சங் பரிவாரத்தின் உத்திகள்!

ஜி.ராமகிருஷ்ணன்

அரசியல் தலைமைக்குழு  உறுப்பினர், சிபிஐ(எம்)

(ஆர்.எஸ்.எஸ். செயல்படுத்தி வரும் உத்திகளை எதிர்கொள்வது தொடர்பாக கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்ட கட்சி முன்னணி தோழர்கள் பங்கேற்ற பயிற்சி பட்டறையில் முன்வைக்கப்பட்ட குறிப்பின் சில பகுதிகள் இங்கு கட்டுரை வடிவில் தரப்பட்டுள்ளது – ஆசிரியர் குழு)

 “இந்துத்துவா சித்தாந்தம் பழமையை மீட்டெடுக்கும் வாதத்தை முன்னெடுப்பதாக இருப்பதோடு, இந்து ராஷ்ட்ராவை நிறுவ வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தியாவின் பன்முகத்தன்மை மிக்க கலாச்சாரத்தை மறுதலிப்பதாகவும் இருக்கிறது” என நமது கட்சித் திட்டம் குறிப்பிடுகிறது.

ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங் பரிவார அமைப்புகள் தொடக்க காலத்தில் இருந்தே இந்துத்துவா – இந்து ராஷ்ட்டிராவை நோக்கிய பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 2014 ஆம் ஆண்டு பாஜக ஒன்றிய ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களுடைய இந்த நோக்கத்தில் வேகமாக செயல்படுகின்றனர்.

கடந்த எட்டு ஆண்டு காலமாக “சமூக, இன பிளவுகளைத் தாண்டி, அனைத்தையும் உள்ளடக்கிய குறிப்பிடத்தக்க இந்து அடையாளத்தை உருவாக்குவதில் கணிசமான வெற்றியை பாஜக பெற்றுள்ளது. அதோடு சேர்ந்து நுண்ணிய நிலையில் (Micro Level) சாதியத் திரட்டலையும் அது மேற்கொள்கிறது” என்று 23 வது அகில இந்திய மாநாட்டின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மேலும், “இந்துத்துவாவையும் அதன் பல்வேறு வகையான வகுப்புவாத அமைப்புகளையும் எதிர்த்துப் போராடுவதென்பதை அரசியல், தத்துவம், கலாச்சாரம் மற்றும் சமூகத் தளங்களில் நீடித்த வகையில் மேற்கொள்ள வேண்டும். இந்துத்துவா நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான இந்தப் போராட்டத்தை வலுப்படுத்த, உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” எனவும் அது குறிப்பிடுகிறது.

கட்சித்திட்டம் மற்றும் 23வது கட்சி காங்கிரஸ் சுட்டிக்காட்டிய அம்சங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு கோவை மற்றும் திருப்பூரில் பாஜக பின்பற்றிவரும் சில உத்திகளை காண்போம்.

கோவை – திருப்பூரில் எதிர்ப்பு உணர்வும், வகுப்புவாதமும்

கோவை மாவட்டம் தொழில்கள் நிறைந்த பகுதி. பஞ்சாலை மற்றும் இன்ஜினியரிங் துறையில் சில கார்ப்பரேட் நிறுவனங்களை தவிர்த்து பெரும்பான்மையாக சிறு-குறு தொழில் நிறுவனங்களே இயங்கி வருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 1,200 ஏற்றுமதி நிறுவனங்கள் உள்ளன. கோவை, திருப்பூருக்கு தேவையான முக்கிய கச்சா பொருட்களில் ஒன்று பருத்தி. பருத்தி பதுக்கலுக்கு சாதகமான கொள்கைகளால் நூல் விலை சென்ற 2020 அக்டோபர் மாதம் கிலோவுக்கு ரூ.237 என்பதிலிருந்து, 2022 மே மாதம் ரூ.474 என இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக கோவை, திருப்பூரில் ஜவுளி, விசைத்தறி மற்றும்  பின்னலாடைத் தொழில்கள் பாதிக்கப்படுகின்றன.

மூலதனம் சுருங்குவதாலும், வங்கிகளிலிருந்து கடன் பெற இயலாததாலும் சிறு – குறு நிறுவனங்கள் நெருக்கடியில் உள்ளன. தொழிலாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். வெளிநாடுகளிலிருந்து திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு கிடைத்த ஆர்டர்களில் மூன்றில் இரண்டு பங்கு குறைந்துவிட்டது. சம்பந்தப்பட்ட நாடுகள் ஆர்டர்களை பங்களாதேஷூக்கும், வியட்நாமுக்கும் மாற்றி கொடுக்கின்றன. உள்நாட்டில் பஞ்சு விலையை சீராக்கவும், ஜவுளித் துறையை தடங்கலின்றிச் செயல்பட வைப்பதற்கும் முதலாளிகள் சங்கத்தினர் தங்களின் கோரிக்கைகளை ஒன்றிய அரசிடம் தெரிவித்தும் அரசின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கவில்லை.

பொதுத்துறை நிறுவனமான இந்திய பருத்திக் கழகம் (சிசிஐ) விவசாயிகளிடமிருந்து பருத்தியைக் கொள்முதல் செய்ய ஜவுளித் துறையினர் ஒன்றிய அரசிடம் கேட்டபோது,  துறைக்கான அமைச்சர் பியூஸ் கோயல், “அரசை தலையிடச் சொல்லி யாரும் நிர்ப்பந்திக்க முடியாது. சந்தை சக்திகள் சுதந்திரமாக செயல்படட்டும்” என (19.11.2021) கூறிவிட்டார்.

கடந்த காலத்தில் பாஜக எதிர்க்கட்சியாக இருந்தபோது, இந்து முன்னணியைச் சார்ந்தவர்கள் திருப்பூர் தொழில் பாதுகாப்புக்குழு என்ற ஒரு அமைப்பை உருவாக்கி கடையடைப்பு உள்ளிட்ட போராட்டத்தை நடத்தினர். அதன் மூலம் சிறு குறுந்தொழில்முனைவோர் மத்தியில் ஆதரவை பெற்றனர். ஆனால், இப்போது மத்தியில் பாஜக ஆட்சியில் உள்ளது. எனவே, பின்னலாடைத் தொழிலை பாதுகாக்க மகா யாகம் ஒன்றை நடத்தினர். யாகம் நடத்துவதன் வழியாக, அரசியல் சார்ந்த பிரச்சனைக்கு, நம்பிக்கை சார்ந்த ‘தீர்வை’ முன்னிறுத்துகின்றனர்.

1984களில் திருப்பூர் மாவட்டத்தில், பஞ்சப்படி கோரி வீறுகொண்ட வேலை நிறுத்த போராட்டம் நடந்த போது, அதனை முறியடிப்பதற்காக, முதலாளிகளோடு கைகோர்த்து, சங் பரிவாரத்தினர் ஆலைகளை இயக்க முயன்றனர். ஆனால், ஒன்றுபட்ட தொழிலாளர் படையின் எதிர்ப்பின் முன்னால் சரணடைந்து ஓட்டம் எடுத்தனர். இப்போதும், இந்தப் பகுதிகளில், தொழில் மற்றும் தொழிலாளர் நலன் காக்க இடதுசாரி இயக்கமும், தொழிற்சங்க இயக்கமும் தொடர்ந்து வலுவாக இயங்குவதற்கான தேவை உள்ளது. இந்த சூழலில் பாஜகவும், சங் பரிவாரமும் பலமடைந்தால், அது இடதுசாரி இயக்கத்தையும், தொழிற்சங்க இயக்கத்தையும் பலவீனப்படுத்தும்.

கோவை, திருப்பூரில் ஜவுளித் தொழிலில் மட்டும் நெருக்கடி ஏற்படவில்லை. கோவை மாவட்டத்தில் உள்ள இஞ்சினியரிங் தொழில்களில் லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு/குறு நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை நெருக்கடியில் உள்ளன. கடந்த 20.12.2021 அன்று அகில இந்திய சிறு – குறு நிறுவனங்களின் 170 கூட்டமைப்புகள் இணைந்து நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தின. இப்போராட்டத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டன.

பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., கச்சா பொருட்கள் விலையேற்றம் என அடுத்தடுத்து நெருக்கடியை உருவாக்கும் கொள்கைகளை மத்திய பாஜக அரசு மேற்கொள்கிறது. இருப்பினும், அண்மையில் நடைபெற்ற திருப்பூர் மற்றும் கோவை மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாஜக கடந்த காலத்தைவிட சற்று கூடுதலாகவே வாக்குகளை பெற்றுள்ளது. தொழில்கள் பாதிப்பதற்கும், தொழிலாளர்களின் வேலையிழப்பிற்கும் காரணம்  பாஜக அரசின் கடைப்பிடிக்கும் கொள்கைகளே என்ற போதிலும் கூட, பாஜகவிற்கு வாக்கு அதிகமாவது வகுப்புவாத உணர்வு வலுப்படுவதை காட்டுகிறது.

வகுப்புவாதத்தின் பல முகங்கள்

வகுப்புவாதத்திற்கு முக்கியக் காரணம் மதம்தான் என சிலர் கருதுகிறார்கள். அப்படி அல்ல. மதநம்பிக்கையும் மதத்தின் மீது பற்றுகொண்டவர்கள் அனைவரும் வகுப்புவாதிகளாக மாறுவதில்லை. மதநம்பிக்கை கொண்ட மக்கள் பலர் இதர மதத்தைச் சார்ந்தவர்களோடு சகோதரத்துவத்தோடும் நேயத்தோடும் வாழ்ந்து வருவதைக் காண்கிறோம். வகுப்புவாதத்திற்கு மதம் அடிப்படை காரணம் அல்ல. அதே நேரத்தில் மத நம்பிக்கையாளர்களைத்தான் வகுப்புவாதிகளாக மாற்றுகிறார்கள்.

வகுப்புவாத உணர்வை உருவாக்கும் நடைமுறைக்கு பேராசிரியர் கே.என்.பணிக்கர் ஒரு கேரளப் பெண்மணியை உதாரணம் காட்டி தனது நூலில் குறிப்பிடுகிறார். (மதச்சார்பற்ற நடவடிக்கைக்கான கையேடு)

”அந்தப் பெண்மணிக்கு ராமர் மீது பக்தி உண்டு. தினமும் கோவிலுக்கு செல்வதில்லை என்றாலும் ராமாயணத்தில் ஒன்றிரண்டு பக்கங்களை தினமும் காலையில் படிக்கும் பழக்கமுண்டு, இப்படிப் பட்டவர் அயோத்தியில் ராமர் கோவிலை பாஜக மேற்கொண்டபோது அதன் ஆதரவாளராக மாறினார்.

அயோத்தியா இயக்கத்தை எதிர்க்கும் முஸ்லீம் சிறுபான்மையினர் மீது அந்தப் பெண்மணிக்கு பகையுணர்வு ஏற்பட்டிருக்கக்கூடும். சாதாரண பக்தி/மத உணர்வு வகுப்புவாத உணர்வாக மாற்றப்பட்டது.

எனவே வகுப்புவாத உணர்வு நிலைக்கு கொண்டு வர மதநம்பிக்கை பயன்படுத்தப்படுகிறது. சாதாரண மக்களிடம் இந்த வகுப்புவாத உணர்வை உருவாக்கிட ராமர் கோவில் பிரச்சனை, முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம் நடத்துவது, கிறிஸ்தவர்கள் மீது பொய்ப் பிரச்சாரம் செய்து அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற நடவடிக்கைகளுக்கு உதவுகின்றன.

வகுப்புவாத உணர்வினை உருவாக்கிய பிறகு, வதந்தி மற்றும் பொய்களை கட்டமைத்து, மத மோதல்களையும், கலவரங்களையும் உருவாக்குகிறார்கள். இதுபோன்ற வன்முறைகள் அவர்களின் அடுத்தகட்ட பாய்ச்சல் வேக வளர்ச்சிக்கு பயன்பட்டிருக்கின்றன.

கோவை – திருப்பூரில் சங் பரிவார அமைப்புகள்:

1940களில் தமிழகத்தில் கன்னியாகுமரி, சேலம், கோவை, மதுரை போன்ற மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். சாகாக்கள் நடக்கத் துவங்கின. 1949 ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உருவானது. கோவை மற்றும் திருப்பூர் என்ற இரண்டு வருவாய் மாவட்டங்களை மாநில அரசு 2009ல் தான் உருவாக்கியது.

இந்து வியாபாரிகள் சங்கம்

கோவை நகரில் உள்ள திருப்பூர் குமரன் மார்க்கெட்டில் கடன் வசூல் செய்வதில் வியாபாரிகளுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டது. கடன் கொடுத்தல், வசூலில் ஏற்பட்ட முரண்பாட்டை இந்து வியாபாரிகள், இஸ்லாமிய வியாபாரிகளுக்கிடையிலான முரண்பாடாக மாற்றி இந்து முன்னணி அங்கே இந்து வியாபாரிகள் சங்கத்தை துவக்கியது. மத ரீதியில் துவங்கப்பட்ட முதல் சங்கம் இது ஆகும்.

கோவையில் ஜவுளி விற்பனை துறையிலும், எலக்ட்ரானிக் துறையிலும் இஸ்லாமிய வியாபாரிகளுக்கும் மார்வாடிகளுக்கும் போட்டி ஏற்பட்டது. பெரியார் திராவிட கழகம் சார்பில் மார்வாடிகளை தமிழகத்திலிருந்து விரட்டுவோம் என துண்டு பிரசுரம் வெளியிட்டனர். இந்து முன்னணி மார்வாடிகளுக்கு ஆதரவாக நின்றது. மார்வாடிகளும் இந்து முன்னணிக்கு நிதி உதவி செய்தார்கள். இச்சூழலில் கோவை நகரில் 1981ல் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். பேச்சாளர் திருக்கோவிலூர் சுந்தரம் நபிகள் நாயகத்தை தாக்கி பேசியிருக்கிறார். அவரை இஸ்லாமிய பழமைவாதிகள் தாக்கியிருக்கிறார்கள். அடுத்தடுத்து திருக்கோவிலூர் சுந்தரம், ராமகோபாலன் போன்றோரின் வெறுப்பு பேச்சு நகரில் பதட்டத்தை உருவாக்கியது. 1982இல் ஹக்கிம் என்ற மாணவர் திராவிடர் கழக கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிய போது படுகொலை செய்யப்பட்டார்.

கலவரமும், குண்டு வெடிப்பும்

1997ஆம் ஆண்டு நவம்பர் 29 அன்று கான்ஸ்டபிள் செல்வராஜ் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, பதட்டம் விசிறிவிடப்பட்டது. நவம்பர் 30, டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் கலவரம் வெடித்தது. காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூடு, படுகொலையில் 19 பேர் கொல்லப்பட்டனர். இவர்களுக்கும் செல்வராஜ் படுகொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை.

1998 பிப்ரவரி மாதத்தில், கோவைக்கு அத்வானி தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்தார். அப்போது அல்-உம்மா பயங்கரவாதிகள் ரயில் நிலையத்திலும், மருத்துவமனையிலும், மக்கள் கூடும் இடங்களிலும் குண்டு வைத்தார்கள். இதிலும் அப்பாவி மக்களே கொல்லப்பட்டார்கள். மேலும் இந்த சம்பவம் இந்து முன்னணியின் கொலைபாதகங்களுக்கு நியாயம் கற்பிக்க உதவியது. இஸ்லாமியர் மீதான வெறுப்பு பிரச்சாரமும், தாக்குதல்களும் அதிகரித்தன.

திருப்பூர் தொழில்முனைவோர் மத்தியில்

திருப்பூரில் தொழில் முனைவோர் மத்தியில் தனது செல்வாக்கை அதிகரிப்பதற்காக சங் பரிவாரம் மேற்கொண்ட முயற்சிகள் முக்கியமானவை. 2011 ஆம் ஆண்டு சாய ஆலைகளுக்கு உயர்நீதிமன்றம் சாயக்கழிவுநீரை வெளியேற்றும் பிரச்சனையில் முழுத் தடை விதித்தது. இதனால் மொத்த பின்னலாடை தொழிலும் நின்று போகும் நிலை ஏற்பட்டது. அப்போது “தொழில் பாதுகாப்புக் குழு” என்ற பெயரில் ஒரு அமைப்பை இந்து முன்னணியினர் உருவாக்கினர். ஏற்கனவே செயல்பட்டு வரும் வழக்கமான தொழில் அமைப்புகளைத் தாண்டி இந்த அமைப்பு சிறப்பாக செயல்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்றனர். சாயஆலைப் பிரச்சனை, நூல் விலைப் பிரச்சனை ஆகியவற்றில் பிரம்மாண்ட இயக்கங்களை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் தேர்தல் வந்தபோது ஆர்எஸ்எஸ் குழுவினர் மாற்றத்துக்கான அணி என்ற பெயரில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றனர். இந்த வெற்றியை பயன்படுத்தி ஆர்எஸ்எஸ் கருத்தியலைப் பரப்ப முயற்சி மேற்கொண்டு, அதில் கணிசமான அளவுக்கு வெற்றியும் பெற்றுள்ளனர்.

ஆடிட்டர்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தியும், “ஸ்ரீபுரம் அறக்கட்டளை” போன்ற தன்னார்வ அமைப்புகளை உருவாக்கியும் இயங்குகிறார்கள். கடந்த காலத்தில் தொழில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் கூட்டாக சேர்ந்து அரசின் கொள்கை சார்ந்த பிரச்சனைகளில் கருத்து தெரிவிப்பது, இயக்கம் நடத்துவது ஆகியவற்றில் புகுந்து, சீர்குலைக்கும் வேலையை தற்போது நுட்பமாக செய்து வருகின்றனர். சமீபத்தில் தொழிற்சங்கங்கள் நடத்திய அகில இந்திய வேலை நிறுத்தம் மோசமாக சீர்குலைக்கப்பட்டது.

கல்வித்தளத்தில்

பெரும்பான்மையான தனியார் பள்ளிகள் தற்போது சிபிஎஸ்இ பாடத் திட்டத்திற்கு மாறிவிட்டன. இப்பள்ளி நிர்வாகங்களே ஆர்.எஸ்.எஸ். மாணவர்களை திரட்டுவதற்கு உதவி செய்கின்றன. தற்போது கோவையில் சில அரசு பள்ளிகளிலும், பள்ளி மைதானங்களிலும் சாகாக்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

திருப்பூரில் ஜெய்வாபாய் அரசுப் பள்ளி தமிழகத்தில் 6ஆயிரம் மாணவிகள் படிக்கக்கூடிய பெரிய மாநகராட்சிப் பள்ளியாகும். அப்பள்ளியில் பெண் ஏன் அடிமையானாள்? என்ற பெரியாரின் புத்தகத்தை விநியோகித்ததை பிரச்சனை செய்தனர். அந்த சம்பவத்தில் இருந்து தொடர்ந்து இப்பள்ளியைக் குறி வைத்து வருகின்றனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவியை ஆசிரியர்கள் மதமாற்றம் செய்வதாக சமீபத்தில் பிரச்சனையை தூண்டி சமூக ஊடகங்களில் பரப்பினர். ஆர்ப்பாட்டம் நடத்தினர். கல்வித் துறை விசாரித்து அது உண்மையில்லை என்று கூறியது.

இந்து முன்னணியின் திட்டம்

இந்து முன்னணி அமைப்பு விநாயகர் சதுர்த்தி விழாவை நான்கு நாள் நிகழ்வாக நடத்துகிறது. இந்த நிகழ்வை பயன்படுத்தி உள்ளூர் குடியிருப்புகள் மட்டத்தில் மிக இளவயது (15 – 20 வயதுடையோர்) இளைஞர்களை அணிதிரட்டுவது நடந்து வருகிறது. இதில் வெளியூரில் இருந்து இங்கு வந்து குடியிருக்கும் சமூகங்களின் பாதுகாப்பின்மை உணர்வை பயன்படுத்தி, தங்கள் பக்கம் ஈர்த்துக் கொள்கின்றனர்.

சிலைகளை ஆற்றில், குளத்தில் அல்லது கடலில் கரைக்கும் ஊர்வலம் நடைபெறுகிறது. இந்த ஊர்வலத்தை இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையிலான மோதலை உருவாக்குவதற்கும் பயன்படுத்துகிறார்கள்.

ஏன் விநாயகர் சதுர்த்தியை தேர்ந்தெடுத்தார்கள்?

தமிழகத்தில் இந்து மதத்தில் உள்ள சைவர்களும், வைணவர்களும் வெவ்வேறு கடவுள்களை வழிபடுகிறார்கள். இரண்டு பகுதிகளை சார்ந்தவர்களும் சங் பரிவார அமைப்புகளில் உறுப்பினர்களாக சேருகிறார்கள். சைவ, வைணவ அடையாளங்களுக்கு அப்பாலும், சாதி வேறுபாட்டிற்கு அப்பாலும் கிராமங்களிலும் நகரங்களிலும் விநாயகரை இந்துக்கள் வழிபடுகிறார்கள். எனவே, விநாயகரை கையில் எடுத்தால் சைவ, வைணவ வேறுபாட்டு பிரச்சனை வராது என்று ஆழமாக பரிசீலித்து முடிவெடுத்திருக்கிறார்கள்.

இ.மு. நிர்வாகிகளாக இருப்போர் கம்பெனி கொடுக்கல், வாங்கல் வரவு செலவு பிரச்சனைகள், நிலப் பிரச்சனைகளில் கட்டப்பஞ்சாயத்து செய்வதும், சட்டரீதியாக காவல் துறையை நாடி நீண்ட காலதாமதத்தைச் சந்திப்பதை விட, இவர்களிடம் போனால் விரைவில் பிரச்சனை முடியும் என்ற தொழில் செய்வோர் மனநிலையும் இ.மு.வுக்கு ஒரு பிடியை உருவாக்கி உள்ளது. இதனால் அவர்கள் பொருளாதார ஆதாயமும் அடைகின்றனர்.

யாகம் – நம்பிக்கை, வியாபாரம்:

இந்து முன்னணி அமைப்பின் சார்பில் மகா யாகம் நடத்தப்பட்டதை முன்பே குறிப்பிட்டோம். அதில் மூட நம்பிக்கை மட்டுமல்லாது வியாபார நோக்கமும் இணைந்துள்ளது. திருப்பூரை அடுத்த  பொங்கலூரில் சோடஷ மகாலட்சுமி மகா யாகம் நடத்தி அதில் சுமார் 10 ஆயிரம் பேரை திரட்டினார்கள். பிறகு யாகம் நடத்திய இடத்தை ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து விட்டனர்.

ஆர்.எஸ்.எஸ். நடத்தும் சாகாக்கள்

கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களில் சுமார் 250 சாகாக்கள் நடந்து வருகின்றன. இப்படிப்பட்ட சாகாக்கள் சில அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பெரும்பாலும் தனியார் பள்ளி வளாகங்களில் நடந்து வருகின்றன. சங் பரிவார நடவடிக்கைகளில் இது முக்கியமானது. இதில் பயிற்சி பெறுபவர்களைத்தான் முழுநேர ஊழியர்களாக்குகிறார்கள். வெறுப்பு பிரச்சாரம் செய்வது, மத மோதலை உருவாக்குவது, சிறுபான்மை மக்களை தாக்குவது போன்ற நடவடிக்கைகளுக்கு வகுப்புவாத அரசியல் பயிற்சியோடு ஆயுதப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் சாகா என்பது, கம்பு, வாள், குண்டெறிதல் போன்ற பயிற்சிகளை உள்ளடக்கியது. உடற்பயிற்சி விளையாட்டுகள், வில்கள், அணிவகுப்புகள் போன்றவை மைதானங்களிலும் பிற பொது இடங்களிலும் நடத்தப்படுகின்றன. உடற்பயிற்சி என்கிற பெயரில்தான் இவை அனைத்தும் நடத்தப்படுகின்றன. ஒரு தீவிரவாத அணுகுமுறையையும், குடிமைச் சமூகத்தில் எவ்விதமான தாக்குதலையும், நடத்துவதற்கான மனநிலையையும் உருவாக்குவதே, இந்த நடவடிக்கைகளின் நோக்கம். இவை சிறுபான்மையினரின் மனதில் சந்தேகத்தையும் அச்சத்தையும், பாதுகாப்பற்ற உணர்வுகளையும் அடிக்கடி ஏற்படுத்துகின்றன.

மதக்கலவரத்தை ஆர்.எஸ்.எஸ். உருவாக்கும் முறை இதுதான்.

1. சிறுபான்மையினர் இந்த நாட்டுக்கு விசுவாசமான குடிமகன்கள் அல்ல என்று பிரச்சாரம் செய்து, பெரும்பான்மை சமூகத்தின் மத உணர்வைத் தூண்டுவது.

2. சிறுபான்மையினரின் எண்ணிக்கை கூடுகிறது, இந்துக்கள் எண்ணிக்கை குறைகிறது என்று தந்திரமாக பிரச்சாரம் செய்து பெரும்பான்மையினரிடம் அச்சத்தை ஆழமாக்குவது.

3. நிர்வாகத்தில் ஊடுருவி, ஆட்சிப் பணியிலும், காவல் பணியிலும் இருக்கும்  அதிகாரிகளுக்கு மதவாத கண்ணோட்டத்தை ஏற்படுத்தி, மதவாத அணுகுமுறையை மேற்கொள்ளத் தூண்டுவது.

4. பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு கத்தி, வாள், ஈட்டி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்த பயிற்சியளிப்பது.

5. எந்த ஒரு சிறு சம்பவத்திற்கும், மதச்சாயம் பூசி, மத ரீதியிலான பிளவை அதிகரித்து, மத வெறுப்பு உணர்வுகளை ஆழமாக்குவது.

சாதி வாரியாக மக்களை திரட்டும் முயற்சி

ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக அமைப்புகளின் தலைமையில் பிராமணர்களே இருக்கிறார்கள் என்ற தோற்றத்தை மாற்றுவதற்காக சங் பரிவார அமைப்புகளின் தலைமை பொறுப்பில் பிராமணர் அல்லாதவர்களை திட்டமிட்டு கொண்டு வருகிறார்கள். எல்லா மாவட்டங்களிலும் இந்து முன்னணி அமைப்பிற்கு பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின பகுதியிலிருந்து தலைமைப் பொறுப்பிற்கு நியமனம் செய்கிறார்கள். மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் பகுதியில் பிரதானமான சாதி எது என்று கண்டறிந்து, அம்மக்களை சாதி ரீதியில் திரட்டுவதை சங் பரிவார அமைப்புகள் அணுகுமுறையாக கடைப்பிடித்து வருகிறார்கள்.  கோவை மாவட்டத்தில் உள்ள தேவாங்க செட்டியார் சாதியில் உள்ள சில பிரமுகர்களை பிடித்து அவர்கள் மூலமாக அந்த சாதியில் உள்ள கணிசமான மக்களை சென்றடைந்துள்ளார்கள். இதே போல சாதிய பெருமித உணர்வைத் தூண்டிவிட்டு கவுண்டர் சமூகத்தினரிடம் கணிசமாக ஊடுருவி உள்ளனர். சாதிய அணி திரட்டலுக்காக சமூக ஊடகங்களை நுட்பமாகவும், திறம்படவும் பயன்படுத்துகின்றனர். கோவை, திருப்பூர் பகுதிகளில் அருந்ததியர் சமூக மக்களையும் தங்கள் வளையத்திற்குள் கொண்டு வர பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊடக வலிமை

வாட்சாப், சமூக ஊடகங்களை பாஜக திறமையாக பயன்படுத்துவதை அறிவோம். அத்துடன் பாரம்பரிய ஊடகங்களையும் அவர்கள் தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள். கோவை, திருப்பூர் இரண்டு மாவட்டங்களிலும் தினமலர் பத்திரிக்கை கூடுதலாக விற்பனையாகிறது. இந்த இதழில் பாஜகவுக்கு ஆதரவாகவும், இடதுசாரிகளுக்கு எதிராகவும் செய்திகள் வெளியாகின்றன. குறிப்பாக கேரளாவில் தோழர் பினராயி விஜயன் தலைமையிலான அரசை பற்றி அங்குவரும் அவதூறுகளை அப்படியே தினமலர் பரப்புகிறது.

சங் பரிவார உத்திகளை எதிர்கொள்ள

                பாஜக தலைமையிலான ஒன்றிய அரசாங்கமும், சங் பரிவார அமைப்புகளும் இந்துத்துவ வகுப்புவாத திட்டத்தை அமலாக்கிட அனைத்து வழிகளிலும் முயற்சிக்கிறார்கள். இந்த முயற்சிகள் மேக்ரோ (நாடு தழுவிய அளவிலும், மாநில மற்றும் மாவட்ட அளவிலும்) மற்றும் மைக்ரோ (உள்ளூர் சமூக) அளவிலும் மேற்கொள்ளப்படுகின்றன. இரண்டு தளத்திலும் இதனை நாம் எதிர்கொள்ள வேண்டும்.

மேக்ரோ அளவில்

நாடு தழுவிய அளவில் பாஜக ஒன்றிய அரசும், சங் பரிவாரமும் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கிறது. (உ.ம்., குடியுரிமை திருத்தச் சட்டம், ராமர் கோவில், அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவு நீக்கம், பொது சிவில் சட்டம்). இதே போல மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல்வேறு பிரச்சனைகளை கிளப்புகிறார்கள்.

நமது அரசமைப்பு சட்டத்தின் மதச்சார்பற்ற ஜனநாயக உள்ளடக்கத்திற்கு எதிராக இந்த செயல்பாடுகள் உள்ளன. மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்துகின்றன. இந்த திட்டங்களுக்கு எதிராக கட்சியும், வர்க்க வெகுஜன அமைப்புகளும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். எதிர் செயல்பாடுகளை கட்டமைக்க வேண்டும்.

மக்களிடையே ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும், மதச்சார்பின்மையையும் பாதுகாக்கும் திட்டத்தை சுயேட்சையான முறையில் முன்னெடுப்பதுடன், ஒத்த கருத்துள்ள கட்சிகள் மற்றும் அமைப்புகளோடு கைகோர்க்க வேண்டும்.

மைக்ரோ அளவில்

                வகுப்புவாத சக்திகள், தனிநபர்களை அணுகும் தன்மையோடு மைக்ரோ செயல்பாடுகளை வகுத்துக் கொண்டுள்ளார்கள். வெளிப்படையாகத் தெரியும் அரசியல் நிகழ்வுகளில் இருந்து இவை மாறுபட்டுள்ளன. அதிகம் வெளியே தெரிவதில்லை.

மதச் சார்பின்மைக்காக இந்தத் தளத்தில் நாம் மேற்கொள்ளும் போராட்டம், மனித மனங்களை வென்றெடுப்பதற்கான ஒன்றாகும். அதற்கு ஏற்ப செயல்திட்டத்தை வகுத்துக்கொள்ள வேண்டும். மத நம்பிக்கையாளர்களை அணுகுகிறபோது அவர்களுடைய மத நம்பிக்கையை புண்படுத்திவிடக் கூடாது.

குழந்தைகளுக்கான மழலையர் பள்ளிகளை சங் பரிவாரத்தினர் பலர் தொடங்கி நடத்துகிறார்கள். அந்த நிலையிலேயே, வகுப்புவாத செயல்பாடுகளை தொடங்குகிறார்கள். ஆங்கில எழுத்துக்களை கற்பிக்கும்போதும் கூட, ஏ எனில் அர்ஜூனன், பி எனில் பீமன் என்பதாக கற்பிக்கிறார்கள். கோயில் வளாகங்களையும் கைப்பற்றுகிறார்கள்.

மேக்ரோ அளவில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை, மைக்ரோ அளவில் மத நம்பிக்கையுள்ள மக்களிடம் எடுத்துச் சென்று மெல்ல மெல்ல அவர்களை வகுப்புவாதிகளாக மாற்றும் விதத்தில் சங்க பரிவாரம் இயங்குகிறது.

எனவே, வகுப்புவாத திட்டத்தை முன் உணர்ந்து தலையீடு மேற்கொள்வது அவசியமாகும். மதச்சார்பற்ற, ஜனநாயக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அறிவியல் பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். கூர்மையாக கவனம் செலுத்தி, வகுப்புவாத நடவடிக்கைகளை கண்டறிந்து, உரிய தலையீடு மேற்கொண்டு தடுக்கவும் வேண்டும். (உ.ம்., அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வளாகங்களில் ஆர் எஸ் எஸ் சாகாக்கள் நடத்துவதை தடுத்து நிறுத்திட அரசு நிர்வாகத்தை அணுக வேண்டும்)

மதச்சார்பற்ற/ஜனநாயக நடவடிக்கைகள்:

கட்சியின் 23 வது அகில இந்திய மாநாடு, இந்துத்துவாவை எதிர்த்து போராடுவதற்கான 7 வழிமுறைகளை பட்டியலிட்டுள்ளது.

  1. கருத்தியல் அடிப்படையில் இந்துத்துவா கொள்கையை தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டும். 2) வெறுப்பு/பயங்கரவாத தாக்குதல்களை எதிர்த்து முன்நிற்க வேண்டும். பொது இடங்களை வகுப்புவாதமயமாக்கும் முயற்சிகளை எதிர்க்க வேண்டும். 3) பழமைவாத, மூடநம்பிக்கை, கண்மூடித்தனமான போக்குகள், பகுத்தறிவின்மை போக்குகளை எதிர்த்து – அறிவியல் அடிப்படையிலான, பகுத்தறிவின் பார்ப்பட்ட கருத்துக்களை முன்னெடுக்க வேண்டும். 4) சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக, பாலின சமத்துவத்தை முன்னெடுக்க வேண்டும். பட்டியல் சாதி/பட்டியல் பழங்குடி மக்கள் மத்தியில் வகுப்புவாத சித்தாந்தம் பரவுவதை எதிர்கொள்ள வேண்டும். 5) பன்மைக் கலச்சாரத்தை முன்னிறுத்தும் நிகழ்வுகளில் சிறப்பு கவனம், செலுத்திட வேண்டும். 6) சமூக சேவை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். 7) கல்வித் துறையில் மதச் சார்பற்ற, ஜனநாயகப்பூர்வமான, ஒன்றிணைப்பு நிரம்பிய உள்ளடக்கத்தை உருவாக்கி பரப்பும் விதத்தில் முன்முயற்சி எடுக்க வேண்டும்.

நம்முடைய நடவடிக்கைகளும் உள்ளூர் சமூக தளத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

குழந்தைகள்

குழந்தைகளுக்காக துளிர் இல்லங்கள், பாலர் சங்கங்களை உருவாக்க வேண்டும். கிராமங்களிலும், நகரங்களிலும் உள்ள பள்ளிகளை (குறிப்பாக அரசுப் பள்ளிகளை) மேம்படுத்திட முயற்சி எடுக்க வேண்டும். இரவு பள்ளிகளை நடத்தலாம். மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க திட்டமிட்டு பயிற்சிகள் தர வேண்டும். அதே போல மாணவர் மன்றங்களை ஏற்படுத்தி, சேவைப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.

இளைஞர்

பொதுவாகவே இளம் வயதில் வீர விளையாட்டுக்கள் மீது ஆர்வம் ஏற்படுகிறது. எனவே நாம் விளையாட்டு பயிற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். பொங்கல் திருவிழாவை ஒட்டி நாம் விளையாட்டு போட்டிகளை நடத்திவருகிறோம். அதில் கண்டறியப்படும் திறன்களை மேலும் மேம்படுத்தும் விதத்தில் ஒன்றிய, நகர, மாவட்ட/மாநில அளவில் போட்டிகளை நடத்திட வேண்டும். வேலைவாய்ப்பு தொடர்பான பயிற்சிகளையும் வழங்க வேண்டும்.

சமூக செயல்பாடுகள்

யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகள் ஆரோக்கிய நோக்கில் மிக உதவிகரமான நடவடிக்கைகளாகும். அது ஆன்மீகச் செயல்பாடு அல்ல. கேரளாவில் ஒன்றிய நகர அளவிலும் கிராம மற்றும் வார்டு அளவிலும் நமது கட்சியின் சார்பில் யோகா பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை தயார் செய்து, அனைத்து மக்களுக்குமே பயிற்சி அளிக்கிறார்கள். இதே போல, நலவாழ்வுக்கான நடவடிக்கைகளை திட்டமிட்டு முன்னெடுக்க வேண்டும்.

படிப்பகங்கள், நூலகங்களை உருவாக்குவதுடன், கலை/இலக்கிய பயிற்சிகள், , குறும்படம்/பாடல் போன்ற நவீன கலை செயல்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும். ஈர்ப்பான விதத்தில் கலைக்குழுக்கள், நாடகக் குழுக்களை உருவாக்கி நிகழ்ச்சிகள் நடத்துவது, அதன் மூலம் மத நல்லிணக்க கருத்துக்களை பரப்புவது உதவி செய்யும்.

மரங்கள் நடுவது, ஏரி/குளங்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாப்பது என நடவடிக்கைகளை உருவாக்கி சாதி மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மக்களை இணைத்திட முடியும்.

கோயில் நிர்வாகத்தில் பங்கேற்பு

                இந்து கோயில்கள், உள்ளூர் அளவில் பண்பாட்டு மையங்களாகத் திகழ்கின்றன. அவற்றை கைப்பற்றும் சங் பரிவார அமைப்புகள், கோயில்களை பயன்படுத்தி தங்களுடைய நோக்கங்களை முன்னெடுக்கிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில கோயில் நிர்வாகத்தில் நமது தோழர்கள் பங்கேற்று நிர்வாகத்தை ஊழலற்ற, தூய்மையான சிறப்பான முறையில் நடத்திட பங்களிக்கிறார்கள். நாம் கோயில் நிர்வாக நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும்.  கோயில்/ மத நிகழ்ச்சிகள்  நடைபெறும் சூழல்களில் வகுப்புவாதிகளின் தலையீட்டை தடுக்க நம்முடைய செல்வாக்கை பயன்படுத்த வேண்டும்.

                வெறுப்பு பிரச்சாரம்/வகுப்புவாத சூழல் உருவாக்கப்பட்டு, வன்முறையோ கலவரமோ வெடிப்பதற்கு ஏதுவான நிலைமை உருவானால் – அந்த நிலைமையை மாற்றிட தீவிரமான திட்டமிட்ட தலையீடுகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

இதைப்போலவே, மசூதி, சர்ச் ஆகிய வழிபாட்டுத்தலங்களுடைய நிர்வாகத்திலும் பங்கேற்று, வகுப்புவாத நடவடிக்கைக்கு பயன்படுத்தாமல் தடுக்க முயற்சிகள் எடுக்க வேண்டும்.

இந்துத்துவா நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க பல்வேறு துறைகளில் மேடைகளை உருவாக்குவதுடன் தேவைக்கு ஏற்ப முழு நேர ஊழியர்களை உருவாக்கிட வேண்டும்.

மேலே குறிப்பிட்ட பண்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பது தனியாக ஒரு அரங்கத்தின் பணி அல்ல. நம்முடைய அனைத்து அமைப்புகளும் மேற்சொன்ன விதத்தில் செயல்பட வேண்டும். வாய்ப்புள்ள மதச்சார்பற்ற சக்திகளோடு, அமைப்புகளோடு, தொண்டு நிறுவனங்களோடு கைகோர்க்க வேண்டும். தனி நபர்களும் கூட உள்ளூர் அளவில் பல்வேறு நடவடிக்கைகளை உருவாக்கி முன்னெடுக்க முயற்சிக்க வேண்டும்.

முகிலினியில் கலந்த முதலாளித்துவம் …

– ந. ரகுராம்

ஒருஆறு, ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணை. அதனையொட்டி முளைக்கும் தொழிற் சாலை, அதன் மூலம் விளையும் நன்மை-தீமைகள் இவைகளை மையமாகக் கொண்டு கோவை மாநகரையும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 60 முதல் 70 ஆண்டுகளாக வாழ்ந்த மூன்று தலைமுறை மக்களின் வரலாற்றை பதிவு செய்கிறது முகிலினி நாவல்.

எழுத்தாளர் முருகவேள், மூன்று தலைமுறை வரலாற்றை, குறிப்பாக கோவை போன்ற தொழிற் சாலைகளும், தொழிலாளி வர்க்கம் மிகவும் எழுச்சியோடு வளர்ந்த ஒருநகரின் வரலாற்றை 500 பக்கத்திற்குள் கொண்டு வந்திருப்பது 100 யானைகளைக் கட்டி இழுப்பதற்கு சமம். அதை அவருடைய முன்னுரையிலேயே அறிந்து கொள்ள லாம். இத்தகைய பணியை பலரது உதவியோடு மிகவும் நேர்த்தியாக செய்து முடித்துள்ளார்.
ஒவ்வொரு ஆலையும், தொழிற்சாலையும், அணுமின்நிலையங்களும் துவங்கப்படும்போதும் இவையனைத்தும் “வளர்ச்சிக்கானது” என மீண்டும் மீண்டும் ஆளும் வர்க்கங்கள் முன்வைக்கின்றன. “கூடங்குளம் அணுஉலை அமைப்பதற்காக அடிக் கல்நாட்ட அப்போதைய பிரதமர் வாஜ்பாய் வருகை” என்ற செய்தியை வாசிக்கும்போது பள்ளிச்சிறுவனாக இருந்த என்மனதில் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா வல்லரசாகிவிடும் என்றே தோன்றியது. உண்மை அவ்வாறில்லை; முதலாளித்துவ ஆளுகையில் எந்த வளர்ச்சியும் அனைவருக்குமானதாக இல்லை.

நாவலின் காலச் சூழல்:
1940 களில் பவானி ஆற்றை ஒட்டிய சிறுமுகை என்னும் கிராமத்திலிருந்து துவங்குகிறது நாவல். இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நகருகிறது. மக்கள் அனைவருக்கும் எவ்வித பிரச்சினையும், கவலையுமின்றி வாழ்ந்து வந்தார்கள் என்று அர்த்தமல்ல. பஞ்சம் தலைவிரித்தாடியது; மக்கள் உண்ண அரிசியின்றி கம்பும் சோளமும், கேழ்வர கும் உண்டு வாழ்ந்தார்கள். அதுவும் போதிய அளவு கிடைப்பதில்லை.
இரண்டாம் உலகப்போர் முடிவுற்று விடுதலை பெற்றபின்னர் இந்திய நாடு புதியதொரு யுகத்திற்குள் நுழைந்து கொண்டிருந்த தருணத்தில், இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை திணிக்கப்படுகிறது. அப் போது, ஆடைஉற்பத்தி தொழிலை மையமாகக் கொண்டு இயங்கிவரும் கோவைநகரம் பொருளா தார பாதிப்புகளை எதிர்கொள்கிறது. முக்கிய மூலப் பொருளான பருத்தி பாகிஸ்தானிலிருந்தே இறக்குமதியாகிய சூழலில், கடும் பாதிப்புகள் உருவாகின.

விஸ்கோசின் இந்திய நுழைவு:
மாற்று வாய்ப்புகளைத் தேடிய ஆலைமுத லாளிகளில் ஒருவரான கஸ்தூரிசாமிநாயுடு, இத்தாலியை சேர்ந்த இத்தாலியானா விஸ்கோ ஸின் தொழில்நுட்பத்தை பெற முனைந்தார். இரண்டாம் உலகப் போரில் தோல்வியடைந்து துவண்டு போயிருந்த இத்தாலியின் அந்த நிறு வனம், இசைவு தெரிவித்தது. வரலாற்றுப் பார் வையில் நோக்கும்போது, போர்தோல்வியிலிருந்து மீண்டு வரும் ஒரு நாட்டின் மூலதனமும், அடிமைப்பட்டுக் கிடந்து எழுந்து வரும் மற்றொரு நாட்டின் மூலதனமும் “முன்னேற்றம்” என்று கூறிக்கொண்டே ஒன்றாகப் பயணிக்கத் துவங்கின.

உற்பத்தியும், உடல் உபாதைகளும்:
சுற்றுப்புறத்திலிருக்கும் பெரும்பாலான கூலித் தொழிலாளர்களுக்கு, தொழிற்சாலை நம்பிக்கை கொடுத்தது. கோவை மில்களில் கிடைக்கும் கூலியைவிட ஓரிருமடங்கு அதிகமான கூலியுடன் வேலை கிடைத்தது. ஆலையின் அலுவலகத்தில் வேலைபார்க்கும் முன்னாள் இராணுவ வீரரும், தமிழ் ஆர்வலரும், திராவிடக் கொள்கையின் தீவிர பற்றாளருமான ராஜூவுடன், அவரது நண் பரும், கம்யூனிச ஈடுபாடுகொண்டவரும், தொழிற் சங்க நடவடிக்கையில் ஈடுபாடு கொண்ட வருமான ஆரான் மேற்கொள்ளும் விவாதங்கள் வழியாக அன்றைய தமிழகத்தில் கம்யூனிச மற்றும் திராவிட சிந்தனைகளின் தாக்கம் நம் கண்முன் விரிகிறது.

கூலி கொடுக்கப்படும் நாட்கள் திருவிழாக் கோலமே. கூலி வந்தவுடன் தொழிலாளிகள் பலர் மேட்டுப்பாளையத்திற்கு செல்வதும், துணி மணிகள், இனிப்பு வகைகள் வாங்குவது என களைகட்டும்.

இத்தாலியிலிருந்து இறக்குமதியாகும் மரஅட்டை களுடன் கந்தகஅமிலம், சுண்ணாம்புக்கல் என பல வேதிப்பொருட்களைச் சேர்த்து ரேயான் செயற்கை இழை தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டது. தொழிலாளிகள் பல வேதிப் பொருட்களை கையாண்டு வருவதால் அவர் களுக்கு தோல் வியாதிகளும், நுரையீரல் வியாதி களும் என பல வியாதிகள் தென்படத் துவங்கின. ஆலையில் கணக்கராக வேலைபார்க்கும் ராஜூ வுக்கும் ஆஸ்துமா அறிகுறிகள் தென்படத் துவங் கின. கைநிறைய ஊதியம் வருவதால் யாரும் தங்களுக்கு வந்து கொண்டிருக்கின்ற வியாதி களைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொண்ட தாகத் தெரியவில்லை.

யூகலிப்டஸ் அட்டைகள்:
மர அட்டைகள் இத்தாலியிலிருந்து இறக்கு மதி செய்வதற்கு பதிலாக, ஊட்டி நீலகிரி மலைத் தொடர்களில் வளர்ந்து கிடந்த யூகலிப்டஸ் மரங் களை கொண்டு தயாரிக்க முடிவு செய்தார்கள். மரங்களை வெட்டுவதற்கான உரிமைப்பெற அன் றைய தமிழக முதலமைச்சர் காமராஜரை, கஸ்தூரி சாமி நாயுடுவும் அவருடைய மாமனாரும் காந்தியவாதியுமான சௌந்தர்ராஜனும் சந்தித்து ஒப்புதல் பெற்றனர்.

1965 முதல் 1990 வரை:
அப்போது தமிழகம் அரசியல் மாற்றத்திற்கு தன்னை தயார்ப்படுத்திக் கொண்டிருந்தது. நீதிக் கட்சி, பகுத்தறிவு, சுயமரியாதை இயக்கம், திரா விட இயக்கங்களின் எழுச்சி இதனூடே கம்யூனிசக் கொள்கைகளும் வளர்ந்து கொண்டிருந்தது. ஆலை முதலாளிகளுக்கிடையேயான விவாதங்களின் போது இயல்பாகவே கம்யூனிசஎதிர்ப்பு இடம் பெற்றது, அத்தோடு குலக்கல்வி திட்டத்திற்கு எதிராக பிராமணரல்லாத முதலாளிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். குலக்கல்வி திட்டம் தொழிற்சாலை வளர்ச்சிக்கு ஒருபோதும் உதவாது என்ற எண்ணம் வெகுவாக வளர்ந்திருந்தது. மத்திய அரசு கொண்டுவந்த இந்தித் திணிப்பிற்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஏற்பட்ட எழுச்சியை திமுக வெகுவாக தனதாக்கிக் கொண்டது.
பல கலவரங்கள், துப்பாக்கிச்சூடு என மாநிலம் முழுவதும் அல்லோல கல்லோலப்பட்டுக் கொண் டிருந்தது. தொடர்போராட்டம் மத்தியஅரசைக் கீழ்ப்படிய வைத்தது. இத்தகைய சூழலில் தேர் தலில் திமுக வென்று அண்ணா தமிழகத்தின் முதலமைச்சரானார். 1969 இல் அண்ணா மறை விற்குப்பிறகு திமுக உடைந்துவிடும்; ஆட்சி கலைந்துவிடும் என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில் முதலாளிகளின் பெரும்பகுதியின ரின் ஆதரவு திமுகவிற்கு இருந்தது. அதன் தலை வராகவும் தமிழகத்தின் முதலமைச்சராகவும் கருணாநிதி தன்னை உயர்த்திக் கொண்டார்.

“தனியார்த்துறை நிர்வாகிக்கும் எல்லாத்துறை யும் திறம்பட செயல்படும்” என்று கூறுவோர்கள் உண்டு. ஆனால் “அரசின் ஒத்துழைப்பின்றி இங்கே எந்தவொரு தொழிற்சாலையும் முன்னேற இயலாது”. ஊட்டி, நீலகிரி மலைத்தொடர்களில் யூகலிப்டஸ் மரங்களை வெட்டி மரக்கூழ் உற்பத்தி செய்யும் பிரிவை அன்றைய முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.

காகிதம், அட்டை, கந்தக அமிலம், உரம், பூச்சிக்கொல்லி மருந்து என பல பொருட்களின் உற்பத்திகள் தொடங்கின. மரக்கூழ் உற்பத்தி 25 டன்னிலிருந்து 60 டன் என்ற இலக்கை நிர்ண யித்தது ஆலைநிர்வாகம். எப்படியாவது டெக்கான் ரேயான் தொழிற்சாலையில் பணியில் சேர்ந்து விடவேண்டும் என்ற ஆவலோடு பல விவசாயக் கூலிகளும், பழங்குடியினரும் காத்திருந்தனர். யூகலிப்டஸ் மரங்களை வெட்டும் பணியில் 3 மாதங்களுக்கு ஈடுபட்டால் கம்பெனி வேலைக்கு அமர்த்திக் கொள்ளப்படும் என்ற வாக்குறுதி யோடு, பழங்குடியினர் மலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கடும்குளிர், முதுகெலும்பு சில்லிடும் அதிகாலைப்பனியில் மரம் வெட்ட வைத்தார்கள். 3 மாத கடும்வேலைக்குப்பிறகு வீடு திரும்பிய மாரிமுத்துவுக்கு “கடும்பனி, சேறு நிறைந்த சகதியில் தொடர்ந்து வேலை பார்த்ததால் இரண்டு கால்விரல்களை துண்டிக்க நேர்ந்தது”.

உலக மாற்றங்களும், உள்ளூர் முதலாளிகளும்:
1980 களுக்குப் பிறகு, ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்புற சூழல் பற்றிய விழிப்புணர்வு பரவலாக மக்களிடம் பரவியது. இதனையொட்டி நடை பெற்ற போராட்டங்களால் பல தொழிற்சாலை கள் நெருக்கடிகளை சந்தித்தன. சூழலியல் சார்ந்து ஒழுங்குமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து இத்தாலியான விஸ்கோஸ் நிறுவனம் மரக்கூழ் மற்றும் ரேயான்நூலிழைகள் தயாரிப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டது.
இலாபம் மட்டுமே குறிக்கோளாக இயங்கிக் கொண்டிருக்கும் கஸ்தூரிசாமி நாயுடு போன்ற முதலாளிகளுக்கு, ஐரோப்பாவின் இத்தகைய மாற்றம் விசித்திரமாகவும், ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருந்தன. இப்போதும் கூட, ஒரு பேரழிவு நிகழும்போது எத்தகைய நடவடிக் கைகள் எடுக்கவேண்டுமென்ற அடிப்படை அறிவோ வசதியோ இல்லாமல்தானே இந்தியா போன்ற நாடுகளில் ‘வளர்ச்சி’ கட்டமைக்கப் படுகிறது!

பங்குகளின் மடைமாற்றம்:
இத்தாலியான விஸ்கோஸாவின் 24 சதவித பங்குகள் துபாயைச் சேர்ந்த சமியாவுக்கு மாற்றப் பட்டது. பின் டாடா குழுமத்தின் பங்குதாரரா கவுள்ள கேன்டி என்பவர் வசம் வந்தது. நீதி மன்றத்தில் சில முயற்சிகளுக்கு பின் கஸ்தூரிசாமி நாயுடுவும் தன்பங்குகளையும் கேன்டியிடம் விற்று விட முடிவு செய்தார். அவர் இதற்கு முன்னரே ரேயான் உற்பத்தியல்லாமல் டெக்கான் அக்ரோ கெமிக்கல்ஸ் என்னும் தொழிற்சாலையை நிறுவி யிருந்தார். உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள், விவசாயத்திற்குத் தேவையான பம்புசெட்டுகள், மோட்டார்கள் என டெக்கான் அக்ரோ கெமிக் கல்ஸ் நிறுவனம் வேறொரு பாதையில் வெகு வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது. இலாபம்- அதிகஇலாபம்- கொள்ளைஇலாபம் என்ற நோக்கத்தோடு மட்டும் இயங்கும் தொழிற் சாலை, மரக்கூழ் உற்பத்தியளவை 60 டன்னி லிருந்து 250 டன்னுக்கு உயர்த்துவதை நோக்கி பயணித்தது.

முகிலியின் வேதிக் கழிவுகள்:
உற்பத்தி பெருகும்போது டெக்கான் ரேயான் ஆலையின் கழிவுகளும் பெருகின. அமிலமும், வேதிப்பொருட்களும் கலந்த கழிவுகள் இரவு நேரங்களில் ஆற்றில் டன்கணக்கில் திறந்து விடப் பட்டது. ஒருகட்டத்தில் தொழிற்சாலையிலிருந்து கூடுதுறைவரையிலான சுமார் 70 கிமீ தொலை விற்கு ஆறு முழுவதுமாக மாசுபட்டிருந்தது. இந்த நீரை குடித்த ஆடு, மாடு, மான் ஆற்றுநீரில் வாழ்ந்த மீன்கள் என அனைத்தும் பாதிக்கப் பட்டன. செத்து மடிந்தன.

ஆற்றைச் சுற்றிய விவசாய நிலங்கள் யாவும் அழிவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தன. மக்களின் கோபம் மெதுவாக டெக்கான் ரேயான் நிறுவனத்தை நோக்கித் திரும்பிக் கொண்டிருந் தது. இதற்காக பல போராட்டங்கள், ஊர்வலங் கள், தெருமுனைக் கூட்டங்கள் என நாள்தோறும் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்றன. ஆற்றைக் காப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப் புகள் யாவும் தொழிற்சாலையை இழுத்து மூடக் கோரி நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தன.

ஆலையில் பணியாற்றிய ராஜூ குடும்பத்தார் அனைவரும் பவானி ஆற்றினை, முகிலினி என்றே அழைத்து வந்தனர். ராஜூவின் பேரன் கௌதம் கோவை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று வந்தான். அதேவேளையில் தனது தாத்தாவின் தமிழ்ப்புலமையும், தாத்தாவின் நண்பர்ஆரான் அவர்களின் இடதுசாரிக் கொள்கைகளையும் சிறுவயதிலிருந்தே கேட்டுவளர்ந்தான். ஆறு, அதையொட்டிய தனது குடும்ப வளர்ச்சியைக் கண்டு வளர்ந்த அவன், ஆற்றையும் சுற்றுப்புறச் சூழலை காக்கும் போராட்டத்தில் இயல்பாகவே தன்னை இணைத்துக் கொண்டான்.

உலக மயமாக்கலுக்குப் பிறகு சூழலியல் பாதுகாப்பில் கவனம் செலுத்திய இடதுசாரி இளைஞர் அமைப்பு போராட்டங் களை நடத்தியது. வழக்கின் தீர்ப்புகள் ஆலைக்குச் சாதகமாக வந்தன. இந்த சூழலில், இளைஞர் அமைப்பின் கவனம் மலைவாழ் மக்களுக்கும், பழங்குடியினருக்கும் சங்கம் கட்டுவதை நோக்கித் திரும்பியது.

”டெக்கான் ரேயான் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும்” என நதிநீர் பாதுகாப்பு அமைப் புகள் தொடர்ந்து குரல் கொடுத்தன. பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருந்த காரணத்தால், தொழிற்சங்கங்கள் இதை ஏற்கவில்லை. இதுபற்றிய விவாதங்கள் இரு அமைப்புகளுக்குமிடையே நடந்து வந்தது.
“இப்ப நீங்க என்ன சொல்றீங்க, இந்த மண்ணை யும், ஆத்தையும் விட, இயற்கை வளத்த காப் பாத்திரத விட வேறென்ன உங்களுக்கு முக்கியமா படுது? உங்களுக்கும் கேன்டிக்கும் அப்படி யென்ன உறவு? ” என ஒரு இளைஞன் கேள்விகளை அடுக்கினான்.

இளைஞனை நோக்கி பேசிய தொழிற்சங்கத் தலைவர் நிதானமாக “கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் என்ன நடக்கிறது என்பதை சற்று சிந்தியுங்கள். 40 க்கும் அதிகமான மில்கள் இங்கே மூடப்பட்டு விட்டது. ஒரு மில் மூடப்படும்போது அதற்கு காரணமாக நிர்வாகக் கோளாறு என்றே வெளியே கூறபட்டு வந்தது. ஆனால் ஒவ்வொரு மில்லாக தொடர்ந்து மூடப்படும்போது அது நிர்வாகக் கோளாறோ அல்லது குளறுபடியோ இல்லை… டெக்ஸ்டைல் துறையில்தான் முதன்முதலாக உலகமயமாக்க லும், தாராளவாதமும் சோதித்துப் பார்க்கப் பட்டது. ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு ஆலை, அதாவது ஸ்பின்னிங், வீவிங், டிரையிங் என பல பிரிவுகள் உருவாக்கப்பட்டது. பல கிராமங்களிலிருந்து மக்கள் கோவை, திருப்பூர் நகரிலுள்ள ஆலைகளை நோக்கி ஆளும் வர்க்கம் நகர்த்தி வந்தது. தொடர்ச்சியான போராட்டங் கள், ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தம் என தொழிற்சங்கங்களின் மூலம் குறிப்பிட்ட சில சலுகைகளையும் வெற்றிகளையும் பெற்றோம்.

உலகமயமாக்கல் நடவடிக்கைகளுக்குப் பிறகு, தொழிலாளர்களின் நிலை மீண்டும் 40 , 50 ஆண்டுகளுக்கு பின்னே நகர்த்தப்பட்டு விட்டது. வேறுவழியின்றி பள்ளிக்குச் சென்று கொண் டிருந்த குழந்தைகளின் படிப்பை நிறுத்திவிட்டு, அவர்களை வேலைக்கு அனுப்பும் போக்கு காண முடிகிறது. இத்தகைய சிக்கல்களுக்கு மத்தியில் மதவாதமும் திட்டமிட்டு பரப்பப்பட்டு வளர்க் கப்பட்டு வருகிறது. இத்தகைய இக்கட்டான காலகட்டத்தில் தொழிற்சங்க இயக்கங்கள் தங் களுடைய செயல்பாடுகளை பூஜ்ஜியத்திலிருந்து துவங்க வேண்டியுள்ளது. இந்நிலையில் ஆலை மூடப்பட்டால் இன்னும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் வேலையிழந்து வீதிக்கு வருவார்கள். அவர்களின் ஒட்டுமொத்த வாழ்வும் கேள்விக்குறியாகி விடும்” என்றார்.

அத்தோடு நில்லாமல் “உங்களின் கோரிக்கை மிகவும் முக்கியமானது; நியாயமானது; நம் போராட்டங்கள் வருங்காலத்தில் உறுதியாக ஒரு புள்ளியில் இணையும்” என்றும் கூறினார். இதைக் கேட்ட கௌதமுடைய மனதில் “தொழிற்சங் கங்களும் நம்மோடு இந்த போராட்டத்தில் உடன் நின்றிருக்க வேண்டும். எது அவர்களை இந்தப் போராட்டத்திலிருந்து நம்மிடமிருந்து பிரித்து வைத்தது.” என்னும் கேள்வி ஆழமாக எழும்பியது.

தீர்ப்பும் அதன் பின்னரும்:
நதிநீர் பாதுகாப்பு போராட்டத்தில், அதிகார வர்க்கம் காவல்துறையைக் கொண்டு தடியடி, கண்ணீர்புகைக்குண்டு என வன்முறையைக் கட்ட விழ்த்து விட்டது. கடும் போராட்டத்திற்குப் பின் நீதிமன்றம் கழிவுகளை அகற்றவும், தொழிற் சாலையை நிரந்தரமாக மூடவும் தீர்ப்பெழுதியது. மறுமுனையில் அந்த ஆலையில் வேலை பார்த்து வந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களுடைய வேலையையிழந்து, ”ஆலையைதிற! அல்லது தொழிலாளர்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய ஓய்வுகால வைப்புத்தொகை மற்றும் இதர சலுகைகள் அனைத்தையும் உடனே வழங்கு! தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்காதே! “  என தொழிற்சங்கங்கள் ஆலைக்கு முன்பாக போராட்டத்தில் இறங்கினார்கள். நேற்றுவரை இது வேறொருவருடைய போராட்டம், இன்று இது இவர்களுடைய போராட்டம். இவ்வாறு பிரித்தது யாருடைய வெற்றி? எங்கே தொழிற் சங்கம் தவறியது? எங்கே நதிநீர்ப்பாதுகாப்பு அமைப்பு தவறியது? என்ற பல கேள்விகளை கௌதம் வாயிலாக வாசகர்களுக்கு கடத்து கிறார் ஆசிரியர். ஆலை மூடப்பட்டு விட்டது. எல்லாம் முடிந்துவிட்டதா? என்னும் கேள்வி எழுந்தது. மூடப்பட்ட ஆலைக்கு உள்ளிருந்து மோட்டார்கள், இரும்பு சாமான்களை சிலர் திருடும் சம்பவம் அவ்வப்போது நிகழ்ந்தது. சிலர் சூழ்நிலையின் காரணமாக வலுக்கட்டாயமாக அத்தகைய திருட்டுவேலைகளில் திணிக்கப் பட்டனர். கோவை நகரில் 1990களுக்குப் பிறகு மதவாதம் காலுன்றியது.

அமெரிக்காவில் தனது படிப்பை முடித்து விட்டு நாடு திரும்பிய கஸ்தூரிசாமி நாயுடுவின் பேரன் ராஜ்குமார் பாலாஜி வந்ததும் வராதது மாக இயற்கை விவசாயத்தைப் பற்றி தனது குடும்பத்தினருடன் குறிப்பாக தனது தாத்தா கஸ்தூரிசாமி நாயுடு மற்றும் பாட்டி சௌதா வுடன் தீவிரமாக ஆலோசித்தான். “ஆர்கானிக் விளைபொருட்களுக்கு எதிர்காலத்தில் மிகப் பெரிய சந்தை இங்கே உருவாகும்” என்று விவரித் தான். இவையெல்லாவற்றையும் நிதானமாகக் கேட்டுக் கொண்டிருந்தார் 80 வயதைத் தாண்டிய கஸ்தூரிசாமி நாயுடு, பிறகு தனது பேரன் விவரித் ததை ஆமோதிப்பதுபோல தலையையசைத்து தனது சம்மதத்தையும் தெரிவித்துச் சென்றார். தங்களுக்கு சொந்தமான நிலத்திலேயே இயற்கை விவசாயம் செய்வதைத் துவங்கினான் பாலாஜி.

கதைப்போக்கில் சாமியார்கள் எவ்வாறு உருவாகிறார்கள் என்பதை நகைச்சுவை ததும்ப விவரிக்கிறார் ஆசிரியர். ஆசிமானந்தசாமிகள் ஜக்கிவாசுதேவன் வகையறாக்களை ஞாபகப் படுத்துகிறார். விளைபொருட்களை வெளிநாடு களுக்கும் ஆசிமானந்தசாமிகளின் ஆசிரமத்திற் கும் விற்கும் தொழிலில் மிகத்தீவிரமாக ஈடுபட்டு வந்தான் பாலாஜி.
அமெரிக்காவில் தகவல்தொழில்நுட்பத் துறை யில் தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை உதறித் தள்ளிவிட்டு இயற்கையோடு இயைந்த இயல்பான வாழ்வைத் தேடி நாடு திரும்பியிருந்த திருநாவுக்கரசுவிற்கும், கௌதமிற்கும் இடை யிலான கம்யூனிசம் மற்றும் இயற்கை விவசாயம் பற்றிய விவாதங்கள் வெளிப்படுகின்றன.

துறவி போல வாழத்துவங்கியிருந்த திருநாவுக் கரசைப் பார்த்து இது ஓய்வுக்கால வாழ்வு என்றும், ‘ஒவ்வொரு நாளும் ஏரி, குளங்கள், ஆறு, ஆற்றுமணல், காடு, மலை என அனைத்து இயற்கை வளங்களும் சூறையாடப்பட்டுக் கொண்டிருக் கிறது, அதைப்பற்றி சிந்திக்காமல் தான் ஒருவன் மட்டுமே மாறுவதால் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது?’ என்று கௌதம் கேட்கிறான். இருப் பினும் திருநாவுக்கரசின் நோக்கமும், தனது நோக்கமும் ஒருபுள்ளியில் நிச்சயம் இணையும் என்றே எண்ணினான்.

சூழலியலும், மார்க்சியமும்:
முதலாளித்துவம் எல்லாவற்றையும் லாப நோக்கிலேயே அணுகுகிறது. மக்களிடம் நுகர்வு கலாச்சாரத்தைத் திணிக்கும் உலகமயம், பாதிப் புகளை மூன்றாம் உலக நாடுகளிடமும், சாமானிய மக்கள் தலையிலும் கட்டி நழுவுகிறது. முதலாளித் துவத்தின் குழந்தைப் பருவத்திலேயே அதன் கோர முகத்தை இந்த உலகுக்கு காட்டிய மார்க்ஸூம் ஏங்கெல்சும் “சூழலியல்” ஒரு தனிக்கருத்தாக்க மாக அறிமுகமாகாத காலத்திலேயே, இது பற்றிய எச்சரிக்கை மணியைஅடிக்கத் தவறவில்லை.
“மக்களை, குறிப்பாக ஏழைகளையும் ஒதுக்கப் பட்டவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சூழலியல் பிரச்சனைகளை கட்சி கையிலெடுக்க வேண்டும்” என மார்க்சிஸ்ட் கட்சி தீர்மானித் துள்ளது. இடது ஜனநாயகத் திட்டத்தின் ஒரு பகுதியாக, “சூழலியல் பாதுகாப்பும், ஆற்றல், நீர் நிலைகள் மற்றும் தேசிய வளங்களைப் பகிர்ந்து கொள்வதில் சமநீதி கடைப்பிடிக்கப்பட வேண் டும்” என குறிப்பிடுகிறது.
மூலதனம் புத்தகத்தில் கார்ல் மார்க்ஸ்,”ஒரு குறிப்பிட்ட சமுதாயமோ, ஒரு குறிப்பிட்ட தேசமோ, ஏன் ஒட்டுமொத்த சமுதாயமோ அல்லது அனைத்து தேசங்களுமோ இவ்வுலகில் உள்ள இயற்கை வளங்களை ஒரு போதும் சொந்தம் கொண்டாட முடியாது. அனைத்து சமூகமும், மனிதர்களும் வெறும் பயனாளிகள் மட்டுமே. எக்காரணத்தைக் கொண்டும் உரிமை கொண்டாடிவிட முடியாது.” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்.

இயற்கையின் இயங்கியல் புத்தகத்தில் எங்கெல்ஸ், “மனிதனுக்கும் மற்ற மிருகங்களுக்கும் இடையிலான வேறுபாடு என்னவென்றால் பிற மிருகங்கள் இயற்கையின் பயன்களை மட்டுமே அனுபவிக்கிறது. ஆனால் மனிதஇனம் இயற்கை வளங்களை அனுபவிப்ப தோடு மட்டுமின்றி அதனை அடக்கி ஆள்வதன் மூலம் அதை ஒடுக்கி வெல்லத் தலைப்படுகிறது. ஒவ்வொரு முறையும் வெற்றி பெறும்போதும் அதற்கான வெற்றி சன்மானமாக இயற்கை மனித இனத்தை வெல்கிறது.” என்கிறார்.
சூழலியல் இழப்புகளைக் கண்டுணர்ந்தோரிடம் எழும் இயல்பான அக்கறையும், சூழலியல் சிக்கல் களை ஏற்படுத்திய அதே முதலாளிகள் ‘இயற்கை விளைபொருட்கள்’ என்ற நோக்கில் சந்தை வாய்ப் பாக மாற்றிக் கொள்வதும் நாவலின் போக்கில் கண் முன் காட்சிப்படுகின்றன. இயற்கை வளங் களை வரன்முறையற்றுச் சுரண்டிக் குவிக்கும் முதலாளிகளும், அவர்களுக்குத் துணைபோகும் அரசுக் கட்டமைப்பும் – மிகத் தெளிவான பார் வையுடன் எதிர்கொள்ளப்பட வேண்டியவை. மனித சமூகத்தின் ஒட்டுமொத்த நலவாழ்வுக்கான நம் போராட்டத்திற்கு, முகிலினி வாசிப்பு உதவியாக அமையும்.