வழிகாட்டும் கேரளம் : கூட்டுறவின் மூலம் ஒரு மாற்று !

ஆசிக் அலி, அங்சுமன் சர்மா

(ஜாகோபின் இதழில்வெளியான ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம்)

குரல்: தேவி பிரியா

இந்திய பொருளாதாரத்தினை, நவ-தாராளமய திசை வழியில், செலுத்திய கடந்த 30 ஆண்டுகளில் வேளாண் சமூகங்களும், ஊரக ஏழைகளும் அதன் கடுமையான உடன் விளைவுகளை எதிர்கொண்டுவருகிறார்கள். நமது நாட்டை ஆளும் கோமான்கள், தாராள வர்த்தக கொள்கைகளை திணித்ததுடன், வேளாண்துறைக்கான அரசு செலவினங்களையும்,மனியங்களையும் குறைத்தார்கள் மேலும் பொதுக் கொள்முதல் அமைப்பை பலவீனப்படுத்தியுள்ளார்கள். வேளாண் வர்த்தகத்தில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள், இடுபொருட்களின் விலைகளையும், விளைபொருட்களின் விலைகளையும் தீர்மானிப்பதுடன் ஒட்டுமொத்த உற்பத்தியையும், மதிப்புக் கூட்டல் மற்றும் சந்தைப்படுத்துவதையும் மேற்கொள்கின்றன. இவ்வகையில், கார்ப்பரேட் மயமாதல் போக்கு வேளாண் துறையில் பொதுவாக நிலவுகிறது.

நவ-தாராளமய பொருளாதார சீர்திருத்தங்கள் 1991 ஆம் ஆண்டில் தொடங்கின. அப்போதிருந்தே வேளாண்மையை சார்ந்து வாழும் சமூகங்கள் தொடர்ந்து இழப்புகளை எதிர்கொண்டு வருகின்றன. இந்திய மக்கள் தொகையில் வேளாண்மையை சார்ந்து வாழும் மக்களின் சதவீதம் 1991ஆம் ஆண்டில் 59 ஆக இருந்தது, 2011ஆம் ஆண்டில் அது 54.6 ஆகியது. 2019-2020 காலகட்டத்தில் இது 45.6 சதவீதமாகியுள்ளது. வேளாண்மை சார்ந்த, மேற்குறிப்பிட்ட மக்கள் தொகையிலும் கூட,சாகுபடியாளர்களின் சதவீதம் 59.7 (1991ஆம்ஆண்டில்) என்பதிலிருந்து 45.1 என்பதாக (2011ஆம் ஆண்டில்) குறைந்துவிட்டது.

பெருந்தொற்றிற்கு முன்பே:

கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்குவதற்கு முன், 2019ஆம் ஆண்டிலேயே, வேளாண்மை சார்ந்த ஒரு குடும்பத்தின் சராசரி கடன் ரூ.74 ஆயிரத்து 121 என இருந்தது. விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகளின் வருமானத்தில் பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கும் இப்போதைய பின்னணியில் நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. தீவிரமான வேளாண் நெருக்கடி அதிகரித்துள்ளதனால், வேளாண்மை சார்ந்த குடும்பங்களில் ஒரு நாளைக்கு குறைந்தது 30 தற்கொலைகள் நடக்கின்றன. ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு விவசாயி வேளாண்மையைக் கைவிட்டு வெளியேறுகிறார்.

பணப்பயிர் விவசாயிகளிடையே தற்கொலை விகிதங்கள் அதிகமாக உள்ளன. அவர்கள்தான் நவதாரளமய பொருளாதார சூழலில் மோசமான இடர்களை எதிர்கொள்கிறார்கள். உலகமயமான சந்தைச் சூழல் காரணமாக ஏற்படும் தாறுமாறான விலை நிர்ணயம், உற்பத்தி பொருட்களின் விலையேற்றம், கடுமையான கடன் நிலைமைகள் என அனைத்தும் ஒன்றாக அவர்களின் வாழ்க்கைநிலையை தாழ்த்துகின்றன.

காற்றில் பறந்த வாக்குறுதி:

நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக அரசாங்கத்தின் கொள்கைகளால், 2014 ஆம் ஆண்டு முதல் வேளாண் நெருக்கடி மேலும் தீவிரமடைகிறது. அதிகாரத்தில் உள்ள இந்த இந்துத்துவக் கட்சி,குறைந்தபட்ச ஆதார விலை வழங்குவோம் என்ற தனது தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டுவிட்டது. (உற்பத்திச் செலவில் இருந்து குறைந்தபட்சம் 50 சதவீதம் கூடுதலான விலையை கொடுப்போம் என்று அவர்கள் வாக்குறுதியளித்திருந்தனர்). மேலும், ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் வேளாண்மைத் துறைக்கான ஒதுக்கீடுகள் குறைக்கப்படுகின்றன.

2016ஆம் ஆண்டில் மோடி அரசாங்கம் திடீரென,நோட்டுக்கள் செல்லாமல் ஆக்கும் திட்டத்தை முன்னெடுத்து, புழக்கத்தில் இருந்த நோட்டுக்களை திரும்பப் பெற்றார்கள். இதன் காரணமாக உள்ளூர் சந்தைகளும்,வேளாண் கடன் பின்னல்களும் மோசமான தாக்கம் பெற்றன. பொதுத்துறை வங்கிகளில் இருந்து கிடைக்கக் கூடிய நிறுவனக் கடன்களும் கூட வேளாண்மை சார்ந்த ‘தொழில்களை’ நோக்கி சாயத்தொடங்கின. மோடியின் தலைமையை பின்பற்றி, பாஜக ஆட்சி நடத்தும் மாநில அரசாங்கங்களும், லாபத்தைக் குவிக்கும், ஊக நில வணிகத்தில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள், வேளாண் நிலங்களை கைப்பற்றுவதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.

இந்திய தொழிலாளர் சட்டங்களை அரசாங்கம் மாற்றியமைத்தது; சங்கமாகச் சேர்வதற்கான தொழிலாளர் உரிமைகள் மறுக்கப்பட்டன; 8 மணி நேர வேலை என்பது 12 மணி நேரமாக உயர்த்தப்பட்டது; தொழிலாளர்களுக்கு இதுவரை இருந்த பாதுகாப்புகளும் உரிமைகளும் பறிக்கப்பட்டன. மேலும், 2020ஆம் ஆண்டில் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான மூன்று வேளாண்சட்டங்களை அரசாங்கம் வேக வேகமாக கொண்டுவந்தது. இப்போது அந்த சட்டங்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்ட இயக்கம், விவசாயிகளை ஓட்டாண்டிகள் ஆக்கி, கார்ப்பரேட்டுகள் கையில் விவசாயத்தைக் கொடுக்கும் போக்கிற்கு எதிரான எழுச்சியாகும். இப்படியான பின்னணியில்,கேரளாவின் அனுபவங்கள் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை பெறுகின்றன.

கேரள முன்மாதிரி:

இந்திய ஒன்றிய அரசின் எதிர்ப்பையும், நாடு முழுவதும் நடந்துவரும் வலதுசாரி திருப்பத்தையும் எதிர்கொண்டு, இடதுசாரிகள் அதிகாரத்தை பிடித்துள்ள ஒரே மாநிலமாக கேரளம் உள்ளது. இந்த மாநிலம் வெகுமக்கள் செயல்பாடுகளாகும், தொழிலாளர் ஒற்றுமையினாலும், வலுவான சமூக-ஜனநாயக வளர்ச்சி நெறிமுறைகளினாலும் செழித்த மாநிலம் ஆகும்.

மக்களை உள்ளடக்கிய இந்த மாநிலத்தின் கூட்டுறவு இயக்கமானது, தொழிலாளர் இயக்கத்துடனும், பிற சமூக சீர்திருத்த இயக்கங்களுடனும் வலுவான பிணைப்புக் கொண்டதாக, சமுதாய ரீதியான முயற்சிகளை முன்னெடுப்பதில் குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்துள்ளது. பிரம்மகிரி மேம்பாட்டு சங்கம் அப்படிப்பட்ட முயற்சிகளில் ஒன்று. நவ தாராளமயத்தினால் உருவாகிய வேளாண் நெருக்கடிக்கு எதிரான போராட்டத்தில் கருப்பெற்றது இந்த முயற்சி.

இந்தியாவில் உருவாக்கப்பட்ட நவ தாராளமய திருப்பத்தின் காரணமாக, பணப்பயிர்கள் சர்வதேச சந்தையுடன் இணைக்கப்பட்டன. அவற்றின் விலை தாறுமாறாகியது. இதனால் கேரளாவின் வேளாண் பொருளாதாரத்தில் பாரதூரமான தாக்கங்கள் ஏற்பட்டன. ஏற்றுமதி சார்ந்த பணப்பயிர்களான காபி, தேயிலை, மிளகு, ஏலக்காய், பாக்கு கொட்டை மற்றும் ரப்பர் ஆகியவைதான் கேரளாவின் மொத்த சாகுபடிப் பரப்பில் 60 சதவீதத்தில் பயிர் செய்யப்படுகின்றன. வயநாடு மாவட்டத்தில் சாகுபடியாகும் முக்கிய பயிர்கள் மிளகும்,காபியும் ஆகும். 1997-98 முதல் 2003-04 வரையிலான காலகட்டத்தில் காபியின் விலை 59 சதவீதமும் மிளகின் விலை 69 சதவீதமும் வீழ்ச்சியை சந்தித்தது. இந்த விலை வீழ்ச்சிகளின் காரணமாக விவசாயிகள் வட்டிக்காரர்களிடம் பெற்றிருந்த கடன்களை திரும்ப செலுத்த முடியவில்லை. இந்த கடன் வலையில் பெரும்பாலானவர்கள் தங்களுடைய மதிப்புமிக்க நிலங்களை இழந்தார்கள்.

10 ஆயிரம் தற்கொலைகள்:

வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட வறட்சி சூழலும், பயிர் நோய்களும், அங்கே இந்த நிலைமையை மேலும் மோசமாக்கின. துயரம் சூழ்ந்த கடுமையான இந்த சூழலின் காரணமாக அந்த மாவட்டத்தில் விவசாயிகள் தற்கொலை ஒரு துயரஅலையாக எழத் தொடங்கியது. 1996-2005 காலகட்டத்தில் 10 ஆயிரம் தற்கொலைகள் நடந்திருந்தன.

இந்தப்பின்னணியில்தான் சுல்த்தான்பத்தேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வர்க்கீஸ் வைத்தியர் (கம்யூனிஸ்ட்), உள்ளாட்சி நிர்வாகங்களின் பிரதிநிதிகளின் கூட்டத்தை வயநாடு மாவட்ட அளவில் கூட்டி, இந்த நெருக்கடியை எதிர்கொள்ள சாத்தியமான வழிமுறைகளைப் பற்றி விவாதித்தார். அதே நேரத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கமும், குடிமைச் சமூக அமைப்புகளும் ஒன்றிணைந்து தன்னார்வலர் குழு ஒன்றை ஏற்படுத்தினார்கள். அவர்கள்,வயநாடுமாவட்டத்தின் விவசாய சமூகங்களோடு உரையாடி பொருத்தமான திட்டத்தை வகுத்தார்கள்.

விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்குமான சந்தை:

இந்த கூட்டு முயற்சியில் விளைந்ததுதான் பிரம்மகிரி பண்ணை திட்ட அறிக்கை. வர்க்கீஸ் வைத்தியர், இந்த அறிக்கையை சட்டமன்றத்தில் முன்வைத்தார். வயநாடு மாவட்டத்தில் உள்ள பண்ணைகளுக்கு உதவி செய்வதும், பதப்படுத்தும் அமைப்பைக் கொண்ட ஒரு இறைச்சிக் கூடத்தை ஏற்படுத்துவதும் அந்த அறிக்கையில் முன்மொழியப்பட்டது. இடது ஜனநாயக முன்னணி அமைச்சரவை, இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டதுடன் ரூ.25 லட்சம் நிதி கொடுத்தது. 1999, மார்ச் 31 ஆம் தேதியன்று இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

வேளாண்-தொழில்துறை நடவடிக்கைகளை நவீனப்படுத்தும் முறைகளைப் பின்பற்றி, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் பிரம்மகிரி மேம்பாட்டு சங்கம் இயங்கியது. கேரளத்திலும்,அருகமை மாநிலங்களிலும் இனப்பெருக்க பண்ணைகள், கால்நடை பண்ணைகள், தீவன ஆலைகள் ஆகியவைகளைத் தொடர்புகொண்டு ஒருங்கிணைத்ததன் வழியாக தங்களுடைய சங்க உறுப்பினர்களுக்கு குறைந்த செலவில் மூலப்பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்தது. கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கியதுடன் அவை இறந்து போனால் காப்பீட்டிற்கும் வழி செய்யப்பட்டது.

விவசாயிகளிடமிருந்து கோழிகளையும், கால்நடைகளையும் நியாயமான விலையில் கொள்முதல் செய்தார்கள். கொள்முதல் செய்யப்பட்ட வேளாண் பொருட்களைக் கொண்டு உறையவைத்த இறைச்சி, உலர்த்திய இறைச்சி, கோழிக்கறியில் செய்த கட்லெட், மாட்டிறைச்சியில் செய்த கட்லெட், ஊறுகாய், பஜ்ஜி, நக்கெட், சாசேஜ் மற்றும் வேஃபர் ஆகியவைகளை பலவகை இறைச்சிக் கூடத்தில் தயாரித்து சந்தைப்படுத்தினார்கள். இந்த கூட்டுறவு சங்கத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள், ஒரு முறைக்கு தலா 2,500 முதல் 3,000 கோழிகளை வளர்க்கிறார்கள். இப்படி ஆண்டுக்கு ஆறுமுறை கோழிகள் கொள்முதல் நடக்கிறது. கிலோ ரூ.11 என்ற விலையில் அவற்றை சங்கம் வாங்கிக் கொள்கிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.31,500 முதல் 37,000 வரை வருமானத்தை உறுதி செய்கிறார்கள்.

தேயிலை, காபிக் கொட்டை மற்றும் சமுதாய வேளாண்மையில் விளைவிக்கப்படும் பொருட்களை கூட்டுறவு சங்கம் கொள்முதல் செய்கிறது. ஏராளமான விவசாயிகள் இதில் ஒரு சங்கிலித்தொடராக இணைந்துள்ளார்கள். விவசாயிகளும், விவசாயதொழிலாளர்களும் கூட்டான உரிமை பெற்ற விரிவான சந்தை உருவாக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, பிரம்மகிரி மேம்பாட்டு சங்கத்தின் மலபார் இறைச்சிப் பிரிவு மட்டும் 110 விற்பனைக் கூடங்களை வைத்திருக்கிறது.

போட்டிக்கு மாற்றாக கூட்டுறவு:

பொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் விலை உறுதி செய்யப்படுகிறது. இடைத்தரகர்களின் சுரண்டல் ஒழிக்கப்படுகிறது. விற்பனைச்சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து தப்ப முடிகிறது. பெருந்தொற்று காலத்தில், ஆன்லைன் விற்பனை வாய்ப்புக்களையும் அவர்கள் பயன்படுத்தினார்கள். விவசாயிகள் வர்த்தக சந்தை (எஃப்.டி.எம்) ஒன்றை உருவாக்கியதன் மூலம் பிரம்மகிரி மேம்பாட்டு சங்கத்திற்கு சொந்தமான கடைகளில் இருந்து வயநாடு மாவட்டத்தில் உள்ள வீடுகளுக்கு பொருட்கள் நேரடி விநியோகம் செய்யப்பட்டன.

பிரம்மகிரி மேம்பாட்டு சங்கத்தின் பின்னணியாக அமைந்த கம்யூனிஸ்ட் விவசாய சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடைய தலைவர்கள், இந்த முயற்சியினை வர்க்கப் போராட்டத்தோடு பின்னிப் பிணைந்த சமூகக் கூட்டுறவாக முன்னெடுத்தார்கள். எனவே விவசாய சமூகங்களின் நலனே லாபத்தை விடவும் முதன்மை பெற்றது. மூலப் பொருட்கள் வாங்கவும், கட்டமைப்பு வசதிகளுக்கும், சந்தைப்படுத்துவதற்கும் ஆகும் செலவுகள் போக, மீதமுள்ள உபரியைக் கொண்டு விவசாயத்தை நவீனப்படுத்தவும், கூட்டுறவு சந்தையை விரிவாக்கவும் எடுக்கப்படும் முடிவுகள் ஜனநாயக முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. வேளாண் உற்பத்தியாளர்களும், தங்களிடம் உள்ள உபரியினை நல்ல ஊதியமாகவும், கூடுதல் விலை கொடுப்பதன் மூலமும் பகிர்ந்துகொள்கிறார்கள்.

அனுபவங்களில் கற்ற பாடம்:

இந்திய கூட்டுறவுச் சங்கங்களின் கடந்த கால அனுபவங்களை பார்க்கும்போது, அவை அரசின் கட்டுப்பாட்டினாலும், அதிகாரத்துவம் காரணமாகவும் – கூட்டுறவு சங்கங்களின் தலைமைப் பொருப்பினை ஆதிக்க சாதியினரும், உள்ளூர் பணக்காரர்களும், அரசியல் மேட்டுக்குடியினரும் கைப்பற்றியதன் காரணமாகவும் சீரழிவைச் சந்தித்தன. இவைகளில் இருந்து பிரம்மகிரி சங்கம் பாடங்களைக் கற்றுக் கொண்டது. பணியாளர்களின் சுய மேலாண்மையை அடிப்படையாகக் கொண்டதாக இயங்குகிறது. முடிவெடுப்பதில் குறுக்கு வெட்டு வழிமுறையை முன்னெடுக்கிறது. இவ்விதத்தில் உறுப்பினர்கள் தங்கள் அன்றாட செயல்பாடுகளை முடிவு செய்கிறார்கள். கொள்கை முடிவுகளையும் மேர்கொள்கிறார்கள். இது உற்பத்தி உறவுகளில் நேர்மறையான மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது. மேலும் பணியிடங்களில் வர்க்கங்களிடையே ஒருமைப்பாட்டு உணர்வை மேம்படுத்துகிறது.

அரசின் தலையீட்டில் சிக்காத வகையில் தன்னாட்சியை உறுதி செய்வதற்காக இந்த சங்கம் தொண்டு நிறுவன சட்டங்களின் விதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை. இதன் மூலம் பிரம்மகிரி மேம்பாட்டு சங்கமானது சமூக இயக்கங்களோடும், கூட்டுறவு சங்கங்களோடும், உள்ளாட்சி நிர்வாகங்களோடும் அணி சேர்ந்து ஒரு வலைப்பின்னலை ஏற்படுத்துவதற்கான நெகிழ்வுத்தன்மைப் பெற்றுள்ளது. அதே சமயம் தனது தனித்தன்மையையும் பாதுகாத்துக்கொள்கிறது.

வயநாடு மாவட்டத்தில்,குடும்பஸ்ரீ சுய உதவிக் குழுக்களோடும், பிற அரசு திட்டங்களோடும் இணைந்து பிரம்மகிரி மேம்பாட்டு சங்கமும் பணியாற்றுகிறது. இப்பணிகளை வறுமை ஒழிப்புத்திட்டத்தின் ஒரு பகுதியாக 1998 ஆம் ஆண்டில் கேரள இடது ஜனநாய முன்னணி அரசு தொடங்கியது. 2017-18 ஆண்டுகளில், குடும்பஸ்ரீ சுய உதவிக் குழுக்களின் மூலம் 60 ஆயிரம் காய்கனி விதைப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன. 557 கூடுதல் வேலை நாட்கள் உருவாக்கப்பட்டன. 2018-19 ஆண்டில், பிரம்மகிரி சங்கம் 5 லட்சம் காய்கனி விதைநாற்றுக்களை வயநாடு மாவட்டத்தின் உள்ளாட்சிகளுக்கு வழங்கியுள்ளது.

இடைத்தரகர்கள் இல்லை:

இந்த கூட்டுறவின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது, மாநிலத்தில் உள்ள இடதுசாரி அரசின் தொடக்க கால ஆதரவாகும். 2.7 கோடி ரூபாய் நிதி உதவியை அரசாங்கம் வழங்கியது. பிரம்மகிரி சங்கம் தனது உறுப்பினர்களிடமிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் 6.3 கோடி ரூபாய் நிதியை திரட்டியது. இப்போது, இந்த சங்கத்திற்கு கூடுதலாக நிதி வழங்குவதாக அரசாங்கம் உறுதி கொடுத்துள்ளது.

2018 ஆம் ஆண்டில்,பிரம்மகிரி சங்கமும் இடது ஜனநாயக முன்னணியின் அமைச்சரவையும் ‘கேரளா கோழிக்கறி’ திட்டத்தை உருவாக்கினார்கள். கறி உற்பத்தியில் தன்நிறைவை எட்டுவதுதான் அந்த திட்டத்தின் நோக்கம். கோழிப்பண்ணைகளை ஊக்கப்படுத்துவது, விரிவான கூட்டுறவு பண்ணைகளை உருவாக்குவது என திட்டமிட்டார்கள். விரிவான கூட்டுறவு பண்ணைகளை உருவாக்கும் புதிய நவீன வடிவிலான பரிசோதனை முயற்சியாக அது அமைந்தது. உயிருடன் கோழிக்கறி ரூ.180 முதல் 210 வரை விற்பனையாகிறது. பிரம்மகிரி கேரளா கோழிக்கறி ரூ.140 முதல் 155 வரை விலையில் விற்கப்படுகிறது. சந்தையில் இடைத்தரகர்கள் இல்லாததால் இது சாத்தியமாகிறது.

சுரண்டலுக்கு எதிராக:

பிரம்மகிரி மேம்பாட்டு சங்கத்தில் 13 ஆயிரத்து 500 உறுப்பினர்கள் உள்ளார்கள். அவர்களில் 19 சதவீதம் பேர் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் ஆவர். சமூக கூட்டுறவின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் இணைக்கப்பட்டுள்ள விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்தது ஒரு லட்சம் ஆகும். 2020-21 ஆண்டு காலத்தில் இதன் உறுப்பினர்களுடைய மொத்த வரவு செலவு ரூ.32.5 கோடிகளாக இருந்தது. இவ்வகையில் விவசாயிகள் மீதான சுரண்டலை பண்ணை அளவில் மட்டுமல்லாது இடை நிலை நிறுவனங்களிலும் (mid-level institutions) எதிர்கொள்கிறார்கள். சில்லறை வணிகம், மாநிலம் முழுவதும் விநியோகித்தல் மற்றும் சந்தைப்படுத்துதலின் மூலம் – முதலாளித்துவ சந்தை உறவுகளால் எழும் அநீதிகளை எதிர்கொள்கிறார்கள்.

பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் விவசாய நிலங்களை இழப்பதற்கு வழிவகுக்கும் நவ தாராளமயத்தின் ஒப்பந்த விவசாய முறையிலிருந்து மாறுபட்டதும், நடைமுறைச் சாத்தியமானதுமான ஒரு முன்னுதாரணத்தை பிரம்மகிரி மேம்பாட்டுச் சங்கம் வழங்குகிறது. இருப்பினும், இந்திய விவசாய-முதலாளித்துவத்தின் சமனற்ற வளர்ச்சியை கவனத்தில் கொண்டிருக்கும் விவசாயிகள் இயக்கம், இப்போதுள்ள விவசாய நெருக்கடிக்கான ஒரே தீர்வாக சமூக கூட்டுறவுகளை மட்டுமே முன்வைக்கவில்லை. வேளாண் துறையில் நடக்கும் கார்ப்பரேட் பெரு நிறுவனங்களின் சுரண்டலுக்கு எதிர்ப்பை கட்டமைக்கும் வழிமுறைகளில் இதுவும் ஒன்று என்று பார்க்கிறார்கள். இவ்வகையில், முதலாளித்துவ அமைப்பிற்குள், அதற்கு எதிராக முன்னெடுக்கும் வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சமூக கூட்டுறவுகள் அமைகின்றன. விவசாயிகளுக்கும், சிறு உற்பத்தியாளர்களுக்கும் இந்த ஏற்பாட்டினால் உடனடி நிவாரணம் கிடைக்கிறது. மேலும் இது, முதலாளித்துவத்தை வீழ்த்தி மேற்கொள்ளவிருக்கும் பொருளாதார மறுகட்டுமானத்தின் (post-capitalist economic restructuring – என்பதை) முக்கியமான பகுதியாகவும்அமைகிறது.

முடிவாக:

ஒட்டுமொத்தத்தில், பிரம்மகிரி மேம்பாட்டு சங்கத்தின் வழியாக விவசாயிகளைத் திரட்டுவதுடன் உற்பத்தியிலும், கொள்முதலிலும், சரக்கு உற்பத்தியிலும் பணியாற்றும் வேளாண்மை சார்ந்த தொழிலாளர்களைத் திரட்டுவதும் சாத்தியமாகியுள்ளது. இந்திய வேளாண் துறையில் இடைத்தரகர்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் அமைத்துள்ள சுரண்டல் ஆதிக்க வலைப்பின்னலுக்கு இது சவால் விடுக்கிறது. தினக்கூலி தொழிலாளர்கள் என்ற நிலையில் இருக்கும் வேளாண் தொழிலாளர்களை, நிரந்தர மாத வருமானம் கொண்ட நவீன விவசாயிகளாக ஆக்குகிறது. நவதாராளமய கொள்கைகளின் காரணமாக, ஊரக இந்தியாவில் விவசாயிகள் ஓட்டாண்டியாக்கப்படும் போக்கினை இது சிறப்பாக எதிர்கொண்டுள்ளதுடன், வயநாடு மாவட்டத்தில் வேளாண்மையை நவீனப்படுத்தவும், நவீன வேளாண்மை சார்ந்த தொழிலாளி வர்க்கம் உருவாகவும் வழிவகுத்துள்ளது.

முற்போக்கு இயக்கங்களுடைய அரசியல் போராட்டங்களின் பிரிக்க முடியாத பகுதியாக இருப்பது தொழிலாளி-விவசாயி ஒத்துழைப்பும், ஒருமைப்பாடும் ஆகும். தற்போதிருக்கும் கொடுமையான வேளாண் நெருக்கடி சூழலிலும் கூட, மேற்சொன்ன அந்த ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் முன்னெடுப்பதன் மூலம், மக்களின் வாழ்வாதாரத்திற்கான வருவாயை உறுதி செய்யும் சாத்தியம் கொண்டதாக, விவசாயத்தை மாற்றியமைக்க முடியும் என்பதை பிரம்மகிரி மேம்பாட்டு சங்கம் உதாரணமாக காட்டியுள்ளது.

இந்திய சமூகத்திலும், அரசியலிலும் காணப்படும் பிற்போக்குத் தனங்களின் காரணமாக, நமது நாட்டின் பெரும்பான்மை வர்க்கங்கள் ஒரு கடுமையான கால சூழலுக்குள் நுழைந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், போட்டியும், சுரண்டலும் அதிகரித்த நிலைமைக்கு மாற்றான – ஒருமைப்பாட்டையும் ஒத்துழைப்பையும் கொண்ட ஒரு கட்டமைப்பை உருவாக்க முடியும் என்ற – நம்பிக்கையை சமுதாய சிந்தனையில் விதைப்பதற்கு இந்த கேராள முன்மாதிரி உதவும். முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் நம்பிக்கையையும், ஊக்கத்தையும் வளர்த்துக் கொள்ள இந்த முயற்சி துணை செய்யும்.

தமிழில்: இரா.சிந்தன்

கூட்டுறவு உணர்வு பரவ ஒரு நீண்ட பயணம்

கூட்டுறவு என்றாலே மக்களின் பங்கேற்பை உத்தரவாதம் செய்து இயங்கும் அமைப்பு என்று பொருள்படும். பிறரோடு எந்த அளவிற்கு ஒருவன் ஒத்துழைக்கிறானோ அந்த அளவிற்கே அவனது நலன் பாதுகாக்கப்படுகிறது என்ற உண்மையை கூட்டுறவு அமைப்புகள் உணர்த்துகின்றன.

“சுயநலத்தைதேடு, பொது நலனை கடவுள் பார்த்துக் கொள்வார்” “தகுதி உள்ளது வாழ, மற்றது அழியும்” என்பன போன்ற வாழ்வியல் போதனைகள், கலாசாரங்கள் மனிதனை மனிதன் அழிக்கும் நிலைக்கு தள்ளி கற்பனைக்கெட்டாத சிரமங்களை கொண்டு வந்துவிட்டன. இந்த கசப்பான உலக அனுபவங்களே கூட்டுறவு அமைப்புகள் தோன்ற முதற் காரணமாகும். அது மட்டுமல்ல வரலாற்றிலே கேட்பதற்கு இனிமையாக இருக்கிற சுதந்திர சந்தை, சந்தையில் போட்டி என்பவைகள் மனிதனுக்கு எதிராக மனிதனை நிறுத்தின, இரண்டு உலக யுத்தங்களை கொண்டு வந்தன. சந்தை மனிதனுக்கு எதிராக மனிதனை நிறுத்துவது இன்றும் தொடர்கின்றன. இவைகளை தவிர்க்க மக்கள் கண்ட அமைப்பே கூட்டுறவு ஆகும். இனக்குழுவாக வாழ்ந்த காலத்திய  தற்காப்பு மனோபாவங்களிலிருந்து விடுபட்டு,  சோசலிச சமூக உறவே ஆக்க பூர்வமானது என்ற கட்டத்தை நெருங்கும் இவ்வேளையில் முன்னைவிட   கூட்டுறவு அமைப்பு களின் தேவை 4 காரணங்களால் முக்கியமாகிவிட்டன.

  1. உலகமயமாகிவிட்ட நவீன சந்தையில் விலைகளின் நிச்சயமற்ற போக்கால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாப்பு பெற மக்களின் சேமிப்பு நிதி மூலதன வடிவில் தறிகெட்டலைவதை தடுத்து  ஆக்கத்திற்கு திருப்ப.
  2. பொருள் உற்பத்தி, பரிவர்த்தனை, விநியோகம், நுகர்வு ஆகிய நான்கிலும் மக்களின் நலனை முதன்மைப்படுத்த.
  3. விவசாயிகளுக்கும், சுயவேலை செய்து பிழைப்போருக்கும் குறைந்த வட்டியில் முதலீட்டு முன்பணம் கிடைக்க, வாழ்விற்கேற்ற வருவாயை உத்தரவாதம் செய்யும் வருமானம் கிடைக்க.
  4. அரசாங்க அமைப்பினுள்  ஜனநாயக முறைகள் பரவ, அதாவது மக்களுக்காக மக்களின் ஆட்சி என்பதை நடை முறையில் அனுபவிக்க, தேர்தல் மூலம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியவர்கள் ஆட்டம் போடுவதைத் தடுக்க.

கனவும் நனவும்

ஆனால் இந்த நோக்கங்கள் வெவ்வேறு வார்த்தைகளில் இனிமையாக சொல்லப்பட்டாலும் நமது அனுபவங்கள் வேறு, கூட்டுறவு அமைப்புகளை  தீபிடித்த வீட்டில் பிடுங்கியது ஆதாயம் என்ற பார்வையோடு நடத்தப்படுவதை காண்கிறோம். அந்த அமைப்புகளை சட்டத்தாலும், அரசாங்க உத்திரவாலும் அதிகார மையங்களில் ஒன்றாக ஆக்கப்பட்டதால் கூட்டுறவு என்ற சொல் கேலிகூத்தாகி விடுகிறது, அந்த அமைப்பு ஊழலின் ஊற்றுக் கண்ணாகிவிடுகிறது, கூட்டுறவு அமைப்புகளில் திரண்டு கிடக்கும் மக்களின் சேமிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய்கள் அதிகாரிகள், அமைச்சர்கள், ஆளும் கட்சியின் புள்ளிகள் கைகளுக்கு போவதால் ஆட்சியில் ஒட்டிக் கொள்ளும் பசையாக மாறி விடுகிறது. உறுப்பினர்களும் அவர்கள் தயவில் இருக்க தள்ளப்படுகிறார்கள். மொத்தத்தில் கூட்டுறவு  ஒரு வேட்டைக் காடாக ஆகிவிடுகிறது. இதனால் உறுப்பினர்களின் நலன் பறி போகிறது. பல ஆயிரம் கோடிகள் பணம் திசை மாறி புரளுவதால் காலப்போக்கில் நாட்டுப் பொருளாதாரத்தில் பல பாதிப்புகளை கொண்டு வருகிறது. ரூபாயின் மதிப்பை சீரழிக்கும் காரணங்களில் இதுவும் ஒன்றாகி விடுகிறது. ஏன்? நல்லெண்ணத்தோடு உருவான ஒரு அமைப்பு இப்படி ஆனது? பொருளாதாரத்தின் பொது நலனை கவனியாமல் கூட்டுறவு அமைப்பு தடுமாறிப் போனதேன்? இந்த அவலத்தை மாற்ற முடியுமா? கேள்விகள் எளிது, பதில்கள் அவ்வளவு எளிதல்ல. முதலில் கேள்விகளை தேடுவோம், நிறைவாக பதில்களை ஆழ் கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல் முயற்சிப்போம்.

பின் நோக்கி பார்த்தால்

கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் நாட்டு கூட்டுறவு அமைப்பு எவ்வாறு செயல்பட்டு வந்திருக்கிறது என்பதை மேலோட்டமாக பார்த்தாலே ஏராளமான கேள்விகள் மனதில் எழும். எந்த கட்சி அல்லது கூட்டணி ஆட்சியிலிருந்தது இன்று இருக்கிறது என்று பாராமல் எத்தகைய அரசியல் கலாசாரம், கொள்கை அல்லது சட்டம் தமிழக கூட்டுறவு அமைப்புகளை பாழ்படுத்தி வருகிறது என்பதை  பரிசீலிப்பதே நமது நோக்கம். நேற்று-இன்று என்று வரலாற்றுப்படி பார்க்காமல் இன்று இப்படி ஆனதற்கு நேற்று என்ன நடந்தது என்று இங்கே பின் நோக்கி பார்க்கப்படுகிறது.

ஏன் உயர் நீதிமன்றம் அவசரச்சட்டத்தை ஏற்றது?

சென்ற வருடம் (2012) அக்டோபர் மாதம் சென்னை உயர்நீதி மன்றம் கூட்டுறவு சங்க உறுப் பினர் சேர்க்க அரசு பிறப்பித்த அவசரச் சட்டம் செல்லுபடியாகாது என்று அறிவிக்க 50 அமைப்புகள் தொடுத்த மனுக்களை நிராகரித்து விட்டது. கூட்டுறவு அமைப்புகளின் நிர்வாகம் அதிகாரிகள் கையில் இருந்ததால் புதிய உறுப்பினர் சேர்ப்பை முந்தைய தீர்ப்பு ஒன்று தடை செய்திருந்தது. இந்த தடையை நீக்கவே அரசியல் நிர்ணயசட்ட 97-வது திருத்தப்படி அவசர சட்டம் போட்டதாக அரசு கூறியது., தடையை போட்ட முந்தைய தீர்ப்பில் புதிய உறுப்பினரை சேர்க்கும் உரிமை பொதுக்குழுவிற்கோ அல்லது அதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக்குழுவிற்கோ உண்டே தவிர அதிகாரிகளுக்கில்லை என்ற விளக்கமும் இருந்தது. ஆனால் அந்த தீர்ப்பு முறையாக தேர்தல் நடத்துக என்று அன்றைய அரசிற்கு சொல்லவில்லை.

அவசர சட்டத்தை எதிர்த்த மனுக்களில் இந்த அவசரச் சட்டம் தேவையில்லை   ஏற்கனவே இருக்கிற உறுப்பினர்கள் நிர்வாகக் குழுவை தேர்ந்தெடுக்க தேர்தலை அறிவிக்கட்டும். இந்த அவசர சட்டம் ஆளும் கட்சியினர் கூட்டுறவு அமைப்புகளை கைப்பற்றும் நோக்கம் கொண்டது என்று வாதாடின. அரசு தேர்தல் நடத்தப் போவதாக கொடுத்த வாக்குறுதியை ஏற்று மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ஏன் நீதிமன்றம் 2008-ம் ஆண்டு ஒரு அவசர சட்டத்தின் மூலம் தமிழக அரசு பிறப்பித்த மறுசீரமைப்பை காட்டி தேர்தலை நடத்துக அந்த குழு புதிய உறுப்பினரை சேர்க்கட்டும் என்று கூறாமல் புதிய உறுப்பினர் சேர்த்த பிறகு தேர்தல் நடத்தினால் போதும் என்று கூறியதேன்? அது என்ன 2008 அவசர சட்டம்? அதன்படி தேர்தல் அன்றே ஏன் நடக்கவில்லை?

பத்திரிகை தந்த தகவல்கள்

உறுப்பினர் சேர்ப்பு அவசரச் சட்டத்தை செல்லுபடியாகும் என்ற தீர்ப்பு வெளிவந்தவுடன் இந்தியன் கோஆப்பரேட்டிவ் என்ற இணையதளம்  கடைசியாக தேர்தல் வந்தது என்ற தலைப்பில் ஒரு செய்திச் சுருளில் கூட்டுறவு இயக்கத்திற்கு  மிகவும் மோசமான உதாரணமாக இருக்கும் தமிழகத்தில் உயர்நீதி மன்ற நிர்பந்தத்தால் தேர்தல் வரப்போகிறது. கடந்த 30 ஆண்டுகளாக நடக்காத அதிசயமிது என்று எழுதியது. மார்ச் 5,2013 தேதியிட்ட இந்து பத்திரிகை ஏப்ரலில் தேர்தல் நடத்த அரசு அறிவிப்பை வெளியிட்ட செய்தியோடு. கீழ்கண்ட தகவலையும் நினைவூட்டியது.

கடைசியாக 2007-ல் கூட்டுறவு அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது சட்டம் ஒழுங்கு சீர் குலைந்ததாக கூறி நிர்வாகக் குழுவை அரசு கலைத்துவிட்டது. அதற்கு முன்னால் 1996-ல் தேர்தல் நடந்தது 2001-ல் அது கலைக்கப்பட்டு நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர் என்று பழசை நினைவூட்டியது. கேள்வி என்னவெனில் 30 ஆண்டுகளில் ஒரு முறைதான் தேர்தல் மூலம் உருவான நிர்வாகக் குழு  5 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. 25 ஆண்டுகள் அதிகாரிகளே நிர்வாகம் செய்யட்டும் என்று அரசு விட்ட தேன்? 2007ல் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட கலைக்கப்பட்டபிறகு  கூட்டுறவு சங்க தேர்தலை மீண்டும் தகுந்த பாதுகாப்போடு ஏன் அன்றைய அரசு நடத்த முன்வரவில்லை?

இன்றைய தமிழக அரசிற்கும் தேர்தல் நடத்துவதில் அக்கறையில்லை என்பது உண்மையே. 2012-13 கூட்டுறவு அமைச்சர் சட்டமன்றத்தில் சமர்ப்பித்த கொள்கை அறிக்கையில் தேர்தலைப் பற்றிய எந்த விவரமும் இல்லை. பல தகவல்களோடு கூட்டுறவு வங்கிகளில் 21 ஆயிரம் கோடி ரூபாய். மக்களின் டெபாசிட் மற்றும் அவைகளின் சொத்துக்கள் பற்றிய  தகவல்கள் இருந்தன. கூட்டுறவு இயக்கத்தை புகழ்ந்து கூறிய ஐ.நா சபையின் பொதுச் செயலாளரின் மேற்கோள்  இருந்தது. ஆனால் அறிக்கையில் தேர்தல் பற்றி எதுவுமில்லை, கடந்த 30 ஆண்டு நிகழ்வுகளை கணக்கில் கொண்டால் இந்த அக்கறையின்மை இன்றைய ஆட்சியாளர்களின் ஏகபோகமல்ல!  கூட்டுறவு அமைப்புகளை அதிகாரிகள் மூலம் நிர்வகிக்கிற பொழுதுதான் ஒட்டு மொத்த கூட்டுறவு சங்கங்களின் பிடி ஆளும் கட்சியிடம் இருக்கும் என்ற கருத்திற்கு ஆளுவோர்கள் யாராக இருந்தாலும் அடிமையாகிவிடுகிறார்கள், ஏன் ஜனநாயகத்தைக் கண்டு ஆளுவோர் பயப்பட வேண்டும்?

நிர்பந்தம் வந்தால்  அரசு தேர்தலைப் பற்றி யோசிக்கிறது என்றும் சொல்ல முடியாது. எந்த திசையிலிருந்து நிர்பந்தம் வருகிறது என்பதை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. நீதிமன்ற தீர்ப்போ அல்லது 356 அரசியல் சட்ட பிரிவை வைத்திருக்கும் மத்திய அரசோ நிர்பந்தித்தால் மட்டுமே தேர்தல் வருகிறது.  அதன் வழியில் தேர்தலை நடத்தவும் செய்கிறது. மற்றப்படி தொழிற்சங்கமோ, விவசாய சங்கமோ, இடதுசாரி கட்சிகளோ, கூட்டுறவு சங்க உறுப்பினர்களோ குரல் எழுப்பினாலோ, இயக்கம் நடத்தினாலோ அவைகள் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகக் கருதப்பட்டு காவல்துறை தலையிடுகிறது.

ஏன் இந்த நிலை?

இன்று நடந்த தேல்தல்களில் ஆளும் கட்சி செய்த தில்லு முல்லுகள் எதுவும் மக்களுக்கு புதிதல்ல. கடந்த காலத்திலும் அபூர்வமாக நடந்த இரண்டு தேர்தல்களும் இதே பாணியில்தான் நடந்தன. கேள்வி என்னவெனில்  எதிர்கட்சியாக இருக்கிற பொழுது அரசை கண்டித்தவர்கள் ஆளும் கட்சியானவுடன் அதே தவறை செய்ய வெட்கப்படவில்லையே ? ஏன்?   2008ல் அப்போது இருந்த அரசு ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்தது. கூட்டுறவு அமைப்பை சீரமைப்பு செய்யும் நோக்கம் கொண்டது என அறிவித்தது. இந்த அவசரச் சட்டம் பிறப்பித்த காலத்தில் கூட்டுறவு சங்கங்கள் நிர்வாகக் குழுக்கள் கலைக்கப்பட்டு அதிகாரிகளே நிர்வகித்தனர் என்பதை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். இந்த அவசரச் சட்டம் கூட்டுறவு சங்க பொதுக்குழுவிற்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுவிற்கும் அதிகார வரம்பை விரிவுபடுத்தியது. எப்பொழுது நிர்வாகம் குழுவை கலைக்கலாம் என்பதற்கு விதிகளை உருவாக்கியது. இந்த அவசரச் சட்டப்படி துவக்க நிலை கூட்டுறவு வங்கியை தொடர்ந்து மூனறு ஆண்டுகள் நஷ்டம் இருந்தால்,  பெருமளவு பணம் கையாடல் செய்யப்பட்டிருந்தால், பொதுக்குழு கூட்டம் மூன்று முறை கூட்ட முயற்சித்தும் கோரம் இல்லாமல் போனால் ஒழிய கலைத்து அதிகாரிகளை நிர்வாகிகளாக ஆக்க முடியாது. நிதிநிர்வாகம், ஊழியர் நியமனம், சம்பளம் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலுக்கு உட்பட வேண்டும்.  நிதிகளை ரிசர்வ் வங்கி வகுத்த விதிப்படியே செலவு செய்யும் கட்டுப்பாடுகளையும் விதித்தது. அந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் அதிகாரிகள், அமைச்சர்கள் விதிகளுக்கு விரோதமாக தலையிட முடியாது. உத்திரவு போட முடியாது. வேடிக்கை என்னவெனில் அவசரச் சட்டம் போட்ட  அன்றைய அரசு அதன்படி தேர்தல் நடத்த முன்வரவில்லை ஏன்? தேர்தல் நடந்தால் தங்களது பிடி பறிபோய்விடும் என்று அன்றைய ஆளும் கட்சி பயந்ததா? அல்லது  தேர்தல் மூலம் வரும் நிர்வாகக் குழுவை முன்பு போல் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று கலைக்க முடி யாது என்ற நிலை அவர்களை பயமுறுத்தியதா?

பின் ஏன் அந்த சட்டத்தை மாநில அரசு அழகு பார்க்கவா கொண்டு வந்தது? இல்லை! இதற்கும் கொஞ்சம் பின் நோக்கி போக வேண்டியிருக்கிறது.  ஊழலாலும், நிர்வாகக் கோளாறாலும்  அரசின் கடன் ரத்து அறிவிப்பாலும், கிராமப்புற கூட்டுறவு வங்கிகளின் நிலைமை மோசமானது. 4400  முதல் நிலை வங்கிகளில் 1100 வங்கிகள் செயலிழந்தன.  2006ம் ஆண்டில் ரூ.6800/- கோடி விவசாயிகளின் கடன் ரத்து செய்த அரசு கூட்டுறவு வங்கிகளுக்கு ஈடுகட்ட பணம் ஒதுக்கவில்லை. கூட்டுறவு வங்கிகள் கடன் கொடுத்த பணம் என்பது அதன் சேமிப்பும், மக்கள் சேமிப்பு கணக்கில் போட்ட  டெபாசிட்டாகும். வங்கிகள் வறண்டு போனதால் டெபாசிட்தாரர்களுக்கு வட்டியும் கொடுக்க இயலவில்லை, அசலையும் கொடுக்க இயலவில்லை. அரசு கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்தது போல்  கூட்டுறவு வங்கியை நம்பிய டெபாசிட்தாரர்களின் பணத்தை எடுத்து, விவசாய கடனை ரத்து செய்துவிட்டது. கூச்சல் கிளம்பவே வெறும் 100 கோடி ஒதுக்கிவிட்டு கை கழுவிவிட்டது. (ஆதாரம் ஃபைனான்சியல் எக்ஸ் பிரஸ் ஜூலை 3, 2006)

மேலும் விவசாயக்கடன்  வழங்குவதை விட அமைச்சர்கள், அதிகாரிகள் நிதியை வேறு வகைக்கு பயன்படுத்தியதால், விவசாயிகள் கந்து வட்டிக்காரர்களின் தயவில் வாழத் தள்ளப்பட்டனர். விவசாய சங்கங்கள் ஆங்காங்கு கூட்டுறவு வங்கிகளை பாதுகாக்க பலவிதமான கோரிக்கைகள் வைத்து குரல் எழுப்பினர். தொழிற்சங்கங்கள் குரல் எழுப்பின. தேர்தல் நடத்தவும், நிதியை விரயம் செய்வதை தடுக்கவும் கோரின.  பத்திரிகைகளுக்கோ டி.விகளுக்கோ இந்த நெருக்கடி பரபரப்பான செய்தியாகப்படாமல் போயிருக்கலாம். ஆனால் கிராமப்புற வாக்கு வங்கி சரிவதை ஆளுவோர் உணராமலா இருந்திருப்பர்! மத்திய அரசையும், ரிசர்வ் வங்கியையும் நபார்டு என்ற வங்கியையும் நாடாமலா இருந்திருப்பர். அவைகள் 2004-ல் நியமித்த வைத்தியநாதன் குழுவின் சிபாரிசுகளை ஏற்றால் தான், ரிசர்வ் வஙகியும், நபார்டும் நிதி கொடுக்க முடியும் என்ற நிலை எடுத்திருக்கும்.

இந்து பத்திரிகை (அக்டோபர் 24, 2008) செய்தி அன்று என்ன நடந்தது என்பதை நமக்கு தெரிவிக்கிறது. கிராமப்புறத்தில் குறுங்கால கடன் வழங்க வைத்தியநாதன் குழுவின் சிபாரிசுகளை அமலாக்கும் இலக்குடன் கூட்டுறவு அமைப்புகளை மறுசீரமைப்பு செய்ய  தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. இந்த வருடம் ஜனவரியில்  மாநில அரசு மத்திய அரசோடும், நபார்டு வங்கியோடும் வைத்தியநாதன் குழுவின் சிபாரிசை ஏற்று கூட்டுறவு சங்க சட்டங்களை திருத்த ஒப்பந்தம் போட்டதின் விளைவாக இந்த அவசரச் சட்டம் போடப்பட்டுள்ளது.  ஊழலாலும், நிர்வாகக் கோளாறினாலும் சிதிலமடைந்து கிடக்கும் கூட்டுறவு வங்கிகளை இயக்கவில்லையானால் அரசிற்கு எதிராக இயக்கம் வலுக்கும் என்ற பயமே 2008ல் அன்றைய அரசு அவசரச் சட்டம் போட்டது. ஆனால் தேர்தல் நடத்தி கூட்டுறவு நிர்வாகத்தை தேர்ந்தெடுத்த குழுவிடம் ஒப்படைக்க முன்வரவில்லை ஏன்? ஒரு வேளை மத்திய அரசு மிரட்டியிருந்தால் தேர்தல் நடந்திருக்குமோ? வைத்தியநாதன் குழு சிபாரிசை ஏற்றால்தான் நிதி தரப்படும் என்று உறுதிகாட்டிய மத்திய அரசு ஏன் தேர்தலை வற்புறுத்தவில்லை?  இந்த அவசரச் சட்டம் கிராமப்புற கூட்டுறவு அமைப்புகளை மாநில அரசின் கிடுக்கிப்பிடியிலிருந்து விடுபட உதவலாம். ஆனால்  மத்திய அரசின்  ஆலிங்கனத்தால் யார் பயனடைவர்? என்பதை இப்பொழுது சொல்ல முடியாது.

அடுத்த கேள்வி கிராமப்புற கூட்டுறவு வங்கிகள் சுயேச்சையாக இயங்க இன்று இயலாவிட்டாலும் நாளை இயங்க சட்டம் உள்ளது. மற்ற கூட்டுறவு அமைப்புகளின் கதி என்ன? சான்றாக தமிழ் நாட்டில் கரும்பு விவசாயிகளின் வருமானத்தை பாதுகாக்கும் இலக்கோடு உருவான கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் ஒன்று கூட உருப்பட்டதாக கூறமுடியாது. மகாராஷ்ட்ராவில் நிலத்திமிங்கலங்களின் அரசியல் கருவியாக உள்ளன. அங்கு விவசாயத்தில் நேரடியாக ஈடுபடுவோருக்கு வறுமையும், அரசியல் தர்மவான்களின்  தயவில் நாளையாவது விடியுமா? என்ற ஏக்கத்தையும் கொடுத்து வருகிறது. விடுதலை பெற்ற துவக்க காலத்தில் இவ்வளவு ஊழல் பேர்வழிகள் புகுந்து  பல அரசியல் கட்சிகளை ஆட்டிப்படைக்காத காலத்தில் ஏன்? சில வருடங்களுக்கு முன்புவரை நுகர்வோர் கூட்டுறவு அமைப்புகள் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த உதவின. சென்னை நகரில் காமதேனு போன்ற கடைகள் வால்மார்ட் கடைகள் வந்தால் கூட விரட்டி அடிக்கும் ஆற்றலோடு இருந்ததை அறிவோம்.  விலைகளை கட்டுப்படுத்த நுகர்வோர்க்கும் அரசு மான்யம் கொடுக்க வேண்டிய அவசியமில்லாத நிலை இருந்தது. இன்று கூட்டுறவு என்றாலே ஊழல், கொலைவெறி என்றாகி விட்டது.

கூட்டுறவு சட்டம்: ஒரு வரலாறு

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னரே  இந்தியாவில் நிலவும் பழைய பாணி பொருள் உற்பத்தி முறையிலிருந்து முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு நகர்த்த வேண்டிய அவசியத்தை பிரிட்டிஷ் அரசு உணர்ந்தது. முதலாளித்துவ பொருளாதாரம் என்றால் கடன் அமைப்பு முறையில் பொருள் உற்பத்தியை இயக்குவது ஆகும். விவசாயமே அன்று முக்கிய தொழிலாக இருந்ததாலும், விவசாயிகளிடம் பண வடிவில் வரி வசூலை எளிமையாக்கவும், கந்து வட்டியால் விவசாயிகளின் கோபம் அரசின் மீது திரும்பாமலும் இருக்க  அரசு கூட்டுறவு முறையை புகுத்தியது. அதாவது அரசு கூட்டுறவு வங்கிக்கு வடன் கொடுக்கும், கூட்டுறவு வங்கி விவசாயிகளுக்கு கடன் கொடுக்கும். இதன் தொடர்ச்சியாக 1904ல் கூட்டுறவு சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம் கடன் சங்கங்களை மட்டுமே அனுமதித்து, 1912-ல் கடன் சார்பற்ற சங்கங்களையும் உள்ளடக்கிய சட்டம் இயற்றப்பட்டது. 1919-ல் மாண்டேகு சேம் போர்டு அரசியல் சாசன சீர்திருத்தங்களின் கீழ் மாநில பட்டியலுக்கு கூட்டுறவுகள் மாற்றப்பட்டது.

தமிழகத்தில் 1932-ல் சென்னை கூட்டுறவு சட்டம் இயற்றப்பட்டது. நாடு விடுதலைப் பெற்ற பின் 1951-ஆம் ஆண்டு விவசாயத்திற்காக நிதி உதவி அதிகரிப்பது தொடர்பாக ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின் படி எ.டி.கோர்வாலா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு 1954-ல் அறிக்கை தாக்கல் செய்தது. குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 1961-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டம் இயற்றப்பட்டது. தொடர்ந்து கூட்டுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்ட திரு.சந்தானம் குழு சிபாரிசுகள், கூட்டுறவு சட்டம் தொடர்பான மத்திய அரசாங்கத்தின் வழிகாட்டுதல், இதர மாநில சட்டங்களில் அடங்கியுள்ள  அம்சங்களை ஒருங்கிணைத்து  தற்போதுள்ள 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டமும், 1988-ஆம் ஆண்டு கூட்டுறவு சட்ட விதிகளும் உருவாக்கப்பட்டு 13.4.1988 முதல் நடைமுறையில் உள்ளது. இச்சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்ய ஆட்சியாளர்கள் அவசரச் சட்டம் கொண்டு வருவதும், பின்னர் சட்டமன்றத்தில் சட்டமாக்குவதும் தொடர் நடைமுறையில் உள்ளது.

கூட்டுறவில் ஜனநாயகம்

ஜனநாயக முறையில் நிர்வாகம் என்பது முக்கிய கூட்டுறவு தத்துவமாகும். அங்கத்தினர்களால் அவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட கூட்டுறவு நிறுவனம், உறுப்பினர்களாலேயே ஜனநாயக கோட்பட்டின் படி நிர்வகிக்கப்பட வேண்டும்.  ஒவ்வொரு கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகமும் சட்டம், விதிகள் மற்றும் சங்க துணை விதிகளின் படி தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுவிடம் இருக்கும்.  இந்த குழு சட்டம், விதிகள் மற்றும் துணைவிதிகளின் படி அளிக்கப்படும் அதிகாரங்களையும், கடமைகளையும் செயல்படுத்தும் என தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவு 33-ல் வரையறுத்துச் சொல்லப்பட்டுள்ளது.

கூட்டுறவு நிறுவனங்களை நிர்வகிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுக்களை கலைத்துவிட்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 89(1)ஐ பயன்படுத்தி தனி அலுவலர்களை நியமிப்பதும் தொடர்ந்து தனி அலுவலர்களது பதவிக் காலத்தை ஆறு மாதத்திற்கு ஒரு முறை நீட்டிப்புச் செய்வதும் வழக்கமானதால் கூட்டுறவு தேர்தல் தொடர்பான பார்வை ஒரு தலை முறைக்கு தெரியாமலே உள்ளதை உணர முடிகிறது.

அரசியல் சாசன சட்டதிருத்தம்

இந்திய அளவில் கூட்டுறவு அமைப்புகள் விரிவடைந்து பல லட்சம் கோடிகள் புரளும் களமாகிவிட்டது. பணப்புழக்கத்தை நிர்வகிக்கும் ரிசர்வ் வங்கிக்கு ரூபாயின் மதிப்பை நிலை நிறுத்த எடுக்கிற முயற்சிகளுக்கு இந்த லட்சக்கணக்கான கோடிகளும் உட்படுத்த வேண்டியிருக்கிறது. ஊழலாலும், நிர்வாகக் கோளாறுகளாலும், கூட்டுறவு வங்கிகளில் திரண்டு கிடக்கும் பணம் விவசாயிகளுக்கு பயன்படாமல், வேறு இடங்களுக்கும், ஊக வாணிபத்திற்கும் போவதால், கிராமப்புற வாழ்வு நரகமாகி விவசாயமே அழியும் நிலை வேகப்பட்டு வருகிறது இதனை உணர்ந்த மத்திய அரசு கூட்டுறவு அமைப்புகளை ரிசர்வ் வங்கியின் ஆளுகைக்கு உட்படுத்தவும், கூட்டுறவு அமைப்புகள் தன்னாட்சி பெறவும், அரசியலமைப்பு சட்டத்தில் 97-வது திருத்தம் 2009-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு 2011-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது

அரசியலமைப்பு சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டு, அரசிதழில் வெளியிட்ட பிறகு கூட்டுறவு தேர்தல் நடத்தாத அனைத்து மாநிலங்களிலும் நடத்த வேண்டிய கட்டாயம் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ளது. பணப்புழக்கத்தை நிர்வகிக்கும் நோக்கமே மத்திய அரசு கொண்டு வந்த திருத்தத்தின் நோக்கமாகும், கூட்டுறவு சங்கங்களுக்கு மாநில அரசின் ஊழல் பிடியிலிருந்து விடுதலை என்றாலும் மத்திய அரசின் ஊழல் பிடியில் மாட்டிக் கொள்ளும் அபாயமுண்டு. மத்தியிலும், மாநிலத்திலும் ஜனநாயகத்தை நேசிக்கிற வெனிசுலா சாவேஸ் அல்லது திரிபுரா முதலமைச்சர்கள் பாணியில் உள்ள மக்களை நேசிக்கும் அரசியல் தலைவர்கள் அமராமல் கிராமப்புற ஏழைகளுக்கு விமோசனம் இல்லை.

கேள்விகளுக்கு பதிலைத் தேடுவோம்

ஏன் நல்லெண்ணத்தோடு உருவான ஒரு அமைப்பு இப்படி ஆனது? கடந்த 30 ஆண்டு அனுபவம் நமக்கென்ன போதிக்கிறது?

தமிழக அரசியல் கலாசாரத்தில் மாற்றங்கள் தேவை என்பதையே அனுபவங்கள் உணர்த்துகின்றன, இதையே நிபுணர்களும், பாமர மக்களும் கருதுகின்றனர். இங்கே பல அரசியல்கட்சிகள் உள்ளன, இடதுசாரி கட்சிகளைத் தவிர மற்ற இயக்ககங்கள் ஜனநாயகம் பற்றி என்ன கருதுகிறார்கள் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. இடதுசாரி கட்சிகள் தங்கள் திட்டங்களிலே ஜனநாயகம் பற்றி எழுதி வைத்திருக்கிறார்கள். அந்த கருத்தை ஏற்காதவர்கள் அதனை விமர்சிக்க முடியும். எழுதி வைத்திருப்பதற்கு விரோதமாக நடந்தால் அவர்களை விமர்சிக்க முடியும், அம்பலப்படுத்த முடியும். ஆனால் மற்ற தமிழக அரசியல் கட்சிகள் இதில் தெளிவாக இல்லை.

சில நிபுணர்கள் சித்தாந்த பிடிப்பில்லாத அரசியலே இந்த கட்சிகளை வழி நடத்துவதாக கூறுகின்றனர். வேறு சில நிபுணர்கள் அப்படி சொல்ல முடியாது. மானுடம் இனக் குழுவாக வாழ்ந்த காலத்தில் இருந்த தற்காப்பு உணர்வே பெரும்பாலான அரசியல் கட்சிகளுக்கு தத்துவ அடிப்படையாக இன்று இருக்கிறது. மானுடம் இனக்குழுவாக வாழ்ந்த காலத்தில் ஜனநாயக உணர்வு பிறக்காத காலம். உயிர்வாழ பிற இனக்குழுவோடு போராட வேண்டியிருந்த காலம். எனவே அந்தப் பார்வையோடு இருக்கிற கட்சிகளுக்கு ஜனநாயக உணர்வு அநேகமாக இருக்காது.  இந்த இனக்குழு பார்வைதான் ஆட்சியில் அமர்ந்தவுடன் அதிகாரத்தை இஷ்டம் போல் பிரயோகிக்கும் உரிமை வந்துவிட்டதாக கருத வைக்கிறது. அதன் விளைவாக உள்ளாட்சி அமைப்புகளும், கூட்டுறவு அமைப்புகளும் எந்த அதிகாரமுமின்றி செயல்பட வைக்கின்றனர் தங்கள் தயவில்லாமல் அணைகளின் மடை கூட திறக்காது என்ற தோற்றத்தை உருவாக்குகின்றனர் என்கின்றனர். இந்த கட்சிகள் ஒரு வகையில் சர்வாதிகார நிர்வாக முறையே, சிறந்த நிர்வாகம் எனக் கருதுகின்றனர் என்பதை நம்மாலும் ஊகிக்க முடியும். இதை எப்படி மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்? என வினவலாம். எந்த சர்வாதிகாரியும் அடக்குமுறையை மட்டும் நம்பி நிற்பதில்லை. ஆங்கிலத்தில் காரட்  அன்ட் ஸ்டிக் பாலிசி என்பர்.  அடக்கு முறையும், சலுகைகளும் வைத்தே ஆட்சி செய்வர்.

உலகத்திலேயே மோசமான சர்வாதிகாரி ஹிட்லர், அவனது சித்தாந்தம் இன உணர்வை அடிப்படையாகக் கொண்டிருந்தது, அவனது அரசாங்க நிர்வாகம் கேரட்டும், ஸ்டிக்கும் கொண்டதாகும். இரண்டாம் உலக யுத்த முடிவில்  யுத்தத்தை தூண்டிய குற்றத்திற்காக நாசி கட்சியின் 22 அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு ஜெர்மன் நாட்டு நுரேம்பர்க் நகரில் சோவியத் யூனியன், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய 4 நாட்டு நீதிபதிகள் அமர்ந்து விசாரனை நடத்தப்பட்டது. அந்த விசாரனைக்கு பிறகுதான் யூதர்களையும், ஆட்சியை எதிர்ப்பவர்களையும் பெரும் திரளாக  முகாம்களில் கொல்ல விஷவாயு அறைகள் இருந்தன என்பதும், ஜெர்மன் மக்களுக்கே தெரிய வந்தது. அதுவரை ஜெர்மன் மக்கள் ஹிட்லரை ஈவிரக்கம் கொண்ட சர்வாதிகாரியாகவே கருதினர்.  ஹிட்லரை மக்கள் நேசித்தனர், ஆனால் ஹிட்லரோ மக்களை நேசிக்கவில்லை  என்பதை வெகுநாள் கழித்தே மக்கள் உணர்ந்தனர். சுருக்கமாகச் சொன்னால் இன உணர்வை அடிப்படையாகக் கொண்ட சித்தாந்தப் பார்வை ஜனநாயகத்தை ஏற்காது. மக்களை நேசிக்கவும் செய்யாது. மதிக்கவும் செய்யாது. மக்களை நம்பவும் செய்யாது. அடக்குமுறை, சலுகைகள் மூலம் ஆளவே முயற்சிக்கும். எதிர்ப்போரை துவம்சம் செய்யும். இன்னொரு சர்வாதிகாரியை கண்டு பயப்படும், சண்டை போடும் அல்லது முசோலினி, ஹிட்லர் காலில் விழுந்தது போல் பணிந்து போகும்.

தென்அமெரிக்காவில் மக்கள் பல நாடுகளில் சர்வாதிகாரிகளின் கேரட் அன்ட் ஸ்டிக் பாலிசியை வெகு காலம் நம்பி மோசம் போயினர். சாவேஸ் என்ற ராணுவ அதிகாரி அதை மாற்றி அமைத்தார். மக்கள் விரும்பினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியைக் கூட திரும்ப அழைக்கலாம் என்று ஜனாதிபதியாக பதவி ஏற்றவுடன் வெனிசுலா நாட்டு சட்டத்தை திருத்தினார். மக்களால் உருவாக்கப்படும் அரசே நிலைக்கும். மக்களின் நம்பிக்கையை இழந்தவர் ஆட்சி செய்யும் உரிமையை இழந்துவிடுகிறார்  என்பது சாவேஸ் அரசியலாக இருந்தது. அந்த திருத்த அடிப்படையில் திருப்பி அழைக்க வாக்கெடுப்பு நடத்த எதிர்க்கட்சிகள் வற்புறுத்தின, அமெரிக்க அரசு உதவியுடன் சாவேசிற்கு எதிராக அவதூறுகளை விதைத்தனர். வாக்கெடுப்பை சந்தித்த சாவேஸ் முன்னைவிட அதிக வாக்குகள் பெற்றார்.

லெனின், சேகுவேரா, காஸ்ட்ரோ முதலியோர் மக்களை நம்பியது போல் போல்   நானும் மக்களை நேசிக்கிறேன், மதிக்கிறேன் அவர்கள் வீட்டிற்கு போ என்றால் அதனை ஏற்பேன். இதுதான் ஜனநாயக உணர்வு.

தமிழ்நாட்டு அரசியலில் ஜனநாயக கலாசாரம் புகாமல், மாற்றங்கள் சாத்தியமில்லைஅதைப் புகுத்துவது எளிதல்ல. ஜனநாயக உணர்வை  அரசியலில் மேலோங்க வைப்பது ஒவ்வொரு மார்க்சிஸ்ட்டின் கடமையாகும். பதவிகளைப் பற்றிய பார்வையில் மார்க்சிச சித்தாந்தப் பார்வை மிளிர வேண்டும் .அதாவது பதவிக்காகவோ, புகழுக்காகவோ, பட்டயங்களுக்காகவோ நாங்கள் போராடவில்லை. நாங்கள் சரி என்று கருதுகிற கருத்திற்காக போராடுகிறோம் என்ற உணர்வே மேலோங்க வேண்டும்.

மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கட்சி திட்டத்தில் உள்ள மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு மக்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும். பதவிகள் முக்கியமல்ல, கூட்டுறவு அமைப்புகளும், உள்ளாட்சி அமைப்புகளும் அரசு அலுவலகங்களும் மக்களுக்கு சாதகமாக செயல்பட வைப்பது அன்றாட வேலைகளில் ஒன்றாக வேண்டும். மக்களை வேடிக்கை பார்ப்பவர்களாக ஆக்காமல் அவர்களும் பங்கெடுக்க வைக்கும் கிளர்ச்சி பிரச்சார வடிவங்களை காண வேண்டும்.

– ஏ.கிருஷ்ணமூர்த்தி, வே.மீனாட்சி சுந்தரம்