திராவிட இயக்கம்: மாற்றைத் தேடும் மறு வாசிப்பு !

  • என்.குணசேகரன்

( ‘திராவிட இயக்கம் ஒரு மறுவாசிப்பு’ நூலில் இருந்து சில பகுதிகள் இங்கே தரப்படுகின்றன…)

திராவிட இயக்கம், தமிழகத்தில் உருவான மாபெரும் மக்கள் இயக்கம் என்பதை யாராலும் மறுக்க இயலாது. கடந்த அரை நூற்றாண்டாக, தமிழ்நாட்டின் அரசியலில் திராவிட இயக்கப் பிரிவுகளே ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளன.

திராவிட இயக்கத்தின் இன்றைய நிலை குறித்து, பகுத்தறிந்து சிந்திப்பவர்கள் அந்த இயக்கங்களின் எதிர்காலம் குறித்த பல கேள்விகளை எதிர்கொள்கின்றனர். அதில் “திராவிட இயக்கம்  நெருக்கடியில் இருக்கிறதா” என்கிற கேள்வியும் ஒன்று. “அப்படி எந்த நெருக்கடியும் இல்லை” என திராவிட இயக்க ஆதரவாளர்கள் அதனை அவசரமாக மறுக்கலாம். தற்போது “திராவிட மாடல்” என்று முன்வைத்து இன்றும் ‘திராவிடக் கருத்தியல்’ வலுவாக உள்ளதாக முன்னிறுத்தப்படுகிறது.

இதற்கு நேர்மாறாக, வேறு சிலர், திராவிட இயக்கத்திற்கு முடிவு வந்துவிட்டது என்கிறார்கள். அவர்கள் தமிழகத்தில் தற்போது வெற்றிடம் நிலவுவதாகவும், அதனை தாங்கள் நிரப்பப் போவதாகவும் சொல்கிறார்கள். தமிழக பாஜக தலைவர்கள் அந்த இடத்தை பிடிப்போம் என்று தொடர்ந்து பேசி வருகின்றனர்.

உண்மையில், தமிழக அரசியலில் வெற்றிடம் எதுவும் ஏற்பட்டு விடவில்லை. திமுக, அதிமுக அல்லாத சில கட்சிகள். அரசியலில் ஆதிக்கம் செலுத்த விரும்புகின்றனர் என்பதற்காக திராவிட இயக்கம் நெருக்கடியில் உள்ளது என்ற முடிவுக்கு வர இயலாது. அதே போன்று, ஜெயலலிதா, கருணாநிதி போன்ற, தலைவர்கள் திராவிட  அரசியல் களத்தில் இல்லாததால் அந்த இயக்கம் நெருக்கடியில் இருக்கிறது  என்று சொல்கிற கருத்தும் சரியானதல்ல. எனினும், எதற்காக நெருக்கடியில் திராவிட இயக்கம் இருப்பதாகக் கருத வேண்டியுள்ளது? 

தமிழகத்தின் சமுகத் தேவைகளிலிருந்து திராவிட இயக்கத்தினர் முன்வைத்த இலக்குகளை அவர்களால் தொடர முடியவில்லை என்பது வரலாற்று உண்மை. இனி அவர்களால் அவற்றை சாதிக்க முடியுமா என்ற அவநம்பிக்கையும் தற்போது ஏற்பட்டுள்ளது. இது அந்த இயக்கம் எதிர்கொள்ளும் முக்கிய நெருக்கடியாகும்.

முன்னிறுத்திய இலக்குகள் எங்கே?

திராவிட இயக்கம் தன்னை பல வகையில் அடையாளப் படுத்தி வந்துள்ளது. பகுத்தறிவுக்கான பாசறை, சமூக நீதி, பிற்பட்டோருக்கான இயக்கம், பெண் விடுதலை, தமிழுக்காக உயிர் கொடுக்கும் இயக்கம் என, தன் அடையாளங்களை வெறும் முழக்கங்களாக மட்டும் வைத்துக்கொள்ளாமல், அவற்றை பயன்படுத்தி வெகு மக்களை தனது செல்வாக்குத் தளத்தில் கொண்டு வந்தது. ஆனால் இன்று மேற்சொன்ன அடையாளங்களில் காலூன்ற இயலாத நிலையில் உள்ளது. அதனால்தான், திராவிட இயக்கம் நெருக்கடியில் உள்ளது எனும் மதிப்பீடு முன்வருகிறது.

எடுத்துக்காட்டாக, 1957-ம் ஆண்டில் திமுக சந்தித்த முதல் தேர்தலிலேயே மத்திய மாநில உறவுகளை சீரமைக்க திமுக வலியுறுத்தியது. அப்போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“இன்றைய அமைப்பில்   அதிகாரங்களும் வருவாயும் மத்திய ஆட்சிக்கே பெரிதும் அளிக்கப்பட்டுள்ளன மாநில அரசு வருவாயை பெருக்கிக் கொள்ள வழியில்லை சாதாரண பிரச்சினைகளில்கூட முடிவெடுக்கும் உரிமை மாநில அரசுகளிடம் இல்லை. மாநிலங்களின் அதிகார வரம்பும் வரிவிதிப்பும் உரிமைகளும் அதிகரிக்கப்பட்டு மத்திய அரசுக்கான அதிகார வரம்பும் வரிவிதிப்பு உரிமைகளும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.”

கடந்த பல ஆண்டுகளாகவே இந்த நிலையை திராவிட இயக்கங்கள் வலியுறுத்தவில்லை. திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது, அல்லது அதிமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது பெயரளவுக்கு இதனை பேசியிருக்கக்கூடும். சமீபத்திய காலங்களில் ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், மத்திய, மாநில அரசாங்கங்களுக் கிடையேயான அதிகாரங்கள் ஜனநாயக அடிப்படையில் மாற்றி அமைக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு தொடர்ச்சியான அழுத்தம் கொடுக்க இயலாத நிலையில்தான் திராவிட இயக்கம் இருந்து வந்துள்ளது.

இதற்கு காரணம் என்ன? மாநில உரிமைகளை மறுத்து வந்துள்ள, பாஜக,காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளோடும் அவ்வப்போது அரசியல் தேவைக்காக இரண்டு கழகங்களும் கூட்டணி கண்டு வந்துள்ளன. இந்தக் கட்டாயமும்  எதற்காக என்பதை ஆழமாக அறிந்திட வேண்டும்.

பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாக்க, மக்கள் வழ்வாதாரங்களை பறிக்கிற கொள்கை கொண்டவை. மாநில மட்டத்தில், இந்த கொள்கை வழித்தடத்தில் இரண்டு கழகங்களும் 1990-ம் ஆண்டுகளிலிருந்து பயணித்து வருகின்றன. இதன் எதிரொலியாகவே, மாநில நலன் சார்ந்த உரிமைகளை அடக்கி வாசிக்கும் நிலைக்கு திராவிட இயக்கங்கள் தள்ளப்பட்டு விட்டன. இவ்வாறு ஒவ்வொரு இலக்கும் கைவிடப்பட்டது.

திராவிட இயக்கத்தின் எதிர்காலம் 

திராவிட இயக்கம் என்றும் நிலைத்திருக்கும் என்றும் அது மக்கள் ஆதரவோடு நீடிக்கும் என்று பலர் நினைக்கலாம். திராவிட இயக்கப் பற்றாளர்கள் எந்த நெருக்கடி வந்தாலும் அவற்றை முறியடித்து முன்னேறுவோம் என முழங்கிடலாம். ஆனால், ஒரு வரலாற்றுப் போக்கினை நாம் மறந்துவிடக்கூடாது. எந்தக் கருத்தியலும், அது சார்ந்த இயக்கங்களும் வரலாற்றில் ஒரே வடிவத்தில் மாறுதலுக்கு உட்படாமல் நீடித்ததில்லை.

எடுத்துக்காட்டாக, இங்கிலாந்தில் 1838 முதல்  1857 -ம் ஆண்டு வரை பெரும் மக்கள் இயக்கமாக செயல்பட்ட மக்கள் சாசன இயக்கம். வாக்குரிமை உள்ளிட்ட அரசியல் சீர்திருத்தக் கோரிக்கைகளை முன்வைத்து எழுந்த இயக்கம் அது. ஆனால், துவங்கிய பத்தாண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து வரலாற்றில் ஏற்பட்ட மாற்றங்களின் ஊடாக, அந்த இயக்கத்தின் தேவை மழுங்கி, பின்னர் அது மறைந்தது.

இதனை குறிப்பிடுவதால் அந்த இயக்கம் எதையும் சாதிக்கவில்லை என்று கருதக்கூடாது. எந்த இயக்கமாக இருந்தாலும் அதன் எதார்த்தத் தேவை முடிந்த பிறகு மறைந்து போவது இயல்பானது. இடையில் அந்த இயக்கம் தன்னை இருத்திக் கொள்வதற்கு பல மாற்றங்களை தனக்குள் ஏற்படுத்திக்கொள்ள முயற்சிக்கக்கூடும். இந்த வரலாற்றுப் போக்கிற்கு  உலக இயக்கங்கள் அனைத்தும் ஆட்பட்டிருக்கின்றன. எனவே, இதற்கு திராவிட இயக்கமும் விதிவிலக்கல்ல.

திராவிட இயக்கத்திலேயே உருவான பல கிளை இயக்கங்கள் மறைந்து போய்விட்டன. அண்ணா அவர்களோடு திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறி திராவிட முன்னேற்ற கழகம் உருவாக்கியவர்களில் முக்கியமானவர், ஈ.வி.கே.சம்பத். அவர், திமுகவிலிருந்து பிரிந்து, “தமிழ் தேசியக் கட்சி” துவங்கினார். பிறகு அவர் காங்கிரசில் சேர்ந்தார். அவர் அமைத்த கட்சி அத்துடன் மறைந்து போனது. இவையெல்லாம் குறுகிய கால நிகழ்வுகள். சமூக இயக்கத்தின் தேவையை நிறைவேற்ற பயன்படாதபோது, இயக்கங்களும், அவை பேசிய கருத்து நிலைப்பாடுகளும் நிலைத்து நிற்கும் என்று கூற இயலாது.

திராவிட இயக்கம் துவங்கிய காலத்திலிருந்து இது போன்ற பல வகையான மாற்றங்களை சந்தித்து வந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தலைவராக விளங்கிய மறைந்த முரசொலி மாறன், “திராவிட இயக்கத்தின் தலைமகன்” என்று நீதிக்கட்சியைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். 1916-ம் ஆண்டு நவம்பர் 20 அன்று தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனும் பெயரில் தனி அரசியல் கட்சி துவங்கப்பட்டது. அதுவே பிறகு நீதிக்கட்சி என அழைக்கப்பட்டது. இதிலிருந்துதான் திராவிடர் கழகமும், பிறகு திராவிட முன்னேற்றக் கழகமும் தோன்றின. 

எந்த இயக்கமும் திடீரென அழிந்து போகாது. ஆனால் ஒரு இயக்கம் தோன்றி, வளர்ந்து, வலுப்பெற்று வந்ததற்கான நிலைமைகள் மாறுகிற போது, அந்த இயக்கத்தின் இருப்பும்,அதன் தேவையும் கேள்விக்குறியாகிறது. இதனால் அது மீள முடியாத நெருக்கடியில சிக்குண்டு தவிக்கும் நிலை ஏற்படுகிறது.            திராவிட இயக்கத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி அதன் வரலாற்று வளர்ச்சியில் அடங்கியுள்ளது. எனவே அந்த இயக்கத்தின் வரலாறு குறித்த மறு வாசிப்பு, தேவைப்படுகிறது.

            இந்த மறுவாசிப்பு, ஆராய்ச்சி ஆர்வத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி அல்ல. நீண்ட கால நோக்கில் மாற்று வாய்ப்பு என்ன என்பதை அறிவதும், அதை நோக்கி தமிழகத்தை கொண்டு செல்லவுமே, இந்த மறுவாசிப்பு தேவை.

  •  

நீதிக்கட்சி செய்தது என்ன?

நீதிக்கட்சி தலைமையிலான  ஆட்சிகள் அவர்களது முக்கிய நோக்கமான பிராமணரல்லாதோர் அரசுப் பணிகளுக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தை ஓரளவு  நிறைவேற்றிக் கொண்டது. இதற்காக, பிற்பட்டோருக்கு அரசுப்பணிகளில் இடஒதுக்கீடு அளிக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற அரசாணையை நீதிக்கட்சி அரசாங்கம்  கொண்டு வந்தது. இது ஒரு முக்கியமான சமூதாய நடவடிக்கையாக அமைந்தது. சமூக ரீதியில் காலம் காலமாக பின்னுக்குத் தள்ளப்பட்ட மக்களை முன்னுக்கு கொண்டு வருவதற்கு இட ஒதுக்கீடு முறை அவசியம் என்ற ஒரு  கோட்பாட்டை மைசூர் சமஸ்தானம் 1918ல் அறிமுகப் படுத்தியது. அதற்கு பிறகு சென்னை மாகாணத்தில் அறிமுகம் செய்த பெருமை நீதிக்கட்சி அரசாங்கத்தையே சாரும்.

நீதிக்கட்சி அரசு மேலும்  சில சமூக சீர்திருத்த நடவடிக்கைகளை கொண்டு வந்தது. தேவதாசி முறை என்றழைக்கப்பட்டு வந்த பெண்களை இழிவுபடுத்தும் ஒரு வழக்கத்தை ஒழித்தது. பெண்கள் சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கு தடையாக இருந்த ஆங்கிலேய அரசின் சட்டத்தை மாற்றி அவர்கள் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட உறுதி செய்தது. இது போன்று கல்வியிலும் சில முற்போக்கான நடவடிக்கைகளை  அந்த அரசாங்கங்கள் கொண்டு வந்தன. அந்தக் காலத்திய சூழலில் இவை அனைத்தும் வரவேற்கத்தக்க, முற்போக்கு  நடவடிக்கைகள் என்பதனை மறுக்க இயலாது.

சுயமரியாதை இயக்கம் !

சுயமரியாதை  இயக்கத்தின் பிரச்சாரத்திற்கு அதன்  அமைப்பு ரீதியான வளர்ச்சி உதவிகரமாக அமைந்தது. குடி அரசு இதழில் வெளிவந்த விவரங்கள் அடிப்படையில் பார்த்தால் சுயமரியாதை  இயக்கத்தின் கிளைகள் கிராமப்புறங்களிலும் பரவி இருந்தன. அந்த இயக்கம் துவக்கப்பட்ட ஓராண்டிற்குள் தஞ்சை, கோவை, இராமநாதபுரம், தென்னாற்காடு, வடாற்காடு, நெல்லை மாவட்டங்களில் 60 கிளைகள் செயல்படத் துவங்கின. அடுத்த ஏழாண்டுகளில் 117 கிளைகளுடன்  10,000 உறுப்பினர்கள் செயல்படுகிற இயக்கமாக வளர்ந்தது. 

சுயமரியாதை இயக்கத்தின் செயல்பாடு அன்றாட வாழ்க்கையின் அனைத்துத் தளங்களையும் தழுவியது. குறிப்பாக குடும்ப வாழ்க்கையில் உறைந்திருக்கும்  சாதி மத வெளிப்பாடுகளில் அது தலையிட்டது. அந்த தலையீடுகளில் முக்கியமானது சுயமரியாதை திருமணங்கள்.

            சுயமரியாதை திருமணம் என்பது குடும்பம், உள்ளூர் சமூகத்தை பிற்போக்குத் தனங்களிலிருந்து மீட்கும் முயற்சியாக விளங்கியது. இயக்கம் துவங்கிய  முப்பது வருடங்களில் அனைத்து தமிழக மாவட்டங்களிலும் சாதி மறுப்பு, பிராமணிய  சடங்குகள் மறுப்பு, புரோகிதர் மற்றும் சமஸ்கிருத மந்திரங்கள் தவிர்த்த சுயமரியாதை திருமணங்கள் நடந்துள்ளன.

            குடும்பம் என்பதை சுயமரியாதைக் குறிக்கோள்களை அடைவதற்கான போராட்டக் களமாக சுயமரியாதை இயக்கம் பயன்படுத்தியது, இது அந்த இயக்கத்தின் மகத்துவமாகத் திகழ்கிறது.

சாதியக் கண்ணோட்டம், மூட நம்பிக்கைகள், பெண்ணடிமைத்தனம், பிற்போக்கான மத சடங்குகள், தீண்டாமை  போன்றவை அன்று தமிழ்க சமூகத்தில்  மண்டிக் கிடந்தன.இவற்றை எதிர்த்த கலகக் குரல்களும் அவ்வப்போது எழுந்துள்ளன. இப்படிப்பட்ட    சமூக முரண்பாடுகளைத் தீர்த்திட  முற்போக்கு கருத்தாக்கங்களை முன்கொண்டு சென்ற  இயக்கமாக  சுயமரியாதை இயக்கம் திகழ்ந்தது. தனது குறிக்கோள்களை எட்டும் பயணத்தின் போது, சுயமரியாதை இயக்கம் அன்றைய காங்கிரசோடும், நீதிக்கட்சியோடும் முரண்பாடு கண்டது.

சுயமரியாதை இயக்கம் சாதித்தவை குறித்து சரியாக மதிப்பிட வேண்டும். இதற்கு பெரியாரின் கீழ்கண்ட வழிகாட்டுதலையே கையாள வேண்டும் :

“எந்த அபிப்பிராயத்தையும் அதனால் ஏற்படும் பலனைக் கொண்டுதான் மதிக்க வேண்டுமே யொழிய வார்த்தை இனிப்பைக் கொண்டும், அழகைக் கொண்டும், செல்வாக்கைக் கொண்டும் மதிப்பது அறிவுடைமை ஆகாது.”

இந்த கோணத்தில் அதனை ஆராய்வதுதான் பலன் தரும்.மாறாக, சுயமரியாதை இயக்கத்தை விமர்சனமற்று போற்றுவது அதனை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுக்க உதவிடாது.

ஒரு மனிதர் சுயமரியாதையுடன் கூடிய வாழ்வினை நடத்த வேண்டுமெனில் அவர்  சுய காலில் நிற்பதற்கான பொருளாதார பலம் பெற வேண்டும்.சுயமரியாதை  இயக்கத்தின் செயல்பாட்டில்  பொருளாதார விடுதலைக்கான கடமைகள் வரையறுக்கப் படவில்லை.இது அந்த இயக்கத்தின்  முக்கிய குறைபாடு. பொருளாதார விடுதலைப்  பார்வையை இணைத்திட கம்யூனிஸ்ட் தலைவர்களான சிங்காரவேலர், ஜீவானந்தம்  போன்றோர் முயற்சிகள் மேற்கொண்டனர்.

1930 ஆம் ஆண்டுகளில் “….ஆங்கிலேய ஆட்சியாக இருந்தாலும், இந்தியர்களால் ஆளப்படும் ஆட்சியாக இருந்தாலும், அது உடைமை வர்க்கங்களின் ஆட்சியாக இருந்தால் அகற்றப்பட வேண்டும்..” பெரியார் அதனை தெளிவாகவே குறிப்பிட்டார் “மகாராஜாக்கள், ஜமீன்தார்கள், முதலாளிமார்கள், ஆதிக்கம் கொண்ட ஆட்சியை அழிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். அப்படிப்பட்ட ஆட்சி பிரிட்டிசாரால் நடத்தப்படுவதானாலும் சரி, இந்தியரால் நடத்தப்படுவதானாலும் சரி, மற்றவரால் நடத்தப்படுவதானாலும் சரி, நமக்கு அதைப் பற்றி கவலையில்லை; அடியோடு ஒழிக்க வேண்டியதுதான் கடமையாகும்;(குடி அரசு;1933)” இந்த சமதர்ம இலட்சிய முழக்கம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது. இது  சில ஆண்டுகளிலேயே நிகழ்ந்ததுதான் வேடிக்கையான வேதனை.

  •  

அண்ணாவின் சில சாதனைகள்

மாநிலத்தின் பெயர் மாற்றம். 1968 ஆம் ஆண்டு மதராஸ் மாகாணம் என்று இருந்த பெயரை தமிழ்நாடு என்று மாற்றியது அண்ணா ஆட்சி. இது முக்கியமான நடவடிக்கை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. தமிழக வரலாற்றுப் பரம்பர்யத்தின் முக்கியத்துவத்தை  வெளிப்படுத்துவதாகவும் தமிழர்களுக்கு பெருமை சேர்ப்பதாகவும்  இது அமைந்தது.

கடந்த காலத்தில் திராவிட இயக்கத்தினர்  பேசி வந்த இன மேன்மைவாத கருத்தியலுக்கு ஏற்ற நடவடிக்கையாகவும் அது இருந்தது. இதனை அன்றும் இன்றும் சாதனையாக முன்னிறுத்தி அரசியல் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ளும் பணியை மிகச் சிறப்பாகவே திமுக தலைவர்கள் செய்து வந்துள்ளனர். குறிப்பாக, இந்தித் திணிப்பு  எதிர்ப்புப் போராட்டத்தில் அவர்களிடம் நெருங்கிய இளைய தலைமுறையை உணர்வூட்டி உற்சாகம் கொள்ளச் செய்திட இது போன்ற நடவடிக்கைகள் அவர்களுக்கு கைகொடுத்தது..

இரண்டு ஆண்டுக்காலம் மட்டுமே இருந்த அண்ணா தலைமையிலான ஆட்சியால், என்ன சாதிக்க முடியும் என்ற கேள்வி எழுப்பப்படலாம். ஆனால், எதிர்கால, மாற்றுக்  கொள்கைக்கான  பாதையில் செல்ல, துவக்கம் எப்படிப்பட்டதாக இருந்தது என்பதும் முக்கியமானது.

சுயமரியாதைத் திருமண முறைக்குச் சட்டப் பாதுகாப்பு வழங்கியதும், விதவை மணம் புரிந்தோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை, இரு மொழிக் கொள்கையைக் அமலாக்கியது போன்றவை  அண்ணாவின் ஆட்சி மேற்கொண்ட முக்கியமான நடவடிக்கைகள். இவை தமிழக சமூகத்தை ஜனநாயகப்படுத்தும் கடமையில் முக்கிய மைல்கற்களாகத் திகழ்கின்றன.

அரசியல் களத்தில் தனிப்பட்ட மனிதர்களின் குணநலன்கள் மாற்றங்களை நிகழ்த்துவதில்லை. எனினும், அண்ணா நேர்மை, எளிய வாழ்க்கை, அயராத உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு, மாற்றுக் கட்சியினரையும் மதித்துப் போற்றும்  பாங்கு, என சிறந்த  பல பண்புகளை கொண்டவராக வாழ்ந்தார். கலை, இலக்கியம் என பல துறைகளில் பன்முகத்திறமைகள் கொண்டவராகவும் அவர் வாழ்ந்தார்.

  •  

மாற்றுக்கான தேடல்: 

ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சியை மக்கள் அடுத்த தேர்தலில் தோற்கடிப்பதுண்டு. ஆளுகிற கட்சி தனது கொள்கைகளால்  மக்கள் அதிருப்திக்கு ஆளாகி, தேர்தலில் தோல்வியை சந்திக்கிறது. தமிழகத்தில் எம்.ஜி.ஆர்  மறைவுக்குப் பிறகு, 1989-லிருந்தே திமுக, அதிமுக என ஆட்சிகள் மாறி மாறி அமையும் நிலை ஏற்பட்டிருந்தது. மக்கள் நலனைப் பாதுகாக்கும் கொள்கையுடன்,மக்கள் நம்பிக்கை பெற்ற மாற்று வலுவாக உருவாகாததால்  இந்த நிலை தொடர்ந்தது.1991-2011 வரை நடந்த சட்டமன்ற தேர்தல்களில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவும் கருணாநிதி தலைமையிலான திமுகவும் மாறி மாறி ஆட்சி அமைத்தன. 

 ஆனால்,இந்த நிலை 2016 தேர்தலில் மாறியது. 2011 முதல் ஐந்தாண்டு காலம் ஆட்சியிலிருந்த அதிமுக 2016 தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வந்தது.அப்படியானால் 2011-2016 ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவின் ஆட்சி மக்கள் வாழ்வை மேம்படுத்திய ஆட்சியாக இருந்ததா? திராவிட இயக்க சித்தாந்த அடிப்படையில் நடத்தப்பட்ட ஆட்சியாக ஜெயலலிதா ஆட்சி இருந்ததா?

தேர்தல் பிரச்சாரத்தில் திராவிடம்

 இதற்கான விடைகளை 2016-ல் நடந்த தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே நடந்த தேர்தல் பிரச்சாரத்திலேயே அறிய முடியும்,இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஜெயலலிதாவிற்கு வயது 68.தேர்தலுக்குப் பிறகு ஜெயலலிதா அந்த ஆண்டிலேயே காலமானார்.ஆட்சியை மீண்டும் பிடிப்பதற்கு  2016-தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்ட கருணாநிதிக்கு வயது 92.இரு தரப்பிலும் ஊழல் உள்ளிட்ட   குற்றச்சாட்டுக்கள் வழக்கம் போல் முன்வைக்கப்பட்டன.

 திருவாரூர் கூட்டத்தில் பேசிய கருணாநிதி “ஊழலில் யாருமே ஜெயலலிதாவை மிஞ்ச முடியாது;அவரைப் போல் தவறுகள் செய்தவர்களும் யாருமில்லை;சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு ஆட்சி செய்கிறார்;இந்த சர்வாதிகார ஆட்சியை வீழ்த்துவதுதான் நமது கடமை”என்று பேசினார்.  அதே நேரத்தில் திராவிடம் பற்றி சொல்லாமல் விடுபடக் கூடாது என்பதற்கு “திராவிட ஆட்சி அமைந்தால்தான் திராவிட மக்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும்” என்றார் கருணாநிதி. ஜெயலலிதா ஆட்சி ஆரிய ஆட்சி என்று பொருள் கொள்ளத்தக்க வகையில் இந்த கருத்தை பிரச்சாரத்தில் சொல்லிவைத்தார்,கருணாநிதி.திராவிட ஆட்சியின் கொள்கைகள் என்ன, அந்த ஆட்சி அடித்தட்டு மக்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த என்ன செய்யும் என்பதைப் பற்றியெல்லாம்  திமுக பிரச்சாரத்தில் எதுவுமில்லை.அதிமுகவை பொறுத்தவரை திராவிடம் என்ற சொல் கூட பிரச்சாரத்தில் இடம் பெறவில்லை.

 தேர்தலில் திமுகவின் பிரச்சாரத்தை ஜெயலலிதா வழக்கமான பாணியில் எதிர்கொண்டார்.திமுகவின் வாரிசு அரசியல், 2ஜி ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட ஊழல்கள், மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட மதுரை தினகரன் அலுவலகத்தின் மீதான தாக்குதல், கடந்த திமுக ஆட்சிகளின் போது நடந்த தொடர் குற்றங்கள்,நில மோசடிகள் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை திமுக மீது சுமத்தி ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார்.  

 பண விநியோகம் இந்த தேர்தலில் பெரும் பங்கு வகித்ததை ஊடகங்கள் வெளிப்படுத்தின.தேர்தல் பிரச்சாரத்தின் போதே இதை உணர்ந்த கருணாநிதி கடலூர் கூட்டத்தில் “அதிமுக உங்களுக்கு ஒட்டு போட பணம் கொடுத்தால் நீங்கள் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும்,அந்தப் பணம் கொள்ளையடித்த பணம்…” என்றார் .   

 அதிமுக 2011-2016 ஆட்சிக்காலத்தில் பல நலத் திட்டங்களை அமலாக்கிய போதும்,ஏராளமான தவறுகளையும் செய்தது.  2015-ஆம் ஆண்டு கனமழை வெள்ளம் மக்களை பாதித்தபோது அதிமுக அரசாங்கம் மக்களை பாதுகாக்கவும்,முறையான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளாததும் மாபெரும் தவறு.சென்னை உள்ளிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் 400-க்கும் மேற்பட்டோர் இதில் உயிரிழந்தனர்.இப்படிப்பட்ட மெத்தனப்போக்கு அதிமுக ஆட்சியில் இருந்த போதிலும்  அதிமுக 2016 தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வந்தது.

  •  

இந்துத்துவ சக்திகளுடன் 

1996-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தது. நான்காவது முறையாக கருணாநிதி முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.2001-வரை ஆட்சியிலிருந்த திமுகவின் ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட முக்கியமான ஒரு திருப்பம் பாஜகவுடன் திமுக ஏற்படுத்திக் கொண்ட உறவு.

 அதுமட்டுமல்லாது,1999- ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான ஒன்றிய அரசில் திமுக பங்கேற்றது. ஒரு இந்துத்துவ கட்சியின் ஆட்சியில் பகுத்தறிவு நெறியில் வந்த கட்சி கூட்டு சேர்ந்து ஆட்சியில் பங்கேற்றது, திராவிட இயக்க வரலாற்றில் ஒரு கொள்கை சறுக்கலாக அமைந்தது. 

 ஏற்கனவே அதிமுக இந்த சந்தர்ப்பவாதத்தை 1998-ஆம் ஆண்டு துவக்கி வைத்தது. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக,பாஜகவோடு கூட்டு சேர்ந்தது. இதுவும் மிகப்பெரும் சந்தர்ப்பவாத செயல்பாடாக திராவிட இயக்க கொள்கைகள் மீது பற்று கொண்டவர்கள் கருதினார்கள். 

 ஆனால்,இதுபோன்ற அரசியல் முடிவுகள் தலைமை எடுக்கிற போது கட்சியின் தொண்டர்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்கிறார்கள்? திராவிட அடிப்படைகளையே புறந்தள்ளி விட்டு முற்றிலும் சந்தர்ப்பவாத நிலை எடுக்கிற தலைமையின் முடிவிற்கு கட்சி அணிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை ?கட்சியின் தொண்டர்கள் இவற்றை ஜீரணித்துக் கொண்டு எப்படி கடந்து போனார்கள் ?இக்கேள்விகளை திராவிட இயக்க வரலாறு எழுதிய பலர்  கண்டுகொள்ளவில்லை. 

 பாஜகவோடு கூட்டு சேர்ந்தது தவறு என்று ஜெயலலிதா இறந்த பிறகும் கூட சொல்வதற்கு அதிமுகவில் யாரும் முன்வரவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில்,நீண்டகாலம் அதிமுக தலைவராகவும்,அமைச்சராகவும் இருந்த கடம்பூர் ராஜு பேசினார்:

“1998- ஆம் ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி வகுப்புவாத கட்சி என்று கருதப்பட்டது.ஜெயலலிதா முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்காக பாஜகவை ஆதரித்தார்.அன்றைக்கு அதிமுக ஆதரவு இல்லாமல் போயிருந்தால், பாஜக மத்தியில் அதிகாரத்திற்கு வந்திருக்க முடியாது'” என்று மிகவும் பெருமையாக கடம்பூர் ராஜு பேசினார்.(DTNEXT,ஜனவரி 22,2018)

 பின்னாளில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்தது தவறு என்ற தொனியில் ஜெயலலிதாவும் கருணாநிதியும் பல சந்தர்ப்பங்களில் பேசினாலும், 1998,1999- ஆம் ஆண்டுகளில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்தது, தமிழகத்தில் பாஜக உள்ளே நுழைய ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியது. ஒரு பகுதியினர் மத்தியில் பாஜகவும் ‘ஒரு நல்ல கட்சி;அதனுடைய தலைவர்களும் நல்ல தலைவர்கள்’ என்கிற ஒரு கருத்தினை உருவாக்குவதற்கு திராவிட கட்சிகள் அவர்களோடு சேர்ந்தது உதவியது.

 இன்றுவரை இந்துத்துவ சித்தாந்தத்தை தமிழ் அடையாளத்துடன் இணைத்துக்கொண்டு தமிழக மக்கள் மனதில் பதியவைக்க சங்கப்  பரிவாரங்கள் முயற்சித்து வருகின்றனர். இதற்கு களம் அமைத்து கொடுத்தது 90-களில் திமுக, அதிமுகவிற்கு ஏற்பட்ட கொள்கை சறுக்கல்கள். 

 2001-ல் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு இந்துக்களின் ஆதரவைப் பெறுவதற்கு சங்கப் பரிவாரங்களின் உத்தியை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக முயற்சித்தது. கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம், கோவில்களில் ஆடு, மாடு, கோழிகளைப் பலியிடத் தடைச் சட்டம் ஆகியவற்றை ஜெயலலிதா கொண்டுவந்தார். பெரியார் தலைமையிலான திராவிட இயக்கம் அன்று மேற்கொண்ட பகுத்தறிவு, மத நல்லிணக்க கருத்துக்களை கைவிட்டு விட்டோம் என்று பறை சாற்றும் வகையில் இந்த நடவடிக்கைகள் இருந்தன.

திமுகவும் 2001-தேர்தலில் பாஜகவுடன் கூட்டு வைத்துக்கொண்டு 21 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட வைத்து,நான்கு தொகுதிகளில் அவர்களை  வெற்றி பெற வைத்தது.திமுக,அதிமுக கட்சிகளால் கிடைத்த அரசியல் அங்கீகாரத்தை வைத்து வகுப்புவாத விஷத்தை தமிழகத்தில் இந்துத்துவா சக்திகள் பரப்பி வருகின்றனர்.

 பெண்கள்,பட்டியலின மக்கள்,சிறுபான்மையினர்,பிற்பட்டோர் என நாட்டின் பெரும்பான்மை மக்களை இரண்டாந்தர குடிமக்களாக்கிடஆர்எஸ்எஸ்  அமைப்பு முயன்று  வருகிறது,இந்த நோக்கத்தை நிறைவேற்ற  இந்து மதத்தினரிடம் இந்து தேசியம் என்ற மத ரீதியிலான உணர்வை தூண்டி,இந்து மத வெறியை ஒருங்கிணைக்க முயற்சிக்கின்றனர்.இதற்கு ஆரிய இனம் என்ற கருத்தையும் ஆரிய இனம் மேலானது என்ற பொய்மையையும் கட்டமைக்க தொடர்ந்து முயன்று வருகின்றனர்.ஆரியர் என்ற தனித்த நிலப்பரப்பு கொண்ட இனம் என்பது இருந்ததில்லை.ஆரிய என்ற மொழிவகை சார்ந்த நாடோடி மக்கள் குழுக்கள் தான் இடம் பெயர்ந்து வந்துள்ளனர்.அவர்களை உயரிய வேத  நாகரிகம் கொண்டவர்கள் என சித்தரித்து மிக பிற்போக்கான பிராம்மணிய  கருத்தியலை பரப்பி  வருகின்றனர்.

  •  

 கடந்த நூற்றாண்டில் சமூக,அரசியல்,நிர்வாக மேலாதிக்கத்தில் இருந்த பிராமணர்கள் இந்த ஆரிய இன மேலாண்மை கருத்தினை ஏற்று, அதனை பரப்பி வந்தனர்.இதற்கு எதிர்வினையாக எழுந்த பிராமணரல்லாதார் இயக்கம் திராவிட இன மேலாண்மை  பேசியது. மொழி.பண்பாடு,நிலப்பரப்பு சார்ந்த தமிழர்கள் ஒரு இனம் என்று பார்க்கிற பார்வையில் பொருள் உண்டு, ஆனால் விந்திய மலைக்கு அப்பால் உள்ள மக்களை ஒரே இனமாக பார்ப்பதற்கு அடிப்படை ஏதுமில்லை. கடந்த கால இந்த சர்ச்சையை மீண்டும் புத்துயிரூட்டி தங்களது சமூகப் பிளவு நோக்கங்களை நிறைவேற்ற தமிழக ஆளுநர் ரவியை சங்கப் பரிவாரங்கள் பயன்படுத்த முனைந்து வருகின்றனர்.இந்து மத உணர்வை,மதவெறியாக  வளர்ப்பதற்கு கடும் முயற்சிகளை பல தளங்களில் சங்கப் பரிவரங்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்,திராவிட இயக்கங்கள் கடந்த கால தவறுகளை செய்திடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 திராவிட இயக்கக் கொள்கைகளில் பல சமூகசீர்திருத்தத்தை அடிப்டையாகக் கொண்டவை.மதத்தின் பெயரால் பிற்பட்ட பட்டியலின மக்களை ஒதுக்கிடும் பிற்போக்குத்தனங்களை திராவிட இயக்கம் எதிர்த்து மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.ஆனால் எந்த ஒரு முற்போக்கு  கொள்கையும், சமூக சீர்திருத்த இலட்சியமும் ஒரு ஜனநாயக அமைப்பு இல்லாமல் சாத்தியமில்லை. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக திராவிட இயக்கங்களில் அப்படிப்பட்ட நிலை இல்லை.

 எதேச்சாதிகார நடைமுறைகளோடு உருவாக்கப்பட்ட கட்சி கட்டமைப்புடன்  கொள்கைகளை நடைமுறைப் படுத்த முடியுமா என்கிற கேள்வி எழுகிறது. சாதி ஒழிப்பு,சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லாத ஒரு சமூகம் படைப்பதற்கான இலட்சிய நோக்கு, பகுத்தறிவு பார்வை கொண்ட மக்கள் போன்ற குறிக்கோளை அடைய தலைமைக்கு ராஜ பக்தியுடன் செயலாற்றும் கட்சி அமைப்பினால் சாத்தியமில்லை; இது கொள்கைகள் மீது அர்ப்பணிப்பு கொண்ட இலட்சக்கணக்கான தொண்டர்கள் தங்களது தனித்தன்மை குறைந்திடாமல் செயலாற்றக் கூடிய ஒரு பெரும் இயக்கத்தினால்தான் அது  சாத்தியமாகும். குறிக்கோள்கள்,இலட்சியங்கள் மீது தான் விசுவாசம் இருக்க வேண்டுமே தவிர தனிநபர்களுக்கு விசுவாசம் காட்டுகிற அரசியல் நாகரீகம், கடந்தகால நிலப்பிரபுத்துவ பண்பாடாகும்.இதிலிருந்து தமிழகம்  மீள வேண்டும்.

அண்மைக் கால நிகழ்வுகள்

 ஜெயலலிதா மறைவு நிகழ்ந்ததும் அதிமுகவில் சசிகலா,தினகரன், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் என அதிகார மையங்களுக்குள் நடந்த அதிகாரப் போட்டி,கருணாநிதி மறைவு ஏற்படுத்திய தாக்கம்,2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்தது என இவை  அனைத்தும் அண்மைய நிகழ்வுகள்.இவை பற்றி சரியான மதிப்பீடு செய்ய சிறிது காலம் தேவைப்படலாம்.

 ஆனால் 2011-2021 வரையிலான பத்தாண்டு அதிமுக ஆட்சி  குறிப்பிடத்தக்க மாறுதல்கள் எதையும் நிகழ்த்தவில்லை.இந்தக் காலம் முழுவதும் தொழிலாளர்,விவசாயிகள் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கங்களின் போராட்டங்கள் ஓய்ந்திடாமல் தொடர்ந்து நிகழ்ந்தன.இதுவே மக்களுக்கு விரோதமான நவீன தாராளமய ஆட்சியே பத்தாண்டுகள் தொடந்தது என்பதற்கான சான்று.

 துவக்க காலங்களில் அண்ணா முன்வைத்த முழக்கமான “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்ற இலட்சியம் கானல் நீராகவே நீடித்தது.ஜெயலலிதா,கருணாநிதி ஆகிய இருவரும் மறைந்த போதிலும் அவர்கள் வெகு மக்கள் வாக்கு வங்கியை தக்க வைப்பதற்கு பின்பற்றிய தவறான அரசியல் வழிமுறைகள் அறவே ஒழிக்கப்படுமா?அவர்கள் காலத்தில் திராவிட கருத்தியலின் சாதகமான அம்சங்களை நீர்த்துப் போக வைத்த அந்த தவறுகள் களையப்படுமா?இவை அனைத்தும் தற்போது முன்னிற்கும் முக்கிய கேள்விகள்.

 கடந்த 20 ஆண்டுகளில் தமிழகத்தின் நடுத்தர வர்க்க மக்கள் அரசியல் ரீதியாக பல மாறுதல்களுக்கு உட்பட்டு வந்துள்ளனர்.அதிமுக,திமுக இரு கட்சிகளும் தனியார்மய தாராளமய கொள்கைகளை பின்பற்றிய நிலையில் சமூக அக்கறை குறைந்து அதீத நுகர்வு கலாச்சாரம்,சுயநலம் அதிகரித்துள்ளது.திராவிட இயக்க ஆரம்ப காலங்களில் அந்த இயக்க வளர்ச்சிக்கு ஆதரவு தளமாக  இருந்த நடுத்தர வர்க்கப் பிரிவினர் இன்று இந்துத்துவ வகையிலான ஆன்மிக நாட்டம் கொண்டவர்களாக மாறுவது பெரிய பின்னடைவு.இதற்கும் திராவிட கட்சிகள் பொறுப்பேற்க வேண்டும்.

 வர்ணாசிரமம், சாதிய ஒடுக்குமுறை,தீண்டாமை  உள்ளிட்ட சமூக கொடுமைகளை களைவதற்கு திராவிட இயக்க முன்னோடிகள் கொண்டிருந்த உறுதிப்பாடு தற்போதைய திராவிட கட்சிகளிடம் இருக்கிறதா?பெண்ணடிமைத்தனம் ஒழித்திட சுயமரியாதை-சமத்துவ இயக்கம் கொண்டிருந்த அக்கறை திராவிட கட்சிகளிடம் இருக்கிறதா? இவ்வாறு இன்றைய நிலைப்பற்றி அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.

தொடரும் மக்களின் தேடல் 

திராவிட இயக்கம் பல உருமாற்றங்களை சந்தித்து தற்போதைய கட்டத்திற்கு வந்துள்ளது.

  • அரசு நிர்வாகம் மற்றும் கல்வித்துறைகளில் பிராமண மேலாதிக்கத்தை ஒழிக்கும் நோக்கத்துடன் எழுந்த நீதிக்கட்சி,
  • சமூக தளத்தில் அந்த மேலாதிக்கத்தை ஒழிக்க எழுந்த பகுத்தறிவு-சுயமரியாதை இயக்கம்,
  • அரசியல் தளத்தில் நுழைந்து, மாநில அதிகாரத்தைக் கொண்டு பிற்பட்டோர் நலன் காக்க அரசியல் இயக்கமாக வடிவெடுத்த திமுக,
  • அதிகாரப் போட்டி முன்னுக்கு வந்த நிலையில் போட்டியாளராக நுழைந்த அதிமுக
  • அதிகாரத்திற்கான போட்டாபோட்டியில் வெகு மக்கள் செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ள சாதாரண மக்களுக்கான ஏராளமான  நல திட்டங்கள்
  • பணபலம்,அதிகார பலம் கொண்டு தேர்தல் வெற்றியே இலட்சியம் என செயல்படுவது.

இவ்வாறான வளர்ச்சியில்தான் தற்போதைய கட்டத்திற்கு திராவிட இயக்கம் வந்துள்ளது. இந்த நீண்ட வரலாற்றில், திராவிட இயக்க இலக்குகளாக முன்வைக்கப்பட்ட இலக்குகள் அனைத்தையும் அடைவதற்கான எதிர்காலப்பார்வை முனை மழுங்கிப் போனது;பதவி,அதிகாரம்,சுயநலம் முக்கியமானதாக முன்னிற்கிறது.

 மக்களும் இந்த உண்மைகளை உணர்ந்து வந்துள்ளனர்.1970-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதி காலத்திலிருந்தே சமத்துவம், சுயமரியாதை உள்ளிட்ட கொள்கைகளுக்கு திராவிட கட்சிகள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதை மக்கள் உணரத் துவங்கினர்.இதனால்தான் 1989 முதல் தேர்தல்களில்  அதிமுக,திமுக என  மாறி மாறி மக்கள் தேர்வு செய்தனர். ‘எது குறைந்த தீமை’ என்ற முனையிலிருந்து தங்கள் தேர்வை அமைத்துக் கொண்டு வந்துள்ளனர். எந்த கட்சி தேவை என்பதை விட எது தேவையில்லை என்று மக்கள் முடிவெடுத்து வந்துள்ளனர்.மக்களுக்கான உண்மையான மாற்று தேவை என்கிற தேடலின் வெளிப்பாடாகவே இந்த எதிர்மறையான தேர்வு நிகழ்ந்து வந்துள்ளது.மக்களின் இந்த தேடல் தொடரும். 

 துவக்க காலத்திலிருந்தே ஒரு அடிப்படையான,ஆழமான குறைபாடு திராவிட கட்சிகளிடம் இருந்து  வந்துள்ளது.இந்திய அளவில் பெரும் கார்ப்பரேட்,நிலவுடைமை சக்திகள் மற்றும் பன்னாட்டு பெரு மூலதன சக்திகளே மத்திய அதிகாரத்தில் இருந்து வந்துள்ளன.அடித்தட்டு மக்களை வாட்டிவதைக்கும் இந்த சக்திகளை எதிர்கொள்வதற்கு,எதிர்ப்பு இயக்கத்தை வலுப்படுத்துவதற்கான உறுதியான திட்டம் திராவிட இயக்க கட்சிகளிடம் இல்லை.மாறாக அவர்களோடு சமரசம் செய்து கொள்வது,அந்த சக்திகளின் ஒரு பிரிவாக உள்ள பிரதேச,மாநில ,பெரிய முதலாளிகள் மற்றும் நிலவுடைமை சக்திகளின் பிரதிநிதிகளாக செயல்படுவது என்ற பாதையில்தான் திராவிட கட்சிகள் பயணித்து வருகின்றன.

 தற்போது திராவிட மாடல் என்று பெரிதாக பேசப்பட்டாலும் மேற்கண்ட குறைபாடு உள்ளவரை பெரிய மாற்றம் எதுவும் திராவிட கட்சிகளிடம் ஏற்படாது.தமிழகத்தில் பெருவாரியான உழைக்கும் மக்கள் தங்களுக்கான மாற்றை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை.இதற்கு தமிழகத்தில் உள்ள ஜனநாயக இடதுசாரி சக்திகள் சரியான திட்டத்தையும் வியுகத்தையும் உருவாக்கிட வேண்டும்.திராவிட இயக்கம் செய்த சில சாதகமான பணிகளையும் துடைத்தெறிய ஆர்எஸ்எஸ்-பாஜக சக்திகள் முயற்சிக்கிற இன்றைய சூழலில் இது அவசியம்.

கருத்தியல் களமும், அரசியல் அதிகாரமும்

(தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய பயிற்சிமுகாமில் ஆற்றிய உரையின் வரிவடிவம். நன்றி: அணையா வெண்மணி)

என்.குணசேகரன்

கருத்தியல் களமும் அரசியல் அதிகாரமும் என்கிற இந்தத் தலைப்பு மிக முக்கியமான தலைப்பு. இது நாம் ஆற்றவேண்டிய மிக முக்கியமான பணிகளை நினைவூட்டுவதாக கருதுகிறேன். கருத்தியல் களத்திற்கும் அரசியல் அதிகாரத்திற்கும் ஒரு இணைப்பு உள்ளது என்பதை சொல்லுவதே ஒரு முக்கியமான விஷயம் என்பது மட்டுமல்ல காலம் காலமாக மறைத்துவைக்கப்பட்டிருக்கிற அல்லது மறக்கப்பட்டிருக்கிற செய்தியை இந்தத் தலைப்பு தெரியப்படுத்துகிறது.

சிறிய கூட்டத்தின் ஆட்சி

அரசியல் அதிகாரம் என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக சமூகத்தின் ஒரு மேல்தட்டு, ஒரு சிறு கூட்டத்துக்குத்தான் சொந்தமாக இருந்திருக்கிறது. அதிகாரம், ஆட்சி, நிர்வாகம் என்கிற இவையெல்லாம் செழுமைப்படுத்தப்பட்டிருக்கிற ஒரு மேம்பட்ட வடிவத்தை பெற்றுள்ள இப்போதைய சமூகம் முதற்கொண்டு, இதற்கு முந்தைய காலங்களிலே மன்னர்களுடைய அரசாட்சி என்கிற முறையில் முடியாட்சி நடைபெற்ற காலம் வரைக்கும், ஆட்சி அதிகாரம் என்பது பெரும்பான்மையான மக்களை ஆள்கிற இடத்தில் ஒரு சிறு கூட்டம் தான் இருந்துவந்திருக்கிறது. உடமை வர்க்கங்கள் என்று சொல்லப்படுகிற ஒரு சிறு கூட்டம் தான் ஆளுகிற இடத்தில் இருந்திருக்கிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அவர்கள் நிலவுடைமைச் சக்திகளாக இருந்திருக்கலாம். அதற்கு முன், சாதியக் கட்டமைப்பு இந்திய சமூகத்தில் வேறூன்றத் தொடங்கிய காலத்தில், கிட்டத்தட்ட அடிமைகள் எஜமானர்கள் என்று இருந்த காலத்திலேயே கூட நிர்வாகம் என ஒரு அமைப்பு இருந்திருக்கிறது. ஓரளவுக்கு அரசு என்ற வடிவம் தோன்றியிருக்கிறது. அப்படிப்பட்ட காலத்திலும் ஒரு சிறு கூட்டம்தான் பெரும்பான்மையினரை அடிமைப்படுத்தியிருந்தது.

ஆனால், சாதாரண மக்களுக்கு இது வெளிப்படையாக தெரியவில்லை. உலகில் கிட்டத்தட்ட 800 கோடி மக்கள் வாழ்கிறார்கள், இதில் 99 % உழைக்கும் மக்கள் ஆவர். இந்த மக்களின் உழைப்பைச் சுரண்டி வாழ்ந்து கொண்டிருக்கிற கூட்டம், ஒப்பீட்டளவில் மிக மிகச் சிரியது. அமெரிக்காவில் வால்ஸ்டீரீட்டைக் கைப்பற்றுவோம் என்ற ஒரு இயக்கம் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. நாங்கள் 99 சதவீதம், நீங்கள் 1 சதவீதம் என்று அவர்கள் முன்வைத்த முழக்கத்திலேயே ஒரு செய்தியை முன்வைத்தார்கள். 1% என்பதுதான் ஆளுகின்ற கூட்டம்.

இப்படி காலம் காலமாக ஒரு சிறு கூட்டம் தான் பெரும்பான்மையை அடக்கி ஒடுக்கி வந்திருக்கிறது.

அதிகாரம் செலுத்தும் வழிமுறை

இந்திய நாட்டை எடுத்துக்கொண்டால், மக்கள் தொகை 130 கோடி. இதில் ஒரு சிறு கூட்டம், ஒரு 250 கம்பெனிகள் இருக்கலாம் (அதில் 10 லிருந்து 12 கம்பெனிகள் அதானி அம்பானி போன்ற பெரும் கார்ப்ரேட் கம்பெனிகள்) இப்படிப்பட்ட ஒரு சிறு கூட்டம், மிகப் பெரும்பான்மையை அடக்கி ஆள்கிறது, நினைத்தை சாதிக்கிறது. கொரோனா பெருந்தொற்றின் காலத்திலும் சாதித்துக்கொண்டிருக்கிறது. அது எப்படி நடக்கிறது?

காலம்காலமாக இது எப்படி சாத்தியமாகிறது என்றால், அடக்குமுறைக்கான, வெகுமக்களை அடக்கி ஆள்வதற்கான இரண்டு கருவிகள் அவர்களுக்கு பயன்பட்டு வந்திருக்கிறது. ஒன்று, நேரடிடையாக அடக்குமுறையை ஏவிவிடக்கூடிய கருவிகள் அவர்களிடம் உள்ளன. ஒரு வலுவான காவல்துறை, ஒரு வலுவான இராணுவம் உள்ளது.  

மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறைந்துகொண்டேயிருக்கிறது. அதே நேரத்தில், அடக்குமுறைக் கருவிகளைப் பலப்படுத்துவதற்கான நிதி உள்ளிட்ட எல்லாவிதமான ஏற்பாடுகளையும் அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். இது இந்திய நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கிற விஷயம்.

உழைக்கும் மக்கள் மீது, இராணுவத்தை ஏவிவிட்டு படுகொலை செய்வது காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது. 1940களில் தெலுங்கானாவில் விவாசிகள் தங்கள் நிலத்துக்காக செங்கொடி ஏந்திப் போராடியபோது, அந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக இந்திய இராணுவம், (அப்போது தான் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்திருந்தது) பயன்படுத்தப்பட்டது. மக்களை அழித்தொழித்தது. பல்லாயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகள் வேட்டையாடப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள். எனவே அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை இராணுவம் காவல்துறை உள்ளிட்டவை உழைக்கும் மக்களின் போராட்டங்களை நேரிடையாக ஒடுக்குவதற்கும் தாக்குவதற்கும் இருந்துகொண்டிருக்கிறது. சிறைகூட அதற்காகத்தான் இருந்துகொண்டிருக்கிறது.

ஆனால் இதைவிட பலமான அடக்குமுறைக் கருவி அவர்களிடம் இருக்கிறது. அதன் வழியாக உழைக்கும் மக்களுடைய ஆதரவான கருத்தைப் பெற்றே அவர்களை அடக்கிஒடுக்குகிறார்கள்.

கருத்தியல் எனும் தளம்

கருத்தியல் தளத்தில், ஆளும் வர்க்கங்களுக்கு, ஆள்வதற்கான ஒப்புதலை உருவாக்குகிறார்கள். மன்னர் தெய்வத்தின் அடையாளம் (இங்கிலாந்தில் ஒருகாலத்தில் இந்தக் கருத்து வலுவாக இருந்தது) அதாவது மன்னருக்கும் தெய்வத்துக்கும் வித்தியாசம் இல்லை என்கிற கருத்து. எனவே, தன்னை அடக்கி ஒடுக்குபவரை மன்னருக்கு சமமாக வைத்துப் பார்க்கிற அந்தக் கருத்து, அது மதத்தின் பெயரால் பதியவைக்கப்பட்டது. இந்தியாவைப் பொருத்தவரை கருத்தியல் என்கிற கோட்டையை ஆளும் வர்க்கம் பலமாகக் கட்டுவதற்கு, ஒரு அடித்தளமாக சாதியக் கட்டமைப்பு என்பது பயன்பட்டிருக்கிறது, பயன்பட்டுவருகிறது.

அதாவது கருத்தியல் தளம் என்பது அடக்கி ஒடுக்கப்படுகிற மக்கள் தன்னை அடக்கி ஒடுக்குகிற கூட்டத்துக்கு எதிராகத் திரும்பிடாமல் பார்த்துக்கொள்கிறது. அவர்கள் எல்லாவிதமான உழைப்பையும் சுரண்டி ஊதியத்தைக் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள், உழைப்புக்கான ஊதியம் கிடைப்பதில்லை. ஆனாலும் அவர்களுக்கு எதிராக உழைக்கும் மக்கள் திரும்பிடாமல் இருப்பதற்கு எதிர்ப்புக் களத்துக்கு போகாமல் இருப்பதற்கு கருத்தியல் தளம் பயன்படுத்தப்படுகிறது.  

அது கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் நடக்கிறது. இவையெல்லாம் நேரடியாகத் தெரியக்கூடியவை. இன்னொரு பக்கம் அது கல்வியின் பெயரால் நடக்கிறது. ஊருக்கு ஊர் இருக்கக்கூடிய பேச்சு வழக்குகளின் ஊடாக அது நடக்கிறது. இந்த ஆளும் வர்க்கத்துக்கும் அதனால் ஆளப்படுகிற, சுரண்டப்படுகிற வர்க்கத்துக்குமான முரண்பாட்டை, வேறுபாடுகளை மட்டுப்படுத்துவதற்கு, அது வெடித்திடாமல் தடுப்பதற்கு இந்தக் கருத்தியல் களம் ஆளும் வர்க்கத்துக்கு பயன்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்தக் கருத்தியல் களமும் அரசியல் அதிகாரமும் பிணைந்த ஒன்று.

கருத்தியல் களத்தில் நாம் செயல்படுகிற போது தீண்டாமை ஒழிப்பு முன்னணி இப்படிப்பட்ட பணியைத் துவங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சிகரமான ஒன்று. இப்போதுதான் ஏதோ கருத்தியல் களத்தில் பணியாற்றுவதாக நான் நினைக்கவில்லை. நீண்டகாலமாக அந்தப் பணி நடந்துகொண்டிருக்கிறது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலையிடுகிற எல்லா இடங்களிலேயும் செயல்கள் மூலமாக, தலையீடுகள் மூலமாக அந்தக் குறிப்பிட்ட கிராமத்துக்கு அந்தக் குறிப்பிட்ட பகுதிக்கு ஒரு செய்தியை, ஒரு கருத்தைப் பதியவைக்கிற வேலையும் கூடவே நடந்துகொண்டிருக்கிறது. ஒரு தீண்டாமைக் கொடுமைக்கு எதிர்த்து  வினையாற்றும்போதே கருத்தியல் தளத்திலும் அது வினையாற்றுகிறது. தீண்டாமை ஒழிப்பு என்கிறபோது சாதி ஒழிப்பு என்கிற கருத்தும் பதிகிறது. சாதி ஒழிப்பு என்றால் சாதிக் கட்டமைப்புக்கான எதிர்ப்புக் குரலாக ஆகும். இவ்வாறு அது சமூக சமத்துவம் என்கிற கருத்தியலுக்கான தளத்தினை உருவாக்குகிறது.

சுரண்டலுக்கான கருத்தியல்

இன்று கருத்தியல் களத்தை தன்கைவசம் வைத்துக்கொண்டு ஆளுகிற வர்க்கம், தன்னுடைய அதிகாரத்தை செலுத்திக் கொண்டிருக்கிறது. பெருமபான்மையான மக்கள் மீது தன்னுடைய அதிகாரத்தை அடக்குமுறைக் கருவிகளைவைத்து மட்டுமல்ல, கருத்தியல் என்ற களத்தையும் வைத்துக்கொண்டு அடக்குமுறையையும் சுரண்டலையும் அவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை செயல்பாட்டாளர்களாகிய நாம் உணரவேண்டியிருக்கிறது. எனவே, கருத்தியல் களம் என்பது மிக முக்கியமானது. இது ஒரு பொதுவான அறிவியல் கோட்பாடு என்றே நாம் சொல்லமுடியும். யார் இதைக் கையில் எடுக்கிறார்களோ, யார் இதை சரியாகப் பயன்படுத்துகிறார்களோ அவர்கள் அதில் முன்னேற்றம் காண்கிறார்கள். அந்த வகையில் கடந்த காலங்களில் இதற்கு பல உதாரணங்களைப் பார்க்கலாம்.

உலக முதலாளித்துவம் ஏற்கனவே இதை உணர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம் 1970களிலேயே இதை உணர்ந்திருக்கிறது. அதனால்தான் அவர்கள் தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் போன்றிருக்கக்கூடிய ஊடகங்கள் அத்தனையும் கொண்டு, எந்தச் செய்தியை மக்களிடத்தில் கொண்டு செல்லவேண்டும், எப்படிக் கொண்டு செல்லவேண்டும் என்று வரையறுத்திருக்கிறார்கள். சோவியத் யூனியன் பற்றிய பொய்களை, உண்மை போன்று சொல்லி, சோசலிசமும் கம்யூனிசமும் மோசமானது என்கிற செய்தியை அவர்கள் கொடுப்பது என்கிற முறையில் 1970களிலேயே பக்குவப்பட்டு வந்திருக்கிறார்கள்.

அதே போன்று சின்னங்களைப் பயன்படுத்துவது. சின்னங்களைப் பயன்படுத்துவது என்றால், இந்தியாவிலேயும் தமிழ்நாட்டிலேயும் அதற்கு நிபுணர்கள் பலர் இருக்கிறார்கள். மோடி பெரிய நிபுணர். அவர் அவருடைய படங்களை எல்லா இடத்திலும் வைத்திருப்பது போன்றவை இதில் அடங்கும். இதெல்லாம் ஹிட்லர் காலத்திலேயே நடந்திருக்கிறது.   கருத்தியல் தளத்தில் ‘அவர் ஒரு பிரம்மாண்டமான மனிதர்’, ‘சரித்திரத்தை மாற்ற வந்த மகா புருஷர்’ என்கிற முறையில் சாதாரண மக்கள் மத்தியில் பதியவைப்பது. இப்படிச் சின்னங்கள் மூலமாக தங்களுடைய மேலாதிக்கத்தை பதியவைப்பது என்கிற முறையிலும் ஆளுகிற வர்க்கம் கருத்தியல் மேலாதிக்கத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு சமூக ஊடகங்கள் போன்றவை அதற்கு பயன்படுகின்றன.

பாரதிய ஜனதா கட்சியும் ஆர்எஸ்எஸ்சும் பிரம்மாண்டமாக ஐ.டி., செல் (தகவல் தொழில்நுட்பம் பிரிவு) வைத்துக்கொண்டு செய்யும் வேலைகளைஎல்லாம் நாம் அறிவோம். முதலாளித்துவமும் உலக ஏகாதிபத்தியமும் இதை செய்துகொண்டிருக்கிறது. கருத்தியல் களம் என்பது அவர்கள் மேலாதிக்கம் செய்து கொண்டிருக்கிற ஒரு முக்கயமான தளமாக இருந்துகொண்டிருக்கிறது.

மேலாண்மையும், மேலாதிக்கமும்

இப்போது நம்முடைய நோக்கம் என்பது காலம் காலமாக இருந்துகொண்டிருக்கிற பிற்போக்குக் கருத்தியலுக்கு மாறாக முற்போக்குக் கருத்தியலைக் கொண்டு செல்வது என்பதுதான். முற்போக்குக் கருத்தியலைக் கொண்டு செல்வது என்பதற்கு பதில் நான் ஒரு சின்ன மாற்றத்தை, (உண்மையில் அது பெரிய மாற்றம்) சொல்லவேண்டிய அவசியம் இருக்கிறது. முற்போக்குக் கருத்தியல் மேலாண்மை செலுத்துகிற ஒரு நிலையை உருவாக்க வேண்டும்.  நீங்கள் கொஞ்சம் சரியாகக் கவனித்தீர்கள் என்று சொன்னால், ஆளுகிற வர்க்கம் கருத்தியல் தளத்தில் செலுத்துகிற அந்த அடக்குமுறையை நான் மேலாதிக்கம் என்று சொல்கிறேன். அவர்கள் மேலாதிக்கம் செலுத்துகிறார்கள். தவறான விஷயங்களுக்கு மக்களை ஆட்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். மக்களை தவறான, மிகப் பொய்யான, கட்டுக் கதைகளை நம்ப வைக்கிறார்கள். இந்தக் கட்டுக் கதைகள் பொய்கள் எல்லாமே அவர்கள் கருத்தியல் தளத்தில், மேலாதிக்கம் செய்ய உதவுகிற மிக முக்கியமான விஷயங்கள். எனவே, ஆளுகிற வர்க்கம், ஒரு சிறு கூட்டம், பெருங்கூட்டத்தை தங்களுடைய கருத்துக்கு, தங்களுடைய கொள்கைக்கு தங்களுடைய அடக்குமுறைக்கு ஆதரவாக அவர்களுடைய சம்மதத்தைப் பெறுவதற்கும் அவர்களைத் தங்களுடைய கொள்கைக்குக் கொண்டுவருவதற்கும் செய்வது மேலாதிக்கம். அவர்கள் செய்வது கருத்தியல் மேலாதிக்கம். சிறு கூட்டம் கருத்தியல் தளத்தில் பெரும்பான்மை மக்களை தன்வயப்படுத்துகிறது என்று சொன்னால் அது மேலாதிக்கம்.

காலம் காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டிருக்கிற பெரும்பான்மை மக்களுக்காக, சுரண்டப்பட்டிருக்கிற பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்காக கருத்தியல் தளத்தில், முற்போக்குக் கருத்தியலைக் கொண்டு சென்று, அதில் மேலாண்மை செலுத்தவேண்டும் என்பதுதான் இன்றைக்கு நம் முன்னர் இருக்கக்கூடிய பணி. உழைக்கும் மக்களின் தரப்பு பெரும்பான்மை என்கிற காரணத்தால் அதை மேலாண்மை என்று சொல்கிறோம். இது சரியான காரணத்துக்காக, சரியான லட்சியத்துக்காக, மனித விடுதலைக்கான மேலாண்மை.

3 தளங்களில் போராட்டம்

இந்த வகையில் நம்முடைய பணி என்பது சாதியம், மதவாதம் இதையெல்லாம் எதிர்க்கிற எதிர்ப்புப் பணி மட்டும் அல்ல. அதே நேரத்தில் இது எதிர்மறை நிகழ்ச்சி நிரல் அல்ல, இது நேர்மறையான நிகழ்ச்சி நிரல்.

மூன்று தளங்களில் இதை செய்யவேண்டும் என்று நான் கருதுகிறேன். ஒன்று, இந்த சாதியம் என்கிற ஒரு மிக முக்கியமான பிற்போக்குக் கருத்தியல் தளம், அதில் செயலாற்றவேண்டிய அவசியம் இருக்கிறது. அதை முறியடிக்க வேண்டிய அவசியம இருக்கிறது. அதேபோன்று மதவாதம். வகுப்புவாதம் என்றும் மதவெறி என்றும் வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிப்பொருள் இருக்கிறது என்று சொன்னாலும் கூட, இன்றைக்கு நாம் விவாதிக்கிற சூழலில், மதவாதம் என்றே வைத்துக்கொள்ளலாம். அந்த மதவாத அல்லது வகுப்புவாதக் கருத்தியல் முறியடிக்க வேண்டிய ஒரு இடத்தில் இருக்கிறது. 

மூன்றாவது, நவீன தாராளமய கருத்தியல். இந்த நவீன தாராளமயம் என்று சொல்லும்போது உடனடியாக நம்முடைய மனத்திரைக்கு முன் வருவது என்பது பொருளாதாரம் பற்றியது. நிச்சயமாக நவீன தாராளமயம் என்பது பொருளாதாரத்தோடு இணைந்தது தான். உயிர் காக்கும் மருந்து என்கிற விஷயத்தில் கூட, லாபம், மூலதனக்குவியல் என்பதற்காக அது எந்த வகையில் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்கிற கொள்கைகள் அடங்கியிருக்கிற ஒரு விஷயம்தான் நவீன தாராளமயம் என்பது.

நவீன தாராளமய கருத்தியல்

அதே சமயம் நவீன தாராளமயம் ஒரு கருத்தியலோடு தான் வந்தது. தனியார் மயம் என்ற கருத்து மக்கள் வெறுத்து ஒதுக்கப்பட்ட ஒரு விஷயமாக இருந்த நிலை இருந்தது. குறிப்பாக 1960களில் 70 வரைக்கும் கூட தனியாரிடம் ஒப்படைத்தால் அவர்கள் லாபம் பார்ப்பார்கள், மக்களைப் பார்க்கமாட்டார்கள் என்கிற நிலை இருந்தது. அதனால் தான் தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் அதிகமான அளவுக்கு பொது முதலீட்டில் சுகாதார நிலையங்கள் அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. போக்குவரத்து உட்பட எல்லாமே அரசுத் துறையில் செயல்படுகிற ஒரு நிலை என்பது இருந்தது. இது இந்தியா முழுக்க இருந்தது. இதற்கு பல காரணங்கள் உண்டு.

1950 காலகட்டத்தில் சோவியத் யூனியனில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் அங்கே ஏற்பட்டிருக்கிறக்கூடிய வளர்ச்சி, அது பொதுத் துறை மூலமாக ஏற்பட்டிருக்கிற ஒரு வளர்ச்சி இங்கே சாத்தியம் என்ற நிலையை உருவாக்கியது. அதனுடைய விளைவாகவும் இந்தக் கருத்து என்பது மக்கள் மத்தியில் நிலவியது. ஆனாலும் ஆளுகிற வர்க்கம் தனியார் துறையை விட்டுவிடவில்லை. அதை வளர்ப்பதற்கான முயற்சிகளை திரைமறைவிலும் சிலநேரங்களில் வெளிப்படையாக வெகுவேகமாக செய்து கொண்டிருந்தார்கள். அதே சமயம், இந்த நேரத்தில் தான் பொதுத் துறையையும் கட்டமைக்கிற வேலை நடந்தது. நவீன தாராளமயம் வருகிறபோது அரசுத் தரப்பிலிருந்தே ஒரு கருத்தை அவர்கள் பதியவைத்துக்கொண்டேயிருந்தார்கள். பொதுத்துறையிடம் இருந்தால் என்றால் அங்கே ஒரு மெத்தனப்போக்கு இருக்கும், நிர்வாகத் திறன் இருக்காது, ஊழல் நிறைந்திருக்கும் என்பதை எல்லாம் சொல்லி பொதுத் துறை என்பது சரியல்ல, தனியார் துறை தான் வெகுவேகமாக செயல்படுவார்கள் என்ற ஒரு கருத்து தொடர்ந்து பதியவைக்கப்பட்டது.

இவ்வாறு கருத்தியல் தளத்தில் செயல்பட்டுக்கொண்டேதான் பொருளாதாரத் தளத்தில் நகர்ந்தார்கள். அதே போல தனிமனித உணர்வில் நவீன தாராளமயம் ஒரு கருத்தை முன்வைத்தது. அதாவது விடுதலைப்போராட்டக் காலத்தில், இளைஞர்களுக்கு சமுதாயத்துக்காக ஏதாவது செய்யவேண்டும் என்கிற சமூக அக்கறை இருந்தது. அது விடுதலைக்கு பிறகும் தொடர்ந்தது. ஒரு மனிதன் என்று பிறந்தால், சமூகத்துக்கு என்ன செய்தான் என்பதுதான் முக்கியமானது. எனவே, தன்னுடைய நலத்தைத் தாண்டி பொதுநலத்தைப் பார்க்கிற அந்த மனப்பாங்கு இருந்தது. 

தனியார்மயம் வரவேண்டும், தனியார் கொள்ளையடிக்க வேண்டும் என்றால், தனியாருக்கு ஒரு மதிப்பு ஏற்படுத்தவேண்டும் என்றால், மேற்சொன்ன தனிமனித உணர்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். நீ பணக்காரனாக வேண்டும், நீ மேலும் மேலும் பணம் சேர்க்க வேண்டும், நீ கோடிஸ்வரனாக மாறவேண்டும். அது உன்னுடைய திறமை. நீ திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும், அதற்கேற்ற தொழில்நுட்பம், அதற்கேற்ற படிப்பு, அதற்கேற்ற முயற்சி, விடாமுயற்சி, பில்கேட்சைப் பார், அவரைப் பார், இவரைப் பார் என்று அது பற்றிய நூல்கள் என்ற முறையில் ஒரு தனிமனித சுயநலத்தை வலுப்படுத்துகிற கருத்தியல் என்பது பதியப்பட்டது. அந்தக் கருத்தியலைப் பதியவைத்துத் தான் ஆளும் வர்க்கம் நவீன தாராளமயத்தை கொண்டுபோனார்கள்.

முதலாளித்துவமும் சாதியும்

இந்த நவீன தாராளமயம் பல தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஆணாதிக்க கருத்தியலை அது வலுப்படுத்தியிருக்கிறது.  ஆதிக்கக் கருத்தியலை மேலும் கிளர்ந்து எழச் செய்ததில் முக்கிய காரணியாக நவீன தாராளமயக் கொள்கைகள் இருந்தன. பிற்போக்கான கருத்தியல் என்பதில் ஒரு முக்கியமான இடத்தைப் பெறுகிறது சாதியக் கருத்தியலும் மதவாதக் கருத்தியலும் அதே போல நவீன தாராளமயக் கருத்தியல். இதற்குள் எல்லா விஷயங்களையும் அடக்கிவிடலாம். பெண்ணடிமைத்தனம் இதற்குள்ளேயே வருகிறது. சாதியம் என்று சொல்லுகிறபோது, சாதியம் என்கிற சித்தாந்தம் என்பது பெண்ணடிமைத்தனத்தை உள்ளடக்கியதுதான். முதலாளித்துவ சமூக அமைப்பில்கூட சாதியம் தன்னை புதுவடிவம் எடுத்து நிலைநிறுத்திக்கொண்டுள்ளது.

முதலாளித்துவமும் நிலப்பிரபுத்துவமும் கூடிகுலாவுகிற, ஒன்றிணைந்திருக்கிற ஒரு சமூகமாக இந்திய சமூகம் இருக்கிறது. முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசாக இந்த அரசு இருக்கிறது என்று சொல்வது சதாரண ஒரு வரி விஷயம் இல்லை. நிலப்பிரபுத்துவம் சேர்ந்திருக்கிறது என்று சொன்னால், நிலப்பிரபுத்துவத்தின் கருத்தியல் என்பதும் அதன் பொருளாகும். 

முதலாளித்துவமும் நிலப்பிரபுத்துவமும் இணைந்துவிட்டது என்று சொன்னால், நவீன காலமாற்றத்துக்கேற்ப சாதியமும் புது வடிவம் பெற்றிருக்கிறது என்பதுதான் அதன் பொருள். இதை முதன்முதலில் கண்டுபிடித்தவர்கள், இந்திய சமுதாயத்தை மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்தவர்களே.

ஒரு சாதியை இன்னொரு சாதி வெறுப்பது, எல்லா சாதிகளும் அடித்தட்டிலிருக்கக்கூடிய உழைக்கும் மக்களான அருந்ததியர் உள்ளிட்ட தலித் மக்கள் மீது ஒடுக்குமுறையை பிரயோகிப்பது, ஒடுக்குமுறை மனநிலையோடு அவர்களை அணுகுவது அது நகர்புறமாக இருந்தாலும் சரி, கிராமப்புறமாக இருந்தாலும் சரி. எனவே முதலாளித்துவத்தில் அது நவீன வடிவம் பெற்று அந்த ஒடுக்குமுறையே தொடர்கிறது என்கிறபோது முதலாளித்துவத்துக்கு அது மிகப் பெரும் பயன்படுகிற ஒரு கருவியாக இருக்கிறது.

காந்தியுடைய கருத்தியலில் பல குறைபாடுகள் இருக்கலாம், ஆனால் அவர் செய்த போதனைகள் அன்றைய சாதி சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதைவிட ஒரு முக்கியமான தாக்கம், இந்த சாதி அமைப்புக்கே மிகப் பெரும் ஒரு புரட்சிகரமான எதிர்ப்பை உருவாக்கி, ஒரு மாற்றுக் கருத்தியலை உருவாக்கியது என்பது டாக்டர் அம்பேத்கர் அவருடைய சிந்தனைகள்.

ஆனால், இந்த சமூகத்துக்குள்ளே சாதியத்துக்கு எதிரான இந்தக் குரல்களும் அனுமதிக்கப்பட்டு அதுவும் நடந்தகொண்டு, அதே நேரத்தில் சாதியம் என்பதை முதலாளித்துவத்துவத்துக்கு பயன்படக்கூடிய விதத்தில் அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். முதலாளித்துவம் எப்படி சாதியத்தை பயன்படுத்திக்கொண்டது என்பது ஒரு நீண்ட பெரிய ஆய்வுக்குரிய விஷயம்.

உதாரணமாக, இன்றைய காலகட்டத்தில், வாக்கு அரசியலில் முதலாளித்துவ கட்சிகள் சாதியக் குழுக்களை எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், சாதியப் படிநிலையை எப்படி தங்களுக்கு ஆதரவாகப் பயன்படுததிக்கொள்கிறார்கள் என்பதை நம்மால் பார்க்க முடிகிறது. எனவே முதலாளித்துவக் கட்சி, முதலாளித்துவப் பொருளாதாரம் இது அத்தனையிலும் சாதியம் என்பது அந்த முதலாளித்துவத்தை வளர்ப்பதற்கு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

சாதியும் மதமும்

முற்போக்குக் கருத்தியலை கொண்டு செல்லவேண்டும் என்பதன் முதல் படி, இந்த சாதியக் கருத்தியலை எதிர்த்துப் போராடவேண்டும் என்பது. சாதியம் என்று சொல்லுகிறபோது, சாதியை அழித்தொழித்தல் என்கிற நிகழ்ச்சி நிரல் முக்கியமானது. அந்த நிகழ்ச்சி நிரலை எப்படி கொண்டுசெல்லவேண்டும் என்பதை நாம் விவாதிக்க வேண்டியிருக்கிறது. அதே போன்று, மதவாதம் என்று சொல்லுகிறபோது, இந்து சமயத்தில் மதமும் சாதியையும் பிரித்துப் பார்க்கமுடியாது. சாதியின் இருப்புக்கு ஒரு ஆன்மீக நியாயத்தைக் கற்பித்து வழங்குவது மதம். கடவுளின் பெயரால்தான் நால்வருணம் படைக்கப்பட்டிருக்கிறது. கடவுளின் பெயரால்தான் சடங்கு சம்பிரதாயங்கள் உள்ளன. இந்து சமயம் என்று சொல்லுகிறபோது சாதி என்பதை அதிலிருந்து பிரிக்கமுடியாது. தனித்தனியாகப் பார்க்க முடியாது.

அதே சமயம் மதவாதம் என்று சொல்லுகிறபோது, பிரித்துப்பார்க்கவேண்டிய தேவை இருக்கிறது. மத நம்பிக்கையாளர்கள் என்கிற ஒரு பிரிவு இருக்கிறார்கள். அவர்கள்தான் கோடான கோடி, ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட உழைக்கும் மக்களில் மத நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மதத்தை நம்புவதும் கூட, மத நம்பிக்கையாளர்களாக இருப்பதும் கூட இன்றைய ஆளும் வர்க்கத்துக்கு சாதகமானதுதான். ஏனென்றால் ஆளும் வர்க்கத்தின் சுரண்டலை மறைப்பதற்கு, மத நம்பிக்கையாளர்களாக இருந்தால் அவரவர் படுகிற கஷ்டங்களுக்கு முந்தைய பிறப்பில் அவர் செய்திருக்கக்கூடிய பாவங்கள் தான் காரணம் என்று எளிதாக சொல்லிவிட்டுப் போய்விடலாம். எனவே, மதநம்பிக்கையாளர்களாக இருப்பதும் ஆளும் வர்க்கத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் சாதகமானதே. அந்த மத நம்பிக்கை என்பதும் மதம் சார்ந்த கருத்துக்கள் என்பதும் நாம் எதிர்நோக்க வேண்டிய முக்கியமான விஷயம்.

மதத்தை எதிர்த்த போராட்டம் என்பதில் இருக்கும் ஒரு சங்கடம் என்னவென்றால், தன்னுடைய வாழ்நிலை, வாழ்வாதாரச் சிக்கல்கள் இதற்கெல்லாம் ஒரு நிம்மதியைத் தருகிற ஒரு புகலிடமாக கோவில்களும் மத நம்பிக்கையும் அவர்களுக்குப் பயன்படுகிற காரணத்தால், நேரிடையாக மதத்தின் மீதான தாக்குதல் என்பது, மத நம்பிக்கையோடு இருக்கிற பெரும்பான்மை மக்களை அந்நியப்படுத்துகிற வேலையைத்தான் செய்கிறது என்பது அனுபவம். எனவே, அனைத்தையும் கணக்கிலெடுத்த அணுகுமுறை தேவை.

அடக்கப்பட்டவர்களின் பெருமூச்சாக மதம் இருக்கிறது. வாழ்க்கைச்சுமையிலிருந்து சிறிது நிம்மதி தருவதற்கான இடத்தில் மதம் இருக்கிறது என்று மார்க்ஸ் மதத்தைப் பற்றி சொல்லியிருக்கிறார். அதே நேரத்தில் சுரண்டுகிற கூட்டத்துடைய கருவியாகவும் மதம் என்றும் மார்க்ஸ் சுட்டிக்காட்டியிருக்கிறார். மதத்துடைய பயன்பாடு பற்றிய பொதுவான நிர்ணயிப்பு இது. எனவே, மத நம்பிக்கை என்பதை இந்த அடிப்படையில் அணுகவேண்டும்.

நாம் ஒரு பிரச்சனையை / இயக்கத்தை எடுக்கிறபோது, அது குறித்து அந்த ஊரில் ஊர் கூட்டம் போடுகிறோம். அப்போது பல விஷயங்களைப் பேசுவோம். அதில் அறிவியலைப் பேசவேண்டும்.  பொருள்முதல்வாதக் கருத்தியலை மக்களுக்கு மனதில் பதிய வைப்பதற்கான வாய்ப்பாக அது அமையும். சாதி ஒழிப்பு பற்றி பேசலாம், சாதியக் கருத்தியல் பற்றி பேசலாம். பிரச்சாரத்திலேயேயும், நேரடியாகவும் கொண்டுபோகலாம். மககளிடம் நெருக்கமாகி விவாதிப்பதன்  மூலமும் கொண்டுபோகலாம்.

இந்துத்துவத்தின் நோக்கம்

அதே நேரத்தில் மதவாதம், வகுப்புவாதம், இந்துத்வாவினை நாம் எதிர்க்க வேண்டியுள்ளது. முதலில் இவைகளுக்கும் மதத்துக்கும் தொடர்பில்லை, மதநம்பிக்கைக்கும் இந்துத்வா சொல்கிற விஷயங்களுக்கும் சம்மந்தமில்லை, மதத்தை அவர்கள் அரசியல் அதிகாரத்துக்குப் பயன்படுத்துகிறார்கள் என்கிற விஷயத்தை மக்கள் மனங்களில் பதியவைப்பது அவசியம். ஒருவரியில்/ வாக்கியத்தில் இதை நான் சொல்லிவிட்டேன், ஆனால் அதைப் பதிய வைப்பது சாதாரண விஷயம் அல்ல. ஏனென்றால் இந்துத்வாவின் மிஷினரி என்பது இந்தியா முழுவதும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அவர்களின் செயல்பாடுகள் குறித்து ஏராளமான விவரங்கள் இருக்கிறது. நிறைய அமைப்புக்கள் இருக்கிறது. வரலாறு, தொல்லியல், சமூகவியல், தத்துவம் உள்ளிட்ட 70 துறைகளில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.  ஒவ்வொன்றுக்கும் ஒரு பார்வை வைத்து அவர்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்துத்வா என்று சொல்லுகிறபோது, முதலில் மத அடையாளம் கொண்டிருக்கிற ஒருவருக்கு படிப்படியாக மதப் பிடிமானத்தை அவர்கள் ஏற்படுத்துகிறார்கள். இது இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. மதநம்பிக்கை என்று சொல்லுவது எப்போதாவது நினைவுக்கு வரும். அன்றாடம் 8லிருந்து 16 மணிநேரம் வேலைசெய்துகொண்டிருக்கும் உழைக்கும் மக்கள் மத்தியில் ஒருவருக்கு மத நம்பிக்கை என்பது ஏதாவது ஒரு நேரத்தில் வர வாய்ப்பிருக்கிறது. வாரம் ஒருமுறை கோவிலுக்கு செல்வது போன்ற வகையில் இருக்கிறது. உழைப்பாளி மக்கள் உழைப்பை செலுத்தவேண்டியிருப்பதால் எப்போதும் மதத்தைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்க நேரமில்லை. எந்த மதம் என்று கேட்டாலோ, வழிபாடு நடத்தும்போதோ ஒருவர் தன்னுடைய மதத்தை சொல்வார். மத அடையாளத்துடன் தன்னை இணைத்துக்கொள்வார். ஆனால் இந்துத்வாவாதிகள் செய்வது மதம் தான் எப்போதும் என்று உணர வைப்பது, மதப் பிடிமானத்தை ஏற்படுத்துவது.

கொரோனா காலத்திலேயும் இராமர் கோவில் கட்டுவதற்கான பணியில் இந்துத்வாவாதிகள் இறங்கினார்கள். கொரோனா தொற்று தீவிரமாக பரவிவரும் சூழலில் அடிக்கல் நாட்டுவிழாவை அவர்கள் நடத்தினார்கள். அந்த விழா தொற்றை அதிகரித்தது. இராமர் கோவில் கட்டுவது இப்போது தேவைப்படும் நிகழ்ச்சி நிரலா? இந்தியாவின் பொருளாதாரம் அதள பாதளத்தில் போய்க்கொண்டிருக்கிறது, கோடிக்கணக்கான மக்கள் நடுத்தெருவுக்கு வந்துவிட்டனர். இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் இருக்கின்றபோது, இராமர் கோவில் கட்டுகிறார்கள் என்று சொன்னால், ஒரு மத நம்பிக்கை இருக்கிறவருக்கு இந்த செய்தி போய் சேருகிறபோது நம்முடைய இராமருக்கு கோவில் கட்டுகிறார்கள் என்று மதப்பிடிமானம் வலுக்கிறது. சிறுபான்மை மதங்களுக்கு எதிராக இந்து மதப்பிடிமானத்தைக் கெட்டிப்படுத்துகிற வேலை நடந்துகொண்டிருக்கிறது. இதர மதத்தை வெறுக்கும் போது மத உணர்வு வகுப்புவாதமாக, மதவாத வடிவம் எடுக்கிறது. டெல்லியில் இந்த சூழலிலும் இஸ்லாமியர்கள் தாக்கப்படுவது தொடர்ந்துகொண்டிருக்கிறது. அது நீண்டகாலமாக இவர்கள் செய்துகொண்டிருக்கும் வேலை. எனவே கலவரங்களை செய்வதன் மூலம் இந்துக்களை ஐக்கியப்படுத்தும் வேலையை இந்துத்வாவாதிகள் செய்துகொண்டிருக்கிறார்கள்.

இதில் இன்னொரு அம்சத்தையும் நாம் பார்கக வேண்டியிருக்கிறது. இந்துத்வா என்று சொல்லுகிறபோது இந்து மதம் சார்ந்தவர்களை அவர்கள் வகுப்புவாதக் கருத்தியலுக்கு கொண்டுசெல்கிறபோது, ஏதோ இந்துக்களுக்காக பாடுபடுகிற ஒரு இயக்கமாக ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார இயக்கத்தை அவர்கள் முன்னிறுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் கட்டமைக்க நினைக்கிற இந்து ராஷ்டராவின் கட்டமைப்பு முழுக்க முழுக்க சாதியக் கட்டமைப்பு தான், சாதியப் படிநிலைதான், சாதிய ஒடுக்குமுறைதான். பட்டியல் சாதியினர், பிற்படுத்தப்பட்டோர், ஆதிவாசி உள்ளிட்ட பெருமபான்மை ஒடுக்கப்பட்ட மக்களை ஒரு சிறு கூட்டம் அடித்தட்டில் வைத்து அவர்களை ஒடுக்குகிற முறைதான். பிராமணியம் என்ற கருத்தியல் இந்த ஏற்பாட்டுக்கு உதவுகிறது. அதே நேரத்தில் ஆளுகிற, ஆதிக்கம் செலுத்துகிற பிராமணியம் என்று சொல்லுகிறவர்களின் இன்னொரு முகம், பெருமுதலாளித்துவ கார்ப்பரேட் முகம்.

எனவே, அவர்களின் நிகழ்ச்சிநிரல் என்பது, இந்து ஒற்றுமை என்ற பெயரால் சாதிப் படிநிலையை கெட்டிப்படுத்துவது. இதற்கு சிறுபான்மை எதிர்ப்பு உதவுகிறது. இதுதான் வகுப்புவாதம். இந்த நிகழ்ச்சி நிரலை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் அம்பலப்படுத்துகிறோம் என்ற பெயரில் எல்லோரையும் திட்டிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. இதுதான் அவர்கள் கட்டமைக்க விருப்புகிற சமூக அமைப்பு என்று சொல்லுகிறபோது அந்தக் கருத்தியல் அம்பலப்படும்.

சமத்துவக் கருத்தியல்

நவீன தாரளமயக் கருத்தியல், மதவாதக் கருத்தியல், சாதியக் கருத்தியல் இவை மூன்றும் ஒன்றோடொன்று பிணைந்திருக்கிறது. இந்தப் பிற்போக்குக் கருத்தியலுக்கு மாறாக சமத்துவக் கருத்தியலை – சமத்துவ, மதச்சார்பற்ற, ஜனநாயக கருத்தியல் என்பதை கொண்டு செல்லவேண்டியிருக்கிறது.

சமத்துவம் என்று சொல்லுகிறபோது சாதி நீங்கிய, சாதிவேறுபாடுகள் களையப்பட்ட, சாதி ஒழிந்த அனைத்து மத நம்பிக்கை கொண்டவர்களும் ஒற்றுமையாக, இதர மத நம்பிக்கை கொண்டவர்களை மதிப்புமிக்கவர்களாகக் கருதுகிற, அப்படிப்பட்ட மத நம்பிக்கையாளர்களைக் கொண்டிருக்கிற ஒரு சமூகம். அதே நேரத்தில், இந்த சமூகம் இப்படிப்பட்ட முற்போக்குக் கருத்தியலை முன்னெடுக்கக்கூடிய ஒரு சமூகம், முழுக்க முழுக்க பொருளாதாரத்தை தன் கையில் எடுத்திருக்கும். பொருளாதாரத்தை பெரும்பான்மை மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில், பொருளாதார உற்பத்தி, அதனுடைய பலன், விநியோகம் இந்த மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் அது மாற்றும். முற்போக்குக் கருத்தியலை விதைக்கிற போது அது உடனடியாக இந்த மாற்றங்களை ஏற்படுத்திவிடாது. பொருளாதார அமைப்பில் சமத்துவம் என்று சொல்லுகிறபோது, உழைக்கும் மக்கள் பொருளாதாரத்தைக் கட்டுக்குள் கொண்டுவருகிற அந்த நிலை ஏற்படும். முற்போக்குக் கருத்தியல் அந்த மாற்றத்தைக் ஏற்படுத்தும். அப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறபோது, முற்போக்கு கருத்தியல் மக்களின் மனங்களைக் கவ்விப்பிடித்து, அந்த உழைக்கும் மக்கள் தங்களுக்கான அரசியல் அதிகாரத்தைக் கட்டமைப்பார்கள். இதுதான் வழி.

இதை நான் சொல்லுகிறபோது, உடனே பலருக்கு இது சாத்தியப்படுமா என்கிற அந்தக் கேள்வி வரும்.  அதற்கு வரலாறுதான் ஒரே பதில். பிற்போக்குக் கருத்தியலுக்கும் முற்போக்கு கருத்தியலுக்குமான அந்தப் போராட்டம் இன்று நேற்றல்ல, பல்லாயிரம் ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. அதில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. இன்றைக்கு பல சட்டங்கள், முன்னேற்றங்களைப் பார்க்கிறோம். ஏராளமான போராட்டங்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது என்பதே ஒரு நம்பிக்கைக்குரிய விஷயம். முற்போக்குக் கருத்தியல் என்பது பல ஆண்டு காலமாக, இன்னும் சொல்லப்போனால் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே கடவுள் இல்லை என்று நாத்திக்கருத்துக்களை பரப்பியவர்கள் இந்தியாவில் இருந்திருக்கிறார்கள். மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் அடக்கி ஒடுக்குகிற ஆதிக்க நிலையில் இருக்கக்கூடிய பிராமணியம் என்கிற கருத்தியலை எதிர்த்து, பிராமணர்களை எதிர்த்து இந்தக் கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள். இன்றைக்கு வரையில் அதனுடைய தொடர்ச்சி என்பது இருந்து கொண்டிருக்கிறது. எனவே நிச்சயமாக முன்னேற்றம், சாதனைகளைச் செய்யமுடியும்.

இன்றைக்கு சீனாவில், உழைக்கும் மக்களிடம் தான் பொருளாதாரக் கட்டுப்பாடு என்பது இருக்கிறது. நிறைய சாதனைகள், வெற்றிகள் இந்தப் போராட்டப் பயணத்தில் இருக்கிறது. அந்த வகையில், முற்போக்குக் கருத்தியலுக்கும் பிற்போக்குக் கருத்தியலுக்குமான போராட்டத்தை நாம் முன்னெடுத்துச் செல்லவேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால் வரலாற்றில் வெற்றி என்பது முற்போக்குக் கருத்தியலுக்குத்தான். நாம் வெற்றிக்கான பயணத்துக்குத்தான் வரலாற்றைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்ற நம்பிக்கையோடு அதை செய்யவேண்டியிருக்கிறது.

உள்ளூர் சமூகங்கள்

இந்த முற்போக்குக் கருத்தியலை மிக முக்கியமாக உள்ளூர் சமூகங்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதை நான் வலியுறுத்திச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். உள்ளூர் மட்டத்தில் தனிநபர்களை அணுகக்கூடிய  வாய்ப்புக்களை முதலாளித்துவம் பெற்றிருக்கிறது. தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட ஊடகங்கள் அனைத்தும் தனிநபர்களை எட்டியிருக்கிறது. பிற்போக்குக் கருத்தியல் தனிநபர்களை சென்றடைந்திருக்கிறது. அது மதவாதம், சாதியவாதம், நவீன தாராளமயம் இவை எதுவாக இருந்தாலும் அது தனிநபர்களை சென்றடைந்திருக்கிறது.

அதே போன்று முற்போக்குக் கருத்தியல் தனிநபர்கள், தனிநபர்கள் வாழுகிற உள்ளூர் சமூகம், தெரு, நகர வார்டு, கிராமம் என்கிற உள்ளூர் சமூகத்தை நோக்கிச் செல்லவேண்டிய அவசியம் இருக்கிறது. உள்ளூர் சமூக மக்களிடம் உரையாடுவது அவசியம். உரையாடுவதன் மூலமாக மட்டும் மாற்றம் வந்துவிடாது. செயல் முக்கியமானது. ஒரு செயல் பல கருத்துக்களை, பல பாடங்களை மக்களுக்கு இயல்பாக அனுபவங்கள் மூலமாகக் கற்றுத் தருகிறது. மக்கள் அனுபவங்கள் மூலமாக கற்றுக்கொள்கிறார்கள் என்பதை மாவோ சொல்லியிருக்கிறார். அவர்கள் அனுபவங்களைப் பெறுவதற்கான வாய்ப்பை நாம் ஏற்படுத்தவேண்டும்.

முற்போக்குக் கருத்தியலை கொண்டு செல்வதற்கு, உள்ளூர் மட்டத்திலான மதச்சார்பற்ற, அறிவியலான சமூகங்களை நாம் எங்கெங்கெல்லாம் செல்கிறோமோ அங்கெல்லாம் உருவாக்க வேண்டும். உள்ளூர் மட்டத்திலான முற்போக்கு சமூகங்களை பல்லாயிரக்கணக்கில் தமிழகத்தல் நாம் உருவாக்குகிறபோது அது மேலும் மேலும் பரவும். ஒரு அறிவியல் விதியைச் சொல்வார்கள், இயக்கவியல் விதி என்று ‘அளவு மாறுபாடு அடைய குணமாறுபாடு அடையும்’. ஒரு 10 ஊர்களில் செய்தோமென்றால் அடுத்து 11, 12 என்று போகாது, 10 நூறாகும், ஆயிரம் ஆகும், பத்தாயிரம் ஆகும், லட்சமாகும். இப்படிப்பட்ட உள்ளூர் சமூகங்களைக் கட்டி அமைத்தல் என்பது, டெல்லியின் ஆட்சி அதிகாரத்தை உழைக்கும் மக்கள் கைப்பற்றுகிற ஒரு நிலைக்கு அது கொண்டுசெல்லும். ஏனென்றால் மத்தியில் ஆட்சி என்பதுதான் இந்த முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அதிகாரம் கோலோச்சிய ஆட்சி. எனவே உள்ளூர் சமூகங்கள் வலுவாகக் கட்டமைக்கப்படுவது என்பது முற்போக்கு கருத்தியலைக் கொண்ட கோடிக்கணக்கான உள்ளூர் சமூகங்களை நாம் உருவாக்குகிறபோது, அரசியல் அதிகாரம் முற்போக்காளர்கள் கையில், உழைக்கும் மக்கள் கையில் கைவர வாய்ப்பிருக்கிறது.

மானுட எதிரி ஏகாதிபத்தியம்; வர்க்கப் புரட்சியே தீர்வு !

என். குணசேகரன்                           

ரஷ்ய சோசலிசப் புரட்சி இன்றைக்கும் பல பாடங்களை மனித சமூகத்திற்கு கற்றுத் தருகிறது. முதலாளித்துவம் உலகளாவிய ஒரு அமைப்பு முறையாக செயல்பட்டு வந்தாலும் அது சமச்சீரற்ற முறையில் வளர்கிறது.

 உலகின் பல பிரதேசங்கள் வளர்ச்சியில் பின்தங்கி, வறுமை, வேலையின்மை பிரச்சனைகளால் கடும் துயரங்களை அனுபவித்து வருகின்றன. ஆனால் உலகின் ஒரு பகுதி மேலும் மேலும்  செல்வக் குவிப்புக்கான தளங்களாக உள்ளன. ஒரு சிறு முதலாளித்துவ கூட்டம் பெரும்பான்மை மக்களை சுரண்டி வேட்டையாடி வருகிறது. இந்த சமச்சீரற்ற வளர்ச்சி பல பகுதிகளில் புரட்சிகர எழுச்சிகளை ஏற்படுத்துகிறது. 

1917நவம்பரில் மானுட வரலாற்றில் ஒரு திருப்பமாக ஏற்பட்ட ரஷ்யப் புரட்சியும் உலக முதலாளித்துவத்தின் ஒரு பலவீனமான பகுதியில் வெடித்து எழுந்தது. முதலாளித்துவத்தின் சமச்சீரற்ற வளர்ச்சி என்பது ஒரு விதியாகவே நிகழ்ந்து வருகிறது. முதலாளித்துவத்தின் இன்றைய கட்டமான ஏகாதிபத்தியமும் அந்த விதிக்கு உட்பட்டு இயங்கிவருகிறது. எனவே புரட்சிகர எழுச்சிக்கான  வாய்ப்புகள் மங்கிவிடவில்லை. மாறாக, மேலும் மேலும் சோசலிசத்திற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருந்து வருகின்றன.

ஏகாதிபத்தியத்தின் தோற்றம் 

லெனின் 1916- ஆம் ஆண்டில் சூரிச் நகரில் தலைமறைவு வாழ்க்கையின்போது  “ஏகாதிபத்தியம்: முதலாளித்துவத்தின் உச்சகட்டம்” என்ற நூலை எழுதினார். அதில் கடந்த நூற்றாண்டில் முதலாளித்துவம் வந்தடைந்த புதிய கட்டத்தினை  லெனின் விளக்கியிருந்தார்.

முதலாளித்துவத்தின்  வளர்ச்சி  நீண்ட வரலாறு கொண்டது. வெகு நீண்ட பாதையைக் கடந்து தற்போதைய நிலைக்கு இன்றைய முதலாளித்துவம் வந்துள்ளது.  பல வளர்ச்சிக் கட்டங்களை தாண்டித்தான் இன்றைய முதலாளித்துவம் உருப்பெற்றது.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அது ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியது. இதனை லெனின் ஏகாதிபத்திய கட்டம் என்று விவரித்தார். இந்தக் கட்டத்தில் உலகம் முழுவதும் அரசியல், பொருளாதார வளர்ச்சி பல வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் கொண்டதாக இருந்தது.

அரசியல் வளர்ச்சியை எடுத்துக் கொண்டால் பல நாடுகளில் ஜனநாயக அமைப்பு முறையும், பல நாடுகளில் சர்வாதிகார முறையும் இருந்தன. பல நாடுகளில் ஒரு ஜனநாயக அமைப்பு வளர்ச்சி பெறாத சூழலும் இருந்துவந்தது. பொருளாதாரத்திலும் வேறுபாடுகள் இருந்தன.சில நாடுகள் பெரும் வளர்ச்சி பெற்றிருந்தன. பல நாடுகள் வளர்ச்சி குன்றிய நிலையில் இருந்தன.

உலகின் முன்னணி நாடுகள் தங்களது பொருளாதார ஆதிக்கத்தை வெளிநாடுகளில் வலுப்படுத்திக் கொள்ளவும் , நாட்டின் எல்லைகளை பங்கு போட்டுக் கொள்ளவும் முனைந்தன. இதற்கான நாடுகளின் கூட்டணி அமைந்தன. இவை பொருளாதார ஆதிக்கத்திற்கும் பல நாடுகளை ஆக்கிரமிப்பதற்கும் ஏற்படுத்திக்கொண்ட கொள்ளைக்கார கூட்டணிகள். இந்த கூட்டணிகளுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான போட்டி , இரண்டு உலகப் போர்களுக்கு இட்டுச் சென்றது.

கடந்த இருபதாம் நூற்றாண்டின் முதல் ஐம்பது ஆண்டுகளில் நிகழ்ந்தளுக்கு இரண்டு உலகப் போர்களின் பாதிப்பை ஆசிய நாடுகளும் , ஏழை நாடுகளும் எதிர்கொண்டன.

கடுமையான வறுமையும், மோசமான பொருளாதார நிலைமைகளும் அந்த நாடுகளை வாட்டி வதைத்தன. போர்களால் உலகத்தின் முன்னேறிய நாடுகளின்  முதலாளித்துவ வர்க்கங்கள் அதிகமாக பலன் பெற்றன.

சில நாடுகள் புரட்சிகரமாக உலக முதலாளித்துவ பிடியிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டன. அவை பொருளாதாரத்தில் வளர்ச்சியடையாத நாடுகளாக இருந்தாலும், சோசலிச  வளர்ச்சிப் பாதையை பின்பற்றத் தொடங்கின. அந்த சோஷலிச நாடுகளில் மக்களின் வாழ்க்கைத் தரம் காலனி ஆட்சிக் காலத்தில் இருந்ததைவிட முன்னேற்றம் கண்டது.

உலகில் முதலாளித்துவ முகாமிற்கும் சோசலிச முகாமிற்கும் முரண்பாடுகள் தீவிரமடைந்தன. இதனால், உலக முதலாளித்துவம் கடும் நெருக்கடிகளுக்கு ஆளானது. எனினும் முதலாளித்துவம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. 1980-90-களில் நவீன தாராளமய காலம் துவங்கியது. இந்தக் கொள்கைகள் முதலாளித்துவ மூலதன  வளர்ச்சிக்கு மேலும் ஊக்கமளிப்பதாக அமைந்தன. 

சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு ஏகாதிபத்திய உலக மேலாதிக்கம் மேலும் வலுப்பெற்றது. பொருளாதார சுரண்டல் மட்டுமல்லாது இயற்கை வளங்களை கொள்ளையடித்தல், பாட்டாளி வர்க்க புரட்சி மீண்டும் எழுந்திடாமல் தடுக்க வலதுசாரி, பிற்போக்கு சக்திகளை வலுப்படுத்துவது, இன்றுள்ள சீனா உள்ளிட்ட சோசலிச நாடுகளுக்கு எதிராக பல நடவடிக்கைகளையும், பல கூட்டணிகளையும் உருவாக்குவது என பல வழிகளில் அமரிக்கா உள்ளடங்கிய உலக ஏகாதிபத்தியம் தனது மேலாதிக்கத்தை நிலை நிறுத்த இடைவிடாது முயற்சித்து வருகிறது.

ஏகாதிபத்தியத்தின் இயல்புகள் 

லெனின் தனது ஏகாதிபத்தியம் நூலின் ஏழாவது அத்தியாயத்தில் ஏகாதிபத்தியத்தின் ஐந்து இயல்புகளை விளக்குகிறார்.

 1) உற்பத்தியும்  மூலதனமும் ஒன்றுகுவியும்  நிலை வளர்ந்து, ஏகபோகங்கள் உருவாகின்றன. இவை பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் சக்திகளாக வளர்கின்றன.

 2) வங்கி மூலதனம் தொழில்துறை மூலதனத்துடன் ஒன்று சேர்கின்றன. இந்த “நிதி மூலதனம்” அடிப்படையில் நிதியாதிக்கக் கும்பல் உருவாகிறது.

 3) அதுவரை முக்கியத்துவம் கொண்ட  சரக்கு ஏற்றுமதி என்ற நிலையிலிருந்து மாறி, மூலதன ஏற்றுமதி முக்கியத்துவம் பெறுகிறது.

 4) சர்வதேச அளவில்  ஏகபோக முதலாளித்துவக் கூட்டுகள் உருவாகின்றன; அவை உலகையே தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்கின்றன.

5) முன்னணி முதலாளித்துவ அரசுகள்  உலகப் பரப்பினையே தங்களுக்குள் பங்குபோட்டுக் கொள்கின்றன.

இது கடந்த நூற்றாண்டில், நூற்றாண்டின் துவக்கத்தில்  ஏகாதிபத்தியம் வளர முற்பட்ட சூழலில், அதன் இயல்புகளைப் பற்றி லெனின் வழங்கியுள்ள ஆய்வு. அவர் குறிப்பிட்டுள்ள அந்த ஐந்து  அடிப்படை இயல்புகளும் இன்றைக்கும் நீடிக்கிறதா? இன்றைய ஏகாதிபத்தியத்திற்கும் அவை பொருந்துவதாக உள்ளதா? மார்க்ஸ் முதலாளித்துவ இயக்கத்தையு ஆராய்ந்து விளக்கியது போன்று, அவருக்குப் பிறகு லெனின், முதலாளித்துவத்தின் புதிய வளர்ச்சிப் போக்குகளை ஆராய்ந்து விளக்கினார். இவர்கள் வகுத்தளித்த பாதையில் இன்றைய ஏகாதிபத்தியத்தையும்,  அதன் இயல்புகளையும் அறிதல் அவசியம். ஏனெனில், முதலாளித்துவத்தை வீழ்த்தி, உழைக்கும் வர்க்கத்தின் அதிகாரத்தை நிலைநாட்டவும், சோசலிச மாற்றத்தை  ஏற்படுத்துவதற்கும் இந்தப் புரிதல் மிக அவசியமானது.

லெனின் குறிப்பிட்ட ஏகாதிபத்தியத்தின் அந்த  ஐந்து இயல்புகளும் இன்றைய ஏகாதிபத்தியத்திற்கும் பொருந்தும் ; எனினும் கடந்த நூற்றாண்டிற்கும், இந்த 21-வது நூற்றாண்டிற்கும் இடையில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. புதிய சூழல், புதிய நிலைமைகளை உள்வாங்கி, ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தை சோஷலிச சக்திகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

லெனின் உற்பத்தியும் , மூலதனமும்  மையப்படுவது ஏகாதிபத்தியத்திற்குரிய தன்மையாக குறிப்பிடுகிறார். தீவிரமான போட்டி முதலாளித்துவ சமூகத்தில் நடப்பதால் உற்பத்தியும் மூலதனமும் மையப்படுகிறது. போட்டியினால் பெரிய சில கம்பெனிகள்  உற்பத்தியின் குவி மையமாக மாறுகின்றன. இவ்வாறு மையப்படுவது ஒரு கட்டத்தில் தொழில் ஏகபோகங்களை உருவாக்குகிறது. சுதந்திரமான போட்டி என்ற இடத்தில் ஏகபோக கூட்டணிகள் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் நிலை வருகிறது. இந்த ஏகபோகங்கள் பொருளாதார வாழ்வில் நிர்ணயிக்கும் சக்திகளாக விளங்குகின்றன. இதற்கு லெனின் தனது காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை ஆய்வு செய்து விளக்குகிறார்.

மூலதனக் குவியல் 

லெனின் காலத்திற்குப் பிறகு முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டன.1970-ஆண்டுகளின் துவக்கத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக கடும் நெருக்கடியையும் தேக்கத்தையும் உலகப் பொருளாதாரம் சந்தித்தது. அதன் வளர்ச்சி விகிதமும் வீழ்ந்தது. உள்நாட்டு சந்தை வீழ்ச்சியால் ஏகபோக மூலதனம் வெளிநாடுகளில் வாய்ப்புக்கள்ளை தேய்ந்த நிலையில்யாது. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி, தகவல் தொடர்பு வளர்ச்சி ஆகியவற்றின் உதவியுடன் நேரடி அந்நிய முதலீட்டு வாய்ப்புக்களை பயன்படுத்தி முதலாளித்துவம் புதிய வளர்ச்சியை அடைந்தது. உற்பத்தியும் விநியோகமும் மேலும் கடந்த காலங்களை விட மேலும் சர்வதேசமயமானது.

மேலும் மேலும் மூலதனம் குவிந்து, மிகப்பெரும் பிரம்மாண்டமான, ஏகபோக, பன்னாட்டு கார்ப்பரேஷன்கள் வளர்ந்தன. அவற்றில் பல,  நாடுகள் பலவற்றின் சொத்துக்களை விட அதிக சொத்து படைத்ததாக வளர்ச்சி பெற்றன. உண்மையில், சர்வதேச, ஏகபோக முதலாளித்துவத்தின் இன்றைய பிரதிநிதிகளாக இந்த பன்னாட்டு கார்ப்பரேஷன்கள் விளங்குகின்றன. 

உலக அளவில் இந்த வகையிலான கார்ப்பரேஷன்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவை நேரடி அந்நிய முதலீட்டுக்கான வாய்ப்புகளைப் பயன்படுத்தி தங்களுடைய கிளைகளையும், ,இணைப்பு நிறுவனங்களையும்  உலகம் முழுதும் அமைத்து செயல்படுகின்றன.1980-லிருந்து 2008 வரை உலக பன்னாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்திலிருந்து 82 ஆயிரமாக  உயர்ந்துள்ளது. வெளிநாட்டு கிளை  நிறுவனங்களின் எண்ணிக்கையும் சேர்த்துப் பார்த்தால் 35 ஆயிரத்திலிருந்து 8 லட்சத்து பத்தாயிரம் வரை  உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் பெரும்பான்மையான நாடுகள் பெரும் பன்னாட்டு கார்ப்பரேஷன்களின் சர்வதேச உற்பத்தி மற்றும் வர்த்தக இணைப்புகளில் இணைந்துள்ளனர். உலகப் பெரும் கார்ப்பரேஷன்களின் இந்த வளர்ச்சி ஏகாதிபத்தியத்தின் நவீன கட்டமாக உருவாகியுள்ளது. இது மூலதனத்தின் சர்வதேச தன்மையை வலுப்படுத்தியுள்ளது.,உற்பத்தி மற்றும் மூலதனம் மேலும் மேலும் ஓர் இடத்தில் குவியும் நிலை மிகப்பெரும் அளவிற்கு தீவிரமடைந்துள்ளது. வாழ்வின் அனைத்துப் பகுதிகளிலும் சில ஆயிரம் பன்னாட்டு கார்ப்பரேஷன்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பன்னாட்டு ஏகபோக மூலதனம் மேலும் மேலும் குவிந்து பெருகி வருகிற நிலையில் ஒரு பன்னாட்டு கார்ப்பரேட் பேரரசு உருவாகியுள்ளது.

பன்னாட்டு முதலாளித்துவ கார்ப்பரேஷன்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அவை மிகப்பெரும் பலம் வாய்ந்தவையாக விளங்குகின்றன. அவை வளர்ச்சிப் பணிகளில் முக்கிய பங்கினை வகிக்கின்றன. புதிய தொழில்நுட்பங்களின்ள் பயன்பாடு, சந்தை செயல்பாடு, இயற்கை வளங்கள், நிதியாதாரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இதனால்தான் உற்பத்தி பொருட்கள் மற்றும் அவற்றின் விநியோகத்தில் ஏகபோக கட்டுப்பாடும், போட்டியில் பெரும் கார்பரேஷன்களுக்கு சாதகமான நிலையும் உள்ளது. இந்த பெரும் கார்ப்பரேஷன்கள் அரசு அதிகாரம், மற்றும் அரசு நிறுவனங்களுடன் வலுவான கூட்டணி கொண்டுள்ளன.

உலகமயமாக்கலும், ஏகபோக மூலதனம் நிதிமயமாக்கலும் இந்த கம்பெனிகளின் சொத்துக் குவியலுக்கு உதவுகின்றன. எடுத்துக்காட்டாக, வால்மார்ட் நிறுவனம் உலகின் மிகப்பெரிய பன்னாட்டு  நிறுவனம். 2017- ஆம் ஆண்டு அதனுடைய மொத்த வருமானம் 500 பில்லியன் டாலரை தாண்டியது. இது பெல்ஜியம் நாட்டினுடைய ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி தொகையைவிட மிக அதிகம்.

இந்த கம்பெனிகளின் கிளைகளின் பொருளாதார செயல்பாடுகள் உலகம் முழுவதும் பல மையங்களில் பரவியிருந்தாலும், அதிக அளவிலான லாபம் வளர்ந்த நாடுகள் சிலவற்றுக்கு மட்டுமே சென்று சேர்கிறது. ஏனென்றால் முன்னணி பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் முன்னேறிய நாடுகளை மையப்படுத்தியே உள்ளன. 2017- ஆம் ஆண்டில் உலகின் முன்னணி 500 கம்பெனிகளில் 250 கம்பெனிகள் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சார்ந்த பெரும் கார்ப்பரேஷன்கள். உலகின் முதல் 100 பன்னாட்டு கம்பெனிகளில் மூன்றில் ஒரு பங்கு முன்னணி நிறுவனங்கள் இந்த நாடுகளைச் சார்ந்தவை.

கடந்த 30 ஆண்டுகளாக அனைத்து நாடுகளும் முதலீட்டை ஊக்குவிப்பதற்கான கொள்கை முடிவுகளை எடுத்துள்ளன. அன்னிய நேரடி முதலீட்டுக்கான கட்டுப்பாடுகளை அவை தளர்த்தி உள்ளன. இந்திய நாட்டில் 1990-களில் கொண்டுவரப்பட்ட நவீன தாராளமயம் இதற்கோர் எடுத்துக்காட்டு. பிரதமர் மோடி ஆட்சி காலத்தில் இன்றுவரை பொருளாதாரத்தை அந்நிய  பன்னாட்டு கம்பெனிகளுக்கு திறந்து விடுகிற கொள்கைகள் வேகமாக பின்பற்றப்பட்டு  வருகின்றன. சமீபத்திய பணமயமாக்கல் கொள்கை, பொதுத்துறை நிறுவனங்களை உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் நடவடிக்கை ஆகியவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். அனைத்து நாடுகளிலும் மிகப்பெரிய அளவிலான தனியார்மயமாக்கல் இன்றுவரை தீவிரமாக நடந்து வருகிறது. இதன் விளைவாக மூலதனக் குவியல் மேலும் அதிகரித்து வந்தது. பல கம்பெனிகள் மேலும் மேலும் பெரிய கம்பெனிகளுடன் இணைக்கப்பட்டன. சிறிய, நடுத்தர கம்பெனிகள் பன்னாட்டு கம்பெனிகளுடன் இணைய வேண்டியந்திடும் கட்டாயத்துக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டது. பல சிறிய நடுத்தர கம்பெனிகள்ளில் திவாலாகி மூட வேண்டிய நிலை ஏற்பட்டன. 

பெரும் கார்ப்பரேட்டுகளின் மேலாதிக்கம் 

ஒவ்வொரு தொழிலிலும் பெரும் கார்ப்பரேட் கம்பெனிகள் மேலாதிக்கம் செலுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, விதை, பூச்சிக்கொல்லி மருந்தின் உலக சந்தை, ஆறு பன்னாட்டு கம்பெனிகளின்ள் கட்டுப்பாட்டில்டுக்குள் உள்ளது. டூபாண்ட், மான்சான்டோ, சின்ஜென்டா, பாயர், டவ், பிஎஎஸ்எப் ஆகிய கம்பெனிகள் 2015 விவரங்கள் அடிப்படையில், 75 சதம் பூச்சிக்கொல்லி மருந்தின்  உலக சந்தையையும், 63 சதம் விதைக்கான உலக சந்தையையும் மும், 75 சதம் உலக தனியார் ஆராய்ச்சியையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தன. 10 பெரும் பன்னாட்டு கம்பெனிகள் மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களில் உலக சந்தையில் 47 சதம் அளவிற்கு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளன.

இந்த வகையில் தனியார் பகாசுர முதலாளித்துவ கம்பெனிகள் அதிக அளவிலான சமூக சொத்தினை கையகப்படுத்திக் கொண்டு வரும் நிலையில், அவை தொழிலாளர் உழைப்பின் மீது கடுமையான கட்டுப்பாட்டை செலுத்துகின்றன. அத்துடன், சுரண்டலையும் மேலும் மேலும் தீவிரப்படுத்தி வருகின்றன. இது உலக அளவில் மூலதனக் குவியலை அதிகரிக்கிறது. உலக அளவில் ஏழை-பணக்காரர் இடைவெளி அதிகரித்து ஏற்றத்தாழ்வு தீவிரமடைந்துள்ளது.

பெரும் கம்பெனிகளின் மூலதனக் குவியல்  அதிகரிப்புக்கு முக்கிய காரணம், குறைந்த ஊதிய செலவில் உலக அளவில் தொழிலாளர் உழைப்பு கிடைப்பதுதான். பன்னாட்டு கம்பெனிகள் சிறந்த முறையில் வலுவான அமைப்பாக செயல்படுகின்றன. உலக உழைக்கும் மக்களால் ஒன்று சேர்வதற்கும், தங்களுடைய உரிமைகளை பாதுகாப்பதற்கும் வாய்ப்பு இல்லாமல் உள்ளது. கடந்த பல பத்தாண்டுகளாக பன்னாட்டு கம்பெனிகள் தங்களது தொழில்களை வளரும் நாடுகளிலும், வளரும் ஏழை நாடுகளிலும்ல் அமைத்தன. அங்கு வேலையில்லாப் பட்டாளம் அதிக அளவில் இருப்பதால், குறைந்த ஊதியத்திற்கு ஆட்கள் கிடைத்து வருகின்றனர். இந்த கம்பெனிகளில் பொதுவாக குறைந்த ஊதியம், கடுமையாக வேலை வாங்குவது, அதிக வேலை நேரம், மோசமான வேலைச் சூழல் போன்ற கொடுமையான நிலைமைகள் உள்ளன.

வளரும் நாடுகளின் அரசாங்கங்களை தங்களது கைக்குள் போட்டுக் கொண்டு தங்களது மூலதன தேவை மற்றும் முதலீட்டுக்கு ஏற்ற கொள்கைகளை பின்பற்ற தூண்டுகின்றனர். சர்வதேச முதலீடுகள் வழியாக மொத்த உள்நாட்டு வளர்ச்சியை பெருக்கிடலாம் என்ற நோக்கில் ஏழை நாடுகளின் அரசாங்கங்கள் இந்த சூழ்ச்சிக்கு பலியாகின்றனர். இதற்கு விலையாக தங்களது மக்களுக்கான சமூக நல  திட்டங்களை குறைப்பது, தொழிலாளர் உரிமைகள் பறிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அத்துடன் உள்நாட்டு வெளிநாட்டு காப்பரேட் கம்பெனிகளுக்கு  ஏராளமான வரிச்சலுகைகள், கடன் ஏற்பாடு போன்றவற்றை இந்த அரசாங்கங்கள் உறுதி செய்கின்றன. இத்தகையந்த மக்கள் விரோத நடவடிக்கைகள் இந்தியாவிலும் நடந்து வருவது கண்கூடானது. இதனால் இந்தப் பெரும் கம்பெனிகள் கொள்ளை லாபம் அடிக்கின்றன. அமெரிக்க கம்பெனிகளுக்கு கிடைக்கும் மொத்த லாபத்தில் வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் இலாபம் 1950-இல்  4 சதம் மட்டுமே இருந்தது ஆனால் 2019இல் இது 29 சதமாக உயர்ந்து, இன்று பெரும் கொள்ளை லாபமாக வடிவெடுத்துள்ளது.

குறைந்த எண்ணிக்கையிலான பன்னாட்டு வங்கிகள் உலகப் பொருளாதாரத்தை ஆதிக்கம் செலுத்துகின்றன. நிதி மூலதன கூட்டமும் அவர்களின் ஏஜெண்டுகளும் வர்த்தகம் மற்றும்  முதலீடுகளின் விதிகளை நிர்ணயிப்பவர்களாக உள்ளனர். பல பொருளாதார நிபுணர்களும் உலக நிதி மூலதனத்தின் குரலாக தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்வார்கள். உலகமயமாக்கல், நிதிமயமாக்கல் போன்றவற்றிற்கு ஆதரவாக கருத்துக்களை வெளிப்படுத்தி, ஏகபோகங்கள் பல நாடுகளின் பொருளாதாரத்தில் மேலாதிக்கம் செலுத்த அவர்கள் உதவுகின்றனர். நிதி ஏகபோக மூலதனம் ஊக வணிகத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு உடனடி லாப வேட்டையை துரிதப்படுத்துகிறது. 

மதிப்பிழந்த ஜனநாயகம் 

கடந்த 30 ஆண்டுகளில் நிதி மூலதனம், தொடர்ச்சியான  தொழில்மயத்தை தடுத்து வந்துள்ளது. இதனால் உற்பத்தி சார்ந்த முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறைந்து போனது. பெரிய கம்பெனிகளின் மூலதனம் நிரந்தர தொழில் முதலீட்டிலிருந்து மாறி, அதிகமாக ஊக வணிக நிதி பரிமாற்ற செயல்பாடுகளாக மாறின.

மக்களின் வாக்குகள், ஜனநாயக அமைப்பு முறை எதுவுமே பெரும் கம்பெனிகளின் கொள்ளை லாபத்திற்கு தடையாக இருப்பதில்லை. உண்மையில், அமெரிக்காவின் கொள்கைகளை நிர்ணயிப்பது வால் ஸ்ட்ரீட் நிதி மூலதன கும்பல் மற்றும் ராணுவ தொழில் கம்பெனிகள்தான். அவற்றின் நலன்கள்தான் நாட்டின் நலன்களானாக முன்னிறுத்தப்படுகின்றனது. அரசு பெரும் கம்பெனிகளின் சேவகனாக செயல்பட்டு வருகிறது. இது அனைத்து முதலாளித்துவ நாடுகளுக்கும் பொருந்தும்.

உலக பொருளாதாரத்தில் அமெரிக்க நாணயமான டாலர் ஆதிக்கம் செலுத்துகிறது. உலகின் எண்பது சதவீதமான அந்நிய செலாவணி பரிவர்த்தனைகளும் 90 சதவீதமான சர்வதேச வங்கி பரிவர்த்தனை களும் டாலரில் மேற்கொள்ளப்படுகின்றன.  இதனை அமெரிக்கா தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது. டாலர் மதிப்பை குறைத்து அமெரிக்கா தனது அந்நிய கடன்களை குறைக்கிறது. இந்த வகையிலும் ஏழை நாடுகள் வஞ்சிக்கப்பட்டு வருகின்றன.

லெனின் ஏகாதிபத்தியம் நூலில் முதலாளித்துவ கூட்டணிகள் வளர்ந்து உலகம் பங்கு போடப்படுவதை குறிப்பிடுகிறார். இது இன்றைய உலகுக்கும் பொருந்துகிறது. சர்வதேச பொருளாதார நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றவைக்கிற பிரிட்டன்வுட் ஓட்ஸ்  அமைப்புநிறுவனம் முறை என்று சொல்லப்படுகின்லுகிற உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம், உலக வர்த்தக அமைப்பு போன்றவைகளும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் மூலதன குவியலுக்கு ஏற்ற வகையில் தங்களது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்கின்றன. சர்வதேச முதலாளித்துவ ஏகபோக கூட்டணி நலன்களுக்கு ஏற்ப இந்த அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. 

அமெரிக்கா தலைமையில் ஏகாதிபத்திய நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ(NATO) இராணுவக் கூட்டணி உண்மையில் ஏகபோக முதலாளித்துவ நலன்களை பாதுகாப்பதற்கானக இராணுவக் கூட்டணியாக செயல்பட்டு வருகிறது. சீனா உள்ளிட்ட சோஷலிச நாடுகளுக்கு எதிராகவும் பல கூட்டணிகளை அமெரிக்கா அமைத்து வருகிறது.

பல விஷயங்களில் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவான சர்வதேச கருத்தை உருவாக்குவதற்கு ஊடகங்களைள்யும், பண்பாட்டு தளங்களையும் பயன்படுத்தி வருகின்றனர். ஏகாதிபத்திய கலாச்சார மதிப்பீடுகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதரவுடன் பரப்பி வருகின்றனர்.

இராணுவ கூட்டணிகள் 

ஏகாதிபத்திய நாடுகள் தங்களது ராணுவத்தை பெருமளவுக்கு பலப்படுத்தி வருகின்றனர். சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு அதிக அளவில் அமெரிக்கா தனது ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது. சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு, வளைகுடாப் போர், ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா போர்கள்  என ஆறு ஆக்கிரமிப்பு  போர்களை அமெரிக்கா மேற்கொண்டது. அவையும், தற்போது நடந்து வரும் ராணுவ மோதல்கள் அனைத்தும் ஏகபோக மூலதனத்தை பாதுகாக்கவே நடைபெறுகின்றன. மனித சமூகத்திற்கு மிகப்பெரும் அழிவையும் நாசத்தையும் அவை ஏற்படுத்தியுள்ளன.

இயற்கை வளங்களை சூறையாடும் அமைப்பாக ஏகாதிபத்தியம் வளர்ந்துள்ளது. காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு என ஏராளமான பாதிப்புகளை ஏகபோக மூலதனத்தின் இலாப வேட்டையும், சுரண்டலும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த பூமிப்பந்தின் இருப்பே இன்றைக்கு கேள்விக்குறியாகியுள்ளது.

ஏகபோக மூலதனத்தின் நலனுக்காக தங்களுடைய நாடுகளில் நவீன தாராளமயத்தை பின்பற்றிய பல நாடுகளில் தற்போது இனவெறி, நிறவெறி, வகுப்புவாத வெறி போன்ற சமூகப் பிளவு ஏற்படுத்தும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. வாழ்வாதார பாதிப்பு, வேலையின்மை,வறுமை போன்ற ஏகாதிபத்திய கொள்கைகளின் விளைவுகள் இப்படிப்பட்ட சமூகப்பிளவுகளுக்கு வழியஅமைக்கின்றன. குறிப்பாக பல மூன்றாம் உலக நாடுகளில்ள் இவைதைத் திட்டமிட்டு தூண்டப்படுகின்றன.

லெனின்  குறிப்பிட்டதுபோல் ஏகாதிபத்தியம் பல வகைகளில் இன்று ஒரு பெரும்  அழிவு சக்தியாக உள்ளது. மனித நாகரிகத்தை அழிக்கும் இந்த கொடூரமான அமைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். உலகப் பாட்டாளி வர்க்கம் சோசலிச இலக்கை நோக்கி முன்னேற வேண்டும். இதற்கு மார்க்சிய-லெனினியமும், ரஷிய புரட்சி வரலாறும் பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கு வழிகாட்டும்.

===============================================================.

கட்டுரை உதவி:

Five Characteristics of Neo-imperialism: Building on Lenin’s Theory of Imperialism in the Twenty-First Century by Cheng Enfu and Lu Baolin; (Monthly Review; May 01, 2021)

கம்யூனிஸ்ட் அறிக்கையும், இந்திய புரட்சியின் திட்டமும்

என். குணசேகரன்

கம்யூனிஸ்ட் அறிக்கை மானுட சமூகத்தின் உலகளாவிய விடுதலையைப் பேசுகிறது. இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி (மார்க்சிஸ்ட்) ன் திட்டம், இந்திய விடுதலையைப் பேசுகிறது. இந்த இரண்டும் இந்திய நாட்டில் செயல்படுகிற  ஒரு புரட்சிகர போராளிக்கு  வழிகாட்டும்  கையேடுகளாகத் திகழ்கின்றன.

அனைத்து நாட்டு மக்களுக்கும் உண்மையான விடுதலையை முன்னிறுத்தும் விடுதலைப் பிரகடனமாக, கம்யூனிஸ்ட் அறிக்கை திகழ்கிறது. அடிமை விலங்குகளை உடைத்தெறிந்து, முதலாளித்துவ சுரண்டலிலிருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும் விடுபட பாட்டாளி வர்க்கத்திற்கு அறிக்கை வழிகாட்டுகிறது.

பிரெட்ரிக் எங்கெல்ஸ் 1883-ம் ஆண்டில் ஜெர்மன் பதிப்புக்கு எழுதிய முன்னுரையில்  “(அனைத்து வரலாறும்) சமூக வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களிலும் சுரண்டப்படும் வர்க்கத்துக்கும், சுரண்டும் வர்க்கத்துக்கும், ஒடுக்கப்படும் வர்க்கத்துக்கும், ஒடுக்கும் வர்க்கத்துக்கும் இடையேயான போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது …” என்கிறார்.

இந்த நெடிய போராட்டத்தில் முதலாளித்துவம் பாட்டாளி வர்க்க முன்னேற்றத்தை தடுக்கவும் ஒடுக்கவும் அனைத்து  சாகசங்களையும் செய்துவருகிறது. ஆனால் இதில் இறுதி வெற்றியை தீர்மானிக்கிற  இடத்தில் பாட்டாளி வர்க்கமே உள்ளது. வரலாற்றில் நிகழவிருக்கும் இந்த விடுதலை சமூகம் முழுமைக்குமான விடுதலையாக அமைந்திடும். 

1848-ல்  மார்க்சும் எங்கெல்சும் எழுதிய இந்தக் கருத்துக்கள் இன்றும் பொருந்துமா?. 20-ம் நூற்றாண்டில் பணி நிலைமைகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. உற்பத்தி முறையிலும் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன; இதன் காரணமாக உழைக்கும் மக்களின் வலிமை பலவீனமடைந்து உள்ளது என்ற வகையில் பல வாதங்களைப் பலரும் முன்வைத்தனர். பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்தை வீழ்த்துவது என்ற கருத்தாக்கம் பொருத்தமற்றதாகப் போய்விட்டது என்றனர்.

ஆனால், இன்றைய நிலைமைகளும் கூட மார்க்சின்  கருத்தினை   உறுதிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. மார்க்ஸ் குறிப்பிட்டார்: “பாட்டாளிகளின் இந்த ஒழுங்கமைப்பு முன்னிலும் வலிமை மிக்கதாக, உறுதி மிக்கதாக, சக்தி மிக்கதாக மீண்டும் வீறுகொண்டு எழுகிறது.” 

21-ம் நூற்றாண்டில் முறைசாரா தொழில்கள், அணி சார்ந்த உற்பத்தித் துறைத் தொழில்கள் மற்றும் சேவைத் துறை தொழில்கள் என பலவிதமாக தொழிலாளர் எண்ணிக்கை பெரும் அளவில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சங்க ரீதியாக ஒன்றுதிரண்டு போராடுகிற திறனும் சமீபகாலங்களில் அதிகரித்துள்ளது .

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 2018-ம் ஆண்டுக் கணக்கீட்டின்படி தற்போது வேலையில் இருக்கும் மொத்த உழைப்பாளர்களில் 60% முறைசாரா தொழில்களில், எவ்வித சமூகப் பாதுகாப்பும் இல்லாமல், வறுமைச் சூழலில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு பணியாற்றும் தொழிலாளர்கள் எண்ணிக்கையே 200 கோடியைத் தாண்டுகிறது. இது மிகப்பெரும் பிரம்மாண்டமான உலகப் பாட்டாளி வர்க்கம். இந்தியாவில் 50 கோடிக்கும்  மேற்பட்ட எண்ணிக்கை கொண்ட வலிமையான பாட்டாளி வர்க்கம் உள்ளது.

தொழிலாளர் ஒற்றுமைக்கான தடைகள் மார்க்ஸ் காலத்தைவிட இன்று அதிகமாக உள்ளன. இன்று வலதுசாரி கருத்தியல் தொழிலாளர்களிடம், இன, சாதி, மத அடையாளங்களை வலுப்படுத்தி, வெறியூட்டி, அரசியல் லாபம் பெற்று வருகிறது. எனினும், மார்க்சின் அறைகூவலான  “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!” என்ற  பாதையில் உழைக்கும் வர்க்கம் தீரமுடன் பயணம் மேற்கொண்டால் சுரண்டலற்ற ஒரு சமூகம் சாத்தியமே.

இந்திய கம்யூனிஸ்ட்கள்

அறிக்கை காட்டும் பாதையில்  இந்திய புரட்சிக்கான திட்டத்தை   வகுக்க இந்திய கம்யூனிஸ்ட்கள் 1920- ம் ஆண்டுகளிலிருந்தே முயற்சித்து வந்தனர்.

கார்ல் மார்க்ஸ் தொழிலாளி வர்க்கம் தனது விடுதலையைத்  தானே சாதித்துக் கொள்ள வேண்டும் என்றும், தனக்கென்று ஒரு அரசியல் கட்சியை வளர்த்தெடுத்து, ஆளுகிற வர்க்கமாக தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றும் கம்யூனிஸ்ட் அறிக்கையில் எழுதியுள்ளார். இது நடக்கும் வரை, முதலாளித்துவ கட்சிகள் பல வடிவங்களில் உழைக்கும் வர்க்கத்தினை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள். மார்க்சின் இந்த அறிவுரை அடிப்படையில் ஒரு புரட்சிகரமான கட்சியை உருவாக்கிட இந்திய  கம்யூனிஸ்ட் இயக்கம் துவக்கத்திலிருந்தே முயற்சித்து வந்தது.

மார்க்சிஸ்ட் கட்சியின்  திட்டத்தில் கட்சியின்  பங்கு குறிப்பிடப்படுகிறது;

“புரட்சிகர இயக்கத்தின் வளர்ச்சிப் போக்கின் தனித்துவமான கட்டங்களில் பல்வேறு வர்க்கங்களும், ஒரே வர்க்கத்தின் பல்வேறு பகுதியினரும், பல வகைப்பட்ட நிலைபாடுகளை எடுப்பார்கள். ஒரு பலமான கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே வெகுஜன இயக்கங்களை வளர்த்தெடுத்து, தொலைநோக்கு இலக்கை அடைவதற்குப் பொருத்தமான ஐக்கிய முன்னணி உத்தியை உருவாக்கி, மாற்றங்களை உருவாக்குவதன்மூலம் இத்தகைய பிரிவினரை தனது அணிக்குள் ஈர்க்க முடியும்.

இத்தகைய கட்சியால்தான் மிகுந்த அக்கறைகொண்ட, சகல தியாகங்களுக்கும் தயாராக உள்ள பகுதியினரை தனது அணிக்குள் கொண்டுவந்து புரட்சிகர இயக்கத்தின் பாதையில் ஏற்படும் பல்வேறு திருகல்கள், திருப்பங்களின் போது மக்களுக்கு தலைமை தாங்கிச் செல்ல முடியும்.” (7.16)

உழைக்கும் மக்கள் ஆதரவைப் பெற, சித்தாந்தத் துறை முக்கியமானது. தங்களது மூலதன நலன்களை பாதுகாக்கும் சித்தாந்தத்தை தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கானது என்று சித்தரிப்பதில் முதலாளித்துவ சிந்தனையாளர்களும், ஊடகவியலாளர்களும் வல்லவர்கள். எனவே இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் இந்தியாவில் நிலவும் சாதிய ஒடுக்குமுறை, மதங்கள் முன்னிறுத்தும் நம்பிக்கைகள், பிற்போக்கான வாழ்வியல் கருத்துக்கள் ஆகிய அனைத்தையும் எதிர்கொண்டு, இந்திய புரட்சியைப் பற்றி கம்யூனிஸ்ட்கள் சிந்தித்தனர்.

தொழிலாளி வர்க்கத்தின்  ஒவ்வொரு போராட்டமும், முதலாளித்துவ அரசியல்  அதிகாரப்  பிடிப்பிற்கு சவாலாக அமைந்திடும். “ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் ஓர் அரசியல் போராட்டமே” என்பது மார்க்சின் கூற்று. இந்தியாவில் 1947-ல் விடுதலை கிடைக்கும்வரை ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகவும், உழைக்கும்  மக்களின் உடனடி  கோரிக்கைகளை  முன்வைத்தும்,  இந்திய  கம்யூனிஸ்டுகள் எண்ணற்ற  போராட்டங்களை முன்னின்று  நடத்தினார்கள். அவை அனைத்தும் காலனிய எதிர்ப்பு, வர்க்க சுரண்டலுக்கு எதிரானதாக நடந்தன. அவற்றின் அரசியல்  தாக்கம்தான் 1947-க்குப் பிறகு அமைந்த  அரசு அமைப்பு ஜனநாயகமும், மதச்சார்பற்ற தன்மையும் கொண்டவையாக அமைய வழிவகுத்தன.

அவ்வப்போது சில வெற்றிகளை தொழிலாளி வர்க்கம் பெற்றபோதிலும், முதலாளித்துவத்துடன்  உள்ள முரண்பாடு  நீடிக்கிறது. இந்த நிகழ்வுப்போக்கின் இறுதிக் காட்சியை மார்க்ஸ் சித்தரிக்கிறார். “…பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்தை தூக்கி எறிந்து தனிச்சொத்துரிமையையும் அழித்திடும்” என்று மார்க்ஸ்  குறிப்பிட்டார். இந்த எதிர்காலப் பார்வைதான் இந்திய சோசலிச  மாற்றத்திற்கான திட்டத்தை  இந்திய மார்க்சியர்கள் உருவாக்குவதற்கான பார்வையாக  அமைந்தது.

முதலாளித்துவம் வீழும் என்பது மார்க்சின் ஆருடம்  அல்ல. முதலாளித்துவ வரலாற்றின் தர்க்கரீதியான நிகழ்வுப் போக்கு.  “இது  தவிர்க்க முடியாதது” என்று அழுத்தந்திருத்தமாக மார்க்ஸ் குறிப்பிடுவதற்குக்   காரணம், அவற்றின் போக்குகளை  அவர்  துல்லியமாக அறிந்திருந்ததுதான்.

முதலாளித்துவ  அழிவு  என்பதனை மார்க்ஸ் தனது விருப்பமாக வெளிப்படுத்தவில்லை; அல்லது முதலாளித்துவ சுரண்டல் கொடுமைகளுக்கு ஆளாகும் பாட்டாளி வர்க்கத்தின்  மீது ஏற்பட்ட பரிதாபத்தின் விளைவாக முதலாளித்துவம்  அழியட்டும் என்று மார்க்ஸ் சாபமிட்டார் என்று கருத முடியாது. அவரும் எங்கல்சும், உருவாக்கிய தத்துவக்  கோட்பாடுகள் முதலாளித்துவ எதிர்காலத்தை கணிக்க உதவின. இயக்கவியல், வரலாற்றுப் பொருள்முதல்வாதம் முதலாளித்துவத்தை ஆராய்வதற்கான சோதனைக் கூடமாக அமைந்தது.

எனவே இந்திய புரட்சிப்பாதையை தெரிவு செய்கிறபோது, இந்திய முதலாளித்துவம்,  அதன் வளர்ச்சிப் போக்குகளை துல்லியமாகவும், வரலாற்றுப் பொருள்முதல்வாதத் துணை கொண்டும் ஆராய்ந்திடும் முயற்சியில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் முயன்றது.

1864 ஆம் ஆண்டு சர்வதேச தொழிலாளர் அமைப்பின் விதிகளை எழுதுகிறபோது மார்க்ஸ் கீழ்கண்டவாறு குறிப்பிட்டார்: “தொழிலாளி வர்க்கங்களின் விடுதலையை தொழிலாளி வர்க்கங்களேதான் சாதிக்க வேண்டும்” வேறு எந்த வர்க்கமும் அந்த வேலையை சாதித்திட முடியாது. இந்தக் கருத்து மற்ற சிந்தனையாளர்களிடமிருந்து மார்க்சினை வேறுபடுத்திக் காட்டுகிறது; அடிமைப்பட்டும், சுரண்டப்பட்டும் இருக்கிற உழைக்கும் மக்களை விடுதலை செய்வதற்கு தேவதூதன் போன்று ஒரு மகத்தான தலைவர் தோன்றிடுவார் என்பது உள்ளிட்ட, பல  பொய்யான சித்தாந்தங்களை உழைக்கும் மக்களிடையே கால காலமாக விதைத்து வருகின்றனர். ஊடகங்களும் ‘சுதந்திர சந்தை, சுதந்திர போட்டியே’ ‘ஜனநாயகம்’ என்பது போன்ற கருத்துகளைப் பரப்பி, சில தனிநபர்களையும் முன்னிறுத்துகின்றனர். இந்த வேலை காலம்காலமாக இடையறாது நடந்து கொண்டிருக்கிறது.

தங்களின் விடுதலையை தாங்களே சாதித்துக் கொள்ள வேண்டும் என்பதும், அதற்கான  தெளிவான திட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சி முன்வைக்க வேண்டும் என்பதும் மார்க்சிய லெனினிய வழிகாட்டுதல். இந்திய உழைக்கும் வர்க்கங்களான தொழிலாளர் – விவசாயிகளின் சமூக பொருளாதார நிலைமைகள் அனைத்தையும் அறிந்து அவர்களின் வர்க்க விடுதலைக்கான வியூகத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டம் விளக்குகிறது.

இந்திய அரசும், அரசாங்கமும் முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையில் நாட்டின் பொருளாதாரத்தை கொண்டு செல்கிற நடவடிக்கையையும், அந்நிய நிதி மூலதனத்தோடு, வலுப்பெற்று வருகிற அதன் கூட்டையும்,  கட்சித்திட்டம் விளக்குகிறது. நவீன தாராளமயக் கட்டத்தில் முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சிப் போக்குகளை கட்சித் திட்டம் துல்லியமாக விளக்குகிறது. விவசாயம், தொழில் மற்றும் வெளியுறவு கொள்கையைப் பற்றிய துல்லியமான மதிப்பீட்டை கட்சித் திட்டம் கொண்டிருக்கிறது.

அதிகாரத்தை கைப்பற்றுதல்

கம்யூனிஸ்டுகளின் செயல்பாடுகள் அனைத்தும் முதலாளித்துவ முறைமையை ஒழிப்பதுதான் என்பது அறிக்கை பகிரங்கமாக  எடுத்துரைக்கிறது. இதனை எவ்வாறு செய்து முடிப்பது என்பதற்கான கோட்பாடுகளையும் அறிக்கை கொண்டுள்ளது.

இதை மூன்று வகையாக பிரித்து அறிக்கை மேலும் விளக்குகிறது. பாட்டாளிகளை ஒரு வர்க்கமாக கட்டியமைக்க வேண்டும் என்றும், அது கம்யூனிஸ்டுகளின் முதல் நோக்கம் என்றும்  அறிக்கை குறிப்பிடுகிறது. இதன் பொருள் என்ன ? பாட்டாளிகள் இந்த சமூகத்தை மாற்றுவதற்கு தாங்கள் கடமைப்பட்டவர்கள் என்ற உணர்வினை அடைய வேண்டும். அவர்களுக்கு அந்த உணர்வினை ஏற்படுத்துகிற பொறுப்பு கம்யூனிஸ்டுகளுக்கு உண்டு. தங்களது அன்றாட பொருளாதார கோரிக்கைகளுக்கு மட்டுமே பாட்டாளி வர்க்கம் முன்கை எடுப்பது போதுமானதல்ல; அந்தப் போராட்டங்கள் அரசியல் உள்ளடக்கம் கொண்டவையாக இருந்தாலும், இறுதியாக, ஒரு பெரும் வரலாற்று கடமையை பாட்டாளி வர்க்கம் நிறைவேற்றவேண்டும். அந்தக் கடமையை உணர்ந்த  வர்க்கமாக பாட்டாளி வர்க்கம் உயரும்போதுதான் அது தனது வரலாற்றுக் கடமையை  செவ்வனே நிறைவேற்றும்.

அது எப்படிப்பட்ட வரலாற்று கடமை என்பதை இரண்டாவது அம்சமாக அறிக்கை குறிப்பிடுகிறது. முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துகிற கடமையைத்தான் அறிக்கை குறிப்பிடுகிறது. புரட்சிகர உணர்வு கொண்ட பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துகிற  வல்லமை கொண்டதாக மாறிடும்.

மூன்றாவதாக, பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க வேண்டும் என்பதை அறிக்கை  வலியுறுத்துகிறது. அரசியல் அதிகாரம்தான் முதலாளித்துவ சமூக ஒழுங்கினை முடிவுக்குக் கொண்டுவந்து சமூக சமத்துவத்தை நிலைநாட்டும் .

எனவே, பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு ஏற்றவாறு, அந்த  வர்க்கத்திற்கு உணர்வு ஊட்டுகிற பணியை கம்யூனிஸ்டுகள் மேற்கொள்ள வேண்டும் என்பது அறிக்கையின் வழிகாட்டுதல். 

அறிக்கை முதலாளித்துவத்தின் உலகம் தழுவிய செயல்பாட்டை விரிவாக பேசுகிறது; அதேநேரத்தில், தேசிய எல்லைகளுக்குள் வர்க்கப் போராட்டம் நடத்தவேண்டிய தேவையையும் அழுத்தமாக குறிப்பிடுகிறது. முதலாளித்துவ வர்க்கத்துடன் பாட்டாளி வர்க்கம் நடத்தும் போராட்டம், முதலில் தேசிய அளவிலான போராட்டமாக இருக்கிறது என்பதை அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. ஏனெனில்,.”…. ஒவ்வொரு நாட்டின் பாட்டாளி வர்க்கமும் முதலில் தன் நாட்டின் முதலாளித்துவ வர்க்கத்துடன் கணக்கு தீர்க்க வேண்டும்” என்று அறிக்கை தீர்க்கமாக குறிப்பிடுகிறது.

இவ்வாறான தேசிய அளவிலான போராட்டங்கள் வடிவத்தில் உள்நாட்டு எல்லைகளை கொண்டிருந்தாலும் இந்தப் போராட்டங்கள் உலக அளவில் “முதலாளித்துவத்தோடு கணக்கு தீர்ப்பதில்” கொண்டு செல்லும்.

சமூக பொருளாதார அமைப்புகள்

மார்க்சியத்தில் சமூக பொருளாதார அமைப்புகள் குறித்த தனித்த பார்வை உண்டு. புராதன கம்யூனிச சமுதாயம், அடிமை சமூகம், நிலப்பிரபுத்துவ சமுதாயம், முதலாளித்துவ சமூகம் என குறிப்பிட்ட கட்டங்களாக சமூக வளர்ச்சியை மார்க்சிஸ்டுகள் பார்ப்பது வழக்கம். ஆனால் இதை ஒரு சூத்திரமாக, ஒன்றின் பின் ஒன்றாக அணிவகுத்து வரும் சமூக வளர்ச்சியாக பார்ப்பது கூடாது. எங்கெல்ஸ் எழுத்துக்களில் இந்த வறட்டுத்தனம் தவிர்க்கப்பட்டு இருப்பதை காணலாம்.

ஒவ்வொரு நாடும் தனித்தன்மை கொண்ட சமூக பொருளாதார அமைப்பினையும் , விசேச தன்மைகளையும் கொண்டதாக உள்ளது. அந்த வளர்ச்சியின் பயணம் நேர்கோட்டில் செல்வதில்லை. முன்னேற்றமும் பின்னடைவும் நிறைந்ததாகவே உள்ளது. ஆனால், வர்க்கப் போராட்டம் இடையறாது நிகழ்வது, கம்யூனிச சமூக அமைப்பு, அதன் முதற்கட்டமாக சோசலிசம் என்ற இலக்கை நோக்கிய பயணம் முடிவடைவதில்லை.

இந்தியா போன்ற நாடுகளில் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை, முதலாளித்துவ  உற்பத்தி  முறை  என  இரண்டுமே  இயங்குவதைக்  காண முடியும். பல ஐரோப்பிய  நாடுகளில் நிலப்பிரபுத்துவ அழிவில்  முதலாளித்துவம்  வளர்ச்சியடைந்த  வரலாற்றையும் காணமுடியும். “குறிப்பிட்ட நிலைமைகளை,  குறிப்பிட்டவாறு ஆய்வு  செய்திட  வேண்டும்” என்று லெனின் வலியுறுத்தினார்.

கட்சித் திட்டம் அந்த குறிப்பிட்ட நாட்டில் நிலவுகிற திட்டவட்டமான நிலைமைகளை மார்க்சிய, லெனினிய கண்ணோட்டத்துடன் ஆய்வு செய்கிற ஒரு ஆவணமாகும். இந்திய புரட்சியின் முதலாவது கட்டம் இந்திய விடுதலையோடு நிறைவு பெற்றது. அப்போது முதலாளிகள், தொழிலாளி வர்க்கம், விவசாயப் பிரிவினர், குட்டி முதலாளிகள் போன்ற பிரிவினர் ஒன்று சேர்ந்து நடத்திய புரட்சியின் முதலாவது கட்டம் முடிவுக்கு வந்தது. இதில் ஏகாதிபத்தியம் முதன்மை எதிரியாக விளங்கியது. தற்போதைய இரண்டாவது கட்டத்தில் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புக் கடமைகள் நிறைவேற்ற வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, பெருமுதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம், ஏகாதிபத்தியம் ஒன்றுபட்டு உழைக்கும் வர்க்கங்களுக்கு எதிராக அதிகாரம் செலுத்துகிற இந்தச் சூழலில்,  இந்த மூன்றுக்கும் எதிரான வர்க்க கூட்டணி அமைத்து புரட்சியை நோக்கி முன்னேறுவதுதான் இந்திய புரட்சியின் இரண்டாவது கட்டமாக விளங்குகிறது. இந்த கட்டத்தில் அணி சேர வேண்டிய வர்க்கங்களாக தொழிலாளி வர்க்கம், விவசாய பிரிவினர், நடுத்தர வர்க்கங்கள், ஏகபோகமல்லாத முதலாளித்துவ பிரிவினர் ஆகியோர் அடங்குவர். இவை அனைத்தையும் கட்சித்திட்டம் மக்கள் ஜனநாயக அணி என்கிற தலைப்பின் கீழ் ஒவ்வொரு பிரிவினரும் வகிக்கும் பங்கு குறித்து விரிவாக விளக்குகிறது. 

விடுதலைக்குப் பிறகு, அரசின் வர்க்கத்தன்மை, இந்திய முதலாளித்துவ வளர்ச்சியின் தன்மை, புரட்சியின் தன்மை, வர்க்க மதிப்பீடுகள் உள்ளிட்ட பலவற்றில் கருத்து மோதல்கள் தொடர்ந்தன. இவை அனைத்திலும் தவறான நிர்ணயிப்புக்களை எடுத்துரைத்து, புரட்சிகர இயக்கத்தை திசை திருப்பும் முயற்சிகள் நடந்தன.

தற்போதைய இந்திய புரட்சியின் கட்டமாக மக்கள் ஜனநாயக புரட்சி என்பது நமது கட்சி திட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய அரசினுடைய வர்க்கத்தன்மை பற்றிய நிர்ணயிப்பு – முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அரசாக இந்திய அரசு செயல்படுகிறது என்பதையும், இதற்கு பெருமுதலாளித்துவம் தலைமை தாங்கி வருகிறது என்பதையும் கட்சித்திட்டம் வரையறை செய்கிறது. அரசு கட்டமைப்பு மற்றும் ஜனநாயகம் குறித்த விளக்கங்கள் கட்சித் திட்டத்தில் உள்ளன.  உண்மையான ஜனநாயகம் பெரும்பகுதியான மக்களுக்கு மறுக்கப்படுவது குறித்தும், நாட்டின் தேச ஒருமைப்பாட்டுக்கு எதிரான சக்திகளின் வளர்ச்சி, வகுப்புவாத சக்திகளால் மதச்சார்பின்மைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து, அதிகரித்து வரும் சமூக ஒடுக்குமுறை ஆகியன கட்சித் திட்டத்தில் விளக்கப்படுகிறது.

மக்கள் ஜனநாயக அரசு அமைகிறபோது, அது ஏற்று அமலாக்கவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து கட்சித் திட்டத்தில் விரிவாக விளக்கப்படுகிறது. தொழிலாளிகள், விவசாயிகள், நடுத்தர மக்கள் உள்ளிட்ட அனைவரின் வாழ்வாதார கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகிற திட்டங்கள் அனைத்தும் விளக்கப்படுகிறது.

மக்கள் ஜனநாயக அரசை அமைப்பதற்கு கட்ட வேண்டிய புரட்சிகரமான மக்கள் ஜனநாயக அணி அதில் அங்கம் வகிக்க வேண்டிய வர்க்க சக்திகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. மார்க்சிய – லெனினிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இந்த அம்சங்கள் அனைத்தும் மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டத்தில் விளக்கப்பட்டுள்ளன. 

வர்க்கங்களிடையே முரண்பாடுகளும், வர்க்கத் திரட்டலும்

மக்கள் ஜனநாயக அணியில் அங்கம் வகிக்கும் வர்க்கங்கள் மற்றும் பல்வேறு பிரிவினரைப் பற்றி கட்சித் திட்டம் விரிவாக விளக்குகிறது.

“தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் வலுவான கூட்டணிதான் மக்கள் ஜனநாயக முன்னணிக்கு மையமானதும், அடித்தளமானதும் ஆகும். நாட்டின் சுதந்திரத்தை பாதுகாக்கவும், நீண்டகால விளைவுகளை தரக்கூடிய ஜனநாயக மாற்றத்தைக் கொண்டுவரவும், ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்தை உறுதிப் படுத்தவும் இந்த கூட்டணி மிக முக்கியமான சக்தியாக இருக்கும். புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில் இதர வர்க்கங்கள் வகிக்கும் பாத்திரம் தொழிலாளர் – விவசாயிகள் கூட்டணியின் வலிமை, நிலைத்தன்மை ஆகியவற்றையே முக்கியமாக சார்ந்துள்ளது.(7.6)

“விவசாயத்தில் முதலாளித்துவம் ஆழமாக ஊடுருவியுள்ளதால், விவசாயிகளிடையே தெளிவான முரண்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, புரட்சியில் பலவகைப்பட்ட பகுதியினரும் பல்வேறு வகையான பாத்திரத்தை வகிப்பார்கள். நிலப்பிரபுக்கள் மற்றும் முதலாளித்துவவாதிகளின் ஈவு இரக்கமற்ற சுரண்டலுக்கு கிராமப்புறங்களில் மிகப்பெரும் எண்ணிக்கையில் உள்ள விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகள் ஆளாகியுள்ளனர். இவர்கள் தொழிலாளி வர்க்கத்தின் அடிப்படையான கூட்டாளிகளாக இருப்பார்கள். நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ நிலப்பிரபுக்களின் கந்துவட்டி மூலதனத்தாலும், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பெரு முதலாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முதலாளித்துவ சந்தையாலும், கிராமப்புறங்களில் உள்ள நடுத்தர விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமப்புற வாழ்க்கையில் நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தால் இவர்களது சமூக நிலையும் பல்வேறு வகைகளிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் மக்கள் ஜனநாயக முன்னணியில் நம்பகமான கூட்டாளிகளாக இருப்பார்கள்.

மேலும் மேலும் பாட்டாளி வர்க்க பட்டாளத்தில் நடுத்தரவர்க்கமும் இடையறாது வந்து சேர்கிறது. இதனை அறிக்கை படம் பிடித்துக் காட்டுகிறது (7.7)

கம்யூனிஸ்ட் அறிக்கையில் நடுத்தர வர்க்கம் குறித்து முக்கியமான கருத்து பேசப்படுகிறது. “நடுத்தர பட்டறைத் தொழில்முறையின் இடத்தைப் பிரம்மாண்ட நவீனத் தொழில்துறை பிடித்துக் கொண்டது. பட்டறைத் தொழில் சார்ந்த நடுத்தர வர்க்கத்தாரின் இடத்தில் கோடீஸ்வரத் தொழிலதிபர்கள் ஒட்டுமொத்தத் தொழில்துறைப் படையணிகளின் தலைவர்கள், அதாவது நவீன முதலாளித்துவ வர்க்கத்தினர் உருவாயினர். நவீனத் தொழில்துறை உலகச் சந்தையை நிறுவியுள்ளது..'” (அத்தியாயம்-1 முதலாளிகளும் பாட்டாளிகளும்)

இந்தியாவில் நடுத்தர வர்க்கங்களின் நிலைமை பற்றி குறிப்பிட்டு அவர்கள் புரட்சிகர இயக்கத்தில் பங்காற்ற இயலும் என்பது கட்சியின் திட்டத்திலும் சுட்டிக்காட்டப்படுகிறது.

“முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ ஆட்சியால் நகர்ப்புற மற்றும் கிராமப்புற நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரும் எண்ணிக்கையிலான நடுத்தர வர்க்க ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழில்முறைநிபுணர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் அறிவு ஜீவிகளின் புதிய பிரிவினர் ஆகியோர் முக்கியமான பகுதியினராகவும், செல்வாக்கு செலுத்தும் பகுதியினராகவும் உள்ளனர்.

மக்கள் ஜனநாயக முன்னணியில் இவர்களை கூட்டாளிகளாக இருக்கவைக்க முடியும்; இருப்பார்கள். புரட்சிக்காக இவர்களை வென்றெடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த பிரிவினரை ஜனநாயக லட்சியங்களுக்காக அணிதிரட்டுவதில் முற்போக்கான அறிவு ஜீவிகளின் பணி முக்கியமான ஒன்றாகும்.”(7.9).

“தொழிலாளி – விவசாயி கூட்டை மையமாகக் கொண்டு அனைத்து தேசபக்த, ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையின் மூலம் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் லட்சியங்களை அடைவதற்கான போராட்டம் சிக்கலானதும், நீண்டகால தன்மை கொண்டதும் ஆகும்.” என்று திட்டம் கூறுகிறது.

மக்கள் ஜனநாயக அணியில் இடம்பெறும் வர்க்கங்கள் மற்றும் பல்வேறு பிரிவினர்களுக்கும்  முதலாளித்துவ அரசிற்கும் ஏற்படும் முரண்பாடுகள்தான் அந்த வர்க்கங்களை திரட்டும் பணிக்கான ஆதாரம். எனவே அந்த முரண்பாடுகள் குறித்த புரிதலை கட்சி உறுப்பினர்களுக்கு ஏற்படுத்தி, தாங்கள் வாழும் சூழலில் தாங்கள் திரட்ட வேண்டிய வர்க்கங்கள் குறித்த ஆழமான புரிதலை உருவாக்க வேண்டும்.

“எண்ணற்ற உள்ளூர் போராட்டங்கள்” முதலாளித்துவத்தை எதிர்த்து அதனை வீழ்த்தும் தன்மை கொண்டவை  என்பது அறிக்கையின் பார்வை. அறிக்கை  பயன்படுத்தும் “உள்ளூர் போராட்டங்கள்” எனும்  சொற்றொடர் முக்கியமானது. நவீன தொடர்பு சாதனங்கள் இந்த உள்ளூர் போராட்டங்களை “ஒரே தேசிய போராட்டமாக மையப்படுத்த” உதவுவதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

இதேபோன்று உழைக்கும் மக்களின் உள்ளூர் போராட்டங்களும் முக்கியமானவை. முதலாளித்துவத்தின் சுரண்டல் கொள்கைகள் கடைக்கோடி கிராமங்கள் மற்றும்  குடியிருப்புகள் வரை தாக்கத்தை செலுத்துகின்றன. இந்த நிலையில், சமூகரீதியில் ஒடுக்கப்படுவோர், சிறுபான்மையினர், மீனவர்கள், ஆதிவாசிகள் என அனைத்துத் தரப்பு உள்ளூர் மக்கள் அனைவரும் அந்தந்தப் பகுதி சார்ந்த போராட்டக்களத்தில் வருவது முதலாளித்துவ எதிர்ப்பினை கூர்மைப்படுத்தும். இது தேசிய போராட்டத்தையும், உலகப் போராட்டத்தையும் வலுப்படுத்தும்.

வாசிப்பது கடினமானதா?

கட்சித் திட்டத்தின் அடிப்படைகளை உணர்ந்துகொள்ள கம்யூனிஸ்ட் அறிக்கை உதவிடும். இரண்டு ஆவணங்களையும் ஆழமாக உள்வாங்கிட வேண்டும். வாசிப்பது கடினமாக இருக்கிறது என்கிற காரணத்தை முன்வைத்து , ஒருவர் , அவற்றை வாசிக்காமல் இருப்பது, அவரது கம்யூனிச லட்சியப் பிடிப்பினை தளரச்  செய்திடும். இவ்வாறு, இலட்சிய பிடிப்பில் தளர்ச்சியுடன் செயல்படும் தெளிவற்ற உறுப்பினர்கள் கொண்ட இயக்கம் வளர்ச்சி காணாது. இயக்கத்திலும் தீவிரமான செயல்பாடு இருந்தாலும் வளர்ச்சி என்பது கானல் நீராகவே இருந்திடும்.

வாசிப்பது, மறுபடியும் வாசிப்பது, வரிக்கு வரி பொறுமையுடன் வாசிப்பது, மார்க்சியம் அறிந்தோருடன் விவாதம் செய்து வாசிப்பது, வாசகர் வட்ட கூட்டங்களில் இந்த இரண்டு ஆவணங்களின் கருத்துக்களை முன்வைத்து விவாதிப்பது, மற்றவர்களுக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கும், அறிக்கையிலும் திட்டத்திலும் உள்ள விஷயங்களை பேசுவது மற்றும் போதிப்பது- என பல வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

கம்யூனிஸ்ட் கட்சியில் சேருகிறவர்கள் கட்சித் திட்ட லட்சியத்துடன் தன்னை முழுமையாக இணைத்துக் கொள்ள வேண்டுமென்று லெனின் அறிவுறுத்தினார். கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் அறிக்கையையும், திட்டத்தையும் போதிக்கும் பணி முக்கியமானது மட்டுமல்ல; புரட்சிகரமான ஒரு பணியும் ஆகும்.

சாதி, வர்க்கம், இயக்கங்கள்

என். குணசேகரன்

ஆனந்த் டெல்டும்டெவின் “சாதிக் குடியரசு” நூல், இந்திய மக்கள் எதிர்கொள்ளும் சமூக சிக்கல்கள் பற்றி ஆழமான பல கருத்துக்கள், ஏராளமான விவரங்கள் கொண்ட 400-பக்க நூலாக அமைந்துள்ளது. டெல்டும்டெவின் சிந்தனைகள் அனைத்தும் கவனத்தில் கொள்ள வேண்டியவை; விவாதத்திற்கும், விமர்சனத்திற்கும் உட்படுத்த வேண்டியவை. எனினும், முக்கிய கருத்துக்கள் சிலவற்றை மட்டும் இக்கட்டுரை விவாதிக்கிறது.

“சாதி, வர்க்க இயக்கவியல்: உள்ளேயும், வெளியேயும்” என்ற தலைப்பு டாக்டர் அம்பேத்கரின் ஒரு முக்கிய மேற்கோளுடன் துவங்குகிறது. “சாதி என்பது மூடப்பட்ட வர்க்கம்” என்று 1916-ம் ஆண்டு “இந்தியாவில் சாதிகள்” என்கிற நூலில் டாக்டர் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். அதாவது, வர்க்கத்தின் வடிவமாக சாதி உள்ளது என்று அவர் கருதினார்.

இன்றைய நவீன கிராம சமுதாயத்தை எடுத்துக்கொண்டால் நிலவுடைமையாளர்கள், முதலாளிகள் என்ற அதிகாரம் படைத்த வர்க்கப் பிரிவினர் ஒருபுறம்; அவர்களிடம் பல்வேறு வகைகளில் பணியாற்றும் நிலமற்ற விவசாயிகள், முறைசாராத் தொழிலாளர்கள் போன்றோர் மறுபுறம் என வர்க்க அடிப்படையில் வேறுபாடுகள் உள்ளன. ஆனால் இதை விட வெளிப்படையாக தெரிவது அந்த கிராம சமூகத்தில் நிலவும் சாதி வேறுபாடுகள் தான். எனவேதான் வர்க்கம், சமூகத்தின் உள்ளடக்கமாகவும் சாதி அதன் வெளிப்புற வடிவமாகவும் விளங்குகிறது.

சாதி, வர்க்க ஒடுக்குமுறை எதிர்ப்பு இரண்டும் இணைந்த போராட்டத்தில்தான் பொருளாதார சுரண்டலுக்கும் ஒடுக்கு முறைக்கும் ஆளான உழைக்கும் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்ட முடியும்.

இந்த ஒற்றுமை அம்பேத்கர் கனவு கண்ட சமத்துவ சமூகத்தை உருவாக்கிடும். அம்பேத்கரின் வர்க்கம், சாதி பற்றிய வரையறை இதனையே உணர்த்துகிறது.

சாதி, வர்க்கம் என்ற இரண்டும் வேறுபட்டவையாக இருந்தாலும், இரண்டுக்கும் ஒற்றுமை அம்சங்களும் உண்டு என்கிறார் டெல்டும்டெ. இரண்டுக்கும் உள்ள பிணைப்பை சரியாக புரிந்து கொண்டு இயங்கும்போது, சமூக விடுதலைக்கான ஒன்றுபட்ட போராட்டத்தைக் கட்டவிழ்ப்பதற்கான வலிமை ஏற்படுவதாக அவர் கருதுகிறார்.

கம்யூனிஸ்ட் இயக்கங்கள் நீண்ட காலமாகவே ஒடுக்கப்பட்ட மக்களை சமூக, பொருளாதார அடிப்படையில் அணிதிரட்டி வந்துள்ளனர். இந்த செயல்பாட்டுக்கான வழிகாட்டுதலை மார்க்சியமே வழங்குகிறது. இதனால்தான் அம்பேத்கரும் மார்க்சியப் பார்வையில் முக்கியமான கருத்தாக்கமான “வர்க்கம்” என்கிற கருத்தாக்கத்தை சாதி பற்றிய ஆய்வுக்கு பயன்படுத்துகிறார்.

அம்பேத்கரும் மார்க்சியமும்

மார்க்சியத்தின் மீது ஈர்ப்பு கொண்டவராக அம்பேத்கர் இருந்தார் என்பதனை டெல்டும்டெ விவரிக்கின்றார். மார்க்சியம் “….மனித உறவுகளில் உள்ள சுரண்டல் தன்மையை முன்னிலைப்படுத்தி, அதனை மாற்றுவதற்கு வழிகாட்டும் சித்தாந்தம்” என்று அம்பேத்கர் கருதியதாக டெல்டும்டெ கூறுகிறார். (பக்கம்-127)

மார்க்சின் “மூலதனம்” மராத்தியில் வெளிவந்தபோது, “கூலி, விலை, லாபம்” என்ற மார்க்சின் நூலை அவரது “ஜனதா” பத்திரிகையில் அம்பேத்கர் தொடராக பிரசுரித்துள்ளார். 1956-ம் ஆண்டில் காத்மாண்டுவில் நடந்த ஒரு கருத்தரங்கில் “புத்தரும், மார்க்ஸும்” என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்து உரையாற்றியுள்ளார். அதில் புத்தர், மார்க்ஸ் இருவரின் உலகப்பார்வையும் இலட்சியங்களும் ஒன்றே என்று பேசியுள்ளார்.

1936 ஆகஸ்ட் 15 அன்று அனைத்து உழைக்கும் மக்களையும் திரட்ட அவர் சுதந்திர தொழிலாளர் கட்சி அமைத்தார். இது, அவரிடம் வர்க்க சிந்தனை இருந்ததை எடுத்துக்காட்டுவதாக டெல்டும்டெ கருதுகிறார்.

இந்த உண்மைகளை ஆனந்த் டெல்டும்டெ எடுத்துக் கூறுவதன் நோக்கம் என்ன? மார்க்ஸ் சிந்தனையும் அம்பேத்கர் சிந்தனையும் எதிரும் புதிருமானது அல்ல என்றும், மார்க்சிய இயக்கங்களும் தலித் இயக்கங்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

மார்க்சியம் மீது சில விமர்சனங்களும் அம்பேத்கருக்கு உண்டு என்று டெல்டும்டே குறிப்பிடுகிறார். வன்முறையையும், சர்வாதிகாரத்தையும் அது வலியுறுத்துவதாக அம்பேத்கர் கருதினார் என்று டெல்டும்டெ தெரிவிக்கின்றார்.

ஆனால், வன்முறை, சர்வாதிகாரம் இரண்டுமே ஆளும் முதலாளித்துவ வர்க்கங்களும், அவற்றின் கருவியாக செயல்பட்டு வரும் அரசும் மக்களை அடக்கி ஒடுக்கிட, மேற்கொள்ளுகிற வழிமுறைகள். இதனை மார்க்சியம் ஆழமாக விளக்குகிறது. இன்றளவும் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் இதனை நாம் காண்கின்றோம். புரட்சிகர மாற்றம் ஏற்பட்டு, பாட்டாளி வர்க்க அரசு அமைகிற போது, பெரும்பான்மை மக்கள் அதிகாரத்தில் இருப்பதை முதலாளித்துவம் சகித்துக் கொள்வதில்லை. பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தில் இருப்பதை பொறுக்க முடியாத முதலாளித்துவம், மீண்டும் எதிர்ப்புரட்சி வேலைகளை செய்து உழைக்கும் மக்களின் அரசினை வீழ்த்த வன்மத்துடன் முயற்சிக்கும்.

அதனை எதிர்கொள்ள வேண்டுமானால், பாட்டாளி வர்க்க அரசு அனைத்து அதிகாரங்களையும் கொண்ட பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசாக இருக்க வேண்டும் என்று மார்க்சியம் வழிகாட்டுகிறது.  அந்த அரசு உண்மையில் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் அரசாக இருக்கும் என்பதனை மார்க்சியம் விளக்குகிறது. அந்த அரசும், அது நிர்வகிக்கும் சமூகமும், நடைமுறையில் உண்மையான மக்கள் ஜனநாயகமாகவே இருக்கும்.

மார்க்சியத்தை வன்முறை தத்துவம் என்றும், சர்வாதிகாரத் தத்துவம் என்றும் மனிதநேய சிந்தனையாளர்கள் பலரும் கூட தவறான புரிதலுக்கு ஆட்பட்டுள்ளனர். அவர்கள் மார்க்சியத்தை அதன் முழுப்பரிமாணங்களுடன் புரிந்து கொள்வதற்கு ஏற்ற வகையில் மார்க்சியம் பற்றிய முழுமையான தரவுகள், மதிப்பீடுகள் கொண்ட கருத்தியல் பிரச்சாரம் அதிகமாக தேவைப்படுகிறது.

சுயநல அரசியலும்,சாதி ஒழிப்பும்

1936-ல் தொழிலாளர் கட்சியை அமைத்த அம்பேத்கர், அந்த வர்க்கத் திரட்டல் பணியை முதன்மைப் பணியாகத் தொடரவில்லை. 1942ல் அனைத்திந்திய தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பினை உருவாக்கினார். இது, வர்க்கம் என்கிற முனையிலிருந்து சாதி என்கிற முனைக்கு அவர் சென்றுவிட்டதை குறிப்பதாக டெல்டும்டெ எழுதுகிறார்.

அம்பேத்கர், காங்கிரஸ் ஆட்சியில் சட்ட அமைச்சராக பொறுப்பேற்றதும், பிறகு காங்கிரஸ் தலைமையால் துரோகத்திற்கு ஆளானதும் வரலாறு. இவற்றை விளக்கும் டெல்டும்டெ பாஜக, காங்கிரஸ் இரண்டுமே தலித் மக்களுக்கு துரோகம் இழைக்கும் கட்சிகளென ஆதாரங்களுடன் எடுத்துரைக்கிறார்.

ஆனால் அந்தக் கட்சிகளோடு, அம்பேத்கர் பெயரை உச்சரித்துக் கொண்டு அரசியல் செல்வாக்கை தேடிக் கொண்ட பலர், சுயநல அரசியலை நடத்தி வருகிற நிலையையும் டெல்டும்டெ அம்பலப்படுத்துகிறார்.

இதற்கு தலித்துகளான ‘ராம்கள்’ சிலரை எடுத்துக்காட்டாக முன்வைத்து பேசுகிறார். ராம்தாஸ் அத்வாலே செல்வாக்கு பெற்ற பெரும் கோடீஸ்வரராக ஆன வரலாற்றை குறிப்பிடுகிறார். முதலில் தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி அரசில் அமைச்சராகவும், பிறகு பாஜக அரசில் அமைச்சராகவும் அவர் இருந்தார். அதேபோன்று ராம் விலாஸ் பஸ்வான், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசிலும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசிலும் தொடர்ச்சியாக ஐந்து முறை மத்திய அமைச்சராக பதவியில் இருந்து வருகிறார். இவர்களை விட பலமடங்கு சுயநல அரசியலும், ஊழல் சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிற பலர், பல முதலாளித்துவ கட்சிகளில் இருந்து வருகின்றனர் என்பது உண்மையே. ஆனால் சாதி ஒழிப்பு லட்சியத்திற்காக வாழ்க்கையைத் துவங்குகிற பலர் தடம் மாறி போகிறபோது, அந்த லட்சியத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது.

தற்போதைய நிலையில் அம்பேத்கரைப் பின்பற்றுவோரும் கூட அம்பேத்கரின் பார்வையை நடைமுறையில் பின்பற்றுவதில்லை. சாதி ஒழிப்பு இலட்சியம் சாத்தியமில்லை என்று அவர்கள் கருதுகின்றனர். அம்பேத்கர் பெயரை உச்சரிக்கும் வேறு சிலர் இந்துத்துவா மற்றும் நவீன தாராளமய விஷ கருத்தியலுக்கு ஆளாகி உள்ளனர். எனவே சாதி ஒழிப்பு நிகழ்வு மெதுவாகவே நடக்கும் என்று விளக்கும் டெல்டும்டெ, அந்த குறிக்கோள் வர்க்க ஒற்றுமை போராட்டங்களின் வழியாகத்தான் சாத்தியமாகும் என்கிறார். (பக்கம் 179). இந்த கருத்திற்கும், கம்யூனிஸ்டுகளின் பார்வைக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

சங்கப் பரிவாரம் விடுக்கும் சவால் உள்ளிட்ட அனைத்தையும் எதிர்கொள்ள, “சாதி உணர்வு வேரறுக்கப்பட வேண்டும்” என்கிறார் டெல்டும்டெ. இதற்கு “சாதி அடுக்கில் நிறுத்தப்பட்டிருக்கும் சாதிகளின் அடையாள உணர்வுகள் அழிக்கப்பட வேண்டும்” என்கிறார். அதாவது, “சாதி ஓழிக்கப்படுதலே சரியான தீர்வாக அமையும்” என்கிறார். இது கரடு முரடான, நீண்ட கால பாதையாக இருக்கலாம். இதற்கு சரியான அணுகுமுறை தேவை. சாதி ஒழிப்பை சாதிக்க, தலித் மக்கள் வர்க்க நிலைமைகள், வர்க்க கருத்து நிலைகளில் நின்று சமூகத்தை அணுக வேண்டும்; தலித்துக்களைப் போன்றே கிராமப்புற அதிகார வர்க்கங்களிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் தலித் அல்லாதவர்களோடு நெருக்கம் ஏற்பட இந்த அணுகுமுறையே சிறந்த வழி என்கிறார் டெல்டும்டெ. இது சாதி ஒழிப்பில் முன்னேறிட உதவிடும்.

சங்பரிவாரங்களின் திட்டம்

தலித் மக்களை தங்கள் பிடியில் வென்றெடுப்பது என்பது சங்பரிவாரத்தின் ஒரு நயவஞ்சகமான திட்டம்.

இந்துக்களுக்கு எதிராக இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், கம்யூனிஸ்டுகளை முன்னிறுத்தி, சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவது இந்துத்துவாவின் குறிக்கோள். இதனை அடைவதற்கான அவர்களது திட்டத்திற்கு, தலித்துகள் தடையாக இருப்பார்கள் என்கிற அச்சம் எப்போதுமே அவர்களுக்கு உண்டு.

வேறுபட்ட நம்பிக்கைகள், கடவுளர்கள், சடங்குகள் என பல்வேறு பிரிவினரை இந்து என்கிற ஒற்றை மத அடையாளத்தின் கீழ் கொண்டுவர இந்துத்துவா முயற்சிக்கிறது. இதற்காக பல பிரிவினரின் பன்முகத் தன்மைகளை அழிக்கும் பண்பாட்டு அழிப்பினை அவர்கள் செய்து வருகின்றனர். தலித் மக்களை இந்து என்ற ஒற்றை மத அடையாளத்தின் கீழ் கொண்டுவருவது சாத்தியமில்லை. ஏனெனில், இந்து மதத்தில் நால் வருணம் என்கிற ஒடுக்குமுறை கோட்பாடு, காலம் காலமாக, அவர்கள் மீது திணிக்கப்பட்டு, தீண்டாமை உள்ளிட்ட கொடுமைகளுக்கு அவர்கள் ஆளாகி வருகின்றனர். இந்த நிலையை எதிர்கொண்டு தலித் மக்கள் மத்தியில் இந்து மத ஒற்றை அடையாளத்தை ஏற்படுத்த சங்பரிவாரம் பெரு முயற்சி செய்கிறது. அம்பேத்கரையும் காவி மயமாக்க அவர்கள் படாதபாடு படுகிறார்கள். அம்பேத்கர் இந்து மதத்தை முழுமையாக நிராகரித்தவர் என்கிற உண்மையை மறைத்து, அம்பேத்கரை சித்தாந்த ரீதியாக கடத்திட முயற்சிக்கிறார்கள். தலித் இயக்கத்தில் உள்ள நடுத்தர வர்க்கத்தினர் சிலரின் சுயநலமும், சங்பரிவாரத்தின் இந்த சதித் திட்டத்திற்கு துணையாக இருக்கிறது என்பதை டெல்டும்டெ அழுத்தமாக குறிப்பிடுகிறார்.( பக்கம் 265)

பாஜகவிற்கு தலித் மக்கள் மீது எந்தப் பாசமும் இல்லை. பாஜக ஆட்சியில் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் ஒவ்வொரு நாளும் சராசரியாக 111 என்ற எண்ணிக்கையில் நடந்து வருவதை சுட்டிக் காட்டும் டெல்டும்டெ “ஆளும் வர்க்கங்களின் நலன்கள் தற்போதைய சாதிப் பிளவுகளை பாதுகாப்பதில்தான் உள்ளது. இந்த ஆளும் வர்க்கங்களின் தேவைகளுக்கு ஏற்ப அரசும் செயல்படுகிறது” என்கிறார். எனவே, பாஜக தலைமை தாங்கும் அரசினை எதிர்த்தால் மட்டும் போதாது. எதிர்காலப் பார்வை முன்வைக்கப்பட வேண்டும். முதலாளித்துவ அரசினை அகற்றி, உழைக்கும் வர்க்கங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுகிற மாற்று நிகழ்ச்சி நிரல் அவசியம்.

சாதி ஒழிப்பில் நிலப் பிரச்சனை

தலித் விடுதலை பற்றி பேசுகிறவர்கள் நிலப் பிரச்சனை பற்றி அதிகம் பேசுவதில்லை. டெல்டும்டெ தலித் விடுதலைக்கு நிலவுடைமை உறவுகளில் மாற்றத்தை ஏற்படுத்துவது மிக முக்கியமானது என்று எழுதுகிறார். “மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால், 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட தலித் மக்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். வேகமாக நிகழும் நகரமயத்தில், தலித் அல்லாதவர்கள் நகர்ப்புறங்களுக்கு குடியேறுகிற அளவில் பாதி அளவிற்கு மட்டுமே நகரங்களுக்கு செல்லும் தலித் மக்களின் எண்ணிக்கை உள்ளது. இந்நிலையில் தலித் விடுதலை குறிக்கோளினை அடைந்திட, நிலம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது.” (பக்கம் 211). இதனையொட்டி அம்பேத்கர் 1929-ம் ஆண்டில் மகாராஷ்டிரா கொங்கண் பகுதியில்ந டத்திய நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டத்தை டெல்டும்டெ குறிப்பிடுகிறார்.

கம்யூனிஸ்டுகள் நீண்டகாலமாக நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். டெல்டும்டெ இந்த பங்களிப்பை விரிவாக எழுதவில்லை என்றாலும், நிலத்துக்கான போராட்டம் கம்யூனிச இயக்கத்தின் பிரிக்க முடியாத நிகழ்ச்சி நிரலாக இருந்து வந்துள்ளது. அந்த வகையில் தலித் விடுதலைக்கு கம்யூனிஸ்டுகள் ஆற்றிய பங்கு மிக முக்கியமானது. எதிர்வரும் காலங்களிலும் புதிய சூழலுக்கு ஏற்றவகையில் நிலப் போராட்டம் முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியமானது. இது விவசாயப் பகுதியினரை திரட்டி நகர்ப்புற உழைக்கும் வர்க்கங்களோடு ஒற்றுமை காண வழிவகுக்கும். இந்த வர்க்க ஒற்றுமையைக் கட்டுவது, சாதி ஒழிப்பில் முக்கிய கடமையாக அமைந்துள்ளது.

கம்யூனிஸ்டுகள் மீது விமர்சனம்

எவ்வித அடிப்படையும் இல்லாமல் கம்யூனிஸ்டுகள் மீது ஏற்கெனவே உலா வந்து கொண்டிருக்கின்ற பல அடிப்படியில்லாத கருத்துக்களையும் ஆங்காங்கே டெல்டும்டெ பதிவு செய்துள்ளார். “வறட்டு தத்துவவாதிகள்” என்று கம்யூனிஸ்ட்களை தூற்றுகிறார். சாதி – வர்க்க உறவுகள் பற்றிய “தத்துவார்த்த பற்றாக்குறை” இடதுசாரி இயக்கங்களிடம் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார். அவரது அறிவியல் சார்ந்த சிந்தனைக்கு பொருத்தமற்ற வகையில் இக்கருத்துக்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. தலித் இயக்கங்கள் ‘சாதி மட்டும் பார்க்கிறார்கள்; கம்யூனிஸ்டுகள், வர்க்கம் மட்டும் பார்க்கிறார்கள்’ என்று சூத்திரம் போன்று டெல்டும்டெ எழுதுகிறார். ‘இதனால் இரண்டு இயக்கங்களும் மக்களிடமிருந்து தனிமைப்பட்டு வருகின்றன’ என்கிறார். தலித் இயக்கங்களின் கருத்து நிலைகள், செயல்பாடுகள், நோக்கங்கள் பலவற்றை அவரே விமர்சித்திருக்கிறார்.

ஆனால், மார்க்சிய இயக்கம் வர்க்கம் மட்டும் பார்ப்பது உண்மையல்ல என்பது மட்டுமல்ல; உண்மையான மார்க்சிய செயல்பாடு சாதியை தவிர்த்து வர்க்கம் மட்டும் பார்ப்பதாக இருக்க இயலாது. ஒரு கிராமத்தில் நிலப்பிரச்னைக்கு விவசாயிகளை திரட்டும் பணியில் ஈடுபட்டு, வர்க்க ஒற்றுமைக்கு முயல்கின்ற ஒரு கம்யூனிஸ்ட், சாதி சவாலை எதிர்கொள்ளாமல் வர்க்க ஒற்றுமையை உருவாக்க இயலாது. உள்ளூர் மக்களிடம் ஒடுக்குமுறை உறவுகளுக்கு எதிராகவும், சாதிய மனப்பான்மையை கைவிடவும் கருத்துப் பிரச்சாரத்தை மேற்கொள்ளாமல் உண்மையான வர்க்க ஒற்றுமை உள்ளூரில் சாத்தியமாகாது. இதை நடைமுறைப்படுத்துகிறபோது சில தவறுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளளன. வாழ்வாதார, பொருளியல் பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்துகிற நிலையில், சமூகரீதியில் உள்ள ஒடுக்குமுறை பிரச்சனைகள் மீது உரிய கவனம் செலுத்தாத போக்கு ஏற்படுகிறது. இது உண்மையான, மார்க்சிய தத்துவ நடைமுறை அல்ல. மார்க்சிய அடிப்படையில் சமூக கட்டமைப்பை பார்ப்பதில் உள்ள சரியான மார்க்சிய புரிதலை ஏற்படுத்தி, இதனை அவ்வப்போது சரி செய்திட வேண்டும். பல தலித் இயக்கங்களோடு இணைந்து கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக பல மாநிலங்களில், குறிப்பாக, தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் கூட்டாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைத்து செயல்பட்டு வருகின்றனர். தலித் மக்களுக்கான உரிமைகளை நிலைநாட்டி உள்ளனர்.

இவ்வாறு தீவிரமான செயல்பாடுகள் மேற்கொண்ட போதிலும், பல அறிவுஜீவிகள் கம்யூனிஸ்டுகளுக்கு ‘வர்க்கம் மட்டுமே தெரியும்; சாதி பற்றி அவர்களுக்கு தெரியாது’ என்ற அவதூறுப் பிரச்சாரத்தை நிறுத்தவில்லை. கம்யூனிஸ்டுகள் ஒடுக்கப்பட்ட மக்களிடையே வேரூன்றுவதை அவர்கள் விரும்பவில்லை; அது மட்டுமல்ல; தலித் மக்கள் பரந்த அளவில் சுரண்டப்படும் வர்க்கங்களோடு இணைந்து போராடுவதையும் அவர்கள் விரும்பவில்லை; வர்க்க ஒற்றுமை உருவாகி, சுரண்டலுக்கே முற்றுப்புள்ளி வைக்கும் சோஷலிச பாதையில் தலித்துக்கள் செல்வதை தடுக்கும் உள்நோக்கமும் அவர்களில் பலருக்கு உண்டு.

சாதியைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்வதற்கு மார்க்சிய அணுகுமுறை உதவுகிறது. பொருளியல் தளத்தில் எவ்வாறு உழைப்புச் சுரண்டல் நடக்கிறது என்பதனையும், சாதி அடுக்கில் அடித்தட்டில் இருக்கிற தலித், பிற்பட்ட உழைக்கும் மக்கள் எவ்வாறு கடும் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளவும், மாற்றத்துக்கான சரியான செயல்பாட்டிற்கும் மார்க்சியமே வழிகாட்டுகிறது. அதேபோன்று, மக்களின் சுரண்டல் வாழ்க்கை நிலைமைகளை மறைப்பதற்கும், மறப்பதற்கும், சாதி, மதம் இரண்டுமே பயன்படுத்தப்படுகின்றன. உழைக்கும் மக்களை ஆதிக்க வர்க்கங்களின் சுரண்டலுக்கு உட்படுத்தி, கேள்வி கேட்காமல் அடிமை வாழ்க்கையில் உழல்வதற்கான சிந்தனைகளை சாதி, மத சிந்தனைகள் ஏற்படுத்துகின்றன. ஆளும் வர்க்கத்தின் கருவிகளாக இவை செயல்படுவதை மார்க்சிய ஆய்வுமுறை மூலமாகத்தான் துல்லியமாக புரிந்து கொள்ள முடியும்.

தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு என்று அவ்வப்போது சில நடவடிக்கைகளை எடுத்தால் மட்டும் சாதி ஒடுக்குமுறை சார்ந்த சமூக அடுக்கினை அகற்றிட முடியாது. வர்க்க நிலைமைகளையும் சாதிய ஒடுக்குமுறை உறவுகளையும் சரியாக கணித்து சரியான செயல்பாட்டு வியூகங்களை அமைத்து செயல்படுவதன் வழியாகத்தான் சாதி ஒழிப்பிலும் முன்னேற முடியும். வர்க்க விடுதலை சாதிக்க முடியும். இதுவே கம்யூனிஸ்டுகளின் கடந்தகால அனுபவமாகவும் இருந்துள்ளது. கேரள சமூகமும், தமிழகத்தில் கம்யூனிஸ்டுகள் ஓரளவு வலுவாக ஆதரவு தளம் பதித்த கீழத்தஞ்சை பகுதியிலும் இந்த வரலாற்று அனுபவங்கள் ஏராளமாக உள்ளன. இந்த வரலாற்றை டெல்டும்டெ அங்கீகரித்ததாக தெரியவில்லை. வர்க்க ஒற்றுமையை கட்ட வேண்டும் என்று வலியுறுத்தும் டெல்டும்டேவின் பார்வையை நடைமுறைப்படுத்தவும் கூட கம்யூனிஸ்டு இயக்கங்களின் சாதி ஒடுக்குமுறை எதிர்ப்பு வரலாற்றையும் அவற்றின் அனுபவங்களையும் கற்பது அவசியமாகிறது.

தலித் எழுச்சி

1990களில் அதிக அளவில் தலித் இயக்கங்கள் உருவான சூழலில், மார்க்சிஸ்ட் கட்சி தலித் இயக்கங்களின் புத்தெழுச்சியை வரவேற்றது. அதனை ஒடுக்குமுறைக்கு எதிரான எழுச்சியாகவே மார்க்சிஸ்ட் கட்சி கணித்தது. அந்த எழுச்சியை வரவேற்பது மட்டுமல்லாமல், அவர்களோடு இணைந்து, களத்தில் ஏராளமான கூட்டு இயக்கங்களை மார்க்சிஸ்ட் கட்சி முன்னெடுத்து வருகிறது

‘சாதிகள் ஒருவகையில் வர்க்கத்தின் ஒரு வடிவமாகவே இந்தியாவில் உள்ளன; வர்க்கங்கள் சாதிகளுக்குள் உட்புகுந்து இருப்பதை காணமுடியும்’ என்பது அம்பேத்கரின் கருத்து. அதே கோணத்தில் டெல்டும்டெ சாதிக்கும் வர்க்கத்திற்கும் உள்ள உறவினை விளக்குகிறார். வர்க்கம் என்றால் மார்க்ஸையும், சாதி என்றால் அம்பேத்கரையும் பிரித்துக் காண்பது சில அறிவு ஜீவிகள் மேற்கொள்ளும் வீணான வேலை என்று டெல்டும்டெ கருதுகிறார்.

சாதி, வர்க்கம் இரண்டையும் பிரித்துப் பார்க்கிற தவறினை உண்மையான மார்க்சியம் செய்வதில்லை. ஆனால் ‘இந்த இரண்டையும் பிரித்துப் பார்க்கிற தவறுகளை தலித் இயக்கங்களும், மார்க்சிய இயக்கங்களும் செய்ததால், இரண்டுமே பின்னடைவுக்கு சென்றுவிட்டது ‘என்று டெல்டும்டெ கருதுகிறார். வழக்கமாக பலர் மார்க்சியத்தை தூற்றுகிற அதே பாணியில் இக்கருத்தினை டெல்டும்டெ வெளிப்படுத்துகிறார்.

மார்க்சியம் ஒரு சமூகத்தை துல்லியமாக ஆய்வு செய்திட வழிகாட்டுகிறது. அந்த சமூகத்தில் வாழும் மக்கள் தங்களது வாழ்க்கையின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள உற்பத்தியில் ஈடுபட வேண்டிய கட்டாயம் உள்ளது. அந்த வகையில் பொருளாதாரம் அடிப்படையாக அமைந்துள்ளது. அந்த பொருளாதார இயக்கத்தில் நிலம் உள்ளிட்ட உற்பத்தி சாதனங்களின் உடைமையாளர்கள், அதில் உடைமை ஏதும் இல்லாமல் உழைப்பு மட்டும் செலுத்துவோர் என்று பிரிவுகள் ஏற்படுகின்றன. இந்த உற்பத்தி சார்ந்த உறவுகளின் அடிப்படையில் தான் வர்க்கங்கள் உருவாகின்றன. சொத்துடைமை வர்க்கங்கள், உழைப்பு சக்தியை மட்டுமே நம்பி இருக்கிற உடைமையற்ற வர்க்கங்கள் என்ற இரண்டு முக்கிய பிரிவுகள் சமூகத்தில் ஏற்படுகிறது. இரண்டு வர்க்கங்களும் வெவ்வேறான நலன்களை கொண்டதாக உள்ளன.

இந்த இரண்டு வர்க்கப் பிரிவினர் சாதிகளாகவும் பிரிந்துள்ளனர். உழைக்கும் வர்க்கங்களாக இருந்தாலும், சாதி என்கிற சமூக அடுக்கு, கருத்து ரீதியாக அவர்களை ஒன்று சேர விடாமல் தடுக்கிறது. உழைக்கும் வர்க்கங்கள் சாதிகளாக பிரிந்திருப்பதும் தலித் மக்களை, தலித் அல்லாத சாதியினர் பகைமையோடு அணுகுவதும் சாதிச் சிந்தனையின் விளைவு. இது, சுரண்டப்படுகின்ற மக்களிடம் வர்க்க ஒற்றுமை ஏற்படுவதை தடுக்கிறது. இதனால் ஆளும் வர்க்கங்கள் பலனடைகின்றன. சாதி பற்றி மார்க்சிய வழியில் ஆராய்வதே சரியான பாதைக்கு வழிவகுக்கும். இன்றைய முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ சமூக உறவுகளில் உள்ள அநீதியான ஒடுக்குமுறை நிலைமைகளை மாற்றியமைத்து சமத்துவத்தை அடைய மார்க்சியம் வழிகாட்டுகிறது.

ஆக, டெல்டும்டெவின் கருத்துக்களும், கள அனுபவங்களும் கீழ்க்கண்ட முடிவுகளுக்கு இட்டுச் செல்கின்றன.

முதலாளித்துவத்தை தூக்கி எறியும் நிகழ்ச்சி நிரல் இல்லாமல்,சாதி ஒழிப்புக் குறிக்கோள் நிறைவேறாது. ஆனால் இவை இரண்டுமே தானாக அழிந்து போகாது. முதலாளித்துவத்தையும், சாதி கருத்து நிலைகளையும் அழிப்பதற்கான களப்போராட்டங்கள், கருத்தியல் முயற்சிகள் இடைவிடாது நடந்தால்தான் இரண்டையும், மரணப்படுக்கையில் தள்ளிட முடியும். இதனை அனைத்துப் பகுதியினரையும் உள்ளடக்கிய பாட்டாளிவர்க்கத்தின் உறுதியான, ஒன்றுபட்ட நடவடிக்கைகளே சாதிக்கும்.

மறுவாசிப்பில் திராவிட இயக்கம் – நூல் மதிப்புரை

குரல்: யாழினி

சூரியன்   

திராவிட இயக்கம் ஒரு நூற்றாண்டு வரலாறு டையது. திராவிட இயக்கங்கள் மற்றும் கட்சிகள், அவற்றின் பங்களிப்புகள் ஆகியன ஆய்வுலகின் கவனத்தைப்பெற்றுவந்துள்ளது.குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத கட்சியாக உருவான பிறகு (1960களில்) ஏராளமான ஆங்கிலேய, அமெரிக்கஆய்வாளர்கள்நீதிக்கட்சி, அதன்தோற்றம், அதன் சாதிய, வர்க்க உள்ளடக் கங்கள் குறித்தும் அது எவ்வாறு பிராமண ரல்லாத இடைநிலை சாதிகளின்நலனுக்காக பணியாற்றி வந்தது குறித்தும் அதிகமான கவனத்தை பெற்றுவந்தது. இதன் காரணமாக, ஏராளமான ஆய்வுகள்தமிழிலும்ஆங்கிலத்திலும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. ஆரம்பகாலங்களில் வந்த ஆங்கில நூல்களில் சில, திமுக-வை பாசிசஇயக்கமென்றும், வகுப்புவாத அமைப்பு என்றும் வகைப்படுத்தின (க்ஷயசநேவவ 1976; ளுhinn 1971). எவ்வாறாயினும், திராவிட இயக்கமும், அதன் அரசியல்நீட்சியானதிமுக-வும்ஆய்வுலகின் கவனத்தை ஈர்த்தன என்பதில் இருவேறுகருத் தில்லை.

அதேபோல, ஆய்வுலகைத்தாண்டி அரசியல் உலகிலும்தனக்கான கவனத்தை திராவிட அரசி யல் தொடர்ந்து பெற்றுவருகின்றது. திராவிட அரசியலின் வெற்றி, அதன் அணிதிரட்டல்யுக்தி, அதன் தத்துவார்த்த பங்களிப்பு என பல தளங் களில் இதுகுறித்து ஆய்வுகள்வந்தவண்ணம் உள்ளன. இவ்வாய்வுகளில் சில திராவிட சித்தாந் தத்தை பாராட்டி வந்துள்ள அதே வேளையில், அதனை முற்றாக நிராகரித்தும், அதனை குறுகிய இனவாதபோக்காகக்கருதியும் கூட நூல்கள் வந்துள்ளன. திராவிட அரசியலை முற்றாக நிரா கரிக்காமல், அதேசமயத்தில்அவ்வியக்கம் குறித்த சரியான மதிப்பிடலை மேற்கொள்ளும் நூல்கள் சொற்பமே. அதேபோல, மார்க்சியபுரிதலின் அடிப்படையில் திராவிட இயக்கங்களின், கட்சி களின் உள்ளார்ந்த பங்களிப்புகள் குறித்து வெளி யானவிமர்சனநூல்களும்மிகக்குறைவே. அருணன் (1981) மற்றும் பி.ராமமூர்த்தி (1983) ஆகியோரின்நூல்களுக்குப் பிறகு, கடந்த கால் நூற்றாண்டிற்கும் மேலாக எந்த நூல்களும் திரா விட இயக்கங்களின் அரசியல் குறித்து விமர்சித்து வரவில்லை என்பது கவலையளிக்கக் கூடியது.

இந்நிலையில், ஏறத்தாழ 36 ஆண்டுகளுக்குப் பிறகு மார்க்சியஅணுகுமுறையில் இருந்து திரா விட இயக்கங்கள் குறித்தும், தமிழகத்திற்குரிய பிரத்யேகசூழலில் இருந்து இவ்வியக்கங்களின்/கட்சிகளின் பங்களிப்பு குறித்தும் என்.குண சேகரன் எழுதிய “மறுவாசிப்பில்: திராவிட இயக்கம்” எனும் நூல் வெளிவந்துள்ளது. இந்நூலாசிரியரே முன்னுரையில்குறிப்பிட்டுள்ளபடி“சரியாக புரிந்துகொள்ளப்படாமல் இருக்கும் திராவிட இயக்கத்தின் சில பரிமாணங்கள் பற்றி சரியான புரிதல் ஏற்படுத்தும்” (பக். 6) முயற்சிக்கு இந்த நூல் உதவியாக உள்ளதா என்பதைக் காண்போம்.

இந்தநூல், திராவிட இயக்கமாக பின்னர் பரிணமித்தபிராமணரல்லாதோர் இயக்கத்தின் தோற்றம் முதல் அதன் பிற்கால அரசியல் நீட்சியானதிமுக ஆட்சி பொறுப்பேற்கும் காலம் வரையான ஏறக்குறைய ஐம்பதாண்டு கால வரலாற்றை ஆய்வு செய்கிறது. இக்காலக் கட்டத்தில் திராவிட இயக்கங்களும், திராவிட அரசியல் கட்சிகளும் சந்தித்துவரும் நெருக்கடிக் கான தோற்றுவாயைக் கண்டடையும் முயற்சியில், திராவிட சித்தாந்தத்தின் அடிப்படைக் கட்டமைப் பில் காணப்படும் குறைகளை ஆசிரியர் அடை யாளப்படுத்துகிறார்.

பிற்காலத்தில், திமுக, அனைத்திந்திய அண்ணா திமுக (அஇஅதிமுக) உள்ளிட்ட திராவிடக் கட்சிகள் அரசியல் தளத்தில் மேற்கொண்ட சமரசப்போக்கிற்கான விதை பெரியாரின் காலத்தி லேயே உருவானதை ஆசிரியர் விவரிக்கிறார்.  உதாரணமாக, சிங்காரவேலருடன் இணைந்து பெரியார் தயாரித்த “ஈரோட்டு திட்டம்”, அக் கால கட்டத்தில் நிலச் சீர்திருத்தம் உள்ளிட்ட புரட்சிகரமான திட்டங்களை முன்மொழிந்தது. ஆனால், இத்திட்டத்தைத் தயாரித்த பெரியாரே பின்னர் அதனை கிடப்பில் போட்டு அதனை கிஞ்சிற்றும் ஏற்காத நீதிக்கட்சியை ஆதரித்தது குறித்தும், அதன்பின்னர் பெரியார் மற்றும் சிங்காரவேலரிடையே நடைபெற்ற விவாதம் குறித்தும் விரிவாக விவாதிக்கிறார் (பக். 49-31).

அதுபோல, திராவிட இயக்கத்தினை வலுவாகக் கட்டமைக்கஉதவிய பல்வேறு காரணிகள் குறித் தும்- இன அரசியல், மொழி அரசியல், சமூக சீர்திருத்த பணிகள்- அதனுடைய பொருத்தப் பாடு குறித்தும் இப்புத்தகம் விரிவாக எடுத்துரைக் கிறது. மேலும், நீதிக்கட்சியுடன் சுயமரியாதை இயக்கம் இணைந்து பின்னர் திராவிடர் கழகமாக பரிணமித்தது குறித்தும், பின்னர் அதில் பிளவு ஏற்பட்டுஅதன் அரசியல் நீட்சியாகதிமுக உருவான தன் பின்னணி குறித்தும் விளக்கமாக ஆராயப்பட் டுள்ளது. மேலும், திக-வில் இருந்து திமுக உரு வான நிலையில் அதுதனதுவெகுமக்கள் செல்வாக்கை வளர்த்துக் கொள்ள மேற்கொண்டபல்வேறு பணிகளை, அதன் தேர்தல் வெற்றியை இப்புத்த கம் வெளிக்கொணர்ந்துள்ளது. இவைகுறித்து ஏற்கனவே பல்வேறு புத்தகங்கள்வெளிந்திருந் தாலும் கூட, இந்நிகழ்வுகள் குறித்து வேறு ஒரு புதிய பார்வையை வாசகர்களுக்கு இப்புத்தகம் வழங்குகிறது.

வரலாற்று நிகழ்வுகள் குறித்து

ஏற்கனவே குறிப்பிட்டது போல், இப்புத்தகம் பல்வேறு வரலாற்றுநிகழ்வுகள் குறித்து விவாதித் திருந்தாலும் சில விவரங்கள் இப்புத்தகத்தில் விடுபட்டுள்ளன. குறிப்பாக, மத்திய – மாநில உறவுகள் குறித்து திராவிட அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு குறித்து ஆசிரியர் கூறியுள்ள தகவல் கள் போதுமானதாக இல்லை. உதாரணமாக, மத்திய-மாநில உறவுகளைசீரமைப்பது குறித்து திராவிட இயக்கங்கள் வலியுறுத்தவில்லை என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார் (பக்.12). ஆனால், திமுக ஆட்சியமைத்த பிறகு சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிபி.வி.இராஜமன்னார் தலைமை யில் மூன்றுபேர் கொண்ட (பி.வி.இராஜ மன்னார், ஏ.லட்சுமணசாமிமுதலியார் மற்றும் பி. சந்திரா ரெட்டி) கமிஷன் (1971) அமைத்து அதன் அடிப் படையில் மாநில சுயாட்சி குறித்த தீர்மானத்தை யும் (1974) கலைஞர் கருணாநிதி தலைமையிலான அரசு நிறைவேற்றியது. பின்னாளில், காங்கிரஸ் கட்சி அமைத்த சர்க்காரியாகமிஷனுக்கான (1983) அடிப்படையாக இராஜமன்னார்கமிஷன் இருந் தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2007-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குகூட்டணியின் போதும் பூஞ்சிகமிஷன்அமைப்பதிலும் திமுக-வின் முதன்மையான பங்கினை கவனத்தில் கொள்ள வேண்டும். நூலின் அடுத்த தொகுதியில் இவை கொண்டுவரப்படுவதாக இருந்தாலும், மத்திய, மாநில உறவுகள் குறித்து பேசும்போது இவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

அடுத்தபடியாக, “தமிழக அரசு அலுவலகங் களில் நிர்வாக மொழியாக தமிழ் மொழி பயன் படுத்தப்படவில்லை” (பக்.61). என்கிறார். இதனை 50 ஆண்டுக்கால திராவிட கட்சிகளின் ஆட்சியில் இன்றும் உயர் நீதிமன்றவழக்காடு மொழியாக தமிழ் இல்லை; அரசாணைகள் மிகவும் கால தாமதமாகவே தமிழில்வெளியிடப்படுகின்றன, அரசு உத்தரவுகள்பலவும் ஆங்கிலத்தில்தான் வருகின்றனஎன்ற போதும், காங்கிரஸ் ஆட்சியின் போது தமிழ் ஆட்சி மொழி சட்டம்- 1956 ல் நிறைவேற்றப்பட்டது முதல் மாநிலத்தில் தமிழே ஆட்சி மொழியாக, நிர்வாக மொழியாக உள்ளது. தமிழ் ஆட்சி மொழிச்சட்டத்தை அரசு அலுவல கங்களில்நடைமுறைப்படுத்துவதற்குத் தமிழக அரசு ஆட்சி மொழிக்குழு ஒன்றை 1957 ஆம் ஆண்டில் அமைத்தது. தமிழ் ஆட்சி மொழித் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் பரவலாகவும் முழுமையாகவும் செயல்படுத்தும் நோக்கில் அரசு தமிழ் வளர்ச்சி இயக்ககம்எனும்தனித்துறைத் தலைமை அலுவல கத்தை 1971-ல் அரசு அமைத்துள்ளது. மேலும், அரசு ஊழியர்கள் தமிழில் கையெழுத்திடுவது, தமிழில் பதிவேடுகளைபராமரிப்பது மற்றும் எழுத்து சீர்திருத்தத்தைஅமலாக்கியது உள்ளிட்ட பணிகளை திராவிடகட்சிகளின் அரசுகள் மேற்கொண் டுள்ளன. இவைகளின் அமலாக்கத்தில் குறைகள் இருக்கலாம்,  ஆனபோதும் திராவிட கட்சிகளின் மேற்கண்ட செயல்பாடுகளை குறிப்பிடாமல் கடந்து போவது சரியான ஆய்வு முறையாக அமையாது. இதேபோல, திராவிட அரசியல் கட்சிகளின் ஆட்சியில் கல்வி பரவலாக்கம் குறித்து விவாதிக்கும்போது கேரளாவுடனான ஒப்பீட்டு முறையிலும் சில குறைபாடுகள் உள்ளன.

ஆசிரியர் நூலாய்வுக்குபயன்படுத்திய நூல்கள் குறித்த தகவல்கள் (நூற்பட்டியல்) இப்புத்தகத் தில்இணைக்கப்படவில்லை. மாத இதழில் தொடர் கட்டுரையாகவந்ததால் நூல் பட்டியல் இணைக்கப்படாமல்இருந்திருக்கலாம். புத்தகமாகி வெளியிடும் போது  நூற்பட்டியல் இணைக்கப்படுவது அவசியம்.

இவ்வாறானசிற்சில குறைகள் இருந்தாலும் ஒரு நீண்டகால இடைவெளிக்குப் பிறகு திராவிட இயக்கம் குறித்த விவாதத்தைஇப்புத்தகம் மீண் டும் தூசிதட்டியிருப்பது குறிப்பிடத்தகுந்த முன்னேற்றமாகும். இப்புத்தகத்தின் அடுத்த பதிப்பில், மேற்குறிப்பிட்டவிவாதங்களையும், விடுபடல்களையும் நூலாசிரியர் களைவார் என எதிர்பார்க்கலாம்.

சிங்காரவேலரின் மார்க்சியப் பார்வை

என்.குணசேகரன்

மானுட விடுதலைக்கு வழிகாட்டுகிற தத்துவம் மார்க்சியம். காரல் மார்க்ஸ் பிறந்து இருநூறு ஆண்டுகள் ஆன இன்றைய பின்னணியில் சிங்கரவேலரின் மார்க்சிய சிந்தனை தமிழக சிந்தனைப் பரப்பில் முக்கியத்துவம் வாய்ந்தததாக உள்ளது,  அது இன்றைக்கும் பொருத்தப்பாடு கொண்டதாகவும் உள்ளது.

இந்திய விடுதலை இயக்கத்தின் முன்னணித் தலைவர், தென்னகத்தின் முதல் கம்யூனிஸ்ட் இயக்கப் போராளி,தொழிலாளர்     இயக்கங்களையும், தொழிலாளர் போராட்டங்களையும் தலைமையேற்று நடத்திய தலைவர் ,மிகச்சிறந்த அறிவியல் பரப்புரையாளர், சுயமரியாதை இயக்கத்தின் கருத்தியல் செயல்பாட்டாளர் என பன்முகத் தளங்களில் பணியாற்றியவர் சிங்காரவேலர். இதன் காரணமாக அவர் தமிழக அறிவுத் தளத்தில் அழிக்க முடியாத முத்திரை பதித்தவராக உயர்ந்து நிற்கிறார்.

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் தமிழகத்திற்கு மார்க்சிய தத்துவத்தின் முழுப்பரிமாணங்களை அறிமுகம் செய்து வைத்தவர், அத்துடன் மார்க்சியத்தை மக்கள் இயக்கமாக மாற்றும் இலட்சியப் பணியையும் துவக்கி வைத்தவர்.

தமிழகத்தில் மார்க்சிய எழுச்சி:

இருபதாம் நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளில் தமிழகத்தில்  அரசியல், சமூக இயக்கங்கள் பல வளர்ச்சி  பெற்றன.ஆங்கிலேய  ஆட்சிக் காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் நிகழ்ந்த கருத்தியல் உருவாக்கங்கள் பல்வேறு வகைப்பட்டனவாக இருந்தன.  சமுக,மத  சீர்திருத்தங்கள்,ஆங்கிலேய ஆட்சியின் பொருளாதார ஒடுக்குமுறை எதிர்ப்பு போன்றவற்றின் தாக்கங்களோடு  காலனிய எதிர்ப்பு பலமடைந்து வந்தது.

பாரதியின் படைப்புகள், பெரியார் தலைமையில் இயங்கிய  திராவிட இயக்கம், அயோத்திதாஸர் போன்றவர்களின் சாதி மறுப்பு இயக்கம் ஆகியவற்றோடு  கம்யூனிஸ்ட் இயக்கச் செயல்பாடும் வளர்ச்சி கண்டது. இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று வலு சேர்த்தன.இந்த சூழலில் மார்க்சிய சிந்தனை வலுப்பெற்றது. சிங்காரவேலர் செயல்பாடு  தமிழகத்தில் மார்க்சியம் உறுதியாக வேரூன்ற  மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக  அமைந்தது.தமிழ்ச் சமூகத்தின் இன்றைய கருத்தாக்க நிகழ்வுகளிலும் முக்கிய  செல்வாக்கு செலுத்தி வருவதற்கு அன்றைய தலைமுறையின் அயராத கருத்தியல் செயல்பாடு முக்கிய காரணமாக இருந்ததை மறுக்க இயலாது. இதற்கு சிங்கரவேலரே முன்னோடியாகத் திகழ்கின்றார்.

தமிழகத்தில் இன்றளவும் அரசியல்,பொருளாதாரம்,கலை,பண்பாடு என பல துறைகளில் மார்க்சியத்தின் தாக்கம் இருந்துவருவதோடு மார்க்சியத்திற்கு தனி ஈர்ப்பு நீடித்து வருகிறது. இதற்காக அன்று வலுவான அடித்தளம் அமைத்தவர் சிங்காரவேலர். இறுதி மூச்சு வரை அவர் மேற்கொண்ட மார்க்சிய பரப்புரையும், மார்க்சிய நோக்கிலான  படைப்புக்களும் தமிழ் மண்,  மார்க்சியத்தை சுவாசித்திட வழிவகுத்தது.

மார்க்சியத்தை பரப்புவதற்கு பல தளங்களையும் வாய்ப்புக்களையும் அவர் பயன்படுத்தினார்.மாற்றுக் கொள்கை கொண்டவர்களிடமும் சில பொது நோக்கங்களை முன்னிறுத்தி இணைந்து பணியாற்றும் போது தனது கொள்கைகள் மேலாண்மை பெற ஒரு மார்க்சியர் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் சிங்காரவேலர். பெரியார் காங்கிரசிலிருந்து விலகி சுய மரியாதை இயக்கத்தை துவங்கியதும் அவரோடு சிங்காரவேலர் இணைந்து செயல்பட்டதும் வரலாறு. இந்த இணைந்த செயல்பாட்டையும், சுயமரியாதை இயக்க மேடைகளை,  பொருள் முதல்வாதக் கோட்பாடுகளையும் கம்யூனிசக் கொள்கைகளையும் பரப்புவதற்கு சிங்காரவேலர் பயன்படுத்தினார். “குடிஅரசு”, “புரட்சி” ஆகிய  வார இதழ்களில், சமுதாயச் சீர்திருத்தம் மற்றும் , பகுத்தறிவுக் கருத்துகள், சோசலிச கொள்கைகள், அறிவியல் விளக்கங்கள் என பல்வேறு வகைகளில் மார்க்சிய கருத்துக்களை எழுதி வந்தார். காங்கிரஸ், சுயமரியாதை இயக்கங்களின் தளங்களை மார்க்சிய பரப்புரைக்கு அவன் பயன்படுத்தியதில், அவரது தனிச்சிறப்பு வாய்ந்த மார்க்சிய நடைமுறையின் மகத்துவம் வெளிப்பட்டது.

அன்று உலக அளவில் மார்க்சியம் பல சவால்களை எதிர்கொண்டது. அது,  தத்துவத்துறையில் கடுமையான போராட்டம் நிகழ்ந்து வந்த காலம்.மார்க்சியத்தை திரித்து அதன் புரட்சிகர கூர்மையை மழுங்கச் செய்திடும் போக்கு தீவிரமாக இருந்த காலம்.ஜெர்மனியில் பெர்ன்ஸ்டைன் எனப்படும் சமுக ஜனநாயக கட்சியின் தலைவர் தலைமையில் ‘சோசலிசம் வென்றடையும் இலக்கு அல்ல. மாறாக அது ஒரு நிகழ்வுப் போக்கு’ எனக் கூறி, ‘சோசலிசத்திற்கான இயக்கம் மட்டுமே முக்கியம்; இலக்கு அல்ல’ என்று மார்க்சியத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகள் தொடர்ந்து நீடித்து வந்தன. அத்தகைய போக்குகளுக்கு எதிராக லெனின் தலைமையில் உண்மையான மார்க்சியவாதிகள் பெரும் கருத்துப்போரை நிகழ்த்தி வந்தனர்.1917 நவம்பரில் வெற்றி கண்ட ரஷியப் புரட்சி, மார்க்சியத்தின் புரட்சிகர உயிர்ப்பினை மீண்டும் உயர்த்திப் பிடித்தது.

ரஷியப் புரட்சியின் வெற்றி நிகழ்ந்த காலத்தில் சிங்காரவேலர் தொழிலாளர் இயக்கங்களை நடத்துவதில் தீவிரமாகப் பணியாற்றி வந்தார். உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமை, சுரண்டலிலிருந்து விடுதலை, மார்க்சிய இயக்கவியல், வரலாற்றுப் பொருள்முதல்வாதம் உள்ளிட்ட பல தத்துவார்த்த, மார்க்சிய நடைமுறைகள் பற்றிய பிரச்சாரத்தை அவர் செய்து வந்தார். குறிப்பாக 1920.-ம் ஆண்டுகளிலிருந்து, 1930-ம் ஆண்டு சிறை சென்று விடுதலையான காலங்களில் அவர் தீவிரமாக இப்பணிகளை மேற்கொண்டார். 1946ம் ஆண்டு இறக்கும் வரை அவர் மார்க்சிய லெனினியத்தை எழுதியும் பேசியும் வந்துள்ளார்.

தத்துவ செயல்பாடு

மார்க்சியத்தில், தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான சோசலிசம் எனும்  மூன்று முக்கிய அடிப்படைக் கூறுகள் உண்டு என்று லெனின் வரையறுக்கிறார், (லெனின் மார்க்சியத்தின்) இதேபோன்று, சிங்காரவேலரின் செயல்பாட்டுத் தளங்களையும் வகைப்படுத்தி அறிந்திட முடியும்.

மார்க்சிய தத்துவம் இயக்கவியல் பொருள்முதல்வாதம்,வரலாற்றுப் பொருள்முதல்வாதம் எனும்  இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது.    மார்க்சிய தத்துவப் பார்வையில் ஆழமான தெளிவான பார்வை கொண்டவராக சிங்காரவேலர் வாழ்ந்திருக்கிறார்.

எங்கெல்ஸ் தத்துவத்தின் அடிப்படைப் பிரச்னை பற்றி எழுதுகிற போது குறிப்பிடுகிறார். “எல்லாத் தத்துவங்களுக்கும் அடிப்படைக் கேள்வி, இருத்தலுக்கும், சிந்தனைக்கும் இடையேயான உறவு பற்றியதுதான்’’

தத்துவக் களத்தில் போரிடும் இரு முகாம்களை எங்கெல்ஸ் விளக்குகிறார். ஆன்மா, புற உலகு உறவு பற்றி “…பதிலளித்த தத்துவவாதிகள் இருகூறாகப் பிரிந்தனர். ஆன்மாவை இயற்கைக்கு முதன்மையாக கருதியவர்கள் கருத்துமுதல்வாத முகாமாகப் பிரிந்தனர். இயற்கையை பிரதானமாக முதன்மைப்படுத்தியவர்கள் பொருள்முதல்வாத முகாமாக இயங்கினர்.”

மார்க்சியத்தின் இந்த வரையறை அடிப்படையில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் என்ற இரு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம். தத்துவ சிந்தனைப் பரப்பில் நடக்கும் போராட்டங்களை வகைப்படுத்த ஏங்கெல்ஸ் காட்டிய வழிகாட்டுதல் உதவுகிறது, இரண்டு பிரிவுகளுக்கும், ஆளும் வர்க்கம் சார்பு, ஒடுக்கப்படும் வர்க்க சார்பு என்ற பின்னணி உண்டு என்பதையும் மார்க்சியம் வழியாக சிங்காரவேலர் உணர்த்தியுள்ளார்.

“சமூகமும் பொருளாதாரமும்” என்ற கட்டுரையில் சிங்காரவேலர் பொருள்முதல்வாத விளக்கத்தை எழுதுகிறார்:

“உயிர்கள் யாவும், பொருளைப்(things) பற்றியுள்ளன. எல்லா உயிரும் பொருளை ஆதாரமாகக் கொண்டுள்ளன. உயிர்கள் பொருளால் ஆக்கப்பட்டும்,பொருளால் தத்தம் ஜீவனத்தை நடத்தியும்,வாழ்ந்து வருகின்றன.பொருள் இல்லையெனில்,எந்த ஜீவனும் வாழா…”பொருளுக்குப் படைப்புக் கடவுள் என்று எதுவும் இல்லை என்பதும் பொருளே முதன்மையானது அதன் பிரதிபலிப்பே சிந்தனை என்றும் மார்க்சிய நிலைப்பாட்டில் நின்று உலக இயக்கத்தை சிங்காரவேலர் விளக்கியுள்ளார். இக்கருத்தினை அன்றைய அறிவியல் வளர்ச்சியின் துணை கொண்டு அவர் விளக்கியுள்ளது தான் சிறப்பானது. இந்தப் பாங்கு இதர பகுத்தறிவாளர்களிடமிருந்து வேறுபட்டு தனிச்சிறப்பு கொண்டவராக சிங்காரவேலரை முன்னிறுத்துகிறது.

அறிவியலோடு இணைந்த தத்துவம்

அவரது எழுத்துக்களில் முக்கிய இடம் பெறுவதாக, 1932-ல் எழுதிய  ‘கடவுளும் பிரபஞ்சமும்’, ‘கடவுளும், மனிதனும்’ போன்ற கட்டுரைகளைக் குறிப்பிடலாம். கடவுள் எனும் கருத்தாக்கம் மனிதனால் படைக்கப்பட்ட ஒரு கற்பிதம் என்று அறிவியலைக் கொண்டு ஆதாரப்பூர்வமாக பேசுகிற கட்டுரைகள் இவை. தன் காலத்தின் முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கொண்டு சிங்காரவேலர்  விரிவாக பொருள்முதல்வாதப் பார்வையை முன்வைக்கிறார். டார்வினின் பரிணாம வளர்ச்சி, -ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சார்புத் தத்துவம் போன்றவற்றை வலுவாகப் பற்றிக் கொண்டு அறிவியல் விளக்கங்களை அளித்துள்ளார். இதன் வழியாக, மார்க்சின் வரலாற்று பொருள் முதல் வாதப் பார்வையை விளக்குகிறார். இது அல்லாமல் புரூனோ, கோபர்னிகஸ் உள்ளிட்ட அறிவியலாளர்களையும் தத்துவாசிரியர்களில். ஸ்பைனோஸா, காண்ட், ஸ்பென்சர், ஹெகல் உள்ளிட்டோரது கருத்துக்களையும் விவாதிக்கின்றார். அவர் எழுதிய  ‘விஞ்ஞானமும் மூடநம்பிக்கைகளும்’ என்ற தொடரிலும் அறிவியல் கருத்துக்களை பொருள்முதல்வாத கண்ணோட்டத்துடன் எழுதினர்.    அவரது காலம் வரை பிரபஞ்சம், விண்மீன்கள், அணு, மின்னணு பற்றிய கண்டுபிடிப்புகளை அவர் ஆழமாக பயின்றிருந்தார்.

அறிவியலோடு இணைந்து மார்க்சியம் தோன்றிய வரலாற்றுச் சூழலை அவர் விளக்கியுள்ளார்:

அறிவியல் வானம், பூமி, பிரபஞ்சம், அணு என ஆராய்ந்து இயற்கை இரகசியங்களை  அறிய முனைப்புடன் அன்று இயங்கி வந்தது. ஆனால் ‘மனித சமுகத்தில் வறுமை வந்த காரணத்தையும், இல்லாமையின் காரணத்தையும் அவைகளை போக்கும் மார்க்கத்தினையும் தெரியாமல் தவித்து வந்ததையும்” விவரிக்கும் சிங்காரவேலர், இந்த கட்டத்தில் மார்க்சியம் பிறப்பெடுத்து அரிய சமுக கண்டுபிடிப்புக்களை கண்டறிந்ததை விளக்குகிறார்.

விஞ்ஞானத்திற்கு இரண்டு கருவிகள் உண்டு என்கின்றார் சிங்காரவேலர். ‘அவையாவை எனில் முதலாவது பார்த்தல், (observation) இரண்டாவது பரீட்சித்தல் (experiment). இவ்விரண்டு கருவிகளைக் கொண்டே இதுவரை தெரிந்திருக்கும் சம்பவ காரணங்களை விளக்கமுற்றன.’

இந்த அறிவியல் கருவிகளை பயன்படுத்தாத காரணத்தினால் மந்திரங்கள், பொய் பித்தலாட்ட மூட நம்பிக்கைகள் மலிந்து கிடக்கின்றன என்கிறார் சிங்காரவேலர்.இது முழுக்க பொருள்முதல்வாத அறிவியல் அணுகுமுறை.

அதே போன்று மேற்கண்ட அறிவியல் கருவிகள் மூலமாகவே மனித அறிவு வளர்ச்சி ஏற்படுகிறது என்று அவர் கூறுகிறார். மார்க்சிய அறிவுத் தத்துவத்தையும் அவர் குறிப்பிடுகிறார்: ”இனித் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களும் மகத்தானதென சொல்லலாம். இதுவரை தெரிந்திருக்கும் விஷயங்கள் தினை அளவு என்று சொல்ல வேண்டும்.” எல்லையற்ற அறிவு வளர்ச்சிக்கு வித்திடுவதாக மார்க்சிய அறிவுக் கோட்பாடு விளங்குகிறது என்பதை சிங்காரவேலரின் எழுத்துக்களில் உணர முடியும்.

 ஒரு தத்துவ மாநாட்டில் பகுத்தறிவைப் பயன்படுத்துவதால் உலகம் சீர்கெட்டு கிடக்கிறது என்று டாக்டர் ராதாகிருஷ்ணன் பேசினார்.அந்தக் கருத்தை எதிர்த்து எழுதுகிறபோது “ஆதி மனிதன் நெருப்பை கண்டுபிடித்தது முதல் நேற்று நாம் தீக்குச்சி செய்து வருவது வரை மனிதன் பகுத்தறிவை உபயோகித்து வந்திருக்க அதிகமாக பகுத்தறிவை உபயோகித்தபடியால் நமக்கு வந்தது கேடு என்றால், இதனினும் உன்மத்தப் பேச்சை நாம் கேட்டறியோம்? பகுத்தறிவின் உதவியின்றி எந்த மனித விவகாரம் நடக்கும்” என்று கடும் ஆவேசத்துடன் எழுதியுள்ளார்.

இயக்கவியல் பார்வைக்கு அறிவியல் இன்றியமையாதது என்று மார்க்ஸும் ஏங்கெல்ஸும் போதித்தனர். சோசலிசத்திற்கான போராட்டத்தில் அறிவியல் புரட்சிகர பங்கினை வகிக்கிறது என்பதனை அவர்களது எழுத்துக்கள் உணர்த்துகின்றன. இதே பார்வையினை உறுதுணையாகக் தனது மார்க்சிய பரப்புரை செயல்பாடுளை சிங்காரவேலர் மேற்கொண்டார். 

மக்களிடையே நிலவுகிற மூட நம்பிக்கைகளை அறிவியல் துணை கொண்டு விளக்கும்போதும் மார்க்சிய நோக்கிலான பொருள்முதல்வாதம் பளிச்சிடுகிறது. அவர் புது உலகம் இதழில் சூரிய, சந்திர கிரகணங்களில் அறிவியல் உண்மையை எழுதி மக்களின் அறியாமையை போக்கிட முயற்சித்துள்ளார். சுரண்டல் அடிமைத்தனத்திலிருந்து உழைக்கும் மக்கள் விடுதலை பெற வேண்டுமெனில் அறிவியல் அடிப்படையிலான மார்க்சியப் பொருள்முதல்வாதம்தான் ஒரே வழி என்பதில் அவர் உறுதிப்பாடு கொண்டவராக இறுதி நாள் வரை செயல்பட்டார்.

சாதி மதம் – பொருள்முதல்வாத பார்வை:

சமூகப் பிரச்னைகளை ஆராய்கிற போது வரலாற்று பொருள்முதல்வாத அடிப்படையை கெட்டியாகப் பற்றி நின்றார், சிங்காரவேலர். சாதி, மதம் தொடர்பான  பிரச்னைகளை  நிறைய விவாதித்துள்ள சிங்காரவேலர், அதன் பொருள்முதல்வாத அடிப்படையை மிக எளிமையாக விளக்கியுள்ளார்.

“மதங்கள் யாவும், எந்த மதமானாலும், சரி, புத்த மதமானாலும், இந்து மதமானாலும், கிறிஸ்து மதமானாலும், மகமதிய மதமானாலும், எல்லா மதங்களும் பொருளாதாரத்தில் நெருங்கிய சம்பந்தம் பெற்றுள்ளவை; பொருளின் செல்வாக்கை நோக்கியே எந்த மதங்களும் கட்டப்பட்டுள்ளன; இன்றைக்கு மதங்கள் உலகில் செழிப்படைந்து வருவது பொருள் ஆதாயம் மதஸ்தர்களுக்கு இருப்பதால்தான்…’

அப்பட்டமாக அவர் அன்று எழுதிய கருத்து இன்றும் பொருத்தமுடையதாகத் திகழ்கிறது.இன்று மதத்தை அதிகாரத்திற்கு வருவதற்கு பயன்படுத்திக் கொண்டு ஆட்சியை கார்ப்பரேட் முதலாளித்துவ குழுமங்கள் செழிக்க இந்துத்துவ சங்கப் பரிவாரங்கள் பயன்படுத்துவதைக் காண்கிறோம்.

அதே போன்று சாதி இயங்குவதற்கு அடிப்படையாக இருக்கும் பொருளியல் நலன்களையும் அவர் விளக்கியுள்ளார்.

“ஜாதியும், பொருளாதார நட்பிலேயே கலந்துள்ளது. நான்கு வருணத்தார்களாகிய பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர்களுக்குள் ஏற்பட்ட வேற்றுமை பொருளாதாரத்தையொட்டியே ஜனித்திருக்க வேண்டும். எப்படியெனில், கடை வருணத்தாராகிய சூத்திரன் ஏழையாகவே இருந்து வந்திருக்கின்றான். இன்றைக்கும் பிராமணர்கள் பெரும்பான்மை சூத்திரர்களை விட பொருள் பெருத்திருப்பதைக் காணலாம்….பணத்திற்கு முன் ஜாதி என்ன செய்யும்..பணம் படைத்த அரிச்சந்திரன் அரசனான். பணம் இழந்த அரிச்சந்திரன் வெட்டியானான்…”என்று எழுதுகிறார்.

“ஆதலின் ஜாதி ஒழிய வேண்டுமாயின் பொருளாதார சமத்துவம் ஏற்பட வேண்டுமென்பது சொல்லாமலே விளங்கும்”என்று அவர் வந்தடையும் முடிவும் வரலாற்று பொருள்முதல்வாத நோக்கில் வந்தடையும் முடிவாகவே அமைந்துள்ளது.

பொதுவுடைமை விளக்கம்

உலகெங்கும் அன்று செயல்பட்டுக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் இயக்கங்களை அவர் அறிந்திருந்தார். அவர்களது நிலைபாடுகளை ஆராய்கிற போது மார்க்சிய இயக்கவியல் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்துடன் அணுகியிருக்கிறார்.தம் காலத்தின் உலக அரசியல், உலக அறிவியல் முன்னேற்றம், தத்துவ  வளர்ச்சி  உளிட்ட அனைத்திலும் மார்க்சியப் பார்வையுடன் விவாதித்துள்ளார்.

‘பொதுவுடைமை விளக்கம்’ என்ற விரிவான கட்டுரையில் பொதுவுடைமைக் கோட்பாட்டினையும், தத்துவத்தையும்  பல பரிமாணங்களில் விளக்குகிறார் சிங்காரவேலர். பொதுவுடமையும் செல்வமும், பொதுவுடமையும் தனியுடைமையும், பொதுவுடமையும் வேலை இல்லாமையும்’ என பல தலைப்புக்களில் விளக்கிகிறார்.இந்த விளக்கங்களின்  ஊடாக முதலாளித்துவத்தின் தீமைகளை விளக்கி,பொதுவுடைமைக் கொள்கையின் மேன்மையை விளக்குகிறார்.

மத வேறுபாடுகள்,சாதி வேறுபாடுகள் குறித்தும் பொதுவுடைமை இலட்சியத்தை அடைய இவை எவ்வாறு தடையாக உள்ளன என்பதையும் விளக்குகிறார்.

‘பொதுவுடையும் பெண்களும்’ என்ற தலைப்பில் விவாதிக்கும் போது,” குடும்ப வாழ்க்கையிலும் பொருளாதார நிலைமையிலும்,கல்வி கேள்வியிலும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் உயர்வு தாழ்வு இருத்தல் கூடாது” என்று மார்க்சியத்தின் முக்கிய நெறியான பெண் சமத்துவத்தை வலியுறுத்துகிறார்.

சிங்காரவேலரின் மார்க்சியப் பார்வைதான்  உழைப்பாளி வர்க்கத்தின் அரசியலை, விடுதலை இயக்கத்தின் நிகழ்ச்சி நிரலில் முக்கியமானதாக மாற்றியது.காங்கிரஸ் அன்று வெறும் அரசியல் விடுதலலைக்கான போராட்டத்தை  நடத்தி வந்த நிலையில் பொருளாதார சுரண்டைலையும்  முடிவிற்கு கொண்டு வரும் செயல்திட்டத்தோடு களம் இறங்கியவர் சிங்காரவேலர்.

ரஷியப் புரட்சிக்கு, தொழிலாளி – விவசாயி ஒற்றுமை, புரட்சி முன்னேறிட உதவியது.  1920-ம் ஆண்டுகளின் போதே தொழிலாளர் விவசாயி வர்க்கக் கூட்டணி பற்றிய கருத்துக்களை பதிவு செய்துள்ளார் சிங்காரவேலர். இந்த வர்க்கங்கள் இந்திய அரசியலில் செல்வாக்கு பெற்று தங்கள் நலனை பாதுகாத்துக் கொள்ள, ஒரு அரசியல் கட்சியை உருவாக்க முனைந்தார். அக்கட்சிக்கு ஹிந்துஸ்தான் தொழிலாளர் விவசாயி கட்சி எனப் பெயரிட்டார். இவ்வாறு பொதுவுடைமைக்கு விளக்கம் கொடுத்து அந்த லட்சியத்தை அடைவதற்கான இயக்கங்களையும் கண்டவர் சிங்காரவேலர்.

சோசலிசப்பார்வை

“உலகப் பொருள்கள் யாவும் உழைப்பவனால் உண்டாக்கப்பட்டபடியால், உழைப்பவனுக்கே உலகம் உரியதென்ற மாபெரும் உண்மையை தனது சிறப்பு வாய்ந்த மூலதனம் என்ற நூலில் (மார்க்ஸ்) எடுத்துரைத்தார். ”இவ்வாறு தொடங்கி தொழிலாளியின் உழைப்பினால் உலகப் பொருள்கள் உருவானது என்றும் உழைப்பு செலவிட்ட பிறகே இயற்கைப் பொருள்களுக்கு விலை மதிப்பு உண்டாவது பற்றியும் அவர் விளக்கி  மார்க்சின் ‘உபரி மதிப்பு’  ‘விஞ்ஞான சோசலிசம் பற்றிய விளக்கவுரைகளை எழுதுகிறார்.

முதலாளித்துவம்  தனக்கு சவக்குழி தோண்டும் தொழிலாளர் வர்க்கத்தை தன்னிலிருந்தே உருவாக்கி வரும் என்ற மார்க்சிய நிர்ணயிப்பையும்,

நிலபிரபுத்துவ வர்க்கங்களை ஒழிக்க  தொழிலாளர்களை வர்க்கப் போராட்டத்திற்கு கொண்டு வந்த முதலாளிகள், பின்னர் அதே தொழிலாளர் வர்க்கம் முதலாளியத்திற்கு எதிராகத் திரளுகிற நிலையும் சிங்காரவேலர்  எடுத்துரைக்கிறார். இதர  அனைத்து  வர்க்கங்களும் முதலாளி/தொழிலாளி என்ற இரண்டில் ஒன்றாய் மாறுவார்கள் என்ற நிகழ்வு போக்கை பதிவு செய்கிறார்.இவை அனைத்தும்  மார்க்சியத்தின் அரசியல் பொருளாதார விளக்கங்களாக அமைந்துள்ளன.

மேல்தட்டு முதலாளித்துவ வர்க்கங்களின் நலனுக்காகவே அரசுகளின் செயல்பாடு இருப்பதையும் சிங்காரவேலர் மார்க்சின் அரசு பற்றிய பார்வையை விளக்குகிறார்.சரக்குகளின் மீதான வரி உள்ளிட்ட பல வகைகளில் மக்களிடம் வருமானத்தை பெற்று,அவர்களின் வீடு உள்ளிட்ட தேவைகளை அரசு புறக்கணிக்கின்றன என்று அரசுகளை அம்பலப்படுத்துகிறார்.

மக்களும் அரசுகளின் நடவடிக்கைகள் பற்றி அறியாமல் இருப்பதையும் வேதனையோடு சுட்டிக் காட்டுகிறார். ”சர்க்கார்கள் செய்யும் படாடோபங்களை கண்டு மக்கள் மயங்கி வருகின்றார்களே ஒழிய,தங்களுடைய குழந்தைகளுக்கு பால் இருக்கின்றதா என்று சிந்திப்பரில்லை” என்று எழுதிய அவரது எழுத்தைப் படிக்கும்போது, இன்றும் இந்த நிலை நீடிக்கிறதே என்ற எண்ணம் வருவதை தடுக்க முடியவில்லை .

சோசலிசத்தின் கூறுகளை பட்டியலிட்டு விளக்குகிறார். நிலமும் நீரும் பொதுவுடைமையாக்கி, அவற்றில் விளையும் தானியங்களும், செல்வங்களும் அனைவருக்கும் விநியோகிக்கப்பட வேண்டும்:சிலர் அவற்றை அபகரிப்பதை நிறுத்தி,ஒரு சிலர் அளவுக்கு மீறிய வசதி வாய்ப்புக்களை பெற்றிருப்பதால் மற்ற பெரும்பான்மை மக்களுக்கு அவை இல்லாமல் போகிறது;போட்டியினால் விலைகள் உயர்த்தப் படுவதும் பொருளுற்பத்தி மக்கள் தேவையை புறந்தள்ளிவிட்டு இலாப நோக்கில் மேற்கொள்ளப்படுவதையும் சிங்காரவேலர் எளிமையாக விளக்குகிறார். இதனால்தான் நெருக்கடிகள் தொடர்கின்றன என்ற மர்ர்க்சிய பார்வையும் அளிக்கிறார்.

“உலகம் நெருக்கடியிலிருந்து மீண்டும் சுகப்பட வேண்டுமானால், மனித வாழ்விற்கு வேண்டிய பொருள்கள் யாவும் பொதுவுடைமையாக்கப்பட வேண்டிய அவசியத்தையும் “அவர் விளக்குகிறார்.

சோஷலிச உருவாக்கம் குறித்து, அன்றைய காலக்கட்டத்தில் மேற்கத்திய  சோசலிச இயக்கங்களுக்குள் இருந்த சமரசப் போக்கையும் அவர் விமர்சிக்கிறார். அவர்கள் அடிப்படையை மாற்றாமல் அமைக்க விரும்பும் “கூட்டுறவு ஆட்சி” எனப்படுவது “சிறுபான்மை முதலாளிகளை நிலைக்க வைத்து பெரும்பான்மை தொழிலாளர்களுக்கு யாதொரு சமத்துவமும் சுதந்திரமும் இல்லாமல் போகும்.” என்ற அவரது எச்சரிக்கை இன்றைய கம்யுனிச இயக்கங்களும் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது. சோசலிசம் என்ற முகமூடி அணிந்து அன்று நாஜிக்களும் பாசிஸ்ட்டுகளும் செயல்பட்டு வந்ததையும் அவர் அடையாளம் காட்டுகிறார்.

பாட்டாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று மார்க்ஸ்  வந்தடைந்த இலட்சிய முடிவினை தனது கொள்கையாகக் கொண்டு வாழ்ந்தார்,சிங்காரவேலர்.அவரது பல உரைகளில் தொழிலாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று பல முறை குறிப்பிட்டுள்ளார்.

1933 மே 7ஆம் தேதி அன்று அவர் ஆற்றிய உரையில்,

“உழைப்பாளர்களின் அரசு உலக சமாதானத்தை அடிப்படையாக கொண்டு இருக்கும். சமத்துவத்தை வலியுறுத்தவே தொழிலாளர் விவசாயி கட்சி ஆரம்பிக்கப்பட்டது. நாம் அரசில் பங்கு பெற்றால் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட நியாயமான நெறியிலேயே உருவாக்குவோம். நிலம் மற்றும் நீர் அத்தியாவசிய தேவைகள், கப்பல்கள், இரயில்கள், சுரங்கங்கள் அனைத்தும் பொது சொத்தே. அவை மக்கள் நலனுக்காகவே பயன்படுத்தப்படும். ….உழைப்பாளர்களின் ஆட்சியின் கீழ் உருவாகும் சமத்துவம் மூலமே உலகம் அமைதியாக வாழும். சமத்துவம் வளமைக்கு இட்டுச் செல்லும்.” என்று குறிப்பிடுகிறார்.

மார்க்சியம் சர்வதேசியத்தை வலியுறுத்தும் தத்துவம். இதற்கு அடிப்படைக் காரணம் உண்டு.உலகளாவிய பிணைப்பு கொண்டது மூலதனம்.மூலதனம் தனது இலாப வேட்டையையும், சுரண்டலையும் உலகளாவிய தன்மையில் நடத்துகிறது. எனவே அது தனி உடைமையிலிலிருந்து சமுகத்திற்கு உடைமையாக வேண்டும். அதனை உலகளாவிய பாட்டாளி வர்க்கப் போராட்டம்தான் சாதிக்கும். எனவே மார்க்சியம் ஒவ்வொரு நாட்டு நிலைகளை உள்வாங்கி தனது சோசலிச மாற்றத்திற்கான வியுகத்தை உருவாக்குகிறது.அதே நேரத்தில் சர்வதேச தொழிலாளர் ஒற்றுமை கட்டும் பணியிலும் ஈடுபட அது வழிகாட்டுகிறது. இந்த அறிவியல் அணுகுமுறை சிங்கரவேலரின் அரசியல், சமூக தொழிற்சங்க செயல்பாடு ஒவ்வொன்றிலும் இருந்தது.

1925-கான்பூர் மாநாட்டில் அவர் ஆற்றிய உரையிலும் இதனைக் காண முடியும். முன்னதாக காங்கிரசின் கயா மாநாட்டில் தன்னை உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிரதிநிதி என்று பிரகடனப் படுத்திக் கொள்ளும்போதும் அவரது சர்வதேசிய உணர்வு வெளிப்பட்டது.

பாசிச அபாயம் – எச்சரிக்கை

“பொதுமக்கள் பெற வேண்டிய  ஞானம் “ என்று அவர் குறிப்பிடும் கருத்து இன்று  இந்துத்துவ பாசிச சக்திகளின் ஆபத்தில் இந்தியா சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

‘பொதுமக்கள் தங்களுக்கு வேண்டுவதைக் கோரி,அதற்கு வேண்டிய உழைப்பை எடுத்துக் கொள்ளாவிட்டால், இத்தாலியிலும்,ஜெர்மனியிலும் சமதர்ம சங்கங்கள் அழிந்ததுபோல், நமது நாட்டிலும் அழிந்துவிடும். எல்லாவிதப் புரட்சியையும் பொதுமக்கள் விரும்பினால்தான் கை கூடி வரும்.”

இதற்கு பொதுமக்களின் மனதை மாற்ற சோசலிச அமைப்புக்கள் பொதுமக்களிடம் நெருங்க வேண்டும் என்றும்,” அதற்கு பிரச்சாரம் தான் தகுதியான கருவி” என்றும் சிங்காரவேலர் அறிவுறுத்துகிறார்.

இந்திய நிலைமைகளில் சோசலிசத்தை கொண்டு வருவதில் உள்ள சவால்களையும் அவர் காண தவறவில்லை.’ சமதர்ம அறிக்கை என்ற கட்டுரையில்,

“உலக சமதர்ம உணர்ச்சிக்கு விரோதமான தன்மையில் மற்ற தேசத்திற்கும் இந்தியாவுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருந்து வருகின்றது. அதென்னவென்றால் மற்ற நாடுகளில் ஒரு விஷயம் தான் முக்கியமாய் கருதப்படுகிறது. அதாவது முதலாளி (பணக்காரன்), வேலையாள் (ஏழை) என்பதுவேயாகும். ஆனால் இந்தியாவிலேயே மேல் ஜாதியார்-கீழ் ஜாதியார் என்பது ஒன்று அதிகமாகவும் முதன்மையானதாகவும் இருப்பதால் அது பணக்காரன், ஏழை தத்துவத்திற்கு ஒரு கோட்டையாக இருந்து காப்பாற்றிக் கொண்டு வருகின்றது. ஆதலால் இங்குச் சமதர்மத்திற்கு இரட்டிப்பு அதிகமான எதிர்ப்பு இருந்து வருவது கொண்டு இங்குச் சமதர்ம உணர்ச்சி தலை தூக்க முடியவில்லை”.

இன்றும் அடையாள அரசியல் நடத்தும் பல இயக்கங்கள்  இந்திய சமுகத்தில் சாதியைக் காண கம்யூனிஸ்ட்கள் தவறி விட்டனர் என அவதூறு செய்து வருகின்றனர்.ஆனால் தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்றழைக்கப்படும் சிங்காரவேலர் சாதிய சவால் குறித்து மிகுந்த விழிப்புணர்வுடன் இருந்திருக்கிறார் என்பதனை மேற்கண்ட கூற்று எடுத்துக் காட்டுகிறது.

எனவே பாசிசம், சாதியம் ஆகிய சோசலிச எதிர்ப்பு சக்திகளை எதிர்கொண்டு வெற்றிபெற சிங்காரவேலரின் சிந்தனைகள் வழிகாட்டுகின்றன.

சமதர்ம வேலைத் திட்டமே மாற்று!

அன்றைய அரசியலில் செயல்பட்டு வந்த சக்திகளை சோசலிச நோக்குடன் அவர் விமர்சிக்கின்றார்.

“காங்கிரஸ் சுயராஜ்யம் சமூக மாற்றம் எதுவுமற்ற சுயராஜ்யமாக “ இருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.அன்று செயல்பட்டு வந்த நீதிக்கட்சியும் அவரது கூரிய விமர்சனப் பார்வைக்கு தப்பிடவில்லை.”பிராமணர்கள் போல் பிராமணரல்லாதார் ஒரு சிலர் பட்டம், பதவி பெற மட்டுமே இவ்வியக்கம் உதவியுள்ளதே தவிர, இக்கட்சியால் பொதுமக்களுக்கு என்ன பயன்?” என்று கேள்வி எழுப்பும் சிங்காரவேலர் நீதிக்கட்சியினால் பயன்பெற்றவர்கள் “பிராமணரல்லாத சில மேட்டிமைச் சாதிகளே” என்பதைஅம்பலப்படுத்துகிறார். ‘பஞ்சமர் அல்லது தாழ்த்தப்பட்ட சாதியோருக்கு நீதிக்கட்சியால் எந்த பயனும் விளையவில்லை’ என்ற புறக்கணிக்க முடியாத விமர்சனைத்தையும் முன்வைக்கிறார்.

சமதர்மம் பற்றிய விளக்க கட்டுரைகளில் அவரது மார்க்சியப் பார்வை வெளிப்படுகிறது.. “சமதர்மமென்றால் சொத்துரிமை, மத உரிமை, ஜாதிவுரிமை நீங்கிய வாழ்க்கையாகும்” என்று வரையறுத்துக் காட்டுகிறார். அன்றைய  ஏற்பவர்கள் சுயமரியாதை இயக்கத்தினர் இதனை ஏற்க வேண்டுமென்று சோசலிச ஆதரவு சக்திகளை திரட்டுகிறார்.

ஆனால் அவர்கள் ஆங்கிலேய ஆட்சியோடு நட்பு பாராட்டும் நிலை இதற்கு தடையாக இருக்கும் என்று சுட்டிக் கட்டுகிறார். சமதர்மத்தை “ஆங்கில அரசின் ஒத்துழைப்போடு இதனைச் சுயமரியாதை இயக்கத்தாரால் செய்யமுடியுமா?” என்று அவர்களை விமர்சிக்கிறார். சமதர்மத்திற்கான பாதைக்கு சுயமரியாதை இயக்கத்தை திரட்ட் முனையும் பல முயற்சிகளில் ஈடுபடுகின்றார். இதில் சுயமரியாதைச் சமதர்ம வேலைத்திட்டம்  முக்கியமான கருத்தாக்கமாக அமைந்துள்ளது. வரலாற்று நோக்கில் இந்த திட்டம் எதிர்கால சோசலிச மாற்றுக்கு முன்னோடியாகவும் திகழ்கிறது.

• • • • • • • • • • • •

மார்க்ஸ் தனது வாழ்க்கையில் தத்துவப் படைப்பாக்கப் பணியை மக்கள் இயக்கம், தொழிலாளர் இயக்கங்களை கட்டுகிற பணியோடு இணைத்துச் செய்தார். அதேபோன்ற வாழ்க்கை நெறியுடன் சிங்காரவேலர் செயலாற்றி வந்துள்ளார். அவரது வாழ்வு இன்றைய சமூக மாற்ற இயக்கங்களுக்கு உத்வேகம் அளிக்கின்றது: அதுமட்டுல்லாது கற்றுப் பயில வேண்டிய ஒரு வாழ்க்கையாகவும் சிங்காரவேலரின் வாழ்க்கை அமைந்துள்ளது.

குறிப்பு :

சிங்காரவேலர் மேற்கோள்கள் அனைத்தும் பா.வீரமணி, முத்து. குணசேகரன் தொகுப்பாசிரியர்களாகக் கொண்டு வெளியிடப்பட்டட ம.சிங்காரவேலரின் சிந்தனைக்களஞ்சியம் தொகுதி நூல்களிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன.

தமிழக சமூக சீர்திருத்தமும், வர்க்க உறவுகளும்

(குரல்: யாழினி)

என்.குணசேகரன்

தமிழக சமூக இயக்கத்தில் சீர்திருத்த முயற்சிகள் பல வடிவங்களில் நடந்துள்ளன. பல்வகை கருத்தோட்டங்களாகவும், தனிநபர் செயல்பாடுகளாகவும், மக்கள் இயக்கங்களாகவும் அவை பரிணமித்துள்ளன. பண்டைய காலத்திலிருந்தே சமூக அசமத்துவம், மனிதர்களை இழிவுபடுத்தும் சாதிய, மத நடைமுறைகள் மீதான கண்டனக் குரல்கள் ஒலித்து வந்துள்ளன.

கடந்த கால சீர்திருத்த முயற்சிகள்  சமூக சமத்துவ   இலக்குகளை எட்டுவதில் எத்தகு முன்னேற்றத்தை சாதித்துள்ளது? அந்த முயற்சிகள் முழுமையான சமூக சமத்துவத்தை ஏன் எட்டவில்லை? என்கிற கேள்விகள் எழுகின்றன. சீர்திருத்த மனப்பாங்கு கொண்ட மக்களிடமும்  இக்கேள்விகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.

இடதுசாரிகள், முற்போக்கு செயல்பாட்டாளர்கள் சமூக சீர்திருத்த வரலாற்றை மார்க்சிய இயக்கவியல் கண்ணோட்டத்தில்   புரிந்து கொள்வது அவசியம். இதில் பாட்டாளி வர்க்க இயக்கம் இடையறாது  செயலாற்றுவதும் அவசியமான கடமையாகும்.

(தமிழக சமூக சீர்திருத்த வரலாற்றின் முக்கியத் தடங்கள் ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளன; தமிழக சமூக சீர்திருத்தம்: மதுக்கூர் ராமலிங்கம்; ஜூலை, மார்க்சிஸ்ட் 2018)

தமிழக வரலாற்றில் சமூக சீர்திருத்தம்  

சாதி, மதம், குடும்பம், திருமணம், மொழி போன்ற பல தளங்களில் மனிதர்களை அடிமைத்தனத்திற்கு உள்ளாக்கும் வாழ்க்கை முறைகளையும், பரம்பரியமான பிற்போக்குக்  கருத்துக்களையும் எதிர்கொண்டு சமூக சீர்திருத்தவாதிகள்  செயல்பட்டு வந்துள்ளனர். அவர்களின் பங்களிப்பினை நிராகரிக்க முடியாது. இன்றைய சமூகம் உருப்பெற அவை முக்கிய பங்கினை ஆற்றின.

கி.மு. நாலாம்  நூற்றாண்டிலிருந்து தமிழகத்தில் வேதங்கள் சார்ந்த பழைய வைதிக மரபு ஆதிக்க நிலையில் இருந்தது. இது  வர்க்கப் பிளவுகளும், வர்ண  பேதங்களும் வளர்ந்த காலமாகவும் இருந்தது. இனக்குழு அமைப்புக்கள் மாறி வேளாண் உற்பத்தி பரவியிருந்த நிலை ஏற்பட்டது. இது, நிலவுடைமையாளர்கள், பண்ணையடிமைகள் எனும் வர்க்கப் பிரிவுகள் கொண்ட நிலவுடைமை சமுதாயம்  வளர்ந்த காலம். இதனை கி.மு 7 முதல் கி.பி. 3-ம் நூற்றாண்டு வரையிலான காலமாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதன் அடுத்த நிலையில் வணிக எழுச்சிக் கட்டம் ஏற்படுகிறது. தமிழிலக்கிய வரலாற்றில் இதனை அறநெறிக்காலம் என்கின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே பின்னுக்குத் தள்ளப்பட்ட பௌத்த, சமண, ஆசீவக மரபுகள் மேலோங்கின.

இந்நிலையில், வர்க்கப் பிளவுகள் தமிழ்ச் சமூகத்தில் தீவிரம் பெற்றன. சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்காலங்களிலும், குறுநில மன்னர்களின் ஆட்சிகளின் போதும்,  தமிழ் சமூகத்தில்  வர்க்க வேறுபாடுகள் கூர்மையாக இருந்தன.

வர்க்கப்  பாகுபாடுகளால் பிளவுபட்டு  இருந்த நிலை, சமூக ஒடுக்குமுறை சூழல் ஆகியவற்றால், சமமற்ற, அநீதியான சமூக உறவுகள் இருந்தன. இந்த சமமற்ற எதார்த்தத்தை நியாயப்படுத்தும்  வகையில்,  கருத்தியல் தளத்தில் வர்ண முறை, மதக்கோட்பாடுகள், சாத்திரங்கள்   நிலைபெற்றன. வர்ண முறை ஏற்படுத்திய அநீதியான ஏற்றத்தாழ்வை சகித்திடாமல் அதன்   மேலாதிக்கத்தை எதிர்க்கும் போக்கும் உருவானது. சமூகத்தில் கனன்று கொண்டிருந்த ஆளும் வர்க்க ஆதிக்க எதிர்ப்புக் குமுறல், வர்ண, மத, பிற்போக்குத்தன எதிர்ப்பாகவும் எதிரொலித்தது. புத்தம் மற்றும்  சமணத்தின் எதிர்ப்புக் குரல்கள்   இந்த வகையைச் சார்ந்ததே .

இந்த விரிவான வரலாற்றுக் காலப்பரப்பில் ஒரு முக்கிய போக்கினை கண்டுணர்வது அவசியம். சமூக அசமத்துவம் வர்க்க அடிப்படையிலும், மத,சாதி சார்ந்தும் வளர்ந்து வந்துள்ளன. இந்த ஒடுக்குமுறைகளை எதிர்த்து எதிர்ப்புக் குரல்கள் அவ்வப்போது ஒலிப்பதும் தமிழக வரலாறு நெடுகிலும் இருந்து வந்துள்ளது. 

கோயில் எனும் நிறுவனம்

தமிழகத்தில் சமண, பௌத்த மதங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்ட நிலையில் வைதீக மதம் ஆதிக்கம் செலுத்தத் துவங்கியது. இறுக்கமாகி வந்த நிலவுடைமை உறவுகளின் விளைவாக சைவ-வைணவ மதங்கள் வலுவாக காலூன்றின. இந்தக் கட்டத்தில் கோயில்கள் நிறுவனமயமாக்கப்பட்டன. உண்மையில் அவை உயர் அடுக்கில் இருந்த சாதிகளின் அதிகார மையங்களாக செயல்பட்டன. குறிப்பாக, பிராமணிய ஒடுக்குமுறைக் கருத்தியலுக்கு உட்பட்டு சமூகம் இயங்குவதை கோயில் என்ற நிறுவனம் உறுதி செய்தது.

அது மட்டுமல்லாது, சமூக உழைப்பில், குறிப்பாக வேளாண் உற்பத்தியில் கிடைக்கும் உபரியை அபகரிக்கும் நிலப்பிரபுத்துவ தன்மையும் கோயில் செயல்பாட்டில் இருந்தது.

மார்க்சிய அறிஞர் தேவ பேரின்பன் இதைக் குறிப்பிடும் போது  “மார்க்ஸ் குறிப்பிடும் ‘நில வாடகை ‘இங்கே நிறுவன ஏற்பாட்டின் முலமாக உயர்குடிகளுக்கு போய் சேர்ந்தது” என்கிறார். (“தமிழர் வரலாறு: சில கேள்விகளும், தேடல்களும்” -தேவ பேரின்பன்) இங்கு  அவர் குறிப்பிடும் நிறுவன ஏற்பாடு என்பது கோயில் நிர்வாகத்தைக் குறிப்பதாகும்.

ஆக, சமூகத்தின் வளங்கள், உற்பத்தி சக்திகள் மீதான கட்டுப்பாட்டை மன்னர்கள் வைத்திருந்தனர். அவர்கள் மீது பிராமணீய கருத்தியலின் துணையோடு பிராமணர்கள்  செல்வாக்கு செலுத்தினர். கோயில் என்ற நிறுவனம் மூலமாக இந்தக் கட்டுப்பாடும், உபரி அபகரிப்பும் நிகழ்ந்தன. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், நிலம், நீர், பொருள் என எதிலும் உரிமை இல்லாத நிலையில் உழைக்கும் மக்கள் வாழ்ந்து வந்தனர். குறிப்பாக இந்த அடிமைத்தனத்திற்கு ஆட்பட்ட நிலையில் தாழ்த்தப்பட்டவர்கள், பஞ்சமர்கள் வாழ்ந்து வந்தனர்.

இந்த அடிமைத்தனத்திற்கு எதிரானதாகத்தான் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் எழுந்தன. ஆனால் அடிமைத்தனமும் உழைப்பு சுரண்டலும் நீடித்த நிலையில் அவற்றில் மாற்றம் ஏற்படாத சூழலில் சமூக சீர்திருத்தக் குரல்கள் மெல்லியதான தாக்கமே செலுத்த முடிந்தது.

எல்லைக்குட்பட்ட வெற்றி

வர்க்க, சாதிய ஒடுக்குமுறை ஒருங்கிணைந்து நீடிப்பதுதான்  அடிப்படைப் பிரச்னை. இது தற்போதைய காலம் வரை நீடிக்கிறது. 19,20-ஆம் நூற்றாண்டுகளில் ஏராளமான சீர்திருத்தக்  கருத்துக்களும் பிரச்சாரங்களும் இயக்கங்களும் எழுந்தாலும் சுரண்டல் முறை நீடித்த நிலையில், சமூக வளங்கள், உற்பத்தி சக்திகள் மீது ஆங்கிலேய ஆட்சியும் விடுதலைக்குப் பிறகு வந்த முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ  சமூக ஆதிக்க உறவுகளும் உறுதியாக இருந்த நிலையில் மன  மாற்றம் என்ற நிகழ்ச்சி நிரலில்தான் சமூக சீர்திருத்த இயக்கங்கள் நிற்க முடிந்தது.

ஆனால் இதற்கும் தமிழ்ச் சமூகத்தில் தாக்கம் இருந்தது. சமூக ஏற்றத்தாழ்வை எதிர்த்து சில சட்டரீதியான பாதுகாப்புக்களையும் சமூக தளத்தில் சமத்துவ நடைமுறைகளையும் ஏற்படுத்த முடிந்தது. ஆனால் இது ஒரு எல்லைக்குட்டபட்ட வெற்றியாகவே இருந்து வந்துள்ளது.

மகாராஷ்டிராவில் வாழ்ந்து வரும் அமெரிக்கரான கெயில் ஓம்வடட் ஒரு மூத்த ஆய்வாளர். ஜோதிபா புலே மற்றும் அம்பேத்கர்  குறித்த ஆய்வுகளுக்காக நன்கு அறியப்பட்டவர்.

அவர் தனது “தலித்-எதிர்கால பார்வைகள்” எனும் நூலில்

“விடுதலைக்கான வழி என்பது பொருளியல், சித்தாந்த தளத்தில்  போராட்டம்தான்” என்று வரையறுக்கிறார். மேலும் அவர், அம்பத்கார் பொருளியல் தளத்தில் தனது  போராட்டத்தை கைவிடவில்லை என்கிறார். “ஆனால், அம்பேத்காரின் அழுத்தம், சித்தாந்த கலாச்சார போராட்டங்களில் இருந்தது. அவர் பொருளாதார மாற்றுத் திட்டத்தை அவற்றோடு இணைப்பதில் பெரிதாக வெற்றி பெற இயலவில்லை என்றாலும் அதனை அவர் கூர்மைப்படுத்தினார்” என்று கெயில் ஒம்வடட் எழுதியுள்ளார். இது தமிழக சீர்திருத்த இயக்கங்கள் பலவற்றுக்கும், பெரியார் தலைமை தாங்கிய திராவிட இயக்க கட்டத்திற்கும் பொருந்தும்.

1930-காலக்கட்டத்திய சுயமரியாதை இயக்கம் பெரியார் தலைமையுடன், சிங்காரவேலர், ஜீவானந்தம் போன்ற  கம்யூனிஸ்ட் தலைவர்கள் உள்ளடங்கிய இயக்கமாக செயல்பட்டது. உண்மையில்,  அந்த இயக்கம் .சமூக சீர்திருத்த செயல்பாட்டுடன் சேர்ந்து, சோசலிசம், கம்யூனிசம் என்ற பொருளாதார மாற்றுத்  தடத்திற்கு வந்தது. பின்னர், ஆங்கிலேய ஆட்சியின் அழுத்தத்தினால், மீண்டும் சமூக சீர்திருத்தம் என்ற எல்லைக்கோட்டுக்குள் திரும்பியது.

இந்த சறுக்கல்கள்  இருந்த போதும், தமிழக சமூக சீர்திருத்த இயக்கத்திற்கு சில சிறப்புக்கள் உண்டு. வட மாநிலங்களில் சமூக சீர்திருத்தம் ராஜாராம் மோகன் ராய் போன்ற முற்பட்ட பிரிவினரால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. தென்னிந்தியாவில் இப்பணியை பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பிரிவுகளிலிருந்து உருவான சிந்தனையாளர்களும் முன்னெடுத்துச் சென்றனர். அந்தப் பிரிவு சார்ந்த மக்கள் திரட்டலும் நிகழ்ந்தது. வடக்கில், அம்பேத்கார் 5 இலட்சம் மக்களைத் திரட்டி புத்த மதத்தில் சேருகிற நிலை ஏற்பட்டது. அந்தப் பாதையை தமிழக சீர்திருத்த இயக்கம் தேர்ந்தெடுக்காதது முக்கியமானது.

எனவே தமிழகத்தில் பொருளாதார மாற்று தடத்தில் பயணிக்கும் சமூக சீர்திருத்த முயற்சிகளுக்கு தமிழகத்தில் அதிக வாய்ப்புக்கள் உள்ளன.. இவ்வாய்ப்பினை இடதுசாரி சித்தாந்த நிகழ்ச்சி நிரல் தான் பயன்படுத்திக்கொள்ள இயலும். இதற்கு பாட்டாளி வர்க்க இயக்கம் வலுமிக்கதாக வளர வேண்டும்.

கொடூரமான ஏற்றத்தாழ்வான, ஒடுக்குமுறை, சுரண்டல் அடித்தளம் கொண்ட சமூக உறவுகளை மாற்றி உழைக்கும் மக்களின் கட்டுப்பாடும் அதிகாரமும் மேலாதிக்கம் பெறும் நிலையே சாதி, மதம், பாலின, சமூக ஒடுக்குமுறைகளை முற்றாக ஒழிப்பதற்கான வழி. கடந்த கால சமூக சீர்திருத்த இயக்கங்களால் இதனை எட்ட இயலவில்லை. சமூக உறவுகளை அடியோடு புரட்டிப் போடுகிற மாற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நிரலோடு இணைந்ததாக சமூக சீர்திருத்தம் பயணிப்பதுதான் இலக்கை எட்டுவதற்கான சரியான பாதையாக இருக்க முடியும். இதுவே தமிழக சீர்திருத்த வரலாறு நமக்கு அளிக்கும் படிப்பினை.

சாதிய ஒழிப்பு இலட்சியம்   

இதற்கு எடுத்துக்காட்டாக, தமிழகத்தில் சீர்திருத்த இயக்கம் சாதிய முறைக்கு எதிராக     எவ்வாறு பயணித்தது என்பதைக் காணலாம்.

தமிழகத்தில்சமூக சீர்திருத்த இயக்கங்களுக்கும் சிந்தனைகளுக்கும் சாதிய முறையை ஒழிப்பது என்பது முக்கிய இலக்காக இருந்து வந்துள்ளது. சங்க இலக்கியங்கள், திருக்குறள் எனத் துவங்கி  இடைக்கால பக்தி இயக்கம், பிறகு சித்தர்கள்  மற்றும் 19,20-ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த வள்ளலார்  உள்ளிட்ட சாதி எதிர்ப்புக்   குரல்கள், இயக்கங்கள் என விரிந்த வரலாற்றுப் பரப்பு இதில் உண்டு.

இதன் தற்போதைய நிலை என்ன?

இதனைப் பற்றி   பேராசிரியர் கே.என். பணிக்கர் குறிப்பிட்டார்.  “சாதி எதிர்ப்பு இயக்கங்கள் கிட்டத்தட்ட, எல்லா இடங்களிலும், சாதி ஐக்கியம் காணும் இயக்கங்களாக மாறிப் போயுள்ளன. இது வேடிக்கையாக இருந்தாலும், தர்க்க ரீதியாகவே இது நிகழ்ந்துள்ளது”.

இதற்கு எடுத்துக்காட்டுக்களாக  தமிழகத்தின் திராவிட இயக்கம் உள்ளிட்டு, பஞ்சாபின் சரின் சபா அமைப்பு, கேரளத்தின் எஸ்.என்.டி.பி. (SNDP) மற்றும் நாயர் சேவை சேவை அமைப்பு(NSS) போன்றவற்றை  அவர் குறிப்பிடுகிறார்.

இவை தங்களது சாதி சமூகத்தின் தேவையை கருதி சாதிய எதிர்ப்பு முழக்கங்களை  எழுப்பின. எனினும் இந்த இயக்கங்களை முன்னெடுத்துச் சென்றவை, முக்கியமாக, அந்த சமூகத்தின் நடுத்தர வர்க்கங்கள். எனவே தங்களது  தேவைகள் சிலவற்றை நிறைவேற்றிக் கொள்ள முடிந்ததே தவிர முற்றான சாதிய முறை ஒழிப்பு நிகழ்ச்சி நிரலை நோக்கி அந்த இயக்கங்கள் செல்லாமல் சாதிய திரட்டலை முன்னெடுக்கும் இயக்கங்களாக நின்று போயின.

எனவே இதில் ஒரு வரலாற்று மறு பரிசீலனை தேவைப்படுகிறது. சாதிய முறையில் உள்ள ஒடுக்கும் மனித உறவுகளை மாற்றி சமத்துவ நிலையை அடைவதற்கான போராட்டம் தேவை. ஆனால்  வர்க்க உறவுகளில் உள்ள ஆதிக்கத் தன்மை நீடித்தால் சமத்துவ நிலையை எட்ட முடியாது. அதற்கான நிகழ்ச்சி நிரல் திட்டத்துடன் சாதிய ஒழிப்பு இலட்சியம் பயணிக்க வேண்டும். தமிழக சமூக சீர்திருத்த வரலாற்றினை விமர்சனரீதியில் ஆராய்ந்தால், இந்த முடிவிற்குத்தான் வர இயலும்.

சாதிய ஒடுக்குமுறையில் போட்டி

பெரும்பான்மை மக்களை சுரண்டுவதற்கும் அடிமைப்படுத்துவதற்கும் சாதிய அடுக்கில் மேல் மட்ட சாதி  பிரிவினரிடையே போட்டா போட்டி இருந்து வந்துள்ளது. இதுவும் கூட சாதிய முறையை அவ்வப்போது நெருக்கடிக்கு உள்ளாக்கியது. எப்போதுமே சாதிய அடுக்கு என்று சொல்லப்படும் சாதிய முறைமை வர்க்க சுரண்டல் நோக்கத்திற்காகவும், தங்களது வாய்ப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் சாதிகளுக்குள் இருந்த மேல்பிரிவினரிடையே மோதல்கள் இருந்தன.

இந்த நிகழ்வினை பேராசிரியர் நா.வானமாமலை மிக நுட்பமாக விவரிக்கின்றார் .

“நில உடைமையாளர்கள் மிகுதியாயிருந்த சாதிகள், ஆரிய வேதம் வேறு என்றும், திராவிட வேதம் வேறு என்றும் கூறித் தங்களுக்குத் திராவிட வேதத்தில் உயர்ந்த பதவியிருப்பதாக நிலை நாட்ட முயன்றனர். தாங்கள் சுகவாழ்க்கை வாழ்வதற்காக உழைப்பதற்குத் தொழிலாளிகள்  தேவையாதலால் வருணாசிரம முறையையும் ஒப்புக்கொண்டு, தங்களை வைசியர் எனவும், தொழில் செய்து வாழ்வோரைச் சூத்திரர் எனவும் அவர்கள் தங்களிலும் தாழ்ந்தவர்கள் என்றும் எழுதினார்கள். ஆனால் மேலுள்ளவர்களுக்குத் தாங்கள் சமம் என்று காட்ட வைசியன் ஆட்சிக்கு வரலாம் என்று கூறும்  கருத்துக்களைப் பிற்கால வடமொழி நூல்களிலிருந்து மேற்கோள் காட்டினார்கள்.”

இதற்கு சான்றாக, சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் வெளியிடப்பட்ட சாதி மேன்மை போற்றும் நூல்களைக் குறிப்பிடுகின்றார். வேளாளர், கிராமணி, நாடார், பரதவர் போன்ற சாதிகளை உயர்நிலை இடத்தில நிறுத்தும் முயற்சியாக பல நூல்கள் வெளிவந்ததை அவர் குறிப்பிடுகிறார்.

ஒடுக்கப்பட்ட தளத்தில் இருந்த தலித் உள்ளிட்ட உழைக்கும் பிரிவினர் இந்தப் போட்டியில் இயல்பாகவே இருந்ததில்லை. மிகவும் பிந்தைய கட்டத்தில், சமீபத்திய காலங்களில்தான் அவர்கள் மத்தியில் இந்த தனமைகள் வெளிப்பட துவங்கின.

ஆக சாதிய சிக்கல்களில் அழுத்தமான பிரச்னையாக வர்க்க முரண்பாடுகளே மேலோங்கி இருந்ததை வரலாறு நெடுக்கிலும் காண இயலும். 

கடந்த காலத்தின் நுண்ணிய படிப்பினை

ஆங்கிலேய ஆட்சி நடந்த சூழலில் காலனியக் கொள்கைகள் மக்களை வாட்டி வதைத்தது. 19-ம் நூற்றாண்டில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடியது. இதனைக் கண்ட வள்ளலார் “கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக “ என்று முழங்கினார். இது, உண்மையில் அன்றைய காலனிய பொருளாதார கொள்கைக்கான எதிர்ப்பாக அமைந்துள்ளது.

தமிழக சீர்திருத்த இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான வள்ளலார் மத, சாதிய சடங்குகள், மரபுகள் ஒழிய வேண்டுமென முயற்சித்தார். புராணங்கள், சாத்திரங்கள் அனைத்தும் பல மூட நம்பிக்கைகளை விதைக்கிற கருத்துக்கள் கொண்டிருப்பதால் அவற்றையும் எதிர்த்தார்.  “கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும், கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப்  போக” என்ற அவரது குரல் வலிமையான சமூக சீர்திருத்தக் குரலாக அமைந்துள்ளது.

அவரது “கருணையிலா ஆட்சி” என்ற எதிர்ப்புக் கருத்து ஆளும் சுரண்டும் வர்க்க ஆதிக்கத்திற்கு எதிரானது. அத்துடன்   அவரது “கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப்  போக” என்ற சீற்றம் பொங்கும் குரல் சாதி, மதம் அடிப்படையிலான ஒடுக்குமுறை உறவுகளை எதிர்க்கும் தன்மை கொண்டது. இரண்டும் இணைந்தவாறு ஒலிக்கும் இந்தப் பாங்கு தற்கால சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர்கள் கற்க வேண்டிய நுண்ணிய படிப்பினையாக திகழ்கிறது.

பொருளாதார அசமத்துவத்தையும், சமூக முறையில் இருந்த சாதி, மத, பாலின அசமத்துவத்தையும் இணைத்து எழுந்த எதிர்ப்பு சிந்தனைகள் தமிழக வரலாற்றில் பண்டைக் காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளன. பூதவாதிகள் என்று மணிமேகலை உள்ளிட்ட இலக்கியங்களில் சித்தரிக்கப்படும் பொருள்முதல்வாதிகள் துவங்கி, சித்தர்கள், பிந்தைய காலத்தில் எழுந்த சுயமரியாதை இயக்கம், அதன் சம காலத்தில் வளர்ந்து வரும் தொழிலாளி வர்க்க இயக்கமான கம்யூனிச இயக்கம் என நீண்ட வரலாறு உள்ளது.

உண்மையில் வள்ளலாரின் இரட்டை அணுகுமுறையான பொருளாதார அசமத்துவ எதிர்ப்பு, சமூக அசமத்துவ எதிர்ப்பு என்ற நிலையின் வரலாற்றுத் தொடர்ச்சியை பிந்தைய காலங்களில் காண முடியும்.1930- களில் பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கம் பொதுவுடைமைக் கருத்துக்களோடு இணைந்து,  சிங்காரவேலரின் வழிகாட்டுதலின் கீழ் செயல்பட்டதைக் குறிப்பிடலாம்.

இந்த வரலாற்றுப் போக்கு இன்றைய சமூக சீர்திருத்தக் கடமைகளை வகுத்துக்கொள்ள உதவுகிறது. நில உடைமை, பண்ணையடிமை போன்ற வர்க்க உறவுகளை கேள்விக்கு உட்படுத்தி, அதன் மீதான எதிர்ப்பியக்கம் உருவாக்கும் பணியுடன் இணைந்த கடமையாக சமூக சீர்திருத்தம் செல்ல வேண்டும். அப்பொதுதான் அதன் இலக்கை அது எட்ட முடியும்.

கடந்த கால பொருள்முதல்வாத தத்துவக் காலத்திலும், சித்தர்கள் மற்றும் வள்ளலார் காலத்திலும் வரையறுக்கப்பட்ட நிலையில் மேற்கண்ட கடமையை வகுப்பது சாத்தியமில்லை. ஏனென்றால்,வர்க்க அசமத்துவ உறவுகளை முடிவுக்கு கொண்டு வரும் வல்லமை கொண்ட வர்க்கமான தொழிலாளி வர்க்கம் அப்போது உருவாகவில்லை. ஆனால் தற்போது இந்த 21-வது நூற்றாண்டின் சம காலச் சூழலில்  அது சாத்தியம். ஆனால் கடந்த காலத்தில் நடந்தது போன்று சமூகத்தளத்தில் நிலவும் அசமத்துவத்தை மட்டும் முன்னெடுத்துச் செல்வதும், வர்க்க உறவு  சார்ந்த சுரண்டல் ஒடுக்குமுறையை புறக்கணிப்பதும் இலக்கை அடையும் பயணமாக இருந்திடாது.

வெகு மக்கள் உணர்வில் தாக்கம்

கடந்தகால சமூக சீர்திருத்தங்களில் இருந்த முரணான போக்குகளை புரிந்து கொள்வது இன்றைய கடமைகளை வகுத்திட உதவும். சமூக சீர்கேடுகளை களைவதற்கு சாதி மறுப்பு, மத மறுப்பு, கடவுள் மறுப்பு கருத்துக்களை பரப்புரை செய்தவர்களும் இருக்கிறார்கள். பழைய நாத்திகம், சாங்கியம், பௌத்தம், சமணம், சார்வாகம் போன்றவற்றை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். 20-ம் நூற்றாண்டில் சுயமரியாதை இயக்கம் கடவுள் மறுப்பினை முன்னெடுத்தது. கம்யூனிச இயக்கம் அறிவியல் கண்ணோட்டத்துடன் மதக் கண்ணோட்டங்களை அணுகியது.

இந்தக் கருத்தோட்டங்களில் பொருளியல் தள ஒடுக்குமுறைகளை எதிர்த்த பழைய சார்வாகம், இடைப்பட்ட காலத்தில் நிலவிய  சித்தர் மரபு, சமகால கம்யூனிசம் ஆகியவற்றை வரலாற்றில் தனித்த இடம் கொண்டவையாக கருத வேண்டும். ஏனெனில் இன்றைய தேவைக்கு படிப்பினைகள் பெற இவை முக்கியமானவை.

ஆனால் மதத்திற்குள் நின்று சீர்திருத்தம் காண விழைந்தவர்களும் தமிழக வரலாற்றில் நெடுக இருந்து வந்துள்ளனர். ஆங்கிலேயர் வருகைக்கு முன்பிருந்தே தமிழகத்திற்கு வந்திருந்த கிறித்துவ போதகர்கள், கல்வி உள்ளிட்ட துறைகளில் அவர்கள் ஆற்றிய தொண்டுப் பணிகள், அவற்றின் ஊடாக அவர்கள் மேற்கொண்ட  சீர்திருத்தப் பிரச்சாரம், இதன் எதிர் விளைவாக சமய வரம்புக்குள் நின்று எழுந்த வைகுண்ட சுவாமிகள் இயக்கம், பிரம்ம சமாஜம், சன்மார்க்க சங்கம், மனுநீதி சட்டங்களை எதிர்த்து எழுத்துத் துறையில் ஈடுபட்ட வேதநாயகம் பிள்ளை, அ.மாதவையா,  ஜி. சுப்பிரமணிய ஐயர், தியோசாபிகல் சொசைட்டி, இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசர் துவக்க கால காங்கிரஸ் கட்சியில் எழுந்த சீர்திருத்த போக்குகள் என இந்த வரிசை நீள்கிறது. (இதற்கு காண்க: அருணன் எழுதிய ‘இருநூறு ஆண்டுக்கால சமூக சீர்திருத்த வரலாறு)

இத்தகைய கடந்த கால சமூக சீர்திருத்த செயல்பாடுகள் நிச்சயமாக வெகு மக்கள் உணர்வில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளன. இவற்றை விமர்சனப் பார்வையுடன் உள்வாங்கி, அவற்றின்  தொடர் கடமைகளை வரையறுக்க வேண்டும். வர்க்க சுரண்டல் தொடர்ந்த நிலையில் ஆளும் வர்க்கமான முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின்  கலாச்சாரப் பிடியிலிருந்து வெகுமக்கள்  விடுபடுவது சோஷலிஸப் புரட்சிக்கு முக்கிய தேவை. எனவே கடந்த கால முயற்சிகளை முற்றாக நிராகரிப்பது தவறானது. அதேசமயத்தில் அவற்றை விமர்சனமின்றி ஏற்பதும் தவறானது.

மார்க்சிய அறிஞர் அந்தோணியோ கிராம்ஷி “நீண்ட காலமாக, சிக்கலான தன்மையுடன் மிக நுண்ணிய அளவில் வெகு மக்கள் உணர்வு மாற்றம் பெறுகிறது. இந்த மாற்றத்தின் விளைபொருளாக சோஷலிஸப் புரட்சி நிகழ்கிறது” என்கிறார். இந்த நுண்ணிய மாற்றம் சமூகத்தில் நடக்கும் வர்க்கப் போராட்டம், சமூக ஒடுக்குமுறை எதிர்ப்புப் போராட்டம் ஆகியவற்றால் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் சோஷலிஸப் புரட்சி எனும் மகத்தான மானுட விடுதலை நிகழ்வதற்கு சமூகத்தை இது இட்டுச் செல்கிறது. சமூக சீர்திருத்த தளத்திலும் மேற்கொள்ளப்படும் சிறு சிறு முயற்சிகளும் கூட  வெகுமக்கள் உணர்வில் தாக்கத்தை  ஏற்படுத்தும்.

எனவே, சமூக சீர்திருத்தப் பாதையில்  கடந்த காலம் சென்றடைந்த முன்னேற்றத்தை உள்வாங்கிக் கொண்டு மேலும் முன்னேறுவது அவசியம். கடந்த கால முயற்சிகள் இறுதி வெற்றியை எட்டாததற்கு முக்கிய காரணம் வர்க்க சுரண்டலுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நிகழ்ச்சி நிரல் இல்லாமல் போனதுதான். அந்த நிகழ்ச்சி நிரலினை  உறுதியாகப் பற்றிக் கொண்டு சமூக சீர்திருத்த இலட்சியத்தை தொடர வேண்டும்.