நவீன தொழிலாளர்களும், கம்யூனிஸ்ட் அறிக்கையும்

சுகுமால் சென்

Download APP

தமிழில் சுறுக்கமாக : ஆர்.எஸ்.செண்பகம்

வளர்ந்து வரும் தொழில்நுட்ப புரட்சி, உழைப்பில் ஏற்படும் மாற்றங்கள், செயல்முறைகள் ஆகியவற்றின் காரணமாக பாட்டாளி வர்க்கம் வேகமாகக் குறைந்து வருகிறது என்றும், அந்த இடத்தில் ஒரு  ‘புதிய நடுத்தர வர்க்கம்’ வளர்ந்து வருகிறது என்றும், ஒரு கருத்து மார்க்சிய வட்டாரங்களிலும் மற்ற இடதுசாரிகளிடமும் நிலவுகிறது. நடுத்தர வர்க்கத்திற்கு எந்தவொரு புரட்சிகர முன்னோக்குப் பார்வையோ, புரட்சிகர ஆற்றலோ இல்லை என்றும்,  அதிவேகமாக வீழ்ச்சியடைந்து வரும் பாட்டாளி வர்க்கமும் இயற்கையாகவே தன்னுடைய புரட்சிகரத் திறனை  இழந்து கொண்டிருக்கிறது என்றும் குறிப்பிடும் அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வலியுறுத்துகின்ற பாட்டாளி வர்க்க புரட்சிக்கான அறைகூவலை மதிப்பற்ற ஒன்றாக ஆக்கிட முயற்சிக்கிறார்கள்.  இக்கட்டுரையில் நாம் இந்த விஷயத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதுடன், வளர்ந்து வரும் யதார்த்தத்தை சுட்டிக் காட்டவும் முயற்சிப்போம்.

தொழிலாளி வர்க்கத்தின் கட்டமைப்பு மாற்றங்கள்

தற்போது நடந்துவரும் அறிவியல் தொழில்நுட்பப் புரட்சி உற்பத்திசக்திகளின் தனிச்சிறப்புகளில் புதிய அம்சங்களை திறந்து விடுகிறது.  இதனால் தொழிலாளி வர்க்கத்தின் பாரம்பரிய கட்டமைப்பிலும் மாற்றம் ஏற்படுகிறது.  தொழில்நுட்பப் புரட்சியின் விளைவாக உருவாகியுள்ள நவீன தொழில்துறை குறித்து கார்ல் மார்க்ஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார் “நவீன தொழில் துறையானது பலதரப்பட்ட, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத,  பழைய தொழிலுற்பத்தி வடிவங்களிலிருந்து வெளிவந்து,  இயற்கை விஞ்ஞானத்தை உணர்வுப்பூர்வமாக கவனமாகவும்,  திட்டவட்டமான ஒழுங்குமுறையுடனும் பயன்படுத்தி, தனக்கான பயனுள்ள செயல்திறனையும் விளைவுகளையும் அடைய முயல்கிறது” என்றார். 1867 தொழில் புரட்சியின் துவக்கக் கட்டத்திலேயே, உற்பத்தியில், அறிவியல் வளர்ச்சி செலுத்தும் தாக்கத்தை உணரத்தொடங்கிய காலத்திலேயே மார்க்ஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  இது எத்தனை முன்னுணர்ந்த கண்ணோட்டம்?  தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் அறிவியல், தொழில்நுட்பப் புரட்சியானது ‘இயற்கை விஞ்ஞானத்தை உணர்வுப்பூர்வமாக பயன்படுத்துவதன்’ மூலமாக உற்பத்தி சக்திகள் புரட்சிகரமாக மாற்றியமைக்கப்படுவதும், அதனால் எழுகின்ற புதிய சாத்தியங்களையும், சிக்கல்களையும் நாம் பார்க்கிறோம்.

தொழிற்புரட்சி என்பது சில தனிப்பட்ட விஞ்ஞானிகளின் குறிப்பிட்ட கண்டுபிடிப்புகளினால் விளைந்தது.  அதிலும் குறிப்பாக நீராவி எஞ்சினின் கண்டுபிடிப்பு, தொழில் புரட்சிக்கான முதன்மை இயக்கியாக இருந்ததை நாம் பார்க்கலாம்.  ஆனால், தற்போதைய எந்தவொரு கண்டுபிடிப்பும் இத்தகையதொரு இடத்தினை பிடிக்க முடியவில்லை.  ஆலைப்பாட்டாளியும், மார்க்சிய அறிஞருமான ஹாரி பிரேவர்மேன் (Harry Braverman) என்பவர், மார்க்சின் உழைப்பு நிகழ்முறை குறித்து ஆழமான ஆய்வினை நடத்தியவர்.  அவர் தனது “உழைப்பு மற்றும் ஏகபோக மூலதனம்” என்னும் நூலில்,  “அறிவியல் தொழில்நுட்பப் புரட்சி என்பதை, குறிப்பிட்ட கண்டுபிடிப்புகளை வைத்து புரிந்துகொள்ள முடியாது. அதனால்தான் நம்மால் ஒரு குறிப்பிட்ட கண்டுபிடிப்பை வைத்து புரிந்துகொள்வது சாத்தியப்படவில்லை… சாதாரண செயல்பாடுகளோடு இணைந்திருக்கும் முழுமையான பொறியியல் மற்றும் அறிவியல் ஆய்வுப்பார்வையை உள்ளடக்கிய உற்பத்தி முறையினைப் புரிந்துகொள்வதன் மூலமே  அதை அறிய வேண்டும். மிக முக்கியமான கண்டிபிடிப்பினை, வேதியலிலோ, மின்னணுவியலிலோ, தானியங்கி இயந்திரங்கள், வானியல், அணு இயற்பியல், அல்லது இந்த அறிவியல் – தொழில்நுட்பத்தின் ஏதேனும் ஒன்றிலோ காண முடிவதில்லை, மாறாக அறிவியலே மூலதனமாக மாற்றமடைவதில் காண முடியும்” என்று குறிப்பிடுகிறார்.

அறிவியல், தொழில்நுட்பப் புரட்சி உற்பத்திசக்திகளை புரட்சிகரமாக மாற்றியமைப்பதுடன், உழைப்பு முறையிலும் அளவில்லா மாற்றத்தை கொண்டு வருகிறது.  ஏற்கனவே உருவான ஏகபோக மூலதனமும், நிர்வாகப் பணிகளின் விரிவாக்கமும், மிகப் பெருமளவில் எழுத்தர் பணிகளில் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது.  தற்போது, அறிவியல், தொழில்நுட்பப் புரட்சியின் விளைவாக, மிகப் பெரிய சேவைத் துறை என்பது உருவாக்கப்பட்டு, அதில் தனித்திறன் மிக்க பணியாளர்கள், தொழில் நுட்பவியலாளர்கள், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள், பிற சிறப்பு அறிவுத் திறனுடன் கூடிய தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

எர்னஸ்ட் மண்டேல், “முதலாளித்துவ சேவைத்துறையின் விரிவாக்கம் என்பது சமீபத்திய முதலாளித்துவ வடிவத்தின் சான்றாக நம் முன் உள்ளது.  இந்த சேவைத் துறையின் விரிவாக்கம் முதலாளித்துவ உற்பத்தி முறையில் உள்ள அனைத்து முக்கிய முரண்பாடுகளையும் கொண்டுள்ளது.  உற்பத்தியின் சமூக, தொழில்நுட்ப, அறிவியல் சக்திகளின் அபரிமிதமான விரிவாக்கத்தை அது பிரதிபலிக்கிறது.  இதனோடு உற்பத்தியாளர்களிடம் கலாச்சார, நாகரீக தேவைகளையும் அது அதிகரிக்கிறது. அவ்வாறே, இது முதலாளித்துவ அமைப்பில் நடக்கிற காரணத்தால், விரோத மனப்பான்மையையும் அது பிரதிபலிக்கிறது. மேலும், இந்த சேவைத்துறையின் விரிவாக்கம் என்பது பெருமளவு மூலதன மயமாக்கலுடன் சேர்ந்து நடக்கிறது.  இதனால், பலன்களை பெறுவதில் அதிகப்படியான சிரமங்களையும், பொருள்மதிப்புகள் வீணாக்கப்படுதலையும் ஏற்படுத்துகிறது. உற்பத்தி நடவடிக்கையிலும், நுகர்வுத்தளத்திலும் தொழிலாளர்கள் அந்நியப்படுதலும் நடக்கிறது” என்று கூறுகிறார்.

ஒவ்வொரு நாடும் இதுபோன்ற தனித்துவமான சேவைத்துறை வளர்ச்சியை காண்கின்றன. இதனால் சேவைத் துறை தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.  இது இந்தியாவிற்கும் பொருந்தும். சேவைத்துறை ஊழியர்கள் அல்லது தொழிலாளர்கள் பெரிய, தேசிய கூட்டமைப்புகளின் கீழ் திரட்டப்பட்டுள்ளனர்.  அவர்கள் தொழிற்சங்க இயக்கத்தில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளனர். ஆனால் அடிக்கடி ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது. இந்த சேவைத்துறை என்பது உற்பத்தி சார்ந்ததா? இல்லையா? என்று. உற்பத்தி சார்ந்த  துறை இல்லை என்றால், இந்த முதலாளித்துவ சமுதாயத்தில், ஒரு வர்க்கப் போராட்டத்தை தொடர்ச்சியாக நடத்துவதில், அதைக் கூர்மைப்படுத்துவதில் இந்தத் துறையின் ஊழியர்கள், தொழிலாளர்கள் என்ன பங்கு வகிக்கமுடியும் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இந்த தலைப்பின் கீழ் விவாதத்தை தொடர்வதற்கு முன் மார்க்ஸ் இதுகுறித்து ஏதேனும் பேசியிருக்கிறாரா என்று பார்ப்போம்.

வணிக கூலித் தொழிலாளர்கள்

வர்த்தக மூலதனம் பற்றிய ஆய்வினை மேற்கொள்ளும்போது மார்க்ஸ்  “வணிக கூலித் தொழிலாளர்கள்” (commercial wage-workers) என்ற பதத்தை பயன்படுத்துகிறார்.  இவர்களையும்,  முதலாளிகளுக்காக தங்களுடைய உபரி உழைப்பை உபரி மதிப்பாக உருவாக்கும்  “கூலித்தொழிலாளர்கள்” என்றே மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.  வணிக முதலாளியாக இருக்கும் வியாபாரிகளால் பணிக்கு அமர்த்தப்படும் இவர்களைக் குறித்த கேள்வியை எழுப்பி அதற்கான விடையையும் மார்க்ஸ் தருகிறார்.

முதலாவதாக, இந்தத் தொழிலாளியின் உழைப்பு சக்தியானது மூலதனத்தை பெருக்குவதற்காக மாறும் மூலதனத்தால் விலைக்கு வாங்கப்படுகிறது.   இரண்டாவதாக, இவர்களுடைய உழைப்பு சக்தியின் மதிப்பும் அதாவது சம்பளமும் பிற கூலித் தொழிலாளர்களைப் போன்றே உற்பத்திக்கான செலவு மற்றும் அவர்களுடைய உழைப்புச் சக்தியை மறுஉற்பத்தி செய்வதற்கான செலவைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.

இங்கே மார்க்ஸ் இரண்டு முக்கியமான விஷயங்களை மிகத் தெளிவாகக் கூறுகிறார்.  1. வணிக கூலித் தொழிலாளர்களும் பிற கூலித்தொழிலாளர்களைப் போன்ற கூலித் தொழிலாளரே ஆவார்.  2.  அவரது கூலியும் பிற கூலித்தொழிலாளர்களைப் போன்றே நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதாகும்.

மார்க்ஸ் அதற்கு மேலும் விளக்கம் தருகிறார்.   “தொழில் துறை மூலதனத்திற்கும், வணிக மூலதனத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் போலவே, தொழில்துறை மூலதனத்தால் நேரடியாக பணியமர்த்தப்படுகிற கூலித்தொழிலாளியையும், வணிக கூலித்தொழிலாளியையும் வேறுபடுத்திப்பார்க்க வேண்டும்”, “வெறுமனே சுற்றோட்ட முகவராக ஒரு வர்த்தகர் இருக்கும் வரையில் அவர் மதிப்பையோ, உபரி மதிப்பையோ உற்பத்தி செய்வதில்லை… எனவே, அதே பணிகளில் அமர்த்தப்படுகிற வணிக தொழிலாளர்களும் நேரடியாக உபரி மதிப்பை அவருக்காக படைத்துக்கொடுக்க முடியாது. “

மேலும் மார்க்ஸ் விளக்குகிறார், “உபரி மதிப்புக்கும் வணிக மூலதனத்திற்குமான உறவு, தொழில்துறை மூலதனத்திற்கும் உபரி மதிப்புக்குமான உறவில் இருந்து வேறுபட்டதாகும். தொழில் துறை மூலதனம் பிறரது ஊதியமில்லா உழைப்பை நேரடியாகத் தனதாக்கிக் கொள்வதன் மூலம் உபரி மதிப்பை உற்பத்தி செய்கிறது. வணிக மூலதனமோ இந்த உபரி மதிப்பில் ஒரு பகுதியை தொழில் துறை மூலதனத்திடமிருந்து தனக்கு மாற்றிக் கொள்வதன் மூலம் தனதாக்கிக் கொள்கிறது” வேறு வார்த்தைகளில் சொன்னால், வணிக கூலித்தொழிலாளரும் உபரியை படைக்கிறார், வழிமுறைகள் வேறுபடுகின்றன.

“தனியொரு வணிகரின் இலாபமானது, அவர் இந்த நிகழ்முறையில் ஈடுபடுத்தும் மூலதனத்தின் அளவைப் பொருத்ததாகும்; அவருடைய எழுத்தர்களின் ஊதியமில்லா உழைப்பு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவு அதிகமாக அவர் வாங்குவதற்கும் விற்பதற்கும் அந்த மூலதனத்தை பயன்படுத்த முடியும்… இந்த எழுத்தர்களின் ஊதியமில்லா உழைப்பு மதிப்பை படைப்பதில்லை என்றாலும் வணிகர் உபரி-மதிப்பை தனதாக்கிக் கொள்வதற்கு வழிவகை செய்கிறது. அவரது மூலதனத்தை பொறுத்தவரை உபரி-மதிப்பை படைப்பதும் தனதாக்கிக் கொள்வதும் விளைவளவில் ஒன்றுதான். ஆகவே இந்த ஊதியமில்லாத உழைப்புதான் அவரது இலாபத்திற்கு ஆதாரம்.” மேலும், “திறனுடை மூலதனத்திற்கான உபரி மதிப்பை ஒரு தொழிலாளியின் ஊதியமில்லா உழைப்பு நேரடியாக படைத்தளிப்பதைப் போலவே வணிக கூலித் தொழிலாளியின் ஊதியமில்லா உழைப்பும் இந்த உபரி மதிப்பில் ஒரு பங்கை வணிக மூலதனத்திற்கு பெற்றுக் கொடுக்கிறது”

வணிக முதலீடும் லாப உற்பத்தியும்

சுற்றோட்டத் துறையில் உள்ள தொழிலாளி உற்பத்தியை உண்டு பண்ணுகிறவரா இல்லையா என்ற கேள்விக்கு வந்து ஒரு முடிவான விளக்கத்தினை மார்க்ஸ் தருகிறார்.   “தொழில் மூலதனத்திற்கு சுற்றோட்டச் செலவுகள் என்பவை பலனற்ற செலவுகள் போல் தெரிகின்றன. ஆம், அது அவ்வாறே. ஆனால் ஒரு வணிகருக்கு, பொது லாப வீதத்தைப் பொருத்தும், அளவைப் பொருத்தும் நேர் விகிதத்தில் லாபமடைவதற்கான ஆதாரமாக அந்தச் செலவுகள் அமைந்திருக்கின்றன. ஆகவே இந்த சுற்றோட்டச் செலவுகளுக்கு செய்யும் முதலீடு வணிக-மூலதனத்திற்கு பலன் தரும் செலவே ஆகும்.” இவ்வாறு குறிப்பிடும் கார்ல் மார்க்ஸ், “இந்தக் காரணத்தினால்வணிக மூலதனத்தால் வாங்கப்படும் உழைப்பு உடனடியாக நேரடியாக உடனடி பலன் தரக்கூடியதாக இருக்கிறது” என்ற விளக்கத்தை தருகிறார்.

இவ்வகைப்பட்ட கூலித் தொழிலாளர்களை குறிப்பிட, மார்க்ஸ் “white collar worker” (அறிவுசார் தொழிலாளி) என்ற பதத்தை பயன்படுத்தவில்லை, தொழில்துறை கூலித்தொழிலாளர்களை அழைப்பதை ஒத்த வகையில் “வணிக பாட்டாளிகள்” என்ற பதத்தையும் அவர் பயன்படுத்தவில்லை. இருப்பினும், மார்க்ஸ் இவர்களை கூலித் தொழிலாளர்கள் என்றும், முதலாளித்துவ உற்பத்தி உறவுகளில் இவர்கள் ஒடுக்கப்படுபவர்களாகவும், சுரண்டப்படுபவர்களாகவும் இருக்கின்றனர் என்றும் தெளிவுபடுத்துகிறார்.

சுரண்டலின் அளவுகோள்

அதே போன்று, இந்த தொழிலாளர்கள் குறித்து இன்னொரு கருத்து நிலவுகிறது.  அவர்கள் அதிகம் சம்பளம் பெறுபவர்கள்.  அதனால், இவர்கள் போராட முன்வருவதற்கு வாய்ப்பில்லை என்ற கருத்து நிலவுகிறது.  மார்க்ஸ் இந்த இடத்தில் இன்னொரு விவாதத்தினை முன்வைக்கிறார்.   “வணிக தொழிலாளர் – இச்சொல்லுக்கு உரிய கண்டிப்பான பொருளிலில் – ஓரளவுக்கு நல்ல ஊதியம் பெறும் கூலித்தொழிலாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர், தேர்ச்சி பெற்ற உழைப்பாக வகைப்படுத்தப்பட்டு சராசரி உழைப்புக்கு மேற்பட்டதாக இருக்கும் உழைப்புக்கு உரியவர்களான கூலித்தொழிலாளர் வகையைச் சேர்ந்தவர்கள். என்றாலும், முதலாளித்துவ பொருள் உற்பத்தி முறையில் முன்னேற்றம் ஏற்படும்போது சராசரி உழைப்பு தொடர்பாகவும் கூட கூலி குறைந்து செல்லும் போக்கு வெளிப்படுகிறது.” சமூகத்தின் எந்த பகுதியிலிருந்து இவர்கள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள்?  மார்க்ஸ் அதனை விளக்குகிறார், “பொதுக்கல்வி அனைவருக்குமாக பரவலாக்கப்படுவதால், சமூகத்தில் அடித்தட்டில், மிகவும் தரம் குறைந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த மக்களிடையே இருந்தவர்களும் கல்வி பெறும் வாய்ப்பு ஏற்பட்டது.  இதனால், தனித்திறன் மிக்க தொழிலாளர்கள் அதிக அளவில் உருவாவதும், அவர்களிடையே போட்டி ஏற்படும் நிலையும் உருவானது.  இதனால், ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர்த்து இவர்களின் உழைப்பு சக்தியானது மதிப்பிழக்கும் நிலை முதலாளித்துவ உற்பத்தி முறையின் முன்னேற்றப் பாதையில் உருவானது” என்று குறிப்பிடுகிறார்.  இதன் பொருள் தெளிவானது.  முதலாளித்துவம் முன்னேற முன்னேற, இந்த பகுதி தொழிலாளர்கள் மிகப் பெருமளவிற்கு சுரண்டலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதுதான்.

எனவே, மார்க்சின் மிகத் தெளிவான வரையறைகளின்படி பார்க்கும்பொழுது பொதுவான தொழிலாளி வர்க்க இயக்கத்தில் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களில் இவர்களது பங்கு குறித்து இருக்கும் கருத்துக்கள் தவறானவை என்பது மிகத் தெளிவாக நிரூபிக்கப்படுகிறது.

பாட்டாளி வர்க்கத்தின் வரையறை

மார்க்சின் நாட்களில் இருந்து, இன்று மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.  அதுவும் தொழில்நுட்ப புரட்சியின் காரணமாக உழைப்பு முறையிலும் புரட்சிகரமான பல மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.  தற்காலத்திய மார்க்சிஸ்டுகள் இந்த மாற்றங்களை புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.  அந்த புரிதல்களின் அடிப்படையில் விஷயங்களை மதிப்பிட வேண்டும்.  மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் அடிப்படை சூத்திரங்கள், கொள்கைகளின் அடிப்படையில் விஷயங்களை பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.

முதலாளித்துவ கட்டமைப்பு, மூலதனக் குவிப்பு, உழைப்புக் கருவிகளின் தொழில் நுட்ப முன்னேற்றங்கள் ஆகியவற்றைப் பொறுத்து தான் தொழிலாளி வர்க்கத்தின் உழைப்பு முறையிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன.  தொழிற்சாலைகளில் கூட, இயந்திரமயமாக்கல் என்பது இயந்திரங்களை பயன்படுத்தி அதிக அளவில் உற்பத்தி செய்வதற்காக முதலாளித்துவ உற்பத்தி முறையில் புகுத்தப்பட்டது என்ற முறையில் மூலதனத்தின் முதல் பகுதியில் மார்க்ஸ்  தனது ஆய்வினை மேற்கொள்கிறார்.  19-ம்நூற்றாண்டில் லான்ஷயர் காட்டன் வர்த்தக நிறுவனம் போன்ற ஒரு சில முன்னேறிய தொழிற்சாலைகள் தவிர்த்து, பெரும்பகுதி முதாலாளித்துவ நிறுவனங்கள் நீராவி இயந்திரங்களை விட மனித உழைப்பு சக்தியைத்தான் பயன்படுத்தின.  உண்மையில் தொழில் புரட்சி காலத்திலேயே கூட பெருமளவில் இயந்திரமயமாக்கல் நிகழவில்லை.  19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20-ம் நூற்றாண்டிலும்தான் மிகப் பெருமளவில் அமெரிக்காவில் அது பயன்படுத்தப்பட்டது.

தொழிலாளி வர்க்கம் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட நிலையான கட்டமைப்பை உடையதாகவோ அல்லது கலவையானதொரு அமைப்பை உடையதாகவோ இருந்ததில்லை.  மாறாக, தொழிலாளி வர்க்கத்தின் கலவை அமைப்பும், கட்டமைப்பும் மூலதன சேர்க்கையின் தேவைக்கேற்ப மாற்றி அமைக்கப்படுகிறது.  மறுகட்டமைப்பு மற்றும் ஒருங்கிணைப்புகள் நிகழும்போது, திவாலானவை கையகப்படுத்தப்படும்போது, திறனற்ற துறைகள் பயனற்றதாகும்போது, புதிய துறைகள் உருவாகும் போது, அதிக திறன் படைத்த மூலதனங்கள் வரும்போது நெருக்கடிகள் எழுவதுண்டு.  தொழிலாளி வர்க்கத்திற்குள்ளும் இதே அழிக்கப்படுதலும், உருவாக்கப்படுதலும் நிகழ்கிறது.

தற்போதைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புரட்சி காலக்கட்டத்தில், முதலாளித்துவ பொருளாதார உலகமயமாக்கலின் கீழ், முதலாளிகள் அதிக அளவில் தொழிலாளர்கள் தேவைப்படாத வகையில் சாதனங்களை பயன்படுத்துகின்றனர்.  மினனணுவியல், சைபர்நெட்டிக்ஸ் எனும் தன்னாள்வியல், ஆட்டோமேஷன் எனும் தானியங்கல் ஆகியவை முதலாளிகளுக்கு அதிக அளவில் தொழிலாளர்கள் தேவைப்படாத வகையில் சாதனங்களை பயன்படுத்த உதவுகின்றன.

மார்க்ஸ் சொன்னது போல், கல்வி பொதுவாக்கப்பட்டதன் காரணமாக வர்த்தக முதலாளிகளுக்கு வேலை செய்யக்கூடிய தொழிலாளர்கள் பெருமளவில் கணக்காளர்களாக, எழுத்தர்களாக, கொடுக்கல் வாங்கல் துறைகளில் வேலை செய்ய தயாராக இருக்கிறார்கள்.  அதேபோல, தானியங்கித் துறை மற்றும் கணிணித் துறையில் உள்ள உயர் மட்ட தொழில் நுட்பக் கல்வியின் காரணமாக, சேவைத்துறையின் முதலாளிகளுக்கு தொழில்நுட்ப தனித்திறன் பெற்ற தொழிலாளர்களை அவர்கள் விரும்பும் வேலைகளில் பணியமர்த்த முடிகிறது. அதாவது, தொழிலதிபர்களுக்குத் தேவையான பல்வேறு வகையான தொழிலாளர்களை பல்வேறு பணிகளில் பணியமர்த்திக் கொள்கின்றனர்.  உண்மையில் தொழிலாளர்களின் பெருக்கம் என்பது முதலாளிகளின் நலன்களை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் பல்வேறு வகையான வேலைகளுக்கு தொழிலாளர்களை பணியமர்த்த உதவுகிறது என்பதை மார்க்ஸ் கண்ணுற்று கூறுகிறார்.

வர்க்கங்கள் குறித்து கார்ல் மார்க்ஸ் சொல்வது

மார்க்சின் மூலதனம் நூலின் பகுதி மூன்றில், வர்க்கங்கள் குறித்த அத்தியாயத்தில், எழுதியவை முடிக்கப்படாமல் கையெழுத்துப் பிரதி பாதியில் நின்று விடுகிறது.  மார்க்ஸ், “கூலித் தொழிலாளர்களும், முதலாளிகளும், நிலவுடைமையாளர்களும் முப்பெரும் சமுதாய வர்க்கங்களாக அமைவது எதனால்? “ என்ற கேள்வியை எழுப்பி விடை காண முயல்கிறார்.

“முதல் பார்வையில் – வருவாய் ஆதாரங்களும், வருவாய்க்கான மூலங்களும் காரணமாகவே என்று தோன்றுகிறது.” கூலித் தொழிலாளர்களும், முதலாளிகளும், நிலவுடைமையாளர்களும் “உழைப்பு சக்தியாலும், மூலதனத்தாலும், நிலச் சொத்தாலும் கிடைக்கிற கூலியையும் இலாபத்தையும் நில வாடகையையும் நம்பி வாழ்கின்றனர்.”

“எனினும், இந்தக் கண்ணோட்டத்தில் மருத்துவர்களும், அலுவலர்களும் கூட இரு வர்க்கங்களாவர்.  ஏனென்றால், அவர்கள் இரு வேறு சமூகக் குழுக்களைச் சேர்ந்தவர்கள்.  ஒவ்வொரு குழுவின் உறுப்பினர்களும் ஒரே ஆதாரத்திலிருந்து தமது வருவாயைப் பெறுகிறவர்கள்.   சமுதாய உழைப்புப் பிரிவினை தொழிலாளர்களையும், அதே போல் முதலாளிகளையும், நிலவுடைமையாளர்களையும் அவர்கள் பெறக்கூடிய நலன்கள் என்ற வகையிலும், தரம் என்ற வகையிலும் எல்லையற்ற முறையில் பிரித்துக் கூறு போடுகிறது.  உதாரணமாக, நிலவுடைமையாளர்களை திராட்சை தோட்ட உடைமையாளர்கள், பண்ணை உடைமையாளர்கள், வன உடைமையாளர்கள், சுரங்க உடைமையாளர்கள், மீன் வள உடைமையாளர்கள் என்று பிரிக்கிறது.  அதற்கும் இதுவே பொருந்தும்.  கெடுவாய்ப்பாக  கையெழுத்துப் பிரதி இங்கே நின்றுவிடுகிறது.

சேவைத் துறை உள்ளிட்ட நவீன உற்பத்தித் துறையில் தொழிலாளர்களின் வேலைப்பிரிவினை என்பது அவர்களுடைய தனித் திறன் சார்ந்தது என்பதையும்,  தர வகைப்பட்டது என்பதையும் நாம் வெளிப்படையாக இன்று கண்டு கொண்டிருக்கிறோம்.

இன்னொரு இடத்தில் மார்க்ஸ்,  “ஒட்டுமொத்த தொழில் முறையின் உண்மையான நெம்புகோல் அல்லது முன்னோக்கி எடுத்துச் செல்லும் சக்தி என்பது தனிப்பட்ட தொழிலாளர்கள் அல்ல.  மாறாக, உழைப்பு சக்தி சமூக அளவில் ஒருங்கிணைக்கப்படும்போது, அது கூட்டு  வேலையாகும்போது,  பல்வேறு உழைப்பு சக்திகள் ஒருங்கே சேர்ந்து ஒட்டு மொத்த உற்பத்தி நிகழ்முறையை உருவாக்கி, பொருட்களை உற்பத்தி செய்யும் பல்வேறு வழிகளில் பங்கெடுக்கும்போது, அதுவே ஒட்டுமொத்த தொழில் முறையின் உண்மையான நெம்புகோலாகிறது.  சிலர் கரங்களால் சிறப்பாக வேலை செய்வார்கள்; சிலர் கருத்தால் வேலை செய்வார்கள். மேனேஜராக, என்ஜினியராக, தொழில் நுட்ப வல்லுநராக, கண்காணிப்பாளராக, உடலுழைப்பு தொழிலாளியை விட இன்னும் கடின உழைப்பாளியாக சிறப்பாக செயல்படுவார்கள்.  எப்போதுமே அதிகரித்துக் கொண்டிருக்கும் எண்ணற்ற உழைப்பு வகைகள் உற்பத்தி உழைப்பு பற்றிய கருத்தாக்கத்திற்குள் அடக்கப்படும்.  அதைச் செய்பவர்கள் உற்பத்தித் தொழிலாளர்கள் என வகைப்படுத்தப்படுவார்கள். இந்தத் தொழிலாளர்கள் நேரடியாக  மூலதனத்தால் சுரண்டப்படுகிறார்கள்.  அதே போல அவர்கள் மூலதனத்தின் உற்பத்தி மற்றும் விரிவாக்கத் தாக்கங்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்” என்று கூறுகிறார். 

கூட்டு வேலை என்பது முதலாளித்துவ உற்பத்தி முறைக்கே உரிய சிறப்பியல்பு அல்ல.  முதலாளித்துவ கூட்டு வேலையில் சுயேச்சையான கூலித் தொழிலாளியும், உற்பத்தி சாதனங்களின் தனி உடைமையும் தேவைப்படுகிறது.  கூட்டு வேலை முறை வளரும் போது உழைப்பு மூலதனத்துக்கு கீழ்படிந்து செயல்படுவது என்பது வெறும் புறவடிவமாக இருந்த நிலையிலிருந்து உண்மையான நேரடியான கீழ்ப்படிதல் நடைபெறும் நிலைக்கு மாறி விடுகிறது.

எனவே, மார்க்சின் வாதத்தின்படி, யாரெல்லாம் கூட்டு வேலையின் பங்களிப்பாளர்களாக ஆகிறார்களோ, அவர்கள் அனைவருமே உற்பத்தி தொழிலாளர்கள் ஆவர்.  அவர்கள் கரத்தால்தான் வேலை செய்ய வேண்டும் என்பதில்லை.  அதே போல மார்க்ஸ் வணிக தொழிலாளர்கள் பற்றி குறிப்பிடும்போது உற்பத்தி தொழில்துறையில் வேலை செய்பவர்கள் மட்டும் பாட்டாளி வர்க்கம்  என்று சொல்லவில்லை.  இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. 

உழைப்புச் சக்தியும், கட்டாயமும்

உண்மையில், உற்பத்தி மற்றும் உற்பத்திசாரா தொழிலாளர்கள் என்பதற்கான வேறுபாடு என்னவென்றால் மூலதனத்தின் விரிவாக்கத்திற்கு பங்களிப்பவர்கள்  என்பதும், பங்களிக்காதவர்கள் என்பதுமே ஆகும்.  19-ம் நூற்றாண்டின் இரண்டாவது பகுதியில் (பிரிட்டனில் விக்டோரியா மகாராணியின் காலம்) நடுத்தர மற்றும் உயர்தட்டு மக்களால் அவர்களுடைய வருமானத்தில் இருந்து பணிக்கமர்த்தப்பட்ட வீட்டு வேலை தொழிலாளர்களை இதற்கு உதாரணமாக மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.  ஆனால், வீட்டு வேலை செய்யும் அவ்வகைப்பட்ட தொழிலாளர்களுக்கு வேறு வாழ்க்கை ஆதாரங்கள் இல்லாததால் உழைப்புச் சக்தியை இவ்வகையில் விற்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அவர் குறிப்பிடத் தவறிவிட்டார். மார்க்ஸ் தொழிலாளர்களின் பல்வேறு வகைகள் பற்றி குறிப்பிடும்போது, நாம் இன்னொன்றையும் மார்க்சினுடைய முதலாளித்துவ ஆய்வின் அடிப்படையிலேயே புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.  தன்னுடைய உழைப்பு சக்தியை விற்றால்தான் வாழ முடியும் என்ற சமூகப் பொருளாதார நிர்ப்பந்தம் அல்லது கட்டாயம் என்பதுதான் பாட்டாளி வர்க்கத்தின் வெளிப்படையான குணாம்சமாகும்.

இதனால் அனைத்து கூலித்தொழிலாளர்களும் முதலாளித்துவ உற்பத்தி உறவுகளின் அடிப்படை கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடுகிறார்கள்.  உற்பத்திக்கான வழிமுறைகள் சொந்தமின்மை, நிலஉடமையின்மை மற்றும் அவை கைக்கெட்டாமை, உழைப்பு சக்தியை (தொடர்ச்சியாக) விற்காமல் வாழ்வாதாரத்திற்குத் தேவையானவற்றை வாங்குவதற்கு போதுமான பணமின்மை என்பது போன்ற சமூகப் பொருளாதார நிர்ப்பந்தங்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.  இந்த பிரிவில் வணிக தொழிலாளர்களும், அரசாங்கத்தின் கீழ் நிலை ஊழியர்களும், சிதறிக் கிடக்கும் தினக் கூலிகளும் (வீட்டு வேலை பணியாளர்களும்) அடங்குவர்.  ஏனென்றால், இவர்களுக்கும் வாழ்வாதாரத் தேவைகளுக்காக தங்களுடைய உழைப்பு சக்தியை விற்பதைத் தவிர வேறு வழியில்லை.

இங்கே ரோசா லக்சம்பர்க் தன்னுடைய மூலதனக் குவிப்பு குறித்த நூலில், அத்தியாயம் 16-ல் ‘மூலதன மறு உருவாக்கம் மற்றும் சமூக அமைப்பாக்கம் என்ற தலைப்பின் கீழ் எழுதியுள்ளதை நாம் கவனிக்க வேண்டியுள்ளது’. அவர் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பாட்டாளி வர்க்கத்தின் உற்பத்தி நிலைகள் பற்றி விவாதிக்கும்போது,  “விவசாயப் பொருளாதாரம் மற்றும் கைவினைத் தொழில்கள் தொடர்ச்சியாக நசிவடைந்தபோது, கிராமப்புற மற்றும் நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தினர் எப்படி பாட்டாளி வர்க்கமாக மாற்றப்பட்டார்கள்” என்று குறிப்பிடுகிறார், ” அதாவது, முதலாளித்துவம் கோலோச்சாத நிலையில் இருந்து, உழைப்பு சக்தியானது முதலாளித்துவ  நிர்ப்பந்தங்களுக்கு இடைவிடாது உட்படுத்தப்பட்டு, மாற்றங்கள் ஏற்பட்டது, முதலாளித்துவத்திற்கு முந்தைய நிலையிலிருந்து, உற்பத்தி முறையில் முன்னோக்கிய சிதைவுகளும் முறிவுகளும் ஏற்பட்டன”.  இது 19-ம் நூற்றாண்டு ஐரோப்பாவிற்கு மட்டும் பொருந்தும் ஆய்வல்ல;  தற்போது இந்தியாவில் நிலவும் சூழலுக்கும் இது மிகச் சரியாகப் பொருந்துகிறது.

உழைப்புச் சக்தியும் சேவைத்துறையும்

இன்னொரு முக்கியமான விஷயம்  கருத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளது.  சேவை குறித்து மார்க்ஸ் குறிப்பிடும்போது, ”சேவை என்பது ஒரு பொருளின் அல்லது ஒரு உழைப்பின் பயன் மதிப்பின் பயனுள்ள விளைவு என்பதன்றி வேறில்லை” என்று பொதுவான வரையறை ஒன்றினை கூறியுள்ளார்.  அதன் பிறகு அவர் தனித் திறன் பெற்ற தொழிலாளர்கள் மற்றும் திறன்பெறாத சாதாரண தொழிலாளர்கள் குறித்து ஒரு சுவாரஸ்யமான விளக்கம் அளித்துள்ளார். “மதிப்பினை உருவாக்கும் ஒவ்வொரு உற்பத்தி செயல் முறையிலும், தனித்திறன் பெற்ற தொழிலாளி மற்றும் சாதாரண சமூகத் தொழிலாளியின் குறைப்பு  (உ-ம்)  திறன் பெற்ற தொழிலாளியின் 1 நாள் முதல் திறனற்ற தொழிலாளியின் 6 நாள் வரை குறைப்பு என்பது தவிர்க்க முடியாதது” என்று குறிப்பிடுகிறார்.

ஒரு முதலாளியால் பொருட்களின் உற்பத்திக்கென பணியில் அமர்த்தப்படும் ஒரு தொழிலாளி முதலாளிக்கு தனது சேவையை செய்கிறார்.  இந்த சேவையின் மூலம் அவர் உறுதியான விற்பனைக்குரிய ஒரு பொருளை சரக்காக மாற்றுகிறார்.  உழைப்பின் பயனுள்ள விளைவு விற்பனைக்குரிய ஒரு பொருளாக மாறாத போது வித்தியாசமான ஒரு சூழல் உருவாகிறது.  ஹாரி ப்ரேவர்மேன் இந்த சூழல்கள் குறித்து மிகவும் தர்க்கரீதியான விளக்கத்தினை அளிக்கிறார். “ஒரு தொழிலாளி தன் உழைப்பால் பயன்பெறக் கூடியவருக்கு நேரடியாக தனது உழைப்பை வழங்காமல், ஒரு முதலாளியிடம் விற்று, அந்த முதலாளி சரக்கு சந்தையில் அதனை மறுவிற்பனை செய்வார் என்றால், அது சேவைத் துறையில் நடைபெறும் உற்பத்தியின் முதலாளித்துவ வடிவமாகும்” என்று குறிப்பிடுகிறார்.

அதே போல, ஹாரி ப்ரேவர்மேன் அத்தகைய சேவை என்பது முதலாளித்துவ உற்பத்தி முறையில், உபரிமதிப்பை உற்பத்தி செய்கிற பயனுள்ள உழைப்பாகும் என விளக்கும் விதத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.  

“முதலாளித்துவத்தின் வரலாற்றில் ஏகபோக மூலதனத்தின் காலத்தில் பல்வேறு வகையான உழைப்பு முறைகளானது மூலதனத்தின் லாபகரமான முதலீட்டின் ஒரு பகுதியாக ஆகிவிடுவதன் காரணமாக, அவை மூலதன விரிவாக்கத்திற்கே பயன்படுகின்றன.  தற்போதைய நவீன  “கார்ப்பரேட்டுகள்” அல்லது  “பெரு நிறுவனங்கள்” வடிவத்தில் அனைத்து வகையான தொழிலாளர்களும் எவ்வித வேறுபாடுமின்றி பணிக்கமர்த்தப்படுகிறார்கள்.  நவீன கார்ப்பரேட் குழுமங்களில் உற்பத்தி, வர்த்தகம், வங்கி, சுரங்கம் மற்றும் சேவை போன்றவற்றை கவனிப்பதற்கென சில பிரிவுகள் இருக்கின்றன. அவற்றில் அவரவர் வேலையை அமைதியாக அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.  இறுதியில் கம்பெனியின் பேலன்ஸ் ஷீட் வெளிவரும்போது அனைத்து வகையான உழைப்பு வடிவங்களும் மறைந்து போய் அவை அனைத்தும் மதிப்புருக்களாக தெரிகிறது” என்று சேவை குறித்த தனது விளக்கத்தினை மிகத் தெளிவாக தருகிறார்.

மார்க்ஸ் இது குறித்து கம்யூனிஸ்ட் அறிக்கையை எழுதும் முன்பே  “கூலி உழைப்பு,  மூலதனம்” என்ற நூலில் விளக்கியுள்ளார்

 “உற்பத்தி மூலதனம் வளரும்போது, தொழிலாளர்களுக்கான கிராக்கியும் வளர்கிறது.  இதன் விளைவாக, உழைப்பின் விலை, கூலி அனைத்தும் உயர்கின்றன…….

 “கவனிக்கத்தக்க ஒரு கூலி உயர்வு ஏற்படுகிறது என்றால், அது  உற்பத்தி மூலதனத்தின் துரித வளர்ச்சியை சுட்டிக்காட்டுகிறது.  உற்பத்தி மூலதனத்தின் துரித வளர்ச்சி என்பது அதற்கு சமமான செல்வாதார வளர்ச்சியை, ஆடம்பர மற்றும் சமூகத் தேவைகளின் வளர்ச்சியை, சமூக போகங்களின் வளர்ச்சியை உருவாக்குகிறது.  இப்படி தொழிலாளியின் அனுபோகங்கள் வளர்ச்சி அடைந்தாலும், முதலாளியின் அனுபோகங்களின் வளர்ச்சியோடு ஒப்பிடும்போது அது குறைவாக இருப்பதால், முதலாளியின்  அனுபோகங்கள் தொழிலாளிக்கு எட்டாதவையாக இருப்பதால், சமூகத்தின் பொதுவான முன்னேற்றத்தோடு ஒப்பிடுகையில், தொழிலாளியின் அனுபோக வளர்ச்சிகள் போதுமானதாக இல்லாமல் இருப்பதால், ஒரு தொழிலாளி பெறும் அனுபோகங்களில் சமூக திருப்தி என்பது குறைவாகவே இருக்கிறது.  நமது ஆசைகளும் இன்பங்களும் சமூகத்தில் இருந்தே முளைத்தெழுகின்றன.  நாம் அவற்றை சமூகத்தின் அளவுகோலால் மட்டுமே அளக்கிறோம்.  நம்மிடம் இருக்கும் பொருட்களால் அல்ல.  ஏனென்றால் அவை சமூகத்துடன் தொடர்புடையவை;  சமூகத் தன்மையுடன்,  இயல்புடன் கூடியவை.  பொதுவாக, கூலி என்பது சரக்குகளின் விலையால் மட்டும் தீர்மானிக்கப்படுவதல்ல.  அது பல்வேறு உறவுகளை உள்ளடக்கியதாகும்” என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

மார்க்சின் இந்த வார்த்தைகள் தற்போதைய சூழலை புரிந்து கொள்ள மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.  தொழிலாளர்களின் போராட்டங்கள் மற்றும் பல்வேறு பிற காரணிகளால், தொழிலாளர்களின் கூலியும்  வசதி வாய்ப்புகளும் உயர்ந்தாலும் அவர்களின் வாழ்க்கைத் தரம் என்பது 19-ம் நூற்றாண்டின் மத்திய காலத்தின் அளவிற்கு இல்லை என்பதே இன்றைய நிலை.  முதலாளித்துவம் முதலாளிகளுக்கும் கூலித் தொழிலாளர்களுக்கும் இடையே ஒரு பரந்த பொருளாதார ஏற்றத்தாழ்வினை உருவாக்குகிறது.  தொழிலாளர்கள் ஒரு வேளை கூடுதலான ஊதிய விகிதம் அல்லது வசதிவாய்ப்புகளை பெறலாம்.  ஆனால் உடைமையாளர்களின் செல்வச் செழிப்புகளும் வசதிகள் மற்றும் சொத்துக்களும்  ஒரு நிரந்தர விகிதாச்சாரத்தில் அதைவிட கூடிக் கொண்டே போகிறது.

இந்த முதலாளித்துவ உலகமயமாக்கல் காலக்கட்டத்தில், குறிப்பாக நிதி மூலதனத்தின் ஆதிக்கத்தின் கீழ், வருமான ஏற்றத் தாழ்வுகள் என்பது இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.  உலகமயமாக்கலின் கதாநாயகன் என்று சொல்லப்படும் உலக வங்கியே கூட, அதனுடைய அடுத்தடுத்த அறிக்கைகளில் இந்த வருமான ஏற்றத்தாழ்வுகள் குறித்து கவலை தெரிவித்துள்ளது.  மேலும் மேலும் மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவது குறித்தும், வேலையில்லாமல் இருப்பது குறித்தும் உலக வங்கி கவலை தெரிவித்துள்ளது.  அதே போல ஆட்சியாளர்களுக்கு எதிராக துன்பப்படும் ஏழை எளிய மக்களின் அதிருப்தியை கண்டுணர்ந்துளளது.

எனவே, ஊதியத்தில் எவ்வளவு உயர்வு ஏற்பட்டிருக்கிறது என்ற கேள்வியல்ல இப்போது முக்கியத்துவம் பெறுவது.  தற்போதைய வினா என்னவென்றால், ஒரு நாட்டின் செல்வாதாரத்தை -/ வருமானத்தை உருவாக்கும் சாமானிய மக்களுக்கு அவர்களுக்கு சேர வேண்டிய பங்கு உரிய விகிதத்தில் / உரிய முறையில் சேர்கிறதா என்பதுதான்.  இந்த இழப்புணர்வும், ஏற்றத்தாழ்வான நிலையும்தான் தொழிலாளி வர்க்கத்தின் போர்க்குணத்திற்கு உண்மையான கரு ஆகிறது.

இந்த எல்லா வகையான உண்மைகளையும், சூத்திரங்களையும் கருத்தில் கொண்டு, இன்றைய உற்பத்தித் துறை தொழிலாளர்கள், திறன் பெற்ற சேவைத் துறை தொழிலாளர்கள், வணிக நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள், நிதி நிறுவனங்களாகிய வங்கிகள், இன்சூரன்ஸ் துறை ஊழியர்கள், அரசுத் துறைகளில் – அரசு அலுவலகங்களில் எழுத்தர்களாகவும் அதற்கும் கீழான பியூன் போன்ற வேலையில் இருக்கும் தொழிலாளர்கள், முதலாளிகளுக்கு சேவை செய்வதில் இது போன்ற வேலைகளில் இருக்கும் தொழிலாளர்கள், ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் தனித் தனியான தினக் கூலிகள்  என அனைவருமே கூலித் தொழிலாளர்கள் என்ற வரையறையின் கீழ் இயற்கையாகவே வந்துவிடுகிறார்கள்.  அதே நேரத்தில் பாட்டாளி வர்க்கத்தின் மையமாக, முக்கிய கருவாகத் திகழ்பவர்கள் தொழில் துறை கூலித் தொழிலாளர்கள் ஆவர்.

தங்களுடைய உழைப்பு சக்தியை விற்பதைத் தவிர வேறு வாழ்வாதாரம் இல்லாத வீட்டு வேலை தொழிலாளர்கள், அவர்கள் மதிப்பினை உருவாக்கவில்லை என்றாலும், முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக அணி திரளாவிட்டாலும், மிக அதிக அளவில் சுரண்டலுக்கு உட்படுத்தப்படுகின்ற, அனைத்தையும் இழந்து நிற்கும் தொழிலாளர்கள் என்ற முறையில் பாட்டாளி வர்க்கம் என்பதன் பரந்த வரையறைக்குள் வந்துவிடுகின்றனர்.

இந்த காரணிகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, பாட்டாளி வர்க்கம் என்பது இன்றைக்கு மிக வேகமாகக் குறைந்து கொண்டே வரும் வர்க்கமாகவும், மறைந்து போகிற வர்க்கமாகவும் இருக்கிறது என்பதும், அந்த இடத்தில் புதிதாக போர்க்குணமற்ற, புரட்சிகர திறனற்ற, மிக அதிக அளவில் ஊதியம் மற்றும் பிற வசதி வாய்ப்புகளை பெற்ற வாழும் ஒரு மத்திய தர வர்க்கம் உருவாகி  இருக்கிறது என்பதுமான கருத்து ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லை.

தொழிலாளி வர்க்கத்தின் வர்க்க உணர்வு (புரட்சிகர குணாம்சம்)

மார்க்சிய இயக்கவியல் கொள்கையின்படி, வர்க்க உணர்வு என்பது ஒரு மனிதனின் புறச் சூழலுக்கும்,  அதன் காரணமாக அவனுள் ஏற்படும் உணர்வு நிலைக்குமான உள்ளார்ந்த தொடர்பு குறித்த விழிப்புணர்வில் இருந்து உருவாகிறது.

“தத்துவத்தின் வறுமை” என்ற தனது நூலில் வர்க்கத்திற்குள்ளும், வர்க்கத்திற்காகவும்  என்ற இரண்டிற்குமான முக்கியமான வேறுபாட்டினை பற்றி மார்க்ஸ் பேசுகிறார்.  இந்த இடத்தில்தான் தொழிலாளி வர்க்கத்தின் உணர்வு மட்டத்தின் வேர் இருக்கிறது என்று குறிப்பிடுகிறார்.

 “பொருளாதார நிலைமைகள் முதன்முதலில் நாட்டின் திரளான மக்களை தொழிலாளிகளாக மாற்றிவிட்டது.  மூலதனத்தின் ஆதிக்கம் இந்த மக்கள் திரளுக்கு ஒரு பொதுவான நிலைமையை, பொதுவான நலனை உண்டாக்கிவிடுகிறது.  எனவே, இந்த மக்கள் திரள் ஏற்கனவே மூலதனத்துக்கு எதிரான வர்க்கமயமாகியுள்ளது என்றாலும் தனக்காக நிற்கும் வர்க்கமாக இன்னும் ஆகவில்லை.  இந்தப் போராட்டத்தில் – அதன் சில கட்டங்கள் மட்டும் நாம் குறிப்பிட்டிருக்கிறோம்.  இந்த மக்கள் திரள் ஒன்றுபடுகிறது.  தனக்காக நிற்கும் வர்ககமாக உருவமைத்துக் கொள்கிறது.  அது காத்து நிற்கும் நலன்கள் வர்க்க நலன்களாகி விடுகின்றன.  ஆனால் வர்க்கத்துக்கு எதிராக வர்க்கம் நடத்தும் போராட்டம் ஒரு அரசியல் போராட்டமாகும்.” என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

இங்கு நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது,  மார்க்ஸ்  “பொருளாதார போராட்டங்களை” புரட்சிகர அரசியல் உணர்வு மட்டத்துடனோ அல்லது சோசலிசத்துடனோ தொடர்புடையது அல்ல என்று ஒரு போதும் சொல்லவில்லை.  மார்க்சைப் பொறுத்த வரையில்,  “பொருளாதாரப் போராட்டங்கள்”தான் ஒரு பிரத்தியேகமான, பரந்துபட்ட அரசியல் உணர்வினை உருவாக்குவதற்கு மையமான முக்கிய அம்சமாகும்.

அதே நேரத்தில், இந்த அரசியல் உணர்வு – சோசலிச குணாம்சம் என்பது தானாக தொழிலாளி வர்க்கத்திற்கு வந்துவிடாது என்று லெனின்கூறுகிறார்.  அதாவது ஒரு புரட்சிகர கட்சியின் தலையீட்டினால் மட்டுமே இந்த சோசலிச உணர்வு மட்டம் என்பது பாட்டாளி வர்க்கத்திற்கு ஊட்டப்பட முடியும் என்று லெனின் குறிப்பிடுகிறார்.

தற்போது நவீன முதலாளித்துவ சமுதாயத்தில் பாட்டாளி வர்க்கம் மட்டுமே புரட்சிகர வர்க்கமாக இருக்கிறது.  ஆனால், அவர்களுடைய அரசியல் உணர்வு மட்டம் அல்லது புரட்சிகர குணாம்சம் என்பது லெனின் கூறியபடி தானாக வந்துவிடாது.  அதே போல எல்லா சந்தர்ப்பங்களிலும் எல்லா இடங்களிலும் முதலாளித்துவ நெருக்கடிக்கு எதிரான போராட்டங்கள் ஒரே மாதிரியாக இருக்காது.

ஹங்கேரியன் மார்க்சிஸ்ட் ஜார்ஜ் லூகாக்ஸ்,   “பொருளாதார நெருக்கடிக்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தின் உணர்வு மட்டம் என்பது பல நேரங்களில் போதுமான அளவிற்கு அதன் தீவிரமான தாக்குதலுக்கு எதிர் வினையாற்றும் தீவிரத்துடன்  இருப்பதில்லை” என்று குறிப்பிடுகிறார்.

தற்போதைய தலைமுறை தொழிலாளி வர்க்கம் முதலாளித்துவ நெருக்கடிகளுக்கு எதிரான போராட்டங்களில் உலகம் முழுவதும் ஆங்காங்கே  ஈடுபட்டுக் கொண்டு தான் இருக்கிறது.  ஆனால், உலகளாவிய அளவில் இந்த போராட்டங்கள் நடப்பதில்லை.  தற்போது புரட்சிகர பாட்டாளிவர்க்க அரசியல் கட்சிகளின் முக்கிய கடமை என்பது தேவையான தலையீடுகளை செய்து, பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் உணர்வு மட்டத்தை வளர்த்தெடுப்பதாகும்.  அவர்களுக்கு சோசலிசமே மாற்று என்பதனை அறிவுறுத்தி, ஒரு புரட்சிகரப் போராட்டத்தினை நடத்துவதற்குத் தேவையான வழிகாட்டுதல்களை அளிக்க வேண்டியதாகும்.  இதைத்தான் கம்யூனிஸ்ட் அறிக்கை அறிவுறுத்துகிறது.

உலகமயமாகும் நிலச்சீர்திருத்த அரசியல்!

உலகமயம் இது பன்னாட்டு பெருவணிக நிறுவனங்களின் கோஷம். ஏகாதிபத்திய நவீன சுரண்டலின் புதிய வடிவம். உலக மக்கள் வெறுக்கும் விரிவாக்கம்; இந்த ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிராக உலகளவில் தொழிலாளர்களும், ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளும், இடதுசாரி – ஜனநாயக அமைப்புகளும் போராட்ட இயக்கங்களை கட்டியெழுப்பி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக உலக சமூக மாமன்றம் போன்ற அமைப்புகள் விரிந்த சங்கிலி இணைப்புகளை உருவாக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. 1848-இல் உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று மார்க்சும் – ஏங்கெல்சும் கம்யூனிஸ்ட் அறிக்கையில் முன்வைத்த முழக்கம் இன்று நிஜமாகி வருகிறது.

ஏகாதிபத்திய – முதலாளித்துவ சக்திகள் தொழில்நுட்ப ரீதியிலும், அறிவியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் ஈபிள் கோபுரம் அளவிற்கு சாதனைகளை நிகழ்த்தியிருந்தாலும், உலக மக்களின் வறுமையை அவர்களால் தீர்க்க முடியவில்லை. மாறாக உலக மக்களை வறுமையின் புதைக்குழிகளுக்கே தள்ளி வருகின்றன. குறிப்பாக கிராமப்புற விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மிகக் கொடூரமான சுரண்டலுக்கு உள்ளாவதோடு, பட்டினிச் சாவுகளுக்கும், தற்கொலைகளுக்கும் இட்டுச் செல்லக்கூடிய அளவிற்கு அவர்களது வாழ்நிலை மிகவும் சீரழிந்து வருகிறது.

இந்த பின்னணியில்தான் இந்தியா உட்பட, லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டு வரும் இடதுசாரிகளின் எழுச்சி விவசாயிகள் – தொழிலாளர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அதோடு வெனிசுலா, பிரேசில், பொலிவியாவில் நடைபெற்று வரும் இடதுசாரி அரசுகளின் நிலச்சீர்திருத்த இயக்கம் விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டி வருகிறது.

இந்தியாவில் இடதுசாரி அரசுகளான கேரளம், மேற்குவங்கம், திரிபுராவில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்தத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தமிழகத்திலும் நிலச்சீர்திருத்தம் ஒரு அரசியல் கோஷமாக முன்னுக்கு வந்துள்ளது.

உலகிலேயே முதன் முதலில் நிலச்சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட நாடு சோசலிச சோவியத் யூனியன் தான்; தற்போது நடைபெற்று வரும் இந்த இயக்கங்களுக்கு முன்னோடி என்பதை நாம் இங்கே நினைவுகூர்ந்திட வேண்டும். சீனா, வடகொரியா, வியட்நாம் உட்பட சோசலிச நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் இன்றைக்கு விரிவடைந்து தென்னாப்பிரிக்கா, தென்கொரியா உட்பட பல்வேறு நாடுகளில் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக நிலச் சீர்திருத்தம் என்பது உலகளவில் அரசியல் கோஷமாக உலக மக்கள் விரும்புகிற உலகமயமாகி வருகிறது.

உலக உழைப்பாளி மக்களின் வறுமைக்கு அடிப்படையாக அமைந்திருப்பது உற்பத்தி கருவிகள் சுரண்டும் வர்க்கங்களின் கைகளில் குவிந்திருப்பதுதான். அதிலும் குறிப்பாக கிராமப்புற நிலவுடைமை இன்றைக்கும் பெரும் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளிலும், நிலப்பிரபுக்களின் கைகளிலும்தான் குவிந்திருக்கிறது. இந்த உற்பத்தி கருவிகளிலும், உற்பத்தி உறவுகளிலும் அடிப் படையான மாற்றத்தை ஏற்படுத்திடாமல் கிராமப்புற வறுமைக்கு தீர்வு காண முடியாது.

உலக விவசாயிகளின் நிலை

உலக மக்கள் தொகையில் சரி பாதி பேர் விவசாயத்தையே நம்பியுள்ளனர். 45 சதவீத மக்களது வாழ்க்கை விவசாயத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. அவர்களது வாழ்நிலை, வருமானம், பாதுகாப்பு என அனைத்தும் விவசாயத்தைச் சார்ந்தேயுள்ளது.

இவர்களது வாழ்க்கை பாதுகாப்பிற்கு மையக் கேள்வியாக இருப்பது நிலம். குறிப்பாக வளரும் நாடுகளில் உள்ள 50 கோடி மக்களுக்கு நிலமோ அல்லது நிலத்தின் மீதான உறவோயின்றி, விவசாயத் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இதில் மிகக் குறைந்த பகுதியினர்தான் குத்தகை விவசாயிகளாக உள்ளனர். இவர்கள் நிலவுடைமையாளர்களால் கடுமையாக சுரண்டப் படுவதோடு, கந்துவட்டி, குறைந்தகூலி, ஆண்டுமுழுவதும் சீரான வேலையின்மை, அதிகமான நிலவாடகை என பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக விவசாயிகள் அதிகமாக உள்ள நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தோனேஷியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, கொலம்பியா மற்றும் தென்னமெரிக்க நாடுகளில் உள்ள கிராமப்புற மக்கள் கடுமையான வறுமைக்கு ஆளாகியுள்ளனர்; சுகாதாரம், கல்வி, வீடு மற்றும் அடிப்படைத் தேவைகள்கூட கிடைக்காத பகுதியினராக திகழ்கின்றனர்.

அதேசமயம், சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான முன்னாள் சோசலிச நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்தத்தால் 58 கோடி மக்கள் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர். சீனா, வடகொரியா, வியட்நாம், கியூபா உட்பட சோசலிச நாடுகளில் நிலச்சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு கிராமப்புற பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளன. இந்தியாவிலும் மேற்குவங்கம், கேரளம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் நிகழ்த்தப்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கைகயால் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம், வாங்கும் சக்தி, உள்ளாட்சி நிர்வாகத்தில் பங்கேற்பு என பன்முனைகளில் ஜனநாயக ரீதியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று கிராமப்புற வளர்ச்சி நிறுவனத்தின், 21 ஆம் நூற்றாண்டில் நிலச்சீர்திருத்தம் என்ற ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

பிரேசில் விவசாயிகள் எழுச்சியும் நில மீட்பும்

உலகில் வளம் பொருந்திய நாடுகளில் ஒன்று பிரேசில், ஆனால், அதே அளவிற்கு வறுமையையும் கொண்டுள்ளது; இந்த நாட்டின் வளங்களை சுரண்டிச் செல்வதிலும், அதற்கேற்ப பொம்மை ஆட்சியாளர்களை அமர்த்துவதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைங்கரியம் உண்டு. குறிப்பாக பிரேசிலில் உள்ள மூன்றில் இரண்டு பகுதி விவசாய நிலங்கள், வெறும் மூன்று சதவீதம் பேருக்கு சொந்தமானது. அதிலும் குறிப்பாக 1.6 சதவீதம் பேரிடம் பிரேசிலின் 46.8 சதவீத விவசாய நிலங்கள் குவிந்திருக்கிறது. இவர்களின் கையில்தான் மொத்த விவசாயமும் – விவசாய கொள்கையை தீர்மானிக்கும் சக்தியாக திகழ்கின்றனர். இந்த நவீன விவசாய பண்ணைகளில் 2.5 கோடி மக்கள் தங்களது வாழ்க்கைக்காக விவசாயம் சார்ந்த வேலைகளையே நம்பியிருக்கின்றனர். நிலமற்ற விவசாயிகளாக – அத்துகூலிக்கு வேலை செய்யும் ஆட்களாக, வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களாக, சத்தற்ற நடைபிணங்களாக ஆக்கியது கடந்தகால ஆட்சியாளர்களின் கொள்கைகள்.

வெளிச்சத்தை கொண்டு வந்த விவசாய இயக்கம்

1984இல் துவங்கப்பட்ட கிராமப்புற நிலமற்ற விவசாயிகள் இயக்கத்தில் (ஆளுகூ-ஆடிஎஅநவேடி னடிளகூசயயெடாயனடிசநள சுரசயளை ளுநஅ கூநசசய  ஞடிசவரபரநளந – டுயனேடநளள றுடிசமநசள ஆடிஎநஅநவே)  1.5 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். எம்.எஸ்.டி. என்று அழைக்கப்படும் கிராமப்புற நிலமற்ற விவசாயிகள் இயக்கத்தில், 10 முதல் 15 குடும்பங்களைச் சார்ந்தவர்கள் ஒரு கிளையாக செயல்பட்டு வருகின்றனர். இந்த கிளைகளில் இருந்து மேல் கமிட்டிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு உறுப்பினர்களை தேர்வு செய்கின்றனர். இந்த இயக்கத்தில் பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த இயக்கம் பிரேசில் முழுவதும் உள்ள 27 மாநிலங்களில் 23 மாநிலங்களில் தங்களது கிளைகளை விழுதுகளாக ஆழப்பதித்திருக்கிறது.

2003 ஆம் ஆண்டு லூலா தலைமையில் அமைந்த இடதுசாரி அரசாங்கம் கிராமப்புற நிலமற்ற விவசாயிகள் இயக்கத்திற்கு பெரும் ஆதர்ச சக்தியாக திகழ்கிறது. கடந்த 20 ஆண்டு காலமாக  அவர்கள் நடத்தி வரும் நிலமீட்பு போராட்டம், லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள நிலமற்ற விவசாயிகளுக்கு ஒரு முன்னுதாரனமாக திகழ்கிறது. இந்த இயக்கம் கிராமப்புற மக்களின் ஆத்மாவாக, நம்பிக்கை நட்சத்திரமாக செயல்படுவதோடு, மிக அதிக அளவிலான விவசாயிகளைக் கொண்ட பேரியக்கமாக செயல்பட்டு வருகிறது.

நிலமற்ற கிராமப்புற விவசாயிகள் இயக்கத்தின் அடிப்படை நோக்கமே வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பது, ஜீரோ வேலையில்லாத் திண்டாட்டம் என்பதுதான். அத்துடன் செல்வத்தை பகிர்வது, சமூக நீதி, சம உரிமை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து செயல்படுகிறது.

பிரேசிலில் உள்ள மொத்த விவசாய நிலத்தில் 60 சதவீத விவசாய நிலம் தரிசு நிலம். இத்தகைய தரிசு நிலத்தை நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கக் கோரி நடத்திய விவசாயிகளின் வீரஞ்செறிந் போராட்டத்தின் மூலமாக, இதுவரை இரண்டரை லட்சம் குடும்பங்களுக்கு 15 மில்லியன் ஏக்கர் (1.5 கோடி ஏக்கர்) நிலம் கிடைத்துள்ளது. இந்த போராட்டத்தின் போது பல இடங்களில் நில முதலாளிகளின் தாக்குதல்களுக்கு 2000-த்துக்கும் மேற்பட்ட எம்.எஸ்.டி. ஊழியர்கள் பலியாகியுள்ளனர்.

விவசாயிகள் இயக்கம் நிலமீட்பு போராட்டத்தை மட்டும் நடத்துவதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. மீட்கப்பட்ட நிலத்தில் வர்த்தக பயிர்*களை தவிர்த்து, மாற்று கொள்கைகளை உருவாக்கி, புதிய விவசாய கலாச்சாரத்தை உருவாக்கி, செயல்படுத்தி வருகிறது. விவசாயம் உணவுப் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்துவதோடு, வேலையின்மைக்கு முற்றுப் புள்ளி வைப்பதாகவும் அமைய வேண்டும் என்ற நோக்கோடும், பொருளாதார தேவைகளை உயர்த்துவதாகவும், அவர்களது வறுமைக்கு தீர்வு காண்பதாகவும் இருக்க வேண்டும் என்ற முனைப்போடு எம்.எஸ்.டி. செயல்பட்டு வருகிறது. இதற்காக 60 உணவு கூட்டுறவு அமைப்புகளையும், சிறிய விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளையும் உருவாக்கி, உணவுக்கும் – வேலைக்கும் உத்திரவாதத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.

இது தவிர, கிராமப்புற விவசாய மக்களிடையே உள்ள எழுத்தறிவின்மையை போக்குவதற்கு எழுத்தறிவு இயக்கத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட எம்.எஸ்.டி. ஊழியர்கள் எழுத்தறிவு இயக்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2002 – 2005 கால கட்டத்தில் மட்டும் 56,000 கிராமப்புற மக்களுக்கு கல்வியறிவை புகட்டியுள்ளனர். அதேபோல் 1000க்கும் மேற்பட்ட ஆரம்ப பள்ளிகளையும் இந்த இயக்கம் நடத்தி வருகிறது.  இதில் 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், 50,000 குழந்தைகளும் பயின்று வருகின்றனர்.

இவ்வாறான விழிப்புணர்வின் மூலம் போராட்டத்தின் வாயிலாக பெற்ற நிலத்தை தாங்களே பாதுகாத்துக் கொள்ளவும், உணவு பாதுகாப்பையும், உணவுத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ளவும், குடும்ப பாதுகாப்பையும், பொருளாதார மேம்பாட்டையும் உத்திரவாதப்படுத்திக் கொள்ள இத்தகைய செயல்பாடு பயன்படுகிறது.

சமீபத்தில் பிரேசில் தலைநகரில் நடத்தப்பட்ட பிரம் மாண்டமான இயக்கத்தில் பல்லாயிரக்கணக்கான எம்.எஸ்.டி. ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர். லூலா தேர்தல் காலத்தில் நான்கு லட்சம் குடும்பங்களுக்கு நில விநியோகம் செய்வதாக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தற்போதைய வேகம் போதாது என்று எம்.எஸ்.டி. இயக்கம் விமர்சிக்கிறது. அதே சமயம் லூலா மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும், லூலா எங்கள் இயக்கத்தில் ஒருவர்; அவர் தங்களது நண்பர் என்றும் எம்.எஸ்.டி. இயக்கம் நம்பிக்கை கொள்கிறது.

பிரேசில் பிரம்மாண்டமான நிலவளத்தை கொண்டிருந் தாலும், அதனுடைய உணவுத் தேவைக்கு இறக்குமதியையே நம்பியிருக்கிறது. ஒரு நாட்டில் அதிகமான நிலம் இருப்பதால் மட்டும் அங்குள்ள விவசாயிகளுக்கும், மக்களுக்கும் உணவு கிடைக்கும் என்பதற்கு உத்திரவாதமில்லை. அந்நாட்டு அரசுகள் பின்பற்றும் கொள்கை, குறிப்பாக நிலவுடைமையாளர்கள் – பண்ணைகள் தங்களது நிலங்களில் உணவுப் பயிர்களுக்கு பதிலாக வர்த்தகப் பயிர்களையே விளைவிக்கின்றனர். மறுபுறத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கு போதுமான கூலி கிடைக்காமல் வறுமையின் சுழலுக்குள் சிக்கி, சின்னாபின்னமாவதுதான் நடக்கிறது.

நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் என்பது, அந்த விவசாயிகளின் வாழ்க்கையில் தன்னம்பிக்கை ஏற்படுத்துவதோடு, அவர்களது உணவுக்கான உத்திரவாதத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது. அந்த அடிப்படையில் தற்போது பிரேசிலில் நடந்துவரும் நிலமற்ற கிராமப்புற விவசாயிகள் இயக்கம் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள விவசாயிகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது.

நிலச்சீர்திருத்தம் வெனிசுலா காட்டும் பாதை

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக திகழ்வது கியூபாவும் – பிடலும். லத்தீன் அமெரிக்க நாடுகளில் அமெரிக்க சுரண்டலுக்கு எதிராக சிங்கத்தின் கர்ஜனையோடு பிடலுடன் கைகோர்த்திருப்பவர் வெனிசுலா அதிபர் யூகோ சாவேஸ். உலக எண்ணெய் வளத்தில் 5-வது இடத்தை வகிப்பது வெனிசுலா.

வெனிசுலா பெட்ரோலிய ஏற்றுமதியில் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது. அமெரிக்கா தன்னுடைய எண்ணெய் தேவையில் 25 சதவீதத்தை வெனிசுலாவில் இருந்து பெற்றுக் கொள்கிறது. வெனிசுலாவின் பொருளாதாரத்தில் மிக முக்கியமான இடத்தை வகிப்பது அதன் எண்ணெய் உற்பத்தியே; 80 சதவீத வருமானம் இதனை நம்பியே உள்ளது. அமெரிக்கா வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை கொள்ளைக் கொண்டதோடு, தனது நவீன காலனியாக பயன்படுத்தி வந்தது. சாவேஸ் ஆட்சிப் பொறுப் பேற்றதும், வெனிசுலாவின் எண்ணெய் வயல்களை அரசுடைமை யாக்கி, அமெரிக்க நிறுவனங்களின் சுரண்டலுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

1999 இல் ஆட்சிக்கு வந்த சாவேஸ் நிலச் சீர்திருத்தம்தான் எனது அரசின் முக்கிய இலக்கு என்று அறிவித்தார். விவசாயிகளின் உணவுப் பாதுகாப்பிற்கு அவர்களுக்கான நிலவுரிமையை உத்திரவாதப்படுத்துவதே எனது நோக்கம் என்று பிரகடனப் படுத்தினார். அத்தோடு நிற்காமல், வெனிசுலாவின் அரசியல் சாசனத்தையும் திருத்தியமைத்தார் சாவேஸ்.

அதிபர் சாவேசின் புரட்சிகர நடவடிக்கைகளை எதிர்கொள்ள முடியாத ஏகாதிபத்திய ஆளும் வர்க்கம், சாவேசை ஆட்சியில் இருந்து கவிழ்ப்பதற்கு பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்டு மூக்கை உடைத்துக் கொண்டது. ஓராண்டுக்கு முன் கிறித்துவ மதப் பிரசங்கம் செய்யும் பாதிரியார், சாவேசை கொல்ல வேண்டும் என்று வெளிப்படையாக மதப் பிரசங்கத்திலேயே அறிவித்தார் ஏகாதிபத்திய சுரண்டும் வர்க்கம் சாவேஸ் அரசை கவிழ்ப்பதற்கு எத்தகைய சீரழிந்த நடவடிக்கைகளை கைக்கொள்கிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை.

வெனிசுலாவில் உள்ள மொத்த விவசாய நிலத்தில் 75 சதவீத நிலம் 5 சதவீதத்தினர் கையில் உள்ளது. இத்தகைய நில முதலைகள் ஒவ்வொருவரிடமும் 1000 ஹெக்டேர்களுக்கு மேல் நிலம் குவிந்துள்ளது. இங்கும் பிரசிலில் நடைபெற்றது போல் பருத்தி, சோயா, கோக்கோ போன்ற வர்த்தகப் பயிர் விளைச்சல்தான். மறுபுறம் ஐந்தில் மூன்று பங்கு விவசாயிகள் நிலமற்ற கூலி விவசாயிகளாக உள்ளனர். மேலும் லத்தீன் அமெரிக்க நாடு களிலேயே கிராமப்புற மக்கள் தொகை குறைவாக கொண்ட நாடு வெனிசுலாதான். கடந்த 35 ஆண்டு காலமாக கிராமப்புறத்தில் இருந்த மக்கள் நிலங்களில் இருந்து விரட்டப்பட்டு, நகரங்களில் குவிந்துள்ளனர்.

1960-களில் 35 சதவீதமாக இருந்த கிராமப்புற மக்கள் தொகை படிப்படியாக குறைந்து 1990-களில் 12 சதவீதத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது 2000 ஆம் ஆண்டில் 8 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. வர்த்தகப்பயிர் உற்பத்தி மற்றும் நவீன விவசாய கருவிகளை கையாள்வதன் மூலமும், கிராமப்புற விவசாய மக்கள் முதலாளித்துவ ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளின் விளைவாக எப்படி நிலத்தில் இருந்து அகற்றப்படுகிறார்கள் என்பதற்கு வெனிசுலா சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. வெனிசுலாவின் விவசாய உற்பத்தி அதன் மொத்த ஜி.டி.பி.யில் வெறும் 6 சதவீதம் மட்டுமே. மொத்தத்தில் வெனிசுலா தன்னுடைய உணவுத் தேவைக்கு 88 சதவீதம் இறக்குமதியையே நம்பியுள்ளது.

ஒரு பக்கத்தில் வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை சுரண்டுவதும், மற்றொரு புறத்தில் தங்களது விளை பொருட்களை வெனிசுலா தலையில் கட்டுவதுமாக இருபுற சுரண்டலை அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் மேற்கொண்டு வந்தனர்.

கிராமத்திற்கு திரும்புவோம்!

சாவேஸ் ஆட்சிக்கு வந்ததும் கிராமத்திற்கு திரும்புவோம் என்ற முழக்கத்தை முன்வைத்தார். இதன் மூலம் பெரும் நிலப் பண்ணைகளை வைத்திருப்பவர்களுக்கு எதிரான போராட்டம் வெனிசுலாவில் தீவிரமடைந்தது. 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் வறுமையில் உழலும் வெனிசுலாவில் 75 சதவீத விவசாய நிலங்கள் 5 சதவீத நிலவுடைமையாளர்கள் வசம் இருந்தது. இதில் எஸ்டேட் என்று அழைக்கக்கூடிய 44 நவீன விவசாய பண்ணை களை நடத்தும் முதலாளிகளிடம் மட்டும் 6,20,000 ஏக்கர் நிலங்கள் குவிந்திருக்கிறது. இந்த நிலக்குவியல்தான் வெனிசுலாவின் அரசியல் அதிகார மையமாக இருக்கிறது. இந்த நிலக்குவியலை தகர்க்கும் உளியாக செயல்படுகிறார் சாவேஸ்.

சாவேஸ் ஆட்சிக்கு வந்தவுடன், அரசியல் சட்டத்தை திருத்தியதோடு, நிலவுடைமை குறித்த சட்டத்தையும் திருத்தி அமைத்தார். இதன் மூலம் தரிசு நிலங்களை கைப்பற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் வெகுவேகமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

18 வயதில் இருந்து 35 வயதுக்கு உட்பட்டவர்கள் குடும்பத் தலைவரோ அல்லது தனி நபரோ நிலம் வேண்டி அரசுக்கு விண்ணப்பித்தால், அவர்களுக்கு உரிய நிலம் அளிக்கப்படும். அவருக்கு கிடைக்கும் நிலத்தில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து விவசாயம் செய்து வந்தால், அந்த நிலம் அவருக்கு முழு உரிமையாக்கப்படும். அதே சமயம் அத்தகைய நிலத்தை யாருக்கும் விற்கவோ, அதேபோல் வேறு நிலங்களை வாங்கவோ சட்டத்தில் இடமில்லை. 2003ஆம் ஆண்டு 60,000 நிலமற்ற விவசாய குடும்பங்களுக்கு 5.5. மில்லியன் ஏக்கர் (55 லட்சம் ஏக்கர்) நிலத்தை விநியோகம் செய்து, அந்த மக்களுக்கு சட்ட உத்திரவாதம் வழங்கியுள்ளது வெனிசுலா அரசு. இந்த ஆண்டில் அரசின் இலக்கு 3.5 மில்லியன் ஏக்கர் நிலத்தை விநியோகிப்பது என்பதுதான்; அரசின் உறுதியான நடவடிக்கையால் இலக்கையும் மிஞ்சியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2004ஆம் ஆண்டு மட்டும் 1.5 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் 1,30,000 குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 6,50,000 பேர் பயனடைந்துள்ளனர் என்று வெனிசுலா நிலவிநியோக புள்ளி விவரம் கூறுகிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு குடும்பத் திற்கும் 11.5 ஹெக்டேர் நிலம் கிடைத்துள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை 2 மில்லியன் ஹெக்டேர் அளவுக்கு விநியோகிக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

இத்தகைய நிலவிநியோக நடவடிக்கையால், கிராமப் புறங்களில் நிலவுடைமை வர்க்கங்கள் நடத்திய தாக்குதல்களில், வன்முறைச் சம்பவங்களில் 150க்கும் மேற்பட்ட விவசாய இயக்கத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். வெனிசுலாவில் முதலாளித் துவ ஆட்சியாளர்கள் கிராமப்புற விவசாயிகளை நிலத்தைவிட்டு விரட்டியுள்ளதால், அங்கே விவசாயிகள் இயக்கம் என்பது கூடுதல் வலுப்பெறாத நிலையுள்ளது. பலமான விவசாயிகள் இயக்கம் வெனிசுலாவில் இருந்திருக்குமேயானால், சாவேசின் புரட்சிகர நடவடிக்கை மேலும் வெகுவேகமாக செயல்படுத்துவதற்கு உத்வேகமாக அமையும்.

வெனிசுலாவில் நடைபெறும் நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து நேரில் பார்வையிட்ட  பிரேசில் நிலமற்றோர் இயக்கத் தலைவர் ஜோஹோ பெட்ரன் கூறுகையில், நான் காதுகளில் கேட்பதை விட கண்களில் பார்ப்பது அதிகம் என்று புகழ்ந்துரைத்துள்ளார்.

நிலச் சீர்திருத்தம் பொலிவேரியன் பாதை

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி அலை வேகமாக சுழன்று அடித்துக் கொண்டிருக்கிறது. புரட்சி வீரன் சேகுவேரா சுடப்பட்ட மண்ணில் இன்றைக்கு இடதுசாரி சிந்தனை கொண்ட ஈவோ மொரேல்ஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஈவோ மொரோல்ஸ் மற்றொரு சாவேசாக உருவெடுத்து வருகிறார். பிடல், சாவேஸ், மொரோல்ஸ் கூட்டு ஏகாதிபத்திய அமெரிக்காவின் அடிவயிற்றை கலக்கிக் கொண்டிருக்கிறது.

இவர் ஆட்சிக்கு வந்தவுடன் எடுத்த முதல் நடவடிக்கையே பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவை அரசுடைமையாக்கியதுதான். பொலிவியாவில் நிலவுடைமை மிக வித்தியாசமானது. அங்கே இரண்டு விதமான நிவுடைமை நிலவுகிறது. ஒன்று மினிபன்டாஸ் என்று அழைக்கக்கூடிய விவசாய நிலம் மேற்கு பகுதியிலும், லாட்டிபண்டாஸ் என்று அழைக்கக்கூடிய தொழிற்சாலை நிலங்கள் கிழக்குப் பகுதியிலுமாக பிரிக்கப்பட்டு ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.

இங்கும், விவசாய நிலங்களில் ஏகாதிபத்திய வர்த்தகப் பயிர்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. விவசாயம் என்றாலே அது உள்நாட்டு மக்களின் தேவைக்கு என்பது மாறி, அது ஏற்றுமதி செய்வதற்கு என்ற நிலையினை தோற்றுவித்துள்ளது ஏகாதிபத்திய கட்டமைப்பு.

சின்னஞ்சிறு பொலிவியாவில் 35 லட்சம் கிராமப்புற மக்கள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். இதில் 40 சதவிகித விவசாயிகள் கடுமையான வறுமையில் உழல்வதாக கூறப்படுகிறது. இவர்களது ஆண்டு வருமானம் வெறும் 600 டாலர் மட்டுமே. அதாவது, ஒரு நாளைக்கு இரண்டு டாலருக்கும் குறைவு.

பொலிவியாவில் எழுந்த நிலத்துக்கான இயக்கம்

பிரேசிலிய அனுபவத்தைத் பின்பற்றி பொலிவியன் நிலமற்றோர் இயக்கம் இன்றைக்கு வெகு வேகமாக பரவி வருகிறது. பொலிவியாவில் உள்ள தரிசு நிலங்களை நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையோடு இந்த இயக்கம் செயல் பட்டு வருகிறது.  இந்த இயக்கத்தின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத முதலாளித்துவ நில பண்ணை முதலாளிகள் நூற்றுக்கணக்கான ஊழியர்களை கொலை செய்து வருகின்றனர்.

இந்த நிலப் பண்ணைகள் குறித்து கூறும் போது பரான்கோ மார்னிக்கோவ் என்ற ஒரே ஒரு நிறுவனம் மட்டும் 14,000 ஹெக்டேர் நிலத்தை தன் வசம் வைத்துள்ளது. இதிலிருந்து அங்குள்ள பண்ணைகளின் ஆதிக்கத்தை அறியலாம். இதேபோல் 100 குடும்பங்கள் மட்டும் 25 மில்லியன் ஹெக்டேர் நிலத்தை தன்வசம் வைத்துக் கொண்டுள்ளது.

அதே சமயம் 2 மில்லியன் மக்கள் (20 லட்சம் பேர்) தங்கள் வசம் வெறும் 5 மில்லியன் ஹெக்டேர் நிலத்தை மட்டுமே வைத்துள்ளனர்.

மொரேல்ஸ் அரசு நிலச்சீர்திருத்த நடவடிக்கையை நிறைவேற்றுவதற்கு முதல் கட்டமாக அரசியல் சட்டத்தில் அடிப்படையான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. முதல் கட்டமாக பொலிவியாவில் உள்ள 4.5 மில்லியன் ஹெக்டேர் நிலங்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பொலிவிய அரசின் நில விநியோகத் திட்டத்தை எப்படியும் தடுத்துவிட வேண்டும் என்ற நோக்கோடு நிலமுதலைகள் நில பாதுகாப்பு கமிட்டி அமைத்துள்ளனர். இவர்கள் நிலமற்ற விவசாயிகளுக்கு எதிராக வன்முறைத் தாக்குதல்களைத் தொடுப் பதற்கும் தயாராகி வருகின்றனர்.

மொரேல்ஸ் அடிப்படையில் கோக்கோ பயிரிடும் விவசாயிகள் இயக்கத்தின் தலைவர். மேலும், அவரது இயக்கமான சோசலிசத்தை நோக்கி (ஆடிஎநஅநவே வடிறயசன ளுடிஉயைடளைஅ  – ஆடிஎஅநைவேடி யட ளுடிஉயைடளைஅடி, ஆஹளு) என்ற கட்சியும் நிலச் சீர்திருத் தத்தை உறுதியாக மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. முதற் கட்டமாக தரிசு நிலங்களை நிலமற்ற விவசாயி களுக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கை துவங்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி அலை வீசுவதோடு, கிராமப்புற மக்களின் விடிவெள்ளியாக திகழ்கிறது. இந்த நாடுகளில் மேற்கொள்ளப்படும் நிலச்சீர்திருத்த நடவடிக்கை, லத்தீன் அமெரிக்கா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது. இது எதிர்காலத்தில் அந்த கண்டம் முழுவதையுமே மாற்றியமைக்கும் நடவடிக்கைக்கு கொண்டுச் செல்லும். உலகம் முழுவதும் இருக்கும் உழைப்பாளி மக்களுக்கும், இடதுசாரி எண்ணம் கொண்டவர்களுக்கும் லத்தீன் அமெரிக்காவில் நடைபெறும் மாற்றங்கள் ஒரு ரசாயன மாற்றத்தை ஏற்படுத்துவ தோடு, அந்தந்த நாடுகளில் ஒரு இடதுசாரி, சோசலிச எண்ணத்தை கட்டமைப்பதில் மேலும் புது உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகள் தற்கொலையும், வங்க பஞ்சமும்

இந்தியாவின் ஆத்மா கிராமப்புறத்தில் உள்ளது. இந்தியா பெரும் விவசாய நாடுகளில் ஒன்று. 70 சதவீத மக்கள் கிராமப்புறத்தை நம்பியே உள்ளனர். உலகமயமாக்கல், உலக வர்த்தக அமைப்பு டனான ஒப்பந்தம் போன்ற புதிய பொருளாதார கொள்கைகளால், இந்தியாவின் விவசாய கொள்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த கொள்கைகள் யாரை வாழ்விப்பதற்காக என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது. பசுமைப்புரட்சி கண்ட இந்தியா என்று பீற்றிக் கொண்ட நாட்டில்தான் தற்போது உலகிலேயே விவசாயிகள் தற்கொலை அதிகமாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மகாராஷ்டிரத்தில் உள்ள விதர்பா மாவட்டத்திற்கு சென்று 3750 கோடி அளவிலான நிவாரணங்களை வழங்கியுள்ளார். பரிதாபம் என்னவென்றால், பிரதமர் ஒருபுறம் நிவாரணங்களை வழங்கிக் கொண்டிருக்கும் போதே, தற்கொலைகளும் சமகாலத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தது தான். மகாராஷ்டிரம், ஆந்திரா, கர்நாடகம், கேரளம், பஞ்சாப் என பல மாநிலங்களில் ஆண்டுக்கு 4000 விவசாயிகள் தற்கொலைக்கு உள்ளாகின்றனர். இந்த எண்ணிக்கை இதைவிட அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஏன் இந்த நிலைமை?

இந்திய ஆட்சியாளர்கள் கடந்த 20 ஆண்டு காலமாக அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளின் செல்லப்பிள்ளையாக மாறியதும், உலக வர்த்தக அமைப்பு மற்றும் உலகவங்கியின் கட்டளைக்கு அடிபணிந்து பன்னாட்டு முதலாளிகளுக்கு சேவகம் செய்யும் கொள்கையை கடைப்பிடித்ததன் விளைவுதான் இன்றைக்கு இந்திய விவசாயிகளை இந்த நிலைக்குத் தள்ளியுள்ளது. ஏற்றுமதியை நோக்கமாக கொண்ட வர்த்தக பயிர் (பருத்தி, சோயா…) உற்பத்தியில் ஈடுபடுமாறு விவசாயிகளை ஆசை காட்டி மோசம் செய்ததோடு, உள்நாட்டில் உற்பத்தியாகும் 800க்கும் மேற்பட்ட விவசாய பொருட்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய அனுமதித்தது போன்ற தவறான விவசாய கொள்கைகளால் இந்திய விவசாயிகள் ஓட்டாண்டியாக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் மான்சாண்டோ என்கிற பன்னாட்டு நிறுவனங்களின் போல்கார்ட் பருத்தி விதைகளை பயன்படுத்தி பருத்தி விவசாயத்தில் ஈடுபட்டதும், உற்பத்தி செய்த விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததும், உரவிலை உயர்வு, மின்சார கட்டணம், தண்ணீரின்மை, கடன் சுமை, கந்து வட்டி என்று தொடர் சங்கிலியாக பருத்தி விவசாயிகள் கட்டுண்டு கிடக்கின்றனர். இதிலிருந்து மீள்வது எப்படி என்று வழி தெரியாத விவசாயிகள் தங்களுக்கான விடுதலை ஆயுதமாக தற்கொலையை தேர்ந் தெடுக்கின்றனர்.

1987 இல் ஆந்திராவில் மட்டும் 0.4 மில்லியன் ஹெக்டேரில் பருத்தி விவசாயம் மேற்கொள்ளப்பட்டது. 2005இல் இது 1.2 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு விரிவடைந்துள்ளது. அதாவது, வர்த்தகப் பயிர் உற்பத்தி எந்த அளவிற்கு விவசாயிகளை பொறியில் சிக்க வைத்துள்ளது என்பதை இந்த விவரம் காட்டுகிறது. மேலும் வர்த்தகப் பயிர் உற்பத்தியில் ஈடுபட்ட நிலங்கள் தற்போது வேறு எந்தவிதமான பாரம்பரிய நெல், கோதுமை போன்ற உணவுப் பயிர்களை உற்பத்தி செய்ய முடியாத சூழலுக்கு தள்ளியுள்ளது. பணப் பயிர் (வர்த்தகப் பயிர்) என்ற சொல்லே ஒரு ஏமாற்றுதான். முதலாளித்துவ அரசியல்வாதிகள்தான் இந்த சொல்லை வைத்து விவசாயிகளை ஏமாற்றுகிறார்கள். உணவுப் பாதுகாப்பு குறித்த உணர்வற்ற சுரண்டும் கூட்டத்திற்கு, விவசாயிகளை சுரண்ட இந்த ஏமாற்றுச் சொல் பயன்படுகிறது.

மேற்கண்ட அனைத்து நடவடிக்கைகளையும் மிஞ்சும் வகையில் மன்மோகன் சிங் அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, அந்நிய நாட்டில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்திய நாட்டிற்குள் விவசாயம் செய்துக் கொள்வதற்கு 100 சதவீதம் அனுமதிக்கப்போவதாக அறிவித்துள்ளது. உள்நாட்டு நவீன பண்ணையார்களை சமாளிப்பதற்கே கடினமாக உள்ள சூழ்நிலையில், விவசாயத்தில் அந்நியரை அனுமதிப்பது என்பது இந்திய நாடே தற்கொலைப் பாதைக்கு செல்வதற்கு ஒப்பாகும். நிலவிநியோகம் குறித்து அதிகமான விழிப்புணர்வு ஏற்பட்டு வரும் நேரத்தில் கார்ப்பரேட் விவசாய முதலாளிகள் இந்திய கிராமப்புறத்தில் உள்ள ஒட்டுமொத்த நிலத்தையும் சுரண்டிச் செல்வதற்குத்தான் இந்த அறிவிப்பு பயன்படும்.

இறக்குமதியாகும் உணவு தானியம்

தற்போது மத்தியில் உள்ள மன்மோகன் சிங் அரசு 5 லட்சம் டன் கோதுமையை ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது.  இந்த உணவு தானிய இறக்குமதி குறித்து ஆட்சியாளர்கள் பல்வேறு நொண்டிச்சாக்குகளை கூறி வருகின்றனர். அதாவது, நம்முடைய உணவு தானிய கையிருப்பை சமப்படுத்துவதாக கூறுகின்றனர். அதுவும் இறக்குமதி செய்யப்பட்டுள்ள கோதுமையில் பூச்சுக் கொல்லி மருந்துகள் சாதாரண அளவைவிட கூடுதலாக இருப்பதாக நாடாளுமன்றத்திலேயே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட கிராமப்புறத்தை கொண்ட ஒரு நாட்டில் தானிய இறக்குமதி என்ற கொள்கை எதை நோக்கிச் செல்லும் என்பதே நமது கேள்வி! நமது விவசாயம் திவாலாகி வருவதையும், உட்டோ (WTO) உடன்பாட்டின் அடிப்படையில் விவசாய பொருட்களை இறக்குமதி செய்யவும், நமது மார்க்கெட்டை பன்னாட்டு நிறுவனங்களுக்கு திறந்து விடும் மோசமான போக்கைத்தான் இது வெளிப்படுத்துகிறது. மேலும் நமது நாட்டு விளை பொருளான பருப்பு போன்றவற்றின் ஏற்றுமதிக்கு தடை விதித்து வருவதையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது.

விவசாயத்துறையில் அந்நியர்களை ஈடுபட அனுமதித்தால் நம்நாட்டில் உற்பத்தி செய்து, அதை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து, அங்கிருந்து நாம் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். இத்தகைய ஆபத்துக்களை நமது பொருளாதார புலி சிதம்பரம் வகையறாக்களுக்கு தெரியாததல்ல; எல்லாம் ஏகாதிபத்திய – உலகவங்கியின் அடிமைத்தன விசுவாசம்தான் இத்தகைய செயல்பாடுகளில் அவர்களை தீவிரமாக ஈடுபடத் தூண்டுகிறது.

கடந்த வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் 6 லட்சம் டன் உணவு தானியம் கையிருப்பில் உள்ளதாக கூறிக் கொண்டு, இது நம்முடைய கையிருப்பு தேவையை விட அதிகமாக இருக்கிறது என்று கூறி, பொது விநியோகத்திற்கு வழங்கப்படும் தொகையை விட மிகக் குறைவான அளவுக்கு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது.

24 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள நம் நாட்டில், ஒரு புறத்தில் பட்டினிச் சாவுகளும், விவசாயிகள் தற்கொலைகளும் நடைபெற்று வருவது மத்திய அரசு கடைப் பிடிக்கும் புதிய விவசாய கொள்கை நம் மக்களை வாழ்விக்காது என்பதை பட்டவர்த்தனமாக உணர்த்துகிறது.

வங்கப் பஞ்சம் படிப்பினை!

பிரிட்டிஷ் இந்தியாவில் 1943 இல் வங்கத்தில் ஏற்பட்ட கடுமையான பஞ்சமும், அதனால் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறப்புக்கும் யார் காரணம்? இதன் மூலம் இந்திய அரசு பெற்ற அனுபவம் என்ன? இது குறித்து ஜவஹர்லால் நேரு, தன்னுடைய கண்டுணர்ந்த இந்தியாவில் எழுதியவற்றை பார்ப்போம்:

அதிகாரிகளின் தொலைநோக்கின்மையும், அலட்சிய மனோபாவமும் போரின் பின் விளைவும்தான் இப்பஞ்சத் திற்கு காரணம். சாதாரணமான அறிவுடையவர்களாலேயே பஞ்சத்தின் அறிகுறியைக் கணிக்க முடிந்தது. உணவு நிலையைச் சரிவரக் கையாண்டிருந்தால், இத்தகைய பஞ்சத்தைத் தவிர்த்திருக்க முடியும். போரால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நாட்டிலும், போரால் விளையும் இத்தகைய பொருளாதார சிக்கலை, போர் தொடங்கும் முன்னரே கணித்துத் தயார் நிலையில் இருந்திருக்கிறார்கள். இந்தியாவில் போர் தொடங்கி மூன்றரை ஆண்டுகள் கழித்தே உணவுத்துறை  துவக்கப்பட்டது.

மேலும், இந்தியாவில் உணவுப் பற்றாக்குறை 40 லட்சம் டன் என்று கணிக்கப்பட்ட சூழ்நிலையில், பிரிட்டிஷ் – இந்திய அரசு 10 லட்சம் டன் உணவுதானியத்தை ஏற்றுமதி செய்தது. விலை யேற்றம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக ஏறிக் கொண்டே சென்றது. மக்களின் வாங்கும் சக்தி முற்றிலும் பறிக்கப்பட்டு, உணவுக்காக கடுமையாக சுரண்டப்பட்டனர். பசியும், பட்டினியுமாக கிடந்த மக்கள் வாழ வழித்தெரியாமல் கடுமையான நோய்களுக்கு ஆளாகி, எலும்பு கூடுகளாய் – நடைபிணங்களாய் மாறி தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்களை பலிகொண்டது வங்கப் பஞ்சம். ஒரு புறம் எந்த உணவுப் பொருட்களும் கிடைக்காததால் பஞ்சம் வந்ததோ, அந்த பொருட்களை விற்பனை செய்ததால் கிடைத்த கொள்ளை லாபத்தில் ஆளும் வர்க்கம் சுகம் கண்டு கொண்டிருந்தனர்.!

வங்கப் பஞ்சம் குறித்தும், அதனுடைய கொடுமைகள் குறித்தும், மக்களது துன்ப – துயரங்களை விளக்கியும் பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய ஆனந்த மடம் நாவலைப் படித்தால் அதன் முழுமையான பரிணாமத்தை உணர முடியும்.

மொத்தத்தில் அரசுகளின் தவறான உணவுக் கொள்கையும், விவசாய கொள்கையும் மக்களை பசி – பட்டினிச் சாவுகளுக்கு கொண்டுச் செல்லும் என்பதைத்தான் வங்கப் பஞ்சம் உணர்த்து கிறது. இதன் பின்னணியில் தற்போது இந்திய அரசின் செயல் பாடுகளை ஒப்பு நோக்கும் போது, இந்திய அரசின் விவசாய கொள்கை எதை நோக்கிச் செல்கிறது என்பதை உணரலாம்.

தற்போது மேற்குவங்கத்தில் இந்த பஞ்சத்தின் அனுபவங்களை உணர்ந்த இடதுசாரி அரசு செய்த நிலச்சீர்திருத்தத்தின் விளைவாக 14 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் விநியோகிக்கப்பட்டு 26 லட்சம் நிலமற்ற விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இதில் 56 சதவீதம் பேர் தலித் மற்றும் பழங்குடியின மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக மேற்கொள்ளப்பட்ட நில விநியோகத்தில் மேற்குவங்கத்தில் மட்டும் வழங்கப்பட்டது  20 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக மேற்கு வங்கத்தில் உணவு உற்பத்தி மிக கணிசமான அளவுக்கு பெருகி யிருக்கிறது. இதேபோல் கேரளத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கையும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளது.

தமிழகத்தில் நில விநியோகம்

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தனது தேர்தல் அறிக்கையில் 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை இரண்டு ஏக்கர் விதம் 26 லட்சம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. திமுக அரசின் நில விநியோக அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இந்த நில விநியோக நடவடிக்கையை வெற்றி பெறச் செய்வதில் மார்க்சிஸ்ட்டுகளுக்கு மிக முக்கியமான பங்குள்ளது. கிராமப்புறத்தில் உள்ள நிலமற்ற விவசாய தொழிலாளர்களை அணிதிரட்டி, அரசுக்கு சொந்தமான தரிசு நிலங்களை அடையாளம் காணுவதோடு, அதற்காக எழுச்சிமிக்க வலுவான விவசாய இயக்கத்தை நடத்துவதன் மூலம்தான் இந்த நில விநியோக நடவடிக்கையை வெற்றிகரமாக பூர்த்தி செய்ய முடியும்.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அம்மையார் ஜெயலலிதா இந்த 55 லட்சம் ஏக்கர் நிலத்தை பெரும் கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு தாரைவார்க்க திட்டமிட்டிருந்தார். ஆனால், இப்போது கூறுகிறார் 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் தமிழகத்தில் இல்லவே இல்லையென்று. ஜெயலலிதாக்களின் விசுவாசம் நிலமற்ற கூலி விவசாயிகள் மீதல்ல; கார்ப்பரேட் பண்ணைகளிடத்தில்தான்.

மேலும், தமிழகத்தில் நிலச்சீர்திருத்த சட்டத்தை அமலாக்குவதில் திமுக அரசு உரிய – தீவிர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இதைத்தான் இடதுசாரிகளும், மக்களும் விரும்புகின்றனர். நிலச்சீர்திருத்த சட்ட அமலாக்கம் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் 26வது மாநில மாநாடு முன்வைத்த அறிக்கையில் உள்ள பகுதியை இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

தமிழகத்தில் நிலச்சீர்திருத்த சட்டம் என்பது முற்றிலும் முடமாக்கப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. உச்சவரம்பு சட்டத்தின் மூலம் 20 லட்சம் ஏக்கர் நிலம் உபரியாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சட்டம் நிறைவேற்றப்பட்டு 40 ஆண்டுகளுக்கு பின்னரும் கையகப்படுத்தியுள்ள நிலம் 1.9 லட்சம் ஏக்கர் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

அதே போல்,

தலித் மக்களுக்கென்றே ஒதுக்கப்பட்ட சுமார் 3 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் அம்மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்டு பலருடைய அனுபவத்தில் உள்ளது. இந்நிலங்களை மீட்டு தலித்துக்கள் வசம் ஒப்படைக்க சட்டரீதியான தடைகள் ஏதுமில்லை

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மேற்கண்ட கூற்று, தமிழக நிலச்சீர்திருத்தத்தில் செய்ய வேண்டிய இலக்கினை மிகச் சரியாக சுட்டிக்காட்டியுள்ளது. தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளபடி 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலத்தை விநியோகிப்பதோடு நிற்காமல், நில உச்சவரம்பு சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்து, நிலச்சீர்திருத்த நோக்கிலான நிலஉச்சரம்பை கொண்டு வரவேண்டும்.

காமராஜர் ஆட்சிகாலத்தில் 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் என்று இருந்ததை கலைஞர் ஆட்சிக்காலத்தில் 15 ஸ்டாண்டர்டு ஏக்கராக மாற்றப்பட்டது. இருப்பினும் இந்த உச்சவரம்பு சட்டத்தில் நிலவுடை மையாளர்களது நிலங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களின் பெயர்களிலும், பினாமிகள் பெயர்களிலும் மாற்றம் செய்யப்பட்டு அனுபவித்து வரப்படுகிறது. அதோடு விவசாய நிலங்கள் கரும்பு விளைச்சல் நிலம், பழத்தோட்டங்கள், பால்பண்ணைகள், டிரஸ்டுகள், தர்ம ஸ்தாபனங்கள் என்று பல்வேறு வடிவங்களில் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி அனுபவித்து வருகின்றனர். இதனாலேயே இந்தச் சட்டம் உச்சரம்பா, மிச்ச வரம்பா என்ற கேலிக்கும் இட்டுச் சென்றது. எனவே கடந்தகால அனுபவத்தை கணக்கில்கொண்டு  நிலஉச்சவரம்பு சட்டத்தை முழுமையாக அமலாக்கி நிலமற்ற விவசாய தொழிலாளர்களது வாழ்வில் அடிப்படையான மாற்றத்தை கொண்டுவருவதன் மூலம் தமிழக வரலாற்றில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்திட முடியும். இத்தகைய அடிப்படையான விஷயங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரி – ஜனநாயக சக்திகளும் களத்தில் உறுதியாக துணை நிற்கும்.

நிலம் – உணவு – வேலைக்கான இயக்கம்

ஜூன் 8 – 10, 2006 நடந்து முடிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி ஆகஸ்ட் மாதத்தில் உணவு – நிலம் – வேலை என்ற மூன்று முழக்கத்தை முன்வைத்து நாடு தழுவிய இயக்கம் நடத்துவதற்கு அறைகூவல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நிலச்சீர்திருத்த நடவடிக்கை என்பது கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பு, உணவு தேவை போன்றவற்றை பூர்த்தி செய்யும் இணைப்பு சங்கிலியாக செயல்படும் மிக முக்கியமான நடவடிக்கை! லத்தீன் அமெரிக்காவில் நடைபெறும் நிலச்சீர்திருத்த நடவடிக்கையும், இந்தியாவில் மேற்குவங்கம் – கேரளத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கையும் நாடு முழுவதும் உள்ள விவசாய தொழிலாளர் களுக்கும், கிராமப்புற விவசாயிகளுக்கும் நம்பிக்கையூட்டும் நிகழ்வாகும்.

நிலச்சீர்திருத்தம் உலக அரசியல் அரங்கின் முக்கிய அஜண்டாவாக மாறி வருவதைத்தான் மேற்கண்ட லத்தீன் அமெரிக்க அனுபவங்கள் உணர்த்துகின்றன. இந்திய அரசியலிலும் நிலச்சீர்திருத்த முழக்கத்தை ஒரு பௌதீக சக்தியாக மாற்றுவது மார்க்சிஸ்ட்டுகளின் வரலாற்று கடமையாகிறது.

தகவல் ஆதாரம்

http://www.landaction.org
http://en.wikipedia.org/wiki/Landless_Workers%27_Movement
http://www.pbs.org/frontlineworld/rough/2005/12/brazil_cutting.html#
http://news.bbc.co.uk/1/hi/world/americas/4550855.stm
http://www.zmag.org/weluser.htm
http://www.venezuelanalysis.com

Rural Development Institute, Land Reform in the 21st Century
http://www.rdiland.org

நிலப்பிரபுத்துவத்தை ஒழிக்க நாம் காட்டும் பாதை, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வெளியீடு – 1974.