அரசமைப்புச் சட்டங்களின் வழியே சோவியத் தரிசனம் !

நவம்பர் புரட்சி நூற்றாண்டு கட்டுரை

இரா.சிந்தன்

பொதுவாக ஒருநாடு தன்னை ‘ஜனநாயக’ நாடென அழைத்துக் கொண்டாலும் அந்த நாட்டின் அரசு எந்த வர்க்கத்தின் கருவியாகவுள்ளது என்பதை வைத்தே, அதைப் பற்றிய மதிப்பீட்டுக்கு வரமுடியும். முதலாளித்துவ நாடுகளில், நாடாளுமன்ற ஜனநாயகம் இயங்குகிறது. குடிமக்களுக்கு சிலஉரிமைகளும் வழங்கப்படுகின்றன. இருப்பினும், அந்த சமூகத்தில் நிலவும் முதலாளித்துவ உற்பத்தி முறையில், சுரண்டல் தொடர்கிறது. எனவே பொருளாதார நெருக்கடிகளும், வேலையின்மையும் தவிர்க்க இயலாததாகின்றன.

மிகச் சிறு எண்ணிக்கையிலான முதலாளித்துவ வர்க்கம் ஒரு ஆட்சிக்குத் தலைமையேற்கும்போது – எப்போது அது தன்னுடைய நலன்களை மட்டுமே முதன்மையாகக் கருதுகிறது. நெருக்கடிகள் எழுந்தால், அதன் பாதகமான விளைவுகளை பெரும்பகுதி மக்களின் மீது சுமத்த ஆளும்வர்க்கம் தயங்குவதில்லை. அத்தகைய சுரண்டலுக்கான கருவியாகவே அரசும் பிறநிறுவனங்களும் தொடர்கின்றன.

சோவியத்துகளின் இரண்டாவது காங்கிரஸ்:

சோவியத் ஒன்றிய அரசானது – பாட்டாளிகள், விவசாயிகளின் அரசுதான் என்பதை அவர்களின் அரசமைப்புச் சட்டம் அறுதியிட்டுக் கூறியது.

1917, நவம்பர் 7 ஆம் தேதியில் குளிர்கால அரண்மனை கைப்பற்றப்பட்டது. நவம்பர் 8ஆம் தேதி சோவியத்துகளின் இரண்டாவது காங்கிரஸ் நடைபெற்றது. அதில் உலக சமாதானத்திற்கான அழுத்தமான குரல் எழுந்தது. மேலும், அப்போது நிறைவேற்றப்பட்ட முடிவுகளின் மூலம் 40 கோடி ஏக்கர்களுக்கும் அதிகமான நிலம் விவசாயி வர்க்கத்தின் ஆளுகையின்கீழ் வந்தது. குத்தகைச் சுரண்டல்களுக்கு முடிவுகட்டப்பட்டது.

’மனிதனை மனிதன் சுரண்டும் முறை இனி இங்கில்லை, சோசலிசப் பொருளாதார அமைப்பில் பொருளாதார நெருக்கடிக்கும், வேலையின்மைக்கும் பொருளில்லை’ என்று பெருமையோடு அறிவித்தது சோவியத் யூனியன். அதைநோக்கிய பயணத்திற்கு லெனின் தலைமையேற்று பாதை வகுத்தார். ரஷ்யாவின் காலனிநாடுகள் விடுவிக்கப்பட்டன.

1918ஆம் ஆண்டில் எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டம் பாலினம், இனம், மொழி உள்ளிட்ட பாகுபாடுகளுக்கு முடிவுகட்டியது. பெண்கள் மீதான பிற்போக்குத்தனமான கட்டுப்பாடுகளை சட்டவிரோதமாக்கியது சோவியத் அரசேயாகும். ஆண் – பெண்திருமணம், விவாகரத்து, வேலை, குழந்தைப்பேறு போன்ற தேர்வுகளை அது சாத்தியமாக்கியது.

1930களில் உலகமும் சோவியத்தும்:

1930களில் உலகம் முழுவதுமே மிகக்கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வந்தது. அமெரிக்காவில் 25% வேலையின்மை நிலவியது. பல நாடுகளில் 33% வரை வேலையின்மை அதிகரித்தது. விவசாய விளைபொருட்களுக்கு 60 சதவீதத்திற்கும் அதிகமாக விலை வீழ்ச்சி ஏற்பட்டது. உலகப் போர்களின் வழியாகவும், போருக்குப் பிறகும் அந்த நெருக்கடியின் சுமைகள் முழுமையாக குடிமக்கள் தலையிலேயே சுமத்தப்பட்டன. ஆனால் சோவியத் பொருளாதாரம் நெருக்கடிகளையோ, விலையேற்றங்களையோ காணாத பேரதிசயமாக இயங்கியது.

1920களில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமலில் இருந்தன. அதாவது அங்கே முதலாளித்துவ உற்பத்தி முறைகளும் நிலவின. முதலாளிகள் இருந்தார்கள். கூட்டுப்பண்ணைகள் முழுமையாக வளர்ந்திருக்கவில்லை. குலாக்குகள் இருந்தார்கள்.

1936 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றிய அரசமைப்புச்சட்டம் திருத்தப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் முதலாளித்துவ உற்பத்திமுறை முழுமையாக ஒழிக்கப்பட்டு, விவசாயத்தில் குலாக்குகள் என்ற பிரிவின் தேவை ஒழிக்கப்பட்டது. கூட்டுப் பண்ணைகள் வெற்றிகரமாக, பிரம்மாண்டமாக இயங்கின.

1936 ஆம் ஆண்டு திருத்தங்கள்:

சோவியத் அரசமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும் என்று 7 வது காங்கிரசில் முடிவு செய்தவுடன், ஸ்டாலின் தலைமையில் 31 பேர் கொண்ட அரசமைப்புச் சட்ட ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. அந்த ஆணையம் எழுதிய வரைவு அரசமைப்புச் சட்டம், நாடு முழுவதும் அனுப்பப்பட்டது. மக்கள் அந்த திருத்தங்களை விவாதித்தார்கள். சுமார் 160 நாட்கள் இந்த விவாதங்கள் நடைபெற்றன; திருத்தங்கள் பெறப்பட்டன. பிறகு எட்டாவது மாநாட்டில் இறுதி வடிவத்தை நிறைவேற்றினார்கள். உலக முதலாளித்துவ நாடுகளின் விமர்சனங்களும், அவை எத்தனை கொச்சையாக இருப்பினும், மாநாட்டின் விவாதத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன. அரசமைப்புச் சட்டத்தை வடிவமைப்பதற்கான இந்த விவாதமே மிகப்பெரிய ஜநாயக நடவடிக்கை என்பதை கவனிக்கவேண்டும்.

புதியதோர் சமூகச் சூழல்:

புதிய அரசமைப்புச் சட்டத்தை முன்வைத்து, ஸ்டாலின் உரையாற்றியபோது மிகுந்த உற்சாகம் நிலவியது. அவர் விவசாயத்தில் ஏற்பட்டுள்ள பிரம்மாண்ட மாற்றங்களைக் குறிப்பிட்டார். கூட்டுப்பண்ணை உற்பத்தியும், புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சியும் பிரம்மாண்ட மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தன. ‘3,16,000 டிராக்டர்களும் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் குதிரைத் திறன் 57,00,000. அரசின் பண்ணைகளையும் சேர்த்துக் கணக்கிட்டால் 4,00,000 டிரேக்டர்கள் 75,80,000 குதிரைத் திறனோடு செயல்பட்டுவருகின்றன’ என்றார்.

வர்க்கங்களின் புதிய நிலைமைகள்:

தொழிலாளர்கள், விவசாயிகள், அறிவுஜீவிகள் இருந்தார்கள். ஆனால் சுரண்டும் வர்க்கங்கள் இல்லை. உற்பத்திக் கருவிகளும், நிலம் உள்ளிட்ட வளங்களும், பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் செயல்படும் சோசலிச அரசுடையதாக இருந்தன. இவ்வாறு பாட்டாளிவர்க்கம் ஒரு புதிய நிலையை எட்டியது. முதலாளித்துவ நாடுகளில் இருப்பதுபோன்ற நிலையில் அது இல்லை. இனியும் அது சுரண்டப்படும் வர்க்கமில்லை. விவசாயிகளும் கூட, கூட்டுப்பண்ணை முறையால் புதிய வளர்ச்சியை எட்டியிருந்தார்கள். விவசாயத்தில் புதிய நுட்பங்கள் புகுத்தப்பட்டிருந்தன. அறிவுஜீவிகளின் நிலையிலும் மாற்றம் ஏற்பட்டிருந்தது. எனவே அவர்கள், சோசலிசத்தில் இருந்து கம்யூனிசத்தை நோக்கி மாறிச் செல்லும் கட்டத்திற்கு பாதை வகுப்போராக இருந்தார்கள். இதையெல்லாம் ஸ்டாலின் பெருமையுடன் குறிப்பிட்டார்.

தேர்தல், வாக்களித்தல், திரும்பப் பெறுதல்:

பொதுப்புத்தியில் ஜனநாயகம் என்பது ஒரு தேர்தல் நடைமுறையாக மட்டுமே கருதப்படுகிறது. தேர்தல், நாடாளுமன்றங்களில் ஜனநாயகம் நிலவுவது மிக முக்கியமே என்ற போதிலும், அவற்றையும் தாண்டிய ஜனநாயக உரிமைகளை சோவியத் அரசமைப்புச் சட்டம் உறுதி செய்தது.

சோவியத் அரசாங்க அமைப்பில் உச்ச அதிகாரம் பெற்றது ‘சுப்ரீம் சோவியத்’ ஆகும். அதில் இரண்டு அவைகள் இருந்தன. ஒன்று சோவியத் ஒன்றிய அவை; மற்றொன்று, தேசிய இனங்களின் சோவியத் அவை. இந்த அவைகளுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல்கள் நடப்பதை அரசமைப்புச் சட்டம் உறுதி செய்தது. 18 வயது வந்த அனைவருக்கும் சம மதிப்பிலான வாக்கும், மறைமுகமான தேர்தல் முறையும் உறுதி செய்யப்பட்டன. (இக்காலகட்டத்தில் பல முதலாளித்துவ நாடுகளில் வாக்குரிமை அனைவருக்குமானதாக இல்லை. வசதி, பாலினம், கல்வியறிவு, இனம், மொழி, வாழிடம் சார்ந்து உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தன) சோவியத் ஒன்றிய அவை உறுப்பினரை தேர்வு செய்ய – ஒவ்வொரு 3 லட்சம் பேருக்கும், ஒரு பிரதிநிதி என்ற வகையில் மறைமுக வாக்கெடுப்பு நடைபெற்றது.

தேசிய இனங்களின் சோவியத் அவைக்கான பிரதிநிதிகள் -ஒவ்வொரு ஒன்றியக் குடியரசிலிருந்தும் தலா 25 , தன்னாட்சிக் குடியரசிலிருந்து 11, தன்னாட்சிப் பிரதேசங்களில் இருந்தும், தேசியப் பகுதிகளில் இருந்தும் தலா ஒருவர் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். இரண்டு அவைகளும் சமஅதிகாரம் கொண்டவையாக இருந்தன. அனைவரும் தேர்தலில் வாக்களிப்பதை உறுதிசெய்த அமைப்புச் சட்டம், போட்டியிடும் உரிமையையும் உறுதி செய்தது. அதே சமயம், சோசலிசக் கட்டமைப்பை பாதுகாத்து கம்யூனிசத்திற்கு பாதையமைக்கும் லட்சியத்தை வென்றெடுக்கும் நோக்கில், பாட்டாளிவர்க்க அமைப்புகளே வேட்பாளர்களை நிறுத்த முடியும் என அரசமைப்புச் சட்டம் வரையறுக்கிறது. தனியுடைமையை ஆதரிக்கும் கட்சிகள், அமைப்புகளுக்கு அதிகாரம் மறுக்கப்பட்டது – இதைத்தான் முதலாளித்துவ நாடுகள் ஜனநாயக விரோத நடவடிக்கையாக வர்ணித்தனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை திரும்ப அழைப்பதற்கான உரிமையும் அத்தியாயம் 11இல் பிரிவு 142 உறுதி செய்தது. குடியரசுகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல்கள் நடைபெற்றன.

நீதிபதிகளுக்கான தேர்தல்:

மேலும்,சுவாரசியம் தரும் வகையில் சோவியத் ஒன்றியத்தில் மாவட்ட நீதிமன்றங்களுக்கு தேர்தல் நடத்துவது உறுதி செய்யப்பட்டது. இந்தத் தேர்தலிலும் அனைவருக்கும் நேரடியான, சம வாக்கு உறுதிசெய்யப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தத் தேர்தல்கள் நடத்தப்பட்டன.

1977ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தத்தில், குடிமக்கள் அரசாங்க நிர்வாகப் பணிகளில் பங்கேற்கவும், அரசு நிறுவனங்களுக்கு முன்மொழிவுகளை அனுப்புதல், அரசுப்பணிகளில் நிலவும் தொய்வுகளைக் கேள்வி கேட்பதற்கான உரிமைகளும், அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக வழக்குத் தொடுக்கும் உரிமையும் உறுதி செய்யப்பட்டன. ஊழல் முறைகேடுகளைத் தடுத்திடும் நடவடிக்கைகளாக இவை அமைந்தன.

குடிமக்கள் உரிமைகள்:

முதலாளித்துவ சமூகத்தில் ஒரு பாட்டாளிக்கு உழைப்பு என்பது அவளின்/அவனின் இயல்பிலிருந்து துண்டிக்கப்பட்ட ஒன்றாக அமைந்துள்ளது. அவள்/அவன் உற்பத்தி நடவடிக்கையை மகிழ்ச்சியுடன் மேற்கொள்வதாக அமைவதில்லை. வேலைசெய்யாத போதுதான் ஒரு பாட்டாளி மகிழ்ச்சியடைவதாகக் கருதும் நிலை உள்ளது. இதனை மார்க்ஸ் அன்னியமாதல் (alienation) என்று குறிப்பிடுகிறார். உற்பத்திப் பொருளில் இருந்து உழைப்பு நடவடிக்கையை அன்னியப்படுத்துவதானது ஒரு மனிதனை அவரது வாழ்க்கை நடவடிக்கைகளில் இருந்தும், சமூக இயல்பிலிருந்தும் தனிமைப்படுத்தி, துண்டிக்கிறது.

சோசலிச சமூகத்தில் உழைப்பு வயிற்றுத்தேவைக்கான ஒரு உயிரற்ற நடவடிக்கையாக இல்லை. மாறாக அது, சொந்த வாழ்க்கைக்கும், சமூகத்தின் நலனுக்குமான சேவையாகிறது. எனவே, ஒரு உழைப்பாளி தன் உழைப்பை மதிப்புமிக்கதொரு பணியாக மேற்கொள்கிறார். இந்தப் பின்னணியில்தான். முதலாளித்துவ நாடுகளில் ஏட்டளவில்கூட வழங்கப்படாத உரிமைகளை, சோவியத் ஒன்றிய அரசமைப்புச் சட்டம் தனது குடிமக்களுக்கு உறுதி செய்தது.

உழைப்பும், ஓய்வும் உரிமைகள்:

ஒவ்வொரு குடிமகனுக்கும் உழைப்பு உரிமையாக்கப்பட்டது. அதன்படிவேலை வழங்குவதும், உழைப்புக்கேற்ற ஊதியத்தை உறுதிசெய்வதும் அரசின் கடமையாகும். ஓய்வெடுத்தலும், புதுப்பித்துக் கொள்வதும் குடிமக்களின் உரிமையாக்கப்பட்டது. 7 மணி நேர வேலை, ஆண்டுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை மற்றும் விடுமுறைக் காலத்தில் வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதும் அரசின் கடமையாக ஏற்றது.

ஓய்வுக் காலத்தில், உடல் நலம் குன்றிய சூழலில் சோவியத் குடிமக்களைப் பாதுகாப்பதும் உரிமைகளாக்கப்பட்டன. கல்வி உரிமையும், பெண்களுக்கான சம உரிமையும் சட்டப்படி உறுதி செய்யப்பட்டன. இனம், மொழி, பண்பாடு, சமூகம் சார்ந்த எந்த வகையிலான வெறுப்பும் கண்டனத்திற்குரியவை மட்டுமல்ல; தண்டமைக்குரியதாகவும் ஆக்கப்பட்டன.

மத வழிபாடுகளும், பிரச்சாரமும், நாத்திகப் பிரச்சாரமும் அனைத்து மனிதர்களுக்கும் உறுதி செய்யப்பட்டன. பேச்சுரிமை, கூட்டம் கூடுவது, போராடும் உரிமைகள் உறுதி செய்யப்பட்டன.

1977ஆம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்ட அரசமைப்புச் சட்டத்தில் மேலும் பல புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஒருவர் தன் வேலையைத் தேர்வு செய்வதற்கான உரிமையும், சுகாதாரத்தை பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமையும் உறுதி செய்யப்பட்டன. தனிநபர் சுதந்திரத்தின் எல்லைகள் விரிவாக்கப்பட்டன. தனிநபர்களின் விருப்பத் தேர்வுகள் அங்கீகரிக்கப்பட்டன. அவற்றில் தலையீடு செய்வது குற்றமாக்கப்பட்டது.

தஞ்சம் புகுவதற்கான உரிமை வழங்கியது சோவியத் ஒன்றியம். பிறநாடுகளில் இருந்த உழைக்கும் மக்களின் நலன்களுக்காக போராடியவர்கள், தேசிய விடுதலைக்காக போராடியவர்கள், அறிவியல்ஆய்வுகளைத் தொடர முடியாமல் அபயம் கேட்டு வருவோருக்கு, தஞ்சம் புகுவதற்கான உரிமை வழங்கியது சோவியத் யூனியன்.

சோவியத் ஒன்றிய கூட்டாட்சி:

சோவியத் ஒன்றியத்தோடு இணைந்த குடியரசுகள் 14 வது பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ளன. தேசிய இனங்களின் அவைக்கு முக்கியத்துவம் தரப்பட்டதுடன், அதிகாரப் பரவலாக்கம் பற்றியும் அரசமைப்புச் சட்டம் விவரிக்கிறது. அந்தந்தப் பிராந்திய நீதிமன்ற நடவடிக்கைகள் அந்தந்தப் பகுதிகளுக்கான மொழியில் நடப்பது உறுதி செய்யப்பட்டன. 1944 ஆம் ஆண்டில் ஒவ்வொரு சோவியத் குடியரசிலும் செம்படைக் கிளைகள் ஏற்படுத்தவும், வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சகம் ஏற்படுத்திக்கொள்ளவும் உரிமைகள் வழங்கி திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. கூட்டாட்சி குறித்த பகுதிகளும், அனுபவமும் வேறொரு முழுநீளக் கட்டுரைக்கானவை.

இதுபற்றி பெருமிதம் பொங்க குறிப்பிடும் தோழர் ஸ்டாலின், ’தேசியங்களும், இனங்களும் சமஉரிமையோடு வாழமுடியாது என்பது மட்டுமல்ல தங்களுக்கு கீழே பல காலனி நாடுகளை வைத்திருக்கும் முதலாளித்துவ நாடுகள், ஆளும் ‘தேசியங்களின்’ சாசனமாகவே அரசமைப்புச் சட்டத்தை வடிக்கிறார்கள். இதிலிருந்து மாறுபட்டது சோவியத் ஒன்றியம்.’ என்கிறார்.

மேலும், ‘சர்வதேசத் தன்மையோடும், அனைத்து தேசியங்களுக்கும் இனங்களுக்கும் சமஉரிமையை உறுதி செய்வதாகவும், நிறம், மொழி, கலாச்சாரம், அரசியல் முன்னேற்றம் என ஆதிக்கத்திற்கு வக்காலத்து வாங்கும் எந்தப் பிரிவும் அமையப் பெறாத ஒன்றாக சோவியத் அரசமைப்புச் சட்டம் உள்ளது.’ என்கிறார். அரசியல் வலிமையோ, கடந்த கால நிலைமைகளோ ஒரு குடியரசின் சம அந்தஸ்தை மறுக்கும் காரணியாக அமைய முடியாது என்கிறார் அவர்.

மறக்கவியலாச் சுவை:

சுரண்டுவோரும், சுரண்டப்படுவோரும் இருக்கையிலே அனைவரும் சமம் என்று இறுமாப்புக் கொள்வதன் பொருள்தான் என்ன? என்ற கேள்விக்கு முதலாளித்துவ நாடுகளில் பதில் இல்லை. சோவியத் ஒன்றியம் அந்த நிலைமையிலிருந்தே மாற்றத்தை தொடங்கியது. அங்கு நிலவிய உற்பத்தி முறையும், உற்பத்தி சக்திகளின் உடைமையும் தனியொரு வர்க்கத்தின் ஆதிக்கத்திலிருந்து அகற்றப்பட்டன. இதன் விளைவாகவே முதலாளித்துவ நாடுகளிலும் இல்லாத பல உரிமைகளை சோவியத் உறுதி செய்தது. இது குறித்து உலகத் தொழிலாளி வர்க்கமே பிரமிப்போடு நோக்கியது. சுரண்டலை முடிவுக்குக் கொண்டு வராமல், இத்தகைய வாழ்க்கைச்சூழல் சாத்தியமில்லை என்ற நிலையில்தான் விமர்சனங்களை முதலாளித்துவ அறிவுஜீவிகள் முன்வைத்தனர். அவர்கள் இதனை ஒரு விளம்பர நடவடிக்கையாக மட்டுமே சுருக்க விரும்பினார்கள்.

ஆனால், சோவியத் தனது லட்சியப்பாதையில் நடைபோட்டது. அதன் அரசமைப்புச் சட்டம் பலமுறை திருத்தப்பட்டுள்ளது. அது தனக்குத்தானே வரித்துக் கொண்ட உயர்ந்த லட்சியங்களை அமலாக்கும் போராட்டத்தில் ‘உலகப் பாட்டாளிகளுக்கு இன்றுவரை கனவாக அமைந்திருக்கும் உரிமைகளை, அது சாத்தியமாக்கிக் காட்டியதென்பதை’ யாரும் மறுக்கமுடியாது. ஒவ்வொரு முறை திருத்தத்தின் போதும் சோவியத் ஜனநாயகம் மெருகூட்டப்பட்டது. “நாங்கள் பெற்ற வெற்றிகளின் கனிகளைத் தருகிறோம்” என்ற மகிழ்ச்சியோடு ஸ்டாலின் அதனை வர்ணித்தார். உலகமே அந்தக் கனிகளைச் சுவைத்தது. பின்னடைவுக்குப் பிறகும் தன் கனிகளின் சுவையை சோவியத் வரலாறு நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறது.