கியூபா: புரட்சியைப் பாதுகாக்கும் புதிய தலைமுறை

சிந்தன்

கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின்  8 வதுமாநாட்டினை ‘தொடர்ச்சியின் மாநாடு’ என்று அழைக்கிறார்கள். உலக முதலாளித்துவ ஊடகங்களெல்லாம், ‘காஸ்ட்ரோக்களின் காலம் முடிந்தது’ என்று செய்தி போட்டு மகிழ்ந்தபோது, ‘தொடர்ச்சி’ என்ற சொல்லை அவர்கள் பயன்படுத்தியதன் நோக்கம், மிக நன்றாகவே புரிகிறது. சோசலிச லட்சியத்தை தொடர்ந்து முன்னெடுக்கிறோம் என்று பெருமிதத்துடனே அவர்கள் அறிவித்துள்ளனர்.

2021 ஏப்ரல் 16 தொடங்கிய மாநாடு 19 அன்று நிறைவடைந்தது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட, கட்சியின் முதன்மைச் செயலாளர் மிகுவெல்டியாஸ்-கேனல் இவ்வாறு பேசினார். “தயங்காமல் சொல்வேன். உண்மையான புரட்சிகர போராட்டத்தில், வெற்றி என்பது கற்றுக் கொண்டே இருப்பதுதான். முன்பே பரிசோதிக்கப்படாத ஒரு பாதையை நாம் தேர்ந்தெடுத்துள்ளோம். புதியவைகளை கண்டறிந்து கொண்டே இருக்க வேண்டும். கொள்கை உறுதியை எவ்வகையிலும் கைவிட்டுவிடக் கூடாது. அதே சமயம், மாற வேண்டியவைகளை மாற்றியமைக்க வேண்டும். வீழ்த்த முடியாத நம் தலைவர் (ஃபிடல் காஸ்ட்ரோ) நமக்கு கொடுத்துச் சென்றிருக்கும் புரட்சியின் கருதுகோளில் இருந்து மாறாமல் பயணிக்க வேண்டும். இந்த சவால் நம் முன் உள்ளது. கட்டுப்பெட்டியான சிந்தனைப் போக்குகளையும், தவறிழைத்துவிடாது இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வையும் சற்று தளர்த்திக் கொண்டு, நமது பாதையில் முன்னேறுவோம்.”

காஸ்ட்ரோக்களின் காலம் தொடர்கிறது. இன்னும் இளமைத் துடிப்புடன், புதுமைகளைக் கைக்கொண்டு என்பதுதான் இந்த மாநாடு வெளிப்படுத்தியிருக்கும் தெளிவான அறிவிப்பு.

புதிய தலைமுறை தலைவர்கள்:

கியூபாவில் புரட்சி நடைபெற்றபோது பிறந்திருக்காத  தலைமுறையைச் சார்ந்தவர் மிகுவெல் டியாஸ்-கேனல். மின்னணுவியல் பொறியாளர். இளம் கம்யூனிஸ்ட் லீக் மூலமாக வளர்ந்தார். நிகரகுவா படைத்தலைவராக இயங்கியுள்ளார். ஒவ்வொரு இளைஞரும் ராணுவ கடமையாற்ற வேண்டும் என்பதை பின்பற்றி 3 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றியுள்ளார். கியூபாவின் இரண்டு பிராந்தியங்களில் முதன்மைச் செயலாளராக செயல்பட்டுள்ளார். உயர்கல்வித்துறைக்கு அமைச்சராக இருந்துள்ளார். கடந்த 2003ஆம் ஆண்டு அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக தேர்வானார். மூன்று ஆண்டுகளுக்கு முன் கியூப சோசலிச குடியரசின் தலைவராக தேர்வானார். இப்போது கட்சியின் முதன்மைச் செயலாளராகவும் தேர்வாகியுள்ளார். புதிய அரசியல் தலைமைக்குழுவில் 3 பெண்கள் உட்பட 14 பேர் உள்ளனர்.

இளைஞர்களும் புதிய மாற்றமும்:

முன்பு ஃபிடல் காஸ்ட்ரோ செய்ததைப் போலவே, இந்த மாநாட்டில் ரால் காஸ்ட்ரோவும் தனது ஓய்வினை அறிவித்தார். வேறு எந்த கூடுதல் பொறுப்பையும் எடுக்கவில்லை. ‘ஒரு சாதாரண புரட்சிகரப்போராளியைப் போலவே நானும் ஓய்வு பெறுகிறேன். நான் உயிரோடு வாழும் காலம் வரையில் என் கால்களில் வாழ்வேன். தந்தை நாட்டையும்,புரட்சியையும்,சோசலிசத்தையும் முன்னணியில் நின்று காப்பேன்’ என அவர் அறிவித்தார்.

திட்டமிட்ட வகையில் இளைஞர்களை வளர்த்தெடுத்து உரிய பணிகளில்  அமர்த்திவிட்டே அவர்கள் இதைச் செய்துள்ளனர்.

கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இளைஞர்களை அமர்த்துவது ஒரு தொடர் பணியாகும். இதற்காக அமைப்பு ரீதியாக சில ஏற்பாடுகளும் அவசியம். கியூப கம்யூனிஸ்ட் கட்சி தனது மத்தியக்குழுவிற்கு அதிகபட்ச வயது 60 என நிர்ணயித்தது. அதே போல  அரசியல் தலைமைக்குழுவிற்கு வயது வரம்பு 70 ஆகும். கட்சியின் மத்தியக்குழுவில் பெண் பிரதிநிதிகளின் சதவீதம் கிட்டத்தட்ட 50 ஆகும்.

இந்த மாநாட்டில், கொரோனா கட்டுப்பாட்டிற்காக 300 பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொண்டனர். 58 ஆயிரம் கிளைகளில் உள்ள 7 லட்சம் கட்சி உறுப்பினர்களை அவர்கள் பிரதிநிதித்துவம் செய்தனர். கியூப கம்யூனிஸ்ட் கட்சியில் இப்போது 27 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். 2006ஆம் ஆண்டு வாக்கில் கட்சி உறுப்பினர்கள் குறையக் கூடிய சூழலை கட்சி கண்டுணர்ந்தது. இப்போது அந்த நிலைமை முடிவிற்கு வந்துவிட்டது. அதே சமயம், கட்சி உறுப்பினர்களின் சராசாரி வயது உயர்ந்துள்ளது. 42.6% கட்சி உறுப்பினர்களின் வயது 55க்கும் அதிகமாகும். அதே சமயம் கட்சியின் முழுநேர ஊழியர்களுடைய சராசரி வயது 42.5 ஆக உள்ளது என்கிறது மாநாட்டு அறிக்கை.

8வது மாநாடு 4 நாட்கள் நடந்தது. மாநாட்டு ஆவணங்கள் முன்கூட்டியே விநியோகிக்கப்பட்டன. மண்டல அளவில் பிரதிநிதிகளால் விவாதிக்கப்பட்டன. இந்த ஆவணங்கள் தத்துவத்தளத்திலும், மக்களின் சமூக பொருளாதார நிலை குறித்தும், கட்சியின் முன்னணி பணியாளர்கள் கொள்கை குறித்தும், பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வது மற்றும் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வது ஆகியவைகளை உள்ளடக்கியிருந்தன.

அரசமைப்பில் மாற்றங்கள்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் கியூபா தன்னுடைய அரசமைப்புச் சட்டத்தை மாற்றியமைத்தது. அரசமைப்பின் புதிய மாற்றங்கள், அப்போதே பொது வாக்கெடுப்பிற்கு விடப்பட்டன. அரசியல் கட்டமைப்பிலும், பொருளாதார கட்டமைப்பிலும் செய்ய வேண்டிய இந்த மாற்றங்களை மக்கள் பரவலாக விவாதித்தார்கள். கட்சிக்குள்ளும் அனைத்து நிலைகளிலும் விவாதிக்கப்பட்டது. திருத்தங்கள் பெறப்பட்டன.

பிரதமர் என்ற பதவி மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. குடியரசின் தலைவராக ஒருவர் இரண்டு ஐந்தாண்டுகள் மட்டுமே அதிகபட்சமாக தேர்ந்தெடுக்கப்பட முடியும். மக்கள் அதிகார தேசிய அவையின் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் இணைந்து கூட்டாக தலைமை தருவார்கள் என்பதாகஅரசமைப்புச் சட்டம் கூறுகிறது.

தனியார் முதலீடுகளுக்கு ஊக்கம்

கியூபா திட்டமிட்ட சோசலிச பொருளாதாரத்தை அடிப்படைக் கட்டமைப்பாக கொண்டுள்ளது. அதே சமயத்தில்,அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அரசியல் ரீதியாகவும்,பொருளாதாரத்திலும் தொடர்ந்து கியூபாவை தாக்கி வருகிறார்கள். சுமார் 60 ஆண்டுகளாக தொடரும் இத்தகைய தாக்குதலை எதிர்கொள்ள படைப்பூக்கம் மிக்க புதிய வழிமுறைகளை கியூபா பின்பற்ற வேண்டியுள்ளது. அதுதான் ஒரு குறிப்பிட்ட நாட்டில், குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில் சோசலிசத்தை கட்டமைப்பதன் சவால் ஆகும்.

சோவியத் ரஷ்யா தனது நாட்டின் புதிய பொருளாதார கொள்கையை அமலாக்கி பரிசோதித்தது. இப்போதும் மக்கள் சீனமும், வியட்நாமும் பல்வேறு பரிசோதனைகளை தங்கள் நாடுகளில் மேற்கொள்கிறார்கள். கியூபாவும் அந்த அனுபவங்களை பரிசீலித்து, தனது நாட்டில் தனியார் முதலீடுகள் மற்றும் அன்னிய முதலீடுகளை சில பகுதிகளில் அனுமதிக்கிறது.

பல ஆண்டுகள் பொது விவாதத்திற்கு பிறகு 2016 ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டன. 2030 வரையிலான கியூப சமூக பொருளாதார மேம்பாட்டு திட்ட கருதுகோள் உருவாக்கப்பட்டது.

உற்பத்திக்கு உதவும் வகையில் வேலை முறைகளை மாற்றியமைத்தல் அல்லது அழித்தல், அரசு அல்லாத துறைகளை விரிவாக்குவது, சுய வேலைவாய்ப்பு, கூட்டுறவு உட்பட விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத தொழில்களில் அதிகரிப்பது என்ற முடிவுகளை எடுத்தனர். அதே சமயம் மூலதன குவியல் உருவாகாமல் தடுக்க தொழில் உடைமையானது எண்ணிக்கை மற்றும் அளவுக் கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது. பயன்பாட்டில் இல்லாத காலியிடங்களை குத்தகைக்கு விடுவது, குத்தகைதாரர்களுக்கு நுண் கடன்களை வழங்குவது, உற்பத்தி பொருட்களை உணவு விடுதிகளுக்கும், தங்கும் விடுதிகளுக்கும் விற்க அனுமதிப்பது, போன்றவை சமீபத்தில் அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளில் ஒன்றாகும்.

நலவாழ்வு, கல்வி, பாதுகாப்பு மற்று ஆயுதம் தொடர்பான நிறுவனங்கள், எவ்விதமான தனியார்மயம் அல்லது அந்நிய மூலதனத்திலிருந்தும் விலக்கியே வைக்கப்பட்டுள்ளன. கியூபாவின் அந்நிய வர்த்தகத்திற்கு ஒரு செலவாணி, உள்நாட்டு வர்த்தகத்திற்கு ஒரு செலவாணி என்று இருந்த நிலைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு, இரண்டும் ஒன்றாக்கப்பட்டுள்ளது. இந்த எல்லா மாற்றங்களையும் ‘சோசலிச திட்டமிடல் அமைப்பே வழிநடத்துகிறது.’

இந்த மாற்றங்களைத் தொடர்ந்து நடந்திருக்கும் மாநாடு, கிடைத்த அனுபவங்களை பரிசீலித்துள்ளது. பொருளாதார வகைப்பட்ட 52 கொள்கை முடிவுகள் நினைத்த பலன்களை கொடுத்துள்ளன. 41 கொள்கை முடிவுகள் ஓரளவு பலன் கொடுத்துள்ளன. 12 கொள்கைகள் முடிவுகள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்று மாநாட்டு அறிக்கை கூறுகிறது. கொரோனா பெருதொற்றுக்கு நடுவிலும் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதை அறிக்கை காட்டுகிறது. அடிப்படைத் தேவைகள் மற்றும் சேவைகளுக்கு அதிக செலவு என்கிற நிலைமையை மாற்ற இன்னும் முன்னேற வேண்டியுள்ளது என்று சுயவிமர்சனமாகவும்  அது கூறுகிறது.

பொருளாதார நிலைமைகளை பரிசீலித்த மாநாட்டின் முதல் ஆணையத்திற்கு, பிரதமர் இம்மானுவல் மரி ரோக்ரஸ் தலைமையேற்றார். இதில்  319 செயல்முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. 2016 முதல் 2020 வரையிலான பணிகளை பரிசீலித்ததுடன், 2026 வரையிலான செயல்திட்டமும் நிறைவேற்றப்பட்டது.

முன்னணியினர் குறித்த கொள்கை

“ஒரு முன்னணி ஊழியருக்கு எப்படி தலைமையேற்பது என்பது மட்டும் தெரிந்தால் போதாது; நீடித்திருக்கும் சிக்கலான சூழலை எதிர்கொண்டு முறியடிக்கவும் தெரியவேண்டும். அதற்கான தைரியமும், அற்பணிப்பும், திட்டமிடலும் தீர்வும் இருக்க வேண்டும்.”

புரட்சிக்கு பின்னர் பிறந்தவர்கள் தலைமையேற்றிருக்கும் இந்தக் காலகட்டத்தில் முன்னணி பணியாற்றும் கம்யூனிஸ்ட் ஊழியர்களைக் குறித்த கொள்கையை இந்த மாநாடு விவாதித்திருக்கிறது. மிகுவெல் டியாஸ் கானல் அந்த அவைக்கு தலைமையேற்றார். ‘முன்னணிச் செயலாட்டாளராக வரக்கூடியவர் நல்லவராக மட்டும் இருக்கக் கூடாது, சிறந்தவர்களாக, மிகச் சிறந்தவர்களாக இருக்க வேண்டும்’ என்கிறார்.

கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர் கொள்கை அறிவியல் பூர்வமாக தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது. இன்னொரு தருணத்தில், அதனை விரிவாக பார்ப்போம்.

கியூப மக்களின் உயிரோட்டம் மிக்க கட்சியாக தொடர்ந்து வைத்திருக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்திருப்பதை புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. கட்சியில் 40 வயதுக்கு குறைவான முழுநேர ஊழியர்கள் 1,501 பேர் உள்ளனர். 54.2 % ஊழியர்கள் பெண்கள், 47.7 % பேர் கருப்பின அல்லது கலப்பு மண குழந்தைகள். நகராட்சி மற்றும் மாவட்ட செயலாளர்களில் 75 பேர் பெண்கள் (42%). 81 சதவீதம் கட்சி ஊழியர்கள் பல்கலைக்கழக படிப்பை முடித்தவர்கள். இளம் கம்யூனிஸ்ட் லீக் மூலமாக கட்சிக்கு வரும் ஊழியர்கள் தொடர்ந்து படிப்பது உறுதி செய்யப்படுகிறது. சிறப்புத் திறன் கொண்ட (புரொபசனல்) கட்சி ஊழியர்களில் குறிப்பிட்ட பகுதி (23.5%) இளம் கம்யூனிஸ்ட் லீக் மூலமாக வருகிறார்கள். கட்சி, அரசு மற்றும் நிர்வாக பொறுப்புகளில் கட்சியின் ஊழியர்கள் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படுவதில்லை, 76.5% பேர் ஒரே பொறுப்பில் 5 ஆண்டுகளுக்கு மேல் தொடரவில்லை. 6.9% பேர் மட்டுமே ஒரு குறிப்பிட்ட பொறுப்பில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கின்றனர்.

கியூபாவின் கடந்த காலம்

கியூபா, தனது வரலாற்றில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வந்திருக்கிறது. சோசலிச சோவியத் யூனியன் தகர்ந்தபோது, இரண்டு நாடுகளுக்குமான பொருளாதார ஒத்துழைப்பு தகர்ந்தது. இதனால் 20 ஆண்டுகளாக கியூபா பெற்றுவந்த நன்மைகளை இழந்தது. அன்னிய வர்த்தகம் 80 சதவீதம் வரை விழுந்தது. உற்பத்தி திறனை பயன்படுத்திக் கொள்வதில் 85% வீழ்ச்சி ஏற்பட்டது. அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 35% சரிந்தது.

1992 தொடங்கி 1996 வரையில் அமெரிக்கா தனது பொருளாதாரத் தடைகளை தீவிரமாக்கியது. இதனால் வர்த்தகமும், டாலர் பரிவர்த்தனையும் பாதிக்கப்பட்டது, நிரந்தரமாக கியூபாவின் 10 சதவீத உள்நாட்டு உற்பத்தி பாதிப்பிற்கு ஆளானது. ஆனால், இந்த நெருக்கடிக்கு கியூப கட்சி முன்கூட்டியே தயாராகியிருந்தது.

சோவியத் அரசின் ‘பெரெஸ்றோய்க்கா’ திட்டத்தை, கியூப தலைமை 1985களிலேயே நிராகரித்துவிட்டிருந்தது. கட்சிக்குள் நெறிப்படுத்தும் இயக்கத்தை வலிமையாக முன்னெடுத்திருந்தது. இது, அடுத்தடுத்த காலங்களில் வந்த நெருக்கடிகளை எதிர்கொள்வதில் கியூபாவிற்கு உதவியது. பொருளாதார முடிவுகள் அதீத மையப்படுத்துதலை மாற்றியமைத்திருந்ததும், நாட்டின் நிர்வாக கட்டமைப்பின் அளவு மற்றும் தோற்றத்தை மாற்றியமைத்தலையும் கியூபா முன்கூட்டியே செய்திருந்தது.

உள்ளூர் குழுக்களுக்கு புத்துயிர் கொடுத்ததுடன், பிராந்திய அளவிலும், தேசிய அளவிலும் பிரதிநிதிகளுக்கு நேரடி தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. சமூக, பொருளாதார கொள்கைகளை உருவாக்குவதில் மக்களின் பங்கேற்பு  உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக ஆற்றல் உற்பத்தியும் விநியோகமும் பரவலாகியது. உயர் தொழில்நுட்பம், நகர்ப்புற வேளாண்மை, அடிப்படை உணவுப் பொருள் உற்பத்தி ஆகியவை மேம்பட்டன. 1993-94களில், செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து, பல கட்ட விவாதங்களுக்கு பின் கியூபா தனது பொருளாதாரம் அந்நிய மூலதனத்திற்குத் திறக்கப்பட்டது. பாதிக்கும் அதிகமான அரசு நிலங்கள் கூட்டுறவு உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டன. நிலம் கொடுத்து முடிவெடுப்பதற்கான அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டது. சுற்றுலாத் துறையில் நுழைந்த அன்னிய மூலதனத்திற்கு, உள்ளூர் வள ஆதாரமும் குறிப்பிடத்தக்க அளவில் கிடைத்ததை ஒட்டி, பொருளாதார மீட்சி வேகமெடுத்தது. நிக்கல் சுரங்கங்களை நோக்கி சீனா, பிரேசில் மற்றும் வெனிசுலா நாட்டு நிறுவனங்களும் முதலீடு செய்தன.

இவ்வாறாக, தனது சொந்த பலத்தையும், பலவீனங்களையும் கணக்கில் கொண்டு கியூபா சோசலிச பாதையில் முன் நோக்கி பயணிக்கிறது.

கட்சியே வழிநடத்துகிறது

கட்சிதான் மக்களின் பாதுகாவலன்; மக்களின் துணை; மக்களின் நம்பிக்கை. பாதுகாவலர்களை கொண்ட அமைப்பு என்பது அடிப்படையானது. புரட்சிக்கு எது பாதுகாப்பை தருகிறது? கட்சிதான். புரட்சியை நிரந்தரப்படுத்துவது எது? புரட்சிக்கு எதிர்காலம் தருவதும், புரட்சிக்கு உயிர் கொடுப்பதும், புரட்சிக்கு எதிர்காலத்தை உறுதி செய்வதும் கட்சியே. கட்சி இல்லாமல் புரட்சி இருக்காது. என்றார் ஃபிடல் காஸ்ட்ரோ (1974).

கியூபாவில் ஒரு சமூக அமைதியின்மையை உருவாக்கிட எதிரிகள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள் என்ற எச்சரிக்கை உணர்வு அவசியம் என்று நினைவூட்டியுள்ளது இந்த மாநாடு. கியூபா ஒரு மிகச் சிறிய பொருளாதாரம். தனக்கென எந்த உற்பத்தியை மேற்கொண்டாலும், அதற்காக அது பல நாடுகளில் இருந்து தொழில்நுட்பமும், கச்சாப் பொருட்களும் பெற்றாக வேண்டும். மேலும், தன் நாட்டின் தேவை போக அதிகமான உற்பத்தியை வேறு நாட்டு சந்தைக்கு அனுப்பியாக வேண்டும். எனவே நிதி மூலதனமும், உலகச்சந்தையும் தவிர்க்கக்கூடியவை அல்ல. சுற்றுலாவும், நவீன தொழில்நுட்பத்தின் பெருக்கமும் அதிகரிக்கும்போது, அது கியூப குடிமக்களுடைய வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும். அதற்கேற்ப மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் கடமையும் கட்சியிடம் உள்ளது.

இதையெல்லாம் உணர்ந்த மாநாடாகத்தான், ‘தொடர்ச்சியின்’ மாநாடு அமைந்திருப்பதை காண்கிறோம். சமூக ஊடகங்களின் வளர்ச்சி வரைக்கும் அனைத்தும் அங்கே விவாதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் ஒற்றுமையை சீர்குழைத்து, அமைதியின்மையை உருவாக்க முன்னெடுக்கும் ஏகாதிபத்திய முயற்சிகள் வீழ்த்தப்படும் என்பதை இந்த மாநாடு மிகத் தெளிவாகவே அறிவித்தது.

மிகுவேல் டியாஸ் கேனல் இவ்வாறு பேசினார், “கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றை இரண்டே வரிகளில் சுருங்கக் கூறுவதானால், ‘மக்களும் ஒற்றுமையும்’ எனலாம். அதனால்தான் கியூபாவின் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் கட்சியாக இருந்ததே இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியானது… பெரும் அநீதியும், ஏற்றத்தாழ்வும் நிலவிய நாட்டின் நிலைமையை மாற்றியமைக்க விரும்பிய மனித நேயசக்திகளின் அனைவரின் ஒற்றுமையில்தான் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. ஒரு கட்சியின் உறுதிப்பாடு என்பது நாட்டின் சக்தியை வளர்ச்சியை நோக்கி திரட்டி செலுத்தும் தன்மையே ஆகும்.

“அவர்கள் தொடர்ந்து முன் செல்கின்றார்கள்.”

***

சோஷலிச கியூபாவும் கொரோனா பெருந்தொற்றும்

பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா

உலகம் முழுவதும் இன்று பெரும்பாலான நாடுகள் கொரோனா பெரும் தொற்று, அதனை எதிர்கொள்வதற்கான யுக்திகளில் ஒன்றாக ஊரடங்கு, அதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகள், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களும் வருமானமும் சிதைந்துள்ள அவலநிலை, மக்கள் மத்தியில் பரவிவரும் அச்சம் என்று தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. இத்தகைய அவநம்பிக்கை நிறைந்த சூழலில் சோசலிஸ சக்திகள் மட்டுமே மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றன. 

குறிப்பாக, பெரும்தொற்றை எதிர்கொண்டு மக்களை பாதுகாப்பதில் சிறப்புற செயல்படும் அரசுகளாக சோசலிச அமைப்பை கொண்டுள்ள மக்கள் சீனம், வியத்நாம், கியூபா, இவை தவிர இந்திய முதலாளித்துவ அமைப்புக்குள் இருந்துகொண்டே, மார்க்சிஸ்டுகள் தலைமையில் இயங்கிவரும் இடது ஜனநாயக மாநில அரசை கொண்டுள்ள இந்திய மாநிலமான கேரளம் ஆகியவை உலகம் முழுவதும் பாராட்டப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் பெரும்தொற்றை எதிர்கொள்வதிலும் மக்களை பாதுகாப்பதிலும் கியூபாவின் வெற்றிகரமான அனுபவத்தை சுருக்கமாக பதிவிடுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

கியூபா என்ற சிவப்பு நட்சத்திரம்

கியூபா நாடு அமெரிக்க ஐக்கிய நாட்டின் தெற்கு மாநிலமான ஃப்ளோரிடாவில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 1492 இல் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கொலம்பஸ் என்ற மாலுமியால் முதலில் ஐரோப்பியர்களுக்கு கியூபா அறிமுகமானது. 1711 இல் ஸ்பெயின் அரசின் படைகள் கியூபாவை தமது காலனி நாடாக ஆக்கிக் கொண்டன. கியூபாவின் மக்கள் கடும் சுரண்டலுக்கு உள்ளாக்கப் பட்டனர். 

அடுத்து வந்த பல பத்தாண்டுகளில் ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து  லட்சக்கணக்கான கருப்பின மக்கள் அடிமைகளாக கைப்பற்றப்பட்டு, இந்த நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு அவர்களது உழைப்பும் மிகக் கடுமையாக சுரண்டப்பட்டது. கியூபா மக்கள் ஸ்பெயின் அரசின் காலனி ஆதிக்கத்திற்கு எதிராகவும் கொடிய காலனீய முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராகவும் மீண்டும் மீண்டும் கிளர்ந்து எழுந்தனர்.

1898 இல் அமெரிக்க வல்லரசு கியூபாவை கைப்பற்றியது. 1902 இல் கியூபாவிற்கு சுதந்திரம் அளிப்பதாக அமெரிக்க வல்லரசு அறிவித்த போதிலும் அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவின் காலனி போல் தான் கியூபா இருந்தது. 1959 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கியூபாவில் இருந்த அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரி பாதிஸ்தா தலைமையிலான அரசு ஃபிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான கியூப விடுதலைப் படையால் விரட்டி அடிக்கப்பட்ட பின்புதான் கியூபா உண்மையில் சுதந்திரம் பெற்றது. 

பல ஆண்டுகளாக அன்றைய கியூபாவின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து, ஜனநாயக ஆட்சியை அமைக்க ஃபிடெல் தலைமையில் நடந்து வந்த ஆயுதம் தாங்கிய போராட்டம் 1959 இல் வெற்றி பெற்றது. மிக விரைவில் கியூபாவின் ஜனநாயக புரட்சி சோசலிச தன்மை கொண்டது என்பது தெளிவானது. கியூப கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் ஃபிடெல் அவர்களை தலைவராக கொண்ட ஆட்சி அமைக்கப்பட்டது.

அமெரிக்க அரசு கியூபாவின் புதிய, சுயேச்சையான ஆட்சியை கவிழ்க்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக கியூபாவின் சோசலிச ஆட்சியை அழிப்பதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. கியூபாவிற்கு எதிராக உணவு மற்றும் மருந்து விற்பனையைக் கூட தடுக்கும் கொடிய, முழுமையான வர்த்தக, தொழில்நுட்ப, பொருளாதார தடையை அறுபது ஆண்டுகளாக அமெரிக்க வல்லரசு அமலாக்கி வருகிறது. தனது நட்பு நாடுகளையும் இதனை கடைப்பிடிக்குமாறு நிர்ப்பந்திக்கிறது. 

கியூபாவை அழிக்க மட்டுமின்றி, கியூபாவின் சோசலிச புரட்சியின் மகத்தான தலைவர் ஃபிடெல் காஸ்ட்ரோவை கொலை செய்யவும் பலமுறை அமெரிக்க அரசு முயன்றது. ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதிகள் அனைத்தையும் முறியடித்து, இன்று உலக நாடுகளில் பெரும்பான்மை நாடுகளின் ஆதரவை பெற்று, மக்கள் நலன் பேணுகின்ற அரசு என்ற பெருமையையும் கியூபா பெற்றுள்ளது. குறிப்பாக, மத்திய, தென்அமெரிக்க நாடுகளில் உள்ள அனைத்து முற்போக்கு சக்திகளுக்கும் எழுச்சிதரும் எடுத்துக்காட்டாக கியூபா திகழ்கிறது.

1959 இல் கியூபா மிகவும் பின்தங்கிய, கொடிய சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், பரவலான வறுமை ஆகியவற்றை இலக்கணமாக கொண்ட ஒரு சமூகமாக இருந்தது. இன்று சோசலிச கியூபா அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் மக்கள் நல்வாழ்வு, அனவைருக்கும் வேலை, நிறவெறி ஒழிப்பு, சமூக பொருளாதார சமத்துவம் ஆகிய இலக்கணங்களைக் கொண்ட நாடாக உலக அரங்கில் மிளிர்கிறது. 

கியூபாவின் மனிதவள குறியீடுகள் முன்னணி முதலாளித்துவ நாடுகளுக்கு சமமாகவும் சில அம்சங்களில் அவற்றை விட சிறப்பாகவும் உள்ளன. எடுத்துக்காட்டாக, ஆரோக்கியக் குறியீடுகளில் முக்கியமான ஒன்று சேய் இறப்பு விகிதம் என்பதாகும். உயிருடன் பிறக்கும் ஆயிரம் சேய்களில் ஒரு வயது நிறைவு அடையும் முன் இறந்துவிடும் சேய்களின் எண்ணிக்கைதான் சேய் இறப்பு விகிதம் என்று அழைக்கப் படுகிறது. இது கியூபாவில் வெறும் 4 என ஆகியுள்ளது. இந்த விகிதம் 1959 இல் கிட்டத்தட்ட 50 என்றிருந்தது. அமெரிக்காவில் இந்த விகிதம் இன்றும் கியூபாவை விட அதிகமாக உள்ளது. வேறு பல பணக்கார நாடுகளுக்கும் இது பொருந்தும். 

இந்தியாவில் சேய் இறப்பு விகிதத்தின் சராசரி 2018 இல் 32 ஆக இருந்தது. சில மாநிலங்களில் இன்னும் அதிகம். எடுத்துக்காட்டாக, மத்திய பிரதேசத்தில் கிராமப் புறங்களில் இது 52 ஆக இருந்தது. ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்று இதனை எடுத்துக் கொள்ளலாம். சராசரி ஆயுட்காலம், சராசரி கல்வி பயிலும் ஆண்டுகள், எழுத்தறிவு விகிதம், இந்த குறியீடுகளில் பாலின வேறுபாடு மிக்குறைவாக இருத்தல், நகர  கிராம இடைவெளி மிககுறைவாக இருத்தல் – இவை அனைத்திலும் கியூபாவின் சாதனைகளை காணலாம். (இந்தியாவில் இத்தகைய சாதனைகளை கேரள மாநிலத்தில் மட்டுமே பார்க்க முடியும்.) 

பொதுசுகாதாரத்தை பேணிக்காப்பதிலும் அனைத்து மக்களுக்கும் கல்வியையும் மக்கள் நல்வாழ்வையும் உறுதி செய்வதிலும் கியூபா உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு வழிகாட்டியாக உள்ளது. இப் பின்புலத்தில் கியூபா கொரோனா தொற்றை எதிர்கொண்ட விதத்தை பார்க்கலாம்.

கியூபாவும் கொரோனா பெரும் தொற்றும்

உலக சுகாதார அமைப்பு கொரோனா பெரும் தொற்றின் புதிய குவி மையம் மத்திய, தென் அமெரிக்கா  என்று அறிவித்துள்ளது. ஆனால் 2020 ஏப்ரல், மே  ஆகிய இரு மாதங்களில் கியூபாவில் புதிதாக தொற்று உள்ளவர் என அறியப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக பிரிட்டிஷ் பத்திரிக்கையான கார்டியன் ஜூன் 7 தேதியிட்ட ஒரு கட்டுரையில் கூறுகிறது. அதன்பின் நிலமை தொடர்ந்து சீரடைந்து வருகிறது.

தொற்றை எதிர்கொள்ள கியூபா அரசும் மக்களும் தயார் நிலையில் இருந்தனர். மார்ச் 24 கியூபாவில் 48 நபர்கள் தொற்று கொண்டிருந்தனர். இந்த எண்னிக்கை வேகமாக அதிகரித்தது. மார்ச் 29 இல் 119 ஆகியது, ஏப்ரல் 14 இல் ஏழு மடங்காக, 814 ஆக உயர்ந்தது. அச்சமயம் 24 பேர் இறந்திருந்தனர். அடுத்த இரு மாதங்களில் அரசும் மக்களும் இணைந்து மேற்கொண்ட, திட்டமிட்ட, கட்டுப்பாட்டுடன் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஜூன் 7 கணக்குப்படி அன்றுவரை மொத்தம் 2,173 நபர்களுக்கு தொற்று ­உறுதி செய்யப்பட்டிருந்தது. 83 நபர்கள் இறந்திருந்தனர். 19 நாட்கள் கழித்து, ஜூன் 26 கணக்குப்படி கியூபாவில் அன்றுவரை மொத்தம் 2,325 நபர்களுக்கு தொற்று உறுதியாகியிருந்தது. மொத்த இறந்தவர் எண்ணிக்கை இரண்டு கூடி 85 ஆகியிருந்தது. கடைசியாக ஜூலை 3 தகவல்படி அன்றுவரை மொத்தம் தொற்று உறுதியானவர் 2,353, இறந்தவர் 86. தொற்றின் பரவல் வேகமும் இறப்பு விகிதமும் வேகமாக குறைந்துள்ளன. கியூபாவின் மக்கள் தொகை 2018 இல் 1.13 கோடியாக இருந்தது. இந்த விவரங்கள் அடிப்படையில் கொரோனா பெரும் தொற்றை கியூபா திறமையாகவும், இயன்ற அளவிற்கு குறைந்த உயிர் இழப்புடனும் எதிர்கொண்டுவருகிறது என்று கூறலாம். இதற்கு பின்புலமாக உள்ளது சோசலிச கியூபாவின் மக்கள் நல்வாழ்வு கட்டமைப்பும் அரசின் கொள்கை சார்ந்த அணுகுமுறையும் ஆகும்.

கியூப புரட்சி 1959இல் வெற்றி பெற்ற நாளில் இருந்தே மக்களின் நலன் சார்ந்து செயல்படுவதை அடிப்படை கொள்கையாக அங்குள்ள சோசலிச அரசு கடைப்பிடித்துவருகிறது. கல்வி, ஆரோக்கியம் ஆகிய இரண்டு அம்சங்களுக்கும் அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளது. 1978ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அன்றைய கஸக்ஸ்தான் குடியரசின் ஆல்மா ஆடா என்ற நகரில் நடைபெற்ற சர்வதேச மாநாடு ‘அனைவருக்கும் ஆரோக்கியம்’ என்ற முழக்கத்தை, இலக்கை முன்வைத்தது. 

சோசலிச கியூபா அப்பொழுதே அந்த இலக்கை நோக்கி கணிசமாக முன்னேறியிருந்தது. அதற்குப் பின் கியூபா அந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்ட முதல்நிலை ஆரோக்கிய வசதி (primary health care)  என்பதையும் நோய் தடுப்பு ஆரோக்கிய அணுகுமுறை (preventive health care) என்பதையும் தாரக மந்திரங்களாக எடுத்துக்கொண்டு மக்கள் வாழும் ஒவ்வொரு பகுதியிலும் போதுமான மருத்துவர், செவிலியர், மருத்துவ கட்டமைப்பு இருத்தல், குடும்ப மருத்துவர் , குடும்ப செவிலியர் என்ற அணுகுமுறை, ஒவ்வொரு குடும்பத்தையும் சந்தித்து அவர்களது ஆரோக்கியத் தேவைகளை கண்டறிந்து நோய் தடுப்பு மற்றும் மக்கள் நல்வாழ்வு சேவைகளை அமைத்துக்கொள்ளுதல் என்று மக்களின் ஆரோக்கியம் தொடர்பான பல அம்சங்களையும் முழுமுனைப்புடன் முன்னெடுத்துச்சென்றது.  

இந்த வரலாற்றுப் பின்னணியில் இன்று கியூபாவில் வலுவான ஆரோக்கிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 2019 கணக்குப்படி கியூபாவில் 1000 மக்களுக்கு 9 மருத்துவர்கள் உள்ளனர். (இந்தியா: 1.34). 2014 ஆம் ஆண்டு விவரப்படி, கியூபாவில் 1000 மக்களுக்கு 5.2 மருத்துவமனை படுக்கைகள் உள்ளன. (இந்தியா, 2019 : 0.55) இந்த நிலை பணக்கார நாடுகளில் கூட இல்லை.  குறிப்பாக, கியூபாவில் ஆரோக்கிய அமைப்பு மக்களுடன் மிக நெருக்கமாக உள்ளது. குடியிருப்புப் பகுதிகள் அனைத்திலும் செயல்படும் “புரட்சி பாதுகாப்பு அருகமை அமைப்புகள்” இத்தகைய ஒருங்கிணைப்புக்கு உதவுகின்றன. 

இதனால் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் மக்கள் வாழும் பகுதிகளில் எழும் பொழுதே கண்டறிந்து எதிர்கொள்ள முடிகிறது. கொரோனா பெரும் தொற்றை எதிர்கொள்வதில் முக்கியம் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தும் அனைத்து அம்சங்களையும் கியூபாவால் திட்டமிட்ட முறையில் அமலாக்க முடிந்திருக்கிறது. 

தொற்று உள்ளதா என்று விரிவான பரிசோதனைகள் மூலம் விரைவில் அறிதல், தொற்று உள்ளவர் என்று அறியப்படுபவர் யாருடன் எல்லாம் தொடர்பு கொண்டிருந்தார் என்பதையும் விரைவில் கண்டறிந்து அவர்களையும் பரிசோதித்து, தனிமை படுத்துதல், தக்க சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட உரிய நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொண்டு தொற்றின் பரவலை கட்டுப்படுத்துவதில் கியூபா சிறப்புற செயல்பட்டுள்ளது.

இதற்கு ஒரு முக்கிய காரணம் ஆரோக்கியம் தொடர்பான மனிதவளம் திட்டமிட்ட அடிப்படையில் தொலைநோக்குடன் போதுமான அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் கியூபா நாட்டில் மேலோங்கியுள்ள சமூக விழுமியங்கள் ஆரோக்கியத்தை மனித உரிமை எனக் கருதுகின்றன. (கியூபாவின் சோசலிச அரசியல் சாசனம் இதை உறுதிபடக் கூறுகிறது.)­ கியூபாவின் மருத்துவர்களும் செவிலியர்களும் லாப நோக்கத்தால் உந்தப்பட்டு செயல்படுவதில்லை. மாறாக, மக்கள் நலம் பேண அவர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். 

இன்று உலகின் பல நாடுகளிலும் அவர்கள் சேவையை அரசுகள் நாடுகின்றன. மிகுந்த சோசலிச சர்வதேச உணர்வுடன் கியூபா பல ஆப்பிரிக்க, மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கு இந்த வகையில் உதவுகிறது. கொரோனா தொற்று காலத்திலும் கியூபாவின் உதவி பல நாடுகளுக்கு – மக்கள் நலன் கருதி, கியூபாவிற்கு எதிராக செயல்படும் பிரேசில் நாட்டுக்குக் கூட – தரப்படுகிறது. இக்காலத்தில்  உலகின் மிகவும் பணக்கார ஏழு நாடுகளில் ஒன்றான இத்தாலி நாடு கூட கியூபாவின் உதவியை பெற்றுள்ளது.

கியூபாவில் கொரோனா பெரும் தொற்றை எதிர்கொள்வதில் பல பத்தாயிரம் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் படிக்கும் மாணவர்கள் களம் இறக்கப்பட்டு, வீடு வீடாக சென்று பணிபுரிகின்றனர். நமது நாட்டிலும் மனித நேயம் மிக்க மருத்துவர்களும் செவிலியர்களும் உள்ளனர். ஆனால் ஆரோக்கியம் என்பது தனியார்மயம், வணிகமயம் என்ற பாதையில் பயணித்துள்ளதால், மக்களை பாதுகாப்பது பெரும் சவாலாகியுள்ளது.­ 

மிக முக்கியம் என்று உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் வலியுறுத்தும் பொதுசுகாதார நடவடிக்கைகளை கியூபா திட்டமிட்டு அமலாக்குகிறது. அதற்கான கட்டமைப்பை கியூபா தொடர்ந்து உருவாக்கியுள்ளது மட்டுமின்றி, சோசலிச அரசியல் தின்ணமும் கியூபா கொரோனா பெரும் தொற்றை எதிர்கொள்வதில் முக்கிய பங்கு ஆற்றியுள்ளது. நாடு முழுவதும் உயிர்ப்புடன் செயல்படும் மக்களின் ஜனநாயக அமைப்புகள் இப்பணியில் முக்கிய பங்கு ஆற்றியுள்ளன. இறுதியாக, கியூபா உறுதியான அறிவியல் அடிப்படையில் இப்பிரச்சினையை  எதிர்கொண்டுவருவது அதற்கு மேலும் வலு சேர்க்கிறது.

கியூபா: ஜனநாயகத்தின் உயர்ந்த பரிணாமம் !

பிடல் காஸ்ட்ரோ செத்துக்கொண்டிருக்கிறார் என்ற தலைப்பில், பிடல் ஒரு கட்டுரையை எழுதினார். அவர் எழுதி வரும் பிரதிபலிப்புகள் “ரெப்லெக்ஸன்” என்ற தொடர் கட்டுரைகளில் ஒன்றாக அது அமைந்தது. தன் ஓய்வுக்காலம் குறித்து விளக்கிய அவர், தான் மரணிக்கவுள்ளதாக ஏகாதிபத்திய ஊடகங்களின் வெளியான பொய்ச் செய்திகளுக்கு பதிலடி கொடுத்தார். மக்களின் மீதும், கட்சியின் மீதும் கொண்ட நம்பிக்கையும், முதலாளித்துவ அமைப்பு முறை மீது, தெளிந்த ஆய்வின் அடிப் படையில் கொண்டிருந்த விமர்சனங்களின் காரணமாகவும்தான், அவர் அத்தனை தீர்க்கமாக செயல்பட முடிந்தது. அக்கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டார், “மக்கள் கற்றுக் கொண்டுள்ளனர், எதிர்ப்பு வலுப்படுகிறது, முதலாளித்துவமானது, தொடர்ந்து அதிகரித்துவரும் நெருக்கடியை எதிர்கொள்கிறது; சமமின்மையையும், நீதியற்ற தன்மையும் கொண்ட ஒரு உற்பத்தி அமைப்பை பொய்களோ, அடக்குமுறைகளோ புதிய ஆயுதங்களோ வெகுகாலம் பொத்திப் பாதுகாத்திட முடியாது”

புதிய குடியரசுத்தலைவர் தேர்வு:

மக்களே முதன்மையானவர்கள் என்பது சோசலிசத்தின் பயணத்தில் எட்ட முடிந்த இலக்கு. அதற்கான அடையாளமாக நிமிர்ந்து நிற்கிறது கியூபா. 1959 ஆம் ஆண்டு புரட்சிin வெற்றிக்குப் பின், கியூபா குடியரசின் ஜனநாயக கட்டமைப்பு, ஒவ்வொரு கால சூழலுக்கும் ஏற்ப பரிணமித்துக் கொண்டேயிருக்கிறது. அதன் சமீபத்திய மாற்றங்களிலும் அது வெளிப்படுகிறது.

கியூபாவின் குடியரசுத்தலைவராக மிகுயல் டியாஸ் கேனல் (வயது 58) தேர்வு செய்யப்பட்டுள்ளார். கியூபா புரட்சிக்கு பின்னர் பிறந்த அவர் ஒரு பொறியியல் பட்டதாரி. ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கினார். 1994 ஆம் ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு நிலைகளில் பணியாற்றினார். 2013 ஆம் ஆண்டு முதல் துணை குடியரசுத்தலைவராக செயல்பட்டுவந்தார். தற்போது அந்த நாட்டின் உயரிய பொறுப்புக்கு தேர்வாகியுள்ளார். இது மட்டுமல்ல, நாம் கவனிக்க வேண்டிய பல முக்கியமான செய்திகளும் உள்ளன.

நாடாளுமன்ற அவையின் சேர்மானம்:

கியூபாவில் குடியரசுத்தலைவர் நேரடியாக தேர்வு செய்யப்படுவதில்லை. கியூபா நாடாளுமன்றத்தின் 605 பிரதிநிதிகள் ரகசிய வாக்களிப்பதன் மூலம் தேர்வு செய்யப்படுகிறார். அவரே குடியரசின் தலைவராகவும், அரசின் தலைவராகவும் செயல்படுவார். அதாவது ஒருவர் முதலில் கியூபா நாடாளுமன்றத்திற்கு மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படவேண்டும். பின்னர் அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களால் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். இவ்வகையில் அவரிடமே அனைத்து அதிகாரங்களும் குவிவதில்லை. நாடாளுமன்ற அவையே முதன்மையானதாகிறது.

அத்தகைய நாடாளுமன்ற அவையில் யார் இடம்பெற்றிருக்கிறார்கள்? என ஆராயும்போது, அது அந்த நாட்டின் இனம் மற்றும் சமூக பன்முகத்தன்மையை காட்டுவதாக அமைந்துள்ளது. நாடுமுழுவதும் நடைபெற்ற தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் 85 ஆகும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் சுமார் 50 சதவீதம்பேர் கம்யூனிஸ்ட் கட்சி அல்லது கம்யூனிஸ்ட் இளைஞர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. 53 சதவீதத்திற்கும் அதிகமான அவை உறுப்பினர்கள் பெண்கள் ஆவர் (322). 56 சதவீதம் பேர் நாடாளுமன்றத்திற்கு முதல் முறையாக தேர்வாகிறார்கள். அவர்களின் சராசரி வயது 49. 18 – 35 வயதுக்கு உட்பட்டவர்கள் 80 பேர்/ 90 சதவீதம் பேர் கியூபா புரட்சியின் வெற்றிக்குப் பின்pu பிறந்தவர்கள். 40 சதவீதம் பேர் கருப்பு அல்லது கலப்பு வழி வந்தவர்கள். அவையின் நாயகர் ஒரு கருப்பர். துணை குடியரசுத் தலைவரான அனா மரியா மாரி மசடோ ஒரு பெண். நாடாளுமன்ற செயலகமும் மிரியம் பிரிடோ என்ற பெண் தலைமையில் செயல்படுகிறது.

சில பொதுவான புரிதல்களும் உண்மையும்:

1959 ஆம் ஆண்டுக்கு பின்னர் கியூபா கண்டுள்ள குடியரசுத்தலைவர்களின் எண்ணிக்கை பலரும் அறியாதது. இதுவரையில் 5 குடியரசுத் தலைவர்கள் அங்கே இருந்துள்ளார்கள். முதல் குடியரசுத் தலைவர் மானுவெல் உருத்தியா. 7 மாதங்கள் அவர் பதவியிலிருந்தார். அவரைத் தொடர்ந்து 1976 ஆம் ஆண்டுவரையில் 17 ஆண்டுகளுக்கு ஓஸ்வலொடோ டோர்டிகோஸ், குடியரசுத் தலைவராக இருந்தார். பின்னர் பிடல் காஸ்ட்ரோ 1976 முதல் 2006 ஆம் ஆண்டு வரையி்ல் 30 ஆண்டுகள் குடியரசுத்தலைவர் பொறுப்பை வகித்தார். அவர் ஓய்வுபெற்ற பின்னர் ரால் காஸ்ட்ரோ இடைக்காலப் பொறுப்பேற்றார். அவரும் சுமார் 12 ஆண்டுகள் பதவிவகித்தார். அக்காலகட்டத்தில் குடியரசுத்தலைவராக ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை (அதாவது 10 ஆண்டுகள்) தேர்ந் தெடுக்கப்படலாம் என முடிவு செய்யப்பட்டது.

கியூபாவில் அனைவரும் கம்யூனிஸ்டுகள், அல்லது பெரும்பான்மை கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் என்று கருத்து நிலவுகிறது. ஆனால், அங்கேயும் ஒருவர் கட்சியில் சேர, மற்றொரு கட்சி உறுப்பினரால் முன் மொழியப் பட்டு, பல கட்டங்களைத் தாண்டியே உறுப்பினராக முடியும். கியூபாவில் உள்ள 80 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களில் 8 லட்சம் பேர் மட்டுமே சுமார் 10 சதவீதம் மட்டுமே கட்சி உறுப்பினர்கள். இளைஞர் சங்க உறுப்பினர்களையும் சேர்த்தால் 15 சதவீதம் தான் ஆகிறது. 85 சதவீத வாக்காளர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் இல்லை.

கியூபாவில் ஒரே கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தலில் போட்டியிடுவதில்லை. அது எந்த வேட்பாளரையும் ஆதரித்து பிரச்சாரம் செய்வது இல்லை. கியூப அரசமைப்புச் சட்டத்தில் பிரிவு 5ன் படி, கியூபா கம்யூனிஸ்ட் கட்சி சமூகத்தையும், அரசையும் வழிநடத்தும் சக்தியாக அமைந்திருக்கிறது.

கியூபாவில் தேர்தல்கள் எப்படி நடக்கின்றன?:

மேற்கண்ட செய்திகளைப் படிக்கும் எவருக்கும் கியூபா தேர்தல்கள் எப்படி நடக்கின்றன? என்பதை அறிந்துகொள்ள விருப்பம் ஏற்படுவது இயற்கை. மக்கள் பங்கேற்பின் பல்வேறு வடிவங்கள் கியூபாவில் நிலவுகின்றன. அதில் தேர்தல் நடவடிக்கை மிக முக்கியமானது.

கியூபாவில் பொதுத் தேர்தல்கள் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நடத்தப்படும். மாநிலங்களவை, நகரசபை மற்றும் பிராந்திய சபை உறுப்பினர்கள் மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒவ்வொரு இரண்டரை ஆண்டுக்கும் அடிப்படை உறுப்பினர் தேர்வுக்கான தேர்தல்கள் நடக்கும்.

மாநிலங்களவை (The Council Of States) தேசிய தேர்தல் ஆணையத்தை உருவாக்கும், தேர்தல் ஆணையமானது மக்கள் மற்றும் சமூக இயக்கங்களை உள்ளடக்கிய வேட்பாளருக்கான ஆணையத்தை ஏற்படுத்தும்.

கியூபாவில் அருகமைச் சமூகங்கள்தான் தங்கள் வேட்பாளர்களை முன்மொழிகிறார்கள். பல்வேறு நிலைகளில் வேட்பாளர்கள் இவ்வாறு பெறப்பட்டு, ஒவ்வொரு தொகுதியிலும் 8 பேர் வரை போட்டியிடுகின்றனர். 50 சதவீதத்திற்கும் அதிகமாக ஒரு ஓட்டாவது பெறுகிறவர் வெற்றி பெற்றவராவார். அவர்தான் நாட்டின் அடிப்படைப் பிரதிநிதியாவார்.

கியூபாவில் மொத்தம் 12 ஆயிரத்து 752 பிரதிநிதி நகரசபைகளில் செயல்படுகிraargal. இவர்களே அடிப்படைப் பிரதிநிதிகள். இவர்களில் இருந்து பெறப்பட்ட பிரதிநிதிகள்தான் தேசிய நாடாளுமன்றத்தில் 50 சதவீதம் இடங்களை நிரப்ப வேண்டும். மேலும், 20 ஆயிரம் பேருக்கு ஒருவர் என்ற வகையில் உறுப்பினர் (டெபுடி) தேர்தல் நடத்த வேண்டும்.
வாக்காளர் பதிவு, தானியங்கியானது, பொதுவானது, கட்டற்றது.

தேர்தல் பிரச்சாரத்தை தேசிய தேர்தல் ஆணையமே மேற்கொள்ளும். எந்த வேட்பாளரும் தனக்கென பிரச்சாரம் செய்துகொள்ள முடியாது.

தேர்வு செய்யப்பட ஒவ்வொரு வேட்பாளரும் சரிபாதிக்கும் கூடுதலான வாக்குகளைப் பெற வேண்டும்.
தேர்தல் மையங்களும், வாக்குப் பெட்டிகளும் ஆரம்பநிலை மற்றும் இரண்டாம் நிலை கல்வி பயிலும் மாணவர்களால் பராமரிக்கப்படும்.

வாக்கு எண்ணிக்கையில் பொதுமக்கள், வெளிநாட்டினர் பங்கேற்கலாம்.

தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு எந்த பணப் பலனும் தரப்படாது.
வாக்களித்தல் கட்டாயமல்ல, ஆனால் அது கட்டற்ற ஒன்று, ரகசியமானது. 16 வயதைக் கடந்த கியூபா குடிmakkal அனைவரும் வாக்களிக்கலாம். 18 வயதுக்கும் மேலான யாரும் போட்டியிடலாம்.

இப்போது அரசமைப்புச் சீர்திருத்தங்கள் நடைபெற்றுவருகின்றன. அதில் ஒரு பகுதியாக நகர சபைகளின் எண்ணிக்கையைக் குறைத்து உள்ளாட்சிகளுக்கு அதிக அதிகாரங்களைக் கொடுக்கவேண்டும் என முடிவு செய்யப்பட் டுள்ளது.

மக்களே இறையாண்மை கொண்டவர்கள்:

கியூபா குடியரசில், மக்களே இறையாண்மை கொண்டவர்கள், அவர்களிடமிருந்துதான் அரசு, அதிகாரம் பெறுகிறது. இந்த அதிகாரமே மக்கள் சபைகளாலும், அரசுக் கருவிகளாலும் பயன்படுத்தப்படுகிறது. அரசின் கருவிகள் தங்கள் செயல்பாடுகளை சோசலிச ஜனநாயகத்தில் கீழ்க் காணும் இரண்டு அடிப்படையில் அமைத்துக் கொள்கின்றன.
1) மக்களே அரசுக் கருவிகள், அதிகாரிகள், சபை உறுப்பினர்கள், பிரதிநிதிகளைக் கட்டுப்படுத்துகிறார்கள்.
2) தங்கள் கடமைகளைச் செய்யத் தவறும் பிரதிநிதிகளின் அதிகாரம் எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெறப்படும்.
தேர்தல்கள் மட்டுமல்லாது, முக்கிய முடிவுகளை வெகுமக்கள் விவாதத்திற்கு உட்படுத்துவது, அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளை மக்களுக்கு கட்டுப்பட்டவர்களாக மாற்றுவது என்ற நோக்கிலும் கியூபாவின் ஜனநாயகம் இயங்குவதற்கு இதுதான் பின்னணி.

கியூபாவின் மாற்றங்களுக்கு அடிப்படை என்ன?

கியூபாவில் நடைபெற்றுவருபவை திடீர் மாற்றங்களா? கியூப வரலாற்றையும், கம்யூனிஸ்ட் கட்சியையும் உன்னிப்பாக கவனித்துவரும் எவரும் ஒரு தொடர்ச்சியை உணர்வார்கள். கியூபா மக்களின் கைகளில் அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரத்தைச் சேர்த்த முதல் நடவடிக்கையானது, புரட்சியைத் தொடர்ந்து நடைபெற்ற நிலச்சீர்திருத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகளாகும். அதன் காரணமாகத்தான் அமெரிக்கா, பொருளாதாரத் தடைகளை, அந்தச் சிறு நாட்டின் மீது திணித்தது.

அருகமைச் சமூகக் குழுக்கள் (Neighbourhood committees) அமைத்தது, எதிர்ப் புரட்சி தாக்குதல்கள் மற்றும் பயங்கரவாதத்திலிருந்து புரட்சியைப் பாதுகாக்கும் குழுக்கள் அமைக்கப்பட்டது ஆகியவை – உள்ளூர் அளவில் மக்களின் சுய ஆளுகையை உறுதிப்படுத்தின. ஒட்டுமொத்த மக்களும், புரட்சியைப் பாதுகாக்கும் பட்டாளமாகினர். இவையெல்லாம் அடுத்தடுத்து அங்கே நிகழ்ந்த ஜனநாயக நடவடிக்கைகளாகும்.
1961 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட, அனைவருக்கும் கல்விக்கான இயக்கம், எழுத்தறிவற்ற பெரும் எண்ணிக்கையிலான மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்தது.

1971 ஆம் ஆண்டு மக்கள் அதிகாரத்திற்கான தேசிய சபை உருவாக்கப்பட்டது. மக்கள் அமைப்புகள், கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசமைப்பு வல்லுனர்கள் இணைந்து புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கினார்கள். இதற்கான விவாதங்கள் நாடு முழுக்க பள்ளிகள், உழைக்கும் இடங்கள், நாட்டுப்புறப் பகுதிகளில் விவாதிக்கப்பட்டன. சுமார் 60 லட்சம் பேர் இந்த விவாதங்களில் பங்கெடுத்தார்கள்.

1980 ஆம் ஆண்டுகளில் நெறிப்படுத்தும் இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. அதிகாரத்துவத்தையும், ஊழலையும் எதிர்த்த போராட்டமாக அது அமைந்தது.
1994 ஆம் ஆண்டில் தொழிலாளர்களுக்கான நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது. அது ஆயிரக்கணக்கான தொழிலாளர்களிடம் விவாதித்தது. அதிலிருந்து (சோவியத் சிதறிய சூழலில்) அமெரிக்க பொருளாதார தாக்குதலை எதிர்கொள்ளும் திட்டங்களை உருவாக்கியது. பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள தொழிலாளி வர்க்கத்தை ஆலோசிப்பதே முதலாளித்துவ ஜனநாயகங்களில் இருந்து மாறுபட்ட ஒன்றுதான்.

ஊழலுக்கும், அதிகாரப் போக்கிற்கும் எதிராக:

2011-2012 கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு, மிக முக்கியமான ஒன்றாகும். அதை நோக்கி எப்படி கட்சி நகர்ந்தது என்பதைப் பார்க்க வேண்டும். 2005 ஆம் ஆண்டிலிருந்தே பிடல் காஸ்ட்ரோவும், ரால் காஸ்ட்ரோவும் ஊழலுக்கும், அதிகாரப் போக்குக்கும் எதிராக கருத்துக்களை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார்கள். நாட்டின் ஒவ்வொரு சிறு கிராமத்திலும், ஏன் தவறு நடக்கிறது என்ற விவாதத்தை அது தூண்டியது.
2007 ஆம் ஆண்டு நடைபெற்ற தொழிலகம், பள்ளி, வசிப்பிடம் சார்ந்த கூட்டங்களில் 51 லட்சம் பேர் பங்கெடுத்தனர். அதனைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கிய அறிக்கை நாடு முழுவதும் ஒரு லட்சத்து 63 ஆயிரம் கூட்டங்களில் சுமார் 89 லட்சம் பேரால் விவாதிக்கப்பட்டது.

அந்த விவாதங்களில் வெளிப்பட்ட கருத்துக்களை இவ்வாறு தொகுக்கலாம். “நாட்டின் பொருளாதாரமும், நிர்வாகமும் மென்மேலும் பரவலாக்கப்படவேண்டும், அதிகாரத்துவம் அகற்றப்படவேண்டும், நாட்டின் பொருளா தாரத் திட்டங்களில், சுகாதார சேவையில், பொருள் விநியோகத்தில் உள்ளூர் மக்களின் கருத்துகள் பெறப்படவேண்டும், வீடு, கார் விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும், சுய வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகள், கூட்டுறவு ஏற்பாடுகள் அதிகரிப்பு, தரிசுநில விநியோகம் ஆகியவை வேண்டும்”
ரால் காஸ்ட்ரோ இதுபற்றி பேசும்போது, “மென்மேலும் மையப்படுத்தப்பட்ட ஏற்பாடு, நமது பொருளாதாரத்தை வடிவமைக்கிறது, அதிலிருந்து மெல்ல மெல்ல ஒழுங்குடன் கூடிய அனைத்து தொழிலாளர்களின் பங்களிப்புடன் நமthu சமூக அமைப்பை பரவலாக்குகிறோம்” என்றார். மேலும், யாரிடமிருந்தும் காப்பியடிப்பதல்ல, நாமே நமக்கான மாதிரியை உருவாக்குதல் என அதனை குறிப்பிட்டார்.
கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் 7 வது கட்சி காங்கிரஸ் ஏப்ரல் 2016 அன்று நடைபெற்றது. அந்த மாநாட்டில் தான் அடிப்படையான அரசியல் பதவிகள் மற்றும் அரசு பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்ற கால அளவு, அடுத்தடுத்து இரண்டு ஐந்தாண்டுகளுக்கு மிகக் கூடாது என முடிவு செய்யப்பட்டது. மத்தியக் குழுவில் இடம்பெற அதிகபட்ச வயது 60 என்றும், அரசியல் தலைமைக்குழுவில் இடம்பெற அதிகபட்ச வயது 70 என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும், நாட்டின் அரசமைப்புச் சட்டத்தில் சில மாற்றங்கள் மேற்கொள்ளவும் முடிவு செய்தனர்.

புதிய தலைமுறைக்கு அதிகாரம் மற்றும் பொறுப்புகளை ஒப்புவிக்கும் பணி கியூபாவில் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. 8 வது மாநாட்டுக்கு (2021) முன் இப்பணிகள் நிறைவு பெற்றாக வேண்டும்.

மக்கள் பங்கேற்பும், விவாதங்களும்:

கியூபா ஜனநாயகத்தில் நாம் காண்கிற அற்புதம், அது வளர்த்தெடுக்கிற பொது விவாதக் கலாச்சாரம் ஆகும். 1976 ஆம் ஆண்டு முதலே, பிரதிநிதித்துவ ஜனநாயகம் அமலாக்கப்பட்ட காலத்தில் இருந்தே, முக்கிய ஆவணங்களும், முடிவுகளும் மக்கள் ஆலோசனைக்கு, அதன் உண்மையான பொருளில் விடப்பட்டு, முடிவுகளை மேற்கொள்வது நடந்துவருகிறது. இது எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ, அந்த அளவுக்கு அதிகாரத்துவமும், ஊழலும் பின்னுக்குச் செல்லும் என்கின்றனர். இதுபற்றி கியூபா அதிகாரி ஒருவர் கூறும்பொழுது “ஒரு குடிமகன் எப்போதும் தனது சமூகத்தில் தன் பங்கு என்ன என்பதை உணர்ந்து, முன்கையெடுப்பவராக இருக்க வேண்டும். அதற்கேற்ப குடிமைச் சமூகத்தின் பண்பாட்டை மாற்றுவது மிக அவசியம்” என்கிறார்.
இவ்வாறு அனைத்து முடிவுகளும் அங்கே எதிர்ப்பின்றி ஏற்கப்படுவதில்லை, குறையின்றி அமலாவதுமில்லை.

அரசு நிறுவனங்களில் பணியிடங்களைக் குறைக்க கியூபா அரசு முடிவு செய்தது. இந்த முடிவை அதிகாரிகள் மட்டும் எதிர்க்கவில்லை. தொழிலாளர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. அந்தக் கருத்துகளை உள்வாங்கி மக்கள் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இம்முடிவை சீராக அமலாக்குகின்றனர். ஒவ்வொரு நிலையும் பரிசீலிக்கப்படுகிறது. அதேபோல், ஓய்வுபெறுவதற்கான வயதை ஆண்களுக்கு 65 எனவும், பெண்களுக்கு 60 எனவும் உயர்த்த முடிவெடுத்த போது, அதனை தொழிலாளர் சபைகளில் விவாதித்தனர். 94 சதவீதம் அதாவது 30 லட்சத்து 86 ஆயிரம் பேர் அந்த விவாதங்களில் பங்கெடுத்தனர்.
கியூபா ஜனநாயகம் சந்திக்கும் மற்றொரு சவால், குடிமக்களுக்கு சரியான தகவல்களை கொண்டு சேர்ப்பதாகும். அதற்கேற்ற பத்திரிக்கைத்துறை செயல்பட வேண்டும். இதுகுறித்து கட்சியின் அரசியல் தலைமைக் குழு சமீபத்தில், அரசு நிர்வாகங்கள் குறித்த எந்த செய்தி மக்களுக்குச் செல்ல வேண்டும் என்பதை பத்திரிக்கையாளர்கள் ‘பிரத்யேகமாக’ முடிவு செய்ய கூடாது என்று தெரிவித்தது. அதிகாரிகளும், மேலாளர்களும் நினைப்பதுதான் செய்தி என்று ஆகிப்போனால் அது முடிவுகளை பாதிக்கும் என்பதைச் சொல்லவேண்டியதில்லை.

பொருளாதாரம் சார்ந்த சீர்திருத்தங்கள்:

மின்சக்திக்கான தேவையை மறுசுழற்சி அடிப்படையிலான வழிகளைப் பயன்படுத்தி பூர்த்தி செய்திட முயற்சிகள் எடுக்கப்பட்டன. கடன் சுமையைக் குறைக்கவும், அன்னிய நேரடி முதலீட்டைப் பெறவும் எடுத்த முயற்சிகளில் சில முன்னேற்றங்கள் உள்ளன. இதற்கான புதிய சிறப்பு சட்ட வழிமுறைகளின் அடிப்படையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதே சமயம் சோசலிச அரசு நிறுவனங்களை பலப்படுத்த எடுத்த முயற்சிகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவைதான் பொருளாதாரத்தின் அடிப்படையாக அமைந்திருக்கின்றன. உற்பத்தி, மற்றும் விநியோக முறையில் சமூகத் கட்டுப்பாடு என்ற கோட்பாடு பின்பற்றப்படுகிறது.

கியூபா சோசலிசத்தைக் கட்டமைக்கும் வரலாற்றுக் கட்டத்தில் உள்ளது. மாறுதலை நோக்கிய சிக்கலான நீண்ட நிகழ்வுப் போக்குகளை உருவாக்குகிறது அதற்கேற்ப அவ்வப்போது நிலைப்பாடுகளை மேற்கொள்ளும் கியூபா கம்யூனிஸ்ட் கட்சி சோசலிசம் என்பது அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை, சமூக நீதி நோக்கோடு உறுதி செய்யும் அமைப்பு என்ற நிலையில் நின்றே இயங்குகிறது.

கட்சிக்கும், புரட்சிக்குமான பொருளாதார மற்றும் சமூக வழிகாட்டுதல்களை 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றினார்கள். அடிப்படையான சமூக தேவைகளையும், கல்வி, சுகாதாரம், பண்பாடு, விளையாட்டு, சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சமூக நலன் சார்ந்த தேவைகளை இலவசமாகக் கிடைக்கச் செய்திடும் சமூகக் கொள்கை ஏற்கப்பட்டது.

இவ்வாறு ஒவ்வொரு நடவடிக்கைக்கும் முன்னர், அனைத்து கியூபா மக்களிடமும் ஆவணங்கள் அச்சிடப்பட்டு கையில் கிடைக்கச் செய்திட முழு முயற்சி எடுக்கப்பட்டது. அரசியல் மாற்றம் என்பது நபர்களை அடிப்படையாகக் கொண்டதல்ல, அனைத்து முடிவுகளும் கூட்டாக மேற்கொள்ளப்படவேண்டும் என்பதே கியூபா மாதிரியின் அடிப்படை. அதுதான் சுதந்திரத்தையும், இறையாண்மையையும் பாதுகாக்கும். சுதந்திரமும், சமூக நீதியும் எப்போதும் சோசலிசத் தோடு நேரடி பிணைப்பைப் பெற்றது, முதலாளித்துவத்தில், சமூக நீதிக்கு இடமில்லை.

தடைகளைத் தகர்த்து முன்னேறும் கியூபா!

கியூபாவின் ராணுவ சர்வாதிகாரி படிஸ்ட்டா அரசை வீழ்த்திடும் நோக்கில், மான்கடா படைத் தளத்தின் மீது ஃபிடல் தலைமையிலான புரட்சிகர குழு தாக்குதல் துவக்கிய நாள் 1953ம் ஆண்டு ஜூலை 26. 1959 ஜனவரியில் புரட்சி வெற்றி பெற்று, தன்னை சோசலிச நாடாக பிரகடனம் செய்த நாள் முதல், கியூபாவின் தேசிய விடுமுறை தினமாக ஜூலை 26, அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் அரசு அலுவலகங்களில் இனிப்பு வழங்கும் விழாவாக காண இயலவில்லை. இல்லம் தோறும் இனிப்பு தயாரிப்பையும், விநியோகத்தையும், கோலாகல கொண்டாட்டங்களையும், கியூபா முழுவதும் காணமுடிகிறது. ஒவ்வொரு அருகமைப் பகுதி (Neighbour hood) குடியிருப்புகளிலும், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் இடம் பெறுகிறது. புரட்சி குறித்து அறிந்த முதியவர் முதல் வரலாற்றைக் கற்றுக் கொள்ளும் குழந்தைகள் வரை அனைவரும் பங்கேற்பதாக இருக்கிறது.

”அக்னி குஞ்சொன்று கண்டேன்,
அதை ஆங்கோர் காட்டிடை,
பொந்தினில் வைத்தேன்,
வெந்து தனிந்தது காடு”

என்ற வரிகள் இந்தியாவின் விடுதலை வேட்கையைத் தூண்டும் வகையில், பாரதி பாடியது. அதேபோல் தென் அமெரிக்காவின் இன்றைய இடதுசாரிகள் தலைமையில் ஆட்சியமைப்பிற்கும், அரசியல் மாற்றங்களுக்கும், சின்னஞ்சிறிய கியூபா அக்னிக் குஞ்சாக இருந்து, பற்றி எரியும், அரசியல் ஈர்ப்பைக் கொண்டதாக வளர்ந்து வருகிறது.

கியூபா குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21 வது அகில இந்திய மாநாட்டு அரசியல் தீர்மானம், “பொருளாதாரத் தடைகளை திரும்பப் பெறாவிட்டாலும், கடந்த 50 ஆண்டுகளாக அமெரிக்கா பின்பற்றி வந்த கியூபாவைத் தனிமைப் படுத்துவது என்ற கொள்கையின் தோல்வியை, அமெரிக்க அதிபர் ஒபாமா பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்”, என்று கூறுகிறது. இப்படி மதிப்பீடு செய்ய காரணமாக, இரண்டு நிகழ்வுகள் நடந்துள்ளன. ஒன்று அமெரிக்கா கியூபாவுடன் தனது அரசு முறை உறவுகளை மீண்டும் ஏற்படுத்தும் என அறிவித்தது. இரண்டு 17 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க சிறையில், உளவாளிகள் என குற்றம் சுமத்தி, வேண்டுமென்றே சிறையில் அடைக்கப் பட்டிருந்த 5 கியூபர்களை அமெரிக்க அரசு விடுதலை செய்ய வேண்டிய நிர்பந்தம் உருவானதும் ஆகும்.
மேற்படி இரண்டு நிகழ்வுகளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீதான நிர்பந்தம் காரணமாக உருவானது. குறிப்பாக அமெரிக்காவிற்கு நெருக்கமாக அமைந்துள்ள, தென் அமெரிக்க நாடுகள் ஏற்படுத்திய தாக்கம் ஆகும். தென் அமெரிக்க நாடுகள் பற்றியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது அகில இந்திய மாநாட்டு அரசியல் தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது. ”ஹியுகோ சாவேஸ் மரணத்தால் ஏற்பட்ட பின்னடைவைக் கடந்து, வெனிசுவேலா மற்றும் இதர தென் அமெரிக்க இடதுசாரி அரசாங்கங்களும், நவீன தாராளமயம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றுக்குச் சவால் விடுத்து, தமது மாற்றுப்பாதையில் முன்னேற கடுமையாகப் போராடி வருகின்றன” என்பது தீர்மானத்தின் முக்கிய வரிகள். கியூபாவுடன் அமெரிக்கா தனது உறவை புதுப்பித்துக் கொள்ள முன் வந்தது, இந்தப் பின்னணியில் தான் எனத் தீர்மானம் சுட்டுகிறது. மேலும் தென் அமெரிக்காவின் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து அளித்த குரல், கியூபா தனிமைப் படுத்தப்படக் கூடாது என்பதாகவே இருக்கிறது. அமெரிக்காவால் அதைப் புறக்கணிக்க முடியவில்லை, என தீர்மானம் மதிப்பீடு செய்கிறது.

இது கியூபா மீதான மனிதாபிமான உணர்வு என்பது மட்டுமல்ல. கியூபாவின் அரசியல் மீதான நாட்டமும், கியூபா பின்பற்றி வரும் அரசியல், பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகள், மீதான ஈர்ப்பும் இணைந்த ஒன்று ஆகும்.

குரலின் வலிமை:
உலகறிந்த நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர், கேபரியேல் கார்சியா மார்க்வஸ், ஃபிடல் காஸ்ட்ரோ குறித்துக் குறிப்பிடும்போது, சொன்ன வார்த்தைகள் ”குரலின் வலிமை”. “காதுமடல்கள் சிலிர்க்க, தங்களின் அன்றாட வேலைகளை மறந்து, இந்தக் குரலின் வலிமையில் லயித்துப் போனார்கள், நேரம் செல்ல செல்ல, தங்களின் வேலைகளைச் செய்து கொண்டே, காதுகளை, ஃபிடல் காஸ்ட்ரோ விண் உரையின் மீது வைத்த வண்ணம் செய்து கொண்டிருந்தனர். அது ஏழு மணிநேர உரை, நாங்கள் தங்கியிருந்த ஸ்டார் ஹோட்டல் துவங்கி, தெருக்கள், வேலைத்தலங்கள், வீடுகள் என எல்லா இடங்களிலும், அந்த உரை ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. கைகள் வேலையில் இருந்தாலும், கவனம் ஒலித்த குரலில் இருந்ததைக் காண முடிந்தது”, என மார்க்வஸ் தன்னுடைய முதல் கியூப அனுபவம் பற்றி, இவ்வாறு எழுதியுள்ளார்.

இது ஏதோ ஒரு புகழ்ச்சிக்காக பேசப்பட்ட வார்த்தைகள் அல்ல. பேச்சு என்பது தனிச்சிறப்பாக இருந்தாலும், ஃபிடல் தனது, அரசியல் உறுதியைக் குறிப்பாக, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை வெகுமக்கள் முழுமையாகப் பங்கேற்கும் திருவிழாவாக, மாற்றிக் காட்டிய பெருமை கொண்டவர். உதாரணமாக 6 வயது சிறுவன் ஏலியன் கோன்சலாஸ், அவனுடைய பெற்றோரிடம் இருந்து பிரிந்து, அமெரிக்காவின் மியாமி யில் குட்டிவைக்கப்பட்டிருந்த விவகாரத்தில், கியூபா முழுவதும் நடந்த போராட்டத்தைக் குறிப்பிடலாம். இறுதியில் அமெரிக்காவின் நீதிமன்றம், ஏலியன் என்ற சிறுவனை அமெரிக்காவில் வைத்து இருக்கக் கூடாது. அவன் பெற்றோருடன் வசிக்க அனுமதிக்க வேண்டும், அதற்காக அவனை கியூபாவிற்கு அனுப்பி வைக்க வேண்டும், எனத் தீர்ப்பு வழங்கியது. ஒரு குழந்தைக்கும், தந்தைக்குமான உறவை அமெரிக்கா, கியூபாவிற்கு எதிராகப் பயன்படுத்த நினைத்தது, இறுதியில் கியூப மக்களின் போராட்டங்களால், அமெரிக்கா அம்பலப்பட்டு நின்றது. 2001 ம் ஆண்டில் அந்தச் சிறுவன் ஹவானா நகரத்திற்கு வந்த போது, ஃபிடல் தலைமையில் லட்சக்கணக்கான மக்கள் ஆர்ப்பரித்து வரவேற்றனர்.

மற்றொரு உதாரணம் எழுத்தாளர் மார்க்வஸ் குறிப்பிடுகிறார், “ஒருமுறை எங்களுடன், சேகுவேரா சுற்றி வளைத்துக் கொல்லப்பட்டது குறித்தும், மொண்டென் அரண்மனை முற்றுகையிடப்பட்டு, அலெண்டே கொல்லப்பட்டது குறித்தும் ஃபிடல் ஆற்றிய உரைகள் வரலாற்றுச் சொற்சித்திரங்கள்” என்கிறார். லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான, வெளிநாட்டுக்கடன் குறித்து ஃபிடல் ஆற்றிய உரை மிகச் சிறப்பு வாய்ந்தது. “இந்தக் கடன் திருப்பிச் செலுத்த முடியாதது. கடனால் லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள விளைவுகள், பொருளாதார வீழ்ச்சி, சமூக பொருளாதார பாதிப்புகள், சர்வதேச உறவுகளில் பின்னடைவு என சகல பரிமாணத்தையும் தொட்டு, லத்தீன் அமெரிக்க நாடுகளின் ஒற்றுமைக்கான வரைவாக நீட்சி பெற்று, வானத்தைப்போல் விரிந்து பரந்து, அந்த உரை அமைந்ததாகக் கூறுகிறார். அந்த விவாதங்களின் தொடர்ச்சியாக, ஹவானாவில் மிகப்பெரிய கருத்தரங்கம் நடத்தி, பல துறை நிபுணர்களைப் பங்கேற்கச் செய்து, அவரின் வரைவு தீர்மானத்தைக் காட்சிப்படுத்தினார். அதுவே பின்னாளில், பொலிவாரிய மாற்று வங்கி அல்லது, லத்தீன் அமெரிக்க கரீபியன் நாடுகளின் சமூகம் போன்ற அமைப்புகள் உருவாக அடித்தளம் இட்டது.

வக்கிரமான தடைகள்:
இன்று அமெரிக்க ஏகாதிபத்தியம், உலகின் எல்லாத் திசையிலும் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த ராணுவ நடவடிக்கைகளை கையாள்வதைப் பார்க்கிறோம். 100க்கும் மேற்பட்ட நாடுகளில், அமெரிக்கா தனது ராணுவ நிலைகளைக் கொண்டுள்ளது, என மைக் மார்க்வஸ், என்ற எழுத்தாளர் தனது ”பேரரசு என்பதன் பொருள் என்ன?” என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார். இந்நிலையில் கியூபா அமெரிக்காவின் மிக அருகில் உள்ள நாடு. அங்கு புரட்சி நடைபெற்றதையோ, தனது பொம்மை அரசான பாடிஸ்ட்டா விரட்டப்பட்டதையோ, சோசலிச அரசியல் கொள்கை உருவானதையோ அமெரிக்காவினால் அங்கீகரிக்க முடியவில்லை.

ஒரு சில தடைகள் அல்ல, ஏராளமான பொருளாதார தடைகளை அமெரிக்கா கியூபா மீது விதித்தது. அதாவது ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள், 10 சதம் அளவிற்கு அமெரிக்க உதிரிபாகத்தைக் கொண்டிருக்குமானால், அப்பொருள் கியூபாவிற்கு அனுப்பப்படக் கூடாது, என்ற தடையை அமெரிக்கா விதித்தது. சர்வதேச நாணய பரிவர்த்தனையாக அமெரிக்காவின் டாலர் இருந்தாலும், அதை கியூபா பயன்படுத்தக் கூடாது. லத்தீன் அமெரிக்க நாடுகளில், “கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, உலக வங்கி மற்றும் அமெரிக்க கண்டத்தின் வளர்ச்சி வங்கி ஆகியவையிடம் இருந்து கடன் பெற இயலாத, ஒரே நாடு கியூபா”, என ஃபிலிப் பெரஸ் ரோக, என்ற எழுத்தாளர், லத்தீன் அமெரிக்கா ஒரு பார்வை, என்ற இதழில் குறிப்பிடுகிறார்.

ஃபர்ஸ்ட் கரீபியன் இண்டர்நேசனல் பேங்க் மற்றும் இங்கிலாந்து வங்கியான பார்க்லேஸ் ஆகியவை, கியூபாவுடன் செய்து கொண்ட பலக் கோடி டாலர் ஒப்பந்தங்களை, அமெரிக்காவின் மிரட்டல் காரணமாக நிறுத்திக் கொண்டன. ஏனென்றால் சுவிட்சர்லாந்து நாட்டின், வங்கியான யுபிஎஸ், கியூபாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதற்காக, 100 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. ஐரோப்பாவின் பெரிய நிறுவனமான சிரான் கார்ப்பரேசன் குழந்தைகளுக்கான நோய் தடுப்பு மருந்து வர்த்தகத்தை மனிதாபிமானம் கருதி, கியூபாவுடன் செய்து வந்தது. இதற்காக, அந்த நிறுவனத்திற்கு 168500 டாலர் அபராதம் விதிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து அந்த நிறுவனம், கியூபாவுடன் தனது வர்த்தகத்தை நிறுத்திக் கொண்டது. அமெரிக்க நிறுவனமான, ஜெனரல் எலெக்ட்ரிக், ஃபார்மாசியா, அமெர்ஷம் ஆகிய சுவிஸ் மற்றும் இங்கிலாந்து மருந்து தயாரிக்கும் நிறுவனங்களை விலைக்கு வாங்கி, கியூபாவுடனான வர்த்தகத்தை தடை செய்தது.

கனடா நாட்டின் ஷெரிட் என்ற நிறுவனத்தின் இயக்குநர்கள், கியூபாவுடனான வர்த்தகத்தை நிறுத்தாததால், அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப் பட்டார்கள். அமெரிக்காவின் தடைகளை மீறி செயல் பட்ட அமெரிக்க குடிமக்கள் 316 பேர், 537 விதமான அபராதங்கள் விதிக்கப்பட்டு 2005 அக்டோபர் 12 அன்று, அமெரிக்க அரசினால் தண்டிக்கப்பட்டார்கள். 2004ம் ஆண்டில் மட்டும், 77 நிறுவனங்கள், வங்கிகள், அரசு சாரா அமைப்புகள் ஆகியவை, அமெரிக்காவின் தடையை மீறி, கியூபாவுடன் உடன்பாடு கண்ட காரணத்திற்காகத் தண்டிக்கப்பட்டுள்ளன. இவை தவிர்த்து எண்ணற்ற நிகழ்வுகளை, ஃபிலிப் பெரஸ் ரோக, குறிப்பிடுகிறார்.

2005 ஏப்ரல் 29ல், அமெரிக்க அதிபர் புஷ், அமெரிக்காவின் வங்கிகளில், கியூபாவைச் சேர்ந்தோர் வைத்து இருந்த, சட்ட விரோதமான 198 மில்லியன் டாலர் பணத்தை, அமெரிக்காவின் மியாமி மாகாணத்தில் இருந்து, கியூபாவிற்கு எதிராகச் செயல்பட்ட, தீவிரவாத இயக்கத்திற்கு அளிக்க வேண்டும் என்ற உத்தரவை வெளியிட்டார். இத்தகைய தடைகள் துவக்கத்தில் இருந்தே அமலாகி வருகிறது. சோசலிச சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு, 1992ல் சீனியர் புஷ் ஆட்சியில் கியூபா ஜனநாயகச் சட்டம் என்ற பெயரில் டாரிசெல்லி தடை மசோதாவை அமல்படுத்தி தனது ஆதரவு நாடுகளையும், கியூபாவுடனான, வர்த்தகத் தொடர்பைத் துண்டிக்கச் செய்தது. இதைத் தொடர்ந்து 1996 கிளிண்டன் தலைமையிலான, ஜனநாயகக் கட்சியின் ஆட்சியிலும் ஹெல்ம்ஸ் – பர்ட்டன் சட்டத்தின் மூலம், சர்வ தேச அளவில், எந்த ஒரு நிறுவனம் அல்லது அமைப்பு கியூபாவுடன் வர்த்தக உடன்பாடு கண்டால், அது அமெரிக்காவின் எதிரியாகப் பிரகடனப் படுத்தப்படும், என அறிவித்தார்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக பொருளாதாரத் தடையை சந்தித்து வந்தாலும், கியூபா அமெரிக்காவின் மிரட்டலுக்கும், தடைக்கும் அடிபணியவில்லை. இத்தகைய தடைகளால், கியூபா சுமார் 83 ஆயிரம் மில்லியன் டாலர் (சுமார் 15லட்சம் கோடி ரூபாய்) இழப்பைச் சந்தித்துள்ளது. இவ்வளவு பொருளாதார நெருக்கடி இருந்தாலும், தனது நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் எதிலும் கியூபா கை வைக்கவில்லை. மாறாக மக்களை எளிமையானவர்களாக வாழ வேண்டுகோள் விடுத்தது. இறக்குமதி செய்து பயன்படுத்தும் பொருள்களைத் தவிர்க்க வேண்டுகோள் விடுத்தது. இதற்கு மக்கள் செவி சாய்த்தனர், என்பதில் இருந்தே இன்றைய கியூபாவின் வளர்ச்சியை மதிப்பிட முடியும்.

சோசலிச நாடுகளின் பின்னடைவும் – கியூபாவின் அரசியலும்:

உலகின் ஆதர்ச சக்தியாக விளங்கிய சோவியத் யூனியன் சிதருண்டு, சோசலிச கொள்கைகளைக் கைவிட்ட போது, கியூபா கடுமையாகப் பாதிக்கப்படும் என்று தான் எதிர்பார்த்து இருந்தனர். உண்மையில் பாதிப்பு இருந்தது. கியூபாவின் சர்க்கரை ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டு, மின்சாரம் உள்ளிட்ட எரிபொருள் இறக்குமதி நின்றுபோன நிலையில், அதை எதிர்கொண்டு முன்னேறிய சோசலிச நாடு என்ற பெருமைக்குரியது கியூபா.

அமெரிக்காவின் ஹெல்ம்ஸ் – பர்ட்டன் சட்டத்தின் காரணமாக, கியூபாவின் சர்க்கரையை இறக்குமதி செய்து கொண்டிருந்த 17 நாடுகள், தங்களின் வர்த்தகத்தை நிறுத்திக் கொண்டன. ஏற்கனவே சோவியத் யூனியனின் இறக்குமதி நின்று போன நிலையில், கியூபா நிலை குழைந்து விடும் என எதிர்பாத்தார்கள். மாறாக கியூபா தனது சந்தை வியூகத்தை உள்நாடு சார்ந்ததாக மாற்றிக் கொண்டது. கச்சா எண்ணெய் தேவையைக் குறைக்க கியூபர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். இதற்கு செவி சாய்த்த மக்கள்,

1. வட அமெரிக்க முறை வாழ்வை நிறுத்தி, எளிய ஆற்றல் முறை வாழ்விற்குத் திரும்பினர்.
2. கூட்டு வாழ்வின் மூலம் எரிசக்தி பயன்பாட்டைக் குறைத்தார்கள்.
3. நகரங்களுக்கும், கிராமப்புறங்களுக்குமான வாழ்முறை இடைவெளியைக் குறைத்தார்கள்.

12 மணிநேரம் மின்வெட்டு, மக்கள் தங்களின் பெட்ரோல் வாகனங்களான மகிழ்வுந்து, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றைக் கைவிட்டு பொதுவாகணங்களான பெரிய டிராம் பேருந்துகளில் பயணிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு, முடிந்த அளவு நடந்தே செல்வது அல்லது மிதிவண்டிகளைப் பயன்படுத்துவது, என்ற அரசின் வேண்டுகோள். ஆகியவற்றை எதிர் கொண்ட விதம் வளரும் நாடுகள் பலவும் பின்பற்ற வேண்டிய ஒன்று. நாட்டின் மக்கள் அத்துணை பேரும் ஒத்துழைக்காமல் இந்தத் துணிச்சலான முடிவை, ஒரு அரசு எடுத்திட முடியாது. இங்கேயும் கியூபாவின் அரசின் தலைவர் பொறுப்பில் இருந்த ஃபிடலின் குரலின் வலிமையை உணர முடியும்.

இவை சாதாரண வேண்டுகோள் என்பதை விடவும், இக்கொள்கையைப் பின்பற்றுவதற்கும், அதைத் தொடர்ந்து, மேற்படித் துறைகளில் மேம்பாடு காண மக்களின் ஒத்துழைப்பை நாடவும், சாலைகளில் சின்ன சின்ன விளம்பரங்களைப் பார்க்க முடியும். மின்னாற்றல் புரட்சி, விவசாயப் புரட்சி, சோசலிசமா? பார்பாரிசமா? (சமத்துவமா? காட்டுமிராண்டித் தனமா?) என்ற சிறிய அளவிலான, ஃபிளெக்ஸ் விளம்பரங்கள் சாலையின் ஓரத்தில், யாருக்கும் இடையூறு இல்லாமல், ஆனால் பார்வையில் படும்வகையில் திட்டமிட்டு வைக்கப்பட்டிருப்பதைக் காணமுடியும். மக்களின் உணர்வோடு கலந்ததாக மேற்படி விளம்பரங்கள் அமைந்தன.

இது உள்நாட்டு மக்களின் ஆதரவைப் பெற்றுத் தந்தது. அதேபோல் உலக அளவிலான மக்களின் ஆதரவையும் கியூபா திரட்டியது. ஆசியா பசிபிக் பிராந்தியத்தில், கியூபா ஆதரவு மாநாடு, 4 முறை நடந்துள்ளது. தமிழகத்தின் சென்னை மாநகரில் 2வது ஆசிய – பசிபிக் மாநாடு, 2006 ஜனவரி, 20,21 தேதிகளில் சிறப்புற நடத்தப்பட்டது. இதுபோல், பல்வேறு கண்டங்களில் நடந்த மாநாடுகள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதிக்க நடவடிக்கைகளை அம்பலப்படுத்திடவும், கியூபாவிற்கான ஆதரவை வென்றெடுக்கவும் உதவியது. இது மிகப்பெரிய அளவில் பேசப்பட வேண்டிய, ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் ஆகும்.

லத்தீன் அமெரிக்க நாடுகளுடனான நட்பு:
அமெரிக்கா உலகின் பல நாடுகளை இணைத்து, கியூபாவிற்கு எதிரான தடைகளை உருவாக்கி, நிர்ப்பந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் கியூபா மிகச் சாதாரணமாக தனது அண்டை நாட்டினரை மிக நெருக்கமான நண்பர்களாக மாற்றிக் கொண்டிருந்தது. லத்தீன் அமெரிக்கா முழுவதுமே, அமெரிக்காவிற்கான செல்வ சுரங்கமாக இருந்தது. அந்தளவிற்கு நேரடி சுரண்டல் நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டது. கடந்த 500 ஆண்டுகளாக லத்தீன் அமெரிக்காவின் 85சதம் நிலம் அமெரிக்க ஆதரவு கைக்கூலிகளின் வசம் இருந்தது. உலகமயம் என்ற சொல் உருவாகும் முன்பே அதன் கொடூர மாதிரிகளை, அமெரிக்கா லத்தீன் அமெரிக்க நிலங்களில் தான் அமலாக்கிப் பார்த்தது.

அங்கு இருந்த பொம்மை அரசுகளைத் தூக்கி எரியும், புரட்சிக்குழுக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்த பின்னணியில் தான், கியூபாவின் அரசியல் உறுதியும் ஒரு இணையாகச் செயல்பட்டு வந்தது. வெனிசூவேலா வில் சாவேஸ் தலைமையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், 2சதம் பேரிடம் மட்டுமே இருந்த நிலத்தை அபகரித்து, 63 சதமான வெனிசூவேலாவின் ஏழைமக்களுக்கு வழங்கினார். இதேபோல் பொலிவியா, சிலி, அர்ஜெண்டைனா, நிகரக்குவா போன்ற நாடுகளில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், பன்னாட்டு நிறுவனங்களை நாட்டுடைமையாக அறிவித்தது ஆகியவை, மேற்படி அரசியல் ஒற்றுமையின் வெளிப்பாடு என்றே கருதிட முடியும்.

2005ம் ஆண்டில் ஃபிடல் வெனிசூவேலாவிற்கு சென்ற போது, அவருக்கு வெனிசூவேலா அரசின் விருதான அன்கோஸ்தூரா வழங்கப்பட்டது. சாவேஸ் உரையாற்றுகிற போது, “எங்கள் சகோதரரை, தோழரை, புரட்சிப்போராளியை, இந்தக் கண்டத்தின், பெருங்கடலின், சொர்க்கத்தின் மாண்பைக் காத்தவரை நாங்கள் வரவேற்கிறோம்”, என உணர்ச்சி மேலோர்கள்க் கூறினார். அதே ஆண்டில் தான், அமெரிக்கா முன்வைத்த, அமெரிக்க கண்ட நாடுகளுக்கான திறந்த வர்த்தக தளம் என்ற அமைப்பிற்கு எதிராக, அமெரிக்க நாடுகளுக்கான பொலிவாரிய மாற்று, என்பதை அறிவித்தனர். இவை கியூபா லத்தீன் அமெரிக்காவிற்கான அரசியல் வழிகாட்டி, என்ற அங்கீகாரத்தை வெளிப்படுத்துகின்றன.

இத்தகைய தொடர் முயற்சிகளின் பலனாகத் தான் கியூபா மீதான பொருளாதாரத் தடையை அமெரிக்கா விலக்க வேண்டும் என்ற தீர்மானம், ஐக்கிய நாடுகள் சபையில், கியூபாவினால் 17 முறை முன்வைக்கப்பட்டு, 195 நாடுகள் கொண்ட அவையில் அமெரிக்கா உள்ளிட்ட ஒருசில நாடுகளின் எதிர்ப்பால் தொடர்ந்து ரத்து ஆகி வருகிறது. இந்த நடவடிக்கைகள், கியூபாவைத் தனிமைப்படுத்துவதற்கு பதிலாக அமெரிக்காவைத் தனிமைப்படுத்தியுள்ளது.

தன்னிறைவுக்கான வளர்ச்சியை நோக்கி:
வெனிசூவேலாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், கியூபாவிற்கான எண்ணெய் தேவையைப் பூர்த்தி செய்ய உதவியது. சுற்றுலாவில் கியூபா செலுத்திய கவனம், மிகப்பெரிய அந்நிய செலாவணியை ஈட்டித் தந்துள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து, மொத்தமாக கியூபாவின் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்த உதவியது. குறிப்பாக விவசாயத்தில் கியூபா மேற்கொண்ட நடவடிக்கை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
2000 ஆண்டுகளின் துவக்கத்தில் தோமஸ் ஃபோர்கே என்ற பத்திரிகையாளர், ஃபிடலிடம் நடத்திய உரையாடல், புத்தகமாக தமிழிலும் வந்துள்ளது. நேருக்குநேர் என்ற அந்த புத்தகத்தைத் தமிழில் அமரந்த்தா என்ற எழுத்தாளர் மொழி பெயர்த்துள்ளார். அதில் ஃபிடல் தனது கருத்தை பதிவு செய்கையில், “ ஒரு கட்டத்தில், விவசாயம் குறித்து குவியல் குவியலாக புத்தகங்கள் படித்தேன். குறிப்பாக மேய்ச்சல் நிலம், மாற்றுப் பயிர்கள் குறித்து ஆழமாகப் படித்தேன், வெப்ப மண்டல விவசாயம், விவசாய நுணுக்கங்கள் குறித்து 100 புத்தகங்களாவது படித்திருப்பேன்”, எனக் கூறுகிறார்.

இந்தப் பின்னணியில் தான் கியூபாவின் விவசாயத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் காண வேண்டும். ஃபிடல் இத்தகைய விவாதங்களை நடத்துகிற போது, அந்தத் துறை சார்ந்த வல்லுநர்கள் மேலும் கற்பதும், அதற்கேற்ப மாற்றங்களை மேற் கொள்வதும், வேகமான செயல்பாடு நடைபெறுவதும் சாத்தியமாகும். 1990 – 2000 ஆண்டுகளில் கியூபாவின் விவசாயம் 6 மடங்கு அதிகரித்தது. விவசாய நிலங்களில் அளவு 4 மடங்கு அதிகரித்தது. காய், கனிகளின் உற்பத்தியைப் பெருக்கி, அரிசி, கோதுமை ஆகியவற்றின் உற்பத்தியைக் குறைத்துள்ளனர். பலரும் ஹவானாவில் இருந்து கிராமங்களுக்கு திரும்பிச் செல்லும் அளவிற்கு விவசாயத்தில் கூலி கிடைத்தது. நகரங்களில் மொட்டைமாடி தாவர பயிர் முறை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கோழி, முயல், பன்றி, போன்ற இறைச்சிக்கான விலங்குகளை புறநகர் மற்றும் கிராமப்புற வீட்டு மேல் தளங்களில் வளர்க்கும் முறை உருவானது. விவசாயப் பண்ணைகளை, அரசின் ஆலோசனைப்படி பெண்கள் நடத்துகின்றனர்.

கியூபாவின் வளர்ச்சியில் மிக முக்கியப் பங்களிப்பு செய்திருப்பது கல்வி. அனைவருக்கும் இலவச, கட்டாயக் கல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது. “லத்தீன் அமெரிக்காவில் மாபெரும் குற்றமொன்று இழைக்கப்பட்டு வருகிறது. நிலத்தின் விளைபொருளினாலேயே, முழுமையாக வாழ்ந்து வரும் நாடுகளில், மக்கள் நகர வாழ்க்கைக்கான அடிப்படையில் அறிவூட்டப்படுகிறார்கள். பண்ணை வாழ்க்கை முறையில் பயிற்றுவிக்கப் படுவதில்லை. தமது மக்களை அவர்களின் உணர்வுகளின் போக்கிலும், சிந்தனைப் பயிற்சியிலும் கல்வியூட்டும் நாடே சிறந்த நாடு. கல்வி வளமிக்க நாடு என்றும் வலிமையுடனும், சுதந்திரத்துடனும் திகழும்”, என ஃபிடல் மான்கடா படைத் தளத்தின் மீது நடத்திய தாக்குதலின் காரணமாக, கைதியாக, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது, குறிப்பிடுகிறார். இதுவே புரட்சிக்குப் பின் அமலாக்கப் பட்ட துவக்க கட்ட கல்விக் கொள்கையாக இருந்தது. புரட்சி முடிந்த ஒரே ஆண்டில், கியூபா முழு எழுத்தறிவு பெற்ற நாடாக வளர்ச்சி பெற்றது.

வியத்தகு மருத்துவ வளர்ச்சி:
கியூபாவிற்கு, எய்ட்ஸ் நோய் சிகிச்சைக்கான மருந்து கலந்த இறைச்சியை பிரேசில் நாட்டு நிறுவனம் வழங்கி வந்தது. ஆனால் அமெரிக்கா தனது தடை உத்தரவினால், பிரேசிலில் இருந்து இறக்குமதியான இறைச்சியை தடை செய்தது. இன்றைய கியூபாவோ, தனது சொந்த முயற்சியில் மருத்துவத் துறையில் பெரு வளர்ச்சி கண்டுள்ளது. எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட தாய்க்குப் பிறக்கும் குழந்தைக்கு எய்ட்ஸ் நோயில் இருந்து விடுதலை பெற்றுத் தர தக்க அளவிற்கு, மருத்துவத் துறையில் வளர்ச்சி கண்டுள்ளது.

கியூபா அரசு வட அமெரிக்கா மீது பல குற்றங்களை முன்வைத்துள்ளது. அதில், “வட அமெரிக்க அரசின் பயங்கரவாதங்கள் எங்கள் மக்களின் மீது ஏற்படுத்தியுள்ள குறிப்பிடத்தக்க தீய விளைவுகள் குறித்தது. டெங்கு வகை – 2 நோய் பரப்பும் திறன் பெற்ற ஏடிஸ் ஏகிப்தி எனும் வகைக் கொசுவை வாங்கிப் பரப்பினார்கள் என்பதை, 1979ம் ஆண்டு பசிபிக் பெருங்கடல் பற்றிய நிகழ்வில், கர்னல் ஃபிலிப் ரஸ்ஸல் அளித்த தகவல் கூறுகிறது. ஒமேகா 7 என்ற பயங்கரவாத இயக்கத்தின் தலைவன், எட்வர்ட்டோ அரோசினோ, கியூபாவில் டெங்கு காய்ச்சலைப் பரப்பியதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டான்.

இதை எதிர் கொள்ள கியூபாஉயிரி தொழில் நுட்ப வளர்ச்சியை, முக்கிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப செயல்பாடாக மாற்றிக் கொண்டது. இதன் வெற்றியாக டெங்கு 2 வகையான நோய்க்கு எதிர்வினையாற்றி, பாதிக்கப்பட்டோரை விரைவில் விடுவிக்கும் சாத்தியக் கூறுகளை உருவாக்கியது. நாலாயிரம் கியூப அறிவியல் அறிஞர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். புரதம், ஹார்மோன், ஊசிமருந்து, நோய் கண்டுபிடிப்பு முறை, கலப்பிணங்கள் என பல்வேறு கோணங்களில் தேவையில் இருந்து, ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர், என பத்திரிகையாளர் தோமஸ் ஃபோர்கே கூறுகிறார்.

உலகமே மிரண்டு போயிருந்த எப்போலா வைரஸ்க்கு எதிர் மருந்தைக் கண்டறிந்து, வெற்றிகரமாக செயலாற்றியமைக்காக கியூபாவை உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் பாராட்டியுள்ளது. ஆயிரம் குழந்தைகளுக்கு 4.5 குழந்தைகள் என்கிற அளவிற்கு இறப்பு விகிதம் கியூபாவில் உள்ளது. அமெரிக்காவில் 6.1 எனவும், இந்தியாவில் 49 எனவும் உள்ளது. இது குறித்து ஃபிடல் ”சிசு மரணத்தை 20 லிருந்து குறைக்க மிக செலவு பிடித்தது. நம்மால் அதைக்குறைக்க முடியும் என்றால், அதற்கு முக்கியத்துவம் தர வேண்டும். ஆயிரக்கணக்கானக் குழந்தைகள் மரணம் அடையும் நாட்டில் மனித உரிமைகள் எப்படி இருக்கும்?” என கேள்வி எழுப்புகிறார்.

சூறாவளியும் அடிபணியும்:
கியூபாவிற்கு மற்றும் ஒரு பொருளாதாரத் தொல்லை தருவது, தீவைச் சுற்றி அடிக்கும் சூறாவளி ஆகும். இதை எதிர் கொள்வதில், மனித இழப்பைத் தடுப்பதில் பெரும் சாதனையை கியூபா செய்துள்ளது. 1944 ல் இருந்து வீசிய சூறாவளிகளிலேயே, மிச்சேல் 2001 தான் மிகப்பயங்கரமானது. இந்தத் தாக்குதலில் இருந்து பல்லாயிரம் மக்களைக் காப்பதில் கியூபா வெற்றி கண்டது சாதாரணமானது அல்ல. சுமார் 70 ஆயிரம் மக்கள் மிச்சேல் சூறாவளியின் போது பாதிக்கப்பட்டார்கள், ஆனால் 4 பேர் மட்டுமே பலியாயினர். 8 பேர் மட்டுமே காயமடைந்தனர். கியூபா ஒரு ஏழை நாடு என்பதை வைத்துப் பார்க்கும் போது, இந்தச் செய்தி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது என செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.

ஆக்ஸ்ஃபேம் என்ற ஆய்வு நிறுவனம் 1994 – 2003க்கு இடைப்பட்ட காலத்தில், 129 சூறாவளிகள் வீசியுள்ளன. இதில் 19 பேர் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர். கியூபாவின் பொருளாதார நெருக்கடி, போக்குவரத்து வசதிகள் மற்றும் இதர வசதிகளை வைத்துப் பார்க்கும் போது, கியூபா சாதித்துள்ளது என்றே கூற வேண்டும், என பதிவு செய்துள்ளது. கியூபாவின் அனைத்து மட்டத்திலும், ஆய்வு மேற்கொண்ட ஆக்ஸ்ஃபேம், அசையா சொத்து மற்றும் அசையும் சொத்து என இரண்டு அம்சங்களை கியூபாவில் கண்டதாகக் கூறுகிறது.

அசையா சொத்து எனும் போது, தேசிய பாதுகாப்புத் துறை, முன்னெச்சரிக்கை அமைப்புகள், தேவையான அனைத்துக் கருவிகளும் கொண்ட மீட்புக் குழுவினர் மற்றும் அவசர கால சேமிப்புக் கிட்டங்கிகள் ஆகியவை கியூபாவின் அசையா சொத்துக்கள் ஆகும். சமூகத்தைக் கட்டமைப்பது, மக்கள் ஆதரவைப் பெறுவது, மனித உயிர்களைக் காப்பாற்றுவதில் உண்மையான தெளிவான அரசியல் உறுதி, ஈடுபாடு, பேரிட்டர் விழிப்புணர்வு அதை எதிர்த்துச் சமாளிக்கும் விவரக்களைத் தரத் தக்க கல்வியறிவு கொண்ட மக்கள் தொகை என்பது அசையும் சொத்து, இதன் காரணமாகவே, கியூபா சூறாவளிகளின் பெரும் தாக்குதலில் இருந்து தப்ப முடிகிறது. வேறு எந்த அரசுகளாலும் இந்தக்கைய சாதனையை நிகழ்த்த முடியவில்லை, என பகிரங்கமாகக் குறிப்பிடுகிறது.
நிறைவாக கியூபா தனது புரட்சிக்குப் பின் அடைந்த வெற்றிகளும், தற்போது சோசலிச முகாம் இல்லாத நிலையில் 25 ஆண்டுகளாக எதிர் நீச்சலில் செய்திருக்கும் மகத்தானச் சாதனைகளும், ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்களுக்கு எதிரான போராட்ட உணர்வை, காட்டுத் தீயாக வளர்க்கிறது. வாழ்க கியூப புரட்சி தினம்.

உதவிய நூல்கள்:

1. ஃபிடல் காஸ்ட்ரோ உரைகள் – 1997 – சவுத் விஷன் வெளியீடு
2. குற்றவாலிக் கூண்டில் வட அமெரிக்கா – 1999 – பரிசல் வெளியீடு
3. குரலின் வலிமை – 2005 – வாசல் வெளியீடு
4. சாவேஸ் – 2006 – வாசல் வெளியீடு
5. நேருக்கு நேர் – 2002 புதுமலர், கோவை வெளியீடு
6. சூறாவளியும் அடிபணியும் – 2006 – என்.சி.பி.ஹெச்
7. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – 21வது காங்கிரஸ் அரசியல் தீர்மானம்
8. Cuba The Blockade and The declining Empire – 2005 – Pablo Neruda School of Spanish

நிலையில்லா புகழ் – இந்தியாவும் அதனுடைய முரண்பாடுகளும்

நிலையில்லா புகழ் – இந்தியாவும் அதனுடைய முரண்பாடுகளும் (Uncertain Glory: India and its Contradictions) என்ற 433 பக்கங்களைக் கொண்ட ஆங்கில நூல் அமர்த்தியா சென், ஜீன் ட்ரஸ் ஆகிய இருவராலும் தயாரிக்கப்பட்டு வெளியாகியுள்ளது.

இந்நூலில் இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்தும் மத்திய அரசு கடைபிடித்து வரும் பொருளாதார கொள்கை குறிப்பாக 1991லிருந்து அமலாக்கப்பட்டு வரும் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை குறித்தும் விமர்சனப் பூர்வமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அமர்த்தியா சென் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கையை பொதுவாக எதிர்ப்பவரல்ல; ஆனால் சமூக மேம்பாட்டில் அக்கறையுள்ளவர்.

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவை விட பொருளாதார வளர்ச்சி குறைவாக உள்ள பல நாடுகளை இந்திய வளர்ச்சியுடன் ஒப்பிட்டு ஏன் சமூக நல குறியீடுகளில் இந்தியாவில் வளர்ச்சியில்லை என்பதை ஆய்வு செய்திருக்கிறார்கள். பக்கம் 45ல் உள்ள அட்டவணையின் சுருக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 
இந்தியா
15 ஏழை நாடுகளின் சராசரி
16 நாடுகளில் இந்தியாவின் இடம்
2011ல் ஜிடிபி தலா உற்பத்தி
3203 டாலர்2112 டாலர்1
சராசரி வாழ்நாள் ஆண்டு (2011)65679
சேய் இறப்பு விகிதம் (உயிருடன் பிறக்கும் 1000 சேய்களில் ஒரு ஆண்டுக்கு இறக்கும் சேய்கள் எண்ணிக்கை)474510
5 வயதுக்குள் இறக்கும் குழந்தைகள்61567
குழந்தை பிறப்பு விகிதம் (Total Fertility Rate %)2.62.97
சுகாதார வசதி கிடைக்க வாய்ப்புள்ளவர்கள் % (2010)345713
கல்வி கற்றோர் % (15-24 வயது) 2010, பெண்கள்747911
கல்வி கற்றோர் % (15-24 வயது) 2010, ஆண்கள்88859
ஊட்டச்சத்து கிடைக்காத 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் (2006-10) குறைவான எடையுள்ளோர்433015
வளர்ச்சி குன்றியவர்484113

உலக வங்கி ஆய்வின் படி 2011ல் (சஹாரா பாலைவனத்திற்கு தெற்கேயுள்ள ஆப்பிரிக்க நாடுகள் அல்லாமல்) மொத்த உற்பத்தி – தனிநபர் வருமானத்தில் மேற்கண்ட 15 நாடுகள் மிகக் குறைவாக உள்ளன. ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பர்மா, கம்போடியா, ஹெய்த்தி, கிர்கிஸ்தான்,  லாவோஸ், மால்டோவா, நேபாளம், பாகிஸ்தான், பாப்புவா – ரியுகினி, கஜகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், வியத்நாம், ஏமன் ஆகிய நாடுகள் எல்லாம் இந்தியாவை விட சராசரி தனிநபர் வருமானத்தில் குறைவாக உள்ள நாடுகள். ஆனால், சராசரியாகப் பார்த்தால் வாழ்க்கைத் தரத்தில் மேலாக உள்ளன. மேற்கண்ட நாடுகளில் ஒரேயொரு அம்சத்தில் தான் – குறிப்பாக ஒட்டு மொத்த வளர்ச்சி, சராசரி தனிநபர் வருமானத்தில் மட்டுமே தான் – இந்தியா முதலிடத்தில் உள்ளது. மற்ற  9 குறியீடுகளில் இந்தியா ஒன்றில் கூட முதலிடத்தில் இல்லை.

இதில் வேதனையான அம்சம் என்னவென்றால் 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா சமூகவள மேம்பாட்டு குறியீடுகளில் ஆசிய நாடுகளில் 2வது இடத்தில் இருந்தது. இந்த 20 ஆண்டுகளில் மொத்த உற்பத்தி வளர்ச்சி ஏணியில் இந்தியா மேலே சென்றிருக்கிறது. ஆனால் சமூகவள மேம்பாட்டு வளர்ச்சியில் கீழே சரிந்துள்ளது.

மேற்கண்ட கல்வி, சுகாதாரம், சேய் இறப்பு விகிதம், சராசரி மனித வாழ்நாள் ஆண்டு உள்ளிட்ட 10 குறியீடுகளில் மற்ற எல்லா குறியீடு களிலும் மற்ற நாடுகளை விட பின்தங்கியே உள்ளது.

இதற்கு காரணம் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட பலனை பெரும்பான்மையான ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட பயன்படுத்தும் அளவிற்கு மத்திய அரசு திட்டமிடவில்லை.

இந்த அவலத்திற்கு விடை காண வேண்டுமென்றால் இந்தியா கடைபிடித்து வந்த பாதையை பரிசீலிக்க வேண்டுமென்று நூல் ஆசிரியர்கள் கூறுகிறார்கள். “வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் இடையில் உள்ள தொடர்பு ஒன்று மற்றொன்றின் வளர்ச்சிக்கு ஆற்றிடும் பங்களிப்பு ஆகிய அம்சங்களே” என்பதுதான் தங்களுடைய நூலின் முக்கியமான சாராம்சம் என்று நூலாசிரியர்கள் கூறுகிறார் கள்.

தொழில், விவசாயம், சேவைத்துறை ஆகிய மூன்றும் சேர்ந்தது ஒட்டுமொத்த வளர்ச்சி (ஜிடிபி). கல்வி, சுகாதாரம், வாழ்நாள் ஆண்டு போன்ற சமூகவளக் குறியீடுகளில் ஏற்படும் முன்னேற்றம் மேம்பாடு என அழைக்கப்படுகிறது. வளர்ச்சி, மேம்பாடு என்ற இரண்டு அம்சங்கள் குறித்து ஏராளமான அம்சங்களை நூலாசிரியர்கள் விளக்கியிருக்கிறார்கள்.

உதாரணமாக கல்வி உள்ளிட்ட பல அம்சங்களில் ஏற்படும் மனிதவள மேம்பாடு பொருளாதார வளர்ச்சிக்கு உந்தும் சக்தியாக இருக்கும். எனவேதான் வளர்ச்சியின் பலன் மேம்பாட்டிற்கு பயன்பட்டுள்ளதா என்ற கேள்வியை நூலாசிரியர்கள் எழுப்புகிறார்கள். வளர்ச்சி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்திட பயன்பட்டுள்ளதா என்பது தேசவருமானம் ஏழை எளிய மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறதா என்பதோடு அரசுக்கு கிடைக்கக் கூடிய வருவாயை மேம்பாட்டிற்காக அரசு பயன்படுத்துகிறதா என்பதையும் பொருத்துள்ளது. உதாரணமாக சீன அரசு அந்நாட்டு ஜிடிபியில் 2.7 சதவிகிதம் சுகாதாரத்திற்காக ஒதுக்கீடு செய்கிறது. ஆனால், இந்தியாவில் மத்திய-மாநில அரசுகள் இணைந்து செய்யும் சுகாதாரச் செலவு ஜிடிபியில் 1.2. தான். இது போன்று பல துறைகளுக்குமான அரசு ஒதுக்கீடுகளையும் செலவாகும் தொகைகளையும் மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது.

கல்வி:

“வறுமை என்ற துயரத்தின் கோபுரம் இந்தியாவின் இருதயத்தை அழுத்திக் கொண்டிருப்பதற்கு அடிப்படைக் காரணம் கல்லாமை என்றே நான் கருதுகிறேன்” என சோவியத் யூனியனுக்கு சென்று வந்த பிறகு மகாகவி தாகூர் கல்வி பற்றி மேற்கண்டவாறு கூறியுள்ளதை நூலாசிரியர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர். தாகூரின் வார்த்தைகள் அக்காலத்தில் இந்தியாவில் நிலவிய கல்லாமையைப் பற்றிய கடுமையான கண்டனமாகும். நாடு விடுதலை பெற்ற பிறகு பள்ளிக் கல்வியிலும் உயர்கல்வியிலும் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பினும் இன்றும் ஏழை எளிய மக்களுக்கு தரமான பள்ளிக் கல்வியும் உயர் கல்வியும் கிடைக்காத அவலம் நீடித்து வருகிறது. பொருளாதார வளர்ச்சியும் மனிதவள மேம்பாடும் பெருமளவிற்கு கல்வியில் ஏற்படும் வளர்ச் சியைப் பொருத்தே அமையும்.

12 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் உயர்கல்வியிலும் பள்ளிக் கல்வியிலும் அரசு மற்றும் தனியார் கூட்டுமுயற்சி தேவை என்ற கொள்கையை மத்திய அரசு முன்வைத்துள்ளது. நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கை அமலாக்கம் தொடங்கிய பிறகு உயர்கல்வியில் நாடு முழுவதும் சுயநிதி கல்வி நிலையங்களும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் உருவாகியுள்ளன. இத்தகைய கல்வி நிலையங்களில் நகர்ப்புற, கிராமப்புற ஏழை குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள் சேர இயலாது. நடுத்தர மக்கள் பகுதியில் கூட உயர் நடுத்தர பகுதியினரே லட்சக் கணக்கில் செலவு செய்து தங்கள் பிள்ளைகளை சுயநிதி கல்வி நிலையங்களில் சேர்க்க முடியும்.

இந்தியாவில் சாதிய ரீதியிலும், மத ரீதியிலும், பாலின ரீதியிலும் உயர்கல்வி பெறும் வாய்ப்பில் பெரும் ஏற்றத் தாழ்வு நீடிக்கிறது. பழங்குடி மக்களும் பின்தங்கியுள்ளனர், இத்தகைய ஏற்றத்தாழ்வை போக்காத வரையில், ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்தவர்களுக்கு அவர்கள் படிக்க விரும்புகிற வேலைவாய்ப்புள்ள உயர் கல்வி கிடைக்காது. இதன் விளைவாக சமூகவள மேம்பாட்டில் இந்தியா மற்ற ஏழை நாடுகளை விடவும் பின்தங்கியே இருக்கும்.

கல்வி அளிக்கும் பொறுப்பை (பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வி) அரசு தனியாருக்கு விடுவது கல்வித்துறையில் மேம்பாடு அடைய உதவாது என்பதை நூலாசிரியர்கள் அழுத்தமாக வலியுறுத்துகிறார்கள்.

சுகாதாரம்:

வங்காளதேசம் போன்ற ஏழை நாடுகளை விட இந்தியா இரண்டு மடங்கு பொருளாதார வளர்ச்சியில் முன்னிலையில் இருந்தாலும் சேய் இறப்பு விகித எண்ணிக்கையிலும் மனிதனின் சராசரி வாழ்நாள் ஆண்டிலும் இந்தியா பின்தங்கியே உள்ளது. இதற்கு அடிப்படைக் காரணம் பொதுச் சுகாதாரத்திற்கும் மருத்துவ சிகிச்சைக்கும் மத்திய – மாநில அரசுகள் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யாததே.

2011 இல் இந்தியாவில் கழிப்பிட வசதியில்லாமல் திறந்த வெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்தும் குடும்பங்கள் மொத்த மக்கள் தொகையில் 50 சதவிகிதம். ஆனால், வங்காளதேசத்தில் இது 10 சதவிகிதமாகவும் சீன நாட்டில் 1 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. சுகாதார வசதியில் இந்தியா பின்தங்கியுள்ளது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

கடந்த 20 ஆண்டு காலமாக அரசுகள் ஜிடிபியில் 1 சதவிகிதமே சுகாதாரத்திற்கு ஒதுக்கீடு செய்து வருகிறது. தற்பொழுது ஒதுக்கீடு 1.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு. சீனத்தில் 2.7 சதவிகிதமும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் 3.8 சதவிகிதமும் ஐரோப்பிய நாடுகளில் 8 சதவிகிதமும் உலக சராசரி ஒதுக்கீடு 6.5 சதவிகிதமாகவும் உள்ளது.

சுகாதார வசதி இந்தியாவில் பெருமளவிற்கு தனியார்மயமாக்கப்பட்டுவிட்டது என நூலாசிரி யர்கள் ஆதாரத்துடன் விளக்குகிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் சுகாதாரத்திற்கு ஆகும் செலவில் அரசின் பங்கு 70-85 சதவிகிதம், அமெரிக்காவில் 50 சதவிகிதம், உலக சராசரி 63 சதவிகிதம். ஆனால் இந்தியாவில் அரசின் பங்கு 29 சதவிகிதம் மட்டுமே. கீழ்க்கண்ட பட்டியலில் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

நாடுகள்சுகாதாரத்திற்கு அரசின் மொத்த பங்கு
இந்தியா29
தெற்காசியா30
சகாரா பாலைவனத்திற்கு தெற்கே உள்ள நாடுகள்45
கிழக்காசியா  பசிபிக்53
மத்திய கிழக்கு  வட ஆப்பிரிக்கா50
லத்தீன் அமெரிக்கா  கரீபியன்50
ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா65
உலக சராசரி63
ஐரோப்பிய யூனியன்77

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி 5-லிருந்து 9 சதவிகிதம் வரையில் உயர்ந்திருந்தாலும் இதனால் அரசிற்கு கிடைக்கும் வருவாயில் சுகாதாரத்திற்கு போதுமான அளவிற்கு ஒதுக்கீடு செய்யாமல் தனியாருக்கு விட்டுவிட்டது. இதனால், மனிதவள மேம்பாட்டில் மற்ற நாடுகளை விட இந்தியா பின்தங்கியுள்ளது.

மத்திய அரசு 12 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் சொல்லப்பட்டுள்ள சுகாதார காப்பீட்டுத் திட்டமும் தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கே முக்கியத்துவம் அளித்துள்ளது. அரசுத் துறைக்கு போதுமான முக்கியத்துவம் அளிக்கவில்லை. மருத்துவ காப்பீட்டு முறையும் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யாது.

வறுமை ஒழிப்பு:

அத்தியாயம் 7 வறுமை ஒழிப்பு பற்றி விளக்குகிறது. இந்தியாவில் அமலாக்கப்பட்டு வரும் பொதுவிநியோகமுறைத் திட்டத்தை மேலும் பலப்படுத்திட வேண்டுமென்று நூலாசிரியர்கள் வாதிடுகின்றனர். வறுமைக்கோட்டு எல்லைக்கு கீழே வாழும் மக்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதிலும் சரியான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டுமெனக் குறிப்பிடுகிறார்கள். மத்திய அரசு கொண்டு வந்துள்ள உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைப் (நூல் வெளியாகிற போது மசோதா வடிவத்தில் இருந்தது) பற்றியும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவிநியோக முறையில் நேரடி பணப்பட்டுவாடா முறை கூடாது என்றும் இதற்கு மாறாக, ஏற்கனவே அமலில் உள்ள பொது விநியோக முறையை பலப்படுத்திட வேண்டும் என்கிறார்கள்.

ஏற்றத் தாழ்வின் பிடியில் இந்தியா:

நூலில் 8 அவது அத்தியாயத்தில் இந்தியாவில் சாதிய ரீதியிலும் வர்க்க ரீதியிலும் பாலின ரீதியிலும் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது. இந்தியாவிலுள்ள சாதிய அமைப்பு முறை ஏற்றத் தாழ்வை நிலைநிறுத்துவதற்கு பல காரணங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. வர்க்க ஏற்றத்தாழ்வுக்கும் பாலின ஏற்றத்தாழ்வுக்கும் சாதிய அமைப்பு முறையும் காரணமாக உள்ளது என நூலாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். சாதிய ஏற்றத்தாழ்வு அகற்றப்பட வேண்டுமென்று அம்பேத்கரையும் நூலாசிரியர் மேற்கோள் காட்டுகிறார்கள்.

கடந்த 20 ஆண்டுகளில் ஜிடிபியில் முன்னேற்றம் இருப்பினும் இதனால் அரசிற்கு கிடைக்கும் வருவாயை சமூகவள மேம்பாட்டிற்கு அரசு பயன்படுத்தாதது இந்தியா பின்தங்கியிருப்பதற்கு முக்கியமான காரணம் என நூலாசிரியர்கள் கூறுகிறார்கள். கடந்த 2012-13 ஆண்டு நிதிநிலை அறிக்கையை சுட்டிக்காட்டி கார்ப்பரேட் கம் பெனிகளுக்கு 5,29,432 கோடி ரூபாய் சலுகை அளிப்பதன் மூலம் அரசிற்கு வரக்கூடிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. (* இது மதிப்பீடுதான். அநேகமாக இறுதி கணக்கு கூடும். 2010-11 இல் இவ்வாறு அரசால் இழக்கப்பட்ட வரி வருமானம் ரூ. 5, 73, 000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது) கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சலுகை அளிக்கும் மத்திய அரசு சமூகவள மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஊடகங்களைப் பற்றி:

கல்வி, சுகாதாரம் போன்ற சமூகவள மேம்பாடு சம்பந்தப்பட்ட பிரச்சனைப் பற்றி ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை என்பதையும் இந்நூல் சுட்டிக் காட்டுகிறது. மேலும், கல்வியும் சுகாதாரமும் போதுமான அளவிற்கு இந்தியாவில் விவாதப் பொருளாக மாறாததும் கவலைக்குரியது என்பதையும் நூல் எடுத்துக் காட்டுகிறது.

இந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூகவள மேம்பாடு ஆகிய இரண்டையும் மற்ற நாடுகளோடு ஒப்பிட்டு ஆழமாக ஆய்வு செய்து இந்தியாவில் ஓரளவுக்கு வளர்ச்சி ஏற்பட்டிருப்பினும் வளர்ச்சியின் பலன் சமூகவள மேம்பாட்டிற்கு பயன்படவில்லை. காரணம் மத்திய அரசு கடைபிடித்த பெரும்பாலான மாநில அரசுகளும் பின்பற்றி வரும் தாராளமயக் கொள்கைகளே.

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் உள்ள பணக்கார மற்றும் உயர் நடுத்தர மக்களின் (மேல்தட்டில் உள்ள ஒரு சிறு பகுதி) வாழ்க்கைத் தரம் எதிர்பார்த்ததை விட அதிகரித்துள்ளது. ஆனால் நகர்ப்புற, கிராமப்புற ஏழைகளின் வருமானம் அதிகரிக்கவில்லை. நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கும் வசதி படைத்தவர்களுக்கும் இடையிலான வருமான ஏற்றத் தாழ்வு அதிகரித்துள்ளது. தேசிய மாதிரி சர்வே (அரசு நிறுவனம்) செய்ததில் 1993லிருந்து 2010 வரையிலான காலத்தில் கிராமப்புறத்தில் தனிநபர் வாங்கும் சக்தி 1 சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளது. நகர்ப் புறங்களில் 2 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

ஆனால் இதே காலத்தில் சீனாவில் தொழிலாளர்களின் உண்மை ஊதியம் (விலைவாசி உயர்வை கணக்கில் கொண்ட) ஆண்டுக்கு 12 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இக்காலத்தில் இந்தியாவில் 2.5 சதவிகிதம் மட்டுமே அதிகரித் துள்ளது.

நூலாசிரியர்கள் சோசலிச நாடுகளில் ஏற்பட்ட சமூகவள மேம்பாடு பற்றி அழுத்தமாகக் குறிப்பிடுகிறார்கள். “சோவியத் யூனியனில் துவங்கி சீனா, வியத்நாம், கியூபா வரையில் அனைவருக்கும் இலவச கல்வியை அமலாக்குவதில் குறியாக இருக்கிறார்கள்”. 1930 இல் நோபல் பரிசு பெற்ற தாகூர் சோவியத் யூனியன் சென்று வந்த போது குறுகிய காலத்தில் சோவியத் நாட்டில் விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் கல்வி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நமது நாட்டில் வசதி படைத்தவர்களுக்குக் கூட அத்தகைய கல்வி கிடைக்கவில்லை என்பது தான் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது என தாகூரை மேற்கோள் காட்டியிருக்கிறார்கள்.

“கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில்” (1848 இல் மார்க்ஸ், ஏங்கல்ஸ் வெளியிட்டது) குறிப்பிடப்பட்டுள்ள அனைவருக்கும் இலவசக் கல்வி என்ற அம்சத்தை கம்யூனிச நாடுகள் அடிப்படைக் கொள்கையாக கடைபிடித்தன என நூலாசிரியர்கள் கூறுகிறார்கள்.

மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தைப் போல் இந்தியாவில் பொருளாதார ஏற்றத் தாழ்வு உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி இத்தகைய ஏற்றத்தாழ்வே, ஏற்றத்தாழ்வு தொடர்ந்து நீடிப்பதற்கு காரணமாகிவிடும் என கீழ்க்கண்ட வாறு சுட்டிக் காட்டுகிறார்கள்.

“நாம் முன்னரே கண்டபடி பல பரிமாணங்களைக் கொண்ட சமத்துவமின்மை தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தேவையான கருவிகளை தானே உருவாக்கிக் கொள்கின்றது. குறிப்பாக பொதுத்தளத்தில் நடக்கும் விவாதங்களையும் ஊடகச் செய்தி வெளியீடுகளையும் உருக்குலைத்து இதனைச் செய்கின்றது. பெரும் சமூகப் பிளவுகள் வெவ்வேறு சமூகப் பிரிவுகளுக்கு  இடையே அதிகாரத்திலும் அவர்கள் தரப்பு கருத்து கேட்கப்படுவதிலும் மிகுந்த ஏற்றத்தாழ்வோடு இருக்கின்றன. மேலும் சமூகத்தின் அடித்தட்டு பகுதிகள் குறித்த ஊடக கவனத்தையும் பொதுத்தளத்தில் அவர்களது பிரச்சனைகள் குறித்த விவாதங்களையும் நடக்க விடாது அவர்களது எல்லாம் இழந்த நிலையை குழப்பி மறைக்கின்றது. ஊடக கவனமும் பொதுத்தள விவாதங்களும் எல்லாம் பெற்ற மக்களின் நலன்களுக்காகவே நடக்க வழிவகை செய்கின்றது. இதன் மூலம் எதிர்ப்பைக் கூறும் வலுத்த குரலுக்கு இடமளிக்காமலிருப்பது உட்பட ஜனநாயகத்தின் வழிமுறைகளை மறுத்து சமத்துவமின்மையை எதிர்கொள்ள விடாமல் செய்கின்றது. இதன் மூலம் சமூகத்தின் வசதிகளை அனுபவிப்பவருக்கும் பிறருக்கும் இடையேயுள்ள பெரும் ஏற்றத் தாழ்வை மறைக்கின்றது”.

‘சமூகநல பொருளாதாரம்’ குறித்து நீண்ட காலமாக அமர்த்தியா சென் செய்த ஆய்வுக்காக அவருக்கு நோபல் வழங்கப்பட்டது. வல்லுநர் சென்னுடன் இன்னொரு வல்லுநர் ஜீன் டிரஸ் இணைந்து தயாரித்து வெளியிட்டுள்ள நூல் இது.

இந்தியா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டு உலகம் முழுவதும் உழைக்கும் மக்கள் நலன்களுக்காக அமலாக்கப்பட்டு வந்த பல பல சமூகநலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை வெட்டுவதோடு அத்தகைய திட்டங்களையே கைவிடும் அரசுகளுக்கு எதிராகப் போராட்டம் நடைபெறும் இக்காலத்தில் இந்நூல் வெளியாகியுள்ளது. சமூகநல மேம்பாட்டிற்காக போராடக் கூடியவர்களுக்கு இந்நூல் பேராயுதமாக அமையும்.

முதலாளித்துவ நெருக்கடியும் சோசலிச புரட்சியும்!

சீதாராம் யெச்சூரி (பின்வருவது, ஜன 31 மற்றும் பிப் 1, 2009 அன்று வயநாட்டில் நடைபெற்ற விச, விதொச சங்கங்களின் தேசிய அளவிலான கருத்தரங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீதாராம் எச்சூரி ஆற்றிய தொகுப்புரையில் இருந்து எடுக்கப்பட்ட பகுதிகள்)

இந்த சந்திப்பின் போது மிகச் ஈர்கத்தக்க உரைகளையும், விவாதங்களையும் நாம் கேட்டோம். அதே சமயம், இந்த பிரச்சனையில் இன்னும் நிறைய கருத்துக்களை விவாதிக்க வேண்டியிருக்கிறது. அந்த விவாதம் நம்மை இன்னும் மிகத் தெளிவாக்கும் என்று நம்புகிறேன்.

நாம் இப்போது பேசுகிற நான்கு முரண்பாடுகளை பற்றி கட்சிக்குள் பெரிய அளவிலான விவாதங்களை நடத்திய பிறகு மிகத் தெளிவான ஒரு முடிவுக்கும் வந்தோம். அவை நான்கும் அடிப்படையான முரண்பாடுகள், முதன்மையானவையும் கூட. எதுவும் தாழ்ந்ததோ, உயர்ந்ததோ கிடையாது. ஆனாலும் இந்த நான்கிலும் ஏகாதிபத்தியத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையேயான முரண்பாட்டை மையமான முரண்பாடாக நாம் பார்க்கிறோம், ஏனெனில் அந்த முரண்பாட்டிற்கான தீர்வு உலகம் ஏகாதிபத்தியத்தில் இருந்து சோசலிசத்தை நோக்கி மாற்றுவதைப் பொறுத்தே இருக்கிறது. எனவே இந்த காலகட்டத்திற்கான மையமான முரண்பாடாக உள்ளது, அதே சமயம் இந்த நான்கு முரண்பாடுகளில் (மையமான முரண்பாடு உட்பட) எதுவும் எந்த நேரத்திலும் முன்னுக்கு வரலாம்.

ஒருவேளை அமெரிக்கா நாளை கியூபாவை ஆக்கிரமிக்க முற்பட்டால் ஏகாதிபத்தியத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையேயான முரண்பாடு மையமான முரண்பாடாக மட்டுமல்லாமல் முன்னுக்கும் வந்துவிடும். எனவே மையமான முரண்பாடும், முன்னுக்கு வந்த முரண்பாடும் இங்கே இருக்கிறது ஆனால் நான்கு முரண்பாடுகளுமே முக்கியமானதும், அடிப்படையானதும் ஆகும். அவைகளுக்குள் எந்த வித்தியாசமும் இல்லை. மற்றும், இந்த நிலையில், நான்கு அடிப்படை முரண்பாடுகளில், ஏகாதிபத்தியத்திற்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையேயான முரண்பாடு தீவிரமடைவதாக கட்சியின் பதினேழாவது மாநாட்டில் இருந்து நாம் சொல்லி வருகிறோம். இதுவரையில், அது முன்னுக்கு வந்து முற்றி குவிமையமாக வளர்ந்துவிட்டதாக நாம் சொல்லவில்லை ஆனால்  நான்கு முரண்பாடுகளில் ஏதேனும் ஒன்று குவிமைய முரண்பாடாக வளரக்கூடியது  ஏகாதிபத்தியத்திற்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையேயான முரண்பாடுதான். இதுதான் நமது கட்சியின் நிலை.

குவிமைய முரண்பாடு மிக முக்கியமானது. ஏன்? ஏனெனில் இத்தகைய முரண்பாடு தீர்க்கப்படுகிற வழிமுறையைப் பொறுத்தே, உலகில் சோசலிசத்தை நோக்கிய மாற்றம் அமைகிறது. வியட்நாம் யுத்த சமயத்தில், ஏகாதிபத்தியத்திற்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையேயான முரண்பாடு முன்னுக்கு வந்திருந்த போது, அந்த யுத்தத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தோல்வியைச் சந்தித்தது. அபோது நாம் ஏகாதிபத்தியத்தை நேருக்கு நேர் சந்திப்பதில் உலக அளவில் சோசலிசம் தன்னை வலிமைப் படுத்திக் கொண்ட விதத்தின் மூலம் முன்னணியான முரண்பாடு தீர்கப்பட்டதாகச் சொன்னோம். இன்றைக்கு இந்த முரண்பாடு முன்னுக்கு வந்த முரண்பாடாகும் நிலைக்கு வளர்ந்துவிட்டதா? என்றுகேட்டால் இதைப் பொறுத்தமட்டில் இப்போதைய முரண்பாட்டை நாம் இன்னும் இன்றைய முன்னணி முரண்பாடாக கொள்ளவில்லை. ஆனால் கண்டிப்பாக இந்த முரண்பாடுதான் தீவிரமடையும் முரண்பாடாக இருக்கிறது.

நெருக்கடி ஒரு வாய்ப்பை தருகிறது:

முக்கியமான பிரச்சனைக்கு வருகிறேன், இந்தக் கருத்தரங்கம் நடந்துகொண்டிருக்கிற நாளில், தற்போதைய சர்வதேச சூழலில் கவனிக்கப்படவேண்டியவை குறித்து அறிவதற்காகவே இந்த அரங்கம் கூட்டபட்டிருப்பதாக நினைக்கிறேன். ஏன் இன்று நாம் அனைவரும் குறிப்பிட்ட ஓர் இடத்தில் கூடி இந்தப் பிரச்சனையைப் பற்றி விவாதிக்கிறோம்?. சோவியத் மற்றும் ஐரோப்பிய சோசலிசக் குடியரசுகளின் வீழ்ச்சிக்குப் பிறகு, சர்வதேச அளவில் வர்க்க சக்திகளின் சேர்மானத்தில் ஏகாதிபத்தியம் பலமடைவதாகவும், சோசலிசம் பலவீனமடைந்திருப்பதாகவும் நாம் ஒரு முடிவிற்கு வந்ததிற்கு பிறகு இவ்வாறு விவாதிப்பது இதுவே முதல் முறை. இந்த இடைப்பட்ட காலத்தில், இடதுசாரி இயக்கங்களால், இடதுசாரி வெகுஜன அமைப்புகள் மற்றும் உலக கம்யூனிஸ்டுகளால் நடத்தப்பட்ட போராட்டங்கள் பெரும்பாலும் தற்காப்பு போராட்டங்களாக இருந்தன. ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவம் ஆகியவற்றின் தாக்குதல்களில் இருந்து நமது உரிமைகளைக் காத்துக் கொள்வதற்கான போராட்டங்களாக அவை இருந்தன. சோசலிசம் பலவீனமடைந்த போது, நாம் பல நூறு ஆண்டுகால போராட்டங்களின் காரணமாகப் பெற்ற உரிமைகளாவது காப்பாற்றிக் கொள்ள முயலுகிறோம். எனவே அந்த நேரத்திலும் தற்போதும் நமது நோக்கம் என்பது பெரும்பாலும் இருக்கிற உரிமைகளை காத்துக் கொள்வதற்கான தற்காப்பு போராட்டங்கள்தான். அதுபோலவே உற்று கவனித்தால் நமது நாட்டில் நடந்துகொண்டிருப்பதும் அதுதான் என்பது புலப்படும். நமது போராட்டங்கள் எல்லாமே நம்மிடம் இருப்பதை காப்பாற்றவும், மேலும் சுரண்டாமல் காத்துக் கொள்வதாகவும்தான் இருந்தது.

ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள உலக நெருக்கடி என்பது முதலாளித்துவ நெருக்கடி வரலாற்றிலேயே மிக மோசமானது ஆகும். சேர்த்து நமது தற்காப்பு போராட்டத்தை முதலாளித்துவத்தின் ஆட்சிக்கு எதிரான தாக்குதல் போராட்டமாக மாற்றுவதற்கான வாய்ப்பு இன்று உருவாகியுள்ளது. முதலாளித்துவத்தின் ஆட்சி அதன் மிக மோசமான நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. ஆனால் துரதிஷ்டவசமாக அரசியல் மட்டத்தை பொறுத்தமட்டில் மாற்று சக்தி (சோசலிச அரசியல் மாற்று) இப்போதைய முதலாளித்துவ நெருக்கடி நிலையை புரட்சிகரமான சூழலாக மாற்ற போதுமான பலம் பெற்றதாக இல்லை. அப்படி இருந்திருந்தால், இந்த நெருக்கடி புரட்சிகர சக்திகள் முன்னேறுவதற்கான மிகச்சிறந்த வாய்ப்பாக இருந்திருக்கும். சில லத்தீன் அமெரிக்க நாடுகளில் இது நிகழலாம் என்று எதிர்பார்க்கலாம் அப்படி நடந்தால் அது நல்லதே. ஆனால், இந்தியாவில் இருக்கும் நம்மைப் பொறுத்தமட்டில், நெருக்கடி நிலையை புரட்சிகர சூழலாக மாற்றக் கூடிய வர்க்க சக்திகளின் செர்மானத்தை நாம் இன்னும் அடையவில்லை. இப்போது கிடைத்திருக்கிற வாய்ப்பில் நாம் முதலாளித்துவ ஆட்சிக்கு எதிரான தாக்குதல் போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். நம்முடைய உரிமைகளை தற்காத்துக் கொள்கிற தற்காப்பு போராட்டத்தை நாம் விட்டுவிட வேண்டும் என்பதில்லை, எப்போதும் போல அவை முக்கியமானவை. நம்முடைய தற்காப்பு போராட்டங்களை வலிமைப்படுத்துவதால் மட்டுமே நம்மால் தாக்குதலை நோக்கி செல்லமுடியும் என்ற உண்மையை நான் கவனத்திலிருந்து அகற்றவில்லை.

இப்பொழுது, தாக்குதலை நோக்கிய மாற்றத்தை நாம் எப்படி சாதிக்கப்போகிறோம்? அதுதான் இன்றைய நிகழ்ச்சிநிரலின் மிக முக்கியமான புள்ளி. இந்நிலையில், தற்போதைய உலக சூழலை , பேராசிரியர் பிரபாத் பட்நாயக் மிகச் சரியாக சுட்டிக் காட்டியிருக்கிறார். அநாகரீக முறையிலான மூலதன திரட்சி தீவிரமடைகிறது. இந்த சூழலில், புதிய தாராளவாத நிர்வாகங்கள் கூட தன்னை மாற்றத்திற்கு உட்படுத்திக் கொள்ளலாம். உலக முதலாளித்துவம், கண்டிப்பாக, இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு ஒன்றுமே நடக்காததைப் போல தன்னுடைய பழைய நிலைக்கே திரும்ப முடியாது. இறுதியாக இங்கே பல மாற்றங்கள் நிகழும். உலக முதலாளித்துவம் பழைய பெரிய நெருக்கடிக்குப் பிறகு எழுந்ததைப் போல் சுதாரித்து எழலாம். என்ன மாற்றம் ஏற்படும்? அது எப்படி மீண்டும் வரும்? எப்படி எழுந்து நிற்கும்? என்பதல்ல நாம் கவனிக்க வேண்டியது.

அநாகரீகமான முறையில் மூலதனத்தை திரட்டுவது தீவிரமடைந்து முதலாளித்துவம் சுதாரித்து எழலாம். இது பற்றி மார்க்ஸ் கூறியதை மனதில் கொள்வோம். ஒவ்வொரு நெருக்கடியும் புரட்சிகர சூழலே அது புரட்சிகர மாற்றத்தை கொண்டு வர இயலாமல் போனதால் முதலாளித்துவம் மீள்கிறது. முன்னை விட பலமாக எழுகிறது என்கிறார் மார்க்ஸ். தனது ஆதிக்கம் நீடிக்க அவசியமான வர்க்க சமநிலையை நிலைநாட்டிட உற்பத்தி சக்திகளை பெருமளவில் அழித்துவிடுகிறது.

இந்த வர்க்க சமநிலை உடையுமானால், அந்த வேளையில் புரட்சிகர சூழல் உருவாகிறது. இப்பொழுது அதற்கு சாதகமான வர்க்க சமநிலையை முதலாளித்துவம் இழந்து நிற்கிறது. நெருக்கடியிலிருந்து மீளுகிற ஆக்கத்தால் மூன்றாம் உலக நாடுகளை, சுரண்டுவது தீவிரப்படுவதை தவிர்க்கவே முடியாது. இதனை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலையை சந்திப்பது மட்டுமல்ல, முதலாளித்துவத்தின் தாக்குதலில் இருந்து தற்காக்கும் போராட்டத்திலிருந்து மாறி, முதலாளித்துவத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் போராட்டமாக மாற்ற முயல வேண்டும்.

தீர்மானிக்கும் தொழிலாளர் – விவசாயி கூட்டணி:

தற்காப்பு நிலையிலிருந்து தாக்குதல் நிலைக்கு மாற மையமானது எதுவோ அதில் கவனம் வேண்டும். அந்த மையம் என்பது தொழிலாளி- விவசாயி கூட்டு ஆகும். மக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவதின் மூலமே  முன்னெடுத்துச் செல்வதுதான். முதலாளித்துவத்தின் அதிகாரத்திற்கு எதிரான போராட்டங்களின் இயல்பை தற்காப்பு நிலையில் இருந்து தாக்குதல் நிலைக்கு மாற்ற முடியும். இப்போது நம்முடைய திட்டத்தின்படி மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மைய அச்சு விவசாயிகள் புரட்சியே. விவசாயிகள் புரட்சி நடக்காமல் நம்மால் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் போர்த் தந்திரத்தை நிறைவேற்ற முடியாது. அப்படி, விவசாயப் புரட்சியே மைய அச்சாக இருக்கும்போது. இந்த மைய அச்சை மக்கள் ஜனநாயகப் புரட்சியை சாதிக்கும் படி எப்படி வளர்க்கிறோம் என்பதும் முக்கியமாகும். தொழிலாளி வர்க்கத்திற்கு – இடையே உறவுப்பாலம் எப்படி அமைக்கிறோம் என்பதும். இந்தப் போராட்டங்களை வலிமைப் படுத்த முடிவதற்கான ஒரே திட்டமாகும். தொழிலாளர் – விவசாயி கூட்டமைப்பை கட்டமைப்பதற்கான ஒரே கருவியாகும். இந்தியாவின் தனித்துவம் மிக்க புறச்சூழலியே இவை நடக்கிறது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

அந்நிய நிதி மூலதனத்துடன்  தனது கூட்டை வலிமைப் படுத்திக் கொண்டிருக்கிற  பெருமுதலாளிகளால் வழிநடத்தப்படுகிற முதலாளி-நிலப்பிரபுக்கள் வர்கங்களின் அதிகாரத்திற்கான கருவியாகவே நாம் இந்திய அரசை காண்கிறோம். இந்திய முதலாளி வர்கம் ஏன் நிலப்பிரபுக்களுடனான கூட்டை உருவாகியது? இது விருப்பத்தினால் நேர்ந்ததல்ல. எந்த ஒரு முதலாளியும் நிலப்பிரபுவோடு ஆளும் வர்கமாக கூட்டு சேர்வதை விரும்பமாட்டான். பெருமுதலாளிகளிடம் அதிகாரம் சென்ற தனித்துவம் மிக்க சூழலில் இந்திய முதலாளிகள் நிலப் பிரபுக்களோடு கூட்டணியை உருவாக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்கள். வர்கத்தின் அதிகாரத்தை நீடிப்பதற்கு, அதோடு நம்மை தடுப்பதற்கு, முற்போக்கு புரட்சிகர இயக்கத்தின் வளர்ச்சியை தடுப்பதற்கு அவர்களுக்கு நிலப்பிரபுக்களின் கூட்டணி தேவைப்படுகிறது. ஆளும் வர்கமாக இந்திய பெரு முதலாளிகள் நிலப்பிரபுக்களோடு கூட்டு சேர்ந்த போது இந்த மாற்றமும் சேர்ந்தே வந்தது. நாம் இதை 1964 இல் இருந்து சொல்லுகிறோம். இப்பொழுது நாம் வரலாற்றை திரும்பிப் பார்த்தால். பெரு முதலாளிகள் அந்நிய நிதி மூலதனத்துடனான கூட்டணியை அதிகரித்திருப்பது கண்கூடாக நிரூபணமாகியுள்ளது. இன்றைய பெரு முதலாளிகள் அந்நிய நிதி மூலதனத்தின் நேரடிக் கூட்டாளிகள். ஒரு வேளை சிறிய கூட்டாளியாக இருக்கலாம். அது என்னவாகவும் இருக்கட்டும், இந்த உலகில் திறந்திவிடப்பட்டிருக்கும் ஒட்டு மொத்த தாராளவாதத் தாக்குதலில் அதுவும் ஒரு கூட்டாளி.

முதலாளிகள் தங்கள் அதிகாரத்திற்கான கூட்டில் இருந்து நிலப்பிரபுக்களை தூக்கி  எறிந்துவிடவில்லை என்பதை நாம் நினைவில் நிறுத்துவது அவசியம். அந்த அளவில் இது ஒட்டுமொத்த விவசாய துறையும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் திரும்பியிருக்கும் காலமல்ல. இப்போது நாம் செய்ய வேண்டியது என்னவெனில், நமது கட்சித் திட்டத்தில் குறிப்பிட்டுள்ள மக்கள் ஜனநாயக முன்னணி குறித்த நிலைப்பாட்டின் படி, நிலப்பிரபுக்கள் அல்லாதவர்களுக்கு இடையேயான ஒற்றுமையை வளர்ப்பதே. ஆனால் இது நாம் எவ்வாறு நமக்குள்ளான பலத்தை அதிகரிக்கிறோம் என்பதைப் பொறுத்தே அமையும். அதாவது விவசாயத் தொழிலாளி மற்றும் ஏழை விவசாயி கூட்டணி. இந்த இரண்டு வர்கங்களின் பலம் அதிகரிக்கும் பொழுது நிலப்பிரபுகள் அல்லாத விவசாயிகள் நம்மோடு நடைபோடுவார்கள்.

ஆனால் இந்தச் சூழலில் நமது போராட்டங்களை அதிகரிப்பதற்கான வழிமுறை, அதாவது அடிப்படை தூண்டுகோல் கிராமப்புற இந்தியாவின் சுரண்டலுக்கு உள்ளாகும் பிரிவினரின் போராட்டங்களை – சிறு விவசாயிகளை மற்றும் விவசாயக் கூலிகளின் போராட்டங்களை – முன்னெடுப்பதாகவே அமைய வேண்டும். அதுவே இன்றைய உலக மற்றும் உள்நாட்டு சூழலில், நம் நாட்டின் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான முதன்மையான தளத்திற்கு வருகிறது. இதுதான் இன்றைய பிரச்சனையின் மையம். மின்சாரம் முதல் எரிபொருள் வரை , தண்ணீர் முதல் நிலச் சீர்திருத்தம் வரையிலான அத்தனை கோரிக்கைகளிலும் – இந்த எல்லாவற்றின் மீதுமான போராட்டங்களை ஊக்கப்படுத்தவும் அதிகரிக்கவும் வேண்டும்.

இடது முன்னணி அரசுகளும் போர்த் தந்திரம் குறித்த கேள்விகளும்:

அதில் வேறு சில பிரச்சனைகள் இருக்கின்றன. நம் மனதில் நினைக்கிறபடி போராட்டங்களை முன்னெடுக்க முடியாது. நாட்டில் நடக்கிற அரசியல் போராட்டத்தையும் நாம் கணக்கிலெடுக்க வேண்டும். அரசாங்கம், ஜனநாயக தேர்தல் நடைமுறைகளில் நாட்டின் முக்கிய இடதுசாரி சக்தி பிரதான பங்காற்றும் இடங்களில் இப்படி நடக்கிறது. மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கான நமது போராட்டங்களுக்கு புறக்காவளாக நாம் இடது முன்னணி அரசுகளைக் கொண்டுளோம். இன்று மக்களின் விருப்பங்களை பாதுகாக்க இடது முன்னணி அரசுகள் இயன்ற அளவு முயற்சிக்கிறது. ஆளும் வர்கங்களுக்கு எதிரான நமது வர்க்கப் போராட்டங்களை அதிகரிக்க அந்த அரசுகளின் வலிமை மிக முக்கியமானது. ஆனால், நம் வலிமையைக் குறைப்பதற்காக ஆளும் வர்கங்கள் தம்மால் இயன்ற எல்லா கருவிகளையும் இடது முன்னணி அரசுகளுக்கு எதிராக பயன்படுத்தும்.1980 களில் 12 வது கட்சி மாநாட்டில் இதுகுறித்து நாம் விவாதித்தோம். தனியார் மூலதனத்தின் ஆதரவை பெறுவது குறித்த விவாதத்தில் தோழர் பி.டி.ரணதிவே என்ன கூறினார்?. மேற்கு வங்கத்தில் தொழில் மயத்திற்கு அரசு ஆதரவளிப்பது என்பது, இடதுசாரிகள் அந்த மாநிலத்தை ஆளும் வரை அங்கே எந்தவித வளர்ச்சியும் துவக்கப்படாது என்று பிரச்சாரம் செய்வதன் மூலம் மாநிலத்தில் நமக்கு ஆதரவான மக்கள் சக்தியை பலவீனப்படுத்த ஆளும்வர்கங்கள்  எடுக்கக்கூடிய முயற்சிகளுக்கு எதிரான வர்க்க போராட்ட உணர்வின் வெளிப்பாடே என்று தோழர் பிடிஆர் சொன்னார்.

ஏற்கனவே சிக்கலாகத் தெரிகிற இந்த அரசியல் சவாலை எப்படி எதிர்கொள்வது?. நடந்திருக்கும் விசயங்களில் ஏற்படும் பொருளாதார ரீதியான மாற்றங்களை புரிந்துகொள்வது மட்டுமல்லாமல் அரசியலில் நம்மை தனிமைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறபொழுது, நம்மை வீழ்த்தவும் பலவீனப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறபொழுது, அந்த சூழலில் என்ன விதமான எதிர்வினை ஆற்றுகிறோம் என்பதும் முக்கியமானதாகும். எனவே மிகச்சரியாக அதுதான் மேற்குவங்கம் அமுல்படுத்தியுள்ள தொழில்மய கொள்கையை நோக்கி இறுதியாக நம்மை இழுத்துச் சென்றது. ஆம். விவசாயிகளுக்கு எதிரான அநாகரீக மூலதனத் திரட்டலை வலிமைப்படுத்துகிற   தற்போதைய தாராளவாத அரசின் கீழ் விவசாயிகள் அடைகிற பாதிப்புகளும் பெரும் மக்கள் போராட்டத்தை ஒருங்கிணைப்பதற்கான முக்கிய இடத்திற்கு வருகின்றன.

அதே நேரத்தில் இடது முன்னணி அரசுகள் இருக்கிற இடங்களில் – அவர்களால் தொழில்மயம் செய்யவும், முன்னேறவும் முடிகிறதோ இல்லையோ – நமக்கும் ஆளும் வர்க்கத்திற்கும் இடையிலான அரசியல் போராட்டத்திற்கான கருவியாக அவை இருக்கின்றன. அந்த சூழலில் தெளிவாகவே சில நேரங்களில் நேர் எதிரான பிரச்சனைகளான மேற்சொன்ன இரண்டையும் எப்படி சந்திப்பது?. இப்போது அங்கே தொழில்மயம் செய்வதே பிரச்சனையாகியுள்ளது. சொல்லுங்கள், இடது முன்னணி ஆளும் மாநிலங்கள் நிலங்களை கையகப்படுத்துகிறது. இப்போது இது சரியானதா? அது என்ன காரணத்திற்காக செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்து சரியானதாகிறது. அல்லது பழையபடியே இருப்பதாக வைத்துக்கொள்வோம். விவசாயப்பன்னைகளை நாம் கைவைக்கவில்லை. அது எப்படி இருந்ததோ அப்படியே இருக்கட்டும் என விட்டுவிடுவோம். நாம் அதனை முன்னேற்றவில்லை. தொடர்ந்து வருகிற தேர்தலில் நாம் தோற்று விடுவோம். பிறகு நமது போராட்டங்களை அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கு பதில் நமது தளங்களை காப்பாற்றிக் கொள்ளவே போராடும் சூழலுக்கு தள்ளப்படுவோம். கடந்த கால அரை-பாசிச பயங்கரவாதத்தின் போது நடைபெற்றதைப் ரத்த வெறிபிடித்த வர்க்கப் போரை நோக்கி நாம் தள்ளப்படுவோம்.

நமது புரட்சிகரத் தன்மையை இழக்காமல் இந்த இரண்டையும் ஒருங்கிணைப்பது எப்படி? அங்கேதான் நடைமுறை அரசியல் தளத்திற்கு வருகிறது. நாம் அந்த சிக்கலை தீர்க்க வேண்டும். சிங்கூர் மற்றும் நந்திகிராமில் அவ்வாறான சிக்கல்களை நாம் பெற்றோம். இப்போது அவற்றை எதிர்கொள்கிறோம். இதுபோன்ற மாற்றங்கள் நடைபெருகிறபோது இந்திய அரசமைப்பில் எந்த ஒரு மாநில அரசும் மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட கொள்கைகளை மாற்றம் செய்ய முடியாது என்பதை நாம் புரிந்திருக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது.

இந்த கட்டுக்குள் நாம் செயல்பட வேண்டும். அப்படி செயல்படுகிறபோது தொழில்மயம் நடைமுறைக்கு வந்தாலும் விவசாயி வர்க்கத்தை காப்பாற்றுவோம் என்கிற கோசத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். நாம் விவசாயிகளை எப்படி காப்பாற்றப் போகிறோம், விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக தொழிலாளர்களும் போராடுகிற போது நாம் விவசாயி வர்க்கத்தை முக்கிய இடத்திற்கு கொண்டுவந்து விவசாயி-தொழிலாளி கூட்டணியை எப்படி வலிமைப்படுத்தப் போகிறோம். மாநிலத்தை தொழில் மயப்படுத்துவதற்கான நமது தந்திரம், விவசாயி தொழிலாளி கூட்டணியை வலிமைப்படுத்தி மக்கள் ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்கிற நமது போர்த்திட்டத்திற்கு எதிராக அமைய முடியாது. நாம் இந்தத் தந்திரங்களை எப்படி செயல்படுத்துகிறோம் என்பதே பிரச்சனையாகிறது. அதைத்தான் நாம் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறோம், அதாவது நம்மை இணைத்துக் கொண்டுள்ளோம்.

சிங்கூரில் கையகப் படுத்தப்பட்ட ஆயிரம் ஏக்கர் நிலத்திற்காக 12,000 த்திற்கும் அதிகமானோர் நஷ்ட ஈடு பெற்றனர். இதன் அர்த்தம் என்ன? ஒரு ஏக்கர் நிலத்தில் 12 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த நிலையில் யாரேனும் சொல்லிக் கொள்கிற வகையில் பிழைக்க முடியுமா?. அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க தொழில்மயத்தை தவிர வேறு என்ன வாய்ப்பு இருக்கிறது?.

ஆனால் தொழில்மயப்படுத்தும்போதும், நிலங்களை கையகப் படுத்தும்போதும். தாராளவாதத்தின் ஆரம்பகால மூலதனத் திரட்டலை வலிமைப்படுத்துகிற கட்சியாக நாம் இருக்க முடியாது. ஆனால், அதேநேரத்தில், இன்றைய முதலாளித்துவத்திற்கும், தாராள வாதத்திற்கும் எதிரான நமது போராட்டங்களை வலிமைபடுத்திக் கொண்டே எந்த வழிகளில் இந்த சூழலை கையாளுவது? அந்த வழிமுறையில்தான் நாம் நட்ட ஈட்டின் அளவையும், மறு-பயிற்சி, இன்னும் சிங்கூரில் செய்யப்பட்ட மற்ற பல விசயங்களையும் தீர்மானித்து செயல்பட்டளிம். எனவே இந்த பிரச்சனைகள் வரும், நாம் எதிர்கொள்ள வேண்டும். ஆனால் நாம் மையாமான திசை என்ன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நமது செயல் தந்திரங்கள் நமது போர் திட்டத்தை முன்னேற்றும் வகையில் பின்னிப் பிணைந்திருக்க வேண்டும் பலவீனப்படுத்திவிடக் கூடாது. மற்றும் இந்த அசாதாரண சூழலிலும் இந்த அளவுகோல் நம்மிடம் இருந்தால், அந்தத் தந்திரங்களை நம்மால் செயல்படுத்த முடியும்.

மக்கள் போராட்டங்களை வலிமைப்படுத்துவோம்:

இந்த சூழலின் மிகப்பெரிய கேள்வி, அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் முன்னாள் இருக்கும் மிக முக்கியமான கேள்வி, மக்கள் ஜனநாயகப் புரட்சியை வலிமைப்படுத்துவதற்கான ஆயுதமாக விவசாயிகள், மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் போராட்டங்களை வலிமைப்படுத்தி அவர்களை கட்டமைப்பதற்கான பிரச்சனை எது என்பதுதான் என நினைக்கிறேன்.

அது பெரும் மக்கள் போராட்டங்களின் மூலமே சாத்தியமாகும். இறுதியாக நாம் பல பத்தாண்டுகளாக பெற்றிருக்காத வாய்ப்புகளை இப்போது பெற்றிருக்கிறோம். எனவே தொடர்ந்து தற்காப்பு இயல்பில் நமது உரிமைகளை காப்பதற்காக நடைபெற்று வந்த போராட்டங்களை மூலதனத்தின் அதிகாரத்திற்கு எதிரான தாக்குதலாக இப்போது மாற்ற வேண்டுமென நினைக்கிறேன். இந்தியத் தன்மையில் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்ட பிரச்சனைகளின் மீது கிராமப்புற மக்கள் போராட்டங்களை ஒரு கிளர்ச்சியாக நடத்த வேண்டும் என்பதே இதன் அர்த்தம். – சில இடங்களில் அது மின்சாரமாக இருக்கும், சில இடங்களில் அது தண்ணீர், சில இடங்களில் வேறு பல பிரச்சனைகள். ஆனால் எல்லா பிரச்சனைகளின் அடிப்படையாக விச மற்றும் விதொச அதன் தந்திரங்களை செயல்படுத்தி, எல்லாப் பிரச்சனைகளையும்  பேராசிரியர் பிரபாத் பட்னாக்கை சரியாக குறிப்பிட்டு காட்டிய, விவசாயிகள்-தொழிலாளி கூட்டணியை மையப்படுத்தி நகர்த்தவேண்டும். அனால், அக்டளிபர் புரட்சியின் இரண்டாம் ஆண்டு கொண்டாட்டத்தில் லெனின் சொன்னதையும் நினைவில் வையுங்கள். அங்கே தொழிலாளர்-விவசாயி கூட்டணி வாழ்க!  என்று பெரிய வாழ்த்து தட்டிகள் இருந்தன. அதைக் கண்ட லெனின் அவர்களை கண்டித்தார். சோசலிச புரட்சிக்கு பிறகும், தொழிலாளிகள்-விவசாயிகள் கூட்டணி வாழ்க என்று சொன்னால் அங்கே சோசலிசமே இருக்காது, சிறு விவசாயிகள் கிராமப்புற தொழிலாளி வர்கமாக மாற்றப்பட வேண்டும்  . அது வேறு பிரச்சனை, புரட்சியின் வரையில் தொழிலாளர்கள் விவசாயிகள் கூட்டணியே நமக்கான கருவி.

எனவே நிச்சயம் இந்தக் கருத்தரங்கின் மையமான செய்தியாக இன்று கிடைத்திருக்கும் வாய்ப்பை பற்றிக் கொள்வோம்   என்பதே அமையும் என்று நினைக்கிறேன். வலிமை மிக்க மக்கள் இயக்கங்களை கட்டமைப்போம். அதோ அங்கே தோழர் ஆம்ரா ராம் முன்னேறுகிறார். அவர் ராஜஸ்தான் போராட்டங்களின் காரணமாக சட்டப் பேரவைத் தேர்தல்களில் மூன்று உறுப்பினர் இடங்களை பெற்றிருக்கிறார். நான் அவரிடம் நகைச்சுவையாக கூறினேன்,  மூன்று சீட்டுகளை பெற்றிருக்கும் நிங்கள் இதோடு தன்னிறைவு பெற்று பாஸ் பொத்தானை அழுத்திவிட முடியாது. ஒருவேளை நீங்கள் பாஸ் அத்தனை அமுக்கினால் பிறகு இருக்கிற மூன்றும் போய்விடும். இங்கெ இரக்கமற்ற இரண்டே வாய்ப்புகள்தான் இருக்கின்றன, ஒன்று நாம் முன்னேற வேண்டும், அல்லது உங்கள் எதிரி முன்னேறவேண்டும். வெற்றிடம் என்பது இல்லை. கண்டிப்பாக நாம் முன்னேற வேண்டும். இந்த கருத்தரங்கை தொடர்ந்து நமது வெகுஜன அமைப்புகள் மேற்ச்சொன்ன போர்த்தந்திரங்களை செயல்படுத்த வேண்டும்.

நஞ்சு கலந்த வரலாற்றுத் திருத்தங்கள் – ஏகாதிபத்தியத்தின் புதிய சாகசம்

நாட்டு மக்களே! வரலாற்றிலிருந்து நாம் நழுவ இயலாது இப்படிச் சொன்னவர் ஆப்ரஹாம் லிங்கன். ஆனால் நழுவுதல் என்னவோ நடந்து கொண்டுதான் இருக்கிறது. வரலாறு மறைக்கப்படுவதும், மறுக்கப்படுவதும் அல்லது திருத்தப்படுவதும் அந்த நழுவுதலின் சில வடிவங்கள் ஆகும். அத்தகைய முயற்சிகளுக்கு தற்போது புதிய வேகம் கிடைத்திருக்கின்றது. இந்தச் சூழலில் ஏகாதிபத்திய எதிர்ப்பு மையங்கள் பல்வேறு வடிவங்களில் உருவாவதையும் காண்கிறோம். ஆசியாவில் செயல்படத் துவங்கியிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு, லத்தின் அமெரிக்காவில் எழுந்து வரும் அமெரிக்காவிற் கான பொலிவிய மாற்று போன்ற அமைப்புகள் ஏகாதிபத்திய வீச்சினை (அப்படி ஒரு நோக்கம் இருப்பதாக அறிவிக்கப்பட வில்லை யென்றாலும்) தடுத்து நிறுத்தும் உள்ளடக்கம் கொண்டதாக உள்ளன. மத்திய ஆசியப் பகுதியில் நடப்பு நிகழ்வுகள் ஏகாதி பத்தியத்தின் கோரமான முகத்தை தெளிவாக உலகுக்கு வெளிக் காட்டுகின்றன. ஆகவே, நிலைமைகளை சந்திக்க ஏகாதிபத்தியத்திற்கு புதிய முகம் தேவைப்படுகிறது. தன்னொளி பொங்கும் முகம் அதற்கு உண்டு என்று சொல்லும் முயற்சி தான் தற்பொழுது துவக்கப் பட்டிருக்கும் வரலாற்றுப் புரட்டல். பேராசிரியர்கள் சிலர் ஊடகங்களின்  துணை கொண்டு ஏகாதிபத்தியம் ஆற்றிய நல்ல பணிகள் குறித்து வரலாற்றின் பக்கங்களைப் புரட்டி எழுதத் துவங்கியிருக்கிறார்கள்.

காலனி ஆதிக்கத்தின் உண்மை முகம்

பிரிட்டிஷ் ஊடகங்கள் இந்த தத்துவார்த்த விளையாட்டினை துவக்கியிருக்கின்றன. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் திருமதி. பிரியம் வதா கோபால் தி கார்டியன் பத்திரிக்கைக்கு சமீபத்தில் எழுதிய கட்டுரை ஒன்றில், கடந்த கால காலனி ஆதிக்கத்திற்கு புனிதமான தோற்றம் கொடுக்கும் இந்த ஊடக முயற்சிகளை தோலுரித்துக் காட்டியிருக்கிறார். வரலாற்றைத் திருப்பி எழுத அல்ல, திருத்தி எழுதி பிரிட்டிஷ் பேரரசின் கொடுங்கோல் ஆட்சியினை மூடி மறைக்கும் வேலை பி.பி.சி.யின் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மூலம் செய்யப்படுகிறது. ஏகாதிபத்திய அமைப்புக்கு வக்காலத்து வாங்கி எழுதிக் கொண்டிருக்கும்  நியாலி பெர்கூசன் என்பவர் அந்த பி.பி.சி நிகழ்ச்சிக்கான வரலாற்றுப் பேராசிரியராக பணியாற்றுகிறார். அவர் கூறும் வரலாறு ஒரு சுகமான கற்பனைக் கதை என்கிறார் பிரியம் வதா. அமெரிக்க வலது சாரி சிந்தனைப் போக்கால் உந்தப்பட்டு வலிந்து புகுத்தப்படும் வரலாற்றுப் புரட்டல் அங்கே அரங்கேறு கிறது. காலனி ஆதிக்கம் என்றால் எது நம் நினைவுக்கு வருகிறது? அடிமைத்தனம், சூறையாடல், யுத்தம், ஊழல், ஏழ்மை, நில அபகரிப்பு, பஞ்சம், சுரண்டல், கொத்தடிமை இப்படிப் பல இருட்டுப் பகுதிகளைக் கொண்டது தான் காலனி ஆதிக்கம். ஆனால், இந்த நிகழ்வுக ளெல்லாம் நல்ல நோக்கத்துடன் செயல் பட்ட காலனி ஆதிக்கத்தின் குறுக்கே விழுந்த தவிர்க்க முடியாத சம்பவங்கள், தவறுகள் மற்றும் அத்து மீறல்கள் என்ற குறிப்போடு அவைகள் மூடப்படுகின்றன. பாதி உண்மைகளும், பாதி கற்பனை கலந்த ஊகங்களும் எந்த வகையான நிரூபணமும், அடிக்குறிப்பு களும் இல்லாமல் அதிகாரப் பூர்வமான வரலாறு இதுதான் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது.

தொலைகாட்சி நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து வெளியிட்ட உலகின் யுத்தம் என்று பெர்கூசன் எழுதிய புத்தகம் கடந்த காலத்தில் கடைபிடித்த இனவெறிக் கொள்கையினைத் தூக்கிப் பிடிக்கின்றது. பொதுவாக மக்கள் தங்கள் இனத்தைச் சார்ந்த மக்களை நம்புவார்கள் என்றும், காலனி மக்களை நவீனப்படுத்த வெள்ளை மனிதர்கள் மேற்கொண்ட சுமை பற்றியும், அவர்கள் புரிந்த வீர சாகசங்கள் குறித்தும் பெர்கூசனின் வரலாறு நிறையவே சொல்லுகிறது.

வரலாற்றை மறைக்கும் முயற்சிகள்

இந்த ஒளிபரப்பு நிகழ்ச்சிகளும், பேச்சுக்களும் ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்றன. நவீன பிற்போக்குவாதிகளின் முற்போக்கு  சொல்லாடல்கள் இவை. பெர்கூசன் புதிதாக எதையும் சொல்லவில்லை. மெக்காலே, மில் போன்ற ஏகாதிபத்திய  ஆதர வாளர்களும், தற்போது புஷ் நிர்வாகம் கொஞ்சம் சுத்தப்படுத்தி வெளியிடும் உளுத்துப்போன சுய விளம்பரக் கனவுகளையும், பரப்பப்பட்ட பொய்களையும்தான் பெர்கூசன் பட்டை தீட்டி நம்முன் வைக்க விரும்புகிறார். அவர் போன்றவர்களை அதிகாரப் பூர்வமான வரலாற்றாசிரியர்கள் என பிரிட்டிஷ் ஊடகங்கள் அங்கீகரிப்பதன் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேன்மை யைப் பரப்பும் பிரச்சார பீரங்கிகளாக அவர்கள் மாற்றப்படுகிறார்கள்.

பிரிட்டனில் குடியுரிமை வேண்டுவோர் பிரிட்டனின் வரலாறு படித்து தேர்வு பெற வேண்டும் என பிரிட்டிஷ் குடியுரிமை விதிகள் கூறுகின்றன. அதற்காக ஒரு வரலாற்றினை எழுதியிருப்பவர் பேராசிரியர் பெர்னார்ட் க்ரிக் – இவரை நியாலி பெர்கூசனின் மறுபதிப்பு எனலாம். 9000 வார்த்தைகளைக் கொண்ட இந்தப் புத்தகம். பிரிட்டனின் மேன்மைக் குடியைப் பற்றி பலவாறு குறிப்பிடுகிறது. பிரிட்டனின் உயர்தனிக் குடும்பங்களைப் பற்றி 210 வார்த்தைகள் இந்தப் புத்தகத்தில் உள்ளது. ஆனால், பிரிட்டன் நாட்டு பாமர மக்களின் சாசன இயக்கம் (Charter Movement) பற்றியோ, தொழிற்சங்க இயக்கத்தின் துவக்கம் பற்றியோ, 1927 ல் நடந்த மிகப் பெரிய வேலை நிறுத்தம் பற்றியோ ஒரு வார்த்தை கூட எழுதப்படவில்லை. தாட்சர் ஆட்சி பற்றி பக்கம் பக்கமாக எழுதப்பட்டிருக்கிறது; ஆனால், அர்ஜென்டினாவுக்கு எதிராக அந்த அரசு நடத்திய  தார்மீக நெறியற்ற ஃபாக்லண்ட் யுத்தம் பற்றி ஏதுமில்லை. அட்லாண்டிக் பெருங்கடல் தாண்டி நடத்தப்பட்ட அடிமை வியாபாரம் தீதானது என்று குறிப்பிடும் போது, பிரிட்டிஷ் பேரரசின் கொடிய செயல்களை வெண்பட்டு முக்காடு கொண்டு மறைக்கப்பட்டுள்ளன. பெர்னார்டு கிரிக் காலனி ஆதிக்கத்தை சித்தரிக்கும் விதமே அலாதியானது. “ஆப்பிரிக்காவின் பூர்வ குடி மக்களுக்கும், இந்திய உபகண்டத்தில் உள்ள மக்களுக்கும் நடுநிலையான சட்ட ஒழுங்கு அமைப்பை கொடுத்தும், ஆங்கிலக் கல்வி கொடுத்தும், சிதறிக்கிடந்த மக்களை ஒற்றுமைப் படுத்தி, மக்கள் நலன், கல்வி முதலியவற்றில் கவனம் செலுத்தி அமைதி காத்து, யார் தங்களை ஆளுகிறார்கள் என்பதைப் பற்றி மக்கள் கவலைப்படாமல் இருக்கச் செய்தது” என்கிறார். இதைப் படித்துவிட்டுத்தான் நம் நாட்டின் பிரதமர் அண்மையில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு “நல்லாட்சி” (Good governance) விருது வழங்கியிருப்பாரோ?

காலனி அரசின் அலங்கோலம்

அமர்த்தியா சென், நிக்கோலஸ் டிர்க்ஸ், மைக் டேவிஸ் மகமூத் மம்தானி, கரோலின் எல்கின்ஸ், வால்டர் ரோட்னி போன்றவர் களெல்லாம் ஐரோப்பிய காலனி ஆதிக்கம் பற்றி ஆய்வு செய்து எழுதியவற்றில் காலனி நல்லாட்சி என்பது வறுமையும், ரத்தக்களறியும், அடக்கு முறையும், துன்ப துயரங்களும் நிறைந்த ஆட்சியாக இருந்தது என்பதை விளக்கியிருக்கிறார்கள். மைக் டேவிஸ் எழுதிய கடந்த விக்டோரியா காலப் படுகொலைகள் என்ற புத்தகத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின் அவலங்களைப்பற்றி எழுதியிருக்கிறார். 1896-1900 காலத்தில் மட்டும் இந்தியாவில் கிட்டத்தட்ட 12 லிருந்து 29 மில்லியன் மக்கள் பஞ்சத்தில் இறந்து போனார்கள்.  அதற்கு முந்தைய  2000 ஆண்டுகளில் அப்படி இறந்தவர்களைக் காட்டிலும் இது அதிகம். பிரிட்டிஷ் ஆட்சியால் அந்த மக்கள் படுகொலை செய்யப்பட்டவர்கள் என்கிறார் டேவிஸ். எல்நினோ என்றழைக்கப்பட்ட வறட்சி நிலை 1876ல் இந்தியாவின் தக்காணப் பகுதியினைத் தாக்கியது. அரசிடம் போதுமான அரிசியும், கோதுமையும் இருப்பில் இருந்தது. அன்றைக்கு இந்திய வைஸ்ராய் பொறுப்பில் இருந்த லிட்டன் எந்தச் சூழ்நிலையிலும் பிரிட்டனுக்கு அனுப்பப்படும் உணவுப் பொருட்களின் ஏற்றுமதியினைத் தடுத்து நிறுத்தக் கூடாது என உத்தரவிட்டிருந்தார். பஞ்சம் நிலவிய உச்ச கட்டத்தில் 320,000 டன் உணவுப் பொருள் ஏற்றுமதி செய்யப்பட்டது.

பட்டினியால் வாடிய விவசாயிகளுக்கு கொடுத்த நிவாரண உதவிகளை நிறுத்த உத்தரவிடப்பட்டது. சந்தையில் விலை நிர்ணயம் செய்யப்படுவதில் குறுக்கீடு இருக்கிறது என்று சொல்லி அறவழி நன்கொடைக்கு எதிராக 1827-ம் ஆண்டு சட்டத்தினைப் பயன்படுத்தி தனியார் நிவாரண உதவிகளும் தடைசெய்யப்பட்டன; மீறினால் தண்டனைக்குள்ளாவார்கள் என எச்சரிக்கை விடப்பட்டது. கடும் உழைப்புக்கு மக்கள் நிர்பந்திக்கப்பட்டனர். நாஜி ஜெர்மனியின் புக்கன் வால்ட் கைதிகள் முகாமில் கொடுக்கப்பட்ட உணவைக் காட்டிலும் மிகக் குறைவான உணவே அந்த உழைப்புக்கு வழங்கப் பட்டது. அந்த உழைப்பிற்கான முகாம்களில் மாதாந்திர இறப்பு விகிதம் 94 சதம். இதுவே ஓர் ஆண்டு இறப்பு விகிதமாக இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மக்களின் சாவு எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கும் போது, வரி வசூலை முடுக்கிவிட்டது காலனி அரசு. அந்தப் பணம் லிட்டன் நடத்திய ஆப்கானிஸ்தான் யுத்தத்திற்கு பயன்படுத்தப்பட்டது. பஞ்சாப் மற்றும் (இன்றைய) உத்திரப்பிரதேசப் பகுதிகளில் அபரிமிதமான அறுவடை இருந்தது; ஆனால் காலனி அரசின் ஏற்றுமதிக் கொள்கையால், இந்தப் பகுதியில் மட்டும் 12.5 லட்சம் பேர் இறந்தார்கள். இதுதான் அந்த நல்லாட்சியின் அளவீடு.

நல்லாட்சியின் அம்சங்கள்

ஜனநாயகம், விடுதலை, சகிப்புத்தன்மை போன்ற மனித குலம் போற்றும் பண்புகளை நாங்கள் தான் காலனி மக்களுக்குக் கொடுத் தோம் என்று காலனி ஆதிக்கவாதிகள் தங்கள் முதுகில் தாங்களே தட்டிக் கொள்கிறார்கள். கென்யாவில் பிரிட்டன் நடத்திய வெறியாட்டம் மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்து நடத்திய கொடுஞ்செயலாகும். விரல்விட்டு எண்ணக்கூடிய பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பாளர்கள் ராணுவத்தின் துணைகொண்டு 12000 சதுர மைல் நிலங்களை அபகரித்து, 2000 சதுர மைல் பரப்பளவுப் பகுதியில் சுற்றி வளைக்கப்பட்ட கிராமங்களில் 12.5 லட்சம் கிகியூ இனத்தவரை அடைத்துப்போட்டது என்ன விடுதலை உணர்வோ! எதிர்த்துப் போரிட்ட மாவ்மாவ் இயக்கத்தினரை கொலை, சித்தர வதை போன்ற அடக்கு முறை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தி ஆட்சி செய்தது என்ன சகிப்புத்தன்மையோ! 3.20 லட்சம் பேர் அந்த சித்தரவதை முகாம்களில் இருந்தனர். செவி மடல்களை வெட்டியும், உடலில் மெழுகை ஊற்றி பின்பு எரித்தும், எரியும் சிகரெட் துண்டுகளை செவிகளில் நுழைத்தும் கைதிகள் விசாரிக்கப்பட்டார்கள் என கரோலின் எல்கின்ஸ் பிரிட்டனின் குலாக் என்ற புத்தகத்தில் எழுதுகிறார். 1 லட்சம் பேர் கொல்லப்பட்டும், நோயினாலும், பட்டினியாலும் மடிந்து போனார்கள் என்றும் குறிப்பிடுகிறார்.

1919ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை காலனி ஆதிக்கத்தின் வெறித்தனத்தை வெளிக்காட்டிய செயல். டாஸ்மானி யாவில் நடந்த இனப்படுகொலை, 1948 – 60 ல் மலேயாவிலும், சைப்ரஸிலும் (1955-59) நடத்திய ராணுவ நடவடிக்கைகள், ஓமன் கிராமங்களின் மீது நடத்திய குண்டு வீச்சு, வடக்கு ஓமன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் யுத்தம், டியோகா கார்சியா தீவிலிருந்து மக்களை வெளியேற்ற எடுத்த நடவடிக்கைகள், 1953-62 ல் கயானாவில் மக்களின் ஜனநாயக முடிவினை எதிர்த்து நடத்திய ராணுவ நடவடிக்கை, 1956 ல் பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலுடன் சேர்ந்து சூயஸ் கால்வாயினை மீண்டும் பிடிக்க எடுக்கப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகள் இவைகள் தான் பிரிட்டிஷ் அரசின் நல்லாட்சிக்கான வரலாற்றுப் பூர்வ நிரூபணங்கள். நமது நாட்டில் மத அடிப்படையிலான பிரிவினையை நடத்தி வைத்த பெருமை பிரிட்டிஷ் அரசுக்கு உண்டு; 1 கோடி மக்கள் புலம் பெயர்ந்து பரிதவித்த சோக வரலாற்றினை நாம் கண்டோம்.

பேராசை, வன்முறை

பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க மேலாதிக்கம் நிறுவப்படுவதற்கு முன் இந்த உலகம் எப்படி இருந்தது? என்பதைச் சிந்தித்துப் பார்ப்பதில் நாம் தோல்வியடைந்திருக்கிறோம் என்கிறார் பிரியம் வதா. பேராசையும், வன்முறையும் ஒரு குறிப்பிட்ட பண்பாடு அல்லது கலாச்சாரத்துக்கு மட்டும் உரித்தானதல்ல. ஆனால், காலனி ஆதிக்கத்தின் இந்த நடைமுறைகள் முன்னேற்றத்திற்கான சாத்தியக் கூறுகளை அழித்துவிட்டது. முகலாய மன்னர் அக்பரின் அட்சி முறை சுல்-எ-குல் அல்லது அனைவருக்கும் நன்மை என்ற பிரதான கோட்பாட்டின் அடிப்படையில் செயல்பட்டது; ஆனால், இதையெல்லாம் மாற்றி பிரிட்டன் இங்கே அதன் பேராசையின் வரலாற்றிற்கு புதிய அத்தியாயம் எழுதியது. பருத்தி, கரும்பு, தேக்கு, ரப்பர் மற்றும் பல்வேறு கனிமங்கள் போன்ற இந்த நாட்டின் இயற்கைச் செல்வம் பெரிய அளவில் சூறையாடப்பட்டது. பிரிட்டிஷ் வருவதற்கு முன் இந்தியாவின் துணி உற்பத்தி மிகவும் வளர்ந்த நிலையில் இருந்தது. ஆனால், பிரிட்டிஷ் ஆட்சி ஒரு அரைநூற்றாண்டு காலத்தில் அதை அழிவுக்குக் கொண்டு வந்தது. மார்க்ஸ் மூலதனம் புத்தகத்தில் குறிப்பிடுவது போல், பருத்தி துணி நெய்யும் நெசவாளிகளின் எலும்புகள் இந்திய சமவெளியினை வெளிறச் செய்துவிட்டது. ஜார்ஜ் மான்பியாட் என்ற கட்டுரை யாளர் தி கார்டியன் பத்திரிக்கைக்கு எழுதிய கட்டுரையில் 18ம் நூற்றாண்டில் தென் இந்தியத் தொழிலாளர்கள் அதே காலக் கட்டத்தில் இருந்த பிரிட்டன் தொழிலாளர்களைக் காட்டிலும் அதிகம் சம்பாதித்தார்கள். நல்ல பொருளாதாரப் பாதுகாப்போடு வாழ்ந்தார்கள் என (பி.பார்த்த சாரதி என்பவர் ஆய்வினை மேற்கோள் காட்டி) குறிப்பிடுகிறார். 1757 லிருந்து 1947 வரை இந்தியாவில் தனிநபர் வருமானம் எள்ளவும் உயரவில்லை என்று மைக் டேவிஸின் கருத்தினையும் முன் வைக்கிறார். 2 கோடி ஆப்பிரிக்க மக்களும், 15 லட்சம் இந்தியர்களும் கொத்தடிமைகளாக கடல் கடத்தப்பட்டு தேயிலை, கரும்புத் தோட்டங்களில், சுரங்கங்களில் பணி புரிய நிர்பந்திக்கப்பட்டனர். ஃபிஜித் தீவின் கரும்புத் தோட்டங்களில் கொத்தடிமையாய் வெந்து மடியும் இந்தியர்களைப் பற்றி பாரதி பாடியது நினைவுக்கு வருகிறது.

நாட்டை நினைப்பாரோ எந்த
நாளினைப் போவதைக் காண்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ – அவர்
விம்மி விம்மி விம்மி யழுங்குரல்
கேட்டிருப்பாய் காற்றே! – துன்பக்
கேணியிலே எங்கள் பெண்கள் அழுத சொல் மீட்டும் உரையாயோ? அவர்
விம்மியழவுந் திறங்கெட்டுப் போயினர்…

நாடுகளை அடிமைப்படுத்தி, செல்வங்களைச் சுரண்டி, உழைப்பை உறிஞ்சி திரட்டிய செல்வத்தில் உருவாகி, வளர்ந்த முதலாளித்துவ உலகம்; ஏகாதிபத்தியமாக உருவெடுத்தது.

பிரிட்டன் வழியில் அமெரிக்கா

ஏகாதிபத்திய உலகில் பிரிட்டனின் வாரிசாக பிரிட்டனையே பின்தள்ளிவிட்டு அமெரிக்க ஏகாதிபத்தியம் முன்னே வந்து நிற்கிறது. இவர்களுக்கும் உண்மையான வரலாறு படிப்பதில் சங்கடங்கள் உண்டு. ஈராக் யுத்தம் முடிவுற்ற போது, (இன்னும் முடிவு பெறவில்லை என்பது வேறு விஷயம்) புஷ் பேசினார்: வரலாறு? எங்களுக்குத் தெரியாது. முடிவில் நாம் எல்லோரும் இறந்து போவோம். இப்படி ஒரு வாழ்க்கைத் தத்துவத்தில் வரலாற்றை ஒதுக்க நினைத்தாலும், அது ஒதுங்குவதாக இல்லை. சென்ற ஆண்டு (நவம்பர் 11) போரில் சிறப்பாக பணி புரிந்தோர் தினத்தில் பேசும்போது புஷ்  எப்படி போர் துவங்கியது என்று வரலாற்றைத் திருப்பி எழுத முயற்சிப்பது எல்லையற்ற பொறுப்பின்மை என்று குற்றம் சாட்டினார். ஈராக் யுத்தம் எப்படி பொய்களையும், உளவுத்துறை செய்திகளின் திருத்தங்களையும், ஏகாதிபத்திய உள்நோக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டு துவக்கப் பட்டது என்று ஆராயத் துவங்கியதன் விளைவுதான் இந்தக் கோபம். ஜனநாயகம், விடுதலை நாகரீகம் என்பதையெல்லாம் உலகுக்கு கற்றுக் கொடுக்க எடுத்த அவதாரம் தான் தங்கள் அமெரிக்கா என்று பறைசாற்றுகிறார்கள். 5 லட்சம் ஈராக் குழந்தைகளைப் பலி வாங்கி, தொன்மையான யூப்ரிடிஸ் – டைக்ரிஸ் நதிக்கரை நாகரிகத்தின் வரலாற்றுச் சின்னங்களையும் அழித்துவிட்டு, அவர்கள் சுட்டு விரலுக்கு அசையும் பொம்மை அரசினை நிறுவிவிட்ட பின் னணியில், அந்த அழிப்பு வேலை வரலாற்றுப் புத்தகங்களில் இடம் பெறுவதை புஷ் கும்பல் விரும்பவில்லை. கடந்த கால வரலாறு எழுதுவது நிறுத்தப்பட்டால் மனிதாபிமானம் என்பது நிறுத்தப் படுகிறது என்று பொருள். கடந்த காலம் என்ன சொல்கிறது?

உங்களுடைய தளர்வுற்ற, ஏழ்மையுற்ற, தாழக் குனிந்து விடுதலை வேண்டும் என்று கெஞ்சுகிற மக்களை – உங்கள் கடலலைகள் உமிழ்ந்து கொட்டி துயருற்று பயனற்றதென கழிவு செய்த மக்களை – உறைவிடம் ஏதுமற்று, சூறாவளியினால் அலைக்க ழிக்கப்படுகிற அந்த மக்களை என்னிடம் அனுப்புங்கள் என நியூயார்க் துறைமுக வாயிலில் தீபத்தைக் கையில் ஏந்திய சுதந்திர தேவியின் சிலைக்கு அடியில் எழுதப்பட்ட வாசகங்கள் இவை. அந்த மக்கள் வந்தார்கள். அமெரிக்க வரலாறு சொல்கிறது வந்தவர்கள் அப்படியே வாழ்ந்தார்கள் என்று ஃபெலிக்ஸ் க்ரின் தன்னுடைய எதிரி என்ற புத்தகத்தில் குறிப்பிடுவது போல், அமெரிக்காவின் புதிய உலகக் கனவில் துவக்கத்திலிருந்தே கேடு விளைவிக்கும் ஊனம் இருந்தது – மனிதர் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டின் மீது கட்டப்படும் எந்தச் சமூகமும் ஒரு அடிமைச் சமூகமாக இருக்க முடியாது;

ஆனால், அமெரிக்கா அப்படித்தான் ஆனது; அந்த மண்ணில் வாழ்ந்த பூர்வீக குடிகளான இந்திய மக்களை (செவ்விந்தியர்கள் என்று ஹாலிவுட் படங்கள் சித்தரித்தன) ஈவிரக்கமின்றி படுகொலை செய்ததை மன்னித்துவிட முடியுமா? உற்பத்திச் சாதனங் களை தனியார் கையில் கொடுத்துவிட்டு மனித சமத்துவம் உருவாக்க முடியுமா? பகட்டான வார்த்தைகளில் வெளியிடப்படும் உன்னத லட்சியத்திற்கும், செயலில் வெளிப்படும் யதார்த்த நிலைக்கும் உள்ள இந்த முரண்பாடுகள் சொல்லொணா விளைவுகளைக் கொண்டு வரும் என்று எச்சரிக்கிறார். ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட கறுப்பு நிற அடிமைகள், அங்கேயே உள்ள இந்திய இன மக்கள், சுதந்திர தேவி அழைத்த முறையில் வந்து குடியேறிய மக்கள் – இவர்களின் உழைப்பு கொடுமையான சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்டது. நிலம் வேண்டி, தங்கம் தேடி அமெரிக்காவில் மேற்கு நோக்கி நகர்ந்த ஐரோப்பி யர்கள் 10 லட்சம் இந்தியர்களில், கிட்டத்தட்ட 7 1/2 லட்சம் பேரைக் கொன்று குவித்துவிட்டுத்தான் நிலத்தையும், தங்கத்தையும் எடுத்துக் கொண்டார்கள். டிசம்பர் 28, 1870 ல் வூண்டட் நீ (Wonded Knee) என்னுமிடத்தில் அரசுப் படைகளுக்கும், இந்தியர்களுக்கும் நடந்த மோதலின் முடிவு எப்படி இருந்தது என்பதைப் பற்றி டீ ப்ரௌன் (Dee Brown) என்பவர்  My Heart at Wounded Knee என்ற புத்தகத்தில் எழுதியதை குறிப்பிடுவது மறந்து போன அமெரிக்க வரலாற்றினை நினைவுக்குக் கொண்டு வரும். அந்த வெறித்தனம் முடிந்த பொழுது பிக்ஃபூட்  (இந்தியர்களின் ஒரு குழுத் தலைவர்) மற்றும் அவர் குழுவில் பாதிக்கும் மேல் இறந்து போனார்கள். பலர் படுகாயமுற்றனர்; தெரிந்த அளவில் 153 பேர் இறந்து போனார்கள். காயமுற்ற பலரும் ஊர்ந்து போனார்கள், கடைசியில் அவர்களும் மாண்டனர்.

ஒரு கணிப்பு கொடுத்த தகவலின் படி, மொத்தம் 350 பேரில் ஆண், பெண், குழந்தைகள் உட்பட, 300 பேர் கொல்லப் பட்டனர். ராணுவத்தினர் 25 பேர் உயிரிழந்தனர். 39 பேர் காய முற்றனர்; அதுவும் அவர்களின் துப்பாக்கிக் குண்டுகள் மற்றும் வெடித்த உலோகத் துண்டுகள் மூலமாகத்தான் இந்த நிகழ்வுக ளெல்லாம் அனை வரையும் சமமாகப் பாவிக்கும் அமெரிக்க அரசியல் சட்டம் நிறை வேற்றிய பிறகு தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வரலாற்றாசிரியன் ஆராய்கின்ற கடந்த காலம் அழிந்து போன கடந்த காலம் அல்ல. ஆனால், ஒரு அர்த்தத்தில் நிகழ்காலத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற கடந்த காலம் அது என இ.எச்.கார் தன்னுடைய வரலாறு என்றால் என்ன? புத்தகத்தில் குறிப்பிடுவதை நாம் கவனத்தில் கொள்வோம். அந்த அடித்தளத்தில் கட்டப்பட்டது தான் இன்றைய அமெரிக்கா.

ஆக்கிரமிப்பு  எல்லை விரிவடைகிறது

பல ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் அமெரிக்க ஏகாதிபத்தியம் வளர்ந்தது. 1898 ல் ஸ்பெயின் பிடியில் இருந்த பிலிப்பைன்ஸ், ப்யூர்டோ-ரிகோவினை அமெரிக்கா கைப்பற்றியது. ஃபெலிக்ஸ் க்ரீன் கேட்கிறார்: ஹவாய் மற்றும் ப்யூர்டோரி கோவினைக் கைப்பற்ற அமெரிக்காவிற்கு கடவுள் கொடுத்த அதிகாரம் ஏதேனும் உண்டா என்று அமெரிக்க மக்கள் கேட்ட துண்டா? அந்த மக்களிடம் இது பற்றி விவாதித்ததுண்டா? இரண் டாம் உலகப் போருக்கு முன்பே பிலிப்பைன்ஸ், மெக்ஸிகோ, கியூபா, நிகரகுவா, பனாமா, ஹைதி, கொலம்பியா, பெரு, டொமினிகன் குடியரசு, கோஸ்டாரிகா, ஹோண்டுராஸ் மற்றும் கரீபியன் பகுதியில் உள்ள நாடுகளில் அமெரிக்க ராணுவம் அத்துமீறி நுழைந்ததை அமெரிக்க மக்களின் மனச்சாட்சி ஏற்றுக் கொள்கிறதா? இந்தக் கேள்விகளுக்கு பதில் ஏதும் கிடைக்க வில்லை. 1954 ல் 72 சதம் வாக்குகளைப் பெற்று ஜாக்கோபா அரபென்ஸ் கவுதமாலாவின் குடியரசுத் தலைவரானார்;

நிலச் சீர்திருத்தம் கொண்டு வந்தார், அன்றைக்கு அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சராக இருந்த டல்லசின் குடும்பம் பங்கு கொண்ட ஒரு நிறுவனம் பறிக்கப்பட்டது. நஷ்ட ஈடு போதாது என்று சொல்லி அதற்காக ராணுவ தளபதி காஸ்டில்லோ அராமாஸ் என்பவனைத் தூண்டி அண்டை நாடான ஹோண்டுராஸிலிருந்து படையெடுத்து, அரபென்ஸ் அரசைக் கவிழ்த்த வரலாறு அதிகமாகப் பேசப்படாத ஒன்று. ராணுவ ஆக்கிரமிப்பு முடிந்தவுடன் டல்லஸ் சொன்னது; அமெரிக்க நாடுகளின் சிறப்பான பாரம்பரியத்தில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டிருக்கிறது. சிலியில் இதே முறையில் அலெண்டே அரசும் கவிழ்க்கப்பட்டதும் ஒரு வரலாறு. அமெரிக்கா நடத்திய வியட்நாம் யுத்தம் எளிதில் மறந்து விடக் கூடிய வரலாற்று நிகழ்வா? இப்போது ஈராக். அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் அண்மையில், ஈராக்கில் மீண்டும் ஒரு வியட் நாமை சந்திக்க நேரும் என்று அமெரிக்க அரசை எச்சரித்திருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பு வரலாற்றை எழுதினால் புத்தகத்தின் பக்கங்கள் முடிவு பெறாமல் போய்க்கொண்டே இருக்கும். ஆனால், புஷ் மற்றும் ஏகாதிபத்தியத்திய வாதிகள் அந்த வரலாறு நினைவு படுத்தப்படுவதை விரும்பவில்லை.

நாணயமான வரலாறு மதிப்பீடு

வரலாற்றை மறைக்க வேண்டும் என்ற ஆசை சிலருக்கு இருக்கக் கூடும். அதை மறந்தால் சமூகம் முன்னேறுவதற்கான திறனை முற்றிலும் இழந்துவிடும். திருத்தும் பேராசிரியர்கள் கடந்த காலத்தில் இந்தியா போன்ற நாடுகளில் ஆட்சி செய்த கொடுங்கோல் மன்னர்களைப் பற்றி ஏன் விமர்சிப்பதில்லை என்று கேட்கிறார்கள். ஆனால் ஒரு கொடுங்கோன்மை அமைப்பிலிருந்து மீண்டும் மற்றொன்றின் கீழ் வாழ மக்கள் விரும்புவதில்லை. ஜனநாயகம், பாராளுமன்ற அமைப்பு முறை, நிர்வாக அமைப்பு முறை இவைகளையெல்லாம் நாங்கள் தானே கொடுத்தோம் (நம் நாட்டின் பிரதமர் உட்பட சிலர் நம்புவது போல்) என்று பறைசாற்றும் மேலை நாட்டு காலனி ஆதிக்க ஆதரவாளர்கள் அந்த நாடுகளின் பாரம் பரியத்தையும், பண்பாட்டையும் முழுமையாகப் புரிந்து கொள்ளா தவர்களாகத்தான் உள்ளனர். அமர்த்தியா சென் போன்றவர்க ளெல்லாம் இந்த மண்ணுக்கு சுதந்திரமான சிந்தனையும், விவாதங் களும், கருத்துப் பரிமாற்றங்களும் மேற்கொண்ட பாரம்பரியம் உண்டு என்று பல ஆய்வுகளில் சுட்டிக் காட்டி யுள்ளனர். மக்கள் பங்கு கொள்ளும் முறைகளைக் கொண்ட கிராமப்புற அமைப்புகள் இங்கே இருந்ததுண்டு.

ஜனநாயகப் பண்புகளெல்லாம் ஒரு குறிப்பிட்ட பண்பாட்டின் அசைவுகள் என்று குறுக்கிவிடும் பேதமை யினை நாம் சந்திக்கிறோம். அமிதாவ் கோஷ் போன்ற வரலாற்றா சிரியர்கள் சுதந்திரச் சந்தை என்று இன்று அதிகமாகப் பேசப்படும் வணிக முறை கூட இந்தியாவிற்குப் புதிதல்ல என்றும், பிரிட்டிஷ் இங்கு வருவதற்குப் பல நூற்றாண்டுகள் கடல் கடந்த வணிகம் ஆப்பிரிக்கா மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கும் நம்நாட்டில் செயல்பட்ட பல்வேறு பேரரசுகளுக்கிடையே இருந்திருக்கிறது என்றும் விவரிக்கிறார்கள். ஆனால், காலனி ஆதிக்கவாதிகளும், ஏகாதிபத்தியமும் புதிய வரலாறு எழுத முயற்சிக்கும் போது ஒரு விஷயத்தை நமக்குச் சொல்ல விரும்புகிறார்கள். அதாவது அவர்களது உயர்ந்த நாகரிகம் மற்ற நாகரிகங்களோடு மோதுவதைத் தவிர்க்க முடியாது. ரட்யார்ட் கிப்ளிங்ஸ் என்ற ஆங்கிலக் கவிஞர் எழுதுவதுபோல்,  கிழக்கு கிழக்கு தான், மேற்கு மேற்கு தான்; இரண்டும் என்றும் சந்திக்க முடியாது என்ற நோக்கத்தோடு அவர்கள் செயல்படுகிறார்கள். பல வகையான பண்பாட்டு நுழைவினைத் தடுத்து, அந்தந்தப் பண்பாட்டினைக் கெட்டிப்படுத்தி நிறுத்துவது (இரண்டும் சந்திக்க முடியாது) ஏகாதிபத்திற்கு தேவைப்படுகிறது. அப்படிச் சந்திக்க முடியாது என்று சொல்வது காலனி ஆதிக்கத்தின் அவலச் சுவை கொண்ட பொய் என்கிறார். பிரான்ஜ் பெனான் (Franz Fanon) இக்கருத்தின் செயல்வடிவம் தான் இஸ்லாமுக்கு எதிராக புஷ் தொடங்கியிருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு; யுத்தம், அதற்குப் பதிலடி கொடுப்பதாக எழுந்திருக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளும், அக்கருத்தின் மோசமான விளைவுகள்தான். இந்த ஏகாதிபத்திய அணுகுமுறை உடைத்தெறியப்பட வேண்டும். அது உண்மையான வரலாற்றுக்குப் பொய்யான முகம் கொடுத்து வண்ண வண்ண கற்பனைக் கதைகள் உலா வருவதைத் தடுத்து நிறுத்திட வேண்டும்.

கடந்த காலத்தைப் பற்றி நாணயமான மதிப்பீடு செய்ய வேண்டும். அமெரிக்க மக்களின் வரலாறு எழுதிய ஹோவர்ட் ஜின் (Howard Zinn) குறிப்பிடுகிறார் வரலாறு சாதாரண மக்களால் உருவாக்கப்படுகிறது. அவர்களில் பலரின் முகங்கள் யாருக்கும் தெரியாது; பலர் சமூகத்தின் கடைக் கோடியில் உள்ளவர்கள்; பலர் பழிதூற்றலுக்கு உள்ளானவர்கள். ஆனால், உண்மையினைப் பேச உரம் பெற்றவர்கள். நமது நாட்டு வரலாற்றைத் திருத்தி எழுதும் முயற்சியினை தேசிய ஜனநாயக முன்னணி அரசு (பா.ஜ.க.வின் வழிகாட்டுதலால்) மேற்கொண்டது நமக்குத் தெரியும். உலக வரலாற்றை மாற்ற ஏகாதிபத்தியம் எடுக்கும் நடவடிக்கையின் மற்றொரு வடிவமாகத்தான் அது இருந்தது. கடந்த காலத்தில் நடந்ததெல்லாம் மக்களின் நன்மைக்கே என்ற பிரச்சாரத்தை ஏகாதிபத்தியம் துவக்கியிருக்கும் போது, உண்மை யினைப் பேச உரம் பெற்றவர்களை பேச வைக்க வேண்டும்.

ஆதாரங்கள்

  1. Dr. Priyam vada Gopal – The Guardian 28.6.20006
  2. George Monbiot – The Hindu 28.12.2005
  3. Mike Morqusee – The Hindu 6.8.2006
  4. Felix Greene – “The Enemy”
  5. Howard Zinn – “Voices of the Peoples’s history of United States”
  6. Dee Brown – “Bury my Heart at Wounded Knee”

உலகமயமாகும் நிலச்சீர்திருத்த அரசியல்!

உலகமயம் இது பன்னாட்டு பெருவணிக நிறுவனங்களின் கோஷம். ஏகாதிபத்திய நவீன சுரண்டலின் புதிய வடிவம். உலக மக்கள் வெறுக்கும் விரிவாக்கம்; இந்த ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிராக உலகளவில் தொழிலாளர்களும், ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளும், இடதுசாரி – ஜனநாயக அமைப்புகளும் போராட்ட இயக்கங்களை கட்டியெழுப்பி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக உலக சமூக மாமன்றம் போன்ற அமைப்புகள் விரிந்த சங்கிலி இணைப்புகளை உருவாக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. 1848-இல் உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று மார்க்சும் – ஏங்கெல்சும் கம்யூனிஸ்ட் அறிக்கையில் முன்வைத்த முழக்கம் இன்று நிஜமாகி வருகிறது.

ஏகாதிபத்திய – முதலாளித்துவ சக்திகள் தொழில்நுட்ப ரீதியிலும், அறிவியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் ஈபிள் கோபுரம் அளவிற்கு சாதனைகளை நிகழ்த்தியிருந்தாலும், உலக மக்களின் வறுமையை அவர்களால் தீர்க்க முடியவில்லை. மாறாக உலக மக்களை வறுமையின் புதைக்குழிகளுக்கே தள்ளி வருகின்றன. குறிப்பாக கிராமப்புற விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மிகக் கொடூரமான சுரண்டலுக்கு உள்ளாவதோடு, பட்டினிச் சாவுகளுக்கும், தற்கொலைகளுக்கும் இட்டுச் செல்லக்கூடிய அளவிற்கு அவர்களது வாழ்நிலை மிகவும் சீரழிந்து வருகிறது.

இந்த பின்னணியில்தான் இந்தியா உட்பட, லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டு வரும் இடதுசாரிகளின் எழுச்சி விவசாயிகள் – தொழிலாளர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அதோடு வெனிசுலா, பிரேசில், பொலிவியாவில் நடைபெற்று வரும் இடதுசாரி அரசுகளின் நிலச்சீர்திருத்த இயக்கம் விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டி வருகிறது.

இந்தியாவில் இடதுசாரி அரசுகளான கேரளம், மேற்குவங்கம், திரிபுராவில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்தத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தமிழகத்திலும் நிலச்சீர்திருத்தம் ஒரு அரசியல் கோஷமாக முன்னுக்கு வந்துள்ளது.

உலகிலேயே முதன் முதலில் நிலச்சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட நாடு சோசலிச சோவியத் யூனியன் தான்; தற்போது நடைபெற்று வரும் இந்த இயக்கங்களுக்கு முன்னோடி என்பதை நாம் இங்கே நினைவுகூர்ந்திட வேண்டும். சீனா, வடகொரியா, வியட்நாம் உட்பட சோசலிச நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் இன்றைக்கு விரிவடைந்து தென்னாப்பிரிக்கா, தென்கொரியா உட்பட பல்வேறு நாடுகளில் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக நிலச் சீர்திருத்தம் என்பது உலகளவில் அரசியல் கோஷமாக உலக மக்கள் விரும்புகிற உலகமயமாகி வருகிறது.

உலக உழைப்பாளி மக்களின் வறுமைக்கு அடிப்படையாக அமைந்திருப்பது உற்பத்தி கருவிகள் சுரண்டும் வர்க்கங்களின் கைகளில் குவிந்திருப்பதுதான். அதிலும் குறிப்பாக கிராமப்புற நிலவுடைமை இன்றைக்கும் பெரும் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளிலும், நிலப்பிரபுக்களின் கைகளிலும்தான் குவிந்திருக்கிறது. இந்த உற்பத்தி கருவிகளிலும், உற்பத்தி உறவுகளிலும் அடிப் படையான மாற்றத்தை ஏற்படுத்திடாமல் கிராமப்புற வறுமைக்கு தீர்வு காண முடியாது.

உலக விவசாயிகளின் நிலை

உலக மக்கள் தொகையில் சரி பாதி பேர் விவசாயத்தையே நம்பியுள்ளனர். 45 சதவீத மக்களது வாழ்க்கை விவசாயத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. அவர்களது வாழ்நிலை, வருமானம், பாதுகாப்பு என அனைத்தும் விவசாயத்தைச் சார்ந்தேயுள்ளது.

இவர்களது வாழ்க்கை பாதுகாப்பிற்கு மையக் கேள்வியாக இருப்பது நிலம். குறிப்பாக வளரும் நாடுகளில் உள்ள 50 கோடி மக்களுக்கு நிலமோ அல்லது நிலத்தின் மீதான உறவோயின்றி, விவசாயத் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இதில் மிகக் குறைந்த பகுதியினர்தான் குத்தகை விவசாயிகளாக உள்ளனர். இவர்கள் நிலவுடைமையாளர்களால் கடுமையாக சுரண்டப் படுவதோடு, கந்துவட்டி, குறைந்தகூலி, ஆண்டுமுழுவதும் சீரான வேலையின்மை, அதிகமான நிலவாடகை என பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக விவசாயிகள் அதிகமாக உள்ள நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தோனேஷியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, கொலம்பியா மற்றும் தென்னமெரிக்க நாடுகளில் உள்ள கிராமப்புற மக்கள் கடுமையான வறுமைக்கு ஆளாகியுள்ளனர்; சுகாதாரம், கல்வி, வீடு மற்றும் அடிப்படைத் தேவைகள்கூட கிடைக்காத பகுதியினராக திகழ்கின்றனர்.

அதேசமயம், சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான முன்னாள் சோசலிச நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்தத்தால் 58 கோடி மக்கள் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர். சீனா, வடகொரியா, வியட்நாம், கியூபா உட்பட சோசலிச நாடுகளில் நிலச்சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு கிராமப்புற பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளன. இந்தியாவிலும் மேற்குவங்கம், கேரளம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் நிகழ்த்தப்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கைகயால் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம், வாங்கும் சக்தி, உள்ளாட்சி நிர்வாகத்தில் பங்கேற்பு என பன்முனைகளில் ஜனநாயக ரீதியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று கிராமப்புற வளர்ச்சி நிறுவனத்தின், 21 ஆம் நூற்றாண்டில் நிலச்சீர்திருத்தம் என்ற ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

பிரேசில் விவசாயிகள் எழுச்சியும் நில மீட்பும்

உலகில் வளம் பொருந்திய நாடுகளில் ஒன்று பிரேசில், ஆனால், அதே அளவிற்கு வறுமையையும் கொண்டுள்ளது; இந்த நாட்டின் வளங்களை சுரண்டிச் செல்வதிலும், அதற்கேற்ப பொம்மை ஆட்சியாளர்களை அமர்த்துவதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைங்கரியம் உண்டு. குறிப்பாக பிரேசிலில் உள்ள மூன்றில் இரண்டு பகுதி விவசாய நிலங்கள், வெறும் மூன்று சதவீதம் பேருக்கு சொந்தமானது. அதிலும் குறிப்பாக 1.6 சதவீதம் பேரிடம் பிரேசிலின் 46.8 சதவீத விவசாய நிலங்கள் குவிந்திருக்கிறது. இவர்களின் கையில்தான் மொத்த விவசாயமும் – விவசாய கொள்கையை தீர்மானிக்கும் சக்தியாக திகழ்கின்றனர். இந்த நவீன விவசாய பண்ணைகளில் 2.5 கோடி மக்கள் தங்களது வாழ்க்கைக்காக விவசாயம் சார்ந்த வேலைகளையே நம்பியிருக்கின்றனர். நிலமற்ற விவசாயிகளாக – அத்துகூலிக்கு வேலை செய்யும் ஆட்களாக, வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களாக, சத்தற்ற நடைபிணங்களாக ஆக்கியது கடந்தகால ஆட்சியாளர்களின் கொள்கைகள்.

வெளிச்சத்தை கொண்டு வந்த விவசாய இயக்கம்

1984இல் துவங்கப்பட்ட கிராமப்புற நிலமற்ற விவசாயிகள் இயக்கத்தில் (ஆளுகூ-ஆடிஎஅநவேடி னடிளகூசயயெடாயனடிசநள சுரசயளை ளுநஅ கூநசசய  ஞடிசவரபரநளந – டுயனேடநளள றுடிசமநசள ஆடிஎநஅநவே)  1.5 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். எம்.எஸ்.டி. என்று அழைக்கப்படும் கிராமப்புற நிலமற்ற விவசாயிகள் இயக்கத்தில், 10 முதல் 15 குடும்பங்களைச் சார்ந்தவர்கள் ஒரு கிளையாக செயல்பட்டு வருகின்றனர். இந்த கிளைகளில் இருந்து மேல் கமிட்டிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு உறுப்பினர்களை தேர்வு செய்கின்றனர். இந்த இயக்கத்தில் பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த இயக்கம் பிரேசில் முழுவதும் உள்ள 27 மாநிலங்களில் 23 மாநிலங்களில் தங்களது கிளைகளை விழுதுகளாக ஆழப்பதித்திருக்கிறது.

2003 ஆம் ஆண்டு லூலா தலைமையில் அமைந்த இடதுசாரி அரசாங்கம் கிராமப்புற நிலமற்ற விவசாயிகள் இயக்கத்திற்கு பெரும் ஆதர்ச சக்தியாக திகழ்கிறது. கடந்த 20 ஆண்டு காலமாக  அவர்கள் நடத்தி வரும் நிலமீட்பு போராட்டம், லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள நிலமற்ற விவசாயிகளுக்கு ஒரு முன்னுதாரனமாக திகழ்கிறது. இந்த இயக்கம் கிராமப்புற மக்களின் ஆத்மாவாக, நம்பிக்கை நட்சத்திரமாக செயல்படுவதோடு, மிக அதிக அளவிலான விவசாயிகளைக் கொண்ட பேரியக்கமாக செயல்பட்டு வருகிறது.

நிலமற்ற கிராமப்புற விவசாயிகள் இயக்கத்தின் அடிப்படை நோக்கமே வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பது, ஜீரோ வேலையில்லாத் திண்டாட்டம் என்பதுதான். அத்துடன் செல்வத்தை பகிர்வது, சமூக நீதி, சம உரிமை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து செயல்படுகிறது.

பிரேசிலில் உள்ள மொத்த விவசாய நிலத்தில் 60 சதவீத விவசாய நிலம் தரிசு நிலம். இத்தகைய தரிசு நிலத்தை நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கக் கோரி நடத்திய விவசாயிகளின் வீரஞ்செறிந் போராட்டத்தின் மூலமாக, இதுவரை இரண்டரை லட்சம் குடும்பங்களுக்கு 15 மில்லியன் ஏக்கர் (1.5 கோடி ஏக்கர்) நிலம் கிடைத்துள்ளது. இந்த போராட்டத்தின் போது பல இடங்களில் நில முதலாளிகளின் தாக்குதல்களுக்கு 2000-த்துக்கும் மேற்பட்ட எம்.எஸ்.டி. ஊழியர்கள் பலியாகியுள்ளனர்.

விவசாயிகள் இயக்கம் நிலமீட்பு போராட்டத்தை மட்டும் நடத்துவதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. மீட்கப்பட்ட நிலத்தில் வர்த்தக பயிர்*களை தவிர்த்து, மாற்று கொள்கைகளை உருவாக்கி, புதிய விவசாய கலாச்சாரத்தை உருவாக்கி, செயல்படுத்தி வருகிறது. விவசாயம் உணவுப் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்துவதோடு, வேலையின்மைக்கு முற்றுப் புள்ளி வைப்பதாகவும் அமைய வேண்டும் என்ற நோக்கோடும், பொருளாதார தேவைகளை உயர்த்துவதாகவும், அவர்களது வறுமைக்கு தீர்வு காண்பதாகவும் இருக்க வேண்டும் என்ற முனைப்போடு எம்.எஸ்.டி. செயல்பட்டு வருகிறது. இதற்காக 60 உணவு கூட்டுறவு அமைப்புகளையும், சிறிய விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளையும் உருவாக்கி, உணவுக்கும் – வேலைக்கும் உத்திரவாதத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.

இது தவிர, கிராமப்புற விவசாய மக்களிடையே உள்ள எழுத்தறிவின்மையை போக்குவதற்கு எழுத்தறிவு இயக்கத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட எம்.எஸ்.டி. ஊழியர்கள் எழுத்தறிவு இயக்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2002 – 2005 கால கட்டத்தில் மட்டும் 56,000 கிராமப்புற மக்களுக்கு கல்வியறிவை புகட்டியுள்ளனர். அதேபோல் 1000க்கும் மேற்பட்ட ஆரம்ப பள்ளிகளையும் இந்த இயக்கம் நடத்தி வருகிறது.  இதில் 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், 50,000 குழந்தைகளும் பயின்று வருகின்றனர்.

இவ்வாறான விழிப்புணர்வின் மூலம் போராட்டத்தின் வாயிலாக பெற்ற நிலத்தை தாங்களே பாதுகாத்துக் கொள்ளவும், உணவு பாதுகாப்பையும், உணவுத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ளவும், குடும்ப பாதுகாப்பையும், பொருளாதார மேம்பாட்டையும் உத்திரவாதப்படுத்திக் கொள்ள இத்தகைய செயல்பாடு பயன்படுகிறது.

சமீபத்தில் பிரேசில் தலைநகரில் நடத்தப்பட்ட பிரம் மாண்டமான இயக்கத்தில் பல்லாயிரக்கணக்கான எம்.எஸ்.டி. ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர். லூலா தேர்தல் காலத்தில் நான்கு லட்சம் குடும்பங்களுக்கு நில விநியோகம் செய்வதாக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தற்போதைய வேகம் போதாது என்று எம்.எஸ்.டி. இயக்கம் விமர்சிக்கிறது. அதே சமயம் லூலா மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும், லூலா எங்கள் இயக்கத்தில் ஒருவர்; அவர் தங்களது நண்பர் என்றும் எம்.எஸ்.டி. இயக்கம் நம்பிக்கை கொள்கிறது.

பிரேசில் பிரம்மாண்டமான நிலவளத்தை கொண்டிருந் தாலும், அதனுடைய உணவுத் தேவைக்கு இறக்குமதியையே நம்பியிருக்கிறது. ஒரு நாட்டில் அதிகமான நிலம் இருப்பதால் மட்டும் அங்குள்ள விவசாயிகளுக்கும், மக்களுக்கும் உணவு கிடைக்கும் என்பதற்கு உத்திரவாதமில்லை. அந்நாட்டு அரசுகள் பின்பற்றும் கொள்கை, குறிப்பாக நிலவுடைமையாளர்கள் – பண்ணைகள் தங்களது நிலங்களில் உணவுப் பயிர்களுக்கு பதிலாக வர்த்தகப் பயிர்களையே விளைவிக்கின்றனர். மறுபுறத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கு போதுமான கூலி கிடைக்காமல் வறுமையின் சுழலுக்குள் சிக்கி, சின்னாபின்னமாவதுதான் நடக்கிறது.

நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் என்பது, அந்த விவசாயிகளின் வாழ்க்கையில் தன்னம்பிக்கை ஏற்படுத்துவதோடு, அவர்களது உணவுக்கான உத்திரவாதத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது. அந்த அடிப்படையில் தற்போது பிரேசிலில் நடந்துவரும் நிலமற்ற கிராமப்புற விவசாயிகள் இயக்கம் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள விவசாயிகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது.

நிலச்சீர்திருத்தம் வெனிசுலா காட்டும் பாதை

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக திகழ்வது கியூபாவும் – பிடலும். லத்தீன் அமெரிக்க நாடுகளில் அமெரிக்க சுரண்டலுக்கு எதிராக சிங்கத்தின் கர்ஜனையோடு பிடலுடன் கைகோர்த்திருப்பவர் வெனிசுலா அதிபர் யூகோ சாவேஸ். உலக எண்ணெய் வளத்தில் 5-வது இடத்தை வகிப்பது வெனிசுலா.

வெனிசுலா பெட்ரோலிய ஏற்றுமதியில் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது. அமெரிக்கா தன்னுடைய எண்ணெய் தேவையில் 25 சதவீதத்தை வெனிசுலாவில் இருந்து பெற்றுக் கொள்கிறது. வெனிசுலாவின் பொருளாதாரத்தில் மிக முக்கியமான இடத்தை வகிப்பது அதன் எண்ணெய் உற்பத்தியே; 80 சதவீத வருமானம் இதனை நம்பியே உள்ளது. அமெரிக்கா வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை கொள்ளைக் கொண்டதோடு, தனது நவீன காலனியாக பயன்படுத்தி வந்தது. சாவேஸ் ஆட்சிப் பொறுப் பேற்றதும், வெனிசுலாவின் எண்ணெய் வயல்களை அரசுடைமை யாக்கி, அமெரிக்க நிறுவனங்களின் சுரண்டலுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

1999 இல் ஆட்சிக்கு வந்த சாவேஸ் நிலச் சீர்திருத்தம்தான் எனது அரசின் முக்கிய இலக்கு என்று அறிவித்தார். விவசாயிகளின் உணவுப் பாதுகாப்பிற்கு அவர்களுக்கான நிலவுரிமையை உத்திரவாதப்படுத்துவதே எனது நோக்கம் என்று பிரகடனப் படுத்தினார். அத்தோடு நிற்காமல், வெனிசுலாவின் அரசியல் சாசனத்தையும் திருத்தியமைத்தார் சாவேஸ்.

அதிபர் சாவேசின் புரட்சிகர நடவடிக்கைகளை எதிர்கொள்ள முடியாத ஏகாதிபத்திய ஆளும் வர்க்கம், சாவேசை ஆட்சியில் இருந்து கவிழ்ப்பதற்கு பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்டு மூக்கை உடைத்துக் கொண்டது. ஓராண்டுக்கு முன் கிறித்துவ மதப் பிரசங்கம் செய்யும் பாதிரியார், சாவேசை கொல்ல வேண்டும் என்று வெளிப்படையாக மதப் பிரசங்கத்திலேயே அறிவித்தார் ஏகாதிபத்திய சுரண்டும் வர்க்கம் சாவேஸ் அரசை கவிழ்ப்பதற்கு எத்தகைய சீரழிந்த நடவடிக்கைகளை கைக்கொள்கிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை.

வெனிசுலாவில் உள்ள மொத்த விவசாய நிலத்தில் 75 சதவீத நிலம் 5 சதவீதத்தினர் கையில் உள்ளது. இத்தகைய நில முதலைகள் ஒவ்வொருவரிடமும் 1000 ஹெக்டேர்களுக்கு மேல் நிலம் குவிந்துள்ளது. இங்கும் பிரசிலில் நடைபெற்றது போல் பருத்தி, சோயா, கோக்கோ போன்ற வர்த்தகப் பயிர் விளைச்சல்தான். மறுபுறம் ஐந்தில் மூன்று பங்கு விவசாயிகள் நிலமற்ற கூலி விவசாயிகளாக உள்ளனர். மேலும் லத்தீன் அமெரிக்க நாடு களிலேயே கிராமப்புற மக்கள் தொகை குறைவாக கொண்ட நாடு வெனிசுலாதான். கடந்த 35 ஆண்டு காலமாக கிராமப்புறத்தில் இருந்த மக்கள் நிலங்களில் இருந்து விரட்டப்பட்டு, நகரங்களில் குவிந்துள்ளனர்.

1960-களில் 35 சதவீதமாக இருந்த கிராமப்புற மக்கள் தொகை படிப்படியாக குறைந்து 1990-களில் 12 சதவீதத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது 2000 ஆம் ஆண்டில் 8 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. வர்த்தகப்பயிர் உற்பத்தி மற்றும் நவீன விவசாய கருவிகளை கையாள்வதன் மூலமும், கிராமப்புற விவசாய மக்கள் முதலாளித்துவ ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளின் விளைவாக எப்படி நிலத்தில் இருந்து அகற்றப்படுகிறார்கள் என்பதற்கு வெனிசுலா சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. வெனிசுலாவின் விவசாய உற்பத்தி அதன் மொத்த ஜி.டி.பி.யில் வெறும் 6 சதவீதம் மட்டுமே. மொத்தத்தில் வெனிசுலா தன்னுடைய உணவுத் தேவைக்கு 88 சதவீதம் இறக்குமதியையே நம்பியுள்ளது.

ஒரு பக்கத்தில் வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை சுரண்டுவதும், மற்றொரு புறத்தில் தங்களது விளை பொருட்களை வெனிசுலா தலையில் கட்டுவதுமாக இருபுற சுரண்டலை அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் மேற்கொண்டு வந்தனர்.

கிராமத்திற்கு திரும்புவோம்!

சாவேஸ் ஆட்சிக்கு வந்ததும் கிராமத்திற்கு திரும்புவோம் என்ற முழக்கத்தை முன்வைத்தார். இதன் மூலம் பெரும் நிலப் பண்ணைகளை வைத்திருப்பவர்களுக்கு எதிரான போராட்டம் வெனிசுலாவில் தீவிரமடைந்தது. 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் வறுமையில் உழலும் வெனிசுலாவில் 75 சதவீத விவசாய நிலங்கள் 5 சதவீத நிலவுடைமையாளர்கள் வசம் இருந்தது. இதில் எஸ்டேட் என்று அழைக்கக்கூடிய 44 நவீன விவசாய பண்ணை களை நடத்தும் முதலாளிகளிடம் மட்டும் 6,20,000 ஏக்கர் நிலங்கள் குவிந்திருக்கிறது. இந்த நிலக்குவியல்தான் வெனிசுலாவின் அரசியல் அதிகார மையமாக இருக்கிறது. இந்த நிலக்குவியலை தகர்க்கும் உளியாக செயல்படுகிறார் சாவேஸ்.

சாவேஸ் ஆட்சிக்கு வந்தவுடன், அரசியல் சட்டத்தை திருத்தியதோடு, நிலவுடைமை குறித்த சட்டத்தையும் திருத்தி அமைத்தார். இதன் மூலம் தரிசு நிலங்களை கைப்பற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் வெகுவேகமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

18 வயதில் இருந்து 35 வயதுக்கு உட்பட்டவர்கள் குடும்பத் தலைவரோ அல்லது தனி நபரோ நிலம் வேண்டி அரசுக்கு விண்ணப்பித்தால், அவர்களுக்கு உரிய நிலம் அளிக்கப்படும். அவருக்கு கிடைக்கும் நிலத்தில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து விவசாயம் செய்து வந்தால், அந்த நிலம் அவருக்கு முழு உரிமையாக்கப்படும். அதே சமயம் அத்தகைய நிலத்தை யாருக்கும் விற்கவோ, அதேபோல் வேறு நிலங்களை வாங்கவோ சட்டத்தில் இடமில்லை. 2003ஆம் ஆண்டு 60,000 நிலமற்ற விவசாய குடும்பங்களுக்கு 5.5. மில்லியன் ஏக்கர் (55 லட்சம் ஏக்கர்) நிலத்தை விநியோகம் செய்து, அந்த மக்களுக்கு சட்ட உத்திரவாதம் வழங்கியுள்ளது வெனிசுலா அரசு. இந்த ஆண்டில் அரசின் இலக்கு 3.5 மில்லியன் ஏக்கர் நிலத்தை விநியோகிப்பது என்பதுதான்; அரசின் உறுதியான நடவடிக்கையால் இலக்கையும் மிஞ்சியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2004ஆம் ஆண்டு மட்டும் 1.5 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் 1,30,000 குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 6,50,000 பேர் பயனடைந்துள்ளனர் என்று வெனிசுலா நிலவிநியோக புள்ளி விவரம் கூறுகிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு குடும்பத் திற்கும் 11.5 ஹெக்டேர் நிலம் கிடைத்துள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை 2 மில்லியன் ஹெக்டேர் அளவுக்கு விநியோகிக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

இத்தகைய நிலவிநியோக நடவடிக்கையால், கிராமப் புறங்களில் நிலவுடைமை வர்க்கங்கள் நடத்திய தாக்குதல்களில், வன்முறைச் சம்பவங்களில் 150க்கும் மேற்பட்ட விவசாய இயக்கத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். வெனிசுலாவில் முதலாளித் துவ ஆட்சியாளர்கள் கிராமப்புற விவசாயிகளை நிலத்தைவிட்டு விரட்டியுள்ளதால், அங்கே விவசாயிகள் இயக்கம் என்பது கூடுதல் வலுப்பெறாத நிலையுள்ளது. பலமான விவசாயிகள் இயக்கம் வெனிசுலாவில் இருந்திருக்குமேயானால், சாவேசின் புரட்சிகர நடவடிக்கை மேலும் வெகுவேகமாக செயல்படுத்துவதற்கு உத்வேகமாக அமையும்.

வெனிசுலாவில் நடைபெறும் நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து நேரில் பார்வையிட்ட  பிரேசில் நிலமற்றோர் இயக்கத் தலைவர் ஜோஹோ பெட்ரன் கூறுகையில், நான் காதுகளில் கேட்பதை விட கண்களில் பார்ப்பது அதிகம் என்று புகழ்ந்துரைத்துள்ளார்.

நிலச் சீர்திருத்தம் பொலிவேரியன் பாதை

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி அலை வேகமாக சுழன்று அடித்துக் கொண்டிருக்கிறது. புரட்சி வீரன் சேகுவேரா சுடப்பட்ட மண்ணில் இன்றைக்கு இடதுசாரி சிந்தனை கொண்ட ஈவோ மொரேல்ஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஈவோ மொரோல்ஸ் மற்றொரு சாவேசாக உருவெடுத்து வருகிறார். பிடல், சாவேஸ், மொரோல்ஸ் கூட்டு ஏகாதிபத்திய அமெரிக்காவின் அடிவயிற்றை கலக்கிக் கொண்டிருக்கிறது.

இவர் ஆட்சிக்கு வந்தவுடன் எடுத்த முதல் நடவடிக்கையே பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவை அரசுடைமையாக்கியதுதான். பொலிவியாவில் நிலவுடைமை மிக வித்தியாசமானது. அங்கே இரண்டு விதமான நிவுடைமை நிலவுகிறது. ஒன்று மினிபன்டாஸ் என்று அழைக்கக்கூடிய விவசாய நிலம் மேற்கு பகுதியிலும், லாட்டிபண்டாஸ் என்று அழைக்கக்கூடிய தொழிற்சாலை நிலங்கள் கிழக்குப் பகுதியிலுமாக பிரிக்கப்பட்டு ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.

இங்கும், விவசாய நிலங்களில் ஏகாதிபத்திய வர்த்தகப் பயிர்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. விவசாயம் என்றாலே அது உள்நாட்டு மக்களின் தேவைக்கு என்பது மாறி, அது ஏற்றுமதி செய்வதற்கு என்ற நிலையினை தோற்றுவித்துள்ளது ஏகாதிபத்திய கட்டமைப்பு.

சின்னஞ்சிறு பொலிவியாவில் 35 லட்சம் கிராமப்புற மக்கள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். இதில் 40 சதவிகித விவசாயிகள் கடுமையான வறுமையில் உழல்வதாக கூறப்படுகிறது. இவர்களது ஆண்டு வருமானம் வெறும் 600 டாலர் மட்டுமே. அதாவது, ஒரு நாளைக்கு இரண்டு டாலருக்கும் குறைவு.

பொலிவியாவில் எழுந்த நிலத்துக்கான இயக்கம்

பிரேசிலிய அனுபவத்தைத் பின்பற்றி பொலிவியன் நிலமற்றோர் இயக்கம் இன்றைக்கு வெகு வேகமாக பரவி வருகிறது. பொலிவியாவில் உள்ள தரிசு நிலங்களை நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையோடு இந்த இயக்கம் செயல் பட்டு வருகிறது.  இந்த இயக்கத்தின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத முதலாளித்துவ நில பண்ணை முதலாளிகள் நூற்றுக்கணக்கான ஊழியர்களை கொலை செய்து வருகின்றனர்.

இந்த நிலப் பண்ணைகள் குறித்து கூறும் போது பரான்கோ மார்னிக்கோவ் என்ற ஒரே ஒரு நிறுவனம் மட்டும் 14,000 ஹெக்டேர் நிலத்தை தன் வசம் வைத்துள்ளது. இதிலிருந்து அங்குள்ள பண்ணைகளின் ஆதிக்கத்தை அறியலாம். இதேபோல் 100 குடும்பங்கள் மட்டும் 25 மில்லியன் ஹெக்டேர் நிலத்தை தன்வசம் வைத்துக் கொண்டுள்ளது.

அதே சமயம் 2 மில்லியன் மக்கள் (20 லட்சம் பேர்) தங்கள் வசம் வெறும் 5 மில்லியன் ஹெக்டேர் நிலத்தை மட்டுமே வைத்துள்ளனர்.

மொரேல்ஸ் அரசு நிலச்சீர்திருத்த நடவடிக்கையை நிறைவேற்றுவதற்கு முதல் கட்டமாக அரசியல் சட்டத்தில் அடிப்படையான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. முதல் கட்டமாக பொலிவியாவில் உள்ள 4.5 மில்லியன் ஹெக்டேர் நிலங்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பொலிவிய அரசின் நில விநியோகத் திட்டத்தை எப்படியும் தடுத்துவிட வேண்டும் என்ற நோக்கோடு நிலமுதலைகள் நில பாதுகாப்பு கமிட்டி அமைத்துள்ளனர். இவர்கள் நிலமற்ற விவசாயிகளுக்கு எதிராக வன்முறைத் தாக்குதல்களைத் தொடுப் பதற்கும் தயாராகி வருகின்றனர்.

மொரேல்ஸ் அடிப்படையில் கோக்கோ பயிரிடும் விவசாயிகள் இயக்கத்தின் தலைவர். மேலும், அவரது இயக்கமான சோசலிசத்தை நோக்கி (ஆடிஎநஅநவே வடிறயசன ளுடிஉயைடளைஅ  – ஆடிஎஅநைவேடி யட ளுடிஉயைடளைஅடி, ஆஹளு) என்ற கட்சியும் நிலச் சீர்திருத் தத்தை உறுதியாக மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. முதற் கட்டமாக தரிசு நிலங்களை நிலமற்ற விவசாயி களுக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கை துவங்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி அலை வீசுவதோடு, கிராமப்புற மக்களின் விடிவெள்ளியாக திகழ்கிறது. இந்த நாடுகளில் மேற்கொள்ளப்படும் நிலச்சீர்திருத்த நடவடிக்கை, லத்தீன் அமெரிக்கா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது. இது எதிர்காலத்தில் அந்த கண்டம் முழுவதையுமே மாற்றியமைக்கும் நடவடிக்கைக்கு கொண்டுச் செல்லும். உலகம் முழுவதும் இருக்கும் உழைப்பாளி மக்களுக்கும், இடதுசாரி எண்ணம் கொண்டவர்களுக்கும் லத்தீன் அமெரிக்காவில் நடைபெறும் மாற்றங்கள் ஒரு ரசாயன மாற்றத்தை ஏற்படுத்துவ தோடு, அந்தந்த நாடுகளில் ஒரு இடதுசாரி, சோசலிச எண்ணத்தை கட்டமைப்பதில் மேலும் புது உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகள் தற்கொலையும், வங்க பஞ்சமும்

இந்தியாவின் ஆத்மா கிராமப்புறத்தில் உள்ளது. இந்தியா பெரும் விவசாய நாடுகளில் ஒன்று. 70 சதவீத மக்கள் கிராமப்புறத்தை நம்பியே உள்ளனர். உலகமயமாக்கல், உலக வர்த்தக அமைப்பு டனான ஒப்பந்தம் போன்ற புதிய பொருளாதார கொள்கைகளால், இந்தியாவின் விவசாய கொள்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த கொள்கைகள் யாரை வாழ்விப்பதற்காக என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது. பசுமைப்புரட்சி கண்ட இந்தியா என்று பீற்றிக் கொண்ட நாட்டில்தான் தற்போது உலகிலேயே விவசாயிகள் தற்கொலை அதிகமாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மகாராஷ்டிரத்தில் உள்ள விதர்பா மாவட்டத்திற்கு சென்று 3750 கோடி அளவிலான நிவாரணங்களை வழங்கியுள்ளார். பரிதாபம் என்னவென்றால், பிரதமர் ஒருபுறம் நிவாரணங்களை வழங்கிக் கொண்டிருக்கும் போதே, தற்கொலைகளும் சமகாலத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தது தான். மகாராஷ்டிரம், ஆந்திரா, கர்நாடகம், கேரளம், பஞ்சாப் என பல மாநிலங்களில் ஆண்டுக்கு 4000 விவசாயிகள் தற்கொலைக்கு உள்ளாகின்றனர். இந்த எண்ணிக்கை இதைவிட அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஏன் இந்த நிலைமை?

இந்திய ஆட்சியாளர்கள் கடந்த 20 ஆண்டு காலமாக அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளின் செல்லப்பிள்ளையாக மாறியதும், உலக வர்த்தக அமைப்பு மற்றும் உலகவங்கியின் கட்டளைக்கு அடிபணிந்து பன்னாட்டு முதலாளிகளுக்கு சேவகம் செய்யும் கொள்கையை கடைப்பிடித்ததன் விளைவுதான் இன்றைக்கு இந்திய விவசாயிகளை இந்த நிலைக்குத் தள்ளியுள்ளது. ஏற்றுமதியை நோக்கமாக கொண்ட வர்த்தக பயிர் (பருத்தி, சோயா…) உற்பத்தியில் ஈடுபடுமாறு விவசாயிகளை ஆசை காட்டி மோசம் செய்ததோடு, உள்நாட்டில் உற்பத்தியாகும் 800க்கும் மேற்பட்ட விவசாய பொருட்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய அனுமதித்தது போன்ற தவறான விவசாய கொள்கைகளால் இந்திய விவசாயிகள் ஓட்டாண்டியாக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் மான்சாண்டோ என்கிற பன்னாட்டு நிறுவனங்களின் போல்கார்ட் பருத்தி விதைகளை பயன்படுத்தி பருத்தி விவசாயத்தில் ஈடுபட்டதும், உற்பத்தி செய்த விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததும், உரவிலை உயர்வு, மின்சார கட்டணம், தண்ணீரின்மை, கடன் சுமை, கந்து வட்டி என்று தொடர் சங்கிலியாக பருத்தி விவசாயிகள் கட்டுண்டு கிடக்கின்றனர். இதிலிருந்து மீள்வது எப்படி என்று வழி தெரியாத விவசாயிகள் தங்களுக்கான விடுதலை ஆயுதமாக தற்கொலையை தேர்ந் தெடுக்கின்றனர்.

1987 இல் ஆந்திராவில் மட்டும் 0.4 மில்லியன் ஹெக்டேரில் பருத்தி விவசாயம் மேற்கொள்ளப்பட்டது. 2005இல் இது 1.2 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு விரிவடைந்துள்ளது. அதாவது, வர்த்தகப் பயிர் உற்பத்தி எந்த அளவிற்கு விவசாயிகளை பொறியில் சிக்க வைத்துள்ளது என்பதை இந்த விவரம் காட்டுகிறது. மேலும் வர்த்தகப் பயிர் உற்பத்தியில் ஈடுபட்ட நிலங்கள் தற்போது வேறு எந்தவிதமான பாரம்பரிய நெல், கோதுமை போன்ற உணவுப் பயிர்களை உற்பத்தி செய்ய முடியாத சூழலுக்கு தள்ளியுள்ளது. பணப் பயிர் (வர்த்தகப் பயிர்) என்ற சொல்லே ஒரு ஏமாற்றுதான். முதலாளித்துவ அரசியல்வாதிகள்தான் இந்த சொல்லை வைத்து விவசாயிகளை ஏமாற்றுகிறார்கள். உணவுப் பாதுகாப்பு குறித்த உணர்வற்ற சுரண்டும் கூட்டத்திற்கு, விவசாயிகளை சுரண்ட இந்த ஏமாற்றுச் சொல் பயன்படுகிறது.

மேற்கண்ட அனைத்து நடவடிக்கைகளையும் மிஞ்சும் வகையில் மன்மோகன் சிங் அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, அந்நிய நாட்டில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்திய நாட்டிற்குள் விவசாயம் செய்துக் கொள்வதற்கு 100 சதவீதம் அனுமதிக்கப்போவதாக அறிவித்துள்ளது. உள்நாட்டு நவீன பண்ணையார்களை சமாளிப்பதற்கே கடினமாக உள்ள சூழ்நிலையில், விவசாயத்தில் அந்நியரை அனுமதிப்பது என்பது இந்திய நாடே தற்கொலைப் பாதைக்கு செல்வதற்கு ஒப்பாகும். நிலவிநியோகம் குறித்து அதிகமான விழிப்புணர்வு ஏற்பட்டு வரும் நேரத்தில் கார்ப்பரேட் விவசாய முதலாளிகள் இந்திய கிராமப்புறத்தில் உள்ள ஒட்டுமொத்த நிலத்தையும் சுரண்டிச் செல்வதற்குத்தான் இந்த அறிவிப்பு பயன்படும்.

இறக்குமதியாகும் உணவு தானியம்

தற்போது மத்தியில் உள்ள மன்மோகன் சிங் அரசு 5 லட்சம் டன் கோதுமையை ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது.  இந்த உணவு தானிய இறக்குமதி குறித்து ஆட்சியாளர்கள் பல்வேறு நொண்டிச்சாக்குகளை கூறி வருகின்றனர். அதாவது, நம்முடைய உணவு தானிய கையிருப்பை சமப்படுத்துவதாக கூறுகின்றனர். அதுவும் இறக்குமதி செய்யப்பட்டுள்ள கோதுமையில் பூச்சுக் கொல்லி மருந்துகள் சாதாரண அளவைவிட கூடுதலாக இருப்பதாக நாடாளுமன்றத்திலேயே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட கிராமப்புறத்தை கொண்ட ஒரு நாட்டில் தானிய இறக்குமதி என்ற கொள்கை எதை நோக்கிச் செல்லும் என்பதே நமது கேள்வி! நமது விவசாயம் திவாலாகி வருவதையும், உட்டோ (WTO) உடன்பாட்டின் அடிப்படையில் விவசாய பொருட்களை இறக்குமதி செய்யவும், நமது மார்க்கெட்டை பன்னாட்டு நிறுவனங்களுக்கு திறந்து விடும் மோசமான போக்கைத்தான் இது வெளிப்படுத்துகிறது. மேலும் நமது நாட்டு விளை பொருளான பருப்பு போன்றவற்றின் ஏற்றுமதிக்கு தடை விதித்து வருவதையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது.

விவசாயத்துறையில் அந்நியர்களை ஈடுபட அனுமதித்தால் நம்நாட்டில் உற்பத்தி செய்து, அதை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து, அங்கிருந்து நாம் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். இத்தகைய ஆபத்துக்களை நமது பொருளாதார புலி சிதம்பரம் வகையறாக்களுக்கு தெரியாததல்ல; எல்லாம் ஏகாதிபத்திய – உலகவங்கியின் அடிமைத்தன விசுவாசம்தான் இத்தகைய செயல்பாடுகளில் அவர்களை தீவிரமாக ஈடுபடத் தூண்டுகிறது.

கடந்த வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் 6 லட்சம் டன் உணவு தானியம் கையிருப்பில் உள்ளதாக கூறிக் கொண்டு, இது நம்முடைய கையிருப்பு தேவையை விட அதிகமாக இருக்கிறது என்று கூறி, பொது விநியோகத்திற்கு வழங்கப்படும் தொகையை விட மிகக் குறைவான அளவுக்கு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது.

24 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள நம் நாட்டில், ஒரு புறத்தில் பட்டினிச் சாவுகளும், விவசாயிகள் தற்கொலைகளும் நடைபெற்று வருவது மத்திய அரசு கடைப் பிடிக்கும் புதிய விவசாய கொள்கை நம் மக்களை வாழ்விக்காது என்பதை பட்டவர்த்தனமாக உணர்த்துகிறது.

வங்கப் பஞ்சம் படிப்பினை!

பிரிட்டிஷ் இந்தியாவில் 1943 இல் வங்கத்தில் ஏற்பட்ட கடுமையான பஞ்சமும், அதனால் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறப்புக்கும் யார் காரணம்? இதன் மூலம் இந்திய அரசு பெற்ற அனுபவம் என்ன? இது குறித்து ஜவஹர்லால் நேரு, தன்னுடைய கண்டுணர்ந்த இந்தியாவில் எழுதியவற்றை பார்ப்போம்:

அதிகாரிகளின் தொலைநோக்கின்மையும், அலட்சிய மனோபாவமும் போரின் பின் விளைவும்தான் இப்பஞ்சத் திற்கு காரணம். சாதாரணமான அறிவுடையவர்களாலேயே பஞ்சத்தின் அறிகுறியைக் கணிக்க முடிந்தது. உணவு நிலையைச் சரிவரக் கையாண்டிருந்தால், இத்தகைய பஞ்சத்தைத் தவிர்த்திருக்க முடியும். போரால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நாட்டிலும், போரால் விளையும் இத்தகைய பொருளாதார சிக்கலை, போர் தொடங்கும் முன்னரே கணித்துத் தயார் நிலையில் இருந்திருக்கிறார்கள். இந்தியாவில் போர் தொடங்கி மூன்றரை ஆண்டுகள் கழித்தே உணவுத்துறை  துவக்கப்பட்டது.

மேலும், இந்தியாவில் உணவுப் பற்றாக்குறை 40 லட்சம் டன் என்று கணிக்கப்பட்ட சூழ்நிலையில், பிரிட்டிஷ் – இந்திய அரசு 10 லட்சம் டன் உணவுதானியத்தை ஏற்றுமதி செய்தது. விலை யேற்றம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக ஏறிக் கொண்டே சென்றது. மக்களின் வாங்கும் சக்தி முற்றிலும் பறிக்கப்பட்டு, உணவுக்காக கடுமையாக சுரண்டப்பட்டனர். பசியும், பட்டினியுமாக கிடந்த மக்கள் வாழ வழித்தெரியாமல் கடுமையான நோய்களுக்கு ஆளாகி, எலும்பு கூடுகளாய் – நடைபிணங்களாய் மாறி தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்களை பலிகொண்டது வங்கப் பஞ்சம். ஒரு புறம் எந்த உணவுப் பொருட்களும் கிடைக்காததால் பஞ்சம் வந்ததோ, அந்த பொருட்களை விற்பனை செய்ததால் கிடைத்த கொள்ளை லாபத்தில் ஆளும் வர்க்கம் சுகம் கண்டு கொண்டிருந்தனர்.!

வங்கப் பஞ்சம் குறித்தும், அதனுடைய கொடுமைகள் குறித்தும், மக்களது துன்ப – துயரங்களை விளக்கியும் பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய ஆனந்த மடம் நாவலைப் படித்தால் அதன் முழுமையான பரிணாமத்தை உணர முடியும்.

மொத்தத்தில் அரசுகளின் தவறான உணவுக் கொள்கையும், விவசாய கொள்கையும் மக்களை பசி – பட்டினிச் சாவுகளுக்கு கொண்டுச் செல்லும் என்பதைத்தான் வங்கப் பஞ்சம் உணர்த்து கிறது. இதன் பின்னணியில் தற்போது இந்திய அரசின் செயல் பாடுகளை ஒப்பு நோக்கும் போது, இந்திய அரசின் விவசாய கொள்கை எதை நோக்கிச் செல்கிறது என்பதை உணரலாம்.

தற்போது மேற்குவங்கத்தில் இந்த பஞ்சத்தின் அனுபவங்களை உணர்ந்த இடதுசாரி அரசு செய்த நிலச்சீர்திருத்தத்தின் விளைவாக 14 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் விநியோகிக்கப்பட்டு 26 லட்சம் நிலமற்ற விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இதில் 56 சதவீதம் பேர் தலித் மற்றும் பழங்குடியின மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக மேற்கொள்ளப்பட்ட நில விநியோகத்தில் மேற்குவங்கத்தில் மட்டும் வழங்கப்பட்டது  20 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக மேற்கு வங்கத்தில் உணவு உற்பத்தி மிக கணிசமான அளவுக்கு பெருகி யிருக்கிறது. இதேபோல் கேரளத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கையும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளது.

தமிழகத்தில் நில விநியோகம்

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தனது தேர்தல் அறிக்கையில் 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை இரண்டு ஏக்கர் விதம் 26 லட்சம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. திமுக அரசின் நில விநியோக அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இந்த நில விநியோக நடவடிக்கையை வெற்றி பெறச் செய்வதில் மார்க்சிஸ்ட்டுகளுக்கு மிக முக்கியமான பங்குள்ளது. கிராமப்புறத்தில் உள்ள நிலமற்ற விவசாய தொழிலாளர்களை அணிதிரட்டி, அரசுக்கு சொந்தமான தரிசு நிலங்களை அடையாளம் காணுவதோடு, அதற்காக எழுச்சிமிக்க வலுவான விவசாய இயக்கத்தை நடத்துவதன் மூலம்தான் இந்த நில விநியோக நடவடிக்கையை வெற்றிகரமாக பூர்த்தி செய்ய முடியும்.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அம்மையார் ஜெயலலிதா இந்த 55 லட்சம் ஏக்கர் நிலத்தை பெரும் கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு தாரைவார்க்க திட்டமிட்டிருந்தார். ஆனால், இப்போது கூறுகிறார் 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் தமிழகத்தில் இல்லவே இல்லையென்று. ஜெயலலிதாக்களின் விசுவாசம் நிலமற்ற கூலி விவசாயிகள் மீதல்ல; கார்ப்பரேட் பண்ணைகளிடத்தில்தான்.

மேலும், தமிழகத்தில் நிலச்சீர்திருத்த சட்டத்தை அமலாக்குவதில் திமுக அரசு உரிய – தீவிர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இதைத்தான் இடதுசாரிகளும், மக்களும் விரும்புகின்றனர். நிலச்சீர்திருத்த சட்ட அமலாக்கம் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் 26வது மாநில மாநாடு முன்வைத்த அறிக்கையில் உள்ள பகுதியை இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

தமிழகத்தில் நிலச்சீர்திருத்த சட்டம் என்பது முற்றிலும் முடமாக்கப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. உச்சவரம்பு சட்டத்தின் மூலம் 20 லட்சம் ஏக்கர் நிலம் உபரியாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சட்டம் நிறைவேற்றப்பட்டு 40 ஆண்டுகளுக்கு பின்னரும் கையகப்படுத்தியுள்ள நிலம் 1.9 லட்சம் ஏக்கர் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

அதே போல்,

தலித் மக்களுக்கென்றே ஒதுக்கப்பட்ட சுமார் 3 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் அம்மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்டு பலருடைய அனுபவத்தில் உள்ளது. இந்நிலங்களை மீட்டு தலித்துக்கள் வசம் ஒப்படைக்க சட்டரீதியான தடைகள் ஏதுமில்லை

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மேற்கண்ட கூற்று, தமிழக நிலச்சீர்திருத்தத்தில் செய்ய வேண்டிய இலக்கினை மிகச் சரியாக சுட்டிக்காட்டியுள்ளது. தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளபடி 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலத்தை விநியோகிப்பதோடு நிற்காமல், நில உச்சவரம்பு சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்து, நிலச்சீர்திருத்த நோக்கிலான நிலஉச்சரம்பை கொண்டு வரவேண்டும்.

காமராஜர் ஆட்சிகாலத்தில் 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் என்று இருந்ததை கலைஞர் ஆட்சிக்காலத்தில் 15 ஸ்டாண்டர்டு ஏக்கராக மாற்றப்பட்டது. இருப்பினும் இந்த உச்சவரம்பு சட்டத்தில் நிலவுடை மையாளர்களது நிலங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களின் பெயர்களிலும், பினாமிகள் பெயர்களிலும் மாற்றம் செய்யப்பட்டு அனுபவித்து வரப்படுகிறது. அதோடு விவசாய நிலங்கள் கரும்பு விளைச்சல் நிலம், பழத்தோட்டங்கள், பால்பண்ணைகள், டிரஸ்டுகள், தர்ம ஸ்தாபனங்கள் என்று பல்வேறு வடிவங்களில் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி அனுபவித்து வருகின்றனர். இதனாலேயே இந்தச் சட்டம் உச்சரம்பா, மிச்ச வரம்பா என்ற கேலிக்கும் இட்டுச் சென்றது. எனவே கடந்தகால அனுபவத்தை கணக்கில்கொண்டு  நிலஉச்சவரம்பு சட்டத்தை முழுமையாக அமலாக்கி நிலமற்ற விவசாய தொழிலாளர்களது வாழ்வில் அடிப்படையான மாற்றத்தை கொண்டுவருவதன் மூலம் தமிழக வரலாற்றில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்திட முடியும். இத்தகைய அடிப்படையான விஷயங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரி – ஜனநாயக சக்திகளும் களத்தில் உறுதியாக துணை நிற்கும்.

நிலம் – உணவு – வேலைக்கான இயக்கம்

ஜூன் 8 – 10, 2006 நடந்து முடிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி ஆகஸ்ட் மாதத்தில் உணவு – நிலம் – வேலை என்ற மூன்று முழக்கத்தை முன்வைத்து நாடு தழுவிய இயக்கம் நடத்துவதற்கு அறைகூவல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நிலச்சீர்திருத்த நடவடிக்கை என்பது கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பு, உணவு தேவை போன்றவற்றை பூர்த்தி செய்யும் இணைப்பு சங்கிலியாக செயல்படும் மிக முக்கியமான நடவடிக்கை! லத்தீன் அமெரிக்காவில் நடைபெறும் நிலச்சீர்திருத்த நடவடிக்கையும், இந்தியாவில் மேற்குவங்கம் – கேரளத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கையும் நாடு முழுவதும் உள்ள விவசாய தொழிலாளர் களுக்கும், கிராமப்புற விவசாயிகளுக்கும் நம்பிக்கையூட்டும் நிகழ்வாகும்.

நிலச்சீர்திருத்தம் உலக அரசியல் அரங்கின் முக்கிய அஜண்டாவாக மாறி வருவதைத்தான் மேற்கண்ட லத்தீன் அமெரிக்க அனுபவங்கள் உணர்த்துகின்றன. இந்திய அரசியலிலும் நிலச்சீர்திருத்த முழக்கத்தை ஒரு பௌதீக சக்தியாக மாற்றுவது மார்க்சிஸ்ட்டுகளின் வரலாற்று கடமையாகிறது.

தகவல் ஆதாரம்

http://www.landaction.org
http://en.wikipedia.org/wiki/Landless_Workers%27_Movement
http://www.pbs.org/frontlineworld/rough/2005/12/brazil_cutting.html#
http://news.bbc.co.uk/1/hi/world/americas/4550855.stm
http://www.zmag.org/weluser.htm
http://www.venezuelanalysis.com

Rural Development Institute, Land Reform in the 21st Century
http://www.rdiland.org

நிலப்பிரபுத்துவத்தை ஒழிக்க நாம் காட்டும் பாதை, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வெளியீடு – 1974.

காஸ்ட்ரோவும் – புரட்சியும்!

அமெரிக்கர்களால் இந்த புரட்சிகர நடவடிக்கை யினை அழித்துவிட முடியாது; ஏனெனில் எம் தேச மக்கள் ஆயுதந்தாங்க பயிற்சி பெற்றவர்கள். ஆனால், எங்கள் தவறுகளை நாங்கள் திருத்திக்கொள்ள முடியாமல் போனால், இந்நாடு தன்னைத்தானே அழித்துக்கொள்ள முடியும். இந்தக் காரணத்திற் காகத்தான், நாங்கள் முழுமையான சமூக மாற்றத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.

சோசலிச கியூபாவின் ஜனாதிபதி தோழர் பிடல் காஸ்ட்ரோ அவர்கள் லே மாண்டே டிப்ளமாடிக் எனும் பத்திரிக்கையின் ஆசிரியர் திரு.இக்னாசியோ ராமனொட் என்பவருக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கும் கருத்து இது. ஏறத்தாழ 100 மணி நேரம் நீடித்த இந்த பேட்டியின் விபரங்கள் 569 பக்கங்கள் கொண்ட பிடல் காஸ்ட்ரோ-இரு குரல்களில் ஒரு சரிதை எனும் தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது. இப்புத்தகம் பல புதிய செய்திகளை கொடுக்கிறது. வெனிசூலாவின் சாவேஸ் 2002 ம் ஆண்டு ஏப்ரலில் ராணுவத்தின் திடீர் கலகத்தை சந்தித்தபோது அதை உறுதியாக எதிர்த்து நிற்க வேண்டும் என அவருக்கு காஸ்ட்ரோ ஆலோசனை வழங்கினார் என்பது போன்ற செய்திகளை உள்ளடக்கியது இப்புத்தகம். ஸ்பானிஷ் மொழியில் வெளியான இப்புத்தகத்தின் முதல் பதிப்பு, வெளியான பதினைந்தே தினங்களில் விற்றுத் தீர்ந்தன. மேலும் ஒன்பது மொழிகளில் இப்புத்தகத்தை வெளியிட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

பிடல் காஸ்ட்ரோவின் பேட்டியின் சில பகுதிகளை 20.5.2006 தேதியிட்ட சகாரா டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. பல ஆழமான தத்துவார்த்தமான விஷயங்கள் குறித்து விருப்பு வெறுப்பற்ற முறையில், தொலைநோக்குப் பார்வையும் சோசலிச கட்டுமானம் கட்டிக் காப்பாற்றப்பட வேண்டுமென்ற அக்கறை ததும்பும் விதமாக பிடல் காஸ்ட்ரோ தெரிவித்துள்ள கருத்துக்கள் அதில் இடம் பெற்றுள்ளன. பிடல் காஸ்ட்ரோ உடல் நலம் குன்றியதையடுத்து அங்குள்ள அரசியலமைப்புச் சட்டப்படி தற்காலிகமாக தனது பொறுப்புக்களிலிருந்து விலகியுள்ளார். அவரது சகோதரர் ரால் காஸ்ட்ரோவிடம் இவரது பதவி பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ரால் காஸ்ட்ரோவும், அண்ணன் பிடலுடன் சிறையில் இருந்தவர்; கொரில்லா யுத்தத்தில் பங்கேற்றவர்; ராணுவ தளபதியாக இருப்பவர். கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவின் முடிவிற்கேற்பவும், கியூப நாட்டுச் சட்டப்படியும் ரால் காஸ்ட்ரோ பதவி ஏற்றுள்ளார்.

பிடல் பதவி விலகியவுடன், அமெரிக்க மீடியாக்கள் பல கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகின்றன. கியூபா மீது படை யெடுக்கவும், அமெரிக்க நாட்டின் மியாமியில் வாழும் கியூப நாட்டு மக்களில் படுபிற்போக்கான நபர்களைக் கொண்டு பொம்மை ஆட்சியை உருவாக்கவும் அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகள் பகிரங்கமாக பேசுகின்றனர். ஏற்கனவே 80 மில்லியன் டாலர் ஒதுக்கியுள்ளதாகவும், கியூபாவில் கம்யூனிசத்தை ஒழித்து, ஜனநாயகத்தை திணிக்க திட்டம் உள்ளதாகவும், புஷ், ரைஸ் போன்ற ஏகாதிபத்திய தலைமை பீடமே டி.வி., ரேடியோ மூலம் ஸ்பானிஷ் மொழியில் பேசி வருகின்றனர். ஏகாதிபத்தியவாதிகளால்  அமெரிக்க மியாமியில் இருந்து நடத்தப்படுகிற ஜோஸ் மார்ட்டி ரேடியோ கியூப மக்களை கலவரம் செய்ய தூண்டி தினசரி அலறுகிறது. கியூபாவில் தேர்தல் நடக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் மூலம் ஆட்சி நடக்கிறது. காஸ்ட்ரோ மக்களின் பாசமிக்க தலைவரே தவிர, சர்வாதிகாரி அல்ல என்ற உண்மையை ஏகாதிபத்திய மீடியாக்கள் மறைக்கின்றன. மியாமியில் வாழும் ஒரு பெண்மணியிடம் பிடலுக்குப் பிறகு கியூபா எப்படி இருக்கும் என்று கேட்ட பொழுது, கியூபாவில் சுகாதாரம், கல்வி, வீட்டு வசதி இவைகள் மக்களுக்கு இலவசமாகக் கிடைக்கின்றன. இவர்கள் அங்கே போய் ஏகாதிபத்தியத்தை திணித்தால், அதனால் ரத்தக்களறி ஏற்படும் என்று கூறியுள்ளார்.

(பிளாக் அமெரிக்கா.வெப்.காம்)

இந்தப் பின்னணியில் பிடல் காஸ்ட்ரோவின் பேட்டி உள்ளதை உள்ளபடி நமக்கு காட்டுகிறது. அதனைப் பார்ப்போம்.

(20.5.2006 ல் வெளிவந்த பேட்டி, அறுவை சிகிச்சை என்பது ஆகஸ்ட் மாதத்தில் இதனை மனதில் கொண்டு பேட்டியின் இப்பகுதியைப் படிக்கவும்.)

கேள்வி: உங்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால், உங்கள் சகோதரரான ரால் காஸ்ட்ரோ அடுத்த கியூப ஜனாதிபதி ஆவாரா?

பதில்: எனக்கு ஏதாவது ஆகிவிட்டால், உடனடியாக தேசிய சபை கூடி ராலை தேர்ந்தெடுக்கும். இதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். ராலுக்கும் வயதாகி வருகிறது, இது இயற்கையாகவே தலைமுறைகளின் பிரச்சனையாகும். கியூபப் புரட்சிக்காக பாடுபட்டவர்கள் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் என்பது ஒரு நல்ல அம்சம். எங்களுக்கு முன்னால் மூத்த கியூப போராளிகளும், மார்க்சிய லெனினிய கட்சியான சோசலிஸ்ட் பாப்புலர் கட்சியின் தலைவர்களும் இருந்தனர். அவர்களுக்குப் பின்னால் புதிய தலைமுறையாக நாங்கள் இருந்தோம். அதற்குப் பின்னால் வந்தவர்கள் எழுத்தறிவு இயக்கம், கொள்ளையை எதிர்த்த போராட்டங்கள், தடைகளை எதிர்த்த போராட்டங்கள், பயங்கரவாதத்தை எதிர்த்த போராட்டங்கள், கிரான் போராட்டம், அக்டோபர் 1962-ல் நிகழ்ந்த ஏவுகணை பிரச்சனை, சர்வதேச சதிகளை எதிர்த்த போராட்டங்கள் என அனைத்து இயக்கங் களிலும் பங்கேற்றனர். தகுதி படைத்தவர்கள் ஏராளம் ஏராளம். பல விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழிலாளர்களின் தலைவர்கள், அறிவுஜீவிகள், ஆசிரியர்கள் என பலதரப்பட்டவர்கள் இருக்கின்றனர். கியூப தேசத்தில் திறமை படைத்தவர்களுக்கு பஞ்சமில்லை. இத்துடன் புதிய தலைமுறையின் வாலிபர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சமூக பணியாளர்களும் இணைந்துள்ளனர்.

கேள்வி:  அப்படியானால், ரால் காஸ்ட் ரோ உங்களைத் தொடர்ந்து அதிபரானால், அது தனி நபர் என்பதைவிட அடுத்த தலைமுறை, அதாவது தற்கால தலைமுறை தலைமைப் பொறுப்பேற்பதாகவே அர்த்தம் என்று சொல்ல வருகிறீர்கள்?

பதில்:  ஆம். தலைமையை ஒரு தலைமுறையிடமிருந்து மற்றோர் தலைமுறையே எடுத்துக் கொள்கிறது. நான் அதில் உறுதியாக இருக்கிறேன், அதை பலமுறை சொல்லியும் இருக்கிறேன். ஆனாலும், புரட்சி நடைமுறைக்கு பலப்பல ஆபத்துகள் இருக்கின்றன என்பதை நாங்கள் அறிந்தே இருக்கிறோம். தாமாகவே புறநிலை புரியாது புரிந்த தவறுகள்… அப்படிப்பட்ட தவறுகளும் இருந்தன. இந்த தவறுகளையும், குறிப்பிட்ட போக்குகளையும் கண்டறியாமல் விட்டதற்கு நாங்களே பொறுப்பு. இன்று, அந்த தவறுகளில் பல சரி செய்யப்பட்டுள்ளன, ஆனாலும் சில தவறுகளுக்கு எதிரான எங்கள் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. நான் நான்காவது தலைமுறை என்றழைக்கும் நபர்கள், முதல் தலைமுறையினரான எங்களைவிட அதிக ஞானம் படைத்தவர்களாக, இரண்டாம் தலைமுறையினரைக் காட்டிலும் மூன்று மடங்கு அறிவுத்திறம் படைத்தவர்களாக, மூன்றாம் தலைமுறையினரை விட இரண்டரை மடங்கு அதிகம் விபரமறிந்தவர்களாக இருக்கிறார்கள். நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை உன்னிப்பாக கவனியுங்கள் – இந்த தேசத்தின் கடற்கரைகளை பார்ப்பதைவிட, கியூபாவின் சமூக முன்னேற்றத்தை காண்பதற்காகவே அதிக மக்கள் வருவார்கள். ஏனெனில், எங்கள் தேசம் பலவற்றை செய்து கொண்டிருக்கிறது. ஆப்ரிக்காவில் எய்ட்ஸ் நோயை ஒழிக்க ஐ.நா. சபையின் பொதுச் செயலாளருக்கு தேவைப்பட்ட மனித வளத்தை சின்னஞ்சிறு கியூபாவால் கொடுக்க முடிந்தது. இன்று கியூப மருத்துவர்கள் இல்லாமல் இது சாத்தியமில்லை. ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகியவை இணைந்துமே, ஆயிரம் மருத்துவர்களைக்கூட எங்கள் மருத்து வர்கள் சென்ற இடங்களுக்கு அனுப்ப முடியவில்லை. 4000 மருத்துவர்களை அனுப்புவதாக ஐ.நா சபையிடம் உறுதி கொடுத்தோம். இதுவரை 3000க்கும் மேற்பட்டவர்களை அனுப்பியிருக்கிறோம். இது எங்களுக்கு ஓரளவு மன நிறைவைத் தருகிறது. 40 ஆண்டுகளாக தடைகளையும், பத்தாண்டுகள் நீடித்த சிறப்பு காலத்தையும் (Special Period) அனுபவித்த ஒரு நாடு இதைச் செய்ய முடிந்திருக்கிறது. மனித மூலதனத்தை வெறும் தற்பெருமையினாலோ அல்லது சமூகத்தோடு ஒட்டாத தனி மனிதப் போக்கினை ஊக்குவிப்பதாலோ உருவாக்க முடியாது.

கேள்வி: எந்த சிக்கலும் இல்லாமல் உங்கள் இடம் நிரப்பப்படும் என்று நம்புகிறீர்களா?

பதில்: நிச்சயமாக எந்த சிக்கலும் இல்லாமல் அது நடைபெறும். அதற்குப் பிறகும் கூட நிச்சயமாக எந்த பிரச்சனையும் வராது. ஏனென்றால் புரட்சி என்பது எந்த ஒரு பெரிய தலைவரையோ அல்லது தனிமனித வழிபாட்டையோ அடிப்படையாக கொண்டு நடைபெறுவதல்ல. புரட்சி என்பது கொள்கைகளின் அடிப்படையில் நடைபெறும். நாங்கள் எந்த கருத்துகளை பாதுகாக்க போராடுகிறோமோ, அது அனைத்து மக்களின் கருத்துகளாக மாறியுள்ளது.

கேள்வி: கியூப புரட்சியின் எதிர்காலம் பற்றி நீங்கள் அதிகம் கவலைப் பட்டதில்லை. ஆனால், சோவியத் யூனியன், யூகோஸ்லாவியா மற்றும் அல்பேனிய பின்னடைவுகள், வடகொரியாவின் அவல நிலை, கம்போடியாவின் தலைவிரித்தாடும் பயங்கரவாதம், புரட்சி வேறுவடிவத்தில் தோற்றமளிக்கும் மக்கள் சீனம் – இவற்றையெல்லாம் பார்த்தால் உங்களுக்கு கவலையாக இல்லையா?

பதில்: உலகின் முதல் சோசலிச நாடு, சோவியத் யூனியன், தன்னைத் தானே சரிப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், அது தன்னைத்தானே அழித்துக்கொண்டது என்பது நிச்சயம் கசப்பான அனுபவம்தான். உலகின் பெரும் சக்திகளில் ஒன்றாக இருந்த தேசம், மற்றொரு வல்லரசுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த தேசம், பாசிசத்தை வீழ்த்திய தேசம் – சிதிலமடைந்தது என்ற இந்த நம்புவதற்கரிய நிகழ்ச்சிப்போக்குகளை நாங்கள் கவனிக்காமலோ அல்லது அது குறித்து கவலைப்படாமலோ இருக்கிறோம் என்று ஒரு விநாடிகூட நினைத்துவிடாதீர்கள். முதலாளித்துவ வழிகளில் சோசலிசத்தை நிர்மாணிக்க முடியும் என்று சிலர் நினைத்தார்கள். இது ஆகப்பெரிய வரலாற்றுத் தவறாகும். இதை தத்துவ ரீதியில் நான் விளக்க விரும்பவில்லை. ஆனால், தாங்கள் மிகப்பெரிய தத்துவ நிபுணர்கள், மார்க்ஸ், ஏங்கல்ஸ் மற்றும் லெனினின் புத்தகங்களை கரைத்துக்குடித்து தங்கள் உடம்பு முழுக்க நிரப்பிக் கொண்டவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பலர் செய்த தவறுகளை என்னால் பட்டியலிட முடியும். ஆரம்பகாலங்களிலும் புரட்சியின் பல கட்டங்களிலும், சோசலிசத்தை நிர்மாணிப்பது எப்படி என்பதை அறிந்த ஒருவர் இருக்கிறார் என்று நம்பியதே நாம் செய்த தவறு என பலமுறை நான் சொல்லியிருக்கிறேன். இன்றோ, சோசலிசத்தை கட்டமைப்பது எப்படி என்பது குறித்து தெளிவான கருத்து நமக்கு இருக்கிறது. ஆனால், உருவாக்கிய சோசலிச சமூக அமைப்பை தக்கவைத்துக் கொள்வது குறித்தும், சோசலிசமே தன்னை தற்காத்துக் கொள்வது குறித்தும் மேலும் பல தெளிவான கருத்துகள் நமக்கு தேவைப்படுகிறது. சீனா என்பது தனியான விஷயம். இன்று உலகின் பெரும் சக்திகளில் ஒன்றாக உருவாகி வரும் தேசம், வரலாற்றால் அழிக்க முடியாத ஒரு மகத்தான சக்தி, சில அடிப்படையான கோட்பாடுகளை பின்பற்றும் தேசம், ஒற்றுமையை முன்வைக்கின்ற, தன் வல்லமையை பலவீனப்படுத்திக் கொள்ளாத தேசமாக சீனா இன்று விளங்குகிறது. நான், கூர்ந்து கவனித்து தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். நீங்கள் குறிப்பிட்ட சோவியத் யூனியன் உள்ளிட்ட பல நாடுகள் பின்னடைவை சந்தித்தாலும், ஒரு சின்னஞ்சிறு தேசம், தடைகளால் சூழப்பட்ட தேசம், சிறப்பு காலம் எனும் வரையறையை இன்னும் முடித்திராத தேசம் – சோசலிச கியூபாவால் ஒரு சென்ட் பணம் கூடப்பெறாமல், மூன்றாம் உலக நாடுகளில் பயிற்சி பெற்ற நிபுணர்களோடு பங்கு பெற்று, உதவியளித்து சோசலிச கட்டுமானத்தை உருவாக்கும் பணியினைச் செய்ய முடிகிறது; அனைத்துத் துறைகளிலும் நிறைவான முன்னேற்றத்தை உறுதி செய்கிறது.

கேள்வி: ஆனால் பலர் இந்த கேள்வியை எழுப்புகிறார்கள். கியூபாவின் சோசலிச புரட்சி தோற்கக்கூடுமா?

பதில் : புரட்சிகள் தோல்வியிலேயே முடியும் என்பது விதியா என்ன? அல்லது நபர்கள் புரட்சியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைகிறார்களா என்று கேட்கிறேன்! மனிதர்களால், சமூகத்தால் புரட்சிகளை வீழ்ச்சியிலிருந்து காப்பாற்ற முடியுமா? நான் என்னையே இந்த கேள்வியை பலமுறை கேட்டுக் கொண்டிருக்கிறேன். நான் என்ன சொல்கிறேன் என்பதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் – அமெரிக்கர்களால் இந்த புரட்சிகர நடை முறையினை அழித்துவிட முடியாது. ஏனெனில் எம் தேச மக்கள் ஆயுதம் ஏந்தத் தெரிந்தவர்கள். எம் தவறுகளையும் தாண்டி, உயர்ந்த நிலையிலான கலாச்சாரத்தையும், அறிவுத் திறனையும், மனச் சான்றினையும் பெற்றிருப்பவர்கள். அது இந்த தேசத்தை மறுபடியும் அமெரிக்காவின் காலனியாக மாறுவதை ஒருபோதும் அனுமதிக்காது. ஆனால், இந்த தேசம் தன்னைத் தானே அழித்துக் கொள்ள முடியும்; புரட்சியும் அதனையே வீழ்த்திக் கொள்ள முடியும். நம்மால்தான் அதனை அழிக்க முடியும். நாம் நமது தவறுகளை திருத்திக் கொள்ளவில்லையென்றால், திருட்டு உள்ளிட்ட பல தீய பழக்கங்களை நாம் விட்டொழிக்கவில்லையென்றால் புரட்சியின் வீழ்ச்சிக்கு நாமே பொறுப்பாவோம். இந்த காரணத்திற்காகத்தான் நாங்கள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். முழுமையான சமூக மாற்றத்தை நோக்கி நாங்கள் முன்னேறி வருகிறோம். மாற்றத்திற்கான அந்த வழிமுறைகளில் நாங்கள் இறங்க வேண்டியுள்ளது. அசமத்துவம், அநீதி உள்ளிட்ட பல சிக்கலான காலகட்டங்களை நாங்கள் அனுபவித்து விட்டோம். எந்த ஒரு திசை திருப்புதலும் இல்லாமல் நாங்கள் இதை மாற்றியாக வேண்டியுள்ளது.

இடதுசாரி கட்சிகளின் குணாம்சங்கள்!

2004 ஆம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் முடிவுகளின் பயனாக ஒரு கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.  அதற்கு தலைமை தாங்கும் பொறுப்பு காங்கிரஸ் மீது விழுந்தது. இது ஒரு விசேஷமான அரசியல் சூழ்நிலையை உருவாக்கியது. அதிலும் குறிப்பாக இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவு கூட்டு மந்திரி சபைக்கு அவசியம் தேவை என்ற நிலைமை ஏற்பட்டது.

சமீபத்தில் நடைபெற்ற ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களில் மேற்குவங்காளத்தில் சி.பி.எம் தலைமையிலான இடதுசாரி முன்னணி அமோக வெற்றி பெற்று – 7 வது முறை மாநில ஆட்சியைப் பிடித்திருப்பது மிகப்பெரிய ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது. (எப்போதுமே ஆட்சியில் இருக்கும் கட்சி அடுத்த தேர்தலில் தோல்வியைத்தான் சந்திக்கிறது என்ற பாராளுமன்றவாதிகளுடைய வாதம் மேற்குவங்கத்தில் தவிடு பொடியாகிவிட்டது.) கேரளாவிலும் இடது ஜனநாயக முன்னணி மிக பலமான முறையில் பெரும் பான்மை பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளதும் ஒரு புது உத்வேகத்தை கொடுத்துள்ளது. பொதுவாக இடதுசாரிகள் இந்திய அரசியலில் ஒரு முக்கிய சக்தியாக வளர்ந்து வருவது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இடதுசாரிக் கட்சிகளில் குறிப்பாக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தனி முக்கியத்துவம் கிடைத்தது சிலரையும் அதிர்ச்சியுறச் செய்துள்ளது. (இடதுசாரிக் கட்சிகள் அனைத்தும் கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று கருதுவது சரியல்ல. இடதுசாரி இயக்கத்தின் முக்கிய பகுதியாகச் செயல்பட்டுக் கொண்டு, இடதுசாரி இயக்கத்திற்கு ஒரு திசை வழியையும், தலைமையையும் அளிக்கவல்ல அரசியல் கட்சியைத்தான் கம்யூனிஸ்ட் கட்சி என்று அழைக்கப் படுகிறது என்பது மட்டும்தான் உண்மை.) பலருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரிகளின் இந்த வெற்றி எதிர்பாராத ஒரு அதிசயமாக இந்த நிகழ்வு மனதில் பட்டது. உலகம் முழுவதும் ஆச்சரியத்துடன் இதை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பல கட்சியினர் அரசியலில், கூர்மையான அக்கறை செலுத்தக்கூடியவர்கள் தங்கள் கட்சியின் மீது அதிருப்தியுற்றவர்கள், இந்திய அரசியலில் ஒரு புதிய மாற்றம் வரவேண்டும் என்று விரும்பியவர்கள் பழைய கட்சிகள் மீது சலிப்பேற்பட்ட சிந்தனையா ளர்கள் போன்ற பல பகுதியினர் மத்தியில் இடதுசாரிகள் இந்த முறையில் எதிர்பாராத விதமாக அரசியலில் முன்னுக்கு வந்திருப்பது வரவேற்கத்தக்க நிகழ்ச்சியாக கருதினார்கள். இன்றும் நாளிதழ் களிலும், ஆசிரியர் கடிதங்கள் போன்றவற்றில் இடதுசாரிகளைப் பற்றி வியப்புடன் கருத்துக்கள் எழுதப்படுகின்றன. திடீரென இந்திய அரசியலில், ஒரு புதிய சக்தி உருவானதை பலரும் வரவேற்றும் எழுதுகின்றனர். இதனால், இடதுசாரிகளைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும் என்ற அவா கூடி வருவது இயல்பானது.

கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக பல நாடுகளிலும் இடதுசாரி கட்சிகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேறி ஆட்சிகளையும் பிடித்துள்ள நிலைமையும் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதிலும் குறிப்பாக தென்னமெரிக்க நாடுகளில், முக்கியமான பல நாடுகளின் ஆட்சிகள் இடதுசாரிகளின் கைகளுக்கு சென்றிருப்பதானது, ஒரு பொருள் நிறைந்த நிகழ்ச்சிப் போக்காகும். தென்னமெரிக்க கண்டமானது ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகளாக ஏகாதிபத்தியங்களின் சுரண்டலுக்கான தளமாக இருந்து வந்து, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொல்லைப்புறம் என்று வர்ணிக்கப்பட்டது. பொருளாதார சுரண்டல் மட்டுமின்றி, மிகக் கொடூரமான சர்வாதிகார ஆட்சிகள் அங்கு நிறுவப்பட்டி ருந்தன. முதலாளித்துவம் பெரிதாக பறைசாற்றி வரும், முதலாளித்துவ சீர்திருத்தங்கள், உலக வங்கியுனுடைய திட்டமிடுதல், கடன் கொடுத்து கழுத்தை நெருக்குதல் போன்ற காரியங்களும் நடைபெற்ற நாடுகள் இவை. (1958லேயே முதலாளித்துவ பிடிப்பிலிருந்து விடுபட்ட கியூபா நீங்கலாக) இத்தகைய தென் அமெரிக்க நாடுகளில் பலவற்றில் இன்று சற்றும் எதிர்பாராத விதமாக, இடதுசாரி சார்பு உள்ள ஏகாதிபத்திய எதிர்ப்பு தன்மை கொண்ட பல அரசுகள் தோன்றியுள்ளன.

இந்தியாவில் நடப்பதும் இதர நாடுகளில் நடப்பதும் வரலாற்றில் ஒரு புதிய போக்கினை பிரதிபலிக்கவில்லையா என்பதனை நாம் ஆழமாக பரிசீலனை செய்ய வேண்டும்.

பழைய சமுதாய அமைப்பின் ஆழமான நெருக்கடிகள் காரணமாக சமூகத்தின் பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலை; மக்களின் வறுமையும், வேலையின்மையும், துன்பங்களும் பெருமளவில் பெருகிக் கொண்டிருக்கும் நிலைமைகள் இவற் றினால், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், கொந்தளிப்பான நிலைமைகள் உருவாகி வரும் சூழலில் தோன்றியவைதான் இந்த இடதுசாரி அரசுகள். ஏகாதிபத்தியத்தின் கடுமையான பிடியின் காரணமாக புரட்சிகரமான சக்திகள் போதுமான அளவிற்கு வளராத ஒரு சூழ்நிலையில், மக்களின் குமுறலை பிரதிபலிக்கும் வகையில்தான், இடதுசாரி அல்லது இடதுசாரி சார்புடைய அரசுகள் தோன்றியுள்ளன என்பது தெளிவு. இவற்றில் கம்யூனிஸ்ட்டுகளின் நேரடி பங்கு அதிகமாக இருப்ப தாகத் தெரியவில்லை. ஆயினும் தென்னமெரிக்காவின் சின்னஞ் சிறு கம்யூனிஸ்ட் நாடான கியூபாவின் முன்னுதாரணம் அது பின்பற்றியுள்ள பாதை, அதன் விளைவாக, மக்களின் வாழ்க்கை நிலையில் கிட்டியுள்ள ஓரளவிற்கு முன்னேற்றமான ஒரு நிலை. இவையெல்லாம் தென்னமெரிக்க கண்டத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு பெருமளவில் உதவியுள்ள காரணங்கள் என்பதை மறுக்க முடியாது.

ஆக, இடதுசாரி இயக்கங்களின் இந்த முன்னேற்றமானது பல நாடுகளில் நடைபெற்று வருகின்றன. ஏற்றத்தாழ்வான நிலை யிலானாலும், உலக முதலாளித்துவத்தின் நெருக்கடிகளும், யுத்த வெறி பிடித்த அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு பல்வேறு முறைகளில் தோல்விகளும், வளர்ந்து வரும் ஒரு சூழ்நிலையில் இவற்றை எதிர்க்கும் மக்களின் இயக்கங்கள் இடதுசாரிப் பாதையை தேடிச் செல்வது என்பது இயல்பானது. அதன் தன்மைகள், வேகம் போன்றவை மாறுபட்டுதான் இருக்கும். அனைத்து நாடுகளிலும் ஒரே சீராக நடைபெறும் என்று எதிர்பார்க்க முடியாது.

இன்றுள்ள நிலையில், இத்தகைய சக்திகளை கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமையில் கொண்டு வருவதற்கு உள்ள சிரமங்கள் காரணமாகவும், பல நாடுகளில் உள்ள முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலைகள் காரணமாகவும், இந்த மாற்றங்கள் தற்சமயம் இடதுசாரி இயக்கங்களின் தலைமையில் நடக்கின்றன. இது ஒரே தன்மைகளுடன் நடப்பதுமில்லை. மாறுபட்ட சூழ்நிலைக்கேற்ற தன்மைகளும் மாறுகின்றன. இதைப் பார்க்கும் போது, இடது சாரிகளின் இந்த முன்னேற்றத்தை அடக்கி ஒடுக்குவதற்கும், குழப்பிச் செயலிழக்கச் செய்வதற்கும், பழைய நம்பிக்கைகளிலிருந்து விடுபடாமல் மக்களை வைப்பதற்கும் ஏகாதிபத்தியம் பல புதிய தந்திரங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. பாசிசமும், கம்யூனிசமும் ஒன்று தான் என்ற பிரச்சாரம் வெகுவாக மேலை நாடுகளில் நடப்பதை இது உறுதிப்படுத்துகிறது.

கம்யூனிஸ்ட் கட்சிகளும் – இடதுசாரிகளும்

கம்யூனிஸ்ட் கட்சிகள் பொதுவாகவே இடதுசாரிகளை ஊக்குவித்து, அவற்றின் வளர்ச்சிக்கு உதவி வருகின்றன என்பது உண்மை. ஆயினும் இவற்றிற்கிடையில் பலவிதமான அடிப்படை மாறுபாடுகளும் உண்டு என்பதையும் மறக்கலாகாது. இவை நேச சக்திகளாக வளர வேண்டியது அவசியமானதாகும். ஆனால், உருவாகும் தன்மை, குணாம்சங்கள் – ஸ்தாபன அமைப்புகள் – நடைமுறைகள் போன்ற பல விஷயங்களிலும் மாறுபட்ட அம்சங்கள் உண்டு என்றும் நாம் உணர வேண்டும்.

இடதுசாரி கட்சிகளின் வளர்ச்சியானது கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும், புரட்சிகரமான இயக்கங்களுக்கும் பெருமளவில் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதேபோல் வலுவான கம்யூனிஸ்ட் கட்சி இருப்பது இடதுசாரி இயக்கங்களுக்கு ஊக்கத்தையும், ஆக்கத்தையும் அளிக்கிறது என்பதும் உண்மை.

இடதுசாரிகள் என்றால் யார்?

ஒரு கட்சியை இடதுசாரி கட்சி என்று அழைப்பது எந்த அடிப்படையில் என்ற ஒரு கேள்வி பலருக்கும் இருக்கிறது. பிரெஞ் புரட்சிக்குப் பின் (1789) ஜனநாயக சக்திகளும் முன்னேறிய காலகட்டத்தில், பிரான்ஸ் பாராளுமன்றத்தில், காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வந்தன. இந்த விவாதங்களில் பழமைவாதிகளாக இருந்தவர்களும், சமுகத்தில் பெரிய மாற்றங்கள் செய்யக்கூடாது என்று எண்ணியவர்களும், சொத்துரிமை போன்ற அவர்களின் பார்வையில் ஜீவாதாரமான பிரச்சினைகளிலும், மாற்றமே கொண்டு வரக்கூடாது என்று வாதாடிய ஒரு பிரிவினர் எதிர்த்தனர். அந்தக் கட்சியினருக்கு பாராளுமன்ற மண்டபத்தில் சபாநாயகருக்கு வலதுபுறமாக சீட்டு ஒதுக்கப்பட்டிருந்தனர். அதே நேரத்தில் சமுதாய அமைப்பில் பெரிய மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்று வீரமுடன் வாதாடிய ஒரு பிரிவினர் இருந்தனர். பிரெஞ்சு புரட்சி மன்னர் ஆட்சி முறையையும், பத்தாம் பசலி சமுதாய அமைப்பையும் உடைத்தெறிந்தது போலவே, சமுதாயத் திலும், பல்வேறு துறைகளில் தீவிரமான மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என்று அவர்கள் வாதாடினர். இதுபோன்ற காரணங்களால், அரசியல் வழக்கத்தில் மாற்றத்திற்காக வாதாடக் கூடிய முற்போக்கு எண்ணம் கொண்ட தீவிர கருத்துக்கள் கொண்ட அனைவரையும் இடதுசாரிகள் என்று அழைக்கின்றனர்.

கம்யூனிஸ்ட் கட்சிகள் கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிட்ட காலத்தில் இருந்து இரண்டு நூற்றாண்டு காலமாக பகிரங்கமாக பிரகடனப்படுத்தப்பட்ட இலட்சியங்களை ஆதாரமாகக் கொண்டு புரட்சிகரமான ஒரு இயக்கத்தை தலைமை தாங்கி நடத்துவதற்காக படிப்படியாக விடா முயற்சியில் ஈடுபட்டு வரக்கூடிய கட்சியினர் ஆவர். தங்களது லட்சியங்களை ஒளிவு மறைவு இன்றி பிரகடனப் படுத்தி இன்றைய சமுதாய அமைப்பினை முற்றிலுமாக மாற்றியமைப்பதற்காக போராடுகிறோம் என்று பகிரங்கமாக பறைசாற்றி வருபவர்கள். இன்றைய முதலாளித்தவ, நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பை முற்றிலுமாக புரட்சிகரமான முறையில் மாற்றியமைத்து, சுரண்டலுக்கு முற்றுப் புள்ளி வைப்பது நோக்கம் என்பது கம்யூனிஸ்ட்டுகளின் நோக்கமென்பதும், தெளிவாக்கப் பட்டுள்ளது. ஆட்சி அதிகாரத்தை சுரண்டும் வர்க்கங்கள் கையில் இருந்து கைப்பற்றி, உழைக்கும் மக்கள் கைகளுக்கு மாற்றுவது என்ற லட்சியம் பகிரங்கமாகவே பிரகடனம் செய்து அதை நடைமுறைப் படுத்த தீவிரமாக முயற்சிப்பவர்கள்.

அமைதியாகவோ, தேவைப்பட்டால் வன்முறையிலோ இலட்சியத்தை அடைவதற்கு தயார் என்று சொல்லுவது மட்டுமின்றி பல நாடுகளில், சுரண்டும் வர்கங்களின் ஆட்சிகளை தூக்கியெறிந்து காட்டியவர்களும் கம்யூனிஸ்ட்டுகள் தான். பொதுவுடைமை சமுதாயம் என்ற ஒரு புதியதோர் உலகத்தை படைப்பதற்காக போராடுபவர்கள் என்ற நோக்கத்துடன், உறுதியுடன் போராடக் கூடியவர்கள். ஆக, வர்க்கப் போராட்டத்தை வலுப்படுத்துவது, சுரண்டும் வர்க்கங்களை ஓயாமல் எதிர்ப்பது, பழைய ஆட்சியில் இருக்கும் சுரண்டும் வர்க்கங்களை அங்கிருந்து விரட்டுவது போன்ற தெளிவான திசை வழியை ஏற்றுக் கொண்டவர்கள் கம்யூனிஸ்ட் டுகள். ஆனால், பல இடதுசாரி கட்சிகளும் சமுதாய மாற்றம் என்ற பொதுவான கருத்தைப் பிரச்சாரம் செய்தாலும், வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் இதற்கான முயற்சியில் இறங்குவது இல்லை. சில இடதுசாரி கட்சிகள் இன்றைய கட்டுக் கோப்பை மாற்றாமல், மக்களுக்கு சேவை செய்து வருவது என்ற மிதமான கோஷத்தைகூட வைத்திருக்கிறார்கள்.

இதுபோன்ற பல்வேறு விஷயங்களை கம்யூனிஸ்ட்டுகளுக்கும், இடதுசாரிகளுக்கும் பல மாறுபாடுகளை பார்க்க முடியும். ஆயினும், சோசலிஸ்ட்டுகள், தொழிலாளர் கட்சியினர் சில சமுதாய சீர்திருத்த கட்சிகள் இவையெல்லாம், இடதுசாரி கட்சிகளாக கருதப்படுகின்றனர். ஆனால், இன்றைய தினம் இந்தியாவில் இடதுசாரி கட்சிகளாக செயல்பட்டு வரக்கூடிய கட்சிகளும், தென்னமெரிக்கா போன்ற கண்டங்களில் செயல்பட்டு வரக்கூடிய பல கட்சிகளும், பல விஷயங்களிலும் முற்போக்கான கருத்துக்களை மேற்கொண்டுள்ளனர் என்பது உண்மை.

உதாரணமாக: பொதுப்படையாக சோசலிசம் என்ற கருத்தை இந்த பிரிவினர் ஏற்றுக் கொள்கின்றனர். (கம்யூனிஸ்ட்டுகளைப் போல் நுட்பமாகவும், ஆழமாகவும் சோசலிசத்தினுடைய தன்மைகளை ஆராயவில்லையென்றாலும், சமத்துவம் என்ற பொதுவான கருத்தை இடதுசாரிகள் ஏற்றுக் கொள்கின்றனர்.) அடிப்படையான சமூக மாற்றத்திறக்காக போராடுவது என்ற நோக்கத்துடன் செயல்படக்கூடிய இடதுசாரிகள், சுரண்டும் வர்க்கங்களை பொதுவாக எதிர்ப்பது என்ற நிலையை மேற்கொள்கின்றனர். நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ சுரண்டலை பற்றி பிரச்சாரமும் செய்கின்றனர். இந்த அளவிற்கு வர்க்கப் போராட்டத்தில் சம்பந்தப்படுகிறார்கள். வர்க்க உணர்வின் தேவையைப் பற்றி பறைசாற்றுகிறார்கள். இயல்பாகவே ஓரளவிற்கு வர்க்க ஸ்தாபனங்களை தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் போன்றவற்றை வளர்க்க முயற்சிக்கின்றனர். ஆக, வர்க்கப் போராட்டம், வர்க்க அமைப்பு ஆகியவற்றை ஊக்குவிக்க முயற்சிக் கின்றனர் என்பது உண்மை. கம்யூனிஸ்ட்டுகளைப் போல தெளிவான பார்வையுடன்,  வர்க்கங்களற்ற சமூக அமைப்பைக் கட்டுவது என்ற பார்வையுடன் இதை செய்யவில்லையென்றாலும், இந்த செயல் களானது ஓரளவிற்கு முற்போக்கு இயக்கங்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. நிலச்சீர்திருத்தம் தேவை பற்றி பொதுவாக பிரச்சாரம் செய்கிறார்கள். தென்னமெரிக்காவில், இன்று அமைந்துள்ள இடதுசாரி ஆட்சிகள் பெரிய அளவில் நில விநியோகம் செய்ய ஆரம்பித்துள்ளனர். (உதாரணம்: பொலிவியா)

இடதுசாரி சக்திகளின் ஒரு முக்கியமான தன்மையானது – அவை ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் உருவாகியவை என்பதாகும். தங்களுடைய நாடுகளில் ஏகாதிபத்தியம் செல்வங்களை, கொள்ளையடித்ததை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் என்ற முறையில், ஏகாதிபத்திய சுரண்டலை கூர்மையாகவும், உறுதியாகவும் போராடுபவர்களில் இடதுசாரிகள் முன்னணியில் நிற்கின்றனர். ஆக, ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளாகவே இடது சாரிக் கட்சிகள் செயல்படுகின்றன என்று கூறலாம்.

ஜனநாயக உரிமைகளை, மனித உரிமைகளைச் சுரண்டும் வர்க்கங்களும், ஆளும் கட்சியும் பறிக்கும் போது, அவற்றை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களில் பல இடங்களில் இடதுசாரிக் கட்சிகள் பங்கேற்கின்றன, முன்னெடுத்துச் செல்கின்றன.

இத்தகைய குணாம்சங்களால், பொதுவாக பார்த்தால், இடதுசாரி இயக்கங்கள் மாணவர்களை, விவசாயிகளை, தொழிலாளி வர்க்கம் போன்ற வர்க்கங்களை திரட்டும் பணியில் ஆங்காங்கு ஈடுபடுகின்றனர். கம்யூனிஸ்ட்டாக விரும்பாத, அதே நேரத்தில் சில முற்போக்கு எண்ணம் கொண்ட அறிவாளிக் கூட்டத்தில் இருந்தும் நடுத்தர மக்களில் பலரும் இடதுசாரி இயக்கத்தை ஆதரிக்கின்றனர்.

இடதுசாரி கட்சிகள் ஒவ்வொன்றின் குணாம்சங்களையும், அவற்றின் பின்னணியை வைத்து தீர்மானிக்க வேண்டியுள்ளது. பல்வேறு சூழ்நிலைமைகளில் அவை முற்போக்கு இயக்கங்களுக்கு பயனுள்ளவையாக அமைகின்றன. ஆயினும், சில சூழ்நிலைகளிலும் சில இடதுசாரிக் குழுக்கள் தெரிந்தோ, தெரியாமலோ கம்யூனிஸ்ட் எதிர்ப்பு இயக்கங்களுக்கு, உதவி செய்து வருகின்றன. ஆகவே இடதுசாரி இயக்கங்களுடைய வளர்ச்சியானது பொதுவாக முற்போக்கு எண்ணத்திற்கு உதவிகரமானதாக இருக்கின்ற போதிலும், ஒவ்வொரு அமைப்பின் செயல்பாடுகளையும், ஸ்தூலமாக பரிசீலனை செய்து அவற்றின் குணாம்சங்களைப் பற்றி முடிவு செய்வதுதான் சரியாக இருக்கும்.

தொடக்கத்திலே குறிப்பிட்டதுபோல் இன்றைய கால கட்டத்தில் இடதுசாரி இயக்கங்களைப் பற்றி பொதுவான அக்கறை வளர்ந்து வருவதும், பல இடங்களில் நல்ல முறையில் இடதுசாரி குழுக்கள்  வளர்ந்து வருதும் புரட்சிகரமான மாற்றங்களுக்கு பெரிய அளவில் உதவி செய்யும் என்று எதிர்பார்க்கலாம். ஆயினும் திட்டவட்டமான அரசியல் பார்வை வலுவான ஸ்தாபன அமைப்பு, தெளிவான மார்க்சிய கண்ணோட்டம் உறுதியான புரட்சிகரமான நடைமுறை இருக்கின்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் வலுவாக இருந்தால்தான் இடதுசாரி இயக்கங்களும் பயனுள்ளவையாக இருக்கும் என்பதையும் கம்யூனிஸ்ட்டுகள் மறந்து விடக்கூடாது.