ஜார்ஜ் டிமிட்ரோவும் ஐக்கிய முன்னணியும்

கே.ஜி. பாஸ்கரன்

ரஷ்யாவில் மொங்கோ நகரில் உள்ள லெனின் சமாதி போன்று, பல்கேரியாவில் சமாதி ஒன்று கட்டப்பட்டு டிமிட்ரோவின் பூத உடல் வைக்கப்பட்டு இருந்தது. 1999இல் பல்கேரியா முதலாளித்துவ நாடான பின்னர், சமாதியை இடிப்பதற்கு முடிவு செய்தனர். பல்கேரிய நாட்டின் மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் சமாதி இடிக்கப்படுவதை விரும்பவில்லை. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் டிமிட்ரோவ் நினைவாலயத்தை 4 முறை குண்டு வைத்து தகர்த்தனர். டிமிட்ரோவின் பூத உடலை எரித்தனர். தற்போது அந்த இடத்தில் நினைவாலயம் இருந்ததற்கான எந்த சுவடும் இல்லை.

பல்கேரியாவின் சோஃபியாவில் முன்பிருந்த கம்யூனிச காலத்து சிலைகளை எல்லாம் அகற்றி விட்டார்கள். அவற்றில் சிலவற்றை ஓரிடத்தில் குவித்து வைத்து மியூசியமாக்கி விட்டார்கள். மியூசியத்திற்கு அருகில் சோசலிஸ்ட் ஆர்ட் மியூசியம் என்ற பெயரில் கம்யூனிச எதிர்ப்பு ஓவியங்களை காட்சிக்கு வைத்து இருக்கிறார்கள். அந்த ஓவியங்கள் 1989ஆம் ஆண்டு, பல்கேரியா முதலாளித்துவத்திற்கு திரும்பியதை கொண்டாடுகின்றன.  அந்த வருடத்திற்கு முந்திய வரலாற்றை அழித்துவிட முதலாளித்துவ சக்திகள் விரும்புகிறது.

முதலாளித்துவத்தின் வளர்ச்சியும் முதலாம் அகிலமும்

18ஆம் நூற்றாண்டின் நடுவில் இங்கிலாந்தில் தொழிற்புரட்சி துவங்கியது. 1776இல் அமெரிக்கா, 1789இல் பிரான்ஸ், பிரேசில், அமெரிக்க ஸ்பானிஷ் காலனி நாடுகள், ஜெர்மன், ஆஸ்திரியா, ஹங்கேரி, இத்தாலி என மேற்கு ஐரோப்பியா மற்றும் வட அமெரிக்க நாடுகள் முழுவதும் முதலாளித்துவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன. உலகம் தழுவிய முறையில் முதலாளித்துவ அமைப்பு முறை நிலை பெற்றது. வேகமாக வளர்ந்து வந்த முதலாளித்துவ அமைப்பு மக்கள் மீது அளவற்ற செல்வாக்கு செலுத்தியது. 1844இல் இங்கிலாந்தில் தொழிலாளர் நிலை எனும் நூலில் ஏங்கெல்ஸ் எழுதினார்: “நவீன முதலாளித்துவ சமூகத்தில் ஒவ்வொரு நபரும் பிற நபர்களுடன் போராடாமல் வாழ முடியாது. இதுவே முதலாளித்துவத்தின் பிரதான பண்பு”. 1819இல் இங்கிலாந்தில் தேசிய உரிமைகள் சாசன அமைப்பு உருவாக்கப்பட்டது. இதுவே சாசன இயக்கம் என்ற பெயரால் தோன்றிய தொழிலாளர்களின் முதல் அரசியல் கட்சியாகும். 1847இல் கம்யூனிஸ்ட் லீக் உருவானது. இதுவே சர்வதேச முதல் கம்யூனிஸ்ட் அமைப்பு. இந்த அமைப்புதான், 17 ஆண்டுகளுக்கு பின் 1864இல் நிறுவப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் அகிலத்துக்கு அடிப்படையாக இருந்தது. 1848 பிப்ரவரியில் கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியானது. 1864இல் துவக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் அகிலம் 1876 வரை செயல்பட்டது. முதலாம் அகிலம் சித்தாந்த ரீதியாகவும், ஸ்தாபன ரீதியாகவும் நவீன தொழிலாளர் இயக்கத்திற்கு அடித்தளமிட்டது. மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவரின் அபாரமான பணியின் மூலம் தொழிலாளி வர்க்க தத்துவ இயலை, உலகக் கண்ணோட்டத்தை, விஞ்ஞான சோசலிசத்தை பிரச்சாரம் செய்வதிலும், நடைமுறைக்கு பொருத்துவதிலும் முதல் அகிலம் பிரதானமான வெற்றியை பெற்றது.

முதல் உலகப்போரும் இரண்டாம் அகிலமும்

 1914 முதல் 1917 வரை நடைபெற்ற உலகப்போரை ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான போர் என லெனின் கூறினார். தொழிலாளி வர்க்கம் ஏகாதிபத்திய நலனுக்கு எதிராகவும், புரட்சிக்காகவும் போராட வேண்டுமென கூறினார். ரஷ்யாவில் புரட்சி வெற்றி பெற்றது. ஆனால் பல நாடுகளில் கம்யூனிஸ்ட் இயக்க தலைமை தேசியவாதம் பேசி, ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவாக நின்று, யுத்தத்திற்கு ஆதரவான நடவடிக்கைகளை எடுத்தன. “இரண்டாம் அகிலம் சந்தர்ப்பவாதத்துடன் போராடுவதற்கு தயாராகவில்லை. சந்தர்ப்பவாதத்துடன் சமாதானமாக வாழ்வதற்கு தயாரானது. சந்தர்ப்பவாதத்தை வலுப்படுத்தியது. சந்தர்ப்பவாதத்துடன் சமரசமாக துவங்கிய இரண்டாம் அகிலம் இறுதியில் அதுவே சந்தர்ப்பவாதத்தின் உருவமாக மாறிற்று”. என ஸ்டாலின் கூறினார்.

மூன்றாம் அகிலத்தின் ஆறாவது மாநாடும் உலகச்சூழலும்

1919இல் துவக்கப்பட்ட மூன்றாவது அகிலம் 1943 வரை செயல்பட்டது. மூன்றாம் அகிலம் புரட்சிகர மார்க்சிய சித்தாந்தத்தை தொழிலாளி வர்க்க இயக்கத்தில் நிலைநிறுத்தியது. இந்த காலகட்டத்தில் உலக தொழிலாளர் இயக்கமும், தேசிய இயக்கங்களும் எதிர்கொண்ட பல சித்தாந்த பிரச்சனைகளுக்கு தீர்வினை சுட்டிக்காட்டி லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோர் மார்க்சியத்தை ஆக்கபூர்வமாக வளர்த்தெடுத்தனர். பல்வேறு நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சியடைந்தது. கம்யூனிஸ்ட் இயக்கம் உலக புரட்சிகர சக்தியாக வடிவமெடுத்தது. மூன்றாவது அகிலத்தின் முதல் மாநாடு 1919 மார்ச் மாதம் மாஸ்கோவில் நடைபெற்றது. முதல் மாநாட்டில் தோழர் லெனின், “இந்த மாநாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. முதலாளி வர்க்கம் எவ்வளவு வேண்டுமானாலும் எரிச்சல் அடையட்டும். லட்சக்கணக்கான தொழிலாளர்களை கொலை செய்யட்டும். இறுதி வெற்றி நமதே. உலக புரட்சியின் வெற்றியை தவிர்க்க முடியாது” என பேசினார். மூன்றாவது அகிலத்தின் 6வது மாநாடு 1928இல் மாஸ்கோவில் நடந்தது.

மூன்றாவது அகிலத்தின் 6வது மாநாடு உலக நிலைமைகளை கீழ்கண்டவாறு மதிப்பீடு செய்தது. ”ஏகாதிபத்திய தலையீட்டை தோற்கடித்ததோடு மட்டுமில்லாமல் உள்நாட்டு எதிர்ப்பு சக்திகளையும் தோற்கடித்து சோவியத் யூனியன் வெற்றிகரமாக முன்னேறியது. முதலாளித்துவ அமைப்பு கடுமையான நெருக்கடிக்கு ஆளாயிற்று. தொழிலாளர்கள் நேரடியாக புரட்சிகரப் போராட்டங்களுக்கு முற்பட்டார்கள். முதலாளி வர்க்கம் தொழிலாளி வர்க்கத்தின் மீது கடும் தாக்குதலை துவக்கியது. முதலாளித்துவ வர்க்க தாக்குதல் தீவிரமானதால், தொழிலாளி வர்க்கம் தன்னைத்தானே தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. பொருளாதார மறு கட்டமைப்புக்கு சோவியத் யூனியன் முயன்றது. இதர நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் செல்வாக்கு பரவியது. 1928 கால கட்டத்தில் முதலாளித்துவ உலக தொழில் உற்பத்தி அதிகரித்தது. அதே சமயம், முதலாளித்துவ உலகத்தின் முரண்பாடுகளும் தீவிரமாகியது. மறுபுறம் சோவியத் யூனியன் தொழில்ரீதியாக வளர்ச்சி அடைந்தது.

முதலாளித்துவ உலகத்தில் உற்பத்தி சக்திகள் வளர்ந்தன. மறுபுறம் அவற்றின் சந்தைகளின் பரப்பு குறைந்தது. இந்த நிலைமை ஏகாதிபத்திய நாடுகளிடையே யுத்த சூழலை ஏற்படுத்தியது. தேசிய விடுதலை இயக்கங்களின் மீதும், சோவியத் யூனியன் மீதும் ஏகாதிபத்திய தாக்குதல் நிகழும் அபாயம் அதிகரித்தது. முதலாளித்துவ அமைப்பில் ஏற்பட்டு வந்த தற்காலிக மீட்சி முடிவுக்கு வந்தது. மீண்டும் கடுமையான நெருக்கடி தவிர்க்க முடியாதபடி உருவானது. ஒரு பக்கம் நெருக்கடி. மறுபக்கம் வர்க்கப் போராட்டங்கள்  தீவிரமடைந்தன. சோவியத் யூனியனுக்கு எதிரான யுத்தமாக இது மாறும் என மாநாடு எச்சரித்தது. 1929இல்  முதலாளித்துவத்தைக் கவ்விய நெருக்கடி ஜெர்மனியில் ஹிட்லர் அதிகாரத்திற்கு வருவதற்கு வழி அமைத்தது. இரண்டாம் உலக யுத்தம் துவங்குவதற்கான சூழல் உருவாகி வருவதை அகிலத்தின் ஆறாவது மாநாடு மிகச் சரியாகவே மதிப்பீடு செய்தது”.

அகிலத்தின் ஏழாவது மாநாடும் உலகைச் சூழ்ந்த பாசிசமும்

1935இல் நடந்த கம்யூனிஸ்ட் அகிலத்தின் 7வது மாநாட்டில் பொதுச்செயலாளராக ஜார்ஜ் டிமிட்ரோவ் தேர்வு செய்யப்பட்டார். அம்மாநாட்டில் ஐக்கிய முன்னணி தந்திர கோட்பாட்டை அவர் முன்வைத்தார். பாசிச இருள் உலகை சூழ்ந்து கொண்டிருந்த காலமது. ஏகாதிபத்திய கட்டத்தில் பாசிசம் என்பது முதலாளித்துவத்தின் தன்மையும் விளைவுமாகும். ஏகாதிபத்தியம் என்பது ஏகபோக மூலதனம் என்றார் லெனின். இதில் நிதி மூலதனத்தின் இயல்பே பிற்போக்கானதாகி விடுகிறது. ஐரோப்பிய முதலாளித்துவத்தில், முதல் உலகப் போருக்குப் பின் ஏற்பட்ட நெருக்கடி பிற்போக்கின் கோர வடிவமான பாசிசத்தை பிரசவித்தது. அரசு ஏகபோக ஒழுங்குமுறையை மேற்கொள்ளுமாறு கீன்ஸ் யோசனை கூறினார். முதலாளித்துவ நாடுகளில் அத்தகைய புனரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் அதே சமயம்,  தொழிலாளர்கள் சுரண்டப்படுவது மேலும் அதிகரித்தது. உழைக்கும் வர்க்கத்தின் போராட்டத்தை ஈவு இரக்கமின்றி நசுக்குவதன் மூலம், புரட்சிகர சக்திகள் வளருவதை தடுக்கும் ஒரே சாதனம் என்ற வகையில், பாசிசத்தை ஏகாதிபத்திய நாடுகள் பின்பற்றத் தொடங்கின.

பிரான்சில் பாசிசம் வெற்றி பெறுமா என்ற கேள்விக்கு டிமிட்ரோவ் பின்வருமாறு பதிலளித்தார்: “பாசிசத்தின் வெற்றிக்கு பிரான்சும் விதிவிலக்கல்ல. 1830, 1848 புரட்சிகள் மற்றும் பாரிஸ் கம்யூன் போன்ற ஆழமான புரட்சிகர பாரம்பரியம் அம்மண்ணில் இருப்பதால், இத்தாலி, ஜெர்மனியைப் போல வெகு எளிதில் பாசிசம் வேரூன்றிவிட முடியாது. ஆனாலும், இங்கு ஹிட்லர்கள் உருவாவதற்கான அடிப்படையை மறந்து விட இயலாது. வறுமை, வேலையின்மையை எதிர்த்தும், நெருக்கடியில் இருந்து மக்களை காக்கவும், புரட்சிகர இயக்கம் மக்களைத் திரட்டி போராட வேண்டும். இப்போராட்டம் தற்காப்புக்கானதாக இல்லாமல் தாக்கும் தன்மையில் இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி சாத்தியமாகும். பிற்போக்கு சக்திகளும், பாசிசமும், சமூகத்தில் அதிருப்திக்கு ஆளான மக்களை கவருவதை தடுத்து நிறுத்தினால்தான் வெற்றியை உறுதிப்படுத்த இயலும். பாசிஸ்டுகளின் தேசியவெறி, இனவெறி சித்தாந்தத்தையும், அவர்களை பின்னணியில் இருந்து இயக்கும் நிதி மூலதனத்தையும், மக்களிடம் தோலுரித்து காட்டுவதின் மூலமே வெற்றி இலக்கை அடைய முடியும். பாசிச எதிர்ப்பு போராட்டத்தில் இருந்து மக்களை திசை திருப்பும் சக்திகளிடம் இருந்து, தொழிலாளி வர்க்கம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட, விடாப்பிடியான போராட்டத்தின் மூலமே பாசிசத்தை வீழ்த்த முடியும்”.

பாசிசத்தின் தன்மைகளை டிமிட்ரோவ் அம்பலப்படுத்தினார்.  முதலாளித்துவ பொது நெருக்கடி அதிகரித்து வருகையில், அதற்கு எதிரான, புரட்சியை தவிர்ப்பதற்காக முதலாளித்துவம் பாசிசத்தில் புகலிடம் தேடுகிறது என்றார். சோசலிசப் புரட்சியை நெருங்கும்போதுதான் பாசிசம் தாக்குதலை தொடங்கும் என நினைப்பது தவறு. உண்மையில் அதற்கு முன்பே தொழிலாளி வர்க்க ஸ்தாபனங்களை தாக்கி அழித்து விட பாசிசம் முயல்கிறது என்றார் டிமிட்ரோவ். நிதி மூலதனத்தின் கடைக்கோடி பிற்போக்கும், கடைக்கோடி இனவெறியும், கடைக்கோடி ஏகாதிபத்திய தன்மையும் கொண்ட பகுதிகளின், பகிரங்கமான, பயங்கரவாத, சர்வாதிகார முறையே பாசிசம் என்றார். பாசிசம், ரத்தவெறி பிடித்த ஏகாதிபத்திய வேட்டை விலங்கு; மிகக்கொடிய பகைவன் என்றார். பாசிசம் முதலாளித்துவ ஜனநாயகத்தை தாக்குகிறது. உழைக்கும் மக்கள் மீதான அநாகரிகமான சுரண்டல் ஆதிக்கத்தை நிலைநாட்டவும், உழைக்கும் மக்களை நசுக்கவும் முயல்கிறது. எனவே, முதலாளித்துவ நாடுகளில் உள்ள உழைக்கும் மக்கள் இன்றைய தினம் உறுதியாக தேர்ந்தெடுக்க வேண்டியது, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அல்லது முதலாளித்துவ ஜனநாயகம், இரண்டில் ஒன்றை அல்ல. முதலாளித்துவ ஜனநாயகம் அல்லது பாசிசம், இரண்டில் ஒன்றைத்தான் என்றார்.

பாசிசம் எவ்வாறு மக்களை கவருகிறது என்ற கேள்விக்கு அவர் பதிலளித்தார்: “மக்களின் கோரிக்கை, தேவைகளை பற்றி வாய்ச்சவடால் அடிப்பது, தேசத்தின் கெளரவத்தை காப்பாற்ற தேசியவெறி உணர்வுகளை தூண்டுவது, முந்தைய முதலாளித்துவ ஆட்சியாளர்கள் மீது மக்களுக்குள்ள வெறுப்பை பாசிசம் பயன்படுத்திக் கொள்கிறது” என்றார். முதலாளித்துவ சமூகத்தில் அரசியல் அமைப்புகள் படிப்படியாக பாசிச மயமாவதையும், பாசிசத்தின் நேரடி தாக்குதலையும் கம்யூனிஸ்டுகள் கவனத்தில் கொள்ள வேண்டுமென எச்சரிக்கை செய்தார்.  பாசிசத்தை முறியடிக்க பரந்துபட்ட ஐக்கிய முன்னணியை கட்ட வேண்டிய அவசியத்தையும் டிமிட்ரோவ் வலியுறுத்தினார்.

முரண்பாடுகளும் ஐக்கிய முன்னணியும்

இயற்கையும், சமூகமும் முரண்பாடுகளின் தொகுப்பு என்பதே இயக்கவியல் பொருள்முதல்வாத கண்ணோட்டம் என்கிறார் மாவோ. முரண்பாட்டின் பிரதான அம்சத்திற்கும், பிரதானமற்ற அம்சத்திற்கும் இடையிலான வேறுபாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் மாவோ. கட்சியின் 23வது காங்கிரசின் நகல் அரசியல் தீர்மானம், தீவிரமாகி வரும் நான்கு முரண்பாடுகளையும் கோடிட்டு காட்டுகிறது. இந்திய அரசியலில் முன்னுக்கு வந்துள்ள முரண்பாடுகளையும் தீர்மானம் விரிவாக விளக்குகிறது. இந்துத்துவா – கார்ப்பரேட் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தின் வெற்றிக்கு இந்துத்துவா வகுப்புவாத சக்திகளுக்கு எதிராகவும், நவதாராளவாத கொள்கைகளுக்கு எதிராகவும், ஒரே நேரத்தில் போராட்டங்களை முன் எடுக்க வேண்டும் என தீர்மானம் வலியுறுத்துகிறது.

கட்சியை வலுப்படுத்துவதற்கு ஐக்கிய முன்னணி உத்தி அவசியமானவை. பொதுவான பிரச்சனைகளில் வெகுஜன இயக்கங்களை கட்டி எழுப்புவதற்கு முதலாளித்துவ கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் ஒன்றுபட்ட நடவடிக்கைகளை முன் எடுப்பதற்கு ஐக்கிய முன்னணி உத்தியை பயன்படுத்த வேண்டும். குறிப்பிட்ட அரசியல் பிரச்சனைகளில் பிரச்சாரங்களையும், போராட்டங்களையும், மக்களைத் திரட்டவும் அரசியல் கட்சிகளுடன் ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட வேண்டும். தேர்தல் களத்தில் நமது உடனடி நோக்கங்களை அடைவதற்கோ, அரசியல் சூழ்நிலையில் மாற்றத்தை உருவாக்கவோ முதலாளித்துவ கட்சிகளுடன் பொதுவான உடன்பாட்டை உருவாக்குவதும் ஓர் ஐக்கிய முன்னணி உத்தியே. ஆயினும், ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கு தனது சுயேட்சையான செயல்பாட்டிற்கு பங்கம் ஏற்படாத வண்ணம் ஐக்கிய முன்னணி உத்தி உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும். முதலாளித்துவ கட்சிகளுடன் கூட்டு மேடைகள் உருவாக்கப்பட்டாலும், கட்சி தனது சொந்த அரசியல் நிலைபாட்டை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் தொய்வின்றி செயல்பட வேண்டும். முதலாளித்துவ கட்சிகளின் அரசியல் நிலைபாட்டிலிருந்து கட்சியின் வேறுபட்ட நிலைபாடுகளை சமரசமின்றி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். ஐக்கிய முன்னணி உத்தியின் மற்றொரு பிரதான அம்சம் என்னவெனில், இதர முதலாளித்துவ கட்சிகளுக்கு பின்னால் திரண்டுள்ள மக்களை அணுகுவதற்கும், நம் பக்கம் திரட்டுவதற்கும் உதவுகிறது என்பதாகும்.  முதலாளித்துவக் கட்சிகளின் செல்வாக்கின் பிடியில் உள்ள மக்களை வெல்வதன் மூலமும், கட்சி மற்றும் ஜனநாயக சக்திகளின் செல்வாக்கின் கீழ் அவர்களைக் கொண்டுவருவதன் மூலமும், வர்க்க சக்திகளின் பலாபலனில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஐக்கிய முன்னணியின் அவசியத்தையும், அதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள குறைபாடுகளையும் 17வது கட்சி காங்கிரசின் அரசியல் – ஸ்தாபன அறிக்கை விரிவாக ஆய்வு செய்துள்ளது.

                  பாசிசத்திற்கு எதிராக கட்டப்படும் ஐக்கிய முன்னணியில் தொழிலாளர்களை ஒன்றுபடுத்த வேண்டியதின் அவசியத்தை டிமிட்ரோவ் விரிவாக எடுத்துரைக்கிறார். 1982 முதல் நடைபெற்று வரும் தொழிற்சங்க வேலைநிறுத்த போராட்டங்களின் மூலம் தொழிலாளர் ஒற்றுமை மேம்பட்டு வருவதை தோழர் தபன் சின்ஹா தனது 2022 மார்ச் மாத வேலைநிறுத்தம் குறித்த கட்டுரையில் குறிப்பிடுகிறார். தொழிலாளி வர்க்கம் தனது நேச சக்தியான விவசாய வர்க்கத்தை அணி திரட்டுவதில் அக்கறையோடு செயல்பட வேண்டுமென்பதையும் வலியுறுத்துகிறார். குறிப்பாக பாசிசத்திற்கு எதிரான ஐக்கிய முன்னணியில் இளைஞர்களையும், பெண்களையும் திரட்டாமல் அப்போராட்டம் வெற்றியடையாது என்கிறார்.