இந்துத்துவா அரசியலை பாஜக கைவிடுமா? அய்ஜாஸ் அகமது-உடன் ஓர் உரையாடல்

ஜிப்ஸன் ஜான், ஜிதேஷ் பி.எம்.

தமிழில்: வீ. பா. கணேசன்

மோடியின் காலத்தில் இந்துத்துவ வலதுசாரிகளின் தாக்குதல்கள் புதிய உச்சங்களைத் தொட்டுள்ளன. கூட்டமாகச் சேர்ந்து அடித்துக்கொலை செய்வது; வெட்ட வெளிச்சமாகவே படுகொலை செய்வது; கொலை செய்வதற்கான சதித்திட்டங்களை தீட்டுவது; மாற்றுக்கருத்துக்களை சொல்ல முயற்சிப்பவர்களை பயமுறுத்திப் பேசவிடாமல் தடுப்பது என வலதுசாரிக் குழுக்களின் செயல்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் அன்றாட நிகழ்வுகளாக இருந்தன. இவை இப்போது மேலும் தீவிரமாகத் தொடர்கின்றன. இவற்றை நீங்கள் எப்படிப்பார்க்கிறீர்கள்?

இத்தகைய நிகழ்ச்சிகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன என்று நீங்கள் சொல்வது சரிதான். என்றாலும் இத்தகைய விஷயங்களை அதற்குரிய கண்ணோட்டத்தில்தான் அணுக வேண்டும். வகுப்புவாதப் படுகொலைகள், பாகிஸ்தானில் இருந்து இந்துக்களும் சீக்கியர்களும் இந்தியாவிற்கும், இந்தியாவில் இருந்து முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கும் என மனித குல வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவில் மத அடிப்படையில் நிகழ்ந்த மக்களின் இடப்பெயர்வு ஆகியவற்றுக்கு இடையேதான் நமது குடியரசு பிறந்தது. இன்னும் சொல்லப்போனால் நமது நாட்டின் விடுதலைக்கும், நமது நாடு இரண்டாகப் பிரிக்கப்படுவதற்கும் முன்பிருந்தே இந்த வகுப்புவாத வன்முறை இருந்து வருகிறது. தங்கள் சமூக வாழ்க்கையில் மற்றவர்களை சிறந்த வகையில் அனுசரித்துப் போகிற, தங்கள் அரசியல் நடத்தையில் மதசார்பற்ற கண்ணோட்டத்தைப் பின்பற்றுகின்ற கோடானுகோடி இந்திய மக்கள் இருக்கிறார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. சாதியை அடிப்படையாகக் கொண்ட, கடவுள் மீது அதீதமான பற்று கொண்ட ஒரு சமூகத்தில் எந்த அளவிற்கு மற்றவர்களை அனுசரித்துப் போகிற, மதசார்பற்ற அணுகுமுறையை பின்பற்ற முடியும் என்பதற்கும் வரம்பு இருக்கிறது என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.\

வகுப்புவாத வன்முறையின் லாபங்கள்

1980களின் நடுப்பகுதியில் இருந்தே வகுப்புவாத வன்முறையானது கலாச்சார ரீதியாகவும், தேர்தல் மூலமாகவும் மிக நல்ல லாபத்தை கொடுத்து வருவதை நாம் மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறோம் என்பது இதில் இரண்டாவது விஷயமாகும். நாட்டின் தலைநகரிலேயே ஆயிரக்கணக்கில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டது இந்து தேசத்தை ஒன்றுபடுத்த பயன்பட்டது மட்டுமின்றி, இதுவரையில் பெற்றதிலேயே மிக அதிகமான மக்களவை இடங்களையும் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கியது.

பெரும்பான்மையான இந்துக்களை காங்கிரஸ் கட்சியிடமிருந்து பிரித்து சங் பரிவாரம் அவர்களை வென்றெடுக்க வேண்டும் என்பதற்காகவே ராமஜன்ம பூமி இயக்கம் கட்டவிழ்த்து விடப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக வன்முறையை கட்டவிழ்த்து விட்டபடி நடைபெற்ற ஐந்தாண்டு கிளர்ச்சிக்குப் பிறகு, நாடாளுமன்ற மக்களவையில் இரண்டே இடங்களை மட்டுமே வைத்திருந்த பாஜகவினால் 85 இடங்களை கைப்பற்ற முடிந்தது. மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ரதயாத்திரைகளையும், ரத்த ஆறுகளையும் ஓடவிட்ட பிறகு அதனிடம் 120 இடங்கள் வசமாயின. பாப்ரி மசூதி தரைமட்டமாக்கப்பட்ட பிறகு நடந்த முதல் தேர்தலில் 161 இடங்களை வென்று நாடாளுமன்றத்தில் இரண்டாவது இடத்தை கைப்பற்றியது மட்டுமின்றி, மிகக் குறுகிய மட்டுமேயானாலும் மத்தியில் அதனால் ஆட்சியையும் அமைக்க முடிந்தது.

இத்தகையதொரு சாதனையைப் படைத்துள்ள நிலையில் அதற்கு மிகவும் இயற்கையாகவே கைவரப்பெற்ற வகுப்புவாத வன்முறையை சங் பரிவாரம் கைவிடுவதென்பது அரசியல் ரீதியாக முட்டாள்தனமான ஒரு நடவடிக்கையாகவே இருக்கும். இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். 2002-ம் ஆண்டில் நடைபெற்ற குஜராத் படுகொலைகளுக்கு முன்னால் பாஜகவின் அரசியல் வானில் மோடி மிகச் சாதாரணமான ஒரு நபராகத்தான் இருந்தார். இந்தப் படுகொலைகளுக்குப் பிறகோ, முதலில் குஜராத் மாநிலத்திலும் பின்னர் அகில இந்திய அளவிலும் அவரையும் அமித் ஷாவையும் யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. தேர்தல் ரீதியான கணக்குகளால் ஒரு சில நேரங்களில் தற்காலிகமான பின்னடைவுகளை அது சந்தித்திருந்த போதிலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது 1980களின் நடுப்பகுதியில் இருந்தே சங் பரிவாரம் ஆட்சி அதிகாரத்தை மட்டுமின்றி தனது பெருமையையும் அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது.

மத்திய மாநில அரசுகளுக்கான தேர்தல்களில் ஆர் எஸ் எஸ், பாஜக தொடர்ந்து வலுப்பெற்றுக் கொண்டே வந்துள்ளன என்பது மட்டுமின்றி சமூக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் நாட்டின் உறுதித் தன்மையையே மாற்றுவதிலும் கூட அவை வெற்றி பெற்றுள்ளன. 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இன்றைய இந்தியா அதிகமான அளவிற்கு இந்துமயமாகி உள்ளது. இன்றைய நாகரீகமாக காவியை ஏற்றுக் கொண்டிருக்கும் இளைஞர்கள் மட்டுமின்றி, பணக்கார விவசாயிகள், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள அடித்தட்டு சாதிகளை சேர்ந்தவர்களுக்கும் இது பொருந்தும்.

உதாரணமாக, வாஜ்பேயி அரசு அதன் தொடக்க நாட்களில் மாட்டுக் கறிக்கு தடைவிதிக்கும் சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த முயற்சித்தது. எனினும் நாடாளுமன்றத்தில் எழுந்த பெருங்கூச்சலைத் தொடர்ந்து அது பின்வாங்கியது. ஆனால் எந்தவிதமான எதிர்ப்பும் இன்றி மாட்டுக் கறி விற்பனையை தடை செய்யும் சட்டத்தை மோடி-ஷா இரட்டையரின் அரசினால் அமலாக்க முடிந்துள்ளது. ஆர் எஸ் எஸ் அமைப்பின் நிகழ்ச்சி நிரலில் உள்ள பல விஷயங்களை அமலாக்க முடிந்துள்ளது. அவர்கள் வளர்ச்சி பெறுவதற்கு முன்னால் ஒரு சிறு கட்சியின் தலைவர்களாக நாடாளுமன்றத்தில் மிக நீண்ட காலத்திற்கு தங்கள் வாழ்க்கையைக் கழித்த வாஜ்பேயி, எல். கே. அத்வானி ஆகியோரை விட கொடூரமானவர்களாக, ரத்தவெறி பிடித்தவர்களாக மோடியில் இருந்து தொடங்கி (யோகி) ஆதித்யநாத் வரையிலான புதிய தலைமுறை தலைவர்கள் இருக்கின்றனர். சின்னாபின்னமாக சிதறிக் கிடக்கும் எதிர்க்கட்சிகளைப் பற்றி நான் எதுவும் சொல்ல வேண்டியதே இல்லை. சுருக்கமாகச் சொல்வதெனில், அதன் வாக்குவலிமையில் உச்சகட்டத்தை பாஜக எட்டிப் பிடித்திருக்கும் சரியானதொரு தருணத்தில்தான் ஆர் எஸ் எஸ் அமைப்பின் மிக மோசமான நபர்கள் அதிகாரத்தில் வந்து அமர்ந்திருக்கின்றனர். அப்படியிருக்கும்போது இத்தகைய அதிகாரத்தை அவர்களுக்குப் பெற்றுத் தந்த நடைமுறை உத்தியை அவர்கள் ஏன் கைவிட வேண்டும்?

பாப்ரி மசூதி தரை மட்டமாக்கப்பட்ட பின்னணியில் நாட்டில் பாசிசம் வலுப்பெற்றுவருகிறது என்று எச்சரித்த அறிவாளர்களில் நீங்கள்தான் முதலாமவர். இதுகுறித்த உங்களது உரை பின்னர் “பாசிசமும் தேசிய கலாச்சாரமும்: இந்துத்துவ நாட்களில் க்ராம்சியை பயில்வது” என்ற தலைப்பில் கட்டுரையாகவும் வெளியானது. இந்தியாவில்இந்துத்துவ பாசிசம் எழுச்சிபெற்றுவருவது குறித்த மிகச்சிறந்த கட்டுரை அது. அந்தக் கட்டுரையில் “ ஒவ்வொரு நாடும் அதற்குத் தகுதியான பாசிசத்தை பெறுகிறது” என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அவ்வாறெனில், இப்போது இந்தியா அதற்கேயுரிய பாசிசத்தை பெற்றிருக்கிறதா?

ஆம். இந்த சம்பவம் நடந்து முடிந்த நாட்களில் முதலில் அதுதான் எனது பிரதிபலிப்பாக இருந்தது. அந்த நேரத்தில் பாசிசம் என்ற வார்த்தையை நான் கொஞ்சம் தேவைக்கு அதிகமாகவே பயன்படுத்தி இருந்தேன். எனினும் அந்த தொடக்க நாட்களுக்குப் பிறகு மிக விரைவிலேயே இந்த வார்த்தையைப் பயன்படுத்துவது குறித்து பல முன் எச்சரிக்கைகளையும் அறிமுகம் செய்யத்  தொடங்கினேன். பாப்ரி மசூதியை இடித்துத் தரைமட்டம் ஆக்கியது ஒரு பாசிச வெளிப்பாடு என்றும், ஆர் எஸ் எஸ் தனித்துவமான பல பாசிச தன்மைகளைக் கொண்டதாக இருக்கிறது என்றும் நான் இப்போதும் நம்புகிறேன். இருந்தபோதிலும் ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கும் வரலாற்று ரீதியாகவே மிகவும் தனித்துவமான அரசியல் கட்சியாக இருக்கும் அதன் வெகுஜன அரசியல் முன்னணிப் படைக்கும் இடையே ஒரு வேறுபாட்டையும் நான் காண்கிறேன்.

மிக எளிதாக இந்தக் கட்சியின் மீது ஒரு முத்திரையை குத்துவதற்கு முன்பாக அதன் புதுமையான கட்டமைப்பைப் புரிந்து கொள்வதற்கு நமக்கு மிகத் துல்லியமான இயங்கியல் செயல்முறைகள் தேவைப்படுகின்றன. நீங்கள் சுட்டிக்காட்டிய எனது உரை/கட்டுரையும் கூட அயோத்தியா இடிப்பு சம்பவம் நடைபெற்ற உடனேயே எழுதப்பட்டதுதான். ஆனால் அந்தக் கட்டுரை நீங்கள் குறிப்பிட்டதுபோல “இந்துத்துவ பாசிசத்தின் எழுச்சி” குறித்ததல்ல. மாறாக, க்ராம்சி தனக்குள்ளேயே எழுப்பிக் கொண்ட கேள்வியைப் போலவே இந்தியாவிற்கு உள்ளிருந்தபடி, நெருக்கடியின் குறிப்பிட்டதொரு கட்டத்தில், குறிப்பிட்டதொரு பிரச்சனையை பற்றி சிந்தித்ததே ஆகும்.

1920-ம் ஆண்டில் மிகச் சிறிய, ஒழுங்கமைப்பில்லாத பாசிச அணியை விட இத்தாலிய இடதுசாரிகள் ஒப்பில்லாத வகையில் வலுவானவர்களாகத் திகழ்ந்தனர். ஆனால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு (பெனிட்டோ) முசோலினி ஆட்சியில் இருந்தார். 1926-ம் ஆண்டிலோ அவரது அதிகாரம் முழுமையானதாக இருந்தது; அதே நேரத்தில் ஓர் அரசியல் சக்தியாக இடதுசாரிகள் முழுமையாகத் துடைத்தெறியப்பட்டிருந்தனர். இவை அனைத்துமே ஜெர்மனியில் நாஜிகள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே நடந்துவிட்டிருந்தன.

இந்தப் பின்னணியில்தான் க்ராம்சி தனக்குள் கேட்டுக் கொண்டார்: பாசிசம் மிக எளிதாக வெற்றி அடைய, இடதுசாரிகள் மிக எளிதாகத் தோல்வி அடைய நமது நாட்டு வரலாற்றிலும், சமூகத்திலும், நமது நாட்டு முதலாளித்துவ தேசிய வாதத்திலும் என்ன இருந்தது? என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது. அவரது சிறைக் குறிப்புகள் நூலின் பெரும்பகுதி இத்தாலிய வரலாறு குறித்த, அந்த வரலாற்றில் வாடிகனுக்கு இருந்த சிறப்பான இடம் குறித்த, ரிசோர்ஜிமெண்டோவின் தனித்துவமான தன்மைகள் மற்றும் இத்தாலியை ஒன்றுபடுத்தும் முயற்சி, இத்தாலிய முதலாளித்துவ வர்க்கத்தின், அதன் தொழில்நகரங்களின் சிதைந்த தன்மை, வெகுஜன ஆதரவைப் பெற்ற புதினங்கள், என்பது போன்ற வெகுஜன உணர்வின் வடிவங்களைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும் ஒரு சிந்தனை ஓட்டமாகவே அந்தக் குறிப்புகள் இருந்தன.

இதேபோன்று இந்தியாவைப் பற்றிய கேள்விகளை எழுப்பவே நான் முயன்றேன். அந்தக் கட்டுரையைப் பொறுத்தவரையில் இருந்த பிரச்சனை என்னவெனில் அதில் பெரும்பகுதி ஒப்பீட்டு முறையிலான சிந்தனையை அடிப்படையாகக் கொண்டதாகும். இத்தகைய சிந்தனை மிகவும் தரம் தாழ்ந்ததாகும். அதன் பிறகு மிக விரைவிலேயே இத்தாலிய பாசிசம் குறித்து மிக நீண்ட கட்டுரை ஒன்றை நான் எழுதினேன். அந்தக் கட்டுரை எனக்கு மிகுந்த விருப்பமுள்ளதாகவும் இருந்தது.

ஒவ்வொரு நாடுமே அது பெறுவதற்குத் தகுதியுள்ள பாசிசத்தையே பெறுகிறது என்று நான் குறிப்பிட்டிருந்தேன். ஜெர்மனிக்கும் இத்தாலிக்கும் இடையே, இத்தாலிக்கும் ஜெர்மனிக்கும் அல்லது ஸ்பெயினுக்கும் இடையே என்பது போல் இருந்த பெரும் வேறுபாடுகளைத்தான் நான் அப்போது மனதில் கொண்டிருந்தேன். இந்தியாவிற்குப் பாசிசம் வருவதாக இருந்தால் அது நமது சொந்த வரலாறு, சமூகம் ஆகியவற்றிலிருந்து உருவானதாக மற்றவற்றிலிருந்து வேறுபட்டதாக இருக்கும் என்பதையே குறிக்கிறது. இப்போது பாசிசம் இந்தியாவிற்கு வருகிறதா என்று நீங்கள் என்னைக் கேட்டீர்கள். இதற்கான பதில் இல்லை என்பதுதான். இந்திய முதலாளி வர்க்கத்திற்கோ அல்லது ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கோ இப்போது பாசிசம் தேவைப்படவில்லை.

இரண்டு உலகப் போர்களுக்கு இடையேயான ஐரோப்பாவில் தொழிலாளி வர்க்க இயக்கம் மிக வலுவாக இருந்த, ஒரு கம்யூனிஸ்ட் புரட்சி நடைபெறுவதற்கான வாய்ப்பு இருந்த நாடுகளில் பாசிசத்தின் பல்வேறு வகைகள் வெளிவந்தன. இத்தகையதொரு நிலைமை இப்போது இந்தியாவில் இல்லை. அது எவ்வளவு கோரமானதாக இருந்தாலும், அல்லது சரியாக குறிப்பிட்ட நேரத்தில் தலைதூக்கினாலும் சரி, வகுப்புவாத வன்முறை என்பது பாசிசம் அல்ல. அப்படியானால் ஆர் எஸ் எஸ் அமைப்பு மற்றும் நாடாளுமன்ற வகைப்பட்டதாக இல்லாத அதன் பல்வேறு அணிகளில் பாசிச குணாம்சங்கள் இருக்கிறதா? ஆம். அவற்றுள் பாசிச குணாம்சங்கள் இருக்கின்றன. என்றாலும் உலகம் முழுவதிலும் அதிதீவிர வலதுசாரித்தன்மை கொண்ட பல இயக்கங்கள்,கட்சிகளிலும் கூட இத்தகைய குணாம்சங்கள் இருக்கத்தான் செய்கின்றன. 1880களில் இருந்தே பாசிச போக்கு என்பது முதலாளித்துவ அரசியலில் தொடர்ந்து நீடித்தே வருகிறது. என்றாலும் ஒரு சில நாடுகள் அல்லது அரசியல் கட்சிகளைத்தான், அதன் உண்மையான பொருளில்,  பாசிசத் தன்மை கொண்டவை என்று குறிப்பிட முடியும்.

குறைந்த அழுத்தம் கொண்ட ஜனநாயகம்

இந்தியாவில் உள்ள தாராளவாத அரசியல் கட்டமைப்பினை முழுமையாக உடைத்து நொறுக்கி, அதை அகற்றவேண்டிய அவசியம் சங்பரிவாரத்தைப்போன்ற வலதுசாரிசக்திகளுக்கு இல்லை என்று நீங்கள் கூறினீர்கள்.  அதற்குப்பதிலாக,  அதற்குள்ளேயே இருந்து செயல்பட்டு,  அதைப் பயன்படுத்திக்கொள்ள அவற்றால்முடியும் என்றும் குறிப்பிட்டீர்கள்.  வலதுசாரி எதேச்சாதிகார போக்கின் கீழ் நொறுங்கிப் போய்விடாமல் ஒரு தாராளவாத ஜனநாயக பாராளுமன்ற அமைப்பாக நீடிக்கவைக்கும் அளவிற்கு நமது ஜனநாயகப்பாரம்பரியமும் தாராளவாத அரசியல் அமைப்பும் வலுவாக உள்ளனவா?

அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஒரு சில அம்சங்களை மாற்றுவதும் தாராளவாத அமைப்பை உடைத்து நொறுக்குவதும் ஒரே விஷயமல்ல. அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்திலும் கூட பல திருத்தங்கள் அடங்கியிருக்கின்றன. ஓர் அரசியல் அமைப்புச் சட்டத்தில்  புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துவதற்கான நாடாளுமன்ற நெறிமுறைகள் இருக்கின்றன. இந்த மாற்றங்களை நீங்களோ அல்லது நானோ விரும்பாமல் கூட இருக்கலாம். இருந்தாலும் எவ்வளவு தூரம் இந்த நாடாளுமன்ற நெறிமுறைகளை பின்பற்றுகிறோமோ அந்த அளவிற்கு தாராளவாத அமைப்பு தொடர்ந்து நிலைத்து நிற்கும். ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஜனநாயகத்தை நான் பெரிதும் ஆதரிப்பவன் தான். எனினும் தாராளவாதத்தை நான் வெறுக்கிறேன். உண்மையில் ஜனநாயகத்தை தாராளமயமாக்குவதை கண்டித்து நான் ஒரு கட்டுரையையும் கூடப் பதிப்பித்திருக்கிறேன். கடந்த ஐந்தாண்டு காலத்தில் மிகவும் அச்சமூட்டக் கூடியதாக இருந்த வளர்ச்சிப் போக்கு என்பது நீதித்துறை, தேர்தல் ஆணையம், இன்னும் சொல்லப்போனால் பெருமளவிலான மின்னணு ஊடகம், மேலாதிக்கம் வகிக்கும் தொலைக்காட்சி நிலையங்கள் போன்ற தாராளவாத அமைப்பின் மிக முக்கிய பிரிவுகளிடமிருந்து தனது விருப்பத்திற்கு ஏற்ற நடத்தையை பாஜகவினால் பெற முடிந்துள்ளது ஆகும். எப்போதுமே நமது ஜனநாயகம் மிகவும் குறைந்த அழுத்தமுடைய ஒன்றாகும். ஆனால் இப்போது அதற்கு இதுவரை இருந்து வந்த அழுத்தமும் கூட அரிக்கப்பட்டுவிட்டது. இன்னும் ஒரு விஷயம்.  “எதேச்சாதிகாரம்” என்ற வார்த்தையை நான் அறவே வெறுக்கிறேன். கம்யூனிஸ்ட் நாடுகளை அவமதிப்பதற்காகவே இந்த வார்த்தை கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு கம்யூனிசம் பாசிசம் ஆகிய இரண்டுமே சம அளவில் எதேச்சாதிகார தன்மை கொண்டவை என்பதை நிறுவவும் முயற்சிக்கப்பட்டது.

21-ம்நூற்றாண்டின்காலனியப்பின்னணியில்ஆர்எஸ்எஸ்இந்துத்துவஅரசியல்தோன்றியதைநீங்கள்எப்படிப்பார்க்கிறீர்கள்இரண்டுஉலகப்போர்களுக்குஇடையேயானஇதேபோன்றஎதிர்ப்புரட்சிசக்திகள்உதாரணமாகமுஸ்லீம்சகோதரத்துவஅமைப்புபோன்றவைஉலகின்பல்வேறுபகுதிகளிலும்தோன்றினஎன்றுமுன்புநீங்கள்எழுதியிருந்தீர்கள்இத்தகையஅமைப்புகள்தோன்றுவதற்குஎதுகாரணமாகஇருந்ததுகுணத்தில்அவைஎவ்வாறுஒரேபோன்றவையாகஇருக்கின்றன?

இந்தக் கேள்விக்கு திருப்திகரமான பதிலளிப்பதற்கு மிக நீண்ட நேரமும் இடமும் தேவைப்படும். என்றாலும் மூன்று விஷயங்களைக் கொண்டு அதற்கு சுருக்கமாக பதிலளிக்கலாம். புரட்சிக்கும் எதிர்ப்புரட்சிக்கும், பகுத்தறிவிற்கும் பகுத்தறிவற்ற நிலைக்கும், தேசியவாதம் குறித்த மதசார்பற்ற விளக்கங்களுக்கும் தேசியவாதம் குறித்த இன ரீதியான அல்லது மதரீதியான விளக்கங்களுக்கும், பல்வேறு வகைப்பட்ட தாராளவாத நிறுவனங்களுக்கும் பல்வேறு வகையான எதேச்சாதிகார நிறுவனங்களுக்கும் என்பது போன்று இருவேறு வகையான கருத்தோட்டங்களுக்கு இடையேயான போராட்டங்களின் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டதாகவே ஐரோப்பா கண்டம் அமைந்திருக்கிறது. காலனியாதிக்கமானது இந்த நோய்கள் அனைத்தையும் தனது ஆளுகைக்குக் கீழுள்ள காலனி நாடுகளுக்கும் கொண்டு சென்றது. இதன் வழியாக இத்தகைய போட்டிகள் நமது சமூகத்திலும் மிகவும் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டிருந்தன. எனவே இந்து தேசியவாதம், முஸ்லீம் தேசியவாதம் ஆகியவற்றில்  குறிப்பாக இந்தியத் தன்மை என்ற எதுவும் இல்லை. இன்னும் சொல்வதானால் அவை அரசாட்சியையும் கத்தோலிக்க தேவாலயங்களின் தனியுரிமைகளையும் இல்லாமல் ஆக்கிய ப்ரெஞ்சு புரட்சியை பெரிதும் வெறுத்தொதுக்கிய அதே ப்ரெஞ்சு நாட்டின் எதிர்ப்புரட்சியின் பாரம்பரியத்தின் வேறு வகையான கண்ணோட்டம் காலனி நாடுகளில் வந்து சேர்ந்தவையே ஆகும். மதரீதியான சிறுபான்மை மக்களுக்கு எதிரான வகுப்புவாத வன்முறை என்பதும் கூட ஐரோப்பிய நாடுகளில் யூதர்களுக்கு எதிராக நிலவி வந்த கசப்புணர்வின் பிரதியைத் தவிர வேறல்ல.

இரண்டாவதாக, இந்து மகாசபா, முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பு போன்ற நநன்கு அறிந்தே இருந்தன என்பதோடு, ஓரளவிற்கு அவற்றிடமிருந்து கற்றுக் கொள்ளவும் செய்தன. உதாரணமாக, ஜெர்மனியின் யூதப் பிரச்சனைக்கு நாஜிகள் தீர்வு கண்டதைப் போலவே, அதாவது இன அழிப்பின் மூலம், இந்துக்களும் முஸ்லீம்கள் குறித்த தங்களது பிரச்சனையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று வி.டி. சவார்க்கர் கூறினார்.

மூன்றாவதாக, இதுபோன்ற இயக்கங்கள் ஒரு நாட்டிலோ அல்லது வேறொரு நாட்டிலோ, ஒரு குறிப்பிட்ட காலத்திலோ அல்லது வேறொரு காலத்திலோ, தோன்றுவதற்கும், அவை வெற்றியோ அல்லது தோல்வியோ அடைவதற்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் உரிய தனித்தன்மையான அம்சங்களே காரணமாக அமைகின்றன. இதுபோன்ற விஷயங்களில் பொதுவான போக்கில் அணுகுவது என்பது நம்மை தவறான வழிக்கு திசைதிருப்பி விடும்.

மதச்சார்பின்மை என்ற கருத்தோட்டம் எந்த அளவிற்கு முக்கியமானதாக இருக்கிறது?

எல்லா நேரங்களிலுமே மதச்சார்பின்மை என்பது நல்லதொரு கருத்தோட்டமே ஆகும். எவரொருவரும் அதை இறுகப் பற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. எனினும் பெரும்பான்மை இந்துத்துவ கருத்தோட்டத்தை எதிர்த்த போராட்டத்திற்கு அனைத்துவகைப்பட்ட, வேறு விதமான கருத்தோட்டங்களும் தேவைப்படுகிறது. மிகக் கொடூரமான வடிவங்களிலான ஒடுக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றின் அடிப்படையிலான ஓர் அமைப்பிற்குள் காங்கிரஸ் வகைப்பட்ட மதச் சார்பின்மையும், பாஜக வகைப்பட்ட பெரும்பான்மைவாதமும் ஒன்றுக்கொன்று போட்டியிடும் தத்துவங்களே ஆகும். இந்தியாவின் தேர்தல் அடிப்படையிலான அரசியல் பெருமளவிற்கு சாதி, மதம், பல்வேறு வகைப்பட்ட சொத்துரிமை ஆகியவற்றைச் சுற்றியே கட்டமைக்கப்பட்டுள்ளது. மதச்சார்பின்மை என்ற கருத்தோட்டமானது “சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம்” என்ற விழிப்புணர்வுக் கோட்பாட்டிலிருந்தே  உருவெடுத்தது. “சகோதரத்துவம்” என்ற விரிவான வகைப்படுத்தலுக்குள்தான் மதச்சார்பின்மை அடங்குகிறது. சாதியை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகம் “சகோதரத்துவம்” நிரம்பியதாக இருக்க முடியுமா? அப்படியில்லையென்றால், அதன் முழுமையான அர்த்தத்தில் மதச்சார்பற்றதாக அது இருக்க முடியுமா? சமத்துவம் இல்லாமல் சகோதரத்துவம் என்பது இருக்க முடியுமா? அல்லது வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சோஷலிசம் என்பது இல்லாமல் ஜனநாயகம் இருக்க முடியுமா? போல்ஷ்விக் புரட்சி கூட அல்ல; ப்ரெஞ்சுப் புரட்சி நடைபெறுவதற்கு முன்பாகவே ரூசோ இதற்கு பதிலளித்திருந்தார்: ”உலகத்தில் உள்ள பொருட்களை அணுகுவதில் சம உரிமை இல்லாதவர்கள் எந்த காலத்திலும் சட்டத்தின் முன்பாக  சமமானவர்களாக இருக்க முடியாது!” நாம் அறிந்துள்ள கம்யூனிசம் என்பது ப்ரெஞ்சுப் புரட்சியின் போதுதான் முதன்முதலாகத் தென்பட்டது. அதே ப்ரெஞ்சுப் புரட்சிதான் மதத்தின் அதிகாரத்திற்கு எதிரான ஒரு கருத்தாக்கம் என்ற வகையில் மதச்சார்பின்மையை, ஃப்ராங்காய் நோயெல் பாவூஃப்-இன்  “சமமானவர்களின் சதித்திட்டம்” என்பதை – இதைக் கிட்டத்தட்ட ஒரு கம்யூனிச அமைப்பு என்றே சொல்லலாம் – நமக்குத் தந்தது. அந்தக் கம்யூனிச போக்கு தோற்கடிக்கப்பட்டது. நமக்கு மிச்சமிருந்ததெல்லாம் மதச்சார்பின்மையும், தாராளவாதமும்தான். எனவே கடந்த 200 வருடங்களுக்கு மேலாகவே ஒரு கேள்வி தொடர்ந்து நீடித்து வருகிறது: “தாராளவாதத்தால் மட்டுமே மதச்சார்பின்மையை பாதுகாத்துவிட முடியுமா? சோஷலிசம் என்பதில்லாமல் மதச்சார்பின்மை என்பது சாத்தியமா?” 

இல்லை என்பதே இதற்கு எனது பதில். தாராளவாத ப்ரான்ஸ், ஐரோப்பா முழுவதிலும் உள்ள மற்ற தாராளவாத நாடுகள் ஆகியவற்றின் யூதர்களுக்கு எதிரான, இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வின் வரலாற்றையே பாருங்கள். எனவே உங்கள் கேள்வியைப் பொறுத்தவரையில், ஆம். மதச்சார்பின்மை என்ற கருத்தோட்டம் மிக முக்கியமானது. எனினும் நடைமுறையில் இந்த கருத்தோட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்னதாக, உங்களிடம் உண்மையானதொரு சோஷலிச சமூகம் இருக்க வேண்டும். இன்றைய இந்தியாவில், இந்தக் கருத்தோட்டத்தையை உண்மையாக நடைமுறைப்படுத்துவதென்பது இயலாத ஒன்றே ஆகும். பெரும்பான்மைவாதம் எவ்வளவு விஷமத்தனமானது என்பது நமக்குத் தெரியும். என்றாலும் தாராளவாதம் எப்போதுமே மதச்சார்பின்மைக்கு துரோகம் செய்துதான் வந்துள்ளது; எதிர்காலத்திலும் எப்போதும் அது அப்படித்தான் நடந்து கொள்ளும் என்ற உண்மையை நாம் பெரும்பாலும் மறந்து விடுகிறோம்.

நன்றி: ஃப்ரண்ட்லைன் ஆங்கில இதழ்

அதிகாரக் குவிப்பும் அத்துமீறல்களும்

உ. வாசுகி

அரசு என்பது ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறை கருவி என்றார் மார்க்ஸ். ஒரு நாட்டில் உள்ள அரசின் வர்க்கத் தன்மையைப் பொறுத்து, ஆளும் வர்க்கத்தின் நலனுக்கு ஏற்பவே அரசின் அங்கங்களும், அதிகார கட்டமைப்பும் அமையும். இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவின் அரசியல் சாசனம், சுதந்திரத்துக்குப் பின் நவீன இந்தியா எத்தகையதாக கட்டமைக்கப்பட வேண்டும் என்ற பல நீரோட்டங்களின் கருத்து மோதல்களில் உருவானது. இந்திய முதலாளி வர்க்கத்தின் தலைமையிலான தேசிய நீரோட்டம், இடதுசாரி கருத்தோட்டம், ஆர்.எஸ்.எஸ். முன்வைத்த இந்து இந்தியா போன்ற பிரதான கருத்தியல்களில் ஆர்.எஸ்.எஸ்.சின் கண்ணோட்டம் நிராகரிக்கப்பட்டு, ஜனநாயக சோஷலிச குடியரசு என்ற அடிப்படையில் அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டது. பின்னர் மதச்சார்பின்மையும் இணைக்கப்பட்டது. டாக்டர் அம்பேத்கர் போன்ற தலைவர்களின் பங்களிப்பு இதில் முக்கியமானது.

கூட்டாட்சிக் கோட்பாடு இதில் இடம் பெற்றதற்கு முக்கிய காரணம் தேச விடுதலை போராட்டங்களில் மக்கள் பங்கேற்பும் , மொழி வழி மாநிலங்களுக்காகவும், மொழி கலாச்சாரம் பாதுகாக்கப்படுவதற்காகவும் பல்வேறு தேசிய இனங்கள் நடத்திய வெகுமக்கள் போராட்டங்களும்தாம். இவற்றில் இடதுசாரிகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. பல்வகை தேசிய இனங்கள், மொழிகள் உள்ளடங்கிய மாநிலங்கள் இணைந்த ஒன்றியம்தான் இந்தியா என்ற சாராம்சம் அரசியல் சாசனத்தில் இடம் பெற்றது. இந்தியாவில் பெரு முதலாளிகள் பெரிதும் வளர்ச்சியடையாத காலமாகவும் அது இருந்தது.

அரசியல் சாசனம் “வடிவத்தில் கூட்டாட்சி தன்மை (federal) கொண்டதாக இருந்தாலும், குணாம்சத்தில் மத்திய அரசிடம் அதிகார குவிப்புக்கு (unitary) வழி வகுப்பதாக உள்ளது” என்பது அன்றைக்கே கம்யூனிஸ்டுகளின் விமர்சனமாக அமைந்தது. பிரதான அதிகாரங்கள், வருவாய் மற்றும் வளங்களின் மீது கட்டுப்பாடு போன்றவை மத்திய அரசின் பொறுப்பில் இருந்தன. மாநில அரசுகளைக் கலைக்கும் உரிமை மத்திய அரசிடம் இருந்தது. நிதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் மத்திய அரசை சார்ந்து இருக்க வேண்டிய நிலைமையில்தான் மாநிலங்கள் வைக்கப்பட்டன. ஆளுநர்கள் மத்திய அரசின் முகவர்களாக செயல்பட்டனர். பொதுப்பட்டியலில் உள்ள அம்சங்கள் மீது முடிவெடுக்கும்போது கூட மாநிலங்களுடன் கலந்து பேசுவதற்கான ஏற்பாடு இல்லை. காலப்போக்கில் இந்த முரண்பாடு அதிகரித்தது. மத்திய மாநில உறவுகளை மறு வரையறை செய்யக்கோரி, 1977-ல் மேற்கு வங்க இடது முன்னணி அரசு 15 அம்ச கோரிக்கை சாசனத்தை உருவாக்கியது. வேறு பல கட்சிகளும் இந்நிலைபாட்டை எடுத்தன. 1983-ல் ஸ்ரீநகரில் நடந்த மாநாடு இத்தகைய கட்சிகளை ஒருங்கிணைத்தது. அதிகார பரவல் என்பது மைய அரசை பலவீனப்படுத்தாது; மாறாக அடித்தளத்தை வலுப்படுத்தும் என்று தோழர் ஜோதிபாசு அம்மாநாட்டில் முன்வைத்தார். அதே வருடம் மத்திய மாநில உறவுகளை மறு சீரமைப்பு செய்ய சர்க்காரியா கமிஷனை மத்திய அரசு அமைத்தது. இதன் அறிக்கை பல அடிப்படை முரண்பாடுகளைத் தீர்க்க உதவவில்லை. 1990-ல் தேசிய முன்னணி அரசு, மாநிலங்களுக்கிடையேயான கவுன்சிலை (Inter-State council) உருவாக்கியது. இது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், இதுவும் அடிப்படை பிரச்னைகளுக்கு வழிகாட்டவில்லை. மேலும் பல புதிய சிக்கல்கள் முளைத்தன. 2007-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி, மீண்டும் ஒரு கமிட்டியை, மத்திய மாநில உறவுகள் சம்பந்தமாக அமைத்தது. அதன் வரம்பும் கூட மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமல் நிர்ணயிக்கப்பட்டது.

பொதுவாக, அரசியல் சாசனத்தில் இருந்த கூட்டாட்சி அம்சங்களை வலுப்படுத்தும் விதமாக, மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் முறையிலேயே கம்யூனிஸ்ட் கட்சியின் தலையீடுகள், நிலைபாடுகள் அமைந்தன. மத்திய முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ அரசின் அதிகார குவிப்பை நிலைநிறுத்துவதாகவே காங்கிரசின் செயல்பாடுகள் இருந்தன. அரசின் வழிகாட்டுதல் மற்றும் உதவியோடு இந்தியாவில் முதலாளித்துவ வளர்ச்சி பாதை போடப்பட்டது. இந்தத் தேவைக்கு ஏற்றாற் போல் மாநில உரிமை வரம்பை மீறும் மத்திய அரசின் நடவடிக்கைகள் தொடர்ந்தன. மாநில முதலாளித்துவ கட்சிகளைப் பொறுத்தவரை, அவற்றின் தோற்றம் மாநில உரிமைகள், மொழி, கலாச்சாரம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டாலும், மாநில உரிமைகளுக்கான அவர்களின் வலுவான குரல், நவீன தாராளமய காலகட்டம் மாநில முதலாளிகளின் வளர்ச்சிக்குக் கதவைத் திறந்து விட்ட பின்னணியில், தளர்ந்து போனது.

இந்திய முதலாளித்துவத்தின் தடையற்ற வளர்ச்சிக்கு அரசின் கட்டுப்பாடுகள் ஒரு கட்டத்தில் தடையாக மாறின. 1990களில் நவீன தாராளமய கொள்கைகள் சுவீகரிக்கப்பட்ட பின்னணியில், சர்வதேச நிதி மூலதனம் விருப்பம் போல் லாபத்தைத் தேடி உலகம் சுற்றுவதற்கு ஏதுவாக அரசின் பங்கு பாத்திரம் மாறியது. ஒருங்கிணைந்த சந்தை உருவாவது முதலாளித்துவ வளர்ச்சிக்குப் பலனளிக்கும் என்ற நிலையில், மத்திய அரசின் கையில் மேலும் அதிகாரங்கள் மாறவும், மாநில உரிமைகள் நீர்த்துப் போகவுமான நடவடிக்கைகள் பின்தொடர்ந்தன. பெரு முதலாளிகளின் வர்க்க பிரதிநிதியான காங்கிரஸ் இந்தப் பாதையில்தான் செயல்பட்டது. பின்னர் வந்த பாஜக அதிகார குவிப்பை அடுத்த கட்டத்துக்கே கொண்டு போனது. நிதி மற்றும் வருவாய் பகிர்வு குறித்த அதிகார குவிப்பு பிறிதொரு கட்டுரையில் இடம் பெறும். அரசியல் பாதிப்புகளை இங்கு பரிசீலிக்கலாம்.

பாஜக ஆட்சியில் அதிகார குவிப்பு:

பாஜக ஆட்சியில் பெருமளவு அதிகாரங்களை மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும் தம் வசம் குவித்துக் கொள்வதை வெறும் எதேச்சாதிகார நடவடிக்கையாக, மீறலாக மட்டும் பார்க்க இயலாது. பாஜக அரசு இப்படித்தான் இயங்கும். அதன் சித்தாந்தம் அப்படி. வேறு வகையிலான அறிவிப்புகள், வாய் ஜாலங்கள் அனைத்தும் புலியின் மீது போர்த்தப்பட்ட பசு தோல்தான்.

ஆர்.எஸ்.எஸ்.சின் வழிகாட்டுதலில் இயங்கும் பாஜக அரசு, கார்ப்பரேட்டுகளின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெற்றிருக்கிறது. தீவிரமான கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை நடைமுறைப்படுத்தவும், ஏற்க மறுக்கிற மாநிலங்களின் எதிர்ப்பை நசுக்கவும் அதிகாரங்கள் மத்திய அரசிடம் குவிக்கப்பட வேண்டியிருக்கிறது. சர்வதேச நிதி மூலதனம் நாடு நாடாக போவதற்கும், வெளியேறுவதற்கும் ஒரு தேசமே கட்டுப்பாடுகளை அகற்ற வேண்டும் என்னும்போது, மாநிலங்களும் அப்பாதையில் செல்ல நிர்ப்பந்தப்படுத்தப்படுகின்றன. ஒரு பரந்து விரிந்த ஒருங்கிணைக்கப்பட்ட சந்தை நவீன தாராளமய காலத்தின் கட்டாயம்.

மறுபுறம், இந்துத்வ சித்தாந்தத்துக்கு ஏதுவாக ஒரே தேசம் – ஒரே கலாச்சாரம் – ஒரே மொழி என்ற ஒற்றை வடிவத்தைத் திணிக்கவும் அதிகார குவிப்பு மேலும் மேலும் தேவைப்படுகிறது. பாஜகவின் கலாச்சார தேசியம் என்ற சொல்லாடலும் சரி, அதன் கருத்தியலும் சரி, இந்தியாவின் பன்மைத் தன்மையை நிராகரிப்பதாகவே இருக்கிறது. தேசிய இனங்களின் பன்மைத் தன்மையை அங்கீகரிப்பதோடு தொடர்புடையதுதான் மாநில உரிமைகளுக்கான அங்கீகாரம். அது இல்லை என்றால் இது இருக்காது. இந்தப் பின்னணியிலேயே பாஜக அரசின் நடவடிக்கைகளைப் பொருத்திப் பார்க்க வேண்டும்.

உதாரணமாக, மானிய வெட்டு என்பது இவர்கள் பின்பற்றும் பொருளாதார கொள்கையின் ஒரு முக்கிய அம்சம். கொள்கை அடிப்படையில் இடதுசாரிகளும், மக்கள் போராட்டங்களின் வெப்பத்தில் இதர மாநில அரசுகளும், பொது விநியோக முறையை பலப்படுத்த வேண்டும் என்று கோருகின்றன. மானியத்தைக் குறைக்கும் நோக்குடன் வறுமை கோட்டைத் தீர்மானித்து, அதற்கேற்றாற் போல் அரிசி, கோதுமையை குறைப்பது, மண்ணெண்ணெயை நிறுத்துவது போன்ற நடவடிக்கைகள் காங்கிரஸ் ஆட்சியில் துவங்கின. தற்போது பாஜக ஆட்சி அதனைத் தீவிரமாக அமல்படுத்துகிறது. இது கேரளா, தமிழகம் போன்ற பொதுவிநியோக முறை ஓரளவு பலமாக இருக்கும் மாநிலங்களைக் கடுமையாக பாதித்துக் கொண்டிருக்கிறது. நேரடி பணப்பட்டுவாடா மூலம் பொதுவிநியோக முறையை முற்றிலும் சீரழிக்கும் நடவடிக்கைகள் படிப்படியாக அதிகரிக்கின்றன. தற்போதைய ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு என்பது பொதுவிநியோக முறையை நாசமாக்குவது மட்டுமல்ல; மாநில அரசாங்கங்கள் தம் மக்களுக்கு உணவு வழங்கும் அதிகாரத்தை மீறுவதாகவும் அமைகிறது. உலக வர்த்தகக் கழகத்தின் நிர்ப்பந்தங்கள், தம் குறுகிய அதிகாரங்களுக்கு உட்பட்டு சில நலத் திட்டங்களை அமல்படுத்த முயற்சிக்கிற மாநில அரசுகளுக்குத் தடையாக அமைகிறது. எனவே, சர்வதேச ஒப்பந்தங்கள் போடும் போது நாடாளுமன்ற ஒப்புதல் வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டியிருக்கிறது. ஜி.எஸ்.டி., நீட் உள்ளிட்ட நடவடிக்கைகளும் மாநிலங்களின் உரிமைகளை மீறக்கூடியவையாகவே அமைந்தன.

மொழி என்பது ஒரு தேசிய இனத்தின் மைய அம்சங்களில் ஒன்று. இந்தி திணிப்பை வலுவாக எதிர்த்த மாநிலங்களில் முதன்மையானது தமிழகம். இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பு, சமஸ்கிருத வளர்ச்சிக்குக் கூடுதல் நிதி ஒதுக்குவது, அகில இந்திய தேர்வுகள் சிலவற்றில் இந்தி, ஆங்கிலம் இரண்டை மட்டும் பயன்படுத்தியது, ரயில்வேயில் உள்ளக தொடர்புக்கு தமிழைப் பயன்படுத்தக் கூடாது என்று அறிவிப்பு வெளியிட்டது போன்ற நடவடிக்கைகள் மோடி ஆட்சியில் அடிக்கடி நடக்கின்றன. தேசிய வரைவு கல்வி கொள்கையின் மூலம் தமிழகத்தின் இரு மொழிக் கொள்கையை மறைமுகமாக மாற்ற முயற்சிக்கப்பட்டது. ஒவ்வொரு கட்டத்திலும் பலத்த எதிர்ப்புக்கிடையேதான் இது மாற்றிக் கொள்ளப்பட்டது. ஆனால் அடுத்த வாய்ப்பு வரும் போது மீண்டும் முயற்சிக்கப்படுகிறது. எனவே மாநிலங்களின் எதிர்ப்பை அங்கீகரித்து, எடுத்த முயற்சியை விட்டு விடுவது என்பது பாஜகவின் நோக்கமல்ல. தற்காலிகமாக விட்டுக் கொடுப்பது அல்லது தகர்த்து முன்னேறுவதுதான் அதன் உத்தியாகத் தெரிகிறது.

ஒரே தேசம் ஒரே தேர்தல் என்பதிலும் மாநிலங்களின் உரிமைகள் கடுமையாக மீறப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் பதவிக்காலத்தை அதிகரிப்பது அல்லது குறைப்பது என்ற உள்ளடக்கம் இதில் உண்டு. ஆளுநரின் மறைமுக ஆட்சிக்கும் இதில் பரிந்துரை செய்யப்படுகிறது.

17வது மக்களவை அமைக்கப்பட்ட பிறகு, நிலைக் குழுக்களோ, அவைக் குழுக்களோ உருவாக்கப்படவில்லை. எனவே, பல்வேறு மசோதாக்கள் முறையாக தயாரிக்கப்படாமல் நேரடியாக நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டன. பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய, ஆழமாக ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய, மாநில உரிமைகளைப் பறிக்கக் கூடிய மசோதாக்களை தெரிவுக் குழுவுக்காவது விட வேண்டும் என்ற எதிர் கட்சிகளின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. மக்களவையில் உள்ள மிருக பலத்தை வைத்து இந்த மசோதாக்கள் அனைத்தும் வரிசையாக நிறைவேற்றப் பட்டன. இவற்றில் பலவற்றில் மாநில உரிமைகள் வலுவாக மீறப்பட்டுள்ளன.

அனைத்து மாநில மக்கள் பிரதிதிகளும் இடம் பெறும் நாடாளுமன்றமும், அது சம்பந்தமாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகளும் புறக்கணிக்கப்பட்டு, பிரதமர் அலுவலகம் சார்ந்து முடிவுகள் எடுக்கப்படுவதும் கூட்டாட்சிக்கு முரணானது.

வரைவு தேசிய கல்விக் கொள்கை:

தற்போதைய வரைவு கொள்கையின் ஒரு பிரதான அம்சம் மையப்படுத்துதல். உதாரணமாக பிரதமர் தலைமையிலான ராஷ்டிரிய சிக்‌ஷா ஆயோக் என்ற அமைப்பின் கட்டுப்பாட்டிலும், கண்காணிப்பிலும் ஒட்டு மொத்த கல்வி நடவடிக்கைகள் இருக்கும் என்றும், ஆராய்ச்சி செய்ய வேண்டிய முக்கிய பிரச்னைகள் என்ன என்பதை இனி தேசிய ஆராய்ச்சி கழகம்தான் தீர்மானிக்கும் என்றும், இக்கழகம் தொழிலதிபர்கள், கார்ப்பரேட்டுகளின் நிதியைக் கொண்டு இயங்கும் என்றும் முன்மொழிவுகள் உள்ளன. கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாக எழும் போது, நேர்மாறாக, அதனை மத்திய பட்டியலுக்கு அதிகாரபூர்வமாகக் கொண்டு செல்லாமலேயே, அத்தகைய விளைவுகளை இக்கொள்கை ஏற்படுத்துகிறது.

தேசிய மருத்துவ ஆணையம்:

இதிலும் இந்தியா முழுவதும் உள்ள மருத்துவம் சார்ந்த அனைத்து அம்சங்களையும் இந்தக் கமிஷன் கட்டுப்படுத்தும் என்பது வருகிறது. தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50% இடங்களுக்கான கல்வி கட்டணம் அவர்களின் விருப்பத்துக்கு விடப்படுகிறது. மீதி 50%க்கு கட்டணம் வசூலிக்க பொதுவான வழிகாட்டுதல்தான் இருக்குமாம். அதற்கு ‘உட்பட்டு’ தனியார் மருத்துவ கல்லூரிகளே நிர்ணயித்துக் கொள்ளலாம். மாநில அரசு நிர்ணயிக்க இங்கு ஏதும் இல்லை. 6 மாத சுருக்கப்பட்ட பயிற்சி பெற்று கிராமப்புறங்களில் மருத்துவம் பார்க்கலாம் என்பதும், எக்ஸ்ரே டெக்னிஷியன், லேப் டெக்னிஷியன், கம்பவுண்டர் உள்ளிட்டோர் கூட இதனை செய்யலாம் என்பதும், நகர்ப்புற, கிராமப்புறங்களுக்கிடையே மருத்துவ சிகிச்சை தரத்தில் நிலவும் பாகுபாடுகளை இது சட்டபூர்வமாக்குகிறது. மாநில அரசின் அதிகார வரம்பை மீறுகிறது. ஐந்தரை ஆண்டு மருத்துவ படிப்புக்குப் பிறகு, மீண்டும் ஒரு தேர்வு எழுதப்பட வேண்டும் என்ற நிபந்தனை, பல்கலைக்கழகம் மருத்துவ பட்டம் கொடுக்குமா? இந்தத் தேர்வை நடத்தும் முகமையின் சார்பில் பட்டம் கொடுக்கப்படுமா? என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

தகவல் உரிமை சட்டத் திருத்தத்தின்படி மாநில தகவல் ஆணையரின் ஊதியமும், பதவிக் காலமும் இனி மத்திய அரசின் கையில்தான். தேசிய புலனாய்வு முகமை திருத்த சட்டத்தில், எந்த மாநிலத்தில் உள்ள எவரை வேண்டுமானாலும் மத்திய உள்துறை அமைச்சகம், பயங்கரவாதி என்று முத்திரை குத்தி, மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலே அவரைக் கைது செய்து, அவரின் சொத்துக்களைக் கைப்பற்றலாம் என்ற பிரிவு உள்ளது. விசாரணை செய்வதிலும் மாநில காவல்துறையை ஈடுபடுத்தப்போவதில்லை. சட்டம் ஒழுங்கு மாநில அதிகாரம் என்பது இதில் நீர்த்துப் போகிறது.

தொழிலாளர் நல சட்டத் திருத்தம்:

தொழிலாளர் நலன் என்பது மத்திய – மாநில பொதுப் பட்டியலில் உள்ளது. 44 தொழிலாளர் நல சட்டங்கள் வெறும் நான்கு தொகுப்பாக மாற்றப்படும் என்று மாநிலங்களுடன் விவாதிக்காமல், நிதிநிலை அறிக்கையின்போது நிதியமைச்சர் உரையில் அறிவிக்கப்படுகிறது. இவற்றில் ஊதியம் குறித்த தொகுப்பு தற்போது சட்டமாகியிருக்கிறது.

குறைந்த பட்ச ஊதியம் குறித்து 15வது இந்திய தொழிலாளர் மாநாடு வழங்கிய பரிந்துரையும், பின்னர் ராப்டகாஸ் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், இவற்றை ஏகமனதாக ஏற்று உருவாக்கப்பட்ட 45 மற்றும் 46வது இந்திய தொழிலாளர் மாநாடுகளின் பரிந்துரைகளும் இச்சட்டத்தில் இடம் பெறவில்லை. 7வது ஊதிய குழு பரிந்துரைத்த ரூ.18,000 என்பதும் புறந்தள்ளப்பட்டு தேசிய அடிமட்ட ஊதியம் ரூ.4628 என தொழிலாளர் நலத்துறை அமைச்சரால் தன்னிச்சையாக அறிவிக்கப்படுகிறது. முறைசாரா துறையில் முதலாளி, மத்திய அரசு நிர்ணயிப்பதையோ அல்லது மாநில அரசு நிர்ணயிப்பதையோ தரலாம் என்று பச்சை கொடி காட்டியிருப்பது, குறைவான கூலிக்கே இட்டு செல்லும். சில குறிப்பிட்ட மாநிலங்களில் தொழிற்சங்க இயக்கம் போராடி தியாகம் செய்து பெற்ற பலன்கள் கூட தொடர முடியாது. உதாரணமாக, கேரள அரசு ரூ.18,000 குறைந்தபட்ச ஊதியம் என்பதை சட்டரீதியாக்கியிருக்கிறது. சட்டங்களை மீறும் முதலாளிகளுக்கு அதிகமான அபராதம் விதிக்கப்படுவதற்கான சட்டமும் உள்ளது. ஆனால் அகில இந்திய சட்டம் வரும் போது, மாநில சட்டங்களை அமல்படுத்துவது மிகுந்த சிரமத்துக்குள்ளாகும்.

ஆளுநர்கள் அரசியல் ஆதாய கருவிகளாய்:

மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டத்திலேயே ஆளுநர் நியமனம் குறித்த விமர்சனம் இருக்கிறது. மேலிருந்து தன்னிச்சையாக நியமனம் செய்வது கூட்டாட்சிக்கு முரணானது. ஒரு வேளை அப்படிப்பட்ட பதவி தேவை என்றால், மாநில முதல்வர்கள் பரிந்துரைக்கும் மூவரில் ஒருவரை குடியரசு தலைவர் தேர்வு செய்து ஆளுநராக நியமனம் செய்வது என்ற வழியைப் பின்பற்றலாம். இது சர்க்காரியா கமிஷன் பரிந்துரையிலும் இடம் பெற்றிருக்கிறது. உலக அளவில் கூட்டாட்சி அமைப்பை வைத்திருக்கும் பிரதான நாடுகள் எவற்றிலும் மத்திய அரசு ஆளுநரை நியமனம் செய்யும் முறை இல்லை. அதே போல், மாநில அரசுகள் நிறைவேற்றும் மசோதாக்கள் ஆளுநர்/குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் போது எல்லையற்ற காலம் அதைக் கிடப்பில் போட்டு வைப்பதானது தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் பணிகளை முடக்கும் நடவடிக்கையே. எனவே, மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதும் மார்க்சிஸ்ட் கட்சியின் பரிந்துரையாக உள்ளது. மாநிலங்களின் கவுன்சில் இதற்கான அரசியல் சட்டத்திருத்தம் வேண்டும் என்று பலமுறை விவாதித்த பிறகும், அது அமல்படுத்தப்படவில்லை. ஆளுநர்கள் பல்கலைக்கழக வேந்தர்களாக இருப்பது பற்றியும், மாநில அரசை பகிரங்கமாக விமர்சிப்பது, அவர்களின் கருத்துக்களுக்கு முரண்படுவது போன்ற அம்சங்களும் தொடர்ந்து விவாதிக்கப்பட வேண்டியிருக்கிறது. புதுவை, தமிழக ஆளுநர்களின் அணுகுமுறை இதற்கு அண்மைக்கால உதாரணமாகும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கலைப்பது, கவிழ்ப்பது மற்றும் எந்தக் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பது, எப்போது அழைப்பது போன்ற அம்சங்களில் மத்திய அரசின் செயல்கருவியாக ஆளுநர் செயல்பட்டதை அருணாச்சல பிரதேசம், உத்தராகண்ட், தமிழ்நாடு, கோவா, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் பார்த்தோம். இது இன்னும் அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளன.

குதிரை பேரம்:

ஒரு குறிப்பிட்ட கட்சியின் சார்பில் அதன் கொள்கைகளை சொல்லி போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள், இன்னொரு கட்சியால் விலைக்கு வாங்கப்படும் குதிரை பேரமானது ஜனநாயகத்தைக் கேலி கூத்தாக்குவதாகும். மாநில மக்களின் விருப்பத்தை/முடிவை கொல்லைப்புற வழியாக தட்டிப் பறிப்பதாகும். தற்போது பாஜக ஆட்சியில், வாடிக்கையாக, அங்கீகரிக்கப்பட்ட நடவடிக்கையாக இது பெருமளவு மாறிவிட்டது. கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த குதிரை பேரம், அடுத்து ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தைக் குறி வைத்து செய்யப்படுகிறது.

மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து:

11 மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து இந்திய அரசியல் சட்டத்தில் அளிக்கப்பட்டிருக்கிறது. முதன்முதலில் அரசியல் சாசனத்தின் ஓர் அம்சமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டது. ஆனால் படிப்படியாக அது நீர்த்துக் கொண்டே வந்தது. அண்மை காலத்தில் மாநில அரசு கலைக்கப்பட்டு, குடியரசு தலைவரின் ஆட்சியின் கீழ் இருக்கும் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலும் நடத்தப்பட வேண்டும் என்று கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்திய பிறகும், தேர்தல் ஆணையம் முன்வரவில்லை.

தற்போது, ஒரு சில மணி நேரங்களில் நாடாளுமன்றத்தின் மூலமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து, அதன் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, குடியரசு தலைவரின் ஒப்புதலையும் பெற்று, பல்லாண்டுகளாக அம்மாநிலம் அனுபவித்து வந்த உரிமைகளைக் குழி தோண்டிப் புதைத்து விட்டது பாஜக அரசு. இனி சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலமாக அது இருக்க முடியாது என்பது மட்டுமல்ல; மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் அது இயங்க வேண்டியிருக்கும். இந்து இந்தியாவில், முஸ்லீம்கள் கணிசமாக இருக்கும் மாநிலம் சிறப்பு அந்தஸ்துடன் இயங்கலாமா என்ற மதவெறி நிகழ்ச்சி நிரலோடு சேர்த்து, இனி கார்ப்பரேட்டுகளுக்கு அதன் இயற்கை வளங்களை அள்ளிக் கொடுக்க முடியும் என்பதும் உள்ளது. நாடாளுமன்றப் பெரும்பான்மையின் கொடுங்கோன்மையைப் பயன்படுத்தி ஒரு மாநிலத்தையே இந்திய வரைபடத்தில் சிதைக்க முடியும் என்றால், இனி எந்த மாநிலத்தையும் எதுவும் செய்யலாம். ஜனநாயக படுகொலை என்பதோடு சேர்த்து, இந்தியாவின் சாரமாக இருக்கும் கூட்டாட்சியை மியூசியத்தில் அடைத்து வைத்து காட்சி பொருளாக்கும் ஏற்பாடே இது.

விடுதலை போராட்டத்தில் பங்களிப்பு செய்யாத ஆர்.எஸ்.எஸ்., காந்தி படுகொலைக்குப் பின் தடை செய்யப்பட்டு, மீண்டு வந்து, அதன் எண்ணற்ற அமைப்புகள் மூலமாக பாசிச உத்திகளைப் பயன்படுத்தி, தற்போது அரசியல் அதிகாரம் பெரும்பான்மை பலத்தோடு கைக்கு வந்த சூழலில், நாட்டின் விடுதலைக்குப் பிறகு மக்களால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்ட தனது நிகழ்ச்சி நிரலை ஒவ்வொன்றாக அமல்படுத்துகிறது. இதுதான் பாஜக அரசு பயணிக்கும் திசைவழியாக உள்ளது. மக்களின் மனநிலையை ஜனநாயகப்படுத்தி, போராட்ட ஒற்றுமையை ஏற்படுத்தும் பணியில் களத்திலும், கருத்தியல் தளத்திலும் முன்னிலும் வேகமாக இடதுசாரிகள் செயல்பட வேண்டிய நேரம் இது.

citu struggle

ஏகாதிபத்திய தாக்குதலும், உழைக்கும் வர்க்க எதிர்ப்பும்

  (ஏ ஆர் சிந்து,  மத்திய குழு உறுப்பினர்,  சி பி எம்)

தமிழில்: ஜி.பாலச்சந்திரன்

உலகெங்கிலும் உள்ள தொழிலாளர் வர்க்கம், வாழ்வின் நாள்தோறுமான மூலதனத்தின் தாக்குதலையும், அரசியல் ரீதியான ஏகாதிபத்திய தாக்குதலையும் தீவிரமான வர்க்க போராட்டத்தால் எதிர்கொண்ட வளமான அனுபவத்துடன் இந்த மே தினத்தை – சர்வதேச தொழிலாளர் தினத்தை – மிகுந்த உற்சாகத்துடனும், வர்க்க பெருமிதத்துடனும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.

ஏகாதிபத்திய தாக்குதலும், உலகளாவிய எதிர்ப்பும்:

முதலாளித்துவ அமைப்பின் நெருக்கடியின் பின்புலத்தில் ,சிஐடியு 2018 நவம்பரிலேயே கீழ்வருமாறு குறித்து வைத்தது:

“அரசியல், பொருளாதார ,மற்றும் ராணுவ முனைகள் என அனைத்திலும் ஏகாதிபத்தியத்திய சக்திகளின் மேலாதிக்க தலையீடு அதிகமான ஆக்கிரமிப்பு பரிமாணத்தை அடைந்துள்ளது. வளரும் நாடுகளின் சந்தையையும், இயற்கை வளங்கள் அதிகமான பகுதிகளையும் தனது மேலாதிக்கத்தின் கீழ் தக்க வைத்து, விரிவுபடுத்துவதே அதன் நோக்கம். மிகவும் குறைவாக இருப்பினும், ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையேயான முரண்பாடு மெல்ல தலைதூக்குகிறது அதேசமயம், வளரும் நாடுகள் தங்களின் சந்தையை, இயற்கை வளத்தை, மற்றும் பொருளாதாரத்தை பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டிட அனுமதிப்பதின் வாயிலாக, அந்த நாடுகளின் தேசீய நலனை சரணடைய செய்ய ஏகாதிபத்திய சக்திகள் பல வழிகளில் அவற்றிற்கு அழுத்தம் தருகின்றன.”

அதன் விளைவாக, லாபத்தை அதிகரிக்க உழைப்பாளர் மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டது .நவீன தாராளமயக் கொள்கைகளை கடைப்பிடிக்கும் அனேக வளர்ந்த, வளரும் நாடுகள் அதிகளவில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்வது, தொழிலாளர்களின் உரிமைகளை குறைப்பது, பொதுசேவைகளை நீக்குவது, விலைகளை உயர்த்துவது போன்றவற்றை அமுல் படுத்துகின்றன.

பெட்ரோலிய பொருளிற்கான அதிக வரி உயர்வை எதிர்த்து சென்ற ஆண்டு நவம்பரில், பிரான்சில் துவங்கிய தொழிலாளார் வர்க்கத்தின் போராட்டமான  “எல்லோ வெஸ்ட் “’இயக்கம்  (மஞ்சள் மேலங்கி இயக்கம்—அதில் ஈடுபடுபவர்கள் மஞ்சள் மேலங்கி அணிந்திருப்பர்)  இன்னும் தொடர்கிறது  இதனால், குறைந்தபட்ச ஊதியத்தில் 100 யூரோ அதிகரிக்கவும், குறைந்த ஊதிய ஓய்வூதியதாரர்களுக்கும், ஊழியர்களின் கூடுதல் கால ஊதியம், போனஸ் ஆகியவற்றிற்கும், திட்டமிட்ட வரி உயர்வினை கை விடவும், வலதுசாரி மக்ரோன் அரசு நிர்பந்திக்கப்பட்டது. ஐரோப்பாவிலேயே சிறந்ததான, பிரான்ஸ் தேசீய ரெயில்வேயை தனியார் மயமாக்குவதற்கும், ஊழியர்களின் பணிநிலைகளில் மாற்றம் கொணர்வற்கும், ஊழியர் எண்ணிக்கை குறைப்பிற்கு எதிராகவும் பிரான்சின் ரெயிவே தொழிலாளார்கள் ஏற்கனவே போராட்டத்தில் உள்ளனர்.

“ஓய்வூதிய சீர்திருத்தம்”என்று பெயரில் வருவதை ரஷ்ய தொழிலாளர்கள் எதிர்த்து போராடி வருகின்றனர்; கிரீஸில், சிரிஸா அரசின் சிக்கன கொள்கைகளுக்கு எதிராக, வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் தொழிலளர் வர்க்கம் ஈடுபட்டு வருகிறது. ருமேனியாவில், குறைந்தபட்ச கூலியையும், ஜெர்மனியில் ஊதிய உயர்வையும் கோரி வருகிறார்கள். பயணிகள் பாதுகாப்பை அச்சுறுத்துவதும், 6000 நடத்துனர் பணிகளை நீக்கிட வழி வகை செய்யும் ‘ஓட்டுனர் மட்டும்’ என்ற முறையில் ரயில் இயக்குவதை விரிவாக்குவதற்கு எதிராக வட இங்கிலாந்தில் ரயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கினர். பணிநிலைகளின் மீதான தாக்குதலுக்கு எதிராக சுவிட்சர்லாந்து கட்டுமான தொழிலாளர்கள் பணிமுடக்கம் செய்தனர். மேம்பட்ட ஊதியத்திற்காகவும், பணிநிலைமைகளுக்காகவும் போராடி வருகின்றனர். பெல்ஜியம், இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின் ஆகிய ஐந்து நாடுகளின் ஐரோப்பிய விமான பணியாளர்கள் மேம்பட்ட பணிநிலைமைகளுக்காக போராடினர். கல்விக்கான அதிக நிதி ஒதுக்கீடு, ஊதிய உயர்வு ஆகியவை கோரி போராடிய அமெரிக்க ஆசிரியர்களின் போராட்டம், அந்த நாட்டின் பல மாநிலங்களுக்கு பரவியது. அதே போன்ற கோரிக்கைகளுக்காக, அர்ஜெண்டினா, இங்கிலாந்து, மற்றும் ஈரான் ஆசிரியர்கள் போராடுகின்றனர். நெகிழி தொழிற்சாலை தொழிலாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், தீயணைப்பு வீரர்கள், முனிசிபல் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பல்வேறுபட்ட தொழிலாளர்கள் ஊதியம் மற்றும் மேம்பட்ட பணிநிலைமைகளுக்காக வேலை நிறுத்தம் செய்தனர். குறைந்த பட்ச ஊதிய விகித்ததை உயர்த்த வேண்டி  ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஒரு லட்சம் ஊழியர்கள் அணிவகுத்தனர்.

வேளாண் வர்த்தக பெரு நிறுவனங்களின் கொள்கைகளை விவசாயிகளும் பல நாடுகளில் எதிர்த்தனர். ஏகாதிபத்தியம் ஏற்பாடு செய்யும் உள் நாட்டு போர் மற்றும் அரசியல் ஆதாயத்திற்கெதிராக உழைக்கும் மக்கள் தெருக்களுக்கு வரத் துவங்கி விட்டனர். ஜனாதிபதி லூலாவின் விடுதலை வேண்டி நடந்த பெரும் ஆர்ப்பாடங்களை பிரேசில் கண்டது. அது போலவே, மதுரோ அரசிற்கு ஆதரவாக வெனிசுலாவின் உழைக்கும் வர்க்கம் வெளி வந்தது.

இந்தியாவில்:

எதேச்சதிகார,வகுப்புவாத நரேந்திர மோடி அரசின் முன்னெப்போதையும் இல்லாத தாக்குதல்களை இந்தியத் தொழிலாளி வர்க்கம் கண்டது. பொறுப்பேற்ற ஐந்தே நாட்களுக்குள்ளாக மோடி அரசு பயிற்சி பருவ ஊழியர்களை எந்த வரையரையுமின்றி பணியாற்றும் வகையில் பயிற்சி பருவ (Apprenticeship Act) சட்டத்தினை திருத்தியது.பாராளுமன்ற் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில நாட்கள் முன்னர், குறைந்தபட்ச ஊதியத்தை குறைக்க முயற்சித்தது, பெரு நிறுவனங்கள் ‘எளிதாக தொழில் செய்ய’ என்ற பெயரில், இந்திய தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற உரிமைகளை ‘  இல்லாதாக்கிட மோடி ஆட்சி தீவிரமாக முயற்சித்தது. முதலாளிகளுக்கு சலுகையாக, படிவ சமர்பிப்பு, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம், தொழிற்சாலை சட்டம் ஆகியவை திருத்தப்பட்டன. ”குறிப்பிட்ட கால பணி” என ( ஒப்பந்த தொழிலாளர் முறை போன்ற ஒன்று) ஒரு ஆணை நிர்வாக ஆண வழி நிறைவேற்றப்பட்டது., வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் காப்புறுதி திட்டம் போன்ற சமூக பாதுகாப்பு திட்டங்கள் பல வழி முறைகளில்   தகர்க்கப்பட்டன,

உற்பத்தி திறன் பல மடங்கு அதிகரித்த பொழுதே,உண்மை ஊதியம் குறைந்தது. மதிப்பு உருவாக்க செலவில் ஊதியத்தின் பங்கு 9 சதவீதமாகக் குறைந்தது. அதே சமயம் லாபத்தின் பங்கு 60 சதவீதமாக உயர்ந்து அசைந்து கொண்டிருந்தது. சர்வ தேச தொழிலாளர் அமைப்பின் இந்திய ஊதிய அறிக்கை 2018 ன் படி நாட்டில் 82 சதவீத ஆண் தொழிலாளர்களும் 92 சதவீத பெண் தொழிலாளர்களும் மாதத்திற்கு ரூ.10000/= ற்கும் குறைவாக ஊதியம் பெறுகிறார்கள்.. இந்தியாவில், 67 சதவீத வீடுகள் மாத ஊதியம் ரூ 10000/= ற்கும் குறைவாக உள்ளதென கூறியதாக அஸிம் பிரேம்ஜி பல்கலை கழக அறிக்கை 2018 சொல்கிறது. 2015-16 வரை மொத்த தொழிலாளார்களில் 46 சதவீதமான  57 சதவீத சுய தொழில் புரிவோர் மாதந்தோறும் ரூ 7000/= மும், மொத்த தொழிலாளார்களில் 50 சதவீதமான பேர் வெறும் ரூ 5000/= மாதம் பெறுவதாக தொழிலாளர் செயலகம் அறிவிக்கிறது. இதெல்லாம் சராசரி எண்களே. பெரும்பான்மை உழைக்கும் பணியாளர் திரளிற்கு உண்மை ஊதியம் மிகவும் கீழே இருக்கும். அதுவும் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் கிடைக்காது. அதே சமயம் முதலாளிகளுக்கு வரி தள்ளுபடிகளும், விலக்குகளும் ஒவ்வொரு வருடமும் ரூ 5 இலட்சத்திற்கும் மேலாக கிடைக்கிறது. மேலும் பெரு நிறுவனங்களின் வரி செலுத்தாத தொகை மட்டும் ரூ 7.31 இலட்சம் கோடி. (2016-17).

கிராமப்புற தபால்காரர்கள், மத்திய மாநில அரசு ஊழியர்கள், ரெயில் ஓட்டுனர்கள், பாதுகாப்பு துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், ஒப்பந்த, வெளி நிறுவன ஊழியர்கள், பி எஸ் என் எல் ஊழியர்கள், சாலை போக்குவரத்து தொழிலாளர்கள், மின் ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆஷா(ASHA-அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள்) மற்றும் மதிய உணவு ஊழியர்கள், துப்புரவு மற்றும் முனிசிபல் தொழிலாளர்கள், மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள், பன்னாட்டு நிறுவனங்களின் நவீன ஆட்டோமொபைல் உற்பத்தியில் வேலை செய்யும் தொழிலாளர் உள்ளிட்ட ஆலைத்தொழிலாளர்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள், ஏன், தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் உட்பட அனைவரும் அவரவர் கோரிக்கைகளுக்காக போராட்டத்தில் இறங்கினர். இந்த துறைகள் பலவற்றில் தொழிலாளார்களின் முழு பங்களிப்போடு வேலை நிறுத்தம் முழுமையாக நடைபெற்றது. ஓய்வூதிய திட்டங்களின் மீதான தாக்குதலால்  ஓய்வூதியதாரர்களும் அதனை எதிர்த்து போராட்டத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

அண்மையில் நடந்த அனைத்து போராட்டங்களிலும், பெண் தொழிலாளர்களின் பெரும் பங்களிப்பும், அணி சேர்க்கையும், அவர்களின் தலைமைப்பண்பும் முக்கிய அம்சமாகும். பிரச்சனை சார்ந்த போராட்டங்களில் முன்னெப்போதும் இல்லாத ஒற்றுமையை இக்காலத்தில் காண முடிந்தது. இத்தகைய தாக்குதல்களுக்கெதிராக, 20 கோடி தொழிலாளர்களுக்கு மேல் பங்கேற்ற, 2 செப்டம்பர் 2015, 2 செப்டம்பர் 2016 மற்றும் 8, 9 ஜனவரி 2019 உள்ளிட்ட பொது வேலை நிறுத்தத்தில் பி எம் எஸ் நீங்கலாக மற்ற அனைத்து மத்திய தொழிற்சங்கங்களுடான ஒற்றுமை பலப்படுத்தப்பட்டது.

விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், வாலிபர், மாணாவர், மாதர், தலித், பழங்குடியினர் என சமுதாயத்தின் பல்வேறுபட்ட பகுதியினரும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கெதிராக போராடினர்

வளர்ந்துவரும் தொழிலாளர்-விவசாயி ஒற்றுமை:  இந்தியாவில் தொழிலாளார் வர்க்க இயக்கங்கள் பிரச்சனைகளை கையிலெடுப்பதில் மேன்மேலும் பக்குவமடைவதோடு, விவசாயிகளின் போராட்டங்களோடு இணைந்து கொள்கின்றன என்பது தற்போதைய இயக்கங்களின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். 2015 பொது வேலை நிறுத்த கோரிக்கைகளில் எழுப்பப்பட்ட முக்கிய கோரிக்கைகளில் நிலம் கையகப்படுத்தும் பிரச்சனை ஒன்றாகும். தொழிற்சங்க இயக்கம் தீவிரமாக விவசாயிகளின் நலன்களை ஆதரித்தது. 9 ஆகஸ்ட் 2018 சிறை நிரப்பும் போராட்டம்,14, ஆகஸ்ட் சமுஹிக் ஜாக்ரண்,( கூட்டான விழிப்புணார்வு), மற்றும் சரித்திர முக்கியத்துவமான 5 செப்டம்பர் 2018 மஸ்தூர் கிஸான் சங்கர்ஷ் பேரணி (தொழிலாளர் விவசாயி போராட்ட திரளணி) ஆகியவற்றில் அமைப்பு ரீதியாக மேலிருந்து கீழ் வரை படிப்படியாக திரட்ட அ இ வி சங்கம் மற்றும் அ இ வி தொ சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து தொழிலாளர் விவசாயிகள் கூட்டணி என்ற திசையில் உருவாக்க  சி ஐ டி யூ முன்முயற்சி எடுத்தது. விவசாயிகளின் போராட்டங்கள் சி ஐ டி யூ வினால் முழுமையாக ஆதரிக்கப்பட்டன. மத்திய தொழிற்சங்கங்களால் ஏற்று கொள்ளப்பட்ட தொழிலாளர் கோரிக்கை சாசனம், அனைத்து மக்களின் கோரிக்கைகளை உள்ளடக்கியதாகும்.

பல்வேறு பட்ட மக்களின் தொடர்ச்சியான இயக்கங்கள்தான், வர்க்க அமைப்புக்களின் பலமான அடித்தளத்துடன், வர்க்க, வெகுஜன, சமூக அமைப்புக்களின் கூட்டு மேடையாக ஜன் ஏக்தா, ஜன் அதிகார் அந்தோலன் (மக்கள் ஓற்றுமை மக்கள் அதிகாரம் இயக்கம்)  அமைய உதவியது. நாட்டின் உழைக்கும் மக்களின் சில முக்கிய பிரச்சனைகளை நடை  பெற்று கொண்டிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பிரதான அரசியல் விவாதமாக்கியது இந்த இயக்கங்களின் பலனே ஆகும்..

முன்னோக்கிய பாதை:

நவீன தாராளமயமாக்கலின் தோற்றுவாய்க்குப் பின், முதன் முறையாக அரசியலும், அடிப்படை வர்க்கங்களான தொழிலாளர் வர்க்கம், விவசாயத் தொழிலாளர் மற்றும் ஏழை விவசாயிகளின் இயக்கங்களும் மையப்புள்ளியாக வெளிப்பட்டுள்ளன. வாலிபர், மாணாவர், மாதர், சூழலியலாளர்கள், தலித், பழங்குடியினர், சிறுபான்மையினர், அனைத்து ஒதுக்கப்பட்ட பிரிவினர்களின் முற்போக்கு சமூக இயக்கங்கள் இந்த நீரோட்டத்தில் இணைகிண்றனர்.

ஆயினும், சி ஐ டி யூ வின் செயற்குழு சுட்டிக்காட்டுவது வருமாறு: “ நவீன தாராளமய முதலாளித்துவ ஒழுங்குமுறை அமைப்பின் உள்ளார்ந்த நெருக்கடியானது, பல நாடுகளில், தீவிர வலதுசாரி சக்திகள் அரசியல் அரங்கில் தலை தூக்கும் நிகழ்வோடு சேர்ந்தே நடக்கிறது. நவீன தாராளமய கொள்கைகளின் தாக்கம் மக்களின் வாழ்வில் மற்றும் வாழ்வாதாரத்தில் ஏற்படுத்தும் பிரச்சனைகளினால் அவர்களின் மத்தியில் வளர்ந்து வரும் அதிருப்தியை, அமைதியின்மையை வலதுசாரி சக்திகள் தங்களின் அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்த முடிகிறது. உழைக்கும் மக்களின் பரந்துபட்ட போராட்டங்கள் நடந்த போதிலும், பல நாடுகளில் வலதுசாரிகள் தலை தூக்க காரணம், சமூக ஜனநாயகவாதிகளின் துரோகங்களும் மற்றும் மாற்று பொருளாதார முறையை தராத, தொடர்சியாக வர்க்க பார்வையோடான போராட்டங்களாய் அவற்றை கொண்டு செல்லாத பலகீனப்பட்டுள்ள இடதுசாரிகளின் தோல்வி அல்லது இரு போக்குகளுமேயாகும்.

அரசியல் அரங்கில் இந்தியாவும் வலது மாற்றத்தை எதிர் கொண்டு வருகிறது. நாட்டின் மதச்சார்பற்ற, ஜனநாயக இழை தீவிரமான தாக்குதலுக்குள்ளாகிறது. பாஜக மட்டுமல்ல, இடதுசாரிகள் தவிர்த்த மற்றெல்லா முக்கிய அரசியல் கட்சிகளும் நவீன தாராளமயக் கொள்கைகளுக்காக வாதிடுபவர்களே. அரசியல் விவாதத்தில் சில அடிப்படை பிரச்சனைகளை வர்க்க, வெகுஜன இயக்கங்கள் கொண்டு வரமுடிந்தாலும், தேர்தலிற்கு பின்னர் கூட உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக அரசின் கொள்கைகளில் அதிக மாற்றமிருக்கப் போவதில்லை. மாறாக, முதலாளித்துவ அமைப்பின் உள்ளார்ந்த நெருக்கடி இன்னும் தீவிரமாவதால், உழைப்பவர் மீதான தாக்குதலும் மிக அதிகமாகப் போகிறது.

 எவ்வாறு உழைக்கும் மக்களின் போராட்டங்களை முன்னெடுப்பது மற்றும் அதனை பலப்படுத்துவது என்பதும், ஜனநாயகத்தை காத்திடவும், அவ்வப்போது அரசை மாற்றுவது மட்டுமேயின்றி கொள்கைகளில் மாற்றம் கொணர அவ்வாறான போராட்டங்களை எப்படி அரசியல் சக்தியாக மாற்றுவது என்பதும்தான்   தொழிற்சங்க இயக்கத்தின் முன்னால் உள்ள சவாலாகும். பரந்து விரிந்த பலமான தொழிற்சங்க இயக்க அடித்தளம் இவ்வாறன இயக்கத்திற்கு அஸ்திவாரமாகும். விவசாயிகளின் இயக்கம் இணைவதால் இந்த வர்க்க அணி சேர்க்கை, பொருளாதார தாக்குதலுக்கு எதிரான அடித்தளமாக மட்டுமில்லாமல், கிராமப்புறங்களின் சமூக ஒடுக்குமுறை, மற்றும் வகுப்புவாத பிரிவினை அரசியலிற்கு எதிரான சக்தியாகவும் விளங்கும். வரும் நாட்களில், தாக்குதலுக்கு எதிரான, மக்களுக்கான மாற்றை முன்னெடுப்பதாக, அனைத்து வகையான சுரண்டலுக்கும் முடிவுகட்டி, எழும் இந்தியாவை வடிவமைப்பதில் வர்க்க அரசியல் ஒர் தீர்மானகரமான பங்கினை வகித்திடும்..

தமிழாக்கம்: ஜி.பாலசந்திரன்

பேரிடரான காலகட்டம்

கடந்தகால, பாசிசத்திற்கும்,இன்றைய பாசிசத்திற்கும் என்ன வேறுபாடு? உலகில் பாசிச அச்சுறுத்தலை இன்று எவ்வாறு எதிர்கொள்வது? இதற்கான அழுத்தமான தத்துவ விளக்கங்களுடன் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் இக்கட்டுரையை வடிவமைத்துள்ளார்.

  • அன்று ஏகாதிபத்தியங்களுக்குள் மூலதனத்தை திரட்டிட போட்டி மூண்டது.உலகை பங்கு போட்டுக் கொள்ளும் உக்கிரம் மேலோங்கியது.
  • மறுபுறம்,உலக மக்களிடையே வறுமை வேலையின்மை தாண்டவமாடியது.
  • இந்த நிலையில் பாசிசம் வேற்று இனத்தவரை எதிரியாக வகைப்படுத்தி கொலை வெறி கொண்டு வேட்டையாடியது.இந்த “வேற்று”இனத்தார் என்ற சித்தாந்தம், பாசிசம் அரசுகளை கைப்பற்றி அதிகாரத்திற்கு வரவும் உதவியது.
  • ஏகாதிபத்தியங்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் தீவிரம் பெற்று இரண்டாம் உலகப் போர் எனும் பேரழிவு ஏற்பட்டது.
  • போரின் அழிவையும் கொடூரத்தையும் சந்தித்த மக்கள் இதுகாறும் பாசிசத்தை ஒதுக்கியே வந்தனர்.
  • முதலாளித்துவமும் மக்களின்  ‘நலன் காக்கும்’அரசு என்ற வேடம் பூண்டது.சோவியத் தாக்கத்தினால் சில நன்மைகளையும் செய்தனர். கீன்ஸ் கொள்கை அடிப்படையிலும் இவை தொடர்ந்தன.
  • இதனால் பாசிசம் சிறிது அடங்கி இருந்தது.
  • ஆனால் நவீன தாராளமயம் நிலைமையை மாற்றியது.அரசு மக்கள் நலன் காக்கும் என்ற நிலையிலிருந்து விலகியது; முற்றாக, கார்ப்பரேட் மூலதன நலன் காக்கும் அரசுகளாக  மாறின.
  • முன்பு போன்று ஏகாதிபத்தியங்களுக்குள்  முரண்பாடு என்றில்லாமல்,அவர்கள்  கைகோர்த்து நடைபோடும் புதிய சூழல் உருவானது.நிதி மூலதனம் ஆதிக்கம் பெற்றுள்ளதால்,அது உலகை  கூறு போடாமல் வலுப்பெற்று வருவதால்,அந்த முரண்பாடு மட்டுப்பட்டுள்ளது.
  • நிதி மூலதனத்திற்கு  உலகை பங்கு போட்டுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கம் உதவிடாது.அந்த நோக்கத்தை ஒதுக்கி வைத்துவிட்டு,கூட்டாக சுரண்ட வேண்டும் என்பது மேலோங்கியுள்ளது.
  • அதே போன்று அரசு விலகி தனியார் ஆதிக்கம் செலுத்தும் சூழல்(நவீன தாராளமயம்) அதற்கு ஏற்புடையது.
  • இக்கொள்கைகளால்,பொருளாதார நெருக்கடி தீவிரம் பெற்றது.அதிலிருந்து மீள முடியாமல் முட்டுச்சந்தில் சிக்கி கொண்டு தப்பிச் செல்ல வழியேதும் இல்லாமல் உலக முதலாளித்துவம் உள்ள நிலை.
  • மறுபுறம், மீண்டும் “வேற்று” சித்தாந்தம் விஸ்வரூபமெடுக்கிறது.வேற்று இனத்தினர்; வேற்று மதத்தினர்  என ஏராளமான “வேற்று”க்களுடன் பாசிசம் தலை தூக்கி வருகிறது.
  • முன்பு போன்று ஆட்சிக்கு பாசிசம் வரக் கூடும்;அல்லது ஆட்சிக்கு வராமல் இருக்கலாம்.ஆனால் சமுக தளம், அரசியல் தளத்தை பாசிச சித்தாந்தம் தனது ஆளுகையின் கீழ் கொண்டு வரும்.
  • முந்தைய பாசிசம் உலகப் போரில் முடிந்தது.இன்றைய பாசிசம் மனித இனத்தை அழிப்பதில் முடியும்.

எவ்வாறு பாசத்தை முறியடிப்பது.?

  • முதலில் இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் பாசிச சக்திகள் வளர்ச்சி பெற்று வருவதற்கு உறுதுணையாக இருப்பது நவீன தாராளமயம் என்பதனை உணர்ந்து கொள்வது அவசியம்.
  • முதலாளித்துவ முறையை குறை காண்பதற்கு பதிலாக “வேற்று” கூட்டத்தினை எதிரிகளாக முன்வைத்து செய்யப்படும் மக்கள் திரட்டலை மக்கள்  அடையாளம் கண்டிட வேண்டும்.
  • இதனை இடதுசாரிகளே செய்திட இயலும்.

இதற்கு

  • பாசிச எதேச்சதிகாரத்தை ஜீரணிக்க முடியாத,
  • தற்போதைய ஜனநாயகம் நீடிக்க வேண்டுமென நினைக்கின்ற,
  • “வேற்றுமை”பாராட்டாமல் ஒற்றுமை நிலைப்பெற விரும்பும் சக்திகள்
  • அதாவது “லிபரல்” சக்திகள்
  • (இந்தியாவில் மதச்சார்பின்மை நெறி விரும்பும்  சக்திகள் உள்ளிட்டோர்)

திரட்ட வேண்டும்.

  • இந்த சக்திகளை இடதுசாரிகள் வென்றடைய வேண்டும்.தனக்கென்று (நவீன தாராளமயக் கொள்கைக்கு  நேர் எதிரான) இடது மாற்று பொருளாதார திட்டத்தை அழுத்தமாகப் பற்றிக் கொண்டு லிபரல் வெகுமக்கள் இடதுசாரியினர் சக்திகளை திரட்ட வேண்டும்.இதற்கு அவர்களோடு நெருக்கம் கொள்ள வேண்டும்.

இந்த முடிவுகள் இன்றைய நிலை பற்றிய ஆழமான ஆய்வு அடிப்படையில், பிரபாத் பட்நாயக் வந்தடையும் முடிவுகள்.

(இந்த முன்னுரையை படித்த பிறகு பொறுமையுடன் அவரது கட்டுரையை வாசிக்க வேண்டுகிறேன்)

– என்.குணசேகரன்


ஆங்கிலத்தில் : >>>>>

இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின் கடந்த அரைநூற்றாண்டாக,  எல்லாவிடத்திலும் ஒரு முனைப்பான அரசியல் சக்தியாக பாசிசம் உருவகாமல் நின்றுவிட்டது. பல எதேச்சதிகார, கொலைபாதகமும் கொண்ட அரசாங்கங்கள், ராணுவ சர்வாதிகாரங்கள் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் அமைந்திருந்திருக்கின்றன, அவை பெரும்பாலும் சி.ஐ.ஏ உதவியுடன் முற்போக்கு தேசியவாத அரசுகளுக்கு எதிராக வென்று அமையப்பெற்றன என்பதும், அவை அமெரிக்காவின் உத்தி ரீதியிலான ஒத்துழைப்பைப் பெற்றுவந்ததும் சந்தேகத்திற்கிடமில்லாத ஒன்று. ஆனால், பாசிச அரசாட்சியிலிருந்து அவற்றை வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். பாசிச அரசாட்சியென்பது மிகப் பரிதாபகரமான நிலையில் உள்ள சிறுபான்மைக்கு எதிராக வெறுப்பை பரப்புவதன் மூலம் அரசியல் நோக்கம் கொண்ட வெகுமக்கள் திரட்டலைச் சார்ந்தது. சோசலிசத்திற்கும் தாராளவாதத்திற்கும் இடையிலான போட்டிதான் முக்கியமானது என, எனது தலைமுறையினரும், அடுத்தடுத்த பல தலைமுறையினரும் நம்பிவந்தோம்.

அடங்கிப்போயுள்ளதாக பாசிசம் காட்சியளிப்பதற்கு இரண்டு மையமான காரணிகளைக் காண்கிறேன். அதில் முதலாவது, மானுட வரலாற்றில் மனித குலத்தைச் சூறையாடும் வகையில், பாசிசம் திணித்த போர்களின் வழியே கட்டமைத்து எழுப்பிய கடும் வெறுப்பு; பாசிசம் என்ற சொல் பெரும் போர்களை திணிக்கும் உச்சகட்ட பகைமை என்பதற்கு நிகரான சொல்லாக மக்களின் மனங்களில் இடம்பெற்றது. இரண்டாவது உலகப்  போர்களுக்கு இடையிலான காலகட்டத்தில், பாசிச வளர்ச்சிக்கு காரணமாக இருந்த பெரும் எண்ணிக்கையிலான வேலையிழப்பு மற்றும் கொடிய வறுமை ஆகியவை கடந்துபோன வரலாறாகிவிட்டது;  சமூக ஜனநாயகம் என்ற பாதுகாப்புக் கவசத்தின் கீழ் முன்னேறிய நாடுகளில் கினீசின் ‘கிராக்கி மேலாண்மை’ அறிமுகப்படுத்தப்பட்டது: அது ‘முதலாளித்துவத்தின் பொற்காலம்’ என அழைக்கப்பட்டது, காலனியத்திற்கு பிறகான காலத்தில் மூன்றாம் உலக நாடுகளில் கொண்டுவரப்பட்ட சமூக, பொருளாதார துறைகளில் அரசுக்கட்டுப்பாடுக் கொள்கைகள், காலனியச் சுரண்டலின் கொடூரங்களுக்கு ஆளாகியிருந்த பெரும்பகுதி மக்களுக்கு புதிய நம்பிக்கையையும், மேம்பட்ட வாழ்க்கையையும் கொடுத்தன.

கடைசியாகக் குறிப்பிட்ட உண்மையை இப்போது ஏற்றுக்கொள்ள சிரமமாய் இருக்கலாம். ஆனால் இந்தியாவே அந்தக் கருத்தை உணர்த்தும் எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. பிரிட்டிஷ் இந்தியாவில், 1900 ஆண்டுகளில் குடிமக்களின் ஆண்டு உணவுதானிய உட்கொள்ளல் 200 கிலோ கிராம்களாக இருந்தது, 1945-46 ஆண்டுகளில் 136.8 கிலோ கிராம்களாக குறைந்தது, 1980களின் இறுதியில் அது 180 கிலோ கிராம்களாக உயர்ந்தது. (புதிய தாராளவாத ‘சீர்திருத்தங்களுக்கு’ பின் அது ஏறத்தாழ 165 ஆக குறைந்துவிட்டது). இந்தியாவின் வருமான வரி விபரங்களைக் கொண்டு, பிக்கட்டி மற்றும் சான்செல் ஆகியோர் செய்த கணக்கீட்டில், மக்கள் தொகையின் முதல் 1 விழுக்காடு பேர், 1930களில் வருமானத்தில் 21 விழுக்காட்டை பெற்றுவந்தனர். அது 1980களில் 6 விழுக்காடு என்பதாகக் குறைந்தது (2014 ஆம் ஆண்டுகளில் அது 22 விழுக்காடாக உயர்ந்துள்ளது)

முன்னேறிய மற்றும் வளர்ச்சிக் குறைந்த நாடுகளில் பொருளாதாரம் மற்றும் சமூக அமைப்பின் மீது அரசுக்கட்டுப்பாட்டுக்கு முடிவுகட்டிய நவதாராளமயத்தின் வெற்றிக்குப் பிறகும் கூட, அமெரிக்காவின் நிகழ்ந்த டாட்காம் குமிழி (1997 – 2001 ஆண்டுகளில் இணையப் பயன்பாட்டின் மூலம் ஊகமாக ஏற்பட்ட பொருளாதாரப் பெருக்கம்)  மற்றும் வீட்டு வசதிக் குமிழி (housing bubble ) ஆகியவை உலகப் பொருளாதார நடவடிக்கைகளை சற்று மேல் நிலையிலேயே வைத்திருந்தன. எனினும் வீட்டு வசதிக் குமிழி உடைந்த நிலையில், உலகப் பொருளாதாரம் ஒரு நெடிய நெருக்கடிக் காலத்திற்குள் நுழைந்தது. தற்போதுள்ளதைப் போல இடையிடையே மீட்சி குறித்த பேச்சுகள் எழும்; ஆனால் யாரோ சொன்னதைப் போல, பந்து தரையில் குதித்துக் கொண்டிருப்பதோடு (analogy of a ball bumping along the floor )  ஒப்பிடும் வாதங்கள், பந்து தரையை நோக்கி வீழும்போது அதனோடு சேர்ந்தே நொறுங்கிவிடுகின்றன. இப்போதைய மீட்சியும் கூட தற்போது அமெரிக்க சந்தையின் வாங்கும் தன்மையில், அமெரிக்க மக்களின் செலவுத்திறைக் காட்டிலும் கூடுதலான அளவில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டது, எனவே அது அதிககாலம் நீடித்திருக்கக் கூடிய ஒன்றல்ல.

போர்களுக்கு இடையிலான காலகட்டத்தைப் போலவே இப்போதும், முதலாளித்துவ உலகத்தின் நெருக்கடி, உலகமெங்கும் பாசிச வளர்ச்சிக்கான புதிய ஊக்கத்தைக் கொடுத்துள்ளது. ஒருவர் இப்பிரச்சனை அத்தனை எளிதாகப் பார்க்கக் கூடாது; எடுத்துக்காடாக, ஜெர்மனியிலேயே ஏற்பட்டுள்ள  நெருக்கடி பல நாடுகளை பல நாடுகளை விடவும் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது, ஜெர்மனியில் வளரும் பாசிசத்தை உலக முதலாளித்துவ நெருக்கடி, அதனால் ஜெர்மனியில் உருவாகும் விளைவுகளோடு சேர்த்து விளக்கிப் புரிந்துகொள்ளவேண்டும். ஒரு அமைப்பு இயங்கும் முறை மீது குற்றம் சாட்டாமல், ”மற்றவர்களை” (சிறுபான்மையினரை) குற்றம்சாட்டுவதன் அடிப்படையில் அரசியல் நோக்கத்துடன் வெகுமக்களைத் திரட்டுதல், இந்தியா உள்ளிட்டு பல நாடுகளில் பரவலாக வளர்ச்சி பெற்றிருப்பது தெளிவானது.

இதன் பொருள் பாசிச அரசு பல இடங்களில் அரசதிகாரத்திற்கு வந்தே தீரும் என்பதோ, அல்லது அவர்கள் அதிகாரத்திற்கு வரும் இடங்களில், பாசிச அரசை ஏற்படுத்தி, அதன் ஆட்சியை நிலைநாட்டுவதில் உறுதியாக வெற்றியடையும் என்பதாகவோ பொருள்கொள்ள வேண்டியதில்லை. ‘பாசிசத்தின் கீழ், அடுத்த அரசாங்கம் ஒன்று இருப்பதில்லை’ என்ற புகழ்பெற்ற மைக்கேல் கலெக்கியின் மேற்கோள், அவர் குறிப்பிட்ட அக்காலகட்டத்தில் இருந்ததைப் போலவே இன்றைய காலங்களிலும் உண்மையல்லாது போகலாம். ஆனால், தற்கால பாசிசம் இன்னும் சில காலத்திற்கு நீடித்திருக்கப் போகிறது என்பது நிச்சயமான உண்மை.

மேற்குறிப்பிட்ட வகையில் உலகப் போருக்கு பிறகான காலகட்டத்தில் பாசிசத்தை ஓரங்கட்டிய இரண்டு நிலைமைகளும் இப்போது இல்லை. தற்கால பாசிசம், போர்களின் மூலம் (மனிதகுலத்திற்கு அளவற்ற அழிவுகளை ஏற்படுத்துகிற அதே நேரத்தில்) தன்னைத்தானே அழித்துக்கொள்வதாக இல்லை. பெரும் முதலாளித்துவ சக்திகளுக்கு இடையிலான போட்டி, அல்லது லெனின் பெயரிட்டு அழைத்த ‘ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான குரூரமான போட்டா போட்டி’ மட்டுப்பட்டிருப்பது வெளிப்படை, மேலும் அது அப்படியேதான் மட்டுப்பட்ட நிலையிலேயே தொடரும் என்றும் தெரிகிறது, இதற்கு முக்கியக் காரணம் நிதிமூலதனம் ஆகும். லெனின் காலத்தைப் போல அல்லாமல் அது இப்போது சர்வதேசம் தழுவியது, தனது எல்லைதாண்டிய கட்டற்ற சுற்றோட்டத்திற்கு முட்டுக்கட்டையாக அமைந்திடும் என்கிற காரணத்தால் உலகை எந்த வகையிலும் தனித்தனி செல்வாக்கு மண்டலங்களாக பிரிப்பதற்கு அது எதிராக நிற்கிறது. டொனால்ட் டிரம்ப், சீனாவுக்கு எதிராக போர்முரசு கொட்டிவரும் போதிலும், உடனடியாக எந்தப் போரும் நிகழப்போவதாக இல்லை; இருப்பினும் சில கட்டுக்குள் உள்ள முரண்பாடுகள் வெடித்தாலும் கூட  இதனால் நேரடியாக பங்குபெறாத  பிற நாடுகளில் உள்ள பாசிச சக்திகள் செல்வாக்கு இழந்துவிடாது.

அதைப் போலவே, முதலாளித்துவத்தின் பொற்காலத்திற்கு திரும்புவது மட்டுமல்ல, நெருக்கடிக்கு முந்தைய காலகட்டத்திற்கு செல்வது சாத்தியமில்லை என்பது கேள்விக்கிடமற்றதாகிவிட்டது; தாராளவாதிகளிடம் தற்போதைய நெருக்கடி நிலைக்கு நம்பத்தகுந்த தீர்வுகள் ஏதும் இல்லை. பெரும்பாலான தாராளவாதிகள், நெருக்கடி உள்ளது என்று அங்கீகரிப்பதில் கூட பாராமுகமாக உள்ளனர். தேர்தல் கால பரப்புரையில் டிரம்ப் நெருக்கடியைக் குறித்து பேசவேனும் செய்தார் என்பதுடன் அதற்கு ‘வெளியாட்களை’ குற்றம் சொல்லியதுடன், பகைமையைத் தூண்டவும் செய்தார், ஹிலாரி கிளிண்டன் அதுகுறித்து பேசவில்லை என்பதுடன், நெருக்கடி இருப்பதையே அவர் அங்கீகரிக்கவில்லை.

அரசு செலவினங்களின் வழியே கிராக்கியை ஊக்கப்படுத்துவது, அது ராணுவத் தேவைக்கான செலவாக இருந்தாலும் கூட, அது நிதிப்பற்றாக்குறையின் வழியாகவோ அல்லது முதலாளிகளின் மீது வரிபோடுவதன் மூலமாகவோ தான் கைகூடும் ( தனது வருமானத்தின் பெரும்பகுதியை ஏதாவதொரு வகையில் நுகர்வுக்காக செலவிடும் தொழிலாளிகள் மீது வரிபோடுவது , கிராக்கியை அதிகரிக்காது) அரசு செலவினங்களை உயர்த்துவதற்கான மேற்சொன்ன இரண்டு நிதி ஏற்பாடுகளும் நவதாரளமயக் கட்டமைப்பில் விலக்கப்பட்டவை, இந்த நடவடிக்கைகள் உலகமய நிதி வெறுப்புக்கு உள்ளான நடவடிக்கைகளாகும். அத்துடன் பாசிஸ்டுகள் மட்டுமல்லாது தாராளவாதிகளுக்கும் உலகமய நிதிமூலதனத்தின் மேலுள்ள அக்கறை எவ்விதத்திலும் குறைவானதல்ல. உண்மையில் அவர்கள் பாசிஸ்டுகளை விடவும், உலகமய நிதி மூலதனத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் நவ தாராளமயத்திற்கு உறுதியாக இருப்பவர்கள். (இருப்பினும், பாசிஸ்டுகளை விட தாராளவாதிகள் நவீன தாராளமயத்தில் உறுதியாக இருப்பார்கள் என்பது இந்தியச் சூழலில் உண்மையானதல்ல, அதிகாரத்திலிருக்கும் வகுப்புவாத பாசிஸ்டுகள், ‘தாராளவாத’ காங்கிரசைப் போலவே நவ தாராளமயத்திற்கு தங்களை ஒப்புக்கொடுத்தவர்களாக உள்ளனர்)

இப்படிப்பட்ட சூழலில் நாம், நவதாராளமயம் நீடித்திருக்கும்வரை பாசிசம் வற்றாது ஜீவித்திருக்கும் நிலையில் சிக்கிக் கொண்டுள்ளோம். இது தற்கால நிலைமையை பேரிடரானதாக ஆக்குகிறது. பாசிசம், பாசிச அரசை நோக்கி நகருமாயின், அபாயம் இன்னும் வெளிப்படையானதாகிறது. அது ‘தேர்தல் விளையாட்டுகளை’ விளையாடும் போதிலும், வாக்குகளைப் பெற முடியாமல் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டாலும், அது ஒரு மாற்றாக தொடர்ந்திருக்கும், காலச் சுற்றோட்டத்தில் அதிகாரத்திற்கு வரும், அரசியல் மற்றும் சமூக ‘பாசிசமயத்தை’ நோக்கி சீராக முன்னேறும்.

நவதாராள முதலாளித்துவத்திற்குள், பாசிசஇருப்புக்கு அணைபோடவோ ஓரங்கட்டவோ முடியாது. உலகப் பொருளாதாரத்தை நெருக்கடியில் மூழ்கடித்து, முட்டுச் சந்தில் தப்பிக்க இயலாமல் மாட்டிக் கொண்டிருக்கும் நவதாராளமயத்தின் தற்போதைய முதிர்ச்சிக் கட்டம் மனித குலத்திற்கு வழங்கியுள்ள ‘பரிசு’ பாசிசமாகும்.

பாசிசத்தின் இருப்பை தாண்டிச் செல்வதற்கான (transcending ) ஒரே வழி, நவதாராள முதலாளித்துவத்தை வீழ்த்தி முன்னேறுவதுதான். இடதுசாரிகளால் இதனை நிறைவேற்றி சோசலிச மாற்றை நோக்கி முன்னேற முடியும், ஆனால் அது தாராளவாதத்திற்கு உள்ள மக்கள் ஆதரவுத்தளத்தை வென்றெடுப்பதன் மூலமே கைகூடும். இதற்கு தாராளவாத அரசியல் சக்திகளை வென்றெடுக்கவேணுமென்ற புரிதல் தேவைப்படுகிறது. அதே நேரத்தில் இடதுசாரிகள் நவீன தாராளமயத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் மாற்றான, மக்களுக்கு நன்மைகளை ஏற்படுத்துகிற பொருளாதாரத் திட்டத்தை அழுத்தமாக வலியுறுத்த வேண்டும். இந்தப் பொருளாதாரத் திட்டத்தை நடைமுறைப்படுத்த, தற்போதைய உலகமயத்திடமிருந்து துண்டித்துக்கொள்வது மிகத் தேவை. கண்மூடித்தனமான மூலதன ஓட்டத்திற்கு விதிக்கவேண்டிய கட்டுப்பாடுகளைச் எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். இடதுசாரிகள் தங்களது ஆற்றல்மிகு பாத்திரத்தை பொருளாதார மற்றும் அரசியல் தயக்கங்கள் ஏதுமின்றி சாதித்திட வேண்டும்.

தமிழில்: இரா.சிந்தன்

மோடி ஆட்சியின் மூன்றாண்டு: அரசியல் துறையில் எதேச்சாதிகாரம் …

கடந்த 3 ஆண்டுகளில் மோடி அரசு பின் பற்றி வந்த பொருளாதாரக் கொள்கைகள், இந்த தேசத்தின் பெருமுதலாளிகள், கார்ப்பரேட் நிறு வனங்களின் சொத்துக்களை அபரிமிதமாக வளர்க் கும் பாதையில் சென்றிருக்கிறது என்பதற்குப் பல உதாரணங்கள் உண்டு. அதை, பொருளாதாரத்துறை குறித்த கட்டுரை படம் பிடித்துக் காட்டுகிறது. இதனால் வர்க்க சேர்க்கை ரீதியாக ஏற்பட்டுள்ள ஓர் அரசியல் அம்சம் என்னவென்றால், பெரு முதலாளிகள் ஏறத்தாழ முழுமையாக பாஜக பின்னால் சென்றுள்ளனர் என்பதே. பெருமுதலாளி களின் இரண்டு தேசிய கட்சிகளில் காங்கிரஸ் தேய்ந்து வருவதும், பாஜக வளர்ந்து வருவதும் தெரிகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது கட்சி காங்கிரசின் அரசியல் தீர்மானம், பாஜக அரசு நவீன தாராளமயத்தையும் இந்துத் வாவையும் இணைத்து ஏகாதிபத்திய ஆதரவு திசை வழியில் செல்கிறது; இத்துடன் மக்களவை யில் அறுதி பெரும்பான்மை என்ற நிலை, பாஜக அரசை எதேச்சாதிகார பாதையில் செலுத்தும் என்பதை கவனப்படுத்தியது. 3 ஆண்டுகளில் மோடி அரசு பயணித்திருக்கும் அரசியல் பாதை இதை வலுவாக நிரூபித்திருக்கிறது.

நாடாளுமன்றம் உள்ளிட்ட தீர்மானிக்கும் அமைப்புகளை ஓரம் கட்டுதல்
பல முக்கிய முடிவுகள் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் எடுக்கப்படுகின்றன. திட்ட கமிஷனைக் கலைத்தது முதல் இறைச்சிக்காக மாடுகளின் அனைத்து வகைகளையும் சந்தையில் விற்பனை செய்யக் கூடாது என்ற அறிவிக்கை வரை அனைத்தும் பிரதமர் அலுவலகத்தை மையப் படுத்தி எடுக்கப்பட்டுள்ளன. மாட்டிறைச்சி விவகாரத்தை அமைச்சரவையில் விவாதித்த தாகக் கூட தெரியவில்லை. மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்திய பண மதிப்பு நீக்கம் குறித்த பிரத மரின் அறிவிப்பும் இந்த வகைக்குட்பட்டது தான். அமைச்சரவையைக் கூட கலந்து பேசாமல் பிர தமர் அலுவலகம் அவசர சட்டங்கள் இயற்றித் தம் ஒப்புதலுக்கு அனுப்புவதை குடியரசு தலை வர் ஒரு முறை சாடியிருந்தார்.

பிரதமர் அவைக்கு வருவதும், பேசுவதும், விவாதங்களுக்கு பதில் கூறுவதும் அரிதாகவே உள்ளன. நிலம் கையகப்படுத்தும் சட்டம் மாநிலங் களவையின் ஒப்புதலைப் பெறாத சூழலில், அதனை மீறுவதற்காக, மாநிலங்கள் தனித்தனியாக இத் தகைய சட்டங்களைப் பிறப்பித்துக் கொள்ளு மாறு வழிகாட்டப்பட்டது. ஆதார் குறித்த விவாத மும், சட்டம் நிறைவேற்றலும் நடப்பதற்கு முன்பே ஆதார் கட்டாயமாக்கப்பட்டது. ஆதார் சட்டம் மாநிலங்களவையால் நிராகரிக்கப்படும் என்ற சூழலில், அது, பண மசோதாவாக தாக்கல் செய்யப் பட்டு, மாநிலங்களவையின் ஒப்புதல் பெற வேண் டிய அவசியமே இல்லாமல் நிறைவேற்றப்பட்டது. இப்போது வரை இதில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு கள் தொடர்ந்து மீறப்படுகின்றன.

அயல்துறை கொள்கையில் அணி சேரா நிலை யைக் கைவிட்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு சாதகமாக செயல்படுதல்; இந்திய மக்களின் நலனுக்கும், இறையாண்மைக்கும் விரோதமான உடன்படிக்கைகளில் கையெழுத்திடல்; பாலஸ் தீனம் உள்ளிட்ட பிரச்னைகளில் இந்தியாவின் பாரம்பர்ய நிலைபாட்டை மீறுதல்; பாதுகாப்பு துறை துவங்கி சில்லறை வர்த்தகம் வரை 100ரூ அந்நிய முதலீடு ஏற்பு; கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு சாதகமான நிலப் பறிப்பு; பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளையைத் தடுத்துநிறுத்தாமல், மருத்துவர்கள் பிராண்ட் பெயரை மருந்து சீட்டில் எழுதுவது தான் விலை ஏற்றத்துக்குக் காரணம் என்ற தோற்றத்தை உருவாக்குதல் போன்றவற்றில் சில காங்கிரஸ் துவங்கி வைத்ததைத் தீவிரப்படுத்துவதாகவும், வேறு சில பாஜகவின் தத்துவார்த்த நிலைபாடு களுக்கு ஏற்பவும் அமைந்துள்ளன. அரசியலில் பெருமுதலாளிகள், கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கமும், செல்வாக்கும் ஓங்கி வரும் போக்கு முன்னெப்போதையும் விட நிதர்சனமாகத் தெரி கிறது. பெருமுதலாளிகள் அரசை வழி நடத்தும் வரை, ஏகாதிபத்திய ஆதரவு பொருளாதார கொள் கைகளைக் கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் வரை, அணி சேரா அணுகுமுறையும், ஏகாதிபத் திய எதிர்ப்பும் கொண்ட அயல்துறை கொள்கை உருவாவதை உறுதி செய்ய முடியாது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் கூறுவதை இதனோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.

பற்றி எரியும் காஷ்மீர் பிரச்னையைப் பொறுத்த வரை, அரசியல் தீர்வை நோக்கிப் போவதற்கு பதிலாக அனைத்தையும் பாகிஸ்தான் பயங்கர வாதம் என்ற ஒற்றை கருத்தாக்கத்துக்குள் திணிப் பது, அதற்கு பதிலடி ராணுவ நடவடிக்கை தான், அதை விமர்சிப்பவர்கள் பயங்கரவாதத்தை ஆதரிப் பவர்கள் என்ற நிலை எடுப்பது போன்ற அரசின் நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை என்பது மட்டுமல்ல; அது பிரச்னையை மேலும் மேலும் சிக்கலாக்குகிறது. சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் தூதுக்குழு அங்கு சென்று பார்வையிட்டு, சில பரிந்துரைகளை அரசுக்கு அளித்தும், அரசு அவை குறித்து பாராமுகம் காட்டுகிறது. மொத்தத்தில் அங்கு பிரச்னைகள் தீர்க்கப்படுவதில் அக்கறை இல்லை. தேசியத்தையும் ராணுவ நடவடிக்கை களையும் இணைத்து வெறியூட்டி அரசியல் லாபம் ஈட்டுவதே நோக்கம்.
ஜனநாயக உரிமைகள்/மரபுகள் நொறுக்கப்படுதல்
அருணாச்சல பிரதேசம், உத்தராகண்டில் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசாங்கங்களைக் கலைத்ததும் சரி, கோவா, மணிப்பூரில் சிறுபான்மையாக இருந்தும் குதிரை பேரம் நடத்தி ஆட்சியைப் பிடித்ததும் சரி, ஜனநாயக மரபுகளை மீறும் செயலாகும். பாஜக ஆளும் ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களில், உள்ளாட்சி தேர்தலில் வேட் பாளராகப் போட்டியிட கல்வி உள்ளிட்ட தகுதி களை நிர்ணயித்து, பெருவாரியான ஏழைகளை யும், தலித், ஆதிவாசி மக்களை, பெண்களைப் போட்டியிட விடாமல் தடுத்தது ஜனநாயகத்துக்கு விழுந்த பலமான அடி. உ.பி. உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் சட்டரீதியான இறைச்சி கூடங்களையும் பூட்டி சீல் வைத்ததும் சட்ட மீறலே. கிட்டத்தட்ட அனைத்து உயர்மட்ட நிறுவனங்களிலும் தலைவர் பொறுப்புக்கு ஆர்.எஸ்.எஸ். போற்றிகளும், மோடி ஆதரவாளர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தலைமைக்கேற்ற தகுதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. ஆளுநர்கள் பொது வாக மத்திய அரசின் முகவர்கள் என்ற நிலை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. அருணாச்சல பிர தேசம், உத்தராகண்ட் போன்ற மாநிலங்களிலும், அண்மை காலத்தில் தமிழகம், புதுச்சேரியிலும் இதைப் பார்க்க முடிந்தது.
அதே போல் மத்திய புலனாய்வு துறை, வருமான வரித்துறையின் அமலாக்கப்பிரிவு எவ்விதத் தயக்கமும் இன்றி அரசியல் ரீதியாகத் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இப்போக்கின் அம்சங்கள் உணரப் பட்டுள்ளன. எதிர் கருத்து சொல்வோரும், விமர் சனம் செய்வோரும் பல்வேறு வழிகளில் அச்சுறுத் தப்பட்டு, அதன் மூலம் பிற பகுதியினரின் கைகள் முறுக்கப்படுகின்றன. உதாரணமாக, என்டிடிவி யின் நிகழ்ச்சிகள் பல பாஜக அரசின் தவறான நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதாக அமைந்த பின்னணியில், ஒரு நிகழ்ச்சியின் தொகுப்பாளர், பாஜகவின் சாம்பிட் பாத்ராவைக் கேள்வி மேல் கேள்வி கேட்டு அம்பலப் படுத்தினார் என்பதற் காக நிறுவனத்தின் இயக்குநர் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி, முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்தது. ஐசிஐசிஐ வங்கியை ரூ.48 கோடிக்கு ஏமாற்றினார் என்ற ஒரு தனிநபரின் புகாரின் மீது இந்நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட தனியார் வங்கி புகார் கொடுக்கவில்லை என்பதோ, சட்ட விதிகளுக்கு உட்பட்டு, பெரும் கடனை அடைக்கும்போது கணிசமான வட்டி விட்டுக் கொடுக்கப்படும் நடை முறை உள்ளது என்பதோ சிபிஐயின் அராஜக நடவடிக்கையைத் தடுக்கவில்லை. ரூ.72,000 கோடி கடன் பாக்கி வைத்திருக்கும் அதானி பிரதமரின் நண்பராக இருக்க முடிகிறது என்னும் போது, இது அரசியல் பழிவாங்கும் போக்கு என்பது தெள்ளத் தெளிவாக முன்னுக்கு வருகிறது. இதர ஊடகங்கள், சக ஊடக நிறுவனத்துக்கு ஏற்பட் டுள்ள இந்த நெருக்கடியை விமர்சிக்கத் தயங்கும் நிலை உருவாக்கப் படுகிறது.
தேச பக்தி என்பது ஒரு குறிப்பிட்ட வகை தேசியமாக உருமாற்றம் செய்யப்பட்டு, அந்த அளவுகோலை மீறுபவர்கள் தேச பக்தி அற்றவர் கள் என்ற பொதுக்கருத்து உருவாக்கப்படுகிறது. குறிப்பாக மோடியை விமர்சிப்போர் தேச துரோகிகள் என்ற முத்திரை விமர்சனங்களைத் தடுக்கும் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. எந்தப் பிரச்னையை எடுத்தாலும், ராணுவ வீரர் களின் தியாகத்துக்கு முன் இது எம்மாத்திரம் என்ற ஒற்றை கேள்வியில் பதில் அளிக்கப்படுகிறது அல்லது பதில் மறுக்கப்படுகிறது. அதே ராணுவ வீரர்கள் ஒரு ரேங்க் ஒரு ஓய்வூதியம் என்று கேட்டால் கிடைப்பதில்லை. போரில் ஊனமுற்றோருக்கான உதவித் தொகை குறைக்கப் படுகிறது. ராணுவ வீரர்களின் தியாகம் பாஜக வின் அரசியலில் பகடைக்காயாக பயன்படுத்தப் படுகிறது. தேச விடுதலைப் போராட்டத்தில் எதிர்நிலை எடுத்தவர் களால் தேச பக்தி குறித்து உரத்து பேச முடிகிறது என்ற நிலையே அபாயகரமானது.

வரலாறு திரிக்கப்படுகிறது. இல்லாத சரஸ்வதி நதியைத் தேட கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதும், கீழடி போன்ற ஆய்வுகள் இவர் களின் நிகழ்ச்சி நிரலுக்குத் தோதாக இருக்காது என்பதால் அதை சீர்குலைக்க முயல்வதும் நடக் கிறது. அரசியல் சாசனம் வலியுறுத்தும் அறிவி யல் பார்வைக்கு நேர் விரோதமான கருத்துக்கள் முன்மொழியப் படுகின்றன. பிரதமர் துவங்கி, இவர்கள் நியமிக்கும் ‘நிபுணர்கள்’ வரை, அரசாங்க துறைகளின் பொறுப்பு அதிகாரிகள், அமைச்சர் கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டு இதை செய்கின்றனர். அறிவியல், கணிதம், விண்வெளி ஆய்வு போன்ற துறைகளில் இந்தியாவின் அற்புத பங்களிப்பு உண்டு. ஆனால் அதை விட்டுவிட்டு பிளாஸ்டிக் சர்ஜரி, குளோனிங், விமானம் போன்ற நவீன கண்டுபிடிப்புகள் புராதன இந்தியாவில் நடைபெற்றன என்று கற்பனைகளை அறிவியல் உண்மைகள் போல் முன்வைப்பது, சமீபத்தில், உயரமான, சிவப்பான குழந்தை வேண்டும் என்றால், குறிப்பிட்ட நேரத்தில் தாம்பத்ய உறவு வைக்க வேண்டும்; கர்ப்பிணி பெண்கள் இறைச்சி சாப் பிடக் கூடாது; பாலியல் இச்சைக்கு உட்படக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் வரை கேலிக் கூத்துகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இவற்றில் இன ஒதுக்கல், பெண்ணடிமைத்தனம் உள்ளிட்ட கருத்தியல் இருப்பதைக் காண தவறக் கூடாது.
பேயாட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங் கள் என்று கூறுவார்கள். அது போல, அரசு எவ்வழியில் போகிறதோ, அவ்வழியில் ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசியாக நடப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ராஜஸ் தான் உயர்நீதிமன்ற நீதிபதி, பசு ஒரு சிறந்த மருத்துவர் என்று கூறியதாகட்டும், ஆண் மயில் பிரம்மச்சாரி, அதன் கண்ணீரை உண்டு பெண் மயில் கர்ப்பம் தரிக்கிறது என்று கூறியதாகட்டும், பசு பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு என்ற பெயரில் தாக்குதல் நடத்தும் ரவுடி படைகளைக் களத்தில் இறக்க சமிக்ஞை கொடுப்பதாகட்டும், இந்தப் படைகள் செய்யும் குற்றங்களைக் கண்டு கொள்ளாமல் பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்கு போடும் காவல் துறையாகட்டும், அனை வரும் இந்தப் பட்டியலில் வருபவர்கள் தான்.

மாநில உரிமைகள் பறிக்கப்படுதல்
கூட்டாட்சி கோட்பாடு ஆர்.எஸ்.எஸ். அமைப் பினருக்கு எப்போதுமே உடன்பாடில்லாத விஷயம் தான். வலுவான மத்திய அரசு, மத்திய அரசை சார்ந்து செயல்படும் பலவீனமான மாநில அரசு கள் என்பது தான் அவர்களின் கோட்பாடு. மத வெறி நிகழ்ச்சி நிரலோ கார்ப்பரேட் ஆதரவு நிகழ்ச்சி நிரலோ தங்கு தடையில்லாமல் நிறை வேற இது ஒரு முன் நிபந்தனை என்றே அவர்கள் கருதுகின்றனர். குறிப்பாகத் தமிழகத்தில் இதன் பாதிப்புகளைப் பார்க்கிறோம் – உணவு பாது காப்பு சட்டம், நீட், ஜிஎஸ்டி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு, இந்தி மொழி திணிப்பு, நெடு வாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம், மாட்டி றைச்சி குறித்த சட்ட திருத்தம், திட்ட கமிஷன் கலைப்பு, ஊரக வேலை உறுதி சட்டம் உள்ளிட்ட மத்திய திட்டங்களை அமல்படுத்த மாநிலங் களுக்கு அளிக்கப்படும் நிதி வெட்டிச் சுருக்கப் படுதல் போன்ற பல உதாரணங்கள் உள்ளன. தமிழகத்துக்கு, மத்திய அமைச்சகங்கள் நிலுவை வைத்திருக்கும் தொகை ரூ.17,000 கோடியை எட்டும். நிதி சிக்கலை ஏற்படுத்தி, தங்களின் கட்டுப்பாட்டுக்குள் மாநில அரசுகளை வைக்கும் ஏற்பாடே இது.

மார்க்சிஸ்ட் கட்சி செய்த மதிப்பீட்டை உண்மையாக்கும் நிகழ்வுகளே மோடி அரசின் 3 ஆண்டு கால ஆட்சியில் நடந்து கொண்டிருக் கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை லாபத்தை பலப்படுத்தும் பொருளாதார நடவடிக் கைகளும், மதவெறி நிகழ்ச்சி நிரலும்தான் பாஜக ஆட்சியின் அரசியலாக பரிணமித்துள்ளன. உழைக் கும் வர்க்கத்தின் எதிரி, ஆயுதமாக ஏந்தியிருக்கும் இந்த இரண்டு அம்சங்களின் பாதிப்புகளை எதிர்த்த போராட்டங்களை ஒருங்கிணைக்க வேண்டும்; பலப்படுத்த வேண்டும் என்பதுதான் சரியான நிலைபாடு. வாழ்வுரிமை பாதிப்புகளை எதிர்த்த போராட்டத்தில் சாதி, மதம் கடந்த ஒற்றுமை யைக் கட்ட முடியும். இதன் மூலம் மதவெறி நிகழ்ச்சி நிரலுக்கான எதிர்ப்பைக் கட்டமைக்க முடியும். பரந்து பட்டதாகவும் ஆக்க முடியும். பாதை தெளிவாகத் தெரிகிறது, அதில் அதிக மான பயணிகள் பயணிக்கும் நிலையை ஏற்படுத்து வதுதான் பாஜக அரசின் எதேச்சாதிகார அரசியல் நிகழ்ச்சி போக்கைக் கட்டுப்படுத்தும் பேராயுதம்.

வகுப்புவாத தேசியத்தை வீழ்த்தும் மாற்று எது?

உத்தரபிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் அரசியல் சக்திகளிடையே யும், மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளிடையேயும், நிறைய கேள்விகளை எழுப்பியுள்ளன. ஊடகங் கள் வெளியிட்டுள்ள தரவுகளை மட்டும் வைத் துக் கொண்டு, இதனை மதிப்பீடு செய்வது பலன் தராது. இந்தத் தரவுகளுக்கு காரணமான சூழல், அந்தச் சூழல் உருவாக்கப்பட்ட அடிப்படை ஆகியவை குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்.

இந்தத் தேர்தல் முடிவுகள், மாநிலத்தை ஆட்சி செய்த கட்சிகள் அல்லது கூட்டணி ஆகிய வற்றுக்கு எதிராக அமைந்துள்ளன என்பது பொதுவான செய்தி. கோவாவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்திருந்தாலும், அதில் ஆளுநர் மற்றும் பாஜகவின் குதிரை பேரம் அப்பட்டமாக வெளிப்பட்டது. மற்றொரு பொதுவான செய்தி, மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக மீதான அதிருப்தி இந்த மாநிலத் தேர்தல்களில் பிரதிபலிக்கவில்லை. காரணம் மாநில முதலாளித்துவ கட்சிகள் அல்லது காங்கிரஸ், பாஜகவின் மத்திய ஆட்சி மீதான அதிருப்தியை அறுவடை செய்ய இயலவில்லை; அதற்கேற்ற உத்தியும் அவர்களிடம் இல்லை. இடதுசாரிகள், அமைப்பும் வலுவுடன் இல்லை.

பஞ்சாபில் பாஜக படுதோல்வி அடைந்தது. என்றாலும் அது மத்திய ஆட்சி மீதான அதிருப்தி யின் விளைவு என்ற முடிவுக்கு முழுதாக வரக் கூடியதாக இல்லை. காரணம், பாஜக பஞ்சாபில் அகாலி தளத்துடன் கூட்டணியில் இருந்தது. மாநில ஆட்சி, பாதல் குடும்ப ஆதிக்கத்தின் மீதான வெறுப்பு இருந்தது. பாஜக கூட்டணியில் பங்கு வகித்ததன் காரணமாக சீக்கியர்களிடம், இந்துத்துவா மேலாதிக்கம் சிறு பாதிப்பை ஏற் படுத்தியிருக்கக் கூடும்.

அதேநேரம் சில குறிப்பான செய்திகளையும் இந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. ஒன்று, பாஜக உத்தரப்பிரதேசம், உத்தர்கண்ட் மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற திட்டமிட்டு செய்த பணிகள். தனக்கு வலு இல்லாத, மணிப்பூரிலும் குதிரை பேரத்தின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றியிருப்பது. அதே போல், நிர்வாக அமைப்புகளில் திணிக்கப்படும் இந்துத்துவக் கொள்கை. (உதாரணமாக ஆளுநர் களின் செயல்பாடு) மேலும் இந்த தேர்தலில் பாஜகவின் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலும் வகுப்பு வாத கலவரங்களும், ஊடக மேலாதிக்கமும் மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளுக்கு கடுமையான சவாலை ஏற்படுத்தியுள்ளன.

பாஜகவின் திட்டமிடல்:
ஐந்து மாநிலத் தேர்தலிலுமே வெற்றி பெற்றாக வேண்டுமென்ற முனைப்பில் பாஜக இருந்தது. குறிப்பாக உத்தரப்பிரதேசம் இந்தியாவின் மிகப் பெரிய மாநிலம். அங்கே வெல்வதன் மூலம், தானொரு வெல்லற்கரிய சக்தி எனக் காட்டிக் கொள்வதும். அதை இந்தியா முழுமைக்கும் பொதுமைப் படுத்துவதும் பாஜகவின் விருப்ப மாக இருந்தது. அதற்கேற்றவகையில் திட்ட மிட்டது. உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2014 நாடாளு மன்றத் தேர்தலுக்கு முன்பாகவே இந்துத்துவா சக்திகள் தீவிர கவனத்தை மேற்கொண்டு வந்தன.

முதலில், அணிகளைத் தயார் செய்வது. உ.பி யில் மட்டும் சேர்க்கப்பட்ட உறுப்பினர்கள் 1.80 கோடி. அதில் செயல்படும் கட்சி உறுப்பினர் களாக 67,605 நபர்களை மாற்றியுள்ளது பாஜக. இது கடந்த ஆண்டைவிட இரு மடங்கு. வாக்கு சாவடி மட்டத்தில் 1.47 லட்சம் பொறுப்பாளர் களை உருவாக்கி, அவர்களுடைய முகவரி உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்து, அவர்களுடனான தொடர்பை வலுப்படுத்தியுள்ளது. இந்த வாக்கு சாவடிகளில் குறைந்தது 10 பேர் கொண்ட கமிட்டி அமைத்து, 13.50 லட்சம் ஊழியர்களை உருவாக்கியுள்ளது. 100 – 125 வாக்குச் சாவடி களைக் கொண்ட மண்டலங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. மண்டல ஊழியர்கள் ஒரு லட்சம் பேருக்கும், மாவட்ட அளவில் 15 ஆயிரம் பேருக் கும் பிரத்யேகப் பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது.

இரண்டாவது, பிரச்சாரம். அமித் ஷாவின் நேரடிப் பார்வையில் விளம்பர நிறுவனங்கள் உதவியுடன் செயல்பட்டனர். 34 தாமரை மேளாக் கள் நடத்தப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றி லும் 60 ஆயிரம் பேர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டது. நாடகப் பிரச்சாரம் பெரும் ஈர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. 8574 நாடகங் கள் நடத்தப்பட்டுள்ளன. வீடியோ வேன்கள் மாநிலம் முழுவதும் பயணம் செய்துள்ளன. இவற்றின் மூலம் 47 லட்சம் பேரைச் சந்தித் துள்ளனர். மனதோடு பேசுவோம் என்ற வீடியோ ரத நிகழ்வு மூலம், நிறைய பகுதிகளில் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ கான்ஃ பரன்ஸ் மூலம் அமித் ஷா நேரடியாக 74,200 இளைஞர்களுடன் உரையாடியுள்ளார்.

மூன்றாவது, சமூக வலைத்தளங்களைப் பயன் படுத்தியது. பாஜக சமூகவலைத் தளங்களை மிக அதிகமாக பயன்படுத்தி வருகிறது. பாஜக4உபி (க்ஷதுஞழருஞ) என்ற பெயரில் பல குழுக்கள் உருவாக்கப் பட்டன. குறிப்பாக வாட்ஸாப் குழுக்கள் மிகப் பெரிய பங்களிப்பு செய்துள்ளன. 10,344 வாட்ஸாப் குழுக்கள் மூலம் 15 லட்சம் மக்களை இணைத் துள்ளனர். பாஜக தனக்கு உள்ள பொருள் செல்வாக்கு காரணமாக, முழுநேர ஊழியர் களாக தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள், மாநிலத்தில் 5,031 நபர்களை நியமித்து செயல் படுத்தியுள்ளது. இவை அனைத்தும் பாஜகவின் சொந்த செல்வாக்கில் உருவாக்கப்பட்டவை. இதர ஊடகங்களும் பாஜகவிற்கு சாதகமாக, ஒரு தலைப் பட்சமாக செயல்பட்டன என்பதும் முக்கியமானது.

பாஜகவின் ஊடக மேலாதிக்கம்:
அச்சு, மின்னணு ஊடகங்கள் என அனைத்துமே எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல், பாஜகவிற்கு சாதகமாக செயல்பட்டன. குறிப்பாக கருத்து உருவாக்கத்தில் பாஜகவிற்கு சாதகமான வாக் காளரின் மனநிலையை உருவாக்க, இத்தகைய பாரபட்சமான செயல்பாடு பயன்பட்டது. உதாரணத்திற்கு டெய்னிக் ஜாக்ரன் டெய்லி என்ற இதழ், தேர்தல் ஆணையத்தின் தடையை மீறி, கருத்துக் கணிப்புக்கு அப்பாற்பட்டு, வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு நடத்தி, அதை 6 கட்ட தேர்தல்கள் நடக்க உள்ள நிலை யில் வெளியிடவும் செய்தது. இது அப்பட்ட மான சட்டமீறலாகும்.
டெய்னிக் ஜாக்ரன் டெய்லி உ.பியின் முதல் கட்டத் தேர்தலில் 73 தொகுதிகளுக்கு 60- ல் பாஜக வெற்றி பெறுமென செய்தி வெளி யிட்டது. அது பின்னர் நடந்த 6 கட்ட வாக்குப் பதிவில் பிரதிபலித்துள்ளதை பல்வேறு ஆய் வாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக நடுநிலை வாக்காளர்கள் எனக் கருதப்படுவோர் வெற்றி பெறும் கட்சிக்கு ஆதரவாக, தங்கள் மனநிலையை மாற்றிக் கொண்டுள்ளனர்.

திட்டமிட்ட வகுப்புவாதப் பிரச்சாரம்:
மேலே குறிப்பிட்ட பாஜகவின் ஊடகம், பிரச் சாரத் திட்டமிடல், அதன் நிகழ்ச்சி நிரலான, வகுப்புவாத அணிதிரட்டலுக்கு ஏற்ப தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டது. அதேபோல் ஒரு பொய்யைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்வதன் மூலம் அதை உண்மையாக்க முடியும் என்ற திசையிலேயே பாஜக செயல்பட்டது. உதாரணமாக இஸ்லாமி யர்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள் கின்றனர். காரணம் அவர்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதில்லை. முத்தலாக் மூலம் அதிக திருமணம் செய்து கொள்கின்றனர் போன்ற வற்றைச் சொல்லலாம். முத்தலாக் போன்றவை கைவிடப்பட வேண்டும் என கம்யூனிஸ்டுகள் உள்பட, விமர்சனம் செய்கின்றனர். ஆனால் அதிகமாக முத்தலாக் மூலம் கூடுதல் திருமணங் கள் நடைபெறுவதாக கூறுவது பொய் பிரச் சாரம் என்பதை அறிய வேண்டியுள்ளது.
உ.பி. யில் தேர்தல் பிரச்சாரம் செய்ய கணிசமான ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் பயன்படுத்தப்பட்ட னர். மேற்கு உ.பியில், “குஜராத் முஸ்லிம்கள் மனி தனின் மண்டை ஓட்டை வைத்து பேருந்துகளில் இடம் பிடிப்பர். இதன் காரணமாக இந்துக்கள் பாதிக்கப்பட்டனர். பாஜக ஆட்சி வந்த பின்தான் முஸ்லிம்களின் இத்தகைய செயல் ஒழிந்தது. உ.பியில் 2012 ஆண்டைப் போல் முஸ்லிம் எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற்றால், காவலர்களைக் கொண்டு, இந்துப் பெண்களைத் தூக்கிச் செல்வர்” எனப் பிரச்சாரம் செய்துள்ளனர். உண்மைக்கு புறம் பான இந்த வெறுப்பு அரசியல் பிரச்சாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமியருக்கான இடுகாடுகள் ( கபர்ஸ் தான் ) மிக அதிகம் என்றும், இந்துக்களுக்கான மயானங்கள் குறைவு என்றும் பிரதமர் மோடியே பிரச்சாரம் செய்தார். இது அப்பட்டமான பொய் பிரச்சாரம் மட்டுமல்ல. திட்டமிட்ட வெறுப்பு அரசியல் ஆகும். இத்தகைய வெறுப்பு அரசியலுக்கு ஊடகங்களும் துணை செய்தன. இது `ஹிட்லரின் நாஜிக் கட்சி ஆட்சிக்கு வருவதற்காக, யூதர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக செய்த பொய்ப் பிரச்சாரத் தைப் போன்றது. மோடி, யோகி ஆதித்யநாத் அல்லது மகேஷ் சர்மா என நபர்கள் மட்டும் பொறுப்பல்ல. இந்த பிரச்சாரம் திட்டமிடப் பட்ட ஒன்று. இந்து ராஷ்ட்ரா என்ற முழக்கத்தை, சாவர்க்கர், கோல்வால்கர் போன்றோர் முன் வைக்கும்போதே பிறந்ததாகும். உதாரணத்திற்கு பாஜக இத்தேர்தலில், பசு பாதுகாப்பு என்ற முழக்கத்தை தீவிரமாக்கியது.
முகம்மது இக்லக் என்பவர் கொல்லப்பட்டார். மீரட் சுற்றுவட்டாரப்பகுதி தொழில் வளர்ச்சி பெற்ற பகுதி. இருந்தாலும் மக்கள் சிந்தனையில், தொழில் வளர்ச்சிக்கேற்ற, வளர்ச்சி ஏற்பட வில்லை. இடதுசாரிகளோ, பாஜகவுக்கு எதிரான கருத்துவலிமை கொண்ட அமைப்புகளோ செயல்படவில்லை. எனவேதான் பாஜக தலைவர் கள் ஒருபுறம் பசு பாதுகாப்பு என முழங்கவும், மறுபுறம் மாட்டிறைச்சித் தொழிற்சாலையையும் நடத்த முடிந்தது. இந்த முழக்கம் தேர்தலுக்குப் பயன்பட்டது.

புதிய முதல்வர் ஆதித்யநாத், சட்டவிரோத மாட்டிறைச்சி கூடம் தடை செய்யப்படும் என அறிவித்து செயல்படுகிறார். இதுபோன்ற காரணத்தால், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச பாஜக அரசுகள் பசுவதையில் ஈடுபடுவோருக்கு ஆயுள்தண்டனை, மரண தண்டனை என கூவு கின்றன. பாஜகவின் இந்த உணவு வெறுப்பு அரசியலை காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் வலுவான எதிர் பிரச்சாரத்தின் மூலம் எதிர்கொள்ளவில்லை.
உணவு, உற்பத்தியின் தன்மைக்கேற்றது. உ.பி., உள்ளிட்ட வட இந்தியாவின் மையப் பகுதி முழுவதும், மேய்ச்சல் மற்றும் விவசாய உற்பத்தி சார்ந்தது. எனவே உணவுப் பொருள் பட்டியலில் மேய்ச்சலுக்கு உள்ளான கால்நடைகள் இருப்பது இயல்பு. குறிப்பாக உழைப்பாளி மக்களின் உணவாகவும் கால்நடைகள், அமைகின்றன. இந்த பண்பாட்டு அம்சம் அல்லது உற்பத்தி வளர்ச்சி குறித்த பார்வை, முதலாளித்துவ கட்சிகளுக்கு இல்லை. அதன் விளைவே ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங் பரிவாரத்தின் வெறுப்புப் பிரச்சாரத்தை முறியடிக்க முடியவில்லை.

சாதித் திரட்டலுக்கு உதவிய லவ் ஜிகாத்:
இந்துத்துவா வகுப்புவாதம், மத அடிப் படையில் மட்டும் மக்களைப் பிளவுபடுத்த வில்லை. சாதி ரீதியில் அரசியல் செய்து வந்த கட்சிகளிலும் சரிவை ஏற்படுத்திய முழக்கமாக லவ் ஜிகாத் அமைந்தது. பாஜக மத்திய ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியவுடன் முன்வைத்த முழக்கம் லவ் ஜிகாத். அதாவது, இஸ்லாமிய இளைஞர்கள் ஆடம்பர உடை அணிந்து இந்துப் பெண்களை ஏமாற்றுகின்றனர். அவர்கள் வீசும் காதல் வலையில் இந்துப் பெண்கள் மயங்கும் நிலை உள்ளது போன்ற கருத்துக்களை விதைத் தனர்.
சமாஜ்வாதி யாதவ் சாதியினரின் வாக்கு களைக் பெரும்பான்மையாகக் கொண்ட கட்சி, பாஜகவின் மேற்குறிப்பிட்ட வகையிலான பிரச் சாரம், உ.பியின் இதர சாதிய இந்துக்கள் என்ற பிரிவினரிடம் ஏற்புடையதாக அமைந்தது. அதன் விளைவு அத்தகைய குணம் கொண்ட சிறு அரசி யல் கட்சிகள் பாஜகவுடன் தேர்தல் உடன்பாடு செய்து கொண்டன. அது பாஜகவின் வாக்கு சதத்தைத் தக்கவைக்கவும், இந்த அளவிற்கான வெற்றிக்கும் வழிவகுத்தது. மீரட் போன்ற மேற்கு உ.பி.யில் ஜாட் பிரிவினர் வசிக்கும் பகுதியில் கணிசமான மனமாற்றத்தை, இது போன்ற பிரச் சாரங்கள் உருவாக்கின. காதல் மீதும் வெறுப்பு அரசியலை மேற்கொள்ள முடியும் என்பதற்கான உதாரணமாக இது அமைந்துள்ளது. ஆதித்யநாத் முதல்வர் பொறுப்பேற்றபின் ரோமியோக்களை ஒழிக்கும் காவலர் படையை அமைத்துள்ளது இந்தப் பின்னணியில்தான். இது மனித குல வளர்ச்சிக்கு எதிரானது.

பொதுவாகக் கலவரங்கள் மூலம் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டு தனது ஆதரவு தளத்தை விரிவாக்கம் செய்துகொண்டுள்ளன என்பதை இடதுசாரிகளுக்கு அப்பாற்பட்ட ஜனநாயக எண்ணம் கொண்ட ஆய்வாளர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்தியாவில் 2012 ல் 668 வகுப்புக் கலவரங்கள் நடந்துள்ளது. அதில் உ.பி. யில் நடந்தது 118. 2013 ல் மொத்தம் 823 கலவரங் கள் நடந்துள்ளன. அதில் உ.பி.யில் மட்டும் 247. 2014 ல் மொத்தம் 644, உ.பி.யில் மட்டும் 133. இந்த கலவரங்கள் உ.பி.யை மையப்படுத்தி கவனம் செலுத்தப்பட்டதைக் குறிப்பிடுகிறது.
அதே நேரத்தில் மொத்த வகுப்பு கலவரங் களும் உ.பி., குஜராத், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் நடந்துள்ளது. பாஜக நீண்ட காலமாக ஆட்சியில் உள்ள குஜராத், ம.பி., காங் கிரஸ் ஆட்சியில் உள்ள கர்நாடகா, காங்கிரஸ் வசம் இருந்து பாஜக கைப்பற்றிய ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா. இது வெளிப்படுத்தும் உண்மை நீண்டகாலமாக பாஜக ஆட்சியில் இருப்பதற்கும், காங்கிரஸ் அல்லது பிராந்திய முதலாளித்துவ கட்சிகளிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றவும், பாஜகவிற்கு பிரதான ஆயுதமாக கலவரங்கள் பயன்படுகின்றன.
உ.பி.யில் நடந்துள்ள கலவரங்கள் பாஜகவிற் கான வாக்கு வங்கியைப் பலப்படுத்தியுள்ளன. குறிப்பாக முசாஃபர் நகர் பகுதியில் நடந்த கலவரங்கள் 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரும், பாஜகவின் செல்வாக்கு வாக்கு சதத் தில் பிரதிபலிக்கக் காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக முதல்வர் ஆதித்யநாத், ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினர்; இந்து யுவ வாகினி என்ற குண்டர் படையைக் கொண்டவர். அது நடத்திய தாக்குதல்கள் குறைத்து மதிப்பிடக் கூடியது அல்ல.

இரட்டையர்களாக செயல்படும் தாராளமயம் மற்றும் வகுப்பு வாதம்:
வகுப்புவாதம் எல்லா இடங்களிலும் தாராள மய பொருளாதாரக் கொள்கைகளுக்கு உதவி செய்து வருகிறது. தாராளமயம், வகுப்புவாதம் போன்ற அடிப்படைவாதத்தைத் தன் வளர்ச் சிக்குப் பயன்படுத்திக் கொள்கிறது. எனவே இரண்டும் இரட்டையர்களாகச் செயல்பட்டு வருகின்றன. கடந்த காலத்தில் பிரிட்டிஷ் காலனி யாதிக்க ஆட்சி, இந்தியாவில் மக்களைப் பிளவு படுத்தும் அரசியலை கையாண்டது. சுரண்டலை தொடர்ந்து செயல்படுத்தவும், காலனியாதிக்கத் திற்கு எதிராகப் போராடிய மக்களைப் பிளவு படுத்தவும் இந்த கொள்கை பயன்பட்டது.
இன்றைய பாஜக இதே போன்றதொரு பிளவு வாதக் கொள்கையைத்தான் கையாண்டு வருகிறது. விலைவாசி உயர்வு, வறுமை உள்ளிட்ட பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகும் மக்களின் எதிர்ப் புணர்வை திசைதிருப்பி, இந்துத்துவ நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், வடிவமைக்கப்பட் டுள்ளது. இன்று காலனியாதிக்கத்திற்கு பதிலாக நவகாலனியாதிக்கம் பின்பற்றப்படுவதால், பாஜக ஆட்சியாளர்களே செயல்படுத்துகிறார்கள். அந்த வகையில் புதிய காலனியாதிக்கத்திற்கு சேவை செய்யும் பணியை, பாஜகவின் மத்திய ஆட்சி சிறப்பாக செய்கிறது.
மோடி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத் தப்பட்ட போது, வளர்ச்சி என்ற முழக்கம் பேரிரைச்சலாக இருந்தது. இந்த மூன்று ஆண்டு களில், எந்த ஒரு துறையிலும் சிறப்பான வளர்ச் சியைப் பெற்றதாகக் குறிப்பிட்டு சொல்ல முடி யாது. அதேநேரம் மேலே குறிப்பிட்ட எண்ணிக் கையில் வகுப்புவாத கலவரங்கள் நடந்துள்ளன. ஆதித்யநாத் மற்றும் அவர் போல் உள்ள பரி வாரங்கள் கொடூர வார்த்தைப் பிரயோகங்களை சிறுபான்மையினரை நோக்கிப் பேசியபோது, மோடி கண்டுகொள்ளவில்லை. அதுவே மோடி தேர்தல் அறிக்கை குறித்து மக்கள் கேள்வி கேட் காமல் திசை திருப்புகிறது. அத்தகைய விஷத் தன்மை கொண்ட பிரச்சாரகர் ஆதித்யநாத்தை, ஒரு பெரிய மாநிலத்தின் முதல்வராக ஆர்.எஸ். எஸ். தேர்வு செய்துள்ளது.

ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல், இந்துத்துவாவின் கொள்கை அமலாக்கத்திற்கு, மோடியும், ஆதித்யநாத்தும் செயல்படுவார்கள் என ஆர்.எஸ்.எஸ் எதிர்பார்க்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களும் தங்களின் சலுகைகளைப் பாது காக்க இந்த அணுகுமுறை பயன்படும் என்றே கருதுகின்றனர். அதனால்தான் எந்த ஒரு ஊடக மும் ஆதித்யநாத் தேர்வை விமர்சிக்கவில்லை. தாராளவாதத்தை ஆதரிக்கிற மாநில முதலாளித்துவ கட்சிகளும், இந்த அபாயத்தை உணர்ந்து, கருத் துப் பிரச்சாரம் எதையும் செய்யவில்லை. கம்யூ னிஸ்டுகள் இது குறித்து விமர்சித்து வருகின்றனர்.

மோடி அரசின் ‘செல்லாநோட்டு’ அறிவிப் பின் போது, அதற்குக் கண்டனம் தெரிவித்த சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள், பாதிக்கப்பட்ட மக்களைத் திரட்டி – களப் போராட்டம் மூலமான நிர்ப்பந்தத்தைத் தர வில்லை. பாஜக மத்திய அரசும் தேர்தலை காரண மாக வைத்து, முதலில் வெளிவந்த 500 ரூபாய் நோட்டுக்களை, உ.பி போன்ற இடங்களில் விநி யோகம் செய்தது. இது உ.பியில் விரைவில் பணத் தட்டுப்பாட்டைப் போக்க பயன்பட்டது. அந்த வகையிலும் பாஜக தனது செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டது.

சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் மாநிலக்கட்சிகள்தான் என்றபோதிலும் அவர்கள் பிராந்திய அடையாளங்களை முன்வைக்கவில்லை, உத்தரப் பிரதேசத்தில் பிராந்திய அரசியலும் வளர்த்தெடுக்கப் பட்டிருக்கவில்லை. தங்களை தேசிய அடையாளங்களுடன் இணைத்துப் பார்த் துக் கொள்ளும் உ.பி. மக்களுக்கு பாஜகவின் ‘இந்து தேசியவாத’ அழைப்பு ஈர்ப்பைக் கொடுத் துள்ளது. வகுப்புவாத நெடியுடன் அந்தப் பிரச் சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு மாறாக சக்திகள், கொள்கை அடிப்படையிலான மாற்றை அவை முன்நிறுத்தவில்லை.
“பிராந்திய முதலாளித்துவ கட்சிகள் வகுப்பு வாதத்தை எதிர்த்தாலும், தாராளமய பொருளா தாரக் கொள்கைகளுக்கு உதவுகிற போது, வகுப் புவாதத்துடன் சமரசம் செய்து கொள்கிறது. மக்களை துன்பத்தில் இருந்து மீட்கவில்லை,” என்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மதிப்பீடு சரியானது. வகுப்புவாதத்தை எதிர்ப்பதற்காக தேர்தல்அணி மட்டும் ஏற்படுத்துவது பலன் கொடுக்காது. எனவே, உத்தரப்பிரதேசத்தில் மாற்றுக் கொள் கைகளுடன் இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டி யிட்டன. அமைப்பு வலிமை குறைவானதன் காரணமாக, இந்தச் செய்தியை மக்களிடம் சென்று சேர்க்கமுடியவில்லை.

ஆட்சி நிர்வாகத்தில் பாஜக:
ஆளுநர் நியமனம் மத்தியில் ஆளும் கட்சியின் விருப்பத் திற்கு உரியவராக இருக்கிறார். வரம்புகள் மீறப் பட்டுள்ளன. மோடி ஆட்சிக்கு வந்தபின் 26 ஆளுநர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். குறிப்பிட்ட துறையின் பிரமுகர் என அந்தஸ்தில் யாரும் நிய மிக்கப் படவில்லை. கேரள ஆளுனர் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி. அவர் நியமனம் முன் எப் போதும் இல்லாத ஒன்று என்பதனால் சர்ச் சைக்கு உரியதாக இருந்தது.
மோடி பிரதமர் பொறுப்பு ஏற்றபின், அருணா சலப்பிரதேசம், உத்தர்காண்ட் மாநிலங்களில் ஆளுநர்களின் அத்து மீறலைப் பார்த்தோம். தொடர்ந்து டில்லி, புதுச்சேரி பிரதேசங்களிலும் சர்ச்சை எழுந்துள்ளது. திரிபுரா ஆளுநர், சமூக வலைத்தளத்தில் பாஜக ஆதரவு செய்திகளை வெளியிட்டுள்ளார். இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. ஆளுநர் அரசியல் சட்டபடி அங்கீ கரிக்கப்பட்டவரா என்பதில் நீண்ட சர்ச்சை நடந்து, இறுதியாக அரசியல் சட்ட அங்கீகாரம் கிடைத்தது. இப்போது அப்படி ஒரு அங்கீகாரம் தேவையில்லை என்று சொல்லும் அளவிற்கு, கோவா, மணிப்பூர் சட்டமன்றத் தேர்தல் முடிவுக் குப் பின் ஆளுநர்களின் நடவடிக்கைகள் அமைந் துள்ளன.
தனிக்கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் மாநிலத்தில் ஆட்சி அமைக்க எந்த அடிப்படையில் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்பதை, சர்க்காரியா, அவரைத் தொடர்ந்து வெங்கடாச்சலய்யா ஆகியோர் அளித்த பரிந்துரைகள் தெளிவுபடுத்துகின்றன. முதலில் கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட கட்சி களின் எண்ணிக்கையைப் பொறுத்து அழைப்பு விடுக்க வேண்டும். அடுத்து தனிப்பெரும் கட்சிக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்து, பின் பெரும் பான்மையை நிருபிக்க செய்ய வேண்டும். மூன்றா வதாக தேர்தலுக்குப் பின் கூட்டணி அமைத்துக் கொண்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்க வேண் டும். நான்காவதாக தேர்தலுக்குப் பின் கூட்டணி அமைத்துக் கொண்ட, ஆட்சியில் இடம் பெறும் சுயேட்சைகள் கொண்ட அணிக்கு அழைப்பு விடுக்க வேண்டும்.
கோவாவில் மிருதுளா சின்ஹா, மணிப்பூரில் நஜ்மா ஹெப்துல்லா ஆகியோர் செய்தது அரசி யல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. எதேச் சதிகார அரசு அமைகிற போது, இருக்கிற உரிமை களும் பறிபோகும் என்பதற்கு இது ஒரு உதாரணம் ஆகும். அதாவது, உ.பி.யில் பாஜக 39 சதமும், கோவாவில் 30 சத வாக்குகளையும், மணிப்பூரில் 35 சத வாக்குகளையும், பெற்றுள்ள நிலையில் இந்த எதேச்சாதிகாரம் தலைதூக்குகிறது. மத்தி யில் பாஜக 31 சத வாக்குகளைப் பெற்றுள்ள சூழலில் எதேச்சாதிகாரத்தைப் பின் பற்றுகிறது. எனவேதான் தேர்தல் சீர்திருத்தம் அவசியம். விகிதாச்சார பிரதிநிதித்துவம் மிக அதிகமான முக்கியத்துவம் பெறுகிறது.
நிறைவாக:
உ.பி. முதல்வராக யோகி ஆதித்யநாத் நியமிக் கப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ். தன் வகுப்புவாத நிகழ்ச்சிநிரலை தீவிரமாக முன்னெடுக்கிறது. இந்தச் சூழலை எதிர்கொள்ள களத்தில் முன்நிற்க வேண்டும். அனைத்து ஜனநாயக சக்திகளும், மதச்சார்பின்மைக்கான சக்திகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். மக்கள்விரோதப் பொருளா தாரக் கொள்கைகளையும் தொடர்ச்சியாக அம் பலப்படுத்த வேண்டும். கதம்பக் கூட்டணிகள் அல்லாமல், பொதுக்கொள்கைகள் மற்றும் திட்டங்களின் அடிப்படையில், பாஜகவுக்கு எதி ரான கட்சிகள் இணைந்து போராட வேண்டும். மதச்சார்பற்ற ஜனநாயகம், சமூகநீதி மற்றும் மக்களை மையப்படுத்திய பொருளாதாரக் கொள்கை களுக்கான அணிசேர்க்கைதான் வகுப்புவாத-தேசியத்தை எதிர்கொள்வதற்கான மாற்று வழியாகும். சமூகத்தில் வலுப்பெற்றுவரும் வகுப் புவாத உணர்வுகளை அழித்து மதச்சார்பின்மை எண்ணங்களை வலுப்படுத்திட சமூகத்தளத்தி லும் பணியாற்றவேண்டும்.
இந்த இலட்சியங்களைக் கொண்ட இடது ஜனநாயக அணி அமைப்பதென்றே மார்க்சிஸ்ட் கட்சியின் எதிர்காலப்பார்வை அமைந்துள்ளது. அந்த லட்சியத்தை அடைவதில்தான் இந்தியா வின் எதிர்காலமும் அமைந்துள்ளது.

இளம் அரசியல் ஊழியர்களுக்கு பகத்சிங் எழுதிய கடிதம் …

பகத் சிங்

தமிழில்: ராமன் முள்ளிப்பள்ளம்

(தூக்கிலிடப்படுவதற்கு 50 நாட்களுக்கு முன் பகத்சிங் சிங் எழுதிய இந்த ஆவணத்தை இந்திய அரசாங்கம், 1936இல் ரகசிய அறிக்கைகள் ஒன்றில் இதனை முழுமையாகப் பிரசுரித்தது. லக்னோவில் உள்ள தியாகிகள் நினைவு மற்றும் விடுதலைப் போராட்ட ஆய்வு மையத்தில் (Martys’ Memorial and Freedom Struggle Research Centre at Lucknow) அதன் நகல் ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது. கீழே அதன் சுருக்கம் பிரசுரிக்கப்படுகிறது. – ஆசிரியர் குழு)

02.02.1931

அன்பார்ந்த தோழர்களே,
நமது இயக்கம் தற்போது ஒரு முக்கியமான கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது.  ஒரு வருட கால தீவிர போராட்டத்தின் பின் சட்டத் திருத்தங்கள் குறித்து சில அறுதியான முன் மொழிகள் வட்ட மேஜை மா நாட்டால் தயாரிக்கப்பட்டுள்ளது; இதற்கு காங்கிரஸ் தலைவர்களும் வரவேற்கப்பட்டுள்ளனர் * தற்போதைய சூழலில் தங்கள் இயக்கங்களைத் துறந்துவிட இதை அவர்கள் விரும்புகின்றனர், அவர்கள் இதை ஏற்கின்றனரா அல்லது எதிர்க்கின்றனரா என்பது நமக்கு தேவையற்ற ஒன்று. தற்போதைய இயக்கம் ஒரு வகையிலான சமரசத்தில்தான் முடியும். சமரசம் விரைவாகவோ, தாமதமாகவோ அமலாகும். சமரசம் என்பது பொதுவாக நாம் நினைக்கும் வகையில் வெட்கப்படத்தக்கதோ, கண்டிக்கத்தக்கதோ அல்ல. அரசியல் தந்திரங்களில் இது தவிர்க்கப்பட முடியாத ஒன்று.

கொடுங்கோலன்களை எதிர்க்கும் எந்த ஒரு தேசமும் துவக்கத்தில் தோல்வியை தழுவும்; தனது போராட்டத்தின் இடைப்பட்ட காலத்தில் சமரசங்கள் மூலமாக அரைச் சீர்திருத்தங்களை வென்றெடுக்கும. இறுதிக்கட்டத்தில் தேசத்தின் அனைத்து சக்திகளையும். சாதனங்களையும் முழுமையாக திரட்டிய பின்னரே அது கடைசித் தாக்குதலைத் தொடுத்து ஆட்சியாளர்களின் அரசாங்கத்தை தவிடு பொடியாக்க இயலும். அப்போதும் கூட சில தோல்விகள் சமரசத்தை நாடும்படி செய்யும்.
ரஷ்யாவில் நடந்தவற்றை பாருங்கள். 1905 ல் ரஷ்யாவில் ஒரு புரட்சிகர இயக்கம் வெடித்தது. எல்லா தலைவர்களும் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தனர், லெனின் தான் மறைந்திருந்த வெளி நாட்டிலிருந்து திரும்பியிருந்தார். அவரே போராட்டத்தை வழி நடத்திக்கொண்டிருந்தார்.

***
அங்கே டூமா ( பாராளுமன்றம்) அறிமுகப்படுத்தப்பட்டது. அதே லெனின் டூமாவில் பங்கு வகிப்பதை ஆதரித்தார். இது 1907 நடந்தது. 1906 ல் உரிமைகள் கத்திரிக்கப்பட்ட டூமாவில் பங்கு கொள்வதை எதிர்த்தார். பிற்போக்கு தலை தூக்கியது ; லெனின் சோசலிச கருத்துகளை விவாதிக்க டூமாவின் அரங்கத்தை விரும்பினார்.
1917 புரட்சிக்குப் பின் போல்ஷ்விக்குகள் ப்ரெஸ்ட் லிடொவ்ஸ்க் உடன் பாட்டை கையெழுத்திட உந்தப்பட்டபோது லெனினை தவிர்த்து அனைவரும் அதை எதிர்த்தனர். ஆனால் லெனின் கூறினார், ‘’ அமைதி, மீண்டும் அமைதி எத்தகைய இழப்பு ஏற்படினும் ; ஜெர்மன் போர் பிரபுக்களுக்கு ரஷ்யாவின் பகுதிகளை விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தாலும் கூட அமைதி’’ போல்ஷ்விக் எதிர்ப்பாளர்கள் லெனினது இந்த உடன்பாட்டை கண்டித்தபோது லெனின் கூறினார் போல்ஷ்விக்குகள் ஜெர்மானிய தாக்குதலை எதிர் கொள்ளமுடியாது போல்ஷ்விக் அரசாங்கத்தை முழுமையாக அழித்து கொள்வதை காட்டிலும் இந்த உடன்பாடே மேலானது என்றார்.

நான் சுட்டிக்காட்ட விரும்பியது என்னவென்றால் சமரசம் என்பது போராட்டம் வளர்ச்சியடைகையில் அவ்வப்போது பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு ஆயுதம். ஆனால் நம் முன் எப்போதும் இருக்க வேண்டியது இயக்கம். எந்த குறிக்கோளை சாதிக்கவேண்டி நாம் போராடுகின்றோமோ அது பற்றிய தெளிவு நம்மிடம் எப்போதும் இருக்க வேண்டும். இது நாம் இயக்கத்தின் தோல்விகளையும் வெற்றிகளையும் ஆய்வு செய்ய உதவுகிறது; நாம் எதிர்கால திட்டங்களை எளிதாக வகுக்க உதவுகிறது. திலக் அவர்களின் கொள்கை இலட்சியத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது அதாவது அவர் தந்திரம் மிகச் சிறந்தது. உங்கள் எதிரியிடமிருந்து 16 ரூபாய் பெறுவதற்கு நீங்கள் போராடுகின்றீர்கள், உங்களுக்கு கிடைத்தது  ஒரு ரூபாய் மட்டுமே, அதை பெற்றுக்கொள்ளுங்கள், பாக்கிப் பணத்திற்காக போராடுங்கள். நாம் மிதவாதிகளிடம் காண்பது அவர்கள் கருத்து. அவர்கள் ஒரு ரூபாய் பெறுவதற்காக போராட்டத்தை துவக்குகின்றனர் ஆனால் அதையும் அவர்களால் சாதித்து பெற  முடியவில்லை. புரட்சியாளர்கள்  தாங்கள் முழுப் புரட்சிக்காக போராடுகின்றனர் என்பதை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும்.
அவர்கள் கைகளில் அதிகாரம் அதன் மீது முழு கட்டுப்பாடு.. சமரசத்தின் பால் ஐயம் எழுவதற்கு காரணம் பிற்போக்குவாதிகள் சமரசத்திற்கு பிறகு புரட்சிகர சக்திகளை களைத்து விடுகின்றனர். ஆனால் திறமை மிக்க வீரம் மிக்க புரட்சியாளர்கள் இயக்கத்தை இத்தகைய இடர்களிலிருந்து காக்க முடியும். இத்தகைய தருணங்களில் நாம் மிகுந்த எச்சரிகையுடன் இருக்க வேண்டும், உண்மையான பிரச்னைகளின் குழப்பங்களை தவிர்க்க வேண்டும், குறிப்பாக குறிக்கோளைப் பற்றிய குழப்பம்.. பிரிட்டிஷ் தொழிலாளர் தலைவர்கள் உண்மையான போராட்டத்திற்கு துரோகம் இழைத்து ஏகாதிபத்திய மோசடிப் பேர்வழிகளாக தரம் தாழ்ந்து போயினர். என் கருத்து முலாம் பூசப்பட்ட ஏகாதிபத்திய தொழிலாளர் தலைவர்களை காட்டிலும் கடைந்தெடுத்த பிற்போக்குவாதிகள் எவ்வளவோ மேல். அணுகுமுறைத் தந்திரம் பற்றி நாம் லெனின் அவர்களது வாழ்வுக் காலக் கருத்துகளை படிக்க வேண்டும். சமரசம் பற்றிய அவரது ஆணித்தரமான கருத்தை அவரது ‘’ இடதுசாரி கம்யூனிஸம்’’ என்ற கட்டுரையில் பார்க்கலாம்.

தற்போதைய இயக்கம் அதாவது போராட்டம் நிச்சயமாக ஏதேனும் வகையான சமரசத்தில் அல்லது தோல்வியில் முடியும் என்பதையே நான் கூறினேன்.
இதை நான் ஏன் கூறினேன் என்றால் என் கருத்துப்படி உண்மையான புரட்சியாளர்கள் இந்த முகாமினுள் வரவேற்கப்படவில்லை. இந்தப் போராட்டமானது நடுத்தர வர்க்கத்தினர், கடைக்காரர்கள் மற்றும் சில முதலாளிகளை சார்ந்து இருக்கிறது. இந்த இரு வர்க்கத்தினரும் குறிப்பாக கடைசியாக கூறப்பட்ட வர்க்கத்தினர் தங்கள் உடமைகளையும், சொத்துகளையும் இழக்கும் வகையான எந்த போராட்டத்தையும் ஏற்க எப்போது முன் வரமாட்டார்கள். உண்மையான புரட்சிகர சேனை கிராமங்களிலும், தொழிற்சாலைகளிலும் உள்ளது; விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள். ஆனால் நமது முதலாளித்துவ தலைவர்கள் இவர்களை கையாளும் துணிவை பெற்றவர்கள் அல்ல. தூங்கும் சிங்கத்தை அதன் உறக்கத்திலிருந்து எழுப்பிவிட்டால் அது பிறகு நம் தலைவர்கள் அவர்களது குறிக்கோளை அடைந்த பின் அடக்கமுடியாததாக ஆகிவிடும். 1920 ல் அகமதாபாத் தொழிலாளர்களுடன் ஏற்பட்ட தனது முதல் அனுபவத்திற்கு பிறகு மகாத்மா காந்தி இவ்வாறு அறிவித்தார் ‘’ நாம் தொழிலாளர்களை பயன்படுத்த முடியாது, ஆலைத் தொழிலாளர்களை அரசியலுக்கு பயன்படுத்துவது ஆபத்தானது’’ ( தி டைம்ஸ் மே 1921) அப்போதிலிருந்து அவர்களை அவர் எப்போதும் அணுகத் துணியவில்லை. விவசாயிகளைப் பார்ப்போம். பிரம்மாண்டமான விவசாயி வர்க்கம் அந்நிய ஆதிக்கத்தை மட்டுமல்லாது நிலப்பிரபுத்துவ கட்டுகளையும் தகர்க்க எழுச்சி கொண்டதை கண்டு இவர்கள் அஞ்சியது 1922 பர்தோலி தீர்மானங்களில் அது தெளிவாகத் தெரியும்.

நமது தலைவர்கள் விவசாயிகளுக்கு அடிபணிவதைக்காட்டிலும் ஆங்கிலேயருக்கு சரண் அடைவதை காண முடியும். பண்டிதர் ஜவஹர்லாலை விட்டுவிடுங்கள். தொழிலாளர்களையும் விவசாயிகளையும் ஸ்தாபனப்படுத்த முயற்சித்த ஏதேனும் ஒரு தலைவரை நீங்கள் சுட்டிக்காட்ட முடியுமா ? இல்லை அத்தகைய அபாயத்தை அவர்கள் எப்போதும் ஏற்கமாட்டார்கள். இங்கேதான் அவர்கள் பலவீனம். ஆகவேதான் நான் கூறுகிறேன் அவர்கள் முழுப்புரட்சியை திட்டமிடவில்லை. பொருளாதார நிர்வாக வற்புறுத்தல்கள் மூலம் மேலும் சில சீர் திருத்தங்களை, சலுகைகளை இந்திய முதலாளிகளுக்கு பெற்றுத்தருவதே அவர்களின் நம்பிக்கை.
புரட்சி ஓங்குக என முழக்கமிடும் இளம் ஊழியர்கள் முறையாக அமைப்புகளில் திரட்டப்பட்டவர்கள் அல்ல, தாங்களாக இயக்கத்தை முன்னெடுத்து செல்லும் வலுப் பெற்றவர்கள் அல்ல. உண்மை என்னவெனில் பண்டித மோதிலால் நேருவை தவிர்த்து தங்கள் தோள்களில் பொறுப்பை ஏற்கும் துணிவு நமது பெரும் தலைவர்களில் யாருக்கும் இல்லை.. ஆகவேதான் அவ்வப்போது எந்த நிபந்தனையும் இன்றி மகாத்மாவிடம் சரணடைகிறார்கள். வேற்று கருத்து இருந்தும் கூட அவரை எப்போதும் எதிர்ப்பதில்லை, ஏனெனில் மகாத்மாவின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.

இத்தகைய சூழ்நிலையில் நான் புரட்சி வேண்டும் இளம் ஊழியர்களை எச்சரிக்கிறேன், மோசமான காலம் வரவிருக்கிறது. நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் இல்லையெனில் குழம்பிப்போவீர்கள் அல்லது மனம் ஒடிந்து போவீர்கள். மாபெரும் காந்தி அவர்களின் இரு போராட்டங்களின் அனுபவத்திற்கு பிறகு தற்போதைய சூழ் நிலை குறித்தும் எதிர்கால திட்டம் குறித்தும் ஒரு தெளிவான கருத்து வகுப்பதில் மேலான நிலையில் உள்ளோம்.
மிக மிக எளிதான முறையில் கருத்தை முன் வைக்க என்னை அனுமதியுங்கள். ’புரட்சி ஓங்குக’ (இன்குலாப் ஜிந்தாபாத்) என நீங்கள் முழக்கம் எழுப்புகின்றீர்கள். நீங்கள் உண்மையிலேயே புரட்சியை நாடுகின்றீர்கள் என நினைத்துக்கொள்கிறேன். சட்டசபை குண்டு வழக்கில் எங்கள் அறிக்கையில் குறிப்பிட்டபடி புரட்சி என்ற பதத்தின் எங்கள் விளக்கம் தற்போதைய சமூக அமைப்பை முழுமையாக அப்புறப்படுத்திவிட்டு அதன் இடத்தில் ஒரு சோசலிச அமைப்பை நிர்மாணிப்பதே. இதற்காக நமது உடனடி குறிக்கோள் அதிகாரத்தை அடைவதே.
உண்மை என்னவெனில் அரசும் அரசாங்க இயந்திரமும் ஆளும் வர்க்கத்தின் கைகளில் உள்ள ஒரு உபகரணமே அதன் வர்க்க நலனை பாதுகாக்கவும் மேம்படுத்தவும். நாம் அந்த அதிகாரத்தை பறித்து நமது இலட்சியத்திற்காக பயன்படுத்த வேண்டும் அதாவது மார்க்சிய அடிப்படையில் சமூகப் புனர் கட்டுமானம். இதற்காக அரசாங்க இயந்திரத்தை அடக்குவதற்கு நாம் போரிட்டுக்கொண்டிருக்கிறோம். வழி நெடுக நமது சமூக திட்டத்திற்கான சாதக சூழ் நிலையை உருவாக்கும் பொருட்டு மக்களுக்கு கல்வி புகட்ட வேண்டும். இந்த போராட்டங்களில் அவர்களுக்கு பெரிதும் பயிற்சியும் கல்வியும் புகட்ட முடியும்.
இந்த தெளிவிற்கு முன் அதாவது நமது உடனடி மற்றும் இறுதி குறிக்கோள் தெளிவான பின் தற்போதைய சூழ் நிலை பற்றிய ஆய்வை தொடங்குவோம். சூழ் நிலையை ஆய்வு செய்கையில் நாம் எப்போதும் மிகுந்த வெளிப்படையுடனும் கடமையுடனும் செயல்பட வேண்டும்.
***
எந்த ஒரு புரட்சிகர கட்சிக்கும் ஒரு வரையறுக்கப்பட்ட திட்டம் அவசியமாகிறது. புரட்சி என்றால் செயல்பாடு என்பது உங்களுக்கு தெரியும். அதன் பொருள் விழிப்புணர்வுடன், ஸ்தாபன ரீதியாக, ஒழுங்குமுறையுடன் கொண்டுவரப்படும் மாற்றம்; திடீரென, ஏற்படும் ஸ்தாபனமற்ற உணர்ச்சிவசப்பட்ட கலக நொறுங்குதல் அல்ல புரட்சி. ஒரு திட்டத்தை வகுக்க பின் வருபவற்றை ஆய்வு செய்ய வேண்டும்.
1.இலட்சியம்.
2.எங்கிருந்து தொடங்குவது; தற்போதைய சூழ் நிலை என்ன
3.செயல்முறை அதாவது செயல்முறைகள், செயல் வடிவம்.
இம்மூன்று குறித்து தெளிவான கருத்து இல்லாமல் திட்டம் குறித்து விவாதிக்க முடியாது.
தற்போதைய சூழ் நிலை குறித்து ஓரளவு விவாதித்துள்ளோம். இலட்சியம் குறித்தும் ஓரளவு பேசியுள்ளோம். நாம் விரும்புவது தவிர்க்கப்படமுடியாத அரசியல் புரட்சிக்கு முன்னோடியான சோசலிச புரட்சி. இதுவே நாம் வேண்டுவது. அரசியல் புரட்சி என்றால் அரசு அல்லது அதிகாரம் பிரிட்டிஷார் கைகளிலிருந்து இந்தியர்கள் கைகளுக்கு வருவதல்ல மாறாக யார் நம்முடன் இறுதி இலட்சியம் ஈடேறும் வரை உள்ளனரோ அந்த இந்தியர்களின் கைகளுக்கு குறிப்பாக புரட்சிகர கட்சிக்கு ஏகோபித்த மக்கள் ஆதரவுடன் அதிகாரம் வருவதுதான் புரட்சி. அதன் பிறகு தீவிர முயற்சியுடன் ஒட்டு மொத்த சமுதாயத்தை சோசலிச அடிப்படையில் புணர் நிர்மாணம் செய்யத் தொடங்க வேண்டும்.
இத்தகைய புரட்சி உங்களது இல்லையெனில் தயவு கூர்ந்து புரட்சி ஓங்குக என முழங்குவதை நிறுத்துங்கள். புரட்சி என்ற சொல் மிக உன்னதமானது அதை மட்டமானதாகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்துவது நம்மால் ஆகாது. ஆனால் நீங்கள் தேசிய புரட்சி என்ற எண்ணம் கொண்டிருந்தால் அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள் வகையில் இந்திய குடியரசை நிர்மாணிப்பது உங்கள் இலட்சியம் என்றால் இத்தகைய புரட்சியை கொண்டு வர எந்த சக்திகளை நீங்கள் சார்ந்து இருப்பீர்கள் என்பதை தயவு செய்து தெரியப்படுத்துங்கள். தேசியப் புரட்சியோ அல்லது சோசலிசப் புரட்சியோ எந்த ஒரு புரட்சியை கொண்டு வரவும் நீங்கள் சார்ந்திருக்க வேண்டிய சக்திகள் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள். இந்த இரண்டு சக்திகளையும் அமைப்பு ரீதியாக திரட்ட காங்கிரஸிற்கு துணிவு கிடையாது. இதை நீங்கள் அவர்கள் இயக்கத்தில் பார்த்திருப்பீர்கள். இந்த சக்திகள் இல்லாமல் அவர்கள் நாதியற்றவர்கள் என்பதை மற்றவர்களை காட்டிலும் அவர்கள் நன்றாக அறிவார்கள். முழு சுதந்திரம் என்ற தீர்மானத்தை அவர்கள் நிறைவேற்றியபோது அவர்கள் பொருள்படுத்தியது புரட்சி ஆனால் அவர்கள் வேண்டியது புரட்சி அல்ல. இதை அவர்கள் இளைஞர்களின் உந்துதலால் செய்தனர், மேலும் இதை அச்சுறுத்தலாக்கி அவர்களின் ஆசையான டொமினியன் அந்தஸ்தை பெற சாதிக்க விரும்பினர். இதை நீங்கள் சுலபமாக மதிப்பிடலாம் அவர்களுடைய கடைசி 3 மாநாட்டுத் தீர்மானங்களை ஆய்வு செய்தால் அதாவது மெட்ராஸ்;  கல்கத்தா; லாகூர் மாநாடுகள். கல்கத்தா மாநாட்டில் 12 மாதங்களுக்குள் டொமினியன் அந்தஸ்த்திற்காக தீர்மானம் நிறைவேற்றினர் அது தவறினால் முழு சுதந்திரம் வேண்டும் தீர்மானத்திற்குத் தள்ளப்படுவார்கள் என்றனர்; ஆனால் டிசம்பர் 31 , 1929 நடு நிசி வரை பரிசுக்காக விசுவாசமாக காத்திருந்தனர். பின்னர் சுதந்திரத்திற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான தர்ம சங்கடத்தில் இருப்பதை உணர்ந்தனர்; ஆனால் அது அவர்கள் நோக்கம் அல்ல. இருந்தும் கூட (சமரசத்திற்கான) கதவு திறந்தே உள்ளது என்பதை மகாத்மா ரகசியமாக வைத்துக்கொள்ளவில்லை. இதுதான் உண்மையான விசுவாசம். துவக்கத்திலேயே அவர்கள் அறிவார்கள் அவர்கள் இயக்கம் சமரசத்தில் மட்டுமே முடியும் என்பதை. இந்த அரை வேக்காட்டுத் தனத்தைத்தான் நாம் வெறுக்கிறோம், போராட்டத்தின் ஒரு கட்டத்தில் ஏற்படும் சமரசத்தை அல்ல. எப்படியானாலும் நாம் விவாதித்துக் கொண்டிருந்தது புரட்சிக்காக எந்த சக்திகளை சார்ந்திருக்க முடியும் என்பதை குறித்து. ஆனால் நீங்கள் விவசாயிகளையும், தொழிலாளர்களையும் சந்தித்து அவர்களது ஆதரவை திரட்டப் போகிறோம் என்று கூறினால் நான் உங்களுக்கு கூறுவேன் நீங்கள் உணர்ச்சி பொங்கும் சொற்களுடன் அவர்களை முட்டாளாக்க முடியாது. எந்த புரட்சிக்கு அவர்கள் சேவையை வேண்டுகின்றீர்களோ அந்த புரட்சியால் அவர்களுக்கு என்ன நன்மை என  அவர்கள் வெளிப்படையாக கேட்பார்கள்; பிரபு ரீடிங் இந்திய அரசாங்கத்தின் தலைமையில் இருப்பதற்கும், அல்லது புருஷோத்தம் தாஸ் தாகுர் தாஸ் இந்திய அரசாங்கத்தின் தலைமையில் இருப்பதற்கும் என்ன வித்தியாசம் அவர்களை பொறுத்தமட்டில்? பிரபு இர்வின் இடத்திற்கு சர் தேஜ் பஹதூர் சப்ரு வந்தால் அது விவசாயிக்கு என்ன மாற்றத்தை கொண்டு வருகிறது. அவர்களுடைய தேச உணர்ச்சிக்கு அழைப்பு விடுவது அர்த்தமற்றது. அவர்களை உங்கள் நோக்கத்திற்கு பயன்படுத்த கூடாது. புரட்சி அவர்களுடையது அவர்களின் நன்மைக்காக என்பதை நாணயமாக தீவிரமாக அவர்களுக்கு பொருள்படுத்த வேண்டும். பாட்டாளி வர்க்கத்தின் புரட்சி; பாட்டாளி வர்க்கத்திற்காக புரட்சி.
உங்களுடைய குறிக்கோளை பற்றிய தெள்ளத்தெளிவான கருத்தை வகுத்தெடுத்த பின் உங்கள் சக்திகளை சரியான தீவிரத்துடன் அத்தகைய ஒரு புரட்சிக்காக அமைப்பு ரீதியாக திரட்ட முடியும். இப்போது நீங்கள் இரண்டு வெவ்வேறான கட்டங்களை கடந்தாக வேண்டும். முதலாவது தயாரிப்பு அடுத்தது செயல்பாடு.

தற்போதைய இயக்கம் முடிந்த பிறகு சில நேர்மையான புரட்சிகர ஊழியர்கள் மத்தியில் வெறுப்பும், தோல்வி மனப்பான்மையும் ஏற்படுவதை காண்பீர்கள். ஆனால் நீங்கள் வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. உணர்ச்சிவசப் படுவதை த    ள்ளி வையுங்கள். யதார்த்தத்தை சந்திக்க தயாராகுங்கள். புரட்சி என்பது கடினமான கடமை. புரட்சி எந்த ஒரு மனிதனின் சக்திக்கும் அப்பாற்பட்டது. அதை ஒரு குறிப்பிட்ட நாளில் கொண்டு வந்துவிட முடியாது. அது ஒரு குறிப்பிட்ட சமூக பொருளாதார சூழ் நிலையில் ஏற்படுத்தப்படுகிறது. இத்தகைய சூழ் நிலை தரும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வதுதான் ஒரு ஸ்தாபனப்படுத்தப்பட்ட கட்சியின் வேலை. புரட்சிக்காக மக்களை தயார்படுத்துவதும், சக்திகளை ஸ்தாபனப் படுத்துவதும் ஒரு பெரும் கடினமான செயல். அதற்காக புரட்சிகர ஊழியர்கள் பெரும் தியாகங்கள்  மேற்கொள்ள வேண்டும். நான் இதை தெளிவுபடுத்தி கொள்கிறேன், நீங்கள் ஒரு வியாபாரி, அல்லது வசதியில் ஊன்றிப்போனவர்; குடும்பஸ்தர், நீங்கள் நெருப்புடன் விளையாடாதீர்கள். தலைவர் என்ற தகுதியில் உங்களால் கட்சிக்கு எந்த பயனும் இல்லை. மாலை நேரங்களில் வசனங்களை பேசக்கூடிய எண்ணற்ற தலைவர்களை நாம் ஏற்கனவே பெற்றுள்ளோம்.அவர்களால் பயனில்லை. லெனினுக்கு பிடித்தமான சொல்லை பயன்படுத்தி கூற வேண்டுமானால் நமக்கு தொழில் முறை புரட்சியாளர்கள் வேண்டும். புரட்சியை தவிர்த்து வேறு ஆசைகளோ அல்லது வாழ்க்கை தேவைகளோ இல்லாத முழு நேர ஊழியர்கள். இத்தகைய ஊழியர்கள் எந்த அளவு அதிகமாக ஒரு கட்சியில் ஸ்தாபனபடுத்தப்பட்டுள்ளனரோ அந்த அளவு அவர்களின் வெற்றி வாய்ப்பு அதிகம்.
திட்டமிட்டபடி தொடங்க உங்களுக்கு மிகவும் தேவைப்படுவது மேலே கூறப்பட்டது போன்ற ஊழியர்கள்; தெளிவான கருத்தும், கூர்மதியும்; முன் முயற்சியும் உடனடி தீர்வுகளும்  கொண்டவர்கள். கட்சியில் தீவிர கட்டுப்பாடு இருக்க வேண்டும், அது ஒரு தலை மறைவு கட்சியாக இருக்க வேண்டிய அவசியமில்லை மாறாக வெளிப்படையானதாக இருக்க வேண்டும். தன்னார்வத்துடன் சிறைக்கு செல்லும் கொள்கை முற்றிலும் கைவிடப்பட வேண்டும். அத்தகைய கொள்கை பல ஊழியர்களை தலைமறைவு வாழ்க்கைக்கு தள்ளும். அவர்கள் தீவிர ஆர்வத்துடன் செயல்பட வேண்டும்.  இத்தகைய ஊழியர்களே அருமையான தலைவர்களை உண்மையான வாய்ப்பிற்காக உருவாக்குவார்கள்.
இளைஞர்கள் இயக்கம் மூலம் சேர்க்கப்படமுடிந்த ஊழியர்களே கட்சிக்கு தேவை. எனவே இளைஞர் இயக்கமே திட்டத்தின் துவக்கமாக இருக்கிறது. இளைஞர் இயக்கம் விவாத வட்டங்களை; வகுப்பு சொற்பொழிவுகளை; துண்டுப்பிரசுரங்களை; புத்தகங்களை; மாத ஏடுகளை ஏற்பாடு செய்ய வேண்டும். அரசியல் ஊழியர்களை சேர்க்கவும் பயிற்சி கொடுக்கவும் இதுவே சிறந்த முறை.
எந்த இளைஞர்களின் கருத்துகள் முதிர்ச்சியடைந்துள்ளதோ; யார் தங்கள் வாழ்வை புரட்சிக்காக அர்ப்பணிக்க தயாராக உள்ளனரோ அவர்களை இளைஞர் அணியிலிருந்து கட்சிக்கு மாற்ற வேண்டும். கட்சி ஊழியர்கள் இளைஞர் இயக்கத்தை வழி நடத்தி கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள வேண்டும். கட்சியின் முதன்மையான செயல் மக்களிடையே பிரச்சாரம் செய்வதே. இது மிகவும் அத்தியாவசியமானது. கத்தார் கட்சியின் (1914−15) தோல்விக்கு அடிப்படை காரணங்கள் அவர்களின் அறியாமை, மக்களிடம் பாராமுகம்., மக்களின் எதிர்ப்பு. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் தீவீர ஆதரவைப் பெற்று அவர்களை ஸ்தாபனப்படுத்துவதும் மிக அவசியமாகிறது.. கட்சியின் பெயர் கம்யூனிஸ்ட் என்றே இருக்க வேண்டும். உறுதியான கட்டுப்பாட்டுடைய ஊழியர்களை கொண்ட இக்கட்சி எல்லா மக்கள் இயக்கங்களையும் நடத்த வேண்டும். இக்கட்சி விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் அமைப்புகளை ஸ்தாபனபடுத்த வேண்டும், தொழிற்சங்கங்கள் கட்ட வேண்டும்; ஏன் முடிந்தால் காங்கிரஸின் தலைமையை பிடிக்க வேண்டும்; மற்ற ஏராளமான அரசியல் அமைப்புகளை வென்றெடுக்க வேண்டும். அரசியல் விழிப்புணர்வை தேச விழிப்புணர்வாக மட்டுமல்லாது வர்க்க விழிப்புணர்வாக உருவாக்க வேண்டி பெரிய அளவிலான நூல் பதிப்புகளின் மூலம் பிரச்சாரம் செய்ய வேண்டும்.சோசலிச கொள்கையை பற்றிய விளக்கம் மக்களை அடைய வேண்டும்; அது பரவலாக செல்ல வேண்டும். எழுதப்படுவது எளிமையாகவும் புரியும்படியாகவும் இருக்க வேண்டும்.
***
வெளிப்பார்வைக்கு நான் ஒரு பயங்கரவாதி போல் நடந்து கொண்டுள்ளேன். ஆனால் நான் பயங்கரவாதி அல்ல. நான் ஒரு புரட்சியாளன், ஒரு நீண்ட கால போராட்டத்தை குறித்து விவாதிக்கும் திடமான கருத்துகள் கொண்ட புரட்சியாளன். என் தோளோடு தோள் நின்ற ராம் பிரசாத் பிஸ்மில் போன்ற  நண்பர்கள் சிலர் குற்றம் சாட்டலாம் நான் சிறைப்பொந்தில் தள்ளப்பட்டதால் இப்படி பேசுகிறேன் என. அது உண்மை அல்ல. நான் சிறைக்கு வெளியிலிருந்த போது கொண்டிருந்த அதே கருத்துகளை, அதே மன உறுதியை, அதே உத்வேகத்தை , அதே துடிப்பை; சொல்லப்போனால் இன்னும் அதிகமாக தீர்மானமாகப் பெற்றுள்ளேன். ஆகவே என் கருத்துகளை படிப்போரை கவனமாக இருக்குமாறு எச்சரிக்கிறேன். வரிகளுக்கு இடையே படிக்க முயற்சிக்காதீர்கள். எனக்கு உள்ள அனைத்து வலுவுடன் கூறுகிறேன் நான் பயங்கரவாதி அல்ல அப்படி எப்போதும் இருக்கவில்லை. ஒருவேளை துவக்கத்தில் அப்படி இருந்திருக்கலாம். இத்தகைய செயல்களின் மூலம் நாம் எதையும் சாதித்துவிட முடியாது என்பதில் நான் தெளிவுடன் உள்ளேன். ஹிந்துஸ்தான் சோசலிச குடியரசு அமைப்பின் வரலாற்றிலிருந்து நாம் படிப்பினைகளை மதிப்பிடலாம். நமது எல்லோரின் செயல்பாடுகளும் ஒரு குறிக்கோளை நோக்கியிருந்தது; நம்மை மாபெரும் இயக்கத்தின் இராணுவக் கிளையுடன் அடையாளம் கண்டு கொள்வது.. என்னை யாரேனும் தவறாக புரிந்து கொண்டிருந்தால் அவர்கள் தங்களை திருத்திக் கொள்ளட்டும். குண்டுகளும், துப்பாக்கிகளும் பயனற்றவை என நான் கூறவில்லை மாறாக அவை பயனுள்ளவை. ஆனால் கூற விரும்பியது குண்டுகள் மட்டும் எறிவது பயனற்றது, சில சமயங்களில் ஆபத்தானது கூட..  கட்சியின் ராணுவக்கிளை தன் கட்டுப்பாட்டில் போர் தளவாடங்களை சில நெருக்கடி காலத்திற்காக எப்போதும் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். அது கட்சியின் அரசியல் செயல்களை ஆதரிக்க வேண்டும். அது தன்னிச்சையாக சுதந்திரமாக செயல் படக்கூடாது அது முடியாது.
மேலே கூறப்பட்ட முறைகளில் கட்சி செயல்பட துவங்க வேண்டும். அவ்வப்போது நடத்தப்படும் கூட்டங்கள்  மாநாடுகள் மூலமாக கட்சி ஊழியர்களுக்கு எல்லாப் பிரச்னை குறித்தும் அறிவும் தெளிவும் புகட்ட வேண்டும்.
இத்தகைய முறைகளில் நீங்கள் துவங்க வேண்டுமானால் நீங்கள் மிகுந்த கண்ணியமுடன் இருக்க வேண்டும். காந்திஜியின் சொர்க்க வாக்குறுதியான ஒரு வருடத்திற்குள் அடையவுள்ள இலட்சிய சுயராஜ்யத்திலிருந்து பத்து வருடங்களில் நம் புரட்சி என்பது போன்ற இளம் பருவ கனவுகளை தூர எறியுங்கள். அதற்கு பொங்கும் உணர்ச்சியும் தேவையில்லை, சாவும் தேவையில்லை, தொடர்ந்து போராடும், அல்லலுறும், தியாக வாழ்க்கை முறை தேவை. முதலில் உங்கள் தனிமனித அபிமானத்தை நசுக்குங்கள். தனிமனித சொகுசு பற்றிய கனாக்களை உதறி வீசுங்கள். பிறகு செயல்பட துவங்குங்கள். அங்குலம் அங்குலமாக முன்னேற வேண்டும். அதற்கு தேவை வீரம், தளராத தன்மை, மிக உறுதியான தீர்மானம். எத்தகைய இன்னலும் இடர்ப்பாடும் உங்களை சோர்ந்து போக வைக்காது. எந்த ஒரு தோல்வியும், துரோகமும் உங்கள் மனத்தை முறிக்காது. உங்கள் மீது திணிக்கப்பட்ட எந்த ஒரு ஆபத்தும் உங்களுள் உள்ள புரட்சியாளனை ஒழித்துவிட  முடியாது. இன்னல்கள் தியாகங்கள் நிறைந்த சோதனைகள் வழியில் நீங்கள் வெற்றியடைவீர்கள். இத்தகைய தனித்தனி வெற்றிகளே புரட்சியின் செல்வங்கள்.
புரட்சி ஓங்குக
பகத்சிங்

உலகமயமாக்கல்: 25 ஆண்டுகளில் எழுந்திருக்கும் சவால்கள், படிப்பினைகள் …

பெருகும் ஏற்றதாழ்வுகளின் 25 ஆண்டுகள் – பகுதி 3

முந்தைய பகுதி: <<<

வேளாண் நெருக்கடி

வேளாண் நெருக்கடியின் மிகத்துயரமான அம்சம் தொடரும் பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகளின் தற்கொலைகள். 1997 முதல் 2016வரை மூன்று லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இத் தற்கொலைகளுக்கும் வேளாண்நெருக்கடிக்கும் உள்ள தொடர்பு நெருக்கமானது. வேளாண் நெருக்கடியின் ஆழத்தை வேளாண்வளர்ச்சி பற்றிய விவரங்கள் நமக்கு தெளிவுபடுத்துகின்றன. தானியம், பருப்பு, எண்ணய்வித்துக்கள், கரும்பு ஆகிய முக்கிய பயிர்களை எடுத்துக் கொண்டால், 1981முதல் 1991வரையிலான காலத்தில் இப்பயிர்களின் உற்பத்தி வேகமாக வளர்ந்தது. ஆனால் அடுத்த 20ஆண்டுகளில் – 1991முதல் 2010முடிய – இவற்றின் உற்பத்தி வளர்ச்சியின் வேகம் பெரிதும் குறைந்தது. மகசூல் உயர்வும் இதேபாணியில்தான் இருந்தது. நெருக்கடி1998 – 2004 காலத்தில் மிகவும் தீவிரமாக இருந்தது என்பது உண்மை. வேளாண்உழைப்பாளிமக்கள் எதிர்கொண்ட இந்த நெருக்கடிக்கு அரசின் தாராளமய கொள்கைகளேக காரணம். அரசின் பட்ஜட் பற்றாக்குறையை குறைப்பது என்ற பெயரில் உரம், எரிபொருள், மின்சாரம் உள்ளிட்ட இடுபொருள் மானியங்கள் வெட்டப்பட்டு, உற்பத்திச் செலவு உயர்ந்தது. ஆனால், அளவு கட்டுப்பாடு இன்றி அயல்நாட்டு வேளாண்பொருட்களின் இறக்குமதி அனுமதிக்கப்பட்டதால், விளைபொருட்கள் விலைகள் வீழ்ச்சியை சந்தித்தன. நிதித்துறை சீர்திருத்தங்கள் விவசாயக் கடனைக் குறைத்து வட்டிவிகிதங்களை உயர்த்தியது. விவசாயிகள் கந்துவட்டிக்காரர்களிடம் சிக்கும் நிலை ஏற்பட்டது. அரசின் செலவைக் குறைப்பது என்ற தாராளமய கொள்கை கிராமப்புற கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த அனுமதிக்கவில்லை. பாசனம், வேளாண்விரிவாக்கம், வேளாண்ஆராய்ச்சி அனைத்துமே பலவீனமடைந்தன. பொது வினியோகமுறை சீரழிக்கப்பட்டது. தனியார்மயத்தால் கல்வி, ஆரோக்கியச் செலவுகளும் அதிகரித்து விவசாயக் குடும்பங்கள் கடன்வலையில் வீழ்ந்தன.

அதேசமயம், வேளாண்துறை நெருக்கடியில் இருந்த போதிலும், கிராமப்புற செல்வந்தர்கள் கொழுத்துள்ளனர் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். பயிர்வாரியாகவும் பகுதிவாரியாகவும் காலவாரியாகவும் வேளாண்நெருக்கடியின் தன்மையும் தாக்கமும் வேறுபட்டு இருந்தன. அதேபோல், வேளாண்பகுதிமக்கள் அனைவர் மீதும் ஒரே மாதிரியான தாக்கம் இல்லை. முதலாளித்துவ-நிலப்பிரபுக்கள் மற்றும் பணக்கார விவசாயிகளில் ஒருபகுதியினர் தாராளமய கொள்கைகளால் பயன்பெற்றுள்ளனர். அவர்களிடம் நிலம், இயந்திரங்கள் உள்ளிட்ட உற்பத்திசார் சொத்துக்கள் குவிந்துள்ளன. 1992 முதல் 2003 வரையிலான காலகட்டத்தில்கூட, சற்று மந்தமான வேகத்தில் என்றாலும், வேளாண்துறையில் இயந்திரங்களின் உடமையும் பயன்பாடும் அதிகரித்தே வந்துள்ளன. உதாரணமாக, டிராக்டர்களின் எண்ணிக்கை 1992-2003 காலத்தில் இரண்டு மடங்காகியது. 2004-05க்குப் பிறகு 2011-12 வரையிலான காலத்தில் கிராமப்புறங்களில் வேளாண் பயன்பாட்டிற்கான இயந்திர விற்பனை வேகமாக அதிகரித்துள்ளது.

இதன் பொருள் என்னவெனில், வேளாண்துறையில் கிடைக்கும் உபரிமூலம், உழைப்பாளி மக்களை சுரண்டுவதன் மூலம், மூலதன சேர்க்கை நடைபெற்று வருகிறது. அரசின் கொள்கைகளும் நிலம் மற்றும் மூலதனக் குவியலை ஊக்குவிக்கும் வகையில் நிலஉச்சவரம்பு சட்டங்களை நீக்குகின்றன. மறுபுறம் விவசாயிகள் நிலம் மற்றும் உற்பத்தி சொத்துக்களை இழப்பதன் மூலமும், அரசுகள் இயற்கைவளங்களை அடிமாட்டுவிலைக்கு பன்னாட்டு இன்னாட்டு ஏகபோகங்களுக்கு வாரிவழங்குவதன் மூலமும், ரியல்எஸ்டேட் கொள்ளை மூலமும் சிறப்புபொருளாதாரமண்டலங்கள் என்றவகையிலும் ஆரம்ப மூலதன சேர்க்கை பாணியிலான மூலதனக் குவியலும் தொடர்கிறது.

வேலைவாய்ப்பு

நிகழ்ந்துள்ள வளர்ச்சி வேலைவாய்ப்புகளைப் பெருக்கவில்லை. தொழில்துறையில், குறிப்பாக ஆலை உற்பத்தித் துறையில், பணியிடங்கள் கூடவேஇல்லை. ஒட்டுமொத்தமாக உருவான பணியிடங்களும் பெரும்பாலும் உழைப்பாளி மக்களுக்கு எந்தப்பாதுகாப்பும் இல்லாத அமைப்புசாரா பணிஇடங்களாகவே இருந்தன. 1993முதல் 2005வரையிலான காலத்தில் ஏதேனும் ஒரு பணியில் (சுயவேலைஉட்பட) இருப்போர் எண்ணிக்கை 1கோடியே 20லட்சம் அதிகரித்தது. இது 1983-1994 காலத்திய வளர்ச்சியைவிட மந்தம் என்பது ஒருசெய்தி. ஆனால் மேலும் துயரமான செய்தி, 2004 முதல் 2012 வரை இந்த எண்ணிக்கை வெறும் 10 லட்சம் மட்டுமே அதிகரித்தது என்பதாகும்.

வறுமை

வறுமை பற்றி அரசு வெளியிடும் புள்ளிவிவரங்கள் நகைப்புக்கு உரியவை. அரசின் வறுமைக்கோடு என்பது ஒரு சாகாக் கோடு என்றுதான் சொல்ல வேண்டும். அரசு நிர்ணயித்துள்ள வறுமைகோட்டில் எவரும் வாழமுடியாது. ஆனால் சாகாமல் இருக்கலாம் என்று வேண்டுமானால் சொல்லலாம்! 2011-12 தேசீய மாதிரி ஆய்வு தரும் விவரங்கள்படி நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு ரூபாய் 50க்கும் குறைவாக செலவு செய்தவர்களாகத்தான் கிராமப்புற குடும்பங்களில் 80% இருந்தனர். நகரப் புறங்களிலும் கிட்டத்தட்ட பாதிகுடும்பங்களின் நிலைமை இதுதான். ஒரு நாகரீக வாழ்க்கைக்குத் தேவையான குறைந்தபட்ச அம்சங்களை வைத்துப் பார்த்தால், நமது நாட்டில் 80சதமானத்திற்கும் அதிகமான மக்கள் வறியவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நமது நாட்டில், 5வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் கிட்டத்தட்ட பாதிப்பேர் வயதுக்கேற்ற எடையை எட்டாதவர்கள். சஹாரா பாலைவனத்திற்கு தெற்கே வசிக்கும் ஆப்பிரிக்க நாடுகளில் கூட இந்த விகிதம் நாலில் ஒன்றுதான். இது போன்ற இன்னும் பல துயர்மிக்க புள்ளிவிவரங்கள் உள்ளன! அதுவும் நாட்டுக்கு விமோசனம் என்று ஆளும் வர்க்கங்கள் விளம்பரப்படுத்திய தாராளமய கொள்கைகள் 22ஆண்டுகள் அமலாக்கப்பட்ட பின்னர்!

மலையும் மடுவும் போன்ற ஏற்றத்தாழ்வுகள்

ஒரு விஷயத்தில் தாராளமய கொள்கைகள் வெற்றி பெற்றுள்ளன. அது எதில்என்றால், அசிங்கமான, ஆபாசமான அளவிற்கு ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கச் செய்ததில்! தொழிலிலும் நிலஉடமையிலும் பொதுவாக சொத்து வினியோகத்திலும் நம்நாட்டில் பெரும் ஏற்றத்தாழ்வு இருந்து வந்துள்ளது என்றாலும், கடந்த 23ஆண்டுகளில் இவை பலப்பல மடங்குகள் அதிகரித்துள்ளன.

2008இல் அமெரிக்க டாலர் கணக்கில் ஒரு பில்லியன் டாலர் – அதாவது, 100கோடிடாலர் – சொத்து மதிப்புகொண்ட இந்திய செல்வந்தர்கள் எண்ணிக்கை 41ஆக இருந்தது. அதன்பின் ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக பெரிதும் சரிந்துள்ளது. இது இந்த எண்ணிக்கையைக் குறைத்து இருக்க வேண்டும். ஆனால் அதற்கு நேர்மாறாக, 2013இல் 53, 2014இல் 70என்று இந்த இந்திய டாலர் பில்லியனேர்கள் எண்ணிக்கை பாய்ச்சல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. நாட்டின் வளர்ச்சி வேகம் இரண்டு ஆண்டுகளாக 5%க்கும் குறைவுதான். ஆனால் டாலர் பில்லியனேர்கள் வளர்ச்சிவிகிதம் அமோகம்!

2014இல் முகேஷ்அம்பானியை முதலிடத்தில் கொண்டுள்ள இந்த 70 இந்திய டாலர்பில்லியனேர்களின் மொத்த சொத்துமதிப்பு சுமார் 390 பில்லியன்டாலர். அதாவது சுமார் ரூ. 24லட்சம் கோடி. இது இந்திய நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜீ.டி.பி.யில்) கிட்டத்தட்ட நாலில் ஒருபங்கு ஆகும். முதல் பத்து செல்வந்தர்களின் மொத்தசொத்து மட்டும் தேசஉற்பத்தியில் கிட்டத்தட்ட 6% ஆகும்.

இந்தியப் பெருமுதலாளிகள் அவர்கள் சொத்துக்களை பிரும்மாண்டமான அளவில் அதிகரித்துள்ளனர். டாட்டா குழுமத்தின் சொத்து 1990இல் 10,922கோடிரூபாயாக இருந்தது. 2012-13இல் இது 5,83,554 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. (ஆதாரம்: டாட்டாஇணையதளம்). இதே கால இடைவெளியில், அம்பானி குழுமத்தின் சொத்துக்கள் 3167கோடி ரூபாயில் இருந்து 5,00, 000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்தது. முகேஷ் அம்பானியின் RIL மற்றும் அதன் உபநிறுவனங்களின் சொத்து 3,62,357 கோடி ரூபாயும், அனில் அம்பானியின் ADAG கம்பெனியின் சொத்துக்கள் 1,80,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகவும் ஆகியுள்ளன.(ஆதாரம்: இக்குழுமங்களின்இணையதளங்கள்).

1991இல் இருந்து 2012 வரையிலான காலத்தில் நாட்டின் நிலை தொழில் மூலதனமதிப்பு 4மடங்கு அதிகரித்தது. இதேகாலத்தில் தனியார் கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்து 9மடங்கு அதிகரித்துள்ளது. (ஆதாரம்: மத்திய புள்ளியியல்நிறுவனம், தேசீய கணக்கு புள்ளிவிவரங்கள்)

நாடு விடுதலை பெற்ற காலத்தில் இருந்து 1991வரை தனியார் கார்ப்ப்ரேட் நிறுவனங்கள் அவர்களுக்கு கிடைத்த நிகரவருமானத்தில் (ஈவுத்தொகையாக கொடுத்து விடாமல்) கைவசம் (மறுமுதலீடுக்காக) வைத்துக் கொண்ட தொகை தேசஉற்பத்தி மதிப்பில் 2%க்கும் கீழாகவே இருந்தது. இது 2007-08இல் தேசஉற்பத்தியில் 9.4%ஆக உயர்ந்தது. தற்சமயம் 8%ஆக உயர்நிலையிலேயே நீடிக்கிறது.

மறுபுறம் சுட்டெரிக்கும் உண்மை என்ன? கணிசமான பகுதி மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி, கழிப்பறை இன்றி, குடிதண்ணீர் இன்றி, தலைக்குமேல் கூரைஇன்றி, வசிக்க வீடின்றி, குளிர்வந்தாலும் மழைபெய்தாலும் சாவை எதிர்நோக்கி வாழும் கோடிக்கணக்கான மக்கள். ஊட்டச்சத்து குறைவான தாய்மார்கள், குழந்தைகள், ரத்தசோகையில் வாடும் பெண்கள், குழந்தைகள், பிறக்கும் 1000சிசுக்களில் 40சிசுக்கள் ஒரு ஆண்டுக்குள் இறக்கும் அவலநிலை (இது குஜராத் உட்பட பல மாநிலங்களில் அதிகம்) இப்படி தொடரும் கொடுமைப்பட்டியல்!

இதுதான் – பெருகும் ஏற்றத்தாழ்வுகள்தான் –தாராளமய வளர்ச்சியின் முக்கியதோர் இலக்கணம்.

மோடி அரசின் தீவிர தாக்குதல்கள்

ஊழல் மலிந்த யூ பீ ஏ அரசு தூக்கி எறியப்பட்டு பா ஜ க தலைமையில் 2014 மே மாதம் பொறுப்பேற்ற மத்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் மீது கடும் சுமைகளை ஏற்றியுள்ளது. பாஜக அரசு விலைவாசி உயர்வை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அதனை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. மொத்த விலைப்புள்ளி உயர்வு முன்பை விட கூடியுள்ளது என்று அரசு தரும் புள்ளிவிவரங்களும், ரிசர்வ் வங்கியும், ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளன.

இது நமக்கு வியப்பளிக்கவில்லை. காரணம், தாராளமயக் கொள்கைகளின் அறுவடைதான் தடையில்லா விலைஉயர்வு என்று நமக்கு அனுபவம் சொல்கிறது.முந்தைய அரசு பின்பற்றிய அதே தாராளமயக் கொள்கைகளை இன்னும் தீவிரமாக மோடி அரசு பின்பற்றுகிறது. பல ஆண்டுகளாக அரசுகள் பின்பற்றிவரும் தாராளமயக் கொள்கைகளால், அரசு செய்ய வேண்டிய முதலீடுகள் செய்யப்படாமல், அளிப்பை(Supply) அதிகரிக்கும் வாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாடற்ற இறக்குமதி ஊக்குவிக்கப்பட்டதால் ரூபாய் மதிப்பு சரிவதும் அதனால் விலைவாசி உயர்வதும் தொடர்ந்து நிகழ்கிறது. ஒரு அமெரிக்க டாலருக்கு 45 ரூபாய் என்பதிலிருந்து 67 ரூபாய் ஆக உயர்ந்தால் இறக்குமதிப்பொருட்களின் செலவு ரூபாய் கணக்கில் கிட்டத்தட்ட ஐம்பது சதம்  அதிகரிக்கும் என்பது தெளிவு.1991ல் ஒரு அமெரிக்க டாலர் மதிப்பு பதிமூன்று ரூபாய்க்கும் குறைவாக இருந்தது. இப்பொழுது எழுபது ரூபாயை தாண்டியுள்ளது.

இதே காலத்தில் நமது நாட்டு இறக்குமதி பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதிலிருந்தே விலைவாசி உயர்வுக்கு ஒரு முக்கிய காரணம் ரூபாய் மதிப்பு குறைந்து வருவதும் மற்றொன்று இறக்குமதியின் முக்கியத்துவம் அதிகரித்துவருவதும் என்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால் பிரச்சனை அது மட்டுமல்ல. தொடர்ந்து அரசு முதலீடுகள் வெட்டப்படுவது கட்டமைப்பு வசதிகளை கடுமையாகப் பாதிக்கிறது. பல முக்கிய துறைகளில் இறக்குமதியின் பங்கு அதிகரிக்கிறது. அரசின் தாராள இறக்குமதிக் கொள்கைகளும் இதற்கு இட்டுச்செல்கின்றன.

இவை அனைத்தும் உணவுப் பொருள் சப்ளையை அதிகரிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகின்றன. அரசின் வேளாண் கொள்கைகள் தானிய உற்பத்தியின் வளர்ச்சி குறைவதற்கு காரணமாக உள்ளன. இதோடு கட்டுப்பாடற்ற ஏற்றுமதி, முன்பேர வணிகம் ஆகியவையும் சேரும் பொழுது விலைவாசி உயர்வின் வேகம் அதிகரிக்கத்தானே செய்யும்? இன்னொரு புறம் உணவு, உரம் , எரிபொருள் ஆகியவற்றிற்கான மானியங்களை அரசு தொடர்ந்து வெட்டுகிறது. இக்கொள்கைகள் விலைவாசி உயர்வுக்கு நேரடி காரணமாக உள்ளன.

அரசின் வரவு-செலவு கொள்கை  

பா ஜ க அரசின் மூன்று பட்ஜெட்டுகளிலும் தாராளமய கொள்கைகள்தான் பின்பற்றப்பட்டுள்ளன. மறைமுக வரிகளை உயர்த்தி மக்கள் மீது விலைவாசி மற்றும் வரிப்பளுவை ஏற்றுவதும் பெரும் கம்பனிகள் மற்றும் செல்வந்தர்கள் மீதான நேர்முக வரிகளை குறைப்பதும் வரிஏய்ப்போருக்கு வெகுமதி அளிப்பதும்தான் பா ஜ க அரசின் வரிக்கொள்கையாக இருந்துள்ளது. அதேபோல், பாதுகாப்பு துறை, நிதித்துறை உள்ளிட்டு எல்லா துறைகளிலும் அந்நிய முதலீடு மீதான வரம்புகளை நீக்குவதும் இறக்குமதி வரிகளை குறைப்பதும்தான் மோடி அரசின் கொள்கையாக உள்ளது.

சென்ற ஆண்டு ஜெயிட்லி தனது பட்ஜெட்டில் சொத்துவரியை அறவே நீக்கி விட்டார். நூறு சீமான்கள் கையில் தலா டாலர் 1 பில்லியனுக்கு அதிகமாக சொத்து குவிந்துள்ள நாடு நமது இந்தியா. அதாவது, 130 கோடி மக்கள் வசிக்கும் இந்தியாவில் 100 பெரும் செல்வந்தர்கள் கையில் தலா ரூ 7,000 கோடிக்கும் அதிகமாக சொத்து உள்ளது. இவர்களின் மொத்த சொத்து நாட்டின் ஆண்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட நாலில் ஒரு பங்கு. இத்தகைய நாட்டில் தான் சொத்துவரி வேண்டாம்; வாரிசு வரி வேண்டாம்; வருமான வரியை குறைக்கவேண்டும் என்று செல்வந்தர்கள் கூவுகின்றனர். அவர்கள் ஊதுகுழலாக உள்ள ஊடகங்களும் இதையே உரக்கச் சொல்லுகின்றன. மத்திய மாநில அரசுகள் திரட்டும் மொத்த வரிப்பணத்தில் 65% க்கும் கூடுதலாக ஏழை மக்களை தாக்கும் மறைமுக வரிகளே உள்ளன.[1] வருமான வரி சலுகைகளை செல்வந்தர்களுக்கு அளித்தது மட்டுமின்றி, வரிஏய்ப்போருக்கு சாதகமாக இருப்பது மட்டுமின்றி, வரி தொடர்பான தாவா அரசுக்கும் பணக்காரர்களுக்கும் இருக்கும் பட்சத்தில் அதனை பரஸ்பர பேரம் மூலம் பைசல் செய்துகொள்ளவும் வலியுறுத்தி, பணக்காரர்களுக்கு இந்த ஆண்டு பட்ஜெட் அழைப்பு விடுத்துள்ளது.

மோடி அரசு பன்னாட்டு, இந்நாட்டு கம்பனிகள் மீதும் செல்வந்தர்கள் மீதும் உரிய வரி விதித்து வசூலித்து வளங்களை திரட்டுவதற்குப்பதில், மக்கள் சொத்துக்களாகிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று வருமானம் ஈட்ட முனைகிறது. வளங்களை திரட்டுவதற்குப்பதில், செலவுகளை குறைப்பதில்தான் அழுத்தம் அளிக்கிறது. அதிலும் உணவு, உரம், எரிபொருள் போன்ற மக்களுக்கும் வேளாண்மைக்கும் அவசியமான மானியங்களை வெட்டி செலவை சுருக்கிக்கொள்ள அரசு விழைகிறது.

சில படிப்பினைகள்

தாராளமய கொள்கைகள் பெரும் துயரங்களை மக்கள் வாழ்வில் அரங்கேற்றியுள்ளன. கடந்த பதினெட்டு  ஆண்டுகளில் 3லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டதற்கு இவைதான் பிரதான காரணம். தாராளமய காலத்தில் வேலை வாய்ப்பு வளர்ச்சி மிகவும் மந்தமாக இருந்துள்ளது. உருவாக்கப்பட்ட பணியிடங்களும் முறைசாரா, குறை கூலி தன்மையுடையவை. தொழில் வளர்ச்சியும் சுமார்தான். ஆலை உற்பத்தி சில ஆண்டுகளில் மட்டுமே குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்தது. சமூக ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, பழங்குடி மக்கள், தலித் மக்கள், முஸ்லிம் மக்கள் மற்றும் பெண்கள் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதெல்லாம் உண்மை. இவை, நாம் ஏன் தாராளமய கொள்கைகளை முன்பின் முரணின்றி, சமரசமின்றி, எதிர்க்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகின்றன.

ஆனால், இதன் பொருள் இந்திய அரசின் வர்க்கத்தன்மை மாறிவிட்டது என்பது அல்ல. இந்திய அரசு பன்னாட்டு நிதி மூலதனத்தையும் அதன் உள்நாட்டுக் கூட்டாளிகளையும்தான் பிரநிதித்துவப்படுத்துகிறது என்ற வாதம் முற்றிலும் தவறானது. 198௦களின் இறுதியிலும் அதனை தொடர்ந்தும் சோசலிச முகாம் பலவீனமடைந்தது. 1990களில் அமெரிக்க ஆதிக்கத்தில் ஒருதுருவ உலகு அமைந்தது. நம் நாட்டில் இந்துத்வா சக்திகள் தலைதூக்கின. அதனையொட்டி இந்திய அரசியலில் ஒரு வலது நகர்வு ஏற்பட்டது. தாராளமய கொள்கைகள் தீவிரமாக அமலாக்கப்பட்டன. இவையெல்லாம் சேர்ந்து இந்திய அரசியல் களத்தில் முக்கியமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளன என்பதில் ஐயமில்லை. நமது நாட்டில் வர்க்க பலாபலத்தை மாற்றுவதற்கான போராட்டம் இந்த மாற்றங்களை ஸ்தூலமாக ஆய்வு செய்து கணக்கில் கொள்ள வேண்டும். ஆனால் “நிகழும் அனைத்தும் உலக நிதி மூலதன ஆதிக்கத்தால் மட்டுமே” என்று கருதுவது இந்தப்போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல உதவாது. கட்சி திட்டம், இந்திய அரசு அதிகாரம்  நிலப்பிரபுக்கள் – முதலாளிகள் வர்க்கக் கூட்டின் கையில் உள்ளது என்றும், இந்த கூட்டிற்கு பெருமுதலாளிகள் தலைமை தாங்குகின்றனர் என்றும், இப்பெரு முதலாளிகள் காலப்போக்கில் பன்னாட்டு நிதி மூலதனத்துடன் மேலும் மேலும் இணைந்து செயல்படுகின்றனர் என்றும் மிகச் சரியாகவே வரையறுத்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளின் அனுபவமும் இதுதான். அதே நேரத்தில், இந்திய முதலாளி வர்க்கத்தின் கட்டமைப்பிலும், பெருமுதலாளிகளின் தன்மையிலும் செயல்பாட்டிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் கிராமப்புற மாற்றங்களையும் நாம் ஸ்தூலமாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. ஆனால் நிலப்ரபுக்கள் அரசு அதிகாரத்தில் பங்கேற்கின்றனர் என்பதை மறக்கலாகாது. பலதுருவ திசையில் உலகம் பயணிக்கிறது என்பதையும் இந்திய பெருமுதலாளிகள் உள்ளிட்ட இந்திய முதலாளி வர்க்கம் முழுமையாக ஏகாதிபத்தியத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையும், அதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வெளி இன்னும் உள்ளது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். சுருங்கச்சொன்னால், ஸ்தூலமான நிலமைகளை ஸ்தூலமாகஆய்வு செய்தே நமது இயக்கம் சரியான முடிவுகளுக்கு வர முடியும். தாராளமய காலத்தில் ஏற்பட்டுள்ள வர்க்க உறவு மாற்றங்கள் குறித்த இத்தகைய ஆய்வை கட்சி கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. சில பூர்வாங்க முடிவுகளுக்கு கல்கத்தா ப்ளீனம் வந்தது. பணி தொடர்கிறது.

[1]தீப்பெட்டி வாங்கும் பொழுதும் மண்ணெண்ணெய் வாங்கும் பொழுதும், எந்த ஒருபொருளையோ, சேவையையோ வாங்கும் பொழுதும் சாதாரண மக்கள் மறைமுக வரி கட்டுகின்றனர். இந்த வரி வாங்கும் பொருளின் விலையில் ஒளிந்திருப்பதால் மறைமுக வரி என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய வரிகள் அம்பானிக்கும் ஒன்றுதான் ஆண்டிக்கும் ஒன்றுதான். ஏழைகளின் வருமானம் குறைவாக இருப்பதால், ஏழைகள் மீது இவை பெரும் சுமையாக ஆகின்றன. செல்வந்தர்களுக்கு இது ஒரு கொசுக்கடி தான்.

 

தமிழக அரசியலும், திராவிடக் கட்சிகளின் நிலையும் !

  • பிரகாஷ் காரத்

இந்தியாவின் சமூகப் பொருளாதார நிலைமைகள் நவீன தாராளமய முதலாளித்துவத்தின் தாக்கத்தால் பெரும் மாற்றங்களுக்கு ஆட்பட்டு வருகின்றன. மார்க்சியவாதிகள் என்ற முறையில், அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள், மேல் கட்டுமானத்திலும் (Superstructure) மாற்றங்களை ஏற்படுத்துமென்பதை நாம் உணர்ந்தேயுள்ளோம். பொருளியல் நிலைமைகளிலும், பொருளாதார அடித்தளத்திலும் மாற்றம் நடக்கும் போது அது சித்தாந்தம், அரசியல், பண்பாடு மற்றும் சமூக உறவுகளில் தாக்கம் செலுத்தும்.

நிதி மூலதன ஆதிக்கம்:

நிதி மூலதனம் உலகமயமாகி முன்னுக்கு வரும் சூழலின் காரணமாக நவீன தாராளமயக் கட்டம்வந்துள்ளது. இந்த நிதி மூலதனத்திற்கு, உலகெங்கும் தங்குதடையற்று பாய்வதற்கேற்ற சூழல் தேவைப் படுகிறது. அது தேசிய எல்லைகளையோ தேச இறையாண்மையையோ மதிப்பதில்லை. நிதி மூலதனத்தின் இந்த ஆதிக்கத்தின் விளைவாக தேசிய அரசுகளும் அவற்றின் இறையாண்மையும் பலவீனமடைகின்றன.
மேலும் மேலும், ஒரு நாட்டின் எல்லைக்குட்பட்ட அரசும், ஆளும் வர்க்கங்களும் உலக நிதி மூலதனத்தின் தேவைகளை நிறைவேற்றி அதனோடு கூட்டுச் சேருகின்றன. இந்திய அரசின் மீதும், அரசியலின் மீதும் இது நேரடிவிளைவுகளை ஏற்படுத்துகிறது. பெரு முதலாளிகளால் தலைமை தாங்கப்படும் அரசும், ஆளும் வர்க்கங் களும் ஒட்டு மொத்தமாக நவீன தாராளமய அணுகு முறையை பின்பற்றுகின்றனர். அவர்களோடு பெருமுதலாளி அல்லாதவர்களும், மாநில முதலாளிகளும் கூட சேருகின்றனர். மாநில முதலாளிகளின் மூலதன திரட்டலுக்கும், வளர்ச்சிக்கும், நவீன தாரளமயம் புதியவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. அந்நிய மூலதனத்துடன் நெருங்கிக் கைகோர்க்க வழி வகுத்துள்ளது.

மாநில முதலாளிகளின் நலன்களை முதன்மையாக பிரதிபலிக்கும் மாநிலக் கட்சிகள், நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான உறுதியான நிலையெடுப்பதில்லை என்பதுடன் மாறுபட்ட விகிதங்களில் நவீன தாராளமயத்தினை ஏற்றுக்கொள்ளவும் செய்வது ஏனென்பது இதன் மூலம் புரிகிறது. மாநிலங்களில் அரசமைத்து அவ்வப்போது மத்திய அரசில் பங்குபெற் றுள்ள பிரதான மாநிலக் கட்சிகளுக்கு – பெருமுதலாளித்துவ முக்கியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜகவால் அமலாக்கப்படும் நவீன தாராளமயக் கொள்கை களுடன் எந்த முரண்பாடும் இல்லை.

கைவிடப்படும் கொள்கைகள்:

குறைந்த அளவே ஜனநாயக உள்ளடக்கத்துடன் இயங்கும் மாநிலக் கட்சிகளின் கண்ணோட்டத்திலும், திட்டங்களிலும் மேற்கண்டவை வெளிப்படுகின்றன. இருபது அல்லது முப்பது ஆண்டுகள் முன்பிருந்த நிலையுடன் ஒப்பிட்டால் – இத்தகைய கட்சிகளின் கொள்கைகளிலுள்ள ஜனநாயக உள்ளடக்கத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவையும், கூட்டாட்சிக் கோட்பாட்டையும் எடுத்துக் கொள்வோம். மாநில சுயாட்சிக் காகவும், மாநிலங்களின் கூடுதல் உரிமைக்காகவும் குரல் கொடுத்த மாநிலக் கட்சிகள் – இன்று தங்கள் கொள்கைகளில் சமரசம் செய்துகொண்டுள்ளன. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியாக இருந் தாலும் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியாக இருந்தாலும் மத்திய அரசில் அங்கம் வகித்துள்ளன. கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளுக்கும் மாநில உரிமைகளை வெட்டிச் சுருக்கும் நடவடிக்கைகளுக்கும் ஆதரவு தருபவர்களாக உள்ளனர்.

மாநில கட்சிகளால் வழி நடத்தப்படும் மாநில அரசுகள் சில திட்டங்களையும், கூடுதல் நிதியையும் -கூடுதல் அதிகாரம் உரிமைகள் வேண்டுமென்ற கொள்கை அடிப்படையில் அல்லாமல், சலுகை அடிப்படையிலேயே கோருகின்றன. அகில இந்திய அளவிலான பெருமுதலாளிகளுடன், மாநில முதலாளிகளுக்கு பிணைப்பு அதிகரித்திருப்பதையே இது காட்டுகிறது. நவீன தாராளமயக் காலத்தில் இந்த இரண்டு பிரிவினருக்கும் இடைப்பட்ட முரண்பாடுகள், மங்கலாகியுள்ளன அல்லது மட்டுப்பட்டுள்ளன. காலம் செல்லச் செல்ல, இத்தகைய மாநிலக் கட்சிகள் தங்கள் அதிகாரத்தை உறுதி செய்து கொண்டு, அரசின் பங்காளிகளாகிவிட்டன, தாங்கள் அதுவரை குரல் கொடுத்து வந்த ஜன நாயக, சமூக உள்ளடக்கங்களைக் கைவிடத் தொடங்கிவிட்டனர். உதாரணமாக, சாதி ஒடுக்கு முறைக்கும், வகுப்புவாதத்திற்கும் எதிர்ப்பென்று வருகிறபோது, தேர்தல் வெற்றியே முக்கியமாகக் கருதப்படுகிறது, அரசாங்கத்தில் நீடித்திருப்பதற்காக மாநிலக் கட்சிகள் எல்லா விதமான சாதி, வகுப்பு வாதசக்திகளோடு சமரசம் செய்துகொள்கிறது.

கிளறப்படும் அடையாளங்கள்

பல்வேறு குறுங்குழுவாத, இனவாத அடையாளங்களுக்கும் ஊக்கம் கொடுப்பது, ஏகாதிபத்திய உலகமயம் தாராளமயத்தின் மற்றொரு குணாம்சமாகும். நிதி மூலதனத்தின் சூறையாடல் தேசிய அரசுகளையும் அவற்றின் இறையாண்மையையும் பலவீனப் படுத்துகிறபோது, சாதி, மதம் மற்றும் இன அடிப்படையிலான அடையாளங்களின் வளர்ச்சியை ஊக்குவிக் கிறது. இந்திய சூழலில் தாராளமயமும், சந்தைப் பொருளாதாரமும் சாதி, வகுப்புவாத, மாநில அடையாளங்களை கிளறிவிட்டுள்ளன. சோவியத் யூனியன் சிதறுண்டதன் விளைவாக, சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு, அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றத்திற்கான கருத்தியலுக்கு ஏற்பட்டபின்னடைவும் இந்த பலவீனத்திற்கான காரணமாகும்.

மேலும், குறுங்குழுவாத, வகுப்புவாரி, சாதி வாரிதிரட்டல்களுக்கு காரணமாக , நவீன தாராளமயத்தால் உந்தப்பட்டு கூர்மையாக அதிகரிக்கிறது. சமூகப் பொருளாதார சமத்துவமற்ற நிலைமை. பாகுபாடான வளர்ச்சியும், மிகப்பெரும் அளவிலான செல்வக் குவிப்பும் போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்கிட வில்லை. வேலையற்றோரும், பொருளாதாரத்தில் பின்தங்கியோரும், அவர்களின் துன்ப துயரங்களுக்கு மற்ற மதக் குழு அல்லது மற்ற சாதிதான் காரணம் என்ற சாதிய, மதவாத முழக்கங்களுக்கு எளிதில் அகப்படுகின் றனர். நவீன தாராளமய கொள்கைகளுக்கும், அதன் அரசியல் ஆதிக்கத்திற்கும், மத, சாதி மற்றும் இனக் குழுக்களுக்கிடையிலான முரண்பாடுகள் உகந்தவையாக அமைந்துள்ளன.

இந்துத்துவப் பரவலின் பின்னணி

பெரும்பான்மை வகுப்புவாதத்தின் அதாவது இந்துத் துவத்தின் வளர்ச்சியை இந்தப் பின்னணியில்தான் பார்க்கப்பட வேண்டும். ஆளும் வர்க்கங்களின் ஆட்சியதிகாரத்தை உறுதி செய்யவும், மக்களுக்கு சொந்தமாக இருக்கும் மிக மிகக் குறைந்த நிலம் உள்ளிட்ட வளங்களில் இருந்து அவர்களை அகற்றி, நவீன தாராளமய நடவடிக்கைகளை தொடரவும், இந்துத்துவ வகுப்புவாதத்தின் நடவடிக்கைகள் நேரடியாக பலன் கொடுக்கின்றன. மக்களை மதவாத அரசியலுக்கும், அணி திரட்டலுக்கும் திசைதிருப்புவது அரசுக்கோ அதன் கொள்கைகளுக்கோ எவ்விதத்திலும் அச்சுறுத்தலாக இல்லை, ஆனால் மக்களைத்தான் பிளவுபடுத்துகிறது.

தேர்தல் நோக்கில் மக்களை சாதி எல்லைகளுக் குட்பட்டு பிரிக்கும் சாதி அரசியலும் மேற்சொன்ன அதே பாத்திரத்தையே வகிக்கிறது. நவீன தாராளமய அரசாட்சியின் கீழ், இந்த வகையான முதலாளித்துவ அரசை உறுதி செய்திடும் ஆயுதமாக வகுப்புவாதம் செயல்படுகிறது. எங்கெல்லாம் வகுப்புவாதம் முன்னேறுகிறதோ, அங்கு ஜனநாயக அரசியல் பின்தள்ளப்படுவதுடன், வர்க்க அடிப்படையிலான இயக்கங்கள் பின்னடைவைச் சந்திக்கின்றன. மத்தியில், பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் அரசமைத்துள்ள நிலையில், இந்துத்துவ சக்திகளுக்கு பெரும் ஊக்கம் கிடைத்துள்ளது. அவர்கள் பலவீனமாக உள்ள மாநிலங்களில் காலூன்றவும், தங்கள் தளத்தை விரிவாக்கவும் பார்க்கின்றனர். தமிழ்நாடு அந்த மாநிலங்களில் ஒன்று.

தமிழக முதலாளித்துவம்

தேசிய அளவிலான வலதுசாரித் தாக்குதலின் இரண்டு முனைகளாக அமைந்த நவீன தாராளமயமும், வகுப்புவாதமும் தமிழகத்தின் அரசியல், பொருளாதார நிலைகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிற தென்பதை நாம் பார்க்க வேண்டும். முதலாளித்துவ வளர்ச்சி இன்று உயர்நிலையில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. தொழிற்சாலைகளில் மிகப்பெரும் தனியார் முதலீடுகள், விவசாயத்தில் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ உறவுகள், முன்னேறிய முதலாளித்துவ வர்க்கம் என்ற வகைகளில் இந்த வளர்ச்சி அமைந்திருக் கிறது. நவீன தாராளமயக் கொள்கைகளின் பாதிப்பு காரணமாக, மாநிலத்தில் நிலவும் பொருளாதார சமத்துவமற்ற நிலை பெருமளவில் அதிகரித்துள்ளது. 73 சதவீதம் கிராமப்புறக் குடும்பங்களுக்கு சொந்தமாக நிலம் இல்லை; 78 சதவீதம் குடும்பங்கள் மாதம் ரூ.5000 க்கும்குறைவாகவே சம்பாதிக்கும் நிலை உள்ளது. இந்தசூழலில் ஏழை விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்கள் மற்றும் விவசாயிகளைத் திரட்டி நிலப்பிரத் துவத்துக்கு எதிராகவும் மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளுக்கு எதிராகவும் போராட மிகப்பெரும் வாய்ப்பு உள்ளது. நகர்ப்புற தொழிலாளர்களான ஆலைப்பாட்டாளிகள் மற்றும் அமைப்புசாராத் துறைகளில் அதிகரித்துவரும் வர்க்க உணர்வு பெற்ற பாட்டாளி களை திரட்ட வேண்டும்.
கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் மிக வேகமான தனியார்மயத்தின் மூலம் நவீன தாராளமயக் கொள்கைகள் பெரும் தாக்கம் செலுத்துகின் றன. கல்வியும், மருத்துவமும் மக்களுக்கு முக்கியப் பிரச்சனையாகியுள்ளது. நவீன தாராளமயத்துக்கு எதிரான போராட்டம் பொருளாதார தளத்தில் மட்டும் நிற்பதல்ல. அது ஒட்டுமொத்த சமூகத்திலும், அரசியலிலும் தாக்கம் செலுத்துகிறது.

தமிழகத்தின் அரசியல் சூழல்

வேறுபட்ட அரசியல் அம்சத்தைக் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. 1960களின் பிற்பகுதியில் திமுகவும் பின்னர் அதிமுகவும் என மாநில முதலாளித்துவ கட்சிகள்தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளன. திமுகவிலிருந்து 1972 ஆம் ஆண்டில் பிரிந்து உருவானதுதான் அதிமுக. இந்த இரண்டு கட்சிகளுமே மாறி மாறி ஆட்சியில் இருந்துவருகின்றன. தமிழ் நாட்டில் வேறெந்தக் கட்சியும் கூட்டணி ஆட்சியில் கூடஇருந்ததில்லை. இதுதான் தமிழகத்தை மற்ற மாநிலங் களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது, அதாவது சுமார் ஐம்பது ஆண்டுகளாக ஒருவருக்கு ஒருவர் எதிராக செயல்படும் இரண்டு பிரதான மாநிலக் கட்சிகளும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தினாலும், அவர் களிடையே கொள்கையளவில் அடிப்படை வேறுபாடு இல்லை. கடந்த 50 ஆண்டுகளில் எந்த அகில இந்திய முதலாளித்துவக் கட்சியும் மாநில அதிகாரத்தில் இருந்ததில்லை என்பது மாறுபட்ட மற்றொரு அம்சமாகும். தமிழகத்தின் அரசியல் போக்கு எந்த மாற்றமும் இல்லாமல் உறைந்துவிட்டதென்பது இதன் பொருளல்ல.

திமுக-அதிமுக

திமுகவும் அதிமுகவும் திராவிட இயக்கத்தின் வாரிசுரிமை கோருகின்றன. இந்தக் கட்சிகள் மாநில முதலாளிகள் மற்றும் ஊரக பணக்காரர்களிடையே ஆழமாக வேரூன்றியுள்ளன.
மாநிலத்தில் நடந்துவரும் முதலாளித்துவ விரிவாக்கத்துடன் இணைந்து இக்கட்சிகளும் வளர்ந்துள்ளன.

சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் திராவிட இயக்கம் வேறுபட்ட அரசியல் வடிவத்தையும் சமூக சீர்திருத்தக் கொள்கைகளையும் கொண்டிருந்தது. முதலில் அது பிராமணரல்லாதோர் இயக்கமாக அறியப்பட்டது, அதன் அரசியல் பிரதிநிதியாக அமைந்த நீதிக்கட்சி பிராமண சாதி அல்லாதவர்களிடையே உள்ள நிலவுடைமையாளர்கள் மற்றும் வசதிபடைத்த பகுதியினரின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தியது. அது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவும், தேச விடுதலை இயக்கத்திற்கு எதிராகவும் அமைந்தது. பெரியாரின் சுயமரியாதை இயக்கம் சாதி எதிர்ப்பு மத எதிர்ப்பு மேடைகளில் முற்போக்கான பங்கு வகித்து. பிராமணிய இந்துத்துவத்தையும் அதன் வர்ணாசிரம தர்மத்தையும் உறுதியுடன் எதிர்த்தது.

இந்த மரபில் வந்த திமுக 1967 ஆம் ஆண்டு ஆளும் கட்சியானது. 1972 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அதிமுக 1977 ஆம் ஆண்டில் தனது முதல் தேர்தலை வென்றது. இரண்டு கட்சிகளும் தமிழக முதலாளிகளின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தி வளர்ந்தன. இந்த நிகழ்வுப்போக்கில், பெரியாரால் பிரச்சாரம் செய்யப்பட்ட முற்போக்கான சமூகக் கருத்துக்களை கைவிட்டன. சமூக, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் மேலோட்டமான அளவிலேயே நிறுத்தப்பட்டது. தமிழ் மொழியையும் பண்பாட்டையும் முன்னெடுப்பதென்ற முழக்கம் நடப்பில் உள்ளது. ஆனால் அதன் உள்ளடக்கமும், மதிப்பும் மாறியுள்ளது. குறுகிய தமிழ்த் தேசியம் மற்றும் இனவெறிப் பார்வை ஆகியவை இந்த மாற்றத்தின் உப விளைவுகளாக அமைந்திருக்கின்றன.

தமிழகத்தின் அரசியலில் காங்கிரஸ்-பாஜக இடையிலான இருமுனைப் போட்டியோ அல்லது காங்கிரஸ் – மாநிலக் கட்சி இடையிலான இருமுனைப் போட்டியோ ஆதிக்கம் செலுத்தவில்லை. இந்த நிலையில் இடது ஜனநாயக மாற்றை கட்டமைப்ப தற்கான போராட்டம் இன்னும் சிக்கலாகிறது. இரண்டு திராவிடக் கட்சிகளும் அரசியல் தளத்தில் பிரதான இடத்தைப் பிடித்துள்ளன. அகில இந்தியமுதலாளித்துவக் கட்சிகள் உள்ளிட்டு மற்ற கட்சிகள் தேர்தல் கூட்டணியில் அவர்களின் ஜூனியர் பங்காளிகளாகவே இணைந்து கொள்கின்றனர்.

சித்தாந்தப் போராட்டம்

எனவே, இடது ஜனநாயக அணியையும், மாற்றையும் கட்டமைப்பதற்கு காங்கிரஸ் பாஜக-வை எதிர்த்து மட்டுமல்லாமல், பிரதான மாநிலக் கட்சிகள் இரண்டின் அரசியல் மற்றும் சித்தாந்தத்தையும் எதிர்த்த அரசியல் போராட்டம் தேவைப்படுகிறது. உலகமயமாக்கத்தின் தாக்கம் காரணமாக சாதி, மதம் மற்றும் இனம் போன்ற குறுகிய அடையாளங்களின் பிரச்சனைகள் உலகம் முழுவதும் அதிகப்படுத்தப்படுகின்றன. இந்தியாவிலும் அடையாளம் சார்ந்த அரசியலின் கூர்மையான அதிகரிப்பில் அதன் தாக்கம் உணரப்படுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த காலத்தில் பிரதானமாக இருந்த திராவிட இயக்க கருத்தியல் பிரச்சாரம் தளர்வடைந் துள்ளது. நவீன தாராளமயமாக்கல் அந்த கருத்தியலின் மதிப்பீடுகளை நீர்த்துப் போகச் செய்வதில் பங்காற்றி யுள்ளது. சாதி அடிப்படையிலான போட்டி அரசியல் கூர்மையாக வளர்ந்துள்ளது. வன்னியர் சாதி ஓட்டுக்களை திரட்ட முயலும் பாட்டாளிமக்கள் கட்சி தன்னை தலித் விரோத அரசியலின் மூலம் வெளிப்படுத்துகிறது. இன்னும் பல்வேறு சாதி அடிப்படையிலான கொங்கு நாடு மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி போன்ற அரசியல் கட்சிகளும் எழுந்துள்ளன.

இந்துத்வ திட்டம்

இந்துத்வ வகுப்புவாத அரசியல் இத்தகைய சாதி அரசியலின் உடன்பிறப்பாகும். ஆர்.எஸ்.எஸ். தன்னுடைய சமூகத் தளத்தை இத்தகைய ‘சமூகக் கட்டமைத்தலின்‘ (Social Engineering) மூலம் விரிவாக்கிட முயற்சிக்கிறது. சாதி அடிப்படையிலான குறுங் குழுக்களை ஆர்.எஸ்.எஸ் பாஜக ஆதரிக்கின்றன. அதன் மூலம் தங்கள் இந்துத்துவ தத்துவத்திற்கான சமூகத் தளத்தை விரிவுபடுத்த விரும்புகின்றன. மத்தியில் பாஜக அதிகாரத்திற்கு வந்துள்ள நிலையில், வி.ஹெச்.பி மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட பிற இந்துத்துவ அமைப்புகள் சிறுபான்மையோரைக் குறிவைத்து, மத அடிப்படையிலான பிளவுகளை ஏற்படுத்தி தங்களின் செல்வாக்கை அதிகரிக்கவிரும்புகின்றனர். இது கன்னியாகுமரி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக நடந்துவருகிறது. இந்த நடவடிக்கைகள் மற்ற இடங்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது. கடந்த காலத்தின் பல கட்டங்களில் பாஜகவானது பிரதான மாநிலக் கட்சிகளுடன் கைகோர்த்ததும், கடந்த நாடாளு மன்றத் தேர்தலில் தேமுதிக, பாமக மற்றும் மதிமுக போன்ற சிறு கட்சிகளுடன் கைகோர்த்ததும் ஒரு அரசியல் ரீதியான ஒப்புதலை வழங்கியுள்ளது. திராவிட இயக்கமும் அதன் சித்தாந்தமும் வலுவிழந்திருப்பதும் மதச்சார்பற்ற-ஜனநாயக மாண்புகளை பின்பற்றுவதில் செய்யப்படும் சந்தர்ப்பவாதமும் கவலைக்குரியவை.

இடது ஜனநாயக மாற்று

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இடதுசாரி ஜன நாயக சக்திகளுக்கும் இதுவொரு மிகப்பெரும் சவாலை முன் நிறுத்துகிறது. அதிமுக மற்றும் திமுக கட்சிகளுடன் கைகோர்த்துக் கொண்டு நவீன தாராளமயத்தையோ அல்லது மதவாத சக்திகளையோ எதிர்த்துப் போராடுவது சாத்தியம் இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளின் தனிப்பட்ட வலிமையை அதிகரிப்பதின் மூலம்தான் திராவிடக் கட்சிகளில் உள்ள ஜனநாயக சக்திகளும், சிறு மாநிலக் கட்சிகளும் ஒரு மாற்று அரசியல், பொருளாதார, சமூக மேடைக்கு ஈர்க்கப்படும். உழைக்கும் மக்கள் பிரச்சனைகளில் நீடித்த போராட்டங்களையும், தொடர் இயக்கங்களையும் நடத்துவதன் மூலமே இது சாத்தியமாகும்.

திராவிட இயக்கம் மற்றும் அதன் கருத்தியல் மரபை விமர்சன ரீதியாக ஆய்வு செய்து விவாதம் நடத்துவது தமிழக சமூக அரசியல் சூழலில் அவசியமான ஒன்றாகும். துவக்ககால சமூக நீதி இயக்கத்தின் ஜனநாயக மரபினை மீட்டெடுக்க வேண்டும், அதே நேரத்தில் திராவிடக் கட்சிகளின் முதலாளித்துவ முகத்தையும், பிற்போக்கான சமூகப் பார்வையையும், சந்தர்ப்பவாதத்தையும் அம்பலப்படுத்தி அவற்றை எதிர்த்துப் போரிட வேண்டும். சமூக நீதியின் காவலராக முன்னின்று அதற்கானபோராட்டங்களை முன்னெடுத்துச் செல்வது என்பது இடது ஜனநாயக மேடையின் முக்கியப்பணியாகும்; தீண்டாமைக்கு எதிராகவும், தலித் மக்கள் மீதான சமூக ஒடுக்கு முறைக்கு எதிராகவும் போராடுவதுதான் அதன் முக்கியத் திசை வழியாகும். பாலின ஒடுக்குமுறைக்கு எதிராகவும், பெண் சமத்துவத்தை வலியுறுத்தியும் நடத்த வேண்டிய போராட்டங்கள் பிரதான இடத்தைப் பெற வேண்டும்.

தமிழ் மக்களின் தாய்மொழியும், இந்தியாவின் பிரதான தேசிய மொழிகளில் ஒன்றுமான தமிழின் முன்னேற்றத்திற்கும், செழுமைக்கும் பாடுபடுவதாக இடதுஜனநாயக நிலைப்பாடு அமைய வேண்டும். அனைத்து இந்திய மொழிகளுக்கும் இடையே சமத்துவமும், கல்வி நிர்வாகம் உள்ளிட்டு சமூகத்தின் எல்லாப் பகுதிகளிலும் அந்தந்த மொழியின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டுக்காகவும் இடது ஜன நாயக அணி முன்நிற்க வேண்டும். இத்துடன், வரலாற்று வளமிக்க தமிழர் பண்பாட்டின், மதச்சார்பற்ற ஜனநாயக அடிப்படையிலான விழுமியங்கள் தொடர்ந்து வளர்த்தெடுக்கப்பட வேண்டும். நுகர்வுக் கலாச்சார, கார்ப்பரேட் மதிப்பீடுகள் தமிழகத்தின் அத்தகைய பண்பாட்டுக்கு அச்சுறுத்த லாக அமைந்துள்ளன. தமிழகத்தில் இடதுஜனநாயக மாற்று இடது ஜனநாயகத் திட்டத்தின் அடிப்படையில் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அண்மையில் அத்தகைய திட் டத்தின் வரையறைகளை வகுத்துள்ளது.

இந்தத் திட்டத்தை தொடர்ந்து வளர்த்தெடுத்து தமிழக மக்களுக்கு ஒரு மெய்யான, முழுமையான – அரசியல், சமூக, பண் பாட்டு மற்றும் சித்தாந்த மாற்றை வழங்குவது அவசியம்.

  • தமிழில்: சிந்தன்

தொழிலாளர் வர்க்கத்தை ஒன்றுபடுத்துவோம், அவர்களின் வர்க்க உணர்வை மேம்படுத்துவோம்!

1964 ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று அன்றைய கல்கத்தா நகரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 7 ஆவது அகில இந்திய மாநாட்டில் கட்சித் திட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் நீண்ட காலமாக நடைபெற்று வந்த அரசியல் மற்றும் தத்துவார்த்தப் போராட்டத்திற்கு ஒரு முடிவு காணப்பட்டது. அந்தப் போராட்டம், இந்திய அரசின் வர்க்க குணாம்சம் குறித்தும் அத்துடன் இந்தியாவில் ஒரு சோசலிஸ்ட் அமைப்பை உருவாக்குவதற்கான புரட்சிகரப் போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்தின் பங்களிப்பு குறித்ததுமாகும். மேலும் இது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) என்று புதியதொரு கட்சி உதயமானதையும் அறிவித்தது. சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் வெளிவருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்னதாகவே, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் கருத்து வேறுபாடுகள் உருவாகத் துவங்கியிருந்தன.

இந்திய அரசு அமைப்பில் இந்திய முதலாளிகளின் பங்கு குறித்து, கட்சித் திட்டத்தில் தீர்மானகரமாகக் கூறப்பட்டது. கட்சித் திட்டத்தின்படி, இந்திய அரசு, “பெரு முதலாளிகளால் தலைமை தாங்கப்பட்ட முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் வர்க்க ஆட்சியாகவும், அது முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையைப் பின்பற்றுவதற்காக மேலும் மேலும் அந்நிய நிதி மூலதனத்துடன் நெருக்கமாக உறவை அதிகரித்துக் கொண்டும், செயல்பட்டு வருகிறது,’’ என்று இறுதிப்படுத்தப்பட்டது.

இந்தக் கட்சித் திட்டம், தொழிலாளர் வர்க்கத்தால் தலைமை தாங்கப்படும் மக்கள் ஜனநாயக அரசை நிறுவுவதுதான் கட்சியின் லட்சியம் என்றும், அதற்கான மக்கள் ஜனநாயகப் புரட்சியின் தலைமைப் பாத்திரம் தொழிலாளி வர்க்கத் தினுடையதுதான் என்றும் பறைசாற்றியது.

தொழிலாளி வர்க்கத்தின் தலைமைப் பாத்திரம் குறித்த இத்தகைய தெளிவான புரிதல்தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை இதரர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதில் பிரதான அம்சமாக உள்ளது.

வேறெந்த வர்க்கமும் தலைமை தாங்க முடியாது

கட்சித் திட்டம், தொழிலாளர் வர்க்கத்தின் முக்கியத்துவத்தை இவ்வாறு அடிக்கோடிட்டுக் காட்டியிருப்பதுடன், இந்தியாவில் தொழிலாளர் வர்க்கம் மற்றும் அதன் அரசியல் கட்சியின் கீழன்றி மக்கள் ஜனநாயக முன்னணியை வெற்றிகரமாகக் கட்டவோ, புரட்சியை வெற்றி பெறச் செய்யவோ முடியாது என்று அறுதியிட்டுக் கூறியது. வரலாற்று ரீதியில், “நவீன சமுதாயத்தில் தொழிலாளி வர்க்கத்தைத் தவிர வேறு எந்த ஒரு வர்க்கமும் இந்தப் பணியை ஆற்றக்கூடியதாக இல்லை என்ற உண்மையை நமது காலத்தின் மொத்த அனுபவமும் தெளிவாக உணர்த்துகின்றது,’’ என்றும் கட்சித் திட்டம் தெளிவுபடுத்தியது.

தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையின் கீழ் கட்டப்பட வேண்டிய கூட்டணி குறித்து கட்சித் திட்டத்தில் கூறப்பட்டிருப்பதாவது: “தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் வலுவான கூட்டணிதான் மக்கள் ஜனநாயக முன்னணிக்கு மையமானதும், அடித்தளமானதும் ஆகும். நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், நீண்ட கால விளைவுகளைத் தரக்கூடிய ஜனநாயக மாற்றத்தைக் கொணரவும், ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்தை உறுதிப்படுத்தவும் இந்தக் கூட்டணி மிக முக்கியமான சக்தியாக இருக்கும். புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில் இதர வர்க்கங்கள் வகிக்கும் பாத்திரம் தொழிலாளர் – விவசாயிகள் கூட்டணியின் வலிமை, ஸ்திரத்தன்மை ஆகியவற்றையே முக்கியமாக சார்ந்துள்ளது.’’

அதேசமயத்தில், கட்சியின் 7 ஆவது அகில இந்திய மாநாடு, தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்குத் தலைமை ஏற்க வேண்டிய, தொழிற்சங்கங்கள் மற்றும் இதர வெகுஜன ஸ்தாபனங்களில் பெருமளவுக்கு இருந்த பலவீனங்களையும் கவனத்தில் எடுத்துக் கொண்டது.

கட்சியின் அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம், “கட்சி உறுப்பினர்கள், மக்களுக்கான நிவாரணங்களைப் பெற்றெடுக்கவும் அவர்களது வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தவுமான திட்டமிட்டப் போராட்டங்களுக்கு உறுதியாகத் தலைமையேற்று செயல்பட வேண்டும்’’ எனவும் வலியுறுத்தியது. தீர்மானத்தில் மேலும், “வெகுஜன ஸ்தாபனங்களில், அதிலும் குறிப்பாக தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்களில் நிலவும் பலவீனங்களினால் எழும் ஆழமான ஆபத்துக்களிலிருந்து முழுமையாக விடுபட்டு, எழாவிட்டால், இந்தப் பணியை வெற்றிகரமாக ஆற்றிட முடியாது’’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த சமயத்தில் தொழிற்சங்க இயக்கத்தின் நிலைமை என்னவாக இருந்தது? அரசாங்கமும், ஆளும் வர்க்கங்களும் தாக்குதலைத் தொடுத்துக் கொண்டும், அதன் விளைவாக உழைக்கும் மக்களின் மீதான சுமைகள் அதிகரித்துக் கொண்டும் இருந்த அதேசமயத்தில், சீர்திருத்தத் தலைமையின் கீழிருந்த தொழிலாளர்கள்கூட போராட்டக் களத்தில் முன்னேறிக் கொண்டிருந்தனர்.

அணிதிரள அறைகூவல்

கட்சி உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் கீழ்வரும் வழிகாட்டுதல்களை மாநாடு வழங்கியது. “சரியான மற்றும் நடைமுறை சாத்தியமான கோரிக்கைகளை வடித்தெடுத்து, தொழிலாளர்களை அவற்றின் கீழ் அணிதிரட்டிட வேண்டும். அதேசமயத்தில் இதர தொழிற்சங்கங்களின் கீழ் உள்ள தொழிலாளர்களையும் சகோதரப்பூர்வமான முறையில் அணுகிட வேண்டும். அவற்றின் தலைமைகளுடனும் ஒரு முறையான அணுகுமுறையை ஏற்படுத்திக் கொண்டு ஒன்றுபட்ட போராட்டங்களைக் கட்டவிழ்த்து விட வேண்டும்.’’

அதேசமயத்தில், தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக ஏற்படும் போராட்டங்களைச் சார்ந்திருக்க முடியாது என்பதையும் தெளிவுபடுத்தி இருந்தது. ஸ்தாபனத்தை வலுப்படுத்துதல், தொழிற்சங்க அமைப்புகளுக்குள் வராது வெளியே இருக்கும் பெருவாரியான தொழிலாளர்களை ஸ்தாபனப்படுத்துதல், அவர்களின் அரசியல் உணர்வினை மேம்படுத்துதல் ஆகிய பணிகளின் முக்கியத்துவம் அடிக்கோடிட்டுக் கூறப்பட்டிருந்தது. அதேசமயத்தில், தொழிற்சங்க இயக்கத்தில் முன்பு நிலவிய இக்கட்டான நிலைமையினை அடிக்கோடிட்டுக் காட்டிட, கட்சியின் அகில இந்திய மாநாடு, தவறவில்லை. அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “தொழிற்சங்க இயக்கம் மிகவும் ஆழமான முறையில் பொருளாதாரவாதத்திற்குள் மூழ்கி இருக்கிறது. தொழிலாளர்களின் அரசியல் உணர்வினை வளர்த்தெடுக்கவும், மக்களின் இதர பகுதியினருக்கு, குறிப்பாக விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நின்று அவர்களை அணிதிரட்டிடவும் நாம் தவறிவிட்டோம்,’’ என்றும் குறிப்பிட்டிருந்தது. `இந்த பலவீனத்தை மிகவும் விரைவில் சரி செய்திட வேண்டும் என்றும், அனைத்து வழிகளிலும் அரசியல் உணர்வினை மிகவும் விரைந்து, புகுத்திட வேண்டும்’ என்றும் கட்சியால் அறைகூவல் விடுக்கப்பட்டது.

கட்சி, தொழிலாளர் வர்க்க ஒற்றுமையைப் பாதுகாத்திட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளத் தீர்மானித்திருந்தது. எனவே, ஏஐ டியுசி-இன் ஒற்றுமையை நிலைநிறுத்திடவும் அதனை வலுப்படுத்திடவும் அறைகூவல் விடுத்திருந்தது. ஏஐடியுசி-இன் ஒற்றுமையை சீர்குலைப் பதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும் தொழிலாளர்களை அணிதிரட்டி முறியடித்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தது. தொழிற்சங்க ஜனநாயகம் மிகவும் பலவீனமாக இருப்பதையும், அது இயக்கத்தை எந்த அளவிற்கு மிகவும் ஆழமான முறையில் இடருக்குள்ளாக்குகிறது என்பதையும், அது எவ்வாறெல்லாம் தலைமையில் அதிகார வர்க்க செயல்பாட்டிற்கு இட்டுச் செல்கிறது என்பதையும் சுட்டிக் காட்டியதுடன், அவை ஒழிக்கப்பட வேண்டும் என்றும் கட்சி அறைகூவல் விடுத்தது.

இவ்வாறு, ஏழாவது அகில இந்திய மாநாடு நிறைவேற்றிய தீர்மானத்திலேயே, தொழிற்சங்க அரங்கில் கட்சி ஆற்ற வேண்டிய பணிகள் சுருக்கமாகப் பட்டியலிடப்பட்டிருந்தன. தொழிற்சங்க இயக்கத்தின் திசைவழி மிகவும் தெளிவானதாகும். ஒற்றுமையை நிலைநாட்டுங்கள், ஸ்தாபனத்தை பலப்படுத்துங்கள், அதன் ஜனநாயக செயல்பாட்டை உத்தரவாதப்படுத்துங்கள், அரசியல் உணர்வை அதிகரித்திடுங்கள், வீரஞ்செறிந்த வெகுஜனப் போராட்டங்களை உருவாக்குங்கள் என்று மிகவும் தெளிவான முறையில் திசைவழி காட்டப்பட்டிருந்தது..

கடமைகள் குறித்த ஆவணம்

1967 இல் மத்தியக்குழுவால் நிறைவேற்றப்பட்ட `தொழிற்சங்க அரங்கில் ஆற்ற வேண்டிய கடமைகள்’ என்னும் ஆவணத்தில் இதற்கான கட்டளைகள் மேலும் விரிவான முறையில் கூறப்பட்டு, வலுப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தத் தீர்மானம், தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் செயல்படும்போது ஆற்ற வேண்டிய அனைத்து அரசியல் கடமைகள், ஸ்தாபனக் கடமைகள் மற்றும் தத்துவார்த்தக் கடமைகள் குறித்தும் தொட்டுக்காட்டி இருக்கிறது.

பொருளாதாரப் போராட்டங்களில் கூட வர்க்க ஒற்றுமை மிகவும் பலவீனமாக இருந்ததைக் கவனத்தில் கொண்டு வர்க்க ஒற்றுமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது. `கடமைகள்’ குறித்த ஆவணம், தொழிற்சங்கங்கள் தங்கள் பங்களிப்பினை வலுவான முறையில் ஆற்றிட வேண்டுமாயின், `அவை தொழிலாளர் வர்க்கத்தின் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதில் ஒரு வலுவான கருவியாக மாறிட வேண்டும், இப்போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்தை முழுமையாக ஒன்றுபடுத்திடும் வல்லமையைப் பெற்றிருக்க வேண்டும்’. இத்தகு ஒற்றுமையின் முக்கியத்துவம் மற்றும் வர்க்க உணர்வினை மேம்படுத்தக்கூடிய விதத்தில் வர்க்கப் போராட்டத்தை உக்கிரப்படுத்துதலுக்கும் அழுத்தம் தரப்பட்டிருந்தது.

முதலாளிகள் மற்றும் அரசாங்கத்தின் தாக்குதலைத் தடுத்து, முறியடித்திட ஐக்கிய முன்னணி அமைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அதேசமயத்தில், `கடமைகள்’ குறித்த ஆவணம் இவ்வாறு `தாக்குதலைத் தடுத்து நிறுத்தும் பணியில் ஒரு வர்க்கமாக செயல்பட’ வேண்டியது தொழிலாளர் வர்க்கத்திற்கு அவசியமான ஒன்று என்பது குறித்தும் அழுத்தம் தந்திருந்தது. ஒன்றுபட்ட நடவடிக்கைகளை வளர்த்தெடுப்பது தொடர்பாக, 1967 ஆவணம் காட்டிய திசைவழி, இன்றைக்கும் பொருத்தம் உடையதாக இருப்பது, மிகவும் சிறப்புக்குரிய ஒன்றாகும்.

“மிகவும் உறுதியான முறையிலும், தீர்மானகரமான விதத்திலும் கீழிருந்து ஐக்கிய முன்னணியைக் கட்டும் உத்திகள் மக்களைத் திரட்டுவதில் உண்மையான போல்ஷ்விக் முறையை நிறுவுகிறது. ஐக்கிய முன்னணி குறித்து தலைமை மட்டத்திலிருந்தான முயற்சிகள் மூலம் இது வலுப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் கீழிருந்து கட்டப்படும் ஐக்கிய முன்னணி முயற்சிகளுக்கு இது ஒரு முன் நிபந்தனையாகும். ஒரு பரந்துபட்ட ஐக்கிய முன்னணியால் மட்டுமே, முதலாளித்துவத்தின் தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் மத்தியில் தன்னெழுச்சியான முறையில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும். இவ்வாறான முறையில் ஸ்தாபன ரீதியாகத் திரட்டப்பட்ட தொழிலாளர்களோடு, திரட்டப்படாத தொழிலாளர்களையும், முன்னேறிய தொழிலாளர்களோடு, பின்தங்கிய தொழிலாளர்களையும், அனைத்துத் தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் கீழ் உள்ள அனைத்துத் தொழிலாளர்களையும் தங்கள் நலன்களைப் பாதுகாப்பதற்காக வெற்றிகரமான முறையில் அணிதிரட்டிட முடியும்.’’

இந்த ஆவணமானது கடந்தகால நடைமுறைகளிலிருந்து முழுமையாக முறிவினை ஏற்படுத்திக் கொண்டு, வர்க்க ஒற்றுமை மற்றும் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டிய அவசியத்தைப் பறைசாற்றியது. இத்தகைய புரிதலின் அடிப்படையில்தான் கட்சி, தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் தன் பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறது.

ஆனாலும், ஏஐடியுசி-இன் பதாகையின் கீழ் வீரஞ்செறிந்த போராட்டங்களை வளர்த்தெடுப்பதோ, ஜனநாயக முறையில் செயல்படுவதை உத்தரவாதப்படுத்துவதோ, ஒற்றுமையைக் கட்டும் பணியை முன்னெடுத்துச் செல்வதோ சாத்தியமில்லாமல் இருந்தது.   ஏஐடியுசி-க்குள்ளேயே ஒற்றுமையை நிலைநிறுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை மேற்கொண்ட முயற்சிகள் பலனளித்திடவில்லை. 1962 இலிருந்து ஏஐடியுசி-க்குள்ளேயே நடத்தி வந்த போராட்டம் 1969 வரை தொடர்ந்தது.

ஏஐடியுசி-இன் அப்போதைய முன்னணித் தலைமை, அதன் அரசியல் மற்றும் தத்துவார்த்த நிலைமைகள் காரணமாக, போராட்ட நடவடிக்கைகளுக்குத் திட்டமிடுவதிலும், தலைமை தாங்குவதிலும் முன்முயற்சி எடுக்கத் தயாராக இருக்கவில்லை. ஏதாவது காரணத்தைச் சொல்லி எவ்விதமான போராட்டத்திற்கும் தலைமையேற்கக் கூடிய விதத்தில் தயாரிப்புப் பணிகளைச் செய்யாதவிதத்தில் அமைந்திருந்தன. ஊதியங்கள், அகவிலைப்படி, போனஸ் போன்று நாட்டிலிருந்த உழைக்கும் மக்கள் எதிர்கொண்ட பல்வேறு முக்கியமான பிரச்சனைகளாக இருந்தாலும் சரி, அரசாங்கத்துடன் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக தத்துவார்த்த மற்றும் அரசியல் பிரச்சனையாக இருந்தாலும் சரி, ஏராளமான வித்தியாசங்கள் தோன்றிக் கொண்டே இருந்தன. இவை அனைத்தையும் ஜனநாயக முறையில் தீர்த்திட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் சீர்குலைக்கப்பட்டன. இவை அனைத்தும் இப்போது தொழிலாளர் வர்க்க இயக்க வரலாற்றின் ஒரு பகுதியாக மாறிவிட்டது.

`தொழிலாளர் வர்க்கம் முதலாளிகளிடமிருந்தும், அரசாங்கத்திடமிருந்தும் மூர்க்கத்தனமான முறையில் தாக்குதல்களைத் தொடர்ந்து எதிர்கொண்டு வந்த’ சமயத்தில்தான் இவை அனைத்தும் நடந்து கொண்டிருந்தன. 1967 தேர்தல்களுக்குப் பின்னரும், நாட்டில் எட்டு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோற்ற பின்னரும், மக்கள் மத்தியில் இருந்த கோபம் பல்வேறு வடிவங்களில் வெடித்தது. நாட்டில் பல்வேறு பிரிவினரின் தீவிரமான போராட்டங்களும் நடைபெற்று வந்தன. மத்தியிலிருந்த அரசாங்கம் உழைக்கும் வர்க்கத்தின் போராட் டங்களுக்கு எதிராகக் கடும் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் இருந்த மாநில அரசாங்கங்கள், தொழிலாளர்களின் பக்கம் நின்று, மத்திய அரசின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிய மறுத்தன. இந்தக் காலகட்டத்தில்தான் இம்மாநில அரசாங்கங்கள் ஆளும் வர்க்கங்களால் துவக்கப்பட்ட சதிகளின் மூலமாகக் கவிழ்க்கப்பட்டன.

புதிய ஸ்தாபனம் உதயம்

ஏஐடியுசி தலைமை, போராடும் தொழிலாளர்களின் விருப்பங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறியதும், பல்வேறு மட்டங்களில் ஜனநாயக விரோத முறையில் செயல்பட்டதும், ஏஐடியுசி-க்குள் செயல்பட்டு வந்த கட்சியின் முன்னணி ஊழியர்களை, 1970 இல் இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு) என்னும் புதியதொரு தொழிற்சங்கத்தை அமைத்திட, நிர்ப்பந்தித்தது.

சிஐடியு-வின் அமைப்பு மாநாடு, தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், `ஒன்றுபடு – போராடு’ — போராட்டங்களை வலுப்படுத்துவதற்காக ஒன்றுபடு, ஒற்றுமையை வலுப்படுத்துவதற்காகப் போராடு — என்னும் முழக்கத்தை உருவாக்கிக் கொடுத்தது. சிஐடியு-வின் நாடு தழுவிய அளவிலான பிரச்சாரங்கள் ஒற்றுமை வாரம் அனுசரிப்பதுடன் தொடங்கின.

சிஐடியு-வின் அமைப்பு மாநாட்டில் நிறைவுரையாற்றியபோது, நிறுவனத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான தோழர் பி.டி. ரணதிவே, ஒற்றுமை மற்றும் ஒன்றுபட்ட போராட்டங்களின் முக்கியத்துவம் குறித்து மிகவும் விரிவாகக் குறிப்பிட்டார். அவர் கூறியதாவது: “உழைக்கும் வர்க்கம் ஒன்றுபட வேண்டிய தருணமிது. தாங்கள் ஒன்றுபடாவிட்டால், தங்கள் மீது ஏவப்பட்டுள்ள தாக்குதலைச் சந்திக்க முடியாது என்பதை, உழைக்கும் வர்க்கம் சொந்தமாகவே சிந்திக்கும் தருணமிது. நம்முடைய ஸ்தாபனமும் இந்தக் களத்தில் இறங்கி ஒவ்வொருவரிடமும், `ஒற்றுமைப் பதாகையை உயர்த்திப் பிடிப்போம், பொது செயல்பாடுகளிலும், கூட்டு செயல்பாடுகளிலும், ஒற்றுமைப் பதாகையை உயர்த்திப் பிடிப்போம்,’ என்று கூற வேண்டிய தருணமிது’’ என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும், முன்னணி ஊழியர்களும் இத்தகைய புரிதலுடன், “ஒன்றுபடுவோம் – போராடுவோம்’’ என்னும் முழக்கத்துடன் கடந்த ஐம்பதாண்டு காலமாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.

தொடர்ந்து வந்த அரசாங்கங்களின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக ஒன்றுபட்ட போராட்டங்களை வளர்த்தெடுப்பதற்கான இடைவிடா முயற்சிகள் மூலமாக, தொழிற்சங்கங்களின் ஐக்கிய கவுன்சில் (UCTU), தேசியப் பிரச்சாரக் குழு (NCC), இந்தியத் தொழிற் சங்கங்களின் நடவடிக்கைக் குழு (Sponsoring Committee), தற்போதைய பதினொன்று மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் சுயேச்சையான தேசிய சம்மேளனங்களின் கூட்டுமேடை போன்ற பல்வேறு மேடைகள் படிப்படியாய்த் தோற்றுவிக்கப்பட்டன. கட்சி இந்நடவடிக்கைகள் அனைத்தையும் முழுமையாக ஆதரித்தது. அதன் செயல்வீரர்கள், இக்காலகட்டம் முழுவதும், பல்வேறு துறைகளிலும் மற்றும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பல்வேறு வேலை நிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின்போதும், தொழிலாளர் களின் ஒற்றுமையை உருவாக்குவதில் முன்னணிப் பாத்திரம் வகித்தனர்.

புதிய சவால்கள்

நாட்டில் கடந்த இருபத்தைந்து ஆண்டு காலமாக நடைபெற்று வரும் நவீன தாராளமய ஆட்சியின் கீழ், உழைக்கும் மக்களுக்கு எதிராக மிகவும் கடுமையான முறையில் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன. கட்சியின் 20 ஆவது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தத்துவார்த்தப் பிரச்சனைகள் மீதான தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது: “நவீன தாராளமய சீர்திருத்தக் கொள்கையானது தொழிலாளர் படைப்பிரிவினரில் பெரும்பகுதியினரை மிகவும் மோசமான விதத்தில் முறைசாராப் பிரிவினராக மாற்றி அமைப்பது அதிகரித்திடும். அவ்வாறான `வளர்ச்சி’ என்றென்றும் அதிகரித்துக் கொண்டே இருக்கும். மூலதனம் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக,   நிரந்தர வேலைவாய்ப்புகளை கேசுவல் மற்றும் ஒப்பந்தத் தொழில்களாக மாற்றுவதுடன், தொழிலாளர்களின் ஒற்றுமையை சிதைக்கும் மற்றும் சீர்குலைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றன. கேசுவல், தற்காலிக மற்றும் சுயவேலைவாய்ப்புத் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.’’

நன்கு வளர்ந்த பெரிய நிறுவனங்களில்கூட, தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக இப்போது இருந்து வருகிறார்கள். இது, முறைசாரா மற்றும் அணிதிரட்டப்படாத ஊழியர்களையும் சேர்ந்து சுமார் 95 சதவீதம் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தத்துவார்த்தப் பிரச்சனைகள் மீதான தீர்மானம் வலியுறுத்துவதாவது: “இத்தகைய சவால்களை விஞ்சி வெற்றிபெற, பொருத்தமான உத்திகளை உருவாக்க, அணிதிரட்டப்படாத தொழிலாளர்களையும் புரட்சிகர நடவடிக்கைக்குள் ஈர்ப்பதன் மூலம் தொழிலாளர் வர்க்க ஒற்றுமையை வலுப்படுத்திடுவோம்.’’

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அரசாங்கம், இந்திய மற்றும் அயல்நாட்டுக் கார்ப்பரேட்டுகளின் முழு ஆதரவுடனும் ஆட்சியில் அமர்ந்ததைத் தொடர்ந்து, தொழிலாளர் வர்க்கம் கடுமையாகப் போராடிப் பெற்ற பல உரிமைகள் மீது புதிதாகத் தாக்குதல்கள் தொடுக்கப்படுவது தொடங்கி இருக்கிறது. ஆட்சிக்கு வந்த நூறு நாட்களுக்குள்ளேயே,   தொழிலாளர் நலச்சட்டங்களில் பல முக்கியமான ஷரத்துக்கள் அரக்கத்தனமான முறையில் திருத்தப்பட்டு வருகின்றன. அதன்மூலம் தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெரும்பான்மை தொழிலாளர்களை, தொழிலாளர் நலச்சட்டங்கள் மற்றும் தொழிற்சாலை ஆய்வாளர்களின் வரையறைக்குள் வராது விலக்கி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இத்தகைய சவால்கள் வலுவாக எதிர்கொள்ளப்பட வேண்டியவைகளாகும். மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் கூட்டுமேடை ஏற்கனவே இதனைக் கையில் எடுத்துக் கொண்டு, இது தொடர்பாக பிரச்சாரங்களையும், போராட்டங்களையும் தொடங்கிவிட்டது. இந்த முக்கியமான போராட்டம் குறித்து கட்சி தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தொழிலாளர் வர்க்க இயக்கம் இன்றைய தினம் மிகவும் ஓர் இக்கட்டான சூழ்நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறது. தொழிற்சங்க அரங்கில் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கியமான கடமைகள் எனக் கட்சியால் அளிக்கப்பட்ட கடமைகளில் பல இன்னமும் நிறைவேற்றப்படாத நிலையிலேயே இருக்கின்றன. தொழிற்சங்க இயக்கத்தில் மேல்மட்டத்தில் கட்டப்பட்டுள்ள ஒற்றுமை, கீழ்மட்ட அளவில் இன்னமும் முழுமையாகப் போய்ச் சேர வேண்டிய நிலை இருக்கிறது. தொழிற்சங்க அரங்கில் ஆற்ற வேண்டிய `கடமைகள்’ குறித்து 1967 மற்றும் 1983 ஆவணங்களிலும் மற்றும் கட்சி அமைப்புகள் மற்றும் மாநாடுகள் பலவற்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலும் பட்டியலிடப்பட்ட பலவீனங்கள் பல இன்னமும் களையப்படாமலேயே இருக்கின்றன. தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் உணர்வுமட்டத்தை உயர்த்துவதிலும், இக்கடமையை வலுவான முறையில் நிறைவேற்றக் கூடிய விதத்தில் முன்னணி ஊழியர்களைத் தயார் செய்வதிலும் நாம் இன்னும் பின்தங்கியே இருக்கிறோம்.

தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையில் மக்கள் ஜனநாயக முன்னணியை அமைத்திடுவதற்கான முயற்சிக்கு ஏற்றவகையில், தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் முன்னணிப் பிரிவினரை ஈர்த்திட, இன்னும் ஏராளமான பணிகளைச் செய்ய வேண்டியது இருக்கிறது. இதற்கு, வர்க்கப் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவதும், தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் உணர்வை மேம்படுத்துவதும் தேவை. இதற்கு, தொழிற்சங்க அரங்கில் ஆற்ற வேண்டிய `கடமைகள்’ ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பலவீனங்கள் களையப்பட வேண்டியதும் அவசியம்.

கட்சியின் 20 ஆவது அகில இந்திய மாநாட்டில் வெளியிடப்பட்ட `சில தத்துவார்த்தப் பிரச்சனைகளின் மீதான தீர்மானத்தில்’ குறிப்பிடப்பட்டிருப்பதைப்போல, “தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையின்கீழ், இந்திய மக்கள், விடுதலையை எய்திட உறுதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கட்சி என்ற முறையில், இந்தியாவில் மூலதனத்தின் ஆட்சிக்கு எதிராக, அதனால் சுரண்டப்படும் மக்கள் அனைவருக்கும் தலைமையேற்று முன்னேறிச் செல்லக்கூடிய விதத்தில், தொழிலாளர் வர்க்கத்தின் வர்க்க ஒற்றுமையையும், புரட்சிகர உணர்வையும், தொழிலாளர் வர்க்கத்தின் வலிமையையும் உயர்த்த வேண்டியது அவசியம்.”