21-ம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டம் எத்தன்மையுடையதாய் இருக்கும் ?

ஆர்.கோவிந்தராஜன்

சோவியத் யூனியன் மற்றும் சோஷலிச உலகம் சந்தித்த பின்னடைவுக்குப் பிறகு, உலகம் முழுவதுமே பரவலான விவாதங்கள் தொடங்கின.

மார்க்சிய – லெனினிய கோட்பாடு பற்றியும், 21-ம் நூற்றாண்டில் சோஷலிச கட்டுமானம் எப்படி இருக்கும் என்பது பற்றியும், உலக  முழுவதுமே பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன.

இந்த சூழலில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் 14-வது காங்கிரஸ் (1992) நிறைவேற்றிய தத்துவார்த்த தீர்மானம் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை தெளிவுபடுத்தியது: சோஷலிச உலகின் வீழ்ச்சியினால் ஏற்பட்ட எதிர்மறை விளைவுகள் சோஷலிச லட்சியத்தையோ, மார்க்சிய-லெனினிய வழிகாட்டுதலையோ நிராகரிக்கவில்லை. மனிதகுல நாகரீகத்தை ஒரு உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்வதில் சோஷலிசம் ஆற்றிய பங்கினை எவராலும் மறுக்கவோ, மறைக்கவோ இயலாது. சோவியத்திலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட சோஷலிச நடைமுறைகளிலிருந்து, பெற்ற அனுபவங்களிலிருந்து நிறைய பாடங்களை நாம் கற்றுக் கொண்டுள்ளோம். கட்சியின் 20-வது காங்கிரசின் தத்துவார்த்த தீர்மானம் குறிப்பிடுவதைப் போல், முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசத்திற்கு மாறிச் செல்லும் இடைப்பட்ட காலம் அதே அனுபவங்களை அப்படியே மீண்டும் பெறுகிற வகையில் இருக்காது. அப்படியென்றால் எந்த பாதையில் பயணம் செய்வது? இக்கேள்விக்கு விடைகாண முயலும் போது சோசலிச நாடுகள் உட்பட பல நாடுகளின் அனுபவங்கள் நம் கவனத்துக்கு வருகின்றன.

மாற்றுப் பாதைக்கான 20-ம் நூற்றாண்டு முயற்சிகள்

சோவியத் புரட்சிக்குப் பிறகு ஒரு புதிய உலகம் பற்றிய பார்வை உலக மக்களுக்குக் கிடைத்தது. 14-வது காங்கிரஸ் தீர்மானம் அன்றைய சோஷலிச உலகின் மாறுபட்ட தோற்றத்தை விவரிக்கிறது. லட்சக்கணக்கான மக்களின் உயிர்களைப் பலி கொண்ட காட்டுமிராண்டித்தனமான இரண்டு உலகப் போர்களிலும் , அணு ஆயுதப் போட்டியிலும், மனிதகுலத்தை தள்ளி விட்ட முதலாளித்துவம், சுதந்திர நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிட்டு எப்படி அரசுகளை கைப்பற்றும் சதி வேலைகளில் ஈடுபட்டது? பாசிச சர்வாதிகார ஆட்சிகளுக்கு எப்படி ஆதரவு கொடுத்தது? என்பதை விளக்கி விட்டு, “இன்னொரு பக்கத்தில் சோஷலிச புரட்சிகளும், தேச விடுதலைப் போராட்டங்களும் மனித நாகரீகத்திற்கு ஒரு வளமான உள்ளடக்கத்தை சேர்த்தன. பல நாடுகளில் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் தேசிய அடக்குமுறை இல்லாமலும், சுரண்டலிலிருந்து விடுபட்டும் தமது வாழ்க்கையை நடத்துவதை சாத்தியமாக்கின. இதன் தாக்கம் தேச விடுதலையையும், சமுதாய விடுதலையையும் நோக்கிச் செல்லும் மனிதகுல வளர்ச்சியின் எதிர்காலப் பாதையை தொடர்ந்து வகுத்துக் கொண்டிருக்கிறது” என்று அந்தத் தீர்மானம் குறிப்பிடுகிறது. அதோடு கூடவே ஒரு எச்சரிக்கையை விடுக்கவும் அது தவறவில்லை. இந்த நடைமுறை நீண்ட காலம் பிடிக்கக் கூடியதாக, சிக்கலானதாக, மாறுதல்களும், திருப்பங்களும் கொண்டதாகத்தான் இருக்கும் என்று எச்சரித்து விட்டு,  “முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசத்தை நோக்கி மாறிச் செல்வதே இந்த சகாப்தத்தின் அடிப்படை திசை வழியாகும்” என்றும் பதிவு செய்திருக்கிறது.

20-ம் நூற்றாண்டில் நடைமுறைக்கு வந்த சோசலிசத்தின் தாக்கம் பல்வேறு அரசியல், பொருளாதார சமூக நிகழ்வுகளில் வெளிப்பட்டன. காலனி நாடுகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் (இந்தியா உட்பட) விடுதலைப் போராட்டங்களுக்கு உத்வேகம்  அளித்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் சீனா, வியட்நாம், வடகொரியா, கியூபா மக்கள் சோசலிச அமைப்பை தேர்ந்தெடுத்து ஏகாதிபத்தியத்திற்கு பலத்த அடியினை கொடுத்தது. பெண்களின் வாக்குரிமை உட்பட பல ஜனநாயக, குடியுரிமைகளை பெற பல்வேறு நாட்டு மக்கள் நடத்திய போராட்டங்களின் மீது அதன் தாக்கம் இருந்தது. உலக முழுமையும் தொழிலாளி வர்க்க அமைப்புகள் உருவாகி விரிவடையும் சூழலையும் அது உருவாக்கியது; தொழிலாளி வர்க்கத்திற்கும், உழைக்கும் மக்களுக்கும் பல்வேறு சலுகைகளையும், சமூக பாதுகாப்பு நலத்திட்டங்களையும் விருப்பமில்லா விட்டாலும் கூட கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு முதலாளித்துவம் தள்ளப்பட்டது என்பது வரலாற்று உண்மையாகும் (இன்றைய உலகமய செயல்பாடுகளால் அவற்றைப் பறிக்க முயற்சிகள் நடக்கின்றன என்பது இன்று நிலவும் ஏகாதிபத்தியத்திற்கு சாதகமான சூழலின் வெளிப்பாடு). இவை யாவும் மக்கள் நடத்திய போராட்டங்களின் விளைவுகளாகத்தான் இருந்தன.

அப்படியென்றால் இந்த பின்னடைவை எப்படி புரிந்து கொள்வது? கல்வி, சுகாதாரம், அறிவியல் வளர்ச்சி, சமூக நலம், வேலை வாய்ப்பு, ஏகாதிபத்திய சவால்களை எதிர்த்து நின்ற ராணுவ வலிமை- இப்படி அனைத்திலும் உயர்ந்து நின்று ஒரு புதிய சமூகத்திற்கான தோற்றத்தைக் கொடுத்த சோஷலிச அமைப்பு பின்னடைவை சந்தித்ததற்கான அடிப்படையான சில அம்சங்களை இந்த (20வது காங்கிரஸ்) தீர்மானம் ஆய்வு செய்கிறது.

தடையற்ற, முதலாளித்துவ சந்தை விரிவாக்கம்:

20-ம் நூற்றாண்டில் நடந்த சோஷலிஸ்ட் புரட்சிகளெல்லாம் பின்தங்கிய முதலாளித்துவ நாடுகளிலேயே (செக்கோஸ்லோவேகியா போன்ற ஓரிரு கிழக்கு ஐரோப்பிய நாடுகளைத் தவிர) நடந்து முடிந்திருந்தன. அதுவே உலகச் சந்தையில் மூன்றில் ஒரு பங்கை முதலாளித்துவத்திடமிருந்து பறித்தது; ஆனால் சோஷலிஸ்ட் புரட்சி வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் நடைபெறவில்லை; இது முதலாளித்துவத்தின் கீழ் வளர்ந்த உற்பத்தி  சக்திகளின் அளவுகளையோ, மேலும் வளர்ச்சி பெறுவதற்கான திறனையோ பெரிய அளவில் பாதிக்கவில்லை. ஆகவே, முதலாளித்துவ சந்தை விரிவடைய, தடை ஏதுமில்லை. இரண்டாம் உலகப்போருக்குப் பின் முதலாளித்துவம் முன்முயற்சி எடுத்து கொண்டு வந்திருக்கும் தொழில்நுட்பப் புரட்சி அதை வெளிப்படுத்துகிறது. காலனியாதிக்கத்தின் சரிவுக்குப் பிறகு, மாறியுள்ள சூழலில், புதிய காலனித்துவ முறைகளில் அதன் சந்தையினை விரிவாக்கிக் கொள்ள முடிந்தது. “ஓயாது ஒழியாது உற்பத்திக் கருவிகளிலும், இதன் மூலம் உற்பத்தி உறவுகள் அனைத்திலுமே புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தாமல் முதலாளித்துவ வர்க்கத்தால் வாழ முடியாது” என்று கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்ஸ் – எங்கெல்ஸ் சுட்டிக் காட்டியிருந்தது சரியாக புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது.

மிகக் குறுகிய காலத்தில், மிகப்பெரிய சாதனைகளை சோஷலிச உலகம் சாதித்துக் காட்டியிருந்தது; அதுவும் சோஷலிசத்தை வீழ்த்த சர்வதேச ஏகாதிபத்திய எதிர்ப்பு உருவாக்கிய சூழலில் அவை நிகழ்ந்தன (அறிவியல் துறையில், செயற்கைக்கோளை விண்வெளியில் அனுப்பியது, மனிதனை முதன் முதலாக விண்வெளியில் அனுப்பியது உட்பட பல்வேறு சாதனைகளை குறிப்பிடலாம்). ஏகாதிபத்திய ராணுவ பலத்தை வலுவாக எதிர்கொள்ளும் ராணுவ வலிமையினை சோஷலிச உலகம் பெற்றிருந்தது. ஆனால், உற்பத்தி நடைமுறையில் பெற்ற முன்னேற்றங்களை மாறுபட்ட காலத்தை ஒட்டி, மக்களின் உணர்வுகள், தேவைகளை கணக்கில் கொண்டு பொருட்களின் தரத்தை உயர்த்தி பொருளாதார அடிப்படையினை வலுப்படுத்துவதில் அந்த முன்னேற்றங்கள் பயன்படுத்தப்படவில்லை; சோஷலிச கட்டுமானத்திற்கான மிக முக்கிய தேவையான காலத்திற்கேற்ற மாற்றங்களையும் மக்களின் தேவைகளையும் பரிசீலிக்கும் அறிவியல் ரீதியான ஆய்வு நடத்தப்படவில்லை. மேலும் விரைவாக கொண்டு வந்த சாதனைகள், வெற்றிகள், அடைந்த முன்னேற்றங்கள் யாவும் அந்த சமூக அமைப்பை பின்னோக்கித் தள்ள முடியாது என்ற நம்பிக்கையினையும் கொடுத்திருந்தது. விழுந்த முதலாளித்துவ வர்க்கம் தான் இழந்ததைப் பெற நூறு மடங்கு வலிமையுடன் திருப்பித் தாக்கும் என்று லெனின் விடுத்த எச்சரிக்கை கவனத்தில் கொள்ளப்படவில்லை.

மதிப்பீட்டில் நேர்ந்த பிழைகள்!

இதில் இரண்டு அம்சங்கள் வெளிப்படுகின்றன. ஒன்று, முதலாளித்துவத்தைப் பற்றி குறைவான மதிப்பீடு; இரண்டாவது சோசலிசத்தின் ஆற்றல் திறன் பற்றி மிகையான மதிப்பீடு. இது 1960-ம் ஆண்டு கூடிய 81 கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையிலிருந்து பெறப்பட்ட முடிவு.

“உலக முதலாளித்துவம் சிதைவினையும், சீரழிவினையும் நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. சமூக முன்னேற்றத்திற்காக நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கு முதலாளித்துவம் மேலும் மேலும் முட்டுக்கட்டை போடும்… உலக உற்பத்தியில் சோசலிசத்தின் பங்கு முதலாளித்துவத்தின் பங்கினை விஞ்சி நிற்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை… முதலாளித்துவம் சந்திக்கும் பொது நெருக்கடியின் வளர்ச்சியில் புதிய கட்டம் உருவாகியிருக்கிறது… முதலாளித்துவத்தின் உலக பொருளாதார அமைப்பின் நிலையற்ற தன்மை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.”

அந்த கருத்தின் அடிப்படையில் “சோவியத் யூனியனில் மட்டுமல்ல; மற்ற சோசலிச நாடுகளிலும் கூட முதலாளித்துவம் இன்று மீட்டுருவம் பெறுவது என்பது நடைமுறை சாத்தியமல்ல” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.  சுயவிமர்சனமாக பரிசீலனை செய்து (அந்த மதிப்பீட்டை நமது கட்சி ஏற்றுக் கொண்டிருந்தது) கட்சியின் 14-வது காங்கிரஸ் தீர்மானம் அந்தக் காலகட்டத்தின் மெய்யான நிலைமையினை ஆய்வு செய்வதில் அத்தகைய மதிப்பீடு மிக மோசமான தவறு என்ற முடிவுக்கு வந்தது என்றும் சோசலிசத்தின் முன்னேற்றத்தை பின்னுக்குத் தள்ளியது என்றும் குறிப்பிட்டது.

சோசலிசம் என்பது நேர்கோட்டுப் பயணமா?

சோசலிசம் என்பது சிக்கலும் இல்லாமல், நேர்கோட்டு பயணத்தில் வந்து விடும் என்ற கருத்தும் நிலவியது. சோசலிச அமைப்பு கம்யூனிச சமுதாயத்தை எட்டுவதற்கு முந்தைய ஒரு மாறும் இடைக்கால நிலை என்பது புரிந்து கொள்ளப்படவில்லை;  மார்க்ஸ் அதை கம்யூனிசத்தின் முதல் கட்டம் என்று குறிப்பிடுகிறார்.

கட்சியின் 14-வது காங்கிரஸ் தீர்மானம் அந்த மாறும் இடைக்காலத்தில் முதலாளித்துவம் தகர்ந்து போய் உலக அளவில் சோசலிசம் வெற்றி பெறும் என மிகவும் சாதாரணமாக புரிந்து கொள்ளப்பட்டது என்று குறிப்பிட்டு, “வர்க்க சமுதாயத்திலிருந்து வர்க்க பேதமற்ற சமுதாயமாக மாறும் சோசலிச காலகட்டத்தில் முதலாளித்துவமும் சோசலிசமும் நீண்ட காலத்திற்கு நீடித்திருக்கும்” என்பதை குறிப்பாக சுட்டிக் காட்டுகிறது. அதன் பொருள் வர்க்க மோதல்கள் – புரட்சி சக்திகளுக்கும், முதலாளித்துவத்தை பாதுகாக்க முனையும் எதிர்ப்புரட்சி சக்திகளுக்கும் இடையே – தொடரும் என்பதுதான். இந்த மோதல் உலக அளவிலும் சோசலிச நாடுகளுக்குள்ளேயும் நடக்கும் என்றும் குறிப்பிடுகிறது. (முன்பே குறிப்பிட்டது போல) முதலாளித்துவ ரீதியில் பின்தங்கியிருந்த நாடுகளில் சோசலிச புரட்சி நடந்திருந்ததால் அங்கே இந்த நிலை இருக்கும் என்பதும் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

வெற்றிகளும், தோல்விகளும்:

சோசலிசத்திற்கு மாறும் இந்த இடைநிலை காலத்தில் சோசலிச சக்திகளின் வெற்றி, தோல்வியினை எப்படி மதிப்பீடு செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. சோசலிசத்தை கட்டும் பொழுது, அந்த நாடுகளில் பெற்ற வெற்றிகள்/தோல்விகள் என்பதைப் பற்றிய மதிப்பீடும், உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் வர்க்க சக்திகளின் பலாபலன்கள் பற்றிய மதிப்பீடும்தான் அதற்கு அடிப்படையாக அமையும். சாதனைகள், வெற்றிகள் எல்லாம் ஒருபுறமிருக்க, சோசலிசத்தின் கீழ் அரசு வர்க்க குணாம்சத்துடன் செயல்படத் தவறியது என 14-வது காங்கிரஸ் தீர்மானம் குறிப்பிடுகிறது. சோசலிச ஜனநாயகத்தை பலப்படுத்தவும், ஆழமாக்கவும் தவறியது. வர்க்க சக்திகளின் அணி சேர்க்கை சாதகமாக மாறியிருந்த நிலையில் ஜனநாயகத்தை விரிவுபடுத்த முன்முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு மாறிய நிலையிலும் எதிர்புரட்சியினையும் சுரண்டல் சக்திகளையும் ஒழிப்பதற்கு தேவைப்பட்ட அரசு அமைப்பை அப்படியே வைத்துக் கொண்டு செயலாற்றியது மக்களை சோசலிச ஜனநாயகத்தில் பங்கு பெறச் செய்வதற்கு தடையாக இருந்தது; அதிகார வர்க்கப் போக்கு வளர்ந்தது; சோசலிச சட்ட விதிகள் மீறப்பட்டன; தனிநபர் சுதந்திரம், உரிமைகள் ஒடுக்கப்பட்டன; பொருளாதார நிர்வாக முறையில் காலத்தே செய்ய வேண்டிய மாற்றங்களும் செய்யப்படவில்லை; தத்துவார்த்த துறையிலும் திரிபுகள் வெளிப்பட்டன. இவை யாவும் மக்கள் அன்னியப்படுவதற்கான தளத்தை உருவாக்கியது. இதனால் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள எதிர்ப்புரட்சி சக்திகள் இணைந்து சோசலிசத்தை ஒழிப்பதற்கான தளம் உருவாக்கப்பட்டது. அதோடு கூட உலக முதலாளித்துவம் அடைந்த முன்னேற்றங்கள், அவை எப்படி உறுதிப்படுத்தப்பட்டன என்பதை கவனிக்க மறுத்த நிலையில்தான் சோசலிச உலகம் பின்னடைவை சந்திக்க நேர்ந்தது.

கூர்மையடையும் முரண்பாடுகள்

மாறும் இடைக்கால கட்டத்தில் உலகில் நாம் சந்திக்கும் அனைத்து சமூக முரண்பாடுகளும், வெவ்வேறு அளவில் கூர்மையடைகின்றன. பொருளாதார நெருக்கடி நிலவும் இந்த சூழலில் உழைப்புக்கும், மூலதனத்திற்கும் உள்ள அடிப்படையான முரண்பாடு தீவிரமடைகிறது. வளர்முக நாடுகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொருளாதார, ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏகாதிபத்தியம் தயங்குவதில்லை. சர்வதேச நிதிநிறுவனம், உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு , வேறு பல பன்னாட்டு நிறுவனங்களை பயன்படுத்துவதோடல்லாமல், ராணுவத்தை பயன்படுத்தி (ஈராக், லிபியா- தற்போது ஈரான், சிரியா) தன் மேலாதிக்கத்தை உறுதி செய்து கொள்ள ஏகாதிபத்தியம் முனைகிறது. இது ஏகாதிபத்தியத்திற்கும் வளர்முக நாடுகளுக்குமிடையேயான முரண்பாட்டை கூர்மையாக்குகிறது. ஏகாதிபத்திய நாடுகளிடையேயும், அவைகளின் வளர்ச்சியில், வணிகத்தில் ஏற்றத்தாழ்வு உண்டு ; டாலர் பெரியதா? யூரோ பெரியதா? என்ற மோதலில் ஈடுபட்டதும் உண்டு. ஆனால் லாபத்தை அதிகரிக்கும் நோக்குடன் மூன்றாம் உலக, வளரும் நாடுகளை சுரண்டும் திட்டங்களோடு தங்களிடையே நிலவும்  முரண்பாடுகளின் தீவிரத் தன்மையினை சற்றே மட்டுப்படுத்தி வைத்துக் கொண்டிருக்கின்றன. ஏகாதிபத்தியத்திற்கும், சோசலிசத்திற்குமான முரண்பாடே இந்த மாறும் இடைக்காலத்தில் மைய முரண்பாடாக நீடித்து வருகிறது. இந்த நான்கு முரண்பாடுகளில், வரலாற்று நிகழ்வுப்போக்கில் ஏதேனுமொன்று முன்னுக்கு வரும்; ஆனால் அது இந்த மைய முரண்பாட்டை நீக்கி விடுவதில்லை.

இந்த நான்கு முரண்பாடுகளைத்தான் மாறும் இடைக்காலத்தில் செல்வாக்கு செலுத்தும் முரண்பாடுகளாக சர்வதேச கம்யூனிச இயக்கம் அங்கீகரித்துள்ளது. முதலாளித்துவ அமைப்பில் உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும் அதன் பலனை தனியார் பறித்துக் கொள்ளும் தன்மைக்கும் முரண்பாடு உள்ளது; இது லாபத்தை அதிகரிக்கும் நோக்கோடு செயல்படுத்தப்படுவதன் விளைவு உலகச் சுற்றுப்புற சூழல் சீரழிந்து போவதில் முடிகிறது. தட்ப வெப்ப நிலைகளில் மாற்றங்கள் நிகழ்கின்றன; மனிதகுல வாழ்க்கை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. உலகம் வெப்பமயமாவதை தடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதற்குக் காரணமான பசுங்கூட வாயு வெளியேற்றத்தை தடுக்கும் பொருளாதார, தொழில்நுணுக்க சுமைகளை ஏகாதிபத்தியம் வளர்முக நாடுகளின் மேல் திணிக்க முயற்சிக்கிறது. ஏகாதிபத்தியத்திற்கும் வளர்முக நாடுகளுக்குமிடையே நிலவும் முரண்பாட்டில் இது ஒரு புதிய அம்சமாக உருவெடுத்திருக்கிறது. தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகள் சுற்றுப்புற சூழல் அழிப்பை தீவிரப்படுத்துகின்றன. பேச்சுவார்த்தைகளில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை, ஏற்றுக் கொண்ட பொறுப்புகளை செயல்படுத்த மறுக்கின்றன; இதில் எழும் பிரச்சனைகளில் அனைவரும் சமநிலையில் நின்று அணுகும் முறையினை ஏற்க மறுக்கின்றன. வளரும் நாடுகளின் மீது சுமையினை ஏற்றி இந்த வகையான வர்க்கச் சுரண்டலை ஆழப்படுத்துகின்றன. ஏகாதிபத்தியத்தின் இந்த முயற்சிகளுக்கு எதிராக வளரும் நாடுகள் நடத்தும் போராட்டம் உலக முதலாளித்துவத்திற்கு எதிரான சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் முக்கிய கூறாகும்.

ஒவ்வொரு நாடும் அதன் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முயற்சியின் போது, இத்தகைய சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. அதற்கான மக்கள் போராட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும். சமூக மாற்றத்திற்கான மக்கள் போராட்டங்களின் வெற்றிதான் மாறிச் செல்லும் காலத்தின் வேகத்தை தீர்மானிக்கும்.

21-ம் நூற்றாண்டில் சோஷலிசம்

வரலாற்றின் வளர்ச்சிப் போக்கில் சோசலிச வெற்றி தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் 21-ம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான பாதை, கடந்த கால அனுபவங்களின் பின்னணியில் பார்க்கும்போது, நெடிய சிக்கல் நிறைந்ததாக பல்வேறு திருப்பங்களையும் வளைவுகளையும் கொண்டதாக இருக்கும்;  அது நீண்ட காலப் போராட்டமாகவும் இருக்கும். முதலாளித்துவத்திலிருநது சோசலிசத்திற்காக மாறும் அந்த இடைக்காலத்தில், கம்யூனிஸ்டுகளும் தொழிலாளி வர்க்கமும் அந்த மாற்றத்தை விரைவுபடுத்த பணியாற்ற வேண்டும். ஏகாதிபத்தியம் அந்த முயற்சிகளை முறியடித்து பின்னோக்கித் தள்ள அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்ற எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்.

21-ம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டம் எத்தன்மையுடையதாய் இருக்கும் ?

மனிதனை மனிதன் சுரண்டாத, ஒரு நாடு மற்றொரு நாட்டை சுரண்டாத அமைப்பிற்காக நடத்தும்போராட்டமாக அது இருக்க வேண்டும். மக்களின்  குடியுரிமை, ஜனநாயக உரிமைகளை வலுப்படுத்தி, அந்த அமைப்பு முதலாளித்துவத்தை விட மேன்மையானது என்று நிலை நாட்டப்பட வேண்டும். ‘சக்திக்கேற்ப உழைப்பு, உழைப்புக்கேற்ற ஊதியம்’ என்ற இடைக்கால கோட்பாடு “சக்திக்கேற்ப உழைப்பு, தேவைக்கேற்ப ஊதியம்” என்ற கம்யூனிச கோட்பாட்டினை நோக்கி செல்ல வேண்டும். அனைத்து துறைகளிலும் மக்கள் பங்கேற்பை உறுதி செய்வதன் மூலம் அதன் மேன்மை நிலை நாட்டப்படும். சோசலிச கட்டுமானத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய ஜனநாயகம், சொத்து வடிவங்கள், திட்டமிடுதல், அதற்கும் சந்தை பொருளாதாரத்திற்குமான தொடர்பு பற்றி கட்சியின் 14-வது காங்கிரஸ் தீர்மானம் கொடுத்த வழிகாட்டுதலின் அடிப்படையில் நமது கட்சித் திட்டத்தில் சில பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, கட்சித் திட்டம் பாரா 6.5-ல் “மக்கள், ஜனநாயக அரசு பொருளாதாரத்தின் முக்கியமான துறைகளில் அரசுடைமை மூலம் ஒரு தீர்மானகரமான பாத்திரத்தை வகிப்பதோடு, இதர துறைகளை கட்டுப்படுத்துகின்ற, வழிகாட்டுகின்ற பாத்திரத்தை அரசு வகிக்க வேண்டியுள்ளது. பொதுத்துறைக்கு மேலாதிக்கம் தரக்கூடிய, பல்வேறு வடிவ சொத்துடமை கொண்ட பன்முக கட்டமைப்பு கொண்டதாக, மக்கள் ஜனநாயக பொருளாதாரம் அமையும்” என்று குறிப்பிடப்படுகிறது. 20-வது காங்கிரசின் தத்துவார்த்த தீர்மானமும், “அரசுத்துறை என்பது சோசலிசத்தின் கீழ் உற்பத்தி சாதனங்களின் சமூக உடைமையின உறுதியான அடித்தளமாக அமைந்திருக்கும் என்ற போதிலும், அரசுக்கு சொந்தமான துறையை சோசலிசத்திற்கு சமமானதாக இயந்திர கதியில் சித்தரிக்கக் கூடாது. பல்வேறு வடிவங்களிலான சொத்துடமைகள் மூலம் சோசலிச அரசு அதன் பொருளாதார உயிர்நாடி அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்” என்று விளக்கி விட்டு “முதலாளித்துவத்தின் கீழ் பொருளாதாரமே (அதாவது லாப அதிகரிப்பே) அதன் அரசியலை” நிர்ணயிக்கும். இதற்கு மாறாக, அரசியலே அதன் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் என்ற கோட்பாட்டினை 21-ம் நூற்றாண்டின் சோசலிசம் நிலை நாட்டும் என்று தெளிவாக வரையறுக்கிறது.

(சோசலிச நாடுகள் பற்றிய தனித்தனியான ஆய்வு இங்கே தரப்படவில்லை)

“சுதந்திரச் சந்தையின் அதிர்ச்சி கோட்பாடு” லத்தீன் அமெரிக்க எதிர்ப்பலைகள்

கனடா நாட்டைச் சார்ந்த புகழ்பெற்ற பத்திரிகையாளர், ஊடக விமர்சகர் நவாமி ஃக்ளெய்ன் எழுதிய கட்டுரையின் தழுவல் சென்ற ஆண்டு (2007) இவர் எழுதி வெளியிட்ட “The Shock Doctrime – The rise of disaster Capitalism” என்ற புத்தகம் ஏகாதிபத்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடையே அதிர்ச்சி அலைகள் தோற்றுவித்திருக்கிறது என செய்திகள் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. இந்தக்கட்டுரையும் அந்த புத்தகத்திலிருந்து தொகுக்கப்பட்ட சில பகுதிகளை உள்ளடக்கியது தான்.

ஈக்வாடர் நிமிர்ந்து கேட்டது

மாண்டா (ஈக்வடார்) வில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க ராணுவதளம் விரைவில் மூடப்பட்டு விடும். அது தொடர்ந்து அங்கேயே இருக்கவேண்டுமானால் ஈக்வடாரின் இடதுசாரி சிந்தனைக் கொண்ட அதன் அதிபர் ரஃபேல் கொர்ரியா ஒரு நிபந்தனை விதித்தார். “அமெரிக்காவில் மியாமி என்னுமிடத்தில் ஒரு ராணுவதளம் வைத்துக் கொள்ள ஈக்வடாருக்கு அமெரிக்கா அனுமதி அளிக்க வேண்டும். ஒரு நாட்டின் மண்ணில் வெளிநாட்டு ராணுவவீரர்கள் இருப்பது சாத்தியமென்றால் ஈக்வடாருக்கு அமெரிக்க அந்த அனுமதி வழங்க வேண்டும். ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை. ஆகவே அமெரிக்கத் தளம் மூடப்படும்.

கொர்ரியாவின் இந்த நிபந்தனை வெறும் அமெரிக்க எதிர்ப்பில் எழுந்ததன்று. லத்தீன் அமெரிக்க நாடுகளின் பல அரசுகள் வெளியிலிருந்து பல நெருக்கடிகளையும் அதிர்ச்சி நடவடிக்கைகளையும் சந்திக்கின்றன. அவைகளினால் நொறுங்கிப் போகாமல் இருக்க எடுக்கும் முயற்சிகளின் பிரதிபலிப்பு தான் அது.

அதிர்ச்சி கோட்பாடு

இது ஒரு முக்கியமான வளர்ச்சிப் போக்காகும். கடந்த 35 ஆண்டுகளாக பன்னாட்டு மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு தரும் வகையில் அதிரடி சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதற்கு ஒத்திசைவான அரசியல் மாற்றங்களை கொண்டு வர அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப் பட்டது. விரிந்த அளவில் தனியார் மயம், சமூக தேவைகளுக்கான செலவீனங்களை குறைத்தல் போன்றவைகள் தான் அந்த அதிரடி நடவடிக்கைகளின் முக்கிய அம்சங்களாக இருந்தன. அரசினை வலுவிழக்கச் செய்யும் இந்த அதிர்ச்சி வைத்தியம் பரவலாக நடைமுறைப்படுத்தப்பட்டது. பொருளாதார ரீதியாக இந்த வைத்தியம் கொடுக்க ஆலோசனை வழங்குபவர் மில்டன் ஃப்ரெய்ட்மன் என்ற பொருளாதார பேராசிரியர். அவர் எழுதிய கட்டுரையொன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார். “உண்மையானதாகவோ அல்லது உணர்வின் வெளிப்பாடாகவோ எழும் நெருக்கடிகள் தான் மாற்றங்களை கொண்டு வரும். அம்மாதிரியான நெருக்கடி தோன்றுகிற போது அதைச்சுற்றி விரவிக் கிடக்கும் கருத்துக்களை சார்ந்து தான் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது”. இன்றைய முதலாளித்துவம் திறமையுடன் தயாரித்து அளிக்கும் நோய்த் தீர்க்கும் மருந்து இதைத்தான் நவோமி க்ளெய்ன் அதிர்ச்சிக் கோட்பாடு என்று குறிப்பிடுகிறார். “நெருக்கடிகளை பயன்படுத்து”. சந்தைப் பொருளாதார வெற்றி நடைபோட எந்த நெருக்கடியும், இயற்கைச் சீற்றத்தால் எழுந்த நெருக்கடியாக இருந்தாலும் சரி. இது தான் அந்த அதிர்ச்சி கோட்பாட்டின் மையக்கரு.

சோதனைக் களம்

லத்தீன் அமெரிக்கா இந்தக் கோட்பாட்டிற்கு சோதனைக் களமாக என்றும் இருந்திருக்கிறது. சிலியின் சோசலிஷ்ட் அதிபரான அல்லெண்டேயை படுகொலை செய்து விட்டு ஆட்சியினை கைப்பற்றினான். ராணுவதளபதி பினோசெட் அவனுக்கு நெருக்கடி நிலைமையினை எப்படி பயன்படுத்துவது ஆலோசனை வழங்குபவர் மில்டன் ஃப்ரெய்ட்மன் அல்லெண்டேயின் படுகொலை கண்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்த காலம்; நாடு மிகவும் ஆழமான பண வீக்கத்தில் மூழ்கியிருந்தது. அப்போது ஃபிரெய்ட்மென் வழங்கிய ஆலோசனைகள் வரிக்குறைப்பு (முதலாளிகளுக்கு) சுதந்திர வணிகம், சேவைத்துறையில் தனியார்மயம், சமூகச் செலவீனங்களில் வெட்டு, கட்டுப்பாடுகள் தளர்த்தல், இவைகள் துரிதமான பொருளாதார மாற்றத்தைக் கொடுக்கும் என பினோசெட்டிற்க்கு ஃப்பெரய்ட்மன் ஆலோசனை வழங்கினார். முதலாளித்துவ உலகின் பொருளாதாரத்தில் இது ஒரு புரட்சி என்றெல்லாம் கூட வர்ணிக்கப்பட்டது. சிகாகோ பல்கலைக் கழகத்தில் ஃப்ரெய்ட்மன்னிடம் பயின்ற சீடர்கள் தான் பினோசேட்டிற்க்காக அந்தப் பணியினை நிறைவேற்றிக் கொண்டிருந்தவர்கள்.

பின்பு அர்ஜென்டினாவிலும் இது செயல்படுத்தப்பட்டது. இதற்கு அடக்குமுறை எந்திரங்கள் துணை தேவைப்பட்டது. அமெரிக்காவில் பயிற்சி பெற்ற ராணுவத்தினர் கட்டுப்பாட்டில் உள்ள சிறைச்சாலைகள் இந்தப் பொருளாதார புரட்சிக்கு எதிராக இயக்கம் காணும் செயல்வீரர்களை ஒடுக்க பயன்பட்டன.

70 மற்றும் 90 களில் லத்தீன் அமெரிக்காவில் சர்வாதிகார அமைப்புகள் வலுவற்ற ஜனநாயக அமைப்புகளுக்கு இடம் கொடுத்தன. அப்போது இந்த அதிர்ச்சி கோட்பாட்டிலிருந்து அது தப்பிக்க இயலவில்லை. மாறாக புதிய அதிர்ச்சிகள் தோன்றின. 80களின் துவக்கம் கடன் அதிர்ச்சி என்ற அதிர்ச்சி வைத்தியத்திற்கு தளம் அமைத்துக் கொடுத்தது. பண வீக்கம் தொடர்ந்து நாட்டின் பொருளாதாரத்தின் மையப்பொருளாக உள்ள உற்பத்திப் பொருட்களின் (விவசாயப் பொருட்கள் உட்பட) விலை வீழ்ச்சியினை சந்தித்தது.

ஆனால் இன்று அங்கே புதிய நெருக்கடிகள் எழுவது தடுத்து நிறுத்தப்படுகின்றன. பழைய அதிர்ச்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக அதன் வீரியத்தை இழந்து வருகின்றன. இந்த நிகழ்வுகள் இக்கண்டத்திற்கு மாற்றத்தினை எதிர்கொள்ளும் தன்மையினை கொடுக்கிறது. அதிர்ச்சிக் கோட்பாட்டினை எதிர்க்கும் அமைப்பிற்கான ஒரு முன்மாதிரியினை உருவாக்கியிருக்கிறது.

ஃபிரய்ட்மென்தோல்வி

ஃபிரய்ட்மென் கட்டவிழ்த்து தறிகெட்டு செயல்படும் முதலாளித்துவத்தை சிலி அனுபவத்தின் அடிப்படையில் உலகம் பூராவும் பரப்ப விரும்பினார். ஆனால் லத்தீன் அமெரிக்காவில் அந்தவிருப்பம் சற்றே நிலை குலைந்து நிற்கிறது. அவர் மறைவு குறித்து வெளியான இரங்கல் செய்திகள் ஒரு சகாப்த முடிவினை சுட்டிக் காட்டிய செய்திகளாக இருந்தன. “சுதந்திரச் சந்தையில் சிங்கம் போல் உலவிய ஃப்ரெய்ட்மனின் மறைவு ஒரு வெற்றிடத்தை உருவாக்கியிருக்கிறது. அவருடைய தரத்திற்கு யாரும் இல்லை. அவர் உறுதியாகப் பற்றி நின்று பரப்பிய கொள்கைகள் தப்பிப் பிழைக்குமா? அதற்கு உறுதியான கவர்ச்சியான அறிவார்ந்த தலைமுறை ஒன்று உருவாக வேண்டும். அது அவ்வளவு எளிதானதல்ல” என்று அவரின் சீடர்களில் ஒருவரான டெரன்கார்கோரன் என்பவர் எழுதினார்.

அப்படி நிகழ்வதற்கான வாய்ப்பும் குறைவு தான் அமெரிக்காவில் ஃபிரெய்ட்மனின் அறிவுலக வாரிசுகள் பிற்போக்குத் தனத்தின் சிந்தனை ஊற்றுகளால் விளங்குபவர்கள். செப்டம்பர் 11, 2001ல் இரண்டு வர்த்தக கட்டிடங்கள் தாக்கப்பட்டன.  அதை பயன்படுத்தி யுத்த முயற்சிகள் (இராக் யுத்தம் உட்பட) மேற்கொள்ளப்பட்டன. உள்நாட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகப்படுத்தப்பட்டன. இந்த நடவடிக்கைகளில் தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் லாபம் கொழிக்கும் செயல்பாடுகளுக்கு ஆக்கம் கொடுக்கும் நடவடிக்கைகளாக மாற்றப்பட்டன. ஆனால் வரலாறு அதற்கான கொள்கை வகுத்தவர்களை ஒரு மூலையில் நிறுத்தி வைத்தது. அரசியல் ரீதியாக அவர்கள் கடைசியாக பெற்ற வெற்றி 1994ல் குடியரசு கட்சி அமெரிக்க காங்கிரசை கைப்பற்றியது தான். ஃப்ரெய்ட்மன் இறப்பதற்கு 9 நாட்களுக்கு முன்பு ஜனநாயகக் கட்சியிடம் அதை மீண்டும் இழந்தார்கள். 2006ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சியின் தோல்விக்கு மூன்று காரணங்கள் வெளிப்பட்டன. முதலாவது, அரசியல் நிர்வாக அளவில் நிலவிப் லஞ்ச ஊழல், இரண்டாவது இராக் யுத்தம் மேற்கொள்ளப்பட்ட முறை, மூன்றாவது அமெரிக்க மக்களிடையே எழுந்த பொதுவான கருத்து – இதை அமெரிக்க ஆட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜிம்வெப் விளக்கினார். “அமெரிக்கா ஒரு வர்க்க அடிப்படையிலான அமைப்பை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. 19ம் நூற்றாண்டிற்கும் பிறகு அமெரிக்க மக்கள் சந்தித்திராத அனுபவம் இது”

இந்தத் திட்டம் பரிசோதனையாக துவக்கப்பட்ட லத்தீன் அமெரிக்காவில் தான் ஆழமான நெருக்கடியினை தோற்றுவித்தது. கம்யூனிசத்தைக் காட்டிலும் ஜனநாயக சோசலிசம் தான் மிகவும் சவால் மிகுந்தது என அமெரிக்கா கருதுகிறது. ஏனெனில் கம்யூனிசத்தை பழி சுமத்தி எதிர்கொள்ள வாய்ப்பான எதிரியாக நிறுத்தி விட முடியும். 60 மற்றும் 70களில் பல நாடுகளில் வெளிப்பட்ட பொருளாதார தேசியம் மற்றும் ஜனநாயக சோஷலிச கோட்பாடுகளை கம்யூனிச கோட்பாடுகளாகவே பாவித்து வசைமாரி பொழியப்பட்டது. அவைகளுக்கிடையே உள்ள வேறுபாடுகள் மறைக்கப்பட்டன. அமெரிக்க உளவுத்துறையின் ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்ட போது இது தெரிந்தது. சிலியின் அல்லெண்டே சோவியத் பாணி சர்வாதிகாரி என்றே உளவுத்துறையின் பிரச்சாரங்களில் குறிப்பிடப்பட்டார். ஆனால் அல்லெண்டேயின் வெற்றி குறித்து அமெரிக்காவின் கவலை அமெரிக்க வெளியுறவு செயலாளராக இருந்த ஹென்றி கிள்ளிங்கர் 1970ல் குடியரசுத் தலைவர் நிக்வனுக்கு எழுதிய குறிப்பில் தெரிந்தது.

“சிலியில் தேர்தலில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் அரசு உலகின் பல பகுதிகளுக்கு குறிப்பாக இத்தாலியில், முன்னுதாரணமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். அதே மாதிரி அரசு அமைக்கப்படுவதற்காக எடுக்கப்படும் முயற்சிகள் உலக சக்திகளின் நிலைமையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டு வரும். நம்முடைய நிலையும் பாதிப்புக்கு உள்ளாகும்.” இதன் பொருள் என்ன? அல்லெண்டேயின் ஜனநாயக மாற்று பரவலான உலக நிகழ்வாக மாறுவதற்கு முன்பே அல்லெண்டேயின் அரசு அகற்றப்பட வேண்டும் என்பது தான் பொருள்.

ஆனால் அல்லெண்டே கனவாக முன்வைத்தது தோற்கடிக்கப்படவில்லை. அச்சமூட்டும் நடவடிக்கைகளால் தற்காலிகமாக பின் தள்ளப்பட்டது. பல ஆண்டுகள் அதிர்ச்சிப் பிறகு அந்த கருத்துக்கள் துடிப்போடு மீண்டும் அரசியல் அரங்கில் நுழைகின்றன. எது அப்படியே பரவும் என கிள்ளிங்கள் அச்சமடைந்தாரோ, அது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

மாற்றங்களை தடுக்க முடியாது!

2001ம் ஆண்டிலிருந்து அப்படி வரும் மாற்றங்களை யாராலும் புறக்கணிக்க இயலாதவைகளாக உள்ளன. அர்ஜென்டைனாவின் மிகப்பிரலபமான பத்திரிகை நிருபர் ரொடால்ஃபோ வால்ஷ் சிகாகோ பொருளாதாரப் பள்ளியின் (ஃப்பெரய்ட்மனின் சீடர்கள் செயல்படுத்திய) பொருளாதாரம் அவர் நாட்டில் ஒரு ராணுவ ஆட்சியின் கீழ் 10களில் ஏற்றம் பெற்றது ஒரு தற்காலிகப் பின்னடைவே தவிர இடதுசாரி இயக்கத்திற்கான தோல்வி அல்ல என்று குறிப்பிடுகிறார். ராணுவம் தன் பயங்கரமான நடைமுறைகளின் மூலம் மக்களிடம் அச்சத்தை பரப்பியது. அதிர்ச்சியினை ஊட்டியது. ஆனால் வால்ஷ் அது நீடிக்கக்கூடியது அல்ல என்று எழுதினார். 20-30 ஆண்டுகளில் அந்த பயங்கரம் புறம் காணும் என்றும் எழுதினார். 1977ல் அர்ஜென்டைனாவின் ரகசிய ராணுவப் படை வால்ஷை ஒரு தெருவில் நேரடியாக சுட்டுக் கொன்றது. ஆனால் வால்ஷ் எழுதியது நடந்தது. அர்ஜென்டைனா மீண்டும் எழுந்தது. நம்பிக்கையினையும் உறுதியினையும் பெற்று எழுந்தது. பொருளாதார, சமூக சமத்துவம் பெற எழுந்தது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு 2001ல் சர்வதேச நிதி நிறுவனத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கெதிரான எதிர்ப்பு இயக்கம் வலுத்தது. அதன் விளைவு? மூன்று வாரத்தில் 5 குடியரசுத் தலைவர்கள் பதவி ஏற்று விலக நேரிட்டது.

மக்கள் பெற்ற உறுதியும், தைரியமும் லத்தீன் அமெரிக்காவின் மற்ற பகுதிகளுக்கு அதிர்ச்சி வைத்தியத்தின் சோதனைக் களமாக இருந்த மற்ற பகுதிகளுக்கும் பரவத் துவங்கியது. ராணுவ அடக்குமுறை இயந்திரங்களால் அவர்கள் மீது திணிக்கப்பட்ட அச்ச உணர்வு விலகியது. மூலதன வெளியேற்றம் மற்றும் நிதிக்கட்டுப்பாடுகள் முதலியவற்றின் தாக்கத்திலிருந்து வெளியே வந்து ஜனநாயக உரிமைகள் சந்தையின் மீதான கட்டுப்பாடு போன்ற கோரிக்கைகளை மக்களின் சார்பாக பல்வேறு இயக்கங்கள் முன் வைக்கத் துவங்கின. ஃப்ரெய்ட்மென் வைத்த கோட்பாட்டிற்கு ஆபத்தினை விளைவிக்கும் கோரிக்கைகள் இவை முதலாளித்துவமும் சுதந்திரமும் பிரிக்கமுடியாது இணைந்திருக்கும் அம்சங்கள் என்ற ஃப்ரெய்ட்மன்னின் கூற்றுக்கு விடப்பட்ட சவால்.

புதிய தாராளமயக் கொள்ளைகளுக்கு லத்தீன் அமெரிக்காவில் கடுமையான எதிர்ப்பினை உருவாக்கியவர்கள் பல நாடுகளில் நடந்த தேர்லில் வெற்றியடைந்து வருகிறார்கள். “21ம் நூற்றாண்டு சோஷலிசம்” என்ற கோஷத்தின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிட்ட வெனிசுலாவின் சாவேஸ் 63சதவிகிதம் வாக்குகள் பெற்று 2006ம் ஆண்டு மூன்றாவது முறையாக வெற்றி பெற்றனர். புஷ் நிர்வாகம் சாவேஸின் வெனிசூலாவை ஒரு போலி ஜனநாயக நாடு என பிரச்சாரம் செய்தது. எனினும் ஒரு கருத்தக்கணிப்பில் பெரும்பான்மையான வெனிசுலா மக்கள் அதை நிராகரித்து அங்கு நிலவிய ஜனநாயக அமைப்பின் மீது நம்பிக்கையினை தெரிவித்தார்கள். உருகுவே நாட்டில் தனியார் மய நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் கருத்தை அறியும் முயற்சியில் அரசு பொறுப்பில் உள்ள இடதுசாரி ஆம்பிலியோ முன்னணி இறங்கியது. அங்கும் மக்கள் பெருவாரியாக தங்கள் ஆதரவினை அரசுக்க அளித்தார்கள். சுருக்கமாகச் சொன்னால் இந்த இரண்டு லத்தீன் அமெரிக்க நாடுகளும் வாஷிங்டன் கருத்திசைவுக்கு சவால் விடுக்கும் வகையில் செயல்படத் துவங்கின. அந்நாட்டு மக்களும் தங்கள் வாழ்நிலை உயர ஜனநாயகத்தின் வலிமை மீது தங்கள் நம்பிக்கையினை பதிவு செய்தார்கள்.

கைவிட்டுப்போனது

2001ல் அர்ஜென்டைனாவில் நடத்தப்பட்ட அதிர்ச்சி வைத்தியம் சிதறத் தொடங்கியவுடன் பல மாற்றங்கள் ஏற்பட்டன. தனியார் மய எதிர்ப்பு அரசாங்கங்களை உருவாக்கவோ அல்லது சீரழிக்கவோ செய்வதற்கு ஒரு தீர்மானகரமான அம்சமாக அக்கண்டத்தில் மாறியது. 2006ன் பிற்பகுதியில் அதுவே அதே தன்மையுடன் உள்ள தொடர்நிகழ்வுகளை கொண்டு வரும் முக்கிய விளைவாக இருந்தது. பிரேசிலில் லூலா மீண்டும் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தனியார் மயக் கொள்கை பற்றிய கருத்துக்கணிப்பில் அதற்கு எதிராக நடத்திய கருத்துப்பிரச்சாரத்தின் அடிப்படையில் தான் அவர் வெற்றி அமைந்தது. ஒரு சோசலிஸ்டைப் போல் தோற்றமளிக்கும் சாகசத்தை அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் (நாட்டின் செல்வங்களை விற்பனை செய்ய வழி வகுத்த அரசியல் குழுவின் பிரதிநிதி) செய்தாலும், லூலா 61 சதவிகிதம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நிகரகுவாவில் மின்சார விநியோகம் மோசமாகி நாட்டை இருளில் மூழ்கடித்துக் கொண்டிருந்து. அரசின் கட்டுப்பாட்டில் இருந்த மின்சார நிறுவனத்தை மிட்ச் பெரும்புயலுக்குப் பிறகு யூனியன் ஃபெனாசா என்ற ஸ்பெயின் நாட்டு நிறுவனத்திற்கு விற்றுவிட்டதால் ஏற்பட்ட விளைவு அது. இதையே தன்னுடைய பிரச்சாரத்தின் மையக்கருத்தாக கொண்டு சென்ற டேனியல் ஆர்டேகா யூனியன் ஃபெனோசாவை இந்த நாட்டிற்கு யார் கொண்டு வந்தது? என்ற கேள்வியினை எழுப்பி காட்டுமிராண்டித் தனமான முதலாளித்துவத்திற்கு சேவை செய்யும் பணக்காரர்களின் அரசு தான் அதை செய்தது. என்ற பதிலையும் மக்கள் முன் வைத்து தேர்தலில் வெற்றி பெற்றார்.

ஈக்வாடர் அறிவிப்பு

2006 நவம்பரில் ஈக்வடார் நாட்டின் அதிபர் தேர்தல் இதே தத்துவார்த்தப் போராட்டக் களத்தைச் சந்தித்தது. 43வயதான இடதுசாரி வேட்பாளர் ரஃபேல் கொர்ரியா வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்டு தோற்றவர் ஆல்வரோ நொபோ என்ற மிகப்பெரிய வாழைத் தோட்டங்களின் சொந்தக்காரர், பணம் படைத்தவர், நாங்கள் இதை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்ற பாப் பாடலை தன் கோஷமாக வைத்து போட்டியிட்டார் கொர்ரியா மக்களைத் துயரத்தில் ஆழ்த்தும் அந்த அதிர்ச்சி தரும் புதிய தாராளமயக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்ற மக்களின் உணர்வினை பிரதிபலிக்கும் கோஷமாக அது இருந்தது. வெற்றி பெற்றவுடன் நான் ஃப்ரெய்ட்மன்னின் அபிமானி அல்ல என்று கொர்ரியா அறிவித்தார். பொலிவியா பொலிவு பெறுகிறது. இதற்கிடையில் பொலிவியாவின் ஈவோ மொரெலின் அதிபர் பொறுப்பேற்று ஒரு ஆண்டு நிறைவு பெற்றது. எண்ணெய் – எரிவாயு  வயல்களை பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலிருந்து விடுவித்து தன் ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார் மொரேலின்; அதனை தொடர்ந்து கனிமச் சுரங்கங்களை நாட்டுடமையாக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டார். சிலியில் பினோசெவின் கைதியாக இருந்த மிஷேல் பாஸ்லெ அந்நாட்டின் அதிபரானார். அவர் தலைமையில் சிலியின் பள்ளி மாணவர்கள் சிகாகோ பள்ளியினைச் சேர்ந்தவர்கள் வலிந்து புகுத்திய இரட்டை அடுக்கு கல்வி முறைக்கு எதிராக நாடு தழுவிய எதிர்ப்பு அலைகளை உருவாக்கினார். அதைத் தொடர்ந்து தாமிர சுரங்கத் தொழிலாளர்கள் தங்களுடைய வேலை நிறுத்தப் போராட்டத்தை துவக்கினார்கள். பல சுரங்கங்கள் பன்னாட்டு நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன.

2006 டிசம்பரில், ஃபிரெய்ட்மன் இறந்து ஒரு மாத்திற்குப் பிறகு, பொலிவியாவின் கொச்சபம்பா நகரில் லத்தீன் அமெரிக்கத் தலைவர்கள் ஒன்று கூடினார்கள். அங்கே தான் சில ஆண்டுகளுக்குப் பின் தண்ணீர் விநியோகம் தனியார் மய தாக்குதலுக்கு உள்ளான போது மக்கள் கிளர்ந்தெழுந்து உயிர்பலிகொடுத்து அதை முறியடித்தனர். அதற்கான உரிமை பெற்றிருந்த பெக்டெல் என்ற பன்னாட்டு நிறுவனம் பொலிவியாவை விட்டே வெளியேற வேண்டிய நிலை வந்தது. திறந்து கிடக்கும் லத்தீன் அமெரிக்காவின் ரத்த நாளங்களை மூடுவேன்” என மொரெலன் சூளுரைத்தார். எடுயார்டா கலீனாவோ என்பவர் எழுதிய திறந்து கிடக்கும் லத்தீன் அமெரிக்காவின் ரத்த நாளங்கள் ஐந்து நூற்றாண்டுகளாக  கொள்கையடிக்கப்பட்ட ஒரு கண்டம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட வார்த்கைள் மிகவும் அற்புதமாக இலக்கிய நடையில் எழுதப்பட்ட உணர்ச்சி மிகு படைப்பு அது. இரக்கமற்ற முறையில் வன்முறை மூலம் சுரண்டப்பட்டு எப்படி வளமிக்க லத்தீன் அமெரிக்க கண்டம் ஏழ்மை தாண்டவமாடும் பகுதியாக உருமாற்றம் பெற்றது என்பதை விளக்கிச் சொல்லும் புத்தகம் அது. 1971ல் எழுதப்பட்டது. சிலியின் அல்லெண்டே படுகொலை செய்யப்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. சிலி நாட்டின் தாமிரச் சுரங்கங்களை நாட்டுடமையாக்கும் உறுதியுடன் செயல்படத்துணிந்த அல்லெண்டேக்கு அமெரிக்க உளவுத்துறையும் பன்னாட்டு நிறுவனங்களும் கொடுத்த பரிசு  துத்தப்படுகொலை அதனைத் தொடர்ந்து தான் லத்தீன் அமெரிக்க நாடுகள் வெறித்தனமான சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்டன. அந்த நாடுகளின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட திட்டங்கள் அழிக்கப்பட்டன முடக்கப்பட்டன மற்றும் விற்கப்பட்டன.

சுதந்திரச்சந்தையின் அதிர்ச்சிக் கோட்பாடு – லத்தீன் அமெரிக்காவின் எதிர்ப்பலைகள்

சில ஆண்டுகளுக்கு முன் அப்படி கொடுமையான சிதைவுக்கு உள்ளான திட்டங்களை லத்தீன் அமெரிக்கா இன்று கையிலெடுக்கிறது. நம் அனைவருக்கும் தெரிந்த கொள்கை முடிவுகள் தான் அவை. பொருளாதாரத்தின் கேந்திரமான துறைகளை தேச உடமையாக்குதல், நிலச்சீர்த்திருத்தம், கல்வி, எழுத்தறிவு இயக்கம் மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளுக்கான முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளித்தல் போன்றவைகள் தான் அந்த கொள்கை முடிவுகள். அவைகள் ஒன்றும் புரட்சிகரமான கருத்துக்கள் அல்ல. ஆனால் சமத்துவம் வேண்டி குற்ற உணர்வு ஏதுமின்றி செயல்படும் அரசின் கண்ணோட்டம் அந்தத் திட்டங்கள் மில்டன் ஃப்ரெய்ட்மானின் கூற்றுக்கு சரியான பதிலடியாகும். 1975ல் சிலியின் பினோசெப்பிற்கு ப்ரெய்ட்மன் எழுதினார். மற்றவர்கள் பணத்தில் நல்லது செய்ய முடியும் என்பது மிகவும் தவறானது என்பது என் கருத்து அரசு வருமானத்தில் மக்களுக்கு நன்மை செய்வது தவறு என்று அதற்கு பொருள் இதற்கு அடி விழுந்தது.

கடந்த கால புரட்சிகர வரலாற்றிலிருந்து வழிகாட்டுதலை பெற்றாலும் கூட, இன்றைய லத்தீன் அமெரிக்கா இயக்கங்கள் முந்தைய இயக்கங்களின் நேரடியான பிரதிபலிப்பல்ல. மிகவும் தெள்ளெனத் தெரிகிற வேறுபாடு யாதெனில், திடீர் ராணுவபுரட்சி வெளிநாட்டார் கொடுக்கும் அதிர்ச்சி வைத்தியம், அமெரிக்காவில் பயிற்சி பெற்ற கொடுங்கோலர்கள் ஆட்சி மற்றும் கடன் நெருக்கடி நாணய வீழ்ச்சி ஆகியவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற புரிதல் தான். மிகப்பெரிய அளவில் இடதுசாரி வேட்பாளர்களின் வெற்றி அலைகள் வீசிக் கொண்டிருக்கும் லத்தீன் அமெரிக்காவின் மக்கள் இயக்கங்கள் எழுகின்றன. அவை செயல்படும் வடிவங்கள் மேலே குறிப்பிட்ட தாக்குதல்களை தாக்குப்பிடித்து உள் வாங்கும் பகுதிகளோடு கட்டப்படுகின்றன. உதாரணமாக, 60களின் இயக்கங்களைப் போல் இன்றைய இயக்கங்கள் அவ்வளவு மையப்படுத்தப்பட்ட இயக்கங்கள் அல்ல; ஆகையால், சில தலைவர்களை அழித்து விடுவதின் மூலம் இந்த இயக்கங்களை நிலை குலைய செய்து விட முடியாது. வெனிசூலாவில் சாவேஸ் என்ற தனி நபரை போற்றுவது என்பது உண்டு. அரசு மட்டத்தில் அதிகாரத்தை மையப்படுத்துவதும் விவாதத்துக்குரிய ஒன்று தான்; ஆனால் அதே நேரத்தில் அந்நாட்டின் முற்போக்கான அமைப்பு வலைகள் பரவலாக்கப்பட்ட அதிகார வரம்புக்குள் செயல்படுகின்றன. ஆயிரக்கணக்கான அருகருகே உள்ள வட்டார அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகள் மூலம் சமூக அடித்தளத்திற்கு அதிகாரம் பரவலாக்கப்பட்டிருக்கிறது. பொலியாவில், ஈவா மொரலஸை அதிபர் பதவிக்கு உயர்த்திய அந்த நாட்டின் பழங்குடி மக்கள் இயக்கம் அதே முறையில் தான் செயல்படுகிறது. அது மொரெலசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுக்கவில்லை என அறிவிக்கிறது. மக்கள் கொடுத்த ஜனநாயக தீர்ப்புக்கு உண்மையாக நடந்து கொள்ளும் வரையில் அந்த இயக்க அணிகள் அவருக்கு ஆதரவு அளிக்கும் இந்த வகையிலான அமைப்பு வலை தான். 2002ல் நடந்த கவிழ்ப்பு முயற்சியிலிருந்து சாவேஸை காப்பாற்றியது. வெனிசுலாப் புரட்சிக்கு சோதனை வந்த பொழுது, சாவேஸின் ஆதரவாளர்கள் தலைநகரமான காரகாணை சுற்றியுள்ள நகரப் பகுதிகளுக்கும் மற்றபகுதிகளுக்கும் விரவிச் சென்று சாவேஸை மீண்டும் பொறுப்பில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை மக்களிடம் கொண்டு போனார்கள் 70களில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகளுக்குக்கெதிராக இம்மாதிரியான பரவலாக்கப்பட்ட மக்கள் இயக்கங்கள் எதுவும் நடைபெறவில்லை.

எதிர்காலத்தில் தங்கள் பெற்ற ஜனநாயக வெற்றிகளை சீர்குலைக்கும் நோக்கோடு அமெரிக்க ஆதரவுடன் செயல்படுத்தப்படும் ராணுவ கவிழ்ப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ள லத்தீன் அமெரிக்காவின் புதிய தலைவர்கள் துணிவோடு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். சாவேஸின் சமீபத்திய அறிவிப்பு ஒன்று இதை எடுத்துக்காட்டியது. தீவிர வலதுசாரி சக்திகள் பொலியாவின் சாண்டாக்குள் பகுதியில் மொரெலிசுக்கு எதிராக அச்சுறுத்தும் நடவடிக்கைகள் எடுத்தால், பொலிவிய ஜனநாயகத்தைக் காப்பாற்ற வெனிசுலாப் படைகள் உதவி செய்யும் என்று அறிவித்தார். அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் ஃபோர்ட் பென்னிங் என்னுமிடத்தில் ராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கான பயிற்சி நிறுவனம் இருக்கிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளில் பயிற்சிப் பெற லத்தீன் அமெரிக்க நாடுகள் இந்த நிறுவனத்திற்கு பயிற்சியாளர்களை அனுப்புவது உண்டு. எம்மாதிரியான பயிற்சிப் பெற்று அவர்கள் திரும்புவார்கள் என்பது உலகமறிந்த செய்தி. அப்படிப் பயிற்சி பெற்றவர்களைப் பயன்படுத்தி அமெரிக்கா படுகொலை மற்றும் அனைத்து சீர்குலைவு வேலைகளை செய்து கொண்டிருந்தது. இப்பொழுது ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. வெனிசுலா, கோன்டாரிகா, அர்ஜென்டைனா, உருகுவே மற்றும் பொலிவியா ஆகிய நாடுகள் தங்கள் நாட்டிலிருந்து இனி பயிற்சியாளர்களை அங்கே அனுப்பப் போவதில்லை என அறிவித்திருக்கின்றன. கடந்த காலத்தில், எதிர்புரட்சி தந்திரங்களிலும் அடக்குமுறை நடவடிக்கைகளிலும் பயிற்சி பெற்றவர் எல்சால்வாடரின் விவசாயிகள் மீறும் அர்ஜென்டைனாவின் மோட்டார் தொழிலாளர்கள் மீதும் நடத்திய தாக்குதலை அந்த நாடுகள் சந்திருக்கின்றன. ஈக்வடாரும், மான்டோ ராணுவத் தளத்தை மூடுவதோடு, அந்தப் பயிற்சி நிறுவனத்துடனான உறவினை துண்டித்துக் கொண்டது. இந்த மாற்றங்களின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்திப்பார்க்க வேண்டிய அவசிய மில்லை. ஆனால், ராணுவம் தளங்களையும் பயிற்சி திட்டங்களையும் இழக்கும் போது அந்த கண்டத்தில் அதிர்ச்சிகளை கொடுக்கும் சக்தி அளிக்கப்பட்டு வருகிறது.
மாறிக் கொண்டே இருக்கும் சந்தை தரும் அதிர்ச்சிகளை சந்திப்பதற்கு லத்தீன் அமெரிக்காவின் புதிய தலைவர்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாட்டை நிலை குலையச் செய்யும் ஓரிரண்டு அம்சங்கள் சமீபகாலத்தில் வெளிப்படுகின்றன. மிகவேகமாக மூலதனம் வந்து போவது ஒரு அம்சம் அல்லது விவசாய உற்பத்தி பண்டங்களின் திடீர் விலை வீழ்ச்சி விவசாயத்துறைக்கு வித்திடும் சீரழிவு லத்தீன் அமெரிக்காவில் பல நாடுகளில் இந்த அதிர்ச்சிகள் நிகழ்ந்திருக்கிறது. அதன் விளைவாக உயிரோட்டத்துடன் இயங்கிக் கொண்டிருந்த தொழிற்துறை நகரங்கள் நடமாட்டம் ஏதுமில்லாமல் அச்சமூட்டும் இடங்களாக மாறிவிட்டன. செழிப்புடன் உற்பத்தியில் இருந்த விளைநிலங்கள் தரிசு நிலங்களாக மாறியிருக்கின்றன. உலகமயமாக்கல் சிதைத்த சிதைவுகளை எடுத்து மீண்டும் ஒருங்கிணைக்கும் பிரதான கடமை தான் அங்கே எழுந்திருக்கும் புதிய இடதுசாரிகளின் முன் வைக்கப்பட்டிருக்கிறது. பிரேசிலில் நிலமற்ற மக்கள் இயக்கம் என்ற அமைப்பைச் சேர்ந்த 15 லட்சம் விவசாயிகள் பயன்பாடு இல்லாத நிலங்களை எடுக்க நூற்றுக்கணக்கில் கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கினார்கள். அர்ஜென்டைனாவில் மீட்கப்பட்ட நிறுவனங்கள் என்ற இயக்கத்தின் சார்பில் மூடப்பட்ட 200க்கும் மேற்பட்ட நிறுவனங்களை தொழிலாளிகளால் அவற்றிற்கு புத்துயிர் கொடுத்து ஜனநாயக முறையில் செயல்படும் கூட்டுறவு அமைப்புகளாக மாற்றினார்கள் இந்த கூட்டுறவு அமைப்புகள் முதலீட்டாளர்கள் திடீரென்று விலகிவிடும் அதிர்ச்சியை சந்திக்க வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் முதலீட்டாளர்கள் எல்லாம் முன்பே ஓடிப்போய்விட்டனர். இந்த இரண்டு நிகழ்வுகளும் மேற்குறிப்பிட்ட இடதுசாரிகளின் கடமையினை சுட்டிக் காட்டும் நிகழ்வுகளாகும்.

சாவேஸ் வெனிசூலாவில் கூட்டுறவு அமைப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறார். அவைகள் வணிகத்தில் பரஸ்பரம் பங்கேற்கும் வகையில் பொருளாதார சலுகைகள் அளிக்கப்படுகின்றன. 2006ம் ஆண்டு முடியும் போது 1 லட்சம் கூட்டுறவு அமைப்புகள் உருவாக்கப்பட்டு 7லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது. சுங்கச்சாவடிகள், நெடுஞ்சாலை பராமரிப்பு, சுகாதார நிலையங்கள் போன்ற அரசு மேற்கொள்ள வேண்டிய துணை அமைப்பு பணிகளை உள்ளூர் சமூகக்கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு அமைப்புகள் செய்து வருகின்றன. அரசுப் பணிகளை ஜனநாயகக் கட்டுப்பாடு ஏதுமின்றி தனித்தனியாக பிரித்து மிகப்பெரிய தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விடும் செயல்பாட்டிலிருந்து இது வேறுபட்ட அணுகுமுறை என்பது தெளிவு. இந்த முறையில் மூலாதாரங்களை பயன்படுத்துவோர் அதை நிர்வகிக்கும் அதிகாரத்தையும் பெறுகின்றனர். குறைந்தப் பட்சம் அது கொள்கை அளவிலாவது வேலை வாய்ப்பை உருவாக்கி மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவையினை உணர்ந்து செயல்படும் தன்மை கொண்டதாக இருக்கும். சாவேஸை விமர்சிப்பவர்கள் இந்த நடவடிக்கைகளை வீணாண தேவையற்ற சலுகைகள் என்று விமர்சித்தார். ஹாலி பெர்ட்டன் என்ற அமெரிக்காவின் எண்ணெய் பன்னாட்டு நிறுவனம் அமெரிக்க அரசை கடந்த 6 ஆண்டுகளாக தன்னுடைய தேவைக்கேற்ப பணம் எடுக்கும் தானியங்கி இயந்திரமாக பயன்படுத்தி வருகிறது. இராக்கில் சில ஒப்பந்தப் பணிகளுக்காக அந்த நிறுவனம் பில்லியன் டாலர் எடுத்திருக்கிறது. ஈராக்கிலும் வளைகுடா பகுதியிலும் செய்ய வேண்டிய பணிகளுக்கு அந்தந்த நாட்டுத் தொழிலாளர்களை அமர்த்துவதில்லை அந்த நிறுவனம் அதன் தலைமையகத்தை துபாய்க்கு மாற்றி சில வரி மற்றும் சட்டச் சலுகைகளை பெற்றது. அதற்காக அமெரிக்க வரி செலுத்தும் மக்களுக்கு நன்றி செலுத்தக்கூட தயங்கவில்லை. இவர்களுக்கு சாவேஸின் மக்களுக்கு நன்மை தரும் மான்யங்கள் முற்போக்குத் தன்மை குறைந்ததாக தெரிவதில் ஆச்சரியமில்லை.

எதிர்காலத்தில் வரக்கூடிய அதிர்ச்சிகளிலிருந்தும் – அதிர்ச்சி கோட்பாட்டிலிருந்து பாதுகாத்துக் கொள்ள லத்தீன் அமெரிக்கா கொண்டிருக்கும் நம்பிக்கை எதிலிருந்து பிறக்கிறது. அந்தப் பகுதியில் வாஷிங்டன் கட்டுப்பாட்டில் இயங்கும் நிதி நிறுவனங்களின் பிடியிலிருந்து விலகி அந்த கண்டத்தின் நாடுகள் சுதந்திரமாக செயல்படத் துவங்கியதிலிருந்தும், பல்வேறு நாடுகளின் அரசாங்கங்கள் தங்களிடையே உருவாக்கியிருக்கும் ஒற்றுமை பிணைப்பிலிருந்தும் பிறக்கிறது. அமெரிக்காவின் சுதந்திர வர்த்தக பகுதி என்ற கோட்பாட்டிற்கு சரியான பதிலடி அமைப்பாக எழுந்திருப்பதுதான் “அமெரிக்காவிற்கான பொலிவாரியான் மாற்று”(The Blivariam Alternative for America) வடக்கே அலாங்கா வடஅமெரிக்காவிலிருந்து தெற்கே டியர்ராடெல் ஃப்யூகோ (சிலி – தென் அமெரிக்கா) வரை இடையில் உள்ள பகுதியினை சுதந்திர வர்த்தக பூமியாக மாற்ற விரும்பிய மிகப் பெரிய நிறுவனங்களின் கனவு அந்த கண்டத்தில் புதை குழிக்குப் போய் கொண்டிருக்கிறது. பிரேசில் நாட்டின் சமூக ஆய்வாளர் எமிர்சாதர் கூறுவது போல், அந்த மாற்று (ALBA) கொடுக்கும் வாக்குறுதி உண்மையான நியாயமான வர்த்தகத்திற்கு சிறந்த உதாரணம் ஒவ்வொரு நாடும் எது அந்த நாட்டின் பிரதான உற்பத்திப் பொருளாக உற்பத்தி செய்ய வாய்ப்பு இருக்கிறதோ அதை கொடுக்க முன் வருகிறது. அதற்கு பதிலாக அந்த நாட்டிற்கு எது தேவையோ அதை உலகச் சந்தை விலைக்கு உட்படாமல் பெறுகிறது. பொலிவியா தன்னிடமுள்ள எரிவாயுவினை தள்ளுபடி விலைக்கு அளிக்கிறது. வெனிசூலா போதுமான மான்ய விலையில் ஏழை நாடுகளுக்கு எண்ணெய் வழங்குகிறது. மற்ற நாடுகளின் எண்ணெய் வளங்களை மேம்படுத்த தொழில் நுணுக்கங்களை பகிர்ந்து கொள்கிறது. கியூபா அந்த கண்டம் முழுமையும் இலவச மருத்துவ சேவையினை அளிப்பதோடு, கியூபாவின் மருத்துவ கல்வி நிலையங்களில் மற்ற நாடுகளின் மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கிறது.

இது ஒரு வித்தியாசமான கல்வியறிவு பரிமாற்றம்; 50களின் மத்தியில் சிகாகோ பல்கலைக்கழகம் கொடுத்த கல்விப் பயிற்சியிலிருந்து மாறுபட்டது இது. சிகாகோ பள்ளியில் வளைந்து கொடுக்காத ஒரே தத்தவார்த்த படிப்பைத்தான் லத்தீன் அமெரிக்க மாணவர்கள் பெற்றார்கள். அப்படி கற்றதை ஒரே மாதிரியாக அந்த கண்டம் முழுமையும் செயல்படுத்தினார்கள். ஆனால் இந்த மாற்றின் பயன்தரத்தக்க அம்சம் யாதெனில் அது ஒரு பண்டமாற்று அமைப்பாக இருப்பதால் பரிவர்த்தனை பொருட்களின் உண்மையான மதிப்பின் அடிப்படையில் இருக்குமே தவிர நியூயார்க், லண்டன், சிகாகோ சந்தையில் வர்த்தகர்கள் தீர்மானிக்கும் விலையில் இருப்பதில்லை. ஆகவே அந்த முறை, லத்தீன் அமெரிக்காவை வாட்டிக் கொண்டிருந்த திடீரென்று மாறும் விலை வாசியின் தாக்கத்திலிருந்து பெருமளவு விடுதலை கொடுத்தது. மிகவும் கொந்தளிப்பான நிதிச்சூழலின் பின்னணியில், ஒப்பு நோக்கின் அமைதியான தெளிவான பொருளாதார வரையறுப்பை கொடுக்கக்கூடிய பகுதியை லத்தீன் அமெரிக்காவில் அது உருவாக்கியிருக்கிறது. உலகமய சூழலில் அது ஒரு செயற்கரிய செயலாகும்.

ஏதேனும் ஒரு நாடு பொருளாதாரப் பற்றாக்குறையினை சந்தித்தால் அது அதை சமாளிக்க அமெரிக்க நிதி ஆதாரங்களையோ சர்வதேச நிதி நிறுவனத்தையோ (IMF) நாட வேண்டிய அவசியமில்லை என நாடுகளிடையே ஏற்படும் இந்த இணக்கமான ஒருமைப்பாடு எடுத்துக்காட்டுகிறது. அது வரவேற்கத்தக்க நிகழ்வுதான், ஏனெனில் அமெரிக்க தேசியப் பாதுகாப்பிற்கான நீண்டகால கொள்கை அதைச் சார்ந்து அனைத்து நாடுகளும் இருக்க வேண்டி அந்த அதிர்ச்சிக் கோட்பாடுகள் தொடர வேண்டும் என வலியுறுத்துகிறது. ஒரு நாட்டில் நெருக்கடி தோன்றுமானல் பொருளாதார திசை வழியினை தேர்ந்தெடுத்திருப்பதற்கு அந்த நாடே பொறுப்பு என சர்வதேசநிதி நிறுவனம் வலியுறுத்த வேண்டும் மறு கவனத்திற்கு உள்ளாகியிருக்கும் சர்வதேச நிதி சம்பந்தப்பட்ட முடிவுகளில் அமைப்புகளையும் சந்தை ஒருங்கிணைப்பும் வலுப்படுத்தும் என்று மேற்குறிப்பிட்ட தேசியப் பாதுகாப்பு ஆவணம் கருத்து தெரிவிக்கிறது. நாடுகள் உதவி நாடி வாஷிங்டனை நோக்கிச் செல்லும் போதுதான் அந்தச் சந்தை ஒழுங்கு கட்டாயமாக திணிக்கப்படும். ஸ்டான்லி ஃபிஷ்னர் (சர்வதேச நிதி நிறுவனத்தின் முதல் துணை இயக்குனர் – சிகாகோ பள்ளி மாணவன்) ஆகிய பொருளாதார நெருக்கடி காலத்தில் சர்வதேச நிதி நிறுவனம் அதை உதவிக்கு அணுகினால் தான் உதவி முடியும். ஒரு நாட்டின் நிதி திவால் நிலையில் இருந்தால், உதவி நாட நிறைய இடங்கள் அதற்கு கிடையாது என்ற கூறினார். ஆனால் லத்தீன் அமெரிக்காவில் இன்று அப்படிப்பட்ட நிலை இல்லை. எண்ணெய் விலை உயர்வினால் வெனிசூலா வளரும் நாடுகளுக்கு உதவி அளிக்கும் முக்கிய நாடாக இருக்கிறது. அந்த நாடுகள் வாஷிங்டனை சுற்றி ஓடுவது என்பது முடிவுக்கு வந்து விடுகிறது. டிசம்பர் மாதத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கப்படும். உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம் போன்ற நிதி அமைப்புகளுக்கு மாற்றாக தென்னகத்தின் வங்கி (Bank of the South) என்ற வங்கி அமைப்பு துவக்கப்படும். உறுப்பு நாடுகளுக்கு கடன் வழங்குவதையும் அந்நாடுகளின் பொருளாதார இணைப்பை கொண்டு வருவதும் அதன் பிரதான பணிகளாக இருக்கும்.

இப்பொழுது உதவிக்கு அந்த நாடுகள் சர்வதேச நிறுவனத்தை நாடிச் செல்ல வேண்டிய அவசியமில்லை. உதவி நாட வேறு இடங்கள் இருக்கின்றன. பல லத்தீன் அமெரிக்க நாடுகள் சர்வதேச நிதி நிறுவனத்தை புறக்கணிக்க துவங்கியிருக்கின்றன. கடன் வலையாய் அமெரிக்காவுடன் கட்டுண்டிருந்த பிரேசில் அந்த நிதி நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் எதிலும் புக தயாராக இல்லை. வெனிசூலா உலக வங்கி உட்பட அமைப்புகளிலிருந்து விலகுவது குறித்து அலோசித்து வருகிறது. அமெரிக்காவின் முன் மாதிரி மாணவன் எனக்கருதப்பட்ட அர்ஜண்டைனா இந்தப் போக்கினால் கவரப்பட்டு நிற்கிறது. 2007ம் ஆண்டில் நாட்டு நிலைமை பற்றி பேசிய அந்நாட்டின் அதிபர் நெஸ்டர் இர்ச்னா (அவர் மனைவி கிறிஸ்டினா இப்போது அதிபாராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்) கடன் கொடுக்கும் வெளிநாட்டவர் கடனை அடைக்க சர்வதேச நிதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். நாங்கள் அவர்களுக்கு சொல்கிறோம். எங்கள் நாடு சுயாட்சி உரிமை பெற்ற நாடு நாங்கள் கடனை திருப்பிதர விரும்புகிறோம் ஆனால் எந்த கடுமையான நிலையிலும் அந்த நிதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் வைத்துக் கொள்ளப் போவதில்லை என்று கூறினார்.அதன் விளைவாக 80களிலும், 90களிலும் அக்கண்டத்தில் ஆதிக்கம் செலுத்திய சர்வதேச நிதி நிறுவனம் இப்பொழுது அங்கே ஒரு சக்தியாக செயல்பட இயலவில்லை. 2005ல் அந்த நிதி நிறுவனத்தின் மொத்தக் கடனளிப்பதில் 80 சதவிகிதம் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குள்ளேயே இருந்தது. 2007ல் கடனில் லத்தீன் அமெரிக்காவின் பங்கு 1சதவிகிதம் தான் 2 வருடங்களில் தான் எவ்வளவு பெரிய மாற்றம்.
இந்த மாற்றம் லத்தீன் அமெரிக்காவையும் தாண்டிச் சென்றிருக்கிறது. மூன்றே ஆண்டுகளில் சர்வதேச நிதி நிறுவனத்தின் கடனளிப்பு 81 பில்லியன் டாலரிலிருந்து 11.8 பில்லியன் டாலராக குறைந்து விட்டது. அந்த கடன் ழுழுமையும் துருக்கிக்கு கொடுக்கப் பட்டது. எங்கெல்லாம் நெருக்கடிகளை லாபமீட்டும் நிகழ்வுகளாகத் சர்வதேச நிதி நிறுவனம் பயன்படுத்தியதோ அங்கே அது தீண்டத்தகாதவனாக மாறிப்போனது.
அதே நிலையற்ற தன்மையினை உலக வங்கியும் எதிர்காலத்தில் சந்திக்கவிருக்கிறது. ஈக்வடாரின் அதிபர் கொர்ரியா வாங்கிய எல்லா கடன்களையும் நிறுத்திவைப்பதாகவும், ஈக்வடாரில் தங்கி இருக்கும் உலக வங்கியின் பிரதிநிதி தன் நாட்டுக்கு வேண்டாதவர் என சென்ற ஏப்ரல் மாதம் அறிவித்தார். இது வியப்பூட்டும் அசாதாரணமான நடவடிக்கை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உலக வங்கி ஈக்வடாருக்குக் கொடுத்த 100 மில்லியன் டாலர் கடனை பயன்படுத்தி அந்த நாட்டின் எண்ணெய் வணிகத்தில் கிடைத்த வருமானம் ஏழைகளுக்கும் போய்ச்சேர வகை செய்யும் ஒரு சட்டத்தை நிறைவேறவிடாமல் செய்ததை கொர்ரியா விளக்கினார். ஈக்வடார் ஒரு சுயாட்சி உரிமை கொண்ட நாடு. சர்வதேச அதிகார வர்க்கத்தின் பறித்தல் நடவடிக்கை முன் கை கூடி நிற்கப்போவதில்லை என கொர்ரியா அறிவித்தார். இதற்கிடையில் பொலிவியாவின் மொரேல்ஸ் உலகவங்கியின் நடுவர் நீதிமன்றத்திலிருந்து விலகும் என அறிவித்தார். ஏனெனில் இந்த மன்றம் தான் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் லாபத்தை பறிக்கும் நடவடிக்கைகள் எனக் கூறி தேசிய அரசுகளின் பல நடவடிக்கைகளை எதிர்த்து வழிக்காட்ட பயன்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு லத்தீன் அமெரிக்கா, ஏன் உலகநாடுகள் கூட இந்த வழக்குகளில் வெற்றி பெறுவதில்லை. பன்னாட்டு நிறுவனங்களின் தான் வெற்றி பெறுகின்றன என்று மொரேலஸ் விளக்கிச் சொன்னார்.

மே மாதத்தில் உலக வங்கியின் தலைவர் பால் உல்ஃபோவிச் தன் பதவியிலிருந்து விலக வேண்டிய நிலை வந்தது. அது ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தியது. உலக வங்கியின் நம்பகத்தன்மைக்கு ஆழமான நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.அதிலிருந்து அதை மீண்டெடுக்க வேண்டுமானால் வேறு வழியின்றி நம்பிக்கையற்ற சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவையினை அது தெளிவுபடுத்தியது. அந்த நேரத்தில் ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை உலக வங்கி அதிகாரிகள் வளரும் நாடுகளுக்கு ஆலோசனைகள் வழங்கும் போது அவர்கள் இன்றி நகைப்புக் குள்ளாகிறார்கள் என்று எழுதியது. இதோடு 2006ல் உலக வர்த்தக அமைப்பில் பேச்சு வார்த்தைகளில் ஏற்பட்ட முறிவினையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் உலகமயம் காலமாகி விட்டது. என்ற பிரகடனம் வெளியிடும் அளவிற்கு சிகாகோ பள்ளியின் பொருளாதாரத் தத்துவத்தை பொருளாதாரத்தின் தவிர்க்க பொறுத்து எனக்கூறி அதை திணிப்பதில் பெரும் பொறுப்பேற்ற இந்த மூன்று நிறுவனங்களும் (உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம், உலக வர்த்தக அமைப்பு) காணாமல் கரைந்து போகும் ஆபத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றன.
புதிய தாராளமயக் கொள்கைக்கு கடுமையான எதிர்ப்பு மிகவும் வளர்ந்த நிலையில் லத்தீன் அமெரிக்காவில் எழுவது பொருத்தமானது தான், ஏனெனில் அந்தப் பகுதி தான் அந்த கோட்பாட்டிற்கான முதல் சோதனை களமாக இருந்தது. அந்நாடுகளுக்கு உலகமயத் தாக்குதலைத்தாங்கும் உறுப்புகளை மீண்டும் புதுப்பிக்க நிறைய கால அவகாசமும் கிடைத்திருக்கிறது அதிர்ச்சி அரசியல் எப்படி செயல்படும் எனப் புரிந்து கொள்ளவும் பல முடிகிறது ஆண்டுகளாக ஒவ்வொரு நாட்டின் தெருக்களிலும் எதிர்ப்பு இயக்கங்கள் புதிய அரசியல் கூட்டுக்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அவைகள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதோடு அரசின் அதிகார கட்டமைப்பையே மாற்ற முனைகின்றன.

உணர்வுகளை பாதிக்கும் அதிர்ச்சிகள் தோன்றும் போது – சுனாமி, ஈராக் யுத்தம், பூகம்பங்கள் போன்ற அதிர்ச்சிகள் உட்பட – அவைகளைப் பயன்படுத்தி சுரண்டல் கொள்கையினை அமுல்படுத்துவது தான் அதிர்ச்சி கோட்பாட்டின் மையக் கருத்தாகும். எதிர்பாராத நேரத்தில் திடீர் தாக்குதலை நடத்தும் தந்திரத்தை அது உள்ளடக்கியது.

எதை அதிர்ச்சி என்று புரிந்து கொள்ளுகிறோம் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்வுகளுக்கும் அவைகளை விளக்கிச் சொல்வதற்காக கிடைத்திருக்கும் தகவல்களுக்கும் இடையே பெரிய இடைவெளி இருக்குமானால் அங்கே அந்த நிகழ்வுகள் அதிர்ச்சியினைக் கொடுக்கிறது. அப்படி நடக்கும் நிகழ்வுகளைப் பற்றிய ஒரு புதிய பார்வையினையும், விளக்கத்தையும் பெறுகிற போது, நமக்கு சரியான திசைவழி கிடைக்கிறது. உலகம் உய்ய ஒரு பாதை உருவாகிறது.

அதிர்ச்சிக் கோட்பாடு இயங்கும் முறை பற்றி கூட்டாகவும் ஆழமாகவும் புரிந்து கொண்டால், எந்த சமூக அமைப்பும் எதிர்பாரா அதிர்ச்சிக்கு உள்ளாகாது. அதிர்ச்சி எதிர்ப்பினை நிலை குலையச் செய்வதும் இயலாது

1857 ஆம் ஆண்டும் நல்லிணக்க முகிழ்தலும் – சீத்தாராம் யெச்சூரி

 
1857 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை எதிர்த்து
நடந்த கிளர்ச்சியின் 150 வது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சிகள்
நாடு முழுமையும் கொண்டாடப்படுகின்றன. இந்த நிகழ்வு முதல் விடுதலைப்போர் என குறிப்பிடப்படுகிறது. அதன் முக்கியத்துவம் யாதெனில் அதில் பெறப்பட்ட படிப்பினைகள் யாவும் இன்றைய தினத்தில் அறிவார்ந்த விவாத மேடைகளில் அலசப்படும் விஷயங்களாக மாறியிருக்கின்றன என்பது தான். அதிகாரப் பூர்வமான நிகழ்ச்சிகள் பல நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன. அனால், அதை விட முக்கியமானது என்னவென்றால் அந்த நிகழ்வு பற்றி புகழ்பெற்ற ஆய்வு மையங்களும், வரலாற்று ஆய்வினை மேற் கொண்டவர்களும் அதன் மீது திருப்பிய புதிய பார்வைதான். இதுவரை வெளிக்கொணராத ஆனால் விரவிக் கிடக்கும் பல்வேறு ஆதாரங்களை ஒன்று திரட்டி பல பண்பாட்டு மற்றும் இலக்கிய அமைப்புகளும் அந்த முயற்சியில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றன. தொடர்ந்து நடத்தப்படும் இந்த விவாதங் களும் அதையொட்டிய செயல்பாடுகளும் நம் நாட்டுக்கும் நமக்கும் பயன்தரத்தக்க நடவடிக்கைகள் தான். இதில் கிடைக்கும் அனுபவத்திலிருந்து சரியான முடிவுகளை பெற்றால் அது இன்னும் சிறப்பாக இருக்கும்.
அந்த எழுச்சி குறித்த பல்வேறு விவரங்களையும் தாண்டி நாம் பரிசீலித்ததால் 1857 க்குப் பிறகு அதிகாரப் பொறுப்பேற்ற பிரிட்டிஷ் அரசு இந்திய நாகரீகத்தில் எழுந்த நல்லிணக்க முகிழ்தலுக்கு தடையாக இருந்திருக்கிறது என்பது தெரியும். பிரிட்டிஷ் அரசு தங்கள் ஆட்சியினைத் தொடரவும் ஒருங்கிணைத்துக் கொள்ளவும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டனர். உள்நாட்டு வகுப்புவாத சக்திகள் அதற்கு துணையாக இருந்தன. இந்த நிகழ்வு நடைபெறாமல் இருந்திருந்தால் இந்திய நாகரீகத்தின் சிறப்பு பண்பாக மக்கள் சமூகத்தில் எழுந்த நல்லிணக்க முகிழ்வு ஒரு உயர்ந்த ஒளி வீசும் நிலையினை அடைந்திருக்கும். அந்த உன்னத நிலையின் வழித் தோன்றலாக நாம் இருப்பதற்கு மாறாக, நம் வரலாற்றினையும், சமூகப் பண்புகளையும் மறு தேடலுக்கு உட்படுத்தும் இரங்கத்தக்க நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று எரிந்து கொண்டிருக்கும் வகுப்பு வாத மோதல்களில் மூழ்கி விடாமல் அந்த சிறப்பான வரலாற்று மற்றும் பண்பாட்டுக் கூறுகளை எடுத்துக் கோர்ப்பது சிறப்பாக இருக்கும். அது தான் 1857 யை நினைவு கூர்வதன் நோக்கத்தை அர்த்தமுள்ளதாக்கும்.
இந்த சிந்தனை ஓட்டத்திலிருந்து சற்றே மாறுபட்ட எனது அனுபவத்தை விவரிப்பது இங்கு பொருத்தமாக இருக்கும். அண்மையில் நான் அந்தமான் சென்றிருந்த போது ஒரு விஷயம் எனக்குத் தெரிந்தது. பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு போன்ற பிரச்சனையில் இங்கே நாம் உழன்று கொண்டிருக்கிறோம். அந்தத் தீவுகளில் கணிசமாக உள்ள (பெரும் பான்மையாக இல்லையென்றாலும்) உள்ளூர் பிறப்பு சமூகத்தினர் (டுடிஉயடடல க்ஷடிசn ஊடிஅஅரnவைநைள) என்று குறிப்பிடப்படும் மக்கள் பிரிவினர் இருக்கிறார்கள். கொடுமையான அந்தமான் சிறைக் கொட்டியில் தொடர்ச்சியாக சிறைவைக்கப்பட் டோரிடையே பிறந்தவர்கள் தான் அவர்கள். பிரிட்டிஷ் நிர்வாகம் ஆண் – பெண் கைதிகளை வரிசையாக நிறுத்தி அவரவர் விரும்புகிற துணையினைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வழி வகுத்தனர். ஏனெனில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு தங்கள் காலனியாதிக்க விரிவாக்கத்திற்காக நடத்திக் கொண்டிருந்த போர்களுக்கும், இந்திய துணைக்கண்டத் திற்குள் தங்களின் அடக்குமுறை அட்சியை நிலைநிறுத்தவும் மனிதர்கள் தேவைப்பட்டனர். நான் பார்த்த அருங்காட்சியகத்தின் பொறுப்பாளராக இருந்த பெண் அப்படிப் பிறந்தவர்தான். 1857 க்குப் பிறகு அங்கு கொண்டு வரப்பட்ட பட்டானிய (ஞயவாடிn) கைதிக்கும் கேரளாவிலிருந்து மோப்பலா எழுச்சி (ஆடிbநெடயா சுநநெடடவiடிn) க்குப் பிறகு அங்கு வந்த பெண்ணுக்கும் பிறந்த ஒரு வம்சாவளியில் வந்தவர் தான். மேற்சொன்ன இரண்டு நிகழ்வுகளும் காலத்தால் வேறுபட்டவை. எனினும் முந்தைய பாரம்பரியத்தின் பிள்ளைகள் பிந்தைய நாளின் கைதிகளை மணம் செய்த கொண்டார்கள். அப்படி உருவான சந்ததி காலனி அதிகாரத்தின் நிர்பந்தத்தால் உருவான நல்லிணக்க முகிழ்வின் ஒரு சமரச இணைப்பின் பிரதிபலிப்பு தான். 1857 க்குப் பிறகு பிரிட்டிஷ் அரசு நிறுவனமாக்கப்ட்ட பிரித்தாளும் கொள்கை செயல்படுவதற்கு முன்பே இயற்கையாகவே சக்தி மிக்க சமரச நல்லிணக்கம் கொண்ட பண்பாடு இங்கே முகிழ்ந்திருந்தது.
1857 க்கு 200 ஆண்டுகளுக்கு முன்பே மதங்களிடையேயும் இந்தியாவில் பல்வேறு நாகரீகங்களிடையேயும் எழுச்சி மிக்க அறிவார்ந்த பரஸ்பர உறவு நிலை இருந்திருக்கிறது. எல்லோரும் மறந்து போன புத்தகம் ஒன்று என் கையில் கிடைத்தது. அது முகலாய இளவரசன் தாராஷிக்கோவால் எழுதப்பட்ட கருத்துச் செறிவினை உள்ளடக்கிய புத்தகம் ( தாரா ஷிக்கோ முகலாய மன்னர் ஷாஜகானின் மூத்த புதல்வர். அரியாசனத்தைப் பிடிக்கும் போட்டியில் அவுரங்கசீப்பால் படுகொலை செய்யப்பட்டார். 1654 – 55 இல் பாரசீக மொழியில் எழுதப்பட்ட அந்த புத்தகத்தின் பெயர் “மஜிமா – உல் – பக்ரெய்ன்” (இரு சமுத்திரங்களின் சங்கமம்) தாரா ஷிக்கோ சமஸ்கிருத மொழியினைக் கற்றுத் தேர்ந்தவர். உபநிஷத்துக்களைப் பாரசீக மொழியில் மொழிபெயர்த்தார். அதில் மறைந்துள்ள இணைக்கும் மாண்புகளை கண்டறிய இந்த முயற்சி மேற்கொண்டார். வேதநூல்களைப் பற்றிய வெளிப்படையான விவாதங்கள் நடைபெறவில்லையே என வருத்தமுற்றார். (ஆனால் வேதங்களைக் கற்பதிலிருந்து கீழ்சாதி மக்களைத் தடுக்கும் சாதி அமைப்பினைப் பற்றி அவர் ஏதும் குறிப்பிடவில்லை) அந்த நிலை “உபநிஷத்துக்கள் கூறும் உண்மைகளை இந்துக்களிடமிருந்தும், இஸ்லாமியர் களிடமிருந்தும் மறைத்தது’. அந்த குறிப்பிட்ட ஆய்வுக் கட்டுரையில் இஸ்லாமிய சுஃபி கோட்பாடுகளுக்கும் இந்துமத ஆத்ம விளக்கத்திற்கும் ஒன்றுக்கொன்று பொருந்துபவை என்ற முடிவுக்கு வந்தார். தாரா ஷிக்கோவின் அந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. ஆனால் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அம்சம் ஒன்று உண்டு. அந்த காலக்கட்டத்திலேயே நாகரீக அறிவுத் தெளிவினை உயர்நிலைக்கு உயர்த்தும் தன்மை வாய்ந்த தத்துவார்த்த மற்றும் அறிவுசார் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த என்பது தான் அது.
தாராஷிககோ தன்னுடைய சமயச் சொற்பொழிவுகளில், அக்பர் முன்வைத்த நல்லிணக்க பாரம்பரியத்தினை முன்னெடுத்துச் சென்றார். அதோடு மட்டுமல்லாமல் அவர், பரந்த முற்போக்கான விஷயங்களை மத்தியகால இந்திய மக்களின் சிந்தனையில் நுழைத்து இந்திய சிந்தனை மரபின் எல்லையினை விரிவுபடுத்தினார். 1857 இல் அதன் தாக்கம் இருந்தது. அந்த எழுச்சி வெடித்த பொழுது, மிகப் பிரபலமான தினத்தாளான ‘தில்லி உருது அக்பார்’ எழுதியது, “இந்திய மதங்களை அழித்துவிட நினைக்கும் மத விரோதிகளின் அகங்காரத்தை ஒடுக்குவதற்காக கடவுளர்களால் உருவாக்கப்பட்ட நிகழ்வுதான் அந்த எழுச்சி”.
கோபால் காந்தி (தற்போது மேற்கு வங்க ஆளுநர்) தன்னுடைய சிறந்த நாடகமான “தாரா ஷிகோ” வை பெரிமஹால் என்ற அரண்மனைக்கு அர்ப்பணித்தார். ஸ்ரீநகரின் தால் ஏரியின் கரையில் தாரா ஷிகோவால் கட்டப்பட்ட தேவதைகளின் அரண்மனை என்று சொல்லப்பட்ட மயக்கும் மாளிகை அது. கோளங்களைப் பற்றிய ஆய்வுக்கான ஒரு மையம் காணும் நோக்கோடு தாரா ஷிக்கோவால் படைக்கப்பட்ட மிகவும் நேர்த்தியான கட்டிட அமைப்பு. இன்று அந்த உன்னத லட்சியம் நலிந்து கொண்டு வருவதை நினைவூட்டும் வகையில் அந்தக் கட்டிடம் மிகவும் சிதலமடைந்து இருக்கிறது.
அந்த லட்சியப்பார்வை தாரா ஷிக்கோவின் கீழ்க்கண்ட வார்த்தைகளில் பிரதிபலிக்கிறது.
பாபர் தேசத்திற்கு அடிக்கல் அமைத்தார். ஹூமாயூன் கொள்ளையர்களிடமிருந்து தேசத்தைக் காத்தார். முற்றுகை, புயல், நில நடுக்கம் எல்லாவற்றையும் தாங்கும் கடவுளரால் மட்டும் அசைக்கக் கூடிய, வலுவான அரண் கட்டி தேசத்தை நிர்மாணம் செய்தார் அக்பர். தேசத்தின் பலம் அந்த பாதுகாப்பிலிருந்து வரவில்லை. இந்துஸ்தானத்தின் பல்துறை சிறப்பிலிருந்து எழும் பன்முகத்தன்மையிலிருந்து வருகிறது. ஜஹாங்கீரும் என் தந்தையும் தேசத்தின் அரியாசனத்தின் கௌரவத்தை உயர்த்தி முறையான அரசாட்சி நடத்தினர். இந்தியாவின் மயிலாசனத்திற்கு ஒரு சிந்தனையாளர் தேவை. அவர் இயற்கையில் படைப்போடு இந்த நாட்டை இணைப்பார். நாட்டின் கௌரவத்தை மேலெடுத்துச் செல்வார். மன்னரைப் பாதுகாக்க அல்ல, சாம்ராஜ்யத்தை மறு உருவாக்கத்திற்கு உட்படுத்த. அப்போது தான் ஊசலாட்டத்திலும் கேளிக்கையிலும் திளைக்கும் தில்லி மன்னர் இந்தியாவின் முதல் தர்மகர்த்தாவாக மாறுவார் ( இது கருத்துச் சுருக்கம் தான் – மொழி பெயர்ப்பல்ல)
தாராஷக்கோ மேலும் எழுதுகிறார் “இந்தியாவிற்குஅதன் மயிலாசனத்திற்கு ஒரு அறிவாளி தேவை. அதற்கு பொருத்த மில்லாதவரை, அது ஏற்றுக் கொள்ளாது”. ஆனால் அந்த மயிலாசனம் அவுரங்கசீப்பை தள்ளிவிடவில்லை. அதையே நாதீர்ஷா கொள்ளையடித்து துருக்கி ஓட்டோமான் பேரரசின் சுல்தான் காலிஃப்க்கு கப்பம் கட்டினார். இன்று அது இஸ்தான்புல் நகரின் டாப்காபி அரண்மனையின் கண்காட்சி சாலையில் அரிய பொக்கிஷமாக வைக்கப்பட்டிருக்கிறது.
ஊகங்களின் தளமாக வரலாறு இருக்க முடியாது. அவுரங்கசீப் முகலாய அரியாசனத்தை கைப்பற்றாது இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது வேறு விஷயம். இங்கே வரலாற்று ரீதியான மதிப்பீடு எதையும் செய்ய நாம் முயற்சிக்கவில்லை. இந்தத் தகவல்களை சேகரிப்பதன் நோக்கம், 1857 க்கு முன் இந்திய சமுகம் கண்ட நல்லிணக்க முகிழ்வின் அம்சங்கள் அதற்குபிறகு வந்த பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் மங்கி மறைந்து போய்விட்டன என்று குறிப்பிடுவதற்குத்தான்.
சமீபத்தில் நடந்து முடிந்த உத்திரப்பிரதேசத் தேர்தல் பிரச்சாரத்தைப் பார்போம். பிரச்சாரத்தின் வீச்சளவு நம்மை கடுமையாக உலுக்கி விடுகிறது. பா.ஜ.க. வின் மூர்க்கத்தனமான இந்துத்துவா, இந்தியாவில் உள்ள பாபரின் குழந்தைகளை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று (தீவிர இந்து மத பக்தையான ராணி லட்சுமிபாய் பாபரின் குழந்தையான பகதூர் ஷா ஜாபரை, பிரிட்டிஷாரை தில்லி அதிகாரத்திருந்து விரட்டிய பிறகு இந்தியாவின் பேரரசராக பொறுப்பில் ஏற்றினார் என்று இருந்த போதிலும்) கூக்குரல் எழுப்பியது. வெறுக்கத்தக்க சி.டி. ஒன்று பா.ஜ.க. வினரால் மக்களிடம் சுற்றுக்கு விடப்பட்டது. அந்த நடவடிக்கைகள் அரசியல் மற்றும் தேர்தல் ஆதாயங்களுக்காக வெறித்தனமாக வகுப்புவாத உணர்வை ஒருமுகப்படுத்தும் வேலை நடப்பதை தெளிவாகக் காட்டின. “ உன்னத நோக்கங்கள் சிதிலமடைவது” என்பது நம்மை மீண்டும் கவ்விப்பிடிக்கிறது. நிலப்பிரபுத்துவ மன்னர் வம்சாவளிமுறையிலிருந்து இந்தியா, இரண்டு நூற்றாண்டுகள் காலனி ஆதிக்கத்தையும் தாண்டி, அதன் இறையாண்மை மக்களிடம் பற்றி நிற்கும் வகையில் ஒரு நவீன அரசு அமைப்பை பெற்றிருக்கிறது. சக்தி வாய்ந்த விடுதலைப் போராட்டம் மக்கள் புரிந்த எண்ணிலடங்கா தியாகங்கள், நம் நாட்டினை ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு என அறிவிக்கும் அந்தஸ்தை நமக்குக் கொடுத்தது. கருத்து மோதல்களை ஒரு நல்லிணக்க கருத்துத் தெளிவின் உயர் மட்டத்திற்கு கொண்டு செல்லும் ஒரு கட்டமைப் பினையும் செயல் வடிவத்தினையும் நாம் உருவாக்கியிருக்கிறோம்.
நிச்சயமாக அந்த வாய்ப்பினை, மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு என்ற கோட்பாட்டிற்கு எதிர்மறையான தத்துவார்த்த நிலையினை மேற்கொள்ளும் வகுப்புவாத சக்திகள் களவாடிச் செல்ல அனுமதிக்கக் கூடாது. அதுபோலவே, இந்த வாய்ப்பினை சிதறடிக்கவும் அனுமதிக்கக் கூடாது. 1857-ஐ நினைவு கொள்வது என்பது அந்த வாய்ப்பினை ஒருங்கிணைத்து கெட்டிப்படுத்தி நமது நவீன மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை மேலும் வலுவானதாகக் காட்டுவது தான்.
உண்மையில், இந்தியாவில் நமக்கு மதச்சகிப்புத் தன்மை என்பது நவீன காலத்தில் மேலை நாடுகளிடமிருந்து கடனாகப் பெற்ற கோட்பாட அல்ல. வரலாற்றை சற்றே பின்னோக்கிப் பார்த்தால், கிறிஸ்து பிறப்புக்கு முந்தைய மூன்றாம் நூற்றாண்டி லேயே பேரரசர் அசோகர் தன் அதிகாரத்தைக் கொண்டு வெளியிட்ட செய்தி சொல்லுகிறது, “ ஒரு குறிப்பிட்ட சமயப் பிரிவினைச்சார்ந்த எவரேனும் அதன் மீது கொண்ட பக்தியின் அடிப்படையிர் மற்ற சமயப் பிரிவினரை இகழ்வாரேயானால், அப்படிச் செய்வது அவர் நம்பும் சமயப் பிரிவிற்கே அதிக கேட்டினை விளைவிக்கும்”.
1857 க்குப் பல ஆண்டுகளுக்குப் பின், எதிர்கால இந்தியா எப்படி இருக்கும் என்ற கற்பனை உருவாக்கத்தில் சுவாமி விவேகானந்தர் அது “இஸ்லாமிய உடம்பில் வேதாந்த சிந்தனை”கொண்டதாக இருக்குமென்றார். மதச்சகிப்புத் தன்மை பற்றி பகவத் கீதை கூட இப்படித்தான் சொல்லுகிறது. “இறை நம்பிக்கை கொண்ட ஒருவர் வழிபாட்டுக்கு எந்த தெய்வீக வடிவத்தை மேற்கொண்டாலும் அவர் அந்த வடிவத்தின் மேல்கொண்ட நம்பிக்கையிளை நான் நிலை நிறுத்துகிறேன்” ( அத்தியாயம் 3 (21)). 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக மதங்களின் பாராளுமன்ற மாநாட்டில் விவேகானந்தர் ஆற்றிய உரை புகழ்பெற்ற ஒன்றாகும். அப்பேச்சின் இறுதியில் அவர் குறிப்பிட்டார். “எவரேனும் தன்னுடைய மதம் மட்டும் தனித்து வாழும் மற்ற மதங்களெல்லாம் அழிந்து போகும் என கனவு காண்பவராக இருந்தால் என் அடிமனதில் அவர் மேல் நான் கழிவிரக்கம் கொள்கிறேன். நான் ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஒவ்வொரு மதத்தின் பதாகையிலும், எதிர்ப்பு இருந்தாலும் கூட, உதவி என்று எழுதப்படுமே தவிர, மோதல் என்றல்ல, தன் வயப்படுதல் என்று இருக்குமே தவிர அழிவு என்றல்ல, நல்லிணக்கம் மற்றும் அமைதி என்று எழுதப்பட்டிருக்குமே தவிர மற்ற சமய எதிர்ப்பல்ல”.
அந்த நல்லிணக்க முகிழ்தலின் அறுந்துபோன இழைகளை மீண்டும் எடுப்பதே நாம் ஆற்ற வேண்டிய பணியாக இருக்க வேண்டும் என்று தான் 1857 இன் 150 வது ஆண்டு கால நினைவுகள் நம்மைக் கோருகின்றன. சொந்த உடன் பிறப்புகள் போல் வாழ்வோரை பலிவாங்கும் நஞ்சுகலந்த வகுப்புவாத வெறியால் அழிந்து போகாமல் இழந்த அந்த இழைகளை ஒருங்கிணைப்பதில்தான் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது.