சோவியத் ஒன்றியத்தின் சோசலிச பொருளாதார சாதனைகள்

ஸ்டீஃபன் கோவன்ஸ்

சிறப்புமிகு சோவியத் ஒன்றியம்

முதலாளித்துவத்துடன் ஒப்பிடுகையில், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமை அடிப்படையிலான திட்டமிட்ட பொருளாதாரம், குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாகச் செயல்பட்டது.

பொதுவுடைமை அடிப்படையிலான திட்டமிட்ட பொருளாதாரம் எதையெல்லாம் உருவாக்கமுடியும் என்பதற்கு, சோவியத் ஒன்றியம் ஒரு நிலையான உதாரணமாகும். முழு நேர வேலைவாய்ப்பு, உத்தரவாதப்படுத்தப்பட்ட ஓய்வூதியம், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, வேலை நேர உச்சவரம்பு, இலவச மருத்துவம் மற்றும் கல்வி (உயர்கல்வி உட்பட), மானியத்துடன் கூடிய விடுமுறைகள், கட்டுப்படியாகும் விலையில் வீடுகள், குறைவான குழந்தை பராமரிப்புச் செலவுகள், குறைந்த செலவில் பொதுப் போக்குவரத்து மற்றும் ஏறத்தாழ சமமான வருமானம். நம்மில் பெரும்பாலானோர் இந்த வசதிகளை விரும்புகிறோம். ஆயினும், இவற்றை நிரந்தரமாக அடைய முடியுமா? சோவியத் ஒன்றியம் இந்த வசதிகளை உருவாக்கியது.

சோவியத் ஒன்றியத்தில் பொதுவுடைமை அடிப்படையிலான திட்டமிட்ட பொருளாதாரம் நடைமுறையிலிருந்தபோது, 1928 முதல் 1989 வரை, போர்க்காலம் தவிர பிற சமயங்களில், நம்பிக்கையளிக்கும் விதத்தில் பொருளாதாரம் ஆண்டுதோறும் வளர்ச்சி அடைந்தது. தெளிவாகக் கூறுவதென்றால், முதலாளித்துவப் பொருளாதாரங்கள் ஒவ்வொரு சில ஆண்டுகளுக்கு ஒருமுறை பின்னடைவை தவறாது சந்தித்து, பெரிய மந்தநிலையில் மூழ்கியிருந்த போதும், சோவியத் பொருளாதாரம் இடையறாது வளர்ந்து, அனைவருக்கும் எப்பொழுதும் வேலைவாய்ப்புகளை வழங்கியது. சோவியத் ஒன்றியத்தின், பொதுவுடைமை அடிப்படையிலான திட்டமிட்ட பொருளாதாரமானது, செயல்பட முடியாதது என்ற முதலாளித்துவ பிரச்சாரத்தை பொய்ப்பித்து, குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டியது. மாறாக, பெருவாரியான மக்களுக்கு வேலையின்மை மற்றும் உச்சக்கட்ட வறுமையை அளித்த, பொருளாதார மந்தம் மற்றும் பின்னடைவுகளை வழக்கமாகக் கொண்டிருந்த, முதலாளித்துவ பொருளாதாரம்தான் செயல்பட முடியாததாக உள்ளது. இன்று, எல்லாவற்றிற்கும் மேலாக, முதலாளித்துவம் சுருங்கி, சுணக்கமடைந்து, எண்ணற்ற மக்களை செயலற்ற நிலைக்குக் கட்டாயமாகத் தள்ளியுள்ளது என்பது தெளிவு.

சோவியத் வீழ்ச்சியில் ஏகாதிபத்தியத்தின் பங்கு

உண்மையில் சோவியத் ஒன்றியத்தின் அழிவுக்கு வழிவகுத்தவை எவையெனில், சோவியத்தின் பொருளாதாரத்தை அழிப்பதற்கு திட்டமிட்டவகையில் தொடர்ந்த மேற்குலகின் முயற்சிகள்; ரீகன் நிர்வாகத்தின் கூர்மைப்படுத்தப்பட்ட பனிப்போர்; இந்த இக்கட்டான சூழலில் இருந்து வெளிவர ஒரு வழி கண்டுபிடிக்கத் தெரியாத சோவியத் தலைமையின் இயலாமை ஆகியவையே ஆகும்.

1980களில் பனிப்போரின் பாதிப்புகள் சோவியத் ஒன்றியத்தில் தெரிய ஆரம்பித்தன. தனது தத்துவார்த்த எதிரியான அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு எதிராக, சோவியத் மேற்கொண்ட இராணுவப் போட்டி பலவகையிலும் அதன் பொருளாதார வளர்ச்சியைப் பாதித்தது. பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருந்த போதிலும், கடந்த காலத்தைவிட மெதுவான வேகத்திலேயே வளர்ச்சி இருந்தது.

முதலாவதாக, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான அதன் சிறந்த வளங்கள் இராணுவத்தால் ஏகபோகமாக்கிக் கொள்ளப்பட்டன. குடிமக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான சிறந்த விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள் மற்றும் இயந்திரக் கருவிகளின் பயன்பாடு, இராணுவத்திற்கு மட்டுமானதாக ஆக்கப்பட்டது.

இரண்டாவதாக, சோவியத்தின் பொருளாதாரத்தை முடக்குவதற்காக ரீகன் நிர்வாகத்தால் வெளிப்படையாகவே ஆயுதப் போட்டி புதுப்பிக்கப்பட்டது. இதற்கு ஈடுகொடுக்க, சோவியத்தின் இராணுவச் செலவினங்கள் உயர்த்தப்பட்டன. அமெரிக்க ஆக்கிரமிப்பை தடுப்பதற்காக, சோவியத் ஒன்றியம் தனது தாங்கும் சக்தியை மீறி, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகப்பெரிய சதவிகிதத்தை, இராணுவத்திற்காக செலவழித்தது.  அதே நேரத்தில், அமெரிக்கர்களும் இராணுவத்திற்காக ஒரு பெரும் தொகையை செலவழித்தபோதிலும், அமெரிக்காவின் மிகப்பெரிய பொருளாதாரத்தின் மொத்த தேசிய வருமானத்தில் அது சமாளிக்கக்கூடிய அளவுக்கே இருந்தது.

மூன்றாவதாக, முக்கியமான மூலப் பொருட்களுக்காக, சோவியத் ஒன்றியம் வெளிநாட்டு இறக்குமதியை நம்பியிருந்தது. தன் நாட்டை மண்டியிடச் செய்வதற்காக மற்ற நாடுகள் விநியோகத்தைத் தடை செய்யும் அபாயங்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, சோவியத் ஒன்றியம் தனது பரந்துபட்ட சொந்த எல்லைக்குள்ளிருந்து மூலப்பொருட்களை அகழ்ந்து எடுக்க முடிவு செய்தது. இது, நாட்டைத் தன்னிறைவு அடையச்செய்த அதே வேளையில், உள்நாட்டு ஆதாரங்களை மட்டுமே நம்பியிருக்கச் செய்தது. எளிதில் கிடைத்துவந்த வளங்கள் தீர்ந்துவிட்டதால், கடினமான வழிகளில், புதியதாக மூலப் பொருட்களைத் தேடவேண்டிய தேவை ஏற்பட்டது. இது உற்பத்தி செலவை அதிகரித்தது.

நான்காவதாக, நாட்டின் பாதுகாப்பிற்காக சோவியத்துகள், கிழக்கு ஐரோப்பாவுடனும் மூன்றாம் உலக நாடுகளுடனும் நட்பை நாடினர். ஆனால் நட்பு பாராட்டிய நாடுகளைவிட சோவியத் ஒன்றியம் பொருளாதார பலத்துடன் இருந்தது. எனவே, அது தன்னுடன் இணைந்த சோஷலிச நாடுகளையும், மேற்கத்திய சக்திகளின் ஆக்கிரமிப்பிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளப் போராடிய பிற நாடுகளின் விடுதலை இயக்கங்களையும் பாதுகாக்க, அந்த நாடுகளுக்கு அச்சாணியாகவும், அவற்றிற்குப் பொருளாதார நலன்களை வழங்கக் கூடியதாகவும் மாறியது. எனவே, அதன் கூட்டாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால், வாஷிங்டன், கம்யூனிச எதிர்ப்புக் கிளர்ச்சிகளுக்கு ஆதரவாக சூழ்ச்சி செய்து, ஆயுதம் மற்றும் நிதி உதவி செய்தது. இதனால் மாஸ்கோ தன் கூட்டாளிகளுக்காகச் செய்யும் செலவுகள் அதிகரித்தன. இதன் காரணமாக, சோவியத் ஒன்றியத்தின் பாதுகாப்பு செலவுகள் தொடர்ந்து அதிகரித்து, அதன் பொருளாதார வளர்ச்சியை தீவிரமாக பாதித்தன. 

நாட்டின் கடைசித் தலைவரான மைக்கேல் கோர்பச்சேவ் நட்பு நாடுகளிடமிருந்து இராணுவ தளங்களைத் திரும்பப்பெற்று, பனிப்போரை முடிவுக்குக் கொண்டுவந்து, அமெரிக்காவுடன் ஒத்துழைக்க உறுதியளித்தார். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, மேற்கத்திய பாணி சமூக ஜனநாயகத்திற்கு சோவியத் ஒன்றியத்தை மாற்ற முனைந்தார். ஆனால், அவரது பொருளாதார மற்றும் அயலுறவு சரணாகதிக் கொள்கைகள், பொருளாதார தேக்கத்திலிருந்து நாட்டை மீட்பதற்கு பதிலாக பேரழிவிற்கே வழிவகுத்தன. சோவியத் ஒன்றியத்தின் பாதுகாப்புக் கரங்கள் விலக்கப்பட்ட நிலையில், அமெரிக்கா, ஈராக்கில் தொடங்கி யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான், மீண்டும் ஈராக், பின் லிபியா என சிறியதும் பெரியதுமாக உலகம் முழுவதும் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புகளில் இறங்கியது. கோர்பச்சேவ் பொருளாதாரத் திட்டமிடலைக் கைவிட்டு, சந்தைப் பொருளாதாரத்தை செயல்படுத்துவதற்கான வழியை அகலத் திறந்துவிட்டதானது, நாட்டை நெருக்கடிக்குள் தள்ளியது. ஐந்து ஆண்டுகளுக்குள் ரஷ்யாவில், வேலையின்மை, வீடில்லாமை, சுரண்டல், பொருளாதார பாதுகாப்பின்மை ஆகியவை வன்மத்துடன் மீண்டும் குடியேறின.

1991 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று, சோவியத் ஒன்றியம் என்பது அதிகாரப்பூர்வமாக இல்லாது ஒழிந்த நிலையில், கோர்பச்சேவ், “நாம் ஒரு புதிய உலகில் வாழ்கிறோம். பனிப்போர் முடிவுக்கு வந்துவிட்டது. நமது பொருளாதாரம் மற்றும் சமூக விழுமியங்களைச் சிதைத்த இராணுவமயமாக்கல் மற்றும் வெறித்தனமான ஆயுதப் போட்டி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. உலகப்போரின் அச்சுறுத்தல் நீக்கப்பட்டது” என்று கூறினார். (ராபர்ட்ஸ், 1999). இதனால் மேற்குலகில் கோர்பச்சேவின் புகழ் பரவியது. ஆனால் ரஷ்யர்கள் சோர்வுற்றிருந்தனர். முதலாளித்துவத்திற்கு மாற்றாக, உலகில் முதன்முதலில் உருவான முயற்சி ஏன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது என்பதற்கான உண்மையான காரணங்கள் கோர்பச்சேவின் வார்த்தைகளுக்குள் அடங்கியிருந்தன. சோவியத் பொருளாதார அமைப்பு செயல்படமுடியாது என நிரூபிக்கப்பட்டதால் அல்ல. உண்மையில் அது முதலாளித்துவத்தை விட சிறப்பாகச் செயல்பட்டது. இரண்டாம் உலகப்போரின் முடிவில் தொடங்கி, ரீகன் ஆட்சிக்காலத்தில் வீரியத்துடன் வளர்ந்த ஆயுதப் போட்டியால், சோவியத் ஒன்றியத்தின் பொருளாதாரத்தை வீழ்த்த முயன்ற பகையாளியான அமெரிக்காவிற்கு, சோவியத்தின் தலைமை அடிபணிந்ததே அதன் அழிவுக்கான உண்மையான காரணம். நாட்டின் 99 சதவீதம் பேருக்கு செழிப்பை அளித்த சோவியத் பொருளாதாரம் போற்றி வளர்க்கப்பட்டிருந்தால், மேல்மட்டத்தில் உள்ள ஒரு சதவீதம் பேருக்கு மட்டுமே பயன்தரும் தனியார்மய சந்தைப் பொருளாதாரங்களை அது மதிப்பிழக்கச் செய்திருக்கும். சுதந்திரச் சந்தைப் பொருளாதாரத்தில், மேல் மட்டத்தில் இருக்கும் ஒரு சதவீதத்தினரின் தனி உரிமையாக சொத்துக் குவிப்பு, சமூகப் பாதுகாப்பு, சொகுசு வாழ்க்கை அமைய, பெருவாரியான மக்களின் வேலையின்மை, வறுமை, பசி, கீழ்மை மற்றும் பொருளாதார பாதுகாப்பின்மை ஆகியவை இன்றியமையாதவையாக உள்ளன.

தோழர் ஸ்டாலின் ஒலித்த எச்சரிக்கை

பொதுவுடைமை அடிப்படையில் திட்டமிட்ட பொருளாதாரம், ஸ்டாலினின் வழிகாட்டுதலின் கீழ் கட்டியெழுப்பப்பட்டது. அவர் ஒருமுறை தீர்க்க தரிசனத்தோடு, “சோவியத் குடியரசைத் தகர்ப்பதில் முதலாளித்துவம் வெற்றி பெற்றால், அனைத்து முதலாளித்துவ மற்றும் காலனி நாடுகளிலும் ஓர் இருண்ட சகாப்தம் அரங்கேறும். ஒடுக்கப்பட்ட மக்களின், தொழிலாளி வர்க்கத்தின் குரல்வளை நெறிக்கப்படும். கம்யூனிசத்தால் அடைந்த முன்னேற்றங்களை இழக்க நேரிடும்”, என எச்சரித்தார். (ஸ்டாலின், 1954). “நம் நாடு தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராவதற்கு 10 ஆண்டுகள் மட்டுமே உள்ளன”‘ என நாஜிப் படையெடுப்பு ‘ஆபரேஷன் பார்பரோசா’விற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டாலின் துல்லியமாகக் கூறியதுபோலவே, முதலாளித்துவத்தினால் வீழ்த்தப்படுவதன் பின்விளைவுகளையும் துல்லியமாகக் கணித்தார்.

உண்மையாகவே நாம் தற்போது இருண்ட சகாப்தத்தில் உள்ளோம். இராணுவ வலிமையைப் பயன்படுத்தி, வாஷிங்டனுக்கு தன்னுடைய பிற்போக்குத்தனமான நிகழ்ச்சி நிரலைத் தொடர பரப்பளவு அதிகரித்துள்ளது. கியூபாவும் வடகொரியாவும் பொதுவுடைமையை மையப்படுத்தி திட்டமிடுகின்றன. ஆனால் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பொருளாதாரத் தடைகள், தந்திரமாகத் தனிமைப்படுத்தல் மற்றும் இராணுவ ரீதியான துன்புறுத்தல்கள் (சோவியத் பொருளாதாரத்திற்கு செய்ததுபோலவே) ஆகியவற்றைப் பயன்படுத்தி அப்பொருளாதாரங்களை நாசம் செய்துவருகின்றன. இதன் மோசமான விளைவுகளை, பொதுவுடைமை அடிப்படையிலான திட்டமிடலின் குறைபாடுகள் என போலியாகக் குற்றம் சுமத்திவிடலாம். உண்மையில் அவை முறையாகத் திட்டமிடப்பட்டு, இரகசியமாக நடத்தப்படும் போரின் விளைவுகளாகும். சோவியத் பொருளாதார அமைப்பு தோல்வியுற்றது என்று திட்டமிட்டு பரப்பப்பட்டதானது, கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் உட்பட பலரையும், பொதுவுடைமை அடிப்படையிலான திட்டமிடல் அமைப்பு உள்ளார்ந்த குறைபாடுடையது என்ற முடிவுக்கு இட்டுச்சென்றது. கம்யூனிஸ்டுகள், சமூக ஜனநாயகக் கட்சிகளுக்குத் தாவினர்; அல்லது தீவிர அரசியலை முற்றிலுமாகக் கைவிட்டனர். சமூக ஜனநாயகக் கட்சிகளோ வலதுசாரிகளாக மாறி, சீர்திருத்தங்களைத் தவிர்த்து, புதிய தாராளமயத்தைத் தழுவின. எனவே, மேற்கத்திய அரசுகளுக்கு, பொதுவுடைமைக்கான கோரிக்கைகளை மழுங்கடிக்கவேண்டிய அவசியம் இல்லாது போயிற்று. அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்ற இலக்கை முழுவதுமாகக் கைவிட்டு, இனி பொது சேவைகள் மக்களுக்குக் கட்டுப்படியாகும் விலையில் கிடைக்காது என்று அறிவித்தன (கோட்ஸ், 2001). அதே நேரத்தில் முன்னாள் சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய கம்யூனிஸ்ட் நாடுகளில் கொண்டுவரப்பட்ட தனியார்மயமானது கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது. அது, முன்னரே கணித்தபடி, ஊதிய மட்டத்தில் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சோவியத் ஒன்றியம் தோல்வியைத் தழுவிய நாள், மூலதனத்திற்கு ஒரு நல்ல விடியல் நாளாகும். ஆனால் மற்றவருக்கோ, ஸ்டாலின் எச்சரித்தபடி, அது குரல்வளையை நெறித்த நாளாகும்.

நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் முதலாளித்துவம்

உலகின் மிகப்பெரிய முதலாளித்துவப் பொருளாதாரங்கள் 2008லிருந்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. சில, சிக்கன நடவடிக்கை எனும் மரணச் சுழலில் அகப்பட்டுள்ளன. இன்னும் சில, மெல்ல மெல்ல வளர்ந்துவரும் மந்த நிலையின் பிடியில் சிக்குண்டுள்ளன. சிக்கனம் என்ற பெயரில் பொது சேவைகளை அகற்றுவது என்பது, பரிந்துரைக்கப்பட்ட போலியான தீர்வு. உண்மையான தீர்வு கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரியவில்லை. அதிகாரப்பூர்வ அறிக்கைகளின்படி, ஐரோப்பாவின் சில பகுதிகளில் வேலைவாய்ப்பின்மை இரட்டை இலக்கத்தைத் தொட்டுள்ளது. இளைஞர்களின் வேலையின்மை இன்னும் அதிகமாக உள்ளது. ஒரு கோடியே 10 லட்சம் மக்கள் வசிக்கும் கிரீஸில் 37 இலட்சம் பேர் மட்டுமே வேலை செய்கிறார்கள் (வாக்கர் மற்றும் ககௌனகி 2012).

மேலும், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் சோவியத் ஒன்றியத்தை சிதைக்க, திட்டமிட்டு செயல்பட்டதுபோல், இந்த நெருக்கடியும் ஏதோ வெளிப்புற சக்திகளால் திட்டமிடப்பட்டு முதலாளித்துவத்திற்கு அழிவைக் கொண்டு வருவதாகக் கூற முகாந்திரம் இல்லை. அப்படி யாரும் திட்டமிட்டு அதை மூச்சுத்திணற வைக்காத போதிலும்கூட, முதலாளித்துவம் செயல்படவில்லை என்பதை சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் இதற்கு நேர்மாறாக, தொடங்கப்பட்டதிலிருந்தே குறிவைக்கப்பட்டு பழிக்கு இலக்கான சோவியத் ஒன்றியத்தின் திட்டமிட்ட பொருளாதாரம், இரண்டாம் உலகப்போர் ஆண்டுகளைத் தவிர பிற சமயங்களில், ஒருபோதும் மந்தநிலையில் தடுமாறவில்லை; முழுமையான வேலைவாய்ப்பு வழங்கத் தவறவில்லை. ஆனாலும், சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் ஆதரவாளர்கள் உட்பட பலரும், இது செயல்பட முடியாது என்றே கருதுகின்றனர். இது, முற்றிலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட கருத்து.

பொதுவுடைமை அடிப்படையில் திட்டமிட்ட பொருளாதாரத்தில் உள்ளார்ந்த பலவீனம் இருந்ததாலேயே அது தோல்வியடைந்தது என்பதாக சோவியத் ஒன்றியத்தின் அனுபவம் நமக்குக் காட்டவில்லை. மாறாக, நீடித்த பொருளாதார வளர்ச்சி, அனைவருக்கும் வேலைவாய்ப்பு, இலவச மற்றும் கட்டுப்படியாகும் விலையில் அளிக்கப்பட்ட பொதுச் சேவைகளின் விரிவான பட்டியல், ஏறத்தாழ சமத்துவமான வருமானம் என முதலாளித்துவத்தால் செய்ய முடியாததை பொதுவுடைமை செய்யமுடியும் என்பதை நிரூபித்தது. ஒரு வருடம் இரு வருடமல்ல; தொடர்ந்து ஆண்டுக்கு ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் தலைமை பொதுவுடைமையிலிருந்து பின்வாங்கும்வரை இது நடந்தது. உயர்மட்டத்தில் இருக்கும் தனிவுடைமையைப் பாதுகாக்கும், ஒரு சதவிகிதத்தினர், தங்களுக்கு எதிரான இப்பொருளாதார அமைப்பை நசுக்க, அரசியல், இராணுவ, பொருளாதார மற்றும் கருத்தியல் ரீதியான அனைத்து வழிகளையும் பயன்படுத்துவார்கள் என்பதைக் கண்கூடாகக் காணமுடிந்தது. ஆனாலும், கீழ்மட்டத்தில் உள்ள 99 சத மக்களுக்காக அது நின்றது. (இன்று கியூபா மற்றும் வட கொரியாவிற்கு எதிராக இதே முயற்சி தொடர்கிறது).

சோவியத் ஒன்றியத்தின் தோல்வி ஓர் இருண்ட காலத்திற்குள் நம்மைத் தள்ளியுள்ளது. ஆயினும், அதை இழிவுபடுத்தி அழிக்க நினைப்பவர்களுக்கு எதிராகப் போராட, பொதுவுடைமை சிறப்பாக செயல்பட்டதை வெளிப்படுத்தும், 1928 முதல் 1989 வரையிலான சோவியத்தின் அனுபவம், நமக்கு உள்ளது.

பொதுவுடமைப் பொருளாதார சாதனைகள்

வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், பொருளாதார மந்தம், ஒருபுறம் செல்வக்குவிப்பு, மறுபுறம் வறுமை மற்றும் சுரண்டல் ஆகிய முதலாளித்துவத்தின் தீமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததிலும், பரந்த இலவசப் பொது சேவைகளை வழங்கியதிலும் சோவியத் பொருளாதார அமைப்பு முறையின் நன்மைகள் அறியப்பட்டன. வேலையின்மை ஒழிப்பு, சோவியத் பொருளாதார அமைப்பின் மிக முக்கியமான சாதனைகளில் ஒன்று. சோவியத் ஒன்றியம் அனைவருக்கும் வேலை வழங்கியது மட்டுமல்லாது, வேலை ஒரு சமூகக் கடமையாகக் கருதப்பட்டு, அரசியலமைப்பு சட்டத்தில் பொறிக்கப்பட்டது. 1936-ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம், சோவியத் ஒன்றியத்தின் குடிமக்களுக்கு வேலை செய்யும் உரிமையை அடிப்படை உரிமையாக்கியது. அதாவது, அவர்களது வேலையின் அளவு மற்றும் தரத்திற்கு ஏற்ப பணம் பெறுவதற்கான உத்தரவாதம் அளிக்கப்பட்டது. மறுபுறம், வேலை செய்யாமல் வேறு வழிகளில் வாழ்க்கை நடத்துவது தடை செய்யப்பட்டது. வட்டி, கருப்புச் சந்தை, ஊக வணிக இலாபம் ஆகியவற்றின் மூலம் வருமானம் பெறுவது சமூக ஒட்டுண்ணித்தனம் என்று கருதப்பட்டு சட்டவிரோதமாக்கப்பட்டது (சைமன்ஸ்கி, 1984). உழைப்பு, பற்றாக்குறையாக இருந்ததால் வேலை தேடுவது எளிதாக இருந்தது. இதன் வெளிப்படையான பலன்களாக,   தொழிலாளர்களின் வேலைப் பாதுகாப்பு மற்றும் நிர்வாகம் பணியாளர்களின் நலனில் அதிக கவனம் செலுத்துவது ஆகியவற்றில் அவர்களது பேரம் பேசும் ஆற்றல் அதிகமானது (கோட்ஸ், 2003).

சோவியத் அரசியலமைப்பு சட்டம், 1977-இன் 41வது பிரிவு ஒரு வாரத்திற்கான வேலை நேரத்தை 41 மணி நேரம் என வரையறுத்தது.  இரவுநேரப் பணியில் உள்ள தொழிலாளர்கள், 7 மணி நேரம் வேலை செய்தால், முழு ஊதியம், அதாவது 8 மணி நேரத்திற்கான ஊதியம் பெற்றனர். சுரங்கம் போன்ற ஆபத்தான வேலைகளில் ஈடுபடுவோர் அல்லது தொடர்ந்து விழிப்புடன் இருக்கவேண்டிய மருத்துவர்கள் ஆகியோர், 6 அல்லது 7 மணி நேரம் வேலை செய்தால், முழு ஊதியம் பெற்றனர். சிறப்பு சூழ்நிலைகள் தவிர, பிற சமயங்களில் கூடுதல் நேரம் வேலை செய்வது தடைசெய்யப்பட்டது (சைமன்ஸ்கி, 1984).

1960இல் இருந்து ஊழியர்களுக்கு, சராசரியாக ஒரு மாதம் விடுமுறை கிடைத்தது (கீரன் மற்றும் கென்னி, 2004; சைமன்ஸ்கி, 1984).  மானியத்துடன் கூடிய ஓய்வு விடுதிகளில், விடுமுறையைக் கழிக்க வசதி ஏற்படுத்தப்பட்டது (கோட்ஸ், 2003).

60 வயதில் ஆண்களுக்கும் 55 வயதில் பெண்களுக்கும் என, அனைத்து சோவியத் மூத்த குடிமக்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட்டது (லெரூஜ், 2010). அரசியலமைப்புச் சட்டம், 1977, பிரிவு 43இன் படி ஓய்வூதிய உரிமை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலன்கள் உத்திரவாதம் செய்யப்பட்டன. இது, முதலாளித்துவ நாடுகளில் உள்ளதைப்போல், அரசியல்வாதிகளின் தற்காலிக விருப்பங்களின்பாற்பட்டதல்ல; மாறாக திரும்பப் பெறப்பட முடியாதது.

சோவியத்தின் அரசமைப்பு சட்டம் 1936, பிரிவு 122-இன் படி, பெண்களுக்கு, பல சலுகைகளுடன், முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பும் உத்தரவாதப்படுத்தப்பட்டது. மேலும், 1936-ஆம் வருட அரசியலமைப்புச் சட்டம் மகப்பேறு இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் மழலையர் பள்ளிகள் இணைந்த, பரந்த கட்டமைப்பை ஏற்படுத்த ஏற்பாடு செய்தது. திருத்தப்பட்ட அரசியலமைப்புச் சட்டம், 1977இன் பிரிவு 53, ஒவ்வொரு குழந்தைப் பிறப்பிற்கும் மானியம்; பெரிய குடும்பங்களுக்கு, குழந்தைகளுக்கான பணப்பயன்கள், நிதிச் சலுகைகள் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் குழந்தைப் பராமரிப்பில் குடும்பங்களுக்கு உதவுவதற்காக ஒரு பரந்த கட்டமைப்பை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் கடமை என வரையறுத்தது. குழந்தைப் பராமரிப்பிற்கான ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கிய முதல் நாடு சோவியத் ஒன்றியம்தான் (சைமன்ஸ்கி, 1984).

அதேபோல் அரசியலமைப்புச் சட்டத்தின் சட்டப்பிரிவு 122-இன் படி சோவியத் ஒன்றியத்தில் பெண்களுக்கு பொருளாதாரம், ஆட்சியதிகாரம், பண்பாடு, சமூக மற்றும் அரசியல் வாழ்க்கையின் அனைத்துத் தளங்களிலும்,  கல்வி, வேலைவாய்ப்பு, ஓய்வு, பொழுதுபோக்கு, சமூகக் காப்பீடு உட்பட அனைத்திலும் ஆண்களுக்கு நிகராக சம உரிமை வழங்கப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் பல முதன்முதல்களில் ஒன்று, கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கி, அதற்கான மருத்துவ சேவை இலவசம் என அறிவித்ததாகும் (ஷெர்மன் 1969). பெண்களை அரசின் உயர் பதவிகளில் அமர்த்திய முதல் நாடும் இதுதான். மத்திய ஆசியப் பகுதியிலிருந்த சோவியத்தின் பகுதிகளில், இஸ்லாத்தின் பழமைவாத பெண் ஒடுக்குமுறையில் இருந்து அவர்களை விடுவிக்க, தீவிரப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. இது, இப்பகுதிகளில் பெண்களின் வாழ்க்கை நிலையில் ஓர் அடிப்படை மாற்றத்தை உருவாக்கியது (சைமன்ஸ்கி, 1984).

1977 அரசியலமைப்பு சட்டப்பிரிவு-44, வீட்டுவசதி உரிமையை உறுதி செய்தது. ஆயினும், ஆஸ்திரியா மற்றும் மேற்கு ஜெர்மனியை ஒப்பிடும்போது, ஒரு நபருக்கு நகர்ப்புற வீட்டு வசதிக்கான இடம் பாதியளவே இருந்தது. ஏனெனில், ஜார் மன்னர் ஆட்சிக்காலத்தில் போதிய அளவு கட்டிடங்கள் இல்லை. மேலும் இரண்டாம் உலகப் போரின் போது பெருமளவில் வீடுகள் இடிக்கப்பட்டன. இதுபோக, சோவியத் ஒன்றியம் கனரகத் தொழில் வளர்ச்சிக்கே முக்கியத்துவம் அளித்தது. அக்டோபர் புரட்சிக்கு முன்பு, சாதாரண மக்களுக்கு, நகர்ப்புறத்தில், போதுமான வீடுகள் கட்டப்படவில்லை. புரட்சிக்குப் பிறகு புதிய வீடுகள் கட்டப்பட்டன. ஆனாலும் வீட்டு வசதி போதுமானதாக இல்லை. தொழில்துறைக் கட்டுமானத்திற்கு மூலதனம் தேவையாக இருந்ததால், வீடு கட்டுவதற்காக பெரும் பணம் செலவழிக்க இயலவில்லை. இரண்டாம் உலகப் போரின்போது கூடுதலாக, நாஜிப் படையெடுப்பினால், சோவியத் குடியிருப்புகளில் மூன்றில் ஒரு பங்கில் இருந்து பாதிவரை அழிக்கப்பட்டிருந்தது (ஷெர்மன் 1969). நகரவாசிகள், பொதுவாக தாங்கள் பணிபுரியும் நிறுவனத்திற்கு அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான அடுக்குமாடிக் கட்டிடங்களில் வசித்தனர். சட்டப்படியான வாடகை மிக மிகக் குறைவு. மொத்த குடும்ப நுகர்வுச் செலவு நாலு முதல் ஐந்து சதவீதம் இருந்தபோது, வாடகை சுமார் 2 அல்லது 3 சதவீதம் மட்டுமே இருந்தது (சைமன்ஸ்கி, 1984; கீரன் மற்றும் கென்னி, 2004). அமெரிக்காவை ஒப்பிடும்போது, இது கடுமையாக வேறுபட்டது. அங்கு, ஒரு சராசரிக் குடும்பத்தின் வரவு செலவுத் திட்டத்தில், கணிசமான பங்கை வாடகை எடுத்துக்கொண்டது (சைமன்ஸ்கி, 1984). இன்றும் கூட நிலைமை அப்படியே உள்ளது.

உணவு மற்றும் பிற அடிப்படை அத்தியாவசிய தேவைகள் மானிய விலையிலும், ஆடம்பரப் பொருட்கள் அவற்றின் மதிப்பை விட மிக அதிகமான விலைக்கும் விற்கப்பட்டன.

பொதுப் போக்குவரத்து மிகப் பரவலான இடங்களை உள்ளடக்கி, திறமையாகவும் அதே நேரத்தில் மிகக் குறைவான கட்டணத்துடனோ இலவசமாகவோ வழங்கப்பட்டது. 1930-களில் இருந்து 1970-கள் வரை சுரங்கப்பாதைக் கட்டணம் வெறும் எட்டு சென்ட்களாக மாறாமல் இருந்தது (சைமன்ஸ்கி, 1984). முதலாளித்துவ நாடுகளில், இதனோடு ஒப்பிடக் கூடியதாக எப்பொழுதும் எதுவுமே இருந்ததில்லை. காரணம் என்னவெனில், திறமையான, மலிவான, விரிவான பொதுப் போக்குவரத்தானது, ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள், பெட்ரோலிய நிறுவனங்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் இலாபம் ஈட்டும் வாய்ப்பை கடுமையாகப் பாதிக்கும். எனவே, இந்நிறுவனங்கள் தங்கள் இலாபத்தைப் பாதுகாப்பதற்காக, தங்களுக்குள்ள செல்வாக்கை, செல்வத்தை, தொடர்புகளைப் பயன்படுத்தி, தனியார் போக்குவரத்திற்கு மாற்றாக, சிறந்த, மலிவான, பொதுப் போக்குவரத்து வளர்வதைத் தடுக்கின்றன. தனியார்துறை தொடர்ந்து வேலைவாய்ப்பை வழங்கவேண்டும் என எதிர்பார்க்கும் அரசாங்கங்கள், தனியார் தொழில்துறையை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டியுள்ளது. இதை மாற்றுவதற்கான ஒரே வழி, மூலதனத்தை பொதுச் சொத்தாக ஆக்குவதே.  அப்பொழுதுதான், மக்களுக்காக எனத் திட்டமிடப்பட்ட இலக்குகளை அடையமுடியும்.

சோவியத் ஒன்றியம் தனது முதலாளித்துவப் போட்டியாளர்களை விட சுகாதாரப் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளித்தது.  வேறு எந்த நாட்டிலும், சோவியத் ஒன்றியத்தைவிட அதிக மருத்துவர்களோ, மருத்துவமனைகளோ இல்லை. 1977-இல் சோவியத் ஒன்றியத்தில் 10,000 பேருக்கு 35 மருத்துவர்களும் 212 மருத்துவமனைப் படுக்கைகளும் இருந்தன. இது அமெரிக்காவில், 18 மருத்துவர்கள் மற்றும் 63 படுக்கைகளாக இருந்தது (சைமன்ஸ்கி, 1984). மிக முக்கியமாக, சுகாதாரம் சோவியத் ஒன்றியத்தில் இலவசமாக இருந்தது. ஆனால் அமெரிக்க குடிமக்கள் இதற்காகப் பணம் செலுத்தவேண்டும் என்பது சோவியத்தில் காட்டுமிராண்டித்தனமாகக் கருதப்பட்டது. சோவியத் குடிமக்கள், இந்த விஷயத்தை நம்ப முடியாமல், அமெரிக்க சுற்றுலாப் பயணிகளிடம், மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பினர் (ஷெர்மன் 1969).

பல்கலைக்கழகக் கல்வியும் இலவசம். முதுகலை மாணவர்களுக்கு, பாடப்புத்தகங்கள், தங்கும் அறை, உணவு மற்றும் பிற செலவுகளுக்கும் போதுமான அளவு உதவித்தொகைகள் கிடைத்தன (ஷெர்மன் 1969, சைமன்ஸ்கி, 1984).

சோவியத் ஒன்றியத்தில், முதலாளித்துவ நாடுகளை ஒப்பிடும்போது, வருமான ஏற்றத்தாழ்வு மிகவும் குறைவு. அதிகபட்ச வருமானத்திற்கும் சராசரி வருமானத்திற்கும் இடையேயான வித்தியாசம், ஒரு மருத்துவருக்கும் சராசரி தொழிலாளிக்கும் இடையேயான வருமான வேறுபாடு, அமெரிக்காவில் சோவியத் ஒன்றியத்தைவிட 8 முதல் 10 மடங்கு அதிகமாக இருந்தது (சைமன்ஸ்கி, 1984). படித்த உயர் வர்க்கத்தினரின் அதிக வருமானம் என்பது, ஒரு சாதாரண வீடு அல்லது கார் வாங்கக்கூடியதை விட அதிக சிறப்புரிமையை வழங்கவில்லை (கோட்ஸ், 2000). கனடாவுடன் ஒப்பிடுகையில், 2010இல் அதிக ஊதியம் பெறும் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளில், முதல் 100 நபர்களின் வருமானம், சராசரி முழுநேர ஊதியத்தை விட 155 மடங்கு அதிகமாக இருந்தது. சராசரி முழுநேர ஊதியம் 43,000 டாலர்களாகும் (மாற்றுக் கொள்கைகளுக்கான கனடிய மையம், 2011). கார்ப்பரேட் உயர்வர்க்கத்தினர் ஒரே வாரத்தில் இதைவிடப் பத்து மடங்கு அதிகமாக, அதாவது 4,30,000 டாலர்கள் வருமானம் ஈட்டினர்.

சோவியத் ஒன்றியத்தில் வருமான வித்தியாசம் குறைவாக இருந்ததற்கான காரணம் என்னவென்றால், அனைத்து சோவியத் குடிமக்களுக்கும் எந்தக் கட்டணமும் இன்றி அல்லது மிகக் குறைந்த கட்டணத்தில் அத்தியாவசியச் சேவைகள் கிடைத்ததாகும். எனவே, வருமான வித்தியாசத்தைவிட வாழ்க்கைக்குத் தேவையான பொருட்கள் கிடைக்காத தன்மையின் அளவு மிகக் குறைவாக இருந்தது (சைமன்ஸ்கி, 1984). பல உலக நாடுகளின் தலைநகரங்களில் உள்ள, ஜனாதிபதிகள், பிரதம மந்திரிகள், மற்றும் மன்னர்களின் ஆடம்பரமான மாளிகைகள் போன்ற வீடுகளில் சோவியத் தலைவர்கள் வசிக்கவில்லை (பேரன்டி, 1997). உதாரணமாக, கோர்பச்சேவ், நான்கு குடும்பங்கள் இருந்த ஓர் அடுக்குமாடிக் கட்டிடத்தில் வசித்துவந்தார். லெனின்கிராட் கட்டுமானத்துறையின் தலைமை அதிகாரி, ஒரு படுக்கையறை கொண்ட குடியிருப்பிலும், மின்ஸ்கில் ஓர் உயர்மட்ட அரசியல் அதிகாரி, மனைவி, மகள், மருமகனுடன் இரு படுக்கையறைகள் கொண்ட குடியிருப்பிலும் வசித்துவந்தனர் (கோட்ஸ் & வேய்ர், 1997). ஆளும் உயர்வர்க்கத்தினரை, சோவியத் ஒன்றியத்தின் விமர்சகர்கள், சுரண்டுபவர்கள் என குற்றம் சாட்டினர். ஆனால், அவர்களது மிதமான வருமானம் மற்றும் பொருட்கள் பயன்பாடு, இந்த மதிப்பீட்டின் மீது கடுமையான சந்தேகத்தை எழுப்புகின்றது. உண்மையில் சோவியத்தின் ஆளும்வர்க்கம் சுரண்டும்  தன்மையது என்று கூறுவது மனிதகுல வரலாற்றில் மிக வினோதமானது.

தமிழில்: சோபனா

2022 ரஷ்ய – உக்ரைன் போர்:ஒரு பார்வை!

அன்வர் உசேன்

ரஷ்யா- உக்ரைன் இடையிலான போர் உலகம் முழுவதும் பல விவாதங்களை உருவாக்கியுள்ளது. ஒரு புறம் புடின் இட்லருக்கு இணையாக விமர்சிக்கப்படுகிறார். இன்னொரு புறம் அவரது நடவடிக்கைகள் அனுதாபத்துடன் பார்க்கப்படுகின்றன. போர் என்பது எப்படியாக இருந்தாலும், எங்கே நடந்தாலும், அது மனித உயிர்களைப் பலி வாங்குகிறது. அரும்பாடுபட்டு உருவாக்கிய உற்பத்தி சாதனங்களும் வளங்களும் இமைப்பொழுதில் அழிக்கப்படுகின்றன. போரில் ஈடுபடும் தேசங்களில், உழைக்கும் மக்களே கடும் இழப்புக்கு ஆளாகின்றனர். இது வெற்றி பெற்ற, தோல்வி அடைந்த இரு தேச உழைப்பாளிகளுக்கும் பொருந்தும். ஆனால், சுரண்டும் வர்க்கங்கள் போர்களுக்கு ஆதரவான கருத்துக்களை கட்டமைப்பதில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். அவற்றில் இருந்து விலகி நின்று போர்களை ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும்.

இப்போதைய சூழலில், நாம் ஒரு முக்கியமான உண்மையை கணக்கிலெடுப்பது அவசியம். சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 42% பேர் ரஷ்யாவை இன்னமும் அதுவொரு கம்யூனிஸ்ட் நாடு என்று எண்ணுவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவிலும் பலர் அவ்வாறு நினைக்க வாய்ப்பு உண்டு. ஆனால், இன்றைய ரஷ்யா ஒரு சோசலிச நாடு அல்ல. அங்கு நடக்கும் ஆட்சி முதலாளித்துவ ஆட்சியே. விளாடிமிர் புடின் அந்த  முதலாளித்துவ நாட்டின் தலைவரே.

வரலாற்று பின்னணி:

1917ம் ஆண்டு சோவியத் புரட்சி வெற்றியடைந்த பிறகு, வெவ்வேறு காலகட்டங்களில் அதனோடு 14 குடியரசுகள் இணைந்துகொண்டன. அவை:

1. உக்ரேனியா

2. பைலோரஷ்யா

3. உஸ்பெகிஸ்தான்

4. கஜகஸ்தான்

5. ஜார்ஜியா

6. அஜர்பைஜான்

7. லிதுவேனியா

8. மால்டோவா

9. லத்திவியா

10. எஸ்தோனியா

11. கிர்கிஸ்தான்

12. தஜிகிஸ்தான்

13. துர்க்மெனிஸ்தான்

14. அர்மீனியா

இதுவே பின்னர்  ‘சோவியத் ஒன்றியமாக’ அமைந்தது. ரஷ்ய மொழியோடு சேர்த்து, மேற்சொன்ன 14 தேசங்களின் மொழிகளும் அதிகாரப்பூர்வ மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டன. 15 தேசிய இனங்களை உள்ளடக்கியிருந்ததால் அவ்வப்பொழுது சில முரண்பாடுகள் ஏற்பட்டாலும், பொதுவாக, சோவியத் குடி மக்கள் எனும் அடையாளம் உருவானது. மேலும், சோவியத் யூனியனின் அரசியல் சட்டம் சுயநிர்ணய உரிமையை உள்ளடக்கியிருந்தது. இதன் பொருள் என்னவெனில், எந்த ஒரு குடியரசும் தாம் விரும்பினால் ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்லலாம். இந்த உரிமையை உருவாக்க லெனினும், ஸ்டாலினும் கடுமையாக பாடுபட்டனர். இந்த பிரச்சனையில் லெனினுக்கும், ஜெர்மன் கம்யூனிஸ்டு ரோசா லக்சம்பர்குக்கும் இடையே கடும் விவாதங்கள் நடைபெற்றன. தேசிய இனப்பிரச்சனைகளில் கம்யூனிஸ்டுகளின் நிலையை புரிந்து கொள்ள முயல்பவர்களுக்கு லெனின்-ரோசா லக்சம்பர்க் விவாதங்கள் ஒரு புதையல் எனில் மிகை அல்ல.

சோசலிச சமூக அமைப்பின்  நன்மைகளான வேகமான தொழில் வளர்ச்சி/ விவசாய முன்னேற்றம்/ இலவச கல்வி மற்றும் மருத்துவம்/ உழைக்கும் மக்களின் உரிமைகள் அனைத்தையும் இந்த 14 குடியரசுகளும் பெற்றன. எனினும், 1970களில் சோவியத் ஒன்றியத்தில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி தேக்கமுற்றது. 1980களில் முதலாளித்துவ உலகுடன் ஒப்பிடும் பொழுது அது பின் தங்கியிருந்தது. மின்னணு புரட்சி/ கணிணி மயம் என முதலாளித்துவம் தனது உற்பத்தி சக்திகளை வேகமாக வளர்த்தெடுத்தது. இதனால், கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் சோவியத் ஒன்றியம் இரு சவால்களை சந்தித்தது. ஒன்று, அதன் பொருளாதாரம் கடுமையாக பின்னடைவை எதிர் கொண்டது. இன்னொருபுறம், சோசலிச ஜனநாயகம் சிதைவுகளுக்கு உள்ளானது. ஏகாதிபத்தியமும் தனது தொடர் தாக்குதல்களை பல முனைகளில் முன்னெடுத்தது.

இந்தச் சூழலில் சோசலிசம் பின்னடைவை சந்திப்பதற்கு சற்று முன்னதாக லிதுவேனியா/லத்திவியா/எஸ்தோனியா ஆகிய மூன்று குடியரசுகளும் பிரிந்து போயின. சோசலிசம் பின்னடைவை சந்தித்த பொழுது, அனைத்து குடியரசுகளும் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து, தம்மை தனி சுதந்திர தேசங்களாக அறிவித்து கொண்டன. இதில் உக்ரைனும் அடங்கும். எனினும், இந்த நிகழ்வு வேறு ஒரு பிரச்சனையை உள்ளடக்கியிருந்தது. சோவியத் ஒன்றியம் இருந்த பொழுது, ரஷ்ய மக்கள் வேறு குடியரசுகளுக்கு புலம்பெயர்வதும், ஏனைய குடியரசு மக்கள் ரஷ்யாவுக்குள் வருவதும் பரவலாக நடந்தது. குறிப்பாக, இந்த பரஸ்பர புலம்பெயர்வு ரஷ்யா/உக்ரைன்/பைலோரஷ்யா ஆகிய மூன்று குடியரசுகளிடைய வலுவாக நடந்தது. இதன் விளைவுதான், இன்றைய உக்ரைனின் கிழக்கு பகுதியில் சுமார் 20% பேர் ரஷ்ய மொழி பேசுபவர்களாக உள்ளனர்.

வாக்குறுதி மீறிய ஏகாதிபத்தியம்

அந்த சமயத்தில், சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்த எந்த தேசத்தையும் நேட்டோ எனும் ராணுவ அமைப்புக்குள் இணைக்கக்கூடாது எனவும், ரஷ்யாவின் எல்லை நாடுகளில் நேட்டோ ராணுவத்தையோ அல்லது ஆயுதங்களையோ நிறுத்தக் கூடாது எனவும், ரஷ்யா அமெரிக்காவிடம் முன்வைத்தது. அன்றைய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் பேக்கர் “ரஷ்யா இருக்கும் கிழக்கு நோக்கி ஒரு இன்ச் கூட நேட்டோ விரிவாக்கம் செய்யப்பட மாட்டாது” என வாக்குறுதி அளித்தார். ஆனால் ஏகாதிபத்தியத்தின் பல வாக்குறுதிகள் போல் இதுவும் காற்றில் விடப்பட்டது.  

நேட்டோ என்ற அமைப்பு இரண்டாம் உலகப்போர் முடிந்த  ஆண்டுகளில் (1949) அமெரிக்கா/ பிரிட்டன்/ பெல்ஜியம்/ கனடா/ டென்மார்க்/ பிரான்ஸ்/ ஐஸ்லாந்து/ இத்தாலி/ லக்ஸம்பர்க்/ நெதர்லாந்து/ நார்வே/ போர்ச்சுகல் ஆகிய நாடுகள் சேர்ந்து உருவாக்கிய ராணுவ கூட்டமைப்பு ஆகும். அமெரிக்காவே இந்த அமைப்பின் தலைமை என்பதை கூறத் தேவையில்லை. பின்னர் 1950களில், நேட்டோவுடன் மேற்கு ஜெர்மனி/கிரீஸ் ஆகிய நாடுகளும் 1982இல் ஸ்பெயினும் இணைக்கப்பட்டன. கம்யூனிஸ்ட் நாடுகளிடமிருந்து தம்மை பாதுகாத்து கொள்ளவே இந்த கூட்டமைப்பு என்று நேட்டோ கூறியது. எனவே அதன் எதிர்வினையாக சோவியத் யூனியன்/ கிழக்கு ஜெர்மனி/ அல்பேனியா/ போலந்து/ செக்கோஸ்லேவாகியா/ ஹங்கேரி/ பல்கேரியா/ ருமேனியா ஆகிய சோசலிச நாடுகள் தங்களுக்குள் வார்சா ஒப்பந்த அமைப்பு எனும் கூட்டமைப்பை உருவாக்கின. எனினும், இந்தியா/எகிப்து/யுகோஸ்லவியா/கியூபா/வியட்நாம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் இந்த இரு அமைப்பிலும் சேராமல் அணிசேரா நாடுகளின் அமைப்பை உருவாக்கின.

1991இல் சோவியத் யூனியனும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் சோசலிசத்தை கைவிட்ட பிறகு வார்சா ஒப்பந்த அமைப்பும் இல்லாமல் ஆகியது. நாளடைவில் அணிசேரா அமைப்பும் செயலிழந்துவிட்டது. ஆனால் நேட்டோ தொடர்ந்து விரிவடைந்தது. முதலாளித்துவ நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, தாங்கள்தான் உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் மேலாதிக்கம் பெற வேண்டும் என்று கொண்டிருந்த பேராசையின் வெறிதான் இதற்கு அடிப்படையான காரணம். இந்த வெறியின் ராணுவ முகம்தான் நேட்டோ. எனவே, கிட்டத்தட்ட அனைத்து முன்னாள் சோசலிச நாடுகளையும் நேட்டோ தனது வளையத்திற்குள் கொண்டு வந்தது. பின்னர் எஸ்தோனியா/லத்திவியா/லிதுவேனியா ஆகிய முன்னாள் சோவியத் குடியரசுகளையும் சேர்த்தது. இறுதியாக 2008ஆம் ஆண்டு உக்ரைன் மற்றும் ஜார்ஜியாவை இணைக்கும் விருப்பத்தை வெளிப்படுத்தியது. அன்றிலிருந்துதான் ரஷ்யாவுக்கும் நேட்டோ நாடுகளுக்கும் ஆழமான பிரச்சனைகள் உருவாயின. இந்த பிரச்சனைகளின் மையமாக உக்ரைன் உருவெடுத்தது.

நேட்டோவை நாங்கள் விரிவாக்கம் செய்ய மாட்டோம் என ஒரு போதும் உறுதி அளிக்கவில்லை என இப்பொழுது அமெரிக்கா கூறுகிறது. ஆனால் இது வடிகட்டிய பொய் ஆகும். 1991ஆம் ஆண்டே போலந்து நேட்டோவில் சேர விண்ணப்பித்தது. ஆனால் ஜெர்மனி இதனை கடுமையாக எதிர்த்தது. இது குறித்து அமெரிக்கா/ ஜெர்மனி/ பிரான்சு/பிரிட்டன் ஆகிய நாடுகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் 06.03.1991இல் பான் நகரில் நடந்தது. அதில் ஜெர்மனியின் பிரதிநிதியான  ஜுர்கன் ஸ்ரோபோக் கீழ்கண்டவாறு கூறினார்:

“ஜெர்மனியின் எல்பே நதிக்கு அப்பால் நேட்டோவை விரிவாக்குவது இல்லை எனும் உறுதிமொழியை நாம் ரஷ்யாவுக்கு தந்துள்ளோம். எனவே போலந்தின் கோரிக்கையை நாம் ஏற்க இயலாது”.

1992ஆம் ஆண்டிலிருந்தே பல அமெரிக்க அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் நேட்டோவை கிழக்கே விரிவாக்கம் செய்வது ரஷ்யாவை போருக்கு தள்ளிவிடும் என எச்சரித்துள்ளனர். அந்த எச்சரிக்கைகளில் சில:

  • 1997ஆம் ஆண்டு அமெரிக்காவின் முன்னாள் ராணுவ அமைச்சராக இருந்த ராபர்ட் மக்னமாரா சி.ஐ.ஏ. இயக்குநர் ஸ்டேன்ஸ் டர்னர் உட்பட 12க்கும் அதிகமானவர்கள் இணைந்து பில் கிளிண்டனுக்கு எழுதிய கடிதத்தில் “நேட்டோவை கிழக்கு நோக்கி விரிவாக்கம் செய்வது வரலாற்று பிழையாக மாறி விடும்” என எச்சரித்தனர்.
  • பனிப்போர் காலத்தில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளை வகுத்தவர்களில் ஒருவரான ஜார்ஜ் கேனன் 1990களிலேயே கீழ்கண்டவாறு கூறுகிறார்:

“கிழக்கு பகுதியில் நேட்டோவை விரிவாக்கம் செய்வது பனிப்போரின் பிந்தைய காலகட்டத்தின் மிகப்பெரிய தவறான கொள்கையாகும். இது பல விரும்பத்தகாத விளைவுகளை உருவாக்கும். அமெரிக்க-ரஷ்யா உறவை சீர்குலைத்துவிடும். ரஷ்யா நிரந்தர எதிரியாக ஆகிவிடும்”

  • ரஷ்ய விவகாரங்கள் குறித்த ஆய்வாளர் ஸ்டீபன் கொஹேன் 2014ஆம் ஆண்டு கூறினார்:

“நாம் நேட்டோவை ரஷ்யாவை நோக்கி விரிவாக்கம் செய்வது என்பது பிரச்சனையை ராணுவமயமாக்கிவிடும். ரஷ்யா பின்வாங்காது. வாழ்வா-சாவா போராட்டமாக ரஷ்யா இதனை பார்க்கும்”

  • அமெரிக்காவின் பிரபல வெளியுறவு கொள்கை நிபுணர் ஹென்ரி கிசிங்கர் 2014இல் கூறினார்:

“உக்ரைனை நேட்டோவில் சேர்க்க கூடாது. அவ்வாறு சேர்த்தால் உக்ரைன் கிழக்கு- மேற்கத்திய நாடுகளின் போர்க்களமாக மாறிவிடும். ரஷ்யா நிரந்தரமாக எதிர் தரப்பில் நிற்கும் ஆபத்து உருவாகும்.”

  • 2008ஆம் ஆண்டில் சி.ஐ.ஏ.வின் இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் அமெரிக்க தலைமையகத்துக்கு அனுப்பிய ஒரு குறிப்பில் கீழ்கண்டவாறு கூறுகிறார்:

“உக்ரைனை நேட்டோவில் இணைப்பது குறித்து உக்ரைன் மக்களிடையே செங்குத்தான பிளவுபட்ட கருத்து நிலவுகிறது என ரஷ்யா கவலை அடைந்துள்ளது என நமது நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக உக்ரைனில் உள்ள ரஷ்ய இன மக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இத்தகைய பிளவு கடும் விளைவுகளை உருவாக்கும். மோசமான சூழலில் இது உள்நாட்டு போருக்கும் வழிவகுக்கலாம். அப்படிப்பட்ட நேரத்தில் உக்ரைனில் தலையிடும் முடிவு எடுக்க வேண்டி வரும் என ரஷ்யா கவலைப்படுகிறது. அத்தகைய சூழலை ரஷ்யா விரும்பவில்லை.”

இவ்வளவு எச்சரிக்கைகளையும் அறிவுறுத்தல்களையும் மீறித்தான், நேட்டோ விரிவாக்கம் திட்டமிடப்பட்டது. அமெரிக்க அரசியல் தலைமை தனது மேலாதிக்கத்தை ஐரோப்பாவில் நிறுவுவதற்காக, ரஷ்யாவை போருக்கு தள்ளினால் தவறு இல்லை எனும் முடிவுக்கு வந்தது என்பதையே இது காட்டுகிறது. அமெரிக்க ஏவுகணைகள் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. உக்ரைன் எல்லையிலும் படைகள் நிறுத்தப்படும் என்றால், அது தனது பாதுகாப்பிற்கு ஆபத்து என்று  ரஷ்யா கருதுகிறது. உக்ரைன் எல்லையிலிருந்து ஏவுகணைகள் 10 முதல் 15 நிமிடங்களுக்குள் மாஸ்கோவை தாக்கிவிடும். 2008ஆம் ஆண்டு உக்ரைனையும் ஜார்ஜியாவையும் நேட்டோவில் இணைக்கும் அமெரிக்காவின் விருப்பம் ரஷ்யாவிடம் கடும் எதிர்ப்பை விளைவித்தது. அதே போல் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சமீபத்தில் அணுஆயுதங்களை நிறுவ உக்ரைன் முனைப்புடன் உள்ளது என பேசினார். இவையும் ரஷ்யாவின் அச்சத்தை அதிகரித்தன.

உக்ரைன் அரசியலில் அமெரிக்க தலையீடு

உக்ரைன் நாட்டின் உள் அரசியலில் ஒரு திருப்புமுனையாக 2014ஆம் ஆண்டினை பார்க்கலாம். அதற்கு முன்பாக, 2010இல் நடந்த தேர்தலில் விக்டர் யோனுகோவிச் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதே உக்ரைன் மேற்கு பகுதியும் கிழக்கு பகுதியும் பல்வேறு பண்பாடு, அரசியல் அம்சங்களில் பிளவுபட்டிருந்தன. கிழக்கு பகுதியில் வாழும் மக்கள் ரஷ்ய மொழியும், மேற்கு பகுதி மக்கள் உக்ரைன் மொழியும் பெரும்பான்மையாக பேசுகின்றார்கள். எனவே, கிழக்கு பகுதி மக்கள் ரஷ்யாவின் ஆதரவாளர்களாகவும், மேற்கு பகுதி மக்கள் ரஷ்ய எதிர்ப்பாளர்களாகவும் மாறும் வகையில் பல கருத்துகள் கட்டமைக்கப்பட்டன. இதில் அமெரிக்காவின் பங்கு மிக முக்கியமானது.

ஜனாதிபதி யோனுகோவிச் தொடக்கத்தில் அமெரிக்காவுடன் நட்பு பாராட்டினார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி அமெரிக்க முதலீடுகள் உக்ரைனுக்கு வரவில்லை. எனவே அவர் ரஷ்யாவுடன் முதலீடுகளுக்காகவும், பொருளாதார ஒத்துழைப்புக்காகவும் ஒப்பந்தம் போட்டார். உக்ரைன் தனது பிடியிலிருந்து நழுவுகிறது என்பதை உணர்ந்த அமெரிக்கா, மேற்கு உக்ரைன் மக்களை யோனுகோவிச்சுக்கு எதிராக தூண்டியது. 2014ஆம் ஆண்டில் ஏராளமான கலவரங்கள் நடைபெற்றன. இந்த கலவரங்களை உருவாக்குவதில் உக்ரைன் நாட்டில் இயங்கும் நாஜி ஆதரவாளர்கள் முக்கிய பங்கை ஆற்றினார்கள். “மைதான் புரட்சி” என ஊடகங்களால் அழைக்கப்பட்ட இந்த கலவரங்களின் காரணமாக யோனுகோவிச் பதவி விலகினார். பின்னர் பதவியேற்ற ஜனாதிபதிகள் கிழக்கு உக்ரைன் மக்களுக்கு எதிராக விஷம் கக்கினார்கள். ரஷ்யா மீது வன்மத்தை வெளிப்படுத்தினார்கள். இப்படியான பின்னணியில் கிரீமியா தீவினை ரஷ்யா தன்னோடு இணைத்து கொண்டது. ஏனெனில் ரஷ்யாவின் முக்கிய கப்பற்படை தளம் அங்கு இருந்தது.

டோன்பாஸ் எனப்படும் பகுதியில் உள்ள லுகான்ஸ்க் மற்றும் டோன்டெஸ்க் ஆகிய மாநிலங்களில் உள்ள  ரஷ்ய மொழி பேசும் மக்கள் தங்களுக்குள் பொது வாக்கெடுப்பு நடத்தி தங்களை சுயாட்சி பிரதேசங்களாக அறிவித்து கொண்டன. உக்ரைனில் வாழும் ரஷ்ய மொழி பேசும் மக்கள் தாக்கப்படுவது ரஷ்யாவில் பெரிய தாக்கத்தை உருவாக்கியது. அவர்களுக்கு ரஷ்ய அரசாங்கம் உதவ வேண்டும் எனும் கருத்து மக்களிடையே இருந்தது. இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண 2015ஆம் ஆண்டு மின்ஸ்க் நகரில் உக்ரைன்/ரஷ்யா/பிரான்ஸ்/ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு இடையே பேச்சு வார்த்தைகள் நடந்தன. இறுதியில் ஒரு  ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் முக்கிய அம்சங்கள்;

  • லுகான்ஸ்க் மற்றும் டோன்டெஸ்க் பகுதிகளுக்கு உக்ரைன் அரசாங்கம் சுயாட்சி வழங்குவது. ரஷ்ய மொழியை அங்கீகரிப்பது.
  • லுகான்ஸ்க் மற்றும் டோன்டெஸ்க் மக்கள் பிரிவினை எண்ணத்தை கைவிடுவது. உக்ரைனின் ஒன்றுபட்ட தன்மையை பாதுகாப்பது.

எனினும் இந்த ஒப்பந்தம் அமலாக்கப்படவில்லை. நடைமுறையில் ரஷ்ய மொழி உதாசீனப்படுத்தப்பட்டது. லுகான்ஸ்க் மற்றும் டோன்டெஸ்க் மக்கள் மீது தாக்குதல்களும் தொடர்ந்தன. அன்றிலிருந்து கிழக்கு உக்ரைன் பகுதி மக்கள் மீது உக்ரைன் ராணுவமும், நாஜி சித்தாந்தவாதிகளும் ஏராளமான தாக்குதல்களை நடத்தினர். கடந்த 7 ஆண்டுகளில் சுமார் 18,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நாஜிக்களை ஊக்கப்படுத்திய நேட்டோ

உக்ரைனில் கடந்த 10 ஆண்டுகளாக வலதுசாரி பயங்கரவாதிகளும் நாஜி சித்தாந்தவாதிகளும் பெரும் எண்ணிக்கையில் உருவாகியுள்ளனர். இவர்களை ஆதரிப்போர் உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளனர். நேட்டோவின் ஆய்வு அமைப்பான “அட்லாண்டிக் கவுன்சில்” இவர்களை ஆதரித்தும் புகழ்ந்தும் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.

நாஜி அமைப்புகளில் முக்கியமானது “அசோவ் பட்டாலியன்” என்ற அமைப்பாகும். அசோவ் பட்டாலியன் கோட்பாடுகள் என்ன?

  • உக்ரைன் மக்கள் பரிசுத்த வெள்ளை இனத்தை சேர்ந்தவர்கள்.
  • கிழக்கு உக்ரைனில் வசிக்கும் ரஷ்யர்கள் அசுத்தமான ரத்தம் உடையவர்கள். அவர்கள் உக்ரைனின் பரிசுத்த ரத்தத்தை மாசுபடுத்த முயல்கின்றனர்.
  • எனவே கிழக்கு உக்ரைன் மக்களை அடிமைப்படுத்த வேண்டும். தேவை எனில் அவர்களை படுகொலை செய்ய வேண்டும்.

இட்லரின் பல்வேறு நாஜி அடையாளங்களை இந்த அமைப்பு பயன்படுத்துகிறது. இத்தகைய கோட்பாடுகளை கொண்ட அமைப்பை நேட்டோ அமைப்பு ஆதரித்தது;  இன்றும் ஆதரிக்கிறது. அசோவ் பட்டாலியன் என்ற இந்த அமைப்புதான் 2014ஆம் ஆண்டில் நடந்த கலகங்களில் முக்கிய பங்கை ஆற்றியது. பின்னர் உக்ரைன் ராணுவத்தின் ஒரு பகுதியாக அது இணைக்கப்பட்டது. டோன்பாஸ் பகுதியில் வாழும் ரஷ்ய மொழி சிறுபான்மையினரை கொன்று குவித்ததும் இந்த அமைப்புதான். இந்த அமைப்பின் கொடூரங்கள் அனைத்தும் நேட்டோ அமைப்புக்கு நன்றாக தெரியும். சில அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்த வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தனர். அமென்ஸ்டி மனித உரிமை அமைப்பும் இந்த அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என கோரியது. அமென்ஸ்டி தனது அறிக்கையில் கூறியது:

“பயங்கரவாத அமைப்புகள் செயல்படுத்தும் கட்டுப்படுத்தப்படாத வன்முறையில் உக்ரைன் சிக்கி மூழ்கி கொண்டுள்ளது. கொடூரங்களை நிகழ்த்தும் இந்த அமைப்புகள் எவ்வித தண்டனைக்கும் உள்ளாக்கப்படுவது இல்லை.”

ஆனால், “அசோவ் பட்டாலியன்தான் நாம் ரஷ்யாவுக்கு தரும் பரிசு” என அட்லாண்டிக் கவுன்சில் கருத்து தெரிவித்தது. எத்தகைய வன்மம் நேட்டோவுக்கு உள்ளது என்பதை இதிலிருந்து நாம் அறியலாம்.

அமெரிக்க செனட் நாடாளுமன்ற உறுப்பினர் பாப் மெனென்டஸ் உக்ரைனுக்கு 500 மில்லியன் டாலர் அதாவது சுமார் 3,800 கோடி ரூபாய் அளவுக்கு ஆயுதங்களை வழங்கிட தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். இந்த ஆயுதங்கள் நாஜிக்களின் கைகளுக்கு செல்வதை தடுக்க என்ன வழிமுறைகள் உள்ளன என அவரிடம் கேட்ட பொழுது “நாம் ஏன் அதைப்பற்றி கவலைப்பட வேண்டும்?” என பதில் கூறினார்.

புடினின் தேசிய வெறி

ரஷ்யாவை நேட்டோ சுற்றி வளைப்பதையும் உக்ரைனில் உள்ள ரஷ்ய மொழி சிறுபான்மையினரை பாதுகாப்பதும் முக்கியம்! இது குறித்த புடினின் கவலை நியாயமானது; அது ரஷ்ய மக்களின் கவலையை பிரதிபலிக்கிறது. ஆனால் தனது போர் நடவடிக்கைகளை நியாயப்படுத்த லெனின் மற்றும் ஸ்டாலின் முன்னெடுத்த தேசிய இனக் கொள்கைகளை புடின் இழிவுபடுத்துகிறார். உக்ரைன் எனும் நாடு வரலாற்றில் இருந்ததே இல்லை எனவும், அதனை உருவாக்கியது லெனினும் ஸ்டாலினும்தான் எனவும் புடின் கூறுகிறார்.  சுயநிர்ணய உரிமை தந்தது மிகப்பெரிய தவறு எனவும், அதனால்தான் சோவியத் ஒன்றியம் சிதறுண்டது எனவும் குற்றம் சாட்டுகிறார். “மகா ரஷ்யா” எனும் கோட்பாட்டையும் வலியுறுத்தும் புடின், உக்ரைன் ஒரு தேசமாக நீடிக்க உரிமை இல்லை எனவும் கூறுகிறார்.

புடின் போன்ற முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கு, தேசிய பிரச்சனையில் கம்யூனிஸ்டுகள் முன்வைக்கும் கோட்பாடுகள் பிடிக்காமல் போவதில் ஆச்சர்யம் இல்லை. ஜார் மன்னனின் ரஷ்ய சாம்ராஜ்யம் பல தேசிய இனங்களை அடிமைப்படுத்தியிருந்தது. எனவேதான் “ரஷ்யா தேசிய இனங்களின் சிறைச்சாலை” என லெனின் வர்ணித்தார். சுயநிர்ணய உரிமை வழங்கப்படாவிட்டால் எந்த ஒரு குடியரசும் சோவியத் ஒன்றியத்தில் இணைந்திருக்காது. சோவியத் ஒன்றியம் வெறும் ரஷ்யாவாகவே இருந்திருக்கும்.

தற்போது, “மகா ரஷ்யா” எனும் சாம்ராஜ்யத்தை உருவாக்கும் எந்த வாய்ப்பும் இல்லை என்பதை புடின் உணர மறுக்கிறார். சோவியத் ஒன்றியம் சிதறுண்டது மனித குலத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுதான். ஆனால் அதற்கு காரணம் சுயநிர்ணய உரிமை அல்ல.

ரஷ்யாவின் ராணுவ பாதுகாப்பு மற்றும் உக்ரைனில் உள்ள ரஷ்ய மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு எனும் இரு நோக்கங்களுக்கு அப்பாற்பட்ட  வேறு எந்த இலக்கையும் உக்ரைன் படையெடுப்பு மூலம் சாதிப்பதற்கு புடின் முயன்றால், அது விரும்பத்தகாத விளைவுகளையே தோற்றுவிக்கும். உலகின் இரு மிகப்பெரிய தேசங்களான சீனாவும், இந்தியாவும் மற்றும் சில நாடுகளும் ரஷ்யாவின் நியாயமான கவலையை ஏற்கிறார்கள். அதே சமயம், புடினின் நோக்கம் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி நீளுமானால், உலக நாடுகளின் எதிர்ப்பையே அவர் சம்பாதிக்க நேரிடும்.

பாசிச எதிர்ப்பு போரில் உலக மக்களின் ஆதரவை பெற்றார் ஸ்டாலின். ஆனால் புடின் ஸ்டாலின் அல்ல. உக்ரைனில் ஒருவேளை ரஷ்யா வெற்றியடையுமானால், அதுவும் ஆபத்தான விளைவுகளையே ஏற்படுத்தும்.

முதலாளித்துவ ஜனநாயகத்தின் உண்மை முகம்

ரஷ்ய படைகள் உக்ரைனில் நுழைந்ததுமே பல முதலாளித்துவ  நாடுகளும் பொருளாதாரத்  தடைகளை விதித்தன. இது எதிர்பார்த்த ஒன்றுதான். எனினும், அதன் மூர்க்கத்தனம் எல்லையில்லாமல் விரிவடைந்தது. ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுடனான எண்ணெய் ஒப்பந்தங்களை திரும்ப பெற்றன. ரஷ்யாவில் செயல்பட்ட ஷெல் போன்ற நிறுவனங்கள் தமது செயல்பாட்டை நிறுத்தின. ஆப்பிள் நிறுவனம்/சாம்சங்/வால்வோ இப்படி பலநிறுவனங்கள் வெளியேறின. ரஷ்ய வங்கிகள் ‘ஸ்விப்ட்’ எனப்படும் நிதி பரிவர்த்தனையை பயன்படுத்த முடியாத அளவுக்கு தடைகள் விதிக்கப்பட்டன. ஐரோப்பா மற்றும் அமெரிக்க வான்வெளிகளில் ரஷ்ய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டன. தன்னுடன் முரண்பட்டால் எந்த ஒரு நாட்டையும் மண்டியிட வைக்க முடியும் என முதலாளித்துவ உலகம் முயல்கிறது. கால்பந்து/ஹாக்கி/மோட்டார் பந்தயம்/மாற்று திறனாளிகள் ஒலிம்பிக் போட்டிகள்  என அனைத்து விளையாட்டு போட்டிகளிலுமிருந்து ரஷ்யா வெளியேற்றப்பட்டுள்ளது. ரஷ்யாவின் பூனைகளுக்கும் யோக் மரங்களுக்கும் கூட தடை விதிக்கப்பட்டுள்ளன. இந்த தடைகளால் பாதிக்கப்படப்போவது புடின் அல்லது பிற அரசியல்வாதிகள் அல்ல; ரஷ்ய மக்கள்தான்.

ரஷ்ய ஊடகங்கள் முழுவதும் ஐரோப்பா/அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளன. தொலை காட்சி விவாதங்களில் ரஷ்யாவை சிறிதளவு ஆதரித்து பேசுவோரும் வெளியேற்றப்படுகின்றனர். டோன்பாஸ் பகுதியில் 5 ஆண்டுகளாக ரஷ்ய மொழி பேசும் மக்கள் அடைந்த துன்பங்களை ஆய்வு செய்த ஒரு ஃபிரான்சு பத்திரிக்கையாளர் தனது அனுபவத்தை சொன்னதற்காக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பி.பி.சி./கார்டியன் போன்ற புகழ்பெற்ற ஊடகங்கள் கூட பொய்ச் செய்திகளை தாராளமாக பரப்பின. முதலாளித்துவ ஊடகங்கள் தமது அரசுகளின் கருத்துகளை மட்டுமே மக்கள் கேட்க வேண்டும் என எண்ணுகின்றன. எதிர்த்தரப்பு கருத்துகளை மக்கள் கேட்க கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டுள்ளன. இது முதலாளித்துவ ஜனநாயகம். இந்த ஜனநாயகத்தில் மாற்று கருத்துக்கு இடமில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தப் போர் முதலாளித்துவத்தின் நிறவெறியை  வெளிப்படுத்தியுள்ளது. ஒரு தொலைகாட்சி செய்தியாளர் கூறினார்:

“இது சிரியாவோ அல்லது ஆப்கானிஸ்தானோ அல்ல; நாகரிக ஐரோப்பா. இங்கு தாக்குதல் நடக்கிறது”

அப்படியானால் சிரியாவும் ஆப்கானிஸ்தானும் நாகரிகமற்ற காட்டுமிராண்டி தேசங்களா?

இன்னொரு செய்தியாளர் கூறினார்:

“நெஞ்சம் பதைக்கிறது. ஊதா கண்களும் பொன் நிறத்திலான முடியையும் உடைய மக்கள் தாக்கப்படுகின்றனர்.”

அப்படியானால் மற்றவர்கள் தாக்கப்பட்டால் பரவாயில்லையா? ஆம். அப்படிதான் அந்த  ஊடகங்கள் முன்வைக்கின்றன.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த அதே நாளில் அமெரிக்க விமானங்கள் சோமாலியா மீது குண்டு பொழிந்தன. அமெரிக்க ஆதரவுடன் சவூதி படைகள் ஏமன் மீது தாக்குதலை நடத்தின. இஸ்ரேல் விமானங்கள் பாலஸ்தீனம் மீது தாக்குதல்கள் நடத்தின. இஸ்ரேல் ராணுவத்தினர் 15 வயது பாலஸ்தீன் பெண்ணை சித்திரவதை செய்து கொன்றனர். இது குறித்த காணொளி பரவலாக வலம் வந்தது. அமெரிக்காவின் ஆசியோடு ஏமன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3,00,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 70% பேர் குழந்தைகள். ஆனால் இவை குறித்து முதலாளித்துவ ஊடகங்களில் ஒரு விவாதம் கூட  இல்லை. 

மேற்கத்திய ஊடகங்களின் செய்தி மற்றும் கட்டுரைகள் வெளியிடப்பட்டதில் பாரபட்சத்தை பாருங்கள்:

  • உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதல்- 1400
  • சவூதி ஏமன் மீது தாக்குதல்-0
  • இஸ்ரேல் சிரியா மீது தாக்குதல்- 5.

சிறிது நாட்கள் முன்புவரை அரேபிய அல்லது ஆப்பிரிக்க அகதிகளுக்கு அனுமதியில்லை என கூறிய போலந்து போன்ற நாடுகள் இன்று உக்ரைன் அகதிகளை இரு கரம் கூப்பி வரவேற்கின்றன. ஆஸ்திரேலியாவில் உள்ள ரஷ்ய தூதரகத்துக்கு வெடி பொருட்கள் பார்சல் அனுப்பப்பட்டன. நெதர்லாந்தில் ரஷ்யர்களுக்கு சொந்தமான உணவுவிடுதி தாக்கப்பட்டது. அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் ரஷ்யாவை சேர்ந்த எவராவது புடினை கொன்று விடுவது ரஷ்யாவின் எதிர்காலத்துக்கு நல்லது என பகிரங்கமாக கூறியுள்ளார். இவையெல்லாம் முதலாளித்துவ ஜனநாயகத்தின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டுகிறது.

முதலாளித்துவம் கைவிட்ட முதலாளித்துவ குழந்தை

ரஷ்யா சோசலிசத்தை கைவிட்ட பொழுது அதன் ஒரே கனவு முதலாளித்துவ உலகம் தன்னை சம பங்காளியாக கருதி அரவணைத்து கொள்ளும் என்பதுதான். அந்த விருப்பத்துடனேயே அனைத்து அரசு நிறுவனங்களும் தனியார்மயமாக்கப்பட்டன. கம்யூனிச கருத்துகளும் அவற்றை கடைப்பிடிப்போரும் வேட்டையாடப்பட்டனர். லெனின் மற்றும் ஸ்டாலின் சிலைகள் உடைக்கப்படடன. தாராளமய பொருளாதார கொள்கைகள் அமலாக்கப்பட்டன. அந்தோ பரிதாபம்! முதலாளித்துவ உலகம் ரஷ்யாவை தனது சம பங்காளியாக பார்க்கவில்லை. மாறாக தனக்கு அடிபணிந்து இருக்கும் ஒரு நாடாக ரஷ்யா இருக்க வேண்டும் என்றே கருதியது.

மார்க்சிய ஆய்வாளர் டேவிட் ஹார்வி ஒரு சுவையான ஒப்பீட்டை முன்வைக்கிறார். இரண்டாம் உலகப்போரில் துவம்சம் செய்யப்பட்ட நாடுகள் ஜப்பானும் ஜெர்மனியும். ஆனால் இந்த இரு நாடுகளையும் மறுநிர்மாணம் செய்ய ஏராளமான நிதி உதவிகளை முதலாளித்துவ உலகம் செய்தது. அதற்கு “மார்ஷல் திட்டம்” எனவும் பெயரிட்டது. ஆனால் சோசலிசத்தையே தூக்கி எறிந்த ரஷ்யாவுக்கு எந்த உதவியும் செய்யப்படவில்லை. குறைந்தபட்சம் ஐரோப்பிய நாடுகள்  கூட ரஷ்யாவை அரவணைக்க முன்வரவில்லை.

அதே சமயத்தில் சோவியத் ஒன்றியத்தின் ஒரு வலிமையே ரஷ்யாவை தொடர்ந்து பாதுகாத்தது. அதுதான் ராணுவ வலிமை. புடினை பார்த்து ஓரளவு முதலாளித்துவ நாடுகள் அச்சப்படுகின்றன என்றால் அதற்கு முக்கிய காரணம்   ராணுவ வலிமைதான்! இதற்கு புடின் ஸ்டாலினுக்கும் அவருக்கு பின்னால் ஆட்சியிலிருந்த ஏனைய கம்யூனிஸ்டு தலைவர்களுக்கும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டவர். “சமாதானத்துக்கு சமாதானம்! ஏவுகணைக்கு ஏவுகணை” என முழக்கமிட்ட யூரி ஆண்ட்ரோபோவ் போன்றவர்கள்தான் இந்த ராணுவ வலிமையை உருவாக்கினர்; பாதுகாத்தனர். இப்போது இந்த ராணுவ வலிமையைதான்  முதலாளித்துவ நாடுகள் சிதைக்க முயல்கின்றன.

இந்த போர் எப்படி முடியும் என்பது இக்கட்டுரை எழுதப்பட்ட சமயத்தில் தெளிவற்றதாகவே இருந்தது. எனினும், ஏற்கெனவே இரு தரப்பிலும் ஏராளமான உயிர்கள் பலியாகியுள்ளன. உக்ரைனின் ஆலைகளும் கட்டடங்களும் கடும் சேதத்தை சந்தித்துள்ளன.

உலக அளவில் கம்யூனிஸ்டுகள் ஒரே குரலில்தான் ஒலிக்கிறார்கள்:

  • போர் தொடர்வதில்  எந்த நியாயமும் இல்லை. போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். 
  • நேட்டோ தனது விரிவாக்கத்தை கைவிட வேண்டும்.
  • ஐரோப்பாவில் உள்ள அணு ஆயுதங்கள் அகற்றப்பட வேண்டும்.
  • உக்ரைனில் ரஷ்ய மொழி பேசும் மக்களின் வாழ்வும் பண்பாடும் பாதுகாக்கப்பட வேண்டும்.
  • உக்ரைன் சமாதான வழியில் பயணிப்பதை உத்தரவாதம் செய்யவேண்டும்.

இதுதான் சரியான பார்வையாக இருக்க முடியும்.

ஆதாரங்கள்: Consortiumnews/ Fair.org/davidharvey.org/Mint Press/MR online/ Newsclick/ RT.com/ Tricontinental newsletter/multipolarista.

சீனாவும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் – சில கேள்விகளும் பதில்களும்

பிரகாஷ் காரத்

கேள்வி: தொடர்ச்சியான பல நடவடிக்கைகளின் மூலம் சீனாவை இலக்கு வைத்து அதன் வளர்ச்சியை தடுத்து நிறுத்த ட்ரம்ப் நிர்வாகம் நீடித்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உலகின் அமைதி, ஸ்திரத் தன்மை ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஆக்ரோஷமானதொரு சக்தி என சீனாவை சித்தரிக்கும் வகையில் சர்வதேச அளவிலான பிரச்சாரத்தையும் அமெரிக்கா நடத்தி வருகிறது. ஏன் இவ்வாறு நடக்கிறது? தனக்கு விரோதமான இத்தகைய பிரச்சாரத்தை சீனா எவ்வாறு காண்கிறது?

சீனாவிற்கு விரோதமாக ட்ரம்ப் நிர்வாகம் தற்போது எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஒரு பின்னணி உள்ளது. சீனாவின் வலிமை அதிகரித்துக் கொண்டே வந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், அதைக் கட்டுப்படுத்தி வைக்கும் வகையிலும் திட்டங்களை உருவாக்கி தனது முக்கிய எதிரி சீனாதான் என்று அமெரிக்கா 20 ஆண்டுகளுக்கு முன்னால் இலக்கு நிர்ணயித்தது. இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் அமெரிக்க ராணுவப் படைகளை களமிறக்குவதற்கான திட்டங்களை தீட்டியதோடு, ஆசிய-பசிஃபிக் பகுதிக்கான போர்த்தந்திரம் ஒன்றையும் இறுதிப்படுத்தியது.

‘ஆசியப் பகுதிக்கே முன்னிலை’ என்ற கொள்கையை அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நிர்வாகம்தான் அறிவித்தது. அதன்படி அமெரிக்காவின் கடற்படையில் 60 சதவீத படைகள் ஆசிய-பசிஃபிக் பகுதிக்கு நிலைமாற்றப் பட்டன.

எனினும் அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் சீனா பொருளாதார ரீதியாக வலிமையடைந்ததோடு, அதன் உலகளாவிய அணுகல் திறனும் பெருமளவிற்கு அதிகரித்தது.

ட்ரம்ப் அமெரிக்க அதிபரான உடனேயே, அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் சீன நாட்டுப் பொருட்கள் அனைத்தின் மீதான சுங்க வரியை  அதிகரித்ததோடு சீனாவுடன் ஒரு வர்த்தக யுத்தத்தையும் தொடங்கினார். கூடவே அமெரிக்காவில் தயாராகும் நுண்ணிய சிப்கள் மற்றும் இதர கருவிகள் ஹுவேயி போன்ற சீன நாட்டைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கிடைக்காதவாறு செய்யவும் அவர் முயன்றார். இந்தப் பெருந்தொற்றுக் காலத்திலும் கூட கொரோனா வைரஸ் பரவுவதற்கு சீனா தான் காரணம் என அமெரிக்கா சீனாவின் மீதான தனது தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தியது. கூடவே சீன நாட்டு நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் ஆகியவர்களுக்கு எதிராகவும் பல்வேறு தடை உத்தரவுகளையும் அது விதித்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சி உலகை மேலாதிக்கம் செலுத்த முயற்சிக்கிறது என்ற பூச்சாண்டியைக் காட்டி ஹுவேயி நிறுவனத்தை புறக்கணிக்க வேண்டுமென தனது கூட்டாளிகளை சம்மதிக்க வைக்க அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது.

வலுவானதொரு பொருளாதார சக்தியாக சீனா உருவாகி வருவதாலேயே இவை அனைத்தும் நடைபெறுகின்றன. அமெரிக்காவிற்கு அடுத்து உலகத்தில் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தியாக இன்று சீனா மாறியுள்ளது. அடுத்த பத்தாண்டு காலத்தில் அமெரிக்க பொருளாதாரத்தையும் விஞ்சிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மனிதர்களைப் போலவே செயல்படும் திறன் வாய்ந்த இயந்திரங்களை உருவாக்கும் தொழில்நுட்பமான ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு போன்ற அதி நவீன தொழில்நுட்பங்களில் தொடர்ந்து முன்னேற்றத்தைக் கண்டு வரும் தொழில்நுட்ப வலுமிக்க ஒரு சக்தியாகவும் சீனா மாறிக் கொண்டு வருகிறது. உயர்தொழில்நுட்பத் துறையில் இதுவரையில் ஏகபோகத்தை அனுபவித்து வந்த அமெரிக்காவிற்கு இந்த அம்சமே மிகவும் அச்சமூட்டும் விஷயமாக உள்ளது. கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதிலும் பரவத் தொடங்கிய பிறகு, இந்தப் பெருந்தொற்றினை வெற்றிகரமாக சமாளித்து, மிக விரைவாக பொருளாதாரத்தையும் மீட்கும் நடவடிக்கைகளில் சீனா இறங்கியுள்ளது. அதே நேரம் தனது நாட்டுப் பொருளாதாரத்திற்கு மிகப் பிரம்மாண்டமான வகையில் சேதத்தை ஏற்படுத்தியுள்ள பெருந்தொற்றினை சமாளிப்பதில் அமெரிக்கா தவறியுள்ள நிலையில் ட்ரம்ப்பிற்கு பயமேற்பட்டுள்ளது. அவரது இந்தப் பயம்தான் சீனாவின் மீதான கண்டனங்களும் தாக்குதல்களும் மீண்டும் ஒரு முறை அரங்கேற வழிவகுத்துள்ளது.

இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக உறவுகளில் எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது என்று இந்தப் பெருந்தொற்று வெடித்தெழுவதற்கு முன்பாகவும் கூட சீனா அரசு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளது. பொருளாதாரத் துறையில் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கு உருவாகும் எந்தவொரு மோதலும் உலகளாவிய பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றின் மீது மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அது தொடர்ந்து கூறி வந்துள்ளது. அதன் கண்ணோட்டத்தின்படி அமெரிக்கா ஒரு மேலாதிக்க சக்தியாக நடந்து கொள்கிறது என்பதே ஆகும். ஐரோப்பாவில் உள்ள பெரும் நாடுகளான ஜெர்மனி, ஃபிரான்ஸ், ஆசியாவில் உள்ள ஜப்பான் போன்ற நாடுகளுடன் வழக்கமான பொருளாதார உறவுகளை சீனா மேற்கொண்டு வருகிறது. அமைதியான வகையில் நிகழ்ந்து வரும் தனது முன்னேற்றம் வேறு எந்தவொரு நாட்டிற்கும் அச்சுறுத்தலாக இருக்காது என்றும் சீனா தொடர்ந்து சுட்டிக் காட்டி வருகிறது. தனது நாட்டை மட்டுமே பாதுகாத்துக் கொள்ளக் கூடிய பாதையை மேலும் மேலும் அதிகமான அளவில் ட்ரம்ப் பின்பற்றி வரும் அதே நேரத்தில் வெளிப்படையான வர்த்தகம் என்பது உலகிலுள்ள அனைத்து நாடுகளின் வளத்திற்கான வழியாக, அனைத்து நாடுகளுக்கும் உரியதாக இருக்கிறது என உலகமயமாக்கலை சீனா உயர்த்திப் பிடிக்கிறது.

தற்போது நிலவி வரும் மையமான முரண்பாடு என்பது ஏகாதிபத்தியத்திற்கும் சோஷலிசத்திற்கும் இடையிலானது என நமது கட்சி எப்போதுமே கூறி வந்துள்ளது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக சீனா உருப்பெற்றுள்ள நிலையில் சோஷலிச சக்திகளின் வலிமையை எவ்வாறு நீங்கள் மதிப்பீடு செய்கிறீர்கள்? தற்போதைய உலகளாவிய சக்திகளின் பலாபலனில் சீனாவின் செல்வாக்கு எத்தகைய மாற்றத்தைக் கொண்டுவரக்கூடும் எனக் கருதுகிறீர்கள்?

ஏகாதிபத்தியத்திற்கும் சோஷலிசத்திற்கும் இடையிலான முரண்பாட்டினை மையமானதொரு முரண்பாடாகவே நமது கட்சி கருதுகிறது. சோவியத் யூனியன் சிதறுண்டு, கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் நிலவிய ஆட்சிகள் வலுவிழந்து உலக அளவில் சோஷலிச சக்திகளை பலவீனப்படுத்திய போதிலும்கூட, குறிப்பிட்ட சில நாடுகளில் தற்போது நீடித்து வரும் சோஷலிசமானது பொருளாயத அடிப்படையில் முதலாளித்துவத்திற்கு முரணான ஒன்றினை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற உண்மை தொடர்ந்து நீடிக்கிறது. அனைத்து வகையிலும் வலுவானதொரு நாடாக சீனா தன்னை வளர்த்துக் கொண்டு, உலகத்தில் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக அது மாறியுள்ள சூழ்நிலையே மிகவலுவான ஏகாதிபத்திய நாடான அமெரிக்காவிற்கு சவாலான ஒன்றாக மாறியுள்ளது. இத்தகையதொரு சூழலில் இருந்துதான் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதல் உருவாகியுள்ளது.

அமெரிக்காவின் பொருளாதார, போர்த்தந்திர ரீதியான அதிகாரம் நீண்ட காலமாகவே சரிந்து வரும் அதே நேரத்தில் சீனா தனது வலிமையையும் செல்வாக்கையும் தொடர்ந்து உறுதியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது என்ற பின்னணியில்தான் அமெரிக்க – சீன மோதல் என்பது நடைபெறுகிறது. உலகத்திலுள்ள 60க்கும் மேற்பட்ட நாடுகள் தங்களை இணைத்துக் கொண்டுள்ள பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேடிவ் (பிஆர்ஐ – பண்டைக் காலத்தில் சீனாவின் பட்டு வர்த்தகர்கள் தரை வழியாகவும், கடல் வழியாகவும் பயணித்த பாதையை மீண்டும் உருவாக்கும் நோக்கத்துடன் ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா கண்டங்களைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட நாடுகளின் வழியாக புதிய நெடுஞ்சாலைகள், கடல் வழிகள் ஆகியவற்றின் மூலம் இந்த நாடுகளின் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது; அதன் மூலம் சீனாவின் வர்த்தக உறவை மேம்படுத்துவது என்ற நோக்கத்துடன் அந்த நாடுகளின் ஒப்புதலுடன் சீனா மேற்கொண்டுள்ள (கடல்வழி) பாதை மற்றும் (நெடுஞ்) சாலை திட்டம் – மொ-ர்) சீனாவின் பூகோள ரீதியான, அரசியல் ரீதியான வீச்சு அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதற்கான வலுவான வெளிப்படாக அமைகிறது.

பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் அமெரிக்க-சீன நாடுகளுக்கு இடையிலான இந்த மோதல் என்பது சர்வதேச அரசியலின் தீர்மானகரமான, முக்கியமான ஓர் அம்சமாக இருக்கும். புதியதொரு பனிப்போர் உருவாகி வருகிறது என்ற பேச்சு வெளிப்படத் தொடங்கியுள்ள போதிலும் கடந்த நூற்றாண்டில் அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே நிலவிய மோதலைப் போன்றதாக இதைச் சித்தரிப்பது பொருத்தமானதாக இருக்காது. அந்த நேரத்தில் ஏகாதிபத்திய முகாம் என்பது பல நாடுகளை உள்ளடக்கிய அமெரிக்காவின் தலைமையிலான ஒரு குழு என்பதாக இருந்தது. மறுபுறத்தில் சோவியத் யூனியன் தலைமையில் சோஷலிச முகாமைச் சேர்ந்த நாடுகள் இருந்தன. அதே போன்று அப்போது சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே கணிசமான பொருளாதார உறவுகள் என்று எதுவும் நிலவவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

ஆனால் இன்றைய நிலைமை என்பது முற்றிலும் மாறானதாகும். அமெரிக்காவுடன் மட்டுமின்றி அதன் நேட்டோ கூட்டாளி நாடுகள் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடனும் கூட சீனா விரிவான பொருளாதார உறவுகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவின் மிகப்பெரும் வர்த்தகக் கூட்டாளியாகவும் சீனா விளங்குகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த பல நிறுவனங்களும் சீனாவில் மிகப்பெரும் முதலீடுகளை செய்துள்ளன.

அதேபோன்று அமெரிக்காவின் தலைமையில் அல்லது சீனாவின் தலைமையில் நாடுகளின் குழுக்கள் என்பதும் இப்போது இல்லை. சீனாவிடமிருந்து ‘விலகிக் கொள்வது’ பற்றி அமெரிக்கா பேசி வந்தாலும் கூட, அமெரிக்காவினாலோ அல்லது அதன் கூட்டாளி நாடுகளாலோ அவ்வாறு செய்வது எளிதான ஒன்றல்ல. அமெரிக்க-சீன மோதல் அதிகரித்து வரும் பின்னணியில் சீனாவுடனான பொருளாதார உறவுகள் தொடர்ந்து நீடிக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே வெளிப்படையாகவே தெரிவித்து விட்டது. ஆசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளைப் பொறுத்தவரையில், இந்தப் பிராந்திய குழுவைச் சேர்ந்த நாடுகளின் மிகப்பெரும் வர்த்தகக் கூட்டாளியாக சீனா தொடர்ந்து இருந்து வருகிறது.

இத்தகையதொரு சூழ்நிலையில் சீனாவை கட்டுப்படுத்தி வைப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் அமெரிக்காவில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள வலதுசாரி சக்திகள் விரும்பிய வகையில் உருவாக இயலாது.  ‘இந்திய-பசிஃபிக்’ பகுதி என்று அழைக்கப்படும் இந்திய பெருங்கடலையும் உள்ளிட்ட பகுதியில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் போர்த்தந்திர ரீதியான, ராணுவ ரீதியான முஸ்தீபுகள் இந்தப் பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கவே வழிவகுக்கும்.

எனவே அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் அதிகரித்து வரும் மோதலை ஏகாதிபத்தியத்திற்கும் சோஷலிசத்திற்கும் இடையிலான முரண்பாட்டின் பின்னணியில்தான் காண வேண்டும். சோவியத் யூனியன் சிதறுண்டு போனதற்குப் பிறகு வர்க்க சக்திகளின் பலாபலன் என்பது ஏகாதிபத்தியத்திற்கு சாதகமான ஒன்றாக மாறியுள்ளது. இந்த நிலைமை தொடர்ந்து நீடித்தே வருகிறது. எனினும் சோஷலிச சீனாவின் அதிகரித்துக் கொண்டே வரும் வலிமையானது எதிர்காலத்தில் வெளிப்படவிருக்கும் முரண்பாட்டின் மீது தாக்கம் செலுத்தவும் செய்யும்.

ஏகாதிபத்திய தாக்குதலுக்கு பதிலடி தருகையில் ஒரு சில தருணங்களில் சீனா சமரசம் செய்து கொள்வதைப் போலத் தோன்றுகிறது. சமாதானபூர்வமான சகவாழ்வு குறித்தும் கூட சீன கம்யூனிஸ்ட் கட்சி பேசுகிறது. 1960களில் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட சமாதானபூர்வமான சகவாழ்வு குறித்த திருத்தல்வாத கருத்துக்களை எடுத்துக் கூறி வந்ததையும்  நாம் பார்த்தோம். இப்போது சீனாவும் கூட அதே பாதையில்தான் செல்கிறது என்று இதை எடுத்துக் கொள்ள முடியுமா?

இரண்டு சமூக அமைப்புகளுக்கு இடையேயான சமாதானபூர்வமான சகவாழ்வு என்பது போன்ற கருத்தோட்டங்களை பற்றிப் பேசும்போது அதன் வரலாற்றுப் பின்னணியையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு சமூக அமைப்புகளுக்கு இடையே, அதாவது முதலாளித்துவம் மற்றும் சோஷலிசம் ஆகிய இரண்டு வேறுபட்ட சமூக அமைப்புகளுக்கு இடையே சமாதானபூர்வமான சகவாழ்வு என்ற கருத்தோட்டம் என்பது அடிப்படையில் தவறானதொரு கருத்தோட்டம் அல்ல. சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி இந்த சமாதானபூர்வமான சகவாழ்வு என்ற கருத்தோட்டத்தை உருவாக்கிய வழியைத்தான் நாம் விமர்சித்தோம். இந்த இரண்டு சமூக அமைப்புகளுக்கு இடையே சமாதான பூர்வமான போட்டி, சமாதானபூர்வமான வகையில் சோஷலிசத்திற்கு மாறிச் செல்வது  ஆகியவற்றோடு இணைந்த வகையில்தான் இந்த சமாதானபூர்வமான சகவாழ்வு என்ற கருத்தோட்டத்தை அது முன்வைத்தது. இந்த மூன்று கருத்தோட்டங்களைத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக விமர்சித்தது.

சோஷலிசம் என்பது வலுவானதொரு சக்தியாக இருக்கும் காலத்தில் சமாதானபூர்வமான சகவாழ்வு மற்றும் சமாதானபூர்வமான போட்டி ஆகியவற்றின் மூலம் சோஷலிசத்தின் மேன்மை நிரூபிக்கப்பட்டு விடும்; அதன் மூலம் சமாதானபூர்வமான சோஷலிசத்திற்கு மாறிச் செல்வதற்கான வழி திறக்கும் என்ற மாயையை அது பரப்பி விடுகிறது. இத்தகைய கருத்தோட்டமானது ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவம் ஆகியவற்றின் அச்சுறுத்தல்களை குறைத்து மதிப்பிடுவதாக அமைந்து விடுகிறது. அதன் விளைவாக முதலாளித்துவ நாடுகளில் நடைபெற்று வரும் வர்க்கப் போராட்டங்களை அது புறக்கணித்து விடுகிறது. ஏகாதிபத்தியமும், முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களும் எந்தவொரு காலத்திலும் சோஷலிசத்தோடு இணக்கமாக இருந்து விட முடியாது என்பதை அங்கீகரிக்கவும் இக்கருத்தோட்டம் தவறுகிறது. எனவேதான் இத்தகைய கருத்தோட்டங்களை நாம் திருத்தல் வாதம் என்று அடையாளப்படுத்தி விமர்சித்தோம்.

இன்றைய நிலைமை என்ன? நாம் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல, சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு வர்க்க சக்திகளின் பலாபலன் ஏகாதிபத்தியத்திற்கு சாதகமானதாக மாறியுள்ளது. மீதமுள்ள சோஷலிச நாடுகளும் கூட சர்வதேச நிதி மூலதனத்தின் உலகளாவிய மேலாதிக்க சூழலையும், முந்தைய சோஷலிச நாடுகளுக்குள் மூலதனத்தின் அதிகாரத்தை மேலும் முன்னேற்றி, தனது உலகளாவிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்தத் தீவிரமாகப் பாடுபட்டு வரும் ஏகாதிபத்தியத்தையும் எதிர்கொள்ள வேண்டிய தற்காப்பு நிலையில்தான் இருந்து வருகின்றன.

இத்தகையதொரு சூழ்நிலையில், இரு வேறுபட்ட சமூக அமைப்புகளுக்கு இடையே சமாதானபூர்வமான சகவாழ்வின் முக்கியத்துவத்தை சீன கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துவது சரியான ஒன்றே ஆகும். ஏகாதிபத்தியத்துடன் ஒரு மோதலில் ஈடுபடுவதற்குப் பதிலாக, தனது உற்பத்தி சக்திகளை வளர்த்தெடுப்பதன் மூலம் தனது பொருளாதாரத்தை மேலும் வளர்ப்பது;, மக்களின் வாழ்க்கைத் தரங்களை மேலும் உயர்த்துவது ஆகியவற்றில்தான் அது கவனம் செலுத்தி வருகிறது. அதன் ராணுவ, பாதுகாப்பு வலிமை உள்ளிட்டு அனைத்து வகையிலும் சீனாவை வளர்த்தெடுப்பதற்கான அமைதியானதொரு சூழலும் அதற்குத் தேவைப்படுகிறது. சோஷலிசத்தின் தொடக்க நிலையில்தான் சீனா உள்ளது என்றே சீன கம்யூனிஸ்ட் கட்சி வகைப்படுத்தியுள்ளது. ஐம்பது ஆண்டுக் காலத்திற்குள் அதனை ஓரளவிற்கு நல்ல வளமானதொரு நாடாக வளர்த்தெடுப்பது என்பதையே அது தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இலக்கை அது தற்போது கிட்டத்தட்ட எட்டியுள்ளது. முக்கியமான முதலாளித்துவ நாடுகள் மற்றும் நிதி மூலதனத்துடன் விரிவான உறவுகளை அது ஏற்படுத்திக் கொண்டதன் விளைவாகவே இது சாத்தியமானது. இந்தச் செயல்பாட்டின் ஊடேயே, சந்தைப் பொருளாதாரத்தை அது வளர்த்தெடுத்துள்ளதோடு, தனியார் மூலதனம் வளரவும் அனுமதித்துள்ளது. ஏகாதிபத்திய மூலதனம் மேலாதிக்கம் செய்து வரும் ஓர் உலகத்தில் உற்பத்தி சக்திகள், தொழில்நுட்ப செயல் அறிவு ஆகியவற்றை வளர்த்தெடுக்க இத்தகைய செயல்முறை தேவைப்படுகிறது என்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

தனித்துவமான சீன அடையாளங்களோடு கூடிய சோஷலிசத்தை கட்டுவது குறித்த மதிப்பீட்டை நாம் மேற்கொள்ளும்போது சீனா தொடர்ந்து முன்னேறி வருவதையும், மிகப்பெரும் பொருளாதார சக்தியாக மாறியுள்ளது என்பதையும், வறுமையை அகற்றுவதில் மிகப்பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பதையும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளது என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டியதும் அவசியமாகும். ஏகாதிபத்தியத்துடனான சமரசப் போக்கின் விளைவாகவே இந்த வெற்றி கிடைத்தது என இவற்றை எளிதாகப் புறந்தள்ளி விடக் கூடாது.

எனினும், சமாதானபூர்வமான சகவாழ்வின் அவசியத்தைப் புரிந்து கொள்ளும் அதே வேளையில், உலகின் எந்தப் பகுதியிலும் எந்தவொரு சோஷலிச அமைப்பும் வளர்ந்தோங்கி வருவதை ஏகாதிபத்தியம், முதலாளித்துவம் ஆகியவற்றால் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதையும் நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, ஏகாதிபத்தியத்தின் சதித்திட்டங்கள், சீர்குலைவு முயற்சிகள் ஆகியவற்றுக்கு எதிரான கண்காணிப்பு எப்போதும் இருந்து வருவது அவசியமாகும்.  ‘ஏகாதிபத்தியம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை சீன கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு முன்பு கைவிட்டிருந்தது. நமது கட்சியின் 20வது கட்சிக் காங்கிரஸில் நிறைவேற்றப்பட்ட தத்துவார்த்த பிரச்சனைகள் குறித்த தீர்மானத்தில் இத்தகைய போக்கு ஏகாதிபத்தியத்தின் அச்சுறுத்தலை குறைத்து மதிப்பிடவும், ஒரு சர்வதேச கண்ணோட்டத்தை கைவிடுவதற்கும் வழிவகுக்கும் என்று நாம் எச்சரிக்கை செய்திருந்தோம்.

இறுதியாக, முன்னேற்றம் அடைந்ததொரு சோஷலிச நாடாக சீனா தன்னை எப்படி வளர்த்துக் கொள்கிறது என்பதையே உலக அளவில் சோஷலிசத்தின் எதிர்காலம் பெருமளவிற்குச் சார்ந்துள்ளது. அவ்வகையில் அவர்களது இத்தகைய முயற்சிகளுக்கான நமது ஒற்றுமையுணர்வையும், ஆதரவையும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும், சீன மக்களுக்கும் நாம்  தெரிவித்துக் கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

தமிழில்: வீ. பா. கணேசன்

கொரோனா பெருந்தொற்று: சீனாவுக்கு எதிரான ஏகாதிபத்திய பொய்கள்

அபிநவ் சூர்யா

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக ஏகாதிபத்திய சக்திகள் பெரும் தோல்வியை அடைந்திருக்கின்றன. உடனே ஏகாதிபத்திய நாடுகளும், முதலாளித்துவ சிந்தனையாளர்களும் தங்கள் தோல்வியிலிருந்து திசை திருப்ப சீனாவின் மேல் அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள். இயல்பாகவே வலதுசாரி சக்திகள் அறிவியல் ஆக்கத்திற்கு எதிரானவர்கள். எனவே, சீனாவிடமிருந்து பாடம் கற்க கோரும் அறிவியல் சமூகத்தின் கருத்துக்களை அவர்கள் நிராகரிக்கின்றனர்.

உலக நாடுகளின் “தலைவர்கள்” என்று கூறிக்கொள்ளும் நாடுகள், சொந்த மக்கள் எத்தனை பேர் பலியானாலும் தங்களின் அரசியல் மூலம் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முனைகிறார்கள். இது போன்ற உத்திகளுக்கு தலைமை வகிக்கும் அமெரிக்காவும் பிரிட்டனும், தாங்கள் முன்னெடுத்த ஏகாதிபத்திய போர்கள், காலனியாதிக்கங்கள், பொருளாதார கொள்கைகள் மூலம் உலகையே சூறையாடிய வரலாற்றை வசதியாக மறந்துவிடுகின்றனர். சரியாக செயல்பட்டுவரும் சீனாவிடமிருந்து நட்ட ஈடு கோரும் சிறுமையை செய்யவும் தயங்கவில்லை.

இது போன்ற ஏகாதிபத்திய சக்திகளின் அவதூறுகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். ஆனால் அதற்காக இல்லாமல், ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மக்கள் அரசு நடத்தி வரும் சீனா, இந்த நெருக்கடியில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்வது முற்போக்காளர்களுக்கு மிகவும் அவசியம்.

கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நவீன தாராளமயக் கொள்கைகளை உலக நாடுகள் மீது புகுத்தி, மக்களின் நல்வாழ்வு மீதான அரசுகளின் பொறுப்பை முற்றிலுமாக ஒழித்து விட்ட ஏகாதிபத்திய தாக்குதலின் மத்தியிலே, ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, மக்கள் நலனில் அரசு முக்கிய பங்காற்றுவதன் மூலம் அசாதாரண பொருளாதார வளர்ச்சியை ஈட்ட முடியும் என்று நிறுவியது சீனாவாகும்.

கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதில் தொடக்கத்திலிருந்து சீனா என்ன நடவடிக்கைகள் எடுத்தது என்று அறிவது நமக்கு அறிவியல் ஞானம் மட்டுமன்றி, மக்கள் நலத் திட்டங்கள் குறித்த முக்கிய பாடங்களையும் வழங்குகிறது.

டிசம்பர் மாத பிற்பகுதியில் தான் ஊகான் நகர சுகாதார அமைப்பு நூதனமான, நிமோனியா போன்ற தொற்றுநோய் பரவி வருவதை கண்டறிந்தது. இந்த நேரத்திலிருந்து, சீனா இந்நோயை கட்டுக்குள் கொண்டு வர எடுத்த நடவடிக்கைகள் அனைத்துமே துரிதமாகவும், வெளிப்படையாகவும் இருந்தன.

டிசம்பர் 27 அன்று, டாக்டர் ஜாங் ஜிக்சியாங் என்பவர் தான் இந்த நிமோனியா போன்ற நோய் தொற்று ஒரு ஆபத்தான வைரஸ் மூலம் பரவி வருவதாக முதலில் சீன மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களிடம் தெரிவித்தார். அன்றிலிருந்து சீனாவின் மொத்த சுகாதார கட்டமைப்பும் துரிதமாக செயல்பட துவங்கிவிட்டன.

டிசம்பர் 30ம் தேதி அன்று, ஊகான் நகர சுகாதார ஆணையம் அனைத்து மருத்துவமனைகளுக்கும் இந்த நூதன நிமோனியா நோய்க்கு சிறப்பு கவனம் அளிக்குமாறு கூறிய பின், டிசம்பர் 31 அன்று இந்த நோய் பற்றிய தகவலை பொது மக்களுக்கு அறிவித்ததோடு, பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும், முகக் கவசங்கள் அணியுமாறும் அறிவுறுத்தியது.

டிசம்பர் பிற்பகுதியில் நோயை பற்றி கண்டறிந்த சீனா, (இந்த நோயை பற்றி ஏதுமே அறியாத நிலையில்), டிசம்பர் 31ற்குள் இந்த அறிவிப்பை செய்தது. இதை ஒப்பிடுகையில், சீனா இந்நோயை பற்றி பல தகவல்கள் அளித்த பின்பும், ஜனவரி இறுதியில் முதல் நோயாளியை கண்டறிந்த பல நாடுகள் மார்ச் வரை இப்படிப்பட்ட அறிவிப்பை மேற்கொள்ளவில்லை என்பதை இணைத்து பார்க்க வேண்டும்.

இந்த நேரம் குறித்து பின்னாளில் துவங்கிய பொய் பிரச்சாரங்களில் ஒன்று, லீ வென்லியாங் என்ற டாக்டர் இந்நோயை பற்றி வெளியே கூற விடாமல் அவரை கைது செய்து சீனா முடக்கியது என்பதாகும். இந்த மருத்துவர் தன் சமூக வலைதளத்தில் சார்ஸ் போன்ற நோய் பரவி வருவதாக டிசம்பர் 30 அன்று பதிவிட்டது உண்மை தான். ஆனால் ஏற்கனவே கூறியது போல், டிசம்பர் 27 அன்றே இந்த வைரஸ் பரவி வருவது பற்றி அனைத்து சீன டாக்டர்களும் அறிந்திருந்தனர். மேலும் ஊகான் மருத்துவமனைகளும் இதற்கேற்ப நடவடிக்கைகள் எடுத்து வந்தன. ஆகையால், சீனா அதன் அறிவியலாளர்களிடமிருந்து மறைக்க ஏதுமில்லை.

மேலும், இந்த நோயை பற்றி சீனாவின் தலைசிறந்த ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வந்த நேரத்தில், முழு உண்மையை அறியாமல், இந்த டாக்டர் உரிய சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கூறாமல், நேராக சமூக வலைதளத்தில் பதிவிட்டது தவறென்று காவல்துறை அவருக்கு எச்சரிக்கை செய்தது. அதே சமயம் அவர் கைது செய்யப்பட்டதாக முதலாளித்துவ ஊடகங்கள் சொல்வது பொய்யாகும்.

மேலும் பின்நாளில் இவ்வாறு காவல்துறை எச்சரித்தது தவறு என சீன உச்ச நீதி மன்றம் தீர்ப்பளிக்க, ஊகான் மாநகராட்சி அந்த டாக்டரின் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, மறைப்பதற்கு எவரும் அறியாத ஒன்றை இந்த டாக்டர் கூறவும் இல்லை; அவர் துன்புறுத்தப்படவும் இல்லை.

மேலும், இந்த நோயை பற்றிய ஆய்வை துரிதப்படுத்திய சீனா, ஜனவரி 3 அன்றே உலக சுகாதார அமைப்பையும், அனைத்து முக்கிய நாடுகளையும் தொடர்பு கொண்டு, இந்நோயை குறித்து எச்சரித்தது. இதில் அமெரிக்காவும் அடக்கம். இந்நோயை பற்றிய எச்சரிக்கையை அமெரிக்காவின் நோய் தடுப்பு ஆணையம் ஜனவரி 3 அன்று பெற்றது என்பதை அமெரிக்காவே ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் இதன் பின்பும், ட்ரம்ப் இன்றும் சீனா இந்நோயை பற்றி உரிய நேரத்தில் எச்சரிக்கவில்லை என பொய் கூறி வருகிறார்.

இதற்கு பின், ஒவ்வொரு நாளும் ஊகான் சுகாதார ஆணைய அதிகாரிகள் ஊடங்கங்களை சந்தித்து பதிலளித்ததோடு, ஒவ்வொரு நாளும் இந்த நூதன நிமோனியா நோயால் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்ள்ளனர் என்பதை தன் வலைத்தளத்தில் பதிப்பித்துக்கொண்டே வந்தது.

இக்காலத்தில் முக்கிய சாதனை, ஜனவரி 12 அன்று சீன ஆய்வாளர்கள் இந்த வைரஸின் முழு மரபணு அமைப்பை கண்டறிந்தனர். இது இருந்தால் மட்டுமே இந்நோயை கண்டறியும் சோதனை  கிட்டுகளையும், இந்நோய்க்கான தடுப்பூசியையும் உருவாக்க முடியும். நோயை பற்றி அறிந்த சில நாட்களிக், இந்த மரபணு அமைப்பை கண்டறிந்தனர். இது மிகப்பெரும் சாதனை. ஒப்பீடாக, 2002ல் சார்ஸ் நோய்த்தொற்றின் பொழுதும், பின்னர் எபோலா வைரஸ் தொற்றின் பொழுதும், மரபணு அமைப்பை கண்டறிய ஆய்வாளர்களுக்கு 2-3 மாதங்கள் தேவைப்பட்டது.

மரபணு கட்டமைப்பை கண்டறிந்த சீன ஆய்வாளர்கள், உடனடியாக, வெளிப்படையாக, இந்த மரபணு அமைப்பைப் பற்றி உலக சுகாதார அமைப்பிடம் பகிர்ந்து கொண்டனர்.இதனால், லாபம் பாராமல், உலக ஆய்வாளர்கள் யார் வேண்டுமானாலும் தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்க வழி வகுத்தது சீனா.

மேலும் இந்த காலகட்டத்தில், இந்த தொற்றை பற்றி மேலும் அறியவும், கட்டுப்படுத்தவும் சிறப்பு குழுக்கள் ஊகான் மற்றும் அனைத்து நகரங்களுக்கும் அனுப்பப்பட்டன. மேலும் ஜனவரி 16ம் தேதிக்குள் “பி.சி.ஆர்” எனப்படும் சோதனைக் கருவிகளை உருவாக்கி, அனைத்து மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைத்தார்கள் (இன்று நாம் இந்த கருவியையே சோதனைக்கு பயன் படுத்தி வருகிறோம்).

இந்தக் கால கட்டத்தில், இந்த வைரஸ் ஒரு மனிதரிடமிருந்து இன்னொரு மனிதரிடம் பரவி வருவதைப் பற்றிய சந்தேகங்கங்கள் ஆய்வாளர்களுக்கு இருந்தாலும், உறுதி செய்ய ஆதாரங்கள் இல்லை. இதை உலக சுகாதார அமைப்பும் உறுதி செய்தது.

ஜனவரி 19 அன்று தான், சீன அரசால் ஊகான் நகரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட சீனாவின் தலை சிறந்த வைரஸ் ஆய்வாளர் ஷாங் நன்ஷங் இந்த வைரஸ் ஒரு மனிதரிடமிருந்து இன்னொரு மனிதரிடம் பரவி வருவதைக் கண்டறிந்து கூறினார். இதன் ஆபத்தை உடனே உணர்ந்தது சீன அரசு. ஜனவரி 20 அன்றே அதிபர் தோழர் ஜி ஜின்பிங் இந்த தொற்றின் ஆபத்தை குறித்து தேசத்திற்கு அறிவித்தார். இதன் பின் ஜனவரி 28 அன்று சீனா சென்ற உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ், சீனாவின் வெளிப்படைத்தன்மையைக் குறித்து பாராட்டினார்.

ஜனவரி 4ம் தேதியிலிருந்து 20ம் தேதி வரையிலான காலம் பற்றியே சீனா பற்றிய ஏகாதிபத்திய நாடுகளின் பொய் ஜோடிப்பு இன்று பரவலாக உள்ளது. குறிப்பாக, அமெரிக்காவின் முக்கிய ஊடகம் ஒன்று ஏப்ரலில் வெளியிட்ட அறிக்கையில், சீனா ஜனவரி 4ம் தேதியிலிருந்து இரண்டு வாரங்களுக்கு நோயுற்றோர் பற்றிய தகவலை சேகரிக்கவில்லை எனவும், ஜனவரி 14 முதல் 20 வரை நோய் தொற்றை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு கூறியது. இந்த கட்டுக்கதையை வைத்து தான் ட்ரம்ப் உட்பட பல உலக ஏகாதிபதியவாதிகளும் இன்று சீனா மீது பழி சுமத்தி வருகின்றனர். ஆனால் இந்த பொய்க்கு எதிரான ஆதாரங்கள் நிரம்ப உள்ளன.

மேலும் ஜனவரி 20ம் தேதிக்கு பிறகு நிகழ்ந்தவை மிகவும் அசாதாரணமான நிகழ்வுகள். உடனடியாக, ஜனவரி 23 அன்றே சீன அரசு ஊகான் நகரை “லாக் டவுன்” எனும் ஊரடங்கிற்குள் கொண்டு வந்தது. இந்த தொற்றின் ஆபத்து பற்றி உலக சுகாதார அமைப்பு உணர்ந்த போதும், இது அதுவரை சந்தித்திராத புதுமையான நிலைமை என்பதால், தீர்மானமான அறிவுரையை சீனாவிற்கு வழங்க முடியவில்லை. ஆனால் சீன அரசு தைரியமாக ஊரடங்கை அமலாக்கியது.

சீன அரசு அவ்வாறு செய்வதற்கு முன், மனித வரலாற்றிலேயே எந்தநேரத்திலும், ஒரு கோடி மக்களுக்கு மேல் வசிக்கும் எந்த பகுதியிலும் “லாக் டவுன்” கொண்டுவரப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சீன அரசின் இந்த புதுமையான மற்றும் தைரியமான நடவடிக்கை, இன்று உலகமே இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டியாய் உள்ளது.

இந்த “லாக் டவுன்” அமலாக்கிய பொழுது, சீனாவை சர்வாதிகாரத்தனமாக நடந்து கொள்வதாக சாடிய ஏகாதிபத்திய நாடுகள், இன்று சீனா ஏன் ஊரடங்கை இன்னும் விரைவாக அமலாக்கவில்லை என கேள்வி எழுப்புவது நகை முரண். இந்த தொற்றின் ஆபத்தை பற்றி சீனா அனைத்து தகவல்களையும் அளித்திருந்தபோதும், எந்த ஏகாதிபத்திய நாடுகளும் ஒரு மதத்திற்கு மேல் “லாக் டவுன்” அறிவிக்காமல் இருந்தன. ஆனால் தொற்றை பற்றி ஏதுமே தெரியாமல் இருந்த சீனா, ஒரே வாரத்திற்குள் “லாக் டவுன்” அறிவித்திருக்க வேண்டும் என இப்பொழுது எதிர்பார்ப்பது எவ்வளவு வேடிக்கை!

சீனா கடைபிடித்த “லாக் டவுன்”, இன்று இந்தியா கடை பிடிப்பது போல் உழைக்கும் மக்களை உணவின்றி தவிக்க விடும் கொடிய “லாக் டவுன்” அல்ல. ஹூபே மாகாணத்தின் ஒவ்வொரு தெருவிற்கும், ஒவ்வொரு பகுதிக்கும், ஒரு அதிகாரியை நியமித்து, அங்குள்ள ஒவ்வொருவருக்கும் உணவும் மருந்தும் வீட்டிற்கே கிடைப்பதை உறுதி செய்தார்கள். எவரும் வீட்டை விட்டு வெளியே வர சிறிதும் அவசியமற்ற ஏற்பாடுகள் செய்தது அரசு. பச்சை வழிப் பாதைகள் அமைத்து, சீனாவின் இதர பகுதிகளிலிருந்து ஹூபே மாகாணத்திற்க்கு உணவு, மருந்து மற்றும் இதர தேவைகள் அனைத்தும் தங்கு தடையின்றி வர வழி செய்தது. வீட்டிற்குள்ளேயே இருப்போர் மனநலத்தை உறுதி செய்ய இணைய வழி ஆலோசனை மையங்களை உருவாக்கியது. இவ்வாறு மக்கள் நலனை மனதில் கொண்டே அனைத்து நடவடிக்கைகளும் எடுத்தது.

ஒவ்வொரு படியிலும், தாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும், தாங்கள் செய்யும் தவறுகள் குறித்தும் உலக நாடுகளுக்கு அறிவித்துக்கொண்டே வந்தது சீனா. ஆனால் இந்த அனைத்து தகவல்களும் எச்சரிக்கைகளும் அறிந்திருந்த போதும், எந்த ஏகாதிபத்திய நாடும், ஏறத்தாழ இரண்டு மாதங்கள் வரை எந்த விதமான ஏற்பாடுகளும் செய்யாமல் இருந்தன.

தன் மக்களின் நலனில் சிறிதும் கவலை இல்லாத ஏகாதிபத்திய நாடுகள், அதன் முதலாளித்துவ கொள்கைகளால் இன்று தொற்று கட்டுக்கடங்காத நிலைக்கு செல்ல விட்டுள்ளன. பின் சீனா பொய்யான தகவல்களை அளித்ததாகவும், சீனாவில் அரசு அறிவித்ததை விட அங்கு பன்மடங்கு மக்கள் இறந்ததாகவும் பொய் பரப்பி வருகின்றனர். ஆனால் இதையும் பொய்யென நிறுவியது சீனா.

பிப்ரவரி இரண்டாம் வாரம், டாக்டர் பிரூஸ் அயல்வார்ட் ஒரு மருத்துவர்கள் குழுவை உலக சுகாதார அமைப்பு ஊகான் மற்றும் இதர பகுதிகளுக்கு அனுப்பியது. அவர்கள் சீனாவின் நடவடிக்கைகளை கண்டு பெருமளவில் வியந்தனர். பல்வேறு தரப்பிலிருந்தும் தரவுகளை சேகரித்த அவர்கள், சீன அரசு வெளியிட்டுள்ள தரவுகள் உண்மை தான் என்பதை உறுதி செய்தனர். இவ்வளவு சிறப்பாக, குறைந்த இறப்பு விகிதத்தோடு நோயை கட்டுக்குள் கொண்டு வந்ததைக் கண்டு ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த உண்மையை ஏற்க முடியாத ஏகாதிபத்திய நாடுகள், உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக இருப்பதாக குறை கூறுகிறார்கள். ஆனால், அங்கு சென்ற மருத்துவர்களில் பாதிப்பேர் உலக சுகாதார அமைப்புடன் சார்பு இல்லாத தன்னிச்சையான மருத்துவர்கள் ஆவார்கள். அவர்களும் இதே உண்ம்மையைத் தான் கூறுகின்றனர். ஆக, சீனா இந்நோயை திறம்பட கட்டுக்குள் கொண்டு வந்தது ஜோடிப்புகளுக்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப் பட்டது.

சீனாவின் இந்த சிறப்பான நடவடிக்கைகள் குறித்து உலக விஞ்ஞானிகளுக்கு பாராட்ட சொற்கள் இல்லை. மருத்துவர் பிரூஸ் அயல்வார்ட் சீனா சென்று கண்ட பின் கூறுகையில், “எவருமே அறியாத நோயொன்றை எதிர்கொண்ட சீனா, அதை கட்டுப்படுத்த பாரம்பரிய முறைகளோடு நவீன அறிவியலையும் கலந்து, கற்பனைக்கெட்டாத முறையில் சாதனை செய்துள்ளது” என்றும், “இந்த போராட்டத்தில் சீன மக்கள் செய்துள்ள தியாகத்திற்கு உலகமே அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது” என்றும், “சீனாவின் சிறந்த நடவடிக்கைகளால், இந்த நோயை கட்டுப்படுத்தியதோடு, இந்த தொற்றை சமாளிக்க அவசியமான விலைமதிப்பில்லாத நேரத்தை சீனா உலகிற்கு பெற்றுத் தந்துள்ளது” என்றும் போற்றினார்.

உலக சுகாதார அமைப்பின் மருத்துவர் கவுடன் கலியா, “ஒரு தொற்று நோயின் பொழுது, அது பெருமளவிலான மக்களை தாக்கி, பின் அடங்குவது தான் அதன் இயற்கையான போக்கு. ஆனால் சீனா இந்த போக்கையே மாற்றி, தொற்று நோயை முளையிலேயே வெட்டிவிட முடியும் என்று உலகிற்கே நிறுவியுள்ளது” என்று பெருமையாக கூறினார். மேலும் மக்களுக்கு பொது சுகாதாரம் வழங்குவதன் அவசியத்தை சீனா காட்டியுள்ளதாக அவர் புகழ்ந்தார்.

இது எதையுமே ஏற்க மறுக்கும் ஏகாதிபத்தியவாதிகள், முதலில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் மருத்துவர் டெட்ரோஸ் சீனாவின் கைக்கூலி என்று கூறினார்கள். பின் அனைத்து மருத்துவர்களும் சீனாவை பாராட்டியதால், மொத்த அமைப்பே சீனவின் கைக்கூலி எனக் கூறியதோடு, அந்த அமைப்பிற்கான நிதியை முடக்கியது அமெரிக்கா.

உலக சுகாதார அமைப்பின் தலைமையில் இருப்பவர்களிக் ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே சீன மருத்துவர் ஆவார். இதர அனைவருமே பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள். உலக சுகாதார அமைப்பின் நிதியில் பெரும்பான்மை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிடமிருந்தே வருகின்றது. வெறும் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான நிதி மட்டுமே சீனாவிடம் இருந்து வருகிறது. உலக சுகாதார அமைப்பிற்கு சீனாவிற்கு எதிராக பேசி, அமெரிக்கா-பிரிட்டனை ஆதரிக்க அனைத்து உந்துதலும் உள்ளது. ஆனால் சீனாவை ஆதரிக்க அறிவியல் நேர்மையைத் தவிர வேற எந்த உந்துதலும் இல்லை.

இதனால் சீனா தவறுகளே செய்யவில்லை என்று கிடையாது. ஆனால் தாங்கள் செய்யும் தவறை ஒப்புக்கொண்டதோடு, அதை உலக நாடுகள் செய்யாமல் இருக்குமாறும் கேட்டுக்கொண்டனர். உதாரணமாக, சுகாதாரப் பணியாளர்கள் மத்தியில் தொற்று பரவுவதை சற்றே தாமதமாகவே கண்டறிந்த சீனா, உடனடியாக பாதுகாப்பு உபகரணங்களை அவர்களுக்கு அளித்ததோடு, இந்த தவறை மற்ற நாடுகள் செய்யாமல் இருக்குமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், இன்றும் ஏகாதிபத்திய நாடுகள் தங்கள் நாட்டு சுகாதாரப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க சரியான ஏற்பாடுகள் செய்யாமல், அவர்களின் இறப்புக்கு காரணமாகி வருகின்றன.

மேலும், இந்த நோயை சிறப்பாக கட்டுப்படுத்திய சீனாவே, தங்களின் பாதையில் பல தவறுகள் இழைத்ததாகவும், அதிலிருந்து பாடம் கற்க வேண்டும் என்றும் ஒப்புக்கொண்ட முதல் உலக அதிபர் தோழர் ஜி ஜின்பிங் தான். ஆனால் தொற்றை கட்டுப்படுத்த தவறிய ஏகாதிபத்திய அரசுகள், இன்றும் தங்களின் கொடிய தவறுகளுக்கு பிறரை குற்றம் கூறி வருகின்றன.

சீனாவின் சிறப்பான திட்டமிடுதலும், அறிவியல் ரீதியான நடவடிக்கைகளும் உலக நாடுகள் அனைத்துமே கற்க வேண்டிய முக்கிய பாடம். அனால் இதை ஒப்புக்கொண்டால், தங்கள் நாட்டில் கம்யூனிச உணர்வு வளர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில், வலதுசாரி ஏகாதிபத்தியவாதிகள் இதை ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர். இன்றும், பல்வேறு ஆய்வுகளும் இந்த வைரஸ் எந்த ஆய்வுக்கூடத்திலும் உருவாக்கவில்ல, இயற்கையில் உருவானதே என்று உறுதியாக கூறிய பின்னும், இந்த வைரஸ் சீன ஆய்வகத்தில் உருவானதாக பொய்யுரைத்து வருகிறார் ட்ரம்ப். மேலும் தன்னை தேர்தலில் தோல்வியுறச் செய்ய சீனா எந்த எல்லைக்கும் செல்லும் என குற்றம் சாட்டி வருகிறார். நாள் ஒன்றிற்கு 2500க்கும் மேற்பட்டோர் மரணிக்கும் பொழுதும், ட்ரம்ப் அரசின் கவனம் மக்களை காப்பாற்றுவதில் இல்லை; தேர்தல் பிரச்சாரம் செய்வதிலேயே உள்ளது.

மக்களின் சுகாதார மற்றும் பொது நலனை சந்தைகள் உறுதி செய்ய முடியாது, அரசின் பங்கு மிக முக்கியம் என்பதை இந்த கொரொனா வைரஸ் நோய் தொற்றின் சமயத்தில் சீனாவும் இதர சோசலிச நாடுகளும் நிறுவியுள்ளன.

உலக முதலாளித்துவம் எதிர்கொள்ளும் அமைப்பு சார் நெருக்கடி, மேற்பூச்சு போதாது…

பிரபாத் பட்நாயக்

தமிழில்: க.சுவாமிநாதன்

அமைப்பு சார் நெருக்கடியின் தனித்தன்மை என்ன தெரியுமா? அது மீண்டும் மீண்டும் நிகழ்கி்ற சுழல் நெருக்கடியில் (Cyclical crisis) இருந்தும், இடையிடையே ஏற்படும் நெருக்கடியில் (Sporadic crisis)  இருந்தும் முற்றிலும் வேறுபட்டது. முதலாளித்துவத்தின் அமைப்பு சார் நெருக்கடி என்பது அந்த அமைப்பின் பொதுவான வரையறையை மீறாமல் எடுக்கப்படுகிற ஒவ்வொரு முயற்சியும், அதாவது அதில் நிலவுகி்ற வர்க்க உள்ளடக்கத்தை பொருத்தே அமைவதுமான நடவடிக்கைகளும், நெருக்கடியை மேலும் ஆழமாக்கவே செய்யும் என்பதே ஆகும்.

இப்பொருளில் தற்போது நவீன தாராளமய முதலாளித்துவம் ஓர் அமைப்பு சார் நெருக்கடிக்குள் பிரவேசித்துள்ளது.

மேற்பூச்சுக்கள் மூலம் அதை சரி செய்ய முடியாது. மேற்பூச்சை கடந்து அமைகிற நடவடிக்கைகள் கூட நவீன தாராளமய எல்லைகளை கடக்காததாக இருக்கிற பட்சத்தில் அவையும் நெருக்கடியை சரி செய்யாது. உதாரணமாக, இறக்குமதி சுவர்களை எழுப்பி சந்தையை பாதுகாப்பது, அதாவது உலகமயத்தின் வினை ஊக்கியாய் இருக்கிற சர்வதேச நிதி மூலதனத்தின் மேலாதிக்கத்தை கேள்விக்கு ஆளாக்காமல் தீர்வினை தேடுவது போன்றவை.  இதையே டிரம்ப் அமெரிக்காவில் செய்கிறார். இது நெருக்கடியை இன்னும் தீவீரமாக்கவே செய்யும்.

உலகம் ஒரே சித்திரம்

நெருக்கடியின் அறிகுறிகள் நன்கு தெரிந்தவையே. 2008 நெருக்கடியின் பின்புலத்தில் அமெரிக்காவிலும் மற்ற நாடுகளிலும் ” மலிவுப் பணக் கொள்கை” (Cheap Money Policy) இருந்தது. அதனால் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டு ஜீரோ வரை கூட நெருங்கின. இதன் வாயிலாக உலக முதலாளித்துவம் தற்காலிகமாக சுவாசிப்பதற்கான மிகக் குறைவான வழிகளை மட்டுமே திறந்து விட முடிந்தது. இதனால் மீண்டும் மீண்டும் அதிகரிக்கிற மந்தத்தையே அது சந்திக்க நேரிட்டது. அமெரிக்காவில் வணிக முதலீடுகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. தொழில் உற்பத்தி ஜுலையில் அதற்கு முந்தைய மாதத்தை விட 0.2 சதவீதம் சரிந்துள்ளது. பிரிட்டன் பொருளாதாரம் இந்த ஆண்டு இரண்டாவது காலாண்டில் ஜெர்மனி போலவே சுருங்கியுள்ளது. எல்லா இடங்களிலும் இதே சித்திரம்தான். இத்தாலி, பிரேசில், மெக்சிகோ, அர்ஜென்டினா, இந்தியாவிலும் இதே நிலைதான். சீனா கூட உலக மந்தத்தின் தாக்கத்திற்கு ஆளாகியுள்ளது. அதன் வளர்ச்சி விகிதம் சரிவை சந்தித்து வருகிறது.

எல்லா இடங்களிலுமே கொள்கை உருவாக்குனர்களின் எதிர் வினை என்ன தெரியுமா? வட்டி விகிதங்களை குறைப்பதே. ஏற்கனவே ஐரோப்பிய மைய வங்கி தனது முக்கிய வட்டி விகிதத்தை (Key interest rate) எதிர்மறை மண்டலத்திற்குள் (Negative region) தள்ளியுள்ளதோடு மேலும் குறைக்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் வட்டி விகிதங்கள் ஏற்கெனவே வெட்டப்பட்டுள்ளன. இந் நடவடிக்கையின் பின்னுள்ள எதிர்பார்ப்பு என்ன? குறைவான வட்டி விகிதங்கள் அதிக முதலீடுகளைக் கொண்டு வரும் என்பது கூட பெரிதாக எதிர்பார்க்கப்படவில் லை. மாறாக குறைவான வட்டி விகிதங்கள் சொத்து விலை ‘குமிழிகளை’ (Asset price bubbles) உருவாக்கும் என்பதே. இக் குமிழிகளால் பயன் பெறுவோர் பெரும் செலவினங்களை செய்வார்கள். அதன் மூலம் கிராக்கி பெருக வாய்ப்பு ஏற்படும் என்பதுதான்  மதிப்பீடு.

“குமிழிகளின்” பின்புலம்

எதனால் இந்த ஒரே மாதிரியான வினையை எல்லா இடங்களிலும் உள்ள கொள்கை உருவாக்குனர்கள் செய்தார்கள் என்பதை விளக்க வேண்டும். இரண்டாம் உலகப் போர் முடிந்ததற்குப் பிந்தைய உடனடி காலத்தில், அதாவது நவீன தாராளமய உலக மயம் அமலாவதற்கு முந்திய காலத்தில், அரசு செலவினம் அதிகரிக்கப்படுவதன் மூலம் கிராக்கியை உயர்த்துகிற நடவடிக்கை பின்பற்றப்பட்டது. எப்போதெல்லாம் மந்தத்திற்கான அபாயம் எழுந்ததோ அப்போதெல்லாம் இப்படி சரி செய்ய முடிந்தது. அரசாங்கங்கள் நிதிப் பற்றாக்குறையை தேவைப்பட்டால் உயர்த்திக் கொள்ள முடிந்தது. மூலதனக் கட்டுப்பாடுகள் இருந்ததால், நிதிப் பற்றாக்குறைகள் காரணமாக மூலதனம் பறந்து போய்விடுமென்ற அபாயம் கிடையாது.

இதுவே பிரபல பொருளாதார அறிஞர் ஜான் மேனார்ட் கீன்ஸ் கற்பனையில் உருவான உலகம். அவர் போருக்கு பிந்தைய காலத்திய முதலாளித்துவ பொருளாதார ஒழுங்கை வடிவமைத்த சிற்பிகளில் ஒருவர்.

அவர் நிதி மூலதனத்தின் சர்வதேச மயத்தை எதிர்த்தார். (“நிதி எல்லாவற்றுக்கும் மேலாக தேசியத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்” என்றார்). அவர் அதற்கு கூறிய காரணம், நிதி சர்வதேசமயமாதல் தேசிய அரசின் வேலை உருவாக்க சக்தியை சிதைத்து விடும் என்பதே. இந் நோக்கத்திற்காக, அரசின் செலவினம் பெருகுவதை நிதி சர்வதேசமயமாதல் எதிர்க்கும்; அது தேசிய அரசை சிறை வைத்து விடும் என்பதே அவரின் எண்ணம். முதலாளித்துவ முறைமையின் காவலர் என்ற வகையில் கீன்ஸ் அச்சப்பட்டார். தேசிய அரசு வேலை உருவாக்கத்தை செய்ய முடியாவிட்டால் சோசலிச அபாயத்தை தாக்குப் பிடித்து முதலாளித்துவம் பிழைத்திருக்க இயலாது என்று நினைத்தார்.

நிதி மூலதனத்தின் விஸ்வரூபம்

என்றாலும் மேலை தேசத்து வங்கிகளில் பெருமளவு நிதிக் குவியல் நிகழ்ந்தது. வெளி வர்த்தக இடைவெளியால் அமெரிக்காவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை தொடர்ந்து இக் காலத்தில் அதிகரித்தது; “ஒபெக்” (பெட்ரோல் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு) நாடுகள் 1970 களில் எண்ணெய் விலை உயர்வால்  வருவாய் சேமிப்புகளைக் குவித்தது; மூலதனக் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டுமென்ற நிர்ப்பந்தம் சர்வதேச நிதி மூலதனத்திடம் இருந்து எழுவதற்கு இவை காரணங்களாக அமைந்தன. நிதி மூலதனம் தனது விருப்பப்படி வலம் வருவதற்காக உலகம் முழுவதுமே தனக்கு திறந்து விடப்பட வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்தது. இறுதியில்  வெற்றியும் பெற்றது.

இதன் மூலம் சர்வதேச நிதி மூலதனத்தின் மேலாதிக்கம் நிறுவப்பட்டது. இதன் பொருள், தேசிய அரசு, நிதி தலையீட்டின் மூலம் வேலை உருவாக்கத்தை நிலை நிறுத்துகிற பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதுமாகும். ஆகவே நிலை பெற்றுள்ள நவீன தாராள மய முதலாளித்துவ ராஜ்யத்தில், கிராக்கியை சந்தையில் உருவாக்குவதற்கான ஓரே வழி, சொத்து விலை “குமிழிகளை” தூண்டி விடுவதே ஆகும்; அதற்கு வட்டி விகித கொள்கையை பயன்படுத்துவதும் ஆகும்.

ஆனால் அரசு செலவினத்தை விருப்பப்படி நெறிப்படுத்த முடிவது போல் “குமிழிகளை” விருப்பத்திற்கு ஏற்பவெல்லாம் நெறிப்படுத்தி விட இயலாது. கொஞ்ச காலத்திற்கு 90 களில் ( டாட் காம் குமிழிகள் அமெரிக்காவில் உருவானது) மற்றும் இந்த நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளில் (அமெரிக்காவில் “வீட்டு வசதி குமிழி”) இது பயன்பட்டதான தோற்றம் கிடைத்தது. ஆனால் வீட்டு வசதி “குமிழி” வெடித்து சிதறிய பிறகு மக்கள் மனதில் தயக்கங்கள் ஏற்பட்டன. வட்டி விகிதங்கள் ஜீரோ அளவிற்கு கொண்டு வரப்பட்டும் புதிய “குமிழிகள்” ஏதும் அதே அளவிற்கு எழுவது இல்லாமல் போனது.

உபரியின் அபகரிப்பு

இதற்கிடையில் எல்லா நாடுகளிலும், மொத்த உலகிலும் சராசரி கிராக்கி வீழ்ச்சி அடைவதற்கு இன்னொரு அம்சம் சக்தி மிக்க காரணியாய் அமைந்தது; அது மொத்த உற்பத்தியில் உபரியின் (Surplus) பங்கு அதிகரித்ததாகும்.  எல்லாவற்றுக்கும் மேலான உலகமயத்தின் பொருள்,  எல்லைகள் கடந்த மூலதனத்தின் சுதந்திரமான நகர்வே ஆகும். அதில் நிதி நகர்வும் அடங்கும். இது நிறைய தொழில் நடவடிக்கைகளை, அதிகக் கூலி உள்ள மேலை நாடுகளில் இருந்து குறைவான கூலி உள்ள மூன்றாம் உலக நாடுகளுக்கு இடம் பெயரச் செய்தது.

வளர்ந்த நாடுகளின் தொழிலாளர்களை, மூன்றாம் உலக தொழிலாளர்களுடனான போட்டிக்கு உட்படுத்தியதால் முந்தையவர்களின் கூலி அளவுகளை குறைக்க முடிந்தது. அதே நேரத்தில் பிந்தையவர்களின் கூலி அளவுகளும் அவர்கள் பிழைப்பதற்குரிய மிகக் குறைவான மட்டத்திலேயே நீடிக்கின்றன. காரணம், இந்த இடப் பெயர்வுக்கு பின்னரும் மூன்றாம் உலக நாடுகளின் காத்திருக்கும் தொழிலாளர் படை தீர்ந்து போய் விடவில்லை என்பதே ஆகும். எனவே உலகளாவிய தொழிலாளர் உற்பத்தி திறனின் கூட்டு மதிப்பு அதிகரித்தும், கூலி அளவுகளின் உலகளாவிய கூட்டுத்தொகை அதிகரிக்கவில்லை.

அதீத உற்பத்திக்கான உந்துதல்

இத்தகைய உபரியின் பங்கு அதிகரிப்பு, அதீத உற்பத்திக்கான உந்துதலை உருவாக்குகிறது. வருவாயின் ஓர் அலகுக்குரிய நுகர்வு, உபரி ஈட்டுவோர் மத்தியில் இருப்பதை விட கூலி பெறுவோர் மத்தியில் மிக அதிகமாக இருப்பதே ஆகும். இந்த உந்துதலை அரசு செலவின அதிகரிப்பின் மூலம் ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் ஈடு கட்டியிருக்க முடியும். ஆனால் இது சாத்தியமற்றதாக ஆகி விட்டதால், ஒரே ஒரு எதிர் வினை மட்டுமே இந்த அதீத உற்பத்தி உந்துதலை எதிர்கொள்வதற்கு உள்ளது. அதுவே சொத்து விலை “குமிழிகள்” ஆகும். இந்த குமிழிகளும் சாத்தியமில்லாததால் அதீத உற்பத்திக்கான உந்துதல் கட்டு இன்றி முழு வேகத்தில் வெளிப்படுகிறது. இதையே இன்று நாம் காண்கிறோம்.

வட்டி விகிதங்களை குறைத்து நிலைமையை சமாளிக்கிற பாரம்பரிய கருவி இப்போது வேலை செய்யவில்லை. சராசரி கிராக்கியில் ஏற்படுகிற குறைபாட்டை சரி செய்வதற்கு அரசு செலவினத்தை உயர்த்துவதும் இப்போது செய்யப்படுவதில்லை. ஆகவே டொனால்ட் டரம்ப் தங்களது சொந்த நெருக்கடியை மற்ற நாடுகளுக்கு, குறிப்பாக சீனாவுக்கு, ஏற்றுமதி செய்து சமாளிக்க முனைகிறார். இதற்காக சந்தை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கிறார். சீனாவில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்கள் மீதும் 25 சதவீத வரிகளை போட்டிருக்கிறார். பதிலுக்கு பதில் எதிர்வினை என்ற முறையில் சீனா, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்கள் மீதும் 25 சதவீத வரிகளை போட்டுள்ளது.

நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக அமெரிக்காவால் துவக்கப்பட்ட  இந்த வர்த்தகப் போர், தற்போது உலக பொருளாதாரத்தின் நெருக்கடியை உக்கிரமாக்குகிறது.

ஏனெனில் இது உலக முதலாளிகளின் முதலீட்டிற்கு இருந்த கொஞ்ச நஞ்சம் ஊக்குவிப்பையும் அரித்து விட்டது. வட்டி விகிதங்களின் குறைப்பு அதன் முதல் நோக்கமான சொத்து விலை ” குமிழிகளை” உருவாக்கவில்லை என்பதோடு உலகம் முழுவதுமுள்ள பங்கு சந்தைகளில் வீழ்ச்சிக்கு வழி வகுத்து விட்டது. உதாரணம் வால் ஸ்ட்ரீட். இது ஆகஸ்ட் 14 அன்று இதுவரை இல்லாத பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. இதன் தொடர் விளைவாக உலகம் முழுவதுமுள்ள பங்கு சந்தைகளும் வீழ்ச்சியை பதிவு செய்தன.

பத்மாசூரன் கையும்- உழைப்பாளர் கரங்களும்

அரசு செலவினங்கள் உயர்த்தப்படுமேயானால் “மற்ற நாடுகள் மீது கை வைப்பது” ( beggar-thy-neighbour) என்கிற கொள்கைகள் தேவைப்படாது. அப்படியே அரசு செலவினத்தால் உயர்கிற கிராக்கி வெளி நாடுகளுக்கு கசிந்து விடக் கூடாது என்று சிறிது “சந்தை பாதுகாப்பு” நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், அது மற்ற நாட்டு இறக்குமதிகளை பெரிதும் பாதிக்காது. காரணம் சந்தையே விரிவடைகிறது. ஆனால் அரசு செலவின அதிகரிப்பை செய்யக்கூடாது என சர்வதேச நிதி மூலதனம் கட்டளையிடுவதால் (இதனாலேயே பல நாடுகள் நிதிப் பற்றாக்குறை அளவுகளை கட்டுப்படுத்துகிற சட்டங்களை பெரும்பாலான நாடுகள் இயற்றியுள்ளன) ” மற்ற நாடுகள் மீது கைவைப்பது” (Beggar-thy-neighbour) என்ற கொள்கைகள் ஒரு நாடு பின் தொடர்வதற்குள்ள மிகக் குறைவான தெரிவுகளில் ஒன்றாக மாறிப் போயுள்ளது. இது எல்லோருக்குமான நெருக்கடியை தீவிரப்படுத்தி வருகிறது.

இதுவே அமைப்பு சார் நெருக்கடியின் தனித்த அடையாளம் ஆகும். சர்வதேச நிதி மூலதனத்தின் மேலாதிக்கம் தொடருகிற காலம் வரை, மேலும் உலக மூலதன பரவலின் வலையில் நாடுகள் சிக்கியுள்ள வரையில், நெருக்கடி தொடரும் என்பது மட்டுமின்றி அதை சமாளிக்க அமைப்பின் வரையறைக்குள் நின்று எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சியும் நெருக்கடியை தீவீரப்படுத்தவே செய்யும். சர்வதேச நிதி மூலதன மேலாதிக்கத்தை எதிர்கொண்டு முன்னேற என்ன தேவைப்படுகிறது? ஒவ்வொரு நாட்டிலும் உழைப்பாளி மக்கள் “மாற்று நிகழ்ச்சி நிரலோடு” ஒன்று திரட்டப்பட வேண்டும் என்பதே ஆகும்.

நன்றி: பீப்பி்ள்ஸ் டெமாக்ரசி ஆகஸ்ட் 25, 2019

ஏகாதிபத்திய தலையீட்டின் புதிய வடிவம் வெனிசுவேலாவின் அமெரிக்கத் தலையீடு

குரல்: ஆனந்தராஜ்

பிரபாத் பட்நாயக் ( English)

தமிழில்: கிரிஜா

வெனிசுவேலாவில் தற்போது நடைபெற்று வரும் நிகழ்வுகள், நவீன தாராளவாத கால கட்டத்தில் மூன்றாம் உலக நாடுகளில் ஏகாதி பத்திய தலையீட்டின் தன்மை குறித்ததொரு விளக்கமான படிப்பினையை அளிக்கிறது.  இதர லத்தீன் அமெரிக்க நாடுகளில்  குறிப்பாக பிரேசில் நாட்டில் –  சமீபகாலமாக ஏகாதிபத்தியம் இதே போன்ற தலையீடுகளை செய்துள்ளது.  ஆனால், இம்மியும் பிசகாமல் தனது வலுவான எதிர்ப்பை வெனிசுவேலா வெளிப்படுத்தியதால், அந்நாட்டில் செய்யப்படும் தலையீடுகளில் ஏகாதிபத்தியத்தின் நுட்பங்கள் கூர்மையாக வெளிப்படுகிறது. 

அண்மைக்காலமாக லத்தீன் அமெரிக்காவில் கியூபா, பொலிவியா மற்றும் வெனிசுவேலா போன்ற நாடுகளில் மட்டுமின்றி, பிரேசில், அர்ஜெண்டினா, ஈக்குவாடர் மற்றும் இதர பல நாடுகளில் இடதுசாரி பாதையை நோக்கிச் சென்ற நடுநிலை வாதிகள் ஆட்சியதிகாரத்திற்கு வந்து, ஏழை உழைப்பாளி மக்களுக்குச் சாதகமான மறுவிநி யோகக் கொள்கைகளை அமலாக்கினர்.  இது உலகம் முழுவதிலும் உள்ள முற்போக்கு சக்தி களுக்கு உத்வேகம் அளிப்பதாக இருந்தது. இந்த அரசுகளில் பல இன்றைக்கு கவிழ்க்கப்பட்டுள்ளன. இந்த அரசுகளின் கொள்கைகளுக்கும், திட்டங் களுக்கும் மக்களின் ஆதரவு இல்லாததால் இவை கவிழ்ந்திடவில்லை. மாறாக, அமெரிக்காவின் பிரதானமான பங்களிப்புடன் நிகழ்த்தப்பட்ட கீழ்த்தரமான சூழ்ச்சிகளாலேயே இவை கவிழ்க் கப்பட்டன. 1950களில், 60 மற்றும் 70களில் அமெரிக்கா அரங்கேற்றிய சூழ்ச்சிகளிலிருந்து இவை மாறுபட்டிருந்தன. திடீரென, வலுக்கட்டா யமாக, சட்டவிரோதமாக அரசிடமிருந்து அதிகாரத்தை பறிப்பது என்ற புதிய வடிவத்தில் இச்சூழ்ச்சிகள் அமைந்திருந்தன. குறிப்பாக நவீன தாராளவாத காலகட்டத்திற்கு உரியனவாக அவை அமைந்திருந்தன.

இத்தகைய ஆட்சி கவிழ்ப்பிற்கு இரண்டு முக்கிய காரணிகள் பங்களிப்பு செய்தன. உலக முதலாளித்துவ நெருக்கடியைத் தொடர்ந்து முதன்மைப் பொருட்கள் சார்ந்த வர்த்தகத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி ஒரு காரணியாகும். பிரேசில் உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகள் பெருமளவில் கச்சா பொருட்களை ஏற்றுமதி செய்து வந்தன.  வர்த்தகப் பரிவர்த்தனையில் ஏற்பட்ட எதிர்மறையான நிலைமைகள் காரண மாக இந்நாடுகள் ஈட்டும் அந்நிய செலாவணியின் அளவு குறைந்து போனதால், தங்களது அத்தியா வசியத் தேவைக்கான இறக்குமதியை செய்ய இயலாத நிலைக்கு அவை தள்ளப்பட்டன.  வெனிசுவேலாவைப் பொறுத்தவரை, எண்ணை விலையில் ஏற்பட்ட சரிவு காரணமாக அந்நாடு தனது அத்தியாவசிய தேவைக்கான இறக்கு மதியை செய்ய இயலாத நிலைக்கு தள்ளப் பட்டது. அத்துடன், எண்ணெய் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக அரசின் வரு மானமும் குறைந்து போனது.  அரசு ஈட்டும் அந்நிய செலாவணியின் அளவில் சரிவு ஏற்பட்டபோதும், ஏகாதிபத்திய முகமைகளின் பரிந்துரையின்படி, “சிக்கன” நடவடிக்கைகளை செயல்படுத்திடாது, அதற்குப் பதிலாக ஏழை மக்கள் அனுபவித்து வந்த மறுவிநியோகப் பயன்களை பாதுகாத்திட அரசு முயன்றது. இதன் காரணமாக அங்கு பணவீக்கம் பெருமளவில் ஏற்பட்டது.

இந்நிலை ஏழை மக்களுக்கு கடுந்துன்பத்தை அளித்தது என்பதில் ஐயமில்லை. ஆனால், இந்த கடுந்துன்பங்கள் ஆட்சியாளர்களின் கொள்கை களால் ஏற்பட்டவை அல்ல; மாறாக வர்த்தகத் தில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக ஏற்பட்டவை என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். உண்மையில், நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சிரமங்களை எதிர்கொள்ள ஆட்சி யாளர்கள் “சிக்கனநடவடிக்கை”க்கான கொள் கையை மேற்கொள்ளவில்லை.  ஆட்சியாளர்கள் அவ்வாறு செயல்படுத்தியிருந்தால், அது சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தாததால் மக்கள் இப்போது எதிர்கொள்ளும் துன்பங்களை விட கூடுதலான துன்பதுயரங்களையே ஏழை மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கும்.

உயிர் காக்கும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் கூட தங்கு தடையின்றி இறக்குமதி செய்வதை தடுக்கும் வகையில் அமெரிக்கா தடைகளை விதித்தது. இதன் காரணமாக, வெனிசுவேலா நாட்டு பொருளா தாரம் அளவு கடந்த நிலையில் மோசமானது. மேலும், அமெரிக்காவில் செயல்பட்டு வரும் வெனிசுவேலா நாட்டு அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களின் சொத்துக்களை அமெரிக்கா முடக்கியுள்ளது.  மேலும், அமெரிக் காவிற்கு எண்ணெயை ஏற்றுமதி செய்வதன் மூலம் வெனிசுவேலா நாட்டிற்கு கிடைக்கும் வரு மானங்கள் அனைத்தும் அந்நாட்டில் ஜனநாயக பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட, அரசியலமைப்புச் சட்டத்தின்படியான அதிபர் நிகோலஸ் மதுரோ வின் அரசிடம் அளிப்பதற்குப் பதிலாக, அமெரிக் காவின் ஆதரவுடன் வெனிசுவேலா நாட்டின் அதி பராகத் தன்னைத் தானே அறிவித்துக் கொண்ட ஜூவான் கியோடோவின் அரசிடம்தான் அளிக்கப்படும் என அறிவித்தது.  இத்தகைய நடவடிக்கைகள் வாயிலாக வெனிசுவேலா மீதான தனது பொருளாதார ரீதியான தாக்குதலை அமெரிக்கா சமீப காலமாக மேலும் தீவிரப் படுத்தியுள்ளது. வெனிசுவேலாவின் பணத்தை களவாடி அந்நாட்டிலேயே ஆட்சிக் கவிழ்ப்பை நடத்துவதாகவே இந்நடவடிக்கை உள்ளது. காலனியாதிக்க காலத்தில் ஆதிக்கம் செலுத்து பவர்களின் வெற்றிக்காக அடிமைப்பட்டுள்ள நாட்டு மக்கள் சூறையாடப்பட்டதை இது நினைவுபடுத்துகிறது.

இத்தகைய சூறையாடல்களும், கட்டுப்பாடு களும் வெனிசுவேலா நாட்டு மக்களின் துயரத்தை கூடுதலாக்கியது என்பதை குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. மதுரோ அரசிற்கு எதிராக மக்களை திருப்பிட, அதிகரித்த துயரத்திற்கான பழி மதுரோ அரசின் மீதே போடப்பட்டது.

சமீபத்திய ஆட்சிக் கவிழ்ப்பிற்கான இரண்டா வது காரணி, மத்திய கிழக்கு நாடுகள் மீதான ஏகாதிபத்திய முயற்சிகளை எவ்விதத்திலும் விட்டு விடாமல், அங்கு நேரடியாக செயல்படுவதி லிருந்து படிப்படியாக அமெரிக்கா விலகி வரு கிறது என்பதாகும்.  இதன் காரணமாக, லத்தீன் அமெரிக்கா மீது தற்போது அமெரிக்காவால் கவனம் செலுத்த முடிகிறது.

சமீபத்தில் ஆட்சி கவிழ்ப்புகளுக்கு அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகளில், வெனிசுவேலா ஓர் மிகச் சிறந்த உதாரணமாகும்.  இது அமெரிக்க ஆதரவுடன் 1950களில், 60 மற்றும் 70களில் மேற்கொள்ளப்பட்ட ஆட்சி கவிழ்ப்புகளிலிருந்து குறைந்தபட்சம் 6 விதங்களில் மாறுபட்டுள்ள தோடு, முற்றிலும் புதிய வழிமுறையிலும் அமைந் துள்ளது.

முந்தைய ஆட்சிக் கவிழ்ப்புகளில், அது ஈரான் அல்லது குவாண்டமாலா அல்லது சிலி ஆகிய நாடுகளில் ஆட்சிக் கவிழ்ப்பு நிகழ்த்தப்பட்ட போது, ஜனநாயகபூர்வமாக தேர்ந்தெடுக்கப் பட்ட அரசுகளுக்கு எதிரானவையாக இருந்த தோடு, அந்த இடத்தில் அமெரிக்காவின் ஆதர வைப் பெற்ற யதேச்சதிகார அரசுகள் துளிக்கூட வெட்கமின்றி நிறுவப்பட்டன.  தற்போது நடை பெறும் ஆட்சி கவிழ்ப்புகளும் ஜனநாயகபூர்வ மாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு எதிராக, ஜனநாயகத்தின் பெயரிலேயே நிகழ்த்தப்படுகின் றன. பிரேசில் நாட்டில், ஜனநாயகபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபராக போல்சனரோ தோற்றமளிக்கிறார்.  ஆனால், தில்மா ரூசுப்பிற்கு எதிராக “நாடாளுமன்ற சதி” மட்டும் அரங் கேற்றப்படவில்லை; ஆனால் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட, தேசத்தின் மிகப் பிரபலமான அரசியல் தலைவரான, முன்னாள் அதிபரும், தொழிலாளர் கட்சியைச் சார்ந்தவருமான லூலா தேர்தல்களில் போட்டியிட அனுமதிக்கப்பட வில்லை.  இது முதலாவது வேறுபாடாகும்.

அதேபோன்று வெனிசுவேலாவில், அமெரிக்கா வின் ஆதரவு பெற்ற ஜூவான் கியோடோ, வலுவான ராணுவ மனிதர் மட்டுமல்ல, மாறாக, தேசிய சட்டமன்றத்தின் அதிபராக உள்ளார். இதையே வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பழைய சுரண்டல் வெள்ளை மேலாதிக்க ஒழுங்கு முறையை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் சக்திகள், லத்தீன் அமெரிக்காவில் முற்போக்கான ஆட்சிகளுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக நேரடியாக அமெரிக்காவால் அணிதிரட்டப் பட்டு வருகின்றன.

சட்டபூர்வமாக ஜனநாயக ரீதியாக தேர்ந்தடுக் கப்பட்ட அரசுகளுக்கு எதிராக அணி திரட்டப் பட்டபோதும், ஜனநாயகத்தை பாதுகாப்பது என்ற பெயரில் அமெரிக்காவின் ஆதரவைப் பெற்ற சக்திகளால் பெரியதொரு அளவில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களும், எதிர்ப்பியக் கங்களும் மேற்கூறப்பட்ட போக்குடன் இணைந்த வையாகும்.  சுருங்கச் சொன்னால், எதிர்ப்புரட்சி சக்திகள், முந்தைய காலகட்டங்களில் இருந்ததைப் போன்று வெறும் ராணுவ ரீதியான ஆட்சிக் கவிழ்ப்புகளாக இல்லாமல் ஒரு வெகுஜனத் தன்மையை அடைந்துள்ளன.

இரண்டாவதாக, மக்களின் பொருளாதார நெருக்கடிகளுக்கு முற்போக்கான அரசுகள் காரணமில்லை என்பதோடு மட்டுமின்றி, இந்நெருக்கடிகளில் பெரும்பாலானவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் வேண்டுமென்றே உருவாக் கப்பட்டவை ஆகும்.  இருந்தபோதும், இந்த பொருளாதார சிரமங்களிலிருந்தே எதிர்ப்புரட்சி கர வெகுஜன இயக்கங்கள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன. முந்தைய ஆட்சி கவிழ்ப்பு களில் வெகுஜனத் தன்மை இருக்கவில்லை. எந்த பொருளாதார நெருக்கடியின் வெடிப்பைத் தொடர்ந்ததாகவும் அவை இருக்கவில்லை. அல்லது இத்தகைய சிரமங்களை முன்னிறுத்தி தங்களது நடவடிக்கைகளை நியாயப்படுத்தவும் அவர்கள் அக்கறை காட்டவில்லை. ஆம். கயானாவில் டாக்டர் சேட்டி ஜகனின் அரசு ஏகாதிபத்தியத்தின் நிதியுதவியுடன் நடத்தப்பட்ட லாரி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தத்தாலேயே கவிழ்க்கப்பட்டது. முந்தைய காலகட்டத்தில் ஆட்சியை கவிழ்த்திட எப்போதேனும் பயன் படுத்தப்பட்ட இத்தகைய வழிமுறை, தற்போது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

மூன்றாவதாக, மக்கள் எதிர்கொள்ளும் பொருளா தார நெருக்கடிகளில் பெரும்பாலானவை உல களாவிய முதலாளித்துவ பொருளாதாரத்தின் செயல்பாட்டாலும், ஏகாதிபத்தியத்தாலேயும் உருவாக்கப்பட்டவை ஆகும்.  இருந்தபோதும், இதற்கான பழி முற்போக்கு அரசுகள் மீது மட்டுமின்றி, அவற்றின் இடதுசாரி கொள் கைகள் மீதும் மிக வெளிப்படையாக சுமத்தப்படு கின்றன.  நாட்டின் கனிம வளங்கள் தேசியமய மாக்கப்பட்டது, பொருளாதாரத்தில் அரசின் தலையீடு, முதலாளித்துவ ஆதரவு கொள்கை களுக்கு எதிரான நிலைபாடு போன்றவையே பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணியாக முன்னிறுத்தப்படுகின்றன. நவீன தாராளவாத ஒழுங்குமுறை செயல்பாட்டின் மீது செய்யப் படும் எந்தவொரு தலையீட்டிற்கும் எதிரான தத்துவார்த்த தாக்குதலை ஆட்சிக் கவிழ்ப் பிற்கான பிரச்சாரம் இணைக்கிறது.  இத்தகைய தத்துவார்த்த தாக்குதல் தெளிவற்றதாக இருப்பது அவசியமாகிறது. “ஊழல்”, “தகுதியின்மை” போன்ற கருத்துக்கள் முன்னுக்கு கொண்டு வரப்படுகின்றன. ஆனால், நவீன தாராளவாத ஒழுங்குமுறையில் அரசின் தலையீட்டுடன் இணைந்ததாகவே இவை கருதப்படுகின்றன.

நான்காவதாக, கார்ப்பரேட் ஆதரவு நவீன தாராளவாத ஒழுங்குமுறையை மீண்டும் நிறுவுவதற்கான நிகழ்ச்சி நிரல் வெளிப்படையாக முன் வைக்கப்படுகிறது. உதாரணமாக, “ஜனநாயக மாற்றம்” என்பதற்கான திட்டம் வெனிசுவேலாவில் முன்வைக்கப்பட்டது. ஆட்சி கவிழ்ப்பிற்குப் பிறகு என்னவெல்லாம் செய்யப்படும் (கீழே கொடுக்கப் பட்டுள்ளவை உள்ளிட்டு) என்பது இத்திட்டத் தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

1) சர்வதேச நிதி நிறுவனத்தின் நிதியைப் பெறு வதன் மூலம் உற்பத்திக் கருவிகளை மீண்டும் செயல்படுத்துதல்.

2) அனைத்து கட்டுப்பாடுகளையும், விதி முறைகளையும், அதிகார தலையீடுகளையும், ஒழுங்கு நடவடிக்கைகளையும் நீக்குதல்.

3) நம்பகத்தன்மையையும், தனியார் சொத்துக் களுக்கு வலுவான பாதுகாப்பையும் அளிக்கும் விதிமுறைகளுக்கு உட்பட்டு சர்வதேச முதலீட்டை அனுமதிப்பது.

4) பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் முதலீட்டிற்கு வழி வகுப்பது.

5) எண்ணெய் திட்டங்களில் பெரும்பான் மையான பங்குகளை தனியார் நிறுவனங்கள் வைத்துக் கொள்ள அனுமதியளிக்கும் புதிய ஹைட்ரோகார்பன் சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது.

6) பயன்பாட்டு சொத்துக்களின் செயல் பாட்டிற்கு தனியார்துறை பொறுப்பாக்கப்படும்.

7)            குறைந்தபட்ச அரசின் மூலம் திறனை அதிகரித்தல்

இது நவீனதாராளவாதத்தின் வெட்கங் கெட்ட நிகழ்ச்சி நிரலாகும். இருப்பினும், இதுவே ஆட்சி கவிழ்ப்பிற்கான நிகழ்ச்சி நிரலாக உள்ளது.  கார்ப்பரேட் நிகழ்ச்சி நிரலை செயல்படுத்திட ஜனநாயகபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தூக்கி எறியப்பட வேண்டும் என்ற இத்தகைய தெளிவான செய்தி இவ்வளவு வெளிப்படையாக இதற்கு முன்னெப்போதும் முன்வைக்கப்பட்ட தில்லை.

ஐந்தாவதாக, தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் ஆட்சிக் கவிழ்ப்புகள் எல்லாம் அமெரிக்கா வின் ஆதரவுடன் அரங்கேற்றப்பட்டு வருகின்றன என்றாலும், இவையெல்லாம் ஏகாதிபத்திய சக்திகள் அனைத்தின் ஆதரவுடனேயே நிகழ்த் தப்பட்டு வருகின்றன.  எனவேதான், வெனிசுவேலா வின் அதிகாரபூர்வமான அரசாக ஜூவான் கியோடோ அரசை ஐரோப்பிய யூனியன் அங்கீரிக்க வேண்டுமென டிரம்ப் கேட்டுக் கொண்டபோது அது உடனேயே ஏற்றுக் கொள்ளப்பட்டது.  இது இன்றைய காலகட்டத் தில் காணப்படும் யதார்த்தத்தின் குறியீடாகும்.  இதற்கு முன்னர் இருந்த பலத்துடன் இன்றைக்கு அமெரிக்கா இல்லை. ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையேயான முரண்பாடுகள் மட்டுப்பட்டுள் ளன; ஏகாதிபத்திய நடவடிக்கை எதையேனும் அமெரிக்கா மேற்கொண்டாலும் கூட அதற்கு மற்றவர்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது ஆகியனவையே அந்த யதார்த்தங்களாகும்.

இறுதியாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாம் உலக நாடுகளின் அரசிற்கு எதிரான ஏகாதிபத்திய நடவடிக்கை ஜனநாயகத்தை பாதுகாத்திடும் நடவடிக்கையாகும்  என அந்நாட்டு மக்களை ஏற்றுக் கொள்ளச் செய் வதில் ஊடகம் மிக முக்கியமான பங்கினை ஆற்று கிறது என்பதை வெனிசுவேலா நிகழ்வு காட்டுகிறது.  நியூயார்க் டைம்ஸ் போன்ற செய்தித்தாள்கள் இத்தகைய பணியை தொடர்ந்து ஆற்றி வருகின்றன. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், இன்றைக்கு நாம் ஓர் புதிய உலக ஒழுங்குமுறை யில் உள்ளோம். இப்புதிய ஒழுங்கு முறையில், ஜனநாயகத்துடன் கார்ப்பரேட் நலன்கள் சமமாக முன்னிறுத்தப்படுவது ஏற்புடையதொரு கொள் கையாக மாறி வருகிறது. அமெரிக்க ஆதரவு ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளுக்கு எதிராக வெனி சுவேலா நாட்டு மக்கள் இதுவரை மிகவும் உறுதி யுடன் செயல்பட்டுள்ளனர். ஆனால், இம்மக் களின் எதிர்ப்பு காரணமாக தற்போது அமெரிக்கா அவர்களை ஆயுதத் தலையீட்டின் வாயிலாக அச்சுறுத்தி வருகிறது. ஆயுதத் தலையீடு செயல்படுத்தப்பட்டது எனில், ஒரு நாட்டின் இறையாண்மைக்கு எதிராக இத்தகைய நடவடிக்கை சமீப காலத்தில் மேற்கொள்ளப் படுவது இதுவே முதலாவதாக இருக்கும். அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை விடுக்கிறது அல்லது அமெரிக்காவின் நலன் களுக்கு ஏதேனும் ஒரு வகையில் ஊறு விளைவிக்கிறது என்ற அற்பமான காரணங்களை இதற்காக முன்வைத்தாலும், இத்தகைய தாக்கு தலுக்கான உண்மையான காரணம் நவீன தாராளவாதத்திற்கு எதிராக செயல்பட மதூரோ அரசு துணிந்தது என்பதேயாகும்.

‘மூலதனம்’, ‘ஏகாதிபத்தியம்’ : சிதைபடும் கோட்பாடுகள்!

[பீப்பிள்ஸ் டெமாக்ரசி (04.09.2016) இதழில் பேராசிரியர் பிரபாத் பட்னாயக் Subversion of Concept என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை இங்கே தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.  – தொகுப்பு  : இ.எம். ஜோசப் ]

பொருளாதாரம் குறித்த விவாதங்களில் பொதுவாக இன்று இரண்டு விஷயங்கள் பேசப்படுகின்றன. ஒன்று, ‘மூலதனத்தின் ஆக்கிரமிப்பு, சிறு உற்பத்தியினை நசுக்கி விடுகிறது. இரண்டு, “ பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆக்கிரமிப்பு, சிறு உற்பத்தியினை நசுக்கி விடுகிறது.“.

மேற்கண்ட இரண்டு வாதங்களுமே ஏறக்குறைய ஒன்று தான் என்று சிலர் கருதக் கூடும். முதல் வாதத்தினை சற்று மேலும் கூர்படுத்திக் குறிப்பாகக் கூறுவதே,  இரண்டாவது வாதம் எனவும் சிலர் கருதக் கூடும்.  ஆனால், அந்தக் கருத்து தவறானது. இரண்டிற்குமிடையில் பெருத்த வேறுபாடுகள்  உண்டு.

அதே போன்று, “அமெரிக்க சாம்ராஜ்யம்” (American empire), “தீய சாம்ராஜ்யம்” (Evil Empire), “அமெரிக்க மேலாதிக்கம்” (US hegemony) போன்ற சொல்லாடல்களும்,  “ஏகாதிபத்தியம்” என்ற சொல்லாடலும்,  உள்ளடக்கத்தில் ஒரே பொருள் கொண்டவை அல்ல. இவை அனைத்தையும் குறித்தும் இங்கு சற்று விரிவாக விவாதிக்கலாம்.

மூலதனமும், முதலாளிகளும்!

சமூக உறவு எனும் வகையில், மூலதனம் சில உள்ளார்ந்த குணப் போக்குகளைக் கொண்டது. இது பல பொருளாதார முகமைகளின் (Economic Agents) செயலாக்கத்தின் அடிப்படையில் இயங்குகிறது. ஒவ்வொரு முகமையும், முதலாளித்துவ அமைப்பின் தர்க்க நியதிகளின் அடிப்படையிலேயே  இயங்குகிறது.

எடுத்துகாட்டாக, முதலாளிகள் செல்வத்தைக் குவித்துக் கொண்டே இருக்கிறார்கள்.  அப்படித்தான் குவிக்க வேண்டும் என்று விரும்பி அவர்கள் செயல்படுகிறார்கள் எனக் கூற முடியாது. முதலாளித்துவ அமைப்பின் தர்க்க நியதி அவர்களை அப்படிச் செய்ய நிர்ப்பந்திக்கிறது. தாங்கள் நினைத்தவாறெல்லாம் செயல்படும் சுதந்திரம் முதலாளிகளுக்குக் கிடையாது.  அவர்கள், முதலாளித்துவ அமைப்பு எழுதி இயக்கும் நாடகத்தின் கதாபாத்திரங்கள் மட்டுமே. அவர்களும் கூட, முதலாளித்துவ அமைப்பிற்குள் அந்நியப்பட்டு நிற்பவர்களேயாவர். எனவே தான், காரல் மார்க்ஸ் முதலாளிகளை “மூலதனத்தின் மனித வடிவம்”  (Capital Personified) என்று அழைக்கும் நிலைக்குச் சென்றார்.

பன்னாட்டு நிறுவனங்கள்!

பன்னாட்டு கார்ப்பரேஷன்களையும், தனிப்பட்ட முதலாளிகளிடமிருந்து இந்த விஷயத்தில் வேறுபடுத்திப் பார்ப்பதற்கில்லை. அவர்களை முலதனத்துடன் சமப்படுத்தி அழைக்க முடியாவிட்டாலும், முதலாளித்துவ அமைப்பின் தர்க்க நியதிகளுக்கு உட்பட்ட இவர்களது செயல்பாடுகள், மூலதனத்தின் உள்ளார்ந்த போக்குகளைத் தீர்மானிக்கும் முகவர்களாக இவர்களை நிலை நிறுத்துகின்றன.   இவர்களை  “முலதன”த்துடன் சமப்படுத்திப் பார்ப்பது, மூலதனத்தின் உள்ளார்ந்த போக்குகள், முதலாளித்துவ அமைப்பின் தர்க்க நியதிகள், அந்த அமைப்பின் “தன்னெழுச்சித் தன்மை” (Spontaneity) குறித்த மூலதனத்தின் ஒட்டு மொத்த கோட்பாடுகள் என அனைத்தையும் புறந்தள்ளி விட்டு, வேறு ஒரு மாறுபட்ட கருத்தியல் தளத்திற்கு இட்டுச் சென்று விடும்.

ஆழமான அரசியல் விளைவுகள்!

இங்கு, கோட்பாட்டுப் பிரச்சினை (Conceptual subject), ஸ்தூலமான பிரச்சினை (Tangible Subject) என்ற இரண்டு அம்சங்கள் விளக்கப்பட வேண்டும். மூலதனம் என்பது கண்ணுக்குப் புலப்படாத பிரச்சினை. இது கோட்பாட்டுப் பிரச்சினை. ஆனால் அந்த மூலதனத்தின் பிரதிநிதிகளாக கண்ணுக்கு புலப்படுபவர்கள் முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்கள் போன்றவை. எனவே அவை எல்லாம் ஸ்தூலமான பிரச்சினைகள்.

கருத்தியல் தளத்தில், உருவமற்ற “கோட்பாட்டு பிரச்சினையை” உருவம் கொண்டதொரு “ஸ்தூலமான பிரச்சினையாக” அதாவது, பன்னாட்டுக் கார்ப்பரேஷன் என்ற தளத்திற்கு மாற்றுவது என்பது, வெறும் தளமாற்றமாக இராது. மாறாக, அது ஆழமான அரசியல் விளைவுகளை உள்ளடக்கியதாகும். மூலதனத்தை குவிமையப்படுத்தல், சமூக வாழ்க்கையின் அனைத்து துறைகளையும் தொடர்ந்து சரக்குமயமாக்கல், சிறு உற்பத்தியினை அழித்தொழித்தல், ஒரு முனையில் செல்வத்தையும், மறு முனையில் வறுமையினையும் உருவாக்குதல் என  முதலாளித்துவத்திற்கு என்று சில உள்ளார்ந்த குணப்போக்குகள் உள்ளன. இந்தப் போக்குகளை   எல்லாம், ஒரு சமூக அம்சம் என்ற வகையில் கடந்து போக வேண்டும் எனில், முதலாளித்துவத்தை முதலில் தூக்கி எறிந்தாக வேண்டும்.  மூலதனத்தை சமூக இயக்கவியலின் கோட்பாட்டு அடிப்படையிலான  அம்சமாக அங்கீகரிக்கும் பட்சத்தில், மனிதகுல விடுதலைக்கு வழி வகுக்கும் சமூகப் புரட்சி தேவைப்படுகிறது. அத்தகைய புரட்சிக்கான ஒரு செயல் திட்டமும் தேவைப்படுகிறது. பன்னாட்டுக் கார்ப்பரேஷன்கள் தான் முதலாளித்துவத்தின் ‘இயக்கிகள்” (Drivers) அல்லது சமூக இயக்கவியலின் “மையப் பிரச்சினை” எனக் குறுக்கிப் புரிந்து கொண்டோம் என்றால்,  பன்னாட்டு நிறுவனங்களை கட்டுப்படுத்துவது, வசப்படுத்துவது, தாஜா செய்வது, சில நற்காரியங்களை செய்ய வைப்பது (“கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு”) போன்றவற்றின் மூலம் இந்த இயக்கவியலின் விளைவுகள் மற்றும் இயங்கு திசைகளை மேம்படுத்தி விட முடியும் என்ற தவறான உணர்வு ஏற்பட்டு விடும். அத்தகைய புரிந்துணர்வு  சமூகப் புரட்சிக்கான செயல் திட்டத்தினைப் பின்னுக்குத் தள்ளி, சீர்திருத்தத்திற்கான செயல் திட்டத்தினை  முன்னுக்குக் கொண்டு வந்து விடும். அத்தகைய திட்டம் ஒரு முற்போக்குப் பெருந்தன்மைத் திட்டமாக  (Progressive liberal agenda) மாறி விடும். எனவே, ‘கோட்பாட்டு அம்சம்”, “உருவம் கொண்டதொரு அம்சமாக” மாறுவது என்பது வெறும் கருத்தியல் தளமாற்றம் அல்ல. அது செயல் திட்டத்தின் மாற்றம். சோஷலிச செயல் திட்டத்திலிருந்து, முற்போக்குப் பெருந்தன்மைத் திட்டத்திற்கு மாறிச் செல்லும்  நடவடிக்கை அது  என்பதை இங்கு மறந்து விடக் கூடாது.

அன்றாடப் பேச்சு வழக்கில்…

நாம் அன்றாடப் பேச்சு வழக்கில், ‘மூலதனம்’ என்ற பதத்தினை பயன்படுத்துவதில்லை. மாறாக, பன்னாட்டுக் கம்பெனிகள், பன்னாட்டு வங்கிகள் என்றும், தனியார் நிறுவனங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது  டாட்டாக்கள், பிர்லாக்கள், அம்பானிகள்  என்றும் தான் பேசி வருகிறோம். ஏனெனில், இவர்களுக்கு எதிராகத் தான் தொழிலாளர்கள் போராடுகிறார்கள். கண்ணுக்குப் புலப்படும் கம்பெனிகள் போன்ற ஸ்தூலமான பிரச்சினைகளை எளிதில் புரிந்து கொள்ள முடியும். ஆனால், கோட்பாட்டுப் பிரச்சினைகளை புரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல.

நடைமுறையிலும் கூட, தொழிற்சங்க நடவடிக்கை உள்ளிட்ட அன்றாடப் போராட்டங்களில் கண்ணுக்குப் புலப்படும் நிறுவனங்களுக்கு எதிராகத்  தான் பேசுகிறோமே தவிர, கோட்பாட்டு அடிப்படையில், அதாவது,  முதலாளிகளை “மூலதனத்தின் மனித வடிவம்” என்று மார்க்ஸ் வர்ணித்ததன் அடிப்படையில், மூலதனத்திற்கு எதிராகப் பேசுவதில்லை. (வர்க்கப் போராட்டம் ஒரு புரட்சிகர நிலையினைத் தொடும் பொழுது தான், அந்த தெளிவான புரிதல் கிட்டும்.)  நாம் இங்கு குறிப்பிட விரும்புவது என்னவெனில், கோட்பாடு அடிப்படையிலும், (அம்பானிக்கெதிரான போராட்டங்கள் போன்ற) நடைமுறை வழக்கிலும், நாம் பேசுவதில் சில மாறுபாடுகள் இருக்கலாம். எனினும், சித்தாந்த தளத்தில் கண்ணுக்குப் புலப்படும் ஸ்தூலமான அடிப்படையினை,  கோட்பாட்டு அடிப்படைக்கு மாற்றாக அமைய அனுமதித்து விடக் கூடாது. 

சித்தாந்த தளத்தில் …  

சில வேளைகளில் சித்தாந்த தளத்தில் அத்தகைய மாற்று என்ற தவறு நிகழ்ந்து விடக் கூடும். அல்லது “கோட்பாட்டு அடிப்படையினை” முறையாக  அங்கீகரித்துக் கொண்டே, ஏறக்குறைய ஸ்தூலமான பிரச்சினைகளிலேயே கால் பதித்து  நிற்பதும் (ஊள்ளடக்கத்தில், இதுவும் சித்தாந்த தளத்தில் உருவாக்கப்படும் மாற்று தான்), அத்தகைய தவறேயாகும். இது இயல்பாகவே, சோஷலிசச் செயல் திட்டத்தை,  முற்போக்கு பெருந்தன்மைத் திட்டமாக உருமாற்றி விடும்.  சோஷலிஸ்ட் அல்லாத முற்போக்குப் பெருந்தன்மையாளர்கள் (Progressive liberals) உள்ளனர். தங்களது அரசியல் சிந்தனைகளின் படி, அவர்கள் கோட்பாடு ரீதியான பிரச்சினைகளை அங்கீகரிப்பதில்லை. நாம் ஏற்கனவே குறிப்பிட்ட படி, “மூலதனத்தின் ஆக்கிரமிப்பு சிறு உற்பத்தியினை நசுக்கி விடுகிறது.” என்று சொன்னால் அவர்கள் அதை புறந்தள்ளி விடுவார்கள்.  ‘மூலதனம்’ என்ற புதிருக்கு, ‘பிரச்சினை’ (Subject) என்று உருவமும் அந்தஸ்தும் கொடுக்கும் வேலை அது என்று கூறிவிடுவார்கள். ஆனால், ஒரு சோஷலிஸ்டைப் பொறுத்த அளவில், சித்தாந்த தளத்தில்,  ‘கோட்பாட்டுப் பிரச்சினைக்கு’ மாற்றாக ‘ஸ்தூலமான பிரச்சினை’யினை முன்வைப்பது என்பது, அவரது சோஷலிச நம்பிக்கையின் ஆணி வேரையே அசைப்பதாகும்.

கூட்டுப் போராட்டங்களில்…

இன்றைய சூழலில், அத்தகைய தவறுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். நல்லெண்ணம் கொண்ட, போர்க்குணம் மிக்க பல சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பலவும் களத்தில் நிற்கும் காலம் இது.  ஆனால், அவர்கள் சோஷலிஸ்டுகள் அல்லர். அவர்களுடைய எதிர் இலக்கெல்லாம் ‘ஸ்தூலமான பிரச்சினைகளே’.   மக்களைப் பாதிக்கும் சில பிரச்சினைகளில் தீவிரமான போராட்டங்களில் ஈடுபடும் இவர்களோடு ஒன்றிணைந்து போராட வேண்டிய தேவை இடதுசாரிகளுக்கு இன்று உண்டு. அவர்களோடு அத்தகைய போராட்டங்களில் இணைந்து போராடும் போது, சித்தாந்தமும், அத்துடன் அனைத்து ‘கோட்பாட்டுப் பிரச்சினைகளும்’ பின்னுக்குத் தள்ளப்படும் அபாயம் உண்டு. சோசலிச லட்சியங்களில் உறுதியாக இருக்க வேண்டும் எனில், இடதுசாரிகள் இதில் மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.

ஏகாதிபத்தியம் என்ற கோட்பாடு!

கோட்பாடு அடிப்படையில் சீர்குலைவு அச்சத்தில் ஆட்படும் மற்றொரு சொல்லாடல் ‘ஏகாதிபத்தியம்’. வளர்ச்சி அடைந்த மற்றும் வளர்ச்சி அடையாத நாடுகளுக்கு இடையிலான பல்வேறு பட்ட உறவுகளின் வலைப்பின்னல் குறித்ததெ ஏகாதிபத்தியம் என்ற சொல்லாடல். இந்த உறவுகள் காலப் போக்கில் பல மாற்றங்களைச் சந்திக்கின்றன. மூலதனத்தின் உள்ளார்ந்த குணப்போக்குகளால் மட்டுமல்லாது, மக்களுடைய போராட்டங்கள் காரணமாகவும் அத்தகைய மாற்றங்கள் நிகழ்கின்றன. ரீகன் நிர்வாகம், புஷ் நிர்வாகம், அல்லது ஒபாமா நிர்வாகம் என்பவை எல்லாம் நாம் ஏகாதிபத்தியம் என்று அழைக்கும் ‘கோட்பாட்டுப் பிரச்சினையின்’  ‘ஸ்தூலமான’ செயல் வடிவங்களே ஆகும்.

ஏகாதிபத்தியம் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால் நடைமுறையில் செயல்படும் இந்த ஸ்தூலமான வடிவங்கள் தாம் கண்ணுக்குத் தெரிகின்றன. ‘மூலதனம்’ என்பதற்கு  மாற்றாக எப்படி ‘பன்னாட்டு நிறுவனங்கள்’, ‘பன்னாட்டு வங்கிகள்’  போன்ற சொல்லாடல்கள் பயன்படுகின்றனவோ, அதே போன்று, ‘ஏகாதிபத்தியம்’ என்பதற்கு மாற்றாக இது போன்ற அரசு நிர்வாகங்களை பார்க்கும் போக்கும்  நிலவுகிறது.

“அமெரிக்க சாம்ராஜ்யம்” (American empire), அல்லது “தீய சாம்ராஜ்யம்” (Evil empire), அல்லது “அமெரிக்க மேலாதிக்கம்” (US hegemony)  அல்லது ஹார்ட் மற்றும் நெக்ரி (Hardt and Negri) தாங்கள் எழுதிய புகழ் பெற்ற நூலுக்கு தலைப்பிட்டதைப் போன்று, “சாம்ராஜ்யம்” (Empire). இவை எல்லாம்  சில சமயங்களில், “ஏகாதிபத்தியம்”  என்பதற்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் சொல்லாடல்கள். அரசாட்சி ஏற்பாடுகளைக் குறிப்பிடும் “ஒபாமா நிர்வாகம்” போன்ற பொதுவான சொல்லாடல்கள் போலன்றி, இந்தச் சொல்லாடல்கள் சில குறிப்பிட்ட உறவுநிலைகளைக் குறிப்பவை  எனபது சரியே. எனினும், மூலதனத்தின் உள்ளார்ந்த குணப் போக்குகளுடனான இணைப்பினை இத்தகைய சொல்லாடல்கள் உணர்த்துவதில்லை.  இந்தச் சொல்லாடல்களைப்  பயன்படுத்துவதில் நமக்கொன்றும் பிரச்சினை இல்லை. ஆனால், ஏகாதிபத்தியம் என்ற சொல்லுக்கு மாற்றாக இவற்றைப் பயன்படுத்தக் கூடாது. மூலதனத்தின் உள்ளார்ந்த குணப்போக்குகள் குறித்த புரிதலையும், அந்தப் புரிதலின் பின்னணியில், மனிதகுல விடுதலைக்கு, முதலாளித்துவத்தைக் கடந்து செல்வது ஒரு முன் நிபந்தனை  என்ற சித்தாந்தப் புரிதலையும் இவ்வகையிலான சொல்லாடல்கள் பாழ்படுத்தி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, குறிப்பாக உலகின் பல பாகங்களில் அமெரிக்க ஆக்கிரமிப்பினை எதிர்க்கும் போராட்டங்களில், நாம் பல ஆர்வமிக்க போராட்டக் குழுக்களுடன் இணைந்து வினையாற்ற வேண்டியுள்ளது. ஆனால், அக்குழுவினர் அனைவரும் சோஷலிஸ்டுகள் அல்லர். மூலதனத்தின் உள்ளார்ந்த குணப்போக்குகள் என்ற இடத்தில் தொடங்கி நாம் சித்தாந்த ரீதியாகப் புரிந்து கொண்டிருக்கும்  “ஏகாதிபத்தியம்” என்ற சொல்லுக்கு அவர்களைப் பொறுத்த மட்டில், பொருள் எதுவுமில்லை. இந்தக் கூட்டுப் போராட்ட அனுபவங்களின் பின்னணியில், சோஷலிசம் குறித்த நமது சித்தாந்த நிலையிலிருந்து வழுவி, முற்போக்குப் பெருந்தன்மையாளர்களின்  அறிவுத்தளத்திற்குள் சென்று விழுந்து விடும் அபாயம் உண்டு.

அத்தகைய போராட்டங்கள் தேவைப்படுகின்றன.  இடதுசாரிகள் மட்டும் அல்லாது, முதலாளித்துவத்தைக் கடந்து செல்ல வேண்டும் என விரும்பும் அனைவரும் அந்தப் போராட்டங்களில் இணைய வேண்டும் என்பதும் தேவையாகிறது. அத்தகைய தேவைகளை ஒன்றுமில்லை என ஒதுக்கித் தள்ளி விட முடியாது. சில போராட்டங்களில் முற்போக்குப் பெருந்தன்மையாளர்கள் இடதுசாரிகளை விட கூடுதல் தீவிரம் காட்டுவதுமுண்டு. இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், அத்தகைய நேரங்களில், இடதுசாரிகள் “கோட்பாட்டுப் பிரச்சினைகள்” அடிப்படையிலான தங்களது சித்தாந்தப் புரிதலை கைவிட்டு விடக் கூடாது என்பதே. .

சரியான புரிதல்!

இந்தப் புரிதலிலிருந்து வழுவுதல் கூடாது என்று சொல்வது, நாம் மார்க்ஸ் மற்றும் லெனின் சிந்தனைகள் குறித்த நமது விசுவாசத்தின் அடிப்படையில் அல்ல. மாறாக, அது தான் சரியான புரிதல் என்பதால் தான். “ஸ்தூலமான பிரச்சினைகள்” மீதான போராட்டங்கள் வெற்றி பெற்றாலும் கூட, அவை தற்காலிக வெற்றிகளே என்பதையும், அடுத்த கட்டத்தில் மூலதனத்தின் குணப்போக்குகள் மீண்டும் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதையும் பார்க்க முடிவதிலிருந்தே   இந்த உண்மையினைப் பரிசோதித்து உணர்ந்து கொள்ள முடியும்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், தொழிலாளி வர்க்கப் போராட்டங்களின் பின்னணியில், வேலைவாய்ப்புக்களையும், மக்கள் கைகளில் வாங்கும் சக்தியினையும் அதிகரிக்கும் தேவையும் நிர்ப்பந்தமும்,  முதலாளித்துவத்திற்கு ஏற்பட்டது.  அவ்வகையில், “கிராக்கி நிர்வாகம்’ (Demand management)  என்ற சமூகப் பொறியமைவு ( Social engineering) உத்திகளைக் கையாளுவதற்கு முதலாளித்துவம் நிர்ப்பந்திக்கப் பட்டது. ஜான் மேனார்ட் கீன்ஸ் என்ற பொருளியல் அறிஞர் முன்வைத்த இந்தக் கொள்கை உத்திகள் “முதலாளித்துவத்தின் பொற்கால’த்திற்கு இட்டுச் சென்றன. ஆனால் அதைத் தொடர்ந்து, மூலதனத்தின் உள்ளார்ந்த குணப்போக்குகளால் எழுந்து வந்த நிதி மூலதனம் ( அது மற்றொரு “கோட்பாட்டுப் பிரச்சினை’)  கீன்ஸ் பொருளாதாரத் திட்டங்களை சுருட்டிப் பின்னுக்குத்  தள்ளி விட்டது. அனுபவங்களின் தொடர் பின்னணியில் எழும் அடுத்தடுத்த புரட்சிகரமான போராட்டங்களின் மூலமே, ‘கோட்பாட்டுப் பிரச்சினைகளுக்கு’ எதிரான  சவால்களை   வெற்றி கொள்ள முடியும். குறிப்பிட்ட பிரச்சினைகளைக் கடந்து முன்னேற முடியும். அது வரை, “கோட்பாட்டுப் பிரச்சினை”களின் அடிப்படையிலான சித்தாந்தப் புரிதலில் உறுதியாக நிற்க வேண்டும். எனவே, சோஷலிஸ்டுகள், கோட்பாடுகளின் சிதைவிற்கு எதிராக எச்சரிக்கையுடன் இருத்தல்  மிகவும் அவசியம்.

நானே மகத்தானவன்! – (குத்துச் சண்டை வீரர் முகமது அலி குறித்து)

உதவிய ஆங்கிலக் கட்டுரை

விண்ணை முட்டும் கரவொலி

செவிப்பறை கிழியும் கூச்சல்!

கரவொலி – குரல் ஒலியுடன்

எதிரொலியும் இணைந்து கொண்ட அரங்கம்!

பெரும் ஆரவாரங்களுக்கிடையில்

அரங்கின் நடு மேடையிலிருந்து

எரிமலை குழம்புகள் வெளியேறுவதுபோல்,     

“நான் மகத்தானவன்

 நானே மகத்தானவன்”

என்ற குரல் பீறிட்டு கிளம்பி, அத்தனை சப்தங்களையும் அமைதியாக்கியது.

தனது 22வது வயதில் தொழில்முறை குத்துச்சண்டை போட்டிக்கு ஃப்ளோரிடா மாநிலம் மியாமி கடற்கரைக்கு வந்து சேர்கிறான் முகமது அலி. மோதப்போவது பிரபலமான சாம்பியன் சன்னி லிஸ்டனுடன் . அவன் சாம்பியன் மட்டுமல்ல. அங்குள்ள உழைப்பாளர்களுக்கு எதிராக கூட்டங்களை கலைக்கவும், போராட்டக்காரர்களை காயப்படுத்தும் பணிகளை செய்யும் பிரபலமான அடியாளாகவும் திகழ்ந்தான். அவன் ஆதரவாளர்கள் கேலி பேசுகின்றனர். முகமது அலியை அவமானப்படுத்துகின்றனர். அவநம்பிக்கையை விதைத்து விரட்டப் பார்க்கிறார்கள். ஆனாலும் அலி அசைந்து கொடுக்கவில்லை.

1964 பிப்ரவரி 25 அன்று போட்டி துவங்கியது. ஒரே சுற்றில் போட்டி முடியும். சன்னி லிஸ்டன் எளிதில் வெல்வான் என நினைத்து அரங்கத்தில் அவனுக்கு ஆதரவான குரல்கள் எழுந்தவண்ணம் இருந்தது. முதல் சுற்று கடந்து இரண்டு…மூன்று சுற்றுகள் தொடர கூட்டத்தில் சப்தம் அடங்கி புருவங்கள் விரிந்தன. ஆறாவது சுற்றில் லிஸ்டன் முகமது அலியால் வீழ்த்தப்பட்டான். கூட்டத்தின் விரிந்த புருவங்கள் நிலைத்து சில நிமிடங்கள் நின்றன. நடுவரின் மணியோசை ஒலித்தவுடன் அலியின் வெற்றி அறிவித்த நிலையில், நிசப்தமான அரங்கம் ஆரவார உச்சநிலையை அடைந்தது. இந்த ஆரவாரங்களுக்கிடையே முகமது அலி இருகைகளையும் உயர்த்தி “நானே மகத்தானவன்” என எரிமலைகுழம்பு பீறிட்டு அடித்தது போல் கத்தினான். இந்த வார்த்தைகள் அடுத்த பத்தாண்டுகள் குத்துச்சண்டை உலகை ஆட்சி செய்தது.

உன்னால் முடிந்தால் என்னை பிடி

பட்டாம் பூச்சிபோல் மிதந்து,

தேனி போல் கொட்டுவேன்

உன்னால் முடிந்தால் என்னை பிடி!

என்ற கவிதை வரிகளுடன் வெற்றிப்பயணத்தில் தடம்பதித்தான்.

விடுதலைக் களமான குத்துச் சண்டை

அமெரிக்காவின் ஆரம்பகால குத்துச்சண்டை வீரர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து பிடித்து வரப்பட்ட கருப்பின அடிமைகளே. அமெரிக்காவின் தெற்கு பகுதியில் தோட்ட முதலாளிகள் மற்றும் பண்ணை முதலாளிகள் தங்களது பொழுதுபோக்கிற்காக கருப்பு அடிமைகளின் கழுத்தில் இரும்புபட்டை கட்டி மோதவிடுவார்கள். அந்த அடிமைகளின் வலியில் இவர்கள் இன்பம் காண்பார்கள். அமெரிக்காவில் அடிமைகளை விடுதலை செய்யும் சட்டம் நிறைவேற்றிய பிறகு பலர் விடுவிக்கப்பட்டனர். அதன் பிறகு பணத்திற்காக நடைபெற்ற போட்டியில் கறுப்பினத்தவர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இந்தக் களத்தையும் கருப்பின மக்கள் தங்களது விடுதலைக் களமாக அமைத்துக் கொண்டனர். முகமது அலியின் முன்னோடிகளின் வரலாறும் இதுவே.

1908ம் ஆண்டு ஜாக் ஜான்சன் (1878-1946) என்ற கருப்பின 20 வயது இளைஞன் டெக்சாஸ் மாநிலத்தில் தொழில்முறை குத்துச்சண்டை களத்திற்கு வருகிறான். 1908ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் முதன்முறையாக “உலக குத்துச்சண்டை வீரன்” என்ற பட்டத்தை டோமி பர்னஸ் என்பவனை வீழ்த்தி வெற்றி பெற்றான். உலக பட்டத்தை பெற்ற முதல் அமெரிக்க கருப்பினத்தவன் இவனே ஆகும். இந்த வெற்றி கருப்பின மக்களிடம் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. அதிகாரம், பணபலம் படைத்த வெள்ளையர்களால் இதை தாங்கி கொள்ள முடியவில்லை. ஜாக் ஜான்சன் இதற்குமுன் உள்ளூர் அளவில் பல கருப்பு, வெள்ளை நிற வீரர்களை தோற்கடித்துள்ளான். எனினும் ஒரு கருப்பன் “உலக சாம்பியன் பட்டம்” பெற்றதை அவர்களால் ஏற்க முடியவில்லை. ஒரு வெள்ளையன் மூலம் ஜாக் ஜான்சனை தோற்கடிக்க வேண்டும் என முடிவெடுத்தனர். ஜாக் ஜான்சனுக்கு இன அடிப்படையில் அச்சுறுத்தல் நெருக்கடிகளை கொடுத்தனர். 1909ம் ஆண்டு வெள்ளை நிறத்து பண்ணையாட்களால் தயார் செய்யப்பட்டு மோதவிடப்பட்ட டோனிராஸ் (Donny Ross), அல்கைஃப்மேன் (Alkaifmann), மற்றும் ஸ்டேன்லி கெட்சல் (Stanley Ketsal) ஆகியோரை ஜாக் ஜான்சன் தோற்கடித்தான். வெள்ளை முதலாளிகளால் தயார் செய்யப்பட்ட ஓய்வுபெற்ற உலக குத்துச்சண்டை வீரர் ஜேம்ஸ் ஜெஃப்ரீசை அழைத்து வந்து மோதவிட்டனர்.

“நான் மீண்டும் சண்டைபோட வருவதற்கு ஒரே

காரணம் வெள்ளை நிறத்தவன் நீக்ரோவைவிட

சிறந்தவன் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று”

நிறவெறி திமிருடன் ஜேம்ஸ் பேசினான்.

அரங்கம் அதிர வைத்து நாக்-அவுட்:

நிறவெறி பதற்றம் போட்டி நடைபெறும் நெவ்டா பிரதேசத்திலும், ரெனோ நகரிலும் பற்றிக்கொண்டது. அரங்கைச் சுற்றிலும், ஆயுதம், துப்பாக்கி, மது வகைகள் ஆகியவை தடைசெய்யப்பட்டிருந்தன. எனினும் வெள்ளை நிற முதலாளிகள் ஜேம்ஸ் ஜெஃப்ரி மீது பந்தயம் கட்டியிருந்தனர். அரங்கை வெள்ளையர் கூட்டம் ஆக்கிரமித்திருந்தது. பார்வையாளர் கூட்டம் “கருப்பனை சாகடி” என வெறிக் கூச்சலிட்டது. போட்டி ஜீலை 4, 1910 அன்று 20,000 பார்வையாளர்கள் மத்தியில் நடந்தேறியது. கருப்பின ஜாக் ஜான்சன் தனது 15வது சுற்றில் முன்னாள் உலக சாம்பியன் “ஜேம்ஸ் ஜெஃப்ரியை” நாக்அவுட் முறையில் வீழ்த்தினான். ஜெஃப்ரி தனது குத்துச்சண்டை வரலாற்றில் அதுதான் நாக்அவுட் முறையில் பெற்ற முதல் தோல்வி.

இந்த போட்டி முடிந்தவுடன் ஜூலை 4ஆம் தேதி மாலையே கலவரம் துவங்கியது. ஜாக் ஜான்சன் வெற்றி கருப்பின மக்களை குதூகலிக்க செய்தது. வெறுப்படைந்த வெள்ளை நிறத்தவர் கருப்பர்கள் மீது தாக்குதலை தொடுத்தனர். நியூயார்க், பிட்ஸ்பர்க், ஃபிலடெல்பியா, நியு ஆர்லியான்ஸ், அட்லாண்டா, செயின்ட் லூயிஸ் என 25 மாநிலங்களிலும், 50க்கும் மேற்பட்ட நகரங்களிலும் கலவரம் நடைபெற்றது. 20க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். பலநூறு பேர்கள் படுகாயமடைந்தனர். இதற்கடுத்து 1960ஆம் ஆண்டுகளுக்கு பிறகுதான் மார்ட்டின் லூதர் கிங் காலத்தில் மீண்டும் கருப்பின மக்களின் எழுச்சி ஏற்பட்டது.

ஹிட்லரை வீழ்த்திய ஜோ லூயிஸ்:

மீண்டும் ஒரு கருப்பின வீரன் “ஜோ லூயிஸ்” குத்துச்சண்டை அரங்கை பற்றவைத்தான். 1937 முதல் 1949-ஆம் ஆண்டு வரை உலக குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை தன்வசம் வைத்திருந்தான். 1934 முதல் 1951 வரை 71 போட்டிகளில் கலந்து கொண்டு 68ல் வெற்றி பெற்றுள்ளான். அவற்றுள் 54 நாக்அவுட் முறை வெற்றியாகும்.

ஜோ லூயிஸ் போட்டிகளில் கலந்து கொள்ளும்போதும் இனவெறி மோதல் இருக்கக் கூடாது என்பதற்காக அவரது மேலாளர்கள் பல கட்டுப்பாடுகளை விதித்தனர். வெள்ளை நிறப் பெண்களுடன் புகைப்படம் எடுக்கக் கூடாது, பொழுதுபோக்கு விடுதிக்கு செல்லக்கூடாது, தானாக சென்று யாரிடமும் பேசக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. எனினும் ஜோ லூயிஸ் கலந்து கொண்ட குத்துச்சண்டை அதிக அளவு அரசியல் களமாக மாறியது. அமெரிக்க நாட்டு நிறவெறியை கடந்து ஜெர்மனி வீரர்களுடன் மோதும்போது இனவெறி மேன்மையை நிரூபிக்கும் ஒரு போட்டியாக இனவெறியர் மாற்றினார்கள். கருப்பினத்தவர்கள் மூளைத்திறன், உடல்திறன் குறைந்தவர்கள். சோம்பேறிகள், கட்டுப்பாடற்றவர்கள் என்று ஹிட்லரின் நாஜிகளால் இனவெறி விஞ்ஞான கருத்தாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது.

1935ம் ஆண்டு கருப்பின ஜோ லூயிஸ் இத்தாலிய உலக சாம்பியன் பிரைமோ கார்னராவுடன் மோதி அவரை தோற்கடித்தான். கார்னரா பெனிட்டோ முசோலினியின் தூதராக கருதப்பட்டான். கருப்பின ஜோ லூயிஸ்-ஐ இத்தாலி ஆக்கிரமித்த எத்தியோப்பிய இனமாக அடையாளப்படுத்தினர். இங்கு அந்த இனத்தூய்மை வாதம் மேலோங்கியது.

ஜெர்மானிய வீரர் மேக்ஸ் ஸ்க்மெல்லிங்கிடம் ஜோ லூயிஸ் 1936-ல் தோற்றுப்போனார். ஹிட்லரும், அவரது கூட்டாளி கோயபல்சும் இந்த வெற்றியை இனவெறி வெற்றியாக பறைசாற்றினர். அமெரிக்காவின் சில பத்திரிக்கைகள் `இந்த வெற்றி தான் எந்த இனம் சிறந்த மேன்மையான இனம் என்பதை நிரூபித்துள்ளது’ என்று எழுதின.

1938ம் ஆண்டு கருப்பின ஜோ லூயிஸ் ஜெர்மானிய மேக்ஸ் ஸ்க்மெல்லிங்குடன் மீண்டும் மோதினான். இந்த போட்டியை அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி வானொலி மூலம் நேரடி ஒலிபரப்பு செய்தது. இந்த போட்டியின் மூலம் வெள்ளை இனமே கருப்பினத்தைவிட மேலானது என்று நிரூபணம் ஆகும் என ஹிட்லரும், வெள்ளை நிற வெறியர்களும் கருதினர். இனப்பெருமையை நிரூபிக்க இது உடல்பலத்தின் மூலமாக நடைபெறும் பொதுவாக்கெடுப்பு என ஹிட்லர் பேசினார். போட்டி துவங்கியது. பெருங்கூட்டத்தால் அரங்கம் நிரம்பி வழிந்தது. இதோ… கருப்பின ஜோ லூயிஸ் முதல் சுற்றிலேயே ஜெர்மானிய மேக் ஸ்க்மெல்லிங்கை வீழ்த்தி ஆட்டத்தை முடித்தான். உடனே ஹிட்லர் ஜெர்மனி முழுவதும் வானொலி ஒலிபரப்பை நிறுத்தினான்.  இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க கண்டம் கடந்து கருப்பின மக்கள் எழுச்சி கொண்டனர். கருப்பின இளைஞர்கள் நம்பிக்கையோடு ஒன்று சேர்ந்தனர். ஜோ லூயிஸ் எந்த அளவு இளைஞர்களின் இதயங்களில் குடிகொண்டிருந்தார் என்பதற்கு மற்றொரு சான்று இதோ. அமெரிக்காவின் தெற்குபகுதி மாநிலத்தில் ஒன்று, மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு புதிய வடிவத்தை கொண்டு வந்தது. “விஷவாயு”வை செலுத்தி மரண தண்டனையை நிறைவேற்றுவது என்று முடிவு செய்தது. இறக்கும் போது விஷவாயு கூண்டுக்குள் என்ன நடக்கிறது என அறிய மைக்ரோபோன் பொருத்தப்பட்டது. முதன்முதலில் இந்த தண்டணை பெற்று நிறைவேற்றப்பட்டவர் கருப்பின இளைஞர். அவரது மரணக்குரல்

“ஜோ லூயிஸ் என்னை காப்பாற்றுங்கள்

ஜோ லூயிஸ் என்னை காப்பாற்றுங்கள்”

என்று இருந்ததாக பதியப்பட்டுள்ளது. அந்த அளவு கருப்பின குத்துச்சண்டை வீரர்கள், அம்மக்களுக்கு மீட்பராக, பாதுகாப்பாளராக இருந்துள்ளனர். ஜோ லூயிஸ் 12 ஆண்டுகளில் 25 முறைகள் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளான்.

கேசியஸ் கிளே பிறந்தார்:

அடுத்த 20 ஆண்டுகளில் குத்துச் சண்டைக் களம் மீண்டும் சமூகப் போராட்டத்தின் உந்து சக்தியாகிறது. அந்த உந்து சக்தியில் முகமது அலி இறந்தார். 1942-ம் ஆண்டு அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் லூயிஸ்வில்லி என்ற இடத்தில் முகமது அலி பிறந்தார். அவருக்கு கேசியஸ் கிளே ஜீனியர் என்று அவரது தந்தை பெயர் வைத்தார். முகமது அலியின் தாத்தா ஹெர்மன் அடிமை சட்டத்தை ஒழித்திட பாடுபட்டவரின் நினைவாக தனது மகனுக்கு கேசியஸ் கிளே என்று பெயர் வைத்தார். இப்போது முகமது அலிக்கு கேசியஸ் கிளே ஜீனியர் என்று பெயர் வைக்கப்பட்டது. காலம் அவனுக்கு கேசியஸ் கிளே என்று பெயரிட்டது. சமூகச் சூழல் அவனை முகமது அலியாக மாற்றியது.

கேசியஸ் கிளே 18 வயது நிரம்பிய நேரத்தில் ரோம் நகரில் நடைபெற்ற கோடை கால ஒலிம்பிக் போட்டியில், குத்துச்சண்டையில் ஐக்கிய அமெரிக்க குடியரசு சார்பில் கலந்து கொண்டு, முதன்முதலாக தங்கப்பதக்கத்தை பெற்றார். ரோமிலிருந்து உற்சாகத்துடன் திரும்பி வந்தார். தனது கழுத்தில் அணிவிக்கப்பட்ட தங்கப்பதக்கத்தை கழற்றாமலேயே விமான நிலையத்தில் இறங்கி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார்.

“அமெரிக்காவிற்காக தங்கம் வெல்வதே என் குறிக்கோள்

ரஷ்யனைத் தோற்கடித்தேன்

போலந்துகாரனைத் தோற்கடித்தேன்

அமெரிக்காவிற்காக தங்கப் பதக்கம் வென்றேன்”

நீ பழைய கேசியசை விட சிறந்தவன் என்று கிரேக்கர்கள் கூறினார்கள்.

என அமெரிக்க தேசம் முன் தனது வெற்றியை ஒப்படைத்தார். கருப்பின மக்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியாக இருந்தது. அவர் அமெரிக்க குடிமகனாக இருந்தாலும், தேசத்திற்காக பதக்கம் பெற்றாலும் நிறவெறி அவரை நிலைகுலையச் செய்தது. அடுத்த வினாடியே கழுத்தில் தொங்கிய பதக்கத்தை கழற்றி ஓடிக்கொண்டிருந்த ஒஹியோ ஆற்றில் வீசினான்.

முகமது அலி உருவானார்:

தேசத்திற்கான போட்டி என்பதிலிருந்து தொழில்முறை குத்துச்சண்டை போட்டிக்கு மாறினான். மறுபுறம் மால்கம் எக்சும், `இஸ்லாமிய தேசம்’ என்ற இஸ்லாமிய மதப்பிரிவும் கேசியஸ் கிளே-வை கவர்ந்தது. அதே நேரத்தில் மால்கம் எக்சையும் கலகக்கார கேசியஸ் கிளே கவர்ந்தார். 1964ம் ஆண்டு மியாமி கடற்கரையில் உலக சாம்பியன் சன்னி லிஸ்டனை தோற்கடித்தவுடன் கேசியஸ் கிளே பெரும் புகழ்பெற்றார். போட்டிக்கு முன் மால்கம் எக்ஸ் கூறினார். “கிளே வெல்வார். நான் பார்த்த சிறந்த கருப்பின வீரர்” என்றார். கிளேயின் பயிற்சியாளர் கேசியஸ் கிளே தலைமுறை வீரர்களை தனது குத்துச்சண்டையால் தரைமட்டமாக்கிவிடுவார் என்றார். கிளாசியஸ் கிளே “நான் மிகவும் வேகமானவன். படுக்கையறை சுவிட்சை தட்டிவிட்டு விளக்கு அணையுமுன் படுக்கையில் இருப்பேன்” என தன்மீதுள்ள அசைக்க முடியா நம்பிக்கையை வெளிப்படுத்தினார். சன்னி லிஸ்டனை சாய்த்த பிறகு, அவரது வெற்றி கொடிகட்டி பறந்தபோது அடுத்த நாள் தான் இஸ்லாமிய தேசம் என்ற மதப்பிரிவில் சேர்ந்ததாக அறிவித்தார். எலிசா முகமது இவரது பெயரை “முகமது அலி” என்று மாற்றினார். முகமது அலியின் இந்த செயல் கருப்பின இளைஞர்களுக்கு எழுச்சியூட்டியது. வெள்ளை நிறவெறியர்கள் சீறினர். கிறிஸ்துவ மதம் வெள்ளை நிறவெறியை ஊக்குவிக்கும் மதம் என கிளே நம்பினார். எனவே இந்த மாற்றம் தனக்குத் தேவைப்பட்டதாக அறிவித்தார். மதம் சமூக ஒடுக்குமுறைகளுக்கு முடிவு கட்டியதாக வரலாறு இல்லை என்றாலும், மதத்தை சுரண்டும் வர்க்கம் தனது சுரண்டலுக்கு பயன்படுத்தி கொண்டிருக்கிறது என்ற நிலைமை இருந்ததாலும் கேசியஸ் கிளே தான் வாழ்ந்த சூழலில் எதிர்ப்பின் அடையாளமாக இஸ்லாமிய தேசம் என்ற மதப்பிரிவை பார்த்தார்.

எனினும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை உட்பட பல பிரபலமான பத்திரிக்கைகள் பெயர் மாற்றத்தை குறிப்பிடாமல் பல ஆண்டுகள் தொடர்ந்து கேசியஸ் கிளே என்றுதான் எழுதினார்கள். இது முகமது அலிக்கு கோபத்தை உருவாக்கியது.

1964ம் ஆண்டு முழுவதும் அமெரிக்காவின் கருப்பின மக்கள் சம உரிமைக்காக போராடினார்கள். இதனால் பல ஆயிரம் சிவில் உரிமை போராளிகள் கைதாகினர். அமெரிக்காவின் தெற்கு முதல் வடக்கு வரை இந்த போராட்டம் நடந்தது. வெள்ளை நிறவெறி அமைப்பு குகிளக்ஸ் (KhuKluxKhan) 30 கட்டிடங்களை குண்டுவைத்து தகர்த்தனர். 36 தேவாலயங்களை தீக்கிரையாக்கினர். கருப்பின இளைஞர்களும் வடக்கு பகுதி சேரிகளில் கொதித்தெழுந்தனர். முதன்முதலாக நகர்ப்புற எழுச்சி அமெரிக்காவில் நிகழ்ந்தது.

இந்த பின்னணியில்தான் முகமது அலி என்ற பெயர் மாற்றத்திற்கு பிறகு நடக்கும் ஒவ்வொரு குத்துச்சண்டை போட்டியும், கருப்பின மக்களின் புரட்சி மற்றும் அதை எதிர்ப்பவர்கள்  என்ற தளத்திலேயே நடக்க ஆரம்பித்தது. பிளைவுட் பேட்டர்சன் (Plywood Patterson) என்பவர் கருப்பின குத்துச்சண்டை முன்னால் உலக சாம்பியன். இவர் வெள்ளை நிறவெறி விசுவாசத்துடன் முகமது அலியை போட்டிக்கு அழைத்தார். இது”ஒரு கருப்பு முஸ்லீமிடமிருந்து பட்டத்தை வெல்லும் புனிதப்போர். நான் ஒரு கத்தோலிக்கன் என்ற வகையில் கிளேயுடன் மோதுவது தேசபக்த கடமை. நான் அமெரிக்க கிரீடத்தை மீட்டுக்கொண்டு வருவேன்” என சபதம் எடுத்து, அமெரிக்க கொடியை தனது உடலில் இறுக்கமாக கட்டிக் கொண்டு போட்டிக் களத்திற்கு வந்தார். 1965ம் ஆண்டு நவம்பர் 22 அன்று போட்டி நடைபெற்றது. முகமது அலி தனது ஒன்பதாவது சுற்றிலேயே பிளைவுட் பாட்டர்சனை அடித்து நொறுக்கினார். பேட்டர்சனை கீழே தள்ளி

வா அமெரிக்காவே! வா!

வா வெள்ளை அமெரிக்காவே! வா!

என்று கர்ஜித்தார். பாட்டர்சன் முகமது அலி என்று அழைக்காமல் கிளே என்றே அழைத்து வந்தார். 1967ல் எர்னி டெரல் (Erney Terrel) என்பவருடன் இதே பின்னணியில் போட்டி நடைபெற்றது. அவரும் முகமது அலி என அழைக்கமாட்டேன் கிளே என்று தான் அழைப்பேன் என்றார். அவரையும் போட்டி மேடையிலிருந்து வீழ்த்தி வளையத்துக்கு வெளியே தள்ளி

என் பெயர் என்ன?

என் பெயர் “கிளே” யா?

முட்டாள், என் பெயர் என்ன?

என்று தனது மாற்றத்தை அங்கீகரிக்காததை எதிர்த்து வினையாற்றினார். முகமது அலி குத்துச்சண்டை வளையத்துக்குள் பட்டம் வெல்வதை மட்டுமல்ல கருப்பின மக்களின் சம உரிமைக்கான வெற்றியாகவும் மாற்றினர். நிறவெறி நெருப்பில் நீந்தி கருப்பின மக்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு வழிவகுத்தார். முகமது அலியின் வெற்றி, கருப்பின மக்கள் பயமின்றி சமஉரிமை போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல உதவியது. முகமது அலியின் போட்டியை கண்ணுற்ற பெரும்பாலான கருப்பின அமெரிக்கர்கள் பயத்தை எளிமையாக வெற்றி கொண்டனர். முகமது அலி அவர் வழியில் மக்களை தைரியப்படுத்தினார் என்று செய்தி தொகுப்பாளர் பிரையன்ட் கம்பள் (Bryant Kumble) நினைவு கூர்ந்தார்.

வியட்நாம் போருக்கு எதிராக:

1966-ம் ஆண்டு அமெரிக்க இராணுவம் முகமது அலியை அழைத்து இராணுவத்தில் சேர உத்தரவிட்டது. அமெரிக்காவில் இராணுவ சேவை சட்டப்பூர்வமானது. எனவே, படையில் சேர்ந்து வியட்நாம் சென்று சண்டையிட அழைத்தது. அப்போது அதை மறுத்த அவரது வார்த்தை

“எனக்கு வியட்நாமியர்களுடன் எந்த விரோதமும் இல்லை

என்னை நீக்ரோ என்று எந்த வியட்நாமியரும் அழைக்கவில்லை”

என்று பத்திரிக்கையாளர் சூழ, இராணுவத்தினரிடம் தெரிவித்தார். இது இராணுவத்தினருக்கு அதிர்ச்சியூட்டியது. அப்போது அமெரிக்காவில் யுத்த எதிர்ப்பு இயக்கம் நடைபெற்று கொண்டிருந்தது. வியட்நாமிலிருந்து அமெரிக்காவை வெளியேறு இயக்கம் வேகம் பிடித்திருந்த காலம். இந்த இயக்கம் இப்போது முகமது அலியின் இந்த வார்த்தைக்கு பின்னால் அணி வகுத்தது. யுத்த எதிர்ப்பு சமாதான செயற்பாட்டாளர் டானியல் பெரிகன் (Daniel Perrigan) அலியின் இந்த முடிவு வெள்ளையர் மத்தியில் உருவான போர் எதிர்ப்பு இயக்கத்திற்கு உந்து சக்தியாக அமைந்தது என்று கூறினார். முகமது அலி மன்னிப்பு கேட்க, கையெழுத்துபோட, பணிந்துவிட வேண்டும் என பலர் கூறினர். ஆளும் நிறுவனங்கள் முகமது அலியை படுமோசமான தேச விரோதியாக சித்தரித்தன. முகமது அலி மண்டியிட மறுத்துவிட்டார்.

“நான் சொல்வதை கேளுங்கள், வியட்நாம் யுத்தம் எவ்வளவு நாள் நடக்கும் என்பது பிரச்சனை அல்ல. ‘ நான் வியட்நாமியர்களுடன் சண்டையிட மாட்டேன்’ என்ற பாடலை மீண்டும் மீண்டும் பாடிக் கொண்டே இருப்பேன்” என்று உறுதிபட கூறினார்.

மார்ட்டின் லூதர் கிங்:

அக்காலத்தில் கருப்பின மக்கள் மார்டின் லூதர் கிங் வழி நடத்திய சமஉரிமைக்கான பெரும் போராட்டத்தில் இருந்தனர். சமஉரிமை கோரி நடத்திய மார்டின் லூதர் கிங் போரையும் எதிர்க்க துவங்கினார். “முகமது அலி சொல்வது போல நாம் எல்லாம் கருப்பு, பழுப்பு நிறத்தவர்கள். ஏழைகள். ஒடுக்குமுறை அமைப்பால் வஞ்சிக்கப்பட்டவர்கள்” என்று அறை கூவல் விடுத்தார்.

அலியின் சொந்த ஊரான லூயிஸ் வில்லியில் நடைபெற்ற கருப்பின மக்களின் போராட்டத்தின்போது மார்ட்டின் லூதர் கிங்-உடன் அலி கலந்து கொண்டார். அப்போது “உங்களது சுதந்திரம், நீதி, சமத்துவம் கேட்டு நடக்கும் போராட்டத்தில் உங்களோடு நானும் இருக்கிறேன். எனது சொந்த மக்கள், என்னோடு வளர்ந்தவர்கள், என்னோடு படித்தவர்கள், எனது உறவினர்கள் சுதந்திரம், நீதி, குடியிருப்பு சமஉரிமை கேட்பதற்காக, தாக்கப்படுவதை, தெருக்களில் விரட்டப்படுவதை வேடிக்கைப் பார்த்து நான் சும்மா இருக்க முடியாது” என்றார்.

கைதும், விடுதலையும்

1967-ம் ஆண்டு ஜீன் 19-ம் தேதி கீழை நீதிமன்றம் முகமது அலி குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. படையில் சேர மறுத்ததற்காக 5 ஆண்டு சிறைத்தண்டனை, கடவுச்சீட்டு முடக்கம். அவரது சாம்பியன் பட்டம் பறிக்கப்பட்டது. 3 1/2 ஆண்டுகள் அவர் குத்துச்சண்டையில் கலந்து கொள்ள முடியவில்லை. முகமது அலி மேல்முறையீடு செய்தார். 1968-ஆம் ஆண்டுகள் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் மாணவர்களிடையே உரையாற்றி இருக்கிறார். அந்த உரைகளில் இதோ இரத்தின வரிகள்

“நான் வியட்நாமுக்கு செல்லாததால் நிறைய இழந்துவிட்டேன் என்று கூறுபவர்களுக்கு ஒன்று சொல்வேன், எனக்கு மன நிம்மதி உள்ளது. எனது மனசாட்சிக்கு விலங்கு பூட்டப்படவில்லை. நான் தெளிவாக உள்ளேன். மகிழ்ச்சியுடன் தூங்கி எழுகிறேன். எனது  முடிவில் நான் பெருமை கொள்கிறேன். என்னை சிறைக்கு அனுப்பினாலும் மகிழ்ச்சியுடன் சிறை செல்வேன்”

என தனது முடிவின் நியாயத்தை தீர்க்கமாக எடுத்துரைத்தார். இக்காலத்தில் முகமது அலியின் பேச்சுக்கள் அமெரிக்க கொள்கைக்கு எதிராகவும், யுத்தத்திற்கு எதிராகவும், இன, நிறவெறிக்கு எதிராகவும் அமைந்திருந்தது. உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் ஏராளமான இளைஞர்களை அலியின் பேச்சு ஆகர்ஷித்தது.

1970-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க நாடுகளின் உச்சநீதிமன்றம் கருப்பின மக்கள் நலன், உயர்வுக்காக என காரணம் சொல்லி முகமது அலியை விடுதலை செய்தது. 31/2 ஆண்டுகளுக்கு பிறகு முகமது அலி மீண்டும் குத்துச்சண்டை வளையத்திற்குள் வந்தார். 1971-ம் ஆண்டு மேடிசானில் “நூற்றாண்டின் சண்டை” என்ற பெயரில் நடைபெற்ற போட்டியில் ஜோ-பிரேசியரிடம் தோல்வி அடைந்தார் முகமது அலி. போட்டி கடுமையாக இருந்தது. 15 வது சுற்றில் பிரேசியர் வென்றார். இருவரையும் சிகிச்சைக்கு அனுப்பும் அளவிற்கு காயம் அடைந்தனர். 1973-ம் ஆண்டு கென்னூர்ட்டனிடம் தோற்றார். மீண்டும் அவருடனேயே மோதி பட்டத்தை வென்றார். பிறகு மற்றொரு போட்டியில் தன்னை தோற்கடித்த ஜோ-பிரேசியரை தோற்கடித்து வெற்றி கண்டார் முகமது அலி.

1981-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி, தனது 39-வது வயதில் குத்துச்சண்டை போட்டியிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார் அலி. தனது தொழில்முறை குத்துச்சண்டை போட்டியின் 21 ஆண்டு வாழ்க்கையில் 61 போட்டிகளில் 56-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் தழுவி உள்ளார். இதில் 37 போட்டியில் நாக்அவுட் முறையில் வெற்றி பெற்றுள்ளார். மூன்று முறை உலக சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார். அரசு, நிறவெறி என பல்முனை தாக்குதலுக்கு மத்தியில் அலி தனது வெற்றிப் பயணத்தை நடத்தினார்.

சமுதாயத்தில் பிரபலமானவர்கள் அரசின் கொள்கையில் மாறுபடுகிறபோது அதை துணிச்சலாக தடுக்க முன்வருவது இல்லை. வியட்நாம் போரை எதிர்ப்பது என்பது, அங்கு இழைக்கப்படும் ஏகாதிபத்திய அநீதிக்கும், அமெரிக்காவில் நடைபெறும் இனவெறி அநீதிக்கும் உள்ள தொடர்பை முன்னிறுத்தி தன் உணர்விலிருந்து எதிர்க்கவில்லை. ஒரு கோட்பாட்டின் அடிப்படையிலேயே எதிர்த்தார். அவரது நடவடிக்கைகள் இன்றும் கற்க வேண்டியவை.

 

 

தடைகளைத் தகர்த்து முன்னேறும் கியூபா!

கியூபாவின் ராணுவ சர்வாதிகாரி படிஸ்ட்டா அரசை வீழ்த்திடும் நோக்கில், மான்கடா படைத் தளத்தின் மீது ஃபிடல் தலைமையிலான புரட்சிகர குழு தாக்குதல் துவக்கிய நாள் 1953ம் ஆண்டு ஜூலை 26. 1959 ஜனவரியில் புரட்சி வெற்றி பெற்று, தன்னை சோசலிச நாடாக பிரகடனம் செய்த நாள் முதல், கியூபாவின் தேசிய விடுமுறை தினமாக ஜூலை 26, அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் அரசு அலுவலகங்களில் இனிப்பு வழங்கும் விழாவாக காண இயலவில்லை. இல்லம் தோறும் இனிப்பு தயாரிப்பையும், விநியோகத்தையும், கோலாகல கொண்டாட்டங்களையும், கியூபா முழுவதும் காணமுடிகிறது. ஒவ்வொரு அருகமைப் பகுதி (Neighbour hood) குடியிருப்புகளிலும், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் இடம் பெறுகிறது. புரட்சி குறித்து அறிந்த முதியவர் முதல் வரலாற்றைக் கற்றுக் கொள்ளும் குழந்தைகள் வரை அனைவரும் பங்கேற்பதாக இருக்கிறது.

”அக்னி குஞ்சொன்று கண்டேன்,
அதை ஆங்கோர் காட்டிடை,
பொந்தினில் வைத்தேன்,
வெந்து தனிந்தது காடு”

என்ற வரிகள் இந்தியாவின் விடுதலை வேட்கையைத் தூண்டும் வகையில், பாரதி பாடியது. அதேபோல் தென் அமெரிக்காவின் இன்றைய இடதுசாரிகள் தலைமையில் ஆட்சியமைப்பிற்கும், அரசியல் மாற்றங்களுக்கும், சின்னஞ்சிறிய கியூபா அக்னிக் குஞ்சாக இருந்து, பற்றி எரியும், அரசியல் ஈர்ப்பைக் கொண்டதாக வளர்ந்து வருகிறது.

கியூபா குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21 வது அகில இந்திய மாநாட்டு அரசியல் தீர்மானம், “பொருளாதாரத் தடைகளை திரும்பப் பெறாவிட்டாலும், கடந்த 50 ஆண்டுகளாக அமெரிக்கா பின்பற்றி வந்த கியூபாவைத் தனிமைப் படுத்துவது என்ற கொள்கையின் தோல்வியை, அமெரிக்க அதிபர் ஒபாமா பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்”, என்று கூறுகிறது. இப்படி மதிப்பீடு செய்ய காரணமாக, இரண்டு நிகழ்வுகள் நடந்துள்ளன. ஒன்று அமெரிக்கா கியூபாவுடன் தனது அரசு முறை உறவுகளை மீண்டும் ஏற்படுத்தும் என அறிவித்தது. இரண்டு 17 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க சிறையில், உளவாளிகள் என குற்றம் சுமத்தி, வேண்டுமென்றே சிறையில் அடைக்கப் பட்டிருந்த 5 கியூபர்களை அமெரிக்க அரசு விடுதலை செய்ய வேண்டிய நிர்பந்தம் உருவானதும் ஆகும்.
மேற்படி இரண்டு நிகழ்வுகளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீதான நிர்பந்தம் காரணமாக உருவானது. குறிப்பாக அமெரிக்காவிற்கு நெருக்கமாக அமைந்துள்ள, தென் அமெரிக்க நாடுகள் ஏற்படுத்திய தாக்கம் ஆகும். தென் அமெரிக்க நாடுகள் பற்றியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது அகில இந்திய மாநாட்டு அரசியல் தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது. ”ஹியுகோ சாவேஸ் மரணத்தால் ஏற்பட்ட பின்னடைவைக் கடந்து, வெனிசுவேலா மற்றும் இதர தென் அமெரிக்க இடதுசாரி அரசாங்கங்களும், நவீன தாராளமயம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றுக்குச் சவால் விடுத்து, தமது மாற்றுப்பாதையில் முன்னேற கடுமையாகப் போராடி வருகின்றன” என்பது தீர்மானத்தின் முக்கிய வரிகள். கியூபாவுடன் அமெரிக்கா தனது உறவை புதுப்பித்துக் கொள்ள முன் வந்தது, இந்தப் பின்னணியில் தான் எனத் தீர்மானம் சுட்டுகிறது. மேலும் தென் அமெரிக்காவின் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து அளித்த குரல், கியூபா தனிமைப் படுத்தப்படக் கூடாது என்பதாகவே இருக்கிறது. அமெரிக்காவால் அதைப் புறக்கணிக்க முடியவில்லை, என தீர்மானம் மதிப்பீடு செய்கிறது.

இது கியூபா மீதான மனிதாபிமான உணர்வு என்பது மட்டுமல்ல. கியூபாவின் அரசியல் மீதான நாட்டமும், கியூபா பின்பற்றி வரும் அரசியல், பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகள், மீதான ஈர்ப்பும் இணைந்த ஒன்று ஆகும்.

குரலின் வலிமை:
உலகறிந்த நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர், கேபரியேல் கார்சியா மார்க்வஸ், ஃபிடல் காஸ்ட்ரோ குறித்துக் குறிப்பிடும்போது, சொன்ன வார்த்தைகள் ”குரலின் வலிமை”. “காதுமடல்கள் சிலிர்க்க, தங்களின் அன்றாட வேலைகளை மறந்து, இந்தக் குரலின் வலிமையில் லயித்துப் போனார்கள், நேரம் செல்ல செல்ல, தங்களின் வேலைகளைச் செய்து கொண்டே, காதுகளை, ஃபிடல் காஸ்ட்ரோ விண் உரையின் மீது வைத்த வண்ணம் செய்து கொண்டிருந்தனர். அது ஏழு மணிநேர உரை, நாங்கள் தங்கியிருந்த ஸ்டார் ஹோட்டல் துவங்கி, தெருக்கள், வேலைத்தலங்கள், வீடுகள் என எல்லா இடங்களிலும், அந்த உரை ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. கைகள் வேலையில் இருந்தாலும், கவனம் ஒலித்த குரலில் இருந்ததைக் காண முடிந்தது”, என மார்க்வஸ் தன்னுடைய முதல் கியூப அனுபவம் பற்றி, இவ்வாறு எழுதியுள்ளார்.

இது ஏதோ ஒரு புகழ்ச்சிக்காக பேசப்பட்ட வார்த்தைகள் அல்ல. பேச்சு என்பது தனிச்சிறப்பாக இருந்தாலும், ஃபிடல் தனது, அரசியல் உறுதியைக் குறிப்பாக, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை வெகுமக்கள் முழுமையாகப் பங்கேற்கும் திருவிழாவாக, மாற்றிக் காட்டிய பெருமை கொண்டவர். உதாரணமாக 6 வயது சிறுவன் ஏலியன் கோன்சலாஸ், அவனுடைய பெற்றோரிடம் இருந்து பிரிந்து, அமெரிக்காவின் மியாமி யில் குட்டிவைக்கப்பட்டிருந்த விவகாரத்தில், கியூபா முழுவதும் நடந்த போராட்டத்தைக் குறிப்பிடலாம். இறுதியில் அமெரிக்காவின் நீதிமன்றம், ஏலியன் என்ற சிறுவனை அமெரிக்காவில் வைத்து இருக்கக் கூடாது. அவன் பெற்றோருடன் வசிக்க அனுமதிக்க வேண்டும், அதற்காக அவனை கியூபாவிற்கு அனுப்பி வைக்க வேண்டும், எனத் தீர்ப்பு வழங்கியது. ஒரு குழந்தைக்கும், தந்தைக்குமான உறவை அமெரிக்கா, கியூபாவிற்கு எதிராகப் பயன்படுத்த நினைத்தது, இறுதியில் கியூப மக்களின் போராட்டங்களால், அமெரிக்கா அம்பலப்பட்டு நின்றது. 2001 ம் ஆண்டில் அந்தச் சிறுவன் ஹவானா நகரத்திற்கு வந்த போது, ஃபிடல் தலைமையில் லட்சக்கணக்கான மக்கள் ஆர்ப்பரித்து வரவேற்றனர்.

மற்றொரு உதாரணம் எழுத்தாளர் மார்க்வஸ் குறிப்பிடுகிறார், “ஒருமுறை எங்களுடன், சேகுவேரா சுற்றி வளைத்துக் கொல்லப்பட்டது குறித்தும், மொண்டென் அரண்மனை முற்றுகையிடப்பட்டு, அலெண்டே கொல்லப்பட்டது குறித்தும் ஃபிடல் ஆற்றிய உரைகள் வரலாற்றுச் சொற்சித்திரங்கள்” என்கிறார். லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான, வெளிநாட்டுக்கடன் குறித்து ஃபிடல் ஆற்றிய உரை மிகச் சிறப்பு வாய்ந்தது. “இந்தக் கடன் திருப்பிச் செலுத்த முடியாதது. கடனால் லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள விளைவுகள், பொருளாதார வீழ்ச்சி, சமூக பொருளாதார பாதிப்புகள், சர்வதேச உறவுகளில் பின்னடைவு என சகல பரிமாணத்தையும் தொட்டு, லத்தீன் அமெரிக்க நாடுகளின் ஒற்றுமைக்கான வரைவாக நீட்சி பெற்று, வானத்தைப்போல் விரிந்து பரந்து, அந்த உரை அமைந்ததாகக் கூறுகிறார். அந்த விவாதங்களின் தொடர்ச்சியாக, ஹவானாவில் மிகப்பெரிய கருத்தரங்கம் நடத்தி, பல துறை நிபுணர்களைப் பங்கேற்கச் செய்து, அவரின் வரைவு தீர்மானத்தைக் காட்சிப்படுத்தினார். அதுவே பின்னாளில், பொலிவாரிய மாற்று வங்கி அல்லது, லத்தீன் அமெரிக்க கரீபியன் நாடுகளின் சமூகம் போன்ற அமைப்புகள் உருவாக அடித்தளம் இட்டது.

வக்கிரமான தடைகள்:
இன்று அமெரிக்க ஏகாதிபத்தியம், உலகின் எல்லாத் திசையிலும் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த ராணுவ நடவடிக்கைகளை கையாள்வதைப் பார்க்கிறோம். 100க்கும் மேற்பட்ட நாடுகளில், அமெரிக்கா தனது ராணுவ நிலைகளைக் கொண்டுள்ளது, என மைக் மார்க்வஸ், என்ற எழுத்தாளர் தனது ”பேரரசு என்பதன் பொருள் என்ன?” என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார். இந்நிலையில் கியூபா அமெரிக்காவின் மிக அருகில் உள்ள நாடு. அங்கு புரட்சி நடைபெற்றதையோ, தனது பொம்மை அரசான பாடிஸ்ட்டா விரட்டப்பட்டதையோ, சோசலிச அரசியல் கொள்கை உருவானதையோ அமெரிக்காவினால் அங்கீகரிக்க முடியவில்லை.

ஒரு சில தடைகள் அல்ல, ஏராளமான பொருளாதார தடைகளை அமெரிக்கா கியூபா மீது விதித்தது. அதாவது ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள், 10 சதம் அளவிற்கு அமெரிக்க உதிரிபாகத்தைக் கொண்டிருக்குமானால், அப்பொருள் கியூபாவிற்கு அனுப்பப்படக் கூடாது, என்ற தடையை அமெரிக்கா விதித்தது. சர்வதேச நாணய பரிவர்த்தனையாக அமெரிக்காவின் டாலர் இருந்தாலும், அதை கியூபா பயன்படுத்தக் கூடாது. லத்தீன் அமெரிக்க நாடுகளில், “கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, உலக வங்கி மற்றும் அமெரிக்க கண்டத்தின் வளர்ச்சி வங்கி ஆகியவையிடம் இருந்து கடன் பெற இயலாத, ஒரே நாடு கியூபா”, என ஃபிலிப் பெரஸ் ரோக, என்ற எழுத்தாளர், லத்தீன் அமெரிக்கா ஒரு பார்வை, என்ற இதழில் குறிப்பிடுகிறார்.

ஃபர்ஸ்ட் கரீபியன் இண்டர்நேசனல் பேங்க் மற்றும் இங்கிலாந்து வங்கியான பார்க்லேஸ் ஆகியவை, கியூபாவுடன் செய்து கொண்ட பலக் கோடி டாலர் ஒப்பந்தங்களை, அமெரிக்காவின் மிரட்டல் காரணமாக நிறுத்திக் கொண்டன. ஏனென்றால் சுவிட்சர்லாந்து நாட்டின், வங்கியான யுபிஎஸ், கியூபாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதற்காக, 100 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. ஐரோப்பாவின் பெரிய நிறுவனமான சிரான் கார்ப்பரேசன் குழந்தைகளுக்கான நோய் தடுப்பு மருந்து வர்த்தகத்தை மனிதாபிமானம் கருதி, கியூபாவுடன் செய்து வந்தது. இதற்காக, அந்த நிறுவனத்திற்கு 168500 டாலர் அபராதம் விதிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து அந்த நிறுவனம், கியூபாவுடன் தனது வர்த்தகத்தை நிறுத்திக் கொண்டது. அமெரிக்க நிறுவனமான, ஜெனரல் எலெக்ட்ரிக், ஃபார்மாசியா, அமெர்ஷம் ஆகிய சுவிஸ் மற்றும் இங்கிலாந்து மருந்து தயாரிக்கும் நிறுவனங்களை விலைக்கு வாங்கி, கியூபாவுடனான வர்த்தகத்தை தடை செய்தது.

கனடா நாட்டின் ஷெரிட் என்ற நிறுவனத்தின் இயக்குநர்கள், கியூபாவுடனான வர்த்தகத்தை நிறுத்தாததால், அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப் பட்டார்கள். அமெரிக்காவின் தடைகளை மீறி செயல் பட்ட அமெரிக்க குடிமக்கள் 316 பேர், 537 விதமான அபராதங்கள் விதிக்கப்பட்டு 2005 அக்டோபர் 12 அன்று, அமெரிக்க அரசினால் தண்டிக்கப்பட்டார்கள். 2004ம் ஆண்டில் மட்டும், 77 நிறுவனங்கள், வங்கிகள், அரசு சாரா அமைப்புகள் ஆகியவை, அமெரிக்காவின் தடையை மீறி, கியூபாவுடன் உடன்பாடு கண்ட காரணத்திற்காகத் தண்டிக்கப்பட்டுள்ளன. இவை தவிர்த்து எண்ணற்ற நிகழ்வுகளை, ஃபிலிப் பெரஸ் ரோக, குறிப்பிடுகிறார்.

2005 ஏப்ரல் 29ல், அமெரிக்க அதிபர் புஷ், அமெரிக்காவின் வங்கிகளில், கியூபாவைச் சேர்ந்தோர் வைத்து இருந்த, சட்ட விரோதமான 198 மில்லியன் டாலர் பணத்தை, அமெரிக்காவின் மியாமி மாகாணத்தில் இருந்து, கியூபாவிற்கு எதிராகச் செயல்பட்ட, தீவிரவாத இயக்கத்திற்கு அளிக்க வேண்டும் என்ற உத்தரவை வெளியிட்டார். இத்தகைய தடைகள் துவக்கத்தில் இருந்தே அமலாகி வருகிறது. சோசலிச சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு, 1992ல் சீனியர் புஷ் ஆட்சியில் கியூபா ஜனநாயகச் சட்டம் என்ற பெயரில் டாரிசெல்லி தடை மசோதாவை அமல்படுத்தி தனது ஆதரவு நாடுகளையும், கியூபாவுடனான, வர்த்தகத் தொடர்பைத் துண்டிக்கச் செய்தது. இதைத் தொடர்ந்து 1996 கிளிண்டன் தலைமையிலான, ஜனநாயகக் கட்சியின் ஆட்சியிலும் ஹெல்ம்ஸ் – பர்ட்டன் சட்டத்தின் மூலம், சர்வ தேச அளவில், எந்த ஒரு நிறுவனம் அல்லது அமைப்பு கியூபாவுடன் வர்த்தக உடன்பாடு கண்டால், அது அமெரிக்காவின் எதிரியாகப் பிரகடனப் படுத்தப்படும், என அறிவித்தார்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக பொருளாதாரத் தடையை சந்தித்து வந்தாலும், கியூபா அமெரிக்காவின் மிரட்டலுக்கும், தடைக்கும் அடிபணியவில்லை. இத்தகைய தடைகளால், கியூபா சுமார் 83 ஆயிரம் மில்லியன் டாலர் (சுமார் 15லட்சம் கோடி ரூபாய்) இழப்பைச் சந்தித்துள்ளது. இவ்வளவு பொருளாதார நெருக்கடி இருந்தாலும், தனது நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் எதிலும் கியூபா கை வைக்கவில்லை. மாறாக மக்களை எளிமையானவர்களாக வாழ வேண்டுகோள் விடுத்தது. இறக்குமதி செய்து பயன்படுத்தும் பொருள்களைத் தவிர்க்க வேண்டுகோள் விடுத்தது. இதற்கு மக்கள் செவி சாய்த்தனர், என்பதில் இருந்தே இன்றைய கியூபாவின் வளர்ச்சியை மதிப்பிட முடியும்.

சோசலிச நாடுகளின் பின்னடைவும் – கியூபாவின் அரசியலும்:

உலகின் ஆதர்ச சக்தியாக விளங்கிய சோவியத் யூனியன் சிதருண்டு, சோசலிச கொள்கைகளைக் கைவிட்ட போது, கியூபா கடுமையாகப் பாதிக்கப்படும் என்று தான் எதிர்பார்த்து இருந்தனர். உண்மையில் பாதிப்பு இருந்தது. கியூபாவின் சர்க்கரை ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டு, மின்சாரம் உள்ளிட்ட எரிபொருள் இறக்குமதி நின்றுபோன நிலையில், அதை எதிர்கொண்டு முன்னேறிய சோசலிச நாடு என்ற பெருமைக்குரியது கியூபா.

அமெரிக்காவின் ஹெல்ம்ஸ் – பர்ட்டன் சட்டத்தின் காரணமாக, கியூபாவின் சர்க்கரையை இறக்குமதி செய்து கொண்டிருந்த 17 நாடுகள், தங்களின் வர்த்தகத்தை நிறுத்திக் கொண்டன. ஏற்கனவே சோவியத் யூனியனின் இறக்குமதி நின்று போன நிலையில், கியூபா நிலை குழைந்து விடும் என எதிர்பாத்தார்கள். மாறாக கியூபா தனது சந்தை வியூகத்தை உள்நாடு சார்ந்ததாக மாற்றிக் கொண்டது. கச்சா எண்ணெய் தேவையைக் குறைக்க கியூபர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். இதற்கு செவி சாய்த்த மக்கள்,

1. வட அமெரிக்க முறை வாழ்வை நிறுத்தி, எளிய ஆற்றல் முறை வாழ்விற்குத் திரும்பினர்.
2. கூட்டு வாழ்வின் மூலம் எரிசக்தி பயன்பாட்டைக் குறைத்தார்கள்.
3. நகரங்களுக்கும், கிராமப்புறங்களுக்குமான வாழ்முறை இடைவெளியைக் குறைத்தார்கள்.

12 மணிநேரம் மின்வெட்டு, மக்கள் தங்களின் பெட்ரோல் வாகனங்களான மகிழ்வுந்து, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றைக் கைவிட்டு பொதுவாகணங்களான பெரிய டிராம் பேருந்துகளில் பயணிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு, முடிந்த அளவு நடந்தே செல்வது அல்லது மிதிவண்டிகளைப் பயன்படுத்துவது, என்ற அரசின் வேண்டுகோள். ஆகியவற்றை எதிர் கொண்ட விதம் வளரும் நாடுகள் பலவும் பின்பற்ற வேண்டிய ஒன்று. நாட்டின் மக்கள் அத்துணை பேரும் ஒத்துழைக்காமல் இந்தத் துணிச்சலான முடிவை, ஒரு அரசு எடுத்திட முடியாது. இங்கேயும் கியூபாவின் அரசின் தலைவர் பொறுப்பில் இருந்த ஃபிடலின் குரலின் வலிமையை உணர முடியும்.

இவை சாதாரண வேண்டுகோள் என்பதை விடவும், இக்கொள்கையைப் பின்பற்றுவதற்கும், அதைத் தொடர்ந்து, மேற்படித் துறைகளில் மேம்பாடு காண மக்களின் ஒத்துழைப்பை நாடவும், சாலைகளில் சின்ன சின்ன விளம்பரங்களைப் பார்க்க முடியும். மின்னாற்றல் புரட்சி, விவசாயப் புரட்சி, சோசலிசமா? பார்பாரிசமா? (சமத்துவமா? காட்டுமிராண்டித் தனமா?) என்ற சிறிய அளவிலான, ஃபிளெக்ஸ் விளம்பரங்கள் சாலையின் ஓரத்தில், யாருக்கும் இடையூறு இல்லாமல், ஆனால் பார்வையில் படும்வகையில் திட்டமிட்டு வைக்கப்பட்டிருப்பதைக் காணமுடியும். மக்களின் உணர்வோடு கலந்ததாக மேற்படி விளம்பரங்கள் அமைந்தன.

இது உள்நாட்டு மக்களின் ஆதரவைப் பெற்றுத் தந்தது. அதேபோல் உலக அளவிலான மக்களின் ஆதரவையும் கியூபா திரட்டியது. ஆசியா பசிபிக் பிராந்தியத்தில், கியூபா ஆதரவு மாநாடு, 4 முறை நடந்துள்ளது. தமிழகத்தின் சென்னை மாநகரில் 2வது ஆசிய – பசிபிக் மாநாடு, 2006 ஜனவரி, 20,21 தேதிகளில் சிறப்புற நடத்தப்பட்டது. இதுபோல், பல்வேறு கண்டங்களில் நடந்த மாநாடுகள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதிக்க நடவடிக்கைகளை அம்பலப்படுத்திடவும், கியூபாவிற்கான ஆதரவை வென்றெடுக்கவும் உதவியது. இது மிகப்பெரிய அளவில் பேசப்பட வேண்டிய, ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் ஆகும்.

லத்தீன் அமெரிக்க நாடுகளுடனான நட்பு:
அமெரிக்கா உலகின் பல நாடுகளை இணைத்து, கியூபாவிற்கு எதிரான தடைகளை உருவாக்கி, நிர்ப்பந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் கியூபா மிகச் சாதாரணமாக தனது அண்டை நாட்டினரை மிக நெருக்கமான நண்பர்களாக மாற்றிக் கொண்டிருந்தது. லத்தீன் அமெரிக்கா முழுவதுமே, அமெரிக்காவிற்கான செல்வ சுரங்கமாக இருந்தது. அந்தளவிற்கு நேரடி சுரண்டல் நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டது. கடந்த 500 ஆண்டுகளாக லத்தீன் அமெரிக்காவின் 85சதம் நிலம் அமெரிக்க ஆதரவு கைக்கூலிகளின் வசம் இருந்தது. உலகமயம் என்ற சொல் உருவாகும் முன்பே அதன் கொடூர மாதிரிகளை, அமெரிக்கா லத்தீன் அமெரிக்க நிலங்களில் தான் அமலாக்கிப் பார்த்தது.

அங்கு இருந்த பொம்மை அரசுகளைத் தூக்கி எரியும், புரட்சிக்குழுக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்த பின்னணியில் தான், கியூபாவின் அரசியல் உறுதியும் ஒரு இணையாகச் செயல்பட்டு வந்தது. வெனிசூவேலா வில் சாவேஸ் தலைமையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், 2சதம் பேரிடம் மட்டுமே இருந்த நிலத்தை அபகரித்து, 63 சதமான வெனிசூவேலாவின் ஏழைமக்களுக்கு வழங்கினார். இதேபோல் பொலிவியா, சிலி, அர்ஜெண்டைனா, நிகரக்குவா போன்ற நாடுகளில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், பன்னாட்டு நிறுவனங்களை நாட்டுடைமையாக அறிவித்தது ஆகியவை, மேற்படி அரசியல் ஒற்றுமையின் வெளிப்பாடு என்றே கருதிட முடியும்.

2005ம் ஆண்டில் ஃபிடல் வெனிசூவேலாவிற்கு சென்ற போது, அவருக்கு வெனிசூவேலா அரசின் விருதான அன்கோஸ்தூரா வழங்கப்பட்டது. சாவேஸ் உரையாற்றுகிற போது, “எங்கள் சகோதரரை, தோழரை, புரட்சிப்போராளியை, இந்தக் கண்டத்தின், பெருங்கடலின், சொர்க்கத்தின் மாண்பைக் காத்தவரை நாங்கள் வரவேற்கிறோம்”, என உணர்ச்சி மேலோர்கள்க் கூறினார். அதே ஆண்டில் தான், அமெரிக்கா முன்வைத்த, அமெரிக்க கண்ட நாடுகளுக்கான திறந்த வர்த்தக தளம் என்ற அமைப்பிற்கு எதிராக, அமெரிக்க நாடுகளுக்கான பொலிவாரிய மாற்று, என்பதை அறிவித்தனர். இவை கியூபா லத்தீன் அமெரிக்காவிற்கான அரசியல் வழிகாட்டி, என்ற அங்கீகாரத்தை வெளிப்படுத்துகின்றன.

இத்தகைய தொடர் முயற்சிகளின் பலனாகத் தான் கியூபா மீதான பொருளாதாரத் தடையை அமெரிக்கா விலக்க வேண்டும் என்ற தீர்மானம், ஐக்கிய நாடுகள் சபையில், கியூபாவினால் 17 முறை முன்வைக்கப்பட்டு, 195 நாடுகள் கொண்ட அவையில் அமெரிக்கா உள்ளிட்ட ஒருசில நாடுகளின் எதிர்ப்பால் தொடர்ந்து ரத்து ஆகி வருகிறது. இந்த நடவடிக்கைகள், கியூபாவைத் தனிமைப்படுத்துவதற்கு பதிலாக அமெரிக்காவைத் தனிமைப்படுத்தியுள்ளது.

தன்னிறைவுக்கான வளர்ச்சியை நோக்கி:
வெனிசூவேலாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், கியூபாவிற்கான எண்ணெய் தேவையைப் பூர்த்தி செய்ய உதவியது. சுற்றுலாவில் கியூபா செலுத்திய கவனம், மிகப்பெரிய அந்நிய செலாவணியை ஈட்டித் தந்துள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து, மொத்தமாக கியூபாவின் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்த உதவியது. குறிப்பாக விவசாயத்தில் கியூபா மேற்கொண்ட நடவடிக்கை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
2000 ஆண்டுகளின் துவக்கத்தில் தோமஸ் ஃபோர்கே என்ற பத்திரிகையாளர், ஃபிடலிடம் நடத்திய உரையாடல், புத்தகமாக தமிழிலும் வந்துள்ளது. நேருக்குநேர் என்ற அந்த புத்தகத்தைத் தமிழில் அமரந்த்தா என்ற எழுத்தாளர் மொழி பெயர்த்துள்ளார். அதில் ஃபிடல் தனது கருத்தை பதிவு செய்கையில், “ ஒரு கட்டத்தில், விவசாயம் குறித்து குவியல் குவியலாக புத்தகங்கள் படித்தேன். குறிப்பாக மேய்ச்சல் நிலம், மாற்றுப் பயிர்கள் குறித்து ஆழமாகப் படித்தேன், வெப்ப மண்டல விவசாயம், விவசாய நுணுக்கங்கள் குறித்து 100 புத்தகங்களாவது படித்திருப்பேன்”, எனக் கூறுகிறார்.

இந்தப் பின்னணியில் தான் கியூபாவின் விவசாயத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் காண வேண்டும். ஃபிடல் இத்தகைய விவாதங்களை நடத்துகிற போது, அந்தத் துறை சார்ந்த வல்லுநர்கள் மேலும் கற்பதும், அதற்கேற்ப மாற்றங்களை மேற் கொள்வதும், வேகமான செயல்பாடு நடைபெறுவதும் சாத்தியமாகும். 1990 – 2000 ஆண்டுகளில் கியூபாவின் விவசாயம் 6 மடங்கு அதிகரித்தது. விவசாய நிலங்களில் அளவு 4 மடங்கு அதிகரித்தது. காய், கனிகளின் உற்பத்தியைப் பெருக்கி, அரிசி, கோதுமை ஆகியவற்றின் உற்பத்தியைக் குறைத்துள்ளனர். பலரும் ஹவானாவில் இருந்து கிராமங்களுக்கு திரும்பிச் செல்லும் அளவிற்கு விவசாயத்தில் கூலி கிடைத்தது. நகரங்களில் மொட்டைமாடி தாவர பயிர் முறை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கோழி, முயல், பன்றி, போன்ற இறைச்சிக்கான விலங்குகளை புறநகர் மற்றும் கிராமப்புற வீட்டு மேல் தளங்களில் வளர்க்கும் முறை உருவானது. விவசாயப் பண்ணைகளை, அரசின் ஆலோசனைப்படி பெண்கள் நடத்துகின்றனர்.

கியூபாவின் வளர்ச்சியில் மிக முக்கியப் பங்களிப்பு செய்திருப்பது கல்வி. அனைவருக்கும் இலவச, கட்டாயக் கல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது. “லத்தீன் அமெரிக்காவில் மாபெரும் குற்றமொன்று இழைக்கப்பட்டு வருகிறது. நிலத்தின் விளைபொருளினாலேயே, முழுமையாக வாழ்ந்து வரும் நாடுகளில், மக்கள் நகர வாழ்க்கைக்கான அடிப்படையில் அறிவூட்டப்படுகிறார்கள். பண்ணை வாழ்க்கை முறையில் பயிற்றுவிக்கப் படுவதில்லை. தமது மக்களை அவர்களின் உணர்வுகளின் போக்கிலும், சிந்தனைப் பயிற்சியிலும் கல்வியூட்டும் நாடே சிறந்த நாடு. கல்வி வளமிக்க நாடு என்றும் வலிமையுடனும், சுதந்திரத்துடனும் திகழும்”, என ஃபிடல் மான்கடா படைத் தளத்தின் மீது நடத்திய தாக்குதலின் காரணமாக, கைதியாக, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது, குறிப்பிடுகிறார். இதுவே புரட்சிக்குப் பின் அமலாக்கப் பட்ட துவக்க கட்ட கல்விக் கொள்கையாக இருந்தது. புரட்சி முடிந்த ஒரே ஆண்டில், கியூபா முழு எழுத்தறிவு பெற்ற நாடாக வளர்ச்சி பெற்றது.

வியத்தகு மருத்துவ வளர்ச்சி:
கியூபாவிற்கு, எய்ட்ஸ் நோய் சிகிச்சைக்கான மருந்து கலந்த இறைச்சியை பிரேசில் நாட்டு நிறுவனம் வழங்கி வந்தது. ஆனால் அமெரிக்கா தனது தடை உத்தரவினால், பிரேசிலில் இருந்து இறக்குமதியான இறைச்சியை தடை செய்தது. இன்றைய கியூபாவோ, தனது சொந்த முயற்சியில் மருத்துவத் துறையில் பெரு வளர்ச்சி கண்டுள்ளது. எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட தாய்க்குப் பிறக்கும் குழந்தைக்கு எய்ட்ஸ் நோயில் இருந்து விடுதலை பெற்றுத் தர தக்க அளவிற்கு, மருத்துவத் துறையில் வளர்ச்சி கண்டுள்ளது.

கியூபா அரசு வட அமெரிக்கா மீது பல குற்றங்களை முன்வைத்துள்ளது. அதில், “வட அமெரிக்க அரசின் பயங்கரவாதங்கள் எங்கள் மக்களின் மீது ஏற்படுத்தியுள்ள குறிப்பிடத்தக்க தீய விளைவுகள் குறித்தது. டெங்கு வகை – 2 நோய் பரப்பும் திறன் பெற்ற ஏடிஸ் ஏகிப்தி எனும் வகைக் கொசுவை வாங்கிப் பரப்பினார்கள் என்பதை, 1979ம் ஆண்டு பசிபிக் பெருங்கடல் பற்றிய நிகழ்வில், கர்னல் ஃபிலிப் ரஸ்ஸல் அளித்த தகவல் கூறுகிறது. ஒமேகா 7 என்ற பயங்கரவாத இயக்கத்தின் தலைவன், எட்வர்ட்டோ அரோசினோ, கியூபாவில் டெங்கு காய்ச்சலைப் பரப்பியதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டான்.

இதை எதிர் கொள்ள கியூபாஉயிரி தொழில் நுட்ப வளர்ச்சியை, முக்கிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப செயல்பாடாக மாற்றிக் கொண்டது. இதன் வெற்றியாக டெங்கு 2 வகையான நோய்க்கு எதிர்வினையாற்றி, பாதிக்கப்பட்டோரை விரைவில் விடுவிக்கும் சாத்தியக் கூறுகளை உருவாக்கியது. நாலாயிரம் கியூப அறிவியல் அறிஞர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். புரதம், ஹார்மோன், ஊசிமருந்து, நோய் கண்டுபிடிப்பு முறை, கலப்பிணங்கள் என பல்வேறு கோணங்களில் தேவையில் இருந்து, ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர், என பத்திரிகையாளர் தோமஸ் ஃபோர்கே கூறுகிறார்.

உலகமே மிரண்டு போயிருந்த எப்போலா வைரஸ்க்கு எதிர் மருந்தைக் கண்டறிந்து, வெற்றிகரமாக செயலாற்றியமைக்காக கியூபாவை உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் பாராட்டியுள்ளது. ஆயிரம் குழந்தைகளுக்கு 4.5 குழந்தைகள் என்கிற அளவிற்கு இறப்பு விகிதம் கியூபாவில் உள்ளது. அமெரிக்காவில் 6.1 எனவும், இந்தியாவில் 49 எனவும் உள்ளது. இது குறித்து ஃபிடல் ”சிசு மரணத்தை 20 லிருந்து குறைக்க மிக செலவு பிடித்தது. நம்மால் அதைக்குறைக்க முடியும் என்றால், அதற்கு முக்கியத்துவம் தர வேண்டும். ஆயிரக்கணக்கானக் குழந்தைகள் மரணம் அடையும் நாட்டில் மனித உரிமைகள் எப்படி இருக்கும்?” என கேள்வி எழுப்புகிறார்.

சூறாவளியும் அடிபணியும்:
கியூபாவிற்கு மற்றும் ஒரு பொருளாதாரத் தொல்லை தருவது, தீவைச் சுற்றி அடிக்கும் சூறாவளி ஆகும். இதை எதிர் கொள்வதில், மனித இழப்பைத் தடுப்பதில் பெரும் சாதனையை கியூபா செய்துள்ளது. 1944 ல் இருந்து வீசிய சூறாவளிகளிலேயே, மிச்சேல் 2001 தான் மிகப்பயங்கரமானது. இந்தத் தாக்குதலில் இருந்து பல்லாயிரம் மக்களைக் காப்பதில் கியூபா வெற்றி கண்டது சாதாரணமானது அல்ல. சுமார் 70 ஆயிரம் மக்கள் மிச்சேல் சூறாவளியின் போது பாதிக்கப்பட்டார்கள், ஆனால் 4 பேர் மட்டுமே பலியாயினர். 8 பேர் மட்டுமே காயமடைந்தனர். கியூபா ஒரு ஏழை நாடு என்பதை வைத்துப் பார்க்கும் போது, இந்தச் செய்தி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது என செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.

ஆக்ஸ்ஃபேம் என்ற ஆய்வு நிறுவனம் 1994 – 2003க்கு இடைப்பட்ட காலத்தில், 129 சூறாவளிகள் வீசியுள்ளன. இதில் 19 பேர் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர். கியூபாவின் பொருளாதார நெருக்கடி, போக்குவரத்து வசதிகள் மற்றும் இதர வசதிகளை வைத்துப் பார்க்கும் போது, கியூபா சாதித்துள்ளது என்றே கூற வேண்டும், என பதிவு செய்துள்ளது. கியூபாவின் அனைத்து மட்டத்திலும், ஆய்வு மேற்கொண்ட ஆக்ஸ்ஃபேம், அசையா சொத்து மற்றும் அசையும் சொத்து என இரண்டு அம்சங்களை கியூபாவில் கண்டதாகக் கூறுகிறது.

அசையா சொத்து எனும் போது, தேசிய பாதுகாப்புத் துறை, முன்னெச்சரிக்கை அமைப்புகள், தேவையான அனைத்துக் கருவிகளும் கொண்ட மீட்புக் குழுவினர் மற்றும் அவசர கால சேமிப்புக் கிட்டங்கிகள் ஆகியவை கியூபாவின் அசையா சொத்துக்கள் ஆகும். சமூகத்தைக் கட்டமைப்பது, மக்கள் ஆதரவைப் பெறுவது, மனித உயிர்களைக் காப்பாற்றுவதில் உண்மையான தெளிவான அரசியல் உறுதி, ஈடுபாடு, பேரிட்டர் விழிப்புணர்வு அதை எதிர்த்துச் சமாளிக்கும் விவரக்களைத் தரத் தக்க கல்வியறிவு கொண்ட மக்கள் தொகை என்பது அசையும் சொத்து, இதன் காரணமாகவே, கியூபா சூறாவளிகளின் பெரும் தாக்குதலில் இருந்து தப்ப முடிகிறது. வேறு எந்த அரசுகளாலும் இந்தக்கைய சாதனையை நிகழ்த்த முடியவில்லை, என பகிரங்கமாகக் குறிப்பிடுகிறது.
நிறைவாக கியூபா தனது புரட்சிக்குப் பின் அடைந்த வெற்றிகளும், தற்போது சோசலிச முகாம் இல்லாத நிலையில் 25 ஆண்டுகளாக எதிர் நீச்சலில் செய்திருக்கும் மகத்தானச் சாதனைகளும், ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்களுக்கு எதிரான போராட்ட உணர்வை, காட்டுத் தீயாக வளர்க்கிறது. வாழ்க கியூப புரட்சி தினம்.

உதவிய நூல்கள்:

1. ஃபிடல் காஸ்ட்ரோ உரைகள் – 1997 – சவுத் விஷன் வெளியீடு
2. குற்றவாலிக் கூண்டில் வட அமெரிக்கா – 1999 – பரிசல் வெளியீடு
3. குரலின் வலிமை – 2005 – வாசல் வெளியீடு
4. சாவேஸ் – 2006 – வாசல் வெளியீடு
5. நேருக்கு நேர் – 2002 புதுமலர், கோவை வெளியீடு
6. சூறாவளியும் அடிபணியும் – 2006 – என்.சி.பி.ஹெச்
7. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – 21வது காங்கிரஸ் அரசியல் தீர்மானம்
8. Cuba The Blockade and The declining Empire – 2005 – Pablo Neruda School of Spanish

அமெரிக்க போர் முரசும், அல்லல்படும் சிரியாவின் மக்களும்

மீண்டும் அமெரிக்கா போர் முரசு கொட்டுகிறது. எண்ணெய் வள அரபு நாடுகளில் ஒன்றான சிரியாவின் அதிபர் ஐ.நா நெறிகளை மீறி வைத் திருக்கும் பேரழிவு ரசாயன ஆயுதங்களிலிருந்து உலக மக்களை காக்க படையெடுக்கப் போவதாக வும் மேலும் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டங் களுக்கு உட்பட்டே இருக்கும் என்றும் ஒபாமா ஓசை எழுப்பியுள்ளார். இந்த போர்முரசின் நோக்கம் எந்த சோற்றாலும் மறைக்க முடியாத மலையாகும்.. தனது மேலாதிக்கத்திற்கு ஆபத்து ஏற்பட்டதாக பயந்து ஆயுத பலத்தை உலகிற்கு காட்டவும் எண்ணெய் வள நாடுகளை கிடுக்கிப்பிடி போட்டுவைக் கவும் இந்த போர் முரசு கொட்டப்படுகிறது. ரசாயன ஆயுதங்கள் ஸ்டாக் வைத்திருப்பது குற்றமென்றால் முதல் குற்றவாளி அமெரிக்காதான். ராசாயன ஆயுதத்தை பயன்படுத்தி மக்களை கொன்ற முதல் குற்றவாளியும் அமெரிக்காதான்.40 ஆண்டுகள் கடந்த பிறகும் வியட்நாம் மக்களும் மண்ணும் காடுகளும் அமெரிக்க ராணுவம் வீசிய ரசாயன விஷத்திலிருந்து இன்னும் மீளவில்லை.. இப்பொழுதும் சிரியாவில் ரசாயன ஆயுதத்தை ஏவியதும் அமெரிக்காவின் உதவியுடன் செயல்படும் பயங்கர வாத குழுதான் என்று ஐ.நா நிபுணர்கள் குழு கண்டறிந்து விட்டது. வேதனை என்னவெனில் மேலை நாட்டு செய்தி சேகரிப்பு நிறுனங்கள் அமெரிக்காவும் அல்கொய்தாவும் கூட்டணி வைத்து  சிரியாவிறகுள் பயங்கர.த்தை விதைத்து மக்களை கடந்த இரண்டு வருடமாக அகதிகளாக ஆக்குவதை  பூசி மொழுகி காட்டுவதுதான்.

இன் னொரு பக்கம், ஐ.நா அகதிகளின் கமிஷனர் வேதனை தரும் புள்ளிவிவரத்தை உலக மக்களின் பார்வைக்கு வைத்துள்ளார். இரண்டேகால் கோடி மக்கள் தொகை கொண்ட சிரியாவில் ஆயுதம் தாங்கிய மோதல் தொடங்கியதிலிருந்து சுமார் 20 லடசம் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளனர். அண்டைநாடுகளான லெபனா னில் 716,000, ஜோர்டன்னில் 515,000, துருக்கியில் 460,000, ஈராக்கில் 169,000, எகிப்தில் 111,000, சிரியா விற்குள் குடியிருப்பைவிட்டு வெளியேறியவர்கள் 42,50,000.இந்த புள்ளி விவரத்தை கொடுத்த ஐ.நா. அகதிகள் கமிஷனர், அண்டை நாடுகள் மட்டும் அகதிகளை பராமரிக்க இயலாது உலக நாடுகள் உதவ வேண்டுமென வேண்டுகோளும் விட்டுள்ளார். (ஆதாரம் யு. என். எச். ஆர்.சி)

அகதிகளில் பெரும் பகுதி 12 வயதிற்கும் குறைந்த குழந்தைகளே, ரத்தம் சிந்தும் காயங்களுடன் குழந்தைகளும், பெண்களும் ஆண்களும் உடுத்திய ஆடை தவிர வேறு எதுவுமில்லாமல் வருவது கல் நெஞ்சங்களையும் இளக்கிவிடும் என்று பத்திரிகை கள் எழுதுகின்றன.

சில மேலைநாட்டு தன்னார்வக் குழுக்களும் நிதி, பொருட்கள் திரட்டி உதவுகின்றன. பத்திரிகை களும் ஊடகங்களும் சிரிய மக்கள் படுகிற வேதனை களை படம் பிடித்து காட்டுகின்றன. வேதனை என்னவெனில் அமெரிக்க படையெடுப்பே சரியான தீர்வு என்ற கருத்தை பலப்படுத்துகிற முறையில் செய்திகள் வழங்கப்படுகின்றன. அதாவது அமெ ரிக்கா ஆயுதங்கள் கொடுத்து ஆதரிக்கிற பயங்கர வாத குழுக்களின் கொடுமைகளை தற்காப்பு நட வடிக்கை போல் பூசியே எழுதுகின்றன. அரசியல் தீர்வை முன் மொழியும் நாடுகளை சர்வாதிகாரி ஆசாத்திற்கு ஆதரவு தருபவைகள் என்று சித்தரித்து சிறுமைப்படுத்துகின்றன. உள்நாட்டு பயங்கரவாத குழுக்கள்,அரசின் அடக்குமுறை இவைகளிலிருந்து மக்களை காக்கும் அரசியல் தீர்வை பிரபல ஊட கங்கள் விவாதிப்பதே இல்லை.  வரலாறு கூறுவதென்ன?

முதல் உலக யுத்தம் நடக்கும் தருணத்தில் (1916). பிரிட்டனும் பிரான்சும் ரஷ்யாவும் வெற்றிவாகை சூட நேர்ந்தால் ஓட்டாமன் சாம்ராஜ்யத்தை பல நாடுகளாக பிரித்து பங்கு போட ஒரு ஒப்பந்தம் செய்து கொணடனர்.. அந்த ஒப்பந்தபடி ஒட்டாமன் சாம்ராஜ்யத்தின் (இன்றைய துருக்கி) பகுதியாக இருந்த ஆசியா மைனர் மற்றும் வட ஆப்பிரிக்க பகுதியை நாடுகளாக பிரித்து பிரிட்டனும், பிரான்சும் பங்கு போட்டுக்கொண்டனர். இதனை .அதிகாரப்பூர்வமாக ஆசியா மைனர் ஒப்பந்தம் என்று அழைப்பர். அந்த ஒப்பந்தப்படி சிரியா பிரான்சின் காலனியானது

முதலாம் உலகப் போர் முடிந்த தருவாயில் உருவான சோவியத் அரசு ஜார் மன்னன் காலத்திய ரஷ்ய காலனிகளுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கியது. 1916ல் காலனிகளை மறு பங்கீடு செய்து ரஷ்ய உட்பட ஏகாதிபத்தியவாதிகள் போட்ட ரகசிய ஒப்பந்தங்களை லெனின் வெளியிட்டு காலனிகளாக ஆன ஆசிய, ஆப்பிரிக்க மக்களிடையே விடுதலைக்கான போராட்டத்திற்கு விவேக மூட்டினார் அதன் விளைவாக பல நாடுகளில் விடுதலைப்போர் வீறு கொண்டு எழுந்தது. அக்காலத்தில் விடுதலை இயக்கங்களுக்கு சோவியத் ஆசானாக இருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. சோவியத் உதயமான பின் விடுதலை இயக்கங்களை முன்பு போல் காலனியவாதிகளால் நசுக்க முடிய வில்லை . அந்த வழியில் 1946ல் சிரியா விடுதலை பெற்ற நாடானது.

சிரியாவில் வாழ்கிற  மக்கள் பல பண்பாட்டுடன் வாழ்கிறவர்கள் குர்திஷ் மொழி பேசுகிற மக்கள், அர்மினியர்கள்  அசிரியன்கள் துருக்கர்கள், கிருத்து வர்கள், துருஸ், அலாவைத், ஷியா, அரபுசன்னிஸ். என்று வேற்றுமையில் ஒற்றுமையில் வாழ்பவர்கள். பல மதங்கள் அதன் உட்பிரிவுகள் உள்ள ஒரு நாட்டில் மதச்சார்பற்ற அரசாக இருந்தால்தான் அமைதியாக ஆளமுடியும் என்று கருதிய. விவேக முள்ள ஆட்சியாளரகள் மதச்சார்பற்ற ஆட்சியை கண்டனர். அந்த வகையில் சிரியாவிலும் அரசு மதச்சார்பற்றே இருந்துவருகிறது ஒட்டாமன் சாம் ராஜ்ய காலத்திலேயே மதச்சார்பற்ற அரசு என்ற கோட்பாடு பின்ப்பற்றபட்டதால் இது பண்பாட்டு அம்சமாக  அங்கு இருக்கிறது என்று வரலாற்று நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த சிரியா இன்று மதவாத பயங்கர வாதக் குழுக்களின் போர்க்களமாக உள்ளது. விஷவாயு ஆயுதமாக்கப்பட்டு மக்கள் கொல்லப்படுகின்றனர், முடமாக்கப்படுகின்றனர்

இந்நிலையில் ரசாயன ஆயுத ஆபத்திலிருந்து உலக மக்களை காப்பாற்ற அமெரிக்கா படையெடுக்கப் போவதாக அறிவித்துள்ளது. 5110 கடல் மைல்களுக்கு அப்பால் இருக்கும் சிரியாவை நோக்கி கடற்படையை அனுப்பி  ஆள் இல்லா விமானங்களையும் ஏவுகனைகளையும் ரசாயன ஆயுத கிடங்குகள் நோக்கி ஏவ எடுத்த அமெரிக்கா வின் முடிவு விவேகமானதா? ஏற்கனவே உள்நாட்டு கலவரத்தால் லட்சக்கணக்கில் அகதிகளாகி உள் நாட்டிலும் அண்டை நாடுகளிலும் குடி பெயர்ந்து அல்லலுறும் அம்மக்களை ஒபாமா ஏவப்போகும் டோரோன்சும், குருயிஸ் மிசைல்களும் காப்பாற்றுமா? சிரியாவில் உள்நாட்டு ஆயுத மோத லுக்கு காரணமென்ன? எது தீர்வு? இன்று அமெ ரிக்கா, இந்தியா உட்பட ஸ்டாக் வைத்திருக்கும் ரசாயன ஆயுதம் மற்றும் அது போன்ற பேரழிவு ஆயுதங்களை ஒழிக்கும் காலம் வருமா? இதற்கான பதிலை முடிந்தவரை தேடுவோம்.

கடந்த சில ஆண்டுகளாக அரபு நாடுகளில் மக்கள் எழுச்சியுற்று மக்களுக்கான ஜனநாயக அரசை நிறுவ முயற்சிப் பதையும் உள்நாட்டு சுரண்டும் கூட்டத்தில் ஒரு பகுதி மேலை நாடுகளின் உதவியுடனும் ராணுவ தளபதிகளின் ஆதரவுடனும் சுரண்டும் வர்க்கத்திற்கு  தில்லு முல்லு செய்ய வாய்ப்பளிக்கும் அரசிய லமைப்பை திணிக்க முயற்சிப்பதையும், இன்னொரு பகுதி பழமைவாத பார்வையோடு. இஸ்லாமிய அரசை நிறுவ முயற்சிப்பதையும். கண்டுவருகிறோம். இதே காட்சி இப்பொழுது சிரியாவிலும் அரங்கேறியுள்ளது  சிரியாவிலும் மக்களுக்கான ஜனநாயகத்திற்காக 2011ல் மக்கள் எழுச்சியுற்றனர். துவக்கத்தில் அதிபர் ஆசாத் ராணுவத்தை கொண்டு மக்களை அடக்க எடுத்த நடவடிக்கைகளே, அவரை சிக்கலில் தள்ளிவிட்டது. மக்கள் மீது சுட ஒரு பகுதி ராணுவம் மறுத்தது. மறுக்கும் ராணுவ வீரர்களை சுட்டுத்தள்ளவே ஒரு கட்டத்தில் ராணுவம் பிளவுபட்டு அரசை எதிர்த்தது. மக்கள் ஒதுங்க ஆயுதம் தாங்கிய மோதலாகிவிட்டது. ஆசாத்தின் அடக்கு முறை இரண்டு சக்திகளை உசுப்பிவிட்டது. அரபு நாடுகளிலே இஸ்லாமிய அரசை நிறுவ கனவு காணும் சாவூதி மன்னருக்கும் அவரது கூட்டாளி களுக்கும், சன்னி மத அல்கொய்தா போன்ற அமைப்புகளுக்கும் அது வாய்ப்பு கொடுத்துவிட்டது.

இன்று அல்நுஸ்ரா பிரன்ட் என்ற பெயரில் அல்கொய்தா சவூதி மன்னரின் உதவியுடன் சிரியாவில் ஆசாத்தை எதிர்க்கும் ராணுவத்திற்கு உதவியாக இயங்குகிறது. இந்த அமைப்பு சன்னி மத பிரிவை சார்ந்த சகிப்புத் தன்மையற்ற தலிபன் பாணி பயங்கரவாத பிரிவாகும். இதற்கு எதிராக ஹிஸ்புல்லா அரசியல் இயக்கத்தின் ஆயுதம் தாங்கிய குழு அரபு நாடுகளில் உள்ளது. லெபனானில் அது ஆளும் அணியில் ஒன்று.. சிரியாவிற்குள். பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக  இதுவும் லெபனானில்லிருந்து வந்துள்ளது சிரியா என்ற போர்களத்தில்  அமெரிக்கா அல்கொய்தா அரபு மன்னரகள் ஒரு பக்கமும் இவர்களது ஆதிக்கத்தை எதிறகும் அரபு நாடுகளின் அரசியல் இயக்கங்கள் எதிர்ப்பக்கமும் மோதுகின்றன.  .

உலக அரசியலில் தங்கள் கொடி தவிர வேறு கொடிகளை பறக்கவிடக் கூடாது என்ற ஆவேசத்துடனும் நீண்ட கால திட்டத்துடனும் செயல்படும் முன்னாள் காலனியவாதிகளான பிரான்ஸ், பிரிட்டன் அமெரிக்கா தங்களுக்கு அனுசரனையான அரசாக சிரியாவில் அமைய தலையிடும் வேளை வந்துவிட்டதாகக் கருதி அவர்களும் நடவடிக்கையில் இறங்கிவிட்டனர். இதன் விளைவாக மக்கள் எழுச்சி சுருங்கி மக்கள் பங்கேற்க இயலாத ஆயுதங்கள் மட்டுமே மோதுகிற போர்க்களமாக சிரியா ஆனது. மக்கள் அகதிகளாகி வருகிறார்கள்..

நட்பு நாடுகளின் நிர்பந்தம் சர்வாதிகாரி ஆசாத்தை 2012 மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தலை நடத்திட வைத்தது..  ஆசாத் தலைமையில்  தேசிய முற்போக்கு கூட்டணி என்ற பெயரிலும், ஆசாத் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட உருவான பாப்புலர் பிரண்ட் பார் சேன்ஞ் அன்ட் லிபரேஷன் எதிரணியும் போட்டியிட்டன.250 இடங்களுக்கு 7195 வேட்பாளர்கள் அதில் 710 பெண்கள் களத்தில் நின்றனர். 12 விதமான அரசியல் கட்சிகள் எதிரும், புதிருமாக இரண்டு அணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டன.

ஒருபக்கம் தேர்தல் நடந்தாலும் ஆங்காங்கு பயங்கரவாதக் குழுக்களும் ஆசாத்தின் விசுவாச ராணுவமும் மோதி சிரியாவை போர்களமாக ஆக்குவது தொடர்ந்தது. இரு தரப்புமே தேர்தலை அமைதியான சூழ்நிலையில் நடத்தி மக்கள் விரும்புகிற ஆட்சியை  உருவாக்க விரும்பவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. தேர்தலும் நடந்தது 14.8 மில்லியன் வாக்காளர்களில் 51.26 சத வாக்காளர்கள் வாக்களித்து ஆளும் கூட்டணி பெரும்பான்மை இடங்களை பிடித்து ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. எதிரணி தேர்தல் முடிவை ஏற்க மறுத்து. 19,மார்ச் 2013 அன்று  எதிரணியின் ஆயுதம் தாங்கிய பயங்கர வாத குழுக்கள் ரசாயன ஆயுதங்களை பிரயோகித்து கான் அன் அசால் நகரில் ராணுவத்தையும் மக்களை யும் கொல்லத் தொடங்கியது. அதே தேதியில் (19,மார்ச் 2013) ஆசாத் ஐ.நா. பொதுச் செயலாளருக்கு  புகார் அணுப்பி நிபுணர்களை அனுப்பி ஆய்வு செய்யக் கோருகிறார்..

அமெரிக்க ரசாயன ஆயுதங்களை ஸ்டாக் வைத்திருக்கும் ஆசாத் அரசுதான் மக்களை கொல்வதாக குற்றம் சாட்டி சிரியாமீது தாக்குதல் தொடுக்கப் போவதாக இப்பொழுது அறிவித்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மூன்று நாடுகளும் ஆசாத்தை குற்றம் சாட்டியது. ஐ.நா.வின் பொதுச் செயலாளர்  எந்தெந்த இடங்களில் என்ன வகையான விஷவாயு? உயரிழப்பு, காயம்பட்டோர் இவைகள் பற்றி ஆய்வு செய்ய 21 பேர் கொண்ட நிபுணர் குழுவை அனுப்பினார். அது தயாரித்த அறிக்கையில் விஷவாயுவை ஏவியது யார் என்பதை முடிவு செய்யாது என்றும் தெரிவித்தார் ரசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது  என்பதை கள ஆய்வு உறுதி செய்தாலும். அதனை ஏவியது யார் என்பதை ஐ.நா நிபுணர் குழு. தெறிவிக்கவில்லை. இதற்கிடையில் அமெரிக்கா ஆசாத் மீது குற்றம் சாட்டி ராணுவ தலையீட்டிற்கு முடிவு செய்துள்ளது. இதனை உலக நாடுகள் வேடிக்கை பார்க்க முடி யாது.. அதற்காக அமெரிக்காவின் படையெடுப்பை கண்டும் காணாமல் விடமுடியாது. அதனை உலக நாடுகள் தடுக்க வேண்டும்.. அமெரிக்காவின் படை யெடுப்பு திட்டத்தை எதிர்க்கும் சீனாவும், ரஷ்யாவும் கண்ணை மூடிக் கொண்டோ.அல்லது அரசியல் ஆதயத்திற்கோ ஆசாத்தை ஆதரிப்பதாக கூறுவது ஒரு பிரச்சார கற்பனையே…

கடந்தகால பிரச்சினைகளில் அந்த நாடுகள் எடுத்த நிலைபாட்டை உலகமறியும்.கடந்த காலத்தில் ஈராக் மீது ராணுவ நடவடிக்கை கூடாது என்று பாதுகாப்பு கவுன்சி லில் சீனாவும், ரஷ்யாவும் வீட்டோ செய்தது சரி என்பதை இன்று உலக மறியும்., லிபியாவில் கடாபி மக்கள் மீது விமானத்தாக்குதல் நடத்த முயற்சித்தால் அதனை தடுக்க நாட்டோ ராணுவத்தை அனுமதிக்க  ஏகமனதான தீர்மானம் நிறைவேற்ற இந்த இரு நாடுகளும் சம்மதித்தன. அதனை பிரெஞ்சு ராணுவம் தவறாகப் பயன்படுத்தி விமானத் தாக்குதல் நடத்தி மக்களை கொன்றதையும் உலகமறியும். அதனை இந்த நாடுகள் கண்டித்தன என்பதையும் உலகமறியும்.. அமெரிக்காவை சார்ந்து நிற்கவே விரும்பும் மன்மோகன் சிங் அரசு அமெரிக்க நடவடிக்கையை ஏற்கவில்லை என்பதை தெளிவாகவே கூறிவிட்டது..

இன்று பயங்கரவாத கும்பல் கள் சிரியாவை ரணகளமாக்குவதை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் சவூதி அரேபியா, சிரியாவின் அண்டை நாடுகள் நினைத்தால் அங்கே அமைதியை கொண்டுவர முடியும். அமைதியான சூழலில் தேர்தலையும் நடத்த முடியும். ஆளுக்கொரு அரசியல் நோக்கத்திறகாக ஆட்சியை சிரிய மக்கள் கையில் கொடுக்க  இவர்கள் விரும்பவில்லை என் பதே உண்மை. இங்கே மக்கள் கையில் அதிகாரம் போகுமானால் பழமையான மதவாத அரசுகள் நிலவும் நாடுகளில் ஆயுதக்குழுக்களை நம்பாமல் சோவியத் பாணியில் மக்கள் ஆங்காங்கு தேர்தல் மூலம் நிர்வாக அமைப்பை ஏற்படுத்தி அதிகாரத்தை எடுத்துக் கொள்வர் என்ற பயமே இவர்களை ஆட்டிப்படைக்கிறது. டாலரைக் கொண்டும்,  எரி பொருள் எண்ணெய் வர்த்தக ஆதிக்கத்தைக் கொண்டும் உலகை ஆளும் முன்னாள் காலனிய வாதி களுக்கு அந்த மேலாண்மைக்கு ஆபத்து என்ற பயம் பிடித்தாட்டுகிறது. இந்த பயமே ஆளுக்கொரு பயங்கரவாத குழுக்களை பராமரிக்க தள்ளியுள்ளது.

ஆசிய கண்டத்தில் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட பல நாடுகளில் மக்களுக்கான ஜனநாயகம் என்பது கேள்விக்குறியாகவே நீடிக்கிறது. அந்த வகையில் சிரியாவும் விதி விலக்கல்ல. உள் நாட்டில் பழமையான சுரண்டல் கும்பலும், மேலைநாட்டு உறவால் உருவான நவீன சுரண்டல் கும்பலும் மக்கள் கையில்  அதிகாரத்தை கொடுக்க தயாரில்லை. இந்த எதார்தத்தை முன்னாள் காலனியவாதி கள் பயன்படுத்தி பழைய சுரண்டலை தொடர எடுக்கிற முயற்சிகளே இன்றைய உலக அரசியலின் இழுபறி சக்தியாக உள்ளது.  எனவே ராணுவ நட வடிக்கை என்பதின் நோக்கம் வேறு… ஐரோப்பிய, அமெரிக்க பிரச்சாரகர்கள் அனைவரும்  யுத்தம் வருமா? வராதா? என்று தலையைப் பிய்த்துக் கொண்டு நிற்கின்றனரே தவிர, ராணுவ நடவடிக் கையின் நோக்கத்தை விவாதிக்க மறுக்கின்றனர்.. ஒரு காலத்தில் அமெரிக்க பொருளாதாரத்திற்கு  போர் என்பது ஒரு டானிக்காக இருந்தது.இப்பொழுது நிலைமை வேறு. அது டானிக்கா? விஷமா? என் பதை உறுதியாக சொல்ல முடியாது. எனவேதான் தர்ம சங்கடம்.

முஸ்லீம் உலகோடு நல்லிணக்கம் கண்டவர் என்பதற்காகவே நோபள் பரிசு பெற்ற ஒபாமாவிற்கு இதைவிட வேதனை தருவது வேறு எதுவும் இருக் காது என்று சிலர் எழுதுகினறனர். ஜனாதிபதி ஒபாமா தர்ம சங்கடத்தில் இருப்பதாக சொல்லப் படுகிறது. பெரும்பான்மை அமெரிக்க பாமரமக் களின் யுத்த எதிர்ப்புணர்வு அவரைத் தடுப்பதாகவும்.. மறுபக்கம் உலக அரசியலில் அமெரிக்காவின் மேலாண்மையை நிலைநாட்ட செனட்டர்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள். போர் தொடுக்கத் தள்ளுவதாகவும் எழுதுகினறன.. பிரிட்டனின் நாடாளுமன்றம் சிரியா மீது ராணுவ நடவடிக்கை கூடாது தடுத்துவிட்டது. பிரான்சிலும் நாடாளு மன்றத்தில் விவாதிக்காமல் ராணுவத்தை அனுப்பக் கூடாது என்ற குரல் எழுந்துள்ளது. ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி என்ற வகையில் புஷ் போல் தான்தோன்றித்தனமாக முடிவெடுக்க அமெரிக்க அரசியல் சட்டம் அனுமதிக்கிறது. ஒபாமாவின் முடிவு எதுவாக வந்தாலும்  சிரியாவின் துயரம் நீங்க நெடுநாளாகும். பேரழிவு ஆயுதமில்லா உலகு, ஐ.நாவின் மூலம் தீர்வு தேடுவது என்பவைகளோடு அது இணை    க்கப்பட்டுள்ளது அதோடு அரபு நாடுகளை பிடித்தாட்டும் பழைய மற்றும் நவீன மூட நம்பிக்கைகள்  அகல்வதை பொறுத்துள்ளது.