எழுதுவது பற்றி மாக்சிம் கார்க்கி

நீங்கள் எவ்வாறு எழுதக் கற்றுக் கொண்டீர்கள்? கதைகள் எப்படி எழுவது என்பதைப் பற்றி ஒரு நூல் தயாரிக்குமாறு,”புரட்சி செய்யப் பிறந்ததே இலக்கியம்” என்ற கூற்றிற்கு ஏற்ப உலகப் புகழ்பெற்ற காவியமான “தாய்” நாவலை எழுதியவரும், உலக இலக்கியங்களுக்கும் படைப்புகளுக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கியவருமான தோழர் மாக்சிம் கார்க்கி அவர்களிடம் பலரும் கேட்டு வந்தனர். இறுதியில் அவர், இலக்கியம் எவ்வாறு படைப்பது, கதை எவ்வாறு எழுதுவது என்பதைப் பற்றி பாடப் புத்தகமெல்லாம் எழுத முடியாது என்றும், அதற்கான சாத்தியமும் இல்லை என்று கூறிவிட்டார். இருப்பினும் எழுதத் தொடங்குபவர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய, கவனிக்க வேண்டிய பல அம்சங்களைப் பற்றி விளக்கியுள்ளார். தான் எப்படி எழுதக் கற்றுக் கொண்டேன் என்கிற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக ஒரு நூலை எழுதியிருக்கிறார் அவற்றில் சில….

வாழ்க்கையின் போக்கைப் பற்றிய எனது “கருத்துக்கள்” மெல்ல மெல்லத்தான், கஷ்டத்தோடுதான் உருவாகின. காரணம், எனது நாடோடி வாழ்க்கை, நான் முறையான கல்வியறவு பெறாத குறை. சுய முயற்சியாகக் கற்றுக் கொள்ள நேரமில்லாது போன குறை – ஆகியவற்றின் குறை.

மக்களுக்குச் சொல்ல முடிகிற அளவுக்கு, சொல்ல வேண்டிய அளவிற்கு நான் கண்டும், கேட்டும், அனுபவித்தும் இருக்கிறேன் என்பதை உணர்ந்தும், மற்றவர்கள் சில விசயங்களை அறிந்தும் உணர்ந்தும் வைத்திருந்ததற்கும் மாறாக நான் அறிந்தும் உணர்ந்தும் வைத்திருக்கிறேன் என்று தோன்றியது.

சொற்களைக் கொண்டு மக்களைச் சித்தரிப்பதில் இருக்கும் கலையிலும், அவர்களுடைய பேச்சுக்களை உயிர் ததும்புவனவாயும், நேரடியாகக் காதில் கேட்கிற மாதிரியும் செய்கிறதிலிருக்கிற கலையிலும் நிறைய எழுத்தளார்கள் வெளிப்படுத்திய திறன், வசனங்களை உருவாக்குவதில் அவர்களுக்கிருந்த உன்னதமான திறன், எப்பொழுதுமே என்னை ஆட்கொண்டவாறிருந்தன. இதன் பின்தான் எழுத ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.

ஒரு எழுத்தாளனுக்கு எல்லா நாட்டு இலக்கியத்திலும் ஞானம் கட்டாயம் இருக்க வேண்டும். ஏனென்றால் சாராம்சத்தில் பார்த்தால், எல்லா நாடுகளிலும் எல்லா மக்கள் சமூகங்களிடையிலும், இலக்கிய படைப்புத் தன்மை என்பது ஒன்றாகத்தான் இருக்கிறது.

மனித நினைவுக்கெட்டாத நாளிலிருந்து மனிதனின் ஆன்மாவைச் சிக்கவைத்துப் பிடிக்க எங்குப் பார்த்தாலும் ஒரு வலை பின்னப்பட்டு வந்திருக்கிறது, இன்னொரு புறத்தில் மனிதர்களிடயேயிருந்து மூட நம்பிக்கைகளையும், விருப்பு வெறுப்புகளையும் சார்புக் கருத்துக்களையும் நீக்குவதையே தமது பணியுன் குறிக்கோளாகக் கொண்ட மனிதர்கள் எங்கும் எப்போதும் இருந்து வந்திருக்கிறார்கள். எனவே, மனிதர்களுக்குப் பிடித்தமான அற்ப விஷயங்களில் ஈடுபடுத்துவதற்கு உற்சாகப்படுத்துபவர்கள் என்றைக்கும் இருந்துவருவது போலவே, தம்மைச் சூழ்ந்துள்ள வாழ்வின் மோசமான அம்சங்களை, இழிந்த அம்சங்களை, எதிர்த்துக் கிளர்ந்தெழுந்த கலகக்காரர்களும் இருந்து வந்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது எழுத்தாளனின் முக்கியக் கடமையாகும்.

மனிதனுக்கு முன்னேற்றப் பாதையைச் சுட்டிக் காட்டி அந்தப் பாதையலேயே செல்லும்படி உற்சாகப்படுத்திய கலகக்காரர்களின் கைதான் மேலோங்குகிறது.  பேராசை, பொறாமை, சோம்பல், உழைப்பில் வெறுப்பு ஆகிய அருவருக்கத்தக்க கெட்ட குணங்களை உழைப்பாளி மக்களுக்குத் தொற்றிக் கொள்ளச் செய்திருக்கிற முதலாளித்துவ சமுதாயத்தால் உண்டாக்கப்பட்டுள்ள மோசமான நிலைமைகளைத் தட்டிக் கொடுத்துத் திருப்திப்படுத்தும்படியோ அவற்றுடன் சமரசம் செய்து கொள்ளும்படியோ பேசுகிற பிரச்சாரகர்களின் கை விழத்தான் செய்கிறது என்பதை உணர வேண்டியது முக்கியமாகும்.

“மனிதனைப் பற்றிய வரலாற்றை விட மனித உழைப்பின் படைப்புத் தன்மையின் வரலாறு எவ்வளவோ சுவையுள்ளதாகும். பொருள் நிறைந்ததாகும். நூறு வயது எட்டுமுன் மனிதன் இறந்துவிடுகிறான். ஆனால், அவனது படைப்புகளோ பல நூற்றாண்டுகள் கடந்து நிலைத்து வாழ்கின்றன”.

எழுத்தாளனின் வேலை விஞ்ஞானியின் வேலையைப் போன்றதே.

ஒரு விஞ்ஞானிதான் தனித்திறன் ஆய்ந்த துறையின் வளர்ச்சி வரலாற்றை அறிந்திருந்ததால்தான் அவனால் கற்பனைக் கதைபோல் தோன்றுகிற விஞ்ஞானத்தின் சாதனைகளையும் அதன் வளர்ச்சியையும் விளக்க முடியும். விஞ்ஞானத்துக்கும் இலக்கியத்துக்கும் பொதுவானவை நிறைய உண்டு; கவனித்தறிதல், ஒப்புநோக்குதல், பயில்வது ஆகியன இவைகள் இரண்டிலும் தலைமைப் பாத்திரம் வகிக்கின்றன. எழுத்தாளனுக்கும் சரி, விஞ்ஞானிக்கும் சரி கற்பனையும்  உள்ளுணர்வும் இருந்தே தீர வேண்டும்.

விபரங்களின் சங்கிலியிலே விடுபட்டுப்போன கண்ணிகளை கற்பனையும், உள்ளுணர்வும் தந்து பூர்த்தி செய்ய உதவுகின்றன. இதனால் விஞ்ஞானிக்கு உத்தேசக் கருத்துக்களையும் தத்துவங்களையும் உருவாக்க முடியாது, இவை மனித சிந்தனை இயற்கையின் சக்திகளைப் பற்றியும் தோற்றங்களைப் பற்றியும் நடத்துகிற விசாரணைகளுக்கு ஏறத்தாழ பயனுள்ள வகையில் வழிகாட்டுகின்றன. இந்த இயற்கையின் சக்திகளையும் தோற்றங்களையும் படிப்படியாகக் கீழ்ப்படியச் செய்வதன் வழியாக மனிதனின் சிந்தனையும் சித்தமும் மனிதப் பண்பாட்டைப் படைக்கின்றன. இந்தப் பண்பாடுதான் மொத்தத்தில் நமது “இரண்டாவது இயல்பாக” இருப்பது. இரண்டு உண்மைகள் இக்கூற்றை மெய்ப்பிக்கின்றன.

ஒன்று, டிமிட்ரி மெண்டலிவ் என்ற புகழ்பெற்ற வேதியியல் விஞ்ஞானி தம் காலத்தில் தெரிந்திருந்த இரும்பு, ஈயம்,கந்தகம், பாதரசம் முதலானவற்றைப் பயின்றதன் அடிப்படையில் தமது தனிம வரிசை அட்டவணையை உருவாக்க முடிந்தது. இயற்கையிலேயே இருக்கிற கண்டுபிடிக்கப்படாமல் இருந்த சில தனிமங்களையும் கண்டறிந்தார். ஒவ்வொன்றின் பண்புகளையும் குறித்தார். அது மட்டுமின்றி மெண்லிவின் முறை பிற்காலத்தில் இதர பல தனிமங்களையும் கண்டுபிடிக்க உதவியது.

இரண்டு, ஹொனர் டி பால்ஸாக் ஒரு பிரெஞ்சு நாவலாசிரியர். தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். அவர் நூல்களில் ஒன்றில் விஞ்ஞானத்திற்குத் தெரியாத சில சக்தி மிகுந்த திரவக் கசிவுகள் மனித உடம்பில் வேலை செய்கின்றன என்றும், அவை அந்த உடம்பின் மனக்கூறு-உடற்கூறு வகைப்பட்ட பல்வேறு குணாம்சங்களை விளக்குமென்றும் தாம் நினைப்பதாகத் தெரிவித்தார். பல பத்தாண்டுகள் கழித்த பிறகு அதுவரை அறிந்திராத பல சுரப்பிகள் மனித உடம்பில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த சுரப்பிகளே ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன;இந்தக் கண்டுபிடிப்பு என்ஜைம் சுரப்பிகள் பற்றிய மிக முக்கியமான விஞ்ஞானத்தைப் படைப்பதில் போய் கொண்டுபோய்விட்டது. இவ்வாறு விஞ்ஞானிகளின், முன்னணி எழுத்தாளர்களின், படைப்புத் திறனுள்ள நடவடிக்கைகள் இணைந்து செல்வது அப்படியொன்றும் அரிய விசயமல்ல. ஒரே சமயத்தில் கவிஞர்களாகவும் விஞ்ஞானிகளாகவும் பலர் இருந்ததாக கார்க்கி கூறுகிறார்.

“இலக்கியத்தின் படைப்புத் தன்மை என்பது குணச்சித்திரங்களையும் “மாதிரிகளையும்” (Types) உருவாக்கும் விசயம் சம்பந்தப்பட்டதாகும். அதற்குக் கற்பனையும் புனைத்திறனும் தேவைப்படுகின்றன. ஒரு எழுத்தாளன் தனக்குத் தெரிந்த ஒரு கடைக்காரனையோ அரசு ஊழியரையோ தொழிலாளியையோ பாத்திரமாக வடிக்கும்போது, அவன் ஒரு குறிப்பிட்ட தனி நபரை ஏறத்தாழ அப்படியே படம் பிடித்த மாதிரி படைத்தால் அது வெறும் புகைப்படமாகுமே தவிர அதற்கு மேல் ஒன்றுமில்லை. அதற்கு ஒரு சமுதாய முக்கியத்துவமோ அறிவூட்டவல்ல பொருட் குறிப்போ கொஞ்சம் கூட கிடையாது. இவ்வாறு படைக்கும் படைப்பு மனிதனைப் பற்றியோ, வாழ்கையைப் பற்றியோ நாம் பெற்றிருக்கும் அறிவை விரிவாக்க அறவே உதவாது.

ஆனால், ஓர் இருபது, ஐம்பது அல்லது ஒரு நூறு கடைக்காரர்களுக்கோ, அரசு ஊழியர்களுக்கோ,தொழிலாளிகளுக்கோ அலாதியாயமைந்த மிகவும் குறிப்பான வர்க்க குணாம்சங்களையும், பழக்கவழக்கங்களையும்,பேச்சுத் தோரணையையும் பொதுவாக்கி சுருக்கித்தர ஓர் எழுத்தாளனாலோ கலைஞனாலோ முடியுமானால்,அவற்றையெல்லாம் தனி ஒரு கடைக்காரனாக, ஒரு அரசு ஊழியராக, ஒரு தொழிலாளியாக சுருக்கிதர முடியுமானால், அதன் வழியாக அந்த எழுத்தாளன் ஒரு மாதிரியை படைக்க முடியும். அதுவே கலையாகும். கலைஞனிடமுள்ள விரிவும், வாழ்கையைப் பற்றிய வளமான அனுபவமும் அவனுக்கு ஒரு சக்தியைத் தருகின்றன. விசயங்களைப் பற்றி அவன் கொண்டிருக்கிற கண்ணோட்டத்தைத் தவிர, அதாவது அவனுடைய அகநிலைத் தன்மையைவிட அந்தச் சக்தி மேலானது. அகநிலைப் போக்கிலே பார்க்கும்போது முதலாளித்துவ அமைப்பையோ அல்லது வேறு சில கருத்துக்களை ஆதரித்து நிற்பவராக ஆகிவிடுவர்.”

“எழுதத் தொடங்குபவர்களுக்கு இலக்கியத்தின் வரலாற்றில் ஞானம் இருந்தாக வேண்டும்”.

தனது வர்க்கத்தையும் தனது நாட்டையும் பாதிக்கிற சகலத்தையும் நுண்மையாக வாங்கிக் கொள்பவனே கலைஞன். தனது வர்க்கத்தின், தனது நாட்டின், காது, கண், இதயம் எல்லாமே அவன். அவனது குரல் அவன் காலத்திய குரலாகும். முடிந்தவரைக்கும் சகலத்தையும் அவன் அறிந்திருக்க வேண்டியது ஒரு எழுத்தாளனின் கடமை. மேலும் அவன் வரலாற்றைப் பற்றி தெரிந்து கொண்டிருக்க வேண்டிதும் அத்தியாவசியம். அதேபோல் மக்களின் சமுதாய, அரசியல் சிந்தனைகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டியதும் அவசியம்.

“எழுத வேண்டும் என்கிற வேட்கை ஏன் எழுகிறது? – அழுத்திக் கொள்கிற மாதிரியிருக்கிற உப்புசப்பற்ற வாழ்க்கைதான்”.

இடிந்து ஒடுங்கிப் போனவர்களைப் பற்றி ஏன் எழுதுகிறேன் என்று பலரும் கேட்ட வண்ணம் இருக்கிறார்கள். காரணம் சாதாரணமானதுதான். “அற்பப் புத்தி படைத்த, பிறருடைய ரத்தத்தை உறிஞ்சி அந்த ரத்தத்தை பணமாக மாற்ற முயற்சிப்பதிலே வெறி கொண்டு திரிந்த மனிதர்கள் என்னைச் சூழ்ந்திருந்தார்கள்”.

கலையை மனித மனம் புனைந்த மாதிரிதான் கடவுளையும் மனித மனம் புனைந்தது.

எழுத்தின் வேலைப்பாடுகள் குறித்து சில…

மனிதனைப் போலத்தான் புத்தகமும் ஒரு வாழ்வின் தோற்றமாகும். அதற்கும் உயிருண்டு; அதுவும் பேசும்; “எழுத்தாளனுக்கு அலாதியான நுண்ணிய பார்வை வேண்டும். மற்றவர்களால் பார்க்க முடியாதவற்றை உன்னிப் பார்த்துக் குறித்துக் கொள்ளும் திறன் வேண்டும். கச்சிதமான வளமான நடை வேண்டும். கூர்மையாகக் கவனிக்கும் கண்களும், ஒருமைப்பாடுகளையும் ஆழ்ந்து கவனித்தறியும் ஆற்றலும், இடையறாத முடிவில்லாத பயிற்சியும் இருந்தால்தான் மாதிரிப் படைப்புகளாக உள்ள மனிதர்களைப் பற்றி பளிச்சென சித்தரித்துத் தர முடியும்.”

இலக்கியத்தில் கற்பனாவாதம், யதார்த்தவாதம் என்ற இரண்டு போக்குகள் அல்லது பிரிவுகள் இருக்கின்றன. யதார்த்தவாதம் என்பது, மக்களையும் அவர்களுடைய வாழ்க்கை நிலைமைகளையும் உண்மையாக,மேல்பூச்செதுவும் பூசாமல் சித்தரித்துக் காட்டுவதாகும். கற்பனாவாதத்துக்கு பல வரையறைகள் கூறப்படுகின்றன. ஆனால், எல்லா வரலாற்றாசிரியர்களுக்கும் திருப்தியளிக்கிற மாதிரி இதுவரை கறாரான, முழுமையான வரையறை எதுவும் வகுக்கப் பெறவில்லை. கற்பனாவாதத்தில் வினைச் சிறப்புடையது, வினைச்சிறப்பற்றது என்ற முற்றிலும் மாறுபட்ட இரண்டு போக்குகள் உண்டு. பூச்சு இட்டு அழகுபடுத்தி அத்துடன் மனிதனைச் சமரசப்பட்டுப் போகும்படி செய்ய முயற்சிக்கிறது அல்லது மனிதனை “வாழ்வின் தீராப் பிரச்சனைகளில் – விஞ்ஞானத்தாலன்றி மற்றபடி தன் சிந்தனையினால் சரி செய்ய முடியாத பிரச்சனைகளில் மலட்டுத்தனமான உள்நோக்கு விசாரணை நடத்தும்படி செய்வதன் வழியாகத் தன்னை சூழ்ந்திருக்கும் விசயங்களிலிருந்து மனிதனின் கவனத்தை திருப்பிவிடவும் முயற்சிக்கிறது. வினைச் சிறப்புள்ள கற்பனாவாதம், வாழ வேண்டும் என்கிற மனிதனின் சிந்தனையை வலுப்படுத்த முயற்சிக்கிறது. தன்னைச் சூழ்ந்துள்ள வாழ்க்கை நிலைமைகளையும் மீறி, அது சுமத்தப் பார்க்கும் எந்தவிதமான நுகத்தையும் தள்ளிவிட்டு, நிமிர்ந்து மேலேறிவரச் செய்வதற்கு முயற்சிக்கிறது”.

“கலகம் செய்ய நிமிர்ந்துவிட்டவனுக்கு உதவி செய்வதே இலக்கியத்தின் பணி”.

“உலகின் பகைச் சக்திகளை தொழிலாளி வர்க்கம் ஒன்றுதான் அடக்க முடியும். மேலும், வெற்றி பெற்ற பிறகு தேவையான எல்லா நிலைமைகளையும் தொழிலாளி வர்க்கம் ஒன்றுதான் உருவாக்க முடியும்”.

தோழர் மாக்சிம் கார்க்சியின் நினைவு தினம் 18 ஜூன் 1936

உதவியவைகள்

1. நான் எவ்வாறு எழுதக் கற்றுக் கொண்டேன் – மாக்சிம் கார்க்கி
2. தமிழ் விக்கிப்பீடியா

(தொகுப்பு ஆர்.சுதிர்)