பாசிசத்தின் மீதான சோவியத் வெற்றியின் விளைவு

என்.சங்கரய்யா

(பாசிச ஹிட்லரை, சோவியத் செஞ்சேனை வீழ்த்தியதை போற்றும் வகையில் 30.04.1985 அன்று வெளியான “தீக்கதிர்” சிறப்பிதழில் தோழர் என்.சங்கரய்யா எழுதிய கட்டுரை)

1942 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 22 ம் தேதி வேலூர் மத்திய சிறை; அரசியல் பாதுகாப்பு கைதிகள் அடைக்கப்பட்டிருந்த பகுதி; சோவியத் யூனியன் மீது ஹிட்லரின் நாஜிப் படைகள் திடீரென்று தாக்குதலைத் தொடுத்துவிட்டன என்று வானொலி அறிவித்தது. பாதுகாப்புக் கைதிகள் வாழ்ந்த பகுதியில் காங்கிரஸ் தலைவர்கள் திரு பட்டாபி சீத்தாராமையா, காமராஜ், சாம்பமூர்த்தி போன்றவர்களும் தோழர் ஏ.கே. கோபாலன், டாக்டர் கே.பி.கிருஷ்ணா மற்றும் பல கம்யூனிஸ்ட் தோழர்களும் சேர்ந்து இருந்தனர். அந்தத் தோழர்களில் நானும் ஒருவன்.

அச்செய்தியைக் கேட்டவுடனேயே, ஹிட்லரின் படைகள் இன்னும் ஆறு வார காலத்தில் ரஷ்யாவின் கிழக்கு எல்லையான விளாடிவாஸ்டாக் நகரத்தை கைப்பற்றிவிடும் என்று பட்டாபி சீத்தராமையா படபடவென்று பொரிந்து தள்ளினர். டாக்டர் பட்டாபி சீத்தாராமையா தான் காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை எழுதிய ஆசிரியராவார். அவர், வரலாற்றை அறிந்து கொள்ள முடிந்த மேதாவித்தனம் அவ்வளவுதான்!

பொன்மொழிகள் பொய்மொழியானது

கம்யூனிஸ்டுகளான நாங்கள் கூடினோம். அதில் மார்க்சிஸ்ட் தத்துவ ஆசிரியர் கே.பி.கிருஷ்ணா பேசினார். டாக்டர் பட்டாபி போன்ற  ‘பெரியவர்கள்’ என்ன சொன்னபோதிலும், சோவியத் செஞ்சேனை தனது ராட்சசக் கால்களைக் கொண்டு நாஜிப் படைகளை மிதித்து அழித்துவிடும்: இது உறுதி என்று தோழர் கே.பி கிருஷ்ணா முழங்கினார். பலத்த கைதட்டல் எங்களிடமிருந்து கிளம்பியது.  ‘பூர்ஷ்வா வரலாற்று ஆசிரியர்’  பட்டாபியின்  ‘பொன்மொழிகள்’ பொய்மொழிகளாகின.

மெய்யான விஞ்ஞானமாம் மார்க்சிசம் – லெனினிசத்தின் வெளிச்சத்தில் தோழர் கே.பி.கிருஷ்ணா வெளியிட்ட சொற்களை வரவாறு உண்மை என நிரூபித்துக் காட்டியது.

சோவியத்- ஜெர்மன் யுத்தத்தைப் போல் பிரம்மாண்டமானதொரு யுத்தத்தை உலகம் இதுவரை கண்டதில்லை. சோவியத் கம்யூனிசம் அழிந்துவிடும் என்றும் அதேசமயத்தில் தங்களுடைய போட்டியாளனாகவும் எதிரியாகவுமிருந்த ஹிட்லர் ஜெர்மனியும் சோவியத் யூனியன் பிடியில் சிக்கி அடிபட்டுப்போவான் என்றும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் எகாதிபத்திய நாடுகள் திட்டமிட்டு செயலாற்றின.

பாசிசம் அனைத்து மக்களையும் அழிக்கும் என்று சோவியத் யூனியன் மேற்கத்திய நாடுகளை எச்சரித்தது. ஹிட்லருக்கு எதிராக பாசிஸ்ட் எதிர்ப்பு முன்னணியை அமைக்க முன்வருமாறு சோவியத் யூனியன் மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளையும் அழைத்தது.

ஆனால், மேலை நாடுகள் அதை ஏற்க மறுத்துவிட்டன. செக்கோஸ்லாவாகியா, போலந்து போன்ற பல ஐரோப்பிய நாடுகளை ஹிட்லர் ஆக்கிரமித்து அடிமைப்படுத்தினான். இந்த நாடுகளை ஹிட்லருக்கு பலியாக கொடுத்தன மேலை நாடுகள். இந்த நாடுகளை பிடித்தபின் ஹிட்லர் அடுத்தாற்போல் சோவியத் யூனியன் மீது பாய்வான் என்று அவை எதிர்பார்த்தன. மேலை நாடுகளின் நயவஞ்சகத் திட்டத்தை முறியடிக்கும் வகையிலும், தன்னுடைய பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்வதற்கு அவசியமான அவகாசத்தை தேடிக் கொள்வதற்காகவும், சோவியத் ராஜதந்திரம் முயற்சித்தது. சூழ்ச்சியை சூழ்ச்சியால் முறியடிக்க பரஸ்பரம் ஒருவரை ஒருவர் ஆக்ரமித்துக் கொள்வதில்லை என்றதொரு ஒப்பந்தத்தை சோவியத் யூனியன் ஹிட்லர்ஜெர்மனியுடன்செய்துகொள்ள வேண்டியதாயிற்று.

 இது, பாசிஸ்ட் ஜெர்மனிக்கு துணை போவதாகும் என்று மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் கதறின. பாஸிசத்தை முறியடிக்க முன்னணி அமைக்க வாருங்கள் என்று சோவியத் யூனியன் பன்முறை வற்புறுத்தி அழைத்தபோது மறுத்து விட்ட மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளின் கொள்கையே, இந்த உடன்பாட்டை செய்துகொள்ள வேண்டிய நிர்பந்தத்தை சோவியத் யூனியனுக்குத் ஏற்படுத்தியது என்பதை உலக பாட்டாளி மக்கள் தெளிவாக உணர்ந்தனர்.

சோவியத் நாட்டைத் தாக்குவதற்கு ஏகாதிபத்திய நாடுகளினால் வளர்க்கப்பட்ட ஹிட்லர், தன்னை வளர்த்த பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் மீதும் யுத்தப் பிரகடனம் செய்தான். வளர்த்த கடா அவர்கள் மார்பிலேயே பாய்ந்தது. இதனால் இரண்டாவது உலகப் போர் 1938இல் ஆரம்பித்து விட்டது. பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய ஏகாதிபத்திய நாடுகள் ஒருபுறமும், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய பாசிஸ்டு நாடுகள் மறுபுறமும் போரில் குதித்தன.

உலக முதலாளித்துவ அமைப்பு, ஏகாதிபத்திய பகுதியாகவும், பாசிஸ பகுதியாகவும் போரில் இறங்கின. தனக்குச் சாதகமான தருணம் பார்த்து ஹிட்லர் சோவியத் பூமியைத் தாக்குவான் என்று சோவியத் தலைமைக்கு நிச்சயமாக தெரியும். எனவே கிடைத்த அவகாசத்தைப் பயன்படுத்திக் கொண்டு சோவியத் யூனியன் தன் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியது.

சோவியத் மீது பாய்ந்தான்

எதிர்பார்த்தபடியே ஹிட்லர், சோவியத் யூனியன் மீது திடீரென்று மாபெரும் தாக்குதலைத் தொடுத்தான். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி, தோழர் ஸ்டாலின் தலைமையில், இந்த ஜீவ மரணைப் போராட்டத்தை உறுதியாகச் சந்தித்தது. முதல் கட்டத்தில், பின்வாங்கிக் கொண்டே எதிரியை மேலும் மேலும் உள்ளே இழுத்து, அவனுக்கு பலத்த சேதத்தை உண்டுபண்ணியது. ஹிட்லரால்  ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில், சோவியத் தேச பக்தர்கள் சக்திவாய்ந்த கொரில்லாப் போராட்டங்களை நடத்தி, எதிரியை நிலைகொள்ள விடாமல் தவிக்க வைத்தனர். சோவியத் மக்களின் வீரஞ்செறிந்த போராட்டம் உலக மக்களின் ஆதரவையும் பாராட்டுக்களையும் பெற்றது. 

ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ள அபாயம் நமக்கு ஏற்படும் அபாயமாகும் என்று பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில் அறிவித்தார். ஜெர்மனியை எதிர்ப்பதற்கு முன்வர மறுத்த மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் இப்பொழுது தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே  சோவியத் யூனியனுடன் சேர்ந்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சோவியத் யூனியன் முன்பிருந்தே விரும்பிய பாசிஸ்ட் எதிர்ப்பு முன்னணி இப்பொழுதுதான் உருவானது. கோரமான போர்களில் சோவியத் படைகள் பாசிஸ்ட் ஜெர்மனியை பலவீனப்படுத்தின. லெனின்கிராட், ஸ்டாலின்கிராட், மாஸ்கோ மற்றும் இதர போர் முனைகளில் லட்சக்கணக்கான சோவியத் வீரர்கள் தங்களின் உயிர்களைத் தியாகம் செய்து எதிரியை தடுத்து நிறுத்தினர். லட்சக்கணக்கில் எதிரிப்படைகளை அழித்தனர்.

சோவியத்தின் சாதனை

சோவியத்தின் பிரம்மாண்டமான யுத்த நடவடிக்கைகள் உலகத்தை வியக்கச் செய்தன. விடுதலைபெற்றுவிட்ட உழைப்பாளி மக்களின் பொதுவுடைமை சமுதாயமும், அரசும் மட்டுமே இத்தகைய சாதனைகளை புரியமுடிந்தது என்பதை மனித வர்க்கம் கண்டது. சோவியத் யூனியன் மீது ஜெர்மனியின் வெறித் தாக்குதலின் வேகத்தை மட்டுப்படுத்த, ஜொமனியின் மேற்குப் பகுதியில், சோவியத்தின் நேச நாடுகளாகிய அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவை ஐரோப்பாவின் மேற்குப் பகுதியில் தங்களின் துருப்புகளை இறக்கி, எதிரிக்கு எதிராக இரண்டாவதுபோர்முனையைத் துவக்க வேண்டுமென்று சோவியத்யூனியனும் முற்போக்கு சக்திகளும் கோரின.

ஆனால் இரண்டாவது போர் முன்னயைத் துவக்குவதற்கு அமெரிக்கா, பிரிட் டன் அக்கறை காட்டவிலை. காரணம் என்னவென்றல், அவர்களின் பழைய நோக்கம்தான். அதாவது ஜெர்மனி, சோவித் யூனியனை அடித்து நொறுக்கி  பலவீனப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் சோவியத் யூனியன், ஜெர்மனியை சக்தி இழக்கும்படி செய்துவிட வேண்டும். அப்படிப்பட்ட நிலைமை ஏற்படும்பொழுது, அமெரிக்காவும் பிரிட்டனும் தமது படைகளை இறக்கி ஐரோப்பா முழுவதையும் தங்கள் ஆதிக்கத்தில் கொண்டு வந்துவிடவேண்டும் என்பதுதான் அந்த நோக்கம். ஆனால், உள்ளதற்கே  ஆபத்து வந்துவிட்டது.

இரண்டு பக்க தாக்குதலுக்கு ஆளான ஹிட்லரின் ஜெர்மனி வீழ்ந்தது. இதுவே ஏகாதிபத்திய நேச நாடுகளின் நேச பார்வையாக நேச பாதையாக இருந்தது. நாளை சோவியத் தலைமை இவர்களின் இந்த சூழ்ச்சியையும் முறியடித்தது. பலமான எதிர் தாக்குதல்களை தொடுத்து ஜெர்மன் படைகளை சோவியத் பூமியிலிருந்து விரட்டியது ஜெர்மனியின் மூல பலத்தை அழித்தது. 

அதைத் தொடர்ந்து சோவியத் பூமி முழுவதையும் விடுவித்துவிட்டு ஜெர்மனியால் அடிமைப்படுத்தப்பட்டிருந்த போலந்து, ருமேனியா, செக்கோஸ்லோவாக்கியா, யூகோஸ்லோவியா, பல்கேரியா, ஹங்கேரி, அல்பேனியா போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளை செஞ்சேனை ஹிட்லரின் கொடுமையில் இருந்து விடுவித்தது.

வென்றது கம்யூனிசம்

இந்த நாடுகளின் மக்கள் சோவியத் யூனியனுக்கு நன்றி செலுத்தினார்கள். இந்த நாடுகளில் எல்லாம் தொழிலாளர்களும் ஜனநாயகவாதிகளும் கம்யூனிச கட்சியின் தலைமையின் கீழ் விடுதலை அரசுகளை ஏற்படுத்தி, நாளடைவில் அவற்றை கம்யூனிஸ்ட் அரசுகளாக அமைத்தார்கள். சோவியத் செஞ்சேனை ஜெர்மனியை நோக்கி முன்னேறியது. இதைக்கண்ட மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் பயந்து அலறின. சோவியத் யூனியனை பலவீனப்படுத்தவே இரண்டாம் போர்முனையை அவர்கள் துவக்காமல் இருந்தனர். சோவியத் செஞ்சேனையோ ஜெர்மனியின் தலைநகரான பெர்லினை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. சோவியத் படைகளால் விடுதலை செய்யப்பட்ட ஜெர்மன் பிரதேசம்தான் இன்று ஜெர்மன் ஜனநாயக குடியரசாக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் இயங்குகிறது. எந்த ஜெர்மன் பூமி கம்யூனிஸ்ட் எதிர்ப்புக்கு பாசிசத்தை உருவாக்கியதோ அதே ஜெர்மன் பூமியின் ஒரு பகுதியில் இன்று கம்யூனிசம் வெற்றிவாகை சூடிவிட்டது. ஜெர்மனியை தோற்கடித்த பின் சோவியத் யூனியன் பாசிஸ்ட் ஜப்பானுக்கு எதிராக யுத்த பிரகடனம் செய்தது. ஆசியாவின் தூரக் கிழக்கு பகுதிகளான சீனாவிலும் கொரியாவிலும் இருந்த ஜப்பானின் படைகள் அனைத்தும் களமிறங்கின.

இதன்மூலம் மகத்தான சீன தேசமும் கொரிய நாடும் தங்களது தேச விடுதலையை பெறுவதற்கு சோவியத் யூனியன் உதவி செய்தது. இதன் விளைவாகவே பின்னர் சீன மக்களின் போராட்டம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் வெற்றி பெற்றது. 1949 அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி அன்று சீன மக்கள் குடியரசை அமைத்தது. வடகொரியாவும் விடுதலை அடைந்தது.

சோசலிச அமைப்பு 

எனவே, இந்த யுத்தத்தில் சோவியத் யூனியனின் வெற்றியின் காரணமாக ஒரு நாட்டில் இருந்த சோசியலிசம் பல நாடுகளுக்கும் பரவியது. ஒரே ஒரு சோசலிச நாடாக இருந்த சோவியத் யூனியனுக்கு பதிலாக, பல்வேறு சோசலிச நாடுகள் அடங்கிய ஒரு உலக சோசலிச அமைப்பு வரலாற்று ரீதியில் உருவெடுத்தது.

1917 இல் சோசலிச புரட்சி ரஷ்யாவில் வெற்றி பெற்ற பொழுது, உலக முதலாளித்துவ அமைப்பின் பொது நெருக்கடியின் முதல் கட்டம் துவங்கியது. பல நாடுகளை கொண்ட சோசலிச அமைப்பு உருவானதை தொடர்ந்து, உலக முதலாளித்துவ அமைப்பின் பொது நெருக்கடியின் இரண்டாவது கட்டம் ஆரம்பமானது. சோவியத் வெற்றியினால் ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் தங்களை அடக்கி ஆண்ட ஏகாதிபத்திய நாடுகளுக்கு எதிராக தேச விடுதலை புரட்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். சோவியத் யூனியனின் உதவியினாலும் இதர சோசலிச நாடுகளின் ஆதரவாலும், 100 கோடி ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க மக்கள் ஏகாதிபத்திய நுகத்தடியில் இருந்து அரசியல் விடுதலை பெற்று, இன்று தங்கள் சுதந்திரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், பொருளாதார சுதந்திரத்தை அடைவதற்கும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நூறு கோடி மக்களின் விடுதலையை தொடர்ந்து, உலக ஏகாதிபத்திய அமைப்பு மேலும் பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக உலக முதலாளித்துவ அமைப்பில் பொருளாதார நெருக்கடியின் மூன்றாவது கட்டம் ஆரம்பமாகிவிட்டது. மேலும், சோவியத் யூனியனின் பாசிஸ்ட் எதிர்ப்பு வெற்றியின் காரணமாக, முதலாளித்துவ உலகம் முழுவதிலும் தொழிலாளி வர்க்க இயக்கங்களும், கம்யூனிஸ்ட் இயக்கங்களும் ஆழமாக வேரூன்றி வளர்ந்து வருகின்றன.

செங்கொடி இல்லாத நாடு இன்று உலகத்தில் இல்லை. இந்த வளர்ச்சி மனித வர்க்கத்தை எல்லா பாதைகளும் கம்யூனிசத்திற்கே இட்டு செல்கின்றன என்ற நிலையை உலகத்தில் ஏற்படுத்தி விட்டது. பாசிஸ்ட் எதிர்ப்பு யுத்தத்தில் சோவியத் யூனியன் பெற்ற மகத்தான வெற்றியின் காரணமாக ஏற்பட்ட இந்த விளைவுகள் இன்றைய சகாப்தத்தின் எதிர்காலத்தை நிர்ணயித்து வருகின்றன.

போர் முனையில் கலைஞர்கள்

நாஜி ஜெர்மனிக்கு எதிரான சோவியத் மக்களின் மாபெரும் தேசபக்தி யுத்த வரலாற்றில் கலைஞர்களுக்கும், கலாச்சார துறை ஊழியர்களுக்கும் முக்கியமான இடம் உண்டு. பாடகர்களும், இசைவாணர்களும், கவிஞர்களும், புகழ்பெற்ற நாடக, சினிமா நடிகை, நடிகர்களும் போர்முனைகளுக்கு சென்று போர் வீரர்களுக்கும், காயமுற்று மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த போர் வீரர்களுக்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்ச்சியூட்டி வந்தனர்.

மார்ஷல் ஆந்திரி ஏரெமென்கோ பின்னர் எழுதிய நினைவு குறிப்புகளில், இதுபற்றிக் குறிப்பிட்டிருப்பதாவது; “யுத்தத்தின் போது பத்து முனைகளில் நான் கமாண்டராக இருந்தேன். அவை ஒவ்வொன்றிலும் கலைஞர்கள் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதைக் கண்டேன். போர் வீரர்களுக்கு உற்சாகமூட்டி அவர்களுடைய மன உறுதியை உயர்த்துவதில் கலைஞர்கள் பெரும் தொண்டு ஆற்றினர்” என்று ஏரெமென்கோ குறிப்பிட்டு இருக்கிறார். போர்முனையில் இவ்விதம் தொண்டாற்றிய கலைஞர்களில் புகழ்பெற்ற “ராஸ்கோ ஆர்ட் தியேட்டர்” நாடக நடிகர்களும் இருந்தனர். மாபெரும் தேசபக்த யுத்தத்தின் போது சோவியத் போர்முனைகளில் 1500க்கும் அதிகமான நாடகம், இசை முதலிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

புஷ்கின், டால்ஸ்டாய், செக்காவ், ஆஸ்த்ரோவஸ்கி, மாயாகோவ்ஸ்கி, த்வார் தோவ்ஸ்கி, ஸ்பார் தோவாஸ்கி முதலியவர்களின் படைப்புகள் இந்த கலை நிகழ்ச்சிகளில் இடம்பெற்றன. முன்னணி போர் வீரர்கள் எங்கும் கலைஞர்களை உற்சாகத்துடன் வரவேற்றதாக ஆர்ட் தியேட்டரின் பிரபல நடிகையான அல்வா தரசோவா தம் நினைவு குறிப்புகளில் எழுதி உள்ளார். போர்முனைகளுக்கு சென்ற இந்த தியேட்டரின் மற்றொரு கலைஞரான அனஸ் தாஸ்யாஜ் யோர்கியோகி மேவ்ஸ்காயா, யுத்தத்தில் தாம் ஆற்றிய தொண்டு பற்றி எழுதுகையில், துப்பாக்கி சுடக் கற்றுக்கொண்டு, போர்முனைக்கு சென்று நாஜிகளை எதிர்த்து போராடத் தாம் விரும்பியதாகவும், ஆனால் அதற்கு அனுமதி கிடைக்காததால், கலை நிகழ்ச்சிகள் மூலம் போர் முனையில் வீரர்களுக்கு உற்சாகமூட்டவாவது முடிந்தது பற்றி மகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். 

மனித குலத்தின் பாதுகாவலன்

சோவியத் யூனியனின் வெற்றிதான் இன்று சோசலிச முகாமும், உலக தொழிலாளி வர்க்க இயக்கமும், தேச விடுதலைப் புரட்சியும் இன்றைய உலகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்திகளாக ஆகிக்கொண்டு வருகின்றன என்ற பேருண்மைக்கு அடித்தளமாகும். பாசிஸ்ட் அபாயத்திலிருந்து மனித குலத்தை பாதுகாத்த பெருமை சோவியத் யூனியனையே சாரும். சோசலிச உலக அமைப்பின் வெற்றிகளை கண்டு மூர்க்கத்தனமான கோபத்துடன் சோவியத் யூனியனையும் இதர சோசலிச நாடுகளையும் அழிப்பதற்கும், உலக மக்கள் மீது மீண்டும் தன் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதற்கும், அணு ஆயுத யுத்தத்திற்கு தீவிரமாக தயாரிப்பு செய்து வரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் யுத்த சதி திட்டங்களை முறியடிப்பதிலும், உலக சமாதானத்தை பாதுகாப்பதிலும் சோவியத் யூனியனும் இதர சோசலிச நாடுகளும் இன்று முன்னணியில் இருக்கின்றன. சோவியத் யூனியனுடன் ஒன்றுபட்டு நின்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் யுத்த சதிகளை முறியடிப்பதும், உலக சமாதானத்தை பாதுகாப்பதும் இந்திய மக்கள் அனைவரின் பிரதான கடமையாகும்.

(ச. லெனின் தொகுத்துள்ள “என். சங்கரய்யா – தேர்ந்தெடுக்கப்பட்ட உரை, பேட்டி, கட்டுரை, ஆவணம்” எனும் புத்தகத்தில் இக்கட்டுரை வெளியாகியுள்ளது.)

அமெரிக்க போர் முரசும், அல்லல்படும் சிரியாவின் மக்களும்

மீண்டும் அமெரிக்கா போர் முரசு கொட்டுகிறது. எண்ணெய் வள அரபு நாடுகளில் ஒன்றான சிரியாவின் அதிபர் ஐ.நா நெறிகளை மீறி வைத் திருக்கும் பேரழிவு ரசாயன ஆயுதங்களிலிருந்து உலக மக்களை காக்க படையெடுக்கப் போவதாக வும் மேலும் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டங் களுக்கு உட்பட்டே இருக்கும் என்றும் ஒபாமா ஓசை எழுப்பியுள்ளார். இந்த போர்முரசின் நோக்கம் எந்த சோற்றாலும் மறைக்க முடியாத மலையாகும்.. தனது மேலாதிக்கத்திற்கு ஆபத்து ஏற்பட்டதாக பயந்து ஆயுத பலத்தை உலகிற்கு காட்டவும் எண்ணெய் வள நாடுகளை கிடுக்கிப்பிடி போட்டுவைக் கவும் இந்த போர் முரசு கொட்டப்படுகிறது. ரசாயன ஆயுதங்கள் ஸ்டாக் வைத்திருப்பது குற்றமென்றால் முதல் குற்றவாளி அமெரிக்காதான். ராசாயன ஆயுதத்தை பயன்படுத்தி மக்களை கொன்ற முதல் குற்றவாளியும் அமெரிக்காதான்.40 ஆண்டுகள் கடந்த பிறகும் வியட்நாம் மக்களும் மண்ணும் காடுகளும் அமெரிக்க ராணுவம் வீசிய ரசாயன விஷத்திலிருந்து இன்னும் மீளவில்லை.. இப்பொழுதும் சிரியாவில் ரசாயன ஆயுதத்தை ஏவியதும் அமெரிக்காவின் உதவியுடன் செயல்படும் பயங்கர வாத குழுதான் என்று ஐ.நா நிபுணர்கள் குழு கண்டறிந்து விட்டது. வேதனை என்னவெனில் மேலை நாட்டு செய்தி சேகரிப்பு நிறுனங்கள் அமெரிக்காவும் அல்கொய்தாவும் கூட்டணி வைத்து  சிரியாவிறகுள் பயங்கர.த்தை விதைத்து மக்களை கடந்த இரண்டு வருடமாக அகதிகளாக ஆக்குவதை  பூசி மொழுகி காட்டுவதுதான்.

இன் னொரு பக்கம், ஐ.நா அகதிகளின் கமிஷனர் வேதனை தரும் புள்ளிவிவரத்தை உலக மக்களின் பார்வைக்கு வைத்துள்ளார். இரண்டேகால் கோடி மக்கள் தொகை கொண்ட சிரியாவில் ஆயுதம் தாங்கிய மோதல் தொடங்கியதிலிருந்து சுமார் 20 லடசம் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளனர். அண்டைநாடுகளான லெபனா னில் 716,000, ஜோர்டன்னில் 515,000, துருக்கியில் 460,000, ஈராக்கில் 169,000, எகிப்தில் 111,000, சிரியா விற்குள் குடியிருப்பைவிட்டு வெளியேறியவர்கள் 42,50,000.இந்த புள்ளி விவரத்தை கொடுத்த ஐ.நா. அகதிகள் கமிஷனர், அண்டை நாடுகள் மட்டும் அகதிகளை பராமரிக்க இயலாது உலக நாடுகள் உதவ வேண்டுமென வேண்டுகோளும் விட்டுள்ளார். (ஆதாரம் யு. என். எச். ஆர்.சி)

அகதிகளில் பெரும் பகுதி 12 வயதிற்கும் குறைந்த குழந்தைகளே, ரத்தம் சிந்தும் காயங்களுடன் குழந்தைகளும், பெண்களும் ஆண்களும் உடுத்திய ஆடை தவிர வேறு எதுவுமில்லாமல் வருவது கல் நெஞ்சங்களையும் இளக்கிவிடும் என்று பத்திரிகை கள் எழுதுகின்றன.

சில மேலைநாட்டு தன்னார்வக் குழுக்களும் நிதி, பொருட்கள் திரட்டி உதவுகின்றன. பத்திரிகை களும் ஊடகங்களும் சிரிய மக்கள் படுகிற வேதனை களை படம் பிடித்து காட்டுகின்றன. வேதனை என்னவெனில் அமெரிக்க படையெடுப்பே சரியான தீர்வு என்ற கருத்தை பலப்படுத்துகிற முறையில் செய்திகள் வழங்கப்படுகின்றன. அதாவது அமெ ரிக்கா ஆயுதங்கள் கொடுத்து ஆதரிக்கிற பயங்கர வாத குழுக்களின் கொடுமைகளை தற்காப்பு நட வடிக்கை போல் பூசியே எழுதுகின்றன. அரசியல் தீர்வை முன் மொழியும் நாடுகளை சர்வாதிகாரி ஆசாத்திற்கு ஆதரவு தருபவைகள் என்று சித்தரித்து சிறுமைப்படுத்துகின்றன. உள்நாட்டு பயங்கரவாத குழுக்கள்,அரசின் அடக்குமுறை இவைகளிலிருந்து மக்களை காக்கும் அரசியல் தீர்வை பிரபல ஊட கங்கள் விவாதிப்பதே இல்லை.  வரலாறு கூறுவதென்ன?

முதல் உலக யுத்தம் நடக்கும் தருணத்தில் (1916). பிரிட்டனும் பிரான்சும் ரஷ்யாவும் வெற்றிவாகை சூட நேர்ந்தால் ஓட்டாமன் சாம்ராஜ்யத்தை பல நாடுகளாக பிரித்து பங்கு போட ஒரு ஒப்பந்தம் செய்து கொணடனர்.. அந்த ஒப்பந்தபடி ஒட்டாமன் சாம்ராஜ்யத்தின் (இன்றைய துருக்கி) பகுதியாக இருந்த ஆசியா மைனர் மற்றும் வட ஆப்பிரிக்க பகுதியை நாடுகளாக பிரித்து பிரிட்டனும், பிரான்சும் பங்கு போட்டுக்கொண்டனர். இதனை .அதிகாரப்பூர்வமாக ஆசியா மைனர் ஒப்பந்தம் என்று அழைப்பர். அந்த ஒப்பந்தப்படி சிரியா பிரான்சின் காலனியானது

முதலாம் உலகப் போர் முடிந்த தருவாயில் உருவான சோவியத் அரசு ஜார் மன்னன் காலத்திய ரஷ்ய காலனிகளுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கியது. 1916ல் காலனிகளை மறு பங்கீடு செய்து ரஷ்ய உட்பட ஏகாதிபத்தியவாதிகள் போட்ட ரகசிய ஒப்பந்தங்களை லெனின் வெளியிட்டு காலனிகளாக ஆன ஆசிய, ஆப்பிரிக்க மக்களிடையே விடுதலைக்கான போராட்டத்திற்கு விவேக மூட்டினார் அதன் விளைவாக பல நாடுகளில் விடுதலைப்போர் வீறு கொண்டு எழுந்தது. அக்காலத்தில் விடுதலை இயக்கங்களுக்கு சோவியத் ஆசானாக இருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. சோவியத் உதயமான பின் விடுதலை இயக்கங்களை முன்பு போல் காலனியவாதிகளால் நசுக்க முடிய வில்லை . அந்த வழியில் 1946ல் சிரியா விடுதலை பெற்ற நாடானது.

சிரியாவில் வாழ்கிற  மக்கள் பல பண்பாட்டுடன் வாழ்கிறவர்கள் குர்திஷ் மொழி பேசுகிற மக்கள், அர்மினியர்கள்  அசிரியன்கள் துருக்கர்கள், கிருத்து வர்கள், துருஸ், அலாவைத், ஷியா, அரபுசன்னிஸ். என்று வேற்றுமையில் ஒற்றுமையில் வாழ்பவர்கள். பல மதங்கள் அதன் உட்பிரிவுகள் உள்ள ஒரு நாட்டில் மதச்சார்பற்ற அரசாக இருந்தால்தான் அமைதியாக ஆளமுடியும் என்று கருதிய. விவேக முள்ள ஆட்சியாளரகள் மதச்சார்பற்ற ஆட்சியை கண்டனர். அந்த வகையில் சிரியாவிலும் அரசு மதச்சார்பற்றே இருந்துவருகிறது ஒட்டாமன் சாம் ராஜ்ய காலத்திலேயே மதச்சார்பற்ற அரசு என்ற கோட்பாடு பின்ப்பற்றபட்டதால் இது பண்பாட்டு அம்சமாக  அங்கு இருக்கிறது என்று வரலாற்று நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த சிரியா இன்று மதவாத பயங்கர வாதக் குழுக்களின் போர்க்களமாக உள்ளது. விஷவாயு ஆயுதமாக்கப்பட்டு மக்கள் கொல்லப்படுகின்றனர், முடமாக்கப்படுகின்றனர்

இந்நிலையில் ரசாயன ஆயுத ஆபத்திலிருந்து உலக மக்களை காப்பாற்ற அமெரிக்கா படையெடுக்கப் போவதாக அறிவித்துள்ளது. 5110 கடல் மைல்களுக்கு அப்பால் இருக்கும் சிரியாவை நோக்கி கடற்படையை அனுப்பி  ஆள் இல்லா விமானங்களையும் ஏவுகனைகளையும் ரசாயன ஆயுத கிடங்குகள் நோக்கி ஏவ எடுத்த அமெரிக்கா வின் முடிவு விவேகமானதா? ஏற்கனவே உள்நாட்டு கலவரத்தால் லட்சக்கணக்கில் அகதிகளாகி உள் நாட்டிலும் அண்டை நாடுகளிலும் குடி பெயர்ந்து அல்லலுறும் அம்மக்களை ஒபாமா ஏவப்போகும் டோரோன்சும், குருயிஸ் மிசைல்களும் காப்பாற்றுமா? சிரியாவில் உள்நாட்டு ஆயுத மோத லுக்கு காரணமென்ன? எது தீர்வு? இன்று அமெ ரிக்கா, இந்தியா உட்பட ஸ்டாக் வைத்திருக்கும் ரசாயன ஆயுதம் மற்றும் அது போன்ற பேரழிவு ஆயுதங்களை ஒழிக்கும் காலம் வருமா? இதற்கான பதிலை முடிந்தவரை தேடுவோம்.

கடந்த சில ஆண்டுகளாக அரபு நாடுகளில் மக்கள் எழுச்சியுற்று மக்களுக்கான ஜனநாயக அரசை நிறுவ முயற்சிப் பதையும் உள்நாட்டு சுரண்டும் கூட்டத்தில் ஒரு பகுதி மேலை நாடுகளின் உதவியுடனும் ராணுவ தளபதிகளின் ஆதரவுடனும் சுரண்டும் வர்க்கத்திற்கு  தில்லு முல்லு செய்ய வாய்ப்பளிக்கும் அரசிய லமைப்பை திணிக்க முயற்சிப்பதையும், இன்னொரு பகுதி பழமைவாத பார்வையோடு. இஸ்லாமிய அரசை நிறுவ முயற்சிப்பதையும். கண்டுவருகிறோம். இதே காட்சி இப்பொழுது சிரியாவிலும் அரங்கேறியுள்ளது  சிரியாவிலும் மக்களுக்கான ஜனநாயகத்திற்காக 2011ல் மக்கள் எழுச்சியுற்றனர். துவக்கத்தில் அதிபர் ஆசாத் ராணுவத்தை கொண்டு மக்களை அடக்க எடுத்த நடவடிக்கைகளே, அவரை சிக்கலில் தள்ளிவிட்டது. மக்கள் மீது சுட ஒரு பகுதி ராணுவம் மறுத்தது. மறுக்கும் ராணுவ வீரர்களை சுட்டுத்தள்ளவே ஒரு கட்டத்தில் ராணுவம் பிளவுபட்டு அரசை எதிர்த்தது. மக்கள் ஒதுங்க ஆயுதம் தாங்கிய மோதலாகிவிட்டது. ஆசாத்தின் அடக்கு முறை இரண்டு சக்திகளை உசுப்பிவிட்டது. அரபு நாடுகளிலே இஸ்லாமிய அரசை நிறுவ கனவு காணும் சாவூதி மன்னருக்கும் அவரது கூட்டாளி களுக்கும், சன்னி மத அல்கொய்தா போன்ற அமைப்புகளுக்கும் அது வாய்ப்பு கொடுத்துவிட்டது.

இன்று அல்நுஸ்ரா பிரன்ட் என்ற பெயரில் அல்கொய்தா சவூதி மன்னரின் உதவியுடன் சிரியாவில் ஆசாத்தை எதிர்க்கும் ராணுவத்திற்கு உதவியாக இயங்குகிறது. இந்த அமைப்பு சன்னி மத பிரிவை சார்ந்த சகிப்புத் தன்மையற்ற தலிபன் பாணி பயங்கரவாத பிரிவாகும். இதற்கு எதிராக ஹிஸ்புல்லா அரசியல் இயக்கத்தின் ஆயுதம் தாங்கிய குழு அரபு நாடுகளில் உள்ளது. லெபனானில் அது ஆளும் அணியில் ஒன்று.. சிரியாவிற்குள். பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக  இதுவும் லெபனானில்லிருந்து வந்துள்ளது சிரியா என்ற போர்களத்தில்  அமெரிக்கா அல்கொய்தா அரபு மன்னரகள் ஒரு பக்கமும் இவர்களது ஆதிக்கத்தை எதிறகும் அரபு நாடுகளின் அரசியல் இயக்கங்கள் எதிர்ப்பக்கமும் மோதுகின்றன.  .

உலக அரசியலில் தங்கள் கொடி தவிர வேறு கொடிகளை பறக்கவிடக் கூடாது என்ற ஆவேசத்துடனும் நீண்ட கால திட்டத்துடனும் செயல்படும் முன்னாள் காலனியவாதிகளான பிரான்ஸ், பிரிட்டன் அமெரிக்கா தங்களுக்கு அனுசரனையான அரசாக சிரியாவில் அமைய தலையிடும் வேளை வந்துவிட்டதாகக் கருதி அவர்களும் நடவடிக்கையில் இறங்கிவிட்டனர். இதன் விளைவாக மக்கள் எழுச்சி சுருங்கி மக்கள் பங்கேற்க இயலாத ஆயுதங்கள் மட்டுமே மோதுகிற போர்க்களமாக சிரியா ஆனது. மக்கள் அகதிகளாகி வருகிறார்கள்..

நட்பு நாடுகளின் நிர்பந்தம் சர்வாதிகாரி ஆசாத்தை 2012 மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தலை நடத்திட வைத்தது..  ஆசாத் தலைமையில்  தேசிய முற்போக்கு கூட்டணி என்ற பெயரிலும், ஆசாத் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட உருவான பாப்புலர் பிரண்ட் பார் சேன்ஞ் அன்ட் லிபரேஷன் எதிரணியும் போட்டியிட்டன.250 இடங்களுக்கு 7195 வேட்பாளர்கள் அதில் 710 பெண்கள் களத்தில் நின்றனர். 12 விதமான அரசியல் கட்சிகள் எதிரும், புதிருமாக இரண்டு அணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டன.

ஒருபக்கம் தேர்தல் நடந்தாலும் ஆங்காங்கு பயங்கரவாதக் குழுக்களும் ஆசாத்தின் விசுவாச ராணுவமும் மோதி சிரியாவை போர்களமாக ஆக்குவது தொடர்ந்தது. இரு தரப்புமே தேர்தலை அமைதியான சூழ்நிலையில் நடத்தி மக்கள் விரும்புகிற ஆட்சியை  உருவாக்க விரும்பவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. தேர்தலும் நடந்தது 14.8 மில்லியன் வாக்காளர்களில் 51.26 சத வாக்காளர்கள் வாக்களித்து ஆளும் கூட்டணி பெரும்பான்மை இடங்களை பிடித்து ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. எதிரணி தேர்தல் முடிவை ஏற்க மறுத்து. 19,மார்ச் 2013 அன்று  எதிரணியின் ஆயுதம் தாங்கிய பயங்கர வாத குழுக்கள் ரசாயன ஆயுதங்களை பிரயோகித்து கான் அன் அசால் நகரில் ராணுவத்தையும் மக்களை யும் கொல்லத் தொடங்கியது. அதே தேதியில் (19,மார்ச் 2013) ஆசாத் ஐ.நா. பொதுச் செயலாளருக்கு  புகார் அணுப்பி நிபுணர்களை அனுப்பி ஆய்வு செய்யக் கோருகிறார்..

அமெரிக்க ரசாயன ஆயுதங்களை ஸ்டாக் வைத்திருக்கும் ஆசாத் அரசுதான் மக்களை கொல்வதாக குற்றம் சாட்டி சிரியாமீது தாக்குதல் தொடுக்கப் போவதாக இப்பொழுது அறிவித்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மூன்று நாடுகளும் ஆசாத்தை குற்றம் சாட்டியது. ஐ.நா.வின் பொதுச் செயலாளர்  எந்தெந்த இடங்களில் என்ன வகையான விஷவாயு? உயரிழப்பு, காயம்பட்டோர் இவைகள் பற்றி ஆய்வு செய்ய 21 பேர் கொண்ட நிபுணர் குழுவை அனுப்பினார். அது தயாரித்த அறிக்கையில் விஷவாயுவை ஏவியது யார் என்பதை முடிவு செய்யாது என்றும் தெரிவித்தார் ரசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது  என்பதை கள ஆய்வு உறுதி செய்தாலும். அதனை ஏவியது யார் என்பதை ஐ.நா நிபுணர் குழு. தெறிவிக்கவில்லை. இதற்கிடையில் அமெரிக்கா ஆசாத் மீது குற்றம் சாட்டி ராணுவ தலையீட்டிற்கு முடிவு செய்துள்ளது. இதனை உலக நாடுகள் வேடிக்கை பார்க்க முடி யாது.. அதற்காக அமெரிக்காவின் படையெடுப்பை கண்டும் காணாமல் விடமுடியாது. அதனை உலக நாடுகள் தடுக்க வேண்டும்.. அமெரிக்காவின் படை யெடுப்பு திட்டத்தை எதிர்க்கும் சீனாவும், ரஷ்யாவும் கண்ணை மூடிக் கொண்டோ.அல்லது அரசியல் ஆதயத்திற்கோ ஆசாத்தை ஆதரிப்பதாக கூறுவது ஒரு பிரச்சார கற்பனையே…

கடந்தகால பிரச்சினைகளில் அந்த நாடுகள் எடுத்த நிலைபாட்டை உலகமறியும்.கடந்த காலத்தில் ஈராக் மீது ராணுவ நடவடிக்கை கூடாது என்று பாதுகாப்பு கவுன்சி லில் சீனாவும், ரஷ்யாவும் வீட்டோ செய்தது சரி என்பதை இன்று உலக மறியும்., லிபியாவில் கடாபி மக்கள் மீது விமானத்தாக்குதல் நடத்த முயற்சித்தால் அதனை தடுக்க நாட்டோ ராணுவத்தை அனுமதிக்க  ஏகமனதான தீர்மானம் நிறைவேற்ற இந்த இரு நாடுகளும் சம்மதித்தன. அதனை பிரெஞ்சு ராணுவம் தவறாகப் பயன்படுத்தி விமானத் தாக்குதல் நடத்தி மக்களை கொன்றதையும் உலகமறியும். அதனை இந்த நாடுகள் கண்டித்தன என்பதையும் உலகமறியும்.. அமெரிக்காவை சார்ந்து நிற்கவே விரும்பும் மன்மோகன் சிங் அரசு அமெரிக்க நடவடிக்கையை ஏற்கவில்லை என்பதை தெளிவாகவே கூறிவிட்டது..

இன்று பயங்கரவாத கும்பல் கள் சிரியாவை ரணகளமாக்குவதை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் சவூதி அரேபியா, சிரியாவின் அண்டை நாடுகள் நினைத்தால் அங்கே அமைதியை கொண்டுவர முடியும். அமைதியான சூழலில் தேர்தலையும் நடத்த முடியும். ஆளுக்கொரு அரசியல் நோக்கத்திறகாக ஆட்சியை சிரிய மக்கள் கையில் கொடுக்க  இவர்கள் விரும்பவில்லை என் பதே உண்மை. இங்கே மக்கள் கையில் அதிகாரம் போகுமானால் பழமையான மதவாத அரசுகள் நிலவும் நாடுகளில் ஆயுதக்குழுக்களை நம்பாமல் சோவியத் பாணியில் மக்கள் ஆங்காங்கு தேர்தல் மூலம் நிர்வாக அமைப்பை ஏற்படுத்தி அதிகாரத்தை எடுத்துக் கொள்வர் என்ற பயமே இவர்களை ஆட்டிப்படைக்கிறது. டாலரைக் கொண்டும்,  எரி பொருள் எண்ணெய் வர்த்தக ஆதிக்கத்தைக் கொண்டும் உலகை ஆளும் முன்னாள் காலனிய வாதி களுக்கு அந்த மேலாண்மைக்கு ஆபத்து என்ற பயம் பிடித்தாட்டுகிறது. இந்த பயமே ஆளுக்கொரு பயங்கரவாத குழுக்களை பராமரிக்க தள்ளியுள்ளது.

ஆசிய கண்டத்தில் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட பல நாடுகளில் மக்களுக்கான ஜனநாயகம் என்பது கேள்விக்குறியாகவே நீடிக்கிறது. அந்த வகையில் சிரியாவும் விதி விலக்கல்ல. உள் நாட்டில் பழமையான சுரண்டல் கும்பலும், மேலைநாட்டு உறவால் உருவான நவீன சுரண்டல் கும்பலும் மக்கள் கையில்  அதிகாரத்தை கொடுக்க தயாரில்லை. இந்த எதார்தத்தை முன்னாள் காலனியவாதி கள் பயன்படுத்தி பழைய சுரண்டலை தொடர எடுக்கிற முயற்சிகளே இன்றைய உலக அரசியலின் இழுபறி சக்தியாக உள்ளது.  எனவே ராணுவ நட வடிக்கை என்பதின் நோக்கம் வேறு… ஐரோப்பிய, அமெரிக்க பிரச்சாரகர்கள் அனைவரும்  யுத்தம் வருமா? வராதா? என்று தலையைப் பிய்த்துக் கொண்டு நிற்கின்றனரே தவிர, ராணுவ நடவடிக் கையின் நோக்கத்தை விவாதிக்க மறுக்கின்றனர்.. ஒரு காலத்தில் அமெரிக்க பொருளாதாரத்திற்கு  போர் என்பது ஒரு டானிக்காக இருந்தது.இப்பொழுது நிலைமை வேறு. அது டானிக்கா? விஷமா? என் பதை உறுதியாக சொல்ல முடியாது. எனவேதான் தர்ம சங்கடம்.

முஸ்லீம் உலகோடு நல்லிணக்கம் கண்டவர் என்பதற்காகவே நோபள் பரிசு பெற்ற ஒபாமாவிற்கு இதைவிட வேதனை தருவது வேறு எதுவும் இருக் காது என்று சிலர் எழுதுகினறனர். ஜனாதிபதி ஒபாமா தர்ம சங்கடத்தில் இருப்பதாக சொல்லப் படுகிறது. பெரும்பான்மை அமெரிக்க பாமரமக் களின் யுத்த எதிர்ப்புணர்வு அவரைத் தடுப்பதாகவும்.. மறுபக்கம் உலக அரசியலில் அமெரிக்காவின் மேலாண்மையை நிலைநாட்ட செனட்டர்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள். போர் தொடுக்கத் தள்ளுவதாகவும் எழுதுகினறன.. பிரிட்டனின் நாடாளுமன்றம் சிரியா மீது ராணுவ நடவடிக்கை கூடாது தடுத்துவிட்டது. பிரான்சிலும் நாடாளு மன்றத்தில் விவாதிக்காமல் ராணுவத்தை அனுப்பக் கூடாது என்ற குரல் எழுந்துள்ளது. ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி என்ற வகையில் புஷ் போல் தான்தோன்றித்தனமாக முடிவெடுக்க அமெரிக்க அரசியல் சட்டம் அனுமதிக்கிறது. ஒபாமாவின் முடிவு எதுவாக வந்தாலும்  சிரியாவின் துயரம் நீங்க நெடுநாளாகும். பேரழிவு ஆயுதமில்லா உலகு, ஐ.நாவின் மூலம் தீர்வு தேடுவது என்பவைகளோடு அது இணை    க்கப்பட்டுள்ளது அதோடு அரபு நாடுகளை பிடித்தாட்டும் பழைய மற்றும் நவீன மூட நம்பிக்கைகள்  அகல்வதை பொறுத்துள்ளது.