இந்தியா : உலகமய வெற்றியும் மனிதவள தோல்வியும்!

உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளின், நாட்டு மக்களின் முன்னேற்றம், வாழ்க்கைத்தரம், வளர்ச்சி நிலை, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி என மொத்தத்தில் மனிதவளம் குறித்த ஆய்வினை ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்டு வெளியிட்டு வருகிறது. சரியான வளர்ச்சி நிலையை எட்ட நாம் எங்கே செல்ல வேண்டியுள்ளது? என்ற கேள்வியை ஒவ்வொரு நாடும், நாட்டு மக்களும் எழுப்ப இவ்வறிக்கை காலக்கண்ணாடியாக இருக்கிறது.

2005 ஆம் ஆண்டுக்கான மனிதவள மேம்பாட்டு அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை செப்டம்பர் 7, 2005 அன்று வெளியிட்டது. 177 நாடுகள் உறுப்பினராக உள்ள இவ்வமைப்பில் ஒவ்வொரு நாட்டைப் பற்றிய மதிப்பீடும், தற்போது அந்தந்த நாடுகள் வகிக்கும் இடத்தையும் பட்டியலிட்டுள்ளது. இப்பட்டியலில் இந்தியாவிற்கு 127வது இடமே கிடைத்துள்ளது. இதிலிருந்தே நம்முடைய நாட்டின் மனிதவளத்தில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளலாம். நமக்கு பக்கத்தில் இருக்கக்கூடிய இலங்கையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இனச்சண்டைகள் நடந்து வருவதை நாம் அறிவோம். இருப்பினும் கூட மனிதவளத்தில் நம்மை விட அவர்கள் முன்னிற்கின்றனர்; இலங்கை இப்பட்டியலில் 93வது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியா ஒளிர்கிறது என்று பிரச்சாரம் செய்த அத்வானி, வாஜ்பாய், மோடி வகையறாக்கள் நமக்கு பின்னால் 135வது இடத்தில் பாகிஸ்தானும், 139வது இடத்தில் வங்காளதேசமும் இருப்பதைக் கண்டு திருப்தியடையலாம். இது அவர்களது அரசியலுக்கு வேண்டுமானால் உதவலாம். ஆரோக்கியமான அரசியலில், மனிதவளத்தை உண்மையிலேயே மேம்படுத்த வேண்டும் என்று பாடுபடுகிற நாட்டு மக்களுக்கு இது உதவாது.

ஓங்காரமாய் ஒலிக்கும் உலகமயம்

உலகமய கொள்கைகளை அமலாக்குவதில் இந்திய நாடு வெற்றி பெற்றுள்ளதையும், மனிதவளத்தில் பின்தங்கியிருப்பதையும் மனிதவள மேம்பாட்டு அறிக்கை மிகச் சரியாக சுட்டிக் காண்பித்திருக்கிறது. குறிப்பாக, …உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முன்னணி வகிப்பதோடு, உயர் தொழில் நுட்பங்களை ஏற்றுமதி செய்வதில் பெரும் பங்கை வகிக்கிறது. அத்தோடு, இந்தியாவில் உள்ள நடுத்தர வர்க்கத்தினர் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் காந்தமாக திகழ்கின்றனர்… என்று அவ்வறிக்கையின் துவக்கத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கை அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், உலகளாவிய மனிதவள மேம்பாட்டு வளர்ச்சியில், இந்தியா மிகக்குறைந்த கவனத்தையே பெற்றுள்ளது என மறக்காமல் குட்டியுள்ளது. மேலும், (வறுமை) வருமான விகிதத்தைப் பொறுத்தவரை 1990களில் 36 சதவீதமாக இருந்தது, தற்போது 25 முதல் 30 சதமாக உள்ளது.

உலகமய கொள்கையால் புளங்காகிதம் அடைந்திருக்கும் முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்கள், உலக பெரு முதலாளிகளையும், பன்னாட்டு ஏகபோகங்களையும் இந்திய நாட்டில் பண முதலீடு செய்திட சுதந்திரமாக வரவேற்பதும், லாபகரமாக இயங்கும் பொதுத்துறை தொழில்களை, தேசத்தின் கனிவள சொத்தினை விற்பதும் அன்றாட வாடிக்கையாகி விட்டது. உலகமயக் கொள்கை உலக முதலாளித்துவ வளர்ச்சிக்கும், உள்நாட்டு பெருமுதலாளி களின் வளர்ச்சிக்கும் மட்டுமே பயன்படக்கூடிய ஒன்றே என்பதை இடதுசாரிகள் நீண்டகாலமாக கூறி வருவதை நமது மத்திய – மாநில ஆட்சியாளர்கள் காதில் போட்டுக் கொண்டதே இல்லை. இலாபத்தில் இயங்கக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களை விற்கக்கூடாது, உள்நாட்டு தொழில்களை பாதிக்கக்கூடிய தொழில்களில் வெளிநாட்டு பண முதலீடுகளை அனுமதிக்கக் கூடாது, குறிப்பாக விவசாயம் போன்ற ஆதாரத் தொழில்களில் நவீன ரக விதை என்ற பெயரில் மான்சாண்டோ போன்ற அந்நியநாட்டு நிறுவனங்களை அனுமதிப்பதின் மூலம் நமது விவசாயிகள் திவால் ஆவது, இதன் மூலம் மக்கள் வாழ்க்கைத்தரம் அதள, பதாளத்திற்கு செல்லும் என்று கம்யூனிஸ்ட்டுகள் குரலெழுப்பும் போது, சிதம்பரம், மன்மோகன், வாஜ்பாய், மாறன், ஜெயா வகையறாக்களுக்கு எட்டிக்காயாக் கசக்கிறது. அவர்கள் பொருளாதாரம் வளர்ந்தால் செல்வம் தானாக சொட்டு நீர்போல் மக்களிடம் பரவும் என்று நம்புகின்றனர். இந்த மூட நம்பிக்கைக்குத் தான் மனித வள மேம்பாட்டு ஆய்வறிக்கை வேட்டு வைக்கிறது.

வருங்கால மன்னர்களின் இன்றைய நிலை

இந்திய குழந்தைகளின் இன்றைய நிலை குறித்தே! அறிக்கை மிக முக்கியமாக சுட்டிக்காட்டியுள்ளது. குழந்தை பிறப்பு – இறப்பு விகிதம் மிக கவலையளிப்பதாக உள்ளது; மில்லினிய இலக்கில் இருந்து இந்தியா விலகியிருக்கிறது. இந்தியாவின் தெற்கத்திய நகரங்களில் தொழில்நுட்ப வளர்ச்சி ஓங்கியிருக்கிறது; ஆனால், 11 குழந்தைகளில் 1 குழந்தை அதன் 5 வயதை எட்டுவதற்குள் இறக்கிறது. இதற்கு காரணம் ஊட்டச்சத்துக் குறைவு, சொற்பத் தொகை  அரசின் ஒதுக்கீடு, குறைந்த தொழில் நுட்பம் போன்றவைகளே! மேலும் 4 பெண் குழந்தைகளில் 1 குழந்தைக்கும், 10 ஆண் குழந்தைகளில் 1 ஒரு குழந்தைக்கும் ஆரம்பக் கல்வி கிடைப்பதில்லை. மொத்தத்தில் இந்திய குழந்தைகளில் 50 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளனர். என்று அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. பொருளாதாரம் 8 சதவீத வேகத்தில் வளர்வதாக பெருமைப்படுபவர்கள், அந்த வளர்ச்சி குழந்தைகளின் வாழ்விற்கு உதவிடவில்லை என்பதை பார்க்கவே மறுக்கிறார்கள்.

இந்தியா வல்லரசாக வேண்டும் என்று ஓயாது ஒலித்து வருபவர்கள் மக்களின் வலிமை தான் நாட்டின் வளமை  என்பதை ஏற்க மறுக்கிறார்கள். இந்திய நாட்டில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் அவர்களது வறிய நிலைக்கு தீர்வு காண்பதில் ,  வீடின்மை பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் தான் வளமை இருக்கிறது என்பதையும் உணரவில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகஸ்ட் 15, 2005 முதல் நாடு முழுவதும் நிலம், உணவு, வேலை கேட்டு மகத்தான பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகிறது. இவ்வியக்கம் வெற்றிகரமாக மக்களைச் சென்றடைந்துக் கொண்டிருக்கக்கூடிய தருவாயில் இவ்வறிக்கை வந்திருப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையில் – வைத்திருக்கக்கூடிய முழக்கத்தில் உள்ள நியாயத்தை உணர வைக்கிறது. இது வெறும் வெற்று கோஷமல்ல! இந்திய நாட்டின் உயிர் நாடி பிரச்சினை!!

குழந்தை இறப்பு உண்மை நிலை!

உலகில் குழந்தை இறப்பில் 5வது இடத்தை வகிக்கும் இந்தியாவில், ஆண்டுதோறும் 25 லட்சம் குழந்தைகள் இறக்கின்றன என்று அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மேலோட்டமாக படிப்பவர்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கும்! இது சரியாக இருக்குமா என்ற கேள்விகூட எழும்! உண்மை இதுதான்!

சமீபத்தில்  பணக்கார மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்று வரும் குழந்தை இறப்புச் சம்பவங்களை டெக்கான் கிரானிக்கல், ஃபிரண்ட் லைன் போன்ற ஒரு சில ஆங்கிலப் பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள பழங்குடி மக்கள் வசிக்கக்கூடிய விதர்பா மாவட்டங்களில், குறிப்பாக அமராவதி, நாசிப், தேண், நான்-தர்பர், காச்சிரோலி ஆகிய 5 மாவட்டங்களில் மட்டும் கடந்த ஏப்ரல் – ஜூலை, 2005 மாதங்களில் மட்டும் 2675 குழந்தைகள் இறந்துள்ளன. இந்த புள்ளி விவரம் கூட மகாராஷ்டிர அரசு கொடுத்ததே.

சமீபத்தில் மும்பை உயர்நீதிமன்றத்தில் திரு. கிரண் பதுக்கூர் என்பவர் தொடுத்த பொதுநல வழக்கில் மேற்கண்ட குறிப்பிடப் பட்டுள்ள மூன்று மாவட்டங்களில் 3000க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்தின்மையால் இறந்துள்ளன. மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் எந்தவிதமான அக்கறையுமின்றி இருக்கின்றன என்று தொடுத்த வழக்கின் மூலம் இது அம்பலத்திற்கு வந்துள்ளது. இது தவிர 33,000 குழந்தைகள் போதுமான ஊட்டச்சத்தின்மையால் பாதிக்கப்பட்டு கை, கால்கள் சூம்பி, வயதிற்கேற்ற எடையின்றி சோமாலியாவில் காணுகின்ற  எலும்புக்கூடு குழந்தைகளாகவே இருக்கின்றனர். இதில் 16,000 குழந்தைகள் இறக்கும் தருவாயில் இருக்கின்றன. இக்குழந்தைகளின் படத்தை காணும் எந்த ஒரு மனித இதயமும் திடுக்கிடாமல் இருக்க முடியாது நம்முடைய முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களைத் தவிர.

மகாராஷ்டிர அரசு சமர்ப்பித்த புள்ளிவிவரங்களின் படியே 1085 குழந்தைகள் முதல் பிறந்தநாளை எட்டுவதற்குள் தங்களது வாழ்க்கையை முடித்துக் கொண்டன. 1590 குழந்தைகள் 6 வயதைக்கூட எட்டவில்லை.

நம்முடைய தமிழ் பத்திரிகை உலகம் இப்பிரச்சினை குறித்து பெரும் மவுனமே சாதிக்கிறது. பாலியல் உறவு பற்றி யாராவது உளறினால் போதும், அது குறித்து பக்கத்திற்கு பக்கம் வண்ணப்படங்களுடன் விளக்கும் பத்திரிகை உலகம், நம்முடைய இந்திய குழந்தைகளின் சுவாசத்தை நிறுத்தும் அரசு பயங்கரவாதத்தை குறித்து மவுனமே சாதிக்கிறது.

மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் கவலையெல்லாம் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 8000 புள்ளிகள் உயர்ந்துள்ளதும், அதை கீழே விழாமல் பார்த்துக் கொள்ள காவல் இருப்பதுமே.

மகாராஷ்டிர சம்பவம் ஏதோ திடீரென்று ஒரு மாநிலத்தில் முளைத்த சம்பவமல்ல; கடந்த 5 ஆண்டுகாலமாகவே இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. சமூக ஆர்வலர்கள் இதற்கெதிராக தொடர்ந்து பல மாநிலங்களில் குரலெழுப்பியும் வருகின்றனர். ஏன் அமெரிக்க ஆதரவு பத்திரிக்கையான டைம் இதழ் கூட டிசம்பர் 2004இல் இது குறித்து ஒரு சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் 61,000 மில்லினிய பணக்காரர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையில் புதியதாக 11,000 பணக்காரர்கள் இப்பட்டியலில் சேர்ந்துள்ளனர். அதே சமயம் ஒரு நாளைக்கு ஒரு டாலருக்கும் குறைவான வருமானம் பெறுபவர்கள் 30 கோடி பேர் என சுட்டிக்காட்டியுள்ளது. இதுதான் உலகமய மாக்கலின் உண்மையான வெற்றி! அந்த டைம் பத்திரிக்கை 30 கோடிப்பேரை ஏழை ஆக்காமல் சில ஆயிரம் பேர் பணக்காரர்களாக ஆக முடியாது என்ற சுரண்டல் உறவை மறைத்து, ஏழை, பணக்காரன் ஆவது தனித்தனி நிகழ்வுகள் என சித்தரிக்கிறது என்பதை பார்க்கத் தவறக் கூடாது.

மக்களை ஏழையாக்கும் பொருளாதார வளர்ச்சி கண்டு !

பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை போகவோ!

நாங்கள் சாகவோ!

என்ற பாரதியின் ஆவேசக் கனல் நெஞ்சத்தில் மூளாமலில்லை.

வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி

மனிதவள மேம்பாட்டு அறிக்கையில் அதிகரித்து வரும் வேலையின்மை குறித்தும் எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிராமப்புற வேலையின்மை என்பது கடந்த காலத்தை விட தற்போது அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளது. விவசாய உற்பத்தி என்பது ஆண்டுக்கு 2 சதவீதம் என்ற அளவுக்கு அதிகரித்து வருகிறது. அதே சமயம் விவசாய கூலியில் தேக்க நிலை நிலவுகிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி நிலவுகிறது. 1980, 1990களில் தேசிய அளவில் ஒரு சதவீத வளர்ச்சி இருந்தால், அது 3 சதவீத வேலைவாய்ப்பை உருவாக்கியது.

குறிப்பாக பாலின (ஆண் – பெண்) ஏற்றத்தாழ்வு என்பது அதிகரித்து வருகிறது. அதேபோல் மாநிலங்களுக்குள் ஏற்றத்தாழ்வு என்பது நிலவுகிறது. என்று இந்தியாவின் இன்றைய நிலையை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளது மனிதவள மேம்பாட்டு அறிக்கை 2005.

நாடு முழுவதிலும் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருவதை பல்வேறு ஊடகங்கள் படம் பிடித்து வருகின்றன. அதே போல் ஒரு மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு பிழைப்பைத் தேடி விவசாயிகள் இடம் பெயர்வது என்பது அன்றாட நிகழ்வாகி விட்டது. தமிழக விவசாயிகள் சென்னை நகரை நோக்கியும், வேறு பல ஊர்களுக்கும் புலம் பெயர்ந்து வருகின்றனர். சமீபத்தில் மத்திய அரசு அமலாக்கிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் – வேலைக்கு உணவுத் திட்டம் தமிழகத்தில் உள்ள நலிந்த விவசாயிகளை பயன்படுத்தி திட்டங்களை அமலாக்காமல், எவ்வாறு இயந்திரங்களை வைத்து அமலாக்கப்பட்டது என்பதையும் நாம் அறிவோம்! ஆட்சியாளர்களின் கவனமெல்லாம் கோடிகளை ஒதுக்கிக் கொள்வதுதானோயொழிய வறுமைக் கோட்டினை ஒழிப்பது அல்ல!

உலகமயமாக்கல் என்ற ஏகாதிபத்திய பொருளாதார கொள்கை ஏழை – எளிய – நடுத்தர மக்களின் வாழ்க்கையில் ஏமாற்றத்தையும், விரக்தியையும், வேலையின்மையையும் மட்டுமே கொண்டு வந்துள்ளது. இந்திய ஆட்சியாளர்களாலும், நமது மக்களின் வாழ்கைப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியவில்லை. உண்மையில் முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு கோடிக்கணக்கான மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்பதே நிதர்சனம்.
பாலின ஏற்றத்தாழ்வு குறித்து கூறும் அறிக்கை, ஒரு வயது முதல் ஐந்து வரை உள்ள குழந்தை இறப்புகளில் 50 சதவீதத்திற்கும் மேல் பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதவளத்தை எவ்வாறு அளக்கிறார்கள் என்பதையும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச அளவில் உயிர் வாழ்தல், கல்வி, வருமானம், சுகாதாரம், சொத்து, வர்த்தகம், அறிவு என அந்தந்த நாடுகளில் பல்வேறு அமைப்புகள் மேற்கொள்ளும் கருத்தாய்வுகளை வைத்து சர்வதேச தர அடிப்படையில்தான் இந்த மனிதவள மேம்பாட்டு அறிக்கையினை ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்கிறது.

இதன்படி 127வது இடத்தில் உள்ள இந்திய மக்களின் உயிர் வாழ்தல் காலம் 64 ஆண்டுகள் மட்டுமே, அதே சமயம் சோசலிச நாடுகளான கியூபாவில் இது 87 ஆண்டுகளாக உள்ளதோடு, மனிதவள மேம்பாட்டில் 52வது இடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல் சீனாவில் 78 ஆண்டுகளாக உள்ளதோடு, மனித வளத்தில் 85வது இடத்தைப் பிடித்துள்ளது. மக்கள் தொகையில் உலகிலேயே சோசலிச சீனா முதலிடம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வியட்நாமில் 76 ஆண்டுகளாகவும், மனித வளத்தில் 108வது இடத்திலும் உள்ளது. மனிதவளத்தில் 93வது இடத்தில் உள்ள இலங்கை உயிர் வாழ்தலுக்கு 82 ஆண்டுகளாக உள்ளது.
மேற்கண்ட விவரத்தின் மூலம் இந்திய நாட்டில் மனித உயிர் வாழ்தலுக்கான உத்திரவாதம் என்பது மிக குறைந்த ஆண்டுகளாக உள்ளதை அறிய முடிகிறது. மனிதர்களின் அடிப்படைத் தேவைகளான நிலம், உணவு, வேலை ஆகியவற்றை உத்திரவாதம் செய்வதன் மூலம்தான் மனிதவளத்தை உண்மையிலேயே மேம்படுத்த முடியும். சோசலிச நாடுகளில் மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. நமது நாட்டில் செல்வந்தர்களை உற்பத்தி செய்வதிலும், அதில் உலக நாடுகளோடு போட்டியிடுவதற்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது. உலக பணக்காரர்கள் குறித்து பட்டியலிடும் போர்ப்ஸ் 2003ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் 5 இந்தியர்களின் சொத்து மதிப்பு 24.8 பில்லியன் டாலர்கள். (1,24,000 கோடி ரூபாய்) இது பிரிட்டனில் உள்ள 5 கோட்டீஸ்வரர்களின் சொத்து மதிப்பை விட அதிகம். அவர்களது சொத்து மதிப்பு 24.2 பில்லியன் டாலர் (1,21,000 கோடி ரூபாய்).

இந்தியா 2020

ஜனாதிபதி அப்துல்கலாம் எழுதிய இந்தியா 2020 புத்தகம் இந்திய நாட்டில் மிக புகழ்பெற்றது. படித்த இளம் தலைமுறையினரிடைய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது. இதன் விற்பனையும் எக்கச் சக்கம். இதைத் தொடர்ந்து இந்திய அரசும் விஷன் 2020 என்ற இலக்கை தீர்மானித்து நாட்டை முன்னேற்றுவதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது. டாக்டர் எஸ்.பி. குப்தா தலைமையில் அமைக்கப்பட்ட குழு இந்திய நாட்டில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றிற்கு தீர்வு காணும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டதே இந்த விஷன் 2020. குறிப்பாக வேலையின்மை, வறுமை, எழுத்தறிவு, குழந்தை பிறப்பு – இறப்பு, ஊட்டச்சத்தின்மை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். அதற்காக உருவாக்கப்பட்டதே இந்த திட்டம்.

உண்மை என்ன? மனிதவள மேம்பாட்டு அறிக்கை 2005 இந்திய நாடு அனைத்து விதத்திலும் முன்னேறிய நாடுகளை எட்ட வேண்டும் என்று சொன்னால் இதே வழியில் போனால் குறைந்தபட்சம் இன்னும் 100 ஆண்டுகள் ஆகும் என்று அறிவித்துள்ளது. அதாவது 2106வது ஆண்டில்தான் இந்த இலக்கை எட்ட முடியும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்திய அரசு உருவாக்கிய விஷன் 2020-அடைய கூறப்படும் வழி முறையை நாம் விமர்சிக்கும் போது, படித்த மேதாவிகளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ஆனால் ஐக்கிய நாட்டு மனிதவள அறிக்கையே இவையெல்லாம் இந்த வழியில் போனால் விஷன்கள் எல்லாம் வெறும் கனவிற்குள் வரும் கனவாகும் என்று குட்டு வைத்துள்ளது.

உண்மையில் நம்நாட்டின் முதலாளித்துவ –  நிலபிரபுத்துவ சார்பு அரசியல் கட்சிகளால் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ அரசியல் சித்தாந்தவாதிகள் வகுக்கக்கூடிய திட்டங்கள் வெறும் வெற்று ஆரவாரத்தை மட்டுமே மக்களிடம் ஏற்படுத்தும், அத்துடன் அவர்களது வர்க்க நலன் சார்ந்த திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். உதாரணத்திற்கு, மனிதவள மேம்பாட்டு அறிக்கை 2005 இல் எந்தவொரு நாட்டின் அடிப்படையான இயற்கை  ஆதாரங்கள், எண்ணை மற்றும் கனிவளங்கள் சுரண்டப்படுவதை கடுமையாக எச்சரித்துள்ளது. ஆனால் சமீபத்தில் ஒரிஸா மாநில அரசு ஒரிஸாவில் உள்ள இரும்புத் தாதுவை ஆண்டுக்கு 12 மில்லியன் டன் என்ற அளவில் கொள்ளையடித்துக் கொண்டுச் செல்ல போஸ்கோ என்ற தென்கொரிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. பணக்கார நாடுகள் எதுவும் இரும்புத் தாது ஏற்றுமதிக்கு அனுமதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாட்டின் மனித வள மேம்பாட்டு அறிக்கையை உற்று கவனித்தால், ஏழைநாடுகளின் இயற்கை வளங்களை கண்மூடித்தனமாக சுரண்டுவதில் பணக்கார நாடுகள் அரசியல் ஒற்றுமையுடன் இருப்பதை அந்த அறிக்கை கூறாவிட்டாலும், புள்ளி விபரங்கள் அதனையே உணர்த்துகின்றன. மக்களுக்காக பொருளாதார வளர்ச்சியே தவிர, பொருளாதார வளர்ச்சிக்காக மக்கள் என்ற  சுரண்டல் பார்வையை ஒழித்துக்கட்டவும், இந்திய நாட்டில் உண்மையாகவே மனிதவளத்தை மேம்படுத்தவும் மக்கள் ஜனநாயக புரட்சியால் மட்டுமே சாத்தியம். நமது இலக்கு அதை நோக்கியதாக இருக்கட்டும்!!

ஆர்.எஸ்.எஸ்.சின் தாக்குதல்

கே.என். பணிக்கர்
தமிழில் எம். அசோகன்

முகமது அலி ஜின்னா ஒரு மதச்சார்பின்மைவாதி என்று லால் கிருஷ்ண அத்வானி மதிப்பிட்டார். அந்தக்கூற்று வரலாற்று ரீதியாகத் துல்லியமானதா இல்லையா என்பது, இந்து வகுப்புவாத அரசியலின் எதிர்காலத்திற்கும் அத்வானியின் சொந்த தத்துவார்த்த நிலையெடுப்பிற்கும் அந்தக் கூற்றுக்கும் இருக்கும் சம்பந்தத்தை விட முக்கியமானதல்ல. இத்துணைக் கண்டத்தின் இருபதாம் நூற்றாண்டு அரசியலில் ஜின்னாவின் பங்கு குறித்த முழுமையான மதிப்பீடாக அத்வானியின் பாகிஸ்தான் பேச்சு இருக்கவில்லை என்பது கண்கூடு. திரட்டுவதற்காக ஜின்னா மதத்தைப் பயன்படுத்திய விதத்தைப் பற்றி இவர் குறிப்பிடவில்லை; மதவாத அரசான பாகிஸ்தான் ஜின்னாவை ஏன் தேசத் தந்தையாக பூஜிக்கிறது என்று கேள்வி எழுப்பவில்லை.

தன்னுடைய ஆரம்பகால அரசியல் வாழ்வில் தாராளவாதியாக இருந்த ஜின்னா பக்திசிரத்தையுள்ள முஸ்லீம் அல்ல. எனினும், இந்துத்துவாவின் மூலகர்த்தாவான வினாயகக் தாமோதர் சாவர்காரைப் போல தேசிய அடையாளத்திற்கு ஒரு மூலமாக மதம் இருக்க முடியும் என்பதை உணர்ந்தார். அரசியல் நோக்கங்களுக்காக அதை வெற்றிகரமாகக் கையாண்டார். 1947, ஆகஸ்ட் 11ல் பாகிஸ்தான் அரசியல் நிர்ணய சபைக் கூட்டத்தில், புதிய நாடு மதச்சார்பற்ற நாடாக ஆக வேண்டுமென்று பாகிஸ்தான் நிறுவனர் ஜின்னாவின் அந்தப் பேச்சை மட்டும் அத்வானி குறிப்பிட்டது கவனிக்கத்தக்க தாகும். மேலும் அரசின் பார்வையில் அனைத்து குடிமக்களும் சமம் மற்றும் அனைத்துக் குடிமக்களும் தாங்கள் விரும்புகிற மதத்தைப் பின்பற்ற சுதந்திரம் உண்டு என்பதே மதச்சார்பின்மைக்கு விளக்கம் கொடுத்தார். இதைத்தான் நாங்கள் இந்தியாவில் மதச்சார்பற்ற அல்லது மதவாத மற்ற அரசு என்று அழைக்கிறோம்.. அந்த அரசில் (நாட்டில்) மத வெறிக்கோ, வெறுப்பிற்கோ, சகிப்பின்மைக்கோ மற்றும் மதத்தின் பெயரால் பாரபட்சம் காட்டுவதற்கோ இடமில்லை என்று மேலும் கூறினார்.

ஆனாலும், இதை மதச்சார்பின்மை என்று அத்வானி இந்தியாவில் கூறுவதில்லை. ஆனால் அதை வர்ணிப்பதற்கு கிட்டத்தட்ட இவருடைய அரசியலைப் போலவே அங்கே ஜின்னாவின் அரசியலும் இருந்ததால் ஜின்னாவிற்கு மதச்சார்பின்மைவாதி என்ற மகுடம் சூட்டுவதால் இவருக்கு ஆதாயம் இருக்கிறது. அப்படிச் செய்யும் போது, ஜின்னாவின் ஆகஸ்ட் உரை பாதை பிறழ்வு என்பதையும், பின்னாளில் ஜின்னாவே அதைத் திருத்திக் கொண்டார் என்பதையும், ஆகஸ்ட் உரை பாகிஸ்தானில் முற்றிலும் மறக்கப்பட்டுவிட்டது என்பதையும் அத்வானி கண்டும் காணாதது போல் விட்டுவிட்டார். ஆதலால் அத்வானி பேச்சின் அர்த்தமும் நோக்கமும் ஜின்னாவை மதிப்பிடுவதற்கு அப்பால் வெகுதூரம் செல்கிறது. அந்தப் பேச்சுக்கு பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்படுவது மட்டுமின்றி, சங்பரிவாருக்குள் கடுமையான உணர்வுகளைக் கிளறிவிட்டது. தன்னுடைய பேச்சு என்னென்ன அரசியல் விளைவுகளை உண்டாக்கும் என்பதை அத்வானி அறியாமலிருத்திருக்க முடியாது.

அப்படியெனில், மதச்சார்பின்மை குறித்த ஜின்னாவின் கருத்துக்களுக்கு அத்வானி ஒப்புதல் அளித்தது, ஆழ்ந்த – கவனமான யோசனையில் விளைவாக மட்டுமே இருக்க முடியும். பாகிஸ்தானில் அவருக்கேற்பட்ட ஞானோதயம் அவர் இது நாள்வரைக் கடைப்பிடித்து வந்த அரசியலின் தன்மை குறித்து வேண்டுமென்று நடத்தப்பட்ட தற்சோதனையின் விளைவாகவும், கடந்த பொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி மற்றும் அதன் விளைவாக தே.ஜ.கூ. உடைந்து சிதறிய பின்னணியில் பாஜக தன்னுடைய தத்துவத்தையும் அரசியல் நடைமுறையையும் மறுவடிவமைக்க வேண்டுமென்ற அவருடைய திட நம்பிக்கையைக் குறிப்பதாகவும் இருக்கக் கூடுமா?

அத்வானியும் இந்துத்துவமும்

இந்துத்துவத்தின் தீவிர முகமாக அத்வானி இருந்து வருகிறார். ஆர்.எஸ்.எஸ்.சின் தத்துவத்திலிருந்து கடந்த காலத்தில் அவர் கடுகளவு கூட விலகியதில்லை. உண்மையில் அவர்தான் பாஜகவில் ஆர்.எஸ்.எஸ்.சின் முக்கிய குரலாக இருந்தார். சங்பரிவார் உறுப்பினர்கள் நாகரீகமான நடத்தையின் எல்லைகளை அடிக்கடி மீறியதெல்லாம் வாஜ்பாய் போல இவர் மனசாட்சியின் உறுத்தலுக்கோ, தொந்தரவுக்கோ ஆளானதில்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்டதை இவர் கொண்டாடியதாகச் செய்திகள் கூறுகின்றன; குஜராத்தில் நரேந்திடி மோடியை பாதுகாத்திருக்கிறார், ஆதரித்திருக்கிறார். இந்து உணர்வுகளை அவர் திறமையாகவும் சூழ்ச்சியாகவும் கையாண்டதால் பாஜக அதிகாரத்திற்கு வந்தது என்று சரியாகவே குறிப்பிடப்படுகிறது. மதச்சார்பின்மையின் மீது இடைவிடாமல் தாக்குதல் தொடுத்தார்; போலி மதச்சார்பின்மை எனற கருத்தை உருவாக்கி அதை இடைவிடாமல் பிரச்சாரம் செய்தார்; இந்துக்களின் மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் அயோத்திக்கு ரதயாத்திரையை தலைமையேற்று நடத்தினார். இவ்விதமாக அவர் இந்து வகுப்புவாத அரசியலுக்கு பெரும் ஊக்கத்தை அளித்தார்; பாஜக அதிகாரத்திற்கு உயர்ந்ததற்கு காரணகர்த்தாவாக அங்கீகரிக்கப்பட்டார். சமரசமின்றி ஆர்எஸ்எஸ் தத்துவத்தைக் கடைப்பிடித்தால் அவர் இதைச் சாதித்தார். கடந்த தேர்தலில் தே.ஜ.கூ. வெற்றி பெற்றிருந்தால் எப்போதும் ஊசலாடிக் கொண்டிருக்கும் வாஜ்பாய்க்குப் பதில் பிரதமர் பதவிக்கு ஆர்எஸ்எஸ்சின் தேர்வாக இவரே இருந்திருப்பார்.

இந்தப் பின்னணியில் பார்க்கும் போது, அவரது பாகிஸ்தான் பயணம் ஒரு மாறுபாட்டைத் தெரிவித்தது. அநேகமாக அது தனக்கும் தனது கட்சிக்கும் ஒரு புதிய பிம்பத்தை காட்டும் முயற்சி, இத்துணைக் கண்ட அரசியல் வரலாறு பற்றியும், அவ்விஷயத்தில் இந்துத்துவ அணுகுமுறை பற்றியும் ஒரு விவாதத்தைத் துவக்கி வைக்கலாம் என அத்வானி நம்பியது போல் தெரிகிறது. ஆனால் ஜின்னாவும் அவரது அரசியலும் தேசப் பிரிவினைக்கும் மற்றும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் படுகொலைக்கும் இட்டுச் சென்றது என்ற சங்பரிவாரின் புரிதலை விவாதத்திற்கு இடமில்லை என்று வலியுறுத்தியதன் மூலம் அதற்கான சாத்தியக் கூற்றை மூடி அடைத்து விட்டது. அத்வானியின் பாகிஸ்தான் பயணம் சங்பரிவாரின் அரசியல் மற்றும் நடைமுறையை பலஹீனப்படுத்தி விட்டது என்று ஆர்எஸ்எஸ் கருதியது. ஹிந்து லட்சியத்தின் மீதான அவரது பற்றுருதி இழந்து விட்டார் என்றே கருதினர். ஆர்எஸ்எஸ் மட்டும் இப்படிக் கருதவில்லை. ஏராளமான பாஜக தலைவர்களும் தொண்டர்களும் கூட அப்படியே கருதினார்கள். ஏனெனில் கண்டனம் பிரவீன் தொகாடியா மற்றும் அசோக் சிங்கால் போன்ற வெறியர்களிடமிருந்து மட்டும் வரவில்லை. ஆனால் முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த்சின்கா போன்ற மூத்த தலைவர்களிடமிருந்தும் வந்தது. அத்வானியின் பேச்சை சங்பரிவாரின் தத்துவத்தை நீர்த்துப்போகச் செய்வது என யஷ்வந்த் சின்கா வர்ணித்தார். கட்சியிலிருந்து அவரது நெருங்கிய நண்பர்கள் கூட ஜாக்கிரதையாக மௌனம் சாதித்தனர்.

கட்சித் தலைவர் பதவியிலிருந்து அவர் விலக வேண்டுமென்று கோரி அவரது ராஜினாமாவைப் பெறும் அளவிற்கு விஎச்பியும் ஆர்எஸ்எஸ்சும் அதிகக் கோபமடைந்தன. தன்னுடைய பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பாகிஸ்தானில் எடுத்த கருத்து நிலையிலிருந்து அத்வானி பின்வாங்க வேண்டியிருந்தது. யாருடைய கட்டளை பரிவாரத்திற்குள் செல்லுப்படியாகிறது என்பதை ஆர்எஸ்எஸ் மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியது.

சங்பரிவாரின் உடடினயான கடும் எதிர்வினையை, பாகிஸ்தான் மற்றும் முஸ்லீம்கள் அதன் அரசியல் தத்துவத்தில் என்ன இடத்தில் இருக்கிறார்கள் என்ற பின்னணியில் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். முஸ்லீம்கள் மற்றவர்கள் (அவர்கள்) என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்து வகுப்புவாதத் தத்துவம் அவர்களை அந்நியர்களாகக் கணக்கிட்டது மட்டுமின்றி அவர்களது மதவெறியும் கலாச்சார செல்வங்களை அழிக்கும் குணமும் இந்திய நாகரீகத்திற்கு கணக்கிட முடியாத அளவு சேதத்தை உண்டு பண்ணியதாகவும் கருதுகிறது. வி.டி. சாவர்கர் மற்றும் மாதர் சதாசிவ கோல்வால்கர் போன்ற ஆரம்பகால வகுப்புவாத தத்துவவாதிகளால் முன்வைக்கப்பட்ட இத்தகைய கண்ணோட்டம் பின்னர் சங்பரிவாரின் அரசியல் மற்றும் அறிவுசார் நடைமுறையின் மையமாக பின்பற்றப்பட்டது. அவர்களைப் பொறுத்த வரையில், கலாச்சார ரீதியாகவோ அரசியல் ரீதியாகவோ முஸ்லீம்கள் இந்த தேசத்தைத் சேர்ந்தவர்களில்லை; முஸ்லீம்களின் தனிமையுணர்வின் விளை வாகவே பாகிஸ்தான் உருவானது. இதனால் அவர்களால் (சங்பரி வாரங்களால்) 1947-ல் சுதந்திர பாகிஸ்தான் நாடு உருவான அரசியல் யதார்த்தத்தை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. பாகிஸ்தான் முறைதவறிப் பிறந்த நாடாகக் கருதப்பட்டது. அதை இல்லாமல் செய்வது 1947-லிருந்து சங்பரிவார் இடைவிடாமல் கடைப்பிடித்து வந்த வகுப்புவாத நிகழ்ச்சி நிரலின் உள்ளார்ந்த பகுதியாக இருந்தது. ஒன்றுபட்ட இந்து நாட்டை மீண்டும் நிறுவுவது அதன் உறுதியான குறிக்கோளாக இருந்தது. பாகிஸ்தானையும் பங்களாதேஷையும் இணைத்து அகண்ட பாரதம் உருவாக்குவதன் மூலம் 1947ல் பாகிஸ்தான் உருவான வரலாற்று யதார்த்தத்தை அழிப்பது. இந்தியப் பிரிவினைக்கு இந்து தேசத்தின் மீது முஸ்லீம்களுக்கு இருந்த பகைமையுணர்வே காரணம் என்று அவர்கள் கூறினார்கள். மேலும் பிரிட்டிஷ் ஆதரவுடன் செயல்பட்ட முகமது அலி ஜின்னா இந்துக்களுக்கு ஏற்பட்ட துயரத்திற்குக் காரண கர்த்தா என்று கருதப்பட்டார். இந்த கருத்திற்காக தொடர்ந்து வாதாடி வந்தார் அத்வானி. அவர் பாகிஸ்தானில் அடித்த பல்டி சங்பரிவாரை மூச்சு திணற வைத்து விட்டது.

பாகிஸ்தானை மையமாக வைத்து வகுப்புவாதப் பிரச்சாரம் செய்யப்பட்ட போதும் உண்மையில் நாட்டிற்குள் முஸ்லீம்களை பேய் பிசாசுகளைப் போல் சித்தரிப்பதன் நீட்சியே அது. இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்ட பல பிரச்சினைகளில் முஸ்லீம் ஆட்சியாளர்களால் இந்துக் கோவில்கள் மிக வலுவானது. சங்பரிவாரின் தத்துவவாதிகள் (அல்லது அவர்கள் வரலாற்று அறிஞர்களா?) முஸ்லீம் ஆட்சியாளர்களால் 1000 கோவில்கள் இடிக்கப்பட்டதாகப் பட்டியலிட்டுள்ளார்கள். இந்தக் கோவில்களை மீண்டும் பெறுவதன் மூலம் முஸ்லீம் படையெடுப்பாளர்களால் இந்துக்களுக்கு அழைக்கப்பட்ட அவமானத்திற்குப் பழி தீர்ப்பதே வகுப்புவாதத்தின் திட்டம்.

உறங்கிக் கொண்டிருந்த ராமஜென்மபூமி கோவில் கட்டுவதற்கான இயக்கத்திற்கு உயிரூட்டினார் அத்வானி. ராமஜென்மபூமி கோவில் முகலாயப் பேரரசர் அக்பரின் படைத் தளபதி மீர் பாகியால் மசூதி கட்டுவதற்காக இடிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. சோம்நாத்திலிருந்து அயோத்திக்கு அத்வானியால் நடத்தப்பட்ட ரதயாத்திரை இறுதியில் மசூதியை இடித்துத் தள்ளுவதை சாத்தியமாக்கியது; இந்திய நாகரீகத்தின் மீது ஆழமான தழும்பை உண்டாக்கிய அச்சம்பவமானது தற்கால இந்திய வரலாற்றின் நிர்ணயகரமான ஒரு தருணமாகும். சமீபகாலங்களில் காணப்பட்டவற்றில் மதரீதியான அணி திரட்டல்களில் மிகவும் சக்தி வாய்ந்த இயக்கமான அது பாஜகவிற்கு கணிசமான அரசியல் ஆதாயங்களைப் பெற்றுத் தந்தது. இதன் விளைவாக, இந்து அபிலாஷைகளை ஈடேற்றியவர், அதன் மூலம் பாஜகவின் அரசியல் வெற்றிக்கு பாடுபட்டவர் என்று அத்வானி புகழப்பட்டார். கடந்த தேர்தலில் பாஜகவிற்கு ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, முன்பு போலவே கட்சிக்கு சக்தியூட்டுவார் என்ற எதிர்பார்ப்புடன் அத்வானி மீண்டும் கட்சித் தலைவராக்கப்பட்டார்.

பாகிஸ்தான் பயணத்தின் அர்த்தம்

அத்வானியின் பாகிஸ்தான் பேச்சுக்கள் மேற்குறிப்பிடப்பட்ட சங்பரிவாரின் அடிப்படையான கருத்துக்களுக்கு முரணாக இருந்தது. இந்தக் கருத்துக்களை உருவாக்கவும், பரப்பவும், நிலை நாட்டவும் அத்வானியே உதவியிருக்கிறார். பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட வகையில் யுத்த வெறியராகக் கருதப்படும் அந்த அத்வானி, பரிவாரத்தால் தொடர்ந்து பிடிவாதமாக எதிரியாக சித்தரிக்கப்படும் ஒரு நாட்டிற்கு, அதனுடன் நட்புறவை வளர்ப்பதற்காக பயணம் மேற்கொண்டதை முந்தைய நிலைப்பாட்டிலிருந்து விலகிச் செல்வதாகக் கூறலாம். அவர் அரசாங்கத்தின் உறுப்பினர் என்ற முறையில் சடங்கை நிறைவேற்றவொன்றும் அவர் சொல்ல வில்லையே! ஆகவே இந்தப் பயணமானது பாகிஸ்தான் எனும் நாட்டை அங்கீகரிக்கத் தயராக இருப்பதைக் குறிக்கிறது. இன்னும் முக்க்கியமாக போற்றி வளர்க்கப்பட்ட அகண்ட பாரத லட்சியத்தைக் கைவிடுவதையும் குறிக்கிறது. இப்பயணத்தின் அரசியல் அர்த்தம் குறித்து பாகிஸ்தானும் சங்பரிவாரும் உணர்ந்தே இருந்தன. ஆகவே, பகையான கடந்த காலம் இருந்த போதும், பாகிஸ்தான் அதிகாரிகள் இப்பயணத்தைப் பெரிதுபடுத்தினர். தங்களுடைய தத்துவார்த்த திட நம்பிக்கைகளின் மீது அப்பயணம் தொடுத்த பலத்த அடியால் சங்பரிவாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

பாபர் மசூதி இடிப்பைத் தூண்டிவிட்டவர்களில் பிரதானமான வரான அத்வானி மசூதி இடிப்பிற்கு வருத்தம் தெரிவிப்பதற்கு இப்பயணத்தை ஒரு வாய்ப்பாகவும் பயன்படுத்திக் கொண்டார். மசூதி இடிக்கப்பட்ட தினம் தன் வாழ்நாளின் மிக இருண்ட தினம் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இது போன்ற உணர்வுகளை அதற்கு முன்பாக, வெளிப்படுத்தியிருந்த போதும் பாகிஸ்தானில் பேசியது கூடுதல் முக்கியத்துவம் பெற்றது. முஸ்லீம் உலகத்திற்கு அளிக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் போலவும் மன்னிப்பு கோருவது போன்ற தொனியிலும் அது இருந்தது. சங்பரிவாரத்திற்கோ மசூதி இடிப்பு வருத்தப்படுதவற்கான விஷயமல்ல. அதை மத மற்றும் தேசபக்த செயலென்று ஆரவாரம் செய்தது; இந்து தேசிய பெருமிதத்தையும் சுயமரியாதையையும் மீட்டெடுத்த செயல் என்றது. வாஜ்பாய் கூட அதை தேசிய உணர்வுகளின் வெளிப்பாடு என்று வர்ணித்தார். மசூதி இடிப்பிற்கும் அப்பால் ஒரு அர்த்தத்தை அச்செயலின் மீது சங்பரிவார் சுமத்தியது. முஸ்லீம்கள் செய்த வரலாற்றுத் தவறுக்குப் பழிவாங்கும் அடையாளச் செயல் என்று அர்த்தம் கற்பித்தது. அவர்களது குறி மசூதி அல்ல; உலகம் முழுவதும் இருக்கும் முஸ்லீம்கள். ஆகவே, மசூதி இடிப்பின் மூலம் மீட்டெடுக்கப்பட்ட சுயமரியாதையை அத்வானி அழித்து விட்டது போல் சங்பரிவாருக்குத் தோன்றியது.

தத்துவம் பலஹீனப்படுத்தப்பட்டது

“இந்து ராஷ்டிரா” எனும் கருத்தாக்கத்தைச் சுற்றிக் கட்டமைக்கப் பட்ட இந்து வகுப்புவாத சக்திகளின் தத்துவார்த்த பிணைப்பு சில காலமாக சிக்கலில் இருந்து வந்தது. இந்து வகுப்புவாத நிகழ்ச்சி நிரலில் மையமாக இருக்கக் கூடிய பிரச்சனைகளில் ஆர்எஸ்எஸ்சும் விஎச்பியும் பாஜகவும் வெவ்வேறு குரல்களில் பேசின. கூட்டணி அரசியல் நிர்ப்பந்தத்தாலும் அதிகாரத்தை அடைவதற்காகவும் ராமர் கோவில், அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு மற்றும் பொதுசிவில் சட்டம் ஆகிய பிரச்சனைகளை முடக்கி வைக்க பாஜக ஒப்புக் கொண்டது. இவ்வாறாக தன்னுடைய அரசியல் எதிர்காலத்தை விருத்தி செய்து கொள்ளவும் இப்படிச் செய்தது. வீரியம் குறையாமல் வகுப்புவாதப் பாதையைக் கடைப்பிடிக்க பாஜக தலைமை காட்டிய தயக்கம் சங்பரிவாரின் இதர பிரிவுகளை பெரிதாக மகிழ்ச்சியடையச் செய்யவில்லை. மதச்சார்பின்மையை ஒரு அரசியல் நடைமுறை என்ற வகையில் மறுத்தத்தைச் சுற்றியே அவர்களது செல்வாக்கும் ஆதரவு அணிகளும் கட்டப்பட்டது என்பது பொதுவாக பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்து.

எதிர்க்கட்சியாக இருந்த வரை இந்துத்துவ நிகழ்ச்சி நிரலுக்காக வாதிடும் கட்சியாக பாஜக தன்னை முன்னிறுத்திக் கொண்டது. ஆனால் கூட்டணி அரசியலுக்குள் நுழைந்தவுடன் அதனால் முடியவில்லை; மாறாக மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்காக இந்துத்துவத்தின் மையப் பிரச்சனைகளில் கூட சமசரம் செய்து கொள்ள வேண்டியிருந்தது. இதனால், பாஜக தலைமையிலான அரசாங்கம் இந்து வகுப்புவாத நிகழ்ச்சி நிரலை அனுசரித்த போதும் அதனால் இந்துத்துவ திட்டத்தை முழுமையாக அமுல்படுத்த முடியவில்லை. குறிப்பாக, ராமர் கோவில் கட்டுவது, பொது சிவில் சட்டத்தை அறிமுக்கப்படுத்துவது மற்றும் அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவை ரத்து செய்வது போன்றவை.

இதன் விளைவாக, பாஜகவிற்கும் பரிவாரத்தின் இதர உறுப்பினர்களுக்குமிடையே சிக்கல் வளர்ந்தது. வாஜ்பாயின் தாராளவாதம் சங்பரிவாருக்கு வெறுப்பைத் தந்தது. தங்களின் கோரிக்கைகளுக்கு அத்வானி கூடுதல் விசுவாசமாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்த்தது. ஆனால் கூட்டணி செயல்பாட்டிற்காக வாஜ்பாயும், அத்வானியும் மிகவும் கவனமாக நடக்க வேண்டியிருந்தது; மற்றும் ஆர்எஸ்எஸ் மற்றும் மற்றும் விஎச்பியிடமிருந்து சுதந்திரமானவர்கள் போன்ற வெளித்தோற்றத்தை பாவனை செய்ய வேண்டியிருந்தது. அவ்வாறு செய்யும் போது சங்பரிவாரின் இதர உறுப்பினர்களுடனான உறவைத் தேவையின்றி சிக்கலாக்காமல் கூட்டணியை விரிவுபடுத்த முடியுமென்றும், கட்சிக்கென்று சுதந்திரமான தளத்தை செதுக்கி எடுத்துக் கொள்ள முடியுமென்றும் நம்பினார்கள். எனினும் இது ஆர்எஸ்எஸ் மற்றும் விஎச்பியிலும் கணிசமான அமைதியின்மையை உருவாக்கியது. ஆகையால் அவர்கள் வாஜ்பாய் மற்றும் அத்வானியை விமரிசப்பவர்கள் ஆனார்கள். இந்து நலன்களை அனுசரிக்க பாஜக தலைமை தயங்கியதால் தான் தேஜகூ தோல்வியடைந்தது என விஎச்பியும் ஆர்எஸ்எஸ்சும் குற்றம் சாட்டின.

தேர்தல் தோல்வி ஆர்எஸ்எஸ்சுக்கும் பாஜகவின் ஒரு பகுதிக்கும் இடையிலான பிளவை அதிகரித்தது. இன்னும் கூடுதலான அடிப்படைவாத நிலை எடுக்க வேண்டுமென்றும் இந்துத்துவ தத்துவத்தின் அடிப்படையில் இந்துக்களை திரட்டினால் மட்டுமே கட்சி மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்று ஆர்எஸ்எஸ் நம்பியது. ஆதிவாசிகளையும் தலித்துகளையும் இந்துக்களாக்கும் செயல்பாடுகளை விரிவாக்கியதன் மூலம் ஆர்எஸ்எஸ்சும் விஎச்பியும் இத்திசையில் நடவடிக்கைகளைத் துவக்கின. இதற்கு மாறாக, மதரீதியான ஆதரவு தளத்தை விட்டுக் கொடுக்காமலும், ஆனால் முழுமையாக அதையே சார்ந்தது இராமலும் கட்சிக்கு மித வலதுசாரி தோற்றத்தை உருவாக்குவதில் மட்டுமே கட்சிக்கு எதிர்காலம் இருக்கிறது என்பதை வாஜ்பாய் மற்றும் அத்வானி மற்றும் நவீன இரண்டாம் தலைமுறை தலைவர்களைக் கொண்ட பாஜகவின் ஒரு பகுதியினர் உணர்ந்திருந்தனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாதிக் கட்சிகளின் செல்வாக்கு, இடதுசாரி கட்சிகளின் ஆதரவாளர்களின் எண்ணிக்கை சீராக உயர்ந்து வருவது, சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் புதிய சக்தியும், உற்சாகமும் கண்டு வருவது என்ற பின்னணியில் அதிகாரத்தை மீண்டும் பெறும் அளவிற்கு பாஜகவின் இப்பகுதி உணர்ந்தது. எனவே மக்கள் தொகையின் பெரும்பகுதியினரை ஈர்க்கக் கூடிய வகையிலான திருத்தல் வாதக் கொள்கையே உசிதமென இவர்கள் கருதினர். அத்வானியின் பாகிஸ்தான் பேச்சுக்கள் நடைபெறக் கூடிய இந்தப் பாதை மாற்றத்திற்கான முன்னோடியாகும். போதுமான தயாரிப்புகள் இல்லாததாலும், சரியான காலத்திற்கு முன்னரே பேசியதாலும் அது குறிதவறியது.

தேஜகூ ஆட்சிக் காலத்தில் பாஜகவிற்கென சுயேட்சையான தளத்தை உருவாக்கி எடுக்க வாஜ்பாயும், அத்வானியும் முயற்சித்து கொண்டிருந்தார்கள் என்பதை ஆர்எஸ்எஸ் அறிந்தே இருந்தது. இந்து ஆட்சி நீடிக்க வேண்டுமென்ற அக்கறையினால் அதனால் அப்போது வெளிப்படையாக எதுவும் சொல்ல முடியவில்லை. மேலும் வாஜ்பாயும், அத்வானியும் இந்திய அரசியலில் சங்பரிவாரில் வேறு எவரும் ஈடு என்று சொல்ல முடியாததொரு நிலையை பெற்றிருந்தனர். இதனால் அவர்களால் ஓரளவு தாராளத் தன்மையை பிரயோகிக்க முடிந்தது. ஆர்எஸ்எஸ் மற்றும் விஎச்பியால் நிர்ப்பந்தம் கொடுக்கப்படும் போது திரித்து; புரட்டிப் பேசி சமாளிக்கவும் முடிந்தது. (ஆர்எஸ்எஸ்-விஎச்பியை முற்றிலும் சார்ந்திராமல்) சுதந்திரமாக இருப்பதற்காக இத்தலைவர்கள் முயற்சித்தது ஆர்எஸ்எஸ் மற்றும் விஎச்பியை கோபமடையச் செய்ததும், இது அத்தலைவர்களிடம் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்பட்டதும் பதிவாகியுள்ளது.

புது இந்துக் கட்சியொன்றை அமைக்கப் போவதாக விஎச்பி அடிக்கடி எச்சரித்தது. ஆர்எஸ்எஸ் அதன் தலைவர்களை அவ்வப்போது அழைத்து சமாதனம் செய்தது. இந்த மோதலின் விளைவாக ஆர்எஸ்எஸ் தலைவர் கே.எஸ். சுதர்சன் அத்வானியும் வாஜ்பாயும் இளம் தலைவர்களுக்கு வழிவிட வேண்டுமென்று கோரினார். குறைவான அந்தஸ்துள்ள தலைவர்களை சுதர்சன் தேடிக் கொண்டிருந்தார். ஏனெனில் அவர்களை ஆர்எஸ்எஸ்சின் சொல்படி கீழ்படியச் செய்ய முடியும். மரண அடி கொடுப்பதற்கு முன்னர் நட்பு ரீதியில் வழங்கப்பட்ட ஆலோசனையாகும் அது.

அத்வானியின் பாகிஸ்தான் பேச்சுக்களை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி அது தாக்கியது. இருந்த போதிலும், தாக்குதலுக்கான காரணம், சங்பரிவாரின் தத்துவத்திலிருந்து விலகிச் சென்ற அத்வானியின் பேச்சுக்களை விட மிக மிகத் தீவிரமானது. இந்த வாய்ப்பை பரிவாரத்திறக்குள் தன்னுடைய மேலதிகாரத்தை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு ஆர்எஸ்எஸ் பயன்படுத்திக் கொண்டது. மேலும், பாஜக தலைவர்களுக்கு அவர்களுடைய கட்சியொன்றும் சுயேட்சையான அமைப்பல்ல, ஆர்எஸ்எஸ்சின் கீழ் செயல்படும் அதன் அரசியல் அங்கமே என்பதை நினைவூட்டவும் பயன்படுத்திக் கொண்டது. ஐந்தாண்டு காலம் அதிகாரத்தில் இருந்த போது அனுபவித்த சுதந்திரம் வேறுவிதமான எண்ணத்தை உருவாக்கியிருந்தால் பாஜக அதை உடனடியாகத் திருத்திக் கொள்ள வேண்டும். அத்வானி விவகாரம் யாருடைய கையில் சாட்டை இருக்கிறது என்பதில் எந்த சந்தேகத்திற்கும் இடம் வைக்கவில்லை. இரும்பு மனிதரை இவ்விதமாக பணிய வைக்க முடியுமென்றால் கட்சியின் சிறிய தலைவர்கள் எம்மாத்திரம்? ஆர்எஸ்எஸ் தன் அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொண்டதானது நாட்டின் எதிர்கால அரசியலில் ஏற்படுத்தக் கூடிய அபாயகரமான விளைவுகளைக் கவனிக்காமல் விட முடியாது. ஏனெனில் ஆர்எஸ்எஸ்சின் பிடி இறுகுவதன் அர்த்தம் என்னவெனில் பாஜக இன்னும் கூடுதலான அடிப்படை வாத மற்றும் இருண்மைவாத அரசியல் பாதையை மேற்கொள்ளக் கூடும் என்பதாகும்.

நன்றி: பிரண்ட்லைன், ஜூலை 1, 2005