப்பித்துள்ளது.

1883 முதல் 1937ஆம் ஆண்டு வரையிலான வரலாறு சுமார் 600 பக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நூலின் மையக் கருவாக விளங்கும் கருத்துக் களை இக்கட்டுரையில் சுருக்கமாகப் பார்க்கலாம்.

கரு உருமாறி வெளியேறும் காலக்கட்டம்
புரட்சியாளர் லெனின், அரசியல் தளத்திற்கு வருவதற்கு முன்பாகவே, ரஷ்ய தேசத்தில் உழைக் கும் மக்களுக்கான போராட்ட அமைப்புகள் தொடங்கப்பட்டு விட்டன. ஜார் ஆட்சியின் கொடுமைக்கும்,சுரண்டலுக்கும் உள்ளாகியிருந்த மக்கள் வெடித்துக் கிளம்பினர்.அதே காலக் கட்டத்தில் ரஷ்யாவின் நகரங்களில் மட்டுமல்லா மல், கிராமங்களிலும் தொழிற்சாலைகள் அமைந் ததால் முதலாளித்துவம் வளர்ச்சியடையத் தொடங்கி இருந்தது.

1875-ல் தென் ரஷ்ய தொழிலாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அது ஒன்பது மாதங் களுக்குள் ஆட்சியாளர்களால் நிர்மூலமாக்கப் படுகிறது. 1878-ல் வட ரஷ்ய தொழிலாளர் சங்கத்தை ஒரு தச்சுத் தொழிலாளியும், பிட்டரும் இணைந்து உருவாக்குகின்றனர். இப்படிப்பட்ட அமைப்புகள் உருவானது குறித்தும், உருவாக் கியவர்கள் குறித்தும் மிகச் சுவையான செய்திகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. 1881-1886 கால கட்டங்களில் மட்டும் 48 வேலை நிறுத்தங்கள் நடந்துள்ளன. இதில் 80 ஆயிரம் தொழிலாளர் கள் பங்கேற்றுள்ளனர்.
ரஷ்யாவில் முதல் மார்க்சிஸ்ட் குழு 1883-ல் ஜி.வி.பிளக்கனோவ் தலைமையில் ‘தொழிலாளர் விடுதலைக்குழு’ என்ற பெயரில் அமைக்கப் படுகிறது. இவ்வமைப்பு மார்க்ஸ், ஏங்கல்ஸ் நூல்களை ரஷ்ய மொழியில் வெளியிடுகிறது. கம்யூனிஸ்ட் அறிக்கை, கூலி உழைப்பும் மூலதன மும், கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் ஆகிய நூல்களை வெளிநாடுகளில் அச்சடித்து, ரஷ்ய நாட்டு தொழிலாளிகளிடம் விநியோகிக்கின்றனர்.
இக்காலக் கட்டத்தில் ‘நரோத்னிக்’ என்ற அமைப்பினரும், பிளக்கனோவும் நிகழ்த்திய சித்தாந்தப் போராட்டம் மிக முக்கியமானது. நரோத்னிக் என்ற ரஷ்ய வார்த்தையின் பொருள் மக்களிடம் செல்வது. புரட்சிகர எண்ணம் கொண்ட படித்த இளைஞர்கள் இந்த அமைப் பில் சேர ஆரம்பித்தனர். இவர்கள் ரஷ்யாவில் தற்செயலான நிகழ்வுப் போக்குதான் முதலாளித் துவம். எனவே, இது வளராது என்றும், கிராமப் புற விவசாயிகள் தான் புரட்சிகரமானவர்கள், தனிச்சிறப்பு வாய்ந்த தனி நபர்களால்தான் சரித்திரம் உருவாக்கப்படுகிறது என்றும் கருதினர்.

இவர்களுக்கு எதிராக பிளக்கனோவும், அவரைத் தொடர்ந்து லெனினும் நடத்திய உரையாடல், எழுத்துக்கள் மிக விரிவாக இந்நூலில் கொடுக் கப்பட்டுள்ளது. இதே பிளக்கனோவ், எதிர் காலத்தில் லெனினின் கருத்துக்கு எதிர்திசைக்கு சென்றார். இருந்தாலும் அவரது பங்களிப்பு இந்நூலில் உரிய முறையில் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. பிளக்கனோவ் 1895-ல் வெளியிட்ட சரித்திரத்தின் ஒருமைவாத வளர்ச்சியைப் பற்றி என்ற புத்தகம் “ரஷ்ய மார்க்சிஸ்டுகளின் ஒரு தலைமுறை முழுவதையும் அறிவியல் பக்குவப் படுத்த பணிபுரிந்தது” என லெனின் கூறியுள்ளார்.

தத்துவ அடிப்படையில் தொழிலாளி வர்க்க இயக்கத்தைக் கட்ட முதல் வேலையைச் செய்தது தொழிலாளர் விடுதலைக் குழு என லெனின் புகழாரம் சூட்டியுள்ளார். எனவேதான் அக்கால கட்டத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வளர்ச் சியை கரு உருமாறி வெளியேறும் வளர்ச்சியில் இருந்ததாக லெனின் கூறினார்.

புரட்சிகர தத்துவம் ; புரட்சிகர இயக்கம்
புரட்சிகரமான தத்துவம் என்றால் என்ன? புரட்சிகரமான இயக்கம் என்றால் என்ன? தத்துவத்திற்கும்,நடைமுறைகளுக்குமான தொடர்பு எப்படி இருக்க வேண்டும்? இப்படி யான கேள்விகளுக்கு ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி வரலாறும், அதில் லெனினும் அவர்தம் தோழர் களின் எழுத்துகளும், செயல்பாடுகளுமே நமக்கு விடையாக அமையும்.
லெனின் என்னும் மனிதரின் ஆளுமையும், அவர் புரட்சிகர இயக்கத்தில் இணைந்த பிறகு ஏற்பட்ட மாற்றங்களும், மிக விரிவாக இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது.
மார்க்சைப் பற்றி அவர் தெரிந்து கொண்டிருந்த அசாதாரணமான விஷய ஞானம், அன்றைய ரஷ்யாவில் நிலவிய அரசியல், பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்றவாறு மார்க்சியத்தைப் பொருத்திக் காண்பிப்பதில் அவருக்கிருந்த திறமை, தொழிலாளர்களின் லட்சியம், நிச்சயம் வெற்றிய டையும் என்பதில் அவருக்கிருந்த அசைக்க முடி யாத நம்பிக்கை, அமைப்புகளை உருவாக்குவதில் அவர் காட்டிய தனிச்சிறப்பு வாய்ந்த ஆற்றல் ஆகியவையெல்லாம் லெனினை செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மார்க்சிஸ்டுகள் அனைவராலும் மனப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்ட தலைவ ராக ஏற்கச் செய்தன.

1898-ல் ரஷ்ய சமூக ஜனநாயக தொழிற் கட்சி முதல் மாநாட்டில் 9 பேர் தான் பங்கு கொண் டனர். அப்போது லெனின் நாடு கடத்தப்பட்டு சைபீரியாவில் இருந்ததால் பங்கெடுக்க முடிய வில்லை.இம்மாநாட்டிலிருந்துதான் ரஷ்ய கம்யூ னிஸ்ட் கட்சியின் வரலாறு கூறப்பட்டுள்ளது.
நரோத்னிக்குள் மற்றும் பொருளாதாரவாதிகள் அதாவது பொருளாதார கோரிக்கைகளுக் காக நடத்தப்படும் போராட்டங்களில் மட்டும் தான் தொழிலாளர்கள் ஈடுபட வேண்டும் என விடாப்பிடியாக கருதும் குழுவினர். இவர்களின் கருத்தோட்டத்திற்கு எதிராக லெனின் நடத்திய சித்தாந்தப் போராட்டம் மிகத் தெளிவாக நூலில் சொல்லப்பட்டுள்ளது. லெனினது மிக முக்கியப் படைப்பான ரஷ்யாவில் முதலாளித் துவ வளர்ச்சி நூலிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள கருத்துகள் கம்யூனிஸ்ட்களுக்கு மிக தேவையான ஒன்றே. வேதனை என்னவெனில் இதுவரை தமிழில் வெளிவரவில்லை.

லெனின் எழுதுகிறார் “உடனடியாக நிறை வேற்ற வேண்டிய வேலையை நம்முன் இன்று சரித்திரம் வைத்திருக்கிறது. இந்த உடனடியான வேலை மிகமிகப் புரட்சிகரமானது. மற்ற நாட்டு பாட்டாளிகளின் முன் நிற்கின்ற உடனடியான வேலைகள் யாவற்றையும் விட மிகவும் புரட்சி கரமான வேலையாகும். இந்த வேலையைச் செய்து முடித்தால், ஐரோப்பிய பிற்போக்கிற்கு மட்டுமல்லாமல் ஆசியாவின் பிற்போக்கிற்கும் மிகவும் வலுவான கோட்டையாக திகழும் ஜார் ஆட்சியை அழித்து ஒழிப்பதால், புரட்சிகரமான சர்வதேசப்பாட்டாளி வர்க்கத்துக்கு ரஷ்ய பாட்டாளி வர்க்கம் முன்னணிப்படையாக ஆகும்.” எவ்வளவு தீர்க்கமான, தெளிவான பார்வை. அதை நோக்கி லெனின் நடத்திய பயணம்தான் கற்க வேண்டிய பாடம்.

கட்சி அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என உலக கம்யூனிச இயக்கத்துக்கு வலுவான கருத் தியலை கொடுத்தது மட்டுமல்லாமல் நடைமுறைப் படுத்தியும் காண்பித்தவர் லெனின். கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபன செயல்பாடுகளை கொச்சை யாக, கேலியாக, விஷமத்தனமாக இன்றும் அதி கார வர்க்கத்தினர் எழுதியும், பேசியும் வருகின் றனர். சில நேரங்களில் இக்கருத்துக்கள் கம்யூனிஸ்ட் ஊழியர்களிடத்தும் செல்வாக்கு செலுத்தும்.

புரட்சி நடத்த வேண்டுமானால் புரட்சிகர இயக்கம், அதாவது கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்பட வேண்டும். அது எப்படி இருக்க வேண்டும், எப்படி கட்ட வேண்டும் என்பதற்கு இந்நூலில் உள்ள விசயங்கள் இன்றும் நமக்கு வழிகாட்டும்.
கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடைபெற்ற கருத்தி யல் ரீதியான போராட்டம் இரண்டு குழுக்களா கப் பிளவுபட நேர்ந்தது. லெனினைப் பின்பற்றிய வர்கள் போல்ஷ்விக்குகள் (அதாவது பெரும் பான்மை உறுப்பினர்கள் என்ற அர்த்தத்தில்) என்றும், எண்ணிக்கையில் குறைவாக இருந்தவர் கள் மென்ஷ்விக்குகள் எனவும் அழைக்கப்பட்டனர்.

போல்ஷ்விக்குகளுக்கும், மென்ஷ்விக்குகளுக் கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலின் காரணங்கள், அக்காலகட்டத்தில் லெனின் எழுதிய நூல்களிலிருந்து பல்வேறு கருத்துக்கள் இந்நூலில் எடுத்தாளப்பட்டுள்ளது.

ரஷ்ய நாட்டிற்குள் மட்டும் இக்கருத்துப் போராட்டத்தை லெனின் நடத்தவில்லை. மேற்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்த சமூக ஜனநாயக கட்சிகளுடனும் சித்தாந்தப் போராட்டத்தை நடத்தி வந்தார். ஏங்கெல்ஸ் காலமான பிறகு மேற்கு ஐரோப்பிய சமூக ஜனநாயகக் கட்சிகள் சீரழிந்து போனதை போல்ஷ்விக்குகள் பார்த் தனர். ஏங்கெல்ஸ் காலத்தில் சமூகப் புரட்சிகர கட்சிகளாக இருந்த இயக்கங்கள் சமூக சீர்திருத் தக் கட்சிகளாக மாறி சீரழிந்து போயின. அவை ஒவ்வொன்றும் அமைப்பு ரீதியில், அந்தக் கட்சி யின் நாடாளுமன்ற சந்தர்ப்பவாதக் குழுக்களு டைய தொங்கு சதையாக ஏற்கனவே மாற்றப் பட்டு விட்டன. அத்தகைய கட்சிகளால் பாட்டாளி களுக்குப் பயன் எதுவும் இல்லை. தொழிலாளி வர்க்கத்தை அக்கட்சிகளால் வழிகாட்டி புரட் சியை நோக்கி அழைத்துச் செல்ல முடியாது என்பதை போல்ஷ்விக்குகள் தெளிவாக உணர்ந்தனர்.

உண்மையான மார்க்சியக் கட்சியை பெற்றி ருக்க விரும்புகிற எல்லோருக்கும் ஒரு உதாரண மாகத் திகழும் புதிய கட்சியை, போல்ஷ்விக் கட்சியைப் படைப்பதற்கு போல்ஷ்விக்குகள் விரும்பினார்கள். என்ன நேர்ந்தபோதிலும், எத்தகைய கஷ்டங்கள் வந்தபோதிலும் மனம் தளராமல் உறுதியுடன் விடாப்பிடியாக உழைத்து வந்தனர்.

இந்த வேலையில் லெனினுடைய நூல்கள் கட்சிக்கு மிகவும் அடிப்படையான – செல்நெறியை நிர்ணயிக்கும்படியான பங்கு வகித்தன. லெனின் எழுதிய என்ன செய்ய வேண்டும்? என்ற நூல் தான் அதற்கு அவசியமான கருத்தையும், கண்ணோட்டத் தையும் கொடுத்து தயாரிப்பு செய்தது. லெனின் எழுதிய ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்ற நூல்தான் அத்தகைய கட்சிக்கு அமைப்பு ரீதியான தயாரிப்பாக இருந்தது. லெனின் எழுதிய, ஜன நாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரு நடைமுறை உத்திகள் என்ற புத்தகம்தான் அரசியல் ரீதியான தயாரிப்பாக இருந்தது. லெனின் எழுதிய பொருள் முதல்வாதமும், அனுபவவாத விமர்சனமும் என்ற புத்தகம் கட்சிக்குத் தத்துவ ரீதியான அடித்தளமாக இருந்தது.

இப்படியாக கட்டப்பட்ட கட்சி புரட்சிக்கு மட்டுமல்ல, புரட்சிக்குப் பின்னரும் சோசலிசப் பாதை நோக்கி, இயந்திர தொழில்மயமாக்கு வதற்கு சோவியத் ஆட்சி மேற்கொண்ட அனைத் திற்கும் உதவிகரமாக இருந்ததுதான் இந்நூலின் வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

புரட்சி… புரட்சி… புரட்சி…
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறே மூன்று புரட்சிகளின் வரலாறுதான். 1. 1905ஆம் ஆண்டு நடந்த முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி 2. 1917 மார்ச்சில் நடைபெற்ற முதலாளித் துவ ஜனநாயகப் புரட்சி 3. 1917-ல் நடைபெற்ற நவம்பர் சோசலிஸ்ட் புரட்சி. எப்படி இத்தகைய புரட்சிகள் சாத்தியமாயின?
எங்கள் தேவை
துண்டுத் துணி அல்ல;
முழு ஆடை
பருக்கைகளல்ல
முழுச் சாப்பாடு
ஒரு வேலை மட்டுமல்ல;முழுத் தொழிற்சாலையும் எங்களுக்குத் தேவை.

நிலக்கரி, தாதுப்பொருள், உலோகக் கரி
அத்தனையும் எங்களுக்குத் தேவை
எல்லாவற்றுக்கும் மேலாக
நாட்டின் ஆளும் அதிகாரமும்
எங்களுக்குத் தேவை
நல்லது
இவ்வளவும் எங்களுக்குத் தேவை
ஆனால்
நீங்கள் கொடுப்பது என்ன?

இது பிரக்டின் கவிதை வரிகள். இக்கவிதை வரிகளின் சாராம்சம்தான் மூன்று புரட்சிகளின் போதும் ரஷ்ய தொழிலாளிகளுக்கும், விவசாயி களுக்கும் ஜார் ஆட்சியை நோக்கிய, அதிகார வர்க்கத்தை நோக்கிய உணர்வுமிக்க முழக்கங் களாக மாறின.

ரஷ்ய தேசத்தின் வளர்ச்சியில் ஒரு சரித்திரப் பூர்வமான கட்டம் முழுவதையும் முதல் ரஷ்யப் புரட்சி (1905) குறித்தது.
இப்புரட்சி மக்களின் பரம விரோதி ஜார் ஆட்சி என்றும், முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிக்குத் தலைமை தாங்குவதாக தொழிலாளி வர்க்கம் மட்டும்தான் இருக்க முடியும். ஊசலா டியபோதும் பாடுபடும் விவசாய வர்க்கம் தான் தொழிலாளி வர்க்கத்துடன் கூட்டுறவை ஏற்படுத் திக் கொள்ளத்தக்க முக்கியமான சக்தி என்பதும் நிரூபணமாயிற்று.

புரட்சியை குலைத்துக் கலைத்துவிடுவதை மென்ஷ்விக்குகள் தங்கள் பாதையாக கருதினர். எழுச்சியின் மூலம் ஜார் ஆட்சியை வீழ்த்துவதற் குப் பதில் அதை சீர்படுத்துவது எனக் கூறினர். இவ்விதம் சமரச சகதியில் மென்ஷ்விக்குகள் சிக் கினர். கட்சியிலும் தேசத்திலும் ஒரே ஒரு புரட்சி கரமான மார்க்சிஸ்ட் சக்தி, போல்ஷ்விக்கு கள்தான் என நிரூபிக்கப்பட்டது.

இப்புரட்சி தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து 1908 முதல் 1912ஆம் ஆண்டு வரை மிக நெருக்கடியான காலக்கட்டத்தில் புரட்சிக் கான வேலை செய்வது கடினமானதாக மாறியது. இந்தச் சூழல்களுக்கு ஏற்றாற்போல் போல்ஷ் விக்குகள் நடைமுறை உத்திகளை மாற்றினர்.
சட்ட விரோதமான நடவடிக்கைகளையும், சட்டப்பூர்வமான செயல்பாடுகளையும் திறமை யாக இணைத்தனர். கட்சி விரோதமான பேர் வழிகளுக்கு எதிராக பிளக்கனோவ் உடன் சேர்ந்து தற்காலிக அணியை லெனின் அமைத் தார். இது கட்சிக்கு சாதகமாகவும், கட்சி விரோ திகளுக்கு பாதகமாகவும் இருக்க வேண்டும் என்பதே அடிப்படை.
இந்த நடைமுறை உத்தி எப்படி போல்ஷ் விக்குகளின் புரட்சிப் பணிக்கு சாத்தியமாயிற்று என்பதை நூலை வாசிக்கும்போது தெளிவாக உணரலாம். பத்திரிகைக்கு சந்தா சேர்ப்பு இயக் கம், தொழிலாளர் தொகுதியில் வெற்றி பெறு தல், சங்கத் தேர்வுகளில் பெற்ற வாக்குகள் என தொடர்ந்தது போல்ஷ்விக்குகளின் வெற்றிப் பயணம்.

முதலாவது உலக யுத்தம் தொடங்குவதற்கு முன்பே, லெனின் தலைமையிலான போல்ஷ்விக் குகள் அதை உணர்ந்தனர். “யுத்தம் என்பது முதலாளித்துவத்துடன் இரண்டறக் கலந்து நிற்கிற தவிர்க்க முடியாத விளைவு” என்று லெனின் சுட்டிக் காட்டினார். யுத்தத்திற்கு எதிராக எத்தகைய நிலைபாடுகளை மேற்கொள்ள வேண்டுமென லெனின் எழுதியும், பேசியும் வந்தார். சமாதானம் நிலவ வேண்டும் என்ற லட்சியத்துடன், பாட்டாளி வர்க்கப் புரட்சி வெற்றியடைய வேண்டும் என்ற லட்சியத்தைப் போல்ஷ்விக்குகள் இணைத்தனர். இந்த காலக்கட்டத்தில்தான் 1916-ல் லெனின் எழுதிய நூல் ஏகாதிபத்தியம் : முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம். இந்நூல் உலகத் தொழிலாளி வர்க்க இயக்கத்துக்கு லெனின் வழங்கிய அறிவுக் கருகூலம். இதன் வாயிலாக மார்க்சியத்தை லெனின் வளர்த்தெடுத்த நிகழ்வும் நடந்தேறியது. அதேபோல் இந்த யுத்த காலத்தின்போது லெனின் எழுதிய எழுத்துக்கள், இப்புத்தகத்தில் மேற்கோள்களாகத் தரப்பட்டுள்ளன.

ஏகாதிபத்தியம் குறித்து லெனின் ஆய்வு செய்த பல்வேறு விசயங்களை சுட்டிக்காட்டுகிறது இந்நூல். தனியாக ஒரு தேசத்தை மட்டும் எடுத்துக் கொண்டால், தனிதேசத்தில் சோசலி சம் வெற்றியடைய முடியாது என்றும், நாகரிகத் தில் முதிர்ந்த சகல தேசங்களிலும் ஒரே சமயத் தில்தான் அது வெற்றியடையும் என்றும் அக்காலத் திய மார்க்சிஸ்டுகள் சிலர் கருதினர். ஆனால், “லெனினோ ஏகாதிபத்திய முதலாளித்துவத் தைப் பற்றிய உண்மையான புள்ளி விவரங்களை ஆதாரமாகக் கொண்டு பழைய கருத்துக்கு மாறாக புதிய கருத்தை வளர்த்தெடுத்தார். இதன் படி ஒரே சமயத்தில் எல்லா தேசங்களிலும் சோசலி சம் வெற்றியடைவது என்பது அசாத்தியம். தனியான ஒரு முதலாளித்துவ நாட்டில் சோசலிசம் வெற்றியடைவதும் சாத்தியமே!” என்றார்.

இதுதான் யுத்தம், சமாதானம், புரட்சி ஆகிய வற்றைப் பற்றிய பிரச்சனைகளில் போல்ஷ்விக் குகள் கைக்கொண்ட தத்துவமும், நடைமுறை உத்தியுமாகும். இந்தக் கொள்கைகளை கொண்டு தான் ரஷ்யாவில் நடைமுறை வேலைகளை போல்ஷ்விக்குகள் நிறைவேற்றினர்.
விளைவு போல்ஷ்விக்குகள் மார்ச் மாத இரண்டா வது புரட்சியில் ஜனநாயகப் புரட்சியில் வெற்றி பெற்றனர். இதை நூலின் வாயிலாக வாசிக்க வாசிக்க புரட்சிகர உணர்வுகளும், சிந்தனைகளும் பெருக்கெடுத்து வருவதை வாசகரால் உணர முடியும்.

இதைத் தொடர்ந்து தற்காலிக அரசாங்கம் அமைந்தவுடன், அதில் பங்கு பெறவும் மந்திரி பதவிகள் பெறவும் மென்ஷ்விக்குகள் உள்ளிட்ட குழுவினர் வாய் பிளந்து காத்துக் கிடக்க, லெனினோ சோசலிசப் புரட்சியை நோக்கி களத்தை விரிவு படுத்தினார்.

முதலாளித்துவ புரட்சிகர கட்டத்திலிருந்து சோசலிசப் புரட்சிக் கட்டத்திற்கு முன்னேறி செல்வதற்கு கட்சிக்கும், பாட்டாளி வர்க்கத்திற் கும் வழிகாட்டினார். அது ஏப்ரல் கொள்கை என்ற நூலின் வழியாக நடந்தேறியது. மாறும் சூழல்களை மிக லாவகமாக உணர்ந்து, மார்க்சிய பகுப்பாய்வில் வர்க்கங்களின் நிலை அறிந்து வழி காட்டிய லெனின் நமக்குப் பேராசானாகத் திகழ்கிறார்.

போல்ஷ்விக் கட்சியினால் வழிகாட்டப்பட்டு ஏழை விவசாயிகளுடன் கூட்டுறவு ஏற்படுத்திக் கொண்டு, ராணுவ வீரர்கள், கடற்படையினரின் ஆதரவையும் பெற்று, முதலாளிகளுடைய அதி காரத்தை தொழிலாளி வர்க்கம் அடியோடு வீழ்த்தியது. “நவம்பர் 7 சோசலிசப் புரட்சி” முதலாளித்துவத்தை தகர்த்து தவிடுபொடியாக் கியது.

சோசலிசத்தை நோக்கி…

நவம்பர் புரட்சியைத் தொடர்ந்து லெனின் தலைமையிலான புரட்சிகர அரசு மேற்கொண்ட பயணம், உலகக் கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு பாடம். பன்னாட்டு முதலாளித்துவ சக்திகளிடமிருந்தும், உள்நாட்டில் வெண் படைகளை சமாளித்தும், புரட்சி மீதான மக்களின் ஆசைகளை, வேண்டு கோளை நிறைவேற்ற லெனின் எடுத்த நிலைபாடு கள், செயல்பாடுகள் இந்நூலில் கொடுக்கப் பட்டுள்ளன.
இந்த சோசலிசப் பாதை எவ்வளவு கடுமை யாக இருந்திருக்கும் என்பதை சார்லஸ் பெட்டில் ஹெய்ம் என்ற பிரெஞ்சு பொருளாதார நிபுணரின் கணிப்பின் மூலம் அறிய முடிகிறது. “சோவியத் யூனியனில் சோசலிசத்தைக் கட்டுவதற்காகப் பணிக்கப்பட்டவர்களில் நான்கில் மூன்று பேர் ஜார் மன்னனின் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த முன்னாள் ஊழியர்கள். ஒரு புரட்சிகரமான சமு தாயத்தைக் கட்டியமைக்க எந்த வகையிலும் பொருத்தமற்றவர்கள். அதேவேளையில் சோவியத் பொருளாதாரம் போருக்கு முன்பிருந்த நிலையி லிருந்து 10 சதவீத வீழ்ச்சியை சந்தித்தது. இத்தகைய கடினமான சூழ்நிலையில் தங்களின் வாழ்க்கையை வேறு எங்காவது அமைத்துக்கொள்ள வாய்ப் புடைய படித்தவர்கள் உள்ளிட்ட 20 லட்சம் மக்கள் ரஷ்யாவிட்டு வெளியேறினர்.”

இப்படியான சூழல்களுக்கு மத்தியில் தான் சோசலிசத்திற்கான அடித்தளத்தை லெனின் நிறுவினார். லெனின் மறைவைத் தொடர்ந்து ஸ்டாலின் தலைமையில் போல்ஷ்விக் கட்சி வீறுநடை போட்டது. சோசலிசப் புரட்சியை கொச்சைப்படுத்தி ட்ராட்ஸ்கி எழுதிய எழுத்துக் களுக்கு எதிராக ஸ்டாலின் தத்துவார்த்த போரை உறுதியுடன் நடத்திச் சென்றார். அவர் எழுதிய லெனினியத்தின் அடிப்படைகள் என்ற புத்தகம் போல்ஷ்விக்குகள் கையில் சக்தி மிக்க ஆயுதமாக மாறியது.

இயந்திர தொழில்மயமாக்கலும், கூட்டுப் பண்ணை அமைப்பு முறைகளும் எவ்வாறு நிகழ்ந் தேறின. அதன் பலன்கள் எப்படி சோசலிசத்தை உயர்த்திப் படிக்க உதவிற்று போன்றவை மிக விரிவாக நூலில் படித்து அறிய முடியும்.

நிறைவாக
சோவியத் யூனியனின் உழைக்கும் மக்கள், சோசலிசத்திற்காக வெற்றிகரமாகப் போராடிய அனுபவமும், படிப்பினைகளும் இந்நூலில் காணக் கிடைக்கின்றன.
சோசலிசத்திற்கான போராட்டத்தில் மார்க்சிய போதனைகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. மேலும், அப்போராட்டத்தின் ஊடே லெனினும், ஸ்டாலினும் அவற்றை எவ்வாறு மேலும் வளர்த்தெடுத்தனர் என்பதை விளக்குகிறது.
மார்க்சிய – லெனினியத்தின் அடிப்டைக் கருத்து களை அறிமுகப்படுத்தி, அவற்றை எவ்வாறு நடைமுறையில் செயல்படுத்தி வளர்த்தெடுப்பது, எவ்வாறு அவற்றுக்காகப் போராடுவது என்பதை எடுத்துக் காட்டுகிறது. சமுதாய வளர்ச்சியின் விதிகளைப் பற்றிய அறிவைத் தந்து நம்மை ஆயத்தமாக்குகிறது. உலகம் முழுவதும் கம்யூனி சத்தின் வெற்றி நிச்சயம் என்ற நமது நம்பிக்கையை வலுப்படுத்துகிறது” என மார்க்சிய அறிஞர் மாரிஸ் கார்ன்ஃபோர்த் மார்க்சிய மூல நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி எனும் நூலில் இப்புத்தகத்தை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
இந்திய நாட்டில் மக்கள் ஜனநாயக புரட்சியை மூல உத்தியாகக் கொண்டு சிபிஐ(எம்) செயல்பட்டு வருகிறது. இப்புரட்சியை நிறைவேற்றுவதற்கு புரட்சிகர கட்சியை கட்டுவது மிக அவசியம். நவம்பர் புரட்சி நூற்றாண்டைக் கொண்டாடும் இத்தருணத்தில் புரட்சிகர கட்சியை கட்டுவதற்கு, புரட்சியை நடைமுறையில் சாத்தியப்படுத்திய போல்ஷ்விக் கட்சியின் வரலாறு மிகப்பெரும் உந்து சக்தியாக இருக்கும் என்பது நிச்சயம்.

மகத்தான சோவியத் புரட்சியின் பொருளாதார சாதனைகள்

அறிமுகம்
1917 அக்டோபர் மாதத்தில் (அன்றைய ரஷ்ய காலண்டர்படி அக்டோபர் 24-25, நவீன கணக்குப்படி நவம்பர் 6-7 ) மகத்தான ரஷ்ய புரட்சி வெற்றிபெற்று போல்ஷ்விக்கட்சியின் தலைமையில் ஒரு தொழிலாளி வர்க்க ஆட்சி அமைந்தது. இது மானுட வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகும். பத்தொன்பதாம் நூற்றாண் டின் நடுப்பகுதியில் மார்க்சும் எங்கல்சும் உருவாக் கிய சோசலிச இயக்கம், தொடர்ந்து தத்துவமாக வும் மக்கள் இயக்கமாகவும் பெரும் தாக்கத்தை ஐரோப்பாவில் மட்டுமின்றி உலகு முழுவதும் ஏற்படுத்தியது. எனினும், மிகக் குறைந்த காலம் 1871 இல் பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் பாரிஸ் கம்யூன் ஆட்சி நடத்தியது என்றாலும், ஒருநாட் டில், அதுவும் பெரிய நாட்டில் சோசலிச ஆட்சி அமைந்தது முதல் முறையாக நிகழ்ந்தது.

1917 ரஷ்யப் புரட்சியில் தான். தொழிலாளி வர்க்கம் ஆட்சிக்கட்டிலில் அமர்வது என்பது சாதாரண விசயமல்ல. அதுவும், பின்தங்கிய ஜார் மன்னன் சாம்ராஜ்யத்தில் கடும் அடக்குமுறை களை நீண்ட நெடிய மக்கள் போராட்டங்கள் மூலம் தகர்த்து, இடையில் ஆட்சியை கைப்பற்றி தொழிலாளி வர்க்கத்தை வெளியேற்ற முனைந்த முதலாளித்துவ கட்சிகளின் சதிகளை முறியடித்து போல்ஷ்விக் புரட்சி வெற்றி பெற்றது என்பது ஆகப்பெரிய வரலாற்று நிகழ்வாகும். இதை ஏகாதிபத்தியநாடுகளின் முதலாளித்துவ அரசு களும் ஆளும் முதலாளி வர்க்கமும் நன்கு உணர்ந் திருந்தன. அவர்களுக்கு கதிகலங்கியது.

முதலாளிகளே இல்லாமல் ஒருநாட்டை ஆள முடியுமா? உற்பத்தி எப்படி நடக்கும்? வளர்ச்சி என்னாவது? யார் முதலீடு செய்வார்கள்? என் றெல்லாம் கூறி காலம்காலமாக தங்கள் சுரண்டலை நியாயப்படுத்தி ஆண்டுவந்தனர் முதலாளி வர்க் கத்தினர். எனவே, இனி அந்த வர்க்கம் தேவை யில்லை, எல்லா உற்பத்தியையும் செய்துவரும் தொழிலாளி வர்க்கம் ஆட்சியையும் பொறுப் பெடுத்துச் செய்யும், முதலாளிகள் தேவையில்லை என்ற பிரகடனமாக அமைந்த அக்டோபர் புரட்சி அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக அமைந்ததில் வியப்பில்லை.

தொழிலாளி வர்க்க ஆட்சி அமைந்தவுடன் அதை முளையிலேயே கிள்ளியெறிய ஏகாதிபத் திய நாடுகள் கூட்டாக செயல்பட்டன. 1918 ஜூன் மாதத்திலேயே பதினான்கு நாடுகள் தங்கள் துருப்புகளை ரஷ்யாவிற்குள் அனுப்பி, உள் நாட்டு எதிர்ப்புரட்சி சக்திகளுக்கு ஆதரவாக சோசலிச ஆட்சிக்கு எதிரான போரைத் துவக் கின. ஆனால், பெரும் இழப்புகளை சந்திக்க நேர்ந்த போதிலும், மக்களின் பேராதரவுடன் தொழி லாளி வர்க்க செம்படை அவர்களை விரட்டி அடித்தது. புரட்சிகர ஆட்சி உறுதிப்படுத்தப் பட்டது. எனினும், ஏகாதிபத்தியம் தனது ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளை பலவடிவங்களில் தொடர்ந் தது. ரஷ்யா மீதும் 1923 இல் சோசலிச சோவியத் ஒன்றியம் உருவான பின்பு அதன் மீதும் மேலை நாடுகள் பொருளாதார பகிஷ்கரிப்பை நடை முறையாக்கினர். (இதையும் மீறி சில மேலை நாட்டுக் கம்பனிகள் சோவியத் ஒன்றியத்துடன் பொருளாதார நடவடிக்கைகளில் பங்கேற்றனர் என்பதும் நடந்தது).

முதலாளிகள் இல்லாமல் ஒரு நாடு, பின்னர் பல குடியரசுகள் இணைந்த சோசலிச சோவியத் ஒன்றியம், வாழ முடியும், வளர முடியும் என்று பல ஆண்டுகளின் அனு பவம் காட்டிய பின்பும் பல முதலாளித்துவ அறிவு ஜீவிகள், குறிப்பாக பொருளியல் அறிஞர்கள், முதலாளிகளும் சந்தை யும், லாபநோக்கும் இல்லா மல் பொருளாதாரமே சாத்தியமில்லை என்றும் ஒட்டுமொத்த பொருளா தார திட்டமிடுதல் என்பது இயலாத காரியம் என்றும் சொல்லி வந்தனர். ஆனால், 70 ஆண்டு களுக்கும் மேலாக இருந்த சோவியத் சோசலிசம் பொருளாதார நிர்மாணத்தில் படைத்த பெரும் சாதனைகளை மேலைநாட்டு அறிஞர்களே மறுப்பதற்கில்லை. இவை பற்றி இக்கட்டுரையில் சுருக்கமாகக் காண்போம்.

புரட்சியின் நுழைவாயிலில் பின்தங்கியிருந்த ரஷ்யா
கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் ரஷ்யா, இதர வல்லரசுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கி இருந்தது. எழுத்தறிவு விகிதம் 30 கூட இல்லை. அச்சமயம் அமெரிக்காவின் எழுத்தறிவு விகிதம் 95 , ஜப்பானது 9 . அமெரிக்காவில் சரா சரி ஆயுட்காலம் 1900 இல் 47.3 ஆண்டுகளாக இருந்தது. ரஷ்யாவில் 1896 இல் 32 ஆண்டு கள் தான். இது போலவே, தொழில்துறை, வேளாண் உற்பத்தி, மின்சாரம், போக்குவரத்து என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும், புரட்சி நிகழ்ந்த பொழுது ரஷ்யா மிகவும் பின் தங்கிய நாடாகவே இருந்தது. முதல் உலகப் போருக்கு முன்பு நிலைமை இவ்வளவு மோசம் என்றால், அதனை தொடர்ந்து வந்தது முதல் உலக யுத்தம். பின்னர் வந்தது, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் (1918-1921) எதிர்ப் புரட்சியாளர்களையும் ஏகாதி பத்திய துருப்புகளையும் எதிர்த்து புரட்சிகர அரசை காப்பாற்ற நடந்த உள்நாட்டுப்போர். இதன் பின்னர் யுத்தங்களின் விளைவுகளில் இருந்து நாட்டைமீட்க புதிய பொருளாதார கொள்கை கள் பின்பற்றப்பட்டன,
1924 ஜனவரியில் லெனின் மறைந்த பிறகு உட்கட்சி போராட்டங்கள் நிகழ்ந் தன. இவற்றின் இறுதியில் 1927 ஆம் ஆண்டு முடிவில் தான் ஸ்டா லின் தலைமையில் உறுதி யான கொள்கை நிலைப் பாடு அமைந்தது. இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், சோவியத் ஒன்றியத்தின் ரஷ்யப் பகுதி 1928ஆம் ஆண்டில் தான் அது ஏற்கெனவே 1913 ஆம் ஆண்டில் கொண்டிருந்த உற்பத்தி நிலையை எட்டியது. வேறு வகையில் சொல்வ தென்றால் போல்ஷ்விக் கட்சியின் தலைமையில் சோவியத் ஒன்றிய அரசு ஐந்தாண்டு திட்டம் என்ற மாபெரும் – அது வரை வரலாற்றில் மேற் கொள்ளப் படாத புது முயற்சியை, பிரம்மாண்ட மான முயற்சியை துவக்கிய 1928 ஆம் ஆண்டில் மேலைநாடுகளுடன் ஒப்பிடுகையில் சோவியத் ஒன்றியம் மிகவும் பின் தங்கி இருந்தது.

அடுத்த பன்னிரண்டு ஆண்டுகளில் 1940 இல் தனது மூன்றாவது ஐந்தாண்டு திட்டம் நிறை வடையும் முன்பே, அமெரிக்காவிற்கு அடுத்தபடி தொழில் வளர்ச்சி பெற்ற நாடு என உலகில் இரண்டாம் இடத்தை சோவியத் ஒன்றியம் எட்டியது. திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சி சாத்தியமே இல்லை, முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரம் இல்லையென்றால் சர்வநாசம் என்று கூறிவந்த பொருளியல் அறிஞர்களின், மேலைநாட்டு ஆளும் வர்க்கங்களின் கூற்றுகளை, சோவியத் ஒன்றியத்தின் மகத்தான சோஷலிச பொருளாதார வளர்ச்சி வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்தது.

திட்டமிட்ட சோஷலிச வளர்ச்சி
1917 முதல் 1927 வரை ஏராளமான சவால்களை அக்டோபர் புரட்சி எதிர்கொண்டதை ஏற்கெனவே குறிப்பிட்டோம். இதனால் ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்களை முறியடித்து தனது ஆட்சியை உறுதிப்படுத்தி நவீன நிர்மாணத்தை 1928 இல் துவக்கிய பொழுது எத்தகைய உலகை அது எதிர்கொண்டது? அதன் புரட்சிகர அணிகள் உள்நாட்டுப்போரில் ஏராளமான தோழர்களை இழந்திருந்தன. ரஷ்ய புரட்சியை தொடர்ந்து தொழில் வளர்ச்சியில் முன்னேறியிருந்த ஐரோப் பிய நாடுகளில் சோஷலிச புரட்சிகள் வெடிக்கும் என்ற போல்ஷ்விக் நம்பிக்கை பொய்த்துப் போனது. ஜெர்மனியிலும் ஹங்கேரியிலும் புரட்சி கள் வெடித்தன. ஆனால் அவற்றை ஆளும் வர்க் கங்கள் ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து முறியடித் தன. இனி நீண்ட காலம் தனித்து நின்று சோஷலிச நிர்மாணத்தை மேற்கொண்டாக வேண்டும் எனற நிலைமையை அது சந்தித்தது. ஏகாதிபத்தியம் சோவியத் புரட்சியை தகர்க்க தொடர்ந்து பல ராணுவ முஸ்தீபுகளையும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப தடைகளையும் ஆயுதங்களாகப் பயன்படுத்தியது. அண்டை ஜெர்மனியில், அதே போல் இத்தாலியில், எதிர்ப் புரட்சி சக்திகளின் வெற்றி பாசிச சர்வாதிகாரத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. ஜனநாயக சக்திகளுக்கு சிக்கலான கால கட்டம் உருவாகிக் கொண்டிருந்தது. இத்தகைய சூழலில், ட்ராட்ஸ்கி போன்றவர்கள் தனி ஒரு நாட்டில் சோசலிசம் அமைப்பது சாத்தியமல்ல என்ற கருத்தை முன்வைத்த பொழுது தனித்து நின்றும் சோஷலிச நிர்மாணத்தை வெற்றிகர மாக சாதிப்போம் என்று ஸ்டாலின் தலைமை யிலான போல்ஷ்விக்கட்சி முடிவெடுத்தது. இதற் கான முக்கிய ஆயுதமாக, அன்று வரை மானுட வரலாற்றில் கண்டிராத, ஒட்டு மொத்த பொருளா தார திட்டமிடுதல் என்ற அற்புதமான யுக்தியை கடைப்பிடித்தது. திட்டமிடுதல் பற்றியும் ஒவ்வொரு சோவியத் ஐந்தாண்டு திட்டம் பற்றியும் இக்கட்டு ரையில் விளக்குவதும் விவாதிப்பதும் சாத்திய மல்ல. எனினும் அதுபற்றிய சிறிய அறிமுகத்திற்கு செல்வோம்.

சோவியத் ஒன்றியத்தில் திட்டமிடுதல்
ரஷ்ய புரட்சிக்கு முன்பு ஒரு நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு திட்டமிடு வது என்பது நிகழவில்லை. முதலாளித்துவ பொருளாதாரத்தில் உற்பத்தி மற்றும் விற்பனை சார்ந்த முடிவுகளை முதலாளிகள் எடுக்கின்றனர். நவீன முதலாளித்துவ வளர்ச்சியில் பெரும் கம்பனிகள் தங்கள் முதலீடுகள் எந்தெந்த துறை களில் செய்யப்படவேண்டும் என்பது போன்ற முடிவுகளை திட்டமிட்டு மேற்கொள்கிறார்கள். ஆனால் இவை குறிப்பிட்ட கம்பனி சார்ந்த திட்டமிடுதல் தான். ஒட்டு மொத்த நாட்டுப் பொருளாதாரத்திற்கு மையப்படுத்தப்பட்ட திட்டமிடுதல் என்பது முதலாளித்துவ அமைப் பில் சாத்தியமல்ல. ஒட்டுமொத்த திட்டமிடு தலுக்கும் அதனை அமலாக்கவும் ஒரு அதிகாரம் பெற்ற அமைப்பு வேண்டும். முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் அரசுகூட அத்தகைய அதிகாரம் பெற்ற அமைப்பு அல்ல. இதற்கு மிக அடிப்படையான காரணம், உற்பத்திக்கருவிகள் முதலாளிகளிடம் உள்ளன என்பதும் அவற்றை அவர்கள் விருப்பப்படி பயன்படுத்த அவர்களுக்கு முழு அதிகாரம் உண்டு என்பதுமாகும். இந்தியா உள்ளிட்ட பல முதலாளித்துவ நாடுகளில் பொருளா தார திட்டங்கள் தீட்டப்பட்டன. இவை எல்லாமே அரசு முன்வைக்கும் பரிந்துரைகள் தான். ஏனெனில், முதலாளித்வ நாடுகளில் வளங்களை திரட்டி அரசுத்துறை முதலீடுகளை மேற்கொள்ள அரசு முயற்சிக்கலாம். ஆனால் தனியார் துறை முதலாளி களின் முதலீட்டு முடிவுகளை அரசு நிர்ணயிக் கவோ ஆணையிடவோ முடியாது. அக்டோபர் புரட்சி தொழில் துறைகள் அனைத்தையும் அரசுடைமை ஆக்கியது. எல்லா தொழில் நிறுவனங்களும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததனால் அவர் களது முதலீடுகளின் அளவு, தன்மை உள்ளிட்ட அனைத்தையும் தனித்தனியாக முடிவு செய்யா மல் ஒட்டுமொத்த நாட்டு நலன் அடிப்படையில் துறைவாரியாக உற்பத்தி இலக்குகள் நிர்ணயித்து அவற்றை அடைய வழிமுறைகளையும் திட்ட மிட்டு அமலாக்குவது என்பது சாத்தியமாயிற்று. துவக்கத்தில், புரட்சி வெற்றி பெற்றவுடன் உள் நாட்டு எதிர்ப்புரட்சி சக்திகளும் ஏகாதிபத்திய நாடுகளும் புரட்சிக்கெதிராக போர் தொடுத்த நிலையில், நீண்ட தொலைநோக்குடன் திட்டமிட சாத்தியப்பாடு இல்லாமல் போனது. அரசின் அனைத்து பொருளாதார திட்டங்களும் கொள்கை களும் நடவடிக்கைகளும் எதிர்ப்புரட்சியாளர்கள் தொடுத்த போரில் அவர்களை தோற்கடிப்பதையே மையமாக கொண்டிருந்தன. இவ்வாறு 1918 முதல் 1921 வரையில் திட்டமிடுதல் என்பது போர் சார்ந்த விஷயமாகத்தான் இருந்தது. போர் கால பொது உடைமை கட்டம் என்று இந்த மூன்று ஆண்டுகள் அழைக்கப்படுகின்றன. துருப்புக ளுக்கு தேவையான உணவை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து உறுதிப்படுத்துவது என்பது முக்கிய திட்ட இலக்குகளில் ஒன்றாக இருந்தது. அதேபோல் போருக்கான தளவாடங் களை உற்பத்திசெய்வது போன்றவை முக்கியமாக இருந்தன. பின்னர் 1921 இல் போரின் பெரும் சேதங்களின் பின்புலத்தில் நாட்டின் மிகவும் பின்தங்கிய வளர்ச்சி நிலையை கணக்கில் கொண்டும், வேளாண் மற்றும் தொழில் மீட்சியை சாதிக்க வேண்டி இருந்தது. இதற்காக, தொழிலாளி வர்க் கத்தின் தலைமையிலான சோசலிச அரசு, தொழி லாளி – விவசாயி வர்க்கக் கூட்டணி யை வலுப் படுத்தும் தன்மையில் சில ஆண்டுகள் புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் ஒரு வரம்பிற்கு உட்பட்டு தனியார் துறையையும் சந்தைசார் உறவுகளையும் அனுமதித்தது.

லெனின் 1924 ஜனவரியில் மறைந்தார். அதன் பின்பும் இக் கொள்கை சிறிதுகாலம் தொடர்ந்தது. ஆனால், இக்கொள்கைகள் செயல்படுத்தப்பட்டதனால் கிராமப்புறங்களில் முதலாளித்துவ சக்திகள் வலுப்பெற்று வந்தது சோஷலிச அமைப்பின் வளர்ச்சிக்கு தடையாக உருவெடுக்கும் அபாயம் உணரப்பட்டது. இவை 1927 வாக்கில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன. ஓரளவு புரட்சி தன்னை நிலை நாட்டிக் கொண்டுவிட்டதால், நீண்ட கால நோக்குடன் மையப்பட்ட திட்டமிடுதலை நோக்கி செல்ல போல்ஷ்விக் கட்சியும் அரசும் முடி வெடுத்தன. சோவியத் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டிய அடிப்படையிலும் நிலவிய பன்னாட்டு சூழலில் தொழில் வளர்ச்சியை பெரிதும் விரைவுபடுத்த வேண்டிய அவசியத்தை கணக்கில் கொண்டும் சோவியத் அரசின் முதல் ஐந்தாண்டு திட்டம் 1928 -1932 காலத்திற்கான துறைவாரி யான வளர்ச்சி இலக்குகளை உருவாக்கியது. அவற்றை அடைவதற்கான வழிமுறைகளையும் சோவியத் அரசு தீர்மானித்தது. 1928 முதல் 1985 தொடர்ந்து ஐந்தாண்டு திட்டங்கள் தீட்டப்பட்டு அமலாக்கப்பட்டன. இவை பல வெற்றிகளை சாதித்தன. காலப்போக்கில் பல காரணங்களால் திட்டங்களின் தன்மையில் மாற்றங்கள் நிகழ்ந்தன. இதில் நிறைகளும் குறைகளும் இருந்தன. இவை பற்றி தனியாக விவாதிக்க வேண்டியுள்ளது. ஆனால் ஒரு விஷயத்தை இங்கே குறிப்பிடவேண்டும். சோஷலிச உடைமை உறவுகளின் கீழ் தான் முழு மையான ஒட்டுமொத்த திட்டமிடுதல் சாத்தியம். அத்தகைய திட்டமிடுதல் லாப நோக்கில் அல்ல. மக்களின் வாழ்க்கைத் தரம் பொருளாதாரம், பண்பாடு என அனைத்து அம்சங்களிலும் உயர வேண்டும் என்பதே அதன் நீண்டகால இலக்காக இருக்க முடியும். சோசலி சம் என்பது வெறும் பொருளாதார வளர்ச்சி பற்றிய விஷயம் அல்ல. அதற்கென. முழுமையான ஜனநாயகம், விரிவான மக்கள் பங்கேற்பு போன் றவை உள்ளிட்ட பல மாண்புகளும் விழுமியங்களும் உண்டு.

1928-1940: வியத்தகு வளர்ச்சி
முதல் மூன்று ஐந்தாண்டு திட்டங்கள் நிறை வடையும் முன்பே உலகில் இரண்டாம் தொழில் நாடானது சோவியத் ஒன்றியம் என்பதை குறிப் பிட்டோம். அதுவும், எதிரிகளின் தாக்குதல்களை எதிர்கொண்டது மட்டுமின்றி, பிற நாடுகளை சுரண்டாமல், தனது தொழிலாளி வர்க்கத்தின் நலன்களையும் காத்து இந்த வளர்ச்சி சாதிக்கப் பட்டது. 1928 முதல் 1937 வரையிலான காலத்தில் சோவியத் ஒன்றியத்தின் தொழில் உற்பத்தி மூன்று மடங்கு அதிகரித்தது. இதில், குறிப்பாக, 1932 முதல் 1937 வரையிலான ஐந்தாண்டு காலத் தில் இரட்டிப்பானது. (1937 முதல் 1955 வரை யிலான காலத்தில் தொழில் உற்பத்தி மீண்டும் இரண்டரை மடங்கு அதிகரித்தது என்ற செய் தியை இங்கு பதிவு செய்யவேண்டும். ஏனென் றால், 1928 முதல் 1937 வரையிலான காலத்தில் ஏற்பட்ட மாபெரும் தொழில் வளர்ச்சி பின்னர் இரண்டாம் உலகப்போரில் நாஜி படைகளின் தாக்குதலில் பெருமளவு அழிந்துபோனது. அதி லிருந்து மீண்டு, இரண்டாம் உலகப் போர் முடிந்து பத்து ஆண்டுகளில், தீவிரமடைந்த ஏகா திபத்திய எதிர்ப்பையும் சந்தித்து இவ்வளர்ச்சி நிகழ்ந்தது என்பது திட்டமிட்ட சோஷலிச பொருளாதார அமைப்பின் மறுக்க முடியாத விளைவும் சாதனையும் ஆகும். )
நிகழ்ந்தது தொழில் வளர்ச்சி மட்டுமல்ல. புரட்சிக்கு முன் விவசாயிகளும் விவசாயக் கூலி தொழிலாளிகளும் நிலப்பிரபுக்களின் கடும் சுரண்டலுக்கு இரையாக இருந்தனர். புரட்சி நிலப்பிரபுக்களின்ஆதிக்கத்தை அழித்தொழித் தது. எனினும் 1921 முதல் 1927 வரையிலான புதிய பொருளாதாரக் கொள்கைகள் காலத்தில் கிராமப் புற செல்வந்தர்களும் பணக்கார விவசாயிகளும் தங்களை ஓரளவு வலுப்படுத்திக் கொள்ள முடிந் தது. பின்னர் முதல் ஐந்தாண்டு திட்ட காலத்தில் சோஷலிச அமைப்பின் இலக்குகளுக்கு தடை யாக இப்பகுதியினர் மாறும் அபாயம் பற்றியும், தொழில் வளர்ச்சிக்கு வேளாண் துறையில் ஏற்பட வேண்டிய உற்பத்தி உறவு மாற்றங்கள் பற்றியும் போல்ஷ்விக் கட்சியில் நடந்த நீண்ட உட்கட்சி விவாதத்திற்குப்பின் கூட்டுப் பண்ணை கள் அமைக்கப்படவேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. இது அமலாக்கப்பட்ட முறை யில் சில தவறுகள் நிகழ்ந்த போதிலும், கூட்டுப் பண்ணைகளை அமைத்தது வேளாண் வளர்ச் சிக்கும் தொழில் வளர்ச்சிக்கும் உதவிகரமாக இருந்தது என்றும் வேளாண் துறையில் உற்பத்தி திறனை உயர்த்த உதவின என்றும் தான் ஆராய்ச் சிகள் நமக்கு தெரிவிக்கின்றன. கடுமையான இயற்கை பாதிப்புகளை தொடர்ந்து சோவியத் ஒன்றியம் 1930 களில் சந்தித்த போதிலும் அவற்றை சமாளிக்க முடிந்தது. வேளாண் உற்பத்தியில் நவீன முறை களும் இயந்திரங்களும் திட்டமிட்டு அரசு உதவி யுடனும் மான்யங்களுடனும் 1930 களில் (அதன் பின்பும்) விரிவாக கொண்டு செல்லப்பட்டன. வேளாண் உற்பத்தி திறன் சோவியத் ஒன்றியத் தில் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. இடை யிடையில் இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்பட்ட காலங்களில் சோஷலிச அரசு தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பதும் குறிப்பிடப் படவேண்டும்.

கல்வியில், ஆரோக்கியத்தில், மக்களின் வாழ்க் கைத் தரத்தில், நுகர்வு அளவில், பொதுவான கணிசமான முன்னேற்றம் இக்காலத்தில் நிகழ்ந் தது. ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற வகையில் கல்வி பற்றிய ஓரிரு புள்ளி விவரங்களை மட்டும் இங்கு பார்ப்போம். 1917 இல் ரஷ்யாவில் பள்ளியில் படித்துக் கொண் டிருந்த மாணவர் எண்ணிக்கை 80 லட்சம். இது 1934 இல் 2 கோடியே 5 லட்சமாக அதிகரித் திருந்தது. 1926 இல் சோவியத் ஒன்றியத்தில் 9 முதல் 49 வயது என்ற வயது வரம்பில் இருந் தோரின் எழுத்தறிவு விகிதம் 56.6 . 1939 இல் இது 87.4 ஆக உயர்ந்திருந்தது. சோவியத் ஒன்றியத் தின் மத்திய ஆசிய குடியரசுகளான உஸ்பெகிஸ் தான் மற்றும் கஸக்ஸ்தான் நாடுகளில் எழுத்த றிவு விகிதங்கள் 1926 இல் முறையே 11.6 மற்றும் 25.2 என்று இருந்தன. 1939 இல் இவை 78.7 மற்றும் 83.6 என்று அதிகரித்திருந்தன. (1959 இல் சோவியத் ஒன்றியத்தில் எழுத்தறிவு விகிதம்: 98.5) முதலா ளித்துவம் செய்ய முடியாத காரியம் அனைவருக் கும் வேலை உத்தரவாதம் அரசியல் சாசனத்தில் (1936) பிரகடனமாயிற்று. வேலை யின்மை என்ற பெருங்கொடுமை – முதலாளித் துவ அமைப்பில் முதலாளிகளின் பேராயுதம் முற்றிலுமாக துடைத்து எறியப்பட்டது. 1936 சோவியத் அரசியல் சாசனம் மறுபுறம், உழைப்பு சாரா வருமானங்களை வர்க்க சுரண்டலை – தடைசெய்தது. பெண்களுக்கு பிரசவகால விடுப்பு வழங்கப்பட்டது. நாடு முழுவ தும் தாய் சேய் நல இல்லங்கள், நர்சரிகள், சிறார் பள்ளிகள் அமைக் கப்பட்டன.

இக்காலத்தில் (1928-1940) பாசிச தாக்குதல்களுக்கு எதிராக தயாராகும் பணி களை அரசு கவனிக்க வேண்டியிருந்த சூழலில் மக்களின் சராசரி நுகர்வு நான்கில் ஒரு பங்கு அதிகரித்தது என்பதும் குறிப்பிடத் தக்கது.
இதே காலத்தில் உலக முதலாளித்துவ பொருளா தாரம் பெரும் மந்தத்தில் சிக்கியிருந்தது. சோவியத் சோசலிசத்தில் அனைவருக்கும் வேலை, தொடர்ந்து அதிகரித்து வந்த வாழ்க்கை தரம் என்ற நிலைமை சோசலிசத்தின் மேன்மையை பிரகடனப் படுத்தியது. கஷ்டங்களும் சவால்களும் இருந்தன. தவறுகள் நிகழ்ந்தன. அன்றைய சூழலில் எதிரிகளின் தாக்கு தலால் ஒரு முற்றுகை மனப்பான்மையுடன் செயல்படும் பலவீனம் இருந்தது. இதனால் பாட்டாளி வர்க்க ஜனநாயக நெறிமுறைகள் மீறப்பட்டன. எனினும், ஓரளவிற்கு, திட்டமிட்ட முறையில் , ஒட்டு மொத்த சமூக பங்கேற்புடன் சவால்கள் வெற்றிகரமாக எதிர் கொள்ளப்பட்டன. இலக்கு மறவாமல் செயல்பட்டு பொருளாதார வளர்ச்சியை சாதித்ததனால் தான் நாஜி படை களின் தாக்குதலையும் சோவியத் ஒன்றியத்தால் முறியடிக்க முடிந்தது.

இரண்டாம் உலகப்போருக்குப்பின் பனிப் போர் காலம் 1940களின் பத்து ஆண்டுகள் இரண் டாம் உலகப்போர் மற்றும் அதை தொடர்ந்து வந்த பிரச்னைகளில் கழிந்தது. இப்போரில் நாஜி படைகளை முறியடித்து உலகில் ஜனநாயகத்தை காப்பதில் பெரும் பங்காற்றிய சோவியத் சோசலி சம் கடும் இழப்புகளையும் சந்தித்தது. 250 லட்சம் மக்களின் இன்னுயிர்களை ஈந்தது மட்டுமின்றி, நாஜி தாக்குதலில் தனது தொழில் கூடங்களில் மூன்றில் இரண்டு பங்கு அழிக்கப்பட்டதையும், நகரங்களில் பெரும்பாலானவை தரை மட்டமாக் கப் பட்டதையும் சோஷலிச சோவியத் ஒன்றியம் எதிர் கொண்டது.

பாசிசத்தை வீழ்த்தி களைப்பாறும் முன்பே மிகப் பெரிய புதிய தலைவலி பனிப்போர் வடிவில் வந்தது. இரண்டாம் உலகப் போர்காலத்தில் வேறு வழியின்றி மேலை ஏகாதிபத்தியம் சோவியத் ஒன்றியத்துடன் ஒத்துழைக்க நேர்ந்தது. பல ஆண்டு கள் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக நாஜி அரசை வளர்த்து விட்ட மேலைநாடுகள் இரண்டாம் உலகப்போரில் தங்கள் நிலைபாட்டை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் போர் முடிந்தபின் சோவியத் ஒன்றியம் தான் முதல் பெரும் எதிரி என்ற நிலைபாட்டை அமெரிக்க ஏகாதிபத்தியம் தெளிவு படுத்தியது. அணுகுண்டை உருவாக்கி அதை ஜப்பான் மீது இருமுறை அமெரிக்கா ஏவியது என்பது சோவியத் செம்படைகள் பசிபிக் பகுதியில் நுழைவதை தடுக்கவும் முதலாளித்துவ உலகின் காவல்காரனாக தன்னை அறிவித்துக் கொள்ளவும் அமெரிக் காவிற்குப் பயன்பட்டது. ஆகவே மீண்டும் ஒரு கடும் சவாலை சோவியத் சோசலிசம் எதிர்கொண்டது. 1928 -1940 காலத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத தொழில் வளர்ச்சியில் பெரும்பகுதி இரண்டாம் உலகப்போரில் அழிக்கப்பட்ட பின்னணியில் மீண்டும் ஒரு நெடிய வளர்ச்சிப் பயணத்தை அது மேற்கொள்ள வேண்டியிருந்தது. அப்பயணத்தை ஏகாதிபத்தியத்தின் கூர்மையான, இடைவிடாத தாக்குதல்கள் மத்தியில் செய்ய வேண்டியிருந்தது. அடுத்த இருபது ஆண்டுகளில் இந்த சவாலை யும் சோஷலிச சோவியத் ஒன்றியம் வெற்றி கரமாக சந்தித்தது. இதனை அடுத்தும் 1970களின் இறுதிவரையும் அதன்பின் சில ஆண்டுகளும் சோவியத் வளர்ச்சி தொடர்ந்தது.

இரண்டாம் உலகப்போர் துவங்கும் முன்பு 1937 இல் இருந்த நிலையை 100 என்று வைத்துக் கொண்டால், தலா தனி நபர் நுகர்வின் அளவு 1944 இல் 66 என சரிந்திருந்தது. ஆனால் 1950 இலேயே இது 135 ஆக உயர்ந்தது. 1955 இல் 159 என அதிகரித்தது. இது மிக வேகமான மீட்சி யாகும். 1950 இல் துவங்கி ஒரு மாபெரும் வீடு கட்டும் திட்டம் அமலுக்கு வந்தது. 1946-50 காலத் தில் மக்களின் வாழ்விடப் பரப்பளவு 12.71 கோடி சதுர கிலோமீட்டர் ஆக இருந்தது. இது 1961-66 இல் 39.44 கோடியாக உயர்ந்தது. சோவியத் மக் களின் உணவு பாரம்பர்ய ரொட்டி மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றை மையப்பட்டிருந்த நிலைமாறி , இறைச்சி, மீன், முட்டை, பால் சார்ந்த பொருட்கள் என்றாகியது. 1965 இல் ஆண்டுக்கு 38 கிலோ என்றிருந்த தலா இறைச்சி நுகர்வு 1985 இல் 61.7 ஆக அதிகரித்தது. இதே கால இடை வெளியில் நூறு குடும்பங்களில் ரெப்ரிஜி ரேட்டர் வைத்திருந்தவை பதினொன்று மட்டுமே என்ற நிலையில் இருந்து தொன்னூற்று ஒன்று என்ற நிலைக்கு உயர்ந்தது. 1965 இல் 100 குடும் பங்களில் 24 மட்டுமே தொலைக்காட்சி பெட்டிகள் வைத்திருந்தன.1985 இல் இது 97 ஆகியது. தொலை பேசிகளின் எண்ணிக்கை இதே காலத் தில் கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகரித்தது. ஒட்டுமொத்த தேச வருமான வளர்ச்சி வேகம் எழுபதுகளின் பிற்பகுதியில் குறையத் துவங்கியது என்றாலும் பல துறைகளில் முன்னேற்றம் தொடர்ந் தது. மின்உற்பத்தி ஐம்பது சதம் அதிகரித்தது. வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளின் உற்பத்தி ஆறு மடங்கு அதிகரித்தது.

பொதுவாக கூறுவதானால், ஆயிரத்து தொள்ளா யிரத்து இருபதுகளின் பிற்பகுதியில் தான் சோஷ லிச நிர்மாணப்பணிகளை வேகப் படுத்த முடிந் தது. அதன் பின்பு ஏகாதிபத்தியமும் பாசிசமும் தொடுத்த தொடர் தாக்குதல்களை ஒருபுறம் எதிர்கொண்டே மறுபுறம் மகத்தான பொருளா தார வளர்ச்சியையும் சோவியத் சோசலிசம் சாதித்தது என்றால், இதன் மையப்புள்ளி சோஷ லிச உற்பத்தி உறவுகளும் அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மைய திட்ட அணுகுமுறை யும் என்பதை பதிவு செய்ய வேண்டும். பனிப் போர் காலத்திலும் சோஷலிச அமைப்பின் சாதனைகள் தொடர்ந்தன. சோஷலிச அரசியல் நிலைபாடு இதில் முக்கியத்வம் வாய்ந்தது. சோவியத் ஒன்றியத்தின் அனுபவம் முக்கியமாக ஒரு செய்தியைச் சொல்கிறது. அது என்ன? ஒரு திட்டமிட்ட, உற்பத்திக்கருவிகளின் பொது உடைமை அடிப்படையிலான பொருளாதார அமைப்பு இன்று அனைத்து உழைக்கும் மக்களும் விரும்பும் விஷயங்களை தர இயலும் என்பதை காட்டுகிறது. எல்லோருக்கும் வேலை, உத்தரவாதப்படுத்தப் பட்ட ஒய்வு ஊதியம், வரம்புக்கு உட்பட்ட பணி நேரம், போதுமான காலத்திற்கு ஊதியத்துட னான மகப்பேறு விடுப்பு , குறைந்த செலவில் மகிழ்வான சுற்றுலா விடுமுறைகள், உயர்கல்வி உட்பட இலவசமானதும் தரமானதுமான கல்வி, இலவச உடல், மன நல வசதிகள் மற்றும் சிகிச்சைகள், மிகக்குறைந்த செலவில் வீட்டு வசதி, மிகக் குறைந்த கட்டணத்தில் பொது போக்குவரத்து வசதிகள் , தரமான தாய்-சேய்நல ஏற்பாடுகள் என்றுஅவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். சோவியத் சமூகத்தில் ஏற்றத்தாழ்வு களும் குறைவு என்பதும் குறிப்பிடப்பட வேண் டும். சுருங்கச்சொன்னால், இன்றைய கேடுகெட்ட முதலாளித்துவ சீரழிவில் உழைக்கும் மக்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை ஒப்பிட்டுப்பார்த் தால், சோவியத் சோசலிசத்தின் சாதனைகளின் பிரம்மாண்டம் ஓரளவு புலப்படும்.

சோஷலிச பொருளாதார வளர்ச்சி அறிவியலை முன்னெடுத்துச் செல்ல உதவியது. அறிவியல் தொழில் நுட்ப சாதனைகளை சாத்தியமாக்கியது. விண்வெளி, ஆற்றல், மருத்துவம், பொறியியல் என்று பல துறைகளில் சோசலிச சோவியத் ஒன்றியம் பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டி யுள்ளது. இது பற்றி தனியாக விவரிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

பிரச்னைகள்
எனினும் கடந்த நூற்றாண்டின் எண்பதுகளில் சோவியத் பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் தொடர்ந்து குன்றியது. இது நிகழ்ந்ததற்கு சோவியத் அமைப்பில் திட்டமிடலில் ஏற்பட்ட பலவீனங் கள் ஒருபங்கு வகித்தன. இதன் பின்புலத்தில் திருத்தல்வாதம் உள்ளிட்ட அரசியல் திரிபு களுக்கு பொறுப்பு உண்டு. மறுபுறம், ஏகாதிபத் தியம் எழுபதுகளின் நடுப்பகுதியில் இருந்து ஏற் பட்ட தனது பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்ள சோஷலிச நாடுகளின் மீதான குறிப் பாக சோவியத் ஒன்றியத்தின் மீதான – தாக்கு தலை தீவிரப் படுத்தியது. 1980 இல் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ரீகன் தலைமை யிலான அமெரிக்க ஏகாதிபத்தியம் மீண்டும் ஒரு கடுமையான ஆயுதப் போட்டியை சோவியத் ஒன்றியத்தின் மீது திணித்தது. ஆயிரத்து தொள்ளா யிரத்து எழுபதுகளில் சில பதட்டக்குறைப்பு நடவடிக்கைகள் துவக்கப்பட்டிருந்தன. இதில் கேந்திர ஆயுதங்கள் கட்டுப்பாடு ஒப்பந்தம் 1 மற்றும் 2 என இரண்டு ஒப்பந்தங்கள் அமெரிக் காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையில் போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் 1980 இல் நுழையும் தருணத்தில் ரீகன் தலைமை யிலான அமெரிக்க ஏகாதிபத்தியம் பதட்டக் குறைப்பு பாதையை நிராகரித்தது. மிக சக்தி வாய்ந்த பெர்ஷிங், க்ரூயிஸ் ஏவுகணைகளை அமெரிக்கா உற்பத்தி செய்து களத்தில் இறக் கியது. அடுத்து, கேந்திர பாதுகாப்பு முன்முயற்சி என்ற பொய் யான பெயரில், விண்வெளிக்கும் யுத்த முஸ்தீபு களை விரிவாக்கியது. இந்த நடவடிக்கைக்கு சரியான நட்சத்திர யுத்தம் என்ற பெயர் மக்கள் மத்தியில் பிரபலமாகியது. இந்த அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண் டிய கட்டாயத்தில் சோவியத் ஒன்றியம் இருந்தது. சோவியத் மக்களின் உழைப்பால் உருவான வளங்களில் ஒரு கணிசமான பகுதி ஏகாதிபத்தி யம் திணித்த தற்காப்பு நடவடிக்கைகளுக்கு சென்றது.இதனால், மக்கள் தேவைகளை குறிப் பாக நுகர்வு தேவைகளை நிறைவு செய்வதில் பிரச்சினைகள் ஏற்பட்டன. சோவியத் ஒன்றியம் தகர்க்கப்படும் வரை கூட சோஷலிச திட்டமிட லால் மக்களின் வாழ்க்கைத்தரம் தொடர்ந்து அதிகரித்து வந்த போதிலும், ஏகாதிபத்தியத்தின் ராணுவ நிர்ப்பந்தங்கள் சோவியத் பொருளா தாரத்தை கடுமையாக பாதித்தன. இது மட்டு மல்ல. மேலை நாடுகள் வசம் இருந்த நவீன தொழில் நுட்பங்களை சோவியத் ஒன்றியம் பெறு வதை தடுக்கவும் பல நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்தது. இரட்டைப்பயன்பாடு தொழில்நுட் பங்கள் அதாவது, ராணுவம் சாரா பயன்பாடு ராணுவ பயன்பாடு இரண்டையும் ஒருங்கே கொண்டவை முற்றிலுமாக மறுக்கப்பட்டன. இதற்கான வணிகத்தடை ஏற்பாடுகள் கறாராக அமலாக்கப்பட்டன. இத்தகைய நடவடிக்கைகள் சோவியத் ஒன்றியத்தின் தொழில் நுட்ப வளர்ச் சிக்கு பெரும் முட்டுக்கட்டைகளாய் அமைந்தன. மேலும், இத்தகைய பதட்டமான பன்னாட்டுச் சூழலில் தனது கேந்திரமான மூலப்பொருட்கள் உள்ளிட்ட அவசிய பொருட்களுக்கு இறக்கும தியை சார்ந்திருப்பது ஏகாதிபத்தியத்திற்கு சாதக மாகிவிடும், தனக்கு நெருக்கடியை ஏற்படுத்தி விடும் என்ற அபாயத்தை கணக்கில் கொண்டு இவற்றை அதிக செலவில் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் நிலைக்கு சோவியத் ஒன்றியம் தள்ளப்பட்டது.

மேலும், 1970 களில் பல ஆப்பிரிக்க நாடுகளின் விடுதலை போராட்டங்களுக்குஆதரவு அளிப்பது, பல வளரும் நாடுகளுக்கு பொருளாதார மற்றும் இதர உதவிகள் அளிப்பது, எழுபதுகளின் இறுதி யிலும் எண்பதுகளின் பல ஆண்டுகளிலும் ஆப் கன் புரட்சிக்கு ஆதரவாக ராணுவ நடவடிக்கை களை எடுக்கவேண்டிய கட்டாயம் என்று பல சர்வதேச கடமைகளை சோவியத் ஒன்றியம் நிறைவேற்ற முனைந்தது. ஆப்கானிஸ்தானிலும், ஆப்பிரிக்காவிலும் இதர வளரும் நாடுகளிலும் சோவியத் சோசலிஸ ஒன்றியம் ஆற்றிய மகத் தான ஏகாதிபத்திய எதிர்ப்புப் பணி அதன் சர்வ தேசக் கடமையின் பகுதி என்றாலும், அதுவும் பொருளாதார ரீதியாக கூடுதல் சுமைகளை சோவியத் ஒன்றியத்திற்கு ஏற்படுத்தியது.

இப்படி ஏகாதிபத்திய தாக்குதல்கள், நெருக் கடிகள் உள்ளிட்ட பல பிரச்சனைகளை சந்திக்கும் நேரத்தில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை யில் பெரும் பலவீனம் உருவாகி வளர்ந்து கொண்டிருந்தது. ஸ்டாலின் மறைவிற்குப்பின்பே, 1956 இல் நடந்த சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது மாநாட்டில் வெளிப்பட்ட திருத் தல்வாத அணுகுமுறை சோவியத் கட்சிக்குள் படிப்படியாக வலுப்பெற்று வந்தது. ஏகாதிபத் தியம் பற்றியும் முதலாளித்துவத்தில் இருந்து சோசலிசம் நோக்கி பயணிக்கும் சகாப்தத்தின் தன்மை பற்றியும், இக்காலத்தில் பாட்டாளி வர்க்க தலைமையின், ஆட்சியின் அவசியம் பற்றியும் ஒரு சரியான நிலைபாட்டை சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி எடுக்கத் தவறியது. சமாதான சக வாழ்வு, சமாதான பொருளாதாரப் போட்டி, சமாதானப் பாதையில் சோசலிசத்தை நோக்கிப் பயணம் என்ற திருத்தல்வாத மும்மூர்த்திகளை சோவியத்கட்சி அங்கீகரித்தது. சமாதான சக வாழ்வின் அவசியத்தை நாம் மறுதலிக்க முடியாது என்றாலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைபாட்டில் இருந்து தான், ஏகாதிபத்தியம் பற்றிய எந்த பிரமைகளும் இல்லாமல் தான் அப் பிரச்சினை யைப் பார்க்க வேண்டியுள்ளது. சமாதான பொருளாதார போட்டியின் அடிப்படையில் சோசலிசம் முதலாளித்துவத்தை வீழ்த்த முடியும் என்ற புரிதலும் பொருத்தமல்ல. ராணுவ தாக்கு தல்கள், நெருக்கடிகள், போர், வர்த்தக மற்றும் தொழில் நுட்ப தடைகள் உள்ளிட்டு எல்லா ஆயுதங்களையும் அது பயன்படுத்தும் என்பதே அக்டோபர் புரட்சியின் துவக்கத்தில் இருந்து நமது அனுபவம். அக்டோபர் புரட்சிக்குப் பின் உள்நாட்டில் எதிரி வர்க்கங்கள் பெருமளவு பலவீனப் படுத்தப்பட்டன என்பது உண்மை என்றாலும், ஆயிரத்து தொள்ளாயிரத்து எண் பதுகளின் துவக்கத்தில் முதலாளித்துவ உலகில் உருவான பன்னாட்டு நிதி மூலதன ஆதிக்கப் பின்புலத்தில் சோவியத் ஒன்றியத்திற்குள் நிதி மூலதனம் ஊடுருவ பல வாய்ப்புகள் உருவாகின. வரலாற்று ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து பெரும் முன்னேற்றத்தை சாதிப்பதற்கு திட்டமிட்ட சோஷலிச உறவுகள் அடிப்படை யிலான வளர்ச்சிப் பாதை உதவியது. ஆனாலும், நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பன்னாட்டு சந்தைகள், பன்னாட்டு நிதித்துறை, பன்னாட்டு ஊடகதுறை ஆகிய அனைத்திலும் ஏகாதிபத் தியத்தின் ஆதிக்கம் நிலவி வந்த சூழலில், மேலை நாடுகளுடன் வர்த்தக, தொழில்நுட்ப, மற்றும் நிதிசார் உறவுகளை தவிர்க்கும் நிலையில் எண்ப துகளில் கூட சோவியத் ஒன்றியம் இல்லை. இத்தகைய வர்த்தக மற்றும் நிதி மூலதன போக்குவரத்து சோவியத் ஒன்றியத்திற்குள் ஊடுருவும் வாய்ப்பு களை ஏகாதிபத்தியத்திற்கு ஏற்படுத்திக் கொடுத் தது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் நிலவிய திருத்தல்வாதப் பார்வை இந்த அபாயத்தை முழு மையாக உணர்ந்து எதிர்கொள்ள உதவவில்லை. கடந்த நூற்றாண்டின் எண்பதுகளின் பிற்பகுதி யில் சோஷலிச கொள்கைகள கோர்பச்சாவ் தலைமையிலான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி படிப்படியாக கைவிட்டது என்பது சோசலிசப் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

நிறைவாக…
மானுட வரலாற்றில் ஒரு சமூகம் உணர்வு பூர்வமாக அறிவியல் அணுகுமுறையை ஏற்று பொருளாதார வளர்ச்சியை திட்டமிட்டு சாதிக்க முனைந்தது சோவியத் புரட்சியில் தான் முதல் முதலாக நிகழ்ந்துள்ளது. வரலாற்றியல் பொருள் முதல் பார்வையில் இருந்து நோக்கினால், இந்த மகத்தான முயற்சி சாதகமான, பொருத்தமான சூழலில் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக முதலாளித்துவ வளர்ச்சியில் பெரிதும் பின்தங் கியிருந்த ஒரு நாட்டில் மேற்கொள்ளப்பட்டது. எனினும்கூட அப்புரட்சி என்றும் அழியாத சாதனைகளை செய்துள்ளது. சோவியத்புரட்சி யும் அதன் சோஷலிச நிர்மாணத்தில் கிடைத்த வெற்றிகளும் அனுபவங்களும் உன்னதமான பொது உடைமை சமூகம் என்ற மானுடத்தின் இலக்கு நோக்கிய பயணத்தின் ஆரம்ப அடிகள். மார்க்சும் எங்கல்சும் எதிர்பார்த்தபடி ஒரு வளர்ந்த முதலாளித்துவ நாட்டில் அனுபவமிக்க, முன்னேறிய தொழிலாளிவர்க்க தலைமையில் புரட்சி நடந்திருந்தால் அது எதிர்கொண்டிருக்கக் கூடிய சவால்களை விட பல நூறு மடங்கு கூடுதல் சவால்களை எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக மகத்தான அக்டோபர் புரட்சி எதிர் கொண்டது. ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பன மாக, தேச விடுதலை இயக்கங்களின் உற்ற நண் பனாக, உலக அமைதியின் பாதுகாவலனாக, உழைப்பாளிகளின் வாளாகவும் கேடயமாகவும் பங்காற்றிய சோவியத் சோஷலிச அனுபவத்தின் ஆகப்பெரிய பங்கு, ஒரு நவீன பொருளாதார அமைப்பை உருவாக்கவும் வளர்க்கவும் ஒரு முதலாளி வர்க்கம் தேவையில்லை என்பதும், உழைப்பாளி மக்களே கூட்டுத் தலைமையின் மூலம் அதை சாதிக்க முடியும் என்பதுமாகும். வேலையின்மை, வறுமை, கல்லாமை, ஆரோக் கியமின்மை உள்ளிட்ட பல முதலாளித்துவக் கேடுகளை அழித்தொழித்த, சுரண்டல் அற்ற உலகத்தை நோக்கி பயணிக்க முனைந்த சோஷலிச அமைப்பின் முதல் அனுபவமான அகோட்பர் புரட்சியை என்றென்றும் நினைவில் நிறுத்து வோம். அதன் மிக முக்கிய படிப்பினை மானுடத் தின் எதிர்காலம் சோசலிசத்தை நோக்கிப் பயணிப் பதில் தான் மேம்படும் என்பதே. சோவியத் அனு பவமும் உலகளவில் தொடரும் முதலாளித்துவ நெருக்கடியும் மானுடம் எதிர்கொள்ளும் எந்த பிரச்னையையும் லாப வேட்டை அடிப்படையி லான முதலாளித்துவ அமைப்பால் தீர்வு காண முடியாது என்று மக்கள் அன்றாடம் கண்டு வருவதும் எதிர்காலத்தில் சோவியத் சோசலிசம் தரும் வெளிச்சத்தில் மானுடம் முன்னேறும் என்ற நம்பிக்கையை நமக்கு அளிக்கின்றன.

ரஷ்ய புரட்சியும் பெண்களும் …

சுரண்டல் சமூகத்தின் தளைகளிலிருந்து மக்களை விடுவிப்பது தான் புரட்சியின் நோக்கம் என்னும் போது, ரஷ்ய புரட்சியானது, சமூக ஒடுக்கு முறைக்கும் வர்க்க சுரண்டலுக்கும் ஆளான பெண்களின் வாழ்க்கையிலும், சமூக அந்தஸ்தி லும் எவ்விதத் தாக்கங்களை ஏற்படுத்தியது, குறிப்பாகப் பெண் விடுதலைக்கான பவுதீக சூழலை ஏற்படுத்தியதா, ஆணாதிக்கமும், வர்க்க சுரண்டலும் அமைப்பு ரீதியாக நிறுவனமய மாக்கப்பட்ட சூழலை மாற்ற என்ன நடவடிக்கை கள் எடுக்கப்பட்டன என்ற சில முக்கிய கேள்வி களுக்கு விடை தேட வேண்டியிருக்கிறது. தனியுடைமை, வர்க்க சுரண்டல், பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றுக் கிடையான தொடர்பை எங்கல்ஸ் அவர்களின் ஆய்வு தெளிவாக எடுத்துரைக்கிறது. வரலாற்றில் முதல் வர்க்க முரண்பாடு, பாலினங்களுக்கிடை யான முரண்பாடு நிகழ்ந்ததுடன் ஒத்திசைந்து தோன்றியது என்கிறார் எங்கல்ஸ். இந்த மார்க் சிய கண்ணோட்டத்துடன் முதல் சோஷலிச சமூக அமைப்பில் நிகழ்ந்த மாற்றங்களைப் பார்க்க வேண்டும்.

முதலில் புரட்சிக்கான இயக்கத்தில், வெகுமக் கள் போராட்டங்களில் பெண்கள் பார்வை யாளர்களாக இருந்திருக்கவில்லை. தொழிலாளி வர்க்கப் பெண்களில் கணிசமானவர்கள் தலைமை தாங்குபவர்களாகவும், பங்கேற்பவர்களாகவும் இருந்தனர் என்பதைப் பார்க்க வேண்டும். அவர் கள் பங்கேற்பு இன்றி, புரட்சி நடந்தது என்றும், அவர்களின் கஷ்டங்கள் கண்டு மனம் இறங்கி மட்டுமே சோஷலிச சமூக அமைப்பு அவர்களுக் காக செயல்பட்டது என்றும் பார்த்துவிடக் கூடாது..

சம வாய்ப்புகளும் அவற்றுக்கான சூழல் உருவாக்கமும்:
உலகிலேயே முதன் முறையாக சட்டபூர்வமான அரசியல் ரீதியான சமத்துவம் பெண்களுக்கு சோஷலிச சமூக அமைப்பில் தான் அளிக்கப் பட்டது. 1917 துவங்கி 1927 வரை அடுக்கடுக்காக சட்டங்கள் இயற்றப் பட்டன. பெண்கள் மீதான ஒடுக்குமுறையின் அச்சாணி தனி உடைமை ஆதிக்கம் – முறிக்கப்பட்டது. சோஷலிச அரசு பொறுப்பேற்ற பின் அனைத்து குடிமக்களுக்கும் முன்னேற்றத்துக்கான சம வாய்ப்புகள் கொடுக்கப் பட்டன. சிவில் சர்வீஸ், தொழிற்சாலைகள், ராணுவம், கட்சி அமைப்பு என அனைத்திலும் பாலின பாகுபாடுகள் இன்றி வாய்ப்புக்கான கதவுகள் திறக்கப்பட்டன. ஆனாலும், தோழர் லெனினும் இதர போல்ஷ்விக் கட்சி தலைவர் களும் சிந்தித்தனர் இந்த வாய்ப்புகளைப் பெண் கள் பயன்படுத்திக் கொள்ளும் சூழல் இருக்கிறதா என்று. சமையலும், குழந்தை பராமரிப்பும், துணி துவைத்தலும் பெண்ணைக் கட்டிப் போட்டு விடும் என்ற புரிதலின் பின்னணியில் தான் மலிவு விலை சமூக உணவகம், மலிவு விலை சமூக சலவையகம், அனைத்து வேலை தலங்களிலும் சிறந்த குழந்தை காப்பகம் என்ற ஏற்பாடுகள் உருவாக்கப்பட்டன. சலிப்பூட்டும் வீட்டு வேலை களிலிருந்து விடுதலை கிடைக்காமல், பெண்கள் அரசியல் பொருளாதார சமத்துவத் தைப் பெற்று விடமுடியாது என்பதே சோஷலிச அரசின் கண்ணோட்டமாக இருந்தது. இக்கண் ணோட்டத்தின் அடிப்படையிலேயே, வீட்டு வேலைகள் தனிப்பட்ட பெண்ணின் அல்லது குடும்பத்தின் பொறுப்பு என்ற நிலையிலிருந்து மாறி சமூகமயமாகியது. குழந்தை பராமரிப்பும், அவர்களின் கல்வியும் பொது விவகாரமாக, அரசின் பொறுப்பாக மாறியது. இது மிகப்பெரிய மாற்றம். தோழர் லெனின் கீழ்க்கண்டவாறு கூறினார் பெண் முன்னேற்றத்துக்கான பல சட்டங்கள் வந்தாலும், அவள் வீட்டுக்கு அடிமை யாகவே கட்டுண்டு கிடக்கிறாள். வீட்டுப் பணி கள் அவளை நசுக்கி, நெரித்து மூச்சு திணற வைக் கின்றன. சமையலறையுடனும், குழந்தை பராமரிப் புடனும் அவள் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக் கிறாள். எவ்வித பலனும் இல்லாத, காட்டுமிராண்டித் தனமான, சலிப்பூட்டும் வேலைகளில் அவளது உழைப்பு வீணாகிறது. இதிலிருந்து விடுதலையா வதன் மூலமே பெண் உண்மையான விடுதலையை அடைய முடியும். இதற்கான முழுமுதல் போராட்டத்தை அரசு அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் பாட்டாளி வர்க்கம் செய்ய வேண்டும். தனிப் பட்ட குடும்ப உழைப்பு, பரந்து பட்ட சோஷலிச பொருளாதாரத்தின் பகுதியாக ஒட்டுமொத்த மாக மாற வேண்டும் இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குடும்ப வேலைகளில் கட்டுண்டு கிடந்து, சுய முன்னேற்றம் குறித்து சிந்திக்க வழியில்லாமல் தவித்த பெண்களின் தளைகளை தகர்க்க உதவின. தனிப்பட்ட பணிகள் சமூகமயமாக்கப்பட்டதன் மூலம், பெண்கள் கல்வி, வேலை வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன்னேற வழி கிடைத்தது. 1927லேயே உயர்கல்வியில் 1/3 பங்கு பேர் மாணவிகளாக இருந்தனர். கிராமப்புற சோவியத்துகளுக்கான தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 11 சதவீதமும், நகர சோவியத்துக்களில் 21.5 சதவீதமும் பெண் கள் என்ற நிலை ஏற்பட்டது. தொழிற்சங்க உறுப் பினர்களில் 25சதவிகிதம் பெண்கள்.

அனைத்துப் பெண்களுக்கும் வாக்குரிமை அளித்ததில் முன்னோடி:
வாக்குரிமையைப் பொறுத்த வரை, பெண் களின் வாக்குரிமைக்காக உலக அளவில் நீண்ட நெடிய இயக்கங்கள் முன்னமே நடந்து கொண் டிருந்தன. அதை முதன் முதலில் சாத்தியப்படுத் தியது ரஷ்ய புரட்சிக்குப் பின் ஏற்பட்ட சோஷலிச அரசாங்கமே. முதலாளித்துவ பெண்ணிய அமைப் புகள், சொத்துடைமை ஆண்களுக்கு வாக்குரிமை இருக்கும் போது, சொத்துடைமை பெண்களுக்கு ஏன் இருக்கக் கூடாது என்ற பிரச்சாரத்தை முன் னெடுத்தனர். பெண்கள் மத்தியில் சோஷலிச கருத்துகளை விதைப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருந்த பெண் கம்யூனிஸ்டுகள், அனைத்துப் பெண்களுக் குமான வாக்குரிமை என்பதற்கு அழுத்தம் கொடுத் தனர். அலெக்சாண்ட்ரா கொலந்தாய், கிளாரா ஜெட்கின் போன்றோர் இதில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தனர்.

1907ல் ஸ்டட்கார்ட்டில் நடந்த சோஷலிச அகிலத்தில் கிளாரா ஜெட்கின் கீழ்க்கண்டவாறு முழக்கமிட்டார்:
வாக்குரிமை என்பது முதலாளித்துவ வர்க்க பெண்களுக்குத் தடைகளை உடைக்க உதவும் என்பது உண்மையே. ஆனால் தொழிலாளி வர்க்க பெண்களைப் பொறுத்த வரை வாக்குரிமை யானது, சுரண்டல் மற்றும் வர்க்க ஒடுக்குமுறை யிலிருந்து மனித குலத்தை விடுவிப்பதற்கான போரில் ஒரு கருவியாகப் பயன்படும். பெண்களின் பிரச்னைகளுக்கு அடிப்படை தீர்வைத் தர வல்ல சோஷலிச சமூக அமைப்பை நிறுவுவதற்கு அரசி யல் அதிகாரம் தேவைப்படுகிறது. அதைக் கைப் பற்ற பாட்டாளி வர்க்கம் நடத்தும் யுத்தத்தில், ஒரு முன் தயாரிப்பாக சாதக சூழலை ஏற்படுத்த தொழிலாளி வர்க்க பெண்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி பெரும் பங்காற்ற முடியும். அனை வருக்கும் சிவில் உரிமைகளைப் பெற்றுத்தர முதலாளித்துவ வர்க்கப் பெண்கள் தம் வாக்குரிமை யைப் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இதனால், வாக்குரிமைக்காக அவர்கள் நடத்தும் இயக்கத்தைக் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. பொது எதிரியை எதிர்த்த போராட்டத்தில் தொழிலாளி வர்க்க பெண்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்ற முடியும். ஆனால் வர்க்க வேறுபாடின்றி ஆண்களை எதிர்த்து பெண்கள் நடத்தும் போராட்டத்தின் மூலம் வாக்குரிமை மற்றும் சிவில் உரிமைகளை வென்றெடுக்க முடியாது. மாறாக, சுரண்டப்படு பவர்கள் பாலின வேறுபாடு பார்க்காமல் ஒன்று படுவதும், சுரண்டும் வர்க்கத்தைப் பாலின வேறு பாடு பார்க்காமல் எதிர்த்து வர்க்கப் போரில் ஈடுபடுவதும் தான் பிரச்னைக்குத் தீர்வு காணும் வழியாகும்.

எதிர்கொண்ட சவால்கள்:
பெண்கள் வாக்குரிமைக்கான போராட்டத்தை வர்க்க பிரச்னையுடன் இணைந்த பாலின பிரச் னையாக கம்யூனிஸ்டுகள் பார்த்தனர். இதற்கு மாறுபட்ட நிலை எடுத்த முதலாளித்துவ பெண்ணிய வாதிகளை ஒரு புறமும், தொழிலாளி வர்க்கத்தில் இருந்த ஆணாதிக்கக் கண்ணோட்டத்தை மறு புறமும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 1911ல் ஜெர்மனியில் கிளாரா ஜெட்கினும், 1913ல் ரஷ் யாவில் கொலந்தாயும் நடத்திய உலக பெண்கள் தின நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றது மாற்றங்களுக்கான சூழலையும், மன நிலையையும் ஏற்படுத்தியது. தோழர் லெனின் அவர்களின் முன்முயற்சியில் 1914ல் பெண் தொழிலாளிகளுக்கான ஒரு பத்திரிகை பெண் தொழிலாளி (ரபோத்னித்சா) துவங்கப்பட்டது. போல்ஷ்விக் கட்சியின் மத்திய குழு, பெண்கள் பிரச்னைகளைப் பொது தளத்தில் விவாதிக்க என்று ஒரு தனியான குழுவை ஏற்படுத்தியது. இத்தகைய நடவடிக்கைகளைத் தொடர்ந்து, புரட்சிக்குப்பின், 1917-லேயே அனைவருக்கும் வாக்குரிமை என்பது சட்டபூர்வமாகியது. ஆஸ்தி ரேலியாவில் பெண்களுக்கு வாக்குரிமை 1902ல் கொடுக்கப்பட்டாலும், அது அனைவருக்குமான வாக்குரிமை அல்ல. அந்நாட்டின் பூர்வகுடி ஆண் களுக்கும் பெண்களுக்கும் வாக்குரிமை 1962ல் தான் கிடைத்தது. எனவே, சோஷலிச அரசு தான், அனைத்துப் பெண்களுக்குமான வாக்குரிமையை முதலில் கொண்டு வந்தது என்று அழுத்தமாகக் கூற முடியும்.

சிரமங்களைக் கடந்தே சிகரங்களை நோக்கி:
ஆனால் இவை எதுவும் சுலபமாக நடந்து விட வில்லை. பழைய ஆணாதிக்க கலாச்சாரத்தின் இழுவையும், நில உடைமை சித்தாந்தக் கூறு களும், பிற்போக்கு சமூக உறவுகளின் தாக்கமும் முற்போக்கு அம்சங்களைத் தடுத்தன. குழந்தை களைக் காப்பகத்தில் விடுவதற்குத் தயக்கம் இருந்தது. அரசாங்கத்தால் இதையெல்லாம் செய்து விட முடியுமா என்ற அவநம்பிக்கை நிலவியது. இவற்றை எதிர்த்த பிரச்சாரத்தையும் கட்சி செய்ய வேண்டியிருந்தது. குறிப்பாக மத்திய ஆசிய பகுதியில் இருந்த குடியரசுகளில் பெண் சமத்துவ அம்சங்களை நடைமுறையாக்குவது பெரும் சவாலாக இருந்தது. அரசியலுக்குப் பெண் களைக் கூடுதலாகக் கொண்டு வருவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பதை உணர்ந்த தோழர் லெனின் மிகச் சரியாக சொன்னார் எவ்வளவு முன்னேறிய நாடுகளானாலும், பழைய முதலாளித்துவ சமூக அமைப்பில், பெண்கள் முக்கியத்துவமற்ற பங்குபாத்திரத்தையே அரசியலில் வகிக்க முடிந்தது. அரசியல் பங்கேற்பை ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைக்குமாறு செய்ய வேண்டி யது நமது கடமை. அரசியலில் பெண் தொழிலா ளிகளின் பங்கேற்பு அவசியம். கட்சி உறுப்பினர் கள் மட்டுமல்ல, கட்சிக்கு வெளியில் இருக்கும் பெண்களுக்கும், மிகக் குறைவான அரசியல் உணர்வு பெற்றவர்களுக்கும் கூட அரசியல் பங்கேற்பு சாத்தியமாக வேண்டும். லட்சோப லட்சம் பெண்கள் அரசியலில் பங்கேற்கும் போது தான், சோஷலிச அரசு துவங்கியிருக்கும் பணிகளை நிறைவேற்ற முடியும்.

மேலும் கம்யூனிஸ்ட் கட்சி விரும்பிய விஷயங் களை செய்யும் அளவுக்கு தேசத்தின் நிதி நிலைமை இல்லை. புரட்சிக்குப் பின் உடனடியாக ஏகாதி பத்திய நாடுகளின் ராணுவ தலையீடுகள், உள் நாட்டு போர் போன்றவற்றை இளம் சோவியத் அரசு சந்திக்க வேண்டியிருந்தது. ஏற்கனவே நசிந்து கிடந்த பொருளாதாரத்தை இது மேலும் மோசமாக்கியது. 1920களின் பிற்பகுதியில் முன் னேற்ற நடவடிக்கைகள் வேகம் பிடித்தன. பிறகு ஹிட்லரின் பாசிச படையெடுப்பை சந்திக்க வேண்டியிருந்தது. இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் மீண்டும் சீர்குலைந்தது. இத்தகைய பெரும் சிரமங்களுக்கு இடையே தான், சோவியத் ஒன்றியத்தில் பெண்கள் பெரும் முன்னேற்றம் அடைந்தனர்.

மாறிய காட்சிகள்:
1924ல் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு தீர்மானம், தொழிற்சாலைகளில் பெண்களின் உழைப்பு படையைப் பாதுகாப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது, முதலாளித்துவ சமூக அமைப்பிலிருந்து சொத்தாகப் பெற்ற பெண்ணடி மைத்தன பிற்போக்கு அம்சங்களுடன் போரிட வேண்டும் என்று அறைகூவி அழைத்தது. ஆலை களில் எப்போதும் துடைப்பத்துடன் காட்சி யளித்த பெண்கள் மெல்ல மெல்ல நம்பிக்கை அடைந்து, பயிற்சி பெற்று இயந்திரங்களை செயல்படுத்தும் தொழிலாளியாக, மேலாளரா கப் பரிணமித்தனர். பெண் மேலாளரை முதலில் கேலியாகப் பார்த்த ஆண் தொழிலாளிகள் பின்னர் பெண்களின் திறமைகளை மதிக்க ஆரம்பித்தனர் என பெண் தொழிலாளர்களின் பத்திரிகையான ரபோத்னித்சா செய்தி வெளி யிட்டது. சோவியத் ஒன்றியத்தில் மிக அதிகமான விற்பனையாகும் பத்திரிகையாக அது செயல் பட்டது.
ஜார் மன்னனின் ஆட்சியில் வேலைக்குப் போகும் ரஷ்ய பெண்களில் 55சதவிகிதத்தினர் நகர்ப்புற கிராமப்புற வீட்டுப் பணியாளர்களா கவும், 25சதம் விவசாய வேலை பார்ப்பவர்களா கவும், 13 சதம் தொழிற்சாலைகளில் பணிபுரி பவர்களாகவும், 4சதம் கல்வி, சுகாதாரம் சார்ந்த பணிகளில் ஈடுபடுபவர்களாகவும் இருந்தனர். ஏராளமான பெண்கள் – சுமார் 5 லட்சம் பேர் – பாலியல் வணிகத்தில் ஈடுபடுபட வேண்டிய நிலையில் வாழ்ந்தனர். இவற்றில் மிகப்பெரும் மாற்றம் ஏற்பட்டது. 1913ல் மருத்துவர்களில் 10 சதவிகிதம் மட்டுமே பெண்கள் என்ற நிலை மாறி, 1950களில் 50-70 சதவிகிதம்பேர் பெண்கள் என்ற நிலைக்கு உயர்ந்தனர். 1960களில் பொறியாளர் களில் 41 சதவிகிதம் பேர் பெண்கள். வழக்கறி ஞரில் மூன்றில் ஒருபங்கு பெண்கள். 1969 புள்ளி விவரப் படி, அமெரிக்காவில் மொத்த பொறி யாளர்களே 870000 பேர், அதில் 1 சதம் தான் பெண்கள். ஆனால் சோவியத் ஒன்றியத்தில் பெண் பொறியாளர்கள் மட்டும் 775000 பேர். 1959ல் வாகன ஓட்டுநர்களில் 57 சதவிகிதம் பெண்கள். கிரேன் ஆபரேட்டர்களில் பெண்கள் 1926ல் 1 சசதவிகிதம் மட்டுமே, ஆனால் 1959ல் 32 அதாவது 557400 பேர். இது 411 மடங்கு உயர்வு. குமாஸ்தா பணிகளில் 78 சதம், துறைகளின் தலைமை பொறுப்புகளில் 39சதவிகிதம் பெண் கள். 1968ல் முனைவர்களில் 31 சதவிகிதம் பெண் கள். பெரும் மருத்துவமனைகளின் தலைவர் களாகப் பெண்கள் பொறுப்பு வகித்தனர். 20000 டன் கப்பலை இயக்கும் கேப்டனாக ஒரு பெண் செயல்பட்டார். 100க்கும் மேற்பட்ட விண்வெளி கண்காணிப்பு நிலையங்களுக்குப் பொறுப்பாக, புகழ் பெற்ற மாஸ்கோ சிம்பனி இசைக்குழுவின் நடத்துநராக, உலகிலேயே மிகப்பெரிய மருத்துவ கல்வி அமைப்பின் தலைவராக பெண் சிறப்பாக செயல்பட்டதெல்லாம் சாதாரணமான விஷயமா? முதல் பெண் வெளிநாட்டு தூதுவர், முதல் பெண் விண்வெளி வீரர் என்று பலப்பல சாதனைகள். இந்த முன்னேற்றங்களும், தனிப்பட்ட பெண் களின் சாதனைகளும் ரபோத்னித்சாவில் இடம் பெற்றன. இது ஆணுக்கான வேலை, இது பெண்ணுக் கான வேலை என்று பிரிக்கப்படவில்லை. பாலின வேறுபாடு இன்றி, தகுதியின் அடிப்படையில் வேலைகளுக்கான வாய்ப்பு கிடைத்தது, அதைப் பயன்படுத்தும் சமூக, பண்பாட்டு சூழலும் உரு வாக்கப்பட்டது. திருமணமும் வேலை வாய்ப்பும் எதிரும் புதிருமான முரணாக இல்லை.

பெண்களின் முன்னேற்றத்துக்கான சிறப்பு ஏற்பாடுகள்:
ஆணும் பெண்ணும் சமம் என்கிற பேரில், பெண்ணுக்கான சில சிறப்பு ஏற்பாடுகள் நிரா கரிக்கப்படும் நிலை வந்து விடக் கூடாது என்ப தையும் சோஷலிச அரசு கணக்கில் எடுத்தது. சமத்துவத்தை இயந்திரகதியாக அணுகிவிடக் கூடாது. புரட்சிக்குப் பின் அமைந்த சோஷலிச அரசில், சமூக சேவைகளுக்கான கமிசாராக (அமைச்சர்) அலெக்சாண்ட்ரா கொலந்தாய் நிய மிக்கப்பட்டார். 1917 டிசம்பரில் தாய் சேய் நலத்துக்கான தனி முன்முயற்சி எடுக்கப்பட்டு பிரசவ கால விடுப்பு, கர்ப்ப காலத்தில் வேலை தலத்தில் கடின வேலை கொடுக்காமை போன்ற நடவடிக்கைகள், சட்ட அடிப்படையில் நிலை நிறுத்தப் பட்டன. பாலூட்டும் தாய்மார்களுக்கு, ஒவ்வொரு 3 மணி நேரத்துக்கு ஒரு முறை 30 நிமிடங்கள், பாலூட்டுவதற்கு அளிக்கப்பட்டது. குடியிருப்பு, வேலை தலத்திலிருந்து தள்ளி இருந் தால், இந்த நேரம் அதிகமாகக் கொடுக்கப் பட்டது. ஒரு வருடம் வரை, குழந்தை பிறந்த பிறகு வேலை பாதுகாத்து வைக்கப்பட்டது.

1918 துவக்கத்திலேயே திருமணத்திலும், குடும் பத்திலும் அன்பு, பரஸ்பர மரியாதையுடன் பாலின சமத்துவத்தை அங்கீகரிக்கும் கோட்பாடு சட்ட ரீதியாக்கப்பட்டது. திருமணமும், குடும்பமும் இரு பாலாரும் விரும்பி ஏற்கும் ஏற்பாடாக முன்னிறுத்தப் பட்டது. பின்னர் குழந்தை பாது காவலில் பெண்ணுக்கு சம உரிமை கிடைத்தது. இதுவெல்லாம் உலகில் எந்த நாட்டுப் பெண் களும் அது வரை அனுபவித்திராத உரிமைகள்.

சொத்துரிமையில், வாரிசுரிமையில் சம பங்கு உறுதி செய்யப்பட்டது. விவாகரத்து மற்றும் கருக்கலைப்புக்கான சட்டங்கள் உருவாக்கப் பட்டன. தன்பாலின சேர்க்கை மீதான தடை விலக்கப்பட்டது. 1922ல் விபச்சாரத்துக்குக் குற்ற விலக்கு கிடைத்தது. அதே சமயம், விபச்சாரத்துக்கு எதிரான பிரச்சாரம் பெண்கள் கமிட்டிகளால் மேற்கொள்ளப்பட்டது. பெற்றோரிடையே மண முறிவு ஏற்பட்டால், குழந்தைகளுக்கான நிதி ஆதாரம் அரசால் உறுதி செய்யப்பட்டது. குழந்தைகளுடன் பிரியும் பெண்களுக்கு நீதி மன்றங்கள் தாராளமான ஜீவனாம்ச தீர்ப்புகளை வழங்கின. திருமண உறவுக்கு அப்பாற்பட்டு பிறக் கும் குழந்தைகளுக்கும் சம உரிமைகள் வழங்கப் பட்டன. வேலை தலத்தில் சம வேலைக்கு சம ஊதியம் சட்டமாகியது. 55 வயதிலேயே முழு ஓய்வூதியத்துடன் பெண் ஓய்வு பெறலாம், ஆண் களுக்கு அது 60 வயது. ஆண் தொழிலாளிகளை விட கூடுதல் நாட்கள் ஓய்வுக்கான விடுப்பு பெண் களுக்குக் கொடுக்கப்பட்டது. நடன கலைஞர் களாக இருந்த பெண்களுக்கு 35 வயதிலேயே முழு ஓய்வூதியத்துக்கான உரிமை வழங்கப் பட்டது.

கிராமப்புறங்களில்:
வானம் வரை நீ செல்லலாம், ஆனால் உன் சிறகுகள் வெட்டப்பட்டவையாகவே இருக்கும் என்ற ரீதியில், வாய்ப்புகளை முன்வைத்து விட்டு, பெண்கள் சவாலான வேலைகளில் ஈடுபடுவதற்கு உகந்த சூழலை உருவாக்காமல் சோவியத் அரசாங் கம் இல்லை என்பது மிக முக்கியமானது. உதாரண மாக, கிராமப்புறங்களில் விவசாய இயந்திரங் களை செயல்படுத்த ஆரம்பித்த பெண்கள், ஒரு கட்டத்தில் மாநாடு நடத்தி, இயந்திரங்களில் அவர்களுக்கு வசதியாக சில மாற்றங்கள் வேண்டு மென கோரிக்கை விடுத்தனர். 1970ல் அரசாங்க உத்தரவு ஒன்று, அம்மாற்றங்களுடன் இயந்திரங் கள், தளவாடங்கள் உற்பத்தி செய்யப்பட ஏற்பாடு செய்தது. மாற்றங்களுடன் வந்த இயந்திரங்களை, பெண்கள் மேலும் திறம்பட இயக்க முடிந்தது. பல சவாலான பணிகளைப் பெண்கள் செய்தனர். அவர்களின் திறமைகள் அங்கீகரிக்கப்பட்டன.

விவாதங்களும், முன்னேற்றங்களும் இணைந்து நடந்தன. உஸ்பெகிஸ்தானில், ஒரு கூட்டுப் பண் ணையின் தலைவர் உட்பட அனைத்து முக்கிய பணிகளிலும் பெரும்பான்மை பெண்களாக இருந்தனர். கட்சி கமிட்டியிலும் பெண்கள் கூடு தலாக இருந்தனர். பெண் ஆதிக்கம் என்று சிலர் கேலி பேசிய போது, பெண்கள் பதிலடி கொடுத் தனர். இது சோவியத் அதிகாரத்தின் மிகப்பெரும் சாதனை, இத்தகைய சூழல் ஏற்படத்தானே நமது பெற்றோர்கள் போராடினர் என்று வாதிட்டு மடக்கினர்.

அமெரிக்கா போன்ற முன்னேறிய முதலாளித் துவ நாடுகளிலேயே, பெண்கள் இயக்கங்கள் முன்வைத்த கோரிக்கைகள், சோவியத் பெண்கள் அடைந்த முன்னேற்றத்தை ஒட்டியவையாகவும், அவற்றை இலக்காக வைத்தும் அமைந்தன.

சோவியத் ஒன்றியம் சிதறுண்ட போது ரஷ்ய புரட்சியின் பலனாக, பெண்கள் தலை நிமிர்ந்தனர். சலிப்பூட்டும் வீட்டு வேலைகளிலிருந்து விடு தலை பெற்றனர். கல்வி, வேலை வாய்ப்புகள் மூலம் பொருளாதார சுதந்திரம் பெற்றனர். பண்பாட்டு ரீதியாகவும் மாற்றங்கள் நிகழ்ந்தன. சமூகத்தின் பார்வையிலும் இது மாற்றத்தை ஏற்படுத்தியது. பெண் சமத்துவத்துக்கான பவுதீக சூழலை சோஷலிச சமூக அமைப்பு ஏற்படுத்தியது. அதாவது, பெண் முன்னேற்றம் சமூக அமைப்பு முறையுடனும், அரசியல் கொள்கையுடனும் தொடர்புடையது. சோஷலிச அமைப்பு வலுப் பெற்றால், முன்னேற்றமும் வலுப்பெறும். சீர் குலைந்தால், இத்தகைய பவுதீக சூழலிலும் எதிர் மறை விளைவுகள் உருவாகும்.
1990களில் சோஷலிசம் பின்னடைவை சந்தித்து, சோவியத் ஒன்றியம் சிதறுண்ட சூழலில், முதல் தாக்குதல் பெண்கள் மீது தான் என்பதை அனுப வத்தின் வாயிலாகவே அவர்கள் உணர்ந்துள்ள னர். வேலையின்மை காரணமாக, மீண்டும் விபச்சாரம் தலை தூக்கியது. வேலை வாய்ப்புகள் குறைவாக உள்ளதால், பெண்கள் வீடு என்கிற தளத்துக்கே திரும்பிப் போக வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. சமூக நலத் திட்டங்கள் வெட்டப்பட்டன. வேலைக்கு இளம் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பதும், பாலியல் சேவை செய்ய வேண்டும் என்பதும் வெளிப்படை விளம்பரமாக வரத் துவங்கியது. பெண்கள் மீதான வன்முறை ஆரம்பித்தது. அரசியலில் பொறுப்புகளுக்குப் பெண்கள் வருவது குறைந்தது. ஆர்மீனியாவில் ஆண்கள் வேலை தேடி ரஷ்யா போன்ற நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வர வேண்டிய நிலையில், அங்குள்ள பெண்கள் மீதியுள்ள குடும்ப உறுப்பினர்களைப் பாதுகாக்கும் மொத்த சுமையும் சுமக்க வேண்டி யிருந்தது. குடும்பத்துக்குள்ளேயே பாலியல் வன் முறையை சந்திக்க நேர்ந்தது. பெருமளவில் குறைக்கப்பட்டிருந்த குடிப்பழக்கம் ஆண்கள் மத்தியில் வெகுவாக அதிகரித்தது. அதன் பாதக மான விளைவுகள் தொடர்ந்தன. சோவியத் சமூக அமைப்பில் ஏற்பட்ட சிதைவு, சோஷலிச தத்து வத்தினாலோ கோட்பாடுகளாலோ இல்லை, இது வரை யாரும் கடந்து சென்றிராத பாதை அது. முதல் முயற்சி என்ற ரீதியில், சோஷலிச நிர்மாணத்தில் சில தவறுகளும், பலவீனங்களும் ஏற்பட்டன, குறிப்பாக சோஷலிச ஜனநாயகத்தை நிறுவுதல், சோஷலிச பொருளாதாரத்தைக் கட்டுதல், தத்துவார்த்த உணர்வுகளை பலப்படுத்து தல் போன்ற பகுதிகளில் குறைபாடுகள் ஏற்பட்டன என்று 1992ல் சென்னையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 14வது கட்சி காங்கிரசில் நிறைவேற்றப் பட்ட, தத்துவார்த்த பிரச்னைகள் குறித்த தீர்மானம் கூறுகிறது. மேலும் சோவியத் ஒன்றியத்தில் கார்பசேவ் தலைமையிலான ஆட்சி யில் கிளாஸ்நாஸ்ட், பெரஸ்த்ரோய்கா போன்ற கருத்தாக்கங்கள் மூலம் சோஷலிசத்துக்கு எதிரான போக்குகள் உருவானது குறித்து அத்தீர்மானம் கவலை தெரிவித்தது. சோஷலிசம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு முதலாளித்துவ மருந்துகள் அளிக்கப்படுவது தவறு என சுட்டிக்காட்டியது. சோஷலிச எதிர்ப்பு சக்திகளின் தாக்குதலை சந்திக்க முடியாமல் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி யின் அணிகளும், மக்களும் நிராயுதபாணியாக் கப்பட்டார்கள் என்றும் தீர்மானம் விளக்கியது. 1980களின் பிற்பகுதியிலிருந்தே இவ்விதத் திரிபு கள் முன்னுக்கு வந்தன. கார்பசேவ் முன்வைத்த கிளாஸ்நாஸ்ட் கருத்தாக்கம், பெண்கள், அவர் களது வேலைக்குத் திரும்பிப் போக வேண்டும், குடும்பத்தைப் பாதுகாப்பதே அவர்களது மைய பணி என்பதில் அழுத்தம் கொடுத்தது. அழகிப் போட்டிகள் பிரபலம் அடைந்தன. 1989 தேர் தலில், குறிப்பிட்ட மட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்புகளில் பெண்களின் பங்கு 15 சதவிகி தமா குறைந்தது. வேலையை விட்டு விட்டால் குடும்பத்தை, குழந்தைகளை நன்றாகப் பார்த்துக் கொள்ள முடியும், ஓய்வெடுக்க முடியும், அது தான் சுதந்திரம் என்ற பிரச்சாரம் செய்யப் பட்டது. சோஷலிசத்தை சீர்குலைக்க தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருந்த ஏகாதிபத்திய சக்தி களுக்கு, இத்தகைய சூழல் பயன்பட்டது.

ஏகாதிபத்தியம் விரித்த வலையில் விழுந்தவர் கள், காலப்போக்கில் அதன் வெளிச்சம் மங்கிய பிறகு, பாதிப்புகளைப் புரிந்து கொள்ள துவங்கி யுள்ளனர். பல்வேறு பெண்கள் அமைப்புகள் உருவாகியுள்ளன. ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் பங்களிப்பை செய்து வருகிறது. இழந்த உரிமைகளையும், சமத்துவத்தையும் பெண்கள் மீண்டும் பெற, 20ம் நூற்றாண்டு சோஷலிசம் தன் பலவீனங்களிலிருந்து கற்றுக் கொண்டு, 21ம் நூற்றாண்டில் மாற்றம் காண முன்னைக் காட்டி லும் வீரியத்துடன் புறப்பட வேண்டியிருக்கிறது. இந்தியாவிலும், இந்த அனுபவங்களிலிருந்து படிப்பினைகளைப் பெற்றுக் கொண்டு, பெரு மளவு பெண்களை இடதுசாரி அரசியலின் பங்கேற் பாளர்களாக மாற்றி, புரட்சிகரப் பாதையில் முன்செல்ல வேண்டும்.

அக்டோபர் புரட்சியின் முக்கியத்துவம் … – ஹர்கிசன் சிங் சுர்ஜித்

தமிழில்: ஆர்.சந்திரா

ஆங்கிலத்தில் வாசிக்க

1917ல் நடைபெற்ற மாபெரும் அக்டோபர் புரட்சியின் வெற்றியை மார்க்சிய-லெனினிய கோட்பாடு எந்த அளவுக்கு சரியானது என்பதை நிரூபித்த முதல் அறிவியல் பூர்வமான அத்தாட்சி எனலாம். அதுவரையிலும் அது ஒரு கோட்பாடகவே இருந்தது. போல்ஷ்விக் கட்சி யின் தலைமையில் நடைபெற்ற புரட்சியின் வலிமை அதற்கு தேவைப்பட்டது. அதன் மூலம் விஞ்ஞான சோசலிசம் என்ற கோட்பாட்டின் சரியான நிலைப்பாட்டை உலகின் முன்வைத்து அதை விமர்சித்தவர்களின் தவறை சுட்டிக் காட்டியது. விஞ்ஞான சோசலிசத்தை உருவாக்கி, சிறப்பாக வளர்த்த கார்ல் மார்க்சும், பிரெடெரிக் எங்கெல்சும், மனிதகுல வளர்ச்சியின் வரலாறு முதலாளித்துவத்திலிருந்து சோசலிசம், அதன் பின்னர் கம்யுனிசம் என்ற பாதையில் செல்லும் என்பதை வகுத்து கொடுத்திருந்தனர். இத்தகைய மாற்றத்தை கொண்டு வரும் சக்திகள் மற்றும் அதன் பொதுவான வழி தெரிந்திருந்த போதிலும், அதை அடைவதற்கான திட்டவட்டமான வழி முறைகள் என்பவை, சர்வதேச நிலைமை மற்றும் அந்த குறிப்பிட்ட நாட்டின் புறச்சூழலை பொறுத்தே அமையும் என்பதால் அது நாட்டிற்கு, நாடு வேறுபாடும் தன்மை கொண்டதாகும்.

ஒரு புதிய பாதை துவங்கியது:

1917ல் லெனின் கீழ்கண்டவாறு கூறினார்:
“சோசலிச பாதையின் கடைசி விவரம் வரை மார்க்சுக்கு அல்லது மார்க்சிஸ்டுகளுக்கு தெரி யும் என நாங்கள் சொல்லவில்லை. அப்படி உரிமை கோருவதும் பொருளற்றதாகும். ஆனால், அந்த பாதை வழி எது, அதில் பின் தொடர வேண்டிய சக்திகள் எவை என்பது பற்றி எங்க ளுக்கு தெரியும். லட்சக்கணக்கான மக்கள் அதை தங்கள் கையிலெடுத்து, அவர்களின் அனுபவங் கள் மூலமாக தான் குறிப்பான, யதார்த்தமான விவரங்கள் வெளிச்சத்திற்கு வரும். “.

லெனின் மேலும் சுட்டிகாட்டுவது:
” மார்க்சிய கோட்பாடு உலக நாகரீக வளர்ச் சிப் பாதையிலிருந்து விலகி தோன்றியது மாறாக மார்க்சின் பேரறிவால், , மனிதகுலத்தின் மிக சிறந்த அறிஞர்கள் முன்பே எழுப்பிய வினாக் களுக்கு பதில் அளிக்க முடிந்தது . தத்துவம், அரசி யல் பொருளாதாரம், சோசலிச ஆகிய கோட் பாடுகளை விளக்கிய மிகச் சிறந்த தலைவர்கள் நேரடியாகவும், தொடர்ந்தும் எடுத்துரைக்கும் பாடங்களில் இருந்து அவரது கோட்பாடு தோன்றியது..”

முதலாளித்துவத்தின் உச்ச கட்டம் ஏகாதிபத்தியம் என விளக்கிய லெனின் மார்க்சிய கோட்பாட்டை செழுமைபடுத்தும் அரிய பங்களிப்பை செய்தார். ஏகாதிபத்திய கட்டத்தில் புரட்சி பற்றி மதிப்பீடு செய்த லெனின், சோசலிச புரட்சி முதலாளித்துவ நாடுகளில் மட்டுமின்றி , ஓரளவு பின் தங்கிய, ஏகாதிபத்திய சங்கிலியின் பலஹீன மான கண்ணி உள்ள நாடுகளிலும் வெற்றி பெரும் என்ற முடிவுக்கு வந்தார்.புதிய காலம் மற்றும் ரஷியாவில் அன்று நிலவிய திட்டவட்டமான நிலைக்கு ஏற்ப, அந்த கோட்பாட்டை திட்ட வட்டமாக பின்பற்றியதால் லெனினின் கீழ் செயல்பட்ட போல்ஷெவிக் கட்சி வெற்றிகரமாக புரட்சியை நடத்த முடிந்தது. ரஷியாவின் பழைய காலண்டர் படி புரட்சி அக்டோபர் 25,1917அன்று வெற்றி அடைந்தது. எனவே அது பிரபலமாக அக்டோபர் புரட்சி என அழைக்கப்பட்டது

புரட்சியின் பங்களிப்புகள்:
சோசலிச அரசு அமைந்தவுடன் பிறப்பிக்கப்பட்ட முதல் பிரகடனம் அமைதி மற்றும் நிலம் பற்றியதாகும். அதன் மூலம், லெனினின் தலைமை யிலான் கட்சி புரட்சியைக் காப்பதற்கு உழைக்கும் வர்க்கத்தின் பின்னால் விவசாயிகளைத் திரட்டும் பணியைச் செய்ய முடிந்தது. இவ்வாறு பெறப் பட்ட வலிமையின் மூலம் குழந்தைப் பருவத்தி லிருந்த சோசலிச அரசு ஏகாதிபத்திய தலை யீட்டை முறியடிக்கவும், உள்நாட்டு கலகத்தை ஒடுக்கவும் முடிந்தது. சுரண்டலின் பல வடிவங் களைக் கொண்ட வர்க்க ஆட்சிக்கு முடிவு கட்ட முடியும் என்பதை புரட்சியின் வெற்றி உணர்த் தியது. அத்துடன், உற்பத்திக்கு அனைவரும் தமது பங் கை செலுத்துவது, அவரவர் திறமைக்கேற்ப உழைப்பது, உழைப்புக்கு ஏற்ற கூலியை பெறுவது என்கிற சமுதாயத்தை உருவாக்க முடியும் என்ப தையும் உணர்த்தியது. இது, ஒவ்வொருவரும் உற்பத்திக்கு தன பங்களிப்பை தன திறமைக்கேற்ப செலுத்தி, தனது தேவைக்கேற்ப ஊதியம் பெறலாம் என்கின்ற சமுதாயத்தை நோக்கி ஒரு அடி முன் வைப்பதாகும்.

இந்த கோட்பாடு, இன்று வர்க்க சமுதாயத் திலும் கூட பல அமைப்புகள், அதிலும் குறிப் பாக, சேமநல அரசு என்ற கருத்து வருவதற்கு ஏதுவாக இருந்துள்ளது. இன்று நமது காலத்தில் க, ல்லாமையை ஒழிக்க,இலவச கட்டாய கல்வி அளிக்கத் தேவையான இலவச பள்ளிகள், கல்லூரி கள், பல்கலை கழகங்கள் தோற்றுவித்தல் என்பது சோவியத் ரஷ்யாவிடமிருந்து நாம் கற்றுக் கொண்ட பாடங்கள் ஆகும்.
எழுபது ஆண்டுகளுக்கும் மேலான ஆட்சியில், சோவியத் யூனியன் இது வரை கேள்விபடாத உரிமைகளையும், உத்தரவாதங்களையும் தனது மக்களுக்கு வழங்கியது. முதல் சோசலிச அரசில் மக்கள் அனுபவித்த வேலைக்கான உரிமை, கல்வி, ஆரோக்கியம், இருப்பிடம் ஆகியவற்றிற்கான உரிமைகள் மற்றும் கணக்கிலடங்காஉரிமைகளும் சலுகைகளும் மற்ற நாடுகளில் வசித்த மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதில் சந்தேகம் இல்லை. இது மற்ற நாடுகளில் வாழ்க்கை நிலை முன்னேறுவதற்காக நடத்திய போராட்டங் களுக்கு உந்து சக்தியாக விளங்கியது. அத்துடன், அந்நாடுகளில் உள்ள முதலாளிகள் அங்கிருந்த வசதியற்றவர்களுக்கு, சில சலுகைகளை வழங்க வேண்டி வந்தது. இதன் மூலம், ” சேம நல அரசு” என்பது உருவாகியது.
தாறுமாறாக செயல்படும் சந்தை மற்றும் நுகர்வோருக்கு எந்த மாற்றும் இல்லாத வண்ணம் கொள்ளை லாபம் ஈட்டும் நோக்கத்துடன் சந்தையை கைப்பற்றும் ஏகபோக வணிகர்களுக்கு பதிலடியாக பொருளாதார திட்டம் என்பது உருவாக்கப்பட்டது. இதுவும் புரட்சியின் மூலம் நமக்கு கிடைத்தது தான். அதே போன்று, சோஷ லிச பொருளாதார திட்டம் மூலமாக, வேலை யின்மையை ஒழிப்பது, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது, அவர்களிடமிருந்து அதிகபட்ச லாபத்தை ஈட்டுவதை தவிர்ப்பது போன்றவை ரஷிய புரட்சியின் மூலம் கிட்டியவை ஆகும். உலகின் அனைத்து உழைக்கும் மக்களையும் விவசாயிகளையும் இணைக்கும் அமைப்புகளான இலவச பொது மருத்துவ வசதி, அரசுடமையாக் கப்பட்ட தொழில்கள், கூட்டுறவு அமைப்புகள், முதியோர் பென்ஷன் முதியோர் இல்லங்கள் பஞ்சாயத்து ராஜ் போன்ற உள்ளாட்சி அரசு அமைப்புகள் ஆகிய அனைத்தும் ரஷிய புரட்சி யின் வெற்றியில் பிறந்தவை ஆகும். இந்த வெற்றி யின் காரணமாக, பல நாடுகளில் இவை பெரிய அளவில் அமுல்படுத்தப்பட்டன. இல்லையெனில், சிறிய குழுக்கள் நடத்திய பரிசோதனைகள் போல் அவை இருந்திருக்கும்.

நம்மை பொறுத்தவரை, இந்த புரட்சி உலக அளவில் ஏகபோகங்களுக்கு இடையேயும், சாம்ராஜ்யங்களுக்கு இடையேயுமான போட்டிக்கு மாறாக, உலக அளவில் பரஸ்பர ஒத்துழைப் பிற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கி தந்தது. காலனிகள் இல்லாத, போர்கள் இல்லாத ஒரு உலகிற்கான கதவுகளை இது திறந்து விட்டது. ரஷிய புரட்சிக்குப் பின்னர் ஏற்பட்ட ப்ரெஸ்ட் லிடோவ்ச்க் ஒப்பந்தம் முதல் உலகப் போரை முடிவுக்கு கொண்டு வர உதவியது. சோவியத் யூனியனின் முனைப்பான தலையீடு இல்லாமல், ஹிட்லரின் 75 துருப்புக்களை அவனது மண் ணிலேயே தோற்கடித்து, இரண்டாம் உலகப் போரை வென்றிருக்க முடியாது பாசிசத்தையும் தோறகடித்திருக்க முடியாது. அந்தப் போரின் பிந்தைய காலங்களில் சோவியத்யூனியன் இருந்த ததால் தான் மூன்றாவது உலகப் போர் வெடிக் காமல் இருந்ததுடன் சால்ட் (கேந்திர ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம்) மற்றும் சால்ட் ஒப்பந் தங்கள்கை யெழுத்தாகி, அணுஆயுத தீமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிந்தது.

விடுதலை அடைவதற்கு ஊக்குவிப்பு:
தேசீய விடுதலை இயக்கங்களுக்கு சோவியத் யூனியன் அளித்த ஊக்குவிப்பு இந்தியாவில் நம் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.சோவியத் யூனியன் ஒரு புறக்கணிக்க முடியாத சக்தியாக உருவெடுப்பதற்கு முன்னர், காலணிகள் ஒரு ஆதிக்க சக்தியை தூக்கி எறிந்தால் கூட வேறொரு காலனிஆதிக்க சக்திகளிடம் சென்றன. முதல் உலகப் போரின் போது ஓட்டோ மான் பேரரசை எதிர்த்து வெற்றிகரமாக போரிட்ட அரபுகள் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு பிடிக்குள் வந்து , மீண்டும் தங்கள் விடுதலைக்காக போரிட்டனர். தற்போது நடைபெற்று வரும் சுதந்திரமான பாலஸ்தீனத்திற்கான போராட்டம் என்பது அத்தகைய முடிவுக்கு வராத ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதன் ஒரு அங்கமே ஆகும். அமெரிக்கா இராக்கை ஆக்கிரமிப்பு செய்ததும் யூத மத வெறி அரசான இஸ்ரேலுக்கு ஆதரவு அளிப்பதும் மேலும் சிக்கலாக்கியுள்ளளது. இரண்டாம் உலகப் போருக் குப் பின்னர் 60 நாடுகள் காலனியாதிக்கத்தி லிருந்து விடுதலை பெற்றதும் மேலும் பல தேசீய விடு தலை இயக்கங்களுக்கு தூண்டுகோலாக அமைந்த தும் ரஷிய புரட்சியின் வெற்றியின் மிகவும் முக் கியமான அம்சம் ஆகும். சிறிய நாடுகளான, வியத் னாம், கம்போடியா, லாவோஸ், கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு மற்றும் கியூபா ஆகியவை ஜெர்மனி, இத்தாலி,மற்றும் ஜப்பான் ஆகிய தோல்வியடைந்த அச்சு சக்திகளின் பிடி மானத்தை எதிர்த்ததுடன், வெற்றிபெற்ற நேச சக்திகளான பிரிட்டன் அமெரிக்க, பிரான்ஸ் ஆகிய நாடுகளையும் எதிர்கொள்ள முடிந்தது. முக்கியத்து வம் வாய்ந்த இந்த புரட்சி, உலக அளவில் உழைக் கும் வர்க்க இயக்கங்களுக்கும் காலனி எதிர்ப்பு போராட்டங்களுக்கும் பெரும் உந்துசக்தியாக அமைந்தது. சோசலிச அரசின் தோற்றமும் சோவியத் ஒன்றியம் அமைக்கப்பட்டதும் ஜார் மன்னனின் சிறையில் அடைக்கப்பட்டு, ஒடுக்கப் பட்ட ,பல தேசிய இன மக்களுக்கு விடுதலை அளித்தது. தற்கால வரலாற்றை உருவகப்படுத் தியதில் சோவியத் யூனியனின் பங்களிப்பை உலகம் முழுவதும் அங்கீகரிக்க வேண்டி வந்தது.

கோட்பாட்டின் முக்கிய அம்சங்கள்:
ஒரு அரசின் ஸ்தூலமான நிலைக்கேற்ப மார்க்ஸ்- எங்கெல்ஸ் கோட்பாட்டை முதல் முறையாக, வெற்றிகரமாக ரஷிய புரட்சி அமுல் படுத்தியது. புரட்சியின் வெற்றியானது, உலகெங் கிலும் உள்ள புரட்சிகர இயக்கங்களின் மனசாட் சியை குறிப்பாக சீனா, வியதனாம், கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு மற்றும் கியூபா ஆகிய நாடுகளில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், போலாந்து, கிழக்கு ஜெர்மனி, யுகொஸ்லாவியா ஹங்கேரி,செக்கொஸ்லாவியா, ரொமேனியா, பல்கேரியா, போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஒனறு சேர்ந்து சோசலிச முகாமை உருவாக்கி உலக சக்திகளை சோசலிசத்திற்கு சாதகமாக நிலையை ஏற்படுத்தின. சோசலிச முகாமிற்குள் ஏகாதிபத்திய ஊடுருவலுக்கு எதிரான போராட்டத் தில் இறுதிவரை நிற்கவில்லை என்பது உண்மை தான். தவறுகள் செய்யப்பட்டன. ஆனால், இந்த தவறுகள், இன்று நாம் அறிந்துள்ள அறிவியல் கோட்பாடான இயக்கவியல் மற்றும் வரலாற்று பொருள்முதல்வாதத்தின் சரியான தன்மையை புறக்கணிக்க முடியாது.

இதன் அடிப்படையான அம்சம் என்ன வெனில், அனைத்து வகையான பொருட்களின் அனைத்து வடிவங்களும், உறவுகளும் மாற்றத்திற்கு உட் பட்டவை என்பதாகும். ஒவ்வொன்றிலும் உள்ள எதிர்மறை சக்திகள் முரண்பாடுகளாக வெளிவரு கின்றன. பழையதை தூக்கி எறிந்து, புதியதை உருவாக்கி முரண்பாடுகளை தீர்க்க முடியும். தீர்க்கப்பட வேண்டிய புதிய முரண்பாடு உருவா கும். பொருள்முதல் உலகில் தோன்றும் புதிய வளர்ச்சிகள் , மற்றும் மனித உழைப்பு,டன் தொழில்நுட்ப வளர்ச்சியும், திறமைகளும் கருவி களாகி, புதிய நிலைமைகளை உருவாக்குகின்றன அவற்றை சார்ந்தே ஒரு சமுதாயத்தில் உற்பத்தி சக்திகள் அமைகின்றன. ஆனால், அதே சமயம அவை சமு தாயத்தை பல வர்க்கங்களாக பிளவு படுத்தி , உற்பத்தியை அபகரித்துக் கொள்ள போராடும் நிலையை தோற்றுவிக்கிறது. அபகரிப்பு என்ற நிலை வர்க்க போராட்டத்திற்கு இட்டு செல்வதுடன் புரட்சிகரமான மாற்றங்களை ஏற் படுத்துகிறது. வரலாற்றில் உற்பத்தி சக்திகள் தொடர்ச் சியாக வளர்ச்சி அடை கின்றன. புதிய சுரண்டல் உறவுகள், ஏற்படுகின்றன. அவற்றுடன் வர்க்கங் கள் இணைகின்றன.இவை முன்னுக்கு வரும் பொழுது, வளர்ச்சியின் தேவைகளை ஒட்டி, சிலவற்றை தூக்கி எறிய வேண்டி வரும். இந்த செயல்முறையில் புதிய திறம் வாய்ந்த தொழில் நுட்ப வடிவங்கள், திறமைகள் புதிய போராட்டங் கள் வருவதை நாம் காண முடியும். அடிமை சமூகம் நிலபிரபுத்துவம், முதலாளித்துவம், கம்யூனி சம் என்கின்ற, சமுதாயத்தின் முக்கியமான நான்கு கட்ட வளர்ச்சியில் இது தொடர்கிறது. சோசலி சத்திற்கான மாற்றம் ஏற்படும் பொழுது, மூலதன சர்வாதிகாரம் தூக்கி எறியப்பட்டு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அமைகிறது. இதில், பாட்டாளி வர்க்கம, முதலாளித்து வர்க்கத்தை தூக்கி எறிந்து உற்பத்தி சாதனங்களை கைப்பற்றுகிறது. அந்த வர்க்கம் பல நூற்றாண்டுகளாக, மற்றவர்களுக்கு செல்வத்தை உற்பத்தி செய்து கொடுத்துள்ளது. உற்பத்தியை தங்கள் வசம் கொண்டு வந்த உடன், சுரண்டலுக்கும், அதோடு தொடர்புடைய வர்க்க போராட்டத்திற்கும் முடிவு கட்டுகிறது.

இத்துடன், மனித குலத்தின் தேவைகளுக்கு ஏற்ப, திட்டமிட்ட உற்பத்தி துவங்குகிறது. அதன் வெற்றி என்பது, சோவியத் ரஷியாவின் வெற்றி மட்டுமல்ல.இதர சோசலிச நாடுகளான சீனா, கியூபா போன்ற நாடுகளில் பொருள் உற்பத்தி அதிகரித்து, மனித வளர்ச்சி உள்ளிட்ட ஒட்டு மொத்த வளர்ச்சியை அடைய முடிந்துள்ளது. இத்தகைய சாதனைகளை பணக்கார முதலாளித் துவ நாடுகள் அடையவில்லை அவர்களின் மக் களுக்கு அவற்றை அளிக்க விரும்பவும் இல்லை. உலகிலேயே ஒரே வல்லரசு என இன்று கருதப் படும் அமெரிக்க தந்து மக்களுக்கு சிறந்த கல்வி, ஆரோக்கியம் மற்றும் இதர கட்டுமான வசதி களை அளிப்பதற்கு பதிலாக, தந்து எல்லைக்கு வெளியேயிருந்து வளங்களை பெற்று வேறு இடங்களில் முதலீடு செய்ய விழைகிறது. மனித குல ம் அமைதியுடனும் முன்னேற்றத்துடனும் மேம்பட வாழ தேவையானதை வலுப்படுத்துவ தற்கு பதிலாக, ராணுவ தளவாடங்களில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவதையே விரும்புகிறது. அதன் வீழ்ச்சியின் விதைகள் இதில் அடங்கி யுள்ளன.. பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் உள்ள அரசு உலகில் குண ரீதியான மாற்றத்தை கொண்டு வருவதற்கான சூழலை உருவாக்க முடியும் என்று யதார்த்தத்தில் நிரூபித்து காட்டியதை அக்டோபர் புரட்சியின் மிக முக்கிய பங்களிப்பு எனலாம். சோவியத் யூனியன் இருந்ததனால் தான் இரண் டாம் உலகப் போருக்கு ப பின்னர், காலனியாதிக்க தகர்வு சாத்தியமாயிற்று.ஏகா திபத்திய நாடுகள் முன்னேறிய தொழில்நுட்பத்தை கொடுக்க விரும்பாத சூழலில், புதிதாக விடுதலை பெற்ற நாடுகள் சோவியத் யூனியனிடமிருந்து அவற்றை பெற முடிந்தது. அதே போல, அது ஷேம நல அரசு மற்றும் உலக அமைதிக்கான நிறுவனங்கள் ஏற் படவும் காரணமாக இருந்தது. என்றும் அழியா புரட்சி:
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு போர் தேவை என்ற கருத்து தவறு என்பதை சோவியத் யூனியன் தனது வெற்றிகரமான வளர்ச்சி மூலமாகவும், உலகில் தான் ஆற்றிய பங்கின் மூலமும் வெளிப்படுத் தியது. மாறாக, போர் படைப்பாற்றளுக்கு எதி ரான நிலையினையும், அழிவையும் ஏற்படுத்தக் கூடியது. சோவியத் யூனியனின் சர்வதேச உறவு கள் தொடர்பான் முதல் பிரகடனம் அமைதி பற்றியதாகும். அதன் மூலம் சர்வதேச உறவுகளில் ஒரு புது சகாப்தம் துவங்கியது என அறிவித்தது.

வரலாற்றைப் பற்றிய நமது புரிதலில் உலகில் “தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்” என்று ஒன்று கிடையாது என்பதை ரஷிய புரட்சி உணர்த் தியது, அதனுடைய மிக முக்கியமான பங்களிப்பு ஆகும். எல்லா இடங்களிலும் உள்ள அனைத்து மக்களும் உள்நாட்டிலும், வெளியேயும் சக்தி களை ஒன்று திரட்டி, வர்க்கமற்ற சமுதாயத்தை நோக்கி முன்னேறும் பணியை மேற்கொள்ள வேண்டும். இதில் வெற்றி பெற உலகில் , மாறி வரும் வளர்ச்சிப் போக்குகளை நமது ஸ்தூலமான நிலைமைகளுடன் பொருத்தி படிப்பதும், அதை உணர்ந்து செயல்படுவதன் மூலம் உலக அளவில் பாட்டாளி வர்க்கம் உற்பத்தி கருவிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர ரஷிய புரட்சி வழி காட்டி உள்ளது. இன்று, சோவியத் யூனியன் என்பது இல்ல. ஆனால், அதன் பங்களிப்புகளை ஒதுக்க இயலாது. உலக அளவில், குறிப்பிடத்தக்க தாக்கத்தை அவர்கள் ஏற்படுத்தினார்கள். எனவே, அவை நமது நினைவில் என்றும் நிலைத்து நிற்கும். சோவியத் யூனியன் சிதறுண்ட பின், முன்னாள், கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகளில் முதலாளித்துவம் தலை தூக்கியது துரதிர்ஷ்ட மானது சோசலிசத்தை நிர்மாணிப்பதில் , மார்க்சிய லெனினிய கோட்பாடுகளை அப்போது நிலவிய சூழலுக்கு ஏற்ப பொருத்தி பார்பதில் ஏற்பட்ட திரிபுகள், விலகல்களினால், நிறைய தவறுகள் நேர்ந்தன. தவறான புரிதல் தோன்றி யதார்த்த நிலைமை புறந்தள்ளப்பட்டது. ஏகாதி பத்திய சவால்களை எதிர்கொள்ள, அவற்றிக்கு சமமாக ராணுவ தளவாடங்களை வைத்திருப் பதில் கவனம் செலுத்தியது சரியானது என்ற போதிலும், அதே அளவு அழுத்தம் தொழில் வளர்ச்சக்கு கொடுப்பதில் பின் தங்கிய நிலை இருந்தது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தில் மேற்கொள்ளப்பட்ட வியக்கத்தகு முன்னேற்றங் கள் மீது போதிய கவனம் செலுத்தப்படவில்லை. பொருளாதார அரங்கில் இந்த பிரச்னைகள் கண்கொடுள்ளப்படவில்லை. என்பது மட்டு மின்றி , முடிவெடுக்கும் இடங்களில், மக்களின் பங்கேற்பை உறுதிபடுத்தி, உண்மையிலேயே, மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவது கைவிடப் பட்டது. கட்சிக்கும் அரசுக்கும் இடையிலான வேறுபாடு என்பது இல்லாமல் போயிற்று. ஜனநாயக மத்தியத்துவம் என்ற கோட்பாடு அதிகமாக மீறப்பட்டு, அதற்கு பதில் மத்தியத்து வம் என்பதற்கு அழுத்தம் தரப்பட்டது. கட்சிக்கு பதிலாக தலைமை, அந்த தலைமைக்கு பதிலாக ஒரு சிறு தனிகுழு செயல்பட்டது. இந்த தவறு கள் குறைபாடுகள் பின்னடைவுக்கு காரணமாக அமைந்தன. முதலாளித்துவம் முந்நூறு ஆண்டுகளுக் கும் மேலாக செயல்பட்டு வருகிறது. சோசலிசம் என்பது ஒரு புதிய கருத்தாகும். சோசலிசத்தின் சாதனைகள் ஏராளமாக இருந்த போதிலும், அதை அமுல்படுத்துவதில் இருந்த எதிர்மறை விஷயங்களினால், சோவியத் யூனியன் சிதறுண் டது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் பின்னடைவு ஏற்பட்டது.

வியூக மாற்றம் தொடர்தல்:
ஆனால், சுரண்டல் அமைப்பின் முக்கிய அமசங்களான, பசி, வறுமை, கைவிடப்படுதல் ஆகிய வற்றையும், முதலாளித்துவம் என்கிற யதார்த்தத்தை சந்தித்த கிழக்கு ஐரோப்பிய நாட்டு மக்களும், முன்னாள்சோவியத யூனியனில் இருந்த குடியரசுகளின் மக்களும் தற்போது போராட துவங்கிவிட்டனர். அந்நாடுகளில் கடும் எதிர்ப்புகளை அந்த அரசுகள் சந்திககின்றன. தொடர்ச்சியான ஏகாதிபத்திய தாக்குதல்களிடம் சரணாகதி அடைந்த கட்சிகள், தற்போது, புதிய சவால்களை எதிர்கொள்ள மீண்டும் வியுகங்கள் அமைத்துக் கொண்டு வருகின்றன.மக்கள் மீண் டும் கம்யுனிஸ்ட் கட்சிகளின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். ரஷிய பெடரேஷனின் கம்யூனிஸ்ட் கட்சி தான் இன்று ரஷியாவில் அமைப்பு ரீதியில் திரட்டப்பட்ட மிகப் பெரிய சக்தியாகும். சோசலி சத்தை பின்பற்றும், சீனா, கியூபா, வியத்னாம், லாவோஸ் கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு ஆகிய நாடுகளில், ஆளும் கட்சிகள் கடந்த கால தவறுகளில் இருந்து பாடங்களை கற்றுக் கொண்டு, அங்கே நிலவும் புறசூழலுக்கு ஏற்ப சரி எனக் கருதப்படும் போதிய ,பொருத்தமான மாற்றங் களை செய்து வருகின்றன. சோசலிசத்தை நிர் மாணிக்க ஒரேயொரு முன்மாதிரி என்பது இல்லை என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. ஒவ்வொரு நாடும் அதன் புறசூழலுக்கு தகுந்தவாறு, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு ஏற்ற படி, வர்க்க சக்திகளின் கூட்டு எப்படி உள்ளது என்பதை அறிந்து தனது பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும். வளர்ச்சி குன்றிய நாட்டில் சோசலிச கட்டுமானம் எவ்வாறு இருக்க வேண் டும் என்பதில் சீன முன்மாதிரி மேலும் பங் களிப்பை செலுத்தி உள்ளது. அடிப்படை கோட் பாடுகளை பின்பற்றிக் கொண்டே உற்பத்தி சக்தி களின் வளர்ச்சிக்கு சீனா அ ழுத்தம் தருகிறது. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை, தொழிலாளி-விவசாயி கூட்டு, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் ஆகிய மூன்றும் சோசலிசம் வெற்றி பெற தேவைப் படும் மூன்று பொதுவான கோட்பாடுகள் ஆகும். இந்த நாடுகளின் அனுபவங்களை கணக்கில் கொண்டு ஒவ்வொருவரும் தத்தம் இடங்களில் நிலவும் சூழலுக்கு ஏற்ப, மார்க்சிய-லெனினிய விஞ்ஞான அடிப்படையில் செயல் படுவது வெற்றியை தரும். சீனர்கள் மாவோவின் சிந்தனை கள், டெங் சியா பிங்கின் கோட்பாடுகள் என்றனர். கொரியர்கள் சுசே கருத்து என்றனர். வியத்நாமி யர்கள் ஹோ சி மின்னுடன் அடையாளப்படுத் திக் கொண்டனர். வேறு சிலர் தங்களுடைய முன்மாதிரிகள் அல்லது ஸ்தூலமான நிலைமை யுடன் அடையாளப்படுத்தி கொண்டனர். 1991ல் நடைபெற்ற பேரதிர்வுகளை ஏற்படுத்திய சம்ப வங்களை தொடர்ந்து, சோசலிசம் வீழ்ந்து விட்டது என்றும், கம்யுனிசம் செத்து விட்டது என்றும் கட்டவிழ்த்து விடப்பட்ட பிரச்சாரம் இனிமேல் எடுபடாது. முன்னாள் சோவியத் குடியரசுகளின் மக்களும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளின்ம க்களும் முதலாளித்துவம் தீர்வு அல்ல என்பதை உணர்ந்து கொண்டு விட்டனர். இந்த நாடுகளில்,ஏற்றத் தாழ்வுகள் அதிகரித் துள்ளது. வேலையின்மமை அதிகரித்து பாது காப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மற்ற நாடுகளில், சோசலிசம் அமைப்பை தகர்க்கும் ஏகாதிபத்தியத்தின் கனவு நனவாகாது. சீன, வியத்னாம், கொரியா, கியூபா மற்றும் லாவோஸ் ஆகிய சோசலிச நாடுகளில் உலக மக்களில் கால் வாசி பேர் வசிக்கின்றனர். இவை மிகவும் பின் தங்கிய நாடுகள் தான், அமெரிக்க கடல்பகுதியி லிருந்து வெறும் 90 மைல்கள் தொலைவில் உள்ள கியூபா அதை நிலைகுலையச் செய்யும் அனைத்து முயற்சிகளையும் வீரத்துடன் எதிர் கொண்டு தோற்கடித்துக் கொண்டு வருகிறது. குழந்தை பருவத் தில் சோசலிசம் நிலவும் கியூபாவின் மீதும், அதன் மக்கள் மீதும் ஏகாதிபத்தியம் பொருளா தார தடைகளை விதித்து பெரும் கஷ்டங்களை ஏற்படுத்தியது. அவர்களுக்கு நிறைய பிரச்னை கள் இருந்த போதிலும், கியூபா இதர விடுதலை இயக்கங்களுக்கு ஏராளமான உதவிகளை செய்து வருகிறது. அந்நாட்டின் புரட்சி ஒட்டு மொத்த லத்தீன் அமெரிக்காவுக்கும், கரீபிய பகுதிக்கும் பரவியுள்ளது.

மார்க்சியம் -லெனினியம் என்பது இன்றைக்கும் பொருந்தும் கோட்பாடு ஆகும். அதன் பொருத்தப்பாட்டை, தேவையை வரலாறு நிரூபித்துள்ளது. கம்யுனிச எதிர்ப்பாளர்களும், பிற்போக்கு சக்திகளும் கடும் தாக்குதல்களை தொடுத்த போதிலும், தடம் பதித்த மாபெரும் அக்டோபர் புரட்சியும் அதனால் உருவாகிய முதல் சோசலிசம் அரசின் முக்கியத்துவத்தை யும் அவர்களால் நிராகரிக்க முடியாது.
1992ல் , “சமகால நிலைமையும் மார்க்சியத்தின் பொருத்தப்பாடும்” என்ற தலைப்பில் நடை பெற்ற சர்வதேச கருத்தரங்கில், மார்க்சிஸ்ட் கட்சி யின் கருத்துத்தாள் மிகச் சரியாக கூறியுள்ளது: தற்போது நிலவும் உலக வளர்ச்சிபோக்குகளின் தன்மை ஒரு அறிவியலாக ஒரு வழிமுறையாக, செயல்படுவதற்கு ஒரு வழிகாட்டியாக மார்க் சியத்தின் பொருத்தபாடும் , தேவையும் நியாய மானது என்பதை காட்டுகிறது. மனிதகுல விடு தலையை முழுமை பெறச் செய்ய தேவையானவை என்ன என்பதை நிறுவ மார்க்ஸ் தனது வாழ்நாள் முழுவதையும் செலவிட்டார். பின்னர் வந்த மார்க்சிஸ்டுகளும் அதே பணியில் ஈடுபட்டனர். மனிதனை மனிதன் சுரண்டுவதும், ஒரு நாட்டை மற்றொரு நாடு சுரண்டுவதும் முதலாளித்துவத் தின் அடிப்படையாக இருக்கும் வரை மனித குலத்தின் விடுதலைக்கான தேடலை நிறுத்திவிட முடியாது. இன்றைய உலகில் மனிதம் ஏற்றுக் கொண்டுள்ள உரிமைகள் அனைத்தும் மக்களின் போராட்டங்களின் பங்களிப்பாகும். இந்த வர்க்க போராட்டம் தான் தற்கால வளர்ச்சிப்போகு களை உருவகபடுத்துவதுடன், மனித மனசாட்சி யுடன் இணைந்ததாக உள்ளது.

தற்கால சமுதாயத் தின் மீதும் மனித குலத்தின் அறிவு வளர்ச்சி மீதும் மார்க்ஸ் பதித்துள்ள தடயம் அழிக்க முடியாதது “முதலாளித்துவத்தின் நியாயமற்ற, மனித நேயம் அற்ற தன்மையை தற்கால உலக நிலைமை தெளிவாக வெளிப்படுத்துகிறது. முதலாளித்துவ அமைப்பு அடிக்கும்கொள்ளை யால் வளர்ந்து வரும் நாடுகளில், கோடிக்கணக் கான மக்கள் பசி, பட்டினி, நோய் கல்லாமை போன்றவை நிலவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அணுஆயுத அழிவு அபாயங் களுக்கும், மோசமாகிவரும் சமமற்ற சுற்று சூழலுக்கும் அதுவே நேரடி பொறுப்பாகும் முதலாளித்துவ சமூகங்களில்அதிகரித்து வரும ஒழுக்கக் கேடுகள், போதை பழக்கம்,வன்முறை, பாலின, இன பாகுபாடுகள் .மனிதர்களின் நல்ல குணங்களை கீழே தள்ளுவது தொடர்கிறது. சோசலிச பின்னைடைவுக்குப் பின்னர், முன்பு போலவே, தற்போதும், “முதலாளித்துவமே நிரந்தரமானது” என்ற இடைவிடா பிரச்சாரம் இருந்தபோதிலும் தலாளித்துவ அமைப்பினால் மனித குலம் சந்திக்கும் பெரிய பிரச்னைகளை தீர்க்க இயலாது என்பதை அதுவே நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

இவற்றிக்கு மாறாக:
“மார்க்சியம்-லெனினியம் என்பது இயல் பாகவே பொருள்முதல்வாதத்தை உள்ளடக் கியது, புத்தாக்க தன்மை கொண்டது. இயக் கவியலை உள்ளடக்கியது. எனவே அது வரட்டு தனமற்றது. விடுதலை என்ற பார்வையும், அதற் கான உயர்ந்த நோக்கங்களையும் வெளிப் படுத்தும் உலகப் பார்வையை கொண்டது. அது மாறிவரும் வரலாற்று நிலைமைகளை கொண்ட பல விஷயங்களை புரிந்து கொள்ளவும் கூர் ஆய்வு செய்யவும் உதவுகின்ற ஒரு கருவியாகும். விடுதலைக்கான மக்கள் போராட்ட திட்டங் களின் நோக்கங்களை வரையறுத்துக் கொடுக்கும் ஓ ர்வழிகாட்டியாகவும், அதே சமயம் மாறி வரும் வரலாற்று சூழலுக்கேற்ப தேவைப்படும் மாற்றங் களை செய்து கொள்ளும் தன்மை கொண்டது.”

1992

லெனினியம் வெல்லும் !

பிப்ரவரி புரட்சியிலிருந்து அக்டோபருக்கு……7

ஒரு நாட்டில் உழைக்கும் வர்க்கம் தனக்கு வழிகாட்டுகிற புரட்சிகர கட்சியின் தலைமையை ஏற்று, திரள்கிறபோதுதான் சோசலிஸ்ட் புரட்சி வெற்றி பெறும்.இதுவே ரஷ்யப் புரட்சி அனுபவம். ஜார் மன்னராட்சியும்,பிப்ரவரி புரட்சிக்குப் பிறகு வந்த கெரென்ஸ்கி அரசும் வீழ்த்தப்பட்டு, ரஷ்யப் புரட்சி வெற்றி பெற்றது.

அதாவது, முதலாளித்துவ,நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் அரசை வீழ்த்தி,அந்த வர்க்கங்களால் ஆண்டாண்டுக் காலமாக அடக்கி ஒடுக்கபப்ட்டு,சுரண்டப்பட்டு வந்த பாட்டாளிவர்க்கம், ரஷ்யப் புரட்சியை நிகழ்த்தியது.இதனை தொழிலாளி,விவசாயி உள்ளடங்கிய பாட்டாளி வர்க்கம் சாதிக்க முடிந்ததற்கு கம்யூனிஸ்ட் கட்சியும்,அதன் அமைப்புக்களும் முக்கிய பங்காற்றின. இந்த கட்சி அமைப்புக்கள் இல்லாமல் “தனித்திறமை”,”வசீகரம்” கொண்ட தலைவர்கள் மட்டும் பாட்டாளி வர்க்கத்திற்கு தலைமையேற்றிருந்தால்,எதிரிகள் புரட்சியை முறியடித்திருப்பார்கள்.

நீண்ட காலமாக ரஷ்யப் புரட்சியை ஒரு கூட்டத்தின் சதி எனவும், அது லெனினது அரசியல் சாதுர்யத்தால் வெற்றி பெற்றது எனவும் வரலாறு எனும் பெயரில் பல புனைகதைகள் எழுதப்பட்டு வந்துள்ளன.

எனினும்,ஆராய்ச்சியாளர்கள் பலர் நடந்த உண்மைகளை உள்வாங்கி, பாரபட்சமின்றியும் எழுதியுள்ளனர்.அவ்வாறு எழுத முனைந்த வரலாற்றாசிரியர்கள் தவிர்க்க முடியாமல் கம்யூனிஸ்ட் அமைப்பு ஏற்படுத்திய தாக்கத்தை பதிவு செய்துள்ளனர்.

1970-ஆம் ஆண்டுகளில் வெளிவந்த “ரஷ்யா எவ்வாறு ஆளப்படுகிறது?”என்ற நூலில் பேராசிரியர் மேர்லே பெயின்சாட்(Merle Fainsod)எழுதினார்.

“1902-ஆம் ஆண்டு லெனின் தனது “என்ன செய்ய வேண்டும்?”நூலில் “புரட்சிக்காரர்கள் கொண்ட ஒரு கட்சி அமைப்பினை எங்களுக்கு கொடுங்கள்!ரஷ்யாவை முழுமையாக,அடியோடு மாற்றிக் காட்டுவோம்”என்று எழுதினார்.1917-ஆம் ஆண்டு அவரது இந்த வேண்டுகோள் நிறைவேறியது;ரஷ்யாவை அடியோடு மாற்றும் பணியும் நிறைவேறியது….”

புரட்சிகர கட்சி அமைப்பின் முக்கிய பங்கினையே பெயின்சாட் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

ஏன் புரட்சிகர கட்சி தேவை?

சமுக மாற்றத்திற்காக இயங்கும் இயக்கங்களே கூட தெளிவான நிலை எடுக்காமல் தடுமாறுகிற கேள்வி ‘ஏன் ஒரு புரட்சிகர கட்சி தேவை?’என்பது.

இதற்கான பதிலை அறிவதற்கு முன்னதாக மார்க்சின் இரண்டு கூற்றுக்களை ஆராய வேண்டும்.சுரண்டலிலிருந்து தொழிலாளி வர்க்கம் விடுதலையை பெறுவது எவ்வாறு என்ற கேள்விக்கு மார்க்ஸ் அழுத்தமாக சொன்ன பதில் இது: தொழிலாளி வர்க்கம்தான் ,தானே முன்முயற்சி மேற்கொண்டு விடுதலையை அடைய வேண்டும் என்றார் மார்க்ஸ்.

மார்க்ஸின் இந்தக் கருத்து,தொழிலாளி வர்க்கம் தானே தனது விடுதலையை சாதித்துக் கொள்ளும் என்றும்,வேறு யாருடைய உதவியும் அதற்கு தேவையில்லை என்றும் பொருள்படுவதாக உள்ளது. குறிப்பாக,கட்சி கட்டுவது,கட்சி கோட்பாடுகளோடு செயல்படுவது என்பதெல்லாம் தேவையில்லை என்ற முடிவுகளுக்கு இட்டுச் செல்வது போன்ற கூற்றாக மார்க்சின் கருத்து தோற்றமளிக்கிறது..

ஆனால் இத்துடன் மார்க்சின் மற்றொரு கூற்றையும் இணைத்துப்பார்க்க வேண்டும்.

“ஒவ்வொரு சமூகத்திலும் நிலவி வருகிற கருத்துக்கள் ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களே”

என மார்க்ஸ் எழுதினார்.

அதாவது, முதலாளித்துவ ஆளும் வர்க்கம் தனது சுரண்டல் நலனுக்கான கருத்துக்களையே சமுகத்தின் கருத்தாக மாற்றிவிடுகிறது. முதலாளித்துவ அரசின் பொருளாதாரக் கொள்கைகள் ஒருபுறம் முதலாளிகளின் மூலதனத்தைப் பெருக்கிடும்.மறுபுறம் உழைக்கும் மக்களின் நலனை பாதிக்கும்.ஆனால்,அந்தக் கொள்கைகள் , தனக்கும் பயன் தரும் என்று தொழிலாளியை நம்பிட வைத்து,தொழிலாளர்களையும் தனது செல்வாக்கு வளையத்திற்குள் முதலாளித்துவ வர்க்கம் தக்க வைத்துக் கொள்கிறது.

இந்நிலையில் முதலளித்துவ செல்வாக்கு மயக்கத்தில் இருக்கும் தொழிலாளி எவ்வாறு முதலாளித்துவ சுரண்டலிலிருந்து விடுவித்துக் கொள்வார்? முதலில் குறிப்பிட்ட ‘தொழிலாளி வர்க்கம் தனது விடுதலையை தானே சாதித்துக் கொள்ளும்’ என்று மார்க்ஸ் சொன்னது சாத்தியமா?

முரணாகத் தெரியும் மார்க்ஸின் இந்த இரண்டு கருத்துக்களும். மார்க்சின் குழப்பத்தினால் ஏற்பட்டதல்ல. இது எதார்த்த நிலைமையாக உள்ளது.

ஒருபுறம் தொழிலாளி வர்க்கத்தினால்தான் விடுதலையை சாதிக்க முடியும் என்பதும் எதார்த்தம்,அதே நேரத்தில் ஆளும் வர்க்கக் கருத்துக்கள் தொழிலாளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி,தங்களது விடுதலையை அவர்கள் சாத்தித்துக் கொள்ள தடையாக இருக்கிறது,இதுவும் எதார்த்தமானதுதான்.

இந்த இரண்டுக்குமான முரணைத் தீர்த்திட மார்கசிய லெனினியம் உருவாக்கிய தீர்வுதான் புரட்சிகர கட்சி ஸ்தாபனம்.

ரஷ்யாவில் உழைக்கும் வர்க்கம் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அமைப்புக்குள் முடங்கி, பின்தங்கிய உணர்வு நிலையில், இருந்தது.அதனை உணர்வுரீதியில் புரட்சிக்கு தயார் செய்தது,உள்ளூர் கிளையிலிருந்து,மேல்மட்டம்வரை கட்டப்பட்ட, கம்யூனிஸ்ட் அமைப்புக்கள்.

தொழிலாளியும்,கட்சியும்

லெனின் தனது “என்ன செய்ய வேண்டும்?” நூலில்

“தொழிலாளி வர்க்கம் தனது இயக்கங்களின் மூலமாக தொழிற்சங்க உணர்வை மட்டுமே அடைய முடியும்:இதுதான் உலக நாடுகளின் வரலாறு.சங்க வேலைகளில் ஈடுபடுவது,முதலாளியை எதிர்த்துப் போராடுவது,தொழிலாளர்கள் நல சட்டங்களை இயற்ற அரசாங்கத்தை கட்டாயப்படுத்துவது,போன்றவற்றை செய்வதற்கான உறுதியை மட்டுமே தொழிற்சங்க உணர்வு தொழிலாளர்களுக்கு ஏற்படுத்துகிறது. “ என விளக்குகிறார்.

உண்மையான வர்க்க உணர்வு என்பது வாழ்க்கையின் அனைத்து செயல்பாடுகளையும் “பொருள்முதல்வாத அடிப்படையில் புரிந்து கொள்வது” என்கிறார் லெனின்.அதாவது,தனது,வேதனைகள்,துயரங்கள் ,உழைப்புச் சுரண்டல் கொடுமைகள் அனைத்திற்கும்,கண்ணுக்குப் புலப்படாத,கடவுள் மீது பாரத்தை சுமத்தி,அற்ப நிம்மதி காண்பதும்,அறிவியலற்ற பார்வையான தலைவிதியை மாற்ற முடியாது என்ற எண்ணத்தில் மூழ்கிக் கிடப்பதும், கருத்துமுதல் வாதப் பார்வை எனப்படும்.மாறாக நடக்கிற நிகழ்வுகளிலிருந்து உண்மைகளை அறிந்து கொள்ளும் பொருள்முதல்வாதப் பார்வைதான், மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிறார் லெனின்.

இந்த பொருள்முதல்வாதப் பார்வை கொண்டு இதர வர்க்கங்களின் நிலைமைகளை சரியாகப் புரிந்து கொள்ளும் அளவிற்காண அரசியல் அறிவும் ஆற்றலும் கிடைத்து தொழிலாளி தனது நிலையை உயர்த்திக் கொள்கிறார்.அப்போது அவர் வர்க்க உணர்வு பெற்றவராகிறார்.

இந்த உயர் நிலையை தொழிலாளி வர்க்கம் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்கிறார் லெனின்.அதாவது,வர்க்க,அரசியல் உணர்வு,வேலைத்தளத்தில் வராது. வெளியிலிருந்து வளர்க்கப் பட வேண்டும் என்பது லெனினியம். அதனை புரட்சிகர கட்சி செய்திட வேண்டும்.

லெனின் எழுதுகிறார்.

“வலுமிக்க,ஊசலாட்டமில்லாத,நிலையான கட்சி,உழைக்கும் மக்களிடம் விரிந்த செல்வாக்கைப் பெற்றிடும்.பல்வேறுபட்ட,தரமான,பன்முகத்தன்மை கொண்ட பிரிவினரை அது ஈர்த்திடும்…”

வர்க்க முன்னணிப் படை

கட்சியையும் வர்க்கத்தையும் ஒன்றாகப் பார்த்துக் குழப்பிக் கொள்ளக்கூடாது இந்த குழப்பத்தைப் போக்கிட, “கட்சி என்பது தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படை “என்ற பொன்னான வாசகத்தை லெனின் எழுதுகிறார்.

கட்சிக் கோட்பாடுகள் குறித்து 1904-ஆம் ஆண்டு கட்சி மாநாட்டில் கடும் சர்ச்சைகள் எழுந்தன.இறுதியில் போல்ஷ்விக்குகள்,மென்ஷ்விக்குகள் என கட்சியில் பிளவு ஏற்பட்டு மாநாடு முடிந்தது. அந்த சர்ச்சைக்களை “ஓரடி முன்னால்,ஈரடி பின்னால்”என்ற நூலில் விவரிக்கின்றார் லெனின்.

மாநாட்டில்,கட்சி விதிகள் பற்றிய விவாதம் கடுமையானதாக இருந்தது.கட்சி விதிகளின் முதல் பாராவே கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்தப் பாராவில், கட்சியின் முக்கிய தலைவரான மார்டவ் எழுதிய நகலில்,மார்டவ் கீழ்கண்டவாறு எழுதியிருந்தார்:

“ரஷ்ய சமுக ஜனநாயக தொழிலாளர் கட்சி (கம்யூனிஸ்ட் கட்சி) உறுப்பினர் என்பவர் கட்சிதிட்டத்தினை ஏற்றுக்கொள்ள வேண்டும்.கட்சிக்கு நிதி அளித்து ஆதரிக்க வேண்டும்;கட்சிக்கு உதவிடும் வகையில், கட்சியின் ஒரு அமைப்பு சார்ந்த வழிகாட்டுதல் அடிப்படையில் தனது பணியினை தொடர்ச்சியாக அவர் செய்திட வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

லெனின் இதனை ஏற்காமல் வாதாடினார்.அந்தப் பாராவை மாற்றி எழுதினார் லெனின்.

“கட்சியின் உறுப்பினர் கட்சித் திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.கட்சிக்கு நிதி அளித்து ஆதரிக்க வேண்டும்.அத்துடன்,கட்சியின் ஒரு அமைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.”

மார்டவ் கருத்துக்கும்,லெனின் கருத்துக்கும் என்ன வித்தியாசம்?

கட்சியின் அமைப்புக்களான தொழிற்சங்கம்,விவசாய சங்கம்,இளைஞர் அமைப்பு போன்ற ஏதாவது பொருத்தமான அமைப்பில் பங்கேற்பதை கட்டாயமாக்குகிறார்,லெனின்.

அதனை மார்டவ்,கட்சி உறுப்பினர் அவரவர் விருப்பத்திற்கு விட்டுவிடுகிறார்!

வெகுமக்களை புரட்சிக்கு தயார் செய்யும் பணிக்காக கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் ஒரு வெகு மக்கள் அமைப்பில் அயராமல் பணியாற்ற வேண்டும் என்பது லெனினது பார்வை.புரட்சி இலக்கிலிருந்து ஒரு சிறு பிரச்னை கூட லெனினது கூறிய பார்வையில் தப்பிட முடியாது என்பதற்கு 1904-ஆம் ஆண்டு கட்சி மாநாடு ஒரு எடுத்துக்காட்டு.

இந்தப் பிரச்னையில் பிளவு ஏற்பட்டது.

மார்க்சிய வழியில் லெனின் புரட்சிகட்சிக்க்ன கோட்பாடுகளை உருவாக்கி போல்ஷ்விக் கட்ச் உர்வ்வதர்கு வித்திட்டார்.

“ரஷ்யக் கம்யூனிஸ்ட்கள் ரஷ்ய நிலைமைகளுக்கு ஏற்றவாறு ஒரு ஸ்தாபனத்தைக் கட்ட வேண்டும்.அதன் வழியாக சமுக ஜனநாயகத்தை( கம்யூனிஸ்ட் கருத்துக்களை) பரப்பிட வேண்டும்.ஒரு அரசியல் சக்தியாக தொழிலாளி வர்க்கம் உருவாக கட்சி தேவை.”என லெனின் எழுதினார்.

1902-ஆம் ஆண்டிலிருந்தே புரட்சிகர கட்சி ஸ்தாபனம் பற்றி லெனின் எழுதி வந்தார்.அவரது பிரசித்தி பெற்ற “என்ன செய்ய வேண்டும்?”என்ற நூல் முதன் முதலாக ரஷ்ய நிலைமைகளுக்கு ஏற்றவாறு கட்சிக் கோட்பாடுகளை பேசுகிற நூல்.

லெனின், முற்றிலும் புதிதோர் கட்சி ஒன்று தேவை என்று வலியுறுத்தினார்.1904-ஆம் ஆண்டில் ரஷ்ய கம்யூனிஸ்ட்களுக்கு இடையே தீவிரமான விவாதம் நடந்தது.அது,ஒரு புரட்சிக் கட்சி எப்படியிருக்க வேண்டும் என்ற விவாதம்.

1917-புரட்சிக்கு முந்தைய காலங்களில் தலைமறைவான பணிகளை உள்ளூர் சார்ந்த கட்சி குழுக்கள் மேற்கொண்டன.இந்தக் கட்சி குழுக்கள் விவாதங்கள் நடத்தி,ஜனநாயகத் தன்மையுடன் செயல்பட்டு வந்தன.இந்தக் கட்சிக் குழுக்கள் அதிக அளவில் தொழிலாளர்களை சேர்ப்பதில் முனைப்பு காட்டின.

இந்தக் குழுக்களின் முக்கிய பணி ஜார் ஆட்சி தடை செய்த,சட்டவிரோதமான,புரட்சிகர இலக்கியங்களை கட்சியின் மேல்மட்ட மையத்திலிருந்து பெற்று விநியோகிப்பதும்,புதிய பிரசுரங்களை படைத்து அவற்றை விவாதிப்பது,விநியோகிப்பது,கிளர்ச்சி, பிரச்சாரம்,வேலை நிறுத்தம் தெருக்களில் ஆர்பாட்டம்,மறியல் போன்றவற்றை திட்டமிட்டு நடத்துவதையும் இந்தக் குழுக்கள் செய்தன.இந்த வேலைகள் அனைத்தும் ஜார் அரசின் கடும் அடக்குமுறைக்கு இடையே நடந்தன.

இவை அனைத்தும் புரட்சிகர கட்சியின் வலிமை பெருகிட உதவிற்று.

ஜனநாயக மத்தியத்துவம்

இன்று, லெனின் என்றாலே வன்முறை மூலம் அதிகாரத்தை அடைய வேண்டும் என்ற கருத்தைக் கொண்டவராக சித்தரிக்கபபடுகிறார்.பள்ளிக்கல்வி பருவத்திலேயே அப்படிப்பட்ட கருத்தை விதைத்து விடுகின்றனர்.

உண்மையில் லெனினியம் அரசியல் ஜனநாயக வழிமுறைகளில்தான் சோசலிசப் புரட்சியை அடைய முடியும் என்பதில் உறுதியாக உள்ள தத்துவம்.

லெனின் கட்சியில் ஜனநாயக மத்தியத்துவம் இருக்க வேண்டும் என்று வாதிட்டார்.இந்தக் கோட்பாடும் ஒரு அதிகாரவர்க்க ஜனநாயக விரோத நடைமுறையாக சித்தரிக்கப்படுகிறது.

ஒரு பிரச்னையை விவாதிப்பதில் முழு ஜனநாயக சூழல் கட்சிக்குள் இருக்க வேண்டும்;அத்துடன் செயல் என்று வரும்போது கட்சி ஒருமித்த கருத்துடன், ஒரு ஒன்றுபட்ட சக்தியாக, களத்தில் இறங்க வேண்டும்.இதுதான் லெனினிய நோக்கில் ஜனநாயக மத்தியத்துவம்.இது கட்சிக்குள் சரியாக கடைபிடிக்கப்பட வேண்டும்.

இந்தக் கோட்பாட்டின் அமலாக்கம் சரியாக இருக்க வேண்டும் என்பதற்கு பதிலாக இக்கோட்பாட்டையே கைவிடவேண்டும் என்று பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.சில இடதுசாரி அறிவுஜீவிகளும் இக்கருத்தைக் கொண்டுள்ளனர்.இந்த கோட்பாடு குறித்த சரியான லெனினியப் புரிதல் தேவைபடுகிறது.

1906-ஆம் ஆண்டு லெனின் எழுதினார்:

“உள்ளூர் கட்சிக் குழுக்களின் சுயேச்சைத் தன்மை என்பதும்,ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடு என்பதும், விமர்சனம் செய்வதற்கான முழு,நிறைவான சுதந்திரம்தான்.ஆனால் இது உறுதியான,தீர்க்கமான செயலில் இறங்குவதற்கு இடையூறாக அமைந்து விடாத வகையில் இருக்க வேண்டும்.கட்சி தீர்மானித்திருக்கிற முடிவினை முன்னெடுத்துச் செல்ல இடையூறாக இருக்கும் எந்த விமர்சனத்தையும் இந்தக் கோட்பாடு அனுமதிக்காது;அல்லது ஒருங்கிணைந்த செயல்பாட்டை தடுக்கிற விமர்சனங்களையும் இந்தக் கோட்பாடு அனுமதிப்பதில்லை.”(விமர்சன சுதந்திரமும்,செயலில் ஒற்றுமையும்”-லெனின் கட்டுரை).

இந்த லெனினிய வழிகாட்டுதல் அடிப்படையில் கட்சி செயல்படுகிறபோது,முதலாளித்துவக் கட்சிகளில் தென்படாத, உயர்ந்த ஜனநாயகம் கம்யுனிஸ்ட் கட்சிக்குள் நிலவிடும்.செயல்திறனும்,தத்துவத் திறனும் கொண்ட கட்சியைக் கட்ட வேண்டுமென்றால்,உண்மையான ஜனநாயக மத்தியத்துவம் தேவை.

தத்துவம்,நடைமுறை

1902-ல் லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்?”கம்யுனிஸ்ட்களுக்கு ஒரு வழிகாட்டி நூல்.முதலாளித்துவ அரசினை எதிர்த்த போராட்டங்கள் எழுவது இயல்பானது.ஆனால் கம்யுனிஸ்ட்கள் பின்தங்கிவிடக்கூடாது.போராட்டங்களுக்கான தத்துவப் பின்னணியை தொழிலாளர்களுக்கு விளக்கிட வேண்டும்.

அதாவது, முதலாளித்துவ முறைதான் வாழ்வியல் நெருக்கடிகளுக்கு அடிப்படைக் காரணம்;அதனை தூக்கி ஏறிய வேண்டும் என்பதுதான் தத்துவ போதனை;முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களை அகற்ற உரிய நடைமுறைகளை வகுத்திட வேண்டும்.இந்த தத்துவம்,நடைமுறை என்ற இரண்டு உலகிலும் இடையறாமல் சஞ்சரித்து,இடையறாமல் பயணம் செய்யும் கட்சிதான் புரட்சியை சாதிக்கும்.அப்படிப்பட்ட கட்சியை கட்ட வேண்டும் என்று அழுத்தமாக வலியுறுத்துவது லெனினியம்.

“இடதுசாரி கம்யூனிஸம்;ஒரு இளம்பருவக் கோளாறு”என்ற நூலில் ,லெனின் ஒரு உண்மையான கம்யுனிஸ்ட் கட்சிக்கு மூன்று முக்கிய அம்சங்கள் கட்டாயமாக தேவை என்று லெனின் வரையறுக்கின்றார்.

1.தொழிலாளி வர்க்கத்தின் முன்னணி முதற்படையான கட்சிக்கு புரட்சிகர வர்க்க உணர்வு அவசியம்.

2.அமைப்புரீதியாகத் திரண்ட புரட்சிக்காரர்கள் கொண்ட கட்சிக்கு ஒரு சரியான புரட்சி நடத்துவதற்கான தொலைநோக்கி உத்தியும்,அன்றைய சூழலுக்கான நடைமுறை உத்தியும் அவசியம்.

3.கட்சி,மிக விரிவான அளவில் உழைக்கும் மக்களோடு நெருங்கிய தொடர்பும் ,பிணைப்பும் கொண்டதாக இருக்க வேண்டும்.

இந்த மூன்று வரையறைகளை நன்கு ஆராய்ந்தால்,தத்துவப் பணியும் நடைமுறையும்,பின்னிப் பிணைந்திருப்பதைக் காண முடியும்.முதல் இரண்டு அம்சங்களும்,முக்கியமாக,தத்துவத் தளத்தில் கட்சி நடத்தும் போராட்டம்.மூன்றாவது அம்சம் கட்சி தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிற களப்போராட்டம்.

இந்த மூன்றும் இல்லாத கட்சி எப்படி இருக்கும்?

இதற்கு லெனின் வார்த்தைகள் கடுமையானவை.

இந்த மூன்றும் இல்லாத நிலையில் கட்சியில் மிஞ்சுவது “வார்த்தை சித்து விளையாட்டுக்களும்,கோமாளித்தனமும்தான்” என்கிறார் லெனின்.

சோவியத் வீழ்ச்சி அடைந்ததைக் காரணம் காட்டி, லெனினியம் இன்று பொருந்தாது என முதலாளித்துவம் பிரச்சாரம் செய்கிறது.உண்மையில்,சோவியத் வீழ்ச்சி, ரஷ்யப் புரட்சிப் பாரம்பர்யத்தின் வீழ்ச்சி அல்ல.அந்த பாரம்பர்யத்தை உருவாக்கிய லெனினியத்தின் வீழ்ச்சியும் அல்ல.

சோவியத் அரசு,முக்கியமாக தனது பிந்தைய காலங்களில், லெனினிய வழித்தடத்தில் செல்லாமல் விலகியதால் அங்கு சோசலிசம் பின்னடைவை சந்திக்க நேரிட்டது.இந்த விலகல்,கட்சி அமைப்பு உள்ளிட்டு,பொருளாதாரம்,அரசு செயல்பாடு என அனைத்திலும் ஏற்பட்டது.லெனினிய வழியில் செல்லாத காரணத்தினால்தான் வீழ்ச்சி ஏற்பட்டது.சோவியத் வீழ்ச்சிக்கான காரணங்களை ஆராய வேண்டுமானால்,சோவியத்தில் எவ்வாறு லெனினியம் மீறப்பட்டிருக்கிறது என்பதுதான் ஆய்வுக்களம்.

எனவே,சோவியத்தில் நிகழ்ந்த தவறுகளை அலசுவதற்கும் லெனினியமே தேவைப்படுகிறது.

இன்றும் தொடரும் பயணம்.

ரஷ்யப் புரட்சி உருவாக்கிய பாட்டாளி வர்க்க அரசான சோவியத் அரசு செய்த சாதனைகளை யாரும் இதுவரை நிகழ்த்திடவில்லை.

எழுதவும் படிக்கவும் தெரியாமல் அறியாமை இருளில் மூழ்கிக் கிடந்த மக்களுக்கு,அனைவருக்கும் எழுத்தறிவு அளிக்கும் பணியை அசுர வேகத்தில் செய்து முடித்தது.

அனைவருக்குமான சுகாதார வசதி,அனைவருக்கும் கல்வி வசதி,குடியிருப்புக்கான வீடு உரிமை,வேலைக்கான உரிமை,என பொதுச் சேவை வசதிகளை மக்களுக்கு உரித்தாக்கிய அரசு சோவியத் அரசு. அது மட்டுமல்லாது இன,சாதி,மத வெறியினைத் தூண்டி அதில் தங்களை வளர்த்துக் கொள்கிற முதலாளித்துவ சக்திகளுக்கும்,அவற்றின் சமுகக் கேடுகளுக்கு மாற்றாக, உண்மையான சமத்துவம் சகோதரத்துவம்,மனிதநேயம் போற்றும் மாற்றுப் பண்பாட்டை உருவாக்கிய சமுகம் சோவியத் சமுகம்;அதற்கு வித்திட்ட ரஷ்யப் புரட்சியை மனித இனம் மறந்திடாது;அதனை யார் மறைக்க முயன்றாலும் உழைக்கும் வர்க்கம், அதனை முறியடித்து, ரஷ்யபுரட்சியின் பாரம்பர்யத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டும்.

இன்றைய உலகக் கார்ப்பரேட் ஊடக நிறுவனங்கள் புரட்சி வரலாற்றை ஓயாமல் அவதூறு செய்கின்றனர்.”பாசிசத்தை விட மோசமானது,போஷிவிசம்” என்று ஒரு எழுத்தாளர் எழுதுகிறார்.மற்றொருவர், ஹிட்லரை விட மோசமானவர் ஸ்டாலின் என்று நூல் வெளியிடுகிறார்.இவை அனைத்தும் சோசலிசப் புரட்சி மீண்டும் நிகழ்ந்து, முதலாளித்துவத்திற்கு ஆபத்து வந்துவிடக்கூடாது எனும் உள்நோக்கத்துடன் வெளியிடப்படுகின்றன.

1930-ஆம் ஆண்டுகளில், பாசிசம் உலகிற்கு ஆபத்தாக எழுந்தபோது கோடிக்கணக்கான மக்களை பலி கொடுத்து உலகைக் காப்பாற்றிய பெருமை சோவியத் அரசிற்கே உண்டு.பாசிசம் மட்டுமல்லாது அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் ஏழை நாடுகளை அச்சுறுத்திய போதெல்லாம் அந்த நாடுகளுக்கு உதவி செய்த சர்வதேசிய மனிதநேயம் கொண்ட நாடாகவும் சோவியத் நாடு விளங்கியது. இது அனைத்தும் லெனின் தலைமையில் நடந்த ரஷ்யப் புரட்சி உருவாக்கிய பாரம்பர்யம்.

ரஷ்யப் புரட்சி நிகழ்ந்து முடிந்து நூற்றாண்டு நிறைவை நோக்கி வரலாறு நகர்கிறது.இன்று நிலைமைகள் மாறியிருக்கலாம்.ஆனால்,ஏகாதிபத்தியம் இன்றும்,உலகை இலாப,மூலதன வேட்டைக்கு சூறையாடுகிற பொருளாதார ஆதிக்க வெறியுடன் இயங்கி வருகிறது.இராணுவ வல்லமை கொண்டதால் நாடுகளை வேட்டையாடி மக்களை கொன்று வருகிறது.

சோவியத் சமுகம் படைத்த சமத்துவ,சகோரத்துவ,மனிதநேயப் பண்பாடு உலகில் தழைக்க வேண்டும்.அதனை லெனினிய புரட்சிகளே சாதிக்கும்.

முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக வளர்ந்த சூழலில், மார்க்சியத்தை வளர்த்து,புதியப் பங்களிப்புக்களை உருவாக்கியர் லெனின். புரட்சி மாற்றத்தை நிகழ்த்திட, அரசியல் வியுகங்களையும் கட்சிக் கோட்பாடுகளையும் உருவாக்கிய மகத்துவம் லெனினையே சாரும்.இன்றைய சவால்களை சந்திக்கவும் லெனினியமே தேவை.

நிச்சயமாக, லெனின் வாழ்ந்து கொண்டிருக்கிறார். புதிய சவால்களை சந்திக்க அவர் லெனினியமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.! ரஷ்யப் புரட்சி துவக்கிய உலக சோஷலிச சகாப்தத்தின் பயணம் தொடரும்.அது வெற்றியை ஈட்டும்.!

மக்கள் பேராற்றலின் அடையாளமாக சோவியத்துக்கள்

பிப்ரவரி புரட்சியிலிருந்து அக்டோபருக்கு-6

போல்ஷ்விக் கட்சியின் வரலாறு என்பது, எங்களது வாழ்க்கையின் வரலாறு. “
– புரட்சியில் பங்கேற்ற மூத்த தலைமுறை கம்யூனிஸ்ட் ஒருவர் 1965-ஆம் ஆண்டு சொன்னது.

மனித குல வரலாற்றில் ரஷ்யாவில் நடந்த புரட்சி, ஒரு முக்கிய திருப்பு முனை. முதன்முறையாக காலம் காலமாக ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட மக்கள், ஆட்சி அதிகாரத்திற்கு வந்து, அரசு நிர்வாகம், பொருளாதார நிர்வாகம் அனைத்தையும் தங்கள் கையில் எடுத்துக்கொண்ட ஒரு மகத்தான மாற்றமே, ரஷ்யப்புரட்சி. இதனை சாதித்தது, மாபெரும் மக்கள் சக்தி.

இந்த மக்கள் சக்தி, மாபெரும் ஆற்றலாக வெளிப்பட்ட நிறுவனங்களாக சோவியத்துக்கள் எனும் அமைப்புக்கள் விளங்கியன. இந்த சோவியத்துக்கள், தொழில், மற்றும் கிராம உள்ளூர் மட்டத்தில் உருவானவை. ரஷ்ய மொழியில் சோவியத் என்றால் குழு அல்லது கவுன்சில் எனப்பொருள்படும்.

மார்க்சிய இலட்சியமான சோஷலிசத்தை, ரஷ்யாவில் நிறுவும் நோக்கத்துடன் கம்யூனிஸ்ட்கள் செயல்பட்டனர். அவர்களது இலட்சியத்தை நிறைவேற்றுவதற்கான கருவியாக சோவியத் அமைப்பு பயன்பட்டது.

உள்ளூர் மட்ட அமைப்பாகப் இருந்தாலும் அணு ஆற்றல் போன்று பெரும் ஆற்றலை வெளிப்படுத்தி புரட்சியை சாதித்த அமைப்புக்களாக சோவியத்துக்கள் விளங்கின. புரட்சிக்குப் பிறகு, சோவியத் யூனியன் நாட்டு அரசினை, உழைக்கும் வர்க்க அரசு என்ற தன்மையோடு உள்ளூர், வட்டார, மாவட்ட, தேசிய அளவிலான தேர்ந்தெடுக்கப்பட்ட சோவியத்துக்கள் நிர்வகித்தன.

இந்த நிகழ்வு உலக கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கும் படிப்பினையாக அமைந்துள்ளது. உள்ளுர்மட்ட மக்கள் அமைப்பு கட்டும் பணி முக்கியமானது. அதனைக் கைவிடுவது சோஷலிச இலட்சியத்தை நோக்கி முன்னேறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தாது.

மக்கள் புரட்சியா? சதியா?

முதலாளித்துவ வரலாற்றாசிரியர்கள் சோவியத்துக்களின் பங்கினை அங்கீரிக்க மறுக்கின்றனர். ஏனெனில், சோவியத்துக்களின் பங்கினை ஏற்றுகொண்டால், ரஷ்யப் புரட்சி என்பது, ஒரு மக்கள் புரட்சி என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்.

அக்டோபரில் நடந்த புரட்சி போல்ஷ்விக்குகள் எனும் புரட்சியாளர் கூட்டம், திட்டமிட்ட சதி செய்து நிகழ்த்திய ஒன்று என்றவாறு இன்றளவும் பல நூல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

இந்த கருத்தை மையமாக வைத்து மிகப்பெரிய நூல் ஒன்றை ஒர்லாண்டோ பிஜெஸ் என்பவர் “மக்களின் சோகமான நிகழ்வு” ( Orlando Figes: A Peoples

Tragedy) எனும் நூலை சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டார். போல்ஷ்விக்குகள் அதிகார வெறி கொண்ட கூட்டம் எனவும், 1917-பிப்ரவரியில் நடந்த புரட்சிதான் உண்மையான மக்கள் புரட்சி எனவும் அக்டோபரில் ஒரு கலகம் நடந்து, பிப்ரவரியில் வந்த ஜனநாயக அரசு வீழ்த்தப்பட்டது எனவும் பிஜெஸ் உள்ளிட்ட பலர் எழுதியுள்ளனர்.

பிஜெஸ் நூலில் பிப்ரவரி புரட்சியை அடுத்த நிகழ்ந்த அக்டோபர் புரட்சியை விளக்குகிற அத்தியாயத்திற்கு, “தனக்கென்று (லெனினுக்கென்று) ஒரு புரட்சி”என்று அவர் தலைப்பிட்டுள்ளார். அதாவது லெனின் தனது அதிகாரப்பசியை தீர்த்திக் கொள்ள அக்டோபர் புரட்சியை நடத்தினார் என அவர் எழுதுகிறார்.

டேவிட் ஷுப் என்பவர் தனது நூலில் அக்டோபர் புரட்சியை விளக்குகிற அத்தியாயத்திற்கு “லெனின் அதிகாரத்தைக் கைப்பற்றுகிறார்:என்று தலைப்பிட்டு, லெனின் செய்த சதிதான் அக்டோபர் புரட்சி என எழுதுகிறார்.

இந்த முதலளித்துவ ஆதரவு வரலாற்றாசிரியர்கள் வரலாற்றை தலைகீழாக விளக்குகின்றனர். ரஷ்யாவில் அன்று நடந்த மாற்றங்களில் சோவியத்துக்கள் மைய இடத்தினை வகித்தன என்ற அடிப்படையான உண்மையை அவர்கள் மறைக்கின்றனர்.

ரஷ்யப் புரட்சி, அடக்கி, ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகப் புரட்சி என்பதற்கான சாட்சியங்களாக சோவியத்துக்கள் திகழ்ந்தன. இந்த உண்மை, வரலாற்றுப் புரட்டர்களால் தொடர்ந்து மறைக்கப்பட்டு வருகிறது.

உண்மையில் முதலாளித்துவப் புரட்சி என்று அழைக்கப்படும் பிப்ரவரி புரட்சியை நிகழ்த்தியதும் மக்கள்தான். ஆனால் அரசு அதிகாரம் முதலாளித்துவ சக்திகளிடம் சென்றது. அக்டோபரில் நிகழ்ந்த புரட்சியின் போதுதான் அதிகாரம் தொழிலாளி வர்க்கத்திடம் மாறியது. இந்த இரண்டு மாற்றங்களிலும் சோவியத் அமைப்புக்கள் முக்கிய பங்கினை ஆற்றின.

ஆனால் தாங்கள் ஆட்சிக்கு வரக் காரணமாக இருந்த சோவியத்துக்களை அழிக்கவே முதலாளிகள் முயற்சித்தனர். கெரன்ஸ்கி தலைமையில் பிப்ரவரி புரட்சிக்குப் பிறகு வந்த அரசு சோவியத்துக்களை அழிக்க முனைந்தது. கெரன்ஸ்கியே கூட”நாங்கள் சோவியத்துக்களை செத்துப் போகச் செய்திடுவோம்” என்று கூறினார். ஏனென்றால் எப்போதுமே மக்கள் சக்தி உறைந்திருக்கிற எந்த ஒரு ஜனநாயக கட்டமைப்பையும் முதலாளித்துவம் சகித்துக் கொள்வதில்லை.

இதற்கு மாறாக, “அனைத்து அதிகாரங்களும் சோவியத்துக்களுக்கே” என்ற உண்மையான ஜனநாயக முழக்கத்தை போல்ஷ்விக்குகள் முன்வைத்தனர். அவர்களது, ”நிலம், சமாதானம், உணவு”என்ற கோஷங்களுக்கு ஈடாக “அனைத்து அதிகாரங்களும் சோவியத்துக்களுக்கே” என்ற முழக்கம் எதிரொலித்தது.

சோவியத்துக்களை பற்றி லெனின்

19௦5-ஆம் ஆண்டிலேயே சோவியத்துக்கள் உருவாகத் துவங்கின. . இது தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்கள் சேர்ந்து உருவாக்கிய அமைப்பு. ஓரளவு கிராமப் புறங்களிலும் இந்த அமைப்புக்கள் வேரூன்றத் தொடங்கின.

புரட்சி நடப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக, 1917 ஜூலை இறுதியில் லெனின் “புரட்சியின் படிப்பினைகள்” என்ற கட்டுரையை எழுதினார்.

உள்ளூர் மட்டத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களை ஒன்று திரட்டும் சோவியத்துக்களுக்கு அவர் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.

சோவியத் அமைப்பை விவரிக்கும் போது, லெனின் எழுதுகிறார்.

“(ஜார் வீழ்ச்சிக்குப் பிறகு, கிடைத்த) சுதந்திரத்தை பயன்படுத்தி,  மக்கள் சுயேச்சையாக அமைப்பு ரீதியாக திரண்டிடத் துவங்கியுள்ளனர். ரஷ்ய மக்கள் தொகையில் மிகப் பெரும்பான்மையாக உள்ள தொழிலாளிகள் மற்றும் விவசாயிகளின் தலைமை அமைப்பாக இருப்பது சோவியத்துக்கள். தொழிலாளிகள்,  இராணுவ வீரர்கள்  மற்றும் விவசாயிகள் பிரதிநிதிகளின் அமைப்பாக சோவியத்துகள் விளங்குகின்றன.”

சோவியத் என்பது வெறும் சங்கமோ, சாதாரணமாக இயங்கும் அமைப்போ அல்ல. வர்க்க உணர்வு வளர்ச்சியின் வெளிப்பாடு என்பதை லெனின் குறிப்பிடுகிறார்.

“இந்த சோவியத்துகள் ஏற்கனவே பிப்ரவரிப் புரட்சியின் போதே உருவாகத் தொடங்கி விட்டன. பிறகு ஒரு சில வாரங்களுக்குள்ளாகவே ரஷ்யாவின் பெரும்பாலான பெருநகரங்களிலும், பல கிராமப்புற மாவட்டங்களிலும் வலுவான வர்க்க உணர்வு கொண்ட தொழிலாளிகளும் விவசாயிகளும் சோவியத்துகளில் ஒன்றுபட்டுள்ளனர்.”

இதில் “வர்க்க உணர்வு” என்பது முக்கியமான சொற்றொடர். முதலாளித்துவத்தை அகற்றும் பணிக்காக வர்க்க ஒற்றுமை உறுதிப்பட வேண்டுமென்று கருதுகிற உணர்வு நிலை தொழிலாளி, விவசாயிகள் மத்தியில் உருவானதால்தான் புரட்சி அமைப்புக்களாக சோவியத் அமைப்புக்கள் தோன்றின. வர்க்க உணர்வை தொழிலாளி வர்க்கத்திடம் ஏற்படுத்தும் பணியை போல்ஷ்விக்குகள் வெற்றிகரமாக செய்தனர்.

சோவியத்துகளைப் பற்றி விவரிக்கும் லெனின், சோவியத்துக்களின் ஜனநாயகத் தன்மையையும் குறிப்பிடுகிறார்.

“சோவியத்துகள் முழுக்க முழுக்க சுதந்திரமான வழிமுறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புக்களாக விளங்குகின்றன. தொழிலாளிகள், மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட மக்களைப் பிரதித்துவப்படுத்தும் உண்மையான அமைப்புகளாக அவை திகழ்கின்றன. ராணுவச் சீருடையில் தொழிலாளிகளும் விவசாயிகளும் ஆயுதபாணியாகவும் இந்த சோவியத்துக்களில் திரண்டுள்ளனர். ”

புரட்சியில் முக்கிய பங்காற்றிய இந்த சோவியத்துக்கள், புரட்சிக்குப் பிறகும் மேலும் ஜனநாயக அடிப்படையில் செயலாற்றின. உண்மையில், உள்ளூர் மட்டத்திலான மக்கள் திரள், அமைப்புரீதியாக ஒன்று திரண்ட நிகழ்வுதான் சோவியத் எனும் அற்புதமான வரலாற்று நிகழ்வு.

எதிர்கொண்ட தடைகள்

சோவியத்துக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியது எளிதாக நடக்கவில்லை. துவக்கத்தில் போல்ஷ்விக்குகள் முன் வைத்த “அனைத்து அதிகாரங்களும் சோவியத்துக்களுக்கே”என்ற முழக்கத்தினை அப்போது   சோவியத்துகளில் இருந்த சிறுபான்மை எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் மட்டுமே ஏற்றுக் கொண்டு அந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.

சோவியத்துகளின் பிரதிநிதிகளில் பெரும்பான்மையினர், அன்று, சோசலிச-புரட்சிவாதிகளின் (Socialist-Revolutionary) கட்சிகளிலும், மென்ஷிவிக் பிரிவின் ஆதரவாளர்களாகவும் இருந்தனர். இந்த இரண்டு பிரிவினரும் சோவியத்துகளுக்கு அதிகாரத்தை மாற்றுவதை எதிர்த்தனர்.

முதலாளித்துவ அரசை அகற்றி சோவியத்துகளின் அரசாங்கம் நிறுவ வேண்டும் என்பதனை  இந்தக் கட்சிகள் எதிர்த்ததற்கு என்ன காரணம்? முதலாளித்துவ அரசாங்கத்தை ஆதரித்து, ,  அதனுடன் சமரசம் செய்து கொண்டு, அவர்களோடு சேர்ந்து கொண்டு ஒரு கூட்டணி அரசை உருவாக்குவதற்குத்தான் அவர்கள் பாடுபட்டனர்.

அவர்களது இந்தப் பாதைதான் பிப்ரவரி புரட்சிக்குப் பிறகு , அது அடுத்த கட்டத்திற்குப் போகாமல், ஐந்து மாத காலத்திய தேக்கத்திற்கு காரணமாக அமைந்தது. லெனின் தலைமையிலான போல்ஷ்விக்குகள் இந்த சந்தர்ப்பவாதத்தை எதிர்த்துப் போராடி இறுதியில் வெற்றி கண்டனர்.

லெனினது உக்கிரமமான கருத்துப் போராட்டம், புரட்சியின் தேக்கத்தை உடைத்தது. சோவியத்துக்கள் என்ன செய்ய வேண்டும், புரட்சி நோக்கி எவ்வாறு பயணப்பட வேண்டும் என்பதை பிப்ரவரி முதல் இடையறாது அவர் எழுதி வந்தார். சோவியத்துக்கள் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்ள வேண்டுமென உறுதியோடு வலியுறுத்தி வந்தார் லெனின்.

“. . . . . . . . அரசியல் அமைப்பு சட்ட அவை கூடுவது தள்ளிவைக்கப்பட்டுவிட்டது. . இந்நிலையில் சோவியத்துக்களை தவிர்த்து, வேறு எந்த சக்திகளும் அரசு அதிகாரத்தில் இருக்க முடியாது. சோவியத்துக்கள் அரசு அதிகாரத்தை முழுமையாக எடுத்துக் கொள்ள முடியும்.  . . . எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது தெளிவானது. அப்போதுதான் நமது புரட்சி,  உண்மையான மக்கள் புரட்சியாகவும், உண்மையான ஜனநாயகப் புரட்சியாகயும் மாறும். ”என்று அவர் எழுதினார்.

அத்துடன், கெரன்ஸ்கி அரசாங்கம் மக்கள் விருப்பத்திற்கு மாறாக போரை தொடர்வது என்று முடிவெடுத்த நிலையில், சோவியத்துகள் அதிகாரத்தினைக் கைப்பற்றி, போரினை நிறுத்த முயற்சிக்க வேண்டுமென லெனின் அறிவுறுத்தினார்.

சோவியத்துக்கள் அதிகாரத்தை கைப்பற்றினால்தான், “. . ஆக்கிரமிப்புப் போரை முடிவுக்கு கொண்டுவந்து அமைதிக்கு இட்டுச் செல்கின்ற ஒரு கொள்கையை முன்னெடுத்துச் செல்ல முடியும். அப்போது தான் தொழிலாளிகளும் விவசாயிகளும் சேர்ந்து,  “போரில் இருந்து” கொள்ளை இலாபத்தை ஈட்டிக்கொண்டு, நாட்டை சீரழித்து, பட்டினி நிலைக்கு தள்ளியிருக்கின்ற முதலாளிகளை அடக்கிட முடியும். ”என்று விளக்கினார், லெனின்.

1917 அக்டோபர் புரட்சிக்குப் பிறகும் லெனினது வழிகாட்டுதல்கள், வற்றாத ஜீவநதியாக வந்து கொண்டிருந்தன. புரட்சி நடந்த சில நாட்களுக்கு பிறகு ரஷ்ய உழைக்கும் மக்களை நோக்கி தோழர் லெனின் கூறினார்.

“உழைக்கும் மக்களே, இப்பொழுது நீங்கள் தான் ஆட்சி பீடத்தில் இருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அனைத்து அரசியல் விவகாரங்களையும் நீங்கள் உங்களுடைய கைகளில் எடுத்துக் கொள்ளாவிடில் உங்களுக்கு யாரும் துணை புரியப்போவதில்லை. இப்பொழுது முதல் உங்களுடைய சோவியத்துகள்தான் அரசு அதிகார உறுப்புகள், முழு அதிகாரம் படைத்த சட்ட மன்றங்கள். உங்களுடைய சோவியத்துகளின் மூலம் ஒன்று திரளுங்கள், அவற்றை பலப்படுத்துங்கள், நீங்களே நேரில் பணிகளில் இறங்குங்கள்”

லெனினது வழிகாட்டுதலில் சோவியத்துக்கள் அரசு அதிகாரத்தை உறுதியாகப் பற்றிகொண்டு,  உலகின் முதல் தொழிலாளி வர்க்க அரசை உருவாக்கும் அரும் பணியில் ஈடுபட்டன.

இன்று, உள்ளூர் மட்டத் திரட்டல் கடினமானது என்பதால் அதனை அலட்சியப்படுத்தும் தவறு பல இடங்களில் பல சந்தர்ப்பங்களில் நிகழ்கிறது. இது லெனினிய சிந்தனைக்கு மாறானது. அடிமட்டத்திலிருந்து மக்கள் சக்தியை ஒருமுகமாக திரட்டி, புரட்சிகரப் பேராற்றலை உருவாக்க வேண்டுமென்பது ரஷ்யப் புரட்சி வரலாற்றில் சோவியத்துக்கள் எடுத்துரைக்கும் படிப்பினை. இதனை புரட்சிகர இயக்கங்கள் மறந்திடக் கூடாது.