மத்திய பட்ஜெட் 2020: வருமான மறு பங்கீட்டில் பெரும் அநீதி

க.சுவாமிநாதன்

ஒவ்வொரு பட்ஜெட்டும் வருமான மறு பங்கீட்டிற்கான கருவியே. அரசின் பொருளாதாரப் பாதையே பட்ஜெட்டை வழி நடத்துவதாய் இருக்கும். இன்று கடைப்பிடிக்கப்பட்டு வரும் நவீன தாராளமயப் பாதை பெரும் நெருக்கடிக்கு இட்டுச் சென்று ஓர் முட்டுச் சந்தில் திணறி நிற்கிற நிலையில் இந்த பட்ஜெட் வெளி வந்துள்ளது. நவீன தாராள மயத்தின் ரணங்களை பா.ஜ.க அரசின் இரு முக்கியமான பொருளாதார முடிவுகளான பண மதிப்பு நீக்கமும், ஜி.எஸ்.டி அமலாக்கமும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல ஆழமாக்கியிருந்தன. இதன் விளைவுகள் தொழில் மந்தம், கிராக்கி வீழ்ச்சி, வேலையின்மை, சிறு தொழில் நசிவு, விவசாய வருமானங்களில் சரிவு, உணவுப் பொருள் பணவீக்கம், அரசின் வருமான திரட்டலில் தோல்வி, ஏற்றத்தாழ்வு இடைவெளி அதிகரிப்பு என பல பரிமாணங்களில் வெளிப்படுகின்றன. ஆனால் அரசு நெருக்கடி இருப்பதாகவே ஏற்றுக் கொள்ளாமல் நவீன தாராள மயப் பாதையிலேயே பயணிக்க முனைந்துள்ளது. இதுவே மூர்க்கத்தனமான தாக்குதல்களாக பட்ஜெட்டில் வெளிப்பட்டுள்ளன.

கேள்வியாகிற நம்பகத்தன்மை

இந்த பட்ஜெட்டின் நம்பகத்தன்மை பெரும் கேள்விக் குறியாகி உள்ளது. அதில் காட்டப்பட்டுள்ள கணக்குகள், மதிப்பீடுகள் எல்லாம் உண்மை நிலைகளோடு பொருந்தவில்லை.

  • மொத்த வரி வருவாய் 2019- 20 க்கு ரூ 24,61,194 கோடிகள் பட்ஜெட் மதிப்பீடாக போடப்பட்டிருந்தது. தற்போது வெளியிடப்பட்ட திருத்திய மதிப்பீடின் அளவு ரூ 21,63,423 கோடிகள் ஆகும். அதாவது பள்ளம் ரூ 2,97,772 கோடிகள். இவ்வளவு பெரிய பள்ளம் இருக்கின்ற நிலையிலும் கூட 2020 – 21 பட்ஜெட்டில் ரூ 24, 23, 000 எதிர்பார்க்கப்படுவதாக காண்பிக்கப்படுகிறது. இது சாத்தியமான ஒன்றுதானா என்ற கேள்வி எழுவது இயல்பு.
  • மாநிலங்களுக்கான மத்திய வரி வருவாய் பங்கு என்பது 2019-20 பட்ஜெட் மதிப்பீடின் படி 8.1 லட்சம் கோடிகள் ஆகும். திருத்திய மதிப்பீடோ ரூ 6.6 லட்சம் கோடி. இதில் ஏற்பட்டிருக்கும் பள்ளம் 1.5 லட்சம் கோடி. இந்த 2020-21 பட்ஜெட்டில், ரூ 7.8 லட்சம் கோடி என மதிப்பிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது. இதுவும் சாத்தியம் ஆகுமா என்ற கேள்வி உள்ளது.
  • பட்ஜெட் செலவினங்களை பொருத்த வரையில் நடப்பு நிதியாண்டு பட்ஜெட் மதிப்பீடிற்கும், திருத்திய மதிப்பீடிற்குமான இடைவெளியாக ரூ 88,000 கோடி உள்ளது. ஆனாலும் 2020- 21 ஆண்டிற்கான பட்ஜெட்டில் ரூ. 27.86 லட்சம் கோடியில் இருந்து ரூ. 30.42 லட்சம் கோடிகளாக உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. இது 11 சதவீத உயர்வு ஆகும். இது நடக்கவேண்டும் என்றால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீத உயர்வு தேவைப்படும். (நடப்பு விலை மதிப்பீட்டிலான ஜி.டி.பி அடிப்படையில்) இது நடப்பது சாத்தியமற்றது.

ஆனாலும், இப்படி நிறைய எண் விளையாட்டுகள் இந்த பட்ஜெட்டில் உள்ளன. பொதுவாக பட்ஜெட் மதிப்பீடு, திருத்திய மதிப்பீடு, உண்மை மதிப்பீடு என்பவை வேறுபட்டுத்தான் இருக்கும் என்றாலும் அவற்றிற்கான இடைவெளி இவ்வளவு பெரிதாக இருக்கக் கூடாது. ( உண்மை நிலவரம் வெளியே வர இரண்டு ஆண்டுகள் கூட ஆகிவிடுகின்றன.) உதாரணமாக தேசிய புள்ளியியல் நிறுவனம் 2018-19 மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை 6.1 சதவீதமாக அறிவித்துள்ளது. ஆனால் மே 2019 ல் வெளியிடப்பட்ட தற்காலிக மதிப்பீடுகள் 6.8 சதவீதம் என்று கூறியிருந்தன. இப்படிப்பட்ட மாறுபட்ட கணக்கீடுகள் தற்செயலானதாக தெரியவில்லை. நாடாளுமன்ற தணிக்கைக்கு உட்படாத நடவடிக்கையாக பட்ஜெட்டை மாற்றுகிற வெளிப்படைத்தன்மையற்ற அணுகுமுறையின் விளைவுகளே ஆகும்.

இந்த பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தின் (எப்.ஆர்.பி.எம்) வரையறைகளுக்காக பூச்சு (Tinkering) வேலைகளும் செய்யப்பட்டுள்ளன. எப்.ஆர்.பி.எம் என்ற சட்டத்தின் நோக்கமே ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட பொருளாதார பாதையில் மக்களின் கருத்துக்கு இடமின்றி பயணிப்பதே ஆகும். 2019-20 ல் 3.3சதவீதம் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இப்போது 3.8 சதவீதத்தை தொட்டுள்ளது. சட்டம் மீறப்பட்டு விட்டதா? இல்லை. எப்.ஆர்.பி.எம் சட்டத்தின் பிரிவு 4 (3) ஓர் தளர்வை தருகிறது. 0.5 சதவீதம் வரை நிர்ணய விகிதத்தில் இருந்து விலகல் இருக்கலாம். அதற்காக கணக்குகளில் பூச்சு வேலை நடந்துள்ளது. முக்கியமான செலவினங்கள் வெட்டப்பட்டுள்ளன. வருமானங்கள் அதீதமாய் மதிப்பிடப்பட்டுள்ளன. இந்த எப்.ஆர்.பி.எம் சட்டம் நவீன தாராள மயப் பாதையில் இருந்து அரசு விலகி செல்லாமல் இருப்பதை உறுதி செய்கிறது. இந்த பட்ஜெட் நிதி ஒழுங்கு என்ற பெயரில்தான் மூர்க்கமான பல தாக்குதல்களை தொடுத்துள்ளது.

விடை கிடைக்காத வேலையின்மை சிக்கல்

இந்திய தொழிலதிபர்களே பெரும் பிரச்சினையாக ஏற்றுக் கொள்கிற அளவிற்கு வேலையின்மை அதிகரிப்பு விஸ்வரூபம் எடுத்துள்ளது. 2017-18 ல் 45 ஆண்டுகள் இல்லாத 6.1 சதவீதத்தை வேலையின்மை தொட்டிருந்தது. இந்த புள்ளி விவரம் வெளியிடப்படாமல் மறைக்கப்பட்டது. பிறகு மோடி அரசாங்கம் இரண்டாவது முறை பதவியேற்ற பின்னர் வெளியிடப்பட்டது. நடப்பு நிதியாண்டில் மோட்டார் வாகனத் துறை பெரும் நெருக்கடியை சந்தித்தது. டாட்டா மோட்டார்ஸ், மாருதி சுசூகி போன்ற நிறுவனங்களில் ஆயிரக் கணக்கில் ஆட்குறைப்பு அரங்கேறியது. பார்லே பிஸ்கட் நிறுவனத்தில் 10000 பேர் வெளியேற்றப்பட உள்ளதாக அறிவித்தது. 90 வயதான அந்த நிறுவனம் இதுவரை சந்தித்திருக்காத நெருக்கடி அது.

காக்னிசன்ட் போன்ற மென் பொருள் நிறுவனங்களும் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த பட்ஜெட் இதற்கான தீர்வு எதையும் உருப்படியாக முன் வைக்கவில்லை.

இவற்றுக்கான பின்புலமாக உள்ள கிராக்கி குறைவு (Demand constraint) என்கிற பிரச்சினையை அங்கீகரிக்கவோ, உரிய மாற்றை முன் வைக்கவோ இந்த பட்ஜெட் தயாராக இல்லை. மாறாக கார்ப்பரேட் வரிகளில் கடந்த ஆண்டில் அளிக்கப்பட்ட ரூ 1,45,000 வரையிலான சலுகைகள் தொடர்கின்றன. இந்த நடவடிக்கை தொழில் மந்தத்தை போக்க எந்தவொரு உந்துதலையும் தரவில்லை. ஆனாலும் அத்தகைய தலைகீழ் “தீர்வுகளை” நோக்கியே இந்த பட்ஜெட்டும் நகர்ந்துள்ளது.

பெருக்கல் விளைவுகள் இல்லை

கடந்த காலங்களில் வட்டி விகித குறைப்புகள், கடன் அடிப்படையிலான சந்தை விரிவாக்கம் போன்றவை செய்யப்பட்டு சந்தையில் தற்காலிக உந்துதல்கள் தரப்பட்டன. ஆனால் தற்போதிருக்கும் பொருளாதார நெருக்கடியின் உக்கிரம் அது போன்ற தீர்வுகளின் வரையறைகளை கடந்ததாக உள்ளது.

பெருக்கல் விளைவுகளை (Multiplier effect) உருவாக்கி கிராக்கியை தூண்டக் கூடிய துறைகளான விவசாயம், கிராமப் புற மேம்பாடு, பெண் நலன், குழந்தைகள் மேம்பாடு போன்றவற்றிற்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள் போதுமானதல்ல.

மகாத்மா காந்தி கிராம வேலை உறுதிச் சட்டத்திற்கு ஒதுக்கீடு பெருமளவு குறைக்கப்பட்டிருப்பது அரசின் எதிர்மறை அணுகுமுறைக்கு சான்றாகும். 2019-20 ல் திருத்திய மதிப்பீடு ரூ. 71,000 கோடிகளாக இருந்தாலும் 2020-21 க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது ரூ 61,500 கோடிகள் மட்டுமே. இத்திட்டத்திற்காக மாநிலங்களுக்கு தர வேண்டிய மத்திய அரசின் பங்கும் உரிய நேரத்திற்கு செல்வதில்லை. கேரளா கேட்ட தொகையில் 39 சதவீதமே அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவுக்கு 37 சதவீதம், ஆந்திர பிரதேசத்திற்கு 41 சதவீதம், ராஜஸ்தானுக்கு 44 சதவீதம் என்ற நிலைதான் உள்ளது. இத்திட்டத்தை மத்திய அரசு நடத்துகிற விதம் படிப்படியாக இத் திட்டத்தை கைவிடும் அவர்களின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

ட்ரிக்கில் அப்

கிராக்கி அதிகரிப்பிற்கு அரசின் பொது முதலீடுகள் அதிகரிக்கப்பட வேண்டும். அதற்கு நிதி ஆதாரங்கள் தேவை. எப்படி உறுதி செய்வது? வரி வருவாயை பெருக்கலாம். ஆனால் அதை செய்யவில்லை. அவர்கள் “சொட்டு பயன் முறைமையை” (Trickle down theory) நம்புகிறார்கள். அதாவது தொழிலதிபர்களுக்கு சலுகைகள் தரப்பட்டால் அவர்கள் ஊக்கம் அடைவார்கள்; தொழில் நடத்துவார்கள்; வேலைவாய்ப்பும் வருமானமும் பெருகும் என்பதே அந்த எதிர்பார்ப்பாகும். நவீன தாராளமயத்தின் அணுகுமுறை அது. தொழிலதிபர்களுக்கு அவ்வாறு “உந்துதல் ஊக்கம்” வழங்கப்பட்டாலும் அது “சொட்டு பயனாக” கீழே வரவில்லை. மாறாக “மேல் நோக்கி பயன் நகர்தல்” (Trickle Up) என்கிற போக்கு உள்ளது. அதாவது நகர்ப்புற, கிராமப்புற உழைப்பாளி மக்களின் வருமானத்தை மேலும் மேலும் உறிஞ்சி ஏற்றத் தாழ்வு இடைவெளியை பெரிதும் அதிகரித்துள்ளது. அண்மைய ஆக்ஸ்பாம் அறிக்கையில் நாம் அதனை பார்த்தோம்.

மேல் நோக்கி உறிஞ்சுதல் (Trickle up)

ஜனவரி 2020 ல் வெளியான ஆக்ஸ்பாம் அறிக்கை, இந்தியாவின் டாப் 1 சதவீதம் பேரிடம் உள்ள செல்வம், அடிமட்டத்தில் வாழும் 70 சதவீதம் பேர் (95 கோடி பேர்) வைத்துள்ள மொத்த சொத்துக்களில் 4 மடங்கு அதிக செல்வத்தை வைத்துள்ளனர் என்று கூறியது. 63 இந்தியப் பெரும் கோடீஸ்வரர்களிடம் இருக்கும் மொத்த சொத்து மதிப்பு இந்தியாவின் முழு ஆண்டு பட்ஜெட் தொகையை விட அதிகமாக இருக்கிறது. எந்த அளவிற்கு ஏற்றத்தாழ்வு பெரும் அகழி போல் விரிந்திருக்கிறது என்பதற்கும், “மேல் நோக்கி உறிஞ்சுதல்” (trickle up) நடந்தேறியுள்ளது என்பதற்கும் உதாரணங்கள் இவை.
அரசின் வருவாய் ஈட்டும் கொள்கைகளும் மேற்சொன்ன மாற்றத்திற்கு உதவி செய்திருக்கின்றன. மொத்த வரி வருவாயில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியில் இந்த தாக்கத்தை காண்கிறோம்.

வருமான வரியில் சலுகை கிடைத்துள்ளதா?

இந்த பட்ஜெட்டில் இரண்டு வகையான வருமான வரி கணக்கீட்டு முறைகள் அறிமுகம் செய்யப்பட்டு, தாமே ஒன்றை தேர்வு செய்துகொள்ளலாம் என வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

முதலாவது ஏற்கனெவே உள்ள வருமான வரி கழிவுகளை உள்ளடக்கியது. இரண்டாவது அத்தகைய கழிவுகள் ஏதுமில்லாத வரி விகித குறைப்பு முறைமை. இதில் பலருக்கு இரண்டாம் முறைக்கு மாறினால் ஏற்கெனவே கட்டுகிற வரிகளை விட அதிகம் கட்ட வேண்டி வரும். இது போன்ற வருமான வரி சலுகைகள் அதிகமாக மூத்த குடி மக்களுக்கு இருக்கும். அவர்களுக்கு புதிய முறைமை எந்த பலனையும் தராது. இந்த இரண்டாம் முறைமை இந்த பட்ஜெட்டில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை விட இது எதிர்காலத்தில் சலுகைகளே இல்லாத சூழலை நோக்கி நகரப் போகிறது என்பதையும், இல்லங்களின் சேமிப்பு என்கிற வருவாய் ஊற்றையே சந்தைக்காக காவு கொடுக்கப் போகிறது என்பதுமே அது உணர்த்தும் அபாயமாகும்.

என்.ஆர்.ஐ தொழிலாளர் மீதான வரி முன் மொழிவுகள், வரையறைகளில் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் சவுதி போன்ற நாடுகளுக்கு பிழைப்பிற்காக சென்றுள்ள சாதாரண, நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும். எனவேதான் இத்தகைய தொழிலாளர்கள் அதிகம் கொண்டிருக்கும் கேரள மாநிலத்தின் இடது முன்னணி அரசு உடனே எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
இன்சூரன்ஸ் நிறுவனங்கள் எல்லாம் இன்சூரன்ஸ் பிரிமியத்திற்கு சிறப்பு வருமான வரி கழிவுக்கான பிரிவை உருவாக்க வேண்டுமென்று கோரி வந்த நிலையில் இருப்பதையே கேள்விக்கு ஆளாக்குகிற இந்த முன் மொழிவு எதிர்காலத்தில் பெரும் பாதிப்புகளை பொருளாதாரத்தில் ஏற்படுத்தும்.

வருமான திரட்டலில் அநீதியும் பள்ளமும்

கார்ப்பரேட்களுக்கான சலுகைகளும், டிவிடெண்ட் பகிர்மான வரி சலுகையும் ரூ 25,000 கோடி அளவுக்கு அரசின் வருமானத்தில் பள்ளத்தை கூடுதலாக உருவாக்கும். சில குறிப்பிட்ட தொழில்களுக்கு கார்ப்பரேட் வரிகள் 15 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டிலேயே கார்ப்பரேட் வரிகளில் வழங்கப்பட்ட பெரும் சலுகைகள் வரிவருவாயில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த பட்ஜெட் அதை சரி செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. 2019 -20 ல் ரூ. 6,10,500 கோடிகள் கார்ப்பரேட் வரிக்கான பட்ஜெட் தொகையாகும். டிசம்பர் வரை வசூலாகியிருந்த தொகை ரூ.3,69,000 கோடிகள் மட்டுமே. இது 60 சதவீதம் மட்டுமே. (2018 டிசம்பரில் 64 சதவீதம்).

கார்ப்பரேட் வரிகள் மட்டுமின்றி மற்ற வரிகளுமே கடுமையான வசூல் பாதிப்புகளை சந்தித்துள்ளன. வருமான வரியில் 57 சதவீதம், ( டிசம்பர் 2018 ல் 64 சதவீதம்) மத்திய ஜி.எஸ்.டி வசூல் 60 சதவீதம் ( டிசம்பர் 2018 ல் 74 சதவீதம்), சுங்க வரி 68 சதவீதம் (2018 டிசம்பரில் 82 சதவீதம்) கலால் வரிகள் 62 சதவீதம் (டிசம்பர் 2018 ல் 67 சதவீதம்).
இந்த வருமான திரட்டல் முறைமை கூட்டாட்சி கோட்பாட்டின் மீதும் தாக்குதல் தொடுக்கிறது. மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு தர வேண்டிய வரி பங்கு ரூ. 8.1 லட்சம் கோடிகள் என்பது 2019-20 பட்ஜெட் மதிப்பீடு. ஆனால் திருத்திய மதிப்பீடு 6.6 லட்சம் கோடிகள்தான். 10 மாநிலங்களுக்கு அவர்களுக்கான பங்கில் சரிவு ஏற்பட்டுள்ளது. 2020- 21 பட்ஜெட் ரூ. 7.8 லட்சம் கோடி தரப்படும் என அறிவித்துள்ளது. இதுவெல்லாம் மலையேறுமா என்பது கேள்விக்குறி. கேரள மாநில அரசு தனது எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்துள்ளது.

இது அரசின் பொருளாதார பாதையின் விளைவு ஆகும். தனது பாதையை மாற்றிக்கொள்ள அரசிடம் எந்த முன்முயற்சியும் இல்லை.

இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அரசு முன் வைத்துள்ள பட்ஜெட் மொழிவுகள் விபரீதமானவை. தொலை நோக்கு பார்வையற்ற ஒதுக்கீடு வெட்டுகள், மருத்துவத் துறை குறித்த கொள்கை முடிவுகள், சமூக நலத் திட்டங்களுக்கு ஒதுக்கீடு குறைப்பு, பொதுத் துறை பங்கு விற்பனை என நகர்ந்துள்ள விதம் பொருளாதார மறு பங்கீட்டில் மிகப் பெரும் வஞ்சனையை செய்யவுள்ளது.

சாதாரண மக்கள் தலையில் சுமத்தும் வகையில் இந்த பட்ஜெட் மும்முனை தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
ஒன்று சமூக நலத் திட்டங்களில் செய்துள்ள வெட்டு.
இரண்டாவது விவசாயத்திற்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி. மூன்றாவது பொதுத் துறை மீதான தாக்குதல்.

மறந்து போன முழக்கங்கள்

மிக ஆரவாரமாக அறிவிக்கப்பட்ட பல திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் வெட்டப்பட்டுள்ளன. “மேக் இன் இந்தியா” பற்றிப் பேசுகிற ஆட்சியாளர்கள் ஆராய்ச்சிக்கான ஒதுக்கீடுகள் குறித்து கண்டு கொள்ளவில்லை. “ஆர்வமிக்க இந்தியா” (ASPIRATIONAL INDIA) என்பது பட்ஜெட்டின் “தீம் சாங்” என்றாலும் இந்திய தொழில்கள் கச்சா பொருட்களுக்கும், தொழில் நுட்பத்திற்கும் அந்நிய நாடுகளை நம்பி இருக்க வேண்டிய நிலைமையை மாற்ற ஓர் அடி கூட எடுத்து வைக்கவில்லை. உலகம் முழுவதும் 2019 ல் பதிவுக்காக தரப்பட்டுள்ள காப்புரிமை விண்ணப்பங்களில் 50 சதவீதத்தை சீனா தந்துள்ளது என்பதை இங்கு நினைவு கூருவது பொருத்தமானது. சீனாவின் இந்த வளர்ச்சி இந்திய பொருளாதாரத்திலேயே பிரதிபலிப்பதை மின்னணு உற்பத்தி, மருந்துகள் உற்பத்தி இரண்டிலும் காண முடிகிறது.

இந்திய மருந்து உற்பத்தி 140 நாடுகளுக்கு ஏற்றுமதி ஆவதாகும். “உலகத்தின் பார்மசி” என்று இந்தியாவை சொல்வார்கள். ஆனால் இந்த மருந்து உற்பத்திக்கு தேவையான கச்சா பொருட்கள் (API- Active Pharma Ingredients) 69 சதவீதம் சீனாவில் இருந்துதான் வருகின்றன. 1994 ல் பிளேக் நோயை எதிர்கொள்வதில் பெரும் பங்கை ஆற்றிய ஐ.டி.பி.எல் போன்ற பலமான நிறுவனங்களை உருவாக்க, வளர்க்க வேண்டியதன் அவசியத்தை இந்த பட்ஜெட் உணர்ந்து எதுவும் செய்யவில்லை. இன்று கரோனா வைரஸ் சீனாவிலேயே பெரும் உயிர் இழப்புகளையும், பொருளாதார பாதிப்புகளையும் உருவாக்கியுள்ள நிலையில் ஆராய்ச்சி தேவைகளை அலட்சியம் செய்வது ஆபத்தானது. இந்தியாவில் சிரிஞ்சை உற்பத்தி செயகிற நாம் ஊசிகளை இறக்குமதி செய்கின்றோம். இந்த பட்ஜெட் இறக்குமதி வரிகளை உயர்த்தி உள்நாட்டு உற்பத்திக்கான சந்தையை உறுதி செய்வதாக கூறியுள்ளது. ஆனால் இருதயங்களில் பொருத்தப்படும் ஸ்டென்டுகள், ரேடியேஷன் இயந்திரங்கள், ஹை எண்ட் ஸ்கேனர் ஆகியன வெளி நாடுகளில் இருந்தே எதிர்பார்க்கப்படுகிற நிலையில் இந்த வரி உயர்வு இறக்குமதியை குறைக்காது; மாறாக நுகர்வோர் தலையில் சுமையையே ஏற்றப் போகிறது.

மின்னணு உற்பத்தியிலும் இதே நிலைமை. இந்தியாவில் 6 ஆண்டுகளில் மொபைல் போன் உற்பத்தி தலங்கள் 2 ல் இருந்து 268 ஆக உயர்ந்துள்ளது. 4.58 லட்சம் கோடிகள் மதிப்புள்ள வணிகம் நடைபெறுகிறது. ஆனால் அவை பெரும்பாலும் வெறும் “இணைப்பு” (Assembly) தலங்களாகவே உள்ளன; அவற்றில் நடைபெறுகின்ற மதிப்பு கூட்டல் 7 முதல் 8 சதவீதம் மட்டுமே ஆகும். இறக்குமதியை சார்ந்து இருப்பதால் இதன் வருவாயில் 93 சதவீதம் சீனாவுக்கு செல்கிறது. (இந்து பிசினஸ் லைன்- 06.02.2020). ஆராய்ச்சிக்கான முனைப்பு அற்ற பட்ஜெட் இவற்றையெல்லாம் எப்படி சரி செய்யப் போகிறது? ஆர்வமிக்க இந்தியா எப்படி உருவாகப் போகிறது?

கசக்கிறது சமூக நலம்

தேசிய உடல் நலக் கொள்கை ரூ 1.12 லட்சம் கோடிகள் தேவை என கூறுகிறது. இந்த பட்ஜெட்டில் உடல் நலத்திற்கான ஒதுக்கீடு ரூ 65011 கோடிகள். 58 சதவீதம் மட்டுமே. பொது மருத்துவம் சிதைக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவமனை படுக்கை வசதி அதிகரிப்பில் 80 சதவீதத்தை தனியார் மருத்துவ மனைகளே செய்துள்ளன எனில் மருத்துவம் எவ்வளவு வணிக மயம் ஆகியுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
“ஆயுஷ்மான் பாரத்” திட்டத்திற்கு சென்ற பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை 6400 கோடிகள். டிசம்பர் வரை 16 சதவீதம் மட்டுமே (1014 கோடிகள்) மத்திய அரசால் செலவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு, குஜராத், ஆந்திரா, ராஜஸ்தான், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் அவர்கள் கோரியுள்ள தொகை மத்திய அரசிடமிருந்து வராமல் தவிக்கின்றன. கேரளா கோரியுள்ளதில் 39 சதவீதம் மட்டுமே தரப்பட்டிருப்பது ஓர் எடுத்துக்காட்டு.

இந்த பட்ஜெட் ஓர் அபாயகரமான முன் மொழிவையும் வைத்திருக்கிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நிலமும் தந்து அவர்களை மாவட்ட அரசு பொது மருத்துவ மனைகளுடன் இணைப்பது என்பதாகும். வளங்களை மடை மாற்றம் செய்வதில் எந்த அளவிற்கு இந்த பட்ஜெட் சென்றுள்ளது என்பதற்கு இது சாட்சியம்.

பட்ட காலிலேயே படும்

பட்ஜெட் பலி பீடத்தில் நிறுத்தப்பட்டுள்ள இன்னொரு காவு பொது விநியோக திட்டம் ஆகும். 2019-20 ல் உணவு மானிய ஒதுக்கீடு 1,84,220 கோடிகளாக இருந்தன. இப்போது அது 1,08,698 கோடிகளாக பெரும் சரிவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறையை குறைத்து காட்டுவதற்காக அரசு கடன் வாங்குவதற்கு பதிலாக இந்திய உணவுக் கழகத்தை கடன் வாங்குகிற நிலைமைக்கு திட்டமிட்டு தள்ளியுள்ளது. அரசு கடன் திரட்டினால் வட்டி குறைவாக இருக்கும். இந்திய உணவு கழகம் வங்கிக் கடன் வாங்கினால் அதிக வட்டிக்கு வாங்க வேண்டி வரும். இது உணவுப்பாதுகாப்பை சிதைக்கும்.

பிரதமரின் கிசான் திட்டத்தில் அவர்கள் இலக்கு 14.5 கோடி விவசாயிகளை தொடுவது. ஆனால் இத்திட்டத்தில் பதிவு ஆகியிருக்கிற விவசாயிகள் 62 சதவீதம் மட்டுமே. அதிலும் முழு பயன் பெற்றவர்களை மட்டும் பார்த்தால் மொத்த இலக்கில் 50 சதவீதத்திற்கு சரிந்து விடுகிறது. இப்படி பாதிக் கிணறு தாண்டுவதையே வழக்கமாக வைத்துள்ளார்கள். கிசான் ரயில் போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருந்தாலும் பட்ஜெட் ரயில் விவசாயிகளை ஏற்றிக் கொள்ளாமலேயே சென்று விட்டது என்பதே உண்மை.

அரசு கொள்முதலை கைவிடுவதை நோக்கி இந்த அரசு நகர்கிறதோ என்ற சந்தேகம் வருகிற அளவிற்கு உச்சகட்ட அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இந்திய உணவு கழகம் எந்த அளவிற்கு தள்ளப்பட்டுள்ளது என்பதை ஏற்கெனவே விவரித்துள்ளோம். இது அரசு கொள்முதலை கடுமையாக பாதிக்கும். சந்தை விலைகளும் அரசின் ஆதரவு விலைகளை விட குறைவாக இருப்பதால் விவசாயிகள் வருமானம் கடும் பாதிப்பிற்கு ஆளாகும். இந்த லட்சணத்தில் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாவது என்ற வாய் ஜாலங்கள் எல்லாம் எப்படி நடக்கும்?

ஒரு புறம் இப்படி வருமானம் பாதிக்கப்படும் போது மறுபுறம் டீசல், உரம், மின்சாரம், டிராக்டர்கள், ஆயில், கால்நடை தீவனம், பூச்சிக் கொல்லி மருந்து ஆகிய இடுபொருள் விலைகள் ஏறியுள்ளன. டீசல் விலைகள் கிட்டத்தட்ட 10 சதவீதமும், ஆயில் 13 சதவீதமும் அதிகரித்துள்ளன. பால் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்குவது பற்றி பட்ஜெட் பேசியுள்ளது. ஆனால் கால் நடை தீவன விலை உயர்வும், கால்நடை மருத்துவ செலவினங்களின் உயர்வும் அதை அனுமதிக்குமா என்பது கேள்வி. உர மானியம் போன பட்ஜெட்டில் ரூ 80000 கோடிகள். திருத்திய மதிப்பீடு ரூ 79997 கோடிகள். ஆனால் 2020-21 பட்ஜெட்டில் ஒதுக்கீடு ரூ 71309 கோடிகள். ஏதாவது தர்க்க நியாயம் உள்ளதா?

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கதையை முடித்து விடுவார்கள் போலிருக்கிறது. 2019- 20 ல் ரூ 71000 கோடியாக இருந்த ஒதுக்கீடு 2020-21 ல் 61500 கோடிகளாக குறைக்கப்பட்டுள்ளது. இது 2018-19 தொகையான ரூ 61815 கோடிகளை விட குறைவான ஒதுக்கீடு ஆகும். 2018- 19 ல் கூலி பாக்கி வேறு இருந்தது என்பதையும் சேர்த்துப் பார்த்தால் எவ்வளவு குரூரமான முன் மொழிவு என்பதை புரிந்து கொள்ள இயலும்.
விவசாயக் கடன் 11 சதவீதம் உயரும் என பட்ஜெட் அறிவித்துள்ளது. இந்திய விவசாயிகளில் பெரும்பாலானோர் நிறுவனக் கடன் பெறுபவர்களாக இல்லை. கந்து வட்டி வலைக்குள் தான் இருக்கிறார்கள். எனவே இந்த அறிவிப்புகள் எல்லாம் உண்மையில் விவசாயிகளைப் போய் சேருமா?

துல்லிய தாக்குதல் பொதுத் துறை மீது

இந்த பட்ஜெட் தீர்வுகளை நோக்கி நகர்ந்திருக்க வேண்டுமென்றால் பொது முதலீடுகளை அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்வதற்கு “சூப்பர் ரிச்” எனப்படும் பெரும் பணக்காரர்கள் மீது வரிகள் போடாமல் செய்ய இயலாது. உலகின் சூப்பர் ரிச் மீது 0.5 சதவீதம் வரி போட்டாலே 26 கோடி குழந்தைகளுக்கு கல்வி தர முடியும். ஆனால் வலதுசாரி பொருளாதார பாதை இத்தகைய மனிதம் கொண்ட பொருளாதார பாதையை நோக்கி தடம் மாறாது. இந்திய பட்ஜெட்டும் விதிவிலக்கல்ல.

பொதுத் துறை பங்கு விற்பனைக்கு ரூ. 2.10 லட்சம் கோடி இலக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எல்.ஐ.சி பங்கு விற்பனை முன் மொழிவு ஓர் மிகப் பெரும் அதிர்ச்சியை மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. வங்கிகள், பி.பி.சி.எல், ஐ.ஆர்.சி.டி.சி உள்ளிட்ட நிறுவனங்கள் குறி வைக்கப்பட்டுள்ளன.

நியாயமற்ற எல்.ஐ.சி பங்கு விற்பனை

மட்டுமின்றி ஆயுள் காப்பீட்டின் மீது பன்முகத் தாக்குதலை இந்த பட்ஜெட் தொடுத்துள்ளது. 100 கோடி முதலீட்டை மட்டுமே கொண்ட எல்.ஐ.சி, ஆண்டு டிவிடென்டாக அரசுக்கு தருவது ரூ 2611 கோடி ஆகும். அரசின் திட்டங்களில் பத்திரங்களில் ரூ. 28 லட்சம் கோடிகள் முதலீடு, சொத்து மதிப்பில் ரூ. 32 லட்சம் கோடிகள் என வளர்ந்து நிற்கிற நிறுவனம் ஆகும்.

இறப்பு உரிமப் பட்டுவாடாவில் 98.2 சதவீதம் கொண்டிருக்கும் எல்.ஐ.சி, இன்சூரன்ஸ் பரவலில் 42 கோடி பாலிசிகள் என உலக சாதனை படைத்துள்ள நிறுவனம் ஆகும். இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் பங்குவிற்பனை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒரு நிறுவனத்தின் பங்குகளை சந்தையில் பட்டியலிடப் பட்டுவிட்டால் 35 சதவீதமான பங்குகளை சந்தைக்கு கொண்டு வர வேண்டுமென்பது விதி. ஸ்டேட் வங்கியின் பங்குகளில் தற்போது 58 சதவீதம் மட்டுமே அரசு பங்குகள் உள்ளன. 2003 ல் வங்கிகளில் அரசின் பங்கை 33 சதவீதமாக குறைக்க சட்டத் திருத்தம் கொண்டு வர முயற்சித்ததை மறந்து விடக் கூடாது. ஆகவே தனியார் மயம் நோக்கிய முதற்படியாகவே பங்கு விற்பனை என்ற சொல்லாடல் நைச்சியமாக முன் வைக்கப்படுகிறது. எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கு பட்ஜெட்டின் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க வேண்டியிருப்பதே உடனடிக் காரணம்.

இந்த பட்ஜெட் 102 லட்சம் கோடிகள் ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு திரட்டப்படும் என அறிவித்துள்ளது. அதில் 39 சதவீதத்தை மட்டுமே மத்திய அரசு தரும். மீதமெல்லாம் மாநில அரசுகள், தனியார் கொண்டு வருவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியெனில் 61 சதவீதம் மத்திய பட்ஜெட்டிற்கு வெளியே இருந்து திரட்டப்பட வேண்டும். ஆயுள் இன்சூரன்ஸ்தான் நீண்ட கால சேமிப்புகளை திரட்டக் கூடிய துறை. ஒரு பக்கம் தேவை இருக்கிறது. மறு பக்கம் அதை தருகிற வல்லமை கொண்ட எல்.ஐ.சி நிறுவனம் இருக்கிறது. அதைப் பலப்படுத்துவதற்கு மாறாக குறுகிய காலத் தேவைகளுக்காக பங்கு விற்பனை என்பது பொறுப்பற்ற முன் மொழிவு ஆகும்.

ரயில்வே மேம்பாட்டிற்கு 150000 கோடிகளை ஐந்தாண்டுகளுக்குள் தருவதாக எல்.ஐ.சி ஏற்றுக் கொண்டு ஆண்டு தோறும் ரூ 30000 கோடிகளை தர புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதென்பது பொருளாதார வரலாற்றில் ஒரு சாதனை. ஒரே துறைக்கு மட்டும் இவ்வளவு நிதி கொடுப்பது சரியல்ல என்று ஐ.ஆர்.டி.ஏ என்று முட்டுக் கட்டை போடுவதாக இப்போது செய்தி. இந்த பட்ஜெட் 34000 கோடி ரயில் என்ஜீன், கோச்சுகளுக்கு தேவை என்றும், 31000 கோடி இதர ரயில் திட்டங்களுக்கு தேவை என்றும் பட்ஜெட் செய்துள்ளது. இது எங்கே இருந்து கிடைக்கும்!

இவை போதாதென்று ஏற்கெனவே உள்ள ஆயுள் இன்சூரன்ஸ் பிரிமியத்தின் மீதான 18 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிப்பு, இந்த பட்ஜெட் வருமான வரியில் இன்சூரன்ஸ் பிரிமியத்திற்கான சலுகை உள்ளிட்ட கழிவுகளை காலப் போக்கில் நிறுத்தி விடுமென்ற சமிக்ஞை ஆகியவை இன்சூரன்ஸ் வணிகத்திற்கு எழுந்திருக்கும் புதிய அபாயங்கள் ஆகும்.

தாக்குதல் பல விதம்

ஏற்கெனவே தனியார் ரயில்கள் டெல்லியில், குஜராத்தில் தனியார் ரயில்கள் ஓட ஆரம்பித்து விட்டன. அதிக கட்டணம், மூத்த குடி மக்கள் சலுகை ரத்து, பயணப் பாதையில் அவற்றுக்கு வழி விட மற்ற ரயில்கள் தாமதம் ஆகிய அபாயங்கள் வெளி வந்துள்ளன. 150 ரயில் தடங்கள் தனியார் வசம் ஓப்படைக்கப்ப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லாப வழித் தடங்கள் தனியாருக்கு வழங்கப்பட்ட பிறகு சமூகப் பொறுப்பை அரசு ரயில்வே சுமக்க வேண்டி வரும். சில காலம் கழித்து நட்டம் என்று பேச ஆரம்பிப்பார்கள். இப்படிப் பொதுத் துறை மீது விதம் விதமான தாக்குதல்கள். பி.எஸ்.என்.எல் இப்படித்தான் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளானது. செல் சேவை அனுமதியில் தாமதம் செய்தது துவங்கி, டவர் நிர்மாணத்தில் அனுமதி இழுத்தடிப்பு, 4 ஜி சேவை தருவதற்கு நீண்ட இடைவெளி என இழுத்தடிப்பு. ஒவ்வோர் தடைக் கட்டத்திலும் நிறுவனத்தை பாதுகாக்க தொழிற்சங்கமே வீதிகளுக்கு வந்தது. அதன் உச்ச கட்டமாக 150000 தொழிலாளர்களில் 93000 பேர் ஒரே நாளில் வி.ஆர்.எஸ் என்ற பெயரில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஏர் இந்தியாவின் பங்குகள் 100 சதவீதம விற்கப்படும். ஐ.ஆர்.சி.டி.சி பங்குகள் சந்தைக்கு வரும். வங்கிகள், எண்ணெய் நிறுவனங்கள் என வரிசையாக…. பட்ஜெட், புல்டோசரை தயார் நிலையில் வைத்திருக்கிறது.

பொதுத் துறை நிறுவனங்கள் தங்கள் சந்தையை தக்க வைக்கவும் போராட வேண்டியுள்ளது. ஒரு சிம்மை உருவி விட்டால், நம்பரை மாற்றாமல் நிறுவனத்தை மாற்றினால் சந்தை போய்விடுமென்ற நிலையில் இவ்வளவு இழுத்தடிப்பு மூலம் பி.எஸ்.என்.எல் தாக்கப்பட்டது. எல்.ஐ.சியின் சந்தை நீண்ட கால முதலீடு என்பதால் 23 தனியார் ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் போட்டிக்கு மத்தியிலும் எல்.ஐ.சி 76 சதவீத சந்தைப் பங்கை வைத்திருக்கிறது. போட்டியை எதிர் கொள்ள முடிகின்ற எல்.ஐ.சி யின் பங்கு விற்பனைக்கு அரசு எத்தனிக்கிறது. ஆகவே ஒரு புறம் அரசின் கொள்கைகளுக்கு எதிரான போராட்டம்… மறுபக்கம் மக்கள் மத்தியில் ஏற்படுகிற அச்சத்தை அகற்றி சந்தைப் பங்கை தக்க வைக்கிற போராட்டம் என இரு முனைகளில் நகர வேண்டியுள்ளது.

மக்கள் மத்தியில் இந்த பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு எழலாம் என்பது ஆட்சியாளர்களுக்கு தெரியும். ஆகவே திசை திருப்பலையும் பட்ஜெட் உரையிலேயே அவர்கள் செய்துள்ளார்கள். சரஸ்வதி சிந்து என்று பேசியிருப்பது அவைகளில் ஒன்றாகும்.

முதலாளித்துவ சமூகத்தில் எல்லா பட்ஜெட்டுகளுமே மடை மாற்றத்தை ஆளும் வர்க்கங்களுக்கு சாதகமாக மாற்றுவது நடந்தேறும். ஆனால் இந்த பட்ஜெட் அதை மூர்க்கத்தனமாக அரங்கேற்றுகிறது என்பதே வித்தியாசம்.

கவலைக்கிடமான இந்திய பொருளாதாரம்: விபரங்களை மறைக்க முயலும் மோடி அரசாங்கம்

  • பிரபாத் பட்நாயக்
    தமிழில் : சிபி நந்தன்

தேசிய புள்ளியியல் நிறுவனம், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தும் தேசிய நுகர்வோர் செலவீட்டு கணக்கெடுப்பை இம்முறை (அதாவது 2017-18ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பினை) வெளியிட மறுத்துள்ளது. கடந்த நவம்பர் 15 ஆம் நாள் ‘தி பிசினஸ் ஸ்டாண்டர்ட்’ நாளிதழ் கசிந்த இந்த கணக்கெடுப்பின் முடிவுகள் 2011-12 முதல் 2017-18 வரை ‘தனிநபர் நுகர்வோர் செலவீடு’ 3.7 சதவீதம் சரிந்துள்ளது என தெரிவிக்கிறது. இதுதான் கணக்கீட்டை வெளியிட மறுப்பதற்காக காரணம். அதாவது (கசிந்த கணக்கீட்டு விபரங்களின்படி) சராசரியாக ஒரு இந்தியர் செலவிடும் தொகை மாதத்துக்கு 1,501 ரூபாயிலிருந்து 1,446 ரூபாயாக சரிந்துள்ளது. (2009-10 ஆம் ஆண்டின் விலைவாசி அடிப்படையில்).

உண்மையிலேயே தனிநபர் நுகர்வோர் செலவீட்டில் சரிவு ஏற்பட்டிருந்தால் அது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். இது போன்ற சரிவு ஏற்படுவது கடந்த நாற்பது ஆண்டுகளில் இதுவே முதல் முறை. கடைசியாக 1971-72 ஆம் ஆண்டில் இதே போல் சரிவு ஏற்பட்டது. ஆனால் அந்த ஆண்டில் விளைச்சல் மோசமாக இருந்தது, ஒபெக் (OPEC) நாடுகள் ஏற்படுத்திய முதல் எண்ணெய் நெருக்கடியும் அதோடு சேர்ந்து நாட்டின் பணவீக்கத்தை பெருக்கின. இது மக்களின் வாங்கும் திறனை பிழிந்தெடுத்திருந்தது. இந்த சிக்கல்களை சரியாக கையாளாதது அரசாங்கத்தின் தவறு என்ற போதிலும், எண்ணெய் விலை உயர்வு போன்ற புற காரணிக்கும், எதிர்பாராத விளைச்சல் சரிவுக்கும் நாம் அரசாங்கத்தையே பொறுப்பாக்க முடியாது.

2017-18 ஆம் ஆண்டில் இது போன்ற, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை மீறிய, எதிர்பாராத எந்த பாதிப்புகளும் இல்லை. கணக்கெடுப்பு நிகழ்த்தப்பட்ட இந்த ஓராண்டில் பொருளாதாரத்தையே உலுக்கிப் போட்ட பாதிப்புகள் என்றால் அவை பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜிஎஸ்டி அமலாக்கமும் தான். இந்த இரண்டுக்கும் மோடி அரசாங்கமே முழுப் பொறுப்பு.

இந்த இரு நடவடிக்கைகள் மட்டுமே தனிநபர் நுகர்வோர் செலவீட்டின் சரிவுக்கு காரணம் இல்லை என்பதை தெளிவுபடுத்திக்கொள்வோம். இந்த சரிவு குறிப்பாக கிராமப்புறங்களில் தான் மோசமாக நிகழ்ந்துள்ளது, அதாவது 2011-12 முதல் 2017-18க்குள் 8.8 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. இதே கால கட்டத்தில் நகர்ப்புறங்கள் சொற்பமான, அதாவது 2 சதவீத உயர்வை சந்தித்துள்ளன. கிராமப்புறங்களில் ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளையும் தாண்டிய நெருக்கடியின் அறிகுறிகள் சில காலமாகவே புலப்படத் தொடங்கிவிட்டன. ஏற்கனவே இருந்த நெருக்கடியை (மோடி அரசாங்கத்தின்) நடவடிக்கைகள் மேலும் மோசமாக்கிவிட்டன. (அதாவது) இவற்றை மேற்கொள்வதற்கு முன்பும் கூட நிலைமை அத்தனை சகிக்கக் கூடிய வகையில் இல்லை.

இதற்கான தெளிவான ஆதாரம், உற்பத்தி குறித்த புள்ளிவிபரங்களில் இருந்து நமக்கு கிடைக்கிறது. உற்பத்தி பற்றிய விபரங்களும் நுகர்வோர் செலவீடுகளைப் பற்றிய விபரங்களும் ஒன்றுக்கொன்று முரண்படுவதாக அரசு தெரிவிக்கிறது, ஆனால் இது தவறு. ’வேளாண்மை மற்றும் வேளாண்மை சார் செயல்பாடுகளின்’ நிகர மதிப்புகூட்டப்பட்ட தற்போதைய விலையை எடுத்துக்கொள்வோம். இதுவே நாட்டில் வேளாண்மை சார்ந்து கிடைக்கும் அனைத்து வருவாய்களின் மூலம் ஆகும். இதை, நாட்டில் உள்ள வேளாண்மை சார்ந்துள்ள மக்கள்தொகையைக் கொண்டு வகுத்து, பின் அதை நுகர்வோர் விலை குறியீட்டினால் திருத்தினோமானால், வேளாண்மை சார் மக்களின் வருவாய் நமக்கு கிடைக்கிறது. 2017-18 ஆம் ஆண்டில் இவர்களுக்கு கிடைத்த இந்த வருவாயின் அளவு, 2013-14 ஆம் ஆண்டு கிடைத்துவந்த வருவாயிலிருந்து சற்று சரிந்துள்ளது. விவசாயம் சார்ந்துள்ள மக்களுள் பெரும் நிலவுடைமையாளர்களும், விவசாய முதலாளிகளும் அடங்குவார்கள். மிகக்குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் விவசாயத்தின் மூலம் வரக்கூடிய மொத்த வருமானத்தில் பெரும்பங்கு இவர்களுக்கே செல்கிறது. நாம் எடுத்துக்கொண்ட காலத்தில் இவர்களின் வருவாய் குறைந்திருக்க வாய்ப்பில்லை என கருதினோமானால், விவசாயம் சார்ந்து வாழும் பெரும் எண்ணிக்கையிலான, உழைக்கும் மக்களின் வருவாய் மிகக் கடுமையான சரிவை சந்தித்திருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். நாம் எடுத்துக்கொண்டுள்ள நிறைவு ஆண்டான 2017-18 என்பதை (ஓராண்டு முந்தையதாக) 2016-17 என எடுத்துக்கொணாலும் (பணமதிப்பிழப்பு, மற்றும் ஜிஎஸ்டி அமலுக்கு வருவதற்கு முந்தைய ஆண்டு), இந்த முடிவில் மாற்றம் ஏதும் இல்லை. மோடி அரசு கருணையற்று செயல்படுத்திய ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பின் பாதிப்புகள் என்பது, ஏற்கனவே பல்வேறு அரசுகளால் தொடர்ந்து திணிக்கப்பட்ட நவ தாராளவாத கொள்கையினால் சிக்கலில் இருந்த வேளாண் பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தப்பட்டவை என்பது புலப்படுகிறது.

கிராமப்புறங்களில் 2011-12 முதல் 2017-18 ஆம் ஆண்டு வரை உணவுக்காக மேற்கொள்ளப்பட்ட தனி நபர் செலவு பத்து சதவீதம் வரை குறைந்துள்ளது. இது வறுமையின் அளவை கணிசமாக உயர்த்தியிருக்கக் வேண்டும். அரசின் கூற்றுக்கு மாறாக, கலோரி வழிமுறையின் படி கணிக்கப்படும் நாட்டின் வறுமையின் அளவு புதிய தாராளவாத கொள்கைகளின் காலம் முழுக்க உயர்ந்துகொண்டே தான் இருக்கிறது. இது, 1993-94 ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களையும், 2011-12 ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களையும் ஒப்பிடுகையில் நமக்குப் புலப்படுகிறது. இந்த அளவு 2017-18 புள்ளிவிபரங்களில் இன்னும் அதிகமாக உயர்ந்திருக்கக் கூடும்.

மோடி அரசு இந்த தகலை பதுக்குவதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. இதற்கு முன்பும் கூட வேலையின்மை குறித்த விபரங்களை இந்த அரசு மறைத்தது. 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை நிலவுவதை காட்டிய புள்ளிவிபரங்களை மக்களவைத் தேர்தலுக்கு முன் அரசாங்கம் வெளியிடவில்லை. தேர்தலுக்கு பின்பாவது அந்த தரவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. தற்போதைய நுகர்வோர் செலவீட்டு புள்ளிவிபரங்களை வெளியிடவே போவதில்லை என அரசாங்கம் முடிவுசெய்துள்ளது. அடுத்த ஐந்தாண்டான 2021-22 வரை இந்த அரசு காத்திருக்கும், அதுவரை தனக்கு ஏற்ற முடிவுகள் வரும்படியாக கணக்கெடுப்பின் செயல்முறைகளை மாற்றியமைக்கும்.

இந்த விபரங்களை வெளியிடாததற்கு, அவற்றின் ‘தரம் சரியில்லை’ என அரசாங்கம் தெரிவித்துள்ள காரணம் வினோதமானதாக உள்ளது. இந்த சர்ச்சையை அதிகாரிகளிடமும் தேர்ந்தெடுக்கப்பட்ட “வல்லுனர்களிடமும்” மட்டும் முடிவு செய்வதற்கு கொடுப்பதை விட ஆய்வாளர்களிடமும், பொதுமக்களிடமுமே விட்டிருக்கலாம். விபரங்களை ளியிட்டுவிட்டு, இந்த விபரங்கள் தரமானது அல்ல, எனவே இதை வைத்துக்கொண்டு ஆழமான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டாம் என கூறியிருக்கலாம்.

சொல்லப்போனால், 2009-10 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஐந்தாண்டு கணக்கெடுப்பில், நாட்டின் வறுமை 2004-05 ஆண்டை காட்டிலும் கணிசமாக உயர்ந்திருப்பது தெரியவந்தது. அப்போதைய அரசாங்கம், 2011-12 ஆம் ஆண்டு மீண்டும் பெரிய அளவிலான புதியதொரு கணக்கெடுப்பை நடத்த உத்தரவிட்டது. 2009-10 ஆண்டு ஏற்பட்ட வறட்சி கணக்கெடுப்பின் விபரங்களை பாதித்திருக்கக் கூடும் என இதற்கு காரணம் தெரிவிக்கப்பட்டது. என்றபோதிலும் 2009-10 க்கான கணக்கெடுப்பின் முடிவுகளை அப்போதைய அரசு வெளியிடவே செய்தது. 2011-12ல் நல்ல விளைச்சல் இருந்தமையால் எதிர்பார்த்ததைப் போலவே, கணக்கெடுப்பின் முடிவுகள் நுகர்வோர் செலவீட்டில் உயர்வையே காட்டின. ஆனாலும், இந்த கணக்கெடுப்பு நவ தாராளவாத கொள்கைகள் அமலாகும் காரணமாக வறுமை உயர்வதையே காட்டின.

கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கு செலவிடப்பட்ட பணத்தை மொத்தமாக விரயம் செய்யும் வகையில், ஒரு கணக்கெடுப்பு விபரங்கள் முற்றிலுமாக நசுக்கப்படுவது இதுவே முதல் முறை. தான் உருவாக்கி வைத்திருக்கும் ‘அச்சே தின்’ என்ற மாயை அழிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக, தேசத்தின் இத்தனை வளங்களை விரயம் செய்ய இந்த அரசு துணிகிறது என்றால், இது இந்த அரசாங்கம் கொண்டிருக்கும் பிம்பப் போதையின் உச்சத்தைக் காட்டுகிறது.

நம்மை மேலும் கவலைப்பட வைப்பது என்னவென்றால், இந்த அரசு தனது பிம்பப்போதையினால், நாட்டின் புள்ளியியல் கட்டமைப்பைச் சிதைத்துவிடுமோ என்பது தான். இந்த புள்ளியியல் கட்டமைப்பு, பேராசிரியர் பி.சி. மகலனோபிஸ் என்பவரால், ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்த போது கட்டமைக்கப்பட்டது. அவர் அமைத்த தேசிய மாதிரி கணக்கெடுப்பு என்பதே அப்போதைய உலகின் மிகப்பெரிய மாதிரி கணக்கெடுப்பு. அதன் மூலம் கிடைத்த விபரங்கள் எந்த மூன்றாம் உலக நாடுகளிலும் இல்லாத அளவுக்கு விரிவானவை; பல்வேறு ஆய்வுகளுக்கு இன்றியமையாத உள்ளீட்டுத் தகவல்களாக அமைந்தவை. நம் நாட்டின் பெருமையாகவே இந்த கணக்கெடுப்பு இருந்து வருகிறது.

பிம்பப் போதையினால், செலவீடு குறித்த தகவலின் தரம் சரியில்லை என்று சொல்கிற இந்த அரசு அதற்காக தெரிவிக்கின்ற காரணம்: பிற அதிகாரப்பூர்வ பொருளாதார குறியீடுகளுடன் இந்த விபரங்கள் ஒத்துப்போகவில்லை என்பதே ஆகும். ஆனால், நமக்கு கிடைத்துள்ள மற்ற விபரங்களை வைத்துப் பார்த்தால், நுகர்வோர் செலவீட்டு புள்ளிவிபரங்கள் அவற்றோடு ஒத்துப்போகவே செய்கின்ற என்பது நமக்குத் தெரிகிறது. வேலையின்மை குறித்து முன்னர் கிடைத்த விபரங்களை இது உறுதிப்படுத்துகிறது, விவசாய வருமானம் குறித்த விபரங்களை உறுதிப்படுத்துகிறது. ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு புள்ளிவிபரம் இந்திய பொருளாதாரத்தின் மோசமான நிலையைக்குறித்து வந்துகொண்டிருக்கும் சூழலில், நாட்டின் பொருளாதாரம் கடுமையான சரிவை சந்தித்து வருகிறது என்பதையே இந்தப் புள்ளிவிபரமும் உறுதிப்படுத்துகிறது. சமீபத்தில், பிஸ்கட் போன்ற சாதாரண பொருட்களின் விற்பனை கூட சரிந்து வருகிறது என்கிற உண்மையை நுகர்வோர் செலவீட்டில் ஏற்பட்டுள்ள சரிவு உறுதிப்படுத்துகிறது.

நாடு மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இந்த சூழலில், கிடைக்கும் ஒவ்வொரு புள்ளிவிபரத்தையும் பயன்படுத்தி எதிர்கொள்ளும் சிக்கலைப் புரிந்துகொள்ளாமல், இது போன்ற முக்கியமான புள்ளிவிபரங்களை மோடி அரசாங்கம் பதுக்குகிறது. இது தான் சிக்கலில் இருந்து மீள இந்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை!

முதலாளித்துவம், சோசலிசம், சிறு உற்பத்தித் துறைகள் – 2

இக்கட்டுரையின் முதல் பகுதி: முதலாளித்துவம், சோசலிசம், சிறு உற்பத்தித் துறைகள் – 1 

பேரா. பிரபாத் பட்நாயக்

தமிழில்: ஆர். எஸ். செண்பகம்

மேற்கூறிய விவாதங்கள் இரண்டு முக்கிய உட்குறிப்புகளை கொடுக்கின்றன. 

முதலாவது உட்குறிப்பு

முதலாளித்துவம் “தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தன்முனைப்பு தன்னிச்சை நடவடிக்கைகளை எடுக்கும்” என்ற அதனுடைய இயல்பான குணாம்சத்தின் காரணமாக, மூன்றாம் உலக நாடுகளில் இருக்கும் ஏழ்மையை விரட்டுவதில்லை.  மாறாக, முதலாளித்துவம், தன்னுடைய இருத்தலுக்கும் விரிவாக்கத்திற்குமான தேவையின் அடிப்படையில், வேலையின்மையை அதிகரிப்பது மற்றும் பொருளாதார பாதுகாப்பின்மையை உருவாக்குவது என்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.  எனவே, வளர்ந்த நாடுகளின் பொருளாதாரமானது, மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதாரத்தை, காலனி ஆதிக்கத்தின்போதே கபளீகரம் செய்து, அந்த நாடுகளின் வறுமை மற்றும் ஏழ்மையை நிலைத்திருக்கவும், வளரவும் செய்துள்ளது.

இப்படிச் சொல்லும்போது இதற்கு மேலும் விளக்கம் தேவைப்படுகிறது.  சந்தேகத்திற்கு இடமின்றி, நவீன தாராளவாத முதலாளித்துவத்தின் கீழ், வளர்ந்த நாடுகள் உலகச் சந்தையில் தங்களுடைய வர்த்தகத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் அவசியத்தை பூர்த்திசெய்து கொள்வதற்காக, மூன்றாம் உலக நாடுகளில் உள்ள தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த கூலியை அளித்தாலே போதும் என்ற நிலையை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும்வகையில்,  மூன்றாம் உலக நாடுகளை நோக்கி வருகின்றன.  இதனால், இதன் இரண்டாம் கட்ட விளைவுகளாக, மூன்றாம் உலக நாடுகளில் சில இடங்களில் அதிக வளர்ச்சி ஏற்படுகிறது.  சில நாடுகள் அளவில் சிறியவையாக இருக்கும்பட்சத்தில் ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சியும் உயர்வடையும்.  இதனால் உள்நாட்டில் வேலைதேடும் பட்டாளத்தின் ஏழ்மை அந்நாட்டில் ஒழிக்கப்படும்.  இப்படிப்பட்ட இந்த ஒரு சில  “வெற்றிகளை” வைத்துக்கொண்டு, இதையே ஆதாரமாகக் கொண்டு, இது ஏதோ நவீன தாராளமய முதலாளித்துவத்தின் பொதுவான உள்ளார்ந்த திறன் போன்று சித்தரிக்கப்படுகிறது.  ஒருவேளை, இப்படி ஒரு  “வெற்றி” கிடைக்கவில்லை என்றால், அதற்கு உள்ளூர் காரணிகள் காரணங்களாகக் காட்டப்படுகின்றன. 

உழைக்கும் மக்களில் பெரும்பகுதியினர் நவீன தாராளமய முதலாளித்துவத்தின் கீழ் பிழிந்தெடுக்கப்படுகின்றனர்.  ஆனாலும், நவீன தாராளமய முதலாளித்துவத்தின் கீழ், நடுத்தர வர்க்கத்தினர் என்ற ஒரு பிரிவினர் உருவாவதும், அவர்களுடைய வாழ்க்கைத்தரம் ஓரளவு நல்லநிலையில் இருப்பது என்பதும் ஒரு சில மூன்றாம் உலக நாடுகளில் நடக்கின்றது.  இதை முன்னிலைப்படுத்தி, மூன்றாம் உலக நாடுகளில் நவீன தாராளமய முதலாளித்துவத்தின் காரணமாக செழிப்பான நிலையே இருக்கிறது என்பது போன்ற ஒரு விவாதம் முன்வைக்கப்படுகிறது. 

அதேபோல, அரசு பின்பற்றும் கொள்கைகளின் காரணமாக, அவை அளிக்கும் நிர்பந்தத்தின் காரணமாக, ஏழைமக்கள் தனியார் மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளை தங்களுக்கான மருத்துவத்திற்கும், கல்விக்கும் நாடவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர்.  ஆனால், இப்படி ஏழை எளிய மக்கள் தனியாரை நாடுவதை, அவர்களுடைய பொருளாதார நிலைமை முன்னேறியதன் காரணமாக அவர்களுடைய நுகர்வு கலாச்சாரத்தின் தரம் உயர்ந்துள்ளது; மாறியுள்ளது என்று தவறான ஆதாரமாகக் காட்டப்படுகிறது.  இப்படியெல்லாம் ஆதாரங்களை காட்டி, நவீன தாராளமய முதலாளித்துவத்தின் அமலாக்கத்தின் காரணமாக மூன்றாம் உலக நாடுகளில் ஏழ்மை பெருமளவில் அதிகரிக்கிறது என்பதையோ அல்லது அதிகரித்துள்ளது என்பதையோ ஏற்றுக்கொள்ள முடியாது என்று வாதிடப்படுகிறது.  முதல் பார்வையில் இது சரியானதாகத் தோன்றலாம். 

ஆனால், நாம் செய்யவேண்டியது என்னவென்றால், ஒட்டுமொத்த மூன்றாம் உலக நாடுகளிலும் மேற்சொன்ன புள்ளிவிவரங்களை எடுத்துக்கொண்டு, சில குறிப்பிட்ட அடிப்படைப் பொருட்களின் நுகர்வுப் போக்கு குறித்த புள்ளிவிவரங்களையும் வைத்துக்கொண்டு, மேலேசொன்ன ஆய்வுகளை பரிசீலனை செய்து பார்க்க வேண்டும். 

உதாரணத்திற்கு, நாம் உலக அளவில் தனிநபர் தானிய நுகர்வினை எடுத்துக்கொள்வோம்.  1980-ம் ஆண்டு, உலக அளவில் தனிநபர் தானிய உற்பத்திஅளவு 355 கிலோகிராம் ஆகும்.  இது எப்படி கணக்கிடப்படுகிறதென்றால், மூன்றாண்டுகளுக்கான 1979-1981 வரையிலான சராசரி உற்பத்தியை 1980-ம் ஆண்டு மக்கள்தொகையால் வகுத்து கணக்கிடப்படுகிறது.  2000-ம் ஆண்டிற்கும் இதேபோன்ற கணக்கீடு செய்து வருகிற அளவு 343 கிகி.  2016-ம் ஆண்டிற்கான அளவு 344.9 கிகி.  இது கிட்டத்தட்ட 2000-ம் ஆண்டின் அளவிலேயே இருக்கிறது.  அதேநேரத்தில், எத்தனால் தயாரிப்பிற்காக கணிசமான அளவு விளைதானியங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.  எனில், 1980-க்கும் 2016-ம் ஆண்டிற்கும் இடையில் தனிநபர் தானிய நுகர்வு என்பது குறைந்து போயுள்ளது என்பது தெளிவாகிறது. 

அதிலும் நுகர்வு என்பதில், நேரடி நுகர்வு மற்றும் மறைமுக நுகர்வு, இவை இரண்டும் சேர்ந்ததுதான் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நுகர்வு கணக்கு.  மறைமுக நுகர்வு என்பதில் பதப்படுத்தப்பட்ட உணவுகளும், விலங்குகளுக்கான தீவனங்களும் அடங்கும்.  இந்த நுகர்வு எப்போது அதிகரிக்கும் என்றால், தனிநபர் உண்மை வருமானம் அதிகரிக்கும்போது அதுவும் அதிகரிக்கும்.  ஒருவேளை மூன்றாம் உலக நாடுகளின் வறுமை ஒழிக்கப்பட்டிருந்தால், தனிநபர் தானிய நுகர்வும் அதிகரித்திருக்கும்.  ஆனால், 80-களின் துவக்கத்தில் இருந்த தனிநபர் தானிய நுகர்வை விட தற்போதைய தனிநபர் தானிய நுகர்வு அளவு குறைந்துள்ளது என்பதில் இருந்தே மூன்றாம் உலக நாடுகளில் வறுமை இன்னும் தொடர்கிறது என்பதும் அது மேலும் அதிகரித்துள்ளது என்பதும் தெளிவாகிறது. 

வேறுவார்த்தைகளில் சொல்வதென்றால், மூன்றாம் உலக நாடுகளின் வறுமையை முதலாளித்துவத்தின் தன்முனைப்பு தன்னிச்சை நடவடிக்கைகள் ஒழித்துவிடும் என்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்லஉண்மையில், இந்நாடுகளின் வறுமை மேலும் அதிகரிக்கப்படுகிறது

இரண்டாவது உட்குறிப்பு

ஏற்கனவே நாம் முன்வைத்த விவாதங்களில் இருந்து, இரண்டாவதாக வரும் உட்குறிப்பு-தொழிலாளர்கள், விவசாயிகள், பிற சிறு உற்பத்தியாளர்கள், விவசாயக் கூலிகள் மற்றும் சிறு உற்பத்தித் துறையில் உள்ள பிற தொழிலாளர்கள் என அனைவரும் தன்னெழுச்சியாக ஒன்றிணைய வேண்டிய அவசியத்தினை நவீன தாராளமய முதலாளித்துவம் உருவாக்குகிறது என்பது ஆகும். 

நவீன தாராளமய முதலாளித்துவம் சிறு உற்பத்தியாளர்களை பிழிந்தெடுத்து, அவர்களை வேலைதேடும் தொழிலாளர் படையுடன் தள்ளிவிடுவதன் காரணமாக அவர்களுடைய வறுமை அதிகரிக்கிறது.  தொழிற்சங்கப்படுத்தப்பட்ட தொழிலாளர்கள் உட்பட, முழுமையாக பணியிலிருக்கும் தொழிலாளர்களின் உண்மைஊதியம் குறைந்து போகிறது.  இதனால், நவீன தாராளமய முதலாளித்துவத்தை எதிர்ப்பதற்காக, தொழிலாளர் விவசாய கூட்டணி உருவாவதற்கான அவசியத்தை, அது தன்னுடைய தன்முனைப்பு தன்னிச்சை நடவடிக்கைகளின் போக்கிலேயே உருவாக்கிவிடுகிறது.

தொழிலாளர்-விவசாயி கூட்டணி பற்றி

“ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயத்தின் இரண்டு உத்திகள்” என்ற நூலில் லெனின், “முதலாளித்துவத்தை நோக்கி, பிற்காலத்தில் தாமதமாக நகரும் நாடுகளில் எல்லாம், நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த ஜனநாயகப் புரட்சி செய்து, நிலப்பிரபுக்களின் கைகளில் குவிந்து கிடக்கும் நிலக்குவியலை உடைத்து, ஏழை எளிய விவசாயிகளுக்கு பிரித்துக் கொடுப்பதற்கு பதிலாக, பூர்ஷ்வாக்கள் நிலப்பிரபுத்துவத்துடன் சமரசம் செய்துகொள்வதையே விரும்புகின்றனர்.  ஏனென்றால், பூர்ஷ்வாக்களின் சொத்துக்களின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட வரலாறு இதற்கு முன்பு உள்ளது என்பதால் அந்த அச்சத்தில் அவர்கள் இந்த நிலைப்பாட்டினை எடுக்கிறார்கள்.  தொழிலாளி வர்க்கம் மட்டுமே விவசாயிகளுக்கும் பிற பிரிவினர்க்கும் தலைமைதாங்கி ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிக்க முடியும்.  இந்த நீண்ட நெடிய புரட்சிகரப் பாதையில் பயணிக்கும்போது, ஒருவேளை அதனுடைய விவசாயக் கூட்டணியில் ஏதேனும் மாற்றங்கள் வந்தாலும், அது எங்கும் நிற்காமல் சமூகப் புரட்சியை நோக்கி தலைமை தாங்கி வழிநடத்திச் செல்லும்” என்று  கூறுகிறார். 

லெனின் காட்சிப்படுத்தும் இந்த ஜனநாயகப் புரட்சியின் கருத்துரு பிரான்சில் பூர்ஷ்வாக்களின் தலைமையில் நடைபெற்ற ஜனநாயகப் புரட்சியில் இருந்து முற்றிலும் வேறானது.  அதேநேரத்தில், 20-ம் நூற்றாண்டில் மூன்றாம் உலக நாடுகளில் நடைபெற்ற அனைத்து மார்க்சிய புரட்சிகளுக்கும் அடிப்படையாக அமைந்ததும் இதுதான்.  மக்கள் ஜனநாயகப் புரட்சி என்ற கருத்துருவிலும், புதிய ஜனநாயகப் புரட்சி என்ற கருத்துருவிலும்கூட இதன் அடிப்படை அம்சங்கள்தான் காணப்படுகின்றன. 

இந்த கருத்து இன்றைக்கும் சரியானதாக, ஏற்புடையதாக, பொருத்தமானதாக உள்ளது.  இன்னும் சொல்லப்போனால், லெனின் கூறிய தொழிலாளி விவசாயக் கூட்டணியின் அவசியம் இன்றைக்கு நவீன தாராளவாத முதலாளித்துவத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள விளைவுகளினால் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.  

பூர்ஷ்வாக்கள் ஒதுங்கியது என்பது, ஜனநாயகப் புரட்சியில் இருந்து விலகும் அதன் கோழைத்தனத்தை மட்டும் காட்டவில்லை.  மாறாக, அது தான் கட்டமைத்த நவீன தாராளவாத முதலாளித்துவ ஆட்சியின் கீழ், விவசாயிகள் உட்பட சிறு உற்பத்தியாளர்களை கூடுதலாகப் பிழிந்தெடுக்கப்படுவதையும் காட்டுகிறது.

நிலப்பிரபுத்துவத்தில் இருந்து முதலாளித்துவ கட்டமைப்பை நோக்கி நகரும்போது உருவாகும் மற்றொரு பிரிவினர் ஜங்கர் ஸ்டைல் முதலாளிகள்.  (இவர்களுக்கு பழைய நிலப்பிரபுத்துவ உரிமைகளில் சில இப்போதும் இருக்கும்.    இவர்களிடம் பெரிய அளவில் நிலக்குவியல் இருக்கும்அதேநேரத்தில் பூர்ஷ்வாக்களை ஒப்பிடும்போது இவர்கள் இரண்டாம்பட்சமானவர்கள்இவர்களும் அரசியல்தளத்தில் இருப்பார்கள்அரசின் மானியங்களை பெருமளவில் பெறுவார்கள்இவர்களுக்கு விவசாய தொழிலாளர்களாக மாற்றப்பட்டு இவர்கள் நிலத்தில் வேலைசெய்யும் விவசாயத் தொழிலாளர்களை பிழிந்தெடுக்கும் அதிகாரம் இருக்கும்).  இப்படிப்பட்ட ஜங்கர் ஸ்டைல் முதலாளிகளாக நிலக்கிழார்கள் மாற்றப்படுகின்றனர்.  அல்லது பணக்கார விவசாயிகள் முதலாளித்துவ விவசாயிகள் என்ற நிலைக்கு வந்துவிடுகின்றனர்.  இப்படி வருவதன் காரணமாக, அவர்கள் விவசாயத்தில் மட்டுமல்லாமல், பலதரப்பட்ட தொழில்களிலும் கவனம் செலுத்துகின்றனர்.  இதன் காரணமாக நவீன தாராளமய முதலாளித்துவத்தின் தாக்குதல்களில் இருந்து இவர்கள் தப்பிவிடுகின்றனர்.  ஆனால், விவசாயிகளில் மிகப் பெரும்பான்மையினர் பிழிந்தெடுக்கப்படுவதன் காரணமாக, சோஷலிசத்தை நோக்கிய பாதையில் இந்த விவசாயி வர்க்கம் நகர்கிறது.

சிறு உற்பத்தியாளர்களின் ஆதரவை இழப்பதன் காரணமாக முதலாளித்துவம் இழந்துள்ள அரசியல் முக்கியத்துவத்தின் அளவு மிகப்பெரியது. 

பாரிஸ் கம்யூன் அனுபவம்

மேலே கூறியதன் அடிப்படையில், தொழிலாளி வர்க்கம் சோஷலிச அமைப்பை உருவாக்குவோம் என்ற சவாலை விடுக்கும்போது, பூர்ஷ்வாக்களின் சொத்துக்களுக்கு சோஷலிச சமுதாயத்தில் ஏற்படும் தாக்கமே சிறு உற்பத்தியாளர்களின் சொத்துக்களுக்கும் ஏற்படும் என்ற அச்ச உணர்வு திட்டமிட்டு விவசாயிகளின் மத்தியில் உருவாக்கப்படுகிறது.  இதன் காரணமாக விவசாயிகள் சோஷலிசத்திற்கான தொழிலாளர்களின் போராட்டத்தில் இணைந்து விடாமல் பார்த்துக் கொள்ளப்படுகின்றனர். அடோல்ஃப் தியோரஸ் இந்த அச்சத்தைதான் பிரெஞ்சு விவசாயிகள் மத்தியில் விதைத்து பாரிஸ் கம்யூனை தோற்கடித்தார். 

1879ல், பிரான்சில் நடைபெற்ற முதலாளித்துவ புரட்சியின்போது, நிலப்பிரபுத்துவ நிலக்குவியலை உடைத்ததில் பிரெஞ்சு விவசாயிகள் இலாபமடைந்தனர்.  அதேநேரத்தில், சில விவசாயிகள் இடம் பெயர வேண்டி வந்தபோது, அதற்கான வாய்ப்புகள் இருந்ததன் காரணமாக, முதலாளித்துவ வளர்ச்சியின் காரணமாக ஏற்பட்ட விவசாய நெருக்கடி என்பது கட்டுக்குள் வந்துவிட்டது.  அதனால், பாரிஸ் கம்யூனின்போது, விவசாயி  – தொழிலாளி கூட்டணி உருவாவதற்கான வாய்ப்பு இல்லாமல் போனது.  அதன் காரணமாக, முதலாளித்துவம் நல்ல வசதியான நிலையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.

போல்ஷ்விக் புரட்சியின் அனுபவம்

இருப்பினும், போல்ஷ்விக் புரட்சியின்போது நடந்தது வேறு.  அதற்குள், வரலாற்றில் நிலப்பிரபுத்துவத்தின் நிலத்தை கைப்பற்றி தகர்க்கும் திறனை முதலாளித்துவம் இழந்துவிட்டது.  அதனால், நிலப்பிரபுத்துவத்தின் நுகத்தடியிலிருந்து விவசாயிகள் அடையவிரும்பிய நிலம் மற்றும் விடுதலையை பூர்ஷ்வாக்களால் பெற்றுத்தர முடியவில்லை. உண்மையைச் சொன்னால், ரஷ்யாவில், பிப்ரவரி புரட்சியின்போது, முதலாளித்துவத்தின் எல்லையைத் தாண்டி பூர்ஷ்வாக்களால் செல்லமுடியாததன் காரணமாக, நில மறுவினியோகம் என்பதில், பூர்ஷ்வாக்களால் விவசாயிகளை திருப்தியடையச் செய்யமுடியவில்லை.  அதேநேரம், அக்டோபர் புரட்சி நடந்தபோது, விவசாயிகள் தாங்களே புரட்சியில் ஈடுபட்டு, நிலப்பிரபுத்துவ பண்ணைகளை கைப்பற்றி விட்டனர்.  இதில் அவர்களுக்கு போல்ஷ்விக்குகளின் ஆதரவு கிடைத்தது. 

போல்ஷ்விக்குகள், நிலங்களை தேசியமயமாக்குதல் என்ற தங்களின் திட்டத்தைக் கூட, விவசாயிகளுக்காக விட்டுக் கொடுத்தனர்.  அந்த நேரத்தில், ரஷ்யாவில் சமகாலத்தில் இருந்த சோஷலிச புரட்சியாளர்கள் கட்சி, துவக்கம் முதலே விவசாயிகளுக்கு சொந்தநிலம் வேண்டும் என்று சொல்லி வந்ததால், போல்ஷ்விக்குகள் தங்களுடைய திட்டத்தை திருடிக் கொண்டார்கள் என்று குற்றம் சாட்டியது.  அதேநேரத்தில், விவசாயிகளை பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டிருந்த இடது சோசலிச புரட்சியாளர்கள் கட்சி, போல்ஷ்விக்குகளுடன் கூட்டணி வைத்து, புரட்சிக்குப்பின் அமைந்த அரசாங்கத்தில் இணைந்தது. 

புரட்சியின் வெற்றியை தீர்மானிப்பதில் விவசாயிகளின் ஆதரவின் பங்கு

எனவே, சுருக்கமாகச் சொல்வதென்றால், விவசாயிகளின் ஆதரவு என்பது தொழிலாளிவர்க்கம் செய்யும் புரட்சியின் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.  குறிப்பாக, எந்த நாடுகளிலெல்லாம், விவசாயிகள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்களோ, அங்கெல்லாம், இது உண்மையானது.  பின்னாளில் முதலாளித்துவத்திற்கு மாறிய ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும் லத்தீன்அமெரிக்கா போன்றவற்றில் உள்ள மூன்றாம் உலக நாடுகளிலும்கூட இதை நாம் காணமுடியும். 

எனவே, நவீன தாராளமய உலகமயமாக்கலின்கீழ், முழுமையான நில மறுவினியோகத் திட்டம் எதுவும் இல்லாமல், விவசாயிகள் கசக்கிப் பிழியப்படும்போது, அந்த நாடுகளில் எல்லாம் தொழிலாளி – விவசாயி கூட்டணியை உருவாக்கி, ஜனநாயகப் புரட்சியை செய்துமுடித்து, சோஷலிசத்தை நோக்கி முன்னேறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.  ஆனால், அந்தந்த நாடுகளின் நிலைமைக்கேற்ப, அந்தந்த நாடுகளின் சூழலுக்கேற்ப, ஜனநாயகப் புரட்சியின் முடிவிற்குப் பிந்தைய சூழல் அமையும். 

சிறு உற்பத்தியை பாதுகாப்பதன் அவசியமும், அதன் விஞ்சிய மேம்பட்ட நிலையும்

 “விவசாயத்தை கையகப்படுத்துவதில் இருந்து பாதுகாப்பது” என்பது மட்டுமே, நிச்சயமாக, சிறு உற்பத்தியை நிரந்தரமாக தக்க வைப்போம் என்று ஏற்றுக் கொள்வதாக ஆகாது. அதாவது, கூட்டு வடிவங்களில், கூட்டமைப்புகளின் மூலம் உற்பத்தியை நோக்கி செல்வோம் என்று கட்டாயப்படுத்தாமல், சிறு உற்பத்தியின் தன்மையில் மெல்லமெல்ல மாற்றம் கொணர வேண்டியுள்ளது என்பது இதன் அர்த்தமாகும்.  அதாவது சோஷலிசத்திற்கான படிக்கல்லாக இந்த மாற்றம் இருக்கும்.

கூட்டுறவு மற்றும் கூட்டு ஐக்கிய செயல்பாடுகள் என்பவை விவசாயிகளை பிழிந்தெடுப்பதையோ அல்லது அவர்களது உரிமைகளை பறிப்பதையோ நிர்பந்திப்பதில்லை.  ஆனால், மனப்பூர்வமாக, தாமாகவே முன்வந்து, தங்கள் நிலங்களை ஒரேகுவியலில் இணைப்பதென்பது தேவைப்படுகிறது.  முதலாளித்துவ ஆக்கிரமிப்பு செய்வதுபோல புராதன மூலதனச் சேர்க்கைக்கான அவசியம் இங்கு இதில் இல்லை.

இருந்தபோதும், வரலாற்றுரீதியாகப் பார்க்கையில், புரட்சிக்கான நீண்ட நெடிய பாதையில் பயணிக்கும்போது, தொழிலாளி – -விவசாயி கூட்டணியை பாதுகாப்பது என்பதால் மட்டுமே சோஷலிசத்தின் நோக்கம் வெற்றிபெறாது.  இன்னும் சொல்லப்போனால், இதுவேகூட சோஷலிச சமுதாயக் கட்டமைப்பின் உருவாக்கத்தில் ஏற்பட்ட தோல்விக்கு முக்கிய காரணியாக அமைந்தது.  முதல்கட்டத்தில் தொழிலாளி வர்க்கம் விவசாயி வர்க்கத்துடன் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டு அதிகாரத்தை கைப்பற்ற முடிந்தது. 

ஆனால் சோஷலிச புரட்சியை நோக்கிய முன்னேற்றப்பாதையில் சிரமம் ஏற்பட்டது.  சோவியத் யூனியனில் கூட்டு ஐக்கிய செயல்பாடுகள் என்பதை நிர்ப்பந்தப்படுத்தியபோதும்சரி, சீனாவில், கூட்டு ஐக்கிய செயல்பாடுகளுக்கு நிர்ப்பந்தம் அளிக்காதபோதும்சரி, விவசாயத் துறையில் மாற்றத்தை உருவாக்க அவசரகதியில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோது, புரட்சியின் அடிப்படையே ஆட்டம் கண்டது.  பலவீனமடைந்தது.  மேலும், அதுவே பெரிய அளவிற்கு ஒருகட்சி சர்வாதிகாரத்திற்கு இட்டுச் சென்றது.  நாளடைவில் இது ஏற்கத்தக்கதல்ல என்பதும் நிரூபணமானது.  சுருக்கமாகச் சொல்வதென்றால், தொழிலாளி-விவசாயி கூட்டணியை தக்கவைப்பது என்பது சிரமமானது என்பது நிரூபிக்கப்பட்டது. 

நிச்சயமாக, இதற்கு பிரத்தியேகமான வரலாற்றுப்பூர்வமான காரணங்கள் இருக்கும்.  இருந்தாலும், இதற்கு சில முக்கிய தத்துவார்த்தரீதியான காரணங்களும் இருக்கின்றன.  குறைந்தபட்சம் இரண்டு பொதுவான தத்துவார்த்த நிலைப்பாடுகள் இருக்கின்றன.  நிரந்தரமான நீடித்த தொழிலாளர்- விவசாயக் கூட்டணி கட்டப்பட வேண்டுமென்றால், இந்த தத்துவார்த்த நிலைப்பாடுகளை திருத்தியமைக்க வேண்டிய அவசியம் உள்ளது. 

முதலாவது தவறான தத்துவார்த்தப் புரிதல்

”ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயத்தின் இரண்டு உத்திகள்”என்ற நூலில், ஜனநாயகப் புரட்சியில் இருந்து சோஷலிசத்தை நோக்கிய மாற்றம் என்பது தொழிலாளி விவசாயி கூட்டணியின் அடிப்படையில் துவங்குகிறது என்று லெனின் குறிப்பிடுகிறார்.   மாற்றத்தை நோக்கிய பயணத்தில், விவசாய வர்க்கத்தில் இருந்து தொழிலாளி வர்க்கத்துடன் கூட்டாளிகளாக வருபவர்களிடையே இடையில் சில மாற்றங்கள் வரலாம் என்பதையும் குறிப்பிடுகிறார். 

புரட்சியின் கட்டத்தை நெருங்கநெருங்க, ஆரம்பத்தில் புரட்சியின் பக்கம் நிற்கும் பணக்கார விவசாயிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதாகும்.  புரட்சியின் இறுதிக்கட்டத்தில் அவர்களுக்கெதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது தெரிந்தே எதற்காக பணக்கார விவசாயிகள் மற்றும் உயர்தட்டு நடுத்தர விவசாயிகள் புரட்சியின் ஆரம்பக் கட்டத்தில் கூட்டணியில் இருக்கவேண்டும்?  என்கிற கேள்வி இங்கு எழுகிறது. 

அவர்கள் முதலில் புரட்சியின் பக்கம் நிற்காவிட்டால், புரட்சி என்பது மிகவும் சிரமமானதாக மாறிவிடும்.  மறுபுறம், புரட்சி அவர்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையுடனும், ஏதேனும் ஒரு கட்டத்தில் அவர்களுக்கு எதிராக அது திரும்பும் என்று எதிர்பார்க்காமலும், புரட்சியின் துவக்கத்தில் அவர்கள் இணைகிறார்கள்.  திடீரென்று அவர்களுக்கு எதிராக திரும்பும்போது, புரட்சிக்கெதிரான அவர்களின் பகைமை என்பது கசப்பானதாக மாறுகிறது.  குறிப்பாக, அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பதில் இருந்து வரும் பகைமை மிகவும் கசப்பானதாக இருக்கும்.  இதனால், புரட்சியின் பாதையில் நிறைய கஷ்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும். 

குறிப்பாக ஏகாதிபத்திய பகைமையால் சுற்றி வளைக்கப்படும்.  ஏற்கனவே, இதனை சந்திக்கவேண்டிய சூழல் இருக்கிறது.  இதனிடையே, சமகால உலகமயமாக்கல் சகாப்தத்தில், எந்தவொரு தொழிலாளி-விவசாயி கூட்டணியும் உலகமயமாக்கலில் இருந்து துண்டித்துக்கொண்டு, அதிகார ஆதிக்கத்திற்கு உயரும்போது, பகைமையால் சுற்றி வளைக்கப்படுவது என்பது தவிர்க்க முடியாததாகிவிடும்.  ஒருவேளை, இந்த எல்லா கஷ்டங்களையும் தாண்டி, அனைத்து பகைமையையும், விமர்சனத்தையும் எதிர்த்து, வலுவான பலமான நடவடிக்கைகளால் அது தன்னை தக்க வைத்துக் கொண்டாலும், இந்த கஷ்டங்களையெல்லாம் எதிர்கொள்வதற்கான அத்தியாவசியமான தேவையாக ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட சர்வாதிகார ஆட்சியை உருவாக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக வேண்டிய சூழல் ஏற்படும்.  இதனால் புரட்சியின் அடிப்படைத்தன்மை சிதைக்கப்பட்டுவிடும். 

வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், ஜனநாயகப் புரட்சிக்கு தேவைப்படுகிற வர்க்கசக்திகளின் சமநிலையில் மாற்றம் ஏற்படுவதென்பது சோசலிசத்தை நோக்கிய பயணத்தில் மிக முக்கியமாக தேவையாக இருக்கிறது.  வெறுமனே நிர்ப்பந்தத்தின் மூலம் சோசலிசத்தை நோக்கி நகர முடியாது.  மாறாக, ஜனநாயகப் புரட்சியில் துணைநின்ற பணக்கார விவசாயிகளின் வலிமையில் குறைவு ஏற்பட்டாலும், புரட்சியில் ஈடுபட்ட அனைத்துப் பிரிவு விவசாயிகளின் பொருளாதார நிலைமைகள் முன்னேற்றமடையும் வகையிலான ஒரு செயல்முறையின்மூலம் இதனை அடையவேண்டும்.   

மக்களுக்குச் சொந்தமான, மக்களால் கட்டுப்படுத்த முடிகிற, கூட்டமைப்புகள்தான் இந்த இரண்டு நோக்கங்களையும் நிறைவேற்றும் வழிமுறைகளாகும்.  அதாவது, அவை மிகவும் பணகக்கார விவசாயிகளின் வலிமையை குறைக்கும்.  அதேநேரத்தில், இந்த கூட்டமைப்பு முறையில், உற்பத்திசக்திகள் வளர்ச்சியடைவதும் முன்னேற்றமடைவதும் நிகழ்வதன் காரணமாக, அனைத்துப் பிரிவு விவசாயிகளின் பொருளாதார நிலையும் முன்னேற்றமடையும்.  லெனின் குறிப்பிடுகிற, சோசலிசத்தை நோக்கிய மாற்றத்தில் பணக்கார விவசாயிகளின் மீதான தாக்கம் என்பது நிர்ப்பந்தத்தினால் ஏற்படுத்தப்படுவதாக எண்ணப்படாது.  மாறாக, சுயமேம்பாட்டிற்குத் தேவையான தூண்டுதலாக பார்க்கப்படும். 

சோசலிசத்தை நோக்கி முன்னேறுவதை எளிமைப்படுத்துவதற்காக,  தொழிலாளி-விவசாயி கூட்டணி தன்னுடைய குணாம்சத்தை மாற்றிக் கொண்டாலும்கூட, விவசாயிகளினுடைய எந்தப் பிரிவினரும், பணக்கார விவசாயிகள் உட்பட பகைமையாகி விடக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருக்கவேண்டும்.  இல்லையென்றால், அதுவே கூட புரட்சியை பலவீனப்படுத்திவிடும்.  இந்த உண்மையை லெனினே கூட, தன் வாழ்நாளின் இறுதிக் கட்டத்தில் நன்கு அறிந்திருந்தார்.

இரண்டாவது தவறான தத்துவார்த்த புரிதல்

இந்த மிக முக்கியமான வாதத்தை மறுப்பதற்கு, இரண்டாவது தத்துவார்த்த ரீதியிலான தவறான கருத்து பயன்படுத்தப்படுகிறது.  அதற்குப் பதிலாக சோசலிசத்திற்கு மாறுகின்ற இடைப்பட்ட காலத்தில் எதிர்கொள்ளும் முரண்பாடுகளின் சக்திபற்றி இந்த கருத்து வாதிடுகிறது.  சந்தைக்கான உற்பத்தி என்பது உற்பத்தியாளர்களிடையே ஒரு வேறுபாட்டினை பிரிவினையை உருவாக்குகிறது.  இதனால் முதலாளித்துவம் தோன்றுவதற்கான போக்கு கீழிருந்து உருவாகிறது என்ற நம்பிக்கையினை அடிப்படையாகக் கொண்டு இந்த இரண்டாவது கருத்து அமைகிறது. 

சோசலிசத்திற்கு பகையான இந்த முதலாளித்துவப் போக்கினை கட்டுப்படுத்துவதற்காக முதலாளித்துவத்தின் அசல் கூறுகளான தனியார் சொத்து, மூலதனச் சேர்க்கை, சந்தை தீர்மானிக்கும் கூலியை பெறும் கூலித்தொழிலாளர்கள், தன்னார்வ பரிமாற்றங்கள், விலைஅமைப்பு முறைகள், போட்டிசந்தைகள் போன்றவை கட்டாயமாக ஒடுக்கப்படவேண்டும் என்று இந்த கருத்து வாதிடுகிறது.  இது தவறான கருத்தாகும்.  ஏனெனில், சந்தைக்கான எந்தவொரு உற்பத்தியும் சரக்குஉற்பத்தியே என்ற அடிப்படை தவறினை இது செய்கிறது. 

சரக்குஉற்பத்தி என்பது நிச்சயமாக உற்பத்தியாளர்களிடையே வேற்றுமையை உருவாக்கும். எனவே, சிறு உற்பத்தியாளர்களிடையே இருந்து முதலாளித்துவத்திற்கான போக்கு உதயமாகும் என்றெல்லாம் இந்த கருத்து வாதிடுகிறது.  ஆனால் சரக்கு உற்பத்தி என்பதேகூட சந்தைக்கான உற்பத்தியை மட்டும் குறிப்பதல்ல.  உதாரணத்திற்கு இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளாக சந்தைக்கான உற்பத்தி நடைபெற்று வருகிறது.  ஆனால், கீழிருந்து முதலாளித்துவப் போக்கு என்பது இதுவரை கவனிக்கத்தக்க வகையில் எழவில்லை.  அப்படி ஒரு போக்கு எழுந்திருக்குமேயானால், ஐரோப்பாவிற்கு முன்னரே இந்தியாவில் முதலாளித்துவம் வந்திருக்க வேண்டும்.  காலனிய சுதந்திரத்துக்கு பின்னர்தான் இந்தியாவில் முதலாளித்துவம் தோன்றியது. 

சரக்கு உற்பத்தி என்பது சந்தைக்காக தயாரிக்கப்படும் அந்த பொருள்உற்பத்தி அதனுடைய உற்பத்தியாளருக்கு பயன்மதிப்பை தருகிறதா அல்லது பரிமாற்ற மதிப்பினை தருகிறதா என்பதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது.  சரக்கு உற்பத்தியில் வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இடையிலான உறவு என்பது முற்றிலும் பொதுவானது.  தனிமனித உறவு சம்பந்தமானதல்ல.  இந்தியாவில் உள்ள எஜமான் வேலையாள் அமைப்பில் இருப்பதுபோன்று (இந்தியாவில் உள்ள சாதிகட்டமைப்பில் உயர்ஜாதியில் இருப்பவரிடம் தாழ்ந்தஜாதி என்று சொல்லப்படும் சாதியில் உள்ளவர்கள் வேலை செய்து கொடுத்துவிட்டு அவர்கள் தரும் கூலியை பெறும் முறை உள்ளதுஇதுவே எஜமான்வேலையாள் உறவுமுறை) அல்லது இந்திய பஜார்களில் பொதுவாக பொருட்களை விற்பனை செய்யும்போது அன்றாட நிகழ்வுகளில் இருப்பது போன்றவற்றில் உற்பத்தியாளர்களிடையே வேற்றுமையை நிச்சயம் உருவாக்கும் என்பதோ அல்லது இதனால் கீழிருந்து சிறு உற்பத்தியாளர்களிடமிருந்து முதலாளித்துவத்தின் போக்கு உதயமாகும் என்பதோ இல்லை.  இந்த உற்பத்தியாளர்கள் கூலித் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால்கூட, இந்தியாவில் ஒரு ஸ்வீட்கடை வைத்திருக்கும் வியாபாரிக்கும் வேலையாளுக்கும் உள்ள உறவுமுறைதான் இருக்கும்.  இங்கு சரக்கு உற்பத்தியில் இருந்து முதலாளித்துவம் உதயமாகும் என்பதற்கான இடம் இல்லை. 

இருந்தபோதும், சந்தைக்காக தயாரிக்கப்படும் அனைத்துமே சரக்கு உற்பத்தியே என்ற நம்பிக்கையில் ஒரு முதலாளித்துவப் போக்கு உருவாகிறது.  குறிப்பாக, எங்கெல்லாம் கூலித்தொழிலாளர்கள் நியமிக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் இது உருவாகும்.  சோசலிச நாடுகளில் சிறு நிறுவனங்கள் மற்றும் விளிம்பு நிலை நிறுவனங்களை ஒழுங்குபடுத்தாமல், கூட்டு அமைப்புகளை உருவாக்குகிறோம் என்ற பெயரில் அவற்றை ஒடுக்கியதன் காரணமாக, அவை காணாமல் போய், புரட்சியின் சமூக அடிப்படையில் பலவீனம் ஏற்பட்டது. புரட்சியின் அடிப்படையே ஆட்டம் கண்டது. இதற்கான சமீபத்திய உதாரணம்தான் சீனாவின் கலாச்சாரப் புரட்சி.  சீனாவின் கலாச்சார புரட்சியில், சிறு உற்பத்தியாளர்களை முதலாளித்துவத்தின் மூதாதையர்கள் என்ற வெளிப்படையான கருத்தின் அடிப்படையில், அவர்களை இல்லாமல் செய்தது என்பது,  அதாவது சிறு உற்பத்தித் துறையை அழித்தது என்பது, மிகவும் தவறான தத்துவார்த்த புரிதலுக்கான சமீபத்திய உதாரணமாகும். 

சோசலிச சமுதாயத்தில் செய்ய வேண்டியது

எனவே, சோசலிசத்தில் மட்டுமே மக்கள் கூட்டாக தங்களுடைய எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும்.  பொருளாதாரம் குறித்த எதிர்காலத்தையும் தீர்மானிக்க முடியும். அரசியல் தலையீட்டின் மூலம் மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்க முடியும் என்பதால், சிறு உற்பத்தியை பற்றி தவறாக வறட்டுத்தனமாக புரிந்துகொள்ளாமல், அதை அழிப்பதற்கு பதிலாக, பாதுகாப்பதன் மூலமாக மேலே குறிப்பிட்டுள்ளபடி வறுமையிலிருந்து மக்களை மீட்டெடுக்க முடியும்.  சிறு உற்பத்தியை பாதுகாத்து அதுவாக தானாக மேம்பாட்டிற்காக மாறுவதற்கு உதவினால் மட்டுமே சோசலிசத்தை அதன் அடிப்படையை பலப்படுத்த முடியும்.  அதற்கு இந்த இரண்டு தவறான தத்துவார்த்த புரிதல்களையும் திருத்தி சரிசெய்ய வேண்டும். 

***

(பிரபாத் பட்நாயக் அவர்கள் மேற்கூறிய கருத்தரங்கில் தனது கருத்துரையை தொடங்கும்போது, அவரது தலைமுறையில் இருந்தவர்களுக்கும், இருப்பவர்களுக்கும் தான்சானியாவின் அதிபர் ஜுலியஸ் நெய்ரே ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்ந்ததை நினைவுகூர்கிறார்.  மூன்றாம் உலக நாடுகளில், காலனியாதிக்கத்தை எதிர்த்து, அந்தந்த நாடுகளில், விடுதலைப் போராட்டத்தை தலைமைதாங்கி நடத்திய முக்கிய தலைவர்களான – இந்தியாவின் ஜவஹர்லால் நேரு, இந்தோனேசியாவின் சுகர்ணோ, கானா குடியரசின் வாமே க்ரூமேன், காங்கோ குடியரசின் பேட்ரிஸ் லுமும்பா, மற்றும் கென்யாவின் ஜோமோ கென்யாட்டா ஆகியோரின் பட்டியலில் ஜுலியஸ் நெய்ரே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்று குறிப்பிடுகிறார்.)