உக்ரைன் போர்: மானுடத்தின் புறந்தள்ளப்பட்ட சிக்கல்கள் !

விஜய் பிரசாத்

திடுக்கிடும் தலைப்புடன் ஒரு புதிய செய்தி வெளியாகிறது. ஆயுதங்களுக்காக உலகம் மேற்கொள்ளும் ஆண்டு செலவுத்தொகை  2 லட்சம் கோடி டாலர்களை கடந்துள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. பட்டியலில் அடுத்து உள்ள பத்து நாடுகளின் ஒட்டுமொத்த செலவீனத்தை விட அமெரிக்காவின் செலவீனம் அதிகமாக இருக்கிறது. அமெரிக்காவின் உளவுத்துறை செலவீனங்களையும், அணு ஆயுத பராமரிப்பு செலவீனங்களையும் சேர்த்து கணக்கிட்டால் வரும் தொகை மட்டுமே 1 லட்சம் கோடி டாலர்களை கடக்கும். இது மிக மிக அதிகமான தொகை ஆகும். மனித உழைப்பையும் அறிவையும் வீணடிக்கும் கடும் செயல்.

இன்னொரு செய்தி. சட்டவிரோத வரி ஏய்ப்புக்கு வழிவகுக்கும் நாடுகளில் குவிந்திருக்கும் செல்வத்தின் மதிப்பு 37 லட்சம் கோடி டாலர்களை கடந்திருப்பதாக ஒரு கணிப்பு வெளியாகியுள்ளது. பெரும் செல்வந்தர்கள், மனித வளத்தை சூறையாடிச் சேர்த்த செல்வம் இப்படிப்பட்ட நாடுகளில் பணமாகவும், தங்கமாகவும், வைப்பு நிதியாகவும் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் மொத்த தொகையில் ஒரு சிறு பகுதி மட்டுமே. மேற்சொன்ன கணிப்பில் நிலம், விலை உயர்ந்த கலை பொருட்கள், நகைகள் போன்றவை உள்ளடங்காது. அவற்றையும் சேர்த்தால், கையளவு மனிதர்களிடம் குவிந்துள்ள செல்வத்தின் அளவு மிகக் கொடுமையானது. உலகின் முதல் 22 செல்வந்தர்கள் கையில் உள்ள சமூக வளத்தின் மதிப்பு, ஆப்ரிக்காவில் மொத்தம் உள்ள 3.25 கோடி பெண்களிடம் உள்ள ஒட்டுமொத்த செல்வத்தை விட அதிகம் ஆகும்.

உலகில் நிலவும் ஏழ்மை, பட்டினி மற்றும் எழுத்தறிவின்மை போன்ற சிக்கல்களுடைய அவல நிலைமை குறித்தும்,  கால நிலை மாற்ற பிரச்சனையால் எழும் அதிபயங்கர தாக்கங்கள் குறித்தும் தொடர்ந்து அறிக்கைகள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக செலவிடப்பட வேண்டிய நம்முடைய சமூக வளத்தின் பெரும் பகுதியை, ஆயுதங்களை குவிக்க செலவிடுவதுடன், வெளிநாடுகளில் பதுக்கியும் வைக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் 17 நிலைத்த நீண்டகால வளர்ச்சிக் குறிக்கோள்களை – பட்டினியை ஒழித்து அமைதியை நிலைநாட்டும் இலக்கினை – எட்டுவதற்கு ஆண்டுக்கு 2.5 லட்சம் கோடி டாலர்கள் செலவிட வேண்டியுள்ளது.  இப்போது இந்த குறிக்கோள்களை எட்டுவதற்கு மிகச் சிறிய தொகை மட்டுமே செலவிடப்படுகிறது. பெருந்தொற்றுக் காலத்திலும், அதன் பிறகு அதிகரித்து வரும் விலைவாசி உயர்வுக் காலத்திலும், இந்த செலவினங்களில் மென்மேலும் வெட்டு ஏற்படும். நாம் இந்தக் குறிக்கோள்களை விட்டு மென்மேலும் விலகிச் செல்வோம்.  மானுடத்தின் மிக முக்கியமான சிக்கலான பட்டினியை ஒழிக்கும் பாதையில் நாம் நெடுந்தொலைவு செல்லவேண்டியுள்ளது. (மக்கள் சீனம் தவிர. அங்கு 2021இல் கடும் ஏழ்மை ஒழிக்கப்பட்டுவிட்டது). உலக மக்களில் 300 கோடிபேர் ஏதோ ஒரு வித பட்டினியால் அவதிப்படுவதாக கணிக்கப்படுகிறது.

விடுதலைக்கு பதிலாக ஆதிக்கம்

மானுடத்தின் இந்த சிக்கல்களை தீர்க்கும் உலகு தழுவிய ஒரு சமூக – அரசியல் திட்டத்தை உருவாக்குவதற்கு பதிலாக, அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளான ஜி7 நாடுகளும், தங்களின் உலக ஆதிக்கத்தை நீடிப்பதற்கான உத்தியை நோக்கியே செல்கின்றன. சோவியத் ஒன்றியமும், கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகளும் வீழ்ந்த 1991 ஆம் ஆண்டுக்கு பின், மூன்றாம் உலக நாடுகள் கடன் வலையில் சிக்க வைக்கப்பட்டதில் இருந்து இந்த ஆதிக்க போக்கு  தொடங்கியது. இந்த ஆதிக்கம் கால வரம்பின்றித் தொடரும் என்றும், அமெரிக்காவுக்கு எதிரான ஒரு அணியின் வரலாறு முடிந்து போனது என்றும், அமெரிக்க அறிவுஜீவிகள் மார் தட்டினார்கள். ஆனால் அமெரிக்காவும், ஜி7 நாடுகளும் “உலக பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற பெயரில் எல்லை மீறி சென்றதாலும், (குறிப்பாக சட்டவிரோதமாக ஈராக் மீது 2003இல் போர் தொடுத்தது)  2007-08இல் ஏற்பட்ட பெரும் பொருளாதார நெருக்கடியின் காரணமாகவும், அந்நாடுகளின் ஆதிக்கம் நிலை குலைய துவங்கியது.

அமெரிக்கா மற்றும் ஜி7 நாடுகளில் வறண்டு போன வங்கி அமைப்பிற்கு நிதியளிக்க இந்தியா, சீனா, இந்தோனேசியா போன்ற நாடுகளை அணுகின. அதனால், ஜி7 கூட்டமைப்பை மூடிவிட்டு, உலகளாவிய சட்ட-திட்டங்களை தீர்மானிப்பதை ஜி20 என்ற கூட்டமைப்பின் கீழ் கொண்டு வந்து, அதில் நிதி அளிக்கும் இந்த புதிய நாடுகளையும் சேர்க்க உறுதி அளித்தது. ஆனால் மேற்கத்திய வங்கிகள் மீண்டு வந்த பின்னர், ஜி20 ஒதுக்கப்பட்டு,  முந்தைய ஜி 7   ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டது. இதர சக்திகளை எதிரியாக பார்க்காமல், மானுட சிக்கல்களை தீர்ப்பதில் கூட்டாளியாக பார்க்கலாம் என்ற முன்மொழிவை ஏற்க அமெரிக்கா மறுத்தது. இந்த கூட்டு சக்தியாக ஜி 20 அமைப்பில்  பங்கு வகித்த சில நாடுகள் சேர்ந்து  BRICS (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா) கூட்டமைப்பு 2009 இல் துவங்கப்பட்டது. இந்நாடுகள் ஒன்றிணைந்து, மேற்கத்திய நாடுகளால் கட்டுப்படுத்தப்படாத, ஐ.எம்.எஃப்-பின் சிக்கன அஜெண்டாவிற்கு அப்பாற்பட்ட, வளர்ச்சி திட்டங்களுக்கு வழி வகுக்கும் நிறுவன அமைப்பை ஏற்படுத்த முன் வந்தன.

BRICS கூட்டமைப்பு துவங்கப்படுவதற்கு முன், ரஷ்யாவின் விளாடிமிர் புதின் (அதுவரை பல விஷயங்களில் மேற்கத்திய நாடுகளுடன் நெருங்கி இருந்தார்)  முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்று ஒரு முக்கிய உரையாற்றினார்.  “ஒரு துருவ உலகம் என்றால் என்ன?” என புதின் கேட்டார். “இந்த வார்த்தையை எவ்வளவு அழகு படுத்தி காட்டினாலும், அதன் அர்த்தம் ஒரே அதிகார புள்ளி, ஒரே ஒரு ஆதிக்க மையம் மற்றும் ஒற்றை ஆண்டான்” என்பதுதான். அந்த ஒற்றை அதிகார புள்ளி என்பது அமெரிக்காவையே குறிக்கிறது என்று அனைவரும் அறிந்திருந்தனர். மேற்கத்திய நாடுகளின் “சர்வதேச உறவுகளில் அதீதமாக பயன்படுத்தப்படும் கட்டுக்கடங்காத தாக்குதல் ” குறித்து புதின் கடுமையாக விமர்சித்தார். மேலும் “சர்வதேச சட்டம்” மேற்கத்திய நாடுகளை அவை மேற்கொள்ளும் போர் குற்றங்களிலிருந்து பாதுகாப்பதை குறிப்பிட்டார். “யாரும் பாதுகாப்பாக உணர்வதில்லை. ஏனெனில் யாரும் சர்வதேச சட்டம் தங்களை பாதுக்காக்கும் அரண் என்பதாக உணரவில்லை. இப்படிப்பட்ட சூழல் ஆயுத குவியலை ஊக்குவிப்பதில் ஆச்சரியம் இல்லை”. அமெரிக்கா ஐரோப்பாவை சுற்றி ஏவுகணை வளையத்தை உருவாக்குவதை நிறுத்திவிட்டு, 2002இல் அது கைவிட்டுவிட்ட “அணு ஆயுத ஏவுகணைக்கு எதிரான ஒப்பந்த”-த்திற்கு திரும்பிச் செல்ல வேண்டும் என புதின் குறிப்பிட்டார். அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இந்த முன்மொழிவை ஏற்க மறுத்தார்.

அச்சுறுத்தல்கள்

21ஆம் நூற்றாண்டில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்காவும் அதன் ஆதரவு நாடுகளும் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டனர். லிபியாவின் மீது 2011 ஆம் ஆண்டு நேட்டோ முன்னெடுத்த தாக்குதல் மேற்கத்திய நாடுகள் தம் ஆதிக்கத்தை நிலைநாட்ட எடுத்த முன்னெடுப்புகளுக்கான குறியீடாக அமைந்தது. இதுவே தெற்கு சீன கடல் பகுதி முதல் கரீபிய கடல் பகுதி வரை உலகளாவிய நேட்டோ ஆதிக்கம் தொடர்பான வாதங்களுக்கு  முன்னோட்டமாக அமைந்தது. 30 நாடுகள் மீதான பொருளாதார தடை விதிப்பு மூலம் அமெரிக்காவையும், அதன் கூட்டாளி நாடுகளையும் எதிர்ப்பவர்களை ஒழுங்கு படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இது மட்டுமல்லாமல் ஐ.எம்.எஃப் அமைப்பின் புதுப்பிக்கப்பட்ட சிக்கன திட்டத்தின் காரணமாக, பல ஏழை நாடுகள் கொரோனா காலத்தில் கூட, தங்களுக்கு கடன் கொடுத்த செல்வச் செழிப்பு மிக்கவர்களுக்கு வழங்க வேண்டியிருந்த பணம், தங்கள் நாட்டு மக்களை காக்க சுகாதாரத்திற்கு மேற்கொண்ட செலவினை விடவும் அதிகம்.

2018இல் “தீவிரவாதத்திற்கு எதிரான போர்” நிறைவுற்றதாக அமெரிக்கா அறிவித்தது, அதன் தேச பாதுகாப்பு உத்தியில், சீனாவும் ரஷ்யாவும் அடைந்துவரும் எழுச்சியே மிகப்பெரும் ஆபத்தாக குறிப்பிட்டது. அமெரிக்கா பாதுகாப்பு செயலாளர் ஜிம் மாட்டிஸ் அமெரிக்காவை “நெருங்கி வரும் எதிரி நாடுகளை” கட்டுப்படுத்துவது என்று வெளிப்படையாகவே பேசினார். சீனா மற்றும் ரஷ்யாவை இவ்வாறு தம் எதிரி நாடுகளாக குறிப்பிட்ட அவர், அமெரிக்காவின் மொத்த ஆதிக்கத்தையும் பயன்படுத்தி இந்நாடுகளை அடிபணிய வைப்பது என்று பேசினார். ஐரோப்பா மற்றும் ஆசியாவை சுற்றி அமெரிக்காவின் பல ராணுவ தளங்கள் (மொத்தம் 800) உள்ளதோடு, ஜெர்மனி முதல் ஜப்பான் வரை ரஷ்யா மற்றும் சீனாவை முன் நின்று தாக்கும் பல கூட்டாளி நாடுகளை அமெரிக்கா கொண்டிருக்கிறது. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளின் கடற்படைகள், “பயணிப்பதற்கான சுதந்திரம்” என்ற பெயரில் ரஷ்யா (ஆர்டிக் பகுதி) மற்றும் சீனாவிற்கு (தெற்கு சீன கடல் பகுதி) எதிராக மிக அச்சுறுத்தலான படைப் பயிற்சிகளில் ஈடுபட்டன. இப்படிப்பட்ட செயல்பாடுகளோடு, 2014 ஆம் ஆண்டில் அமெரிக்கா உக்ரைன் நாட்டின் அரசியலில் தலையிட்டதும், 2015இல் தைவானிற்கு பெருமளவு ஆயுதங்கள் அளித்ததும், ரஷ்யாவையும், சீனாவையும் மேலும் மிரட்டுவதாக அமைந்தது. மேலும் 2018இல் அமெரிக்கா தன்னிச்சையாக “இடைநிலை தூர அணு-ஆயுத சக்திகள்” ஒப்பந்தத்திலிருந்து விலகியதன் காரணமாக, சர்வதேச அணு-ஆயுத கட்டுப்பாட்டு கட்டமைப்பை நலியச் செய்தது. ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் எதிரான போர்க்கள அணு ஆயுத உத்தியை அமெரிக்கா வகுத்துவருகிறது என்பதுதான் இந்த பின்வாங்கலின் வெளிப்பாடு.

அமெரிக்காவின் தேச பாதுகாப்பு உக்தியில் சீனாவையும், ரஷ்யாவையும் கட்டுப்படுத்துவது பற்றி குறிப்பிட்டிருப்பதும், “இடைநிலை தூர அணு-ஆயுத சக்திகள்” ஒப்பந்தத்திலிருந்து விலகியதும், ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும்  அமெரிக்காவால் உள்ள அச்சுறுத்தல் கற்பனையானது அல்ல என்பதை தெளிவாக்குகிறது. இதுவரை, ஆசிய பகுதியில் அமெரிக்காவின் நட்பு நாடுகளான தென் கொரியாவும், ஆஸ்திரேலியாவும்  இடைநிலை தூர அணு-ஆயுதங்களை அனுமதிக்க தயாராக இல்லை. ஆனால் குவாம் மற்றும் ஒக்கினாவா-வில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களில் ஆயுதங்களை குவிக்க வாய்ப்பு உண்டு. பல ஆண்டுகளாக இவ்வாறு கட்டமைக்கப்பட்டு வரும்  அமெரிக்க அச்சுறுத்தலை ரஷ்யா உணர்ந்ததன் விளைவாகவே உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை முன்னெடுக்கிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்ந்தாலும், இல்லாவிட்டாலும் அமெரிக்கா உக்ரேனில் அணு ஆயுதங்களை குவிக்க வாய்ப்பு உள்ளது என்ற கவலை எழுந்துள்ளது.

உக்ரைனில் நடந்துவரும் போர் பற்றிய வாதங்களுக்கு பின் ஒரு முக்கியமான கேள்வி உள்ளது: இயற்கையாகவே  யூரேசியா (ஆசிய-கிழக்கு ஐரோப்பிய) நாடுகள் நெருங்கி வரும் போக்கை அமெரிக்காவும் அதன் ஆதரவு நாடுகளும் அனுமதிக்குமா? இல்லையேல் இதை தடுக்க ஐரோப்பிய மற்றும் சில ஆசிய நாடுகளில் தலையிடும் முயற்சிகளை தொடருமா? ஐரோப்பிய நாடுகளை ஆங்கிலேய-அமெரிக்க-ஆர்டிக் கூட்டமைப்பினுள் கொண்டு வந்து, ஐரோப்பிய-ஆசிய நாடுகள் இணைப்பை, குறிப்பாக ரஷ்யா மற்றும் சீனா உடனான இணைப்பை தடுக்கும் அமெரிக்காவின் முயற்சியும் உக்ரைன் மீதான போரில் ஒரு பங்கு ஆற்றியுள்ளது என்பதை நிராகரிக்கவே முடியாது.

இந்த நிலையில் மானுடத்தின் மிக முக்கிய சிக்கல்கள் கண்டுகொள்ளப் படாமல் போகின்றன. பட்டினியும் போர்களும் பூமியை வாட்டுகின்றன. அன்றாட வாழ்வின் நிதர்சன பிரச்சனைகளை தீர்ப்பதற்காகச் செல்ல வேண்டிய சமூக வளங்களோ, ராணுவ ஆதிக்கத்திலும் போர்களிலும் வீணடிக்கப் படுகின்றன.

தமிழில்: அபிநவ் சூர்யா

2022 ரஷ்ய – உக்ரைன் போர்:ஒரு பார்வை!

அன்வர் உசேன்

ரஷ்யா- உக்ரைன் இடையிலான போர் உலகம் முழுவதும் பல விவாதங்களை உருவாக்கியுள்ளது. ஒரு புறம் புடின் இட்லருக்கு இணையாக விமர்சிக்கப்படுகிறார். இன்னொரு புறம் அவரது நடவடிக்கைகள் அனுதாபத்துடன் பார்க்கப்படுகின்றன. போர் என்பது எப்படியாக இருந்தாலும், எங்கே நடந்தாலும், அது மனித உயிர்களைப் பலி வாங்குகிறது. அரும்பாடுபட்டு உருவாக்கிய உற்பத்தி சாதனங்களும் வளங்களும் இமைப்பொழுதில் அழிக்கப்படுகின்றன. போரில் ஈடுபடும் தேசங்களில், உழைக்கும் மக்களே கடும் இழப்புக்கு ஆளாகின்றனர். இது வெற்றி பெற்ற, தோல்வி அடைந்த இரு தேச உழைப்பாளிகளுக்கும் பொருந்தும். ஆனால், சுரண்டும் வர்க்கங்கள் போர்களுக்கு ஆதரவான கருத்துக்களை கட்டமைப்பதில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். அவற்றில் இருந்து விலகி நின்று போர்களை ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும்.

இப்போதைய சூழலில், நாம் ஒரு முக்கியமான உண்மையை கணக்கிலெடுப்பது அவசியம். சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 42% பேர் ரஷ்யாவை இன்னமும் அதுவொரு கம்யூனிஸ்ட் நாடு என்று எண்ணுவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவிலும் பலர் அவ்வாறு நினைக்க வாய்ப்பு உண்டு. ஆனால், இன்றைய ரஷ்யா ஒரு சோசலிச நாடு அல்ல. அங்கு நடக்கும் ஆட்சி முதலாளித்துவ ஆட்சியே. விளாடிமிர் புடின் அந்த  முதலாளித்துவ நாட்டின் தலைவரே.

வரலாற்று பின்னணி:

1917ம் ஆண்டு சோவியத் புரட்சி வெற்றியடைந்த பிறகு, வெவ்வேறு காலகட்டங்களில் அதனோடு 14 குடியரசுகள் இணைந்துகொண்டன. அவை:

1. உக்ரேனியா

2. பைலோரஷ்யா

3. உஸ்பெகிஸ்தான்

4. கஜகஸ்தான்

5. ஜார்ஜியா

6. அஜர்பைஜான்

7. லிதுவேனியா

8. மால்டோவா

9. லத்திவியா

10. எஸ்தோனியா

11. கிர்கிஸ்தான்

12. தஜிகிஸ்தான்

13. துர்க்மெனிஸ்தான்

14. அர்மீனியா

இதுவே பின்னர்  ‘சோவியத் ஒன்றியமாக’ அமைந்தது. ரஷ்ய மொழியோடு சேர்த்து, மேற்சொன்ன 14 தேசங்களின் மொழிகளும் அதிகாரப்பூர்வ மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டன. 15 தேசிய இனங்களை உள்ளடக்கியிருந்ததால் அவ்வப்பொழுது சில முரண்பாடுகள் ஏற்பட்டாலும், பொதுவாக, சோவியத் குடி மக்கள் எனும் அடையாளம் உருவானது. மேலும், சோவியத் யூனியனின் அரசியல் சட்டம் சுயநிர்ணய உரிமையை உள்ளடக்கியிருந்தது. இதன் பொருள் என்னவெனில், எந்த ஒரு குடியரசும் தாம் விரும்பினால் ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்லலாம். இந்த உரிமையை உருவாக்க லெனினும், ஸ்டாலினும் கடுமையாக பாடுபட்டனர். இந்த பிரச்சனையில் லெனினுக்கும், ஜெர்மன் கம்யூனிஸ்டு ரோசா லக்சம்பர்குக்கும் இடையே கடும் விவாதங்கள் நடைபெற்றன. தேசிய இனப்பிரச்சனைகளில் கம்யூனிஸ்டுகளின் நிலையை புரிந்து கொள்ள முயல்பவர்களுக்கு லெனின்-ரோசா லக்சம்பர்க் விவாதங்கள் ஒரு புதையல் எனில் மிகை அல்ல.

சோசலிச சமூக அமைப்பின்  நன்மைகளான வேகமான தொழில் வளர்ச்சி/ விவசாய முன்னேற்றம்/ இலவச கல்வி மற்றும் மருத்துவம்/ உழைக்கும் மக்களின் உரிமைகள் அனைத்தையும் இந்த 14 குடியரசுகளும் பெற்றன. எனினும், 1970களில் சோவியத் ஒன்றியத்தில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி தேக்கமுற்றது. 1980களில் முதலாளித்துவ உலகுடன் ஒப்பிடும் பொழுது அது பின் தங்கியிருந்தது. மின்னணு புரட்சி/ கணிணி மயம் என முதலாளித்துவம் தனது உற்பத்தி சக்திகளை வேகமாக வளர்த்தெடுத்தது. இதனால், கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் சோவியத் ஒன்றியம் இரு சவால்களை சந்தித்தது. ஒன்று, அதன் பொருளாதாரம் கடுமையாக பின்னடைவை எதிர் கொண்டது. இன்னொருபுறம், சோசலிச ஜனநாயகம் சிதைவுகளுக்கு உள்ளானது. ஏகாதிபத்தியமும் தனது தொடர் தாக்குதல்களை பல முனைகளில் முன்னெடுத்தது.

இந்தச் சூழலில் சோசலிசம் பின்னடைவை சந்திப்பதற்கு சற்று முன்னதாக லிதுவேனியா/லத்திவியா/எஸ்தோனியா ஆகிய மூன்று குடியரசுகளும் பிரிந்து போயின. சோசலிசம் பின்னடைவை சந்தித்த பொழுது, அனைத்து குடியரசுகளும் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து, தம்மை தனி சுதந்திர தேசங்களாக அறிவித்து கொண்டன. இதில் உக்ரைனும் அடங்கும். எனினும், இந்த நிகழ்வு வேறு ஒரு பிரச்சனையை உள்ளடக்கியிருந்தது. சோவியத் ஒன்றியம் இருந்த பொழுது, ரஷ்ய மக்கள் வேறு குடியரசுகளுக்கு புலம்பெயர்வதும், ஏனைய குடியரசு மக்கள் ரஷ்யாவுக்குள் வருவதும் பரவலாக நடந்தது. குறிப்பாக, இந்த பரஸ்பர புலம்பெயர்வு ரஷ்யா/உக்ரைன்/பைலோரஷ்யா ஆகிய மூன்று குடியரசுகளிடைய வலுவாக நடந்தது. இதன் விளைவுதான், இன்றைய உக்ரைனின் கிழக்கு பகுதியில் சுமார் 20% பேர் ரஷ்ய மொழி பேசுபவர்களாக உள்ளனர்.

வாக்குறுதி மீறிய ஏகாதிபத்தியம்

அந்த சமயத்தில், சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்த எந்த தேசத்தையும் நேட்டோ எனும் ராணுவ அமைப்புக்குள் இணைக்கக்கூடாது எனவும், ரஷ்யாவின் எல்லை நாடுகளில் நேட்டோ ராணுவத்தையோ அல்லது ஆயுதங்களையோ நிறுத்தக் கூடாது எனவும், ரஷ்யா அமெரிக்காவிடம் முன்வைத்தது. அன்றைய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் பேக்கர் “ரஷ்யா இருக்கும் கிழக்கு நோக்கி ஒரு இன்ச் கூட நேட்டோ விரிவாக்கம் செய்யப்பட மாட்டாது” என வாக்குறுதி அளித்தார். ஆனால் ஏகாதிபத்தியத்தின் பல வாக்குறுதிகள் போல் இதுவும் காற்றில் விடப்பட்டது.  

நேட்டோ என்ற அமைப்பு இரண்டாம் உலகப்போர் முடிந்த  ஆண்டுகளில் (1949) அமெரிக்கா/ பிரிட்டன்/ பெல்ஜியம்/ கனடா/ டென்மார்க்/ பிரான்ஸ்/ ஐஸ்லாந்து/ இத்தாலி/ லக்ஸம்பர்க்/ நெதர்லாந்து/ நார்வே/ போர்ச்சுகல் ஆகிய நாடுகள் சேர்ந்து உருவாக்கிய ராணுவ கூட்டமைப்பு ஆகும். அமெரிக்காவே இந்த அமைப்பின் தலைமை என்பதை கூறத் தேவையில்லை. பின்னர் 1950களில், நேட்டோவுடன் மேற்கு ஜெர்மனி/கிரீஸ் ஆகிய நாடுகளும் 1982இல் ஸ்பெயினும் இணைக்கப்பட்டன. கம்யூனிஸ்ட் நாடுகளிடமிருந்து தம்மை பாதுகாத்து கொள்ளவே இந்த கூட்டமைப்பு என்று நேட்டோ கூறியது. எனவே அதன் எதிர்வினையாக சோவியத் யூனியன்/ கிழக்கு ஜெர்மனி/ அல்பேனியா/ போலந்து/ செக்கோஸ்லேவாகியா/ ஹங்கேரி/ பல்கேரியா/ ருமேனியா ஆகிய சோசலிச நாடுகள் தங்களுக்குள் வார்சா ஒப்பந்த அமைப்பு எனும் கூட்டமைப்பை உருவாக்கின. எனினும், இந்தியா/எகிப்து/யுகோஸ்லவியா/கியூபா/வியட்நாம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் இந்த இரு அமைப்பிலும் சேராமல் அணிசேரா நாடுகளின் அமைப்பை உருவாக்கின.

1991இல் சோவியத் யூனியனும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் சோசலிசத்தை கைவிட்ட பிறகு வார்சா ஒப்பந்த அமைப்பும் இல்லாமல் ஆகியது. நாளடைவில் அணிசேரா அமைப்பும் செயலிழந்துவிட்டது. ஆனால் நேட்டோ தொடர்ந்து விரிவடைந்தது. முதலாளித்துவ நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, தாங்கள்தான் உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் மேலாதிக்கம் பெற வேண்டும் என்று கொண்டிருந்த பேராசையின் வெறிதான் இதற்கு அடிப்படையான காரணம். இந்த வெறியின் ராணுவ முகம்தான் நேட்டோ. எனவே, கிட்டத்தட்ட அனைத்து முன்னாள் சோசலிச நாடுகளையும் நேட்டோ தனது வளையத்திற்குள் கொண்டு வந்தது. பின்னர் எஸ்தோனியா/லத்திவியா/லிதுவேனியா ஆகிய முன்னாள் சோவியத் குடியரசுகளையும் சேர்த்தது. இறுதியாக 2008ஆம் ஆண்டு உக்ரைன் மற்றும் ஜார்ஜியாவை இணைக்கும் விருப்பத்தை வெளிப்படுத்தியது. அன்றிலிருந்துதான் ரஷ்யாவுக்கும் நேட்டோ நாடுகளுக்கும் ஆழமான பிரச்சனைகள் உருவாயின. இந்த பிரச்சனைகளின் மையமாக உக்ரைன் உருவெடுத்தது.

நேட்டோவை நாங்கள் விரிவாக்கம் செய்ய மாட்டோம் என ஒரு போதும் உறுதி அளிக்கவில்லை என இப்பொழுது அமெரிக்கா கூறுகிறது. ஆனால் இது வடிகட்டிய பொய் ஆகும். 1991ஆம் ஆண்டே போலந்து நேட்டோவில் சேர விண்ணப்பித்தது. ஆனால் ஜெர்மனி இதனை கடுமையாக எதிர்த்தது. இது குறித்து அமெரிக்கா/ ஜெர்மனி/ பிரான்சு/பிரிட்டன் ஆகிய நாடுகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் 06.03.1991இல் பான் நகரில் நடந்தது. அதில் ஜெர்மனியின் பிரதிநிதியான  ஜுர்கன் ஸ்ரோபோக் கீழ்கண்டவாறு கூறினார்:

“ஜெர்மனியின் எல்பே நதிக்கு அப்பால் நேட்டோவை விரிவாக்குவது இல்லை எனும் உறுதிமொழியை நாம் ரஷ்யாவுக்கு தந்துள்ளோம். எனவே போலந்தின் கோரிக்கையை நாம் ஏற்க இயலாது”.

1992ஆம் ஆண்டிலிருந்தே பல அமெரிக்க அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் நேட்டோவை கிழக்கே விரிவாக்கம் செய்வது ரஷ்யாவை போருக்கு தள்ளிவிடும் என எச்சரித்துள்ளனர். அந்த எச்சரிக்கைகளில் சில:

  • 1997ஆம் ஆண்டு அமெரிக்காவின் முன்னாள் ராணுவ அமைச்சராக இருந்த ராபர்ட் மக்னமாரா சி.ஐ.ஏ. இயக்குநர் ஸ்டேன்ஸ் டர்னர் உட்பட 12க்கும் அதிகமானவர்கள் இணைந்து பில் கிளிண்டனுக்கு எழுதிய கடிதத்தில் “நேட்டோவை கிழக்கு நோக்கி விரிவாக்கம் செய்வது வரலாற்று பிழையாக மாறி விடும்” என எச்சரித்தனர்.
  • பனிப்போர் காலத்தில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளை வகுத்தவர்களில் ஒருவரான ஜார்ஜ் கேனன் 1990களிலேயே கீழ்கண்டவாறு கூறுகிறார்:

“கிழக்கு பகுதியில் நேட்டோவை விரிவாக்கம் செய்வது பனிப்போரின் பிந்தைய காலகட்டத்தின் மிகப்பெரிய தவறான கொள்கையாகும். இது பல விரும்பத்தகாத விளைவுகளை உருவாக்கும். அமெரிக்க-ரஷ்யா உறவை சீர்குலைத்துவிடும். ரஷ்யா நிரந்தர எதிரியாக ஆகிவிடும்”

  • ரஷ்ய விவகாரங்கள் குறித்த ஆய்வாளர் ஸ்டீபன் கொஹேன் 2014ஆம் ஆண்டு கூறினார்:

“நாம் நேட்டோவை ரஷ்யாவை நோக்கி விரிவாக்கம் செய்வது என்பது பிரச்சனையை ராணுவமயமாக்கிவிடும். ரஷ்யா பின்வாங்காது. வாழ்வா-சாவா போராட்டமாக ரஷ்யா இதனை பார்க்கும்”

  • அமெரிக்காவின் பிரபல வெளியுறவு கொள்கை நிபுணர் ஹென்ரி கிசிங்கர் 2014இல் கூறினார்:

“உக்ரைனை நேட்டோவில் சேர்க்க கூடாது. அவ்வாறு சேர்த்தால் உக்ரைன் கிழக்கு- மேற்கத்திய நாடுகளின் போர்க்களமாக மாறிவிடும். ரஷ்யா நிரந்தரமாக எதிர் தரப்பில் நிற்கும் ஆபத்து உருவாகும்.”

  • 2008ஆம் ஆண்டில் சி.ஐ.ஏ.வின் இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் அமெரிக்க தலைமையகத்துக்கு அனுப்பிய ஒரு குறிப்பில் கீழ்கண்டவாறு கூறுகிறார்:

“உக்ரைனை நேட்டோவில் இணைப்பது குறித்து உக்ரைன் மக்களிடையே செங்குத்தான பிளவுபட்ட கருத்து நிலவுகிறது என ரஷ்யா கவலை அடைந்துள்ளது என நமது நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக உக்ரைனில் உள்ள ரஷ்ய இன மக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இத்தகைய பிளவு கடும் விளைவுகளை உருவாக்கும். மோசமான சூழலில் இது உள்நாட்டு போருக்கும் வழிவகுக்கலாம். அப்படிப்பட்ட நேரத்தில் உக்ரைனில் தலையிடும் முடிவு எடுக்க வேண்டி வரும் என ரஷ்யா கவலைப்படுகிறது. அத்தகைய சூழலை ரஷ்யா விரும்பவில்லை.”

இவ்வளவு எச்சரிக்கைகளையும் அறிவுறுத்தல்களையும் மீறித்தான், நேட்டோ விரிவாக்கம் திட்டமிடப்பட்டது. அமெரிக்க அரசியல் தலைமை தனது மேலாதிக்கத்தை ஐரோப்பாவில் நிறுவுவதற்காக, ரஷ்யாவை போருக்கு தள்ளினால் தவறு இல்லை எனும் முடிவுக்கு வந்தது என்பதையே இது காட்டுகிறது. அமெரிக்க ஏவுகணைகள் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. உக்ரைன் எல்லையிலும் படைகள் நிறுத்தப்படும் என்றால், அது தனது பாதுகாப்பிற்கு ஆபத்து என்று  ரஷ்யா கருதுகிறது. உக்ரைன் எல்லையிலிருந்து ஏவுகணைகள் 10 முதல் 15 நிமிடங்களுக்குள் மாஸ்கோவை தாக்கிவிடும். 2008ஆம் ஆண்டு உக்ரைனையும் ஜார்ஜியாவையும் நேட்டோவில் இணைக்கும் அமெரிக்காவின் விருப்பம் ரஷ்யாவிடம் கடும் எதிர்ப்பை விளைவித்தது. அதே போல் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சமீபத்தில் அணுஆயுதங்களை நிறுவ உக்ரைன் முனைப்புடன் உள்ளது என பேசினார். இவையும் ரஷ்யாவின் அச்சத்தை அதிகரித்தன.

உக்ரைன் அரசியலில் அமெரிக்க தலையீடு

உக்ரைன் நாட்டின் உள் அரசியலில் ஒரு திருப்புமுனையாக 2014ஆம் ஆண்டினை பார்க்கலாம். அதற்கு முன்பாக, 2010இல் நடந்த தேர்தலில் விக்டர் யோனுகோவிச் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதே உக்ரைன் மேற்கு பகுதியும் கிழக்கு பகுதியும் பல்வேறு பண்பாடு, அரசியல் அம்சங்களில் பிளவுபட்டிருந்தன. கிழக்கு பகுதியில் வாழும் மக்கள் ரஷ்ய மொழியும், மேற்கு பகுதி மக்கள் உக்ரைன் மொழியும் பெரும்பான்மையாக பேசுகின்றார்கள். எனவே, கிழக்கு பகுதி மக்கள் ரஷ்யாவின் ஆதரவாளர்களாகவும், மேற்கு பகுதி மக்கள் ரஷ்ய எதிர்ப்பாளர்களாகவும் மாறும் வகையில் பல கருத்துகள் கட்டமைக்கப்பட்டன. இதில் அமெரிக்காவின் பங்கு மிக முக்கியமானது.

ஜனாதிபதி யோனுகோவிச் தொடக்கத்தில் அமெரிக்காவுடன் நட்பு பாராட்டினார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி அமெரிக்க முதலீடுகள் உக்ரைனுக்கு வரவில்லை. எனவே அவர் ரஷ்யாவுடன் முதலீடுகளுக்காகவும், பொருளாதார ஒத்துழைப்புக்காகவும் ஒப்பந்தம் போட்டார். உக்ரைன் தனது பிடியிலிருந்து நழுவுகிறது என்பதை உணர்ந்த அமெரிக்கா, மேற்கு உக்ரைன் மக்களை யோனுகோவிச்சுக்கு எதிராக தூண்டியது. 2014ஆம் ஆண்டில் ஏராளமான கலவரங்கள் நடைபெற்றன. இந்த கலவரங்களை உருவாக்குவதில் உக்ரைன் நாட்டில் இயங்கும் நாஜி ஆதரவாளர்கள் முக்கிய பங்கை ஆற்றினார்கள். “மைதான் புரட்சி” என ஊடகங்களால் அழைக்கப்பட்ட இந்த கலவரங்களின் காரணமாக யோனுகோவிச் பதவி விலகினார். பின்னர் பதவியேற்ற ஜனாதிபதிகள் கிழக்கு உக்ரைன் மக்களுக்கு எதிராக விஷம் கக்கினார்கள். ரஷ்யா மீது வன்மத்தை வெளிப்படுத்தினார்கள். இப்படியான பின்னணியில் கிரீமியா தீவினை ரஷ்யா தன்னோடு இணைத்து கொண்டது. ஏனெனில் ரஷ்யாவின் முக்கிய கப்பற்படை தளம் அங்கு இருந்தது.

டோன்பாஸ் எனப்படும் பகுதியில் உள்ள லுகான்ஸ்க் மற்றும் டோன்டெஸ்க் ஆகிய மாநிலங்களில் உள்ள  ரஷ்ய மொழி பேசும் மக்கள் தங்களுக்குள் பொது வாக்கெடுப்பு நடத்தி தங்களை சுயாட்சி பிரதேசங்களாக அறிவித்து கொண்டன. உக்ரைனில் வாழும் ரஷ்ய மொழி பேசும் மக்கள் தாக்கப்படுவது ரஷ்யாவில் பெரிய தாக்கத்தை உருவாக்கியது. அவர்களுக்கு ரஷ்ய அரசாங்கம் உதவ வேண்டும் எனும் கருத்து மக்களிடையே இருந்தது. இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண 2015ஆம் ஆண்டு மின்ஸ்க் நகரில் உக்ரைன்/ரஷ்யா/பிரான்ஸ்/ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு இடையே பேச்சு வார்த்தைகள் நடந்தன. இறுதியில் ஒரு  ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் முக்கிய அம்சங்கள்;

  • லுகான்ஸ்க் மற்றும் டோன்டெஸ்க் பகுதிகளுக்கு உக்ரைன் அரசாங்கம் சுயாட்சி வழங்குவது. ரஷ்ய மொழியை அங்கீகரிப்பது.
  • லுகான்ஸ்க் மற்றும் டோன்டெஸ்க் மக்கள் பிரிவினை எண்ணத்தை கைவிடுவது. உக்ரைனின் ஒன்றுபட்ட தன்மையை பாதுகாப்பது.

எனினும் இந்த ஒப்பந்தம் அமலாக்கப்படவில்லை. நடைமுறையில் ரஷ்ய மொழி உதாசீனப்படுத்தப்பட்டது. லுகான்ஸ்க் மற்றும் டோன்டெஸ்க் மக்கள் மீது தாக்குதல்களும் தொடர்ந்தன. அன்றிலிருந்து கிழக்கு உக்ரைன் பகுதி மக்கள் மீது உக்ரைன் ராணுவமும், நாஜி சித்தாந்தவாதிகளும் ஏராளமான தாக்குதல்களை நடத்தினர். கடந்த 7 ஆண்டுகளில் சுமார் 18,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நாஜிக்களை ஊக்கப்படுத்திய நேட்டோ

உக்ரைனில் கடந்த 10 ஆண்டுகளாக வலதுசாரி பயங்கரவாதிகளும் நாஜி சித்தாந்தவாதிகளும் பெரும் எண்ணிக்கையில் உருவாகியுள்ளனர். இவர்களை ஆதரிப்போர் உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளனர். நேட்டோவின் ஆய்வு அமைப்பான “அட்லாண்டிக் கவுன்சில்” இவர்களை ஆதரித்தும் புகழ்ந்தும் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.

நாஜி அமைப்புகளில் முக்கியமானது “அசோவ் பட்டாலியன்” என்ற அமைப்பாகும். அசோவ் பட்டாலியன் கோட்பாடுகள் என்ன?

  • உக்ரைன் மக்கள் பரிசுத்த வெள்ளை இனத்தை சேர்ந்தவர்கள்.
  • கிழக்கு உக்ரைனில் வசிக்கும் ரஷ்யர்கள் அசுத்தமான ரத்தம் உடையவர்கள். அவர்கள் உக்ரைனின் பரிசுத்த ரத்தத்தை மாசுபடுத்த முயல்கின்றனர்.
  • எனவே கிழக்கு உக்ரைன் மக்களை அடிமைப்படுத்த வேண்டும். தேவை எனில் அவர்களை படுகொலை செய்ய வேண்டும்.

இட்லரின் பல்வேறு நாஜி அடையாளங்களை இந்த அமைப்பு பயன்படுத்துகிறது. இத்தகைய கோட்பாடுகளை கொண்ட அமைப்பை நேட்டோ அமைப்பு ஆதரித்தது;  இன்றும் ஆதரிக்கிறது. அசோவ் பட்டாலியன் என்ற இந்த அமைப்புதான் 2014ஆம் ஆண்டில் நடந்த கலகங்களில் முக்கிய பங்கை ஆற்றியது. பின்னர் உக்ரைன் ராணுவத்தின் ஒரு பகுதியாக அது இணைக்கப்பட்டது. டோன்பாஸ் பகுதியில் வாழும் ரஷ்ய மொழி சிறுபான்மையினரை கொன்று குவித்ததும் இந்த அமைப்புதான். இந்த அமைப்பின் கொடூரங்கள் அனைத்தும் நேட்டோ அமைப்புக்கு நன்றாக தெரியும். சில அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்த வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தனர். அமென்ஸ்டி மனித உரிமை அமைப்பும் இந்த அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என கோரியது. அமென்ஸ்டி தனது அறிக்கையில் கூறியது:

“பயங்கரவாத அமைப்புகள் செயல்படுத்தும் கட்டுப்படுத்தப்படாத வன்முறையில் உக்ரைன் சிக்கி மூழ்கி கொண்டுள்ளது. கொடூரங்களை நிகழ்த்தும் இந்த அமைப்புகள் எவ்வித தண்டனைக்கும் உள்ளாக்கப்படுவது இல்லை.”

ஆனால், “அசோவ் பட்டாலியன்தான் நாம் ரஷ்யாவுக்கு தரும் பரிசு” என அட்லாண்டிக் கவுன்சில் கருத்து தெரிவித்தது. எத்தகைய வன்மம் நேட்டோவுக்கு உள்ளது என்பதை இதிலிருந்து நாம் அறியலாம்.

அமெரிக்க செனட் நாடாளுமன்ற உறுப்பினர் பாப் மெனென்டஸ் உக்ரைனுக்கு 500 மில்லியன் டாலர் அதாவது சுமார் 3,800 கோடி ரூபாய் அளவுக்கு ஆயுதங்களை வழங்கிட தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். இந்த ஆயுதங்கள் நாஜிக்களின் கைகளுக்கு செல்வதை தடுக்க என்ன வழிமுறைகள் உள்ளன என அவரிடம் கேட்ட பொழுது “நாம் ஏன் அதைப்பற்றி கவலைப்பட வேண்டும்?” என பதில் கூறினார்.

புடினின் தேசிய வெறி

ரஷ்யாவை நேட்டோ சுற்றி வளைப்பதையும் உக்ரைனில் உள்ள ரஷ்ய மொழி சிறுபான்மையினரை பாதுகாப்பதும் முக்கியம்! இது குறித்த புடினின் கவலை நியாயமானது; அது ரஷ்ய மக்களின் கவலையை பிரதிபலிக்கிறது. ஆனால் தனது போர் நடவடிக்கைகளை நியாயப்படுத்த லெனின் மற்றும் ஸ்டாலின் முன்னெடுத்த தேசிய இனக் கொள்கைகளை புடின் இழிவுபடுத்துகிறார். உக்ரைன் எனும் நாடு வரலாற்றில் இருந்ததே இல்லை எனவும், அதனை உருவாக்கியது லெனினும் ஸ்டாலினும்தான் எனவும் புடின் கூறுகிறார்.  சுயநிர்ணய உரிமை தந்தது மிகப்பெரிய தவறு எனவும், அதனால்தான் சோவியத் ஒன்றியம் சிதறுண்டது எனவும் குற்றம் சாட்டுகிறார். “மகா ரஷ்யா” எனும் கோட்பாட்டையும் வலியுறுத்தும் புடின், உக்ரைன் ஒரு தேசமாக நீடிக்க உரிமை இல்லை எனவும் கூறுகிறார்.

புடின் போன்ற முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கு, தேசிய பிரச்சனையில் கம்யூனிஸ்டுகள் முன்வைக்கும் கோட்பாடுகள் பிடிக்காமல் போவதில் ஆச்சர்யம் இல்லை. ஜார் மன்னனின் ரஷ்ய சாம்ராஜ்யம் பல தேசிய இனங்களை அடிமைப்படுத்தியிருந்தது. எனவேதான் “ரஷ்யா தேசிய இனங்களின் சிறைச்சாலை” என லெனின் வர்ணித்தார். சுயநிர்ணய உரிமை வழங்கப்படாவிட்டால் எந்த ஒரு குடியரசும் சோவியத் ஒன்றியத்தில் இணைந்திருக்காது. சோவியத் ஒன்றியம் வெறும் ரஷ்யாவாகவே இருந்திருக்கும்.

தற்போது, “மகா ரஷ்யா” எனும் சாம்ராஜ்யத்தை உருவாக்கும் எந்த வாய்ப்பும் இல்லை என்பதை புடின் உணர மறுக்கிறார். சோவியத் ஒன்றியம் சிதறுண்டது மனித குலத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுதான். ஆனால் அதற்கு காரணம் சுயநிர்ணய உரிமை அல்ல.

ரஷ்யாவின் ராணுவ பாதுகாப்பு மற்றும் உக்ரைனில் உள்ள ரஷ்ய மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு எனும் இரு நோக்கங்களுக்கு அப்பாற்பட்ட  வேறு எந்த இலக்கையும் உக்ரைன் படையெடுப்பு மூலம் சாதிப்பதற்கு புடின் முயன்றால், அது விரும்பத்தகாத விளைவுகளையே தோற்றுவிக்கும். உலகின் இரு மிகப்பெரிய தேசங்களான சீனாவும், இந்தியாவும் மற்றும் சில நாடுகளும் ரஷ்யாவின் நியாயமான கவலையை ஏற்கிறார்கள். அதே சமயம், புடினின் நோக்கம் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி நீளுமானால், உலக நாடுகளின் எதிர்ப்பையே அவர் சம்பாதிக்க நேரிடும்.

பாசிச எதிர்ப்பு போரில் உலக மக்களின் ஆதரவை பெற்றார் ஸ்டாலின். ஆனால் புடின் ஸ்டாலின் அல்ல. உக்ரைனில் ஒருவேளை ரஷ்யா வெற்றியடையுமானால், அதுவும் ஆபத்தான விளைவுகளையே ஏற்படுத்தும்.

முதலாளித்துவ ஜனநாயகத்தின் உண்மை முகம்

ரஷ்ய படைகள் உக்ரைனில் நுழைந்ததுமே பல முதலாளித்துவ  நாடுகளும் பொருளாதாரத்  தடைகளை விதித்தன. இது எதிர்பார்த்த ஒன்றுதான். எனினும், அதன் மூர்க்கத்தனம் எல்லையில்லாமல் விரிவடைந்தது. ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுடனான எண்ணெய் ஒப்பந்தங்களை திரும்ப பெற்றன. ரஷ்யாவில் செயல்பட்ட ஷெல் போன்ற நிறுவனங்கள் தமது செயல்பாட்டை நிறுத்தின. ஆப்பிள் நிறுவனம்/சாம்சங்/வால்வோ இப்படி பலநிறுவனங்கள் வெளியேறின. ரஷ்ய வங்கிகள் ‘ஸ்விப்ட்’ எனப்படும் நிதி பரிவர்த்தனையை பயன்படுத்த முடியாத அளவுக்கு தடைகள் விதிக்கப்பட்டன. ஐரோப்பா மற்றும் அமெரிக்க வான்வெளிகளில் ரஷ்ய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டன. தன்னுடன் முரண்பட்டால் எந்த ஒரு நாட்டையும் மண்டியிட வைக்க முடியும் என முதலாளித்துவ உலகம் முயல்கிறது. கால்பந்து/ஹாக்கி/மோட்டார் பந்தயம்/மாற்று திறனாளிகள் ஒலிம்பிக் போட்டிகள்  என அனைத்து விளையாட்டு போட்டிகளிலுமிருந்து ரஷ்யா வெளியேற்றப்பட்டுள்ளது. ரஷ்யாவின் பூனைகளுக்கும் யோக் மரங்களுக்கும் கூட தடை விதிக்கப்பட்டுள்ளன. இந்த தடைகளால் பாதிக்கப்படப்போவது புடின் அல்லது பிற அரசியல்வாதிகள் அல்ல; ரஷ்ய மக்கள்தான்.

ரஷ்ய ஊடகங்கள் முழுவதும் ஐரோப்பா/அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளன. தொலை காட்சி விவாதங்களில் ரஷ்யாவை சிறிதளவு ஆதரித்து பேசுவோரும் வெளியேற்றப்படுகின்றனர். டோன்பாஸ் பகுதியில் 5 ஆண்டுகளாக ரஷ்ய மொழி பேசும் மக்கள் அடைந்த துன்பங்களை ஆய்வு செய்த ஒரு ஃபிரான்சு பத்திரிக்கையாளர் தனது அனுபவத்தை சொன்னதற்காக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பி.பி.சி./கார்டியன் போன்ற புகழ்பெற்ற ஊடகங்கள் கூட பொய்ச் செய்திகளை தாராளமாக பரப்பின. முதலாளித்துவ ஊடகங்கள் தமது அரசுகளின் கருத்துகளை மட்டுமே மக்கள் கேட்க வேண்டும் என எண்ணுகின்றன. எதிர்த்தரப்பு கருத்துகளை மக்கள் கேட்க கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டுள்ளன. இது முதலாளித்துவ ஜனநாயகம். இந்த ஜனநாயகத்தில் மாற்று கருத்துக்கு இடமில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தப் போர் முதலாளித்துவத்தின் நிறவெறியை  வெளிப்படுத்தியுள்ளது. ஒரு தொலைகாட்சி செய்தியாளர் கூறினார்:

“இது சிரியாவோ அல்லது ஆப்கானிஸ்தானோ அல்ல; நாகரிக ஐரோப்பா. இங்கு தாக்குதல் நடக்கிறது”

அப்படியானால் சிரியாவும் ஆப்கானிஸ்தானும் நாகரிகமற்ற காட்டுமிராண்டி தேசங்களா?

இன்னொரு செய்தியாளர் கூறினார்:

“நெஞ்சம் பதைக்கிறது. ஊதா கண்களும் பொன் நிறத்திலான முடியையும் உடைய மக்கள் தாக்கப்படுகின்றனர்.”

அப்படியானால் மற்றவர்கள் தாக்கப்பட்டால் பரவாயில்லையா? ஆம். அப்படிதான் அந்த  ஊடகங்கள் முன்வைக்கின்றன.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த அதே நாளில் அமெரிக்க விமானங்கள் சோமாலியா மீது குண்டு பொழிந்தன. அமெரிக்க ஆதரவுடன் சவூதி படைகள் ஏமன் மீது தாக்குதலை நடத்தின. இஸ்ரேல் விமானங்கள் பாலஸ்தீனம் மீது தாக்குதல்கள் நடத்தின. இஸ்ரேல் ராணுவத்தினர் 15 வயது பாலஸ்தீன் பெண்ணை சித்திரவதை செய்து கொன்றனர். இது குறித்த காணொளி பரவலாக வலம் வந்தது. அமெரிக்காவின் ஆசியோடு ஏமன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3,00,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 70% பேர் குழந்தைகள். ஆனால் இவை குறித்து முதலாளித்துவ ஊடகங்களில் ஒரு விவாதம் கூட  இல்லை. 

மேற்கத்திய ஊடகங்களின் செய்தி மற்றும் கட்டுரைகள் வெளியிடப்பட்டதில் பாரபட்சத்தை பாருங்கள்:

  • உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதல்- 1400
  • சவூதி ஏமன் மீது தாக்குதல்-0
  • இஸ்ரேல் சிரியா மீது தாக்குதல்- 5.

சிறிது நாட்கள் முன்புவரை அரேபிய அல்லது ஆப்பிரிக்க அகதிகளுக்கு அனுமதியில்லை என கூறிய போலந்து போன்ற நாடுகள் இன்று உக்ரைன் அகதிகளை இரு கரம் கூப்பி வரவேற்கின்றன. ஆஸ்திரேலியாவில் உள்ள ரஷ்ய தூதரகத்துக்கு வெடி பொருட்கள் பார்சல் அனுப்பப்பட்டன. நெதர்லாந்தில் ரஷ்யர்களுக்கு சொந்தமான உணவுவிடுதி தாக்கப்பட்டது. அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் ரஷ்யாவை சேர்ந்த எவராவது புடினை கொன்று விடுவது ரஷ்யாவின் எதிர்காலத்துக்கு நல்லது என பகிரங்கமாக கூறியுள்ளார். இவையெல்லாம் முதலாளித்துவ ஜனநாயகத்தின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டுகிறது.

முதலாளித்துவம் கைவிட்ட முதலாளித்துவ குழந்தை

ரஷ்யா சோசலிசத்தை கைவிட்ட பொழுது அதன் ஒரே கனவு முதலாளித்துவ உலகம் தன்னை சம பங்காளியாக கருதி அரவணைத்து கொள்ளும் என்பதுதான். அந்த விருப்பத்துடனேயே அனைத்து அரசு நிறுவனங்களும் தனியார்மயமாக்கப்பட்டன. கம்யூனிச கருத்துகளும் அவற்றை கடைப்பிடிப்போரும் வேட்டையாடப்பட்டனர். லெனின் மற்றும் ஸ்டாலின் சிலைகள் உடைக்கப்படடன. தாராளமய பொருளாதார கொள்கைகள் அமலாக்கப்பட்டன. அந்தோ பரிதாபம்! முதலாளித்துவ உலகம் ரஷ்யாவை தனது சம பங்காளியாக பார்க்கவில்லை. மாறாக தனக்கு அடிபணிந்து இருக்கும் ஒரு நாடாக ரஷ்யா இருக்க வேண்டும் என்றே கருதியது.

மார்க்சிய ஆய்வாளர் டேவிட் ஹார்வி ஒரு சுவையான ஒப்பீட்டை முன்வைக்கிறார். இரண்டாம் உலகப்போரில் துவம்சம் செய்யப்பட்ட நாடுகள் ஜப்பானும் ஜெர்மனியும். ஆனால் இந்த இரு நாடுகளையும் மறுநிர்மாணம் செய்ய ஏராளமான நிதி உதவிகளை முதலாளித்துவ உலகம் செய்தது. அதற்கு “மார்ஷல் திட்டம்” எனவும் பெயரிட்டது. ஆனால் சோசலிசத்தையே தூக்கி எறிந்த ரஷ்யாவுக்கு எந்த உதவியும் செய்யப்படவில்லை. குறைந்தபட்சம் ஐரோப்பிய நாடுகள்  கூட ரஷ்யாவை அரவணைக்க முன்வரவில்லை.

அதே சமயத்தில் சோவியத் ஒன்றியத்தின் ஒரு வலிமையே ரஷ்யாவை தொடர்ந்து பாதுகாத்தது. அதுதான் ராணுவ வலிமை. புடினை பார்த்து ஓரளவு முதலாளித்துவ நாடுகள் அச்சப்படுகின்றன என்றால் அதற்கு முக்கிய காரணம்   ராணுவ வலிமைதான்! இதற்கு புடின் ஸ்டாலினுக்கும் அவருக்கு பின்னால் ஆட்சியிலிருந்த ஏனைய கம்யூனிஸ்டு தலைவர்களுக்கும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டவர். “சமாதானத்துக்கு சமாதானம்! ஏவுகணைக்கு ஏவுகணை” என முழக்கமிட்ட யூரி ஆண்ட்ரோபோவ் போன்றவர்கள்தான் இந்த ராணுவ வலிமையை உருவாக்கினர்; பாதுகாத்தனர். இப்போது இந்த ராணுவ வலிமையைதான்  முதலாளித்துவ நாடுகள் சிதைக்க முயல்கின்றன.

இந்த போர் எப்படி முடியும் என்பது இக்கட்டுரை எழுதப்பட்ட சமயத்தில் தெளிவற்றதாகவே இருந்தது. எனினும், ஏற்கெனவே இரு தரப்பிலும் ஏராளமான உயிர்கள் பலியாகியுள்ளன. உக்ரைனின் ஆலைகளும் கட்டடங்களும் கடும் சேதத்தை சந்தித்துள்ளன.

உலக அளவில் கம்யூனிஸ்டுகள் ஒரே குரலில்தான் ஒலிக்கிறார்கள்:

  • போர் தொடர்வதில்  எந்த நியாயமும் இல்லை. போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். 
  • நேட்டோ தனது விரிவாக்கத்தை கைவிட வேண்டும்.
  • ஐரோப்பாவில் உள்ள அணு ஆயுதங்கள் அகற்றப்பட வேண்டும்.
  • உக்ரைனில் ரஷ்ய மொழி பேசும் மக்களின் வாழ்வும் பண்பாடும் பாதுகாக்கப்பட வேண்டும்.
  • உக்ரைன் சமாதான வழியில் பயணிப்பதை உத்தரவாதம் செய்யவேண்டும்.

இதுதான் சரியான பார்வையாக இருக்க முடியும்.

ஆதாரங்கள்: Consortiumnews/ Fair.org/davidharvey.org/Mint Press/MR online/ Newsclick/ RT.com/ Tricontinental newsletter/multipolarista.

உக்ரைன் – அரங்கேறும் ஏகாதிபத்திய நாடகம்

பாலசுப்பிரமணியன்

முந்தைய பனிப்போர் அரசியலுக்குப் பிறகு கிழக்கு – மேற்கு நாடுகளிடையே மிகப்பெரும் நெருக்கடி உருவாகி வருவதாக வரலாறு ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

உக்ரைனில் தற்போது ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியிருப்போருக்கும் எதிர்த்து நிற்கும் ரஷ்ய ஆதரவாளர்களுக்குமிடையே கடும் மோதல் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன; உக்ரைனின் தென்பகுதியில் உள்ள நகரமான ஒடிச்சாவில் ஒரு தொழிற்சங்க கட்டிடத்திற்குள் அரசுக்கு எதிர்ப்பாளர்களாக இருந்த 42 பேர் உயிரோடு கொளுத்தப்பட்டனர். சென்ற பிப்ரவரி மாதம் ரஷ்ய ஆதரவாளர் என கருதப்பட்ட உக்ரைனின் ஆட்சித் தலைவர் விக்டர் யானுகோவிச் அப்பொறுப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு மிகவும் மோசமான அரசியல் சூழல் உருவாகியுள்ளது. உள்நாட்டுப் போர் விரிவாக நடத்தப்படுமென்றும் உக்ரைன் பல துண்டுகளாக சிதைந்து போகுமென்றும் அரசியல் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவை திடீரென்று வெடித்த நிகழ்வுகள் அல்ல. நீண்ட காலமாக தீட்டப்பட்ட ஏகாதிபத்திய சதித் திட்டத்தின் விளைவுகளை உக்ரைன் சந்திக்கிறது.

ஒரு பின்னோக்கி பயணம்

சோவியத் யூனியனின் ஒரு குடியரசாக உக்ரைன் இருந்தது. 360 ஆண்டுகளுக்கு முன் ரஷ்யப் பகுதியாக அது இணைக்கப்பட்டது. வரலாற்று ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் ரஷ்யாவுடன் உக்ரைன் பலமான இணைப்பை பெற்றிருந்தது. சோவியத் ஆட்சிக் காலத்தில் ரஷ்யப் பகுதிக்கு அடுத்தாற்போல் மிகப் பெருமளவில் பொருளாதார வளர்ச்சியினை பெற்ற குடியரசாக இருந்தது. சோவியத் யூனியன் சிதைவுக்குப் பிறகு நிலைமை பெருமளவு மாறிவிட்டது. ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளைக் காட்டிலும் பொருளாதார மேன்மை பெற்றிருந்த உக்ரைன் அந்த நிலையிலிருந்து கீழிறங்கத் தொடங்கியது; பொருள் உற்பத்தி, விவசாய உற்பத்தி என்ற அனைத்து அம்சங்களிலும் நெருக்கடியினை சந்தித்தது. சோசலிச அமைப்பை கைவிட்டு முதலாளித்துவ – புதிய தாராளமயக் கொள்கைகளை உக்ரைன் ஏற்றுக் கொண்டதன் விளைவுகளை அந்த குடியரசு சந்தித்தது.

மக்களுக்கெதிரான சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டிய நிர்பந்தம் அரசுக்கு வந்தது. ஊழல், விபச்சாரம், போதை, மருந்து விற்பனை போன்ற சமூக கேடுகள் பரவத் தொடங்கின. மக்களின் உடல்நலன், வீட்டுவசதி போன்ற சமூகத் தேவைகளுக்கான சேவைப்பிரிவுகள் குறைக்கப்பட்டன. அதிகார வர்க்கத்தோடு இணைந்து சிலர், சில குழுக்கள் செல்வச் செழிப்பில் வளர்ந்தனர். இவர்கள் தான் யானுகோவிச்சின் பிரதேசங்களின் கட்சிக்கு (Party of Regions) ஆதரவாளர்கள், அதன் எதிர்ப்பாளர்களையும் அவர்கள் சரியாகவே கவனித்துக் கொண்டார்கள். உக்ரைனை மேற்கு நோக்கி நகர்த்தி ஐரோப்பிய யூனியனோடு சேர்த்துவிட வேண்டுமென்று இவர்கள் அழுத்தம் கொடுத்தார்கள்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள குறைந்தபட்சம் 15 பில்லியன் டாலர் தேவைப்படும் என மேலை நாடுகளின் பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்தனர். சர்வதேச நிதி நிறுவனத்தை அணுகிய போது, எரிவாயு பயன்பாட்டிற்காக மக்களுக்காக கொடுக்கப்படும் மானியத்தை நீக்க வேண்டும் என அது நிபந்தனை விதித்தது; அதை செயல்படுத்தினால் அதன் விலை 40 சதவிகிதம் உயரும். உக்ரைனின் அன்னிய செலாவணி கையிருப்பு 12 பில்லியன் டாலராக குறைந்தது; உக்ரைனின் நாணயமான ரைவ்னியா (Hryvnia) கடுமையாக வீழ்ச்சியடைந்தது. ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியம் கொடுக்கக் கூட போதுமான நிதி அரசு கருவூலத்தில் இல்லை. சொல்லொணா துயரத்திற்கு உட்பட்ட மக்கள் கிளர்ச்சியில், போராட்டங்களில் ஈடுபட்டனர். பல நகரங்கள் போராட்ட களங்களாக மாறின. தலைநகர் கீவில் இளைஞர்கள் நவம்பர் 30, 2013ல் நடத்திய அமைதியான ஆர்ப்பாட்டத்தில் காவல்துறை நடத்திய வன்முறை தாக்குதல் நிலைமையினை மேலும் மோசமாக்கியது. யானு கோவிச் ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்தன.

ஆனால் இந்த போராட்டங்களை நாஜி பாரம்பரியத்தில் வளர்ந்த கட்சிகள் பயன்படுத்திக் கொண்டன. வலதுசாரி கட்சியான ஸ்வோபோடா கட்சி அதில் முக்கிய பங்கு வகுத்தது. இதற்கிடையில் யானுகோவிட்ச் இந்த நிதிநெருக்கடியிலிருந்து மீள ஒரு பக்கம் ஐரோப்ப யூனியனுடனும் மறுபக்கம் ரஷ்யாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். ஐரோப்பிய யூனியன் விதித்த சிக்கன நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்வதில் யானு கோவிட்சுக்கு தயக்கம் இருந்தது; முடிவில் ஐரோப்பிய யூனியன் ஆலோசனைக்குட்படாது, ரஷ்யாவோடு ஒப்பந்தம் செய்து கொண்டார். போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ரஷ்ய அதிபர் புதின் முயற்சியால் பிப்ரவரி 21, 2014 ஒரு அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி உக்ரைன் அரசு (யானுகோவிட்ச்) தனது படைகளை திரும்ப அழைத்துக் கொண்டது. ஆனால் எதிர்ப்பு சக்திகள் அதை மீறி அரசு அலுவலகங்களை கைப்பற்றின. யானுகோவிட்ச் கீவ் நகரை விட்டு வெளியேற நேர்ந்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் முழு அங்கீகரிப்போடு அது நடந்து முடிந்தது. மே 25ல் அதிபருக்கான தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்போடு இடைக்கால அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டது. ரஷ்ய மொழியினை அரசாங்க மொழி அந்தஸ்திலிருந்து நீக்கியது தான் இடைக்கால அரசாங்கம் எடுத்த முதல் நடவடிக்கை 46 மில்லியன் மக்களில் 17 சதம் மக்கள் ரஷ்ய மொழி பேசுபவர்கள் அண்மையில் அங்கே நடத்தப்பட்ட ழுயடடரயீ ஞடிடட, என்கிற பொது வாக்கெடுப்பில் 83 சதம் மக்கள் ரஷ்ய மொழியினை தாங்கள் பேசும் மொழியாக கருத்து தெரிவித்தார்கள். இடைக்கால அரசில் உள்ள 4 அமைச்சர்கள் நாஜி சித்தாந்தம் கொண்ட அமைப்பை சேர்ந்தவர்கள். அவர்கள் நடத்திய கலவரத்தில் கீவ் நகரில் லெனின் சிலையினை கீழே தள்ளி சுகம் கண்டவர்கள்.

அமெரிக்காவின் தலையீடு

2004-05ல் உக்ரைனில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் ஆரஞ்சு புரட்சி என்று வருணிக்கப்பட்டது. அப்போது மேலை நாடுகளின் ஆதரவாளரான யூலியா டிமொஷெங்கோ அரசு பொறுப்பில் இருந்தார் (பின்பு அவர் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்கு அனுப்பப்பட்டார். யானு கோவிட்ச் தற்போது வெளியேறியவுடன் ஜெர்மனியின் ஏஞ்சலா மெர்க்கல் ஆசியுடன் விடுதலை பெற்று அரசியல் களத்தில் இறங்கியுள்ளார்). அந்த மாற்றத்தை அமெரிக்கா எப்படி பார்த்தது? உக்ரைனின் எதிர்காலமும் அமெரிக்க நலன்களும் என்பதைப் பற்றி 2004ல் அமெரிக்க காங்கிரஸ் விவாதித்து அறிக்கை வெளியிட்டது. உக்ரைனில் ஒரு நிலையான ஜனநாயக மற்றும் வளமான குடியரசை உருவாக்கி, வலுப்படுத்தி அதனை ஐரோப்பா மற்றம் ஐரோப்பா – அட்லாண்டிக் கூட்டணியில் இணைப்பதற்கான அமெரிக்க கொள்கையில் கவனம் செலுத்த வேண்டும்….கீவ் (உக்ரைன்) “வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகள்” (North Atlantic Treaty Organisation – NATO) அமைப்பில் உறுப்பினராக சேர்வதற்கு அதற்கு உதவி செய்வதற்கான வழிமுறைகளை நாம் தேட வேண்டும் ஏன் அமெரிக்காவுக்கு இவ்வளவு அக்கறை? அதையும் தெளிவுபடுத்துகிறது அந்த காங்கிரஸ் அறிக்கை அந்த உக்ரைன் ஐரோப்பாவின் நிலைத்த பாதுகாப்பிற்கு உதவிகரமாக இருக்கும். பல்கிப் பெருகும் பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் நடத்தும் போர் போன்ற புதிய சவால்களை சந்திப்பதில் அது நமது கூட்டாளியாக இருக்கும்; பொருளாதாரம், வணிகம் மற்றும் முதலீடுகள் தொடர்பான விஷயங்களில் பரஸ்பரம் பலனடையும் மாற்றங்களை கொண்டு வர அதற்கு நிறைய வாய்ப்புண்டு நினைவில் கொள்ள வேண்டிய தகவல் உண்டு. ஈராக்கின் மீது அமெரிக்கா படையெடுத்த போது உக்ரைன் அதற்கு துணையாக 1600 ராணுவ வீரர்களைஅனுப்பியது; அங்கு போன மிகப்பெரிய படைப் பிரிவினரில் இதுவும் ஒன்று. ஆப்கன் யுத்தத்தில் உக்ரைன் கொடுத்த மதிப்பு மிக்க உதவிக்கு அந்த காங்கிரஸ் நன்றி தெரிவித்தது.

யானுகோவிட்ச் வெளியேறியவுடன் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினபோது அமெரிக்காவின் துணைச் செயலர் திருமதி விக்டோரியா நுலண்ட் உக்ரைனில் உள்ள அமெரிக்க தூதர் ஜாஃப்ரி ப்யாட்டுடன் பேசிய உரையாடல்களில் உக்ரைன் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தொடர்ந்து தலையிட்டுக் கொண்டிருந்ததை வெளிப்படுத்தியது. யானுகோவிட்ச் இடத்திற்கு யார் வர வேண்டுமென்பதைப் பற்றி இருவரும் பேசியது வெளிவந்திருக்கிறது. திருமதி நுலண்ட் டிசம்பர் (2013) மாதத்தில் அமெரிக்கா வளமான ஜனநயாக உக்ரைனை பாதுகாக்க 5 பில்லியன் டாலர் முதலீடு செய்திருக்கிறது என அறிவித்தார். உக்ரைன் அரசுக்கு எதிராக கீவ் நகரின் மைதானத்தில் இருந்த கிளர்ச்சியாளர்களை குறிப்பாக நாஜி கட்சியான ஸ்வோபோடா கட்சியின் உறுப்பினர்களை இந்த இரு அதிகாரிகளும் சந்தித்து ரொட்டி வழங்கினர் என்பதும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உக்ரைனை எப்படியாவது நேடோ அமைப்புக்குள் கொண்டு வந்து விட வேண்டுமென்ற ஏகாதிபத்தியத்தின் ஆசை தெளிவாக வெளிப்படுகிறது. அண்மையில் கிடைத்த செய்தி. அமெரிக்காவின் உளவுத்துறை அமைப்புகளான குக்ஷஐ மற்றும் ஊஐஹ உக்ரைன் இடைக்கால அரசுக்கு ஆலோசனைகள் வழங்கிக் கொண்டிருக்கிறது என்ற செய்தி தான் அது. அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் உக்ரைனில் உள்ள வலதுசாரி – நாஜி சக்திகளுக்கு ஆதரவு கொடுப்பதுமல்லாது அவர்களின்தலைமையில் மே 25 தேர்தலை நடத்தி முடித்து விட வேண்டுமென துடிக்கின்றன.

ரஷ்யாவின் அணுகுமுறை

உக்ரைன் ரஷ்யாவுடன் நீண்ட கால இணைப்பை பெற்றிருந்தது என முன்பே குறிப்பிடப்பட்டுள்ளது – உக்ரைனில் வாழும் ரஷ்யர்களைப் பற்றிய கவலை ரஷ்யாவுக்கு உள்ளது. அங்கே நிகழ்ந்து வரும் அரசியல் மாற்றங்களுக்கு தலைமை வகிக்கும் யூலியா டிமொஷெங்கோ ரஷ்யர்கள் அழிக்கப்பட வேண்டும் என்ற ரஷ்ய மொழியில் வெளியிட்ட அறிவிப்பை கேட்ட பிறகு ரஷ்யாவின் கவலை அதிகரித்திருக்கும். ஹிட்லரின் நாஜி படைகளின் கொலை வெறித் தாண்டவமாடிய பிரதேசம் உக்ரைன். அதன் தலைநகரான கீவில் பாபியார் என்பது ஒரு பகுதி. அங்கே தான் இரண்டாம் உலகப் போர் காலத்தில் செப்டம்பர் 29-30, 1941ல் நாஜி படைகள் ஒரே ராணுவ நடவடிக்கையில் 33771 யூதர்களை படுகெலை செய்தனர். யூதர்களை அழித்தொழிக்கும் களப் பலியில் இதுதான் மிகப் பெரிய அழிப்புச் செயல் என்று வரலாறு கூறுகிறது. நாஜி படைகளும் அதற்கு துணை நின்றவர்களும் சோவியத் யூனியனை அழித்து விட வேண்டும் என்ற நோக்கோடு எடுக்கப்பட்ட போர் நடவடிக்கையின் ஒரு பகுதி அது. ஜெர்மனியின் கட்டுப்பாட்டில் உக்ரைன் இருந்த பொழுது சுமார் 150,000 பேர் பாபியாரில் கொல்லப்பட்டிருக்கின்றனர்; கம்யூனிஸ்டுகள், ஜிப்சி என்று அழைக்கப்படும் நாடோடி மக்கள் உக்ரேனிய தேசியவாதிகள் பிணையக் கைதிகளாக வைக்கப்பட்ட பொதுமக்கள் யாவரும் அதில் அடங்குவர். 2 கோடி மக்களை அந்த போரில் இழந்த சோவியத் யூனியன் நாஜிக்களின் அரசியல் ராணுவ வழிமுயினை அனுபவத்தில் கண்டது. சோவியத் யூனியன் இன்று இல்லை; ஆனால் அந்த கொடுமையினை சந்தித்த ரஷ்யாவும் உக்ரைனும் இருக்கின்றன. எந்த மனிதர்கள், குழுக்கள், அமைப்புகள் ஜெர்மன் உக்ரைனை ஆக்கிரமித்ததற்கு ஆதரவு தெரிவித்தார்களோ அவர்கள் இன்று இடைக்கால அரசில் முக்கிய பொறுப்பாளர்களாக உள்ளனர் என்பதை ரஷ்யா கவலையோடு பார்ப்பதில் ஆச்சரியமேதுமில்லை.

பனிப்போரில் தாங்கள் வெற்றி பெற்று விட்டோம் என்ற களிப்பில் (சோசலிச உலக பின்னடைவை சந்தித்ததால்) ரஷ்யாவை வீழ்ந்து விட்ட எதிரியாக அமெரிக்காவும் மேலை நாடுகளும் பார்க்கத் துவங்கின. கொடுத்த வாக்குறுதிகள் சிதைக்கப்பட்டன. பெர்லின் சுவரை உடைப்பதற்கும் கிழக்கு மேற்கு ஜெர்மனி இணைப்பதற்கும் ஒப்புக் கொண்டால் நேடோ கலைக்கப்படும் என்ற வாக்குறுதி கோர்ப்பசேவுக்கு கொடுக்கப்பட்டது; யெல்ட்சினுக்கும் அந்த வாக்குறுதி கொடுக்கப்பட்டது. ஆனால் நேடோ போலந்து, பல்கேரியா, ருமேனியா, பால்டிக் நாடுகள் ஆகியவற்றைத் தாண்டி உக்ரைனை தட்டிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது புடினும் ஏமாற்றப்பட்டிருக்கிறார். முன்பே நாம் பார்த்த பிப்ரவரி 21 அமைதி ஒப்பந்தத்திற்கு புடினின் உதவியை நாடிய ஐரோப்பிய யூனியன் அதை அப்பட்டமாக மீறுவதற்கு எதிர்ப்பாளர்களை அனுமதித்தன; சட்ட ரீதியான யானுகோவிட்ச் அரசு கவிழ்க்கப்பட்டது. இப்படி ஒன்றன் பின் ஒன்றாக வாக்குறுதிகள், ஒப்பந்தங்கள் மீறப்படுவதைப் பார்த்த பிறகு புடின் உக்ரைனில் அமெரிக்க – ஐரோப்பிய யூனியன் தலையீடு ரஷ்யாவை தங்களின் கட்டுக்குள் வைக்கும் முயற்சியின் ஒரு நடவடிக்கை என்று பார்த்தார்.

மிகவும் துரிதமாக செயல்பட்டு கருங்கடலில் உள்ள 1954ல் குருஷ்சேவால் உக்ரைனோடு இணைக்கப்பட்ட கிரிமீயா தீபகற்ப பகுதியினை ரஷ்ய பாராளுமன்ற ஒப்புதலோடு ரஷ்யா எடுத்துக் கொண்டது. ஏற்கனவே அதை உக்ரைன் ஒரு விசேஷ ஒப்பந்தத்தில் ரஷ்யப் படைகள் அங்கு வைக்கப்படுவதற்கு அனுமதி அளித்திருந்தது. கருங்கடல் பகுதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த செவஸ்டபோல் துறைமுகம் கிரிமீயாவில் தான் உள்ளது, அது ரஷ்யாவின் கடற்படை தளமாக 2042 வரை செயல்பட ஒப்பந்தம் உள்ளது. இடைக்கால அரசு அதை நிராகரிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். உக்ரைனை நேடோவிற்குள் இழுப்பதில் நேடோ வெற்றி பெற்றால் அந்த இடத்தில் அமர்ந்து 425 கி.மீ. தூரத்தில்உ ள்ள மாஸ்கோவை குறி வைக்கும், கருங்கடல் பகுதியிலிருந்து ரஷ்யாவை வெளியேற்றும். ஆகவே தான் ரஷ்யா அந்தப் பகுதியை அதன் கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வந்தது.

அந்த பகுதியில் மீண்டும் சோவியத்தை உருவாக்கும் முயற்சி என்று ஹிலாரி கிளிண்டன் பதறினார். நாம் எந்த தவறினையும் செய்ய முடியாது. அவர்களின் இலக்கு என்ன என்பது நமக்குத் தெரியும். அதன் வேகத்தைக் குறைத்து தடுத்து நிறுத்துவதற்கான ஆற்றல் வாய்ந்த வழிமுறைகளை நாம் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறினார். ஆற்றல் வாய்ந்த என்றால் என்ன பொருள்? முந்தைய சோவியத் யூனியனின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதார கட்டமைப்பைக் கொண்டிருக்கும், பெருமளவில் ரஷ்யாவை சார்ந்திருக்கும் உக்ரைனை (ரஷ்ய எரிவாயு பாதி விலைக்கு உக்ரைனுக்கு வழங்கப்படுகிறது) கட்டி இழுத்து ரஷ்யாவின் தாக்கத்திலிருந்து வெளியே கொண்டுவருவது மட்டுமல்ல, நெருக்கடியில் உள்ள ஐரோப்பிய யூனியன் நாடுகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உக்ரைனை ஒரு புதிய சந்தையாக இணைத்துக் கொள்வது என்பது தான் அதன் பொருள். கிரிமீயா நாடாளுமன்றம் மக்களிடையே நடத்திய வாக்கெடுப்பில் 90 சதவிகிதத்திற்கும் மேலாக மக்கள் கிரிமீயா ரஷ்யாவுடன் இணைவதை உறுதிப்படுத்தினர். உக்ரைனின் கிழக்கு, தென்கிழக்கு பகுதிகளில் உள்ள நகரங்களில் இடைக்கால அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெறுகின்றன; சில நகரங்கள சுயாட்சி பகுதிகாளக அறிவித்துக் கொண்டன. உக்ரைன் பல்வேறு பகுதிகளாக பிளவுப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உக்ரைனில் எழுந்துள்ள நிலைமைகளை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யா மூன்று ஆலோசனைகளை முன்வைக்கிறது. முதலாவதாக உக்ரைன் மக்கள் தொகை பல்வேறு வேற்றுமைகளை உள்ளடக்கியது. மொழி, இனம், கலாச்சார வேற்றுமைகள் இருந்தாலும் ஸ்லாவிக் இன மக்கள் என்ற அடிப்படையில் ரஷ்ய மொழி பேசுவோரும் உக்ரேனிய மொழி பேசுவோரும் கலந்து வாழும் வாழ்க்கை முறையும் உண்டு. ஆகவே ஒரு கூட்டாட்சி அமைப்பினை உருவாக்கி அதற்கான அரசியல் சட்டத்திருத்தங்களை மேற்கொண்டு, சுயாட்சி உரிமையினை அளித்து அதன் ஒற்றுமையினை பாதுகாக்கலாம்.

இரண்டாவதாக, நேடோ படைகள் கிழக்கு நோக்கி நகர்வதற்கான எந்த அடிப்படை நியாயமும் இல்லை. அப்படி நகருமேயானால் நாடுகளுக்கிடையே (ரஷ்யா உட்பட) உறவுகள் கடுமையாக பாதிக்கும் என ரஷ்யா எச்சரிக்க விரும்புகிறது.

மூன்றாவதாக, சோவியத் யூனியன் சிதைவுக்குப் பிறகு ரஷ்ய மொழி பேசும் மக்கள் அந்தந்த நாடுகளில், குறிப்பாக உக்ரைன், லாட்வியா வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நலன்களை பாதுகாக்கும் உரிமை, கடமை தங்களுக்கு இருப்பதாக ரஷ்யா அறிவிக்கிறது.

இந்த ஆலோசனைகளில் உள்ள அம்சங்களை விவாதித்து முடிவு காண வேண்டும் என்ற கருத்து அரசியல் அரங்கில் முன்வைக்கப்படுகிறது.

உள்ளடக்கிய அரசியல் அம்சங்கள்

அண்மையில் அமெரிக்க அதிபர் ஆசிய திருகுமுனை மையம் (Asian Pivot) உருவாக்கப்படுவது பற்றி பேசினார்; அதன் நோக்கம் சீனாவை சுற்றி வளைத்து அதன் கழுத்தை நெரிப்பது என்பது தான். இப்பொழுது அமெரிக்காவின் ஐரோப்பிய திருகுமுனை மையம் (European Pivot) உருவாக்கிறது. இதன் நோக்கம் ரஷ்யாவை சுற்றி வளைப்பது – அதாவது ரஷ்யாவுக்கும் விரிவாக ரஷ்யாவை நோக்கி முன்னேறியிருக்கும் நேடோ அமைப்புக்கும் இடையே உள்ள முக்கிய பகுதியினை (உக்ரைனை) வசப்படுத்தினால் சுற்றி வளைக்கும் திட்டம் முழுமை பெறும் என்பது தான்.

உக்ரைன் தற்பொழுது பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இதுவரை ரஷ்யாவின் தாராளமான உதவி அதை நிமிர்ந்து நிக்க செய்திருந்தது; கடந்த 20 ஆண்டுகளில் ரஷ்யா அதன் எண்ணெய் மற்றும் எரிவாயு வணிகத்தில் 200 பில்லியன் டாலர் அளவுக்கு மானியமும், விலை குறைப்பும் அளித்து உதவியிருக்கிறது. சிக்கன நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற நிபந்தனையோடு ஐ.எம்.எப். உதவக் கூடும். ரஷ்ய உதவி நிறுத்தப்படுமேயானால் மிகப் பெரிய பேரழிவை உக்ரைன் சந்திக்கும். இந்நிலையில் ஐ.எம்.எப்.பும் நுழைந்து. நேடோ ராணுவமயமாக்கலும் நடைபெறுமானால் உக்ரைன் ஒரு உள்நாட்டுப் போரை சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் அண்மையில் நடந்த வாக்கெடுப்பில் 70 சதம் மக்கள் உக்ரைன் நேடோவில் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 56 சதம் மக்கள் சோவியத் சிதைவு மிகப்பெரிய அழிவு என்றும் வாக்களித்துள்ளனர்.

ஐரோப்பாவில் ஒரு புதிய மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நாஜி என்றும் பாசிஸ்ட் என்று அழைக்கப்பட்டவர்களெல்லாம் தங்களை தேசியவாதிகள் என்று குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். ஊடகங்கள் கூட அவர்களை வலதுசாரி தேசியவாதிகள் என்று குறிப்பிடுகின்றன. பெயர் மாற்றம் உள்ளுரைந்து கிடக்கும் பாசிச வெறித் தன்மையினை மாற்றி விடுவதில்லை. ஹங்கேரி, குரோஷியா, ஸ்லோவேனியா போன்ற நாடுகளில் (முன்பு சோசலிச கட்டமைப்புக்குள் இருந்தவை) பாசிசத்தின் வாரிசுதாரர்கள் அரசாங்க பொறுப்புக்கு வர முடிந்தது; பிரான்ஸ், ஆஸ்ட்ரியா, டென்மார்க் போன்ற நாடுகளில் பாசிச ஆதரவாளர்கள்அரசியல் அரங்கில் முக்கிய பங்கினை பெற்றார்கள். ஆனால் உக்ரைனில் தான் மூன்று முக்கிய பாசிஸ்ட் அரசியல் குழுக்கள் ஆட்சியில் அமர்ந்திருப்பது மட்டுமல்லாமல், நாட்டின் பாதுகாப்பு அமைப்பையும் தங்கள் வசம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் – அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் அங்கீகாரத்தோடு, ஒத்துழைப்போடு வலதுசாரி மற்றும் பாசிச சக்திகளின் துணையோடு ரஷ்யாவை சுற்றி வளைப்பது என்பது அமெரிக்காவின் ஜனநாயக ஊக்குவிப்பு பணியில் புதிய கட்டம். ஆப்கனில் சோவியத் எதிர்ப்புக்கு நல்ல ஜெகாதிகள் கிடைத்தார்கள்; எல்சால்வடார், நிகரகுவா மற்றும் லத்தீன் அமெரிக்க இடதுசாரிகளை எதிர்க்க போதை மருந்து கடத்தும் நல்ல பயங்கரவாதிகள் துணை கிடைத்தது: சிரியாவில் நல்ல அல்கொய்தா கட்டவிழ்த்தப்பட்டிருக்கிறது; இப்பொழுது ஐரோப்பிய மண்ணில் நல்ல பாசிஸ்டுகள் அமெரிக்காவுக்கு கிடைத்திருக்கிறது. இடைக்கால அரசு 60000 பேர் கொண்ட துணை ராணுவ பிரிவு ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் எடுபட்டுள்ளது. இது நாஜிக்களின் படையாகவே உருவாகும் என்பதில் ஐயமில்லை. 1941-ல் நாஜிக்கள் நடத்திய இனப்படுகொலையில் பலியானவர்களின் நினைவாக ஒடிஸ்ஸா நகரில் எழுப்பப்பட்ட கட்டிடத்தை சிதைத்து அவர்களின் ஸ்வந்திக் அடையாளத்தை பதித்து விட்டுப் போனார்கள். ஐரோப்பிய- அமெரிக்க ஊடகங்கள் இதை கண்டுகொள்ளவே இல்லை.

அமெரிக்க அரசாங்கமும் ஊடகங்களும் இரண்டு பொய்களை திரும்பத் திரும்ப பதிவு செய்து கொண்டிருக்கின்றன. இன்று, உக்ரைனில் பதவியில் இருக்கும் ஆட்சி முற்றிலும் அரசியல் சட்ட விதிகளின் படியே ஆட்சியில் உள்ளது; இரண்டு ரஷ்யா கிரீமியா மீது படையெடுத்து அதை கைப்பற்றியது; அது அரசியல் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட யானுகோவிட்ச் வெளியேற்றப்பட்டது தான் உண்மையில் சட்ட விரோதமான செயல்; கிரிமீயா அரசியல் சட்ட உரிமைகளின் படியே விலகியது – எப்படி உக்ரைன் சோவியத் யூனியனிலிருந்து விலகியதோ அதைப்போல. அந்த பொய்களின்அடிப்படையில் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்படுகின்றன. தடைகள் தொடருமேயானால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று புடின் எச்சரிப்பதால் மீண்டும் பனிப்போர் சூழல் எழுகிறதோ என்ற ஐயம் எழுகிறது. ரஷ்ய பொருளாதாரத்தின் மீது தாக்குதல் நடந்தால் அது மேற்கு நாடுகளின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்; ஏனெனில் அந்த பொருளாதாரங்களின் (ரஷ்ய மற்றும் ஐரோப்பிய நாடுகள்) பரஸ்பரம் தாக்குதலின் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். 600 ஜெர்மன் கம்பெனிகள் ரஷ்ய வணிகத்தில் ஈடுபட்டுள்ளன; பல பில்லியன் டாலர்கள் அங்கே முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன. ரஷ்ய எண்ணெய், எரிவாயு உக்ரைனில் பதிக்கப்பட்ட குழாய்கள் மூலம் ஐரோப்பாவுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. எரிசக்திக்கான ஜெர்மனியின் தேவையில் 30 சதம் ரஷ்யா அளிக்கிறது. ரஷ்யாவின் வெளிநாட்டு வணிகத்தில் 50 சதம் ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் தான். வளர்ந்து வரும் ரஷ்ய பொருளாதாரத்தில் 75 சதம் ஐரோப்பிய யூனியன் நாடுகள் முதலீடு செய்திருக்கின்றன. பிரான்ஸ் 1.7 பில்லியன் டாலருக்கு ஹெலிகாப்டர்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை ரஷ்யாவிற்கு விற்பதற்கான ஒப்பந்தம் போட்டிருக்கிறது. பொருளாதார தேக்கத்தை சந்திக்கும் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க ஏகாதிபத்திய கனவுகளுக்கு இரையாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்காவின் பொய்களை பரப்பும் திட்டத்திற்கு மற்றொரு நோக்கமும் உண்டு. கிரிமீயாவை கைப்பற்றியதின் மூலம் ரஷ்யா தன்னுடைய நாடுகளுக்கு ராணுவ ரீதியான அச்சுறுத்தலை கொடுக்கும் நிலையில் உள்ளதாக பிரச்சாரம் செய்ய முடியும்; முன்பு சோவியத் யூனியனின் பகுதியாக இருந்த கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற (சீனாவுக்கு அருகில் உள்ள) நாடுகளுக்கு இந்த பிரச்சாரத்தை கொண்டு சென்று நேடோவின் ராணுவத்தை அங்கு கொண்டு வைப்பது என்ற நோக்கமும் அதில் உள்ளடங்கியுள்ளது.

ரஷ்ய நாடாளுமன்றத்தில் பேசும்பொழுது புடின் வரலாற்று, அரசியல் புரிதலோடு இந்தியாவும் சீனாவும் உக்ரைன் பிரச்சனையை அணுகிய முறை குறித்து பாராட்டுகளை தெரிவித்தார். ப்ரிக்ஸ் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சினா, தென்ஆப்பிரிக்கா) நாடுகள் ஏகாதிபத்திய நிலையினை சாராமல் முடிவு மேற்கொண்டதையும் பாராட்டினார். உக்ரைன் நிகழ்வுகள் ரஷ்யாவும், சீனாவும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒரு கேந்திரமான கூட்டணி அமைத்துக் கொள்ள வாய்ப்பு எழலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். ஆனால் நடைமுறையில் ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் உலக முழுமையும் உள்ள பொருளாதார உறவுகளை கணக்கில் கொண்டால் அது உடனடியாக நிறைவேறுவதற்கு வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது.

உக்ரைன் பிரச்சனையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இரட்டை வேடம் வெளிப்பட்டது. 2008ம் ஆண்டு செர்பியாவிலிருந்து கொ சோவா பிரிந்ததை சட்டப்பூர்வமானதாக அங்கீகரித்த அமெரிக்கா கிரீமியா பிரிவதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. நேடோ படையெடுப்பில் உருவானது கொசோவா; கிரீமியா சட்டப்பூர்வமான பொதுவாக்கெடுப்பில் உருவானது. 1991ல் க்ரோஷியாவும் ஸ்லோவேனியாவும் பொது வாக்கெடுப்பு நடத்தி யூகோஸ்லாவியாவிலிருந்து பிரிந்து சென்றன. அமெரிக்கா அதை அங்கீகரித்தது – ஆனால் கிரீமிய வாக்கெடுப்பை அங்கீகரிக்க மறுக்கிறது ஏன்? 15 ஆண்டுகளுக்கு முன்பு யூகோஸ்லோவியா 78 நாட்கள் நேடோ நடத்திய போருக்குப் பிறகு துண்டு துண்டானது. உடைக்கப்பட்ட துண்டு செல்பியாவிலிருந்து தான் கொசோவா பிரிந்தது. இந்த நிகழ்வுகளெல்லாம் பால்கன் பகுதியில் நேடோவின் செல்வாக்கினை விரிவுபடுத்தியது. ரஷ்யாவின் செல்வாக்கு விரிவடைவது அமெரிக்காவுக்கு உகந்ததல்ல. புடின் இந்த மாற்றங்களெல்லாம் சட்டத்தின் அடிப்படையில் நடைபெறவில்லை, துப்பாக்கியின் பலத்தில் நடந்தது என்கிறார். ஏகாதிபத்தியத்தின் தேவைகளுக்கு அனைத்து வழிகளும் சரியானவையே! இந்த நாடகம் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

ஆனால் இந்த அரசியல் சதுரங்கத்தில் ரஷ்யா சற்று வலுவான நிலையில் உள்ளது போல் தெரிகிறது. ஈரானுடன் அணு ஆயுத பிரச்சனைகளில் அமெரிக்காவுக்கு உதவிட ரஷ்யா தேவைப்படுகிறது; சிரியாவை சமாளிக்க ரஷ்யா தேவைப்படுகிறது. ஆப்கனிலிருந்து அமெரிக்க துருப்புகள் திரும்பப் பெறுகிற போது அங்கு நிகழும் ரத்தக் களரியை எதிர்கொள்ள ரஷ்யாவின் உதவி தேவைப்படலாம். இப்பொழுது கண்ணில் காணும் பனிப்போர் தோற்றம் இல்லாது போகக் கூடும். முந்தைய பனிப்போரின் மையப் புள்ளியாக முரண்பாடுகள் கொண்ட இரண்டு சமூக அமைப்புகளின் செயல்பாடுகள் இருந்தன. சோவியத் யூனியன் சிதைந்த பிறகு அது முடிவுக்கு வந்தது. இன்று நாம் காணும் பனிப்போர் நிலைக்கு அப்படி ஒரு அம்சம் இருப்பதாகக் கூற முடியாது. ஏனெனில் ரஷ்யா சோவியத் யூனியன் அல்ல.

(ஃப்ரண்ட்லைன் ஏப்ரல் 18, மே 2 ஆகிய இதழ்களில் அய்சாஜ் அகமது எழுதிய கட்டுரைகளை தழுவியது)