சாதியமைப்பு – ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கம்யூனிஸ்டுகள்!

இதுவரை உள்ள மனிதகுல வரலாறு முழுவதும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே (ஆதிகாலப் பொதுவுடைமைச் சமுதாயம் தவிர) என பிரகடனப்படுத்துகிறது மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் வெளியிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கை. இது இந்தியாவின் வரலாறு மற்றும் சமூக அமைப்புக்கும் பொருந்தும். உலகின் பல்வேறு நாடுகளின் சமூக அமைப்பும், வர்க்கப் போராட்டங்களும் ஒரே மாதிரியானதாக இல்லை. இந்த அம்சங்களில் ஒவ்வொரு நாட்டிற்கும் பிரத்யேகத்தன்மைகளும் பின்னணியும் உண்டு.

இந்தியாவின் பிரத்யேகத் தன்மை:

ஒவ்வொரு நாட்டின் பிரத்யேகத்தன்மையை சரிவர ஆய்வு செய்து புரிந்து கொண்டுதான் அந்நாடுகளின் நடைபெற வேண்டிய வர்க்கப் புரட்சியையும், அதற்கான பாதையையும் அந்நாட்டின் புரட்சிகர இயக்கம் தீர்மானிக்க வேண்டுமேயொழிய மார்க்சிய கோட்பாடுகளை இயந்திர பாணியில் அமல்படுத்துவதன் மூலம் அல்ல. “திட்டவட்டமான நிலைமைகளை திட்டவட்டமாக ஆய்வு செய்து திட்டவட்டமான முடிவுகளுக்கு வர வேண்டும்” என்றே மார்க்சியம் நமக்கு போதிக்கிறது.

இந்த அடிப்படையில் இந்தியச் சமுதாயத்தை ஆய்வு செய்தால் அதன் பிரத்யேகத் தன்மைகளில் ஒன்றுதான் இங்கு நிலவும் சாதியமைப்பு. இச்சாதியமைப்பையும் இதோடு இங்கு நிலவும் மூடப்பழக்க வழக்கங்கள் மற்றும் பத்தாம்பசலித் தனமான சம்பிரதாயங்களையும் எதிர்த்துப் போராடாமல் – அவ்வாறு போராடி முறியடிக்காமல் இங்கே புரட்சிகரமான சிந்தனைகள் மற்றும் இயக்கம் வளர்வதோ அல்லது சமுதாய மாற்றத்திற்கான புரட்சி வெற்றிகரமாக நடைபெறுவதோ சாத்தியமல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சுரண்டல் முறையின் அங்கமாக வருணாசிரமம்:

இந்திய வரலாறு நெடுகிலும் சாதியத்திற்கு ஆதரவான, எதிர்ப்பான பல்வேறு போக்குகள் இருந்துள்ளன. இவை அனைத்தையும் சந்தித்து இன்றளவும் சாதியம் வீரியத்துடன் நீடித்து வருவது பல சமூக ஆய்வாளர்களை வியப்படைய வைத்துள்ளது. இது குறித்து பிரபல சமூக ஆய்வாளர்களில் ஒருவரான சியாமா சரண்தூபே கூறியதாவது “இந்தியாவில் நிலவும் சாதியமுறை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கடும் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது”. ஆனாலும் வருணாசிரம அமைப்பும், சாதிய முறையும் வியக்கத்தக்க விதத்தில் தொடர்ந்து உறுதியாக நிலைத்து நிற்கின்றன. எதிர்ப்புகளை சமாளித்து வந்துள்ளன. எல்லா வகையான தாக்குதல்களையும் பொறுத்துக் கொண்டு எவ்விதத்திலாவது தப்பித்து நீடித்து வந்திருக்கின்றன”. எனவே, இந்தியச் சாதியமைப்புக்கு எதிரான போராட்டம் மிக நுட்பமானதும், கடினமானதுமான ஒன்று என்பதை கடந்த கால அனுபவங்களிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.

இந்தியச் சாதியமைப்பிற்கு எதிரான போராட்டத்தை வலுவாகவும், திறமையாகவும் நடத்திட அது உருவானதற்கான பின்னணி மற்றும் அடிப்படைகளை சரிவர புரிந்துகொள்ள வேண்டும். இந்தியச் சாதியமைப்பை வேறு எவரையும்விட மார்க்சிய ஆய்வாளர்கள் இயக்கவியல் அடிப்படையில் சரிவர ஆய்வு செய்துள்ளனர். அவர்கள் வெளிப்படுத்தும் விவரங்கள் யதார்த்த நிலைமைகளுக்கு பொருந்தி வருவதாக உள்ளன. இந்தியச் சமுதாயத்தில் வர்க்கக் கட்டமைப்பு உருவானதன் ஒரு பகுதியாகவே சாதியமைப்பு உருவானது என்பதே இவர்கள் வெளிப்படுத்தும் உண்மை. இது குறித்து தலைசிறந்த மார்க்சிய சமூக ஆய்வாளர் டி.டி.கோசாம்பி கூறுவதாவது: “சாதி அமைப்பு என்பது இந்திய உற்பத்தி முறையின் துவக்ககட்டத்தில் வர்க்க அமைப்பாகவே இருந்தது” எனக் குறிப்பிடுகிறார்.

டி.டி.கோசாம்பியின் ஆய்வை பலப்படுத்தும் வகையில் மார்க்சிய அறிஞர் தோழர் இ.எம்.எஸ் இதுகுறித்து கூறும்போது, “கிரீசில் அடிமை முறை உருவானது போல இந்தியாவில் வேறு ஒரு வடிவத்தில் வர்க்க சமுதாயம் உருவாகியது. அடிமைகள், எஜமானர்கள் என்ற கிரேக்க வர்க்க வேற்றுமைக்குப் பதிலாக இங்கு உருவானது தாசர்கள் (ஆந்திரர்கள்), ஆரியர்கள் என்ற வடிவிலான வருண வேற்றுமைதான். இதுதான் பிற்காலத்தில் நான்கு வருணத்தின் மூலமாக அநேக சாதிகளும், உபசாதிகளும் உள்ள அமைப்பாக மாறியது. பிராமணர்கள், ஷத்திரியர்கள், வைசிகர்கள் என்ற மூன்று பிரிவுகளைச் சார்ந்த ஆக்கிரமிப்பாளர்களின் சுரண்டலுக்கு இரையாகி அடக்கப்பட்டவர்களாக சூத்திரர்கள் (தாசர்கள்) மாறினர். இதில் மூன்று பிரிவினர் ஆளும் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். நான்காவது பிரிவினர் ஆளப்படுவோர். இதுதான் இந்தியாவின் வர்க்க, வருண வேற்றுமையின் முதல் படிவம் ஆகும்” எனக் குறிப்பிடுகிறார். பிற்காலத்தில் மிகவும் கடினமானதும் சுகாதாரக் கேடு ஏற்படுத்தக் கூடியதும், இழிவானது எனக் கருதப்பட்டதுமான பணிகளுக்கு ஒரு பிரிவினர் ஒதுக்கப்பட்டனர். அவர்கள் பஞ்சமர்கள் என அழைக்கப்பட்டனர். ஆக இந்தியாவில் சுரண்டல் அமைப்பு முறையின் கவசமாகவே அதனுடன் பின்னிப்பிணைந்து உருவாக்கப்பட்டதே வருணாசிரம அமைப்பு என்பதில் ஐயமில்லை.

வருணாசிரமத்திலிருந்து பல்லாயிரம் சாதிகளாக:

வருணாசிரம முறைதான் இந்தியாவில் சாதி அமைப்பு உருவானதன் ஆரம்ப அடிப்படையாகும். துவக்க காலத்தில் இந்திய உற்பத்தி முறையில் நான்குவித உழைப்புப் பிரிவினைகள் இருந்தன. நான்கு வருணத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நான்குவித உழைப்பு பிரிவினையை மேற்கொண்டவர்களாக இருந்தனர். பிராமணர்கள் (வேதம் ஓதுதல்), ஷத்திரியர்கள் (யுத்தம் செய்தல்), வைசியர்கள் (வாணிபம் செய்தல்), சூத்திரர்கள் (உடல் உழைப்பு செய்தல்) என்ற முறையில் வருணாசிரம முறை இருந்தது. பிற்காலத்தில் புதிய உற்பத்திக் கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டு உற்பத்தி முறையில் முன்னேற்றம் ஏற்பட்டு ஏராளமான உழைப்புப் பிரிவினைகள் உருவாயின. அதன் அடிப்படையில் வருணாசிரம முறையின் உள்ளடக்கத்திலும் மாற்றம் ஏற்பட்டு எண்ணற்ற சாதிகளும், உப சாதிகளும் உருவாயின. இன்று பல்லாயிரக்கணக்கான சாதிகளும், உப சாதிகளும் உள்ளன என்றாலும் இதன் ஆரம்பகால அடிப்படை என்பது வேதகால வருணாசிரம முறையேயாகும். இது குறித்தும் தோழர் ஈ.எம்.எஸ். விவரிக்கிறார் “படிப்படியாக தொழில்நுணுக்கத்திலும் பொருளாதார ரீதியாகவும் ஏற்பட்ட முன்னேற்றங்களைத் தொடர்ந்து சூத்திரர்களிலும் அதே போல மேல்சாதி வருணங்களான பிராமணர், ஷத்திரியர், வைசியர், வருணங்களிலும் பல்வேறு கிளைகள் தோன்றி வளர்ந்தன. அடிமை வேலை, போர் முறை, கடவுள் வழிபாடு-சடங்குகள், வாணிபம் முதலிய ஒவ்வொரு படியிலும் ஏராளமான பிரிவுகள் – உப பிரிவுகள் இவ்விதமான தொழில் வேறுபாடுகள் பரவலாகத் தொடங்கியதுடன் ஆரம்ப காலத்தில் இருந்து வந்த நான்கு வருணத்தவர்களும் நூற்றுக்கணக்கான சாதிகளாகவும், உபசாதிகளாகவும் மாறினர். இந்திய சமுதாய வளர்ச்சியின் ஒரு பிரத்யேகத்தன்மை இது”.

இங்கு தோழர் இ.எம்.எஸ். தொழில்நுட்பம் குறித்தும், பொருளாதார வளர்ச்சி குறித்தும் சாதியமைப்பின் விரிவாக்கம் பற்றியும் குறிப்பிடுகிறார். இதை நாம் வரலாற்று ரீதியாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அடிமை சமுதாய காலத்தில் உருவான வர்ணாசிரம அமைப்பு, நிலப்பிரபுத்துவ சமுதாய காலத்தில் பலப்படுத்தப்பட்டு இன்றைய முதலாளித்துவ சமுதாயத்திலும் பல்வேறு மாற்றங்களுடன் பிரிவுகளுடனும் நீடிக்கிறது என்பதாகும். பண்டைய வர்ணாசிரம அமைப்புதான் அதன் பரிணாம வளர்ச்சியில் பல்லாயிரம் சாதிகளைக் கொண்ட இன்றைய சாதி அமைப்பாக மாறியுள்ளது.

சாதியம் அமல்படுத்தப்பட்ட முறை:

கொடூரமான சுரண்டலையும், ஆதிக்கத்தையும் அடிப்படையாகக் கொண்ட சாதியமைப்பை இந்தியச் சமூகத்தில் நிலைநாட்டவும் அமல்படுத்தவும் ஆளும் வர்க்கத்தினர் பன்முக முயற்சிகளை மேற்கொண்டனர். சாதிய ஏற்றத்தாழ்வுகள் இழிநிலைக்கு எதிராக மக்கள் மத்தியில் உருவாகி வந்த எதிர்ப்பையும், வெறுப்பையும் வெறும் ஒடுக்குமுறைகள் மூலம் மட்டும் முறியடிக்க முடியாது என்பதால் தத்துவார்த்த ரீதியாகவும் மக்களை இதற்கு தயார்படுத்தினர். வருணாசிரம – சாதியமைப்பு கடவுளின் படைப்பு எனவும் அதனை மாற்றமுனைவது கடவுளை நிந்திப்பதாகும் என பரப்பினர். இந்நோக்கத்தோடுதான் வேதங்கள், உபநிஷத்துகள், மனுஷ்மிருதிகள் உருவாக்கப்பட்டன. சாதியமைப்பை நியாயப்படுத்தும் வகையில் புராணங்களும், இதிகாசங்களும் உருவாக்கப்பட்டன. புராணங்களில் வரும் கதைகளும் – பாத்திரங்களும் வர்ணாசிரம வேறுபாட்டை நியாயப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தன. ஆயினும் சுரண்டலும் ஒடுக்குமுறையும் கடுமையான போது இத்தகைய தத்து வார்த்த கண்ணோட்டங்களையும் மீறி வருணாசிரம சாதிய முறைக்கு எதிர்ப்பு வரவே செய்தன. அவ்வாறு உருவான எதிர்ப்பையும் கலகங்களையும் அடக்க அவர்கள் மீது கையை வெட்டுவது, காலை வெட்டுவது, மரண தண்டனை, சிறைக் கொடுமைகள் உள்ளிட்ட கடும் தண்டனைகளும் அடக்குமுறைகளும் ஏவப்பட்டன. வர்ணாசிரம ஒடுக்குமுறைக்கு அடங்க மறுத்தவர்கள் மட்டுமல்ல வர்ணாசிரமத்தையும் வேதங்கள், மனுஷ்மிருதி, புராணங்களையும் மறுத்த விமர்சித்த அக்காலத்திய அறிவுஜீவிகளும் கூட கடுமையாகத் தண்டிக்கப்பட்டார்கள். மனுஷ்மிருதியில் வர்ணாசிரமத்தை மீறுபவர்களுக்கும் அத்தத்துவங்களை எதிர்ப்பவர்களுக்கும் மேற்கண்ட கடும் தண்டனைகள் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்த மனுஷ்மிருதிதான் அக்காலத்தில் அரசர்களுக்கான அரசியல் சட்டமாக இருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆளும் வர்க்கம் – அரசு – அரசியல் கட்சிகள் நிலைபாடு :

இந்தியாவில் சுரண்டல் முறையோடு இணைந்து அதன் ஒரு பகுதியாக உருவான (வருணாசிரம) சாதியமைப்பு பல உருவங்களைக் கடந்து பல்லாயிரம் சாதிகளாக மாறி இன்று உழைக்கும் மக்களை பிளவுபடுத்தி மோதவிடும் அபாயகரமான பாத்திரத்தை வகிக்கிறது. வரலாறு நெடுகிலும் சுரண்டல் அமைப்பின் கேடயமாகவே சாதியமைப்பு இருந்து வருகிறது. எனவேதான் இதுவரை உள்ள அனைத்து சுரண்டும் வர்க்கங்ககளும் (அடிமை எஜமானர்கள், நிலப்பிரபுக்கள் இன்று முதலாளிகள்) இதனை பாதுகாத்து வந்துள்ளனர். சாதி ஆதிக்க சக்திகளுக்கு ஏதாவது ஒரு விதத்தில் துணைநிற்கவே செய்துள்ளனர். இன்று அரசியல் சட்டபூர்வமாக ஜனநாயகம், சமத்துவம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்ற போதிலும் அரசு நிர்வாகமும், காவல்துறையும் இதனை சரிவர அமல்படுத்தாததால் சாதிய ஒடுக்குமுறைகள் கடந்த கால நிகழ்வுகளாக அல்லாமல் இன்றளவும் தொடர்கின்றன. முதலாளித்துவ அரசியல் கட்சிகள் சாதியமைப்பிற்கு எதிராக பசப்பு வார்த்தைகளை பேசி வருகிற போதிலும் அடிப்படையில் அவற்றின் செயல்பாடுகள் சாதிய உணர்வை பாதுகாக்கும் விதத்திலும் பல சந்தர்ப்பங்களில் சாதியமைப்புகளை பயன்படுத்தும் வகையிலுமே அமைந்துள்ளன.

பிற்படுத்தப்பட்ட மக்களும் தலித் மக்களும்

இந்தியாவில் வருணாசிரம சாதியமைப்பு உருவான பின்னணி, அதன் வளர்ச்சி, அதை அமல்படுத்த ஆளும் வர்க்கமும் ஆதிக்க சக்திகளும் கையாண்ட முறை போன்ற அம்சங்களை வர்க்கப் பின்னணியோடு பரிசீலித்தோம். இத்தகைய அமைப்பை எதிர்த்ததவர்கள் சந்தித்த கொடூரமான ஒடுக்குமுறைகளையும் வரலாற்று ரீதியாக பார்த்தோம்.

ஆக இந்தியச் சமூகத்தில் மிகவும் கடுமையான உடலுழைப்புச் செய்பவர்களும் இழிவான சுகாதாரக்கேடு விளையும் தொழிலைச் செய்பவர்களும் பிற்படுத்தப்பட்ட சாதிகளாகவும் தாழ்த்தப்பட்ட சாதிகளாகவும் வைக்கப்பட்டுள்ள சமூக வரலாற்றையும் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஒடுக்குமுறைகளையும், இழிவுகளையும் இப்பின்னணியில் சரிவர புரிந்து கொள்ள வேண்டும். இன்று பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் மிகக் கணிசமான பகுதியினர் எவ்வித உடைமையுமின்றி நகர்ப்புற, கிராமப்புற உழைப்பாளிகளாக உள்ளனர் என்பது இத் தகைய வளர்ச்சிப் போக்கின் பரிணாம வளர்ச்சியேயன்றி தற்செயலாக ஏற்பட்ட நிகழ்ச்சி போக்கல்ல. இம்மக்கள் தங்கள் மீதான சாதியக் கட்டுமானங்களை மீறும்போது அதற்கு சாதிய சக்திகள் கடும் தண்டனை வழங்குவதைக் கண் கூடாக காண்கிறோம்.

இன்று தமிழகம் உள்ளிட்டு இந்தியா முழு வதும் நாம் சந்திக்கின்ற முக்கியமான பிரச்சனை எதுவென்றால் சாதிய வேறுபாடுகளைக் காட்டி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குமிடையே மோதலை உருவாக்கும் நடவடிக்கைகளில் சாதிய சக்திகள் இறங்கியிருப்பதும் அதை ஆளும் வர்க்கத்தினரும் அரசும் உரிய முறையில் தடுக்க தவறுவதும்தான். பிற்படுத்தப்பட்ட மக்களில் 70 சதம் பேர் உழைப்பாளிகள். இதேபோல கிராமப்புற தாழ்த்தப்பட்ட மக்களில் 88 சதம் பேர் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகள். நகர்ப்புறங்களிலும் இவர்களில் கணிசமானவர்கள் உழைப்பாளிகளே. தமிழக, இந்திய பாட்டாளி வர்க்கத்தின் மிகக் கணிசமான பகுதியினராக பிற்படுத்தப்பட்ட மக்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் இணைந்து உள்ளனர். இவர்களுக்கிடையே மோதல்கள், பிணக்குகளை உருவாக்குவது என்பது உழைக்கும் வர்க்கத்தின ஒற்றுமையை பாதிக்கும் ஆபத்தான அம்சங்களாகும். இந்த ஆபத்தை முறியடிப்பதோடு இதர சாதிப் பிரிவுகளில் உள்ள உழைக்கும் மக்களையும் அணிதிரட்டி ஆளும் வர்க்கத்தின் சவாலை எதிர்கொள்ள தொழிலாளி வர்க்கத்தின் பரவலான ஒற்றுமையை உருவாக்க வேண்டிய பிரதான கடமை நம்முன் உள்ளது.

கம்யூனிஸ்ட் அணுகுமுறையும் வரலாறும் :

இந்தியாவில் உழைக்கும் வர்க்க ஒற்றுமையை உருவாக்கி சமுதாய மாற்றத்திற்கான புரட்சி நடத்துவதில் உறுதிபூண்டுள்ளது கம்யூனிஸ்ட் இயக்கம். இதற்காக தொழிலாளர்கள், விவசாயிகள், மத்திய தர வர்க்கத்தினர் உள்ளிட்ட பரவலான மக்கள் திரளை அணிதிரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இத்தகைய பரவலான மக்களை அணிதிரட்ட வேண்டுமெனில் அதற்கு பிரதான தடைகளில் ஒன்றாக இருக்கக்கூடிய சாதியமைப்பையும், சாதிய ஒடுக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடுவதும் முறியடிப்பதும் பிரதான கடமையாகும். இந்தியாவின் விடுதலைப் போராட்டம் நடைபெற்ற போதே அதில் பிரதான பங்கு வகித்த கம்யூனிஸ்ட் இயக்கம் “இந்தியாவுக்கு விடுதலை என்றால் அது தலித்துகளுக்கும் விடுதலையாக இருக்க வேண்டும்” என 1928லேயே முழங்கியது. இந்திய விடுதலைப் போராட்டத்தை சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்துடன் மிகச்சரியாக அக்காலத்திலேயே இணைத்தது. மிகக் கடுமையான அடக்குமுறைகளைச் சந்தித்துக் கொண்டே, தலைவர்கள் பலரும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டே இத்தகைய முழக்கத்தை கம்யூனிஸ்ட் இயக்கம் எழுப்பியது என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாகவும் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகவும் கம்யூனிஸ்டுகள் தலைமையில் நடைபெற்ற அக்காலத்திய பல போராட்டங்கள் சாதிய ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டங்களாகவும் இருந்தன. ஆந்திராவில் நடைபெற்ற தெலிங்கானா போராட்டம், கேரளாவில் நடைபெற்ற புன்னப்பரா வயலார் போராட்டம், வங்கத்தில் நடைபெற்ற தெபேகா போராட்டம், மராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற வோர்லி ஆதிவாசி மக்கள் போராட்டம் என இத்தகைய பல போராட்டங்களை உதாரணங்களாகக் குறிப்பிட முடியும். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த தோழர் சிங்காரவேலர் பெரியாரோடு இணைந்தும் தனித்தும் சாதியமைப்புக்கு எதிரான கருத்துப் பிரச்சாரத்திலும் போராட்டங்களிலும் தனிக்கவனம் செலுத்தினார்.

காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் இயக்கமும்:

இந்திய விடுதலையில் பிரதான பங்கு வகித்த மற்றொரு இயக்கமான காங்கிரஸ் கட்சிக்கு இத்தகைய பார்வையும், அணுகுமுறையும் இருக்கவில்லை. எனவே கடுமையான சாதிய ஒடுக்குமுறைகளைச் சந்தித்த மிகக் கணிசமான தாழ்த்தப்பட்ட மக்களை விடுதலைப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியால் இணைக்க முடியவில்லை. பிற்காலத்தில் இதனை உணர்ந்த காந்தி தாழ்த்தப்பட்ட மக்களை கவருவதற்காக தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தை நடத்தினார். ஒரு பகுதி தாழ்த்தப்பட்ட மக்களை அவரால் திரட்டவும் முடிந்தது. எனினும் அது காந்தியின் தனிப்பட்ட முயற்சியாகவும் ஒரு பகுதி காங்கிரஸ் ஊழியர்களை மட்டுமே இணைத்தாகவும் இருந்ததேயொழிய ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியின் பணியாக அமையவில்லை. உண்மை யில் பல காங்கிரஸ் தலைவர்கள் சாதிய அணுகு முறையுடன் செயல்பட்டார்கள் என்பதும் தங்கள் சொந்த வாழ்க்கையில் தீண்டாமையைக் கடைபிடித்தார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். இக்காலத்தில் சாதிய ஒடுக்கு முறைகளுக்கு எதிராக கடுமையாக போராடிய வரும் கணிசமான தாழ்த்தப்பட்ட மக்களை தன் தலைமையில் அணிதிரட்டியவருமான டாக்டர் அம்பேத்கர் காங்கிரஸ் கட்சியை பரவலாக அம்பலப்படுத்தியும் அக்கட்சி முழுவதையும் தீண்டாமை ஒழிப்பில் ஈடுபடுத்த முடியாமல் இருந்த காந்தியை விமர்சித்தும் பரவலான பிரச் சாரம் செய்தார் என்பதைக் கவனிக்க வேண்டும்.

சமூக சீர்திருத்த இயக்கத்தின் பாத்திரம்:

இந்தியாவில் சாதியமைப்புக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக சமூக சீர்திருத்த இயக்கங்கள் வகித்த பாத்திரத்தை கம்யூனிஸ்ட் இயக்கம் அங்கீகரிக்கிறது. ஜோதிபாபுலே, அம்பேத்கர், பெரியார், ஸ்ரீநாராயண குரு மற்றும் பலருடைய மகத்தான பங்களிப்பு இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இன்றைய சமூக அமைப்புக்குள்ளேயே சாதியமைப்பினை அம்பலப்படுத்துவதிலும், கொடூரங்களை தணிப்பதிலும் சாதிய ஒடுக்கு முறைக்கு உள்ளான மக்களுக்கு பல நிவாரணங்கள் பெற்றுத் தருவதிலும் சமூக சிர்திருத்த இயக்கம் முக்கிய பங்கு வகித்தது. கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் பொறுத்த வரை இன்றைய சமூக அமைப்பை மாற்றியமைப்பதன் மூலமே அனைத்துவிதமான சுரண்டல் மற்றும் ஒடுக்கு முறைகளுக்கும் முடிவுகட்ட முடியும் எனக் கருதுகிறது. அதேசமயம் சமூக மாற்றத்திற்கான புரட்சிக்கு மக்களை தயார்படுத்தவும், ஒன்று படுத்தவும் சாதிய ஒடுக்குமுறைகள் முடிவுக்குக் கொண்டு வருவது அவசியம் என உறுதியாகக் கருதுகிறது. எனவே, கடந்த கால சமூக சீர்திருத்த இயக்கங்களிலிருந்து உரிய படிப்பினைகள் பெற்று அதனை மென்மேலும் முன்னெடுத்துச் செல்வது அவசியம் என முடிவுக்கு வந்துள்ளது.

விடுதலைக்குப் பிறகும்:

இந்திய விடுதலைக்குப் பிறகும் வர்க்கப் போராட்டங்களை நடத்திக் கொண்டே சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடிய பாரம்பரியம் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு உண்டு. மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் வர்க்கப் போராட்ட தலைவர்களாக மட்டுமின்றி தீண்டாமை மற்றும் சாதிய பாரபட்சங்களுக்கு எதிரான போராட்ட தலைவர்களாகவும் விளங்கினார்கள் என்பது வரலாறு. மேற்கு வங்கத்தில் ராஜாராம் மோகன்ராய் முன்னெடுத்துச் சென்ற சமூக சீர்திருத்த இயக்கத்தை கம்யூனிஸ்ட் இயக்கம் முன்னெடுததுச் சென்றது. கேரளாவில் ஏ.கே.ஜி., ஈ.எம்.எஸ் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஆலய பிரவேசம் உள்ளிட்ட தலித் மக்களின் ஏராளமான உரிமைப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கினர். திரிபுராவில் பழங்குடி மக்களின் சமூக பொருளாதார உரிமைகளுக்காக மகத்தான தியாகங்களைச் செய்த பாரம்பரியம் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு உண்டு. தமிழகத்தின் கீழத்தஞ்சையில் சிறு விவசாயிகள், கூலித் தொழிலாளர்களின் குத்தகை உரிமை மற்றும் கூலி உயர்வுக்கான வர்க்கப் போராட்டத்துடன் சவுக்கடி, சாணிப்பால் குடிக்க வைப்பது போன்ற சாதிய ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டங்களையும் கம்யூனிஸ்ட்டுகள் இணைத்தே நடத்தினர் என்பதும் இதில் தோழர் சீனிவாசராவ் உள்ளிட்ட தலைவர்களின் மகத்தான பாத்திரமும் வீரகாவியமாகும்.

சிபிஐ(எம்) திட்டமும் செயல்பாடும்:

ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வர்க்கப் போராட்ட மற்றும் சமூகச் சீர்திருத்த பாரம்பரியத்தை தன்னகத்தே கொண்டுதான் 1964ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. இப்பாரம்பரியத்தையும் பாதையையும் முன்னெடுத்துச் செல்லும் வகையில்தான் கட்சித் திட்டத்தையும் உருவாக்கியது. இந்தியாவில் சோசலிச சமுதாயம் நிர்மாணிப்பதை லட்சியமாகக் கொண்டு அதன் முதல் கட்டப்பணியாக மக்கள் ஜனநாயகப் புரட்சி நடத்திட பரந்துபட்ட உழைப்பாளி மக்களை அணிதிரட்டும் முயற்சிகளில் கட்சி ஈடுபட்டு வருகிறது. இதற்கு தடையாக உள்ள அனைத்து அம்சங்களையும் தகர்த்தெறிய விரும்புகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் சாதியமைப்பு மற்றும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு கட்சித் திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முன்பகுதியில் இந்தியாவில் வருணாசிரம சாதியமைப்பு எவ்வாறு வர்க்கக் கட்டமைப்பு உருவானதன் பின்னிப்பிணைந்த பகுதியாக உருவானது என்பதை வரலாற்று ரீதியாக பரிசீலித்தோம். இத்தகைய மார்க்சியப் புரிதல் அடிப்படையில் கட்சித் திட்டத்தின் கீழ்க்கண்ட பகுதிகள் அமைந்துள்ளன என்பதைப் பார்க்க முடியும்.

“ஒரு சாதி மற்ற சாதியினரை ஒடுக்குவதும் தீண்டாமை அகற்றப்படுவதும் சட்ட விரோதமாக்கப்பட்டு தண்டனைகளுக்கு உள்ளாக்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்கள் பழங்குடியினர், பின்தங்கிய வகுப்பினர் ஆகியோருக்கு வேலை வாய்ப்பு, கல்வி ஆகியவற்றில் பிரத்யகேச் சலுகைகள் வழங்கப்படும். (1964 கட்சித் திட்டம், பாரா 15)

“சாதிய ஒடுக்குமுறை, சாதிய பாரபட்சம் என்ற பிரச்சனைக்கு நீண்டதொரு வரலாறு உள்ளது. இது முதலாளித்துவத்திற்கு முந்தைய கால சமூக முறையிலேயே ஆழமாக வேரோடி விட்டது. முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையிலான சமூகம் ஏற்கனவே இருந்த சாதிய முறையுடன் சமரசம் செய்து கொண்டது. இந்திய முதலாளி வர்க்கமே கூட இந்த சாதிய வேறு பாடுகளை வளர்த்து வருகிறது. தலித் மக்களின் மிகப்பெரும்பாலானோர் உழைக்கும் வர்க்கத்தின் பகுதியாக உள்ள நிலையில் சாதிய முறைக்கும் தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கும் எதிரான ஒற்றுமை உழைக்கும் மக்களின் ஒற்றுமையே ஆகும். சமூக சீர்திருத்த இயக்கங்கள் மூலம் சாதியமுறை மற்றும் அதன் அனைத்து வடிவத்திலான சமூக ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராட வேண்டியது ஜனநாயகப் புரட்சியின் முக்கியமான பகுதியாகும். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் வர்க்கச் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்துடன் பின்னிப்பிணைந்த ஒன்றாகும்.” (2000-இல் மேம்படுத்தப்பட்ட கட்சித் திட்டம், பாரா 5.12)

மேற்கண்ட அணுகுமுறையின் அடிப்படையில் இந்தியாவில் சாதியமுறை மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களில் தனி கவனம் செலுத்தப்படுகிறது. இடைக்காலத்தில் இதனை அமல்படுத்துவதில் சில தொய்வுகள் பலவீனங்கள் ஏற்பட்டபோதிலும் கட்சித் திட் டத்தின் அடிப்படையில் இதனைப் பரிசீலனை செய்து அத்தகைய போராட்டங்களை கட்சி தீவிரப்படுத்தியுள்ளது. கட்சியின் அகில இந்திய மாநாடுகள் அனைத்திலும் சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகப் பொருளாதார நிலைமைகளை பரிசீலிப்பதும் அவர்களின் நலன்கள், உரிமைகளுக்கான போராட்டங்களை தீவிரப்படுத்துவதுமான பணிக்கு தொடர்ச்சி யான முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

விரிந்து பரந்த ஜனநாயக மேடை:

இப்பின்னணியில்தான் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, திரிபுரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்முயற்சியில் தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவும் அவர்களின் சமூக, பொருளாதார உரிமைகளுக்காகவும் ஏராளமான போராட்டங்கள் சமீப காலங்களில் நடத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி உருவாக்கப்பட்டு இயங்கி வருவதையும் அதன் செயல்பாடுகள் தலித் மக்கள் மற்றும் இதர ஜனநாயக சக்திகளிடையே ஏற்படுத்தியுள்ள தாக்கத்தையும் நன்கு அறிவோம். இதேபோல தலித் மக்களின் பரச்சினைகளுக்காக போராடு வதற்கென்றே மேலே குறிப்பிட்டுள்ள மாநிலங்கள் அனைத்திலும் தனித்தனி அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த 2014 நவம்பர் 27ல் மேற்கண்ட மாநில அமைப்புகள் அனைத்தும் இணைந்து “தலித் மக்கள் ஒடுக்கமுறை விடுதலை முன்னணி” என்ற அகில இந்திய அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. தலித் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தலித்துகள்தான் போராட வேண்டும் என்ற கருத்தை சில அமைப்புகளும் நபர்களும் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் தலித்துகளின் பிரச்சனை தேசத்தின் பிரச்சனை, உழைக்கும் வர்க்கத்தின் பிரச்சனை என்ற அணுகுமுறையோடு ஒட்டு மொத்த உழைப்பாளி மக்களையும், ஜனநாயக சக்திகளையும் இப்போராட்டத்தில் இணைத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மகத்தான முயற்சிகளை செய்து வருகிறது. மேலே குறிப்பிட்டுள்ள அமைப்புகள் சார்பாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகவும் தலித் மக்கள் உரிமைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டங்களில் ஏராளமான தலித் அல்லாத மக்களும் பங்குபெற்றார்கள் என்பதும், அத்தகைய பல போராட்டங்கள் அவர்களின் உரிமைகளை மீட்டுத் தந்த போராட்டங்களாகவும், பல்வேறு நிவாரணங்களைப் பெற்றுத்தந்த போராட்டங்களாகவும் வெற்றிகரமாக அமைந்தன என்பதும் சிறந்த அனுபவங்களாகும்.

தமிழகத்தின் தலையீடுகள் – வெற்றிகள்:

தமிழகத்திலும் அவ்வாறு நடைபெற்ற சமீபத்திய பல போராட்டங்களையும் தலையீடுகளையும் இங்கு பெருமையுடன் குறிப்பிட முடியும். நாலுமூலைக்கிணறு (தூத்துக்குடி) மக்களுக்கு ரூ.23 லட்சம் நஷ்ட ஈடு தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகளுக்கு தண் டனை, கொடியன்குளம் காவல்துறை தாக்குதல் குறித்து சிபிஐ விசாரணை, தென்மாவட் டங்களிலும் பல வட மாவட்டங்களிலும் நடைபெற்ற சாதிய மோதல்களில் மிகவும் பாதிக்கப் பட்ட தலித் மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க தலையீடுகள் – இதையொட்டி நாம் நடத்திய தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரம், உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் உடைப்பு, ஒவ்வொரு ஆண்டும் பி.சீனிவாசராவ் நினைவு தினமான செப்டம்பர் 30ல் நடத்திய பல தீண்டாமை ஒழிப்பு போராட்டங்கள் – அதன் வெற்றிகள், பல ஆலயங்களில் தலித் மக்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டியது, பல கிராமங்களில் தலித் மக்களின் நில உரிமையை மீட்டுத்தந்தது. 20 ஆயிரம் அருந்ததியர் மக்களை திரட்டி சென்னையில் நடத்திய பேரணி இதையொட்டி அருந்ததியர் மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் கிடைத்த 3 சதவிகித உள்ஒதுக்கீடு, கடந்த சில ஆண்டுகளில் 2 முறை சென்னை கோட்டை நோக்கி பல்லாயிரம் பேரைத் திரட்டி நாம் நடத்திய கோட்டை நோக்கிய பேரணி – அதன் தாக்கம், வாச்சாத்தி மலைவாழ் பெண்கள் மற்றும் மக்கள் மீதான வனக்காவலர்களின் வன்கொடுமைத் தாக்குதலை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்கள், வழக்கினால் கிடைத்த நிவாரணம் மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை, பரமக்குடி காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் சிபிஐ விசாரணை, தர்மபுரி மாவட்ட தலித் மக்கள் மீதான தாக்குதல்களின் பாதிப்புக்கு அரசு நஷ்ட ஈடு மற்றும் நமது இயக்கங்களில் சார்பாக பல லட்ச ரூபாய் நிவாரணம் – இப்பிரச்சனையில் நாம் தொடுத்த வழக்கு, சாதி மறுப்பு திருமணங்களையொட்டி நடைபெற்ற பல கௌரவக் கொலைகளில் நமது தலையீடுகள் – வழக்கு – நிவாரணம், தலித் – பழங்குடியினர் உபதிட்ட நிதி ஒதுக்கீடு மக்கள் தொகைக்கு ஏற்ப அரசு ஒதுக்குவதிலும் பயன்படுத்தவதிலும் கிடைத்த முன்னேற்றம், தமிழகத்தின் 12 மாவட்டங்களில் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மூலம் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான பயிற்சி மையம், இப்பயிற்சியின் காரணமாக பல நூற்றுக்கணக்கானவர்கள் தேர்வில் வெற்றி பெற்று வேலைநியமனம் பெற்றது, சில வங்கிகள் இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான உத்தரவை வெளியிட்ட போது அதனை தடுத்து நிறுத்தி முறியடித்தது என எண்ணற்ற நமது தலையீடுகள் மற்றும் போராட்டங்கள் தலித், பழங்குடியின மக்களுக்கு பெரும் பயன் அளிப்பதாக அமைந்தன.

தமிழகத்தில் நமது செயல்பாடுகள் மற்றும் அதன் வெற்றிகள் காரணமாக தலித் மக்களின் உரிமைகளுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் போராடி வரும் பல தலித் அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், தனி நபர்கள் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் இணைந்து அதன் அங்கமாக செயல்பட்டு வருகின்றனர் என்பதையும் இங்கு பெருமையுடன் குறிப்பிட முடியும். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாடு 2010ல் புதுக்கோட்டையில் நடைபெற்ற போது அதன் மாவட்டக்குழுக்களிலிருந்தும் மேற்கண்ட அமைப்புகளிலிருந்தும் தலைவர்களும் ஊழியர்களுமாக நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் உற்சாகத்தோடு கலந்து கொண்டதோடு அதன் இறுதிப் பேரணியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலித் மற்றும் இதர பகுதி உழைப்பாளி மக்கள் எழுச்சியுடன் பங்கேற்றனர். அதன்பிறகு கடந்த 4 ஆண்டுகளில் இந்த அமைப்பின் செயல்பாடு மென்மேலும் பலமடைந்துள்ளது. ஏராள மான தலையீடுகள் மற்றும் இயக்கங்கள் நடந்த தின் பின்னணியில் 2வது மாநில மாநாடு விருதுநகரில் 2014 மே மாதம் நடைபெற உள்ளது. இந்த மாநாடும் பெரும் தாக்கத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் ஜனநாயக சக்திகளிடையே ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

முன்னெடுத்துச் செல்வோம்:

ஆக சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட தலித் – பழங்குடி மக்களின் உரிமைப் போராட்டங்களில் வேறு எந்த அரசியல் இயக்கங்களும் செய்திராத பங்களிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்துள்ளது. பல முதலாளித்துவ கட்சிகள் வாக்கு வங்கியை உருவாக்குவதற்காக தங்கள் அமைப்புகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவுகளை உருவாக்கியுள்ளன. இக்கட்சிகளின் நிலைபாட்டிற்கு முற்றிலும் மாறாக தலித்-பழங்குடி மக்கள் மீதான சமூக ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடவும் அப்போராட்டங்களில் அனைத்து சாதிகளையும் சார்ந்த உழைப்பாளி மக்கள் பங்கேற்கும் வகையிலும் தமிழகத்தின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி இதேபோல அகில இந்திய அளவில் தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி போன்ற விரிந்து பரந்த ஜனநாயக மேடைகளை உருவாக்கியுள்ளது. இப்போராட்டங்களை வர்க்கப் போராட்டத்தின் பின்னிப்பிணைந்த பகுதியாக முன்னெடுத்துச் செல்கிறது. தனது 50 ஆம் ஆண்டு பொன்விழாவில் அடியெடுத்து வைத்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இக்கடமையை நிறைவேற்றுவதில் மென்மேலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றும் என உறுதி ஏற்கிறது.

இலங்கையும் – தேசிய இனப்பிரச்சனையும்!

இலங்கைத் தமிழர் பிரச்சனை இந்த நூற்றாண்டின் துயரம். அரசியல் அதிகாரம், மொழி, கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் சிங்கள மேலாதிக்க ஆட்சியாளர்களால் தமிழ் மக்களுக்கு உரிமை மறுக்கப்பட்டது.

முப்பது ஆண்டுகளுக்கு மேல் அமைதியான வழியில் உரிமைக்காகப் போராடியவர்கள் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலை உருவானதற்கு சிங்கள மேலாதிக்கம் தான் காரணம் என்பது மறுக்க முடியாத ஒன்று.

“சமரசம் என்பது கெட்ட சொல் என்று கருதக் கூடாது” என்று “மாவீரன் பகத்சிங்” ஒருமுறை குறிப்பிட்டார். புலிகளுக்கும் அரசுக்கும் உருவான சமரசத் தீர்வுகள் ஒவ்வொரு முறையும் தட்டி விடப்பட்ட உண்மையை மறைக்க முடியாது. அதுவும் இன்றைய துயரத்திற்கு முக்கியமான காரணமாகும்.

நேபாள மாவோயிஸ்ட், இதே காலத்தில் உலக சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கணக்கில் எடுத்து ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு, தேர்தலில் வெற்றி பெற்று – நேபாள மன்னனை நீக்கி ஜனநாயகத்தை உருவாக்கினார் கள்.

தமிழ் ஈழ வரலாறு, பண்டைய மன்னர்கள் பெருமை, சிங்களத்தை வென்ற பெருமைகள் இப்போதும் பேசப்பட்டு, எழுதப்பட்டு அதன் பின்னணியில் ஈழம் தவிர எந்த யோசனையையும் ஏற்காத இயக்கங்கள், அறிவு ஜீவிகள், எழுத்தாளர்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தத்துவார்த்த ரீதியாக கடுமையாக விமர்சிக்கிறார்கள். நய்யாண்டி செய்கிறார்கள். இந்திய வர லாற்றில், தமிழக வரலாற்றில் அதிகமாக துப் பாக்கி ரவைகளை தாங்கிய கட்சி, சித்திரவதை களை சந்தித்த கட்சி. இதை விமர்சிக்கும் சாய்வு நாற்காலி அரசியல்வாதிகள் சற்று நிதானமாக உண்மைகளை பார்க்க வேண்டும். இலங்கைத் தமிழர் நலனில் சிபிஐ(எம்)-க்கு மற்றவர்களுக்கு உள்ள அக்கறை உண்டு என்பது அவர்களுக்கும் தெரியும். கடந்த 30 ஆண்டுகளில் தனக்குரிய பங்கை சிபிஐ(எம்) நிறைவேற்றியுள்ளது. மற்ற இயக்கங்கள் பேசுவது போல் சிபிஐ(எம்) பேசவில்லை என்பது உண்மை. எங்கள் எழுத்துக்கள், நாடாளுமன்ற விவாதங்களை கேட்டவர்கள், படித்தவர்கள் எந்த இடத்தில் தவறு என்று இன்று வரை சுட்டிக் காட்டவில்லை.

கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின் காலத்து வரலாறுகளையும் தத்துவார்த்த விளக்கங்களையும் தாராளமாக எடுத்து வைக்கிறார்கள்.

“மார்க்சியத்தின் பால் அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை நம்மை புல்லரிக்க செய்கிறது”. அவர்களுடைய மார்க்சிய பக்தி சுயநிர்ணய உரிமை பற்றி மட்டுமே என்பதும் நமக்குத் தெரியும். தங்களுக்கு உதவும் வார்த்தை களை பெருத்த நம்பிக்கையுடன் அள்ளி வீசுவார்கள்.

இந்த பிரச்சனையின் உண்மையான ஆர்வம் உள்ளவர்களுக்கு சில உண்மைகளை எடுத் துரைக்க வேண்டியுள்ளது:

அரசியல் போராட்டங்களில் வரலாறு ஓர் ஆயுதமாக பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. பலர் இதுகுறித்து தங்கள் கவலைகளை தெரிவித்துள்ளனர்.

பிரபல வரலாற்று அறிஞராகிய பேராசிரியர் ஏரிக் ஹோப்ஸ்பாம் தெரிவித்துள்ள கருத்து மிகவும் கவனிக்கத்தக்கது.

“ஹெராயின் என்ற போதைப் பொருளுக்குப் பொப்பி மலர் மூலப்பொருள். அதுபோல தேசியவாதக் கருத்துக்கள், இனக்குழு சார்ந்த கருத்துக்கள் மற்றும் அடிப்படை வாதங்கள் ஆகியவற்றிற்கு வரலாறு மூலப் பொருளாக அமைகிறது. இப்படியுமான கருத்துக்கு கடந்த காலம் என்பது ஓர் அத்தியாவசியமான கூறு. இக்கருத்துக்கு பொருத்தமான கடந்த காலம் இல்லை என்றால், அதனை வேண்டிய வகையில் ஆக்கிக் கொள்ள முடியும். எதையும் நியாயப்படுத்த கடந்த காலம் உதவுகின்றது. மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு அதிகம் இல்லாத நிகழ்காலத்துக்கு ஒரு புகழ் பூத்த பின்னணியை கடந்த காலம் வழங்குகிறது”.

அவர் மேலும் கூறுகிறார்,

“வரலாறு எழுதும் தொழிலானது அணு ஆய்வுப் பௌதீகவியல் போல அல்லாது யாருக்கும் தீங்கு விளைவிக்காத ஒரு தொழில் என நான் எண்ணிப் பார்த்தேன். ஆனால், இத்தொழில் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதை இப்போது உணர்கிறேன்”. பிரித்தானியாவில் ஐரிஷ் குடியரசுப் படையினர் ரசாயன உரத்தை வெடிகுண்டாக மாற்றுவதற்குப் பயன்படுத்திய தொழிற்சாலைகள் போல் எங்கள் படிப்பறைகள் குண்டு தொழிற்சாலைகளாக மாறக்கூடியவை. இந்நிலை எங்களை (வரலாறு எழுதுவோரை) இருவகையில் பாதிக்கிறது.

ஒன்று, வரலாற்று உண்மைகளை எடுத்துரைக்கும் பொறுப்பு எமக்கு இருப்பதைப் பொதுவாக உணர்ந்து கொள்வது.

இரண்டாவதாக, அரசியல் தத்துவ நோக்கங்களுக்காக வரலாறு தவறாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்டிக்கும் பொறுப்பு எமக்கு இருப்பதை சிறப்பாக உணர்ந்து கொள்வது.

“உலகம் இன்றைய நிலையை எப்படி அடைந்தது என்பதை விளங்க வைப்பதில் வரலாறு முன்னேற்றம் கண்டுள்ளது என்பது பேராசிரியர் ஏரிக் ஹோப்ஸ்பாம் கருத்தாகும்”.

தற்போது காணப்படும் அரசியல் நிலைக்கு அடிகோலிய தமிழர் உரிமைப் போராட்டம் இன்றைய உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனித உரிமைகளின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டியது. இது அவர் அவர் வரலாற்றின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை ஆகாது.

இரண்டாவது உலக யுத்தத்திற்கு பின் உலகின் விடுதலை அடைந்த நாடுகளில் இன்று இனப்பிரச்சனை, மொழிப் பிரச்சனை, மதப் பிரச்சனை, ஏற்றத்தாழ்வுகள் போன்ற ஏராளமான பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ளது.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தானை பிரித்தது ஒரு விபத்து. இதை அன்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் ஆதரித்தது உண்மை.

பாகிஸ்தான் கோரிக்கை பலம் பெற்றவுடன் சீக்கியர்கள் தனிநாடு கோரினர், இந்து மகாசபை இந்துராஷ்புரா என்ற கோஷத்தை முன்வைத்தன. தெற்கே திராவிட நாடு என்கிற கோரிக்கை உருவானது. பல மொழிகள், பல இனங்கள் கொண்ட மக்கள் மத்தியில் ஒற்றுமையை உருவாக்குவது என்பது கம்யூனிஸ்ட்டுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது. 500-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் மீண்டும் உருவாவது வளர்ச் சிக்கு உதவாது. இதுகுறித்து ,

கம்யூனிஸ்ட் இயக்கத்திலும் வலுவான வாதங்கள், பிரதிவாதங்கள் உருவானது மார்க்சிய ஆதாரங்கள் கொடுக்கப்பட்டது.

தென்னகத்தைப் பொருத்தவரை மொழியால் பிரிந்து (திராவிடம்) இனம் நாடு உருவாக்குவது.

சுயநிர்ணய உரிமை குறித்து திமுக தலைவர்கள் இன்று வைக்கும் வாதங்களை விட ஆயிரம் மடங்கு வாதங்கள், தத்துவார்த்த சான்றுகள், வரலாறு போன்றவற்றை திராவிட இயக்கம் வைத்தது. அன்று திமுக விடம் 60-க்கு மேற்பட்ட வார இதழ்கள் இருந்தது. ஒரு ஜனசக்தி அதற்கு எதிரானப் போராட்டத்தை நடத்தியது.

சோவியத் ஒன்றியம் உருவானபோது இதர சிறிய இன மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டிய தேவை அன்றைய ரஷ்ய கம்யூனிஸ்டுகளுக்கு இருந்தது. அந்த சிறிய இன மக்கள் சாரிஸ்ட ரஷ்ய மேலாதிக்கத்தினால் ஒடுக்கப்பட்டு இருந்தனர். ஆகவே தான், தோழர் லெனின் சோவியத் அரசியல் சட்டத்தின் பிரிவு 17-ல் தேசிய குடியரசுகளுக்கு பிரிந்து போகும் உரிமை உண்டு என்று வடிவமைக்கப்பட்டது: சிலகாலம் யூகோஸ்லாவியாவின் அரசியல் சட்டத்தில் இருந்து பிறகு அது நீக்கப்பட்டுவிட்டது.

“சுயநிர்ணய உரிமை குறித்து குரல் கொடுக்கும் நண்பர்கள் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் என்று முடித்து விடுகிறார்கள். அவர்கள் வாதத்திற்கு அது உதவுகிறது”.

“1948 மக்கள் சீனத்தில் மாவோ தலைமையில் ஆட்சி அமைத்த கம்யூனிஸ்டுகள் தங்கள் அரசியல் சட்டத்தில் லெனின் பாதையை பின்பற்றவில்லை. திபெத்தியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற தலாய் லாமா-வின் கோரிக்கையை மக்கள் சீனம் ஏற்கவில்லை. அவருடைய மடத்தை சார்ந்த பஞ்சன் லாமா சீன நிலை சரி என்று சீனாவில் இருந்துவிட்டார்”.

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இதுகுறித்து 1942 காலங்களில் விவாதம் தொடங்கிவிட்டது. பல பிரச்சனைகளுக்கு மார்க்ஸ், லெனின் உரைகளில் இருந்து மேற்கோள் காட்டி பல தோழர்கள் பேசினர்.

அந்த விவாதத்திற்கு பதில் உரைக்கும் போது தோழர் மாவோ கூறுகிறார்:

இப்போதும் கூட சிலர் மார்க்சிய-லெனினிய எழுத்தாளர்கள் அவையிலிருந்து சில மேற்கோள்களை எடுத்துச் சொல்லி அவைகளே அனைத்து தீங்குகளையும் எளிதாக தீர்க்கவல்லது என்று கருதுகின்றனர். அறியாமையில் உழலும் அத்தகையோர் தான் மார்க்சிசம்-லெனினிசத்தை ஒரு வகையான சமயகோட்பாடாக கருதுகின்றனர். அவர்களிடம் மழுப்பல் எதுவுமில்லாமல் தெளிவாகச் சொல்லிட வேண்டும்.

“உங்கள் கோட்பாடு எந்தப் பயனுமற்றது நம்முடைய கொள்கை வறட்டுச் சிந்தாந்தமல்ல; செயலுக்கான வழிகாட்டி என மார்க்ஸ், லெனின் மற்றும் ஸ்டாலின் திரும்பத் திரும்ப வலியுறுத்தியுள்ளனர். அத்தகைய சிறப்புமிக்க மிகமிக முக்கியமான வழிகாட்டுதலை இந்த மனிதர்கள் மறந்துவிடுகிறார்கள்”.

சுயநிர்ணய உரிமைக்காக வாதாடுகிறவர்கள் மார்க்ஸ், லெனின், ஸ்டாலினுடன் நின்றுவிடு வார்கள். தோழர் மாவோவிடம் நெருங்கமாட் டார்கள். இந்த வியாபாரிகள் தேவைப்பட்டால் மாவோ – கம்யூனிஸ்ட் அல்ல என்றும் எழுதுவார் கள். உலக வரலாற்றில் இயற்கையை புரிந்து கொள்ள  நிக்கோலஸ் கோபர்நிக்கஸ், கலிலியோ போன்றவர்கள் எடுத்த முயற்சிக்கு மேல் புதிய கண்டுபிடிப்புக்களை ஐசக் நியூட்டன் கண்டு பிடித்தவுடன், மற்றவர்களை ஐசக் நியூட்டன் நிராகரிக்கவில்லை. மாறாக 1676-ல் ஐசக் நியூட்டன் ராபர்ட் ஹீக்குக்கு எழுதிய கடிதத்தில்  எனக்கு முன்னோடியாக இருந்த பேரறி வாளர்களின் தோள்களின் மீது நின்று தான் என்னால் முன்னோக்கி பார்க்க முடிகிறது என்று கூறினார்.  இன்றைய உலக நிலைகளை புரிந்து கொள்ள திட்டவட்டமான நிலைமைகள் குறித்து திட்ட வட்டமான பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும் மார்க்சிய-லெனி னியத்தின் மீற முடியாத கருவியாக இக்கோட் பாடு கருதப்படுகிறது. இதைத்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பின்பற்றுகிறது.

எந்த அரசும், முதலாளித்துவ அரசாகவோ, சோசலிச அரசாகவோ இருந்தாலும், பிரிவினையை கொண்டுவரும் வழிமுறைகளுக்கான அடிப்படை விதியினை எடுத்து விளம்பியதில்லை: அப்படிச் செய்யும் என எதிர்பார்க்கவும் இயலாது. ஆப்ரகாம் லிங்கன் சொன்னது போல் எந்த அரசும் தானே கலைந்து (கரைந்து) போவதற்கான வழி வகுப்பதில்லை.

எதற்காக இந்த நண்பர்கள் சிபிஐ (எம்) ஐ தாக்குகிறார்கள். இந்தியாவில் சிபிஐ, சிபிஐ(எம்-எல்), சிபிஐ(எம்) ஆகிய அனைவரும் இலங்கை இனப்பிரச்சனை குறித்து ஒரே நிலை எடுத்துள்ளது. உலகில் எந்த கம்யூனிஸ்ட் கட்சியும் இலங்கையில் பிரிவினை கோருவதும் ஈழம் அமைவதும் தேவை என்று கூறவில்லை என்பது புரிந்தும், சிபிஐ(எம்) கட்சியை விமர்சிக்கும் இவர்களுக்கு ஓர் அரசியல் நோக்கம் இருக்கிறது. அந்த நோக்கம் நிறைவேறாது…

“தொழிலாளிகளிடையே சமூக-ஜனநாயகவாத (கம்யூனிச) உணர்வு இருந்திருக்க முடியாது என்று சொன்னோம். அது வெளியிலிருந்துதான் அவர்களுக்கு கொண்டுவரப்பட வேண்டும். பாட்டாளி வர்க்கம் தனது சொந்த முயற்சிகள் மூலமாகத் தொழிற்சங்க உணர்வு மட்டுமே அதாவது தொழிற் சங்கங்களில் ஒன்றுபடுவது, முதலாளிகளை எதிர்த்துப் போராடுவது, இன்றியமையாமையாத தொழிலாளர் சட்டங்களை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்த முயல்வது, முதலியவற்றின் இன்றியமையாமைப் பற்றிய துணிவு மட்டுமே – வளர்த்துக்கொள்ள முடிகிறது என்று எல்லா நாடுகளின் வரலாறு புலப்படுத்துகிறது. ஆனால் சோஷலிசத்தின் கொள்கை, மெய்யறிவுவகைப்பட்ட, வரலாறு வழிப்பட்ட, பொருளாதார வகைப்பட்ட கொள்கைகளிலிருந்து வளர்ந்ததாகும். சொத்துள்ள வர்க்கங்களின் பிரதி நிதிகள், அறிவுத்துறையினர், அவற்றை வகுத்து விளக்கினர். நவீன விஞ்ஞான சோசலிஸத்தின் மூலவர்களான மார்க்சும், எங்கெல்சும் முதலாளி வர்க்கப் போக்கான படிப்பாளிப் பகுதியினரைச் சேர்ந்தவர்கள்” – லெனின் – என்ன செய்ய வேண்டும் என்ற நூலிலிருந்து.

வெல்வதற்கோர் பொன்னுலகம்!

சமுதாய வாழ்க்கையெனும் அரங்கினையும் தன்னுள் கொண்டு முரணற்றதாய் அமைந்த பொருள்முதல்வாதம்; வளர்ச்சி பற்றிய மிக விரிவான, மிக ஆழமான போதனையாகிய இயக்கவியல்; வர்க்கப் போராட்டத்தையும், ஒரு புதிய, கம்யூனிச சமுதாயத்தின் படைப்பாளனாகிய பாட்டாளி வர்க்கத்திற்குள்ள உலக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரட்சிகர பாத்திரத்தையும் பற்றிய தத்துவம் – இவையாவும் அடங்கிய ஒரு புதிய உலகக் கண்ணோட்டத்தை இந்த நூல் மாமேதைக்குரிய தெளிவோடும், ஒளிச்சுடரோடும் எடுத்துரைக்கிறது. மாமேதை லெனின் அவர்கள் மார்க்சும், ஏங்கல்சும் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பற்றி தெரிவித்துள்ள கருத்தாகும்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியாகி ஒன்றரை நூற்றாண்டு கடந்துவிட்ட போதிலும், இன்றைய சூழலுடன் பொருத்திப் பார்த்து, படித்து பயன்பெற வேண்டிய நூல் என்றால் மிகையாகாது. ஆங்கிலத்தில் A World to Win என்று லெப்ட் வேர்டு பதிப்பகம் வெளியிட்ட நூலை பாரதி புத்தகாலயம் தமிழில் வெளியிட்டுள்ளது. கடினமான அரசியல், பொருளாதார கருத்துக்களை, எளிமையான, அழகான நடையில் மொழி பெயர்த்துள்ள கி.இலக்குவன் அவர்கள் பாராட்டுக்குரியவர். தமிழில் இதை வெளியிட்ட பாரதி புத்தகாலயத்திற்கு பாராட்டுக்கள். இதில் மூன்று முக்கிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மார்க்சீய அறிஞர்களான பிரபாத் பட்நாயக், இர்பான் ஹபீப் மற்றும் அய்ஜாஸ் அகமது ஆகியோரின் கட்டுரைகளுக்கு தோழர் பிரகாஷ் காரத் அறிமுக உரை எழுதியுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மீண்டும் படிக்கத் தூண்டும் வகையில் அறிமுக உரை அமைந்துள்ளது. இந்நூலை படித்து விட்டு, கம்யூனிஸ்ட்டு கட்சி அறிக்கையை, அதன் பல பதிப்புகள், அவற்றிற்கு மார்க்ஸ், ஏங்கெல்ஸ் எழுதியுள்ள முகவுரையை படிப்பது சிறந்த அனுபவமாக அமையும். (இந்த கட்டுரையாளர் அப்படி வாசித்தது பயனுள்ளது என குறிப்பிட விரும்புகிறார்.) பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பாவில் நிலவியசூ ழல், பாரீஸ் கம்யூன் புரட்சி, பிரஞ்சு புரட்சி பற்றி தோழர். பிரகாஷ் காரத் குறிப்பிடுகிறார். 1864 ல் உழைக்கும் மக்கள் சங்கம், மார்க்சீய சிந்தனைகள் வளர்ச்சி பற்றி குறிப்பிடும் அவர், 1948 ல் கம்யூனிஸ்ட் பிரகடனத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவின் போது, உலகம் எந்த அளவு மாறியுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். சோவியத் யூனியன், மக்கள் சீனம், வியட்நாம், கொரியா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் என மக்கள் ஜனநாயக அரசுகள் ஏற்பட்ட காலம் அது. ஆனால், சோவியத் யூனியன் உடைந்த பின் சோசலிசம் செத்துப் போய் விட்டது என்ற புலம்பலும், முதலாளித்துவத்திற்கு மாற்று இல்லை என்ற ஏகாதிபத்திய நாடுகளின் கொக்கரிப்பும், சோசலிசத் தின் சாத்தியப்பாடு பற்றி சிந்தனையாளர்களின் கவனத்தை திருப்பியது.

சோவியத் யூனியன் வீழ்ந்த பின், உலக நாடுகளுக்கு தலைவனாக, தட்டிக் கேட்க ஆளில்லாதது போன்று ஏகாதிபத்திய அமெரிக்கா செயல்படத் துவங்கிய உடனேயே தொண்ணூறுகளின் பின் பகுதியில், வளர்ந்த நாடுகளில் வெடித்த உழைக்கும் மக்களின் போராட்டம், குறிப்பாக, பிரெஞ்சு நாட்டுத் தொழிலாளர் போராட்டம் முதலாளித்துவம் நிரந்தரமானது அல்ல என்ற கருத்தை மீண்டும் வலுவாக நிலை நிறுத்தியது.

தனது அறிமுக உரையின் இரண்டாவது பகுதியில் கம்யூனிஸ்டு பிரகடனத்தில் முதலாளித்துவம் பற்றிய மார்க்சின் ஆய்வு முழுமை பெறவில்லை என்றும் மூலதனம் என்ற நூல் தான் முழுமையாக அப்பணியைச் செய்துள்ளது என்று தோழர்.காரத் குறிப்பிடுகிறார். மேலும், இன்றைய சூழலில், நிதி மூலதனத்தின் வளர்ச்சி,  அதனால் ஏற்படும் பிரச்சனைகள், பொருளாதார சீர்குலைவுகள் பற்றி தெளிவாக விளக்கியுள்ளார். முதலாளித்துவம் உலகளாவிய அளவில் செயல்பட்டாலும், தேசிய எல்லைக்குள் வர்க்கப் போராட்டம் நடத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை கம்யூனிஸ்டு பிரகடனம் வலியுறுத்துவது, இன்றும் பொருத்தமாக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். இன்றைய சந்தை சார் பொருளா தாரத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ள ஆளும் வர்க்கங்கள் அதை நிலையானதாக கருத இயலாது என்றும், தங்கள் நிலை பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டி இருக்குமென்றும் கூறுகிறார்.

மேலும், சுயாதிபத்தியத்தை ஒரு நாடு இழக்கும் போது, அந்நாட்டு மக்கள் தங்களை தாங்களே ஆளும் உரிமையை இழக்கின்றனர் என்பதை இன்றைய இந்திய சூழலுடன் பொருத்தி விளக்கியுள்ளார். வர்க்கப் போராட்டத்தை நாம் திறமையாக கையாள வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. தோழர்.காரத்தின் அறிமுக உரையின் மூன்றாவது பாகத்தில், இன, குழுவாதம், மதம் மற்றும் தேசிய அடிப்படையில் பல்வேறு சிக்கல்கள் தோன்றியுள்ளதையும், இவற்றினால் ஏகாதிபத்தியத்திற்கெதிரான போராட்டங்களுக்குத் தடைகள் ஏற்படுகின்றன என்பதை வலியுறுத்தியுள்ளார். சாதி, மத, இன அடிப்படையில் எவ்வளவு மோதல்கள்? ஆப்கனில் தாலிபன், பாகிஸ்தானில் உள்ள மத அடிப்படைவாதிகள், இந்தியாவில் இந்து மத வெறியர்கள் ஆகியவற்றுடன் அமெரிக்க ஏகாதிபத்தியம் சேர்ந்து செயல்படுகிறது. இதனால் மக்கள் ஒற்றுமை பாதிக்கப்படுகிறது. சோவியத் யூனியன் மற்றும் யூகோஸ்லாவியாவில் நடைபெற்ற நிகழ்வுகள், பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட நாடுகளின் பிரச்சனைப் பற்றி மார்க்சீய தத்துவம் மற்றும் நடைமுறைகள் காட்டும் வழிகாட்டுதல் குறித்த ஒரு புதிய பார்வையின் அவசியத்தை உணர்த்துகின்றன என்று கூறுகிறார்.

நான்காம் பகுதியில், சோசலிசம் சந்தித்த பின்னடைவுகள் காரணமாகத் தோன்றியுள்ள திரிபுவாத போக்குகள் குறித்து கவனத்தை ஈர்க்கும் அதே சமயம், தொழிலாளி வர்க்கம் மட்டுமே ஏகாதிபத்திய தாக்குதலை தொடர்ந்து எதிர்த்து வருகிறதென்ப தையும் சுட்டிக்காட்டியுள்ளார். கம்யூனிஸ்டு பிரகடனத்திலிருந்து மேற்கோள் காட்டி, ஆண்களின் உழைப்பு அகற்றப்பட்டு, பெண் தொழிலாளர்கள் அமர்த்தப்படுவதைக் குறிப்பிட்டு, 20 – ம் நூற்றாண்டு இறுதிக் கணக்கின் படி, வளர்ந்துள்ள முதலாளித்துவ நாடுகளில் உழைப்பாளர் படையில் 60 சதம் பெண்கள் உள்ளனர் என்பதை குறிப்பிடுகிறார். உழைக்கும் வர்க்கத்தின் ஒரு அங்கமாக பெண் தொழிலாளர்கள் மாற்றப்படாவிட்டால், பிரகடனத்தின் நோக்கத்தை நிறைவேற்ற இயலாதென எச்சரிக்கிறார். அனைத்து நாடுகளிலுமுள்ள தொழிலாளி வர்க்க கட்சிகளுக்குள்ளே கம்யூனிஸ்டுகள் தான், மிகவும் முன்னேறிய, மிகவும் நெஞ்சுறுதி படைத்தவர் என பிரகடனத்தில் கூறியுள்ளது மிகவும் சரியான நிலை என்று வலியுறுத்தியுள்ளார். இப்பகுதியின் இறுதியில், இருபதாம் நூற்றாண்டில் சோவியத் யூனியன் மற்றும் இதர சோசலிச நாடுகள் சந்தித்த அனுபவங்களின் அடிப்படையில் கட்சி பற்றியும், வர்க்கம் பற்றியும், அரசு பற்றியும், பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இன்றளவும் விடை காணப்படாதவையாகவும் நீடிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

அறிமுக உரையின் இறுதிப் பகுதியில் இன்று கட்சியின் செல்வாக்கு, பணிகள், பலம், பலவீனம் பற்றி பொதுச் செயலாளர் சுருக்கமாக தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

கம்யூனிஸ்ட் பிரகடனம் – அன்றும் இன்றும் என்ற அய்ஜாஸ் அகமதுவின் கட்டுரை மிகவும் சுவாரசியமாக எழுதப்பட்டுள்ளது. துவக்கத்திலேயே, பைபிள், குரானுக்கு அடுத்தபடியாக விரிவான முறையில்  அறியப்பட்ட நூல் கம்யூனிஸ்ட் பிரகடனம் என்கிறார் ஆசிரியர். போல்ஷ்விக் புரட்சிக்கு முன்பு 35 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது என்பதும், அக்காலத்திலேயே 544 பதிப்புகள் வெளிவந்தன என்பதும் அதன் சிறப்பை வெளிப்படுத்து கின்றன. 1917 நவம்பர் புரட்சிக்குப் பின்னர் மேலும் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, எண்ணற்ற பதிப்புகள் வெளியாகின என்பதும் இந்நூலின் செல்வாக்கு எந்த அளவுக்கு இருந்ததென்பதை காட்டுகிறது பைபிள், குரான் போலின்றி, வெளியிட்டு 150 ஆண்டுகளுக்குள் இந்நூல் ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிக அதிகம். இது ஒரு இளமை ததும்பும் நூல் என்கிறார் கட்டுரையாளர், மற்ற நூல்களைக் காட்டிலும், இந்நூல் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தக் காரணம் அதன் அரசியல் வலிமை என்று குறிப்பிடப் பட்டுள்ளது மிகவும் பொருத்தமானதாகும். அதேபோல, இந்த நூலின் உரைநடை வீச்சின் கம்பீரம், சமூகங்களை பீடித்துள்ள நோய் பற்றிய நிர்ணயிப்பையும், எதிர்கால நிகழ்வுகளைப் பற்றிய கணிப்பும்….. பிரகடனத்தின் சிறப்புக்குக் காரணம் என்கிறார் அகமது.

மார்க்சும், ஏங்கெல்சும் இணைந்தும், மார்க்ஸ் தனியாகவும் ஏராளமான நூல்களை எழுதிய போதிலும், 30 வயது கூட நிரம்பாத இளைஞரான ஒருவரின் அறிவு முதிர்ச்சி மிக்க நூல்தான் பிரகடனம் என்கிறார் கட்டுரையாளர் அகமது. மார்க்சின் மற்றநூல்களை மேற்கோள் காட்டி, அவை அன்று நிலவிய அரசியல் சிந்தனை போக்குகளுக்கெதிராக அவரது தத்துவ மோதல்களின் அடையா ளங்கள் என்று குறிப்பிடுகிறார், அவை குறிப்பிட்ட நூலாசிரியர் களுக்கெதிராக, அச்சிந்தனைகளுக்கு எதிராக எழுதப்பட்டவை என்றும் விளக்குகிறார். ஆனால், பிரகடனத்தின் மறக்க முடியாத முற்பகுதி எந்த ஒரு சிந்தனையாளருக்கோ, சிந்தனைப்போக்கு களுக்கோ எதிரான விமர்சனமாக இது அமையவில்லை. மாறாக, அதுவரை மார்க்ஸ் எழுதிய நூல்களுக்குள்ளேயே முதன் முறையாக தனது கருத்துக்களை அழுத்தந்திருத்தமாக விவரிக்கக்கூடிய ஒரு பகுதியாகவே உள்ளது என்றும், இந்நூல் அரசியல், பொருளா தாரம், வரலாறு, தத்துவம் ஆகியவற்றுக்கிடையே ஒரு புதிய உறவு முறைக்கான இலக்கணத்தை வகுக்கும் நூல் என்றும் நூலின் அம்சங்களைப் பற்றி விளக்குகையில் கூறுகிறார், இந்நூல் ஒரே நேரத்தில் இரண்டு விதமான அசைவுகளைச் சுட்டிக்காட்டியது. ஒன்று பொருளியல் உலகில் நடைபெறும் அசைவு அதாவது பல்வேறு உற்பத்தி முறைகளைப் பொதுவான முறையில் விளக்கு வதன் மூலம் தத்துவம் என்ற அறிவியல் ஆய்வை உறுதிப்படுத்தக் கூடிய ஒரு வரலாற்றுக் கோட்பாடு……. இரண்டாவது – நீதிநெறி முறைகளுக்கு முரணான, பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு உலகத்தை புரட்சிகரமான மாற்றங்கள் மூலம் மாற்றியமைக்கும் நெறிமுறை சார்ந்த திட்டம். இரண்டுவிதமான அம்சங்கள் குறித்தும் மார்க்சியம் கவனம் செலுத்தியுள்ளது என்றும் நூலின் முக்கியத் துவம் பற்றி நிறைய விளக்கியுள்ளார். முதலாளித்துவத்தை எப்படிப் பார்க்க வேண்டும்?

முதலாளித்துவத்தின் சாரத்தைப் புரிந்து கொள்ள வேண்டு மென்றால் அதனை ஆடாமல் அசையாமல் இருக்கும் ஒரு சமூக அமைப்பாக பார்க்கக்கூடாது (பக்கம் 30) என்பதே மார்க்சின் பதில். மேலும், மார்க்சின் அனைத்து படைப்புகளிலும் உள்ள மூன்று முக்கிய அம்சங்களாக கட்டுரையாளர் குறிப்பிடுபவை:

  1. முதலாளித்துவ உற்பத்தி முறையைப் பற்றி மிகவும் கூர்மையான முறையிலும், மிகவும் விரிவான முறையிலும் விளக்குவதற்கான முயற்சி……….
  2. அவர் காலத்திலும், அவரைச் சுற்றியும் உருவாகி வந்த வரலாறு மற்றும் அரசியல் பற்றிய விரிவான பரிசீலனை………
  3. தொழிலாளர் இயக்கம் பரிசீலிக்க வேண்டிய பிரச்சனைகள் ஆகும்.

பிரகடனம் பற்றிய பல்வேறு அணுகுமுறைகளை கட்டுரையாளர் விளக்கியுள்ளார், ஹெகலின் கருத்துக்கு எதிராக மார்க்ஸ் தனது கருத்துக்களை வெளிப்படுத்த ஆரம்பித்தார் என்றும், உணர்வு என்பதை கருப்பொருளாகக் கொண்டு பல கட்டுரைகளை எழுதினார் மார்க்ஸ் என்றும் கூறுகிறார், உணர்வு பற்றிய மார்க்சின் மிகவும் பிரபலமான வாசகமும் மேற்கோளாகக் காட்டப் பட்டுள்ளது. மனிதனுடைய உணர்வு அவனது வாழ்நிலையை தீர்மானிக்கவில்லை. மாறாக, அவனது சமூக வாழ்க்கைத்தான் அவனது உணர்வை தீர்மானிக்கிறது (பக்கம் 33).

கட்டுரை ஆசிரியர் பிரகடனத்தை எப்படி பரிசீலிக்கலாம் என்று விளக்கியுள்ளார்.

  1. காலச் சூழலுக்கேற்ப பரிசீலிக்கலாம். (உ.ம் கம்யூனிஸ்ட் லீக், பிளவுபட்டுக் கிடந்த உழைக்கும் வர்க்கம் – வர்க்க ஒற்றுமை……)
  2. சித்தாந்த அடிப்படையில் பரிசீலிக்கலாம். (ஹெகல், ஃபாயர்பாக்….) இப்படி கூறிவிட்டு, பிரகடனத்தை பரிசீலிப்பது என்பது முடிவே இல்லாத ஒன்று என கருதும் அளவுக்கு ஆழமானது சிக்கல் நிறைந்தது, புரிந்து கொள்வதற்கு கடினமானது என்ற தன் கருத்தை முன்வைக்கிறார் பிரகடனத்திலுள்ள அரசியல், பொருளாதார அம்சங்களை ஆராய்ந்து, ஐரோப்பிய சூழல், முதலாளி-தொழிலாளி வர்க்கத் தன்மைகளை விரிவாக எழுதி யுள்ளார். மேலும், முதலாளித்துவ வர்க்கம் ஒரு புரட்சிகரமான வர்க்கம் என்ற தன்மையை எப்போது இழக்கும்? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். தனது கருத்துக்களுக்கு வலுவூட்ட கிராம்சியின் கருத்துக்களை மேற்கோள்காட்டி விளக்குகிறார். இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் தன்மைகளையும் கட்டுரையாளர் பரிசீலனை செய்துள்ளார். முதலாளித்துவத்தின் விதிகளையும் விளக்கமாக எழுதியுள்ளார்.

அய்ஜாஸ் அகமது கட்டுரையின் கடைசி பகுதியான உலகமயமாக்கல், பொருளாதாரம் பண்பாடு, தற்போதைய சூழலை தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. அதில் ஊடே நூலிழை போன்று ஹெகல் மற்றும் மார்க்சின் கருத்துக்கள் ஆராயப் பட்டுள்ளன. உலகளாவிய வர்க்கம் என்று அதிகாரவர்க்கத்தை ஹெகல் குறிப்பிட்டாலும், மார்க்ஸ் அதற்கெதிரான விளக்கத்தை அளித்துள்ளதை எழுதியுள்ள கட்டுரையாளர் அச்சொல்லிற்கு நீண்ட விளக்கம் தந்துள்ளார். பாட்டாளி வர்க்க நிலைமைகளை விளக்கி கட்டுரையை நிறைவு செய்துள்ளார் அகமது அவர்கள். கட்டுரைக்கு பின் 6 பக்கங்களுக்கு கொடுத்துள்ள குறிப்புகள் சில சொற்களை சரியாக புரிந்து கொள்ள உதவும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

நூலில் இரண்டாவது கட்டுரை மிகச்சிறந்த வரலாற்று அறிஞர் இர்பான் ஹபீப் அவர்களால் எழுதப்பட்டதாகும். தலைப்பு கம்யூனிஸ்ட் பிரகடனத்தில் பொதிந்துள்ள வரலாற்றை வாசிப்பது என்பதாகும் பிரகடனம் பற்றிய எதிர்பார்ப்பு எவ்வாறு இருந்தது என்ற முன்னுரையுடன் கட்டுரை துவங்குகிறது. முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போன்று ஹெகல், ஃபாயர்பாக் பற்றிய மார்க்சின் ஆய்வுரைகள் தொடர்பான மேற்கோள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உணர்வு பற்றிய மார்க்சின் நிலைப்பாட்டை இவரும் குறிப்பிடுகிறார். பொருளியல் வாழ்வு, உற்பத்தி, மனித உழைப்பு பற்றிய கருத்துக்களை முன்வைக்கும் போது, மனிதகுலம் தன்னால் நிறைவேற்றக் கூடிய கடமைகளைத்தான் தனக்கு நிர்ணயித்து கொள்கிறது என்ற மார்க்சின் கூற்று எவ்வளவு பொருத்தமானது என்பதை எடுத்துக் காட்டுகிறார். வரலாற்று சூழல்களின் பின்னணியில் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய செயல் முறைகளின் எல்லைப் பற்றி மார்க்சும், ஏங்கெல்சும் அறிந்திருந்தனர். ஆனால், சிந்தனைகள் மூலமும் அவற்றை புரட்சிகரமான செயல்பாடுகள் நிலைக்கு உயர்த்துவதன் மூலம்தான் உலகையே மாற்றி அமைக்க முடியும் என நம்பினார்கள். பிரகடனம் இதை வெளிப்படுத்துவதாக உள்ளது.

மார்க்சிய ஆய்வு முறை வரலாற்று இயக்கவியல் அடிப் படையில் இருந்தது. முரண்பாடுகளின் தாக்கங்களினால் ஏற்படும் விளைவுகள் வரலாற்று மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்ற பார்வை மிகவும் முக்கியமானது. கொள்கைதான் புரட்சிகரமான நடவடிக்கைகளுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும் என்ற மார்க்ஸ்-ஏங்கெல்சின் நம்பிக்கை மிகவும் முக்கியமான ஒன்றாகும். சமுதாய வரலாற்றை. மனிதகுல வளர்ச்சியை மார்க்சீய அடிப்படையில் புரிந்து கொள்ள பிரகடனத்தை படிப்பது அவசியமாகும். ஒவ்வொரு காலகட்டத்திலும் பொருள் உற்பத்தி நடைபெற்ற விதம், வர்க்கங்கள் உருவான விதம் ஆகியவற்றை புரிந்து கொண்டால்தான் வர்க்கப் போராட்டம் இடையறாமல் நடப்பதை புரிந்துகொள்ள முடியும். வர்க்கப் போராட்டம் சில நேரங்களில் வெளிப்படையாகவும், சில நேரங்களில் மறைமுகமாகவும் நடப்பதை பிரகடனம் சுட்டிக்காட்டுகிறது. மார்க்சின் ஜெர்மன் சித்தாந்தம் என்ற நூல் இதைப்பற்றி விரிவாகவே விளக்கமளிக்கிறது.

இர்பான் ஹபீபின் கட்டுரையில், பிரகடனத்தில் உற்பத்தி முறை என்ற சொல் பயன்படுத்தவில்லை என குறிப்பிடப்படுகிறது. ஆனால், பின்னர் எழுதப்பட்ட நூல்களில் அது பயன்படுத்தப் படுகிறது. இது மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்ய மிகவும் அடிப்படையான ஒன்றாகும். கரிண்ட்ரிஸ் (1857-58) என்ற நூலில் ஆசிய பாணி உற்பத்தி முறை பற்றியும், இந்திய சமூகம் பற்றியும் மார்க்ஸ் நிறைய எழுதியுள்ளார். அப்போது இந்தியாவுக்கு வரலாறு என்ற ஒன்றே இல்லை என மார்க்ஸ் கூறினார். ஆனால் பின்னர் அந்த கருத்தை வெளிப்படுத்தும் வகையில் அவர் எழுதவில்லை என்பது கவனிக்கத்தக்கது. பிரகடனத்திலும் அது சேர்க்கப்படவில்லையென கட்டுரையாளர் தெரிவிக்கிறார். பிரகடனம் முதலாளித்துவ வர்க்கத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றி குறிப்பிடுகிறது. ஆனால் முதலாளித்துவ வர்க்கத்தினர் என்ற சொல்லும் மூலதன உடமையாளர்கள் என்ற சொல்லும் ஒரே பொருளில் பயன்படுத்த வில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மூலதனம் ? சுரண்டல் பற்றிய தனது கருத்துக்களில் மூலதன திரட்சி உருவான விதம் மார்க்சின் புகழ்வாய்ந்த கண்டுபிடிப்பு என கட்டுரையாளர் மார்க்சை பாராட்டுகிறார். ஆடம்ஸ்மித், ரிக்கார் டோ போன்ற தொன்மை பொருளாதார நிபுணர்களின் கருத்துக்களிலிருந்து மாறுபட்டு, முக்கியமான பங்கை மார்க்ஸ் பொருளாதாரம் என்ற சமூக அறிவியலுக்கு ஆற்றியுள்ளார் என மார்க்சை பாராட்டுகிறார்.

இறுதியாக, கம்யூனிஸ்ட் பிரகடனம் என்பது ஒரு குறிப்பிட்ட தேவையை நிறைவேற்ற வடிவமைக்கப்பட்டது என்றும், முக்கியமான கருத்துக்களை மிகச்சரியாக எழுதியுள்ளானர் என்பதும் பிரகடனத்திற்கு கிடைத்த வெற்றி கட்டுரையாளர் பிரகடனத்தை மட்டுமின்றி அதுவெளிவந்த பின் மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் எழுதிய வற்றை படிப்பது பிரகடனத்தின் நோக்கத்தை புரிந்து கொள்ள உதவும் என்று எழுதியிருப்பது வரவேற்கத்தக் கதாகும். அது மட்டுமல்ல ஏராளமான நூல்களை மேற்கோள் காட்டி, வாசிக்கும் உணர்வை தூண்டி இருப்பதும் பாராட்டுக்குரியது.

நூலின் கடைசி கட்டுரையான 150 ஆண்டுகளுக்குப்பிறகு கம்யூனிஸ்ட் அறிக்கை என்பதை பிரபல பொருளாதார அறிஞர் பிரபாத் பட்நாயக் அவர்கள் எழுதியுள்ளார். இந்த கட்டுரையை விஜயராகவன் என்பவர் மொழிபெயர்த்துள்ளார். கம்யூனிஸ்ட் அறிக்கை மார்க்சிய உலக கண்ணோட்டத்தை எழுத்துவடிவில் கொணர்ந்த முதல் முயற்சி என கட்டுரையாளர் பாராட்டுகிறார். ஜெர்மன் தத்துவ ஞானம் என்று மார்க்சும், ஏங்கெல்சும் எழுதியது அப்போது அச்சில் வரவில்லையென்ற போதும் பிரகடனத்தின் அடித்தளமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பிரகடனம் வரலாற்றை பொருள்முதல்வாத பார்வையில் விளக்கி இருப்பது அதன் சிறப்பம்சமாகும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

கம்யூனிஸ்ட் அறிக்கையின் 4 சிறப்பு அம்சங்களை கட்டுரையாளர் கீழ்க் கண்டவாறு சுட்டிக்காட்டுகிறார்.

  1. வரலாற்றின் உள் இயக்கங்களை இனங்கண்டு, சமூக உற்பத்தி சக்திகளுக்கும், உற்பத்தி முறையின் சமூக உறவுகளுக்குமிடையேயான தொடர்பு.
  2. சமூகம் வர்க்க வடிவிலும், வர்க்கப் போராட்ட வடிவிலும் செயல்படுதலை விளக்குதல்.
  3. முதலாளித்துவ உற்பத்தி முறையைப் பற்றிய சிறப்பான, சுருக்கமான ஆய்வு.
  4. முதலாளித்துவம் ஏன் இருக்கிறது என்றும், முதலாளித்துவ மற்றும் அனைத்து வகை சுரண்டல்களிலிருந்தும் மனித குலத்தை எப்படி பாட்டாளி வர்க்கம் விடுவித்து வரலாறு படைக்கும் என்ற விளக்கம் ஆகியவை பிரகடனத்தின் முக்கிய அம்சங்களாகும்.

இவை மட்டுமின்றி, வரலாறு என்பது ஏதோ தனிநபர் வாழ்வின் சம்பவத் தொகுப்பு என்ற பார்வையை அகற்றி, பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் பார்க்க பிரகடனம் உதவியுள்ளது. அதேபோல், முதலாளித்துவ அமைப்பில் உள்ள முரண்பாடுகள், சமூக போக்குகளை விளக்குகிறது என்கிறார் பட்நாயக். கம்யூனிஸ்ட் அறிக்கை புரட்சியை நடைமுறைப்படுத்த முயற்சித்தது. ஐரோப்பிய அரசியல் பொருளாதார நிகழ்வுகளை விளக்கியதுடன் உலகப் புரட்சி பற்றிய போக்குகளையும் பிரகடனம் வரையறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மார்க்சீயம் இன்றும் உயிரோட்டமாக இருப்பதற்கான காரணங்களை எடுத்துக் காட்டுகளுடன் விளக்கும் கட்டுரையாளர் பட்நாயக், மார்க்சின் எழுத்துக்களை முழுமையாக படித்துவிட்டால் மட்டும் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டுவிட்டதாகக் கூற இயலாது என்றும், மார்க்சியத்தை மறு கட்டமைப்பு செய்வதன் மூலம், செய்யப்பட்ட மறு கட்டமைப்பின் வேர்களை மார்க்சினுடைய எழுத்துக்களில் அடையாளம் காணுவது அவசியம் என்றும் கூறுகிறார். ஹார்க் லுக்காசை மேற்கோள் காட்டுகிறார்.

தொண்ணுறுகளில் சோசலிச நாடுகளில் ஏற்பட்ட நிகழ்வுகளையும், உலகமயமாதல், நிதி மூலதனத்தின் ஆதிக்கம், அதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடி ஆகியவற்றை விரிவாக கட்டுரையாளர் எழுதியுள்ளார்.

இன்றயை உலகப் பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபட்டு, முன்னேற்றப் பாதையில் செல்ல சோசலிச திட்டத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்றும், அதற்குப் புதிய ஒருங்கிணைக்கப் பட்ட கோட்பாடுகளை உருவாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதென்றும், கம்யூனிஸ்ட் அறிக்கை அடித்தளமாக அமையும் என்றும் கூறியுள்ளதன் மூலம் சோசலிசம் சாத்தியமே என்பதையும், மனித குல விடுதலைக்கு அதுவே தேவை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார். மூன்று அருமையான கட்டுரைகளையும், சிறந்த அறிமுக உரையும் கொண்ட இந்நூல் கட்சியில் உள்ள ஒவ்வொருவரும் படித்து பயன்பெற வேண்டியவையாகும். இந்த நூலை படித்துவிட்டு, கம்யூனிஸ்ட் அறிக்கையை மீண்டும் வாசித்தால், மார்க்சிய கோட்பாடுகளை எளிதாகப் புரிந்து கொள்ள இயலும்.

சிறந்த மொழி பெயர்ப்பைச் செய்துள்ள கி.இலக்குவன், விஜயராகவன் மற்றும் பாரதி புத்தகாலயத்துக்கு மீண்டும் பாராட்டுகள். கட்டுரையாளர்கள் அனைவருமே மார்க்சின் அசாத்திய புத்திக் கூர்மையையும், சமூக, அரசியல், பொருளா தாரத்தை தீர்க்கதரிசனத்துடன் அலசி ஆராய்ந்திருப்பதைப் பாராட்டியுள்ளனர். விடுபட்ட விசயங்களைச் சுட்டிக்காட்டி யுள்ளனர். ஏராளமான எடுத்துக்காட்டுகள், மேற்கோள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த நூல்களையும் வாசிப்பது மேலும் மார்க்சியத்தை நன்கு புரிந்து கொள்ள சிறந்த வாய்ப்பாக இருக்குமென்பதில் ஐயமில்லை.

தேச அரசியலை நிர்ணயிப்பதில் உள்ளூர் சமூகங்கள்!

(பேராசிரியர் கே.என்.பணிக்கரோடு நடைபெற்ற ஒரு கலந்துரையாடலின் போது, அவர் வெளியிட்ட கருத்துக்கள் அடிப்படையில் கீழ்க்கண்ட கட்டுரை எழுதப்பட்டுள்ளது.)

சமீப ஆண்டுகளில், அரசியலில் இரண்டு அனுபவங்களை நாடு பெற்றுள்ளது.

  • தற்போது அரசியலில், இடதுசாரிகள் முக்கிய பாத்திரம் வகிக்க, இடதும் அல்லாத, வலதும் அல்லாத அரசியல் சக்திகள் அதிகாரத்தில் இருக்கும் நிலை உள்ளது.
  • இதற்கு முன்பு, முழுக்க முழுக்க வலதுசாரி பிற்போக்கு சக்திகள் ஆட்சியதிகாரத்தில் இருந்த நிலை.

இன்று அதிகாரத்தில் இருக்கும் சக்திகள் நாட்டை உலக மூலதனத்தின் ஆதிக்கத்திற்குக் கொண்டு செல்ல முயல்கின்றன. அவ்வப்போது இடதுசாரிகளின் தலையீடு அவர்களது வேகத்தைத் தடுத்தாலும், அவர்களது கொள்கைகள் மாறவில்லை. புதிய தாரளமயம் எனும் பாதையே இன்று ஆட்சியாளர் செல்லும் பாதை.

இதற்கு முந்தைய ஆட்சியாளர்கள் இதே புதிய தாராளமயத்தை கொள்கையாகக் கொண்டு வகுப்புவாதப் பாதையில் நடைபோட்டனர். ஆக இரண்டு அனுபவங்கள் இரண்டு பாதைகளை மக்களின் முன் நிறுத்தியுள்ளன. ஒன்று புதிய தாராளமயம், மற்றொன்று வகுப்பு வாதம்.

தேச அரசியலில் இரண்டு அனுபவங்கள்

ஆளுகிற வர்க்கங்கள் இந்த இரண்டு வழிகளில் ஒன்றைத்தான்  இந்திய மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்; இதைவிட்டால் வேறு மாற்று இல்லை என்ற கருத்தையும், அப்படிப்பட்ட ஒரு நிலையையும் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

இந்த இரண்டு வழிகளும், நாட்டின் அடித்தட்டு உழைப்பாளி வர்க்கங்களுக்கு ஏற்றவை அல்ல. இன்றைய சுரண்டல் அடிமைத் தனத்திலிருந்து மக்கள் விடுதலை பெறுவதற்கு ஏற்றவையாக இந்த இரண்டு தீர்வுகளும் இருந்திட முடியாது.

வகுப்புவாதம் அதிகாரத்தில் இருக்கும் போது, மக்கள் அதன் தீமையை ஓரளவு உணரத் தொடங்கினர். தற்போது அந்த சக்திகள் அதிகாரத்தில் இல்லை என்றாலும், நாடு முழுவதும் தங்களது வகுப்புவாத செயல்பாடுகளை அவர்கள் சுறுசுறுப்பாகச் செய்து வருகின்றனர்.

இன்று அதிகாரத்தில் இருப்போர் புதிய தாராளமயப் பாதையில் சென்று, தவறுகள் பல இழைத்து, மக்கள் நம்பிக்கையை இழக்கிற போது, இதோ நாங்கள் இருக்கிறோம் மாற்று என்று அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற ஓடி வந்துவிடும் நிலையில் இன்னமும் வகுப்புவாதிகள் உள்ளனர்.

எனவே, இந்திய மக்கள் முன்னால், மேற்கண்ட இரண்டு சக்திகளில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுத்தாக வேண்டும் என்ற நிலையை எப்படி மாற்றுவது, வங்கம், கேரளம், திரிபுரா  மாநிலங்களில் இடதுசாரிகளே உறுதியான மாற்று என்ற புரிதல் உருவானதுபோல், நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு இந்தப் புரிதலை ஏற்படுத்துவது எவ்வாறு?

இந்தக் கேள்விகளை எழுப்பி, சரியான விடைகாண வேண்டிய கடமை இடதுசாரி சக்திகளுக்கு உண்டு. இன்றைய காலகட்டம் இதே கேள்விகளுக்கான சரியான விடைகண்டு, சரியான பாதையில் நடைபோடுவதற்கான வாய்ப்பான கால கட்டம்.  இதனை தவறவிடக் கூடாது. வரலாறு பல சமயங்களில் ஒருமுறை அளித்த வாய்ப்பினை மறுமுறை அளிப்பதில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

இடதுசாரி அரசியலும், உழைப்பாளி வர்க்கங்களும்

இடதுசாரிகளின் பொருளாதார, அரசியல், பண்பாட்டு மாற்றுக் கொள்கைகளும், சித்தாந்தங்களும் சமூகத்தில் யாருடைய நலனுக்கானவை? நிச்சயமாக உழைப்பாளி மக்களின் நலன்களை பாதுகாப்பவையே இடதுசாரி சித்தாந்தங்கள். இடதுசாரி சிந்தனை வேர் பரப்பும் வாய்ப்புள்ள பகுதி உழைப்பாளி மக்களே. ஆனால், இங்கு எழும் முரண்பாடு என்னவென்றால், எந்த வர்க்கங்கள் இடதுசாரிகளுக்கு பக்கபலமாக இருக்க வேண்டுமோ, அந்த வர்க்கங்களின் ஒரு சிறு பகுதிதான் தற்போது இடதுசாரி செல்வாக்கின் கீழ் உள்ளனர். பெரும்பகுதி இடதுசாரி இயக்கங்களோடு நெருங்கிட வில்லை.

இம் முரண்பாட்டை தீர்க்க வேண்டுமெனில் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு நாம் விடை காண வேண்டும். இன்று உழைப்பாளி மக்களின் அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கிறது? அவர்கள் தங்களது பெரும்பகுதி நேரத்தை, தொழில் தளத்திலும், குடியிருப்பிலும் செலவிடுகிற நிலையில், எத்தகைய சிந்தனைகளுக்கு ஆட்படுகின்றனர்? அவர்களின் சிந்தனையில் இடதுசாரி கருத்துக்களோ, இடதுசாரி இயக்கங்களோ எத்தனை மணி நேரம் உறவு கொள்ளும் நிலை உள்ளது?

ஒரு உழைப்பாளி தனது வாழ்க்கைப் போராட்டத்திற்கு செலவிடுகிற நேரம் தவிர இதர நேரங்களில் பெரும்பகுதி முதலாளித்துவ ஊடகங்களோடு உறவாடும் நிலை உள்ளது. எப்போதாவது, தனது தொழில் தளத்தில் அல்லது குடியிருப்புப் பகுதியில் நடைபெறும் இடதுசாரி இயக்க நிகழ்ச்சிகளில் வெறும் பார்வையாளனாக பார்க்கிற வாய்ப்பும் கிடைப்பதுண்டு. இதுவும் இடதுசாரி இயக்கங்களின் சுருங்கிய தளம் காரணமாக, ஒரு குறைவான பகுதி உழைப்பாளிகளுக்குத் தான் இந்த அனுபவம் கிடைக்கிறது.

எனவே, பெரும்பகுதி உழைப்பாளிகளிடையே இடதுசாரி சித்தாந்தங்கள் பதிந்து, அவர்களது மனதில் இடதுசாரி அரசியல் உணர்வை ஏற்படுத்தும் பணியை எப்படிச் செய்வது? என்ற கேள்விக்கு விடை காண வேண்டும். இதில் மற்றொரு பிரச்சனையும் எதிர்ப்படுகிறது.

உழைப்பாளிகளை முடமாக்கும் பொதுபுத்தி

பெரும்பாலான உழைப்பாளி மக்கள் கிராம்ஷி குறிப்பிட்ட பொது புத்தி (Common Sense) கொண்டவர்களாக உள்ளனர். அதாவது, ஒரு கருத்தை பெரிய ஊடகங்கள் விரிவாக பரப்புகிறபோது, விமர்சனப்பூர்வமாக பார்க்காமல் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுகிற நிலையில் தான் உழைப்பாளி மக்கள் உள்ளனர்.
உதாரணத்திற்கு, பங்கு வர்த்தகத்தில் குறியீட்டெண் குறைந்தால், நாட்டுப் பொருளாதாரமே வீழ்ச்சியடைந்து விட்டது போன்ற தோற்றத்தை பத்திரிக்கைகள் ஏற்படுத்துகிற போது, அதை அப்படியே சிந்தனையில் போட்டு வைத்துக் கொள்கிற பலரை நாம் காண்கிறோம். இது போன்று விமர்சனப்பூர்வமற்ற வகையில் ஏராளமான கருத்துகள், சினிமா, டி.வி. சீரியல்கள், டி.வி. விவாதங்கள், கலை நிகழ்ச்சிகள் என்ற பல வடிவங்களில் பரவலாக உழைப்பாளி மக்களிடம் கொண்டு செல்லப்படுகின்றன. இதன் மூலம் உழைப்பாளிகளின் சிந்தனையை ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவாக, அவர்களது அதிகாரத்தினை நியாயப்படுத்தும் வகையிலும் மாற்றி அமைத்து விடுகின்றனர்.

இந்நிலையில், இக்கருத்துக்களை கேள்விக்குள்ளாக்கி, விமர்சன ரீதியாக அணுகும் தன்மையை உழைப்பாளி மக்களிடம் ஏற்படுத்தும் பணியை யாரால் செய்ய முடியும்? இதனை இடதுசாரிகள் மட்டுமே செய்ய இயலும். இதனைச் செய்ய வேண்டுமானால், உழைப்பாளி மக்களோடு அன்றாடம் உறவு கொள்ள, அவர்களோடு அன்றாடம் உரையாடிடும் சூழலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இடதுசாரிகளுக்கு உள்ளது.

இந்தச் சூழல் எங்கு உள்ளது? உழைப்பாளி மக்களின் வாழும் இடங்கள் தான். தெரு, கிராமம் என்ற வகையில் அவர்கள் வசிக்கும் இடங்களில், அவர்கள் சமூகமாக இயங்குகிற அந்தத் தளம் தான் பொருத்தமானது. இதையே உள்ளூர் சமூகம் என்கிறோம்.

உள்ளூர் சமூகமே, செயல்படு தளம்

உள்ளூர் சமூக அளவில் அன்றாடம் உழைப்பாளி மக்களோடு உரையாடுவதும் தான், அவர்கள் சிந்தனையை மாற்றுவதற்கான சரியான வழிமுறையாக அமையும். இதுவும், தொடர்ச்சியாக பல காலம் செய்திட வேண்டிய பணி. ஒரு நாள் பிரச்சாரம், ஏதாவது ஒருநாள் அந்த மக்களோடு உறவாடுவது எல்லாம் நிரந்தரத் தாக்கத்தை ஏற்படுத்தாது. சிந்தனை மாற்றம் எனும் மிகப் பெரிய பணி  ஒரு நாள், ஒரு முறை செய்யும் பணிகளால் நிறைவேறாது.

எனவே, உள்ளூர் சமூக அளவில், அன்றாடம் செயல்படும் தன்மையில் இடதுசாரி இயக்கங்களும், அவற்றின் வர்க்க, வெகுஜன அமைப்புகளும் தங்களின் செயல்பாடுகளை வகுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. இதையொட்டிய மற்றொரு பிரச்சனையும் நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

வாழ்க்கை நடைமுறையும் – சிந்தனையும்

மக்களது சிந்தனையில் இடது சித்தாந்தத்தின் மீது பிடிப்பை ஏற்படுத்துவது எனில், பிரச்சாரம், நீண்ட சொற்பொழிவுகள், கருத்தரங்கங்கள், பொதுக்கூட்டங்கள் மூலம் நடைபெறுவதில்லை.

கருத்து, பொருளின் பிரதிபலிப்பே என்பது மார்க்சீய கண்ணோட்டத்தில் பாலபாடம். அறிவியல் ரீதியான இயக்கவியல் பொருள் முதல் வாதம் கூறுவது என்ன? வாழ்க்கை நடைமுறையே சிந்தனையை தீர்மானிக்கிறது என்பதுதான்.

மா – சே – துங் இதனை தனது நடைமுறை பற்றி என்ற கட்டுரையில் விளக்குகிறார்.

ஒரு விஷயத்தை நீங்கள் அறிய வேண்டுமானால், நீங்கள் நேரடியாக, நிலைமைகளை மாற்றுவதற் கான நடைமுறை போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். இதற்கு மார்க்சீய மூலவர்களின் வாழ்க்கையையே உதாரணமாக மாவோ எடுத்துரைக்கிறார்.

மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோர் மகத்தான மேதைகள். எனினும், அவர்களால் புதிய தத்துவார்த்தக் கருத்துக்களை உருவாக்க முடிந்ததற்கு முக்கிய காரணம், அவர்கள் சமூக, வர்க்கப்போராட்ட நடைமுறைகளில் நேரடியாக பங்கேற்றது தான். இது இல்லாமல் இருந்தால், எத்துணை மேதைத்தனம் இருந்தாலும் வெற்றி கிட்டியிருக்காது.

(நடைமுறை பற்றி – மா-சே-துங்)

மார்க்சீய மேதைகளுக்கே புதிய அறிவைப் பெறுவதற்கு அவர்களது நடைமுறைதான் காரணமாக அமைந்தது என்றால், சாதாரண மக்கள் இடதுசாரி சிந்தனையை பெறுவதற்கு நடைமுறை அனுபவம் அவசியம் அல்லவா? அவர்கள் இதனை பெறுவதற்கான சூழ்நிலைகளையும், வாய்ப்புக்களையும் அமைத்துக் கொடுக்க வேண்டியது இடதுசாரி ஊழியரின் கடமை.

தலையீட்டு வடிவங்கள்

நடைமுறைப் பணிகள் மற்றும் போராட்டத்தின் மூலம் தான் மக்கள் சிந்தனை மாற்றம் பெறுவார்கள். முதலாளித்துவ சிந்தனைத் தாக்கத்தின் பிடியில் உள்ள மக்களை விடுவித்து, இடதுசாரி சிந்தனைக்குக் கொண்டுவர வேண்டுமெனில், ஒரு குறிப்பிட்ட சூழலில் மக்களைப் பணியாற்ற வகை செய்தல் வேண்டும். அந்தப் பணியில் மக்கள் ஈடுபடும் போது, நேரடி அனுபவம் வாயிலாக அவர்கள் பொதுபுத்தி யிலிருந்து விடுபட்டு உண்மைகளை அறிவார்கள். இது அவர்களை இடது சாரிப் பாதைக்குக் கொண்டு செல்லும்.

உதாரணமாக, ஒரு படிப்பகமோ, நூலகமோ, இரவுப் பள்ளியோ உள்ளூர் மட்டத்தில் இடதுசாரி ஊழியர்கள் அமைத்து நடத்துகிறபோது, அதில் உள்ளூர் மக்களோடு அன்றாடத் தொடர்புகள் கிடைக்கிறது. இந்தப் படிப்பகம் மற்றும் இரவுப் பள்ளி செயல்பாடுகளில் மக்களின் பங்கேற்பு நிகழ்கிற போது, அவர்களுக்கு புதிய நடைமுறை அனுபவம் கிட்டுகிறது. மற்றொரு உதாரணம் நிலத்திற்கான போராட்டம். நில மீட்சிக்கான ஒரு போராட்டம் நடத்துவது அவசியமானது. ஆனால், ஒருநாள், ஒரு வாரம் அல்லது ஒரு மாத வேலையாக நடத்தி முடித்துக் கொள்வது போதுமானது அல்ல. அதே நேரத்தில் உள்ளூர் மட்டத்தில் ஒட்டு மொத்த விவசாய மேம்பாடு, உற்பத்தி அதிகரிப்பு, இவற்றின் மூலம் விவசாயிகளுக்கான வேலை வாய்ப்பு அதிகரிப் பதற்கான நடவடிக்கைகள் எனும் வகையில் தொடர்ச்சியாக பல ஆண்டுகாலம் விவசாயிகளோடு இடையறாத தொடர்பும், அவர்களை திட்டமிட்ட நடைமுறைக்கான திசைவழியில் நடைபோட வைப்பதும்தான் பலன் தரும். அத்துடன் அவர்கள் இடதுசாரி பாதைக்கு வருவதற்கு அது வழிவகுக்கும்.

ஆக, மேலே சொல்லப்பட்ட கருத்துக்களை தொகுத்துப் பார்க்கிற போது, மூன்று முக்கிய அம்சங்களை இடதுசாரி இயக்க ஊழியர் தனது செயல்பாட்டில் கடைபிடிக்க வேண்டியுள்ளது.

  1. இடதுசாரி சித்தாந்தத்தில் மக்களின் சிந்தனையை கொண்டுவர வேண்டுமெனில், அவர்களோடு அன்றாடம், முகத்துக்கு முகம் நோக்கிய, உரையாடல், கருத்து பரிமாற்றம் மூலமாகவே சாத்தியம்.
  2. உழைப்பாளி மக்களோடு அன்றாடத் தொடர்புக்கு உள்ளூர் சமூகம் என்கிற தளமே, சிறந்த செயல்படு தளம்.
  3. உழைப்பாளி மக்களின் சிந்தனை மாற்றத்திற்கு நேரடி நடைமுறை அனுபவமே பலன் தரும். இதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்த வேண்டும்.

உள்ளூர் மட்டத்தில் பல்வகை பணிகளைச் செய்வதற்கான வாய்ப்புக்கள் உண்டு. அன்றாடம் மக்கள் ஈடுபடும் தொழில் ரீதியான பிரச்சனைகள், விவசாயம், கல்வி, சுகாதாரம், சேவைகள் என உள்ளூர் மட்டத்தில் செயல்படும் வாய்ப்புக்கள் ஏராளமாக உள்ளன.

உள்ளூர் மட்டத்தில் நிலவும் சூழ்நிலைமைகளை அறிந்து, உரிய தலையீட்டு வடிவங்களை திட்டமிட வேண்டும். உள்ளூர் சூழ்நிலைமைகளை அறிவது என்ற கூற்றினைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுதல் அவசியம்.

அதிகார உறவுகள், ஒடுக்கு முறை

உள்ளூர் மட்டத்தில் நிலவும் சூழலை உற்றுக் கவனித்தால், உழைப்பாளி மக்கள் பல்வகை ஒடுக்கு முறைக்கு ஆளாகும் நிலை உள்ளது தெரியவரும். நேரடியாகத் தெரிவது, தலித் மக்கள் தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாகிற ஒடுக்குமுறை. இது அல்லாமல் எளிதில் புலப்படாத பல ஒடுக்குமுறைகள் பல உள்ளன. ஒரு கிராமத்திற்குச் சென்று, கல்வி பயிலுவோர், கல்வி வாய்ப்பு பெற்றவர்கள், படித்தோர் எண்ணிக்கையை கணக்கிட்டால், ஒரு உண்மை தெரியவரும். கணிசமான எண்ணிக்கையிலான உழைப்பாளி மக்கள் கல்வி பெறாதவர்களாக அல்லது தரமான, தகுதியான கல்வி நிலையை எட்டாதவர்களாக இருப்பதைக் காண முடியும். அவர்களது பிள்ளைகளுக்கும் தரமான கல்வி பெறுவதற் கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதைக் காண முடியும்.

இத்தகு நிலை படித்தோர், படிப்பறிவற்றோர் என்ற முரண்பாட்டை ஒரே உள்ளூர் சமூகத்தில் காண முடிகிறது. இந்தப் படிப்பறிவோடு, நிலம், கிராம உற்பத்தியில் அதிக பங்கீடும், செல்வாக்கு என்ற அம்சங்களும் சேர்ந்து குறிப்பிட்ட சில சக்திகள் அதிகாரம் படைத்தோராக விளங்குவதைக் காண முடியும்.

இதர மக்கள், குறிப்பாக உழைப்பாளி மக்கள் கிராமத்து அதிகாரப் பீடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டவர்களாக, ஒடுக்குமுறை வாழ்க்கை வாழ்பவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.

ஒவ்வொரு உள்ளூர் சமூகத்திலும் இந்த அதிகார உறவுகளைக் காணலாம். அனைத்து வாய்ப்பு வசதிகள் கொண்டோர், வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டோர் என்ற பிரிவுகளைக் காணலாம். உள்ளூர் சமூகத்தில் தலையிடுவது, இடதுசாரி சிந்தனைக்கு உழைப்பாளி மக்களைக் கொண்டு வருவது என்று கூறுவதற்கான உண்மையான பொருள் என்ன? உள்ளூர் சமூகத்தில் அதிகார உறவுகளில் மாற்றம் ஏற்படுத்தி, ஒடுக்குமுறைக்கு ஆளாகி அதிகாரமிழந்த உழைப்பாளி மக்களை அதிகாரம் பெற்றவர்களாக ஆக்குவதுதான்.

சேவைப் பணிகளும், அதிகார உறவுகளும்

சிலர் படிப்பகம், இரவுப்பள்ளி போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர். இன்னும் சிலர் மார்க்சிஸ்ட்களுக்கு இதுதான் வேலையா? என முகம் சுளிக்கின்றனர். இன்னும் சிலர் இப்படி அன்றாடம் இரவுப் பள்ளியில் போய் உட்கார்ந்து கொண்டால் ஸ்தாபனப் பணிகள் என்ன ஆவது என்றெல்லாம் கேள்வி எழுப்புகின்றனர்.

ஆனால், உள்ளூர் மட்டத்தில் அதிகார சமத்துவமின்மை நீடித்தால், இடதுசாரி அரசியல் அங்கு நுழைய வாய்ப்பில்லை. ஏனெனில் உழைப்பாளி மக்கள் விழிப்புணர்வு பெறாமல் இருந்தால், ஒடுக்குமுறையை சகித்து வாழ்க்கை நடத்தும் பொறுமை சாலிகளாக இருப்பார்கள். அல்லது, அவ்வப்போது இடதுசாரிகள் நடத்தும் கூட்டங்கள், இயக்கங்களில் தலையை காட்டுபவர் களாகவும் தான் இருப்பார்கள். ஒட்டாத இந்த இயக்கங்கள் உள்ளூர் சமூக அதிகார உறவுகளை எந்த வகையிலும் பாதிக்காது.

ஒரு படிப்பகம் துவங்கி முற்போக்கு இலக்கியங்களை படிக்க வைப்பதும், அது குறித்த உரையாடல், நடத்துகிற போதும், உழைப்பாளி மக்கள் தங்களது வாழ்க்கை ஒடுக்கு முறையிலிருந்து விடுபட உத்வேகம் கொள்கின்றனர். மூடத்தனத்திலேயே தங்களை வைத்துக் கொள்ளச் செய்யும் உள்ளூர் சமூகத்தின் ஆதிக்க சித்தாந்தத்திற்கு எதிரான போர்க்குரல் அவர்கள் இதயத்தில் ஒலிக்கத் துவங்குகிறது.

அதே போன்று, இரவுப் பள்ளியில் அறிவியல் ரீதியான கல்வி அளிக்கும் ஏற்பாட்டை இடதுசாரி ஊழியர்கள் செய்கிறபோது, அதில் தங்களது குழந்தைகளை உழைப்பாளி மக்கள் அனுப்பும் போது அவர்களுக்கு ஒரு சிந்தனை உருவாகிறது. உள்ளூர் சமூகத்தில் அறிவியல் சிந்தனையும், கல்வி பெறும் உரிமையும் உழைப்பாளி மக்களுக்கு மறுக்கப்பட்ட அந்த இயல்பான வாழ்க்கையிலிருந்து அவர்களிடம் மாற்றம் பிறக்கிறது. கல்வி தங்களது உரிமை எனும் அதிகார மறுப்பு சிந்தனை அவர்களிடம் ஏற்படுகிறது.

எனவே, உள்ளூர் சமூகத்தில் உறைந்து கிடக்கும், ஒடுக்குமுறையை எதிர்த்து, அதிகார பீடத்தை தகர்க்கும் போராட் டத்தை நடத்திடாமல் இடதுசாரி இயக்கமும், இடதுசாரி வெகுஜன அமைப்புகளும் உண்மையான வளர்ச்சியை கண்டிட முடியாது.

எனவே, தங்களது இன்றைய செல்வாக்கு பலத்திற்கேற்ப உள்ளூர் சமூகங்களை தேர்ந்தெடுத்து, உரிய தலையீட்டு வடிவங்களை தீர்மானித்து, இடதுசாரி, வர்க்க, வெகுஜன அமைப்புக்கள்  செயலாற்றிட வேண்டும். நாடு முழுவதும் உள்ள கோடானு கோடி உள்ளூர் சமூகங்களில் இந்த நிகழ்வு ஏற்பட இடதுசாரி இயக்கங்கள் முனைய வேண்டும்.

இதுவே, புதிய தாராளமயம், வகுப்புவாதம் என்ற இரண்டு பாதைகளையும், தவிர்த்து இடதுசாரி பாதையில் இந்தியா செல்ல உகந்த வழி.

கம்யூனிஸ்ட்டுகளும், தொழிலாளி வர்க்கமும்

கம்யூனிஸ்ட் தோழர்கள் தொழிற்சங்க இயக்கத்திலும், போராட்டத்திலும் முன்னிலையில் நிற்கின்றன என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. தொழிற்சங்க இயக்கத்தில் கம்யூனிஸ்ட் தலைவர்களும் தோழர்களும் மிகவும் திறமையுடனும் பயனுள்ள முறையிலும் (மற்றவர்களை ஒப்பிடும் பொழுது முதன்மையாகவும்) செயல்படுகிறார்கள் என்று தொழிலாளர்கள் பரவலாக கருதுகிறார்கள். தன்னலமற்ற முறையில் நேர்மையாகவும் உறுதியாகவும் தொழிலாளர் நலன்களை பாதுகாப்பதில் விடாப்பிடியான முயற்சியுடனும் கம்யூனிஸ்ட்டுகள் தலைமை தாங்குகிறார்கள் என்று பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. புதிதாக தொழிற்சங்கங்கள் அமைப்பது பற்றி யோசிக்கம் போது மார்க்சிஸ்ட் தலைவர்களை தலைமையில் வைத்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் ஏராளமான தொழிலாளர்கள் மத்தியில் இயல்பாகவே ஏற்படுகிறது. கம்யூனிஸ்ட்கள் பற்றி இத்தகைய மதிப்பீடு உருவானதற்கு ஆதாரமான காரணங்கள் புரிந்து கொள்ளப்பட வேண்டியுள்ளது. (பிறவியிலேயே கம்யூனிஸ்ட்டுகளுக்கு இந்த நல்ல குணங்கள் அமைந்து விடுகின்றன என்று நினைப்பதானது சிறுப்பிள்ளைத் தனமானது)

கம்யூனிஸ்ட்டுகள் தொழிலாளர் இயக்கத்தில் முன்னணியில் நிற்பதற்கான காரணங்களை ஆராயும்பொழுது சமூக வளர்ச்சிப் பற்றியும் ஒவ்வொரு வர்க்கத்தின் வரலாற்று ரீதியான பாத்திரங் களைப் பற்றியும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு முற்றிலும் தெளிவான விஞ்ஞான ரீதியான ஒரு பார்வை இருப்பதுதான் முக்கிய காரணம் என்று புலனாகும். இது கம்யூனிஸ்ட்டுகளின் அடிப்படையான நோக்கங்களுடன் பின்னிப் பிணைந்து கிடக்கக் கூடிய ஒரு முக்கியமான அம்சமாகும்.

தொழிலாளி வர்க்கம் – புரட்சியின் ஈட்டி முனை

கம்யூனிஸ்ட்டுகள் சோசியலிச இலட்சியத்தை தங்களின் போர்ப்பதாகையாக ஏற்றுக் கொண்டதாகும். சோசியலிச இலட்சியம் என்று கூறும்போது அடிப்படையான இன்றியமையாத தன்மை அரசியல் அதிகாரம் சுரண்டும் வர்க்கங்களிலிருந்து சுரண்டப்படும் வர்க்கங்களின் கைகளுக்கு மாற்றப்படுவது என்பது முக்கியமான தாகும். இத்துடன் இன்றுள்ள சமுதாய அமைப்பில் எல்லா துறைகளிலும் ஆதிக்க வர்க்கங்களின் பிடிமானத்தை உடைத் தெறிவதற்கு முன்னோடியாகத்தான் அரசியல் அதிகாரத்திற்கான போராட்டமாகும். மொத்தமாக இந்த கடமையைத் தான் சோசியலிச புரட்சியின் கடமை என்று கம்யூனிஸ்ட்டுகள் பார்க்கிறார்கள்.

கடுமையான நீண்ட நெடும் காலத்திற்கு நடைபெற வேண்டிய இந்த இலட்சியப் போராட்டத்தின் பாதை எத்தகையவை என்று இக்கட்டுரையில் விளக்க முன்வரவில்லை. பல்வேறு நாடுகளில் உள்ள சூழலிற்கு ஏற்ப வரலாற்றின் வளர்ச்சிப் போக்கிற்கு ஏற்ப இந்தப் பாதை உருவாகும் என்பது பற்றியும் இங்கு விளக்கவில்லை. ஆனால், சோசலிச புரட்சி வெற்றி பெறுவதற்கு அடிப்படையாக இருப்பது வர்க்கப் போராட்டம்தான் என்பது தொழிலாளி வர்க்கம்தான் அந்தப் போராட்டத்தை தலைமை தாங்கவேண்டும் என்றும், உலகத்தின் இதுநாள் வரைக்கும் கிடைத்த ஒரு அனுபவமாகும். ஆக, சோசலிசப் புரட்சிக்கு தலைமை தாங்கி நடத்தக்கூடிய வர்க்கம் தொழிலாளி வர்க்கமாகும் என்பது மிகப் பெரிய உண்மையாகும். தொழிலாளி வர்க்கத்திற்கு இத்தகைய வரலாற்றுரீதியாக பாத்திரம் இருக்கிறது என்பது கம்யூனிஸ்ட்டுகளின் ஆழமான கருத்தாகும்.

இந்த மகத்தான பாத்திரம் குறித்த கருத்து விஞ்ஞான ரீதியான பல அடிப்படை பார்வைகளை ஆதாரமாக அமைந்துள்ளதாகும். அவற்றில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறோம்.

1. இன்றைய முதலாளித்துவ உலகத்தில், முதலாளி வர்க்கத்தை நேருக்கு நேர் சந்தித்து போராடும் வர்க்கம் தொழிலாளி வர்க்கமாகும். சமுதாயத்தில் பல்வேறு வர்க்கப் பிரிவினை இருப்பினும், முதலாளித்துவ சுரண்டலை நேருக்கு நேர் ஒவ்வொரு நிமிடமும் சந்திக்கும் நிலைமையில் உள்ள வர்க்கம் தொழிலாளி வர்க்கம். ஒரு தொழிற்சாலை (அல்லது) ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளி அல்லது ஊழியர் விரும்பியோ, விரும்பாமலோ முதலாளித்துவ சுரண்டலில் பல்வேறு தன்மைகளை நேரில் அனுபவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிரான எண்ணங்கள் இதன் காரணமாக, இயல்பாகவே தொழிலாளர்களின் மனதில் தோன்றுவது இயல்பு. சோசலிசத்துக்கான போராட்டத்தில், நமது முக்கிய எதிரியான முதலாளித்துவ அமைப்பை மனமார வெறுக்கக்கூடிய ஒரு வர்க்கமாக தொழிலாளி வர்க்கம் காட்சியளிக்கிறது. ஆகவே, முதலாளித் துவத்துக்கு எதிரான போராட்டத்தில், இந்த வர்க்கம் இயல்பாகவே முன்னணி பாத்திரத்தை நிறைவேற்றும் நிலையில் உள்ளது.

இந்த முதலாளி வர்க்கத்திற்கும், தொழிலாளர்களுக்கும் உள்ள முரண்பாடு கூர்மையான வர்க்கப் போராட்டம் என்ற உருவத்தில் அனுதினமும் வெடித்துக் கொண்டே இருக்கும். ஆரம்ப நிலையில், முதலாளிக்கு எதிரான வெறுப்பு பல வடிவங்களில் தோற்றமளிக்கும். தொழிற்சங்கங்கள் என்பவை இந்த முரண்பாட்டில் துவக்க நிலை பிரதிபலிப்பே ஆகும்.
சோசலிசத்துக்கான போராட்டத்தில், இவ்வாறு தொழிலாளி வர்க்கம்தான் முன்னணியில் நிற்க வேண்டிய வரலாற்று கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

2. இன்றைய உலகில் உற்பத்தி முறைகள் விஞ்ஞான வளர்ச்சியுடன் நெருங்கி, இணைந்து கிடக்கக்கூடிய தன்மைக் கொண்டதாகும். நவீன விஞ்ஞானத்தில் குணாம்சங்களையும், விதிமுறைகளையும், உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்கள் நேரடியாக பயன்படுத்து கிறார்கள் என்பது ஒரு மகத்தான காரியம். ஆகவேதான், விஞ்ஞானத் தையும், அதன் பயன்பாட்டையும் உட்கொண்டிருக்கக் கூடிய வர்க்கம் நவீன தொழிலாளி வர்க்கம். இந்த தன்மையும் அதன் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணி பாத்திரத்திற்கு மூலகாரணமாகும்.  (தொழிலாளி வர்க்கம் என்று கூறும் போது, உடல் உழைப்பை மட்டுமின்றி நுட்பமான மூளை உழைப்பிலும் ஈடுபட்டுள்ளவர் களையும் சேர்த்துதான் குறிப்பிடுகிறோம்.) இப்பிரிவில் பணியாற்றும் பலரும் தங்களை அறிவுஜீவிகளாக மட்டும் கருதி, தொழிலாளி வர்க்கத்திற்கு அப்பால் நிற்பதாக நினைக்கிறார்கள். ஆயினும், அவர்களும் பல முறைகளில் முதலாளித்துவ சுரண்டலுக்கு உட்பட்டவர்கள் என்பது உண்மை.

3. தொழிலாளி வர்க்கத்தினர் தங்கள் பணிகளை செய்யும் போது, பலரும் சேர்ந்து (கூட்டாக) செயல்பட வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். தனிநபர் என்ற முறையில், செய்யும் பணிக்கு அநேகமாக இடமேயில்லை. இந்த தன்மை காரணமாக, கூட்டாக செயல்படுவது, கூட்டாக வாழ்வது, கூட்டாக சுரண்டலை எதிர்ப்பது போன்ற குணங்கள் இயல்பாகவே, தொழிலாளி வர்க்கம் பெறுகிறது. வேலைப் பாதுகாப்பில் இருந்து, ஊதியம் போன்ற பிரச்சினைகளில் முன்னேற்றம் வரை அனைத்துக் காரியங்களிலும், தொழிலாளர்கள் கூட்டாக செயல்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஏன்? முதலாளி வர்க்கத்தின் சுரண்டலை தனிப்பட்ட ஒரு நபராக எதிர்க்க முடியாது, எதிர்க்கவும் இயலாது, அதுவும்கூட கூட்டாக ஒன்றுபட்டு போராட்டத்தின் மூலமாகத்தான் சாதிக்க முடியும். இத்தகைய காரணங்களால்தான் தனிநபர் உணர்வை விட, கூட்டுணர்வு என்ற உணர்வு நிலை இந்த வர்க்கத்திற்கு அமைகிறது. இந்த உணர்வுதான், சோசலிசம் என்ற கருத்திற்கு ஆதாரமானது. ஒரு ஆலையின் உரிமையாளராக வளர்ந்து, வாழ்க்கையில் முன்னேற முடியும் என்ற எண்ணம் தொழிலாளிக்கு தானாகவே ஏற்படுவதில்லை. ஆலை அனைத்தும், உற்பத்தி கருவிகள் அனைத்தும் பொது சொத்தாக வரவேண்டும் என்ற சோசலிச கருத்து, இயல்பாகவே இந்த வர்க்கத்திற்கு ஏற்படுகிறது. மற்ற எல்லா வர்க்கங்களை விட, கூட்டான வாழ்க்கை, கூட்டான உடமை முறை என்ற கருத்தினை உட்கொண்டிருக்கும் நிலையில் உள்ள வர்க்கம் தொழிலாளி வர்க்கம்.

சொல்லப்போனால், சோசலிசம் என்ற கருத்துக்கூட தொழிலாளி வர்க்கம் என்ற வர்க்கம், வரலாற்று ரீதியாக உருவெடுத்தபிறகுதான், முன்னுக்கு வந்தது. முதலாளி வர்க்கமும், அதன் ஆதிக்கமும், வளர்ந்த கட்டத்தில், ஐரோப்பாவிலும், மற்ற பல நாடுகளிலும், தீவிரமான வர்க்கப் போராட்டங்கள் வெடித்தன. இப்போராட்டங்களில், தொழிலாளி வர்க்கம் ஒரு முன்னணி சக்தியாக, வேகமாக முன்னேறியது. அந்தப் பின்னணியில்தான், விஞ்ஞான சோசலிசம் என்ற கருத்து, உருவாகி, வளர்ந்து, உலகத்தில் சிந்தனைப் போக்குகளை முக்கிய இடத்தைப் பெற்றது. அதுநாள் வரை சோசலிசம் என்பது ஒடுக்கப்பட்ட மனிதர்களின் நியாயம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தின் பிரதிபலிப்பாகும். பெரும்பாலும், இந்த எண்ணம் சுரண்டலற்ற, வர்க்க பேதமற்ற ஒரு சமுதாயம் அமைய வேண்டுமே என்ற கற்பனைவாத கண்ணோட்டமாகவே இருந்தது. இது கற்பனைவாத சோசலிசம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது.

விஞ்ஞானத்தின் வளர்ச்சியில், வர்க்கப் போராட்டத்தின் கூர்மையும் காரணமாக கற்பனைவாத சோசலிசம் என்ற எண்ணப் போக்கிற்கு மாறாக, விஞ்ஞான சோசலிசம் என்ற தத்துவம் வரலாற்றின் அரங்கில் உதயமாயிற்று. வெறும் ஒரு கனவாக இல்லாமல்; சமுதாய வாழ்க்கையில் திசை வழிகளை ஆராய்ந்து விஞ்ஞானரீதியாக வடிவம் கொள்ளப்பட்ட, ஒரு எதார்த்த தத்துவமாக, விஞ்ஞான சோசலிசம் காட்சியளித்தது.

காரல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் போன்ற மாபெரும் மேதைகள் போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டே, விஞ்ஞான சோசலிசம் என்ற தத்துவத்தை முன்வைத்தபோது, வளர்ந்து வரும் தொழிலாளி வர்க்கம் அதை தன்னுடைய தத்துவமாக இயல்பாகவே ஏற்றுக் கொண்டது. இன்றும், சோலிச தத்துவத்தின், ஆதாரமான ஈர்ப்பு சக்தி தொழிலாளி வர்க்கத்தை கவ்விப் பிடித்துக் கொண்டிருக்கிறது. இந்த காரணங்களினால்தான், சோசலிசத்தினுடைய பதாகையை ஏந்தி வரக்கூடிய வர்க்கம்தான் தொழிலாளி வர்க்கம் என்று கம்யூனிஸ்ட்டுகள் கருதுகிறார்கள்.

ஒருவர் தொழிலாளியாக இருப்பதினால், அல்லது அந்த வர்க்கத்தில் பிறந்ததினால், தானாகவே சோசலிசப் புரட்சி பாதைக்கு வந்துவிடுவார்கள் என்று நினைப்பது மூடத்தனமாகும். புதிதாக ஒருவர் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தவுடன் அவர் தொழிற் சங்கத்தில் சேர்ந்து, வர்க்கப் போராட்டத்தில் பங்கேற்கும்போதுதான், அவருடைய மனோ நிலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
தொழிற்சங்க உணர்வில் இருந்து….

இன்றுள்ள நிலைமையில் கம்யூனிஸ்ட்டுகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தொழிலாளர்கள் பல்வேறு ஆலைகளை, நிறுவனங்களை, தொழிற்சங்கங்களை நிறுவி பல முறைகளில் போராட்டங்களை நடத்தும் கட்டாயத்தில், சிக்கிக் கொள்கிறார்கள். இவர்களெல்லாம், தங்களுடைய கோரிக்கைகளை அடைவதற்காக, இந்த முதலாளியை எதிர்த்து போராடுகிறோம் என்ற எண்ணத் துடன்தான் இருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் தொழிலாளி வர்க்கத்தை சார்ந்தவர்கள், முதலாளிகள் அனைவரும் முதலாளி வர்க்கத்தை சார்ந்தவர்கள்தான் என்ற எண்ணம் அவர்களுக்கு இயல்பாகவே ஏற்படுவதில்லை. அவர்களின் எண்ணப் போக்குகளை சுருங்க கூறின், ஆரம்ப நிலை வர்க்க உணர்வு என்று மட்டுமே கூறமுடியும். ஏராளமான தொழிற்சங்க தலைவர்கள், ஏன்? ஊழியர்கள் கூட இந்த ஆரம்ப நிலையிலேயே தங்களுடைய சிந்தனைகளை நிறுத்திக் கொள்கின்றனர்.

கம்யூனிஸ்ட்டுகள் தொழிற்சங்க பணியில் ஈடுபடும்போது, துவக்க நிலையில் இருந்தபோதிலும், தொழிலாளர்களின் வர்க்க உணர்வை வலுப்படுத்தக்கூடிய வகையில் தங்களுடைய பணிகளை அமைக்கிறார்கள். வர்க்க உணர்வுகூட ஏற்படாத தொழிலாளர் களுக்கு புரட்சிகரமான எண்ணங்களெல்லாம், வந்து விடும் என்று நினைப்பது ஒருமுறையில் கற்பனைவாதமாகும்.

வர்க்க உணர்வு என்று கூறும்போது, நாம் அனைவரும், சுரண்டப்படும் வர்க்கம் என்றும், நம்முடைய எதிரிகளாக இருக்கும் சுரண்டல்காரர்களை எதிரி வர்க்கமாகவும், பாகுபடுத்தி காணும் அளவிற்கு அத்தொழிலாளர்களுக்கு உணர்வு நிலையில் மாற்றம் வேண்டும். நாம் அனைவரும் ஒரு வர்க்கம். முதலாளி வர்க்கம் இன்னொரு வர்க்கம் என்ற எண்ணத்தை வளர்ப்பது கம்யூனிஸ்ட்டுகளின் ஆரம்ப நிலைக் கடமை.

இன்றைய சமுதாயத்தில், தொழிலாளி வர்க்கமும் இதர வர்க்கங்களும் வாழ்க்கைப் போராட்டத்தில் அல்லல்பட்டு, தவிப்பதற்கான அடிப்படைக் காரணம் முதலாளித்துவ, நிலப் பிரபுத்துவ சுரண்டல்தான் என்று தொழிலாளர்கள் புரிந்து கொள்ளும்போதுதான் வர்க்க உணர்வுக்கு மூலாதாரமான ஒரு பரிணாமம் ஏற்படும். அது ஏற்படுத்தும் கடமையை உணர்வுபூர்வமாக கம்யூனிஸ்ட்டுகள் நிறைவேற்றுகிறார்கள்.

ஆக, வர்க்க உணர்வில், துவக்க நிலையில் இருந்து, அடுத்த உயர் கட்டதிற்கு தொழிலாளி வர்க்கத்தை அழைத்துச் செல்லும் மகத்தான பணியினைத்தான் கம்யூனிஸ்ட்டுகள் தொழிற்சங்க பணிகள் மூலமாக செய்ய முயற்சிக்கிறார்கள்.

தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபடும்போது, நமது வர்க்க எதிரிக்கு முழுமூச்சுடன் உதவி செய்வது, முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்கள்தான் என்பதை புரிய வைப்பதன் மூலம் உணர்வில் இங்கு ஒரு புதிய பரினாமம் ஏற்படுகிறது. ஏற்படுத்த வேண்டும். கம்யூனிஸ்ட்டுகள் அதைச் செய்கிறார்கள். மற்ற பல தொழிற்சங்கத் தலைவர்கள் அதைச் செய்வதில்லை.

ஆக, நாம் ஒரே வர்க்கத்தை சார்ந்தவர்கள் என்ற உறுதியான எண்ணத்தையும்; நம்முடைய எதிரிகளாக இருப்பது முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ வர்க்கம்தான் என்ற எண்ணமும், சுரண்டல் வர்க்கங்களுக்கு முக்கிய கருவியாக செயல்படுவது அரசுதான் என்ற எண்ணமும், தொழிலாளர்களின் மனதில் பதியும் போது, உண்மையான வர்க்க உணர்வு வேரூன்றுகிறது. கம்யூனிஸ்ட்டுகள் தொழிற்சங்க பணிகளில் ஈடுபடும்போது, இத்தகைய வர்க்க உணர்வை வளர்ப்பது என்ற கடமையை செய்கிறார்கள்.

உண்மையான போர்க்குணமிக்க வர்க்க உணர்வை வளர்த்து தொழிலாளி வர்க்கத்தை ஒரு சக்தியாக முன்னெடுத்துச் செல்வது என்ற ஜீவாதாரமான பார்வையுடன் கம்யூனிஸ்ட்டுகள் தொழிற்சங்க பணிகளில், பங்கேற்கிறார்கள்.

ஆயினும், இந்த உணர்வு மட்டும் தொழிலாளி வர்க்கத்தை ஒரு புரட்சிகரமான வர்க்கமாக உயர்த்தி விடாது என்று நாம் பார்க்க வேண்டும். புரட்சிகரமான வர்க்கமாக வளர்ப்பது என்ற கடமையைப் பற்றி வரும் இதழ்களில் காணலாம்.