நகரமயமும், நம் முன் உள்ள கடமைகளும் !

அருண் குமார்

தமிழில்: ச.லெனின்

நாட்டில் வேகமாக நகர்மயமாகும் மாநிலங்களில் தமிழ் நாடும் ஒன்று. புள்ளிவிவரங்களின்படி தமிழகத்தின் 48.5 சதவீத மக்கள் நகரங்களில் வசிக்கின்றனர். இந்த போக்கு அடுத்த சில பத்தாண்டுகளுக்குத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நகர்மயமாதல் என்பது வாய்ப்பு மற்றும் சவால்கள் என இரண்டையும் ஒருங்கே கொண்டுள்ளது.

பொருளாதார மற்றும் சமூக ரீதியான மேம்பட்ட ஒரு வாழ்நிலைக்கான நம்பிக்கையோடு நகரங்களை நோக்கி புலம்பெயரும் மக்களுக்கு நகர்மயம் சவாலாக உள்ளது. அதேநேரம் அரசிற்கோ அதிகப்படியான வரியை விதித்து அதன் வருவாய்க்கான வழிகளை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்பாக உள்ளது. இந்தப் பின்னணியில், சமூக மாற்றத்தை நிகழ்த்துவதற்கான உறுதிப்பாடுடன் இருக்கும் புரட்சிகர சக்தி என்கிற வகையில் நகர்பகுதிகளில் நமது தலையீடு அவசியமானதாகும். நமக்கு நகர்மயம் என்பது சவாலாகவும் அதேநேரம் வாய்ப்பாகவும் உள்ளது.

கொல்கத்தா பிளீனத்தின் ஸ்தாபனம் குறித்த அறிக்கையில் நகர்ப்புற மக்கள் மத்தியில் நமது தொடர்பை வலுப்படுத்துவதன் அவசியம் குறித்து கூடுதல் அழுத்தம் கொடுத்து குறிப்பிடப்பட்டுள்ளது. நகரங்கள் என்பது தொழிற்சாலைகளில் மையமாக மட்டுமில்லாமல் சேவை துறை சார்ந்த மையங்களாகவும் வளர்ந்து வருகிறது. நாட்டின் உள்நாட்டு உற்பத்திக்கு இந்த இரண்டு துறைகளும் கூடுதலான பங்களிப்பை செலுத்துகிறது என்பதோடு மட்டுமல்லாமல், அவை அதிகமான வேலைவாய்ப்புகளை வழங்கும் இடமாகவும் உள்ளது. கிராமப்புற இளைஞர்கள் பலர் வேலை மற்றும் மேம்பட்ட வாழ்வை தேடி நகரங்களை நோக்கி புலம்பெயர்கின்றனர். நகரங்கள் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தொழில் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுடன், சேவை துறை சார்ந்த பணிகளில் வந்து குவியும் புதிய தலைமுறையினர் கூடுதலாக இணைகின்றனர். அந்தவகையில் நகரங்கள் இன்னமும் உழைக்கும் வர்க்கத்தின் முக்கிய மையமாக திகழ்கிறது. எனவே நகரங்களில் நமது அடித்தளத்தை வலுவாக்க வேண்டியது அவசியமாகிறது.

வங்கி, காப்பீடு, கல்லூரிகள், பள்ளிகள், பயிற்சி மையங்கள் என நிதி மற்றும் கல்வி சார்ந்த நடவடிக்கைகள் நகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகம் நடைபெறுகிறது. வளர்ந்துவரும் தகவல் தொழில் நுட்பத்துறை புதிய தலைமுறையினரின் துறைசார் வல்லுநர்களை (professionals) நகரங்களை நோக்கி வரவைக்கிறது. இவர்களில் பெரும்பகுதியினர் தங்களின் வாழ்வை மேம்படுத்திக்கொள்ளும் கனவுடன் கூடிய, நன்கு படித்த, மத்தியதர வர்க்கத்தினராக உள்ளனர். இருக்கும் பொருளாதார நிலைமைகளில் அவர்களின் கனவுகள் நிராசைகளாகவே முடியும் என்பதை உணர மறுக்கின்றனர். மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றாததையும், மாசு நிறைந்த சுற்றுச்சூழல், மோசமான பொது போக்குவரத்து, நெருக்கடியான சாலைகள், தங்களை ஆற்றுப்படுத்தி தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வெளி இல்லாமை என்பது போன்ற மோசமான அரசுகளின் மீது அவர்களுக்கு கோபமும் அதிருப்தியும்  உள்ளது. சொந்த வீடு என்பதன் மீதான விருப்பம் கூடுதலாக உள்ளது.  நில விற்பனை சந்தை இம்மக்களை சார்ந்தே உள்ளது. இம்மக்களின் ஆசைகள் மற்றும் அச்சங்களின் மீதே அவர்கள் தங்கள் முதலீட்டை திட்டமிடுகின்றனர். இம்மக்கள் இன்றளவும் நவதாராளமய கொள்கைகள் குறித்து குழப்பமான பார்வையையே கொண்டுள்ளனர். ஒரு பக்கம் சந்தைகள் மூலம் அது வழங்கியுள்ள வாய்ப்பு வசதிகளை நினைத்து மகிழ்கின்றனர். மறுபுறம் வேலை மற்றும் வாழ்நிலை குறித்த நிச்சயமற்ற தன்மைகளை நினைத்து வருந்துகின்றனர். சமூகத்தின் அடிநாதமாக இருக்கும் இம்மக்கள் தங்களின் அதிருப்திகளை வெளிப்படுத்தும் அதேநேரம், இந்த வளர்ச்சிப்போக்கை ஏற்பதா? நிராகரிப்பதா? என்று முடிவெடுக்க முடியாமல் நிற்கின்றனர்.

அரசுக்கும் இம்மக்களுக்குமான முதல் தொடர்பு உள்ளாட்சி அமைப்புகள்தான். அரசு வழங்கவேண்டும் என்று இம்மக்கள் எதிர்பார்க்கும் தேவைகளை உள்ளாட்சி அமைப்புகள்தான் நிறைவேற்றிட வேண்டும். அதேபோல் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளே அவர்களால் உடனடியாக தொடர்புகொள்ள முடிந்த மக்கள் பிரதிநிதியாகும். உள்ளாட்சி அமைப்புகளில் செய்யவேண்டிய பணிகள் குறித்து அதிகமான எதிர்பார்ப்பு இம்மக்களிடம் உள்ளது. ஆனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்ள வரம்புகள் குறித்து அவர்கள் அறிவதில்லை. எனவே உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மீதே அவர்களின் கோபங்கள் வெளிப்படுகிறது. உள்ளாட்சி அமைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மக்களின் எதிர்பார்ப்புகளை கூடுமான அளவு நிறைவேற்றிட உழைத்திட வேண்டும். அதேநேரம் மக்கள் மத்தியில் இப்பணிகளை மேற்கொள்வதில் உள்ள வரம்புகளையும் எடுத்துக் கூறிடவேண்டும். சமூகத்தில் நவதாராளமயத்தின் மோசமான தாக்கம் குறித்தும் நமது அரசியல் குறித்தும் மக்கள் மத்தியில் எடுத்துரைப்பதற்கான நல்ல வாய்ப்பை இது வழங்கியுள்ளது. மக்களுடன் நேரடித் தொடர்பு கொள்ளும் நிலையில் உள்ள நாம் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளில் நமது மாற்று திட்டத்தின் அடிப்படையிலான சிறப்பான செயல்பாடுகள் மூலம் முன்னணி வகிக்க வேண்டும்.

அதிகாரங்களை குவிக்கும் மத்திய அரசின் இன்றைய போக்கை அம்பலப்படுத்திடவேண்டும். அரசியல் சாசனத்தின் 73 மற்றும் 74 ஆம் பிரிவு வழங்கியுள்ள குறைந்தபட்ச அதிகாரப் பரவலையும் மத்திய அரசு சிதைக்கிறது. அதிகாரப் பரவல் மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு  பிரிவுகள் குறித்து கட்சியின் முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளர் இ.எம்.எஸ். கீழ்காணும் வகையில் குறிப்பிடுகிறார். “ஜனநாயகபர்வமான அதிகாரப் பரவல் என்பது, உழைக்கும் மக்கள் தங்கள் மீது நிகழ்த்தப்படுகிற ஒடுக்குமுறை மற்றும் சரண்டலுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவுவதாக இருக்கவேண்டும் என்பதே எனது நம்பிக்கை. தேசிய மற்றும் மாநில அளவில் ஜனநாயகமும், கீழ்மட்ட அளவில் அதிகாரப் போக்கு என்பதே இந்திய அரசியலின் அரசியல் சாசனம் குறிப்பிடுகிறது. மேலும் அரசியல் அமைப்பின் உள்ளடக்கம் மாநிலங்களின் உரிமைகள் மற்றும் அதிகாரத்தின் மீதான மத்திய அரசின் ஆதிக்கத்தை விரிவுபடுத்த வழிவகை செய்கிறது. எனவே, அரசு அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ அரசியல் சாசனம் மாநிலங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரப் பரவலை அமலாக்க தயாராகாமல் இருப்பது குறித்து ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.” இந்தப் இரண்டு பிரிவுகளும் அரசு நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளதே தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளுக்கு கட்டுப்படும் வகையில் அதிகாரிகள் இல்லை.

இந்த அடிப்படையில் அதிகாரப்பரவல் குறித்து நாம் பேசவேண்டியுள்ளது. 73 மற்றும் 74 ஆவது பிரிவுகளின் சாதகமான பங்களிப்புகள் மற்றும் வரம்புகளையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அனைத்து மாநிலங்களும் உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்கி, அதற்கான நிதி ஆதாரங்களை உருவாக்கி செயல்பட வைப்பதோடு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி அவ்வமைப்புகளுக்கான பிரதிநிதிகளை தேர்வு செய்யவேண்டும் என்கிறது இப்பிரிவுகள். நாடுமுழுவதும் ஒரேமாதிரியான செயல்பாடுகளை உத்தரவாதப்படுத்துவதோடு கிராமப்புற மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இப்பிரிவு அரசியல் சாசனத்திற்குட்பட்ட அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. 74 ஆவது பிரிவின்படி வழங்கப்பட்ட அதிகாரப் பரவலின்படி ‘வளர்ச்சிக்கான பணிகளை திட்டமிடுவது, சுகாதாரம், கல்வி, வறுமை ஒழிப்பு, வீட்டுவசதி, நகர வளர்ச்சி திட்டங்கள், நிலபயன்பாடுகள் குறித்த வரம்புகள், தண்ணீர் விநியோகம், குடிசை பகுதிகளை மேம்படுத்துதல், சிறு தொழில் வளர்ச்சி உள்ளிட்ட 18 முக்கியமான அம்சங்களில் செயல்பட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் உண்டு. இவையெல்லாம் அதன் அதிகார வரம்பாக தீர்மானிக்கப்பட்டாலும், மாநிலத்திற்கு மாநிலம் அது வேறுபடும். தேர்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதி என்கிற வகையில் மக்கள் நலன் சார்ந்து அவ்வமைப்பை செயல்பட வலியுறுத்துவது நமது கடமையாகும்.

அதேநேரம் அதன் வரம்புகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். வேகமான நவதாராளமய காலத்தில் அதற்கேற்ற வகையில்தான் பொருளாதார கொள்கை, அரசு அமைப்பு முறை எல்லாம் மாறிப் போயுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டு வந்த நிதி கடுமையாக வெட்டிச் சுருக்கப்பட்டுள்ளது. சர்வதேசிய நிதி முகமைகளான உலக வங்கி நவதாராளமய சீர்திருத்தங்களை அமலாக்கிட அழுத்தம் கொடுக்கின்றன. தண்ணீர் விநியோகத்திற்கு மீட்டர் பொருத்தி கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும், குடிநீர், குப்பை சேகரிப்பு, கழிவு நீர் சுத்திகரிப்பு, பொது இட பயன்பாடு உள்ளிட்டவைகளுக்கு தனித்தனியாக கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும், சொத்துவரி, மின்கட்டணம் மற்றும் நிலப்பயன்பாடு உள்ளிட்டவைகளுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றும் அவை கூறுகின்றன. அரசியல் ரீதியான பின்விளைவுகளை சந்திக்க வேண்டும் என்கிற அச்சத்தில் மத்திய மாநில அரசுகள் இவற்றை ஓரே நேரத்தில் அமலாக்க அஞ்சுகின்றன. எனவே உலக வங்கி கொஞ்சம் கொஞ்சமாக அமலாக்கச் சொல்கிறது. அவ்வாறே தற்போது அது அமலாக்கப்படுவதை நாம் பார்க்கிறோம்.

உள்ளாட்சி அமைப்புகள் தண்ணீர் விநியோகம் உள்ளிட்ட மக்களுக்கு ஆற்றும் சேவைகளை தனியார்மயமாக்க வேண்டும் என்கிறது உலக வங்கி. நகரங்களுக்கு 24 மணி நேரமும் தண்ணீர் விநியோகத்தை தனியார் வந்தால்தான் வழங்கமுடியும் என்கிறது. “கொள்கை அடிப்படடையில், பராமரிப்பு மற்றும் செயல்பாட்டுக்கான பணம் என்பது பயன்பாட்டு கட்டணத்தின் மூலமே திரட்டப்பட வேண்டும். சொத்தின் மீதான தேய்மானம் மற்றும்  சொத்துக்கள் மூலம் ஈட்டப்பட வேண்டிய வருமானம் எல்லாம் வரவாக வேண்டும்” என்கிறது உலக வங்கி (2013). பொதுப் பணத்தின் மூலம் அனைவருக்கும் குடிநீர் வழங்குவது சாத்தியமில்லை. எனவே தனியாரை அனுமதிப்பது அவசியம் என்கிறது. “தற்போது ஏழை மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகள் பொது நிதியை செலவு செய்கின்றன. அவை போதுமான திட்டமிடல்கள் இல்லாமலும் தேவையை நிறைவேற்ற போதுமானதாகவும் இருப்பதில்லை. நிதி ஆதாரத்தை திரட்டுவதாக இல்லாமல் நிதியை  செலவழிப்பதாக உள்ளது. எனவே நிதி ஆதாரங்களுக்கான பழைய வழிமுறைகளுக்கு மாறாக, ஒரு புதிய நிதி திரட்டும் முறையை அரசாங்கம் கண்டறியவேண்டும்.”   செலவுகளை ஈடுகட்ட தனியார் முதலீட்டை அனுமதிக்க வேண்டுமென்கிறது உலக வங்கி. ”அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யவேண்டும் என்கிற விருப்பத்தை அரசியல் கட்சிகளின் தலைமை அடைய நினைத்தால் அவர்கள் சற்று மாற்றி சிந்திக்க வேண்டும்” (உலக வங்கி 2017)

காங்கிரஸ், பி.ஜே.பி மற்றும அனேகமாக அனைத்து மாநில கட்சிகளுக்கும் நவதாராளமய சீர்திருத்தங்களை அமலாக்குவதில் எவ்வித தயக்கமும் இல்லை. இப்படியான சீர்திருத்தங்களை அமலாக்கினால் மக்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டி வருமே என்பது குறித்து மட்டுமே அவர்களுக்கு அச்சம் உள்ளது. மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ளவே ஜனநாயகமும் ஜனநாயக அமைப்புகளும் மெதுமெதுவாக சீரழிக்கப்படுகிறது. மத்தியில் பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த பிறகு இதன் வேகம் அதிகரித்ததுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளை பொருத்தவரை அதன் அதிகாரங்கள் வெட்டிச் சுருக்கப்பட்டு, அதன் ஜனநாயக உள்ளடக்கம் நீர்த்துப்போக செய்யப்படுகிறது. இ.எம்.எஸ். சுட்டிக்காட்டியதுபோல் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளால் எடுக்கப்படும் முடிவுகள் மதிக்கப்படாமல் அரசு நிர்வாகத்தின் அதிகாரம் நிறுவப்படுகிறது. நவதாராளமய கொள்கைகளின் அமலாக்கத்திற்கு பிறகு, உலக வங்கியின் வேறொரு பரிந்துரையின்படி தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு இணையான அரசு அதிகாரிகளின் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. நகர வளர்ச்சி குழுமம், குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் ஆகியவை இதற்கான உதாரணங்களாகும்.

பி.ஜே.பி உருவாக்கியுள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு பிறகு இந்த அமைப்புகளின் உள்ளடக்கம் மேலும் புதிய பரிணாமத்தை அடைந்துள்ளது. சிறப்பு நோக்க திட்டம் (Special Purpose Vehicle) என்று அது அழைக்கப்படுகிறது. இது அரசு மற்றும் தனியார் மூலம் 50:50 என்கிற பங்குகள் அடிப்படையில் செயல்படும். சந்தையில் தனக்கான அங்கீகாரத்தை உருவாக்கிக் கொண்டு கூடுதல் நிதி ஆதாரங்களை பெருக்கிக் கொள்ள வேண்டும். இது தலைமை நிர்வாக அலுவலரை நியமித்து செயல்படும். அவர் மூன்றாண்டுகள் அப்பொறுப்பில் இருப்பார். அதற்கு முன்பாக அவரை அப்பொறுப்பிலிறுந்து விடுவிப்பதாக இருந்தால், மத்திய அரசிடம் முன் அனுமதி பெறவேண்டும். இது 74வது பிரிவு வழங்கியுள்ள உரிமைகள் மீதான தாக்குதலாகும். அதிகாரப் பரவலை நீர்த்துப் போகச் செய்வதாகும். தனியார் அரசு கூட்டு திட்டங்களை ஊக்குவிப்பதோடு, திட்ட மேலாண்மை ஆலோசகர்களை கொண்டு செயல்படும் தன்மையை கொண்டுள்ளது. இது தவிர்க்க முடியாத வகையில் நகர நிர்வாகத்தில் நேரடி ஆதிக்கத்தை செலுத்தும்.

நகர நிர்வாகம் என்பது ஜனநாயக வழிமுறைப்படியான செயல்பாடுகளில் இருந்து நிர்வாக வழிமுறையாக மட்டும் மாற்றப்படும். உள்ளாட்சி தேர்தல்களின் முக்கியத்துவம் குறையும். மேயர், தலைவர் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் வார்த்தைகளுக்கு எவ்வித மரியாதையும் இல்லாமல் போகும். மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்கிற குறைந்த பட்ச சிந்தனையும் குறைந்துபோகும். மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு முடிவுகள் எடுக்கப்படாமல், லாப நஷ்ட கணக்கின் அடிப்படையிலும் வருமானத்தை ஈட்டுவதற்கான சிந்தனையோடுமே திட்டங்கள் செயல்படுத்தப்படும். பொதுவாக ஆணையர்களாக உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும்  தலைமை நிர்வாக அலுவலருமே அனைத்து முடிவுகளையும் எடுப்பார்கள். அவர்கள் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் அற்றவர்களாவர். இது ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்படும் மோசமான தாக்குதலாகும். இதை எதிர்த்து கடுமையாக போராட வேண்டும்.

கலங்கரை திட்ட வளர்ச்சி என்கிற ஒன்றும் தற்போது முன்நிறுத்தப்படுகிறது. குறிப்பிட்ட பகுதியை தேர்வு செய்து மேம்படுத்துவது, அதை மற்ற பகுதிகள் பின்பற்றுவது என்பதாகும். இது சிறுதுளி தத்துவம் என்பது போன்றதாகும். ஆனால் எங்குமே வெற்றி பெறாது. இது  சென்னை தி.நகர் பகுதியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டம் போன்றதாகும். அப்பகுதியின் நிலப்பயன்பாடு, போக்குவரத்து முறை, தகவல் தொடர்பு என எல்லாம் நவீனமயமாக்கப்படும். ”நகர்மயத்தின் மூலம் உருவாகியுள்ள நிலம் குறித்த கொள்கை, கட்டமைப்பு சேவை, போக்குவரத்து மேம்படுத்தப்படுவது, ஒருங்கிணைந்த வளர்ச்சி  ஆகியவை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான அறுவடையை வழங்கும்.” என்கிறது உலக வங்கி. ஸ்மார்ட் சிட்டிக்கான இடங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள் எல்லாம் ஒன்று பணம் படைத்த மேட்டுகுடி பகுதிகளாக உள்ளன; அல்லது நிலத்தின் மதிப்பு கூடுதலாக உள்ள இடமாகவும், வர்த்தக நோக்குடன் அங்குள்ள ஏழை மக்களிடமிருந்து அவற்றை அபகரிக்கும் நோக்கம் கொண்டதாகவும் உள்ளன.

2008 ஆம் ஆண்டு நெருக்கடிக்கு பிந்தைய காலத்தில் நிலம் ஒரு முக்கியமான ஆதாரமாக உள்ளது. அரசு நிலங்களை குத்தகைக்கு கொடுத்தோ அல்லது விற்பனை செய்தோ நிலங்களை பணமாக மாற்றும்  போக்கு அதிகரித்துள்ளது. அரசு நிலங்களில் உள்ள குடிசை பகுதிகளை அகற்றுவதும், அந்த நிலங்களை தனியாருக்கு வாரிவழங்குவதும் நிகழ்கிறது. நில தரகு என்பது நிதி மூலதனத்தின் கூடாரமாக இருந்து அதிகப்படியான லாபத்தை வழங்குகிறது. உலகம் முழுவதும் அவை நிலம் மற்றும் வீடுகள் குறித்த மாயத்தோற்றதை உருவாக்கி வருகின்றன.  குறைந்த விலையில் வீடுகள் என்பவை எல்லாம் ஏழை மற்றும் புலம்பெயர் மக்களுக்கான வீடு கட்டும் வேலைகளை தனியாருக்கு வழங்கும் வேலைகளே ஆகும். தனியார் – அரசு கூட்டு என்பதன் மூலம் ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் வீடு எனும் உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்பை முடக்குகிறது.

நிலம் சம்மந்தப்பட்ட வர்த்தகத்தின் மூலம் ஊழல் மற்றும் முறையற்ற பணப் பரிவர்த்தனை அதிகரிக்கிறது. உள்ளூர் தலைவர்கள், ஒப்பந்தக்காரர்கள், நில தரகர்கள் ஆகியோர் இதன்மூலம் ஊழலில் திளைக்கின்றனர். அரசும் இதை கண்டுகொள்வதில்லை. இவர்கள் அனைவரும் கூட்டு சேர்ந்து செயல்படுவதன் மூலம் குடிசைகளை எளிதில் காலிசெய்து நிலங்களை கொள்ளையடிக்க முடிகிறது. எனவே இதன் ஊழல் நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படுகிறது.

இந்தப் பின்னணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளின் முன்னுள்ள சவால்கள் மகத்தானதாகும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பிரதிநிதிகளுக்கு கூடுதலாக இது பொருந்தும்.

அவ்வாறு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தேர்வாகியுள்ள பிரதிநிதிகளின் முதல் கடமை மக்களின் நலன்சார்ந்து மக்களுடன் இரண்டறக் கலந்து பனியாற்றுவதாகும். உள்ளாட்சி அமைப்புகளுக்குள்ள வரம்புகளும் விளக்கப்படவேண்டும். குடிசை பகுதிகளுக்கு சுகாதாரம், மருத்துவம்,  கல்வி, தண்ணீர் மற்றும் கழிப்பறை வசதிகள் கிடைத்திட முன்னுரிமை வழங்கிட வேண்டும்.

தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதி என்ற வகையில் குடியிருப்போர் நலச்சங்கம், அடுக்குமாடி கட்டிட அமைப்புகள் துவங்கி அவர்கள் மூலம் மக்களின் கோரிக்கைகளை அடையாளப்படுத்தி முன்னெடுப்பது. அந்த அமைப்புகளின் மூலம் ஜனநாயகத்தின் மீதான விருப்பத்தை வளர்த்தெடுத்து, கீழிருந்து வரும் குரல்களுக்கு செவிசாய்த்திட வேண்டும். சொத்துவரி உயர்வு, பயன்பாட்டு கட்டணங்கள் விதிப்பது போன்றவற்றுக்கு எதிராக இந்த குடியிருப்பு சங்கங்கள் செயல்படுவதை முதல் வேலையாக மாற்ற வேண்டும். உள்ளாட்சி அமைப்புள் தங்களின் செயல்பாட்டிற்காக எவ்வாறு ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை சார்ந்துள்ளன என்பதை விளக்க வேண்டும்.  ஏனெனில் இந்த அரசுகளின் செயல்பாடுகளே நவதாராளமய சீர்திருத்தங்களுக்கு இணங்கச் செய்கிறது. கொரோனா தொற்று காலத்தில் சொத்து வரி உயர்வை உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி வழங்குவதற்கான நிபந்தனையாக மாற்றியுள்ளது ஒன்றிய அரசு. உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்குவதற்கு பதிலாக, தனியார் மற்றும் வெளி நிதி அமைப்புகளிடம் நிதி பெறுவதற்கான நிர்ப்பந்தத்தை உருவாக்குகிறது. இவ்வளவு இருந்தபோதும் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் வெறும் இரண்டு சதம் மட்டுமே உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்படுகிறது. சீனாவில் 11 சதமும் பிரேசிலில் 7 சதமும் ஒதுக்கப்படுகிறது. இவற்றை எல்லாம் அந்த குடியிருப்போர் நல அமைப்புகளில் விவாதிப்பதின் மூலம் அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிராக அவர்களை கேள்வி எழுப்ப வைக்க முடியும்.

 ஸ்டாலின் கூறியதுபோல் கம்யூனிஸ்டுகள் தனித்த வார்ப்புகள். நமது நடவடிக்கைகளின் மூலம் அதை நிருபிக்க வேண்டும். ஊழல் நடவடிக்கைகளில் நாம் ஈடுபடாதவர்கள்; அதிலிருந்து வெகுதூரம் நிற்பவர்களாக மட்டும் நிற்காமல், ஊழலுக்கு எதிராக மக்களையும் திரட்டிட வேண்டும். பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் வாங்குவதில் துவங்கி நில பயன்பாடு, கட்டிட அனுமதி என பல அம்சங்களை லஞ்சம் இல்லாமல் பெறுவது பெரும் சிரமமாக உள்ளது. இவைகளை எளிதில் பெற்று மக்கள் பயன்படும்படி இதை மாற்ற முயற்சிக்கவேண்டும்.

உள்ளூர்தான் மக்கள் கூடுவதற்கும் பேசுவதற்கும் உறவுகளை வளர்ப்பதற்குமான இடமாக உள்ளது. விழாக்கள், பண்டிகைகள், திருமணங்கள் போன்றவையே அதற்கான இடங்களாகும். விளையாட்டு மற்றும் கலை நிகழ்வுகளை நாம் நடத்திட முன்முயற்சிகளை  மேற்கொள்ளவேண்டும். திருவிழாக்களில், பண்பாட்டு நிகழ்வுகளில் நாம் கூடுதலாக பங்கேற்க வேண்டும். பழமைவாத மூடநம்பிக்கை நிகழ்வுகளை கவனமாக தவிர்க்க வேண்டும்.

கொரோனா பெருந்தொற்று முக்கியமான படிப்பினையை நமக்கு வழங்கியுள்ளது. நெருக்கடியான காலங்களில் மக்கள் உதவிக்காக தேடி நிற்பார்கள். அதுபோன்ற காலங்களில் நாம்தான் முதலில் உதவிக்கரம் நீட்டுபவர்களாக இருக்க வேண்டும். கேரளாவில் நமது உள்ளாட்சி பிரதிநிதிகள் தான் மக்களுக்கான உதவிகளையும் அவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்தனர். வெள்ளச் சேதத்தின்போதும் இப்படியான பணிகளை அவர்கள் மேற்கொண்டனர். அதை நாம் அனைத்து பகுதிகளிலும் செய்திடவேண்டும். இதுபோன்ற தன்னலமற்ற பணிகள் மூலம்தான் மக்களின் மனத்தை  வெல்ல முடியும்.

உள்ளாட்சி அமைப்புகளின் தன்னாட்சி தன்மையை சீர்குலைக்கும் முதலாளித்துவ கட்சிகளின் செயல்பாடுகளை எடுத்துரைக்க வேண்டும். ஜனநாயகத்தை சீர்குலைப்பது, தனியாருக்கு வளங்களை தாரைவார்ப்பது, அதிகாரிகளின் கையில் நிர்வாகத்தை ஒப்பளிப்பது போன்ற நடவடிக்கைகளை மக்களுடன் உரையாடும்போது அவ்வப்போது விவாதிக்க வேண்டும். எந்த மாதிரியான அரசியல் சூழ்நிலையில் நாம் பணியாற்றுகிறோம் என்பதை மக்களிடம் பேசாமல் விட்டால் அவர்களால் மக்கள் பிரதிநிதிகளான நமது வேலைகளை புரிந்து கொள்ள இயலாது. தற்போதைய நிலையிலேயே தேங்குவதைவிட நமது குறிக்கோளை நோக்கி பயணிப்பதற்கான வேலைகளை  கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் செய்ய முனைய வேண்டும். நமது அரசியலை மக்களிடம் பேசுவதன் மூலம்தான் அவர்களின் ஆதரவை தொடர்ந்து பெற்று அதை விரிவுபடுத்திட முடியும்.

மதவாத சக்திகள் நகரங்களை தங்களின் இயற்கையான தளமாக பார்க்கின்றன. மத்திய தர மக்களின் ஊசலாட்டத்தையும், அச்சத்தையும் வளர்த்து அவர்களுக்கான ஆதாயத்தை வளர்த்துக் கொள்கின்றனர். நமது நடவடிக்கைகளில் அவர்களின் ஜனநாயகமற்ற தன்மையை விளக்கி நமது சித்தாந்த பிரச்சாரத்தையும் மேற்கொள்ளவேண்டும்.

இ.எம்.எஸ். கூறியதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். “ஒன்றிய மற்றும் மாநில நாடாளுமன்ற\ சட்டமன்ற  ஜனநாயகத்தை பாதுகாப்பதோடு, மேலும் அவற்றை மாவட்ட மற்றும் அதற்கடுத்த கீழ்நிலைவரை விரிவுபடுத்துவதே ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக கருதப்பட்டது.  அதுவே இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்கு முக்கியமானதாகும்.” ஒன்றியத்தில் பி.ஜே.பி ஆட்சியில் இருக்கும் நிலையில் இது கூடுதல் பொருத்தப்பாடுடையதாக உள்ளது.

2022 ரஷ்ய – உக்ரைன் போர்:ஒரு பார்வை!

அன்வர் உசேன்

ரஷ்யா- உக்ரைன் இடையிலான போர் உலகம் முழுவதும் பல விவாதங்களை உருவாக்கியுள்ளது. ஒரு புறம் புடின் இட்லருக்கு இணையாக விமர்சிக்கப்படுகிறார். இன்னொரு புறம் அவரது நடவடிக்கைகள் அனுதாபத்துடன் பார்க்கப்படுகின்றன. போர் என்பது எப்படியாக இருந்தாலும், எங்கே நடந்தாலும், அது மனித உயிர்களைப் பலி வாங்குகிறது. அரும்பாடுபட்டு உருவாக்கிய உற்பத்தி சாதனங்களும் வளங்களும் இமைப்பொழுதில் அழிக்கப்படுகின்றன. போரில் ஈடுபடும் தேசங்களில், உழைக்கும் மக்களே கடும் இழப்புக்கு ஆளாகின்றனர். இது வெற்றி பெற்ற, தோல்வி அடைந்த இரு தேச உழைப்பாளிகளுக்கும் பொருந்தும். ஆனால், சுரண்டும் வர்க்கங்கள் போர்களுக்கு ஆதரவான கருத்துக்களை கட்டமைப்பதில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். அவற்றில் இருந்து விலகி நின்று போர்களை ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும்.

இப்போதைய சூழலில், நாம் ஒரு முக்கியமான உண்மையை கணக்கிலெடுப்பது அவசியம். சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 42% பேர் ரஷ்யாவை இன்னமும் அதுவொரு கம்யூனிஸ்ட் நாடு என்று எண்ணுவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவிலும் பலர் அவ்வாறு நினைக்க வாய்ப்பு உண்டு. ஆனால், இன்றைய ரஷ்யா ஒரு சோசலிச நாடு அல்ல. அங்கு நடக்கும் ஆட்சி முதலாளித்துவ ஆட்சியே. விளாடிமிர் புடின் அந்த  முதலாளித்துவ நாட்டின் தலைவரே.

வரலாற்று பின்னணி:

1917ம் ஆண்டு சோவியத் புரட்சி வெற்றியடைந்த பிறகு, வெவ்வேறு காலகட்டங்களில் அதனோடு 14 குடியரசுகள் இணைந்துகொண்டன. அவை:

1. உக்ரேனியா

2. பைலோரஷ்யா

3. உஸ்பெகிஸ்தான்

4. கஜகஸ்தான்

5. ஜார்ஜியா

6. அஜர்பைஜான்

7. லிதுவேனியா

8. மால்டோவா

9. லத்திவியா

10. எஸ்தோனியா

11. கிர்கிஸ்தான்

12. தஜிகிஸ்தான்

13. துர்க்மெனிஸ்தான்

14. அர்மீனியா

இதுவே பின்னர்  ‘சோவியத் ஒன்றியமாக’ அமைந்தது. ரஷ்ய மொழியோடு சேர்த்து, மேற்சொன்ன 14 தேசங்களின் மொழிகளும் அதிகாரப்பூர்வ மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டன. 15 தேசிய இனங்களை உள்ளடக்கியிருந்ததால் அவ்வப்பொழுது சில முரண்பாடுகள் ஏற்பட்டாலும், பொதுவாக, சோவியத் குடி மக்கள் எனும் அடையாளம் உருவானது. மேலும், சோவியத் யூனியனின் அரசியல் சட்டம் சுயநிர்ணய உரிமையை உள்ளடக்கியிருந்தது. இதன் பொருள் என்னவெனில், எந்த ஒரு குடியரசும் தாம் விரும்பினால் ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்லலாம். இந்த உரிமையை உருவாக்க லெனினும், ஸ்டாலினும் கடுமையாக பாடுபட்டனர். இந்த பிரச்சனையில் லெனினுக்கும், ஜெர்மன் கம்யூனிஸ்டு ரோசா லக்சம்பர்குக்கும் இடையே கடும் விவாதங்கள் நடைபெற்றன. தேசிய இனப்பிரச்சனைகளில் கம்யூனிஸ்டுகளின் நிலையை புரிந்து கொள்ள முயல்பவர்களுக்கு லெனின்-ரோசா லக்சம்பர்க் விவாதங்கள் ஒரு புதையல் எனில் மிகை அல்ல.

சோசலிச சமூக அமைப்பின்  நன்மைகளான வேகமான தொழில் வளர்ச்சி/ விவசாய முன்னேற்றம்/ இலவச கல்வி மற்றும் மருத்துவம்/ உழைக்கும் மக்களின் உரிமைகள் அனைத்தையும் இந்த 14 குடியரசுகளும் பெற்றன. எனினும், 1970களில் சோவியத் ஒன்றியத்தில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி தேக்கமுற்றது. 1980களில் முதலாளித்துவ உலகுடன் ஒப்பிடும் பொழுது அது பின் தங்கியிருந்தது. மின்னணு புரட்சி/ கணிணி மயம் என முதலாளித்துவம் தனது உற்பத்தி சக்திகளை வேகமாக வளர்த்தெடுத்தது. இதனால், கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் சோவியத் ஒன்றியம் இரு சவால்களை சந்தித்தது. ஒன்று, அதன் பொருளாதாரம் கடுமையாக பின்னடைவை எதிர் கொண்டது. இன்னொருபுறம், சோசலிச ஜனநாயகம் சிதைவுகளுக்கு உள்ளானது. ஏகாதிபத்தியமும் தனது தொடர் தாக்குதல்களை பல முனைகளில் முன்னெடுத்தது.

இந்தச் சூழலில் சோசலிசம் பின்னடைவை சந்திப்பதற்கு சற்று முன்னதாக லிதுவேனியா/லத்திவியா/எஸ்தோனியா ஆகிய மூன்று குடியரசுகளும் பிரிந்து போயின. சோசலிசம் பின்னடைவை சந்தித்த பொழுது, அனைத்து குடியரசுகளும் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து, தம்மை தனி சுதந்திர தேசங்களாக அறிவித்து கொண்டன. இதில் உக்ரைனும் அடங்கும். எனினும், இந்த நிகழ்வு வேறு ஒரு பிரச்சனையை உள்ளடக்கியிருந்தது. சோவியத் ஒன்றியம் இருந்த பொழுது, ரஷ்ய மக்கள் வேறு குடியரசுகளுக்கு புலம்பெயர்வதும், ஏனைய குடியரசு மக்கள் ரஷ்யாவுக்குள் வருவதும் பரவலாக நடந்தது. குறிப்பாக, இந்த பரஸ்பர புலம்பெயர்வு ரஷ்யா/உக்ரைன்/பைலோரஷ்யா ஆகிய மூன்று குடியரசுகளிடைய வலுவாக நடந்தது. இதன் விளைவுதான், இன்றைய உக்ரைனின் கிழக்கு பகுதியில் சுமார் 20% பேர் ரஷ்ய மொழி பேசுபவர்களாக உள்ளனர்.

வாக்குறுதி மீறிய ஏகாதிபத்தியம்

அந்த சமயத்தில், சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்த எந்த தேசத்தையும் நேட்டோ எனும் ராணுவ அமைப்புக்குள் இணைக்கக்கூடாது எனவும், ரஷ்யாவின் எல்லை நாடுகளில் நேட்டோ ராணுவத்தையோ அல்லது ஆயுதங்களையோ நிறுத்தக் கூடாது எனவும், ரஷ்யா அமெரிக்காவிடம் முன்வைத்தது. அன்றைய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் பேக்கர் “ரஷ்யா இருக்கும் கிழக்கு நோக்கி ஒரு இன்ச் கூட நேட்டோ விரிவாக்கம் செய்யப்பட மாட்டாது” என வாக்குறுதி அளித்தார். ஆனால் ஏகாதிபத்தியத்தின் பல வாக்குறுதிகள் போல் இதுவும் காற்றில் விடப்பட்டது.  

நேட்டோ என்ற அமைப்பு இரண்டாம் உலகப்போர் முடிந்த  ஆண்டுகளில் (1949) அமெரிக்கா/ பிரிட்டன்/ பெல்ஜியம்/ கனடா/ டென்மார்க்/ பிரான்ஸ்/ ஐஸ்லாந்து/ இத்தாலி/ லக்ஸம்பர்க்/ நெதர்லாந்து/ நார்வே/ போர்ச்சுகல் ஆகிய நாடுகள் சேர்ந்து உருவாக்கிய ராணுவ கூட்டமைப்பு ஆகும். அமெரிக்காவே இந்த அமைப்பின் தலைமை என்பதை கூறத் தேவையில்லை. பின்னர் 1950களில், நேட்டோவுடன் மேற்கு ஜெர்மனி/கிரீஸ் ஆகிய நாடுகளும் 1982இல் ஸ்பெயினும் இணைக்கப்பட்டன. கம்யூனிஸ்ட் நாடுகளிடமிருந்து தம்மை பாதுகாத்து கொள்ளவே இந்த கூட்டமைப்பு என்று நேட்டோ கூறியது. எனவே அதன் எதிர்வினையாக சோவியத் யூனியன்/ கிழக்கு ஜெர்மனி/ அல்பேனியா/ போலந்து/ செக்கோஸ்லேவாகியா/ ஹங்கேரி/ பல்கேரியா/ ருமேனியா ஆகிய சோசலிச நாடுகள் தங்களுக்குள் வார்சா ஒப்பந்த அமைப்பு எனும் கூட்டமைப்பை உருவாக்கின. எனினும், இந்தியா/எகிப்து/யுகோஸ்லவியா/கியூபா/வியட்நாம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் இந்த இரு அமைப்பிலும் சேராமல் அணிசேரா நாடுகளின் அமைப்பை உருவாக்கின.

1991இல் சோவியத் யூனியனும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் சோசலிசத்தை கைவிட்ட பிறகு வார்சா ஒப்பந்த அமைப்பும் இல்லாமல் ஆகியது. நாளடைவில் அணிசேரா அமைப்பும் செயலிழந்துவிட்டது. ஆனால் நேட்டோ தொடர்ந்து விரிவடைந்தது. முதலாளித்துவ நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, தாங்கள்தான் உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் மேலாதிக்கம் பெற வேண்டும் என்று கொண்டிருந்த பேராசையின் வெறிதான் இதற்கு அடிப்படையான காரணம். இந்த வெறியின் ராணுவ முகம்தான் நேட்டோ. எனவே, கிட்டத்தட்ட அனைத்து முன்னாள் சோசலிச நாடுகளையும் நேட்டோ தனது வளையத்திற்குள் கொண்டு வந்தது. பின்னர் எஸ்தோனியா/லத்திவியா/லிதுவேனியா ஆகிய முன்னாள் சோவியத் குடியரசுகளையும் சேர்த்தது. இறுதியாக 2008ஆம் ஆண்டு உக்ரைன் மற்றும் ஜார்ஜியாவை இணைக்கும் விருப்பத்தை வெளிப்படுத்தியது. அன்றிலிருந்துதான் ரஷ்யாவுக்கும் நேட்டோ நாடுகளுக்கும் ஆழமான பிரச்சனைகள் உருவாயின. இந்த பிரச்சனைகளின் மையமாக உக்ரைன் உருவெடுத்தது.

நேட்டோவை நாங்கள் விரிவாக்கம் செய்ய மாட்டோம் என ஒரு போதும் உறுதி அளிக்கவில்லை என இப்பொழுது அமெரிக்கா கூறுகிறது. ஆனால் இது வடிகட்டிய பொய் ஆகும். 1991ஆம் ஆண்டே போலந்து நேட்டோவில் சேர விண்ணப்பித்தது. ஆனால் ஜெர்மனி இதனை கடுமையாக எதிர்த்தது. இது குறித்து அமெரிக்கா/ ஜெர்மனி/ பிரான்சு/பிரிட்டன் ஆகிய நாடுகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் 06.03.1991இல் பான் நகரில் நடந்தது. அதில் ஜெர்மனியின் பிரதிநிதியான  ஜுர்கன் ஸ்ரோபோக் கீழ்கண்டவாறு கூறினார்:

“ஜெர்மனியின் எல்பே நதிக்கு அப்பால் நேட்டோவை விரிவாக்குவது இல்லை எனும் உறுதிமொழியை நாம் ரஷ்யாவுக்கு தந்துள்ளோம். எனவே போலந்தின் கோரிக்கையை நாம் ஏற்க இயலாது”.

1992ஆம் ஆண்டிலிருந்தே பல அமெரிக்க அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் நேட்டோவை கிழக்கே விரிவாக்கம் செய்வது ரஷ்யாவை போருக்கு தள்ளிவிடும் என எச்சரித்துள்ளனர். அந்த எச்சரிக்கைகளில் சில:

  • 1997ஆம் ஆண்டு அமெரிக்காவின் முன்னாள் ராணுவ அமைச்சராக இருந்த ராபர்ட் மக்னமாரா சி.ஐ.ஏ. இயக்குநர் ஸ்டேன்ஸ் டர்னர் உட்பட 12க்கும் அதிகமானவர்கள் இணைந்து பில் கிளிண்டனுக்கு எழுதிய கடிதத்தில் “நேட்டோவை கிழக்கு நோக்கி விரிவாக்கம் செய்வது வரலாற்று பிழையாக மாறி விடும்” என எச்சரித்தனர்.
  • பனிப்போர் காலத்தில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளை வகுத்தவர்களில் ஒருவரான ஜார்ஜ் கேனன் 1990களிலேயே கீழ்கண்டவாறு கூறுகிறார்:

“கிழக்கு பகுதியில் நேட்டோவை விரிவாக்கம் செய்வது பனிப்போரின் பிந்தைய காலகட்டத்தின் மிகப்பெரிய தவறான கொள்கையாகும். இது பல விரும்பத்தகாத விளைவுகளை உருவாக்கும். அமெரிக்க-ரஷ்யா உறவை சீர்குலைத்துவிடும். ரஷ்யா நிரந்தர எதிரியாக ஆகிவிடும்”

  • ரஷ்ய விவகாரங்கள் குறித்த ஆய்வாளர் ஸ்டீபன் கொஹேன் 2014ஆம் ஆண்டு கூறினார்:

“நாம் நேட்டோவை ரஷ்யாவை நோக்கி விரிவாக்கம் செய்வது என்பது பிரச்சனையை ராணுவமயமாக்கிவிடும். ரஷ்யா பின்வாங்காது. வாழ்வா-சாவா போராட்டமாக ரஷ்யா இதனை பார்க்கும்”

  • அமெரிக்காவின் பிரபல வெளியுறவு கொள்கை நிபுணர் ஹென்ரி கிசிங்கர் 2014இல் கூறினார்:

“உக்ரைனை நேட்டோவில் சேர்க்க கூடாது. அவ்வாறு சேர்த்தால் உக்ரைன் கிழக்கு- மேற்கத்திய நாடுகளின் போர்க்களமாக மாறிவிடும். ரஷ்யா நிரந்தரமாக எதிர் தரப்பில் நிற்கும் ஆபத்து உருவாகும்.”

  • 2008ஆம் ஆண்டில் சி.ஐ.ஏ.வின் இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் அமெரிக்க தலைமையகத்துக்கு அனுப்பிய ஒரு குறிப்பில் கீழ்கண்டவாறு கூறுகிறார்:

“உக்ரைனை நேட்டோவில் இணைப்பது குறித்து உக்ரைன் மக்களிடையே செங்குத்தான பிளவுபட்ட கருத்து நிலவுகிறது என ரஷ்யா கவலை அடைந்துள்ளது என நமது நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக உக்ரைனில் உள்ள ரஷ்ய இன மக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இத்தகைய பிளவு கடும் விளைவுகளை உருவாக்கும். மோசமான சூழலில் இது உள்நாட்டு போருக்கும் வழிவகுக்கலாம். அப்படிப்பட்ட நேரத்தில் உக்ரைனில் தலையிடும் முடிவு எடுக்க வேண்டி வரும் என ரஷ்யா கவலைப்படுகிறது. அத்தகைய சூழலை ரஷ்யா விரும்பவில்லை.”

இவ்வளவு எச்சரிக்கைகளையும் அறிவுறுத்தல்களையும் மீறித்தான், நேட்டோ விரிவாக்கம் திட்டமிடப்பட்டது. அமெரிக்க அரசியல் தலைமை தனது மேலாதிக்கத்தை ஐரோப்பாவில் நிறுவுவதற்காக, ரஷ்யாவை போருக்கு தள்ளினால் தவறு இல்லை எனும் முடிவுக்கு வந்தது என்பதையே இது காட்டுகிறது. அமெரிக்க ஏவுகணைகள் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. உக்ரைன் எல்லையிலும் படைகள் நிறுத்தப்படும் என்றால், அது தனது பாதுகாப்பிற்கு ஆபத்து என்று  ரஷ்யா கருதுகிறது. உக்ரைன் எல்லையிலிருந்து ஏவுகணைகள் 10 முதல் 15 நிமிடங்களுக்குள் மாஸ்கோவை தாக்கிவிடும். 2008ஆம் ஆண்டு உக்ரைனையும் ஜார்ஜியாவையும் நேட்டோவில் இணைக்கும் அமெரிக்காவின் விருப்பம் ரஷ்யாவிடம் கடும் எதிர்ப்பை விளைவித்தது. அதே போல் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சமீபத்தில் அணுஆயுதங்களை நிறுவ உக்ரைன் முனைப்புடன் உள்ளது என பேசினார். இவையும் ரஷ்யாவின் அச்சத்தை அதிகரித்தன.

உக்ரைன் அரசியலில் அமெரிக்க தலையீடு

உக்ரைன் நாட்டின் உள் அரசியலில் ஒரு திருப்புமுனையாக 2014ஆம் ஆண்டினை பார்க்கலாம். அதற்கு முன்பாக, 2010இல் நடந்த தேர்தலில் விக்டர் யோனுகோவிச் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதே உக்ரைன் மேற்கு பகுதியும் கிழக்கு பகுதியும் பல்வேறு பண்பாடு, அரசியல் அம்சங்களில் பிளவுபட்டிருந்தன. கிழக்கு பகுதியில் வாழும் மக்கள் ரஷ்ய மொழியும், மேற்கு பகுதி மக்கள் உக்ரைன் மொழியும் பெரும்பான்மையாக பேசுகின்றார்கள். எனவே, கிழக்கு பகுதி மக்கள் ரஷ்யாவின் ஆதரவாளர்களாகவும், மேற்கு பகுதி மக்கள் ரஷ்ய எதிர்ப்பாளர்களாகவும் மாறும் வகையில் பல கருத்துகள் கட்டமைக்கப்பட்டன. இதில் அமெரிக்காவின் பங்கு மிக முக்கியமானது.

ஜனாதிபதி யோனுகோவிச் தொடக்கத்தில் அமெரிக்காவுடன் நட்பு பாராட்டினார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி அமெரிக்க முதலீடுகள் உக்ரைனுக்கு வரவில்லை. எனவே அவர் ரஷ்யாவுடன் முதலீடுகளுக்காகவும், பொருளாதார ஒத்துழைப்புக்காகவும் ஒப்பந்தம் போட்டார். உக்ரைன் தனது பிடியிலிருந்து நழுவுகிறது என்பதை உணர்ந்த அமெரிக்கா, மேற்கு உக்ரைன் மக்களை யோனுகோவிச்சுக்கு எதிராக தூண்டியது. 2014ஆம் ஆண்டில் ஏராளமான கலவரங்கள் நடைபெற்றன. இந்த கலவரங்களை உருவாக்குவதில் உக்ரைன் நாட்டில் இயங்கும் நாஜி ஆதரவாளர்கள் முக்கிய பங்கை ஆற்றினார்கள். “மைதான் புரட்சி” என ஊடகங்களால் அழைக்கப்பட்ட இந்த கலவரங்களின் காரணமாக யோனுகோவிச் பதவி விலகினார். பின்னர் பதவியேற்ற ஜனாதிபதிகள் கிழக்கு உக்ரைன் மக்களுக்கு எதிராக விஷம் கக்கினார்கள். ரஷ்யா மீது வன்மத்தை வெளிப்படுத்தினார்கள். இப்படியான பின்னணியில் கிரீமியா தீவினை ரஷ்யா தன்னோடு இணைத்து கொண்டது. ஏனெனில் ரஷ்யாவின் முக்கிய கப்பற்படை தளம் அங்கு இருந்தது.

டோன்பாஸ் எனப்படும் பகுதியில் உள்ள லுகான்ஸ்க் மற்றும் டோன்டெஸ்க் ஆகிய மாநிலங்களில் உள்ள  ரஷ்ய மொழி பேசும் மக்கள் தங்களுக்குள் பொது வாக்கெடுப்பு நடத்தி தங்களை சுயாட்சி பிரதேசங்களாக அறிவித்து கொண்டன. உக்ரைனில் வாழும் ரஷ்ய மொழி பேசும் மக்கள் தாக்கப்படுவது ரஷ்யாவில் பெரிய தாக்கத்தை உருவாக்கியது. அவர்களுக்கு ரஷ்ய அரசாங்கம் உதவ வேண்டும் எனும் கருத்து மக்களிடையே இருந்தது. இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண 2015ஆம் ஆண்டு மின்ஸ்க் நகரில் உக்ரைன்/ரஷ்யா/பிரான்ஸ்/ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு இடையே பேச்சு வார்த்தைகள் நடந்தன. இறுதியில் ஒரு  ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் முக்கிய அம்சங்கள்;

  • லுகான்ஸ்க் மற்றும் டோன்டெஸ்க் பகுதிகளுக்கு உக்ரைன் அரசாங்கம் சுயாட்சி வழங்குவது. ரஷ்ய மொழியை அங்கீகரிப்பது.
  • லுகான்ஸ்க் மற்றும் டோன்டெஸ்க் மக்கள் பிரிவினை எண்ணத்தை கைவிடுவது. உக்ரைனின் ஒன்றுபட்ட தன்மையை பாதுகாப்பது.

எனினும் இந்த ஒப்பந்தம் அமலாக்கப்படவில்லை. நடைமுறையில் ரஷ்ய மொழி உதாசீனப்படுத்தப்பட்டது. லுகான்ஸ்க் மற்றும் டோன்டெஸ்க் மக்கள் மீது தாக்குதல்களும் தொடர்ந்தன. அன்றிலிருந்து கிழக்கு உக்ரைன் பகுதி மக்கள் மீது உக்ரைன் ராணுவமும், நாஜி சித்தாந்தவாதிகளும் ஏராளமான தாக்குதல்களை நடத்தினர். கடந்த 7 ஆண்டுகளில் சுமார் 18,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நாஜிக்களை ஊக்கப்படுத்திய நேட்டோ

உக்ரைனில் கடந்த 10 ஆண்டுகளாக வலதுசாரி பயங்கரவாதிகளும் நாஜி சித்தாந்தவாதிகளும் பெரும் எண்ணிக்கையில் உருவாகியுள்ளனர். இவர்களை ஆதரிப்போர் உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் உள்ளனர். நேட்டோவின் ஆய்வு அமைப்பான “அட்லாண்டிக் கவுன்சில்” இவர்களை ஆதரித்தும் புகழ்ந்தும் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.

நாஜி அமைப்புகளில் முக்கியமானது “அசோவ் பட்டாலியன்” என்ற அமைப்பாகும். அசோவ் பட்டாலியன் கோட்பாடுகள் என்ன?

  • உக்ரைன் மக்கள் பரிசுத்த வெள்ளை இனத்தை சேர்ந்தவர்கள்.
  • கிழக்கு உக்ரைனில் வசிக்கும் ரஷ்யர்கள் அசுத்தமான ரத்தம் உடையவர்கள். அவர்கள் உக்ரைனின் பரிசுத்த ரத்தத்தை மாசுபடுத்த முயல்கின்றனர்.
  • எனவே கிழக்கு உக்ரைன் மக்களை அடிமைப்படுத்த வேண்டும். தேவை எனில் அவர்களை படுகொலை செய்ய வேண்டும்.

இட்லரின் பல்வேறு நாஜி அடையாளங்களை இந்த அமைப்பு பயன்படுத்துகிறது. இத்தகைய கோட்பாடுகளை கொண்ட அமைப்பை நேட்டோ அமைப்பு ஆதரித்தது;  இன்றும் ஆதரிக்கிறது. அசோவ் பட்டாலியன் என்ற இந்த அமைப்புதான் 2014ஆம் ஆண்டில் நடந்த கலகங்களில் முக்கிய பங்கை ஆற்றியது. பின்னர் உக்ரைன் ராணுவத்தின் ஒரு பகுதியாக அது இணைக்கப்பட்டது. டோன்பாஸ் பகுதியில் வாழும் ரஷ்ய மொழி சிறுபான்மையினரை கொன்று குவித்ததும் இந்த அமைப்புதான். இந்த அமைப்பின் கொடூரங்கள் அனைத்தும் நேட்டோ அமைப்புக்கு நன்றாக தெரியும். சில அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்த வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தனர். அமென்ஸ்டி மனித உரிமை அமைப்பும் இந்த அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என கோரியது. அமென்ஸ்டி தனது அறிக்கையில் கூறியது:

“பயங்கரவாத அமைப்புகள் செயல்படுத்தும் கட்டுப்படுத்தப்படாத வன்முறையில் உக்ரைன் சிக்கி மூழ்கி கொண்டுள்ளது. கொடூரங்களை நிகழ்த்தும் இந்த அமைப்புகள் எவ்வித தண்டனைக்கும் உள்ளாக்கப்படுவது இல்லை.”

ஆனால், “அசோவ் பட்டாலியன்தான் நாம் ரஷ்யாவுக்கு தரும் பரிசு” என அட்லாண்டிக் கவுன்சில் கருத்து தெரிவித்தது. எத்தகைய வன்மம் நேட்டோவுக்கு உள்ளது என்பதை இதிலிருந்து நாம் அறியலாம்.

அமெரிக்க செனட் நாடாளுமன்ற உறுப்பினர் பாப் மெனென்டஸ் உக்ரைனுக்கு 500 மில்லியன் டாலர் அதாவது சுமார் 3,800 கோடி ரூபாய் அளவுக்கு ஆயுதங்களை வழங்கிட தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். இந்த ஆயுதங்கள் நாஜிக்களின் கைகளுக்கு செல்வதை தடுக்க என்ன வழிமுறைகள் உள்ளன என அவரிடம் கேட்ட பொழுது “நாம் ஏன் அதைப்பற்றி கவலைப்பட வேண்டும்?” என பதில் கூறினார்.

புடினின் தேசிய வெறி

ரஷ்யாவை நேட்டோ சுற்றி வளைப்பதையும் உக்ரைனில் உள்ள ரஷ்ய மொழி சிறுபான்மையினரை பாதுகாப்பதும் முக்கியம்! இது குறித்த புடினின் கவலை நியாயமானது; அது ரஷ்ய மக்களின் கவலையை பிரதிபலிக்கிறது. ஆனால் தனது போர் நடவடிக்கைகளை நியாயப்படுத்த லெனின் மற்றும் ஸ்டாலின் முன்னெடுத்த தேசிய இனக் கொள்கைகளை புடின் இழிவுபடுத்துகிறார். உக்ரைன் எனும் நாடு வரலாற்றில் இருந்ததே இல்லை எனவும், அதனை உருவாக்கியது லெனினும் ஸ்டாலினும்தான் எனவும் புடின் கூறுகிறார்.  சுயநிர்ணய உரிமை தந்தது மிகப்பெரிய தவறு எனவும், அதனால்தான் சோவியத் ஒன்றியம் சிதறுண்டது எனவும் குற்றம் சாட்டுகிறார். “மகா ரஷ்யா” எனும் கோட்பாட்டையும் வலியுறுத்தும் புடின், உக்ரைன் ஒரு தேசமாக நீடிக்க உரிமை இல்லை எனவும் கூறுகிறார்.

புடின் போன்ற முதலாளித்துவ அரசியல்வாதிகளுக்கு, தேசிய பிரச்சனையில் கம்யூனிஸ்டுகள் முன்வைக்கும் கோட்பாடுகள் பிடிக்காமல் போவதில் ஆச்சர்யம் இல்லை. ஜார் மன்னனின் ரஷ்ய சாம்ராஜ்யம் பல தேசிய இனங்களை அடிமைப்படுத்தியிருந்தது. எனவேதான் “ரஷ்யா தேசிய இனங்களின் சிறைச்சாலை” என லெனின் வர்ணித்தார். சுயநிர்ணய உரிமை வழங்கப்படாவிட்டால் எந்த ஒரு குடியரசும் சோவியத் ஒன்றியத்தில் இணைந்திருக்காது. சோவியத் ஒன்றியம் வெறும் ரஷ்யாவாகவே இருந்திருக்கும்.

தற்போது, “மகா ரஷ்யா” எனும் சாம்ராஜ்யத்தை உருவாக்கும் எந்த வாய்ப்பும் இல்லை என்பதை புடின் உணர மறுக்கிறார். சோவியத் ஒன்றியம் சிதறுண்டது மனித குலத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுதான். ஆனால் அதற்கு காரணம் சுயநிர்ணய உரிமை அல்ல.

ரஷ்யாவின் ராணுவ பாதுகாப்பு மற்றும் உக்ரைனில் உள்ள ரஷ்ய மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு எனும் இரு நோக்கங்களுக்கு அப்பாற்பட்ட  வேறு எந்த இலக்கையும் உக்ரைன் படையெடுப்பு மூலம் சாதிப்பதற்கு புடின் முயன்றால், அது விரும்பத்தகாத விளைவுகளையே தோற்றுவிக்கும். உலகின் இரு மிகப்பெரிய தேசங்களான சீனாவும், இந்தியாவும் மற்றும் சில நாடுகளும் ரஷ்யாவின் நியாயமான கவலையை ஏற்கிறார்கள். அதே சமயம், புடினின் நோக்கம் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி நீளுமானால், உலக நாடுகளின் எதிர்ப்பையே அவர் சம்பாதிக்க நேரிடும்.

பாசிச எதிர்ப்பு போரில் உலக மக்களின் ஆதரவை பெற்றார் ஸ்டாலின். ஆனால் புடின் ஸ்டாலின் அல்ல. உக்ரைனில் ஒருவேளை ரஷ்யா வெற்றியடையுமானால், அதுவும் ஆபத்தான விளைவுகளையே ஏற்படுத்தும்.

முதலாளித்துவ ஜனநாயகத்தின் உண்மை முகம்

ரஷ்ய படைகள் உக்ரைனில் நுழைந்ததுமே பல முதலாளித்துவ  நாடுகளும் பொருளாதாரத்  தடைகளை விதித்தன. இது எதிர்பார்த்த ஒன்றுதான். எனினும், அதன் மூர்க்கத்தனம் எல்லையில்லாமல் விரிவடைந்தது. ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுடனான எண்ணெய் ஒப்பந்தங்களை திரும்ப பெற்றன. ரஷ்யாவில் செயல்பட்ட ஷெல் போன்ற நிறுவனங்கள் தமது செயல்பாட்டை நிறுத்தின. ஆப்பிள் நிறுவனம்/சாம்சங்/வால்வோ இப்படி பலநிறுவனங்கள் வெளியேறின. ரஷ்ய வங்கிகள் ‘ஸ்விப்ட்’ எனப்படும் நிதி பரிவர்த்தனையை பயன்படுத்த முடியாத அளவுக்கு தடைகள் விதிக்கப்பட்டன. ஐரோப்பா மற்றும் அமெரிக்க வான்வெளிகளில் ரஷ்ய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டன. தன்னுடன் முரண்பட்டால் எந்த ஒரு நாட்டையும் மண்டியிட வைக்க முடியும் என முதலாளித்துவ உலகம் முயல்கிறது. கால்பந்து/ஹாக்கி/மோட்டார் பந்தயம்/மாற்று திறனாளிகள் ஒலிம்பிக் போட்டிகள்  என அனைத்து விளையாட்டு போட்டிகளிலுமிருந்து ரஷ்யா வெளியேற்றப்பட்டுள்ளது. ரஷ்யாவின் பூனைகளுக்கும் யோக் மரங்களுக்கும் கூட தடை விதிக்கப்பட்டுள்ளன. இந்த தடைகளால் பாதிக்கப்படப்போவது புடின் அல்லது பிற அரசியல்வாதிகள் அல்ல; ரஷ்ய மக்கள்தான்.

ரஷ்ய ஊடகங்கள் முழுவதும் ஐரோப்பா/அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளன. தொலை காட்சி விவாதங்களில் ரஷ்யாவை சிறிதளவு ஆதரித்து பேசுவோரும் வெளியேற்றப்படுகின்றனர். டோன்பாஸ் பகுதியில் 5 ஆண்டுகளாக ரஷ்ய மொழி பேசும் மக்கள் அடைந்த துன்பங்களை ஆய்வு செய்த ஒரு ஃபிரான்சு பத்திரிக்கையாளர் தனது அனுபவத்தை சொன்னதற்காக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பி.பி.சி./கார்டியன் போன்ற புகழ்பெற்ற ஊடகங்கள் கூட பொய்ச் செய்திகளை தாராளமாக பரப்பின. முதலாளித்துவ ஊடகங்கள் தமது அரசுகளின் கருத்துகளை மட்டுமே மக்கள் கேட்க வேண்டும் என எண்ணுகின்றன. எதிர்த்தரப்பு கருத்துகளை மக்கள் கேட்க கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டுள்ளன. இது முதலாளித்துவ ஜனநாயகம். இந்த ஜனநாயகத்தில் மாற்று கருத்துக்கு இடமில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தப் போர் முதலாளித்துவத்தின் நிறவெறியை  வெளிப்படுத்தியுள்ளது. ஒரு தொலைகாட்சி செய்தியாளர் கூறினார்:

“இது சிரியாவோ அல்லது ஆப்கானிஸ்தானோ அல்ல; நாகரிக ஐரோப்பா. இங்கு தாக்குதல் நடக்கிறது”

அப்படியானால் சிரியாவும் ஆப்கானிஸ்தானும் நாகரிகமற்ற காட்டுமிராண்டி தேசங்களா?

இன்னொரு செய்தியாளர் கூறினார்:

“நெஞ்சம் பதைக்கிறது. ஊதா கண்களும் பொன் நிறத்திலான முடியையும் உடைய மக்கள் தாக்கப்படுகின்றனர்.”

அப்படியானால் மற்றவர்கள் தாக்கப்பட்டால் பரவாயில்லையா? ஆம். அப்படிதான் அந்த  ஊடகங்கள் முன்வைக்கின்றன.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த அதே நாளில் அமெரிக்க விமானங்கள் சோமாலியா மீது குண்டு பொழிந்தன. அமெரிக்க ஆதரவுடன் சவூதி படைகள் ஏமன் மீது தாக்குதலை நடத்தின. இஸ்ரேல் விமானங்கள் பாலஸ்தீனம் மீது தாக்குதல்கள் நடத்தின. இஸ்ரேல் ராணுவத்தினர் 15 வயது பாலஸ்தீன் பெண்ணை சித்திரவதை செய்து கொன்றனர். இது குறித்த காணொளி பரவலாக வலம் வந்தது. அமெரிக்காவின் ஆசியோடு ஏமன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3,00,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 70% பேர் குழந்தைகள். ஆனால் இவை குறித்து முதலாளித்துவ ஊடகங்களில் ஒரு விவாதம் கூட  இல்லை. 

மேற்கத்திய ஊடகங்களின் செய்தி மற்றும் கட்டுரைகள் வெளியிடப்பட்டதில் பாரபட்சத்தை பாருங்கள்:

  • உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதல்- 1400
  • சவூதி ஏமன் மீது தாக்குதல்-0
  • இஸ்ரேல் சிரியா மீது தாக்குதல்- 5.

சிறிது நாட்கள் முன்புவரை அரேபிய அல்லது ஆப்பிரிக்க அகதிகளுக்கு அனுமதியில்லை என கூறிய போலந்து போன்ற நாடுகள் இன்று உக்ரைன் அகதிகளை இரு கரம் கூப்பி வரவேற்கின்றன. ஆஸ்திரேலியாவில் உள்ள ரஷ்ய தூதரகத்துக்கு வெடி பொருட்கள் பார்சல் அனுப்பப்பட்டன. நெதர்லாந்தில் ரஷ்யர்களுக்கு சொந்தமான உணவுவிடுதி தாக்கப்பட்டது. அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் ரஷ்யாவை சேர்ந்த எவராவது புடினை கொன்று விடுவது ரஷ்யாவின் எதிர்காலத்துக்கு நல்லது என பகிரங்கமாக கூறியுள்ளார். இவையெல்லாம் முதலாளித்துவ ஜனநாயகத்தின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டுகிறது.

முதலாளித்துவம் கைவிட்ட முதலாளித்துவ குழந்தை

ரஷ்யா சோசலிசத்தை கைவிட்ட பொழுது அதன் ஒரே கனவு முதலாளித்துவ உலகம் தன்னை சம பங்காளியாக கருதி அரவணைத்து கொள்ளும் என்பதுதான். அந்த விருப்பத்துடனேயே அனைத்து அரசு நிறுவனங்களும் தனியார்மயமாக்கப்பட்டன. கம்யூனிச கருத்துகளும் அவற்றை கடைப்பிடிப்போரும் வேட்டையாடப்பட்டனர். லெனின் மற்றும் ஸ்டாலின் சிலைகள் உடைக்கப்படடன. தாராளமய பொருளாதார கொள்கைகள் அமலாக்கப்பட்டன. அந்தோ பரிதாபம்! முதலாளித்துவ உலகம் ரஷ்யாவை தனது சம பங்காளியாக பார்க்கவில்லை. மாறாக தனக்கு அடிபணிந்து இருக்கும் ஒரு நாடாக ரஷ்யா இருக்க வேண்டும் என்றே கருதியது.

மார்க்சிய ஆய்வாளர் டேவிட் ஹார்வி ஒரு சுவையான ஒப்பீட்டை முன்வைக்கிறார். இரண்டாம் உலகப்போரில் துவம்சம் செய்யப்பட்ட நாடுகள் ஜப்பானும் ஜெர்மனியும். ஆனால் இந்த இரு நாடுகளையும் மறுநிர்மாணம் செய்ய ஏராளமான நிதி உதவிகளை முதலாளித்துவ உலகம் செய்தது. அதற்கு “மார்ஷல் திட்டம்” எனவும் பெயரிட்டது. ஆனால் சோசலிசத்தையே தூக்கி எறிந்த ரஷ்யாவுக்கு எந்த உதவியும் செய்யப்படவில்லை. குறைந்தபட்சம் ஐரோப்பிய நாடுகள்  கூட ரஷ்யாவை அரவணைக்க முன்வரவில்லை.

அதே சமயத்தில் சோவியத் ஒன்றியத்தின் ஒரு வலிமையே ரஷ்யாவை தொடர்ந்து பாதுகாத்தது. அதுதான் ராணுவ வலிமை. புடினை பார்த்து ஓரளவு முதலாளித்துவ நாடுகள் அச்சப்படுகின்றன என்றால் அதற்கு முக்கிய காரணம்   ராணுவ வலிமைதான்! இதற்கு புடின் ஸ்டாலினுக்கும் அவருக்கு பின்னால் ஆட்சியிலிருந்த ஏனைய கம்யூனிஸ்டு தலைவர்களுக்கும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டவர். “சமாதானத்துக்கு சமாதானம்! ஏவுகணைக்கு ஏவுகணை” என முழக்கமிட்ட யூரி ஆண்ட்ரோபோவ் போன்றவர்கள்தான் இந்த ராணுவ வலிமையை உருவாக்கினர்; பாதுகாத்தனர். இப்போது இந்த ராணுவ வலிமையைதான்  முதலாளித்துவ நாடுகள் சிதைக்க முயல்கின்றன.

இந்த போர் எப்படி முடியும் என்பது இக்கட்டுரை எழுதப்பட்ட சமயத்தில் தெளிவற்றதாகவே இருந்தது. எனினும், ஏற்கெனவே இரு தரப்பிலும் ஏராளமான உயிர்கள் பலியாகியுள்ளன. உக்ரைனின் ஆலைகளும் கட்டடங்களும் கடும் சேதத்தை சந்தித்துள்ளன.

உலக அளவில் கம்யூனிஸ்டுகள் ஒரே குரலில்தான் ஒலிக்கிறார்கள்:

  • போர் தொடர்வதில்  எந்த நியாயமும் இல்லை. போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். 
  • நேட்டோ தனது விரிவாக்கத்தை கைவிட வேண்டும்.
  • ஐரோப்பாவில் உள்ள அணு ஆயுதங்கள் அகற்றப்பட வேண்டும்.
  • உக்ரைனில் ரஷ்ய மொழி பேசும் மக்களின் வாழ்வும் பண்பாடும் பாதுகாக்கப்பட வேண்டும்.
  • உக்ரைன் சமாதான வழியில் பயணிப்பதை உத்தரவாதம் செய்யவேண்டும்.

இதுதான் சரியான பார்வையாக இருக்க முடியும்.

ஆதாரங்கள்: Consortiumnews/ Fair.org/davidharvey.org/Mint Press/MR online/ Newsclick/ RT.com/ Tricontinental newsletter/multipolarista.

1946 பிப்ரவரி 18, கப்பற்படை எழுச்சியும் கம்யூனிஸ்டுகளும்

பீப்பிள்ஸ் டெமாக்ரசி வார இதழில் தொடராக வெளியாகி தமிழில் ‘இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூறாண்டுப் பயணம்’ என்ற நூலில் இருந்து

தமிழில்: வீ.பா.கணேசன்

இந்திய தேசிய ராணுவ வீரர்களுக்கு எதிரான விசாரணையின்போது உச்சத்தைத் தொட்டு வளர்ந்து வந்த தேசியவாத உணர்வு 1945-46 குளிர்காலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் வன்முறை நிரம்பிய மோதலாக உருவெடுத்தது. இந்தியாவில் பிரிட்டிஷ் ராணுவப் படைகளில் பணியாற்றி வந்த இந்திய படைவீரர்களும் இளம் அதிகாரிகளும் இத்தகைய வெகுஜன கிளர்ச்சிகளின் செல்வாக்கிற்கு ஆட்பட்டனர். இவர்களில் ஒரு பிரிவினர் தனித்திறன் பெற்ற நிபுணர்களாகவும் இருந்தனர். இவ்வகையில் பிரிட்டிஷ் ராணுவப் படைகளில் பணிபுரிந்து வந்த முந்தைய தலைமுறையைச் சேர்ந்த இந்தியர்களிலிருந்து அவர்கள் வேறுபட்டவர்களாக இருந்தனர். மேலும் இரண்டாம் உலகப் பெரும் போரின்போது நேசநாட்டு ராணுவத்தினருடன், குறிப்பாக சோவியத் யூனியனின் செஞ்சேனையுடன், இணைந்து இவர்கள் போரிட்டனர். இத்தகைய நேரடித் தொடர்பின் விளைவாக பாசிஸ எதிர்ப்பு, சுதந்திரம், ஜனநாயகம், சோஷலிசம் ஆகிய கருத்துகளும் அவர்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.

கப்பற்படையில் பணிபுரிந்து வந்த இந்தியர்களில் ஒரு பிரிவினர் தேசிய விடுதலை இயக்கம், இந்திய தேசிய ராணுவம் ஆகியவற்றால் உத்வேகம் பெற்று ஆசாத் ஹிந்த் (இந்திய விடுதலை) என்ற ஒரு ரகசிய அமைப்பைத் தொடங்கினர். கப்பற்படை மாலுமிகளை கலகம் செய்ய கிளர்ந்தெழச் செய்வதில் இந்த அமைப்பு மிக முக்கியமான பங்கினை வகித்தது. பிரிட்டிஷ் இந்திய கப்பற்படை மாலுமிகள் வேலைநிறுத்தத்தில் இறங்கியபோது பம்பாயில் மிகப்பெரும் எழுச்சி உருவானது.

பிரிட்டிஷ் இந்திய கப்பற்படையைச் சேர்ந்த தல்வார் என்ற கப்பலின் ஊழியர்கள் 1,100 பேர் 1946 பிப்ரவரி 18 அன்று வேலைநிறுத்தத்தில் இறங்கினர். பம்பாயில் இந்திய கப்பற்படையில் வேலைசெய்து வந்த மேலும் 5,000 பேரும் அவர்களோடு சேர்ந்து கொண்டு கப்பற்படையில் தாங்கள் நடத்தப்படும் விதத்தைக் கண்டித்து கிளர்ச்சி செய்தனர். தல்வார் கப்பலின் ஊழியர்கள் அந்தக் கப்பலின் கொடிமரத்தில் பறந்து கொண்டிருந்த யூனியன் ஜாக் என்றழைக்கப்படும் பிரிட்டிஷ் கொடியை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக காங்கிரஸ், முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொடிகளை ஏற்றினர். ஆயுதங்களை ஏந்திய அவர்கள் தங்களது மேலதிகாரிகளையும் கைது செய்தனர். அதற்கு அடுத்தநாள் கேசில், ஃபோர்ட் ஆகிய படைமுகாம்களில் இருந்த கப்பற்படை வீரர்களும் வேலைநிறுத்தத்தில் இறங்கியதோடு, பம்பாய் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் காங்கிரஸ், முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் கொடிகளை ஏந்தியபடி பங்கேற்றனர். இந்தப் படைவீரர்கள் இந்துக்கள், முஸ்லீம்கள், கிறித்துவர்களாக இருந்தது மட்டுமின்றி, நாட்டின் அனைத்துப்பகுதிகளையும் சேர்ந்தவர்களாகவும், அனைத்து மொழிகளையும் பேசுபவர்களாகவும் இருந்தனர்.

அரசின் எந்தவொரு பிரிவிலும் பணியாற்றி வந்த ஊழியர்கள் பலருமே இனரீதியாக, பாரபட்சத்தோடு நடத்தப்பட்டு வந்தனர். அவர்களது ஊதியமும் மிகவும் குறைவாகவும், வழங்கப்படும் உணவும் கூட சாப்பிடமுடியாததாகவேஇருந்தது. இவ்வாறு மோசமாக நடத்தப்பட்டு வந்ததன் விளைவாக இவர்களில் பலர் தற்கொலைசெய்து கொண்ட சம்பவங்களும் நிகழ்ந்தன. இவற்றைத் தாங்கிக் கொள்ள இயலாத பலரும் ராணுவப் படைகளை விட்டு வெளியேறினர். தல்வார் கப்பலில் ‘இந்தியாவைவிட்டு வெளியேறு!’, ‘ஏகாதிபத்தியம் ஒழிக!’ போன்ற கோஷங்களை எழுதியதற்காக ஒரு மாலுமியான பி சி தத் கைது செய்யப்பட்டதை பலரும் பெரிதும் வெறுத்தனர். நாகரீகமான உணவு; போதுமான அளவிற்கு ரேஷன் பொருட்கள்; இந்திய ஊழியர்களை அவதூறாகப் பேசி வந்த தல்வார் கப்பலின் தலைமை அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை; அதிகாரிகள் ஊழியர்களை தரக்குறைவாக நடத்துவதற்கு முடிவு கட்டுவது; பணியிலிருந்து விலகும் செயல்முறையை விரைவாக முடிப்பது; அவர்களின் மறுவாழ்விற்கான ஏற்பாடுகள்; ஓய்வூதியப் பயன்கள்; இந்திய தேசிய ராணுவத்தை சேர்ந்த கைதிகள் உள்ளிட்டு அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்வது; இந்தோனேஷியாவிலிருந்து அனைத்து இந்தியப் படைகளையும் உடனடியாகத் திரும்பப் பெறுவது; இந்தியா முழுவதிலும் நடைபெற்ற போலீஸ் துப்பாக்கி சூடுகள் பற்றி பாரபட்சமற்ற நீதி விசாரணை ஆகியவையே கப்பற்படை ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளாக இருந்தன.

பம்பாய் நகரைத் தவிர கராச்சி நகரும் கப்பற்படை வீரர்கள் எழுச்சியின் முக்கிய மையமாக இருந்தது. இது பற்றிய செய்தி பிப்ரவரி 19 அன்று கராச்சியை அடைந்ததும் இந்துஸ்தான் கப்பலும் (இது பின்னர் ஆயுதந்தாங்கிய தாக்குதலிலும் ஈடுபட்டது) மற்றொரு கப்பலும் தரைப்பகுதியில் இருந்த மூன்று படைமுகாம்களும் திடீர் வேலைநிறுத்தத்தில் இறங்கின. இந்த இரு கப்பற்படை மையங்கள் மட்டுமின்றி மதராஸ், கராச்சி, விசாகப்பட்டினம், கல்கத்தா, டெல்லி, கொச்சின், ஜாம்நகர், அந்தமான், பஹ்ரைன், ஏடன் ஆகிய இடங்களில் இருந்த படைவீரர்களும் வேலைநிறுத்தம் செய்து வந்த கப்பற்படை வீரர்களுக்கு ஆதரவாக களமிறங்கினர். இதைக் கண்ட பிரிட்டிஷ் ராணுவ தலைமைத் தளபதி அட்மிரல் காட்ஃப்ரே இந்திய கப்பற்படையின் அனைத்துக் கப்பல்களையும் குண்டுவீசித் தகர்ப்போம் என எச்சரிக்கை விடுத்தார். இந்த எழுச்சியில் 78 கப்பல்கள், 28 தரைப்பகுதி படைமுகாம்களில் இருந்த 20,000 வீரர்கள் ஈடுபட்டு வந்தனர். பம்பாயின் மரைன் ட்ரைவ், அந்தேரி, சியான், பூனே, கல்கத்தா, ஜெஸ்ஸூர், அம்பாலா ஆகிய பகுதிகளில் இருந்த இந்திய விமானப்படை வீரர்களும் இவர்களுக்கு ஆதரவாக வேலைநிறுத்தத்தில் இறங்கினர். ஜபல்பூரில் இருந்த ராணுவ வீரர்களும் வேலைநிறுத்தத்தில் குதித்தனர். பம்பாயின் கொலாபா பகுதியில் இருந்த ராணுவ குடியிருப்பு பகுதி ‘அச்சுறுத்தும் வகையிலான சலசலப்புடன்’ இருந்தது.

கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட கப்பற்படைவீரர்கள் மற்றும் அவர்களது நியாயமான கோரிக்கைகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சி உடனடியாக ஆதரவு தெரிவித்தது. பிப்ரவரி 19 அன்று கட்சி வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தில் இந்த வேலைநிறுத்தத்தை ஆதரிக்குமாறு அது மக்களை கேட்டுக் கொண்டது. இந்திய கப்பற்படையை அழிக்கப் போவதாகவும், அவற்றிலிருந்த இந்தியர்களை கொல்லப்போவதாகவும் அச்சுறுத்திய அட்மிரல் காட்ஃப்ரேவுக்கு பதிலடியாக பிப்ரவரி 22 அன்று நடத்தத் திட்டமிட்டிருந்த பொது வேலைநிறுத்தத்தில் திரளாகப் பங்கேற்குமாறு மீண்டும் தனது செய்தித்தாளின் மூலம் அது மக்களைகேட்டுக் கொண்டது. நாடு முழுவதிலும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையை கண்டித்தும் முழு அடைப்புகள், ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. பொதுவான விடுதலைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்தக் கப்பற்படை கலகத்தை நாட்டிலுள்ள ஒவ்வொருவருமே ஆதரித்தனர்.

அனைத்துக் கட்சிகளும் தங்களது வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு கப்பற்படை வீரர்களின் கோரிக்கைகளை ஆதரிக்க வேண்டுமெனவும் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்தது. கட்சியின் பொது வேலைநிறுத்தத்திற்கான அறைகூவலை ஏற்று லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தொழிற்சாலைகளை விட்டு வெளியேறி வீதிகளில் வந்து குவிந்தனர். சிறுகடைகள், வியாபாரிகள், உணவு விடுதிகள் ஆகியவையும் முழுஅடைப்பு செய்தன. மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் பம்பாயில் போக்குவரத்தை நிலைகுலையச் செய்தது. இதுவரை கண்டிராத வகையில் வேலைநிறுத்தம் மற்றும் முழு அடைப்பை பம்பாய் நகரம் கண்டது.

இதற்கு பதிலடி தரும் வகையில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இரும்புக் கவசமிட்ட கார்களுடன் பிரிட்டிஷ் வீரர்களை தெருக்களில் கொண்டுவந்து குவித்தனர். பெரும் எண்ணிக்கையில் கூடியிருந்த மக்களின் மீது எவ்வித முன்னறிவிப்புமின்றி இப்படை துப்பாக்கி சூடு நடத்தியது. இவ்வகையில் அப்பாவிகளை கொன்று குவித்தனர். பம்பாய் நகரில் உள்ள பரேல் பகுதி மாதர் சங்கத் தலைவியும் கம்யூனிஸ்டும் ஆன கமல் தோண்டே இவ்வாறு பலியானவர்களில் ஒருவர். பிப்ரவரி 21 முதல் 23 வரையிலான மூன்று நாட்களில் மொத்தம் 250 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வ செய்திகள் தெரிவித்தன. ‘துப்பாக்கிகள், டாங்குகள், குண்டு வீசும் விமானங்கள் இந்தியாவை அச்சுறுத்தி வந்த காலம் போய் விட்டது’ என கட்சி அறிவித்தது. ஏகாதிபத்திய வாதிகளின் இந்த ரத்தவெறி பிடித்த ஆட்டம் ‘பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒற்றுமையையும் உறுதியையும் மேலும் வலுப்படுத்தும்’ என்றும் அது கூறியது.

அரசின் ஒடுக்குமுறைக்கு அதிருப்தி தெரிவிக்கும் வகையில் அனைத்து கடைகள், பள்ளிகள், கல்லூரிகள், ஆலைகளை முழுமையாக அடைக்கவேண்டும் என்றும், அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும், வேலைநிறுத்தம் செய்து வரும் கப்பற்படை வீரர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்கச் செய்யும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமெனவும் கம்யூனிஸ்ட் கட்சி அனைத்து அரசியல் கட்சிகளையும் மக்களையும் கேட்டுக் கொண்டது. பம்பாய் நகரின் தொழிலாளர்களும் குடிமக்களும் இந்தக் கோரிக்கைகளுக்கு முழுமையாக ஆதரவு தெரிவித்து, முழு அடைப்பையும் நடத்தி, இந்திய கப்பற்படை வீரர்களின் இந்தத் துணிவான நடவடிக்கைக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

அரசின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின், காயமுற்றவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் அமைதி மற்றும் நிவாரணத்திற்கான குடிமக்கள் குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் கட்சி கோரியது. ‘ஆசாத்இந்த் விடுதலைப் படை’யின் பிரச்சனையைப் போன்று முக்கியமானதாக மாறியுள்ள ஆயிரக்கணக்கான கப்பற்படை வீரர்களின் பிரச்சனையை காங்கிரஸ் தலைவர்கள் கையிலெடுக்கவேண்டும் என்றும், ‘எவ்வித பாரபட்சமுமின்றி நியாயத்தின் அடிப்படையில்’ இந்தப் பிரச்சனை தீர்க்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் கட்சி கூறியது. மத்திய சட்டமன்றத்திற்கும் இந்தப் பிரச்சனையை எடுத்துச் சென்று, அவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படுவதை காங்கிரஸ்-லீக் தலைவர்கள் உறுதிப்படுத்தவேண்டும் என்றும் கட்சி கோரிக்கை விடுத்தது.

அரசு ஒரு விசாரணை கமிஷனை அமைக்க வேண்டும் என்றும், வேலைநிறுத்தம் செய்துவரும் கப்பற்படை வீரர்களின் கோரிக்கைகளை தீர்க்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றும் கட்சி கோரியது. வீரர்களின் இந்தக் கலகம் எழாமல் இருந்திருப்பின் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டிருக்காது. அவர்களுக்கு இழைக்கப்பட்டு வந்த அநீதி, பாரபட்சம், கொடூரங்கள் ஆகியவையும் வெளிச்சத்திற்கு வந்திருக்காது. கட்சியின் உடனடி நடவடிக்கைகளின் விளைவாக இந்திய கப்பற்படையும் அதிலிருந்த வீரர்களும் அழிக்கப்படுவது தடுக்கப்பட்டு, இறுதியில் ஓர் ஒப்பந்தம் உருவாகவும் வழியேற்பட்டது. எவ்வித தண்டனையும் விதிக்கப்பட மாட்டாது என்று உறுதிமொழி அளித்தபிறகும் கூட, இந்த வேலைநிறுத்தத்தின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டதன் மூலம் அரசு தனது ஒப்பந்தத்தினை மீறியபோது அரசின் செயலை கட்சி கடுமையாகக் கண்டித்தது.

இந்த எழுச்சி தோற்றது ஏன்?

இந்திய தேசிய இயக்கக் களத்தில் குறிப்பான சில பலவீனங்கள் நிலவி வந்தன. காங்கிரஸ்-லீக் கட்சிகளின் உயர்வர்க்கத் தலைமை இந்த வெகுஜன எழுச்சியைக் கண்டு அஞ்சியது. அகில இந்திய அளவிலும் ராணுவப்படையின் தரைப்படை மற்றும் விமானப்படை போன்ற இதர பிரிவுகளிலும் இந்தக் கலகம் பரவுவதை அவர்கள் விரும்பவில்லை. தடைவிதிக்கப்பட்டிருந்த போதிலும் அனைத்துப்பகுதி மக்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக நடைபெற்ற வேலைநிறுத்தம், முழு அடைப்பு ஆகியவற்றையும் அவர்கள் அதிகாரபூர்வமாகவே எதிர்த்தனர். கப்பற்படை வீரர்களின் இந்தக் கலகத்தை வெறும் ‘அரிசி-பருப்பு’க்கான ஒரு பிரச்சனையாகவே அவர்கள் பார்த்ததோடு, இன ரீதியான பாரபட்சத்திற்கு எதிரான கோரிக்கையை அவர்கள் காணத் தவறியதோடு, விரிவானதொரு தேசிய போராட்டத்தின் ஒரு பகுதியாகவும் இந்தப் போராட்டத்தைக் காண மறுத்தனர்.

நூற்றுக்கணக்கானோரைக் கொன்று குவித்த ஏகாதிபத்திய ஆட்சியாளர்களின் வன்முறை தாண்டவத்தை காங்கிரஸ்-லீக் தலைவர்கள் கண்டனம் செய்யவில்லை. மாறாக, குண்டடிபட்ட, நிராயுதபாணிகளான மக்களையே அவர்கள் விமர்சனம் செய்தனர். கப்பற்படை வீரர்களின் வேலைநிறுத்தத்தை கண்டனம் செய்ததன் மூலம் சட்டம்-ஒழுங்கிற்கான பிரதிநிதிகளின் பக்கமே அவர்கள் நின்றனர். ‘கப்பற்படையில் ஒழுங்கு நிலவ வேண்டும் என்ற தலைமைத் தளபதியின் அறிக்கையை’ தாம் ஆமோதிப்பதாக சர்தார் பட்டேல் அறிவித்தார். ‘வன்முறை நோக்கம் கொண்ட இந்து-முஸ்லீம் கூட்டணி’ என்று தனது கண்டனத்தை காந்தி தெரிவித்து குறிப்பிடத்தக்கதொரு அறிக்கையை வெளியிட்டார். அவர்கள் முன்வைத்த ஒரே ஆலோசனை கப்பற்படை வீரர்கள் அரசிடம் சரணடைய வேண்டும் என்பதே ஆகும். காங்கிரஸ் தலைவர் வல்லபாய் பட்டேலின் ஆலோசனை, அதைத் தொடர்ந்து ஜின்னாவிடமிருந்து வந்த செய்தி ஆகியவற்றின் அடிப்படையில் “இந்தியாவிடம்தான் நாங்கள் சரணடைகிறோம், பிரிட்டனிடம் அல்ல!” என்ற அறிவிப்புடன் பிப்ரவரி 23 அன்று கப்பற்படை வேலைநிறுத்த மத்திய குழு இறுதியாக சரணடைந்தது.

வேலைநிறுத்தம் செய்து வந்த கப்பற்படை வீரர்களை காப்பாற்றவும், அவர்களது சரணாகதியையும் தண்டனையையும் தடுக்கவுமான தமது முயற்சிகளில் அன்று வலுவான கட்சிகளாக இருந்த காங்கிரஸையும் முஸ்லீம் லீகையும் தன்னுடன் அணிதிரட்டுவதற்குத் தேவையான வலிமை கட்சியிடம் இருக்கவில்லை என்று கம்யூனிஸ்ட் கட்சி வருத்தம் தெரிவித்தது. இவ்வாறு இருந்தபோதிலும் ‘கப்பற்படையில் இருந்த நமது சகோதரர்களின் பின்னால் தனது வலிமைஅனைத்தையும் தந்து அவர்கள் முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்படுவதில் இருந்து தடுப்பதில் உதவி’ புரிந்ததாக கம்யூனிஸ்ட் கட்சி மிகச் சரியாகவே பெருமைகொண்டது.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் வர்க்கத் தன்மை

குரல்: தேவிபிரியா

கி.தீபான்ஜன்

வரலாற்றுத் துறை ஆய்வு மாணவர் (ஜே.என்.யூ)

பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கமும் அதற்கு எதிராக எழுந்த மிகப்பெரிய மக்கள் எழுச்சியான சுதந்திரப் போராட்டமும் இந்திய வரலாற்றில் மிக முக்கியமான காலமாகும். தற்கால இந்திய சமுதாயத்தில் நிலுவையிலுள்ள பல சிந்தனை ஓட்டங்கள் மேற்கண்ட காலத்தில் உருவானதுதான். இந்திய தேசிய போராட்டத்தின் துவக்கமும் 1885இல் அமைக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசின் உருவாக்கம் மற்றும் அதன் வளர்ச்சியோடு பொதுவாக இணைத்து பார்க்கப்படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தேசிய அளவிலான ஒரு இயக்கம் உருவானதற்கு பல அரசியல் சமுதாய கலாச்சார மற்றும் பொருளாதார காரணங்கள் உள்ளன. பற்பல காரணங்கள் இருப்பினும் இந்த கட்டுரையின் நோக்கம் இந்திய சுதந்திர போராட்டத்தின் வர்க்கத் தன்மையை ஆராய்வதாகும்.

சுதேசி முழக்கம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் பொதுக்கல்வி முறை துவங்கப்பட்டது. இதனால் ஆங்கிலக் கல்வி பெற்ற உயரடுக்கு இந்தியர்கள் உருவானார்கள். இவர்கள் பெரும்பாலும் மத்தியதர வர்க்கத்தை சார்ந்தவர்களாகவும், உயர் சாதியை சார்ந்தவர்களாகவும் இருந்தனர். இவர்கள் ஆங்கில கல்வி அறிவை பெற்று இருந்தாலும் அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் இல்லாமல் இருந்தது. பெரும்பாலான அரசாங்க வேலைகள் முதல் பெருவியாபாரம் வரை ஆங்கிலேயர்களின் ஆதிக்கம்தான் நீடித்தது. இந்த நடுத்தர வர்க்க நுண்ணறிவு உள்ளவர்களின் எண்ணிக்கை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பல மடங்காக உயர்ந்தது. அவர்கள் பெரும்பாலும் இந்தியா முழுவதிலும் இருந்த ராஜதானி தலைநகரங்களில் காணப்பட்டனர். இந்த நடுத்தர வர்க்க நுண்ணறிவு உள்ளவர்களின் அபிலாசைகள்தான் இந்திய தேசிய காங்கிரஸ் உருவானதற்கான பிரதான காரணம்.

அக்காலம் இந்திய முதலாளித்துவம் வலுபெறாத காலம். இந்திய முதலாளிகள் தன்னைத்தானே ஒரு வர்க்கமாக திரள வேண்டும் என்ற ஒரு யோசனை உருவான காலம். வரலாற்று அறிஞர் சுமித் சர்க்கார் கூறுகையில் ”1860களில் பிரிட்டிஷ் ஆட்சி நிறுவப்பட்ட பிறகு ஆங்கிலேய முதலாளிகளுக்கு தங்கள் வியாபாரத்தை நிறுவுவதற்கும் செயல்படுத்துவதற்கும் பணியாளர்கள் தேவைப்பட்டனர். இந்தத் தேவையை பூர்த்தி செய்தவர்கள்தான் அப்போது இருந்த இந்திய முதலாளிகள். 1920கள் வரை இந்திய முதலாளி வர்க்கம் பெரும்பாலும் தரகு முதலாளிகளாகதான் இருந்தார்கள். 1905ல்தான் முதன்முதலாக சுதேசி இயக்கம் வங்காளத்தில் நடைபெற்றபோது வெள்ளையர் பொருட்கள் புறக்கணிப்பு, இந்தியப் பொருட்கள், இந்திய கல்வி, இந்திய வியாபாரம் போன்ற முழக்கங்கள் ஒலித்தன. அப்போதுதான் இந்திய முதலாளிகள் முதல்முறையாக சுய உற்பத்தியினால் லாபம் கண்டனர்” என்கிறார்.

போராட்டமும் சமரசமும்

”1914-1947 வரையிலான காலகட்டத்தில் இந்திய முதலாளித்துவம் ஆங்கிலேய வியாபாரத்தோடு போட்டி போட்டு வளர்ந்த காலம்” என்கிறார் பிபின்சந்திரா. “இந்தியா சுதந்திரம் அடையும் தருணத்தில் இந்திய நிறுவனங்கள் 72-73% உள்நாட்டு சந்தையை பிடித்ததாகவும், ஒழுங்கமைக்கப்பட்ட வங்கித்துறையில் 80% மேலான வைப்பு வைத்திருந்தார்கள்” என்றும் அவர் கூறுகிறார். “1920களின் நடுப்பகுதியில் முதலாளிகள் தங்களுடைய நீண்டகால வர்க்க நலனை சரியாக யூகித்து, தைரியமாகவும் வெளிப்படையாகவும் ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்தார்கள்” என்றும் கூறுகிறார்.

இப்படியொரு நிலைப்பாட்டை எடுத்திருந்தாலும், எந்த ஒரு போராட்டமாக இருந்தாலும், தங்களின் வர்க்க நலனை பாதிக்காத அளவில் இருக்க வேண்டும் என்பதில் மிக கவனமாக இருந்தார்கள். அவர்கள் முடிந்த அளவிற்கு அரசியலமைப்புக்கு உட்பட்ட முறையில்தான் போராட்டம் நடத்த விரும்பினார்கள். சட்ட ஒத்துழையாமை இயக்கம் வெகுநாட்களுக்கு மேல் நீடித்தால், புரட்சிகர சக்திகள் இயக்கத்தை திசை திருப்பி விடுவார்கள் என்ற அச்சமும், நீண்டநாள் இயக்கம் தொடர்ந்தால் அவர்களுடைய தினசரி வியாபாரம் பாதிக்கப்படும் என்பதும் அதற்கான காரணமாகும். இவை அவர்களின் வர்க்க நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எண்ணினர். ஒரு பக்கம் இத்தகைய தயக்கங்கள் இருந்தாலும், பெருந்திரள் சட்ட ஒத்துழையாமை இயக்கம் நடக்கும் பொழுது அவர்கள் தங்களுடைய வர்க்க பலன்களை அடைவதில் குறியாக இருந்தார்கள். சட்ட ஒத்துழையாமை இயக்கம் வெகுநாட்கள் நீடிக்கும் சூழல் வரும்போதெல்லாம் பெரும்பாலான நேரங்களில் அரசாங்கத்திற்கும் காங்கிரசுக்கும் இடையிலான மத்தியஸ்தர்களாக செயல்பட்டனர். அவர்கள் வர்க்கம் சார்ந்த ஸ்தூலமான சலுகைகளை பேச்சுவார்த்தையின்போது பெற முயன்றனர். அவர்களின் கோரிக்கை நிறைவேறினால் போராட்டத்தில் சமரசம் ஏற்படும். கோரிக்கை நிறைவேறாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று மிரட்டலும் விடுத்தனர். இத்தகைய நிலையில் இவர்களுக்கு பக்கபலமாக நின்றது காங்கிரசும் காந்தியும்தான்.

1931இல் சட்ட ஒத்துழையாமை இயக்கம் நாடெங்கும் பரவி போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, இந்திய முதலாளிகளின் பிரதிநிதியான ஜி.டி. பிர்லா, இன்னொரு முதலாளிகளின் பிரதிநிதியான புருஷோத்தம் தாஸ்க்கு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் “எள்ளளவும் சந்தேகமில்லை நமக்கு இப்பொழுது தரப்படும் சலுகைகள் அனைத்தும் முழுக்க முழுக்க காந்திஜியால்தான்…. நாம் விரும்புவதை அடைய வேண்டுமென்றால், இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இயக்கம் சோர்வடைய விடக்கூடாது”. என்று குறிப்பிட்டுள்ளார்.

கம்யூனிஸ்டுகளின் போராட்ட யுக்தி

உலகமெங்கும் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்த நாடுகளிலெல்லாம், 1917இல் தோழர் லெனின் தலைமையில் நடந்த ரஷ்ய புரட்சி உத்வேகத்தையும் உற்சாகத்தையும் அளித்தது. இந்தியாவிலும் ரஷ்ய புரட்சியின் கருத்தோட்டங்களின் தாக்கம் மிகப்பெரிய அளவில் இருந்தது. இந்தியாவில் பெரும்பான்மையாக இருந்த விவசாயத் தொழிலாளர்களுக்கும் நகர்ப்புற தொழிலாளர்களுக்கும், தங்களின் கோரிக்கைகளுக்காக போராடுவதற்கு ரஷ்யப் புரட்சி உத்வேகம் அளித்தது. தொழிற்சங்கங்கள் பிறந்தன. தொழிலாளர்களின் போராட்டங்கள் வளர்ந்தன. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியும் உருவாயிற்று. நாடெங்கும் கட்சி கிளைகள் உருவாயின. கம்யூனிஸ்ட் தோழர்களின் செயல்பாடு வெகுஜனங்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பு கண்டது. தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இணைந்து செயல்பட்டனர். கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தின் தாக்கம் பொதுவெளியில் மட்டும் அல்லாமல், காங்கிரஸ் இயக்கத்திற்குள்ளேயும் வலுவடைந்தது. இளம் காங்கிரஸ்காரர்கள் மார்க்சிய சித்தாந்தத்தினால் ஈர்க்கப்பட்டனர். முதல்முறையாக அகில இந்திய அளவில் மாணவர் அமைப்பும், தொழிற்சங்கங்களும் உருவாகின. கம்யூனிஸ்ட் அகிலத்தின் வழிகாட்டுதல்படி, கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் இயக்கத்திற்கு உள்ளேயே இருந்து செயல்பட்டனர். இப்படியான ஒரு அரசியல் சூழல் குறித்து இந்திய முதலாளி வர்க்கம் அச்சம் கொண்டது.

புதிதாக உருவாக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது காங்கிரசில், காலனிய நாடுகள் குறித்த ஆரம்ப ஆய்வு அறிக்கையில் (Preliminary theses on the national colonial question) கீழ்காணும் அம்சங்களை தோழர் லெனின் சுட்டிக்காட்டினார். 

காலனிய நாடுகளில் நடைபெறும் தேசிய போராட்டம் ஒரு முதலாளித்துவ ஜனநாயக இயக்கமாக மட்டும்தான் இருக்க முடியும்.  ஏனெனில், பின்தங்கிய நாடுகளில் பெரும்பகுதி மக்கள் பூர்ஷ்வா முதலாளித்துவ உறவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் விவசாயிகளே. மேலும்,  பெரும்பாலான நேரங்களில் ஒடுக்கப்பட்ட நாடுகளின் முதலாளி வர்க்கம், தேசியப் போராட்டத்தை ஆதரிக்கிறார்கள். அதேசமயம், அந்த வர்க்கம் அந்நிய முதலாளிகளுடனும் நல்லிணக்கத்தோடு செயல்படுகின்றன. அதாவது புரட்சிகர இயக்கங்களும், புரட்சிகர வர்க்கங்களும் வலுவடையும்போது  உள்நாட்டு முதலாளிகளும் ஏகாதிபத்தியமும் ஒன்றிணைந்து எதிர்க்கும் என்றும் லெனின் எச்சரித்தார்.

ஆகவே, முதலாளித்துவ ஜனநாயக இயக்கத்திற்கு உள்ளே புரட்சிகர சக்திகளையும் சீர்திருத்தவாதிகளையும் வேறுபடுத்தி காட்ட வேண்டிய அவசியம் உள்ளது. தேசிய முதலாளிகளுக்கு அவர்களின் நாட்டு விடுதலைக்கான போராட்டத்தில் ஒரு முக்கிய பங்கு உள்ளது என்கிற வகையில், காலனிய நாடுகளின் முதலாளித்துவ விடுதலைப் போராட்டங்களை புரட்சிகரமானதாக உள்ளவரை கம்யூனிஸ்டுகள் ஆதரிக்க வேண்டும் என்றார் லெனின். விவசாயிகளையும் பெரும்பாலான உழைப்பாளி மக்களையும் முதலாளிகள் தலைமையிலான விடுதலை போராட்டங்களில் திரட்டும்போது  முட்டுக்கட்டைகள் உருவாக்கக்கூடாது. கம்யூனிஸ்டுகள் இந்த முதலாளித்துவ ஜனநாயக இயக்கத்திற்கு உள்ளேயிருந்து கட்சி ஸ்தாபனங்களை உருவாக்க வேண்டும், கட்சி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும், தொழிலாளர்கள் விவசாயிகளை திரட்டி போராட்டங்களை நடத்த வேண்டும் என்றும் இரண்டாவது அகிலம் வழிகாட்டியது. இதனடிப்படையில்தான் இந்தியாவிலும் கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் இயக்கத்துக்குள்ளே இருந்து செயல்பட்டனர். 

முதலாளிகளுக்கு சாதகமான செயல்திட்டம்

”1920களின் கடைசியில் காங்கிரஸ் கட்சிக்குள் கம்யூனிஸ்ட்களின் செயல்பாடு, கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தின் ஈர்க்கப்படும் காங்கிரசின் இளம் ஊழியர்கள், இவைகளை கண்டு முதலாளிகள் கவலை அடைந்தனர். எனவே, காங்கிரஸ் இயக்கத்திற்குள் தங்களையும் பெருமளவில் உறுப்பினர்களாக இணைக்துக் கொள்வதென அவர்கள் முடிவு செய்தனர். அதனடிப்படையில் பல முதலாளிகள் காங்கிரசில் தங்களை உறுப்பினர்களாக சேர்த்துக் கொண்டனர்” என்கிறார் பிபன் சந்திரா.

”காந்தி எந்த ஒரு போராட்டம் அறிவித்தாலும், இயக்கத்தின் தலைமை மற்றும் போக்கு குறித்து மிக கவனமாக இருப்பார். 1920இல் ஒத்துழையாமை இயக்கம் அறிவித்தார். தொழிலாளர்களும் பெருமளவில் பங்கெடுத்தார்கள். தொழிலாளர்களின் போராட்டம் ஆங்கிலேய தொழிற்சாலைகளுக்கும் முதலாளிகளுக்கும் எதிராக இருக்கும் வரை கவலை கொள்ளமாட்டார். ஆனால் தொழிலாளர்களின் போராட்டம் இந்திய முதலாளிகளுக்கு எதிராக நடக்கும்போது, உடனடியாக ஏதாவது காரணத்தை காட்டி போராட்டத்தை வாபஸ் பெற்று விடுவார். இதுதான் 1921இல் பம்பாய் நகரில் நடைபெற்ற தொழிலாளர்கள் போராட்டத்தின்போதும் நடந்தது. எனவே, காந்தியினுடைய போராட்ட வடிவமும், நிலைபாடும் இந்திய முதலாளிகளுக்கு மிகவும் சாதகமான ஒன்றாக இருந்தது. அதனால்தான் தேசிய நிலப்பிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் காங்கிரஸ் இயக்கத்தோடு காந்தியோடு எந்தவிதமான தத்துவார்த்த ரீதியான, செயல்பாட்டு ரீதியான பிரச்சினையையும் இருந்ததில்லை. அப்படியே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் காங்கிரஸ் கமிட்டிக்கு உள்ளேயே விவாதித்து தனக்கு சாதகமான முடிவை எடுக்கும் அளவிற்கு முதலாளிகள் வலுவாக இருந்தனர். காந்தியின் வருகைக்குப் பிறகு தேசியப் போராட்டம் வெகுஜனப் போராட்டமாக உருவானது. ஆனால், அந்தப் போராட்டத்தின் உள்ளடக்கம், அதை வழிநடத்திய நுண்ணறிவு உள்ளவர்களின் சிந்தனையோட்டமும் குணாம்சமும் முதலாளித்துவத்திற்கு சாதகமாகவே இருந்தது” என்கிறார் பேராசிரியர் இர்பான் அபிப்.

முற்போக்கு பாதையை தடுத்த சமரசம்

தோழர் இ.எம்.எஸ். குறிப்பிடுவதுபோல, இந்திய விடுதலை என்பது ஆங்கில ஏகபோக முதலாளித்து வர்க்கத்திற்கும், இந்திய நிலப் பிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே நடந்த ஒரு சமரசம் ஆகும். இந்திய முதலாளிகள் சுதந்திரத்திற்குப் பிறகும் நாட்டின் பொருளாதார, அரசியல், சமுதாய, கலாச்சார வளர்ச்சியை முதலாளித்துவப் பாதையிலேயே உருவாக்க விரும்பினர். அதற்காக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பாதையிலேயே நிலப்பிரபுத்துவத்தையும் முதலாளித்துவத்திற்கு முந்தைய நிறுவனங்களையும் அடிப்படையாகக் கொண்டு, அப்பொழுது மேலோங்கியிருந்த பிற்போக்கான ஆதிக்க வர்க்கங்களின் ஆட்சி அமைக்கப்பட்டது. இந்த நிலைமை உருவானதற்கான காரணத்தை அறிய சுதந்திர போராட்டத்தின் துவக்க காலங்களுக்கு செல்ல வேண்டும். இ.எம்.எஸ். கூறுகிறார், “இந்திய விடுதலைப் போராட்டத்தின் தலைமை பூர்சுவா தேசியவாதிகளாக இருந்தமையால் அவர்களால் அவர்களின் வர்க்க நலனை மீறி பார்க்க இயலவில்லை. இத்தகைய நிலைப்பாடு அவர்களின் சமுதாய பொருளாதார தத்துவங்களை வழி நடத்தியது. சமுதாயத்தில் நிலவிய பல்வேறு பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு காணுவதில் திறன் அற்றவர்களாக இருந்ததுதான் இந்தியாவின் தேசிய பிரச்சினைகளுக்கு காரணம்.” 

இ.எம்.எஸ். சுதந்திரப் போராட்டத்தின் தலைவர்களின் சமுதாய சிந்தனையை மேலும் விளக்குகிறார். “சுதந்திர போராட்டத்தின் ஆரம்பகட்டத்தில் (துவக்ககால மதப்பழமைவாத) தீவிரவாத தேசியவாதம் என்பது, உண்மையில் ஒரு பழமைவாத சக்தி. அவர்கள் நாட்டினுடைய காலாவதியான அனைத்து சமுதாய கலாச்சார விஷயங்களையும் பாதுகாக்க முற்பட்டனர். நவீனத்துவத்தின் உந்து சக்தியாக இருக்க வேண்டியே முதலாளித்துவ வளர்ச்சி அன்றைய ஆட்சியாளர்களுடன் சமரசத்தை ஏற்படுத்திக் கொண்டது” என்கிறார் இ.எம்.எஸ்.

மேலும்  மிதவாத தேசியவாதிகளுக்கும் தீவிரவாத தேசியவாதிகளுக்குமான வேறுபாட்டையும் சமூக கலாச்சார சிந்தனைப் போக்கையும் அவர் விளக்குகிறார். மிதவாதிகளை நவீனத்துவவாதிகள் என்றும், அவர்கள் இந்தியாவையும் பிரிட்டன் நாட்டைப்போல ஒரு முதலாளித்துவ நவீனத்துவப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணினர். ஆங்கிலேயர்கள் அதை செய்ய தவறுவதன் மீதே  அவர்களது கோபமிருந்தது. தீவிரவாத தேசியவாதிகளுடன் ஒப்பிடுகையில் மிதவாதிகள் சமுதாய கலாச்சார அம்சத்தில் முற்போக்கானவர்களே. தீவிரவாத தேசியவாதிகள் நாட்டில் காலாவதியான அரசியல் மற்றும் சமூக கலாச்சார நிறுவனங்களை அன்னிய முதலாளித்துவத்திற்கு எதிராக பாதுகாத்தனர். தேசியப் போராட்டம் இந்த தீவிரவாத தேசியவாதிகளால் தலைமை தாங்கப்பட்டதால், பிற்போக்கான சமூக அம்சங்கள் மறையாமல் பாதுகாக்கப்பட்டன. இதுவே ஆங்கிலேயே ஏகபோக முதலாளித்துவத்திற்கு, இந்திய நிலப்பிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே சுதந்திர இந்தியாவில் உருவான சமரசத்திற்கான அடிப்படை என்கிறார் இ.எம்.எஸ். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது திட்டத்தில் “தங்களது காலனி ஆட்சியின் போது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களோ அல்லது சுதந்திரத்திற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த இந்திய முதலாளிகளோ முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூகத்தை உடைத்தெறிய முன்வரவில்லை. முதலாளித்துவம் வளர்ச்சி அடைய அதற்கு முந்தைய சமூகம் நொறுக்கப்பட வேண்டுமென்பது மிக முக்கிய முன் நிபந்தனையாகும். இன்றைய இந்திய சமூகமானது, ஏகபோக முதலாளிகளால் ஆதிக்கம் செய்யப்படுகிற சாதிய, மத மற்றும் ஆதிவாசி அமைப்புகளைக் கொண்ட ஒரு வினோதமான கலவையாக உள்ளது. முதலாளித்துவதிற்கு முந்தைய சமூக அமைப்பை அழிப்பதில் விருப்பு கொண்ட அனைத்து முற்போக்கு சக்திகளையும் ஒன்றுபடுத்தி, அந்த சமூக அமைப்பிற்குள் இருக்கக் கூடிய அனைத்து புரட்சிகர சக்திகளையும் ஒன்றிணைத்து மக்கள் ஜனநாயகப் புரட்சியை நிறைவேற்றுவதன் மூலம் சோசலிசத்தை நோக்கிய மாற்றத்திற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள வேண்டிய கடமை உழைப்பாளி வர்க்கத்திற்கும் அதன் கட்சிக்கும் இருக்கிறது.” என்கிறது.

கொரோனா தொற்றும் மைய அரசின் பொருளாதார அணுகுமுறையும்

பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா

அறிமுகம்

கொரோனா தொற்று கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. தொற்றின் பாதிப்பு மட்டுமின்றி, திட்டமற்ற, முன்பின் முரணான, மைய அரசின் அணுகுமுறை மிகவும் அதிகமான அளவில் மக்களை குழப்பியுள்ளது; அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பெரும்பகுதி உழைப்பாளி மக்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக, 4 மணி நேர அவகாசம்கூட தராமல் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து அமலாக்கியது கோடிக்கணக்கான புலம்பெயர் தொழிலாளிகளை பெரும் துயரத்திற்கு ஆளாக்கியது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள், சிறு-குறு தொழில் முனைவோர், தினக்கூலி அடிப்படையில் சகல துறைகளிலும் பணியாற்றும் தொழிலாளிகள், முறைசார் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் சாதாரண உழைப்பாளி மக்கள் என்று மொத்த உழைப்புப் படையில் 80%க்கும் அதிகமானவர்கள் பணியிழந்து, ஊதியம் இழந்து, கடினமான சூழலை சந்தித்து வருகின்றனர். ஒரே காலத்தில், தொற்றுசார்ந்த சுகாதார சவாலையும், வாழ்வாதாரம் சார்ந்த பொருளாதார சவாலையும் பெரும்பகுதி மக்கள் இன்று எதிர்கொண்டு போராட வேண்டியுள்ளது. இதோடு மைய அரசின் தவறான கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் எதிர்த்தும் போராட வேண்டியுள்ளது.

மையஅரசின்பொருளாதாரஅணுகுமுறை

கொரோனா தொற்று காலத்தில் மிகப் பெரிய பாதிப்பை முதலில் எதிர் கொண்டவர்கள் புலம்பெயர் தொழிலாளிகள். உணவிற்கும் உறைவிடத்திற்கும் எந்த ஏற்பாடுமின்றி கோடிக்கணக்கான புலம்பெயர் தொழிலாளிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு எப்படியாவது சென்றாக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு, இதற்கான பொது போக்குவரத்து வசதிகளும் இல்லாத நிலையில் நடந்தே செல்வது என முடிவெடுத்து தங்கள் உயிர்களையே பணயம் வைக்கும் நிலை ஏற்பட்டது. 

ஆலைகளும் அலுவலகங்களும் மூடப்பட்டதால் பெரும்பகுதி உழைப்பாளி மக்கள் வாழ்வு நிலைகுலைந்தது. அண்மையில் சிஎம் ஐ இ (CMIE) ஆய்வு நிறுவனம் ஏப்ரல் மாதம் வெளியிட்டுள்ள தகவல்படி நாட்டு அடங்கு நடவடிக்கைகளின் விளைவாக சுமார் 12 கோடி மக்கள் வேலை இழந்துள்ளனர். விவசாயிகள் பயிர்களை அறுவடை செய்த இடங்களில் நாட்டு அடங்கின் காரணமாக அவற்றை விற்க இயலாமல் தவிக்கின்றனர். சாகுபடி வேலைகளை செய்வதும் கடினமாகியுள்ளது. அழியும் பயிர்களை அடிமாட்டு விலைக்கு விற்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், முற்றிலும் கோளாறான ஜிஎஸ்டி கொள்கை அமலாக்கமும் சிறுகுறு தொழில் முனைவோரையும் வணிகர்களையும், பொதுவாக ஒட்டுமொத்தமாக முறைசாரா துறைகளையும் பலவீனப்படுத்தியிருந்த நிலையில் நாட்டு அடங்கு இப்பகுதியினரை மேலும் படுகுழியில் தள்ளியுள்ளது.

இத்தகைய சூழலில் இதுவரை மைய அரசு முன்வைத்துள்ள பொருளாதார நிவாரணம் என்பது தேச உற்பத்தி மதிப்பில் 0.5% என்ற அளவில்தான் உள்ளது. நிதி அமைச்சர் அறிவித்த 1.7 லட்சம் கோடி ரூபாய் நிவாரண தொகுப்பில் பல ஒதுக்கீடுகள் ஏற்கெனவே மத்திய பட்ஜட்டில் இடம்பெற்றவையே. நிகரமாக பார்த்தால், நிவாரணத் தொகுப்பின் மொத்த மதிப்பு 1 லட்சம் கோடி ரூபாய் கூட இருக்காது.  மருத்துவமனைகளை மேம்படுத்தவும் ஆரோக்கியம் சார்ந்த இதர செலவுகளுக்கும் என்று நாடு முழுவதற்குமாக பிரதமர் அறிவித்த ரூ. 15,000 கோடி என்பது மிகவும் குறைவானது; பொருத்தமற்றது என்பதுடன் அதுவும் இரண்டு ஆண்டுகளுக்கான செலவுக்கு என்று கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஒரு விமர்சகர் கூறியதுபோல், மைய அரசு ஒருபுறம் மக்களை அடிக்கடி கைகழுவச் சொல்லிவிட்டு, மறுபுறம் மக்களை கைகழுவி விட்டுள்ளது என்று சொன்னால் மிகையாகாது. மார்ச் 14 மற்றும் மே 5 ஆகிய இரு தினங்களில் பெட்ரோல், டீசல் மீதான புதிய சிறப்பு கூடுதல் கலால் வரிகள் மற்றும் ரோடு செஸ் விதித்து சுமார் ரூ. 2 லட்சம் கோடி மக்களிடம் இருந்து மைய அரசு அபகரித்துள்ளது. அரசு அறிவித்த நிகர நிவாரணத்தைபோல் இரு மடங்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

மந்தநிலையில்பொருளாதாரம்

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்திய பொருளாதார வளர்ச்சி வேகம் சரிந்து வருகிறது என்பதை அனைவரும் அறிவோம். தேச உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி விகிதம் மைய அரசின் 2020-21 நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படும்பொழுதே அரசின் மிகையான கணக்குப்படியே கூட ஆண்டுக்கு 4.5% என்ற நிலையில்தான் இருந்தது. உண்மை அளவில் இதை 2.5% என்று கொள்ளலாம். ஆனால் பிரச்சினை வளர்ச்சி விகிதக் கணக்கு பற்றி மட்டுமல்ல. மூன்று முக்கிய பிரச்சினைகளை அன்றும் இன்றும் நாடு எதிர்கொள்கிறது.

ஒன்று, பல ஆண்டுகளாக தொடரும் கடுமையான வேளாண் நெருக்கடி. மூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டது மட்டுமின்றி அரசின் ஆதரவு மறுக்கப்பட்டு அதன் தாராளமய கொள்கைகளால் ஏழை, நடுத்தர விவசாயிகளும், இதர உடல் உழைப்பு தொழிலாளிகளும் நிலமும் வருமானமும் இழந்து வருவது தீவிரமாகியுள்ளது. பன்னாட்டு, இந்நாட்டு பெரும் வணிக நிறுவனங்களின் செல்வாக்கு வேளாண்துறையில் பெருகியுள்ளது. பயிர் சாகுபடி பெரும்பகுதி விவசாயிகளுக்கு கட்டுபடியாகாத தொழிலாகியுள்ளது.

இரண்டாவது, பாய்ச்சல் வேகத்தில் அதிகரித்துள்ள வேலையின்மை விகிதம். 2011-12 இல் இருந்து 2017-18 வரையிலான காலத்தில் வேலையின்மை விகிதம் மூன்று மடங்கு ஆனது. இளம் வயதினர் (வயது 15 – 29 ஆண்டுகள்) மற்றும் படித்தவர்கள் (12 வகுப்புகளும் அதற்கு மேலும்) மத்தியில் இது 20%ஐ நெருங்கியது. இந்த விவரங்களை கொண்ட தேசீய புள்ளியியல் ஆணையத்தின் அறிக்கையை 2019 தேர்தலுக்கு முன்பாக வெளிவராமல் பார்த்துக் கொண்டது மோடி அரசு. இன்று நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.

மூன்றாவது, 2011-12 மற்றும் 2017-18 ஆண்டுகளை ஒப்பிடும்பொழுது, கிராமப்புறங்களில் குடும்பங்களின் மாதாந்திர சராசரி தலா நுகர்வுசெலவு 8.8% குறைந்துள்ளது. நகரப் பகுதிகளில் 2.2% என்ற அளவிற்கு சிறு அதிகரிப்பு இருந்தாலும், அங்கும் குறைந்தபட்சம் சரிபாதி குடும்பங்களுக்கு சரிவே ஏற்பட்டுள்ளது. குறிப்பிடப்பட்டுள்ள ஆறு ஆண்டு காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு 6%, 7%, 8% அதிகரித்ததாக எல்லாம் அரசு கணக்கு கூறினாலும், நிகழ்ந்த வளர்ச்சி பெரும்பகுதி மக்களை சென்றடையவில்லை என்பது தெளிவாகிறது. 

மேலே கூறப்பட்டுள்ள மூன்று அம்சங்களையும் இணைத்துப் பார்த்தால்

பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா

அறிமுகம்

கொரோனா தொற்று கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. தொற்றின் பாதிப்பு மட்டுமின்றி, திட்டமற்ற, முன்பின் முரணான, மைய அரசின் அணுகுமுறை மிகவும் அதிகமான அளவில் மக்களை குழப்பியுள்ளது; அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பெரும்பகுதி உழைப்பாளி மக்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக, 4 மணி நேர அவகாசம்கூட தராமல் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து அமலாக்கியது கோடிக்கணக்கான புலம்பெயர் தொழிலாளிகளை பெரும் துயரத்திற்கு ஆளாக்கியது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள், சிறு-குறு தொழில் முனைவோர், தினக்கூலி அடிப்படையில் சகல துறைகளிலும் பணியாற்றும் தொழிலாளிகள், முறைசார் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் சாதாரண உழைப்பாளி மக்கள் என்று மொத்த உழைப்புப் படையில் 80%க்கும் அதிகமானவர்கள் பணியிழந்து, ஊதியம் இழந்து, கடினமான சூழலை சந்தித்து வருகின்றனர். ஒரே காலத்தில், தொற்றுசார்ந்த சுகாதார சவாலையும், வாழ்வாதாரம் சார்ந்த பொருளாதார சவாலையும் பெரும்பகுதி மக்கள் இன்று எதிர்கொண்டு போராட வேண்டியுள்ளது. இதோடு மைய அரசின் தவறான கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் எதிர்த்தும் போராட வேண்டியுள்ளது.

மையஅரசின்பொருளாதாரஅணுகுமுறை

கொரோனா தொற்று காலத்தில் மிகப் பெரிய பாதிப்பை முதலில் எதிர் கொண்டவர்கள் புலம்பெயர் தொழிலாளிகள். உணவிற்கும் உறைவிடத்திற்கும் எந்த ஏற்பாடுமின்றி கோடிக்கணக்கான புலம்பெயர் தொழிலாளிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு எப்படியாவது சென்றாக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு, இதற்கான பொது போக்குவரத்து வசதிகளும் இல்லாத நிலையில் நடந்தே செல்வது என முடிவெடுத்து தங்கள் உயிர்களையே பணயம் வைக்கும் நிலை ஏற்பட்டது. 

ஆலைகளும் அலுவலகங்களும் மூடப்பட்டதால் பெரும்பகுதி உழைப்பாளி மக்கள் வாழ்வு நிலைகுலைந்தது. அண்மையில் சிஎம் ஐ இ (CMIE) ஆய்வு நிறுவனம் ஏப்ரல் மாதம் வெளியிட்டுள்ள தகவல்படி நாட்டு அடங்கு நடவடிக்கைகளின் விளைவாக சுமார் 12 கோடி மக்கள் வேலை இழந்துள்ளனர். விவசாயிகள் பயிர்களை அறுவடை செய்த இடங்களில் நாட்டு அடங்கின் காரணமாக அவற்றை விற்க இயலாமல் தவிக்கின்றனர். சாகுபடி வேலைகளை செய்வதும் கடினமாகியுள்ளது. அழியும் பயிர்களை அடிமாட்டு விலைக்கு விற்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், முற்றிலும் கோளாறான ஜிஎஸ்டி கொள்கை அமலாக்கமும் சிறுகுறு தொழில் முனைவோரையும் வணிகர்களையும், பொதுவாக ஒட்டுமொத்தமாக முறைசாரா துறைகளையும் பலவீனப்படுத்தியிருந்த நிலையில் நாட்டு அடங்கு இப்பகுதியினரை மேலும் படுகுழியில் தள்ளியுள்ளது.

இத்தகைய சூழலில் இதுவரை மைய அரசு முன்வைத்துள்ள பொருளாதார நிவாரணம் என்பது தேச உற்பத்தி மதிப்பில் 0.5% என்ற அளவில்தான் உள்ளது. நிதி அமைச்சர் அறிவித்த 1.7 லட்சம் கோடி ரூபாய் நிவாரண தொகுப்பில் பல ஒதுக்கீடுகள் ஏற்கெனவே மத்திய பட்ஜட்டில் இடம்பெற்றவையே. நிகரமாக பார்த்தால், நிவாரணத் தொகுப்பின் மொத்த மதிப்பு 1 லட்சம் கோடி ரூபாய் கூட இருக்காது.  மருத்துவமனைகளை மேம்படுத்தவும் ஆரோக்கியம் சார்ந்த இதர செலவுகளுக்கும் என்று நாடு முழுவதற்குமாக பிரதமர் அறிவித்த ரூ. 15,000 கோடி என்பது மிகவும் குறைவானது; பொருத்தமற்றது என்பதுடன் அதுவும் இரண்டு ஆண்டுகளுக்கான செலவுக்கு என்று கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஒரு விமர்சகர் கூறியதுபோல், மைய அரசு ஒருபுறம் மக்களை அடிக்கடி கைகழுவச் சொல்லிவிட்டு, மறுபுறம் மக்களை கைகழுவி விட்டுள்ளது என்று சொன்னால் மிகையாகாது. மார்ச் 14 மற்றும் மே 5 ஆகிய இரு தினங்களில் பெட்ரோல், டீசல் மீதான புதிய சிறப்பு கூடுதல் கலால் வரிகள் மற்றும் ரோடு செஸ் விதித்து சுமார் ரூ. 2 லட்சம் கோடி மக்களிடம் இருந்து மைய அரசு அபகரித்துள்ளது. அரசு அறிவித்த நிகர நிவாரணத்தைபோல் இரு மடங்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

மந்தநிலையில்பொருளாதாரம்

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்திய பொருளாதார வளர்ச்சி வேகம் சரிந்து வருகிறது என்பதை அனைவரும் அறிவோம். தேச உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி விகிதம் மைய அரசின் 2020-21 நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படும்பொழுதே அரசின் மிகையான கணக்குப்படியே கூட ஆண்டுக்கு 4.5% என்ற நிலையில்தான் இருந்தது. உண்மை அளவில் இதை 2.5% என்று கொள்ளலாம். ஆனால் பிரச்சினை வளர்ச்சி விகிதக் கணக்கு பற்றி மட்டுமல்ல. மூன்று முக்கிய பிரச்சினைகளை அன்றும் இன்றும் நாடு எதிர்கொள்கிறது.

ஒன்று, பல ஆண்டுகளாக தொடரும் கடுமையான வேளாண் நெருக்கடி. மூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டது மட்டுமின்றி அரசின் ஆதரவு மறுக்கப்பட்டு அதன் தாராளமய கொள்கைகளால் ஏழை, நடுத்தர விவசாயிகளும், இதர உடல் உழைப்பு தொழிலாளிகளும் நிலமும் வருமானமும் இழந்து வருவது தீவிரமாகியுள்ளது. பன்னாட்டு, இந்நாட்டு பெரும் வணிக நிறுவனங்களின் செல்வாக்கு வேளாண்துறையில் பெருகியுள்ளது. பயிர் சாகுபடி பெரும்பகுதி விவசாயிகளுக்கு கட்டுபடியாகாத தொழிலாகியுள்ளது.

இரண்டாவது, பாய்ச்சல் வேகத்தில் அதிகரித்துள்ள வேலையின்மை விகிதம். 2011-12 இல் இருந்து 2017-18 வரையிலான காலத்தில் வேலையின்மை விகிதம் மூன்று மடங்கு ஆனது. இளம் வயதினர் (வயது 15 – 29 ஆண்டுகள்) மற்றும் படித்தவர்கள் (12 வகுப்புகளும் அதற்கு மேலும்) மத்தியில் இது 20%ஐ நெருங்கியது. இந்த விவரங்களை கொண்ட தேசீய புள்ளியியல் ஆணையத்தின் அறிக்கையை 2019 தேர்தலுக்கு முன்பாக வெளிவராமல் பார்த்துக் கொண்டது மோடி அரசு. இன்று நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.

மூன்றாவது, 2011-12 மற்றும் 2017-18 ஆண்டுகளை ஒப்பிடும்பொழுது, கிராமப்புறங்களில் குடும்பங்களின் மாதாந்திர சராசரி தலா நுகர்வுசெலவு 8.8% குறைந்துள்ளது. நகரப் பகுதிகளில் 2.2% என்ற அளவிற்கு சிறு அதிகரிப்பு இருந்தாலும், அங்கும் குறைந்தபட்சம் சரிபாதி குடும்பங்களுக்கு சரிவே ஏற்பட்டுள்ளது. குறிப்பிடப்பட்டுள்ள ஆறு ஆண்டு காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு 6%, 7%, 8% அதிகரித்ததாக எல்லாம் அரசு கணக்கு கூறினாலும், நிகழ்ந்த வளர்ச்சி பெரும்பகுதி மக்களை சென்றடையவில்லை என்பது தெளிவாகிறது. 

மேலே கூறப்பட்டுள்ள மூன்று அம்சங்களையும் இணைத்துப் பார்த்தால் இந்தியாவின் கிராமங்களிலும் நகரங்களிலும் ஒரு ஆழமான கிராக்கி நெருக்கடி நிலவுகிறது என்பது தெளிவாகத் தெரியும். மைய அரசு இந்த நெருக்கடி இருப்பதாகவே இன்றுவரை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை. மந்த நிலை பற்றி பெருமுதலாளிகள் பகிரங்கமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் -செப்டம்பர் மாதங்களில் பேசினர். அதன்பின் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக பல நடவடிக்கைகளை மைய அரசு மேற்கொண்டது. இவற்றின் மூலம் முதலாளிகளுக்கும் பங்குச்சந்தையில் ஊகவணிகம் செய்து லாபம் ஈட்டும் அன்னிய நிதிமூலதனங்களுக்கும் ஏற்றுமதி ஊக்குவிப்பு என்ற பெயரிலும் வேறுவகைகளிலும் பிப்ரவரி மாத பட்ஜட்டுக்கு முன்பாகவே ரூ. 2.25 லட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகைகளை மைய அரசு வாரி வழங்கியது.

மேலும் 2020-2021 பட்ஜட்டில் சுமார் ரூ. 65,000 கோடி அளவிற்கு செல்வந்தர்களுக்கு வருமான வரிச்சலுகைகள் வழங்கப்பட்டது. இவ்வாறு கிட்டத்தட்ட ரூ. 3 லட்சம் கோடியை செல்வந்தர்களுக்கு தூக்கிக் கொடுத்துவிட்டதால் அரசுக்கு ஏற்பட்ட வருமான இழப்பை ஈடுகட்டவும் அரசின் பற்றாக்குறையை குறைக்கவும் ரூ. 2.10 லட்சம் கோடி அளவிற்கு பொதுத்துறை நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்கப் போவதாக அரசு பட்ஜட்டில் அறிவித்தது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளை வெட்டிச் சாய்த்தது.

இதற்கு இரண்டு உதாரணங்கள் போதும்: ரேகா திட்ட ஒதுக்கீடு சென்ற ஆண்டு (2019-20) ரூ.71,000 கோடி, நடப்பு ஆண்டில் ஒதுக்கீடு ரூ 61,500 கோடி தான். உணவு மானியம் ரூ. 75,000 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மறுபுறம், வரிச்சலுகைகள் பெற்ற பெரும் கம்பனிகள் முதலீடுகளை முன்னெடுக்கவில்லை. கிராக்கி சரிந்துள்ள நிலையில் முதலீடுகள் நிகழவில்லை. மந்த நிலையும் தீவிரமடைந்தது. அரசின் வருமானமும் சரிந்தது. உலக நாடுகளில் பலவும் – குறிப்பாக முன்னணி முதலாளித்துவ நாடுகளும் – கொரோனாவின் கடும்தாக்குதலுக்கு உள்ளாகி, ஏற்கெனவே மந்தத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பன்னாட்டு பொருளாதாரமும் வரும் ஆண்டில் பெரும் சரிவை எதிர்கொள்ளும் நிலை உள்ளது.

இத்தகைய  சூழலில்தான் கொரொனா தொற்றை நாடு எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. பிற பல நாடுகளின் அரசுகள் கொரோனா பெரும் தொற்றை எதிர்கொள்ள நாட்டடங்கு அமல்படுத்துவதால் ஏற்படும் வாழ்வாதார பிரச்சினைகளை சமாளிக்க நிவாரணமாகவும் பொருளாதார மீட்சிக்காகவும் அவரவர் தேச உற்பத்தி மதிப்பில் 10% க்கு குறையாமல் பொருளாதார ஊக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. ஆனால் இந்திய அரசு கடுமையான சிக்கன நடவடிக்கைகளை பின்பற்றுகிறது. முன்பு நாம் குறிப்பிட்ட தேசஉற்பத்தி மதிப்பில் வெறும் 0.5% என்ற அளவிலான நிவாரணம் தவிர எந்த நிவாரணமும் அறிவிக்கப்படவில்லை. மாறாக, கலால் வரிகளை உயர்த்தி கூடுதல் வரிச்சுமையை மக்கள்மீது திணித்துள்ளது. இவற்றிற்கு மத்தியில், நாட்டு அடங்கை முடிவுக்கு கொண்டுவந்து ஆலைகளையும் அலுவலகங்களையும் திறக்க முதலாளிகள் தரப்பிலிருந்து தொடர் அழுத்தம் தரப்பட்டு வருகிறது. பல வாரங்கள் உற்பத்தி தடைப்பட்டதால் ஆலைகளையும் அலுவலகங்களையும் திறப்பது மட்டுமின்றி, திறந்த பின் தொழிலாளர்கள் இழந்த வேலைநாட்களை ஈடுசெய்யும் வகையில் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்றும், சில ஆண்டுகளுக்கு தொழிலாளர் உரிமை சட்டங்களை அமல்படுத்த வேண்டாம் என்ற தொனியிலும், முதலாளி வர்க்கம் தனது ஊடக ஊதுகுழல்கள் மூலம் உரக்கப் பேசுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களான மத்தியப்பிரதேசம், உத்திரப் பிரதேசம், கர்னாடகா மற்றும் குஜராத் ஆகியவற்றில் இதற்கான சட்டத் திருத்தங்கள் விரைவில் அமலாக உள்ளன. கொரோனா பெரும் தொற்று காலத்தையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள ஆளும் வர்க்கம் களம் இறங்கியுள்ளது. படிப்படியாக நாட்டுஅடங்கு தளர்த்தப்பட்டு வரும் சூழலில் நாம் இதனை கணக்கில் கொள்ள வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்?

உடனடியாகவும் தொடர்ந்தும் பொருத்தமான சில கோரிக்கைகளின் அடிப்படையில் நாம் மக்களை திரட்ட வேண்டியுள்ளது. கருத்து ரீதியாகவும் களப்பணியாகவும் நாம் இதனை செய்ய வேண்டும். கீழ்காணும் ஆலோசனைகள்/ கோரிக்கைகள் பரிசீலிக்கத்தக்கவை:

உடனடிக் கோரிக்கைகள்

  • அனைத்து புலம்பெயர் தொழிலாளிகளுக்கும் அவர்கள் விரும்பும் பட்சத்தில் அவரவர் சொந்த ஊருக்கு மைய அரசு செலவில் பாதுகாப்பாக பயணிக்க உத்தரவாதம் செய்யப்பட வேண்டும்.
  • கிட்டத்தட்ட எண்பது சதவீத குடும்பங்களுக்கு உடனடியாக மைய அரசு ஒரு மாதத்திற்கு ஒரு குடும்பத்திற்கு ரூ 7500 என்ற அடிப்படையில் மூன்று மாதம்  நிவாரணத்தொகை வழங்கவேண்டும்.
  • இக்குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு நபருக்கு மாதம் 10 கிலோ தானியம் ஆறு மாத காலத்திற்கு விலையின்றி வழங்க வேண்டும். அரசு கணக்குப்படி கிட்டத்தட்ட 7.5 கோடி டன் தானியம் இந்திய உணவு கார்ப்பரேஷனின் கிடங்குகளில் உள்ளது. குளிர்கால பயிர் அறுவடை முடிந்துவரும் நிலையில், மேலும் 4 கோடி டன் தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வந்து கொண்டிருக்கின்றன. எனவே விலையில்லா தானியம் கொடுப்பது சாத்தியமே. தானியம் மட்டுமின்றி பொருத்தமான அளவு பருப்பு, சமையலுக்கான எண்ணெய் போன்ற இதர அத்தியாவசிய மளிகை பொருட்களும் தரப்பட வேண்டும்.
  • சமைத்து உண்ண இயலாதவர்களுக்கு மதிய உணவு திட்ட வசதிகளை பயன்படுத்தி சமைத்த உணவு அளிக்கப்படலாம்.

இக்கோரிக்கைகளை நிறைவேற்ற தேச உற்பத்தி மதிப்பில் 3% என்ற அளவில்தான் செலவு ஆகும். இதற்கான வளங்களை பின்னர் பெரும் செல்வந்தர்கள் மீது வரிகள் விதிப்பதன் மூலம் திரட்ட இயலும். எனினும் உடனடி சூழலில் ரிசர்வ் வங்கி மைய அரசுக்கு இத்தொகையை கடனாக வழங்க வேண்டும். இன்றைய நாட்டு அடங்கு சூழலிலும் மந்த கிராக்கி நிலையிலும் இதனால் பணவீக்கம் ஏற்படும் வாய்ப்பு மிகக் குறைவு. மேலும் ரிசர்வ் வங்கியிடம் ஏறத்தாழ 50,000 கோடி அமெரிக்க டாலர்கள் கையிருப்பு உள்ளதால் தேவை ஏற்பட்டால் அவசியமான இறக்குமதி மூலம் விலைஉயர்வை கட்டுப்படுத்த இயலும். ரொக்கத் தொகையும் தானியம் மற்றும் மளிகை பொருட்களும் மைய அரசால் மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும். மாநிலங்கள் பணம் மற்றும் பொருள் விநியோகத்தை உள்ளாட்சி ஜனநாயக அமைப்புகள் மூலம் இதை அமலாக்க வேண்டும்.

மாநில அரசுகளுக்கு தரவேண்டிய பாக்கிகளை – ஜிஎஸ்டி நட்டஈடு, ஜிஎஸ்டி பங்கு, நிதிஆணைய பரிந்துரைபடி மாநிலங்களுக்கு தரப்பட வேண்டியவை, இன்ன பிற – உடனடியாக மைய அரசு கொடுக்க வேண்டும். மிக முக்கியமாக, இக்காலத்தில், மைய அரசின் உதவி அதிகரித்தாலும், மாநில அரசுகள் அதிகமான செலவுகளை செய்ய வேண்டி இருப்பதால், அவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கடன் வரம்பை இரட்டிப்பாக்க வேண்டும். மேலும் ரிசர்வ் வங்கி நேரடியாக மாநில அரசுகளுக்கு குறைந்த வட்டியில் கடன் அளிக்க வேண்டும். இதற்கான விதிமுறை மாற்றங்களை மைய அரசு உடனடியாக கொண்டுவர வேண்டும்.

கொரோனா பெரும்தொற்றை எதிர்கொள்ள பொதுத்துறையில் உள்ள மருத்துவ வசதிகள் மட்டும் போதாது என்ற நிலையில் உடனடியாக பல்வேறு அரசு மானியங்களை அனுபவித்துவரும் தனியார் மருத்துவமனைகள அரசு குறிப்பிட்ட காலத்திற்காவது கையகப்படுத்தி பயன்படுத்த வேண்டும். இம்மருத்துவமனைகளில் பணிபுரிவோரின் ஊதியங்களை அவற்றைப் பயன்படுத்தும் காலப்பகுதி வரையில் அரசு கொடுக்கலாம். விரிவான அளவில் தொற்று அறியும் சோதனைகளை செய்வதற்கும் இது அவசியம்.

இவ்வாறு மைய அரசு கூடுதல் செலவுகளை ஏற்கும்பொழுது அதன் பற்றாக்குறை கணிசமாக அதிகரிக்கும். இதனால் நிதிமூலதனம் நாட்டைவிட்டு பிற நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அதிகரிக்கும். இத்தகைய சூழலில், மூலதனம் நாட்டைவிட்டு வெளியேறுவது என்ற நடவடிக்கைமீது வலுவான கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டும். மேலும் ஐ எம் எஃப் அமைப்பில் அனைத்து நாடுகளுக்கும் கூடுதல் சிறப்புபணம் பெரும் உரிமைகளை (Special Drawing Rights or SDRs) அளித்திட பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை இந்திய அரசு வலுவாக ஆதரிக்க வேண்டும்.

அடுத்தகட்ட நடவடிக்கைகள்

மேற்கூறிய நடவடிக்கைகள் நிவாரணம் அளிக்கும் தன்மையில்தான் உள்ளன. அடுத்தகட்டமாக உற்பத்தி மீட்பையும் மக்களின் வாழ்வாதாரங்களை வலுப்படுத்தும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, விவசாயிகள், சிறு-குறு தொழில் முனைவோர், நகர, கிராம கூலி தொழிலாளர்கள் ஆகிய பகுதியினரின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்த வேண்டும். இதில் முக்கிய அம்சங்கள் ஐந்து: மகாத்மா காந்தி ஊரக வேலைஉறுதி திட்டம் (ரேகா); சிறு-குறு தொழில் முனைவோர் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு; புலம்பெயர் தொழிலாளிகள் மீண்டும் பணிகளில் இணைவது; அத்தியாவசிய பண்டங்களின் அளிப்பை உறுதி செய்தல்; ஊரக பொருளாதார மீட்சி.

ரேகாவில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் தொழிலாளிகளின் சம்பள பாக்கியை கொடுப்பது, ஊர் திரும்பி வரும் புலம்பெயர் தொழிலாளிகள் அனவருக்கும் வேலை அட்டை கேட்காமல் பணி கொடுப்பது, ஒவ்வொரு ஊரக குடும்பத்திற்கும் 100 நாள் வேலை என்பதற்கு பதில் உழைக்க முன்வரும் அனைத்து வயது வந்த குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் 100 நாள் வேலை அளிப்பது, வேலை கொடுக்க இயலாத பட்சத்தில் வேலையின்மை உதவிதொகை ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட வேண்டும். மேலும் நகரப் பகுதிகளுக்கும் ரேகா போன்ற திட்டம் கொண்டுவந்து இதன் மூலம் சிறு-குறு தொழில் முனைவோருக்கு உதவி செய்வது என்பதும் ஒரு முக்கிய கோரிக்கை.

சிறு-குறு தொழில்களுக்கு ஒரு ஆண்டு காலம் கடன் திருப்புதல் ஒத்திவைக்கப்பட வேண்டும். குறைந்த வட்டியில் அரசின் உத்தரவாத அடிப்படையில் தாராளமாக கடன் வழங்கப்பட வேண்டும். விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான ஒரு முறை கடன் ரத்து என்பதை அமலாக்க வேண்டும். பால் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை விவசாயிகளுக்குக் கட்டுபடியாகும் விலையில் அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.

புலம்பெயர் தொழிலாளிகளில் மீண்டும் நகரங்களுக்கு சென்று பணிபுரிய முன்வருவோருக்கு உரிய ஊக்கம் அளிக்கப்பட வேண்டும்.

நீண்டகால நடவடிக்கைகள்

இந்திய நாட்டின் முதன்மையான சவால் வேளாண் பொருளாதாரத்தின் புரட்சிகர மாற்றம் ஆகும். இதற்கு அடிப்படை முழுமையான நிலச்சீர்திருத்தம். நிலஉச்சவரம்பு சட்டங்கள் கறாராக அமல் செய்யப்படுவதன் மூலம் கிடைக்கும் உபரி நிலங்களும் அரசு தரிசு நிலங்களும் நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கும் ஏழை விவசாயிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுவது அவசியம். மேலும் பல ஆண்டுகளாக விவசாயத் துறையிலும் ஊரக கட்டமைப்பு துறைகளிலும் அரசு முதலீடு குறைக்கப்பட்டு வருகிறது. விவசாயம் மற்றும் ஊரக கட்டமைப்பிற்கான அரசு முதலீடுகள் பன்மடங்கு உயர்த்தப்பட வேண்டும். பாசன விரிவாக்கம், வேளாண் ஆராய்ச்சி விரிவாக்கப் பணி அமைப்புகள் வலுப்படுத்துதல் உள்ளிட்டு பன்முக நடவடிக்கைகள் தேவை.

உள்நாட்டு சந்தையை மையப்படுத்தியதாக நமது வளர்ச்சி இருக்க வேண்டும். கட்டற்ற உலகமயம் ஏற்புடையதல்ல. வலுவான பொதுத்துறை, சுயச்சார்பு அடிப்படையிலான அறிவியல் – தொழில்நுட்ப வளர்ச்சி, அரசின் வரிக் கொள்கைகளில் நேர்முக வரிகளின் பங்கை அதிகப்படுத்தும் முயற்சிகள், மத்திய மாநில நிதி உறவுகளில் ஜனநாயக தன்மையிலான மாற்றங்கள் ஆகியவையும் அவசியமான நீண்டகால நடவடிக்கைகள். சுகாதாரம், கல்வி, கட்டமைப்பு ஆகிய துறைகளில் கணிசமான பொதுமுதலீடுகளை அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

இவற்றின் மூலம் முதலாளிகளுக்கும் பங்குச்சந்தையில் ஊகவணிகம் செய்து லாபம் ஈட்டும் அன்னிய நிதிமூலதனங்களுக்கும் ஏற்றுமதி ஊக்குவிப்பு என்ற பெயரிலும் வேறுவகைகளிலும் பிப்ரவரி மாத பட்ஜட்டுக்கு முன்பாகவே ரூ. 2.25 லட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகைகளை மைய அரசு வாரி வழங்கியது.

மேலும் 2020-2021 பட்ஜட்டில் சுமார் ரூ. 65,000 கோடி அளவிற்கு செல்வந்தர்களுக்கு வருமான வரிச்சலுகைகள் வழங்கப்பட்டது. இவ்வாறு கிட்டத்தட்ட ரூ. 3 லட்சம் கோடியை செல்வந்தர்களுக்கு தூக்கிக் கொடுத்துவிட்டதால் அரசுக்கு ஏற்பட்ட வருமான இழப்பை ஈடுகட்டவும் அரசின் பற்றாக்குறையை குறைக்கவும் ரூ. 2.10 லட்சம் கோடி அளவிற்கு பொதுத்துறை நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்கப் போவதாக அரசு பட்ஜட்டில் அறிவித்தது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளை வெட்டிச் சாய்த்தது.

இதற்கு இரண்டு உதாரணங்கள் போதும்: ரேகா திட்ட ஒதுக்கீடு சென்ற ஆண்டு (2019-20) ரூ.71,000 கோடி, நடப்பு ஆண்டில் ஒதுக்கீடு ரூ 61,500 கோடி தான். உணவு மானியம் ரூ. 75,000 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மறுபுறம், வரிச்சலுகைகள் பெற்ற பெரும் கம்பனிகள் முதலீடுகளை முன்னெடுக்கவில்லை. கிராக்கி சரிந்துள்ள நிலையில் முதலீடுகள் நிகழவில்லை. மந்த நிலையும் தீவிரமடைந்தது. அரசின் வருமானமும் சரிந்தது. உலக நாடுகளில் பலவும் – குறிப்பாக முன்னணி முதலாளித்துவ நாடுகளும் – கொரோனாவின் கடும்தாக்குதலுக்கு உள்ளாகி, ஏற்கெனவே மந்தத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பன்னாட்டு பொருளாதாரமும் வரும் ஆண்டில் பெரும் சரிவை எதிர்கொள்ளும் நிலை உள்ளது.

இத்தகைய  சூழலில்தான் கொரொனா தொற்றை நாடு எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. பிற பல நாடுகளின் அரசுகள் கொரோனா பெரும் தொற்றை எதிர்கொள்ள நாட்டடங்கு அமல்படுத்துவதால் ஏற்படும் வாழ்வாதார பிரச்சினைகளை சமாளிக்க நிவாரணமாகவும் பொருளாதார மீட்சிக்காகவும் அவரவர் தேச உற்பத்தி மதிப்பில் 10% க்கு குறையாமல் பொருளாதார ஊக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. ஆனால் இந்திய அரசு கடுமையான சிக்கன நடவடிக்கைகளை பின்பற்றுகிறது. முன்பு நாம் குறிப்பிட்ட தேசஉற்பத்தி மதிப்பில் வெறும் 0.5% என்ற அளவிலான நிவாரணம் தவிர எந்த நிவாரணமும் அறிவிக்கப்படவில்லை. மாறாக, கலால் வரிகளை உயர்த்தி கூடுதல் வரிச்சுமையை மக்கள்மீது திணித்துள்ளது. இவற்றிற்கு மத்தியில், நாட்டு அடங்கை முடிவுக்கு கொண்டுவந்து ஆலைகளையும் அலுவலகங்களையும் திறக்க முதலாளிகள் தரப்பிலிருந்து தொடர் அழுத்தம் தரப்பட்டு வருகிறது. பல வாரங்கள் உற்பத்தி தடைப்பட்டதால் ஆலைகளையும் அலுவலகங்களையும் திறப்பது மட்டுமின்றி, திறந்த பின் தொழிலாளர்கள் இழந்த வேலைநாட்களை ஈடுசெய்யும் வகையில் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்றும், சில ஆண்டுகளுக்கு தொழிலாளர் உரிமை சட்டங்களை அமல்படுத்த வேண்டாம் என்ற தொனியிலும், முதலாளி வர்க்கம் தனது ஊடக ஊதுகுழல்கள் மூலம் உரக்கப் பேசுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களான மத்தியப்பிரதேசம், உத்திரப் பிரதேசம், கர்னாடகா மற்றும் குஜராத் ஆகியவற்றில் இதற்கான சட்டத் திருத்தங்கள் விரைவில் அமலாக உள்ளன. கொரோனா பெரும் தொற்று காலத்தையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள ஆளும் வர்க்கம் களம் இறங்கியுள்ளது. படிப்படியாக நாட்டுஅடங்கு தளர்த்தப்பட்டு வரும் சூழலில் நாம் இதனை கணக்கில் கொள்ள வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்?

உடனடியாகவும் தொடர்ந்தும் பொருத்தமான சில கோரிக்கைகளின் அடிப்படையில் நாம் மக்களை திரட்ட வேண்டியுள்ளது. கருத்து ரீதியாகவும் களப்பணியாகவும் நாம் இதனை செய்ய வேண்டும். கீழ்காணும் ஆலோசனைகள்/ கோரிக்கைகள் பரிசீலிக்கத்தக்கவை:

உடனடிக் கோரிக்கைகள்

  • அனைத்து புலம்பெயர் தொழிலாளிகளுக்கும் அவர்கள் விரும்பும் பட்சத்தில் அவரவர் சொந்த ஊருக்கு மைய அரசு செலவில் பாதுகாப்பாக பயணிக்க உத்தரவாதம் செய்யப்பட வேண்டும்.
  • கிட்டத்தட்ட எண்பது சதவீத குடும்பங்களுக்கு உடனடியாக மைய அரசு ஒரு மாதத்திற்கு ஒரு குடும்பத்திற்கு ரூ 7500 என்ற அடிப்படையில் மூன்று மாதம்  நிவாரணத்தொகை வழங்கவேண்டும்.
  • இக்குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு நபருக்கு மாதம் 10 கிலோ தானியம் ஆறு மாத காலத்திற்கு விலையின்றி வழங்க வேண்டும். அரசு கணக்குப்படி கிட்டத்தட்ட 7.5 கோடி டன் தானியம் இந்திய உணவு கார்ப்பரேஷனின் கிடங்குகளில் உள்ளது. குளிர்கால பயிர் அறுவடை முடிந்துவரும் நிலையில், மேலும் 4 கோடி டன் தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வந்து கொண்டிருக்கின்றன. எனவே விலையில்லா தானியம் கொடுப்பது சாத்தியமே. தானியம் மட்டுமின்றி பொருத்தமான அளவு பருப்பு, சமையலுக்கான எண்ணெய் போன்ற இதர அத்தியாவசிய மளிகை பொருட்களும் தரப்பட வேண்டும்.
  • சமைத்து உண்ண இயலாதவர்களுக்கு மதிய உணவு திட்ட வசதிகளை பயன்படுத்தி சமைத்த உணவு அளிக்கப்படலாம்.

இக்கோரிக்கைகளை நிறைவேற்ற தேச உற்பத்தி மதிப்பில் 3% என்ற அளவில்தான் செலவு ஆகும். இதற்கான வளங்களை பின்னர் பெரும் செல்வந்தர்கள் மீது வரிகள் விதிப்பதன் மூலம் திரட்ட இயலும். எனினும் உடனடி சூழலில் ரிசர்வ் வங்கி மைய அரசுக்கு இத்தொகையை கடனாக வழங்க வேண்டும். இன்றைய நாட்டு அடங்கு சூழலிலும் மந்த கிராக்கி நிலையிலும் இதனால் பணவீக்கம் ஏற்படும் வாய்ப்பு மிகக் குறைவு. மேலும் ரிசர்வ் வங்கியிடம் ஏறத்தாழ 50,000 கோடி அமெரிக்க டாலர்கள் கையிருப்பு உள்ளதால் தேவை ஏற்பட்டால் அவசியமான இறக்குமதி மூலம் விலைஉயர்வை கட்டுப்படுத்த இயலும். ரொக்கத் தொகையும் தானியம் மற்றும் மளிகை பொருட்களும் மைய அரசால் மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும். மாநிலங்கள் பணம் மற்றும் பொருள் விநியோகத்தை உள்ளாட்சி ஜனநாயக அமைப்புகள் மூலம் இதை அமலாக்க வேண்டும்.

மாநில அரசுகளுக்கு தரவேண்டிய பாக்கிகளை – ஜிஎஸ்டி நட்டஈடு, ஜிஎஸ்டி பங்கு, நிதிஆணைய பரிந்துரைபடி மாநிலங்களுக்கு தரப்பட வேண்டியவை, இன்ன பிற – உடனடியாக மைய அரசு கொடுக்க வேண்டும். மிக முக்கியமாக, இக்காலத்தில், மைய அரசின் உதவி அதிகரித்தாலும், மாநில அரசுகள் அதிகமான செலவுகளை செய்ய வேண்டி இருப்பதால், அவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கடன் வரம்பை இரட்டிப்பாக்க வேண்டும். மேலும் ரிசர்வ் வங்கி நேரடியாக மாநில அரசுகளுக்கு குறைந்த வட்டியில் கடன் அளிக்க வேண்டும். இதற்கான விதிமுறை மாற்றங்களை மைய அரசு உடனடியாக கொண்டுவர வேண்டும்.

கொரோனா பெரும்தொற்றை எதிர்கொள்ள பொதுத்துறையில் உள்ள மருத்துவ வசதிகள் மட்டும் போதாது என்ற நிலையில் உடனடியாக பல்வேறு அரசு மானியங்களை அனுபவித்துவரும் தனியார் மருத்துவமனைகள அரசு குறிப்பிட்ட காலத்திற்காவது கையகப்படுத்தி பயன்படுத்த வேண்டும். இம்மருத்துவமனைகளில் பணிபுரிவோரின் ஊதியங்களை அவற்றைப் பயன்படுத்தும் காலப்பகுதி வரையில் அரசு கொடுக்கலாம். விரிவான அளவில் தொற்று அறியும் சோதனைகளை செய்வதற்கும் இது அவசியம்.

இவ்வாறு மைய அரசு கூடுதல் செலவுகளை ஏற்கும்பொழுது அதன் பற்றாக்குறை கணிசமாக அதிகரிக்கும். இதனால் நிதிமூலதனம் நாட்டைவிட்டு பிற நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அதிகரிக்கும். இத்தகைய சூழலில், மூலதனம் நாட்டைவிட்டு வெளியேறுவது என்ற நடவடிக்கைமீது வலுவான கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டும். மேலும் ஐ எம் எஃப் அமைப்பில் அனைத்து நாடுகளுக்கும் கூடுதல் சிறப்புபணம் பெரும் உரிமைகளை (Special Drawing Rights or SDRs) அளித்திட பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை இந்திய அரசு வலுவாக ஆதரிக்க வேண்டும்.

அடுத்தகட்ட நடவடிக்கைகள்

மேற்கூறிய நடவடிக்கைகள் நிவாரணம் அளிக்கும் தன்மையில்தான் உள்ளன. அடுத்தகட்டமாக உற்பத்தி மீட்பையும் மக்களின் வாழ்வாதாரங்களை வலுப்படுத்தும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, விவசாயிகள், சிறு-குறு தொழில் முனைவோர், நகர, கிராம கூலி தொழிலாளர்கள் ஆகிய பகுதியினரின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்த வேண்டும். இதில் முக்கிய அம்சங்கள் ஐந்து: மகாத்மா காந்தி ஊரக வேலைஉறுதி திட்டம் (ரேகா); சிறு-குறு தொழில் முனைவோர் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு; புலம்பெயர் தொழிலாளிகள் மீண்டும் பணிகளில் இணைவது; அத்தியாவசிய பண்டங்களின் அளிப்பை உறுதி செய்தல்; ஊரக பொருளாதார மீட்சி.

ஊரக வேலை உறுதி திட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் தொழிலாளிகளின் சம்பள பாக்கியை கொடுப்பது, ஊர் திரும்பி வரும் புலம்பெயர் தொழிலாளிகள் அனவருக்கும் வேலை அட்டை கேட்காமல் பணி கொடுப்பது, ஒவ்வொரு ஊரக குடும்பத்திற்கும் 100 நாள் வேலை என்பதற்கு பதில் உழைக்க முன்வரும் அனைத்து வயது வந்த குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் 100 நாள் வேலை அளிப்பது, வேலை கொடுக்க இயலாத பட்சத்தில் வேலையின்மை உதவிதொகை ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட வேண்டும். மேலும் நகரப் பகுதிகளுக்கும் ரேகா போன்ற திட்டம் கொண்டுவந்து இதன் மூலம் சிறு-குறு தொழில் முனைவோருக்கு உதவி செய்வது என்பதும் ஒரு முக்கிய கோரிக்கை.

சிறு-குறு தொழில்களுக்கு ஒரு ஆண்டு காலம் கடன் திருப்புதல் ஒத்திவைக்கப்பட வேண்டும். குறைந்த வட்டியில் அரசின் உத்தரவாத அடிப்படையில் தாராளமாக கடன் வழங்கப்பட வேண்டும். விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான ஒரு முறை கடன் ரத்து என்பதை அமலாக்க வேண்டும். பால் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை விவசாயிகளுக்குக் கட்டுபடியாகும் விலையில் அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.

புலம்பெயர் தொழிலாளிகளில் மீண்டும் நகரங்களுக்கு சென்று பணிபுரிய முன்வருவோருக்கு உரிய ஊக்கம் அளிக்கப்பட வேண்டும்.

நீண்டகால நடவடிக்கைகள்

இந்திய நாட்டின் முதன்மையான சவால் வேளாண் பொருளாதாரத்தின் புரட்சிகர மாற்றம் ஆகும். இதற்கு அடிப்படை முழுமையான நிலச்சீர்திருத்தம். நிலஉச்சவரம்பு சட்டங்கள் கறாராக அமல் செய்யப்படுவதன் மூலம் கிடைக்கும் உபரி நிலங்களும் அரசு தரிசு நிலங்களும் நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கும் ஏழை விவசாயிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுவது அவசியம். மேலும் பல ஆண்டுகளாக விவசாயத் துறையிலும் ஊரக கட்டமைப்பு துறைகளிலும் அரசு முதலீடு குறைக்கப்பட்டு வருகிறது. விவசாயம் மற்றும் ஊரக கட்டமைப்பிற்கான அரசு முதலீடுகள் பன்மடங்கு உயர்த்தப்பட வேண்டும். பாசன விரிவாக்கம், வேளாண் ஆராய்ச்சி விரிவாக்கப் பணி அமைப்புகள் வலுப்படுத்துதல் உள்ளிட்டு பன்முக நடவடிக்கைகள் தேவை.

உள்நாட்டு சந்தையை மையப்படுத்தியதாக நமது வளர்ச்சி இருக்க வேண்டும். கட்டற்ற உலகமயம் ஏற்புடையதல்ல. வலுவான பொதுத்துறை, சுயச்சார்பு அடிப்படையிலான அறிவியல் – தொழில்நுட்ப வளர்ச்சி, அரசின் வரிக் கொள்கைகளில் நேர்முக வரிகளின் பங்கை அதிகப்படுத்தும் முயற்சிகள், மத்திய மாநில நிதி உறவுகளில் ஜனநாயக தன்மையிலான மாற்றங்கள் ஆகியவையும் அவசியமான நீண்டகால நடவடிக்கைகள். சுகாதாரம், கல்வி, கட்டமைப்பு ஆகிய துறைகளில் கணிசமான பொதுமுதலீடுகளை அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

அதிகாரக் குவிப்பும் அத்துமீறல்களும்

உ. வாசுகி

அரசு என்பது ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறை கருவி என்றார் மார்க்ஸ். ஒரு நாட்டில் உள்ள அரசின் வர்க்கத் தன்மையைப் பொறுத்து, ஆளும் வர்க்கத்தின் நலனுக்கு ஏற்பவே அரசின் அங்கங்களும், அதிகார கட்டமைப்பும் அமையும். இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவின் அரசியல் சாசனம், சுதந்திரத்துக்குப் பின் நவீன இந்தியா எத்தகையதாக கட்டமைக்கப்பட வேண்டும் என்ற பல நீரோட்டங்களின் கருத்து மோதல்களில் உருவானது. இந்திய முதலாளி வர்க்கத்தின் தலைமையிலான தேசிய நீரோட்டம், இடதுசாரி கருத்தோட்டம், ஆர்.எஸ்.எஸ். முன்வைத்த இந்து இந்தியா போன்ற பிரதான கருத்தியல்களில் ஆர்.எஸ்.எஸ்.சின் கண்ணோட்டம் நிராகரிக்கப்பட்டு, ஜனநாயக சோஷலிச குடியரசு என்ற அடிப்படையில் அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டது. பின்னர் மதச்சார்பின்மையும் இணைக்கப்பட்டது. டாக்டர் அம்பேத்கர் போன்ற தலைவர்களின் பங்களிப்பு இதில் முக்கியமானது.

கூட்டாட்சிக் கோட்பாடு இதில் இடம் பெற்றதற்கு முக்கிய காரணம் தேச விடுதலை போராட்டங்களில் மக்கள் பங்கேற்பும் , மொழி வழி மாநிலங்களுக்காகவும், மொழி கலாச்சாரம் பாதுகாக்கப்படுவதற்காகவும் பல்வேறு தேசிய இனங்கள் நடத்திய வெகுமக்கள் போராட்டங்களும்தாம். இவற்றில் இடதுசாரிகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. பல்வகை தேசிய இனங்கள், மொழிகள் உள்ளடங்கிய மாநிலங்கள் இணைந்த ஒன்றியம்தான் இந்தியா என்ற சாராம்சம் அரசியல் சாசனத்தில் இடம் பெற்றது. இந்தியாவில் பெரு முதலாளிகள் பெரிதும் வளர்ச்சியடையாத காலமாகவும் அது இருந்தது.

அரசியல் சாசனம் “வடிவத்தில் கூட்டாட்சி தன்மை (federal) கொண்டதாக இருந்தாலும், குணாம்சத்தில் மத்திய அரசிடம் அதிகார குவிப்புக்கு (unitary) வழி வகுப்பதாக உள்ளது” என்பது அன்றைக்கே கம்யூனிஸ்டுகளின் விமர்சனமாக அமைந்தது. பிரதான அதிகாரங்கள், வருவாய் மற்றும் வளங்களின் மீது கட்டுப்பாடு போன்றவை மத்திய அரசின் பொறுப்பில் இருந்தன. மாநில அரசுகளைக் கலைக்கும் உரிமை மத்திய அரசிடம் இருந்தது. நிதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் மத்திய அரசை சார்ந்து இருக்க வேண்டிய நிலைமையில்தான் மாநிலங்கள் வைக்கப்பட்டன. ஆளுநர்கள் மத்திய அரசின் முகவர்களாக செயல்பட்டனர். பொதுப்பட்டியலில் உள்ள அம்சங்கள் மீது முடிவெடுக்கும்போது கூட மாநிலங்களுடன் கலந்து பேசுவதற்கான ஏற்பாடு இல்லை. காலப்போக்கில் இந்த முரண்பாடு அதிகரித்தது. மத்திய மாநில உறவுகளை மறு வரையறை செய்யக்கோரி, 1977-ல் மேற்கு வங்க இடது முன்னணி அரசு 15 அம்ச கோரிக்கை சாசனத்தை உருவாக்கியது. வேறு பல கட்சிகளும் இந்நிலைபாட்டை எடுத்தன. 1983-ல் ஸ்ரீநகரில் நடந்த மாநாடு இத்தகைய கட்சிகளை ஒருங்கிணைத்தது. அதிகார பரவல் என்பது மைய அரசை பலவீனப்படுத்தாது; மாறாக அடித்தளத்தை வலுப்படுத்தும் என்று தோழர் ஜோதிபாசு அம்மாநாட்டில் முன்வைத்தார். அதே வருடம் மத்திய மாநில உறவுகளை மறு சீரமைப்பு செய்ய சர்க்காரியா கமிஷனை மத்திய அரசு அமைத்தது. இதன் அறிக்கை பல அடிப்படை முரண்பாடுகளைத் தீர்க்க உதவவில்லை. 1990-ல் தேசிய முன்னணி அரசு, மாநிலங்களுக்கிடையேயான கவுன்சிலை (Inter-State council) உருவாக்கியது. இது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், இதுவும் அடிப்படை பிரச்னைகளுக்கு வழிகாட்டவில்லை. மேலும் பல புதிய சிக்கல்கள் முளைத்தன. 2007-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி, மீண்டும் ஒரு கமிட்டியை, மத்திய மாநில உறவுகள் சம்பந்தமாக அமைத்தது. அதன் வரம்பும் கூட மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமல் நிர்ணயிக்கப்பட்டது.

பொதுவாக, அரசியல் சாசனத்தில் இருந்த கூட்டாட்சி அம்சங்களை வலுப்படுத்தும் விதமாக, மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் முறையிலேயே கம்யூனிஸ்ட் கட்சியின் தலையீடுகள், நிலைபாடுகள் அமைந்தன. மத்திய முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ அரசின் அதிகார குவிப்பை நிலைநிறுத்துவதாகவே காங்கிரசின் செயல்பாடுகள் இருந்தன. அரசின் வழிகாட்டுதல் மற்றும் உதவியோடு இந்தியாவில் முதலாளித்துவ வளர்ச்சி பாதை போடப்பட்டது. இந்தத் தேவைக்கு ஏற்றாற் போல் மாநில உரிமை வரம்பை மீறும் மத்திய அரசின் நடவடிக்கைகள் தொடர்ந்தன. மாநில முதலாளித்துவ கட்சிகளைப் பொறுத்தவரை, அவற்றின் தோற்றம் மாநில உரிமைகள், மொழி, கலாச்சாரம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டாலும், மாநில உரிமைகளுக்கான அவர்களின் வலுவான குரல், நவீன தாராளமய காலகட்டம் மாநில முதலாளிகளின் வளர்ச்சிக்குக் கதவைத் திறந்து விட்ட பின்னணியில், தளர்ந்து போனது.

இந்திய முதலாளித்துவத்தின் தடையற்ற வளர்ச்சிக்கு அரசின் கட்டுப்பாடுகள் ஒரு கட்டத்தில் தடையாக மாறின. 1990களில் நவீன தாராளமய கொள்கைகள் சுவீகரிக்கப்பட்ட பின்னணியில், சர்வதேச நிதி மூலதனம் விருப்பம் போல் லாபத்தைத் தேடி உலகம் சுற்றுவதற்கு ஏதுவாக அரசின் பங்கு பாத்திரம் மாறியது. ஒருங்கிணைந்த சந்தை உருவாவது முதலாளித்துவ வளர்ச்சிக்குப் பலனளிக்கும் என்ற நிலையில், மத்திய அரசின் கையில் மேலும் அதிகாரங்கள் மாறவும், மாநில உரிமைகள் நீர்த்துப் போகவுமான நடவடிக்கைகள் பின்தொடர்ந்தன. பெரு முதலாளிகளின் வர்க்க பிரதிநிதியான காங்கிரஸ் இந்தப் பாதையில்தான் செயல்பட்டது. பின்னர் வந்த பாஜக அதிகார குவிப்பை அடுத்த கட்டத்துக்கே கொண்டு போனது. நிதி மற்றும் வருவாய் பகிர்வு குறித்த அதிகார குவிப்பு பிறிதொரு கட்டுரையில் இடம் பெறும். அரசியல் பாதிப்புகளை இங்கு பரிசீலிக்கலாம்.

பாஜக ஆட்சியில் அதிகார குவிப்பு:

பாஜக ஆட்சியில் பெருமளவு அதிகாரங்களை மத்திய அரசும், பிரதமர் அலுவலகமும் தம் வசம் குவித்துக் கொள்வதை வெறும் எதேச்சாதிகார நடவடிக்கையாக, மீறலாக மட்டும் பார்க்க இயலாது. பாஜக அரசு இப்படித்தான் இயங்கும். அதன் சித்தாந்தம் அப்படி. வேறு வகையிலான அறிவிப்புகள், வாய் ஜாலங்கள் அனைத்தும் புலியின் மீது போர்த்தப்பட்ட பசு தோல்தான்.

ஆர்.எஸ்.எஸ்.சின் வழிகாட்டுதலில் இயங்கும் பாஜக அரசு, கார்ப்பரேட்டுகளின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெற்றிருக்கிறது. தீவிரமான கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை நடைமுறைப்படுத்தவும், ஏற்க மறுக்கிற மாநிலங்களின் எதிர்ப்பை நசுக்கவும் அதிகாரங்கள் மத்திய அரசிடம் குவிக்கப்பட வேண்டியிருக்கிறது. சர்வதேச நிதி மூலதனம் நாடு நாடாக போவதற்கும், வெளியேறுவதற்கும் ஒரு தேசமே கட்டுப்பாடுகளை அகற்ற வேண்டும் என்னும்போது, மாநிலங்களும் அப்பாதையில் செல்ல நிர்ப்பந்தப்படுத்தப்படுகின்றன. ஒரு பரந்து விரிந்த ஒருங்கிணைக்கப்பட்ட சந்தை நவீன தாராளமய காலத்தின் கட்டாயம்.

மறுபுறம், இந்துத்வ சித்தாந்தத்துக்கு ஏதுவாக ஒரே தேசம் – ஒரே கலாச்சாரம் – ஒரே மொழி என்ற ஒற்றை வடிவத்தைத் திணிக்கவும் அதிகார குவிப்பு மேலும் மேலும் தேவைப்படுகிறது. பாஜகவின் கலாச்சார தேசியம் என்ற சொல்லாடலும் சரி, அதன் கருத்தியலும் சரி, இந்தியாவின் பன்மைத் தன்மையை நிராகரிப்பதாகவே இருக்கிறது. தேசிய இனங்களின் பன்மைத் தன்மையை அங்கீகரிப்பதோடு தொடர்புடையதுதான் மாநில உரிமைகளுக்கான அங்கீகாரம். அது இல்லை என்றால் இது இருக்காது. இந்தப் பின்னணியிலேயே பாஜக அரசின் நடவடிக்கைகளைப் பொருத்திப் பார்க்க வேண்டும்.

உதாரணமாக, மானிய வெட்டு என்பது இவர்கள் பின்பற்றும் பொருளாதார கொள்கையின் ஒரு முக்கிய அம்சம். கொள்கை அடிப்படையில் இடதுசாரிகளும், மக்கள் போராட்டங்களின் வெப்பத்தில் இதர மாநில அரசுகளும், பொது விநியோக முறையை பலப்படுத்த வேண்டும் என்று கோருகின்றன. மானியத்தைக் குறைக்கும் நோக்குடன் வறுமை கோட்டைத் தீர்மானித்து, அதற்கேற்றாற் போல் அரிசி, கோதுமையை குறைப்பது, மண்ணெண்ணெயை நிறுத்துவது போன்ற நடவடிக்கைகள் காங்கிரஸ் ஆட்சியில் துவங்கின. தற்போது பாஜக ஆட்சி அதனைத் தீவிரமாக அமல்படுத்துகிறது. இது கேரளா, தமிழகம் போன்ற பொதுவிநியோக முறை ஓரளவு பலமாக இருக்கும் மாநிலங்களைக் கடுமையாக பாதித்துக் கொண்டிருக்கிறது. நேரடி பணப்பட்டுவாடா மூலம் பொதுவிநியோக முறையை முற்றிலும் சீரழிக்கும் நடவடிக்கைகள் படிப்படியாக அதிகரிக்கின்றன. தற்போதைய ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு என்பது பொதுவிநியோக முறையை நாசமாக்குவது மட்டுமல்ல; மாநில அரசாங்கங்கள் தம் மக்களுக்கு உணவு வழங்கும் அதிகாரத்தை மீறுவதாகவும் அமைகிறது. உலக வர்த்தகக் கழகத்தின் நிர்ப்பந்தங்கள், தம் குறுகிய அதிகாரங்களுக்கு உட்பட்டு சில நலத் திட்டங்களை அமல்படுத்த முயற்சிக்கிற மாநில அரசுகளுக்குத் தடையாக அமைகிறது. எனவே, சர்வதேச ஒப்பந்தங்கள் போடும் போது நாடாளுமன்ற ஒப்புதல் வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டியிருக்கிறது. ஜி.எஸ்.டி., நீட் உள்ளிட்ட நடவடிக்கைகளும் மாநிலங்களின் உரிமைகளை மீறக்கூடியவையாகவே அமைந்தன.

மொழி என்பது ஒரு தேசிய இனத்தின் மைய அம்சங்களில் ஒன்று. இந்தி திணிப்பை வலுவாக எதிர்த்த மாநிலங்களில் முதன்மையானது தமிழகம். இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பு, சமஸ்கிருத வளர்ச்சிக்குக் கூடுதல் நிதி ஒதுக்குவது, அகில இந்திய தேர்வுகள் சிலவற்றில் இந்தி, ஆங்கிலம் இரண்டை மட்டும் பயன்படுத்தியது, ரயில்வேயில் உள்ளக தொடர்புக்கு தமிழைப் பயன்படுத்தக் கூடாது என்று அறிவிப்பு வெளியிட்டது போன்ற நடவடிக்கைகள் மோடி ஆட்சியில் அடிக்கடி நடக்கின்றன. தேசிய வரைவு கல்வி கொள்கையின் மூலம் தமிழகத்தின் இரு மொழிக் கொள்கையை மறைமுகமாக மாற்ற முயற்சிக்கப்பட்டது. ஒவ்வொரு கட்டத்திலும் பலத்த எதிர்ப்புக்கிடையேதான் இது மாற்றிக் கொள்ளப்பட்டது. ஆனால் அடுத்த வாய்ப்பு வரும் போது மீண்டும் முயற்சிக்கப்படுகிறது. எனவே மாநிலங்களின் எதிர்ப்பை அங்கீகரித்து, எடுத்த முயற்சியை விட்டு விடுவது என்பது பாஜகவின் நோக்கமல்ல. தற்காலிகமாக விட்டுக் கொடுப்பது அல்லது தகர்த்து முன்னேறுவதுதான் அதன் உத்தியாகத் தெரிகிறது.

ஒரே தேசம் ஒரே தேர்தல் என்பதிலும் மாநிலங்களின் உரிமைகள் கடுமையாக மீறப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் பதவிக்காலத்தை அதிகரிப்பது அல்லது குறைப்பது என்ற உள்ளடக்கம் இதில் உண்டு. ஆளுநரின் மறைமுக ஆட்சிக்கும் இதில் பரிந்துரை செய்யப்படுகிறது.

17வது மக்களவை அமைக்கப்பட்ட பிறகு, நிலைக் குழுக்களோ, அவைக் குழுக்களோ உருவாக்கப்படவில்லை. எனவே, பல்வேறு மசோதாக்கள் முறையாக தயாரிக்கப்படாமல் நேரடியாக நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டன. பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய, ஆழமாக ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய, மாநில உரிமைகளைப் பறிக்கக் கூடிய மசோதாக்களை தெரிவுக் குழுவுக்காவது விட வேண்டும் என்ற எதிர் கட்சிகளின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. மக்களவையில் உள்ள மிருக பலத்தை வைத்து இந்த மசோதாக்கள் அனைத்தும் வரிசையாக நிறைவேற்றப் பட்டன. இவற்றில் பலவற்றில் மாநில உரிமைகள் வலுவாக மீறப்பட்டுள்ளன.

அனைத்து மாநில மக்கள் பிரதிதிகளும் இடம் பெறும் நாடாளுமன்றமும், அது சம்பந்தமாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகளும் புறக்கணிக்கப்பட்டு, பிரதமர் அலுவலகம் சார்ந்து முடிவுகள் எடுக்கப்படுவதும் கூட்டாட்சிக்கு முரணானது.

வரைவு தேசிய கல்விக் கொள்கை:

தற்போதைய வரைவு கொள்கையின் ஒரு பிரதான அம்சம் மையப்படுத்துதல். உதாரணமாக பிரதமர் தலைமையிலான ராஷ்டிரிய சிக்‌ஷா ஆயோக் என்ற அமைப்பின் கட்டுப்பாட்டிலும், கண்காணிப்பிலும் ஒட்டு மொத்த கல்வி நடவடிக்கைகள் இருக்கும் என்றும், ஆராய்ச்சி செய்ய வேண்டிய முக்கிய பிரச்னைகள் என்ன என்பதை இனி தேசிய ஆராய்ச்சி கழகம்தான் தீர்மானிக்கும் என்றும், இக்கழகம் தொழிலதிபர்கள், கார்ப்பரேட்டுகளின் நிதியைக் கொண்டு இயங்கும் என்றும் முன்மொழிவுகள் உள்ளன. கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாக எழும் போது, நேர்மாறாக, அதனை மத்திய பட்டியலுக்கு அதிகாரபூர்வமாகக் கொண்டு செல்லாமலேயே, அத்தகைய விளைவுகளை இக்கொள்கை ஏற்படுத்துகிறது.

தேசிய மருத்துவ ஆணையம்:

இதிலும் இந்தியா முழுவதும் உள்ள மருத்துவம் சார்ந்த அனைத்து அம்சங்களையும் இந்தக் கமிஷன் கட்டுப்படுத்தும் என்பது வருகிறது. தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50% இடங்களுக்கான கல்வி கட்டணம் அவர்களின் விருப்பத்துக்கு விடப்படுகிறது. மீதி 50%க்கு கட்டணம் வசூலிக்க பொதுவான வழிகாட்டுதல்தான் இருக்குமாம். அதற்கு ‘உட்பட்டு’ தனியார் மருத்துவ கல்லூரிகளே நிர்ணயித்துக் கொள்ளலாம். மாநில அரசு நிர்ணயிக்க இங்கு ஏதும் இல்லை. 6 மாத சுருக்கப்பட்ட பயிற்சி பெற்று கிராமப்புறங்களில் மருத்துவம் பார்க்கலாம் என்பதும், எக்ஸ்ரே டெக்னிஷியன், லேப் டெக்னிஷியன், கம்பவுண்டர் உள்ளிட்டோர் கூட இதனை செய்யலாம் என்பதும், நகர்ப்புற, கிராமப்புறங்களுக்கிடையே மருத்துவ சிகிச்சை தரத்தில் நிலவும் பாகுபாடுகளை இது சட்டபூர்வமாக்குகிறது. மாநில அரசின் அதிகார வரம்பை மீறுகிறது. ஐந்தரை ஆண்டு மருத்துவ படிப்புக்குப் பிறகு, மீண்டும் ஒரு தேர்வு எழுதப்பட வேண்டும் என்ற நிபந்தனை, பல்கலைக்கழகம் மருத்துவ பட்டம் கொடுக்குமா? இந்தத் தேர்வை நடத்தும் முகமையின் சார்பில் பட்டம் கொடுக்கப்படுமா? என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

தகவல் உரிமை சட்டத் திருத்தத்தின்படி மாநில தகவல் ஆணையரின் ஊதியமும், பதவிக் காலமும் இனி மத்திய அரசின் கையில்தான். தேசிய புலனாய்வு முகமை திருத்த சட்டத்தில், எந்த மாநிலத்தில் உள்ள எவரை வேண்டுமானாலும் மத்திய உள்துறை அமைச்சகம், பயங்கரவாதி என்று முத்திரை குத்தி, மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலே அவரைக் கைது செய்து, அவரின் சொத்துக்களைக் கைப்பற்றலாம் என்ற பிரிவு உள்ளது. விசாரணை செய்வதிலும் மாநில காவல்துறையை ஈடுபடுத்தப்போவதில்லை. சட்டம் ஒழுங்கு மாநில அதிகாரம் என்பது இதில் நீர்த்துப் போகிறது.

தொழிலாளர் நல சட்டத் திருத்தம்:

தொழிலாளர் நலன் என்பது மத்திய – மாநில பொதுப் பட்டியலில் உள்ளது. 44 தொழிலாளர் நல சட்டங்கள் வெறும் நான்கு தொகுப்பாக மாற்றப்படும் என்று மாநிலங்களுடன் விவாதிக்காமல், நிதிநிலை அறிக்கையின்போது நிதியமைச்சர் உரையில் அறிவிக்கப்படுகிறது. இவற்றில் ஊதியம் குறித்த தொகுப்பு தற்போது சட்டமாகியிருக்கிறது.

குறைந்த பட்ச ஊதியம் குறித்து 15வது இந்திய தொழிலாளர் மாநாடு வழங்கிய பரிந்துரையும், பின்னர் ராப்டகாஸ் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும், இவற்றை ஏகமனதாக ஏற்று உருவாக்கப்பட்ட 45 மற்றும் 46வது இந்திய தொழிலாளர் மாநாடுகளின் பரிந்துரைகளும் இச்சட்டத்தில் இடம் பெறவில்லை. 7வது ஊதிய குழு பரிந்துரைத்த ரூ.18,000 என்பதும் புறந்தள்ளப்பட்டு தேசிய அடிமட்ட ஊதியம் ரூ.4628 என தொழிலாளர் நலத்துறை அமைச்சரால் தன்னிச்சையாக அறிவிக்கப்படுகிறது. முறைசாரா துறையில் முதலாளி, மத்திய அரசு நிர்ணயிப்பதையோ அல்லது மாநில அரசு நிர்ணயிப்பதையோ தரலாம் என்று பச்சை கொடி காட்டியிருப்பது, குறைவான கூலிக்கே இட்டு செல்லும். சில குறிப்பிட்ட மாநிலங்களில் தொழிற்சங்க இயக்கம் போராடி தியாகம் செய்து பெற்ற பலன்கள் கூட தொடர முடியாது. உதாரணமாக, கேரள அரசு ரூ.18,000 குறைந்தபட்ச ஊதியம் என்பதை சட்டரீதியாக்கியிருக்கிறது. சட்டங்களை மீறும் முதலாளிகளுக்கு அதிகமான அபராதம் விதிக்கப்படுவதற்கான சட்டமும் உள்ளது. ஆனால் அகில இந்திய சட்டம் வரும் போது, மாநில சட்டங்களை அமல்படுத்துவது மிகுந்த சிரமத்துக்குள்ளாகும்.

ஆளுநர்கள் அரசியல் ஆதாய கருவிகளாய்:

மார்க்சிஸ்ட் கட்சியின் திட்டத்திலேயே ஆளுநர் நியமனம் குறித்த விமர்சனம் இருக்கிறது. மேலிருந்து தன்னிச்சையாக நியமனம் செய்வது கூட்டாட்சிக்கு முரணானது. ஒரு வேளை அப்படிப்பட்ட பதவி தேவை என்றால், மாநில முதல்வர்கள் பரிந்துரைக்கும் மூவரில் ஒருவரை குடியரசு தலைவர் தேர்வு செய்து ஆளுநராக நியமனம் செய்வது என்ற வழியைப் பின்பற்றலாம். இது சர்க்காரியா கமிஷன் பரிந்துரையிலும் இடம் பெற்றிருக்கிறது. உலக அளவில் கூட்டாட்சி அமைப்பை வைத்திருக்கும் பிரதான நாடுகள் எவற்றிலும் மத்திய அரசு ஆளுநரை நியமனம் செய்யும் முறை இல்லை. அதே போல், மாநில அரசுகள் நிறைவேற்றும் மசோதாக்கள் ஆளுநர்/குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் போது எல்லையற்ற காலம் அதைக் கிடப்பில் போட்டு வைப்பதானது தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் பணிகளை முடக்கும் நடவடிக்கையே. எனவே, மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதும் மார்க்சிஸ்ட் கட்சியின் பரிந்துரையாக உள்ளது. மாநிலங்களின் கவுன்சில் இதற்கான அரசியல் சட்டத்திருத்தம் வேண்டும் என்று பலமுறை விவாதித்த பிறகும், அது அமல்படுத்தப்படவில்லை. ஆளுநர்கள் பல்கலைக்கழக வேந்தர்களாக இருப்பது பற்றியும், மாநில அரசை பகிரங்கமாக விமர்சிப்பது, அவர்களின் கருத்துக்களுக்கு முரண்படுவது போன்ற அம்சங்களும் தொடர்ந்து விவாதிக்கப்பட வேண்டியிருக்கிறது. புதுவை, தமிழக ஆளுநர்களின் அணுகுமுறை இதற்கு அண்மைக்கால உதாரணமாகும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கலைப்பது, கவிழ்ப்பது மற்றும் எந்தக் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பது, எப்போது அழைப்பது போன்ற அம்சங்களில் மத்திய அரசின் செயல்கருவியாக ஆளுநர் செயல்பட்டதை அருணாச்சல பிரதேசம், உத்தராகண்ட், தமிழ்நாடு, கோவா, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் பார்த்தோம். இது இன்னும் அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளன.

குதிரை பேரம்:

ஒரு குறிப்பிட்ட கட்சியின் சார்பில் அதன் கொள்கைகளை சொல்லி போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள், இன்னொரு கட்சியால் விலைக்கு வாங்கப்படும் குதிரை பேரமானது ஜனநாயகத்தைக் கேலி கூத்தாக்குவதாகும். மாநில மக்களின் விருப்பத்தை/முடிவை கொல்லைப்புற வழியாக தட்டிப் பறிப்பதாகும். தற்போது பாஜக ஆட்சியில், வாடிக்கையாக, அங்கீகரிக்கப்பட்ட நடவடிக்கையாக இது பெருமளவு மாறிவிட்டது. கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த குதிரை பேரம், அடுத்து ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தைக் குறி வைத்து செய்யப்படுகிறது.

மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து:

11 மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து இந்திய அரசியல் சட்டத்தில் அளிக்கப்பட்டிருக்கிறது. முதன்முதலில் அரசியல் சாசனத்தின் ஓர் அம்சமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டது. ஆனால் படிப்படியாக அது நீர்த்துக் கொண்டே வந்தது. அண்மை காலத்தில் மாநில அரசு கலைக்கப்பட்டு, குடியரசு தலைவரின் ஆட்சியின் கீழ் இருக்கும் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலும் நடத்தப்பட வேண்டும் என்று கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்திய பிறகும், தேர்தல் ஆணையம் முன்வரவில்லை.

தற்போது, ஒரு சில மணி நேரங்களில் நாடாளுமன்றத்தின் மூலமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து, அதன் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, குடியரசு தலைவரின் ஒப்புதலையும் பெற்று, பல்லாண்டுகளாக அம்மாநிலம் அனுபவித்து வந்த உரிமைகளைக் குழி தோண்டிப் புதைத்து விட்டது பாஜக அரசு. இனி சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலமாக அது இருக்க முடியாது என்பது மட்டுமல்ல; மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் அது இயங்க வேண்டியிருக்கும். இந்து இந்தியாவில், முஸ்லீம்கள் கணிசமாக இருக்கும் மாநிலம் சிறப்பு அந்தஸ்துடன் இயங்கலாமா என்ற மதவெறி நிகழ்ச்சி நிரலோடு சேர்த்து, இனி கார்ப்பரேட்டுகளுக்கு அதன் இயற்கை வளங்களை அள்ளிக் கொடுக்க முடியும் என்பதும் உள்ளது. நாடாளுமன்றப் பெரும்பான்மையின் கொடுங்கோன்மையைப் பயன்படுத்தி ஒரு மாநிலத்தையே இந்திய வரைபடத்தில் சிதைக்க முடியும் என்றால், இனி எந்த மாநிலத்தையும் எதுவும் செய்யலாம். ஜனநாயக படுகொலை என்பதோடு சேர்த்து, இந்தியாவின் சாரமாக இருக்கும் கூட்டாட்சியை மியூசியத்தில் அடைத்து வைத்து காட்சி பொருளாக்கும் ஏற்பாடே இது.

விடுதலை போராட்டத்தில் பங்களிப்பு செய்யாத ஆர்.எஸ்.எஸ்., காந்தி படுகொலைக்குப் பின் தடை செய்யப்பட்டு, மீண்டு வந்து, அதன் எண்ணற்ற அமைப்புகள் மூலமாக பாசிச உத்திகளைப் பயன்படுத்தி, தற்போது அரசியல் அதிகாரம் பெரும்பான்மை பலத்தோடு கைக்கு வந்த சூழலில், நாட்டின் விடுதலைக்குப் பிறகு மக்களால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்ட தனது நிகழ்ச்சி நிரலை ஒவ்வொன்றாக அமல்படுத்துகிறது. இதுதான் பாஜக அரசு பயணிக்கும் திசைவழியாக உள்ளது. மக்களின் மனநிலையை ஜனநாயகப்படுத்தி, போராட்ட ஒற்றுமையை ஏற்படுத்தும் பணியில் களத்திலும், கருத்தியல் தளத்திலும் முன்னிலும் வேகமாக இடதுசாரிகள் செயல்பட வேண்டிய நேரம் இது.

கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர்கள் கட்சிகளின் 15வது சர்வதேச மாநாடு

ஆழமடைந்து வரும் முதலாளித்துவ நெருக்கடி, தொழிலாளர்கள் மற்றும் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் தொழிலாளி வர்க்கத்தின் பங்கும், கம்யூனிஸ்ட்டுகளின் கடமையும், ஏகாதிபத்திய மேலாதிக்கம், சர்வதேச சக்திகளின் பலா பலன்களில் மறு அணி சேர்க்கை, தேசிய இனப்பிரச்சனை, வர்க்க விடுதலை மற்றும் சோசலிசத்துக்கான போராட்டம் என்ற முழக்கத்தின் கீழ் நவம்பர் 8-10 தேதிகளில் போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பனில் கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர்கள் கட்சிகளின் 15வது சர்வதேச மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் 61 நாடுகளைச் சேர்ந்த 77 கட்சிகள் பங்கேற்றன. 14 கட்சிகள் வாழ்த்துச் செய்திகளை அனுப்பி இருந்தன.

போர்ச்சுக்கீசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெரோனி மோடி சௌசா  இம்மா நாட்டைத் தொடங்கி வைத்தார். தகவல்களையும் அனுபவங்க ளையும் பரிமாறிக்கொள்ள, சிக்கலான சர்வதேச நிலைமைகள் குறித்த நமது மதிப்பீடுகளை மேம்படுத்த, நமது கட்சிகளுக்கு இடையில் காணப்படும் மகத்தான பரஸ்வர புரிதலையும், வலுவான நட்புறவையும், ஒருமைப் பாட்டை யும் ஆகச்சிறந்த முறையில் வளர்த் தெடுத்திட, ஒத்துழைப்புக்கும், ஒன்றுபட்ட செயல்பாட் டுக்குமான திசை வழியையும், முன் முயற்சி களையும், வரையறுத்திட நாம் இங்கு கூடியுள் ளோம் என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

போர்ச்சுக்கீசிய சமூகத்தின் மீதான உலக முதலாளித்துவ நெருக்கடியின் தாக்கம் குறித்தும், போர்ச்சுக்கீசிய கம்யூனிஸ்ட் கட்சி நடத்தி வரும் போராட்டங்கள் பற்றியும் தனது உரையில் ஜெரோனிமோடிசௌசா எடுத்துரைத்தார். தமது நாட்டு நிலமைகள் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு பெரும் பாதகமாகவும், கேடு விளைவிப்பதாக உள்ளதாகவும், அரசாங்கம் மக்களிடமிருந்து தனிமைப்பட்டு, மக்களின் நம்பிக்கையை இழந்து வருவ தாகவும் கூறிய அவர், இதற்கு போர்ச்சுக்கீசியக் கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர வேறு மாற்று இல்லை என்றார்.

மாநாட்டில் மூன்று சுற்று விவாதங்கள் நடைபெற்றன. முதல் சுற்றில் சமகால உலக வளர்ச்சிப் போக்குகள் குறித்த தமது பகுப்பாய்வையும், தத்தமது நாடுகளில் ஆளும் வர்க்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்ட அனுபவங்களையும் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் பகிர்ந்து கொண்டனர்.

இலத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து வருகை புரிந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏகாதிபத்தியத் தாக்குதல்களுக்கு எதிரான தங்களது போராட்ட அனுபவங்களையும் இப்பிரதேசத்தில் உள்ள முற்போக்கு அரசாங்கங்களின் பங்கையும் பற்றிக் குறிப்பிட்டனர்.

வெனிசூலா அரசாங்கம் சுகாதாரம், கல்வி, பண்பாடு, விளையாட்டு, வீட்டு வசதி மற்றும் பிற சமூகத் துறைகளுக்காக 550 பில்லியன் டாலருக்கு மேல் செலவு செய்து வருவதாகக் கூறினர்.

உருகுவே, தொழிலாளர்களின் ஊதியத்தை 19 சதவீதம் உயர்த்தியுள்ளது.  அர்ஜெண்டி னாவில் ஓய்வூதியமும், சம்பளமும் பெரு மளவில் அதிகரிக்கப்பட் டுள்ளது.  பிரேசி லில் 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமையிலிருந்து விடுபட்டுள்ளனர்.

இலத்தீன் அமெ ரிக்காவில் ஒட்டுமொத்தத்தில் வறுமை, வேலையின்மை, கல்லாமை குறைந்து, சுகாதாரம் மேம்பட்டு வருவதாக அவர்கள் சுட்டிக் காட்டினர். இன்றைய உலகம் ஆழமும், சிக்கலும் நிறைந்த மாற்றங்களுக்கு உள்ளாகி வருவ தாகக் குறிப்பிட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அது ‘பன்முகத்தன்மையை’ நோக்கி நகருவதாக கூறுகிறது.  சர்வதேச வளர்ச்சிப் போக்கில் மேலாதிக்கம், அதிகார வர்க்க அரசியல், புதிய தலையீட்டுக் கொள்கை ஆகியவை அதிகரித்து வரும் சூழலில், அவை சோசலிச வளர்ச்சிக்கான அரிய வாய்ப்புகளையும், சவால்களையும் முன்னுக்கு கொண்டு வந்துள்ளதாக குறிப்பிடுகின்றனர். ‘சர்வதேச நிதி நெருக்கடி முதலாளித்துவத்தைக் கட்டமைப்பு நெருக்கடிக்குள் தள்ளிவிட்டுள்து. புதிய தாராளமயத்தின் வளர்ச்சி நீண்ட காலத்துக்கு நீடித்திருக்க முடியாது எனக் கூறும் அவர்கள் அது மாற்றியமைக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என் கின்றனர். தங்கள் நாட்டு நிலைமையைப் பற்றிக் கூறுகையில் தங்களது கட்சி முன் முயற்சியின்மை, மக்களிடமிருந்து அந்நியப்பட்ட சூழல், ஊழல் போன்ற பேராபத்தை எதிர்கொண்டு வருவதாகவும், கட்சி தன்னை ஒழுங்குபடுத்திக் கொண்டு முன்னேறி வருவதா கவும் குறிப்பிட்டனர்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கம்யூ னிஸ்ட் கட்சிகள், தொழிலாளர் கட்சிகள் மற்றும் பிற முற்போக்கு சக்திகளுடன் கட்சி யையும், நாட்டையும் வழிநடத்துவதிலுள்ள அனுப வங்களைப் பகிர்ந்துகொள்ளவும், உலக சவால்களை எதிர்கொள்ளும் வழிமுறைகளைக் காணவும், உலகில் சோசலிச இலட்சி யத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பரஸ்பர உறவு களை வலுப்படுத்த உறுதி பூண்டுள்ளதாகக் கூறி அவர்கள் தமது உரையை நிறைவு செய்தனர்.

எழுபது களின் மத்தியிலிருந்து எகிப்திலும், அப்பிரதேசத்திலும் நிலவிவந்த மதவெறிப் பாசிச வலதுசாரிப்போக்கு பல்லாண்டு காலம் மக்களை ஆட்டிப்படைத்து வந்தது.  ஜூன் 30 புரட்சி இதனை முறியடித்து நிறை வடையாத புரட்சியின் வரலாற்றுக் கடமைகளை நிறைவேற்றியது என எகிப்து கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிட்டது.  ஜூன் 30க்குப் பிந்திய நிகழ்வுகள் பற்றிக் கூறுகையில் ‘இது ஒரு ஜனநாயகப் புரட்சி, சுதந்திரம் மற்றும் குடிமக்களின் அரசியல், பொருளாதார சமூக, பண்பாட்டு உரிமைகளைக் காப்பதற்கான அர சியல் சாசனத்தின் அடிப்படையிலான ஒரு ஜனநாயகக் குடிமைஅரசு இதன் மூலம் நிறு வப்பட்டுள்ளது.

வெகுஜனக் கட்டுப்பாட்டை உத்திரவாதப்படுத்துவது, அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மன்றங்கள் அமைத்துக் கொள்வதற்கான சுதந்திரம், அரசியலிலிருந்து மதத்தைப் பரிப்பது மத ரீதியிலான கட்சி களைத் தடை செய்வது ஆகியவற்றின் அடிப் படையில் இது செயல்பட்டு வருகிறது என் றனர். தேசிய ஜனநாயகப்புரட்சியின் கட்டங் களில் இது ஒரு குறிப்பிடத்தக்க கட்டம் எனக் கூறும் அவர்கள், இடைக்கால அரசாங்கத்தின் கொள்கைகள் புரட்சிகர மாற்றத்தின் உணர்வுக்கு ஏற்ப முழுமையாக அமையவில்லை.  இந்நிலைமை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும் என்கின்றனர்.  இந்நிலை தொடர்ந்தால் அது புரட்சியை பலவீனப்படுத்தி எதிரிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.  எனவே, எகிப்திய இடதுசாரி சக்திகளின் தீவிரத் தலையீடும், ஒன்றுபட்ட முன் முயற்சியும் அவசியம் என்று கூறும் அவர்கள், முதல் அத்தியாவசிய மாகவும், நடப்பு சூழலில் அவசர நடவடிக்கையாகவும் சோசலிஸ்ட் கட்சிகளின் ஒன்று பட்ட தலைமையை உருவாக்க முயற்சி மேற் கொண்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். உலகம் முழுவதிலுள்ள தொழிலாளர்கள் மற்றும் மக்களின் போராட்டங் களுக்கு மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள் தமது ஆதரவைத் தெரிவித்தனர்.  தற்போதைய நிலையில் ஏகபோக எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு திசை வழியிலான மாற்றத்துக்கான, சோசலித்துக்கான உண்மையான வாய்ப்புகள் இருப்பதை அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.

2008ம் ஆண்டு லேமன் பிரதர்ஸ் வங்கி திவாலானதைத் தொடர்ந்து வெடித்த நெருக்கடியின் ஆழத்தை மாநாடு சுட்டிக்காட்டியது.  ‘மீட்சி’ ஏற்பட்டு வருவதாக ஆளும் வர்க்கம் கூறி வருவதை எளிதில் மீளமுடியாத இந்நெருக்கடி பொய்யாக்கி வருகிறது.  அதன் இயல்பாகவும், பரிணாமமாகவும் உள்ள மிகை உற்பத்தி மற்றும் மிகை மூலதன ஒன்றுகுவிப் பின் நெருக்கடியை உறுதிப்படுத்துவதாகக் கம்யூனிஸ்டுகள் கூறி வருவதை மெய்பித்து வருகிறது.

முதலாளித்துவ நெருக்கடி, குறிப்பாக சமூகமயமாகி வரும் உற்பத்திக்கும், தனி நபர் அபகரிப்புக்கும் இடையிலான அடிப்படை முரண்பாடு அதிகாரித்து வருவதை இந்நெருக்கடி வெளிப்படுத்துகிறது.

முதலாளித்துவ அமைப்பின் வரலாற்று வரம்பையும், முதலாளித்துவத்துக்கு மாற்றான சோசலித்துக்காக போராடுவதற்கான நேரம் நெருங்கி வருவதையும் இது படம் பிடித்துக் காட்டுகிறது என மாநாடு குறிப்பிட்டது. வளரும் நாடுகளில் வாழும் மக்களின் கடினமான எதார்த்த நிலைமைகளையும் நெருக்கடியின் தாக்கத்தையும் அந்நாடுகளில் முதலாளித்துவத்தாக்குதலையும் பற்றி இம்மாநாடு விவாதித்தது. அம்மக்களின் பொருளாதார சமூக உரிமைகளை கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.  இப்பின்னணியில் வேளாண்மை மற்றும் உணவுப்பொருட்களின் மீதான முதலாளித்துவ நெருக்கடியின் தாக்கம், நாடு களின் உணவுப் பாதுகாப்பு பெரும் ஆபத்துக்குள்ளாகி வருவது, உலக மக்களில் பெரும் பாலோர் பட்டினிச்சாவுக்கும், சத்துணவுப் பற்றாக்குறைக்கும் உள்ளாகி வருவது போன்ற அம்சங்கள் மீது மாநாடு கவனம் செலுத்தியது. முன்னணி ஏகாதிபத்திய வல்லரசுகள், நேட்டோ ஆகியவை இராணுவ பலத்தை அதிகரிப்பது, மேலும் அவற்றின் போர் வெறி தலையீட்டுக் கொள்கை ஆகியவற்றிலிருந்து எழும் ஆபத்தை இம்மாநாடு சுட்டிக்காட்டியது.  ஏகாதிபத்திய தாக்குதலுக்கு எதிராக, சமூக முன்னேற்றம், சுதந்திரம், இறையான்மை, சமாதானம், சமூக பொருளாதார முன்னேற்றத்துக்கான உரிமைக்காக, ஏகாதிபத்திய மேலாதிக்கத்துக்கு எதிராக, மாற்று இறையாண்மையையும், முன்னேற்றத்தையும், கட்டமைப்பதற்காக, முதலாளித்துவ காட்டு மிராண்டித்தனத்துக்கு எதிராக, உண்மையான அடிப்படை மாற்றான சோசலித்துக்கு மாநாட்டில் பங்கேற்றவர்கள் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.  வேலை அடிப்படை உரிமை, தொழிலாளர் மற்றும் சமூக உரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக தொழிலாளி வர்கமும், அதன் கூட்டாளிகளும் பிற ஏகபோக எதிர்ப்புப் பகுதியினருடன் இணைந்து வகிக்க வேண்டிய மையமான பாத்திரத்தை மாநாடு வலியுறுத்தியது. ஏகாதிபத்தியத்தின் தலையீட்டுக் கொள்கையையும், ஆக்கிரமிப்பையும் எதிர்த்து வரும் மக்களுக்கு, குறிப்பாக மத்தியக் கிழக்கு மக்களுக்கு மாநாட்டுப் பிரதிநிதிகள் தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

பாலஸ்தீன மக்களுக்கும், தேசிய உரிமைகளுக்கான அவர்களுடைய போராட்டத்துக்கும், சிரிய மக்களைப் போல அப்பகுதியில் ஆக்கிரமிப்புக்கும், தலையீட்டுக்கும் உள்ளாகி இருக்கும் பிற பகுதி மக்களுக்கும் இம்மநாடு தனது ஆதரவை உறுதிப்படுத்தியது.

கியூபாவுக்கும், அதன் சோசலிசப் புரட்சிக்கும் வெனிசூலா மக்களுக்கும், அவர்களுடைய பொலிவாரிய புரட்சிக்கும் மாநாட்டுப் பிரதிநிதிகள் தமது நல்லாதரவைத் தெரிவித்தனர். ஐரோப்பிய கண்டத்தில் உள்ள பல்வேறு அரசாங்கங்களாலும், ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற் றாலும் மேற்கொள்ளப்பட்டு வருகிற கம்யூனிஸ்ட் எதிர்ப்பு பிரச்சாரத்தினால் அரசியல் ரீதியில் பாதிப்புக்குள்ளாகி வரும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் அனைத்து புரட்சிகர சக்திகளுக்கும் மாநாடு தனது ஆதரவைத் தெரிவித்தது. மக்கள் போராட்டத்தை வலுப்படுத்தவும், சோசலிச மாற்றைக் கட்டமைக்கவும் நடப்பு சர்வதேச சூழலில் அனைத்து முற்போக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளுக்கிடையில், முதன்மையாக உலகம் முழுவதிலுமுள்ள கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர்கள் கட்சிகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை மாநாடு வலியுறுத்தியது.

இந்த வகையில் கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் சர்வதேச மாநாடுகளின் வளமான அனுபவமும், முன்னேற்றங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும். இரண்டாவது சுற்று விவாதம் போர்ச்சுக்கீசியக் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்த கூட்டுப் பிரகடனத்தை மையப்படுத்தியதாக அமைந்திருந்தது.  மாநாட்டில் கலந்துக் கொண்ட பெரும்பாலான கட்சிகள் இம்முன்மொழிவை ஒப்புக்கொண்ட போதிலும் சில கட்சிகள் தமது புரிதலையும், சர்வதேச வளர்ச்சிப் போக்குகளையும் இப்பிரகடனம் பிரதிபலிக்கவில்லை எனக் கருதின.  பொதுக் கருத்து என்பது மாநாட்டில் முக்கிய வழிகாட்டும் கோட்பாடாகும்.  இவ்விவகாரத்தில் பொதுக் கருத்து ஏற்படாததால் பிரகடனம் வெளியிடப்படவில்லை.  மாறாக, மாநாடு குறித்த செய்தி அறிக்கை வெளியிடப்பட்டது. மூன்றாவது சுற்று விவாதம் மாநாட்டை நடத்துவதற்கான முறையியல் பற்றியதாக அமைந்திருந்தது.  மாநாட்டில் அங்கம் வகிக்கும் கட்சிகள், செயல் கமிட்டி ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது.  தற்போது செயல் கமிட்டியில் 11 கட்சிகள் உள்ளன.  இது தலைமை அமைப்பாக அல்லாமல் உதவி செய்யக்கூடிய ஒன்றாக உள்ளது. எதிர்காலத்தில் இத்தகையை மாநாடுகளை எவ்வாறு நடத்துவது என்பதற்கான விவாதமாக இது அமைந்திருந்தது.  செயல்கமிட்டி இதனை மேலும் முழுமையாக விவாதித்து கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர்கள் கட்சிகளின் 16வது மாநாட்டுக்கு முன்பு முன்மொழிவுகளை அளிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.  16வது மாநாட்டை நடத்துவதற்கான இடம் தேதி, முழக்கம் குறித்த அடுத்து நடைபெறவுள்ள செயல்கமிட்டி இறுதிப் படுத்தும்.

மாநாடு பின்வரும் எதிர்காலக் கடமைகளை வகுத்தது.

  1. 2014ம் ஆண்டு முதலாம் உலகப்போரின் நூற்றாண்டும், இரண்டாம் உலகப்போரின் 75ம் ஆண்டும் இதையொட்டி கூட்டு இயக் கங்களின் மூலம் புதிய சர்வதேச இராணுவ மோதல்களின் ஆபத்து குறித்து எச்சரிப்பது, சமாதானத்துக்காகவும், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கும், போருக்கும் எதிரான போராட் டத்தை வலுப்படுத்துவது சமாதானத்துக்கான போராட்டத்தை சோசலிசத்துக்கான போராட்டத்துடன் ஒருங்கிணைப்பது ஆகிய பணிகளில் ஈடுபடுவது. (ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி, நெதர்லாந்து புதிய கம்யூனிஸ்ட் கட்சி, பெல்ஜியம் தொழிலாளர் கட்சி, லக்சம்பர்க் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன ஜெர்மனியின் எல்லை நகரமான ஆச்சினில் பிப்ரவரி 15ம் தேதி இதையொட்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட முடி வெடுத்து அதற்கான தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகத் தகவல் தெரிவித்தன.
  2. அடுத்த ஆண்டு யூகோஸ்லேவியா பெடரல் குடியரசுக்கு எதிரான கொலைவெறி பிடித்த ஏகாதிபத்திய நேட்டோ தாக்குதலின் 15ம் ஆண்டாகும்.  ஏகாதிபத்திய இராணுவ யுக்தியின் புதிய கட்டம் தொடங்கியதை இது குறிக்கிறது.  அதேபோல இவ்வாண்டு தெற்கு சைபீரிய மாகாணத்தில் கொசோவாவையும், மெடோ ஹிஜாவையும் ஆக்கிரமிக்கத் தொடங்கிய ஆண்டாகும்.  இவற்றைக் குறிக் கும் வகையில் எதிர்ப்பு இயக்கம் நடத்துவது.
  3. ஆசிய, ஆப்பிரிக்க இலத்தீன் அமெரிக்க, கரீபிய நாடுகளின் மீதான முதலாளித்துவ நெருக்கடியின் தாக்கம் குறித்த சர்வதேசகருத் தரங்கம் நடத்துவது.  இதில் குறிப்பாக பொரு ளாதார, சமூக முன்னேற்றத் துக்கான உரிமை, இயற்சை வளங்களைப் பாதுகாப்பது, வேளாண்மை, நிலஉரிமை, உணவுப்பாது காப்பு ஆகிய அம்சங்களை வலியுறுத்துவது.  சுற்றுச் சூழலை அழிப்பதில் ஏகபோகங்களின் பங்கை அம்பலப்படுத்துவது, அதிகரித்து வரும் சுற்றுச் சூழல் நெருக்கடியை ஏகபோக எதிர்ப்பு ஏகாதிபத்திய எதிர்ப்பு அணுகு முறையில் வலியுறுத்துவது.
  4. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைக்கு எதிராகவும், பொது ஐரோப்பிய ஒன்றிய நிலையை எதிர்த்தும், இலத்தீன் அமெரிக்காவிலும், கரீபியாவிலும் நடை பெற்றுவரும் போராட்டங்களுக்கு ஆதரவாக வும், அமெரிக்க சிறையில் வாடும் கியூபாவின் தேசபக்தர்கள் நாடு திரும்ப வலியுறுத்தியும், சோசலிசக் கியூபாவுக்கு ஆதரவாகவும், பொலிலியா, வெனிசூலா, கொலம்பியா மக்களுக்கு ஆதரவாகவும், சர்வதேச ஒருமைப் பாட்டு இலக்கங்களை நடத்துவது.
  5. பெருமள விலான கட்சிகள் பங்கேற் கின்ற சர்வதேச நிகழ்வுகளைப் பயன்படுத்தி சித்தாந்தத் தாக்குதல், வெகுஜன ஊடகங் களின் பங்கு ஆகியவை குறித்து விவாதிக்கவும், வெகுஜன தகவல் தொடர்பு அனுபவங் களைப் பகிர்ந்துகொள்ளவும் செயல்கூட்டங் களை நடத்துவது.
  6. நெருக்கடியின் தாக்கம், உழைக்கும் பெண்கள் மீதான ஏகாதிபத்தியத்தின் பண் முகத் தாக்குதல் ஆகிய அம்சங்களை முன் வைத்து 2014 மார்ச் 8 அன்று சர்வ தேச மகளிர் தினத்தைக் கொண்டாடுவது, அவர்களுடைய போராட்டத்துக்கும், ஏகாதி பத்திய எதிர்ப்பு இயக்கத்துக்கும் ஆதரவளிப்பது.
  7. தொழிலாளர்கள் மற்றும் மக்களின் பொருளாதார, சமூக உரிமைகளுக்கு ஆதர வாக, வேலை அடிப்படை உரிமைக்காக தொழிலாளர் உரிமைகளுக்காக வர்க்கப் போராட்டத்தின் முக்கியத்து வதை வலி யுறுத்தி, மனிதனை மனிதன் சுண்டும் நிலைக்கு முடிவு கட்டிட ஒவ்வொரு நாட்டிலும் நடை பெற்றுவரும் போராட்டங்களில் பங்கேற் பதன் மூலம் மே தினத்துக்கு பெருமை சேர்ப்பது.  இளைஞர்களிடையே காணப்படும் பெருமளவிலான வேலையின்மைக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து வேலையின் மைக்கும் அதன் உண்மையான அடிப்படை களுக்கும் எதிராக தொழிற்சங்க உரிமை களுக்கு ஆதரவாக, அரசியல் தாக்குதலுக்கு எதிராக, கைது செய்யப்பட்டுள்ள தொழிற் சங்கத் தலைவர்களின் விடுதலைக்காகப் போராடுவதற்கான செயல்திட்டத்தை அன் றைய தினம் அறிவிக்கும் பணியில் ஒவ்வொரு நாடும் ஈடுபடுவது.
  8. இனவெறி, அந்நியர்பால் வெறுப்பு, பாசிசம், ஆகியவற்றுக்கு எதிராக ஒருங் கிணைந்த வகையில் போராடுவது.  கம்யூ னிஸ்ட் எதிர்ப்பு, வரலாற்றைத் திரித்து எழுது வது ஆகியவற்றுக்கு எதிரான சித்தாந்தப் போராட்டத்தின் முக்கியத் துவத்தை வலி யுறுத்துவது.  கம்யூனிசத்தைப் பாசிசத்துக்கு இணையாக காட்ட முயலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரச்சாரத்தையும், நடவடிக்கை களையும் முறியடிப்பது.
  9. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிரான தாக்குதலுக்கும், கம்யூனிஸ்ட் அடையாளங் களைத் தடை செய்துள்ளதற்கும் எதிராக, தடை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஆதரவாக ஒவ்வொரு நாட்டிலும் நடைபெற்று வரும் போராட்டங் களுக்கு ஆதரவாக இயக்கம் நடத்துவது.
  10. லெனினது 90வது நினைவு ஆண்டை ஒட்டி, கம்யூனிஸ்ட் அகிலம் தொடங்கப்பட்ட தன் 95வது ஆண்டையும், சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும் நினைவு கூர்வது.
  11. அரேபிய நாடுகளிலும், மத்தியக் கிழக்கிலும், உள்ள கட்சிகளின் ஒத்துழைப்புடன் அந்நாடுகளின் சமூக மற்றும் தேசிய விடுதலைப் போராட்டங்கள் குறித்த சர்வதேச கருத்தரங்க அமைப்பை ஊக்குவிப்பது.  ஏகாதிபத்திய, யுதவெறிக்குற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன, சிரிய மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவது, ஒடுக்குமுறை, சர்வாதிகார பிற்போக்கு ஆட்சிகளுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து வரும் மக்களுக்கும், அவர்களுடைய சமூக, அரசியல் பொருளாதார உரிமைகளுக் கும் ஆதரவாகக் குரல் கொடுப்பது.
  12. சிரியாவுக்கும், ஈரானுக்கும் எதிரான ஏகாதிபத்தியத் தலையீட்டைக் கண்டிப்பது, சுதந்திர பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதற் கான போராட்டத்தைத் தொடருவது.
  13. ஏகாதிபத்தியத்துக்கு எதிரான சர்வ தேச முன்னிணியை உருவாக்குவது.  ஏகாதிபத்திய எதிர்ப்பு வெகுஜன அமைப்புகளான உலகத் தொழிற்சங்க சம்மேளனம், உலக சமாதானக் கவுன்சில், உலக ஜனநாயக இளைஞர் கழகம், சர்வதேச ஜனநாயக மாதர் சம்மேளனம் ஆகியன அந்தந்த நாட்டின் பிரத்யேக சூழ்நிலைகளுக்கேற்ப செயல்படுவதற்கு ஆதரவளிப்பது. மாநாட்டின் இறுதியில் மகத்தான புரட்சியாளர், பாசிச எதிர்ப்புப் போராளி, போர்ச்சுகல் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தோழர் அல்வரோசுனால் பிறந்த நூற்றாண்டு தொடக்கத்தை ஒட்டி பிரம்மாண்ட மான பேரணி நடைபெற்றது.  முன்னதாக, மாநாட்டில் பங்கேற்ற அனைவரும் தோழர் சுனாலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது நினைவைப் போற்றினர்.  லிஸ்பன் நகரின் நான்கு முனைகளிலிருந்து புறப்பட்ட பேரணி நகரின் மையப்பகுதியில் அமைக்கப்ப்டடிருந்த மேடையை வந்தடைந்தது.  அங்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  போர்ச்சுகல் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும், சர்வ தேச மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் சார்பிலும் ஜெரோனிமோ டிசௌசா சிறப்புரை ஆற்றினார்.

(பீப்பிள்ஸ் டெமாக்ரசி, நவம்பர் 11-17 இதழில் வெளிவந்த கட்டுரைகளின் சுருக்கம்: தமிழில் இரா. சிசுபாலன்)

தோழர் ஹரிபட்….

தோழர் ஹரிபட்
தோழர் ஹரிபட்

சென்னை நகர வரலாறு பலவிதமாக எழுதப்படுகின்றன, ஆனால் சென்னை நகரை உருவாக்கும் பாட்டாளி வர்க்கத்தின் வரலாறு சரியாக சொல்லப்படாமலே உள்ளது. அப்படி எழுதப்படுமானால் தோழர் ஹரிபட்டின் வாழ்க்கை இடம் பெறும். ஹரிபட்டின் வாழ்க்கை ஒரு தனி மனிதனின் வாழ்க்கையல்ல. சென்னை நகர பாட்டாளி வர்க்க போராட்டத்தில் இரண்டற கலந்த வாழ்க்கையாகும்.

கர்நாடக மாநிலத்தில் மங்களுர் அருகே பிறந்த ஹரிபட் இளமைப் பருவத்தை தாண்டுவதற்கு முன்னரே வாழ்க்கையின் கடுமைகளை அனுபவித்தவர்.  ஆரம்ப பள்ளியில் கால்வைத்ததோடு சரி, சென்னை நகரம் தன்னை உயர்த்தும் என்று வந்து விட்டார். இடையில் ஆந்திரா வழியாக வந்த பொழுது அங்கே சில காலம் தங்க நேர்ந்தது, அங்கு தெலுங்கான விவசாயிகள் போராட்டத்தை கண்டும் கேட்டும் கற்றது ஏராளம். அவரது லட்சிய நகர் சென்னையில் இத்தகையோருக்கு புகலிடமாக இன்றும் இருப்பது ஹோட்டல் தொழிலே. ஆரியபவனில் டேபிள் துடைக்கும் பையனாக ஹரிபட் வேலைக்கமர்ந்தார். இந்த இளைஞன் அடுத்த சில ஆண்டுகளில் சென்னை நகர தொழிற்சங்க இயக்கத்தில் புதிய திருப்பத்தை உருவாக்குவதில் பங்களிக்கப் போகும் முன்னோடிகளில் ஒருவனாக ஆவான் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

சினிமாவில் நடித்து ஹிரோ ஆகவேண்டுமென்ற கனவோடு இருந்த ஹரிபட்டே, எதிர்பார்த்திருக்கமாட்டார். ஹோட்டல் தொழிலாளர் சங்கத்தில் சேர்ந்தது அவரது வாழ்க்கையில் திருப்பு முனையாயிற்று, கம்யூனிஸ்ட் தலைவர்களின் உதவியோடு பொது அறிவை வளர்த்துக் கொண்டார், ஆங்கிலம் கற்றார், சட்டங்கள், தீர்ப்புகள் பற்றிய ஞானத்தை வளர்த்துக் கொண்டார். அதைவிட நிர்வாகம் தரும் லாப நட்டக்கணக்கு, வரவு செலவு கணக்கு இவைகளை அலசும் ஞானத்தை வளர்த்துக் கொண்டார். ஒப்பந்தங்களிலே ஒளிந்து கிடக்கும் ஏமாற்றுக்களை காண்பதில் கை தேர்ந்தவரானார். தொழிலாளர்களை, பிளவுபடுத்தவும், ஏமாற்றவும் கூறப்படும் கருத்தக்களை அனுபவங்களை காட்டி அம்பலப்படுத்துவதில் நிபுணரானார். இதற்காக அவர் டியுடோரியல் காலேஜில் சேரவில்லை. கம்யூனிச இயக்கமே அவரது ஆசிரியராக இருந்தது என்றால் மிகையாகாது. சுருக்கமாக கம்யூனிஸ்ட் இயக்கம் எவ்வாறு பாட்டாளி வர்க்க முன்னோடிகளை உருவாக்குகிறது என்பதின் அத்தாட்சியாக அவர் இருந்தார்.

அன்று சென்னை நகரத் தொழிலாளர்கள் மரத்தை நம்பி படரும் கொடி போல் ஒரு தலைவனை சார்ந்தே இருந்தனர். சங்கம் என்பது ஒரு பெயரளவு அமைப்பே. அதற்கு தலைமை தாங்குபவர்களே தொழிலாளர்களின் தலைவிதியை நிர்ணயித்தனர். அதற்கு காரணங்கள் இருந்தன.1920 களில் சிங்கார வேலர். திரு.வி.க,  சக்கரை செட்டியார் போன்ற தன்னலம் கருதாத தலைவர்கள் தொழிலாளர்களிடையே அவரவர் வழிகளிலே விழிப்புணர்வை கொண்டுவர பாடுபட்ட தால் அந்த நம்பிக்கை ஆழமாக வேர்விட்டிருந்தது. சுருக்கமாக சொன்னால் தொழிலாளர்கள் தொழிற்சங்க அமைப்பையும் கூட்டு சக்தியையும் சார்ந்து நிற்காமல் தலைவர்களை நம்பியே இருந்தனர்.

இந்த பலகீனத்தை புரிந்து கொண்ட சென்னை நகர தொழில் அதிபர்கள்.முதலாளி நிர்ணயிக்கிற தலைவரை ஏற்றுக் கொண்டால் வேலைக்கு ஆபத்தில்லை. அதைவிட்டு, தொழிலாளர்கள் கூட்டு பேர சக்தியை காட்டினால் அரசு, அடியாட்கள் உதவியுடன் தொழிலாளர்கள் அடக்கப்படுவர் என்பதை நடைமுறையாக்கிக் கொண்டனர். இந்த நடைமுறை இந்திய முதலாளிகள் பிரிட்டீஷ் முதலாளிகளிடமிருந்து கற்றுக் கொண்டதாகும். இது 1921ல் பின்னி மில் தொழிலாளர்கள் கூலி உயர்வு கோறி வேலைநிறுத்தம் செய்ததை அரசும் பின்னி நிர்வாகமும் இனைந்து கையாண்ட  சூழ்சிகளாகும், வேலை நிறுத்தத்தை உடைக்க வெளியாட்களை வேலைக்கு அமர்த்தல், சாதி, மத வேறுபாடுகளை,பயன்படுத்தி பிளவுபடுத்தல், அடியாட்கள் மூலம் கலவரத்தை தூண்டுதல். துப்பாக்கி சூட்டின் மூலம் பணியவைத்தல். தொழிலாளர்கள் பணிந்து ஆலை திறந்தாலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களை, தலைமை தாங்கியவர்களை வேலைக்கு எடுக்காமல் குடும்பங்களை பட்டினியில் சாகவிடுதல் ஆகியவைகளே. இந்த யுக்திகளை தொழிலாளர் உறவுக்கு  அரசும், முதலாளிகளும் இலக்கனமாக்கிக் கொண்டனர்.

வேலை நிறுத்த உரிமை சட்டத்திலிருந்தாலும், மீண்டும் பணிக்கமர்த்த நீதிமன்றத்தை நாடலாம் என்றிருந்தாலும் அவைகள் ஏட்டுச் சுரைக்காயாக இருந்தன. இன்றும் அது தான் நிலை.

1950களில் விடுதலைக்குப் பிறகும் துறைமுக தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி தொழிற்சங்க இயக்கம் முடக்கப்பட்டது. டிராம்வே தொழிலாளர்கள் வேலை இழந்தனர். 1967ல் ஆட்சி மாறியது. ஆட்சியை மாற்ற முடியுமென்றால் தொழிற்சாலைகளில் நிலவும் கூலி அடிமை முறைக்கும் முடிவு கட்ட முடியுமென்ற நம்பிக்கை தொழிலாளர்கள் மனதிலே  பிறந்தது. ஆனால் கூலி உயர்வு கேட்டான் அத்தான் குண்டடிபட்டு செத்தான் அத்தான் என்ற சோகம் தொடர்ந்தது. இத்தகைய கசப்பான அனுபவங்களாலும், சிங்காரவேலரின் வழியில் பி.ராமமூர்த்தி, வி.பி.சிந்தன் போன்ற மார்க்சியவாதிகளின் பொதுவான அரசியல் கிளர்ச்சி பிரச்சாரத்தின் தாக்கத்தாலும் 1970களில்  சென்னை நகர தொழிற்சங்க இயக்கத்தின் திசை மாறியது..

அந்த மாற்றத்தை கொண்டு வருவதில் ஹரிபட்டின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. ஹோட்டல் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகியாகி. கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியரானார். மார்க்சிஸ்ட் கட்சி உதயமானபின் வி.பி சிந்தனும் அவரும் இனைந்து அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம், முறைசாரா தொழிலாளர் சங்கம் என்று உழைப்பாளி வர்க்கத்தின் உடலுழைப்பால் நடை பிணமாக ஆகும் அடித்தட்டு தொழிலாளர்களை திரட்டினர். இவர்களது நோக்கம் மிக தெளிவாக இருந்தது.

  1. தொழிலாளர்களின் உரிமைகள் கூட்டு பேர சக்தி மூலமே காக்க முடியுமே தவிர, ஒரு  குறிப்பிட்ட தலைவரின் சாதுர்யமல்ல என்பதை தொழிலாளர்களை உணர வைப்பது.
  2. அரசியல், மற்றும், சாதி, மத வேறுபாடுகளை தாண்டிய வர்க்க ஒற்றுமை அவசியமென்பதை உணர வைப்பது,
  3. வேலையில்லாதோரும், அத்தக்கூலிகளும்  முதலாளி களின் கருவியாக பயன் படுவதை தடுக்க அவர்களையும் பாட்டாளி வர்க்கத்தின் பகுதியாக கருதி கூட்டுபேர சக்தி மூலம் காசுவல் காண்டிராக்ட் ஊழியர்களின் உரிமைகளை பாதுகாப்பது.
  4. தொழிற் தகராறில், காவல் துறையை தலையிட வைக்கும் அரசின் கோட்பாட்டை கூட்டு சக்தி மூலமே தடுக்க முடியும் என்ற ஞானத்தை தொழிலாளர்களுக்கு கொடுப்பது.

இந்த 4 அம்சமும் எந்த அளவிற்கு சென்னை நகர தொழிலாளிக்ளை அசைத்திருக்கும் என்பதை அளக்கும் வாய்ப்பாக 1971ல் எம் ஆர். எப் தொழிலாளர்கள் போராட்டம் வெடித்தது. எம்.ஆர்.எப் தொழிலாளர்கள் அவர்கள் விரும்பிய வழக்கறிஞராக இருந்த குசேலரை சங்க தலைவராக தேர்ந்தெடுத்தனர். நிர்வாகம் குசேலரை விரும்பவில்லை. சங்க தலைவரோடு சுமூகமாக பேசி பிரச்சினைகளை தீர்க்காமல் தொழிலாளர்களை வேலை நிறுத்தம் செய்ய தள்ளியது. இதனால் எம் ஆர்.எப் தொழிலாளர் போராட்டம் தொழிற்சங்கத்திற்கு தலைவரை தேர்வு செய்யும் உரிமை யாருக்கு? என்ற பிரச்சினையாக ஆனது. அந்த உரிமை தொழிலாளர்களுக்கில்லை என்று  தி.மு.க அரசும், நிர்வாகமும் கருதியதால் சாம பேத தான தண்ட யுக்திகளை கையாளத் தொடங்கின. 1921ல் பின்னிமில் நிர்வாகமும், அரசும் கையாண்ட அதே சூழ்ச்சிகள் மீண்டும் அரங்கேறின. திருவெற்றியூர் கலவர பூமியானது. தொழிலாளர்களின் வீடுகள் தாக்கப்பட்டன,பெண்கள் அவமானப்படுத்தப்பட்டனர். 144 தடை உத்திரவால் தெருக்கள் ரவுடிகள் ராஜ்யமானது.

மார்க்சிஸ்ட் கட்சியின் சென்னை மாவட்டக்குழு எம்.ஆர்.எப் தொழிலாளர்களுக்கு ஆதரவாக மாவட்டம் தழுவிய கூட்டுப் போராட்டத்தை உருவாக்கிட செயல்பட்டது. ஹரிபட், சிந்தன், பரமேஸ்வரன்  மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்கள்  ஆலை தோறும் சென்று வாயிலில் தொழிலாளர்களிடம் பேசி ஆதரவு திரட்டினர். சென்னை நகர தொழிற்சங்கங்கள் வர்க்க ஒற்றுமைக்கு அடையாளமாக திரண்டு நிற்க வேண்டினர். இதன் விளைவாக அண்ணா சாலையில் (அன்று மவுன்ட்ரோடு) 10 ஆயிரம் பேருக்கு மேல் கலந்து கொண்ட தொழிலாளர்களின் பேரணி பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சிக்கு  அடையாளமாக அமைந்தது.

அரசு தொழிலாளர்களை பயமுறுத்த, குசேலரோடு, வி.பி.சிந்தன், ஹரிபட், பரமேஸ்வரன் நால்வரையும் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் தள்ளியது. ஆனால் போராட்டம் மடியவில்லை, பொது வேலை நிறுத்தமாக ஆனது.  முதலாளி தொழிலாளி உறவை குடும்ப உறவாக பார்க்க வேண்டும் என்ற திராவிட கருத்தின் பொய்மை எடுபடவில்லை. மலையாளி- தமிழன் என்ற இன பேத கருத்தும் காற்றிலே பறந்தது. அந்த சென்னை நகர பாட்டாளிவர்க்கத்தின் எழுச்சி முதலாளிகளையும் அரசையும் பின்னுக்குத் தள்ளியது. தொழிற்சங்கத்திற்கு தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமை தொழிலாளர்களுக்குண்டு என்பதையும், அதனைப் பறிக்க வன்முறை பயன்படாது என்பதையும் உணரவைத்தது. அதன் பிறகே தலைவர் யார் என்பதை தீர்மாணிப்பது தொழிலாளர்களின் உரிமை என்பதை அரசும்,முதலாளிகளும் அங்கிகரிக்க தொடங்கினர்.

ஹரிபட் சென்னையில் பல தொழிற்சங்கங்களுக்கு தலைமை பொறுப்பிற்கு தொழிலாளர்களால் அமர்த்தப்பட்டுள்ளார். அதன் பிறகு தர்மபுரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியை கட்டும் பொறுப்பேற்றார். அங்கும் ஆலைத் தொழிலாளர்களின் வர்க்க விழிப்புணர்வை தூண்டும் பணியை தொடர்ந்தார்.

ஹரிபட்டை பற்றி சுருக்கமாக கூறுவதென்றால்  தொழிற் சங்க அரங்கில் அவர் பணிபுரிந்தாலும், அவர்  அரசியல் கலக்காத வடிகட்டின தொழிற்சங்கவாதியாக மாறவில்லை. பாட்டாளி வர்க்கத்தின் விழிப்புணர்விற்காக பாடுபட்ட மார்க்சியவாதியாகவே வாழ்ந்தார். அதற்கு காரணம் தோழமை உணர்வின் எடுத்துக்காட்டாக இருந்த ஒரு கூட்டுணர்வின் அங்கமாக இருந்ததே. வி.பி. சிந்தன், பரமேஸ்வரன், கஜபதி, பி.ஜி.கே கிருஷ்ணன், இவர்களின் கூட்டால் உருவானவர். சென்னை நகர பாட்டாளிவர்க்கத்தின் விழிப்புணர்விற்காக பாடுபட்ட அந்த குழுவின் பங்கில்லாமல் 1970-1990 வரை சென்னை நகரில்  பாட்டாளி வர்க்க போரட்டம் எதுவும் நடக்க வில்லை, என்பதே இந்தக் குழுவின் சிறப்பாகும். அவர்களது வேலைப்பாணி  சமதர்ம சமூகத்தை உருவாக்க ஆசைப்படு வோருக்கு சிறந்த வழிகாட்டியாகும். தொழிற்சங்க இயக் கத்தை பாட்டாளி வர்க்கத்தின் பல்கலை கழகமாக்க ஆர்வமுள்ளோருக்கு எடுத்துக்காட்டாகும்.

ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டின் தோற்றம் நமது அனுபவம்

VI Lenin
VI Lenin

கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் ஸ்தாபன கோட்பாடுகளில் முக்கியமானதாக ஜனநாயக மத்தியத்துவத்தைக் கொண்டிருக்கின்றன. சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் துவக்கம் ரஷ்ய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சியாகும். இந்தக் கட்சியின் இரண்டாவது காங்கிரஸ் (மாநாடு) 1903 ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்த மாநாட்டில் தான் அக்கட்சியின் திட்டமும் அமைப்பு விதிகளும் மத்திய தலைமையும் உருவாக்கப்பட்டது. இந்த மாநாட்டில்தான் ஸ்தாபன கோட்பாடுகளில் முக்கியமான ஒன்றாக ஜனநாயக மத்தியத்துவம் லெனினால் முன்மொழியப்பட்டு நீண்ட விவாதங்களுக்குப் பின் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன் பிறகு 1921-ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் அகிலத்தின் மூன்றாவது மாநாட்டில் ஜனநாயக மத்தியத்துவம் அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஸ்தாபனக் கோட்பாடாக ஏற்கப்பட்டது.

எதிர்ப்புகள்:-

இந்தக் கோட்பாடு லெனினால் முன்மொழியப்பட்டபோதே கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்தது. ரஷ்ய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சி போல்ஷ்விக் (பெரும்பான்மை) மென்ஷ்விக் (சிறுபான்மை) என பிளவுபடுவதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்றாகவும் இருந்தது.

தோற்றத்தில் தொடங்கி இன்று வரை அது கடுமையான தாக்குதல்களையும் எதிர்ப்பையும் சந்தித்துக் கொண்டே இருக்கிறது. இந்த எதிர்ப் பிற்கான அடிப்படைகளை மூன்று விரிவான தலைப்பில் அடக்கலாம்.

  1. கம்யூனிஸ்ட்டுகள், கம்யூனிஸ்ட்டுகளின் ஆதரவாளர்கள் ஆகியோரின் எதிர்ப்பு.
  2. கம்யூனிஸ்ட் விரோதிகளின் எதிர்ப்பு.
  3. கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களாக இருந்து வெளியேறியவர்கள்,  வெளியேற்றப்பட்டவர்களின் எதிர்ப்பு.

கம்யூனிஸ்ட், ஆதரவாளர்களின் எதிர்ப்பு:-

மேலே குறிப்பிட்டுள்ளபடி ரஷ்ய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சி பிளவுபடுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்தது. அந்தக் கட்சியிலிருந்த மென்ஷ்விக்குகள் இதைக் கடுமையாக எதிர்த்தனர்.

கட்சியின் முடிவுகள் யாவற்றிற்கும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டுமென்று கூறுவது அதிகார வர்க்கத் தோரணையாகும் என்று கூறினர். பெரும்பான்மையான முடிவிற்கு சிறுபான்மையினர் உட்பட வேண்டும் என்று கூறுவது கட்சி உறுப்பினர்கள் விருப்பத்தை இயந்திரம் போல் நசுக்குவதாகும் என்று கூறினர். அனைத்து கட்சி உறுப்பினர்களும், தலைவர்களும் பொதுவான கட்சிக் கட்டுப்பாட்டை வேறுபாடின்றி கடைபிடிக்க வேண்டும் என்று கூறுவது, கட்சிக்குள் பண்ணையடிமைத்தனத்தை உருவாக்குவதாகும் என்று கூறினர்.

(சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி போல்ஷ்விக்: 76)

லெனின் இந்த வாதங்களையெல்லாம் காங்கிரசிலேயே தவிடு பொடியாக்கினார். மேலும் ஸ்தாபன கோட்பாடுகளைப் பற்றி குறிப்பாக மத்தியத்துவம் குறித்த விமர்சனங்களையும், அவை எப்படி தவறானவை என்பதையும் ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்ற தன் புத்தகத்தில் முன்வைத்துள்ளார்.

அமைப்பையும், கட்டுப்பாட்டையும் கண்டு பாட்டாளி வர்க்கம் பயப்படவில்லை…. கட்சியிலுள்ள சில குறிப்பிட்ட படிப்பாளிகளுக்குத் தான் கட்டுப்பாட்டு உணர்விலும் ஸ்தாபன உணர்விலும் சுய பயிற்சி இல்லாமல் இருக்கிறது. தொழிலாளி வர்க்கத்திற்கு இவை இருக்கிறது.

(ஓரடி முன்னால், ஈரடி பின்னால்)

லெனினது ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்கிற படைப்பு முழுவதுமே ஸ்தாபன கோட்பாடுகளுக்கெதிரான வாதங்களை முன்வைத்து அவற்றை அம்பலப்படுத்துவதும் அதான் முன்மொழிந்த ஸ்தாபன கோட்பாடுகள் எப்படி சரியானவை என்பதை நிலை நிறுத்துவதுமேயாகும்.

பாட்டாளி வர்க்கக் கட்டுபாட்டையும் அமைப்பையும் கண்டு பாட்டாளி வர்க்கம் பயப்படவில்லை. முதலாளித்துவ படிப்பாளிகள்தான் அதை உதறித் தள்ளினார்கள். மார்டவ் வகுத்திருக்கும் கருத்து பரந்த அளவுள்ள பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை வெளித்தோற்றத்தில் ஆதரிக்கிறது. ஆனால், உண்மையில் அது முதலாளித்துவ படிப்பாளிகளுடைய நலன்களுக்குச் சேவை செய்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு வார்த்தைகளுக்குப் பின்னாலும் ஒரு வர்க்கத்தின் நலன் அடங்கியிருக்கிறது என்ற மார்க்சின் நிர்ணயிப்பையும் உட்கட்சிப் போராட்டம் என்பது சமூகத்தில் நடைபெறும் வர்க்கப் போராட்டத்தின் பிரதிபலிப்பே என்கிற லியோ சோஷியின் கருத்தையும் இணைத்து லெனினது மேற்கண்ட வரிகளைப் படித்தால் ஸ்தாபன கோட்பாடுகளுக்காக ஏன் லெனின் இவ்வளவு கடுமையாகப் போராடியிருக்கிறார் என்பது புரியும். அதாவது கட்சிக்குள் நடக்கும் கருத்துப் போராட்டங்கள் சமூக வர்க்கங்களின் கருத்துக்களுக்கிடையிலான போராட்டங்களே என்கிற புரிதலோடு இதை அணுக வேண்டும். ஆனால், இதன் பொருள் அத்தகைய கருத்துக்களை கூறுவோரின் நோக்கம் எதிரி வர்க்கத்தின் கருத்துக்களை வலியுறுத்த வேண்டும் என்பதல்ல. மாறாக எதிரி வர்க்க கருத்தின் தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்பதே பொருள். நோக்கம் சரியாக இருப்பினும் விளைவு வர்க்க சமரசத்திற்கோ பகை வர்க்கத்தின் நலனுக்கு அடிபணிவதற்காகவோ இருந்து விடக் கூடாது என்பது தான்.

Rosa Luxemburg
Rosa Luxemburg

புகழ் படைத்த கம்யூனிஸ்ட் போராளியான ரோசாலக்ஸம்பர்க்கும் ஜனநாயக மத்தியத்துவம் குறித்து லெனினது கருத்துக்களை விமர்சித்தார். தற்போதைய நிலையில் இத்தகைய பரிசோதனை ரஷ்ய சமூக ஜனநாய இயக்கத்திற்கு இரட்டை அபாயகர மானதாகும். ஜாரை எதிர்த்த தீர்மானகரமான போராட்டத்தின் விளிம்பில் அவர்கள் நிற்கிறார்கள். ரஷ்ய சமூக ஜனநாயக இயக் கம் ஏற்கனவே அல்லது தற்போது அனைத்து வகையிலும் தனது தாக்கத்தை ஏற்படுத்தும் நிலைக்கு வந்திருக்கிறது. கட்சியைச் சுற்றிலும் முள்வேலிகளைக் கட்டுவது தற்போதைய நிலையில் செய்ய வேண்டிய பணியை கட்சி செய்ய முடியாமல் தடுப்பதாகும். இங்கு நாம் வைத்துள்ள சோசலிச மத்தியத்துவம் குறித்த பொதுவான கருத்துக்கள் ரஷ்யக் கட்சியின் அமைப்பு விதிகளை உருவாக்குவதற்கு போதுமானவை அல்ல. இறுதியாக இத்தகைய (மத்தியத்துவம்) கோட்பாடு குறிப்பிட்ட காலச்சூழலில் நடைபெறும் ஸ்தாபன நடவடிக்கைகளாலேயே தீர்மானிக்கப்பட வேண்டும். எந்த ஒரு அமைப்பு விதியும் தவறுகளே இல்லாதது என்று கூறிக் கொள்ள முடியாது. நெருப்பில் நீந்தித்தான் அது தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக மத்தியத்துவம் கட்சியைச் சுற்றிலும் முள்வேலிகளை கட்டியிருந்தால் ரஷ்யாவில் சோசலிசப் புரட்சியே நடந்திருக்க முடியாது. லெனின் புரட்சியை மக்களின் திருவிழா என்று கொண்டாடினார். மக்களை கட்சியின்பால் நெருங்கவிடாத ஒரு கோட்பாட்டை புரட்சி கனியும் தருவாயில் அனுமதித்திருக்க மாட்டார். அனுபவமும் அதையே உறுதிப்படுத்தியது. உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசை நிறுவி 70 ஆண்டு காலம் தாக்குப்பிடித்த தன் மூலம் நெருப்பில் நீந்தி ஜனநாயக மத்தியத் துவம் தன்னை நிரூபித்துக் கொண்டுள்ளது என்பது வரலாற்று அனுபவம்.

நல்ல நோக்கத்திலான மற்றொரு விமர்சனம், ஜாரின் அடக்குமுறை ஆட்சியின் கீழ் செயல்பட வேண்டியிருந்த கட்சியின் ஸ்தாபன கோட்பாடே ஜனநாயக மத்தியத்துவம். முதலாளித்துவ ஜனநாயக அமைப்பில் சட்டப்படியும் பகிரங்கமாகவும் செயல்படும் கட்சிக்கு இந்தக் கோட்பாடுகள் பொருந்தாது என்பதாகும்.

ஒழுங்காக வேலைகளைக் கவனிப்பதற்கும் மக்களை முறையாக வழிகாட்டி நடத்துவதற்கும் மத்தியத்துவம் என்ற சித்தாந்தத்தின் பேரில் அமைப்பு ரீதியாக கட்சி உருவாக்கப்பட வேண்டும். கீழிலிருந்து தேர்தல் மூலம் அமைப்புகளைக் கட்டுவது என்ற சிந்தாந்தத்தின் பேரில் அந்தக் காலத்தில் கட்சி அமைப்புகளைக் கட்ட முடியவில்லை. இதன் பயனாய், பரம ரகசியமாக கண்டிப்புடன் வேலை செய்ய வேண்டியிருந்தது. ஆனால், கட்சியின் வாழ்நாட்களில் இது தற்காலிக அம்சம்தான். இந்த தற்காலிக அம்சம் ஜார் ஆட்சியை அகற்றியவுடன் அகன்றுவிடும் அப்போது கட்சி பகிரங்கமாகவும் சட்ட ரீதியாகவும் வேலை செய்யும். அப்போது ஜனநாயத் தேர்தல் என்ற சிந்தாந்தத்தின் பேரிலும் ஜனநாயக மத்தியத்துவம் என்ற சித்தாந்தத்தின் பேரிலும் கட்சி அமைப்புகள் கட்டப்படும் என்று லெனின் கருதினார்.

(பக்கம்:82-83 சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஸ் விக்) கட்சியின் வரலாறு:- சென்னை புக்ஸ் 1979 (அழுத்தம் சேர்க்கப்பட்டது))

அடக்குமுறை அமைப்பின் கீழ் மத்தியத்துவம் என்பதும் பகிரங்மாக பணியாற்றும் போது ஜனநாயக மத்தியத்துவம் என்கிற கோட்பாடும் தான் லெனினால் வரையறுக்கப்பட்டது.

முதலாளித்துவ ஜனநாயக அமைப்பிலும் கூட முதலாளித்துவ வர்க்கம் தான் ஆட்சி பொறுப்பிலிருக்கும். அது இடையறாது அரசியல் ரீதியாகவும் தத்துவார்த்த ரீதியாகவும் கம்யூனிஸ்ட்களின் மீது தாக்குதல் தொடுக்கும்: தாக்கத்தை ஏற்படுத்தும். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டே இந்தக் கோட்பாடு வடிவமைக்கப்பட்டது. கடுமையான தாக்குதல்கள் வந்த போதும் ஆட்சியில் இல்லாத பல கம்யூனிஸ்ட் கட்சிகள் தாக்குபிடித்து நின்றதற்கு அவர்கள் ஜனநாயக மத்தியத்துவத்தை கடைபிடித்ததுதான் காரணம். அதன் மூலம் ஆளும் வர்க்கத்தின் தாக்குதல்களி லிருந்து கட்சியைக் காப்பாற்ற முடிந்தது. மாறாக ஜனநாயக மத்தியத்துவத்தை கைவிட்டிருந்த இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் அனுபவம் துயரம் மிகுந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் ஆட்சியிலில்லாத சக்தி வாய்ந்த கம்யூனிஸ்ட் கட்சியாகிய இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி முதலில் ஜனநாயக மத்தியத்துவத்தை கைவிட்டது. பின்னர் மார்க்சியத்தையும் கைவிட்டது என்பதையும் நாம் பார்க்கிறோம். ஜனநாயக அமைப்பிலும் கூட ஆளும் வர்க்கம் தொழிலாளி வர்க்கத்தின் மீது எத்தகைய தாக்குதல் தொடுக்கும் என்பதற்கு சிலி ஒரு வருந்தத்தக்க உதாரணமாக இருக்கிறது.

இத்தகைய நல்லெண்ணம் கொண்டோரின் மற்றொரு விமர்சனம் ஜனநாய மத்தியத்துவம் ஒரு சிறு பகுதியினரை கட்டளை இடுவோராகவோ கட்சியின் இதர பகுதியினரை இடப்பட்ட கட்டளைகளை நிறைவோற்றுவோராகவும் மாற்றிவிடுகிறது என்பதாகும். கீழ்மட்டத்தில் உள்ளோர் பணத்திற்காகவோ அல்லது சுயநலத்தை எதிர்நோக்கியோ இருந்தால் மட்டுமே மேலிருந்து கொடுக்கப்படும் கட்டளைகளை தங்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும் கடமையின் பொருட்டும் வாழ்வாதாரத்தின் பொருட்டும் ஏற்றுக் கொள்கிறவர்களாக இருப்பார்கள். அனைத்துத் தியாகங்களுக்கும் தயாராக ஒட்டு மொத்த சமூகத்தின் உயர்வுக்காகத் தானே முன்வந்து புரட்சிக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிற வர்க்க உணர்வு படைத்த முன்னணிப் படை மேலிருந்து வரும் கட்டளைகளை அவை தனக்கு உடன்பாடு இல்லை என்கிற நிலையில் அமல்படுத்துமா?. எனவே, மத்தியத்துவம் செயல்பட வேண்டுமானால் சிறப்பாக செயல்பட வேண்டுமானால் மத்தியத்துவத்தின் அடிப்படையிலான கட்டளை ஜனநாயக அடிப்படையில் கருத்துக்களை பிரதிபலிப்பதாக இருந்தால் மட்டுமே சாத்தியம். எந்த அளவுக்கு ஜனநாயகம் விரிவாகக் கடைபிடிக்கப்படுகிறதோ அந்த அளவிற்கு மத்தியத்துவம் வலிமையுடையதாக இருக்கும். கருத்துருவாக்கத்தில் விரிந்து பரந்த ஜனநாயகம் என்பதும் செயல்பாட்டில் உருக்கு போன்ற கட்டுப்பாட்டுடன் கூடிய ஒற்றுமையும் என்பதே ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படை.

நட்புப் பகுதியினரிடமிருந்து வரும் இத்தகைய விமர்சனங்கள் கட்சியோ அல்லது சோசலிசமோ பின்னடைவைச் சந்திக்க நேரும் போதெல்லாம் வெளியிடப்படுகின்றன. சோவியத் யூனியன், சோசலிச முகாம் தகர்விற்குப் பின்னர் இத்தகைய விமர்சனங்கள் கூடுதலாக எழுந்தன. சில கட்சிகள் ஜனநாயக மத்தியத்துவத்தை, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிடுவதாக அறிவித்தன. பின்னர் இத்தகைய கட்சிகள் மார்க்சியத்தையே கைவிட்டதையும் உலகம் கண்டது.

கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களின் விமர்சனம்

கம்யூனிஸத்தின்பால் அக்கறை கொண்டோரின் விமர்சனத்தைப் போலன்றி கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்கள் தவறான நோக்கத்திலிருந்து சரியோ என தோன்றும்படியான விமர்சனத்தை முன்வைக்கிறார்கள். முதலாளித்துவ ஆதரவாளர்கள் மற்றும் அறிவு ஜீவிகளைப் பொறுத்த மட்டில் மார்க்ஸிய தத்துவத்தை எதிர்ப்பவர்கள். தத்துவத்தின் மீதான தாக்குதலின் ஒரு பகுதியே ஸ்தாபன கோட்பாடுகளின் மீதான தாக்குதல். ஜனநாயக மத்தியத்துவமும் மார்க்சிய தத்துவத்துவமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாது. ஏனெனில், கம்யூனிசத்துக்கு முந்திய எல்லா சமூக அமைப்பும் பல்வேறு வர்க்கங்களை, பகை வர்க்கங்களை கொண்டவையே. எனவே, சோசலிசத்தின் உயர்ந்த கட்டம் வரை கம்யூனிஸ்ட்  கட்சிக்குள்ளும் பல்வேறு வர்க்கங்களின் தாக்கம் தவிர்க்க முடியாது. எனவே, ஜனநாயக மத்தியத்துவமும் தவிர்க்க முடியாதது.

முதலாளித்துவ ஜனநாயம் என்பது ஜனநாயகத்தின் உயர்ந்தபட்ச வடிவம் போன்று தோன்றுமாறு அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். உலகத்தில் எந்தவொரு முதலாளித்துவக் கட்சியும் தனது ஸ்தாபன கோட்பாடுகளை தனது உறுப்பினர்களின் கருத்தைக் கேட்டு ஜனநாயகப் பூர்வமாக முடிவு செய்வதில்லை. இந்தியாவில் காங்கிரஸில் 6 தலைமுறையாக நேருவின் குடும்பத்தினரே கட்சிப் பொறுப்பில் அல்லது ஆட்சிப் பொறுப்பில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். மத்தியில் மட்டுமின்றி மாநிலங்களிலும் இதே நிலை. பாஜக, திமுக, அதிமுக, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, தெலுங்கு தேசம் என்று எந்தவொரு கட்சியிலும் இதைக் காண முடியும்.

மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட வர்கள் கூட தன்னை தேர்வு செய்த மக்களின் கருத்துக்களை பிரதிபலிப்பவர்களாக இருப்ப தில்லை என்பது உலகம் முழுவதுமுள்ள அனுபவம். எனவே, ஜனநாயக மத்தியத்துவத்தை கேள்விக்கு உள்ளாக்குகிற தார்மீக உரிமை முதலாளித்துவ நெறிகளை தூக்கிப்பிடிப்போர்க்கு கிடையாது. முதலாளித்துவ ஜனநாயகத்தை விட ஜனநாய மத்தியத்துவம் என்பது ஜனநாயகத்தின் உயர்ந்த வடிவம் என்பதையே முதலாளித்துவ கட்சிகளுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையிலான வேறுபாடு வரலாறு ரீதியாக நிரூபிக்கிறது.

அனுபவம் செழுமைப்படுத்தும்

ஒரு கம்யூனிஸ்ட் கட்சியில் நீண்ட காலம் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றிய ஒருவர் அவருடைய பலவீனத்தின் காரணமாகவோ அல்லது கட்சியின் ஏதேனும் நிலைபாட்டினை ஏற்காததாலோ அல்லது தான் நியாயமற்ற முறையில் வெளியேற்றப்பட்டதாக கருதும் போதோ ஜனநாயக மத்தியத்துவத்தின் மீது தாக்குதல் தொடுப்பது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

இவையெல்லாம் இருப்பினும் ஜனநாயக மத்தியத்துவத்தில் எது மேலோங்கியிருக்கும் என்பது அவ்வபோது எழுந்து வரும் புதிய நிலைமைகளோடு சம்பந்தப்பட்டது. ஒரு குறிப்பிட்ட சூழலில் மத்தியத்துவம் மேலோங்கியிருக்க வேண்டிய தேவையும் மற்றொரு குறிப்பிட்ட சூழலில் ஜனநாயகம் மேலோங்கியிருக்க வேண்டிய தேவையும் எழலாம். இவை இன்ன விகிதத்தில் இருக்க வேண்டுமென்று முன்கூட்டியே நிர்ணயிப்பது சாத்தியமல்ல. ஸ்தாபனத்தின் முதிர்ச்சி நிலைக்கேற்ப இதில் மாற்றமென்பது இயங்கியல் ரீதியாக நடந்து கொண்டேயிருக்கும். அந்த வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 1964-ல் தனது கட்சி திட்டம் மற்றும் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியது. இயங்கியல் ரீதியாக தேவையின் அடிப்படையில் இவற்றில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் காலங்களிலும் கூட போராட்டங்களினூடாக இத்தகைய மாற்றங்கள் நடைபெறும்.

இதுவரை செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் சில.

  1. சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு மக்கள் ஜனநாயக அரசு ஜனநாயக மத்தியத் துவத்தின் அடிப்படையில் இயங்கும் என்பது கைவிடப்பட்டுள்ளது. ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடு கட்சிக்கானதே தவிர அரசுக்கான தல்ல.
  2. மாநாடுகளின் போது மேல் கமிட்டிகள் கீழ் கமிட்டிகளுக்கான செயலாளர் பெயரை முன்மொழியக் கூடாது என வழிகாட்டப்பட் டுள்ளது. ஆனால், புதிய கமிட்டிக்கான ஆலோ சனைகளை பழைய கமிட்டி முன்வைக்கும்.
  3. போட்டி இருக்கும் பட்சத்தில் ரகசிய வாக்கெடுப்புடன் தேர்தல் நடைபெறும். கண்ட் ரோல் கமிஷன் முன்பு மத்திய கமிட்டியால் தேர்ந்தெடுக்கப்பட்டது. தற்போது கட்சி காங்கிரஸ் நேரடியாக தேர்ந்தெடுக்கிறது.
  4. வெகுஜன ஸ்தாபனங்களின் அனைத்து பொறுப்புகளுக்கும் நிர்வாகிகளை கட்சிக் கமிட்டிகள் தீர்மானிப்பது கூடாது.

இந்த மாற்றங்கள் முந்தைய வடிவங்களை நிராகரிப்பது என்று அர்த்தம் ஆகாது. இது வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அனுபவத்தின் அடிப்படையிலான வளர்ச்சியாகும். ஜனநாயக மத்தியத்துவம் இத்தகைய வளர்ச்சி அடிப்படையிலான மாற்றங்களை உள்வாங்கிக் கொள்ளும் தன்மையுடையது என்பதால் அது வளர்ந்து கொண்டும் இருக்கும். அது தன்னை நிலை நிறுத்திக் கொண்டும் இருக்கும்.


மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் ஆகியோர் அரசு என்பதை வெளிப்புறத்தைச் சேர்ந்த ஒரு கருத்தினமாக மனித வரலாற்றில் ஒரு காலகட்டத்தில் அரசு என்பதே இருக்கவில்லை என்பதை நிரூபிக்க கடினமாக உழைத்திருக்கிறார்கள்.  அதேபோல் வர லாற்றில் அரசு என்பதே இல்லாத ஒரு கட்டம் மீண்டும் வரும்.

கேரளா  லா டைம்ஸ் என்ற இதழுக்கு இ.எம்.எஸ். எழுதிய கடிதத்தில் இருந்து….

கம்யூனிஸ்ட் அறிக்கை முகவுரைகளின் முக்கியத்துவம்

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை 1847 ஆம் ஆண்டு நவம்பரில் லண்டனில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கழகம் என்கிற ரகசியமாக செயல்பட வேண்டியிருந்த அமைப்பின் தத்துவார்த்த நடவடிக்கை வேலைத்திட்டமாக காரல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கெல்ஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்டது.

அறிக்கையின் மேன்மை, மகத்துவம், அமரத்துவம் ஆகியவைகளுக்கு அவ்வப்போது சந்தேகங்கள் எழுப்பப்படுவதும் அதன் மீது விவாதங்கள் நடப்பதும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் விவாதங்களின் முடிவில் கம்யூனிஸ்ட் அறிக்கை தனது மேதாவிலாசத்தை உலகுக்கு உணர்த்தி தன்னுடைய தத்துவ மேலாண்மையை நிலைநிறுத்தியே வந்திருக்கிறது. இதுகுறித்து தொடர்ச்சியாக பல்வேறு நூல்கள் வெளிவந்திருக்கின்றன.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் ஏழு முகவுரைகள் அறிக்கையை போலவே காலங்கடந்தும் தங்களின் ஒப்புயர்வற்ற தன்மையை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. இவற்றில் 1872, 1882 ஆகிய இரண்டு முகவுரைகளும் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகிய இருவராலும் எழுதப்பட்டவை. இதர ஐந்து முகவுரைகள் 1883, 1888, 1890, 1892, 1893 ஆகிய ஆண்டுகளில் மார்க்சின் மறைவிற்குப் பிறகு  எங்கெல்சால் மட்டும் எழுதப்பட்டவை. இந்த முகவுரைகள் அறிக்கையின் பதிப்புகள் எத்தனை வந்திருக்கிறது எத்தனை பிரதிகள் அச்சடிக்கப்பட்டன என்பதை பற்றிய விவரங்களை மட்டும் குறிப்பவை அல்ல. மாறாக, அறிக்கை எழுதப்பட்ட பிறகு முகவுரைகள் எழுதப்பட்ட காலம் வரையிலும் உலகெங்கிலும் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிப் போக்குகளின் அடிப்படையில் பெறப்பட்ட அனுபவங்களிலிருந்து அறிக்கையைச் செழுமைப்படுத்துவதற்காக எழுதப்பட்டவை. இவையும் கூட அறிக்கையை போலவே அமரத்துவம் வாய்ந்தவை.

கம்யூனிஸ்ட் அறிக்கையா? சோசலிஸ்ட் அறிக்கையா?  அறிக்கையின் இரண்டாவது பகுதியின் இறுதியில் முன்மொழியப்படும் பத்து நடவடிக்கைகள் ஒரு சோசலிச அரசு அமைந்தபிறகு நிறைவேற்றுவதற்கான கடமைகளாகும். எனவே இந்த அறிக்கை சோசலிஸ்ட் அறிக்கை என்றே பெயரிடப்பட்டிருக்க வேண்டுமென்று மார்க்சும், எங்கெல்சும் நினைத்திருக்கிறார்கள். ஆனால், இந்த அறிக்கைக்கு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்று பெயர் சூட்டினார்கள். ஆனால், இதுகுறித்து 1888 ஆம் ஆண்டு ஆங்கிலப் பதிப்பிற்கு எழுதிய முகவுரையில் எங்கெல்ஸ் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

அது (அறிக்கை) எழுதப்பட்ட காலத்தில் அதற்கு நாங்கள் சோசலிஸ்ட் அறிக்கை என்பதாய் பெயர் சூட்ட முடியவில்லை. 1847-இல் சோசலிஸ்ட் எனப்பட்டோர்கள் ஒருபுறத்தில் வெவ்வேறு கற்பனாவாத கருத்தமைப்புகளை சேர்ந்தோராய் இருந்தனர். இங்கிலாந்தில் ஓவனியர்கள், பிரான்சில் ஃபூரியேயர்கள் இருவகையினரும் ஏற்கனவே குறுங்குழுக்களின் நிலைக்கு தாழ்த்தப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருந்தவர்கள். மறுபுறத்தில் மிகப் பல்வேறுபட்ட சமூக மருத்துவப் புரட்டர்களாய் மூலதனத்திற்கும் லாபத்திற்கும் எந்த தீங்கும் நேராதபடி பலவகையான ஒட்டு வேலைகள் மூலம் எல்லா வகையான சமூக கேடுகளையும் களைகிறோமென கூறிக் கொண்டவர்களாகயிருந்தனர். இருவகைப்பட்டோரும் தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கு வெளியேயிருந்து கொண்டு படித்த வகுப்பாரின் ஆதரவையே அதிகமாக நாடி வந்தனர்.

தொழிலாளி வர்க்கத்தின் எந்த பகுதி வெறும் அரசியல் புரட்சிகள் மட்டும் நடைபெற்றால் போதாது என்பதை ஐயமற உணர்ந்து முழுநிறைவான சமுதாயமாற்றம் ஏற்படுவது இன்றியமையாததென பறைசாற்றியதோ அந்த பகுதி அன்று தன்னை கம்யூனிஸ்ட் என்று அழைத்துக் கொண்டது.

ஆதியிலிருந்தே எங்களுடைய கருத்தோட்டம் தொழிலாளி வர்க்கத்தின் விடுதலை நேரடியாய் தொழிலாளி வர்க்கத்தின் செயலால் தான் பெறப்பட்டாக வேண்டும் என்பதாய் இருந்ததால் இவ்விரு பெயர்களில் நாங்கள் எதை ஏற்பது என்பது குறித்து ஐயப்பாட்டுக்கு இடமிருக்கவில்லை. அதோடு அது முதலாய் இந்த பெயரை நிராகரிக்கும் எண்ணம் கணமும் எங்களுக்கு ஏற்பட்டதில்லை. அறிக்கையின் உள்ளடக்கம் சோசலிசத்திற்கான திட்டத்தை விரிவாக வரைந்திருந்தாலும் அன்று சோசலிஸ்ட்டுகள் என்று தங்களை அழைத்துக் கொண்டோர் வர்க்கப் போராட்டத்தை ஏற்காதவர்களாக இருந்ததாலும் அவர்கள் படித்த வகுப்பாரின் ஆதரவையே நாடி வந்தவர்களாக இருந்ததாலும் அன்று தொழிலாளி வர்க்கம் தன்னை எப்படி அழைத்துக் கொண்டதோ அந்தப் பெயரான கம்யூனிஸ்ட் என்ற பெயரையே தாங்கள் ஏற்றுக் கொண்டதாகவும் அதன் பிறகு அந்தப் பெயரை நிராகரிக்கும் எண்ணம் தங்களுக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை என்றும் எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார்.

இந்தியாவிலும் கூட சுதந்திரப் போராட்டக் காலத்திலும் அதற்குப் பின்னரும் சோசலிஸ்ட்டுகள் என்று தங்களை அழைத்துக் கொண்டோர் கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளராகவும் வர்க்கப் போராட்டத்தை நிராகரிப்பவர்களாகவும் இருந்தார்கள், இருக்கிறார்கள் என்பது இந்திய அனுபவம்.

மார்க்ஸ் – எங்கெல்ஸ் இருவரும் முதன்முறையாக 1872 ஆம் ஆண்டு தான் அறிக்கை வெளிவந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஒரு முகவுரையை எழுதினார்கள். அதில் கடந்த 25 ஆண்டுகளில் நிலைமைகள் எவ்வளவு தான் மாறியிருப்பின் இந்த அறிக்கையில் குறிக்கப்படும் பொதுக் கோட்பாடுகள் ஒட்டுமொத்தத்தில் என்றும் போல் இன்றும் சரியானவே என்று குறிப்பிடுகின்றனர்.

மேலும் இரண்டாம் பிரிவில் இறுதியில் முன்மொழியப்படும் புரட்சிகர நடவடிக்கைகள் தனி முறையில் வலியுறுத்திக் கூறப்படவில்லை என்கின்றனர். மேலும் இந்தக்கோட்பாடுகளை நடைமுறையில் கையாளுதல் எங்கும் எக்காலத்திலும் அவ்வப்போது இருக்கக்கூடிய வரலாற்று நிலைமைகளை சார்ந்ததாகவே இருக்கும் என்கின்றனர்.

சோசலிச கட்டுமானம் குறித்த தவறான புரிதல்கள் சோசலிச முகாம் தகர்ந்ததற்கான காரணங்களில் ஒன்றாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. முதலாளித்துவம் வளர்ந்து கொண்டிருந்த இன்னும் சொல்லப்போனால் நிலவுடைமையில் புராதன பொதுவுடைமை நிலவி வந்த ரஷ்யாவில் சோசலிசத்தை கட்டுவதற்கும் 1895 ஆம் ஆண்டிலேயே இன்று உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் ஸ்கோடா (Skoda) என்கிற கார் தயாரிப்பு நிறுவனம் உருவாகியுள்ள செக்கோஸ்லாவாக்கியாவில் சோசலிசத்தை கட்டுவதற்கும் ஒரே மாதிரியான செயல்திட்டம் இருக்க முடியாது என்பதை 1872-ஆம் ஆண்டிலேயே அறிக்கையில் முதல் முகவுரையில் தெரிவித்துள்ளனர்.

1964-ஆம் ஆண்டு தனது 7 வது கட்சி காங்கிரஸில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இந்தியாவில் தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமையை தனது கட்சித் திட்டத்தில் உறுதியளித்திருந்தது. ஆனால், மாறிய சூழ்நிலைகளில் தனது 9 வது கட்சி காங்கிரசில் இந்தப் பிரிவு திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது.

இதேபோன்று 1964-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கட்சித் திட்டத்தில் நிலப்பிரபுத்தவ ஒழிப்பு எவ்வித இழப்பீடுமின்றி நிறைவேற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் இழப்பீடின்றி என்கிற வார்த்தை மாறிய சூழ்நிலையை கணக்கில் கொண்டு கைவிடப்பட்டது. இதன் பொருள் இழப்பீடு கொடுப்பதா? இல்லையா? என்பதை மக்கள் ஜனநாயக அரசு அமைந்த பிறகு முடிவெடுத்துக் கொள்ளலாம் என்பதே.

அரசுப் பொறியமைவு பற்றிய நிர்ணயிப்பு:

அந்த முதல் முகவுரையிலேயே மேலும் இரண்டு அம்சங்களை அவர்கள் குறிப்பிட்டுக் காட்டுகின்றனர். அதில் கடந்த 25 ஆண்டுகளில் நவீன தொழில்துறை பெருநடைபோட்டு பிரமாதமாய் முன்னேறியிருக்கிறது. இதனுடன் கூடவே தொழிலாளி வர்க்கத்தின் கட்சி நிறுவன ஒழுங்கமைப்பும் மேம்பாடுற்றும் விரிவடைந்தும் உள்ளது. எனவே, இதைக் கணக்கில் எடுத்தால் இந்த வேலைத்திட்டம் சில விவரங்களில் காலங்கடந்ததாகி விடுகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

1871-ஆம் ஆண்டு பாரீஸ் கம்யூன் அனுபவத்தைக் குறிப்பிட்டு தொழிலாளி வர்க்கத்திற்கு ஒன்றை நினைவுபடுத்துகிறார்கள். ஏற்கனவே பூர்த்தியான தயார்நிலையிலுள்ள அரசுப் பொறியமைவை தொழிலாளி வர்க்கம் அப்படியே கைப்பற்றி தனது சொந்த காரியத்திற்காக பயன்படுத்திக் கொள்ள முடியாது. இதன் மூலம் அறிக்கை குறிப்பிடாத ஆனால் மிகவும் முக்கியமான முதலாளி வர்க்க அரசுப் பொறியமைவை அப்படியே தொழிலாளி வர்க்கம் தனது சொந்த காரியங்களுக்காக பயன்படுத்திக் கொள்ள முடியாது என்பதை வலியுறுத்திக் கூறுகின்றனர்.

இதற்கு முன்னர் நடைபெற்ற புரட்சிகளெல்லாம் ஏற்கனவேயிருந்த அரசுப்பொறியமைவை பயன்படுத்திக் கொண்டனர். ஆனால், புதிய சமூக பொருளாதார அமைப்பிற்கேற்றதாக அதைப் படிப்படியாக மாற்றிக் கொண்டனர். ஆனால், தொழிலாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தின் அரசுப்பொறியமைவை அப்படியே தனது சொந்த காரியங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியாது என்பது இரண்டு அம்சங்களை தெளிவாக்குகிறது. முதலாவதாக இதுவரை நடைபெற்ற புரட்சிகள் சுரண்டலை முற்றாக ஒழிப்பவையல்ல. இரண்டாவதாக அரசுப்பொறியமைவு என்பது வர்க்த்தன்மை கொண்டது என்பதை தொழிலாளி வர்க்கம் நேரிடையாக அனுபவத்தில் கண்டறிவதை பாரீஸ் கம்யூன் சாத்தியமாக்கியது.

புரட்சி எங்கு நடக்கும்?

வளர்ச்சிபெற்ற முதலாளித்துவ நாடுகளில்தான் சோசலிசப் புரட்சி நடைபெறும் என்று மார்க்சும், எங்கெல்சும் முன்நிர்ணயித்து கூறியதாக பொதுவாக கருத்து உண்டு. ஆனால், இதன் அர்த்தம் வேறு எங்குமே சோசலிச புரட்சி நடக்காது என்று அர்த்தமல்ல. இதை மார்க்சும், எங்கெல்சும் தங்களுடைய 1882 ஆம் ஆண்டு ருஷ்ய பதிப்பின் முகவுரையில் ரஷ்யாவிலும் கூட சோசலிசப் புரட்சி நடைபெறுவதற்கான வாய்ப்பிருக்கிறது என்பதை குறிப்பிட்டுள்ளனர். இது பற்றி  அவர்கள் கூறுவதாவது. நவீன கால முதலாளித்துவ சொத்துடமையின் தகர்வு தவிர்க்க முடியாதபடி நெருங்கி வருவதை பிரகடனம் செய்வதே கம்யூனிஸ்ட் அறிக்கையின் குறிக்கோள். ஆனால் ரஷ்யாவில் நாம் காண்பது என்ன?. அதிவேகமாய் வளர்ந்துவரும் முதலாளித்துவ முறையோடு கூடவே, வளர்ச்சியின் துவக்க நிலையில் உள்ள முதலாளித்துவ நில உடமையின் கூடவே, ருஷ்ய நாட்டின் நிலங்களில் பாதிக்கு மேற்பட்டவை விவசாயிகளது பொதுவுடைமையாய் இருக்க காண்கிறோம்.

இப்போது எழும் கேள்வி என்னதான் ருஷ்ய ஓப்ஷீனா வெகுவாய் சீர்குலைக்கப்பட்டிருப்பினும் இன்னும் நிலத்திலான புரதான பொதுவுடைமையின் ஒரு வடிவமாகவே இருக்கும் இது நேரடியாய் கம்யூனிச பொதுவுடைமை எனும் உயர்ந்த வடிவமையாய் வளர முடியுமா? அல்லது இதற்கு நேர் மாறாய் மேற்கு நாடுகளது வரலாற்றின் பரிணாம வளர்ச்சியாய் அமைந்த அந்த சிதைந்தழியும் நிகழ்முறையை முதலில் அது கடக்க வேண்டியிருக்குமா?  இதற்கு இன்று சாத்தியமான ஒரே பதில் இதுதான் ருஷ்ய புரட்சியானது மேற்கு நாடுகளின் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான முன்னறிவிப்பாகி இவ்விதம் இரண்டும் ஒன்றுக்கொன்று துணை நின்று நிறைவு பெருமாயின் தற்போது ருஷ்யாவில் நிலத்தில் உள்ள பொதுவுடைமை கம்யூனிச வளர்ச்சிக்குறிய துவக்க நிலையாய் பயன்படக்கூடும். எனவே புரட்சியானது ஒரு நிலையான சூத்திரத்தின் அடிப்படையில் ஆனதல்ல. பொருளாதார நிலை, புரட்சி நடத்துகிற வர்க்கத்தின் உணர்வுநிலை, அதன் ஸ்தாபன ஒழுங்கமைப்பு, சர்வதேச சூழல் இவை அனைத்திற்கும் ஓரு பங்குண்டு;. இதில் ஒன்று மட்டுமே பிரதானம். மற்றது அதன் துணை நிலைமைதான் என்று புரிந்துகொள்வது சரியல்ல என்பதை அவர்கள் தங்களது இரண்டாவது முகவரையிலேயே தெளிவாக்கி இருக்கின்றார்.

அமெரிக்காவின் வளர்ச்சி பற்றி

1890 ஆம் ஆண்டு ஜெர்மன் பதிப்பிற்கு  எங்கெல்ஸ் எழுதிய முகவுரையில் அப்போது தொழில் துறையில் ஏகபோக நிலையை வகித்து வந்த இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி முதல் நிலைக்கு வந்துவிடும் என்பதை அப்போதே முன்நிர்ணயித்து கூறியுள்ளார்.  இதுகாறும் மேற்கு ஐரோப்பாவும் இன்னும் முக்கியமாய் இங்கிலாந்தும் தொழில்துறையில் வகித்து வரும் ஏகபோக நிலை சீக்கிரமே தகர்க்கப்படுமென கூறும்படி அத்தனை விருவிருப்போடும் அவ்வளவு பெரிய அளவிலும் அமெரிக்க ஐக்கிய நாடு தனது அளவிலா தொழில்துறை செல்வாதாரங்களை பயன்படுத்திக் கொள்வதை சாத்தியமாக்கிற்று. அதேபோன்று பெருந்திரளான பாட்டாளி வர்க்கமும் வியக்கத்தக்க மிகப்பெரிய அளவிலான மூலதன ஒன்றுகுவிப்பும் தொழில்துறை பிரதேசங்களில் வளர்ச்சியுருகின்றன.

கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிடப்பட்ட போது அறிக்கையின் கடைசி பிரிவு பல்வேறு நாடுகளிலும் பற்பல எதிர்கட்சிகள் சம்பந்தமாய் கம்யூனிஸ்ட்களின் நிலைமையை கூறும் இந்த பிரிவில் ருஷ்யாவும் அமெரிக்க ஐக்கிய நாடும் காணப்படவேயில்லை. இந்த இரு நாடுகளும் ஐரோப்பாவிற்கு மூலப்பொருட்களை வழங்கின. அதேபோது ஐரோப்பிய தொழில்துறை உற்பத்தி பொருள்களுக்கு சந்தைகளாகவும் இருந்தன இப்படி இருந்த நாடுகள் இரண்டும் 25 ஆண்டுகளுக்குள் இரண்டு நாடுகளிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களை துல்லியமாக கணித்ததில் இந்த முகவுரைகள் மிகுந்த முக்கியத்துவம் பெருகின்றன. இதில், அமெரிக்க பற்றிய கணிப்பு அப்போதைய வளர்ச்சியை அடிப்படையாக கொண்டது. ஆனால், ரஷ்யா பற்றிய கணிப்பானது ஹாக்ஸ்த்ஹாவு எழுதிய ருஷ்யாவின் நில உறவுகளில் கிராம சமுதாய அமைப்பின் மீதமிச்சங்களை விவரித்து எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் முடிவுக்கு வந்தது. அவை எவ்வளவு துல்லியமானது என்பதை அதன் பிறகு நடைபெற்ற நிகழ்ச்சிகள் நிருபித்திருக்கின்றன.

இதே போன்று 1882-ஆம் ஆண்டு தொழில்துறையில் இங்கிலாந்தின் ஏகபோகம் தகர்க்கப்பட்டு அந்த இடத்திற்கு அமெரிக்கா வரும் என்பதையும் மிகத்துல்லியமாக கணித்திருக்கிறார். 1947க்குப் பின்னால்தான் இங்கிலாந்தின் காலனி ஆதிக்கம் என்பது முடிவுக்கு வர துவங்கியது. அதற்கு 65 ஆண்டுகளுக்கு முன்பே கம்யூனிஸ்ட் அறிக்கையின் முகவுரையில் மார்க்சும், எங்கெல்சும் இதைமுன் நிர்ணயித்து கூறியுள்ளனர்.

முன்னேற்றம் நேர்கோட்டிலானதா?

1847 இல் அறிக்கை வெளிவந்தபோது எண்ணிக்கையில் அதிகமில்லை என்ற போதும் சோசலிச பதாகையை உயர்த்தி பிடித்தவர்கள் அதை வரவேற்றனர். அறிக்கை வெளிவந்த ஒரு சில வாரங்களுக்குள்ளாகவே ஜெர்மனியிலும் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் வெவ்வேறான 12 பதிப்புகளுக்கு குறையாமல் ஜெர்மன் மொழியில் வெளிவந்திருக்கிறது.

பிரெச்சில் 1848 ஆம் ஆண்டு ஜுலை மாதத்திற்கு முன்பு முதன் முதலாக பாரிசில் வெளியாயிற்று. போலிஷ் மொழியிலும் உடனடியாக லண்டனிலிருந்து வெளிவந்தது. இப்படி பெருமளவில் வரவேற்கப்பட்டு வாசிக்கப்பட்ட அறிக்கை மிக சீக்கிரமே பின் நிலைக்கு தள்ளப்பட்டது. 1848 இல் பாரிசில் நடந்த பாட்டாளி வர்க்க எழுச்சி தோல்வியடைந்ததும் 1852 நவம்பரில் கம்யூனிஸ்ட் கழகத்தின் உறுப்பினர்கள் 7 பேருக்கு 3 ஆண்டிலிருந்து 6 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டதை ஒட்டியும் அறிக்கை சட்டத்தின்படி தீண்டத்தகாததாய் விலக்கி வைக்கப்பட்டது. இதன் பிறகு ஐரோப்பிய தொழிலாளி வர்க்கம் ஆளும் வர்க்கத்தின் ஆட்சி அதிகாரம் மீது தாக்குதல் தொடுக்க போதிய பலத்தை பெற்றதும் அகில தொழிலாளர் சங்கம் உருப்பெற்று எழுந்தது. ஆயினும் இச்சங்கம் கம்யூனிஸ்ட் அறிக்கையில் வகுத்தளிக்கப்பட்டுள்ள கோட்பாட்டிலிருந்து தொடங்கப்படவில்லை. பல்வேறு சீர்திருத்தவாதிகளையும் அனைத்து செல்ல வேண்டியிருந்ததால் அந்த சங்கத்திற்கான விதிகளது முகப்புரையாய் அமைந்த வேலைத்திட்டத்தை மார்க்ஸ் வகுத்தளித்தாலும் கூட அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள கோட்பாடுகளை வேலைதிட்டமாக முன்வைக்க முடியவில்லை.

மார்க்ஸ் அறிக்கையில் வரையறுக்கப்பட்ட கோட்பாடுகளின் இறுதி வெற்றிக்கு ஒன்றுபட்ட செயற்பாட்டிலிருந்தும் விவாதத்திலிருந்தும் நிச்சயம் ஏற்பட்டாக வேண்டிய தொழிலாளி வர்க்க ஞான வளர்ச்சியைத்தான் நம்பியிருந்தார்.

மார்க்ஸ் எதிர்பார்த்தபடியே இந்த அகிலம் கலைக்கப்பட்டபோது ஆங்கிலேயே தொழிற்சங்கங்களின் தலைவர் 1887 இல் சோசலிசம் கிலியூட்டுவதாய் இருந்த காலம் மறைந்துவிட்டது என்று அறிவித்தார்.

புரட்சியின் வளர்ச்சிப்போக்கில் ஏற்ற இறக்கங்கள் வெற்றி தோல்விகள் பாய்ச்சலும் பின்னடைவும் தவிர்க்க முடியாதவை. ஆயினும் தோல்விகள் விலகல்கள் பின்னடைவுகள் இவற்றை சமாளித்து அனுபவங்களிலிருந்து தொழிலாளி வர்க்கம் சோசலிசத்தை நோக்கி முன்னேறிக் கொண்டே இருக்கும் என்பதை முகவுரையின் இந்த பகுதி மிகத்தெளிவாகவும் படிப்பினையாகவும் பாட்டாளி வர்க்கத்தின் முன் சமர்ப்பித்திருக்கிறது.

இறுதியாக இந்த முகவுரைகள் அறிக்கையின் அளவிற்கு முக்கியத்துவமுடையவை. அறிக்கையை முழுமையாக புரிந்துகொள்ள விரும்பும் எவரும் இந்த முகவுரைகளையும் முழுமையாக வாசிக்க வேண்டியது அவசியமாகும்.